New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியம் -அதில் திருமால்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்க இலக்கியம் -அதில் திருமால்
Permalink  
 


 

1.2 சங்க இலக்கியம் - எட்டுத் தொகை

 

 

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். அதில் திருமாலின் புகழ் பேசப்படுகிறது.

1.2.1 திருமால்

ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்; அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14). மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ; 
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; 
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

 

 

p2022aud.gif

 

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

 

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள; 
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; 
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள; 
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

 

 

p2022aud.gif

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல்அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல்= தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர்,ஒலி = சொல்வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து= காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

1.2.2 அவதாரங்கள்

திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

• கூர்ம அவதாரம்

 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.

தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாக உருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல்திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.

p2022528.jpg

 

 

திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்

 

 

p2022aud.gif

(64-71)

(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி =உச்சியில் ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர்,அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

• வராக அவதாரம்

 

இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்துகொண்டான். இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்கு உதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.

p2022529.jpg

 

 

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;

 
(பரி. 2:16-18)

(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)

(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

• நரசிம்ம அவதாரம்

 

இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதைநரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக்கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும் தன்னைக் கொல்லக்கூடாது.ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப்படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான்.எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.

p2022530.jpg

தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன் வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும்இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக்கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

• வாமன அவதாரம்

 

குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியதுவாமன அவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண்கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

p2022531.jpg

பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தைஎடுத்துரைக்கின்றது. கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

• பரசுராமன் அவதாரம்

 

திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

p2022532.jpg
 

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி 
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல


p2022aud.gif

(அகநானூறு : 220-5-9)

(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன்= மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலை உடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்திஇடம் பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப்பாடல் வழி அறிகின்றோம்.

• இராமன் அவதாரம்

 

இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை (இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்த பொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

p2022527.jpg

 

 

வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை 
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல் வீழ் ஆலம் போல
லி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

 
(அகம்,70:13-17)

(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை = கடற்கரை)

எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போலஅலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப்புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

• கிருஷ்ண அவதாரம்

நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்து கொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

 

 

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் 
மரம் செல மிதித்த மாஅல் போல

 

 
(அகநானூறு : 59 : 3-6)

(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட,அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்;ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக்கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன்கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

 

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை 
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு

 
(103: 53-55)

(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து, புடைத்த = அடித்த, ஞான்று வேளை, உட்கிற்று = நினைத்து)

 

என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

 

மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் 
குறங்கு அறுத்திடுவான் போல்

 
(52:2-3)

(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை) 

 


மல்லரை மறம் சாய்த்த மால்போல்

 
(52:5)

எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

‘மறம்’ வீழ்த்தப்படுவது அவதாரப் பெருமை என்பதும் புலன்ஆகின்றது.

பாண்டவர்கள் அரக்கினால் செய்த வீட்டில் இருக்கும்பொழுது, இரவில் துரியோதனன் நெருப்பை வைத்துக் கொளுத்தி விடுகின்றான். வீமன்  அரக்குவீட்டை உடைத்து உள்ளே இருந்தவரைக் காப்பாற்றுகின்றான் (25: 1-8).

தலைவன் வெஞ்சுரம் செல்ல இருக்கின்றான் என்கிறாள் தோழி. அகப்பாடல்களில்

  •  

ஏறு தழுவும் போது தலைவனின் தோற்றத்தை உவமிக்கும் போதும்,

  •  

தலைவனைப் பிரிவுணர்த்திய பின் செலவைத் தள்ளிப்போடும் போதும் / தவிர்க்கும் போதும்,

கிருஷ்ண அவதாரக் குறிப்பு உள்ளது.

• பலராமன்

பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,


மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி

(நற்றிணை - 32)

p2022534.jpg

(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)

எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.

முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண - பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண - பலராமன் ஆகிய இருவரை,

 

கடல்வளர் புரிவளை புரையும் மேனி 
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் 
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும


p2022aud.gif

(புறம். 56: 3-6)

(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)

என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

 

பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

 
(புறம், 58:14-16)

என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

ஆக, சங்க இலக்கியங்கள்

  • கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

     

  • சிவன் - முருகன் வழிபாடு போலவே மக்கள் கிருஷ்ண -பலராமர் வழிபாட்டையும் செய்தனர்.

     

     

  • பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1.2.3 வழிபடு கடவுள்

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

 

மா நிலம் சேவடி ஆக, தூ நீர் 
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப 
தீது அற விளங்கிய திகிரியோனே

 

p2022aud.gif

என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

1.2.4 வழிபாடு

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.

 


‘செல்வன் சேவடி பரவி’

 
(பதிற்றுப்பத்து 4:1:9)

(பரவி = வணங்கி)

எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.

 

 

• வழிபடுதல்

மக்கள் திருமாலை வழிபட்டதை,

நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே

p2022aud.gif (பரி. 15:63-66)

(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)

என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று

 

, . . . . . . . . மரபினோய் நின்அடி
தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:

 

p2022aud.gif

(பரி. 2: 72-76)

(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி, வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம்,கொடும்பாடு = கொடிய துன்பம்)

 

. . . . . . . .நின் அடி தொழுதனெம் 
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.


p2022aud.gif

(பரி. 13:61-64)

(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)

எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

 திருவடி

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.

 

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

 
(பரி. 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

எனப் புகழ்ந்து,

 

முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே

 
(பரி:3:71-72)

திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவாத பிறப்புஇல்லை எனச் சிறப்பிக்கின்றது.

1.2.5 இராமகாதைக் குறிப்பு

இளஞ்சேட்சென்னி என்ற மன்னனைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெறுகின்றனர். அவற்றுள் அணிகலன்களும் செல்வமும் அடங்கும். தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும்,காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொள்வது வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் உள்ளது. எப்படி?

 

கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன் 
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

 

p2022aud.gif

புறநா: ( 378: 18-22)

(மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்)

 

 

இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளைஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.

1.2.6 பாரதப் போர்க்களம்

மகாபாரதத்தின் கிருஷ்ண அவதாரச் சிறப்பும், இராமாயணத்தின் ராம அவதாரப் பொலிவும் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

கலித்தொகையில் இசைக் கருவிகள் ஒலிக்க மாட்டின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து ஆயர்கள் ஏறு தழுவிய இடம் ஆகிய தொழுவம் (தொழுஉ) பாரதப் போர்க்களம் போல் உள்ளதாம்.

 

புரிபு மேல்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனைவல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும் தொழூஉ

 
கலி (104 : 57-59)

(நூற்றுவர் = கௌரவர், ஐவர் = பாண்டவர், பொருகளம் = போர்க்களம், தொழுஉ = மாடுகள் கட்டும் இடம்)

1.2.7 பாரதக் கதைக்குறிப்பு

ஏறு தழுவும் பொதுவனை (முல்லை நிலப்பெயர்) ஏறு குத்திஅதன் கொம்பினால் புண் உண்டாகின்றது. அதிலிருந்து இரத்தம் வழிகின்றது; அவன் அஞ்சவில்லை. அக்காட்சி பாரதப் போரில் பாஞ்சாலி கூந்தலைப் பற்றியவனைக் கொன்று சபதம் நிறைவேற்றிய வீமனை நினைவு படுத்துகிறது. பாடல்:

 

அம் சீர் அசைஇயல் கூந்தற் கைநீட்டியான் 
நெஞ்சம் பிளந்துஇட்டு நேரார் நடுவண், தன் 
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்

 
(101:18-20)

துச்சாதனனைக் கொன்று வஞ்சினம் நிறைவேற்றிய வீமனைப் போல் காட்சி தருகின்றான் பொதுவன் என உவமை வழி,பாரதப்போரில் பாண்டவரின் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதைககலித்தொகையில் முல்லைக்கலியின் முதல் பாடல் வழி அறிகின்றோம்.

முல்லைக் கலிப் பாடல்களில்,

  •  

வீமனின் வீரம் பொதுவனின் தோற்றத்திற்கு உவமிக்கப் படுகின்றது
  •  

துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய செய்தி

  •  

பாரதப் போர்க்களம்

  •  

அவதாரச் சிறப்பு

போன்ற பல செய்திகள் முல்லைத்திணையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயர்களின் கடவுளாக, ஆயர்களின் வாழ்வோடு ஒன்றிய பெருமாளை, அந்நில மக்கள் வாழ்வை, நிலமும் பொழுதுமாக வைத்துப் பாடிய புலவர்கள் பதிவு செய்திருப்பது இலக்கியப்பாரம்பரியத்திற்கு வளம் சேர்த்திருப்பதோடு, ஆழ்வார் பாசுரங்களுக்கும் வித்திட்டிருக்கின்றது.

1.2.8 ஐம்படைத்தாலி

புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய இடைக்குன்றூர் கிழார் வாகைத்திணையில் அரச வாகைத் துறையில் ‘ஐம்படைத்தாலி களைந்தன்றும் இலனே’ (புறநானூறு : 77:7) எனப் பாடுகின்றார்.

ஐம்படைத்தாலி என்னும் இத்தொடருக்கு உரையாசிரியர்கள் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில் ஆகிய ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும் ஓர் ஆபரணம். பஞ்சாயுதமென்றும் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிவித்தல் மரபென்றும் கூறுவர். இந்த உரையும் திருமால் காத்தல் கடவுள் எனக் கருதிய மக்களின் நிலையைக் காட்டுகின்றது. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard