New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1
Permalink  
 


பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 (Post No.3450)

e09be-img_6708.jpg?w=600

Written by S NAGARAJAN

 

Date: 15 December 2016

 

Time uploaded in London:- 5-56 am

 

Post No.3450

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 15

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் முதல் பாடலில் வேதம் பற்றியும் நாவல் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

 

                             ச.நாகராஜன்

 

 

பரிபாடல்

 

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதில் 70 பாடல்கள் இருந்தன. நமக்குக் கிடைத்திருப்பது இருபத்துநான்கு பாடல்களே. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக இந்த பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பதிப்பித்து தமிழுக்குத் தந்தவர் அவரே.

பரிபாடலின் பாடல்களில் திருமாலுக்கு உரியவையாக எட்டும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், கொற்றவைக்கு ஒன்றும் வைகை நதிக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கு பாடல்களும் உள்ளன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ திருமாலுக்கு ஏழு, முருகனுக்கு எட்டு, வைகைக்கு ஒன்பது

25 அடி முதல் 400 அடிகள் வரை பரிபாடல் கொண்டிருக்கும் என்கிறது இலக்கணம். பரிபாடல அரிய இசையைக் கொண்டிருக்கும் ஒன்று. ப்ரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் எழுதியவர் யார், அதற்கு இசை அமைத்தவர் யார் என்ற குறிப்பும் பாடலின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிபாடலின் காலத்தை நிர்ணயிக்க விழையும் அறிஞர்கள் அது சங்க காலத்தின் இறுதியில் தோன்றியிருக்கலாம் என்று  கருதுகின்றனர்.

இதில் தொட்ட இடங்களிலெல்லாம் இறை  ம்ணம் கமழும்.

அற்புதமான பக்தி வரிகள் மின்னும். ஹிந்து தத்துவங்கள் தவழும்.

பாடலை நாமே ரசித்துப் படிக்க வேண்டும், அப்போது தான் அதன் பெருமையை உணர முடியும்.

 

e67d1-img_6709.jpg?w=600

வேதத்தின் பல பெயர்கள்

வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை என ஆதிசேஷனைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் பாடலில் இறுதி மூன்று வரிகள் வேதத்தையும் அந்தணரையும் பற்றிக் கூறுகிறது.

 

“சேவல் அம் கொடியோய் நின் வல் வயின் நிறுத்தும்            மேவலுள் பணிந்தமை கூறும்

நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே” (வரிகள் 11 12 13)

 

சேவல் அம் கொடியோய் – கருடனைக் கொடியில் கொண்டவனே!

மேவலுள் – உன் கருணையுடன்

நின் வல் வயின் நிறுத்தும் – உன் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்கள்

பணிந்தமை கூறும் –  உன்னை வழிபடும் தன்மை அறிந்து வழிபடுவோர்.

நாவல் அந்தணர் –  நாவில் மிகத் திறமை கொண்ட அந்தணர்கள் ஒதுகின்ற

அருமறைப் பொருளே – அரிய வேதத்தின் அர்த்தமாக விளங்குகின்றவனே!

அந்தணர்கள் வேதத்தை ஓதுகின்ற நல்ல திறன் உடையவர்கள் என்பதை  மிக மிக அழகாக நாவல் அந்தணர் என்ற சொற்றொடர் விளக்குகிறது

திருமால் அரிய வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறான் என்பதையும் அருமறைப் பொருள் என்ற அழகிய சொற்றொடர் விளக்குகிறது.

இப்படி முதல் பாடலிலேயே அந்தணரின் புகழையும் அவர் நாவில் தவழும் வேதத்தின் பெருமையையும் பரிபாடல் விளக்குகிறது.

 இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் இதற்கு இசை அமைத்தவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)

d427f-brahmins2bin2btemple.jpg?w=600

Written by S NAGARAJAN

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 5-18 am

 

Post No.3474

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 16

 

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் இரண்டாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

 

                        ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

 

திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

 

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த                    கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும் என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

 
சாயல் நினதுவான் நிறை-என்னும் 
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே: 
அவ்வும் பிறவும் ஒத்தனைஉவ்வும் 
எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

 

 

சாயல் நினதுவான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் 
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா 
நின்னொடு புரைய 
அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

 

 

இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

 

அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

என்ன அற்புதமான் பாடல். ஆழ்ந்த பொருளைக் கொண்ட அற்புதமான சொற்கள்.

பல முறை படித்து மகிழ வேண்டிய அழகிய பரிபாடல் பாடல் இது!

*******



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4 (Post No. 3512)

48585-img_0783.jpg?w=600

Written by S NAGARAJAN

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  4-52 AM

 

 

Post No.3512

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 18

இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 4,5,6,8 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

 

                        ச.நாகராஜன்

 

 

பரிபாடலில் நான்காம் பாடல்

 

பரிபாடலின் நான்காம் பாடல் 73 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்ட நாகனார். திருமாலைப் பற்றிய அழகான பாடல் இது.  இதில் இரணியனைக் கொன்று பிரகலாதனைக்  காப்பாற்றிய வரலாறு வருகிறது. பிரகலாதன் என்ற பெயரையும் இதில் காணும் போது புராணங்கள் பாரதம் முழுவதிலும் பரவி இருந்தமை தெரிய வருகிறது. வராக அவதாரத்தின் சிறப்பு, கருடக் கொடியின் பெருமை போன்றவை சிறப்பு வாய்ந்த சொற்களால் வர்ணிக்கப்படுகிறது.

 

 

நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை (வரி 65)

என்ற இந்த வரியால், “திருமாலின் பெருமை அளப்பதற்கு அப்பாற்பட்டது. அது அந்தணர் ஓதும் வேதத்தால் உரைக்கப்படுகிறது” என்பது விளக்கப்படுகிறது.

 

 

ஐந்தாம் பாடல்

அடுத்ததாக, பரிபாடலின் ஐந்தாம் பாடல் 81 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகனார். முருகனைப் பற்றிய அழகான பாடல் இது. முருகனிடம், “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; அருளும் அன்பும் அறனும் மூன்றும்” மட்டுமே யாம் வேண்டுவது என்னும் வரிகள் மனதை உருக்குபவை.

இதில் வரும்,

 

“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து”  (வரிகள் 22,23)

 

என்பதன் பொருள் :

ஆதி அந்தணன் என்பது புராதன பிராமணனான பிரம்மம்.அந்த ஆதி அந்தணன் புவி என்னும் ரதத்தில் எப்படி நன்கு ரதத்தை நடத்துவது என்பதை அறிந்து வேதத்தை குதிரைகளாகக் கொண்டு புவி மீது நடத்துகிறான்.

 

 

ஆறாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் ஆறாம் பாடல் 106 அடிகளைக் கொண்ட நீண்டதொரு சுவையான பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். வையையின் பெருமையை மிக அழகுற விளக்கும் பாடல் இது. வையையில் வெள்ளம் கரையையும் உடைத்துக் கொண்டு ஓட மகளிரும் ஏனையோரும் புனலாடுதல் உள்ளிட்ட பல காட்சிகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டும் பாடல் இது.

ஓடி வரும் வெள்ளத்தால் அந்தணர் கலக்கம் அடைகிறார்களாம். அதைப் பாடல் அழகுறச் சொல்கிறது இப்படி:

 

 

நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து                         வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை                         புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு(வரிகள் 43-45)

 

புலம் என்றால் வேதம். புலம் புரி என்பதால் வேதம் ஓதும் அந்தணர் என்பது சொல்லப்படுகிறது.  அவர்கள் மணத்துடன் கரை புரண்டோடும் ஆறு கண்டு (நாறுபு நிகழும் யாறு கண்டு) இது வேறு பல மணம் கொண்டு அழிந்தது என்று (வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை) வேதம் ஓதும் அந்தணர் மருண்டு கலங்கினர் (புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு)

அழகான வையைப் பற்றி விளக்கும் அற்புதமான பாடல் இது.

 

எட்டாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் எட்டாம் பாடல் 130 அடிகளைக் கொண்ட நீண்டதொரு அழகிய பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். திருப்பரங்குன்றின்  மாண்பினை இதை விடச் சுவையாகக் கூற முடியாது என்ற அளவில் பரங்குன்றின் சிறப்பை விளக்கும் அற்புதப் பாடல் இது.

இமய மலையை ஒக்கும் சிறப்புடைய குன்று எது தெரியுமா?

பதிலைப் பாடல் தருகிறது இப்படி:

“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்                     இமயக் குன்றினில் சிறந்து”    (வரிகள் 11,12)

 

முருகன் உறைந்து அருள் புரியும் மலை இமயத்தில் சிறந்ததாக இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

“யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்                            மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்”                                         

(வரிகள் 8,9)

 

தேவர்கள், அசுரர்கள், முதுமொழி எனப்படும் வேதம் ஓதுவதில் நிபுணர்களான தவ முதல்வரும் வந்து சேரும் இடம் திருப்பரங்குன்றமே!

பரங்குன்றின் அருமை பெருமைகளை தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களால் உரைக்கும் இந்தப் பாடலை அனைவரும் படித்தல் வேண்டும்.

 

அரு மறை, வேதம், புலம், முது மொழி என்று இப்படி, பல சொற்களால் வேதம் புகழப்படுவதையும் அதை ஓதும் அந்தணர் மேன்மை உரைக்கப்படுவதையும் இந்தப் பரிபாடல் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன..

**********



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)

e9bf3-brahmin2bchildren.jpg?w=600

Written by S NAGARAJAN

 

Date: 30  December 2016

 

Time uploaded in London:-  10-25 AM

 

Post No.3497

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

 

                      ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

 

பரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.

 

 

இந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.

e13de-sri2bsri3.jpg?w=600

மா அயோயே! மா அயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்

திதியைன் சிறாரும் விதியின் மக்களும்

மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலத்து

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,

நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை

;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,

பயந்தோள் இடுக்கண்  களைந்த புள்ளின்

நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை        20

தீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,

மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு

கேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,

‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்

சேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து

நூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்

பாடும் வகையே எம் பாடல்தாம் அப்

பாடுவார் பாடும் வகை                   30

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்

எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின், கை;

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய் நயம் இல்  ஒரு கை

இரு கை மாஅல்!

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!

ஐங் கைம்  மைந்த! அறு கை நெடு வேள்!

எழு கையாள! எண் கை ஏந்தல்!

ஒன்பதிற்றுத் தடக் கை  மன் பேராள!

பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!   40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!

பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!

நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,

முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!                50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்

ந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும். ‘செங் கண்  மாஅல்!             60

ஓ! ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

பறவாப் பூவைப் பூவினோயெ!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை           80

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!

பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல்! கோவல! காவல!

காணா மரப! நீயா நினைவ!

மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!

தொல் இயல் புலவ! நல் யாழிப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்னை!

பருதி வலவ! பொரு திறல் மல்ல!

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!                 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே!

 

 

 

அருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.

அமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.

 

 

இதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.

அதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்

நம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.

அவையாவன:

 

d16aa-tulsi2btiff-tif.jpg?w=600

1)‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)

இங்கு வாய் மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது

 

2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)

இந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.

 

3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! (வரி 42)

இந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.

 

4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)

இங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.

 

7) வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ; (வரி 66)

இங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.

 

8) வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே! (வரிகள் 93,94)

இங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.

ஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.

 

 

இந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.

 

 

அத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

 

 

என்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது

இதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

அவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.

 

 

சங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.

ஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.

 

**********



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5 (Post No.3539)

img_4214

Written by S NAGARAJAN

 

Date: 13 January 2017

 

Time uploaded in London:-  5-12 am

 

 

Post No.3539

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 19

 

இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 9,13,15,18 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5

 

                       by ச.நாகராஜன்

 

 

பரிபாடலில் ஒன்பதாம் பாடல்

 

பரிபாடலின் ஒன்பதாம் பாடல் 85 அடிகளைக் கொண்டுள்ளது. குன்றம்பூதனார் என்ற புலவர் பாடிய இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் இசை அமைத்துள்ளார். குன்றம்பூதனார் முருகனைப் பற்றி இரு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் சுவை பயப்பவை. வள்ளிக்கும் தேவசேனைக்கும் நடந்த மோதலை சுவைபட இவர் விவரிக்கும் பாங்கு ப்டித்தால்  இன்பத்தைத் தரும்.

 

 

நான்மறை விரித்துநல் இசை விளக்கும்                            

வாய்மொழிப் புலவீர் கேண்மின் (வரிகள் 12,13)

 

 

என்ற வரிகளில் நான்மறையை ஓதி அதை விளக்கும் நாவன்மை படைத்த புலவர்க்ளே, கேளுங்கள் என்று புலவர் அழைத்து காமத்தின் காதல் காமம் சிறந்தது என்றும் அதிலும் சிறந்தது காதலர் இருவரும் மனமொத்து விரும்பும் புணர்ச்சி என்றும் விளக்குகிறார். பிறகு முருகன், வள்ளி, தேவசேனை கதை விளக்கப்படுகிறது.

 

 

பரிபாடலில் பதிமூன்றாம் பாடல்

 

பரிபாடலின் பதிமூன்றாம் பாடல் 64 அடிகளைக் கொண்டுள்ளது. நல்லெழுதியார் என்ற புலவர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். இதற்கு இசை அமைத்தவர் யர்ர் என்று தெரியவில்லை.

 

திருமாலைப் பலவாறாகப் புகழும் அருமையான பாடல் இது.

 

 

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை

ஏவல் இன் முது மொழி கூறும்   (வரி 40)

சேவல் ஓங்கு உய்ர் கொடிச் செல்வ நல் புகழவை                              கார் ம்லர்ப் பூவை கடலை இருளமணி

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்                   அவை நான்கு உறழும் அருள் செறல் வயின் மொழி (வரி 45)

 

 

என்ற வரிகளில் முதுமொழி என்றும் வாய்மொழி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

மேற்கூறிய வரிகளில் பாம்புக்குப் பகைவனான விரிந்த சிறகுகளைக் கொண்ட கருடனைக் கொடியெனக் கொண்ட (படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட) கடவுள் (கோடாச் செல்வனை)ஏவல் இன்றி தானாகவே முதுமொழியான வேதத்தை ஓதும் (ஏவல் இன் முதுமொழி கூறும்) ஓங்கு உயர் கொடியான கருடக் கொடியினை உடைய கடவுள் (சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ) என்ற பொருளை பெறலாம்

 

 

பின்னர் திருமாலை வர்ணிக்கும் வரிகளில் வலம்புரி வாய்மொழி என மறுபடியும் முதுமொழி என வேதம் கூறப்படுகிறது. அடுத்து (56ஆம் வரியில்) ‘வேள்வி என்ற வார்த்தையால் மறுபடியும் சடங்குகள் குறிப்பிடப்படுகிறது.

 

 

பரிபாடலில் பதினைந்தாம் பாடல்

 

பரிபாடலின் பதினைந்தாம் பாடல் 66 அடிகளைக் கொண்டுள்ளது இளம் பெரு வழுதியார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். அழகர்கோவில் என்று இன்று அழைக்கப்படும் மாலிருஞ்சோலை குன்றம் பற்றிப் பாடல் புகழ்கிறது. திருமாலின் பெருமையை ஓங்கி உயர்த்திச் சொல்கிறது.

 

.நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி                          இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை இருங்குன்றத்து அடி உறை இயைக என                                பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே (வரிகள் 63 முதல் 66)

 

என்று பாடல் இப்படி முடியும் போது.சிறப்பான பலன்களைத் தரும் சீரான அழகிய வேதம் என்ற பொருளில் (நலம் பூரீஇ அம் சீர் நாம வாய் மொழி)என வேதம் புகழப்படுகிறது திருமாலையும் பலதேவனையும் தொழுது பாடல் முடிகிறது.

 

பரிபாடலில் பதினெட்டாம் பாடல்

 

பரிபாடலின் பதினெட்டாம் பாடல் 56 அடிகளைக் கொண்டுள்ளது குன்றம்பூதனார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இப்பாடலில், இமயம் நிகர் குன்றமான (நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து) திருப்பரங்குன்றத்தையும் அதில் உறையும் முருகனையும் வாயார மனதாரப் புகழ்ந்து போற்றித் துதிக்கிறார் புலவர்.

இதில்

“சுருதியும் பூவும் சுடரும் கூடி”  (வரி 52)

என்று பாடி, வேதம், மலர்கள், சுடர் ஆகியவையுடன் கூடிய முருகனை சுற்றமொடு பிரியாது திருப்பரங்குன்றத்தில் இருந்துவரும் வரத்தை வேண்டி பாடலை முடிக்கிறார் மாபெரும் முருக பக்தரான குன்றம்பூதனார்.

 

இப்படி தொட்ட இடம் தோறும் பக்தி மணம் கமழும் பரிபாடல் தமிழுக்குச் சூட்டப்பட்ட மணியாரம். சங்க காலத்தில் அந்தணரும் வேதமும்  உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததற்கு பரிபாடலின் பாடல்கள்  ஒரு சிறந்த சான்று என்பதில் ஐயமில்லை!

அடுத்து ‘பரிபாடல் திரட்டு’ நூலுக்குள் நுழைவோமா?

-தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் ! (Post No.3580)

c33bb-brahmin2bchildren.jpg?w=600

Written by S NAGARAJAN

 

Date: 27 January 2017

 

Time uploaded in London:-  6-25 am

 

 

Post No.3580

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 20

இந்தக் கட்டுரையில் பரிபாடல் திரட்டில் வரும் 1,3,8 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

       பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

 

                        ச.நாகராஜன்

 

 

பரிபாடல் திரட்டில் முதலாம் பாடல்

 

 பரிபாடல் திரட்டு 13  பாடல்களைக் கொண்டுள்ள நூல். முதலாம் பாடல் திருமாலைப் பற்றியது. இருந்தையூர் அம்ர்ந்த இறைவனின் புகழ் பாடும் இந்தப் பாடலில் அந்தணர் இருக்கை பற்றிய வரிகள் வருகின்றன.  இந்தப் பாடல் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டது.

 

 

ஒருசார்- அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி

விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி  (வரிகள் 18-20)

இதன் பொருள்:

 

ஒரு சார் – ஒரு பக்கத்தில்

அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – தர்மத்தொடு  வேதத்தினைப் பின்பற்றித் தவம் புரியும்

விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் –புகழ் வாய்ந்த புனித நூல்களில் நன்கு புலமை பெற்றோர், நீதியின்று திறம்பாத அந்தணர்

ஈண்டி – சேர்ந்து வாழ்வோர்

என இப்படி அந்தணர் வாழ்க்கை வேதத்தின் அடிப்படையில் விளங்கும் வாழ்க்கை என்று புகழ்ந்து உரைக்கப்படுகிறது.

அடுத்து வையையில் அந்தணர் நீராட விரும்பாததை கீழ்க்கண்ட வரிகள் காரணத்துடன் தெரிவிக்கின்றன.

 

பார்ப்பார் நீராட மாட்டார்கள்                        ஈப்பாய அடு நறாக் கொண்டது இவ்யாறு என்ப

பார்ப்பார் ஒழிந்தார் படிவு                                               மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று                     அந்தணர் தோயலர் ஆறு                                  வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென                                   ஐயர், வாய்பூசுறார், ஆறு (வரிகள் 58-63)

 

 

இந்த ஆற்றில் ஈக்களும் மதுவும் உள்ளது. என்று அந்தணர் அந்த ஆற்றை விட்டு நீங்கினர். மைந்தர் மற்றும் மகளிர் இதில் நீராடியதால் அவர்களின் நறுமணம் இதில் கலந்துள்ளதால் இது தூய்மை அற்றது என்று கூறி அந்தணர் அதில் நீராடவில்லை. – நீரானது பூக்களின் மதுவால் வழுவழுப்பாகியுள்ளது என்று கூறி அவர்கள் தங்கள் வாயையும் நீரால் கழுவ மறுத்தனர்

அந்தணர்கள் தங்களின் தூய்மையைக் காக்கும் விதத்தை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

 

 

பரிபாடல் திரட்டில் மூன்றாம் பாடல்

பரிபாடல் திரட்டு மூன்றாம் பாடல் வைகை நதியைப் பற்றியது. இதுவும் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டதேயாகும்.

அறவோர் உள்ளார் அரு மறை காப்ப (முதல் வரி)

என்ற வரியில் அருமறை காப்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அறவோர் உள்ளார் என்பதால் தர்ம வழியில் நிற்பவர் அந்தணர் என்பது உரைக்கப்படுகிறது. அவர்கள் வேதத்தைக் காத்து வருபவர்கள் என்பதையும் பாடல் வரி தெரிவிக்கிறது.

 

 

பரிபாடல் திரட்டில் எட்டாம் பாடல்                               இந்தப் பாடல்  புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் வருகிறது.

நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியின் சிறப்பை பாடல் வர்ணிக்கிறது.                                                        பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த                        நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம இன்றுயில் எழுதல்   (வரிகள் 7,8,9)

 

என்னும் வரிகளில் பிரம்மாவையும் அவன் நாவில் வந்த வேதம் பற்றியும் சிறப்புறக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.

 

 

அதாவது சேரனின் நகரமும் சோழனின் நகரமும் சாதாரணமாக கோழி கூவி எழும். ஆனால் பாண்டியனின் மதுரை மாநகரமோ அந்தணர் வேதத்தை ஓதும் குரல் கேட்டே எழும். புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் ஓத அந்த இனிய ஓசையிலேயே மதுரை தன் காலைப் பொழுதைத் தொடங்கும் என்று அழகுறப் புலவர் விளக்குகிறார்.

 

 

முடிவுரை

 

இதுகாறும் இருபது அத்தியாயங்களில் சங்க இலக்கிய நூல்களில் அந்தணரும் வேதமும் சொல்லப்படும் இடங்களின் ஆய்வுத் தொகுப்பைக் கண்டோம்.

 

சங்க காலத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தைத் தெளிவாக இப்பகுதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் அந்தண்ர் என்போஈர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்  செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

 

. என்ற குறளைப் பார்த்தால் அந்தணர் என்போர் மற்ற அனைத்து உயிர்களிடமும் அருளுடன் நடக்கும் தன்மை கொண்டிருக்கும் அறவோர் என்பது பெறப்படுகிறது.

 

தன்னலம் பாராமல் பிறர்க்குரியாளராக அவர்கள் திகழக் காரணம் அவர்கள் ஓதும் வேதமும் அதில் கூறப்பட்டுள்ள அற வாழ்க்கையுமே காரணம் என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

காழ்ப்புணர்ச்சியற்ற ஒன்று பட்ட தமிழகத்தில் வேதத்தின் இடம் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதை ஓதும் அந்தணர் அந்த வேதச் சிறப்பால், அதை ஓதி அதன் படி நடந்ததால் சிறப்பினைப் பெற்ற்னர். இமயம் முதல் குமரி வரை பரவியிருந்த ஒரே பண்பாடு வேதப் பண்பாடே என்பதையும் இந்தப் பாடல்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

பின்னாளில் ஏற்பட்ட ஏராளமான படையெடுப்புகள் – கிரேக்கப் படையெடுப்பு, முகலாயரின் படையெடுப்பு, வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்ட படையெடுப்பு என பல படையெடுப்புகளும் இந்த ஒன்று  பட்ட வாழ்க்கையைக் குலைக்க ஏராளமான முயற்சிகளை எடுத்தன. என்ற போதிலும் அடிப்படைப் பண்பு குறையாமல் இன்றும் பாரதப் பண்பாடு ஒன்றெனத் திகழ்கிறது.

 

என்ற போதிலும் இடைவிடாது பல நூற்றாண்டு தொடர்ந்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் பாரத சமுதாயம் சற்றே இரையாகி விட்டதை நிரூபிக்கும் வகையில் இன்றைய சில பிளவுகள் நம்மிடையே ஊடுருவி இருக்கின்றன.

அவற்றைக் களைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பண்பாடு  ஒன்றே என எடுத்துக் காட்ட இந்த வேதமும் அந்தணரும் என்ற பொருள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

இனி அடுத்த பகுதியில் பழக்க வழக்கங்கள், இறை வழிபாடு, நம்பிக்கைகள் எப்படி நம் தேசத்தில் ஒன்றாகவே விளங்கின என்பதை ஆராய்வோம்.

இதுவரை இதைப் படித்தவர்களுக்கு நன்றி. இனி அடுத்த பாகத்தைத் தொடர்வோம்.

                முதல் பாகம் முற்றிற்று



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard