New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுரைக்காஞ்சி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மதுரைக்காஞ்சி
Permalink  
 


ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப		5
வியல் நாள்மீன் நெறி ஒழுக
பகல் செய்யும் செம் ஞாயிறும்
இரவு செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க	10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக மிக பொலிந்த
ஓங்கு நிலை வய களிறு		15
கண்டு தண்டா கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர் பூரிம விழு தெருவில்
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு		20
நல் ஊழி அடி படர
பல் வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்மகளிர்		25
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி		30
சின தீயின் பெயர்பு பொங்க
தெறல் அரும் கடும் துப்பின்
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு			35
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின்	40
தொல் முது கடவுள் பின்னர் மேய
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந
விழு சூழிய விளங்கு ஓடைய
கடும் சினத்த கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறும் சென்னிய		45
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉ துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்	50
வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய	55
பொருது அவரை செரு வென்றும்
இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின்
நிலம் தந்த பேர் உதவி		60
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல்
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை
அரும் குழு மிளை குண்டு கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரை புதவின்		65
நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று
கொண்டு நீங்கிய விழு சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல்		70
குண குட கடலா எல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை
வான் இயைந்த இரு முந்நீர்		75
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க		80
பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை		85
தெண் கடல் குண்டு அகழி
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு		90
வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி
இரும் புள் ஓப்பும் இசையே என்றும்	95
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப
ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவு தோள் முரண் பொருநர்க்கு
உரு கெழு பெரும் சிறப்பின்		100
இரு பெயர் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்
பொலம் தாமரை பூ சூட்டியும்
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே		105
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை		110
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து
நிலவு கானல் முழவு தாழை
குளிர் பொதும்பர் நளி தூவல்		115
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
வியன் மேவல் விழு செல்வத்து		120
இரு வகையான் இசை சான்ற
சிறு குடி பெரும் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
கால் என்ன கடிது உராஅய்		125
நாடு கெட எரி பரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசு பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே		130
நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎம் தோன்றி
சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்	135
இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின்	140
கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவு வில் பொலி கூவை
ஒன்றுமொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே
அரிய எல்லாம் எளிதினின் கொண்டு	145
உரிய எல்லாம் ஓம்பாது வீசி
நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து
பனி வார் சிமைய கானம் போகி
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து	150
மேம்பட மரீஇய வெல் போர் குருசில்
உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி
இழிபு அறியா பெரும் தண் பணை
குரூஉ கொடிய எரி மேய		155
நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப		160
அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடி கடு நோக்கத்து
பேய்மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉ புதவின்		165
அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும் பதிய குடி தேம்பி
செழும் கேளிர் நிழல் சேர
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி
குடுமி கூகை குராலொடு முரல		170
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பன் மயிர் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழி தவ கெட்டு		175
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்
எழாஅ தோள் இமிழ் முழக்கின்
மாஅ தாள் உயர் மருப்பின்
கடும் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் தானையொடு		180
முருகு உறழ பகை தலைச்சென்று
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயல் உறழ கணை சிதறி
பல புரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்ப		185
பீடு அழிய கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வௌவி
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி 190
அரசியல் பிழையாது அற நெறி காட்டி
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம்
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின்	195
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்
உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்	200
பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே	205
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை
தவா பெருக்கத்து அறா யாணர்		210
அழித்து ஆனா கொழும் திற்றி
இழித்து ஆனா பல சொன்றி
உண்டு ஆனா கூர் நறவின்
தின்று ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை	215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப
பாணர் உவப்ப களிறு பல தரீஇ
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ	220
மறம் கலங்க தலைச்சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு
தேரொடு மா சிதறி
சூடுற்ற சுடர் பூவின்			225
பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக
கள்ளின் இரும் பை கலம் செல உண்டு
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார்	230
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படு கண் முரசம் காலை இயம்ப
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்	235
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
அதனால் குண கடல் கொண்டு குட கடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி	240
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி	245
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முள் தாள சுடர் தாமரை
கள் கமழும் நறு நெய்தல்		250
வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை
கம்புள் சேவல் இன் துயில் இரிய
வள்ளை நீக்கி வய மீன் முகந்து		255
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே	260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன் கை வினைஞர் அரி பறை இன் குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலிய	265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதம் சான்ற தண் பணை சுற்றி		270
ஒருசார் சிறு தினை கொய்ய கவ்வை கறுப்ப
கரும் கால் வரகின் இரும் குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி	275
மட கண் பிணையொடு மறுகுவன உகள
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து
நீலத்து அன்ன பைம் பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து		280
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணி மருள் நெய்தல் உறழ காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்	285
நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும்
பல் வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி	290
தினை விளை சாரல் கிளி கடி பூசல்
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின்
வீழ் முகம் கேழல் அட்ட பூசல்		295
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர்
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து	300
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார்
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப
நிழத்த யானை மேய் புலம் படர
கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன
கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து	305
அருவி ஆன்ற அணி இல் மா மலை
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு
கமம் சூழ் கோடை விடரகம் முகந்து
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி	310
உவலை கண்ணி வன் சொல் இளைஞர்
சிலை உடை கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார்
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்	315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல் வேறு கூலம்
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்	320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல்தோறும் வழிவழி சிறப்ப
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு	325
ஐம் பால் திணையும் கவினி அமைவர
முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு	330
பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்
கலை தாய உயர் சிமையத்து
மயில் அகவும் மலி பொங்கர்
மந்தி ஆட மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்	335
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல்
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்
அவிர் அறல் வையை துறைதுறைதோறும்	340
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும்
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்	345
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்
தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய
பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று	350
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்
விண் உற ஓங்கிய பல் படை புரிசை
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை
நெய் பட கரிந்த திண் போர் கதவின்
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு	355
வையை அன்ன வழக்கு உடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப	360
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து	365
சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடி
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக்கொள
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி	370
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல
பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்	375
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து	380
கோலோர் கொன்று மேலோர் வீசி
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்	385
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய		390
கொடி படு சுவல இடுமயிர் புரவியும்
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்	395
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்
பல வகை விரித்த எதிர் பூ கோதையர்
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய்	400


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
இரு தலை வந்த பகை முனை கடுப்ப
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்	405
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர
இரும் கடல் வான் கோது புரைய வாருற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்
செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை	410
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்
சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை	415
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல்
மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப	420
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக
மழை கொள குறையாது புனல் புக மிகாது
கரை பொருது இரங்கும் முந்நீர் போல	425
கொளக்கொள குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
நாளங்காடி நனம் தலை கம்பலை		430
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம்
பொன் புனை வாளொடு பொலிய கட்டி
திண் தேர் பிரம்பின் புரளும் தானை	435
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ	440
காலோர் காப்ப கால் என கழியும்
வான வண் கை வளம் கெழு செல்வர்
நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை	445
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப	450
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக	455
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க		460
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்		465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்க பாடி
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி	470
உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து	475
பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை		480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி நல்குவர
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து	485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்
குன்று பல குழீஇ பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து	490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறங்கூறவையமும்
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல	495
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி	500
குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு	505
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும்
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன
தாம் மேஎ தோன்றிய நாற்பெருங்குழுவும்	510
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும்
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்
பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும்		515
எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து	520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர
கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ	525
விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன்
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறு பட கவினிய தேம் மாங்கனியும்
பல் வேறு உருவின் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி	530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும்
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல் வயின் நுகர	535
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்	540
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே
அல்லங்காடி அழிதரு கம்பலை
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து	545
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர குண முதல்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர்
காதல் இன் துணை புணர்மார் ஆய் இதழ்	550
தண் நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நல் நெடும் கூந்தல் நறு விரை குடைய
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்	555
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணு கொள
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து	560
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ
மேதகு தகைய மிகு நலம் எய்தி		565
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர்
திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி
மாய பொய் பல கூட்டி கவவு கரந்து	570
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும்
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து	575
பழம் தேர் வாழ்க்கை பறவை போல
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல்
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி	580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர்
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்	585
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர
கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்	590
மாயோன் மேய ஓண நல் நாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடு படு நெற்றி		595
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்
கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடும் கரை காழ் அக நிலம் பரல் உறுப்ப
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர
கணவர் உவப்ப புதல்வர் பயந்து		600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வள மனை மகளிர் குள நீர் அயர
திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி	605
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார்	610
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்	615
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை		620
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம்	625
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க
விழவின் ஆடும் வயிரியர் மடிய
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப	630
பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப
இரும் பிடி மேஎ தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை	635
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர்
மெல் நூல் ஏணி பன் மாண் சுற்றினர்	640
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும்
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி
வய களிறு பார்க்கும் வய புலி போல
துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த	645
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்	650
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகலுற கழிப்பி
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு	655
ஓதல் அந்தணர் வேதம் பாட
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண காழோர்
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர்
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட	660
பல் வேறு பண்ணியம் கடை மெழுக்குறுப்ப
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய	665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண் சுவர் நல் இல் கதவம் கரைய
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற
சூதர் வாழ்த்த மாகதர் நுவல		670
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணி மயில் அகவ	675
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி
கூட்டு உறை வய மா புலியொடு குழும
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த	680
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும்
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப	685
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி
வேல் கோல் ஆக ஆள் செல நூறி		690
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி
நாள்தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும்	695
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தேள் உலகம் கவினி காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ	700
ஒண் பூ பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மேதக பொலிந்து	705
மயில் ஓர் அன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை	710
தாது படு பெரும் போது புரையும் வாண் முகத்து
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும்	715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தட கை தொடியொடு சுடர் வர	720
சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம்
உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ
வல்லோன் தைஇய வரி புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து	725
ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த
வில்லை கவைஇ கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின்	730
நல் எயில் உழந்த செல்வர் தம்மின்
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த
மா கண் முரசம் ஓவு இல கறங்க
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண்
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய	735
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின்
புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து	740
வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின்
நிவந்த யானை கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்	745
பெரும் செய் ஆடவர் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என	750
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி
களம்தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய		755
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
பல் சாலை முதுகுடுமியின்
நல் வேள்வி துறைபோகிய		760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவில் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி	765
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி	770
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்
பெரும் பெயர் மாறன் தலைவனாக
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த	775
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறரும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்	780
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உயர்ந்து எழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும்
முழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு,
தேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலைகள் முளைத்துஎழும் அகன்ற உலகத்தின்கண் -
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல,								5
அகன்ற நாள்மீன்கள் (தாம் நடக்கும்)பாதையில் ஒழுங்காக நடக்க,
பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும்
இரவில் (ஒளி)செய்யும் வெண்மையான திங்களும்
குற்றமற்றுத் தோன்றி விளங்க,
முகில் (தன் பெய்தல்)தொழிலை (வேண்டுங்காலத்தே செய்து)உதவ, (எல்லாத்)திசைகளும் தழைக்க,		10
(ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை விளைய,
விளைநிலங்களும் மரங்களும் பயன்தருதலை மேற்கொண்டு தழைப்ப,
பிணிகள் நீங்கி அழகு விளங்க,
மகிழ்ந்து நிற்க (மேம்பாடு தக), - (மிகவும் பொலிவுபெற்ற
உயர்ந்த நிலையையுடைய வலிமைமிக்க திசையானைகள்)					15
பார்த்து (ஆசை)தணியாத கண்ணுக்கு இனிமையினையும்,
உண்டு குறையாத மிகுந்த வளத்தையும்,
உயர்ந்த (இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும்,
பொய்மையே அறியாத (தங்களின்)வாய்மொழியால்
புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு								20
நல்ல ஊழிக்காலம் எல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க,
பல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட,
உலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே -
பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய								25
இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை						30
வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க,
வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும்,
வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,								35
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்கு வேள்விசெய்யும்படி,
போரினை வெல்லும் அகன்ற படையினையுடைய
தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய				40
பழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய,
மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே -
சீரிய முகபடாத்தையுடைய, விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையுடைய
கடும் கோபத்தையுடைய, கமழுகின்ற மதநீரால்
சேறுண்டான நறிய தலையையுடையவாய்								45
மலையென்று (கண்டோர்)மருளும் உயர்ந்த தோற்றத்தினையுடைய,
போர்த்தொழிலே பயின்ற பெரிய யானை
வெகுளி மிகுந்து போர்க்களத்தில் பகைவரைக் கொன்றுதிரியவும்
குதிரைப்படை தோற்றுவித்த மிகுந்த நிறத்தையுடைய புழுதி
விரிந்த வானத்தில் வெயிலை மறைக்கவும்,							50
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
வாட்போரில் மிகுந்த வலிமை (கொண்ட)மைந்தர்கள்
(தம்)தோளால் முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப்பெறவும் -
இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ				55
பொருது அவரைப் போரில் வென்றும்,
விளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து
காடுகளைப் பிளக்கும் மாறுபாட்டையுடைய போராற்றலால்,
உயர்ந்து ஓங்கிய சீரிய தலைமையினால்,
நிலத்தைத் திருத்தித்தந்த பெரிய உதவியினையும் உடைய,					60
பொன்னால் செய்த மாலையை அணிந்த நெடியோன் வழியில் வந்தவனே -
மரங்களைச் சுட்டு மலைகளை நொறுக்கி விழச்செய்யும்
பெருமையினையுடைய இடிமின்னலின் இடி(முழக்கத்தைப்) போன்றவன் நீ,
சேர்தற்கரிய அடர்ந்த காவல்காட்டையும், ஆழ்ந்த கிடங்கினையும்,
உயர்ந்து வளர்ந்த, வரிசையான குறுவாயில்களைக்கொண்ட					65
நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று,
கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு,
தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,							70
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
வெற்றியோடே செறிந்து நடந்த
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,
வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய			75
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இனிய இசையை உடைய முரசம் முழங்க,								80
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் -
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த - அசைகின்ற இருக்கையினையும்,						85
தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே -
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)							90
(ஏற்றத்)தோடு மேலும் கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும்,			
குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற
மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்,
கடா விடுபவர் எருதுகளுக்குப் பூணும் தெளிந்த மணியின் ஓசையும்,
பெரிய பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசையும், எந்த நாளும்					95
(நீல)மணி போன்ற பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும்
பரதவப் பெண்டிர் (ஆடும்)குரவைக் கூத்தின் ஓசையுடன் கூடி ஆரவாரிக்க -
ஒரு பக்கத்தே, விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில்,
முழவு (போலும்)தோளினையுடைய (கல்வியால்)மாறுபடுதலையுடைய பொருநர்க்கு
அச்சம் பொருந்திய பெரிய சிறப்பினையுடைய							100
(கன்றும் பிடியும் என்னும்)இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடன்				
ஒளிர்கின்ற கொம்புகளையுடைய ஆண்யானைகளைக் கொடுத்தும்,
பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,
நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே -							105
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும்,						110
பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும்,						115
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) - புகழப்படுகின்ற
மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய,							120
(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த	
சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
பழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;
காற்றோ என்று சொல்லும்படி விரைந்து சென்று,							125
பகைவர் நாடு கெடத் தீமூட்டி,									
தலையாலங்கானம் என்கிற ஊரின்கண் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி,
அரசர்கள் விழும்படி போர்செய்து,
முரசைக்கொண்டு களவேள்வி வேட்ட
கொல்லுகின்ற ஆற்றல் மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே -				130
(உன்னுடன்)நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்துவாய்,					
(நீ)சினந்தவரின் அரசுரிமையை எடுத்துக்கொள்வாய்,
பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த் தோன்றுகையினாலே
புகழையுடைய விழுமிய தலைமையினையும்,
(நன்றாக)விளைந்து முதிர்ந்த சீரிய முத்தினையும்,							135
பளிச்சிடும் சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும்,					
கள்ளை(யே) உணவாகக்கொண்டோரின் குடியிருப்புப் பகுதிகளையும் உடைய,
நல்ல கொற்கை என்னும் ஊரிலுள்ளோர் விரும்பும் வீரவேந்தே -
(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,			140
கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,		
புலால் (நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும்,
வஞ்சினம் கூறுதலையும், ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையவராகிய
தென்திசை மீனவர்களைப் பொருது அடக்கிய அரிமா போன்றவனே -
அரியவை (என்று எண்ணப்படுபவற்றை) எல்லாம் (மிக)எளிதாகக் கொண்டு,			145
உரியவற்றை எல்லாம் வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் (பிறர்க்குக்)கொடுத்து,		
மிக விரும்பி (ஊரின்கண்)உறைவோம் என்று சொல்லாமல், மேற்கொண்டு புறப்பட்டு,
பனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,
(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,						150
(அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே -		
மிக்க பகையுடையோர் நிலத்தில் புகுந்து, அவரின்
காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து,
குன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை
(செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,						155
நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,
பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,
ஊர்கள் இருந்த இடமெல்லாம் பாழிடம் ஆக,
ஒளிர்கின்ற வளை அணிந்த இள மங்கையர்
துணங்கைக்கூத்தையும், சீரான குரவைக்கூத்தையும் மறக்க,					160
அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,
இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்
நிலத்தில் கிடந்த திரளான வாயில்(நிலை)களில்							165
துன்பம்கொண்ட பெண்கள் வருந்தியவராய் அழுதுநிற்க,
வளமையான ஊர்களிலிருந்த குடிகள் பசியால் வருந்தி,
செழுமையுள்ள (தம்)உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர,
பெரிய மாளிகைகளில் வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும்
கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப,				170
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர,
நல்ல ஏர் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்
பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,
(மனிதர்)வாழாமற்போனதால் பிழைப்பு மிகவும் கெட்டு						175
பாழ்நிலம் ஆயின நின் பகைவர் நாடுகள் -
எழுந்துயராத தோளினையும், முழங்குகின்ற ஓசையையும்,
பெருமையையுடைய கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய
கடிய சினங்கொண்ட யானைகளை எங்கும் பரப்பி,
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு							180
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று,
விரிந்த விசும்பெங்கும் ஆரவாரம் முழங்க,
மழை போல அம்புகளை ஏவி,
பல குதிரைகள் துகள்களை எழுப்ப,
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,									185
பெருமை அழியும்படி வென்று கொன்று, பகைவரின்
நாடுகள் அழியும்படி (அவரின்)அரண்களைக் கைக்கொண்டு,
(பகைவரைச்)சேர்ந்தாருடைய வலியைப் போக்குதலின்,
(நீ)சினந்த பகைவர் நின் சொற்படி நடப்ப,
அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து,		190
அரசியலறம் வழுவாது அறவழியைக் காட்டி,
பெரியோர்கள் சொல்லிச் சென்ற பாதை வழியிலிருந்து விலகாமல்,
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி -
கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல்	195
(கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் ஆக்கம் -
உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும்,
பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்;
முழங்குகின்ற கடலை எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு
உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும்,						200


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

(அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;
தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;						205
அத்தன்மையுடையாய், உன்னோடு ஒப்பிட்டுக் கூறவல்லோன் எவன்?
மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,
கெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் -
கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும்,						210
(உண்பதற்காகச்)செலவழித்துக் குன்றாத கொழுவிய தசையும்,
உண்டு குறையாத பலவாகிய சோறும்,
பருகிக் குறைவுபடாத மிக்க கள்ளும்,
தின்று தீராத (இன்னோரன்ன)வகைகளும், (இவை எப்பொழுதோ அன்றி)ஒவ்வொரு நாளும்,
நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய,					215
பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில்,
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க,
பாணர்கள் மகிழும்படி யானைகள் பலவற்றையும் கொடுத்து,
தம்மைச்சேர்ந்தோர் மகிழ எயில்பொருள்கள் பலவற்றைச் செலுத்திக்கொடுத்து,			220
(பகைவர்)மறம் கலங்கும்படி அவரிடத்தே சென்று,
வாட்போரில் (அவரை)வருத்தி, அதன் முயற்சியைப் பாராட்டி,
(அன்றைக்)காலையில் வந்துகூடிய நல்ல பொருநற்குத்
தேருடன் குதிரைகளையும் கொடுத்து,
சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும்,								225
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,
கள்ளினையுடைய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக உண்டு,
(தமக்குப்)பணிந்தவரின் நாடுகள் தம் சொற்படி நடப்ப,
(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,		230
பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப,
கேடு உண்டாகக் கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி,
பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,
கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய பெரிய கடலின்				235
அலைகள் குவிக்கின்ற மணலினும் பலரே - (புகழோடு
அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை ஆண்டு, பின் இறந்துபோனோர்) -
எனவே, கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,
இரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி,
மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து,						240
கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,
மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க,
மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து				245
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
விளங்கும் மடுக்களிலும், இலைக்கு மேலே உயர்ந்த
முள்ளுடைய அடித்தண்டையுடைய ஒளிவிடும் தாமரைப்பூவினையும்,
தேன் கமழும் மணமிக்க நெய்தல் பூவினையும்,							250
வளவிய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,
மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு,
வண்டுகள் தங்குதல் கொண்ட மணங்கமழும் பூக்களைக்கொண்ட பொய்கைகளிலும்,
கம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட,
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,		255
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,
கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,
சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும்,						260
தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய
துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்
விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள்
(தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட		265
அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்
அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,
குருகுப்பறவைகள் ஒலியெழுப்ப, மனையிலுள்ள மரங்கள்தோறும்
மீனைச் செதுக்கி(வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன்
மருதநிலம் ஒழுக்கம் அமைந்த குளிர்ந்த வயல்வெளிகள் சூழ்ந்த ஒருபகுதியும் -			270
சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,
கரிய தாளினையுடைய வரகின் கரிதாகிய கதிர் முற்றிக் காய்ந்துபோக,
ஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க,
வளர்ந்த காட்டில் நல்ல பொன் மேலே பிறழ,
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்					275
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
நீலமணியை ஒத்த பசிய(கரும்பச்சை நிற) பயிர்களிடந்தோறும்
வெள்ளியின் நிறத்தை ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து,						280
முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடன் முல்லையும் பரவ,
நீலமணியென்று மருளும் நெய்தல், மாறும்படி, விருப்பத்தையுடைய,
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர,
வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று
முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் -				285
நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,
இஞ்சியும், மஞ்சளும், பசுத்த மிளகுக்கொடியும், பிறவும்
பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கல்தரையில் குவிக்கப்பட்டு,					290
தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,
பன்மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும்
ஆமாவை ஓட்டுகின்ற கானவரின் ஆரவாரமும்,
குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த)
கீழ்நோக்கிய பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,				295
கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த)
நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய
பன்றியைக் கொல்லும் வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும்
விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க
கரிய காலையுடைய குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து,			300
பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்), ஒரு பக்கம் -
பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
(உணவின்றி)கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்த யானைகள் (வேறு)மேய் நிலங்களுக்குச் செல்ல,
மகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று,
முங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து,			305
அருவிகள் இல்லையான அழகில்லாத பெரிய மலையிடத்தில்,
வைக்கோலைக் கண்டாற் போன்று புல் உலர்ந்த அழகிய காட்டில்,
நிறைவினையுடைய சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினால்,
காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய;
குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்,			310
தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க;
நிழல் தன் வடிவை இழத்தற்குக் காரணமான முதுவேனில் காலத்தையுடைய மலையிடத்து
பாலை ஒழுக்கம் அமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம் -
ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்,				315
அரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளைகளும்,
பரதர் கொண்டுவந்த பலவாய் வேறுபட்ட பண்டங்களும்,
கரிய கழியிடத்துப் பாத்தியில் விற்கும் தித்திப்புக்கூட்டிப் பொறித்த புளியோடே வெள்ளிய உப்பும்,
பரந்து உயர்ந்த கானலில் வலிமையான கையினையுடைய திமிலர்
கொழுவிய மீன்களை அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்(ஏற்றப்பட்ட)	320
சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்
நாள்தோறும் வழிவழியாகச் சிறக்க,
நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு, அங்கு				325
ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற -
முழவு முழங்கும் அகன்ற ஊரில்,
விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,
துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும்,
இனிய செருக்கினையுடைய புதுவருவாயினையுடைய குடித்திரளையும் உடைய அங்கே,	330
(புலவர்)பாடுதல் நிறைந்த நல்ல நாட்டிற்கு நடுவணதாய் -
முசுக்கலைகள் தாவுகின்ற உயர்ந்த மலையுச்சியில்,
மயில்கள் அகவும் நிறைந்த மரக்கிளைகளில்
மந்திகள் ஊசலாட, பெரிய வானில் உயர்ந்து
ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலையிலும்,			335
ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,
தாதுக்கள் சூழ்ந்த கோங்கினையுடைய பூவும் (ஏனை)மலர்களும் பரந்து
மாலையைப் போன்று ஒழுகி ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய
விளங்குகின்ற அறலையுடைய வையையின் துறைகள்தோறும்					340
பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,
நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் -
நிலத்தையும் (அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத
விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்,					345
செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவர்களும்,
அதிக நாட்களாய் கறுவிக்கொண்டு இருக்கும் -- (தன்)வலிமையினால் வந்த --
தலைமைச்சிறப்புடைய யானையைக் கொல்லும் -- போர்த்தொழிலை உடைய, வேந்தரை,
இனிய ஓசையினையுடைய முரசம் (உழிஞைப் போர்க்கு)இடைநிலத்தே கிடக்கும்படி,
பலவாய்க் கிடந்த மாறுபாட்டினை அகற்றி, (பகைவர் அத்தனை)பேரின் முதுகைக் கண்டு,		350
(கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,
விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,
தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,
நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும்,
முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,						355
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்,
பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)
சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் -
பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,						360
பெருமையையுடைய காற்று எடுத்த கடலொலி போல
முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,
குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு
மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தையும் உடைய,
ஓவியத்தில் கண்டாற்போன்ற இரண்டு பெரிய அங்காடித்தெருவின்கண்				365
விழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
வேறுபட்ட பல பெயர்களையுடைய (உறுதி)நிறைந்த அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற
நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய அலங்காரமான கொடியும்,
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)
புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து,	370
புகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும்,
கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல
பலவாய் வேறுபட்ட திரண்ட கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று,
பெரிய மலையிடத்து அருவியைப் போன்று நெளிந்துஆட,
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,						375
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, வெகுளி மிக்கு				380
கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, பாகரைத் தூக்கி எறிந்து,
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு
ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்		385
சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின				390
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
யானை போன்ற அச்சம்தரும் போக்கினையுடைய
கள்ளை உண்ட மறவரின் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்,
(இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால் - 
இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின்	395
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
பலவகையாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,
பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்,
அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடன்,			400
நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,
இரண்டு பக்கத்திலும் (படை)வந்த பகைப்புலத்தை ஒக்க,
இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து,
ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர்,
பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,		405
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க -
கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய,
நல்ல வனப்பினையுடைய, பழைமை மூத்த பெண்டிர் --
{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை					410
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்; மடப்பத்தையுடைய கண்ணோடே
(பார்ப்பவர்)வியந்து கலங்கும் மாமை நிறமுடையவரும்; கூர்மையான பற்களின்
ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும்,			415
தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்,
மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய
மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)
(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்
கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,}						420
-- புடைத்தல் அமைந்த அழகிய பலவகைப்பட்ட செப்புக்களில்,
விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல -
முகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல,							425
(வாங்குவோர்)எடுக்க எடுக்கக் குறையாது, (வணிகர்)கொணரக் கொணர நிறையாது,
தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,
ஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது (மக்கள்)ஆரவாரித்ததைப் போன்று,
மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் -				430
வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய
செவ்வானத்தை ஒத்த, சிவந்து நுண்ணிதான வடிவில்,
கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை,
பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி,
திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,				435
கச்சம் இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்,
(உலகத்தார்)வலிமையைக் கடந்து (புகழோடு) திரியும் ஒப்பற்ற பெரிய வேப்பமாலையினையும்,
மாணிக்கம் ஒழுகினாற் போன்ற ஒளிரும் செங்கழுநீர் மாலையினையும்,
அழகு விளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து,
காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,					440
காலாட்கள் (சூழ்ந்து)காக்க, காற்று என விரைந்து செல்லும்,



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகில்போன்று (வரையாமற்கொடுக்கும்)வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்திய செல்வர்
நாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண - (ஏனைய)அணிகலன்களோடே
தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில்(இட்டு)
குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னாற் செய்த பளபளக்கும் அணிகலன்களையுடைய,	445
தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,
ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம்,
திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்
தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்,		450
ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும்
மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய -
நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்
திசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,		455
அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய
வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க -						460
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,						465
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)	470
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய			475
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,					480
நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,					485
கண்பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,
வியப்பமைந்த நறிய பூக்களையுடைய (அமண்)பள்ளியும் -
மலைகள் பலவும் திரண்டு பொலிவன (போலத்)தோன்ற;
அச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,
பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து,				490
துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,
சிறந்த கொள்கைகள் (உடைய)அறங்கூறவையமும் -
நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய்,
யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று,						495
நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும் -
அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து --						500
அருகருகேயமைந்த பலவான சிறுமலைகளைக் கண்டாற் போன்று
பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லங்களில்
பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,
மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு	505
-- சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் -
மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய
பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
தாம் மேலாய் விளங்கிய நாற்பெருங்குழுவும் -							510
சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,
பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,						515
பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,
தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,			520
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,
நான்காய் வேறுபட்ட தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய 
வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,
குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு							525
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப - பலவுடன்,
சாறும், மணமும் (கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும்,
ஒன்றற்கொன்று வேறுபட்ட அழகிய மாவின் பழங்களையும்,
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும், பழங்களையும்,
மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,								530
மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,
புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,
கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும்,
இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண -				535
வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த)
பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து
ஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போன்று, கல்லென
அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி			540
கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து,
அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,
பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது
அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் -
ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து,				545
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கீழ் வானத்தில்
(பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால்,
பகலின் வடிவை ஒத்த இராக்காலம் வரும்படியும், (நெஞ்சால்)விரும்பினோரான --
காதல் (மிக்க தம்)இனிய துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய		550
குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்கள் துணையாக நிற்க, அணிகளை அணிந்து,
நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க,
கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க,
மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணக்கின்ற (அகிற்)புகையை ஊட்ட,
-- பெண்டிரே விரும்பும் மான்பிணை(போலும்) நோக்கினையுடைய மகளிர்				555
நீண்ட சுடர்(விடும்) விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின்
எல்லைக்குட்பட்ட இடமெல்லாம் (நயந்தோர்க்கு)நோயைச் செய்தலோடே புகுந்து
கல்லெனும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்க - நாணம் கொண்டு,
(இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,
தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),	560
(தம்மை)விரும்புகின்ற துணைவரை முயங்கி, அகன்ற விண்ணில் (சென்று)மணக்கும்படி,
நீர் திரண்டாற் போல (வெள்ளிய பூக்களால் புனைந்த)மாலைகளை கொண்டையில் சூடி,
அழகிய திரண்ட ஒளிரும் தொடிகள் பளபளக்கக் கையை வீசி நடந்து,
மொட்டுக்கள் மலரும் புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ,
பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து,		565
பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகள் மொய்க்கும் பல பூக்களை,
(கையால்)மலரச்செய்து மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்து மணக்கும் வாசனையுடன்,
மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி,
நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்)வடுப்படும்படியாகத் தழுவி,
வஞ்சனையுடைய பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, (தம் மனத்து)எண்ணத்தை மறைத்து,	570
தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,
(பூவின்)நுண்ணிய தாதை உண்டு, (பின்னர் தாதற்ற)வறிய பூவை விட்டுவிலகும்
மெல்லிய சிறகையுடைய வண்டுகளைப் போன்று, (தம்மை)நுகர்ந்தோரது
நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,						575
பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,
வளவிய குடி(யிற் பிறந்த)செல்வரும், பிறமாந்தரும் பொருந்தியுள்ள,
(புதிய)மணம் நிகழ்ந்தமையால் உயர்ச்சிபெற்ற, இல்லுறை தெய்வங்களையுடைய நல்ல இல்லங்களில்,
ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி,				580
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,
யாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற
முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய				585
குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய -
குழாம் கொண்ட அவுணர்களைக் கொன்றருளிய, பொன்னால் செய்த மாலையினையுடைய	590
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,							
தோட்டி (வளைந்த வாள்)வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,
சாணைக்கல்லால் தழும்பேறின, போரைத் தாங்கும் பெரிய கையினையும்,
வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில்,
(அடி)மாறாமையாற்பட்ட (கொம்பு அழுந்தின)தழும்பினையுடைய நெற்றியினையுடையனவும்,	595
வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய மறவர்கள்		
கடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால், (அதனைக்)காணவந்தோர் இட்டுச்செய்த
நெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கண் பரல்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி,
கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய -
தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று,							600
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,
வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க -
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,					605
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க - ஒருபக்கத்தே,			610
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - (முதல் யாமத்தில் மாலை 6 - 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற)	615
புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
முற்பட்ட (முதல்)யாமம் நிகழ்ந்த பின்னர் - (இரண்டாம் யாமத்தில் - இரவு 9 - 12 நள்ளிரவு)	620
சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து, மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒளிவிடும் அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய,
நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும்,
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)			625
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க,
திருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள,
ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல,
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில - (மூன்றாம் யாமத்தில் நள்ளிரவு 12 - 3 காலை)	630
நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,
கரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,
கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய							635
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,
மிக்க கருமையான, நுணுக்கமான வேலைப்பாடு(கொண்ட), நுண்ணிய கருமணலின்
நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;
மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்;640
நிலத்தை அகழும் உளியினை உடையவராய்; பேரணிகலன்களை விரும்பிச் சுற்றித்திரியும்
காட்சியினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து,
வலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
துயில் கொள்ளாத கண்ணையுடையவராய்; அஞ்சாத கோட்பாட்டையுடையவராய்;
அறிந்தவர்கள் புகழும் ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய				645
நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,						
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,				650
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,
(நான்காம் யாமத்தில் - காலை 3  - 6)பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில்,	
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,					655
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,
தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான,						
கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல, 		660
பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,
கள் விற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, மகளிர்
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
(பொழுது)புலர்ந்து (கதிர்)விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே, விருப்பத்தால்
கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று					665
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து --
திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகள்(திறக்கப்படுவதால்) கிரீச்சிட,
(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,					670
வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப,
இமிழ்கின்ற முரசு ஒலிக்க, ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்க,
பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,
யானையங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய
அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ,			675
பிடியைக் கூடின பெரிய யானைகள் முழங்க, மிக்க வலியுடைய
கூட்டில் உறைகின்ற (கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க,
வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த		680
பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு, 
பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம் போல்,
அழகிய மென்மையான இளம்பாக்குக் காய் விழுந்து, (முத்தொழிந்த)பிறவும் (விழுந்து கிடப்ப),
கொண்டுவந்து இட்ட மணலையுடைய (அம்)முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப,
-- மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள				685
இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்,
கருமை படர்ந்த பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து,
போர்க்களத்தின் நடுவழியில் (விட்டுப்போன)ஏந்தின கொம்பினையுடைய யானைகளும்,
பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும்,
வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி,					690
எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும்,
அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்,
நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி,
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்				695
கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் -
மரக்கிளைகளில் ஒன்றுகூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)			700
ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்,
ஒளியைச் சொரிந்து (உச்சிக்கு)ஏறிய பளீரிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின்
(மேற்கில் இறங்கிய பின்னர்)மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று
பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று,						705
மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும், மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூரிய எயிற்றினையும்
ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும்,
இறைத்தன்மையுள்ள (பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின்	710
தாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும்,
ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கி,
தூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு -
நன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து,
திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும்					715
ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்,
பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர,				720
சோறு (தன்னிடத்தே நன்றாக)அமையப்பெற்ற நீரை(- கஞ்சியை) உடைய துகிலை,
உடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்தி,
(சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில்
முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி -
வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து,	725
(அப்)பகைவரை விரட்டிய போரை விரும்பும் படைத்தலைவர்
வாள் வெற்றியைப் பொருந்தின நின் முயற்சியின் வெற்றியை வாழ்த்திநிற்ப -
‘வில்லை (வலிக்கையினால் தன்னுள்ளே)அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும் மார்பினையும்,
குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்;
கல் (தரையைப்)பொளிந்து பண்ணின ஒடுங்கிய (நீர்வரும்)வாயையுடைய கிடங்கினையுடைய	730
நல்ல கோட்டைமதிலில் சிரமப்பட்ட (மறச்)செல்வர்களைக் கொணர்மின்;
கொல்லும் (தன்மையுள்ள முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமற் போர்த்த
பெரிய கண்ணையுடைய முரசம் விடாமல் ஒலிக்க,
நெருப்பு நிமிர்ந்து நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று)
பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று,						735
சீரிய புண்ணால் வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;
குற்றம்தீர்ந்த உயர்வினையுடையோர்க்குக் கட்டப்பட்ட பொன்னாற்செய்த பூவினையுடைய தும்பையை
நீர் (யார்)என்னாது, (அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும்)முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுதலால்
காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,
(பலவாய்ப்)பிரிந்து இணைந்த (பொருத்துவாய்கள் அற்ற பழைய)நிறம் கெட்ட கவசத்தோடே,	740
தேவருலகத்தை ஒத்த வளமுடைய நகர் (மேலும் வீரப்பொலிவாலே)விளங்க,
வலிய குறட்டை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;
உயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த,
(பூசி)உலர்ந்த சாந்தினையும், பலவகையாய்க் கலந்த பூக்களின் மாலையினையும்,			745
பெரிய செய்கைகளையும் உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும்
எல்லாரும் வருக, ஏனோரையும் கொணர்மின்' என்று
வரைந்து கூறி, வாயிலில் தடுத்து நிறுத்தாமல் இருந்து,
‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக', என்று அழைத்து			750
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும்,			755
நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,
நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே,
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,							760
தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,					765
அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,					770
பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும்,
பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப,
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க,
பொன் அணிகலன்களையுடைய ஐம்பெரும் கேளிரும் உட்பட, (அவரால்)புகழப்பட்ட		775
மறம் மிக்க சிறப்பினையுடைய குறுநில மன்னராகிய
அவர்களும், மற்றோரும் நிறைந்து,
பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த,
விளங்குகின்ற பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் எடுத்த
மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்				780
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,
அறநெறியில் ஈட்டி நீ பெற்றுள்ள நல்ல பழவினைப் பயனை உடையவனாவாய்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

https://learnsangamtamil.com/maduraikanchi/

மதுரைக்காஞ்சி – Mathuraikkānji

Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

பாடியவர்                      :             மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன்         :              தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை                            :           காஞ்சி
பாவகை                        :             ஆசிரியப்பா, வஞ்சி
மொத்த அடிகள்        :             782

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

This song has 782 lines in the Āsiriyappā/Akaval meter mixed with vanji meter, and was written by poet Māngudi Maruthanār (Māngudi Kilār), for Pāndiyan king Neduncheliyan.  Kānji is a later genre of Sangam poetry.  It is based on the philosophy of instability and perishability of the world and life.  This idyll contains didactic matter, as do other poems composed by this poet.  There are descriptions of Buddhist monasteries and Jain temples.  There are also descriptions of the king’s victories in battles and the various riches brought back by his warriors.  The sights and sounds of Mathurai are captured beautifully in the morning, afternoon, at dusk, midnight and at dawn.

செழிப்பு நிலை

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பு ஆகத்
தேன் தூங்கும் உயர்சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப,   5
வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகற் செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண்திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க,   10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த, (1 – 12)

Prosperity

In this huge world, bounded by the loud,

vast ocean with tall waves, where honeycombs

hang on tall peaks of mountains, winds swirl

to the right in the sky, wide stars go on

their paths, the red sun that creates days and the

white moon that creates night shine splendidly

without fault, rains help, the land

thrives everywhere, one seed yields thousands,

and land and trees give abundant benefits,

Notes:  நெடுநல்வாடை 1-2 – வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.     மாதிரத்தான் (5) – நச்சினார்க்கினியர் உரை – வலமாக ஆகாயத்தின்கண் காற்றுச் சுழல, சோமசுந்தரனார் உரை – விசும்பு, திசை எனினுமாம், காற்று வலப்பக்கம் சுற்றி வீசின் உலகின் நன்மை உண்டாம் என்பது நம்பிக்கை.

Meanings:  ஓங்கு திரை – tall waves, வியன் பரப்பின் – in the wide ocean, ஒலிமுந்நீர் – loud ocean (வினைத்தொகை), வரம்பு ஆக – as the limits, தேன் தூங்கும் உயர் சிமைய மலை – tall mountains with peaks where honeycombs hang (தேன் – ஆகுபெயர், தேனிறாலுக்கு), நாறிய – appeared, வியல் ஞாலத்து – in the wide world, வல – to the right, with strength, மாதிரத்தான் – in the sky, in the direction (மூன்றனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, வேற்றுமை மயக்கம்), வளி கொட்ப – the winds swirl, வியல் நாள்மீன் நெறி ஒழுக – huge stars go on their path, பகற் செய்யும் செஞ்ஞாயிறும் – the red sun that creates days, இரவுச் செய்யும் வெண்திங்களும் – the white moon that creates night, மை தீர்ந்து – without fault, கிளர்ந்து விளங்க – shine splendidly, மழை தொழில் உதவ – rains help with their work, மாதிரம் கொழுக்க – all directions thrive, தொடுப்பின் – if dug and placed (தொடுப்பு – தொழிற்பெயர்), ஆயிரம் வித்தியது விளைய – where one seed yields thousand, நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த – land and trees give abundant benefits (நிலன் – நிலம் என்பதன் போலி, மரன் – மரம் என்பதன் போலி)

நோய் இகந்து நோக்கு விளங்க,
மேதக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக்களிறு,   15
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர் பூரிம விழுத்தெருவில்,
பொய் அறியா வாய்மொழியால்,
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு   20
நல் ஊழி அடிப்படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! (13 – 23)

people flourish without diseases, strong

noble elephants that carry the earth thrive

splendidly, prosperity gives unlimited joy

to all who see it, mansions have risen tall

on the rich streets, and you, scion of great

ancestors who ruled this world with fame

for long periods called vellam, rule with

your famed, truthful ministers.

Notes:  பூரிமம் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறகு, அஃதாவது தெருவின் இரு மருங்கிலும் நிரல்பட அமைந்த வீட்டொழுங்கு, University of Madras Lexicon – தெருவின் சிறகு, side of a street.  தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  வய – வய வலியாகும் (தொல்காப்பியம், உரியியல் 68).

Meanings:  நோய் இகந்து – disease removed, நோக்கு விளங்க – people flourish, மேதக – splendidly, மிகப் பொலிந்த – flourishing greatly, ஓங்கு நிலை வயக்களிறு – strong tall male elephants (that carries the earth) that thrive splendidly (வய – உரிச்சொல்), கண்டு தண்டாக் கட்கு இன்பத்து – with great joy to those who see, உண்டு தண்டா மிகு வளத்தான் – with unlimited great prosperity, உயர் பூரிம – with the tall sides of streets, விழுத்தெருவில் – in the rich streets, பொய் அறியா – not knowing to lie, வாய்மொழியால் – with truthful words, புகழ் நிறைந்த நல்மாந்தரொடு – with fine ministers with fame, நல் ஊழி அடிப்படர – they are under you for a long time, you have been their overlord for a long time, பல் வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – you are the heir of great ancestors who were praised for ruling this world for the time called vellam

சிவனின் வழிவந்த சான்றோன்

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர்   25
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சு வந்த போர்க் களத்தான்,
ஆண்தலை அணங்கு அடுப்பின்,
வயவேந்தர் ஒண் குருதி,   30

சினத்தீயின் பெயர்பு பொங்க
தெறல் அருங் கடுந்துப்பின்,
விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப்பு ஆக,
ஆடுற்ற ஊன் சோறு,   35

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந்துப்பின்,   40
தொல்முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந! (24 – 42)

Wise man of Sivan’s Lineage

O king of warriors!  O lord of the south

owning mountains with flowing waterfalls!

O heir of the ancient God Sivan!

You win battles in fierce battlefields, where

the headless dead bodies of warriors rise up

with desire and perform thunangai dances

to loud music with rhythm, accompanied by

female ghouls who devour the flesh of dead

bull elephants that carried corpses of dead

warriors on their tusks, the ritual cook who

knows ancient traditions honors brave men

who did not turn their feet and run away

fearing battle by performing rites with a

flesh meal, boiling the bright blood of mighty

kings in stoves made with heads of dead men,

and stirring it using the severed hands with

bracelets belonging to dead soldiers.

Notes:  புறநானூறு 26 – முடித்தலை அடுப்பாகப் புனல் குருதி உலைக் கொளீஇத் தொடித் தோள் துடுப்பின், புறநானூறு 372 – பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்.  தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொல்முது கடவுள் பின்னர் மேய வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந (40-42) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தென்னவன் என்னும் பெயரினையுடைய பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய பக்கமலையில் வீழ்கின்ற அருவிகளையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே, நச்சினார்க்கினியர் உரை – இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் (பக்க மலையிலே விழுகின்ற அருவியினையுடைய பொதியின் மலையிலிருக்கும் கடவுள்) பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே, K. N. Sivaraja Plillai in his book ‘Agastya in the Tamil Land’ – Oh! War-like Prince, lord of the hill resounding with waterfalls, and known as the ‘Southern king’ (by pre-eminence) and, in point of unapproachable prowess, standing second only to that ancient primal being (Siva) himself.  வய – வய வலியாகும் (தொல்காப்பியம், உரியியல் 68).

Meanings:  பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் – fatty meat of herds of male elephants that pierce dead bodies on their tusks (கோட்ட – பலவறி சொல்), வாய்ப் பெய்த பேய்மகளிர் – demon/ghoul women who eat, இணை – together, ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப் பிணை – dense loud music with rhythm for thunangai dance (ஒலி இமிழ் – பண்புத்தொகை, பிணை- நெருக்கம்), யூபம் எழுந்து ஆட – headless dead bodies rise up and dance, அஞ்சு வந்த போர்க் களத்தான் – in the fierce battlefield, ஆண்தலை – heads of men, அணங்கு – fierce, அடுப்பின் – as stoves, வய வேந்தர் ஒண் குருதி சினத்தீயின் பெயர்பு பொங்க – boil the bright blood of strong kings in fierce flames as it overflows, தெறல் அருங் கடுந்துப்பின் – with great strength that is difficult to conquer, விறல் விளங்கிய – greatly victorious, விழுச்சூர்ப்பின் – of those who are very fierce (warriors), தொடித் தோள் – arms with bracelets, கை துடுப்பு ஆக – as hand ladles, ஆடுற்ற – cooked, ஊன் சோறு – meat rice/meat dish, நெறி அறிந்த கடி வாலுவன் – cook who knows the proper methods, அடி ஒதுங்கிப் பின் பெயராப் படையோர்க்கு – to warriors who do not turn their feet the other way and back off, முருகு அயர – performing rituals, அமர் கடக்கும் வியன் தானை – huge armies that battle and win, தென்னவன் – the lord of the south, பெயரிய – one with the title, who had attained the title, துன் அருந்துப்பின் – with great strength that is hard for enemies to reach, தொல்முது கடவுள் பின்னர் மேய – heir of ancient old God (Sivan), வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந – O king of warriors owning mountains with flowing waterfalls



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவிற் பாண்டியனின் வழித் தோன்றல் – நால்வகைப் படைகளின் வலிமை

விழுச் சூழிய விளங்கு ஓடைய
கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னிய   45
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை,
சினம் சிறந்து களன் உழக்கவும்,
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்,   50
வாம்பரிய கடுந் திண்தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்,
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறுமுற்றவும், (43 – 54)

இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்   55
பொருது அவரைச் செருவென்றும்
இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி   60
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்! (55 – 61)

Heir of Thiruvil Pāndiyan – Four Divisions of the Army

You are the heir of Thiruvil Pāndiyan, adorned

with a gold garland, a great man who provided

for those in the land, who vanquished the two

great kings and many Vēlir kings, and not

satisfied with those victories, went past

mountains with bright waterfalls, seized their

land and ruined their forests which turned to

wasteland.  His brave elephants, with fragrant

musth flowing from their heads, were well

trained in warfare, wore fine face ornaments

sooli and ōdai, appeared like mountains, and

attacked in battlefields with great rage.

His horses raised colored dust that spread and

hid sunlight.  His fierce chariots hitched to

leaping horses whirled like wind.  His brave

swordsmen with strong arms achieved battle

victories.

Notes:  குரூஉ (49) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  இருபெரு வேந்தரொடு வேளிர் சாய (55) – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.  நெடியோன் உம்பல் (61) – நச்சினார்க்கினியர் உரை – வடிம்பலம் நின்ற பாண்டியன் வழியில் வந்தோனே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனே.  நிலந்தரு திருவின் நெடியோன் (மதுரைக்காஞ்சி 763) – நச்சினார்க்கினியர் உரை – எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வமுடைய மாயோனைப் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவிற்பாண்டியன்  என்னும் புகழால் நீண்ட மன்னனைப் போல.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:  விழுச் சூழிய – with fine face ornaments called sooli, விளங்கு ஓடைய – with bright face ornaments called ōdai, கடுஞ்சினத்த – with great rage, கமழ் கடாஅத்து – with fragrant musth (கடாஅத்து – அத்து சாரியை), அளறுபட்ட – rutting/with musth liquid, நறுஞ் சென்னிய – with fragrant heads, வரை மருளும் – like mountains, உயர் தோன்றல – with a noble appearance, வினை நவின்ற பேர் யானை – huge elephants with practiced skills (battle skills), சினம் சிறந்து – with great rage, களன் உழக்கவும் – attacked in the battlefield (களன் – களம் என்பதன் போலி), மா எடுத்த – caused by horses, மலி குரூஉத் துகள் – dust with lots of color (குரூஉ – இன்னிசை அளபெடை), அகல் வானத்து – in the wide sky (அகல்வானம் – வினைத்தொகை), வெயில் – sunlight, கரப்பவும் – hid the sun, வாம் பரிய – with leaping horses (வாம் – வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம், ஈற்று மிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது), கடுந்திண் தேர் – fierce sturdy chariots, காற்று என்னக் கடிது கொட்பவும் – whirled rapidly like the wind, வாள் மிகு மற மைந்தர் – brave men with swords, தோள் முறையான் – properly with their arms, வீறுமுற்றவும் – attain victory, இருபெரு வேந்தரொடு – with the two great kings (Chōlan and Chēran), வேளிர் – Vēlir kings (small-region kings), சாய – fell, பொருது – fought, அவரைச் செருவென்றும் – not satisfied that they were ruined in battle, இலங்கு அருவிய வரை நீந்தி – went past mountains with bright waterfalls, சுரம் போழ்ந்த – ruined forests making them cracked (parched) lands, இகல் ஆற்றல் – efficient in your battle task, உயர்ந்து ஓங்கிய – very high, lofty (ஒருபொருட் பன்மொழி), விழுச் சிறப்பின் – with greatness, நிலம் தந்த பேர் உதவி – provided great help to the land, பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்  – heir of the great Thiruvil Pāndiyan with a gold garland on his chest

மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை!
அருங்குழு மிளை குண்டு கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்   65

நெடுமதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச் சென்று,
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வட பெருங்கல்    70

குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர் தம் கோன் ஆகுவை! (62 – 74)

King of Kings

You are like proud thunder that ruins trees

and breaks up mountains.  You seized

fortresses with tall walls with rows of gates,

difficult protective forests, deep moats, rows

of bastions, and walls from which arrows were

shot and spears were thrown.

 

Without resting, you won great victories in the

land between southern Kumari and the huge

mountain in the north and between the oceans

in the east and west.  You became king of kings

to those who submitted to you and told you

about their ancient heritage.

Notes:  நீங்கிய (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகெல்லாம் பொது நீக்கித் தன்னொரு குடைக் கீழ் கொண்டாளும் சிறப்பு.

Meanings: மரம் தின்னூஉ – burning trees, ruining trees (தின்னூஉ – இன்னிசை அளபெடை), வரை உதிர்க்கும் – dropping rain on the mountains and breaks them, நரை உருமின் ஏறு அனையை – like proud thunder that roars, அருங்குழு மிளை – many difficult protective forests,  குண்டு கிடங்கின் – with deep moats, உயர்ந்து ஓங்கிய – very tall (ஒருபொருட் பன்மொழி), நிரைப் புதவின் நெடுமதில் – tall walls with rows of gates, நிரை ஞாயில் – rows of breastwork, rows of bastions, அம்பு உமிழ் – shooting arrows, அயில் – spears, அருப்பம் – forts, தண்டாது – without relaxing, தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் – with greatness of going and being victorious, தென்குமரி – southern Kumari, வட பெருங்கல் – huge mountain in the North, குணகுட கடலா எல்லைத் தொன்று – with the eastern and western oceans as its limit, மொழிந்து – telling about their heritage, telling about their ancient pride, தொழில் கேட்ப – requesting them to bow to you, வெற்றமொடு – victoriously, வெறுத்து ஒழுகிய –  behaved in an obedient manner, கொற்றவர் தம் கோன் ஆகுவை – you are king of kings

கடல் வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி

வான் இயைந்த இருமுந்நீர்ப்   75
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ,
கடுங்காலொடு கரை சேர,
நெடுங் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க,   80
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கைத்   85

தெண் கடல் குண்டு அகழி,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ! (75 – 88)

Conquering the Prosperous Coastal Town of Sāliyūr

You captured the esteemed Sāliyoor town

named for fine paddy, with the deep ocean

as its moat,

where swaying ships, surrounded by the ocean,

with tall masts with flags on them, bring goods

that bring great wealth and can be enjoyed by

its citizens, looking like mountains surrounded

by clouds, that split the curved, blocking waves

of the fierce large ocean that appears one with

the sky, are brought to the port by fierce winds

as sweet drums roar.

Notes:  பேஎம் – பே நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப்பொருள. (தொல்காப்பியம். உரியியல் 67).

Meanings:  வான் இயைந்த – appearing one with the sky, இருமுந்நீர்ப் பேஎம் நிலைஇய – large ocean that appears fearful (பேஎம் – இன்னிசை அளபெடை, நிலைஇய – சொல்லிசை அளபெடை), இரும் பெளவத்து – in the large ocean, கொடும் புணரி – curved waves, விலங்கு – blocking, போழ – splitting, கடுங்காலொடு – with fierce winds, கரை சேர –   reached the shore, நெடுங்கொடி மிசை – tall flags above, இதை எடுத்து –  setting the sails, இன் இசைய முரசம் முழங்க – as sweet drums roared, பொன் மலிந்த – with abundant gold, with abundant wealth, விழுப் பண்டம் நாடு – wealthy with fine things, ஆர – to enjoy, நன்கு – well, இழிதரும் – bring them, ஆடு இயற் பெரு நாவாய் – swaying huge ships, மழை முற்றிய மலை புரைய – like the mountains surrounded with clouds (புரை – உவம உருபு, a comparison word),  துறை முற்றிய துளங்கு இருக்கை – splendid ships surrounded by the ocean, தெண் கடல் – clear ocean, குண்டு அகழி – deep moats, deep ocean, சீர் சான்ற உயர் – great and esteemed, நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ – O great king who captured the town called Sāliyoor which was named for its fine paddy



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர்

நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு இசை ஏற்றத்   90
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர்,
அதரி கொள்பவர் பகடு பூண் தெள்மணி
இரும் புள் ஒப்பும் இசையே என்றும்   95
மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப, (97 – 89)

Town with the Sounds of Kuravai and others

On the seashore filled with sand and

sapphire colored mundakam flowers,

there are sounds of those singing as

they draw water rapidly with their wide

buckets to water the fields, along with those

from strong water-lifts with delicately tied

strings, as the ponds become dry.  There are

jingling sounds from the clear bells on bulls

that thresh.  There are sounds from those

chasing large birds, and sounds of

fisherwomen performing kuravai dances.

Meanings:  நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் – workers who fill and draw water standing in rows, workers who fill and draw water in an orderly manner, those who fill and draw water in a row, பாடு சிலம்பு இசை – sounds of songs, ஏற்றத் தோடு வழங்கும் – being raised, அகல் ஆம்பியின் – wide water-lifting buckets, கயன் அகைய வயல் நிறைக்கும் – watering fields causing the ponds to become dry (கயன் – கயம் என்பதன் போலி), மென் தொடை  – delicately tied, வன் கிழாஅர் – strong water-lifting equipment (கிழாஅர் – இசைநிறை அளபெடை), அதரி கொள்பவர் பகடு – the bulls of those who thresh, பூண் தெள்மணி – clear bell sounds, இரும் புள் ஒப்பும் இசையே – the chirping sounds of large/dark birds, என்றும் – every day, மணிப் பூ முண்டகத்து – with plants with sapphire colored flowers, நீர் முள்ளி, Hygrophila spinose, கழிமுள்ளி,  நீர் முள்ளி, மணல்மலி கானல் – seashore grove filled with sand, பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப – along with the kuravai songs of the fisherwomen

பொருநர்க்கு யானைமுதலிய பரிசுகளைப்

பாண்டியன் கொடுத்தல்

ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உருகெழு பெருஞ்சிறப்பின்   100
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்,
பல் குட்டுவர் வெல் கோவே!   (98 – 105)

Elephants and other Gifts given to the Bards

O victor of Kuttanādu!  On one side of the

wide space with festivities, you give fierce,

fine bull elephants with bright tusks along

with cow elephants and calves to war bards

with drum-like shoulders.  You also adorn

their heads with gold lotus blossoms and give

them fine jewels.

Notes:  உருகெழு – உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).

Meanings:  ஒரு சார் – one one side, விழவு நின்ற வியல் ஆங்கண் – in the wide space with festivities, முழவுத் தோள் முரண் பொருநர்க்கு – to war bards with shoulders like drums, உருகெழு – fierce, பெருஞ்சிறப்பின் – with great splendor, இரு பெயர்ப் பேர் ஆயமொடு – along with female elephants and calves, இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – gifting male elephants with bright tusks, பொலந்தாமரைப் பூச் சூட்டியும் – wearing gold lotus flowers (on bards and dancers), நலம் சான்ற கலம் சிதறும் – give fine jewels, பல் குட்டுவர் வெல் கோவே – O king who was victorious over Kuttanādu many times

முது வெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை   110

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்,
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்   115

நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை (106 – 119)

Splendor of Muthu Vellilai town

Even if summer scorches the mountains,

even if the sky hides rains, and even if Venus

changes course, the waterflows in your rivers

do not change, harvests are abundant,

and rustling sounds of grain spears are heard.

There are sounds of those who reap grains,

sounds of birds chirping, and noises of

water spraying on the thālai trees with

drum-like fruits on the seashore with

sand that resembles the white moon.

Engraged, arrogant sharks thrive.  There are

clamors of fishermen reaching the shores,

along with those of salt merchants who sell

white salt from huge salt pans.  Such is Muthu

Vellilai town with constant noises.

Notes:  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர்.  வெள்ளி திசை மாறினும்:  புறநானூறு 35 – இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 – தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 – வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 – வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 – வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1 – வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும்.  நளி – நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 25).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

Meanings:  கல் காயும் கடு வேனிலொடு – along with intense summer that heats mountains, இரு வானம் பெயல் ஒளிப்பினும் – even if the sky hid rains, வரும் வைகல் மீன் பிறழினும் – even if the morning star/Venus changes directions (moves toward the south), வெள்ளம் மாறாது – waterflow not changing, விளையுள் பெருக – harvest increases (விளையுள் – விளை உள், தொழிற்பெயர் விகுதி), நெல்லின் ஓதை அரிநர் – the sounds of paddy reapers, கம்பலை – uproar, புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே – the sounds of birds chirping (இசையே – ஏகாரம் ஈற்றசை), என்றும் – every day, சலம் – differing, enraged, புகன்று – with arrogance, சுறவுக் கலித்த – where sharks are thriving (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), புலவு நீர் வியன் பெளவத்து – of the wide ocean with fish stink, நிலவுக் கானல் – seashore with sand that is like the moon, முழவுத் தாழை – thālai trees with drum-like fruits, Pandanus odoratissimus, Fragrant screwpines, குளிர்ப் பொதும்பர் – cool groves, நளித் தூவல் – dense sprays, நிரை திமில் வேட்டுவர் – rows of boats, கரை சேர் கம்பலை – uproars of reaching the shores, இருங்கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு – with merchants who sell white salt from the huge salt pans, ஒலி ஓவாக் கலியாணர் – flourishing unending prosperity, முது வெள்ளிலை – Muthu Vellilai town



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முதுவெள்ளிலையார் ஏவல் கேட்பத் தலையாலங்கானத்தில்

பகைவர்களை வென்றமை

………………………………..மீக்கூறும்
வியல் மேவல் விழுச் செல்வத்து,   120
இரு வகையான் இசை சான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்,
கால் என்னக் கடிது உராஅய்   125

நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட,
அடுதிறல் உயர் புகழ் வேந்தே! (119 – 130)

Victory in Thalayālankānam

There are two kinds of people praised

by the wise.  The famous citizens and big

merchants who live in the four landscapes.

They listen to your ancient heritage.

O king with great fame and skill in battles!

You went swift like the wind, spread flames,

caused fear in enemies and ruined them at

Ālankānam battlefield where drums roared!

Notes:  ஆலங்கானத்து (127) – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.  களவேள்வி – திருமுருகாற்றுப்படை 100 – கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – ஒளவை துரைசாமி உரை – இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம்.  புறநானூறு 26 – அடு போர் வேட்ட வடுபோர்ச் செழிய, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், அகநானூறு 36-22, கொன்று களம் வேட்ட ஞான்றை, மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம்.

Meanings:  மீக்கூறும் வியல் மேவல் விழுச் செல்வத்து  – of great wealth (farming and business) that is praised by the wise, இரு வகையான் – there are two kinds, இசை சான்ற – famous, சிறுகுடிப் பெருந்தொழுவர் – ordinary citizens and rich merchants, குடி கெழீஇய – with citizens (கெழீஇய – சொல்லிசை அளபெடை), நால் நிலவரொடு – people from the four landscapes, தொன்று மொழிந்து தொழில் கேட்ப – telling them about your ancient fame and ask them to be obedient, கால் என்னக் கடிது உராஅய் – went fast like the wind (உராஅய் – இசை நிறை அளபெடை), நாடு கெட – for the country to be ruined, எரி பரப்பி – spread flames, ஆலங்கானத்து – At Ālankānam, அஞ்சுவர இறுத்து – stayed there causing fear (to enemies), அரசு பட அமர் உழக்கி – ruined and killed kings in battle, முரசு கொண்டு களம் வேட்ட- desiring battlefields where drums are beat, அடு திறல் – skills in killing, skills in battles, உயர் புகழ் வேந்தே – O greatly famous king

கொற்கைக்குத் தலைவன்

நட்டவர் குடி உயர்க்குவை;
செற்றவர் அரசு பெயர்க்குவை;
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்   135

இலங்கு வளை இருஞ்சேரி
கட் கொண்டிக் குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந! (131 – 138)

Leader of Korkai

O warrior king!  You uplift your friendly

citizens!  You seize kindships of enemies!

The wise praise your flourishing greatness!

You are loved by the citizens of fine Korkai

town with abundant toddy, where those who

dive for mature, splendid pearls and bright

conch, reside in large streets.

Notes:  கட் கொண்டி (137) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கள்ளாகிய உணவு, கொள்ளப்படுதல் என்னும் பொருட்டாய் உணவிற்காயிற்று.

Meanings:  நட்டவர் குடி உயர்க்குவை – you raise your friendly citizens, செற்றவர் அரசு பெயர்க்குவை – you seize kingship of enemies, பேர் உலகத்து மேஎம் தோன்றி – appearing great to the wise in the world (மேஎம் – இன்னிசை அளபெடை), சீருடைய விழுச் சிறப்பின் – with flourishing splendor and greatness, விளைந்து முதிர்ந்த – grew and mature, விழு முத்தின்- with splendid pearls, இலங்கு வளை – bright conch, இருஞ்சேரி – huge street, huge community, கள் கொண்டிக் குடிப்பாக்கத்து – in a seashore town with abundant toddy/alcohol, நற்கொற்கையோர் நசைப் பொருந – O warrior king who is loved by the citizens of fine Korkai town

செழியன் பரதவரை வென்றமை

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின்   140

கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சிப்
புலவு வில் பொலி கூவை
ஒன்றுமொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே! (139 – 144)

Subduing the Fishermen Clan

You are a king with the strength of a male

lion, who brought under your control the

enemies you hate,

the cunning, uproarious southern fishermen

with fierce strength, who have abundant

rich rice cooked with fatty meat, flesh-stinking

bows, and fine koovai yam, instilling fear in them!

Notes:  கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி (141) – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  கொழுத்த இறைச்சி கலந்தமையால் கொழுப்புண்டாக்கும் சோறு என்பார்.

Meanings:  செற்ற தெவ்வர் கலங்க – causing hated enemies to panic, தலைச் சென்று – went there, அஞ்சுவர- causing fear, தட்கும் – stays, அணங்குடைத் துப்பின் – with fierce strength, with strength that causes sorrow, கோழ் ஊஉன் – fatty pieces of meat (கோழ் – முதனீண்டது, ஊஉன் – இன்னிசை அளபெடை), குறைக் கொழு வல்சி – rich rice with fatty meat, புலவு வில் – bows with flesh stink, பொலி கூவை – fine koovai yam, flourishing koovai yam, Curcuma angustifolia, East Indian arrowroot, ஒன்றுமொழி ஒலி இருப்பின் தென் பரதவர் போர் ஏறே – lion-like king who controlled the cunning uproarious southern fishermen

பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி

அரிய எல்லாம் எளிதினின் கொண்டு   145

உரிய எல்லாம் ஓம்பாது வீசி,
நனி புகன் உறைதும் என்னாது ஏற்று எழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கு அவர் அருப்பம் வெளவி,
யாண்டு பல கழிய வேண்டுபுலத்து இறுத்து,   150
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்! (145 – 151)

Victorious in Seizing Enemy Lands

O king who is victorious in battles!

You take from others easily what is precious

and give it away, without caring to keep it

for yourself.  Not thinking that you should

stay home, you rise up and go past forests

in mountain with dripping snow,

enter foreign lands, seize their forts, stay

there for many years with desire, and improve

the lot of the citizens who live there.

Meanings:  அரிய எல்லாம் – all that is precious, எளிதினின் கொண்டு – taking them easily, உரிய எல்லாம் – what you have, ஓம்பாது வீசி – give away without keeping for yourself, give away without protecting yourself, நனி புகன் உறைதும் என்னாது – not thinking that residence is  near,  ஏற்று எழுந்து – rise up, பனி வார் சிமையக் கானம் போகி – went past forests in mountains with dripping snow (சிமையம் – ஆகுபெயர் மலைக்கு), அக நாடு புக்கு – enter into their countries, அவர் அருப்பம் வெளவி – seize their forts, யாண்டு பல கழிய – letting many years pass, வேண்டுபுலத்து இறுத்து – live (occupy) in those countries with desire, மேம்பட – to get better, மரீஇய – staying (சொல்லிசை அளபெடை), வெல்போர்க் குருசில் – O king who is victorious in battles



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை

உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண்பணை
குரூஉக் கொடிய எரி மேய,   155
நாடு எனும் பேர் காடு ஆக,
ஆ சேந்த வழி மா சேப்ப,
ஊர் இருந்த வழி பாழ் ஆக,
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப,   160

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின்   165

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ,
கொழும் பதிய குடி தேம்பிச்
செழுங் கேளிர் நிழல் சேர,
நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரல,   170

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர,
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள,
வாழாமையின் வழிதவக் கெட்டு   175
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம். (152 – 176)

Ruined Situation in Enemy Lands

You entered lands of ancient enemies, ruined

their protective forests, and lit fires with colorful

flames to their cool agricultural lands that

had not known bad times.  Towns became forests,

wild animals moved in where there were cattle,

their towns were spoiled, delicate women with

bright bangles forgot to perform beautiful

thunangai dances and kuravai dances that

are performed to rhythm,

in the common grounds female ghouls with

forked feet and harsh looks moved around and

danced in the wide spaces where deities

strolled, young women lamented in sorrow

near their doors with fine headers, wealthy

communities were ruined, rich people fled

to other countries to join their relatives,

tufted owls now hoot along with their females

from the burned granaries of rich houses

where waterlilies had been thriving in ponds,

cherunthi grasses have grown along with kanpu

grasses high enough to hide elephants, and fields

where bulls walked to plow have become ruined

and are now places for boars and their hairy sows

to wallow.

 

This is what has become of the countries of those

who did not listen to you.

Notes:  குரூஉ (155) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  தழூஉ:  அகநானூறு 176 – விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,  கலித்தொகை 103 – மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ, கலித்தொகை 104 – எழில் நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ, கலித்தொகை 106 – அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ,  பதிற்றுப்பத்து 52 – முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆக,  மதுரைக்காஞ்சி 159-160 – இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, மதுரைக்காஞ்சி 329 – துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி.  நச்சினார்க்கினியரும் (கலித்தொகை) சோமசுந்தரனாரும் (மதுரைக்காஞ்சி) குரவைக் கூத்து எனக் கொள்கின்றனர்.  அருள் அம்பலவாணரும் (பதிற்றுப்பத்து), ஒளவை துரைசாமியும் (பதிற்றுப்பத்து), வேங்கடசாமி நாட்டாரும் (அகநானூறு), சோமசுந்தரனாரும் (அகநானூறு) தழுவி ஆடுவதாக் கொள்கின்றனர்.   மதுரைக்காஞ்சி 615-616 – தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை.

Meanings:  உறு செறுநர் புலம் புக்கு – entered lands of ancient enemies, அவர் கடி காவின் நிலை தொலைச்சி – ruined their protective forests, இழிபு அறியாப் பெருந்தண் பணை – huge cool agricultural lands that do not know bad times, குரூஉக் கொடிய எரி மேய – lit fires with colorful tall flames that ate the places (குரூஉ – இன்னிசை அளபெடை), நாடு எனும் பேர் காடு ஆக – countries became forests, ஆ சேந்த வழி – places where there were cattle,  மா சேப்ப – wild animals stay there, wild animals have moved in, ஊர் இருந்த வழி பாழ் ஆக – towns were ruined, இலங்கு வளை – bright bangles, மட மங்கையர் – delicate women, naïve women, துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப – forgot thunangai dances and kuravai dances that are performed to beautiful rhythm (தழூஉ – இன்னிசை அளபெடை), அவை இருந்த பெரும் பொதியில் – in the common places where they were, கவை அடிக் கடு நோக்கத்துப் பேய் மகளிர் பெயர்பு ஆட – demon women with harsh looks and forked feet dance moving around, அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – where there are deities, நிலத்து ஆற்றும் – standing on the ground, குழூஉப் புதவின் – at the doors with headers (குழூஉ  – இன்னிசை அளபெடை), (Pathitruppathu 53-16 குழூஉ நிலைப் புதவின் கதவு), அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ – sad women lament, கொழும் பதிய குடி தேம்பி – wealthy communities in their towns are ruined, செழுங் கேளிர் நிழல் சேர – join their wealthy relatives, நெடுநகர் – big houses, வீழ்ந்த – destroyed, கரி – burnt, குதிர்ப் பள்ளி – granaries, places with grain, குடுமிக் கூகை – tufted owls, குராலொடு – along with their females, முரல – they hoot, கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கை – wide ponds where waterlily blossoms were beautiful, wide pond where waterlilies were thriving, களிறு மாய் – hiding elephants, செருந்தியொடு – along with cherunthi grasses, A kind of sedge, வாட்கோரை, கண்பு அமன்று ஊர்தர – elephant grasses are spread, சம்பங்கோரை, arundo donax, நல் ஏர் நடந்த – where fine oxen walked, நசை சால் – with desire, விளை வயல் – yielding fields, பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள – boars roam with their sows with lots of hair (பிணவொடு – பிண + ஒடு, பிணவென்னும் அகர ஈற்றுச்சொல் வகரவுடம்படு மெய் பெற்றது), வாழாமையின் வழி தவக் கெட்டு பாழ் ஆயின – they were ruined greatly since they did not live listening to you, நின் பகைவர் தேஎம் – the countries of your enemies (தேஎம் – இன்னிசை அளபெடை)

பகைவரை அடக்கி அவரை அறநெறியில் நிறுத்துதல்

எழாஅத் தோள், இமிழ் முழக்கின்,
மாஅத்தாள், உயர்மருப்பின்,
கடுஞ்சினத்த களிறு பரப்பி,
விரிகடல் வியன் தானையொடு,   180

முருகு உறழப் பகைத் தலைச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ,
பெயல் உறழக் கணை சிதறி,
பல புரவி நீறு உகைப்ப,
வளை நரல வயிர் ஆர்ப்ப,  185
பீடு அழியக் கடந்து அட்டு, அவர்
நாடு அழிய எயில் வெளவி,
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப,
வியன்கண் முது பொழில் மண்டில முற்றி   190

அரசியல் பிழையாது அறநெறி காட்டி
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது,
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்!
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்,   195
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்! (177 – 196)

Controlling Enemies and Ruling them with Justice

May your warriors with brave shoulders, along

with trumpeting, large-footed tuskers with rage,

and ocean-like, huge army attack your enemies

like Murukan!  May your army shoot arrows like

rain!  May there be uproars from the wide sky!

May horses raise dust!  May conch shells and vayir

horns be blown!  May the pride of your enemies

be ruined!  May the strengths of your hated enemies

and their relatives be lost after you seize their forts!

May they follow your path!  May you seize their land

with ancient groves and show them the just path,

not faulting from the path that elders took!

May your victory be splendid like the crescent

moon that rises in the west, that has been worshipped

since ancient times!   May the strength of your enemies

be ruined like the waning moon that appears in the east

in pitch darkness!

Meanings:  எழாஅத் தோள் – brave shoulders who don’t rise up against those who run away in battle (எழாஅ – இசைநிறை அளபெடை), இமிழ் முழக்கின் – with loud trumpeting, மாஅத் தாள் – huge feet (மாஅ – இசைநிறை அளபெடை), உயர் மருப்பின் – with lifted tusks, கடுஞ்சினத்த களிறு – bull elephants with great rage, பரப்பி – spread, விரிகடல் – wide ocean, வியன் தானையொடு – with a huge army, முருகு உறழப் பகைத் தலைச் சென்று – went to enemies like Murukan, அகல் விசும்பின் – in the wide sky, ஆர்ப்பு இமிழ – uproars rise, பெயல் உறழக் கணை சிதறி – scattering arrows like rain, பல புரவி நீறு உகைப்ப – may horses raise dust, வளை நரல – conch shells are blown, வயிர் ஆர்ப்ப – vayir horns raise sounds, பீடு அழிய – ruining their pride, ruining their strength, கடந்து அட்டு அவர் நாடு அழிய  – invading and ruining their countries, எயில் வெளவி – seizing their forts, சுற்றமொடு தூ அறுத்தலின் – removing their strengths along with that of their relatives, செற்ற – hated, தெவ்வர் நின் வழி நடப்ப – your enemies follow your path, வியன்கண் முது பொழில் – wide ancient grove, மண்டில முற்றி – circling their lands, அரசியல் பிழையாது – without political faults, அறநெறி காட்டி – showing the just path, பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது – not faulting from the path that elders took, குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்  – may your victory be more and more splendid like the crescent moon that rises in the west and is worshipped (பிறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, சிறக்க – வியங்கோள் வினைமுற்று), குணமுதல் தோன்றிய – appearing in the east, ஆர் இருள் மதியின் தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்  – may the strength of your enemies be ruined like the waning moon in pitch darkness (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கெடுக – வியங்கோள் வினைமுற்று)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செழியனை வாழ்த்தி அவனுக்கு நிலையாமை

அறிவுறுத்தத் தொடங்குதல்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே;
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்,  200

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே;
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும் ,
பழி நமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே;   205

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ?
கொன் ஒன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை. (197 – 209)

Praising the King

You will not utter a lie, even if you were

given the upper world with nectar.  Even if

those from the upper world came along with

great kings of the wide world with the ocean

as its boundaries, you do not fear enemies

and comply.  Even if you are offered the great

wealth of Vānan, stored in the southern

mountains, you will reject it, if it comes with

blame.  You donate generously with a charitable

mind and desire fame.  What can I say to you?

I will tell you one more thing which is above all

these, O lord of murderous battles!  Listen!

May you live long!  May your sorrow perish!

May your fine fame spread far and never be ruined!

Notes:  கொன் – அச்சம் பயமிலி காலம் பெருமை என்றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 6).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் – even if you were given the upper world with nectar, பொய் – lies, சேண் – far away, நீங்கிய – removed, வாய் நட்பினையே – you only utter truths (நட்பினை – முன்னிலை வினைமுற்று, ஏகாரம் அசை நிலை, an expletive), you have friendship only with truth, முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு – along great people/kings with the wide world with the oceans as its limit, உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் – even if those from the upper world come (தேஎத்து – இன்னிசை அளபெடை), பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே – you don’t fear enemies and submit and abide (ஒழுகலை – முன்னிலை எதிர்மறை வினைமுற்று, ஏகாரம் அசை நிலை, an expletive), தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் – even if you receive the great wealth of Vānan (a Sooran) that is stored in the mountains in the south, பழி நமக்கு எழுக என்னாய் – you do not consider it if it is of blame (என்னாய் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று), விழுநிதி – abundant wealth, ஈதல் உள்ளமொடு – with a charitable heart, இசை வேட்குவையே – you desire fame (வேட்குவை – முன்னிலை வினைமுற்று, ஏகாரம் அசை நிலை, an expletive), அன்னாய் – you are of such nature, நின்னொடு முன்னிலை எவனோ – what can I say in front of you, கொன் ஒன்று கிளக்குவல் – I will tell you one more thing which is above all these, அடு போர் அண்ணல் – O lord of murderous battles, கேட்டிசின் – listen (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), வாழி  – may you live long, கெடுக நின் அவலம் – may your sorrow/confusion be destroyed (கெடுக – வியங்கோள் வினைமுற்று), கெடாது – not ruined, நிலைஇயர் – may it last (நிலைஇயர் – சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று), நின் – your, சேண் விளங்கு – flourishing afar, நல் இசை – fine fame

உலகத்தைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்

தவாப் பெருக்கத்து அறா யாணர்   210

அழித்து, ஆனாக் கொழுந்திற்றி
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு, ஆனாக் கூர் நறவின்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கைப்   215

பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ,   220

மறம் கலங்கத் தலைச் சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின்   225

பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக்
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார்   230

பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப,
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த்   235
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!  (210 – 237)

Many great Kings have Ruled and Perished

There was faultless, abundant, endless

prosperity in their lands.

They did not cease eating big pieces of meat.

They did not stop eating various rice dishes.

They did not end drinking abundant liquor.

They did not put an end to eating many

varieties of food.  From their palaces with

no end to great wealth, which were a burden

to the earth, came flute music.  Viralis who

played sweet music were given stacked bangles

to adorn their bare hands, bards were made

happy with gifts of bull elephants, those who

joined them were made happy, artists were

given valuables seized from attacked fortresses

where warriors who trembled were praised for

fighting bravely with their swords, and diviner

bards were gifted horses along with chariots.

 

They were in the company of army commanders,

wearing bright vanji flowers and sandal paste,

emptying huge leather bags of liquor.  They let those

who submitted to rule their countries according

to their desires, taking tributes from those who

did not submit.  Drums roared early in the morning

in battle camps whose walls were so high that kites

could not fly up to them.  They occupied countries

that they desired.  Many such famous kings owning

armies with spears and large drums ruled and died

in this wide world, their numbers larger than the

sand brought to the shores by the ocean waves.

Notes:  இரும் பைக்கலம் (228) – தோலினால் செய்த பை, பெரும்பாணாற்றுப்படை 382 – நீலப் பைங்குடம் தொலைச்சி நாளும் பெரு மகிழி இருக்கை.  பார்வல் (231) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரசர் தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியுடைய அரண்: ஆகுபெயர்.  பெரியோர் (227) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – படைத்தலைவர்கள்.  படைத் தலைவர்களை சான்றோர் என்றும் குறிப்பிட்டுள்ளனர் (புறநானூறு 63-5, பதிற்றுப்பத்து 14-12, 58-11, 67-18).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  தவாப் பெருக்கத்து அறா யாணர் – unspoiled abundant endless prosperity, அழித்து ஆனாக் கொழுந்திற்றி – did not end eating big pieces of meat, இழித்து ஆனாப் பல சொன்றி உண்டு – did not end eating different rice dishes, ஆனாக் கூர் நறவின் தின்று – did not end drinking abundant liquor, ஆனா இன வைகல் – did not end eating many varieties (of food), நிலன் எடுக்கல்லா – burden for the land to bear (நிலன் – நிலம் என்பதன் போலி), ஒண் பல் வெறுக்கை – many bright things,  பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர் – rich prosperous huge houses with no end to benefits, நரம்பின் முரலும் – lute sounds are heard, நயம்வரு முரற்சி – sweetly played fine music, விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்ப – they stack the empty hands of viraliyar (musicians/dancers) with small bangles, பாணர் உவப்பக் களிறு பல தரீஇ – they gave many male elephants making bards happy (தரீஇ – சொல்லிசை அளபெடை), கலந்தோர் உவப்ப – those who joined were happy, எயில் பல கடைஇ – went to many forts and brought (கடைஇ – சொல்லிசை அளபெடை), மறம் கலங்கத் தலைச் சென்று  – went there as their warriors trembled, வாள் உழந்து – attacked with swords, அதன் தாள் வாழ்த்தி – praised them for their bravery, நாள் ஈண்டிய – arrived early in the day, நல் அகவர்க்கு – to fine diviner bards, தேரோடு மா சிதறி – gave horses along with chariots, சூடுற்ற சுடர்ப் பூவின் பாடு – wearing bright vanji flowers, புலர்ந்த நறுஞ் சாந்தின் – with dried fragrant sandal paste, விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – surrounded by distinguished army commanders, கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு – drank the toddy in the huge leather bags, பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப – let those who submitted to run their countries according to their desires (தேஎம் – இன்னிசை அளபெடை), பணியார் தேஎம் – countries that refuse to submit (தேஎம் – இன்னிசை அளபெடை), பணித்துத் திறை கொண்மார் – in order to control and take tributes, பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப் படுகண் முரசம் காலை இயம்ப – drums roared early morning in the battle camp whose walls are so high that kites cannot fly that high, வெடிபடக் கடந்து – attacking and ruining, வேண்டு புலத்து இறுத்த – occupied enemy lands, பணை கெழு – with large panai drums, பெருந்திறல் பல்வேல் மன்னர் – many very able kings with armies with spears, கரை பொருது இரங்கும் – waves attacking the shores, கனை – dense,  இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே – they were more in numbers than the sands brought to the shores by the vast ocean, உரை செல – with spread fame, மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – those who ruled this vast earth and died (கழிந்தோரே – ஏகாரம் ஈற்றசை)

மருத நில வளப்பம் – வலைஞர் இயல்பு

அதனால் குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர்த் திரள்பு ஈண்டி,  240

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழை வளர் சாரல் களிற்றினம் நடுங்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து,
சிதரற் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது,
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி,   245

நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி;
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முட் தாள் சுடர்த் தாமரை;
கள் கமழும் நறு நெய்தல்;   250

வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு,
வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை
கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி வயமீன் முகந்து   255

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்,
வேழப் பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை;  (238 – 258)

Prosperity of the Agricultural Lands

Absorbing water from the eastern ocean,

clouds poured continuously heavy rain along

with thunder, making it unable to know day

and night.  Abundant water collected on the

high lands and in the pits.  Kavalai yam collected

in the pits.  Waterfalls roared down the mountains

causing elephant herds in the bamboo-filled

mountains to tremble.  Rivers were filled to the

brim and the colorful flood waters ran toward the

eastern ocean, unable to bear the overflowing

water, and filled up reservoirs. They flowed into paddy

fields where crops were tall enough to hide elephants.

They flowed into bright, fragrant ponds with leaves

and lotus flowers with thorny stems, waterlilies with

honey fragrance, blue waterlilies with thick petals,

and white waterlilies with delicate leaves swarmed

by bees.   Fishermen with curved nets cause a male

coot who was sleeping sweetly to move away, by

pushing aside vallai vines to catch large fish to sell,

calling out prices.  They heap the killed fish in the land

with ponds with reeds.  There are sounds from

sugarcane presses and from workers who pull weeds.

Notes:  குரூஉ (245) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:  அதனால் – so, குணகடல் கொண்டு –  take from the eastern ocean, குடகடல் முற்றி – take to the mountains near the western ocean, இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது – not knowing the ending of night and day, அவலும் மிசையும் – in pits and on high land, நீர்த் திரள்பு  ஈண்டி – abundant water has collected, கவலை அம் குழும்பின் – kavalai yams have fallen into pits, அருவி ஒலிப்ப – waterfalls roar, கழை வளர் சாரல் களிற்றினம் நடுங்க – elephant herds of the bamboo-growing slopes tremble, வரை முதல் – on the mountains, இரங்கும் ஏறொடு – with thunder strikes, வான் – clouds (ஆகுபெயர் முகிலுக்கு), ஞெமிர்ந்து – spread, சிதரல் – water droplets, பெரும் பெயல் சிறத்தலின் – since heavy rains fell, தாங்காது குண கடற்கு இவர் தரும் – flows toward the eastern ocean unable to bear, குரூஉப் புனல் – colored waterflow (குரூஉ – இன்னிசை அளபெடை), உந்தி நிவந்து செல் நீத்தம் – rapidly flowing high floods of the rivers, குளம் கொளச் சாற்றி – fill up the ponds, களிறு மாய்க்கும் – they hide elephants,  கதிர்க் கழனி – crops in the field with grain spears, ஒளிறு இலஞ்சி அடை நிவந்த –  bright pond with spread leaves, bright pond with lifted leaves, முட் தாள் சுடர்த் தாமரை – bright lotus with thorny stems, கள் கமழும் நறு நெய்தல் – waterlilies with honey fragrance, வள் இதழ் அவிழ் நீலம் – opening blue waterlily flowers with thick petals, மெல் இலை அரி ஆம்பலொடு – with white waterlilies with delicate leaves swarmed by bees, வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை – fragrant flower pond swarmed by bees, கம்புள் சேவல் – male coot, இன் துயில் இரிய வள்ளை நீக்கி – pushed aside vallai vines disturbing its sweet sleep, Ipomaea aquatic, Creeping bindweed, வயமீன் முகந்து – catch strong fish, கொள்ளை சாற்றிய – call out prices, கொடுமுடி வலைஞர் – fishermen with curved nets, வேழப் பழனத்து நூழிலாட்டு – killing fish and heaping in the land with ponds and reeds, கரும்பின் எந்திரம் – the sugarcane press, கட்பின் ஓதை – sounds of those who weed



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே   260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி;
வன்கை வினைஞர் அரிபறை இன்குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்
தழைந்த கோதை தாரொடு பொலியப்   265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு,
மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார்;  (259 – 270)

Many Sounds from the Agricultural Land

There are noises of weeders intoxicated

with toddy, who try to comfort a sad bull

that has been stuck in mud.

There are sweet parai drum sounds coming from

mature grain fields with flourishing pakandrai

flowers, played by workers with strong hands.

In cool Thirupparankundram, rain comes down

with huge drops and men and women wearing

flower garlands play together with uproar, their

garlands entangled with those of their beloved.

Sweet sounds echo in the wide, dark sky,

herons screech, and fish are cleaned under trees

in the bards’ settlement surrounded by cool farm

land.  This happened on one side.

Notes:  மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார் (270) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த மருத நிலத்தாலே சூழப்பட்ட ஒரு பகுதி. மருதம் சான்ற:  மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186.  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings:  அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – the sorrow of a bull that is caught in mud, கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – the clamor of weeders drunk with toddy who try to move it, ஒலிந்த பகன்றை – flourishing pakandrai flowers, Operculina turpethum,  Indian jalap, சிவதை, விளைந்த கழனி – mature grains in the field, வன்கை வினைஞர் – workers with strong hands, அரி பறை இன்குரல் – sweet sharp sounds of parai drums, தளி மழை பொழியும் – rain drops fall, தண் பரங்குன்றில் – in cool Thirupparankundram, கலி கொள் – happy, சும்மை ஒலி கொள் ஆயம் – women who are loud, தழைந்த – flourishing, கோதை தாரொடு – women and men with their flower garlands, பொலியப் புணர்ந்து – their garlands joined together beautifully, உடன் ஆடும் இசையே – sounds of them playing together (with their beloved partners), அனைத்தும் – all this, அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப  – sweet sounds from the wide dark sky, குருகு நரல – herons/egrets/storks screech, மனை மரத்தான் மீன் சீவும் – remove scales of fish under their house trees, பாண் சேரியொடு – in the community of bards, மருதம் சான்ற தண் பணை  – with cool agricultural lands, சுற்றி – surrounded, ஒரு சார் – on one side

முல்லை நிலக் காட்சிகள்

சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப
கருங்கால் வரகின் இருங்குரல் புலர,
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர,
எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி,   275

மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல்
பாஅயன்ன பாறை அணிந்து,
நீலத்து அன்ன பைம் பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து   280

சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணி மருள் நெய்தல் உறழ காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப,
முல்லை சான்ற புறவு அணிந்து ஒரு சார்;  (271 – 285)

 

Mullai Woodland Scenes

Millet spears are ready for picking, sesame pods

have become dark, the large clusters of varaku

millet with black stems are mature and dry,

in the deep pits dug for tubers beautiful gems

gleam, a stag romps and whirls with his female

with delicate eyes, raising dust that brings up gold

in the mature forest, kondrai flowers that look like

flames have dropped on the boulders in the shade,

on top of the sapphire-like green bushes bright

flowers have dropped looking like silver, whorled

musundai flowers and mullai flowers have spread,

sapphire hued blue waterlilies have blossomed

densely in pits with thoyyil vines.

The forest looked on one side like a veriyāttam ritual

ground created by a vēlan.   All this happened on

one side of the woodland with mullai vines.

Notes:  முல்லை சான்ற புறவு அணிந்து (285) – நச்சினார்க்கினியர் உரை – இருத்தல் ஆகிய உரிப்பொருள் அமைந்த காடு சூழ்ந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்து.  அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்,  சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற முல்லை அம் புறவின், மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.

Meanings:  சிறுதினை கொய்ய – pluck millet (spears), கவ்வை கறுப்ப – sesame pods have become dark, tender sesame pods have matured, கருங்கால் வரகின் இருங்குரல் புலர – the large clusters of varaku millet with black stems mature and dry, ஆழ்ந்த குழும்பில் – in the deep pits, திருமணி கிளர – beautiful gems (sapphire) gleam, எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்ப – for fine gold to rise up in the grown forest, பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி – very beautiful small-headed stag, மடக்கண் பிணையொடு – with a female with delicate eyes, மறுகுவன உகள – whirls and romps, சுடர்ப் பூங் கொன்றை – flame-like kondrai flowers, Cassia fistula, Golden shower tree, Laburnum, தாஅய – spread, நீழல் – shade (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), பாஅய அன்ன பாறை அணிந்து – wide rocks are decorated (பாஅய – இசை நிறை அளபெடை),  நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் – on top of all the sapphire-like green bushes (நீலத்து – நீலம், அத்து சாரியை), வெள்ளி அன்ன – like silver, ஒள் வீ உதிர்ந்து – bright flowers have dropped, சுரி முகிழ் முசுண்டையொடு – with whorled musundai buds, Rivea ornata, Leather-berried bindweed, முல்லை தாஅய் – mullai flowers have spread (தாஅய் – இசைநிறை அளபெடை), மணி மருள் நெய்தல் – sapphire-like blue waterlilies (மருள் – உவம உருபு), உறழ – densely, காமர் துணி நீர் மெல் அவல் – in small pits with desirable clear water, தொய்யிலொடு மலர – blooming with thoyyil- a kind of creeper, வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப  – like a veriyāttam ground created by a vēlan/Murukan priest (தைஇய – சொல்லிசை அளபெடை, கடுப்ப – உவம உருபு), முல்லை சான்ற புறவு அணிந்து – in the forest with mullai vines, ஒரு சார் – on one side



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி,
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி,   290

தினை விளை சாரற் கிளிகடி பூசல்,
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்,
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ் முகக் கேழல் அட்ட பூசல்,   295

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல், இருங் கேழ்
ஏறு அடு வயப்புலிப் பூசலொடு, அனைத்தும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட,
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து,   300
அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார்; (286 – 301)

Kurinji Mountain Land

The small-eared thōrai paddy that was raised

on high grounds killing akil and sandalwood

trees, white mustard with long stems that got

tangled with white mountain rice,

ginger, turmeric, black pepper and many other

kinds of food were heaped on boulders.  There

were sounds of parrots being chased from the

millet fields, those of forest dwellers who chased

wild cattle from grazing on the bright sprouts of

gem-like avarai flowers, those of a boar that had

fallen into a pit trap set by a forest guard, those

of women plucking fragrant flowers from the huge

branches of short-trunked vēngai trees, those of

a strong tiger killing a dark-colored boar, along

with those of bright, white waterfalls on the slopes

of the mountains adorned with kurinji flowers

with black stems.  All this happened on one side.

Notes:  வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல் (296-297) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவுதல், அங்ஙனம் கூவினால் அம்மரம் மலரும் என்றும் வளைந்து கொடுக்கும் என்றும் கொண்ட எண்ணத்தாலாம்.  குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து (300) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிஞ்சியினது பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்க மலைகளாற் சூழப்பட்ட.  ‘புலி புலி என்று ஓசை எழுப்புதல்:  அகநானூறு 48 – ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலி புலி என்னும் பூசல் தோன்ற, அகநானூறு 52 – வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் ஏர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், மதுரைக்காஞ்சி 396-397 – கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல், மலைபடுகடாம் 305-306 தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்.  குரூஉ (292) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).

Meanings:  நறுங்காழ் கொன்று – killed fragrant woods – akil and sandal, கோட்டின் – on higher grounds, வித்திய குறுங்கதிர்த் தோரை – seeded thorai paddy with short spears, நெடுங்கால் ஐயவி – long-stemmed aiyavi, white mustard, ஐவன வெண்ணெலொடு –white paddy of mountain rice, அரில் கொள்பு நீடி – grown tangled, இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் – ginger, turmeric, fresh black pepper and others, பல்வேறு தாரமொடு – with many kinds of food, கல் அகத்து ஈண்டி – heaped on the rocks, தினை விளை சாரற் கிளிகடி பூசல் – sounds of protecting mature millet from parrots on the slopes, மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும் ஆமா – wild cow that grazes on gem-like colorful/bright sprouts of avarai, dolichos lablab (குரூஉ – இன்னிசை அளபெடை), கடியும் கானவர் பூசல் – sounds of forest dwellers who chase,  சேணோன் அகழ்ந்த – dug by a field guard, மடிவாய்ப் பயம்பின் வீழ் முகக் கேழல் அட்ட பூசல் – sounds of killing a boar that had fallen into a pit (trap) covered on top, கருங்கால் வேங்கை – vēngai trees with black trunks, Pterocarpus marsupium, Kino tree, இருஞ்சினைப் பொங்கர் – huge branches, நறும் பூக் கொய்யும் பூசல் – sounds of plucking the fragrant flowers, இருங் கேழ் ஏறு அடு வயப்புலிப் பூசலொடு – the sounds of a strong tiger killing a dark colored boar, அனைத்தும் – all this, இலங்கு வெள் அருவியொடு – with bright white waterfalls, சிலம்பு அகத்து இரட்ட – sounds on the slopes, கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து – surrounded by mountains with kurinji with black stems, Strobilanthes kunthiana, அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார் – splendid huge mountain embracing on one side (தழீஇ – சொல்லிசை அளபெடை)

பாலை நில இயல்பு

இருவெதிர்ப் பைந்தூறு கூர்எரி நைப்ப,
நிழத்த யானை மேய்புலம் படர,
கலித்த இயவர் இயம் தொட்டன்ன,
கண்விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து,   305

அருவி ஆன்ற அணி இல் மாமலை
வை கண்டன்ன புல் முளி அம் காட்டுக்
கமம் சூழ் கோடை விடரகம் முகந்து,
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலை வேய் குரம்பை உழை அதட் பள்ளி   310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்,
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார்;  (302 – 314)

Nature of the Pālai Wasteland

The raging intense fire burned the green bushes

under bamboo, tired elephants spread out

to graze, bamboo has lost its beauty, and their

nodes break sounding like the instruments of

musicians, the huge mountain has lost its beauty

without its waterfalls, grass appears like hay, the

pretty forest is parched, strong westerly winds blow

through mountain caves sounding like the mighty

ocean with heavy wind, and young men with

harsh mouths who carry bows to protect those

who travel on the forked paths live in huts made

with leaves, their beds made from animal hides.

The wasteland near the mountain where summer

has reduced shade is on one side.

Notes:  பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் (314) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரிவாகிய உரிப்பொருள் அமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம்.  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).   கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).

Meanings:  இரு வெதிர்ப் பைந்தூறு – green bushes under the huge bamboo, கூர் எரி நைப்ப – burned by intense fire, நிழத்த யானை மேய்புலம் படர – where tired elephants spread to graze, கலித்த – loud, இயவர் இயம் தொட்டன்ன – like musicians who play with their instruments, கண்விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து – bamboo nodes open and break and the beauty of bamboo has been ruined (உடையூஉ- இன்னிசை அளபெடை), அருவி ஆன்ற அணிஇல் மாமலை – huge mountain not beautiful without waterfalls, வை கண்டன்ன புல் – grass appears like hay, முளி அம் காட்டு – dried beautiful forest, கமம் சூழ் கோடை – fully strong westerly winds, fully strong summer winds,  விடரகம் – mountain caves, முகந்து கால் உறு கடலின் ஒலிக்கும்  – the wind sounds like the ocean with heavy wind, சும்மை – noise,  இலை வேய் குரம்பை – huts made with leaves, உழை அதட் பள்ளி – deer hide/leather bed, உவலைக் கண்ணி – dried leaf garland, வன்சொல் இளைஞர் சிலையுடைக் கையர் கவலை காப்ப  – young men of harsh words carry bows in their hands to protect those who travel on the forked paths, நிழல் உரு இழந்த வேனில் – summer where shade is reduced, குன்றத்து – on the mountain,  பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் – wasteland with separation as its theme is on one side, wasteland with the wasteland traits is on one side



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நெய்தல் நில இயல்பு

முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்   315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்,
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்புப்
பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்   320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும்,
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு,   325
ஐம்பால் திணையும் கவினி அமைவர   (315 – 326)

Nature of the Neythal Seashore Land

Bright pearls given by the roaring ocean,

beautiful, bright bangles made by cutting

conch shells with saws, various food

brought by merchants, sweet tamarind

that grew in the fields near the huge

backwaters, white salt in the seashore

with tall dunes, pieces of fatty fish caught

by fishermen with strong hands,

that look like the eyes of thudi drums,

horses that were brought in splendid ships

by sea, navigated by captains, and fine goods

that are to be sent to huge countries – all these

are seen every morning again and again, and

they bring prosperity to the seashore land.

 

All the five landscapes were beautiful there.

Notes:  நெய்தல் சான்ற வளம் (325) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரங்கல் ஆகிய உரிப்பொருள் அமைந்த இன்னோரன்ன வளம் பலவும்.

Meanings:  முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் – bright pearls that emit rays are given by the roaring ocean, அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் – cut with saws and perfect, இலங்கு வளை – bright bangles, பரதர் தந்த – brought by the merchants, பல்வேறு கூலம் – different food, different grains and legumes, இருங்கழிச் செறுவின் – in the fields, near the huge backwaters, தீம்புளி – sweet tamarind, வெள் உப்பு பரந்து – white salt spread, ஓங்கு வரைப்பின் – on the tall dunes on the seashore, வன்கைத் திமிலர் – fishermen with strong hands who go on their boats, கொழு மீன் குறைஇய – reduced/cut fatty fish (குறைஇய – சொல்லிசை அளபெடை), துடிக்கண் – eyes of thudi drums, துணியல் – pieces, விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் – captains who drive great ships in the ocean, நனந்தலைத் தேஎத்து – huge countries (தேஎத்து – இன்னிசை அளபெடை), நன்கலன் உய்ம்மார் – to send fine things (உய்ம்மார் – மார் ஈற்று வினையெச்சம்), புணர்ந்து  உடன்கொணர்ந்த புரவியொடு – with horses that were brought by those who came together, அனைத்தும் – all these, வைகல் தோறும் – every morning, வழிவழிச் சிறப்ப – special again and again, நெய்தல் சான்ற வளம் பல பயின்று – seashore/neythal prosperity is there, ஆங்கு ஐம்பால் திணையும் கவினி அமைவர – all the five landscapes were beautiful there

மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்

முழவு இமிழும் அகல் ஆங்கண்,
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி,
இன் கலியாணர் குழூஉப்பல பயின்று ஆங்கு   330
பாடல் சான்ற நல்நாட்டு நடுவண்; (327 – 331)

Mathurai City Scenarios

In the huge city where drums roar constantly,

festivals are celebrated on the wide streets,

thunangai dances are performed, beautifully

embracing, there are communities with

fragrances, and there are many citizens with

abundant wealth.

 

In the middle of that fine country praised by

poets,

Notes:  மணம் கமழ் சேரி (329) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணம் கமழ் சேரி என்றது பரத்தையர் சேரியினை.  பரத்தையர் எப்பொழுதும் தம்மை மலர் முதலிய மணப் பொருள்களால் ஒப்பனை செய்து கோடாலின் ஆண்டு இடையறாது மணங்கமழும் என்க.  தழூஉ:  அகநானூறு 176 – விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,  கலித்தொகை 103 – மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ, கலித்தொகை 104 – எழில் நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ, கலித்தொகை 106 – அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ,  பதிற்றுப்பத்து 52 – முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆக,  மதுரைக்காஞ்சி 159-160 – இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, மதுரைக்காஞ்சி 329 – துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி.  நச்சினார்க்கினியரும் (கலித்தொகை) சோமசுந்தரனாரும் (மதுரைக்காஞ்சி) குரவைக் கூத்து எனக் கொள்கின்றனர்.  அருள் அம்பலவாணரும் (பதிற்றுப்பத்து), ஒளவை துரைசாமியும் (பதிற்றுப்பத்து), வேங்கடசாமி நாட்டாரும் (அகநானூறு), சோமசுந்தரனாரும் (அகநானூறு) தழுவி ஆடுவதாக் கொள்கின்றனர்.  மதுரைக்காஞ்சி 615-616 – தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  முழவு இமிழும் அகல் ஆங்கண் – in that huge place where drums roar, விழவு நின்ற வியல் மறுகின் – on the wide streets where festivals were celebrated, துணங்கை அம்தழூஉவின் – with the hugging thunangai dance (தழூஉ – இன்னிசை அளபெடை), மணம் கமழ் சேரி – community with fragrances, community of prostitutes, இன் – sweet, கலி யாணர் – abundant wealth, குழூஉப்பல பயின்று – with many groups of citizens (குழூஉ  – இன்னிசை அளபெடை), ஆங்கு பாடல் சான்ற நல்நாட்டு நடுவண் – in the middle of the famous country, in the middle of the country praised by poets

பெரும் பாணர் வாழும் இருக்கை

கலை தாய உயர் சிமையத்து
மயில் அகவும் மலி பொங்கர்,
மந்தி ஆட மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்   335

இயங்கு புனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல்,
கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்,
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத் துறை துறை தோறும்,   340
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும், (332 – 342)

Where Bards who play Large Lutes Live

male monkeys leap and pea****s dance in

the mountains, female monkeys play on many

tree branches, loud winds rise and attack the

groves filled with trees, there are sand dunes

with white tops heaped by flowing waters,

and in all the sandy shores touching the

fragrant groves, flowers of kōngam trees with

pollen and other flowers have spread on the wide

river that looks like a flower garland.

On the shores of Vaiyai river, there are groves

with clusters of many kinds of flowers,

surrounded by residences of bards who play

musical instruments, who had lived there for

generations.

Notes:  அழுந்துபட்டிருந்த (342) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வாழ்ந்த.

Meanings:  கலை தாய – male monkeys leap, உயர் சிமையத்து மயில் அகவும் – pea****s dance in the tall mountain peaks, மலி பொங்கர் – many tree branches, மந்தி ஆட – female monkeys play, மா விசும்பு உகந்து – from the huge sky, முழங்கு கால் பொருத – loud winds hitting, மரம் பயில் காவின் – in the groves filled with trees, இயங்கு புனல் கொழித்த – brought to the shore (ஒதுக்கிய) by the flowing water, வெண்தலைக் குவவு மணற் – white topped sand dunes, கான் பொழில் தழீஇய அடைகரை தோறும் – in all the sandy shores touching the fragrant groves (தழீஇய – சொல்லிசை அளபெடை), தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – the flowers of kōngam with pollen and other flowers have spread, Cochlospermum Gossypium (தாஅய் – இசைநிறை அளபெடை), கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் – wide river flowing well like a garland, அவிர் அறல் வையைத் துறை துறை தோறும் – on all the shores of Vaiyai with bright fine sand, பல்வேறு பூத்திரள் தண்டலை – groves with clusters of many kinds of flowers, சுற்றி அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் –  surrounded by the residences of bards who play musical instruments who have lived there for generations



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்

நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்,   345
கொழும்பல் பதிய குடி இழந்தனரும்,
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்இசை முரசம் இடைப் புலத்து ஒழிய
பன்மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று,   350

மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,
தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை,
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு,   355

வையை அன்ன வழக்குடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,  (343 – 359)

Fort, Moat and Tall Houses

Countries like Alumpil, belonging to

Māna Viral Vēl, with great prosperity in the land,

and flourishing great wealth, who lost rich

communities because of ancient enmity with you,

belonged to kings of murderous battles with noble

elephants, who retreated, abandoning their sweet

drums midway, unable to fight with you.

 

Your fort walls are tall with many sections, its

high terraces rising up to the sky like mountains

covered with clouds.  There is a sapphire-colored

deep moat and a tall, tight-fitting door with a deity

that has been rubbed with oil and darkened.  The

entrance with people moving is like the Vaiyai river.

There are many fine houses that rise up to the sky,

with many doors and windows through which a little

wind blows with music.  The streets are wide and long

like rivers.

Notes:  நற்றிணை 200 – யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்.  தொல் வலி நிலைஇய (353) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தொல் வலி நிலைஇய என்ற தொடரை அணங்கிற்கேற்றி வலிமிக்க மறத்தெய்வமாகிய கொற்றவையின் உருச் செதுக்கப்பட்ட நெடுநிலை எனினுமாம்.  அக் கொற்றவைப் படிமத்திற்கு நெய்யணிதலானும் விளக்கிடுதலானும் நெய் ஒழுகிக் கரிந்த கதவு என்க.  திண் போர்க் கதவின் (354) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திண்ணிதாக வாய் பொருத்தப்பட்ட கதவு.  பல் படைப் புரிசை (352) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல கற்படைகளையுடைய மதில், மதில் பற்பல படைகளால் உயர்தப்படுதலின் பல்படை என்றார், பல் படைப் புரிசை – புறநானூறு 244 – ஒளவை துரைசாமி உரை – பல படையாகச் செய்யப்பட்ட மதில்  (படை – அடுக்கு).  வானம் மூழ்கி (357) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வானம் மூழ்கி என்றது மிக உயர்ந்து என்றவாறு, நச்சினார்க்கினியர் உரை – தேவருலகிலே சென்று.  மான விறல் வேள் (மதுரைக்காஞ்சி 344) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மான விறல் வேள் என்ற குறுநில மன்னன், மான விறல் வேள் (மலைபடுகடாம் 164) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னன்.

Meanings:  நிலனும் வளனும் கண்டு – seeing the land and prosperity (நிலன் – நிலம் என்பதன் போலி, வளன் – வளம் என்பதன் போலி), அமைகல்லா – not ending, விளங்கு பெருந்திருவின் – with flourishing great wealth, மான விறல் வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – those who lost countries like Alumpil belonging to Māna Viral Vēl, கொழும்பல் பதிய குடி இழந்தனரும் – those who lost rich communities, தொன்று கறுத்து உறையும் – with ancient enmity, துப்புத் தர வந்த – with their might, அண்ணல் யானை – noble elephant, அடுபோர் வேந்தர் – king of murderous battles, இன்இசை முரசம் இடைப்புலத்து ஒழிய – abandoned their sweet drums midway, பன்மாறு ஓட்டி – removed their differences, பெயர்புறம் பெற்று – causing them to run away showing their backs, மண் உற – with sand, ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் – with a sapphire-colored deep moat, விண் உற ஓங்கிய – rise up tall to the skies, பல் படைப் புரிசை –  walls with many layers, walls with many sections, தொல் வலி நிலைஇய – with ancient strength (நிலைஇய – சொல்லிசை அளபெடை), அணங்குடை நெடுநிலை – tall door with deity, நெய்படக் கரிந்த – darkened by oil/ghee,  திண் போர்க் கதவின் – with tight fitting doors, மழை ஆடும் மலையின் – like mountains with clouds, நிவந்த மாடமொடு – with houses with high upper levels, வையை அன்ன – like Vaiyai river, வழக்குடை வாயில் – entrance with traffic, வகை பெற – separated into different areas, எழுந்து வானம் மூழ்கி – rise up very high to the sky, rise up surrounding the sky, rise up piercing the sky, சில் காற்று இசைக்கும் பல் புழை – many entries (doors, windows etc.) through which a little wind blows with sound, நல்இல் – fine houses, யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் – in the wide long streets that are like rivers

ஒலியும் கொடியும்

பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப,   360

மா கால் எடுத்த முந்நீர் போல,
முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை;
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து,   365

சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள,
நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு,
புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டி   370

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்கப்  (360 – 374)

Sounds and Flags

There are sounds of different groups of people.

The sounds of parai drums beaten to announce

messages are as loud as the roaring ocean

with heavy winds.  The happy sounds of those

who dance to musical instruments are like those

who splash in the ponds.  In the two huge markets

that appear like a painting, there are flags hoisted

during festivals, and many flags hoisted after

seizing difficult fortresses with many different

names.  There are beautiful flags hoisted every day.

There are flags to celebrate victories with armies

loud like the ocean, with spears as bright as the

moon that killed enemies making them become

stinking flesh, and ruining rows of elephants.

There are flags in the toddy shops that announce

the joy of drinking toddy.

Many different groups have many flags.  The huge

flags sway appearing like waterfalls coming down

large mountains.

Notes:  கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை (363) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளத்தின்கண் நீரைக் கையாற் குடையின் துடும் துடும் என ஒலிக்கும், அங்ஙனம் ஒலிக்கும் இயம் என்க.  மிடை தோல் (370) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அணிவகுக்கப்பட்ட யானை.  வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள (உழிஞைத் திணை) – முழுமுதல் அரணம் முற்றலுங் கோடலும் அனை நெறி மரபிற்றாகுமென்ப (தொல்காப்பியம், பபுறத்திணையியல் 10).  சும்மை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings: பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – sounds of various different groups of people (குழாஅத்து – அத்து சாரியை), மா கால் எடுத்த முந்நீர் போல – like the ocean with heavy wind, முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல – loud panai drums are beaten with messages by drummers, கயம் குடைந்தன்ன – like splashing water in the pond, இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – sounds of those who are happy playing musical instruments and dancing, ஓவுக் கண்டன்ன – like seen in a painting, இரு பெரு நியமத்து – in the two great markets,  சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி – many flags hoisted during festivals, வேறு பல் பெயர – with many different names, ஆர் எயில் கொளக் கொள – take difficult to seize well-protected fortresses, நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி  – beautiful flags hoisted every day, நீர் ஒலித்தன்ன – like the sound of water, நிலவு வேல் தானையொடு – with an army of spears bright as the moon, புலவுப்படக் கொன்று – killed them making them become stinking flesh, மிடை தோல் ஓட்டி – killed their rows of elephants, புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி – raised victorious beautiful flags,  கள்ளின் களி நவில் கொடியொடு – along with the toddy shop flags that announce happiness of toddy, நன்பல பல்வேறு குழூஉக் கொடி – many different groups of flags (குழூஉ  – இன்னிசை அளபெடை), பதாகை நிலைஇ – huge flags are stable (நிலைஇ – சொல்லிசை அளபெடை), பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க – they sway like waterfalls flowing down a large mountain (அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது)

நால்வகைப் படைகளின் இயக்கம்

பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்   375

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடுங்காற்று எடுப்ப கல்பொருது உரைஇ,
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல,
இருதலைப் பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து   380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்துக்
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்,
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து,
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்   385

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து,
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்,
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய   390

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்,
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும்,
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்,  (375 – 394)

The Four Divisions of the Army

A whirling elephant in rut grows violent and

kills its keeper who used a goad, and attacks

others sitting on it, as conch shells are blown

on the front and back announcing an elephant

in rut.  Not caring about the strong chain

to which it was delicately tied,

it leaned and broke the column to which it was

tethered, appearing like a huge ship with torn

sails in heavy wind, its tightly tied, strong mast

ropes broken, mast ruined, its anchor rock

swaying, caught in a huge whirlpool, dashed

against boulders in the ocean with conch that

graze and panai fish.

 

Beautiful chariots are pulled by horses, with

well-trimmed, colored manes, that are decorated

with yak hair, that gallop, splitting the wind,

looking like red-legged ganders that fly on the huge,

pretty sky as though racing toward the sun with bright

rays, driven by charioteers with sticks, who have

taught their horses various movements, like circular

trotting and āthi, which is straight trotting.

 

Liquor drinking warriors who are fierce

like elephants, are confused, having to go to war.

These divisions of the army keep moving.

Notes:  இதை புடையூ (376) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாயைப் பீறி (கிழித்து).  புடையூ என்ற சொல்லுக்கு ‘தட்டி’ ‘கொட்டி’ ‘புடைத்து’ என்று நெடுநல்வாடை 8, குறிஞ்சிப்பாட்டு 160, மலைபடுகடாம் 204, பதிற்றுப்பத்து 26, 30 ஆகிய பாடல்களில் உரை ஆசிரியர்கள் (நச்சினார்க்கினியர், பொ. வே. சோமசுந்தரனார், ஒளவை துரைசாமி, அருள் அம்பலவாணர், பழைய உரை ஆசிரியர்) பொருள் கொடுத்துள்ளனர்.   குரூஉ (387) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  விடுமயிர் (391) – ஸி. ஜெகந்நாதாசார்யர் உரை – இடுமயிர் – இது இட்ட வாசம்.  குதிரையின் கழுத்தின் புறத்திலும் தலையின் சூட்டினிடத்திலும் இடப்படும் கவரி மயிரைக்காட்டும்.

Meanings:  பனை மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – in the ocean where there are conch that eat and panai fish (பரப்பு – கடலுக்கு ஆகுபெயர்), வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ – tightly tied strong ropes snapped (அரீஇ- சொல்லிசை அளபெடை), இதை புடையூ – sails fluttered, sails got torn, கூம்பு முதல் – on the mast base, முருங்க – ruined,எற்றி – crashed, காய்ந்து உடன் கடுங்காற்று எடுப்ப  – anchor rock raised in very heavy winds, கல் பொருது உரைஇ – dashed against rocks and roaming (உரைஇ – சொல்லிசை அளபெடை), நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல – like a ship caught in a large whirlpool, இருதலைப் பணிலம் ஆர்ப்ப – conch shells roared on both ends, சினம் சிறந்து கோலோர்க் கொன்று மேலோர் வீசி – in anger killed the keeper who used a goad and those on it and threw the riders, மென்பிணி – delicately tied, வன்தொடர் பேணாது  – not caring about the strong chain, காழ் சாய்த்து கந்து நீத்து – leaned and broke the column to which it was tied, உழிதரும் கடாஅ யானையும் – rutting elephant that whirls, அம் கண் மால் விசும்பு புதைய – hiding the huge sky with a beautiful sun, வளி போழ்ந்து – splitting the wind, ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் – flies around thinking about going to the sun with bright rays, செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன – like a gander with red legs, குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து  – horses with colored tufts gallop (குரூஉ – இன்னிசை அளபெடை), கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும் – and beautiful chariots that are like the wind, கொண்ட கோலன் – charioteers with sticks, கொள்கை நவிற்றலின் – since they taught the principles (Po. Ve. Somasundaranar urai – ஐந்து வகைச் செலவினையும் பதினெண்வகைச் சாரியையும் பயிற்றுதலாலே), அடிபடு மண்டிலத்து – running around in the circular tracks with feet pressing down, ஆதி போகிய – trotting in a straight line, கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும் – horses with well trimmed manes that are decorated with yak hair, வேழத்து அன்ன – like elephants (வேழத்து – வேழம், அத்து சாரியை), வெருவரு செலவின் கள் ஆர் களமர் – warriors who drink liquor and are fierce, இருஞ்செரு மயக்கமும் – confusion because they have to fight in a huge battle, அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – since the the different divisions of the army come and go



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்

தீம் புழல் வல்சிக் கழற் கால் மழவர்   395
பூந்தலை முழவின் நோன்தலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்,
பல வகை விரித்த எதிர் பூங்கோதையர்,
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய்   400
நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்,
இருதலை வந்த பகை முனை கடுப்ப
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து,
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர்   405
மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர,  (395 – 406)

Things Sold in a Day Market

Some sold sweet dishes.

Warriors wore bravery anklets on their feet.

Flower sellers sold fragrant flowers in round

trays that looked like the wide and strong tops

of drums that are adorned with flowers.

Garland sellers sold garlands with different

kinds of flowers placed against each other.

Some sold aromatic powders pounded together

by many, that spread like pollen.

Some sold betel leaves from long vines along with

areca nuts with sweet juice inside, and some sold

lime from burning conch shells.  Some carried

many food items and roamed around to sell them.

 

All these people who were afraid, who sighed in

distress, as if they were caught between two armies

and were attacked on both ends, rest in the shade of

huge mansions, after all the divisions of the army

left the market.

Notes:  தீம் புழல் (395) – நச்சினார்க்கினியர் உரை – இனிய பண்ணியாரங்கள், இருப்பைப் பூவுமாம்.  ஐங்குறுநூறு 187 – தொடலைக்கு உற்ற சில பூவினரே.  நெடுநல்வாடை 26 – தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற.

Meanings:  தீம் புழல் வல்சி – sweet snack food (the word புழல் means ‘hollow’ and ‘hole’ in all their other usages in Sangam), கழற் கால் மழவர் – warriors with anklets on their feet, பூந்தலை – decorated with flowers, முழவின் நோன்தலை கடுப்ப –like the strong top of drums (கடுப்ப – உவம உருபு), பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் – flower sellers with fragrant flowers in round baskets, பல வகை விரித்த – many kinds spread, எதிர் பூங்கோதையர் – those with garlands with different flowers placed against each other, பலர்- many, தொகுபு இடித்த – pounded together, தாது உகு சுண்ணத்தர் – those selling fragrant powders that spread pollen, தகை செய் – making beautiful, தீம் சேற்று இன்நீர்ப் பசுங்காய் – fresh areca nut with sweet juice, green betel nut with sweet juice, நீடுகொடி இலையினர் – those with betel leaves from long vines, கோடு சுடு நூற்றினர் – those with lime got by burning conch shells, இருதலை வந்த பகை முனை கடுப்ப – like in a battle with attacks on both ends (கடுப்ப – உவம உருபு), இன் உயிர் அஞ்சி – fearing for sweet life,  இன்னா வெய்து உயிர்த்து ஏங்குவனர் – attained sorrow and sighed in distress, attained sorrow and sighed hot breaths, இருந்து அவை நீங்கிய பின்றை – after they were gone (army), பல் வேறு பண்ணியம் – many kinds of food dishes, தழீஇத் திரி விலைஞர் – those who hold many things and roam around and sell (தழீஇ – சொல்லிசை அளபெடை), மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர – rest in the dense shade from the mountain-like mansions (புரை – உவம உருபு, a comparison word)

முதுமகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்

இருங்கடல் வான்கோடு புரைய, வாருற்றுப்
பெரும் வால் நரைக் கூந்தலர்
நன்னர், நலத்தர், தொல் முதுபெண்டிர்,
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை   410

செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன,
செய்யர், செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கு இறைப்பணைத் தோள்
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை   415

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்
மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து,
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப   420

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக, (407 – 423)

Older Women sell Fragrant items

There are older women of fine beauty, with

long braids of white hair that look like the

white conches in the huge ocean,

who carry in lovely bowls items that people

desire and fragrant flowers for young women

who are like dolls made with pure gold, with

looks that torment men, some with complexion

like the sun’s soft, moving rays, some with

dark, pretty complexion and delicate, moist

eyes, perfect mouths with sharp teeth, curved

arms that resemble bamboo, dark, thick hair

that appears like flowing darkness, gleaming

bracelets that slip down, thoyyil designs on their

opposing, young breasts with pallor, delicate

nature of pea****s, and delicate walk, who clap

their hands and laugh with uneducated men.

Notes:  மை உக்கன்ன (417) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மை ஒழுகினாற்போல.  காமர் (422) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை,  விருப்பம் மருவிய, C. ஜெகந்நாதாசார்யார் உரை – காமரு = காமர் + மருவு.  காமர் என்பது கடைக்குறைந்து நிற்க, மருவு என்பதன் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டுமவ்வீறு சந்தியாற் கெட்டது.

Meanings:  இருங்கடல் வான்கோடு புரைய – are like the white conches in the vast ocean (புரை – உவம உருபு, a comparison word), வாருற்றுப் பெரும் பின்னிட்ட – combed and had long braids, வால் நரைக் கூந்தலர் – those with white colored hair, நன்னர் நலத்தர் தொல் முது பெண்டிர் – older women with fine beauty,  செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை – like dolls made with new/pure gold, செல் சுடர் – sun’s moving rays,  பசு வெயில் – warm sunlight, soft sunlight, தோன்றியன்ன – like it appeared, செய்யர் – red colored ones,  செயிர்த்த நோக்கினர் – those with looks that torment men, மடக்கண் ஐஇய கலுழும் மாமையர் – bright dark women with delicate moist eyes (ஐஇய  – சொல்லிசை அளபெடை), வை எயிற்று வார்ந்த வாயர் – those with perfect mouths with sharp teeth, வணங்கு இறைப்பணைத் தோள் – curved arms like bamboo, சோர்ந்து உகுவன்ன – like it is falling down, வயக்குறு வந்திகை –  gleaming bracelet, தொய்யில் பொறித்த – thoyyil designs drawn, சுணங்கு – pallor, எதிர் இளமுலை – opposing young breasts,  மை உக்கன்ன மொய் இருங் கூந்தல் – dark thick hair like blackness flowing, dark thick hair that appears like flowing kohl, மயில் இயலோரும் – those with the nature of pea****s, மட மொழியோரும் – those with delicate words, கைஇ – decorating themselves (சொல்லிசை அளபெடை), மெல்லிதின் ஒதுங்கி – they walk delicately, கை எறிந்து –  clapping their hands, கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப  – they laugh and enjoy with uneducated men, புடை அமை – with sides, பொலிந்த வகை அமை செப்பில் – in beautiful bowls that are well made, காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் – beautiful items/food that people desire, கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக – t0 all the houses carrying fragrant flowers

ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்

மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போலக்   425

கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே,
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்;
நாள் அங்காடி நனந்தலைக் கம்பலை;  (424 – 430)

Ritual bathing on the Seventh Day

 Like the ocean, with waves that batter the

shores, that does not get reduced despite the

clouds taking water, nor swell when the

rivers bring water, the things in the market in

Koodal do not get decreased by selling or get

increased by new things that are brought in.

The uproar in the day market in the wide space

shining with mansions is like that during the

celebration of the festival when ceremonial

baths are taken at twilight on the seventh day.

Meanings:  மழை கொளக் குறையாது – not reducing despites clouds absorbing, புனல் புக மிகாது – not increasing when rivers join it, கரை பொருது இரங்கும் முந்நீர் போல – like the ocean where waves hit the shores, கொளக் கொளக் குறையாது – not getting reduced by constant giving, தரத் தர மிகாது  – not increasing despite being given again and again, கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – seventh day twilight when ceremonial baths are taken, ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – the clamor that arises in the land filled with victorious festivals (நாடு – ஆகுபெயர் நாட்டில் உள்ளோர்க்கு), மாடம் பிறங்கிய – shining with mansions, மலி புகழ்க் கூடல் நாள் அங்காடி – day market in greatly famous Koodal/Mathurai, நனந்தலைக் கம்பலை – uproar in the wide space

செல்வர்கள் செல்லும் நிலை

வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்,
கண் பொருபு உகூஉம் ஒண் பூங்கலிங்கம்
பொன் புனை வாளொடு பொலியக் கட்டித்
திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை,   435

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல்,
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக்   440

காலோர் காப்ப கால் எனக் கழியும்,
வான வண்கை வளங் கெழு செல்வர்
நாள் மகிழ் இருக்கை காண்மார்;    (431 – 443)

Wealthy Men who are Generous

Wealthy men who are generous like the

rain clouds in the sky wear minutely woven,

eye dazzling, bright red garments with flower

designs, that look like the dulled rays of the

setting red sun, their ends touching the rattan

on the chariots, and golden colored swords

tied on their beautiful clothing.  Their strong

feet with warrior anklets have scars from

tightly tied straps.  They are men of great fame

who wear garlands made from neem leaves

along with pearl strands on their handsome

chests.

They ride on their horses as fast as the wind,

surrounded by their escorts who are on foot.

May they see the festivities in the day courts.

Notes:  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings: வெயிற் கதிர் மழுங்கிய – sun’s rays dulled, படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து – red like the setting sun, நுணங்கு உருவின் – minutely woven, கண் பொருபு உகூஉம் – dazzling eyes like making them fall (உகூஉம் – இன்னிசை அளபெடை), ஒண் பூங்கலிங்கம் – bright flower patterned clothes, பொன் புனை வாளொடு – with golden swords, பொலியக் கட்டி – tied beautifully, திண் தேர்ப் பிரம்பின் – on the rattan of sturdy chariots, Calamus rotang, புரளும் தானை – moving end of the clothing, கச்சம் – anklet straps, தின்ற – ruined, caused scars, கழல் தயங்கு திருந்து அடி – perfect feet with moving warrior anklets,  மொய்ம்பு – strength, இறந்து – passing beyond, திரிதரும் –  roaming, ஒரு பெருந் தெரியல் –  big garlands (neem), மணி தொடர்ந்தன்ன – like gems strung, ஒண் பூங்கோதை – bright flower garland, அணி கிளர் மார்பின் – on their handsome chests, ஆரமொடு அளைஇ – along with pearl necklaces (அளைஇ – சொல்லிசை அளபெடை), கால் இயக்கு அன்ன – like the speed of moving wind, கதழ் பரி கடைஇ – ride on the horses (கடைஇ – சொல்லிசை அளபெடை), காலோர் காப்ப – surrounded the escorts on foot, கால் எனக் கழியும் – move like the wind, வான – like the clouds, like the sky (ஆகுபெயர் முகிலுக்கு), வண்கை – charitable hands, வளம் கெழு செல்வர் – very wealthy people, நாள் மகிழ் இருக்கை காண்மார்  – may they enjoy their time/festivities in their day courts

செல்வ மகளிர்

…………………………….…………………..பூணொடு,
தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப, ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை   445

அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ,
ஒண் குழை திகழும் ஒளிகெழு திருமுகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண் கடல் திரையின் அசைவளி புடைப்ப,   450
நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய, (443 – 452)

Rich Women in Mathurai

Rich women wear gold anklets that jingle with

clear sounds along with bright, faultless, pretty

gold jewels and they appear like celestial women

who came down.  They wear bracelets with flower

designs.  Fragrances spread as they walk on the

streets wearing bright earrings.  Their beautiful,

bright faces appear like the moon which hides behind

the clouds and reappears like the wide flags hoisted on

sturdy poles in their mansions, that are moved by the

winds, appearing like the rising and falling waves

of the clear ocean.

Meanings:  பூணொடு – along with jewels, தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – gold anklets jingle with clear sounds, ஒள் அழல் – bright flame, தாஅற  – faultless, perfect, விளங்கிய  – shining,  ஆய் பொன் அவிர் இழை – pretty gold, bright jewels, அணங்கு வீழ்வு அன்ன – like heavenly women who came down, பூந்தொடி மகளிர்  – women with bangles  bearing flower designs, மணம் கமழ் நாற்றம் – fragrances spreading from fragrant materials (மணம் – மணமுடைய பொருட்கு ஆகுபெயர்), தெருவுடன் கமழ – spread on the streets, ஒண் குழை திகழும் – splendid with bright earrings, ஒளிகெழு – brightness filled, திருமுகம் – beautiful faces, திண் காழ் – sturdy poles, ஏற்ற – hoisted, raised, வியல் இரு விலோதம்  – very wide flags, தெண் கடல் திரையின் – like the clear ocean waves, அசை வளி – moving wind, புடைப்ப – attacking, நிரை நிலை மாடத்து – in the rows of mansions, அரமியம் தோறும் – in all the mansion open upper levels where the moon shines, மழை மாய் மதியின் – like the moon that is hid by the clouds, தோன்றுபு மறைய  – appear and hide



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அந்தி விழா

நீரும், நிலனும், தீயும், வளியும்,
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர்பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க,   460

Twilight Celebrations

At the twilight festival, musical instruments are

played, and abundant offerings are given according

to unchanging traditions, to Sivan with an axe, who

created the five elements of water, land, fire, wind

and space, and to gods with faultless bodies,

bright flowers that do not fade, eyes that are do not

blink and fragrant food offerings.

Notes:  இமையா நாட்டத்து (457) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமையாத கண்.  இமையவர் (பெரும்பாணாற்றுப்படை 429) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்.  புறநானூறு 62 – வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம்.  வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப (தொல்காப்பியம், களவியல் 4).

Meanings:  நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போடு – water, land, fire, wind and the space with directions (நிலன் – நிலம் என்பதன் போலி, மாக விசும்பு – இருபெயரொட்டு), ஐந்து உடன் – with the five, இயற்றிய – created, மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – lord Sivan with an axe as the leader, மாசு அற விளங்கிய யாக்கையர் – those with bright bodies without faults, சூழ் சூடர் – surrounded by brightness, வாடாப் பூவின் – with unfading flowers, இமையா நாட்டத்து –  with eyes that are not closed, Sivan, நாற்ற உணவின் – with offerings of fragrant food, with offerings of delicious food, உருகெழு பெரியோர்க்கு – to the divine gods, மாற்று அரு மரபின் – according to unchanging traditions, உயர்பலி கொடுமார் – to give great offerings (கொடுமார் – வினையெச்சம்), அந்தி விழவில் தூரியம் கறங்க – musical instruments are played in the twilight festival

பௌத்தப் பள்ளி

திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇ தாம் புணர்ந்து முயங்கித்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேர்இளம் பெண்டிர்   465

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்,  (461 – 467)

Buddhist Monastery

Young women adorned with flowers

embrace with love their children wearing

sturdy, bright jewels, holding them safe,

close to themselves, like how lotus flowers

with pollen hold lotus buds. They offer flowers

and fragrant smoke, pray and praise god in

the protected Buddhist monastery.

Notes:  தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு தாமும் அவரும் (461-462) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாது சேர்ந்த தாமரைப் பூ தாமரை முகிழைப் பிடித்தாற்போன்று அம்மக்கள் கையினைத் தம் கையால் பற்றி.  கடவுட் பள்ளி (467) – நச்சினார்க்கினியர் உரை – பௌத்தப் பள்ளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – புத்தரை வழிபடும் இடத்தைப் பள்ளி என்றல் மரபு.

Meanings:  திண் கதிர் மதாணி – sturdy bright ornaments, ஒண் குறுமாக்களை – the bright children, ஓம்பினர்த் தழீஇ – they protected and embraced (தழீஇ – சொல்லிசை அளபெடை), தாம் புணர்ந்து முயங்கி – embraced them holding them tight, தாது அணி தாமரைப் போது – lotus flowers/buds beautiful with pollen, பிடித்தாங்கு – like holding, தாமும் அவரும் – them and their children, ஓராங்கு விளங்க – stayed together splendidly, காமர் கவினிய – desirable and beautiful, பேர்இளம் பெண்டிர் – many young women, பூவினர் – women with flowers, புகையினர் – those offering fragrant smoke, தொழுவனர் – those who pray, பழிச்சி – they praise, சிறந்து – with greatness, புறங்காக்கும் கடவுட் பள்ளியும் – Buddhist monastery which is protected

அந்தணர் பள்ளி

சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி   470

உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்,  (468 – 474)

Brahmin Monastery

There are Brahmins who sing the Vedas well,

following tradition, with great discipline.

Even though they live in this world with different

kinds of lands, they are one with god and they

live in a superior world.  They lead virtuous lives

not faulting from the just path.  The monastery

where these great people live sweetly, appears

like it was dug into the mountains.

Notes:  ஒரு தாம் ஆகி (470) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நின்று என்றவாறு.  அந்தணர் (474) – நச்சினார்க்கினியர் உரை – வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்.  கலித்தொகை 1 – நச்சினார்க்கினியர் உரை – ‘அந்தத்தை அணவுவார் அந்தணர்’ என்றது, வேதாந்தத்தையே பொருளென்று பார்ப்பார் என்றவாறு.

Meanings:  சிறந்த வேதம் விளங்கப் பாடி – singing the great Vedas clearly, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – following the greatness with discipline, நிலம் அமர் வையத்து – in he world with different lands, ஒரு தாம் ஆகி – becoming one with god, உயர் நிலை உலகம் – they are in the superior upper world, இவண் நின்று எய்தும் – even while here they attain, அறநெறி பிழையா – not faulting from the just path (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), அன்புடை நெஞ்சின் – with loving hearts, பெரியோர் – great souls, wise people, மேஎய் இனிதின் உறையும் – residing there sweetly (மேஎய் – இன்னிசை அளபெடை), குன்று குயின்றன்ன – like dug into the mountains, அந்தணர் பள்ளியும் – and the Brahmin monastery

அமணப் பள்ளி

வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்   475

பூவும், புகையும், சாவகர் பழிச்சச்
சென்ற காலமும், வரூஉம் அமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை   480

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி, நல்கு வர
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து,   485

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற,  (475 – 488)

Jain Monastery

The awesome Jain monastery surrounded by fragrant

flower gardens is beautiful, and appears like a collection

of many hills.  In its brilliance, the building resembles

a pond, and its lofty walls, with paintings, appear like

made with copper, blinding the eyes of onlookers.

There are ritual pots with small mouths hanging on loops

with ropes twisted with many strands, that look like

carved from stones using chisels.  The monks, who

have controlled their senses, whose bodies are not ruined

even though they perform rituals with smoke and

bee-swarming flowers with honey, know the past, present

and future.  They fully understand the principles of the

upper world and this world.

Notes:  சாவகர் (476) – நச்சினார்க்கினியர் உரை – சைனரில் துறவாது விரதங் காக்கும் இல்லறத்தார்.  செம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

 Meanings:  வண்டு படப் பழுநிய – ripe for bees to swarm, தேன் ஆர் தோற்றத்துப் பூவும் – flowers that appear to be filled with honey, புகையும் – smoke, சாவகர் பழிச்ச – ritualists praise, சென்ற காலமும் – past life, வரூஉம் அமயமும் – future life (வரூஉம் – இன்னிசை அளபெடை), இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு  நன்கு உணர்ந்து – understand this discipline well that has appeared in this world today, வானமும் – and the upper world, நிலனும் – and the land (நிலன் – நிலம் என்பதன் போலி), தாம் – they, முழுது உணரும் சான்ற கொள்கை – principles of understanding fully, சாயா யாக்கை – not ruined body, ஆன்று அடங்கு அறிஞர் – wise men who have controlled, செறிந்தனர்- those who are close, நோன்மார் – for rituals, கல் பொளிந்தன்ன – like carved out of stones, இட்டுவாய்க் கரண்டை – pots with narrow mouths, pots with small mouths, பல்புரிச் சிமிலி – hanging loop with many ropes, நாற்றி – hang, நல்குவர – with grace,  கயம் கண்டன்ன – like seeing a pond, வயங்குடை நகரத்து – in the bright monastery building, செம்பு இயன்றன்ன செஞ்சுவர் – red walls like made of copper, புனைந்து – decorated with paintings, நோக்கு விசை தவிர்ப்ப – to avoid the glare, மேக்கு உயர்ந்து ஓங்கி – tall and lofty (உயர்ந்து ஓங்கி – ஒருபொருட் பன்மொழி), இறும்பூது சான்ற – surprising, awing, நறும் பூஞ்சேக்கையும் – Jain monastery surrounded by groves with fragrant flowers, குன்று பல குழீஇ – many hills together (குழீஇ – சொல்லிசை அளபெடை), பொலிவன தோன்ற – appearing bright, appearing beautiful

 அறம் கூறு அவையம்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,   490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகிச்,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும், (489 – 492)

Courts that Deliver Justice

There are courts with fine principles delivering justice.

They protect justice without hatred or joy and are fair

like a pointer on a balance, removing the fear, shame

and anxiety of those who seek justice.

Meanings:  அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – remove fear and shame and anxiety, செற்றமும் உவகையும் செய்யாது – without hatred or happiness, without anger or joy, காத்து – protect, ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி – fair like a pointer on a balance, சிறந்த கொள்கை – with fine principles, அறம் கூறு அவையமும் – courts which deliver justice

காவிதி மாக்கள்

நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து,
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல   495

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்,  (493 – 499)

Ministers

There are great ministers who are famous.  They

see good and bad, analyze situations in a restrained

manner, work with kindness and justice, protect

people and avoid blame.

They are like the celestial beings in the huge sky, who

are adorned with fragrant sandal on their bright chests,

who wear bright clothes and perform rituals.

Meanings:  நறுஞ் சாந்து நீவிய – smeared sandal paste, கேழ் கிளர் அகலத்து – bright chest, ஆவுதி மண்ணி – performed rituals, அவிர் துகில் – bright clothes,  முடித்து – tied,  மா விசும்பு வழங்கும் பெரியோர் போல – like celestials who offer the world in the huge/dark sky, நன்றும் தீதும் கண்டு – see good and bad, ஆய்ந்து – analyze, அடக்கி – controlled, அன்பும் அறனும் ஒழியாது – not ruining kindness and justice, காத்து – protect, பழி ஒரீஇ – avoid blame (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), உயர்ந்து – attain higher status, பாய் புகழ் நிறைந்த – spread and famous, செம்மை சான்ற காவிதி மாக்களும் – greatly wise ministers

பண்டங்கள் விற்கும் வணிகர்

அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகிக்   500

குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன,
பருந்து இருந்து உகக்கும் பல்மாண் நல்இல்
பல்வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்

பல் வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு   505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்,  (500 – 506)

Merchants who Sell Many Things

There are merchants who buy lovely gems, pearls

and gold and sell imported things from fine

countries.  Not erring, they follow the righteous

path.  Their gorgeous houses are clustered together,

appearing like a group of hills.  They are tall and

kites rest there before taking flight.  They have

abundant food, along with goods from the mountains,

land and water.

Meanings:  அற நெறி பிழையாது – not erring in their just path, ஆற்றின் ஒழுகி – going on the right path, குறும் பல் – small and many, குழுவின் – together, குன்று கண்டன்ன – like seeing hills, பருந்து இருந்து உகக்கும் – kites stay before flying, பல் மாண் நல் இல் – very esteemed fine houses, பல் வேறு பண்டமோடு – with many different commodities, ஊண் மலிந்து கவினி – beautiful with abundant food, மலையவும் நிலத்தவும் நீரவும் – from the mountains and the land and water, பிறவும் –many, பல் வேறு – many kinds, திருமணி – beautiful gems, முத்தமொடு – along with pearls, பொன் கொண்டு – purchase gold, சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் – merchants who sell things from other fine countries (தேஎத்து – இன்னிசை அளபெடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நாற்பெருங்குழு

மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்,   (507 – 510)

 

Four Royal Assemblies

The four assemblies in the royal court are like the

flourishing four groups of Kōsars in the court of

Palaiyan of Mōkūr, which flourishes with unfailing

harvests due to abundant rains.

Meanings:  மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள் – unfailing harvest since rains fall without fail (அறாஅ – இசை நிறை அளபெடை, பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), பழையன் மோகூர் – Palaiyan of Mōkūr, அவையகம் விளங்க – for the court to flourish, நான்மொழிக் கோசர் தோன்றியன்ன – like in the presence of four groups of Kōsars, தாம் – they, மேஎம் தோன்றிய – appearing great (மேஎம் – இன்னிசை அளபெடை), நாற்பெருங்குழுவும் – the four large committees

பல்வேறு தொழிலாளர்கள்

கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்,
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்,
பொன்னுரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
வம்பு நிறை முடிநரும், செம்பு நிறை கொண்மரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்,   515

எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண்பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்துச்   520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
நால்வேறு தெருவினும் கால் உற நிற்றர, (511 – 522)

Various Craftsmen

In the market place with four streets where elders

and youngsters who weave have gathered, there

are craftsmen who cut conch shells and make

bangles.  There are those who drill holes into pretty

gemstones, goldsmiths who make jewels with melted

gold, those who rub gold on touchstones to test,

traders who sell fabric, those who tie knots on ends

of fabrics, those who buy copper by weight, those who

sell flowers and substances that cause fragrant smoke,

intelligent artists who paint beautifully with minute details

that is enjoyed by all who look at them, and others

who sell clothes with small and large folds that appear

like the ripples of bright sand brought by the clear waves.

Notes:  கண்ணுள் வினைஞரும் (518) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூரிய அறிவு உடையார்க்கு அன்றி ஓவியத் தொழில் இயற்ற வாராமையின் நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர் என்றார்.  C. ஜெகந்நாதாசார்யார் உரை – குயினரும், புனைநரும், பகர்நரும், கொண்மரும், மாக்களும் ‘கூடி’ என்ற வினையெச்சத்தோடு இயைந்தன.

Meanings:  கோடு போழ் கடைநரும் – those who cut conch shells and make bangles, திருமணி குயினரும் – those who drill holes in beautiful gems, சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும் – those who make gold jewels with melted gold (சூடு – முதனிலை திரிந்த தொழிற் பெயர்), பொன் உரை காண்மரும் – those who rub gold on touchstones and see (to test gold), கலிங்கம் பகர்நரும் – those who trade in fabric, வம்பு – breast cloth, cloth which goes around the body (கச்சு), நிறை முடிநரும் – those who tie knots on ends, செம்பு நிறை கொண்மரும் – those who buy copper by weight, பூவும் புகையும் ஆயும் மாக்களும் – people who sell flowers and smoking fragrant stuff analyzing well, எவ்வகைச் செய்தியும் – all kinds of jobs, உவமம் காட்டி – with examples, நுண்ணிதின் உணர்ந்த – understanding minute details, நுழைந்த நோக்கின் – with great intelligence, கண்ணுள் வினைஞரும் – and artists who paint, பிறரும் கூடி – and others gather, தெண் திரை – clear waves, அவிர் அறல் கடுப்ப – like the bright fine sand (கடுப்ப – உவம உருபு), ஒண் பல் – many bright, குறியவும் நெடியவும் – small and big,  மடி – folds, தரூஉ – brought (இன்னிசை அளபெடை), விரித்து – spread, சிறியரும் பெரியரும் – youth and elders,  கம்மியர் குழீஇ – skilled workers gather (குழீஇ – சொல்லிசை அளபெடை), நால்வேறு தெருவினும் – in all the four different streets, கால் உற நிற்றர – their feet stand touch each other

பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்

கொடும்பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ,   525

விழைவு கொள் கம்பலை கடுப்ப பலவுடன், (523 – 526)

Clamor Rising from Others

There are pleasant bustles in the court of the

king wearing a bright flower garland, rising

from drummers with curved parai drums

and their relatives who praise him, and from

wise men with expertise in various fields.

Meanings:  கொடும் பறைக் கோடியர் – drummers/dancers with curved parai drums, கடும்பு உடன் வாழ்த்தும் – praising along with relatives, தண் கடல் நாடன் – lord of the cool sea, ஒண் பூங்கோதை – bright flower garland, பெருநாள் இருக்கை – the king’s court, விழுமியோர் குழீஇ – wise men with expertise who gather (குழீஇ – சொல்லிசை அளபெடை), விழைவு கொள் கம்பலை கடுப்ப – like desirable uproars (கடுப்ப – உவம உருபு), பலவுடன் – with many (sounds)

உணவு வகைகள்

சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய தேம் மாங்கனியும்,
பல்வேறு உருவின் காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி   530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்,
இன்சோறு தருநர் பல்வயின் நுகர, (527 – 535)

Types of Food

Food is served to many, with sweet rice, segments

of jackfruits with fragrance, beautiful, sweet

mangoes, vegetables and fruits in many different

shapes that grow on lovely vines with delicate

sprouts that have opened into leaves, nurtured by the

rains, sugar cubes that are like nectar, rice cooked

with meat that is praised by many, tubers that go down

into the earth and others.

Meanings:  சேறும் நாற்றமும் – soft pulp and fragrance, பலவின் சுளையும் – segments of jackfruits, வேறுபட – differing, கவினிய தேம் மாங்கனியும் – beautiful sweet mango fruits (தேம் தேன் என்றதன் திரிபு), பல்வேறு உருவின் காயும் – vegetables in many different sizes, பழனும் – and fruits (பழன் – பழம் என்பதன் போலி), கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி – beautiful vines that grew due to the rains, மென் பிணி அவிழ்ந்த  – they open their tender ties, குறு முறி – small sprouts, அடகும் – and leaves, அமிர்து இயன்றன்ன – like nectar, தீம்சேற்றுக் கடிகையும் – sweet sugar cubes, புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும் – and rice cooked with meat that is praised by many, கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு – with tubers which went downwards, பிறவும் – and others,  இன்சோறு – sweet rice, தருநர் – those who give, பல்வயின் நுகர – eat in many places

அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி

வால் இதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென,
நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத் திரை ஓதம்   540

இருங்கழி மருவிப் பாய பெரிது எழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே
அல் அங்காடி அழிதரு கம்பலை; (536 – 544)

Noises from the Night Market

The sounds in the market, arising from merchants from

large countries who roam around and buy goods to take

back, are like the sounds in the seashore towns where

ships with white sails that are guided by the wind bring

different goods. The uproarious sounds heard in the

night market is like the chirping of many kinds of birds

in the middle of fierce nights when fish-stinking waves

from the huge ocean flow into the backwater and recede.

Notes:  வினைஞர் கலம் கொண்டு மறுக (539) – மதுரையிடத்தே இயற்றப்படுகின்ற அணிகலன்களை விலைபேசி வாங்கிக் கொண்டு மேலும் அணிகலன் வாங்கும் பொருட்டுத் திரியா நிற்ப என்பார் ‘கலங் கொண்டு மறுக’ என்றார்.  துறைமுகப் பட்டினத்து அயல்நாட்டு வணிகர் மிக்கு முழங்கினாற் போன்று ஈண்டும் மிக்கு ஆரவாரித்தனர் என்றவாறு.  பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே – (534) – அவர் பல நாட்டினின்றும் வந்து பல்வேறு மொழிகளைப் பேசுதலால் பல்வேறு வகைப்பட்ட பறவைகள் ஒருங்கு கூடி ஆரவாரித்தலை உவமை கூறினார்.

Meanings:  வால் இதை எடுத்த – raised white sails, வளி தரு வங்கம் – ships brought by the wind, பல்வேறு பண்டம் – many different materials, இழிதரும் – bringing them down, importing, பட்டினத்து – in the seaside town, ஒல்லென் இமிழ் இசை மான – loud like music sounds (மான – உவம உருபு, a comparison word), கல்லென – loud sounds (ஒலிக்குறிப்பு), நனந்தலை – wide place, வினைஞர் கலம் கொண்டு மறுக – things made in Madurai are bought by merchants who roam around and buy them to take them in their ships,  பெருங்கடற் குட்டத்து – from the huge ocean depths, புலவுத் திரை ஓதம் – the stinking waves that flow, இருங்கழி மருவிப் பாய – flows into the backwaters, பெரிது எழுந்து – rises high, உருகெழு பானாள் வருவன பெயர்தலின்  – since the water flow occurs in the middle of the fierce night, பல் வேறு புள்ளின் – of many different birds, இசை எழுந்தற்றே – the sounds that rose up, அல் அங்காடி – night markets, அழிதரு கம்பலை – great uproar

இரவுக் கால நிலை

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து,   545

சென்ற நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர குணமுதல்
நாள்முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
காதல் இன்துணை புணர்மார் ஆய் இதழ்த்   550

தண் நறுங்கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ் சாந்து மறுக
மென் நூற் கலிங்கம் கமழ் புகை மடுப்ப
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்,   555

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து,
கல்லென் மாலை நீங்க,  (545 – 558)

Events that Occur at Night

The loud evening ends when the bright rays of

the sun become dull and its rage is reduced.

The sun reaches the western mountains taking

daytime along with it.   In the east, the waxing

moon appears and lits up the sky with its rays

at night.  Women who desire to unite with their

beloved ones wear strands of fragrant waterlilies

with pretty petals, adorn themselves with

jewels, remove rubbed fragrant pastes from their

long hair, grind narantham and fragrant

sandal, and pass fragrant smoke through their

garments made with delicate threads.  Women

with the looks of does make other women

happy lighting lamps with long wicks in

the large houses where love disease has entered.

Meanings: ஒண் சுடர் உருப்பு – bright rays of the sun, ஒளி மழுங்க – brightness dulled, சினம் தணிந்து   சென்ற ஞாயிறு – sun’s rays reduced,  நன் பகல் கொண்டு – taking away day time,  குட முதல் குன்றம் சேர – joined the western mountains, குண முதல் நாள் முதிர் மதியம் தோன்றி – in the east the waxing moon appears, நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர – the moon’s rays spread light making night appear like day (விரிபு – செய்பு என்னும் எச்சம்), நயந்தோர் காதல் இன் துணை புணர்மார் – those who desire to unite with their sweet partners, ஆய் இதழ்த் தண் நறுங் கழுநீர் துணைப்ப – tied together  cool fragrant waterlilies with beautiful petals, இழை புனையூஉ – wearing ornaments (புனையூஉ – இன்னிசை அளபெடை), நல் நெடுங் கூந்தல் – fine long hair, நறுவிரை குடைய – remove rubbed fragrant pastes, நரந்தம் அரைப்ப – grind narantham, Cymbopogon flexuosus, நறுஞ்சாந்து மறுக – grind fragrant sandal, மென் நூற் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – infuse fragrant smoke into clothing made with delicate threads, பெண் மகிழ்வுற்ற – making women happy, பிணை நோக்கு மகளிர் – women with the looks of does,  நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ – light lamps with long flames (கொளீஇ – சொல்லிசை அளபெடை), நெடு நகர் எல்லை எல்லாம் – in the large houses, நோயொடு புகுந்து – enters with love disease, கல்லென் மாலை நீங்க  – loud evening leaves



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குல மகளிர் செயல்

………………………………………………. நாணுக்கொள
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணுப் பெயர்த்து   560
வீழ்துணை தழீஇ, (558 – 561)

Acts of Housewives

With shyness, they play different melodies with

their lutes with seven sweet strings and sing along

with it, after embracing their beloved partners.

நாணுக்கொள – attaining shyness, ஏழ் புணர் சிறப்பின் – with seven together beautifully, இன் தொடைச் சீறியாழ் – small lute with sweet strings, தாழ்பு அயல் – lowering there, கனை குரல் கடுப்ப – like loud music (கடுப்ப – உவம உருபு), பண்ணுப் பெயர்த்து – played different tunes, வீழ் துணை தழீஇ – embracing their beloved partners (தழீஇ – சொல்லிசை அளபெடை)

பரத்தையரது வாழ்க்கை

………………………….வியல் விசும்பு கமழ,
நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ,
மேதகு தகைய மிகுநலம் எய்தி,   565

பெரும் பல்குவளைச் சுரும்புபடு பல்மலர்
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து,
நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப்பொய் பல கூட்டி கவவுக் கரந்து,   570

சேயரும் நணியரும் நலன் நயந்துவந்த
இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம்மான புணர்ந்தோர்,
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து,   575

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல்
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்,
ஒண்சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி   580

நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவமகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்ப்   585

பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி நீர்நனை மேவர,
நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர  (561 – 589)

The Lives of Courtesans

The courtesans of great beauty who unite with

respected men adorn their hair knots with white

flowers that spread their fragrances in the wide

sky, sway their hands donning pretty, rounded,

bright bangles as they walk, and the streets become

fragrant from the new blossoms they wear that have

just opened from buds.  They are also decked with

many flowers, resembling small bushes of the rainy

season whose fragrances are like those of the many

large kuvalai flowers, buzzed by bees, with many

fragrances.

 

They embrace men tightly, their chests scarred by

fine ornaments, tell them confusing lies, hide the

truths, attract many young men from near and far,

and like bees with delicate wings that take the fine

pollen and fly away leaving the flowers empty, they

take away the wealth of these men, and leave them

confused.  Abandoning sweet sleep with them,

like birds that go in search of fruit trees, they go to

many wealthy men who live in huge houses with

gods where weddings are performed.  Wearing fine,

bright gold jewels, they get close to many in the

bright flame of lamps, and like the celestial women

from the blue skies, they cause the hearts of those

who see them to tremble.

 

They dance to the music of lutes and drums in the

first phases of nights, and tiring of the cold shores of the

deep waters filled with sand dunes, they pluck tender

sprouts from thick stems, weave them into garlands

with water-dripping kuvalai flowers, wear them low

touching the edges of their feet, and play poythal games

in their fragrant houses.

Notes:  நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி (569) – வடுக்கொள முயங்கி தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் தம் மார்பிலே வடுப்படும்படியாகத் தழுவி.  தொடி வடு – கலித்தொகை 71 – தொடி வடு, கலித்தொகை 78 – தொடி உற்ற வடு, கலித்தொகை 91- தொடி உற்ற வடுவும்.  அகநானூறு 142 –  தொடிக்கண் வடுக் கொள முயங்கினள்.  கொண்டி மகளிர் (583) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள் வாங்குதலையுடைய வரைவின் மகளிர், கொண்டி = கொள்ளையுமாம்.  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.

Meanings:  வியல் விசும்பு கமழ – the wide sky becomes fragrant, நீர் திரண்டன்ன – like water that is collected, கோதை பிறக்கு இட்டு – adorning their hair knots with strands of white flowers, ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – swaying their hands with pretty rounded bright bangles, போது அவிழ் புது மலர் – new flowers just opened from buds, தெரு உடன் கமழ – the streets become fragrant, மேதகு தகைய –  with great beauty, with great esteem, மிகு நலம் எய்தி – attained great beauty, பெரும் பல் குவளைச் சுரும்புபடு பல் மலர் திறந்து – many large blue waterlily flowers buzzed by bees open, மோந்தன்ன – like smelling, சிறந்து கமழ் நாற்றத்து – with fine fragrances, கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து – wore flowers resembling the rainy season small bushes (கொண்டல் – ஆகுபெயர் முகிலுக்கு), நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி – they embrace them causing scars on their chests with fine ornaments, மாயப்பொய் பல கூட்டி – they tell some confusing lies, கவவு – embrace, கரந்து – hide, சேயரும் நணியரும் – those who are far and near, நலன் நயந்து வந்த இளம்பல் செல்வர் – some young wealthy men who came desiring their beauty,  வளம் தப வாங்கி – take away their wealth, நுண் தாது உண்டு – eating fine pollen, வறும் பூத் துறக்கும் – abandon the empty flowers, மென் சிறை வண்டினம்மான – like the bees with delicate wings, புணர்ந்தோர் நெஞ்சு – the hearts of those they united with, ஏமாப்ப – to be confused, இன்துயில் துறந்து – abandoning sweet sleep (இன்துயில் – இடகடரக்கல்), பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல – like birds that go in search of fruits, கொழுங் குடிச் செல்வரும் பிறரும் – very rich men and others, மேஎய மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல் – tall rich fine houses with gods where marriages were performed (மேஎய – இன்னிசை அளபெடை), ஆய் பொன் – beautiful gold, chosen gold, அவிர் தொடிப் பாசிழை மகளிர் – women with bright new bangles, ஒண் சுடர் விளக்கத்து – in bright light, பலர் உடன் துவன்றி – be close with many, நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர் மான – they are like the celestial women in the blue sky (மான – உவம உருபு, a comparison word, நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் – prostitutes who cause fear in those who see them (நடுக்குறூஉ – இன்னிசை அளபெடை), யாம நல் யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடி – they danced to fine lutes and drums in the first phase of the nights, குண்டு நீர்ப் பனித்துறைக் குவவு மணல் முனைஇ – tiring the heaps of sand in the cold shores of deep waters (முனைஇ – சொல்லிசை அளபெடை), மென் தளிர்க் கொழுங் கொம்பு கொழுதி – plucked delicate sprouts from thick stems, நீர்நனை மேவர நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி – wore long strands of water-dripping blue waterlily flowers that touched the edges of their feet, மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர – played poythal games in all their fragrant houses

ஓண நாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்   590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி   595

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதரக்,  (590 – 599)

Warriors on Ōnam day

On Ōnam day, the birthday of Thirumal

adorned with a gold garland who destroyed

groups of Avunars, in the settlement of brave

warriors adorned with bee-swarming flowers with

marks on their faces caused by curved swords, scars

on their foreheads, and big hands that bore battles,

there are elephant fights between rival groups,

and spectators drunk with strong liquor roam

on the ground with pebbles that hurt them, laid

down along the long, dark cloth boundaries to

protect them from the elephants.

Meanings:  கணம் கொள் அவுணர்க் கடந்த – destroyed groups of Avunars, பொலந்தார் மாயோன் – Thirmal with gold garland, மேய ஓண நன்னாள் – the day of his birth, கோணம் தின்ற – ruined by curved swords/goads, வடு ஆழ் முகத்த – with faces with deep scars, சாணம் தின்ற – scarred by weapons, சமம் தாங்கு தடக்கை – big hands that bore battles, மறம் கொள் சேரி – neighborhood/village/settlement of brave warriors, மாறு பொரு செருவில் – in battle fought because of differences, மாறாது – unchanging, உற்ற வடுப்படு நெற்றி  – forehead with scars, சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் – great warriors who desire war with strands of bee-buzzing flowers, கடுங்களிறு ஓட்டலின் – since they rode/goaded the fierce elephants, காணுநர் – spectators,  இட்ட – laid down, நெடுங்கரைக் காழகம் – dark colored long cloth boundaries, நிலம் பரல் உறுப்ப – pebbles  on the ground hurt, கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதர – roamed happily after drinking strong liquor



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்

கணவர் உவப்ப புதல்வர்ப் பயந்து,   600

பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு,
வளமனை மகளிர் குளநீர் அயர,  (600 – 603)

Women Who Bore Babies

Women from wealthy homes who bore

sons making their husbands happy, their

young, thick, lifted breasts secreting milk,

bathe in ponds with thriving relatives after

the stinking birth procedures were over.

Meanings:  கணவர் உவப்ப புதல்வர்ப் பயந்து – bore sons making their husbands happy, பணைத்து ஏந்து இளமுலை – young thick breasts that are lifted, அமுதம் ஊற – secreting nectar (milk), புலவுப் புனிறு தீர்ந்து – after the stinking birth procedures are over, பொலிந்த சுற்றமொடு – with thriving relatives, with fine relatives, வள மனை மகளிர் – women from wealthy homes, குள நீர் அயர – played in the pond water

சூல்மகளிர் தெய்வத்திற்கு மடை கொடுத்தல்

திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி,   605

நுண்நீர் ஆகுளி இரட்ட பலவுடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு,
நல்மா மயிலின் மென்மெல இயலி
கடுஞ்சூல் மகளிர் பேணி கைதொழுது,
பெருந்தோட் சாலினி மடுப்ப,  (604 – 610)

Pregnant Women give Offerings

Women in their first pregnancies, of delicate

nature and pea**** walk, pray and give offerings

along with women possed by god, led by those carrying

many lamps with bright flames, as ākuli drums and

mulavu drums are beaten in a fine manner, and

songs are sung in sevvali tunes to the music of fine

lutes, holding the frets on its stems.

Notes:  மெய்ந்நிறுத்து (604) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மெய் நிறுத்தலாவது அதனைச் செறித்துப் பண்ணமைத்தல்.  சாலினி (610) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேவராட்டி, தெய்வம் ஏறி ஆடும் மகள்.

Meanings:  திவவு மெய்ந்நிறுத்து – holding the frets on the stems, tightening the frets, செவ்வழி பண்ணி – sing sevvali tunes, குரல் புணர் நல்யாழ் – sing along with fine lutes, முழவோடு ஒன்றி – together with mulavu drums, நுண்நீர் ஆகுளி – played the ākuli drums in a fine manner, இரட்ட – beaten, பலவுடன் – along with others, ஒண் சுடர் விளக்கம் முந்துற – with lamps with bright flames leading (for rituals), மடையொடு  – with offerings, நல்மா மயிலின் மென்மெல இயலி – walk very delicately with the nature of pea****s, கடுஞ்சூல் மகளிர் – women who are pregnant for the first time, பேணி கைதொழுது – praise and pray, பெருந்தோட் சாலினி மடுப்ப – possessed (by god) women with large arms give offerings

வேலன் வழிபாடும் குரவைக் கூத்தும்

………………………………………… ஒரு சார்,
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக்கூடு இன் இயம் கறங்க நேர் நிறுத்துக்,
கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை, (610 – 615)

Velan’s Prayers and Kuravai Dances

On one side, a vēlan who instills fear saying that

problems are caused by Murukan’s wrath, surrounds

people as sweet instruments are played in a rhythmic

manner.  Adorning himself with the rainy season’s

kurinji flowers, he prays to Murukan who wears

kadampam flowers.  In all the common grounds,

women hold hands and perform kuravai dances.

Notes:  கடம்பின் சீர் மிகு நெடுவேள் கார் மலர்க் குறிஞ்சி சூடி (613-614) – நச்சினார்க்கினியர் உரை – ‘கார்காலத்தான் மலரையுடையவாகிய குறிஞ்சியைச் சூடி கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபடுகையினாலே’, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘கார்காலத்தான் மலர்தலையுடைய குறிஞ்சிப் பூவினைச் சூட்டிக் கடப்ப மரத்தின்கண்ணே புகழ்மிக்க செவ்வேளாகிய முருகனை வழிபடுதலாலே’.  அருங்கடி (611) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு அச்சம்.  என்னை?  கடியென் கிளவி வரைவே கூர்மை  காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்றாயீரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே (தொல்காப்பியம். உரியியல் 87).

Meanings:  ஒரு சார் – on one side, அருங்கடி வேலன் – fierce vēlan (Murukan priest), முருகொடு – because of Murukan, வளைஇ – surrounding (சொல்லிசை அளபெடை), அரிக்கூடு இன்இயம் கறங்க – as sweet instruments play in a rhythmic manner, நேர் நிறுத்து – worshipping Murukan, கார் மலர்க் குறிஞ்சி சூடி – adorning himself with kurinji flowers of the rainy season, adorning the kadampam tree with kurinji flowers,  கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணி – prays to great Murukan wearing kadampam garlands, adorns a kadampam tree where Murukan dwells and prays (கடம்பு அமர் நெடுவேள் – பெரும்பாணாற்றுப்படை 75), Anthocephalus cadamba, Kadampa oak, தழூஉப் பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை – women perform kuravai dances in the common grounds holding their hands (தழூஉ – இன்னிசை அளபெடை, பிணையூஉ – இன்னிசை அளபெடை)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இரவின் முதற்சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்

…………………………………………சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேரிசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப்,  (615 – 620)

Events of the First Phase of Night end

After the first phase with discourses, music,

dances and various uproarious and confusing

sounds, which is like the uproar in the

communities celebrating the birthday of Vēl king

Nannan, ended,

Meanings:  சேரிதொறும் – in all the communities, உரையும் பாட்டும் ஆட்டும் – discourses and music and dances, விரைஇ வேறு வேறு கம்பலை – different different mixed uproarious sounds (விரைஇ – சொல்லிசை அளபெடை), வெறி கொள்பு மயங்கி – confusing a lot, பேரிசை நன்னன் பெரும் பெயர் நன்னாள் – famous small-region king Nannan’s birthday, சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு – like the uproar that rose up in the celebrations in the communities, முந்தை யாமம் சென்ற பின்றை – after the first phase of night

இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர,
நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்   625

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப,   630

பானாள் கொண்ட கங்குல் இடையது;  (621 – 631)

 

The Second Phase of Night in the City

the sounds of conch shells die down, shop

keepers remove pole props and close the

big shops where prices are called out, delicate

women wearing bright jewels go to sleep,

vendors who sell delicate adais that are like

honeycombs with fine lines and mōthakams that

are made on the palms pressing fingers,

with fillings with sugar syrup, go to sleep,

and artists who dance in the festivals go to sleep,

and everyone has sought sweet sleep.

In the middle phase of night, the town is like the

quiet cold ocean where sounds have died down.

Notes:  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 51).

Meanings:  பணிலம் கலி அவிந்து அடங்க – the sounds of conch shells ended, காழ் சாய்த்து – remove the prop poles, நொடை நவில் நெடுங்கடை அடைத்து – close the big shops where prices are called out, மடமதர் ஒள் இழை மகளிர் – delicate/naive beautiful women with bright jewels, பள்ளி அயர – went to bed, நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை – delicate adais that are like honeycombs with fine lines (இறாஅல் – இசைநிறை அளபெடை, புரை – உவம உருபு, a comparison word), அயிர் உருப்பு உற்ற – with sugar pieces (karkandu) melted, ஆடு அமை விசயம் – made with sugar syrup (நச்சினார்க்கினியர் உரை  – இதன் முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடை), கவவொடு – with filling, பிடித்த வகை அமை மோதகம் – a kind of mōthakam,  தீஞ்சேற்றுக் கூவியர் – sellers who sell items with sugar syrup, தூங்குவனர் உறங்க – those who sleep go to sleep (தூங்குவனர் உறங்க – ஒருபொருட் பன்மொழி), விழவின் ஆடும் வயிரியர் மடிய – artists who dance in festivals go to sleep, பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய – like the cold ocean where sounds have died down (புரை – உவம உருபு, a comparison word), பாயல் வளர்வோர் – those who are in bed, கண் இனிது மடுப்ப – eyes go to sleep sweetly, பானாள் கொண்ட கங்குல் இடையது – in the middle phase of the night

மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்

பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய்கோல்
கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப,
இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்   635
தொடலை வாளர் தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்   640

நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும்
கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த   645

நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்க அருங்கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரை நாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின்,   650

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியா ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பிப்,  (632 – 653)

The Third Phase of the Night

In the third phase of the night, ghouls and deities

take shape and roam, Kootruvan roams with

a fine rod along with ghouls that choose to kill,

darkness is as dark as the skin of female elephants,

there are robbers wearing slippers, carrying dangling,

sharp swords that can break stones and chop trees,

and sharp knives with short handles placed around

their thighs.

 

They wear clothing made from dark blue fabric,

finely made, the color of fine black sand, tie elegantly

ladders made with thin ropes around their waists,

carry chisels which can dig into the land, and roam

desiring to steal precious jewels, hiding from the view

of others.

 

There are fearless and well trained by methods

of books, the principled town guards who do not go

to sleep, who are praised by many, who bear arrows,

who are like powerful tigers that stalk strong male

elephants in the streets where chariots are driven.

They protect the streets without slack, removing the fears

of people, even in the middle of the night, even when there

is heavy downpour and the streets are flooded and deities

roam.

Notes:  அகநானூறு 3 – முதலை மேஎந்தோல் அன்ன.  தேர் வழங்கு தெரு:  அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.  C. ஜெகந்நாதாசார்யார் உரை – அடியர், கச்சினர், சுற்றினர், உளியர், வாளர் என்ற வினைக்குறிப்பு முற்றுக்கள் வினையெச்சப்பொருட்டாய், செருப்பைத் தொட்டுக், கச்சைக்கட்டி, நூலேணியைச் சுற்றி, உளியை எடுத்து, வாளைப் பிடித்து என வந்து நிற்குமாறு காண்க.  இங்ஙனம் நிற்குமாறு ‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’ (தொல்காப்பியம், எச்சவியல் 63) என்பதனால் உணர்க.  மற்றை என்னும் ஐகார ஈற்று இடைச்சொல் முந்தைய யாமம் என முன்னர்ச் சுட்டப்பட்டதனையொழித்து அதனினங்குறித்து நின்றது –  ‘மற்றையது என்னும் கிளவிதானே சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே’ (தொல்காப்பியம் இடையியல் 16).

Meanings:  பேயும் அணங்கும் – ghouls and deities, உருவு கொண்டு – taking shape, ஆய் கோல் கூற்ற – god of death with a fine scepter,  Kootruvan, கொல் தேர் கழுதொடு – along with ghouls that choose to kill, along with ghouls that move like chariots, கொட்ப – roam, இரும்பிடி மேஎம் தோல் அன்ன இருள் – darkness is like the top skin of female elephants (மேஎம் தோல் = பொருந்திய தோல், மேல் தோல், மேஎம் – இன்னிசை அளபெடை), சேர்பு – reach, கல்லும் மரனும் துணிக்கும் – can break stones and chop trees (மரன் – மரம் என்பதன் போலி), கூர்மைத் தொடலை வாளர் – those  (thieves) with sharp swords hanging on their waist, தொடுதோல் அடியர் – they wear slippers on their feet, குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி – stuck around their thighs are sharp knives with short handles, சிறந்த கருமை – fine darkness, நுண்வினை – finely made, நுணங்கு அறல் நிறம் – color of fine black sand, கவர்பு புனைந்த நீலக் கச்சினர் – those wearing blue colored clothing around their bodies, மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர் – tied very elegantly around their waist ladders made with fine ropes,  நிலன் அகழ் உளியர் – having sharp metal tools to dig into the earth (நிலன் – நிலம் என்பதன் போலி), கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் – men who roam around to steal because of their desire for jewels (நசைஇ – சொல்லிசை அளபெடை), ஒடுக்கம் ஒற்றி – can hide from others, வயக் களிறு பார்க்கும் வயப்புலி போல – like strong tigers that stalk powerful elephants, துஞ்சாக கண்ணர் – men with their eyes not sleeping, அஞ்சாக் கொள்கையர் – men with principles of not fearing, அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் – manly men who are praised by knowledgeable people, செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – trained well by the faultless (perfect) methods of books dense with information (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), ஊர் காப்பாளர் – the town guards, ஊக்க அருங்கணையினர்  – those with arrows not letting escapes (by robbers), தேர் வழங்கு தெருவில் – in the streets where chariots ride,  நீர் திரண்டு ஒழுக – water collects and flows abundantly, மழை அமைந்து உற்ற அரை நாள் அமயமும் – at the midnight time when rains come, அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – since they roam with desire without slack (வழங்கலின் – இன் ஏதுப்பொருளது), கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – helpless nights when gods roam, அச்சம் அறியா – not knowing fear, ஏமம் ஆகிய – as protection, மற்றை யாமம் – the phase which came after the previous phases of night, பகல் உற – separating, கழிப்பி – passing



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விடியற்காலத்தில் மதுரை மாநகர்

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு,   655

ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண காழோர்
கடுங்களிறு கவளம் கைப்ப நெடுந்தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப்   660

பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்பக்,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக்
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய,   665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்றச்
சூதர் வாழ்த்த மாகதர் நுவல,   670

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணி மயில் அகவ,   675
பிடி புணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டு உறை வயமாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்தனையராகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த   680

பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன
அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப,   685
இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை;  (654 – 686)

The City in the Morning

In the morning, as night departs and dawn

arrives with the spreading rays of the sun,

when protection is afforded to all, Brahmins

who chant sing the Vēdas, sounding like

pollen-eating bees humming on fragrant flowers

that have just blossomed in ponds,

lute players strum their lute strings sweetly

and play in marutham melody with rhythm,

elephant keepers hand feed balls of food to their

fierce male elephants in the stables,

horses that pull tall chariots chew grass,

shop keepers plaster the floors of their shops

where many items are sold,

those who sell toddy call out prices,

housewives sleep in the homes embraced by their

beloved husbands, the jingling sounds of their

lightning-like, bright, dazzling gold jewels heard,

sounds of doors of fine houses with sturdy walls are

heard, loud, joyous sounds of those who are drunk

that are like the prattles of young children are

heard, bards sing praises, the time keepers

announce the times along with those who praise,

sweet drums roar, bulls bellow, fowls with

spots crow, pretty pea****s screech, beautiful geese

cry along with large herons,

large male elephants that unite with their females

trumpet,

wild animals and tigers in strong cages make

noises,

women resembling rising lightning that appears

in the sky among clouds, are joyously drunk with

liquor, sulk with their husbands and break their

thick necklaces scattering pearls and gems on the

ground which appear like embers thrown on the land

after melting gold, and along with that lay scattered

beautiful, tender areca palm nuts in the front yards

filled with sand, and buzzing bees hover over delicate,

faded flowers that are removed along with fine

ornaments.

Notes:   நெடுநல்வாடை 93-94 – பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி புல் உணாத் தெவிட்டும்.  ஆரம் சொரிந்த முத்தமொடு பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும் (681-83) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வடத்தின்கண் முத்தும் பிற மணிகளும் பொன்சுடு நெருப்பு நிலத்தே சிந்திக் கிடந்தாற்போன்று சிதறி அவற்றோடு அழகிய மெல்லிய பச்சைப் பாக்கும் விழுந்து, ச. வே. சுப்பிரமணியன் – அறுத்த மாலையிலிருந்து மணிகளும் முத்துக்களும் உதிர்ந்தன.  அக்காட்சி பொன்னைச் சுடும் நெருப்புச் சிந்தியத்தைப் போலும், அழகிய பச்சைப் பாக்கு உதிர்ந்ததைப் போலும் இருந்தது.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484,  மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  வேதாளிகரொடு (671) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரிக்கூத்து உட்பட்ட வேதாளிக்கூத்தினை ஆடுபவரோடு.  C. ஜெகந்நாதாசார்யார் உரை – ‘பாட’ முதல் ‘சீப்ப’ வரையுள்ள வினையெச்சங்கள் அடுக்கி ‘தலைப்பெயரும்’ என ஓர் முடிபு கொண்டன.

Meanings:  போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத் தாது உண் தும்பி போது முரன்றாங்கு – like pollen-eating bees that hummed over fragrant flowers that just blossomed in a pond, ஓதல் அந்தணர் வேதம் பாட – chanting Brahmins sing the Vēdas,  சீர் இனிது கொண்டு – sweetly with rhythm, நரம்பு இனிது இயக்கி – strumming the strings, யாழோர் மருதம் பண்ண – lute players play in marutham melody, காழோர் கடுங்களிறு கவளம் கைப்ப – elephant keepers hand feed balls of food to their fierce male elephants, நெடுந்தேர்ப் பணை நிலைப் புரவி –in stables, horses that draw tall chariots,  புல் உணாத் தெவிட்ட – eat and chew its food which is the grass, chew the food which is grass and neigh (உணா – உணவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), பல்வேறு பண்ணியக் கடை – shops with many products, மெழுக்கு உறுப்ப – applying a plaster of cowdung and cleaning up (the shops), கள்ளோர் களி நொடை நுவல – those who sell toddy/alcohol call out the prices, இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி – people in homes sleep holding their desired partners, புலர்ந்து விரி விடியல் எய்த – early morning arrives with the spreading rays of the sun, விரும்பி கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – like lightning streaks that shine and blind the eyes (புரை – உவம உருபு, a comparison word), ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி  – sounds from bright gold jewels are heard, திண் சுவர் நல் இல் கதவம் கரைய – doors of fine houses with sturdy walls screech or sounds heard since they are opened, உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – the sounds of those who are drunk happily and have hangovers and prattle (with blocked words) like kids with their tongues are heard,  சூதர் – bards who stand up and praise, வாழ்த்த –  praise,  மாகதர் – bards who sit down and praise, நுவல – utter praises, வேதாளிகரொடு – along with those who sing praises according to their field of interest (தத்தம் துறைக்கு ஏற்ப இசைப்ப), நாழிகை இசைப்ப – time keepers utter the time, இமிழ் முரசு இரங்க – the sounds of sweet drums are heard, ஏறு மாறு சிலைப்ப – bulls make noises, பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – fowls with spots crow in the morning, யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய – beautiful geese cry along with large male herons/storks, அணி மயில் அகவ – pretty pea****s screech, பிடி புணர் பெருங்களிறு முழங்க – large male elephants that unite with their female trumpet, முழுவலிக் கூட்டு உறை வயமாப் புலியொடு குழும – the wild animals and tigers in cages make sounds, வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – in the blue colored sky which the clouds split (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end),  மின்னு நிமிர்ந்தனையராகி – they were like rising lightning, நறவு மகிழ்ந்து – they enjoyed alcohol (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), மாண் இழை மகளிர் புலந்தனர் – the women wearing fine jewels sulk, பரிந்த பரூஉக் காழ் – thick strands that they broke (பரூஉ – இன்னிசை அளபெடை, காழ் ஆரம் – இருபெயரொட்டு), ஆரம் சொரிந்த முத்தமொடு – with pearls dropped from strands, பொன் சுடு நெருப்பின் – like embers from melting gold, like sparks from melting gold, நிலம் உக்கென்ன – scattered on the land, அம்மென் குரும்பைக் காய் படுபு – beautiful tender tiny coconuts/areca nuts and others are scattered, பிறவும் – and others (gems and gold from their necklaces), தருமணல் முற்றத்து – in the front yard with spread sand, அரி ஞிமிறு ஆர்ப்ப – bees with stripes buzz, மென் பூஞ்செம்மலொடு – along with delicate faded flowers, நன்கலம் சீப்ப – picking up fine jewels, இரவுத் தலைப்பெயரும் – as night leaves, ஏம வைகறை – the protective  dawn (இரவுத் தலை – தகர ஒற்று விகாரம்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மதுரையின் சிறப்பு

மைபடு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி
வேல் கோல் ஆக ஆள் செல நூறி,   690

காய் சின முன்பின் கடுங் கட்கூளியர்
ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடு உடை நல்எயில் அணங்குடைத் தோட்டி
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி,
நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும்   695
கங்கை அம் பேர் யாறு கடற் படர்ந்தாங்கு
அளந்து கடை அறியா வளங் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச் (687 – 699)

Splendors of Mathurai

Elephants with lifted tusks, that were abandoned

in battlefields by great enemy warriors with huge

shoulders, who ruin others,

rapidly leaping horses that were seized from enemy

countries,

herds of cattle brought by warriors using their spears

as goads after killing enemy warriors with great rage

in the light of the flames they set to enemy towns

with fine forts and fierce gates,

and fine jewels are brought as tributes with praises.

The abundant flow of gifts is like the beautiful, huge

Ganges river flowing into the ocean.

The limitless goods and abundant prosperity in

Madurai of great fame, is a sight to behold, even by

those in the celestial world.

Notes:  ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும் (692) – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – வெட்சிப்போர் கூறிற்று.  என்னை?  வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் (தொல்காப்பியம். புறத்திணையியல் 2).

Meanings:  மைபடு – with faults, பெருந்தோள் மழவர் – warriors with huge shoulders, ஓட்டி – chasing away, இடைப் புலத்து ஒழிந்த – driven and abandoned in the battlefield, ஏந்து கோட்டு யானை – elephant with lifted tusks, பகைப் புலம் கவர்ந்த – seized enemy lands, பாய் பரிப் புரவி – rapidly leaping horses, வேல் கோல் ஆக – used their spears as sticks/goads, ஆள் செல நூறி – killed men there (other wasteland warriors), காய் சின முன்பின் கடுங் கண் கூளியர் – fierce-eyed mighty warriors with great rage, ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – cattle herd brought in the light of burning towns, நாடு உடை நல் எயில் – fine forts in the countries, அணங்குடைத் தோட்டி – fierce gates, நாள்தொறும் விளங்க – every day for prosperity, கைதொழூஉப் பழிச்சி – prayed and praised (தொழூஉ – இன்னிசை அளபெடை), நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும் – all the fine jewels brought as tributes, கங்கை அம் பேர் யாறு கடற் படர்ந்தாங்கு – like how the great river Ganges flows to the ocean, அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – with limitless things and prosperity, புத்தேள் உலகம் கவினிக் காண்வர – those in the celestial world to see its beauty, மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – Mathurai with great fame

இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

சினை தல மணந்த சுரும்புபடு செந்தீ   700

ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து,   705

மயில் ஓரன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி தளிர்ப்புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத்   710

தாதுபடு பெரும் போது புரையும் வாள்முகத்து
ஆய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து,
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சித்,  (710 – 713)

The King at Night

The king sleeps on a lovely bed with flower

strands, embracing the fragrant shoulders of his

women who wear perfect gold jewels that shine

like the soft, bright light of the rays of the glowing

sun in a grove where asoka trees have opened their

bright blossoms that are like red flames on their

branches, swarmed by bees, and brighten the

land.

The women are delicate like pea****s.  Their bodies

are like the pretty tender leaves of mango trees, and

their budding pallor spots resemble the central vein

on the backside of mango sprouts.

They have sharp teeth, low hanging ear lobes with

bright earrings, bright faces like pollen-rich lotus

flowers growing in ponds for gods, and they wear

beautiful bangles.

Meanings:  சினை தலைமணந்த – on the tree branches, சுரும்பு படு – attacked by bees, swarmed by bees, செந்தீ ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – in a grove where asoka trees have opened their bright blossoms that are like red flame, Saraca indica, சுடர் பொழிந்து – pouring light, ஏறிய – rising up, விளங்கு கதிர் ஞாயிற்று இலங்கு கதிர் இள வெயில் தோன்றியன்ன – like the soft light of the rays of the bright sun that appeared, தமனியம் – gold, வளைஇய – surrounded (சொல்லிசை அளபெடை), தாவு இல் – faultless, விளங்கு இழை – bright jewels,  நிலம் விளக்குறுப்ப – making the land bright,  மேதகப் பொலிந்து – is bright and splendid, மயில் ஓரன்ன சாயல் – pea****-like nature, மாவின் தளிர் ஏர் அன்ன மேனி – body like the beautiful tender leaves of mango trees, தளிர்ப்புறத்து ஈர்க்கின் – the vein on the backside of sprouts, அரும்பிய திதலையர் – women with budding pallor spots, கூர் எயிற்று  – with sharp teeth, ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் – with bright earrings on their hanging ears, கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் தாதுபடு பெரும் போது புரையும் – are like the pollen-rich flowers of lotus in ponds of gods (புரை – உவம உருபு, a comparison word), வாள் முகத்து – bright faced, ஆய் தொடி மகளிர் – women with beautiful bangles, women with chosen bangles, நறுந்தோள் புணர்ந்து – embracing fine shoulders, கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி – slept on a beautiful/splendid bed with flower strands

காலையில் மன்னன்

திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும்   715

ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல்
பொலஞ்செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்   720

சோறு அமை உற்ற நீருடைக் கலிங்கம்
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி,  (714 – 724)

The King in the Morning

O king!  You rise sweetly from perfect sleep to the

music of bards, and rub sandal paste on your chest

adorned by a bright, ray-emitting pearl strand.

Bees with stripes swarm your flower garlands woven

with many kinds of flowers.

 

Wearing bright gold rings on your fingers and bracelets

on your strong, large arms, and donning starched,

bright clothing, you appear like a lovely painted statue

of Murukan created by a sculptor.

Notes:  திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து (714) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூதர் இனிய இசையால் ஏத்தித் துயில் எடுத்ததாலே திருந்திய உறக்கத்தினின்றும் இனிதாக எழுந்து.  முருகு இயன்றன்ன உருவினை ஆகி (724) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடவுளாகிய முருகன் தான் அறிவுப் பொருளும் வியாபகப் பொருளும் ஆதல் நன்கு அறிந்தேயும், தன் தகவுக்கேற்பச் சிற்பியால் இயற்றி அழகு செய்யப்பட்ட வடிவத்தே நின்று அடியார்க்கு காட்சியின்பம் நல்கி அருளுமாப்போலவும் அவன் தான் ஏறிய பாவை அழியுங்கால் தனக்கு அழிவின்மையை உணர்துவனாய் அவ்வுருவத்திற் பற்றின்றியும் உவந்து விளையாடுமாறு போலவும் அம்முருகன் உருவத்தினின்று விளையாடுதல் தன் பொருட்டன்றி உயிர்களின் பொருட்டே ஆதல் போன்றும், நீதானும் உனது உயிரியல்பினை இப் பாச இயல்பினான் வேறாக உணர்ந்து கொண்டனையாய். உன் தகுதிக்கேற்ப ஊழாகிய சிற்பியால் இயற்றி கை செய்து அளிக்கப்பட பாவையாகிய இவ்வுலகின்கண் பற்றின்றியும் உவந்திருந்து, நினக்கு ஏதும் பயன் கருதாமல் நின் கடமையாகிய அரசியலைப் பிறர் நலன் பொருட்டு ஊக்கத்துடன் இயற்றி வாழக்கடவை.

Meanings:  திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – woke up from perfect sleep sweetly listening to music, திண் காழ் ஆரம் நீவி – applied sandal paste from hard- core sandal trees, கதிர் விடும் ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – in the chest hugged by a bright ray – emitting pearl strand (கவைஇய – சொல்லிசை அளபெடை), வரிக் கடைப்பிரசம் – honey bees with stripes, மூசுவன மொய்ப்ப – they surround and swarm, எருத்தம் தாழ்ந்த – hanging on the neck, விரவுப் பூந்தெரியல் – flower garland with many kinds of flowers, பொலஞ்செயப் பொலிந்த – made in gold and bright, நலம் பெறு விளக்கம் –  beautiful ring, வலி கெழு தடக்கைத் தொடியொடு – along with bracelets on large hands with strength, சுடர்வர – bright, சோறு அமை உற்ற நீருடைக் கலிங்கம் – clothing with starch, உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ – wear his clothes in a splendid/beautiful and faultless manner (கவைஇ – சொல்லிசை அளபெடை), வல்லோன் தைஇய – created by a skilled craftsman (தைஇய – சொல்லிசை அளபெடை), வரிப் புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை ஆகி – you become like a beautifully carved and painted statue of Murukan



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து,   725
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த,  (725 – 727)

Praises of Warriors

Your warriors who love wars, who block

attacking enemy forces by cutting into them,

blocking like a rock dam that blocks floods,

praise your efforts and triumphs with swords!

Meanings:  வருபுனல் – flowing water, river, கற்சிறை கடுப்ப – like a rock wall (கடுப்ப – உவம உருபு), இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய – blocked attacking enemy forces by cutting into them, செருப்புகல் மறவர் – warrior who loves wars, வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – praise the great efforts of you with sword strength

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர

மன்னன் பணித்தல்

வில்லைக் கவைஇ கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின்   730

நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல் ஏற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த,
மாக்கண் முரசம் ஓவு இல் கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்
பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய,   735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை
நீர் என்னாது முறை கருதுபு சூட்டி,
காழ்மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து   740

வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல்   745
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என,  (728 – 747)

King’s Orders to bring Great Men

May you command your men to bring

to your presence,

warriors whose chests are strong holding

bows and taking arrows,

those whose

shoulders are mighty to ride on swift horses,

those who protected fine forts with narrow

moats created by breaking rocks,

those like spreading flames who destroyed large,

fine elephants amidst enemy armies, as drums

with huge eyes, with new leather covers with

hair made from murderous bulls, roar without a

break, and got injured in battle,

those great men wounded greatly in battle to whom

you gave gold thumpai garlands without asking them

what they did,

those who fought for the place that is like heaven

to flourish, even as they lost flesh from their chests

that are like the strong wheel hubs of wagons,

by the attacks of spears fixed to stems and arrows,

and those with sandal paste on their chests who

seized huge elephants belonging to enemies!

Bows and arrows are ruined.  Body shields have lost

color and their joints are broken.  You welcome your

warriors and others in this manner.

Notes:  வீழ்ந்த (736) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிற்று யானைகளை வெட்டிக் கொன்று விழுப்புண் பட்டமையான வீழ்ந்த மறவர்.  புரையோர்க்கு (737) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புரையோர் = உயர்ந்தோர், ஈண்டு உயர்ந்தோர் என்பது மறத் துறையில் உயர்ச்சி பெற்ற படைத் தலைவர்.  தம்மின் 729, 731, 736, 743 746 – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person.

Meanings:  வில்லைக் கவைஇ – embracing bows (கவைஇ – சொல்லிசை அளபெடை), கணை தாங்கு மார்பின் – with chests that can take arrows, மா தாங்கு – able to control horses, able to handle horses, எறுழ்த்தோள் – shoulders with great strength, மறவர்த் தம்மின் – bring warriors, கல் இடித்து இயற்றிய – broke rocks and created, இட்டுவாய்க் கிடங்கின் – with narrow moats, நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின் – bring leaders who protected fine fortresses, கொல் ஏற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் – huge-eyed drums with new leather cover from murderous bulls with hairs not removed, ஓவு இல் கறங்க – roars without a break, எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் – were like spreading flames in the midst of enemy army, பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய – destroyed huge fine elephants in the battlefield, விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் – bring warriors who were wounded greatly in battle, புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை – gold thumpai flowers strung as garlands and given to those who are superior in battle, Leucas aspera,  நீர் என்னாது – not questioning them about what they did, முறை கருதுபு சூட்டி – you wore on them with proper consideration, காழ் மண்டு எஃகமொடு – with spears fixed to stems, கணை அலைக் கலங்கி – arrows ruined, பிரிபு இணை – joints that are used to attach, அரிந்த – broken, நிறம் சிதை – with ruined colors, கவயத்து – with body shields, with body armors, வானத்து அன்ன வள நகர் பொற்ப – the city gleamed like heaven, palace gleamed like the celestial world (வானத்து – வானம், அத்து சாரியை), நோன் குறட்டு அன்ன – like a strong axle box, like a strong wheel hub, ஊன் சாய் மார்பின் – chests that have lost flesh, உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் – bring those who did great work, நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த – seized herds of tall elephants, புலர்ந்த சாந்தின் – with dried sandal paste, விரவுப் பூந்தெரியல் – flower garlands with many flowers mixed, பெருஞ் செய் ஆடவர் – men who have done great deeds, தம்மின் பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என – you welcome them and everyone else

மன்னனது பெருங்கொடை

வரையா வாயில் செறாஅது இருந்து,
பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என,   750

இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்,
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி,  (748 – 752)

Generosity of the King

May you give without limits chariots with

decorations and bull elephants to bards, viralis,

poets with wealth of words, and musicians!

Notes:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வரையா – without limits, வாயில் செறாஅது இருந்து – at your door (செறாஅது – இசை நிறை அளபெடை), பாணர் வருக – welcome bards, பாட்டியர் வருக – welcome ladies from the families of bards, welcome viralis, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக – welcome musicians along with verse-rich poets, என இருங்கிளை புரக்கும் – protects huge clan of relatives, இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி – give to those who come decorated tall chariots with male elephants

மன்னனை வாழ்த்துதல்

களம் தோறும் கள் அரிப்ப,
மரம் தோறும் மை வீழ்ப்ப,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய,  755

நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய,   760

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,   765

அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்று இசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்,
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்   770

பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாகக்
கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த   775
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறகும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவை நிற் புகழ்ந்து ஏத்த,
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும்   780
மகிழ்ந்து, இனிது உறைமதி பெரும,
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே! (753 – 782)

Praising the King

May you perform fine rituals like your ancestor
Palsālai Muthukudumi of fame, who received
knowledge from fine teachers of ancient tradition,
in whose reign, in this big city, liquor was filtered
in all the fields, goats were slaughtered under all
the trees, dishes were cooked with
roasted fatty meat and ghee as colorful smoke
rose appearing like spreading rain clouds!

 

May you be like King Thiruvil Pāndiyan of fame,

spotless, and praised for this greatness by those

with great wisdom!

 

May you bring precious goods to your land

and increase the number of citizens, learn

books and attain fame, appear like the sun in the

midst of the ocean, and the moon in the midst

of stars among your bright ministers!

 

May you shine sweetly with everlasting fame!

 

May Māran of the ancient clan who adorns himself

with beautifully made flower garlands be a leader to

young Kosars who kill their enemies with their

unfailing swords and listen to his commands and

follow the right path!

 

May the five great assemblies and the

small-region kings, famed for their bravery, praise

you in your splendid court of renown!

 

May you enjoy this good life that has been given to you,

being served liquor in gold cups by young women

with glittering ornaments!

Notes:  குரூஉ (757) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  நிலந்தரு திருவின் நெடியோன் (763) – நச்சினார்க்கினியர் உரை – எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வமுடைய மாயோனைப் போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவிற்பாண்டியன்  என்னும் புகழால் நீண்ட மன்னனைப் போல.  நெடியோன் உம்பல் (மதுரைக்காஞ்சி 61) – நச்சினார்க்கினியர் உரை – வடிம்பலம் நின்ற பாண்டியன் வழியில் வந்தோனே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனே.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:  களம் தோறும் கள் அரிப்ப – filtered liquor in all the fields, மரம் தோறும் மை வீழ்ப்ப – slaughtered goats under each tree, நிண ஊன் சுட்டு உருக்கு அமைய – roasted fatty meat and melted it, நெய் கனிந்து வறை ஆர்ப்ப – made many poriyals using ghee, குரூஉக் குய்ப் புகை – colorful smoke (குரூஉ – இன்னிசை அளபெடை), மழை மங்குலின் பரந்து தோன்றா – appearing like spread rain clouds, வியல் நகரால் – in the wide city, பல் சாலை முது குடுமியின் – like king Palsālai Muthukudumi, நல் வேள்வித் துறை போகிய – may you perform good rituals with aspects (போகிய – வியங்கோள்), தொல் ஆணை – ancient command, நல் ஆசிரியர் – fine teachers, புணர் கூட்டு உண்ட – learned from them, புகழ் சால் சிறப்பின் – with fame, நிலந்தரு திருவின் நெடியோன் போல – like king Thiruvil Pāndiyan who seized land for his country, like Thirumal, வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர் வாய் – praised by the greatly wise with awe and wisdom, புகர் அறு சிறப்பின் தோன்றி – appearing with spotless greatness, அரிய தந்து – bring rare goods/wealth, குடி அகற்றி – increased citizens, பெரிய கற்று இசை விளக்கி – learned books and attained fame, முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – like the sun amidst the ocean, பல்மீன் நடுவண் திங்கள் போலவும் – like the moon between many stars, பூத்த சுற்றமொடு – with many relatives, with many ministers, பொலிந்து – flourishing, இனிது விளங்கி – shine sweetly, பொய்யா நல் இசை நிறுத்த – for unfailing fine fame to last, புனை தார்ப் பெரும் பெயர் மாறன் – greatly famous Māran wearing hand-made garlands, great Māran wearing beautiful garlands, தலைவனாக கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர் – as a leader to young Kosars who kill enemies with their unfailing swords, இயல் நெறி மரபின் – according to the tradition of the right path, நின் வாய்மொழி கேட்ப – listen to your words, பொலம் பூண் ஐவர் உட்பட – including the five wearing gold ornaments (5 advisors to the king, 5 advisory groups),  புகழ்ந்த மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர் – small-region kings with fame and bravery, அவரும் பிறகும் – them and others, துவன்றி – together, பொற்பு விளங்கு புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த – praise you in your famous splendid assembly, இலங்கு இழை மகளிர் – women wearing gleaming jewels, பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப – serve fragrant liquor in golden bowls, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி – stay sweet enjoying every day (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பெரும – O lord, வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – this life you are given by good destiny



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard