New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரும்பாணாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பெரும்பாணாற்றுப்படை
Permalink  
 


பெரும்பாணாற்றுப்படை

http://sangacholai.in/10-4.html

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்	5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்	10
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்		15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து
பழு மரம் தேரும் பறவை போல			20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கை புலவு வாய் பாண
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு		25
வழங்க தவாஅ பெரு வளன் எய்தி
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்		30
திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்		35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை		40
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம்		45
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்		50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த		55
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்		60
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி		65
எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்	70
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி		75
உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும்		80
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின்
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது		85
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ்		90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல்
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறை தாள் விளவின்		95
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல்			100
வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர்		105
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்		110
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ	115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்		120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர்
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர்		125
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன		130
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்		135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு			140
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ	145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின்
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின்		150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி		155
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி		160
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்		165
மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை		170
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்		175
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின்		180
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில்		185
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர்
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்து பா மழை கடுப்ப			190
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று		195
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி		200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்		205
வன்புலம் இறந்த பின்றை மென் தோல்
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்		210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில்
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி		215
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்		220
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்		225
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி
கடுப்பு உடை பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்		230
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்	235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால்		240
செம்பொன்மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்			245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை		250
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்
தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி		255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை		260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில்		265
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும்		270
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
அவையா அரிசி அம் களி துழவை		275
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த		280
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ	285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி			290
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்		295
பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின்
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்		300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்		305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர்		310
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த		315
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ		320
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா		325
மேழக தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்		330
பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்		335
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல்
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்		340
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர்		345
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்		350
துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின்		355
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம்
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம்
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும்		360
தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல்
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர			365
சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து
பல் மரம் நீள் இடை போகி நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்		370
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி		375
பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால்	380
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்	385
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின்		390
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும்
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ
நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில்			395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ
கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த		400
அடையா வாயில் மிளை சூழ் படப்பை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்		405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல
புலவு கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ		410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய		415
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கை வண் தோன்றல்			420
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்		425
துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமைய செ வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு	430
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து		435
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்	440
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி		445
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி
பொறி வரி புகர்முகம் தாக்கிய வயமான்
கொடுவரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர்		450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை
கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ			455
செல்வர் செல்வ செரு மேம்படுந
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி		460
வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி
நின் நிலை தெரியா அளவை அ நிலை
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க	465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ	470
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும்		475
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்		480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
உரவு கடல் முகந்த பருவ வானத்து
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பகம் பொலிய பொன்னின்		485
தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து	490
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்		495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே		500


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய 		5
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ
(விரியாமல்)கருவாய் இருந்ததைப் போன்ற (இரண்டு)கண்ணும் கூடின செறிந்த துளையினையும்;
உருக்கி (ஒன்றாக வார்த்ததைப்)போன்ற (தோல் வேறுபாடு தெரியாமல்)பொருத்தப்பட்ட உறையினையும்;
சுனை வற்றியதைப் போன்ற இருள் செறிந்த உள்நாக்கில்லாத வாயினையும்;			10
பிறை பிறந்ததைப் போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற பிளவுபட்ட கடையினையும்;
நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
குறிய தொடியைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
நீலமணி (நீரைப்போல்)ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும்;
பொன் (உருக்கப்பட்டுக் கம்பியாக)வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய	15
கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து,
வெம்மையான சினம் கொண்ட ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும்
குளிர்ந்த கடல் (சூழ்ந்த)உலகில் (உன்னை)ஆதரிப்போரைப் பெறாமல்,
பொழியும் மழை புறக்கணித்த (நிலத்தில் எழுந்த)ஆவி சூழ்ந்த மலையிலுள்ள
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல,						20
அழுகின்ற சுற்றத்துடன் கால் போனவழியே செல்லும்
பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே -
பெரிய வறட்சி மிக்க கானம்(முழுதும்) கல்லென்ற ஆரவாரத்தால் நிறையும்படியாக
கூட்டமான மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போன்று,
நீண்டநாட் பசி மிக்க (எம்முடைய)கரிய பெரிய சுற்றத்தோடு					25
(பிறருக்குக்)கொடுக்கவும் மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று,
வெண்மையான தலையாட்டுச்சிறகுகளையுடைய குதிரையுடன் வலிமையான யானைகளையும் வாரிக்கொண்டு
யாம் அவன் ஊரினின்று வருகின்றோம் - நீங்களும்,
பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் (அமைய), அக் கடலின்			30
திரை கொணர்ந்து ஏறவிட்ட பாரம்பரியம் கொண்ட சோழன் குடிபிறந்தோனாகிய,
அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும்
முரசு முழங்குகின்ற படைகளையுடைய மூவேந்தர்க்குள்ளும்,
விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்,					35
(நல்லது)அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும்,
பல வேற்படையினையும் உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின் -
கேட்பாயாக, அவனின் தன்மையை, கெடுக நின் துயரம் -
(வேறு ஊர்களுக்கான)வழியில் போவாரை (அவர்)கதறும்படி வெட்டி,
(அவர்)உடைமைகளைக் கைப்பற்றும் களவே உழவு (போலத் தொழிலாகவுடைய)வாழ்வாகக்கொண்ட	40
கொடியவர் இல்லாதது, அவ் வள்லலின் காவலை உடைய அகன்ற நாடு;
இடியேறும் இடியாது; பாம்புகளும் கொல்லமாட்டா;
காட்டு விலங்குகளும் தீங்கு செய்யமாட்டா; (நீ)விரும்பியபடியே,
இளைத்தவிடத்தே இளைப்பாறி, விரும்பியவிடத்தே தங்கி,
செல்வாயாக, இரவலனே, சிறப்புறுவதாக நின் நெஞ்சம் -						45
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய,
மத்தளம் போன்று முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும்,
(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும்,
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி- 	50
யானை(புனத்தில் தின்னாமல்) காக்கின்றோர் (இதண் மேல் கட்டின)குடிலைப் போன்ற,
கோழிகள் தங்கும் கூட்டை உடைய (குடிலின்)வாயிலில்,
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படி தூக்கி,
நாடக மகளிர் (தாம்)ஆடும் களத்தில் கொண்டுவந்த							55
வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி,
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து,
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப -
கொம்பிடத்தே பூங்கொத்தையுடைய வேம்பின் மேன்மையையுடைய இலையை இடையிடையே கட்டிய
தழை விரவின மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்	60
முறுக்குண்ட உடம்பினையும், நிரம்பிய மெய்வலியினையும் உடைய மாக்கள்
சிறிய துளையினையுடைய வளைந்த நுகத்தின்கண் (எருதுகள்)ஒருவழிப்படுமாறு நிரலே கட்டின
பெரிய கயிற்றையுடையனவாகிய (சகட)ஒழுங்கினை பக்கத்தே காத்துச்செல்ல,
உப்பாகிய உணவின் விலையைக் கூறி,
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி			65
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்;
பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து,
(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;	70
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
உடைவாள் செருகப்பட்ட கட்டு இறுகிய உடையினையும்;
கரிய வில்லின் வலிமையை விரட்டிய, இடமகன்ற வலிமையுடைய தோளினையும்;
கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்;				75
வேலினைக் கொண்ட பெரிய கையினையும் உடைய புறங்கொடாத புதியவராகிய வழிப்போவார் -
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே - செல்கின்ற			80
சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் கவர்த்த வழியைப் பாதுகாக்கின்ற
விற்படையிருக்கின்ற ஊர்களையுடைய அகன்ற காட்டுவழிகளில் -
நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,					85
ஆற்றின் அறலை ஒக்கும் முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய,
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,
மான் தோலாகிய படுக்கையில் பிள்ளையோடு முடங்கிக்கிடக்கும்
மகப்பேறடைந்த பெண்ணைத் தவிர (ஏனையோர்)போய், வலிய வயிரம் பாய்ந்த 			90
பூண் தலையில் கட்டப்பட்ட திருந்திய திரட்சியையுடைய சீரிய கோலின்
(மறுபக்கம் உள்ள)உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர் -
பார்வை மான் கட்டிய தேய்ந்த தாளினையுடைய விளாமரத்தின்					95
நிழலையுடைய முற்றத்தில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு,
குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி, ஆழமான கிணற்றில்
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு, பழைய
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை -	100
‘வாடாத தும்பை சூடின போரில் வல்ல மறவருடைய தலைவனாகிய
புறமுதுகிடாத படையினையுடைய சிறந்த தொழில்நுணுக்கம் கொண்ட வீரக்கழல் அணிந்த
செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம்' எனின்,
- தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலிபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய
பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்;				105
மானின் அடிச்சுவடுகள் பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்,
மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,
புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை - வெற்றி வாகை - வாகைத் திணை)
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்				110
நடுயாமத்து வேட்டையைச் செய்யாதுவிட்டால், பகற்பொழுதில்
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து),	115
கடுமையான கானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்
அரிய வழியைக் கடந்த பின்னர் - (அதற்கு அப்பால்)பருந்துகள் வந்து படியுமாறு
(தம்மைப்)பொருந்தாத பகைவர் அஞ்ச, (அவரைக்)குத்தி,
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய	120
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்;
ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,
மலையின் தேன்கூட்டை ஒக்கும், கவைத்த அடிப்பக்கத்தையுடைய அம்புக்கட்டுக்களுடன்,
(ஓசை)கடிதான உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்,
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்;	125
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்,
உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட),
நெடிய முனையினையுடைய வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய,
கொடிய வில்லையுடைய எயினரின் அரணில் சென்று தங்கின்,
களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று,					130
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்
பொரியலால் மறைக்கப்படுமளவு மனைகள்தோறும் பெறுவீர்கள் -
யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,							135
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும்,
(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,
புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்,
வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,				140
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க,
வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து,		145
பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய
பொரு களங்களைக் கழிந்த பின்னர் - ஆட்டுமறிகளுக்குத்
தழைகள்(தம்மிடத்தே) கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்,
இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும்,
(வரகுக்)கற்றை வேய்ந்த கழிகளைத் தலையிலேயும் கொண்ட சேக்கையின்கண்,			150
தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும், ஆட்டுக்கிடாயின்
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் -
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,		155
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,			160
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
நெய்யின் விலைக்குக் கட்டியாகிய பசும்பொன்னையும் வாங்காதவளாய்,
எருமையையும், நல்ல ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற	165
மடித்த வாயையுடைய இடையர் குடியிருப்பிலே தங்குவீராயின்,
பெரிய சுற்றமாகிய நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த
பசிய தினையரிசியிலான சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர் –
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,			170
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன் -		175
கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டில் தங்கி,
அழகிய நுண்ணிதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்து,
தீக்கடையப்படும் கோலால் உண்டாக்கிக்கொண்ட பெரிய திறலுடைய கொள்ளிக்கட்டையின்
சிவந்த நெருப்புத் துளைத்த கரிய துளையினையுடைய குழலில் எழுப்பின,
இனிய பாலைப் பண்ணை(த் தான்) - வெறுக்கின், குமிழினது					180
உள்ளீடற்ற கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய
வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,
பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும்,
புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்து போய் - முள்ளை உடுத்திக்கொண்டு
எழுகின்ற காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களையுடைய நிலத்தின்கண்,				185
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்,
குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய,
மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப						190
கரிய (வரகு)வைக்கோலால் வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில்,
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
புள்ளிபுள்ளியாகத் தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்		195
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர் - அந்நிலத்திற்கு மேல்,
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,					200
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி,
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த
வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்					205
வன்புலமான முல்லைநிலத்தைக் கடந்த பின்பு - மெத்தென்ற தோலாலான
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த
கவர்த்த காலையுடைய நண்டின் சேற்று வளை கெடும்படி,
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,						210
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்
களைபறிப்போர் பறித்துத் தந்த திரண்ட தாளினையுடைய நெய்தலின்
தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின், முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்			215
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
ஈரையுடைய கரிய தலை நிறையும்படி சூடி,
பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்			220
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,
இரும்பைத் தகடாக்கினாற் போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய,
கரிய கையுடைய தொழிலாளரின் காதல் இளையோர்கள்
பழைய சோற்றின் கட்டியை வெறுத்து, வரம்பிடத்தே
புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில்					225
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால், (அதற்கு)அருகிலுள்ள
வளைந்த வாயையுடைய கிளிகள் (தமக்கு)உண்டாகின்ற பகையாகக் கருதி அஞ்சும்
இடையறாத புதுவருவாயினையுடைய வளைந்த கதிர்களையுடைய கழனியிடத்து,
(கொட்டினால் ஏற்படும்)கடுப்பு உடைய (பறவை இனமான)குளவித் திரளை ஒத்த
பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்							230
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,
பாம்பு கிடக்கின்ற மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள)
பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி,
கூட்டம் கொண்ட (தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில் அழகிய பூதங்கள் (வெண்மையான)ஆடையை உடுத்தி நின்றவை போல	235
சிலந்தியின் வெண்மையான நூல் சூழ்ந்த பக்கத்தினையுடைய
(பலவாகத்)திரண்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து,
கடா விட்டுப்போன பின்பு, தூசு போக,
வைக்கோலையும் கூளத்தையும் நீக்கி, ஈரம் உலர,
மேற்காற்றில் (தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள)					240
சிவந்த பொன்(போன்ற மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில் -
எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக்
கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிவினையும்,							245
தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்;
தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி அழகிதாய்ப் பண்ணின
(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்
(தமது)தளர் நடை(யால் உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய		250
செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,
(தமது)படுக்கையில் துயிலும் அழகையுடைய நல்ல இல்லினையும் (உடைய)
நீடித்திருக்கும் பசியை அறியாத நிலைகெடாத குடியிருப்புகள்(நிறைந்த)
வளன் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை							255
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர் –
முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில்,
(தம்மை)வருத்துதலையுடைய யாளி தாக்குகையால், பலவும் கூடிக்
கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய								260
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர் –
மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்			265
வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,
இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் நிறைந்திருந்து,
புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச்
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,				270
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத,
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிகளையுடைய வலைஞருடைய குடியிருப்பில் தங்குவீராயின் -
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை	275
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி,
பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (இடித்து அதில்)கலந்து, இனிமை மிக
பகலும் இரவும் இருமுறை போக்கி,
கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்),	280


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை,
பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர் -
(வாடூனன்றி)பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட		285
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,
நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த
கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,		290
துளி சொரிதலை ஒழிந்த, ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய,
அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
(ஒன்றற்கொன்று நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்) பொய்கைகளில்,
பூப்பறிப்பார் உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும்,					295
விழாக்கோலம் (கொண்டாற் போல)சூடியவராய்ப் போவீராக -
கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தலினையும்,
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
மனைகளில் தங்கும் கோழிகளுடன் நாயும் அருகே வராமல்(இருக்கும்),
வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்				300
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின் -
பெரிய நல்ல விசும்பில் வடதிசைக்கண் நின்று விளங்கும்
சிறிய விண்மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறிய நுதலினையும்,
வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி இடமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,	305
சிவலைப் பசுவின் நறிய மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,
கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு, பசிய கொத்துக்களையுடைய
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர் -				310
(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த 			315
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்
நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று - பாலின் நிறமான
வெண்மையான தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும்	320
மரக்கலங்கள் சூழ்ந்த பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க தெருக்களையும்,
பரதவர் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,
தொழில் செய்வோர் காக்கும் மிகவும் உயரமான பண்டசாலைகளையும்,
நெல்லிற்கு உழுகின்ற எருதுகளுடன் (பால் தரும்)பசுக்கள் நெருங்காவாய்,			325
ஆட்டுக்கிடாயோடே நாயும் சுழன்று திரியும்,
உணவுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர்,
கொன்றையின் அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல
பசிய மணிகளைக் கோத்த வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய,
பெருமையையுடைய பக்கமலையில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும்				330
தோகையையுடைய மயில் போல் உலாவி, கால்களிடத்தனவாகிய
செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய
வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,		335
பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின் - முட்டுப்பாடில்லாத
பசிய கொடிகள் அசைகின்ற பலரும் நுழையும் வாயிலிடத்து,
சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து,							340
ஈரத்தையுடைய சேற்றை அளைத்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய
பலவாகிய மயிர்களையுடைய பெண் பன்றிகளோடே மனவிருப்பம் கொள்ளாமல்,
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர் -			345
வானம் (வீழாதபடி முட்டுக்காலாக) ஊன்றிவைத்த பற்றுக்கோல் போல
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய தலையினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்					350
துறை பின்னே கிடக்க (கடந்து) போய் - உரல் போன்ற அடியினையுடைய
மலையோடு மாறுபடுகின்ற யானையின் உடம்பை ஒக்கும்
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால் -		355
தாழ்ந்த குலைகளையுடைய பலாவின், சூழ்ந்து அமைந்துள்ள சுளைகளையுடைய பெரிய பழத்தையும்,
விழுதில்லாத தாழையாகிய தென்னையின் இளநீரின் இனிய நீரையும்,
கவைத்த முலையையுடைய குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும்,
குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,
திரண்ட அடியினையுடைய பனையின் நுங்கோடே, வேறும்						360
இனிய பல பண்டங்களையும் வெறுப்பின், சேம்பின்
முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர் - பகல் மழையின்
மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி,						365
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற
கெடாத புதுவருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்து,
பல மரங்கள் வளர்ந்த நீண்ட வழியில் போய், நல்ல நகரங்கள்தோறும்,
விண்ணைத் தீண்டும் மாடங்களில் விளங்கிநின்ற மதில் சூழ்ந்த,
வாடாத வள்ளியாகிய வள்ளிக் கூத்தினைக் கொண்ட, வளங்கள் பலவற்றையும் தருகின்ற	370
நாடுகள் பலவற்றையும் கடந்த பின்பு - நீண்ட பூங்கொத்துகளையுடைய
காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று
பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து,
வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்,
குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும்,			375
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த 
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி,
மழைநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய			380
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு - நாள்தோறும்
பெரிய மகிழ்ச்சியையுடைய இருக்கைகளில் தங்கி, சிறிய கோட்டையுடைய
இளைய திங்களைச் செம்பாம்பு தீண்டினாற் போன்று
மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள் சூழும் ஒளியையுடைய நுதலினையும்,		385
தேனை உருப்பெயர்த்துக் அமைத்ததைப் போன்ற நல்ல அழகிய குளிர்ச்சியுடைய கண்ணையும் கொண்ட
மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி;
பெறுதற்கரிய பழைமையான புகழினையுடைய துறக்கத்தை ஒக்கும்
பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே,
(இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில்				390
அரிய திறலினையுடைய கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய
கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய் (அங்கிருந்து)போமின் -
பரிக்கோலையுடையோர் கவனம் சிதைந்த நேரம் பார்த்து, கீழேயுள்ள
நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;				395
(அக்)களிற்று யானைகளின் சினத்தை அடக்கிய முதிராத தன்மை இல்லாத தறிகளையும்;
திண்ணிய தேர்கள் (ஓடிக்)குழித்த பள்ளங்களுள்ள நெடிய தெருக்களையும்;
(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,
விற்பதும் வாங்குவதும் (நிறைந்து) நடந்துசெல்வோரைத் தடுத்து நிறுத்துவதும்,			400
(பரிசிலர்க்கு)அடையாததும் ஆன வாயிலினையும்; காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்;
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்;			405
இழுமென்னும் ஓசையையுடைய திரண்ட பறவையினங்களின் திரளையுடைய,
கொழுவிய மெல்லிய கொம்புகளையுடைனவாகிய, (பூவாமல் காய்க்கும்)கோளியாகிய மரங்களினுள்ளும்,
பழத்தால் மேலாகச் சொல்லும் பலாமரத்தைப் போன்று,
புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த வானம் கவிந்த
அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி,			410
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர் -
அழகிய வாயைக்கொண்ட வளர்பிறையைச் சூடிச், சிவந்த இடத்தையுடைய
அந்தி(ப்பொழுதின் செக்கர்)வானத்தே அசைகின்ற முகில்களை ஒப்ப,
வெண்மையான கொம்பினையுடைய கரிய (யானையின்)பிணத்தைக் குருதி(யாறு) இழுத்துச்செல்லும்படி,
நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி,						415
பெரிய போரினை வென்று கடந்த, கொடுஞ்சியுள்ள, நெடிய தேரினையுடைய,
தோற்காத போரினையுடைய பாண்டவரைப் போன்று,
(எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து (தன்)மேல் வந்த
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,
காஞ்சிபுரத்துள்ளான், கை(யால் வழங்கும்)வண்மையில் சிறந்தவன்(தொண்டைமானிளந்திரையன்),		420
(அவன்)தன்னை விரும்பித் (தன்பால்)எய்தினோர்க்குப் பாதுகாவல் ஆகிய
அருள்செய்தலும், (தன்னைப் பகைத்தோரை)அழித்தலும் (தனக்கு)எளிய (செயல்களே)ஆகலான்,
(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,
நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும்,						425
(அவன்)வலியை(த் துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும் (ஆகிய),
மலையினின்றும் விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல்
பலவேறு வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள் -
தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய மலையின்கண்
வெண்மையான (நீருள்ள)ஓடைகள் கிழித்தோடுதலால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய கரத்தினின்றும்	430
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல -
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;					435
பெரிய கையையுடைய யானைக்கு வளைந்து கிடக்கும் பூணைச் சேர்க்கும்
வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே -		440
கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து,
(கூறாமலே)குறிப்பால் தெரிந்து உணரும் மயக்கமற்ற காட்சியையுடையனாய்,			445
கொடை எனும் கடமையைச் செய்துமுடித்த கூம்பாத உள்ளத்துடன்,
கொடுமையில்லாத அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி,
‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
(பின்னர்)புலியின் குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று,
புலவர்க்குப் பேரணிகலன்களையும் பிற கடமைகளையும் வழங்கி, பகைவருடைய		450
காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்
வெற்றியையே அல்லது (அவ்வரசர் உன்)வினைக்கு உடன்படினும்
மனம் பொருந்துதல் செல்லாத, வலிய வாளினையுடைய பெரிய கையினையும்,
(பகைப்புலத்துக்)கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே,
மள்ளர்க்கு மள்ளனே, மறவர்க்கு மறவனே,								455
செல்வர்க்குச் செல்வனே, போர்த்தொழில் மிக்கவனே,
வெண்மையான அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற
பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றினையும்,
துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் (சில)நொடிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,			460
வந்தேன் பெருமானே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக' என்று சொல்லி,
இடப்பக்கத்தே உடைய பேரியாழை இயக்குமுறையில் இயக்கி,
(மன்னவர்க்கான)முறைமையை அறிந்த நியதிப்படியே கையால் தொழுது நாவால் புகழ்ந்து,
உனது நிலையினைத் தெரிதற்கு முன்னரே, அந்த நிலையின்கண்ணே
நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி,		465
நிலையற்ற (இவ்)உலகத்தே நிலையுள்ளது (புகழ் ஒன்றே என்று)ஆராய்ந்து,
அந்தப் புகழ்நிலையைச் சேரும்பொருட்டு, நின் இடுப்பில் கிடந்த
பாசியின் வேரை ஒத்த சிதர்த்தழிந்த கந்தையை அகற்றி,
(பால்)ஆவியை ஒத்த ஒளிரும் நூலால் செய்த துகில்களை
(உன்)கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து,				470
வளைந்த அரிவாளைக் கொண்ட வடு அழுந்தின வலிவுள்ள கையினையுடைய
சமையற்காரன் ஆக்கின பல இறைச்சியில் கொழுவிய தசைகளும்,
அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய
ஆராய்ந்து பொறுக்கிக்கொண்ட அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய சோற்றையும்,
அரிய காவலில் வைத்த இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளையும், பிறவும் ஆகிய		475
(கண்டோர்)விரும்பும் முறைமைத்தாகிய மூடிவைத்தலை உடைய அடிசில்களை,
விண்மீன்கள் (இரவில்)மலர்ந்தாற் போன்று வெள்ளிக் கலங்களைப் பரக்க இட்டு,
தாய் பிள்ளையைப் பார்க்குமாறு திரும்பத்திரும்பப் பார்த்து, முகம் இனிது காட்டி,
குன்றாத விருப்பத்துடன் தான் எதிர்நின்று உண்ணச்செய்து -
இருண்ட வானத்தின்கண் திங்களைப் போன்று							480
உலாவும் வண்டுகள் ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை
நீண்ட கரிய மயிரில் அழகுபெறச் சூட்டி;
தொடர்ந்து இயங்கும் கடலின்கண் நீரை முகந்துகொண்ட பருவ கால வானத்தில்
பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,
அலங்கரித்த கரிய மயிரிடம் அழகு பெறும்படி, பொன்னால் செய்து				485
சேரக்கட்டின மாலையை ஆடும் மகளிர் சூடி நிற்ப;
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்,
தன்னுடன் சேர்ந்தவையோடு ஒத்துத் தொழில்செய்வனவான, நான்கினை ஒருசேரப் பூட்டி,
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி		490
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன				
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
(நீ சென்ற)அன்றே நினக்கு  ஏனைய பரிசிலும் தந்து விடுவான் - இனிய தாளத்தில்,
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இளமரக்காட்டினையும்;						495
முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய,
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்.	500


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை   – Perumpānātruppadai

Translated by Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

பாடியவர்          :      கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்         :      தொண்டைமான் இளந்திரையன்
திணை                   பாடாண் திணை
துறை              :              ஆற்றுப்படை
பாவகை                 ஆசிரியப்பா
மொத்த அடிகள்    :      500

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரும்பாண், பெரிய பாண் எனப் பொருள்படும்.  பெரிய பாணாவது, பெரும் பண்.  அஃதாவது பெரிய பாட்டு.  அக்காலத்துப் பாட்டுக்களைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் பிரிந்திருந்தனர்.  அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர் ஆவர்.  பாணரை அவர் பண்பால் பாண் என்றுக் கொண்டு அவரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர் அமைத்தனர்.

பாணனது யாழின் வருணனை

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்   5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை
உருக்கி யன்ன, பொருத்துறு போர்வைச்
சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய்ப்   10
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை,
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்தன்ன, மாஇரு மருப்பின்
பொன் வார்ந்தன்ன, புரி அடங்கு நரம்பின்   15

தொடை அமை கேள்வி இடவயின் தழீஇ,  (1-16)

Description of the bard’s lute

The sun rises with many rays, with great

rage, swallowing the darkness spread in the

wide sky, in this scorching intense summer.

 

Hugging perfectly on your left side is your lute,

its outer leather cover like the torn inner part

of large pāthiri flowers with thick petals,

swarmed by bees, that blossom on thick-trunked

trees that have lost their green leaves,

its eye-like close holes like the new flower buds

under the spathe of a betelnut palm, its cover like

it was melted and molded, its sound hole dark

like a dry spring, its lifted, forked end like the

crescent moon, its frets like the small bangles

on the forearms of a delicate woman with long,

bamboo-like arms, its strings looking like gold,

that can be loosened and tightened, and

its large, dark stem resembling sapphire strands,

Notes:  புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 – பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்.  கேள்வி (16) – யாழிற்கு ஆகுபெயர்.

Meanings:  அகல் இரு விசும்பில் – in the wide, vast/dark sky, பாய் இருள் பருகி – swallowing the darkness that has spread, பகல் கான்று – revealing day time, எழுதரு பல் கதிர்ப் பருதி – rising sun with many rays, காய் சினம் திருகிய – scorched with great rage, கடுந்திறல் வேனில் – in the intensely hot summer, பாசிலை ஒழித்த – lost its green leaves, பராஅரை – thick trunk (இசைநிறை அளபெடை),  பாதிரி – Stereospermum chelonoides, Trumpet flower, வள் இதழ் – thick petals, மா மலர் – large/dark flowers buzzed by bees, வயிற்றிடை வகுத்ததன் – inside the torn part, உள்ளகம் புரையும் – like the inner sides (புரை – உவம உருபு, a comparison word), ஊட்டுறு பச்சை – dyed leather cover, பரியரைக் கமுகின் – betel nut trees with thick trunks, பாளை – spathe, அம் பசும் பூக்கரு இருந்தன்ன  – like the new buds of the beautiful flowers, கண் கூடு செறி துளை – close holes like eyes together, thick holes like eyes together, உருக்கியன்ன பொருத்துறு போர்வை – the cover appeared like it was melted and fitted perfectly, சுனை வறந்தன்ன – like a dried spring, இருள் தூங்கு – darkness residing, வறுவாய் – empty mouth/mouth without tongue/opening, பிறை பிறந்தன்ன – like a new crescent moon that appeared, பின் ஏந்து – in the back and lifted, கவைக்கடை – forked end, நெடும் – long, பணைத் திரள் தோள் –  thick arms like bamboo, மடந்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும் – like the small bangles on a young girl’s forearm, மெலிந்து வீங்கு – loosen and tighten, திவவின் – with frets, மணி வார்ந்தன்ன – like long strands of sapphire,  மாஇரு மருப்பின் – with a large and dark stem, பொன் வார்ந்தன்ன – like made with stretched gold, புரி அடங்கு நரம்பின் – with tightly tied strings, தொடை அமை – ties are perfect, கேள்வி – lute (ஆகுபெயர் யாழிற்கு), இடவயின் தழீஇ  – hugging on your left side (தழீஇ – சொல்லிசை அளபெடை)

பாணனது வறுமை

வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்,   20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! (17-22)

The Poverty of the Bard

you with a body that is thin, wander with your

loud relatives, like birds that seek fruit trees

in the mountains with fog, abandoned by rain,

frustrated that you cannot find donors in this

world surrounded by the cool ocean, circled

with strength by the moon and heated by the

hot sun, O bard!

Notes:  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.

Meanings:  வெந்தெறல் கனலியொடு – along with the heat emitting sun, மதி – the moon, வலம் திரிதரும் – roams with strength, தண் கடல் வரைப்பில் – in the land with the ocean as its limits, in the earth surrounded by cool water, தாங்குநர்ப் பெறாது – not getting donors, பொழி மழை துறந்த – abandoned by the pouring rains, புகை வேய் குன்றத்து – in the mountains with fog, பழுமரம் தேரும் பறவை போல – like birds that search for fruit trees, கல்லென் சுற்றமொடு – with loud relatives, கால் – places, கிளர்ந்து – rise up, திரிதரும் – roam around, புல்லென் யாக்கை – dull body, body that is thin, புலவுவாய்ப் பாண – O frustrated bard, O bard who talks ill of your training and work (பாண – அண்மை விளி)

பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்துரத்தல்

பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்குப்,
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு   25
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு

யாம் அவணின்றும் வருதும்; (23-28)

The Bard who received wealth tells the other Bard about it

We are returning with our very large family

that was hungry for a long time, after receiving

gifts of horses with white tufts, strong bull

elephants and great wealth that will not get

reduced by giving, like a dry forest receiving

loud, heavy rain with thunder and lightning.

Notes:  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.  கருவி வானம் (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.

Meanings:  பெருவறம் கூர்ந்த கானம் – forest that is very dry, கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்தாங்கு – like how the clouds with thunder and lightning poured rain loudly, பழம் பசி கூர்ந்த – with great hunger for a long time, எம் இரும்பேர் ஒக்கலொடு – with my very large clan of relatives, with my dark and large family of relatives, வழங்கத் தவாஅ – won’t get reduced by giving (தவாஅ – இசை நிறை அளபெடை), அப் பெருவளன் எய்தி – attain great wealth (வளன் – வளம் என்பதன் போலி), வால் உளைப் புரவியொடு – along with horses with white tufts, வயக்களிறு – strong male elephants, முகந்துகொண்டு யாம் அவணின்றும் வருதும் – we coming from there after receiving all these

திரையனது சிறப்பை அறிவித்தல்

….. …. ………. நீயிரும்,

இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்   30
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்,   35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்,

கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்! (28-38)

Announcing the Fame of Thiraiyan

Your poverty will be removed if you go to

Thiraiyan who has an army of spears and a

protecting, just scepter, who is of a lineage

from that of the ocean with waves, heir to

Thirumal of ocean color,

who measured the earth in one step and has

Thirumakal on his chest, greater than the three

great kings with armies with roaring drums,

who protect lives on this wide earth.  His faultless

splendor is great like the right-whorled conches

from the bright, wide ocean that is praised as

the best among conch.

Listen to what I have to say about him!

Meanings:  நீயிரும் – also you, இரு நிலம் கடந்த – measured the large land, stepped over the large land, திருமறு மார்பின் – with a chest with Thirumakal, with a chest with Lakshmi,  முந்நீர் வண்ணன் – one with the color of the ocean, Thirumal, பிறங்கடை – one who came behind, heir, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் – of the family with heritage given by that ocean,  உம்பல் – heir, மலர்தலை உலகத்து – in the wide world,  மன் உயிர் காக்கும் – protecting stable lives, முரசு முழங்கு தானை மூவர் உள்ளும் – among the three great kings with armies with roaring drums, இலங்கு நீர்ப் பரப்பின் – in the bright wide water (ocean), வளை மீக் கூறும் – praised more than other conches, வலம்புரி அன்ன – like the right-whorled conches, வசை நீங்கு சிறப்பின் – with faultless greatness, அல்லது – or, கடிந்த – protective, அறம் புரி – desiring virtue, desiring justice, செங்கோல் – scepter, பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின் – if you go to Thiraiyan with many spears, கேள் அவன் நிலையே – listen about his situation, கெடுக நின் அவலம் – let your poverty be ruined, let your poverty be lost (கெடுக – வியங்கோள் வினைமுற்று)

திரையனது ஆணை

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக்   40
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது, அரவும் தப்பா,
காட்டு மாவும் உறுகண் செய்யா,

வேட்டு ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச்,

சென்மோ இரவல! சிறக்க நின் உள்ளம்! (39-45)

Safe paths in Thiraiyan’s country

In his protected, wide country, there are no

cruel wasteland bandits whose livelihood is

plucking things from the hands of people,

attacking them as they scream.   Thunder does

not attack, snakes don’t kill, and wild animals

do not hurt.  Rest wherever you desire to rest,

relax and proceed.  May your mind flourish!

Meanings:  அத்தம் செல்வோர் – those who go to the wasteland, அலறத் தாக்கி – attack them as they scream, கைப்பொருள் வௌவும் – plunder what they carry in their hands, களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் – cruel people (men) who live a life of stealing (as their plow/livelihood), இன்று – without, அவன் கடியுடை வியன் புலம் – his vast land with protection, உருமும் உரறாது – thunder does not roar/attack, அரவும் தப்பா – snakes don’t err (don’t bite), காட்டு மாவும் உறுகண் செய்யா – forest animals do not hurt, வேட்டு ஆங்கு அசைவுழி அசைஇ – rest where you are tired (அசைவுழி  – உழி ஏழாம் வேற்றுமை உருபு, அசைஇ – சொல்லிசை அளபெடை), நசைவுழி – desired place (நசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு), தங்கி சென்மோ இரவல – stay and go O bard in need (மோ – முன்னிலையசை, an expletive of the second person), சிறக்க நின் உள்ளம் – may your mind flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று)

உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி

கொழுஞ்சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்  50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த   55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்,
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணிதோள்,   60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த,
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச்
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி, (46-65)

The Long Path that Salt Merchants take

The wagons of salt merchants have wheel

rims which surround perfectly placed spokes,

massive wheel hubs made from huge trees,

thick, strong wooden axle bars appearing like

two fortress gate cross bars tied together, roofs

woven with grass looking like rain clouds carried

by the mountains during monsoons, and cages

for domestic fowl resembling the huts of guards

who protect fields against elephants.

 

In a wagon, there is a small mortar with holes

in the shape of the knees of a cow elephant with

tusks like the sprouts of bamboo, that dangles

from the cart near the cage.

 

The salt merchant’s wife, holding her child,

is seated on a wooden bar on which a pickle pot

circled with ropes is placed, that resembles

small drums with holes that are tied with ropes

and played when drama actresses dance in dancing

arenas, that resemble the legs of female elephants

whose tusks appear like bamboo sprouts.

 

She hits the oxen on their back and drives the

cart, and strong men with thick shoulders and firm

bodies wearing garlands made with fine leaves

of neem trees with clusters of flowers on branches,

walk near the cart with curved yoke with small holes

tied properly with large ropes, calling out the price of

salt, in the long path that takes the salt merchants

owning many bulls, to many towns.

Notes:  அறைவாய்ச் சகடம் (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ‘அறைத்துச் செல்லும் வாயையுடைய’ எனினுமாம், ‘வாய் அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம்’ எனினுமாம், அறைவாய்ச் சகடம், அகநானூறு 301 – வேங்கடசாமி நாட்டார் உரை – ‘ஒலியினைச் செய்யும் வாயினுடைய வண்டி’, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அறுத்து அமைத்த வாயையுடைய சகடம்’.  மூக்கின் (57) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூக்கு – சகடத்தின் முன்னர் நுகத்தடி பிணைக்கப்பட்ட மரம்.  இக்காலத்திலும் மூக்கணை என்றே வழங்குதல் அறிக.

Meanings:  கொழுஞ்சூட்டு – with thick wheel rims, அருந்திய – swallowed, covered, திருந்து நிலை ஆரத்து – with perfectly placed spokes, முழவின் அன்ன – like drums, முழு மர – of thick trees, of whole trees, உருளி – round wheel hubs, எழூஉப் புணர்ந்தன்ன – like two wooden bars (from fort gates) that are united (எழூஉ – இன்னிசை அளபெடை), பரூஉக்கை நோன் பார் – thick and strong wooden bar (பரூஉ – இன்னிசை அளபெடை), மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன – like the mountains carrying the rain clouds in the rainy season, ஆரை வேய்ந்த – mat woven with grass, அறைவாய்ச் சகடம் – wagon that cuts into the path, wagon front made with cut grass, வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – like the huts that guards who protect from elephants have built (on tall platforms), கோழி சேக்கும் கூடுடைப் புதவின் – with baskets with hens residing near the entrance, முளை எயிற்று – with tusks that are like sprouts (of bamboo), இரும்பிடி – dark/big female elephant, முழந்தாள் ஏய்க்கும் – like the legs (முழந்தாள் = முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு, part of the leg between the knee and the ankle), துளை – holes, அரைச் சீறுரல் –  a small drum, தூங்கத் தூக்கி – moving and lifting, நாடக மகளிர் ஆடுகளத்து – in the dancing hall of drama actresses, எடுத்த – carrying, விசி வீங்கு – tied with strings, இன் இயம் கடுப்ப – like  the sweet instruments/drums (கடுப்ப – உவம உருபு), கயிறு பிணித்து – tied with ropes, காடி வைத்த கலனுடை மூக்கின் – on the wooden part of the cart where the yoke is attached that bears the vessels with pickles, மகவுடை மகடூஉ – lady holding a child (மகடூஉ- இன்னிசை அளபெடை), பகடு – oxen, புறம் துரப்ப – hit on the back, கோட்டு இணர் வேம்பின் – neem trees with clusters of flowers on their branches, ஏட்டு இலை மிடைந்த – woven with the fine leaves, படலைக் கண்ணி – leaf garlands, பருஏர் எறுழ்த் திணிதோள் – thick and strong shoulders, முடலை யாக்கை  – tight bodies, முழு வலி மாக்கள் – men with great strength, சிறு துளை – small holes, கொடு நுகம் – curved yoke, நெறிபட நிரைத்த – tied straight in a proper manner, பெருங் கயிற்று – with large ropes, ஒழுகை மருங்கில் – near the cart, காப்ப – protected, சில்பத உணவின் – of salt which is food, கொள்ளை சாற்றி – calling out prices, பல் எருத்து – with many oxen, உமணர் – salt merchants, பதி போகு – going to towns, நெடு நெறி – long path

வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி

எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக,
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்,
அரும்பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம் புக்குப்
பொரு கணை தொலைச்சிய புண்தீர் மார்பின்,   70
விரவு வரிக் கச்சின் வெண்கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடைக்
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்,
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி,   75
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்,
தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட
சிறு சுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்   80
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்; (66-82)

The Forest Path on which Merchants Travel with their Donkeys

As a protection to those who travel during the

day, there are merchants who trade with rare

things that are from the mountains and oceans.

They are men of firm mind who wear body shirts

and sandals that cover their feet.  They have scars

on their chests, caused by taking arrows from foes.

Adept in archery, they hang bright swords with

white hilts, on the striped cloth tied around their

chests, which resemble snakes crawling on

mountains.

They have daggers on their tight clothing.  Their

arms that held black bows are strong.  Their

strength is like that of Murukan in kadampam

trees.  They have large hands carrying spears and

they don’t back off.

 

They travel on wide toll roads with their donkeys

with lifted ears and backs with deep scars,

that carry loads of pepper sacks, well balanced,

resembling jackfruits with small segments

that grow on the low, thick trunks of curved trees.

 

The forked forest paths used by merchants are

protected by those with bows.

Meanings:  எல்லிடைக் கழியுநர்க்கு – for those who pass during the day, ஏமம் ஆக – as protection, மலையவும் கடலவும் – from the mountains and oceans, மாண் பயம் தரூஉம் – yields with esteem (தரூஉம் – இன்னிசை அளபெடை), அரும் பொருள் – rare things, அருத்தும் – share with desire, திருந்து தொடை – perfectly started work, நோன் தாள் – unshakeable effort, அடி புதை அரணம் எய்தி – wearing slippers that hide the feet, படம் புக்கு – wearing a body shirt, பொரு கணை தொலைச்சிய – shot with arrows in fights and did not get killed, புண் தீர் மார்பின் – with chests with sores healed, விரவு வரிக் கச்சின் – on the striped cloth wrapped around their bodies, வெண்கை – white handles, ஒள் வாள் – bright sword, வரை ஊர் பாம்பின் – like a snake crawling on a mountain,  பூண்டு புடை தூங்க – hung on one side, சுரிகை நுழைந்த – sword placed, சுற்று வீங்கு செறிவு உடை – tightly worn clothes surrounding the body, கரு வில் – black bow, ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள் – strong wide shoulders that shot them, கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – strength like that of Murukan who is in a Kadampam tree, Neolamarckia cadamba, உடம்பிடி – spears, தடக்கை – large hands, ஓடா வம்பலர் – travelers/strangers who don’t run away, தடவு நிலைப் பலவின் – of jackfruit trees with curved trunks, of jackfruit trees with large trunks, Artocarpus heterophyllus, முழு முதற் கொண்ட – that are low on the thick trunks, சிறு சுளைப் பெரும்பழம் – large fruits with small segments, கடுப்ப – like (உவம உருபு), மிரியல் – black pepper, புணர்ப்பொறை தாங்கிய – carrying the weight together, வடு ஆழ் நோன் புறத்து – with strong back with deep scars, அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு – with merchants with donkeys with lifted ears, வழங்கும் – go, உல்குடைப் பெருவழி – huge path with toll roads, கவலை காக்கும் – protects the forked paths, வில்லுடை வைப்பின் – in towns/places bow warriors with bows, வியன் காட்டு இயவின் – in the vast forest paths



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எயிற்றியர் குடிசை

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த,
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன,
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது,   85
யாற்று அறல் புரையும் வெரிந் உடைக் கொழுமடல்,
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்,

ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை; (83-88)

The Huts of Forest Dwellers

The huts of forest dwellers are woven with

thick fronds of date palms, their back sides

like the river sand and the sharp ends like the

tips of spears.  The huts on the raised land

resemble the backs of porcupines.  Rats, and

squirrels with striped backs looking like the

open cotton pods of ilavam trees with swaying

branches and tall trunks, are unable to get in.

Meanings:  நீள் அரை இலவத்து – of ilavam trees/silk cotton trees with tall trunks, Bombax malabaricum, அலங்கு சினை பயந்த – given by the swaying branches, பூளை அம் பசுங்காய் – beautiful green pods with cotton, புடை விரிந்தன்ன – like the sides are split and open, வரிப்புற அணிலொடு – squirrels with stripes on their backs, கருப்பை ஆடாது – rats not roaming, யாற்று அறல் புரையும் – like the river sand (புரை – உவம உருபு, a comparison word), வெரிந் உடை – with the back side, கொழு மடல் – thick fronds, வேற்றலை அன்ன – like the ends of spears, வைந்நுதி – sharp tips, நெடுந்தகர் – tall raised land, ஈத்து இலை வேய்ந்த – woven with date palm leaves, எய்ப்புறக் குரம்பை – huts that resemble porcupine backs

புல்லரிசி எடுத்தல்

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி நோன் காழ்   90
இரும்புதலை யாத்த திருந்து கணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இருநிலக் கரம்பைப்படு நீறு ஆடி,

நுண் புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர், (89-94)

Collecting Grass Grain

Other than those who have given birth

recently who are resting on their cots made with

deer skins, women with white teeth, belonging to

the hunter clans, dig with tools with strong, fine

rods and sharp iron tips like those in chisels,

turn the soil and collect fine grains, their bodies

getting smeared with fine dust from the vast, clay

land.

Notes:   பிணவு (90) – பெண்.  பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய (தொல்காப்பியம், மரபியல் 61).  சுரை (92) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாரைக்கு (கடப்பாரைக்கு) ஆகுபெயர் என்க.

Meanings:  மான் தோல் – deer skin, பள்ளி – bed, மகவொடு முடங்கி – lying with children, ஈன் பிணவு ஒழியப் போகி – those other than the hunter woman who have given birth, நோன் காழ் – strong shaft, strong column, இரும்புதலை – iron top, யாத்த – attached, திருந்து கணை விழுக்கோல் – perfect/ thick/ fine rods, உளிவாய் சுரையின் – with rods with sharp ends like those in chisels,  மிளிர – turning (soil) upside down, மிண்டி – stabbing, digging (மிண்டி – குத்தி), இரு நிலக் கரம்பைப்படு நீறு ஆடி – smeared with dust that rise up in the vast clay land, நுண் புல் அடக்கிய – removed the fine grains, வெண்பல் எயிற்றியர் – the females of the wasteland hunters with white teeth

எயிற்றியர் அளிக்கும் உணவு

பார்வை யாத்த பறை தாள் விளவின்   95
நீழல் முன்றில் நில உரல் பெய்து,
குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடுங்கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடூன் புழுக்கல்,   100
வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை ஒண் தொழிற் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே,
தெய்வ மடையின் தேக்கு இலைக் குவைஇ, நும்

பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்; (95-105)

Food given by Forest Dwellers

In a front yard, in the shade of a woodapple

tree whose trunk has been reduced by a

decoy deer that is tied to attract other deer,

they pour the grain into an ural

set in the ground, and pound with their short

ulakkai, draw brackish water from a well, and

cook it along with dried white meat, in an old

pot with a ruined mouth rim, on a broken stove.

 

If you tell them that you are the bards of the lord

of the splendid mountains, wearing a gold thumpai

garland and bright warrior anklets, who owns an

army that does not run away from battles, they will

feed you and your hungry relatives abundant food,

heaped on teak leaves, like offerings given to gods.

Notes:  நற்றிணை 167-6 – பயன் தெரி பனுவல் பை தீர் பாண.  பார்வை (95) – நச்சினார்க்கினியர் உரை – பார்வை மான், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பார்வை மான், மானைக் காட்டி மானைப் பிடித்தற் பொருட்டு வளர்க்கப்பட்ட மான் என்க, பார்வை = ஆகுபெயர், நற்றிணை 212-1 – பார்வை வேட்டுவன் படுவலை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலை.  கழகத் தமிழ் அகராதி – பார்வை விலங்கு என்பது விலங்கைப் பிடிக்க பழகிய விலங்கு.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, பார்வைப் போர் – கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4.  பைதீர் (105) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசுமை தீர்ந்த.  The words பைதீர் பாணரொடு in Malaipadukādam 40 explained by Po. Ve. Somasundaranar as ‘with the poor bard’ – ‘பை – பசுமை, ஈங்கு செல்வமுடைமையின் மேற்று.  செல்வத்தை பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு  இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம்’.  The words பைதீர் பாண in Natrinai 167-6 has been interpreted by Pinnathur Narayanasamy Iyer as ‘வருத்தமில்லாத பாணனே’.  They have been interpreted by Avvai Duraisamy Pillai as ‘வருத்தமுடைய பாணனே’.

Meanings:  பார்வை a trap (a decoy) animal that has been tied to attract other animals (பார்வை  – ஆகுபெயர்), யாத்த – tied, பறை தாள் – reduced trunk, worn out trunk, விளவின் – of a wood apple tree, vilām palam, Limonia acidissima, நீழல் முன்றில் – in the front yard with shade (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), நில உரல் பெய்து – pour into the well of a pounding stone set in the ground, குறுங்காழ் உலக்கை ஓச்சி – pound with a short pestle,  நெடுங்கிணற்று வல் ஊற்று உவரி தோண்டி – they draw salty water from a long well – Puranānūru 311-1 – களர்ப்படு கூவல் தோண்டி, தொல்லை – old, முரவுவாய் – mouth rim ruined, குழிசி – pot, முரி அடுப்பு ஏற்றி – light the broken stove, வாராது – without cutting, அட்ட வாடு ஊன் புழுக்கல் – dish made cooked with dry white meat, வாடாத் தும்பை வயவர் பெருமகன் – the lord of the warriors wearing unfading thumpai flowers, gold flowers that do not fade, Leucas aspera, ஓடாத் தானை – army that does not run away, ஒண் தொழிற் கழற்கால் – wearing fine bright warrior anklets on his feet, செவ்வரை நாடன் – lord of the splendid mountains, சென்னியம் எனினே – if you tell that you are the bards (சென்னியம் – தன்மைப் பன்மை), தெய்வ மடையின் – like the offerings made to gods, தேக்கு இலைக் குவைஇ – in a bunch of teak leaves, Tectona grandis (குவைஇ – சொல்லிசை அளபெடை), நும் பைதீர் கடும்பொடு – along with your hungry relatives, along with your poor relatives, along with your relatives who end sorrow, பதம் மிகப் பெறுகுவிர் – you will get abundant food

பாலை நிலக் கானவர்களின் வேட்டை

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கிப்
புகழா வாகைப் பூவின் அன்ன,
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்  110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையம்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,   115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்

அருஞ்சுரம் இறந்த அம்பர், (106-117)

Hunting done by Forest Dwellers

 

The forest dwellers await boars that have

curved tusks resembling agathi flowers, stalking

them from the deep pits dug up with desire when

the rains had stopped, near the confusing path

with foot imprints of deer.  If they complete

their midnight hunting, they go with their dogs

with gaping mouths during the day and capture

small hares with long ears that resemble the thin

outer petals of lotus flowers with thorny stems,

chasing them out of green bushes that grow on

thick fences, combining many nets.  They surround

them, and the hares are unable to escape.

 

Such is the wilderness where the harsh forest

dwellers eat the yields of the forest.

Notes:  புகழா வாகை (109) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புகழா வாகை அகத்திக்கு வெளிப்படை.  வாகையாயின் புகழப்படும் என்பது கருத்து.  வாகை வெற்றிப் புகழ்க்கு அடையாளப் பூவாதல் அறிக.  ‘கடவுள் வாகை’ என்றார்.

Meanings:  with மான் அடி பொறித்த – deer feet imprints, மயங்கு அதர் மருங்கின் – in the confusing path, வான் மடி பொழுதில் – when the clouds have not done their task of raining (வான் – ஆகுபெயர் முகிலுக்கு), நீர் நசைஇக் குழித்த – pits dug with desire for water (நசைஇ – சொல்லிசை அளபெடை), அகழ் சூழ் பயம்பின் அகத்து – inside the deep pits surrounding depressions, ஒளித்து ஒடுங்கி – hiding, புகழா வாகைப் பூவின் அன்ன – like the not-praised vākai flowers, Albyzzia Lebbeck, or not praised agathi/West Indian Pea Tree flowers – the former according to Dr. A. Dakshinamurthy and the latter according to J.V. Chelliah, Po. Ve. Somasundaranar, and the University of Madras Lexicon, வளை மருப்பு – curved tusks, ஏனம் வரவு பார்த்திருக்கும்  – waiting for boars, அரைநாள் வேட்டம் – midnight hunting, அழுங்கின் – if they complete, பகல் நாள் – the leftover daytime, பகுவாய் ஞமலியொடு – with dogs with gaping mouths, பைம்புதல் எருக்கி – chasing out of green bushes, தொகுவாய் வேலி – on the thick fence, தொடர் வலை மாட்டி – they place the nets that are combined together, முள் அரைத் தாமரை – lotus with thorny stems, புல் இதழ் புரையம் – like the thin outer petals (புரை – உவம உருபு, a comparison word), நெடுஞ்செவிக் குறுமுயல் – tiny hares/rabbits with long ears, போக்கு அற – unable to escape, வளைஇ  – surrounding them (வளைஇ – சொல்லிசை அளபெடை), கடுங்கண் கானவர் – harsh forest men, கடறு கூட்டுண்ணும் – eat together food from the forest, அருஞ்சுரம் இறந்த அம்பர் – pass the harsh wasteland there

எயினரது அரணில் பெறும் பொருள்கள்

…… ……….. ………. பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடிநாண்   120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்,
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு,
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்த்
தொடர் நாய் யாத்த துன்னருங் கடிநகர்;   125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பைக்
கொடு நுகம் தழீஇய புதவின், செந்நிலை
நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,   130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர்; (117-133)

What you can get from the Forest Forts

 Spears with sharp tips, stinking of flesh,

blunted by attacking enemies causing them

to tremble, as kites come for flesh, are placed

in a row along with shields with pretty gems.

Bows with strings lean against the large

house with arrows.  The tall walls are made

of ookam grass on which bundles of arrows

with forked ends hang like honeycombs in the

mountains.  Dogs are chained to the pavilion

with thick pillars where thudi drums hang.

The protected grove around the fort is surrounded

by a living thorn fence.

 

If you reach the fort, belonging to the harsh forest

dwellers carrying curved bows, with attached doors

with wooden bars and an entrance with tall, pointed,

strong rods in a row, you will be fed red rice from the

paddy growing in the highland, that resembles the

seeds of date palms growing in the saline land.

In every home, you will be given poriyal dishes,

cooked with monitor lizards with eggs looking like

conch shells, brought by hunting dogs, that hide the

rice that is served.

Notes:  பட்டினப்பாலை 78 – கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 – காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 – பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 – எஃகம் வடி மணிப் பலகையொடு நிரைஇ (119-120).  பெரும்பாணாற்றுப்படை 131-133 – நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்தொறும் பெருகுவிர், மலைபடுகடாம்176-1766 – முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ.

Meanings:  பருந்து பட – kites coming for flesh, ஒன்னாத் தெவ்வர் நடுங்க – causing disagreeing enemies to tremble, ஓச்சி – attack, வைந்நுதி – sharp tips, மழுங்கிய – blunted, புலவுவாய் எஃகம் – spears with flesh, spears with flesh stink, வடி மணிப் பலகையொடு நிரைஇ – placed them in a row with shields with pretty gems (நிரைஇ – சொல்லிசை அளபெடை), முடி நாண் சாபம் சார்த்திய – leaned the bows with strings (முடி நாண் – வினைத்தொகை), கணை துஞ்சு வியல் நகர் – wide house with arrows, ஊகம் வேய்ந்த – woven with ookam grass, Aristida setacca, Broomstick grass,  உயர்நிலை வரைப்பின்  – in the walls that are high, வரைத் தேன் – mountain honeycombs, புரையும் – are like (புரை – உவம உருபு, a comparison word), கவைக்கடைப் புதையொடு – with a bundle of arrows with forked ends, கடுந்துடி தூங்கும் கணைக்கால் பந்தர் – pavilion/canopy with thick pillars where harsh thudi drums hang (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தொடர் நாய் யாத்த – dog tied with a chain, துன் அருங்கடி நகர் – close well protected house that is hard to approach (துன்னுதல் – நெருங்குதல்), வாழ் முள் வேலி – living thorn fence, சூழ் – surrounded, மிளைப் படப்பை – protected forest groves, கொடு நுகம் – curved wooden bars,  தழீஇய புதவின் – having attached doors (தழீஇய – சொல்லிசை அளபெடை), செந்நிலை – finely, நெடு நுதி – tall and pointed, வயக்கழு நிரைத்த – with strong rods in a row, with strong rods placed in a proper manner (பகைவரைக் குத்துதற்குக் கழு வைத்தார் – நச்சினார்க்கினியர்), வாயில் – entrance, கொடு வில் எயினக் குறும்பில் – in the fort of the hunters with curved bows, சேப்பின் – if you reach, களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன – like seeing the seeds of date palms growing on the saline soil, சுவல் விளை – growing on the high land, நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி – red cooked rice of paddy, ஞமலி தந்த – brought by dogs, மனவுச்சூல் உடும்பின் – of monitor lizards with eggs that look like conch shells, வறை கால் யாத்தது – surrounded by poriyal dishes, hidden by poriyal dishes (வறை – பொரிக்கறி), வயின்தொறும் பெருகுவிர் – you will get in every home



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்

யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்,   135
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை,
வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணற் காளை,
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு,   140
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி,
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉப்,   145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை,

முரண்தலை கழிந்த பின்றை, (134–147)

Life of those in the Kurinji Region

Even if attacked by elephants, even if

snakes crawl on their bodies, even if

strong thunder roars, pregnant women

with brave lives remain without fear.

Born in a clan which eats with its strength,

the thin-bearded young chief, who is like

a male tiger, and his relatives with

harsh bows, go after their enemies like dogs

going after their quarry, enter the lands of

kings who do not listen, and steal their cattle,

sell them to buy liquor, drink sweet rice

liquor that is made at home, cut and eat strong

goats in the splendid, common grounds,

dance and celebrate to the beat of

thannumai drums with folded tops, lifting

their strong arms and moving them around.

It is a place where they don’t relax.

 

After you cross this difficult place,

Notes:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரவுக் காலத்தே ஆன் கொணர்ந்தது பகற்காலத்தே உண்டு ஆடி மகிழும் இருக்கை என்க.

Meanings:  யானை தாக்கினும் – even if an elephant attacks, அரவு மேல் செலினும் – even if a snake crawls on the body, நீல்நிற விசும்பின் – in the blue sky (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), வல்ஏறு சிலைப்பினும் – even if strong thunder roars, சூல்மகள் மாறா – pregnant women do not change, மறம்பூண் வாழ்க்கை – life of bravery, வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த – born in a group which eats with its strength, புலிப்போத்து அன்ன – like a male tiger, புல் அணற் காளை – young man with a thin beard, செல் நாய் அன்ன – like a dog that goes after the quarry/hunted prey, கரு வில் சுற்றமொடு – with relatives with harsh bows, கேளா மன்னர் கடிபுலம் புக்கு நாள் ஆ தந்து – enter the protected land of kings who do not listen and bring their cattle, நறவு நொடை தொலைச்சி – sell them as a price for liquor (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), இல் அடு கள் இன் தோப்பி பருகி – drink sweet rice liquor that is made at home, மல்லல் மன்றத்து மத விடை கெண்டி – cut and eat arrogant goats in the splendid common grounds, மடிவாய்த் தண்ணுமை – thanummai drums with folded leather tops, நடுவண் – in the midst, சிலைப்ப – to roar, சிலை நவில் – practiced the bow, எறுழ்த்தோள் ஓச்சி – lifted strong arms, வலன் வளையூஉ – bending on the right side, bending with strength, பகல் மகிழ் தூங்கும் – dance happily during the day, தூங்கா இருக்கை – place where they don’t relax, முரண்தலை கழிந்த பின்றை – after you crossed this harsh place

கோவலர் குடியிருப்பு

…        ……….  ……..       மறிய
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பைச்
செற்றை வாயில் செறிகழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்,   150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்,
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்,
நள் இருள் விடியல் புள் எழப் போகிப்   155
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ,
நாள் மோர் மாறும் நல்மா மேனி   160
சிறு குழை துயல்வரும் காதில், பணைத்தோள்,
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்,
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்,   165
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,
இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன,

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்; (147-168)

Residences of Cattle Herders

you will go to the settlement of cattle herders

who have leaves tied on the posts of their huts

with short legs, for their goats.  There are

bushes near the front entrance, the doors are

made with thick poles, and there is a cot with

legs, its top woven with millet straw.  A man

sleeps on an animal hide mat placed on the cot

in that protected place.  In the front yard with

short stumps, white goats are tied with long

ropes along with sheep with curved faces.

 

In the town with thorn fences and manure,

a woman gets up early when it is still dark and

birds rise up and start flying.  Her churning

rod sounding like roaring tigers, she churns

curds with mushroom-like surface, removes

the butter, carries her pot with spots on its

mouth filled with fresh buttermilk, on a

delicate pad on her head, to sell.

 

This cattle herder woman is dark and pretty

and has small earrings swaying on her

ears.  Her arms are like bamboo, and she has

short parting of her hair.  She feeds her family

with the money from buttermilk.  She does not buy

gold with the money from the ghee she sells.  She

buys buffaloes and fine, pregnant cows.

 

If you reach this settlement of the cattle herders

who fold their lips and whistle,

you will, along with your relatives, receive fresh

millet that looks like baby crabs, cooked and served

with milk.

Notes:  சிறு குழை (161) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாளுருவி என்ற அணிகலன்.

Meanings:  மறிய – of young goats, குளகு – leaves, அரை யாத்த – tied on the legs (foundation posts), குறுங்கால் குரம்பை – huts with small legs, செற்றை வாயில் – entrance with small bushes, செறி கழி கதவின் – door made with thick poles, கற்றை வேய்ந்த – woven with millet straws, கழித்தலைச் சாம்பின் – in a bed with poles, அதளோன் – a man sleeping on an animal hide, துஞ்சும் – he sleeps, காப்பின் – in a protected place, உதள – a male goat’s (உதள் – male goat), நெடுந்தாம்பு தொடுத்த – tied with a long rope, குறுந்தறி முன்றில் – front yard with short stumps, கொடு முகத் துருவையொடு – with sheep with curved faces, வெள்ளை சேக்கும் – resides together with white goats, இடுமுள் வேலி – fence with placed thorns, எருப்படு வரைப்பின் – in the place with animal manure, நள் இருள் விடியல் – early morning darkness, புள் எழப் போகி – goes when birds start flying, புலிக்குரல் மத்தம் ஒலிப்ப – churning rod sounds like the roar of a tiger, வாங்கி – pulls, ஆம்பி வால் முகை அன்ன – like white mushroom buds, கூம்பு முகிழ் – closed buds, உறை அமை – perfectly set, தீம் தயிர் கலக்கி – churn sweet curds, நுரை தெரிந்து  – knowing the perfect stage, removing the butter, புகர்வாய்க் குழிசி – pot with spots of buttermilk on its mouth, பூஞ்சுமட்டு – on a delicate pad, on a beautiful pad, இரீஇ – places (இரீஇ – சொல்லிசை அளபெடை), நாள் மோர் மாறும் – she sells day’s fresh buttermilk, she sells dawn’s buttermilk, நல்மா மேனி – beautiful, dark body, சிறு குழை துயல்வரும் காதில் – small earrings sway on her ears, பணைத் தோள் – bamboo like arms, குறு நெறிக் கொண்ட கூந்தல் – hair with small curls, hair with short parting, ஆய்மகள் – cattle herder woman, அளை விலை – money earned from buttermilk, உணவின் கிளை உடன் அருத்தி – she has the family eat, நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் – she does not buy gold with the ghee she sells, எருமை – buffaloes, நல் ஆன் – fine cows, கரு நாகு பெறூஉம் – she gets pregnant young cows (பெறூஉம் – இன்னிசை அளபெடை), மடிவாய்க் கோவலர்  – whistling cattle herders, குடிவயிற் சேப்பின் – if you reach their settlement, இருங்கிளை – large family, ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன – like small baby crabs (ஞெண்டின் – ஞெண்டு நண்டு என்பதன் போலி), பசுந்தினை – fresh millet, மூரல் – cooked grain, பாலொடும் பெறுகுவிர் – you will receive with milk



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முல்லை நிலக் கோவலரின் குழலிசை

தொடுதோல் மரீஇய வடு நாள் நோன்அடி,
விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன் கை,   170
உறிக் கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்,
மேம்பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்   175
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழ கைம்முயன்று,
ஞெலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின்   180
புழற்கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும்

புல் ஆர் வியன் புலம் போகி, (169-184)

Flute Music of a Cattle Herder

A cattle herder with scars on his strong

feet caused by slippers, marks on his

strong hands that hold the rod that cattle

dread caused by working with an axe,

scars on his hairy shoulders from the

balancing rod on which he carries weight,

and hair that has touched superior milk he

carries, wears a flower garland with flowers

from tall tree branches and vines, all mixed,

wears a single piece of clothing, has rice

gruel for his meal, and lives in the forest with

his herds of cows that love their calves.

 

He uses a kindling stick and creates beautiful,

fine, bright smoke with red flame, drills black

holes and creates a flute with which he plays in

pālai tune, and tiring of that, makes a lute with

a hollow kumilam branch using hemp fibers

for strings and plays in kurinji tune, and bees

with six legs think that it is the humming

sound of their own kind.

 

Go past the wide land filled with grass.

Notes:  பெரும்பாணாற்றுப்படை 181-182 – மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 – தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 – மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.  விழுத்தண்டு (170) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசுக்களுக்கு வருத்தஞ் செய்யும் தடி.

Meanings:  தொடுதோல் மரீஇய –  caused by slippers worn always (மரீஇய – சொல்லிசை அளபெடை), வடு நாள் நோன் அடி – scars on strong feet, விழுத் தண்டு – rod that distresses cattle, big rod, ஊன்றிய – planted, மழுத்தின் வன் கை – scars on the strong hands from an axe, உறிக் கா ஊர்ந்த – using the weight carrying rod (kāvadi), மறுப்படு மயிர்ச்சுவல் – scars on his hairy shoulders with scars, மேம்பால் உரைத்த ஓரி – hair that touches milk that is superior, ஓங்கு மிசைக் கோட்டவும் – from those on the high tree branches, கொடியவும் – from those on vines, விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), காட்ட பல் பூ மிடைந்த படலைக் கண்ணி – flower garland with woven with many flowers from the forest, ஒன்று அமர் உடுக்கை – wears a single piece of clothing கூழ் ஆர் இடையன் – cattle herder with rice/gruel, கன்று அமர் நிரையொடு – herds with cows that love their calves,  கானத்து அல்கி – lives in the forest, அம் நுண் அவிர் புகை கமழ – beautiful, fine, bright smoke creating fragrance, கைம்முயன்று ஞெலிகோல் கொண்ட – using a kindling stick with his hands, பெருவிறல் ஞெகிழிச் செந்தீத் தோட்ட –  very successfully created holes with fire with red flames, கருந்துளைக் குழலின் – with a flute with black holes, இன் தீம் பாலை முனையின் – tiring sweet pālai melody, குமிழின் புழற்கோட்டு – hollow kumilam branch, Gmelina arborea, தொடுத்த – tied, மரல் புரி நரம்பின் வில்யாழ் இசைக்கும் –  plays on a bow-lute with strings made with maral fibers, Sansevieria trifasciata, விரல் எறி குறிஞ்சி – play kurinji tune strumming with his fingers, பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும் – bees with many legs listen thinking it is their kind, புல் ஆர் வியன் புலம் போகி – go past the wide land filled with grass

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன

………               ……….. முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்,   185
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி,
நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்   190
கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர்
நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று,   195

இன்சுவை மூரல் பெறுகுவிர்; (184-196)

What you can get in the Mullai Land

In the woodland fenced with thorns,

there are tall cattle sheds, granaries in the

front yards that resemble herds of female

elephants, and canopies with grinding stones

that look like feet of elephants.  On the tall,

eroding walls of the cattle sheds, small wagon

wheels and plows are leaning.  They are

are surrounded by smoke that appears like

the spread clouds of the rainy season in the

small village where houses are woven with black

hay.

 

You will receive a sweet tasting meal made with

small millet, looking like the large clusters of

poolai flowers, cooked with the seeds of white

avarai beans.

Meanings:  முள் உடுத்து எழுகாடு – fenced with thorns in the forest, ஓங்கிய தொழுவுடை வரைப்பில் – in the villages with tall cattle sheds, பிடிக்கணத்து அன்ன – like female elephants herds (கணத்து – கணம், அத்து சாரியை), குதிருடை முன்றில் – front yards with granaries (முன்றில் – இல்முன்), களிற்றுத் தாள் புரையும் – are like the feet of elephants (புரை – உவம உருபு, a comparison word), திரிமரப் பந்தர் – pavilions with grinding stones (பந்தர் – பந்தல் என்பதன் போலி), குறுஞ்சாட்டு – of small wagons, உருளையொடு – along with wheels, கலப்பை சார்த்தி –  plows are leaning, ploughs are leaning, நெடுஞ்சுவர் பறைந்த – eroding the tall walls, புகை சூழ் கொட்டில் – cattle sheds surrounded by smoke, பருவ வானத்துப் பா மழை கடுப்ப – like the season’s rain clouds that have spread (கடுப்ப – உவம உருபு), கரு வை வேய்ந்த – woven with black (millet) hay, கவின் குடிச் சீறூர் – beautiful small village, நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன – like poolai flowers that are in big clusters, Aerva lanata, குறுந்தாள் வரகின் – of millet with short stems, குறள் அவிழ்ச் சொன்றி – small cooked grain, புகர் – spotted/colorful, இணர் வேங்கை வீ கண்டன்ன – appearing like clusters of vengai flowers, Pterocarpus marsupium, Kino tree, அவரை வான் புழுக்கு – cooked dish with the seeds of white avarai beans, dolichos lab lab, அட்டி பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவிர் – you will receive tasty cooked rice that is mixed with beans (பயில்தல் = துழாவுதல்)

மருத நிலத்தைச் சேர்ந்த முல்லை நிலம்

………………………………………………….ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப்,
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித்,   200
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன,
வளர் இளம் பிள்ளை தழீஇக், குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்   205

வன்புலம் இறந்த பின்றை, (196-206)

Woodland adjoining the Agricultural Land

Above that land, there is a community

with abundant food and plowmen who

create perfect furrows.

They yoke huge oxen that are trained to walk

in the field and help with plowing.

They plow their fields by pressing down the front

parts of their plows that resemble mouths of cow

elephants, and weed with weeding hooks.

Disturbed by the harvest clamor,

dark-throated, short-legged quails fly away to the

dry land after embracing their colorful, growing

young ones who resemble kadampam flowers.

Notes:  புதவில் (198) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு முன்றிலுக்கு ஆகுபெயர்.  எருதுகளை முன்றிலிடத்தே நுகம் பூட்டிக் கொண்டு செல்வார் என்றவாறு.  உடுப்பு முகம் (200) – உடும்பு முகம், கொழுவிற்கு உவமை.

Meanings:  ஞாங்கர் – above that place,  குடிநிறை வல்சி – abundant food in the community, செஞ்சால் – those who make perfect furrows to plant seeds, உழவர் – farmers, plowmen, நடை நவில் பெரும் பகடு – huge oxen that are trained to walk, புதவில் – in the front yard, பூட்டி – yoke them, பிடிவாய் அன்ன – like the mouths of female elephants, மடிவாய் நாஞ்சில் – bent plows, உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி – thrusting the sharp front part of the plow (உடுப்பு முக – உடும்பு முகம், உடுப்பு முகம் என மென்தொடர் வன்தொடராயிற்று), தொடுப்பு எறிந்து – used a plow to cut into the earth, உழுத துளர்படு துடவை – plowed and weeded fields with weeding hooks (துளர் – களைக்கொட்டு, weeding hook, hoe), அரிபுகு பொழுதின் – when harvest season approaches, இரியல் போகி – moves away,  வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன – like the colorful, fragrant kadampam flowers, Neolamarckia cadamba, Kadampa oak, Anthocephalus cadamba, வளர் இளம் பிள்ளை தழீஇ – embracing the growing young chicks (தழீஇ – சொல்லிசை அளபெடை), குறுங்கால் கறை அணற் குறும்பூழ் – quails with short legs and tinted throats (காடை), கட்சிச் சேக்கும் வன்புலம் – reach their place of safety in the harsh land, இறந்த பின்றை – after passing

மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் – நாற்று நடுதல்

……………………………………………………….மென்தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்று அன்ன,
கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின்,
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்,   210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்

முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில், (206-212)

Sights of the Marutham Land

In the wide fields with abundant water,

where dark colored oxen with sand

on their horns from fighting with each

other, ruin the reeds and the mud holes of

crabs with forked legs that resemble broken

tongs used by a metalsmith who blows soft

leather bellows by pressing a treadle with

his feet.

workers walk on fine mud and prepare the

land without plowing and press down the

paddy seedlings.

Notes:  மென்தோல் (206) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லன் துருத்திக்கு ஆகுபெயர், காலாலே மிதித்துத் துருத்தியை ஊதச் செய்தலை இன்றும் காணலாம்.  அகநானூறு 202 – குருகு ஊது மிதி உலை, குறுந்தொகை 172 – உலை வாங்கு மிதி தோல், பெரும்பாணாற்றுப்படை 207 – மென்தோல் மிதி உலைக் கொல்லன்.

Meanings: மென்தோல் மிதி உலைக் கொல்லன் – metalsmith who blows bellows by pressing his treadle with his feet, முறி கொடிற்று அன்ன – like broken tongs, கவைத்தாள் அலவன் – crab with split legs, அளற்று அளை சிதைய – ruining their mud holes, பைஞ்சாய் கொன்ற – ruining reed plants, மண்படு மருப்பின் கார் ஏறு பொருத – dark colored oxen/buffaloes with sand on their horns fight, கண் அகன் செறுவின் – in the wide fields, உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர் – workers who walk on fine mud and prepare the land without plowing (உழாஅ – இசைநிறை அளபெடை), முடிநாறு அழுத்திய – pressed paddy seedlings, நெடுநீர்ச் செறுவில் – fields with abundant water

நெல் விளைதற் சிறப்பு

களைஞர் தந்த கணைக்கால் நெய்தற்
கள் கமழ் புதுப்பூ முனையின், முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்   215
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டிப்
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி,
ஈருடை இருந்தலை ஆரச் சூடிப்
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்   220
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்
கருங்கை வினைஞர் காதல்அம் சிறாஅர்,
பழஞ்சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்,   225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்,

நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனிக் (213-228)

Growing Paddy

The beloved children, of laborers with strong

hands whose unshrunk skin appears like

flattened iron, get tired of the honey-fragrant

waterlilies with thick stems given to them by the

weeders, pluck the dark colored mulli flowers

with curved stems that are surrounded

by buds, bite and chew fibers of reeds with their

teeth to weave pretty flower strands, and wear them

beautifully on their black heads with nits, play with

each other hitting their chests with kanpu grass,

its pollen dust making their dark bodies appear

like touchstones on which gold has been rubbed.

 

Since they hate the balls of old rice, new rice is

flattened in the front yards of the lovely curved huts

woven with new hay, and parrots with curved beaks

fly away in fear on hearing the loud sounds.

 

Such is the prosperity in this farming community

with unending wealth and fields with heavy, curved

spears.

Notes:  அகநானூறு 172 – இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரும்பை உருக்கி வார்த்தியற்றினாற் போன்ற வன்மையான கையையுடைய குறவன்.   இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் கருங்கை வினைஞர் (221-222) – நச்சினார்க்கினியர் மற்றும் பொ. வே. சோமசுந்தரனார் உரைகள் – இரும்பைத் தகடாக்கினாலொத்த திரையாத மெல்லிய தோலினையும் உடைய, வலிய கையால் தொழில் செய்வார்.  விறந்து (226) – விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 347).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  களைஞர் தந்த – given by the weeders, கணைக்கால் நெய்தற் கள் கமழ் புதுப் பூ முனையின் – tiring of the honey-fragrant new flowers of waterlilies with thick stems, முட்சினை – thorny stems, முகை – buds, சூழ் – surrounded, தகட்ட– with outer petals, பிறழ்வாய் – varying, முள்ளிக் கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு – pluck the dark mulli flowers with curved stems, முள்ளிச் செடி, Asteracantha Longifolia, Hygrophila spinosa, அவண – there, பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி – biting and chewing the fibers of reeds, Cyperus rotundus tuberosus, புணர் நார்ப் பெய்த புனைவு – weaving with the tied fibers, இன் கண்ணி – sweet strands/garlands, ஈருடை இருந்தலை ஆரச் சூடி – wearing beautifully on their black heads with lice eggs, பொன் காண் கட்டளை கடுப்ப – like  the gold rubbing touchstones of goldsmiths (கடுப்ப – உவம உருபு), கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் – with chests hit with pollen of kanpu with tiny pollen or small grains, Elephant grass, சம்பங்கோரை, Arundo donax, இரும்பு வடித்தன்ன – like iron that is beat and flattened, like iron that is cast, மடியா மென் தோல் – unshrinking, delicate skins, கருங்கை வினைஞர் – laborers with strong hands, காதல் அம் சிறாஅர் – beloved children (சிறாஅர் – இசைநிறை அளபெடை), பழஞ்சோற்று அமலை முனைஇ – hating old rice balls (முனைஇ – சொல்லிசை அளபெடை), வரம்பில் புது வை வேய்ந்த கவி குடில் – beautiful curved huts with new hay on the edge, முன்றில் – front yards, அவல் எறி உலக்கைப் பாடு விறந்து – hearing the loud sounds of pestles flattening rice, அயல – nearby, கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் – parrots with curved beaks fear that it is enmity towards them and move away (வெரூஉம் – இன்னிசை அளபெடை), நீங்கா யாணர் – unending prosperity, வாங்கு கதிர்க் கழனி –field with curved spears, field with mature spears that are bent with weight



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நெல் அரிந்து கடா விடுதல்

கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின்   230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்,
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன்களம் மலிய ஏற்றிக்
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து, ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்,   235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்,
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குடகாற்று எறிந்த குப்பை, வடபால்   240
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றுந்

தண் பணை தழீஇய தளரா இருக்கைப், (229-242)

Chopping and Threshing Paddy

In the cool, established settlements of the

agricultural lands, workers cut the thick, hollow

stalks of fine, huge paddy grass whose large,

red grains look like swarms of stinging bees.

They create tall stacks of sheaves in the shade

of tall marutham trees where snakes reside

and offerings are given.

The many stacks on which spider webs are

woven appear like lovely demons performing

thunangai dances, holding hands with their clan,

wearing lovely clothes.

The stacks with thick bases are brought down

and spread on the ground,

as bulls thresh the grain and separate the chaff

and grain.  The grain is sifted in the west wind,

and the heap collected appears like the lovely,

ruddy golden mountain in the north.

Meanings:  கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன – like stinging bees/wasps, பைது அற விளைந்த – fully dried losing their freshness, பெருஞ் செந்நெல்லின் – of huge red paddy, தூம்புடைத் திரள் தாள் – thick hollow stalks, துமித்த வினைஞர் – workers who chopped, பாம்பு உறை மருதின் – of marutham trees where snakes live, Terminalia arjuna, ஓங்கு சினை நீழல் – shade of tall branches (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), பலி பெறு – receive offerings, வியன் களம்  – wide fields, மலிய ஏற்றி – create tall haystacks, கணம் கொள் சுற்றமொடு – with its big family, கை புணர்ந்து – holding hands, ஆடும் துணங்கை – perform thunangai dance, அம் பூதம் துகில் உடுத்தவை போல் – like lovely demons wearing pretty clothing, சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – where spider webs are woven, குழுமு நிலைப் போரின் – of the many crowded haystacks, முழு முதல் தொலைச்சி – up to the thick bases are brought down and spread on the ground, பகடு ஊர்பு இழிந்த பின்றை – after the oxen have walked on them, துகள் தப வையும் துரும்பும் நீக்கி – removing dust and small pieces of straw, பைது அற – wetness to leave, குடகாற்று எறிந்த குப்பை – the heap of grains collected by the western wind, வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும் – appear like the northern mountain that is like reddish gold, தண் பணை தழீஇய தளரா இருக்கை – established settlements surrounded by cool agricultural lands (தழீஇய – சொல்லிசை அளபெடை)

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்

பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள்நெடு மார்பின்,   245
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்,
தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச்   250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல்இல்,
தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி,   255

மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்; (243-256)

The Food that you will get in the Marutham land

In the houses, there are calves with bent walk

of cows that unite with bulls, tied on the

sides to wooden poles using split ropes.  There

are tall granaries whose top parts are difficult

to reach using ladders, and grains from many

harvests are thrown from the top and stored in

these eternal, old granaries.

 

Children who roll their toy chariots, the ones

on which they cannot ride, loved by the children

of carpenters, drink milk from their pretty foster

mothers with large breasts and sleep on mattresses

in their fine, lovely houses which have never known

hunger.  If you stay in that prosperous town, you

will receive food cooked with white rice brought

by workers who do not tire, along with dishes cooked

with house residing hens.

Notes:  செவிலி (251) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவிலியர்.  பன்மைக்கண் ஒருமை மயங்கிற்று.  குழவி (243) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  பகட்டு ஆ ஈன்ற – cows that united with oxen gave birth, கொடு நடைக் குழவி – calves with bent walk,  கவைத்தாம்பு தொடுத்த – tied with split ropes, காழ் ஊன்று – poles planted, அல்குல் – side, ஏணி எய்தா நீள்நெடு மார்பின் – with the top middle part of the very tall structures that cannot be reached with ladders (a grain silos), முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின் – the top opened and old paddy thrown in, குமரி மூத்த – eternal and old, கூடு ஓங்கு நல் இல் – fine house with tall granaries, தச்சச் சிறாஅர் நச்ச – loved by young children of carpenters (சிறாஅர் – இசைநிறை அளபெடை), புனைந்த – created, ஊரா நல் தேர் – toy chariots that do not ride, உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட – for the sorrow of the boys with slow walk who rolled the chariots, அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇ பால் ஆர்ந்து – beautiful foster mothers with large breasts embrace and give milk (தழீஇ – சொல்லிசை அளபெடை), அமளித் துஞ்சும் – they sleep on mattresses, அழகுடை நல் இல் – pretty fine houses, தொல் – past, ancient, பசி அறியா – not knowing hunger,  துளங்கா இருக்கை – stable place, மல்லல் பேர் ஊர் – prosperous large town, மடியின் – if you stay there, மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி – food cooked with white rice brought by the workers who don’t tire, மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – you will receive a dish cooked with a house residing hen

ஆலைகளில் கருப்பஞ்சாறு அருந்துதல்

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து,
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை   260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,

கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்; (257-262)

Sugarcane Juice in the Sugar Mills

The unending, roaring sounds of equipment in

every sugar mill where sugarcane juice is boiled,

surrounded by smoke, are like the screams of many

elephants that are attacked by an āli

in the bamboo growing mountains where clouds

play.   There you can drink sweet sugarcane juice

as much as you desire.

Notes:  பெரும்பாணாற்றுப்படை – 259-260 – கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு எந்திரம் சிலைக்கும்.  புறநானூறு 322 – கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும்.  ஐங்குறுநூறு 55 – கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்.  கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின் (262) – நச்சினார்க்கினியர் உரை – கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் கரும்பின் கட்டியைத் தின்பீராக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பின் இனிய சாற்றை விருப்பமுடையீர் பருகுமின்.

Meanings:  மழை விளையாடும் – where clouds float, கழை வளர் அடுக்கத்து – in the mountain ranges where bamboo grows, அணங்குடை யாளி தாக்கலின் – attacked by an āli, பல உடன் கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு – like how many elephants in herds scream, எந்திரம் சிலைக்கும் – equipment makes noises, துஞ்சாக் கம்பலை – unending uproar, விசயம் அடூஉம்  – sugarcane juice cooking (அடூஉம் – இன்னிசை அளபெடை), புகை சூழ் – surrounded by smoke, ஆலைதொறும் – in each factory, கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின் – drink sweet sugarcane juice if you desire (மிசைமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

வலைஞர் குடியிருப்பு

வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த,
குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில்,   265
கொடுங்காற் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிப்
புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்   270
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின், (263-274)

Fishermen Community

The small-eaved huts are made with reeds

placed in rows, woven with white sticks

between, tied with thālai fibers and covered

with tharuppai grass.   In their front yards

with fishing baskets, there are arbors on spread

sand made by cutting punnai trees, and vines

with hanging vegetables grow on them.

 

The young and old gather with their relatives,

and catch fish with their children in the dark, deep,

huge ponds where there are carps with red stripes

looking like bows and arrows with flesh stink, along

with abundant fresh shrimp.  Even if the summers are

long, the ponds do not get reduced, and the arms of

a person in the water raising them high, cannot be

seen.

 

If you go to the settlement of fishermen owning nets

with curved knots, who protect the ponds,

Notes:  மையிருங் குட்டத்து (271) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மையிருங்குட்டம் என்றது கரிய பெரிய ஆழமான குளம் என்றவாறு.  குளத்தின் இயல்களைத் தொகுத்துக் கூறியவாறு உணர்க.  கொடுமுடி (274) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளைந்த முடிகளையுடைய, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – கொடிய (கெட்டியான) முடிச்சுக்கள்.

Meanings:  வேழ நிரைத்து – placed reeds in a row, வெண்கோடு விரைஇ – wove white sticks in between (விரைஇ – சொல்லிசை அளபெடை), தாழை முடித்து – tied with thālai fiber, Pandanus odoratissimus (தாழை – ஆகுபெயர் நாருக்கு), தருப்பை வேய்ந்த – woven with tharuppai grass, sacred grass, Poa cynosuroides,  (குசைப்புல்), குறியிறைக் குரம்பை – small-eaved huts, பறியுடை முன்றில் – fish removing baskets in the front yard, கொடுங்கால் – curved trunk, புன்னைக் கோடு துமித்து – chopped punnai branches, Calophyllum inophyllum, இயற்றிய – created, பைங்காய் தூங்கும் – (vines with) hanging vegetables, பாய் மணல் பந்தர் – canopy on the spread sand (பந்தர் – பந்தல் என்பதன் போலி), இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – old and young gather with relatives, புலவு நுனைப் பகழியும் சிலையும் மான – like the arrow ends with flesh stink and bows (மான – உவம உருபு, a comparison word), செவ்வரிக் கயலொடு – with carp with red stripes, பச்சிறாப் பிறழும் – fresh shrimp roll in abundance (பச்சிறா – பண்புத்தொகை), மையிருங் குட்டத்து மகவொடு வழங்கி – fish in the dark huge deep ponds with their children, கோடை நீடினும் – even if summer prolongs, குறைபடல் அறியா – do not know reduction, தோள் தாழ் குளத்த – arms of a person in a  pond holding it high cannot be seen, கோடு – bank, shore, காத்திருக்கும் – protect, கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின் – if you go to the settlement/village of fishermen with curved/thick knots



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வலைஞர் குடியில் பெறும் உணவு

அவையா அரிசி அம்களித் துழவை   275
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇத் தேம்பட,
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி,
வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த,   280
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி,

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்; (275-282)

Food you will get in the Fishermen community

when you are hungry, you will receive freshly

cooked fish and fine, aged, fragrant liquor that is made

by making a mash of unpounded, boiled rice spread

on wide trays to dry, mixed with powdered sprouts of rice

that have back sides that are bright like the fungus combs

of termite mounds where snakes live, and for the liquor

to be sweet, poured in jars with strong mouths after

two days and two nights, boiled with hot water, filtered,

and stirred with fingers.

Notes:  பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.  குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277-278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (277) – நச்சினார்க்கினியர் உரை – பாம்பு கிடக்கின்ற புற்றின்கண் கிடைக்கும் புற்றாம் பழஞ்சோற்றை ஒக்கும், J.V. Chelliah’s translation – look like white ants’ nests where serpents live, Dr. A. Dakshinamurthy’s translation – resembles the shell of termites inside the snakeholes.   நல் அடை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லடையும் பாடம், அடை முளை.

Meanings:  அவையா அரிசி – unpounded rice (அவையா – குற்றாத), அம் களித் துழவை – beautiful boiled mash, மலர்வாய்ப் பிழாவில் – in a pot with a wide mouth (மலர்வாய் – வினைத்தொகை), புலர – drying, ஆற்றி – cooling, பாம்பு உறை – snakes living, புற்றின் குரும்பி – fungus combs of termite mounds with termites, white ants, ஏய்க்கும் – resembling, பூம்புற நல் அடை , பூம்புற நெல்லடை – fine rice sprouts with bright back sides, அளைஇ – mixed (அளைஇ – சொல்லிசை அளபெடை), தேம்பட – to become sweet (தேம் தேன் என்றதன் திரிபு), எல்லையும் இரவும் – morning and night, இரு முறை – twice, கழிப்பி – removing, வல்வாய்ச் சாடியின் – in a jar with strong mouth, வழைச்சு அற – without the smell of liquor that has not aged, விளைந்த – aged, வெந்நீர் – warm water, அரியல் – filtered, விரல் அலை – stir with fingers, நறும் பிழி – fine liquor, தண் – fresh, மீன் சூட்டொடு – with cooked fish, தளர்தலும் பெறுகுவிர் – you will receive when you are hungry

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப்போதல்

பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல்,
கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த,
நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,   285
கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்
பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப்பட மலர்ந்த
கடவுள் ஒண்பூ அடைதல் ஒம்பி,   290
உறைகால் மாறிய ஓங்கு உயர் நனந்தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன்மலர்   295

பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்; (283-296)

Wearing Water Flowers in the Morning

 

Do not pluck the lotus flowers which appear

like flames on the pond, since the bright flowers

are meant for the gods.

 

In the long pond where people swim, a vālai fish

with gaping mouth trembles on seeing the moving

shadow of the pirampu plants on the shore,

after escaping the long bamboo fishing rod with a

curved iron tip and thread tied on it,

……….belonging to a bard with angling skills,

……….who carries a leather shoulder bag

……….with meat as bait,

taking the hidden bait, and causing the rod to tremble.

 

Leave early morning, wearing the many flowers

that the flower-pickers give, blue and red waterlily

blossoms which together look like a short rainbow

in the wide dark sky after the rains have stopped.

Notes:  குறைவில் (292) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறைவில்லாகிய இந்திர வில்.  இனி வானவில் சில செவ்விகளில் ஓரிடத்தே ஒரு பகுதி தோன்றி மற்றோரிடத்தே ஒரு பகுதி தோன்றாமலும் இடையிடையே இற்றுப் போயும் காணப்படுதல் இயல்பாகலின் குறை வில் என்றார் எனினுமாம்.  பச்சூன் (283) = பசுமை + ஊன்.  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.

Meanings:  பச்சூன் பெய்த – having frsh meat, சுவல்பிணி – tied to the shoulder, பைந்தோல் – leather bag, கோள்வல் பாண்மகன் – bard who is capable of catching, தலைவலித்து யாத்த – pulled and tied on the top, நெடுங்கழைத் தூண்டில் – long bamboo fishing rod,  நடுங்க – tremble, நாண் கொளீஇ – rope/thread threaded (கொளீஇ – சொல்லிசை அளபெடை), கொடுவாய் இரும்பின் – on the curved iron tip of the fishing rod, மடிதலை – folded top, புலம்ப – lonely (without the bait), பொதி இரை கதுவிய – bit the hidden food, bit the bait, போழ்வாய் வாளை – vālai fish with a gaping mouth, Trichiurus haumela, Scabbard fish, நீர் நணிப் பிரம்பின் – of rattan growing near the water, Calamus rotang, நடுங்கு நிழல் வெரூஉம் – fears on seeing the trembling shadow (வெரூஉம் – இன்னிசை அளபெடை), நீத்துடை நெடுங் கயம் – large pond with swimming, தீப் பட மலர்ந்த – blossomed like flame, கடவுள் ஒண் பூ – bright flowers of god, அடைதல் – not wearing, ஒம்பி – protected, உறைகால் மாறிய – falling rain ending, ஓங்கு உயர் – very tall (ஒருபொருட் பன்மொழி), நனந்தலை – wide, அகல் இரு வானத்து – wide and dark sky, குறை வில் ஏய்ப்ப – like a short rainbow, like Inthiran’s rainbow, அரக்கு இதழ்க் குவளையொடு – along with red-petaled waterlilies, நீலம் நீடி – blue waterlilies had grown, முரட்பூ மலிந்த – many different flowers flourish, முதுநீர்ப் பொய்கை – ancient pond, குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் – many flowers blossomed from closed buds that flower pluckers give, பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின் – wear them in the early morning and leave (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

அந்தணரது உறைவிடங்களில் பெறுவன

செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்,
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்   300
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்   305
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்; (297-310)

What you will get in the Brahmin Settlement

If you go to the Brahmin settlement, where

fat calves are tied to the small poles of

pavilions, floors are smeared with fresh dung,

rituals are performed in fine houses where dogs

and domestic fowl are not allowed, parrots

with curved beaks are taught to recite the Vedas,

women with fragrant brows and bangled arms,

with chastity like that of the small star Arundathi

in the north of the huge, splendid sky, will serve

you perfectly cooked food, famed by the name

of a bird, at sunset, and you will be given dishes

made with freshly opened pomegranates mixed

with warm butter from fragrant buttermilk of tawny

cows, mixed with fresh curry leaves and black pepper.

You will also receive fragrant vadu mango pickles

from tender green mangoes from tall trees.

Notes:  பறவைப் பெயர்ப்படு வத்தம் (305) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல் என்றவாறு, நச்சினார்க்கினியர் உரை – இராசன்னம் என்னும் பெயர்பெறுகின்ற நெல் என்றவாறு.  ஆகுதி பண்ணுவதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்ததென்று இதனைக் கூறினர்.  இனி மின்மினி நெல் என்பாருமுளர்.  இப்பெயர் வழக்கமின்மையும் ஆகுதிக்கு சிறவாமையும் உணர்க.

Meanings:  செழுங்கன்று யாத்த – fat calves are tied, சிறு தாள் பந்தர் – pavilion/canopy with short poles (பந்தர் – பந்தல் என்பதன் போலி), பைஞ்சேறு மெழுகிய – floor smeared with fresh dung, படிவ நல்நகர் – fine house with rituals, மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – not letting dogs and with house-residing hens close, வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – parrots with curved beaks are taught the Vedas, மறை காப்பாளர் – those who protect the Vedas, உறைபதிச் சேப்பின் – if you go to where they live, பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் – like the chastity of the small star in the north of the huge fine sky (புரை – உவம உருபு, a comparison word), Arundathi, நறுநுதல் வளைக்கை மகடூஉ – women with fragrant foreheads wearing bangles on their arms (மகடூஉ- இன்னிசை அளபெடை), வயின் அறிந்து அட்ட – cooked knowing the perfect stage,  சுடர்க்கடை – evening, பறவைப் பெயர்ப்படு வத்தம் – famous food with the name of a bird at sunset, சேதா நறுமோர் வெண்ணெயின் – in fragrant butter from buttermilk of a tawny cow, மாதுளத்து – pomegranate’s, உருப்புற – warmed, பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – mix with pepper along with split up fresh pomegranate, கஞ்சக நறுமுறி அளைஇ – mixed in fragrant karivepilai leaves (அளைஇ – சொல்லிசை அளபெடை), பைந்துணர் –fresh clusters, நெடுமரக் கொக்கின் – of a tall mango tree’s, நறுவடி – fragrant māvadu, விதிர்த்த – placed, தகைமாண் காடியின் – esteemed/fine pickles, வகைபடப் பெறுகுவிர் – you will receive such esteemed varieties

நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு

வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇப்
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரை தேர் மணிச்சிரல் இரை செத்து எறிந்தெனப்
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த   315
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்

நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் (311-319)

 Reaching Neerpeyatru town

 

Women with their friends with whom

they used to play sand games, swim in the

drinking water port, leaving their gold

earrings on the shore.  A kingfisher looking for

food, takes it thinking it is food, carries it, and

not taking it to a lonely frond in a palm tree

filled with birds,

stays on a ritual post where Vedic Brahmins

perform rituals.  It appears like the goose lamps

of Yavanars that are on masts, and like the dull

star that is seen above at dawn.

If you reach the limits of Neerpeyatru town,

Notes:  யவனர் ஓதிம விளக்கின் (314-315) – நச்சினார்க்கினியர் உரை ‘சோனகர் கூம்பின் மேலிட்ட அன்ன விளக்குப் போல’, பொ. வே. சோமசுந்தரனார் உரை ‘யவனர் தங்கள் மரக்கலக் கூம்பில் ஓதிம விளக்கிடுதல் பெற்றாம்’.

Meanings:  வண்டல் ஆயமொடு – with friends playing in the sand/making sand houses, உண் துறைத் தலைஇ புனல் ஆடு மகளிர் – women playing together in the flowing water in the drinking-water port (தலைஇ – சொல்லிசை அளபெடை), இட்ட பொலங்குழை – placed gold earrings, இரை தேர் மணிச்சிரல் – kingfisher that searches for food, இரைசெத்து – thinking that it is food, எறிந்தென – attacked it, புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது – not going to the lonely palmyra fronds filled with birds, கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து – on the ritual colum where Vedic Brahmins perform rituals, அசைஇ – placed (அசைஇ – சொல்லிசை அளபெடை), யவனர் ஓதிம விளக்கின் – like the goose lamp of Yavanars, Greeks, உயர்மிசைக் கொண்ட – it is above, வைகுறு மீனின் பைபயத் தோன்றும் – appears dull like the early morning star above (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நீர்ப்பெயற்று எல்லைப் போகி – go to the limits of the town Neerpeyatru (நீர்ப்பெயற்று – நீர்ப்பாயற்றுறை என்பதன் மரூஉ)

கடற்கரைப்பட்டினம்

……………………………………………….. பாற்கேழ்
வால் உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்   320
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணன் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா   325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல்இல் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்   330
பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை
வான் தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
கை புனை குறுந்தொடி தத்த பைபய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்   335

பட்டின மருங்கின் அசையின், (319-336)

Seashore town

go and rest in that seashore town, where,

ships bring horses with white manes and

wealth from the north to its shores,

tall mansions are in the streets filled with sand,

there are big buildings where people do

their business, oxen used for plowing are kept

away from cows, rams and dogs roam around,

in rich houses women donning curved

earrings wear delicate clothing on their loins

with gem strands that appear like dew spread

on the delicate branches of kondrai trees and

walk like strutting pea****s with plumes, play with

striped balls in the upper levels of their mansions

as their golden anklets jingle, and play with

kalangu seeds on long stretches of pearly sand,

as their hand-made, small bangles move gently.

Notes:  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  முத்தைப் போன்ற மணல்:  புறநானூறு 53, முத்த வார் மணல், பெரும்பாணாற்றுப்படை 335 – முத்த வார் மணல், கலித்தொகை 136 – முத்து உறழ் மணல்.  நளி (321) – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25).

Meanings:  பாற்கேழ் – color of milk, வால் உளைப் புரவியொடு – with horses with white tufts, வட வளம் தரூஉம் நாவாய் – ships that bring the wealth of the north (தரூஉம் – இன்னிசை அளபெடை), சூழ்ந்த – surrounded, நளி நீர் – abundant water,  படப்பை – seashore, மாடம் ஓங்கிய – with  tall mansions,  மணல் மலி மறுகின் – in the streets filled with sand, பரதர் மலிந்த பல் வேறு தெருவின்  – in the many streets with many merchants, சிலதர் காக்கும் சேண்உயர் வரைப்பின் – in the very tall places protected by those who do business, நெல் உழு பகட்டொடு – along with oxen that plows, கறவை – cows, துன்னா – not close by, not near, ஏழகத் தகரோடு – with rams, with male goats, எகினம் கொட்கும் – dogs roam around, கூழ் உடை நல் இல் – fine house with food, கொடும் பூண் மகளிர் – women with curved earrings, கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் – like the spreading dew on the delicate branches of kondrai trees, Cassia fistula, Golden shower tree, Laburnum, பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – delicate clothing on their swaying loins with gem/pearl strands,  மால் வரைச் சிலம்பில் – on the tall mountain slopes, மகிழ் சிறந்து – with happiness, ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி – move like dancing pea****s with plumes, கால தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப – golden anklets jingling on their legs, உயர்நிலை வான் தோய் மாடத்து – in the upper floors of the sky-touching mansions, வரிப்பந்து அசைஇ – playing with striped balls (அசைஇ – சொல்லிசை அளபெடை), கை புனை குறுந்தொடி – small bangles made with hand, தத்த பைபய – moving delicately, moving slowly (பைபய – பையப்பைய பைபய என மருவியது), முத்த வார் மணல் – long stretches of sand that looks like pearls, பொற்கழங்கு ஆடும் பட்டின மருங்கின் அசையின் – if you reach the city where they play with gold kalangu beans/dice, and rest, caesalpinia crista seeds, molucca beans



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பட்டினத்து மக்களின் உபசரிப்பு

……………………………………………….முட்டு இல்,
பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம்பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்   340
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்

கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்; (336-345)

Hospitality of the seashore town

You will get abundant toddy, along with fatty

meat of a boar with short legs, that has been

raised in a pit for many days and fed flour made

from rice, not letting it unite with its mate with

hair who has many dark piglets

that wallow in the mud created from washing

pots on which women prepare liquor in their

front yards, which are cleared and strewn with red

flowers, where there are flags that sway without

hindrances, near the entrances where many enter.

Notes:  செதுக்கு உடை முன்றில் (338) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மண் வெட்டியாலே புல் முதலியவற்றைச் செத்தி தூய்மை செய்யப்பட்ட முற்றம்..  பாயம் (342) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பயம் என்று நின்றது.

Meanings:  முட்டு இல் பைங்கொடி நுடங்கும் – without restrains new flags sway, பலர் புகு வாயில் – entrance where many enter, செம்பூத் தூஉய – red flowers are strewn (தூஉய – இன்னிசை அளபெடை), செதுக்கு உடை முன்றில் – in the cleared front yard, கள் அடு மகளிர் – women who prepare/cook liquor, வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் – little water from washing the bowls/plates, வழிந்த – flowed, குழம்பின் ஈர்ஞ்சேறு ஆடிய – played in the mushy wet mud, இரும்பல் குட்டிப் பல் மயிர்ப் பிணவொடு – many dark piglets along with its female with many hair, பாயம் போகாது – not going with its desire, நெல்மா வல்சி தீற்றி – fed the flour from rice, பல் நாள் குழி நிறுத்து – placed in a pit for many days, ஓம்பிய – protected, cared for, குறுந்தாள் ஏற்றை – male (pig) with short legs,  கொழு நிணத் தடியொடு – along with its fatty meat pieces, கூர் நறாப் பெறுகுவீர் – you will receive abundant/strong liquor

ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை

வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண்பொர நிவந்த வேயா மாடத்து,
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி,
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்   350

துறை பிறக்கு ஒழியப் போகி, (346-351)

Lighthouse that invites Ships

After leaving the port behind, where there is a

tall lighthouse with an unwoven roof that appears

like a prop that supports the sky, a building

appearing to be difficult to scale with ladders,

with a bright flame that is lit at night that

invites plying ships to the shore,

Notes:  அகநானூறு 255 – நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய.

Meanings:  வானம் ஊன்றிய மதலை போல – like a planted prop that supports the sky, ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி – ladder are placed and difficult to scale, விண்பொர நிவந்த வேயா மாடத்து – in the unwoven (not woven and covered like a hut) mansion that is tall and touching the sky, இரவில் மாட்டிய இலங்கு சுடர் – bright lamp that is lit at night, ஞெகிழி – lit, உரவு நீர் அழுவத்து – in the ocean with strong waves, ஓடு கலம் – plying ships, கரையும் துறை –inviting port, inviting shore, பிறக்கு ஒழிய – causing it to be behind, போகி – they go

தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்

……………………………………………….கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண்தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பைத்
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்   355
தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்க்
கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்,   360
தீம்பல் தாரம் முனையின், சேம்பின்

முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர்; (351-362)

Hospitality in the Groves

you will reach a fragrant grove where the houses

of farmers are in individual compounds, woven

with the dried fronds of coconut trees with thick

fronds, that look like elephants with dark feet

resembling mountains, where turmeric grows in the

front yards.  You will receive segments of large

jackfruits that grow low on the trees, sweet water of

tender coconuts, curved, white bananas from bunches

that look like the tusks on the cheeks of dark, female

elephants with forked udders, along with tender

nungu of palmyra palms, and when you tire, you

will receive the mature tubers of chēmpu that

have sprouts on the sides.

Notes:  நற்றிணை 97-9 – தண்டலை உழவர் தனி மட மகளே.  முளைப்புற முதிர் கிழங்கு (362) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முளையுடையதாக முதிர்ந்த கிழங்கு உண்ணற்கு இனிதாகலின் முளைப்புற கிழங்கு என்றார்.  தாழைக் குழவி (357) – பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி உயிர்க்கே (தொல்காப்பியம். மரபியல் 24).

Meanings:  கறை அடிக் குன்று உறழ் யானை – elephants with dark feet that is like a mountain (உறழ் – உவம உருபு), மருங்குல் – on it, ஏய்க்கும் – resembles, வண்தோட்டுத் தெங்கின் – with the thick leaves of coconut trees, வாடுமடல் வேய்ந்த – woven with dried leaves, மஞ்சள் – turmeric, முன்றில் – front yard, மணம் நாறு படப்பை – fragrant grove, தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் – if you reach the individual houses of farmers in the grove, தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம் – large fruit of jackfruit trees with low hanging fruits with segments that are not surrounded by fibrous parts (சக்கை) but surrounded with just the fruit segments, வீழ் இல் – the kind of tree that does not having aerial roots (not that kind of thālai – the fragrant kindcoconut palm, தாழைக் குழவித் தீம் நீர் – sweet water of tender coconuts, கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் – resembles the tusks on the cheeks of a dark female elephant with forked udders, குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம் – curved white fruits from banana tree clusters, திரள் அரைப் பெண்ணை நுங்கொடு – along with tender seed/nungu of palmyra trees with thick trunks, பிறவும் – and others, தீம் பல் தாரம் – many sweet food, முனையின் – hating/tiring, சேம்பின் முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர் – eat the mature tubers of chēmpu that have sprouts on the sides, Colocasia esculenta, சேப்பங்கிழங்கு

ஒதுக்குப்புற நாடுகளின் வளம்

……………………………………………பகற் பெயல்
மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச்,   365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளங் கெழு பாக்கத்துப்
பல்மரம் நீள் இடைப் போகி, நல்நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்,   370

நாடு பல கழிந்த பின்றை, (362-371)

Places on the Way

Near betelnut palms with dark trunks that

appear like dark streaks of rain that fall during

the day, there are coconut palms with mature

coconuts that bulge on three sides, that drop

down and shake the rice pots of the hungry

people on the path.

After going through long paths with many trees,

you will go through a few prosperous lands

where valli koothu is performed, where there are

fine houses with upper floors that touch the skies,

surrounded by tall walls.  After that,

Notes:  வாடா வள்ளியின் (370) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘வாடா வள்ளி’ வள்ளிக் கூத்திற்கு வெளிப்படை.  கொடியில்லாத வள்ளி என்றவாறு.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  பகற் பெயல் மழை வீழ்ந்தன்ன – like the rain streaks that fall during the day, மாத்தாள் கமுகின் – of betelnut trees with dark/thick trunks, புடை – nearby, சூழ் – surrounded by, தெங்கின் – of the coconut trees, முப்புடைத் திரள்காய் – thick coconuts bulging on three sides, ஆறு செல் வம்பலர் – strangers who go on the path, காய் பசி தீர – for their great hunger to end, சோறு அடு குழிசி இளக – making the rice cooking pots to shake, விழூஉம் – they fall down, வீயா யாணர் – unending prosperity, வளம் கெழு பாக்கத்து – in the wealthy town, பல் மரம் நீள் இடைப் போகி – go through the long paths with many trees,  நல் நகர் – fine houses, விண் தோய் மாடத்து – with upper floors that touch the skies, விளங்கு சுவர் உடுத்த – surrounded by bright walls, வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை – after you pass a few rich countries where unending Valli koothu dances are performed (தரூஉம் – இன்னிசை அளபெடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்

…………………………………………..நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்   375
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர்முகத்து உறைப்பப்
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள் கால்   380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன,
நீலப் பைங்குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழி இருக்கை மரீஇ சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச்
சுறவுவாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்,   385
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப்
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறைச்
செவ்வி கொள்பவரோடு அசைஇ, அவ்வயின்   390
அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிது நும்

கருங்கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்; (371-392)

Praying to Thirumāl at Thiruvekhā

you will reach the shrine of the one who lies

on a bed of snakes like an elephant lying on the

beautiful mountain slopes where glorylily

flowers blossom in long clusters.  Sunlight does

not enter the grove where cuckoos enter.  Long

kurukkathi vines with green leaves grow on

portia trees with short trunks, their flowers with

dull backs and stripes, that have fallen into water

on the long stretches of sand, in the shade, appear

like round appam made with threads and sugar

syrup lying in milk in the dark, wide bowls

of vendors who call out prices.

 

In the groves washed by flowing water, enjoy

yourself by drinking liquor from blue leather

containers that are bulging like the thick trunks of

betelnut palms, play during the day with women

with moist, beautiful eyes that appear to have been

made with naravam flowers, and bright foreheads

with small brows like the crescent moon that is

gripped by a snake, adorned with fish shaped

ornaments that are swarmed by bees.

 

After that, rest in the flower-filled, huge shores

which are like the upper world that is hard to attain,

praise the god who abides there and play your sweet

lute with black stem for a while and then leave.

Notes:  நீலப் பைங்குடம் (382) – நீல நிறம் அமைந்த பையாகிய குடம்.  இது தோற்பை.  இதனைப் பச்சைக் குப்பி என்பர்.  மதுரைக்காஞ்சி – கள்ளின் இரும்பைக் கலம்.  நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக்கண் (386) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனை உருப்பெயர்த்து கண் வடிவில் அமைத்தாலொத்த நன்றாகிய அழகினையுடைய குளிர்ச்சியுடைத்தாகிய கண்ணை உடைய, நறவம் பூவினை உருப்பெயர்த்து கண் வடிவிலமைத்தாற் போன்ற நல்லெழில் மழைக்கண் எனினுமாம்.  அகநானூறு 19 – நறவின் சேயிதழ் அனைய ஆகிக் குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, பரிபாடல் 8-75 – நயவரு நறவு இதழ், மதர் உண்கண்.  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

Meanings:  நீடு குலைக் காந்தள் – glory lilies with long clusters, அம் சிலம்பில் – on the beautiful mountain slopes, களிறு படிந்தாங்கு – like an elephant was lying, பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் – the god on the bed of snakes, Thirumal, ஆங்கண் – there, வெயில் – sunlight, நுழைபு அறியா – not knowing to enter, unable to enter, குயில் நுழை பொதும்பர் – groves where cuckoos enter, குறுங்காற் காஞ்சி – Portia tree with short trunks, பூவரச மரம், Thespesia populnea, சுற்றிய நெடுங்கொடி – vines that have surrounded, பாசிலைக் குருகின் புன்புற – the back sides of the green leaves of kurukkathi, Hiptage madablota, மாதவிக்கொடி, வரிப்பூ – flowers with stripes,  கார் அகல் – black, wide, கூவியர் – those who call out and sell, பாகொடு பிடித்த – combined with syrup,  இழை சூழ் வட்டம் – circles with threads (வட்டம் – ஆகுபெயர் அப்பத்திற்கு), பால் கலந்தவை போல் – like milk is mixed, நிழல் தாழ் – low shade, வார் மணல் – long stretches of sand, நீர் முகத்து உறைப்ப – have dropped on the water,  புனல் கால் கழீஇய – the trunks of trees washed by flowing water (கழீஇய – சொல்லிசை அளபெடை), பொழில்தொறும் – in all the groves, திரள் கால் சோலைக் கமுகின் – of grove betelnut trees with thick trunks, சூல் வயிற்றன்ன – like pregnant stomachs, நீலப் பைங்குடம் தொலைச்சி – drinking liquor from leather containers that are blue,  நாளும் பெருமகிழி இருக்கை மரீஇ – enjoy your time there every day (மரீஇ – சொல்லிசை அளபெடை), சிறு – small, கோட்டு – brows, curved, குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு – like a crescent/young moon that is gripped (by a snake), சுறவுவாய் அமைத்த – with fish/shark shaped ornaments (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), சுரும்பு சூழ் – bee swarming, surrounded by bees, சுடர் நுதல் – bright forehead, நறவு பெயர்த்து அமைத்த – like shaped and created with honey, like created with naravam flowers, Luvunga scandens (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நல் எழில் மழைக்கண் – fine moist beautiful eyes,  மடவரல் மகளிரொடு – with delicate/naïve women, பகல் விளையாடி – playing during the day, பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் –  upper world of ancient pride that is hard to obtain, ஏய்க்கும் – like, பொய்யா மரபின் – with an unfailing tradition, பூ மலி பெருந்துறை செவ்வி கொள்பவரோடு அசைஇ – rest with those who enjoy the flower-filled shores (அசைஇ – சொல்லிசை அளபெடை), அவ்வயின் அருந்திறற் கடவுள் வாழ்த்தி – praise the precious great god who is there, சிறிது நும் கருங்கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் – go after playing a little bit your sweet instrument with black stem (கழிமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person)

கச்சி மூதூரின் சிறப்பு

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ,
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்,   395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடைகால் யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த   400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்,   405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅப் போல,
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர்தலை உலகத் துள்ளும் பலர் தொழ,   410

விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்; (393-411)

The splendor of Kānji

The town is surrounded by protective

forests.

In a grove, a monkey in her first pregnancy,

eyes the elephant keeper when he is careless

and slyly steals a rice ball made with ghee from

angry, rutting elephants with long trunks that

ruin the posts to which they are tied.

The streets where famed warriors with great

strength live are rutted with the constant

movement of chariots.  The business of giving

and taking in the market nearby is hectic and

it hinders those who walk.

The gates of the town are never closed.

 

The outer walls are made with bricks,

appearing like the center of the many-petaled

lotus flower which is like the navel of Thirumāl

with blue color, from which rose the four-faced

Brahman.   On the thick, delicate tree branches

there are flocks of birds.  Like the jackfruit tree

that is special among non-flowering trees

because of its fruits, Kānji town is special

among all the towns in this world surrounded by

the ocean and covered by the skies.  It is a victorious

ancient town with festivals where many worship.

Notes:  கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த (400) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொள்வாரும் கொடுப்போரும் நிறைந்து இயங்குவாரைத் தடை செய்யும் அங்காடியினையும் உடைத்ததாய், இனி வழிச் செல்வோரையும் தன் புதுமையால் தடுக்கும் அங்காடி எனினுமாம்.

Meanings:  காழோர் இகழ் பதம் நோக்கி – looking at the elephant keeper when he is careless, கீழ – down, நெடுங்கை யானை – elephant with long trunk, நெய்ம்மிதி கவளம் – rice balls with ghee, கடுஞ்சூல் மந்தி கவரும் – first-time pregnant monkeys steal, காவில் – in the grove, களிறு கதன் அடக்கிய – controlled the rage of bull elephants, வெளிறு இல் கந்தின் – wooden posts that are not firm, திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில் – in the long streets that have pits created by sturdy chariots,  படை தொலைபு அறியா – not knowing loss of army, மைந்து மலி – great strength, பெரும் புகழ் – great fame, கடைகால் யாத்த – hiding the limits, பல் குடி – many communities, கெழீஇ  – having (சொல்லிசை அளபெடை), கொடையும் கோளும் வழங்குநர் – those who do giving and taking, தடுத்த  – blocking, அடையா வாயில் – gate that is never closed, மிளை சூழ் படப்பை – groves/areas surrounded by protective forests, நீல்நிற உருவின் நெடியோன் – Thirumāl with blue color (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), கொப்பூழ் – belly button, navel, நான்முக ஒருவற் – four faced one (Brahman), பயந்த – bore, பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி – appeared beautifully like the center of a lotus flower with many petals, சுடுமண் – bricks, burnt sand, ஓங்கிய நெடுநகர் – a tall large house, வரைப்பின் – within the limits, within the outer walls, இழுமென் புள்ளின் – of loud birds, ஈண்டு கிளைத் தொழுதி – families of huge flocks, கொழுமென் சினைய – with thick delicate branches, கோளியுள்ளும் – among the trees that fruit without flowers, பழம் மீக்கூறும் பலாஅப் போல – like  jackfruit trees that are praised because of their fruits (பலாஅ – இசை நிறை அளபெடை), புலவுக் கடல் உடுத்த வானம் – sky surrounded by fish stinking ocean, சூடிய – adorned, மலர்தலை உலகத் துள்ளும் – among the towns in the wide earth, பலர் தொழ – many worship, விழவு மேம்பட்ட – esteemed with festivals,  பழவிறல் மூதூர் – great ancient old town, victorious ancient old town

இளந்திரையனின் போர் வெற்றி

அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய்
அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப,
வெண்கோட்டு இரும்பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம் பதின்மரும் பொருது களத்து அவியப்   415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக்

கச்சியோனே கைவண் தோன்றல்!   420

நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய (412-421)

Battle victories of Iranthiraiyan

He is protection to those who seek him with

desire, the charitable scion of Kānji,

who controlled his enemies who defied him in

battlefields

and routed them with great uproar, like the five

men owning chariots with decorations, who have

won great battles, never lost, who destroyed

hundreds, the flood of blood carrying dead bodies

of elephants with white tusks, appearing like clouds

that roam in the red colored, wide sky adorned

with a crescent moon.

Meanings:  அவ்வாய் – beautiful place, வளர்பிறை சூடி – wearing the waxing moon, செவ்வாய் அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப – like the moving clouds in the red sky at twilight (கடுப்ப – உவம உருபு), வெண்கோட்டு – white tusks, இரும்பிணம் – dark dead body, குருதி ஈர்ப்ப – dragged by blood, ஈர் ஐம் பதின்மரும் – hundreds have fallen on the battlefield,  பொருது களத்து அவிய – ruined in the fighting battlefield, பேர் அமர்க் கடந்த – won great battles, கொடுஞ்சி நெடுந்தேர் – tall chariot with decorations, ஆராச் செருவின் ஐவர் போல – like the five who battled not losing, the Pāndavars, அடங்காத் தானையோடு – armies that cannot be controlled, உடன்று மேல்வந்த – came with great rage, ஒன்னாத் தெவ்வர் – disagreeing enemies, உலைவிடத்து – in the battlefield where they lost, ஆர்த்து – raised uproar, கச்சியோனே – the one in Kānji, கைவண் தோன்றல் – generous heir, நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய – he is protection to those who go to him with desire

அரசனது முற்றச் சிறப்பு

அளியும் தெறலும் எளிய ஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட,
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப,
நட்புக்கொளல் வேண்டி நயந்திசினோரும்,  425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல்வீழ் அருவி கடற் படர்ந்தாங்குப்
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ்வரை,
வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்   430
பொன் கொழித்து இழிதரும் போக்கு அருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்

செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்துப் (422-435)

Audience to see the King

He is graceful to those who love him.

He shows his wrath to his enemies and

destroys the common areas of their countries.

Countries he favored flourished with prosperity.

Kings who desire to cultivate friendship with

him and kings without support who desire

his strength, come to him like the water in the

mountain streams that rushes toward the ocean.

In the front yard of his wealthy palace, they

bow to him in many ways for his favors,

with tributes of great wealth, and wait for the

appropriate time,

like those who wait for a boat to go across the

wide waters of the Ganges river, difficult to cross,

that flows from bright, white waterfalls with gold

from the peaks of the tall, red Himalayas where

the celestials reside.

Notes:  இமையவர் (429) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்.  இமய மலையின் உச்சியில் தேவர்கள் உறைவர் என்பது மரபு.  புறநானூறு 62 – இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம்.

Meanings:  அளியும் – his graces, தெறலும் – his wrath, எளிய ஆகலின் – since they are easy,  மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – he ruined the common grounds in countries of enemies who fought with him (தேஎம் – இன்னிசை அளபெடை), நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – countries that desired him flourished with fine gold/prosperity (தேஎம் – இன்னிசை அளபெடை), நட்புக்கொளல் வேண்டி – desiring friendship, நயந்திசினோரும் – those who loved him, துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும் – those who have nobody desire and go to him for strength, கல்வீழ் அருவி – waterfalls that fall from the mountains, கடற்படர்ந் தாங்கு – like they go toward the ocean, பல்வேறு வகையின் பணிந்த மன்னர் – the kings who bowed to him in many ways, இமையவர் உறையும் சிமையச் செவ்வரை – the celestials live in the red mountains (Himalayas) with peaks, வெண்திரை கிழித்த – torn by the white waves, விளங்கு சுடர் – bright light, நெடுங்கோட்டுப் பொன் கொழித்து இழிதரும் – flows with gold from the tall peaks, போக்கு அருங் கங்கை – Ganges river that is difficult to cross, பெருநீர் போகும் இரியல் மாக்கள் – people who want to cross the wide water, ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு – like how they wait for the time of a boat, தொய்யா வெறுக்கையொடு – with wealth that cannot be ruined, துவன்றுபு குழீஇ – gather around together (குழீஇ – சொல்லிசை அளபெடை), செவ்வி பார்க்கும் – wait for the appropriate time, செழு நகர் முற்றத்து – in the front yard of the wealthy house/palace



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திரையன் மந்திரிச் சுற்றத்தோடு அரசு வீற்றிருக்கும் காட்சி

பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த,
கூடத் திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செங்காற் சேவல்,
இன்துயில் இரியும் பொன் துஞ்சு வியல்நகர்க்   440
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைத்தெரிந்து உணரும் இருள் தீர் காட்சிக்   445
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,

உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகிப், (436-447)

The King in his Court with his Ministers

The king is in his palace, where a red-legged

male pigeon that lives in the eaves of an upper

floor of the prosperous mansion wakes up from

sweet sleep when a metalsmith with strong hands,

who fits a curved ring on the tusk of an elephant

with a huge trunk, hits his hammer rapidly against

metal.

 

The king is seated with his ministers who are of

generous minds and with no cruelty,

like the sun that rises from the ocean in the

east and spreads its rays and causes day.  He gives

to those who ask appropriately.  He gives to those

who need and request, and he also gives to those

who desire but do not ask.  Go near him.

Meanings:  பெருங்கை யானை – elephant with huge trunk,  கொடுந்தொடி படுக்கும் – tightens the curved rings (on its tusks), கருங்கைக் கொல்லன் – a metalsmith with strong hands, இரும்பு விசைத்து எறிந்த கூடத் திண் இசை வெரீஇ – fearing the loud sounds of a rapid hammer hitting metal (வெரீஇ – சொல்லிசை அளபெடை), மாடத்து இறை உறை புறவின் செங்காற் சேவல் – red-legged male pigeon that lives on the upper levels of a mansion, இன்துயில் இரியும் – wakes up from sweet sleep, பொன் துஞ்சு – wealth residing, gold residing, வியல்நகர் – huge house, குணகடல் வரைப்பின்  – on the eastern side, முந்நீர் நாப்பண் – in the middle of the ocean, பகல்செய் மண்டிலம் – sun that creates day, பாரித்தாங்கு – like how it appeared, முறை வேண்டு நர்க்கும் – to those  who ask in the right manner, குறைவேண்டு நர்க்கும் – those who have needs and request, வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி – give according to what people ask, இடைத்தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – the sight of him giving to those who he desires understanding their situation, கொடைக்கடன் – duty of charity, இறுத்த கூம்பா உள்ளத்து உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி – go near him who is with his ministers with generous minds and no cruelty

பாணன் – அரசனைப் போற்றும் வகை

பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண்கடன் ஆற்றிப் பகைவர்   450
கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவுவாட் தடக்கை
கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள மறவர் மறவ!   455
செல்வர் செல்வ செரு மேம்படுந!
வெண்திரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத்
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும்பெயர் ஏத்தி   460
வந்தேன் பெரும வாழிய நெடிது என,
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடன்அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,

நின் நிலை தெரியா அளவை அந்நிலை, (448-464)

Bard Praising the King

Tell him this, “O heir of the Thondaiyar clan!

Warrior of warriors!  Brave among the brave!

Wealthy among the wealthy!  Great leader in

battles!  Like a lion that attacked an elephant

with spots and lines on his face, and then desired

to take down tiger cubs, you performed your duties

to poets giving them gold ornaments and then

ruined the protected fortresses of your enemies,

seized their crowns, and even if they were

agreeable, you not compromising,

extracted food tributes from them with your large

hands with a strong sword.  I came here to praise

your unlimited charity and great name, like how

the fierce deities praised the pretty goddess of

thunangai for bearing in her womb Murukan who

killed Sooran in the ocean with white waves.  May

you live long!”

 

Hold your lute to your left side, and play well

according to tradition, performing your duty, and

praise him with folded hands.   Even before he

knows where you are standing,

Notes:  The words கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு on lines 457-459 refer to the goddess Kotravai.  Thirumurukātruppadai line 258 has a similar description about Kotravai being the mother of god Murukan – வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ.  She is also mentioned in line 4 of Akanānūru 345 as கான் அமர் செல்வி.

Meanings:  பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான் – a lion that attacked an elephant with spots and lines on his tawny/brown face, கொடுவரிக் குருளை – cubs of tigers (கொடுவரி – வளைந்த கோடு, புலி, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), கொள வேட்டாங்கு – like it desired, புலவர் பூண்கடன் ஆற்றி – performed duties to poets, gave gifts of jewels and precious ornaments to poets, பகைவர் கடிமதில் எறிந்து – ruined the protected fortresses of enemies,  குடுமி கொள்ளும் வென்றி – seized their crowns, அல்லது – or,  வினை உடம்படினும் – even if they are agreeable, ஒன்றல் செல்லா – not agreeing to  compromise, உரவுவாள் தடக்கை – large hands with strong sword, கொண்டி உண்டி – food as tributes, தொண்டையோர் மருக – O heir of the Thondaiyar clan (Thondai Nadu is an ancient part of the Tamil land, which included the districts of Arcot, Chingleput and Nellore, with Kancheepuram as its capital), மள்ளர் மள்ள – O warrior of warriors, மறவர் மறவ – O brave among brave, செல்வர் செல்வ – O king of kings, செரு மேம்படுந –  O king who is great in battles, வெண்திரைப் பரப்பின் – on the ocean with white waves, கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த – gave birth to the son (Murukan) who killed fierce Sooran, மாமோட்டு – splendid womb, துணங்கை அம் செல்விக்கு – pretty goddess of thunangai dance, Kotravai goddess, அணங்கு நொடித்தாங்கு – how the deities uttered praises, தண்டா ஈகை – unlimited charity, நின் பெரும்பெயர் ஏத்தி வந்தேன் பெரும – I came O lord to praise your great name, வாழிய நெடிது என – may you live long, இடனுடைப் பேரியாழ் – huge lute on your left, முறையுளிக் கழிப்பி – play in the traditional manner, கடன் அறி மரபின் – according to the tradition of performing duty,  கைதொழூஉ – worship him with hands (தொழூஉ – இன்னிசை அளபெடை), பழிச்சி – praise him, நின் நிலை தெரியா அளவை அந்நிலை  – even before he knows your position

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்

நாவல் அம்  தண்பொழில் வீவு இன்று விளங்க,   465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந்நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇக்   470
கொடுவாள் கதுவிய வடு ஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங்கடித் தீம் சுவை அமுதொடு பிறவும்,   475
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி,
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,

மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் (465-480)

Hospitality to Bards

he will request you to get closer to him.  He who

is aware of this unstable world which is made to

shine with beautiful, cool lands with nāval trees,

will remove your old clothing that is like duckweed

roots and give you clothing that is fine like smoke, with

bright threads, have your very large family get dressed

in new clothes and serve you many meat dishes cooked

by a talented cook with strong hands with scars

caused by cutting knives, chosen, large, fine, red rice

that is thick and long, special sweet dishes that are

spread in silver bowls, appearing like the stars that

have risen, and cooked dishes in covered bowls.

 

He will look at all of you like a parent looking at his

children, and with a calm face and with unending

desire, he will stand there and feed you.  Like the

moon in the sky,

Notes:  இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்.

Meanings:  நாவல் – nāval trees, Eugenia jambolana, அம் தண் பொழில் – beautiful cool land, வீவு இன்று விளங்க  – to shine without evil, நில்லா உலகத்து – in the unstable world, நிலைமை தூக்கி – analyzes and knows what stands (fame), அந்நிலை அணுகல் வேண்டி – request you to get closer from there, நின் அரைப் பாசி அன்ன சிதர்வை நீக்கி – he will remove your worn-out clothing which is like duckweed roots (பாசி – ஆகுபெயர் பாசியின் வேர்க்கு), ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம் – clothing with bright threads that is fine like smoke, இரும்பேர் ஒக்கலொடு – with your very large group of relatives, with your dark and large group of relatives, ஒருங்கு உடன் உடீஇ – all of them dressed (உடீஇ – சொல்லிசை அளபெடை), கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை வல்லோன் – cook with strong hands with scars caused by curved knife cuts, அட்ட – cooked, பல் ஊன் கொழுங்குறை – many meat dishes, அரி – cut, செத்து – killed water, dried out, உணங்கிய – dried, பெருஞ் செந்நெல்லின் – large fine/red paddy’s, தெரிகொள் அரிசி – chosen rice, திரள் நெடும் புழுக்கல் – thick and long grains of rice, அருங்கடித் தீம்சுவை அமுதொடு – special sweet fine dishes, பிறவும் – and others, விருப்புடை மரபின் – according to tradition, கரப்புடை – with lids, covered, அடிசில் – cooked dishes,  மீன் பூத்தன்ன – like stars that rise, வான்கலம் பரப்பி – spread silver dishes, மகமுறை மகமுறை நோக்கி – looked at everybody like looking at children, முகன் அமர்ந்து – with a calm face (முகன் – முகம் என்பதன் போலி), ஆனா விருப்பின் – with unending desire, தான் நின்று ஊட்டி – feed you himself standing there, மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் – like the moon in the dark/cloudy sky

பரிசு வழங்குதல்

ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி,
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்குப்
புனை இருள் கதுப்பு அகம் பொலிய பொன்னின்   485
தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில நால்குடன் பூட்டி,
அரித்தேர் நல்கியும் அமையான் செருத்தொலைத்து   490
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும்படை தரீஇ,

அன்றே விடுக்கும் அவன் பரிசில், (481-493)

Giving gifts to the Bard’s family

are the gold lotus flowers which are not

buzzed by flying bees, that he will place

splendidly on your long, dark hair.  He will

adorn the dancers with gold garlands making

their pretty braids to shine like lightning streaks

when rain falls during the day from the monsoon

sky after absorbing water from the powerful

ocean.  He will give you a golden chariot

hitched with four horses with white tufts,

praised by experts, that resemble white

conches in the ocean of Thirumal.  Not satisfied

with that, he will also give you rapid horses with

saddles, abandoned by his enemies in battlefields.

He will give you these gifts on the day you visit him

and let you leave,

Notes:  புறநானூறு 69 – ஆடு வண்டு இமிராத் தாமரை.  அரித்தேர் (490) – நச்சினார்க்கினியர் உரை – பொன்னால் செய்த தேர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன்னால் செய்த தேர், காற்றை ஒத்த தேர் என்பாருமுளர்.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484,  மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.

Meanings:  ஆடு வண்டு இமிரா – flying bees do not hum, அழல் அவிர் தாமரை – lotus flowers made in bright flames, gold lotus blossoms, நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி – wear on your long dark hair splendidly/beautifully, உரவுக் கடல் முகந்த – absorbed from the powerful ocean, பருவ வானத்துப் பகற்பெயல் துளியின் – with rain drops that fall during the day from the season’s sky, மின்னு நிமிர்ந்தாங்கு – like spreading lightning streaks, புனை இருள் கதுப்பு அகம் பொலிய – making the well decorated dark hair braids to become beautiful, பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய – the dancers will be adorned with woven golden garlands, நூலோர் புகழ்ந்த மாட்சிய – esteemed and praised by experts, மால் கடல் வளை கண்டன்ன – like conches in the ocean of Thirumal, like conches in the dark ocean, வால் உளைப் புரவி – horses with white tufts, துணை புணர் தொழில – doing their task together, நால்குடன் பூட்டி – four of them yoked together (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), அரித்தேர் நல்கியும் – give you a golden/beautiful chariot, give you a chariot that rides fast like the wind, அமையான் – he will not rest, செருத்தொலைத்து – ruined in battles, killed in battles, ஒன்னாத் தெவ்வர் – not agreeable enemies, உலைவிடத்து ஒழித்த – abandoned in the battlefield, விசும்பு செல் இவுளியொடு – with horses that fly in the sky, பசும்படை தரீஇ – he will give you new saddles (தரீஇ – சொல்லிசை அளபெடை), அன்றே விடுக்கும் அவன் பரிசில் – he will give you the gifts on that day and let you leave

இளந்திரையனது மலையின் பெருமை

……………………………………………….இன்சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்,   495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே! (493-500)

Ilanthiraiyan’s Mountain

the lord of the mountain where, bright

waterfalls cascade down, pea****s

dance on slopes with gods, female monkeys

sweep the ground in the front yards of houses

where animals sleep, leaping male

monkeys have dropped flowers from the forest

dense with trees, and sages who nurture red

flames perform rituals with wood brought to

them by male elephants with white tusks.

Meanings:  இன்சீர்க் கின்னரம் முரலும் – kinnaram birds sing sweet music, அணங்குடைச் சாரல் – mountain slopes with gods, fierce mountain slopes, மஞ்ஞை ஆலும் –  pea****s dance, மரம் பயில் – dense with trees,  இறும்பின் – in the forest, கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் – flowers dropped by leaping male monkeys, புறவின் – in the forest, மந்தி சீக்கும் – female monkeys sweep the ground, மா துஞ்சு முன்றில் – in the front yard where animals sleep, செந்தீப் பேணிய முனிவர் – sages who protect red flames, வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் – they perform rituals with wood brought by male elephants with white tusks, ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – lord of the mountain with bright splendid waterfalls



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard