New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் -இல.திருவள்ளுவன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் -இல.திருவள்ளுவன்
Permalink  
 


 

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இல. திருவள்ளுவன், தினச்செய்தி

 
அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 1

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 1)
 திருவள்ளுவர் கூறும் இம்முதல் குறட்பாவிலேயே மிகப்பெரும் அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளார்.
இக்குறளுக்கு உரை எழுதியுள்ள பெரும்பான்மையர் ஆதி பகவன் என்பதற்குக் கடவுள் என்றே கூறியுள்ளனர். பகவன் என்பதற்குச் சூரியன் என்றும் பொருளுண்டு.  பிங்கல நிகண்டு (சூத்திரம் 210) சூரியனுக்கு 64 பெயர்களைக் கூறுகிறது. அவற்றில் ஒரு பெயர்  ‘பகவன்’. காலத்தைப் பகுப்பவன் என்ற பொருளில் சூரியன் பகவன் எனக் குறிப்பிடுகின்றனர் பழந்தமிழர்கள்.
உலகில் ஆதியில் தோன்றிய சூரியனைத் திருவள்ளுவர் ஆதி பகவன் எனகிறார். முதல் குறளில் இந்த அறிவியல் உண்மையைக் கூறும் திருவள்ளுவர் மற்றோர் உண்மையையும் குறிப்பிடுகிறார். நாம் வாழும் இந்த உலகம் சூரியினில் இருந்து பிரிந்து வந்ததே! சூரியனில் இருந்து சிதைந்த வந்ததே புவி என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த நூற்றாண்டு உருவானதுதான் பெருவெடிப்புக் கொள்கையும். திருவள்ளுவர் சூரியனை முதலாகக் கொண்டு உலகம் தோன்றியது என்ற அறிவியல் உண்மையையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் திருக்குறளின் முதல்சொல்லும் இறுதிச்சொல்லும் அறிவியல் உண்மையைக் கூறுவனவே.
உலக மொழிகளின் எழுத்துகளுக்கெல்லாம் முதலாக அமைவது அகர ஒலி என்னும் மொழிஅறிவியல் உண்மையைத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘உலகு’ என்னும் சொல்லை முதல் பாடலில் இடம்பெறச்செய்வர். ‘உலகம்’ என்னும் சொல்லே உலகம் சுற்றுவது என்னும் அறிவியல் உண்மையைக் குறிக்கும் சொல்தான். உலா, உலவு முதலான சொற்கள் உலவுவதன் அடிப்படையிலானது என அறிவோம். அதுபோல் பூமி சுற்றிக் கொண்டு – உலவிக்கொண்டு – இருப்பதால் உலகு, உலகம் என்றனர். (“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” எனத் திருவள்ளுவர் பின்னரும் பூமியின் சுழற்சியைக் குறிப்பிடுவார்.)
இவ்வாறு முதல் குறளிலேயே சூரியன் ஆதியானது என்னும் உண்மையைக் கூறி அதிலிருந்து உருவானது புவி என்னும்  அறிவியல் உண்மையைக் குறிப்பிட்டு அதனை உவமையாகக் கொண்டு அகர ஒலி எழுத்துகளுக்கெல்லாம் முதலானது என்பதை விளக்கியுள்ளார்.
அறிவியல் குறிப்புகளைத் தெரிவித்து சூரியனில் இருந்து தோன்றியது உலகம் என்னும் அறிவியல் உண்மையைக் கூறியதைப் பாராட்டாமல், ஆதி பகவனைச் சாதிப்பெயர்களாக்கிக் கதை கட்டுவோரும் இவ்வுலகில்தான் இருக்கின்றனர் என்பதுதான் கொடுமை

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் -இல.திருவள்ளுவன்
Permalink  
 


 


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர்,உலகப்பொது நூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
 2
 
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)
 ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல் தன் நீர் வளத்தில் குறையும். இதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார்.
‘தடிந்து எழிலி’ என்பதன் மூலம், இடிஇடித்து மின்னி மழை பெய்வதையும் பூரித்து (முகில் பெருத்து) மழை பெய்வதையும் உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
நீர் நிலைகளில் உள்ள நீர், வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று காற்றில் கலந்து முகிலாக உருவாகிப் பின்னர் மழையாக மாறுகிறது என்பதுதான் அறிவியல் உண்மை. அவ்வாறு பெய்யும் மழை மீண்டும் கடலில் கலந்து மீண்டும் முகிலாக மாறுகிறது. இந்த நீர்ச் சுழற்சியைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நீரில் இருந்து எழுந்து உருவாகும் முகிலின் பெயர் ‘எழிலி’(nimbostratus). இச்சொல்லைச் சங்க இலக்கியங்களில் புலவர்கள் 33 இடங்களில் கையாண்டுள்ளனர்.
திருவள்ளுவர் தம் காலத்தில் மக்கள் நன்கறிந்த அறிவியல் உண்மையை இத்திருக்குறள் மூலம் நமக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்கும் பொழுது ‘எழிலி’ என்னும் அறிவியல் கலைச்சொல்லையும் பயன்படுத்தியுள்ளார்.
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டாவது அதிகாரமாக வான்சிறப்பு கூறி மழையைச் சிறப்பிக்கிறார்.
மழை இல்லையேல் உணவு இல்லை, பூசைகளும் வழிபாடுகளும் இல்லை, தானமும் தவமும் இல்லை, உயிர்கள் இல்லை, உலகமும் இல்லை என அடுக்கடுக்காகக் கூறுகிறார்.
மழை இல்லாமல்  நீர்நிலைகள் மூலம்  பயன்பெறலாமே! நீண்ட பரப்பிலான கடல்கள் உள்ளனவே! அவற்றின் மூலம் நீராதாரம் பெற்றுப் பயனுறலாமே எனச் சிலர் எண்ணுவர். எனவேதான்,  மழையின்றி நிலம் மட்டும் தன்னிலை கெடும் என எண்ணவேண்டா என்பதற்காகத்தான் கடலும் தன் தன்மை கெட்டு நீர் வளம் அற்றுப் போகும் என எச்சரிக்கிறார்.
இவ்வாறு கூறும் பொழுது, தொடக்கத்தில் தெரிவித்தவாறு மழையின் தோற்றம் குறித்த அறிவியல் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் தொடக்கநிலையில் உள்ள முகிலின் பெயரான ‘எழிலி’ என்பதையும் கையாண்டுள்ளார்.
திருவள்ளுவரின் எச்சரிப்பை உணர்ந்து  நாம் நீர்ச் சேமிப்பிலும் நீர்நிலைகள் காப்பிலும் மழைஆக்கத்திற்கான வழிகளிலும் கவனம் செலுத்துவோமாக. 
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 23.07.2019



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
 

3

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245)
 
“அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர்.
காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து நிற்கிறது. அருள் உள்ளவர்கள் எல்லாரிடமும் எப்போதும் அருள் உள்ளத்துடன் நடந்து கொண்டால்  துன்பமின்றிப் புகழால் நிலைத்து நிற்பர். காற்று வழங்கும் இப்பெரிய நில உலகில் பிறரிடம் அருள் உள்ளத்துடன் நடந்து அல்லல் உறாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களை முன் எடுத்துக்காட்டுச் சான்றாகக் கொண்டு  அருள் உள்ளத்துடன் திகழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அருளுடையார்க்கு அல்லலில்லை என்பதற்குச் சான்று இவ்வுலகம் என்று மட்டும் திருவள்ளுவர் கூறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு கூறவில்லை. வளம் மிகுந்த காற்று இருக்கும் பெரிய உலகம் என்கிறார்.
காற்று ஓரிடத்தில் நில்லாமல் உலவிக் கொண்டே இருப்பதால் ‘உலவி’ என்றும் அதற்கு  அறிவியல்  பெயர் உண்டு. பல கோடி பல கோடி உயிர்கள் பற்பல கோடி யாண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும் செழிப்புடையது காற்று.  செழிப்புடைய காற்று உள்ளமையால் உலகமும் செழிப்புடையதுதான். எனவேதான் ‘மல்லல்’ என்கிறார்.
‘மல்’ என்றால் வளம் எனப் பொருள். அதிலிருந்து பிறந்த மல்லல் வளமை, செழுமை, பெருமை, வலிமை,செல்வம், மிகுதி, பொலிவு, அழகு எனப்பல பொருள்கள் உடையது.
தொல்காப்பியர் “மல்லல் வளனே” என்கிறார். (வளன் + ஏ = வளமையும் பெருக்கமும்)
‘ஞால்’ என்றால் பிடிப்பு இல்லாமல் தொங்குதல் எனப் பொருள்.
எப்புறமும் பிடிப்புத் துணை இன்றி விண்வெளியில் தொங்கும் உலகம் என்னும் ஆழ்ந்த பொருளை உடையது ‘ஞாலம்’ என்னும் சொல். இத்திருக்குறளில் ஞாலம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தரத்தில் பூமி இருக்கும் அறிவியல் உண்மையை நினைவு படுத்துகிறார். பொருள்கள் மீது பற்றின்றி இருந்தால்தான் நமக்கு அருள் உள்ளம் வாய்க்கும் என்பதை உணர்த்த இச்சொல்லைத் திருவள்ளுவர் கையாண்டார் போலும்.
கரி என்பதற்கு யானை, கரிய நிறம், நெருப்புக்கரி, சான்று எனப் பல பொருள்கள் இருப்பினும் இங்கே சான்று என்னும் பொருளில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
அருளாளர்களுக்கு அல்லல் இல்லை எனச் சொல்ல வந்த திருவள்ளுவர் பூமியில் உள்ளவர்களை எடுத்துக்காட்டாகக் கூறி அதற்கு அடைமொழியாகப் புவியில் காற்று நிலவும் அறிவியல் உண்மையைப் பயன்படுத்தி உள்ளார். அத்துடன் விண்வெளியில் பற்றின்றித் தொங்கிக் காெண்டிருப்பதை உரைக்கும்  ஞாலம் என்றும் அறிவியல் கலைச்சொல்லையும் பயன்படுத்தி உள்ளார்.
அருள் உள்ளத்தை வலியுறுத்த வந்த பொழுதும் அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கும் திருவள்ளுவரின் வல்லமைதான் என்னே!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard