New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மலைபடுகடாம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மலைபடுகடாம்
Permalink  
 


மலைபடுகடாம்

http://sangacholai.in/10-10.html

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு		5
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி		10
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்		15
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி		20
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ		25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்		30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை		35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்
அமைவர பண்ணி அருள் நெறி திரியாது
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு		40
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து	45
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல்
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ		50
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய
துனை பறை நிவக்கும் புள் இனம் மான		55
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள்
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு		60
புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த		65
புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின்
ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்
மலையும் சோலையும் மா புகல் கானமும்
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப		70
பலர் புறம்கண்டு அவர் அரும் கலம் தரீஇ
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின்		75
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்	80
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும்
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்		85
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்
இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு	90
திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்		95
புதுவது வந்தன்று இது அதன் பண்பே
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து
அகல் இரு விசும்பின் ஆஅல் போல		100
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை
நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின்
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்		105
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல்
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை	110
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்		115
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே
புயல் புனிறு போகிய பூ மலி புறவின்		120
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை
தொய்யாது வித்திய துளர் படு துடவை
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில்
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி		125
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய		130
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு
ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்		135
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து
உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப		140
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே
தீயின் அன்ன ஒண் செங்காந்தள்			145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்		150
மண இல் கமழும் மா மலை சாரல்
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி
பொருது தொலை யானை கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர்			155
செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர்
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலை செப்பம் போகி			160
அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி
நோனா செருவின் வலம் படு நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம் எனினே
நும் இல் போல நில்லாது புக்கு			165
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு		170
வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை	175
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண் புடை கொண்ட துய் தலை பழனின்
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து		180
வழை அமை சாரல் கமழ துழைஇ
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்		185
செரு செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலை மிசை நாடே
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும்
வரை அரமகளிர் இருக்கை காணினும்		190
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்
பல நாள் நில்லாது நில நாடு படர்மின்
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே நள் இருள்		195
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின்
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி		200
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழிமின்
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை		205
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின்	210
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி		215
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின்
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா	220
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய		225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை
பராவு அரு மரபின் கடவுள் காணின்		230
தொழா நிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே
அலகை அன்ன வெள் வேர் பீலி
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்		235
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும்
நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்து அன்று	240
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்
வரை சேர் வகுந்தின் கானத்து படினே
கழுதில் சேணோன் ஏவொடு போகி
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி
நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்		245
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து
துகள் அற துணிந்த மணி மருள் தெள் நீர்		250
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர்
புள் கை போகிய புன் தலை மகாரோடு
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்
இல் புக்கு அன்ன கல் அளை வதிமின்		255
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானகம் பட்ட செம் நெறி கொண்மின்
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்		260
துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து
பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார்
இரும் கால் வீயும் பெரு மர குழாமும்		265
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவையவை குறுகாது கழிமின்
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்மின்	270
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்து படினே		275
அகன் கண் பாறை துவன்றி கல்லென
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை
காடு காத்து உறையும் கானவர் உளரே
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்		280
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட			285
இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்		290
பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்
அருவி நுகரும் வான் அரமகளிர்
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும்		295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின்		300
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை		305
மலைமார் இடூஉம் ஏம பூசல்
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்	310
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல்
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை		315
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு		320
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து		325
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு		330
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை		335
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை
மழை கண்டு அன்ன ஆலைதொறும் ஞெரேரென	340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப்பறையும் குன்றகம் சிலம்பும்
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி	345
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன்
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர்
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்		350
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண்		355
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின்		360
மை படு மா மலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி
தூஉ அன்ன துவலை துவற்றலின்
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு
காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல்		365
கூவல் அன்ன விடரகம் புகுமின்
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும்
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு	370
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து
கதிர் சினம் தணிந்த அமயத்து கழிமின்		375
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல்	380
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி
கை பிணி விடாஅது பைபய கழிமின்
களிறு மலைந்து அன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவ பலவே		385
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே
இன்பு உறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக	390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின்
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடுமின்
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த		395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே		400
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே
அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து		405
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்		410
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்		415
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீ துணை ஆக சேந்தனிர் கழிமின்			420
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்
கொடு வில் கூளியர் கூவை காணின்
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ			425
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி		430
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த		435
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி		440
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன	
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை		445
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி
புலரி விடியல் புள் ஓர்த்து கழிமின்
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல் யாழ்		450
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும்
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே
கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை		455
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்
பிடி கை அன்ன செம் கண் வராஅல்
துடி கண் அன்ன குறையொடு விரைஇ
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த		460
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளம் செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்தொறும் பெறுகுவிர்
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு	465
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின்		470
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்	475
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து		480
யாறு என கிடந்த தெருவின் சாறு என
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு
மலை என மழை என மாடம் ஓங்கி
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்		485
பனி வார் காவின் பல் வண்டு இமிரும்
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர்
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின்		490
அரும் கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர்
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற அளியர்தாம் என
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி	495
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான் கயமுனி குழவி		500
ஊமை எண்கின் குடா அடி குருளை
மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை வன் தலை மா தகர்
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை
அளை செறி உழுவை கோளுற வெறுத்த		505
மட கண் மரையான் பெரும் செவி குழவி
அரக்கு விரித்து அன்ன செம் நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை
கானக்கோழி கவர் குரல் சேவல்			510
கான பலவின் முழவு மருள் பெரும் பழம்
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழம் தாரம்
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை		515
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி
குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள்
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள்
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்			520
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி
திருந்து அமை விளைந்த தேம் கள் தேறல்
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர்
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல்		525
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப
நோனா செருவின் நெடும் கடை துவன்றி
வானத்து அன்ன வளம் மலி யானை		530
தாது எரு ததைந்த முற்றம் முன்னி
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ்
நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி		535
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி
குன்றா நல் இசை சென்றோர் உம்பல்		540
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடை கடன் இறுத்த செம்மலோய் என
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர		545
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து		550
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று		555
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி		560
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ
முடுவல் தந்த பைம் நிணம் தடியொடு
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து		565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய		570
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர்
வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும்		575
இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி			580
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன், சிறுபறையும்,
நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,
மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,		5
துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்,
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,	10
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,
கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் -
கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே,					15
(கீழே கிடப்பதை)எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான (ஏறுதற்குக்)கடினமான சிறிய வழியை,
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
இடற்பாடு செய்யாமல், போவோர் வருவோரை (வழிகாட்டியும் உதவியும்)போகச்செய்யும் 
பாறைக்குன்றின் உச்சியில், நடந்துபோகும் கடினத்தை(யும்) பெரிதாகக்கொள்ளாமல்,
உடைத்து அமைக்கப்பட்ட பாதையின் செங்குத்தான பகுதியில் (பழைய)வழித்தடத்தையே பார்த்து நடந்து -	20
(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
(பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு,		25
ஒலியை எதிரொலித்துப் பெரிதாக்கும் தன்மை அமைந்த (கூடு போன்ற)பத்தலினைப் பசையினால் சேர்த்து,
மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்;
மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய 30
இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே 
சென்று முடிவுறும் மயிர் முறைமையோடு அமைந்திருக்கும் அழகிய அமைப்பு போன்று,
(இரண்டு ஓரங்களையும் இணைத்து)நடுவினில் சேர்வதுபோல் சீராக அமைத்து, தனக்குரிய அளவினில் மாறாது,
இரண்டாகப் பிரிவுபட உள்ளிருத்தப்பட்ட நீண்டு வளைந்த உந்தியெனும் வயிற்றுப்பகுதியையும்;
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், கரிய நிறத்தில்				35
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை
(நன்கு)அமைவாகச் செய்து, சொல்லப்பட்ட நியதிகளினின்றும் மாறுபடாமல்,
இசை கேட்கும் சிறப்புடைய அரசவை(யிலுள்ளோர்) ஏற்றுக்கொள்ளும் விதத்தில்,
துறைகள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்த இளநிலை முடிந்த (=அனுபவமிக்க) பாணர்களோடு -	40
உயர்ந்தோங்கிய (=மிக உயர்ந்த)பெரிய மலைகளை (எவ்விதத்)தீங்குமின்றி ஏறிவருதலால்,
வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும்,
சோர்வடைந்த தன்மையினால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும்,
கூட்டமாய் இருக்கும் மயில்கள் (தங்கள் தோகையைத் தாழ்த்தியதைப்)போன்று தலைமயிர் தாழ விழச் சோர்வுடன் நடந்து,
மான் கண்ணோடு (உருவத்தால்)ஒத்தும்,(நோக்கால்)மாறுபட்டும், அமைதிகொண்ட, சிவந்த வரியையுடைய கண்களையும்,	45
ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்து வர -
குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு (ஆங்காங்கே)நீண்டுகிடக்கும் முல்லைநிலத்தின்கண்,
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,					50
தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரை(யின் உச்சி)யை மோதுகின்ற (அளவுக்கு)உயர்ச்சியினையுடைய
பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு கடலில் விரிந்து பரவியதைப்போல்,
நாங்கள் அவ்விடத்திலிருந்து வருகின்றோம்; நீங்களும்,
பழங்கள் நிறைந்துவழியும் காட்டை நோக்கி (அப்பழங்களைத் தன்)சுற்றத்தோடு தின்னுவதற்கு,
விரைவாக(த் தம்) சிறகுகளை உயர்த்தும் பறவைக்கூட்டம் போல,					55
அலங்காரமான மாலையினால் அழகுபெற்ற, வண்டுகள் மொய்க்கும் மார்பினையுடைய,
கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட அழகிய முலையையும் வளைவுள்ள மூங்கில்(போன்ற) திரண்ட தோளையும்
பூப் போன்ற குளிர்ச்சியான கண்ணையும் உடைய பெண்களின் கணவனான;
பகைவர் நாட்டை நாசமாக்கும் (பகைவர்)நெருங்குவதற்கு முடியாத வலிமையுடைய,
புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)உழவர்க்கு(=பரிசிலர்க்கு)		60
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,
தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,
வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
(அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட		65
(பறவையால் தோன்றிய)நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால் -
(செல்லும்)பாதையின் தன்மையையும், தங்குவதற்கான நல்ல இடங்களையும்,
வேறெங்கும் காணமுடியாத செழிப்பு நாளும் உண்டாகும் அவனது நாடு விளைக்கும் உணவுகளையும்,
மலைகளையும், பொழில்களையும், விலங்குகள் அடைந்திருக்கும் காடுகளையும்,
குறைக்கமுடியாத நல்ல புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்படியாக,				70
(பகைவர்)பலரையும் தோற்கடித்து, அவரது அரிய அணிகலன்களைக் கொணர்ந்து,
புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும்,
இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும், புகழுபவர்க்கு
தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத எண்ணத்துடன்,
தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,	75
நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு),
நல்லோர் கூடியிருக்கும் நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில்,
(சொல்)வன்மையில்லாதவர் எனினும் (அவர்)தரப்பை மறைத்து, தம்மிடம் சென்றோரை,
(தம் பொருளைச்)சொல்லிக் காட்டி, (திரும்பத் திரும்ப)சோர்வடையாமல் விளக்கி,
நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும்,					80
நீர் (சூழ்ந்த)இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தரும் பேரளவிலான வலிமையையுடைய,
பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற,
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,
பரந்துகிடக்கும் இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து உதிக்கும்
ஞாயிற்றைப் போன்ற அவனது பழிச்சொல் அற்ற மேன்மையையும்,				85
வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து,
சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு
கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது மூத்தோர் வரலாற்றையும்,
இரையைத் தேர்ந்தெடுத்து (அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து)நகரும் வளைந்த காலையுடைய முதலையுடன்,		90
அலைகள் உண்டாகும் அளவிற்கு ஆழமான, பாறைகளைத் தோண்டி அமைத்த பள்ளத்தையும்,
மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய,
புகழ் (எங்கும்)சென்று மிகுகின்ற அவனுடைய மூதூரின் இயல்பினையும்,
கேட்பாயாக - இப்பொழுது, வேளிர் குலத்தவனை நீ நினைத்துச் செல்கின்ற திசைதான்,
பெருகுகின்ற வளம் நிறைவடைந்த புதுவருவாயையுடைய ஊர்களால்				95
(என்றும்)புதியதாகவே இருக்கும் தன்மை வந்தது, இது அத்திசையின் பண்பு;
மேகம் மின்னல் வெட்டோடு மழையைக்கொட்ட, குறைவில்லாமல்
விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய,
மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில்,
அகன்ற இருண்ட வானத்தின் கார்த்திகை என்னும் விண்மீன் போல,				100
வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;
நீல மணிகள் போன்ற (விதைகள்)விதைக்கப்பட்ட கொல்லைக்காட்டின் பக்கத்தே,
மகுளியென்னும் அரக்குநோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுதலால்,
நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டுநிலத்தில்,
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்	105
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;
பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை;
முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும்
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;					110
எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,
வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி,
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;					115
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி,
குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, 
ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,				120	
அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மூங்கில்நெல்;
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
வெண்சிறுகடுகு(ச் செடிகள்) நெருங்கிவளர்ந்தன; வெளுத்த(நெல்)அரிதாளையுடைய வயல்களில்,
கரேர் என மலர்ந்தன, நீண்ட நறிய நெய்தல்;
(கையால்)செய்யப்படாத(இயற்கையாய் அமைந்த) பாவை(உருவில்) வளர்ந்து, அழகு மிகுந்து,	125
உறைப்புத்தன்மை கொண்டன, இஞ்சி; (முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
காம்பினுள் செலுத்தப்பட்ட (எஃகினாலான)வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,
பதம்கெட்டு மலர்தல் இல்லாத(நன்கு திரண்ட) மொட்டுக்களின் நிமிர்ந்த முகங்கள் உரசும்படியாக,		130
(பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில்,
இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன; பயன்தரும் நிலை அடைந்து
முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில்நெல்; அகன்ற பாறையின்மேல், 
(தம்)பருவத்தே அன்றியும் (எல்லாக் காலங்களிலும்)மரங்கள் பயனைக் கொடுத்தலால்,
காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்;						135
(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி; 
சுண்ணாம்பின் தன்மையில் (முற்றித்இ)திரண்டன, கூவைக்கிழங்கு; சதைப்பற்றுடன் சாறு மிக்கு,
(மிக்க தித்திப்பினால் திகட்டலால்)உண்பாரைத் தடுத்தன, தேமாங்கனிகள்; (மேல்தோல்)புண்ணாகி வெடித்து,
விதைகளை உதிர்த்தன, நெடிய அடிப்பகுதியையுடைய ஆசினிப்பலாப்பழங்கள்;
விரல்கள் அழுந்தப்பதிந்து ஒலியெழுப்பும் முகப்பையுடைய சிறுபறையைப் போன்று,		140
பேராந்தைகள் (சேவலும் பெட்டையும்)மாறி மாறிக் கூப்பிடும் நெடிய மலைச் சாரலில்,
அடிவாரத்திலும் உச்சியிலும், மழை வாய்க்கப்பெற்றமையால் அதனைப்பெற்று, 
வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி,
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்;
நெருப்பினைப் போன்று ஒளிர்வுள்ள செங்காந்தளின்						145
மழையால் செழித்து வளர்ந்த புதிய மொட்டினைத் தசையெனக் கருதி,
அறியாமல் எடுத்த பொலிவிழந்த முதுகினையுடைய பருந்து,
(அது)தசையில்லாததால், உண்ணாமல் கீழேபோட்டுவிட,
நெருப்பைப் போன்ற பல இதழ்கள் பரந்து,
வெறியாடுகின்ற களத்தை ஒக்கும் அகன்ற பாறைகள்தோறும்				150
மண வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும்
தேனுடையராய், கிழங்குடையராய், தசை நிறைந்த நார்க்கூடையராய்,
சிறிய கண்ணையுடைய பன்றியின் (தசைகளில்)பழுதுள்ளவற்றை நீக்கி,
(தம்மில்)போர்செய்து இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக,
(மற்றுமுள்ள)தசைகளோடே நிறைய (கூடைகளைத்)தோளில் சுமந்துவந்த கானவருடைய	155
வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர் - 
அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் (அவர்களுடன்)சேர்ந்து தங்கி,
(தீக்கங்குகளில்)கனலாய் எரியும் நெருப்பு(ப்போன்று) ஒளிரும் பூங்கொத்துக்களைச் சூடி, 
சிவந்த அசோக மரங்களுள்ள சீராக்கப்பட்ட வழியில் சென்று,					160
(மேலும் கீழூம்)அசைகின்ற மூங்கில்கள் கிரீச்சிடும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய
மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,
‘(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையும் (அவற்றில்)வெற்றிபெறும் தீவிர முனைப்பினையுமுடைய,
மானஉணர்ச்சிமிக்க, வலிமைமிக்க நன்னனுடைய கூத்தர் யாம்' என்று கூறுவீராயின்,
உம்முடைய (சொந்த)வீடு போல (வாசலில்)நிற்காமல் உள்ளே சென்று,				165
உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே (அவருடன்)நட்புரிமை கொள்ள,
தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி,
பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர் -
(மலை மீது)ஏறிக் கொண்டுவந்த பொலிவுள்ள மலையின் அரும்பொருட்களோடு,			170
மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவைக்
குறைவு இல்லாமல் குடித்து, (அதன்)நறுமணத்தில்(=களிப்பில்) மகிழ்ந்து, விடியற்காலையில்,
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி,
அருவிநீர் அடித்துக்கொண்டுவந்த (பலாப்)பழத்தினின்றும் சிதறிய வெண்மையான விதைகளையும்,
(முட்டுவதற்கு ஓடி)வரும் வேகத்தைத் தணித்து (ப் பின் கொன்ற)கடமானின் கொழுத்த தசைகளையும்,	175
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, நாரை உச்சியில் கொண்ட (புளியம்)பழத்தின்
மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் உதிர்த்து,				180
சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி,
நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள், (தான்)ஆக்கிய அருமையாக மலர்ந்து உதிரிஉதிரியான சோற்றை,
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், (மிக்க)ஆர்வத்துடனும் கலந்துதர,
தாய்பிள்ளை ஆகிவிட்டதால் (இருந்து செல்க என்று)தடுக்க, (இந்த விருந்தோம்பலை)வீடுகள்தோறும் பெறுவீர் -	185
போர் செய்யும் மிக்க வலிமையையுடைய மன்னனைக் கருதிச்செல்லும்
பரிசிலை(யும்) மறக்குமளவுக்கு (உமது இருப்பை)நீட்டித்தலுக்கு உரித்தாவீர்;
அத்தகையது (அன்று - அசை)அவன்  மலையின்மீது (உள்ள)நாடு (நாட்டின் மலைப்பகுதி);
வரிசையாய் அமைந்த இதழ்களையுடைய குவளையின் தொழுகைக்குரிய பூக்களைத் (தெரியாமல்)தொட்டாலும்,
மலைத்தேவதைகளின் இருப்பிடங்களைப் பார்த்தாலும்,						190
உயிர் போக (=மிகவும்) மனம் வெதும்பி நடுங்குதலுக்கும் உரித்தாவீர்;
(எனவே)பல நாட்கள் நிற்காமல், (=தாமதியாமல்)(மலையை விட்டிறங்கி)சமவெளிப்பகுதிக்கு விரைவீர் -
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
(என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள், (எனவே)கும்மிருட்டு(ப்போய்)			195
(பொழுது)புலர்ந்த விடியற்காலைவரை தங்கியிருந்துப் பின் (அவ்விடத்தைக்)கடந்துசெல்வீராக -
அடுத்தடுத்துப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்,
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்
மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;
(அவ்விடங்களை மனத்தில்)குறித்துவைத்துக்கொண்டு, (மற்ற விலங்குகளுக்காக)மரத்தில் ஏறிக் கைதட்டிப் பார்த்து,	200
நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வாழ்த்த,
சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள் -
காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்		205
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்,
பெரிய மூங்கிலின் ஈரமான தண்டுகளில் (பட்டுப் பட்டுத்) தாவித்தாவிச் சென்று சலசலப்பு உண்டாக்க,
கருத்த விரல்களையுடைய குரங்குகள் (தம்)குட்டிகளோடே மிரண்டோட,
உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப் போன்று,
(அக் கவண்கற்கள்)வருகின்ற வேகம் குறையமாட்டா, (எனவே)மரங்களில் ஒளிந்துநின்று (ப் பின்)கடந்துசெல்லுங்கள்-	210
வலிமையுள்ள யானைகளை(யும்) வஞ்சகமாகக் கவரும் முதலைகள் சோம்பிக்கிடக்கும்,
(பகலிலும்)இரவுநேரத்தைப் போன்ற இருள் அடர்ந்திருக்கும் எல்லையோரக் காட்டினையும்,
நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்),
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,					215
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள் -
(காலில்)மிதிபட்டு வாடிக்கிடக்கும் மலையெருக்கு மண்டிக்கிடக்கும் மலைச்சரிவுகளில்,
விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே,				220
வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
(ஊன்றிய)காலின் உறுதியைக் குலைக்கும் (=வழுக்கும்) வழுக்குநிலங்களும் உள்ளன,
முழுப் பாதையும் பின்னி வளர்ந்த நுண்ணிதான கோல்களையுடைய வேரல் என்னும் சிறுமூங்கிலுடன்
எருவை என்னும் நாணலின் மெல்லிய கோல்களையும் (பிடித்துக்)கொண்டவர்களாய்ச் செல்லுங்கள் -
உயர்ந்து நிற்றலையுடைய பெருமை மிக்க (நவிர)மலையில், புள்ளிகளையுடைய (தம்)முகத்தில அழுந்தப் பதிய,		225
மழை போன்று இறங்கிவரும் வில் பொழியும் கடுமையான அம்புகள்,
(கழுத்தில் கிடக்கும் கிண்கிணி)மாலையுடன் அழகூட்டும், போர்த்தொழில் பயின்ற யானையின்
முகபடாம் போன்று பொலிவுற்ற, தீச்சுடர் (போன்ற)பூக்களையுடைய, சுற்றிலும் கரை அமைந்த மடுக்களையுடைய,
ஓர் ஆற்றின் போக்கில் உள்ள பழைய கோட்டைமதிலையுடைய
மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்,		230
வணங்கி நீங்கள் சென்றுவிடுங்கள், அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும்
உம்முடைய இசைக்கருவிகளைத் தொடுதலைத் தவிருங்கள், (ஏனெனில்)நெருக்கமான துளிகளைக்கொண்ட
மழை (எப்போதும்)பெய்யலாம் அவனுடைய வளமிக்க மலையிடத்தே (மழையில் கருவிகள் நனையுமாதலால்) -
சோழியைப் போன்ற வெண்மையான வேர்களையுடைய மயிலிறகுகளைக்கொண்ட
தோகையையுடைய மயில்கள் தம்மிடங்களில் சோர்வுறும்வரை ஆடிக்கொண்டிருப்பினும்,	235
தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,
செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய,
தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
‘படக்'என்று (அவற்றைத் திரும்பிப்) பார்ப்பதைத் தவிருங்கள், (அது உமக்கு)உரித்தான செயல் அன்று,	240
(ஏனெனில்)ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர் -
மலைக்குச்செல்லும் கிளைப்பாதையையுடைய வனத்துள் செல்லநேர்ந்தால்,
காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய்,
வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,
மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு,	245
வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால்,
(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்
அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு,
தூசியை விலக்கிவிட்டு (கையால் வெட்டியதைப்போன்று)மொண்ட பளிங்கோவென நினைக்கத்தக்க தெளிந்த நீரை,	250
குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து,
மீதம்வைத்த தசையைக் கொண்ட பருத்த வடிவுடைய மூட்டையுடையராய்,
கிட்டிப்புள் கையினின்றும் போகும்(தட்டிக்கொண்டே வரும்) வாராத தலை(முடி)ப் பிள்ளைகளுடன்,
இரவிற்கு இடைவழிகளில் காலத்தைப் போக்குவதைத் தவிர்த்து, வழியிலுள்ள, உமது(சொந்த)
வீட்டிற்குள் நுழைவதைப்போன்ற(உயரமான நுழைவிடம் கொண்ட) கல்குகைகளில் தங்குவீராக -	255
இரவில் கூட்டாக (அவ்விடத்தில்)தங்கி, (நெடுநேரம் அசந்து தூங்கி)ஓய்வெடுத்தலைத் தவிர்த்து,
வானம் துயிலெழுந்த விடியற்காலத்தே, (சீக்கிரமாய்ப்)புத்துணர்வோடு எழுந்து,
காட்டிடைக் கிடந்த செம்மையான பாதையில் போவீராக -
குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே
மதம் மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை(யும்) அழிக்கக்கூடிய,			260
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி,
எல்லைகடந்து தொலைதூரத்திலும் மணம்வீசும் பூவும், உண்டவர்கள்
மறந்து இருக்கமுடியாத பழங்களும், வழக்கத்தை மீறி,
(அவற்றால்)பெரும் பயன் மிகுந்தாலும், மனிதர் (அவற்றை)நெருங்கார்; 
நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய)பெரிய மரக்கூட்டங்களையும்	265
இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் நினைவினிற்கொண்டவராய்ப் பார்த்து,
(அவற்றின்)அடையாளங்களை அறிந்து அவற்றையெல்லாம் அணுகாமல் போவீராக;
கிளைகள் பலவும் முற்றிப்போன பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில்,
ஒன்றுசேர்ந்த பல இசைக்கருவிகள் (இசைத்ததைப்)போன்ற (பல)ஓசைகள் இணைந்த பறவைகளின்
வாழ்விடங்களைக் காணும்படியான அகன்ற இடத்தையுடைய மலையை மெல்ல மெல்ல விட்டு அகல்வீராக-270
பெரிய நிழல் படிந்த மரங்கள் நெருங்கிவளர்ந்த அடர்ந்த புதர்க்காடுகளில்,
கதிரவன் சுடாத(வெப்பம்படாத) வான்வெளியைக்கொண்ட அகன்ற இடங்களில்,
திசை தடுமாறும் காலமாயினும்,
முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும்
குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,				275
அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, சுற்றுப்புறம் அதிரும்படியாக,
மேற்செல்லுதலைத் தவிர்த்து உமது இசைக்கருவிகளை இசைப்பீராக -
ஒலித்தல் இனிமையான (இனிமையாக ஒலிக்கும்)அருவியின் பயன் மிகுந்த உச்சிகளில்
காடுகளைக் காத்து வசிக்கும் கானவர் (பலர்)உளர்;
வழக்கிலுள்ள துறையைத் தவறவிட்ட(வேறு துறையில் புகுந்து,திரும்பிவர முயன்று, முடியாத)வலிமை குன்றிய மக்கள்	280
நீரில் சிக்கிய கூச்சலைக் கேட்டதைப் போல் (உம் இசையைக்கேட்டு)வேகமாக ஓடிவந்து சீக்கிரமாய் (உம்மைக்)கிட்டி,
உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்
சூடுவதற்கு மகிழ்ச்சிதரும் பூக்களையும், காட்டி
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல,
உம்முடைய மனத்துயரம் முற்றிலும் நீங்க,								285
(மனநிறைவோடு)‘இம்' என்ற ஒலியெழுப்பும் சுற்றத்தோடே மகிழ்ச்சியுள்ளவர் ஆகுவீர்;
தெரிந்தவர்கள் கூறிய திசைகளைப் பின்பற்றி,
சிறிதும் பெரிதுமான(ஏற்ற இறக்கங்களில்)(அவர் சொல்லிக்கொடுத்தது போல்)முறையாக(ஏறி) இறங்கி, புதியவர்கள்
பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்,		290
பலவிதமான நடமாட்டங்களை(உற்றுக்கேட்டால்) கேட்பீர் -
ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்,
மலை முழுதும் மணம்கமழும் திசைகள்தோறும்,
அருவி(யில் குளித்து அதன் பயனை) நுகரும் வானத்துத் தெய்வ மகளிர்,
(அருவிநீர்)விழும் வேகத்தைத் தவிர்க்காமல் (தம் முதுகில்)வாங்கி (நீரைக்) குடையும்போதெல்லாம்	295
கேட்கும் இமிழும் ஒலியைக் கொண்ட உமது இசைக்கருவி (எழுப்புவதைப்)போன்ற இனிய ஓசையும்;
ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும் ஓசையும்;
தூரத்துக் குகையைப் படுக்குமிடமாகக்கொண்ட, இரும்பைப் போன்ற முட்களையுடைய		300



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும்;
(வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட)
நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என
(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்;
முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் 305
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;
கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;	310
(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று
துன்பப்பட்ட (யாராலும்)களையமுடியாத பெரிய அமளியும்;
ஆண்கருங்குரங்கு(ம்) (ஏறமுடியாதென்று)கைவிட்ட, பார்ப்பதற்கு இனிய உயர்ந்த மலையில்,	315
உறுதியாக நட்டுச் சார்த்திய கணுக்களைக்கொண்ட மூங்கிலே வழியாகக்கொண்டு,
பெரும் பலனாக எடுத்துச்சேர்த்த இனிய (தேன் கூட்டினின்றும்)கொள்ளையாகக் கொண்ட பொருட்காக,
எளிதாய்க் கிட்டமுடியாத (தேனுக்குக் காவலரண் போன்ற)தேனடைகளை அழித்த கானவர் மகிழ்ச்சிக்கூச்சலும்;
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று
கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு			320
மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன்,
விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும்;
நல்ல தோற்றப்பொலிவையுடைய நெடும் தேர் தன் வழித்தடத்தில் வந்ததைப் போன்ற
பரல்கற்கள்(மீது) ஆறு(ஓடிவரும்போது) சலசலக்கும்(ஒலி) மலைப்பிளவுகளில் பெரிதாக ஒலிக்கும் எதிரொலி ஓசையும்;
பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்					325
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்;
ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும்
கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;
(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும்,	330
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,
குறையாத வலிமையுடன் (ஒன்றற்கொன்று) காயம் ஏற்படும்படியாகத் தாக்கி,
இடையர்கள் குறவர்களோடு முழுவதும் ஒத்து ஆரவாரிக்க,
செழுமையான இதழ்களைக்கொண்ட காட்டுமல்லிகையும் குறிஞ்சிப்பூவும் வாடும்படி,
காளைகள் சண்டையிடும் கல்லென்ற ஆரவாரமும்;							335
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,
உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை
தின்று விழுந்த மீதமான(பழங்களின்) கொட்டைகளின் பயன் கொள்ள(=அவற்றை எடுக்க)
கன்றுகளால் (அப் பழங்களின்மீது)போரடிக்கும் பிள்ளைகளின் ஓசையும்;
மேகங்களைப் பார்த்தாற் போல் (புகை விடும்)ஆலைகள்தோறும், விரைவாக			340
(கரும்புத்)தட்டைகளைக் கணுக்களில் துண்டாக்கும் கரும்பின் ஏற்றம் இறைப்பது போன்ற ஒலியும்;
தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்;
சேம்பையும் மஞ்சளையும் பேணிக் காப்போர்
பன்றிகள் (வராதிருக்கக் கொட்டும்) பறையொலியும்; (இவற்றின்)குன்றிடத்து எதிரொலியும்;
என்று இந்த அனைத்தும், ஒத்து ஒன்றாகப் பெருகியொலித்து,					345
தாழ்நிலத்தவும் மேல்நிலத்தவும் (ஆகிய ஒலி அனைத்தும்)கூடிப் பலவும் ஒன்றுசேர்தலால்,
(அளக்கக்கூடிய எந்த)அளவை (யும்)மீறிய, எண்ண முடியாத தன்மையுடையனவாய்,
மலை(எனும் யானை)யில் உருவாகும் மதநீர் (எனும் வெறியூட்டும் கூட்டொலிகள்)திசைகள்தோறும் ஒலிக்க-
(பல)நிறங்கொண்ட காம்புகளையுடைய மலர்களைப் பிணைத்த மாலை (அணிந்த)பெண்கள்
முரசுகள் தூக்கம்(=ஓய்வு) அறியாத அகன்ற ஊரினில்(கொண்டாடும்)				350
திருவிழாவைப் போன்றது, அவனுடைய(நன்னனுடைய) அகன்ற இடத்தைக்கொண்ட மலை;
கண் குளிரக் கண்டும் (செவி குளிரக்)கேட்டும்,
உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும்,
‘இனியும் வருவதாக நமக்கு' என்று
நீண்டகால உறவுள்ள (ஒரே)வம்சத்தினர்(போல்) ஆகி, பல்வித சிறப்புக்கொண்ட			355
போரிடுவதை(ப்பற்றியே) பெருமையுடன் (எந்நேரமும்)பேசும் சிறப்பு நிறைந்த மார்பினன்(ஆன நன்னனின்)
இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய பெரிய மலைகள் (உமக்குப்)பின்னாகப்போக,
(புதிய இடங்களைக்கண்ட)வியப்பு மேலிட்ட, இனிய குரலையுடைய விறலியர்
மணமிக்க கரிய மலைத்தொடரில் குறிஞ்சிப்பண்ணைப் பாடி,
(தெய்வங்களைக்)கைகூப்பித்தொழுது வணங்கிப் புகழ்ந்து செல்வீர் -				360
கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து,
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால்,
திக்குத் தெரியாமல் மிக விரைவாக ஓடும் சுற்றத்தோடே,
(தோளில்)தொங்கவிட்ட உம்முடைய இசைக்கருவிகள் (நனைந்து)தொய்வடையாதபடி,		365
கிணற்றைப்போன்ற பெரிய பொந்துகளில் புகுந்துகொள்ளுங்கள் -
பெரிய பாறைகளைக்கொண்ட இறக்கத்தில் (திடீரென்று)முடிவுறும் (செங்குத்தான)சரிவுகளின் கிட்டப்போகாமல்,
குன்றுகளில் உள்ள நிறைந்த துன்பம்(தரும்) பள்ளங்களில்,
நின்று (சற்று உற்றுப்)பார்த்தாலும் கண்ணின் ஒளியைக் கவர்ந்துகொள்ளும்,
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து	370
(முரசை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,
(தடியை)ஊன்றினராக(வே) கடந்து செல்லுங்கள் - இடையூறுகள் மிகப் பலவாம்,
வேல்(முகப்பு) (வெயிலில்)காய்ந்ததைப் போன்ற (சுடுகின்ற)கூர்மையான(சில்லுகளைக் கொண்ட) கற்பாறையில்,
வெயில் ஆட்சிசெய்கின்ற இன்னல்(தரும்) வழிகளில்,
கதிரவன் (தன்)சினம் தணிந்த (மாலைப்)பொழுதில் செல்லக்கடவீர் -				375
புகழ் (எங்கும்)பரவி மிகுகின்ற அவனது(நன்னனது) (அவனைவிட்டு)விலகாத படைத்தலவரோடே
சிறப்புக்களில் மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள்(உள்ள),
(போரிட வந்த)அரசர்களின் நிலையழிக்கும் கோட்டைகளும் (அவ்வழியே)உள்ளன;
பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
முன்னே செல்பவன் (ஒதுக்கிப் பின்)விட்டுவிட்ட கடும் வேகம்கொண்ட திரண்ட கோல்,		380
இனிய இசையைத்தரும் நல்ல யாழின் (கூடு போன்ற)பத்தலினையும், இழுத்துக்கட்டப்பட்ட
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் மேற்பரப்பையும், (அடித்து உடைத்துவிடாதபடி)பாதுகாத்து,
(முன்செல்பவனைப் பற்றிய)கைப் பிடியை விட்டுவிடாமல் மெல்ல மெல்லப் போவீராக -
யானைகள் (ஒன்றோடொன்று)சண்டையிட்டதைப் போன்ற ஒன்றன்மீது ஒன்று ஏறிநிற்கும் பாறைகள்(மீது)
மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்;				385
(தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது (ஆயுதங்களை மேலே தூக்கி)ஆரவாரித்ததைப் போன்று,
(வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்
அழியாத நல்ல புகழையுடைய பெயர்களோடு நட்ட
(நடு)கற்கள் நிறைய நிற்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்;
(கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய,	390
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக -
(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
(புல்,புதர் வளர்ந்து)குறுகலான வழிகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, புற்களை முடிந்து (வழியுண்டாக்கி)வைப்பீர் -
போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்			395
கடவுள்(படிமங்கள்) ஓங்கிநிற்கும் காடுகள் நிறைந்த கிளைவழிகளில்,
(நன்னனை)ஒட்டிப்பழகாமல் பிரிந்துபோன (அவனுடன்)ஒத்துப்போகாத பகைவர்கள்
(இந்தப்பக்கம் இருப்பர் என்று)சுட்டிக்காட்டினும் நடுக்கம்வரும் கடினமான வழிகள் மிகப் பலவாம்;
‘தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய
(தனக்கென எதையும்)வைத்துக்கொள்ளாத வள்ளலிடம் செல்கின்றோம்' என்று சொன்னால்,	400
நலம்சிறந்து மிகுகின்ற அவனுடைய தொன்றுதொட்ட வாழ்க்கைநெறியையுடைய தொன்மையான ஊர்களுக்கு
உள்ளே இருப்பது போன்றதே நம்மைப்போன்றவர்க்கெல்லாம்;
(எனவே)களைப்புற்றபோது இளைப்பாறி அஞ்சாமல் போவீராக -
புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து,			405
வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது
குறுங்காட்டின் முகப்பிற்குள் விரைந்தோடுகின்ற மணங்கமழும் கொடிகளையுடைய கொல்லைக்காட்டினில்,
(தங்கள் ஊர்களைவிட்டு)வேற்று நிலமான (மேட்டுப்பகுதியில்)மேய்ந்த, எருதுகளையுடைய ஆநிரையைச்சேர்ந்த
சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைச் சுற்றிக்காவல்புரியும் இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால்,	410
(அதைக்குடித்து)பரிசில் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;
(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,
கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து,
கல்லென்ற ஓசையையுடைய காட்டினில் கடல் போல் இரைச்சலிடும்				415
பலவித ஆட்டினங்களைக்கொண்ட மந்தைகள்(இருக்கும் இடத்தில்) இராத்தங்குபவராய்ச் சேர்ந்தால்,
பாலும் (தயிரில்)மிதக்கும் வரகுருண்டைச்சோறும் (அப்பொழுது)சமைக்காது (ஏற்கனவே இருந்ததைப்)பெறுவீர்;
நார்(போன்ற) உரோமத்தை உள்ளடக்கிய மெத்தை விரிப்பைக்கொண்ட கட்டில் போன்ற,
(ஆடுகளின்)உடலை உரித்துச் செய்த (வார்)மிதித்த தோலாலான படுக்கையில்,
நெருப்பே துணையாக தங்கிப் போவீர் -								420
(அம்பு எய்தால்)கூப்பிடு தூரத்தையும் கடக்கக்கூடிய கூரிய நல்ல அம்பினையும்,
கொடிய வில்லினையும் உடைய (காட்டுப்படையான)விற்படையினரின் கூட்டத்தைக் கண்டால்,
‘தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
(பூங்)கொடிபோன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்' என்று சொன்னால்,
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து,	425
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
(பின்னர்)அங்கே (அவர்)போகச்சொன்ன வழியைக் கொள்வீர் - அதுவே அக்காட்டின் தன்மையாம்,
தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,
தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,				430
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,
சரளைமண்ணுடைய மேட்டுநிலத்தின் (மழைநீரினால்)அரிப்புண்ட வழித்தடங்களில் (தேங்கியுள்ள)குளிர்ந்த
(மழைநீரைக்)குடித்து, (அதை மொண்டு உடல்)கழுவி (ப்பின் வழிக்கு)எடுத்துக்கொண்டவராய்ச் செல்வீராக -
சிவந்த மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் பூக்களைப் போன்ற
மூங்கிலினின்றும் கொண்ட அரிசி(யினால் செய்து தயிரில் மிதக்கவிட்ட)உருண்டைச்சோற்றின்மீது ஊற்றிய, 435
மேட்டுநிலத்தில் விளைந்த நெற்பயிரின்(ஊடே வளர்ந்த) அவரைப்பருப்பின் புளிசேர்த்த மசியலை,
இரவுக்கு, இடைவழியில் பட்ட வருத்தம் போக,
அகன்ற உட்பரப்பைக்கொண்ட (அங்குள்ள)ஊர்களிலுள்ள, கம்புகளை நெருக்கமாகக் கட்டிப்
புல்லால் வேய்ந்த குடிசைகளான வீடுகள்தோறும் பெறுவீர்;
தங்கத்தை (ச்சிறிது சிறிதாக)நறுக்கினதைப்போன்ற நுண்ணிதாக ஒன்றுபோலிருக்கும் அரிசியை,	440
வெண்மை(யான கஞ்சியை வடித்து)நீக்கி ஆக்கிய பெரிய உருவமுடைய (சூடான)சோற்றுருண்டையில்,
குளிர்ந்த(சூடற்ற) நுண்ணிய நெய்விழுதை உட்பொதிவாகக் கொண்டு,
இளைப்பாறி (அங்குத்)தங்கினால், தினமும் பெறுவீர்; (மேலும்),
சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல,
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் (பெறுவீர்);	445
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,
பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் குரலைக்கேட்டுப் போவீராக -
அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,
(உழுது உழுது)மென்மையாகிப்போன விளைநிலங்களும், இருக்கும் ஊர்கள்தோறும், நல்ல யாழின் 450
பண்களை மாறிமாறி வாசிப்பதைப்போல, (பலவித இன்பம் தரும்)சோலைகளிலும், துயிலிடங்களிலும்,
பலநாள் தங்கினும், (அல்லது ஒருநாள் மட்டும்)தங்கியவராய்ச் சென்றாலும்,
(அவற்றை)மிகப் பல உடையது அவனுடைய குளிர்ச்சியான மருதநிலங்களைக்கொண்ட நாடு;
சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்(துண்டங்களை),	455
நிலையாக நின்று மீன்பிடிப்போர் போட்ட நீண்ட நரம்பையுடைய தூண்டிலால் பிடித்த,
பெண்யானையின் துதிக்கையைப் போன்ற, சிவந்த கண்களையுடைய விரால்மீன்களின்,
உடுக்கையின் முகப்பரப்பை ஒத்த, துண்டங்களோடு கலந்து,
பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்,
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,				460
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து (அவற்றைச்)சரித்து,
(போரடித்து)வளம் சேர்க்கும் தொழிலாளிகள் நெல்லை முகந்து தர,
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை,
இள வெயில் சூரியனையுடைய(காலைவேளையில்) (நெற்)களங்கள்தோறும் பெறுவீர்;
(மீனின்)முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த (மீன்துண்டங்களோடு)வெண்மையான சோற்றை ,465
‘வண்டுகள் மொய்க்கும்படி மணங்கமழும், தேன் சொரியும் (தலையில் சூடிய)மாலையினையும்
திண்ணிய தேரையுமுடைய நன்னனுக்கே (இது)உணவாக ஆகும்' என(ப்புகழ்ந்துரைத்து)
பார்ப்போர் வியக்கும்படி, (உமது)சுற்றத்துடன் உண்டு,
எருதுகளை ஓட்டும் உழவரின் (உழவுப்)பாட்டோடு இயையுமாறு (உமது)நல்ல யாழில்
மருதப்பண்ணை வாசித்து, (அங்கு)இளைப்பாறியவராய்ச் செல்வீர் -					470
வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா,
உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு,
(குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்,
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,				475
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக -
முத்துமணிகள்(கேட்பாரற்றுத்) தூங்குகின்ற, உயர்ந்தோங்கிய மதிலையுடைய,
ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் நிறைந்துவாழும்,
அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய,			480
ஆறு என்றுசொல்கிறமாதிரி இருக்கும் தெருக்களையுடைய, திருவிழாவோ என்றுநினைக்கும்படி(மக்கள் கூடிய),
(ஊரைப்பற்றி)ஏளனம்பேசுவோர் (வழி தவறிப்போமோ என)அஞ்சும், சந்திகளையும் தெருக்களையும்கொண்ட,
கடலோ (அல்லது) பெருமழையோ என்று நினைக்கும்படியாக ஒலிக்கும் பேரிரைச்சலோடு,
மலையோ (அல்லது) முகில்கூட்டமோ என்று நினைக்கும்படியாக மாடங்கள் உயர்ந்துநிற்க,
(மக்கள் தம்)துன்பம் தீர்க்கும் விருப்புடன் இன்புற்று அமர்ந்து தங்கியிருக்கும்,			485
குளுமை பொழியும் சோலைகளில் பல்வித வண்டுகள் ரீங்காரம்செய்யும் --
- (இன்னும்)வெகு தூரத்திலிருப்பதன்று; -- (அவன் பழமையான சிறப்பியல்புகள் கொண்ட தொன்மையான ஊர்)-
(மன்னனோடு)இசைந்துபோகாத பகைவரின் கரிய தலைகள் துண்டிக்கப்பெற,
பருந்துகள் (சதைகளைத் தூக்கப்)பாய்ந்திறங்க, கள வெற்றிகொள்ளும் ஒளிரும் வாளையுடைய மறவர்
(தம்)கரிய காம்பினையுடைய வேலைச் சாத்திவைத்திருக்கும் திட்டிவாசல்களையுடைய,		490
கடுமையான காவலையுடைய கோட்டைவாசலுள் (யாரும் தடுப்பரோ என)ஐயம்கொள்ளாமல் நுழைவீராக;
மரத்தடித் திண்ணைகளில் வசிப்போராய் தொலைதூர நாட்டிலிருந்து வரும் பரிசிலர் (இவர்),
‘வெற்றிகொள்ளும் போரில்(வல்ல நன்னன்) மகன் (நன்னனின்) பெரும் சிறப்பியல்புகளை நினைத்து
வந்திருக்கின்றனர் போலும், பாவம் இவர்கள்' என்று(இரக்கப்பட்டு),
பார்ப்பவர்கள் எல்லாம், கனிவுடன், இனிது நோக்கி,							495
விருந்தினராகத் தங்க ஒவ்வொருவரும் (உறவினராக உம்மை)ஏற்றுக்கொள்ள, (அவரிடம்)சேர்ந்து,
(சொந்த ஊரைவிட்டு வந்த)மிகுந்த ஏக்கத்தால் அலைக்கப்பட்ட உம் வருத்தம் குறைந்துபோக -
நெருப்பைக் கக்கியது போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தில்,
(தன்)கூட்டமெல்லாம் ஓடிப்போய்விட (ஓடமுடியாமல்) வலிய அகப்பட்ட
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும், யானைக்கன்றும்,				500
வாய்திறவாத கரடியின் வளைந்த பாதங்களையுடைய குட்டியும்,
மலையுச்சியில் பிடித்த (நிலத்தைப்)பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய
மலையில் வாழும் மலையாடும், உறுதியான தலையையுடைய பெரிய செம்மறியாட்டுக்கிடாவும்,
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்,
குகையில் பதுங்கியிருந்த புலி கொள்வதற்காகப்பாய, (அதனால்)துன்புற்ற,				505
பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளைக்கொண்ட குட்டியும்,
அரக்கை (உருக்கிப்)பரப்பிவிட்டாற் போன்ற சிவந்த நிலத்தில்,
பருக்கைக்கற்களின்மீது தவழும் உடும்பின் வளைந்த பாதங்களைக்கொண்ட ஏறும்,
மலை அழகுற ஆடும் பேதைமை நிறைந்த கண்களைக்கொண்ட மயிலும்,
காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,					510
காட்டுப் பலாவின் மத்தளமோவென நினைக்கத் தோன்றும் பெரிய பழமும்,
(தானியங்களை)இடித்துக் கலந்துசெய்த(பொரிவிளங்காய்)உருண்டை போன்ற,(ஆனால்) மணம்மிக்க வடு மாங்காயின்
தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,
தூறலால் செழுப்புற்றுத் தழைத்து உயர்ந்த, அரும்புகள் முதிருகின்ற (மணம்வீசும்)நறைக் கொடியும்,
தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத்தோன்றும் நூறைக்கிழங்கும்,			515
பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும்,
மினுமினுப்பான(தோலையுடைய) புலி தாக்கிய புண் மிகுந்த யானையின்
முத்துக்களைக்கொண்ட தந்தத்தின் முழுதும் உறுதி மிகுந்த குவியலும்,
வளையல் உடைந்ததைப் போன்ற, செழுமையான இதழ்களையுடைய காந்தள்பூவும்,
புன்னைப்பூவும், திலகப்பூவும், மணமிக்க வயிரத்தையுடைய சந்தனமும்,				520
கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்,
நன்குசெய்யப்பட்ட கெட்டி மூங்கில் குழாயில், நன்கு பக்குவப்பட்ட, தேனிற்செய்த கள்ளின் தெளிவும்,
காட்டில் வசிக்கும் எருமையின், மூங்கில் குழாயினுள் ஊற்றப்பட்ட இன்சுவையுள்ள தயிரும்,
கருநீல நிறமான முற்றிய தேனின் நிறம் (எங்கும்)பரவியதைப்போன்ற, உயர்ந்த மலையில்
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,			525
இவற்றோடு சேர்ந்த ஆசினிப்பலாவும், (மற்ற)எல்லாப்பொருள்களும்,
குடகு மலையில் பிறந்த குளுமையான பெரிய காவிரியாற்றைக்
கடல் (தாகத்துடன்)குடிக்கும் ஆழமான கழிமுகத்தைப் போன்று,
(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையுடைய உயரமான வாயிலில் நிறைந்து (இருக்கும்),
மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானைகள்(இருக்கும்),				530
(காய்ந்த)சாணத் துகள்கள் (யானை மிதிப்பதால்)சிதறிக்கிடக்கும் முற்றத்தை அடைந்து,
மேகங்களின் முழக்கத்துக்கு ஈடாக முழங்கும் கண்களையுடைய முழவின் கண்கள் ஒலிக்க,
மூங்கிலால் உருவாக்கப்பட்ட பெருவங்கியத்தின் துளையிடங்கள் ஒலியெழுப்ப,
மருதப்பண்ணை வாசித்த கரிய தண்டினையுடைய சிறுயாழின்
நரம்பின் இசையை மீறாது அதனோடு சேர்ந்து ஒன்றுபட்டுப்					535
பாடும் முறையை (நன்கு)அறிந்த இனிய குரல்வளமுடைய விறலியர்,				
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தினின்றும் தம் நெறிமுறை தவறாது,
அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி, ‘சூளுரைத்து அதனைக்காப்பதில்
குறையாத நல்ல புகழோடு இருந்து மறைந்தோரின் வழிவந்தவனே,				540
(தம் புகழ்)இன்றைக்கு இங்கே முடிந்துவிடாது, உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி,
நடுவுநிலை அறிந்து உணர்ந்த பெரியோர்கள் மறைந்தனராக,
(அவர் கைக்கொண்டிருந்த)கொடையாகிய கடமையைச் செய்துமுடித்த அண்ணலே' என்று
(அவனது)வெற்றிகளால் கிடைத்த பெரும் புகழையும், அவன் சிறப்பியல்புகளையும் புகழ்ந்துகூறி,
(நீர்)சொல்லிச்சென்றதை முடிக்கவும் விடமாட்டாதவனாய், ‘(என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க	545
(நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது' என,
போரிடும் பகைவரை எதிர்கொள்ளும் படைத்தலைவர்களோடே (முகம்)மலர்ந்து,
சிறப்பு மிக்க தன் மனையின் முன்பகுதிக்கு (நீர்)வருவதை விரும்பிக்கேட்டு,
கலகலப்புள்ள (தன்)அவையோரின் நலமுள்ள வலப்பக்கத்தே இருத்தி,
‘சிறந்த அரசுரிமையையும், சினங்கொள்ளாத அமைச்சர்களையும்					550
அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்,
“எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய்,
தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்,
உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்				555
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே,
அதனால், புகழோடே முடிவடையட்டும், நமக்கு வரையப்பட்ட வாழ்நாள்' என்று
பரந்துபட்டு, (எல்லாவற்றிற்கும்)இடம்கொடுக்கும் வானத்தை(யும்)எட்டும் (உயர்ந்த)உள்ளத்தோடு
ஆசைகொண்டவராய்ச் சென்ற உம்மைக்காட்டிலும், தான் பெரிதும்
மகிழ்ந்த நெஞ்சத்தோடே கனிவுடன் இனிதாகப் பார்த்து,						560
இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை
ஏளனம் அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி,
பெண்நாய் (கடித்துக்)கொண்டுவந்த இளங்கொழுப்புள்ள தசைகளும்,
நீண்ட வெண்ணெல்லின் அரிசியும் தட்டுப்பாடு இல்லாமல்,
முதல்நாள் போன்ற ஆதரவுடன், (உம்முடன் உண்டான)உறவு சிறப்பெய்தி				565
பல நாட்கள் (அங்குத்)தங்கினாலும் பெறுவீர், (தொடர்ந்து)தங்காமல்
“போகலாமென்று எண்ணுகிறோம், எமது பழைய ஊருக்கு, திரும்பவும்”, என்று
(தயங்கித்தயங்கி)மெதுவாகக் கூறி, (அவ்விடம் விட்டுச்)சென்றால், உங்களில்
தலவனானவன் பொற்றாமரையைச் சூட, விறலியர்
சீர்சிறப்பாக(=சீதனமாக) ஒளிரும் அணிகலன்கள் அணிய,						570
(ஆற்று)நீர் (சீராக)ஒடுவதைப்போன்று வரிசையாகச் செல்லும் நெடிய தேர்களையும்,
யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவரது), மலையோ என்று நினைக்கத்தோன்றும் யானைகளையும்,
(கழுத்தைச்சுழ்ந்த)மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்,
அழகிய சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரைகளையும்,
(எடுக்க எடுக்கக்குறையாமல்)மண் அரிக்கக் கிடக்கும் பொருள்குவியலுடன், அனைத்தையும்	575
வறுமையில்வாடும் புலவர்கள் ஏந்திய கைகள் நிறைய,
அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்
வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள),
மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில், சடுதியாக
மழை சொரிவதைப் போலக் கொடை வழங்கி,							580
(போவோம் என்ற)முதல்நாளிலேயே(தாமதிக்காமல் உம்மை)வழியனுப்புவான் (தன்)பரிசிலோடே - மலையின் (அருவி)நீர்
வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்
மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பத்துப்பாட்டு – மலைபடுகடாம்

மலைபடுகடாம்   – Malaipadukadām

Translation by Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

பாடியவர்         –      இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன்     –      நன்னன் வேண்மான்
திணை            –      பாடாண்திணை
துறை             –      ஆற்றுப்படை
பாவகை           –     ஆசிரியப்பா

மொத்த அடிகள்     –      583

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு

எடுத்துச் செல்லுதல்

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,

மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,   5

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,

கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,  10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,

நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)

Musical Instruments are Packed

You who carry your musical instruments on balancing

poles have packed them in draw-string bags that look like

monsoon season’s ripe jackfruit clusters, a mulavu drum

with sturdy, tight straps that creates roaring sounds like

the sky-shattering noises from beautiful clouds in the dark

sky that give prosperity with rains, an ākuli drum, bright

cymbals with intricate designs made from melted and flattened

metal, a kōdu horn decorated with bright, dark hued

pea**** feathers, sweet-music creating splendid small

thoompu horn along with a long thoompu horn that sounds like

the hollow, breathing trunk that hangs between the eyes of an

elephant, sweet flute that sounds like the ili string of the yāl,

thattai with croaking sounds of frogs played in the middle,

strong-mouthed ellari drum played to beat, a pathalai drum

that gives perfect beat, and other musical instruments!

Notes: கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் (6) – நச்சினார்க்கினியர் உரை – கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானையின் கைபோலும் நெடிய வங்கியத்தோடு.  உயிர் – ஆகுபெயர்.  இனி நெட்டுயிர்ப்பு கொண்டாற்போலும் ஓசையை உடையை என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையிடையே துளையிடப்பட்டிருந்ததால் கண் இடை விடுத்த தூம்பென்றார்.  இதன் ஒலி யானை நெட்டுயிர்ப்புக் கொள்ளும் ஒலியை ஒத்தலின் களிற்று உயிர்த் தூம்பென்றார்.  இளி (7) – யாழின் ஒரு நரம்பு.  அரிக்குரல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘யாழ் நரம்பு’ என்ற பொருளும் உடைத்தாகலின் கரடிகை எனினுமாம்.  கரடிகை – கரடி கத்தினாற்போலும் ஓசையுடைய பறை வகை, தவளையினது குரல் எனினுமாம்.  தட்டை  (9) – உ. வே. சாமிநாத ஐயர் உரை – குறுந்தொகை 193 – மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது.   எல்லரி (10) –  C. ஜெகந்நாதாசார்யார் உரை – சல்லி, சல்லென்ற ஓசையுடையதால் பெற்ற பெயர், பிறவும் (11) – பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு,சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை.  காய (13) – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – காவின, காவுதல் – தோளில் சுமந்து செல்லல்.  புறநானூறு 206-10 ‘காவினெம் கலனே’.  புறநானூறு 152-15 – கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்.  காவுதல் – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – தோளில் சுமந்து செல்லுதல்.  தோற்சுமை எடுப்போர் ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருள்களைப் பை உறி முதலியவற்றில் சம எடை உடையனவாகச் சீர் செய்து தூங்கவிட்டு அத் தடியின் நடுவினைத் தோளில் ஏற்றிச் சுமப்பர். இத் தடி காவுத் தடி எனப்படும்.  இக்காலத்தே காவடி என வழங்குவர்.

Meanings:  திரு மழை தலைஇய – poured rains that give prosperity (தலைஇய – சொல்லிசை அளபெடை), இருள் நிற விசும்பின் – in the dark colored sky, விண் அதிர் இமிழிசை கடுப்ப – like the sky shattering roars of clouds (கடுப்ப – உவம உருபு), பண் அமைத்து – creating tunes,  திண் வார் – firm straps, விசித்த – tightly tied, pulled and tied, முழவொடு – with mulavu drums, ஆகுளி – ākuli drum,  நுண் உருக்கு உற்ற – intricate and melted, விளங்கு – bright, அடர்ப் பாண்டில் – cymbals made from flattened metal (கஞ்ச தாளம், சால்ரா, அடர்- தகடு), மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு – with long kōdu horn decorated with pea**** feathers, கண் இடை விடுத்த – has intermittent holes, open between the eyes, களிற்று உயிர்த் தூம்பின் – along with long thoompu that is like the breathing trunk of male elephants, along with the long thoompu that sounds like the breathing of male elephants, இளிப்பயிர் இமிரும் – creates pleasant/sweet fine sounds that resemble that of the ili string of the yāl, குறும் பரம் தூம்பொடு – along with small splendid thoompu, விளிப்பது கவரும் – well tuned with attractive musical tones, தீம்குழல் – sweet flute, துதைஇ – closely (சொல்லிசை அளபெடை),  நடுவு நின்று இசைக்கும் – playing in the middle, அரிக்குரல் தட்டை – a bamboo musical gadget called thattai with frog sounds, a bamboo musical gadget called thattai with sounds of bears, a bamboo musical gadget called thattai with sharp sounds, கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி – strong-mouthed ellari with clear rhythmic sounds (எல்லரி – சல்லிகை, சல்லென்ற ஓசையுடைத்ததால் பெற்ற பெயர்), நொடிதரு பாணிய பதலையும் – and with pathalai drum that gives perfect beats, பிறவும் – and other musical instruments, கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப – like the monsoon season’s ripe fruit clusters of jackfruit trees (கடுப்ப – உவம உருபு), நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் –  you with your instruments on balancing shoulder poles packed in perfect draw-string bags (காய – கா என்ற வினைப்பகுதியினடியால் பிறந்த குறிப்புப் பெயரெச்சம், கலப்பையிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று)

அவர்கள் கடந்து வந்த மலை வழி

கடுக் கலித்து எழுந்த கண்அகன் சிலம்பில்,

படுத்து வைத்தன்ன பாறை மருங்கின்,   15

எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ்சிறுநெறி,
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்,
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது,

இடிச்சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகித் (14 – 20)

Mountain path

Without worrying about protection,

you have passed through the huge mountain

range with kadukkāy trees, near lying boulders

that appear like they had been placed, on a difficult,

narrow path that looks like it was set there, on the

mountain where forest men who shoot arrows,

who unite with their wives, do not cause sorrow to

those who travel on the high mountain path created

with broken stones, but guide them on the path.

Meanings:  கடுக் கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – on the huge mountain filled with kadu trees, gall nut tree, terminalia Chebula, படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் – near the spread boulders which appear like they had been placed, எடுத்து நிறுத்தன்ன – like lifted and placed, இட்டு – narrow, அருஞ்சிறு நெறி – difficult narrow path, தொடுத்த வாளியர் – those who shoot arrows, துணை புணர் கானவர் – forest men who unite with their wives, forest men who are with their wives, இடுக்கண் செய்யாது –without causing trouble, இயங்குநர் இயக்கும் – guide those on the path, அடுக்கல் மீமிசை – on the mountains (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அருப்பம் பேணாது – without considering protection, without worrying about protection, இடிச்சுர நிவப்பின் – on the high path broken and created, இயவுக் கொண்டு ஒழுகி – passing through it

பேரியாழின் இயல்பு

தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ,   25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்  30

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப,
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி,
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை,   35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்; (21 – 37)

Description of the Large Lute

The nine frets on the large lute are like varied bangles

worn by women; the polished tight strings are tuned to

perfection without a fault even the size of tiny, white

mustard; the leather top of gold color is attached to the

sound producing bowl with glue; nails driven into its tiny

holes that are in a row resembling long millet clusters;

the bridge is made of ivory; its curved sound hole on the

leather top resembles the beautiful stomachs of young

women with five-part braids with natural fragrances that

cause swarming bees to have wedding fragrances, that

drape down on their their lovely, curved chests; and its

pretty, curved, lifted stem filed with a fine rasp appears

shiny dark like kalam fruits.

Notes:  கடிப்பகை (22) – கடி என்பது பேய்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிபகை என்றார்.  வதுவை நாறும் வண்டு ஐம்பால் மடந்தை (30) – நச்சினார்க்கினியர் உரை –  தன்னிடமிருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடைய நாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினை உடைய மடந்தை, பொ. வே. சோமசுந்தரனார் – வண்டுகள் புதுமணத்தைத் தோற்றுதற்குக் காரணமான நறுமணம் கமழ்கின்ற மயிரினையுடைய மடந்தை, வதுவை நாறும் என்றது வண்டுகள் புணர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றவாறு, C. ஜெகந்நாதாசார்யார் உரை – வண்டானது கலியாணம் செய்த நாற்றத்தை நாறுதற்குக் காரணமான இயல்பான மணத்தையுடைய மயிரினையுடைய.  புறநானூறு  109 – சுகிர் புரி நரம்பின்.  தொண்டு (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதென்னும் தொகை, C. ஜெகந்நாதாசார்யார் உரை – இந்த எண் உண்டான வார்க்கட்டு என்றது.  வார்க்கட்டு இந்த எண்ணைப் போலே தோற்றமளித்தல் என்பது.  ஒன்பது என்ற எண் தமிழ் முறையில் ‘௯’ என்று சுருள எழுதப்படுதல்போல் வார்க்கட்டும் சுருள அமைந்திருத்தலைக் குறிக்கும்.

Meanings: தொடித் திரிவு அன்ன – like the variations of bangles, தொண்டுபடு திவவின் – with the nine frets, கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்துத் தொடுத்த – tied and tuned perfectly sounding without even a small white mustard size fault, சுகிர் புரி நரம்பின் – with polished tight strings, with tightly tied strings, அரலை தீர உரீஇ – are tuned without fault (உரீஇ – சொல்லிசை அளபெடை), வரகின் குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ – tiny holes in a row that resemble long millet grain growing in clusters are placed (இரீஇ – சொல்லிசை அளபெடை),  சிலம்பு அமை – causing sound, பத்தல் பசையொடு சேர்த்தி – the body/bowl of the lute is attached using glue, இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – inserting nails tightly on the bright holes, புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – attaching a new bridge made with elephant tusk (வெண்கை – யானையின் கோடு, யானையின் தந்தம்), புதுவது போர்த்த பொன் போல் பச்சை – newly covered with golden colored leather, வதுவை – wedding, நாறும் – causing, வண்டு – honey bees, கமழ் – with fragrance, ஐம்பால் மடந்தை – young woman with five-part braid, மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – on the esteemed curved beautiful chests, அடங்கு மயிர் ஒழுகிய – draping controlled hair, அவ்வாய் கடுப்ப – like the beautiful stomach (கடுப்ப – உவம உருபு), அகடு சேர்பு பொருந்தி – attached to the interior, அளவினில் திரியாது – not differing in size, கவடு பட – separated,  கவைஇய சென்று – bent (கவைஇய  – சொல்லிசை அளபெடை), வாங்கு உந்தி – curved part of the lute, curved sound hole, நுணங்கு அரம் நுவறிய – filed with a fine rasp, carved with a fine saw, நுண் நீர் மாமை – nature of dark beauty, களங்கனி அன்ன – like kalam fruits, களாக்காய்,  Corinda tree, Bengal Currant, Carissa spinarum, கதழ்ந்து – greatly, closely, கிளர் – shining, உருவின் – in the form, வணர்ந்து ஏந்து மருப்பின் – with a curved lifted stem, வள் உயிர் – loud sounds (உயிர் – ஆகுபெயர் ஒலிக்கு), பேரியாழ் – large lute



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பாணரும் விறலியும் சூழ இருந்து கூத்தர்

தலைவனை அழைத்தல்

அமைவரப் பண்ணி அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்பத்,
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு,   40
உயர்ந்து ஓங்கு பெருமலை ஊறின் ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடிக்,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,

விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து,   45

இலங்கு வளை விறலியர் நிற்புறம் சுற்ற,
கயம் புக்கன்ன பயம்படு தண் நிழல்
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சிக்,
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! (38 – 50)

Addressing the Leader of Bards

O lord of the clan of artists who receive precious

gifts, whose poor bards with great skills play with

grace perfect music with proper arrangements suiting

the courts of rich kings, whose viralis are adorned

with bright bangles, their looks with red lines on their

eyes are better than those of a deer, their splendid

small feet, resembling tongues of weak dogs,

tired by climbing on lofty mountain

paths where pebbles hurt them, their swaying

hair like the plumes of pea****s that live in flocks,

and they surround you and rest under fine, cool shade

in the forest with long stretches of sand washed by the

river canals, with the feeling of entering a pond,

abandoning their sorrow, your group without very

young children!

Notes:  பை (40) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பை – பசுமை, ஈங்கு செல்வமுடைமையின் மேற்று.  செல்வத்தை பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு.  இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம்’.  The words பை தீர் பாண in Natrinai 167-6 has been interpreted by Pinnathur Narayanasamy Iyer as ‘வருத்தமில்லாத பாணனே’.  They have been interpreted by Avvai Duraisamy Pillai as வருத்தமுடைய பாணனே.  அமைவரப் பண்ணி (38) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாழை அமைவரப் பண்ணி என்றது பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு, என்னும் எண் வகையானும் இசை எழீஇ, வார்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை, என்னும் எட்டு வகை இசைக் கரணத்தானும் செவியால் ஓர்ந்து இயக்குதற்குத் தகுதியாக்கி என்றவாறு.  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77).

Meanings:  அமைவரப் பண்ணி அருள் நெறி திரியாது இசை பெறு – with proper arrangements and not differing from grace they  play music perfectly without mistakes,  திருவின் வேத்து அவை ஏற்ப – suiting the courts of rich kings, துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – with bards with no wealth who have great skills in their field, with old bards who have great skills in their field, உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறின் ஏறலின் – due to climbing on the tall lofty mountain paths (உயர்ந்து ஓங்கு – ஒருபொருட் பன்மொழி), மதம் தபு ஞமலி நாவின் அன்ன – like the tongues of dogs whose strengths are ruined, துளங்கு இயல் – splendid, மெலிந்த – tired, weakened, கல் பொரு சீறடி – small feet hitting the pebbles, கணம் கொள் தோகையின் – like the plumes of pea****s that live in flocks (தோகையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கதுப்பு இகுத்து அசைஇ – hair hanging and moving (அசைஇ – சொல்லிசை அளபெடை), விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து – with looks with eyes with red lines and looks that differ from that of a deer, with looks with eyes with red lines and better than that of deer, இலங்கு வளை விறலியர் – viralis with bright bangles,  நிற்புறம் சுற்ற – surrounding you, கயம் புக்கன்ன – like entering a pond, பயம்படு தண் நிழல் – beneficial cool shade, புனல் கால் கழீஇய – washed by the river canals (கழீஇய – சொல்லிசை அளபெடை), மணல் வார் புறவில் – in the forest where there are long sandy areas, புலம்பு விட்டு இருந்த – let go of sorrow, புனிறு இல் காட்சி – seen without infants, கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – O lord of the clan of artists (those who sing and dance) who receive precious jewels

நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்

எனல்

தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான,   55
புனை தார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக்கண் மங்கையர் கணவன்,
முனை பாழ்படுக்கும் துன்அருந்துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப்   60

புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தடக்கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு,
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த   65

புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின், (51 – 66)

Reaching Nannan for Gifts

I am returning from him with gifts, like a fine stream

that tumbles down a tall mountain carrying pure flowers,

as it dashes against its banks and rushes toward the ocean.

 

You and your family should go to Nannan, son of Nannan,

who wears fitting, large gold ornaments,

like flocks of birds that fly fast in the sky and go toward

forests that shower fruits.  He is husband to women with

curved, rounded arms that resemble bamboo, moist

eyes that appear like flowers, and painted, pretty breasts.

 

His handsome chest, decorated with sandal paste, has flower

garlands on which bees swarm.  His large hands are trained to

use bows.  He has great strength to ruin enemy lands, a man

of clear thinking who avoids evil thoughts.  He has the lovely

nature to donate to bards who plant seeds of praise.

 

Think of him and go to him with hope.  It is your good fortune

that you came across me.  Consider meeting me a good omen,

as you depart!

Notes:  புள்ளினிர் (66) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்ல முழுத்தத்தையும் நன் நிமித்தத்தையும் நன்கு எதிர்ந்தவர் ஆயினிர் எனினுமாம், புள் – இன்னின்ன பறவை ஆறு செல்வோர் முன்னர் இன்ன திசைக்கண் நின்று இன்ன திசைக்கண் செல்லின் நன்மை விளையும் அல்லது தீங்கு விளையும் எனக் கூறும் நிமித்த நூல்களில் நலம் விளைதற்கு ஏதுவாகக் கூறப்பட்ட புட்கள் என்க.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).

Meanings:  தூ மலர் துவன்றிய – filled with pure flowers, கரை பொரு – hitting the shores, நிவப்பின் – tall, மீமிசை – atop (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), நல்யாறு – fine river, கடல் படர்ந்தாஅங்கு – like it goes toward the ocean (படர்ந்தாஅங்கு – இசை நிறை அளபெடை, ஆங்கு உவம உருபு), யாம் அவண் நின்றும் வருதும் – we come from there, நீயிரும் – you too, கனி பொழி கானம் – forest which shower fruits, கிளையொடு உணீஇய – to eat with relatives (உணீஇய – சொல்லிசை அளபெடை, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), துனை பறை நிவக்கும் புள்ளினம் மான – like flocks of birds that fly fast high above (துனை  – உரிச்சொல், மான – உவம உருபு, a comparison word), புனைதார் – with woven garlands, பொலிந்த – beautiful, splendid, வண்டுபடு – bee-swarming, மார்பின் வனை புனை எழில் முலை – with chests with beautiful breasts with drawn patterns (thoyyil), வாங்கு அமைத் திரள் தோள் – rounded arms like curved bamboo, மலர் போல் மழைக்கண் மங்கையர் கணவன் – he is the husband of women with flower-like eyes, முனை பாழ்படுக்கும் துன் அருந்துப்பின் – with great strength to ruin enemy lands, இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – to bards who plant the seeds of praises, புது நிறை வந்த புனல் அம் சாயல் – lovely nature like that of new floods, மதி மாறு ஓரா – not thinking against his intelligence, நன்று உணர் சூழ்ச்சி – thinks only about good behavior, வில் நவில் தடக்கை – large hands that are skilled with bows, மேவரும் பெரும் பூண் நன்னன் சேய் நன்னன் – Nannan who is the son of Nannan wearing fitting huge ornaments, படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயின் – if you think about him and go to him with principle, பொழுது எதிர்ந்த – meeting me on your way at this time, புள்ளினிர் – it is a good omen for you, மன்ற – அசை நிலை, expletive, for sure, என் தாக்குறுதலின் – that you came across me

கூத்தன் நன்னனைப் பற்றிக் கூறுதல்

ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும்,
மலையும் சோலையும், மா புகல் கானமும்,
தொலையா நல்இசை உலகமொடு நிற்பப்,   70

பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் தரீஇப்,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு

தூத்துளி பொழிந்த பொய்யா வானின்,   75

வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும், புறம் மறைத்து சென்றோரைச்
சொல்லிக் காட்டி சோர்வு இன்றி விளக்கி,
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்,   80

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்,   85
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழிலாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேல் நிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,

இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு,   90

திரைபடக் குழிந்த கல் அகழ் கிடங்கின்
வரை புரை நிவப்பின் வான்தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்;

கேள் இனி! (67 – 94)

One bard telling the other about Nannan

Be aware of the good and bad on the paths in his fine

land which gives food abundantly without changes,

has mountains, groves and forests with animals!  His

unspoiled fame will last as long as the earth lasts!

 

With the tributes he got from enemies who ran away

showing their backs, he donates precious jewels to poets.

Not content with that, he donates more like the rain.

He has the ability to bring his enemies under his control,

and he gives totally to bards who praise his kingship.

 

Like the unfailing skies that drop pure water drops, with

a peaceful countenance, he gives without keeping for

himself.  In his happy court, he is surrounded by the wise

who protect and express the views of those with limited

abilities who are unable to express themselves in front

of others.

 

Know the greatness of the god who resides in Naviram

who ate poison, who causes the earth surrounded with

water to tremble!  Know the faultless splendid nature

of Nannan who is like the sun that rises, chasing wide

spread, pitch darkness, to usher in the day!

 

He marched far into distant enemy countries and routed

their armies.  He was praised by his ancient clan for

performing charitable duties to his noble warrior brigades

who brandished swords and ruined the noble battle-

elephants of enemies.

Listen now to what I have to tell you about his greatly

famous town with sky-high fort walls surrounded by a

wide moat with waves caused by digging up stones,

where crocodiles with curved legs search for prey!

Notes:  புகழுநர் (73) – C. ஜெகந்நாதாசார்யார் உரை – சூதர் (நின்று ஏத்துவார்), மாதர் (இருந்து ஏத்துவார்), பாணர், கூத்தர் முதலியோர்.  நவிரம் (82) – இம்மலை திருவண்ணாமலையின் அருகில் உள்ளது.  திரிசூலகிரி என்றும் பருவதமலை என்றும் இன்று வழங்கப்படுகின்றது.  நுகம்பட (87) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலியுண்டாக, உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 80) – நடுநிலைமையுண்டாகும்படி, நுகம் – நுகத்தின் தன்மை, நடுவு நிலைமை, வலிமை.  தொல்லோர் (89) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொல்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது தொல்படையே.  ஆதலான் ‘தொல்லோர் வரவும்’ என்றார்.  புரை – புரை உயர்வாகும் (தொல்காப்பியம், உரியியல் 4).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings:  ஆற்றின் அளவும் அசையும் – the good and bad on the paths, நல் புலமும் – fine land, வீற்று வளம் சுரக்கும் – gives abundantly without changes, அவன் நாடுபடு வல்சியும் – food prodeced in his country, மலையும் சோலையும் – mountains and groves, மா புகல் கானமும் – forests with animals, தொலையா நல் இசை – unspoiled fine fame, உலகமொடு நிற்ப – will stay until the end of the earth,

பலர் புறம் கண்டு – his many enemies ran away showing their backs, அவர் அருங்கலம் தரீஇ – he donates  their precious jewels (தரீஇ – சொல்லிசை அளபெடை), புலவோர்க்குச் சுரக்கும் – giving to poets, அவன் ஈகை – his generosity,  மாரியும் – like the rain, இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் – ability to bring his enemies under his control, புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும் – even though he gives totally to bards and others who praise his kingship, அமரா நோக்கமொடு – with an unsettled attitude – since he wants to donate more, தூத்துளி பொழிந்த பொய்யா வானின் – like the unfailing sky that drops pure water drops, like the unfailing clouds that drop pure water drops,

வீயாது சுரக்கும் – gives without keeping, அவன் நாள் மகிழ் இருக்கையும் – his happy day court, நல்லோர் குழீஇய – amidst wise people who have gathered (குழீஇய – சொல்லிசை அளபெடை), நா நவில் அவையத்து வல்லார் ஆயினும் – even if they are able among others in the assembly with abilities of tongue, புறம் மறைத்து – hide their inability, சென்றோரை- those who went, சொல்லிக் காட்டி – pointed and said, சோர்வு இன்றி விளக்கி – explaining without slack, நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – the fine behavior of those around him who act very well,

நீர் அகம் பனிக்கும் – earth surrounded by water trembling, அஞ்சுவரு கடுந்திறல் – fierce bravery, பேர் இசை – great fame, நவிரம் மேஎய் உறையும் காரி உண்டி – residing on Naviram mountains whose poison is food (மேஎய் – இன்னிசை அளபெடை), கடவுளது இயற்கையும் – nature of the god, Sivan, பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் ஞாயிறு அன்ன – like the sun that rises to create days removing darkness that spreads, அவன் வசை இல் சிறப்பும் – his faultless greatness, இகந்தன ஆயினும் – even if far away, தெவ்வர் தேஎம் – enemy countries (தேஎம் – இன்னிசை அளபெடை),

நுகம்படக் கடந்து – went with strength, went in a just manner, நூழிலாட்டி – killed, புரைத்தோல் – noble elephants, வரைப்பின் – in the place with rows, வேல் நிழற் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்த – did donation duties to the great men who had great army skills using spears, அவன் தொல்லோர் – his warriors, his ancient clan, வரவும் – praising, இரை தேர்ந்து இவரும் – wandering and searching for food, கொடுந்தாள் முதலையொடு – along with crocodiles with curved legs,

திரைபட –  causing waves to rise, குழிந்த கல் – dug up removing stones, அகழ் கிடங்கின் – in the  wide moat, வரை புரை – like mountains (புரை – உவம உருபு, a comparison word) நிவப்பின் வான் தோய் இஞ்சி – sky-high fortress/fort walls, உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் கேள் இனி – listen now to what I say about his greatly famous ancient town with abundance (வெறுத்த – செறிந்த, abundant, dense, மாலை – இயல்பு, trait)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வழியினது நன்மையின் அளவு கூறுதல்

வேளை நீ முன்னிய திசையே,

மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்   95
புதுவது வந்தன்று இது அதன் பண்பே,
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும் புனத்து,

அகல் இரு விசும்பின் ஆஅல் போல,   100

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை,
நீலத்து அன்ன விதைப்புன மருங்கில்,
மகுளி பாயாது மலி துளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்,
கௌவை போகிய கருங்காய் பிடி ஏழ்  105

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண்,

பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப,
கொய் பதம் உற்றன குலவுக் குரல் ஏனல்,
விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்,

குளிர் புரை கொடுங்காய் கொண்டன அவரை,   110

மேதி அன்ன கல் பிறங்கு இயவின்,
வாதி கை அன்ன கவைக்கதிர் இறைஞ்சி,
இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகே,
பால் வார்பு கெழீஇப் பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்,   115

வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்னக்,
கால் உறு துவைப்பின் கவிழ்க் கனைத்து இறைஞ்சிக்,
குறை அறை வாரா நிவப்பின் அறை உற்று,
ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்ப,

புயற் புனிறு போகிய பூ மலி புறவின்   120

அவற் பதம் கொண்டன அம்பொதித் தோரை,
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி அமன்ற வெண்கால் செறுவில்
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்,

செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக்   125

காயம் கொண்டன இஞ்சி, மா இருந்து
வயவுப் பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை,
காழ்மண் எஃகம் களிற்று முகம் பாய்ந்தென

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய   130

துறுகல் சுற்றிய சோலை வாழை,
இறுகு குலை முறுகப் பழுத்த பயம் புக்கு
ஊழ் உற்று அலமரும் உந்தூழ் அகல் அறைக்
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்

காலின் உதிர்ந்தன கருங் கனி நாவல்,  135

மாறு கொள ஒழுகின ஊறு நீர் உயவை,
நூறொடு குழீஇயின கூவை, சேறு சிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமா, புண் அரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி,

விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்   140

குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்துக்
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரிச்
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே; (94 – 144)

The good on the path

In the direction that you take to see the Vēlir

king Nannan, there are wealthy towns with great

prosperity and new status.  That is the nature

of the path where lightning strikes and rain falls

for seeds to grow wherever they are placed,

according to the desires of those who planted

them, in the wide, huge woodland.

 

The spreading thin musundai vines with white flowers

and sapphire colored leaves are like the constellation

of pleiades in the wide, dark sky.  The mature pods

of sesame plants with many forked branches are green,

without the makuli disease, their pods filled with

seven times oil, which is a handful. There are many

forest springs which have taken in abundant rain

water and appearing like water pots filled to the brim.

 

The heavy clusters of mature millet ears are ready

for harvest.  They look like the united trunks of

young elephants engaged in fights.  In all the

millet stubble, vines of sickle-shaped avarai

beans have shed their flowers that appear like

drops of mature curds.

 

On the paths where boulders are strewn like lying

buffaloes, varaku grain clusters forked like the

fingers of those who argue, are ready for reaping.

The white mountain aivanam paddy spears that have

matured well are whipped by roaring winds

blowing in different directions and they are bent

like an army of soldiers who have been hurt.

The tall, mature, sweet sugarcanes are ready to be

cut for crushing in the factories.

 

In the forest filled with flowers fully open from rains,

lovely clusters of bamboo seeds are mature, ready to be

flattened into aval.  In the fields where seeded aiyavi

mustard has grown without plowing, weeds are

removed with weeding hooks.

In the fields with white stubble, blue waterlilies with long

stems, have blossomed like darkness, with fragrance.

Ginger roots have matured beautifully with heat.

Kavalai yams with thick creepers, that are made into

flour, have matured in all the pits, big like legs of strong

female elephants.

 

Banana groves flourish surrounded by boulders.

The tips of their thick stems with buds, after the flowers

have been lost, touch the nearby rocks, appearing like

spears with hilts that plunge into faces of elephants.

Seeds of swaying bamboo have grown in mature, close

clusters, to benefit people.

On the wide boulders, winds have dropped black fruits

from nāval trees.

 

Uyavai vines that secrete spit when chewed are spread,

thick koovai yams are in clusters, mango trees have sweet

juice in their fruits preventing those who eat from going

elsewhere, breadfruits crack dispersing their seeds, and

clusters of jackfruits that hang above and below receiving

rain, appear like drums of artists, and sway in

the mountains where owls hoot like the beats of ākuli

drums with roaring eyes, that are beat with fingers.

Notes:  பால் வார்பு (114) – C. ஜெகந்நாதாசார்யார் உரை – வார்த்தல் ஒழுகலால் கட்டுதலை உணர்த்திற்று.  குறை அறை வாரா (118) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறைந்து போதலும் அற்றொழிதலும் உண்டாகாத, நச்சினார்க்கினியர் உரை – அறை குறை வாரா = பாத்தி குறைபடுதல் உண்டாகாத.  மா இருந்து (126) – நச்சினார்க்கினியர் உரை – முற்றி மாவாகும் தன்மை தன்னிடத்தே உளவாய்.  செய்யாப் பாவை (125) – நச்சினார்க்கினியர் உரை – இஞ்சிக் கிழங்கைப் பாவை என்பது மரபு, ஒருவரால் பண்ணப்படாத பாவை.  செய்யாப் பாவை – குரவ மரத்தின் மலர் (ஐங்குறுநூறு 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குரவம் பூ உருவத்தால் பாவை போறலின் பாவை என்றே உவமவாகு பெயராற் கூறுப.  ஈண்டுச் செய்யாப் பாவை என்றது பாயா வேங்கை, பறவாக் கொக்கு என்பனபோல வெளிப்படை.  (பாயா வேங்கை – வேங்கை மலர், பறவாக் கொக்கு – மாம்பழம்).  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  யாணர்– புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  முரஞ்சல் – முதிர்வே (தொல்காப்பியம், உரியியல் 35).  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77).

Meanings:  வேளை நீ முன்னிய திசையே – the direction you desire to go to see Vēlir king Nannan, the path you desire to go to see Vēlir king Nannan (திசையே – ஏகாரம் பிரிநிலை, implying exclusion, திசை ஆகுபெயர் செல்லும் வழிக்கு), மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் – with wealthy towns with abundant prosperity, புதுவது வந்தன்று – new status/attitudes came (வந்தன்று – அன் சாரியை, று – விகுதி, த் – இடை), இது அதன் பண்பே – this is their nature of the path, வானம் மின்னு வசிவு பொழிய – the clouds split with lightning strikes and rain falls (மின்னு – மின் உகரச்சாரியை பெற்று மின்னு என நின்றது), ஆனாது இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய – places were seeds were sown have grown according to the desires of those who planted them, பெயலொடு வைகிய – stayed with the rain, வியன்கண் இரும் புனத்து – in the wide huge woodland, அகல் இரு விசும்பின் – in the wide dark skies, ஆஅல் போல – like the Pleiades constellation – Karthikai star (ஆஅல் – இசைநிறை அளபெடை, ஆல் – ஆரல் என்பதன் விகாரம்),

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – white colored and spread thin musundai creepers, Rivea ornata, Leather-berried bindweed, நீலத்து அன்ன – like sapphires, leaves are like sapphire gems (நீலத்து – நீலம், அத்து சாரியை), விதைப்புன மருங்கில் – in the seeded land, மகுளி பாயாது – without  disease attacking (on the sesame plants), மலி துளி தழாலின் – due to taking in abundant rain water, அகளத்து அன்ன – like water pots (அகளத்து – அகளம், அத்து சாரியை), நிறை – full, to the brim, சுனைப் புறவின் – in the forest with many springs, in the forest with many ponds, கௌவை போகிய கருங்காய் – black sesame seed pods that are past tender stage, பிடி – handful, ஏழ் நெய் கொள – had oil for seven in one, ஒழுகின பல்கவர் ஈர் எண் – sesame plants that have grown with many branches,

பொய் பொரு – fake fights, கயமுனி முயங்கு கை கடுப்ப – like the trunks of young elephants (கடுப்ப – உவம உருபு), கொய் பதம் உற்றன – attained plucking stage, குலவுக் குரல் ஏனல் – bent millet clusters, விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு dropped flowers that looked like separated mature curds, இருவிதொறும் – on all the millet stubble, குளிர் புரை – like sickles (curved) (புரை – உவம உருபு, a comparison word), கொடுங்காய் கொண்டன அவரை – avarai have become curved beans,

மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – on the path filled with huge rocks that look like buffaloes, வாதி கை அன்ன – like the joined fingers of those who argue in court, கவைக் கதிர் இறைஞ்சி – forked grains have bent, இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகே – the varaku millet spears in the huge field were cut with iron sickles, பால் வார்பு கெழீஇ – dripping with milk, with thickened milk, with maturity (கெழீஇ – சொல்லிசை அளபெடை), பல் கவர் வளி போழ்பு – with taking the winds blowing in different directions going between them,  வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் – the mountain white paddy matured perfectly, வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன  – like an army of foot soldiers with spears being hurt, கால் உறு துவைப்பின் – due to the loud whipping wind, கவிழ்க் கனைத்து இறைஞ்சி – bent down and curved with sounds, குறை அறை வாரா நிவப்பின் – with tall growth without any reductions, அறை உற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்ப – sweet cane sugarcanes ready to be cut for the factories, புயல் – rain, புனிறு போகிய – immaturity left, fully blossomed, பூ மலி புறவின் – in the forest filled with flowers,

அவற் பதம் கொண்டன – reached the stage for aval, அம்பொதித் தோரை – bamboo seeds grains that are in the beautiful clusters, தொய்யாது வித்திய – seeded without plowing, துளர்படு – weeded with weeding hooks, துடவை – fields, ஐயவி – white mustard, அமன்ற வெண்கால் செறுவில் – in the fields with white stubble, மை என விரிந்தன – opened like darkness, opened like kohl, நீள் நறு நெய்தல் – fragrant blue waterlilies, செய்யாப் பாவை – tubers, roots (dolls that are not made, செய்யாப் பாவை – இஞ்சிக்கிழங்குக்கு வெளிப்படை), வளர்ந்து கவின் முற்றி காயம் கொண்டன இஞ்சி – ginger matured beautifully with heat (உறைப்பு, காரம்),

மா இருந்து – became mature to be made into flour, வயவுப் பிடி முழந்தாள் கடுப்ப – like the legs of strong female elephants (வயா என்பது வயவு ஆயிற்று, கடுப்ப – உவம உருபு), (முழந்தாள் = முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு, part of the leg between the knee and the ankle), குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன – grew down in all the pits in a lovely manner, கொழுங்கொடிக் கவலை – kavalai yams with thick creepers, காழ் மண் எஃகம் களிற்று முகம் பாய்ந்தென – like the spears with hilts that are thrust into the faces of elephants, ஊழ் மலர் ஒழி – after flowering, முகை – buds, உயர் முகம் தோய – their tips touch,

துறுகல் சுற்றிய – around boulders, சோலை வாழை – groves with banana trees, இறுகு குலை – close clusters, முறுகப் பழுத்த – ripened very well, ripened to soft consistency, பயம் புக்கு ஊழ் உற்று அலமரும் உந்தூழ் – swaying bamboo seeds that are beneficial, அகல் அறை – wide boulders, காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – since the trees gave benefits not just in the season, காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் – black nāval fruits that have fallen due to the winds,

மாறு கொள – differing,  ஒழுகின – they spread, ஊறு நீர் – flowing secreting spit, உயவை – uyavai vines, நூறொடு – with flour, குழீஇயின கூவை – thick clustered koovai tubers, arrowroot, Curcuma angustifolia (குழீஇயின – சொல்லிசை அளபெடை), சேறு சிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமா – sweet mangoes with juice that do not allow those who eat to go elsewhere, புண் அரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி – tall-trunked breadfruit whose seeds scatter when fruits break, விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்ப – like ākuli drums with roaring eyes are beat with fingers (கடுப்ப – உவம உருபு), குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து – in the the tall mountain ranges where owls hoot, கீழும் மேலும் – (jackfruits that hang on the trees) above and below, கார் வாய்த்து எதிரி – accepting the rains, சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி – hanging and appearing like the mulavu drums of drummers on the wasteland path, முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே – jackfruit branches that sway bent down with ripe fruits



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கானவர் குடி

தீயின் அன்ன ஒண் செங்காந்தள்,   145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,
அறியாது எடுத்த புன்புறச் சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,

வெறிக்களம் கடுக்கும் வியல் அறை தோறும்,   150

மண இல் கமழும் மாமலைச் சாரல்,
தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கி,
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆகத்,

தூவொடு மலிந்த காய கானவர்,   155

செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே,
இரும்பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்; (145 – 157)

Village of Forest Dwellers

The fire-like petals of the red kānthal flowers

flourish after the rains, and thinking that it is

flesh, a male kite with a dull back picks it up in

ignorance and drops it without eating when it

finds out it is not flesh, the petals dispersed on

wide boulders resemble a veriyāttam ground,

in the mountain with fragrances like those in

wedding houses.

 

When you reach the prosperous small village of the

forest dwellers with vegetables, who carry honey,

tubers and flesh of small-eyed pigs with unwanted parts

removed, using as carrying poles tusks of elephants that

died, you and your very large clan of relatives will

receive abundant food.

Notes:  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings: தீயின் அன்ன ஒண் செங்காந்தள் – red glory lilies are like flame, தூவல் கலித்த – flourishing due to rains, புது முகை – new buds,  ஊன் செத்து – thinking that it is flesh, அறியாது எடுத்த புன்புறச் சேவல் – a male kite with a dull back that took it unknowingly, ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென – since it dropped finding out that it is not flesh (ஊஉன் – இன்னிசை அளபெடை), நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – many petals that are like flames are spread (தாஅய் – இசைநிறை அளபெடை), வெறிக்களம் கடுக்கும் – like a veriyāttam ground, வியல் அறை தோறும் – on the wide boulders, மண இல் கமழும் – fragrances like a wedding house, மாமலைச் சாரல் – slopes of the huge mountain, தேனினர் – those with honey, கிழங்கினர் – those with tubers, ஊன் ஆர் வட்டியர் – those with bowls filled with flesh, சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கி – of small-eyed pigs after removing ruined/unwanted parts, பொருது தொலை யானைக் கோடு – tusks of elephants that were killed battling each other, tusks of elephants killed in battles, சீர் ஆக – as  shoulder balancing poles, with equal material on both sides, தூவொடு – along with meat, மலிந்த காய – abundant vegetables (tubers), கானவர் – forest dwellers, செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே – if you reach the very rich prosperous small village, இரும்பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் – you along with your very large clan will receive perfect food

வழியிலுள்ள சிற்றூரில் நிகழும் விருந்து

அன்று அவண் அசைஇ அற்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,

சேந்த செயலைச் செப்பம் போகி,   160

அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல் வேள் வயிரியம்” எனினே,

நும் இல் போல நில்லாது புக்குக்,   165

கிழவிர் போலக் கேளாது கெழீஇச்,
சேட் புலம்பு அகல இனிய கூறி,
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்; (158 – 169)

Hospitality in a Village on the Path

Stay there on that day and stay with them

for the night, and leave on the next day wearing

flame-like, bright flower clusters with your relatives,

go on a perfect path with asoka trees with red blossoms,

and reach a village on the mountain slopes after

passing through swaying, loud bamboo on a difficult

path, and tell them that you are the musicians of the

dignified Vēlir king Nannan whose victories in battles

cannot be handled by enemies, and become friendly

with the people there, as though they are your relatives.

They will utter sweet words to you who have come from

a distant place, to remove your sorrow.  You will receive

from them dishes with big pieces of meat roasted in ghee

along with colored millet rice.

Notes:  மான விறல் வேள் (மலைபடுகடாம் 164) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னன், மான விறல் வேள் (மதுரைக்காஞ்சி 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மான விறல் வேள் என்ற குறுநில மன்னன்.  குரூஉ (169) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:  அன்று அவண் அசைஇ – stay there on that day (அசைஇ – சொல்லிசை அளபெடை), அல் சேர்ந்து அல்கி – stay with them for the night, கன்று எரி – burning flame, ஒள் இணர் – bright flower clusters,  கடும்பொடு மலைந்து – wearing along with your relatives, சேந்த செயலைச் செப்பம் போகி – go on a perfect path with asoka trees with red flowers, Saraca indica, அலங்கு கழை நரலும் – swaying bamboos make noises, ஆரிப் படுகர் – difficult path,  சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – reach the village on the mountain slopes, நோனாச் செருவின் வலம்படு – victorious in battles that enemies cannot withstand, நோன் தாள் – great efforts, மான விறல் வேள் வயிரியம் எனினே – if you tell them that you are musicians of the dignified and victorious king Nannan of the Vēlir clan, நும் இல் போல நில்லாது புக்கு – enter like they are your home, கிழவிர் போல – like they are relatives (கிழவிர் – கிழமையென்ற பகுதியினடியாகப் பிறந்த முன்னிலை வினையாலணையும் பெயர்), கேளாது கெழீஇ – become friendly without asking (கெழீஇ – சொல்லிசை அளபெடை), சேட் புலம்பு அகல இனிய கூறி – they will utter sweet words to you who have come from far to remove your sorrow, பரூஉக்குறை பொழிந்த – with big pieces of meat thrown in (பரூஉ – இன்னிசை அளபெடை), நெய்க்கண் வேவையொடு – roasted dish with ghee, குரூஉக்கண் இறடிப் பொம்மல் – colored millet rice (குரூஉ – இன்னிசை அளபெடை), பெறுகுவிர் – you will receive



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்

ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு,   170

வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்,
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறைப்
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீ,ர
அருவி தந்த பழம் சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை,   175

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை,
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ,
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன் புளிக் கலந்து மா மோர் ஆக,

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து,   180

வழை அமல் சாரல் கமழத் துழைஇ,
நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி,
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்; (170 – 185)

Gifts from Nannan’s Mountains

Along with food that they bring climbing mountains,

they will give you sweet liquor aged in bamboo pipes

which you can drink without limits, and for your

hangover to go, in the morning, they will serve you

a dish made with scattered seeds of fruits brought

down by waterfalls, big pieces of meat of rapidly

running deer that are killed, chopped up pieces of fatty

meat of porcupines killed by female dogs,

sweet tamarind with pointed tops, fine buttermilk, and

seeds growing on bamboo added to the boiling liquid

along with white rice, cooked by a mountain woman with

flowers on her huge hair knot, their fragrances spreading

all over the mountains with surapunnai trees.  They,

along with their children, will be greatly hospitable

in all the houses, and prevent you from leaving.

Notes:  பெரும்பாணாற்றுப்படை 131-133 – நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர், மலைபடுகடாம் 176-1766 – முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ, புறநானூறு 177 – எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள் அமலை.  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  கடமான் (175) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடமான், புறநானூறு 157-10 – ஒளவை துரைசாமி உரை – காட்டின்கண் உள்ள மான்.

Meanings:  ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு – with food that they bring climbing (தரூஉம் – இன்னிசை அளபெடை), வேய்ப் பெயல் விளையுள் – poured and aged in bamboo (pipes), தேக்கட் தேறல் – sweet liquor, குறைவு இன்று பருகி – drinking without limits, நறவு மகிழ்ந்து – drunk with liquor, வைகறை – dawn, பழஞ் செருக்கு உற்ற – with old joy got (from the previous night’s drinking), நும் அனந்தல் தீர – for your hangover to go away, அருவி தந்த – brought by waterfalls, பழம் சிதை வெண்காழ் – scattered fruits’ white seed, வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை – big pieces of meat of rapidly running deer that are killed, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை – chopped up fatty meat of porcupines, பிணவு நாய் – female dogs, முடுக்கிய – ran and bit, தடியொடு – with the flesh pieces, விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), வெண்புடைக் கொண்ட – white on the sides, துய்த்தலைப் பழனின் – with fruits with pointed tops, இன் புளிக் கலந்து – mixed with sweet tamarind, மா மோர் ஆக – with fine buttermilk, கழை வளர் நெல்லின் – with the seeds growing on bamboo, அரி – bamboo rice, bamboo seeds (அரி –  அரிசி, கடைக்குறை), உலை ஊழ்த்து – adding to the boiling liquid, வழை அமல் சாரல் – mountain slopes filled with surapunnai trees, Ochrocarpos longifolius, கமழ – fragrance spread, துழைஇ – mixed, stirred (சொல்லிசை அளபெடை), நறுமலர் அணிந்த – wearing fragrant flowers, நாறு – fragrant, இரு முச்சிக் குறமகள் ஆக்கிய – cooked by mountain girl with huge hair knot, வால் அவிழ் வல்சி அகம் – houses with white cooked rice, மலி உவகை ஆர்வமொடு – with great happiness, அளைஇ – with hospitality (சொல்லிசை அளபெடை),  மகமுறை – with their children, தடுப்ப – preventing (from leaving), மனைதொறும் பெறுகுவிர் – you will receive in all the houses

மலைநாட்டில் நெடுநாள் தங்க வேண்டாம்

 செருச்செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்,
அனையது அன்று அவன் மலை மிசை நாடே,
நிரை இதழ்க் குவளைக் கடிவீ தொடினும்,

வரை அர மகளிர் இருக்கை காணினும்,   190

உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;

பல நாள் நில்லாது, நிலநாடு படர்மின்; (186 – 192)

Do Not Stay there for Long

It is possible that you will stay there, forgetting the gifts

that you will receive from Nannan, brave king who fights

in battles.  His mountain country is such.  If you touch

the protected kuvalai flowers or see places where the

mountain deities reside, you will tremble as though you

are losing your life.  Do not stay there for many days.

Leave immediately from there and go to his flat land!

Notes:  குவளைக் கடிவீ தொடினும் (189) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குவளையில் தெய்வம் விரும்புதலில் கடியவாகிய பூக்களை நீயிர் அறியாதே தொடுவீராயினும்.

Meanings:  செருச்செய் முன்பின் குருசில் – the brave king who battles, முன்னிய பரிசில் – gifts that you had desired, மறப்ப – forgetting,  நீடலும் உரியிர் – you might stay there for long, அனையது அன்று அவன் மலை மிசை நாடே – his country on the mountains is such (நாடே – ஏகாரம் அசை நிலை, an expletive), நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும் – if you touch the protected (f0r god) blue waterlilies with rows of petals, வரை அர மகளிர் இருக்கை காணினும் – if you see the places where mountain deities reside, உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர் – you will tremble as though you are losing your life, பல நாள் நில்லாது – not staying there for many days, நிலநாடு படர்மின்  – leave from there and go to his flat land – away from the mountains (படர்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

இரவில் செல்ல வேண்டாம்

விளைபுனம் நிழத்தலின் கேழல் அஞ்சி,
புழைதொறும் மாட்டிய இருங்கல் அடாஅர்,
அரும் பொறி உடைய ஆறே நள் இருள்   195

அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்; (193 – 196)

Do not Travel at Night

Since the pigs damage mature millet fields, near all the

entrances on the paths, there are huge rock traps

that are made with great details. Do not go there at night.

Go only when the morning sun has spread its rays.

Notes:  விலங்கைப் பிடிக்கும் பொறி: மலைபடுகடாம் 193-194 – கேழல் அஞ்சி புழை தொறும் மாட்டிய இருங்கல் அடாஅர், நற்றிணை 119 – தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர், புறநானூறு 19 – இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும்.  அரும் பொறி (95) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்தற்கரிய நுணுக்கங்களையுடைய இயந்திரம்.

Meanings:  விளைபுனம் நிழத்தலின் – since the mature millet fields get ruined (விளைபுனம் – வினைத்தொகை), கேழல் அஞ்சி – afraid of the pigs, புழைதொறும் – in all the entrances, மாட்டிய – placed, இருங்கல் அடாஅர் – huge rock traps (அடாஅர் – இசை நிறை அளபெடை), அரும் பொறி – gadgets that are made with rare intricacies, உடைய ஆறே – the paths are with them (ஆறே – ஏகாரம் அசை நிலை), நள் இருள் – pitch darkness, அலரி விரிந்த விடியல் – morning when the sun spreads its rays, வைகினிர் கழிமின் – stay there and then go (வைகினிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பாம்புகள் உறையும் இடத்தைக்

கடந்து செல்லும் வகை

நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில்,
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே,

குறிக் கொண்டு மரங்கொட்டி நோக்கிச்,   200

செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச

வறிது நெறி ஓரீஇ வலம் செயாக் கழிமின்; (197 – 202)

Be Aware of Snakes on the Path

If you dare to go together on the fine path where many

do not go, be aware that on the raised land there are snakes

lying in the cracks among broken pebbles in the pits.

Hit the trees and make noises.  Let your viralis

with stacked bangles worship and praise.  Move away

from this difficult path a little bit and go on the right side.

Notes:  நளிந்து – நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மரங்கொட்டி (200) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரம் என்றதன் இறுதியினின்ற குறிலிணைக் கீழ் மகரம் ஙகரமாகத் திரிந்து செய்யுள் ஓசையை நிரப்புதற் பொருட்டு அளபெடுத்தது.

Meanings:  நளிந்து – closely together (நளி என்ற உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம்), பலர் வழங்காச் செப்பம் துணியின் – if you are bold to go on the fine path where many do not go often (நளிந்து – உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம்), முரம்பு கண் – on the raised land, உடைந்த பரல் அவல் – broken pebbles, போழ்வில் – in the cracks, கரந்து – hide, பாம்பு ஒடுங்கும் – snakes will be hiding/lying, பயம்புமார் உளவே – there are pits (மார் – அசைச் சொல், உளவே – ஏகாரம் அசை நிலை, an expletive), குறிக் கொண்டு – be aware, watch for signs, மரங்கொட்டி – hit the trees, நோக்கி – seeing, செறிதொடி விறலியர் – the viralis with stacked bangles (செறிதொடி – வினைத்தொகை), கைதொழூஉப் பழிச்ச – worship and praise god (தொழூஉம் – இன்னிசை அளபெடை), வறிது நெறி ஓரீஇ – move away from the difficult path a little bit (ஓரீஇ – சொல்லிசை அளபெடை), வலம் செயாக் கழிமின் – go on the right side (வலம் – ஆகுபெயர் வலப்பக்கத்து வழிக்கு, கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

கவண் கற்கள் படாமல் தப்பிச்

செல்லும் விதம்

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ,

அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப்  205

பகல் நிலை தவிர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இரு வெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய,
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன,

வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின்; (203 – 210)

Escaping Catapults

Mountain farmers, in fields where millet has matured,

climb on high platforms, clap their hands, and shoot

stones from catapults at elephants that come during the

day to steal, and even black-fingered monkeys leap from

the wet stalks of huge bamboo and move

away in fear with their children.  Escape those stones

that come with loud sounds to remove life, in the

tradition of Death.  Go carefully, hiding behind trees!

Notes:  புனிறு – புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 77).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).

Meanings:  புலந்து – freshness ended, புனிறு போகிய – immaturity ended, fully mature, புனம் சூழ் குறவர் – mountain men who surround their fields, உயர் நிலை இதணம் ஏறி – climb on the high platforms, கை புடையூஉ – they clap their hands (புடையூஉ – இன்னிசை அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), அகல் மலை இறும்பில் – in the forest in the wide mountains,  துவன்றிய யானைப் பகல் நிலை தவிர்க்கும் – hurting the herds of elephants that come together during the day, கவண் உமிழ் கடுங்கல் – harsh stones shot by catapults, இரு வெதிர் – huge bamboos, ஈர்ங்கழை தத்தி – leap from the wet/fresh bamboo stalks, கல்லென – with loud sounds, கரு விரல் ஊகம் பார்ப்போடு – monkeys with black fingers with their young, இரிய – move away, உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – removing life like the tradition of the god of death (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), வரும் விசை தவிராது – they come fast without stopping, மரம் மறையாக் கழிமின் – go carefully hiding behind trees (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

வழுக்கும் இடங்களைக் கடத்தல்

உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப்,   215

பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித்
துருவின் அன்ன புன்தலை மகாரோடு

ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்; (211 – 218)

Slippery places on the path

In the place where eddies whirl, where it is dark

like night, crocodiles that kill strong male elephants

lie in wait.

The forest path near the stream is narrow and slippery

and there are places that are deep like moats.

Hold on to the thick vines that have wound around trees,

to avoid slipping.  Protect your children with dull hair like

that of sheep, and take care of each other as you go on the

path.

Notes:  மலைபடுகடாம் 229 – யாற்று இயவின்.  ஒருவிரொருவர் (218) – இடையே இரண்டனுருபு தொக்கது.

Meanings:  உரவுக் களிறு கரக்கும் இடங்கர் – crocodiles that make male elephants disappear, crocodiles that kill bull elephants, ஒடுங்கி – hiding, lying in wait, இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – in the places where it is very dark like darkness of nights, குமிழி சுழலும் – bubbles and eddies whirl, குண்டு கய – deep ponds, முடுக்கர் – narrow path, narrow spaces, அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை – in the  path near the forest streams that have moat-like flowing places, வழூஉம் மருங்கு உடைய – there are slippery places (வழூஉம் – இன்னிசை அளபெடை), வழாஅல் – to not slip down (வழாஅல் – இசைநிறை அளபெடை), ஓம்பி – taking care, பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி – hold on to the thick vines that have wound around (trees) as support (பரூஉ – இன்னிசை அளபெடை), துருவின் அன்ன புன்தலை மகாரோடு – with your children with dull/dry hair that is like the hair of sheep, ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின் – protect each other as you go (ஓம்பினிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்

அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா,   220

வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய,
முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு

எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்; (219 – 224)

Dangers of Ponds and Moss

Where there are swaying creepers of tubers

pressed down into the earth in the mountain with

erukkam flowers, near the deep ponds that kill

those who fall into them, are delicate, wet moss

hiding the ground which is slippery and harmful.

Walk carefully holding on to bamboo that grows

tangled on the entire path with fine stalks, and to

reeds with delicate stalks.

Notes:  அழுந்து (219) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழுந்து – கிழங்கு, ஆகுபெயர், இனி நீண்டகாலமாக அடிப்பட்டுக் கிடந்து எனினுமாம்.  வழும்பு (221) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வழுவழுப்பு, நச்சினார்க்கினியர் உரை – குற்றம்.

Meanings:  அழுந்து பட்டு அலமரும் – pressed down (tubers lying down in the earth) and swaying (creepers of tubers sway), புழகு அமல் சாரல் – mountain slopes filled with mountain erukkam (erukkam according to Nachinarkkiniyar who also indicated that it could be செம்பூ or புனமுருங்கை),  விழுந்தோர் மாய்க்கும் – they kill those who fall, குண்டு கயத்து அருகா – near deep ponds, வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி – fine wet moss that hide the ground are slippery, அடி நிலை தளர்க்கும் – makes feet slip, makes feet fall down, அருப்பமும் உடைய – difficult, முழு நெறி பிணங்கிய – tangled on the entire path, நுண் கோல் வேரலொடு – with bamboo with fine stalks, எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் – you hold on to the reeds with delicate stalks as you go (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கடவுளைத் தொழுதல்

உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய,   225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப்

பராவு அரு மரபின் கடவுட் காணின்,   230

தொழாநிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின்; மயங்கு துளி

மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே; (225 – 233)

Worship before you leave

On Nannan’s lofty mountain, in the ponds near

the river, there are shining, flame-like flowers that

resemble the face ornaments of battle-trained, tall

elephants whose faces with spots have been attacked

by volleys of harsh arrows that fall like rain, shot by

enemy warriors.

On your path, if you see the god in the temple with

old walls, who is worshipped according to tradition,

worship before you leave, but protect your musical

instruments.  Do not play them since confusing rain

falls on his great mountain!

Notes:  உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணை தாரொடு பொலிந்த வினை நவில் யானைச் சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி ஓர் யாற்று இயவின் (225-227) – நச்சினார்க்கினியர் உரை – இனி அம்பையுடைய தூசிப் படையோடு பொலிந்த யானையென்று யானைக்கு அடையாக்கி அவ்வியானையினுடைய பூக்கள் எழுதின முகபடாம் போலே உயர்நிலைமாக்கற புகர் முகம் புதையப்பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை என்றுமாம்; இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை என்றுமாம்; இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சியையுடைய உயர்நிலை மாக்கலையுடைய புரிசை என்பாரும் உளர்; அவர் சுனையிடத்து மேலெழுந்த குவளை முதலியவற்றின் அரும்புகள் தலை சாய்ந்து கற்புதையக் கிடந்ததற்கு யானையின் மத்தகத்துப் புகரை உவமை என்று கொள்வர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயர்ந்து நிற்றலையுடைய பெருமை மிக்க நவிர மழையிடத்தே மழைபோன்று புகரையுடைய தம் முகம் மறையும்படி பகைவருடைய வில் பொழியா நின்ற கடிய கணையினை ஏற்று அவர் தம் தூசிப் படையோடே பிறக்கிடாது நின்று பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயின்ற யானைப்படையினை உடையதும் உச்சியிலே ஒளியையுடைய பூத் தொழில் செய்யப் பெற்றதும் மடுக்களையுடைய ஆற்றின் வழியின்கண் உள்ளதுமாகிய.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அம் மலையின்கண் நன்னன் வேண்மான் தன் படைகளை வைத்திருந்தான் என்பது இதனால் உணரற்பாலது.  யானை ஒன்றே கூறினாரேனும் எடுத்த மொழியின் இனஞ்செப்பி நால்வகைப் படையும் கொள்க.  தொழா நிர் கழிமின் (231) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொழுது, நீர் என்பது ‘நிர்’ என்று குறுகி நின்றது. தொழ நீர் கழிமின்  என்றும் பாடமுண்டு, நச்சினார்க்கினியர் உரை –  இனித் தொழாநிரென்பது மறையன்றித் தொழுதென்று பொருள் தருமேனும் உணர்க.

Meanings:  உயர் நிலை – lofty, tall, மாக்கல் – huge mountain (Naviram), புகர் முகம் புதைய – spotted faces to be hidden, மாரியின் – like the rain, இகுதரு வில் உமிழ் கடுங்கணை – harsh arrows that are shot from bows (of enemies), தாரொடு – with foot soldiers, பொலிந்த – with greatness, வினை நவில் யானை – elephants that are well trained to do battle jobs,  சூழியின் – like the face ornaments of elephants, on the top, பொலிந்த சுடர்ப்பூ – bright flame-like flowers, இலஞ்சி – ponds, ஓர் – அசை நிலை, an expletive, யாற்று இயவின் – on the path near the river, மூத்த புரிசை – old walls (புரிசை – மதில், கோயிலுக்கு ஆகுபெயர்), பராவு அரு மரபின் – in the tradition of worshipping, கடவுட் காணின் – if you see the god, தொழாநிர் கழியின் அல்லது  – but also when you worship and leave, வறிது நும் இயம் – protect your musical instruments a little, தொடுதல் ஓம்புமின் – protect from touching (ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மயங்கு துளி மாரி தலையும் – confusing heavy rain falls, அவன் மல்லல் வெற்பே – on his great mountain (வெற்பே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கவனமாகச் செல்ல அறிவுறுத்தல்

 அலகை அன்ன வெள்வேர்ப் பீலிக்

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்,   235

கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன
நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்,
நேர் கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும்,
ஞெரேரென நோக்கல் ஓம்புமின்; உரித்தன்று   240

நிரைசெலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்; (234 – 241)

Travel with caution

Even if you see pea****s with feathers with

ends white like cowry shells that dance and tire,

or see male monkeys leap on stalks of tall bamboo

playing like the children of drummers who beat harsh

parai drums, or see honeycombs resembling chariot

wheels hanging on the tall mountains,

don’t look at them rapidly.  Protect yourselves.  Walk in a

row with small steps on the path.  Otherwise, you’ll get lost.

Meanings:  அலகை அன்ன – like roots, like cowry shells, வெள்வேர்ப் பீலி – white ends of plumes, கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – even if pea****s with plumes dance in that forest and get tired, கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன – like children of parai drummers who beat harsh drums (மகாஅர் – இசைநிறை அளபெடை), நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும் – even if male monkeys leap on stalks of tall bamboos (கொம்பர் – மொழி இறுதிப் போலி), நேர் கொள் நெடுவரை – perfect tall mountains, நேமியின் – like chariot wheels, தொடுத்த – attached, சூர் புகல் அடுக்கத்து – mountain ranges with deities that like them, பிரசம் காணினும் – even if you see the honeycombs, ஞெரேரென நோக்கல் – don’t look at them rapidly, ஓம்புமின் – protect yourselves (ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), உரித்தன்று நிரை செலல் – walk in a row, மெல் அடி- small steps,  நெறி மாறுபடுகுவிர் – you will get lost on the path

இரவில் குகைகளில் தங்குதல்

வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,

நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்   245

நெறிக் கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடுபடு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து,

துகள் அறத் துணிந்த மணிமருள் தெள் நீர்   250

குவளை அம் பைஞ்சுனை அசைவிடப் பருகி,
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர்
புள் கை போகிய புன்தலை மகாரோடு,
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்

இல் புக்கன்ன கல் அளை வதிமின்; (242 – 255)

Seek Protection in the Caves at Night

When you go to the forest with mountain paths,

you will see a dead boar with a big rough neck, with

wounds on its chest oozing white fat that appears like

butter, lying there, dark like darkness cut up, its tusks

ruined by digging, killed by a forest guard from a high

platform with arrows.  Roast it in the dry bamboo fire

which burns without much smoke, remove the hair

and eat it.  Relax and drink the clear water from the

faultless, beautiful, sapphire-colored, fresh spring with

kuvalai flowers.  Carry the excess big pieces of meat in

heavy bundles.  To protect your children with parched

heads whose mothers wear no bangles on their hands,

enter a mountain cave at night and treat it like your

home.

Notes:  செருக்கி (244) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருக்குற்று.  அம்பு தைத்தவிடத்தே ஊன் நெருக்குண்டதென்பார்.  இருள் துணிந்தன்ன (247) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருள் துண்டுபட்டு கிடந்தாற்போன்ற.  அசைவிட (251) – அசைவு விட என்பது அசைவிட எனவாயிற்று.  புள் கை போகிய (253) – நச்சினார்க்கினியர் உரை – பிள்ளையைப் பெற்றால் பெண்கள் வளையல் இடார்.  ஆதலின் வளை போதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்கு காரணமான மகார் என்றவாறு.

Meanings:  வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே – when you go to the forest with mountain paths (படினே – ஏகாரம் அசை நிலை, an expletive), கழுதில் – on a tall tower, on a tall platform, சேணோன் – a guard, ஏவொடு போகி – with his arrows, இழுதின் அன்ன வால் நிணம் – butter like white fat, செருக்கி – pressed, நிறப் புண் கூர்ந்த – with wounds on the chest (செருக்கி = நெருக்குற்று, see notes above), நிலம் தின் மருப்பின் நெறிக் கெட – with tusks ruined by digging into the earth, கிடந்த – lying there, இரும்பிணர் எருத்தின் –with a big rough neck, இருள் துணிந்தன்ன ஏனம் காணின் – if you see a pig that is like darkness cut up, முளி கழை இழைந்த காடுபடு தீயின் – in the forest fire that burns among dried bamboos, நளி புகை கமழாது – without the smell of thick smoke, இறாயினிர் மிசைந்து – you remove the hair and cook and eat, துகள் அறத் துணிந்த – faultless and clear, மணி மருள் – like sapphire (மருள் – உவம உருபு), தெள் நீர் குவளை – blue waterlilies growing in clear water, அம் பைஞ்சுனை – beautiful fresh spring, அசைவிடப் பருகி – relaxing and drinking, மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர் – you carrying the excess big pieces of meat that is in heavy bundles (பரூஉ – இன்னிசை அளபெடை), புள் கை போகிய – hands without bangles, புன்தலை மகாரோடு – with children with heads with dull/parched hair, with children with heads with scanty hair, children with small heads, அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற – to protect from going stay at night, நும் இல் புக்கன்ன – like entering your house, கல் அளை வதிமின் – you stay in the mountain cave, you reside in the mountain cave (வதிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

 அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி,
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து

கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்; (256 – 258)

Walk Carefully on the Mountain Path

Protect your family and rest well for the night.  Early

in the morning, when the sun rises, rise from sleep

and walk carefully on the mountain path.

Meanings:  அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – at night rest and take care, வான் கண் விரிந்த விடியல் – early morning when the sun rises in the sky, ஏற்றெழுந்து – rise from sleep, கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின் – you walk carefully on the fine/red forest path (கொண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

முன் எச்சரிக்கைகள்

கயம் கண்டன்ன அகன் பை அம் கண்

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்   260

துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து,
பெரும் பயம் கழியினும் மாந்தர் துன்னார்

இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்   265

இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின்;
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்துக்
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்

நாடு காண் நனந்தலை மென்மெல அகன்மின்; (259 – 270)

Words of Caution

In the wide, beautiful forest that is like a pond,

watch out for pythons that lie around like fallen

trees, which can kill brave, fierce male elephants.

Be careful and stay away from fruits that those

who ate are unable to forget and flowers that have

fragrances that spread afar.

Do not touch such flowers with long stems and stay

away from the huge woods with trees bearing fruits.

Know the signs, look carefully to your right and left,

without going near them.

 

Go to the wide spaces in the land where there are

banyan trees with birds that chirp together sounding

like music played by instruments.  Go past that very

slowly.

Notes:  முரஞ்சிய – முரஞ்சல் முதிர்வே (தொல்காப்பியம்.  உரியியல் 35).

Meanings:  கயம் கண்டன்ன – like seeing a pond, அகன் பை அம் கண் – the wide beautiful forest, மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – ruins the strengths of brave fierce male elephants, துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் – pythons lie around like dead trees, விலங்கி – stay away, இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் – those who have smelled the flowers whose fragrance spreads far, மறந்து அமைகல்லாப் பழனும் – those who ate the fruits that they are unable to forget (பழன் – பழம் என்பதன் போலி), ஊழ் இறந்து – improperly, பெரும் பயம் கழியினும் – even if they don’t use its great benefits, மாந்தர் துன்னார் – people don’t touch, இருங்கால் வீயும் – and flowers with huge/dark stems, பெருமரக் குழாமும் – and groups of huge tree, and huge group of trees, இடனும் வலனும் நினையினர் நோக்கி – you look on the left and right with caution, குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின் – know the signs and then you leave without going near them (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), கோடு பல முரஞ்சிய – branches that are mature (முரஞ்சிய – முதிர்ந்த), கோளி ஆலத்து – with banyan trees that fruit without flowering, கூடு இயத்து அன்ன குரல் – chirping sounds like the music of musical instruments played together (இயத்து – இயம், அத்து சாரியை), புணர் புள்ளின் – with many bird flocks that are together, நாடு காண் நனந்தலை – where you can see the wide spaces in the land, மென்மெல அகன்மின் – you go there very slowly (அகன்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

குறவரும் மயங்கும் குன்றத்தில்

செய்ய வேண்டுவன

மா நிழற் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்,
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்

குறவரும் மருளும் குன்றத்துப் படினே,   275

அகன்கண் பாறைத் துவன்றிக் கல்லென

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்; (271 – 277)

What to do at Night when even Mountain Dwellers

are Confused

In the forest dense with trees and abundant shade,

where the wide space touching the sky is not heated by

the sun, if you go when it is night when even the mountain

dwellers who roam with strong bows to hunt animals are

confused about direction, sit together on a wide boulder

and play your musical instruments loudly.

Notes:  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).

Meanings:  மா நிழற் பட்ட – with great shade, மரம் பயில் இறும்பின் – in the forest dense with trees, ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை – mountain touching the sky that is not heated by the sun (தெறாஅ – இசை நிறை அளபெடை, நனந்தலை – ஆகுபெயர் மலைக்கு), தேஎம் மருளும் அமையம் ஆயினும் – even if it is night time when you will be confused about directions (தேஎம் – இன்னிசை அளபெடை), இறாஅ வன் சிலையர் – those with strong bows that don’t get ruined (இறாஅ – இசை நிறை அளபெடை), மா தேர்பு கொட்கும் – roam around choosing animals (to hunt), குறவரும் மருளும் குன்றத்துப் படினே – if you go to the mountain where even mountain dwellers are confused (குறவரும் – உம்மை உயர்வு சிறப்பு), அகன் கண் பாறைத் துவன்றி – join together on a wide boulder, கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின் – play your instruments loudly (தொடுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து

உதவி புரிதல்

பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசை
காடு காத்து உறையும் கானவர் உளரே;

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்   280

புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற

நும்மின் நெஞ்சத்து அவலம் வீட,   285

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்;
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து,

அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்,   290

பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ; (278 – 291)

Forest Dwellers will come to Aid

There are forest dwellers who protect the mountains

from where roaring, sweet waterfalls come down.

They will come fast to your aid like people who run

over to help those who are in distress in in deep water.

They will give you sweet fruits to eat and give you pretty

flowers to wear.

They will walk ahead of you on the very harsh paths

to remove your sorrow.  Stay sweetly with your clan

and understand the directions explained by

the experts as you go through tall and short peaks that

cause newcomers to tremble.  If you rest in the strips of

shade from the blossomed flowers, you will hear various

sounds rising from different directions.

Meanings:  பாடு – sounding, இன் அருவி – sweet waterfalls, பயம் கெழு – beneficial, மீமிசை – up above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), காடு காத்து உறையும் கானவர் உளரே – there are mountain dwellers who protect the forests (உளரே – ஈற்றசை), நிலைத் துறை வழீஇய – those who leave the shore and enter the water (வழீஇய – சொல்லிசை அளபெடை), மதன் அழி மாக்கள் – people who lose their strength, புனல்படு – caught in the water, பூசலின் –  due to the distress, விரைந்து வல் எய்தி – they will come fast, உண்டற்கு இனிய பழனும் – fruits that are sweet to eat (பழன் – பழம் என்பதன் போலி), கண்டோர் – those who see, மலைதற்கு – to wear, இனிய பூவும் காட்டி – showing sweet flowers, ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – walking ahead of you on the very difficult paths, நும்மின் நெஞ்சத்து அவலம் வீட – for sorrow to leave your heart, இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் – stay sweetly with your loud relatives (இம்மென் – ஒலிக்குறிப்பு), அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – understand/accept the directions as told by experts, குறியவும் நெடியவும் – short and tall, ஊழ் – established, இழிபு – go down, புதுவோர் நோக்கினும் பனிக்கும் – causes newcomers who see to tremble, நோய்கூர் அடுக்கத்து – in the mountain ranges with disease (distress), அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – if you rest in the strips of shade (dappled shade) from the blossomed flowers, பல திறம் பெயர்பவை கேட்குவிர் – you will hear different sounds rising from many directions, மாதோ – மாது, ஓ அசை நிலைகள், expletives

மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்  295

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;

சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின்   300

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என.
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை   305

மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்,   310

கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை   315

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு,   320

மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து,   325

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு   330

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,

நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;   335

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்   340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,   345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக், (292 – 348)

Various Sounds Heard in the Mountains

Male monkeys dig out jackfruits and their oozing

juice sprays in the wind, spreading fragrances in

all directions.

There are sweet sounds from waterfalls, that rise

when celestial women catch the rapidly flowing

water in their hands and play in the waterfalls,

sounding like those produced by your musical

instruments.

 

There are sounds of forest dwellers sitting on high

platforms chasing a stray bull elephant with raised

tusks, that has strayed from his herd and entered

their millet field, and laments of those who

lost to a porcupine with thorn-like, sharp quills,

that resides in a cave.

 

A mountain woman with wavy hair sings songs,

believing that it will heal the deep chest wounds

of her husband who was attacked by a tiger with curved

stripes.  Women who want to wear fresh vēngai flowers

shout ‘tiger’ ‘tiger’ without fear.

 

In the tall mountains, the painful roaring trumpets of a

naive, tender-headed pregnant cow elephant and her herd

are heard, since she was attacked by a tiger when her strong

mate went to get her food.  An uproar was caused by a

black-fingered female monkey and her troop who feed on

sprouts, when her untrained young child fell off the

mountains since she did not hold it tight.

 

Climbing on bamboo ladders on the tall mountains where

even male monkeys are unable to climb, forest dwellers

gather honey collected by bees from huge honeycombs,

and celebrate happily since they have destroyed forts

of their enemies, and that the loot got will serve as

gifts to Nannan with perfect spears.  The men drink

liquor and celebrate with kuravai dances in the sky-high

mountain, with their women, to the accompaniment of

small, loud deer hide parai drums.

 

There are roaring sounds produced by rivers with rocks

as they enter rocky crannies,

appearing like beautiful chariots riding in a row.

There are clamors of elephant trainers who speak various

languages, who bind their fierce elephants to tall posts,

reducing their rage, after saving them when they fell into

huge whirlpools, and there are the sounds of bamboo

gadgets used by women to chase parrots from millet fields.

 

A bull with a moving hump, that strayed from its herd and a

male elk that came from the mountains, fine males, fought

with each other with strength without backing down, causing

wounds to each other,

and ruining thick-petaled kulavi flowers and kurinji plants,

and cattle herders and mountain dwellers raised uproars.

 

There are noises made by children who thresh the

seeds of sweet, mature jackfruits that grow in clusters,

dropped on the ground by many who ate the fruits, using

calves that they control with the ladle-like petals of fragrant

kānthal flowers.

 

There are loud noises of machines which crush sugarcane

rapidly in factories, that appear like the sounds of rain.

 

Vallai songs are sung by women pounding millet grains.

There are roars of parai drums beat by those who grow

turmeric and chēmpu yam, beaten to chase marauding pigs.

 

All these and other sounds, countless in numbers, are

heard in the canyons and mountain peaks in all directions.

The sounds join together and ooze from the mountain like

musth flowing from a bull elephant, rare to hear alone.

Notes:   அறல் வாழ் கூந்தற் (304) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறல்பட்ட கூந்தல், அறல் கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு, அறல் கருமணலுமாம்.   இறை (319) – அரசிறை, அரசனுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள், products from the land given by citizens to the king as tax.  (சான்ம் 319) – சான்ம் (467) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாலும் என்பது சான்ம் என நின்றது, ஸி. ஜெகந்நாதாசார்யர் உரை – சாலும் என்பது ‘சான்ம்’ என்று உகரம் கெட்டு மெய் திரிந்து நின்றது. ‘திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம்’ என்றார் முன்னரும் (319), ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  விரவு மொழி பயிற்றும் பாகர் (327) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  யானையைப் பயிற்றும் பாகர் பயிற்றும் சொல் வடமொழி ஆகலின் ‘விரவு மொழி’ என்றார்.   தன் தமிழ் மொழியின் இடையே வட மொழியை விரவிப் பயிற்றி என்றவாறு.  புறநானூறு 24 – திண் திமில் வன் பரதவர் வெப்புடைய மட்டுண்டு தண் குரவைச் சீர் தூங்குந்து, புறநானூறு 129 – குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து வேங்கை முன்றில் குரவை அயரும்.  முல்லைப்பாட்டு 35-36 – கவை முட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளம் கைப்ப.  தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல் (305-306) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைநாள் பூத்த பொன்போலும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைச் சூடுவதற்கு மகளிர் புலி புலி என்று கூப்பிடும் ஏமத்தையுடைய ஆரவாரம்.  வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் ‘ஏமப்பூசல்’ என்றார்.  வேங்கைப் பூக்கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவினால் வேங்கையும் வளைந்து கொடுக்கும் என்றுகருதிக் கூவுதல் அக்காலத்து வழக்கமாம்.  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல்:  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.   கலையும் பெரும்பழமும்:   குறுந்தொகை 342-1 – கலை கை தொட்ட கமழ் சுளைப் பெரும்பழம், மலைபடுகடாம் – 292 – கலை தொடு பெரும்பழம்.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  கய – கயவென் கிளவி மென்மையும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 24).  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).

Meanings:  கலை தொடு பெரும்பழம் – jackfruits dug by male monkeys, புண் கூர்ந்து – greatly wounded, ஊறலின் – since they secreted, மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும் – the fragrance spreads to all the directions, அருவி நுகரும் வான் அர மகளிர் – celestial women who enjoy the waterfalls, celestial women who play in the waterfalls, வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் – whenever they bathe they accept the rapid water in their hands without avoiding and sounds arise (from the water hitting them),

தெரி இமிழ் கொண்ட – with clear sounds,  நும் இயம் போல் – like your instruments, இன் இசை – sweet music,  இலங்கு ஏந்து மருப்பின் – with shining lifted tusks, இனம் பிரி ஒருத்தல் – straying male elephant away from his herd, விலங்கல் – blocking mountain, மீமிசைப் பணவைக் கானவர் – forest people on a high platform (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), புலம்புக்கு உண்ணும் – enter the field and eat, புரி வளைப் பூசல் – the noises of them desiring and surrounding, சேய் அளைப் பள்ளி – lying in a far away cave, எஃகு உறு முள்ளின் எய் – porcupine with sharp quills that are like thorns (முள்ளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது),

தெற – ruining, இழுக்கிய – lost, கானவர் அழுகை – cries of the forest dwellers, கொடுவரி பாய்ந்தென – since a tiger attacked (கொடுவரி – வளைந்த கோடு, புலி, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), கொழுநர் மார்பில் – on her husband’s chest, நெடுவசி விழுப்புண் தணிமார் – to get the deep wound healed, காப்பு என – as protection, அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் – songs of mountain women with fine-sand-like hair, தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை – vēngai flowers that bloomed on the previous day

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் – women who want to wear them create noises without fear – interpreted by commentators as ‘vengai’, ‘vengai’ meaning ‘tiger’ ‘tiger’ – (Aka 48, 52), கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி – naïve tender-headed female elephant that is pregnant with calf, வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – since her strong mate went to get food and take care of her, ஒண் கேழ் வயப்புலி பாய்ந்தென – a bright colored mighty tiger leaped and attacked, கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – her loud cries along with those of her relatives are heard like roaring thunder in the tall mountain,

கைக் கோள் மறந்த கருவிரல் மந்தி – a female monkey with black fingers forgot to hold on with its hands, அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு – for its untrained young child that fell between the cracks that are difficult to reach, முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி – it joined its troop that eats tender leaves, சிறுமை உற்ற – in sorrow, களையாப் பூசல் – continuous loud sounds, கலை கையற்ற – unable for a male monkey, காண்பு இன் – sweet to sight, நெடு வரை – tall mountains

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – climbing on bamboo ladders placed firmly on the tall mountains (கண்ணேணி), பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – taking the useful huge combs with honey collected by bees (தேம் தேன் என்றதன் திரிபு), அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை – forest people who are happy that they broke up the difficult forts, திருந்து வேல் அண்ணற்கு – for the king (Nannan) with perfect spears, விருந்து இறை சான்ம் என – the new gifts given by the citizens to the king for use of the land are suitable (இறை – இறு – பகுதி, ஐ – செயல்படுபொருள் விகுதி, சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்), நறவு நாட் செய்த குறவர் – mountain dwellers who drank liquor during the day (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), தம் பெண்டிரொடு  – with their women,

மான் தோல் சிறு பறை கறங்க – as the small parai drums made with deer hide covers are beat, கல்லென – loudly, வான் தோய் மீமிசை அயரும் குரவை – the kuravai dance that they perform on the sky-touching mountains (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன – like a very beautiful chariot that rode, கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – the roaring sounds of rivers that flow on rocks/stones, நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து – fierce elephants that were caught in the huge eddies,

உரவுச் சினம் தணித்து – reducing their rage, பெரு வெளில் பிணிமார் – tie them on huge posts, விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – sounds of elephant keepers who speak different languages, ஒலி கழைத் தட்டை புடையுநர் – those who hit their loud bamboo gadgets to chase birds (புடையுநர் – முற்றெச்சம்), புனந்தொறும் – in all the fields, கிளி கடி மகளிர் விளிபடு பூசல் – sounds raised by women who protect millet from parrots, இனத்தின் தீர்ந்த – moved away from its herd, துளங்கு இமில் நல் ஏறு – fine bull with moving hump,

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை – a swift male elk that came from the mountain, a swift male bison that came from the mountain, மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி – they attack each other with great strength not backing off and cause wounds, கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப – cattle herders sing along with mountain dwellers, வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய – crushing kulavi flowers with thick petals and kurinji flowers, நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – fine bulls fight and raise noises (பொரூஉம்  – இன்னிசை அளபெடை),

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – hit with the ladle-like fragrant petals of glory lilies, வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டுபடு – eat the segments of ripe sweet fruits that grow on thick branches of jackfruit trees and drop, மிச்சில் – leftover, காழ் பயன் கொண்மார் – to get the benefit of the seeds, கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் – youngsters who make calves thresh (கடாஅ, மகாஅர் – இசைநிறை அளபெடை), ஓதை – sounds,  மழை கண்டன்ன – like seeing rains falling, ஆலைதொறும் – in all the mills, ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் – the sounds of sugarcanes with nodes being crushed rapidly,

தினை குறு மகளிர் இசைபடு வள்ளையும் – the vallai songs sung by the young women who pound/protect millet, சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையும் – parai drum sounds from those who care and protect the chēmpu yam and turmeric plants from pigs (சேம்பு, சேப்பங்கிழங்கு, Colocasia antiquorum, Colocasia esculenta), குன்றகச் சிலம்பும் என்று இவ் அனைத்தும் – mountain sounds and all these, இயைந்து ஒருங்கு ஈண்டி- join together, அவலவும் – in the canyons, in the pits, மிசையவும் – and in the mountain tops, துவன்றிப் பல உடன் – together with many, அலகைத் தவிர்த்த எண் – numbers beyond limits of quantity, countless numbers, அருந் திறத்த – rare to hear them alone, மலைபடு கடாஅம் – oozing from the mountains (கடாஅம் – இசை நிறை அளபெடை), மாதிரத்து இயம்ப – sounds come from all directions



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நன்னனது மலை

குரூஉக்கண் பிணையற் கோதை மகளிர்

முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்,   350

விழவின் அற்று அவன் வியன்கண் வெற்பே;
கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக நமக்கு எனத்

தொல்முறை மரபினர் ஆகி பல்மாண்   355

செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட,

இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்

நறுங்கார் அடுக்கத்து குறிஞ்சி பாடிக்

கைதொழூஉப் பரவி பழிச்சினிர் கழிமின்; (349 – 360)

Nannan’s Mountain

In Nannan’s huge mountain where drums don’t

rest and women wear garlands with colorful

flowers, there is a feeling of festivity.  You can enjoy

with your eyes and ears.  You can eat and praise the

sweet foods, and stay there like you are his old

relatives, hoping that you will attain more like this

from the man who has fought many great battles,

and has great wealth.  May your viralis

playing, awe-inspiring, sweet lutes sing in kurinji

melodies in the fragrant, dark mountain ranges,

as you hold hands and worship, praise and leave the

mountain with clouds with thunder and lightning behind.

Notes:  குரூஉ (349) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  திரு ஆர் மார்பன் (356) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திரு ஆர் மார்பன் என்றது நன்னனின் செல்வப் பெருமை கூறியவாறு.  திருமகள் உறையும் மார்பினையுடைய திருமாலாகிய நன்னன் எனக் கொள்ளினுமாம்.   கருவிய (357) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.   கண்ண் தண்ண் (352) – குறிற்கீழ் ஒற்றுக்கள் சீர்நிலை எய்தற்பொருட்டு கண்ண் தண்ண் என அளபெடுத்தன.  வியல் – வியலென் கிளவி அகலப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 66).

Meanings:  குரூஉக்கண் பிணையல் – colorful garlands (குரூஉ – இன்னிசை அளபெடை), கோதை மகளிர் – garlanded women, முழவுத் துயில் அறியா – drums do not rest, வியலுள் – in the wide space, ஆங்கண் – there, விழவின் – like festivals, அற்று – of that nature, அவன் வியன்கண் வெற்பே – his huge mountain (வெற்பே – ஏகாரம் அசை நிலை, an expletive), கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் – see and hear sweetly, உண்டற்கு இனிய பல பாராட்டியும் – eat and praise many sweet things, இன்னும் வருவதாக – to attain more of this, நமக்கு எனத் தொல்முறை மரபினர் ஆகி – requesting like they are his old relatives of tradition, பல் – many, மாண் செரு – esteemed battles, மிக்குப் புகலும் – uttered greatly, praised greatly, திரு ஆர் மார்பன் – the man with Thirumakal on his chest, a man who has great wealth, உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட – for the huge mountain with clouds with thunder and lightning to go behind, இறும்பூது கஞலிய – awesome and flourishing instrument, இன்குரல் விறலியர் – viralis with lutes that create sweet music (குரல் – ஆகுபெயர் யாழுக்கு), நறுங்கார் அடுக்கத்து – in the fragrant dark ranges, குறிஞ்சி பாடி – as they sing in kurinji tunes (பாடி – பாட, எச்சத்திரிபு), கைதொழூஉப் பரவி – holding hands and worship (தொழூஉ – இன்னிசை அளபெடை), பழிச்சினிர் கழிமின் – you praise god and then leave (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மைபடு மாமலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி
தூஉயன்ன துவலை தூற்றலின்,
தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு,

காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்   365

கூவல் அன்ன விடரகம் புகுமின்;
இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு,   370

தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின் ஊறு தவப் பலவே;
அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்துக்

கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின்; (361 – 375)

Dangers on the Mountain Path

In the dark, huge mountain many monsoon

clouds touching each closely like hands held

together appear like overflowing cotton, and they

drop heavy rain.  Not being able to see directions,

walk rapidly with your relatives and enter mountain

caves that are like wells, to protect your musical

instruments that you carry on shoulder poles.

 

Avoid standing near eroding boulders which

might come down.  There are many difficulties in the

place filled with pits in the wide space.  If you stand

there and look, the brightness in your eyes will be lost.

Use the carrying poles of your drum with clay

as walking sticks when you are tired.  There are

many hindrances.  There are sharp rocks that are as

hot as iron.  Wait until the hot rays of the sun go down

before you go on the harsh path that is protected by the

sun against cold.

Notes:  தூஉய் அன்ன (363) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலியத் தூவினாலொத்த.   காஅய்க் கொண்ட (365) – நச்சினார்க்கினியர் உரை – காவிக் கொண்ட.  இன்னல் இயக்கம் (374) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்னாமை எய்துவதற்குக் காரணமான செலவு.

Meanings:  மைபடு மாமலை – in the dark huge mountain, பனுவலின் பொங்கி – overflowing like cotton, கை தோய்வு அன்ன – like hands joining together, கார் மழைத் தொழுதி – crowds of rainy season clouds, தூஉய் அன்ன – like strong showers (தூஉய் – இன்னிசை அளபெடை), துவலை தூற்றலின் – since they drop raindrops, தேஎம் தேறா – not understanding directions (தேஎம் – இன்னிசை அளபெடை), கடும் பரி – moving very fast, கடும்பொடு – with your relatives, காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல் – for your musical instruments on shoulder balancing poles not to get wet (காஅய்க் கொண்ட = காவடியில் கொண்ட, காஅய் – இசைநிறை அளபெடை), கூவல் அன்ன விடரகம் புகுமின் – you enter the mountain caves that are like wells (புகுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது – not joining the huge mountains that are eroding, குன்று இடம்பட்ட – in the mountain, ஆர் இடர் அழுவத்து – in the place filled with pits, நின்று நோக்கினும் – even if you stand and look, கண் வாள் வெளவும் – they take away the brightness of the eyes, மண் கனை முழவின் – of the drum with abundant clay,  தலைக்கோல் கொண்டு – with its carrying poles, தண்டு கால் ஆக – use them as walking sticks, தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின் – you walk placing them on the ground when you are tired (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), ஊறு தவப் பலவே – there are many hindrances, அயில் காய்ந்தன்ன – hot like iron/spears, கூர்ங்கற் பாறை – rocks with sharp stones, வெயில் புறந்தரூஉம் – protection of the sun from cold (புறந்தரூஉம் – இன்னிசை அளபெடை), இன்னல் இயக்கத்து – on the path that will cause pain (இயக்கம் – ஆகுபெயர் வழிக்கு), கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் – go after the rage of the sun’s rays have gone down (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு,
புரை தவ உயரிய மழை மருள் பஃறோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,

முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல்   380

இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிக்
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்;
களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல்

தளி பொழி கானம் தலை தவப்பலவே;   385

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்துஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட,
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்   390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்; (376 – 391)

Forts and Memorial Stones

There are very tall forts with army leaders who don’t

leave the side of Nannan of great fame.  There are

bull elephants resembling very tall rainclouds

that ruin enemy kings.  On the path, there are small

plants that are knotted and tangled like they are

braided.  Make sure that the bowl of the lute that

creates sweet music and the clay eye of the tightly-tied

drum are not hit by the thick tree twigs that those

walking ahead hold to protect their faces and then

release as they pass.

Hold hands and walk slowly.  There are boulders next

to each other, looking like bull elephants engaged in

fights in the forest with heavy rainfall.  There are many

memorial stones on confusing, forked paths planted

for warriors of fine, unspoiled fame who fought

and died, embarrassed after some warriors in their own

army ran away showing their backs and enemy warriors

raised uproars in the battlefield field.

Sing sweetly with rhythm, play your lute and worship

the memorial stones.  Proceed rapidly after that.

Notes:  முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல் இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி (380-382) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டினூடே வழிபோக்கர்க்குளதாகிய நுணுகிய இடையூறு ஒன்றனை அரிதின் எடுத்துக் கூறல் பெரிதும் இன்பம் தருவதால்.  அஃதாவது காட்டின் நுழைவழியூடே  முன் செல்வான் தன் முகத்தே படாதவாறு தன் கையால் முன்னிற்கும்  வளாறுகளை (சிறிய மரக்கிளைகளை) வளைத்துக் கொண்டு செல்வதும், அவன் அப்பால் சென்றவுடன் அதனை விட்டுவிடுதலும் வளைக்கப்பட்டமையால் அவ்வளாறுகள் விசையுடன் பின் வருவாரைத் தாக்கி ஊறு செய்தலும். அத்தகைய வழிகளிற் பயில்வோர் நன்கறிவர்.  பஃறோல் – தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் என்மனார் புலமையோரே (தொல்காப்பியம். புள்ளி மயங்கியல் 74).  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings:  உரை செல – for fame to spread, வெறுத்த – abundant, அவன் நீங்காச் சுற்றமொடு – with his army leaders who do not leave his side, புரை தவ உயரிய – very very high, மழை மருள் – like the clouds (மருள் – உவம உருபு), பஃறோல் – many elephants (பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது), அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – having forts that ruin enemy kings, பின்னி அன்ன – like braided, பிணங்கு அரில் நுழைதொறும் – in the paths where small plants are knotted and tangled, முன்னோன் – the person in front, வாங்கிய – pulled, கடுவிசை – with rapid speed, கணைக் கோல் – the thick sticks, thick twigs, இன் இசை நல்யாழ்ப் பத்தரும் – the body of the fine lute that creates sweet music, விசிபிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – also protect the clay covered eye of the tightly tied drum, கை பிணி விடாஅது பைபயக் கழிமின் – you hold hands and go very slowly (விடாஅது – இசைநிறை அளபெடை, பைபய – பையப்பைய பைபய என மருவியது, கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல் – boulders that are close to each other look like elephants that fight each other, தளி பொழி கானம் தலை தவப்பலவே – there are many forests where rains fall, ஒன்னார்த் தெவ்வர் – disagreeable enemy, உலைவிடத்து– when their own warriors run away showing their backs, ஆர்த்தென – since there was uproar in the battlefield from the enemies, நல்வழிக் கொடுத்த – fought in a good manner and gave up their lives, நாணுடை மறவர் – embarrassed warriors, செல்லா இல்இசைப் பெயரொடு – with fine fame not ruined, நட்ட கல் – planted stone, ஏசு – blame/confusing, கவலை – forked path, எண்ணு மிகப் பலவே – if counted there are many, இன்புறு முரற்கை நும் பாட்டு – your sweet song with rhythm (கைத்தாளம் – ஆகுபெயர் தாளத்திற்கு), விருப்பு ஆக – desired, தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் – you go fast after worshipping playing your lute (மருப்பு – ஆகுபெயர் யாழிற்கு), துனைமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புதியவர்களுக்கு வழி தெரியபுல்லை முடிந்து

இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்; (392 – 393)

Tie Grass in the Junctions

Clean the place and tie ookam grass in the junctions,

where you struggled being new to the dangerous path,

to indicate directions to those who come after you.

Notes:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்காலம் நன்மையறியாத தீய நிலத்தை வழி அறியாமல் போய் மீண்டு வருவீராயின் புதியவராகிய நீவிர் பின் வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாமற் பொருட்டு, பல வழிகளும் கூடின அச்சந்திகளைக் கையாலே துடைத்து அறிகுறியாக ஊகம்புல்லை முடிந்திட்டு வைப்பீர்.

Meanings:  பண்டு நற்கு அறியா – not knowing well in the past (நற்கு – நன்கு விகாரம்), புலம் பெயர் – moving to a place, புதுவிர் – you who are new, சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் – please tie grass (ookam grass) in the junctions after cleaning the place (இடுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

நன்னனுடைய பகைவர் இருக்கும் அருநிலங்கள்

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்,

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த   395

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்,
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே;
தேம்பாய் கண்ணித் தேர் வீசு கவிகை

ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே,   400

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்;
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே

அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்;

புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி

கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து,   405

சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை,
தலைஇறும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த;
வளை ஆன் தீம்பால் மிளை சூழ் கோவலர்

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்,   410

பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல வரியன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும்   415

பல் யாட்டு இனி நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதட் பள்ளித்

தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின்; (394 – 420)

Nannan’s Enemies

In the land where you are going, there are

memorial stones with names etched for

warriors who gave up their lives.  In that forest

with kadampam trees with fine trunks, there are

forked paths and many wasteland paths where there

are enemies of Nannan who tremble at the thought

of him.  If you tell them that you are going to see

Nannan donned with honey-flowing garlands, who

donates chariots generously, a great donor who does

not keep anything for himself, they will only benefit

you like the wealthy, fine, ancient towns of Nannan.

Rest when you are tired and go without fear.

 

In the forest where a stag bellows for his beloved mate

that ran away on seeing a tiger, a red-eyed elk bull

panics on hearing the sounds of a hunter’s bow, and runs

fast through the thickets ahead with fragrant vines,

where bangle-wearing females of cattle herders, whose

cattle graze on other lands, who protect their herds,

will give you sweet milk of cows as white as conch

shells.  You who have set out with desire will be relieved

of your sorrow, and become a new person, since they

will care for you who has come from afar.

 

If you reach by night, the noisy place where the sounds

in the forest are like those from the ocean, with many herds

of sheep and goat mixed together like the different colors

of paddy rice obtained through bartering, you will be given

milk and well-cooked rice that they cooked for themselves.

You will sleep on goat hide beds, as soft as those made with

fine hair.  There will be fire to keep you warm.   Stay there

and leave.

Notes:  பகர் விரவு நெல்லின் பலவரியன்ன (413) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகர் விரவு நெல் என்றது பண்டங்களை விற்போர் அவையிற்றிக்கு மாற்றாகப் பெற்ற கலப்பு நெல் என்றவாறு.  மெய் உரித்து இயற்றிய மிதி அதட் பள்ளி (419) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடுகளின் உடலையுரித்து ஒன்றாகத் தைத்த வார் மிதித்த தோல் படுக்கை (மெய் = ஆட்டின் உடல்), தீ (420) –  நச்சினார்க்கினியர் உரை – கொடிய விலங்குகள் வராதபடி இடையர் ஒளித்த (ஒளி உண்டாக்கிய) நெருப்புத் துணையாகத் தாங்கிப் போவிர்.  கதழும் – கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 17).  வெறுத்த – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், உரியியல் 51).  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.

Meanings:  செல்லும் தேஎத்து – to the land that you go, in the direction that you are going (தேஎத்து – இன்னிசை அளபெடை), பெயர் மருங்கு அறிமார் – to know the name of the warriors who died in battles, கல் எறிந்து எழுதிய – etched on stone, நல் அரை – fine trunks, மராஅத்த கடவுள்– gods in kadampam trees (மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, இசைநிறை அளபெடை), ஓங்கிய – flourishing, காடு – forest, ஏசு – blame, கவலை – on the forked paths, ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் – not agreeable and separated enemies, சுட்டினும் பனிக்கும் – tremble when they think about him, சுரம் தவப் பலவே – wasteland paths are many, தேம் பாய் கண்ணி – honey-flowing garlands (தேம் தேன் என்றதன் திரிபு), தேர் வீசு கவிகை – charitable hands that donate chariots (கவிகை – வினைத்தொகை, elliptical compound in which a verbal root forms the first component), ஓம்பா வள்ளல் – charitable man who doesn’t keep anything for himself, படர்ந்திகும் எனினே – if you say that you are going to see him, மேம்பட வெறுத்த – have more wealth than others, அவன் தொல் திணை மூதூர் – his towns with ancient heritage, his towns with good behavior, ஆங்கனம் – there, அற்றே நம்மனோர்க்கே – to those like us, அசைவுழி அசைஇ – rest where you are tired (அசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு, அசைஇ – சொல்லிசை அளபெடை), அஞ்சாது கழிமின் – and you go without fear (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), புலி உற வெறுத்த – hated the arrival of a tiger, தன் வீழ் துணை உள்ளி – thinking about his desirable mate, கலை நின்று விளிக்கும் கானம் – forest where a stag stands and bellows, ஊழ் இறந்து – cross properly, சிலை ஒலி – bow sounds, வெரீஇய – moves away (சொல்லிசை அளபெடை), செங்கண் மரை விடை – elk stag with red eyes, male bison with red eyes, தலைஇறும்பு கதழும் – runs fast in the forest that is ahead, நாறு கொடிப் புறவின் – in the forest with fragrant creepers, வேறு புலம் படர்ந்த – go and graze on other lands, ஏறுடை இனத்த – of herds with bulls, வளை – conch shells (white color), ஆன் தீம்பால் – sweet milk of cow, மிளை சூழ் கோவலர் – cattle herders who protect their herds, வளையோர் – females of cattle herders wearing bangles, உவப்ப தருவனர் – they will give happily, சொரிதலின் – since they give,  பலம் பெறு நசையொடு – with a desire to benefit, பதி வயின் தீர்ந்த – one who left town, நும் புலம்பு சேண் அகல – for the sorrow of you coming from far away to be removed, புதுவிர் ஆகுவிர் – you will become a new person, பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – like paddy rice that is bartered (அரி – அரிசி, கடைக்குறை), தகர் விரவு – rams mixed, துருவை – sheep, வெள்ளையொடு – along with white goats, விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும் – loud sounds are heard in the forest like ocean sounds, பல் யாட்டு இனி நிரை – many goat herds, எல்லினிர் புகினே – if you go at night, பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – you will receive milk and well cooked rice that they cooked for themselves and not for you, துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – like a bed that is made with soft hair, மெய் உரித்து இயற்றிய மிதி அதட் பள்ளி – bed that is made with skin that is peeled off bodies of goats (ஆட்டின் தோலாலே தைத்து வார் இறுக்கி மிதிக்கப்பட்டதும் ஆகிய படுக்கை), தீத் துணையாக – fire as a partner, சேந்தனிர் கழிமின் –  you stay there and then go (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

கூளியரின் உதவி

கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்
கொடுவிற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவற் படர்ந்திகும் எனினே,

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ,   425

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை;

ஆங்கு வியங்கொண்மின்; அது அதன் பண்பே; (421 – 427)

Warriors who will help

If you see warriors with sharp arrows and curved

bows, who are within calling distance, tell them that

you are going to see Nannan with manliness that ruins

those who do not submit, husband to a vine-like,

delicate woman, they will give feed you forcefully

with abundant meat and tubers.  They are ones who

will protect you, not hurt you.

Proceed with their guidance.  Such is the nature of the

forest.

Meanings:  கூப்பிடு கடக்கும் – in calling distance, கூர்நல் அம்பின் – sharp arrows, கொடுவிற் கூளியர் கூவை காணின் – if you see a group of warriors/hunters with curved bows, படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை – manliness that ruined those who did not submit, கொடியோள் கணவற் படர்ந்திகும் எனினே – if you say that you are going to see the husband of a vine-like (delicate) woman, தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – they will give you forcefully abundant meat and tubers (தரீஇ – சொல்லிசை அளபெடை), ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை ஆங்கு – there are only protectors there and not those who cause sorrow, வியம் கொண்மின் அது – listen to their commands, do what they say (கொண்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), அதன் பண்பே – it is its nature of the forest (பண்பே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நீர் அருந்திக் குளித்துச் செல்லுதல்

தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி   430

திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென

உண்டனிர்; ஆடிக் கொண்டனிர்; கழிமின்; (428 – 433)

Drink and Bathe before Leaving

Deck yourselves beautifully with strands, woven with

Kadampam flowers with honey mixed with the

flowers of  trees with bright leaves, whose branches

are broken by elephants, and other tender leaves,

using hemp fibers.  Drink the cool water on the

broken pebble path in the raised land.  Bathe in the

streams and take some for your travel.

Notes:  பெரும்பாணாற்றுப்படை 181-182 – மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 – தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 – மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங் கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ் சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்

Meanings:  தேம்பட மலர்ந்த மராஅ – kadampam flowers that have blossomed with honey, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak (தேம் தேன் என்றதன் திரிபு, மராஅ – இசைநிறை அளபெடை), மெல் இணரும் – delicate clusters, உம்பல் – bull elephants, அகைத்த – broke, ஒண் முறி யாவும் – flowers of  trees with bright leaves, ஆச்சா மரம், Hardwickia binata, தளிரொடு மிடைந்த – woven with tender leaves, காமரு கண்ணி – beautiful strand (விகாரம்), desirable strand, திரங்கு மரல் நாரில் – with dried hemp fiber, Sansevieria trifasciata, பொலியச் சூடி – wear beautifully, முரம்பு கண் – raised land, உடைந்த நடவை – path with broken pebbles, தண்ணென உண்டனிர் – you drink that cold water – rain water (உண்டனிர் – முற்றெச்சம்), ஆடி கொண்டனிர் கழிமின் – you bathe there and then take some when you go (கொண்டனிர் – முற்றெச்சம், கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

புல் வேய்ந்த குடிசைகளில் புளிஞ்கூழும்,

பிறவும் பெறுதல்

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த,   435

சுவல் விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி   440

வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்;
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை   445
நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிதுஉடன் துஞ்சிப்

புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்; (434 – 448)

Hospitality of Villages with Huts

At night, for your sorrow to go away, you will be served

food cooked with seeds of bamboo that are red like

vēngai flowers cooked with rice grown on high grounds,

along with beautiful tamarind gravy with avarai beans.

In all the villages with huts built with poles and thatched

with grass, you will receive daily, huge balls of rice made

with tiny, perfect rice, like tiny gold pieces, butter, and

sprinkled white flour.  If you stay there and rest, every

day you will be given dishes made with fine millet flour

mixed with sifted sugar powder.  You will sleep, leaving

cold far away, in the warmth of the fire lit with brittle

wood.  Leave in the morning when birds start chirping.

Notes:  வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை (440) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெள்யாட்டை அரிந்து அதன் தசையோடே சேர்த்துச் சமைத்த என்க.  இனி, வெண்ணிறம் அமைந்த மாவைத் தூவி எனினுமாம்.

Meanings:  செவ்வீ  வேங்கைப் பூவின் அன்ன – like red vēngai flowers, வேய் கொள் அரிசி மிதவை – bamboo rice made with bamboo seeds (மூங்கில் அரிசியின் சோறு), சொரிந்த – poured, சுவல் விளை நெல்லின் – with paddy that grew in the high grounds, அவரை அம் புளிங்கூழ் – beautiful tamarind gravy with avarai beans, அற்கு – for the night, இடை உழந்த நும் வருத்தம் வீட – for your sorrow of walking on the path to go away, அகலுள் ஆங்கண் – in those wide spaces, கழி மிடைந்து – tied densely with poles, woven with poles, இயற்றிய புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் – you will receive from villages where people like in grass thatched huts, பொன் அறைந்தன்ன – like gold chopped up, நுண் நேர் அரிசி – tiny rice that are alike, tiny perfect rice, வெண் எறிந்து இயற்றிய – pounded white flour and made, killed white goats and made, மாக் கண் அமலை – huge rice balls, தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக – with cool fine butter inside, அசையினிர் சேப்பின் – if you stay there and rest, அல்கலும் பெறுகுவிர் – you will receive daily, விசையம் கொழித்த பூழி அன்ன – like sifted powder made with sugar (விசயம், அகரம் ஐகாரமாயிற்று), உண்ணுநர்த் தடுத்த – blocking others from eating (other food), நுண் இடி நுவணை – finely powdered millet powder, நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி – with the fire from the brittle woods of soft trees,  பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – sleep well keeping cold far away, புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின் – leave when it is morning and birds create noises (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

நன்னனது தண்பணை நாட்டின் தன்மை

புல் அரைக் காஞ்சி புனல் பொரு புதவின்

மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல்யாழ்ப்   450

பண்ணுப்பெயர்த்தன்ன காவும் பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,

நன் பல உடைத்து அவன் தண்பணை நாடே; (449 – 453)

Nannan’s Agricultural Lands

You can stay for a few days in the groves and villages

of his agricultural land with dull-trunked portia

trees and sluices on which flowing water crashes,

where it is pleasurable like the music raised by a fine

lute.  You could also leave after a day if you want.

Meanings:  புல் அரைக் காஞ்சி – portia trees with dull trunks, பூவரச மரம், portia tree, Thespesia populnea, புனல் பொரு புதவின் – with sluices on which flowing water crashes, மெல் அவல் இருந்த ஊர்தொறும் – in all the towns where there are delicate agricultural lands, நல்யாழ்ப் பண்ணுப் பெயர்த்தன்ன – like the music raised by a fine lute, காவும் – groves, பள்ளியும் – and in places where people live, in villages (பள்ளி = இருப்பிடம்), பல் நாள் நிற்பினும் – even if you stay for a few days, சேந்தனிர் செலினும் – or if you stay and leave (in a day), நன் பல உடைத்து – it has many benefits, அவன் தண் பணை நாடே – his cool fine agricultural land

உழவர் செய்யும் உபகாரம்

கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,

வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை,   455

நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்,
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்,
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த,   460

விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர்;

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு,   465

வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண்தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்

மருதம் பண்ணி அசையினிர் கழிமின்; (454 – 470)

Hospitality in the Agricultural Land

Fishermen with nets enter ponds with kanpu

grass with fragrant flowers, and catch vālai fish with

big necks.  Some stand on the shore and

catch with their rods with strings, red-eyed varāl fish

shaped like trunks of female elephants.  Their women

wearing pakandrai flowers will serve you pieces of fatty

fish that look like eyes of drums along with white rice

from blocking mountain-like haystacks kept on mounds

near fields where crabs play, that are threshed by

workers who reduce the haystacks, who cause prosperity,

along with liquor made with paddy sprouts.  You will

receive in every field when the sun’s rays spread,

cooked white rice with fish from which bones have

been removed, that awes those who see it, which deserves

to be served to Nannan owning sturdy chariots, wearing

a garland with flowers swarmed by bees for honey.

Eat with your relatives.  You will hear the sounds of

workers who goad their bulls.  Play marutham tunes

on your lute, and rest before you leave.

Notes:  முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு (465) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய   நிறத்தையுடைய தடிகளையிட்ட வெளிய சோறு, மீன் துண்டு, அரியப்படுதலால் அரி என்றார்.  சான்ம் (467) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சாலும் என்பது சான்ம் என நின்றது, ஸி. ஜெகந்நாதாசார்யர் உரை – சாலும் என்பது ‘சான்ம்’ என்று உகரம் கெட்டு மெய் திரிந்து நின்றது. ‘திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம்’ என்றார் முன்னரும் (319), ஒளவை துரைசாமி உரை நற்றிணை 381 – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  

Meanings:  கண்பு மலி பழனம் – pond with lots of elephant grass, சம்பங்கோரை, கமழ – fragrances (of flowers), வலையோர் தந்த – fishermen with nets who searched and brought (துழைஇ – சொல்லிசை அளபெடை), இருஞ்சுவல் வாளை – vālai fish with big necks, scabbard fish, trichiurus haumela, நிலையோர் இட்ட – those standing still and placing, நெடுநாண் தூண்டில் – long fishing rod with string, பிடிக்கை அன்ன – like trunks of female elephants,  செங்கண் வராஅல் – varāl fish with red eyes, murrel fish, Slacate nigra, Ophiocephalus punctatus, Ophiocephalus marulius (வராஅல் – இசை நிறை அளபெடை), துடிக்கண் அன்ன – like the eyes of a thudi drum, குறையொடு – with flesh pieces, விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் – women of fishermen wearing pakandrai flowers (பழையர் = கள் விற்போர், those who sell toddy), ஞெண்டு ஆடு செறுவில் –in the fields where crabs play (ஞெண்டு – நண்டு என்பதன் போலி), தராய்க்கண் வைத்த – kept on the mounds, விலங்கல் அன்ன – like blocking mountains, போர் முதல் தொலைஇ – they reducing the tall haystacks down to the bases (தொலைஇ – சொல்லிசை அளபெடை), வளம் செய் வினைஞர் – the workers who cause prosperity, வல்சி நல்க – give food, துளங்கு தசும்பு வாக்கிய – poured from a moving pot, பசும் பொதித் தேறல் – liquor made with paddy sprouts, இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர் – you will receive in all the fields when the sun’s delicate rays spread, முள் அரித்து –removing the bones of fish, இயற்றிய – made,  வெள் அரி – white pieces, வெண்சோறு – cooked white rice, வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணி – garland with flowers with honey that are swarmed by bees (தேம் தேன் என்றதன் திரிபு), திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் – fit as food for Nannan with sturdy chariots (சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது, ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்), எனக் கண்டோர் மருள – as those who see awe,  கடும்புடன் அருந்தி – eat with your relatives, எருது எறி களமர் ஓதையொடு – along with the sounds of those weeders who goad bulls, நல் யாழ் மருதம் பண்ணி  – play marutham tunes on your lute, அசையினிர் கழிமின் – rest and then leave (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சேயாற்றின் கரை வழியே செல்லுதல்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்,
செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்   475

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்

யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்; (471 – 477)

Walk along the shores of River Sēyāru

Be aware of a red-eyed, male buffalo that has moved

away from its herd, that runs fast

toward you, fearing the roars of thannumai drums of

those who reap paddy.  If you see a rushing stream with

bubbles and whirlpools that whirl like wheels of potters,

go on the other side of the prosperous river Sēyāru

which is sweet to behold.

Notes:  தலைவாய் (475) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவாய் என்பதனை வாய்த்தலை என மாற்றுக.  இதனை வாய்க்கால் என்றும் கால்வாய் என்றும் இக்காலத்து வழங்குவர்.  ஓவு இறந்து வரிக்கும் (475) – நச்சினார்க்கினியர் உரை – ஒழிவின்றி ஓடும்.  கதழ்துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – fearing the thannumai drums of those who cut white paddy (வெரீஇ – சொல்லிசை அளபெடை), செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – a red-eyed male buffalo which separated from its herd, கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – aware that it comes fast toward you with strength, வனை கலத் திகிரியின் – like wheels on which potters create (வனை கலம் – வினைத்தொகை, திகிரியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), குமிழி சுழலும் – bubbles and eddies whirl, துனை செலல் தலைவாய் – they run fast in a stream, ஓவு இறந்து வரிக்கும் – they run without rest, காணுநர் வயாஅம் கட்கு இன் – sweet to the eyes of those who see (வயாஅம் – வயாவும் என்பது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட வயாம் என வந்தது).  சேயாற்றின் யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் – you go on one side of the shore of the prosperous river Sēyāru (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

நன்னனது மூதூரின் இயல்பு

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇ,

வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து,   480

யாறு எனக் கிடந்த தெருவின் சாறு என,
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்,
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு,
மலை என மழை என மாடம் ஓங்கித்

துனிதீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்,   485

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்

நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர்; (478 – 487)

Nannan’s Ancient Town

Nannan’s ancient town has tall houses with wealth

and citizens who do not move away.

The streets are wide as rivers.  The opulent markets

are huge without any space.  People gather together like

constant festivities.  The forked streets cause fear

in enemies.  There are loud sounds like those from the

ocean and the rain.  In the tall mansions that are like

mountains and clouds, there are loving people.  There

are groves with dew where flowers are swarmed by

bees in his ancient, old town that is not far away.

Meanings:  நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – in the tall houses where prosperity resides, பதி எழல் அறியாப் பழங்குடி – ancient community that does not know moving from the land, கெழீஇ – having, with (சொல்லிசை அளபெடை), வியல் இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து – in the wide wealthy market place without space (பெறாஅ – இசை நிறை அளபெடை), யாறு எனக் கிடந்த தெருவின் – on the streets that are like rivers, சாறு என – like festivals, இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – on the forked streets that causes fear in enemies (வெரூஉம் – இன்னிசை அளபெடை), கடல் என கார் என ஒலிக்கும் – sounds like the ocean and rains, சும்மையொடு – with loud sounds, மலை என மழை என மாடம் ஓங்கி – mansions tall like mountains and clouds, துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – those who rest there do with great love, பனி வார் காவின் – in the the groves with dew, பல் வண்டு இமிரும் – many bees swarm, நனி சேய்த்தன்று – it is not far away, அவன் பழவிறல் மூதூர் – his ancient old town

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள் வாள் மறவர்,

கருங்கடை எஃகம் சாத்திய புதவின்   490

அருங்கடி வாயில் அயிராது புகுமின்;
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி,
வந்தோர் மன்ற அளியர் தாம் என,

கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி,   495

விருந்து இறை அவர் அவர் எதிர்கொளக் குறுகிப்

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட, (488 – 497)

Hospitality in Nannan’s Town

Enter without fear and hesitation through the

protected gates,

where warriors who chopped the black heads of enemies

for kites to descend, lean their bright spears with black

handles near the doors.  There are many in the common

grounds who have come for gifts from far away,

thinking about Nannan who is like Murukan, victorious

in battles.  They pity you who are like them and look at

you calmly and sweetly, accepting you as their guest,

for your sorrow from walking to go away.

Notes:  பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட (497) – நச்சினார்க்கினியர் உரை – தரித்தலால் உண்டான தனிமை வருந்தின நும் வருத்தம் போகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பரி புலம்பு’ என்பதற்கு வழி நடந்த வருத்தம் என்று கோடலே பொருந்துவதாகும்.  இத் தொடர்க்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் பரி – மிகுதி எனக் கொண்டு தன்னுடைய சிலப்பதிகார உரையில் (10:226) ‘மிகவும் வருந்தினர்’ என்றது நோக்கற்பாலது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 33).

Meanings:  பொருந்தாத் தெவ்வர் – not-agreeable enemies, enemies with enmity, இருந்தலை துமிய – their black heads chopped, பருந்து படக் கடக்கும் – win battles where kites descend, ஒள் வாள் மறவர் – warriors with bright swords, கருங்கடை எஃகம் சாத்திய புதவின் – spears with black ends/handles are kept leaning near doors, அருங்கடி வாயில் அயிராது புகுமின் –  enter the well protected gates without doubt (புகுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மன்றில் வதியுநர் – those staying in the common place, சேட்புலப் பரிசிலர் – those who have come for gifts from far away, வெல் போர்ச் சேஎய்ப் பெருவிறல் – greatly victorious in wars like Murukan, உள்ளி வந்தோர் – those who came thinking, மன்ற – for sure, அசை நிலை, அளியர் தாம் என – that they are pitiable, கண்டோர் எல்லாம் – those who see you, அமர்ந்து இனிதின் நோக்கி – look at you calmly and sweetly, விருந்து இறை அவர் அவர் எதிர் கொள – they accept you as their guest, குறுகி – approach, பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – your great sorrow to go away, for your sorrow of walking to go away (பரி – மிகுதி, நடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்

எரி கான்றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்து அகப்பட்ட,

மட நடை ஆமான் கயமுனிக் குழவி   500

ஊமை எண்கின் குடாவடிக் குருளை,
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரை வாழ் வருடை வன்தலை மாத்தகர்,
அரவுக் குறும்பு எறிந்த சிறுகட் தீர்வை,

அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த   505

மடக் கண் மரையான் பெருஞ்செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக்கண் மஞ்ஞை,

கானக் கோழிக் கவர் குரல் சேவல்,   510

கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம்,
இடிக் கலப்பு அன்ன நறுவடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம்,
தூவற் கலித்த இவர் நனை வளர்கொடி

காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை,   515

பரூஉப் பளிங்கு உதிர்த்த பல உறு திருமணி,
குரூஉப் புலி பொருத புண்கூர் யானை,
முத்துடை மருப்பின் முழுவலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,

நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்,    520

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல்
கான் நிலை எருமைக் கழைபெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை

நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல்,   525

உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும்
குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி,
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,

நோனாச் செருவின் நெடுங்கடைத்துவன்றி, (498 – 529)

Wealth at the Palace Yard

In the front yard of Nannan whose enemies are

unable to fight with him,

there is a wild cow calf of delicate walk separated

from its herd and caught under a kadampam

tree with flame-like flower clusters, an elephant calf,

a bear cub with curved legs that utters no sounds, a

mountain goat with fast, bent legs, that lives in high

places, a huge ram with a strong head, a small-eyed

mongoose that destroys snakes, a bison calf with large

ears and delicate eyes that hates cave tigers that kill,

a male monitor lizard with curved legs that crawls on

pebbles on the wax-like red land, pretty pea****s with

delicate eyes that dance in the mountains, forest rooster

that calls its mate with love,

huge jackfruits that are like mulavu drums, food made

with fruits chopped and crushed with mature, sweet

pulp of mangoes with other fragrant tender fruits, creepers

that spread with buds flourishing in the rain, noorai yams

that are like the yokes of shoulder poles, large pieces of

camphor dropped from trees, many beautiful gems, large

heaps of pearl-filled tusks of elephants of might that

were attacked by tigers with colored skin, white,

thick-leaved kānthal flower clusters resembling broken

conch shells,

blossoms of punnai and thilakam, pieces of fragrant

sandalwood, fresh clusters of pepper from dark-colored

vines, sweet liquor aged in bamboo pipes, bamboo pipes

with sweet curds of buffaloes that live in the forest,

wheel-like, large, honeycombs with mature blue-colored

honey in the tall mountains, abundant breadfruits, and

others, appearing like the deep estuary of the cool, huge

Kaviri river which is born on the western mountains and

runs toward the ocean, and battlefields which are harsh

for enemy warriors.

Notes:  காஅய் (515) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காவி, அஃதாவது தோளிற் சுமந்த என்றபடி.  குரூஉ (517) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  நீல் நிற ஓரி பாய்ந்தென (524) – நச்சினார்க்கினியர் உரை – முற்றுகையாலே நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரந்ததாக, புறநானூறு 109 – அணி நிற ஓரி பாய்தலின்.  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின். மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  மலையில் பிறந்த காவிரி: பட்டினப்பாலை 6-7 – மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும், மலைபடுகடாம் 327-328 – குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப.  துவன்றி – துவன்று நிறைவாகும் (தொல்காப்பியம், உரியியல் 34).  குழவி (500, 506) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  எரி கான்றன்ன – looking like flame that is emitted (கான்றன்ன – வெளிப்படுத்தினாற்போல), பூஞ்சினை – branches with flowers, மராஅத்து – of a kadampam tree, தொழுதி போக – after its herd has left, வலிந்து அகப்பட்ட – unable to run and got caught, மட நடை ஆமான் – a calf of slow walk, கயமுனிக் குழவி – an elephant’s young calf, ஊமை எண்கின் குடாவடிக் குருளை – cub with curved legs of dumb bear, மீமிசைக் கொண்ட கவர் – conquers high places (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), பரிக் கொடுந்தாள் – fast curved legs, வரை வாழ் வருடை – mountain goat living on the mountains, வன்தலை மாத்தகர் – huge male sheep with strong heads, அரவுக் குறும்பு எறிந்த – ruined the strength of snakes, சிறுகண் தீர்வை – mongoose with small eyes, அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த – hated the cave tiger that attacked,  மடக் கண் மரையான் – bison with delicate eyes, or elk with delicate eyes, பெருஞ்செவிக் குழவி – calf with big ears, fawn with big ears, அரக்கு விரித்தன்ன – like wax has been spread, செந்நில மருங்கின் – on the red land, பரல் தவழ் உடும்பின் – of a monitor lizard that crawls on pebbles, கொடுந்தாள் ஏற்றை – a male with curved legs, வரை – mountain, பொலிந்து – with beauty, இயலும் மடக்கண் மஞ்ஞை – pea****s with delicate eyes that dance, கானக் கோழிக் கவர் குரல் சேவல் – forest rooster that calls its mate attracting her, கானப் பலவின் – of jackfruit trees in the forest, முழவு மருள் – like drums (மருள் – உவம உருபு), பெரும்பழம் – large fruits, jackfruits, இடிக் கலப்பு அன்ன – like chopped and crushed with sugar, நறுவடி மாவின் வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம் – food made with the mature sweet filtered fruit pulp of mangoes with fragrant tender unripe fruits (மாவடு), தூவற் கலித்த – flourishing due to the rain, இவர் நனை வளர் கொடி – growing creepers that have spread with buds, flourishing in the rain, காஅய்க் கொண்ட – carried on the shoulders on balancing poles (காஅய் – ), நுகம் மருள் நூறை – noorai yams that look like yokes (மருள் – உவம உருபு), பரூஉ – thick (இன்னிசை அளபெடை), பளிங்கு – camphor crystals, from Cinnamomum camphora trees, உதிர்த்த – dropped from trees, பல உறு திருமணி – many beautiful gems, குரூஉப் புலி பொருத புண்கூர் யானை – elephants wounded by the attacks of tigers with color (குரூஉ – இன்னிசை அளபெடை), முத்துடை மருப்பின் – with tusks with pearls, முழு வலி – full strength, மிகு திரள் – very huge heap, வளை உடைந்தன்ன – like conch shells that are broken, like bangles that are broken, வள் இதழ்க் காந்தள் – thick petals of glory lilies, நாகம் – punnai, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum or surapunnai trees, long-leaved two-sepalled gamboge according to the University of Madras Lexicon, திலகம் – thilakam flowers, Adenanthera pavonina, நறுங்காழ் ஆரம்  – hardwood/hard-core sandal, கருங்கொடி மிளகின் – on the dark colored pepper vines, காய்த்துணர்ப் பசுங்கறி – fresh pepper growing in clusters, திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல் – sweet toddy aged in perfect bamboo, கான் நிலை எருமை – buffaloes that are established in the forest, forest-residing buffaloes, கழை பெய் தீம் தயிர் – sweet curds that are poured in bamboo pipes, நீல் நிற – blue colored (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), ஓரி பாய்ந்தென – matures and blue color spreads (in honey), நெடுவரை – lofty mountains, நேமியின் – like the wheels of chariots (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), செல்லும் – moves, நெய்க்கண் இறாஅல் – honeycombs with honey (இறாஅல் – இசைநிறை அளபெடை), உடம்புணர்வு தழீஇய ஆசினி – and also the abundance of breadfruits (தழீஇய – சொல்லிசை அளபெடை), அனைத்தும் – and others, குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி – the cool huge Kaviri river born on the western mountains, கடல் மண்டு – reaching the ocean, அழுவத்து – with depth, கயவாய் கடுப்ப – like the estuary, like the river mouth where the river meets the ocean (கடுப்ப – உவம உருபு), நோனாச் செருவின் – like battles that are impossible for enemy armies (செருவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, செரு ஈண்டு படைகட்கு ஆகுபெயர்), நெடுங்கடை – tall gate,  துவன்றி – gathered/filled



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விறலியர் நன்னனைப்

போற்றுதல்

வானத்து அன்ன வளம் மலி யானை   530
தாது எருத் ததைந்த முற்றம் முன்னி,
மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்பக்
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்

நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றிக்,   535

கடவது அறிந்த இன்குரல் விறலியர்,
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,

அருந் திறற் கடவுட் பழிச்சிய பின்றை, (530 – 538)

Let the Viralis Sing

There are huge, mighty elephants that are like the

dark clouds, their droppings in the yard. When you reach

there, beat your drums with eyes that roar like rainclouds,

let your tubular thoompu made with bamboo blare,

let your viralis with sweet voices who know to sing

well sing in unison with the small lute with black stem

in marutham melodies, according to ancient tradition,

not faulting.  After they are done praising god,

Meanings:  வானத்து அன்ன – like the clouds (வானத்து – வானம், அத்து சாரியை, வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), வளம் மலி யானை – huge strong elephants, தாது எருத் ததைந்த முற்றம் முன்னி – reaching the front yard with dust from elephant droppings, மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்ப – beats of drums with roaring eyes answer the roaring clouds, கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – the tubular thoompu musical instruments made from bamboo to blare, thoompu musical instruments with holes that are made with bamboo to blare, மருதம் பண்ணிய – கருங்கோட்டுச் சீறியாழ் – small lute with black stem that created marutham tune, நரம்பு மீது இறவாது – not making (their voices) more than the sounds of strings, உடன் புணர்ந்து – united, ஒன்றி கடவது அறிந்த இன்குரல் விறலியர் – viralis with sweet voice who know to sing together in a dutiful manner,  தொன்று ஒழுகு மரபின் – according to perfect ancient tradition, தம் இயல்பு வழாஅது – not deviating from their nature (வழாஅது – இசைநிறை அளபெடை), அருந் திறற் கடவுட் பழிச்சிய பின்றை – after they praised the precious gods

நன்னனைப் போற்றுதல்

விருந்தின் பாணி கழிப்பி, “நீள் மொழிக்

குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல்!   540

இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!” என,
வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி,

சென்றது நொடியவும் விடாஅன்; (539 – 545)

Praising Nannan

you must sing new songs.  After that, address him

saying, “O heir of those with truth and great fame,

know that their fame should not stop today, but

stay until this world stays, since the great ones who

analyzed and knew died!  You are a great one that knows

the duties of generosity!”

Praise his bravery, many victories and fame in a victorious

manner, and tell him everything that appears in your mind.

He will not let it go any further.

Meanings:  விருந்தின் பாணி கழிப்பி – sing new songs, நீள் மொழிக் குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல் – ‘O scion of those with truth and great fame that is not reduced’, இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப இடை – ‘know that their fame should not stop just today but stay until this world stays’, தெரிந்து உணரும் பெரியோர் – ‘the great ones who analyzed and knew’, மாய்ந்தென – ‘since they died’, கொடைக் கடன் இறுத்த செம்மலோய் – ‘O  great one who knows the duties of generosity’, என – thus, வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி – praise his victories and many fame in a victorious manner, சென்றது நொடியவும் – tell him everything that has appeared in your mind, விடாஅன் – he will not allow it to go any further (இசை நிறை அளபெடை)

நன்னன் கூறும் முகமன் உரை

……         ……..      ……..   நசை தர

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என, (545 – 546)

What Nannan will Say

He will tell you that he is happy that you came to

him, passing through many difficulties.

Meanings:  நசை தர வந்தது – that you came with desire, சாலும் – fitting, வருத்தமும் பெரிது – amidst great difficulties, என – thus

நாளோலக்கத்துக்கு அழைத்துச் செல்லுதல்

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து,
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி,

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ, (547 – 549)

Nannan’s Assembly

He will take you happily to his palace yard, splendid

with his army chiefs who are ready to fight battles.

He will be in the midst of his uproarious ministers

in his fine court.

Meanings:  பொரு முரண் எதிரிய வயவரொடு – with warriors who await for battles, பொலிந்து – splendid, beautiful, திருநகர் முற்றம் – palace yard, அணுகல் – approach, வேண்டி – desiring, கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – stay amidst loud ministers/advisors in the fine assembly (இரீஇ – சொல்லிசை அளபெடை)

நன்னனது குளிர்ந்த நோக்கம்

உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து   550

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து,
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்,
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக்

கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று   555

வடு வாழ் எக்கர் மணலினும் பலரே;
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் எனப்
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி, (550 – 560)

Nannan’s Sweet Looks

Tell him, “There have been many kings, who ruled

vast countries with superior regal rights and flawless

ministers, who took their names along with them

when they died because they opened their hands and

said they had nothing to give, their numbers larger

than the sand in the dunes brought out by the river

Sēyāru that is sweet to behold that came from the tall

mountains.  May your living days pass with fame with

a sky-high heart that is generous!”.  He will sit and

look sweetly with great joy that is more than yours.

Meanings:  உயர்ந்த கட்டில் – with superior regal rights, உரும்பு இல் சுற்றத்து – with ministers without cruelty, அகன்ற தாயத்து – of huge countries, அஃகிய நுட்பத்து – with reduced intelligence, இலம் என – that they do not have, மலர்ந்த கையர் ஆகி – they are with open empty hands, தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – those who died taking their name along with themselves, நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – full waterfalls that comes down the tall mountains, கடுவரல் கலுழி – fast flowing floods, கட்கு இன் சேயாற்று – of Sēyāru river that is sweet to eyes, வடு வாழ் எக்கர் – sand dunes with marks, மணலினும் பலரே – more than the sands, அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – so may your living days (days that have been given to you by fate) pass with fame, பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – with a sky touching heart that is charitable, நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது – more than you who came with desire, உவந்த உள்ளமோடு – with a happy heart, அமர்ந்து இனிது நோக்கி – sit and look sweetly

நன்னனது கொடைச் சிறப்பு

இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து,   565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்

சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய   570

நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,
பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி

நிலம் தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்,   575

இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய
கலம் பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்,
வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநிக்
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி   580

தலைநாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்

குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே!   583

Nannan’s Generosity

He will give you perfect clothing on which

woven threads cannot be seen and tie it well

around your faultless body, and fresh meat with

fat brought by a female dog cooked with long,

white rice and served without limits.  He will give

you gifts with desire even if you stay there for

many days, like what you received on the first day.

If you tell him that you have to leave for your

ancient town, he will give the leader among you

golden lotus flowers, adorn viralis with fine, bright

jewels, give you tall chariots that run perfectly like

flowing water, trained mountain-like elephants

seized or received from enemies as tributes,

large herd of cattle with bulls with ringing bells,

horses with trimmed tufts decorated with golden

saddles, wealth lying on the ground, and all this.

 

He fills the hands of poets who have nothing,

with his large hands with whirling

bracelets.  He showers unspoiled wealth like the

rain showers on Naviram Mountain where bamboo

grows, the lord of the country surrounded by

mountains from which waterfalls flow down like

raised victory banners, who gives you gifts on the

first day and lets you leave.

Notes:  வாரி (572) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை பிடிக்குமிடம், வாரிக் கொள்ளா என்றது தாமே காட்டினின்றும் பிடித்துக் கொள்ளாத என்றவாறு. எனவே பகைவர் படையினின்றும் பற்றிக் கொண்ட அல்லது திறையாகப் பெற்ற யானைகள் என்றவாறு.  பொலம் படை (574) – நச்சினார்க்கினியர் உரை – பொன்னால் செய்த கலனை.  கலனை = சேணம், horse saddle.  புறநானூறு 101 – தலைநாள் போன்ற விருப்பினன். பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.

Meanings:  இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம் – cloth where it is unable to see the woven threads, எள் அறு – without any fault, சிறப்பின் வெள் அரைக் கொளீஇ – tie splendidly on your faultless body (கொளீஇ – சொல்லிசை அளபெடை), முடுவல் தந்த – brought by a female dog, பைந்நிணத் தடியொடு – along with the fresh meat with fat, நெடு வெண்ணெல்லின் அரிசி – long white rice from paddy, முட்டாது – without limits, தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து பல நாள் நிற்பினும் பெறுகுவிர் – you will receive with desire like on the first day even if you there for many days, நில்லாது – not staying there, செல்வேம் – we will leave, தில்ல – அசை நிலை, an expletive, எம் தொல் பதிப் பெயர்ந்து என – if you tell him that you have to leave for your ancient town, மெல்லெனக் கூறி விடுப்பின் – if you leave telling that softly, நும்முள் தலைவன் தாமரை மலைய – he will give the leader golden lotus flowers to wear, விறலியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – adorn viralis with splendid bright jewels, நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர் – tall chariots that move perfectly like running water, வாரிக் கொள்ளா – not brought from the forest, received from enemy kings as tributes or seized in battles, வரை மருள் வேழம் – mountain-like elephants (மருள் – உவம உருபு), கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை – huge herds of cattle with ringing bells, பொலம்படைப் பொலிந்த – beautiful with golden saddles (பொலம் – பொன் என்பது பொலம் எனத் திரிந்து வந்தது), கொய் சுவல் புரவி – horses with trimmed tufts, நிலம் தினக் கிடந்த நிதியமொடு – along with wealth lying on the ground, along with wealth devoured by the ground (தின தின்ன என்பதன் விகாரம்), அனைத்தும் – and all this, இலம்படு புலவர் – poets with nothing, ஏற்ற கைந் நிறைய கலம் பெய – give them jewels filling their hands, கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின் – his large hands wearing whirling bracelets gave (கழல்தொடி- வினைத்தொகை), வளம் பிழைப்பு அறியாது – wealth that he bestowed not spoiled, வாய்வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீமிசை – on Naviram Mountain with prosperity where bamboo grows (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஞெரேரென மழை சுரந்தன்ன – like how rain showers fall rapidly, ஈகை நல்கி – gives charitably, தலைநாள் விடுக்கும் பரிசில் – he gives gifts on the first day and lets you leave, மலை நீர் வென்று எழு கொடியின் தோன்றும் – waterfalls from the mountains come down like raised victory banners, குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – the lord of the country surrounded by mountains



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard