New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?


Guru

Status: Offline
Posts: 24596
Date:
வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?
Permalink  
 


verukkathakkatha.jpg

சோ – 1

தச்சம்யோ- ராவ்ருணிமஹே. காதும் யஜ்ஞாய.
காதும் யஜ்ஞபதயே தைவி ஸ்வஸ்தி-ரஸ்து ந:
ஸ்வஸ்திர்-மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்
சந் நோஅஸ்துத்வியதே. சஞ் சதுஷ்பதே. 
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம். யாகத்திற்கு வளர்ச்சியை வேண்டுகின்றோம். யாகத்தை செய்பவனுக்கு நற்பயன் கிட்ட வேண்டு கின்றோம். நமக்கு தேவதைகளின் அருள் உண்டா கட்டும். மனித சமூகத்திற்கு க்ஷேமம் உண்டா கட்டும். செடி, கொடிகள் மேலோங்கி வளரட்டும். இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டா கட்டும். நான்கு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும்.அமைதி நிலவட்டும்

.                                                                     – ஒரு வேத மந்திரம்

முதலிலேயே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விடுகிறேன். இந்தக் கட்டுரைத் தொடரில் ஆங்காங்கே வேதங்கள் உபநிஷத்துக்கள் தர்ம சாத்திரங்கள் புராணங்கள் ஆகியவை ஆதாரமாகக் கூறப்படும் அவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படும் ஒரு சில ஸ்லோகங்களும் குறிப்பிடப்படும்.

இவற்றைப் படித்துவிட்டு, நான் ஏதோ இவற்றை யெல்லாம் கரைத்துக் குடித்து விட்டதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்த அளவுக்கு ஸம்ஸ்க்ருத ஞானமும் எனக்குக் கிடையாது. உழைப்பும் கிடையாது. இவை பற்றியெல்லாம் விளக்கி இருக்கிற ஒரு சில நூல்களிலிருந்து நான் திரட்டிய தகவல்களைத்தான், இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் பார்ப்பீர்கள்.

விஷயத்திற்கு வருவோம்.

‘… எங்கெங்கே பிராமணீயம் தாண்டவமாடு கிறதோ, அது யாருடைய இல்லத்திலே தாண்டவ மாடினாலும், பிராமணியத்தைத்தான் நாங்கள் வெறுக்கிறோமேயல்லாமல், தனிப்பட்ட பிராமணர் களை எதிர்க்கவில்லை. இதை நான் மாத்திரம் சொல்லவில்லை, அண்ணா மாத்திரம் சொல்ல வில்லை, தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார் என்று பெரியாருடைய பொன்மொழிகள் – சுய மரியாதை பிரசார ஸ்தாபனம் வெளியிட்டது-விடுதலை அச்சகத்திலே அச்சு ஏற்றப்பட்ட புத்தகத்திலிருந்து படித்துக் காட்டி, பெரியாரே சொல்லியிருக்கிறார், நான் தனிப்பட்ட பிராமணனுக்கு விரோதி இல்லை. தனிப்பட்ட பிராமணர்கள் எனக்கு நண்பர்கள்தான்.

ஆனால் இந்த நாட்டிலே, சமுதாயத்திலே, விஷ வித்துக்களைப் பரப்புகின்ற பிராமணீயத்திற்கு நான் விரோதி. அந்த பிராமணீயத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட பிராமணர்களை அல்ல என்று பெரியார் பேசியதை, பெரியாருடைய பொன் மொழிகளை அச்சு ஏற்றப்பட்டு வந்திருப்பதை, அதிலும் விடுதலை அச்சகத்திலே அச்சிட்டு வந்திருப்பதை, நான் படித்துக் காட்டினேன். நான் எடுத்து எழுதினேன். அப்பொழுது என்னுடைய நண்பர் வீரமணி அவர்கள், நான் திரிபுவாதம் செய்கிறேன், பெரியார் அப்படிச் சொல்லவில்லை, பெரியார் தனிப்பட்ட பிராமணரை எதிர்த்தார், பிராமணியத்தை எதிர்த்தார் என்று அவருடைய பொன் மொழிகளையெல்லாம் கருணாநிதி திரித்துப் பேசுவது தவறு என்று வீரமணி சொன்னார். பிராமணர்களில் நல்லவர்கள் இருப்பார்கள். எனவே, பிராமணீயம்தான் கெட்டதே தவிர, தனிப்பட்ட பிராமணர்கள் கெட்டவர்கள் அல்ல, என்று நான் சொன்னதை எதிர்த்து அன்றைக்குச் சொன்னார்.” – திருவாரூரில் ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதியான இது – ஆகஸ்ட் 2-ஆம் தேதி (2000) முரசொலியில் வெளியாகியுள்ளது.

பிராமணீயம் – என்று முதல்வர் கருணாநிதியும் பெரியாரும் பொதுவாகக் கழகத்தவரும், எதை குறிப்பிட்டு வருகிறார்கள் எனறு எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் , பிராமணீயம் என்று ஒரு சித்தாந்தம் கிடையாது. . பிராமணர்களினால் ஏற்கப் படுகிற வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் – போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தான் பிராமணீயம் என்றால் -இவற்றை பிராமணர்கள் மட்டுமல்லாமல் மற்ற வர்ணத்தவர்களும் ஏற்கிறார்களே பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர்-என்ற நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களும் இவற்றை நம்புகிறார்கள் எனும்போது – இந்த நூல்கள் கூறும் கோட்பாடுகள்தான் பிராமணியம் என்று எப்படிச் சொல்வது? பிராமணியம், க்ஷத்ரீயம், வைசீயம், சூத்ரியம் என்று இதை நான்கீயமாக்குவதுதானே முறையாக இருக்கும்?

இவை எல்லாமே பிராமணர்களால் செய்யப் பட்டவை – அதனால் இது பிராமணியம் என்றும் சொல்லி விட முடியாது. வேதங்களை இயற்றியவர்களே கிடையாது. இதிஹாசங்களாகிய மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை இயற்றியவர்கள் பிராமணர்கள் அல்ல. ஆனால் பிராமணர்களுக்கு மேலாக மதிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப் படுத்தப்பட்டனர். இதுபற்றி ‘எங்கே பிராமணன்’ தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ்விஷயத்தைப் பார்க்க நேரிடலாம்.

குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன.

இப்போதோ இந்த நான்கு வகைகள் கூட இரண்டாக மாறி விட்ட தோற்றம் உண்டாகியிருக்கிறது. பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிரிட்டிஷார் செய்த பாகுபாடு இன்று கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்து விட்டது. கழகத்தவரின் பிராமண எதிர்ப்புப் பிரசாரம் தீவிரமடைந்ததிலிருந்து, அவர்கள் தங்களுடைய பிரசார வசதிக்காக க்ஷத்ரியனையும், வைசியனையும் விழுங்கி விட்டார்கள். தங்களுடைய பிராமண எதிர்ப்பு வலுப் பெறுவதற்காக, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர வகைகளை ஒன்றாக்கி, அந்த மூன்று வகைகளையும் சூத்திரர்கள் என்ற வகையில் அடக்கியது அவர்கள்தான். இதை பிராமணர்கள் உட்பட யாரும் மறுக்காததால், இதுவே நிலைபெற்று விட்டது. அதுவுமின்றி காலப்போக்கில் பல ஜாதிகள் தோன்றி விட்டதால், நடைமுறையில் வர்ணக்குறிப்பைவிட ஜாதிக்குறிப்பு முக்கியத்துவம் பெற்று விட்டது.

வர்ணம் வேறு , ஜாதி வேறு. வர்ணம் பிறப்பினால் வருவதல்ல. ‘வ்ரி ‘ என்ற வேரிலிருந்து வர்ணம் என்ற சொல் வருகிறது. என்பதற்கு விரும்பித் தேர்ந்தெடுப்பது (to Choose) என்று அர்த்தம். வாழும் ஒரு வகையை ஒருவன்
விரும்பித் தேர்ந்தெடுப்பதால், அவன் அதற்குரிய வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான்.

ஜாதி என்ற சொல்லோ, ‘ஜன் ‘ என்ற வேரிலிருந்து வருகிறது. அதற்குப் பிறப்பு என்று பொருள் ஆக ஜாதி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டது; வர்ணமோ ஒருவன் விரும்பி ஏற்கும் வாழும் வகையை அடிப்படையாகக் கொண்டது. வேதத்தில் ஜாதி என்ற சொல் கிடையாது. அது பிறகு காலப்போக்கில் வந்துவிட்ட விஷயம். ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற முடியாது. ஆனால் ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியும். அது மட்டுமல்ல , குறிப்பிட்ட குணாதிசயங்கள் வாழும் வகைகள் போன்ற ‘லட்சணங்கள்’ யாரிடம் காணப்படுகிறதோ அவன் அந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான் .
பகவத் புராணத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது

– யஸ்ய யல்லக்ஷ்ணம் ப்ரோக்தம் –
பும்ஸோ வர்ணபிவ் யஞ்ஜகம்

யத் அன்யத்ராபி த்ருஷ்டேய –
தத் தேனைவ வி நிர்திசேத்

இதன் அர்த்தம்ஒரு வர்ணத்திற்குரிய லக்ஷ்ணங்கள் ஒருவனிடம்காணப்பட்டு இன்னொருவனிடம் காணப்படாமல் இருந்தால்எவனிடம்அவை காணப்படுகின்றனவோ அவனை அந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகஅறிக .

இம்மாதிரி விளக்கங்கள் பல நூல்களில் கொட்டிக் இடக்கின்றன. இந்த விளக்கங்கள் தேவைப்பட்டன என்பதிலிருந்தே ஒரு விஷயம் புரிகிறது. அப்போதே இது பற்றிய கேள்விகள் எழுந்து விட்டன. வாழும் வகை, குணம் ஆகியவைதான் ஒருவன் என்ன வர்ணம் என்று நிர்ணயிக்கும் என்ற நிலை மாறத் தொடங்கி, பிறப்பின் மூலமே ஒருவன் ஒரு வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான் என்ற நடைமுறை வந்து விட்டது அதனால் இதுபோன்ற விளக்கங்கள் அப்போதே தேவைப்பட்டிருக்கின்றன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

2 – பிறப்பும், வர்ணமும்

மஹாபாரதகாலத்தில், ஒருவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்பதற்கு பிறப்பே அடிப்படையாதி விடுகிறது. அதனால்தான் இதுபற்றிய சர்ச்சையும் அதில் விவரமாகவே வருகிறது. ஆனால் ஒவ்வொரு விவாதத்திலும் பிறப்பின் மூலம் ஒருவன் பிராமணன் ஆக முடியாது அவன் வாழும் வகையைப் பொறுத்துத் தான் ஒருவன் ஒரு வர்ணத்தைச் சார்ந்தவனாவான் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.

அதாவது வாழும் வகையின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் அமைக்கப்பட்டன – இது ஒரு கட்டம்.  ஒவ்வொரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள்  தங்களுடைய மூத்தோர்களின் வழிகளையே பற்றினார்கள் இது அடுத்த கட்டம். இதனால் பிறப்பின் மூலமே ஒரு வாழும் வகை மேற் கொள்ளப்படும் நிலை தோன்றியது – இது மூன்றாவது  கட்டம்.

நாளடைவில் பிறப்பே வர்ணத்தில் அடிப்படையாக அங்கீகரிக்கட்பட்டு விட்டது. இப்படித் தான் இது நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நிலை முதலில் வகுக்கப்பட்ட விதத்திலிருந்து மாறுபட்டது என்பதால்,  மீண்டும் மீண்டும் பிறப்பு அடிப்படை அல்ல என்று வற்புறுத்தபட்டு வந்திருக்கிறது.

வேத காலத்தில் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட, வெவ்வேறு வர்ணத்திற்குரிய வழிகளை மேற்கொண்டதுண்டு. தேவாபி என்பவன் புரோகி தனானான்; அவனுடைய சகோதரன் அரசனானான். ஒரு பிராமணரிஷி ‘நான் நான்காவியங்கள் இயற்றுகிறேன்; என் தந்தை ஒரு மருத்துவர்; என் தாயார் சோளத்தை அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்கிறாள்’ என்று கூறுகிறார். ப்ருகு என்ற பிராமணமுனிவரின் குலத்தில் தோன்றியவர்களில் சிலர், தேர்களைச் செய்யும் தச்சு வேலையை மேற்கொண்டார்கள்.

ரிக் வேத காலத்தில் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள், எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்களை மணக்கலாம் என்று தடை எதுவும் இருக்கவில்லை. சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு சூத்திரனுக்கு, ஒரு பிராமணன் வேதம் கற்பிக்கும் நிகழ்ச்சி வருகிறது. சதபத பிராமணம் எனும் நூலில் ஒரு சூத்திரன் ஒரு யாகத்தில் பங்கேற்கிறான்.

அதே நூலில் ஒரு துதி வருகிறது. “எங்களிடையே உள்ள பிராமணர்களுக்கு சிறப்பை அளிப்பாயாக ; எங்களிடையே உள்ள க்ஷத்ரியர்களுக்கு சிறப்பை அளிப்பாயாக ; எங்களிடையே உள்ள வைசியர்களுக்கு சிறப்பை அளிப்பாயாக ;   எங்களிடையே உள்ள குத்திரர்களும் சிறப்பை அளிப்பாயாக ;  எனக்கு சிறப்பை அளிப்பாயாக !’  என்று வேண்டிக் கொள்ளப்படுகிறது.

மஹாபாரதத்தின்படி, க்ருத யுகத்தில் மனிதர்களிடையே எந்த விதமான வகைகளும் இருக்கவில்லை மஹாபாரதத்தில் ஓரிடத்தில் ‘பலவிதமான மனிதர்கள் எப்படி நான்கே வகைகளில் அடக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி பரத்வாஜரால் கேட்கப்படுகிறது அதற்கு ப்ருகு, அந்த வகைகளைச் சார்ந்தவர்களிடையே கூட, ஏற்றத்தாழ்வு கிடையாது. முதலில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். பிரம்மனால் இப்படி சமமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அவர்கள் நான்கு வர்ணத்தவராக வகைப்படுத்தப் பட்டார்கள்’ என்று கூறுகிறார்.

முதலில் இருந்த பிராமணர்களில் ‘உலக  இன்பங்களில் ஆர்வம் ; கோப தாபங்கள் ; துணிவு ஆகியவற்றை முதன்மையாகக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறவர்கள் – க்ஷத்ரியர்களானார்கள் ;  விவசாயம் , ஆடு மாடுகளைப் பராமரிப்பது போன்ற வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்கள் வைசியர்களானார்கள் ;

ஆசைகளை வளர்த்துக் கொண்டு பல விதமான தொழில்களைச் செய்தவர்கள்  சூத்திரர்களானார்கள். வெவ்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு, வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாகிவிட்ட இவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருந்தவர்கள்தான் என்பதால், யாகங்களை செய்வதிலும், தர்மத்தை அனுஷ்டிப்பதிலும் இவர்களில் யாருக்கும் எந்தத்தடையும் கிடையாது’ என்றும் அவர் கூறுகிறார்.

ப்ருகு முனிவரின் சொல், இவ்வாறு அமைந்திருக்கிறது:

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள். ஆகையால், தர்ம காரியங்களைச் செய்வதிலும், யாகங்களை நடத்துவதிலும், யாருக்கும் தடை கிடையாது.

இதனால்தானோ என்னவோ பதரி இயற்றிய தர்ம சாத்திரத்தில், சூத்திரர்கள் வேதங்களில் கூறப் பட்டிருக்கும் யாகங்களைச் செய்யலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.

பாகுபாடுகள் ஆழமாகப் பதிந்து விடக் கூடாது என்பதற்காக, மீண்டும் மீண்டும் தர்ம சாத்திரங்களும், புராணங்களும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. பவிஷ்ய மஹாபுராணத்தில் ‘மனிதர்களிடையே ஜாதி பேதம் என்பது இல்லை. அவர்கள் அனைவருமே சகோதரர்கள். உடும்பரம் என்ற மரத்தில் அடி பாகத்திலும், நடு பாகத்திலும், மேல் பாகத்திலும் பழுத்து குலுங்குகிற பழங்கள் எப்படி ஒரே நிறம், ருசி ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றனவோ, அதே போல எல்லா மனிதர்களும் ஒன்றே’ என்று கூறுப்பட்டிருக்கிறது.

பாகவத புராணத்தில் ‘பிறப்பினால் ஒருவன் எந்த வர்ணத்தையும் சாரமாட்டான்’ என்றும், ஒருவன் எந்த வர்ணத்தைச் சார்ந்தவன் என்பது அவனுடைய நட வடிக்கையைப் பொறுத்தது என்றும் கூறப்பட்டிருக்கிறது. சுக்ர நீதியும் இதையே வலியுறுத்துகிறது.

பராசர முனிவர், ஜனக மன்னனிடம் வர்ணங்களைப் பற்றி இவ்வாறு கூறுவது, மஹாபாரதத்தில் வருகிறது.

வைதேஹகம் சூத்ரம் உதாரந்தி  – 

த்விஜா மஹாராஜ ச்ருதோப பன்னா

அஹம் ஹி ப்ச்யாமி நரேந்த்ர தேவம் விச்வஸ்ய

விஷ்ணும் ஜகத் ப்ரதானம்

இதன் அர்த்தம் நற்குணம் நிரம்பிய சூத்திரன் பிராமணர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறான் என்று வேதங்களை நன்கு அறிந்த பிராமணர்கள் கூறுகிறார்கள். நானோ, அப்படிப்பட்டவனை உலகிற்கெல்லாம் முதன்மையான விஷ்ணுவாகவே கருதுகிறேன்.

க்ஷத்ரியனாகப் பிறந்த விச்வாமித்திரர் பிராமணனாக மட்டுமல்ல, பிரம்ம ரிஷியாகவே ஏற்கப்பட்டார்.

விதஹவ்யர், கார்க்யர், துரிதக்ஷயர் , புஷ்கராருணி, த்ரையாருணி, கவி, சர்யாதி. என்ற பலர் பிராமணர்களாகப் பிறக்காமல், தங்களுடைய வாழும் வகையின் காரணமாக பிராமணர்களானார்கள் என்பது மஹாபாரதத்திலும், பாகவதத்திலும் வருகிறது.

ஒரு கூட்டத்தைச்சார்ந்தவர்களே இவ்வாறு மாறினார்கள் என்றும் பாகவதத்தில் வருகிறது. ‘வியாஸர் வைபாந்தகர் ஆகியோர் தாழ்ந்த பிறப்பெய்தியும் பிராமணர்களானார்கள் க்ஷத்ரிய குலத்தில் பிறந்த விச்வாமித்திரரும் அவ்வாறே…’.  என்று பத்ம புராணம் கூறுவதை ஒரு நூல் சுட்டிக் காட்டுகிறது. மீனவப் பெண்மணிக்குப் பிறந்த வியாஸ்ர், குருக்களில் முதன்மையானவராகவும் ஏற்கப்பட்டார்.

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பரந்த மனோபாவத்தைத்தானே காட்டுகின்றன? இதில் எல்லாம் குறுகிய எண்ணம்  தென்படவில்லையே? அப்படியிருக்க வேதங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லாமே பிராமணீயத்தின் சின்னங்கள் என்றால் – அந்த பிராமணீயம் எப்படி வெறுக்கத்தக்கதாகும்? இன்னமும் பார்ப்போம்.



-- Edited by Admin on Sunday 24th of June 2018 05:28:19 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

3 – ஒரே தந்தையின் குழந்தைகள்

 ‘னத்தை அடக்குவது, இந்திரியங்களை வெல்வது, தவம், மனத்திருப்தி, பொறுமை, ஞானம் கருணை, இறைவனிடத்தில் மனத்தைச் செலுத்துவது, சத்தியம் தவறாமை – இந்த லட்சணங்களை உடையவன் பிராமணன்’ என்று நாரதர் கூறுவதாக மஹாபாரதத்தில் வருகிறது.

பிராமணனாகப் பிறந்து விட்டவன், இந்த வழிமுறைகளையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று நாரதர் கூறவில்லை. ‘இந்த லட்சணங்கள் உடையவன் பிராமணன்’ என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட குணத்தை உடைய வனுக்கு வாழும் வகை என்ன? அதையும் நாரதரே விளக்குகிறார். யாசிக்காமல் கிடைப்பது, தனக்கு வேண்டாம் என்று தன்னுடைய வயல்களில் ஒருவனால் தள்ளப்பட்ட தானியங்களை பொறுக்கி எடுத்துக் கொள்வது, . கடை வீதியில் யாருக்கும் தேவையற்றதாகத் தெருவில் இரைந்து கிடக்கிற தானியங்களை எடுத்துக் கொள்வது…. இவை பிராமணனுக்கு விதிக்கப்பட்ட வழிகள்.

தன்னுடைய குணங்களின் காரணமாக பிராமணனாகக் கருதப்படுகிறவன், இந்த வாழும் வழி முறையையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை மேற்கொள்ளத் தவறினால், அவன் பிராமணன் என்ற நிலையிலிருந்து மாறி விடுகிறான்.

‘பிராமணன், கத்ரியன், வைசியன், சூத்திரன், மிலேச்சன் என்பதெல்லாம் அவரவர்களுடைய குணாதிசயங்களையும், செயல்களையும் பொறுத்த விஷயம்’ என்று சுக்ர நீதி கூறுகிறது. பிராமணனை அடையாளம் காட்டுகிற லட்சணங்கள் என்று கூறப்பட்ட குணாதிசயங்கள் பிராமணனாகக் கருதப்படுகிற ஒருவனிடம் காணப்படாவிட்டால், அவன் பிராமணன் அல்ல. அந்த குணாதிசயங்கள் சூத்திரனாகக் கருதப்படுகிற ஒருவனிடம் காணப்பட்டால், அவன் பிராமணனே என்று பரத்வாஜ முனிவருக்கு ப்ருகு முனிவர் கூறுகிறார். இதுவும் மஹாபாரதத்தில்தான் வருகிறது.

தர்மவியாதன் என்ற கசாப்புக் கடைக்காரன், ஒரு பிராமண தபஸ்விக்கு உபதேசம் செய்கிற நிகழ்ச்சி மஹாபாரதத்தில் விவரிக்கப்படுகிறது. அதிலேயே ‘பிராமணன் கர்வம் கொண்டவனாகவும், தீய மதி படைத்தவனாகவும் இருந்தால், அவன் பிராமணன் என்ற நிலையிலிருந்து நழுவியவனாகிறான். ஒரு சூத்திரன்,தர்மத்தின்பாதையிலிருந்து தவறாதவனாக இந்திரியங்களை அடக்கியவனாக சத்தியத்தையே –கடைபிடிப்பவனாக திகழ்ந்தால், அவன் பிராமணனாகிறான் . ஒருவன் எந்த நிலையை எய்துகிறான் என்பது அவனுடைய குணத்தையும், நடத்தையையும் பொறுத்தது’ என்று அந்த தபஸ்வி விளக்குவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில் மேலும் ஒரு நிகழ்ச்சி நகுஷன், தர்மபுத்திரரைப் பார்த்து, பிராமணன் என்பவன் யார்? என்று கேட்கிறான். அதற்கு தர்மபுத்திரர் ‘எவனிடம் உண்மை, மன்னிக்கும் மனப்பான்மை, தயை, நன்னடத்தை கருணை, தவம், பச்சாதாபம் – ஆகிய குணங்கள் காணப்படுகின்றனவோ அவன் பிராமணனாகிறான்’ என்று கூறுகிறார்.

அதற்கு நகுஷன், ‘ இந்த குணங்கள் ஒரு குத்ரனிடமும் காணப்படலாமே ‘ , என்று கேட்க, தர்ம புத்திரர், ‘இவை ஒரு குத்திரனிடம் காணப்பட்டால் அவன் குத்திரன் அல்ல. இந்த குணங்கள் ஒரு பிராமணனிடம் காணப்படாவிட்டால் அவன் பிராமணனும் அல்ல. பிராமணனுக்குரிய வாழும் வகை யாரிடம் காணப்படுகிறதோ அவன்பிராமணன் . யாரிடம் அது காணப்படவில்லையோ அவன் பிராமணன் அல்ல – என்று கூறப்பட்டிருக்கிறது’ என விளக்கமளிக்கிறார்.

இப்படிப்பட்ட விளக்கம் அளித்ததற்காக அறிய வேண்டியதை நன்கு அறிந்தவர் என்று தர்மபுத்திரர், நகுஷனால் பாராட்டப்படுகிறார்.

ஆக, பிராமணன் என்பது பிறப்பினால் கிடைக்கிற ஒரு நிலை அல்ல என்பது தெளிவாகிறது. வேதங்கள், பிறப்பிலேயே பேதத்தைக் கற்பித்தன என்று கூறுகிறவர்கள் ஒரு மேற்கோள் காட்டுவது உண்டு.

‘விராட புருஷனின் முகத்திலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து க்ஷத்ரியனும், தொடைகளிலிருந்து வைசியனும், கால்களிலிருந்து சூத்திரனும் தோன்றிய தாக வேதம் கூறுகிறதே?’ என்பது இவர்கள் கேட்கிற கேள்வி

ரிக் வேதத்தில் சூத்திரன் என்ற சொல் வருவதே இந்த ஒரு மந்திரத்தில்தான். இது புருஷ ஸுக்தம் எனும் பிரிவில் வருகிறது. இதில் முதலிலேயே ஒரு விஷயத்தை கவனித்து விடுவோம். ‘பிராம்மனோஸ்ய முகம் ஆஸித்‘ என்று இந்த மந்திரம் கூறுகிறது. இங்கே முகம் என்பது இரு அர்த்தங்களை உடைய சொல். இதை தமிழில் முகமாகவும் வைத்துக் கொள்ளலாம், ‘வாய்’ என்றும் கொள்ளலாம்.

பல விரிவுரையாளர்கள் பிராம்மனோஸ்ய முகம் ஆஸித் என்பதற்கு பிராமணன் வாயிலிருந்து தோன்றினான் என்றுதான் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால், இதுபற்றி கேள்வி எழுப்புகிறவர்கள், பிராமணன் முகத்திலிருந்து தோன்றினான் என்ற அர்த்தத்தையே எடுத்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் வாயிலிருந்து தோன்றினான் என்றால் ஓர் உயர்ந்த நிலையை பிராமணனுக்குக் கொடுத்ததாக ஆகிவிடவில்லை. ஏதோ ஒர் அங்கத்திலிருந்து தோன்றிய நிலைதான் இருக்கிறது. அது தங்கள் வாதத்திற்கு அவ்வளவு வசதியாக இல்லை என்பதால், முகம் என்றே எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

இது ஒருபுறமிருக்க கால்களிலிருந்து சூத்திரன் தோன்றினான் என்று அந்த மந்திரம் கூறுவதால், பிறப்பின் மூலமே சிலர் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்ற வாதம் எழுப்பப்படுகிறது. இவர்கள் மிகவும் வசதியாக ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அதே புருஷ சூக்தத்தில் விராட புருஷனின் கால்களிலிருந்துதான் பூமியே தோன்றியதாகக் றப்படுகிறது. பத்ப்யாம் பூமி: – அதாவது கால்களிலிருந்து பூமி உண்டாயிற்று என்று கூறப் பட்டிருக்கிறது.

எந்த கால்களிலிருந்து சூத்திரன் உண்டானான் என்று கூறப்பட்டிருக்கிறதோ அதே கால்களிலிருந்து பூமியே படைக்கப்பட்டிருப்பதாக அந்த மந்திரம் சொல்கிறது. அப்படியானால் பூமியே இழிவானதா? இதிலிருந்தே என்ன தெரிகிறது ? கால்களிலிருந்து தோன்றினான் என்று சொன்னதால், எந்த இழிவும் திட்டமிடப்படவில்லை. விராட புருஷனிடமிருந்துதான் எல்லோருமே தோன்றினார்கள் ; ஒரு அங்கம் மற்றொரு அங்கத்தை விட கேவலமானதோ உயர்ந்ததோ அல்ல. பூமியே கூட எந்த அங்கத்திலிருந்து உண்டாயிற்றோ அந்த அங்கத்திலிருந்துதான் சூத்திரனும் உண்டானான் என்று அந்த மந்திரம் கூறுகிறது.

பூமிக்கு ஒர் இழிவு அவிக்கப்பட்டது என்றால்தான், சூத்திரனுக்கும் ஒர் இழிவு அளிக்கப்பட்டது என்று பொருள் உண்டாகும். ஆனால் பூமியோ மிகவும் உயர்ந்ததாகக் கூறப் படுகிறது – அப்படியிருக்க அதே கால்களிலிருந்து தோன்றிய சூத்திரனுக்கு மட்டும் எப்படி ஒரு குறிப்பிட்ட இழிவு உண்டாகும்?

வாயிலிருந்து உண்டாகிய பிராமணன் யார்? பிறவியினால் அந்த பிராமனன் என்கிற நிலையைப் பெற்றவன் அல்ல – என்பதுதான் மீண்டும் மீண்டும் தெளிவாக்கப்பட்டிருக்கிறதே பிறவியால் எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது பலமுறை வலியுறுத்தி கூறப்பட்ட பிறகு – இந்த மந்திரத்தினால் ஒருவனுக்கு இழிவோ அல்லது பெருமையோ எப்படி பிறவியிலேயே வந்து சேர்ந்துவிடும் ?

ஒருவனுடைய குணாதிசயங்கள் மற்றும் அவனுடைய நடத்தை வாழும் வகை ஆகியவற்றைக் கொண்டுதான் ஒருவனுடைய வர்ணம் நிச்சயமாகிறது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் பலமுறை கூறப் பட்டிருக்கின்றன. அப்படியானால், இந்த மந்திரத்தின் பொருள் என்ன ? அவரவர்கள் பெற்றுள்ள குணாதிசயம், மற்றும் அவரவர்கள் மேற்கொள்கிற வாழும்வகை ஆகியவற்றைப் பொறுத்து அவரவர்கள் விராட புருஷனின் வாய், தோள், தொடை கால்கள் ஆகிய அங்கங்களிலிருந்து பிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இதுதானே அர்த்தமாக இருக்க முடியும் ஆகையால், இந்த புருஷ ஸு க்த மந்திரம் பிறவியிலேயே பேதத்தைக் கற்பித்துவிடுகிறது என்று கூறுகிற வாதம், ஏற்கத்தக்கது அல்ல.

இதனால்தான் பவிஷ்ய புராணம், எல்லோருமே கடவுளின் குழந்தைகள் என்பதால், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது என்று வலியுறுத்துகிறது.

சத்வாரா ஏகஸ்ய பிது: ஸ்தாஸ்ச
தேஷாம் ஸு தானாம் கலு ஜாதி : ஏக. 
ஏவம் ப்ரஜானாம் ஹி பிதைகா ஏவ
பித்ரைகாபவான் ந ச ஜாதி பேத:

இவ்வாறு கூறுகிற பவிஷ்ய புராண ஸ்லோகத்தின் அர்த்தம் இது: நான்கு வகையானவர்களும் ஒரே தந்தையின் (கடவுளின்) குழந்தைகள் ; ஒரு தந்தையின் மக்களாகிய இவர்களிடையே ஜாதி பேதம் என்பது கிடையாது.

ஆக , இன்று பகுத்தறிவுவாதிகளால் ‘பிராமணீயம்’ என்று வர்ணிக்கப்படுகிற சிந்தனைகளில் மிக உயர்ந்த எண்ணங்களும் இருக்கின்றனவே இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது ?



-- Edited by Admin on Sunday 24th of June 2018 05:28:48 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

4 – ஆட்சி புரிய அருகதை இல்லை

பிராமண க்ஷத்ரிய, வைசிய, சூத்திர வர்ணங்களில் ஒருவன் எந்த வர்ணத்தைச் சார்ந்தவனாகிறான் என்பது அவனுடைய குணம், அவன் வாழும் வகை ஆகியவற்றை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டது – என்பதற்கு தர்ம சாத்திரங்களிலிருந்தும், புராணங் களிலிருந்தும் பல சான்றுகளைப் பார்த்தோம் இதையேதான் பகவத் கீதையும் வலியுறுத்திச் சொல்கிறது. கீதையில் கிருஷ்ண பகவான்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் 
குனகர்மவிபா கச;

என்று சொல்கிறார்.

அதாவது ‘குணங்கள் கர்மங்கள் (தொழில்கள் அல்லது செயல்பாடு) ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இப்படி வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதற்கு மேலும் பல ஆதாரங்களையும் காட்டிக் கொண்டே போகலாம் . தர்ம சாத்திரங்களிலும் புராணங்களிலும் இந்த சிந்தனை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறப்படுகிறது.

‘இப்படிக் கூட அதாவது குணம், தொழில் அல்லது செயல்பாடு போன்ற அடிப்படையில் கூட மனிதர்கள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழலாம் சமூகத்தின் இயக்கத்தை சீரமைக்க இம்மாதிரி அணுகுமுறை இன்றும் கூட தேவைப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இன்டெலக்சுவல்ஸ் என்ற வகையில் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் என்று சிலர் அடங்குகிறார்கள். வர்த்தகர்கள் என்ற வகையில் தொழிலதிபர்களும், வியாபாரிகளும் அடங்குகிறார்கள் . தொழிலாளிகள் என்ற வகையில் ஸ்கில்ட் , செமி ஸ்கில்ட் , அன் ஸ்கில்ட் வேலைகளைச் செய்பவர்கள் அனைவருமே அடங்குகிறார்கள். இந்த மூன்றிலிருந்தும் விலகி ராணுவத்தினர் இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட பழைய வர்ண முறையாகத்தானே இருக்கிறது ?

இன்றைய நிலையில் பிறப்பினால் எவனும் ஒரு வகையைச் சார்ந்தவனாகி விடுவதில்லையே ? என்ற ‘கேள்வி எழும். பண்டைக் காலத்திலும் பிறப்பையொட்டி எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனாகி விடவில்லை என்பதற்கு நாம் ஏற்கெனவே பல ஆதாரங்களைப் பார்த்து விட்டோம்.

ஆனால் பிற்காலத்தில் இந்த நிலை மாறி, பிறப்பின் அடிப்படையிலேயே வர்ணங்கள் அமைந்து விட்டன. இது எப்படி நடந்தது? அதற்கும் இன்றைய நிலையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஓர் அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாவது எளிதாக நடந்து விடுகிறது. அதேபோல் ஒரு டாக்டரின் பிள்ளை டாக்டராகவோ, வக்கீலின் பிள்ளை வக்கீலாகவோ உருவெடுப்பதும் சுலபமாகவே இருக்கிறது. பிறந்த போதிலிருந்தே குறிப் பிட்ட சூழ்நிலையில் வளர்கிற குழந்தைகள் அந்தச் சூழ்நிலையை ஒட்டியே உருவாகி விடுகின்றன. பிறப்புச்சூழ்நிலையை மீறி, வேறு வகையில் வளர்கிற குழந்தைகளும் உண்டு. அப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

அதே சமயத்தில் பிராமண வர்ணத்தை சார்ந்த வனாக வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மை யானவர்களுக்கு வரும் அளவில் பிராமண வர்ணம் அமையவில்லை என்பதுதான் உண்மை. பிராமணனுக்கு வறுமை விதிக்கப்பட்டது; கடும் தவங்கள் கூறப்பட்டன.

புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாத்திரங்கள், எல்லாவற்றுக்குமே காரணம் பிராமணன்தான் என்று வைத்துக் கொண்டால் – ஒரு பேச்சுக்காக வைத்துக் கொண்டால் – அப்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிராமணன் தனக்கு ஏற்ப கொண்ட நிலை எப்பேர்ப்பட்டது? இத்தனை நூல்களையும் இயற்றிய பிராமணன், தனக்கு மிகவும் வசதியான ஒரு நிலையை அல்லவா ஏற்படுத்தி கொண்டிருக்க வேண்டும்? ஆனால், அவன் ஏற்படுத்திக் கொண்ட நிலை எத்தகையது?

சத்தியம் தவறக் கூடாது, எல்லா ஜீவராசி களிடத்திலும் கருணை காட்ட வேண்டும் , தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும், சமநிலையை மேற்கொள்ள வேண்டும், பிறகு தேவைப்படும் என்று பொருளை சேர்த்துவைத்துக் கொள்ளக்கூடாது; பணம் சம்பாதிக்கக் கூடாது ; யாசிக்காமல் பெறுவது, களத்தில் விழுந்து கிடக்கிற நெல் அல்லது கை வீதியில் இரைந்து கிடக்கிற தானியம் ஆகியவற்றை மட்டுமே பெறுவது.
இவையெல்லாம் எல்லோருமே பொறாமைப் படத்தக்க ஒரு நிலையா?

நமக்கு வேண்டாம் இந்த வம்பு என்று பலரும் ஒதுக்கித் தள்ளக் கூடிய வாழும் நிலை அல்லவா பிராமணனுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது .  இது மட்டுமா ? இவை போதாதென்று உயர் பதவி பிராமணனுக்கு மறுக்கப்பட்டது -அவன் அரசனாக இருக்கத் தகுதியற்றவன் என்று விதிக்கப்பட்டது.

இதை பரசுராமரின் கதை நன்றாகவே விளக்குகிறது. அதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கார்த்தவீர்யார்ஜுனன் என்ற மன்னனின் மகன்கள் பரசுராமரின் தந்தையை கொன்று விட்டார்கள். பெரும் கோபமுற்ற பரசுராமர், ‘இந்த பூமியில் க்ஷத்ரிய இனமே இல்லாமல் செய்து காட்டுகிறேன்’ என்று முனைந்தார். க்ஷத்ரியர்களை மீண்டும் மீண்டும் அழித்தார். அப்போது கச்யபர் என்கிற ரிஷி பரசுராமர் செய்த ஒரு யாகத்தில் ‘க்ஷத்ரியர்களைக் கொன்று நீ வென்ற பூமியை எனக்குத் தானமாகக் கொடு’ என்று கேட்டு, அவரிடமிருந்து பூமியைப் பெற்றார்.

பிறகு இந்த தேசமெல்லாம் இப்பொழுது என்னுடையது; ஆகையால் நீ தென்கோடிக்குச் சென்று கடற்கரையை அடைந்து விடு’ என்று உத்திரவிட்டார். பின்னர் கச்யபர், பரசுராமர் வென்ற தேசங்களை, தன் சிஷ்யர்களிடம் ஒப்படைத்தார்.அப்போது பிராமணர்கள் ஆட்சியின் கீழ் வந்த பூமியில் பலம் உள்ளவர்கள் எல்லாம், பலம் குறைந்தவர்களைத்தாக்கத் தொடங்கினார்கள் எது யாருடைய உடமை என்று நிர்ணயம் எதுவும் இல்லாமல், பலாத்காரத்தின் மூலமாகவே எல்லோரும் எதையும் பெற்றனர். ஆட்சியாளர்களாகி விட்ட கர்வத்தினால் பிராமணர்கள் தீய வழிகளில் சென்றார்கள். திருட்டும், பொய்யும் மலிந்தன. பூமாதேவி பெரிதும் வருந்தினாள் அப்போது அவள் தவம் செய்து கொண்டிருந்த கச்யபரை அடைந்து ‘தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு இந்த பூமியை மீண்டும் க்ஷத்ரியர்கள் வசமே ஒப்படையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறே செய்தார். க்ஷத்ரிய குலத்தைச் சார்ந்தவர்கள் எங்கெல்லாம் மிஞ்சியிருந்தார்களோ அவர்கள் எல்லாம் வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே அரசர்களாக பட்ட பிஷேகம் செய்விக்கப்பட்டார்கள். மீண்டும் பூமி செழித்தது.

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தர்மபுத்திரருக்கு கிருஷ்ணர் விவரிப்பதாக மஹாபாரதத்தில் வருகிறது.

அதாவது பிராமணனுக்கு வசதியான வாழ்க்கை இருக்கக் கூடாது; செல்வம் சேர்ந்திருக்கக் கூடாது ; ஆட்சியும் கூடாது. விரதங்கள், தவங்கள் போன்ற கடுமையான விஷயங்களே அவனுக்கு விதிக்கப்பட்டன. இந்த மாதிரி நிலையில் பிராமணனை வைத்து, சாத்திரங்களையும், சூத்திரங்களையும், புராணங்களையும் பிராமணர்கள்தான் உருவாக்கினார்கள் என்றால் – அந்தத் தன்மைதான் பிராமணீயம் என்றால் – அதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது 



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

5 – மனு ஸ்ம்ருதி – ஒரு பார்வை

மனு தர்மம் கி.மு. இரண்டாவது நூற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாவது நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனு தர்மம் என்ற பெயர் வழங்கினாலும், இது மனு ஸ்ம்ருதி என்றுதான் பல நூல்களிலும் கூறப்படுகிறது. ச்ருதி என்பது – கேட்கப்பட்டது; அதாவது வேதங்கள் ஸ்ம்ருதி என்பது – இயற்றப்பட்டது; தர்ம சாஸ்திரங்கள் இதில்தான் அடங்கும். அந்தந்த கால கட்டம் , சமூக சூழ்நிலை ஆகியவற்றையொட்டி பல தர்ம சாஸ்திர நூல்கள் இயற்றப்பட்டன.

நாரத ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, காத்யாயன ஸ்ம்ருதி, ஹரீத ஸ்ம்ருதி என்று பல ஸ்ம்ருதிகள் இருப்பதற்கு இதுதான் காரணம். இந்த நூல்கள் சில விஷயங்களில் ஒன்றையொன்று ஒத்தும், சில விஷயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டும் நிற்கின்றன. இவையெல்லாம் இன்றைய சட்டங்கள் போன்றவை அல்ல. இன்றைய சட்டங்களை மீறினால் தண்டனைகள் உண்டு. ஆனால் இந்த தர்ம சாஸ்திர நூல்கள் அப்படி பட்டவை அல்ல. ஏனென்றால் இவை இயற்றப்பட்ட காலத்தில் இன்று இருப்பது போன்ற அரசியல் அமைப்புகள் இல்லை. இவை அந்தந்த காலத்திற்கு ஏற்ற பொதுவான விதிமுறைகளை வகுத்தன. அவற்றை ஏற்றவர்களும் உண்டு, ஏற்காதவர்களும் உண்டு. எல்லா அரசர்களும், எல்லாக் காலத்திலும் ஒரே தர்மசாஸ்திர நூலின் அடிப்படையில் ஆட்சி செலுத்தினார்கள் என்று சொல்லி விட முடியாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஒரு மரியாதை இருந்தது.

இந்த நூல்களில் மனு ஸ்ம்ருதி என்கிற மனுநீதி தர்மம் தான் மிகவும் பிரபலமானது. இந்த தர்ம சாஸ்திரங்கள் – மனுநீதி உட்பட – இயற்றப்பட்ட காலத்தில் வர்ணங்கள் பிறப்பின் மூலமே அடையப் பெறுகின்றன என்ற நிலை தோன்றியாகி விட்டது.

மனு ஸ்ம்ருதியில் பிராமணனுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் விட உயர்ந்த இடம் க்ஷத்ரியனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது . ‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை ; ஆகையால் ராஜசூயம் நடக்கும் பொது, பிராமணன் க்ஷத்ரியனை விட , தாழ்வான இடத்திலேயே அமர்கின்றான்.’ என்று ஸத பத பிராமணம் கூறுகிறது. பிராமணனுக்கு சொல்லாத சிறப்பை மனு நீதி , அரசனுக்கு கூறுகிறது. ‘சந்திரன், அக்னி, வாயு, சூரியன், , இந்திரன், குபேரன் , வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அரசனுக்கு அசுத்தம் என்பது கிடையாது என்று மனு நீதி சொல்கிறது.

பிராமணனுக்குப் பல சலுகைகளைக் காட்டுகிற மனுநீதி, மேலே சொன்னவாறு அரசனுக்குத் தருகிற உயர்ந்த அந்தஸ்தை, பிராமணனுக்குத் தரவில்லை. பிராமணனைக் கொல்லக் கூடாது என்றும், மரண தண்டனையிலிருந்து அவனுக்கு விலக்கு உண்டு என்றும் மனுநீதி கூறுகிறது. ஆனால், தன்னைத்தாக்க வருகிற பிராமணனை, சிறிதும் தயக்கம் இன்றி கொன்றுவிட வேண்டும் என்றும் அதே மனு நீதி சொல்கிறது.

குரும் வா பாலவ்ருத்தெள வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம். 
ஆததாயினமாயாந்தம் 
ஹன்யாதேவாவிசாரயந்

குருவோ, இளைஞனோ வயோதிகனோ பிராமணனோ மெத்த கற்றவனோ ஆயினும் சரிஒருவன் வன்முறை எண்ணத்துடன் வந்தால் அவனைத்தயக்கமின்றி கொன்று விடவேண்டும்என்பது இதன் அர்த்தம் இது மனு ஸ்ம்ருதியில் வருகிறது.

அதே போல சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு பிராமணன் கொல்லப்படலாம் என்றும் மனு தர்மம் கூறுகிறது.

ஒரே குற்றத்திற்கு மற்றவர்களை விட பிராமணனுக்கு அதிக தண்டனை வேண்டும் என்றும் மனுநீதி வற்புறுத்துகிறது.

அஷ்டாபாத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்.
ஷோடசைவ து வைச்யஸ்ய 
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச.
ப்ராம்மனஸ்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபிசதம் பவேத்
த்விகுணாவா சது:
ஷஷ்டி தத் தோஷகுனா வித்தி: ஸ:

அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு ; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பிராமணனுக்குச் சலுகையை அளிக்கிற மனு நீதிதான், மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, மனு தர்மம், எல்லா பிராமணர்களையும் – அதாவது பிராமணனாகப் பிறந்தவர்கள் அனைவரையும் – சலுகைக்கு உரியவர்களாக எடுத்துக் கொள்ளவில்லை.

கற்றறிந்து வேதம் ஒதுகிற பிராமணனுக்கு வரி விதிக்கக் கூடாது என்று மட்டுமே மனு தர்மம் சொல்கிறது. அப்படி கற்றறிந்து வேதம் ஒதாத பிராமணனுக்கு வரி விலக்கு கிடை யாது. ஆனால் ஏழை மக்களிடமும், சிறு வியாபாரங் களைச் செய்பவர்களிடமும் பெயரளவுக்கே வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மனு தர்மம் சொல்கிறது. இது பிராமணனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை அல்ல. எல்லா வர்ணங்களைச்சார்ந்தவர்களிடையிலும் உள்ள ஏழைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை.

வேதம் ஓதி, சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனை மனு தர்மம் மிகவும் கடுமையாக அணுகுகிறது .

எப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானங்களைச் செய்ய வேண்டும் என்று விவரிக்கிற மனு ஸ்ம்ருதி, இவ்வாறும் சொல்கிறது; ‘சாதுவைப் போல் வேஷம் அணிந்து கொண்டு, மற்றவர் பொருளின் மீது விருப்பம் வைத்து, பொய்யை பரப்பி, கர்வம் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய நல்ல வார்த்தைகளைப் பொறுக்க முடியாத பொறாமைக் காரனாகத் திகழ்பவன், பூனையின் தன்மையை உடையவன் எனப்படுகிறான். தான் தேடுகிற இரை வெளியே வருகிற வரையில், அடக்க குனம் உள்ளதுபோல் நடித்து, இரை வெளியே வந்தவுடன் பாய்ந்து பிடித்து, அதைக் கொன்று விடுகிற குணம் பூனையினுடைய குணம்…. இப்படிப்பட்ட குணமுடைய குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான்….’

மனு தர்மம் மேலும் சொல்கிறது : பூனை குணம் உடைய பிராமணனுக்கோ விரதமுடையவன் போல் வேஷம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களைக் கற்றறியாத பிராமணனுக்கோ, ஒரு சிறியதானத்தையும் கூட நன்னடத்தை உள்ள மனிதன் செய்து விடக் கூடாது. இப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானம் செய்யப்பட்டால் , தானம் வாங்கியவனோடு சேர்ந்து, தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப் பிடிக்காத பிராமணனுக்கு சிராத்தத்தில் உணவளிக்கப் பட்டால், அந்த உணவு அரக்கர்களால் உட்கொள்ளப் பட்டதாகிறது.

இப்படி வேதம் ஒதாத பிராமணனையும், சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனையும், மனு தர்மம் பிராமணனாகவே கருதவில்லை. ஆகையால், பிராமணனுக்குப் பலவித சலுகைகளை மனுநீதி தந்து விடுகிறது என்று கூறுகிறபோது – பல சுமைகளைப் பிராமணன் மீது அதே நீதி நூல் ஏற்றுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இன்றும் பல வகுப்பினருக்கு சலுகைகள் கோரப்படுகின்றன. சட்ட ரீதியாகச் சலுகைகள்  அளிக்கப்படுகின்றன. ஆனால் அச்சலுகைகளை பெறுபவர்கள் மீது, சட்டம் எந்தச் சுமையையும் ஏற்றவில்லை மனு தர்மமோ, சலுகைகள் உண்டு – இந்தச் சுமைகளைத் தாங்கினால் என்றுதான் கூறியிருக்கிறது.

மனு ஸ்மிருதியை மேலும் கொஞ்சம் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

 6 – தர்மமே அதர்மமாகலாம் !

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே.

அனுவ்ரஜ்யா ச சுச்ரூஷா  யாவத் அத்யயனம் குரோ:

தவிர்க்க முடியாத நேரங்களில் பிராமண மாணவன்பிராமணன் அல்லாத குருவிடமிருந்து போதனை பெறலாம்; அப்படி போதனை பெறுகின்ற காலத்தில் அந்த குருவுக்கு அந்த மாணவன் பணிவிடை செய்யவேண்டும் – என்பது மேற்கண்ட மனுவாக்கியத்தின் அர்த்தம்.

அதாவது சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று ஒருபுறம் கூறுகிற மனு தர்மம், பிராமணன் அல்லாதவர்களிடமிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமணனுக்கு அளிக்கிறது. பிராமணன் அல்லாதவன் எனும்போது, அதில் க்ஷத்ரிய வைச்ய, சூத்ர வர்ணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா ?

இந்த முரண்பாடு – அதாவது மேற்கண்ட விதிக்கும், சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு –  – மனு ஸ்ம்ருதியில் இருக்கத்தான் செய்கிறது. இதைத் தீர்ப்பதற்கு வேதங்களில்தான் ஆதாரம் தேட வேண்டும் ஏற்கெனவே நான் குறிப்பிட்ட மாதிரி, வேதங்கள் மாற்றப்பட முடியாதவை ; மனு ஸ்ம்ருதி போன்ற தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளோ காலத்துக்கேற்றபடி மாற்றியமைக்கப்படக் கூடியவை . உபநிஷத்துக்கள், வேதங்களின் ஓர் அங்கம் முதன்மையான உப நிஷத்துக்களில் சாந்தோக்ய உபநிஷத்தும் ஒன்று. அதில் ரைக்வர் என்கிற பிராமணர் ஜனச்ருதி என்கிற சூத்திரருக்கு வேதத்தைக் கற்பிக்கிற நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.

ப்ருகு முனிவர், பரத்வாஜ முனிவரிடம் நான்கு வர்ணத்தவருக்குமே யாகங்களையும் மற்ற தெய்வ காரியங்களையும் செய்யும் உரிமை உண்டு என்று விளக்குகிறார்

இத்யேதி: கர்மபிர் வ்யஸ்தா

தீவிஜா வர்ணாந்தரம் கத :

தர்மோ யஞ்ய-க்ரியா தேஷாம்

நித்யம் ந ப்ரதிஷித்யதே.

இதன் அர்த்தம் : பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கை விட்டதால் வெவ்வேறு செயல் முறைகளை மேற்கொண்டுமற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்களானார்கள். ஆகையால்தர்ம காரியங்களைச் செய்வதிலும் யாகங்களை நடத்துவதிலும் யாருக்கும் தடை கிடையாது.

பிராமண ,க்ஷத்ரிய , வைச்ய வகுப்பினர் அனைவரும் வேதம் கற்கலாம் என்பது எல்லா நூல்களிலும் கூறப்படுகிறது; அது தவிர சூத்திர வர்ணத்தைச் சார்ந்தவர்களும் வேதம் கற்கலாம் என்பதற்கு மேற் கூறிய ஆதாரங்கள் இருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, மனு தர்மமே கூட யாரை பிராமணனாகக் கருதுகிறது? யாரை சூத்திரனாகக் கருதுகிறது?  ‘வேதத்தைக் கற்றறியாமல், மற்ற கல்விகளைக் கற்று, வாழ முயற்சிக்கிற பிராமணன், தன்னுடைய சந்ததியினருடன், தான் வாழும் காலத்திலேயே சூத்திரனாகிறான்’ என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.

இது மட்டுமல்ல. சூத்திரன், பிராமணனாகி விடலாம் பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைச்ய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம் என்றும் மனு ஸ்ம்ருதி சொல்கிறது.

 சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்

க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து  வித்யாத்வைச்யாத்ததைவ ச

– என்பது மனுவின் வார்த்தை.

 சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று மனு சொல்லியிருப்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறவர்கள்  , மேலே குறிப்பிட்டவற்றையும் பார்க்க வேண்டும். இவற்றிற்கிடையே முரண்பாடுகள் உண்டு அதைத் தீர்க்க ஏற்கெனவே நாம் சொன்ன மாதிரி மற்ற ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பொழுது பிறப்பினால் மட்டும் எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனாகி விடுவ இல்லை என்பது புரியும் ஒருவன் ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கும் மாறவும் முடியும் என்பது தெளிவாகும்.

அது மட்டுமல்ல வேதம் பயிலக் கூடாது என்ற தடை சூத்திரர்களுக்கு மட்டுமல்ல பிராமணர்களுக்கும் உண்டு.  நியமம் தவறி, பெயரளவில் பிராமணனாக வாழ்கிறவன், பெண்கள், சூத்திரர்கள் ஆகியோர் வேதம் பயிலக் கூடாது என்கிற விதிமுறையை பாகவத புராணத்தில் வியாஸர் எடுத்துச் சொல்கிறார். இதில் ஒன்று கவனிக்கத்தக்கது. வேதம் பயிலக் கூடாது என்கிற தடை-நியமம் தவறிய பிராமணனுக்குத்தானே தவிர,அப்படிப்பட்ட தடை க்ஷத்ரியனுக்கோ, வைச்யனுக்கோ அல்ல !

சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று கூறுகிற மனு ஸ்ம்ருதியே கூட அவர்களுக்கு வேறு எந்தக் கல்வியையும் தடைசெய்யவில்லை. வேறு தொழிலையும் தடுக்கவில்லை. பிராமணனுக்கு விதிக்கப்பட்ட மாதிரி வறுமையும் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட வில்லை. ‘ஒரு பிராமணன் வீட்டிற்கு வைச்யர்களும் சூத்திரர்களும் விருந்தாளிகளாக வந்தால், அமர்த்தி உணவளிக்க வேண்டும்’  என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.

 வைச்ய சூத்ராவபி ப்ராப்தெள குடும்பேதிதிதர்மினெள

போஜயேத்ஸஹ   ப்ருத்யை : தாவான்ருசம்ஸ்யம்  ப்ரயோஜயன்

என்று இது மனு ஸ்ம்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது .

மேலே போவதற்கு முன்பாக, மனு ஸ்ம்ருதியைப் பற்றி ஒரு வார்த்தை அது வர்ணப் பிரிவுகளைப் பற்றி மட்டும் பேசுகிற நூல் அல்ல. கல்வி, திருமணம், குற்றங்கள், குற்ற விசாரணை, சாட்சியம் அளிப்பதற்கான வழிமுறைகள், சொத்துரிமை, அரசனின் கடமைகள், ஒற்றர்கள்…. என்று பல விஷயங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிற நூல் அது அதைப் படிக்கும் பொழுது, இத்தனை விஷயங்களை, இவ்வளவு நுணுக்கமாக, எவ்வளவு காலத்திற்கு முன்பாகவே சிந்தனை செய்திருக்கிறார்கள் என்ற வியப்பு மேலிடுகிறது.

இது புறமிருக்க, ஒரு வர்ணத்தவர் மற்றொரு வர்ணத்திற்கு மாறலாம் என்பதைப் பார்த்த நமது மனதில், ஏன் பலரும் பிராமணனாக மாறி விட வில்லை? என்ற கேள்வி எழலாம். எதற்காக மாற வேண்டும்? கடித்ரியனுக்கு அரசுப் பதவிகள் இருந்தன;

வைச்யனுக்கு வர்த்தகம் இருந்தது. சூத்திரனுக்கு ‘ பலவித தொழில்கள் இருந்தன. பிரமணனுக்கோ வேதம் ஓதுவது தான் முக்கிய கடமையாக இருந்தது. வறுமைதான் அவனுக்கு விதிக்கப்பட்டது. நியமம் தவறியவனாக இருந்தால், தானம் வாங்கக்கூட  அருகதையற்றவன் என்ற நிலை அவன் மீது  சுமத்தப்பட்டது.அப்படியிருக்க பிராமணனாக மாற ஒருவன் துடிக்க வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை என்பது கண்கூடு.

இன்று இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சில பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரப் படுகிறது. ஆனால் அவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அன்று வேதம் கற்பதில் க்ஷத்ரியர்களோடும், வைச்யர்களோடும் சம உரிமையும் – வேதம் கற்பிப்பதில் தனி உரிமையும் பெற்றிருந்த பிராமணனுக்கோ, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இன்றைய சமுதாயத்தில், இடஒதுக்கீடு பெறுகிற பிரிவுகளில் ஒருவன் விரும்பி சேர்ந்து விட முடியாது அப்பிரிவுகளில் பிறந்திருந்தால்தான் உண்டு. ஆனால் அன்றோ, ஒருவன் விரும்பினால் பிராமணனும் ஆகலாம் என்ற நிலை இருந்தது. இதை மனு ஸ்ம்ருதியில் பார்த்தோம் மற்ற ஆதாரங்களிலும் கண்டோம் .

சரி, வேதம் ஓதுவதும், கற்பிப்பதும் ஏன் முக்கியத்துவம் பெற்றன? வேதங்கள் அவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டன. ஆனால் அவையோ எழுத்துவடிவத்தில் கிடையாது.வாய் மூலம் சொல்லக் கேட்டுத்தான் ஒருவன் பயில வேண்டும். அதில் எழுத்துப்பிழை வந்தாலோ, ஸ்வரம் தவறிப் போனாலோ அர்த்தம் அனர்த்தமாகி விடும். அதனால் தான் அதைக் கற்பதற்கும், போதிப்பதற்கும் பல கடுமையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்படி இருந்தும் கூட, இந்த விதிமுறைகள் எல்லாம் மாறக் கூடியவையே என்றும் அப்போதே கூறப்பட்டிருக்கிறது. ‘காலத்திற்கும், இடத்திற்கும் தக்கவாறு தர்மம், அதர்மமாகிறது; அதர்மமோ தர்மமாகி விடுகிறது. காலம்,இடம் ஆகியவற்றின் வன்மை அத்தகையது’ என்று யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் செய்யும் உபதேசம் மஹாபாரதத்தில் வருகிறது.

ஒரு காலத்தில் தர்மமாக இருந்த வழிமுறை, பிற்காலத்தில் மக்களால் வெறுக்கப்படுகிற நிலையை அடைந்தால், அந்த தர்மத்தைக் கை விட வேண்டும் என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

ப்ரஹஸ்பதி இயற்றிய தர்ம சாத்திர நூலோ மேலும் ஒரு படி போகிறது. ‘சாத்திரத்தின்படி மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது தவறுகள் நேர்ந்துவிடலாம் நியாயமான காரணத்திற்கு உட்படாத அம்மாதிரி முடிவு தர்மத்திற்கு இழுக்கு.

ஆகையால், நியாய சபையில் எடுக்கப்படும் முடிவுகள் சாத்திரத்தையொட்டி மட்டுமல்லாமல், நடைமுறை காரண காரியங்களை ஒட்டியும் அமைய வேண்டும் என்று அவருடைய நூல் கூறுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அன்று இருந்த நியாய உணர்வுதானே பளிச்சென தெரிகிறது? இப்படிப்பட்ட அன்றைய சிந்தனைதான் பிராமணீயம் என்றால், அதை வெறுப்பானேன்?



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

7 – உண்மையை ஏற்போமாக!

‘நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம். யாகத்திற்கு வளர்ச்சியை வேண்டுகின்றோம். யாகத்தைச் செய்பவனுக்கு நற்பயன் கிட்ட வேண்டுகின்றேன். நமக்கு தேவதையின் அருள் உண்டாகட்டும். மனித சமுதாயத்திற்கு கேஷ்மம் உண்டாகட்டும். செடி, கொடிகள் மேலோங்கி வளரட்டும். இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும் நான்கு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும் அமைதி நிலவட்டும்’.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் இந்த வேத மந்திரத்தைக் குறிப்பிட்டிருந்தேன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் செடி, கொடிகளுக்கும் கூட நன்மையை வேண்டுகிற இந்தப் பரந்த மனப்பான்மை  எவ்வகையில் வெறுக்கக் தக்கதாகும் ? வேதங்களில்  இப்படிப்பட்ட மந்திரங்கள் நிறையவே இருக்கின்றன. சிலவற்றைப் பார்ப்போம்.

ஓம் மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ :

மாதவீர் நஸ்ஸந்த்வோஷ தீ :

மதுநக்தமுதோஷஸி மதுமத் பார்த்திவக்ம் ரஜ:

மதுத்யௌரஸ்து   : பிதா

மதுமான் நோ வனஸ்பதிர் மதுமாக்ம் அஸ்து ஸூர்ய:

மாத்வீர் காவோ பவந்து :

இதன் அர்த்தம் சிறந்த செயலை செய்ய விரும்புகிற நம் அனைவருக்கும்காற்று இனிமையாக வீசட்டும் நதிகள் தூய்மையான நீருடன் ஒடட்டும் செடிகொடிகள் நல்ல வளத்துடன் விளங்கட்டும் இரவும் பகலும்இனிமையைத் தரட்டும்;  பூமி இனிமையைத் தருவதாக;  நம் அனைவருக்கும்தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும்;  செடி கொடிகளுக்குத்தலைவனான சந்திரன்இனிமையைப் பொழியட்டும் பசுக்கள் நம்அனைவருக்கும் இனிமையைத் தருவதாக.

விரோதத்தைக் கிளப்பி விட்டு, அதன் மூலம் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வது எப்படி என்று அலைகிற இன்றைய பகுத்தறிவுவாதிகள் பார்வையில், இப்படிப்பட்ட உயர்ந்த பொது நன்மையைக் கோருகிற வேத மந்திரங்கள் வெறுக்கத்தக்கவையாகத் தெரிகின்றன ! இது ஒரு விந்தைதான் !

ஸமானீ  ப்ரபா ஸஹ வோ அன்ன  பாக :

இவ்வாறு கூறுகிற வேத மந்திரத்தின் அர்த்தம்:  உங்களுடைய உணவுகுடிநீர்இருப்பிடம் எல்லாமே எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் சமமாகபொதுவானதாக இருக்கட்டும்‘ என்பதாகும்.

அறிஞர்களுக்கு ஒரு புனிதமான பொறுப்பை வேத மந்திரம் எடுத்துச் சொல்கிறது.

உத தேவா அவஹிதம் தேவா உன்னயதா புன:

அதாவது ‘அறிஞர்களே!  என்று இந்த மந்திரம் விவரமறிந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறது. தாழ்த்தப்பட்டு விட்டவர்களை உயர்த்துகிறோம் என்று சொல்லி, தங்களை உயர்த்திக் கொள்பவர்களைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். ஆனால் அன்றோ, விழுந்து விட்டவர்களை மீண்டும் உயர்த்துவது அறிஞர்களின் கடமை என்று வேத மந்திரம் வற்புறுத்துகிறது.

ரிக்வேதத்தில் வருகிற ஒரு மந்திரம்

அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே

ஸம் ப்ராதரோ வாவ்ருது:ஸெளபகாய

என்று சொல்கிறது. ‘உங்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும்கிடையாது நீங்கள் அனைவரும் சகோதரர்களே!  எனவேஒன்றுபட்டுவாழ்வீர்களாக !   மேன்மையடைவீர்களாக! ‘ .  இப்படி சமத்துவத்தை வலியுறுத்துகிற நூல்களிலும், அவற்றைப் போற்றுகிறவர்களிடமும் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது?.  மாறாக, அப்படிப்பட்ட நூல்களும், அதைப் புனிதமாக நினைப்பவர்களும் பாராட்டுக்குரியவர்கள் அல்லவா?

யஜுர்வேத மந்திரம் ஒன்று :

அன்யா வோ அன்யா மவத் வன்யான்யஸ்யா உபாவது

ஒருவர் மற்றொருவருக்கு பாதுகாப்பு அளித்து, உதவி செய்து, பெருமைப்படுத்திக் கொண்டிருங்கள் என்று சொல்கிறது. பரஸ்பர ஒத்துழைப்பை இப்படி வலியுறுத்துகிற வேதங்கள்தான் பகுத்தறிவுவாதிகளுக்கு விஷமாகத் தெரிகின்றன. கோளாறு, வேதத்தில் இல்லை என்பது இம்மாதிரி மந்திரங்களைப் பார்த்தாலே தெரியும்.

அதர்வண வேதம் சொல்கிறது:

ஸம்யஞ்சஸவ்ரதா பூத்வா வாசம் வதத பத்ரயா

இதன் அர்த்தம் எல்லோரும் ஒன்றாகக் சேர்ந்து ஒரே நோக்கத்திற்காக முனைந்து நன்மை தருகின்ற வார்த்தைகளையே பேசுங்கள்

ரிக்வேதத்தில் வருகிற மற்றொரு மந்திரம் :

ஸம்ஸ்மித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய 

என்று சொல்கிறது. அதாவது நன்மை அள்ளிக்  கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே!  எல்லா உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக ! என்று சொல்கிற மந்திரம்.

இது ரிக் வேதத்தில், மற்றொரு மந்திரம் இவ்வாறு சொல்கிறது :

ஸமானோ மந்த்ர ஸ்மிதிஸமானீ

ஸமானம் மனஹை சித்தமேஷாம்

ஸமானம் மந்த்ரம்பி மந்த்ரேய :

ஸமானேன வோ ஹவிஷா  ஜுஹோமி

 

எல்லா மனிதர்களையும் பார்த்துப் பேசுகிற இந்த மந்திரம் சொல்வதாவது: உங்களுடைய வழிபாடு ஓத்த கருத்துடன் விளங்குவதாக இருக்கட்டும்உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும்உங்களுடைய எண்ணங்களும்மனமும் ஒற்றுமையோடு இருக்கட்டும்உங்கள் அனைவருக்காகவும் பொதுவான ஆஹதியைக் கொண்டு நான்வழிபாட்டை நடத்துகிறேன்‘.

இப்படியெல்லாம்  துதிக்கின்ற வேத மந்திரங்கள் தீய சக்திகளையும் கூட நல்வழிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதற்கு ஒர் உதாரணம்.

யதிஹ கோரம் யதிஹ க்ரூரம் யதிஹ பாபம்

தச்சாந்தம் தச்சிவம் ஸர்வமேவ சமஸ்து  :

என்று வேண்டிக் கொள்கிற இந்த மந்திரத்தின் அர்த்தம், ‘இங்கே எவையெல்லாம் பயங்கர சக்திகளாக உள்ளனவோ , இங்கே எவையனைத்தும் கொடூரமான சக்திகளாக உள்ளனவோ, இங்கே எவையெல்லாம் பாவத்தினால் உந்தப்பட்டு இயங்குகின்றனவோ , அவை அனைத்தும் நித்தமடைந்து அமைதி பெறட்டும். எல்லாமே நன்மையை தரட்டும்.

ஆக இதில் எல்லாம் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது ?

ஸர்வோ ஜனா : ஸு கினோ பவந்து 

எல்லா மக்களும் சுகமாக வாழட்டும் – என்று வாழ்த்துகிற மந்திரம் ஓதப்படாமல் நடத்தப்படுகிற ஒரு பூஜை இல்லை,  ஒரு ஹோமம் இல்லை.  வேதங்களையும், நம் முன்னோர் வகுத்த நன்னெறிகளையும் , இன்று இகழ்ந்து பேசுகிறவர்கள் கூறுகிற பிராமணீயம் இதுதான் என்றால் – இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது ?  வாழ்கிறவர்களுக்கு நன்மையை வேண்டிக் கொள்கிற மந்திரங்கள் மேற்சொன்னவாறு வேதங்களில் நிறைந்து இருக்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். இறந்து போன முன்னோர்களுக்கு காரியம் செய்கிற பொது, ஒருவன் வேண்டிகொள்கிற விஷயம் ஒன்று உண்டு, மிகவும் அற்புதமான விஷயம்.

யேஷாம்  மாதா  பிதா   ப்ராதா

   பாந்தவாநான்யகோத்ரிண :

தே ஸர்வான் த்ருப்திமாயாந்து மயோ

ஸ்ருஷ்டை:  குசோதகை:

அதாவது,  எவரெவர்கள் தாய், தந்தை இல்லாமலும், சகோதரன் இல்லாமலும், தன் குலத்தைச் சார்ந்தவர்கள் இல்லாமலும் இறந்து விட்டார்களோ, அந்தப் பித்ருக்கள் அனைவரும் திருப்தியடையுமாறு வேண்டிக் கொண்டு இந்த எள்ளையும், தண்ணீரையும் சமர்ப்பிக்கிறேன். இதனால் இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு திவசம் செய்வது ஒரு புனிதமான கடமை என்று நினைத்து,அதைச் செய்பவர்கள் மற்றவர்களுக்காக வேண்டிக்கொள்வதும் தங்கள் கடமை என்று நினைக்கிறார்களே, அந்தப் பரந்த மனப்பான்மைதான் கவனத்துக்குரியது. இந்த மந்திரங்கள் எல்லாமே வர்ண பேதங்களைப் பார்க்கவில்லை. எல்லா மனிதர்களுக்காகவும் நன்மையை வேண்டுகின்றன. எல்லா மனிதர்களுக்காகவும் உயர்வை வேண்டுகின்றன. எல்லா மனிதர்களுக்காகவும் செழிப்பை வேண்டுகின்றன. இந்த பிராமணீயத்தில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது.

இதைக்குறை கூறுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் ? ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி’ என்ற ܂தத்துவத்தை உபதேசித்தவர்கள். உச்சிக் குடுமியை வெட்டுபவர்கள். நெற்றியிலே பூசப்படுகிற திருநீற்றையும் இட்டுக் கொள்கிற நாமத்தையும் அழிப்பவர்கள்.

பிறப்பின் பெயரால் துவேஷத்தை போதிப்பவர்கள் பிரிவினையை உண்டாக்கி, வெறுப்பை வளர்த்து அதன் மூலம் தங்கள் வாழ்விற்கு வளம் தேடிக் கொள்பவர்கள்; இப்படிப்பட்ட கூட்டங்களைச் சார்ந்தவர்கள்தான், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சகல ஜீவ ராசிகளுக்கும் மட்டுமல்லாமல், செடி கொடிகளுக்கும் கூட நன்மையை வேண்டுகின்ற உயர்ந்த தத்துவங்களை போதிக்கிற வேத நூல்களை இகழ்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் இதற்கு பிராமணீயம் என்ற பெயரைச் குட்டி, அது வெறுக்கத்தக்கது என்கிறார்கள்.

இவர்கள் கூறும் பொய் உதறி விட்டு உண்மையை நான் ஏற்பேனாக ! – என்று நான் சொல்லவில்லை.  யஜுர்வேதம் சொல்கிறது.

அஹமன்ருதாத் ஸத்ய மு  பைமி

நான் பொய்யை  உதறி விட்டு, உண்மையை ஏற்பேனாக !



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

8 – சுதந்திரப் போரில் பிராமணர்கள் !

‘பிராமணீயம்’ என்று கழகங்களைச் சார்ந்தவர்களாலும், பகுத்தறிவுவாதிகளாலும்,தமிழக முதல்வராலும் , வர்ணிக்கப்படுகிற சிந்தனை – வெறுக்கத்தக்கது அல்ல எனபதற்கான ஆதாரங்கள் பலவற்றை சென்ற அத்தியாயங்களில் எழுதியிருந்தேன். பரந்து விரிந்த மனம், உயர்ந்த சிந்தனை ஆழமான கருத்துக்கள், சகோதரத்துவம், அன்பு, சமுதாய ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு…. போன்ற பல நல்ல விஷயங்களை வற்புறுத்துகிற சிந்தனைதான் இன்று பிராமணீயம் என்று பெயரிட்டு, சிலரால் தூற்றப்பட்டு வருகிறது என்பதை ஒரளவு விவரமாகவே எழுதியிருந்தேன்.

பிராமணீயத்தைத்தான் தான் எதிர்ப்பதாக முதல்வர் கூறினாலும்-பெரியாரும் பிராமணீயத்தைத் தான் எதிர்த்தார் என்று அவர் வாதிட்டாலும் பெரியார் எதிர்த்தது பிராமணர்களைத்தான் என் திராவிடர் கழகம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

முதல்வரும் (திரு. மு.கருணாநிதி ) , அவரருடைய  தி.மு.க வினரும்கூட பல்வேறு சமயங்களில் பிராமணர்களை எதிர்த்து வந்திருக்கிறார்கள்.  உச்சிக்குடுமியைக் அறுப்பது , நாமத்தை அழிப்பது போன்ற எல்லாம் பிராமணீய எதிர்ப்புகள் அல்ல,  பிராமண எதிர்ப்புதான். இந்தப் புனிதமான காரியங்களில் ஈடுபட்ட கழகங்களைச் சார்ந்தவர்களும், பகுத்தறிவு வாதிகளும் பிராமணீயத்தையே எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, தொடர்ந்து பிராமண துவேஷத்தை பரப்பி வந்திருக்கிறார்கள். இப்படி இவர்களால் எதிர்க்கப்பட்ட பிராமணர்கள் வெறுக்கத்தக்கவர்களா என்பதை பார்ப்போம் .

ஒரு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல பிரிவினர்களிடையே ஒரே ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் வெறுக்கத்தக்கவர்கள் என்றால் – மற்ற பிரிவினர்களிடம் காண முடியாத குற்றங்கள், அந்த வெறுக்கத்தக்க பிரிவினரிடையே காணப்பட வேண்டும். அதாவது பிராமணர்கள் வெறுக்கத் தக்கவர்கள் என்றால் வேறு எந்த ஜாதியினரிடமும் காணப்பட முடியாத குற்றங்கள், தவறுகள் பிராமணர்களிடம் மலிந்திருக்க வேண்டும்.

அல்லது வேறு காரணங்களுக்காகவும், ஒரு பிரிவினர் வெறுக்கப்படும் நிலை தோன்றி விடலாம். பற்பல ஆண்டுகளாக எந்த நன்மையையும் செய்யாமல், கூட்டு பொறுப்பு எதையும் ஏற்காமல் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு பிரிவினர் வாழ்ந்து விட்டால் ஒரு கால கட்டத்தில் அவர்கள் பால் ஒரு வெறுப்பு தோன்றி விடலாம். பிராமணர்களை பொறுத்த அளவில் இப்படிப்பட்ட நிலையாவது இருக்கிறதா ? அதையும் பார்ப்போம்.

நாட்டுக்காகவோ, மக்களுக்காகவே தியாகம் செய்வதிலும், நியாயமான போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் பிராமணர்கள் யாருக்கும் சளைத்தவர்களாக இருக்கவில்லை. பிராமணர்களும் பெரும் தியாகங்களைச் செய்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை உயர் வதற்காக போராடிய பலரில், பிராமணர்களும் முக்கியமானவர்களே – தமிழ் வளர்ச்சிக்குப் பாடு பட்டவர்களில் பிராமணர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.  சில விவரங்களை மட்டும் பார்ப்போம்.

(சுதந்திரப் போராட்டம்தமிழ் வளர்ச்சிசமூக சேவை போன்றவற்றில் பங்கேற்ற பிராமணர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க நான்  முனைந்தபோது அந்த விவரங்களைத் தொகுத்து அளித்து உதவியர் முத்த பத்திரிகையாளரான திரு. கே.ஸி. லஷ்மி  நாராயணன்.)

1885 – ஆம் ஆண்டு காங்கிரஸ் மஹாசபையின் முதலாவது கூட்டம்  பம்பாயில் நடந்தது. அதில் கலந்து கொண்ட தமிழர்களில் இருந்த பிராமணர்கள்  ஜி. சுப்ரமண்ய ஐயர், எஸ். சுப்ரமண்ய ஐயர், வக்கீல் வி. அனந்தாச்சாரியார், தஞ்சை எஸ்.ஏ ஸ்வாமிநாத ஐயர், மு. வீரராகவ ஆச்சாரியார் திருவள்ளூர் டி .என்.ஐயர் ஆகியோர். ஹிந்து சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய ஜி.சுப்ரமண்ய ஐயர் காங்கிரஸை ஆரம்பித்தவர்களுள் ஒருவர்.

காங்கிரஸின் மூன்றாவது கூட்டம் சென்னையில் நடந்தபோது, அதில் முக்கிய பங்கு வகித்த பிராமணர்கள்:  எஸ்.சுப்ரமண்ய ஐயர், சேலம் சி விஜயராகவாச்சாரியார் எஸ்.ஏ. ஸ்வாமிநாத ஐயர், சுந்தரம் சாஸ்திரி, அண்ணாசாமி  ஐயர் , மு. வீரராக வாச்சாரியார், ஜி. சுப்ரமண்ய ஐயர் தேசிய இயக்கத்தில் ஆரம்பம் தொட்டே இப்படிப் பங்கேற்ற பிராமணர்களின் தொண்டு மேலும் தொடர்ந்தது. எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வசதிகளைத் துறக்கத் தயாராக தேச விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு, பொது நன்மைக்காக சொந்த நலனை தியாகம் செய்ய முன் வந்தவர்கள்தான் சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கேற்றார்கள் என்பதை மறந்து விட முடியாது.

1905-ல் வெள்ளையர் ஆட்சி வங்காள மாநிலத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தபோது, அதற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு தோன்றியது. வங்கப் பிரிவினை எதிர்ப்பில் சுதேசி இயக்கமும் தோன்றியது. அந்த சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்க பிராமணர்கள்  –  மஹாகவி பாரதியார், ஜி. சுப்ரமண்ய  ஐயர். வி. கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஏற்படுத்திய போது, வெள்ளையர் ஆட்சிக்கு வ .உ.சி.யுடன் தொடர்பு கொள்ளவே பலர் பயந்த போது, அவருடைய கப்பல் கம்பெனிக்கு சட்ட ஆலோசகர்களாகத் துணிந்து செயல் பட்டவர்கள் இரண்டு பிராமணர்கள்- சேலம் விஜயராகவாச்சாரியார்,  குருசாமி ஐயர்  ஆகியோர்.

மேலே குறிப்பிட்டபடி சுதேசி இயக்கம் தோன்றிய பிறகு, அதில் தீவிரவாதிகளாகச் செயல்பட்டவர்கள் பாரதியாரைத் தவிர, மண்டையம் சீனிவாசாச்சாரியார் துரைசாமி ஐயர், திருவல்லிக்கேணி கிருஷ்ணஸ்வாமி ஆகிய அந்தணர்கள்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் வலது கரமாக விளங்கிய சுப்ரமண்ய சிவா ஒரு பிராமணர்.

லண்டனில் கூடி பிரிட்டனுக்கு எதிராகப் புரட்சி நடத்த திட்டமிட்டவர்களுள் வ.வே.சு. ஐயர்,  டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் என்ற இரண்டு பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர்  ஆஷ்துரையை சுட்டு வீழ்த்திய  வாஞ்சிநாதன் ஒரு பிராமணன்.அந்த ஆஷ்  கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட பதினான்கு பேரில் எட்டு பேர் பிராமணர்கள். இவர்களில் ஐவருக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டன. அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில் பிராமணர்கள் பங்கேற்றனர்.அவர்களில் ஹிந்து ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் குறிப்பிடத்தக்கவர்.ஹோம் ருழே இயக்கம் சுயாட்சி கோரும் விண்ணப்பம் ஒன்றை அரசுக்கு அனுப்பியது. அதில் முன் முதலாக கையொப்பம் இட்டவர் எஸ்.சுப்ரமண்ய ஐயர் என்ற பிராமணர்.

தென் ஆஃப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்காக மஹாத்மா காந்தி அங்கே இயக்கம் நடத்திய போது, அவர் இந்தியர்களின் ஆதரவை கோரினார்.  தமிழகத்தில் அவருக்கு ஆதரவளித்தவர்களில் பெரும் பாலானோர் பிராமணர்களே!  அந்தப் பட்டியலில் எஸ்.சுப்ரமண்ய ஐயர், வக்கீல் பாஷ்யம் ஐயங்கார், பதிப்பாளர் ஜி.ஏ . நடேசன், ஜி .சுப்ரமண்ய ஐயர் ஆகியோர் இருந்தனர்.

அடக்குமுறைக்கு வழி வகுத்த ரௌலட் மசோதாக்களை ஏற்க மறுத்த சத்தியாகிரஹிகளில்  ராஜாஜி, சத்திய மூர்த்தி, கஸ்தூரிரங்க ஐயங்கார், சேலம் விஜய ராகவாச்சார்யார் , ஏ.ரங்கசாமி ஐயங்கார், திருச்சி டி .எஸ் .எஸ்  ராஜன் ஆகியவர்கள் அந்தணர்களே .

இதையொட்டி 1919-இல்சென்னையில் சத்தியாகிரஹி இதழ் மஹாத்மா காந்தியின் ஆணைப்படி வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர் டி.வி. வெங்கட்ராம  ஐயர் என்கிற பிராமணர்; அதை வெளியிட்டவர் கஸ்தூரிரங்க ஐயங்கார் என்ற இன்னொரு பிராமணர்.

1920 –  ஆம் ஆண்டின் இறுதியில் நாக்பூரில் காங்கிரஸ் மஹாசபைக் கூட்டம் நடந்தது. சேலம் விஜயராகவாச்சாரியார் என்கிற பிராமணர் அதற்குத் தலைமைத்  தாங்கினார். தமிழர் ஒருவர் தலைமை வகித்த முதலாவது காங்கிரஸ் மஹாசபைக் கூட்டம் அதுதான்.  பத்து வருடகால கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதில் பல  மாதங்களை அனுபவித்தவர் அவர்.

மொழிவழி மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டபோது,  தமிழ்நாட்டில்  அமைந்த காங்கிரஸ் கமிட்டிக்கு முதலாவது தலைவர், வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த சுப்ரமண்ய சாஸ்திரியார் என்கிற பிராமணர்.  ஜஸ்டிஸ் கட்சியினர் ஆங்கிலேயர்களுக்குத் தாளம் போட்டு அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆங்கிலேயர்ஆட்சியை எதிர்த்து போராட்ட அமைப்பான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகச் செயல்பட்டவர் பிராமணரே !

ராஜாஜி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி என்கிற பிராமணர் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். 1930- ஆம் ஆண்டு வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரஹத்திற்காக சிறைவாசம்; 1931 – ல் மீண்டும் சட்டமறுப்பு போட்டத்தில் சிறை தண்டனை ; 1933 ஆம் வருடம் தனி நபர் சட்ட  மறுப்பு இயக்கத்தில் சிறை தண்டனை;  1940 – ஆம் ஆண்டில் தனி நபர் சத்தியாக்கிரஹத்தின்போதும் சிறைவாசம்.  இதுதவிர, தீண்டாமை ஒழிப்பு போன்ற காங்கிரஸின் சமூக நீதிப் போராட்டங்களில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தவர் ராஜாஜி என்பதையும் மறந்துவிடக்கூடாது. உப்பு சத்தியாக்கிரஹத்தை தமிழகத்தில் தலைமை யேற்று நடத்தியவரும் அவரே !



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

9 – தியாகத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.

தேச நலன், சமுதாய மேன்மை – ஆகியவற்றையே மனதில் கொண்டு சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கேற்று, பல தியாகங்களைப் புரிந்த பிராமணர்களின் பட்டியல் தொடர்கிறது.

தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியராக வ.வே.சு ஐயர் இருந்த போது, அதில் வெளியான ஒரு தலையங்கத்திற்காக ஒன்பது மாதம் கடும் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. 1857- ல் சுதந்திரப் போர் நடந்த போது, பல அக்கிரமங்களையும், கொடுமைளையும் புரிந்த ஆங்கிலேய தளபதி கர்னல் நில் என்பவருக்கு சென்னையில் ஆங்கில ஆட்சி சிலை வைத்தது. ஜஸ்டிஸ் கட்சி இதற்கு துணை போயிற்று அதில் ஒன்றும் வியப்பில்லை.ஆங்கிலேயர்கள் செய்த அத்தனை இந்திய விரோதச் செயல்களையும் ஆதரித்தவர்கள் தான் ஜஸ்டிஸ் கட்சியினர். பிராமணீய, பிராமண எதிர்பாளர்களுக்கெல்லாம் தாய் கட்சியான ஜஸ்டிஸ் கட்சியினர். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அந்த நீல் சிலையை அகற்றுவதற்காக 1927 – ஆம் ஆண்டில் பெரும் போராட்டம்  நடத்தினார்கள். பலர் அதில் கொண்டு சிறை சென்றார்கள். அந்த போராட்டத்திற்கு அப்போதைய தமிழகத்தில் தலைமை தாங்கி நடத்தியவர் நெல்லை சோமையாஜுலு என்கிற பிராமணர். மதுரை சீனிவாச வரத ஐயங்கார், அவர் மனைவி பத்மாசினியம்மாள், எஸ். ஸ்வாமிநாத ஐயர், ஆக்கூர் அனந்தாச்சாரியார் போன்ற பிராமணர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள்.

பிராமணர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளாகிய சுயராஜ்யா, ரங்கசாமி ஐயங்காரின் சுதேச மித்திரன், ஹிந்து பத்திரிகை ஆகியவை இந்த நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு தந்தன.

சைமன் கமிஷனை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆாப்பாட்டங்கள் நடந்த போது, தமிழகத்தில் அதற்கு தலைமை வகித்தவர்  சத்தியமூர்த்தி என்கிற பிராமணர். இதில் கவனிக்கத்தக்க விஷயம்   வளிக்கத்தக்க விஷயம் ஒன்றும் உண்டு. ஜஸ்டிஸ் கட்சி மட்டுமே இந்தியாவில் சைமன் அதிகாரபூர்வமாக வரவேற்ற கட்சி.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிவின் ஆரம்பம் மகாத்மா காந்தி நடத்திய உப்பு சத்தியாக்கிரஹம் என்று கூறப்படுவது உண்டு. தெற்கே தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் இதற்கான யாத்திரை நடந்தது.  அதற்குத் தலைமை தாங்கியவர் ராஜாஜி  என்கிற பிராமணர். அதில்,  ராஜாஜியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற பிராமணர்கள் பட்டியல் நீளமானது. அதில் சில பெயர்களை பார்ப்போம்.

க.சந்தானம்,  மட்டப்பாறை வெங்கடராம ஐயர், ஆர். துரைசாமி ஐயர், சமையல் ரங்கசாமி  ஐயங்கார்,  தாணுவையர், தேசிய கீதம் சுப்பையர், திண்டுக்கல் டி.ஆர். மகாதேவ ஐயர், தொண்டர் காப்டன் சுப்ரமண்ய ஐயர், மிராசுதார் தலையூர் ராயணசாமி ஐயர், ஸ்டோர் கீப்பர் சீனிவாச ஐயர், கதர் கிருஷ்ணமூர்த்தி ஐயர், சிதம்பர ஐயர், பி.கே. நாராயண ஐயங்கார், டி.ஆர். பத்மநாப ஐயர், ஹரிஹர சர்மா….. போன்ற பல பிராமணர்கள் ராஜாஜியின் தலைமையில் அந்த உப்பு சத்தியாக்கிரஹ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள்.

ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும் இந்த உப்பு சத்தியாக்கிரஹத்தை எதிர்த்தன. ஈ.வெ.ரா.வின் குடியரசு பத்திரிகை உப்பு சத்தியாக் கிரஹத்தை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் இழிவுபடுத்தி பிரசாரம் செய்து மகிழந்தது. அப்போது சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ப.ஜீவானந்தம், உப்பு சத்தியாக்கிரஹத்தில் சுய மரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எவ்வளவோ முயன்றும், ஈ.வெ.ரா  அந்த  முயற்சிகளைத் தோற்கடித்து திருப்தி அடைந்தார்.

ஈ.வெ.ரா வின் குடியரசு பத்திரிக்கையோடு ஜஸ்டிஸ் கட்சியின் பத்திரிக்கைகளான ‘ஜஸ்டிஸ் ‘ என்ற ஆங்கில பத்திரிகையும், ‘திராவிடன்’ என்ற தமிழ் பத்திரிகையும், உப்பு சாத்தியகிரஹத்தை கேலியும் கிண்டலும்   செய்து மகிழ்ந்தன.

1932 – ல் சட்ட மறுப்புப் போர், காங்கிரஸ் மஹாசபையின் சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

மகாத்மா காந்தி உள்ளிட்ட பலர் அகில இந்திய அளவில் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் ராஜாஜியின் தலைமையில் இந்த சட்ட மறுப்புப் போர் நடத்தது. அதில் ராஜாஜியைத் தவிர, சத்திய மூர்த்தி, அம்புஜம்மாள், ஜானாம்பாள் என்கிற பாஷ்யம் ஐயங்காரின் மகள், கே.நாகேஸ்வர ராவ் பந்துலு, க. சந்தானம், சிதம்பரம் ஐயர், ஆக்கூர் அனந்தாச்சாரி, கே.ஆர். ராம ஐயர், சுந்தர வரதன், கல்லிடைக் குறிச்சி டாக்டர் சங்கர ஐயர், அவரது மனைவி லக்ஷ்மி சங்கர ஐயர், மதுரை வைத்திய நாத ஐயர், கல்லிடைக்குறிச்சி யக்ஞேஸ்வர சர்மா என்கிற பிராமணர்கள் சிறை புகுந்தார்கள்.

அந்த சட்ட மறுப்புப் போர் நடந்த போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பிரிட்டனின் தேசியக் கொடியை இறக்கி, மூவர்ணக் கொடியை ஏற்றி , ஓர் அற்புத சாதனை புரிந்தவர் பாஷ்யம் என்கிற பிராமணர்.

சட்ட மறுப்புப் போரில் சிறையில் அடைக்கப் பட்ட கைதிகளுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.  அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் எதிர்த்து அறிக்கை சமர்ப்பித்து, உலகநாடுகளின் கவனத்தை   இவ்விஷயத்தின்பால் ஈர்த்த துணிவு மிக்க பிராமணர்கள் சிலர் சென்னையில் இருந்தார்கள்.  அவர்கள் வக்கீல்கள். அவர்கள் டி.ஆர். ராமச்சந்திர ஐயர் , டி. ரங்காச்சாரியார்,  டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, எஸ். வரதாச்சாரி, வி.வி. சீனிவாச ஐயங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே. ஜெயராம ஐயர், கே.ராஜா ஐயர் என்கிற பிராமணர்கள்.

1942-ஆம் வருடம் ஆகஸ்ட் இயக்கத்தின்போதும் தமிழகத்தில் பலர் சிறை புகுந்தார்கள். அவர்களில் பல நூறு பிராமணர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் மதுரை வைத்தியநாத ஐயர், சத்திய மூர்த்தி, தினமணி என் ராமரத்தினம், கல்லிடைக்குறிச்சி யக்ஞேஸ்வர சர்மா, ஆந்திர கேசரி பிரகாசம், வி.வி கிரி, தென்னேட்டி விஸ்வநாதன், எம். அனந்த சயனம் இயங்கார் ஆர். வெங்கட்ராமன், டி.வி. கணேசன் ஆகியோர்,

நேதாஜி துவங்கிய இந்திய தேசிய ராணுவத்திலும் பிராமணர்கள் பங்கேற்றார்கள். நேதாஜி இடைக்கால இந்திய அரசு ஒன்றை அமைத்த போது, அதில் பிரச்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் லெஃப்டினென்ட் எஸ்.ஏ ஐயர் என்கிற தமிழ் பிராமணர். அந்த அமைச்சரவையில் இருந்த ஒரே ஒரு  பெண் பிரதிநிதி கேப்டன் லஷ்மி என்கிற தமிழ் பிராமண பெண்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் உயர்வுக்காகப் போராடுவதை சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக காந்தியடிகள் கருதி நடத்தினார். ஹரிஜன மக்களுக்கு கல்வி கற்பிப்பது, ஹரிஜன மக்களை ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வது , அவர்களை சமுதாயத்தின் மற்ற பிரிவினருடன் சமமாக நடத்தச் செய்வது போன்றவற்றில் காந்தியின் தலைமையில் காங்கிரஸார் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் இந்தப் புனிதமான முயற்சி ராஜாஜியின் தலைமையில் நடந்தது. ராஜாஜி வருகைக்கு முன்பே, தமிழகத்தில் பெருந்தலைவராக விளங்கிய எஸ். சீனிவாச ஐயங்கார், ஹரிஜன நலப்பணிகளுக்கு முன்னோடியாக விளங்கினார்.

ராஜாஜி தலைமையில் இந்த இயக்கத்தில் ஈடுபட்ட பிராமணர்களில் சிலர் – மதுரை வைத்தியநாத ஐயர்,  காஞ்சிபுரம் கல்யாண ராம ஐயர், ஆக்கூர் அனந்தாச்சாரி,  எஸ் . ராமகிருஷ்ண ஐயர்,  அனுமந்தன்பட்டி கிருஷ்ணசாமி ஐயங்கார் , வாலாஜா  சுந்தர வரதன், எஸ். அம்புஜம்மாள் , வட ஆற்காடு ஏ.தேவராஜ ஐயங்கார்,  வை.மு.கோதை நாயகி அம்மாள், திருச்சி டாக்டர் ஸ்வாமிநாத சாஸ்திரி, ஆரணி சுப்ரமண்ய சாஸ்திரி, கல்லிடை குறிச்சி தம்பதிகள், கல்வி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் .

இப்படி இந்த தேசத்திற்காக, எந்தவித பலனையும் கருதாமல் பலவிதத் தியாகங்களைச் செய்தவர்களும் துணிந்து சிறை தண்டனையை ஏற்றவர்களும், சமூக நலனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க முன் வந்தவர்களும் ஏராளமானவர்கள் இந்நாட்டில் உண்டு.  அவர்களில் பிராமணர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

ஆகையால், சமுதாயத்தில் பொது நலனுக்காக எந்த விதத் தியாகத்தையும் செய்யாமல் வாழ்ந்த ஒரு பிரிவினர் என்று பிராமணர்களைக் கருதி விட முடியாது. பிறகு ஏன் அவர்களை வெறுக்க வேண்டும்? அந்த வெறுப்பில் என்ன நியாயம் இருக்கிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

 10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

தேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்களாக இருக்கவில்லை என்பதற்குச் சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

எப்படி தேச விடுதலை, சமூகத் தொண்டு ஆகியவற்றில் பல்வேறு மதத்தினரும் ஜாதியினரும் பெரும் பங்காற்றினார்களே அதே போல தமிழ் தொண்டிலும், தமிழ் வளர்ச்சியிலும் பல்வேறு ஜாதிகளைச் சார்ந்தவர்களும், மதங்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்றார்கள். அவர்களில் பிராமணர்களுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு.

சங்க இலக்கியங்கள், கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான காலத்தில் இயற்றப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சங்க இலக்கியப் புலவர்கள் வரிசையில் பல பிராமணர்கள் இடம் திருந்தனர். ‘புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று புகழப்பட்ட மாபெரும் புலவராகிய கபிலர் ஓர் அந்தணர். சங்க இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் கபிலருடைய பாடல்கள்தான் எண்ணிக்கையில் முதல் இடம்பெறுகின்றன.

வரலாற்றுப் புலவர் என்று புகழப்படுகிற சங்க காலப் புலவராகிய மாமூலனார் ஓர் அந்தணர்.  மற்றொரு அந்தணர் உருத்திரங்கண்ணனார் என்பவர் பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப் பாலையும் இவர் பாடியவை. இவர் பாடிய பட்டினப்பாலையில் வானநூல் கருத்துக்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்து இலக்கியங்களைப் படைத்த அந்தணப் புலவர்களில் இவர்கள் ஒரு சில உதாரணங்கள்.

சைவத்தையும், தமிழையும் ஒருசேரப் பரப்பியவர்களிலும் அந்தணர்கள் உண்டு.  பிள்ளை பாதி, புராணம் பாதி என்று பெரிய புராணமே சிறப்பிடம் தருகிறபடி அமைந்த வரலாற்றுக்குரியவர் திருஞானசம்பந்தர்.  அவர் இயற்றிய தேவாரம், தமிழ் இலக்கியத்தில் மகுடமாகத் திகழ்கிறது.

அந்தணர் மரபில் வந்த சுந்தரர் பாடிய தேவாரம் ஏழாவது திருமுறையாக அமைந்துள்ளது.பெரிய புராணத்திற்கு அடிப்படையான திருத்தொண்ட தொகை இவர் பாடியது.

திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் பிறந்த மாணிக்கவாசகர்  திருவாசகம் பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

தமிழகத்தில் சைவ சமயத்தை நிலை நிறுத்தி வளர்த்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர், மாணிக்கவாசகர் – ஆகிய நால்வரில் மூவர் அந்தணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாக திரு விசைப்பாவும், திருப்பல்லாக்கும் இடம்பெறுகின்றன. இவற்றைப் பாடியவர்களில் திருமாளிகைத் தேவர், புருடோத்தமன் நம்பி, பூந்துருத்தி காடவை நம்பி ஆகியோர் அந்தணர்கள்.

தமிழ் வியாசர் என்று புகழப்பட்ட நம்பியாண்ட நம்பிகள் என்கிற அந்தணர் திருத்தொண்ட திருவந்தாதி பாடியவர்.

வேம்பத்தூர் கவுனிய கோத்திர சோழிய அந்தணரான பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் தான் முதலில் திருவிளையாடல் படைத்தவர். இதுவே பழைய திருவிளையாடல் எனப்படுவது.  மதுரை தலத்தின் வரலாறு அறியப்படுவதற்கு இந்நூல்கள் நெடுங்காலம் வரை மிகவும் உதவியாக இருந்தது எனக் கூறப்படுகிறது.

பின்னர் பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணத்தை இயற்றினார். அவர் ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தவர். 15-ஆம் நூற்றாண்டில வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிற காளமேகப் புலவர் ஒர் அந்தணர்.

வைணவ இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் – தமிழில் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களைப் படைத்தவர்கள் ஆழ்வார்கள். இவர்களில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அந்தண குலத்தில் பிறந்தவர்  பெரியாழ்வார்.

திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் இவர்பாடியவை. பிள்ளைத்தமிழ் என்று பிற்காலத்தில் வர்ணிக்கப்பட்ட சிறு பிரபந்த வகையைத் தோற்று வித்தவர் பெரியாழ்வாரே !.

கருங்கல்லையும் கரைய வைக்கும் வல்லமை படைத்த பாடல்களை இயற்றிய தொண்டரடிப் பொடியாழ்வார் ஒர் அந்தணர்.

நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பல இடங்களிலும் பிரசாரம் செய்தவர் மதுரகவிகள் ;  இவரது பாடல்கள் மதுரமாக இனித்ததால், மதுரகவிகள் ஆழ்வார் என்று பெயர் பெற்றுத் திகழ்ந்த இவர் ஒர் அந்தணர்.

நாதமுனிகளும், ஆளவந்தாரும், வைணவ ஆச்சார்யார்களாகத் திகழ்ந்த அந்தணர்கள். பிற்படுத்த பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தூக்கி  விடுவதை தனது லட்சியமாகக் கொண்டு இயங்கி பெரும் பணியாற்றிய ராமானுஜர் ஒரு அந்தணரே !. ‘ஆன்மீகத்தின் கதவுகளை அனைவருக்கும் திறந்து விட்ட ராமானுஜருடைய கருணைப் பெரும்  செயல் , மகத்தான சிறப்பு வாய்ந்தது என்று ஸ்வாமி விவேகானந்தரே இவருடைய பணியைப் பாராட்டி  யிருக்கிறார். ராமானுஜரை விட உயர்ந்த சமூக சீர்திருத்த வாதி,தமிழகத்தில் பிறக்கவில்லை என்று சொல்வோரும் உண்டு.

மிகப் பெரிய பணக்காரராக இருந்து,  பின்னர் பெரும் ஞானம் பெற்று செல்வத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்தவர் கூரத்தாழ்வார். அவருடைய மகன்களாகிய பராசர பட்டர், வியாச பட்டர் ஆகியோரும் அந்தணர்களே.

இப்படிப்பட்டவர்களை விடுத்து அடுத்த கட்டத்திற்கு வந்தால் -தமிழில் பாரதத்தை இயற்றிய வில்லிப்புத்துராரும் கந்த புராணம் பாடிய காஞ்சிபுரம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் அந்தணர்களே.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் முக்கிய இடம் பெற்ற ‘இருபா இருபஃது’ என்ற நூலை இயற்றிய பெரும் பண்டிதரான அருள்நந்தி சிவாச்சாரியார் ஓர் அந்தணர். எட்டு சைவ சித்தாந்த சாத்திரங்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரும் ஓர் அந்தனரே !

தமிழிலும் நூல்கள் இயற்றி, சைவ பரம்பரையில் வடமொழியிலும் நூல்கள் இயற்றியவர் சிவாக்கிர யோகிகள் என்கிற அந்தணர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து இதன் பெற்றவர் என்று கூறப்படுகிற வீரை – கவிராச பண்டிதர் ஓர் அந்தணர். ‘தமிழில் உள்ள பெருமைக்குரிய அருமையான அத்வைத  வேதாந்தப் பெருநூல்’ என்று  இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் குறிப்பிடுகிற வகையில் அமைந்த நூலை இயற்றிய வீரை ஆளவந்தார், வீரை  கவிராச பண்டிதரின் மகன்.

கச்சியப்ப முனிவரின் மாணவரான கந்தப்பையர் என்கிற அந்தணர் தணிகை ஆற்றுப் படை,  உலா, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத் தமிழ் – ஆகியவற்றை இயற்றியவர்.

திருச்செங்கோடு பற்றி நாகதிரி புராணம் பாடிய கவிராஜ பண்டிதரும், காசித்தல புராணம் இயற்றிய அவரது தந்தையார் சங்கர நாராயன ஐயரும் அந்தணர்கள்.

தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி – ஆகிய நூல்களுக்கு உரை இயற்றியுள்ள நச்சினார்க்கினியர் ஒர் அந்தணர்.

இருமொழிப் புலமை படைத்த பரிமேலழகர் ஒரு அந்தணர்.  ‘திருக்குறளுக்கு பழங்காலத்தில் பத்து  அறிஞர்கள் எழுதியுள்ள உரைகளில், மிகவும் சிறப்பாக அமைத்திருப்பது பரிமேழகர் உரையே என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

திவ்ய கவி என்று புகழப்பட்ட பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஓர் அந்தணர்; ‘ப்ரயோக விவேகம்’ என்கிற இலக்கண நூலைச் செய்த சுப்ரமண்ய தீட்சிதர் ஒரு அந்தணர். திருச்செந்தூர் புராணம் இயற்றிய வென்றிமாலைக் கவிராயர் ஒரு அந்தணர்.

ஆங்கில மொழியின் செல்வாக்கு இந்திய முழுவது பரவிய 19-ஆவது நூற்றாண்டில் தமிழை வளர்க்க பல அந்தணர்கள் பாடுபட்டார்கள்.

பரிதிமாற் கலைஞர் – என்று தன பெயரை மாற்றி கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்களில் ஒருவர். தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையை இவருடைய ‘நாடகவியல்’ என்கிற நூல் போக்கியதாகக் கூறப்படுவதுண்டு.  இந்திய மொழிகளை பாடதிட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு சென்னைப் பல்கலைக் கழகம் முனைந்த போது , சூர்ய நாராயண சாஸ்திரியார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பெரும் முயற்சிகளைச் செய்து, அதைத் தடுத்து நிறுத்தினார். மறைமலை அடிகள் இவருடைய மாணவர்களில் ஒருவர்.

பரிமேலழகர் உரைக்கு விளக்கமும், மேலும் பல நூல்களும் எழுதிய சடகோப ராமாஜாச்சாரியார் ஓர் அந்தணர். சிறுவர்களுக்காக வசன நடையில் இலக்கணம் எழுதித் தந்த  அந்தணர் மகாலிங்க ஐயர் . அவருடைய அந்த நூல் ‘மகாலிங்கய்யர் இலக்கணம்’ என்றே பெயர் பெற்றது.

இயல்மொழி வாழ்த்து, இறையனார் ஆற்றுப்படை,  நற்றினை உரை உள்ளிட்ட  பல நல்ல எழுதியவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்.  பல அரிய இலக்கண நூல்களைப் படைத்தவர் விசாகப் பெருமாள் ஐயர் என்கிற அந்தணர்.

நன்னூல், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, நன்னெறி, மூதுரை திருவள்ளுவமாலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர் சரவணப் பெருமாள் ஐயர் என்கிற அந்தணர்.  திருவள்ளுவ மாலைக்கு இவர் செய்த உரைதான் இப்போது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  குறவஞ்சி, நகுமலை குறவஞ்சி என்ற நூல்களை இயற்றிய யாழ்ப்பாணம் விஸ்வநாத சாஸ்திரி ஒர் அந்தணர்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் விளம்பரம் தேடாமல், தமிழின் பெயரால் பிழைப்பு நடத்த முயலாமல் – பெரும் தமிழ்த்தொண்டாற்றி பிராமணர்கள் பட்டியல் இன்னமும் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

11 – சித்தர்கள் முதல் சினிமா தயாரிப்பாளர்கள் வரை….

தமிழ்த் தொண்டு, தமிழர் வரலாறு பற்றிய ஆராய்ச்சி, பத்திரிகைப் பணி, திரையுலகப் பணி. என்று பலதுறைகளிலும் தன்னலம் பாராமல் உழைத்த பல பிராமணர்களில், சிலர் பெயர்களைப் பார்ப்போம் …

‘அவர் இல்லையேல் தமிழ் மொழியில், பக்தி இலக்கியத்திற்கு முந்தைய பேரிலக்கியங்கள் இல்லை’ என்று தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் கூறுகிற வகையில், தமிழ்த் தொண்டாற்றிய டாக்டர் உ.வே. சுவாமி நாத ஐயர் ஒர் அந்தணர்.  தமிழ் என்றதும் உ.வே.சா நினைவே முதலில் எழுகிறது. இவரே முதலில் தோன்றுகிறார். அதற்கு முன் திருக்குறளைத் தவிர, நமக்கு வேறு ஒரு நூல் தெரியுமா ?

பக்தி நூல்களைத் தாண்டி பெருநூல்களைப் பற்றி  கேள்விப் பட்டிருக்கிறோமா?  இவர் தோன்றவில்லையேல் பதினெட்டாம் பெருக்கிலும். புனலிலும், கனலி லும், கரையானாலும் அன்றோ ‘நம்’ பழந்தமிழ் செல்வங்கள் அழிந்து போயிருக்கும். ‘அழியாது காத்த அண்ணல்’, ‘தமிழ் காத்த தெய்வம்’ ,  ‘தண்டமிழ் இலக்கியம் வழங்கிய வள்ளல் உ.வே.சா’ என்று தமிழ் இலக்கிய வரலாறுக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

ஊர் ஊராய்ச் சென்று செல்லுக்கும், கரையானுக்கும் இரையாகிக் கொண்டிருந்த தமிழ் ஒலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி வந்து அவற்றை திருத்தமான முறையில் பதிப்பித்தவர் உ.வே.சா .

பதிப்புரை ஆராய்ச்சி, சொற்பொழிவு, செய்யுள், மொழி பெயர்ப்பு, சமயம் மொழியியல், நூல் இயற்றல், இதழ் ஆசிரியர் பணி, பாடம் பயிற்றல், ஏடு திரட்டல், வரலாறு, இலக்கியம் என்று பலதுறைகளில் முன்னோடியாகப் பணியாற்றிய ரா.ராகவ ஐயங்கார் ஓர் அந்தணர்.

பல நூல்களைப் புதுப்பித்து தமிழ் ஆராய்ச்சித் துறையில், பெரும்பணியாற்றிய ஈ.வை அனந்தராமய்யர் ஒர் அந்தணர். தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழி அமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவராகிய மு. ராகவையங்கார் ஓர் ‘உரையாசிரியச் சக்கரவர்த்தி’ என்று புகழப்படுகிற வை.மு . கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஓர் அந்தணர் .

தேசபக்தி, பெண் விடுதலை, ஜாதி பேதமின்மை போன்ற பல திசைகளில் தனது ஞானத்தீயை பரப்பி கவிதைகளை இயற்றி, கட்டுரைகளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த பாரதியார் ஒரு அந்தணர்.

‘திராவிட கவிமணி’ என்று பாராட்டப்பட்ட வெமுத்துசாமி ஐயர், கவி யோகி என்று போற்றப்பட்ட சுத்தானந்த பாரதியார் , வைக்கம் போராட்டத்தில் சிறை சென்ற சா.து.சி யோகியார் ஆகிய அந்தணர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு மிகப் பெரிது.

ஜாதி வேறுபாடுகளை எதிர்த்து எளிமையாக வாழ்ந்து சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த சித்தர்களில் பல அந்தணர்கள் உண்டு. அவர்களில் திருமாளிகைத் தேவர், பாம்பாட்டி சித்தர் கரூர் சித்தர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘தமிழ்க் காப்பியங்கள்’ என்ற ஆய்வு நூலை எழுதியவரும் பன்னிரு திருமுறைகளுக்கும் அரும் பொருள் வழங்கியவரும், தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் கலைமகள் பத்திரிகையை நடத்தியவரும் ஆகிய ‘வாகீச’ கலாநிதி கி.வா. ஜகந்நாதன் ; 1901-ல் மதுரை தமிழ்ச் சங்கம் அமைத்த ஞானியாரடிகள்;  பல அரிய நூல்களை எழுதிய பி.ஸ்ரீ ஆச்சார்யா ; அறிவியல் தகவல்களை யெல்லாம் எளிய தமிழில் கொண்டு வருவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த பெ.நா. அப்புஸ்வாமி, கம்பராமாயணத்தை விளக்குவதில் புகழ்பெற்ற சி.ஜெகந்நாதாச்சாரியார்; அரிய இலக்கண விளக்க நூல்களை எழுதிய கலா நிலையம் ராஜகோபால் சாஸ்திரி;  பல கவிதை நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவரும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முதல்வராகப்  பணியாற்றி யவருமாகிய பேராசிரியர் ஆ .சீனிவாச ராகவன் ;  பாரதி நூல்கள் பற்றிய ஆராய்ச்சியில் பெரிதும் பாடுபட்டரா.அ.பத்மநாபன், மற்றும் சீனி விசுவநாதன்… போன்ற அந்தணர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு சாதாரணமானதல்ல.

தேசபக்தியைப் பரப்புவதிலும், ஜாதி வேறுபாடுகளைக் களைவதிலும், தீண்டாமை ஒழிப்பிலும், மதுவிலக்கைப் பரப்புவதிலும், பெண்கள் உயர்வுக்காக பாடுபடுவதிலும், முன் நின்றவர்களில் பல பிராமணர்கள் உண்டு. தமிழ் பத்திரிகை உலகின் தந்தை என்று கருதப்படுகிற ஜி. சுப்ரமண்ய ஐயர், இக்கால ஒளவையார் என்று திரு.வி.க. வால் பாராட்டப்பட்ட பண்டிதை அசலாம்பிகை அம்மையார் ;  தேசபக்தன் இதழின் ஆசிரியராக இருந்த வ.வே.சு ஐயர் ;  ஹரிஜன சேவையில் பெரிதும் ஈடுபட்ட சீர்திருத்த வாதி வ.ரா ; வெ .சாமிநாத சர்மா ;  மது விலக்கு , ஹரி ஜன முன்னேற்றம், நாட்டு விடுதலை,  இளம் விதவைகளின் விவாகத்துக்கு ஆதரவு என்று பல முனைகளில் தனது எழுத்தைச் சுழற்றி, சமூகசேவை புரிந்த கல்கி ; சங்கு சுப்ரமண்யம்,  சங்கு கணேசன்….. ஆகியோரும் அந்தணர்களே.

சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லும் அளவுக்கு தேச பக்தியைப் பரப்புவதில் ஈடுபட்டவரும்,  மிகக் கடினமான பொருளாத விஷயங்களையும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் படியாக எழுதியவரும், ஒரு தினசரி பத்திரிக்கை என்றால் ,அது இப்படித்தான் நடத்த படவேண்டும் என்று காட்டியவருமான ஏ.என் சிவராமன் மற்றும் ஏ.வெங்கடாச்சாரியார், என். ராமரத்தினம் போன்ற அந்தணர்கள் தமிழுக்கும் தமிழகத்துககும் பெரும் சேவை செய்தவர்கள்.  தேசியவாதிகளின் படைப்புகளை மக்களுக்குக் கொண்டு செல்வதை ஒரு புனிதக் கடமையாக நினைத்து, பதிப்பகத் தொழிலை நடத்திய அல்லயன்ஸ் கம்பெனியின் அதிபர்கள் பிராமணர்கள்.

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை வலியுறுத்திய பாலயோகினி, தீண்டாமை ஒழிப்பை வற்புறுத்திக் கூறிய மாலபில்லா, சமுதாய சீர்திருத்தத்தைப் பேசிய சேவாசதனம், தேசபக்தியைப் பரப்பிய தியாக பூமி… ஆகிய படங்களையெல்லாம் துணிந்து பிரிட்டிஷாரின் காலத்திலேயே தயாரித்த டைரக்டர் கே. சுப்ரமண்யம் ஓர் அந்தணர்.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதுவதை ஒரு கடமையாகக் கருதி பணியாற்றிய வை.மு. கோதைநாயகி பிராமண வகுப்பைச் சார்ந்தவர். லாப நோக்கம் என்பதை தமிழுக்குச் செய்கிற சேவையாக  நினைத்து ஒளவையார் படத்தைப் பெரும் செலவில் துணிந்து தயாரித்து வெளியிட்ட எஸ்.எஸ் .வாசன் ஓர் அந்தணர். நந்தன் சரித்திரத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி ஒரு அந்தணர்.

தமிழிசைக்கு பெரும் பணியாற்றிய பாபநாசம் சிவன், ஒரு பிராமணர். (தமிழிசையை பரப்புவதில் பெரும்பங்கு வகித்தவர்களில், கல்கி முதன்மையானவர் என்பதும் நினைவில் வைக்கத்தக்கது.)

தமிழகத்தின் வரலாறு பற்றியும், அதன் பழம் பெருமைகள்பற்றியும் இப்போது பலரும் பேசுகிறார்கள்.ஆனால் அந்தப் பழமையான வரலாற்றை ஆராய்ச்சி செய்து வழிப்படுத்தியவர்களில் பிராமணர்களே!

தன் கைப்பொருளைச் செலவு செய்து, பல இடங்களுக்கும் சென்று கல்வெட்டுக்களையும், செப்புப் பட்டயங்களையும் கண்டுபிடித்து சரித்திர நுட்பங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய து.அ.கோபிநாத ராயர் ஒர் அந்தணர். பாண்டித்துரை தேவர் கேட்டுக் கொண்டதால், சோழ வம்ச சரித்திர சுருக்கம் எழுதியவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழர்களின் சரித்திரம் என்ற ஆங்கில நூலை எழுதிய பி.டி. சீனிவாச ஐயங்கார் ஓர் அந்தணர்.  சங்க கால சேர மன்னர்கள் என்ற அரிய படைப்பை அளித்த கே.ஜி. சேஷய்யர் ஒர் அந்தணர். சென்னைப் பல் கலைக் கழகத்தின் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் முதல் பேராசிரியரான டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் என்கிற அந்தணர் பற்றி, ‘இவர் தென்னக வரலாற்று வித்தகர்; அதனை முறையாக எழுதிய மூலவர்,  உண்மை பல கண்ட முதல்வர்’  என்று தமிழ்  இலக்கிய வரலாற்றுக்  களஞ்சியம் கூறுகிறது.

தென்னிந்திய வரலாறு, சோழர் பாண்டியர் அரசு, விஜயநகர அரசு முதலிய 22 ஆராய்ச்சி நூல்களும் , 160  கட்டுரைகளும் எழுதி, இந்திய வரலாற்று ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு களஞ்சியம் கூறுகிற  நீலகண்ட சாஸ்திரி ஓர் அந்தணர்.

‘உண்மையான வரலாற்றை சீனிவாச ஐயங்காருக்கு பின் விரிவாக வெளியிட்டவர், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்  பேராசிரியராக இருந்த ராமசந்திர தீட்சிதரே என்று தேவநேயப் பாவணாரால் பாராட்ட பட்ட  வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் ஒர் அந்தணர். பலராலும் பாராட்டப்பட்ட இந்திய வரலாறு என்ற நூலை எழுதிய ஆர்.சத்தியநாத ஐயர் ஒர் அந்தணர்.

தங்கள் தொழிலை ஒரு புனிதமான கடமையாக  நினைத்து பணியாற்றிய டாக்டர்கள், மிக நுட்பமான சட்டங்களை ஆராய்ந்து விளக்கங்களைத் தரக்கூடிய வக்கீல்கள், சிறிதும் நேர்மை மாறாத நீதிபதிகள் மாணவர்களைத் தங்கள் பிள்ளைகள் போல் கருதி அக்கறையுடன் கல்விபோதித்த ஆசிரியர்கள் – சமுதாயத்தின் பல பிரிவுகளிலும் இருந்திருக்கிறார்கள் இவர்களில் பிராமணர்களும் நிறையவே உண்டு.

இப்படி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சிறப்புறப் பணியாற்றி மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதில் மற்றவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்களாக விளங்கிய பிராமணர்கள் எப்படி வெறுக்கத்தக்கவர்கள் ஆவார்கள் ?



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

12 – இது வெறும் பூச்சாண்டி…

வர்ணம் என்பது ஜாதியல்ல. பிறப்பினால் ஒருவன் எந்த வர்ணத்தையும் அடைந்து விடவில்லை;  ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாறவும் முடியும், மாறியவர்களும் உண்டு.

பிறப்பினாலேயே ஒருவன் ஒரு வர்ணத்தை அடைகிறான் என்ற நிலை நடைமுறையில் ஒரு காலத்தில் வந்து விட்டது என்கிற நிலையில் கூட – பிராமணனுக்கு கடும் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. க்ஷத்ரியர்களும், வைசியர்களும் வேதத்தை ஓதும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். வேதம் படிக்கும் உரிமை சூத்திரர்களுக்கு சில தர்ம சாத்திரங்களில்மறுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் வேறு எந்த கல்வியையும் மேற்கொள்வதற்கு அந்த எந்த தடையும் இருக்கவில்லை; வேறு சில சாஸ்திரங்களிலும் – ஏன் வேதத்தில் கூட, வேதங்களைப் படிக்கவும் சூத்திரர்களுக்கு அதிகாரம் என்பதைக் காட்டும் சான்றுகளும் கூட உள்ளன.

சூத்திரர் இடத்தில் பிராமணன் கல்வி கற்றதும் உண்டு; பிராமணன் அரசாளத் தகுதி அற்றவன் என்று விதிக்கப் பட்டிருந்தது…. என்பன போன்ற பல விஷயங்களை முன் அத்தியாயங்களில் சுட்டி காட்டி இருந்தேன்.

பிராமணர்கள்தான் இந்த மாதிரி சாத்திரங்களையெல்லாம் படைத்தார்கள் என்றால், அவர்கள் வெறுக்கத்தக்க காரியம் எதையும் செய்துவிடவில்லை என்பது தெளிவு. இன்னொரு விஷயத்தையும் கவனிக்கலாம். நமது தெய்வங்கள் எல்லாம் பிராமணர்களின் சிருஷ்டி என்றால், அவர்கள் ஏன் தெய்வங்களை பிராமணர்களாகவே கற்பித்துவிடவில்லை? பிரம்மா விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் எந்த வர்ணத்தைச்சார்ந்த வர்களாகவும் குறிப்பிடப்படவில்லை. மஹா விஷ்ணுவின் பல அவதாரங்களில் வாமன, பரசுராம அவதாரங்கள் பிராமண ஜாதியில் பிறப்பிக்கப் பட்டவை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வாமனரும், பரசுராமரும் தெய்வங்களாக வணங்கப்படுவதில்லை. முருகன் வேடுவப் பெண்ணை மணந்தார். தெய்வமாக வணங்கப்படுகிற விஷ்ணுவில் அவதாரமாகிய ராமர் க்ஷத்ரியர். அப்படிப்பட்ட மற்றொரு அவதாரமாகிய கிருஷ்ணர், யாதவ குலத்தில் பிறந்தவர்.

இப்படிப்பட்ட தெய்வங்களை பிராமணன் வணங்குகிறானே ஒழிய, தெய்வங்களை பிரமணர்களாக்கி விடவில்லையே? கற்பனையில் தெய்வங்களைப் படைத்த பிராமணனுக்கு மிகவும் பரந்த மனோபாவம் இருந்திருக்க வேண்டுமே !

அது ஏன் வெறுக்கத்தக்கது?

சரி , இந்தப் பழைய விஷயங்களை விட்டு, பிற்கால பிராமணர்களைப் பார்த்தல் , அவர்கள் நாட்டின் விடுதலைக்கும், சமூக சேவைக்கும்,  தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கும்,  தமிழ் வளர்ச்சிக்கும் எவ்வளவு பணியாற்றியிருக்கிறார்கள் என்பதையும் சென்ற பல அத்தியாயங்களில் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கும் அடுத்த காலகட்டத்திற்கு வந்தால், ‘எல்லா உயர் பதவிகளையும் தானே ஆக்கிரமித்துக் கொண்டு, மற்றவர்களை அமுக்கி வைத்தான் ‘ பிராமணன் என்று பிராமண எதிர்ப்பாளர்கள் கூறுவது உண்டு.

உயர் பதவிகளில் பலவற்றிலும் பிராமணனே இருந்தான் – என்பது மட்டுமே இதில் உள்ள உண்மை அதற்கு  காரணம் ?

தர்ம சாத்திரங்கள் பிராமணனுக்கு விதித்திருந்த கடுமையான விதிமுறைகள் பலவற்றிலிருந்தும், பிராமணன் காலப்போக்கில் தவறி விட்டான். ஆனாலும் சடங்குகளில் அவனுக்கு இருந்த நம்பிக்கையால், சில கட்டுப்பாடுகள் மிச்சம் மீதியாக அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தன. ஆகையால்  எப்படி செட்டியாருக்கு வர்த்தகம் கை வந்த கலையாயிற்றோ , முதலியார்களுக்கு சுய கெளரவம் முக்கியமயிற்றோ ,

மறவர்களுக்கு போர் குணம் இயல்பாயிற்றோ, அது போல பிராமணனுக்கு ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிற்பது வழக்கமாயிற்று. கடவுள் நம்பிக்கையும் அவனுக்கு மிகுந்திருந்தது. வியாபாரத்திலோ, தொழில் செய்வதிலோ, கைத்திறனைக் காட்டிக் கூடிய வேலைகளைச் செய்வதிலோ பிராமணனுக்கு நாட்டம் இருக்கவில்லை. அதற்கான திறமையும் அவனுக்கு இருக்கவில்லை. இது ஒரு புறம்.

மற்றொரு புறத்தில் வேதங்களைப் படிப்பது ஒதுவது, கற்பிப்பது – ஆகிய பொறுப்புக்களிலிருந்து, பிராமணன் கொஞ்சம் கொஞ்சமாகத் தவற ஆரம்பித்து விட்டான் பணத்தையும், பிழைப்பையும் தேடினான். இந்த நிலையில் பிழைப்புக்கு அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு படிப்பதும், படிப்பின் மூலம் அடையக் கூடிய வேலைகளைப் பெறுவதும்தான் என்று ஆகி விட்டது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக இதற்குப் பெரிய வாய்ப்பு இருக்கவில்லை.  ஏனென்றால் அப்போதெல்லாம் அதிகாரம் மையப்படுத்தப்படவில்லை. அரசன் ஒருவன் இருந்தான். ஆனால் அவனுடைய ஆணை நேரடியாக நெடுந்தூரம் பாயவில்லை; ஆங்காங்கே கிராம அமைப்புகள் அதிகாரம் செலுத்தின; அந்த அமைப்புகளில் ஆங்காங்கே இருந்த உள்ளூர் மக்களே பொறுப் பேற்றார்கள்.

பிரிட்டிஷார் வந்த பிறகே அதிகாரம் மைய்யப்படுத்தப்பட்டது. அரசின் பிரதிநிதிகளாக அதிகாரிகள் மூலையில் இருந்த கிராமத்தையும் அடைந்தார்கள். படிப்பில் பிராமணன் காட்டிய அக்கறையினால், இந்த அதிகாரிகள், குமாஸ்தாக்கள் போன்ற பல வேலைகளும் பிராமணனுக்குக் கிட்டின.

இதில் பிராமணனின் ஆக்கிரமிப்பு எங்கிருந்து ?  மற்றவர்கள் கல்வி கற்கக் கூடாது என்று பிராமணன் கூறவில்லை. சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று கூறவில்லை. விஞ்ஞானமோ, கணிதமோ, பூகோளமோ சரித்திரமோ, வான சாத்திரமோ வேறு எந்தப் படிப்போ யாருக்கும் தடுக்கப்படவில்லை. பிராமணன் அல்லாதவர்களுக்கு தொழிலில் நாட்டம் இருந்தது. வியாபாரத்தில் ஊக்கம் இருந்தது: கைத்திறனைப் பயன்படுத்திச் செய்கிற வேலைகளில் திறமை இருந்தது – ஆகையால் அவர்கள் மாதச் சம்பளத்திற்கு உழைக்கிற வேலையைப் பெரிதாகக் கருதாமல், இந்த மாதிரி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  ஆக பிராமணர்களே பலத்த போட்டியின்றி பல இடங்களிலும் அதிகாரிகளாகவும் குமாஸ்தாக்களாகவும் ஆனார்கள்.  இதில் அவர்களுடைய தவறு எங்கிருக்கிறது  ?

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக  மாறியது பற்பல ஜாதிகளைச் சார்ந்தவர்களும் படிப்பில் காட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களும் பிரிட்டிஷ் அரசுப் பணிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்கள்.

அவர்களையும் பிராமணன் தடுக்க முயற்சிக் வில்லை.

‘பிராமணன் ஜாதித் திமிர் பிடித்தவன். ஆகையால் பிராமணனும் பிராமணியமும் வெறுக்கத்தக்கவைகளே என்பதும் பிராமண எதிர்ப்பாளர்களின் வாதங்களில் ஒன்று. ஐந்தாவது பிரிவு என்று ஒன்று கிடையாது –  என்று மனு நீதி கூறுகிறது. ஆனால் நான்கு வர்ணங்களுக்கு அப்பால் ஹரிஜனங்கள் – தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு பிரிவு நடை முறையில் வந்து விட்டதை நாம் அறிவோம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று கொடுமைப்படுத்தப் பட்டனர். ஆனால் இந்த மாபெரும் தவறை பிராமணன் மட்டுமா செய்தான்? மற்ற ஜாதியினர் எல்லாம் செய்ய வில்லையா? சொல்லப் போனால் அன்றிலிருந்து இன்று வரை, இந்தத் தீண்டாமையை பெரிய அளவில் பெரிதாக அனுஷ்டிப்பவர்கள், பிராமணர்கள் அல்லாதவர்களே !

பிராமணர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே மோதலும், அதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்படுவதில்லை. அந்த மாதிரி மோதல்கள் பிராமணரல்லாத சில ஜாதிகளைச் சார்ந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையேதான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஜாதி களைச் சார்ந்தவர்கள் மீது கூறாத குற்றச்சாட்டை பிராமணன் மீது கூறுவது என்ன நியாயம் ?

ஓவ்வொரு ஜாதியைச் சார்ந்தவர்களும், தங்கள் ஜாதியை பற்றி ஒர் உயர்வான எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்களுடைய ஜாதியையும் வெறுப்பது என்றால் – முதலியாரீயம் செட்டியாரீயம், சைவப் பிள்ளையீயம், பிள்ளையீயம்,, நாயுடீயம், கிராமணியரீயம், கவுண்டரீயம், நாயக்கரீயம்,

நாடாரீயம், ரெட்டியாரீயம், வன்னியாரீயம்…. என்று எல்லாவற்றையும் வெறுத்துத் தள்ள வேண்டியதுதானே? அல்லது சுருக்கமாக க்ஷத்ரீயம் , வைசீயம், சூத்ரீயாம்  ஆகியவற்றை வெறுக்க வேண்டியதுதானே?

அதெல்லாம் போற்றத்தக்கவை, பிராமணீயம் மட்டும் வெறுக்கத்தக்கது என்றால் – அதில் வாதம் தெரியவில்லை, வறட்டுத்தனம்தான் தெரிகிறது. இப்படி இருந்தும் கூட பிராமணன் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறான்- காரணம் அவன் 4 சதவிகிதம் தான் இருக்கிறான். அதுவும் ஓரிடத்தில் குவிந்தில்லை. அவன் ஒட்டு வந்தாலும் ஒன்றுதான், வராவிட்டாலும் ஒன்றுதான். பிராமணன் உன்னை விழுங்கிவிடுவான் என்று மற்றவர்களுக்குப் பூச்சாண்டி காட்டுவது வசதியாக இருக்கிறது. ஏதாவது ஒரு பூச்சாண்டி காட்டித்தான் மக்கள் செல்வாக்கைப் பெறவேண்டும் என்று ஆகிவிட்டது. வடநாட்டு ஆதிக்கம் ,  ஏகாதிபத்தியம், முதலாளிகளின் கொடுமை,  தமிழ் விரோதிகளின் சதி … போன்ற  பூச்சாண்டிகள்.

வெவ்வேறு சமயங்களில் பயன்படுவது போல , ‘பிராமணன் வருகிறான் ஜாக்கிரதை’ என்ற பூச்சாண்டியும் அவ்வப்போது பயன்படுகிறது. இந்த பிராமணனே 15 சதவிகிதம் இருந்திருந்தால் – அதுவும் மாநிலத்தில் சில பகுதிகளில் பிராமண ஒட்டு குவிந்து கிடந்தால் – இந்தப் பிராமண பூச்சாண்டி தோன்றியே இருக்காது. மாறாக, பிராமணனைப் போற்றிப் புகழ்த்திருப்பார்கள்.  ஓட்டுக் குவியல் இல்லை; அதனால் குரலில்லை; அதனால் கவலையில்லை ; தாராளமாகத் திட்டலாம்.

அந்தத் திட்டிலும் கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டாமா? இல்லை என்பதை மேலும் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

 13- யார் தமிழர்கள்?

பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ்; தமிழை சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்லர்  பிராமணர்கள் ;  தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள்; அமெரிக்காவில் வளர்கிற தன் விட்டுக் குழந்தைகள்கூட தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாது என்று முனைபவர்கள் பிராமணர்கள்;  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் ; ஆனாலும், ‘தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு’ என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது.

வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தங்கள் தாய்மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் – அவர்கள் தமிழர்கள்.  உருது தாய் மொழியாக ஏற்கிற ஒரு பகுதி முஸ்லிம்கள் கூட தமிழகத்திலே வாழ்வதால் அவர்கள் தமிழர்கள் ;  ஆனால் பிராமணன் தமிழன் அல்ல !

இந்த வக்கிரமான வாதத்திற்குக் கூறப்படுகிற காரணம் என்ன ? பிராமணன் ஸம்ஸ்க்ருதத்தை ஏற்கிறான் என்பதுதான். லத்தீன் மொழியில் ஓதப்படுகிற சொற்களை கிறிஸ்துவர்கள் ஏற்றாலும் – அவர்கள் தமிழர்களே;  அரபு மொழியில் ஓதப்படுகிற விஷயங்களை முஸ்லிம்கள் ஏற்றாலும், அவர்கள் தமிழர்களே;  ஆனால் ஸம்ஸ்க்ருத மொழியில் ஒதப்படுகிற மந்திரங்களை ஏற்பதால், பிராமணன் தமிழன் அல்ல !  பிதற்றல் அல்லவா இது !

மற்ற எந்த ஜாதியினரை விடவும் மிக அதிகமாக, பிராமணர்களே ஸம்ஸ்க்ருத மொழியை மதிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வேதங்களும், அதன் பின்னர் வந்த புராணங்களும், அவற்றை ஒட்டிய ஸ்லோகங்களும், மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் தான் இருக்கின்றன. மந்திரங்களின் வார்த்தைக்கு மட்டுமல்லாமல், சப்தத்திற்கும் வலிமை உண்டு – என்பது நம்பிக்கை. ஆகையால் ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்திருக்கிற வேதங்கள் மந்திரங்கள் போன்றவை அப்படியே உச்சரிக்கப்படுகின்றன. சொல்லப் போனால், வார்த்தை, சப்தம் தவிர, ஏற்ற இறக்கங்களும் கூட ஒழுங்காக இருந்தால்தான், மந்திரத்தில் வலிமை சிதையமால் இருக்கும் – என்பது தான் பெரியவர்கள் கூறுவது. இதெல்லாம் இப்போது நலிந்து வருகின்றன என்பது வேறு விஷயம். ஆனால் விட்ட குறை தொட்ட குறையாக, இந்த நம்பிக்கைகள் ஓரளவுக்காவது தொடர்கின்றன.

ஸம்ஸ்க்ருத மொழி, இந்நாட்டு மொழி , தமிழ் மன்னர்களும் போற்றி வளர்த்த மொழி. அருமையான காவியங்களை வழங்கிய மொழி. இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு அது அவசிய இல்லாமற் போய்விட்டாலும், கம்ப்யூட்டருக்குக்கூட அந்த மொழி மிகவும் ஏற்றது என்ற கருத்து ஜெர்மனி போன்ற நாட்டில் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மிக அருமையான, தெளிவான அறிவுபூர்வமான விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்கிற பல படைப்புகளைத் தந்துள்ள அந்த மொழியை நாம் ஒழித்துக் கட்டினால் – நஷ்டம் மொழிக்கு அல்ல, நமக்குத்தான். வேதங்கள் உபநிஷத்துக்கள், போன்ற தத்துவ பொக்கிஷங்கள் தவிர, காளிதாஸனின் காவியங்கள், பாஸ்கரனின் சாத்திரம், ஆர்யபட்டாவின் ஆராய்ச்சிகள், பர்த்ருஹரியின் அறிவுரைகள், பீஷ்மரின் வழியாக வந்த வியாஸரின் நீதி சாத்திரம், கெளடில்யரின் நிர்வாக நூல், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், பதஞ்சலியின் யோகா நூல் , சுஸ்ருதனின் மருத்துவம், குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய பஞ்ச தந்திரக் கதைகள்….  போன்ற நன்னெறி போதனைகள்; காளி தாஸனின் உவமைத் திறனையும், பாரவியின் பொருட் செறிவையும், தண்டியின் சொல் ஆளுகையும்  சேர்த்து அளிப்பதாகக் கருதப்படுகிற மாகனின் காப்பியம்; பூஜ்யத்தை கணித சாத்திரத்திற்கு அளித்து, அதன் முன்னேற்றத்திற்குப் பேருதவி புரிந்த இந்திய ஆராய்ச்சியாளர்களின் கணித நூல்கள், ஆயுர்வேத மருத்துவ முறையை விளக்குகிற நூல்கள் என்று கொட்டிக் கிடக்கிற அறிவுத் திறனுக்கும் – எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நாம் சொன்னால், ஸம்ஸ்கிருதத்திற்கா நஷ்டம் ?  கலைச் செல்வங்கள் எந்த மூலையில், எந்த மொழியில் இருந்தாலும் அதைக் கொண்டு வந்து இங்கே கொட்டுங்கள் – என்றார் பாரதியார்; நம்மிடம் கொட்டிக் கிடக்கிற கலைச் செல்வத்தைத் தூக்கிக் குப்பையில் எறியுங்கள் என்கிறார்கள் இன்றைய பகுத்தறிவாளர்கள் !

துவேஷத்தைத் தவிர, அர்த்தமற்ற ஒரு வெறுப்புணர்வைத் தவிர, இந்த மூர்க்கத்தனத்திற்கு வேறு என்ன காரணம் இருக்கிறது?

முன்பு பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட, இம் மொழியில் பாண்டித்யம் பெற்று கல்லூரி பேராசிரியர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள். ஸம்ஸ்கிருதம் கற்க கூடாது  என்ற தடை எந்தக்காலத்திலும், எந்தப்பிரிவினருக்கும் , எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படவில்லை.  இப்படிப்பட்ட ஸம்ஸ்கிருத மொழியைப் இன்று பெரும்பாலான பிராமணர்கள் கூட இன்று கற்பதில்லை.

ஸ்ம்ஸ்கிருதத்தைக் கற்றால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவப் போகிறது என்பதல்ல நம் வாதம். கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பவர்கள் – அம்மொழியைக் கற்பதால் – அவர்கள் தமிழ் விரோதிகள்  ஆகிவிட மாட்டார்கள் என்று கூறுகிறேன் -அவ்வளவுதான்.

இவை ஒருபுறமிருக்க, ஸம்ஸ்கிருதத்தை இப்பதால் – பிராமணன் தமிழன் அல்ல என்று ஆகிவிடுவானா ?

அப்படியானால் ஆங்கிலத்தை மதிப்பதாலும், கற்பதாலும் – ஒருவன் தமிழன் அல்ல என்று ஆகிவிடுமே? அப்படிப் பார்த்தால் இன்று தமிழ்நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்களே?

பிராமணன் வீட்டில் பேசுகிற தமிழ் ஏளனத்திற்குரியது; மற்ற ஜாதியினர் பேசுகிற தமிழ் எப்படிப் பட்டதாக இருந்தாலும் அது கேலிக்குரியதல்ல. இப்படி ஒரு நியாயம் இன்று நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. அகத்துக்காரர் என்பது மருவி ஆத்துக்காரர் என்றும், அகத்துக்காரி என்பது மருவி ஆத்துக்காரி ன்றும் பிராமணர்கள் வீடுகளில் பேசப்படுவது – கேவலம்.  ஆனால் ஊட்டுக்கார், ஊட்டுக்காரி,அப்புச்சி, ஆச்சி போன்றவை கேலிக்குரியவை அல்ல. ‘அவர்கள்’ என்பது மருவி ‘அவா’ என்று பிராமணனால் பேசப்படுவது மட்டம்; ஆனால் அதுவே ‘அவுக’ என்றும் ‘அவனுங்க’ என்றும் கூறப்படுவது தவறல்ல. இது நியாயவாதமா? அல்லது நியாயம் சிறிதுமற்ற த்வேஷ வாதமா? பேசிக் கொண்டிருக்கிறால் பேசிகினுகிறான் என்று சொன்னால் தவறில்லை;  பேசி கிட்டிருக்கான் என்று சொன்னால் குற்றமில்லை; ஆனால்  ‘பேசிண்டிருக்கான்’ என்று சொன்னால் அது ஏளனத்திற்குரியது ; ஏனென்றால் அது பிராமணன் பேச்சு.

எந்த மொழியானாலும் சரி – வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பிரிவுகளில் அது சில மாறுதல்களோடு பேச்சு வழக்கில் இருக்கும். அது பேச்சு மொழியின் அழகு. பெர்னாட்ஷாவின் நாடகமொன்றில், ஒரு மொழி விற்பன்னர், ஒருவருடை ஆங்கிலப் பேச்சை வைத்து அவர் எந்த பகுதியில், எந்தப் பிரிவில், எந்தத் தொழிலைச் சார்ந்தவர் என்று கூறிவிடுவதாக ஒரு காட்சி வரும். இது ஆங்கிலத்திற்கு அவமானமல்ல. ஒரு மொழியின் கொச்சை உருவத்தின் வளம் இது தமிழ்நாட்டிலோ, பல மொழிகள் கலந்த மெட்ராஸ் பாஷை கூட ஏற்புடையது; ஆனால் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற சில வார்த்தைகள் மிகவம் ஏளனத்திற்குரியவை – என்ற வகையில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் சித்தரிக்கப் படுகிறது. துவேஷப் பிரசாரத்தின் விளைவுகளில் இது ஒன்று.

‘தமில் மொலியில் உல் இலக்கியங்கள்’ என்று பேசி தமிழை வளர்க்கிற அறிஞர்கள்;  ‘தாய் தடுத்தாலும் தமிளைபளிப்பவனைலிடே என்பதை ஸொல்வி கொல்கிறேன்’ என்று சவால் விட்டு தமிழைக் காப்பாற்றுகிற  தலைவர்கள் ; ‘தமிளை வாள வைத்து, உளகிளேயே கள் தோன்றி மண் தோன்றா காளத்தில் பிறந்தது என்பதை பரை  சாற்றி.. ‘ எனப் பேசி தமிழின் பெருமையை நிலை நாட்டுகிற தமிழ்ப் பற்றாளர்கள். ஆகிய தமிழ்க் கொலை நிபுணர்கள் எல்லோரும் – தமிழர்கள். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை ஒழுங்காக உச்சரித்து, வீட்டிலே தமிழில்பேசி, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்தைக் கூறினாலும், அது முடிந்து இறைவனிடம் தனது வேண்டுகோளையும் தமிழிலே வைக்கிற பிராமணன், தமிழன் அல்ல!

அவ்வளவு ஏன்? தன்னைக் கன்னடியன் என்று வெளிப்படையாகக் கூறி, தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று தூற்றிய பெரியார் – தமிழ்த் தலைவர் ஆனால் தமிழைக் கற்று, வீட்டிலே தமிழ் பேசி, அதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பிராமணன் தமிழன் அல்ல !  இது வாதம் அல்ல – பிடிவாதம் கூட அல்ல – வெறும் மோசடி.



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

14 – புரோகிதர்கள் செய்த குற்றம் என்ன?

பிராமணீயம் மற்றும் பிராமணர்கள் மீது தங்களுடைய தாக்குதலை நடத்துபவர்கள், புரோகிதர்களைப் பிராமணியத்தின் ஒரு முக்கிய சின்னமாகக் கருதி, அவர்கள் மீது ஏளனத்தைப் பொழிகிறார்கள்; கண்டனத்தை வீசுகிறார்கள்;  ‘புரோகிதர்கள் எல்லாம் பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டுமா? மற்றவர்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற ஏற்பாடுதானே இது? என்ற வகையில் பிராமணீய – பிராமண எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது பிரசாரம் செய்கிறார்கள் ;  அதாவது ‘புரோகிதர்கள் மிகவும் மதிக்கத் தக்கவர்கள்; அவர்களுடைய ஆக்ஞைக்கு மற்றவர்கள் கட்டுப்படுகிறார்கள்; அவர்களுடைய ஆசி இருந்தால்தான் ஒருவன் நன்றாக முடியும்;  கல்யாணத்திலிருந்து கருமாதி வரை அவர்கள் நடத்தி வைத்தால்தான் அந்த நிகழ்ச்சி முறையாக இருக்கும்.  ஆகையால் புரோகிதனாகப் பிராமணன் மட்டுமே இருக்கலாம் என்கிற விதி பிராமணனுக்கு, மற்ற எல்லோரையும் விட, ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கிறது; இது சமூக அநீதி.’

இந்த வாதத்தில் பல கற்பனைகள் அடங்கியிருக்கின்றன பழைய காலத்தை எடுத்துக் கொண்டால் – யாகங்களையே கூட பிராமணர்களாக இல்லாதவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். மனுவின் நீதிநூலைப் பார்த்தால், எல்லா பிராமணர்களும் புரோகிதர்களாகி விட முடியாது;

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்காமல் வாழ்கிறவன் ஒதுக்கித் தள்ளப்படுகிறான். இன்றைய சமூக த்தைப் பார்த்தால் – புரோகிதர்களின் நிலா பரிதாபத்துக்கு  உரியதாக இருக்கிறதே தவிர, பொறாமைக்கு  உரியதாக இல்லை. அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்பட வேண்டிய நிலையில் பல புரோகிதர்கள் இருக்கிறார்கள்.

வருடக் கணக்கில் வேதங்களையும், சாத்திரங்களையும் பயின்று, எளிமையான வாழ்க்கை நடத்தி தாங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என்று ஆயுளைக் கழித்து அவர்கள் கண்டதென்ன? நம்பாதவர்கள் ஏளனம்

செய்கிறார்கள்;  நம்புகிறவர்கள் அவமரியாதை செய்கிறார்கள்;  ஆம் நம்புகிறவர்கள் – குறிப்பாகப் பிராமணர்கள் செய்கிற அவமரியாதை கொஞ்சம் நஞ்சமல்ல.  ஓர் ஆச்சார்யனை அல்லது குருவை நடத்துவது போல், புரோகிதர்களை நடத்துபவர்கள் மிகச் சொற்பம்.  புரோகிதர்களுக்குத்’ தட்சணையாகப்  பணம் கொடுப்பதால் – கொடுக்கிற குடும்பஸ்தன் முதலாளியாகத் தன்னை நினைத்து கொண்டு , தட்சணை பெறுகிற புரோகிதரைக் கூலியாக நடத்துகிறான். அதிகாரம் செய்கிறான். ஆணவம் காட்டுகிறான். ‘என்ன? இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா  எப்படி ?  எனக்கு வேலை வெட்டி இல்லையா? என்பதில் ஆரம்பித்து பணத்துக்கு இப்படி பறக்கறீங்களே ?  ஒரு மந்திரம் ஒழுங்கா சொல்ற தில்லை.  தட்சணை மட்டும் தாராளமா இருக்கணும்’ என்பது வரை மரியாதை போகிறது.

கவனிக்க வேண்டும் – இது ‘நம்பிக்கை’ உடையவர்களின் லட்சணம். புரோகிதர்கள் இன்று வாழ முடியுமா என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. வர்ணங்கள் பிறப்பின் மூலம் அடையப் பெறுவதில்லை – என்ற நிலை இருந்தபோது, சமூகம் பிராமணனை காப்பாற்றியது; அடுத்த தினம் பற்றி திட்டமிடாமல் அவன் வாழ்ந்தான். காலப்போக்கில் பிறப்பின் மூலமே வர்ணங்கள் நிச்சயிக்கப்படத் தொடங்கிய போது பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகளை ஏற்று கட்டுப்பாடுடன் வாழ்ந்த பிராமணன் சமூகத்தால் மதிக்கப்பட்டான்; அப்போதும் பொருள் ஈட்டுவது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. பின்னர் வர்ணங்களே அழிந்து, ஜாதிகள் தோன்றிய போது -பொருளாதார மாற்றங்களும் பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தன.  விவசாயம் , தொழில், வர்த்தகம் ஆகியவை பெருகத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் , பிராமணர்களுக்கு ஆசை வளரத் தொடங்கியது.

வைதீகத்தை விட்டு, வர்த்தகத்தையும், அதையொட்டிய பொருள் ஈட்டும் வழிமுறைகளையும் அவர்கள் நாடத் தொடங்கினர். பிராமணன் என்ற இலக்கணத்திற்குச் சம்பந்தமே இல்லாத பணத்தாசை , அந்தச் சமூகத்தைக் கவ்விக் கொண்டது. இன்று பிராமணன், ‘எங்கே பிழைப்பு’ என்று தேடுகிற நிலையில் இருக்கிறான்.

இதற்குப் பிராமணன் மட்டும் பொறுப்பல்ல; எல்லோருமே இப்படித்தான் மாறி விட்டனர். க்ஷத்ரியனுக்கு போர்த் தொழில் என்பதோ, வைசியனுக்கு நேர்மையான வர்த்தகம் மற்றும் விவசாயம் என்பதோ, சூத்திரனுக்கு நேர்மைத்திறன் கொண்ட பல தொழில்கள் என்பதோ, பழங்கதைகள் ஆகிவிட்டன. பொருள் ஈட்டுவதே குறி – என்று உலகமே மாறி விட்டது. இந்த நிலையில் பிராமணன் மட்டும்பொருள் ஈட்டுவது ஒரு பொருட்டல்ல-என்று வாழ்ந்தால் , அவன் பிச்சைக்காரனாக அலைய வேண்டியதுதான்.

இந்த மாதிரி நிலை வரும் என்பதைப் பாகவத புராணம் அன்றே எடுத்துச் சொல்லியிருக்கிறது. ஆகையால் இது, அன்றைய அறிஞர்களால் எதிர் பார்க்கப்படாத நிலைமை அல்ல. பூணூல் ஒன்றுதான் பிராமணன் என்பதற்கு அடையாளமாக இருக்கும்; திருடனின் நியாயம்  எதுவோ, அதுவே ஆட்சியாளர்களின் நியாயமாகி விடும்.. ‘ என்றெல்லாம் பாகவத புராணம் கூறுகிறது.

இப்படி விலக்க முடியாத மாற்றங்கள் பலவற்றைக் கண்டு விட்ட சமுதாயத்திலும்கூட புரோகிதர்கள் கூடிய வரையில் இன்றும் எளிமையாகவே வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது வியப்புக்குரிய விஷயம். ஆனால் இது வெகுகாலம் தொடரக்கூடிய நிலை அல்ல என்பது அவர்களுக்கே தெரிந்துதான் இருக்கிறது. மரியாதை குறைகிறது; நம்பிக்கை தளர்கிறது; சடங்குகள் கடமைகள் என்பதிலிருந்து மாறி, கடன்கள் என்று ஆகிவிட்டன; சன்மானம் என்பது கூலியாகி விட்டது;  இந்த நிலையில் புரோகிதர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பணி வேண்டாம் – என்று முடிவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதி தன் மகனை அரசியலுக்கு இழுக்கிறார் – அதில் பெரும் பணமும், அதிகாரமும் இருக்கிறது என்பதால்!.  வர்த்தகர் தன் மகனை வர்த்தகத்திற்கு இழுக்கிறார் – அதில் வசதியான வாழ்க்கை இருக்கிறது என்பதால் !நடிகர் தன் மகனை நடிப்புத் தொழிலில் ஈடுபடுத்துகிறார் – அதில் புகழும் பணமும் இருக்கிறது என்பதால் !.

டாக்டர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் தங்கள் பிள்ளைகள் தங்கள் தங்கள் தொழிலுக்கே வர வேண்டும் என்று  முயல்கிறார்கள் – அதில் அந்தஸ்தும் சம்பாத்தியமும் இருப்பதால்! ஆனால் புரோகிதர்களோ – தங்கள் பிள்ளைகளை புரோகிதத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை . அதில் பணமும் இல்லை. அந்தஸ்தும் இல்லை , மரியாதையும் இல்லை என்பதால்!

இதுதான் இன்றைய மிகப் பெரும்பாலான புரோகிதர்களின் நிலை.  இப்படிப்பட்ட ஒரு பணியைப் பிராமணர்கள் மட்டும் செய்வதா என்ற கேள்வி அர்த்தமற்றது. அந்தப் பணியை மேற்கொள்ள துடிக்கிற மற்ற ஜாதியினர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார்தடுத்தது? இன்றைய சட்டப்படி பிராமணன் ஒருவன், புரோகிதம் செய்து நடத்தி வைத்தால்தான், ஒரு சடங்கு நடந்ததாகக் கருதப்படும் என்ற நிலை இல்லையே? பொங்கலுக்கு குரிய நமஸ்காரம், நவராத்திரிக்கு தேவி பூஜை, நவகிரஹத்திற்கு சாந்தி, அமாவாசைக்கு தர்ப்பணம் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அதற்கு பிராமணர்களைத்தான்   புரோகிதனாக அழைக்க வண்டும் – என்ற நிர்பந்தம் இல்லையே? மற்ற ஜாதியினரை அழைத்து இம்மாதிரிச் சடங்குகளை நடத்த முனைந்தால் – அதைத் தடுக்கும் யாருக்கு இருக்கிறது? யாருக்கும் இல்லை .

திருமணங்களை எடுத்துக் கொள்வோம். பிராமண புரோகிதர்கள் இருந்துதான் திருமணங்கள் நடத்தப் பட்டாக வேண்டும் – என்ற நிர்பந்தம் இல்லையே ?  பகுத்தறிவு அல்லது சீர்திருத்த திருமணம் வருவதற்கு  முன்பாகவே – ரிஜிஸ்டர் கல்யாணம் வந்து விட்டதே ?  புரோகித எதிர்ப்பாளர்கள் பதிவுத் திருமணம்  செய்து கொண்டிருக்கலாமே?

பகுத்தறிவு திருமணம் செய்து கொண்டால் தான் புரோகிதம் தவிர்க்கப்படுமா ? புரோகித பகிஷ்காரத்திற்குப் பதிவுத் திருமணம் போதாதா? ஏன்  ? அது என்ன பகுத்தறிவு ? ஒரு தலைவரை அழைத்து அவருக்கு வேண்டாதவர்களையெல்லாம் அவர் திட்டித் தீர்க்க திருமணம் நடந்து முடிந்தால் பகுத்தறிவு. பதிவுத் திருமணம் செய்து கொண்டால், அது போதுமா பகுத்தறிவில்லை. நல்ல பகுத்தறிவு சரி .. சீர்திருத்த அல்லது பகுத்தறிவுத் திருமணம் மாதிரி, ஏன் சீர்திருத்த கருமாதி அல்லது பகுத்தறிவு கருமாதி என்று கொண்டு வரப்படவில்லை? அது கெளரவம் இல்லை என்பதாலா? பகுத்தறிவாளர்கள் பார்க்கிற இந்தக் கெளரவத்தை நினைக்காமல், புரோகிதர்கள் ஈமக்கிரியையும் நடத்துகிறார்களே, அங்கேதான் இருக்கிறது வித்தியாசம் பகுத்தறிவாளர்கள் செய்வது வெறும் பிரச்சாரம் ; அது செயல்படுவது வெறுப்பின் அடிப்படையில், புரோகிதர்கள் செயல்படுவது நம்பிக்கையின் அடிப்படையில். அதனால் தான்  இன்னமும் கூட  அவர்கள் செய்து வைக்கிற சாத்திரப்படியான சடங்குகளில் மற்றவர்களுக்கும் கொஞ்சமாவது நம்பிக்கை மிச்சம் மீதமிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையிலும், ஏன் பிராமணர்களே புரோகிதர்களாக அமர்த்தப்படுகிறார்கள் ? அவர்கள்தான் அதைச்  செய்ய  முன் வருவார்கள். அவர்கள் தான் பல வருடங்கள் செலவிட்டு, சாத்திரங்களில் கூறியுள்ளபடி, வெவ்வேறு சடங்குகளின் மந்திரங்ளையும் வழிமுறைகளையும் கற்றிருக்கிறார்கள். குடும்பத்தில் வழிவழியாக வந்த பணி என்பதால் புரோகித குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச்  சிறு வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது; பயிற்சியும் கிட்டியது. அக்கறையும் உண்டாயிற்று. இந்த அக்கறை மற்றவர்களுக்கு இல்லை. ஏன்?

ஏனென்றால், அதில் பெரிய லாபம் இல்லை. அதனால்தான் மற்ற ஜாதியினர் புரோகிதப் பணிக்கு, போட்டியாக வருவதில்லை. அதனால்தான் புரோகிதர்களே கூட தங்களுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புவதில்லை.

இப்படி இருந்தும் பிராமணர்கள்தான் புரோகிதர்களாக வேண்டுமா – என்ற கேள்வி ஏன் எழுகிறது? வெறும் வெத்துப் பிரசாரம்,  கலப்படமில்லாத வேவுப் பிரசாரம். ஏதோ மற்ற ஜாதியினர்கள் பலரும் புரோகிதர்களாக துடிப்பது போலவும், அவர்களை எல்லாம் தடுத்து, அமுக்கிவிட்டு, பிராமணன் மட்டும் புரோகிதத்தைத் தொடர்வது போலவும், மற்றவர்கள் ஏன் கூடாது? என்று கேட்டு, ஒரு கற்பனைப் போட்டியைச் சிருஷ்டித்து வெறுப்பு வளர்க்க படுகிறது. அவ்வளவுதான். மற்றபடி பார்த்தால் புரோகிதர் பணி போட்டியில்லாத பணி ; வெளியே இருப்பவர்கள் அதற்கு ஆசைப்படுவதில்லை;  உள்ளே இருப்பவர்கள் தங்களோடு இது முடியட்டும் என்று பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதுதால் புரோகிதத்தின் நிலை !

நம்பிக்கை உடையவர்கள் – புரோகிதர்களிடம் தான் கணக்கு பார்ப்பார்கள்.  சினிமாவுக்கோ, ஹோட்டலுக்கோ செலவு செய்கிற போது நினைவுக்கு வராத சிக்கனம் புரோகிதருக்குத் தட்சணை கொடுக்கும்போது வந்து விடும்.;  ரொம்ப மிஞ்சிப் போனால் விநாயகர் பூஜையிலிருந்து, அமாவாசை தர்ப்பணம் வரை, காஸெட்டுகள் இருக்கவே இருக்கின்றன. புரோகிதமாவது மந்திரமாவது ! காஸட்   போட்டு காரியத்தை முடித்தால் ஆயிற்று; இது நம்பிக்கையுள்ளவர்களின் அணுகுமுறை ! நம்பிக்கை இல்லாதவர்களோ ஏளனத்தைப் பொழிகி றார்கள்; குடுமியை அறுக்கிறார்கள். துவேஷத்தைப் பரப்புகிறார்கள்.

இத்தனைக்கும் இடையில் இன்றும் கூட வேதங்களை மறக்காமல், மந்திரங்களை விட்டு விடாமல் பூஜைகளைத் துறக்காமல், ஏளனத்தை சகித்துக் கொண்டு, அவமரியாதையை சுமந்து கொண்டு ஏழ்மையில் உழன்று கொண்டு, எளிமையாகவே வாழ்ந்து கொண்டு, தங்கள் பணியை தொடர்வது, மிகப் பெரிய ஆச்சர்யம் ! தொன்று தொட்டு வரும் நமது நம்பிக்கைகளையும் , கலாச்சாரத்தையும் இன்றும் கூட  பேணிப் பாதுகாக்கிறவர்களாக புரோகிதர்கள் பலர் திகழ்கிறார்கள். இப்படிப்பட்ட  புரோகிதர்கள், பகுத்தறிவாளர்கள் கூறுகிற பிராமணீயத்தின் சின்னங்கள் என்றால் – அந்த பிராமணீயம் எப்படி வெறுக்கத்தக்கதாகும் ?



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

15 – இவர்களைப் புரிந்து கொண்டால் போதும்

பிராமண எதிர்ப்புக்கு அஸ்திவாரமாக அமைந்தது, ஆரியப் படையெடுப்பு சித்தாந்தம் அதாவது – இந்தத் தேசத்தின் ஒரிஜினல் குடிமக்கள் திராவிடர்கள். இதன் மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் வேறு இனத்தவர், அவர்கள் காட்டு மிராண்டிகளுக்கு நிகராக வாழ்ந்தவர்கள். அவர்கள் கண்ட வெற்றியினால், இங்கு நிலவிய கலாச்சாரத்தை அழித்து தங்களுடைய (அ) நாகரிகத்தையும், நம்பிக்கைகளையும், புகுத்தினர். அதுதான் வேதங்களில்  தொடங்கி, இன்றைய ‘பிராமணீயம்’ வரை வந்திருக்கிறது.

இந்த சித்தாந்தம், மேலை நாட்டவர்களால் உருவாக்கப்பட்டது. மேலை நாட்டவர் என்ன சொன்னாலும் அதை ஒரு கேள்வியின்றி அப்படியே ஏற்றுக் கொண்ட அந்தக் காலத்தில் – இந்த சித்தாந்தமும் ஏற்கப்பட்டது. இந்தியர்களை மத ரீதியில் பிரித்தது போதாமல் ஹிந்துக்களையும் பிரித்து விட பிரிட்டிஷாருக்கு இது உதவியது. பல நூல்களும் இதையே வலியுறுத்தின. தொல்பொருள்ஆராய்ச்சியில் கிடைத்தவை எல்லாம் இதையே உறுதி செய்வதாக பறைசாற்றப்பட்டன. ஒரு கற்பனை சித்தாந்தம், ஆராய்ச்சி முடிவு என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

இதன் அடிப்படையில் ‘இந்தத் தேசத்தின் பழங்குடி மக்களை அடக்கி ஆண்டு’, தங்களுடைய காட்டுமிராண்டித் தனங்களை அவர்கள்மீது திணித்து விட்டார்கள் ஆரியர்கள் என்ற பிரசாரம் பலமாக நடந்தது. அந்தக் கால ‘ஆரியர்கள்’  இந்தக் கால பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் என்று ஆகிவிட்டது. இந்த நிலையையும் கடந்து, ஒரு கட்டத்தில் ஆரியன் – பிராமணன் என்ற கணக்கே போடப்பட்டு விட்டது.

ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் மரியாதைக்குரியவர் என்ற அர்த்தத்தில் தான் பல ஸம்ஸ்கிருத நூல்களிலும் பயன்படுத்தப்படுகிறதே அன்றி – ஓர் இனம் என்ற அர்த்தத்தில் அது எந்த ஸம்ஸ்கிருத நூலிலும் இடம் பெறவில்லை. மனைவி தன் கணவனைக் குறிப்பிடும்போது கூட  ‘ஆரிய’  என்றே கூறுவதாக பழைய நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல, திராவிட என்கிற சொல், ஓர் இனத்தைக் குறிப்பதாக இல்லாமல் பிரதேசத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.  ஆதி சங்கரர் , கால் நடையாகவே பாரதம் முழுவதும் யாத்திரை சென்ற போது, வடக்குப் பிரதேசத்தில் தன்னைத் ‘திராவிட சிசு’  என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார் – அதாவது திராவிட பிரதேசத்திலிருந்து வருபவன் என்று தன்னை அறிவித்தார் அவர்.

இப்போது பல மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் , இந்திய ஆராய்ச்சியாளர்களும் இந்த ஆரியப் படையெடுப்பு சித்தாந்தம், அசல் கற்பனை என்று ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறார்கள். இதை

நிராகரிப்பவர்களும் உண்டு. அப்படி இதை நிராகரிப்பவர்கள் ‘ஆரியப் படையெடுப்பு கற்பனை என்று கூறுபவர்கள், அரைகுறை ஆராய்ச்சியாளர்கள்; அருகதையற்றவர்கள்’ என்றெல்லாம் ஏச்சுக்களில் இறங்குகிறார்கள்.வாதங்கள் குறைந்து, வசவுகள் மலிந்து கொண்டிருக்கிற, விஷயமாகிவிட்டது இந்தக் கருத்துப் பரிமாற்றம். அப்படி இருந்தாலும் கூட, ஆரியர் படையெடுப்பு என்பது கேள்விக்கும்,விவாதத்திற்கும் உரிய சித்தாந்தம் என்பது வரை சந்தேகமற நிலை நாட்டப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.. இதை முதலில் பிரகடனப்படுத்திய மார்க்ஸ் மூல்லரே  பிறகு, இது தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் கூறி, ‘ஆரியர் என்பது ஒர் இனத்தை குறிக்கும் சொல்லே அல்ல’ என்று கூறி இருக்கிறார்.

‘இப்பொழுது கூறப்படுகிற வாதங்கள் எதுவாயினும் சரி. அவற்றை ஏற்க மாட்டோம்; ஆரிய, திராவிட என்ற சொற்கள் இனங்களைக் குறிப்பது அல்ல என்பதற்கான சான்றுகள் எதுவாயினும் சரி அவற்றை ஒதுக்கித் தள்ளுவோம் ;  ஆரியப் பட யெடுப்பு-என்ற சித்தாந்தத்தை ஏற்காதவர்களை ஏசித் தள்ளுவோம்; இந்தியர்களைப் பிரித்தாள்வதற்கு ஒர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியப் படை யெடுப்பு சித்தாந்தம் – இன்று ஜாதி ரீதியான ஒட்டு அரசியலுக்கு மிகவும் பயன்படுவதால் – அந்த சித்தாந்தம் தவறானது என்று காட்டுகிற வாதங்களை நாங்கள் காது கொடுத்தும் கேட்க மாட்டோம்; உலகின் பல நாடுகளில் சரித்திர ஆராய்ச்சியில் ஏற்பட்டு விட்ட தவறுகள் திருத்தி அமைக்கப்பட்டாலும், எங்களைப் பொறுத்த வரையில் புதிய ஆராய்ச்சி முடிவுகள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தான் பகுத்தறிவு…..’ என்று செயல்படுகிறவர்கள்தான் இன்னமும் இந்த ஆரியப் படையெடுப்பு என்கிற கற்பனையைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். மற்றபடி ஆரிய திராவிட இன பேதங்கள் வெறும் கற்பனையே என்பதற்கு மலைபோல் சான்றுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு கற்பனை சித்தாந்தத்தை  அடிப்படையாக வைத்து பிராமண துவேஷம்  பெரிதாகக் கிளப்பப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆசியுடன் துவங்கப்பட்ட இந்தத் துவேஷப் பிரசாரம் இந்நாட்டின் பிரிவினைவாதிகளுக்கும், ஜாதி அரசியலை நம்புகிறவர்களுக்கும் உதவியாக இருந்ததால் , இன்றுவரை அது தொடர்கிறது.சரி,  ஒரு வாதத்திற்காக இந்தப் பகுத்தறிவாளர்கள், பிரிவினை வாதிகள், ஜாதி அரசியல்வாதிகள் – ஆகியோர் வகுக்கிற பாதையிலேயே கொஞ்ச தூரம் சென்று பார்ப்போம் .

இவர்கள் சொல்வது என்ன? ‘ஆரியர் என்பது தனி இனம். அவர்கள் இந்நாட்டில் படையெடுத்துப் புகுந்தவர்கள்; பழங்குடி மக்களை நசுக்கி தங்கள் வழிமுறைகளையெல்லாம் இங்கே புகுத்தி விட்டவர்கள்; இன்று சமூகத்தில் விழிப்புணர்வு தோன்றி விட்டது. ஆகையால் இந்த ஆரிய நம்பிக்கைளையும், வழிமுறைகளையும் உடைத்தெறிய வேண்டும்; அவற்றையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்; இந்த ஆரிய ஆதிக்கத்தின் சின்னமாக விளங்குகிற பிராமணீயத்தைப் பொசுக்க வேண்டும்.ஆரீயர்களின் வாரிசுகளாகிய இன்றைய பிராமணர்கள் வெறுக்கத்தக்கவர்கள்; அவர்களை ஒடுக்க வேண்டும். அவர்களுடைய முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் ஆகியோர் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டின் கலாசாரத்தை அழித்து விட்டார்கள். ஆகையால் இப்போது அந்தப் பிராமணர்களை எல்லாம் ஒடுக்க வேண்டும்;

பிராமணீயத்தை வேரோடு அறுத்து எரிய வேண்டும் ;  அது முற்றிலும் வெறுக்கத்தக்கது ! – இது இவர்களுடைய வாதத்தின் சாராம்சம்.

அதாவது, எப்போதோ நிகழ்ந்து விட்டதாக இவர்கள் கூறுகிற தவறை,  இன்று திருத்தப் போகிறார்கள். சரி, இதே அணுகுமுறையை  எல்லா  விஷயங்களிலும் கடைப்பிடிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்களா? அயோத்தி விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். சில ஹிந்து  அமைப்புகள் கூறுகிற வாதம் என்ன?  அயோத்தியில் இருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டு, அங்கே பாபர் ஒரு மசூதியை எழுப்பினார்; அந்த மசூதி இடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அங்கே கோவில் கட்டப்பட வேண்டும். இதேபோல காசி, மதுரா ஆகிய இடங்களிலும் முகலாய மன்னர்களால் கோயில்கள் அழிக்கப்பட்டன. அவையும் மீண்டும் கட்டப்பட வேண்டும். சரித்திர கால தவறுகளை இப்போது சரி செய்ய வேண்டும். இதைப் பகுத்தறிவுவாதிகளும், பிரிவினைவாதிகளும் ஏற்கிறார்களா? நிச்சயமாகக் கிடையாது. என்றோ நிகழ்ந்து விட்டதாகச் சொல்லப் படுகிற ஒரு தவறை இன்று திருத்தி அமைப்பது என்று ஆரம்பித்தால், இந்தச் சமூகத்தில் அமைதி நிலவுமா? முன்பு படையெடுத்து வந்த முகலாய மன்னர்கள் புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிற அட்டுழியங்களுக்கு, இன்றுள்ள முஸ்லிம்கள் எப்படிப் பொறுப்பா வார்கள்? ஏதோ சில பழைய கதைகளைச் சுட்டி காட்டி, அதற்கு இன்றுள்ள மக்களைப் பொறுப்பாக்கி அவர்களைச் சந்தேகக் கண்களோடு பார்ப்பது எவ்வாறு நியாயமாகும்?’ – என்பதெல்லாம் இன்றைய பகுத்தறிவுவாதிகளும்,மதச்சார்பின்மைவாதிகளும் கேட்கும் கேள்விகள்.

இதே நியாயத்தை ஆரியப் படையெடுப்பு விஷயத்திலும், ஆரிய – திராவிட இன பேத பத்திலும், பிராமணர்கள் விஷயத்திலும் – இவர்கள் கடைப்பிடிக்க மறுப்பது ஏன்? சிறுபான்மை மக்களுக்கு ஒரு நியாயம் ஹிந்துக்களில் ஒரு பிரிவினருக்கு மற்றொரு நியாயம் என்று இவர்கள் செயல்படுவது ஏன்? இதுதான் பகுத்தறிவா?

நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான் ஆரிய, திராவிட இன வேறுபாடு என்பது ஒரு கற்பனை ; அது கற்பனையல்ல உண்மை என்று கூறுகிறவர்கள், மற்ற பல விஷயங்களில் சரித்திர நிகழ்வுகளை இன்று திருத்த முற்படக் கூடாது என்று கூறுகிறார்கள் – ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் அது சரி செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்களுடைய இந்த இரட்டை வேடத்தைப் புரிந்து கொண்டு விட்டால், இவர்களுடைய பிரசாரங்கள் நியாயவாதங்களின் அடிப்படையில்தான் அமைந்திருப்பவை அல்ல என்பதும், துவேஷத்தின் அடிப்படையில்தான் இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதும் தெளிவாகப் புரிந்து விடும்.

இவர்களுடைய இலக்கு – சமூகத்தைப் பிரித்து வைத்து , அந்தப் பிரிவினையில் ஆதாயம் தேடி, தங்களுக்கு ஒரு தலைமையை வகுத்துக் கொள்வது என்பது தான். இது பிழைப்புக்காக நடத்தப்படுகிற பிரசாரம் .இதற்குச் சமூகம் பலியாகி விடக்கூடாது.

இது ஒருபுறமிருக்க இவர்கள் கூறுகிற பிராமணீய எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு போன்றவற்றிலாவது இவர்கள் நேர்மையாக இருக்கிறார்களா என்றால், அதுவும் கூட இல்லை. தி.மு.க  ராஜாஜியை எதிர்த்த போது, அவரை குல்லுக பட்ட குள்ள நரி என்றெல்லாம் வர்ணித்து மகிழ்ந்தபோது அவர் ஒரு பிராமணர் என்பதை சுட்டிக் காட்டி, அவர் மீது குற்றம் கண்டது; ஆனால் அதே ராஜாஜியின் உதவியோடு, கட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி காண முனைந்த போது, அவர்களுக்கு ராஜாஜி மூதறிஞராகி விட்டார்.  தங்களுக்கு வேண்டாத போது குள்ளநரி, அந்தக் குள்ள நரியின் உதவி தேவைப்பட்டபோது, அது ஒரு மூதறிஞர். இது இவர்களுடைய பிராமண எதிர்ப்பின் லட்சணம்.

காமராஜைத் தோற்கடிப்பதற்காக, இந்திரா காந்தி என்ற பிராமணரோடு தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். இந்திரா காந்தியின் தந்தையாகிய ஜவஹர்லால் நேரு, அலஹாபாத் பண்டிதர். ஆனால், அந்தப் பண்டிதரின் மகள் பச்சைத் தமிழராகிய, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த காமராஜைத் தோற்கடிக்க தங்களோடு இணைந்து செயல்பட முன் வந்தபோது – அதே இந்திரா காந்தியின் பிராமணத் துவம் மறைந்து போய் விட்டது ! தாழ்த்தப்பட்டவர்கள் உயர் பதவிகளை அடைய வேண்டும் என்று வாய் கிழிய பேசுகிற இவர்கள், ஜெகஜீவன்ராம்  பிரதமராக வருவதைத் தடுப்பதற்காக, அதே பண்டிதரின் மகளோடு கூட்டணி அமைத்து பிரசாரம் செய்தனர்.

தி.மு.க. தலைவர்களுக்கு வக்கீல்கள் தேவைப்படுகிற போது சுரண்டுகிற வடநாட்டவர்களும், ஏமாற்றுகிற பிராமணர்களும்தான் தேவைப்படுகிறார்ளே தவிர, தா’ழ்த்தப்பட்டவர்கள் இடையே நல்ல வக்கீல்களை அமர்த்திக் கொள்வோம்’  என்று இவர்கள் முனைவதில்லை. இவர்களுக்கு ஆடிட்டர்கள் தேவைப்பட்டாலும் சரி, டாக்டர்கள் தேவைப்பட்டாலும் சரி, இதே கதைதான். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அப்படிப்பட்ட சமூகங்களிலிருந்து நிபுணர்களை இவர்கள் நாடுவது என்பது கிடையாது. திராவிடர் கழகத்தை எடுத்துக் கொண்டால், அது இன்று ஜெயலலிதா என்ற பிராமணரின் பின்னால் நிற்கிறது. பிராமணர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லி, அதை ஒரு பெருமையாக  நினைக்கும் அமைப்பு காட்டுகிற பிராமண எதிர்ப்பின் லட்சணம் இது.

இப்படி தமிழகத்தைப் பொறுத்தவரையில், பிராமண . பிராமணீய எதிர்ப்பைப் பரப்ப முயன்று கொண்டிருக்கிற பிரதான அமைப்புகள், அந்த எதிர்ப்பில் . நேர்மையைக் காட்டவில்லை என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தங்களுக்கு ஆதாயம் தேடுவதற்காக தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக ஒரு சில அமைப்புகளில் தங்களுடைய தலைமை தங்க வேண்டும் என்பதற்காக,  அதன் மூலம் சொத்துக்களைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக – இவர்கள் செய்கிற பிரசாரம் பிராமண எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு. ஆனால் , அதே சுயநல காரணங்களுக்காக, இந்த எதிர்ப்பை மூட்டை கட்டி, ஒரு மூலையில் வைக்க வேண்டும் என்கிற நிலைமை தோன்றும் போதெல்லாம் அதற்கும் இவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். தங்கள் பின்னல் வருகிற கூட்டத்தை ஏமாற்றிக் கொண்டு , தங்கள் பிழைப்பை நன்றாக நடத்திக் கொண்டு, போகிற இந்தத் தலைவர்களையும் , அமைப்புகளையும் சாதாரண மக்கள் புரிந்து கொண்டு விட்டால், அதன் பிறகு இந்த துவேஷப் பிரசாரத்திற்கு இந்த மாநிலத்தில் இடம் இருக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

16 – உயர்ந்தவனுமல்ல; தாழ்ந்தவனுமல்ல

இந்தச் சுயநலவாதிகள் தங்களுடைய பிழைப்பிற்காகப் பரப்பிய இந்த வெறுப்புணர்வு, மேடைப் பிரசாரமாகத் தொடங்கி, பின்னர் அரசியல் தத்துவமாக வளர்ந்து, பிறகு ஆட்சிக் கொள்கையாக உருவெடுத்து, இன்று நிர்வாக நடவடிக்கையாக உலா வருகிறது. இதன் விளைவு என்ன? எல்லாத் துறைகளிலும் பிராமணர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். எந்தத் தவறும் செய்யாத ஒரு மாணவன் 98 சதவிகிதம் மார்க் வாங்கினாலும் அவன் பிராமணனாக இருந்து விட்டால், அவனுக்கு உயர் கல்வி பெறும் தகுதி கிடையாது. மற்ற மாநிலங்களுக்கோ, முடிந்தால் மேலை நாடுகளுக்கோ, போவதுதான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. பிராமணர்களிடையே உள்ள ஏழைகள், மேலை நாடுகளுக்குப் போகும் வசதியும் வாய்ப்பும் இல்லாததால், ஸ்காலர்ஷிப் கிடைக்கா விட்டால் வேறு மாநிலங்களுக்குப் போகிறினார்கள். பிறப்பை வைத்து இன்று கற்பிக்கப்படும் பேதம் இது !

மனுவின் நீதி சாத்திரத்திலும் சரி. வேறு பல தர்ம சாத்திரங்களிலும் சரி நான்காவது வர்ணத்தவர்களுக்கு வேதங்களைக் கற்பது தவிர, வேறு எதுவும் மறுக்கப்படவில்லை. அதை மிகக் கொடுமை என்று கூறுகிற சீர்திருத்தவாதிகளின் விதிமுறைகளோ, பிறப்பின் அடிப்படையில் நாற்பதாவதுக்கும் கீழே வைக்கப்பட்டிருக்கும் பிராமணனுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றன. மனு கொடுமைக்காரன். இவர்கள் சமூக நீதியாளர்கள். விசித்திரம்தான் இது !

இப்படி நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை, நிர்வாகத்துறை பொறியியல் துறை….என்று பல இடங்களிலிருந்தும் பிராமணர்களை விரட்டி விட்டதால், இந்தச் சமுதாயம் கண்டிருக்கும் உயர்வு என்ன? மருத்துவம் வியாபாரம் ஆகியிருக்கிறது; நீதி விலை பேசப்படுகிறது; கல்வியின் தரம் தாழ்ந்து விட்டது; நிர்வாகத்திலோ ஊழல் பெருகி விட்டது. பிராமணர்கள் இருந்திருந்தால் இவையெல்லாம் சீராக இருந்திருக்கும் என்பதல்ல என் வாதம், ஆனால் பிராமணர்களை ஒதுக்கி விட்டதால் இவையெல்லாம் தூய்மையாகி விட்டனவா என்பது தான் என் கேள்வி விட்டாலும் பரவாயில்லை. சீர் கெடாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாழ்பட்டுக் கிடக்கிறது. . பிராமணனை ஒதுக்கிக் கண்டது என்ன என்பதுதான் கேள்வி.

ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு சில குறிப்பிட்ட குடும்பங்கள் மேலும் மேலும் வளர்வதற்கு வாய்ப்புகள் தேடித் தரப்பட்டனவே தவிர… .ஒரு சில அரசியல் குடும்பங்கள் வியக்கத்தக்க பணக்காரர்களாக மாறிவிடுவதற்கு வழிசெய்யப்பட்டதே தவிர கண்ட பலன் வேறு என்ன?

மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன் – பிராமணர்கள் ஒடுக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த மாதிரி நிலைமை தோன்றியிருக்காது என்று நான் கூறவில்லை. அம்மாதிரி கூறுவது அபத்தமாக இருக்கும். ஆனால் பிராமணர்கள் ஒடுக்கப்பட்டதால், சமுதாயத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிட்டவில்லை. மிகப் பெரிய அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் கண்டிருந்தால் – தீண்டாமை என்பது ஒழிக்கப்பட்டு எந்த ஒரு ஜாதியினரும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமையாக நடத்த முற்படாமல் இருந்திருந்தால் – ஜாதி மோதல்கள் நிகழாமல் இருந்திருந்தால்-பிராமணீயத்தையும், பிராமணனையும் ஒருசேர அடக்கி வைத்ததால் சமுதாயம் பெரும் மறுமலர்ச்சியைக் கண்டு விட்டது என்று சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது தான் என் வாதம். மாறாக, பெரும் சீரழிவுதான் வளர்ந்து ஓங்கி இருக்கிறது.

இனி என்ன நடக்கும்?  ஏற்கெனவே பிராமணன் மீது ஏவப்பட்ட ஜாதி  அடிப்படையிலான வெறுப்புணர்வு என்ற ஆயுதம்,  மற்ற பல ஜாதியினர் பரஸ்பரம் தாக்கிக் கொள்ள உதவத் தொடங்கி விட்டது. பகுத்தறிவு வாதிகளும், புரட்சியாளர்களும் சேர்ந்து தோற்றுவித்த ஜாதித் துவேஷம் என்பது இன்று தமிழகத்தில் பற்பல ஜாதியினரிடையே வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு உருவத்தில், தலைவிரித்து ஆடத் தொடங்கி விட்டது. பிராமணன் ஒதுக்கப்பட்டதால் இவர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு ஒரு விரோதி வேண்டுமே என்ன செய்வது? மேட்டுக்குடி மக்கள், உயர்ஜாதியினர் என்றெல்லாம் ஆரம்பித்தனர். இன்று அந்த விரோதங்களும் வளர்ந்து வருகின்றன. இப்படி துவேஷத்தைப் பரப்பியே, வெறுப்புணர்வை வளர்த்தே, தாங்கள் வளர்ச்சி அடைந்து வரும் இந்தப் பகுத்தறிவு கூட்டத்தினரை, இந்தக் கழக பிரசாரகர்களைத்  தமிழகம் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதிக்கு ஒரு கட்சி, தினத்திற்கு ஒரு மோதல் வேளைக்கு ஒரு வெறுப்பு என்ற நிலைமை மாற – ஜாதி அடிப்படையிலான வெறுப்பு என்பதை எல்லோரும் இவர்கள் அஸ்திரமாகப் பயன்படுத்தி தங்கள் ‘வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

ஆரம்பத்தை  எடுத்துக் கொண்டால் வேதங்களும், சாத்திரங்களும், புராணங்களும் அன்பைப் போதிக்கின்றன; சகோதரத்துவத்தை உபதேசிக்கின்றன ; கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றன, நேர்மையை எளிமையை, தூய்மையை விதிமுறைகளாக்குகின்றன. பிராமணீயம் என்று இன்று வர்ணிக்கபடுகிற இதில் வெறுப்பதற்கு எதுவுமில்லை.

இதுபோக, சென்ற நூற்றாண்டு பிராமணர்களை எடுத்துக்கொண்டால், தேசசேவையிலும் சரி. நாட்டுப் பற்றிலும் சரி, தமிழுக்கு ஆற்றிய தொண்டிலும் சரி, தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றும் பணியிலும் சரி, தமிழ்ப்பற்றிலும் சரி, சமுதாயத்தொண்டிலும் சரி அவர்கள் யாருக்கும் குறைந்தவர்களாக இருந்து விடவில்லை.எப்படிப் பல சமூகங்களிலும் இதற்கெல்லாம் பாடுபட்ட பெரியவர்கள் இருந்திருக்கிறார்களோ, அதே போல பிராமணர்களிடையிலும் இதற்கெல்லாம் உழைத்த பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள்.

இன்றைய பிராமணனை எடுத்துக்கொண்டால், அவன் ஜாதிமோதல்களில் ஈடுபடுவதில்லை.. தீண்டாமை போன்ற ஜாதிக் கொடுமைகளை அவன் வலியுறுத்துவதில்லை; மற்ற எல்லோரைக்காட்டிலும் தான் பிறப்பால் உயர்ந்தவன் என்று அட்டகாசம் செய்வதில்லை.

எப்படி எந்த வகையில் பார்த்தாலும் இன்று பிராமண எதிர்ப்பு என்பது அர்த்தமற்றது.

வெறுக்கத்தக்கதுதான் என்ன? பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் சுதந்திரப் போராட்டத்தையே கேலி செய்து நாடு சுதந்திரமடைவதை எதிர்த்து , வெள்ளைக்காரன் ஆட்சியே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதே அந்தப்போக்கு வெறுக்கத்தக்கது. பிராமண எதிர்ப்பு என்கிற பெயரின் கோவில்கள் மற்றும் கோவில் நிதியில் நாத்திகர்களின் பிடி இறுகி இருக்கிறதே அது வெறுக்கத்தக்கது:  பிராமணீய எதிர்ப்பு என்கிற பெயரில், இட ஒதுக்கீட்டில் புதிய புதிய ஜாதிகளைச் சேர்த்துச் சேர்த்து, அதை ஒர் ஒட்டு வேட்டையாக மாற்றி இருக்கிறார்களே அது வெறுக்கத்தக்கது; பிராமணீய எதிர்ப்பு என்கிற பெயரில், நாட்டின் ஒற்றுமையையே குலைக்க முற்படுகிறார்களே-அது வெறுக்கத்தக்கது: பிராமணீய எதிர்ப்பு என்று ஆரம்பித்து, இன்று அதன் பரிணாம வளர்ச்சியாக வெவ்வேறு ஜாதிகளுக் கிடையே மோதல் என்று உருவாகி இருக்கிறதே – இந்தப் போக்கு வெறுக்கத்தக்கது; பிராமணர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தங்களுடைய குடும்ப நலனுக்கு வழிதேடி, தங்கள் கட்சிகளிலும் தங்கள் அமைப்புகளிலும், தங்கள் அரசியல் வர்த்தகங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கியே வத்து தங்கள் குடும்பத்தினரை வாரிசுகளாக வளர்க்கிறார்களே-அந்தப் போக்கு வெறுக்கத்தக்கது. பிராமணீய எதிர்ப்பு என்ற பெயரில் கிரிமினல்களுக்கு ஆதரவு, அயல் நாட்டு தீவிரவாதிகளுக்கு உதவி, சமூக விரோதிகளுக்கு மன்னிப்பு….   என்றெல்லாம் வக்கிரமான நிலை தோன்றி  கொண்டிருக்கிறதே – அது வெறுக்கத்தக்கது:

பிராமணீய எதிர்ப்பு என்கிற பெயரில் இந்நாட்டில் தொன்றுதொட்டு வருகிற கலாசாரத்தையும், பண்புகளையும் காலுக்கடியில் போட்டு மிதித்து, கண்மூடித்தனமாக மேலை நாட்டு நாகரிகம் ஏற்கப்படுகிறதே அது வெறுக்கத்தக்கது; பிராமண எதிர்ப்பு என்கிற பெயரில் கடவுள் நம்பிக்கையை அகற்றி, அதற்குப்பதிலாக தங்களையே கடவுள்களாக சிருஷ்டித்துக் கொண்டு, சிலைகளை வணங்குவதும், சமாதிகளில் அஞ்சலிசெலுத்துவதும் பகுத்தறிவு என்று பறைசாற்றி மக்களை முட்டாள்களாக்கிக்கொண்டிருக் கிறார்களே – அந்த அணுகுமுறை வெறுக்கத்தக்கது; பிராமண எதிர்ப்பு என்கிற பெயரிலும், பிராமணீய எதிர்ப்பு என்கிற பெயரிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில குடும்பங்கள், எல்லோரும் வியந்து பார்க்கும் வகையில், கணக்குக் காட்ட முடியாதபடி செல்வத்தைக் குவித்திருக்கிறார்களே -அந்த மோசடி வேலை வெறுக்கத்தக்கது.

இவை போன்றவைதான் வெறுக்கத்தக்கவையே தவிர, பிராமணீயமோ, பிராமணர்களோ அல்ல. பிராமணன் யாரையும் விட உயர்ந்தவன் அல்ல; யாரையும் விடத்தாழ்ந்தவனும் அல்ல;யாரையும் விட அவன் யோக்கியமானவன் அல்ல; யாரை விட அவன் அயோக்கியனும் அல்ல. மற்ற மனிதர்கள் எப்படியோ அப்படித்தான் பிராமணனும். அப்படியிருக்க அவனை மட்டும் குறிப்பாக வெறுப்பது என்பது சமூக அநீதி.

இன்று பிராமணனுக்குச் செய்யப்படும் இந்த அநீதியை ஆதரிப்பவர்கள், நாளை தாங்களே அநத அநீதியை அனுபவிக்க நேரிடலாம் என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு சமுதாயத்தில் பரஸ்பர ஒத்துழைப்பும், சகோதர உணர்வும் வளர்ந்தால்தான் நாடு முன்னேற முடியும் இன்றைய தேவை ஒத்துழைப்பே தவிர, துவேஷம் அல்ல.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் கூறிய வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன்.

தச்சம்யோ– ராவ்ருணிமஹேகாதும் யஜ்ஞாய.
காதும் யஜ்ஞபதயே தைவி ஸ்வஸ்திரஸ்து :
ஸ்வஸ்திர்மானுஷேப்யஊர்த்வம் ஜிகாது பேஷஜம்
சந் நோஅஸ்துத்வியதேசஞ் சதுஷ்பதே
ஓம் சாந்திசாந்திசாந்தி:

நிகழ்கால துன்பத்திற்கும்எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிறநற்கர்மம் எதுவோஅதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம்யாகத்திற்குவளர்ச்சியை வேண்டுகின்றோம்யாகத்தை செய்பவனுக்கு நற்பயன் கிட்டவேண்டு கின்றோம்நமக்கு தேவதைகளின் அருள் உண்டா கட்டும்மனிதசமூகத்திற்கு க்ஷேமம் உண்டா கட்டும்செடிகொடிகள் மேலோங்கிவளரட்டும்இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டா கட்டும்நான்கு கால்படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும்.அமைதி நிலவட்டும்

வேதம் கூறுகிற துதி இது . அந்த நல்ல எண்னத்தை நினைத்து வியந்து, அந்தத் துதியை வகுத்த பெரியோர்களை வணங்கி, இந்த மேன்மையான அணுகுமுறையே நம்மை எதிர் காலத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு, இக்கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard