குடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்” என்று பெரியார் திராவிடர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதைக் கண்டித்து திராவிடர்கழகம் சார்பில் கவிஞர் கலி. பூங்குன்றன் பூனைக்குட்டி வெளியே வந்தது! என்ற தலைப்பில் விடுதலையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது இலட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு திராவிடர்கழகப் பொதுக்கூட்டங்களிலும், புத்தகச் சந்தைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டால் கடவுள் மறுப்புத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்வார்களா? விடுதலை நாளிதழ் வருமா? பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு எனப் பிரச்சாரம் செய்வார்களா? அரசு கையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளை, பச்சையப்பன் அறக் கட்டளைகளின் நிலைபோல ஆகாதா? பார்ப்பன அரசு வந்தால் பெரியார் கொள்கையைப் பரப்புமா? என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை வைத்து பெ.தி.க வை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்குமுன் வீரமணி அவர்களோ பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணியை “வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவர்”,  “துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பை ஒடிப்போம்” என்றெல்லாம் இ.கு.க கட்சியின் வட்டச்செயலாளர் வண்டுமுருகனைப் போல முழங்கி வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்லி தமது தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாமல் பெ.தி.க எந்த மறுப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது.  எனவே பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களின் சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

நாய் பெற்ற தெங்கம்பழம்

திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரண்டு சட்ட எரிப்பு வீரர்களின் நினைவிடம் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இவர்கள் இருவரும் 1957 ஆம் ஆண்டு ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தை எரித்து கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள். சிறைக்குள்ளேயே சிறைக் கொடுமைக்குப் பலியானவர்கள். இப்போராளிகளின்  உடலைக்கூட அப்போதைய காங்கிரஸ் அரசு வெளியில் தோழர்களிடம் தராமல் சிறைக்குள்ளேயே  புதைத்தது. அன்னை மணியம்மையார் வீராங்கனையாக வெகுண்டெழுந்தார். “ உயிருடன் அனுப்பினோம் - பிணத்தையாவது கொடுங்கள்” எனப் போராடி, அரசு கொடுத்த சிதைந்த  உடல்களை இலட்சக்கணக்கான தோழர்கள் புடைசூழ தனது தலைமையில்  திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் புதைத்து அங்கே ஒரு நினைவுச் சின்னத்தையும் உருவாக்கிவைத்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் அப்போராளிகளின் உடலின் முன்பு எங்கள் வாழ்வில் எங்கள் குடும்பத்தில் இனி ஜாதி மறுப்புத் திருமணங்களைத்தான் செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டு நடத்தியும் காண்பித்தனர். அப்போது சிறையில் இருந்த பெரியார் விடுதலை ஆனபிறகு அந்த நினைவிடங்களில் தானே தலைமையேற்று கல்வெட்டுக்களைத் திறந்து வைத்துள்ளார். இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராளிகளின் நினைவிடத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். 

 periyarists_cemetry_1
.ஈழத்தில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் வீரஞ்செறிந்த யுத்தங்களுக்கு இடையே எதிரிகளின் குண்டுமழை பொழிந்துவந்த காலத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வளவு கவனமாக பேணி பாதுகாக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். தற்போதைய களத்தில் புலிகள் பின்னடைவான பிறகு மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களன் சீரழிக்கிறான். ஆனால் எந்த முக்கிய வேலையும் இல்லாமல் ஆட்சிகளுக்கு காக்காய் பிடிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்துவரும் திராவிடர் கழகத் தலைமை - பெரியார் ட்ரஸ்ட் தலைமை - அரசுக்கு சொத்து போய் விட்டால் சொத்து நாசமாகிவிடுமே என கவலைப்படும் வண்டுமுருகன்கள், இந்த இயக்கத்துக்காக கொள்கைக்காக உண்மையாகவே உயிர்விட்ட போராளிகளின் நினைவிடத்தை - பெரியாராலும் அன்னை மணியம்மையாராலும் உருவாக்கப்பட்ட நினைவிடத்தை எதிரிகளால் இல்லாமல் தாமே அழித்துச் சிதைத்துவிட்டனர்.

பெரியார் காலத்தில் திருச்சி மாநகரத்தில் மாபெரும் செயல்வீரராகத் திகழ்ந்தவர் பெரியாரின் போர்ப்படைத் தளபதி திருச்சி பிரான்சிஸ். திருச்சியை பெரியாரின் கோட்டையாக வைத்திருந்த தளபதி பிரான்சிஸ். ஆசிட் தியாகராசன், குடந்தை ஜோசப் போன்ற பல செயல்வீரர்களின் பாசறையாகத் திருச்சியை உருவாக்கி வைத்தவர் பிரான்சிஸ். அவரது மறைவுக்குப் பிறகு பெரியாரே நேரடியாக பிரான்சிஸ் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று அந்த வீட்டருகே பிரான்சிஸ் நினைவுப் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். திருச்சியின் மையப்பகுதியான உப்புப்பாறையில் பெரியார் திறந்துவைத்த அந்த பிரான்சிஸ் நினைவுப் படிப்பகம் இப்போது அந்தப் பகுதி மக்களின் கழிப்பிடமாக மாறிவிட்டது. பிரான்சிஸ் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராக இடிந்து மண்ணாகிப் போய்விட்டது.  இப்படிப்பட்ட கொள்கை அடையாளங்கள் தரைமட்டமாகிப் போய்விட்டன.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று சிறை சென்றதால்  திருச்சியில் தான் சொந்தமாக நடத்திவந்த இரண்டு உணவுவிடுதிகளையும் இழந்து குடும்பத்தினரை வறுமையில் வாடவிட்டு இன்னும் மீடேற முடியாமல் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அதே இடத்தில் அதே பகுதியில் கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு அதன்மூலம் கிடைக்கும் மிகச்சிறு வருமானத்தைக்கொண்டு வாழ்க்கையின் மீதிக் காலத்தைக் கடத்தி வருகிறார் 80 வயதைக் கடந்த சட்ட எரிப்புவீரர் மாரியப்பன்.  இவரது நிலை குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், பல இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் பதிவாகி உள்ளது. வெளி உலகுக்கும் வந்துள்ளது. இவற்றைப் பார்த்து பார்ப்பன சிரிப்பு நடிகன் எஸ்.வி.சேகர் கூட ஒரு இலட்ச ரூபாய் தரமுன்வந்தான். பெரியார் அறக்கட்டளை ? ? ?

இதே காலகட்டத்தில் இலட்சக்கணக்கில் வருமானம் வரக்கூடிய பெரியார் கல்விநிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டு பேணிப்பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கு வாரிசாக ஒரு 'மாபெரும் தத்துவவாதி', 'ஆற்றல்மிக்க செயல்வீரன்', 'போராளி' அன்புராஜ் நியமிக்கப்படுகிறார். 

கொள்கையையும் கொள்கைக்காரர்களையும் பாதுகாக்கத்தான் பெரியார் சொத்துக்களைச் சேர்த்தார். மறைந்த போராளிகளின் நினைவிடத்தையும் அந்த சொத்தால் பாதுகாக்க முடியவில்லை, சுயமரியாதைக் காலத்தின் அடையாளங்களாக இன்னும் வாழ்ந்துவரும் மாரியப்பன் போன்ற போராளிகளையும் காப்பாற்றப் பயன்படவில்லை என்றால் அந்தச் சொத்து அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? ஆயிரங்கோடி சொத்து இருந்தும் கழக வளர்ச்சிக்காக பெரியாராலேயே உருவாக்கப்பட்ட படிப்பகங்கள் கழிப்பிடங்களாகவும், மணியம்மையாரால் உருவாக்கப்பட்ட நினைவிடங்கள் உருக்குலைந்து முட்புதர்களாகவும், செயல்வீரர்களின் பாசறைகள் குட்டிச்சுவர்களாகவும் சிதைந்துபோய்க் கிடப்பதை திருச்சியில் நேரில் இன்றும் காணலாம். நாய்பெற்ற தெங்கம்பழமாக - நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல எதற்கும் பயன்படாத சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசுக்குப் போய்விட்டால்...

அரசுக்குப் போய்விட்டால் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்வார்களா? என்று கேட்டுள்ளனர். மலையாளி என உங்களால் இகழப்பட்ட எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடரை நினைவுச் சின்னத்தை உருவாக்கினார். பெரியார் பெயரில் மாவட்டத்தை அமைத்தார். அவரது வாரிசாக வந்த பார்ப்பன ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் பெரியாரின் குடிஅரசு இதழ்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழியாக அரசு சார்பாக அச்சிட்டு மக்களிடம் கொண்டு செல்ல உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இராமர் இளங்கோ அவர்களுக்கு ஒப்புதலை அளித்தார். அந்நிறுவனத்தின் நடவடிக்கைக் குறிப்புக்களில் ஆதாரம் இருக்கிறது. அப்போது அந்த அரசு குடி அரசை வெளியிட்டுவிடக் கூடாது என இரகசியமாகத் தடை போட்டவர் பெரியார் ட்ரஸ்டை இயக்கும் தமிழர் தலைவர் தானே? அரசு செய்யும் பெரியாரியல் பணிகளைத் தடை போடத்தானே ட்ரஸ்ட் பயன்பட்டுள்ளது?

“பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என அட்சரம் பிசகாத பெரியாரின் இந்த முழக்கம் மத்திய பார்ப்பன அரசாங்கத்தில் அனுமதி பெற்றுத்தானே அச்சிடப்படுகிறது. தனியாக யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காடுகளில் அச்சிடப்பட்டு, உழைக்கும் அடித்தட்டு மக்களிடம் இரகசியச்சுற்றாகவா விடுதலை விநியோகிக்கப்படுகிறது? பார்ப்பனமயமாக உள்ள மத்திய அரசுதானே பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் அடங்கிய விடுதலைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அந்த பதிவு எண்ணை தினமும் விடுதலையில் 8 ஆம் பக்கத்தில் போட்டுத்தானே  பத்திரிக்கை நடத்துகிறீர்கள்?

பெரியார் பார்வையை அடிப்படையாகக்கொண்ட பெண்விடுதலை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை பூத்த தனித்தமிழ்நாட்டுக்காக அந்தக் கொள்கைகளை மக்களிடையே தினந்தோறும் பரப்பிவரும் வீரமணியின் விடுதலை, உண்மை இதழ்கள் அரசே நடத்தும் நூலகங்களில் அவசியம் வாங்கப்படவேண்டுமென அரசாலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுத்தானே வருகின்றது?

பெரியார் தி.க கொடுத்த நெருக்கடியால் தற்போது நீங்கள் வெளியிடுட்டுவரும் குடியரசு தொகுப்புகள் கூட தமிழ்நாட்டு அரசின் அனைத்து நூலகங்களிலும் வாங்கப்படுகின்றனவே? பார்ப்பன ஜெயலலிதாவின் ஆட்சியிலும் நூலகங்களில் விடுதலை, உண்மை இதழ்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுத்தானே வந்தன? பிறகென்ன அப்பாவித் தொண்டர்களிடம் நாடகம்? அரசுக்குப் போய்விட்டால் பிரச்சாரமே நடக்காது; பெரியார் கருத்துக்கள் பரவாது என பித்தலாட்டப் பிரச்சாரம். அரசுக்குப் போனாலாவது பெரியார் கருத்துக்களால் பலனடைந்தவர்கள் பலமுறை பொறுப்புக்கு வருவார்கள். உங்களைவிட சிறப்பாக பணிகள் நடக்கும்.

அரசைவிட அறக்கட்டளையில்தான் சமூகநீதிக்குப் பஞ்சம்

பெரியார் கல்வி நிறுவனங்கள் சமூகநீதிக்கண்ணோட்டத்தில் செயல்படுகிறதா? அரசு நடத்தும் கலை, பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் இன்றும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.  தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டுக்கு பாதி இடங்களை கேட்டுள்ளது அரசு. அரசுக்கு இடங்களைக் கொடுத்தால் அவற்றில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட்டிருக்கும்.  சமூகநீதியை அரசு செய்யுமா என தற்போது கேள்வி எழுப்பும் மடாதிபதிகள் இன்றுவரை பெரியார் கல்வி நிறுவனங்களில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே இல்லை. தெம்பிருந்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு நிலையை வெளிப்படையாக நாணயமாக அறிவியுங்களேன்? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களே அவற்றை வெளிப்படையாக இணையதளங்களில் வெளியிடுகின்றன. இந்திய ஆட்சிப்பணிக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் நிறுவனமே ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு நிலை என்ன என விளக்கமாகப் பட்டியலோடு வெளியிடுகிறது.  அரசைவிட அதிகமாக சமூகநீதியை நிலை நாட்டவேண்டிய பெரியார் ட்ரஸ்ட் நடத்தும் கல்விநிறுவனங்கள் இடஒதுக்கீட்டு நிலையை வெளிப்படையாக அறிவிக்குமா?

பெரியார் கல்விநிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு இல்லை. அது போகட்டும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்கிறதா, தமிழ்நாடு முழுவதுக்கும் 31 சி சட்டத்தைக் கண்டு பிடித்து இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தோம் என மார்தட்டிக்கொள்ளும் அறக்கட்டளைத் தலைவர் வீரமணி அவர்களே!

முதலில் இதுவே பித்தலாட்டம். 31 சி சட்டத்தின் அடிப்படையில் 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும் என்ற சட்டமுன்வரைவைத் தயாரித்தவர் நீதியரசர் வேணுகோபால்தான். வீரமணி அல்ல. நீதியரசர் உருவாக்கிய சட்ட முன்வடிவைச் சட்டமாக்கியவர் அப்போதைய முதல்வர் பார்ப்பன ஜெயலலிதா. இடையில் இவர் செய்தது போஸ்ட்மேன் வேலை மட்டுமே. இந்த ஒரு எளிமையான செயலை பெரியார் 1951 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலாகத் திருத்திய போராட்டத்தோடு தொடர்புபடுத்திப் பிரச்சாரம் செய்வது என்ன பிழைப்போ தெரியவில்லை. அது கிடக்கட்டும்.

தோழர் வீரமணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியார் அறக்கட்டளையிலாவது சமூகநீதி உள்ளதா? அங்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவாரா?  ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவராவது அறக்கட்டளை யில் உறுப்பினராக உள்ளாரா? சட்ட எரிப்புப்போராட்ட வீரர்களாவது யாராவது அறக்கட்டளையில் இருக்கிறார்களா?  மூச்சுக்கு மூச்சு கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் கலைஞரையாவது அவர் குடும்பத்தையாவது அறக்கட்டளையில் சேர்ப்பார்களா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவோ, இணைவேந்தராகவோ வரமுடியுமா? சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் பக்தசிகாமணி வி.கே.என். கண்ணப்பனை விட இயக்கத்துக்கு இன்னும் உழைத்து உழைத்து கருப்பு மெழுகுவர்த்திகளாக உருகும் கவிஞர்.கலி. பூங்குன்றன், உரத்தநாடு குணசேகரன் போன்றவர்கள் தாழ்ந்தவர்களா? இப்படி தற்போது உழைக்கும் தோழர்களும் இல்லாத, உழைத்து ஓய்ந்த போராளிகளும் இல்லாத, இவர்கள் யாருக்கும் பயன்படாத, அரசு நிறுவனங்களில் உள்ள சமூகநீதிகூட நடைமுறைப்படுத்தப் படாத அறக்கட்டளை சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசு சார்பில் சாலைபோடுதல், தொழில்நிறுவனங்கள் உருவாக்குதல் போன்ற பல பணிகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகளை அரசு வழங்குகிறது. ஆனால் பெரியார் அறக்கட்டளைக்குச் சொத்துக்களை வழங்கியவர்களின் வாரிசுகளின் நிலை என்ன? அரசுக்குக் கொடுத்திருந்தாலாவது அவர்களுக்கு ஒரு பயன் இருந்திருக்கும். அல்லது சொத்துக்களைக் கொடுக்கும் நோக்கங்களாவது நிறைவேறியிருக்கும்.

இது எங்கள் சொத்து, இதையெல்லாம் கேட்க நீயார் எனக் கேட்கலாம். அவை உங்கள் சொத்து அல்ல; அன்புராஜ் ரிலையன்ஸ் அம்பானியுடன் ஒப்பந்தம்போட்டு சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல; ஹிந்துஸ்தான் லீவரோடு இணைந்து சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல. எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் ஊர் ஊராக துண்டேந்தி, பிச்சை எடுத்து சேர்த்துக் கொடுத்த நிதி. திருமண வயதில் வீட்டில் பெண் இருக்கும்போதுகூட தான் அணிந்திருந்த ஒரே ஒரு நகையையும் கழட்டிக் கொடுத்து சேர்ந்த நிதி. தன் வாரிசுகளை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைத்துவிட்டு பெரியார் கொள்கையைப் பரப்ப சொத்துக்களை கொடுத்து சேர்ந்த நிதி. உங்களைவிட ஆயிரம் மடங்கு கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கேட்கும் யோக்கியதை உங்களுக்கு உண்டென்றால் இந்த தனியார் அறக்கட்டளையிலும் சமூகநீதியைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்காதா? அரசின் உதவியில்லாமல் அரசின் தயவில்லாமல் தனியாக வானத்திலா மிதக்கிறது இந்த அறக்கட்டளை? அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தித்தானே அறக்கட்டளை நடத்துகிறீர்கள்?  உங்கள் அறக்கட்டளையின் அனைத்துப் பணிகளும் அரசின் கண்காணிப்புக்கு உட்பட்டுத்தானே நடக்கிறது. இது மக்கள் அரசல்ல, மக்களுக்கான அரசல்ல, இந்த அரசைப் பெரியார் ஏற்கமாட்டார் என கொள்கைத் துணிச்சலுடன் அறிவித்து அரசுக்கு வருமானவரி கட்டாமல், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யாமல், அரசின் சலுகைகளைப் பெறாமல், அறக்கட்டளையை அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தமாட்டோம் என அறிவிக்கத்தயாரா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? இப்போதும் அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த அறக்கட்டளையும் செயல்படமுடியும். அது முழுமையாக அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? நீங்கள் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒரே ஒரு குறைதான். அதைத் தாங்கமுடியாமல்தான் “விநாசகாலே விபரீத புத்தி” என சமஸ்கிருத புத்திமதிகள்.