ஜெ.எம்,
இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய என் அம்மாவுக்கு நெருக்கமான ஒரு கிறித்தவத் தோழி இருந்தார்.இன்றும் கூட ‘சித்தி’ என்ற உறவில் என்உணர்வுகளுக்குள் உறைந்து நிற்பவர் அவரே.
அம்மாவும் சித்தியும் எத்தனை நெருக்கம் கொண்டாடினாலும் , சித்தி வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்றாலும் அந்தச் சித்தி எதையும் வலுவில் என்னுள் திணித்ததில்லை;பிரச்சினையோ நோய்களோ வந்தபோது’ஜெபம்’செய்கிறேன் என்று தொடங்கியதுமில்லை.இத்தனைக்கும் அம்மாவும் அவர்களும் ஒன்றாகச் சில ஆண்டுகள் ஒரு கிறித்தவப் பள்ளியில் பணி புரிந்தவர்கள்.
என் அம்மாவும் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்;வீட்டிலேயே ஒரு வடமொழி ஆசானை ஏற்பாடு செய்து கொண்டு சுலோகங்களையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தவர்.அவரும் என்னை என் போக்கில் விட்டாரேயன்றி எதையும் என் மீது வலிந்து புகட்டியிருக்கவில்லை.
ஆனாலும் ஒரு சிற்றூரில் – நான் படித்த தமிழ்வழிப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சூழலும், எங்கள் சுற்றுப்புறம் மற்றும் ஊர்க் கோயில்களின் சூழலும்,நான் பெற்ற தமிழ் இலக்கியக் கல்வியும் என்னைக் கிறித்தவத்தின் பால் பெரிதும் வசீகரிக்கவில்லை.
பிறகு என் வாழ்நாளின் செம்பாதி ஒருகிறித்தவ நிறுவனத்திலேயே – பணி நிமித்தம் கழிந்திருந்தாலும், அங்கும் ’தோழிகள்’ வழி சில மாயத் தூண்டில்கள் சாஸ்வதமாக வந்து கொண்டே இருந்தாலும் (அது என் தாயின் தலைமுறையில் இல்லை) என் இலக்கிய வாசிப்புக்களும், அதனால் நானடைந்திருந்த விசாலமான கண்ணோட்டங்களும் எதற்குள்ளும் எல்லை குறுக்கிக் கொள்ளாதவளாகவும்,உறுதியான நிலைப்பாட்டுடனும் என்னைக் கட்டமைத்தன.வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் என்னை வழி நடத்தி வருவது இலக்கியம் மட்டுமே என நம்பி அதற்குமட்டுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நான். .
வீட்டுச் சூழலில் எதைப் பற்றியும் எப்படியும் பேசலாம்,விவாதிக்கலாம் என , நானும் என் தாயும் வகுத்திருந்த தாராள மனப்போக்குக்கு என் மகள் வடிவில் சோதனை வரும் வரை – இப்படியொரு விஷயம் பிரச்சினையாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை.
நான் பணி புரிந்த ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியும் , ஒரு சி.எஸ்.ஐ கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் (நான் வேலை புரிந்தது,ஒரு கத்தோலிக்கக் கல்விநிறுவனத்தில்) பயின்றாள் என் மகள்.
பள்ளி நாட்களில் தரப்படும் பைபிள் வாசகங்களைக்கூட என் அம்மா கல்மிஷமின்றி – மிகுந்த ஈடுபாட்டோடு கற்பித்த நாட்களின்நினைவுகள் இன்னும் பசுமையாக என்னுள்.
எந்தக் கணம் அந்த மாற்றம் நிகழ்ந்ததோ…..அல்லது படிப்படியான மூளைச் சலவைக்கு அவள் சூழலும் நட்பும் அவளை ஆளாக்கியதோ தெரியாது…
கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்றும் – பிற எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லை – வேறு எதிலும் எந்தச் சாரமும் இல்லை -எதைப் பற்றி அறியும் நாட்டமும் இல்லை என்று கூறும் எல்லைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சென்று விட்டாள்.
(பிறவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் தீர்ப்புச் சொல்வது எப்படிச் சாத்தியம்?எனப் பல முறை விவாதித்தபோதெல்லாம் எனக்கு எஞ்சியது கசப்பே)
நானும் பலவகைத் தத்துவங்கள்பற்றிப் பேசிப் பார்த்தேன்;நூல்கள் தந்தேன்.எதற்கும் செவி கொடுக்கக் கூட அவள் ஆயத்தமாக இல்லை.
நான் ஏசுவையோ அவரது கோட்பாடுகளையோ அவரது அன்பு வழியையோ என்றும் மறுதலித்தவளில்லை.‘எந்தரு மகானுபாவோ..’
ஆனால் எல்லாவற்றைப் பற்றியும்- நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த அறிவு பூர்வமான விவாதங்களுக்கான திறந்தவழி ,ஒரு காலத்தில் என் நெருக்கமான தோழியுமாக இருந்த அவளிடம் – என் ஒரே மகளிடம்- முழுக்க முழுக்க – முற்றிலுமாய் அடைத்துப் போய்விட்டது.இனி அது அடையா நெடுங்கதவு மட்டுமே. ஒரு முட்டுச் சந்து!
20 வயது வரை படங்களை உற்சாகமாக விரும்பிப் பார்ப்பவள்..பாடல்களை ஆசையாய்க் கேட்பவள், கதைகளை விருப்பமாய் வாசிப்பவள்- பைபிள் வாசிப்பைத் தவிர – , பார்க்கும் வேலை சார்ந்த வாசிப்புக்களைத் தவிர- வேறு எந்த ஆர்வமும் அற்ற நிலைக்கு – மற்ற எல்லாம் ’பாவம்’ என எண்ணும் நிலைக்கு ஆட்பட்டு விட்டாள்.
கல்லூரிச் சூழலிலிருந்து விலகிப் பணிச் சூழலுக்கு மாறி அங்கே காதல் வயப்பட்டு விரும்பியவரையே மணந்த பின்னும் கூட (அவர் என்னைப் போலப் பிறப்பால் மட்டும் இந்து ,மற்றபடி குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்டவர்) நாளுக்கு நாள் அவளது only God பிடிப்பு இறுகிக் கொண்டுதான் போகிறதே தவிரப் பொதுவான அறிவு சால் நிலைப்பாட்டுக்கு அவள் வருவதாக இல்லை.
நல்ல காலமாக அவள் கொண்ட காதல் என்னைக் கொஞ்சம் காத்தது;மருமகன் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்;ஏதோ தன் காதலால் , நல் உள்ளத்தால் அவளது கிறுக்குத்தனங்களைச் சற்றே பொறுத்தாலும் குழந்தைகள் வளரும் சூழல் -மருமகன்,நான் என எங்கள் இருவருக்குமே சற்றுக் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் மீது எதுவும் திணிக்கப்படக் கூடாது என்ற எங்கள் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் ஏதோ அரைமனதோடு அவள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அதுவும் எனக்கு சற்று பயம்தான்.
அறிவுக்கான வழிகள் அந்தப்பிஞ்சுகளுக்கு அடைபட்டுப் போனால் அது எத்தனை பெரிய கொடுமை..அது நிகழாமல் பாதுகாப்பதே எனக்குப் பெரும் பதட்டமளிப்பதாய் இருக்கிறது.
அன்பு ஜெ.எம்,மீண்டும் சொல்கிறேன்.நான் இளமையிலிருந்து அறிந்த ஏசு…,உங்கள் எழுத்துக்கள் வழி உறுதிப்பட்ட ஏசு..only God போன்ற இப்படிப்பட்ட மூடத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பெருமகனல்லவா.. அவள் ஏசு மீதும்,பைபிள் மீதும் வைத்திருக்கும் பற்றுக்கும் பிடிப்புக்கும் நான் எதிரியில்லை…அது மட்டும் புத்தியின் பாற்பட்டதாக இருந்திருந்தால்..!.
அவற்றைக் காரணம் சொல்லிக் கொண்டு ஞானம் வருவதற்கான எல்லா வாயில்களையும் இறுக அடைத்தபடி -வேறு எதையுமே படிக்காமல்…எதுகுறித்தும் தர்க்க பூர்வமாகச் சிந்திக்காமல் இப்படி அவள் இருப்பது உண்மையில் எனக்குத் திகிலூட்டவே செய்கிறது ஜெ.எம்.
தற்செயலாக ஒரு சிறிய நல்லது நடந்தாலும் – அது அவர் நிகழ்த்தும் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி அவள் மாய்ந்து போகும்போது , அவள் படித்த விஞ்ஞானமெல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று எனக்குள் கூச்சமெடுக்கிறது.
இயல்பில் அவள் உல்லாசமானவள்,வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க ஆசைப்படுபவள்;இப்போதும் அப்படிப்பட்ட இயல்புகள் அவளிடம் தலை தூக்காமல் இல்லை;ஆனால் வலிந்து அவற்றை அடக்கப் பார்க்கும் அவள் முயற்சி எனக்கு வேதனை தருகிறது. .
ஒரு கதையில் selling soaps and selling prayers என்று சுஜாதா சொல்வார்
கூவிக் கூவி யாரோ எதையோ விற்று விட்டுப் போனதால் என் மகள் அறிவின் மீது இப்போது அடர்த்தியான புழுதி படிந்து கிடக்கிறதே..இதைக் கழுவ எந்த அற்புதத்துக்காக நான் காத்திருக்க வேண்டும்?
நெடுநாளாக இதைத் தங்களிடம் பேச எண்ணியிருந்தேன்.
தங்கள் அண்மைப்பதிவான மெய்ஞ்ஞானம் சில்லறை விற்பனை..
இதைப் பகிரும் எழுச்சியைக் கிளர்த்தியதால் உடன் எழுதியிருக்கிறேன்.
இது என் தனி நபர் சோகமல்ல. இன்று பல சமயங்களும் சார்ந்ததாய் அறிவுத் துறை மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அராஜகத் தாக்குதல் இது என எண்ணியபடி என் சொந்த வருத்தத்தைச் சமூகம் சார்ந்த அறிவின் இழப்பாய் மடை மாற்றிக் கொள்கிறேன்.
இச்சூழலில் இதனை எதிர்கொள்வதற்கான என் நிலைப்பாடு பற்றியும்,பொதுவான நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சில கருத்துப்பகிர்வுகள் அளித்தால் மனம் சற்று இதம் பெறும்.
எஸ்
****
அன்புள்ள எஸ்,