New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Speculations சிந்து எழுத்துக் கற்போம்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Speculations சிந்து எழுத்துக் கற்போம்
Permalink  
 


சிந்து எழுத்துக் கற்போம் - 1
சிந்துத் தமிழ் எழுத்து .
சிந்து எழுத்தும் சங்கத் தமிழியும் உறவுடையவை என்று நான் இந்திய மூத்த ஆய்வாளர் ஒருவருடனும் , தமிழக ஆய்வாளர் ஒருவருடனும் குறிப்பிட்டுப் பேசியபோது அது தவறு தமிழி ( தமிழ் பிராமி) செமிட்டிக் - பொனீசிய ஒலிநிலை எழுத்திலிருந்து உருவானது அவை தொடர்பற்றவை என்று வாதிட்டார்கள் . ஆனால் , அவற்றினும் 1000 ஆண்டுகள் மூத்த சிந்து வெளி எழுத்து செமமிட்டிக் எழத்துடன் உறவுடையது என்றும் அதனைக்கொண்டு சிந்து எழுத்தைப் படிக்கலாம் என்று ஒருவரும் , அக்கருத்துக்கு மறுப்புரைக்காமல் இன்னொருவரும்் இருந்த போதுதான் அத்தகைய ஆய்வுகளின் - ஆய்வாளர்களின் சூதுமதியை உணர்ந்து கொண்டு என் வழியே எனது ஆய்வுகளைத் தொடர்ந்தேன்். எனது கருத்தில் இன்று நான் ஊன்றி நிற்கிறேன் . தமிழியும் சிந்துவும் உறவுடையவை அவற்றின் தொடர்பைப் பின்னிணைப்பைப் பார்த்து அறியலாம்.
சிந்து எழுத்து வடிவங்கள் சிக்கல் உடையனவாகத் தோன்றினும் அடிப்படையில் எளிமையானவை. இவற்றையெல்லாம் ஆராயுமுன் உலக எழுத்துமுறை வரலாற்றை அறியலாம். அவை சுமேரிய, எகிப்திய , சீன மற்றும் கிரீட் தீவு இலீனியர் எழுத்து முறைகளாகும். இவற்றுள் முதல் மூன்றும் படமுறையான புதிர் விடுப்பை ( pictographic - rebut methored word- signs )அடிப்படையாகக் கொண்டவை. சற்றே பிற்காலத்தில் எகிப்திய எழுத்து அகரமுலியாகவும் இரண்டு மூன்று மெய் கூட்டெழுத்து வடிவங்களைக் கொண்டும் , சுமேரிய எழுத்து அசையெழுத்துகளையுடையதாகவும் , சீன எழுத்து கோட்டுருவான ஒலிநிலைத் தன்மையுடைய ஒலியுருவன்களாகவும் ( phonogram ) சற்றே வளர்ச்சியுற்றன. புதிர் விடுப்பு முறையென்பது நமது ஆகுபெயர் முறையேயாகும் . அங்கே மலை படம் hill மலை என்பதைக் குறிப்பிடாமல் மலைதல் - சூடுதல் , போரிடுதல் என்ற பொருளில் வரும் . மலை என்பது மலையைக் குறிப்பிடாமல் அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வரும் . கிரீட்டன் லீனியர் எழுத்துகள் இயற்கை அசைநிலையான உயிர்மெய்யன் ( syllabary ) எழுத்துகளாகும். ( மூன்றாம் படம் காண்க ) .
சிந்து எழுத்து இவற்றினும் முன்னேறியதாகும்.. படவுருவன்களுடன் எளிமையான ஒலிநிலை வடிவங்களையும் பெற்றிருந்தது .சிந்து எழுத்து தன் நாகரிகத்தின் உயர்நிக்கேற்ப முன்னேறிய எழுத்தாகும் .அவற்றின் எளிமையான அடிப்படை வடிவங்கள் வடிவியல் கோணத்தன்மையுடன் ஒலிநிலையாகவும் இருந்தன. ஆய்வாளர்கள் இதனை மனங்கொளத் தவறிவிட்டனர் .இதனால் சிந்து எழுத்துக் காலத்திலேயே ( கிமு 2600 - 1700) ஒலிநிலையான எழுத்துகள் தோன்றிவிட்டதை இதனால் அறியலாம். சிந்து எழுத்து இரு வகை எழுத்து வடிவங்களால் ஆனவை. (1) ஒலிநிலையான அடிப்ப எழுத்துகள் , அந்த அடிப்படை வடிவின் மீது குறியீடிட்ட செயற்கை உயிர்மெய்கள் ,இத்தகைய இரு வகை வடிவங்களாலான கூட்டெழுத்துகள் எனபன (2) படங்கள், குறியீடுகள் , எண்கள் அடங்கிய சொலவடிவங்கள் ( word signs ) என்பன இரண்டாம் வகை . இவை தமது பெயர்களால் வேறு பொருள் உணர்த்துவன . இதன்படி அரசிலை அரச, நான்கு கட்டங்களாலான குறியீடு நகரம் , இரண்டு என்ற எண் இரு என்பது கரிய , பெரிய என்று பொருளுணர்த்தும் . ( படம் காண்க ) . சிந்து கூட்டு எழுத்து வடிவங்கள் படங்களல்ல மேற்கூறியவற்றாலான கூட்டு எழுத்துகள் என்று உணர்ந்தாலே சிந்து எழுத்து வடிவங்களின் சிக்கல் தீர்ந்துவிடும். இவை அழகுணர்வுடன் பொருளமைதிக்கேற்ப வடிவமைக்கப் பெற்றுள்ளதால் படங்கள் போன்று காணப்படுகின்றன ( படம் 3 காண்க ) . சிந்து எழுத்தை pictògraphs என்று கூறிய பர்போலா ,மகாதேவன் போன்றோர் அண்மையில் சில படவுருக்கள் தவிர பிற அனைத்தும் பொருள்கொள்ள இயலாமல் சிக்கல நிறைந்தவையாக உள்ளன என்று புலம்புவதைக் காண்கிறேன் .இதற்குக் காரணம் அவை படவுருக்கள் அல்ல என்பதுதான் .( பர்போலா செம்மொழி மாநாட்டுப் பேச்சு , மற்றும் மகாதேவனின் ரோஜா முத்தையா நூலகப் பேச்சு ) .இருவருமே பெரிதுபடுத்தாமல கமுக்கமாக இருந்து விட்டனர்.இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அவர்களால் சிந்து எழுத்தைப் படித்து பொருள்கூற இயலாது என்பதே உண்மை நிலை .சிந்து முத்திரைகள் இவ்விரு வகை வடிவங்களைக் கொண்டுள்ளன. எடு : மலையின் படம் எழுதி பக்கத்தில் அம்பு படமும் , அரச (இலை) படம் வரைந்து பக்கத்தில் அம்பு படம் எழுதினால் அவற்றை மலயன் , அரசன் என்று படிக்க வேண்டும். இது அன் , அள் என்று விகுதி எழுதாமல் தொல்காப்பியம் கூறும் ' னகர ஒற்றே ஆடூஉ அறிசொல் ' என்ற விதியைக் கொண்டது. இதனால் தொல்காப்பியம் கூறும் தமிழ் இலக்கண முறையின் தொன்மையை அறியலாம். தொலபழங்காலத்தில் தமிழ் எழுத்து எம்முறைப்படி எழுதப்பட்டதென இதனால் அறியலாம் .( படம் 5 காண்க ) . இனி தொடர்ந்து சிந்து எழுத்து முறையைப் பற்றியும் சில முத்திரைகளையும் படிக்கலாம் .மேலும் சிந்து எழுத்து அடிப்படை வடிவங்களும் தமிழி எழுத்து வடிவங்களையும ஒப்பிட்டுக் காட்டும் பட்டிகள் தந்துள்ளேன் . உங்கள் ஆய்வுக்குப் பயன்படுவதுடன் , தமிழி - சிந்து எழுத்துகளின் உறவையும் நன்கு அறியலாம் .ஒரு குறிப்பு : நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க இக்குறிப்பு. முத்திரைகளைத் தனித்தனி எழுத்துகளாகத் தமிழ்ப்டுத்தியுள்ளேன். எனது படிப்பில் ஒருவடிவம் எங்கு வந்தாலும் ஒரே ஒலியில் .அதேஎழுத்தொலியாக வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.. ஒரு எழுத்து எங்கும் ஒரே பொருளில் , ஒலியில வந்ததால்தான் அது எழுத்து முறையாகும். மேலும் பிறர் படிப்புபோல் மாற்றியும் புதியவற்றை சேர்த்தும் இணைத்தும் படித்தலகூடாது. கவனமாகப் படித்து என் குறைகளை எனக்குக் கூறுக. முத்திரை எண்கள் ஐயா மகாதேவன் அவர்களது ASI வெளியிட்ட Concordence அடிப்படையிலானது .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிந்து எழுத்துக் கற்போம் - 3
சிந்து மீன்வடிவம் ழகரமாதல்
சிந்து எழுத்து தமிழையும் அதன் வட்டார வழக்குகளையும் எழுதப் பயன்பட்டிருக்க வேண்டும் . 8 இலட்சம் சதுரக் கி மீ பரப்பளவில் வழக்கில் இருந்த ஒரு மொழியும் எழுத்தும் பல்வேறு வட்டார வழக்கில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை . ஆயினும் அடிப்படையான பொது மொழி தமிழே என்பதில் வேற்றுக் கருத்து இல்லை . சிந்து எழுத்தில் வேறு எந்த வேற்று மொழியின் சொல்லோ ஒலியோ இல்லை . சிந்து எழுத்து கி மு 2600 அளவில் முதிர் சிந்து அரப்பன் நாகரிகத்தில் நூழையும்போதே தனது முதிர்ந்த - உயர்ந்த நாகரிகம் பாண்பின் காரணமாக தனக்குரிய படவுருவன் ((Pictographic ) சொல் - வடிவ ( Word - sign ) எழுத்துடன் தமது புதிய கண்டுபிடிப்பான எளிய ஒலிநிலையான அடிப்படை வடிவங்களையும் ( Simple phonetic basic signs ) தனது எழுத்து முறையில் இணைத்துக் கொண்டது . அடிப்படை வடிவங்கள் என்பன மெய் யெழுத்து முறையிலான அசை வடிவங்களே . இவற்றை உயிர்மெய்யாக்க குறியீடுகளைப் பயன்படுத்தி செயற்கை உயிர்மெய்யன்களை ( syllables ) உருவாக்கும் முறையை அவர்களே புதிதாகக் கண்டுப்பிடித்தனர் .
அஸ்கோ பர்போலா அவர்களிடம் எனது நூலையும் படிப்புமுறையையும் தெரிவித்தபோது அவர் சொன்னது நினைவில் உள்ளது . சிந்து எழுத்துக் காலத்தில் ஒலிநிலை எழுத்து கிடையாது , எனவே எத்தகைய படிப்பு முறையாயினும் அதன் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார் . ஆனால் அவரும் அவரது சார்பாளர்களும் சிந்து நாகரிகம் மற்றும் அதன் எழுத்துக்கான காலத்தைத் தொடர்ந்தே எகிப்திய கிரீட்டன் நாகரிகங்கள் ஒலிநிலை அடிப்படையிலான எழுத்து முறைகளைக் கைக்கொள்ளத் தொடங்கி விட்டதையும் , பல ஆசிரியர்கள் சிந்துவின் ஒலிநிலைத் தன்மையைப் பற்றி குறிப்பிட்டுள்ளதையும் , படவெழுத்துகள் என்பன பொருள் தராததையும் , சிந்து எழுத்து முறையின் எளிய அடிப்படை வடிவியல் கோண வடிவங்கள் எத்தன்மையன என்று சிந்திக்காததும் அவர்களது ஆய்வுகள் பயன்தராமைக்குக் காரணங்களாகும் . ஆனால் சிந்து சமவெளி மக்கள் அடிப்படை வடிவங்களையும் அவற்றின் உயிர் - மெய்த்தன்மைகளையும் ஆராய்ந்து குறில் - நெடில் தன்மைகளையும் உணர்த்துமாறு செயற்கை உயிர்மெய்களையும் உருவாக்கி விட்டனர். அ இ ஒலிகளை ஒற்றை இரட்டைக் கோடுகளிட்டு குறில் நெடில் உணர்த்தினர் . மெய்களையும் அவ்வாறு வேறுபடுத்தினர் . பின் பட்டியல் காண்க . அய் அவ் என்பன நெட்டுயிர்களெனக் கருதி ஆ என்ற பசுத்தலை எழுத்தில் ஒன்று இரண்டு கோடுகளிட்டு அவ்வுயிர் எழுத்துகளை எழுதுகின்ற அளவு முன்னேறிய எழுத்துமுறையைக் கடைப்பிடித்தனர் .
சிக்கலான ( Intricate ) உயிர்களான உ எ ஒ என்பனவற்றை உயிர்க்குறியீடுகள் அமைக்காமல் மெய்யை எழுதி சொல் - பொருள் நிலைக்கேற்ப உயிர்மெய்யாகப் படிக்கும் மொழிச் சிக்கன முறையைக் கண்டுப்பிடித்தனர் .இம்முறைகள் தமிழ் போன்ற ஒட்டுநிலை ( agglutinated languages ) மொழிகளை எழுத ஏற்ற முறையென அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தனர். இந்த உயிர்மெய்யாக்கும் முறையையே பொனீசியர்கள் சிந்து வெளிக்கு வணிகத்திற்கு வந்தபோது கற்று மேற்காசியாவிற்குக் கொண்டு சென்றனர் . எ - டு : முத்திரை 24 : 4236 மற்றும் 26 : 1188 கீழே தந்துள்ளேன் . வி ல் ல் ன் என்றும் ம ழ வ் ட் என்றும் எழுதி வில்லோன் , மழவ்விட்ட என்றும் படித்தனர் . இவ்வாறு எழுதும் முறையைக் கண்டுப்பிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் தமிழரே .இம்முறையைப் பின்னர் எகிப்தியர்கள் கடைப்பிடித்ததுடன் ஒரு எளிய அகரமுதலி ( Alphabetic ) எழுத்துமுறையைக் கொண்டிருந்தனர் . ஆனால் அறியாமையால் அதனை எகிப்தியர் பயன்படுத்தவில்லை என்று தொன்னூலறிஞர் டேவிட் டிரிங்கர் கூறுவார் . பொனீசியர் இம்முறைப்படி l b ' l t என்று எழுதி Leba alat - for the lady ( Ashera ) இறைவிக்காக ( அஷேரா ) என்று படித்தனர் . சிந்து மக்கள் அரச ( இலை ) படம் எழுதி + ன் மெய்சேர்த்து = அரசன் என்று எழுதினர் . அவ்வாறே எகிப்தியர் Thot என்னும் கொக்கின் படம் எழுதி பக்கத்தில் + m s மெய் சேர்த்து Thotmosis என்று அரசன் பெயர் எழுதினர் . இவை கி மு 1800 ஆண்டுக்குப் பின்னர் நிகழ்ந்தது . சிந்துவில் இதனை கி மு 2600 அளவிலேயே காண்கிறோம் .
உயிரெழுத்தை முழுமைப்படுத்தாதது போலவே மெய்யெழுத்துகளையும் சிந்துத் தமிழர் முறைப்படுத்தவில்லை . எ -டு : ஒற்றை மீன் வடிவ எழுத்தைக்கொண்டு இன ஒலிகளான ல - ழ - ள எழுத்துகள் மூன்றையும் எழுதினர் . சொல்நிலை பொருள்நிலைக்கேற்ப தேவையான ஒலிகளாகப் படித்தனர் . அவ்வாறே ங - ந - த போன்ற எழுத்துகளை ண - ன - ட போன்ற ஒலியெழுத்துகளால் எழுதினர் . இதனை ஒரு குறையாகக் கருதிவிடக்கூடாது . அவர்கள் ஒலிநிலை எழுத்துகளை அப்போதுதான் கண்டுபிடித்திருந்தனர் . ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழும் போது தொடக்கத்தில் சில இடர்ப்பாடுகள் இருக்கவே செய்யும் , பின்னர் அது திருத்தப்படும் . இக்குறைகளைச் சீர்செய்த பெருங்கற்காலத் தமிழ் மக்கள் சிந்து எழுத்தின் குறைபாடுகளை நீக்கினார். தமிழ் மக்கள் மீன் எழுத்தைத் தமிழின் சிறப்பெழுத்தான ழ என்பதற்கு ஒதுக்கி , ல ள ஒலிகளுக்குப் புதிய வடிவங்கள் அமைத்தனர் . ஆகவேதான் தமிழியின் இவ்விரு எழுத்துகளும் சற்றே மாறுபட்ட வடிவநிலையில் உள்ளன . இம்மாற்றங்களைப் பின்னிணைப்புப் பட்டியில் காட்டியுள்ளேன் . செம்புகற்கால , பெருங்கற்கால வடிவங்கள் வடிவ ஒப்பியல்பின் அடிப்படையிலேயே காட்டப்படுகிறது . சிந்து எழுத்து தமிழியாக மாறிய மாற்றத்துக்கான காரணங்கள் மக்களின் பெருவாரியான பயன்பாடு , மற்றும் பனையோலை எழுத்துமுறையே எனலாம் . கேரள மாநிலம் எடக்கல் தமிழியின் ழ வடிவம் மீன் வடிவம் தமிழி எழுத்து வடிவம் பெற்றமைக்கு எடுத்துக்காட்டான இடைநிலை வடிவமாகும் . எடக்கல் தமிழி வடிவம் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது . சிந்து எழுத்து ல - ழ - ள மீன் வடிவம் முத்திரைகளில் உள்ளவாறு பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது . சிந்துத் தமிழெழுத்து உலகின் முன்னேறிய ஒலிநிலையான எழுத்தின் தாய் என்று அறியலாம் .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிந்து எழுத்துக் கற்போம்- 4.

சிந்து எழுத்து வடிவங்கள்
படவுருக்கள் அல்ல .

சிந்து எழுத்து மிகத்தொன்மையான காலத்தில் சிந்து சமவெளி நாகரிக நகரங்களில் தமிழ் மொழியை எழுதவே உருவாக்கப்பட்டது . பிறமொழிக்குரிய ஒலியோ சொற்களோ இன்றி தூய தமிழ் எழுதவே பயன்பட்டது . இதன் காலம் கி மு 2600 - 1750 என்று கருதப்பட்டாலும் கி மு 1500 அளவிலும் பயன்பாட்டில் இருந்ததைத் தொல்லியல் சான்றுகள் நிறுவுகின்றன . இது சிந்து எழுத்து (Indus script ) என்று ஆய்வாளர்களால் பொதுவாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த எழுத்து முறையைப் படவுருவன் , சொல்லுருவன் , சொல்லசையன் ( Pictographic, Logographic, Logosyllabic ) என்றும் , வேறு சிலர் கருத்துருவன் ( Idiographic ) என்றும் பலவாறு கூறுகின்றனர் . இவை யாவும் படவுருக்களை அடிப்படையாகக் கொண்டு சொல் வடிவங்களாகக் (Word signs) கருதி புதிர் விடுப்பு ( Ribus method) முறையில் படிப்பதாகும். திரு. எஸ் .ஆர் .ராவ் போன்றோர் ஒலிநிலையான எழுத்துகள் என்று செமிட்டிக் - பொனீசிய அடிப்படையில் படிக்கின்றனர் . மேலை நாட்டு ஆய்வாளர்கள் சுமேரிய எகிப்திய எழுத்துகள் படவுருக்கள் - சொல் வடிவங்களாதலால் அதே காலத்திய சிந்து எழுத்தும் அவ்வாறே இருக்கமுடியும் என்று கூறுகின்றனர். குதிரையின் கண்களில் பட்டைகள் கட்டுவதுபோல இக்கருத்தை ஆய்வாளர்கள் கட்டிக் கொண்டுள்ளனர் . இயலாததாயினும் எதற்கும் மனந்தளராமல் வேதாளத்தைப்பிடிக்க மரம் ஏறும் விக்கிரமாதித்தியனைப் போல மீண்டும் மீண்டும் இதையேகூறி படிக்க ( to decipher) முனைகின்றனர் . மேலும் கணினி மூலமே படித்தறிய முடியும் என்ற மாயத் தோற்றத்தையும் உண்டாக்கிவிட்டனர் . உண்மையில் உலக அளவில் தொன்மையான எழுத்துகள் எவையும் கணிப்பொறி மூலம் படிக்கப்பட்டவை அல்ல . நாம் அவர்களது கருத்துகளையே ஆராயப்போவதில்லை ; நம் வழியில் போகப் போகிறோம். படவுருவன்எழுத்துகள் எப்போதும் தமது ஓவியத் தன்மையை இழப்பதில்லை . எ - டு: கிரேக்கத்தில் இருந்து உருவான ஆங்கிலத்தில் Alpha Beta என்னும் மாடு வீடு எனும் பொருளுக்குரிய சொற்களில் இருந்தே A B எழுத்துகள் அவற்றையே வரிவடிவாகக் கொண்டு தோன்றின . செமிட்டிக்கில் இருந்து கிரேக்கம் ஆங்கிலம் என்று பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வந்த பிறகும் தமது மாடு வீடு என்ற வடிவங்களின் தன்மையை அவை இழக்கவில்லை . எழுத வசதியாக A தலைக்கீழாகவும் , B வீடு இடமிருந்து வலப் பக்கமாக நிமிர்ந்தும் தமது வடிவத் தன்மையை இழக்காமல் உள்ளன . எனவேதான் இத்தன்மையுடைய சுமேரிய எகிப்திய எழுத்துகள் படிக்கப்பட்டுவிட்டன . பொருளறிய இயலாது சிந்து எழுத்து மட்டுமே படித்தறிய முடியாமல் பின்தங்கியுள்ளது . காரணம் சிந்து சொல் வடிவம் தவிர்த்து அதன் அடிப்படை வடிவங்கள் கூட்டு வடிவங்கள் தமிழர் உருவமைத்த செயற்கை வடிவியல் வடிவங்களாகும் . எனவே அவை பொருள் தராது ஒலிநிலையாக மட்டுமே சிந்து முதல் தமிழிவரை 3000 ஆண்டுகள் தொடர்ந்து இன்றும் தமிழில் அவ்வாறே தொடர்கின்றன .
சிந்து எழுத்திலும் படவுருக்கள் அடிப்படையில் சொல் வடிவப் புதிர் விடுப்பு முறையிலான வடிவங்கள் உள்ளன . படவுருவன்கள் , எண்கள் , குறியீடுகள் அவ்வாறு இயங்குவன . மலை படம் மலைதல், சூடுதலைக் குறிக்கிறது ; இரண்டு இரு என்பது கருமை , பெரிய என்று குறிக்கின்றன ; நான்கு கட்டம் கொண்ட குறியீடு நகர் , நான்மாடக் கூடல் என்பதைக் குறிக்கின்றன . இம்முறை 35 % அளவிலேயே பயன்படுகிறது. இம்முறை சிந்து எழுத்து முறைக்கு முன்னர் வழக்கில் இருந்த முறையின் எச்சமாகலாம் . படவுருவன் , உயிர்மெய்யன் ( Syllabary) எழுத்து முறைகள் சிந்து வெளியில் வழங்கியமைக்குச் சிந்து எழுத்திலேயே அகச்சான்றுகள் உள்ளன . இம்முறைகளின் எச்சமே சிந்து எழுத்திலும் தொடர்கிறது . இன்றைய தமிழிலும் சிந்து வடிவங்கள் தொடர்வதையும் நாம் பின்னர் பார்க்கப் போகிறோம்.
ஆனால் சிந்து மக்கள் தங்கள் உயர்நிலை முதிர்ச் சிந்து நாகரிகத்தில் நுழைந்தபோது தங்கள் மேன்மைக்கேற்ப தங்களின் அறிவியல் , வடிவியல் - கணித அறிவைப் பயன்படுத்தி எளிய வடிவியல் கோணம் உள்ள செயற்கையான அடிப்படை வடிவங்களை ( Simple diametrically designed basic signs) அறிமுகம் செய்தனர் . அவை ஒலிநிலையானவையாக இருந்தன . செயற்கை முறையில் உயிர்மெய்யாக்கம் செய்ய ( Artificial syllabification ) ஏற்றதாக இருந்தது . எனவே செயற்கை உயிர்மெய்யாக்க முறையை அறிமுகம் செய்து ஒலிநிலையான அடிப்படை எழுத்தின் மீதே சிறு கீற்றுக்கோடுகளிட்டு உயிர்மெய்யாக்கினர் (Diacrìtical marking by short strokes on the basic signs). இது அக்காலத்திலேயே மிகமுன்னேறிய கண்டுபிடிப்பாகும் . இந்த மெய்யெழுத்து முறையில் இருந்தே உலக ஒலிநிலையான (Phonetic) எழுத்துகள் தோன்றியிருக்க முடியும். இது தமிழன் உலகிற்கு வழங்கிய அறிவுக் கொடையாகும் . எனவே அவர்கள் தங்கள் பழைய எழுத்து முறையான சொல் வடிவங்களையும் ஒலிநிலையான அடிப்படை எழுத்துகளையும் ஒருங்கிணைத்து சிந்து எழுத்தை உருவாக்கினர் .
மேலும் அவர்களுக்கு முத்திரை எழுத்து முறையும் தேவைப்பட்டுள்ளது . அடையாளச் சீட்டுபோல , மடாலையங்களின் தாயத்துகள்போல , அரச ஆணைகள்போலவும் அதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறலாம். இவற்றிற்குப் பொருளியல் அடிப்படையில் பணமதிப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது . இச்சிறிய முத்திரை இடத்தில் தனித்தனி எழுத்தால் விரிவாக எழுதுவது இடர்ப்பாடு என்பதால் பல எழுத்துகளைக் கூட்டெழுத்தாக்கி ஒற்றை வடிவமாக எழுதும் முத்திரை எழுத்து முறையை அறிமுகம் செய்திருக்கலாம் . எனவே இரண்டு முதல் எட்டு எழுத்துகள்வரை இணைத்து இவ்வடிவங்களை அமைத்துள்ளனர் . ஒரே வடிவில் ஒரு சொல்லையோ , குறுந்தொடரையோ எழுதிவிடலாம் . பின்னிணைப்பில் 6 ஆம் எடுத்துக்காட்டு காணவும் . இளவ்வணி ஆவு என்ற தொடரை ஒரே வடிவில் எழுதிவிட்டனர் . கூட்டு எழுத்து வடிவங்கள் அல்லது கூட்டெழுத்துகள் முத்திரை எழுத்து முறையில் இருந்தே உருவாகி இருக்க வேண்டும் . இவ்வடிவங்களை ஏனோ தானோ என்று அமைக்காமல் ஆழ்ந்து சிந்தித்து பொருள்நிலைக்கும் , எழுத்துகள் சொல்லில் அமையும் நிலைக்கு ஏற்பவும் அழகிய ஓவியங்கள் போன்று படவுருக்களுக்கு இணையாக வடிவமைத்துவிட்டனர் . இணைப்பில் காட்டியுள்ள சிக்கலான, மிகச் சிக்கலான கூட்டுவடிவங்களைப் பார்த்தே இதனை அறியலாம் . எனவே இவை அவ்வப்போது வடிவமைக்கப்பட்டவை அல்ல என்றும் குஜராத் - மொகஞ்சதாரோ - அரப்பா என்று பலநூறு கல் தொலைவிலுள்ள இடங்களிலும் இவை ஒரே அச்சு மாறாத வடிவங்களாகவும் உள்ளதால் இவற்றைத் திட்டமிட்டு வடிவமைத்தனர் என்பது உறுதியாகிறது . முதலில் அடிப்படையான சொற்பகுதி , சொற்களை வடிவமைத்துக் கொண்டு அதிலிருந்து தொடர்புடைய மற்ற கூட்டு வடிவங்களையும் உருவமைத்துள்ளனர் ( பின்னிணைப்பு 3 காண்க). மேலும் பல பழைய படவுரு எண்கள் குறியீடுகளையும் கொண்டும் கூட்டு வடிவங்களை அமைத்துள்ளனர் . எனவே கூட்டுவடிவங்கள் யாவும் படவுருக்கள் எண்கள் குறியீடுகள் ஆகிய சொல் வடிவங்களும் ஒலிநிலையான அடிப்படை எழுத்துகளும் கொண்டு செயற்கையாக வடிவமைக்கப்பட்டவை என்றும் அவை இயற்கையான படவுருக்கள் இல்லை என்று அறியலாம் . பிற நாகரிக எழுத்துகளில் இத்தகைய வடிவங்கள் அதிகம் பயன்படுத்தாத நிலையில் சிந்துவில் மிகுதியான செயற்கை வடிவங்கள் இருப்பது அந்த எழுத்து ஒலிநிலைத்தன்மை பெற்றிருப்பதே காரணமாகும் . இந்நிலையைத் தமிழகச் சிந்து எழுத்து வடிவங்களிலும் நாம் காணலாம் . பொதிகை எழுத்துப்புடைக் குகையெழுத்து , கீழ்வாலை , சாணூரில் சிக்கலான கூட்டெழுத்துகளைத் தவிர்த்து எளிமையான கூட்டுவடிவங்களைப் பயன் படுத்தப்படுவதைக் காண்கிறோம் .
சிந்து எழுத்து வடிவங்களைப் படவுருக்களாகப் பார்க்காமல் அடிப்படை ஒலிநிலையான வடிவங்கள் கொண்டு சொல் வடிவ படவுருக்களோடு ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட செயற்கைக் கூட்டெழுத்துகளாகப் பார்த்தாலே சிந்து எழுத்தை எளிதாகப் படித்துவிடலாம் .எனவே சிந்து எழுத்து ஏதோ ஒற்றை எழுத்துமுறைபோல் கருதாது முற்கால படவுருக்களாலான சொல் வடிவப் புதிர்விடுப்பு முறையுடன் முதிர் சிந்து காலத்து அடிப்படை எழுத்துகளும் கூடிக்கலந்து உருவமைக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த எழுத்துமுறை என்று கருதினால் வெற்றி உறுதி. The Indus script was not created by a single type of signs , but it was an integrated writing system of Logographic word - signs and the phonetic natured basic signs which were changed by artificially into syllables with short strokes of diacritical marking .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிந்துவெளி நாகரிகம்
நிலவியபோது
தமிழக நாகரிகம் எப்படி
இருந்தது?

சிந்து வெளி அரப்பன் நாகரிகம் கி மு 2600 - 1750 அளவில் வடமேற்கு இந்தியாவில் சிறப்புற்றிருந்தபோது , தமிழகத்தில் எத்தகைய நாகரிகம் நிலவி வந்தது என்பது மிக முக்கியமான கேள்வி என்பதில் ஐயமில்லை. சிந்துவெளியில் செம்புக்கற்காலம் ( Chalcolithic ) நிலவியபோது தமிழகத்தில் மிக உயர்ந்த புதியகற்கால நாகரிகம் நிலவியது . புதியகற்காலம் என்றதும் ஏதோ ஆதிமனிதர்கள் வாழ்ந்ததுபோல கற்பனை செய்து பார்க்க வேண்டாம் . வடமேற்கு இந்தியாவில் பலுச்சிஸ்தானத்ததில் வாழ்ந்த திராவிடர்களான தெற்காசிய வேடர்கள் முதலில் பழையகற்காலத்தில் இருந்து புதியகற் காலத்திற்கு மாறி நிலைத்த வாழ்வைத் தொடங்கினர் . வேடர்கள் வேளாண்மைக்கு மாறினர் . உணவு தேடுதலைவிடுத்து கால்நடைமேய்ப்பாளர்களாயினர் . இதே திராவிட வேடர்களே அப்போது தமிழ் பேசுவோராய் ஆசியா மைனர் முதல் இந்தியா இலங்கை வரை வாழ்ந்து வந்ததாக இப்பகுதிகளின் மொழியியல் ஆய்வுகள் உணர்த்துவதாக மெக் அன்பின் போன்றோர் கருதுகின்றனர் . வடமேற்கு இந்திய வேடர்களே தென்னிந்தியா இலங்கை தெ கி ஆசியாவிலும் வாழ்ந்தனர் . வ மே இந்தியாவில் இவர்களே முதலில் செம்பு உலோகத்தைக் கண்டுப்பிடித்து செம்புககற் காலத்திற்கு ( Chalcolithic ) மாறி மெகார்கர் பண்பாட்டையும் , பின்னர் அருகிலேயே முதிர் சிந்து அரப்பன் நாகரிகத்தினையும் உருவாக்கினர் . இதே திராவிடத் தமிழ் வேடர்களே ( இருளர் ) தமிழகம் , இலங்கையிலும் வாழ்ந்தனர். ஆனால் தமிழகத்தில் அவர்கள் மிகமுதிர்ந்த புதியகற் காலத்திலேயே தொடர்ந்தனர் . எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு சொல்வதானால் சிந்துவில் செம்பு உலோகக்கருவிகளும் புதிய- நுண் கற்கருவிகளும் உற்பத்திக் கருவிகளாக இருந்தன . சமுதாய அமைப்பு வேளாண்மை , ஆனிரை மேய்த்தல் , வேட்டைத்தொழில் , வெளிநாட்டு வணிகம் ஆகியவையாக இருந்தன . தமிழகத்தில் புதிய - நுண்கற் கருவிகள் உற்பத்திக்கருவிகளாகவும் , வேளாண்மை ,ஆநிரை காத்தல், வேட்டைத்தொழில் , வெளிநாட்டு வணிகம் ஆகியவை சமுதாய அமைப்பாகவும் இருந்தன . ஒரே வேறுபாடு இங்கு செம்பு உலோகம் இல்லை என்பதுதான் . இதனால் தமிழக மக்கள் செம்பு என்ற உலோகத்தையே அறிய மாட்டார்கள் என்பது பொருளல்ல . செம்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் ஆழ்கடலில் செல்லும் மரக்ககலங்களைக் கட்டிப் பயணித்து வெளிநாடுகளுடன் வணிகம் செழித்து வளர்ந்திருக்க முடியும் . ஆகவேதான் வலிய இரும்பைக் கண்டுப்பிடித்தப் பிறகும் செம்பு ஆணியைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக பாய்மரக் கப்பல்கள் செய்து வருகிறார்கள் . கடலோடிகளான கடல் வணிகர்களான எனது முன்னோர் மிகவிளக்கமாக எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் . செம்பு அதன் அருகிய நிலையின் காரணமாகத் தமிழகத்தில் பொதுப்பயன்பாட்டில் இல்லையே தவிர அணிகலன்களாக , தொழிற்கருவிகளாக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன . ஆதிச்சநல்லூர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும் . எனவே, புதியகற் கருவிகளுடன் செம்பும் குறிப்பிட்ட தொழிற் கருவியாகப் பயன்பட்டது என்பதைத் தமிழகத்தின் கி மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வளர்ச்சி காட்டுகிறது . தமிழகத்தில் புதியகற்காலம் கி மு 3000 - 2500 அளவில் தோன்றி , கி மு 1500 வரை சிறப்புற்றிருந்தது என்பது ஆய்வாளர் கருத்து . வடக்கே காஷ்மீர் ( ஸ்ரீநகர் அருகே ) புர்சகோம் , குப்கிரால் முதல் தெற்கே தமிழகத்தில் ( வேலூர் அருகே ) பையம்பள்ளி , அப்புக்கல்லு வரையிலும் இந்தப் புதிய கற்கால நாகரிகம் ஒப்பியல்புகளோடு மிகுந்த வளர்ச்சி அடைந்து காணப்பட்டது . காஷ்மீர் - தமிழகப் புதியகற்கால நாகரிகங்கள் மிகுந்த ஒப்புமைகள் கொண்டுள்ளதைத் தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன .
சிந்து வெளி நாகரிக நகரங்கள் இமயமலை அடிவார சர்டுகை
- அரப்பா முதல் மொகஞ்சதாரோ தெற்கே குஜராத் - மகாராஷ்டிரா வரையில் வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலவளம் நீர்வளம் மட்டுமே கொண்டிருந்தன . கால்நடைவளர்ப்பும் சிறந்திருந்தன. ராஜஸ்தான் போன்ற இடங்களில் செம்புச் சுரங்கங்கள் இருந்தன . மற்றபடி விலைமதிப்பு மிக்க வணிகப் பொருட்கள் அங்கு இல்லை . ஆனால் புதியகற்காலத்திலேயே தமிழகம் கோலார் தங்கச் சுரங்கம் இந்திய நாட்டிற்குரிய மொத்த தங்கத்தையும் உற்பத்தி செய்தது . நீலகிரியில் மிகுதியான பச்சைநிற மணிக்கற்கள் கிடைத்தன . இதுபற்றி மொகஞ்சதாரோ நகரத்தை ஆராய்ந்த ஜான் மார்ஷல் மிக விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார் . நீலகிரியின் அடிநிலமான கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் காங்கேயம் , பல்லடம் , பாடியூர், வேளூர் , புகழ்பெற்ற கொடுமணம் போன்ற இடங்களில் விலை மதிப்பு மிக்க மணிக்கற்கள் பேரளவில் கிடைத்தது . இப்பகுதியில் சங்க காலம் வரை ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தன . மேலும் நீலகிரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் தேக்கு , கருங்காலி , சந்தனம் , அகில் , கருவாப்பட்டை , யானைத்தந்தம் போன்றனவும் , காடுபடு திரவியங்களான மிளகு , இலவங்கம் , ஏலக்காய் போன்றனவும் சுமேரிய நாகரிகம் காலம் முதல் கிடைத்து உலக வணிகப் பொருளாக 5000 ஆண்டுகளாக விளங்கியது. அங்கிருந்து தென்கிழக்காகப் பொதிகை மலைச் சந்தனமும் , பாண்டியன் தென்கடலில் முத்தும், பவழமும் ( பாண்டிய கவாடம்) உலகமுழுதும் வணிகப்பொருளாக விளங்கியது . இப்படித் தமிழகத்தில் கிடைத்த வணிகப் பொருட்கள் யாவும் கிழக்கு மேற்குத் கடல்கள் வழியே உலகச் சந்தைப் பொருட்களாயின . இப்பொருட்கள் தமிழகம் தவிர வேறு எங்குமே கிடைக்காதவை. இப்பொருட்களுக்காகவே கி மு 2350 இல் சுமேரிய மன்னன் முதலாம் சார்கானும் , கி மு 1000 ஆம் ஆண்டுகளில் செமிடிக் ( பொனீசிய ) மன்னன் சாலமனும் தாங்களே நேரடியாகக் கடல்வணிகம் தமிழகத்துடன் மேற்கொண்டிருந்தனர் என்பது வரலாறு .
சார்கான் மன்னன் மெலுகாவுடன் ( MELUHHA ) மேற்கொண்ட வணிகம் குறித்து எத்தனையோ விளக்கம் கூறப்பட்டாலும் மெலுகா - meluhha என்பது ta த என்னும் முதலசை முழுமையாக உச்சரிக்கப்படாத tameluhha தமிழகா - தமிழகம் என்பதே உண்மையாகும் எனபது எனது ஆய்வுக் கருத்து . பிற்கால ஆரியர்கள் சிந்து வெளி பாழடைந்த நகரங்களை வைலஸ்தான் - வேலஸ்தான் - வேளகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழகம் - வேளகம் என்பன தமிழ்நிலப் பெயர்களாகும் .
இவற்றால் நாமறிவது இவ்வணிகம்- தமிழக மேலைநாட்டுக் கடல்வணிகம் - சிந்துவெளிக் கடலோர நகரங்களான உலோதல் , துவாரகை , பிரபாச பட்டினம் , தோசால்பூர் , பாலகோட் , சத்காஜென்டூர் வழியேதான் நடைபெற்றிருக்க வேண்டும் . எனவே சிந்து நாகரிகமே மேற்காணும் நிலவியல், பண்பாட்டு , பொருளியல் அடிப்படையில் தமிழகக் கடல்வணிகத்தின் இடைநிலமாகவும் , மிகப்பெரிய சந்தையாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்றுக்கு முந்திய காலம் முதலே தமிழகப் பொருட்கள் உலக நாகரிகங்களால் விரும்பப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.
பண்டைத்தமிழகத்தின் நிலத்தில் ( தென்னிந்தியா) பெருங்கற்காலம் இந்தியாவிலேயே வரலாற்று முதன்மை பெற்றிருந்ததுபோலவே , புதிய கற்காலமும் பேரிடம் பெற்றுள்ளது . காஷ்மீர் போலவே பண்டைய வடதமிழகமும் கருநாடக சங்கனகல்லு , தெக்கலகோட்டா , பிரம்மகிரி ,மாஸ்கி, நரசிபூர் ஆகியனவும் , ஆந்திராவில் உட்நூர், பாலவாய் , கொடேகல் ஆகியவை மிகச்சிறந்த புதியகற்கால வாழிடங்களாக இருந்தன . மேகார்கரின் புதிய கற்காலம் உள்ளூர் வேடர்களால் உருவாக்கப்பட்டது போல இந்தியப் புதியகற்காலமும் தென்கிழக்காசிய வேடர்களால் உருவாக்கப்பட்டது தான். தமிழக வேடர்கள் ( இருளர்கள்) புதிய கற்காலத்தில் சிறந்த வேளாண் உற்பத்தியாளர்களாகவும் , கால்நடை வளர்ப்பாளர்களாகவும் இருந்தனர் . அரிசி கேழ்வரகு கொள்ளு எள்ளு ஆகியவை பயிரிட்டனர் . பையம்பள்ளி மக்கள் கற்களாலான அறுவடைக்கத்தி மற்றும் பிற உழவுக்கருவிகளைப் பெற்றிருந்தனர் . கல்லாலான திரிகைகள் அம்மி மாவாட்டும் கற்கருவிகளைப் பெற்றிருந்தனர் . பெரிய மந்தை வளர்ப்பாளர்களென்று பையம்பள்ளி அப்புக்கல்லு பகுதிகளில உள்ள சாம்பல் மேடுகளால் அறிகிறோம் . ஏரிப்பாசனம் செய்தனர் . புர்சகோம் உழவர்கள் தால் ஏரிக்கரையிலேயே வாழ்ந்தனர் . இன்றும் இப்பகுதி கரைவா(karewa ) எனப்படுகிறது .பையமபள்ளி மக்களும் மலைஏரிவழியே பயிர் செய்தனர் . மலைக்குன்றுகளில பயிரிட்டனர் .இவை மலைப்பயிர்களாக இருக்க வேண்டும்.
பையம்பள்ளி அப்புக்கல்லு மக்கள் உலோகக் கலையை அறிந்திருந்தனர். தங்கம் உருக்கவும் அணிகலன்கள் செய்யவும் அறிந்திருந்தனர். அருகிலேயே கோலார் தங்கச் சுரங்கம் அவர்களுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும் . தங்கம் வார்க்கும் கொல்லர் அச்சுக் கருவி ஒன்று பையம்பள்ளியில் கிடைத்துள்ளது . வணிக நோக்கில் தங்க நகை செய்யப்பட்டிருக்கலாம் . அப்புக்கல்லில் மலைப்பாறை வங்கு ஒன்றில் ( பொந்து ) இரண்டு நீளமான பூச்சி உணர்கொம்பு பிடியுள்ள (Antennae swords ) செம்புவாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இவை கி மு 2000 அளவுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்துடன் தொடர்புடையவை . இத்தகைய பூச்சி உணர்கொம்பு செம்பு வாள்கள் கோவை பொள்ளாச்சி அருகே கல்லாங்குத்து ஓடையருகே 10 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . செங்கற்பட்டு அருகே 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இவை சிந்து நாகரிகம் தமிழகத்திலும் பரவி இருந்ததைக் காட்டுகிறது . இத்துடன் வடநாட்டில் சிந்து நாகரிகத்துடன் தொடர்புடைய செம்புப்புதையல் தொகுப்பில் ஒன்றான கலப்புருவின் வடிவில் ( Anthropomorphs ) மிகப்பெரிய பறை வடிவில் 10×11 அடியுள்ள தாய்த்தெய்வச் சிற்பம் ஒன்றும் இப்பகுதியில் திருவண்ணாமலை மோட்டூரில் கிடைத்துள்ளது . இத்தகைய இன்னொன்று விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளது ( படங்கள் காண்க) .
சிந்து நாகரிகம் அங்கு வழக்கில் இருந்தபோதே தமிழகத்திலும் அதன் எழுத்துமுறை இங்கும் வழங்கியதைத் தமிழகத்தில் கிடைத்துள்ள சிந்து எழுத்துப் பொறிப்புகள் கட்டுகின்றன . பொதிகை மலை, கீழ்வாலை , சாணூர், பெருமுக்கல் , யாழ்ப்பாணம் எழுத்துகள் காட்டுகின்றன . தமிழகம் முழுதும் கிடைத்துள்ள பானையோட்டுச் சிந்து எழுத்துகள் சிந்து எழுத்து மக்களின் பயன்பாட்டில் இருந்ததை உறுதி செய்கிறது . தமிழக மக்கள் சிந்து நாகரிகத்துடன் தொடர்பில் இருந்ததையும் , மக்கள் சிந்து எழுத்தையே பயன்படுத்தியதையும் ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
சிந்து நாகரிகத்தின் பயன்களை அறிந்தபோதும் இந்தியப் புதியகற்கால மக்கள் சிந்துவின் செம்புக் கற்கால நாகரிகத்திற்கு மாறவில்லை . தமிழகமும் அவ்வாறே . காஷ்மீர் புர்சகோம் குப்கிரால் வாழிடத்தின் அருகிலேயே அரப்பா நாகரிக நகரம் இருந்தது . ஆனால் அம் மக்கள் அதன் நாகரிகத்தை ஏற்கவில்லை . அரப்பா தோன்றியதில் இருந்து அது அழியும் வரை அருகருகே வாழ்ந்த போதும் புர்சகோம் குப்கிரால் மக்கள் சிந்துநாகரிகத்தை ஏற்கவில்லை . மேலும் கி மு 1500 வரை வாழ்ந்து பெருங்கற்கால நாகரிகத்தில் கலந்துபோயினர் . தமிழகத்தின் நிலையும் இதுதான். தமிழரும் சிந்து நாகரிகத்தை நன்கறிந்து அந்நாகரிகப் பயனைக் கண்டிருந்தும் அதனை முழுமையாக ஏற்கவில்லை . ஆனால் வணிகம் செழித்து தங்கள் உற்பத்திப் பொருட்களைச் சிந்து மற்றும் பிற நாகரிக மக்களுடன் சந்தைப்படுத்தி இணைந்து வாழ்ந்திருந்தனர் .
இவற்றால் தமிழக மக்கள் அக்காலத்தில் சிந்து நாகரிகத்தைக் கடைப்பிடித்து செம்புக்கற் காலத்தில் வாழவில்லை என்றாலும் தங்கள் நாகரிகத்தின் மீது பற்றுறுதியுடன் வாழ்ந்தனர் .சிந்து நாகரிக காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் மதுரை உறையூர் ஆகியவை உலக வணிகத்தில் சிறந்து , செழித்து வாழ்ந்தன . இதனைச் செம்பியன்கண்டியூர் புதியகற்காலக் கருவி உணர்த்துகிறது. சிந்து நாகரிகத் தமிழக மக்கள் செம்புப்பயன்பாட்டையே அறியமாட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது. நன்கு அறிவார்கள் . செம்பு antennae swords தமிழகம் முழுதும் கிடைத்துள்ளது என்று பார்த்தோம் . செம்புப்பயன்பாட்டின் சிறப்பை ஆதிச்சநல்லூர் நீலகிரி மலை ஆகிய இடங்களில் கிடைத்துள்ள நுண்ணிய வேலைப்பாடமைந்த பொருட்களில் காண்கிறோம் ( படங்கள் காணக ). வியப்பளிக்கும் வகையில் முழுமையும் செம்பையே பயன்படுத்திய வாழிடங்கள் தமிழகத்தில் உள்ளன .. பாண்டிச்சேரியில் கௌரிமேடு , மணிமங்கலம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவ்விடங்கள் முழுமையும் செம்புக்கால மக்களே வாழ்ந்த பண்பாட்டு இடமெனக்கண்டுள்ளனர் . இவை செம்புக்கால வாழிடமென்று பிரெஞ்சு தொல்லியலார்கள் அல்சின் & அல்சின் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர். இது தமிழக வரலாற்றில் வியப்பளிக்கும் செய்தி எனலாம் . மேலும் ஆராயவேண்டியுள்ளது .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும் ...
சமஸ்கிருதமா முந்தியது ?
#########################
தமிழா சமஸ்கிருதமா எது தொன்மையானது என்று கருத்துப்போர் நடக்கிறது . நண்பர்கள் உணர்ச்சிப் பெருக்கில் தகிக்கிறார்கள் . எல்லா மொழிகளுமே தொன்மையானவைதாம் .அது அல்ல ஒரு மொழியின் தொன்மைஙயை உணர்த்தும் கருவி . பண்பாடும் நல்ல இலக்கிய வளங்களைப் பெற்றிருப்பதோடு பிற இன - மொழி மக்கள் தொகுதியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் . எ- டு : கி மு 999 இல் வாழ்ந்த செமிட்டிக் பொனீசிய மன்னன் சாலமன் ஏடுகளில் அரிசி தோகை கருவாப்பட்டை மணப்பொருள்களின் தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன . அரிசி சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது என்றனர். ஆனால் ரிக் வேதத்தில் அரிசி என்னும் பெயரோ குறிப்போ இல்லை . தோகை என்பது தோகைமயிலைக் குறிப்பது. அரிசி மிகப்பிற்கால வேதத்தில் குறிப்பிடப்பெறுகிறது . அரிசி என்ற தமிழ்ச் சொல்லுக்கு நுண்மை, கூர்மை என்பது பொருளாகும். இவற்றால் கி மு 1000 அளவிலேயே தமிழகம் அரிசியைப் பயிரிடும் தொழில்நுட்பம் கொண்டிருந்தது தெரிந்தது. வடக்கேயும் ஆரியர் கைபர் கணவாய் வழியே இந்தியா வந்து முதலில் பஞ்சாப்பில் தங்கியபோது ஆரியர் பருவகாலங்களைப்பற்றிய அறிவு வேளாண்மை வணிகம் ஆகியவற்றைத் தமிழரிடம் இருந்து கற்றனரென்று ரிக் வேதம் கூறுகிறது . பருவமறிந்து ஆண்டில் இருமுறை பயிர்ச் சாகுபடி செய்வதை தேவர்கள் அங்கிருந்த திராவிடத் தமிழ் மக்களிடமே கற்றறிந்ததாக ரிக் வேதம் கூறுகிறது . அவ்வேதத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமுதாயத்திடமிருந்தே ஆரியர் நாகரிக வாழ்வைக் கற்றதை உணர்த்துகின்றன . ரிக்கில் காணும் இச்சொற்கள் வாழ்விற்கு அடிப்படையானவை.
மயூர = மயில் , காக = காகம், மீன = மீன் , உலுகல = உலக்கை , கடுக , குண்ட, கல = கலை , கள = களம், பல, தண்ட , பிண்ட , கயிதா = கைதை - தாழை , ரத்தம் = அரத்தம், வர்ணம் = வரணம், லங்கலா = உழுங்கலம் ( அ) அலங்கலம் = ஏர்க்கலப்பை , மேலும் பலநூறு சொற்களும் உள்ளன . அவர்கள் அங்கு வந்தபோது சிந்து நாகரிகம் அழிந்து மக்கள் எளிய நாகரிகர்களாக வாழ்ந்தனர் . பாழடைந்த இடிந்த பெரிய கட்டடங்களில் வாழ்ந்தனர் . இத்தகைய இடங்கள் வைலஸ்தான் என்று ரிக் வேதம் கூறுகிறது . அங்கு வாழ்ந்த பெண்களை வைலஸ்தானில் வாழும் சூனியக்காரிகள் என்கிறது . வைலஸ்தான் என்பது வேளஸ்தான் - வேளகம் ஆகும் . சிந்தவன் (சிந்து நாட்டவன்) சமஸ்கிருதத்தில் சைந்தவன் ( சிந்து நாட்டு அரசன் - மகாபாரதம்) என்று ஆவது போல வேளகம் வைலஸ்தான் ஆனது . ஸ்தான் - இடம் , அகம் . வேளிர் வாழ்ந்ததால் வேளகம். அப்போது தமிழகத்திலும் வேளிர்கள் வாழ்ந்தனர் . சிந்து வெளியில் வாழ்ந்த பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் . சிந்து நகரங்களின் அரசர்கள் பெண்கள் மட்டுமே கொண்ட போர்ப்படைப் பிரிவை வைத்திருந்தனர் .எனவே இந்திரனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை என்று ரிக் வேதம் கூறுகிறது. அப்படைகளை அழிக்க இந்திரன் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது . எனவே மக்கள் மிகுந்த நாகரிகமும் அறிவும் பெற்றிருந்தது தெரிகிறது .
ஆனால் ஆரியர்கள் இங்கு வந்தபோது அவர்களிடம் கல்வியறிவோ எழுத்தறிவோ கிடையாது . வெறும் வாய்மொழி நாடோடி வழிபாட்டுப் பாடல்கள் தான். அவையே பின்னர் ரிக் வேதம் எனப்பட்டது . பிற்கால வேதங்களின் விளக்க நூலான சதபதபிரமாணம் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது . ஆரியர்கள் ஒரு ஊரைக் கைப்பற்றுகின்றனர் . ஆண்கள் கொல்லப்பட்டார்கள் . பெண்களும் குழந்தைகளும் வயதானோருமே சிறைப்பட்டனர் . ஊர்ப்பொது மன்றத்தில் வைத்து ஆரியர்கள் சிறைப்பட்ட மக்களின் வாக் voc என்னும் வாக்கை நெருப்பிலிட்டு அழிக்கின்றனர். வாக்கு என்றால் பேச்சு , பேச்சை எப்படி நெருப்பிலிட முடியும் ? அப்போது ஆரியர்கள் மொழியில் எழுத்து என்ற சொல் இல்லை . அம் மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஓலை சீலைகளை அழிப்பதையே அவ்வாறு கூறினர் . மக்கள் அவ்வாறு தங்கள் நூல்கள் தீயிடப்படுவதைக் கண்டு தங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஐயய்யோ ஐயய்யோ ( ஹல்லாயோ ஹல்லாயோ ) என்று அழுததாக சதபதபிரமாணம் கூறுகிறது .எழுத்து மொழியற்ற ஆரியர் தங்கள் பேச்சு மொழியில் கூட எழுத்து நூல் போன்ற சொற்களை அறியாதிருந்தனர் . இன்று ...
சிந்து வெளியை விடுங்கள் தமிழக மக்களும் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவும் எழுத்திலும் பெற்றுத் திகழ்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே தமிழ்நாடு கல்வியறிவு பெற்று எழுத்து முறையைக் கொண்டிருந்தது . தமிழ்நாட்டு மக்களும் அவர்களது தமிழ்மொழியைச் சிந்து எழுத்து வடிவங்களாலேயே ( Indus script ) எழுதியமைக்குச் சான்றுகள் உள்ளன . தமிழ்நாட்டில் அவ்வாறு சிந்து எழுந்தால் எழுதப்பட்ட பொறிப்புகள் (Inscriptions ) பல கிடைத்துள்ளன . கீறல் வரி வடிவங்களென ஆய்வாளர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டனர். அவற்றின் பொருளை மட்டுமல்ல சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் மட்டுமே கிடைத்து இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் கிடைக்காத சிந்து எழுத்து வடிவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைப்பது எவ்வாறு என்றுகூட ஆராயவில்லை . பெருங்கற்காலத்தில்கூட ( Megalithic age ) அவை பேரளவில் மட்பாண்ட எழுத்துகளாகவும் (Graffiti signs ) எழுத்துப் பொறிப்புகளாகவும் தமிழகத்தில் கிடைக்கின்றன . அவற்றைச் சுருக்கமாகச் காணலாம் .
(1) செம்பியன்கண்டியூர் நாகை மாவட்டம் . இங்கு புதியகற்காலக் கருவியில் தூய சிந்து எழுத்தாகப் பொழியப்பட்டுள்ளது . எழுத்து ஓரளவு தெளிவாக உள்ளது . நான் அதனை
வர ஆய்யன்
என்று படித்துள்ளேன் . இடமிருந்து நான்கு வடிவங்கள் வர ஆ ய் ய என்றும் விகுதியை நிறைவு செய்ய தொல்காப்பிய விதிப்படி ( னகர ஒற்றே ஆடூஉ அறிசொல் ) இறுதியில் ன் சேர்த்து வர ஆய்யன் என்று படித்துள்ளேன் . இது கி மு 2000 அளவுக்குரியதாக மதிப்பிடலாம் .
(2) பொதிகை மலைக்குகை
தமிழுடன் தொடர்புடைய அகத்தியர் வாழ்ந்த மலை . இக்குகையில் இன்னொரு மிகப்பெரிய துறவி வாழ்ந்துள்ளார் . அவரை அப்பொறிப்பு தவம் வளர்ப்பவர் என்கிறது . தவ நந்தன் . இக்குகை மக்களால் எழுத்துப் புடை எழுத்துகளுள்ள பக்கங்களைக் கொண்டது என்று அழைக்கப்படுகிறது .
மூய தவணண்தன் இன் தவ
மூய தவ நந்தன் இன் தவ
நந்தன் என்பது இயற்பெயராகவும் இருக்கலாம் . மேலும் பல மறைபொருட் குறியீடுகளும் இங்கு கீறப்பட்டுள்ளது . ஒரு வரிசையாகக் கீறாமல் பாறைச்சுவர்களில் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப இடம் விட்டுக் கீறப்பட்டுள்ளது .
(3) கீழ்வாலைப் பாறைத் தீற்றல்
இதுவும் தவசியர் வாழ்விடமே . தூய சிந்து எழுத்தும் படங்களும் தீட்டப்பட்டுள்ளன. இப்பொறிப்பில் வரும் இரு பொறிப்புகளும் படங்களும் செங்காவி நிறத்தில் தீற்றப்பட்டுள்ளன .
தவச சதவரவ் தவசய்ய சரத்
தவச சதவரவ்வன் தவசய்ய சரய்
சதவர் என்பது இயற்பெயர் . அவ்வன் - அவ்வய் என்பதன் ஆண்பால் . சரய் - கிழத்தன்மை . ஊர்வலம் என்பதும் . இணைப்புப் படம் நண்பர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு . தமிழக அரசின் காப்பில் உள்ள இடம் .
(4) சாணூர் பானைக் கீறல் .
செங்கற்பட்டருகே உள்ள பெருங்கற்கால வாழிடம் . மத்திய அரசு அகழ்வாய்வைத் தொடரவில்லை .
ஆயவர் ( ஆயர் )
தெளிவான சிந்து வடிவங்கள் . பெருங்கற் காலத்திலும் சிந்து எழுத்துத் தொடர்ந்துள்ளது . இவ்விடம் முழுமையாக அகழப்பட்டால் 1500 ஆண்டு கி. மு தமிழக வரலாறு வெளிச்சம் பெறும் .
(5) பெருமுக்கல் பாறைக் கீறல் .
மரக்காணம் அருகே சிறு குன்றின் மீதுள்ளது . சுற்றிலும் அரசன் யானை மீது வருவது , அவன் வருவதால் மழை பொழிந்து நாடு செழிக்கிறது என்னும் கருத்துரு ஓவியமாகக் கீறப்பட்டுள்ளது .
அ ர ச ர்
என்ற ஒற்றைச் சொல் உள்ளது . முதல் எழுத்து அ சிந்து எழுத்து வடிவமாகவும் பிற சிந்து தமிழிக்குப் பொதுவாகவும் உள்ளன . இந்த எழுத்துக்குப் பிறகே தமிழ்நாட்டில் சிந்து எழுத்து தனது வடிவ நிலையில் இருந்து தமிழியாக மாறுகிறது .
(6) யாழ்ப்பாணம் முத்திரை
தமிழகத்துடனான இன மொழி பண்பாட்டுத் தொடர்பால் இங்கு இணைக் கப்படுகிறது. குயவன் தொழிலக முத்திரை . மேல் வரிசை சிந்து எழுத்து கீழே முழுமையடைந்த தமிழி எழுந்துள்ளது. Dr . இந்திரபாலா அகழந்தது .
மயன ( சிந்து)
கோவேத்து ( தமிழி)
தமிழி முழுமையாகி உ எ ஒ உயிர்மெய்யாக்கம் பெறுகிறது.
(7) பொருத்தல் பானைக்கீறல்
பழனியருகே வயிரம் என்பானது பெருங்கற்கால புதைகுழியில் கிடைத்தது .
வயிர ( வயர் - வைரம் )
இந்திய மொழிகளிலேயே தொன்மையான எழுத்து . கி மு 490 .
(8) பேட் துவாரகை எழுத்து .
இவற்றுடன் குஜராத் மாநில பேட் துவாரகை கடலடியில் கிடைத்த வழிபாட்டுப் பாத்திர எழுத்து மேற்காணும் எழுத்துகளின் கால நிர்ணயத்துக்கு முக்கியம் . இதன் காலம் கி மு 1500 . இதன்படி வடிவ மாற்றமில்லா பொதிகை கீழ்வாலை பொறிப்புகள் சிந்து நாகரிக காலத்தை ஒட்டியவை என்றும் பிற யாவும் கி மு 1500 அளவுக்குப் பிற்பட்டவையாகும். பேட் துவாரகை எழுத்தில்
மண்ய்வரணணாவ்வோர்
மணிய் வரணன் ஆவோர்
என்பது மணிவண்ணனாகிய கிருஷ்ணரைக் குறித்தது . இம்முத்திரைகள் சிந்து வெளி நாகரிகக் காலம் முதல் சிந்து எழுத்துச் சாயல் உள்ள பொருத்தல் எழுத்துக் காலம் வரை தமிழகத்தில் தமிழை எழுத சிந்து எழுத்தே பயன்படுத்தப்பட்டது என்று இதனால் அறியலாம் .
சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து எழுத்து முறைக்கு கி பி 151 ஆம் ஆண்டு சத்ரபகுல மன்னன் ருத்ரதாமன் வெட்டிய கிர்நார் கல்வெட்டின் காலத்திலேயே எழுத்து வடிவம் பெற்றது . சங்க காலத்தில் தமிழை எழுத எழுத்து முறை இருந்தது போல சமஸ்கிருதத்தை எழுத எழுத்து முறை இல்லை . இதனைச் சங்கத்தமிழ் மக்களும் அறிந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கூறுகிறது. குறுந்தொகை ,156 . பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடல் காட்டுகிறது .
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ வுண்டி பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும்
மருந்து முன்போ மயலோ இதுவே
என்பது பாடல் . இவர் பாண்டிய மன்னரின் வில் படைத் தலைவர். தலைவி பார்ப்பன மகனிடம் எழுதும் முறை இல்லாததால் எழுத்தில்லாமல் கற்பிக்கப்படும் உன் வேத மொழியில் ( சமஸ்கிருதம்) பிரிந்தோரைச் சேர்த்து வைக்க மருந்து ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா ? எனறு கேட்கிறாள். எனவே இப்புலவர் காலத்திலும் சமஸ்கிருதத்திற்கு எழுத்துமுறை இல்லை , ஆனால் தமிழுக்கு இருந்தது என்று தெரிகிறது .எனவே இப் பாடல் கி பி 150 ஆண்டுக்கு முன்பு பாடப்பட்டிருக்க வேண்டும் . தமிழுக்குத் தொலபழங்காலத்தில் இருந்து எழுத்தும் இலக்கியமும் இருந்தது ஆகவே சமஸ்கிருத மொழியை விட தமிழே மிக்க நாகரிகமும் எழுத்து மொழியறிவு பெற்றதென்று அறியலாம். சமஸ்கிருதம் கி பி 2 ஆம் நூற்றாண்டில் எழுத்து பெற்று குப்தர்கள் காலத்தில்தான் இலக்கியம் உருவானது . அவர்கள் பலரது நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துத் தனதாக்கிக் கொண்டனர் . நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய கோயில்களுக்கே பெருமை சேர்க்க புராண இதிகாசக் கற்பனைகளை அவிழ்த்துவிடும் பார்ப்பார்கள் தாங்கள் உரிமை கொண்டாடும் நூல்களுக்கு எவ்வளவு கற்பனையான கதைகளை அதற்குச் சேர்த்திருப்பார்கள் என்று சொல்லாமலே விளங்கும் .
சொல்லுங்கள் சமஸ்கிருதமா முந்தியது ?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிந்து முத்திரைகள் - புதிய ஆய்வுகள்

தொடங்கிய இடத்துக்கே மீண்டுமா?

இன்றைய நாளிதழ்களில் சிந்து சமவெளி நாகரிக காலத்து எழுத்து மற்றும் முத்திரை குறித்து பஹதா அஞ்சுமன் முகோபாத்யாய் என்ற அம்மையார் புதிய முடிபுகளை வெளியிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன . தனது ஆய்வுகளை 37 பக்கத்தில் அறிக்கையாக பால்கிரேவ் கம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவன இதழில் வெளியிட்டு இருக்கிறார். சிந்து எழுத்துப் பொறிப்புகள் அவற்றின் பொருளுணர்த்தும் இயங்கு முறையைச் சிக்கறுத்து ஆராய்தல் ( Interrogating Indus inscriptions to unravel their mechanism of meaning conveyance ) என்ற அவரது ஆய்வுரை நம்மால் இங்கு ஆராயப்படுகிறது . சிந்து எழுத்து Logographic - Logosyllabic என்ற கோணத்தில்தான் சோவியத் ஃபின்லாந்து இந்திய ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர் . பின்னர் அது சொல்லசையன் ( Logographic ) எழுத்து முறை என்று முடிவு செய்தனர் . இதனையே மகாதேவன் Logographic Phonogram சொல்லுருவன் ஒலிப்புருவன் என்றார் . ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றுபடும் கோணநிலை என்பது சிந்து எழுத்து புதிர் விடுப்பு முறையிலானது (Rebus method ) என்னும் கருத்து . (என்கருத்தும் சிந்து எழுத்தின் ஒருபகுதி படவுருவன் - எண்கள் - குறியீடுகள் அடிப்படையில் புதிர் விடுப்பு முறையிலான சொல் - வடிவங்கள் என்பதேயாகும்). எ - டு : அஸ்கோ பர்போலா ஏழு புள்ளிகள் + மீன் = எழுமீன் சப்தரிஷி மண்டிலம் - அருந்ததி விண்மீன் என்றும் , மகாதேவன் காவடி வடிவம் : காவடி - காவு = சுமத்தல் - பொறையன் என்பதாக இருவரும் அருந்ததி , பொறையன் என்று புதிர்விடுப்புச் செய்கின்றனர் . ஆனால் அவ்விருவருமே பல வடிவங்கள் உள்ள முத்திரையில் இப்படி ஒவ்வொரு வடிவங்களையே விளக்குகின்றனர் . பிற வடிவங்களோடு இணைத்து முழு முத்திரைக்கு விளக்கம் சொல்வதில்லை .
இப்போது திரும . முகோபாத்யாய் அம்மையார் தனது முத்திரை ஆய்வை வெளியிட்டு இது படிப்பு அல்ல படிக்கும் முறையைப் பற்றியது என்ற பீடிகையுடன் சிந்து முத்திரை வடிவங்கள் Phonogram ( ஒலிப்புருவன் ) வகைப்பட்ட ஒலிநிலைத்தன்மையுடைய எழுத்து முறையில் (சிந்து எழுத்து) எழுதப்பட்டதல்ல ; மாறாக Logographic சொல்லுருவன் முறைப்படி சொல் - வடிவங்களாக (Word - signs ) எழுதப்பட்டுள்ளன என்று ஒரு குழப்பமான முடிவைத் சொல்கிறார் .இந்த ஆய்விற்கு மகாதேவனின் இயைக்கோவை Concordence அடிப்படையாக இருந்தது என்கிறார்.
சொல்லுருவன் என்பதும் word sign அடிப்படையிலான புதிர் விடுப்பு முறைதான். எனது ஆய்வுகளில்கூட இருவகைச் சொல் வடிவங்களைக் குறிப்பிட்டுள்ளேன் . மலை (படம்) + ன், அரச (இலை ) + ன் என்பன மலையன் அரசன் என்று படிக்க வேண்டும். இங்கு மலய், அரச என்பன புதிர் விடுப்பு முறையிலான சொல்லுருவன்கள் .ஆனால் அம்மையார் தனது முறை புதிர் விடுப்பு முறையல்ல ( Rebus method ) , சொல் வடிவங்கள் என்கிறார். அதற்கு ( Honey)bee + Leaf = Belief நம்பிக்கை என்று எ - டு தருகிறார். இது என்ன முறை ? சிறுவர் கூட வீட்டிலும் பள்ளியிலும் விளையாடும் சொல் விளையாட்டு. Bee + Leaf இரு படங்களைக் காட்டினால் இன்னொரு குழந்தை Belief நம்பிக்கை என்று புதிர் விடுப்புச் செய்துவிடும் . Bee = be , Leaf= lief என்று எழுத்து மாறுபட்டாலும் ஒலி ஒற்றுமை அடிப்படையில் புதிர் விடுப்பு செய்யப்படுகிறது . இந்த எடுத்துக்காட்டைத் தரும் அம்மையார் மகாதேவன் பல பத்தாண்டுகளாக Logographic சொல்லுருவன் முறையில் படிக்க முனைந்ததாகவும் அதனால் ஒரு பயனுமில்லை என்கிறார் . ( ஒரு படம் - உருவம் ஒரு சொல்லைத் தருவதால் இப் பெயர் வந்தது ). இப்போது இவரும் அதே பயனற்ற வேலையையே செய்கிறார் . இது மட்டும் பயன் தருமா?
சிந்து முத்திரை முந்து - திராவிட, அல்லது முந்து - இந்தோ ஐரோப்பிய ( வேத மொழி ) மொழிக்கோ ( Proto Dravidian , Proto Indo European ) மொழிகளுக்கு உரியதல்ல என்கிறார். இதனை ஒரு கருத்துப் பிழை எனலாம் .தான் முத்திரைகளைப் படிக்கவில்லை படிக்கும் முறைபற்றி மட்டுமே ஆராய்ந்துள்ளேன் என்றுரைக்கும் ஒருவர் இது இன்னின்ன மொழிகளுக்கு உரியனவல்ல என்று எவ்வாறு கூற முடியும்? இது ஒரு தந்திரம் என்று கூறலாம். சிந்து எழுத்து ஆரியருக்கு உரியதல்ல என்று அனைவரும் ஒப்புகின்றனர் . ஆகவே முந்து திராவிட மொழிக்குரியதல்ல என்பது அதற்கான ஆதரவுக் கருத்துக்களை மறுப்பதே எனலாம் . இவ்வாறுதான் தமிழ் - திராவிடக் கருத்துக்களுக்கு எதிராகத் தொடங்கி வைப்பார்கள் .
ஆனால் சிந்து வடிவங்கள் சொல் வடிவங்களை உணர்த்துவன உள்ளன , அவை படவுருக்கள் எண்கள் குறியீடுகள் அடிப்படையில் அமைவனவாகும் . தமிழில் மட்டுமே படவுருக்களோடு எண்கள் குறியீடுகள் ஆகியனவும் சொல் வடிவங்களாகப் பொருந்தி வருகின்றன . நாம் சிந்து எழுத்தில் சொல் வடிவப் புதிர் விடுப்பு முறையுடன் எளிய ஒலிநிலையான வடிவியல் அடிப்படை வடிவங்களை மிகுந்திருப்பதைக் காட்டுகிறோம் . அவை வடிவநிலையாலும் ஒலிநிலையாகவும் சங்க காலத் தமிழி எழுத்துகளுடன் பொருந்தி பொருளுணர்த்துவதை ஆராய்ந்து காட்டியுள்ளோம் . ஆகவே , சிந்து எழுத்து அம்மையார் குறிப்பிடும் Logographic சொல்வடிவங்களும் மிகுதியான ஒலிநிலையான (Phonetic)வடிவங்களையும் இணைத்து வழங்கும் எழுத்து முறையாகும் . அம்மையார் மறுத்துரைக்கும் எளிய ஒலிநிலையான வடிவங்களையும், சொல்லுருவன் தொடர்புடைய சொல் வடிவங்களும் இணைந்த ஓர் ஒருங்கிணைந்த எழுத்துமுறையே சிந்து எழுத்து ( Integrated writing system) எனலாம் .சொல்லுருவன் ( சொல் வடிவம் ) படிப்பதற்கு எளிதானது . காரணம் அது படவுருக்கள் அடிப்படையிலானது . உலகத்தின் அத்தகைய தொன்மையான எழுத்துகள் யாவும் படிக்கப்பட்டுவிட்டன .ஆனால் சிந்து எழுத்து மட்டுமே இன்னும் படிக்கப்பெறாமல் உள்ளது . காரணம் சிந்து எழுத்தைப் படவுருவன் என்று முத்திரை குத்துவதுதான் . அதன் வடிவங்கள் அனைத்தையும் படவுருக்கள் என்று கூறி பொருளூட்டிப் படிக்க முனைவதுதான் . உலகத்தின் ஆய்வாளர்கள் கூட்டெழுத்துகளைக்கூட படங்களாகக் கருதி பொருளூட்டுவதால் அவர்கள் நூறாண்டுகளாகப் படிக்க முடியாது தவிக்கின்றனர் . இப்போதுதான் ஓரளவு ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் . படங்களாகப் படிக்க முயன்ற ஈராஸ் அடிகள் முதல் சோவியத் ஃபின்லாந்து இந்திய ஆய்வாளர்கள் சோர்வடைந்து சிந்து எழுத்து வடிவங்கள் பொருளுணர்த்துவதில் பயனற்று உள்ளதாகக் கூறத்தொடங்கியுள்ளனர் . அஸ்கோ பர்ப்போலா , மகாதேவன் போன்றோர் இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளனர் . அம்மையார் இரு மொழிக் கல்வெட்டு ஏதும் கிடைக்காததால் இதுவரை படிக்க முடியாமல் உள்ளது என்கிறார். ரோசட்டா இரு மொழி , மூவெழுத்துக் கல்வெட்டு எல்லா எழுத்துகளையும் படிக்கக் கிடைத்துவிடாது . அதற்குக்காத்திருக்க முடியாது . சிந்து எழுத்து ஒலிநிலையுடையதல்ல என்று வெகு காலம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முழுமையாகப் படிக்கப்படும் காலம் விரைவில் வரும் . படவுருக்களே இல்லாமல் எளிமையான வடிவங்களும் அவற்றின் மீது உயிர்குறியீடு இட்டு எழுதும் முத்திரைகள் சிலவற்றைக் கீழே தந்துள்ளேன் . சிந்து எழுத்து முறையின் மறுபக்கத்தை - ஒலிநிலைத் தன்மையை அதுவே காட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

சிந்து எழுத்துக் கற்போம் - 2 .

சிந்து நாகரிகத் தமிழ் எழுத்து.

சிந்து எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ள அதன் முதல் வகையான வடிவியல் கோணம் உள்ள செயற்கையாக வடிவமைக்கப்பட்ட எளிய அடிப்படை வடிவங்களையும் , அவற்றின் மீது சிறு கீற்றுக் கோடுகள் இட்டு எழுதப்பெறும் உயிர்குறியீடிட்ட செயற்கை உயிர்மெய் வடிவங்கள் பற்றி நன்கறிவது இன்றியமையாத ஒன்றாகும் . , மற்றும் இவ்விரு வடிவங்களுடன் படங்கள், குறியீடுகள், எண்களைக் கொண்டு இணைத்து உருவமைக்கப்படும் கூட்டு வடிவங்கள் ( Compount signs ) ஆகியவற்றையும் நாம் தெளிவுபட புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுவடிவங்களை நம்மால் பிரிக்கவோ இணைக்கவோ முடியும் .ஆய்வாளர்கள் பலர் சொல்வதுபோல அவை படங்களோ , கோட்டுருக்களாக மாறிய வடிவங்களளோ அல்ல.
ஆனால் அவற்றைச் சொல்நிலை , பொருள்நிலைக்கேற்ப அழகிய ஓவிய வடிவங்களாக வடிவமைத்துள்ளனர் . அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வடிவங்கள்வரை இணைந்துள்ளன . ( படம் காண்க 1 , 2 ). நமது ஆய்வுகள் சிந்து எழுத்தின் இரு வகைகளில் முதல் வகை ஒலிநிலையான வடிவங்களாலும் , இரண்டாம் வகை வடிவங்கள் ( படம் குறியீடு எண்கள் ) சொல் வடிவங்களாகவும் ( Word- signs ) அமைந்துள்ளன என்று காட்டுகின்றன எனவே சிந்து எழுத்து முறையை சிந்து எழுத்து என்ற பெயரில் ஒற்றைப் பொது வடிவங்களாகக் கொள்ளும் மரபுமுறை ஆய்வாளர்களின் கருதுகோள்கள் தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மையாகும் .எனவே சிந்து எழுத்து முறையை பல தொகுதிகள் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த எழுத்து முறை என்றே கொள்ள வேண்டும் ( Integrated writing system ) என்பதே சரியாகும் .முதலில் நாம் எளிமையான அடிப்படை வடிவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் .
இவ்வடிவங்களை ஒருமுறை பார்த்தாலே நாம் இவற்றின் அடிப்படைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம் .( படம் 3 ). முதல் வகை எழுத்தான ஒலிநிலை எழுத்துகள் முதிர் சிந்து நாகரிக காலத்தில் உருவாக்கப்பட்டவை . ஆனால் இரண்டாம் வகை சொல் வடிவங்களோ முந்து சிந்து அல்லது தொடக்கநிலைச் சிந்து நாகரிக காலத்தில் உருவானவை .நாம் அறிந்த வகையில் முதிர் சிந்து காலத்திற்கு முன்பும் பின்பும் கிடைத்துள்ள முத்திரைகள் எழுத்துகள் இல்லாமல் வடிவியல் வடிவங்களை மட்டுமே கொண்டுள்ளன . எனவே முந்தைய எழுத்துகள் நிலைத்திருக்கக் கூடிய பொருட்களில் எழுதப்படவிலலை என்று கருதவேண்டியுள்ளது .
சிந்து மக்கள் தங்கள் நாகரிக - கணித அறிவியல் நிலைக்கேற்ப அடிப்படை வடிவியல் வடிவங்களை உருவாக்கி அவற்றை அதற்கும் முந்திய பட குறியீடு எண் வடிவங்களோடு கலந்தும் இணைத்தும் எழுதி இருக்க வேண்டும் . திரு. ஐ . மகாதேவன் தனது இயைகோவையிலேயே (Concordence ) சுமார் 45 அடிப்படை வடிவங்களைத் தருகிறார். மேலும் கூட்டு எழுத்து வடிவங்களிலும் பல அடிப்படை வடிவங்களைக் காண்கிறோம். ( படம் 2 - 3 ) .இத்தகைய வடிவங்களைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவை ஒப்பிடத்தக்க அளவுக்கு வடிவப் பொருத்தம் கொண்டு சங்கத் தமிழி எழுத்து வடிவங்களுடனும் ஒலிநிலையுடனும் ஒப்ப உள்ளன (படம் 2 - 4 ) . தமிழியில் ஒரு ஒலிக்கு ஒரு வடிவம் என்றிருப்பது போலல்லாமல் ஒரு ஒலியின் வடிவத்திற்குத் தொடர்புடைய சில மாற்று வடிவங்களையும் கொண்டுள்ளது . தொன்மையான செமிட்டிக் பொனிசிய எழுத்து முறைகளில் கூட இத்தகைய மாற்று வடிவங்கள் ( Alternative signs ) உள்ளன .
பலநூறு ஆண்டுகள் புழக்கத்தில் , மிகப்பெரிய நிலப்பரப்பில் புதிய எழுத்து முறைக்குத் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தோற்றுவித்த ஒற்றை வடிவத்திலிருந்து பல தொடர்புடைய வடிவங்களை உருவாக்கி விட்டனர். ஆயினும் குறியீடிட்டு உயிர்மெய்களை எழுத ஒற்றை வடிவத்தையே பயன்படுத்தினார். நாம் இவ்வடிவங்களைச் சங்கத் தமிழி எழுத்து வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். மேலும் இவற்றைத் தமிழி எழுத்து வடிவங்களின் அடிப்படையில் ஒலியூட்டலாம் . இதனைக் காட்டும் வடிவ ஒற்றுமை , ஒலி ஒற்றுமை குறித்த இரு பட்டிகளையும் இணைத்துள்ளேன்.
சில முத்திரைகளையும் தந்துள்ளேன். இவற்றின் வடிவங்கள் வருமுறை எத்தகைய ஒலிநிலைகளில் பொருளியலபிற்கேற்ப வருகின்றனவா என்று கண்காணியுங்கள் . முத்திரை 20 : 2056 மட்டுமே தவ " என்ற அடைமொழியை அடுத்து ண்டனய்ய என்று சொல்முதலில் மெய்யுடன் வருகிறது. சொல் முதலில் இவ்வாறு மெய்வடிவம் தமிழ் எழுத்தில் வராது எனவே சிந்து எழுத்து தமிழல்ல என்று திரு . எஸ் . ஆர் . இராவ் வாதம் செய்கிறார். ஆனால் சொல்முதலில் உயிர்க்குறியீடு ( புள்ளி) இல்லாமல் வரும் மெய்யெழுத்து அகர உயிர் ஏறிய உயிர்மெய் என்றும் அப்போது மெயயெழுத்து தனக்குரிய வடிவமே வடிவமாக வரும் புள்ளியிட்ட பிற மெய்கள் மட்டுமே ( உயிர்க்குறியீடு பெற்று ) தமக்குரிய மெய்வடிவில் உருவு திரிந்து வரும் என்ற தொல்காப்பிய இலக்கண விதியைச் சிந்து எழுத்தில் பார்க்கிறோம் . சங்க காலத்திலும் , அதற்கு முன்னர் தொல்காப்பியர் காலத்திலும் மெய்யெழுத்துக்குப் புள்ளியிடும் முறை கிடையாது .அது கி மு முதல் நூற்றாண்டில் இருந்தே வழக்கிற்கு வந்தது . எனவே இம்முத்திரையில் வரும் மெய்யெழுத்தை அகரம் ஏறிய ந அல்லது ண என்ற உயிரமெய் எழுத்தாகவே கொள்ள வேண்டும் . தொல்காப்பிய விதி சிந்து எழுத்து முதலே தமிழில் வழக்கில் உள்ளது என்று கூறலாம் . திரு . ராவ் கூறுவது பிழையாகும் . எனவே இச்சொல்லை ண்டனய்ய - நடனய்ய என்று படிக்க வேண்டும் . சங்கத் தமிழியிலும் இவ்வாறு ணகரம் நகரமாக ( ணாகன மகன் - நாகன் மகன் ) என்று வருகிறது. இத்தொல்காப்பிய விதி சிந்து - ஆகிய இரு முறைகளிலும் உண்டு . புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுருவாகி அகரமொடு உயிர்த்தலும் ஏனை உருவு திரிந்து உயிர்த்தலும் என ஆயீரியல உயிர்த்தலாறே என்பது தொல்காப்பியம் .
மொகஞ்சதாரோ முத்திரை 2068 தமிழ் என்ற பெயரையே வழங்குகிறது . அத்து என்னும் இடைச்சொல் பெற்று தமிழத்தள் - தமிழுக்கு உரியவள் என்று தமிழன்னையையோ வேறு ஒரு இறைவியோ குறிப்பிடப்பெறுகிறாள். இது வண்ணத்தள் , கன்னத்தள் என்பது போன்று வந்தது . முதல் இரு எழுத்துகளைப் பிரித்து தமி = ஒப்பற்ற என்று அடைமொழியாக்கி , தொடர்நிலையில் தமிழத்தள் என்று பிரிநிலைக்குறி மூலம் ( " ) ஒரு சொல்லையே தொடராக்கி விட்டனர் . ஆ க் என்று இறுதி இரண்டு எழுத்து. நான் இந்த ஆக் என்பதை ஆக்கள் என்று ஒற்றை இரட்டித்துப் படித்துள்ளேன். இம்முத்திரை கிடைத்த மொகஞ்சதாரோ அருகில் ( 250 கிமி ) வட திராவிட மொழியான பிராகுயி மொழி பலுச்சிஸ்தான் ( பாகிஸ்தானில்) பகுதிகளில் பேசப்படுகிறது . இம்மொழியில் க் என்பது பன்மை உணர்த்தும் விகுதியாக ( கள் ) வழங்குகிறது . இதன்படி அம்மொழியில் தேள் ( அதிலும் Scorpion தமிழ் போல தேள்தான் ) என்பதைப் பன்மையாக்க க் சேர்த்து தேள்க் = தேள்கள் என்று குறிப்பிடுகின்றனர் . இன்றும் அப்படியே வழங்குகிறது . சிந்து எழுத்துக் காலத்தில் எழுத்து - ஒலிச்சிக்கனம் கருதி க் என்று எழுதி க்க என்று இரட்டித்துப் படித்ததன் தொடர்ச்சியா ? அல்லது ஆதிகாலத்தில் தமிழ் உள்ளிட்ட உலகம் முழுதும் வழங்கிய தமிழ்ப் பொதுமொழியில் ( Dravidian core langauge ) அப்டியே தேள்க் ஆக் என்பது போன்று வழங்கினார்களா என்று புரியவில்லை . என் கருத்து : இன்றும் அது என்னும் 6 ஆம் வேற்றுமை உருபின் மாற்று உருபாக அ என்பது வழங்குகிறது . எ டு : தமிழ் + அ = தமிழ - தமிழினது என்று வழங்குவதால் பிராகுயி போல தமிழிலும் ஆக் என்றே வழங்கி இருக்கலாம் . க் என்பது கள் என்ற விகுதியின் மாற்றுருபாகவும் இருக்கலாம் . மேலும் க் என்னும் கள் விகுதி ஆ = பசு என்னும் அஃறிணை வழக்கில் வருவதை அறிக . கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே என்ற தொல்காப்பிய விதியின்படியான வழக்கு இது .
முன்பு காட்டிய தொல்காப்பிய விதி , இங்கு காட்டுவது யாவும் தமிழின் மிகத்தொன்மையான இலக்கண விதிகளையே தொல்காப்பியம் கொண்டுள்ளதை உணர்த்துகிறது . இத்தொன்மையான இலக்கண விதிகள் அந்நூலின் தொன்மையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன . அடுத்து சிந்து எழுத்து முறையின் விதிகள் தமிழியல்புடன் பொருந்த வருவதால் சிந்து எழுத்துத் தமிழே என்று உறுதியாகிறது .
எனவே சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே தமிழ் என்று தம் மொழிக்குத் தமிழர் பெயரிட்டுவிட்ட தொன்மையும் பான்மையும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கண ,இலக்கிய வளம்பெற்ற மொழியாக விளங்கும் சிறப்பும் நம்மைப் பெருமைகொள்ளச் செய்கிறது - மனம் இனிக்கிறது . அடுத்தப் பதிவில் மீன் வடிவ எழுத்தின் சிறப்பியலபைக் காணலாம் .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 Somasundaram Murugan Arulraj Lourdusamy தமிழிலிருந்தே தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு .. என பதினெட்டு மொழிகள் பிரிந்து சென்றுள்ளன. ஆக வந்தேறி என்பது சரியல்ல.


பண்டைய தமிழ் வேந்தர்கள் ஆண்ட பூமியில் கொடுந்தமிழ் நாடுகளென பன்னிரண்டு பகுதிகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

சேரநாடு சோழநாடு என்பது இன்றைய கேரளம் கன்னடம் ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியதே.

சுதந்திரம் வந்த பிறகு நிர்வாக வசதிக்காக..அதிகமாக பேசப்படும் மொழிப்பகுதிகளை உள்ளடக்கி பெரும் இந்திய நிலத்தை தனி தனி மாநிலங்களாகப் பிரித்துள்ளனரே தவிர..
பெங்களூரிலோ மாதங்காவிலோ ஹைதராபாத்திலோ இல்லை சிட்னியிலோ கனடாவிலோ கலிபோர்னியோவிலோ வசிக்கும் தமிழர்கள் எல்லாம் போயேறிகள் என்பதோ..அதே போல தெலுங்கோ படகர் மொழி பேசும் படகர்களோ செளராஷ்டிர மொழி பேசும் நெசவாளர்களோ .. கடுந்தெலுங்கு பேசும் துப்புறவுத் தொழிலாளர்களோ வந்தேறிகள் என்பது சரியல்ல.
அரசியல் காரணமாய் இடப்படும் துவேஷமே ஒழிய அது எந்த விதத்திலும் மனித சமத்துவத்திற்கு கல்வி வேலை சுகாதார பாதுகாப்புக்கு உத்ரவாதம் தர உதவாது என்றே எண்ணுகிறேன்.

தமிழர் சிங்கப்பூர் மலேசியா ஆப்ரிகா என்று பல தலைமுறைகளாக வாழ்பவர்ளை குடியேறி என்றா சொல்வது? இலங்கையே தமிழகத்தோடு தொடர் நிலப்பகுதி என்று தானே சொல்கிறார்கள்.
அப்ப இலங்கை பிரச்னைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றா பிரிந்து நிற்பது?

திராவிடம் என்ற சொல்லே தமிழி என்பதன் திரிபு என்றல்லவா அறிகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 Poorna Chandra Jeeva Arulraj Lourdusamy ஐயா செஞ்சோற்றுக் கடனுக்காக எழுதுபவன் எழுத்தாளனோ , ஆய்வாளனோ அல்ல . உங்களிடமிருக்கும் அதே மனோபாவம்தான் நீங்கள் சொல்லுகின்ற தெலுங்கர் , கன்னடர் , மலையாளிகளிடமும் உள்ளது . நீங்களெல்லாம் பேசும் மொழியால் மட்டுமே வேறுபடுகிறீர்கள் . நீங்கள் தமிழ் தமிழ் நாடு என்கிறீர்கள் அவன் ஆந்திரா தேசா , கன்னட தேசா என்கிறான் . அரசியல் களத்தில் எவரிடமோ தோற்றுப்போய் வாலறுந்த நீங்கள் மற்ற எல்லோருமே வாலை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள் . மக்கள் நன்மைக்கான அரசியல் பொருளாதார மனிதநேயக் கொள்கைகளைச் சொல்லி மக்களைத் திரட்டத் தெரியாதவர்களே திராவிட என்ற சொல்மீது அந்த வெறுப்பைக் காட்டுகிறீர்கள் . பலர் தமிழை வைத்து வயிரு வளர்க்கிறார்கள் இப்போது வேறு பலர் திராவிட எதிர்ப்பு பேசி வயிரு வளர்க்கிறார்கள் . தோற்றுப் போன நீங்களெல்லாம்தான் திராவிடர்கள் . ஏனெனில் திராவிடம் நிலவியல் , அரசியல் களத்திலேயே தோல்வியடைந்திருக்கிறது . இன மொழி பண்பாட்டுக் களத்தில் இன்னும் தனது அடையாளத்தை இழக்காமல்தான் உள்ளது . நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு திராவிடத்தை எதிர்ப்பவர்கள் ; நாங்கள் அப்படி உணர்ச்சி வயப்பட்டு திராவிட என்ற சொல்லை ஆதரிப்பவர்களல்ல . ஆய்வறிவு எங்களுக்கு அச்சொல்லின் தேவையை உணர்த்துகிறது . ஆனால் எதிர்காலத்தில் ஒருவேளை அச்சொல்லுக்கான தேவையில்லாது போகலாம் , அப்போதும் நாங்கள் அதைத் தயங்காமல் ஏற்றுக்கொள்ளுவோம் . . எங்களுக்கு வார்த்தை வயிற்றுப்பிழைப்பல்ல . இனி எவரிடமும் செஞ்சோற்றுக் கடன்பற்றிப் பேசாதீர்கள் . கடன் பட்டிருந்தால்கூட சான்றோர்கள் அவ்வாறு பேச மாட்டார்கள் . முதலில் நீங்கள் சொல்லுங்கள் - நீங்கள் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் என்ன செய்திருக்கிறீர்கள் ? வசதியான வாழ்க்கை வந்த பிறகு ' ஈஸி சேரில்' உட்கார்ந்து கொண்டு தத்துவம் சித்தாந்தம் பேசுவோரால் எதையும் சாதிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 Somasundaram Murugan நிறங்களின் வரலாறு


அவர் என்ன நிறமென என்ற கேள்விக்கு அவர் புதுநிறம் என்பர்.அல்லது மாநிறம் என்று சொல்லுவர்.


மாநிறம் என்றதும் மா..பச்சை வெளிர்பச்சை என்றா எடுத்துக் கொள்ள என யோசனை ஓடும்.

சங்க இலக்கியங்கள் எப்படிச் சொல்கிறதாம்?

பெண்கள் செம்பு-மாந்தளிர் நிறத்தினர் என்றும்
ஆண்கள் கரிய இரும்பு நிறத்தினர் என்று காட்டுகின்றனவாம்.
மா நிறம் என்றால் மாந்தளிரின் நிறத்தை தேனின் நிறத்தைச் சொல்வதாக நாம் அறிந்திட வேண்டும்.

திராவிடர் அடையாளமாய்

குறுகிய மண்டையோடு
கோரை முடி அல்லது
அலைபாயும் சுருள் முடி
தடித்த உதடு
அகண்ட மூக்கு
செம்பு மாந்தளிர் அல்லது இரும்பு நிறத்தினர் என்பது அடிப்படை அமைப்பாம்.

இதுவே ஆரியர், ஈரானிய பாரசீகர்களிலிருந்து திராவிட மானிட அமைப்பிலிருந்து மாறுபட்டுத் தெரிவதாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard