New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்தாவது நெய்தற்கலி பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஐந்தாவது நெய்தற்கலி பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்
Permalink  
 


ஐந்தாவது நெய்தற்கலி
பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்
# 118
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப
குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட
காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய்
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது எம்_வயின்
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே
 
மேல்



# 119
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி_வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர
மா வதி சேர மாலை வாள் கொள
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே
 
மேல்



# 120
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான்
வெருவு_உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்_கண்
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்
அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல்
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்_கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ
என ஆங்கு
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே
 
மேல்



# 121
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம்
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே
உறையொடு வைகிய போது போல் ஒய்யென
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்_உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு
என ஆங்கு
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே
 
மேல்



# 122
கோதை ஆயமும் அன்னையும் அறிவுற
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை
அலவலை உடையை என்றி தோழீ
கேள் இனி
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
பேணி அவன் சிறிது அளித்த_கால் என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
அருளி அவன் சிறிது அளித்த_கால் என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த_கால் என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்
அதனால்
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்_பால் பட்டது ஆயின்
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே
 
மேல்



# 123
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல்
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான்
மாணா நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை
அல்லல் நோய் செய்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான்
செறி வளை நெகிழ்த்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே
என ஆங்கு
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்_கண் பெறல் நசைஇ
இரும் கழி ஓதம் போல் தடுமாறி
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே
 
மேல்



# 124
ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின்
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா_கால்
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா_கால்
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா_கால்
அதனால்
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர
புரி உளை கலி_மான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே
 
மேல்



# 125
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ
இலங்கு ஏர் எல்_வளை ஏர் தழை தைஇ
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய்
புலந்து அழ புல்லாது விடுவாய்
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட வாராது விடுவாய்
தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ
என ஆங்கு
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி
பிறை ஏர் சுடர் நுதல் பசலை
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே
 
மேல்



# 126
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப
அணி சிறை இன குருகு ஒலிக்கும்_கால் நின் திண் தேர்
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த_கால்
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
நனவு என புல்லும்_கால் காணாளாய் கண்டது
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே
என ஆங்கு
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க
புது நலம் ஏர்தர பூண்க நின் தேரே
 
மேல்



# 127
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்
புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும்
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர்
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை
அதனால்
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன்
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே
 
மேல்


# 128
தோள் துறந்து அருளாதவர் போல் நின்று
வாடை தூக்க வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும்
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல
புதுவது கவினினை என்றி ஆயின்
நனவின் வாரா நயன் இலாளனை
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என்
நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும்
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும்
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என
தலை உற முன் அடி பணிவான் போலவும்
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும்
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி காண்_தக
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே
 
மேல்



# 129
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்_கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல்
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம்
நோய் தெற உழப்பார்_கண் இமிழ்தியோ எம் போல
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ
என ஆங்கு
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே
 
மேல்


# 130
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனின் தோன்றிய இவை என இரங்க
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல்
நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை
இ மாலை
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்
இ மாலை
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
இ மாலை
கோவலர் தீம் குழல் இனைய அரோ என்
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்
என ஆங்கு
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை
விடு_வழி விடு_வழி சென்று ஆங்கு அவர்
தொடு_வழி தொடு_வழி நீங்கின்றால் பசப்பே
 
மேல்



# 131
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என்
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு
பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்
நோக்கும்_கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை
வீழ் ஊசல் தூங்க பெறின்
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்
ஆனா பரிய அலவன் அளை புகூஉம்
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என்
மேனி சிதைத்தான் துறை
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என்
மென் தோள் ஞெகிழ்த்தான் துறை
கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம்
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி
இரவு எலாம் தோழி அருளின என்பவை
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை
என நாம்
பாட மறை நின்று கேட்டனன் நீடிய
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை
யான் என உணர்ந்து நீ நனி மருள
தேன் இமிர் புன்னை பொருந்தி
தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே
 
மேல்



# 132
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றி சென்று_உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த_கால்
நன்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ
பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள்
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த_கால்
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு_உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை
என ஆங்கு
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி
அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே
 
மேல்



# 133
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி
நன் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்
நின் தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ பூண்க நின் தேரே
 
மேல்


# 134
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப
ஒரு நிலையே நடுக்கு_உற்று இ உலகு எலாம் அச்சு_உற
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின்
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ
என ஆங்கு
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு
விரைவனர் காதலர் புகுதர
நிரை_தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே
 
மேல்



# 135
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை
தொடி நெகிழ்ந்த தோளளா துறப்பாயால் மற்று நின்
குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின்
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின்
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ
என ஆங்கு
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே
 
மேல்


# 136 கூற்று
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த_கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ
முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால்
மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ
பாண்டியம் செய்வான் பொருளினும்
ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே
 
மேல்


# 137
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே
பலவே யாமம் பையுளும் உடைய
சிலவே நம்மோடு உசாவும் அன்றில்
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின்
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்
நகை முதலாக நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொன் முரண் முதலாக
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய்
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம்
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே
 
மேல்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஐந்தாவது நெய்தற்கலி பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்
Permalink  
 


138
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன்
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன்
எல்லீரும் கேட்டீ-மின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை
நல்கியாள் நல்கியவை
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல
உக்குவிடும் என் உயிர்
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது பைபய
தேயும் அளித்து என் உயிர்
இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
உற்றது உசாவும் துணை
என்று யான் பாட கேட்டு
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம்
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே
 
மேல்


# 139
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன்
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது
பாடுவேன் பாய் மா நிறுத்து
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன்
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காம கடல் அகப்பட்டு
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல்
உறீஇயாள் ஈத்த இ மா
காணுநர் எள்ள கலங்கி தலைவந்து என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
ஆணையால் வந்த படை
காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்
எழில்_நுதல் ஈத்த இ மா
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற
நேர்_இழை ஈத்த இ மா
ஆங்கு அதை
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம்
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர்
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என்
துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே
 
மேல்


# 140
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த
புன வரை இட்ட வயங்கு தார் பீலி
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான்
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக
நன்_நுதல் ஈத்த இ மா
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும்
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல்
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும் கண்ணோடாது இ ஊர்
தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம்
உணர்ந்தும் உணராது இ ஊர்
வெம் சுழி பட்ட மகற்கு கரை நின்றார்
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம்
அறிந்தும் அறியாது இ ஊர்
ஆங்க
என்-கண் இடும்பை அறீஇயினென் நும்-கண்
தெருள்_உற நோக்கி தெரியும்_கால் இன்ன
மருள் உறு நோயொடு மம்மர் அகல
இருள் உறு கூந்தலாள் என்னை
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே
 
மேல்


# 141
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு
ஓரொரு_கால் உள்_வழியள் ஆகி நிறை மதி
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல்
மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர்
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர்
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ
பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும்
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர்
கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர்
என்று ஆங்கே
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போல கொடுத்தார் தமர்
 
மேல்


# 142
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும்
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல்
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம்
காண்பாம் கனம்_குழை பண்பு
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லி புணர பெறின்
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை
செய்தான் இவன் என உற்றது இது என
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின்
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே
வள்ளியை ஆக என நெஞ்சை வலி_உறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால்
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய
கை உளே மாய்ந்தான் கரந்து
கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என்
தொய்யில் சிதைத்தானை தேர்கு
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை
நயந்து நலம் சிதைத்தான்
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன்
நன்று தீது என்று பிற
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவது அளித்து இ உலகு
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு
என பாடி
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல
மணியுள் பரந்த நீர் போல துணிவாம்
கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்
நல் எழில் மார்பனை சார்ந்து
 
மேல்


# 143
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நன் நுதல் நீத்த திலகத்தள் மின்னி
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல
மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன்
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார்-கண்
கழிய கதழ்வை என கேட்டு நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழிய துறந்தானை சீறும்_கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார்
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்-தலை
மாலையும் வந்தன்று இனி
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய்
அருள் இலை வாழி சுடர்
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின்
யாண்டும் உடையேன் இசை
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து
பீர் அலர் போல பெரிய பசந்தன
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது
என ஆங்கு
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர
தென்னவன் தெளித்த தேஎம் போல
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே
 
மேல்


# 144
நன்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ சென்று
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார்
நின் உற்ற அல்லல் உரை என என்னை
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன்
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு_உழி பட்டது என் நெஞ்சு
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்_வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின்
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை
கண்ணோடினாய் போறி நீ
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும்
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம்
கோதை புனைந்த வழி
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடி_உழி
உது காண் தொய்யில் பொறித்த வழி
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான்
பைய முயங்கி_உழி
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும்
வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று
ஒளி உள்_வழி எல்லாம் சென்று முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
கண்ணீர் அழலால் தெளித்து
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று
பாடுவேன் என் நோய் உரைத்து
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன்
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து
பற்றுவேன் என்று யான் விழிக்கும்_கால் மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும் அறன் இல்லவன்
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள்
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ
நீருள் புகினும் சுடும்
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய்
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு
ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே
 
மேல்


# 145
துனையுநர் விழை_தக்க சிறப்பு போல் கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி
உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள்
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து
துறந்தானை உள்ளி அழூஉம் அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும்
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி
வீழ்வார்-கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என்
கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ
கொண்மூ குழீஇ முகந்து
நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே
எல்லா கதிரும் பரப்பி பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின்
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன்
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு
மாலை பகை தாங்கி யான்
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த
கள்வன்_பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான்
தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது
வானும் நிலனும் திசையும் துழாவும் என்
ஆனா படர் மிக்க நெஞ்சு
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என்
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப
அளி புறம்மாறி அருளான் துறந்த அ
காதலன் செய்த கலக்கு_உறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றார் மருந்து
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே
ஏமராது ஏமரா ஆறு
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்று தீ
என பாடி
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு
ஆர்வு_உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார்
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய்_இழை உற்ற துயர்
 
மேல்


# 146
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன்
துன்னி அகல துறந்த அணியளாய்
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன்
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை
கூறுப கேளாமோ சென்று
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது
கேட்டீ-மின் எல்லீரும் வந்து
வறம் தெற மாற்றிய வானமும் போலும்
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து
என் மேல் நிலைஇய நோய்
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான்
நக்கது பல் மாண் நினைந்து
கரை காணா நோயுள் அழுந்தாதவனை
புரை தவ கூறி கொடுமை நுவல்வீர்
வரைபவன் என்னின் அகலான் அவனை
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்
உரை கேட்பு_உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும்
மாலையும் வந்து மயங்கி எரி நுதி
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும்
யாமம் நீ துஞ்சலை-மன்
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின்
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல்
ஓடி சுழல்வது-மன்
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
போலாது என் மெய் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே
வருத்து_உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி
செல்வேன் விழுமம் உழந்து
என ஆங்கு பாட அருள்_உற்று
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே
 
மேல்


# 147
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும்
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன்
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார்
மதி மருள நீத்த_கடை
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர்
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை
விலை வளம் மாற அறியாது ஒருவன்
வலை அகப்பட்டது என் நெஞ்சு
வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
கொலைவனை காணேன்-கொல் யான்
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல்
வானத்து எவன் செய்தி நீ
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி
தேரை தினப்படல் ஓம்பு
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே நீ
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி
சுறாஅ_கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலை_கண் கொண்டீ
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று
அறாஅ தணிக இ நோய்
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன்
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல்
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை
மெய்யாக கள்வனோ என்று
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும்
மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு
கனவினான் காணிய கண்படா ஆயின்
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின்
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன்
கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு
என ஆங்கு
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள்
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல்
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல்
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக
நல் எழில் மார்பன் அகத்து
 
மேல்


# 148
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன்
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய
துன்புற்றார் துயர் செய்தல் தக்கதோ நினக்கு
மாலை நீ
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன்
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு
மாலை நீ
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு
என ஆங்கு
ஆய் இழை மடவரல் அவலம் அகல
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே
 
மேல்


# 149
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை_கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே
 
மேல்


# 150
அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும்
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம்
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம்
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர்
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின்
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால்
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர்
புது_திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஐந்தாவது நெய்தற்கலி
  அடிநேர் உரை
# 118
வெற்றிப்புகழ் மிக்க ஒரு மன்னவன் தான் கைக்கொண்டுள்ள நல்லொழுக்கத்தால்,
நல்ல நெறிகளின்படி ஆட்சிசெய்து உயிர்களைக் காத்து மனத்தினில் நடுக்கமின்றி, தான் செய்த
முந்தைய நல்வினைகளின் பயன்களைத் துய்ப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல,
பல கதிர்களைக் கொண்ட ஞாயிறு பகற்பொழுதை நிறைவேற்றி, மலையில் சென்று சேர,
அரசனை இழந்து ஓயாமல் அழுகின்ற உலகத்து மக்களை, அந்த அரசனின்
இளையவன் வந்து காப்பது போல, பகலுக்குப் போட்டியான இருளை வெண்திங்கள் அகற்ற,
நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசனுக்கும், அவனுக்குப்பின் ஆள்வதற்கு வருகின்றவனுக்கும்
இடையே நின்ற காலத்தைப் போல வந்து நிற்கின்ற மருட்டுகின்ற மாலையே!
ஏ மாலையே! என் பொலிவு அழியும்படி என்னைவிட்டுப் பிரிந்துசென்றவரை நினைத்து வருந்துவதால், குளத்தில் பூத்த
மலர்கள் மாலையில் குவிந்துபோவதைப் போல குவிந்துபோன என் அழகிய பெண்மை நலத்தைக்கண்டு சிரிக்கிறாய்!
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் ஆரவாரிக்கும்படி, கிளைகளில் உள்ள பூக்களைப் போல் மனம் நெகிழ்ந்த
காதலரைச் சேர்ந்திருக்கும் காரிகையரின் அழகை அழிப்பதில்லை!
ஏ மாலையே! 'தை'யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
குமுறுகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்!
செவ்வழி என்னும் இரங்கல்பண் இசைக்கும் யாழின் நரம்போசை போன்ற சோகமான பேச்சினையுடையவர் அன்புசெய்து
நனவில் திளைக்கும் கலவியினால் கிடைக்கும் புதிய நலத்தை அழிப்பதில்லை;
ஏ மாலையே! அழகு மிக்க தாழ்ந்த கிளைகளில் இருக்கும் தமது இருப்பிடத்தைச் சேர்ந்து, பறவைகள் ஆரவாரிக்க,
அவற்றைக் கண்டு பொறாமைப்படும் நெஞ்சத்தினையுடைய எங்களின் சிறுமைத்தனத்தைப் பழித்துப்பாராட்டுகிறாய்!
அணைத்துத் தழுவிக்கொள்ளும் கலவியையுடைவரின், தாழ்ந்த கொடியிலுள்ள நறிய முல்லையின்
மொட்டு தம் முகத்தைத் திறந்தது போன்ற இனிய முறுவலை அழிப்பதில்லை;
இவ்வாறாக,
இந்த மாலைப்பொழுதையும், ஊராரின் பழிச்சொற்களையும் பொறுக்கமாட்டாமல் எம்மிடம்
நெஞ்சம் இன்னமும் எஞ்சியிருக்கிறதே! நம்மைப் பிரிந்து
நம்மை நினையாமல் பிரிந்திருப்போரை நினைத்துக்கொண்டிருக்கும்
உள்ளே உறுதியில்லாத உள்ளம் உள்ளுக்குள் உவந்துகொண்டு.
 
மேல்



# 119
அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு
பகலை விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு மலையைச் சேர,
வலிமை மிக்க சக்கரப்படையையுள்ள திருமாலின் நிறத்தைப் போல இருள் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து வர,
தன் ஒளியால் அதனை விரட்டுவது போன்று அழகிய திங்கள் தோன்ற,
கண்ணை மூடித் தூங்குவன போல் கணை போன்ற தண்டுகளையுடைய மலர்கள் கூம்ப,
தம் புகழைக் கேட்டவர் தலை நாணி நிற்பது போல் தலையைச் சாய்த்து மரங்கள் தூங்க,
புன்முறுவல் பூப்பவை போல் மொட்டுக்கள் தம் முறுக்கு அவிழ்ந்து புதர்களில் பொலிவுடன் விளங்க,
சிறிய மூங்கிலில் செய்த குழலின் ஓசையைப் போல வண்டுகள் ஆரவாரித்து ஒலியெழுப்ப,
பறவைகள் தம் குஞ்சுகளைத் தேடிச் செல்ல, கறவைமாடுகள் தம் வீட்டிலுள்ள
கன்றுகளின் மீது கொண்ட அளவில்லாத ஆசையுடன் தெருக்களில் நிறைந்து செல்ல,
விலங்குகள் தாம் தங்குமிடங்களை அடைய, மாலைக்காலம் பலவகையிலும் ஒளிபெற்று விளங்க,
அந்திக்காலத்தை அந்தணர்கள் தமக்குரிய சடங்குகளைச் செய்து எதிர்கொள்ள,
மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்க, இவ்வாறாக வந்த பொழுது
தூய்மையான அணிகலன் அணிந்த, பிரிந்து வாழும் மகளிரின் உயிரை அவர் உடலிலிருந்து போக்கும்
தருணமாக இருப்பதை அறியமாட்டாதவராய்
மாலைக் காலம் என்கின்றனர் மனமயக்கம் கொண்டவர்கள்.
 
மேல்



# 120
அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைப் பாராதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,
பலரும் கண்டு அஞ்சுமாறு செயல்களைச் செய்தவன் ஆகிய ஒருவனின் நெஞ்சத்தைப் போல, மெல்ல மெல்ல
இருள் வந்து நிறைந்து, தனிமைத் துயர் மேலிட, தகிக்கின்ற கதிர்களைக் கொண்ட ஞாயிறு மலையில் மறைய,
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,
சிறப்பு மிகுந்த தோற்றமுள்ள செக்கர் வானத்தில் தோன்றும் கூர்மையான நுனியையுடைய பிறையே பல்லாக,
நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே!
ஏ மாலையே! என் உள்ளத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றவர், எனக்குத் துணையாக இல்லாதபோது
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மானின் மருமத்தைக் குறிவைத்துக் கணை தொடுக்கும் கொடியவனைப் போல
அல்லலில் அழுந்தியிருக்கும் என்னை அலைக்கழிக்க வந்தாயோ?
ஏ மாலையே! இரக்கமற்ற காதலர் கருணையின்றிப் பிரிந்துசென்ற காலம் பார்த்து
போரில் தோற்றுப்போனவர்களைப் பார்த்து அவரின் தோல்வியைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடுவார் போல
பொறுக்கமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் என்னை மேலும் துன்புறுத்த வந்தாயோ?
ஏ மாலையே! எனக்கு ஆதரவாக இருக்கவேண்டியவர் என் அல்லலைக் களையாமல் இருக்கும் வேளையில்
வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சுபவனைப் போல
எரிகின்ற காமநோய் என்னும் இன்னலுள் உழந்துகிடப்பவளை இன்னமும் கலக்க வந்தாயோ?
என்று கூறும்படியாக,
ஓடி ஒளிந்துகொள்வதற்கு ஓர் இடம் இல்லாதபடி அலைத்துத் துன்பமே செய்கின்ற இந்த மாலைக் காலம்,
வெறுப்பால் வந்த துயரம் தீரும்படி, காதலன் விரைந்து வந்துசேர,
படைவலிமை இல்லாத ஓர் அரசன் ஆளும்போது, அவனுக்கு எதிராக வந்த கடுமையான பகைவர்கள்,
அந்தப் பகைவரை விரைந்து போக்கி, நீங்காமல் நின்று காத்து நடத்தும்
நல்ல திறமை மிக்க அரசன் தோன்றும்போது ஓடிவிடுவதைப் போன்று
இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து.
 
மேல்



# 121
ஒளிர்கின்ற ஞாயிறு மலையில் மறைய, உலகெல்லாம் தன் ஒளியைப் பரப்பும் இயல்பையுடையதாய்,
தெளிந்த கடற்பரப்பில் அலைகளுக்கு மேலே எழுகின்ற
குளிர்ந்த கதிர்களையுடைய திங்களின் அழகையுடைய நிலவொளி மிகுதியாய்ப் பரவ,
பறவை இனங்கள் தம் இரையை ஆர உண்டு தம் வசிப்பிடங்களைச் சேர, ஒலி அடங்கி,
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
தூங்கப் போனதைப் போன்ற கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நிலத் தலைவனே!
இவளை விட்டுப் பிரிந்து, தாங்க முடியாத காமத்தை நீ கைவிட்டதால்,
அசைவாடும் கடல்நீரில் முழங்குகின்ற அலைகள்தான் துணையாக இருந்து ஒலிக்கின்றன,
நீர்த்துளியோடே தங்கிய பூவினைப் போல் விரைவாக
பொறுக்கமுடியாமல் கொட்டுகின்ற நீரில் கிடந்து நீந்தும் கண்ணையுடையவளுக்கு;
இங்கு நீ வராமல் இவளைக் கைவிட்டதால் வருந்திய மேனியையுடையவளுக்கு,
நிறைந்த இருளே துணையாகி, அசையும் காற்று துணையாக நின்று வருத்தும்,
கமழ்கின்ற குளிர்ந்த பூந்தாதுக்கள் உதிர்ந்து விழ, வாடிய செங்காந்தள் பூவின்
இதழ்கள் நழுவி விழும் கொத்தினைப் போல முன்கையிலிருந்து கழன்று விழும் வளையலை உடையவளுக்கு;
இனிய துணையாகிய நீ இவளை விட்டுப் பிரிந்ததால், இரவுநேரத்தில் துணையாகத்
தன் துணையைப் பிரிந்து வருந்தும் தனிக் குருகு இவளிடம் வந்து விசாரிக்கும்,
ஒளிரும் சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் பிரகாசத்தால் தன் ஒளி மங்கித் தோன்றும்
நண்பகலில் காணப்படும் திங்களைப் போல் தன் பொலிவிழந்த இந்த அழகிக்கு;
என்றவாறு
ஓங்கியடிக்கும் அலையினால் தூக்கியெறியப்பட்டு வந்து விழுந்த மீனை, இனிய துறையில்,
திரும்பி வரும் அலை வருந்தாமல் கொண்டுசென்றதைப் போல், நீ நெறியிலிருந்து தாழ்ந்ததால்
மெலிந்து வருந்தியவளின் துயரத்தை
உன்னுடைய பாய்கின்ற குதிரை பூட்டிய, மிகவும் திண்ணிய தேர் சென்று போக்கினால் நல்லது.
 
மேல்



# 122
மாலைபோல் சுற்றிச்சுற்றி விளையாடும் தோழியரும், அன்னையும் அறியும்படியாகவும்,
மலர் போன்ற அழகுள்ள மைதீட்டிய கண்கள் புகழ்ந்த பெண்மை நலத்தை இழக்கவும்,
காதலித்துப் பின்னர் இரக்கமில்லாமல் நம்மைப் பிரிந்துசென்றவருக்காகக் காரணமின்றி
முதலில் சிறிதளவு சலித்துக்கொண்டாய்! அவரின் பொருந்தாத செயல்களில் ஆழ்ந்துபோனவளாய்
அவர்மீது பல குறைகளை நூற்றுக்கணக்கில் அடுக்கினாய், அதற்காக வருந்தி ஏங்கி அழுகிறாய்,
மனவருத்தப்படுகிறாய், என்றெல்லாம் கூறுகிறாயே தோழி!
இப்போது கேட்பாயாக!
மிகவும் சிறப்புள்ள அழகும் காதலும் உள்ள தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம்மைக் காணும் விருப்பமும் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்
கனிவுடன் அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
நாணமற்ற நெஞ்சம் அவனுக்காக நெகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம் வருத்தத்தைத் தீர்க்கும் குணம் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்
இரக்கம்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
மருண்ட நெஞ்சம் மகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;
ஒளிரும் அணிகலன் அணிந்த காதலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி அவன்
என்னை நினைத்துப்பார்க்கவும் செய்யாத பண்பற்றவன் என்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தும்
என்னைத் தழுவிக்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
அல்லல்படும் நெஞ்சம் மடங்கிப்போவதையும் காண்கிறேன்;
அதனால்,
நடுயாமமாகிய நள்ளிருள் வேளையில் நம் உறக்கத்தைக் கவர்ந்து ஒளித்துவைத்துக்கொண்ட
காமநோயில் ஆழ்ந்துபோன நெஞ்சம்
அவனிடமே சென்றுவிட்டால்
அதன் பிறகும் நாம் உயிர் வாழ்தல் மிகுந்த நகைப்பிற்கிடமாகும்.
 
மேல்



# 123
கரிய கொம்பினையுடைய நறிய புன்னை மலர்ந்துள்ள சிறிய கிளைகள்தோறும்
வண்டுகள் ஆரவாரிக்கும் ஓசையோடே, கரிய தும்பிகளும் சேர்ந்து ஊத,
இவை ஒன்று சேர்ந்து இம்மென்ற ஒலியோடு இசைப்பதால், பாடலுடன்
அரிய பொருளாகும் மரபினையுடைய திருமால் யாழிசையையும் கேட்டுப் பள்ளிகொண்டிருப்பதைப் போல
பெரிய கடல் துயில்கொண்டிருக்கும் வண்டுகள் ஒலிக்கின்ற நறிய கடற்கரைச் சோலையில்,
பொருள்கள் கண்ணுக்குத் தெரியாதபடி இருளைப் பரப்பி, உயிர்களைச் செயலிழக்கச் செய்யும் இரவில்
மாண்பில்லாத காமநோயைச் செய்தவனிடம் சென்றாய், அவனை நீ
காணும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது காணாமலே வந்தாயோ, அறிவுகெட்ட நெஞ்சமே?
கொல்லுகின்ற சுறாமீன் கூட்டம் யாரையும் அண்டவிடாமல் காக்கின்ற மயக்கம் தரும் மாலைப்பொழுதில்
வருத்துகின்ற காமநோயைச் செய்தவனிடம் சென்றாய், அவனை நீ
தழுவிக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது தழுவாமலே வந்தாயோ, அறிவுகெட்ட நெஞ்சமே?
ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்
செறிவான வளையல்கள் கழன்றோடுமாறு செய்தவனிடம் சென்றாய், அவன் உள்ளத்தை நீ
அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது அறியாமலேயே வந்துவிட்டாயோ அறிவுகெட்ட நெஞ்சமே?
என்று நான் கூற,
பகலும் இரவும் தூக்கமில்லாமல், பல முறை,
பொறுக்கமுடியாத வருத்தத்தையுடைய காமநோயைச் செய்தவனிடம், அவனைப் பெறுவதற்கு விரும்பி
கரிய கழியில் வருவதும் போவதுமாயிருக்கிற கடல் நீர் போலத் தடுமாறி,
வருந்துகிறாய், இரங்கத்தக்காய் நீ, என் அறியாமை பொருந்திய நெஞ்சமே!
 
மேல்



# 124
உலகங்கள் மூன்றையும் தன் அடியால் அளந்த முதல்வனாகிய திருமாலுக்கு மூத்த முறையையுடைய
பால் போன்ற வெள்ளை நிற மேனியைக் கொண்ட பலராமன் அழகுற அணிந்த
நீல நிற ஆடையைப் போல அழகைப் பெற்ற வெள்ளை நுரையைக் கொண்ட அலைகளையுடைய நீலக்கடல்
வெண்மை நிற மணல் மேட்டை வந்து சூழ்ந்துகொள்ளும் பளிச்சிடும் நீரையுடைய குளிர்ச்சியான கடலுக்குச் சொந்தக்காரனே!
ஊரார், தமக்குள் பேசிக்கொண்டிருந்த பழிச்சொற்களை உரத்துப்பேசிப் புலம்புமாறு நீ அவளை நினைக்காமல் பிரிந்துசென்றதால்
அதிகமான வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள்,
அந்தப் பேரழகி பெற்ற அழகெல்லாம் களையிழந்துபோக மனங்கலங்கிய போது
பீர்க்கம்பூவின் மஞ்சள் நிறத்தைப் பெற்ற இவளின் பிறை போன்ற நெற்றிமட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
ஊரெல்லாம் ஒன்றுகூடி பழிச்சொல்கூறித் தூற்ற, அதைப் பற்றிக் கவலைப்படாதவனாய் நீ பிரிந்துசென்றதால்,
தனக்கு ஆதரவு தருவோர் யாருமில்லாத நிலையில் வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள்,
தன் தோழியருக்குள்ளேயே மிகவும் அழகுபெற்ற தன் இயற்கை நலத்தை இழந்து இப்போது
தன் அழகிய வனப்பை இழந்த இவளின் மெத்தை போன்ற மெல்லிய தோள்கள் மட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
இன்று இந்த ஊர் பழிச்சொல்கூறித் தூற்ற, அதைப் பற்றிக் கவலைப்படாதவனாய் நீ பிரிந்துசென்றதால்,
நிலைத்து நிற்கும் வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள், 
வெற்றியைத்தரும் வேலின் நுனியைப் போன்ற சிறப்புமிக்க தன் பெண்மை நலனை இழந்து இப்போது
கண்ணீர் ஒழுகிக்கொண்டே இருக்க, அழுகின்ற நெடிய பெரிய கண்கள் மட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
அதனால்,
பிரியவேமாட்டாதவன் போல நீ தெய்வத்தின் மீது ஆணையிட்டுத் தெளிவித்தபோது
அதனைப் பெரிதாகக் கருதாமல் உண்மையென்று நம்பியவளுடைய அழகிய பெண்மைநலன் எல்லாம் மீண்டும் வர
சுருள் சுருளான பிடரி மயிரைக் கொண்ட விரைந்தோடும் குதிரை பூட்டிய உன் தேரினைச் செலுத்தி
மலர்ந்த குளிர்ந்த மாலையையுடைய அகன்ற மார்பினையுடையவனே! விரைவாகச் செல்வாயாக.
 
மேல்



# 125
தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்
தாம் நெஞ்சறியச் செய்த கொடிய தீய செயல்களைப் பிறர் அறியாமல் மறைத்தாலும், அதனை அறிந்திருக்கிறவர்களில்
தம்முடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நேரிடையான சான்று வேறு இல்லையாதலால்,
வளமான ஓட்டத்தில் பயிற்சியையுடைய வலிமை மிக்க குதிரையையுடைய செல்வனே!
அதனை நான் நன்கு அறிந்திருந்தாலும், கனிவற்ற உன் போக்கினால்
அன்பில்லாதவன் நீ என்று உன்னிடமே வந்து கடிந்துரைக்கிறேன், ஐயனே! நான் சொல்வதைக் கேள்;
மகிழ்ச்சியூட்டும் இனிய மொழியினையுடையவளின் தொய்யில் கோலம் வரைந்த இளமையான முலைகள்
பொங்கிப் பூரிக்கும்படியாக முயங்கிய உன் தொடர்பினை, அவளது மைதீட்டிய கண்களில்
பெருகிவரும் கண்ணீர் ஒழுகுவதைக் கண்டும் அவள்மீது இரக்கம் காட்டாமல் கைவிட்டிருக்கிறாயே!
ஒலிக்கும் அலைவீசும் கடற்கரைத் தலைவனே! நீ மிகக் கொடியவன்!
ஒளிரும் அழகுடன் பளபளக்கும் வளையல்களை அணிந்த என் தோழிக்கு அழகிய தழை ஆடை அணிவித்து,
அவளின் இளமை அழகு மேலும் மிகும்படி அளித்த உன் தொடர்பினை, அவள் தன் நலம் இழந்து
உன்னை வெறுத்து அழும்படி விட்டுவிட்டு, அவளைத் தழுவாமல் கைவிட்டிருக்கிறாயே!
ஒளிரும் நீர்ப்பரப்பைக்கொண்ட கடற்கரைத் தலைவனே! நீ மிகக் கொடியவன்!
இனிதான மணிகள் ஒலிக்கும் சிலம்பையும், சிறிதளவான பேச்சையும் உடைய என் தோழியின் கூந்தலை ஐம்பாலாகப்
பின்னி முடிக்கின்ற இளமைப் பருவத்தில் தொடர்பு கொண்டாய், இப்போது இவளின் விரிந்த பாம்புப்படம் போன்ற அல்குலின்
நுண்ணிய வரிகள் வாடிப்போகும்படி வராமல் கைவிட்டிருக்கிறாயே!
குளிர்ச்சியான அழகிய துறைகளுக்குச் சொந்தக்காரனே! நீ மதிப்புமிக்கவன் இல்லை!
என்று
நான் கூறியபடியான தன்மைகள் கொண்டவள் என் தோழி என்று அவளுக்கு இரக்கம் காட்டு! பெருமானே! நீ இல்லாமல்
கையின் ஓரத்தில் வளையல்கள் நிற்கமாட்டாத இவளுக்கு இனிப்
பிறையைப் போன்ற அழகிய சுடர்விடும் நெற்றியில் பசலை
மறைந்து போகும் நீ திருமணச் செய்தியை அனுப்பினால்.
 
மேல்



# 126
பொன் வளம் மிக்க மேற்கு மலையில் ஞாயிறு மறைய, அதற்காக வருந்திய உலகை நோக்கி,
தன்னைத் தலையில் தூக்கிவைத்து உலகம் கொண்டாடும்படியாக, அதற்கேற்ற தகுதியையுடைய திங்கள் எழ,
செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலத்தில் ஒலி அடங்கிப்போன கூட்டமான நாரைகள்,
முக்கோலை ஏந்திய அந்தணர்கள் தம் மறையை நினைத்து அமர்ந்திருப்பதைப் போல,
மணல் மேடுகளில் தங்கியிருக்கும் ஒளிர்கின்ற நீர்ப்பரப்பையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்குத் தலைவனே!
அழகிய சிறகுகள் கொண்ட கூட்டமான குருகுகள் ஒலிக்கும்போது, அதனை, உன்னுடைய திண்ணிய தேரின்
மணியொலி என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது
உள்ளுக்குள் அடங்கின ஒலியாக இருக்கக்கண்டு , அவை கடற்கரைச் சோலையின்
பறவைகளின் குரல் என்று தெளிந்து, பின்னர் தனிமை கொண்டு வருந்துவாள்;
நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது,
பூக்கள் மலர்கின்ற வேளையில் அவற்றை அசைத்த காற்று வந்து தன் மேனியில் மோத, கழியில் பூத்த
மலரின் மணமே அது என்று தெளிந்து பின்னர் மனமயக்கம் கொண்டு வருந்துவாள்;
நீண்ட மனையில், தன் மனத்தைக் கட்டுப்படுத்த மாட்டாதவளாய், உன்னை நினைத்துக்கொண்டிருந்தபோது
பின்புறமாக வந்து தன் தோளினை நீ தழுவுவதுபோல் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது
அதனை நனவாக எண்ணி உன்னைத் தழுவ முற்படும்போது உன்னைக் காணாதவளாய், தான் கண்டது
கனவு என உணர்ந்து பின்னர் செயலற்றுப்போய்க் கலங்குவாள்;
இவ்வாறு
பலவாறாக நினைந்து வருந்தும் பிரிவுத்துயர் மிகுந்த நெஞ்சோடு
நடுங்கும் காம நோயில் வீழ்ந்து கலங்கும் என் தோழியின்
திங்கள் போன்ற ஒளியையுடைய முகம் பொலிவுபெற்று விளங்கும்படி,
அவள் மேனியில் புதிய அழகு இடம்பெற, பூட்டுக உன்னுடைய தேரை.
 
மேல்
!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

# 127
வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கொத்துக்களையுடைய ஞாழலும், தேன் மணக்கும் புன்னையும்,
முறுக்கு அவிழ்ந்த பூக்களைக்கொண்ட தாழம்பூவும், செருந்திப்பூவும்,
வரிகளையுடைய வண்டுகள் ஒலியெழுப்பி ஆரவாரிக்க, கரிய தும்பிகள் அவற்றோடு சேர்ந்து தேனையுண்ண,
போர்த்திறம் மிகுந்த சக்கரத்தையுடைய திருமால் அணிந்திருக்கும் மாலையைப் போல, பெரிய கடற்கரையில்
நெளிநெளியான மணற்பரப்பில் சூழ்ந்துகிடக்கும் ஒளிவீசும் நீரையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்குத் தலைவனே!
கொடிய கழிகள் சூழ்ந்திருக்கும் குன்று போன்ற, நீர் சூழ்ந்த வெண்மையான மணல் மேட்டில்
உன் மனத்தை நடுக்கும் உன் காம நோய் தீரும்படியாக, நீ வரச் சொன்ன இடத்துக்கு வந்தாள் என்பதினாலா,
விரைவாகச் சுரந்த கண்ணீர் வீழ்ந்து வற்றிப்போக, கயலைப் போன்ற அழகிய கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க,
துயரத்தோடு வருந்தி அழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;
முன்னறிவிப்பின்றி பல நாட்கள் உன் விரைவான திண்ணிய தேர் வருவதைச் சரியாகக் கணக்கிட்டு
ஓங்கியடிக்கும் அலைகள் உறுமுகின்ற கடற்கரைச் சோலையில் உன்னை எதிர்கொண்டாள் என்பதினாலா,
தன் அறிவு வருத்தத்தில் ஆழ்ந்து ஏக்கம்கொள்ள, தன் அழகிய பெண்மை நலம் வற்றிப்போக,
செறிவாக இருந்த வளைகள் இவள் தோள்களில் கழன்று வீழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;
காண்பதற்கு இனிமையாகச் செய்யப்பட்ட அழகிய இடத்தைப் போன்ற இந்த அழகிய குளிர்ந்த துறையில்,
நள்ளிரவில் வந்து நீ சொன்ன இடத்தில் சரியாக இவள் நின்றாள் என்பதினாலா,
மூங்கில் போன்ற அழகை இழந்த தோள்கள், தம் ஒளிவீசும் அணிகலன்களைத் தாங்கமாட்டாமல் தளர,
பளிச்சென்ற நெற்றியில் பசலை படர இவளை நீ துறந்து சென்றாய்?
அதனால்,
கைகளில் வளையல்கள் கழன்றுபோகும்படியான துன்ப நோய் இவளிடமிருந்து தீர்ந்துபோக,
கடுமையான கதிரவன் சுட்டுப்பொசுக்கும் என்று உயர்ந்த அலைகளைக் கொண்ட கடல் விரைந்து வந்து தன்
கரையோரத்தில் செறிவாய்ப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியைக் காப்பது போல
வலிமையான நீரைக் கொண்ட கடற்கரைக்குத் தலைவனே! இரக்கமுள்ளவனாக வந்து இவளை மணந்துகொள்.
 
மேல்


# 128
நமது தோளைத் துறந்து நமக்கு அருள்காட்டாதவர் போல், நிலையாக
வாடைக் காற்று அடிப்பதால் வளைந்து நிற்கும் தாழையின்
அசைகின்ற கிளையில் இருந்த அசைவான நடையைக் கொண்ட நாரை,
நன்றாகச் செறிந்த பெரும் இரவில் நம் துயரை அறியாமல்,
நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்புகின்ற
அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனைக் கண்டவளைப் போலப்
புதிதாக ஓர் அழகினைப் பெற்றிருக்கிறாய் என்று கேட்கிறாயானால்
நனவில் வராத அந்த நயம்கெட்டவனைக்
கனவில் கண்டு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பாயாக இப்போது;
உன்னைப் பிரிந்திருந்து, வருந்தி உயிர்வாழமாட்டேன் என்று சொன்னவனைப் பிடித்துக்கொண்டு என்னுடைய
பழைய பெண்மை நலத்தைத் தருவாய் என்று அவனை வளைத்துக்கொள்வேன் போலவும்,
என்னோடு கலந்து கூடி, அங்கே நான் இழந்துபோன என் அழகை நான் திரும்பப் பெறும்படி தழுவிக்கொண்டு
புலம்பாதே இனி என்று எனக்கு அருள்செய்தான் போலவும்,
என் மார்பில் கிடந்து துயிலும் இன்பத்தையும் மறந்தாயோ என்று
நிலைகெட்ட நெஞ்சத்தவளாய் நான் அழுவேன் போலவும்,
வலையில் அகப்பட்ட மயிலைப் போல வருந்துகிறாயே பெரிதும் என்று
தன் தலை என் காலடியில் படும்படியாகப் பணிந்துகொள்வான் போலவும்,
என்னுடைய மாலையையே கோலாகக் கொண்டு, பணிந்து மன்றாடி நின்ற
ஊதைக் காற்று அடிக்கும் கடற்கரைத் தலைவனை, நான் அடிப்பேன் போலவும்,
இது என்ன பிழைப்பு என்று நடுங்கி, அங்கே
நீ பெரிதும் பேதையாக இருக்கிறாயே என்று என்னைத் தெளிவிப்பான் போலவும்,
இப்படியாகக்
கனவில் கண்டேன் தோழி! எனக்குக் காட்சிதருவதற்காகக்
கனவில் வந்த அந்த கடற்கரைச் சோலையின் தலைவன்
நனவிலும் வருவான் என்று
அந்த நம்பிக்கையின் எல்லையில் நிற்கின்றது அரிதாக எனக்குக் கிட்டியிருக்கும் என் உயிர்!
 
மேல்



# 129
பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்,
பல அண்டங்களில் வாழும் அந்த உயிர்கள் அனைத்தையும் படைத்த தன்னிடமே அடக்கிக்கொள்ளும் இறைவனைப் போல,
பகற்பொழுதைச் செய்யும் சுடுகின்ற கதிர்களைத் தன்னிடத்தில் மீட்டுக்கொண்டு ஞாயிறு மறைய,
நல்ல அறநெறிகளை நிலைநிறுத்தி உலகினை ஆண்ட அரசனுக்குப் பின்னால்
நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய,
பகற்பொழுதின் எல்லையாகிய வருத்தம் மிகுந்த மயக்கத்தையுடைய மாலையில்,
பாய்கின்ற அலைகளின் ஓசை அடங்காத பரந்த நீரைக் கொண்ட குளிர்ந்த கடலே!
நான் எந்தவிதமான ஆதரவும் இல்லாதிருக்கும்படி என்னைத் துறந்து சென்றான் துறைவன் என்று அவனால் வந்த
நோய் வாட்டுவதால் வருந்திக்கொண்டிருக்கும் எனக்காக நீயும் வருந்தி முழங்குகின்றாயோ? எம்மைப் போலக்
காதலித்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்றார் உனக்கும் இருக்கிறார்களோ?
மன்றத்தில் நிற்கும் கரிய பனையின் மடலில் வாழும் அன்றிலே!
தான் செய்த நன்மைகளை நான் சொல்வதைக் கெடுத்துவிட்டாரே அவர் என்று கலங்கிய
எனது துயரத்தை அறிந்துதான் கூவுகின்றாயோ? எம்மைப் போல
இனிய துணையைப் பிரிந்தவர் உனக்கும் இருக்கிறார்களோ?
பனியோடு கூடிய இருள் சூழ்ந்து வர, வருத்தத்தையுடைய அழகிய சிறிய குழலே!
இப்போது வந்தாலும் அவர் செய்த பிழை மிகவும் அகன்றுவிடும் என்று கலங்கிய,
தனித்திருக்கும் எனது துயரத்தைக் கண்டு வருந்துகின்றாயோ? எம்மைப் போல
இனியன செய்துவிட்டுப் பின் பிரிந்து சென்றவர் உனக்கும் இருக்கிறார்களோ?
என்று சொல்லி,
உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!
வருந்தவைக்கும் நோயைத் தீர்ப்பதற்கான வழியை அறிந்த ஒருவன்
அதற்குரிய மருந்தைத் தனக்குத் தெரியாது என்று கூறுவதைக் காட்டிலும் கொடியது, உன்னை
நுகர்ந்தோரின் நெஞ்சம் அழிந்துபோகும்படி அவரைக் கைவிட்டுவிடுவது.
 
மேல்


# 130
நல்லொழுக்கமும், வாய்மையும், நல்ல நடுவுநிலையும்
இவனிடத்தில் காணப்பட்ட நற்பண்புகள் என்று உலகத்தார் இரங்கிச் சொல்லும்படி,
சிறப்பானவற்றை மிகவும் நாடி, பொய்யை அழித்து, இனிதே ஆண்ட
அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல,
நிறைந்த ஒளிக்கதிர்களைக் கொண்ட ஞாயிறு மறைவதால் அதனோடு பகல்காலமும் செல்ல,
ஒன்றையுமே கல்லாமல், வயதுமட்டும் ஆனவனின் அறிவுக்கண் இல்லாத இருள் படர்ந்த நெஞ்சம் போல
புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும் மாலை வேளை;
இந்த மாலைப் பொழுதில்,
அந்தணர் செந்தழல் வளர்க்க, என்
செயலற்ற நெஞ்சம் கொதித்துக் காமத்தீயை மூட்டும்;
இந்த மாலைப் பொழுதில்,
கரிய கழிகளில் பெரிய மலர்கள் கூம்ப, என்
பொறுக்கமுடியாத துன்பத்தைக் கொண்ட நெஞ்சம் வருத்தத்தினால் கூம்பிப்போகும்;
இந்த மாலைப் பொழுதில்,
கோவலர்கள் தம் இனிய குழலால் துயர இசை எழுப்ப, என்
பூப்போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் தனிமையுணர்வுகொண்டு துயரத்தில் ஆழும்;
என்று கூறி,
ஞாயிறு மறையும் மாலைக் காலத்தில் துயர நோயில் உழந்துகிடப்பவளை,
குடிமக்களை பேணிப் பாதுகாக்கும் செங்கோலாட்சியையுடைய மன்னனின் பெரும் சேனை
மேற்கொண்டு செல்லச் செல்ல ஓடுகின்ற பகைவர் போல, என் காதலர் வந்து
என்னைத் தொடத் தொட ஓடிப்போகும் பசப்பு.
 
மேல்



# 131
"தெய்வமாகிய பெரிய கடலின் நீரைக் காட்டி, 'உன்னைப் பிரியேன்' என்று உறுதிசொல்லி, என்
திருத்தமான அணிகலன்களை அணிந்த மென்மையான தோள்களைக் கூடியவன் செய்த
தீர்ப்பதற்கரிய துயரத்தையும் ஒருவாறு நீக்கிவிடுவேன், பொருத்தமான இரண்டு
பூக்களின் அழகைக் கொண்ட புகழ் மிக்க அழகினையுடைய மைதீட்டிய கண்களால்
பார்க்கும்போது அந்தப் பார்வையாலேயே பிறர்க்கு வருத்தமுண்டாக்கும் சாயலை உடையவளே! தாக்குவதால்
கூட்டமான மீன்களின் பகைமை மாற, அவற்றை வென்ற கோபங்கொண்ட மீனான
அறைகின்ற சுறாமீனின் வெண்மையான கொம்புகளை இருப்பிடமாகக் கோத்து, ஒழுங்குபடுத்திய
நெய்தல் மலர்களை நீண்ட நாரால் கட்டிச் சேர்த்து, கையால் மீட்டப்படும்
யாழின் இசையைக் கொண்ட கூட்டமான வண்டுகள் ஒலியெழுப்பி ஆரவாரிக்க,
இடைவிடாமல் தேன் துளிர்க்கும் பெரிய மலர்களையுடைய குளிர்ந்த தாழையின்
விழுதைக் கயிறாகத் திரித்துச் செய்த ஊஞ்சலில் நீ வந்து ஆடினால்;
இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத்
தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய், உன் பெரிய மென்மையான தோள்களை
விட்டுப்பிரிந்தவனின் கொடுமைகளைச் சொல்லிக்கொண்டு;
வெட்கப்பட்டனவோ தோழி! வெட்கப்பட்டனவோ தோழி!
இரவு முழுதும், நல்ல தோழியே! அவை வெட்கப்பட்டுக்கிடக்குமோ?
நிலவொளியைப் போன்ற சுடர்விடும் ஒளியையுடைய மணல்மேட்டின்மேல்
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நண்டுகள் நம்மைக் கண்டதும் தம் வளைகளுக்குள் புகுந்துகொள்கின்றன!
கடற்கரைச் சோலையில் கமழ்கின்ற ஞாழல் பூவின் மஞ்சள் நிறத்தினைப் போல், தோழியே! உன்
மேனியில் பசப்பூர அதனைப் பாழ்படுத்தியவனின் துறையில்;
கார்மேகமும் விரும்பும் கருங்கூந்தலையும், மதர்த்த பார்வையைக் கொண்ட அழகிய மைதீட்டிய கண்களையும்,
ஆழமான கடலில் பிறந்த முத்தின் அழகைப் போன்ற முறுவலையும் உடையவளே!
குறையாத நோயைச் செய்தவனுடைய கொடுமையைச் சொல்லி நாம் பாடும்
மிக உயர்ந்த ஊசல்பாட்டை நீ ஒன்று பாடுவாய்!
நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்படுகின்றன தோழி! நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்படுகின்றன தோழி!
இரவு முழுவதும், நல்ல தோழியே! அவை நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்பட்டுகிடக்குமோ?
துணைவனைப் பிரிந்திருப்பவள் துயருற்று இருப்பாளோ என்று
இனிய துணையுடன் இருக்கும் அன்றில் இரவில் கூவுவது இல்லை,
முன்பொருநாள் தான் தோளில் தீட்டிய தொய்யில் கரும்பின் அழகு வாடிப்போகும்படி, உன்
மென்மையான தோள்களை மெலிந்துபோகச் செய்தவனின் துறையில்;:
"கரையை இடித்துக் கவர்ந்துகொள்ளும் வளைவான கழியினில், கண்களைக் கவரும் அழகிய பறவைத் திரள்
அலைகள் மோதுவதால் இறந்துபோன புலால் நாறும் மீன்களையன்றி,
தமக்கு இரையாக உயிருள்ள மீன்களைக் கொன்று உண்ணாத துறையைச் சேர்ந்தவனை, நாம் பாடும்
அசைந்து வரும் ஊஞ்சல் பாட்டில் நீ முன்பு பழித்துக்கூறியதை அழித்து ஒன்று பாடுவாய்!
அருள்செய்தனவோ தோழி! அருள் செய்தனவோ தோழி!
இரவு முழுவதும், தோழியே! அருள் செய்துகொண்டிருக்குமோ?
திரளாக வந்து குவியும் மணல் குவியலினால் கருங்குவளை மலர்கள் வருந்த,
ஒன்றன்பின் ஒன்றாகப் பெரிதாய் எழுந்துவரும் அலைகள் மணலைக் கரைத்து அந்தப் பூக்களுக்கு அருள்செய்யும்,
மணங்கமழும் கூந்தலையுடையவரின் ஊடலை, அதனைக் கண்டபொழுதிலேயே
வணங்கித் தீர்க்கின்றவனின் துறையில்;"
"என்று இவ்வாறாக
நாம் பாட, அதனை மறைவில் நின்று கேட்டுவந்தவனான, நீண்ட
வெண்மையான நீர்ப்பரப்பின் ஒளிர்கின்ற தன்மையினையுடைய கடற்கரைத்தலைவனை,
நான்தான் ஆட்டுவதாக எண்ணி நீ மிகவும் மருண்டுபோக,
தேனீக்கள் ஒலிக்கும் புன்னை மரத்தை ஒட்டியிருந்து
அவனே வந்து ஆட்டினான் அந்த ஊஞ்சலை."
 
மேல்



# 132
வலிமை மிக்க நீரலைகள் வந்து மோதுவதால் உயர்ந்து எழுந்து உண்டான மணல் மேட்டில்,
பல்வேறு உருவங்களுடன், தாம் விரும்பும் பெடைகள் துணையாக,
இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க, 
மூன்று முரசங்களையும் ஆளுகின்ற பாண்டியர், பகையரசரின் பகை அழியும்படி,
வரிசையான யானைகளை படைகளுக்கு நடுவே கட்டிவைத்திருந்ததைப் போல,
சிதைவுறாமல் பயணத்தை மேற்கொண்டு, சிறப்பான செல்வங்களைப் பெற்று, தாம் சென்ற காரியத்தை முடித்து
துறைக்கு வந்து சேர்ந்த மரக்கலங்கள் அவ்விடத்தையே சூழ்ந்து நிற்கும் தெளிந்த கடலையுடைய சேர்ப்பனே!
புன்னை மரங்கள் கொண்ட நறும் பொழிலில் நீ இவளுடன் சேர்ந்திருந்தபோது
'நல்ல நெற்றியையுடையவளே! நீ அஞ்சாதே!' என்று கூறியதன் பயன் அல்லவா,
படர்ந்திருக்கும் பசலையால் பகலில் ஏற்றிய விளக்குப் போல் ஆனவள்
மாந்தளிர் போன்ற தன் மாட்சிமைப்பட்ட அழகை இழந்தது;
பல மலர்கள் கொண்ட நறும் பொழிலில் நீ மனக்குறை இன்றி இவளுடன் சேர்ந்திருந்தபோது
'கொஞ்சமாய்ப் பேசுபவளே! என்னை நம்புவாயாக என்று அவளைத் தேற்றியதன் விளைவு அல்லவா,
மெலிந்து, வனப்பிழந்து, மெருகேற்றாத மணியைப் போன்று ஆனவளின்
நீண்ட முன்கையையுடைய நெடிய மென்மையான தோள்களில் செறித்த வளைகள் நெகிழ்ந்துபோனது;
அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
'வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக' என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ
பாரத்தைத் தாங்கமாட்டாத இடுப்பை உடையதால், பூக்கள் உதிர்ந்த கொடியைப் போன்றவள்
தன் காதலைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்து இந்தக் காமநோயில் அழுந்திக்கிடப்பது;
என்றவாறு,
வழிபடும் தெய்வம்தான் ஆதரவு என்று நம்பியிருந்தவர்க்குக்
குறையும் நோயைக்கூடக் கூடுதலாக்கும் கொடுமைக்காரத் தெய்வமாக ஆகியது போல,
பழிச்சொற்கள் எங்கும் பரவி, ஊரார் அலர் தூற்றுவதால், என் தோழியைப்
பெருந்துன்பம் அலைக்கழிக்க, அவளைவிட்டு இன்னும் பிரிந்திருத்தல் கொடியது.
 
மேல்



# 133
கரிய மலர்களையுடைய கழிமுள்ளி, தில்லை மரத்தோடு ஒன்று சேர்ந்த
கடற்கரைச் சோலையை ஒட்டி இருந்த உயர்ந்த மணல் மேட்டின் மேல்
புகழ் மிக்க தட்சிணாமூர்த்தி தான் உறையும் ஆலமரத்து அடிமரத்தில் முன்னே எடுத்து வைத்திருந்த
நீர் நிறைந்த கமண்டலம் போல பழங்கள் தொங்கும் வளைந்த தாழையின்
பூக்கள் மலர்ந்தவை போல் குருகினம் அந்தத் தாழை மேல் தங்கியிருக்கும் துறைவனே! கேட்பாயாக!
இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்,
பேணிப் பாதுகாத்தல் என்பது கூடினவரைப் பிரியாதிருத்தல்,
பண்பு எனப்படுவது உலக நடப்பு அறிந்து அதன்படி நடத்தல்,
அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைக் கோபிக்காதிருத்தல்,
அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்,
செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,
நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்,
முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றத்திற்கேற்ற தண்டனை கொடுத்தல்,
பொறை எனப்படுவது தம்மைப் போற்றாதவரையும் பொறுத்துக்கொள்ளுதல்,
இவ்வாறு சொன்னவற்றை அறிந்து அதன்படி நடப்பவரென்றால், என் தோழியின்
நல்ல நெற்றியின் நலத்தை நுகர்ந்து அவளைக் கைவிடுதல், கொண்கனே!
இனிய பாலைக் குடித்தவர் பின்பு அந்தக் கலத்தைத் தூக்கியெறிவது போலாகும்,
உன்னையிட்டு வருந்தியவளின் துயரத்தை,
விரைந்து சென்று களைவாயாக! பூட்டுக உன் தேரை!
 
மேல்


# 134
மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய திருமால்
தன்னொடு உடன்படாதார் சிதறியோடும்படியாகச் சினம்கொண்டு வேகமாக எறிய,
கொல்லுகின்ற யானையின் அழகிய நெற்றியில் ஆழப்பதிந்த சக்கரப்படையைப் போல,
மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களையெல்லாம் திரும்பவும் உள்வாங்கிக்கொண்டு மறைவதால்,
கரிய கடல் பேரொலி எழுப்பி, அங்கே இரவைக் காண விரும்புவது போல
பெரிய கடலில் ஓதநீர் பொங்கி எழுந்து கரையினைச் சேர,
வண்டுகள் போய்விட்டதால் வனப்பிழந்த துறையில்,
துயில் கொள்பவை போல நீர்மலர்கள் தம் வாயினை மூடிக்கொண்டு கூம்பி நிற்க,
ஒருசேர நடுக்கம்கொண்டு இந்த உலகம் எல்லாம் அஞ்சிநிற்கும்படியாகப்
பூமியே பிளப்பது போன்ற பெருந்துன்பம் மிகுகின்ற மனத்தைக் கலங்கவைக்கும் மாலைப் பொழுதில்,
குறையாத காமநோயை எனக்குக் கொடுத்தவரைக் காணாமல் அவரையே நினைத்துக்கொண்டிருத்தலால்
மாறுபட்டுத் துயர்தரும் பனிக்காலம் என்னைக் கொல்ல, வருத்தத்தில் ஆழ்ந்து, அங்கே
கவலைகொண்ட நெஞ்சத்தினளாய் நான் மனம் கலங்கி நிற்க, கடல் அதனைப் பார்த்து
அந்த அவலத்தைத் தான் அனுபவிப்பது போல அரற்றுகின்றதே! அது எதனாலோ?
நடுக்கும் நோயை எனக்குக் கொடுத்தவர் அருள்புரியாமற் போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால்
கொடிய பனிக்காலம் மிகுந்து செயலற்ற நிலையில் ஆழ்ந்து, அங்கே
நடுக்கும் நோயில் உழன்று என் நலமெல்லாம் அழிய, மணல் அதனைப் பார்த்து
இடும்பை தரும் அந்த நோய்க்காகத் தான் இடிந்து விழுகிறது போல் இருக்கிறதே! அது எதனாலோ?
என்னோடிருந்து என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை  நினைத்துக்கொண்டிருத்தலால்
செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து அங்கே
மையல் கொண்ட நெஞ்சத்தோடு மயங்கியிருக்க, மரம் அதனைப் பார்த்து
அந்தத்துன்பத்தால் தாம் பதிக்கப்பட்டது போல் இலைகளைக் குவித்துக்கொண்டதே! அது எதனாலோ?
என்று இவள் சொல்ல,
கரை காணமுடியாத பெருங்கடலில் மரக்கலம் கவிழக் கடலுள் மூழ்கியவன்
அலைகள் கொண்டுவந்து தந்த ஒரு மிதவையைப் பெற்றுத் தீங்கு நேராமல் கரை சேர்ந்ததைப் போன்று
காதலன் விரைந்து வந்துசேர,
அடுக்கிய வளையல்களைக் கொண்ட இவளின் அவலம் அகன்றுபோனது விரைவாக.
 
மேல்



# 135
துணையுடன் சேர்ந்து இரட்டையாகக் கடலிலிருந்து எழுகின்ற வெண்மை நிறச் சங்குகளே
இணையாகத் திரண்ட கொம்புகளாக, வீசுகின்ற காற்றே பாகனாக,
வேல் நுனிகள் செருகப்பட்ட உயர்ந்த கதவு அமைத்து, வாசலை அடைத்து அழகு செய்த
கோட்டை மதிலைக் குத்தி அழிக்கும் யானைப் படையைப் போல, மணல் மேடாகிய உயர்ந்த கோட்டையை
பயிற்சிபெற்ற கடலலைகள் நள்ளிரவில் பாய்ந்து தாக்கும் துறைவனே! கேட்பாயாக!
மணக்கின்ற மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் மாண்பை இழந்த இக் காரிகையை
வளையல்கள் கழன்று விழும் தோளினையுடையவளாக மாற்றிவிட்டு அவளைத் துறப்பாயேல், அது உன்
குடிப்பெருமைக்குப் பெரிய குற்றமாய் அமையாதோ?
அழகிய மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் அழகிய நலத்தை இழந்தவளைக்
காமநோய் மிகுந்த நிலையினளாய் மாற்றிவிட்டு அவளைக் கைவிடுவாயேல், அது உன்
வாய்மையே வழங்கும் வாழ்க்கையில் பொய்யும் இடம்பெற்ற பெரிய வஞ்சமாய் முடியாதா?
ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
மலர்கள் இகழும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன்
புகழுக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா?
என்று நான்
கடுமையாக உன்னிடம் சொல்லக் கேட்டாயாயின்
அழகு விளங்கும் நெடிய மலையையும் வருத்தும் உன் மார்பினில்
மணிகள் ஒளிவிடும் முத்துவடம், மாலையோடு சேர்ந்து அசைய,
மனம் வருந்திப் பெருமூச்சுவிடும் என் தோழிக்காக,
ஓடுகின்ற போது எழும் ஒலியுடன் கூடிய உன் நெடிய திண்ணிய தேரை விரைவாகச் செலுத்துவாயாக.
 
மேல்


# 136
ஊர்ந்து செல்லும் மீன்படகுகளை ஓங்கியடிக்கும் அலைகள் ஒன்றுசேர்ந்து வந்து கரையினில் மோதும்போது
நீர் சுரக்கும் உயர்ந்த மணல்மேடுகளில் தன் வளையிலிருந்து வந்த நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,
தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,
அந்தக் சூதாட்டக்காய் ஏற்படுத்திய கோடுகளைப் போன்றிருக்கும் காண்பவர் விரும்பும் அழகினையுடைய கடல் நாட்டுச் சேர்ப்பனே!
முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?
வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?
இவ்வாறாகப்
பழிசொல்வதை மேற்கொண்டு பலரும் தூற்றும் பழிச்சொற்களுக்கு நீ அஞ்சமாட்டாய்!
இவளை மணந்துகொள்ள அருளுள்ளம் கொண்டு, அதற்கான வழிவகைகளை அறிந்து அதற்காக முயல்வாயாக!
உழவுத்தொழில் செய்கின்றவன் ஈட்டுகின்ற பொருளைக் காட்டிலும்
இவள் நலம் சிறந்து விளங்கட்டும், தேரில் ஏறுக!
 
மேல்


# 137
அரிதாக இருக்கின்றது, தோழி! நாணத்தை விடாமல் நம்மிடம் நிறுத்திப் பேணுவோம் என்ற உணர்வுடன் இருப்பது,
நான் கொண்ட காமம் மிகப் பெரியது, ஆனால் அதைத் தாங்கும் என் உயிரோ மிகச் சிறியது,
நமக்கு வருத்தத்தைத் தரும் பல யாமங்கள் வந்து போகின்றன,
இருப்பினும் நமக்குத் துணை மிகவும் சிலவே, அவையும் நம்மோடு அளவளாவும் அன்றில் பறவைகள்,
நெருப்புப்போல் ஒளிர்ந்து சுடர்வீசும் அணிகலன்கள் புரண்டு புரண்டு படுப்பதால் ஒலியெழுப்ப, துன்புற்று,
பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி, படுக்கையில்
நெருப்பாகக் கொதிக்கிறது மேனி, அவருடன் மகிழ்ந்திருந்ததனால் கிட்டிய பயன்;
எனது மென்மையான நெஞ்சில் வருத்தம் மிகும்படியாகத் தன்
வாக்குத்தவறிய சொல்லம்புகளால் என்னைத் துளைத்தாரே அன்றி, அவர் நம் மேல்
வல்ல ஒருவன் செய்த வடிவத்தில் திருத்தமான, விரைந்து செல்லக்கூடிய
வில்லின் அம்புகளை விட்டது இல்லை, அழகிய இழையணிந்தவளே!
வில்லம்பிலும் கொடியது அவர் சொல்லம்பினால் பிறந்த நோய்;
சிரிப்பைத் தொடக்கமாகக் கொண்டு எழுந்த நட்பிடையே தோன்றிய
அவரது நற்பண்புகளால் நான் நலிந்துபோகிறேனே அன்றி, அவர் நம் மீது கொண்ட
பிரிவினைகளால் எழுந்த பழைய விரோதத்தைத் தொடக்கமாகக் கொண்ட
பகைமையினால் நான் நலிந்துபோவதில்லை, அழகிய இழையணிந்தவளே!
பகைமையிலும் கொடியது அவரது பண்புகளால் நான் நலிகின்ற நோய்;
உன்னைவிட்டுப் பிரியேன் என்று சொல்லி என்னைத் தன் அன்பினால் கட்டிப்போட்டுத் தனது
மென்மைப் பண்புகளால் என்னைச் சுடுகிறாரே அன்றி, அவர் நம்மைப்
பரவுகின்ற இருளை முற்றிலும் நீக்கித் துன்பத்தை அகற்றும் நீண்ட கொழுந்தினையுடைய
தீயினால் சுடுவது இல்லை, அழகிய அணிகலன்கள் அணிந்தவளே!
தீயிலும் கொடியது, அவர் மென்மையால் மேலோங்கி எரியும் காம நோய்;
இவ்வாறாக,
காதலர் இப்படிப்பட்டவராக இருப்பதால், அவர் நமக்கு
நமது இனிய உயிரைக் காக்கும் மருத்துவராக இருப்பது
எப்படி ஆகும், தோழியே! கொஞ்சங்கூடத்
தாங்கிக்கொள்ளும் வலிமையும் இல்லை, மேலும்
அதனின்றும் நீங்குவதும் அரிதாக இருக்கின்றது, அவர் நமக்குத் தந்த நோய்.
 
மேல்




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

# 138
அழகிய கொம்பினைக்கொண்ட அழகிய யானை, வடிகின்ற மதத்தால்
தான் செய்யவேண்டிய தொழில்களைத் தவிர்த்து, தன்னை அடக்குகின்ற அங்குசத்திற்கு அடங்காமற் போவது போல
என் அறிவும், அந்த அறிவினால் ஆராய்ந்துபெற்ற அடக்கமும், நாணவுணர்வும்
என்னைவிட்டு நீங்க, பிறர் என்னைப்பார்த்துச் சிரிக்கும்படி, சிரிப்புடன்
மின்னலைப் போல ஒளிவீசி மறைவது போலவும், கனவு போலவும் தன் மேனியைக் காட்டி,
என் நெஞ்சம் என்னோடு நில்லாமலிருக்கும்படி அதனை மிகவும் கவர்ந்துகொண்டு,
தன்னுடைய நலத்தை நான் காணாதவாறு மறைத்துக்கொண்டவளை அடைகின்ற வழிதான் எதுவோ?
நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,
வளம் நிறைந்த ஊரின் தெருவில் இவளைப் பாடுகின்றேன், இவன் ஒருத்தன்,
'எல்லாரும் கேட்பீர்களாக' என்று;
துன்பமும், பனை மடலால் செய்த குதிரையும், ஒளிவீசும் அணிகலன்களை அணிந்தவளான
என்னால் காதலிக்கப்பட்டவள் எனக்குக் கொடுத்தவை;
என்னுடைய உயிரைத் தாங்கிக்கொண்டிருப்பது என்னிடத்தில் இல்லை, பொலிவுள்ள நெற்றியையுடையவள் தந்த
மனவுறுதியை அழிக்கின்ற காம நோயை நீந்தி, உப்புப்பாத்தியில் கிடந்த
உப்பால் செய்யப்பட்ட பாவை மழைநீரில் கரைவது போல்
அழிந்துவிடும் என் உயிர்;
பூளையும், பொன் போன்ற மலரான ஆவிரம்பூவும், மூங்கிலையும் வென்ற
தோளையுடையவள் எனக்குத் தந்த பூக்கள்;
எனக்குரித்தான என் இயல்புகள் இப்போது என் வசம் இல்லை, ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவள் தந்த
என் இயல்பையே அழிக்கின்ற துன்பத்தைத்தரும் காமநோய்க் கடலுள் மூழ்கி, தீப்பிடித்து எரியும்
நெய்க்குள் போட்ட மெழுகினைப் போல நிலைக்காமல் மெல்ல மெல்ல
தேய்ந்து போகின்றது, இரங்கத்தக்க என் உயிர்;
இளைஞர்களும், இதனோடு தொடர்பற்ற அன்னியர்களுமே இந்த வலியில் நான் படும்
வேதனையை ஏனென்று கேட்கும் துணைவர்கள்;
என்று நான் பாடுவதைக் கேட்டு,
அன்பு நிறைந்த மொழியினையுடையவள் என்மீது அருள்கொண்டு வந்து எனக்கு இரக்கம் காட்டியதால்,
துன்பத்தில் துணையாக இருந்த இந்த மடல், இனி, இவளைப் பெற்றதினால்,
இன்பக் காலத்தில் இடம்பெறாமல் ஒழிக என்று மனம் இரங்கினாள், பக்தி மேலிட்டு
அளவில்லாத மேன்மையை உடைய அரிய தவத்தைச் செய்தோர், தம்
உடம்பினை விட்டுவிட்டு விண்ணுலக வாழ்வினை இனிதாகப் பெறுவது போல.
 
மேல்


# 139
சான்றோர்களே, சான்றோர்களே! நீர் வாழ்க! எப்பொழுதும்
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதி, அதனால் வரும் அறப்பயனை அறிந்து வாழ்தல்
சான்றோர்கள் எல்லாருடைய இயல்பு என்பதால், இங்கிருக்கும்
சன்றோர்களே! உங்களுக்கு ஒன்றனை எடுத்துச் சொல்வேன்! மயங்கவைக்கும்
மழையிடையே வரும் மின்னலைப் போல் தோன்றி, ஒருத்தி
தன் ஒப்பனையுடன் தன் உருவத்தையும் எனக்குக் காட்டுமளவுக்கு என்மேல் கருணைகொண்டாள், என்
நெஞ்சத்தை வழியாகக் கொண்டு என்னுள் வந்துவிட்டாள், அது முதல் துயில்கொள்ளேன்,
அழகுடன் அசைகின்ற ஆவிரம்பூவுடன், எருக்கம் பூவையும்
சேர்த்துக்கட்டிய அழகிய தலை மாலை சூடி, மணிகள் ஒலிக்க,
உயர்ந்து வளர்ந்த கரிய பனையின் மடலால் செய்த குதிரையில் ஏறிக்கொண்டு, என்னுடைய காம நோயைத்
தாங்கமாட்டாமையால் உண்டான மனவருத்தத்திற்கு இளைப்பாறுதலாக,
இறுக்கமான அணிகலன்களை அணிந்த மங்கையைப் பற்றி ஒன்றுவிடாமல்
பாடுகிறேன், இந்தக் குதிரை மடலை மனத்திலே நிறுத்தி;
இரவிலும் பகலிலும் இந்தத் துன்ப அலைகள் என்னை அலைக்கழிக்க,
மடல்மா மேலே இருக்கிறேன் என்று சொல்லியவாறே, அந்த மடல்மாவே தெப்பமாகக் கொண்டு நீந்துகிறேன்
தேன் போன்ற மொழியைக் கொண்ட அந்த மங்கை தான் காதலிக்காமல், என்னைக் காதலில் வீழ்த்திய
காமமாகிய கடலில் அகப்பட்டு;
உயிர்வாழ முடியாத இந்த அரிய நோய்க்கு, உயிர் காக்கும் வழி ஆகும், இந்த மையலில்
என்ன வீழ்த்தியவள் எனக்குத் தந்த இந்த மடல்மா;
பார்த்தவர் சிரிக்கும்படியாக நான் கலங்க, என் முன் தோன்றி, என்
ஆண்மைப் பொலிவு என்ற கோட்டையை முற்றுகையிட்டு அதனை உடைத்து என் உள்ளத்தை அழிக்கிறது,
சிறந்த அணிகலன்களையுடைய மங்கையின் அழகு என்ற வடிவில் காமனது
ஆணையால் வந்திருக்கும் படை;
காமம் என்ற கொடிய பகையால் இவ்வாறு வந்து நின்றவனுக்கு, அரணாக அமைகிறது,
அழகிய நெற்றியையுடையவள் தந்த இந்த மடல்மா;
சுட்டெரிக்கும் காமத்தீ எல்லை கடந்து என் அரிய உயிரைப் போக்குகின்ற
வகையில் உள்ளத்தைச் சுடுகின்றது,
முல்லை அரும்புகளின் அழகைப் பெற்று ஒளிவிடும் பற்களையும், இனிய சிரிப்பையும் கொண்ட மங்கையின்
அழகால் அவளுக்கு ஆட்பட்டுவிட்ட என் நெஞ்சில்;
இந்தக் காமமாகிய பொறுப்பதற்கு அரிய நோய் கொழுந்துவிட்டெரியும் நெருப்பென்றால், குளிர் நிழலாய் இருப்பது
நேர்த்தியான அணிகலன் அணிந்தவள் தந்த இந்த மடல்மா;
என்று நான் கூற,
இதை நீங்கள் அறிவீராயின், சான்றோர்களே! தான் தவ முறையிலிருந்து
விலகி, விண்ணுலகம் செல்லும் நெறியில் வழுவி, பெரியோர்
உயர்நிலைக்கு உரியவன் என்று எண்ணிய ஓர் அரசனை, மீண்டும் நல்வழியில் ஈடுபடுத்தி, அந்தப் பெரியோர்
அவனைப் பேரின்ப உலகம் சேர்ப்பதைப் போன்று, என்
துயர நிலையைத் தீர்த்துவைப்பது உங்களது முதன்மையான கடமையாகும்.
 
மேல்


# 140
பார்த்தவர் அனைவரும் விரைந்து வந்து, இந்த ஊரில்
முன்பு என்னைத் தெரியாததைப் போல் பார்க்கிறீர்கள்; நான் ஏறிக்கொண்டிருப்பது
குதிரை என்று உணருங்கள், இது மடல் அன்று, மேலும் இவை
பூக்கள் அல்ல, பூளை, உழிஞை இவற்றோடு சேர்த்துக் கட்டிய
தினைப்புனமுள்ள மலையில் மயில்கள் உதிர்த்த பீலியுடன் சேர்ந்த மின்னுகின்ற மாலை இது,
கையால் பிடிப்பதற்கான கடிவாளத்துடன், சேர்த்துக்கட்டிய மணிகளைக் கழுத்தில் கட்டி,
பொன் தகட்டின் பளபளப்பைப் போன்றிருக்கும் ஆவிரம் பூவால் செய்த தலை மாலையைச் சூடி,
திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட
சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், இதனை நீங்கள் வெறுக்கவேண்டாம்,
நான் அப்படிப்பட்ட ஒருவன்தான்;
பாடு என்று நீங்கள் சொன்னால், எப்படியாயினும் என்னால் பாட முடியும், இங்கேயே சிறிது
ஆடு என்று சொன்னால் சிறிது ஆடவும் செய்வேன், பாடுவேனோ,
உன் உள்ளத்தில் இருக்கும் காமநோயைத் தணிக்கும் மருந்தாக
அந்த அழகிய நெற்றியையுடையவள் எனக்குத் தந்த இந்த மடல்மாவை;
திங்களைப் பாம்பு பற்றினால் அதனை விடுவிக்க இயலாதவராயினும்
அந்தத் திங்களிடம் அன்புகாட்டுவர் சான்றோர், இனிய சாயலையுடைய
ஒளிரும் வளையணிந்தவளின் நோய் செய்யும் பார்வையில் அகப்பட்ட என் நெஞ்சத்துக் காமநோயைக்
கண்டும் என்னைப் பரிவுடன் பார்க்காது இந்த ஊர்;
தாங்காத சினத்தோடு படமெடுத்து உயிர்களைப் போக்கும்
பாம்பும், நல்லோர் சபையில் புகுந்தால் பிழைத்துச் செல்லலாம், பூப்போன்ற கண்களையும்,
நீண்டு மடங்கிய செழித்த கூந்தலையும் உடையவள் ஏற்படுத்திய இந்தக் காமநோயை
உணர்ந்திருந்தும் அதனைத் தீர்ப்பதற்கான வழியை உணராது இந்த ஊர்;
கொடுமையான நீர்ச்சுழியில் அகப்பட்டுக்கொண்ட ஒருவனைப்பார்த்துக் கரையிலிருப்போர்
பயப்படாதே என்று சொன்னாலும் அவன் சற்று ஆறுதல் பெறுவான், அழகும் நேர்த்தியும் கொண்டு,
அடக்கமும் தோற்றப்பொலிவும் உடைய முறுவலையுடையவள் ஏற்படுத்திய இந்தக் காமநோயை
அறிந்திருந்தும் அதனைத் தீர்ப்பதற்கான வழியை அறியாது இந்த ஊர்;
இவ்வாறாக,
என்னிடத்தில் உள்ள வருத்தத்தை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன், இனி நீங்கள்
இதைத் தெளிவுறப் பார்த்து ஆராயும்போது, இப்படிப்பட்ட
மயக்கமுறும் காமநோயுடன் அதனாலுண்டான கலக்கமும் நீங்கும்படியாக,
இருள் செறிந்த கூந்தலையுடையவள் என்மீது
இரக்கம்கொள்ளும்படி செய்தால் அது உங்களுக்கு நல்லறமாகும்.
 
மேல்


# 141
அரிதாகக் கிட்டிய இந்த உடம்பின்மேல் ஆசைகொண்டு, தாம்
விரும்பியவற்றைச் செய்து, அவற்றை மற்றவர்க்கும் காட்டி, முற்பிறப்பில்
அறம் பொருள் இன்பம் ஆகிய இந்த மூன்றினில் ஒன்றாகிய அறத்தின்
வழியே சேராதார், இப்பிறப்பில் செய்யும் தொழில்களில் ஒன்றாக நூல்கள் தெரிவிக்கின்றன,
அழகான நிலையிலிருக்கும் பனை மடலால் செய்த குதிரையில் ஏறிவந்து, ஒருத்தியின்
அழகிய பெண்மை நலத்தைப் பாடி வருவது;
ஒரு சமயம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பவளாகி, பின்னொரு சமயம், நிறைமதியின்
நீருக்குள் இருக்கும் நிழலைப் போலக் கையில் பிடிப்பதற்கு அரியவள் ஆகிவிடுகிறாள், போர்க்களத்தில்
வலிமை மிக்க குதிரை மீது அமர்ந்து போரிடும் என்னை, இந்த மடல்மா மேல்
மன்றத்தில் நிற்கச் செய்தவள், வாழ்க, நீவிர், சான்றோர்களே!
பொய்மை அற்ற நன்மக்கள் போற்றிப்புகழும், கீழ்த்திசையில் தோன்றும்
களங்கமற்ற ஞாயிற்றைப் பிடிப்பதற்கு விரும்புவதைப் போன்ற அவள், இந்த உலகத்துக்கே
உணவு கொடுத்துக் காக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட என்னை, அவளிடம் இரந்து நிற்கும்
கொடிய துன்பத்தைச் செய்தாள், கேளுங்கள், சான்றோரே!
என் கண்ணுக்கு மறைந்திருந்து, கேடு செய்யும் நோயை எனக்குச் செய்கிறாள், இப்படிப்பட்டதோ,
அழகுத்தேமல் பரந்த, மூங்கில் போன்ற தோள்களையுடைவளின் பண்பு?
இடியை உமிழ்கின்ற வானத்தில், இரவுநேர இருளைப் பிளந்துகொண்டு வெளிப்படும்
கொடி மின்னலைப் பிடிப்பேன் என்பது போலக் கைப்பற்ற அரியவள், திருத்தமான நாவன்மையால்
வல்லவர்கள் முன்னால் சொல்லாடக் கூடியவனான என்னைப் பிறர் முன்னர்
கல்லாதவனாய்க் காட்டிவிட்டாள், வாழ்க, நீவிர், சான்றோரே!
என்றவாறு,
கண்டோர் வருந்த, மடல்மா மீது ஏறி, ஊர்த்தெருவில் நின்று நான் பாட,
திருத்தமான அணிகலன்களை அணிந்தவளுக்கு ஏற்ற சொற்களைக் கேட்டு, அங்கு,
பகைவர்கள், போரில் வல்ல பாண்டியனுக்கு அரிய திறைப்பொருளைக் கொடுப்பது
போல, அவள் வீட்டார் பெண்ணைக் கொடுத்தனர்.
 
மேல்


# 142
மனம் விரும்பிய உறவுக்காலத்தில், அதற்குரிய தழுவுதல் நிறைவுபெறாத அளவில்,
இருவருள் ஒருவரை அந்த உறவுக்கு அரிதானவராகப் பிரித்துவிடுவதால், ஆராய்ந்து பார்க்கும்போது,
நரம்பை இயக்க, அதில் நின்ற பண்ணினுள் தோன்றிய இனிமையைச் செவி சுவைப்பதற்கு முன்னே,
அந்த இசைப்பயன் கெட்டுப்போகும்படி, முறுக்கு அறுந்துபோகும் நரம்பைக்காட்டிலும்
பயனற்றதாகும் காமம், இவளைப் பொருந்திச் சூழ்ந்திருக்கும்
ஒளிவிடும் நெற்றியையுடைய தோழியர் எல்லாரும் ஒன்றாகக் கூடிச் சிரிக்கும் காலத்திலும்,
முள்ளின் நுனை போன்ற தன் பற்கள் வெளியில் தெரியாமல் புன்முறுவல் கொண்டு, சிரிப்பை அடக்கித் தன்
கண்ணாலும், முகத்தாலும் மட்டுமே சிரிக்கும் இயல்புடையவள், இப்போது பெண்தன்மை இல்லாமல்
எல்லாரும் தன் இனிய குரலைக் கேட்கும்படி, வரிசையான வெண்ணிறப் பற்களின்
மேல் ஈறு தெரியும்படி, சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, உடனேயே
பூக்கள் உயிர்கொண்டவை போன்ற புகழ்மிக்க தன் அழகிய மைதீட்டிய கண்களின்
அழகிய இமைகளில் நீர் பெருகும்படி அழுவாள்;
ஓ! நம்மை வருத்தும் என்றும் பாராமல், அல்லலுடன் கிட்டேயிருந்து
காண்போம் இந்தப் பொற்குழையணிந்தவளின் அல்லல் நிறைந்த குணத்தை;
என்று கருதி வந்து நீங்கள் எல்லாரும் என்ன காரியம் செய்கிறீர்கள்? என்னைப் பார்த்துச் சிரிக்கின்றீர்களா?
நீங்கள் பெரிதாகச் சிரிக்கமாட்டீர்கள்! நான் படும்
வேதனையை எனக்குக் கொடுத்தவனின் மாயத்தைச் செய்த மலர்ந்த மார்பினை
நான் தழுவி அவனைச் சேரப்பெற்றால்;
ஏடி! நீ படும் வேதனை என்ன? என்று கேட்பீர்களென்றால், எனக்கு இந்த மனச் சிதைவைத்
தந்தவன் இவன் என்றும் அவன் அளித்த வேதனை இப்படிப்பட்டது என்றும்
உங்களுக்குப் புரியக்கூடிய வகையில் உரைக்கின்ற தெளிவு என்னிடத்தில் இருக்குமானால்,
மிகவும் துன்புற்று, ஒளியிழந்து பசந்துபோகுமோ என்
நெய்தல் மலரைப் போன்ற கண்கள்?
சிற்றில் விளையாடி, தலைவர் வருவாரா என்று காண மணலில் வட்டங்கள் இட்டேன், அதில் முனைகள் கூடாமல்
பிறை தோன்றிற்று, எனவே, தலைவர் வாரார் என அறிந்து, அந்தப் பிறைநிலவை
என் ஆடையால் மூடி மறைத்துவிட்டேன், ஆனால் தலையில் சூடுவதற்காகக்
காணாமல் அலைவான் அல்லவா, மணி நிறத்தைக் கழுத்தினில் கொண்ட
மாண்பு மிக்க மலரான கொன்றையைச் சூடிய சிவபெருமான் என்று எண்ணி,
நாம் தெளிந்த அறிவுடையோம் என்று சொல்லிக்கொண்டு, ஆராய்ந்து பாராமல், அதை நிலைநாட்டும் வகையில்
அப் பிறையைச் சிவனுக்கே அளித்து, வள்ளல் என்ற பெயரைப் பெறுவாயாக என்று நெஞ்சிற்கு உறுதியளித்துவிட்டு,
காதலர் நம்மை நினைத்து வருவாரோ?, வருந்தி நான்
இவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணியபடி இருக்க, நள்ளிரவில்
மாந்தர் காவல் காத்துத்திரியும் இரவில், கனவில்
தோன்றினான், உடனே அவனை வளைத்துப் பிடித்தேன் நான், பின்னர் அவனைக்
காண்பதற்காக மெல்லக் கண்விழிக்க, நான் பிடித்திருந்த என்
கைகளுக்குள்ளே தன்னை ஒளித்து மறைந்துவிட்டான்;
கதிர்களை யாருக்கும் பகிர்ந்தளிக்காத ஞாயிறே! நீ மலையில் மறைவாயானால்,
அவரை நினைத்து, அவருள்ள இடத்தில் அவரை நிறுத்திப்பிடித்து, என் கைவரை நீட்டி
உன் கதிர்களைத் தருவாயானால், அணைந்துபோகும், என் நெஞ்சத்தில்
என் உயிரையே திரியாகக் கொண்டு கொளுத்திய காமத்தீ;
களங்கமற்ற சுடரே! நீ மேற்கில் மலையில் சென்று மறைவாயானால்,
கிழக்கில் கடலில் தோன்றிப் பகலைச் செய்யும் வரை,
எனக்குக் கைவிளக்காக உன் கதிர்கள் சிவற்றைத் தருவாய்! என்
தொய்யில் அழகைக் கெடுத்தவனைத் தேடிப்பிடிப்பதற்காக;
என்னைச் சிதைத்தவனை நான் வேறு என்ன செய்யமுடியும்? என்னை முதலில்
விரும்பி என் அழகையெல்லாம் அவன் சிதைத்துவிட்டான்;
ஊர் மன்றத்துப் பனை மரத்தின் மேல் சூடியுள்ளதைப் போல் தோன்றும் மாந்தளிர் போன்ற மாலை வெயிலே!
பழங்காலந்தொட்டு இந்த உலகத்தில் நான் கூறுவதைப் போலக் கேட்டு அறிந்திருக்கிறாயா?
என்னுடைய மென்மையான தோள்களை மெலியப்பண்ணியவனின் சிறப்புகளையல்லாமல் நான் காணேன்
அவன் செயல்களிலுள்ள நன்மை, தீமை என்று பிறவற்றை;
காம நோய் தீயாக என்னைச் சுட்டாலும், கண்ணீரை என் கண்களுக்குள் சுழலச் செய்து என்
அழகிய கண்ணிமைகளுக்குள் அடக்கிக்கொள்ளுவேன், அவ்வாறு மறைத்துக்கொள்வதால், கண்களில் தோன்றும்
காமத்தால் உண்டான சூடான நீரை நிலத்தில் சிந்தினால், அழியும்படி
வெந்துபோகும் இரங்கத்தக்க இந்த உலகம்;
என் உயிர் மெலிந்துபோகுமளவும் பொறுத்திருக்கிறேன்; இந்தத் துன்பத்தைக் களைவீராக! சான்றோர்களே!
என்னை நலிந்துபோகச் செய்யும் காமமும், ஊரார் பழிச்சொல்லும் என்ற இவை
வலிமையான என் உயிரின் இரண்டு பக்கமும் காவடி தொங்குவதைப் போல் என்னை
நலியச்செய்யும் இரண்டு துன்பங்களாக இருக்கின்றன;
என்று பாடி,
வருந்தி நொந்து அழுதாள், நினைத்துப் பெருமூச்சுவிட்டாள்,
பகலும் இரவும் கழிந்தன என்று எண்ணி; ஒளியுள்ள ஓர் இரவில்
இவளிடம் அன்புகொண்ட துணைவன் இவன் வந்தான் என்று, மெல்லிதாக
மணியினுள்ளே பரவியிருக்கும் ஒளியான நீரைப் போன்று இனி இவர்கள் ஒன்றானார் என்று தெளிவானோம்,
கலத்தில் உள்ள நீர் கலங்கியிருந்தால், தேற்றாமரத்தின் விதையைக் கொண்டு தேய்க்க,
கலங்கிய நீர் தெளிவது போல் மனம் தெளிந்து நலம் பெற்றாள்,
நல்ல அழகான மார்பினையுடையவனைச் சேர்ந்து.
 
மேல்


# 143
அகன்ற ஊரில் முன்பெல்லாம் இருள் நீங்கப்பெற்று அழகிய நிலா திகழ்வதுபோல் அழகுபெற்றிருந்தவள், இப்போது
பகற்காலத்தில் ஒளியிழந்த திங்களைப் போல், ஒளி இழந்த
நல்ல நெற்றியில் திலகம் இல்லாதவளாய், ஒளிர்ந்து
நீலமணியுடன் போட்டிபோடும் பசும்பொன்னோ, மாமரம் ஈன்ற இளம் தளிரின் மேல்
கோங்கின் பூந்தாது பரந்து ஒளிவீசுகிறதோ என்று இருந்த அழகு நீங்கிப்போக,
மேனி முழுக்கப் பரவிய பசலையையுடையவளாய், அமைதி இழந்து,
மனம் மருண்டு, எதையெதையோ நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு,
அஞ்சி, அழுது, அரற்றுகின்ற இவள் ஒருத்தி
என்ன செய்தாளோ என்று கேட்போர்களே! கேளுங்கள், பொன்னிறமான பசலையைத்தான் நான் செய்தேன்;
வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான், அவனைத்
துண்டு துண்டான ஒன்பது நாடுகளான நவகண்டம் என்ற நாடுகளிலிருந்தேனும் கொண்டுவந்து தந்தால், நானும்
உறுதியான கற்புநெறி உடையவள் ஆகுவேன், களவு வாழ்க்கையால் என்னுடைய
மென்மையான தோள்களை மெலிவித்தவனை விரும்பி, அவனிடம்
சென்று எனக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது என் நெஞ்சு;
என்றேனும் ஒருநாள் இவள் அவனைச் சேர்ந்து ஒன்றாயிருப்பாள் என்று என் பின்னே வருகின்றீர், மேலும்
இவள் வருந்தித் துவண்டுபோனாள் என்று அவனுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கின்றீர், ஐயோ,
அறிவுகெட்டுப்போய்விட்டாளோ என்று மருளுகின்றீர், கலங்கவேண்டாம்,
எனது இனிய உயிரைப் போன்றவர்க்கு எந்தவிதமாகவும் ஒரு தீங்கும் நேரிடவில்லை என்பதை
நான் இன்னும் உயிரோடிருக்கிறதே காட்டிவிடவில்லையா?
யாராலும் பழிக்கப்படாத ஞாயிறே! உலக ஒழுக்கத்தை அறியாதவர்களிடம்
மிகவும் சினம்கொண்டிருப்பாய் என்று கேட்டிருக்கிறேன், உன்னை
வழிபட்டு இரந்து கேட்டுக்கொள்வதற்காக வந்திருக்கிறேன், என் நெஞ்சம்
கெட்டழிய என்னைத் துறந்துவிட்டுச் சென்றவனைக் கண்டு சீறும்போது, என்னைக்
கைவிட்டுவிட்டு அவனை மிகவும் சீறிவிடாதே!
எனக்கு வருத்தம் தரும்படியான, மாந்தளிர் போன்ற நிறத்தைக் கொண்ட மாலை நேரத்தில், இந்த ஊர்மகளிர்
தாம் தாம் இளந்தளிர்களைச் சூடிக்கொண்டு தம் காதலர் மேல் தாம் வைத்த அன்பினைப் பாடுவர்,
ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;
நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன், இளம் முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலமிடுவதிலும் வல்லவன், தன் கையில்
வில்லை வைத்திருக்கும் காமனைப் போன்று நட்புறவு கொள்பவன், மேலும் நல்ல
பல தொழில்களில் வல்லவன் என் தோள்களை ஆள்பவன்;
அவனை நினைத்து வாடும் என் உள்ளத்தைப் போல் நீண்ட கழியிலுள்ள மலர்கள் கூம்பிநிற்க,
வருந்துகின்ற என் நெஞ்சத்தைப் போல் ஆநிரை காக்கும் கோவலர்களின் குழல்கள் சோக இசை எழுப்ப,
தளர்ந்த என் சொற்கள் போல் யாழ்கள் செவ்வழிப்பண்ணை இசைக்க,
போய்விட்ட என் மேனியழகினைப் போலப் பகலும் ஒளியிழந்து மறைய,
காலன் போல வந்த கலக்கத்தோடே, என் மீது
மாலையும் வந்தது இப்பொழுது;
இருளோடு நான் இங்குத் துன்புற்றிருக்க என்னை விட்டுவிட்டு நீ போனாய்
இரக்கம் உனக்கு இல்லை, வாழ்க, சுடரே!
மிகுந்துவரும் நீரையுடைய இந்த உலகத்தில், என்னைப் போன்றவர்களின் கணவர் இல்லாதுபோனால்,
சிறந்த மனம்படைத்த அவர்கள், குற்றம் இல்லாத மேலுலகத்துக்குச் சென்று
அங்கு தமக்கு வேண்டியவற்றை வேண்டியபடியே பெறுவார் என்பது உண்மை என்றால்,
நானும் அவ்விதமே உயிர்போய் அவர்களைப் போல் புகழைப் பெறுவேன்;
இந்த ஊர்மக்கள் என்னைப்பற்றிப் பழிச்சொற்கள் தூற்றுகின்றனர், இந்த உய்வில்லாத துயரத்தில்
பீர்க்கம்பூவைப் போலப் பெரிதும் பசந்தன,
நீரில் மலர்ந்த நீலப்பூவென்று அவர் புகழும்படி, அவருக்கு அந்தக் காலத்தில்
பெரிய வருத்தத்தைச் செய்த என் கண்கள்;
தன் உயிரைப் போலப் பேணி ஆதரித்து, உலகத்தில்
உயர்வான உயிர்களைக் காக்கும் இந்த நாட்டு மன்னனும் ஏனோ,
எனக்கு இனிய உயிர் போன்றவனை எனக்குக் காட்டிச் சிறிதளவும்
என் உயிரைக் காக்காமல் இருப்பது?
என்று கூறி,
நிலைபெற்ற நோயோடு மருண்ட மனத்தோடிருந்த அவள்,
பல மலைகளையும் கடந்து சென்றவன், திரும்ப வந்து அவளின் அடிபணிய,
பாண்டியன் நட்புப் பாராட்டிய நாட்டினைப் போல்
இழந்த தன் நலங்களைப் பெற்று இனிய மகிழ்ச்சி எய்தினாள்.
 
மேல்


# 144
நல்ல நெற்றியையுடையவளே! இவளைப் பார்! எதனையோ நினைத்துக்கொண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டு,
என்ன துன்பம் உற்றாளோ, இவள் ஒருத்தி? பலமுறை
நகைக்கிறாள், தன் நாணத்தைக் கைவிட்டு, ஒழுகுகின்ற
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு,
இவை போல துன்பத்தைக் காட்டும் செயல்கள் பலவற்றைச் செய்து, ஏனென்று தன்னைக்
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்,
அவள் கூறுவதைக் கேட்கலாம் என்று சென்று,
'ஏடி! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? யார் உனக்கு இதனைச் செய்தார்?
நீ படும் துயரை எமக்குச் சொல்' என்று என்னைக்
கேட்கிறவர்களே! தெளிவாகக் கேளுங்கள்! ஒருவன்,
'செழுமையான கூந்தலையுடையவளே! உன்னைப் பார்த்ததால் எனக்கு நேர்ந்த துன்பத்தை உனக்கு நான்
உரைக்கும் வரையிலாவது என் இனிய உயிர் என்னிடம் இருக்கிறதே' என்று
என்னிடம் மயக்குமொழி கூறிப் பின்னர் மாறிப்போய்விட்டது முதல்
மயக்கம்கொண்டுவிட்டது என் நெஞ்சு;
எல்லா இடங்களிலும் தேடி அவன் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்வேன்;
பொங்கிவரும் பெரிய கடற்பரப்பைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்க்கின்ற நிலையில்
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
வேடர்கள் இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன், படமெடுக்கச் செய்து
பாம்பினை, திங்களுடன் உன்னையும் விழுங்க அனுப்புவேன் - மதி மாறிப்போயிருக்கும்
என் அல்லலைத் தீர்த்துவைக்காவிட்டால்,
என்று நான் எனக்குள்ளிருக்கும் துயத்தை உன்னிடம் உரைக்க, நீ அந்தத் திங்களுடன்
ஓடிப்போய் வெண்மேகத்துக்குள் புகுந்துகொண்டாய், சிறிதளவு என்னைக்
கருணைகொண்டு பார்க்கின்றாய் போலும்!
நீண்ட இலைகளையுடைய தாழைகள் வளர்ந்திருக்கும் செம்மணல் பரந்த கடற்கரைச் சோலைக்குள்
ஓடுவேன், ஓடி ஒளிந்துகொண்டு பார்ப்பேன், சோலைகள்தோறும்
தேடிச் செல்வேன் - உள்ளம் கவர்ந்த கள்வன் உள்ளே மறைந்திருக்கிறானோ என்று,
அழகிய பூக்களைக் கொண்ட அடும்பின் மலர்களைக் கொண்டு, இதோ பார், எனக்கு
மாலைகட்டிச் சூட்டிவிட்ட இடம் இதுதான்!
இதோ பார்! தண்டாங்கோரையின் மலர்களைக் காட்டி, அந்தத் தரங்கெட்டவன், விளையாட்டுப்
பாவையைச் செய்துகொண்டு என்னிடம் தராமல் எடுத்துக்கொண்டு ஓடிய இடம்!
இதோ பார்! என் தோளிலும் மார்பிலும் அவன் தொய்யில் கோலமிட்ட இடம்!
இதோ பார்! பெண்ணே! உன்னைக் கைவிடேன், என்னை நம்பு என்று என்னைத் தேற்றி, அந்த அறமில்லாதவன்
என்னை மெதுவாகத் தழுவிய இடம்!
இரங்கத்தக்க என் உள்ளத்தில், இன்னல் என்னும் தேர் ஏறி வந்து
குறையாத காமநோயை உண்டாக்கி, என்னைக் கைவிட்டுப்போன அந்த அன்பற்றவனை,
என் மனம் தெளியும்படியாக, வானத்திலும், இந்த உலகத்து மூலை முடுக்குகளெல்லாவற்றிலும்,
காற்றே! பரந்துசெல்லும் பல கதிர்களையுடைய ஞாயிற்றின்
ஒளி புகும் இடமெல்லாம் சென்று, என் மீது வெறுப்புக்கொண்டு, என்னுடைய
இயற்கை நலத்தை நுகர்ந்த பின் தன்னை ஒளித்துக்கொண்டவனைக் கண்டிபிடித்துத்தா!
அவ்வாறு தராவிட்டால், இந்த மண்ணகம் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் சுடுவேன் - என்
கொதிக்கும் கண்ணீரைத் தெளித்து, அதிலிருந்து எழும் அழலால்;
என்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன், அவ்வாறு முயன்றால்
அதற்கு அறமே துணையாகவும் இருக்கும்;
கைவிட்ட காதலனைக் கண்டுபிடித்துத் தந்தால், உனக்கு ஒரு பாராட்டுப் பாடல்
பாடுவேன், என் நோயை உனக்குச் சொல்லி;
என்னைத் தழுவிய காதலர் என்னை வந்து சேரும் நேரத்தை அறியேன்,
அதனால் இரவு ஆகட்டும் பகற்பொழுது என்று பகலை வெறுப்பேன்,
இரவான பொழுதிலோ அந்த இரவை வெறுப்பேன், நான் படும்
துயரத்தைத் தீர்ப்பவர் ஒருவரும் இல்லை;
ஓ! கடலே! மிகவும் தெளிவாக என் கண்களுக்குள்ளே தோன்றினான், என் இமைகளை விரித்து
அவனைப் பிடித்துக்கொள்வேன் என்று நான் கண்ணை விழிக்கும்போது, என்
நெஞ்சுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான், அங்கிருந்துகொண்டு எனக்குத் தூக்கம் வராமற்செய்யும் காம நோயைத்
தருகின்ற அந்த அறம் இல்லாதவன்;
ஓ! கடலே! ஊரையே வளைத்துக்கொண்டு கனன்று எரியும் கடுமையான தீயில்
நீரை ஊற்றினவுடனே நெருப்பின் சினம் தணியும், இதோ, இந்த
இரக்கமற்ற காதலன் மூட்டிய காமத்தீ
நான் நீருக்குள் புகுந்துகொண்டாலும் நெருப்பாய்ச் சுடும்;
ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத இவள் எதற்காகப் பித்துப்பிடித்தவளானாள் என்று இந்தக் காம நோயை
அனுபவித்து அறியாதவர்கள் சிரித்துவிட்டுப்போகட்டும், காதலித்த பொழுது
இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் தழுவியிருக்கமாட்டேன் - என்னைக்
காக்கவேண்டிய நேரத்தில் கைவிட்டுவிட்டு, என் வலிமையைக் கெடுத்தவனின் மார்பினை;
என்று
கடலோடு புலம்பிக்கொண்டிருந்தவளின் கலக்கம் தரும் துன்பம் தீரும்படியாக,
ஒழுக்கம் குன்றாக் காதலர் விரைந்து ஓடிவர, தன் காமநோய் நீங்கி,
அறவழியை அறிந்து நடக்கும் அப்பழுக்கற்ற ஒருவனைப் பற்றித்
திறங்கெட்டவர் கூறிய தீய சொற்கள் எல்லாம்,
நல்லோர் அவையில் எடுபடாமற்போவது போல,
இல்லாமல் போய்விட்டது அவளின் அழகிய நெற்றியில் படர்ந்திருந்த பசப்பு.
 
மேல்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

# 145
மக்கள் மிக விரைவாக அடையத்துடிக்கும் சிறப்பினைப் போல், கண்டவர்க்கு
நள்ளிருளில் பார்த்தது, நனவுலகில் உதவாமல் வேறுபட்டுப்போகும்
கனவைக்காட்டிலும் நிலையற்றது காமம்; ஒருத்தி
பெருமூச்சுவிட்டுக்கொண்டே, எதிரில் வருவோரை ஓயாது ஏதோ விசாரித்துக்கொண்டே திரிகிறாள், 
கயல் போன்ற, மைதீட்டிய கண்களிலிருந்து ஒழுகும் நீர் முகத்தில் வடிய,
மழையிடையே தோன்றும் முழுமதியைப் போலத் தன் ஒளிபடைத்த முகம் தோன்ற,
நிறைவாகச் செழித்த கூந்தலையுடையவள் தன் நற்பண்புகளையெல்லாம் துய்த்துவிட்டுப்
பின் அவளைத் துறந்துசென்றவனை நினைத்து அழுகின்றாள், அவனை
மறந்துவிட்டவளைப் போல மகிழ்ந்து ஆடி சிரிக்கிறாள், பின்னர் மருண்டு நோக்குகிறாள்,
தன்னிடம் சிறப்பாக அமைந்த தனது நாணத்தையும், மற்றுமுள்ள நல்ல குணங்களையும் நினைத்துப்பார்க்காமல்
காமத்தை மட்டுமே நினைத்து அவள் மனம்கலங்குகிறாள், என்று என்னைப் பார்த்துச்
சிரிக்கவேண்டாம், கூறுகிறேன் மக்களே சுருக்கமாக!
மகளிரின் தோளைச் சேர்ந்த ஆண்கள், அவரின் வருத்தம் மிகும்படியாக அவரைவிட்டுப் பிரிதலும்,
நீண்ட காட்டுவழியில் சென்றவர்கள் சீக்கிரமாய் வந்து அருள்செய்தலும்
மாறி மாறி இரவும் பகலும் போல வெவ்வேறாக,
ஒருவரையொருவர் விரும்புகிறவர்களிடையே தோன்றும் இவ்வாறான தடுமாற்றம் உலகத்தில்
வாழ்கின்றவர்கள் அனைவருக்கும் வரும்;
முதலில் என்னிடத்தில் தாழ்ந்து, பின்னர் என்னைத் துறந்து, என் வளைகளை நெகிழ்த்தவன் சென்ற காட்டில்,
அளவுகடந்து அனல் வீசாமல், பரந்து முழங்கி,
மழை பெய்யாமல் வறண்டு என்ன காரியம் செய்கிறாய் வானமே? பெருகிக்கிடக்கும் என்
கண்ணீர்க் கடலைக் கொண்டு பெருத்த மழையைப் பெய்யப்பண்ண மாட்டாயோ -
கூட்டமான மேகங்களால் முகந்துகொண்டு?
உங்களுக்கு எப்படி இருக்கிறதோ? ஊர்ப்பெரியவர்களே! எனக்கு, என்னுடைய
கண்ணின் தூக்கத்தை எடுத்துக்கொண்டு என்னை நினைக்காமல் சென்றுவிட்ட காதலன் செய்த
'நல்ல காரியங்கள்' தந்த தொடர்ச்சியான காமநோய் என்னும் கடுங்குளிருக்கு (இந்த நண்பகல்) வேது
கொடுப்பது போல் இருக்கிறது, இந்த வேதினை எனக்குக் கொடுக்கும் கடுமையான பகலைச் செய்யும் ஞாயிறே!
உன்னுடைய எல்லாக் கதிர்களையும் பரப்பி, இந்தப் பகற்பொழுதோடு
மறைந்து போகாமல் நின்று இருக்க வேண்டுகிறேன், அவ்வாறு நீ சென்றுவிட்டால்
பொலிவிழந்த இந்த, மயக்கத்தைத்தரும் மாலைப் பொழுது இன்று வந்து என்னைக்
கொல்லாமல் போவது அரிதாகும், அத்துடன் நானும்
இறந்துபோகாமல் இங்கிருக்க மாட்டேன்,
விரைவாக, என் காதலரை அழைத்துக்கொண்டு, கடலைக் கிழித்துக்கொண்டு காலையில்
இங்கு வந்தால் அவரைக் காண்பேன், என்னுடைய நடுக்கத்தோடு
மாலையாகிய பகையையும் தாங்கிக்கொண்டு, நான்
'என் காதலன் இனியவன்' என்று என் நெஞ்சினைக் காத்துக்கொள்வேன், ஞாயிறே, இப்பொழுது;
ஒளிரும் வளையல்கள் கழன்றுபோகும்படி, என்னைத் துறந்து சென்று எனக்குத் துயரினைச் செய்த
கள்வனிடம் அன்று சென்று ஒளிந்துகொண்டு, இப்போது என் துயர நிலையை எண்ணி,
பெரிய கடல் ஒலியடங்கிக் கிடக்க, கடற்கரைச் சோலை யாருமின்றித் தனித்திருக்க,
கரிய கழியில் பூத்திருக்கும் நெய்தல் தன் இதழ்களை மூடிக்கொண்டு காட்சியளிக்க,
தன் கதிர்களை விரித்து ஒளிவிடும் வெண்ணிலா ஒளிவீசும் மாலைப் பொழுதில்,
நான் விரும்பும் ஒருவனும், எனக்கு இந்த அல்லலைத் தந்தவனும்,
தான் விரும்புவனுமாகிய அவனுடன் துயில்கொண்டிருக்குமோ - தூங்காமல்
வானுலகிலும், மண்ணுலகிலும், நாற்றிசைகளிலும் தேடி அலையும் என்
குன்றாத துயர் மிக்க என் நெஞ்சு?
ஊரிலுள்ளோர் அனைவரின் பெருஞ்சிரிப்புக்கு இடமாகி, என்
அருமையான உயிர் பிரிந்துவிடும், அதைக் காக்க, அங்கு நீ செல்வாயாக,
நிலவொளியை உமிழும் வெண் திங்களே! அழகிய வளைகள் தொளதொளவென்று ஆக,
கனிவு என்பதனையே புறந்தள்ளி, எனக்கு அருள்செய்யாமல் என்னைத் துறந்துசென்ற அந்தக்
காதலன் ஏற்படுத்திய கலக்குகின்ற காமநோய்க்கு, அயலார்
எல்லாரும் தெளிவாகக் கூறமாட்டார் ஒரு மருந்தினை;
உங்களின் கடமையாகக் கொண்டு, என் காம நோயைத் தீர்ப்பதற்காக, ஊர் மக்களே!
நீங்கள் எவ்வளவுதான் என்னை இகழ்ந்தாலும், என் காதலன் என்னை இகழமாட்டான்,
நினைக்கையில் நெஞ்சுக்குள் தோன்றுவதைக் காட்டிலும் கண்ணுக்குள் தோன்றுவான், இருப்பினும் அது ஒன்றே
என் உயிரைக் காக்கும் வழி ஆகாது.
மிகுந்த இருளைக் கொண்ட மேகமே! கடல்நீரையெல்லாம் முகந்துகொண்டு என் மீது
மழையை நின்று கொட்டவேண்டும், ஒன்றாக,
நிறைந்த வளையல்களையெல்லாம் தொளதொளக்கச் செய்தவன் செய்த துயரினால்
என் உடம்பின் மூலை முடுக்கெல்லாம் மூண்டுநிற்கிறது காமத்தீ!
என்று பாடி,
துயரடைந்த நெஞ்சில் அடித்துக்கொண்டு வருந்தி அழுது,
உங்களில் ஒருவரும் என் காதலனைக் காணவில்லையா என்று கேட்டவளின்
பசப்புற்ற வருத்தத்திற்கு அறக்கடவுளே உதவிசெய்து தீர்த்துவைத்ததைப் போல அவள் கணவன் தீர்த்துவைத்தான்,
அவளது தூக்கத்தை வாங்கிக்கொண்டு அவளை நினையாமற் போனவர் திரும்பி வரக்கண்டு,
திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தது போல் அவள் அவனிடம் சேர,
ஞாயிற்றின் முன்னர் இருள் போல மறைந்தது என்
அழகிய அணிகலன்கள் அணிந்தவள் கொண்டிருந்த துயர்.
 
மேல்


# 146
பலரும் புகழும்படி, அறிவால் உயர்ந்து சிறந்து, தன்னைச் சேர்ந்திருக்கும் அமைச்சர்களையும், ஒரு நிலையில்
எல்லையற்ற துன்பத்திற்கு உள்ளாக்கி, அவர் நடுங்கும் மொழி உரைத்து, அவரைக் கொல்லும் இயல்புடைய
அரசனைக் காட்டிலும் அன்பில்லாதது காமம் ஆகும், மனத்தில் எந்தவிதக் குறைபாடுகள் இல்லாத அளவுக்கு
அன்னத்தின் தூவி பரப்பிய மென்மையான படுக்கையில் நிறைந்த இன்பத்தை அளித்தவன்
நெருக்கத்துடன் இருந்துவிட்டுப் பின் பிரிந்துசெல்ல, அணிகலன்களைத் துறந்தவளாய்,
நாணத்தையும், மனவுறுதியையும் மறந்தவளாய், தோள்கள் தளர்ந்து,
பெரிதும் கலக்கமுற்ற மைதீட்டிய கண்களில் கண்ணீர் நிறைய, அந்தக் கண்ணீர் தன்
கூர்மையான பற்களைக் குளிப்பாட்டிக் குவிந்திருக்கும் முலைகளின் மேல் வடிந்துநிற்க,
அவனைத் தேடுகின்ற வழிகளை ஆய்ந்து மனம்சுழன்று இருக்கும் அழகிய நூலாடை அணிந்தவளிடம்
சென்று அவள் கூறுவதைக் கேட்போமா என்று
ஒளிவிடும் ஆடைக்காரியே! முன்பு பரிவுகாட்டிப் பின் கைவிட்டுச் சென்றவனுக்காக நாணத்தை மறந்தாயே என்று
மிகவும் என்மேல் அன்புகொண்டவர் போலக் கேட்கிறீர்களே! நான் சொல்வதைக்
கேளுங்கள் எல்லாரும் வந்து;
வறட்சி வாட்டும்படியாகப் பெய்யாமற்போன மேகத்தைப் போலவும்,
பெருகிவந்து என்னைக் கொல்லும் பெரிய வெள்ளத்தைப் போலவும்,
சிறந்த என் காதலன் என் சீர்மை எல்லாம் கெட்டுப்போகப் பிரிந்துசெல்ல, பெருகி வந்து
என்மேல் நிலைத்து நிற்கிறது இந்தக் காமநோய்;
அவனுடன் சேர்ந்திருந்து, தன்னுடைய பெண்மைநலனையும் இவள் இழந்தாள் என்கிற
நினைப்பையுடையவர் போல் தெரிகிறது! நான் எதனையும் இழக்கவில்லை - உறுதியாக,
மிகுந்திருக்கும் என் நாணமும், பெண்மைநலனும், என் உள்ளமும்
அப்பொழுதே அவனிடத்தில் அங்கேயே நின்றுவிட்டன,
இதோ அங்கே பாருங்கள், உடம்புதான் உயிருக்குப் பற்றுக்கோடு என்று அறிந்தவை போல,
சிவந்த அழகிய புள்ளியைக் கொண்டு சக்கரம் போல் இருக்கிற நண்டுகள் திரிகிற இடத்தில் நான்
அவனுடன் பல முறை சிரித்து விளையாடியதை நினைத்துப்பார்க்கிறேன்;
கரை காணமுடியாத காமநோயில் அழுந்திக்கிடக்காதவனை
குற்றங்கள் பல கூறி கொடுமைசெய்தான் என்று கூறுகின்ற பெரியவர்களே!
என்னை மணந்துகொண்ட அவன் என்னைவிட்டுப் போகமாட்டான், அவனை
அலைகளைக் கொணரும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகம் எங்கும் சென்று
தேடிக்கண்டுபிடி என்று திரளான கதிர்களைக் கொண்ட ஞாயிற்றை வேண்டிக்கொண்டேன், நானும்
அவனுடைய புகழ் கேட்கும் இடமெல்லாம் சென்று தேடுவேன், குற்றமற்ற அவன்
எங்குதான் போய் மறைந்துகொள்ளமுடியும்?
மருண்ட பெண்மானைப் போல் நான் மயங்கும்படியாக, கொடிய துன்பத்தைத் தரும்
மாலைக்காலமும் வந்து, அதனுடன் சேர்ந்து கொழுந்துவிட்டெரியும் கொடுமையைச் செய்யும்
இரவுக்காலமும் கூடிவந்ததென்றால், அதற்கு என் நோயைக்
கூறுவேன் - என்னைப்போன்ற மகளிரோடு சென்று,
நான் படும் துயரை உனக்குக் கூறினால், பலரைத் தூங்கச் செய்யும்
நள்ளிரவே! நீயும் தூங்கமாட்டாய்!
தொழுவதற்கு எதிர்கொண்டு நிற்கும் இந்த உலகமும் துயிலை மேற்கொள்ளாது, இங்கு
கதிர்கள் நிறைந்து என்னை வளைத்துக்கொண்டதால் எனக்கேற்பட்ட கொடிய துன்பத்தைச் சொன்னால்
அந்தக் கதிர்கள் மழுங்கி, முழுமதியும் மனம் நடுங்குவது போல்
மருண்டு ஓடிவிடும்;
பேரூர்த் தெருக்களில் பெருந்துயில் கொள்லும் பெரியோர்களே!
நீரையெல்லாம் தடுத்து நிறுத்தி நிறைந்து வழியும்படி சேமித்துவையுங்கள்,
மேகமெல்லாம் ஒன்றுதிரண்டு என் மேனியில் பெய்தாலும், குறைவது
போலில்லை என் உடம்பில் கொதிக்கும் காமநோய்;
காதலன் கூட இருந்தாலும் பிரிந்து செல்வானோ என்று நெஞ்சம் கொதிக்கும், சென்றுவிட்டாலோ
வருத்துகின்ற என் உடல் வருந்துவதைத் தாங்கிக்கொள்ளமாட்டேன்,
அழிக்கமுடியாத அரணைப் பெற்றுள்ளது என்னுள் இருக்கும் இந்தக் காமநோய், பல உறுப்புகளைப் பொருத்தி
பொறியாகச் செய்த புனைந்த பாவையைப் போல, வீணாக வருந்தி
இறப்பேன், துன்பத்தில் உழன்று;
என்று அங்கு அவள் பாட, இரக்கம் கொண்டு
வறட்சி மிகுந்த வானத்தில் வளமையான மழைக்காக ஏங்கி வாடும்
வானம்பாடிக்கு, அந்த மழை பொழிந்ததைப் போல், தன்
நல்ல அழகிய மார்பினையுடைய காதலன் வந்து சேர்ந்து தழுவிக்கொண்டதால்
அழகிய இழையணிந்தவளின் அல்லலாகிய மனநிலை தீர்ந்தது.
 
மேல்


# 147
"நன்னெறிகளிலுட்படாத சொற்களைச் சொல்லும்படி செய்து, அறச் செயல்களைக் கெடுக்கும்
தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ? தன் சிறிய பாதங்களில்
சிலம்புகள் ஒலிக்கச் செல்லுகின்ற இவள்தானோ, இப்பொழுது நிலைபெற்ற
தனிமைத்துயரம் படர, பொலிவிழந்த அழகையுடையவளாகி, நேராகப் பார்க்காமல் குறுக்காக
வேல்நுனை போன்ற கண்களால் பார்த்து, வெயில் தன் மேல் படத் தன் மேனி அழகு உருகி அழிய, தன்
தோளின் அழகை நுகர்ந்தவனைப் பறிகொடுத்தவள் போல், தெருவில் திரிந்து,
உணவு ஏதும் உண்ணாதவளாகி, உயிரினும் சிறந்த தன்
நாணம் ஏதும் இல்லாதவளாகி, சிரிக்கவும் செய்கிறாளே! அங்கு
பெண்மைப் பண்புகள் இல்லாதவளாகி அழவும் செய்கிறாளே! தோழியே! இந்த உயர்ந்த
ஒளிரும் நெற்றியையுடையவள் அடைந்த துன்பத்தை அருகில் சென்று கேட்கலாமா?"
"இவர்களெல்லாம் யார்? இங்கு பித்துப்பிடித்தவரைக் கண்டீரோ? ஓ!
இந்த நிலை எல்லா மகளிர்க்கும் அமையும்! நீங்கள் இதுபோல் தவறினைச் செய்யவில்லையா? நகைப்பிற்கிடமான
மிகுதியான காமமும் அறநூல்கள் கூறுவதில் ஒருவகையே என்பார்களே! அழகிய வண்டுகள்
புது நலத்தை உண்டபின் பூ வாடியதைப் போன்றதே, தாம் விரும்பும் காதலர்
தம் மதி மயங்கும்படி கைவிட்டுச் சென்ற நிலை,
என்னையே மொய்த்துக்கொண்டு விரைந்துவந்து என்னைப் பார்க்காதீர்கள்;
அவனோடு கலந்த கண், புருவம், தோள், இடை, அழகாகச்
சிறிய மேகத்தைப் போன்று நீண்டு கருத்த கூந்தல் ஆகியவற்றின்
மிகுந்த மதிப்பைக் கொடுத்து அவற்றுக்கேற்றவற்றை வாங்குவதை அறியாமல், ஒருவனின்
வலையில் அகப்பட்டது என் நெஞ்சு,
உற்றார்களே! வாழ்வீர்களாக!
பலவான பொய்வாக்குறுதிகளைக் கொடுத்து, என்னைத் தேற்றித் தெளிவித்தவன், என்னை
அணைத்து முலை நடுவே தழுவினான், பின்னர் என்னைக் கைவிட்டுச் சென்ற
கொலைகாரனை நான் தேடிக் காணமாட்டேனோ? நான் அவனைக்
கண்டபின்பாவது என்னைப்பற்றி அறிந்துகொள்வீர்கள், உன் கதிர்களைப் பிடித்து ஏறி
நீ இருக்கும் அந்த இடத்திலும் அவனை எதிர்கொண்டு தேடுவேன், ஞாயிறே! என் காதலன்
எங்கிருந்தாலும் அவனைக் காட்டமாட்டாயா? காட்டாவிட்டால்
வானத்தில் என்ன செய்கிறாய் நீ?
பெரும் இருளை நீக்கும் விசும்பின் திங்களைப் போல்
நீருக்குள்ளும் தோன்றுகிறாய் ஞாயிறே! அந்த இடத்தில்
தவளைகள் உன்னைத் தின்றுவிடாமல் உன்னைக் காத்துக்கொள்,
எனக்கு அருள்செய்யாத ஒருவனை நாடி நான் பிடித்துக்கொள்கிறேன், அது வரை
உன்னுடைய பல கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகல்காலம் முடிய மறைந்துவிடாதே!
சென்று சேரும் கதிர்களையுடைய ஞாயிறே நீ!
எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும்
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்
கறக்காத காட்டெருமைகள் இருக்கும் காட்டைக் கடந்து சென்றுவிட்டானோ?
பொருந்தாத செயல்களைச் செய்து இந்த ஊரிலேயே இருக்கின்றானோ?
அவன் இவ்வூரிலேயே இருந்தால், கோபிக்காமல் ஏற்றுக்கொள்வேன் அவனை,
அவனை அடையமுடியாமல் நான் வருந்துகிறேன், அவனை எனக்குக் காதலனாகக் காட்டி
சுறாமீன் கொடியையுடைய காமனின் கொடுமையை, நீயும்
நடுவுநிலையுடன் ஒரு பக்கம் சாராத அரசனாகிய கூற்றுவனே! உன் ஓலையில் எழுதிவைத்துக்கொள்,
கடமை மறவாத அரசனாகிய ஞாயிறே! உன் மாலைக் காலமும் வந்துவிட்டது,
என்னை அறுக்காமல் தணியவேண்டும் இந்த நோய்,
ஒரு காதலியின் நெஞ்சு, அவளின் காதலனுக்காக வருந்தும்படி செய்வதில், எல்லா மகளிர்க்கும்
ஒரே மாதிரியானதோ, காமனே! உன் மலரம்புகள்?
என்னை இவ்வாறு செயலிழக்கச் செய்தவனைப் பார்த்தால், கண்ணீர் சொரியும் கண்களால்
மெதுவாக நோக்குவேன், தாழ்ந்து வரும் அவன் மேலாடையைப் பிடித்துக்கொள்வேன்,
நான் அவளின் காதலிதானா என்ற ஐயம் கொண்டு என்னை அறியாதவனாய் அவன் விட்டுச்செல்ல முயன்றால்
ஓங்கிக் குரலெழுப்புவேன் நான், அவனை
மெய்யாகவே என் பண்புகளைக் கவர்ந்துசென்ற 'கள்வன் கள்வன்' என்று;
என்னை எதுவும் கேட்காதீர்கள், ஊர் மக்களே!
பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;
கனவிலாவது அவனைக் காண்பதற்காக என் கண்கள் உறங்காவிட்டால்,
நனவிலாவது அவனை எனக்குக் காட்டுவாய் ஞாயிறே! அப்படிக் காட்டாவிட்டால்
பனை தந்த மடல்மாவில் ஏறி அவன் வரும்படியாக, அவன் மீது எய்ய, காமனின்
கணைகளை வேண்டுவேன், அவன் கால்களைத் தழுவிக்கொண்டு";
என்று புலம்பி,
கண்கள் வருந்தக் கலங்கி ஏங்கி அழுதாள்,
தோள்கள் மெலிந்து வளைகளும் நெகிழப்பெற்றாள்,
அம்மாடியோ! எல்லாரும் பாருங்கள்! கபடமற்ற
மென்மையான நடையைக் கொண்ட பெண் அன்னம் விரைந்து செல்ல, அதனைச் சேர்ந்த
வெண்மையான அன்னச் சேவலின் புணர்ச்சியைப் போல, ஒளிவிடும் நெற்றியையுடையவளின்
காதலன் வர, அவனைக் கண்டு, அப்போதே
தான் பட்ட மிகுந்த துயரம் எல்லாவற்றையும் மறந்தாள் அந்தப் பேதை,
ஊரார் சிரித்த சிரிப்பை மறந்து, நாணம் தன்னிடத்தில் நிலைத்து நிற்க, தலை குனிந்து,
இன்பம் பெருகும்படி அந்த மங்கை சேர்ந்தாள், பிறர்க்கு மகிழ்ச்சி பிறக்க,
நல்ல அழகிய மார்பையுடையவனிடம்.
 
மேல்


# 148
தொன்றுதொட்டு வரும் உலகில் ஒளியைத்தரும் தன் தொழிலை ஆற்றிவிட்டு, ஞாயிறானது
இறைவன் தனக்கிட்ட ஆணையைத் தலைமேல் ஏற்றுச் செய்பவனைப் போல்
மலையைச் சேர்ந்து, தன் கதிர்களை அங்கே ஒடுக்கிக்கொண்டு, கண்கள் தம் பயனை இழந்துபோகும்படி, மறைய,
நல்லவை அல்லாதவைகளை அழிப்பவனின் அருள் நிறைந்த முகத்தைப் போல,
வளம் நிறைந்த கடல்நீரின் அலைகளின் மேலே ஊர்ந்து ஏறி, மயக்கத்தைத்தரும் இருளைத் திங்கள் போக்க,
பொருளில்லாதவர்கள் நடத்தும் இல்லறம் போல் கரிய கழிகளில் உள்ள மலர்கள் கூம்பிப்போக,
போகின்ற என் உயிரின் புறத்தே வந்து நிற்கும் மனக்கலக்கத்தைத் தரும் மாலைப்பொழுதே!
ஏ! மாலையே!
இன்பமாய் இருந்த காதலர்க்கு இனிமை தருவதாய் அவர்க்கு வேண்டுவனவற்றை முன்பு செய்தாய்,
அன்புற்ற மனைவியர் அழும்படியாக அவரை விட்டுப்பிரிந்ததனால் அல்லல்பட்டுக் கலங்கித்
துன்புறும் அந்த மங்கையரை மேலும் துயருக்குள் ஆழ்த்துதல் உனக்குத் தக்கதோ?
ஏ! மாலையே!
காதலரைக் கூடிய மகளிரின் காமத்தை மேலும் எரியச் செய்தாய்,
தங்கள் நலத்தை நுகர்ந்துவிட்டுத் தமக்கு நலம் தராமல் காதலர் பிரிந்துசென்ற மிகுதியான பிரிவுத்துன்பத்தினால்
வருந்தும் மகளிர்க்கு வருத்தும் தெய்வமாக ஆவது உனக்குத் தக்கதோ?
ஏ! மாலையே!
என் காதலனைக் கொண்டுவந்து தரவும் மாட்டேனென்கிறாய், எனக்குத் துணையாகவும் இருக்கமாட்டாய்,
பிரிந்தவர்க்குத் துன்பமாகி, சேர்ந்திருப்போர்க்கு ஆதரவாகி,
இவ்வாறு செய்யத்தகாதவைகளைச் செய்வதல்லாமல் வேறு நல்லது செய்யத் தெரியாதோ உனக்கு?
என்று கூறும்
அழகிய அணிகலன் அணிந்தவளின் பேதைமையான அவலம் நீங்கும்படியாக,
பரந்த இருட் பரப்பினை ஞாயிறு போக்கினது போல,
பகைவர் நாட்டுக்குப் போய் அவரது மண்ணைக் கவர்ந்து திரும்பி வந்து சேர்ந்தார்,
தொலைதூர நாட்டில் இருந்த காதலர் தன் மேற்கொண்ட பணியை முடித்துக்கொண்டு.
 
மேல்


# 149
வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
கரையிலிருக்கும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டமே காலாட்படையாக,
அரசன் எழுச்சியுடன் செல்வது போன்ற வலிமை மிக்க கடலைச் சேர்ந்த நிலத்தையுடையவனே! கேள்;
கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற கல்விக்குக்
கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான்,
தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவனது
பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
உறவினர்களின் நெஞ்சம் நோகும்படி, தேடிக் குவித்த செல்வங்கள்
முயற்சியற்ற ஒருவனின் குலத்தைப் போல் தானாகவே அழிந்துபோகும்,
சூள் உரைத்து ஒன்றை உறுதி செய்த ஒருவன், பின் செயலில் அதனைப் பொய்த்துவிட்டால், அவன்
வாட்போரில் வெற்றிபெற்றாலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
எனவே,
செய்ந்நன்றிக்கேடு, பொய்ச்சூள் ஆகியவை அப்படிப்பட்டன, பெருமானே! அதன் நிலையை நினைத்துப் பார்!
ஒரு அரசன் சினங்கொள்ள, அதனால் அவனது பகைவன் அவனது கோட்டையை வெளியே வளைத்துக்கொண்டிருக்க,
அந்தச் சினத்தால் வந்த துன்பத்தைப் போல
மணவினைகள் விரைந்து வர எண்ணும் நெஞ்சத்தோடு பெரிதும் வருந்தினாள்.
 
மேல்


# 150
நீர்நிலை அருகே மலர்ந்த நறிய கொன்றைப்பூவால் செய்த ஆடுகின்ற அழகிய மாலையினையுடைய இறைவன்
இயக்கமுள்ள கோட்டையான திரிபுரத்தை அழிப்பதற்காக உண்டாக்கிய நெருப்பினைப் போல எல்லாப்பக்கங்களிலும்
கொதிக்கின்ற கதிர்களைக் கொண்ட ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால், கிளர்ந்து எழுந்த மூங்கில் பற்றிய தீ
மலைகளில் பரவி அவ்விடங்களையெல்லாம் மேற்கொண்டு, முழங்கிய முழக்கத்தையுடைய தீக்கொழுந்துகள்
குழப்பத்தைத்தரும் குறுக்குநெடுக்கான வழிகளே பாதைகளாய்க் கொண்ட மலைகளைத் தொடக்கமாகக் கொண்டு
வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியைக்
கடந்து, தாம் கருதியதைப் பெறவேண்டும் என்ற வேட்கையால்
அறத்தை மறந்து, அழகிய இழையணிந்தவளே! பொருளீட்டப் பிரிந்துசென்றவர்,
பெருகுகின்ற கங்கை நீரைத் தன் சடையிலே மறைத்துவைத்தவனின் மேனியைப் போன்ற உன் பொன்னிறம்
பசந்துபோய் நீ இப்படி ஆகிவிட உன்னைக் கைவிடவும் செய்வாரோ?
வெந்த கரியினையுடைய பல கிளைவழிகளைக்கொண்ட, கற்கள் சுடுகின்ற காட்டுவெளியை
அச்சம்தரக்கூடிய வழி என்று கருதாதவராய், தான் சிறந்ததெனக் கருதும் பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
சிறந்த வடிவையுடைய காளையை ஊர்தியாகக் கொண்டவனின் ஒளிவிடும் மேனியைச் சிரிப்பது போன்ற உன்
சிறந்த நிறத்தை இழந்து நீ இப்படி ஆக உன்னை நினைப்பதுவும் செய்யாரோ?
ஞாயிறு குன்றினில் ஏறும்போதே கொதித்து உராய்ந்துகொண்டு ஏறும் நீண்ட கோடைக் காலத்தில்
போவதற்குக் கடினமான வழி என்று எண்ணிப்பார்க்காமல், தான் கருதிய சிறந்த பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
பிறையைத் தன் தலையிலே சூடியிருப்பவனின் பொன்னால் செய்த தலைக்கோலம் தொங்குகிறதைப் போன்ற உன்
கூந்தல் பரட்டையாய் உலர்ந்துகிடக்கும் காட்சியைக் காணவும் செய்வாரோ?
எனினும்
பெறுவதற்கு அருமையான திருவாதிரைப் பெயரையுடைய சிவபெருமான் அணிந்துகொள்வதற்காக மலர்ந்த
பெரிய குளிர்ந்த சண்பக மலர் பருவம் பொய்க்காமல் மலர்வதைப் போன்று, நாமிருவரும் ஒன்றாக, அவர்
சொன்னசொல் தவறாமல் திரும்பி வருவார் என்பதனை உணர்ந்துள்ளோம்,
கருமையான, நெய்பூசிய கூந்தலையும், கபடமற்ற மொழியையும் உடையவளே


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard