New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியார் தலித்களுக்கு ஒன்றும் செய்யவில்லை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பெரியார் தலித்களுக்கு ஒன்றும் செய்யவில்லை
Permalink  
 


பொதுவாக, கி.வீரமணி உட்பட எல்லா திராவிட பெரும்புள்ளிகளிடமும், பேட்டி என்று வந்துவிட்டால் - கேட்பதற்கென்று சில கேள்விகள் உள்ளன. அவை "இந்து மதத்தை மட்டும் தான் விமர்சிக்கிறிர்கள், பிற மதங்களை விமர்சிப்பதில்லை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஈவெராமசாமி எதையும் செய்யவில்லை, இடைநிலை சாதிக்காக தான் உழைத்தார் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி பேச சொன்னால் தொடை நடுங்குகிறிர்கள், சாமானியனின் இறை நம்பிக்கையை கேலி பேசும் தி.க.காரன், திராவிட பிரபலங்களின் இறை நம்பிக்கையை விமர்சிப்பதில்லை - இந்த கேவலமான முரண்பாடு ஏன் என்பது மாதிரியான கேள்விகள். இம்மாதிரி கேட்கப்படும் கேள்விகளுக்கு கி.வீரமணியிலிருந்து வேறு எவரும், இதுவரை நேர்மையாக பதிலளித்ததில்லை.

அமெரிக்காவில் மனிதநேய சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற கி.வீரமணி, அமெரிக்கத் தமிழ் வானொலிக்கு பேட்டி கொடுத்தார். 11.11.2019 நாள் விடுதலையில், "அமெரிக்கத் தமிழ் வானொலிக்குத் தமிழர் தலைவர் பேட்டி" என்கிற தலைப்பில் வந்த செய்தியில், நாம் தி.க.வினரிடம் கேட்பதற்கென்றே இருக்கிற கேள்வி என குறிப்பிட்ட கேள்வியிலிருந்து, இந்திரா தங்கசாமி என்பவர் ஒரு கேள்வி கேட்டார், "நீங்கள் பெரியாரோடு பயணித்தவர் தொடர்ந்து. பெரியாரைப்பற்றி ஒரு விமர்சனம், அது உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரியார் மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள தலித் போன்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே?

கி.வீரமணியின் பதில், "அது அடிப்படை அற்ற விமர்சனம் என்பதற்கு ஒன்றை சொல்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் தலைமை செய்தி யாசிரியராக இருக்கக்கூடிய நண்பர் திருமாவேலன் அவர்கள், ‘‘ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா பெரியார்?'' என்று ஒரு அரிய புத்தகம் எழுதியிருக்கிறார். 300 பக்கங்கள் உள்ளது அந்த புத்தகம். இந்த இயக்கத்திற்குப் பெயரே என்னவென்றால், நான் ஜாதியை சொல்லக்கூடாது. கீழ்ஜாதிக்காரன் பெயரை சொல்லித்தான், திராவிட இயக்கத்தை சொல்வார்கள். நான் அந்த சொல்லைப் பயன்படுத்த விரும்பவில்லை. வலதுசாரி ‘மாயமான்'களைப்பற்றி சொன்னேன் அல்லவா, அந்த மாயமான்களில் இதுவும் ஒரு ‘மாயமான்.' ஆகவேதான், அதனை எச்சரிக்கையோடு பார்த்தாலே, அது தெளிவாகத் தெரிந்துவிடும்.

அவர்களுடைய ஏவுகணைகள்தான் இவைகள். அந்த ஏவுகணைகள் பயன்படாது. திருமாவேலன் அவர்களுடைய புத்தகத்தில், ஆதார பூர்வமாக எழுதியிருக்கிறார். ‘குடிஅரசு' இதழ், ‘விடுதலை' இதழிலிருந்து ஆதாரங்களை எடுத்து எழுதியிருக்கிறார்." என கி.வீரமணி கூறுகிறார். "ஈவெராமசாமி, மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார்." என கூறப்படுவது வலதுசாரிகளின் பொய்யுரை, மாயமான் என்கிறார். அதற்கு திருமாவேலன் புத்தகத்தை குறிப்பிட்டு, ‘குடிஅரசு' இதழ், ‘விடுதலை' இதழிலிருந்து ஆதாரங்களை எடுத்து எழுதியிருக்கிறார் என குறிப்பிடுகிறார். அதே விடுதலை, குடிஅரசு இதழிலிருந்தே ஈவெராமசாமியின் சில பேச்சுக்களை தருகிறோம். அந்த பேச்சுக்களை வைத்தே, ஈவெராமசாமியின் யோக்கியதை என்னவென கூறி, "தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அந்த ஈவெராமசாமி உழைத்திருப்பாரா அல்லது நாயக்க, நாயுடு சமூகத்திற்காக உழைத்திருப்பாரா என்கிற கேள்வியை எழுப்புகிறோம்.

"திராவிடமே! தமிழ்நாடே!" என்கிற தலைப்பில் ஈவெராமசாமி கூறியது.
08.03.1947 குடிஅரசிலிருந்து.... "நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக் கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை. இந்தத் திராவிட நாட்டில் 10இல் ஒரு பங்குகூட இல்லாத முஸ்லிம்களின் நிலை எவ்வளவு உயர்ந்துவிட்டது. அவர்கள் எவருடைய தயவும் வேண்டாத உயர்நிலை அடைந்து விட்டார்கள். அதுபோலவே திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரி யுமா? இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷார் விலகிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தத் தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் விஷயம் ஒரு நிபந்தனை ஆக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் வேலையும் நடந்து வருகிறது.

அவர்கள் இனிமேல் தீண்டப்படாத மக்களும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் அல்ல என்கின்ற நிலைமையை அடைந்துவிட்டார்கள். அவர் களுக்கு இனி உத்தியோகங்கள் ஓடி ஓடி வரும்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணையும். இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். இவர்கள் தவிர கிறிஸ்தவர் களைப் பார்! அவர்கள் திராவிடத்தில் 40இல் ஒரு பங்கு (இருக்கலாம்) உள்ளவர்கள் அவர் களுக்கு என்ன குறை என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க்கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிடநாட்டுக்குப் பிழைக்கவந்த யாதும் ஊரே என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார்.

அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன் மையில் இருக்கிறது. இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன?" ஈவெராமசாமி கூறியதில் எத்தனை பொய்யும், பித்தலாட்டமும் உள்ளது என பார்ப்போம். "ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வு பெற்றுவிட்டார்கள் - திராவிட தெலுங்கர், கன்னடர்களை காட்டிலும்" என்கிறார். அதுவும் எப்போது? 1947ல். உண்மை நிலை அவ்வாறாகவா உள்ளது. மூத்தக்குடியான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஈவெராமசாமி தமிழர்கள் என்ற கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை.

ஈவெராமசாமி, "திராவிட கணக்கில் எம்மக்களை சேர்க்க வேண்டாம். அது எங்களுக்கு தேவையில்லை. தமிழரல்லாதவர்களாக காட்ட முயல்வது அயோக்கியதனமில்லையா? ஈவெராமசாமி குறிப்பிட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ப்பனர்கள், வடநாட்டவர் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வு பெற்றுவிட்டார்களாம். ஈவெராமசாமி 'பகல் கனவு' கண்டுவிட்டு தலையங்கம் எழுத உட்கார்ந்துவிட்டார் போலும். "உத்தியோகங்கள் ஓடி ஓடி வருமாம்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணைக்குமாம்". இப்படி வயிற்றெரிச்சல் படும் ஈவெராமசாமி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்திருப்பாரா என்கிற கேள்வி ஒருவன் மனதில் எழுவது நியாயம் தானே. ஈவெராமசாமியின் நாயக்க சமூகமும், அவர் குறிப்பிடும் இதர சமூகமும் தான் இழிந்த நிலையில் உள்ளதாம்.

இப்படி சொல்ல ஈவெராமசாமிக்கு மனசாட்சி என்பதே இல்லாமல் போயிருக்க வேண்டும். பார்ப்பனர்கள் பற்றி ஈவெராமசாமி சொல்வதில் இருக்கிற அதே உண்மை, கிறிஸ்தவர்கள் பற்றி, முஸ்லிம்கள் பற்றி கூறுவதிலும் உள்ளது. பார்ப்பனர் அளவுக்கு பதவிகளில் இல்லையென்றாலும் கிறிஸ்தவன் என்றால், முஸ்லிம் என்றால் ஆட்சியாளன் அஞ்சுகிறானே. சிறுபான்மை சமூக அந்தஸ்த்தில் தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்கிறார்களே.
ஒடுக்கப்பட்ட சமூகத்தால் அது இயலுமா? தனி தொகுதிகளை விட்டால், அவர்களுக்கு தொகுதி இல்லையே? ஈவெராமசாமியால் இழிந்த, நலிந்த நிலையில் இருப்பதாக குறிப்பிடப்படும் திராவிடன் நிலை அப்படியா உள்ளது. அதனால் பிறர் விஷயத்தில் ஈவெராமசாமி கூறும்போது இருக்கிற உண்மை, ஒடுக்கப்பட்டோர் விஷயத்தில் இல்லை. இந்த விஷயத்தில் ஈவெராமசாமி 'பொய்யன்' ஆகிறார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல், ஒடுக்கப்பட்டோரின் சமூகநிலை, "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என்று ஈவெராமசாமி வியக்கிற அளவா உள்ளது. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதால் எரிக்கப்பட்டு கொல்லப் பட்டது, "நாயக்க சமூகமா... ஒடுக்கப்பட்ட தலித் சமூகமா...' ஏன் இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தாரோடு ஈவெராமசாமியின் நாயக்க சமூகத்தை மட்டும் இணைத்து பேசுகிறோம் என்றால், சாதியை ஒழிக்க கிளம்பிய ஈவெராமசாமியானாலும், தம் சொந்த சாதியான "நாயக்கமார்கள்' நாமஞ்சாத்தப்பட்டதற்கு தானே ஒப்பாரி வைத்தார். இதோ ஈவெராமசாமி 'நாயக்கர்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்' என்பதற்காக பொங்கி எழுந்த காட்சி.

"கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்க்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள் வரை நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம். தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா? அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக் கவுண்டர் திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம். ஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான். இனியாவது புத்தி வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். - குடி அரசு துணைத் தலையங்கம், 15.11.1936.

இந்த ஈவெராமசாமி, இழிந்த, நலிந்த திராவிடன் என்கிற போர்வையில் யாருக்காக உழைத்திருப்பார் என சொல்லவும் வேண்டுமோ. கோவையில் நாயக்கமார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் என்றால், இன்னொரு சாதிக்கு நாமஞ்சாத்திவிட்டு ஈவெராமசாமி சாதிக்காரன் மேலெழும்பி வர போகிறான். அப்போது அந்த இன்னொரு சாதிக்காக ஈவெராமசாமி, இவ்வளவு அப்பட்டமாக வக்காலத்து வாங்கினாரா? இந்த ஈவெராமசாமி தாழ்த்தப்பட்டோருக்காக உழைத்ததாக சொல்வது பெயர் சம்பாதிக்க தானே இருக்குமே தவிர, ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக இருந்திருக்காது. இருந்திருந்தால், "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என்று கூற வாய் வந்திருக்காது. தீண்டப்படாத மக்கள் வளர்ந்ததற்கு மகிழ்ச்சி அல்லவா அடைந்திருப்பார் ஈவெராமசாமி.

ஆனால் மகிழ்ச்சி அடைந்த மாதிரி இல்லையே. பட்டம், பதவிகளில் திராவிட சாதிக்காரன் பிடி நழுவுகிறதே என்கிற கேவல் தானே உள்ளது. 2000 ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு சமூகம், இதோ இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாய் மேலேற துவங்கி உள்ளார்கள். அதிலும் சாண் ஏறினால் முழம் வலுக்குகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத வளர்ச்சியை கூட பொறுக்க முடியாத ஈவெராமசாமி அரற்றுகிறார், "திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என. எதுய்யா திராவிட நாடு. சமூகநீதி பேசுவதாக சொல்லும் ஈவெராமசாமிக்கே தீண்டப்படாத மக்களின் சின்னஞ்சிறிய வளர்ச்சியே உறுத்தலாக உள்ளபோது, ஆண்ட ஆதிக்க சாதியின் புத்தி எப்படி இருக்கும்.

நாயக்க மன்னர்களோடு இடம் பெயராந்து வந்த ஆந்திர மக்கள், இங்கே நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்... எத்தனை எத்தனை தொழிற்சாலை நாயுடுகளுக்கு. மண்ணின் மைந்தர்களாம் தமிழர்கள் கூலிகளாய். இதெப்படி சாத்தியமானது என ஈவெராமசாமியின் மூளை என்றேனும் சிந்தித்திருக்குமா? 'மண்ணின் மைந்தர்களாம் ஒடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்களில் எத்தனை மிராசுதார்கள் இருக்கிறார்கள்... எத்தனை தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்" என. 350 வருச காலத்திற்குள் ஈவெராமசாமியின் உறவுகாரர்கள் மட்டும் எப்படி ஆயிரமாயிரம் ஏக்கருக்கு அதிபதியானார்கள். பட்டியல் இன சமூகத்தில் ஏன் எந்த சொத்து, பத்தும் இல்லை. ஈவெராமசாமி கூறுவார், தம் நாயக்க கூட்டாளிக்கு ஆதரவாக, "கடுமையாக உழைத்தோம். நிலக்கிழார் ஆனோம்" என்று. ஒடுக்கப்பட்ட மக்கள் உழைக்காத உழைப்பையா நீ உழைத்துவிட்டாய்.

நீ கடுமையா உழைக்கவில்லை. கடுமையாக சுரண்டினாய் தமிழகத்து மண்ணின் மைந்தர்களை. அதனால் தான் இத்தனை விவசாய நிலங்களும், இவ்வளவு தொழிற்சாலைகளும் உங்களுக்கு கிடைத்தது. இவ்வளவு வசதி இருந்தும், "திராவிட நாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரியுமா?" என அடுத்தவன் நிலையை பார்த்து வெம்புகிறாய். நீ சமூகநீதிக்காரனா... சமூக அநீதிகாரனா... ஈவெராமசாமியின், "நாயக்கர்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்" எனும் தலையங்கத்தையும், "திராவிடமே... தமிழ்நாடே...." கட்டுரையையும் வாசிக்கிற ஒருவனின் மனதில் இயல்பாக என்ன தோன்றும், ஈவெராமசாமி, "மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள தலித் போன்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என தானே நினைப்பான். அது தானே உண்மையாகவும் இருக்க முடியும்.

அண்ணல் அம்பத்கரே, ஈவெராமசாமியை அவ்விதம் கூறவில்லையாயினும் நீதிக்கட்சி கோஷ்டிகளை அவ்விதம் தானே சாடினார், "செகண்ட் கிளாஸ் பார்ப்பனர்கள் என்று. ஈவெராமசாமி "சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு" என பல முகமூடி போட்்டு கொண்டு, தம் சாதிக்காரனுக்காக உழைத்தார் என்பதே பல கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. அதை தான் கி.வீரமணியிடம் வானொலி பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard