New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெண்டி டானிகரும் இந்தியாவும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வெண்டி டானிகரும் இந்தியாவும்
Permalink  
 


வெண்டி டானிகரும் இந்தியாவும்


 
Save
Share12
 

வணக்கம்
தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும்
வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு

செ. நிஜந்தன்

அன்புள்ள நிஜந்தன்,

நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. மதிப்புரையை வைத்துப் பார்த்தால் அந்த அம்மையார் புதியதாக ஏதும் இந்தியாவைப்பற்றியோ இந்துமதம் பற்றியோ சொல்லிவிடவில்லை. சென்ற நூறாண்டுகளில் இந்தியாவில் உள்ள நவீன யுக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இதைவிடத் தீவிரமான, கூர்மையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த அம்மையாரே கூட அவ்வகையான ஒரு விரிந்த சொல்லாடல்களனில் இருந்தே தன் விமர்சனங்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்

காதரின் மேயோ

இங்கே நினைவுகூரவேண்டியது காதரின் மேயோ என்ற அமெரிக்க ஆய்வாளர் 1927ல் எழுதி வெளியிட்ட மதர் இந்தியா என்ற நூல். இந்தியாவை ஓர் அழுகியநாகரீகமாக சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் அந்நூலை எதிர்த்து அன்று இந்தியாவில் கடும் விமர்சனம் எழுந்தது. காந்தி அந்நூலை சாக்கடை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்று சொன்னார்.

அந்த எதிர்ப்பு ஒருவகையில் புதியது. ஏனென்றால் அதே தொனியில் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ‘ஆய்வு’ நூல்கள் அதற்கு முன்பு கிறித்தவ மதப்பரப்புநர்களாலும் காலனியாதிக்கவாதிகளாலும் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலானவை எந்த வகையான எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுக்குள் புழங்கிக்கொண்டும் இருந்தன.

மிகச்சிறந்த உதாரணம் என்றால் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார் வரலாறு. நாடார் சாதியின் வரலாறு, வாழ்க்கைமுறை பற்றிய அக்கறையோ அடிப்படை மரியாதையோ இல்லாமல் அவர்கள் மதம் மாறாவிட்டால் மிருகங்களே என்ற தோரணையில் எழுதப்பட்ட அந்நூல் பின்னர் புழக்கத்திலேயே இல்லாமலாகிவிட்டது.[ The Tinnevelly Shanars : a sketch of their religion and their moral condition and characteristics : with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them. London : Clay for the Society for the Propagation of the Gospel, 1850.]

இந்தியாவை மேலைநாட்டினர் அணுகுவதில் இரு பார்வைகள் உள்ளன. இந்தியவியலின் அடிப்படை விவாதம் எப்போதுமே இவ்விரு பார்வைகள் நடுவேதான்.

முதல்பார்வை இந்தியாவை மதமாற்றக் களமாக கண்ட பாதிரியார்களால் உருவாக்கப்பட்டு ஐரோப்பிய- அமெரிக்க சூழலில் மிக வலுவாக நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒரு வறுமைமிக்க, பிற்பட்ட, அரைக்காட்டுமிராண்டி நாடு. இங்குள்ள பண்பாடு என்பது சில உயர்குடிகளையும் நகரங்களையும் மட்டும் சார்ந்து இருந்த ஒரு போலிப்பாவனை மட்டுமே. இங்குள்ள சிந்தனைகள் கலைகள் அனைத்துமே ஆன்மாவற்றவை, மோசடியானவை. இந்தியப்பண்பாடு தேங்கிநின்றுவிட்ட ஒன்று. இந்தியமக்களை மீட்டு, அவர்களுக்கு பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வளர்ச்சியையும் அளிக்க ஐரோப்பாவால் மட்டுமே முடியும். அது வெள்ளைதோல் கொண்டவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.– இதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.

நிரத் சௌதுரி

நான் சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் பயணம்செய்த நாட்களில் அங்கே மாதாகோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்களில் இந்தியாவைப்பற்றிய இந்தச் சித்திரம் முன்வைக்கப்பட்டு நிதியுதவிக்கான கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதை வாசித்தேன். பதினேழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்ப்பட்ட இப்பிரச்சாரம் இன்றும் அதே வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த முந்நூறாண்டுப் பிரச்சாரத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சராசரியான வெள்ளையன் இந்த மனநிலையையே கொண்டிருக்கிறான், நுட்பமாக வெளிப்படுத்துவான்.

ஐரோப்பியச் சிந்தனையாளர்களில் கணிசமானவர்கள் இந்தமனநிலையை வெளிப்படுத்துவதைக் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் கார்ல் மார்க்ஸ். அவர் முன்வைத்த ஆசிய உற்பத்திமுறை என்ற கருதுகோள் இந்தியாவில் உற்பத்திமுறை தேங்கிநின்றுவிட்டது என வாதிடுகிறது. வெளிநாட்டினரிடம் வணிகத் தொடர்புடைய நகரங்கள் மட்டுமே இந்தியாவில் வளர்ந்திருந்தன. அங்குமட்டுமே போலியான ஒரு த்த்துவ வளர்ச்சி இருந்தது. மற்றபகுதிகள் பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்தவையாக இருந்தன என்று மார்க்ஸ் சொல்கிறார். ஆகவே பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் அது இந்தியாவை மீட்கும் வல்லமைகொண்டது என்றும் நினைக்கிறார்

இதே தோரணையை முன்வைக்கும் இன்னொரு சிந்தனையாளர் ஆல்ஃபிரட் ஸுவைட்சர். ஆப்ரிக்காவில் கிறித்தவ மதப்பிரச்சாரகராக அரும்பணியாற்றியமைக்காக புகழ்பெற்ற இவர் இந்திய தத்துவ ஞானமரபை தொகுத்துச் சொல்லி அடிப்படையில் அறவுணர்வற்ற போலியான தத்துவமரபு, பெரும்பாலும் நகல்களால் ஆனது என நிராகரிக்கிறார்

இவ்வாறு நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இந்தியாவைப்பற்றிப் பேசும் கணிசமான ஆய்வாளர்களிடம் அவர்களின் மேலோட்டமான ஜனநாயகபாவனைகளுக்கு அடியில் இம்மனநிலை இருப்பதை கொஞ்சம் அணுகியதும் காணலாம். பொதுவாக இவ்வகை ஆய்வாளர்கள் தங்கள் கிறித்தவச்சார்பை, வெள்ளை இனச்சார்பை, ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை நேரடியாகக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாத்திகர்களாக, ஜனநாயகவாதிகளாக, உலகப்பொதுமைபேசும் அறிவியல்நோக்குள்ளவர்களாகவே காட்டிக்கொள்வார்கள். அது ஐரோப்பிய அமெரிக்க அறிவுலகின் பொதுப்பாவனை. ஆனால் பெரும்பாலும் அது ஒரு தற்காப்புப் பாவனை மட்டுமே. விதிவிலக்குகள் மிகமிகமிக அபூர்வம். அந்த அடிப்படைக்காழ்ப்புகளில் இருந்து அங்கே பிறந்து அக்கல்விக்கூடங்களில் கற்ற ஒருவர் வெளியே வருவதும் மிகமிகமிகக் கடினம்.

வெண்டி டானிகர்

இந்த மனநிலைக்கு இருவகையான எதிர்வினைகள் இங்கிருந்து எழுகின்றன. இந்தியாவில் கல்வித்துறையில் உள்ள ஐரோப்பிய அடிமை மனநிலை மேற்கண்ட ஐரோப்பிய மேட்டிமை நோக்கை அப்படியே அள்ளி தன் கருத்தாக வைத்துக்கொள்கிறது. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பியக் கல்விநிலையங்களில் கற்றவர்கள் அனேகமாக அனைவருமே இந்த மனநிலையைத்தான் ‘ஆய்வு நோக்குடன்’ சொல்லிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்குகளை நான் அதிகம் கண்டதில்லை. எவரேனும் அப்படி எங்கேனும் இருந்தால் நண்பர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.

இரண்டாவது எதிர்வினை, ஐரோப்பிய அங்கீகாரத்துக்காக இங்கே எழுதப்படும் எழுத்துக்கள். இவை ஐரோப்பிய ரசனைக்காகவும் அவர்களின் ஆமோதிப்புக்காகவும் எழுதப்படுபவை. அங்கே புகழ்பெற்றபின் அவை இங்கு ‘அவர்களாலேயே’ அங்கீகரிக்கப்பட்டவை என்ற பேரில் முன்வைக்கப்பட்டு நம்மவர்களாலும் கொண்டாடப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம், நிரத் சௌதுரி என்ற வங்க எழுத்தாளர். காதரீன் மேயோவின் குரலிலேயே எழுதிய இந்திய எழுத்தாளர் இவர். லண்டனில் ஒருகாலத்தில் இந்தியாவைப்பற்றி ‘உண்மையாக’ எழுதும் ஒரே எழுத்தாளர் என பெரும்புகழ்பெற்றிருந்தார். அவரது நூல்கள் இங்குள்ள ஊடகங்களிலும் பரவலாக புகழ்பெற்றிருந்தன. இன்று அவை மறக்கப்பட்டுவிட்டன

நிரத் சௌதுரியின் வெவ்வேறு வடிவங்களையே நாம் இந்திய ஆங்கில எழுத்துக்களில் திரும்பத்திரும்பக் காண்கிறோம். ‘so called’ இந்தியப்பண்பாட்டில் சலிப்புற்ற, ஏமாற்றமடைந்த, விலகிச்சென்று ஐரோப்பியப் பண்பாட்டின் மென்மையிலும் மேன்மையிலும் சரண்புகுந்த கதைமாந்தர்கள் கொண்ட கதைகளே புகழ்பெற்ற இந்திய ஆங்கில இலக்கியங்களில் பெரும்பாலானவை. உதாரணமாக ரோகிண்டன் மிஸ்திரி முதல் அருந்ததி ராய், வரையிலானவர்களின் நாவல்களைச் சொல்லலாம்.

இரண்டாவது இந்திய அணுகுமுறை என்பது இந்தியாவின் பண்பாடு மீதான அடிப்படை ஆர்வத்துடன் நிகழ்த்தப்படுவது. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆரம்பகால இந்தியவியலாளர்களுக்கு ஆரிய இனவாத நோக்கு இருந்தது என்கிறார்கள்.ஆனால் இந்தியசிந்தனையை புரிந்துகொள்ள, இந்தியப்பண்பாட்டை உள்வாங்கிக்கொள்ள முயல்வதனாலேயே அவை முக்கியமானவை. மோனியர் விலியம்ஸ் முதல் ஏல்.எல்.பாஷாம் வரை உதாரணமாகக்ச் சொல்லலாம். அவர்களுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது

8

வெண்டியின் இந்நூல் ஒன்றும் புதிய தாக்குதல் அல்ல. அது ஐரோப்பிய மேட்டிமைநோக்கின் குரலாக சென்ற முந்நூறாண்டுகளாக இந்தியா, சீனா, ஆப்ரிக்கா மீது முன்வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக எந்த ஆளுமை முன்வைக்கப்பட்டாலும் உடனடியாக இந்த ஐரோப்பிய அறிவுத்தளத்தால் அந்த ஆளுமை சிறுமைப்படுத்தப்படும். காந்தி, அரவிந்தர், விவேகானந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்பற்றி மிகக்கீழ்த்தரமான நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. அவை வெறும் சிலையுடைப்புகள் அல்ல, அவதூறுகள்.

இணைய அறிமுகம் உடையவர்கள் சென்ற ஓரிரு வருடங்களுக்குள்ளேயே இத்தகைய நூல்கள் சில பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்டதை நினைவுகூரலாம். காந்திக்கும் அவரது நண்பருக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்தது என்று அவரது கடிதங்களில் இருந்து ‘கண்டுபிடித்து’ எழுதப்பட்டது. விவேகானந்தரும் ராமகிருஷ்ணபரம ஹம்ஸரும் ஓரினச்சேர்க்கை உறவுள்ளவர்கள் என ஒருவர் ஆய்வுசெய்து எழுதினார்

இராமனைப்பற்றியும் கிருஷ்ணனைப்பற்றியும் ஏராளமான நூல்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன.இந்தியப்புராணங்கள், இந்திய தெய்வங்கள் பற்றி எழுதப்படுகின்றன. ஏன்? இவற்றின் பெறுமதி உண்மையில் என்ன?

ஒப்ரி மேனன் என்ற எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருந்தார். அவர் பி.கெ.பாலகிருஷ்ணனின் நண்பர். அன்று உலகப்புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளராக இருந்தார் ஓப்ரி மேனன். தாய் வழியில் ஐரிஷ்காரர் தந்தைவழியில் மலையாளி. அவரது ராமாயண மறுஆக்கம் நூல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. [The Ramayana, As Told by Aubrey Menen (1954)] அவரை 1987ல் பி.கெ.பாலகிருஷ்ணனுடன் சென்று சந்தித்தபோது அதைப்பற்றி நான் கேட்டேன்.

‘இந்தியாவில் தடைசெய்யப்படுவதற்காக எழுதப்பட்ட நாவல் அது. ஏராளமாக பணம் கிடைத்தது. என் பிறநூல்களுக்கு கவனமும் பெற்றுத்தந்தது’ என்றார் ஒப்ரி. அதை அவர் எழுதியதன் நோக்கமென்ன என்று மீண்டும் கேட்டேன். ‘அதைத்தானே சொன்னேன்’ என்று சிரித்தார். அந்நூலை தடைசெய்திருக்கக் கூடாது என நான் ஒரு கட்டுரை எழுதினேன், ஒரு வணிகத்தை ஏன் தடைசெய்யவேண்டும்? அதனால் என்ன ஆகிவிடப்போகிறது?

இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதற்கு அதிக எதிர்வினையாற்றுவதும் தடைசெய்வதும் சரியல்ல என்பதே என் எண்ணம். முதலில், இன்றைய இணையச்சூழலில் தடை என்பது மறைமுக விளம்பரம் மட்டுமே. அடிப்படையில் நூல்களை தடைசெய்யும் அதிகாரம் அரசுகளுக்கு அளிக்கப்படக்கூடாது. எந்நூலையும் எக்காரணத்தாலும் தடைசெய்யக்கூடாது

மேலும் வெண்டியின் இந்நூலை தடைசெய்தால் அதைப்போல எழுதப்பட்ட பலநூறு நூல்களை என்ன செய்வது? 1979ல் கீதாமேத்தா என்பவர் எழுதிய கர்மகோலா என்ற நூல் இதேபோல ஒட்டுமொத்தமாக இந்திய ஆன்மீகத்தை கேவலப்படுத்துகிறது என்றார்கள். அது என்ன விளைவை உருவாக்கியது? வெண்டியின் நூலைப்பற்றிய மதிப்புரையை வைத்துப்பார்த்தால் நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட ஒரு நூலாக அது தெரியவில்லை.இன, மத காழ்ப்புடன் எழுதப்பட்ட சர்வசாதாரணமான நூலுக்கு அதற்குத் தகுதியற்ற விளம்பரத்தை அளிப்பதனால் என்ன பயன்? இத்தகைய காழ்ப்புகளால் சீண்டப்படுவதா இந்துப்பண்பாடு?

ஆகவே இந்த மிகையான எதிர்வினைகள்தான் இந்தியப்பண்பாட்டுக்கும், இந்துப்பண்பாட்டுக்கும் எதிரானவை என நினைக்கிறேன். இந்தியப்பண்பாடும் இந்துமதமும் கீழ்த்தரமானவை என சித்தரிப்பவர்கள் இந்த மிகையுணர்ச்சிமிக்க எதிர்வினைகளைத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்நூல்களை இந்து, இந்திய பண்பாட்டுமரபில் ஞானம் கொண்டவர்கள் புன்னகையுடன் கடந்துசெல்லும்போது தெருவில் இறங்கும் ஏதுமறியாத கும்பல் தங்களை இந்து- இந்திய பிரதிநிதிகளாக முன்வைக்கிறது. ஐரோப்பிய மேட்டிமையாளர்களுக்கு மேலும் வசதியானதாக ஆகிறது. பண்பாட்டுத்தாக்குதல்களுக்கும், வணிகத்துக்கும்

இந்த தாக்குதல்களை உண்மையில் எதிர்கொள்ளும் வழிகள் இரண்டுதான்.முதல் வழி சிந்தனையின் தளத்தில். அந்தசெயல்பாடுகளுக்கு இந்திய கல்வித்துறை முற்றிலும் தகுதியற்றதாக ஆகிவிட்ட நிலையில் வெளியே இருந்து வலுவான அறிவார்ந்த குரல்கள் எழவேண்டியிருக்கிறது.

இன்னொரு வழி உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்புவரை சீனா ஐரோப்பாவால் நம்மைவிட அதிகமாக வசைபாடப்பட்டு அவதூறுசெய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. அதன் நாகரீகமும் பண்பாடும் ஐரோப்பாவால் சிறுமையாகவே பேசப்பட்டன. இன்று அது உலக வல்லரசு. இன்று ஐரோப்பா அதை பணிவுடன் மரியாதையுடன் கௌரவத்துடன் பேசத்தொடங்கியிருக்கிறது

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மார்க்ஸ் கண்ட இந்தியா


 
Save
Share30
 

அன்புள்ள ஜெமோ

நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன.

அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/?cat=11]


’இங்கிலாந்தின் குற்றங்கள் என்னவாக இருந்தாலும் வரலாற்றின் கையில் உணர்வற்ற கருவியாக (இந்துஸ்தானில்) ஒரு சமுதாயப் புரட்சியைக் கொண்டு வருகிறாள்.’

‘காட்டுமிராண்டித்தனம் கொண்ட இயற்கை வழிபாடு, அதன் சீரழிந்த தன்மை எப்படி வெளிப்படுகிறதென்றால், மனிதன் – இயற்கை அனைத்துக்கும் அரசனான அவன், ஹனுமான் என்கிற குரங்கின் முன்னரும் சபாலா என்கிற பசுவின் முன்னரும் மண்டியிடுவதில்.’

உண்மையிலேயே மார்க்ஸ் சொன்ன கருத்துதானா இது? இல்லாவிட்டால் திரிக்கிறாரா? இல்லை ஒரு பெரிய விவாதத்தின் ஒரு அம்சமாக இதை போகிற போக்கிலே சொன்னாரா?

சத்யநாராயணன், சென்னை

அன்புள்ள சத்யநாராயணன்,

மார்க்ஸின் அந்த மேற்கோள் சரியானதுதான். மிக விரிவாக இன்னமும் தீவிரமாக அவர் சொன்ன விஷயங்களை சரியாக பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வரிகள்தான் அவை.[போகிற போக்கைப்பார்த்தால் மார்க்ஸை மேற்கோள் காட்டினாலே இந்துத்துவா முத்திரை வந்துவிடும்போல படுகிறது!]

மார்க்ஸியம்போன்ற ஒரு தரிசனத்தை நாம் பல கூறுகளாகப் பிரித்து பார்க்கவேண்டும். அதன் மெய்யியல், தத்துவம், சமூகநோக்கு, அழகியல், அரசியல்திட்டம் ஆகியவற்றை அவ்வாறு பிரித்து ஆராய்வோமென்றால் அதன் மெய்யியல் என்பது ஒரு ஆயிரம் வருடம் பழைய செமிட்டிக் மதத்தின் அளவேயானது என்று சொல்ல முடியும். செமிட்டிக் மதங்களின் நான்கு அடிப்படைகள் மார்க்ஸியத்துக்கும் உண்டு.

1. மனிதமையப் பார்வை. 
இயற்கை அனைத்துக்கும் அரசன் மனிதன் என்ற மார்க்ஸின் வரி அதையே சுட்டுகிறது. இயற்கையின் பரிணாமத்தின் உச்சம் மனிதனே என்றும் மனிதனை வந்தடையவே இயற்கையில் பரிணாமமே நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் மார்க்ஸியம் நம்புகிறது. அந்த பரிணாமத்தையும் மனித உழைப்பே நிகழ்த்தியது என்று அது வாதிடுகிறது.

இது கடவுள் தன் வடிவில் மனிதனைப்படைத்தான் என்ற செமிட்டிக் மதங்களின் வரியில் இருந்து வேறுபட்டது அல்ல. கீழைமதங்கள் பிரபஞ்ச மைய நோக்கு கொண்டவை. பிரபஞ்சம் என்ற பிரம்மாண முழுமையின் ஒரு துளியே மனிதன் என அவை நினைக்கின்றன

2. இருமைநோக்கு. 
அனைத்தையும் கறுப்பு வெளுப்பு என முழுமையாக பிரித்துக்கொள்ளும் பார்வை என அதைச் சொல்லலாம். எல்லா ஆதி நம்பிக்கைகளும் இருமையையே முதலில் கண்டடையும். ஆனால் தத்துவசிந்தனையும் மெய்ஞானமும் அந்த இருமை என்பது தற்காலிகமானது, நம் அறிதல் மற்றும் இருப்பை மட்டுமே சார்ந்தது, மாயையானது என்று அறிந்து மேலே செல்லும். அந்தப் பயணத்தை இந்து,பௌத்த மதங்களில் காணலாம்.

3. ஒற்றை மையம் 
நோக்கி செல்லும் நோக்கு. இந்நோக்குதான் ஒரே கடவுள், ஒரே தீர்க்கதரிசனம், ஒரே தீர்வு என்றெல்லாம் வளர்கிறது. ஐரோப்பிய பாகன் மதங்களிலும் கீழைமதங்களிலும் பன்மையை மையமாக்கும்போக்கை காணலாம்.

4. ஒட்டுமொத்தமான இறுதி உண்மை,
 இறுதித் திருப்புமுனை பற்றிய நம்பிக்கை. அதாவது ஒரு நியாயத்தீர்ப்பு நாள் வரும் என்ற நம்பிக்கை. ஒரு முழுமையான இறுதி மாற்றம் அதாவது புரட்சி வரும் என்ற மார்க்ஸிய நம்பிக்கை அதில் இருந்து உதித்ததே. தத்துவ அடிப்படை கொண்ட கீழை மதங்கள் அப்படி ஒரு ஒற்றைப்புள்ளி நோக்கி வாழ்க்கையை கொண்டுசெல்ல முயல்வதில்லை. வாழ்க்கையை அவை ஒரு முடிவில்லாத சுழற்சி [பவ சக்கரம்] என்றே உருவகிக்கின்றன.

மார்க்ஸியத்தின் சாரத்தில் மனிதமையவாதமும், எளிமையாகத் திரிக்கப்பட்ட பத்தொன்பதாம்நூற்றாண்டுப் பரிணாமவாதமும், வரலாற்றை விருப்பப்படி கட்டமைத்துக்கொள்ளும் வரலாற்றுவாதமும் உள்ளது. அதில் இருந்தே மார்க்ஸிய நம்பிக்கைகள் பல உருவாகின்றன. சிக்கலாகச் சொல்வதன் வழியாகவே மிக எளிமையான நம்பிக்கைகளுக்கு ஓர் அறிவார்ந்த கனத்தை கொடுப்பதை மார்க்ஸ் பதினெட்டாம்நூற்றாண்டு ஜெர்மனிய தத்துவசிந்தனையாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அதை மார்க்ஸியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த சொற்சிக்கல்களை எளிமையாக்கி புரிந்துகொண்டோமென்றால் மார்க்ஸியம் பலசமயம் பெந்தெகொஸ்தே கிறித்தவம் போல ஒலிக்கும்.

மார்க்ஸியம் மனிதவரலாற்றைப்பற்றிச் சொல்வதை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். மனிதனே இந்த பூமியின் அதிபன். ஏனென்றால் அவன் பரிணாமத்தின் உச்சம். பல லட்சம் வருடங்களாக இயற்கையில் பரிணாமம் நிகழ்ந்து அதன் விளைவாக மனிதன் உருவாகியிருப்பது பரிணாமத்தின் நோக்கமே அவன்ந்தான் என்பதற்கான ஆதாரம். இதுதான் அவர்களின் மனித மையவாதம்.

மனித வரலாற்றிலும் அதே பரிணாமவாதத்தை போட்டுப்பார்க்க முடியும். மனித இனங்கள் படிப்படியாக பண்பாட்டு ரீதியாகவும் பரிணாமம் அடைந்து வருகின்றன. மனிதனின் பிரக்ஞையும் சிந்தனையும் அழகுணர்ச்சியும் எல்லாமே அவ்வாறு பரிணாமம் மூலம் உருவானவைதான். பழங்குடிகள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு பரிணாமம் அடைகிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம். அதில் இருந்து கம்யூனிசம். இந்த பரிணாமகதியில் உருவானவையே இனக்குழுகக்ள், அரசாங்கம், குடும்பம் போன்ற எல்லா அமைப்புகளும். இது மார்க்ஸியத்தின் முதிரா பரிணாமவாதம்.

இந்தப்பரிணாமம் இயற்கைக்கு வெளியே உள்ள எந்த ஆற்றலாலும் நிகழ்த்தப்படுவதில்லை. இயற்கையில் உள்ள பொருண்மையான சக்திகள் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் முரணியக்கம் வழியாக நிகழ்கிறது. வரலாறெங்கும் நிகழ்ந்துள்ள மோதல்கள் எல்லாமே இந்த முரணியக்கத்தையே காட்டுகின்றன. இவ்வாறு வரலாறு முன்னகர்ந்து வளர்ந்து பரிணாமம் அடைவதை வரலாற்றை ஆராய்ந்தால் காணலாம். இவ்வாறு வளர்ந்து செல்லும் வரலாற்றுக்கு ஒரே திசைதான் இருக்க முடியும். இதுவரை வந்த திசையை வைத்து இனிமேல் போகும் திசையை கணிக்கலாம். இனிமேல் அது போகும் திசை கம்யூனிச அமைப்புதான். இது அவர்களின் வரலாற்று வாதம்.

இந்த விளக்கம் இயல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மனிதனின் ’பரிணாமத்தில்’ உச்சத்தில் இருப்பது முதலாளித்துவம் நிகழ்ந்துவிட்ட பகுதியான ஐரோப்பா. ஆகவே ஐரோப்பிய மனிதன் பரிணாமத்தில் முதலாளித்துவம் நிகழாத ஆசியர்களை விட பலபடிகள் மேலே நிற்பவன். ஜெர்மனியரான மார்க்ஸ் ஜெர்மனியே ஐரோப்பாவின் உச்சம் என்றும், அங்கேதான் முதலில் புரட்சி வந்து கம்யூனிசம் வரும் என்றும் நம்பினார். ஆக அவரது நோக்கில் அவர் நின்றது பரிணாமத்தின் உச்சத்தின் உச்சிப்புள்ளியில். நாம் நின்றது பல படிகள் கீழே.

எவ்வளவு கீழே? மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை [Asiatic mode of production (AMP)] என ஒன்றைப்பற்றி பேசியிருக்கிறார். இதைப்பற்றி விரிவான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தினரின் குறிப்புகளை அப்படியே நம்பி மார்க்ஸ் இந்தியச்சூழலைப்பற்றிய முடிவுகளுக்கு வந்தார். அதன்படி அவரது கருத்தில் இந்தியாவில் நிலப்பிரபுத்துவமே கூட வரவில்லை. இந்தியா இருந்தது அதற்கும் பிற்பட்ட நிலையில்! இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் பழங்குடிகளாகவே இருந்தனர் என்கிறார் மார்க்ஸ்.

அப்படியானால் எப்படி இந்தியாவில் அரசுகளும் மதங்களும், சிந்தனைகளும், கலைகளும் உருவாயின? அதை விளக்கவெ அவர் ஆசிய உற்பத்தி முறை என்ற கருதுகோளை உருவாக்கினார். அதன்படி பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வரும்போது இங்கே இருந்தவை விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த மக்கள் வாழ்ந்த கிராமங்கள். இங்கே மிகச்சிறிய அளவில் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. கிராமங்கள் வணிகத்தாலும் அரசியல் தொடர்புகளாலும் பிணைக்கப்படவில்லை. ஆகவே அவை தனித்தீவுகள் போல பற்பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியில்லாமல் உறைந்து கிடந்தன்.

இந்த கிராமங்களை சிறிய படைகள் வழியாக கொள்ளையடித்து நிதியை சேர்த்துக்கொள்ளும் சிறிய அதிகாரக்குழுக்கள் இருந்தன. இவர்கள் சிறு நகரங்களை உருவாக்கிக்கொண்டார்கள். இந்நகரங்களிலேயே மதங்களும் கலைகளும் இலக்கியங்களும் உருவாயின. இப்படி தேங்கி கிடந்த இந்தியாவில்தான் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. அவர்கள் இந்திய கிராமங்களை வணிகம் மூலமும் ஆட்சி மூலமும் இணைத்தார்கள். அவர்கள் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை கொண்டுவந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவை முன்னேற்றிய சக்திகள்! – இதுதான் மார்க்ஸ் சொன்னது.

உங்களுக்கு கொஞ்சமாவது தமிழக வரலாறு தெரிந்திருந்தால் ’இது என்ன பேத்தல்!’ என்று கூவிவிடுவீர்கள். இங்கே இருந்த மாபெரும் ஏரிகளையும் பாசனநிர்வாகத்தையும் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பீர்கள். ஆனால் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்து மார்க்ஸ் சொன்னது என்பதனாலேயே முடிவான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஐம்பதாண்டுக்காலம் இந்திய வரலாறும் இந்தியப்பண்பாடும் அதன் அடிப்படையில் நம் மார்க்ஸியர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இன்று நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வந்துவிட்டன. பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள். இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு. அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது. பெரும் பஞ்சங்கள் வந்தன. அந்தப் பஞ்சங்களைப் பயன்படுத்தி இந்திய மக்களை அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று தோட்டத்தொழிலை உருவாக்கினர் பிரிட்டிஷார்.

இங்கிருந்தது மேலை நிலப்பிரபுத்துவம் அல்ல. அந்த நிலப்பிரபுத்துவம் என்பது விவசாயிகளை முழுமையாக அடிமைகளாக வைத்திருந்து நிலப்பிரபுக்கள் மொத்த உபரியையும் சுரண்டி கொழுத்த அமைப்பு. இங்கிருந்தது சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு. இன்றும்கூட அந்த அமைப்புகள் நீடிக்கின்றன -சினிமாவில்கூட கேட்கிறோமே பதினெட்டுபட்டி என்று.

அது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை விட பல மடங்கு பண்பட்டது. சீரான உபரிசேமிப்பு முறை கொண்டது. ஆகவே மேலான பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்தியது. நாமே கண்கூடாக பார்க்கக் கூடிய விஷயம், ஒரு சராசரி இந்தியக் கிராமம் என்பது வெறும் அடிமைகளின் தேங்கிப்போன முகாம் அல்ல. அதில் கல்விக்கு, கலைகளுக்கு, மதத்துக்கு, பொதுக்கொண்டாட்டங்களுக்கு எல்லாம் இடமிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிராம அமைப்பு நொறுங்கும் வரை இலக்கியம், கலைகள், மருத்துவம், கைத்தொழில்கள், கோயில்சடங்குகள் அனைத்தையுமே கிராமசமூகம் மிக வெற்றிகரமாகப் பேணி வந்தது. இன்று பல்லாயிரம் ஆவணங்கள் மூலம் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக, மார்க்ஸ் கண்ட இந்தியா அவர் கற்பனைசெய்துகொண்ட ஒன்று. அவரது சொந்த சமூகப்பரிணாமவியலின்படி அவரும் அவரது சமூகமும் வளர்ந்து பரிணாமத்தின் உச்சியில் நின்றார்கள். மேலே செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள். கீழே குனிந்து நம்மை பார்த்தார் மார்க்ஸ். அவரது காலகட்டத்தில் கணிசமான ஐரோப்பிய சிந்தனையாளர்களிடம் இந்த ஐரோப்பியமைய நோக்கு இருந்தது. இப்போதும்கூட ஏராளமான சிந்தனையாளர்களிடம் அது இருக்கிறது. ஐரோப்பாவே உலகை வழிநடத்தும் என்ற எண்ணம்.

என்ன சிக்கல் என்றால் நாம் அதை அப்படியே நம்பி நம் விசுவாசத்தைக் கொடுப்பதே. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே மார்க்ஸ் மேற்கோள்தான் காட்டப்ப்பட்டிருக்கிறார்– ஆராயப்படவில்லை. விதிவிலக்காக மிகமிகச் சிலரையே நம்மால் சுட்டிக்காட்ட முடியும். ஓர் இஸ்லாமியர் குரானையும் கிறித்தவர் பைபிளையும் கொள்வது போலவே நம் மார்க்ஸியர் மூலதனத்தை கொள்கிறார்கள். சராசரி மார்க்ஸியர்க்ளுக்கும் வகாபிகளுக்கும் நம்பிக்கையைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடேதும் நம்மால் பார்க்கமுடிவதில்லை.

ஒரு நிகழ்ச்சி. மார்க்ஸியத்தை நித்ய சைதன்ய யதியிடம் நடராஜ குரு விவாதிக்கிறார். மனிதனின் கையை ஒரு முக்கியமான குறியீடாக மார்க்ஸ் முன்வைக்கிறார். செயல் மூலம், உழைப்புமூலம் அவனுடைய கை உருவானது என்றும் அதுவே மானுடவரலாறு என்றும் சொல்கிறார். நடராஜகுரு சொல்கிறார் ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கையை முன்வைக்கையில் ஒரு புதிய மதத்தை நிறுவும் உற்சாகம் தெரிகிறது. ஏன் கண்ணை எடுத்துக்கொண்டு அதன் பரிணாமமாக வரலாற்றைப் பார்ப்பதுதானே?’ [குருவும் சீடனும். எனி இண்டியன் வெளியீடு. ப.சாந்தி மொழியாக்கம்]

ஆனால் அரவிந்தன் நீலகண்டனைப்போல நான் மார்க்சை முழுமையாக நிராகரிக்க மாட்டேன். மார்க்ஸை பத்தொன்பதாம்நூற்றாண்டு சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவராகவே எண்ணுகிறேன். வரலாற்றை பொருளியல் அடிப்படையில் நோக்கும் பார்வையை அவர் உலகுக்கு அளித்தார். அந்த பார்வை முழுமையானது அல்ல. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள உதவிகரமான கருவி அது. சமூகப்பரிணாமவியலை ஆராய்வதற்கு மார்க்ஸின் வாதங்களை இன்றைய புரிதல்களையும் கணக்கெடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம்

மார்க்ஸுக்கு அவரது காலகட்டம் சார்ந்தும், அவரது ஐரோப்பியமைய நோக்கு சார்ந்தும், அவரது யூதமதப்பின்னணி சார்ந்தும், அவரது சொந்த காட்சிப்பிழைகள் மற்றும் முன்முடிவுகள் சார்ந்தும் பல எல்லைகள் இருந்தன. அவர் தீர்க்கதரிசியோ ஞானியோ அல்ல. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான சிந்தனையாளர் மட்டுமே. அந்த குறைபாடுகளை முழுமைசெய்துகொண்டு மார்க்ஸிய சிந்தனைகளை நாம் வரலாற்றையும் சமூகத்தையும் ஆராய பயன்படுத்தலாம். அவரது சிந்தனைகளை நவீன சிந்தனைகளின் ஒட்டுமொத்தப் பரப்பில் வைத்து ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முதலில் அவரை மார்க்ஸியர்களிடமிருந்து மீட்டாக வேண்டும்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மார்க்ஸியம் இன்று தேவையா?


 
Save
Share67
 

அன்புள்ள ஜெ.எம்,

மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன?

கெ.அன்புராஜ்

அன்புள்ள அன்புராஜ்,

பலநாட்களாகப் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில் அது. பல நிலைகளில் பலரிடம் உரையாடியதன் விளைவு. ஆகவே சொல்லிச் சொல்லி முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. அதில் பல கேள்விகள், பல பதில்கள் உள்ளன. அத்தனையையும் ஒரு கட்டுரையாக்கும்போது கட்டுக்கோப்பை உருவாக்க பெரிதும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நான் மார்க்ஸியத்தைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணத்தை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இங்கே நாம் மார்க்ஸியத்தை அதன் அரசியல்தளப் பிரச்சாரகர்களிடமிருந்து மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அன்றாட அரசியல் நடவடிக்கைக்கு ஏற்பவும் அவர்கள் தொடர்ச்சியாக மாற்றி வளைத்து ஒடித்து திரித்துக் கொண்டே இருக்கும் மார்க்ஸியத்தை புரிந்து கொள்வது எளிதல்ல.

இந்த அரசியல்வாதிகளால் செய்யப் பட்டுள்ள முக்கியமான ஒரு திரிபை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்ஸ் முன்வைத்த மார்க்ஸியம், அதற்கு லெனின் அளித்த அரசியல் விளக்கம், அதன் விளைவாக உருவான சோவியத் அரசு உருவாக்கிய ஆட்சியமைப்பின் செயல்பாடுகள் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒன்றாகவே அவர்கள் நம்மிடம் சொன்னார்கள். அதில் இருந்தே எல்லா சிக்கல்களும் ஆரம்பமாகின்றன.

மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.

முதலாளித்துவத்தின் அன்றைய சிக்கல்களை வைத்து அவர் முதலாளித்துவத்தில் இருந்து அடுத்த கட்டமாக அது கம்யூனிசம் நோக்கிச் செல்லும் என்று ஊகித்தார். நிலப்பிரபுத்துவத்தின் போதாமைகளை தீர்க்கப் பண்ணையடிமைகள் போராடியதன்மூலம் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவத்தின் போதாமைகளைத் தாண்ட தொழிலாளர்கள் போராடி கம்யூனிசம் வரவேண்டும். இதுவே மார்க்ஸ் முன்வைத்த வரலாற்றுவாதம். இதுதான் உண்மையில் மார்க்ஸியம் என்ற சொல்லால் உத்தேசிக்கப்படுகிறது.

விழிப்புணர்ச்சி கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஊட்ட வேண்டும். தொழிலாளர்கள் திரண்டு உற்பத்திச் சக்திகளை கைப்பற்றி, சமூக அமைப்புகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சமூகத்தைத் தன்வயப்படுத்தவேண்டும். விளைவாக முதலாளித்துவ உற்பத்திமுறை நெருக்கடிக்குள்ளாகும். அது கம்யூனிச அமைப்புக்கு வழிவிடும். அதாவது மாற்றம் தொழிலாளர்களிடம் இருந்து அரசை நோக்கிச் செல்லும்.

லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியும் அளிக்கப்படவில்லை.

அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.

லெனின் காட்டிய வழியில் சர்வாதிகாரம் மூலம் சமூகத்தை வெட்டித்திருத்த ஸ்டாலின் முயன்றார். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றழித்தார். அவரது முன்மாதிரியைக் கொண்டு உலகம் எங்கும் மார்க்ஸிய சர்வாதிகாரிகள் ராணுவ ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றி விருப்பப்படி சமூகத்தை உருவாக்க முயன்று அழிவை உருவாக்கினார்கள். மாவோ, போல்பாட் முதல் இன்று கொரியாவின் கிம் இல் சுங் வரை

இம்மூன்றும் ஒன்றல்ல. நான் மார்க்ஸிய அரசியல் என்று சொல்வது லெனின் உருவாக்கிய அரசியலை. மார்க்ஸிய அரசமைப்பு என்று சொல்வது ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கிம் இல் சுங்கும் உருவாக்கிய அரசுவடிவங்களை. அவை முழுமையாகவே தோற்றுப்போனவை. பேரழிவுகளை உருவாக்கியவை.

நம்மை சிந்திக்கவே விடாமல் இடைவிடாத வசைகள் மற்றும் அவதூறுகள் என வெற்றோசை எழுப்பிக்கொண்டே இருக்கும் நம்மூர் மார்க்ஸியர்களை மீறிச்சென்று இதையெல்லாம் பகுத்து பார்ப்பது சாதாரண வேலை அல்ல. அவர்களுக்கு மார்க்ஸியம் என்பது ஒரு மத நம்பிக்கை . அது ஒரு வகை வெறி மட்டுமே. அதில் சிந்தனைக்கு, வரலாற்று நோக்குக்கும் இடம் இல்லை. ஆனால் நாம் இவற்றைச் செய்தாகவேண்டும்.

ஆக இந்தத் திரிபுகளை தள்ளிவிட்டு பார்த்தால் மார்க்ஸியம் என்பது இன்னொன்று. அதில் மூன்று கூறுகளை நான் காண்கிறேன். ஒன்று, அதன் இலட்சியவாதம். இரண்டு, அதன் தத்துவநோக்கு. மூன்று, அதன் அரசியல்

மானுடர்கள் அனைவரும் இந்தப் பூமியின் செல்வங்கள் மேல் சமமான உரிமைகொண்டவர்கள் என்ற நம்பிக்கையே மார்க்ஸிய இலட்சியவாதத்தின் மையம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்ற அறைகூவல் அதன் வெளிப்பாடுதான். ஒருநாள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பேதம் இல்லாத சமூகம் அமையும் என்ற கனவு அதன் உச்சம்

மானுட வரலாற்றில் உருவான ஒரு முக்கியமான மெய்யியல்தரிசனமாகவே மார்க்ஸிய இலட்சியவாதத்தை நான் காண்கிறேன். அது பிறந்திருக்கவில்லை என்றால் இன்றைய உலகம் உருவாகியிருக்காது. ஜனநாயகத்தின் உள்ளுறையாக சமத்துவம் அமைந்திருக்காது. இன்றைய நவீன நலம்நாடும் அரசுகள் அனைத்துக்கும் கருத்தியல் தொடக்கம் அதுவே. இன்றைய மக்கள் அமைப்புகள் அனைத்துக்கும் வழியமைத்தது அதுவே.

மார்க்ஸிய தத்துவம் என்பது முரணியக்கப் பொருள்முதல்வாதம். வரலாறு அதன் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம் மூலம் முன்னால்செல்கிறது என்ற விளக்கம்,  வரலாற்றின் உள்ளுறையாக மானுடமுன்னேற்றம் என்ற கருத்து உள்ளது என்ற ஹெகலின் தரிசனத்துக்கு இவ்வாறு மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாத விளக்கம் அளித்தார்.

இந்தத் தத்துவநோக்குச் சிந்தனைகளை, பண்பாட்டை, சமூக மாற்றங்களை, தொழில்நுட்பத்தை மானுட வரலாற்றின் பரந்த வெளியில் வைத்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதற்கு மிகமிக உதவியானது. வரலாற்றைப் புரிந்துகொள்ள, அதைவிட அதைப் பயன்படுத்திக்கொள்ள, முரணியக்க பொருள்முதல்வாதம் போல உதவியான இன்னொரு தத்துவ நோக்கு இன்று இல்லை.

தொழிலாளர்கள் உற்பத்திசக்திகளைக் கைப்பற்றுவது என்ற மார்க்ஸிய அரசியல் அன்றைய ஐரோப்பிய தொழிற்சூழலை வைத்து மார்க்ஸால் உருவகிக்கப்பட்டது. அதற்கு இன்று எந்த பொருளும் இல்லை. மார்க்ஸ் ஊகித்ததை விட முற்றிலும் வேறான ஒன்றாக, மாபெரும் தனி ஆற்றலாக, தொழில்நுட்பம் வளார்ந்துள்ளது இன்று. மேலும் மூலதனம் இன்று செயல்படும் முறையும் மார்க்ஸ் எண்ணிய வகையில் அல்ல. ஆகவே மார்க்ஸிய அரசியலுக்கு இன்று பொருத்தப்பாடு இல்லை.

மார்க்ஸ் சொன்ன அரசு இல்லாத சமூக அமைப்பும் அதைச் சாத்தியமாக்கும் தொழிலாளர்வர்க்க சர்வாதிகாரமும் இன்றைய நோக்கில் வெறும் கனவுகள். முழுக்க முழுக்க மனிதனின் நல்லியல்புகளை மட்டும் நம்பி, இலட்சியவாத நோக்கம் மட்டுமே கொண்டு உருவகிக்கப்பட்டவை. அதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பொற்கனவு என்று மட்டுமே சொல்வேன். வரலாறு செல்லும்திசை வேறு. நாளை சாத்தியமான ஒரு அரசு என்பது எப்போதும் மானுடசமூகத்தில் இயங்கும் பல்வேறு விசைகளின் சமரசமாக அமைவதாகவே இருக்கும். அந்த விசைகளில் முக்கியமாக அமைவது தொழில்நுட்பம்.

ஆனால் மார்க்சிய இலட்சியவாதமும், மார்க்ஸிய தத்துவமும் இன்றும் முக்கியத்துவமிழக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு நவீன ஜனநாயக அமைப்புக்குள் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதிலேயேகூட மார்க்ஸிய இலட்சியங்களுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. இன்று நான் பயன்படுத்தும் வரலாற்றாய்வு நோக்கு மார்க்ஸியம் சார்ந்ததே.

அடிப்படையான தத்துவ சிந்தனைகள் எவையும் காலாவதியாவதில்லை. அவை மானுட சிந்தனையின் முரணியக்கத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன.ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம். ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. நாளை இன்றைய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இன்னொரு புதியசமூக அமைப்பு உருவகிக்கப்பட்டால் கூட அதிலும் மார்க்ஸியத்தின் பங்களிப்பு உண்டு என்றே சொல்ல முடியும்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…


 
Save
Share9
 

என்னுடைய இலக்கிய விமர்சனங்களை வாசிப்பவர்கள் நான் ஏன் இலக்கியவிமர்சனத்தை இந்த அளவுக்கு விரிவாக்குகிறேன் என்று கேட்பதுண்டு.எதற்காக நான் ஓர் இலக்கியப்படைப்பாளியைப்பற்றி பேசும்போது அந்த படைப்புக்கும் அது சொல்லும் சூழலுக்கும் உள்ள ஒட்டுமொத்தமான வரலாற்றுப்பின்னணியையே இழுத்துக்கொண்டு வருகிறேன்?

உதாரணமாக சமீபத்தில் ஆ.மாதவனைப்பற்றி எழுதிய கட்டுரையில் திருவனந்தபுரம் சாலைத்தெருவைப்பற்றிய மாதவனின் சித்தரிப்பை விளக்க காந்தளூர்ச்சாலையை ராஜராஜன் வென்றதில் இருந்து ஆரம்பிக்கிறேன். இலக்கியப்பிரதியை வாசிப்பதற்கு இந்த விரிவான அடித்தளம் தேவையா?

என்னுடைய ஆய்வுமுறையை நான் கோட்பாட்டாய்வு என்று சொல்ல மாட்டேன். ஒரு கோட்பாட்டை சார்ந்து இலக்கியப்படைப்புகளை ஆராய்வதிலும், கோபாடுகளை உருவாக்க இலக்கியப்படைப்புகளை வாசிப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானும் ஓர் இலக்கியவாதி. இலக்கிய ஆக்கத்தின் அகம் கோட்பாட்டுக்குள் அடைபடாது என நான் அறிவேன்.

ஆனால் இலக்கியப்படைப்புகளை உள்வாங்கிக்கொள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். அவ்வகையில் புதுவரலாற்றுவாத கோட்பாடுகள் பல எனக்கு உதவிகரமாக உள்ளன.நான் ஆக்கங்களை எப்போதும் வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்க்க அதுவே அடிப்படை.

நம்முடைய பண்பாட்டு விவாதங்களிலும் இலக்கிய விவாதங்களிலும் பின்நவீனத்துவ சிந்தனைகள் உருவாக்கிய கருதுகோள்களை இப்போது இயல்பாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறோம். தமிழில் பின் அமைப்பியல்- பின்நவீனத்துவம் பேசப்பட்ட காலகட்டத்துக்குப் பின் கோட்பாட்டாய்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் நிகவில்லை. ஆகவே அதற்கு மாற்றாக உருவான புது வரலாற்றுவாத[New historicism ] சிந்தனைகள் இங்கே விரிவாக அறிமுகமாகவில்லை.

புதுவரலாற்றுவாதம் அடிபப்டையில் மார்க்ஸிய நோக்கு கொண்டது. பின் நவீனத்துவ சிந்தனைகள் மார்க்ஸிய ஆய்வாளாரக்ளின் இரு அடிப்படைகளை தாக்கி தகர்க்க முற்பட்டன. ஒன்று வரலாறு, இரண்டு இலக்கியப்பிரதி. வரலாறென்பது ஒரு புறவய நிகழ்வோ,யதார்த்தமோ அல்ல என்றும் அது ஒரு மொழிபு[Narration ] மட்டுமே என்றும் பின் நவீனத்துவம் சொன்னது. கதைகளைப்போல கட்டுரைகளைப்போல கலைகளைப்போலத்தான் அதுவும். வரலாற்றுக்கு ஒழுங்கையும் நோக்கத்தையும் உருவாக்குவதை வரலாற்றுவாதம்[Historicism ] என்று சொல்லும் பின்நவீனத்துவர்கள் எல்லா வரலாற்றுவாதங்களும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நோக்கில் விளக்கி அதன்மூலம் அதிகாரத்தைக் கட்டமைக்கச்செய்யபப்டும் முயற்சிகளே என்றார்கள். மார்க்சியமும் ஒரு வரலாற்றுவாதம் என்றார்கள்.

இலக்கியப்பிரதி என்பது ஒரு மொழிநிகழ்வு மட்டுமே என்றார்கள் பின்நவீனத்துவர்கள். மொழியின் தொடர் பின்னலாட்டத்தின் ஒரு கணம் அது. பின் நவீனத்துவ நோக்கில் பார்த்தால் இலக்கியப்பிரதியை அது நம் முன் வைக்கும் குறிகள் மற்றும் குறியிடுகள் உருவாக்கும் அர்த்தங்களின் தொகையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு வரலாற்றுப்பின்னணியை அளிப்பதென்பது அதை வகுத்துக்கொள்வதும் அதை சாராம்சப்படுத்துவதும் ஆகும்.

பின் நவீனத்துவத்துடன் மோதி உரையாடி தன்னை உருமாற்றம்செய்துகொண்ட ஐரோப்பிய மார்க்ஸியமே புதுவரலாற்றுவாதத்தின் உள்ளுறை. அதற்கு பல்வேறு அமெரிக்க விளக்கமாறுபாடுகள் உள்ளன. வரலாற்றை ஒரு மொழிபு என்று ஏற்றுக்கொண்ட புதுவரலாற்றுவாதம் ஆனால் அந்த மொழிபு மட்டுமே வரலாற்றை பயனுள்ளதாக்குகிறது என்கிறது. பண்பாடு, சமூக இயக்கம் அனைத்தையும் அந்த மொழிபுக்குள் மொழிபுகளாக வைத்து மட்டுமே அர்த்தபூர்வமாக விளக்க முடியும் என்றது. இலக்கியப்பிரதியும் மொழிபே. அது வரலாறென்ற மொழிபுக்குள் நிகழும் மொழிபு.

புதுவரலாற்றுவாதத்தை விரிவாக முன்வைத்து தமிழில் எவரேனும் பேசமுடியுமென்றால் இன்று தமிழில் கோட்பாட்டு விமர்சனத்தளத்தில் இருக்கும் தேக்கத்தை அகற்றமுடியும் என்று தோன்றுகிறது. குறிப்பாக கலாச்சாரம் குறித்த இரு கருதுகோள்கள் நம்முடைய விவாதத்தின் பல தளங்களை புதியதாக ஆக்க முடியும். தமிழக வரலாறு என்ற பிரம்மாண்டமான பிரதியில் நம் இலக்கியப்பிரதிகள் எப்படி பொருள்கொள்கின்றன என்று ஆராய்வது பல்வேரு திறப்புகளை அளிக்கும்.


கலாச்சார கவிதையியல் Cultural Poetics

இலக்கியப் பிரதியின் அழகியலை ஒரு தனித்த சுயமான இயக்கமாகக் கருதாமல் அதை வரலாற்று மொழிபின் பகுதியாக ஆராயும் திறனாய்வு முறைமை. இதை புது வரலாற்றுவாத சிந்தனையாளரான ஸ்டீபன் கிரீன்பிளாட் உருவாக்கினார். ஒரு காலகட்டத்தில் ஒரு பகுதியின் பொதுவான கலாச்சாரத்தை உருவாக்கும் சமூக, பண்பாடு, அரசியல், வரலாற்று கூறுகளுடன் தொடர்புபடுத்தி இலக்கியப்பிரதியை வாசிக்கும் முறை இது.

கிரீன்பிளாட் தன் கட்டுரைகளை ஒரு பழங்கதை அல்லது உதாரணக் குறிப்பு அல்லது சம்பந்தமில்லாத ஒரு தகவலைச் சொல்லி துவங்குகிறார். மிக நுண்மையான வாசிப்பு மூலம் அங்கிருந்து இலக்கியப் படைப்புக்கு வருகிறார் அந்த முதல் உதாரணம் மூலம் வெளிப்படும் சமூக, அரசியல், வரலாற்றுப் போக்குகளுடன் படைப்பை தொடர்புபடுத்துகிறார். இவ்வாறாக அப்படைப்பை உருவாக்கக்கூடிய நம்பிக்கைகள், கலாச்சார, உட்கூறுகள், குறியீட்டுக் கூறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி அப்படைப்பின் நுண் அதிகாரம் செயல்படும் அடிப்படைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

தன் ‘கண்ணுக்குத்தெரியாத குண்டுகள்’ [Invisible Bullets] என்ற பிரபலமான கட்டுரையில் கிரீன்பிளாட் தாமஸ் ஹாரியட்டின் ‘விர்ஜினியாவில் உள்ள புதிதாக கண்டெடுக்கப்பட்டு நிலம் குறித்த சுருக்கமான உண்மை அறிக்கை’ என்ற 1588ல் எழுதப்பட்ட கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அமெரிக்காவை ஆதிக்கம் கொண்ட ஆங்கில காலனிவாதிகள் எவ்வாறு அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றி அதை கொண்டாடினர் என்பதை விவரிக்கிறார். அந்நிலத்திற்கு உரியவர்களான செவ்விந்தியர்கள் எப்படி இழிவாக கணிக்கப்பட்டு பிறகு வேட்டையாடப்பட்டனர் என்று சுட்டிக்காட்டி அங்கிருந்து ஷேக்ஸ்பியரின் ‘புயல்’ என்ற நாடகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு தீவை உரிமை கொண்டாடிய பிராஸ்பரோவின் நடத்தையை ஒப்பிட்டு விவரித்து அதே பாணி கூறுமுறையும் மனநிலையும் ஷேக்ஸ்பியரின் பிற நாடகங்களான ஹென்றி நான்காமவன் முதலியவற்றில் தொடர்வதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு ஒரு தனிப்பட்ட மொழியின் உள்ளே பலநூறு வரலாற்று மொழிவுகளின் சரடுகள் பின்னி ஊடுருவிச் செல்வதை கிரீன் பிளாட் எடுத்துக்காட்டுகிறார். இதையே அவர் கலாச்சாரக் கவிதையியில்’ என்கிறார்.

தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கிரீன்பிளாட் தி ஜனாகிராமனின் மோகமுள் குறித்து ஒரு திறனாய்வுக் கட்டுரை எழுதுவதை கற்பனை செய்து பார்க்கலாம்.

சங்க இலக்கியத்தில் தலைவி மீது தலைவன் ஒருதலைக்காதல் கொண்டு மடலேறுவதைச் சித்தரித்தபடி கட்டுரை தொடங்குகிறது. தமிழ் சமூகத் தளத்திலும் வரலாற்றுத் தளத்திலும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்ட ஒருதலைக்காதல் அல்லது ஊமைக்காதல் வெளிப்பட்டுள்ளத என்று ஆராய்கிறது கட்டுரை. மணிமேகலை மீது ஆசைகொண்டு அலைக்கழிகப்பட்டு மறைந்த உதயகுமாரன் போன்ற கதாபாத்திரங்கள் வழியாக பாபுவுன் கதாபாத்திரக் கட்டுமானத்திற்குள் நுழையும் ஆய்வுமுறை அதன் உருவாக்கத்தில் தமிழ்ப்பண்பாட்டின் பலவிதமான கூறுகள் எப்படி எப்படி செயல்பட்டது என்பதை விவரிக்கிறது. மடலேறுதல் மூலம் தலைவியை அறக்கட்டாயத்திற்கு உள்ளாக்கி வெல்கிறது தலைவனின் தாபம். அதையே பாபுவின் இறுதி ‘வெற்றி’யிலும் காண்கிறோம். தலைவனுக்கு இறுதி வெற்றியை உறுதிப்படுத்தும் அந்த அறக்கட்டாயத்திற்குள் செயல்படும் ‘அறம்’ என்ன என்பதை சுட்டிக்காட்டி கட்டுரை முடியும். இதுவே சுருக்கமாகச் சொன்னால் புதுவரலாற்றுவாதம் உருவாக்கிய திறனாய்வு முறையாகும்.


கலாச்சாரப் பொருள்முதல்வாதம் Cultural Meterialism

 

வரலாறு அல்லது இலக்கியப் படைப்பின் பிரதித் தன்மையானது புறவயமான பொருளியல் சக்திகளின் நேரடியான பாதிப்புக்கு உட்பட்டது என்று கூறும் திறனாய்வுக் கோட்பாடு. மார்க்ஸிய இலக்கியத் திறனாய்வாளரான ரேமான்ட் விலியம்ஸ் உருவாக்கிய கலைச்சொல் இது. புது வரலாற்றுவாதத்தில் மார்க்ஸிய இது வரலாற்றுவாதத் திறனாய்வாளர்கள் இக்கருதுகோளை பரவலாகப் பயன்படுத்தினர்.

வரலாறு என்பது தனக்குரிய இயங்குவிதிகள் கொண்ட பொருண்மையான அமைப்போ போக்கோ அல்ல என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அது ஒரு பிரதிதான். ஆனால் அப்பிரதியின் மொழியை உருவாக்குவதில் கலாச்சார, சமூகவியல் சக்திகளின் பங்களிப்பைவிட முக்கியமான பங்களிப்பை ஆற்றுவது உற்பத்தி வினியோகம், நுகர்வு ஆகியவற்றாலான பொருளியல் அடிப்படைதான். அதாவது வரலாற்று மொழிபின் முன்வைப்பைத் தீர்மானிப்பவை வர்க்க நலன்களே. அம்முன்வைப்புகள் அனைத்துமே உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை நேரடியாக சார்ந்தவையே.

ஆகவே ஓர் இலக்கியப் படைப்பின் மொழி்பு தன் முன்வைப்புகள் மூலம் எத்தகைய வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது என்பது இவ்வகைத் திறனாய்வின் முக்கியமான வினாவாகும். ஒரு பிரதி அது உருவான காலகட்டத்தில் வெளிப்படுத்தும் வர்க்க நலன்கள் மட்டுமல்ல அதன் பல்வேறு காலத்தைய மறுவாசிப்புகள் வெளிப்படுத்தும் வர்க்க நலன்களும் இணைந்ததே அதன் பிரதித்தன்மையாகும என்கிறார்கள் இவர்கள்.

உதாரணமாக இப்படிக் கூறலாம். சிலப்பதிகாரம் அது உருவான காலகட்டத்தில் வரம்பற்ற மன்னரதிகாரத்திற்கு எதிராக பொதுவான அறம் என்ற ஒன்றை உருவாக்கி முன்நிறுத்தி வணிகர்களின் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டிருந்தது. பத்தினி வழிபாட்டை வணிகர் குலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி வணிகர்களின் சமூக அதிகாரத்தை வலியுறுத்தியது அது. பிற்பாடு கற்பு என்ற விழுமியத்தை முன்நிறுத்தும் பிரதியாக மாறி பெண்களுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாண்பின் அடையாளமாகி சமஸ்கிருத, பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக சைவ, தமிழ், வேளாள அரசியலின் கருவியாக மாறியது. சிலப்பதிகாரத்தின் பிரதித்தன்மை இவையனைத்தையுமே உள்ளடக்கிற ஒன்று என்று இத்திறனாய்வாளர் கூறுவர்.

மார்க்ஸிய புதுவரலாற்றுவாதிகளின் நோக்கில் திறனாய்வு என்பது ஓர் அரசியல் செயல்பாடும்கூட. வடிவவாதம், அமைப்புவாதம், பின் அமைப்புவாதம், கட்டவிழ்ப்பு முதலிய தளங்களில் திறனாய்வு என்பது பிரதியின் முன் வாசகன் தன்னை ஒரு எதிர்நிலையாக (அறியும் தன்னிலையாக) நிறுத்திக் கொள்வதன் மூலம் உருவாக்கப்படுவதாகும். ஆனால் மார்க்ஸிய புது வரலாற்றுவாத நோக்கில் திறனாய்வு என்பது சமூகப் பொறுப்பு கொண்டதும், சமூக மாற்றத்திற்கான கருத்துச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிகழ்வதுமான ஒரு செயல்பாடாகும். ஆகவே எழுதுவதற்குச் சமானமான ஒரு வரலாற்றுச் செயல்பாடே வாசிப்பும் என்கிறார்கள் இவர்கள்.

என்னுடைய ஆய்வுகள் இவர்களின் ஆய்வுமுறைகளுடன் ஒத்துப்போவதை காணலாம். மார்க்ஸியம் போன்ற ஒரு அரசியல் செயல்திட்டம் சார்ந்து நான் பிரதிகளை குறுக்குவதில்லை. ஆனால் அவற்றை வரலாற்றில் வைத்துப்பார்க்கிறேன். வரலாறென்பது ஒரு பிரம்மாண்டமான் மொழிபு, தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் கூட்டுப்பிரதி என்றே எடுத்துக்கொள்கிறேன். அந்த பின்னணியில் படைப்புகள் தொடர்ந்து உருமாறும் அர்த்தங்கள் கொண்டிருக்கின்றன என்று காண்கிறேன். அத்தனை அர்த்தங்களையும் கருத்தில்கொண்டு இந்தக்காலத்தில் நின்று ஒரு வாசிப்பை உருவாக்க முயல்கிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அசிங்கமான மார்க்ஸியம்


 
Save
Share30
 

திருவாளர் ஜெ,

எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்கள் மர்க்ஸிய சிந்தனைகளை கூர்ந்து வாசிக்கிறீர்கள் என்று இங்குள்ள மார்க்ஸியர்கள் நம்பவேண்டும் என்பது மட்டும்தானே உங்கள் நோக்கம் இல்லையா? மற்றபடி இதுவரை இங்குள்ள மார்க்ஸிய சிந்தனையாளர்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? மேற்கோள் காட்டியிருக்கிறீர்களா? மார்க்ஸியத்தில் உங்களுக்கு என்ன ஆர்வம்? மார்க்ஸியத்தை நீங்கள் எதற்குப் பயன்படுத்துகிறீர்கள்? சும்மா மூளை விளையாட்டுக்காகவா?

சரவணக்குமார்.எம்.

அன்புள்ள சரவணக்குமார்,

திருவாளர் என்பது ஓர் அவமரியாதைச் சொல் என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டேன்.

நான் தமிழக மார்க்ஸிய சிந்தனையாளர்களில் முக்கியமானவர்களாக எண்ணுபவர்களைப்பற்றி எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். எஸ்.என்.நாகராஜன், ஞானி முதலியவர்களைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்-ஏற்றும் மறுத்தும். அவர்கள் என்னுடைய சிந்தனையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.

ஆனால் எல்லா மார்க்ஸியர்களைப் பற்றியும் நான் எழுதமுடியாது. தமிழில் எழுதுபவர்களில் நான் கொஞ்சம்கூட உடன்பட மறுக்கும் மார்க்ஸியர்களே அதிகம். ஏன்? எந்தச்சிந்தனையானாலும் நம்முடைய ஆதார மனநிலை மதம் சார்ந்ததே. ஆழமான நம்பிக்கையாக, உறுதியான சுயதரப்பாக நாம் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறோம். அதை எளிய வாய்ப்பாடுகளாக ஆக்கிக்கொண்டு ஓங்கிச்சொல்கிறோம். மாற்றுத்தரப்பைக் கண்டுபிடித்து அதை வசைபாடுகிறோம். தமிழகத்தில் சிந்தனைத்தள விவாதம் என்ற ஒன்று அனேகமாக இல்லை. இங்கே வசைபாடுபவர்களே பெரும்பாலும் சிந்தனையாளர்கள் என அறியப்படுகிறார்கள்.

எதையும் அதன் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் எடுத்துக்கொள்பவர்களே நம்மிடையே அதிகம். நம் சூழலில் மார்க்ஸியமே கூட சிக்கலற்ற ஒரு நவீன மதநம்பிக்கையாகவே வந்து புழங்கிக் கொண்டிருக்கிறது. படைப்பூக்கம் கொண்ட எதையும் இந்த எளிமையான வாய்ப்பாடுகளைக்கொண்டு நம் ’சிந்தனையாளர்கள்’ நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு. ஓரு படைப்பிலக்கியவாதி என்ற முறையில் ஒருபோதும் நான் அவர்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.

தமிழில் மார்க்ஸியம் வந்தபோது வர்க்கப்பார்வை, சோஷலிச யதார்த்தம் என்றெல்லாம் கலைச்சொற்கள் போடப்பட்டு தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட்டனர், வசைபாடப்பட்டனர், எள்ளி நகையாடப்பட்டனர். படைப்பூக்கமே இல்லாத வெற்று ஜோடனைகள் பேரிலக்கியங்களாக முன்வைக்கப்பட்டன. இன்று அவையெல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. தமிழில் மார்க்ஸியர்களால் முன்னுதாரண இலக்கியவாதியாகச் சுட்டிக்காட்டப்பட்டவர் ’செவ்வானம்’ போன்ற வறண்ட நாவல்களை எழுதிய செ.கணேசலிங்கன் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

அதன் பின் வந்த ஒவ்வொரு சிந்தனை அலையும் படைப்பிலக்கியத்தை நிராகரிக்கும் வெற்றுக் கோட்பாட்டாளர்களுக்குப் படைப்பியக்கம் மீது வசைகளையும் திரிபுகளையும் கொட்டவே பயன்பட்டுள்ளது. விளிம்புநிலை சிந்தனைக் கோட்பாடுகளைப் பேசியவர்கள் முன்னிறுத்திய எழுத்தாளர், பஞ்சமர் போன்ற துண்டுப் பிரசுர பிரச்சார எழுத்துக்களை எழுதிய கெ.டானியல். அதன் பின்னர் வந்த அமைப்பியலாளர்கள் தாங்கள் எழுதிய அசட்டு சோதனை முயற்சிகளையே முன்னிறுத்தினார்கள் – தமிழவனின் நாவல்கள் போல. வாழ்க்கைக்கும் கலைக்குமான உறவு ஒருபோதும் அவர்களுக்குப் பிடிகிடைத்ததில்லை.

ஆகவே என்னுடைய கருத்தில் இத்தகைய வெற்றுக் கோட்பாடுகளை ஒருவகை ஆபாச எழுத்துக்களாகவே கண்டுவருகிறேன். அவற்றில் பெரும்பகுதி சுயசிந்தனை இல்லாமல் வெறுமே மனப்பாடம் செய்து திருப்பிச் சொல்லும் ஆசாமிகளால் எழுதப்படுவது. அவர்களால் மேற்கோள் காட்ட மட்டுமே முடியும், ஒருவரி கூட சிந்திக்க முடியாது. அவர்களுக்கு எப்போதுமே உண்மையான இலக்கிய ஆக்கத்தை பயம். அந்த ஆக்கத்தின் உட்சிக்கலையும் நுட்பத்தையும் அவர்களின் கோட்பாடுகளைக்கொண்டு விளக்க முடியாது. ஏனென்றால் இலக்கியப்படைப்பு ஒவ்வொரு முறையும் அவற்றைப் புதியதாகவே அடைகிறது.

ஆகவே எப்போதும் ஒட்டுமொத்தமாக படைப்பூக்கத்தை நிராகரிக்கிறார்கள். ‘வர்க்கநலனுக்கான எழுத்து’ என்றோ ’அழகியலுக்குப்பதில் அரசியல்’ என்றோ ‘இனி இலக்கியம் இல்லை வாசிப்பு மட்டுமே உள்ளது’ என்றோ இவர்கள் சொல்லும்போது செய்ய நினைப்பது இலக்கியத்தை நிராகரிப்பதைத்தான். அதை நான் ஏற்கமுடியாது

எரிக் ஹாப்ஸ்பாமுக்கே வருகிறேன். ஹாப்ஸ்பாம் அசிங்கமான மார்க்ஸியம் என்ற ஒன்றைச் சொல்கிறார். அதற்கு ஏழு இயல்புகள் உண்டு என்கிறார்

1. வரலாறு மீதான எளிய பொருளியல் விளக்கம். மிக எளிமையான பொருளியல் விளக்கத்தை எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் அளித்துக்கொண்டே இருப்பது, பண்பாட்டுக் காரணிகளை, தனிப்பட்ட ஆளுமையின் விளைவுகளை எல்லாம் முழுமையாக நிராகரிப்பது அசிங்கமான மார்க்ஸியம்.

பொருளியல் அடித்தளம்-மேல்கட்டுமானம் என்ற எளிமைப்படுத்தல்.சமூகத்தின் பொருளியல்சார்ந்த இயங்குமுறையை விளக்க உற்பத்திவிசைகளும் உற்பத்தி உறவுகளும் அடங்கிய பொருளியல் கட்டுமானத்தை அடித்தளமாகவும் பண்பாடு, அரசு போன்ற அனைத்தையும் மேற்கட்டுமானமாகவும் பார்க்கும் அணுகுமுறை உதவிகரமானதே. ஆனால் எல்லாவகையான அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையும் விளக்க அதை ஒரு வாய்பாடு போல கையாள்வது இந்த மார்க்ஸியர்களின் வழக்கம்.

வர்க்க நலன், வர்க்கப்போராட்டம் என்ற விளக்கம். மார்க்ஸியத்தின் இறுதி இலக்கு வர்க்கப்போராட்டமே. ஆனால் மாற்றுத்தரப்புகள் அனைத்தையுமே வர்க்க எதிரிகளின் கருத்தாகக் காண்பது அசிங்கமான மார்க்ஸியம்.

வரலாற்று விதிகள், வரலாற்றுப் போக்கின் தவிர்க்க முடியாமை பற்றிய பேச்சு. வரலாற்றில் உள்ளுறைந்து சில விதிகள் உள்ளன என்றும் அவற்றை எந்த ஆற்றலும் மாற்ற முடியாது என்றும் நினைப்பது மார்க்ஸிய அடிப்படைவாதம்.

மார்க்ஸ் அவரது தனிப்பட்ட ஆர்வத்தால் கூறிய சாதாரண கருத்துக்களைக்கூட விதிகளாக எடுத்துக்கொள்ளுதல் . உதாரணமாக ஐரோப்பியப் பொருளியல் வளர்ச்சி பற்றிய அவரது சாதாரண ஊகங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறை பற்றி கூறிய முதிர்ச்சியில்லாத கருத்துக்களை கிட்டத்தட்ட மதநூல் வரிகளாகவே இங்குள்ளவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்

மார்க்ஸை ஆதர்சமாகக் கொண்டு எழுந்த இயக்கங்களில் இருந்து பெறும் விதிகளையும் கருத்துக்களையும் மார்க்ஸியக் கருத்துக்களாக அவர்மேல் ஏற்றிக்கொள்ளுதல். லெனின் அல்லது ஸ்டாலினின் கூற்றுக்களைக்கூட நம்மவர்களில் பலர் மார்க்ஸின் சிந்தனைகளின் பகுதிகளாக, அவற்றில் இருந்து பிரிக்கவே முடியாதவையாகக் கருதுகிறார்கள்.

வரலாற்றெழுத்தின் எல்லைகளை வர்க்க நலன் சார்ந்ததாக விளக்குதல். வரலாற்றெழுத்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருவிகளைக் கொண்டு நிகழ்த்தப்படலாம். எல்லா வரலாற்றெழுத்தும் எப்போதும் வர்க்கநலன்களுக்காக எழுதப்படும் ஜோடனைகள் அல்லது சதிகள் மட்டுமே என்ற எண்ணம் அடிப்படைவாத மார்க்ஸியர்களிடம் உண்டு. ஹாப்ஸ்பாம் அதை அசிங்கமான மார்க்ஸியம் என்கிறார்

யோசித்துப்பாருங்கள். நம்மிடையே மார்க்ஸியம் பேசுபவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று. அசிங்கமான மார்க்ஸியர் என்று மட்டுமே அவர்களைப்பற்றிச் சொல்லமுடியும் இல்லையா? எரிக் ஹாப்ஸ்பாமை ஏற்றுக்கொள்வதனாலேயே அவர்களை நிராகரிக்கவேண்டியிருக்கிறதல்லவா?

நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் வரலாற்றாய்விலும் சமூகவியல் ஆய்விலும் மார்க்ஸிய முரணியக்கப் பொருள் முதல்வாத ஆய்வுமுறையை மிக நவீனமான மிகவும் பயனுள்ள ஒரு ஆய்வு முறைமையாக எண்ணுகிறேன். சமூகப்பரிணாமத்தின் , பண்பாட்டு வளர்ச்சியின் சித்திரத்தை அது உருவாக்குமளவுக்கு வேறெந்த சிந்தனைமுறையும் உருவாக்குவதில்லை. அக்காரணத்தாலேயே எரிக் ஹாப்ஸ்பாம் முதல் ஞானி வரையிலான மார்க்ஸியர்கள் எனக்கு முக்கியமானவர்கள்

ஆனால் அந்த ஆய்வுமுறையைக்கொண்டு வர்க்கப்போரை உடனடியாக உருவாக்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. சமூகத்தை எளிதாக வர்க்கங்களாகப் பிரிக்கமுடியாதென்றும், சமூகத்தைக் கருத்தியல் அடிப்படையில் செயற்கையாக உடைத்து மறுகட்டுமானம் செய்யமுடியாதென்றும், அவ்வாறு செய்தால் அழிவை மட்டுமே உருவாக்கமுடியும் என்று உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றும் நம்புகிறேன்.

சமூகத்தைப் புரிந்துகொள்ள மார்க்ஸிய முரணியக்கப் பொருள்முதல்வாதம் பெருமளவு உதவிகரமானது. ஆனால் அந்தப் புரிதல் முழுமையானதல்ல. ஆகவே அந்தப் புரிதலின் அடிப்படையில் சமூகத்தை உடைத்துவார்க்க முயல்வது சரியல்ல என்பதே என் எண்ணம். நான் தொடர்ச்சியான கருத்தியல் முரணியக்கம் மூலம் நிகழும் படிப்படியான சமூக மாற்றத்தை நம்புகிறேன். அதை வளர்சிதை மாற்றம் என்றோ பரிணாமம் என்றோதான் சொல்வேன். ஆகவே எனக்கு காந்தி இன்னும் ஏற்புடையவராக இருக்கிறார். மார்க்ஸிய ஆய்வுமுறைக்கும் காந்தியச் செயல்திட்டத்திற்கும் நடுவே ஓர் அர்த்தபூர்வமான இணைப்பு நிகழமுடியுமா என்றே நான் எப்போதும் பார்க்கிறேன்.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 7, 2011

[On History. Eric Hobsbawm. ABACUS London]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வெண்டி டானிகரும் இந்தியாவும்

வெண்டி டானிகரும் இந்தியாவும்

 ஜெயமோகன்
 
 Share on    

வணக்கம்

தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும்
வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு.

செ. நிஜந்தன்

***

அன்புள்ள நிஜந்தன்,

நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. மதிப்புரையை வைத்துப் பார்த்தால் அந்த அம்மையார் புதியதாக ஏதும் இந்தியாவைப்பற்றியோ இந்துமதம் பற்றியோ சொல்லிவிடவில்லை. சென்ற நூறாண்டுகளில் இந்தியாவில் உள்ள நவீன யுக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இதைவிடத் தீவிரமான, கூர்மையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த அம்மையாரே கூட அவ்வகையான ஒரு விரிந்த சொல்லாடல்களனில் இருந்தே தன் விமர்சனங்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்.

இங்கே நினைவுகூரவேண்டியது காதரின் மேயோ என்ற அமெரிக்க ஆய்வாளர் 1927ல் எழுதி வெளியிட்ட மதர் இந்தியா என்ற நூல். இந்தியாவை ஓர் அழுகியநாகரீகமாக சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் அந்நூலை எதிர்த்து அன்று இந்தியாவில் கடும் விமர்சனம் எழுந்தது. காந்தி அந்நூலை சாக்கடை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்று சொன்னார்.

அந்த எதிர்ப்பு ஒருவகையில் புதியது. ஏனென்றால் அதே தொனியில் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ‘ஆய்வு’ நூல்கள் அதற்கு முன்பு கிறித்தவ மதப்பரப்புநர்களாலும் காலனியாதிக்கவாதிகளாலும் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலானவை எந்த வகையான எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுக்குள் புழங்கிக்கொண்டும் இருந்தன.

மிகச்சிறந்த உதாரணம் என்றால் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார் வரலாறு. நாடார் சாதியின் வரலாறு, வாழ்க்கைமுறை பற்றிய அக்கறையோ அடிப்படை மரியாதையோ இல்லாமல் அவர்கள் மதம் மாறாவிட்டால் மிருகங்களே என்ற தோரணையில் எழுதப்பட்ட அந்நூல் பின்னர் புழக்கத்திலேயே இல்லாமலாகிவிட்டது.

[ The Tinnevelly Shanars : a sketch of their religion and their moral condition and characteristics : with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them. London : Clay for the Society for the Propagation of the Gospel, 1850.]

இந்தியாவை மேலைநாட்டினர் அணுகுவதில் இரு பார்வைகள் உள்ளன. இந்தியவியலின் அடிப்படை விவாதம் எப்போதுமே இவ்விரு பார்வைகள் நடுவேதான்.

முதல்பார்வை இந்தியாவை மதமாற்றக் களமாக கண்ட பாதிரியார்களால் உருவாக்கப்பட்டு ஐரோப்பிய- அமெரிக்க சூழலில் மிக வலுவாக நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒரு வறுமைமிக்க, பிற்பட்ட, அரைக்காட்டுமிராண்டி நாடு. இங்குள்ள பண்பாடு என்பது சில உயர்குடிகளையும் நகரங்களையும் மட்டும் சார்ந்து இருந்த ஒரு போலிப்பாவனை மட்டுமே. இங்குள்ள சிந்தனைகள் கலைகள் அனைத்துமே ஆன்மாவற்றவை, மோசடியானவை. இந்தியப்பண்பாடு தேங்கிநின்றுவிட்ட ஒன்று. இந்தியமக்களை மீட்டு, அவர்களுக்கு பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வளர்ச்சியையும் அளிக்க ஐரோப்பாவால் மட்டுமே முடியும். அது வெள்ளைதோல் கொண்டவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.– இதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.

நான் சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் பயணம்செய்த நாட்களில் அங்கே மாதாகோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்களில் இந்தியாவைப்பற்றிய இந்தச் சித்திரம் முன்வைக்கப்பட்டு நிதியுதவிக்கான கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதை வாசித்தேன். பதினேழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்ப்பட்ட இப்பிரச்சாரம் இன்றும் அதே வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த முந்நூறாண்டுப் பிரச்சாரத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சராசரியான வெள்ளையன் இந்த மனநிலையையே கொண்டிருக்கிறான், நுட்பமாக வெளிப்படுத்துவான்.

ஐரோப்பியச் சிந்தனையாளர்களில் கணிசமானவர்கள் இந்தமனநிலையை வெளிப்படுத்துவதைக் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் கார்ல் மார்க்ஸ். அவர் முன்வைத்த ஆசிய உற்பத்திமுறை என்ற கருதுகோள் இந்தியாவில் உற்பத்திமுறை தேங்கிநின்றுவிட்டது என வாதிடுகிறது. வெளிநாட்டினரிடம் வணிகத் தொடர்புடைய நகரங்கள் மட்டுமே இந்தியாவில் வளர்ந்திருந்தன. அங்குமட்டுமே போலியான ஒரு த்த்துவ வளர்ச்சி இருந்தது. மற்றபகுதிகள் பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்தவையாக இருந்தன என்று மார்க்ஸ் சொல்கிறார். ஆகவே பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் அது இந்தியாவை மீட்கும் வல்லமைகொண்டது என்றும் நினைக்கிறார் இதே தோரணையை முன்வைக்கும் இன்னொரு சிந்தனையாளர் ஆல்ஃபிரட் ஸுவைட்சர். ஆப்ரிக்காவில் கிறித்தவ மதப்பிரச்சாரகராக அரும்பணியாற்றியமைக்காக புகழ்பெற்ற இவர் இந்திய தத்துவ ஞானமரபை தொகுத்துச் சொல்லி அடிப்படையில் அறவுணர்வற்ற போலியான தத்துவமரபு, பெரும்பாலும் நகல்களால் ஆனது என நிராகரிக்கிறார்.

இவ்வாறு நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இந்தியாவைப்பற்றிப் பேசும் கணிசமான ஆய்வாளர்களிடம் அவர்களின் மேலோட்டமான ஜனநாயகபாவனைகளுக்கு அடியில் இம்மனநிலை இருப்பதை கொஞ்சம் அணுகியதும் காணலாம். பொதுவாக இவ்வகை ஆய்வாளர்கள் தங்கள் கிறித்தவச்சார்பை, வெள்ளை இனச்சார்பை, ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை நேரடியாகக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாத்திகர்களாக, ஜனநாயகவாதிகளாக, உலகப்பொதுமைபேசும் அறிவியல்நோக்குள்ளவர்களாகவே காட்டிக்கொள்வார்கள். அது ஐரோப்பிய அமெரிக்க அறிவுலகின் பொதுப்பாவனை. ஆனால் பெரும்பாலும் அது ஒரு தற்காப்புப் பாவனை மட்டுமே. விதிவிலக்குகள் மிகமிகமிக அபூர்வம். அந்த அடிப்படைக்காழ்ப்புகளில் இருந்து அங்கே பிறந்து அக்கல்விக்கூடங்களில் கற்ற ஒருவர் வெளியே வருவதும் மிகமிகமிகக் கடினம்.

இந்த மனநிலைக்கு இருவகையான எதிர்வினைகள் இங்கிருந்து எழுகின்றன. இந்தியாவில் கல்வித்துறையில் உள்ள ஐரோப்பிய அடிமை மனநிலை மேற்கண்ட ஐரோப்பிய மேட்டிமை நோக்கை அப்படியே அள்ளி தன் கருத்தாக வைத்துக்கொள்கிறது. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பியக் கல்விநிலையங்களில் கற்றவர்கள் அனேகமாக அனைவருமே இந்த மனநிலையைத்தான் ‘ஆய்வு நோக்குடன்’ சொல்லிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்குகளை நான் அதிகம் கண்டதில்லை. எவரேனும் அப்படி எங்கேனும் இருந்தால் நண்பர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.

இரண்டாவது எதிர்வினை, ஐரோப்பிய அங்கீகாரத்துக்காக இங்கே எழுதப்படும் எழுத்துக்கள். இவை ஐரோப்பிய ரசனைக்காகவும் அவர்களின் ஆமோதிப்புக்காகவும் எழுதப்படுபவை. அங்கே புகழ்பெற்றபின் அவை இங்கு ‘அவர்களாலேயே’ அங்கீகரிக்கப்பட்டவை என்ற பேரில் முன்வைக்கப்பட்டு நம்மவர்களாலும் கொண்டாடப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம், நிரத் சௌதுரி என்ற வங்க எழுத்தாளர். காதரீன் மேயோவின் குரலிலேயே எழுதிய இந்திய எழுத்தாளர் இவர். லண்டனில் ஒருகாலத்தில் இந்தியாவைப்பற்றி ‘உண்மையாக’ எழுதும் ஒரே எழுத்தாளர் என பெரும்புகழ்பெற்றிருந்தார். அவரது நூல்கள் இங்குள்ள ஊடகங்களிலும் பரவலாக புகழ்பெற்றிருந்தன. இன்று அவை மறக்கப்பட்டுவிட்டன.

நிரத் சௌதுரியின் வெவ்வேறு வடிவங்களையே நாம் இந்திய ஆங்கில எழுத்துக்களில் திரும்பத்திரும்பக் காண்கிறோம். ‘so called’ இந்தியப்பண்பாட்டில் சலிப்புற்ற, ஏமாற்றமடைந்த, விலகிச்சென்று ஐரோப்பியப் பண்பாட்டின் மென்மையிலும் மேன்மையிலும் சரண்புகுந்த கதைமாந்தர்கள் கொண்ட கதைகளே புகழ்பெற்ற இந்திய ஆங்கில இலக்கியங்களில் பெரும்பாலானவை. உதாரணமாக ரோகிண்டன் மிஸ்திரி முதல் அருந்ததி ராய், வரையிலானவர்களின் நாவல்களைச் சொல்லலாம்.

இரண்டாவது இந்திய அணுகுமுறை என்பது இந்தியாவின் பண்பாடு மீதான அடிப்படை ஆர்வத்துடன் நிகழ்த்தப்படுவது. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆரம்பகால இந்தியவியலாளர்களுக்கு ஆரிய இனவாத நோக்கு இருந்தது என்கிறார்கள்.ஆனால் இந்தியசிந்தனையை புரிந்துகொள்ள, இந்தியப்பண்பாட்டை உள்வாங்கிக்கொள்ள முயல்வதனாலேயே அவை முக்கியமானவை. மோனியர் விலியம்ஸ் முதல் ஏல்.எல்.பாஷாம் வரை உதாரணமாகக்ச் சொல்லலாம். அவர்களுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது.

வெண்டியின் இந்நூல் ஒன்றும் புதிய தாக்குதல் அல்ல. அது ஐரோப்பிய மேட்டிமைநோக்கின் குரலாக சென்ற முந்நூறாண்டுகளாக இந்தியா, சீனா, ஆப்ரிக்கா மீது முன்வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக எந்த ஆளுமை முன்வைக்கப்பட்டாலும் உடனடியாக இந்த ஐரோப்பிய அறிவுத்தளத்தால் அந்த ஆளுமை சிறுமைப்படுத்தப்படும். காந்தி, அரவிந்தர், விவேகானந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்பற்றி மிகக்கீழ்த்தரமான நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. அவை வெறும் சிலையுடைப்புகள் அல்ல, அவதூறுகள்.

இணைய அறிமுகம் உடையவர்கள் சென்ற ஓரிரு வருடங்களுக்குள்ளேயே இத்தகைய நூல்கள் சில பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்டதை நினைவுகூரலாம். காந்திக்கும் அவரது நண்பருக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்தது என்று அவரது கடிதங்களில் இருந்து ‘கண்டுபிடித்து’ எழுதப்பட்டது. விவேகானந்தரும் ராமகிருஷ்ணபரம ஹம்ஸரும் ஓரினச்சேர்க்கை உறவுள்ளவர்கள் என ஒருவர் ஆய்வுசெய்து எழுதினார்.

இராமனைப்பற்றியும் கிருஷ்ணனைப்பற்றியும் ஏராளமான நூல்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன.இந்தியப்புராணங்கள், இந்திய தெய்வங்கள் பற்றி எழுதப்படுகின்றன. ஏன்? இவற்றின் பெறுமதி உண்மையில் என்ன?

ஒப்ரி மேனன் என்ற எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருந்தார். அவர் பி.கெ.பாலகிருஷ்ணனின் நண்பர். அன்று உலகப்புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளராக இருந்தார் ஓப்ரி மேனன். தாய் வழியில் ஐரிஷ்காரர் தந்தைவழியில் மலையாளி. அவரது ராமாயண மறுஆக்கம் நூல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. [The Ramayana, As Told by Aubrey Menen (1954)] அவரை 1987ல் பி.கெ.பாலகிருஷ்ணனுடன் சென்று சந்தித்தபோது அதைப்பற்றி நான் கேட்டேன். ‘இந்தியாவில் தடைசெய்யப்படுவதற்காக எழுதப்பட்ட நாவல் அது. ஏராளமாக பணம் கிடைத்தது. என் பிறநூல்களுக்கு கவனமும் பெற்றுத்தந்தது’ என்றார் ஒப்ரி. அதை அவர் எழுதியதன் நோக்கமென்ன என்று மீண்டும் கேட்டேன். ‘அதைத்தானே சொன்னேன்’ என்று சிரித்தார். அந்நூலை தடைசெய்திருக்கக் கூடாது என நான் ஒரு கட்டுரை எழுதினேன், ஒரு வணிகத்தை ஏன் தடைசெய்யவேண்டும்? அதனால் என்ன ஆகிவிடப்போகிறது?

இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதற்கு அதிக எதிர்வினையாற்றுவதும் தடைசெய்வதும் சரியல்ல என்பதே என் எண்ணம். முதலில், இன்றைய இணையச்சூழலில் தடை என்பது மறைமுக விளம்பரம் மட்டுமே. அடிப்படையில் நூல்களை தடைசெய்யும் அதிகாரம் அரசுகளுக்கு அளிக்கப்படக்கூடாது. எந்நூலையும் எக்காரணத்தாலும் தடைசெய்யக்கூடாது.

மேலும் வெண்டியின் இந்நூலை தடைசெய்தால் அதைப்போல எழுதப்பட்ட பலநூறு நூல்களை என்ன செய்வது? 1979ல் கீதாமேத்தா என்பவர் எழுதிய கர்மகோலா என்ற நூல் இதேபோல ஒட்டுமொத்தமாக இந்திய ஆன்மீகத்தை கேவலப்படுத்துகிறது என்றார்கள். அது என்ன விளைவை உருவாக்கியது? வெண்டியின் நூலைப்பற்றிய மதிப்புரையை வைத்துப்பார்த்தால் நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட ஒரு நூலாக அது தெரியவில்லை.இன, மத காழ்ப்புடன் எழுதப்பட்ட சர்வசாதாரணமான நூலுக்கு அதற்குத் தகுதியற்ற விளம்பரத்தை அளிப்பதனால் என்ன பயன்? இத்தகைய காழ்ப்புகளால் சீண்டப்படுவதா இந்துப்பண்பாடு?

ஆகவே இந்த மிகையான எதிர்வினைகள்தான் இந்தியப்பண்பாட்டுக்கும், இந்துப்பண்பாட்டுக்கும் எதிரானவை என நினைக்கிறேன். இந்தியப்பண்பாடும் இந்துமதமும் கீழ்த்தரமானவை என சித்தரிப்பவர்கள் இந்த மிகையுணர்ச்சிமிக்க எதிர்வினைகளைத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்நூல்களை இந்து, இந்திய பண்பாட்டுமரபில் ஞானம் கொண்டவர்கள் புன்னகையுடன் கடந்துசெல்லும்போது தெருவில் இறங்கும் ஏதுமறியாத கும்பல் தங்களை இந்து- இந்திய பிரதிநிதிகளாக முன்வைக்கிறது. ஐரோப்பிய மேட்டிமையாளர்களுக்கு மேலும் வசதியானதாக ஆகிறது. பண்பாட்டுத்தாக்குதல்களுக்கும், வணிகத்துக்கும்
இந்த தாக்குதல்களை உண்மையில் எதிர்கொள்ளும் வழிகள் இரண்டுதான்.முதல் வழி சிந்தனையின் தளத்தில். அந்தசெயல்பாடுகளுக்கு இந்திய கல்வித்துறை முற்றிலும் தகுதியற்றதாக ஆகிவிட்ட நிலையில் வெளியே இருந்து வலுவான அறிவார்ந்த குரல்கள் எழவேண்டியிருக்கிறது.

இன்னொரு வழி உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்புவரை சீனா ஐரோப்பாவால் நம்மைவிட அதிகமாக வசைபாடப்பட்டு அவதூறுசெய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. அதன் நாகரீகமும் பண்பாடும் ஐரோப்பாவால் சிறுமையாகவே பேசப்பட்டன. இன்று அது உலக வல்லரசு. இன்று ஐரோப்பா அதை பணிவுடன் மரியாதையுடன் கௌரவத்துடன் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஐரோப்பாவின் கண்களில்…


 
Save
Share12
 

ஆசிரியருக்கு ,

சில நாட்களுக்கு முன் ஜர்ரட் டைமெண்டின் “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” தமிழில் (பாடாவதி மொழிபெயர்ப்பு) முடித்தேன். அதற்கு முன் வில் துரந்தின் The story of Philosophy படித்து முடித்தவுடனும் இதே சந்தேகம் தான் தோன்றியது. Bill Bryson இன் A Short History of Nearly Everything லும் இதே கதை தான். உலகம் தழுவிய வரலாற்று ஆய்வு, மானுடவியல் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு என வரும்போது இந்தியா ஏன் புறக்கணிக்கப் படுகிறது. “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இனங்களையும் தேசங்களையும் பற்றி பேசுகிறது. இந்தியா பற்றி குறிப்பிடும் படி அனேகமாக ஏதும் இல்லை.

மாக்ஸ் முல்லர் போல நாம் போற்றும் வெளிநாட்டு இந்திய அறிஞர்களெல்லாம் உலக அரங்கில் சாதாரணர்களோ என எண்ணத் தோன்றுகிறது . நம்மை போற்றுபவர்களை நாம் தெரிந்து கொள்வோம். யுங் கூட நாம் தான் முக்கியமானவர் எனச் சொல்கிறோம், அவருக்கு இந்தியா மீது மரியாதை இருப்பதால். நமது குழுமத்திலேயே கூட உலக அரங்கில் அவர் அவ்வளவு முக்கியமானவர் என அத்துறையில் சொல்லப் படுவதில்லை என்கிற கருத்து சில நாட்களுக்கு முன் கூறப் பட்டது.

இரண்டு உண்மைகள் தான் இருக்க முடியும்

1. ஒப்புநோக்க உலகிற்கு முதன்மையான நமது பங்களிப்பு என உண்மையில் ஏதும் இல்லை , நாம் தான் claim செய்து கொள்கிறோம்.

2. நாமும் முதன்மையாக பங்காற்றியிருக்கிறோம் , அது சரியாக வெளிக் கூறப் படவில்லை , லாபி செய்யப் படவில்லை , பெரும் மூலதனந்தில் இதைப் பரப்ப தன்னார்வ நிறுவனம் இதுவும் துவக்கப் படவில்லை.

அதுபோக இங்குள்ள திறனற்ற ஜால்ரா ஆய்வாளர்கள் .

இதில் எது உண்மை ?

கிருஷ்ணன்.

ஜரேட் டயமண்ட்

ஜரேட் டயமண்ட்

அன்புள்ள கிருஷ்ணன்

வாசிக்க வாசிக்க இந்த வினா எழுந்தபடியே வரும். உலகப்பேரிலக்கியம் என்று ஹோமர் முதல் ஜாய்ஸின் யுலிஸஸ் வரை பட்டியலிடும் ஐரோப்பிய அறிஞர்கள் மகாபாரதத்தை விட்டுவிடுவார்கள். மானுடன் இறப்பதற்குள் வாசித்தாகவேண்டிய நூறு நூல்களில் மகாபாரதம் இருக்காது. ராமாயணமோ கீதையோ இருக்காது. ஏன் பெருங்காவியங்களின் பட்டியலிலேயே அவற்றை பலசமயம் காணமுடியாது. உலகநாகரீகம் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா என்ற வார்த்தையையே சொல்லாமல் பேசிச்செல்வார்கள். வேண்டுமென்றே அல்ல. உண்மையிலேயே தெரியாது.

மிகச்சமீபத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் மதங்கள் மீதான அவரது விமர்சனத்தை முன்வைத்தார். அதில் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் ஆபிரகாமிய மதங்களுக்கு மட்டுமே[ இஸ்லாம் கிறித்தவம் யூதம்] பொருந்தும், வலுவான தத்துவ அடிப்படைகொண்ட இந்து,பௌத்த,சமண மதங்களுக்குப் பொருந்தாது என பலராலும் எழுதப்பட்டது. அது டாக்கின்ஸ் வரை சென்று சேராது.

இந்தியாமீதான ஐரோப்பாவின் ஆர்வம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியவியல் உருவானபோது தொடங்கி ஐம்பதாண்டுகளுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. மோனியர் விலியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஜெக்கோபி, ஷெர்பாட்ஸ்கி, போன்ற இந்தியவியல் மேதைகள், மொத்த ஐரோப்பியப் பண்பாட்டையும் நோக்கிப் பேசியவர்கள், பின்னர் வரவில்லை.அதன்பிறகு இந்தியதத்துவம் பண்பாடு மீது ஐரோப்பிய- அமெரிக்க அறிவுத்துறைக்கு கவனம் இருக்கவில்லை. சொல்லப்போனால் உதாசீனமே இருக்கிறது. இன்று இந்தியவியல் கல்வித்துறை வட்டாரத்தில் பண்டைப்பண்பாட்டியல் சார்ந்த ஒரு உபதுறையாக மட்டுமே உள்ளது.

அமெரிக்கா இந்தியாவை கவனித்தது எமர்சன் காலகட்டத்தில், ஆழ்நிலைவாதம் [transcendentalism] பேசப்பட்டபோதுதான்.ஐரோப்பா கவனித்தது வேர்ட்ஸ்வர்த் போன்றவர்களின் இயற்கைவாதம் [naturalism] பேசப்பட்டபோதுதான்

சென்ற நூறாண்டுகளில் ஆழ்நிலைவாதமும் இயற்கைவாதமும் ஐரோப்பாவில் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அங்கே நடைமுறைசார்ந்த, பகுப்பாய்வுத் தன்மைகொண்ட, நுகர்வுநோக்குள்ள பல்வேறு சிந்தனைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. கூடவே இந்தியாவும் மறக்கப்பட்டுவிட்டது.இந்திய சிந்தனைக்கு அந்தத் தளத்தில் பெரிதாக கொடை ஏதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

இனி இந்தியா கவனிக்கப்படவேண்டுமென்றால் ஒருவழிதான் உள்ளது. அது பொருளியல்வெற்றி பெற்று புறக்கணிக்கமுடியாத மையமாக ஆகவேண்டும். சென்ற ஐம்பதாண்டுகளில் ஜப்பான் அதனால்தான் கவனிக்கப்பட்டது. இப்போது சீனா அதனால்தான் கவனிக்கப்படுகிறது. அதுவரை இந்தியாவில் ஐரோப்பியர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் மட்டுமே அவர்களால் கவனிக்கப்படும். உண்மையான இந்தியா கவனிக்கப்படாது.

இன்று ஏன் இந்தியாமேல் மதிப்பில்லை என்பதற்கு அறிவுத்துறை சார்ந்த காரணங்களும் உண்டு. இன்று நம் அறிவுப்புலம் என்பது ஐரோப்பாவை அசட்டுத்தனமாக நகல் செய்பவர்களால் நிறைந்துள்ளது. ஐரோப்பிய பல்கலைகளில் இருந்து கசிவதையே இங்குள்ள முதன்மை அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட பேசுகிறார்கள். இந்திய அறிவுஜீவிகளில் இந்திய மரபு பற்றி சற்றேனும் தெரிந்தவர்கள், மதிப்பு கொண்டவர்கள் மிகமிக அபூர்வம். இவர்கள் ஐரோப்பியக் கல்வியமைப்புகளில், கருத்தரங்குகளில் ஓர் அழைப்பைப் பெறுவதையே உச்சகட்ட இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இயல்பாக இவர்கள் மேல் எந்த அசலான கவனமும் அங்கே இருக்க வாய்ப்பில்லை. இவர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், அவ்வளவே

தரம்பால்

தரம்பால்

இந்தியப் பண்பாட்டை, பேரிலக்கியங்களை, தத்துவசிந்தனையை உலகளாவக் கொண்டு செல்லும் முதன்மையான அறிவுஜீவிகள் என அதிகம்பேரை இந்தியா இந்த ஐம்பதாண்டுக்காலத்தில் உருவாக்கவில்லை. கண்ணைத் தீட்டிப்பார்த்தால்கூட தரம்பால் மட்டுமே தெரிகிறார். மற்றவர்கள் ஐரோப்பிய அங்கீகாரத்துக்காக அலைமோதும் எளிய ஆத்மாக்கள். அவர்கள் மேல் உலக அளவில் எந்த மதிப்பும் இல்லை. இங்கேதான் அவர்கள் சத்தம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபக்கம் இந்தியப் பண்பாட்டையும் இலக்கியங்களையும் அறிவார்ந்த சமநிலையுடன் நோக்கும் அறிஞர்கள் அருகிப்போய் எதையும் முழுதறியாமல் மேலோட்டமாக ஓங்கிப்பேசும் போலிகள் பெருகி இருப்பது. ராமாயணத்தில் ராக்கெட் இருந்தது, புறநாநூற்றில் பென்சிலின் இருந்தது ,ஜப்பானிய மொழி தமிழின் கிளைமொழி, சார்பியல்கொள்கை ரிக்வேதத்தில் உள்ளது என்பதுபோன்ற உளறல்களை ஆய்வு என்ற பேரில் கொட்டிவைக்கும் கும்பல்களால் நம் அறிவுத்துறையே நாறிப்போய் நம்பத்தன்மை இழந்து கேலிப்பொருளாகிவிட்டது

நம் கல்வித்துறை முழுமையாகவே அழுகிப்போய்விட்டது. இதிலிருந்து எதுவும் புதியதாக உருவாகிவரமுடியாது. ஐரோப்பிய அடிவருடிகளும் உள்ளூர் அசடுகளும் மட்டுமே அங்கே விளையமுடியும். வெளியே இருந்து ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் உண்டு. நவீனத் தகவ்லதொழில்நுட்பம் மூலம் மொழிகளுக்கிடையேயான இடைவெளி அழிந்து உலகசிந்தனை ஒரு பொதுவெளியாக ஆகுமென்றால் எதிர்காலத்தில் அதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard