New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்
Permalink  
 


இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்

E-mailPrintPDF

மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,மிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.

1.  சங்கங்கள்: மறுப்பு

 

 முச்சங்கங்களின் வரலாற்றை மறுப்போரில் குறிப்பிடத்தக்க அறிஞர்களாக விளங்குவோர் கே.என்.சிவராஜபிள்ளை, பி.டி.சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர், கீ.சேசகிரி சாஸ்திரியார், கு.வையாபுரிப்பிள்ளை முதலானோர் ஆவார். இவர்கள் முச்சங்க வரலாற்றை மறுப்பதற்கான காரணங்களைப் பின்வருவனவற்றைக் குறிக்கின்றனர்,

• சங்கம் என்பது தமிழ்ச்சொல்லன்று
• பழைமை நூல்களில் சங்கம் இருந்ததற்கான சான்றுகள்
 இல்லை
• அகத்தியம் முதலிய மறைந்துபோன தொல்பழம்
 நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
• வச்சரிநந்தி சமண சங்கத்தை நடத்தினார் என்பதற்குப்
 போட்டியாகத் தமிழ்ச் சங்கங்கள் பற்றிச் சொல்லப்பட்டன.

இவர்களின் இக்கருத்தியல்களைக் க.மலையமான், கு.முத்துராசன் முதலியோர் மறுக்கின்றனர். ‘சங்கம்’ என்னும் சொல் தமிழ்ச் சொல் அன்று எனும் கருத்தியலை மலையமான் பின்வருமாறு மறுத்துரைக்கிறார்,

  சங்கு என்பது தமிழ்ச்சொல். சங்குகள் கூட்டமாக இருக்கும் ஆகவே சங்கு என்பதிலிருந்து உருவான சங்கம் என்றசொல் கூட்டம் என்ற பொருளைப் பெற்றது. எனவே சங்கம் என்ற சொல் கூட்டம் என்ற பொருளைப் பெற்றது. எனவே சங்கம் என்பது தமிழ்ச்சொல்லே.
என்றும்,  கடலைச் சூழ்ந்த நாட்டில் பயன்பட்ட சங்கு என்பது தமிழ்ச் சொல்அன்று என்பதும் கடலே இல்லாத பகுதியில் -வடநாட்டில்- வழங்கிய அச்சொல் வடசொல் என்பதும் நகைப்புக்குறியதாகும். எனவும் சங்கம் எனும் சொல் தமிழ்ச்சொல்லே என்று நிறுவுகிறார். சங்கம் என்ற சொல்லிற்காக வழங்கபடபெறும் தொகை, கூடல், அவை முதலிய சொற்களை முன்வைத்தும் நூல்அவையேற்ற நிகழ்வுகள் முதலியனவற்றை முன்வைத்தும் சங்கம் இருந்து வந்துள்ளமையினை நிறுவுகிறார் கு.முத்துராசன்.

      இவ்வாறாகக் கருத்தியல் அளவிலும் தர்க்கமுறையிலும் சங்கங்களின் வரலாறு குறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவை குறித்த சில விவாதங்களை முன்வைப்பனவாக இனிவரும் பகுதிகள் அமைகின்றன.


 

2
           மேற்குலக நாடுகளில் ஒருகாலத்தில் கருத்தியல்களாக முன்வைக்கப்பட்ட பலசெய்திகள், கதைகள், தொன்மங்கள் (ஆலவா)இ புராணங்கள் முதலியவை தர்க்கமாகப் பரிணமித்து பின்பு சோதனைகளால் அவை நிருவப்பட்டன. துர்க்கத்திற்கு உரிய அனைத்துப் படைப்புகளும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் அந்நிலை இன்னும் தழைத்துவிடவில்லை.

          மேற்குலக நாடுகள் அறிவியல் பாதையில் பயணித்தபொழுது, தமிழகம் பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து வந்துள்ளது. இப்படையெடுப்புகள் சமயங்களின் வடிவாகவும், பண்பாடு வடிவாகவும், போர்முறை வடிவாகவும், நிகழ்ந்தவண்ணம் இருந்து வந்துள்ளன. இப்படையெடுப்புகள் மூலம் பிற தேசத்தாரின் மொழி, பண்பாடு, கல்விமுறை முதலியன தமிழகத்தில் நிலைபெற்றன. இதனைப் பின்வரும் க.ப.அறவாணனின் கருத்தியலோடு ஒப்பிட்டு அறியலாம்.

    களப்பிரராலும் பல்லவராலும் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றில் முற்காலப்      பகுதியைச் சேர்ந்தவை பிராகிருத மொழியிலும், இடைக்காலப் பகுதியைச் சேர்ந்தவை வடமொழியிலும் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு வடமொழி, தமிழ்மொழி என இரு மொழிகளிலும் வரையப்பெற்றுள்ளன. வடமொழி அவர்களின் ஆட்சியில் முதன்மை பெற்றமையால் வடமொழியில் உள்ள கலை நூல்களையும் பலவகைப்பட்ட சமயநூல்களையும் மொழிபெயர்க்கும் முயற்சியோடு மட்டுமல்லாமல் கற்பிக்கும் முயற்சியும் நடந்தது. ஆதற்கெனவே பல்லவர்களின் செல்வாக்குப் பெற்ற தலைநகரமான காஞ்சிபுரத்தில் வடமொழிக் கல்லூரி பல்கலைக்கழகத்திற்கு நிகராக அமைக்கப்பட்டது (தமிழ் மக்கள் வரலாறு: பல்லவர் காலம்,2013,ப.59).

    மேற்கண்ட காரணங்களால் பன்னெடுங்காலமாக ஒரே மொழியில் சிந்தித்தும் பேசியும் வளர்ந்த சிந்தனை மரபுகள் தடைபடலாயின எனலாம். இவ்இடத்திலிருந்து மாறுபட்ட கல்வி முறை அமைப்பைத் தமிழ்ச் சமூகம் தன்மேல் ஏற்றிவைத்துக் கெண்டு பயணிக்கும் பயணம் தொடங்கிவிட்டது என்பது பொருந்தும். பிறமொழிச் சொற்களையும் பொருளையும் ஏற்றுவந்த தமிழ் இயங்கியல் தளத்தில் இங்கிருந்தே வேற்றுப்புலக் கல்வி மரபு துவங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறாக அயல்புலச் சிந்தனைமரபுகளை ஏற்றுக்கொள்ளும் போக்கு தமிழ்ச்சமூக வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இந்நிலை காலப்போக்கில் தமிழ் மரபுவழிச் சிந்தனை மரபையே மாற்றியமைத்துள்ளது. ஒரு மொழிப்புல இயங்குதளத்தில் செயலாக்கம் பெற்றுவிட்ட ஒரு இலக்கிய மரபைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குப் பிறகு மாற்றுக் கல்விச் சிந்தனைமரபில் இருந்து பெறப்பட்ட ஒரு அறிவு மரபைப் புகுத்திப் பார்த்தலில் முழுமையான ஆய்வுமுடிபுகளை எட்டுவது கடினம். இன்றைய திமிழ் ஆய்வு உலகில் நிலவும் தேக்க நிலைக்கும் இருண்மை நிலைக்கும் இங்குச் சுட்டப்பட்ட அம்சங்களும் ஒரு காரணிஆகும்.

      தமிழ் ஆய்வுச் சூழலில் இலக்கியம் வேறாகவும் அறிவியல் வேறாகவும் பார்க்கும் பார்வையே விஞ்சி நிற்கிறது. அறிவியல் பார்வை கொண்டு இலக்கண இலக்கியங்களை ஆராயும் சூழல் நிகழும் இடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணலாகும் பன்முகப்பட்ட வரலாற்று மரபுகளையும் மீட்டுருவாக்க இயலும்.


 

3
      தமிழ்ச் சங்கங்கள் குறித்த ஆய்வுகள் இலக்கியப் பார்வைகொண்டே நிகழத்தப்பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரையில் குறிக்கப் பெறும் முச்சங்க வரலாற்றில் கடல்கோள்கள் குறித்த பதிவுகள் இடம்பெறுகின்றன. இப்பதிவுகள் முதல், இடைச் சங்கங்கள் கடல்கோள்களால் மூழ்கடிக்கப் பெற்றுள்ளன எனும் நிகழ்களைச் சுட்டுகின்றன. இதுபோன்ற பதிவுகளே, தமிழியல் ஆய்வுகளில் கடல்கோள், குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகளைத் துவக்கி வைத்தன எனலாம். இறையனார் களவியல் உரை பதிவு செய்வனவற்றை உண்மைக்குப் புறம்பானவை என முற்றிலும் புறந்தள்ளிவிட இயலாது. முச்சங்க வரலாற்றைப் பதிவு செய்யுமிடத்து அது குறிக்கும் ஆண்டுகளின் வரிசை நம்பகத்தன்மை அற்றது போன்று தோன்றினாலும் அவை விரிவான முறையில் ஆராயத்தக்கவையாக உள்ளன. நக்கீரனார் இச்சைய்திகளைப் பதிவு செய்யுமிடத்துத் தான் குறிப்பிடுவதுபோன்று குறிப்பிடாது ‘என்ப’ எனும் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தி அவையெல்லாம் தாம் ஏற்றுக் கொண்ட முன்னோரது அல்லது பிறரது கருத்துகள் என்பதைத் தெளிவுபடுத்திச் சுட்டுகிறார். அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு சான்றுரைக்கலாம்.

    அவருட் கவியரங்கேறினார் எழுவரென்ப (ப.4)
         தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப (ப.4)
         அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச் செழியன்
         முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப (ப.4)
         அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப (ப.5)

         மேலும் சங்கம் ஆதரித்தோர், புலவர், ஆண்டுகளின் வரலாற்றினைப் பதிவு செய்கையில் முதல் சங்கத்தின் தொடக்கத்தினர். 549பேர் என்றும் பாடினோர் 4449பேர், ஆண்டுகள் 4440 ஆண்டுகள் என்றும் ஆதரித்த மன்னர்கள் 89பேர் என்றும், இரண்டாம் சங்கத்தில் தொடக்கத்தார் 59பேர் பாடினோர் 3700 நீடித்த ஆண்டுகள் 3700 ஆதரித்தோர் 59பேர்கள் என்றும், மூன்றாம் சங்கத்தில் தொடக்கத்தார் 49பேரும் பாடினோர் 449பேரும் எனக் குறிக்கப் பெறுகின்றனர்.

இங்குப் பதிவுசெய்யப் பெற்றனவற்றில் இருந்து நாம் சில கருத்தியல்களை வருவித்துக் கொள்ளமுடிகின்றது.

• சங்கங்களைத் தொடங்கியவர்கள் எனச்சிலர் இருந்து வந்துள்ளனர். அவர்களே உறுப்பினர்களை அதாவது புலவர்களை இணைத்துப் பாடச்செய்துள்ளனர்.
• இவர்களை ஆதரித்த மன்னர்கள் குறைவான எண்ணிக்கையை உடையவர்களாகவும் சங்கம் நீடித்த ஆண்டுகளின் எண்ணிக்கை பிரமிக்கத்தக்கதாகவும் உள்ளன.
• ஆண்டுகளின் எண்ணிக்கையில் இறுதி ஓர் எண்ணை நீக்கிவிடின் அக்கருத்துகள் எளிதில் ஏற்கத் தக்கதாகும். இவ்இறுதி எண் பின்னர்வந்த எவரேனும் கூடுதலாக இணைத்துத் தந்திருக்கக் கூடும். எனும் கருத்தியலுக்கு இடம் இருக்கின்ற பொழுதும் இறையனார் களவியல் உரையை முதன்முதலில் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை அவற்றை எண்களில் குறிக்காமல் எழுத்தினால் குறித்திருப்பதால் இக்கருத்தியலும் சிந்திக்கத் தக்கதாகிறது.
• இவ்வாறு கருதுவது ஏற்புடைத்தாகின் மூலச்சுவடியில் இருந்து பெயர்த்து எழுதியவர் இப்பிழையைச் செய்திருக்கக் கூடும் எனும் கருத்தியலுக்கு வரமுடிகிறது.
• மேலும் அதில் விளங்கும் இறுதிஎண்களின் வரிசை வைதிக சமயத்தார் அதிகம் பயன் கொள்ளும் எண்களின் குறியீடுகள்போல் தோன்றுகின்றன.
• நாம் நடைமுறையில் தற்போது பயன்படுத்திவரும் நாட்காட்டியும் அது குறிக்கும் ஆண்டுவரிசையும் நம் மரபினைச் சார்ந்ததன்று. அது மேலைநாட்டாரால் உருவாக்கப்பட்டது.
• கிருத்துபிறப்பு நாளை மையமிட்டு உருவாக்கப்பட்டதே இன்றைய வழக்கில் நாம் கொண்டிருக்கும் நாட்காட்டி.
• இது ஆங்கிலேய காலனியத்தின் விiளைவால் நமக்கு அது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
• எனவே அவர்கள் கருதும் ஆண்டுவரிசை முறைக்கும் தமிழர் கொண்டுவிளங்கிய ஆண்டுவரிசை முறைக்கும் வேறுபாடுகள் இருந்திருக்கவேண்டும்
• எனவே மேலைத் தேயத்தார் கொண்டிருக்கும் ஆண்டுவரிசையை அடிப்படையாகக் கொண்டு இறையனார் களவியலுரை காட்டும் காலமுறை வரிசையை ஆராய்தல் பிழையாகும்.
• பண்டைத் தமிழர் கொண்டிருந்த ஆண்டுக் கணக்கியலைக் கண்டறிந்து இறையனார் களவியலுரையின்; முச்சங்க வரலாற்றை ஆராய்தலே பொருத்தமுடையதாகும்.


 

4
 முச்சங்க வரலாறுகளை மீட்டுருச் செய்து ஆராய்கையில், தமிழரின் மிகப்பெரும் தொல்பழங்கால வரலாற்றை மீள்கட்டமைக்க முடியும். இறையனார் அகப்பொருள் உரையின் வரலாற்றுக் கூறுகளை ஓரளவிற்கேனும் உய்த்துணரப் பின்வரும் சில கருத்தியல்களைக் கொண்டு ஆராயலாம்.

 முச்சங்க வரலாற்றினை உய்த்தறிய தொல்லியல், அறிவியல் சார்ந்த ஆய்வுகள் இறையனார் அகப்பொருளுரை சுட்டிக்காட்டும் சில ஊர்ப்பகுதிகளில் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். இவ்ஆய்வுகள் வழி, தமிழகத்தை இதுவரைத் தாக்கிய கடல்கோள்கள் முதலியவற்றால் இழந்த நிலப்பரப்புகள் இலக்கண, இலக்கியங்கள் முதலானவற்றை அறிய இயலும்.

 இவ்வகை ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுதலின்வழி இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் வரலாற்றுக் குறிப்புகளின் உண்மைத் தன்மையை அளவிட இயலும்.

 இலக்கண, இலக்கிய ஆய்வுகள் அதனதனோடு ஆராயப் பெறாமல், அறிவியல் பூர்வமான ஆக்கங்களோடு அவை செயலாற்ற வேண்டும். இவ்வகை ஆக்கப்பூர்வ முயற்சிகளே இலக்கிய இலக்கண ஆய்வுகளை அதன் சமகாலத்திய கமூகப் பொருளாதார அரசில் வரலாற்றை நோக்கிப் பயணப்படுத்தும்.

துணை நின்றவை

1. பாண்டுரங்கன் அ., தொகை இயல், 2010.
2. சென்னைப் பல்கலைக்கழகம், தமிழாய்வுத்துறை, ஆய்வுக்கதிர் -1,மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.
3. மலையமான், தமிழும் தமிழரும் (பதிப்பு விவரம் தெரியவில்லை)
4. முத்துக்குமாரசாமி கு., செம்மொழிகாட்டும் காலக் கண்ணாடி,  
  கீதகோவிந்த நிலையம், விருகம்பாக்கம், சென்னை-2.

tamilayan2011@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard