New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அம்பேத்கர் - நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அம்பேத்கர் - நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி
Permalink  
 


நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்

 

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 27-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 ன் மதமாற்ற அறிவிப்புக்குப்பின், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்து 1936-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்பேத்கர் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ என்கிற ஒரு புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

தொழிற்சாலைகளை அரசுடைமையாக்குதல், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர் வேலை செய்யும் நேரத்தின் அளவை நிர்ணயித்தல், நியாயமான கூலிபெற வழிகாணல், ஊதியமுடன் கூடிய விடுமுறை அளித்தல், தொழிலாளர்களுக்கு மலிவானதும் தூய்மையானதுமான குடியிருப்புகள் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை வரையறுத்தியது அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சி.

இதைப் பார்க்கும்போது அம்பேத்கர் கம்யூனிச சிந்தனையால் கவரப்பட்டுவிட்டதாகவே தோன்றும். தீண்டப்படாதவர்களுக்காகப் போராடி வந்த அம்பேத்கர் தொழிலாளர் நோக்கித் திரும்பியது கம்யூனிசச் சிந்தனையால்தானா?

புரட்சியாளர் அம்பேத்கர் ஒருபோதும் கம்யூனிசச் சிந்தனையால் கவரப்படவில்லை. அவர் கம்யூனிசத்தை, கம்யூனிஸ்டுகளை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்ததிலிருந்தே நாம் இதைத் தெரிந்துகொள்ளலாம்.

அம்பேத்கருக்கு ஏற்பட்ட இந்தச் சிந்தனை இந்தியச் சிந்தனை. கம்யூனிசம் வர்க்கப்பார்வையை பார்த்தது. அம்பேத்கரோ வர்க்கப்பார்வையுடன் மேலும் ஒன்றைக் கண்டார். அது என்ன? பின்பு பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி தாழ்த்தப்பட்டவர்களை நடத்திக் கொண்டிருந்த அம்பேத்கர், ஏன் கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கவில்லை? அதுவும் ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அன்று தொழிலாளர்களாக இருந்தபோதும் அவர் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.

இரு காரணங்களை முக்கியமாகப் பார்ப்போம்.

கம்யூனிசமோ, ‘மதம் மக்களுக்கு அபின் போன்றது’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது.

மேலும் கம்யூனிசம், ‘இந்தியாவில் எல்லாப் பிரச்சினைகளுக்குக் காரணம் முதலாளித்துவம்; அதை ஒழித்தால் போதும்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது. வர்க்கப்போராட்டமே எல்லாவற்றையும் தீர்க்கும் சர்வ வல்லமை பெற்றது என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.

இந்த இரு காரணங்களில் அம்பேத்கர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதைப் பார்த்தால் அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புரிந்துகொள்ள முடியும்.

புரட்சியாளர் அம்பேத்கரைப் பொருத்தவரையில் மனிதர்களுக்கு மதம் அவசியமானது; ஏனென்றால் மனிதர்களை பண்படுத்துவது, நல்வழிப்படுத்துவது மதம் மட்டுமே என்ற கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்டிருந்தவர்.

1938 பிப்ரவரி 12 அன்று அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற பம்பாய் மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் மாநாட்டில்,

 ‘‘….மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்குத் தேவை. அதே சமயம், மதம் என்னும் பெயரில் கபடவேடம் போடுவதும் எனக்குப் பிடிக்காது’’

என்று கூறினார். இந்தக் கருத்தை பல மேடைகளில் முழங்கினார்.

புதுடெல்லியில் 1950 மே 2-ஆம் நாள், இந்தியாவின் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர், 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களும் புத்தமதத்தில் சேர்ந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர், 

“சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல் மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை…. மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்மசாஸ்திரங்களைப்போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது”

என்று கூறினார்.

மதம் பற்றி கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்த இந்தக் (மதம் மக்களுக்கு அபின்) கருத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் எள்ளிநகையாடினார்.

கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களுக்கான இயக்கமா என்றால் இல்லை என்பதுதான் அம்பேத்கரின் புரிதல். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்களை சுரண்டுபவர்கள் என்றும் தான் அவர்களுடைய பரம்பரை எதிரி என்றும் கடுமையாக விமர்சித்தவர் அம்பேத்கர்.

1937, செப்டம்பர் தொடக்கத்தில் மசூர்-இல் ஒடுக்கப்பட்ட மக்களின் மாவட்ட மாநாட்டை தலைமை தாங்கிய அம்பேத்கர் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசுகையில் ‘‘நான் அதில் சேரும் சாத்தியக்கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி. கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காகச் சுரண்டுபவர்கள்’’என்று விமர்சித்தார்.

1938 ஜனவரி 10 அன்று பம்பாய் எஸ்பிளனேட் மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில், ‘‘எல்லாக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றைவிட நான் அதிகம் படித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டதில்லை’’ என்றும் விமர்சித்தார். இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் என்று அ.மார்க்ஸ் (நூல்: அம்பேத்கர் வாழ்வில்– இந்த நூலில் பல பொய்யான தகவல்களை அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) குறிப்பிடுகிறார். அப்படியே வைத்துக்கொண்டாலும் இந்திய கம்யூனிஸ்டுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மாநாட்டிலேயே அம்பேத்கர் அவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

1938 பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் மன்மத் என்னுமிடத்தில் கிரேட் இந்தியன் பெனின்சுலா (ஜி.ஐ.பி) ரயில்வேயைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளை வெளுத்து வாங்கினார். மாநாட்டின் இரண்டாம் நாளான 13-ஆம் தேதி அம்பேத்கர் பேசினார்.

அப்போது அவர்,

‘‘தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கும்போராட்டத்தை விட கடுமையான போராட்டம் போட்டிச் சங்கங்கள் மத்தியில் நடப்பது விசித்திரத்திலும் விசித்திரம். இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக!

இதில் கம்யூனிஸ்ட்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால் தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டுவந்தவர்கள் வேறு எவரும் இல்லை.

இன்று தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது. பொதுமக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்தி தான் புரட்சியைத் தூண்டும், புரட்சியின்மூலம் தொழிலாளி வர்க்கக் கட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்திப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு, சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாகத் தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலைநிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே?

வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல் சமூக உரிமைக்கான நியாயம், அவசியம், முக்கியத்துவம் ஆகியவைப் பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும். ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் வேலைநிறுத்தம் நடத்தலே வேலை என்று அலையமாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்ட்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது. வேலைநிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சி நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக்கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலைநிறுத்தம் கையாளப்படவேண்டும் என்பதே மார்க்சியம்.

இந்த உண்மைகளை கம்யூனிஸ்ட்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த தெய்வீக சாதனமாக வேலைநிறுத்தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் திணித்தார்கள். இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கே வந்துவிட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடியவேண்டும்?

இன்றைய கம்யூனிஸ்ட் எப்படி இருக்கிறான்? சுற்றுவட்டத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன் தன் சொந்த வீட்டையும் சேர்த்து எரித்துவிட்ட நிலையில் இருக்கிறான்.’’

என்று கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

கம்யூனிசம் வர்க்கப்பார்வையைப் பார்த்தது. அம்பேத்கரோ வர்க்கப்பார்வையுடன் மேலும் ஒன்றைக் கண்டார். அது பார்ப்பனியம். முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்துவத்தையும் அம்பேத்கர் ஒரே நேரத்தில் எதிர்த்தார். கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை எதிர்த்தனரே தவிர பார்ப்பனியத்தை அந்த அளவுக்கு எதிர்க்கவில்லை. முதலாளித்துவத்தை ஒழித்தால் இதுவும் தானாகவே ஒழிந்துவிடும் என்றுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அம்பேத்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதே மாநாட்டில் இதைத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அம்பேத்கர் கூறுகிறார்:

“நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம். பார்ப்பனியம் என்று நான் குறிப்பிடுவது, பார்ப்பன வகுப்பினரிடம் மட்டும் குவிந்துள்ள அதிகாரம், சிறப்புரிமைகள், தன்னலம் முதலானவற்றையன்று. பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிடும் சொல்லாகப் பார்ப்பனீயத்தை நான் பயன்படுத்தவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான தன்மையையே பார்ப்பனியம் என நான் கருதுகிறேன். இதன்படி பார்த்தால் பார்ப்பனியம் எல்லாச் சாதிகளிலும வகுப்புகளிலும் படிந்திருக்கிறது. பார்ப்பனியத்தின் மூலகர்த்தாக்கள் பார்ப்பனர்களே. ஆயினும் பார்ப்பனர்களிடம் மட்டும் அது இருக்கவில்லை. சமபந்தி விருந்து, கலப்புத் திருமணம் போன்ற சமூக உரிமைகளில் தடைபோடுவதுடன் பார்ப்பனியம் நின்றுவிடவில்லை. அது குடியுரிமைகளையும் வெகுமக்களுக்கு வழங்கிட மறுத்தது. வாழ்வில் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது பார்ப்பனியம். அதனால்தான் பொருளாதார வாய்ப்புகளையும் அது பாதித்தது.’’

முக்கியமான இந்த இரு காரணங்களினாலும் இந்திய கம்யூனிஸ்ட்களின் செயல்களாலுமே அம்பேத்கர் கம்யூனிசம் பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நோக்கி அழைத்துச் செல்ல வில்லை.

1938, செம்டம்பர் மாதத்தில் பம்பாய் சட்டசபையில் தொழில் தகராறு மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மசோதா சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலை நிறுத்தம் செய்வதைச் சட்டவிரோதமானதாக்குகிறது. அம்பேத்கர் இதைக் கடுமையாக எதிர்த்தார். கம்யூனிஸ்டுகளும் எதிர்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் அமைச்சரவை அம்மசோதாவை நிறைவேற்றுவது என்று உறுதி பூண்டது. நவம்பர் 7-ஆம் நாள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதெனச் சுதந்திரத் தொழிற்கட்சியும், பி.பி.டி.யூ.சி-(பம்பாய் மாகாணத் தொழிலாளர் யூனியன் காங்கிரசு)யும் அறிவித்தன. இந்தப் போராட்டத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகள், மற்றும் இதர தொழிலாளர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளுமாறு அறுபது தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தன. வேலைநிறுத்தப் போராட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 2500 தொண்டர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் அம்பேத்கரின் சுதந்திரத் தொழிற் கட்சியைத் சேர்ந்தவர்களாவே இருந்தனர். அம்பேத்கருடைய கட்சிதான் வேலைநிறுத்தத்தில் முக்கியமான பெரும் பங்களிப்பைச் செய்தது. தொழிலாளர் நலன் குறித்த இப்பிரச்சினையில் அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் ஒரு ஐக்கிய முன்னணியாக இணைந்து செயல்பட்டனர் என்றபோதிலும் அவருடைய கட்சியையும் அமைப்பையும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து தனித்து, கட்டமைப்போடும் செயல்படும் விதத்தில் மிகத் திறமையாகக் கட்டிக்காத்தார்.

அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து போராடினார் என்பதை வைத்து அவர் கம்யூனிசத்தை அரவணைத்தார் என்பது பொருளல்ல. ஏனென்றால் அம்பேத்கர் தொடர்ந்து கம்யூனிஸத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். தன் கட்சியை ஒருநாளும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதை நேரடியாகவும் அறிக்கயிலேயும் தெளிவுபடுத்தினார்.

1951 அக்டோபர் 6-இல் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழு அம்பேத்கர் இல்லத்தில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஜனசங்கம் ஆகியவைகளுடன் கூட்டுறவு கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சிக் கோட்பாடுகளை விளக்கியபின் கம்யூனிசம், சோஷலிசம், காந்தீயம் அல்லது வேறு எந்த இசத்துக்கும் எந்தக் குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கும் கட்சியின் கோட்பாடு கட்டுப்பட்டதல்ல என்பதையும் ….தனிப்பட்டவர்களின் சுதந்திரம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து அதற்குப் பதிலாக ஏதேச்சாதிகாரத்தை கொண்டுவருவதை இலட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக்கொள்ளாது என்பதையும் மறுபடியும் தெளிவுபடுத்தியது. இந்த செயற்குழு தமது வெளிநாட்டுக் கொள்கை என்ன என்பது பற்றியும் சொல்லியது.

அந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பார்த்தோமானால் அம்பேத்கர் கம்யூனிச சீனாவையும் நம்பவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.

பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.

பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.

பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.

பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள்,  இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.

பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அம்பேத்கர் - நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி
Permalink  
 


காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

 

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 28-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

‘‘நமது வெளிநாட்டுக் கொள்கைகளில் சீனா பற்றிய நம் கண்ணோட்டம் பல நாடுகளை நமது விரோதிகளாக்கிவிட்டன. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா போராட வேண்டி வந்துள்ளது. இது ஓர் அசாதாரணமான விஷயம். இந்தப் போராட்டத்தை நடத்த சீனாவுக்கு வலிமை இருக்கும்போது ஏன் இதற்காக இந்தியா போராட வேண்டும்? கம்யூனிஸ்டு சீனாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பகைமை உணர்ச்சிக்குக் காரணம். இதன் விளைவாக அமெரிக்காவிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாம் பெற முடிவதில்லை.

…..தன் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே இந்தியாவின் தலையாய கடமை. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் போராடுவதற்குப் பதிலாக, தான் ஐ.நா.வின் நிரந்த உறுப்பினராவதற்கு இந்தியா பாடுபட வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக சியாங்கேஷேக்குக்கு எதிரான மாவோவின் போராட்டத்தில் இந்தியா தன் சக்தியை விரயம் செய்கிறது. உலக ரட்சகனாக நடந்து கொள்ளும் இந்தப் பைத்தியக்காரக் கொள்கை இந்தியாவிற்கு அழிவையே கொண்டுவரும். தற்கொலைக்கொப்பான இந்த வெளிநாட்டுக் கொள்கை எவ்வளவு சீக்கிரம் மாற்றப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை உண்டாகும். ஆசிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவதற்கு முன்பு இந்தியா தன்னைப் பலப்படுத்திக் கொள்ள எல்லா உதவிகளையும் பெற கடுமையாகப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் அதன் குரலுக்கு மதிப்பு இருக்கும். இத்தகைய வெளிநாட்டுக் கொள்கையையே ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் கடைபிடிக்கும்.’’

அதாவது இந்திய கம்யூனிசம் மட்டுமல்ல கம்யூனிச சீனா, கம்யூனிச ரஷ்யா போன்ற கம்யூனிசம் கோலோச்சுகிற நாடுகளையும் அவர் நம்பவில்லை.

இந்தியாவின் இரண்டாவது தலைநகரம் அமைவது பற்றி எழுதுகையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

“இந்தியாவும் சீனாவும் இப்போது இப்போது நட்புநாடுகளாக இருந்தாலும் இந்த நட்புறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது,’’

என்று – “மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்” (1955) நூலில் கூறுகிறார்.

 

1956 ஆகஸ்டு 26-ஆம் நாள் அம்பேத்கர் மாநிலங்கள் அவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை பற்றி சிந்திக்க வைக்கும்படியான சிறந்ததோர் உரையாற்றினார்.

அம்பேத்கர் பேசும்போது, ‘‘நேருவின் வெளியுறவுக்கொள்கை மூன்று கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. முதலாவது அமைதி, இரண்டாவது கம்யூனிசத்திற்கும் சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடையிலான இணக்கம், மூன்றாவது சீட்டோ அமைப்பிற்கான எதிர்ப்பு,” என்று கூறினார்.

“ரஷ்யா பத்து ஐரோப்பிய நாடுகளைத் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. மேலும் சீனா, மஞ்சூரியா, கொரியா ஆகிய நாடுகளின் சில நிலப்பரப்புகளையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது,” என்று அம்பேத்கர் கூறியபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் அதை மறுத்துக் குரலெழுப்பினார். நாடுகளைப் பிரிப்பதன் பெயராலோ அல்லது நாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்துவதாலோ அமைதி விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவைப் பற்றி அம்பேத்கர் பேசியபோது,

“ரஷ்யா பல நாடுகளை இல்லாமல் ஆக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலை அளிப்பது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மற்ற நாடுகளைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொள்கிறது. மற்ற நாடுகளுக்கு ரஷ்யா வழங்கும் விடுதலை என்பது, விடுதலையின் பேராலான அடிமைத்தனம் என்பதாகவே இருக்கிறது. விடுதலைக்குப் பிறகு அங்கே சுதந்திரம் முகிழ்ப்பதில்லை. இத்தகைய அமைதியினால் எந்தவொரு பயனும் விளைவதில்லை. மாறாக ரஷ்யா பூதம் வாயைத் திறந்து இரை கேட்கும் போதெல்லாம் அதற்குப் பிற நாடுகள் பலியாக்கப்படுகின்றன…”

என்று கூறினார்.

ரஷ்யா இந்தியா மீதும் இதேபோல் கை வைக்குமா? என்ற கேள்வியை மறந்துவிடாமல், புறக்கணித்துவிடாமல் இந்தியர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று அம்பேத்கர் எச்சரித்தார்.

“கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று என்பதே என் கருத்தாகும். ஏனெனில் கம்யூனிசம் ஒரு காட்டுத்தீயைப் போன்றதாகும். தன்னை எதிர்ப்படும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும்”

என்று அம்பேத்கர் கூறினார். காட்டுத்தீ போன்று விளங்கும் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும்போது அந்நாட்டின் நிலவியல் அமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்துவிடக்கூடாது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.

“…ரஷ்யாவும் சீனாவும் இவ்வுலகில் சுதந்திரமாகவுள்ள மற்ற நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்து கைப்பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்காக ‘சீட்டோ’ என்ற அமைப்பை உருவாக்கிட அமெரிக்காவும், பிரிட்டனும் திட்டமிட்டன”

“சீட்டோ அமைப்பு எந்தவொரு நாட்டின்மீதும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதன்று. மாறாக சுதந்திர நாடுகளின்மீது ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதைத் தடுப்பதே அதன் குறிக்கோளாகும் என்று அம்பேத்கர் விளக்கினார். சீட்டோ அமைப்பின்பால் காட்டப்படுகின்ற வெறுப்பு, நேருவிற்கு அமெரிக்காவிடம் ஏதோ ஒருவகையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாகவும் இந்தியா சீட்டோ அமைப்பில் சேர்ந்துவிட்டால் ரஷ்யா என்ன நினைக்குமோ என்ற அச்சத்தினாலும் தோன்றியதாகும்”

 என்று அம்பேத்கர் கூறினார்.

இந்தியாவை ஒருபுறத்தில் பாகிஸ்தானும், மற்ற இஸ்லாமிய நாடுகளும் சூழ்ந்திருப்பதையும், இன்னொரு பக்கத்தில் சீனா லாஸா பகுதியைக் கைப்பற்றிக் கொள்ள அனுமதித்திருப்பதையும் அம்பேத்கர், அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

“சீனா அதனுடைய எல்லையை இந்தியாவின் எல்லை வரையில் கொண்டுவந்துவிட பிரதமர் அனுமதித்து விட்டார். இந்த உண்மைகளையெல்லாம் ஒருசேர நினைக்கும் போது, உடனடியாக என்று கூற முடியாவிடினும் எதிர்காலத்தில் இந்தியா ஆக்கிரமிப்புக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை யார் செய்வார்களெனில் ஆக்கிரமிப்புச் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் செய்வார்கள்”

என்று அம்பேத்கர் உறுதிபடக் கூறினார்.

 

“பிரதமர் நேரு மாசேதுங் ஒப்புக்கொண்ட பஞ்சசீலக் கொள்கையையோ, ஒருநாடு மற்ற நாட்டின்மீது ஆக்கிரமிப்புச் செய்யக்கூடாது என்று திபெத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தையோ நம்பக்கூடாது”

என்று அம்பேத்கர் அவருடைய உரையில் குறிப்பிட்டார்.

 

“பௌத்த சமயத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் பஞ்சசீலக் கொள்கையின்பால் உண்மையில் மாசேதுங்கிற்கு நம்பிக்கையிருக்குமானால் அவருடைய நாட்டில் பௌத்தர்களை இப்போது நடத்துவதுபோல் கொடுமையாக நடத்தியிருக்கமாட்டார். அரசியலில் பஞ்சசீலக் கொள்கைக்கு இடமேயில்லை. கம்யூனிச நாட்டின் அரசியலில் பஞ்சசீல கொள்கை இடம்பெறவே முடியாது. கம்யூனிச நாடுகள் இரண்டு கொள்கைகளின் மீதே எப்போதும் செயல்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பது மாறிக்கொண்டேயிருக்கும். ஆகவே ஒழுக்கநெறி என்ற ஒன்றே இருக்காது. இன்று ஒழுக்கநெறியாகக் கருதப்படுவது, அடுத்தநாளே ஒழுக்கநெறிக்குரியதாக இல்லாமல் ஆகிவிடும். ஆசியா ஒரு போர்க்களமாக ஆகிவிட்டது. ஆசியாவில் பாதிக்கு மேற்பட்டவை கம்யூனிச நாடுகளாக இருக்கின்றன. கம்யூனிச நாடுகள் மாறுபட்ட வாழ்வியல் கோட்பாடுகளையும் வேறுபட்ட அரசமைப்பு முறையையும் பின்பற்றுகின்றன. ஆகவே நமக்குச் சுதந்திரத்தில் நம்பிக்கையிருகுமாயின் சுதந்திர நாடுகள் என்று கருதப்படும் நாடுகளுடன் நாம் கூட்டு வைத்துக்கொள்வது நல்லது”

என்று அம்பேத்கர் கூறினார்.

 

அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இந்தியா மீது 1962-இல் சீனா படையெடுத்தபோது நமக்கு வெளிப்பட்டது.

மறுபடியும் 1951, நவம்பர் 7 அன்று பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில் அம்பேத்கர்,

‘‘நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒளிவுமறைவற்ற காரணத்தினால் என் கட்சி எக்காரணத்தைக்கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது’’

என்று கூறினார்.

 

அம்பேத்கர் கம்யூனிசத்துக்கு மிக வைரியாக இருந்தார். கம்யூனிசத்தின்பால் அவருடைய கவனம் எப்போதும் சென்றதில்லை. கடுமையான வார்த்தைகளால் கம்யூனிசத் தத்துவத்தை விளாசினார்.

இந்தியாவின் சிறந்த தேசபக்தரும், சீர்திருத்தவாதியுமான ரானடேயின் பிறந்தநாளையொட்டி, 1943 ஜனவரி 19-ஆம் தேதி பூனாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது,

“ஆண்டவனின் புனிதத் திட்டத்தின்படிதான் வரலாறு நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு நாளின்போது, இப்புனிதத் திட்டம் முடிவுக்கு வரும்வரையில் மனித சமுதாயம் போர்களிலும், துன்பங்களிலும் உழன்று கொண்டுதானிருக்கும் என்பது ஆகஸ்டைன் கூறும் தத்துவம். இது இன்று மதவாதிகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கின்றது. பக்ளியின் தத்துவம், வரலாற்றை நிலவியலும், இயற்பியலும் உருவாக்குகின்றன என்று சொல்கிறது. காரல் மார்க்சின் கம்யூனிசத் தத்துவமோ பொருளாதாரச் சக்திகளே வரலாற்றை தீர்மானிக்கின்றன என்று கூறுகிறது. இவ்விரண்டு தத்துவங்களும் முழுமையான உண்மைகளைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுக்கு வெளியே உள்ள சக்திகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்றும், வரலாற்றின் நிகழ்வுகளை முடிவு செய்வதில் மனிதன் ஒரு சக்தியாக இல்லையென்றும் இவர்கள் கூறுவது முற்றிலும் தவறாகும்,’’

என்று கூறினார்.

 

1951-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் ஜலந்தர் நகரிலுள்ள டி.ஏ.வி.கல்லூரியில் நடைபெற்ற ‘மாணவர் நாடாளுமன்ற’த்தில் அம்பேத்கர் பேசியதாவது,

‘‘இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் அது தோற்றுத்தான் போகும். அதன் விளைவாக கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும். வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும். கம்யூனிசம் இங்கு வரலாம். ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுதந்திரத்தை நசுக்கி, நமது சுதந்திரத்தையும் ஒழித்துவிடும். அல்லது ஆட்சியதிகாரத்திலிருக்கும் கட்சி தோல்வியடைந்தால் அதிருப்தியுற்ற ஒரு பிரிவு மக்கள் கலகத்தில் ஈடுபடலாம், அராஜகம் அப்போது தலைதூக்கும்.’’

என்றார்.

 

மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்டுகளின் பலவீனங்கள் பற்றி 1953 பிப்ரவரி 21, 28, மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதிகளில் அமெரிக்கப் பத்திரிகையாளர் திரு.சீலிங் எஸ்.ஹாரிசன், டாக்டர் அம்பேத்கரிடம் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில்,

“திரு.டாங்கே மற்றும் இதர பிராமண இளைஞர்களின் கைகளில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. மராத்தா சமூகத்தையும் ஷெட்யூல்டு வகுப்பினர்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர அவர்கள் முயன்றனர். ஆனால் மகாராஷ்டிராவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏன்? பெரும்பாலும் அவர்கள் பிராமண இளைஞர்களின் கூட்டமே. இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க அவர்களை நம்பியது ரஷ்யர்கள் செய்த பெரும் தவறு. இந்தியாவில் கம்யூனிசம் வளர்வதை ரஷ்யர்கள் விரும்பவில்லையா- அவர்கள் வெறும் ஜால்ராக்களை விரும்பியிருக்கலாம் அல்லது அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.’’

என்று கூறினார்.

கம்யூனிசத்தைப் பற்றிய புரிதல் அம்பேத்கருக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் 1956, மே 12-இல் புதுடெல்லியில் வெளியிட்ட ‘புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்’ என்ற அறிக்கையில் நாம் காணலாம். அதில் குறிப்பிடுகிறார்:

‘‘…. வேறு எந்தமதமும் செய்யாத விதத்தில் புத்தமதம் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை (மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையை வைப்பதையும் எதிர்ப்பதை) போதிக்கிறது. அது கருணையை போதிக்கிறது. அது சமதாவை (சமத்துவத்தை) போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். புத்தமதத்தின் இந்த மூன்று கோட்பாடுகளும் என்னைப் பெரிதும் கவர்கின்றன.’’

என்று கூறுகிற அம்பேத்கர் கம்யூனிசத்தின் தாக்கத்தையும் அதில் குறிப்பிட்டு அதை விமர்சிக்கிறார்.

‘‘….. உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்று உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம். இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. மார்க்சியமும் கம்யூனிசமும் சமயசார்பற்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டவை.

இவை அனைத்து நாடுகளின் சமயசார்பு அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்துள்ளன. சமயசார்பு அமைப்புக்கு இது முற்றிலும் இயல்பானதே. இன்றைய நிலைமை சமயசார்பற்ற அமைப்புடன் சம்பந்தப்படாது இருந்தாலும், அதன் அடித்தளத்தின் மீதுதான் சமயசார்பற்றவை அனைத்துமே அமைந்துள்ளன. சமயத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலொழிய சமயசார்பின்மை அமைப்பு நீண்டகாலம் நீடிக்க முடியாது. சமயத்தின் அங்கீகாரம் கிடைப்பதே அரிது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பௌத்தமத நாடுகளின் மனப்போக்கு கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்திருப்பது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. பௌத்தமதம் என்பது என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே இதன் பொருள். என்னைப் பொருத்தவரையில் பௌத்தமதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால் என்று கூறுவேன்.

ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்தக்களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பௌத்த கம்யூனிசமோ, இரத்தம் சிந்தாத மனப்புரட்சியின் வாயிலாக அதனைக் கொண்டுவருகிறது. கம்யூனிசத்தைத் தழுவ ஆர்வத்தோடு இருப்பவர்கள், சங்கம் ஒரு கம்யூனிச அமைப்புதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதில் தனிச்சொத்துடைமை ஏதும் இல்லை. வன்முறை மூலம் இது சாத்தியப்படவில்லை. மனமாற்றத்தின் மூலமாகவே இது சாதிக்கப்பட்டது. எனினும் 2500 ஆண்டுகளாக அது நிலைத்து நின்று வருகிறது. ஒருக்கால் அது சிதைந்திருக்கலாம். ஆனால் அது இன்னமும் நிலைத்து நின்று வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று?

இந்தக் கேள்விக்கு ரஷ்ய கம்யூனிசம் பதிலளிக்க வேண்டும். வேறு இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் கூறியாக வேண்டும். முதலாவதாக எல்லாக் காலத்துக்கும் கம்யூனிச அமைப்பு முறை ஏன் தேவை? ரஷ்யர்கள் என்றும் செய்யமுடியாத பணியைச் செய்துமுடித்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. பணி முடிந்த பிறகு புத்தர் போதித்தது போல் அன்பைத் தொடர்ந்து, மக்களுக்கு ஏன் சுதந்திரம் அளிக்கவில்லை? எனவே, தென்கிழக்கு ஆசிய நாடுகள் அவசரப்பட்டு ரஷ்யவலையில் குதித்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவ்வாறு குதித்தார்களானால் அவர்களால் ஒருபோதும் அதிலிருந்து தப்பி வெளியேற இயலாது. இப்போது அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் புத்தரையும் அவரது வாழ்க்கையையும் அவரது போதனைகளையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்….’’

இந்த அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசிய நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கை. அம்பேத்கர் எந்த அளவுக்க கம்யூனிசத்துக்கு வைரியாக இருந்தார் என்பது இதிலிருந்து புலப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

 

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 29-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

காட்மாண்டில் உலக பௌத்த கவுன்சில் மாநாட்டுக்கு சற்றுமுன்னர் 1956 நவம்பர் 26-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர், நேபாள மன்னரின் அரண்மனையில் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துமதம் அதிகாரபூர்வமாகக் கோலோச்சும் நேபாளத்தில் புத்தமதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வது என்பது ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாகும்.

….பௌத்தமும் கம்யூனிசமும் என்னும் பொருள் பற்றி நான் பேசவேண்டும் என்று மாநாட்டிற்கு வந்திருப்போரில் பெரும்பாலோர் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

….உண்மையைக் கூறுவதானால் இது பாதி உலகைத் தன்பிடியில் வைத்துக்கொண்டுள்ள விஷயம். பௌத்த நாடுகளில் ஏராளமான மாணவர்கள் இதன் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த விஷயத்தின் பிந்திய அம்சத்தை நான் மிகுந்த கவலையோடு நோக்குகிறேன்.

கம்யூனிசம் வழங்கும் வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையை பௌத்தம் வழங்குகிறது என்பதை பௌத்த நாடுகளில் உள்ள இளம் தலைமுறையினரால் உணர முடியவில்லை என்றால் பௌத்தத்தின் கதி அதோகதிதான். அது ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைக்கு மேல் நீடிக்காது.

எனவே, பௌத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பௌத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பௌத்தம் நம்பிக்கை கொள்ள முடியும்.

இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பௌத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனை பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கார்ல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பௌத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.

இப்பொழுது இந்த முன்னுரையுடன் பௌத்தத்திலும் மார்க்சியத்திலும் அல்லது கம்யூனிசத்திலும் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன். பௌத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே எங்கு இலட்சிய ஒற்றுமைகள் உள்ளன, எங்கு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது குறித்து சில முக்கியமான விஷயங்களை உங்களிடம் கூறப்போகிறேன்.

மூன்றாவதாக குறிக்கோளை எய்துவதில் பௌத்த வாழ்க்கை முறை நிலையானதா அல்லது கம்யூனிச வாழ்க்கை முறை நிலையானதா? குறிப்பிட்டதொரு பாதை ஒரு நிலையான பாதையாக இருக்கப்போவதில்லை என்றால் அது உங்களைக் காட்டுக்கு இட்டுச்செல்கிறது. என்றால் அந்தப் பாதையைப் பின்பற்றுவதில் அர்த்தமில்லை. பயன் இல்லை. ஆனால் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்து செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச்செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக்கொள்ளத் துணை நிற்கும்.

எனவே, அவரசரப்பட்டு குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும்பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என்கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதுமே அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.

சரி, இனி விஷயத்துக்கு வருவோம். கம்யூனிசச் சித்தாந்தம் என்பது என்ன? அது எதிலிருந்து தொடங்குகிறது. ஏழைகள் செல்வந்தர்களால் சுரண்டப்படுகின்றனர். அவர்களிடம் சொத்து இருப்பதே இதற்குக் காரணம். அவர்கள் மக்களை அடிமைப் படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் அடிமைப்படுத்துவது ஏழைகளைத் துன்ப துயரத்திலும் துக்கத்திலும் வறுமையிலும் ஆழ்த்துகிறது. இதுதான் கார்ல் மார்க்சின் அடிப்படைத் தத்துவம். அவர் சுரண்டல் என்னும் சொல்லை இங்கு பயன்படுத்துகிறார். இதற்கு கார்ல் மார்க்ஸ் கூறும் பரிகாரம், தீர்வு, மருந்து என்ன?

வறுமையைப் போக்குவதற்கும், ஒரு குறிப்பிட்ட வர்க்கம் துன்ப துயரங்கள் அனுபவிப்பதற்கும் முடிவு கட்ட தனியார் சொத்துரிமையை ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் வழி என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

எவரும் தனிச்சொத்துக்கள் வைத்திருக்கக்கூடாது, ஏனென்றால் தனிச்சொத்துரிமையால்தான் ஒருவன் எதையும் தனதாக்கிக் கொள்கிறான். உரிமையின்றி சொத்துக்களைக் கையாளுகிறான். அல்லது மோசடி செய்கிறான். கார்ல் மார்க்ஸின் மொழியில் கூறுவதானால் தொழிலாளர்கள்தான் உபரி மதிப்பை உற்பத்தி செய்கின்றனர். ஆனாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் உபரிமதிப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது உடைமை உரிமையாளனால் அபகரித்துக் கொள்ளப்படுகிறது.

உழைக்கும் மனிதனின் முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பை உடைமையாளன் ஏன் அபகரித்துக்கொள்கிறான் என்ற கேள்வியைக் கார்ல் மார்க்ஸ் கேட்டார். இதற்கு ஒரே உடைமையாளன் அரசாங்கம்தான் என்பதே இதற்கு அவரது பதில். இதனாலேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர் வலியுறுத்தினார். இது கார்ல் மார்க்ஸ் முன்வைத்த மூன்றாவது முன்மொழிவாகும்.

அரசாங்கம் சுரண்டப்பட்ட வர்க்கங்களாலன்றி சுரண்டும் வர்க்கங்களால் நிர்வகிக்கப்படக்கூடாது. அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவ வேண்டும். இவைதான் கார்ல்மார்க்சின் அடிப்படையான கருத்துக்கள். ரஷ்யாவில் கம்யூனிசத்துக்கு இவைதான் ஆதார அடிப்படையாக, அடித்தளமாக அமைந்தன. இவைமேலும் விரிவுப்படுத்தப்பட்டு கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டன என்பதில் ஐயமில்லை. எனினும் இவைதான் அடிப்படையான பிரச்சினைகள்.

இப்போது ஒருகணம் பௌத்தத்துக்கு செல்லுவோம். கார்ல் மார்க்ஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து புத்தர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நான் ஏற்கனவே கூறியதுபோல் ஏழைகள் சுரண்டப்படும் விஷயத்திலிருந்துதான் கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். இதுபற்றி புத்தர் என்ன சொல்கிறார்? அவர் எங்கிருந்து தொடங்குகிறார்? அவர் தமது மதத்தின் கட்டமைப்பை எழுப்பியுள்ள அடித்தளம் என்ன? புத்தரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதையேதான் கூறினார்.

அவர் சொன்னார், உலகில் துக்கம் இருக்கிறது. ‘சுரண்டல்’ எனும் சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் துக்கம் எனப்படுவதன் மீதுதான் அவர் தமது மதத்துக்கான அஸ்திவாரத்தை இட்டார். உலகில் துக்கம் இருக்கிறது. துக்கம் என்னும் சொல் பல்வேறு வகைகளில் அர்த்தம் செய்துகொள்ளப்படுகிறது என்பதில் ஐயமில்லை. மறுபிறவி, வாழ்க்கைச் சக்கரம் இதுதான் துக்கம் எனப் பொருள்கொள்ளப்படுகிறது. இதை நான் ஏற்பதற்கில்லை. வறுமை என்னும் பொருளில் துக்கம் என்னும் சொல் பௌத்த நூல்களில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது எனக் கருதுகிறேன். எனவே, அடித்தளம் என்பதைப் பொருத்தவரையில் உண்மையில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை என்பது தெள்ளத் தெளிவு.

அடித்தளம் பெறுவதற்கு பௌத்தர்கள் கார்ல் மார்க்சிடம் செல்வது அவசியமற்றது. தேவையற்றது. இந்த அடித்தளம் ஏற்கனவே இருக்கிறது. அது நன்கு இடப்பட்டுள்ளது. புத்தர் தமது முதல் விளக்கப் பேருரையான தர்மச் சக்கர பரவர்த்தன சுத்தத்தை எங்கு தொடங்குகிறாரோ அங்குதான் அந்த அடித்தளம் உள்ளது.

எனவே கார்ல் மார்க்ஸால் கவரப்பட்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். தர்மச் சக்கர பரவர்த்தன சுத்தத்தைப் படியுங்கள். அதில் புத்தர் என்ன சொல்லுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினையில் நீங்கள் போதிய அளவு திருப்திடையவீர்கள். புத்தர் தமது மதத்துக்கான அடித்தளத்தை கடவுள் மீதோ அல்லது ஆன்மா மீதோ அல்லது இவைபோன்ற வேறு எந்த இயல்நிலை கடந்தவற்றின் மீதோ இடவில்லை.

மக்களின் துன்ப துயரங்கள் மீதே அவர் தலையாய முக்கிய கவனம் செலுத்தினார். எனவே மார்க்சியம் அல்லது கம்யூனிசத்தைப் பொருத்தவரையில் பௌத்தம் அதனைப் போதிய அளவில் பெற்றுள்ளது. மார்க்ஸ் சொன்னதை புத்தர் மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.

சொத்து என்னும் விஷயத்தைப் பொருத்தவரையில் புத்தர் கோட்பாட்டுக்கும் கார்ல் மார்க்ஸ் போதித்த கோட்பாட்டிற்கும் இடையே நெருங்கிய உறவும் ஒருமைப்பாடும் இருப்பதைக் காண்பீர்கள். சுரண்டல் நடப்பதைத் தடுப்பதற்கு உற்பத்தி சாதனங்கள், அதாவது சொத்து அரசிடம் இருக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். தொழில்துறை அரசுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும், அப்போதுதான் எந்தத் தனி உடைமை உரிமையாளரும் குறுக்கிட்டு தொழிலாளி தனது உழைப்பின் ஆதாயங்களைக் கொள்ளையடிக்க முடியாது, அபகரிக்க முடியாது. இதைத்தான் மார்க்சியம் கூறியுள்ளது.

இனி நாம் சங்க விஷயத்துக்கு– பௌத்த சங்க விஷயத்துக்கு– வருவோம். பௌத்தத் துறவிகளுக்கு புத்தர் வகுத்துத் தந்த வாழ்க்கை நியதிகளைப் பரிசீலிப்போம். புத்தர் வகுத்தளித்த விதிகள் என்ன? எந்தத் துறவியும் சொந்தமாக சொத்து ஏதும் வைத்திருக்ககூடாது என்று அவர் கூறினார். கொள்கை ரீதியில் கூறினால் எந்தத் துறவியும் சொந்த சொத்து வைத்திருக்கலாகாது. இது சம்பந்தமாக இங்கும் அங்கும் சில பிறழ்வுகள் இருக்கலாம். சிலநாடுகளில் துறவிகள் சொத்துக்கள் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் துறவிகள் சொத்துக்களை வைத்திருக்கவில்லை. உண்மையில் சங்கத்துக்கு வகுத்துத் தரப்பட்டுள்ள விதிமுறைகள், ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் வகுத்துத் தந்துள்ள விதிமுறைகளை விடக் கடுமையானவை. இதனை விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்கிறேன். இது குறித்து இதுவரை எவரும் விவாதிக்கவில்லை. எந்த முடிவுக்கும் வரவில்லை.

சங்கத்தைத் தோற்றுவிக்கும்போது இதில் புத்தருக்கு என்ன நோக்கம் இருந்தது? இதை ஏன் செய்தார்? புத்தர் இந்த மதத்தைப் பரப்பிக்கொண்டிருந்த வேளையில் பரிவ்ராஜாக்கள் புத்தருக்கு முன்னரே அதில் இருந்தனர். பரிவ்ராஜாக்கள் என்றால் வீடுவாசல் இல்லாதவன், தனது வீட்டை இழந்தவன் என்று பொருள்.

ஆரியர்கள் காலத்தில் ஆரிய இனத்தைச் சேர்ந்த பல்வேறு குலமரபுக் குழுக்கள், எல்லா குலமரபுக் குழுக்களையும் போலவே, தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்தன. சில குலமரபுக் குழுக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை இழந்து குறிக்கோளின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. இந்த நாடோடிகள்தான் பரிவ்ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த பரிவ்ராஜாக்களுக்கு புத்தர் மாபெரும் உதவி செய்தார், அவர்களை ஓர் அமைப்பாக ஒன்று திரட்டினார். அவர்களுக்கு வாழ்க்கை விதிகளைத் தயாரித்துக் கொடுத்தார். விநயாபிடிகத்தில் இடம் பெற்றிருந்தவையே இந்த விதிகள். இந்த வழிகளின்படி ஒரு பிக்கு எந்தச் சொத்தும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. பௌத்த விதிகளின்படி ஒரு பிக்கு ஏழு பொருள்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

ஒரு சவர கத்தி, தண்ணீர் குடிப்பதற்கு ஒரு சொம்பு, மூன்று சிவராக்கள், தையல் வேலைக்கு ஊசி முதலியவையே அவை. தனியார் சொத்துரிமையை மறுப்பதுதான் பொதுவுடைமை தத்துவத்தின் சத்தும் சாரமும் என்றால் தனியார் சொத்துரிமைப் பற்றி விநயா பிடிகத்தில் காணப்படுவது போன்ற மிகக்கடுமையான விதி வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே தனியார் சொத்துடைமை எதுவும் இருக்காது என்று கம்யூனிசத் தத்துவத்தில் இடம் பெற்றுள்ள விதி எந்த இளம் மக்களையாவது கவர்ந்திழுக்குமானால் அத்தகைய விதி புத்தரின் தத்துவத்தில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒரே கேள்வி தனியார் சொத்துடைமையை மறுக்கும் விதி சமுதாயத்தில் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதேயாகும். இது கல்வி சூழ்நிலையையும், காலத்தையும், சந்தர்ப்பத்தையும் மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கையும் பொறுத்திருக்கிறது. எனினும் சித்தாந்தத்தை பொறுத்தவரையில் தனியார் சொத்துரிமையை ரத்து செய்வதில் தவறேதும் இருக்கிறதா என்றால், இருக்காது. ஏனென்றால் பௌத்த சங்கத்தை அமைப்பதில் இந்தச் சலுகையை ஏற்கனவே அளித்துள்ளது.

இப்போது இந்த விஷயத்தின் இன்னொரு அம்சத்துக்கு வருவோம். கம்யூனிசத்தைக் கொண்டுவரும் பொருட்டு எத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க கார்ல் மார்க்சோ கம்யூனிஸ்டுகளோ விரும்புகின்றனர்? இது முக்கியமான கேள்வி. துக்கம் இருந்து வருவதை அங்கீகரிப்பது, சொத்துரிமையை ஒழிப்பது என்ற அடிப்படையில் அமைந்த கம்யூனிசத்தைக் கொண்டுவருவதற்கு வன்முறையையும் பகைவர்களைக் கொல்லுவதையும் வழிமுறையாக கடைபிடிக்க கம்யூனிஸ்டுகள் விரும்புகின்றனர்.

இதில்தான் புத்தருக்கும் கார்ல் மார்க்சுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு அமைந்துள்ளது. குறிப்பிட்ட கோட்பாடுகளைக் கடைபிடிக்கும்படி மக்களைத் தூண்டுவதற்கு புத்தர் கடைப்பிடிக்கும் வழி ஒழுக்க போதனையும் அன்புமாகும்.

எதையும் அன்பு வெல்லுமே தவிர அதிகாரம் வெல்லாது என்ற சித்தாந்தத்தை, போதனையை, எதிராளிக்கு ஊட்டி அவனைத் தன் பக்கம் ஈர்க்க அவர் விரும்புகிறார். இங்குதான் ஓர் அடிப்படையான வேறுபாடு நிலவுகிறது. புத்தர் வன்முறையை அங்கீகரிக்க மாட்டார். கம்யூனிஸ்டுகள் அங்கீகரிப்பர்.

இதன்மூலம் கம்யூனிஸ்டுகள் உடனடியாக பலன்பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மனிதர்களை ஒழித்துக்கட்டும் வழிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளும்போது, உங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் உயிரோடு இருப்பதில்லை.

உங்கள் சித்தாந்தம் போல் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். காரியம் சாதிப்பதற்கான வழிமுறைகளை உங்கள் விருப்பம்போல் கடைப்பிடியுங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல் புத்தரின் வழி, நீண்ட வழி. மனச்சோர்வூட்டுகிற வழி என்றுகூட சிலர் கூறலாம். ஆனால் இதுதான் நிச்சயமான, சத்தியமான வழி என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

என்னுடைய கம்யூனிஸ்டு நண்பர்களைச் சந்திக்கும்போது இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எப்போதும் அவர்களைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் அவர்களால் என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதைப் பச்சையாக பட்டவர்த்தனமாக நான் கூறியாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனப்படுவதை வன்முறை மூலம்தான் அவர்கள் உருவாக்குகின்றனர். செல்வம் படைத்த அனைவரையும் அவர்கள் ஓட்டாண்டியாக்குகின்றனர். அவர்களது அரசியல் உரிமையைப் பறிக்கின்றனர். சட்டமன்றத்தில் அவர்கள் இடம்பெற முடியாது. வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்காது. அவர்கள் நாட்டின் இரண்டாந்தர பிரஜைகளாகவே இருப்பார்கள். ஆளப்படுபவர்களாக இருப்பார்கள். ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் பங்குகொள்ளக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

சர்வாதிகாரம் என்பது மக்களை ஆள்வதற்கு ஒரு சரியான முறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என நான் கேட்கும்போது அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் தெரியுமா? “இல்லை நாங்கள் அப்படி நினைக்கவில்லை, சர்வாதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை..”

“அப்படியானால் நீங்கள் எப்படி அதை அனுமதிக்கிறீர்கள்?” என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். “இது இடைக்காலக் கட்டம், இதில் சர்வாதிகாரம் இருந்தாக வேண்டும்” என்கின்றனர்.

நாம் தொடர்ந்து அது சரி இந்த இடைக்கால கட்டம் என்பது எத்தனை ஆண்டுகள்? இருபது ஆண்டுகளா? நாற்பது ஆண்டுகளா, ஐம்பது ஆண்டுகளா? என்று கேட்கிறோம். பதில் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படியோ தானாகவே மறைந்துவிடும் என்று அரைத்த மாவையே அரைப்பதுபோல் பதிலளிக்கின்றனர்.

நல்லது. அவர்கள் கூறுவதுபோல் சர்வாதிகாரம் அஸ்தமித்துவிடும் என்றே வைத்துக்கொள்வோம். இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சர்வாதிகாரம் மறைந்துவிடும்போது என்ன நடைபெறும்? அதனிடத்தில் எது இடம் பெறும்? மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையான அரசாங்கம் தேவையில்லையா? இதற்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.

பிறகு மீண்டும் புத்தரிடம் செல்லுகிறோம். அவருடைய தம்மம் பற்றிய இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். அவர் என்ன கூறுகிறார்? மனிதனது மனத்தையும் உலகத்தின் மனத்தையும் மாற்றினாலொழிய உலகத்தை சீர்படுத்த முடியாது என்று புத்தர் உலகுக்குக் கூறியது மிகப் பெரிய விஷயமாகும். மனம் மாறினால், கம்யூனிச அமைப்பு முறையை மனம் ஏற்றுக்கொண்டால், அதனை விசுவாசத்தோடு நேசித்தால் அது நிரந்தரமாகிவிடுகிறது.

மனிதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஒரு படை வீரனோ அல்லது காவல்துறை அதிகாரியோ தேவையில்லை. ஏன்? இதற்கான பதில் இதுதான். புத்தர் மனச்சான்றை ஊக்குவித்து நீங்கள் சரியான வழியில் செல்லுவதற்கு வழிகாட்டும் காவலாளியாக அதை மாற்றியிருக்கிறார். மனம் மாற்றப்பட்டு எந்த ஒரு விஷயமும் நிரந்தரமாகிவிடும்போது எத்தகைய இடர்பாடும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

கம்யூனிச அமைப்பு வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. நாளைய தினம் ரஷ்யாவில் சர்வாதிகாரம் தோல்வியடைந்து அதன் தோல்விக்கான அறிகுறிகளை நான் காணும்போது என்ன நடக்கும்? கம்யூனிச அமைப்புக்கு என்ன நேரும் என்பதை உண்மையிலேயே நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நாட்டின் சொத்தைக் கபளீகரம் செய்து கொள்வதற்கு ரஷ்ய மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டு கொடிய ரத்தக் களறியில் ஈடுபடுவார்கள். இவ்வாறுதான் அதன் விளைவு இருக்கும். ஏன்? ஏனென்றால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து கம்யூனிச அமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடந்துகொள்கிறார்கள்.

ஏனென்றால் தாங்கள் தூக்கிலிடப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு. இத்தகைய அமைப்பு ஆழ வேரூன்ற முடியாது. இந்தக் கேள்விகளுக்குக் கம்யூனிஸ்டுகள் பதிலளிக்க இயலவில்லை என்றால் அவர்களது அமைப்பு என்னவாகும்? வன்முறை மறைந்துவிடும்போது அதனைப் பின்பற்றுவதில் பயனேதும் இருக்காது. ஏனென்றால் மனம் மாறாத போது வன்முறை தேவை. முடிவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். புத்த மதத்தில் நான் காணும் மிக முக்கியமான அம்சம் அது ஒரு ஜனநாயக அமைப்பு முறை என்பதேயாகும். வஜ்ஜிகளை வெற்றிக்கொள்ள அஜாத சத்ரு விரும்புகிறார் என்று அவரது பிரதமர் புத்தரிடம் சென்று கூறியபோது, வஜ்ஜிகள் தங்களுடைய தொன்னெடுங்கால மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வரும்வரை அவர்களை ஒருபோதும் உங்கள் மன்னரால் வெற்றிகொள்ள முடியாது என்று புத்தர் அவனிடம் கூறினார்.

தாம் சொன்னதன் பொருளை என்ன காரணத்தினாலோ புத்தர் விளக்கிக் கூறவில்லை. வஜ்ஜிகள் நடத்திவரும் ஜனநாயகக் குடியரசு முறையிலான அரசாங்கத்தை மனதில் வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் சொன்னார், “வஜ்ஜிகள் தங்கள் ஆட்சி முறையைக் கடைப்பிடித்து வரும்வரை அவர்களை எவரும் வெல்ல முடியாது.” புத்தர் ஒரு மாபெரும் ஜனநாயகவாதி என்பதிலும் அணுவளவும் ஐயமில்லை.

எனவே ஜனாதிபதி என்னை அனுமதித்தால் பின்வருமாறு கூறுவேன். நான் அரசியல் துறை மாணக்கனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறை மாணவனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறைப் பேராசிரியராக இருந்துள்ளேன். கார்ல் மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டுள்ளேன். அதேசமயம் புத்தரின் தம்மத்தைப் படிப்பதிலும் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன். உலகை இன்று ஒரு மாபெரும் பிரச்சினை எதிர்நோக்குகிறது. உலகில் துக்கம் நிலவுகிறது. அந்தத் துக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதே அந்தப் பிரச்சினை. இதற்குப் புத்தர் தெரிவித்துள்ள யோசனைகள்தான், பரிகாரம்தான் மிகவும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது, இதுவே சிறந்தது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தேன்.

……இந்தப் பிரச்சினையை நான் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க விரும்பினேனோ அதைத்தான் செய்துள்ளேன். கம்யூனிஸ்டுகளின் வெற்றிகளைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். புத்தரைப் போல் நாம் விழிப்படைவோமானால் அன்பு, நீதி, நல்லெண்ணம் என்னும் வழிமுறைகளைப் பின்பற்றி இதே சாதனையை நம்மாலும் புரிய முடியும் என்பதில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு.’’

என்று முடிக்கிறார் அம்பேத்கர்.

ஆகவே கம்யூனிசம் வன்முறையை அடிப்படையாகவும் மதத்தை வெறுப்பனவாகவும் இருந்த காரணத்தினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை கம்யூனிசச் சித்தாந்தத்திற்கு ஆட்படவிடவில்லை.

கடைசியாக அவர்முன் நின்றது பௌத்தம்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard