New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதநெறியும் தமிழ்சைவத்துறையும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும்
Permalink  
 


வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் 

http://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-1/

வேதநெறி

“வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார்.

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள்

வேதநெறி என்பது மலைமேல் உற்பத்தியாகிப் பெருகிவரும் நதிபோன்றது. அந்த நதி ஓடி வரும் இடங்களில் மக்களும் விலங்குகளும் பயன்கொள்ளும் பலதுறைகளும் உண்டு. அந்தத் துறைகள் அவ்வப்பகுதி மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயன்பட்டாலும் அவை அனைத்தும் பாதுகாப்பனவை என்றோ தூய்மையானவை என்றோ கூறமுடியாது. சிலதுறைகளில் கால் கழுவலாம். சிலவற்றில் குளிக்கலாம். சில விலங்குகளுக்கே பயன்படும். அதுபோல வேதநெறியில் பல தத்துவங்களும் சமயநெறிகளூம் கிளைத்தெழுந்தன. மக்கள் அனைவரும் அறிவிலும் ஆன்மநெறியிலும் ஒத்த அளவு பக்குவமுடையவரல்லர். இவர்களுடைய பக்குவத்திற்கேற்பவும் வாழ்க்கை நிலைக்கேற்பவும் ஆன்றோர்கள் வேதத்தின் அடிப்படையில் ஒழுகலாறுகளை அமைத்து மன்பதையை மேம்படுத்தினர்.

இந்திய நாட்டில் தோன்றிய தத்துவ தரிசனங்களும் சமய நெறிகளும் வேதத்தை முன் நிறுத்தியே தோன்றின என்பது ஆன்றோர்கள் கருத்து. சார்வாகம் என்னும் இந்திய உலோகாயத மதமும் வேதத்தை முன்னிறுத்தி அதை மறுக்க எழுந்த மதமே. கடவுட் கொள்கையை மறுத்து கன்மக்கொள்கையை ஏற்றுக்கொண்ட நாத்திகமான மீமாம்சையும் வேதமதமே. வேதம் கன்மகாண்டத்தில் கூறிய வேள்வியையும் உயிர்க்கொலையையும் மறுத்து எழுந்த கலகக்கொள்கைகள் சமணமும் பவுத்தமும். ஆக, பாரத நாட்டில் தோன்றிய எல்லாத் தத்துவ ஞானங்களும் வேதத்தை உடன்பட்டோ வேதத்தை மறுத்தோ தோன்றின என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் வேதத்தின் செல்வாக்கு

தென்நாட்டில் தோன்றிய சைவசித்தாந்தமும் வேதத்தைத் தழுவிக் கொண்ட சமயமே. எனவே வேதமென்னும் நதிக்கு அமைந்த நீர்த்துறைகளில் பாதுகாப்பானதும் தூய்மையானதும் மக்களை எல்லாவகையானும் மேம்படுத்துமான துறை, சைவத்துறை என்பது சேக்கிழார் கருத்து எனலாம்.

மெய்ப்பொருள் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தோற்றுவித்த நூல் வேதம் என்பதால் பிற்காலத்தில் தோன்றிய தத்துவச் சிந்தனைகளை அறிஞர்கள் அவ்வேதத்தோடு தொடர்புபடுத்தியே கண்டனர். நம் முன்னோர் வேதோபநிடதங்களின்பால் சிறப்புவகையால் பற்றுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவை மனோலயத்தை வலியுறுத்துவனவாகவும் சுவானுபூதியை எடுத்தியம்புவனவாகவும் உள்ளமையாலாகும். நம் பாரதநாட்டு ஞானியர், எக்கொள்கையராயினும், தம் மெய்ப்பொருளாராய்ச்சிகளுக்கு வேதம் முதலிய வித்தைகள் பதினெட்டுள் வேதத்தின் ஞானகாண்டமாகிய நூற்றெட்டு உபநிடதங்கள் முதலியவற்றையே தலைமைப் பிரமாணங்களாகக் கொண்டனர். தென்னாட்டுச் சைவ சித்தாந்தமும் இதற்கு விலக்கன்று.

வேதவொலி கேட்டுத் துயிலெழும் மதுரை

தமிழகத்தில் வேதத்தின் செல்வாக்கு சங்க காலத்திலேயே இருந்தது. பாண்டியரின் தலைநகராகிய மதுரையில் மக்கள் நான்முகனுடைய நாவினுட் பிறந்த நான்மறை ஓதும் ஓசை கேட்டுத் துயில் எழுவார்களேயன்றி, சேரசோழர்களின் தலைநகர்களாகிய கோழி (உறையூர்) ,வஞ்சி வாழ் மக்களைப் போலக் கோழி கூவத் துயில் உணர்வதில்லையாம்.

“பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
ஏம வின்துயி லெழுத லல்லதை
வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே” (பரிபாடல் – திரட்டு.7)

மதுரைக் காஞ்சியும் “ ஓதலந்தணர் வேதம் பாட” (31) என்றது.

தொல்காப்பியமும் மறைநூலும்

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியது என்பதும், தொல்காப்பியர், தலைச்சங்க காலத்தவரேயல்லால் இடைச்சங்ககாலத்தவரல்லர் என்பதும் மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் கருத்து. பெரும்பாலான அறிஞர்களால் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கருதப்படுகின்றது. தொல்காப்பியர் வேதத்தை அறிந்திருந்தார் என்பதற்குப் பல அகச்சான்றுகள் உள. தொல்காப்பியரின் ஒரு சாலை மாணக்கராகிய பனம்பாரனார் தாம் தொல்காப்பியத்திற்கு எழுதிய சிறப்புப்பாயிரத்தில், இந்நூல் ‘அறங்கரை நாவின் நான்மறை முற்றிய’ அதங்கோட்டாசானுக்கு’அரில்தப’ எடுத்துக் காட்டினார் என்று கூறுகின்றது. “ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றி” என்றதால் தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணத்தையும் நன்கு அறிந்திருந்தாரெனத் தெரிகின்றது.

எழுத்துக்களின் பிறப்பையும் அவற்றின் அளபினையும் கூறிவந்த தொல்காப்பியர், அவற்றுக்கு,
“அகத்தெழு வளியிசை —- —- அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே” என்று பிறன்கோட் கூறலாகக் கூறினார். (தொல். எழுத்து. பிறப்பியல் 102)

வடசொல்லும் தமிழில் செய்யுளீட்டச் சொல்லாகும் என்று உடன்பட்ட தொல்காப்பியர், வடசொற்கள் தமிழ்ச் செய்யுளில் எவ்வாறு பயிலப்பெறும் என இலக்கணமும் வகுத்தார். (தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்ச சூத்திரம் 5)

தொல்காப்பியர், வேதவழக்கினையுடையாரிடத்து நடக்கும் திருமணவகை எட்டு என்றும் அவற்றுள் தமிழருக்குரிய களவு மணம் வேதவழக்குட்பட்ட காந்தருவம் போன்றது; ஆனால் காந்தருவம் அன்று என்றார். (மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள், துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. தொல். – பொருள் – களவியல்1)

களவுத் திருமணத்தில் பொய்யும் வழுவும் புகுந்த பின்னர், வேதவழக்காகிய ‘பிரசாபத்தி’யத்தை யொட்டிக் கரணமொடு கூடிய கற்புத் திருமணத்தை ‘ஐயர்’ யாத்தனர் (கற் 4) ‘ஐயர்’ என்று தொல்காப்பியர் கூறிய பெயருக்கு முனைவர் என்றும் இருடிகள் என்றும் தலைவியின் தமையன்மார் என்றும் பெரியோர் என்றும் பிற்காலத்தவர் பொருள் கூறினர்.

தொல்காப்பியம் தமிழ்நாட்டை உரிப்பொருளுக் கேற்ற வகையில்,

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

எனப் பகுத்தது.

மாயோனையும் சேயோனையும் தமிழ் நாட்டுத் தெய்வம் எனக் கொண்டாலும் இந்திரனும் வருணனும் வேதக் கடவுளர் என்பது தெளிவு. மாயோனும் தமிழ்நாட்டுத் தெய்வம் என்பதைவிட புராணக் கடவுள் என்பதுதான் ஏற்புடையது. வேதக் கடவுளரும் புராணக் கடவுளரும் ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலத்திலேயே தமிழ்ப்பண்பாட்டில் வேற்றுமையின்றிக் கலந்துவிட்ட நிலைமையினை இந்நூற்பா எடுத்துக் காட்டுகின்றது.

திருமுருகாற்றுப்படையில் வேத வழக்கு

பத்துப்பாட்டுத் தொகுதியின் கடவுள்வாழ்த்துப் பாடல்போல அமைந்திருக்கும் திருமுருகாற்றுப்படை தமிழர் சமயப் பண்பாடு வேதநெறியுடன் கலந்துவிட்ட நிலைமையையும், அக்கலப்பினால் தன் தனித்தனித்தன்மையை இழந்து விடாத நிலயையும் காண்கிறோம். (சிறுதெய்வவழிபாடு வேதநெறிக்கு மாறும் இயக்கநெறி பின்னர் ஆராயப்படுகின்றது)

வேதத்தில் கூறப்படாத கடவுளரான முருகனும் கொற்றவையும் முறையே குறிஞ்சி, பாலை ஆகிய திணைநிலைத் தெய்வங்கள் எனும் ‘கருப்பொருள்’ நிலையினின்றும் வேதங்கூறும் பெருந்தெய்வநிலைக்கு உயர்ந்து இந்தியப் பண்பாட்டில் கலந்துவிட்டமைத் திருமுருகாற்றுப்படை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

karthikeyar1சிறுதினையரிசியைப் பூக்களுடன்கலந்து ஆட்டிக்கிடாயை அறுத்து கோழிக்கொடிநிறுத்தி ஊர்தொறும் எடுத்துக் கொண்ட திருவிழாக்களிலும், வேலன் வெறியாடும் களனிலும் ‘உருவப் பல்பூத் தூஉய் வெருவரக், குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் , முருகியல் நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த’ களங்களிலும் முருகன் குறிஞ்சிக் கிழவனாக இருந்த , (திருமுரு. பழமுதிர்ச்சோலை) அந்தமுருகனையே வேதங்கூறிய பிரமசரிய நெறியில் நாற்பத்தெட்டாண்டு இளமையைக் கழித்த அந்தணர்கள், எப்பொழுதும் அறன்நவில்கின்ற கொள்கையர், முத்தீச் செல்வத்தர், முப்புரிநுண்ஞாண் இருபிறப்பாளர், தாங்கள் வழிபடும் காலத்தை அறிந்து, ஈர ஆடையை அணிந்து, அருமறை ஆறெழுத்து மந்திரத்தை நாவியல் மருங்கில் நவிலப்பாடி, நறுமலர் எடுத்து அருச்சித்து, துதிக்கின்றனர்.(திருவேரகம்)

“மடவை மன்ற முருக’ எனச்சங்க இலக்கியத் தோழியால் எள்ளப்படும் நிலைக்கு மாறாக , முருகன், திருச்சீரலைவாயிலில், உலக இயக்கத்திற்குக் காரணனனாகக் கூறப்படுகிறான். தமிழ் முருகன் “மந்திர விதியின் மரபுளி வழாமல், அந்தணர் செய்யும் வேள்வியைக் காக்கின்றான். இந்திரன் , இயமன், வருணன், குபேரன், ஆகியோர் வேதத்தலைவர்கள் முருகனின் செவ்வி பெறக் காத்ததிருப்பதாகக் கூறப்பெறுகின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் தங்கள் தொழில் நிலைபெறக் குமரனைத் தொழுது நிற்கின்றனர்.

நூறு வேள்வி செய்து ஆயிரங்கண்ணுடைய இந்திரனானது, பிரமன் திருமாலின் உந்தியிற் பிறந்தது,. பன்னிரு ஆதித்தர், பதினொரு உருத்திரர், எட்டு வசுக்கள், மருத்துவர்(அசுவினி) இருவர், பதினெண்கணத்தோர், கந்தருவர், விண்செலல் மரபின் ஐயர், இருடிகள் எழுவர், சுரர், அசுரர் இவை போன்ற பல செய்திகளை வேத வழக்கொடுபட்டுத் திருமுருகாற்றுப்படை பேசுகின்றது.

தமிழ் முருகனை, உயர்ந்த இமயமலைச் சாரலி லிருக்கின்ற கருங்குவளைகளையுடைய பசிய சரவணப் பொய்கையில் தோன்றியதாகக் கூறுவதும் அவனை அக்கினிதேவன் தன் கையிலேற்றதாகவும், கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டியதாகவும் ஆறு வடிவங்கள் அம்மை யெடுக்க ஒன்றாய் இசைந்ததாகவும் திருமுருகாற்றுப்படை பேசுகின்றது.

முருகனை, கொற்றவையின் புதல்வனாகவும் பழையோளாகிய காடுகிழாளின் குமாரனாகவும் கூறிய இந்நூல், இமயமலையரசனுக்கு மகளாகிய உமாதேவியாருடைய குமாரனாகவும் கூறுகிறது. கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள் (autochothonous goddesses), வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.

பரிபாடலில் வேத வழக்கு

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தமிழோடு கலந்து விட்ட வேதப் பண்பாட்டைக் காட்டும் செய்திகள் பலவுள்ள நூலாகும். பெரும்பாலும் முருகனையும் திருமாலையும் சிவனையும் துதிக்கும் பாடல்களைக் கொண்டுள்ள இந்தநூலில் திருமாலின் வாகனமாகிய கருடன் , திருமகள், சிவபெருமானின் வாகனமாகிய காளை பற்றிய வடமொழிப் புராணக் கதைகள் பேசப்படுகின்றன.
முருகனின் பிறப்பைப் பற்றி ஒரு பரிபாடல் கூறுகின்றது. அந்தக் கதை, முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றும் தமிழ் நெஞ்சங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வடமொழி மரபையொட்டிய அக்கதையினை மறுத்து வேறோர் விதமாக முருகனின் அவதாரத்தைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதனால் அகில இந்திய பண்பாட்டு மரபினோடு இணைகின்றபோது, தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டுப் போற்றி வந்த தம் விழுமியங்களுக்கு ஏற்புடையனவற்றையே தழுவிக் கொண்டது என அறியலாம். அத்தோடு இக்கலப்பு புறத்திருந்து வலுவந்தமாகத் திணிக்கப்பட்டதன்று, ஏதோ ஒருபயன் கருதி தமிழ்ச்சமுதாயம் விரும்பி ஏற்றுக் கொண்டதே எனவும் அறியலாம்.

புறநானூறில் வேத வழக்கு

பால் புளிப்பதும் பகல் இருளுவதும் இயற்கையல்ல. அவ்வாறே எக்காலத்திலும் நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடுவதில்லை. (புறம் 2) வேதம் நான்கென்றும் அதனைக் கற்றமுனிவர் நான்மறை முனிவரென்றும் போற்றப்பட்டனர். (புறம்6) வேதத்தில் கூறப்படும் வேள்வி நெருப்பு முத்தீ எனப்பட்டது. (புறம்2). வேதத்தில் வளர்க்கப்பட்ட முத்தீ அரசர்களூக்கு உவமையாகவும் கூறப்பட்டது. (புறம் 2, 367) தரும சாத்திரங்களும் வேதத்தினொடு சங்கத்தமிழர்களால் அறியப்பட்டிருந்தன.

“நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி” (புறம் 15)

எனும் புறப்பாடலில், சங்ககால மன்னர், எய்தற்கரிய சமிதையும் பொரிமுதலாகிய கண்ணுறையோடு மிக்க நெய் ஆவுதியாகச் சொரிந்து பலமாட்சிமைப்பட்ட யாகங்களை முடித்தனர் என்றும் அத்தகைய வேள்விச் சாலைகள் பல இருந்தன என்றும் ஒவ்வொரு வேள்வியின் முடிவிலும் வேள்வி முடித்தற்கு அடையாளமாகத் தூண் நட்டனர் என்றும் அறியப்படுகின்றது. (புறம் 15)

புறநானூறு 166ஆம் செய்யுள் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், பார்ப்பனவாகை என்னும் துறையில் பாடியாதும் இப்பாடல் சங்ககாலத்தில் வேதமும் வேள்வியும் பெற்றிருந்த ஏற்றத்தை நன்கு விளக்குகின்றது. பூஞ்சாற்றூர் சோழநாட்டில் முடிகொண்டானாற்றங்கரையில் உள்ளதோரூர். கவுணியன் என்றால் கெளண்டின்னிய கோத்திரத்தில் பிறந்தவன் என்பது பொருள். அது பார்ப்பனர்களின் கோத்திரங்களில் ஒன்று என்பதும், ஏழாம் நூற்றாண்டில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ அவதாரம் செய்த திருஞானசம்பந்தர் தோன்றியதும் கெளணிய கோத்திரம் என்பதறியத் தக்கது. இப்பாடலால் சிறப்பிக்கப்பட்ட பார்ப்பானின் பெயர் விண்ணந்தாயன். இது வாமனனாக வந்து, மாபலியிடம் மூவடி மண் யாசித்து விண்ணும் மண்ணும் அளந்த திருமாலாகிய திரிவிக்கிரமனின் பெயர்.

பார்ப்பான் என்பது மரியாதைக்குரிய பெயராகவே வழங்கியது. அது அகக்கண்ணில் பிரம்மத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் வேதியரொழுக்கத்தைச் சுட்டியதொரு பெயர். இப்பார்ப்பான் ஆற்றிய வேள்வியைப் பொருளறிந்து பாராட்டிய புலவர் ஆவூர் மூலங்கிழார் என்னும் வேளாளர். கிழார் எனும் பெயர் நிலவுரிமையைச் சுட்டும் கிழமை என்னும் சொல்லிற் பிறந்ததாகும். பார்ப்பானின் வேதக் கல்வியையும் வேதவேள்வியையும் அறிந்து மதிப்பிடும் திறமை பிராமணரல்லாத வேளாளராகிய புலவர்க்கு இருந்துளது. இதனால் சங்ககாலத்தில் வேதக்கல்வி பற்றிய அறிவு பார்ப்பனரல்லாத சமுதாயத்திலும் இருந்துள்ளதென அறியலாம்.

இனி, இந்தப் பாடலின் சிறப்பை நோக்குவாம்.

இப்பாடலில் சிவன் ‘நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன்’ எனப்பட்டான். சிவனின் சடை ஞானத்தைக் குறிக்கும். ஆராயப்பட்ட நீண்டசடை என்றது வேதக் கல்விக்கு முதல்வன் சிவன் என்பதாம். ‘ஈஸ்வர சர்வ வித்யானாம்’ என்பது வேதம்.சிவன் , ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளா’தலால் முதுமுதல்வன் எனப்பட்டான். வேதம் அவன் வாயை விட்டு நீங்காது. அப்பெரியோனாலும் எக்காலமும் அவ்வேதம் அத்தியயனம் பண்ணப்படும். வேதம் அறம் ஒன்றையே மேவியது. நான்கு கூற்றையுடையது. ஆறங்கத்தால் உணரப்படுவது. பழைய நூலாகிய அவ்வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைச் செய்துகொண்ட (புத்தர், சமணர் முதலாயின ) புறசமயத்தோரது மேம்பாட்டைச் சாய்க்க வேண்டி ‘மெய்போன்ற பொய்யினை’ அறிந்து, அப்பொய்மையை மெய்யென்று கருதாமல், உண்மைப்பொருளை அவர்கள் அறிவு கொளும்படிச் செய்தவன்; இருபத்தொரு வேள்வித்துறையும் குறைவின்றி செய்துமுடித்த புகழும் தலைமையும் சான்ற அறிவுடையோர் மரபில் வந்தவன் இப்பாடலின் தலைவனாகிய பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் விண்ணந்தாயன்.

வேள்வி செய்யும்போது, காட்டுநிலத்தில் வாழும் கலைமானின் தோல் மார்பில் உள்ள பூணூலின்மீது சிறந்து தோன்றுமாறு போர்த்துக் கொள்வர்.. அரிய கற்பினையும் , அறநூல்கள் புகழ்ந்த ‘சாலகம்’ சூடி, மனமொத்த துணையராகிய பத்தினிமார் தத்தமக்குப் பொருந்திய ஏவற்றொழிலைக் குறிப்பறிந்து செய்வர்.(சாலகம்- ஜாலகம். இது யாகபத்தினிகள் அணியும் அணிவிசேடம்). எழுவகைக் காட்டுப்பசுக்கள், எழுவகை நாட்டுப்பசுக்கள் ஆகியவற்றினின்றும் பெற்ற நறுநெய்யினை நீர் நாணும்படியாகச் சொரிந்தும் எண்ணற்ற பலவேள்விகளை வேட்டும் மண்போதாமற் புகழைப் பரப்புவர். வேள்வி முடிவில் அதிதிபூசையாகிய விருந்தோம்பல் நடைபெறும்.

இவ்வாறு விண்ணந்தாயன் ஆற்றுகின்ற வேள்வியை, ‘ யாங்கள் எந்நாளும் காண்பேமாக’ என்று வாழ்த்துகின்றார். இவ்வாறு வேள்விசெய்ததால் மழைவளம் பெற்றுக் காவிரியில் நீர் பெருகித் தாங்கள் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை, ஆவூர் மூலங்கிழார்,

“விருந்துற்றநின் திருந்தேந்துநிலை
என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்
உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்
செல்வலத்தை யானே”

என்று பாராட்டியதோடு, பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயனை
“மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீய ரத்தைநீ நிலமிசை யானே” என வாழ்த்தினார்.

இவ்வேள்வி உயிர்க்கொலை யின்றி நெய்யாவுதி செய்து சிவனை முன்னிறுத்திச் செய்த சிவவேள்வியாகும்.

வேதங் கற்ற பார்ப்பனர்களாகிய அந்தணர்கள் சங்ககால சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டிருந்தனர். ஓரரசனைப் புலவர், “இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே” (புறம்6:19-20) என வாழ்த்துகின்றார். மற்றொருவர், “பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற்று 63:1) எனப் பாராட்டுகின்றார்.

பார்ப்பனர் சிறிதும் தீங்கு செய்யத்தகாத சாதியர் எனக் கருதப்பட்டனர். ஆதலால் “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்’ என ஆக்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்பட்டனர். (புறம் (:1)

பசுவதை, பார்ப்பனக் கொலை, கருச்சிதைவு முதலாயின வாக்காற் சொல்லப்படாமையின் “ ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்” எனக் கூறப்பட்டது. (புறம் 43:3)

“நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான்” எனச் சமண இலக்கியமாகிய சீவகசிந்தாமணியும் (443) பார்ப்பாரின் உயர்வை வழிமொழிகின்றது.

ஒரு புலவர் ஒரு சோழ இளவரசனை நோக்கி “ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம், பார்ப்பனர் நோவன செய்யலர்” எனக் குடிப்பண்பினை அறிவுறுத்தினார்.

பார்ப்பனர்கள் இவ்வாறு போற்றப்பட்டமைக்குக் காரணம், வேதத்திற்கு உபகாரப்படும் சாத்திரங்களான வியாகரணம், நிருத்தம், சோதிடம் முதலிய கலைகளில் அவர்கள் பெற்றிருந்த அறிவு, இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய வாழ்வு, கடவுளரும் விழைதக ஆவுதி யளித்தல் முதலிய பண்புகளை அவர்கள் பெற்றிருந்தமையாலாகும்.* இத்தகைய “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்ன ரேவல் செய்யச்” சங்ககால மன்னர்கள் வேள்வி முடித்தனர். (புறநா 26:12-5).

*“சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி” பதிற்று 3;1-7)

இத்தகைய வேள்வியால் மழைவளமேயன்றி வேறுபல அற்புதங்களும் நிகழ்த்தியதைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

அதியமான் என்னும் அரசனின் முன்னோர்,
“அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்”விண்ணுலகத்திலிருந்து இவ்வுலகத்துக்குக் கரும்பைக் கொண்டு வந்தனர். (392:19-21)

பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் எனும் புலவர் பாடினார் பத்துப்பாட்டு. அரசன் ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் எனப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் பதிகம் பதிவுசெய்கின்றது.

இந்த நிகழ்ச்சியை, மதுரைக் காஞ்சியும், “ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல” (494-95) எனப் பதிவு செதுள்ளது.

இமயமுதல் குமரி வரை சமயப்பண்பாட்டால் ஒருநாடு என்னும் எண்ணம் இருந்தமை, “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” (புறநா 6:1-2) எனும் வரிகள் உணர்த்துகின்றன. இக்கருத்தே, பிற்காலத்தில் ‘ஆஸேது ஹிமாசல பரியந்தம்’ என வடமொழியில் சங்கற்பம் செய்ய வழி வகுத்தது எனலாம். இமயமும் பொதியமும் சமமாக எண்ணப்பட்டன. இரு மலைகளிலும் அந்தணர்கள் முத்தீ வளர்த்து வழிபாடுகள் நிகழ்த்தினர். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் ஆண்டுப் பயிலுவதால் மான்கூட்டம் அங்குக் கவலையின்றித் துயின்றன.(புறநா 2:21-24)*

*(சிறுதலை நவ்விப் பெருங்கண் மான்கணம்
அந்தி யந்தணர் அருங்கட னிருக்கும்
முத்தீ விளக்கின் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்தினார். அவர் இமயத்தைக் கூறும்போது, ‘நெருங்கி வளர்ந்துள்ள முள்ளுடை முருங்கை மரங்களின் நீழலில் துஞ்சும் கவரிமான்கள் நரந்தம் புல்லை உண்டுமகிழுவதகக் கனாக் காணும். அருவிகள் பல நிறைந்த, ‘ஆரியர்’ துவன்றிய பேரிசை இமயம்’ என அவர் இமயத்தை வருணிக்கின்றார்.

“கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்” (பதிற்றுப்பத்து 11:21 – 24)

இப்பாடலில் ‘ஆரியர்’ என்றது வடநாட்டவர்களைக் குறித்தன்று. ஆரியரென்றது இமயத்தில் தவம் புரியும் மேலோராகிய முனிவரை. ‘ஆரியராணையானே ,”மயிர்நீப்பின் வாழாக்கவரிமா”(குறள்) என்று சிறப்பிக்கப்பட்ட கவரிமான், முருக்கென்னும் முள்ளுடை மரமும் தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக்கவிர் செறிந்த சிலம்பின்கண்ணே இனிதாக உறங்குமென்றவாறு’ என்பது பதிற்றுப்பத்தின் பழையவுரை.

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப், புள்ளுறு புன்கண் தீர்த்தோனாகிய” ‘சிபி’ என்னும் புராண வேந்தனின், வழி வந்தவர் சோழ மரபினர் என்று போற்றப்பட்டனர். (புறநா 37: 5-6), புறநா 39, 43, 46)

மகாபாரதம் , இராமாயணம் ஆகிய இதிகாசங்களைச் சங்கத் தமிழ்ர்கள் அறிந்திருந்தனர், (புறநா2:13-16, 378:18-22, அகநா70:13-16) ஆனிலையுலகம் எனப்படும் ‘கோலோகம்’, கீழ்க்கடல் சகரரால் தோண்டப்பட்டமையின் ‘தொடுகடல்’ எனப்படுதல் (6:7, 2:29) போன்ற செய்திகள் தமிழ் மரபினை அகில இந்தியப்படுத்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

 

முந்தைய பகுதி : வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1 (சங்க இலக்கியங்கள்)

திருக்குறளும் வடமொழி வேதமும்

மாமுனிவர் திருவள்ளுவர்

தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும்.

திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.

திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,

“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”

எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)

திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.

பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.

“பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்” (560)

என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.

இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
“அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)

என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
(பிரமோத்தரகாண்டம்,10- 1)
என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.

vyasa_ganapati

பராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்

திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)

எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.

அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு

இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.

பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.

“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “

“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

“இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது..

“பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”

“குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

 

முந்தைய பகுதி : வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2 (திருக்குறள்)

சிலப்பதிகாரத்தில் வேதநெறி

சங்ககாலத்தை மருவி எழுந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம் பண்டைத் தமிழ் மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும் பேரிலக்கியமாகப் போற்றப்படுகின்றது. இந்தச் சிறப்பான காப்பியத்தில் தமிழ் மக்கள் வேதநெறியைத் தழுவி நின்ற பல செய்திகள் அறியவருகின்றன.

காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய வேதக்கடவுளரின் வணக்கத்துடன் தொடங்குகின்றது. காப்பிய நாயகர்களாகிய கோவலனுக்கும் கண்ணகிக்கும் ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட’ அக்கினி சாட்சியாகச் செய்யப்படும் பிரசாபத்தியத் திருமணம் நடைபெறுகின்றது. சந்திரன் உரோகிணியைச் சேர நல்லோரையில் ‘அருந்ததி’ யனையாளாகிய கண்ணகியைக் கோவலன் கைத்தலம் பற்றுகின்றான். மணமகள் கண்ணகி, ‘போதிலார் திருவினாள்’ என்றும், ‘தீதிலா வடமீனின் திறமிவள் திறம்’ என்றும் போற்றப்படுகின்றாள்.

கோவலன் தந்தை மாசாத்துவான் ‘இருநிதிக் கிழவ’னாகிய ‘குபேரன்’ எனப் போற்றப்படுகின்றான். கோவலன், ‘செவ்வேள்’ என மாதரால் பாராட்டப்படுகிறான். புகார் நகர் செல்வசிறப்பாலும் போகத்தாலும் ‘நாகநீ ணகரொடு நாகநா டதனொடு’ உவமிக்கப்படுகின்றது. ‘பொதியி லாயினு மிமய மாயினும்’ என்றும், ‘காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேரு வலந்திரிதலான்’ எனத் தமிழகத்து நிலக்குறிகளோடு இமயமலை, மேரு எனும் வேதஇலக்கிய நிலக்குறிகளும் (Landmarks) பேசப்படுகின்றன.

பாயிரம் கண்ணகியை, பலர்புகழ் ‘பத்தினி’ என்று கூறுகின்றது. பத்தினி என்பது வேத வழக்கு. மறையவர் மனைகளில் நித்திய வேள்வி செய்யும் பொழுது அதனை அணையாது ஓம்புதல் அவன் மனைவியின் செயலாகும். அவ்வாறு நித்தியாக்கினி யோம்பும் மறையவனுக்கு உதவும் மனைவிக்கு ‘பத்தினி’ என்று பெயர்.*

* திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்
றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ
மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப்
பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்”

(பேருர்ப் புராணம்- கடவுள் வாழ்த்து -2)

இதில் கூத்தப்பெருமான் மறையவன் என்பதற் கேற்ப அம்மை இடப்பக்கத்தில் நின்று முத்தி வளர்க்கும் பத்தினியாகக் கூறப்படுகின்றாள்.

சிலப்பதிகாரம், இந்திரன் மகனாகிய சயந்தன் உருப்பசி என்ற கந்தருவப் பெண்ணை இந்திரனுடைய அவைக்களத்துக் கண்டு இருவரும் காமவயப்பட அகத்தியன் சாபத்தால் சயந்தன் பொதியமலையில் மூங்கிலாகப் பிறந்ததும், உருப்பசி புகார்நகரில் கணிகையர் குலத்து முன்னோளாகிய மாதவியாகப் பிறந்ததையும் கூறுகின்றது. உருப்பசி வந்து சாபத்தால் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் இளங்கோவடிகள் வானவர்மகளிர் என்றார்.

வேதக் கடவுளாகிய இந்திரனுக்கு விழா எடுத்தலை இந்திரவிழவூரெடுத்த காதை கூறுகின்றது. இந்த விழவினைப் பற்றிப் பவுத்த காப்பியம் எனப்படும் மணிமேகலையும் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் வடக்கு திசையைப் ‘புண்ணிய திசை’ என்றது.(5:94) அதற்குக் காரணம் ‘இமையவர் உறையும் சிமையம்’ அத்திக்கில் உள்ளமையாகும். (5:97) திருமாவளவன் என்னும் சோழமன்னன் வடநாடு சென்று வெற்றி கொண்டு இமயமலை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தமையால் அதன் உச்சியில் புலிச் சின்னம் பொறித்து மீண்டான். வச்சிரநாடு, மகத நாடு அவந்தி ஆகிய நாட்டு அரசர்கள் சோழனோடு நட்புக் கொண்டனர்.(5: 95- 110)

இந்திரவிழாவுக்கு முன்னர் புகார் நகரிலுள்ள திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்பொழுது, ‘மிக்க முதுமையுடைய முதல்வனாகிய வேதாவினுடைய வாய்மையில் தப்பாத நான்கு வேதங்கள் சொன்ன நெறியில் ஓமங்கள் ஒருபக்கம் நடந்தன.’ (5:174- 5)

இந்திரவிழாவில், மாதவியுடைய ஆடலைக் கண்டு மகிழ்வதுடன் “அமரர் தலைவனை வணங்குதும் யாமென” கந்தருவன் ஒருவன் தன் காதலியுடன், தெய்வயாக்கையை மறைத்து மானுடயாக்கையுடன், புகார் நகர் நோக்கி வருகின்றான். அவன் தன்னுடைய காதலிக்கு, கொடுமுடியையுடைய இமயமலையயும் வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும் அவந்தியென்னும் பதியினையையும் விந்தமலையும் விந்தாடவி யென்னும் காட்டினையும் வேங்கடமலையையும் நிலம் பொறாத விளையுடைய காவிரிநாட்டினையும் தன் காதலிக்குக் காட்டி அங்கங்குள்ள பயன்களை நுகர்வதற்கு ஆங்காங்குத் தங்கி வருகின்றான். (5::25-34) இக்கூற்றினால் வடநாடும் தென்னாடும் சமயம் , கலைப் பண்பாடுகளில் ஒற்றுமைப் பட்டு ஒன்றையொன்று தழுவியிருந்தமை தெளிவாகின்றது.

மாதவியாடிய பதினொருவகை ஆடலிலும் பாடலிலும் கண்ணன் பாகவதம் , தேவி பாகவதம் ஆகியவற்றின் தாக்கம் இருந்தமை அறியத்தக்கது.(6: 35 -66)

“தூய, மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் , துறைபோய்” (9:29-31) எனும் அடிகளுக்கு அடியார்க்குநல்லார், “இருமரபுந் தூய மறையோனுக்குப் பின்செல்லும் பிள்ளையாய் மிக்க கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையும் கற்றும் தரித்தும் துறைபோய்த் தந்தைதாயர் இறந்த பின்னர் அவர்க்கு நீர்க்கடன் முதலியவுஞ் செய்து” என உரை வரைந்ததுடன், ‘வான்பொருட்கேள்வி – மறைநூலும் அங்கமும். துறைபோதல்- அதற்குத் தக நிற்றல்* (*குறள்,391). மாணியாயெனவே செளளமும் உபநயனமும், துறைபோயெனவே கல்வி கேள்வி முதலிய பிரமசரியங் காத்தலுங் கூறி, மேல் “தேவந்தி யென்பாண் மனைவி” என்பதனால் விவாகமும் காருகத்தமுங் கூறினமையு முணர்க. “ எனக் குறிப்புரையும் வரைந்துள்ளார்.(அடியார்க்கு நல்லார் ஒரு தமிழ் வைதிகர். அவரைச் சமணர் என்று சில தமிழாசிரியர்கள் கூறுவது தவறு)

இதனால் பார்ப்பனர்களின் வருண ஒழுக்கம் இரட்டைக் காப்பிய காலத்திலேயே தமிழ்சமுதாயத்தில் நிலை பெற்றிருந்தமை புலனாகின்றது.. அந்தணர் ஒழுக்கத்தைப் பார்ப்பன வாகை எனச் சங்கத்தமிழ் புகழ்கின்றது. அந்த ஒழுக்கம் எத்தகையது என்பதைச் சிலப்பதிகாரம் ஒரு நிகழ்ச்சியை வைத்துப் பதிவு செய்கின்றது.

மதுரையைக் கண்ணகி அழலூட்டியபின், எரியாமல் நின்ற வெள்ளியம்பலத்துள், ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் மதுராபுரித் தெய்வம் தோன்றி, அவளுடைய சினந் தணியுமாறு பேசுகையில் பாண்டியமன்னர்களது செங்கோன்மையை எடுத்தியம்புகின்றது.

“சோழ நன்னாட்டுப் பார்ப்பான், பராசரன்* என்போன், வேதக்கல்வியில் வல்லமையுடையவன், சேரமன்னனின் கொடைத்திறங்கேட்டு வண்டமிழ் மறையோனுக்கு வானுறை கொடுத்த* அச்சேரனைக் காண்கென, காடும் நாடும் ஊரும் போகி, நீடுநில மலயம் பிற்படச் சேர நாடு அடைகின்றான்.

அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”

என இக்குடியினருக்கு வகுக்கப்பட்டபடி, பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன், ‘செங்கோற் தென்னன்’ ஆட்சிக்குட்பட்ட , ‘திருந்து தொழில்மறையவர்’ வாழும் திருத்தங்காலூர் என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”

மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், “குண்டப் பார்ப்பீர்” என்னோடு சேர்ந்து மறையோதி, இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் கொண்டு செல்வீர்” என அழைத்தான். அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்கிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான்.(“தளர்நா வாயினும் மறைவிளி வழாஅ, துளமலி யுவகையோ டொப்ப வோத, ‘தக்கிணன்’ றன்னைப் “) அதனால் முகமகிழ்ந்த பராசரன் தக்கிணாமூர்த்தியை மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களான, “முத்தப் பூணூலதற்கொத்த புனைகலம், கடகம், தோடு முதலனைத்தையும் ஈந்து தன் பதிப்பெயர்ந்தான். ( சிலம்பு 23: 63-98)

தக்கிணாமூர்த்தி வழி வார்த்திகன் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டோர், ‘படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென, விடுசிறைக் கோட்டகத் திட்டனர்’. வார்த்திகன் மனைவி கார்த்திகை கலங்கிப் புலம்பினள். செங்கோன்மை பிறந்தமை கண்டு ஐயை கோயிற்கதவைடைத்துக் கொண்டனள். உண்மை அறிந்துகொண்ட பாண்டியன், வார்த்திகனுடைய பொருளை மீட்டுக் கொடுத்ததோடு அதனின் பெருவளம் நல்கி,

“கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே”(சிலம்பு 23:)

அரசன் பார்ப்பனன் முன்னர் வீழ்ந்து வணங்கினான் என்று கூறாமல், இருநிலமடந்தைக்குத் திருமார்பு நல்கினான் என்று உரைத்த நயம் அறியத் தக்கது. அரசரும் வணங்கும் உயர்ந்த நிலையில் பார்ப்பனர் மதிக்கப்பட்டனர் என இதனால் அறியலாம்.

பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் முத்தியாகிய ஒன்றையே விரும்பும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி எனும் முத்தீயோம்பும் செல்வமே அவர்கள் போற்றும் செல்வம்.

அத்துடன், ‘பிரமவேள்வி, தேவவேள்வி, மனிதவேள்வி, உயிர்வேள்வி, பிதிர்வேள்வி’ ஆகியவற்றை வழுவாது ஓம்பும் ஒழுக்கமு உடையவர். (திருவள்ளுவர் இவ்வேள்விகளை,”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தா றோம்ப றலை”(43) எனுங் திருக்குறளில் கூறியுள்ளார்.)

மறையோர் மெய்ஞ்ஞானக் கல்விச் செல்வத்தையே தேடிச் சேமிக்க வேண்டும்; உலகியல் போகத்தில் ஆழ்த்தும் பொருட் செல்வத்தைச் சேமித்தலாகாது. ஈதலும் அந்தணர் அறமாதலால் அதனைத் தக்காருக்கு உடனே ஈந்து விடல் வேண்டும். இந்த ஒழுக்கம் பராசரன் தான் பார்ப்பன வாகையில் ஈட்டிய செல்வத்தைத் தக்கிணாமூர்த்திக்கு ஈந்த செயலில் வெளிப்படுகின்றது.

அந்தணன் கல்வியை விற்றலாகாது. கல்விக்குப் பரிசாகக் கிடைத்த பொருளைக்காக்கும் பிராமணன் பிரமராக்கதனாவான். இக்கருத்தைக் கச்சியப்பமுனிவர்* ( *இவர் காஞ்சிப்புராண ஆசிரியர் சிவஞான முனிவரின் மாணாக்கர். திருவானைக்காப்புராணம், பேரூர்ப் புராணம், திருத்தணிகைப்புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய புராணங்களின் ஆசிரியர்) . பேருர்ப்புராணத்தில், திருநீற்றுமேட்டுப் படலத்தில் ஓரந்தணன் வரலாற்றில் வைத்து விளக்குகின்றார்.

கங்கைக் கரையில் தன் மறைக்கல்வியை வெளிப்படுத்திப் பெற்ற மிகுந்த செல்வத்துடன் தன் இருப்பிடத்திற்கு செல்பவனுக்குத் தான் வேதஒழுக்கத்தில் தவறியதாக மனத்தில் பட்டது. அவன் பின் வருமாறு நினைக்கின்றான்.

“ உயர்ந்த வருணத்திலே பிறந்து, வேதம் ஓதி, வேள்விகள் செய்தும் தெளிந்த அறிவைப் பெற்றும் குற்றமுடைய வினைகளினின்று நீங்கியும் , இந்த நன்மைகளையெல்லாம் சிறந்த முத்தியைப் பெறுதற்குக் காரணமாக்காமல், மயக்கந்தரும் பாவம் வளர்ச்சியுற்று அரிய நரகத்திலே வீழ்ந்து துன்புறும்படித் தானமாகச் செல்வத்தைப் பெற்று இவ்வுலகத்திலே வருந்துவதற்கு ஏதுவானவற்றைச் செய்துவிட்டேனே! கற்ற கல்வியும் உரிய காலத்தில் வந்து உதவவில்லையே’ என்று அந்த அந்தணன் நொந்து கொள்கின்றான்*.

*“உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ்
செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது
மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங்
கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே.” (பேரூர்ப். 35:10)

தன்னிடமிருந்த பொருள்களையெல்லாம் தானமாக்க நினைந்து அவ்வெண்ணத்தைச் செயல்படுத்துமுன் இறந்து விடுகின்றான். பொருளைப் பாதுகாப்பாக வைத்த இடத்திலேயே பொருள்மேல் வைத்த ஆசையின் காரணமாக அரக்கனாய்த் திரிகின்றான். (பேரூர்ப் 35:13,27) மறையோதும் அந்தணனுக்குப் பொருள் நசை கேடு விளைக்கும் என்பது இப்புராணக் கதையின் கருத்து. இதனால் அந்தணவொழுக்கம் பற்றிப் புராணங்களின் கருத்தும் தெளிவாம்.

நல்லொழுக்கமும் கல்வியும் பொருளாசையும் அற்ற பார்ப்பார் நல்ல துணைவராவர் எனும் கருத்தில் மகட்கொடை நேர்ந்த அரசர்கள் மகளுடன் பார்ப்பாரையும் உடன் தருதல் சேரன் செங்குட்டுவன் காலவழக்காக இருந்தது.*

(*புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்
திருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கற்றா ரானெனின்” (25:126130)

எனும் இவ்வரிகளுக்கு,’பார்ப்பாருடனே மகட்டருதனோக்கி இருபிறப்பாளரொடு கல் தாரானாயினென்றான்’ என்றது பழையவுரை)

கங்கை முதலிய புனித நதிகளில் கிடைக்கும் கற்களால் பாணலிங்கம் அமைத்து வழிபடுதல் இன்றும் மரபாக உள்ளது. சிலப்பதிகாரம், ‘விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் ‘ கொண்டு, கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்யும் வழக்கிருந்ததைக் கூறுகின்றது. (25:117-121)

கங்கையாற்றில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்பட்டமையும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் புனிதநீராட்டினமையும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. (25:160-161)

நான்மறை வல்ல மறையோர் ,’மறைநா வுழுது, இறையோன் செவிசெறு வாக, வித்திப் பெரும் பயன் விளைத்தனர்..(28:186- 189)

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் வேத வழக்குத் தழுவிய நெஞ்சையள்ளும் காப்பியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையும் வேதநெறியும்

இரட்டைக் காப்பியங்கள் என்று பேசப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வேதவழக்கைக் குறித்த மட்டில் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது.

மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

மணிமேகலை மறையைப் போற்றிக் காப்பாற்றும் கடப்பாடு உடைய மறையவர்களை ஒழுக்கங் கெட்டவர்களாகவும் கொலைவெறியர்களாகவும் மதுமாமிசம் விரும்புபவர்களாகவும் சித்திரிக்கின்றது. அவர்கள் மேல் எழுந்த வெறுப்பு அவர்கள் போற்றும் வேதத்தின்மீதும் வேதநெறியின் மீதும் விரியுமாறு பேசுகின்றது.

புறநானூறு பார்ப்பனர்கள் பிற உயிர்களுக்குச் சிறிதும் தீமை செயத்தகாத சாதியர் என்றும் பசுக்களொடு ஒத்த இயல்புடையவர்கள் என்றும் போர் நிகழும் காலத்தில் இரு அரசர்களாலும் காப்பாற்றப்படத் தக்கவர்கள் என்றும் பேசும்.

பார்ப்பனர்கள் புலவுத் துறந்த (உடலைப் பாதுகாத்தலை வெறுத்த) நோன்புடையர் என்றும் அவர்கள் மெய்யே பேசுவர் என்றும் அறங்கறைந்த நாவினர் மறையவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறும்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் நல்ல தோழர்களாகவும் அரசர்களால் கீழே விழுந்து வணங்கத் தக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.

மணிமேகலையில் ஆபுத்திரன் என்பான் வரலாறு வேதியர் மீது வெறுப்பினைத் தோற்றுவிக்கவே படைக்கப்பட்டது. ஆபுத்திரன் கற்பொழுக்கத்தில் இழுக்கிய சாலி என்னும் பார்ப்பனி வயிற்றிற் பிறந்தவன். பார்ப்பனி சாலி என்பவள் காப்புக்கடை கழிந்து கொண்டோர்ப் பிழைத்த தண்டம் அஞ்சிச் சூன் முதிர்ந்த பருவத்துத் தான் செய்த தவற்றிற்குக் கழுவாயாகக் குமரியாடச் செல்கிறாள். அதாவது ஒழுக்கம் கெட்டவளாகி கருப்பமுற்றுத் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகத் தீர்த்தநீராடச் செல்லுகின்றாள். *(கழுவாயாகத் தீர்த்தமாடச் செல்லுகின்றாள் என்பதிலும் புனிதநீராடல் என்னும் வைதிக நெறியை எள்ளல் தொனிக்கின்றது.) இருள்நெறியில் போகின்றவள், வழியிலே, தான் ஈன்ற குழவி என்றும் மனம் இரங்காதவளாகிப் பிறர்கண்ணுக்குத் தோன்றாத ஒரு தோட்டத்தில் அதனை வீசி எறிந்து விட்டுப்போகின்றாள்.

இப்படிக் கூறுவதன் மூலம் மேற்குலத்தவளாகிய பார்ப்பனி மகவிற்கும் இரங்காத வன்கண்மையுடையளாகக் காட்டி இதன் மூலம் பவுத்தப் புலவன் வைதிகத்தின் மீது தனக்குள்ள காழ்ப்பைக் காட்டிக் கொள்ளுகின்றான்.

தீவினைப் பாவத்திற்குக் கழுவாயாகப் புனித நீராடலை வைதிக மதம் கூறும். *(*சிலப்பதிகாரத்தில் மாங்காட்டுமறையவன், தேவந்தி, முதலியோர் வாயிலாகவும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரை கங்கையாட்டியதன் வாயிலாகவும் புனித் நீராடுதலின் பெருமையைப் போற்றிய செய்திகளோடு இது மாறுபடுதலைக் காண்க)

சாலி வீசி எறிந்துவிட்டுச் சென்ற குழந்தையை ஒரு அந்தணன் எடுத்து வளர்க்கின்றான். அவனுடைய ஊரில் ஓரந்தணன் வீட்டில் வேள்வியிற் கொல்லப்படுவதற்கு என ஒரு பசு கட்டப்பட்டு நின்றது. அது கண்ணீர் உகுத்துக் கலங்குகின்றது. அதன் கலக்கத்தைச் சகியாத ஆபுத்திரன், அதனைக் காப்பாற்றத் துணிந்து அதனை அவிழ்த்துக் கொண்டுபோய்க் காட்டில் விட்டுவிடுகின்றான். அந்தணர்கள் பசுவினைக் காணாது அவ்வூரிலுள்ள ‘அடர்க்குறு மாக்கள்’ பலரைக் கூட்டிக்கொண்டு போய் ஆபுத்திரனைப் பற்றிஅடித்துத் துன்புறுத்துகின்றனர். வேள்விப் பசுவைத் திருடிய கள்வன் என ஆபுத்திரனை அந்தணர்கள் தூற்றியதோடு அமையாது அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் சோறிடுதற்கு மாறாக அந்தணர் கல்லும் மண்ணும் இடுகின்றனர். பிச்சைப் பாத்திரத்தில் கல்லிடுதற்குக் கயவருந் துணியார். ஆனால் அவ்விழி செயலை மறையோராகிய வேதியர் செய்கின்றனர்.

சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் புலனழுக்கற்ற,, புலவுத் துறந்த அந்தணாளர்கள், ஆனியற் பார்ப்பனமாக்கள், தீங்கு செயத் தகாத சாதியினர் என்பனபோன்ற பண்புகளுக்கு மாறாக மணிமேகலை, பார்ப்பனர்கள் இரக்க குணம் சற்றும் அற்ற கொடூர குணமுடையவர்களாகவும் இழிபண்புடையோராகவும் பார்ப்பனியர் கற்பொழுக்கம் கெட்டோராகவும் தம் மகவெனவும் பாராத கருணையற்ற கொலைக் குணம் உடையோராகவும் கூறுகின்றது..

இந்த மாறுபாடு காப்பியத்தில் வரும் ஒரு தனிபாத்திரத்தின் பண்பாகவன்றி. பார்ப்பனக்குலத்தின் குடிவரவாக மணிமேகலை பேசுகின்றது. இது வேதநெறியின் மீது பவுத்தர்கள் கொண்டிருந்த பகையினால் கூறப்பட்ட வசைமொழியேயன்றி வேறன்று. இந்த மனப்பாங்கை இன்று நம் நாட்டில் வாழும் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் திராவிடக் கட்சியினரும் பவுத்தர்களிடமிருந்து சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

குலவொழுக்கம் கெட்ட பார்ப்பனியரையும் பார்ப்பனர்களையும் பற்றிப் பிற்காலத் தெழுந்த சைவ தலபுராணங்களும் பேசுகின்றன. இவையனைத்தும் பார்ப்பன குடியில் தோன்றிய ஒருவரின் ஒழுக்கச் சிதைவையும் அதன் விளைவையும் பேசுகின்றன.

அவையெல்லாம், வைதிக ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்த,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”(134)

எனும் திருக்குறளுக்கு இலக்கியமாகவே படைக்கப்பட்டன. அந்தப் புராணக்கதைகள் தனி ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனியின் ஒழுக்கக் கேட்டால் வரும் இழுக்கினை உரைத்துக், கல்வியினும் பார்ப்பனனுக்கு ஒழுக்கமே மேலான செல்வம் என்பதனை வலியுறுத்துவனவாம். (பேரூர்ப் புராணம்: சுமதி கதிபெறு படலம், திருநீற்று மேட்டுப்படலம்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உலகியல் நெறியும், வேதநெறியும்

வேதநெறி உலகியல் சமுதாய அமைப்புக்களுக்கு உரியமதிப்பைக் கொடுக்கின்றது. சமுதாய நிறுவனங்கள் (social Institutions) அவ்வக் காலத்துத் தாமே சமூக இயக்கத்தின் ஏதுவாக இயற்கையில் உருவாகும் அல்லது சான்றோர்களால் சமுதாய நலன் குறித்து உருவாக்குப்படுவதாகும். அவை எக்காலத்துக்கும் உரியதெனக் கூற முடியாது. இயங்கும் சமுதாயத்தில் ஒருகாலத்தில் பயன்பட்ட சமுதாய நிறுவனங்கள் பின்னொரு சமுதாயக் கட்டமைப்பில் அமைப்பில் பயன்படாமற் போகலாம். அந்த நிறுவனங்கள் உலகியல் பயன்கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டன. வைதிகநெறி எக்காலத்துக்கும் பயன்படும் ஆன்மிக நெறிகளாம். ஆன்ம முன்னேற்றங் கருதிக் காலங்காலமாக ஆன்றோர்களாற் கைக் கொண்டொழுகப்படும் ஒழுக்கமாகும்.

சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் சாலினி, மறவர்கள், மறக்குடித் தாயமாகிய வழிவளங் கரவாது, அதாவது வழிபோவாரை அடித்துப் பறியாது’, அறஞ்செயும் குடிகள்போல நிரைகோடலும் ஆறலைத்தலும் செய்யாமையால்‘, வல்விலெயினர் மன்றுபாழ் பட்டன என்றும் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன என்றும் கூறி மறக்குடித் தாயமாகிய களவே செய்து உண்ண வற்புறுத்தி அழைக்கின்றாள்.; உயிர்ப்பலியும் உதிரப்பலியும் கொடுப்பவருக்கே ஐயை எனப் பெயரிய தங்கள் குலதெய்வம் வழிவளஞ் சுரக்கும் எனச் சாலினி வாக்களிக்கின்றாள்.

இந்தமறத்தன்மை அவர்களது குடிவரவாகிய குலதன்மம். அதனால்தான் சங்க கால மன்னர்கள் இக்குடியினரை நாட்டெல்லைக் காவலுக்கு நியமித்திருந்தனர்; பயிருக்கு முள்வேலி இடுதல் போல. வேலி பயிரை மேயாதவாறு காத்தல் அரசன் கடமையாயிற்று.

மணிமேகலையில், மாதவியின் அன்னை, சித்திராபதி, “நாடகக்கலை கற்றுத்துறை போகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து” எனக் கூறியது, குலதருமத்தை எடுத்தோதி உலகியலை நிலைநாட்ட முயன்றதாகும். அறம் உணர்ந்த மாதவி தனக்கும் தன் மகளுக்கும் எந்தவொழுக்கம் உயர்வளிக்கும் எனத் தேறி குலவொழுக்கத்தைக் கைவிட்டுத் துறவொழுக்கத்தைப் பேணியது வேதநெறி பற்றியதாகும்.

இந்த மாற்றத்தை மேற்கொள மிக்க துணிவும் தியாகமும் வேண்டப்படும். ஊரலர் தாங்கும் மனோதிடமும் வேண்டும். “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப” என்று மணிவாசகமும் இந்நிலையை வற்புறுத்திற்று.

உயிர்கள் தாம் பிறந்த சூழ்நிலைகளை யொட்டியே வாழுதல் இயலும். இவ்வாறு பிறந்த சூழ்நிலையை ஒட்டி வாழும்போது ‘நான் எனது’ என்னும் உணர்வோடு கூடியே தன்னலத்துடன் வாழும் உயிர், பிற உயிர்களுடன் ஒட்டி உறவாடும்போது தன்னலத்தைப் பிற உயிர்களுக்காகச் சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளும். இதுவும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்காகவே நிகழும். இதனால் அன்பு எனும் உணர்வு பிறக்கின்றது. எல்லா உயிர்களையும் நோக்கிய தன்னல மறுப்பே ‘அருள்’ எனப்படுகின்றது.

இதன் உச்சநிலை, “சொல்லுதற்கரிய நித்தியமான ஆன்மவர்க்கத்துக்கு, ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும், பெறுதற்கரிய சுவர்க்க பலமும், தம்மினு மிகப் பெருக வுண்டாக வேண்டும் என்று நினைத்திருக்கும் “ எண்ணுதற்கரிய பெருங்குணமாம். (ஞானாமிர்தம் 24:12 -15)

இந்த ‘எண்ணரும் பெருங்குணம்’ தன்னலம் கருதும் இயற்கைக்கு மாறானது. இது உயிர்களின் இயற்கைக் குணமன்று.

சுயநலமாகிய தற்காப்புணர்வே (selfpreservation) இயற்கையான வாழ்வூக்கி. தன்னலமறுப்பு செயற்கையே. இயல்புணர்வை அரிதில் வென்றோருக்கே அது கைகூடும். அத்தகைய அருளாளர்களுக்கே இறைவனருள் கிட்டும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

“உலகினி லியற்கையை யொழித்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற, ஆலவாயாவது மிதுவே”(3:120: 2)

இயற்கையோடு ஒட்டி அதற்கிணங்கி வாழ்வது உலகியல்நெறி. அதனை வென்று வாழ்வது வைதிகநெறி

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

 

முந்தைய பகுதி : வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2 (திருக்குறள்)

சிலப்பதிகாரத்தில் வேதநெறி

சங்ககாலத்தை மருவி எழுந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம் பண்டைத் தமிழ் மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும் பேரிலக்கியமாகப் போற்றப்படுகின்றது. இந்தச் சிறப்பான காப்பியத்தில் தமிழ் மக்கள் வேதநெறியைத் தழுவி நின்ற பல செய்திகள் அறியவருகின்றன.

காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய வேதக்கடவுளரின் வணக்கத்துடன் தொடங்குகின்றது. காப்பிய நாயகர்களாகிய கோவலனுக்கும் கண்ணகிக்கும் ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட’ அக்கினி சாட்சியாகச் செய்யப்படும் பிரசாபத்தியத் திருமணம் நடைபெறுகின்றது. சந்திரன் உரோகிணியைச் சேர நல்லோரையில் ‘அருந்ததி’ யனையாளாகிய கண்ணகியைக் கோவலன் கைத்தலம் பற்றுகின்றான். மணமகள் கண்ணகி, ‘போதிலார் திருவினாள்’ என்றும், ‘தீதிலா வடமீனின் திறமிவள் திறம்’ என்றும் போற்றப்படுகின்றாள்.

கோவலன் தந்தை மாசாத்துவான் ‘இருநிதிக் கிழவ’னாகிய ‘குபேரன்’ எனப் போற்றப்படுகின்றான். கோவலன், ‘செவ்வேள்’ என மாதரால் பாராட்டப்படுகிறான். புகார் நகர் செல்வசிறப்பாலும் போகத்தாலும் ‘நாகநீ ணகரொடு நாகநா டதனொடு’ உவமிக்கப்படுகின்றது. ‘பொதியி லாயினு மிமய மாயினும்’ என்றும், ‘காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேரு வலந்திரிதலான்’ எனத் தமிழகத்து நிலக்குறிகளோடு இமயமலை, மேரு எனும் வேதஇலக்கிய நிலக்குறிகளும் (Landmarks) பேசப்படுகின்றன.

பாயிரம் கண்ணகியை, பலர்புகழ் ‘பத்தினி’ என்று கூறுகின்றது. பத்தினி என்பது வேத வழக்கு. மறையவர் மனைகளில் நித்திய வேள்வி செய்யும் பொழுது அதனை அணையாது ஓம்புதல் அவன் மனைவியின் செயலாகும். அவ்வாறு நித்தியாக்கினி யோம்பும் மறையவனுக்கு உதவும் மனைவிக்கு ‘பத்தினி’ என்று பெயர்.*

* திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்
றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ
மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப்
பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்”

(பேருர்ப் புராணம்- கடவுள் வாழ்த்து -2)

இதில் கூத்தப்பெருமான் மறையவன் என்பதற் கேற்ப அம்மை இடப்பக்கத்தில் நின்று முத்தி வளர்க்கும் பத்தினியாகக் கூறப்படுகின்றாள்.

சிலப்பதிகாரம், இந்திரன் மகனாகிய சயந்தன் உருப்பசி என்ற கந்தருவப் பெண்ணை இந்திரனுடைய அவைக்களத்துக் கண்டு இருவரும் காமவயப்பட அகத்தியன் சாபத்தால் சயந்தன் பொதியமலையில் மூங்கிலாகப் பிறந்ததும், உருப்பசி புகார்நகரில் கணிகையர் குலத்து முன்னோளாகிய மாதவியாகப் பிறந்ததையும் கூறுகின்றது. உருப்பசி வந்து சாபத்தால் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் இளங்கோவடிகள் வானவர்மகளிர் என்றார்.

வேதக் கடவுளாகிய இந்திரனுக்கு விழா எடுத்தலை இந்திரவிழவூரெடுத்த காதை கூறுகின்றது. இந்த விழவினைப் பற்றிப் பவுத்த காப்பியம் எனப்படும் மணிமேகலையும் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் வடக்கு திசையைப் ‘புண்ணிய திசை’ என்றது.(5:94) அதற்குக் காரணம் ‘இமையவர் உறையும் சிமையம்’ அத்திக்கில் உள்ளமையாகும். (5:97) திருமாவளவன் என்னும் சோழமன்னன் வடநாடு சென்று வெற்றி கொண்டு இமயமலை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தமையால் அதன் உச்சியில் புலிச் சின்னம் பொறித்து மீண்டான். வச்சிரநாடு, மகத நாடு அவந்தி ஆகிய நாட்டு அரசர்கள் சோழனோடு நட்புக் கொண்டனர்.(5: 95- 110)

இந்திரவிழாவுக்கு முன்னர் புகார் நகரிலுள்ள திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்பொழுது, ‘மிக்க முதுமையுடைய முதல்வனாகிய வேதாவினுடைய வாய்மையில் தப்பாத நான்கு வேதங்கள் சொன்ன நெறியில் ஓமங்கள் ஒருபக்கம் நடந்தன.’ (5:174- 5)

இந்திரவிழாவில், மாதவியுடைய ஆடலைக் கண்டு மகிழ்வதுடன் “அமரர் தலைவனை வணங்குதும் யாமென” கந்தருவன் ஒருவன் தன் காதலியுடன், தெய்வயாக்கையை மறைத்து மானுடயாக்கையுடன், புகார் நகர் நோக்கி வருகின்றான். அவன் தன்னுடைய காதலிக்கு, கொடுமுடியையுடைய இமயமலையயும் வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும் அவந்தியென்னும் பதியினையையும் விந்தமலையும் விந்தாடவி யென்னும் காட்டினையும் வேங்கடமலையையும் நிலம் பொறாத விளையுடைய காவிரிநாட்டினையும் தன் காதலிக்குக் காட்டி அங்கங்குள்ள பயன்களை நுகர்வதற்கு ஆங்காங்குத் தங்கி வருகின்றான். (5::25-34) இக்கூற்றினால் வடநாடும் தென்னாடும் சமயம் , கலைப் பண்பாடுகளில் ஒற்றுமைப் பட்டு ஒன்றையொன்று தழுவியிருந்தமை தெளிவாகின்றது.

மாதவியாடிய பதினொருவகை ஆடலிலும் பாடலிலும் கண்ணன் பாகவதம் , தேவி பாகவதம் ஆகியவற்றின் தாக்கம் இருந்தமை அறியத்தக்கது.(6: 35 -66)

“தூய, மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் , துறைபோய்” (9:29-31) எனும் அடிகளுக்கு அடியார்க்குநல்லார், “இருமரபுந் தூய மறையோனுக்குப் பின்செல்லும் பிள்ளையாய் மிக்க கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையும் கற்றும் தரித்தும் துறைபோய்த் தந்தைதாயர் இறந்த பின்னர் அவர்க்கு நீர்க்கடன் முதலியவுஞ் செய்து” என உரை வரைந்ததுடன், ‘வான்பொருட்கேள்வி – மறைநூலும் அங்கமும். துறைபோதல்- அதற்குத் தக நிற்றல்* (*குறள்,391). மாணியாயெனவே செளளமும் உபநயனமும், துறைபோயெனவே கல்வி கேள்வி முதலிய பிரமசரியங் காத்தலுங் கூறி, மேல் “தேவந்தி யென்பாண் மனைவி” என்பதனால் விவாகமும் காருகத்தமுங் கூறினமையு முணர்க. “ எனக் குறிப்புரையும் வரைந்துள்ளார்.(அடியார்க்கு நல்லார் ஒரு தமிழ் வைதிகர். அவரைச் சமணர் என்று சில தமிழாசிரியர்கள் கூறுவது தவறு)

இதனால் பார்ப்பனர்களின் வருண ஒழுக்கம் இரட்டைக் காப்பிய காலத்திலேயே தமிழ்சமுதாயத்தில் நிலை பெற்றிருந்தமை புலனாகின்றது.. அந்தணர் ஒழுக்கத்தைப் பார்ப்பன வாகை எனச் சங்கத்தமிழ் புகழ்கின்றது. அந்த ஒழுக்கம் எத்தகையது என்பதைச் சிலப்பதிகாரம் ஒரு நிகழ்ச்சியை வைத்துப் பதிவு செய்கின்றது.

மதுரையைக் கண்ணகி அழலூட்டியபின், எரியாமல் நின்ற வெள்ளியம்பலத்துள், ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் மதுராபுரித் தெய்வம் தோன்றி, அவளுடைய சினந் தணியுமாறு பேசுகையில் பாண்டியமன்னர்களது செங்கோன்மையை எடுத்தியம்புகின்றது.

“சோழ நன்னாட்டுப் பார்ப்பான், பராசரன்* என்போன், வேதக்கல்வியில் வல்லமையுடையவன், சேரமன்னனின் கொடைத்திறங்கேட்டு வண்டமிழ் மறையோனுக்கு வானுறை கொடுத்த* அச்சேரனைக் காண்கென, காடும் நாடும் ஊரும் போகி, நீடுநில மலயம் பிற்படச் சேர நாடு அடைகின்றான்.

அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”

என இக்குடியினருக்கு வகுக்கப்பட்டபடி, பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன், ‘செங்கோற் தென்னன்’ ஆட்சிக்குட்பட்ட , ‘திருந்து தொழில்மறையவர்’ வாழும் திருத்தங்காலூர் என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”

மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், “குண்டப் பார்ப்பீர்” என்னோடு சேர்ந்து மறையோதி, இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் கொண்டு செல்வீர்” என அழைத்தான். அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்கிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான்.(“தளர்நா வாயினும் மறைவிளி வழாஅ, துளமலி யுவகையோ டொப்ப வோத, ‘தக்கிணன்’ றன்னைப் “) அதனால் முகமகிழ்ந்த பராசரன் தக்கிணாமூர்த்தியை மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களான, “முத்தப் பூணூலதற்கொத்த புனைகலம், கடகம், தோடு முதலனைத்தையும் ஈந்து தன் பதிப்பெயர்ந்தான். ( சிலம்பு 23: 63-98)

தக்கிணாமூர்த்தி வழி வார்த்திகன் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டோர், ‘படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென, விடுசிறைக் கோட்டகத் திட்டனர்’. வார்த்திகன் மனைவி கார்த்திகை கலங்கிப் புலம்பினள். செங்கோன்மை பிறந்தமை கண்டு ஐயை கோயிற்கதவைடைத்துக் கொண்டனள். உண்மை அறிந்துகொண்ட பாண்டியன், வார்த்திகனுடைய பொருளை மீட்டுக் கொடுத்ததோடு அதனின் பெருவளம் நல்கி,

“கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே”(சிலம்பு 23:)

அரசன் பார்ப்பனன் முன்னர் வீழ்ந்து வணங்கினான் என்று கூறாமல், இருநிலமடந்தைக்குத் திருமார்பு நல்கினான் என்று உரைத்த நயம் அறியத் தக்கது. அரசரும் வணங்கும் உயர்ந்த நிலையில் பார்ப்பனர் மதிக்கப்பட்டனர் என இதனால் அறியலாம்.

பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் முத்தியாகிய ஒன்றையே விரும்பும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி எனும் முத்தீயோம்பும் செல்வமே அவர்கள் போற்றும் செல்வம்.

அத்துடன், ‘பிரமவேள்வி, தேவவேள்வி, மனிதவேள்வி, உயிர்வேள்வி, பிதிர்வேள்வி’ ஆகியவற்றை வழுவாது ஓம்பும் ஒழுக்கமு உடையவர். (திருவள்ளுவர் இவ்வேள்விகளை,”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தா றோம்ப றலை”(43) எனுங் திருக்குறளில் கூறியுள்ளார்.)

மறையோர் மெய்ஞ்ஞானக் கல்விச் செல்வத்தையே தேடிச் சேமிக்க வேண்டும்; உலகியல் போகத்தில் ஆழ்த்தும் பொருட் செல்வத்தைச் சேமித்தலாகாது. ஈதலும் அந்தணர் அறமாதலால் அதனைத் தக்காருக்கு உடனே ஈந்து விடல் வேண்டும். இந்த ஒழுக்கம் பராசரன் தான் பார்ப்பன வாகையில் ஈட்டிய செல்வத்தைத் தக்கிணாமூர்த்திக்கு ஈந்த செயலில் வெளிப்படுகின்றது.

அந்தணன் கல்வியை விற்றலாகாது. கல்விக்குப் பரிசாகக் கிடைத்த பொருளைக்காக்கும் பிராமணன் பிரமராக்கதனாவான். இக்கருத்தைக் கச்சியப்பமுனிவர்* ( *இவர் காஞ்சிப்புராண ஆசிரியர் சிவஞான முனிவரின் மாணாக்கர். திருவானைக்காப்புராணம், பேரூர்ப் புராணம், திருத்தணிகைப்புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய புராணங்களின் ஆசிரியர்) . பேருர்ப்புராணத்தில், திருநீற்றுமேட்டுப் படலத்தில் ஓரந்தணன் வரலாற்றில் வைத்து விளக்குகின்றார்.

கங்கைக் கரையில் தன் மறைக்கல்வியை வெளிப்படுத்திப் பெற்ற மிகுந்த செல்வத்துடன் தன் இருப்பிடத்திற்கு செல்பவனுக்குத் தான் வேதஒழுக்கத்தில் தவறியதாக மனத்தில் பட்டது. அவன் பின் வருமாறு நினைக்கின்றான்.

“ உயர்ந்த வருணத்திலே பிறந்து, வேதம் ஓதி, வேள்விகள் செய்தும் தெளிந்த அறிவைப் பெற்றும் குற்றமுடைய வினைகளினின்று நீங்கியும் , இந்த நன்மைகளையெல்லாம் சிறந்த முத்தியைப் பெறுதற்குக் காரணமாக்காமல், மயக்கந்தரும் பாவம் வளர்ச்சியுற்று அரிய நரகத்திலே வீழ்ந்து துன்புறும்படித் தானமாகச் செல்வத்தைப் பெற்று இவ்வுலகத்திலே வருந்துவதற்கு ஏதுவானவற்றைச் செய்துவிட்டேனே! கற்ற கல்வியும் உரிய காலத்தில் வந்து உதவவில்லையே’ என்று அந்த அந்தணன் நொந்து கொள்கின்றான்*.

*“உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ்
செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது
மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங்
கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே.” (பேரூர்ப். 35:10)

தன்னிடமிருந்த பொருள்களையெல்லாம் தானமாக்க நினைந்து அவ்வெண்ணத்தைச் செயல்படுத்துமுன் இறந்து விடுகின்றான். பொருளைப் பாதுகாப்பாக வைத்த இடத்திலேயே பொருள்மேல் வைத்த ஆசையின் காரணமாக அரக்கனாய்த் திரிகின்றான். (பேரூர்ப் 35:13,27) மறையோதும் அந்தணனுக்குப் பொருள் நசை கேடு விளைக்கும் என்பது இப்புராணக் கதையின் கருத்து. இதனால் அந்தணவொழுக்கம் பற்றிப் புராணங்களின் கருத்தும் தெளிவாம்.

நல்லொழுக்கமும் கல்வியும் பொருளாசையும் அற்ற பார்ப்பார் நல்ல துணைவராவர் எனும் கருத்தில் மகட்கொடை நேர்ந்த அரசர்கள் மகளுடன் பார்ப்பாரையும் உடன் தருதல் சேரன் செங்குட்டுவன் காலவழக்காக இருந்தது.*

(*புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்
திருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கற்றா ரானெனின்” (25:126130)

எனும் இவ்வரிகளுக்கு,’பார்ப்பாருடனே மகட்டருதனோக்கி இருபிறப்பாளரொடு கல் தாரானாயினென்றான்’ என்றது பழையவுரை)

கங்கை முதலிய புனித நதிகளில் கிடைக்கும் கற்களால் பாணலிங்கம் அமைத்து வழிபடுதல் இன்றும் மரபாக உள்ளது. சிலப்பதிகாரம், ‘விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் ‘ கொண்டு, கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்யும் வழக்கிருந்ததைக் கூறுகின்றது. (25:117-121)

கங்கையாற்றில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்பட்டமையும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் புனிதநீராட்டினமையும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. (25:160-161)

நான்மறை வல்ல மறையோர் ,’மறைநா வுழுது, இறையோன் செவிசெறு வாக, வித்திப் பெரும் பயன் விளைத்தனர்..(28:186- 189)

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் வேத வழக்குத் தழுவிய நெஞ்சையள்ளும் காப்பியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையும் வேதநெறியும்

இரட்டைக் காப்பியங்கள் என்று பேசப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வேதவழக்கைக் குறித்த மட்டில் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது.

மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

மணிமேகலை மறையைப் போற்றிக் காப்பாற்றும் கடப்பாடு உடைய மறையவர்களை ஒழுக்கங் கெட்டவர்களாகவும் கொலைவெறியர்களாகவும் மதுமாமிசம் விரும்புபவர்களாகவும் சித்திரிக்கின்றது. அவர்கள் மேல் எழுந்த வெறுப்பு அவர்கள் போற்றும் வேதத்தின்மீதும் வேதநெறியின் மீதும் விரியுமாறு பேசுகின்றது.

புறநானூறு பார்ப்பனர்கள் பிற உயிர்களுக்குச் சிறிதும் தீமை செயத்தகாத சாதியர் என்றும் பசுக்களொடு ஒத்த இயல்புடையவர்கள் என்றும் போர் நிகழும் காலத்தில் இரு அரசர்களாலும் காப்பாற்றப்படத் தக்கவர்கள் என்றும் பேசும்.

பார்ப்பனர்கள் புலவுத் துறந்த (உடலைப் பாதுகாத்தலை வெறுத்த) நோன்புடையர் என்றும் அவர்கள் மெய்யே பேசுவர் என்றும் அறங்கறைந்த நாவினர் மறையவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறும்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் நல்ல தோழர்களாகவும் அரசர்களால் கீழே விழுந்து வணங்கத் தக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.

மணிமேகலையில் ஆபுத்திரன் என்பான் வரலாறு வேதியர் மீது வெறுப்பினைத் தோற்றுவிக்கவே படைக்கப்பட்டது. ஆபுத்திரன் கற்பொழுக்கத்தில் இழுக்கிய சாலி என்னும் பார்ப்பனி வயிற்றிற் பிறந்தவன். பார்ப்பனி சாலி என்பவள் காப்புக்கடை கழிந்து கொண்டோர்ப் பிழைத்த தண்டம் அஞ்சிச் சூன் முதிர்ந்த பருவத்துத் தான் செய்த தவற்றிற்குக் கழுவாயாகக் குமரியாடச் செல்கிறாள். அதாவது ஒழுக்கம் கெட்டவளாகி கருப்பமுற்றுத் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகத் தீர்த்தநீராடச் செல்லுகின்றாள். *(கழுவாயாகத் தீர்த்தமாடச் செல்லுகின்றாள் என்பதிலும் புனிதநீராடல் என்னும் வைதிக நெறியை எள்ளல் தொனிக்கின்றது.) இருள்நெறியில் போகின்றவள், வழியிலே, தான் ஈன்ற குழவி என்றும் மனம் இரங்காதவளாகிப் பிறர்கண்ணுக்குத் தோன்றாத ஒரு தோட்டத்தில் அதனை வீசி எறிந்து விட்டுப்போகின்றாள்.

இப்படிக் கூறுவதன் மூலம் மேற்குலத்தவளாகிய பார்ப்பனி மகவிற்கும் இரங்காத வன்கண்மையுடையளாகக் காட்டி இதன் மூலம் பவுத்தப் புலவன் வைதிகத்தின் மீது தனக்குள்ள காழ்ப்பைக் காட்டிக் கொள்ளுகின்றான்.

தீவினைப் பாவத்திற்குக் கழுவாயாகப் புனித நீராடலை வைதிக மதம் கூறும். *(*சிலப்பதிகாரத்தில் மாங்காட்டுமறையவன், தேவந்தி, முதலியோர் வாயிலாகவும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரை கங்கையாட்டியதன் வாயிலாகவும் புனித் நீராடுதலின் பெருமையைப் போற்றிய செய்திகளோடு இது மாறுபடுதலைக் காண்க)

சாலி வீசி எறிந்துவிட்டுச் சென்ற குழந்தையை ஒரு அந்தணன் எடுத்து வளர்க்கின்றான். அவனுடைய ஊரில் ஓரந்தணன் வீட்டில் வேள்வியிற் கொல்லப்படுவதற்கு என ஒரு பசு கட்டப்பட்டு நின்றது. அது கண்ணீர் உகுத்துக் கலங்குகின்றது. அதன் கலக்கத்தைச் சகியாத ஆபுத்திரன், அதனைக் காப்பாற்றத் துணிந்து அதனை அவிழ்த்துக் கொண்டுபோய்க் காட்டில் விட்டுவிடுகின்றான். அந்தணர்கள் பசுவினைக் காணாது அவ்வூரிலுள்ள ‘அடர்க்குறு மாக்கள்’ பலரைக் கூட்டிக்கொண்டு போய் ஆபுத்திரனைப் பற்றிஅடித்துத் துன்புறுத்துகின்றனர். வேள்விப் பசுவைத் திருடிய கள்வன் என ஆபுத்திரனை அந்தணர்கள் தூற்றியதோடு அமையாது அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் சோறிடுதற்கு மாறாக அந்தணர் கல்லும் மண்ணும் இடுகின்றனர். பிச்சைப் பாத்திரத்தில் கல்லிடுதற்குக் கயவருந் துணியார். ஆனால் அவ்விழி செயலை மறையோராகிய வேதியர் செய்கின்றனர்.

சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் புலனழுக்கற்ற,, புலவுத் துறந்த அந்தணாளர்கள், ஆனியற் பார்ப்பனமாக்கள், தீங்கு செயத் தகாத சாதியினர் என்பனபோன்ற பண்புகளுக்கு மாறாக மணிமேகலை, பார்ப்பனர்கள் இரக்க குணம் சற்றும் அற்ற கொடூர குணமுடையவர்களாகவும் இழிபண்புடையோராகவும் பார்ப்பனியர் கற்பொழுக்கம் கெட்டோராகவும் தம் மகவெனவும் பாராத கருணையற்ற கொலைக் குணம் உடையோராகவும் கூறுகின்றது..

இந்த மாறுபாடு காப்பியத்தில் வரும் ஒரு தனிபாத்திரத்தின் பண்பாகவன்றி. பார்ப்பனக்குலத்தின் குடிவரவாக மணிமேகலை பேசுகின்றது. இது வேதநெறியின் மீது பவுத்தர்கள் கொண்டிருந்த பகையினால் கூறப்பட்ட வசைமொழியேயன்றி வேறன்று. இந்த மனப்பாங்கை இன்று நம் நாட்டில் வாழும் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் திராவிடக் கட்சியினரும் பவுத்தர்களிடமிருந்து சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

குலவொழுக்கம் கெட்ட பார்ப்பனியரையும் பார்ப்பனர்களையும் பற்றிப் பிற்காலத் தெழுந்த சைவ தலபுராணங்களும் பேசுகின்றன. இவையனைத்தும் பார்ப்பன குடியில் தோன்றிய ஒருவரின் ஒழுக்கச் சிதைவையும் அதன் விளைவையும் பேசுகின்றன.

அவையெல்லாம், வைதிக ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்த,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”(134)

எனும் திருக்குறளுக்கு இலக்கியமாகவே படைக்கப்பட்டன. அந்தப் புராணக்கதைகள் தனி ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனியின் ஒழுக்கக் கேட்டால் வரும் இழுக்கினை உரைத்துக், கல்வியினும் பார்ப்பனனுக்கு ஒழுக்கமே மேலான செல்வம் என்பதனை வலியுறுத்துவனவாம். (பேரூர்ப் புராணம்: சுமதி கதிபெறு படலம், திருநீற்று மேட்டுப்படலம்)

உலகியல் நெறியும், வேதநெறியும்

வேதநெறி உலகியல் சமுதாய அமைப்புக்களுக்கு உரியமதிப்பைக் கொடுக்கின்றது. சமுதாய நிறுவனங்கள் (social Institutions) அவ்வக் காலத்துத் தாமே சமூக இயக்கத்தின் ஏதுவாக இயற்கையில் உருவாகும் அல்லது சான்றோர்களால் சமுதாய நலன் குறித்து உருவாக்குப்படுவதாகும். அவை எக்காலத்துக்கும் உரியதெனக் கூற முடியாது. இயங்கும் சமுதாயத்தில் ஒருகாலத்தில் பயன்பட்ட சமுதாய நிறுவனங்கள் பின்னொரு சமுதாயக் கட்டமைப்பில் அமைப்பில் பயன்படாமற் போகலாம். அந்த நிறுவனங்கள் உலகியல் பயன்கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டன. வைதிகநெறி எக்காலத்துக்கும் பயன்படும் ஆன்மிக நெறிகளாம். ஆன்ம முன்னேற்றங் கருதிக் காலங்காலமாக ஆன்றோர்களாற் கைக் கொண்டொழுகப்படும் ஒழுக்கமாகும்.

சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் சாலினி, மறவர்கள், மறக்குடித் தாயமாகிய வழிவளங் கரவாது, அதாவது வழிபோவாரை அடித்துப் பறியாது’, அறஞ்செயும் குடிகள்போல நிரைகோடலும் ஆறலைத்தலும் செய்யாமையால்‘, வல்விலெயினர் மன்றுபாழ் பட்டன என்றும் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன என்றும் கூறி மறக்குடித் தாயமாகிய களவே செய்து உண்ண வற்புறுத்தி அழைக்கின்றாள்.; உயிர்ப்பலியும் உதிரப்பலியும் கொடுப்பவருக்கே ஐயை எனப் பெயரிய தங்கள் குலதெய்வம் வழிவளஞ் சுரக்கும் எனச் சாலினி வாக்களிக்கின்றாள்.

இந்தமறத்தன்மை அவர்களது குடிவரவாகிய குலதன்மம். அதனால்தான் சங்க கால மன்னர்கள் இக்குடியினரை நாட்டெல்லைக் காவலுக்கு நியமித்திருந்தனர்; பயிருக்கு முள்வேலி இடுதல் போல. வேலி பயிரை மேயாதவாறு காத்தல் அரசன் கடமையாயிற்று.

மணிமேகலையில், மாதவியின் அன்னை, சித்திராபதி, “நாடகக்கலை கற்றுத்துறை போகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து” எனக் கூறியது, குலதருமத்தை எடுத்தோதி உலகியலை நிலைநாட்ட முயன்றதாகும். அறம் உணர்ந்த மாதவி தனக்கும் தன் மகளுக்கும் எந்தவொழுக்கம் உயர்வளிக்கும் எனத் தேறி குலவொழுக்கத்தைக் கைவிட்டுத் துறவொழுக்கத்தைப் பேணியது வேதநெறி பற்றியதாகும்.

இந்த மாற்றத்தை மேற்கொள மிக்க துணிவும் தியாகமும் வேண்டப்படும். ஊரலர் தாங்கும் மனோதிடமும் வேண்டும். “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப” என்று மணிவாசகமும் இந்நிலையை வற்புறுத்திற்று.

உயிர்கள் தாம் பிறந்த சூழ்நிலைகளை யொட்டியே வாழுதல் இயலும். இவ்வாறு பிறந்த சூழ்நிலையை ஒட்டி வாழும்போது ‘நான் எனது’ என்னும் உணர்வோடு கூடியே தன்னலத்துடன் வாழும் உயிர், பிற உயிர்களுடன் ஒட்டி உறவாடும்போது தன்னலத்தைப் பிற உயிர்களுக்காகச் சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளும். இதுவும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்காகவே நிகழும். இதனால் அன்பு எனும் உணர்வு பிறக்கின்றது. எல்லா உயிர்களையும் நோக்கிய தன்னல மறுப்பே ‘அருள்’ எனப்படுகின்றது.

இதன் உச்சநிலை, “சொல்லுதற்கரிய நித்தியமான ஆன்மவர்க்கத்துக்கு, ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும், பெறுதற்கரிய சுவர்க்க பலமும், தம்மினு மிகப் பெருக வுண்டாக வேண்டும் என்று நினைத்திருக்கும் “ எண்ணுதற்கரிய பெருங்குணமாம். (ஞானாமிர்தம் 24:12 -15)

இந்த ‘எண்ணரும் பெருங்குணம்’ தன்னலம் கருதும் இயற்கைக்கு மாறானது. இது உயிர்களின் இயற்கைக் குணமன்று.

சுயநலமாகிய தற்காப்புணர்வே (selfpreservation) இயற்கையான வாழ்வூக்கி. தன்னலமறுப்பு செயற்கையே. இயல்புணர்வை அரிதில் வென்றோருக்கே அது கைகூடும். அத்தகைய அருளாளர்களுக்கே இறைவனருள் கிட்டும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

“உலகினி லியற்கையை யொழித்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற, ஆலவாயாவது மிதுவே”(3:120: 2)

இயற்கையோடு ஒட்டி அதற்கிணங்கி வாழ்வது உலகியல்நெறி. அதனை வென்று வாழ்வது வைதிகநெறி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

 

முந்தைய பகுதிகள்:

சைவமும் வேதமும்

சைவசமயக் குரவர்களாகிய நால்வரின் திருமுறைகளிலும் வேதம் உயர்வாகப் பேசப்படுகின்றது. தமிழ் ஞானசம்பந்தர் தம்மை,”நற்றமிழ் ஞானசம் பந்தன், நான்மறை கற்றவன்” என்று கூறிக் கொள்கின்றார்.

nalvar1

தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தருடைய திருஅவதாரமே வேதநெறியைத் தழைத்தோங்கச் செய்தலையும் மிகுசைவத் துறையை விளங்கச் செய்தலையும் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

அவருடைய தந்தையார் சிவபாத இருதயர் கவுணிய கோத்திரத்தவர்.( இக்காலத்தில் கவுண்டின்ய கோத்திரம் என வழங்கப்படுகின்றது.); ‘அந்தணர் தங்குடி முதல்வர்.’ ‘இப்புவி வாழத் தவஞ்செய் இயல்பினார்’;. சிவபாத இருதயர் தமிழ்நாட்டில் சமணர், சாக்கியர்களின் பொய்மிகுந்து, “ஆதி அருமறை வழக்கம்” அருகி, சிவனடியார்களிடத்தில் திருநீறு முதலிய சைவசாதனங்கள் போற்றப் பெறாதொழிதலைக் கண்டு வருந்தினார். இறைவனிடத்தில், “பரசமயம் நிராகரித்து நீறாக்கும் “ திருப்புதல்வனை வேண்டித் தவம் புரிந்தார். அவருடைய வேண்டுகோளுக் கிரங்கிய இறைவன்,

“பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க ……
சிவம்பெருக்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்
திருவவதாரம் செய்தார்”

என தெய்வச் சேக்கிழார் பெருமான் மொழிகின்றார். திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் ‘இருக்குமொழிப் பிள்ளையார்’ எனும் சிறப்புப் பெயராலும் குறிக்கின்றார். இருக்குவேதம் எனும் ஒரு வேதம் இருந்தாலும், இப்பெயர் வேதங்கள் நான்கினையும் பொதுவாகக் குறிக்கும்.

வேதமொழிகளுக்கு ‘நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை, கற்றவன்” அருளிய மொழிகள் பின்னாளில் தென்னாட்டுச் சைவசித்தாந்த தத்துவத்திற்கு அடிகோலியது. எடுத்துக் காட்டாகத் தென்னாட்டு சைவசித்தாந்தம் உயிரைப் ‘பசு’ என்றும் இறைவனைப் ‘பதி’ என்றும் , உயிர் இறைவனை அறிய ஒட்டாமல் மறைக்கும் அறியாமையைப் ‘பாசம்’ என்றும் கூறும். இம்மூன்று பொருள்களையும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தத்தின் சிறப்பு. இறைவனைப் பசுபதி என வேதம் பேசுதலைப் போலத் திருமுறைகளும் ஓதும். திருஞான சம்பந்தப் பிள்ளையார் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்.

meditating_shivaஉயிர்களைப் பசுக்கள் என்றும் ஈசனைப் பசுபதி என்றும் கூறுவதற்குக் காரணத்தை ஜாபால்ய உபநிஷத் கூறுகின்றது. “புல்லைப் புசிப்பனவும் அறிவுக் குறைபாடு உடையனவும், உடையானால் உழவு முதலியதொழில்களில் ஏவப்படுவனவும் துக்கமுடையனவாகவும் இயமானனால் கட்டப் படுவனவுமாயுள்ளன பசுக்கள். அவ்வாறே பாசபந்தமுடைய சீவன்களாகிய பசுக்களும். பசுக்களை கட்டவிழ்ப்பவனும் ஏவுவனுமாகிய எஜமானனைப் போல முற்றுணர்விற்கும் ஈச சத்தத்திற்கும்( சொல்) உரிய பசுபதியும்.. ”.

வேதம் கூறும் அத்துவிதத்திற்கு உண்மையான, சரியான பொருள் இன்னது என்பதைத் திருஞானசம்பந்தர் ”ஈறாய் முதலொன்றாய்” எனும் திருவீழிமிழலைப் பதிகத் திருப்பாடலில் எடுத்துரைக்கின்றார்.

வேதமொழிகளைத் தாங்கி, அவற்றுக்குச் சரியான விளக்கம் தரும் சிறப்பினை நோக்கி, சிவவேதியராகிய நம்பியண்டார் நம்பிகள்,

“பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே”

எனப் போற்றினார்.

சமணசமயத்தினின்றும் சைவத்திற்கு மீண்ட அப்பர்சுவாமிகள், தம்முடைய நீண்ட வாழ் நாள் சிவவழிபாடின்றி கழிந்ததற்கு வருந்தி,

“தொண்டனேன் பட்டதென்னே தூயகா விரியின் நன்னீர்
கொண்டு இருக்கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்த வாறே”
என்று பாடுகின்றார்.

எனவே, தமிழோடிசை பாடல் மறந்தறியாத அப்பரடிகள் ‘தென்தமிழும் வடமொழியும் மறைகள் நான்கும்’ ஆன ஈசனை, ‘இருக்கு ஓதி இருமொழிகளிலும் துதித்து வழிபட்டாரெனவும் தெரிகின்றது.

“அருச்சனை பாட்டேயாகும், அதனால் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என இறைவனால் பணிக்கப் பெற்ற நம்பியாரூரர், திருவாரூர்ப் பெருமான் தம்மை யாட்கொண்டருளுமாறு , அடியவரை வேண்டும்போது, “தொண்டர்களே! – யான் அந்தணர்களை வெறுக்க மாட்டேன்; வெறுக்கின்றவர்களுக்குத் துணைபோகின்றவனும் ஆகேன். ”( வேதியர் தம்மை வெகுளேன், வெகுண்டவர்க் குந்துணை யாகேன், 8.73.5) எனவேதம் கற்றோரிடத்தில் தமக்கிருக்கும் பயபக்தியையும் வேதங்கற்றோரிடத்தும் அவர்களை வெறுப்போரிடத்தும் சைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஒழுக்கத்தையும் கூறுகின்றார்.

“வேதப் பயனாம் சைவம்” என்றார் சேக்கிழார் பெருமான்.(பெரியபுராணம் 1219)

வைதிகசைவம் எனும் வழக்கு

தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம்.

“இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ”
என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10)

“மழை வழங்குக மன்னவன் ஓங்குக
பிழையில் பல்வள னெல்லாம் பிறங்குக
தழைக அஞ்செழுத்து ஓசை தரையெலாம்
பழைய வைதிக சைவம் பரக்கவே

– கோயிற் புராணம், திருவிழாச்சருக்கம், 53

என உமாபதி சிவனார் வைதிக சைவத்தை வாழ்த்தியருளினார்.

“வீடு வைதிக சைவம் பகரும்” எனச்சிவப்பிரகாசம் (31) கூறும்.

திராவிட மாபாடியம் அருளிய மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில்,

“நலம் மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப்
பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவும் சமயங்களொராறும் மகிழ்ச்சி கூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன”,

காமாட்சியம்மை இறைவன் கண்களைத் தன் திருக்கரங்களாற் புதைத்ததாகப் படுகிறார்.

உபநிடதங்கள் வேதாந்தம் எனப்படும். சைவசந்தானக் குரவர்கள் “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்” என்றும், “ வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றால் சைவத் திறத்தடைவர்” என்றும் சைவத்திற்கும் வேத உபநிடதங்களுக்கும் உள்ள உறவை விளக்கியிருக்கின்றனர். இந்த உறவைக் குமரகுருபர சுவாமிகள் மேலும் சுவைபட விளக்கியுள்ளார்.

வேதம் ஒரு கனிமரம். அம்மரத்தினிடத்து விளையும் பயன்கள் பல. அவற்றுள் பலர் இலையையே நன்றெனக் கொண்டு மகிழ்ந்தனர். வேறு சிலர் தளிரைக் கொண்டு மகிழ்ந்தனர். இவ்வாறே சிலர் அரும்பையும், சிலர் மலரையும் பலர் பிஞ்சையும், வேறு பலர் காயையும் நன்று எனக் கொண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு அந்த ஆறு உறுப்புக்களும் அவர்களுக்கு அவ்வாறு பயன்படுவனவாகவே இருந்தன. ஆனால் வேதம் என்னும் அந்த மரத்தின் உச்சியில் பழுத்த வேதாந்தம் என்னும் தெவிட்டாத அருங்கனியை எடுத்துப் பிழிந்து சாரமாகக் கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதைப் பருகினோர் சிலரே எனச் சைவம் வேதாந்தமாகிய உபநிடதத்தைப் பயன் கொண்ட சிறப்பக் குமரகுருபர முனிவர் விளக்கினார்.

“ஓரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த
ஆரா இன்ப அருங்கனி பிழிந்த
சாரங் கொண்ட சைவசித்தாந்தத்
தேனமுது அருந்தினர் சிலரே”

(பண்டார மும்மணிக்கோவை)

இந்தக் கனிமர உவமையை விரித்து இலை, தழை முதலியன கொண்டு மகிழ்ந்த வேத மதங்கள் இன்னின்ன என்று காசிவாசி திரு செந்தினாதய்யர் அவர்கள் தம்முடைய சிவஞான வசனாலங்கார தீபத்தில் விளக்கியுள்ளார்கள்.

“ இங்கே வேத மரத்து இலையினால் தார்க்கிக மதத்தினரும், தளிரினால் மீமாஞ்சக மதத்தினரும், அரும்பினாற் சாங்கிய மதத்தினரும், மலரினால் யோக மதத்தினரும், பிஞ்சினாற் பாஞ்சராத்திர மதத்தினரும், காயினால் ஏகான்மவாத மதத்தினரும் ஆக மூலப்பிரகிருதியைப் பற்றிய அறுவித சமயத்தினர் சூசிக்கப்பட்டார். உச்சியிற் பழுத்த பழத்தினாற் சிவாத்துவித வேதாந்தமும்,

‘சைவசித்தாந்தமும் வேதசாரமாயிருத்தலான்” என சுப்பிரபேதாகமமும்,
“இந்தச் சித்தாந்தம் வேத சாரம்” என்று மகுடாகமும்,
“வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என்று சிவப்பிரகாசமும் கூறுமாற்றால், உச்சியிற் பழுத்த சிவாத்துவித வேதாந்தமாகிய பழத்தின் சாரத்தினாற் சைவ சித்தாந்தமும் குறிக்கப்பட்டனவாம் என்க”.

kumaraguruparaகுமரகுருபரசுவாமிகளின் இப்பாடலில், வேதங்களும் உபநிடதங்களும் அனைத்துத் தத்துவச் சிந்தனைகளுக்கும் அடிப்படையான கருத்துக்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகின்றது. இலை, அரும்பு, மலர், காய் முதலியன தோன்ற மரம் உயிருடன் இருத்தல் இன்றியமையாதது. மரம் உயிருடன் இருந்தால்தானே அதில் மலர் முதலியன தோன்றி கனியாகும். மரத்தையே ஒழித்துவிட்டால் கனி எப்படிக் கிடைக்கும்?

எனவே, சைவசமயச் சான்றோர்கள் தம் நூல்களில் மரபுவழி வேதத்தை யுடன்பட்டுப் போற்றி வந்துள்ளனர்.

இவையெல்லாம் தென்னாட்டுச் சைவசித்தாந்தம் வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் அளித்து வரும் ஏற்றத்திற்குச் சில சான்றுகளாம்.

“வைதிக சைவம் “ என்றால் சைவநூல்களிற் கூறிய பொருள்களுக்கு ஏற்ப வேதநூல்களுக்குப் பொருள்கொண்டு அதனைத் தழுவிச்செல்லுதல் என்று பொருள்.

சைவப்புறம், வேதப்புறம், வைதிகர் யார்

வேதத்தின் சிலபகுதிகள் சைவச்செந்நெறிக்குப் புறம்பாகப் பிறரால் பொருள் கொள்ளப்படுகின்றன. வேதத்தின் உண்மைப்பொருளை மறைத்து இவ்வாறு பொய்ப்பொருளை இந்த வேதியர்கள் கூறிப் பாவப்பட்டுத் தாமுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பர் என அவர்கள் தக்கன் வேள்வியில் பங்கேற்றுச் சிவத்துரோகம் செய்தமையால் ததீசி முனிவர் சாபமிட்டனர் எனக் கந்தபுராணம், காஞ்சிப்புராணம் முதலிய சிவபுராணங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டு வைதிகப் பிராமணர்களிற் சிலர் தமிழையும் சைவத்தையும் இகழ்ந்து பேசுவதற்குக் காரணம் இந்தச்சாபமே போலும். இத்தகைய பிராமணர்களைக் காஞ்சிப்புராணம் “வைதிகப் புறத்தவர்கள்” என்கின்றது.

“ வைதிகப் புறத்த ராகிச் சைவநூல் வழியைக் கைவிட்டு,
உய்தியில் புறநூல் பற்றி உலப்பரு மறையின் நிந்தை,
ஐதெனப் புகன்று வேற்று மொழியினை யாதரித்துப்
பொய்திகழ் நரகின் உய்க்கும்” (தக்கேசப் படலம் 23)

எனும் இப்பாடலால் வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை என்பதும் வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே என்பது தெளிவாகும்.

இன்று வைதிகர் என்றசொல், சுருங்கி, புரோகிதத் தொழில் செய்கின்ற பிராமணர்களுக்கே உரியதாக வழங்கி வருகின்றது. இந்தப் பொருள் மாற்றத்திற்குச் சங்கரமடத்தினருக்கே நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பொருள் சுருக்கம் சமுதாயத்திலும் சமயநெறியிலும் பலவித வேண்டாத தாக்கங்களை விளைத்துவிட்டது. தமிழகத்தில் வழங்கும் சைவத்திற்கு மரபு வழிச் சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம் என்று பெயர் சைவப் பெரியோர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இது காறும் கூறியவற்றால், தமிழ் சைவத் துறையும், சைவசித்தாந்தம் என்ற தத்துவப் பிரிவும் வேதநெறியின் வழிவந்தனவே ஆகும் என்பதும், சங்ககாலம் தொட்டு இன்றுவரை உள்ள தமிழ், சைவ இலக்கியங்களும், வாழும் மரபுகளும் அக்கருத்தை உறுதி செய்வதும் புலனாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard