New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைக்குலமும் தொண்டக்குலமும் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பண்டைக்குலமும் தொண்டக்குலமும் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Permalink  
 


 பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

 

sekkizharசாதியைப் பற்றித் தமிழ்ஹிந்துவிலும் பிற தளங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் சைவநாயன்மார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான, திருநாளைப்போவார் நாயனார் என்று போற்றப்படுபவரான நந்தனார் பற்றிக் கட்டாயம் பேசப்படுகின்றது.

மூதறிஞர் இராஜாஜி போன்றவர்களால் சமூகஒற்றுமை குறித்து நந்தனார் வரலாறு பேசப்பட்டால், பகுத்தறிவாளர் என்றும் சமூகப்புரட்சியாளர் என்றும் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொள்வோரால் சமூகக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பார்ப்பன சமூகத்தின்மீது வெறுப்பை உமிழ்வதற்கும் அச்சமூகத்தை சாதிக்கொடுமைக் காவலர்களாகவும் மனிதநேயமற்ற அரக்கர்களாகவும் காட்டுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றது.

நந்தனார் வரலாற்றை முதன்முதல் முழுமையாகக் கூறும் தெய்வச்சேக்கிழாரின் உள்ளக் கருத்திலிருந்து இவர்கள் எத்துணை தூரம் விலகிச் செல்லுகின்றார்கள், நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள் என்பன சிந்திக்கத் தக்கனவாகும்.

தொகை வகை விரி:

திருநாளைப்போவார் நாயனாரை, முதன் முதலில் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திநாயனார், தம்முடைய திருத்தொண்டத் தொகையில்,

‘செம்மையே திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’

என்று குறிப்பிடுகின்றார். இத்தொடரில் உள்ள ‘செம்மை’ இங்குச் சிவனிடத்தில் அவருக்கு இருந்த நீங்காத பத்திநிலையை உணர்த்தும். செம்மைபுரி சிந்தையராய்த் திருநாளைப்போவார் என்ற பெயர் வாய்ந்த பெரியவருக்கும் நான் ஆளாவேன்’ என்பது இத்தொடரின் பொருளாகும்.

திருத்தொண்டத் தொகை எழுந்தவரலாறு திருத்தொண்டத்தொகைக்குத் தமிழ்ச் சைவர்கள் தரும் ஏற்றத்தை விளக்கும்.

‘மாதவஞ்செய் தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர’,

நம்பியாரூரர் திருவெண்ணெய்நல்லூரில் சைவவேதியர் குலத்தில் திருஅவதாரம் செய்தார்.

நம்பியாரூரர் தம்முடைய சாதியாகிய சைவவேதியர் குலத்தில் தோன்றிய புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளாரைத் திருமணம் செய்துகொள்ளும்போது மறையவராக இறைவர் வந்து தடுத்தாட்கொண்டார். அப்பொழுது நம்பியாரூரர் தம்முடைய பிறப்பின் வழிச் சாதியை உயர்த்திப் பேசும் முறையில் “ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாகும் வழக்கு உலகில் உண்டோ” என்று வாதிட்டார்.

சைவராஜதானியாகிய திருவாரூரிலே, திருத்தேவாசிரிய மண்டபத்திலே, ‘மண்மேல் மிக்கசீர் அடியார் கூடி , எண் இலார் இருந்த போதில்’ அவர்களைகண்டு, ‘இவர்க்கு யான் அடியேன் ஆகப் பண்ணும் நாள் எந்நாள்? ‘ என்று பரமர்தாள் பரவிச் சென்றார். பிறப்பால் தோன்றிய சாதி வேறுபாடு, ‘பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழும்’ தொண்டக் குலத்தில் அழிந்து விடும் என்று சிவபரம்பொருளே உணர்த்த, ‘ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாதல் இல்லை’ என்றுதன் சாதிப் பெருமை பேசிய சுந்தரர், ‘திருநீலகண்டக் குயவனாருக் கடியேன்’, பாணனாருக் கடியேன்’ எனச் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள சாதியில் பிறந்த அடியாருக்கும் அடியேன்’ என்று தம் அடிமைத் திறத்தை வெளியிட்டார்.

சிவதொண்டர்கள் இருபிறப்பாளர். தாய்தந்தையரால் வந்த பிறப்பு ஒன்று. அது சாதியைக் குறித்த பிறப்பு. சிவத்தொண்டராதல் இரண்டாம் பிறப்பு. அது பிறப்பால் தோன்றிய சாதியை அழித்துத் தொண்டர் அனைவரையும் ‘சிவகோத்திரத்தினர்’ ஆக்குகின்றது.

நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகை பாடியருளும்போது, ‘திருநாளைப் போவார்’ என்ற திருநாமம் மட்டுமே இறையருளால் அறியப் பெற்றிருந்தது. அவருடைய இயற்பெயர் முதலியன எதுவம் அறிய வராநிலையில், நம்பியாரூரர், ‘திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று பாடியருளினார்.

நம்பியாரூரருக்குப் பின் , திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாளைப் போவாரைப் பற்றிய மேலும் சில செய்திகள் தெரிய வந்தன. நம்பிகள் தாம் அருளிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யில் திருநாளைப் போவாரின் வரலாற்றை ஒரு பாடலில் பாடினார். அப்பாடல் –

“நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே”

(திருத்தொண்டர்திருவந்தாதி, 20)

இந்தப் பாடலில் நாம் பெறுகின்ற செய்திகள்:
1. திருநாளைப்போவாரின் பிறப்பிடம் பொழில்கள் சூழ்ந்த ஆதனூர்.
2. புலைச்சாதியினர்.
3. தில்லையம்பலவாணரின்மேல் அளப்பரும் பத்தி உடையவர்.
4. தில்லையம்பலவாணர் அருளால் புன்புலை நீங்கப் பெற்றார்.
5. தில்லை மூவாயிர அந்தணரும் கைகுவித்துத் தொழும்படியான முனிவராயினார்.
6. ‘புறத்திருத் தொண்டன்’ என்றமையால் அவரது மரபும், தொண்டராயின நிலையும், மரபுக்கு ஏற்ப அவர் செய்த திருத்தொண்டுகளும் குறிக்கப்பட்டன.

நம்பியாண்டார் நம்பிகள் கூறிய செய்திகளுக்கு மேல் தெய்வச்சேக்கிழார், – அவர் சோழப்பேரசின் முதலமைச்சர் என்னும் தகுதியினார், பலசெய்திகளை அறிந்து, திருநாளைப் போவாரின் வரலாற்றை விரிவாகப் பாடினார். இவருடைய இயற்பெயர் நந்தனார் என்பதைச் சேக்கிழார்தாம் முதலிற் கூறினார்.

புலைச்சாதியிற் பிறந்து தம்முடைய முன்னுணர்வினால் சிவபத்தியை வளர்த்துக் கொண்ட நந்தனாரின் மனநிலையை சேக்கிழார் மிகத் தெளிவாகவும் யதார்த்தமாகவும் எடுத்துக் காட்டியுள்ளார்.

நந்தனாரின் மனநிலையை எடுத்துப் பேசும் முன் அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் புலைப்பாடியின் நிலைமையை சேக்கிழார் சொல்லோவியமாகத் தீட்டுகின்றார். அவர் பிறந்த குடியும் வாழ்ந்த சூழ்நிலையும் அவருடைய மனநிலையை உருவாக்கின.

இலைக்கூரை வேயப் பெற்ற குடிசைகள், அவற்றின் மீது சுரைக்கொடிகள், ஒழுங்கற்ற தெருக்கள், அவற்றில் குஞ்சுகளுடன் அலைந்து திரிந்து மேயும் கோழிகள், வார்கள் நெருங்கிய முற்றங்கள், அங்குக் கூரிய நகங்களையுடைய நாய்களின்குட்டிகளைக் கவர்ந்து அலைத்து விளையாடும் இரும்புக்காப்பணிந்த சிறுவர்கள், அந்த நாய்க்குட்டிகளின் மெல்லிய குரைப்பு சிறுவர்கள் இடுப்பில் அணிந்துள்ள இரும்புச் சதங்கையின் ஒலியை அடக்கி ஒலித்தல், பள்ளப்பெண்கள் மருதமரத்தின் கிளையில் கட்டித் தொங்கவிட்டுள்ள தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், வஞ்சி மரங்களின் மெல்லிய நிழலடியில் புதிக்கப்பட்ட பானைகளில் கோழிப் பெடைகள் முட்டையுடன் அடைகாத்தல், வார்க்கட்டினை உடைய தோற்பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், வங்குள்ள தென்னை மரங்கள், அவற்றினுள் அண்மையில் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், கடைஞர்களை வினை செய்யக் கூவும் கொண்டையுடைய சேவல்கள், காஞ்சிமரத்தின் நிழலில் நெல்குறும் புலைமகளிரின் பாட்டொலி, நெற்கதிர்களைக் கூந்தலிற் செருகிய மள்ளத்தியர் பறையொலிக்கு ஏற்ப கள்ளூண்டு களிக்கும் மள்ளருடன் கூத்தாட்டயருதல் எனும் இத்தகைய சூழலில் நந்தனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றார்.

நந்தனாரின் வாழ்க்கைப் போராட்டம்

இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில் பிறந்து வளர்ந்த நந்தனார், இப்பின்னணியில் வாழும் மக்களைப் போலவே வாழ்தல்தான் இயற்கைநெறி. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார். இவ்வாறு புலைப்பாடியை வருணித்த சேக்கிழார், “ நந்தனார் என ஒருவர் உளரானார் “ எனக் கூறினார். அந்தப் புலைப்பாடியின் சூழ்நிலைக்கு ஒத்தியங்கி வாழ்ந்த பிறரெல்லாம் மறைந்து போக, எதிர்நீச்சலிட்டுச் செயற்கரிய செய்த பெரியோராகிய நந்தனார் இன்றும் உளரானார் என்பது சேக்கிழார் கருத்து.

thirunaalaippovarஅந்தப் புலைப்பாடியில் வாழும் மக்களின் மனநிலைக்கு முற்றும் வேறுபட்ட மனநிலையில், “பிறந்து உணர்வு தொடங்கியபின்” சிவபிரானிடத்தில் “சிறந்து எழுங்காதலினால் , செம்மைபுரி சிந்தையராய், மறந்தும் அயல் நினைவு இன்றி” வாழ்ந்தார். (செம்மை என்றால் சிவம்பதம்.’செம்மையேயாய சிவபதம் அளித்த செல்வமே’ திருவாசகம்)

நந்தனார், தம் குலத்தில் தோன்றிய பிறரைப் போலவே ‘பறைத்துடவை’ எனும் மானியம் பெற்று ஊரிலே பறையடித்தல் முதலிய தம் குலத்துக்குரிய தொழில்களைச் செய்து வாழ்ந்தார். இவர் குலத்தொழில் செய்வதனைச் சேக்கிழார், ‘சார்பினால் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால்’ என்றார். புலையர் பிறவியின் சார்பினால் வரும் மரபுத் தொழிலைச் செய்தாரென்றாலும் தம் சாதி மக்களிலிருந்து வேறுபட்டுச் சிவதொண்டிலும் தலைநின்றார் என்பது கருத்து. ‘கூரிலைய முக்குடுமிப் படையண்ணல்’ கோவில்கள்தோறும் பேரிகை, முரசு முதலிய இசைக்கருவிகளுக்கு வேண்டிய தோல் , வார் முதலியனவற்றையும், யாழுக்கும் வீணைக்கும் தேவைப்படும் நரம்புகளையும், சிவபெருமானுடைய அருச்சனைகளுக்குரிய கோரோசனை ( கோரோசனை பசுவின் வயிற்றினின்றும் எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ளதொரு வாசனைப் பண்டம். இது இறைவனது திருமெய்ப்பூச்சுச் சந்தனக் குழம்புக் கலவைக்கு உதவுவது) முதலியவற்றை உதவி வந்தார்.

வார், தோல், கோரோசனம் முதலியன இவருடைய குலத்தொழிலில் எளிதாகக் கிடைப்பன. இப்பொருள்களை விற்றுத் தம் வயிறு வளர்க்கும் பொருள்களாக்காமல் சிவன் திருக்கோவில்களுக்கு அளித்துச் சிவத்தொண்டுக்கு உரிய பொருள்கள் ஆக்கினார் . சிவார்ச்சனைக்கு உதவுவது முற்பிறப்பின் உணர்வினால் நந்தனார் உள்ளத்தில் பெருகிய ஆசையின் விளைவாகும். அந்த ஆர்வத்தைத் தூண்டியது, ஆதனூரில் இருந்த சிவன் திருக்கோவில். ஆதலின், ஆதனூரின் பெருமையை, “ நீற்றலர்பே ரொளிநெருங்கும் அப்பதி” என்றார், சேக்கிழார். (அப்பகுதி நீறுபூசும் அடியார்கள் கூட்டம் மிகுந்துள்ளது, திருநீற்றுச் சார்பினால் உளதாகும் சிவஞானப் பேரொளி நந்தனார், திருநாளைப் போவார் நாயனார் ஆக ஏதுவாக அமைந்தது என்பது குறிப்பு) இவை உடலால் அவர் செய்த சிவத்தொண்டு. பிறந்தது புலைப்பாடி யென்றாலும் புலைப்பாடியில் வாழும் ஏனையோரின் மனநிலைக்கு வேறுபட்ட மனநிலையுடையராய், சிவனடியாராய் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்தது, திரு ஆதனூர் சிவன் திருக்கோயில்)

அத்துடன்,

‘பாடவேண்டும் நான்போற்றி நின்னையே,
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்-
காடவேண்டும் நான்”

என மணிவாசகர் விரும்பியபடியும்,

“ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே”

எனத் தாயுமானார் கூறும் படியும், நந்தனார், சிவன் திருக்கோயில்களில் திருவாயில் புறம் நின்று, ”மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும், அவ்வியல்பில் பாடுதலும்” செய்தார். இவ்வாறு ஊனும் உயிரும் கலந்து சிவத்தொண்டில் நந்தனார் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு இவர் வாழும் நாளில் இவருக்குத் தில்லைத் திருத்தலத்தைத் தரிசிக்கும் ஆவல் மூண்டெழுகின்றது. தில்லை சைவர்களுக்கெல்லாம் பெருங்கோவில் அல்லவா!

நந்தனாரின் மனநிலை

அவருக்குத் தில்லையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை என்று பிறந்ததோ அன்றுமுதல் அவருடைய மனம் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நின்றது. அவருடைய மனமே அவருக்கு எதிரியாக இருந்தது.

இரவெல்லாம் துயிலாது கண்விழித்துத் தில்லையையே நினைந்திருப்பார். புலர்ந்தவுடன், ‘ அத்திருத்தலத்தில் சேரும் தன்மை நான் பிறந்துள்ள எனது குலத்தினொடு பொருந்துவதில்லை’ என்று எண்ணி, ‘இதுவும் எம்பெருமானுடைய ஏவலே’ என்று தில்லைக்குப் போகும் முயற்சியை ஒழித்திடுவார். ஆயினும் ஆசை மேன்மேலும் அதிகரிக்க ‘நாளைப்போவேன்’ என்பார். ‘நாளைப் போவேன்’ என நாட்கள் பல கழிந்தன. இக்காரணத்தாலேயே இவருக்குத் திருநாளைப் போவார் நாயனார் என்ற காரணப் பெயரும் தோன்றியது.

தில்லையைத் தரிசனம் செய்தவர்களுக்குப் பிறவி இனி இல்லை என்ற மரபுவழி சொல்லப்படுகின்ற மொழியை நினைந்து, தில்லைத் தரிசனமாம் நற்செயல் செய்வதில் இனிக் காலம் தாழ்க்கலாகாது எனப் ‘பூளையின் பூப்போன்ற பிறவியாகிய பிணிப்பு’ ஒழிய’ அங்குப் போகத் துணிந்து எழுந்தார். வழியிலுள்ள திருநின்றியூர், திருநீடூர், திருப்புள்ளிருக்குவேளூர் முதலிய தலங்களில் முன் கூறியவாறு வழிபட்டார்.

நந்தனார் தில்லையின் மருங்கு அணைந்தார். தில்லையின் திருவெல்லையை வணங்கி எழும்பொழுதில், அங்கு வேதியர் ஆற்றும் வேள்விச் செந்தீயில் எழுகின்ற புகைப் படலத்தைக் கண்ணுற்றார். வேதியர்கள் மறைகளை ஓதுகின்ற திருமடங்களும், அந்தணச் சிறார்கள் வேதம் பயிலும் பெருங்கிடைகளும் கண்டார். அங்கு மறையோதும் ஒலியையும் செவியுற்றார். இவை அவருடைய மனத்தில் அவர் பிறந்த குலத்தின் நிலையை நினைவூட்டின. ‘தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.’ என்று சேக்கிழார் கூறுகிறார். குறைவுடைய தமது குலச் சார்பினால், வேள்விச்சாலைகள், வேதம் பயிலும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லலாகாது என்று நடைமுறையில் இருந்துவரும் விதி வழக்கம் பற்றி அவர் அவற்றின் அருகில் செல்ல அஞ்சினார்.

தில்லைக்கு நந்தனார் புறப்படுமுன், மனம் எழுவதும் தவிர்வதும் ஆகப் பலநாட்கள் கழிந்தன. ஆயினும் பெருகுகாதலால் உந்தப்பட்டு தில்லையின் எல்லையை அடைந்தபோது வேள்விச்சாலைகளும் மறையோதும் கிடைகளும் அவற்றின் பெருமைகளையும் (காணாராயினும் கேட்டறிந்தமையால்) நந்தனார் நினைந்தார். அப்பெருமைகள் பற்றிய நினைவுகள் அவர் அங்குச் செல்லத் தடைகளாயிருந்தன. இந்தத் தடைகளே தில்லைத் தரிசனம் பற்றிய அவருடைய ஆராக்காதலை மேலும் முருகி எழச் செய்தன. அதனால் தில்லைப் பதியைப் பலமுறையும் வலம் வருவாராயினார்.

பெரியபுராணத்திற்குப் பேருரை வரைந்த சிவக்கவிமணி அவர்கள் நந்தனாரின் இந்த மனநிலையை அழகுற எடுத்துக் காட்டுகின்றார்.

“மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வில்” பெருங்காதலாய் எழுந்த ஆசை இன்னபடித்தென்று சொல்லமுடியாத அளவில் வளர்ந்து மேலும் ஓங்கிற்று. தான் பிறந்த குலத்தைப் பற்றிய தாழ்வுணர்ச்சியும் வேதியர்களின் ஒழுக்கம் பற்றிய பயபக்தியும் அவரைத் தில்லைநகரினுள் புகாதவாறு தடுத்தன. ஆதலால் ‘ உள்ளே போகவும் முடியாமல், விட்டு நீங்கவும் முடியாமல், தேனடைத்த பாண்டத்தினைச் சுற்றும் எறும்பு போலச் சுற்றிச்சுற்றி வருவாராயினர். தாய்ப்பசுவினை ஒரு வீட்டின் உள்ளே வைத்து அடைத்துக் , கன்றினை வெளியே நிறுத்தினால், அக்கன்று அவ்வீட்டினைச் சுற்றிச்சுற்றி வரும் இயல்பு போல’ நந்தனாரும் தில்லைநகரைச் சுற்றிச் சுற்றி வருவாராயினார்.

nandanar1இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. ‘மன்றின் நடங் கும்பிடுவது எவ்வண்ணம், திருநடம் கும்பிட இன்னல் தரும் இந்தப் பிறவி ஒருதடை ” என்ற ஏக்கத்தோடு நந்தனார் உறங்கும்போது, “மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு”, ஒருநாள், அம்பலத்தாடுவார் அவர்கனவின்கண் முறுவலுடன் அருள்செய்தார். “ இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி , முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என அம்பலவாணர் மொழிந்தார்.

தில்லைத் திருக்கோயிலுக்குள் நந்தனார் புக அவருடைய மனமே அவருக்குத் தடையாக இருந்தது என்ற உண்மை பெரியபுராணத்தில் திருநாளைப்போவார் புராணத்தில் நன்கு வெளிப்படுகின்றது. நந்தனாருடைய மனத்தினில் சில எண்ணங்கள் நன்கு அழுத்தமாகப் பதிந்து போயிருந்தன (obsession).

அவையே அவருடைய வருத்தங்களுக்குக் காரணமாகவும் இருந்தன.

அவையாவன:.
1. தான் பிறந்த குலம் இழிகுலம்.
2. இழிகுலத்தில் பிறந்த தன்னுடைய உடம்பும் இழிந்தது.
3. இழிந்த இந்த உடம்புடன் தில்லைத் திருக்கோயிலில் நுழைவதும் இறைவன் திருமுன்னர் நிற்பதும் ஆகாது.
4. வேள்வி செய்யவும் மறை ஓதவும் தில்லையம்பலவாணனுக்கு நெருக்கமாக இருந்து தொண்டு செய்யவும் உரிமையுடைய மறையோர் பிறப்பே பிறப்புக்களில் உயர்ந்த பிறப்பு..

தில்லையம்பலவனுடைய திருநடங் கும்பிடப் பெறுவதற்குத் தம்முடைய இழிபிறவியே தடை என்று அவருடைய எண்ணத்தில் ஆழப் பதிந்து இருத்தலினால், அத்தாழ்வுணர்ச்சியினால், இறைவனே அழைத்தாலும் அவர்முன்னே இவர் போகத் துணியார். இந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அவர் அடியார்கூட்டத்திலும் தம்மை இணைத்துக் கொள்ள இயலவில்லை.

எனவே, ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான்’ ஆகிய பெருமான் இவருடைய இழிபிறப்பைப் பற்றிய மன அழுத்தத்தை முதலில் போக்க வேண்டும்; அவர் உயர்ந்ததாக நினைக்கும் மறையவர் கோலம் தருதல் வேண்டும். பின்னர் அவரைத் தம் முன்னர் வருவிக்க வேண்டும் எனக் கருதினான். எனவே, இறைவன் “இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி, முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணருக்கு எரி வளர்க்க ஆணையிட்டார்.

இறைவனுடைய கட்டளையைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் “ அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டினர்” அம்பலவருடைய திருவருளுக்கு ஆளாகிய அன்பரை இதுகாறும் அறியாது இருந்துவிட்டோமே என்னும் வருத்தமே அவர்களுடைய அச்சத்துக்குக் காரணம். “எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம்” என்று தம் அன்பு பெருக திருத்தொண்டனாராகிய நந்தனாரிடம் சென்றனர். சென்று , “ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம், வெய்ய அழல் அமைத்து உமக்குத் தரவேண்டி” என விளம்பினர். ( வெய்ய – வெம்மை, விருப்பம்).

மறையவர்கள் அவ்வாறு அறிவித்தபின் நந்தனார், மறையவர்கள் நெருப்பு அமைத்த குழியை எய்தினார்; இறையவர் தாளை மனத்தினில் தியானம் செய்துகொண்டே எரியை வலம் வந்தார். இறைவனின்கழலை உன்னி அழலினுள் புகுந்தார். எரியினுட் சேர்ந்த தீயினிடத்து,

“…… இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்.”

அதாவது, மாயாகாரியமாகிய பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய உருவமுடைய முனிவர் வடிவம் கொண்டு, மார்பினில் வெண்புரிநூல் விளங்கச் சடைமுடியும் கொண்டு மேலெழுந்தனர். செந்தீயின் மேல் வந்து எழுகின்றபோது செம்மலரின் மேல் வந்து எழுந்த அந்தணன் (பிரமன்) போலத் தோன்றினார்.

எரியில் நந்தனார் மூழ்கினார் என்ற செய்தி புத்தாராய்ச்சினருக்குப் பல்வேறு எண்ணங்களை எழச் செய்துள்ளது. தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கோவிலுக்குள் நுழைவதற்குத் துணிந்த இழிகுலத்தினராகிய நந்தனாரைச் சுட்டெரித்துக் கொன்றுவிட்டனர் என்றும், கீழவெண்மணி நிகழ்ச்சி அன்றே தொடங்கி விட்டது என்றும், சிவபெருமானும் அந்தணச் சார்புடையனாய் நந்தனை பூணூல் தரித்த பர்ப்பனனாய் ஆக்கியே தம் முன் வர அனுமதித்தான் என்றும் இன்னும் பலவாறு திரித்துக் கூறினர். இன்னும் , சிவபெருமான் அனுமதித்தும் நந்தி இழிகுல நந்தனைத் திருக்கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், சிவன் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்” என நந்தியை விலகியிருக்கச் செய்ததாகவும் திருப்புன்கூர் நிகழ்ச்சியைத் தில்லை நிகழ்ச்சியாகவும் இவ்வாறு கதையினைத் திரித்தும் உரைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பண்டைக்குலமும் தொண்டக்குலமும் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Permalink  
 


நந்தனார் நெருப்பினுள் மூழ்கியது பற்றிச் சைவமரபில் பற்றிய சிந்தனைகள்

இத் “தவமறையோரெல்லாரும்” நந்தனாரிடம் பேசிய சொற்களின் நுட்பம் நோக்கத்தக்கது. ‘அடே, நந்தன் பயலே! உன்னைத் தீயிலிட்டுப் பொசுக்கி மந்திர ஸம்ஸ்காரம் செய்து உள்ளே சேர்த்துக் கொள்கிறோம்’ என்று அவர்கள் சொல்லவே இல்லை. ஆனால், “ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுதணைந்தோம், வெய்ய தழலமைத்துத் தரவேண்டி” என்றார்கள். ஆராத காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகும் நந்தனாரைத் தங்களுக்கு அன்புப் பாடம் கற்பிக்கும் “ஐயரே” என்றழைத்ததை நோக்குக. தங்கள் குலச் செருக்காலும் புறப்பூசைச் செருக்காலும் உண்மையன்பின் உறைவிடத்தை அறியாத அந்தணர்கள் கண்ணுதலருளால் காட்டக் கண்டார்களாதலின், “அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம்” என்றார்கள். அன்பிற்கு முன் மந்திர ஸம்ஸ்காரங்கள் நில்லாவென்பதை நன்குணர்ந்த அந்தணர்கள் “அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி” என்று, தாங்கள், இறைவன்சொல்லியபடி செய்யும் ஏவலாளர்கள் என்பதையும் விளக்கினார்கள். நந்தனார் இறைவனை நினைந்து அழலை வலம் வந்தார்; கைதொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புகுந்தார்; புண்ணியமாமுனிவடிவாய் மார்பில் முந்நூல் விளங்க எழுந்தார்.

நந்தனாருக்கு நெருப்பால் உடலைச் சுட்டுப் பொசுக்கும் நிகழ்ச்சிக்கு மாறாக, புலைப்பிறப்பு நீங்கும் அரிய ஸம்ஸ்காரம் நிகழ்ந்தது. நிகழ்த்தியவன் வேறு ஒரு அந்தணன் அல்லன். பரமேஸ்வரனே இதனை நிகழ்த்தினான். இறைவனே நந்தனைத் தீயில் உருமாற்றி முப்புரி நூல் அணிவித்து அந்தணனாக்கினான். நந்தன் செம்மலர்மேல் விளங்கும் வேதா வாகிய பிரமனைப் போலத் தோன்றினார், என்பது தெய்வச் சேக்கிழார் திருவாக்கு.

nanaalai_iஇறைவன் திருவடியன்பினால், கடைஞன் எனப்படும் ஒருவர்- , எந்த உயர் பிறப்பினரைக் கண்டு அவர் கூசி ஒழுகினாரோ அந்த வேதியர் குலத்துக்கெல்லாம் முன்னவராய் ‘வேதியன்’ என்ற சிறப்புப் பெற்ற பிரமனைப் போலத் திகழப் பெற்றார்.

இறைவன் செய்த செயலைப் பின்னாளில் ஐயா வைகுண்டர் செய்து தம் அடியவர்களுக்குத் ஏற்றத்தைத் தந்தார். எந்த சமூகத்தினர் தலைக்குத் துண்டு கட்டக் கூடாது, மேல் துண்டுபோடக் கூடாது என்று உயர்குடியினர் விதித்திருந்தனரோ, அந்தக் குடியினர் தலைப்பாகை அணிந்து கொண்டு , மேல்துண்டு போர்த்துக் கொண்டுதான் இறைவழிபாடு செய்ய வேண்டும், தம்மை வழிபடவேண்டும் என்று விதித்துப் பிறசமூகத்தினருக்கு மேலாக உயர்த்தினார் ஐயா வைகுண்டார்.

சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர். ‘எரிசுடராய் நின்ற இறைவா போற்றி’ என்று அப்பர் இறைவனைக் கண்டு போற்றினார். அஞ்ஞானம், அறியாமை என்பது ஆணமலம். அது இருள் வடிவினது. இருளை ஒளியே விரட்டும். சிவன் ஒளி வடிவினன்; ஞானமே வடிவானவன். பெருந்தேவர் இருவர் தம்முள் அடிமுடிதேட எழுந்த திருக்கோலம் நெருப்பு மேனி.

மணிவாசகர் வரலாற்றில் திருப்பெருந்துறையிலும் திருஞானசம்பந்தரின் திருமணத்தின்போது திருமணநல்லூரிலும் சோதியினுள் அடியார்கள் புகுந்து சாயுச்சியநிலை பெற்ற செய்தி பேசப்படுகின்றது.

சிவதீக்கையிலும் ஆன்மார்த்த வழிபாட்டிலும் பூத உடலை மந்திரவிதியால் எரித்தலும் அருளுடல் ஆக்குதலும் உண்டு. சிவபூசை செய்வோர் அதற்குக் கருவியாய், இருவினைகளுக்குக் கொள்கலமாயும் பஞ்சபூத பரிணமமாகவும் உள்ள உடலைப் பாவனையால் அழித்து, மீள அருள்மயமாக உண்டாக்குதலே பூதசுத்தி எனப்படும். சிவன் ஆணையால் தில்லைவாழ் அந்தணர் உண்டாக்கிய நெருப்பு பூதசுத்தி செய்து தூய்மையாக்கும் மந்திர பூர்வமான சிவாக்கினியே அன்றி உடலைச் சுட்டுப் பொசுக்கும் நெருப்பாகிய பெளதிக நெருப்பன்று என்பது சைவர்கள் கொள்கை.

திருநாளைப் போவாரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும்:

தில்லைஅருகில் இருக்கும் திரு எருக்கத்தம்புலியூர் எனும் திருத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருடைய மனைவியார் மதங்க சூளாமணியார். யாழ் என்னும் இசைக்கருவி தோலால் மூடப்பட்ட பத்தர் என்னும் உறுப்பு உடைமையாலும், நரம்புகள் விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படுதலினாலும், யாழ்ப்பாணர்கள் அக்காலத்தில் தாழ்குடிப் பிறப்பினர்களாகக் கருதப்பட்டனர்.

thiruneelakanda-yaazh-panarபாணனாரும் பாடினியாரும் திருஞானசம்பந்தப் பெருமானின் சிவனருள் பெற்ற இசைத்திறத்தைக் கேள்வியுற்று அவரைக் காணும் பொருட்டுச் சீகாழிக்கு வருகின்றனர். அளவிலா மகிழ்ச்சி கொண்ட திருஞானசம்பந்தர், பாணனாரையும் பாடினியாரையும், ‘ஐயர்! நீர் (எம்) உள மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம்’ என்று முகமன் கூறி தோணிபுரத் திருக்கோவிலுக்கு அழைத்துச் செல்லுகின்றார்.

திருக்கோவிலின் பாணனாரையும் பாடிணியாரையும் புறமுன்றினில் நிறுத்திக் கும்பிடுவித்து, “ ஏயும் இசை உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்” என்று கூற இருவரும் யாழிசை விரித்துத் தோணிப்பெருமானைப் பாடினர் எனச் சேக்கிழார் கூறுவதில் ஒன்றை மனத்தில் இருத்தல் வேண்டும்.

சீகாழி திருஞானசம்பந்தர் பிறந்து வாழ்ந்த தலம். அவர் பிறந்த அந்தண குலத்தவர்கள் பெரும்பான்மையராக வாழ்ந்த தலம். எனவே, திடீர்ப் புரட்சி எதுவும் செய்யாமல், அக்காலத்தில் நிலவிவந்த வழக்கத்தை ஒட்டிப் பாணனாரைத் திருக்கோவிலினுள் அழைத்துச் செல்லாமல், திருஞானசம்பந்தர், புறமுன்றினில் நின்று கும்பிடுவித்தார். இப்பொழுதுதான் அவர் பாணனாருடன் அறிமுகம் ஆகின்றார். ஆயினும் பாணனாரின் பெருமையை அறிந்து அவரை “ஐயரே” என்று அழைக்கப் பாணனாரின் தாழ்ந்த சாதி தடையாக இருக்கவில்லை. பின்னர், தம் மனையில் இருவரும் தங்க உரிய ஏற்பாடுகள் செய்தார்.

திருமனையில் இருந்தபோது ஆழிவிடம் உண்ட அண்ணலாரைக் காழிப் பிள்ளையார் போற்றிய பதிக இசையைப் பாணனார் யாழில் இட்டு எவ்வுயிரையும் மகிழ்வித்தார். பின்னர்ப் பாணனார், திருஞானசம்பந்தரிடம் “நீர் அருள்செய்யும் அறிவரிய திருப்பதிக இசையை யாழில் இட்டு அடியேன் உங்களைப் பிரியாமல் சேவிக்கப் பெற வேண்டும்” எனத் தொழுது வேண்டினார். பிள்ளையார் ‘தம்பிரான் அருள் இதுவே” என மனமகிழ்ந்தார். அன்று முதல் திருஞானசம்பந்தரின் அருகிருந்து யாழ் வாசிக்கும் முறைமையால் அகலா நண்புடன் வாழ்ந்தார்.

திருஞான சம்பந்தர் தில்லையை வழிபட வேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டபோது, அவருடன் அவரைப் பெற்றெடுத்த புண்ணியம் வாய்ந்த சிவபாத இருதயர் முதலாய மறையவர்களுடன் யாழ்ப்பாணனாரும் பாடினியாரும் உடன் சென்றனர். தில்லையில் வேதநாதமும் மங்கல முழக்கமும் நிறைந்து ஓங்க தில்லைவாழ் அந்தணர்கள் ‘சோபன ஆக்கம்’ சொல்லி எதிர்கொண்டு வரவேற்றனர்.

அவ்வரவேற்பின்போது ஞானசம்பந்தருடன் பாணனார் தம்பதியினரும் உடன் இருந்தனர் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். அங்குப் பாணனாரை அவருடைய பிறப்பைச் சுட்டித் தடுத்து நிறுத்துவார் ஒருவரும் இல்லை. சம்பந்தருடன் பாணனாரும் திருக்கோவிலுள் அம்பலவாணர் முன்னின்று சேவித்ததால், அம்பலவர் தீட்டுப்பட்டுவிட்டார் என்று புண்ணியாவாசகமும் செய்யப்படவில்லை.

sambandhar_palaniஅதன் பின்னர், திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலிய திருத்தலங்களை வழிபட்டு மீண்டும் தில்லைக்கு வ்ந்தார். பிள்ளையார் தில்லையை இவ்வாறு இருமுறை வழிபட்டார்.

பாணனார் பிள்ளையாரின் அடிதொழுது,’ அடியனேன் பிறந்த திருவெருக்கத்தம் புலியூர் முதல் நிவாநதிக் கரையின் மேலுள்ள ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும்’ என வேண்டினார். இந்தப் பயணங்களில், தந்தையாராகிய சிவபாத இருதயருடன் பரிசனங்களு தவமுன்வர்களும் செல்ல, திருஞானசம்பந்தர், “செங்கையாழ்த் திருநீலகண்டப் பெரும்பாணனாருடன் சேர, மங்கையார் புகழ் மதங்க சூளாமணியார் உடன்வர் வந்தார்” என்று கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். திருவெருக்கத்தம் புலியூரை அடைந்தபோது, “ ஐயர்! நீர் அவதரித்திட இப்பதி எத்தகைய அளவில் மாதவம் முன்பு செய்திருக்க வேண்டும்” எனப் பிள்ளையார் பாணனாரைப் பாராட்டிச் சிறப்பித்தார்.

திருஅயவந்தியில் திருநீலநக்கர் எனும் அந்தணர் பெருமான் தம்முடைய நெடுமனையில் , திருஞானசம்பந்தர் , பாணனாருக்கும் பாடினியாருக்கும் இனிது தங்க இடம் அமைத்துத் தரக் கூற, அந்தணர் வீட்டில் புனிதமான அக்கினிகாரியம் நடத்தும் இடத்தில் அவ்ர்களைத் தங்க வைக்கின்றார். முத்தீ புனித்மடைந்து வலமாகச் சுற்றி வளர்ந்தது.

திருப்புகலூரில் முருகநாயனார் எனும் அந்தணர் திருமடம் அமைத்துச் சிவத்தொண்டு புரிந்து வந்தார். அவருடைய திருமடத்தில் திருஞானசம்பந்தர் தம் பரிவாரங்களுடன் தங்கினார். அவர் அங்கிருப்பது கேள்வியுற்று சாந்தை அவயந்தியிலிருந்து அந்தணர் பெருமானாம் திருநீலநக்கர் அங்கு வருகின்றார். திருநாவுக்கரசர் பெருமானும் தம் அடியவர்களுடன் அத்திருமடத்தில் வந்து தங்கினார். அத்திருமடத்தில் அடியவர்கள் எத்தகைய வேறுபாடும் இன்றி,

“திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்து அங்கு,
ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்”.

திருமுருகநாயனார் திருமடத்தில் தங்கியிருந்த அடியவர்கள் அனைவரும் அந்தணர் முதலிய பலசாதியினராயினும், இறைவன் பொற்றாளில் விருப்புடைய திருத்தொண்டர்கள்; திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் அறிந்தவர்கள்; அதில் மகிழ்வுறுபவர்கள்; அதனால் அனைவரும் ஒருப்படு சிந்தையினர்.

அந்த ஒருப்படு சிந்தையினரில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். அந்தத் திருக்கூட்டத்தில் அவர் தயக்கமின்றி அந்தணர்களுடனும் கலந்து பழக, அவருடைய சிவபத்தியும் இசைப் புலமையும் திருப்பதிகப் பயிற்சியும் திருஞானசம்பந்தரிடம் அவருக்கு இருந்த நெருக்கமான பழக்கமும் ஏதுவாக அமைந்தன. அதனால் பாணனார் தாம் பிறந்த குலம் பற்றிய எவ்விதச் சிந்தனையும் இன்றி , அதனால் தோன்றும் தயக்கமும் இன்றிப், பிற அடியவர்களுடன் கலந்து பழகினார். திருஞானசம்பந்தரின் அடியவர் கூட்டத்தில் இருக்கும் தகுதியைத் திருநீலகண்டரும் பாடினியாரும் வளர்த்துக் கொண்டமையால், அந்தணர் முதலாய பிற அடியவர்களுடன் பழகுவதில் அவர்களுக்கு எந்த மனச்சிக்கலும் விளையவில்லை என்பது அறியத்தக்கது.

திருஞானசம்பந்தரின் திருமணத்தின்போது குழுமியிருந்த அடியார் கூட்டத்தில் அந்தணர்கள் உள்ளிட்ட எல்லா சாதியினருடன், பாணர் தம்பதியினரும் இருந்தனர். திருப்பெருமணம் கோவிலில் எழுந்த சோதியில்,

”சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல்தொண்டர்,
ஏர்கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி”

முதலிய அந்தணர் பெருமக்களுடன், பெரும்பாணரும் தம் மனைவியாருடன் உடன்புகுந்தார். இச்செய்திகளால் யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்.

நந்தனார் சிறந்த சிவபக்தராக இருந்தாலும் அவருக்கு அடியவர் கூட்டத்தில் சேரும் வாய்ப்பே கிடைக்கவில்லை. தம்முடைய இழிபிறப்புக் குறித்த தாழ்வுணர்ச்சி அவருடைய மனத்தில் அழுத்தமாகப் படிந்து விட்டது. அவர் வாழ்ந்திருந்த புலைப்பாடியும் செய்துவந்த புலைத்தொழிலும் அந்தத் தாழ்வுணர்ச்சிக்கு உரமேற்றி விட்டன. ‘திருநீற்றொளி பரவும்’ ஆதனூர் , நந்தனாரின் உள்ளத்தில் சிவபக்தியை வளர்த்தாலும், அவர் வாழ்ந்த சூழல் தாழ்வுணர்ச்சியையும் கூடவே வளர்த்து விட்டது. தாழ்வுணர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது எனலாம். இது ஒரு மனப்பிறழ்வு எனலாம். அந்த மனப்பிறழ்வுக்கு இறைவன் செய்தது அதிர்ச்சி வைத்தியம்.

தொண்டக் குலத்தினருக்கு பண்டைக் குலநினைவு வராது.; வரக்கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கண்ணன் எந்தக் குலம்?

 

கண்ணனது திருக்கதை அமுதத்தைப் பருகியவர்கள் இது பற்றிப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். சந்திர வம்சத்து மன்னர்களின் மரபில் வந்த யது என்ற மன்னனின் குலத்திலே தோன்றிய யாதவன். கோகுல பாலன், ஆயர் தம் குலக் கொழுந்து. அவன் தேவர் குலத்தவன், மனிதனாக அவதாரம் செய்தான், இப்படியெல்லாம்.

“கண்ணன் என் தந்தை” என்ற பாடலில் பாரதி சொல்லுகிறார் :

மூவகைப் பெயர் புனைந்தே அவன்
முகமறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன்
செய்தி தெரியாதவர் சிலர் சொல்வார்.


அப்படியானால், எது அவன் குலம்?

பிறந்தது மறக் குலத்தில் - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே – சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு
நிறந்தனில் கருமை கொண்டான் – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகளுடையான் – உங்கள்
சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்!

கண்ணனைப் பற்றிய எவ்வளவு ஆழமான, தீர்க்கமான தரிசனம் பாருங்கள்! ராமாவதாரத்தில் மட்டுமல்ல, அமானுஷ்யமான தனது கிருஷ்ணாவதாரத்திலும் “மானுடம் வென்றதன்றே” என்றே முரசறைகிறான் கண்ணன். தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் எல்லாக் குலங்களையும் விளங்க வைக்கிறான். எல்லாக் குலங்களையும் தன் குலமாக்கிக் கொள்கிறான். எல்லாக் குலங்களையும் உய்விக்கிறான். எல்லாக் குலங்களையும் இணைக்கிறான்.


Krishna_family.jpg


அதனால் தான், பட்டர் பிரான் திருமகளாக வளர்ந்த கோதை சொல்கிறாள்:

“பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது”

என்று! அந்தணர் விஷ்ணு சித்தரின் வீட்டில் வளர்ந்த பெண் “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில்” வந்தவளாகத் தன்னைக் கருதுவதிலேயே பெருமை அடைகிறாள். வடமதுரை அரச குலத்தில் கண்ணன் பிறந்த கதை அவளுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் “ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கே” என்று கண்ணன் தங்கள் குலத்தில் தான் பிறந்தான் என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள்.

மகள் இப்படி என்றால், அப்பா பெரியாழ்வார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்:

“அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு”


என்று பாடுகிறார். இங்கே “அண்டக் குலம்” என்பது அண்டர் (தேவர்) குலம் அல்ல. அவன் தேவர் குலத்தவன் என்று செய்தி தெரியாதவர்கள் சிலர் சொல்வார்கள் என்று பாரதி கூறினான் அல்லவா? ஆழ்வார் சேதி தெரிந்தவர், அதனால் கண்டிப்பாக அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

அண்டக் குலம் என்றால் இந்த அண்டம் முழுவதையுமே குலமாக உடையவன் என்று பொருள்.
“அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நினைவாகி ஆனந்தமான பரம்” அவனே.
“நீராய்த் தீயாய்ச் சுடராய்க் காற்றாய் நெடுவானாய்” விரிந்தவன் அவன்.
“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையுமெல்லாம்” கண்ணன் எம்பெருமான்.
பிரபஞ்சத்தில் உள்ள சகல உயிர்கள், மற்றும் புல் பூண்டு முதலான எல்லாப் பொருள்களும் ஆனவன் அவனே அல்லவா?
அதனால் அவனது குலம் அண்டக் குலம்.

அப்பேர்ப் பட்ட அவனைப் போற்றித் துதிக்கும் தான் எந்தக் குலம் என்றும் பட்டர் அடுத்த வரிகளில் சொல்கிறார் –

தொண்டக் குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே!

ஆக நாம் எல்லாரும் ஒரே குலம், அது தொண்டக் குலம். அவன் அடி தொழுத பின் நம்முடைய பழைய குலங்களெல்லாம் போய் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்”! அதனால் தான் “குலம் தரும் செல்வம் தந்திடும்” என்று திருமங்கையாழ்வார் நாராயண நாமத்திற்குக் கட்டியம் கூறினார்.

நாரத பக்தி சூத்திரம் (72-73) கூறுகிறது:

நாஸ்தி தேஷு ஜாதி வித்யா ரூப குல தன க்ரியாதி பேத: யதஸ் ததீயா:

“பக்தர்களிடத்தில் சாதி, கல்வியறிவு, உருவம், குலம், செல்வம், தொழில்கள் இவற்றால் உண்டாகும் எந்த வேற்றுமைகளுக்கும் இடமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடையவர்களே”.

இப்பேர்ப்பட்ட அடியார்களின் பெருமை எப்பேர்ப் பட்டது?

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே!”

என்று குலப் பெருமை பேசித் திரியும் கூட்டத்திற்காகக் குருகூர்ப் பிரான் கூறுகிறார். குலத்தால் வரும் கொள்கையல்ல பக்தி, பண்பால் விளையும் பக்குவம்.

அண்டம் முழுதும் ஓர் குலமாய்ச் செய்த
கொண்டல் மணி வண்ணன் தாளில் – தொண்டன்
பழுதுடையேன் எனினும் பாரிப்பான் என்றே
கழுகரசன் சாற்றும் கவி


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard