New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைக்கமும் காந்தியும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வைக்கமும் காந்தியும்
Permalink  
 


வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.

 ஆகவே வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்.

 பலர் திராவிட இயக்கத்தை பரப்பியம் நோக்கிக் கொண்டுவந்தவர் அண்ணாத்துரை அவர்கள்தான் என்று சொல்வதுண்டு. அது உண்மையல்ல என்பதை ஈ.வே.ரா அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் எவரும் இன்று காணலாம். எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார். எந்த உரையிலும் அவர் சமநிலையுடன் எதையும் அணுகியதில்லை. அனைத்தையுமே அப்போது அவருக்குப் பட்ட உச்சநிலைக்குக் கொண்டுசெல்வதுதான் அவரது வழிமுறை. ஆகவேதான் அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன. சீரான ஒரு நிலைபாட்டையோ அல்லது தொடர்ச்சியான தர்க்கபூர்வ வளர்ச்சியையோ அவரது உரைகளில் காணமுடியாது.

 ஈ.வே.ரா அவர்கள் காந்தியைப் பற்றிச் சொன்ன வரிகளைப் பிடுங்கி இங்கே இன்று சிலர் வரலாறுகளை உருவாக்க முயல்கிறார்கள். காந்தியைப்பற்றிய அவரது கருத்துக்களும் இரு எல்லைகளில்தான் உள்ளன. காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்.

 ஈ.வே.ரா அவர்கள் காந்தியைப்போலவே ஓர் அரசின்மைவாதி, மிகையுணர்வாளர். ஆனால் காந்தியைப்போலன்றி அவர் ஒரு முழுமறுப்பாளர். சமநிலையும் கட்டுப்பாடும் இல்லாதவர். வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.

 திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டுசென்றவர் கவற்சியான பரப்புயவாதியான சி.என்.அண்ணாத்துரை அவர்களே. அன்றைய காங்கிரஸ் அரசின் மீதான அனைத்து அதிருப்திகளையும் பயன்படுத்திக்கொண்டு ஓர் அரசியலியக்கமாகவே அவர் அதை முன்னெடுத்தார். அதற்காக ஈ.வே.ரா அவர்களின் அடிப்படைக்கூற்றுகளை எல்லாம் அவர் சமரசப்படுத்திக்கொண்டார். கடவுள் எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு உட்பட.  அதற்காக ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஈ.வே.ரா அவர்களின்  அமைப்பில்  அண்ணாத்துரை அவர்கள் இருந்து பிரிந்து வந்தார்.

 அவ்வாறு அவர் ஈ.வே.ரா அவர்களை கைவிட்டதனாலேயே அவர் மக்கள்செல்வாக்கு கொள்ள முடிந்தது. அந்த செல்வாக்கு வழியாக உருவாகி வந்த இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனால்தான் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமை இன்றுள்ள பெரும் வடிவை அடைகிறது.

 அதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை. நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ காந்தி ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. அவரது காலகட்டத்தில் கோடானுகோடிகளின் குரல் அவர். ஈ.வே.ரா அன்று ஒரு சிறு குறுங்குழுவை நடத்தி வந்தவர் மட்டுமே. காந்திக்கு எதிரான ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களையெல்லாம் இந்த ஒப்பீட்டுடன் மட்டுமே நாம் அணுக முடியும்.

 அதே சமயம் ஒரு முழுமறுப்பாளர் என்ற வகையில் ஈ.வே.ரா அவர்களின் ஆளுமையின் தீவிரத்தை நான் மதிக்கிறேன். அவரது ஆளுமையின் வீரியத்தால் அவர் ஒரு வரலாற்று சக்தியாக, கருத்தியல் தரப்பாக இருந்தார். அவரது பங்களிப்பை கறாராக மதிப்பிட்டுக் கொண்டே கூட நாம் தமிழக வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். வைக்கம் போராட்டத்தையும்.

 வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்புசரிகளின் ஆட்டமாக அல்லாமல் சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக்கொள்வது உகந்தது. பல்வேறு பண்பாட்டுச் சூழல்களும் கருத்துநிலைகளும்  கொண்ட இந்நாட்டில் எந்த ஒரு நிகழ்விலும் முழுக்க மாறுபடும் பல தரப்புகள் இருக்கும். இன்றைய பிரச்சினைகளையே எடுத்துக்கொண்டு பார்க்கலாம். கொடியன்குளம் நிகழ்ச்சி அல்லது உத்தப்புரம் நிகழ்ச்சியில் திராவிட இயக்கங்கள் கீழ்த்தரமான சாதிவெறுப்பு அமைப்புகளாக நடந்துகொண்டன என்றே  தலித் அமைப்புகள் பொதுவாக பதிவுசெய்கின்றன. ஆனால் நான் அங்கே மாறுபட்ட தரப்புகள் இருந்தன என்றே எடுத்துக் கொள்வேன். ஒரு தரப்பு இன்னொன்றை பற்றிச் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள மாட்டேன்.

 இனி வைக்கம். 1924 முதல் 1925 வரை நடந்த வைக்கம் சத்தியாக்கிரகம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். கோட்டயம் அருகே உள்ள வைக்கம் கேரளத்தில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று. பிராமணியத்தின் மையமும் கூட. கேரளத்தில் அன்றிருந்த தீண்டாமைமுறை வைக்கத்திலும் இருந்தது. வைக்கம் கோயிலுக்குள் நுழைவதற்கும் ஆலயத்திற்குச் சுற்றிலும் இருந்த தெருக்களிலும் குளங்களிலும் ஈழவர் உட்பட தாழ்ந்த சாதியினர் நடமாடுவதற்கும் தடை இருந்தது. இந்தத் தடை கேரளத்தில் இருந்த எல்லா கோயில்களிலும் இருந்தது.

 இங்கே கேரளச் சமூக இயக்கங்களின் பின்புலத்தை புரிந்துகொள்ள வேண்டும். கேரளம் கடுமையான ஆசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட சமூகமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. அங்கிருந்த தீண்டாமை என்பது பிற இந்தியப்பகுதிகளில் நிலவியதைவிட அதிகம். அதாவது எல்லா சாதியினரும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டனர். பிராமணர்களுக்குள்ளேயே சிலரை பிறர் தீண்டமாட்டார்கள். நாயர்களை பிராமணர் தீண்டமாட்டார்கள். நாயர்கள் ஈழவர்களை தீண்டமாட்டார்கள்.

 தீண்டாமை மட்டுமல்ல ஆயித்தம் என்று சொல்லப்பட்ட தூரம் விடும் ஆசாரமும் உண்டு. நாயரைப் பார்த்தால் ஈழவர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஈழவரைப்பார்த்தால் புலையர் நான்கடி விலகி நிற்க வேண்டும். ஆகவே நாயரிடமிருந்து புலையர் எட்டடி தள்ளி நிற்க வேண்டும். நாயாடிகள் போன்ற சிலசாதியினரை கண்ணால் பார்ப்பதே தீட்டு என்ற நிலை நிலவியது.

 ஏன் இந்த உக்கிரம் என்று யோசித்தால் தெரிவது கேரளம் தமிழகம் சந்தித்த பிற அன்னியப் படையெடுப்புகள் ஏதும் நிகழாமல் மலைகளால் பொத்திப் பாதுகாக்கப்பட்ட நிலம் என்பதே. இவ்வாறு புறப்பாதிப்பு இல்லாத இடங்களில் இருப்பவர்களே தேங்கிப்போய் பழங்குடிகளாக நின்றுவிடுகிறார்கள். கேரளத்தில் மிகத்தொன்மையான தமிழக ஆசாரங்களும் கொண்டாட்டங்களும் நம்பிக்கைகளும் இப்போதும் நிலவுகின்றன. தொன்மையான பழங்குடித் தமிழே பேசப்பட்டு பின்னர் சம்ஸ்கிருதம் கலந்து மலையாளமாகியது. கேரளம் முழுக்க இன்றும் பழங்குடிப் பண்பாட்டுக்கூறுகள் வலுவாகவே இருக்கின்றன.

 

 அதாவது கேரளம் புறத்தொடர்புகள் இல்லாமல் பழங்குடிமனநிலையை அப்படியே நீட்டித்துக்கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. கேரளத்தில் இருந்த சாதிவிலக்குகளும் தீண்டாமையும் எல்லாம் பழங்குடிமரபில் இருந்து வந்தவையே. இதற்கு ஆதாரமாகக் கூறப்படவேண்டியது கேரளத்திலேயே உள்ள  எந்த புறத்தொடர்பும் இல்லாத உச்சிமலைப் பழங்குடிகளுக்குள் இன்றும் நிலவும் இன்னும் உக்கிரமான தீண்டாமையும் ஆயித்தமும்தான்.

 தீண்டாமை ஆயித்தம் தவிர இன்னும் பலவகையான பழங்குடித்தன்மை கொண்ட விலக்குகளும் கேரளத்தில் இருந்தன. பலவகையான உணவுகளுக்கு விலக்கு. உதாரணமாக, புலையர்கள் சமீபகாலம் வரைக் கூட பால் குடிக்கமாட்டார்கள். அதேபோல குடுமி வைத்துக்கொள்வது உடைகள் அணிந்து கொள்வது போன்ற அனைத்திலுமே விதிகளும் விலக்குகளும் உண்டு. மண உறவுகளில் விசித்திரமான பல விஷயங்கள் உண்டு. நாயர், ஆசாரிமார் உட்பட பல சாதிகளில் ஒருபெண்ணுக்கு ஒரேசமயம்  பல கணவர்கள் இருக்கலாம் என்ற வழக்கம் இருந்தது. 

 அதேபோல சமூக விலக்குகள் பல இருந்தன. விலங்குகளை சுமைதூக்க வைக்க கேரளத்தில் தடை இருந்தது. குறிப்பிட்ட இரு ஆறுகளுக்கு நடுவே வாழ்பவர்கள் அந்த ஆறுகளை தாண்டிச்செல்லக்கூடாது என்ற ஆற்றுவிலக்கு [புழவிலக்கு] இருந்தது. வருடத்தில் ஒரு நாள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்த உயர்சாதிப்பெண்ணை கண்ணால் பார்க்கிறானோ அவளை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற ஆசாரம் இருந்தது. இதற்கு புலைப்பேடி என்று பெயர். இன்னும் மிகமிகப் பழமையான பல பழங்குடி ஆசாரங்கள் இருந்தன.

 இத்தகைய சூழலில்  சுவாமி விவேகானந்தரின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1892 ல் சுவாமி விவேகானந்தர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கிய திருவனந்தபுரத்துக்கு வந்தார். மகாராஜாவின் விருந்தினராகத் தங்கியிருந்தார். இங்குள்ள ஆசாரங்களைக் கண்டு அவர் கொதிப்படைந்து ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று கருத்து தெரிவித்தார் என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாராயண குரு

1893ல் சுவாமி விவேகானந்தர் மைசூருக்குச் சென்றபோது அங்கே டாக்டர் பல்பு அவரைச் சந்தித்தார். மிஷனரிகளின் உதவியால் ஆங்கிலக்கல்வி கற்ற சில ஈழவர்களில் ஒருவர் அவர். கேரளச் சாதியமைப்பினால் அவருக்கு கேரளத்தில் வேலை கிடைக்கவில்லை. மைசூருக்குச் சென்று அங்கே உயர்பதவியில் அமர்ந்தார். இங்கே கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. மைசூரிலும் சாதியமைப்பு கடுமையாக இருந்தது. ஆனால் கேரளத்தில் உள்ள சாதி படிநிலை அங்கே செல்லுபடியாகாது. அங்குள்ளச் சாதிப்படிநிலை இங்கே செல்லுபடியாகாது.

 

விவேகானந்தரிடம் டாக்டர் பல்பு கேரளத்தின் சாதி முறைக்கு எதிராக என்ன செய்யலாம் என்று கேட்டார். விவேகானந்தர் ஒரு துறவியை முன்னிறுத்தி பணிகளை ஆரம்பியுங்கள், மக்கள் திரண்டு வருவார்கள் என்றார்.  தான் திருவனந்தபுரம் வந்தபோது சந்தித்த சட்டம்பி சுவாமிகளின் மாணாக்கரான நாரா¡யண குருவைப்பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டு அவரைச் சந்திக்கும்படி ஆலோசனை சொன்னார்

 

கேரளம் வந்த டாக்டர் பல்பு திருவனந்தபுரம் அருகே அருவிப்புறம் என்ற ஊரில் ஆசிரமம் அமைத்திருந்த நாராயண குருவை சென்று சந்தித்தார். 1855ல் ஈழவகுடும்பத்தில் பிறந்து துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்த நாராயணகுரு 1888 ல் அருவிப்புறத்துக்கு வந்து அருவியில் இருந்து எடுத்த ஒரு கல்லை சிவலிங்கமாக நிறுவி ஓர் ஆலயத்தை எழுப்பி அங்கே ஈழவர்களாலெயே பூஜைகளையும் செய்வித்துவந்தார். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மலையாளத்திலும் பேரறிஞராக திகழ்ந்தார். ‘ஜாதிபேதம் மதபேதம் இல்லாமல் அனைவரும் வாழும் இடம் ‘ என தன் ஆசிரமத்தை அறிவித்தார். இதெல்லாம் அன்று பெரும் சர்ச்சையை உருவாக்கிய விஷயங்களாக இருந்தன.

 

டாக்டர் பல்பு நாராயணகுருவை முன்னிறுத்தி சமூக சீர்திருத்ததுக்காக ஒரு பெரும் இயக்கத்தை ஆரம்பித்தார்.  ஏற்கனவே நாராயணகுரு வாவூட்டு யோகம் என்றபேரில் ஒரு சிறிய அமைப்பை நடத்திவந்தார். அது சமபந்தி உணவுக்கான ஓர் அமைப்பு. அது ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் என்று பெயர் கொண்ட அமைப்பாக  1903ல் பதிவு செய்யப்பட்டது. கேரள சமூக வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த இயக்கம்.

 முதன்மையாக எஸ்.என்.டி.பி ஒரு கல்வி இயக்கம்.. நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் பள்ளிகளையும் நிறுவி இந்தியாவின் பெரும் கல்வியமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது இன்று.  ஈழவ சமூகத்தையும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் சமூக இழிவுகளுக்கு எதிராக போராடச்செய்தது. கல்வியிலும் பொருளியலிலும் சுயமேம்பாடு அடைவதும் உரிமைகளுக்காக ஜனநாயகம் உறையில் தொடர்ச்சியாக போராடுவதும் அதன் வழிகள். 1915க்குள் எஸ்.என்.டி.பி கேரளவரலாற்றின் முதன்மையான சமூக இயக்கமாக மாறி சாதிய அடிப்படைகளை உலுக்க ஆரம்பித்ததுவிட்டது..

 இன்றைய கேரளத்தின் பண்பாட்டு சாதனைகள் எல்லாமே இந்த இயக்கம் வழியாக உருவாகி வந்தவை. உதாரணமாக இன்று கேரளத்தில் உள்ள முக்கியமான மூன்று நாளிதழ்கள் இவ்வியக்கத்தால் உருவாக்கப்பட்டவை. கேரளத்தின் அரசியலில் இலக்கியத்தில் இதழியலில் வரலாற்றாய்வில் கலைகளில் எல்லாம் முக்கியமான  முன்னோடி ஆளுமைகள் நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து உருவாகி வந்தார்கள்.

 நாராயணகுருவின் இயக்கம் ஒரு தொடக்க விசை, ஒரு முன்னுதாரணம். நாராயணகுருவின் இயக்கத்தின் அலையே நம்பூதிரிகளில் யோகஷேம சபா போன்ற சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கியது. அதில் இருந்துதான் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு உருவாகி வந்தார். புலையர்களில் அய்யன்காளியின் புலையர்மகாசபை உருவாகி வந்தது. நாயர்களில் நாயர் சர்வீஸ் சொசைட்டி [என்.எஸ்.எஸ்] உருவாகியது. இவையெல்லாமே நாராயணகுருவின் இயக்கத்தின் நட்பு சக்திகளாகச் செயல்பட்டன.

 நாராயணகுருவின் இயக்கம் சமூக உரிமைகளுக்கான வெகுஜனப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. பொது இடங்களில் நடமாடுவதற்கான உரிமை, பொதுக்கல்வி நிறுவனங்களில் கல்விகற்பதற்கான உரிமை, அரசு வேலைகளில் பங்கு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்திவந்தது. சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தாலும்கூட இவ்வியக்கம் பொதுவாக ஜனநாயக இயக்கமாகவே இருந்தது. விளைவாக திருவிதாங்கூர் மன்னருக்கு ஆலோசனைசொல்லக்கூடிய சட்டச்சபையில் ஈழவர்களுக்கும் புலையர்கள் உட்பட சாதிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.

 

சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் நாராயணகுருவின் இயக்கம் நடத்தியது. நாராயணகுருவின் முதற்சீடரும் கடுமையான நாத்திகருமான ‘சகோதரன்’ அய்யப்பன் 1917ல் கொல்லம் அருகே செறாயி என்ற இடத்தில் புலையர்களும் ஈழவர்களும் சேர்ந்து உணவுண்ணும் இயக்கத்தை ஆரம்பித்தார். சமபந்தி இயக்கம் என்று சொல்லப்படும் இவ்வியக்கம் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியபடி நடந்தது. இதை கலப்புத்திருமண இயக்கமாக ஆக்கி சகோதர இயக்கம் என்று பெயரிட்டார் அய்யப்பன். சகோதரன் என்ற இதழையும் நடத்தினார்

 

இந்தச்சூழலில்தான் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தது. கேரளத்தில் உள்ள பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் ஈழவர்கள் கோயில் வீதிகளில் நுழைய அனுமதி கோரி போராடிக்கொண்டிருந்த காலம் அது. அதன் ஒருபகுதியாக திட்டமிடப்பட்டது வைக்கம். எஸ்.என்.டி.பி யோகத்தின் தலைவராக இருந்தவர் என்.குமாரன். செயலாளர் டி.கெ.மாதவன். இவ்விருவரும் இணைந்தே வைக்கம் போராட்டத்தைத் திட்டமிட்டார்கள்.

 

டி.கெ.மாதவன்

வைக்கம் வீரர் என்று எவரையாவது சொல்லவேண்டுமென்றால் அது டி.கெ.மாதவனை மட்டுமே. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல இந்தியாவின் ஆலயநுழைவுப்போராட்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியே அவர்தான். 1885ல் நடுத்தர ஈழவக்குடும்பத்தில் பிறந்த டி.கெ.மாதவன் இளவயதில் குலவழக்கப்படி சம்ஸ்கிருதமும் வைத்தியமும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றார். 1914ல் நாராயணாகுருவை மாதவன் சந்தித்தார். அது அவரது ஆளுமையை உருவாக்கியது. சமூக சீர்திருத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஆணையை அவருக்கு நாராயணாகுரு அளித்தார்.

 

1914 ல் மாதவன் தேசாபிமானி என்ற செய்தி இதழை சொந்த செலவில் ஆரம்பித்தார்.1917 முதல் அதை நாளிதழாக நடத்த ஆரம்பித்தார். நாராயணகுருவின் இயக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்றும் நடந்துவரும் மூன்று நாளிதழ்களில் முதலாம் நாளிதன் தேசாபிமானியே.  இன்று தேசாபிமானி மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. தேசாபிமானியில் அலாயப்பிரவேசம் குறித்து பல கட்டுரைகள் எழுதிய மாதவன் 1916ல் ‘ஷேத்ரபிரவேசம்’ என்று ஆலயப்பிரவெசத்தைப்பற்றி ஒரு நூலும் வெளியிட்டார். 

 

1916ல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் நடந்த பாரதமகாசபா மாநாட்டில் பங்கெடுத்த மாதவன் ஆலயபிரவேசத்தைப்பற்றி ஒரு தீர்மானம் கொண்டுவரும்படி அன்னிபெசண்டிடம் கோரினார். அன்னிபெசன்ட் அதற்கு ஒத்துக்கொள்ளவே தீர்மானம் அன்னிபெசண்டால் கொண்டுவரபப்ட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிரதி திருவிதாங்கூர் மன்னருக்கு அனுப்பப்பட்டது.  

 1918ல் மாதவன் திருவிதாங்கூரின் சட்டச்சபையான ஸ்ரீமூலம் சபைக்கு ஈழவர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டார். 1918ல் ஸ்ரீமூலம் சபையில் அவர் நிகழ்த்திய முதல் உரையே ஆலயநுழைவுரிமை சார்ந்ததுதான். அதன்பின்னர்தான் மாதவன் காங்கிரஸ் உறுப்பினரும் தலைவரும் ஆகி காந்தியைச் சந்தித்து அவரது வழிகாட்டுதலுடன் வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார். 1927 ல் எஸ்.என்.டி.பி அமைப்பின் பொதுச்செயலராக தேர்வுசெய்யப்பட்ட மாதவன் 1930ல் தன் ஐம்பத்தைந்தாம் வயதிலேயே மரணமடைந்தார்

 நாராயணகுரு இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவளிக்கவில்லை. காரணம் அவர் நேரடி மோதல்போக்கை குருவிரும்பவில்லை. நாராயண குருவின் இயக்கம் பல இடங்களில் நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு வித்திட்டிருந்தன. மோதல் போக்கு தொடர்ந்தால் இயக்கம் ஆரம்பித்திருந்த பிரம்மாண்டமான கல்விப்பணிகள் பாதிக்கும் என்று நாராயணகுரு அஞ்சினார். வைக்கம் தெருவில் நுழைவதன் மூலம் உடனடியாக அடையப்பெறும் பலன்களும் ஏதுமில்லை என நினைத்தார்.

 ஆனால் டி.கெ.மாதவன் முக்கியமான பல ஈழவத்தலைவர்களைக் கொண்டு சொல்லவைத்து நாராயணகுருவின் அனுமதியைப் பெற்றார். வன்முறையே நிகழாது என்று தனிப்பட்டமுறையில் நாராயணகுருவுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். ஆகவே நாராயணகுரு ஒத்துக்கொண்டார். ஆனால் எஸ்.என்.டி.பி நேரடியாக இதில் ஈடுபடக்கூடாது என விலக்கிவிட்டார்.

 மாதவனின் தீவிரத்துக்குக் காரணமாக ஒரு வரலாற்றுப்பின்புலம் உண்டு. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர் வைக்கம் ஆலயத்தின் நிலங்களை கவனித்துக்கொண்டிருந்த ஈழவர்கள் அங்குள்ள களங்களில் நுழைய அனுமதி கோரி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் ஆலய வளாகத்தில் நுழைய அனுமதி அளித்தார்.காரணம் மன்னர் பாலராம வர்மா ஆங்கிலக்கல்வி கற்ற நாகரீக மனிதர்.

 ஆனால் ஈழவர்கள் ஆலயவளாகத்தில் நுழைந்தபோது திருவிதாங்கூர் திவான் குஞ்சுகுட்டிப்பிள்ளை தளவாயின்  ஆணைப்படி நாயர்படை கிளம்பிவந்து அத்தனை ஈழவர்களையும் கொன்று பின்னர் தளவாய்க்குளம் என்று பெயர் பெற்ற குளத்தில் போட்டுவிட்டது. மன்னரால் திவானை எதிர்க்க முடியவில்லை, ஏனென்றால் தளவாய்க்கு பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் துரையின் வலுவான ஆதரவு இருந்தது. மன்னர் பொம்மையாக இருந்தார்.

 1905 ல் திருவிதாங்கூர் சட்டச்சபையில் ஈழவ உறுப்பினர்கள் வைக்கம் ஆலய வளாகத்துச்சாலையில் நுழையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஈழவர்கள் புலையர்கள் சேர்ந்து நடத்திய ஜனநாயகப் போராட்டங்களின் விளைவாக முன்னரே பொதுச்சாலைகளை பொது மக்கள் அனைவருக்குமாக திறந்துகொடுக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் வைக்கம் சாலை பிரச்சினை மத உரிமை சம்பந்தமானது என்று சொல்லப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. 1920 ல் சட்டச்சபை உறுப்பினராக இருந்த கேரள மகாகவிஞரும் எஸ்.என்.டி.பி செயலருமான குமாரன் ஆசான் பலமுறை இப்பிரச்சினையை சட்டச்சபையில் கிளப்பினார்.

 திவான் ராகவையர் அப்போது சர்வ வல்லமைகொண்டவராக திருவிதாங்கூரை ஆட்சி செய்தார். அவருக்கு ஆங்கில ஆட்சியின் வலுவான  ஆதரவு இருந்தமையால் மன்னர் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திவானை நியமிக்கும் உரிமையையே ஆங்கில ஆட்சிதான் வைத்திருந்தது. மன்னர் மூலம்திருநாள் ராமவர்மாவைக் கண்டு வைக்கம் சாலைநுழைவுப்பிரச்சினையைச் சொல்ல பலமுறை டி.கெ.மாதவன் முயன்றார். ஆனால் அதனால் பயனேதும் விளையவில்லை. திவான் ராகவையருடைய ஆட்கள் தடையாக இருந்தார்கள்.

 ”குறைகளை பிரஜைகள் மன்னரைக் கண்டு சொல்லமுடியவில்லை என்றால் ஈழவ மக்கள் என்ன செய்யவேண்டும், திருவிதாங்கூரை விட்டு ஓடவேண்டுமா?” என்று டி.கெ.மாதவன் கேட்டபோது ”சரி, ஓடுங்கள்” என்று திவான் ராகவையர் பதில் சொன்னார். இந்தபதில்தான் உண்மையில் வைக்கம் போராட்டத்திற்கான பொறி.

 சுவாரசியமான அம்சம் ஒன்றுண்டு. அன்றைய பிரிட்டிஷ் ரெஸிடண்ட் கர்னல் மக்காலே தெந்திருவிதாங்கூரில் கிறித்தவ நாடார்களின் உடைகளை அணியும் உரிமை போன்றவற்றில் நேரடியாக ஈடுபாடு காட்டினார். ஆனால் ஈழவர்களின் போராட்டங்களில் திவானுக்குச் சாதகமாக எதிர்நிலை எடுத்தார். காரணம் ஈழவர்கள் ஒட்டுமொத்தமாக கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டால் உரிமைகளைப் பெற்றுத்தருவதாக 195 முதலே பேரங்கள் நடந்து வந்தன. நாராயணகுரு அதற்கு பெரும் தடையாக இருந்தார். 

 டி.கெ.மாதவன் நாராயண இயக்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருந்துகொண்டே காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். ஆங்கில ஆட்சி நேரடியாக இல்லாமல் இருந்த காரணத்தால் திருவிதாங்கூரில் இந்திய தேசிய காங்கிரஸ் பெயரளவுக்கே அப்போது இருந்தது. வடகேரளத்தில் கிலாபத் போராட்டத்தை ஒட்டி காங்கிரஸ் மெல்ல மெல்ல வேரூன்றியது. கெ.பி..கேசவமேனன், பி.கேளப்பன் போன்ற தலைவர்கள் உருவாகி வந்தார்கள்.

 1921ல் செப்டெம்பரில் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாக வந்த டி.கெ.மாதவன் காந்தியைச் சந்தித்து திருவிதாங்கூரில் உள்ள ஈழவர்களின் போராட்டத்தைப் பற்றி காந்தியிடம் விவாதித்தார். காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ஆனால் காந்தியையும் பேசி தன் தரப்புக்கு இழுக்க டி.கெ.மாதவனால் முடிந்தது. விளைவாக என்ன செய்யலாமென்று ஆலோசனை சொல்லும்படி காந்தி கேரள காங்கிரஸ் பிரிவுக்கு எழுதிக்கேட்டார்.

 

1923ல் காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் டி.கெ.மாதவன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர்களான கெ.பி.கேசவமேனன், சர்தார் கெ.எம்.பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்து இப்பிரச்சினையை எழுப்பினார். சாதி ஒழிப்புக்காக போராடுவதை தேசிய விடுதலைப்போராட்டத்தின் பகுதியாக காகிநாடா காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. திருவிதாங்கூர் காங்கிரஸ் நேரடியாக இதில் ஈடுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க காந்தி கேட்டுக்கொண்டார்

 1924 ஜனவரி 24 அன்று எரணாகுளத்தில் கே.வேலப்பன் தலைமையில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதில்  டி.கெ.மாதவன் செயலர். குரூர் நீலகண்டன் நம்பூதிரி, டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், கே. வேலாயுதமேனன் ஆகியோர் பிற உறுப்பினர்கள். டி.கெ.மாதவன் தலைமையில் ஒரு பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டது. 1924 பிப்ரவர் 28 ஆம் தேதி வைக்கத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம்  கூட்டப்பட்டது. பொதுநடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு எதிரான எந்தத் தடையும் மீறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் வைக்கம் போராட்டத்தின் தொடக்கமாகும்.

 வைக்கம் சத்யாக்கிரகம் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தது பெருங்கூட்டமாக சென்று வைக்கம் ஆலயத்தில் நுழைவதறகாகவே. ஆனால் அது பெரிய அடிதடியில் முடியும் என்பதுடன் அதன் மூலம் ஈழவர்களுக்கே தீங்கு வரும் என்று நாராயணகுரு அபிப்பிராயப்பட்டார். மேலும் போராட்டத்தை கேரளம் முழுக்க எல்லா கோயில்களிலும் முன்னெடுக்கவேண்டுமென்றால் வைக்கம் போராட்டத்தை பலநாட்களுக்கு நீளக்கூடிய ஒரு தொடர் நிகழ்வாக ஆக்குவதே நல்லது என காங்கிரஸ்தலைவர்களும் எண்ணினார்கள். வாய்ப்பாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அந்த தெருவில் நுழைவதற்கு அரசு தடை விதித்தது. தடையை மீறுவதே போராட்டம் என ஆகியது.

 ஆகவே  வைக்கம் ஆலயத்திற்கு அருகே ஒரு பந்தல் கட்டி அமர்ந்துகொள்வதென்றும் தினமும் சிறு சிறு குழுவாக சத்யாகிரகிகளை அந்த அவ்ழியாக அனுப்பி கைதாகச்செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1924 மார்ச் 30ல் முதல் குழு சென்றது. ஒவ்வொருகுழுவிலும் ஒரு புலையர் ஒரு நாயர் ஒரு ஈழவர் வீதம் அமையும்படி அந்தப்போராட்டம் அமைக்கப்பட்டது. முதல்குழுவில் கொச்சாப்பி [புலையர்] பாகுலேயன் [நாயர்]  கோவிந்தப்பணிக்கர் [ஈழவர்] ஆகியோர் இருந்தனர். போலீஸ் அவர்களை தடுத்து நாயரை மட்டும் உள்ளே விட முயலும்போது பிற இருவருடன் மட்டுமே தானும் உள்ளே போவதாகச் சொல்லி மூவருமே கைதாவார்கள் . இதுவே போராட்ட முறை.

 சத்தியாக்கிரக பந்தலில் தினமும் பொதுக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. செய்திகள் கேரளம் முழுக்க சென்று சேரும்படி பெரிய பிரச்சார வலையும் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்த இந்த போராட்டம் ஏப்ரல் 5, 6 தேதிகளில் மட்டும் தடைபட்டது. அன்று உயர்சாதியினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.

 தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இந்த போராட்டம் தேசிய அளவில் கவனத்தை கவர்ந்தது. இந்தியா முழுக்க இருந்து சுவாமி சிரத்தானந்தா, வினொபா பாவே போன்ற முக்கியமான பலர் வந்து போராட்டத்தை பார்வையிட்டார்கள். ஆலயநுழைவுக்கு எதிராக பழமைவாதிகளும் மன்னரும் அரசும் உறுதியாக நின்றார்கள். ஈழவர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.கெ.குஞ்šராமன் ஈழவர்கள் உடனடியாக மதம் மாறவேண்டும் என்று தன்னுடைய நாளிதழான கௌமுதியில் ஒரு தலையங்கம் எழுதினார். சீக்கியமதம், கிறித்தவமதம், இஸ்லாம் மதம் மூன்றையும் பரிசீலிப்பதாக அவர் சொன்னார். ஒரு சிறிய ஈழவர் குழு பஞ்சாபுக்குச் சென்று சீக்கியர்களாக மதம் மாறியது.

 அதைத்தொடர்ந்து சீக்கியர்களின் தூதுக்குழு ஒன்று வைக்கத்துக்கு வந்து ஈழவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவல் பரவியதும் இஸ்லாமிய கிறித்தவ அமைப்புகளும் களமிறங்கின. பாரிஸ்டர் போத்தன் ஜோச·ப், பஜே மாதரம் மாத்துண்ணி, அப்துல்ரகுமான் சாகிப் போன்றவர்களும் களமிறங்கினார்கள். இந்தப்போராட்டமே மாற்று மதத்தவரால் இந்து மத அமைப்புகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று திவான் குறிப்பிட்டார்.

 இந்தச் சந்தர்ப்பத்தில்தான் 1924 ஏப்ரல் 14 அன்று ஈ.வே.ரா அவர்கள் தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். நடைமுறையில் ஈவேரா அவர்கள் வைக்கம் போராட்டத்தில் வகித்த பங்கு என்பது மிகக் குறைவானதே. அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை.

 இந்தக் காலகட்டத்தில் அரசு வைக்கம் சாலைக்கு குறுக்கே தட்டுப்புச்சட்டகங்கள் அமைத்து விட்டிருந்தது. அந்த சட்டகங்களை கடக்க முனைந்த அத்தனைபேரும் கைதுசெய்யப்பட்டார்கள். போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை. ஈவேரா அவர்கள் அவருக்கான மூக்கியத்துவத்தைப் பெற்றது  அவர் காங்கிரஸை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னர்தான்.

 வைக்கம் போராட்டம் குறித்து கேரளத்தில் வெளிவந்த அக்காலத்தைய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈவேராவின் பெயர் காணப்படவில்லை. ஈழவ இதழ்களான கேரளகௌமுதி போன்றவற்றில்கூட அவரது பெயர் பட்டியலில் ஒன்றாகவே உள்ளது. வைக்கம்போராட்ட வீரர்களான டி.கெ.மாதவன் போன்றவர்களின் வாழ்க்கைவரலாறுகளிலும் நினைவுகளிலும்கூட ஈவேராவின் பெயர் முதன்மையாக எடுத்துச் சொல்லப்படவில்லை. யங் இண்டியாவின் செய்திகளில் ஒரு இடத்தில்கூட ஈவேரா குறிப்பிடப்படவில்லை.

 இவ்வாறு ஈவேரா பெயர் இல்லாததற்குக் காரணம் அவரை பிராமணர் மறைத்து விட்டதுதான் என்று அற்றது ஆதரவாளார் சொல்கிறார்கள். ஆனால் அன்றைய போராட்டச்செய்திகளை அதிகமாக வெளியிட்ட இதழ்கள் சிரியன் கிறித்தவ இதழ்களும் ஈழவ இதழ்களும்தான். அன்று யங் இன்டியாவின் வைக்கம் நிருபராக இருந்தவர் அப்துல் ரகுமான் சாகிப் அவர்கள். உண்மையில் தமிழ்நாட்டில் ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை.

 வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவு. காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதை உருவாக்கி நடத்தி முடித்தவர் டிகெ.மாதவன். அதன்மூலம் ஈழவர்கள் காங்கிரஸில் செல்வாக்கு பெறவும் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகாரத்திலேறவும் முடிந்தது. கேரளம் முழுக்க தீண்டாமை ஒழிப்பு ஆலய நுழைவு போராட்டங்கள் வலுப்பெற வைக்கம் வழிவகுத்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வைக்கம் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்ச்சியின் நுட்பமான தகவல்களுக்குள் செல்ல இது தருணமல்ல. கேரளத்தில் அதைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவுகள், பதிவுகள். காங்கிரஸ் தரப்பிலும் நாராயண இயக்கங்களின் தரப்பிலும். வரலாற்றுக் கோணங்களில் மாறுபாடுகள் பல உள்ளன. சில தகவல்கள் கூட மாறுபடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டதுபோல காந்தி அந்தப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தார், கைவிட்டார் என்று எவராலும் எழுதப்பட்டதில்லை. காந்தியின் போக்கை முழுமையாக மறுப்பவர்கள் கூட அதைச் சொன்னதில்லை. இந்த கோணம் ஈவேராவால் உருவாக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தமிழகத்திற்குள் நிலைநாட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.

 

வைக்கம்போராட்டத்தில் பல்வேறு மாற்றுத்தரப்புகள் உருவாகி வந்தன. முதல் முரண்பாடு நாராயணகுருவுக்கும் டி.கெ.மாதவனுக்கும் இடையேயானதுதான். நாராயணகுரு இது ஒரு வீண்வேலை என்றே என்ணினார். மதியாத இடத்துக்கு ஏன் செல்லவேண்டும், ஈழவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே அமைத்தால் போதுமே என்பதே அவரது தரப்பு. இன்று புகழ்பெற்றுள்ள பல ஆலயங்களை அவர் உருவாக்கி வந்த காலகட்டம் அது. சமூக மோதல்கள் உருவாகி ஈழவர்கள் கல்விக்குள் வருவது தடைபடக்கூடாது என்று குரு நினைத்தார்.

 

ஈழவ தலைவர்களிடையேகூட கருத்துமுரண்பாடுகள் இருந்தன. அன்று செல்வாக்குமிக்க இதழாளராக இருந்த சி.வி.குஞ்šராமன் ஈழவர் மதம் மாறவேண்டும் என்றும் இந்துமதத்தை உதறவேண்டும் என்றும் வாதிட்டார். சகோதரன் அய்யப்பன் ஆலயமே தேவையில்லை என்ற நிலைபாடு கொண்டிருந்தார். பல ஈழவ செல்வந்தர்கள் இந்த போராட்டத்தை அஞ்சி ஈடுபாடு காட்ட மறுத்தார்கள்.

 

போராட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்தபோது பலவிதமான சிக்கல்கள் உருவாயின. ஈழவர்கள் நடுவே எழுந்த கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கலை ஒரு ஒட்டுமொத்த மதமாற்றத்தை நோக்கி கொண்டு செல்லலாம் என கிறித்தவ சபைகள் முயன்று பேரங்களில் ஈடுபட்டன. விவகாரம் மதமோதலை நோக்கிச் சென்றது.  ஆலயப்பிரவேசம் குறித்து சாதகமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட  மாற்றுமதத்தவர் உள்ளே வர ஆரம்பித்தபோது எதிர்நிலை எடுக்க ஆரம்பித்தார்கள்

 

ஆகவே காந்தி இந்தப்பிரச்சினை முழுக்க முழுக்க இந்துமதத்துக்குள் உள்ள பிரச்சினை என்றும் அன்னிய மதத்தவர் இதில் தலையிடவேண்டாம் என்றும் சொன்னார். மேலும் இது கேரளத்திற்குரிய பிரச்சினை, ஆகவே இதில் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவேண்டாம் என்றும் விலக்கினார். ஆனால் இதை போராட்டத்திற்கு வந்த கிறித்தவர்களும் சீக்கியர்களும் ஏற்கவில்லை. ஈவேரா அவர்கள் அந்த தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு காந்தியின் கோரிக்கையை நிராகரித்தார் என்று அவரே எழுதியவற்றில் இருந்து தெரிகிறது.

 

ஆரம்பம் முதலே காந்தி இந்தப்பிரச்சினையை மிக எச்சரிக்கையாக கையாண்டார். சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையாக திரண்டு ஒரே குரலாகப் பேசவேண்டுமென காந்தி எண்ணினார். சாதிய உரிமைப்போராட்டங்கள் சாதிகள் நடுவே கசப்பாகவும் மோதலாகவும் மாறினால் ஏற்கனவே இந்துமுஸ்லீம் பிரிவினையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷார் அதையும் சாதகமாக்கிக்கொள்வார்கள் என அவர் எண்ணினார்.

 

காந்தியின் நோக்கம் என்ன என்று  வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். உயர்சாதிக்கு எதிராக தாழ்ந்த சாதியினரைத் தூண்டிவிடுவதாக போராட்டம் ஆகிவிடலாகாது என அவர் எண்ணினார். அவரது திட்டம் உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களிலும் சாதிக்கொடுமைகள் மற்றும் தீண்டாமை குறித்த விழிப்பை உருவாக்குவதே. அதற்காக ஒரு பிரச்சாரக்கருவாகவே அவர் வைக்கத்தை அணுகினார். அங்கே செய்து பார்த்ததை அவர் இந்தியா முழுக்க பின்னர் விரிவுபடுத்தினார்.

 

ஆகவேதான் வைக்கத்தில் அது மாற்றுமதத்தவர் உள்ளே வரும் நிகழ்ச்சியாக ஆனபோது அதை அவர் விலக்கினார். இந்திய அளவில் அது என்ன விளைவை உருவாக்குமென அவர் அறிந்திருந்தார். ஓர் ஆலயப்பிரச்சினை அங்குள்ளவர்களாலேயே நடத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியமைக்குக் காரணம் அத்தனை ஆலயங்களிலும் அந்த விளைவுகளை விரிவுபடுத்துவதற்கான அவரது  திட்டமே. வைக்கம் போராட்டத்தை எவரும் தங்களுக்குச் சாதகமாகக் கடத்திக் கொண்டு செல்ல காந்தி விரும்பவில்லை.

 

காந்தியின் திட்டத்தை புரிந்துகொண்டிருந்தால் ஈவேரா அவர்கள் ஈரோட்டில் ஓர் ஆலயப்பிரவேசத்தை ஆரம்பித்து போராடியிருப்பார். ஆனால் தமிழகத்தில் எங்கும் அவர் அதைச் செய்யவில்லை. பிற்பாடும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஈவேரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அரசதிகாரம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்ட, அவரது ஆதரவுத்தளமான, தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வைத்திருந்த ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டம் வைக்கம் போராட்டம் முடிந்து 84 வருடங்கள் கழித்து இப்போது தலித்துக்கள் அமைப்பாக திரண்ட பின்னர்தான் நடக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

 

வைக்கம் போராட்டத்தில் காந்தி சந்தித்த மிகப்பெரிய எதிர்ப்பு இந்து மடாதிபதிகளிடமிருந்து வந்தது. குறிப்பாக காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் காந்தியை பாலகாட்டுக்குச் சென்று சந்தித்து ஆலயப்பிரவேசம் இந்து தர்மத்தை அழிக்கும் என்று வாதாடினார். சுருதிகளில் இருந்து அதற்கு ஆதாரம் அளிக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டபோது ஸ்மிருதிகளும் மாற்றக்கூடாதவையே என்று அவர் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. உடுப்பி, சிருங்கேரி மடங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி வந்தன. 

 

வைக்கம் போராட்டத்தில் அக்காலத்திலேயே பலர் உள்ளே புகுந்து பல வகையான திரிபுகளை உருவாக்கினார்கள். அது எந்த போராட்டத்திலும் நடக்கக்கூடியதே.  அதில் ஒன்று நாராயணகுருவுக்கும் காந்திக்குமான முரண்பாடு. உண்மையில் அப்படி ஒரு முரண்பாடே இல்லை, அது தவறாக  உருவாக்கப்பட்டது. நாராயணகுரு ஓர் அமைப்புக்கூட்ட உரையாடலில் ‘போராட்டம் நல்லதுதான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’ என்று சொன்னார். ‘ தடுக்கப்பட்ட இடத்திற்கு நாம் செல்லாமலிருந்திருக்கலாம், ஆனால் சென்றுவிட்டதனால் உத்தேசித்த விஷயத்தை நிகழ்த்திவிட்டே வரவேண்டும்.  இனி ஆலயப்பிரவேசம் இல்லாமல் இந்த சமர் நின்றுவிடகூடாது’ என்றார்

 

இது நாராயணகுரு தடைகளை மீறி கோயிலுக்குள் செல்ல தொண்டர்களை தூண்டுகிறார் என்று செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தியை காந்திக்கு அனுப்பிய உயர்சாதியைச்சேர்ந்த ஒரு காந்தியவாதி ‘இது வன்முறை, ஆகவே போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்’ என்று காந்தியிடம் கேட்டுக்கொண்டார். காந்தி எழுதிய பகிரங்கமான பதிலில் தடைகளை தாண்டிக்குதித்து உள்ளே போக நாராயணகுரு சொன்னார் என்றால் அது தவறு, அது வன்முறையேதான் என்று சொன்னார். ‘இந்தச் செய்தியை எனக்களித்த நண்பர் போராட்டத்தை திரும்பப்பெற நான் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் முன்னிலும் திடமாக தொடர்ந்து போராடும்படித்தான் நான் சொல்வேன்’ என்று எழுதினார் காந்தி

 

ஆனால் விரைவிலேயே அந்த தவறான புரிதல்கள் களையப்பட்டன. பிற்போக்குவாதிகளின் திரிபு நல்விளைவை உருவாக்கியது. நாராயணகுரு நேரடியாகவே போராட்டத்திற்கு வந்தார். தனக்குச் சொந்தமான வெல்லூர் மடத்தை சத்தியாக்கிரகிகளுக்கு அலுவலகமாக அளித்தார். அன்றைய காலத்தில் பெரும் தொகையான ஆயிரம் ரூபாயை போராட்டநிதியாக கொடுத்தார். சிவகிரி ஆசிரமத்தில் நன்கொடைப்பெட்டி ஒன்றையும் திறந்தார். போராட்டம் உச்சமடைந்தது. போராட்டத்திற்கு தன் துறவிகளான இருசீடர்களை குரு அனுப்பினார். அவர்களில் சுவாமி சத்யவிரதன் பின்னர் கேரளத்தில் பெரும்புகழ்பெற்றார்.

 

செப்டெம்பர் 27 அன்று நாராயணகுரு அவரே வைக்கத்திற்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு காந்தி கொடுத்தனுப்பிய காந்தியே தன்கையால் நெய்த துண்டு அளிக்கப்பட்டது. அப்போது காந்தி உண்ணாவிரதம் இருந்துவந்தமையால் அவரது உடல்நலனுக்காக நடத்தப்பட்ட மாபெரும் பொதுகூட்டத்தில் நாராயணகுரு மௌனமாக பிரார்த்தனை செய்தார். குரு பொது இடத்தில் பிரார்த்தனை செய்த ஒரே நிகழ்ச்சி அதுவே.

 

காந்தியின் அணுகுமுறை உயர்சாதியினரின் மனசாட்சியுடன் உரையாடுவதாக இருந்தது. மனசாட்சி உள்ள உயர்சாதியினர் வைக்கம் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து போராட முன்வரவேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். விளைவாக நாயர் சர்வீஸ் சொசைட்டியின் நிறுவனரும் பழமைவாதியுமான மன்னத்து பத்மநாபன் போராட முன்வந்தார். 1924 நவம்பர் ஒன்றாம் தேதி மன்னத்து பத்மநாபன் தலைமையில் 500 பேர்கொண்ட ஊர்வலம் திருவனந்தபுரத்திற்கு கிளம்பியது. செல்லும் வழிதோறும் பெருகிய அப்பயணம் மாபெரும் ஊர்வலமாக சிவகிரியை அடைந்து நாராயணகுருவிடம் ஆசி பெற்று வைக்கத்தை சென்றடைந்தது.

 

அதேபோல சுசீந்திரத்தில் இருந்து பெருமாள் நாயிடு தலைமையில் வேளாளர்களும் நாயர்களும்  அடங்கிய ஒர் ஊர்வலம்  கிளம்பி வைக்கத்தை அடைந்தது. நவம்பர் 14 ஆம் தேதி சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளையின் தலைமையில் ஒரு உயர்சாதிக்குழு 27000 உயர்சாதிவாக்காளர்கள் கையெழுத்திட்ட  ஒரு மனுவை அப்போதைய மகாராணி சேதுலட்சுமிபாய்க்கு அளித்து வைக்கம்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது

 

உண்மையில் வைக்கம் சத்தியாக்கிரகம் இந்த புள்ளியில் அதன் வெற்றியை அடைந்துவிட்டது. சாதியாசாரங்களில் மூழ்கிக்கிடந்த ஒரு சமூகத்தில் இருந்து மனசாட்சியின் இத்தனைபெரிய குரல் எழுவதற்கு அந்தப்போராட்டமே காரணம். 1924 நவம்பர் மாதமே புதிய கேரளத்தின் தொடக்கம் என்று கூட சொல்லப்படுவதுண்டு. தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உயர்சாதியினரை தெருவுக்குக் கொண்டுவருவதில் காந்தி வெற்றியடைந்தார்.

 

ஆனால் அன்று சீண்டப்பட்ட பழமைவாதிகள் கடுமையான நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.  வைக்கம் போராட்டத்திற்கு முடிவெடுக்க மகாராணி கூட்டிய சட்டச்சபைக்கூட்டத்தில் தீர்மானத்தை ஒற்றுமையாக இருந்து தோற்கடித்தார்கள். அதிகமும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய அந்த சட்டச்சபை பழமைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது. நேரடி வன்முறை தொடங்கியது. சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். கோயில்களை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது. விளைவாக கோயில்கள் வெறிச்சோடின.

 

போராட்டம் வன்முறையை நோக்கி சென்றது. ஒவ்வொருநாளும் சத்யாகிரகிகள்தாக்கப்பட்டார்கள். அத்துடன் கேரள வரலாற்றின் ஆகப்பெரிய மழையும் சேர்ந்துகொள்ளவே சத்யாக்கிரகம் மெல்ல சோர்ந்து நின்றது. ஆகவே காந்தி அவரே கிளம்பி வைக்கத்துக்கு வந்தார். அவருடன் ராஜாஜியும் வந்தார். 1925 மார்ச் பத்தாம்தேதி காந்தி திருவனந்தபுரத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் நாராயணகுருவைக் கண்டார். அவர்களிடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாடல் காந்திக்கு சாதி மற்றும் வர்ண அமைப்பு மீதிருந்த கருத்துக்களை முற்றாக மாற்றியமைத்தது. ஏற்றத்தாழ்வற்ற சாதிமுறை இருப்பது நல்லதே என்று காந்தி எண்ணியிருந்தார். அந்த எண்ணத்தை நாராயணகுரு மறுத்து மனிதர்கள் ஒன்றே என்று உபதேசம் செய்தார்.

 

மறுநாள் காந்தி வைக்கம் பழமைவாதிகளின் தலைவராக இருந்த ‘இண்டன்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பூதிரி’யை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். காந்தியை கீழ்ச்சாதியரை தொட்டு அசுத்தமான ஒருவர் என்று சொல்லிய நம்பூதிரி அவரை வெளித்திண்ணையில் நிற்கச் செய்து பேசினார். காந்தி நடத்திய பேச்சுவார்த்தை எதற்குமே நம்பூதிரி இணங்கி வரவில்லை.

 

காந்தி நம்பூதிரியிடன் பேசியவை பதிவாகியுள்ளன. தீண்டாமைமுறைக்கு இந்து சாஸ்திரங்களில் அனுமதி உண்டு என்று நம்பூதிரி கருதுவாரென்றால் தான் நியமிக்கும் ஒரு இந்து மதபண்டிதருடன் அவரோ அவர் நியமிக்கும் இந்து மதபண்டிதரோ பொது விவாதத்திற்கு வரலாம் என்றார் காந்தி. அல்லது இதுசம்பந்தமாக வைக்கம் பகுதி இந்துக்கள் நடுவே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். இரண்டு அறைகூவல்களையும் தேவன் நீலகண்டன் நம்பூதிரி நிராகரித்துவிட்டார். 

 

மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது. இம்முறை நம்பூதிரி தரப்பில் இருந்து ரவுடிகள் கொண்டுவரப்பட்டு சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்களும் தாக்கப்பட்டன. போராட்டத்திற்கு பெரும் சோர்வை இது உருவாக்கியது. உண்மையில் பின்னணியில் இருந்தது திருவிதாங்கூர் அரசை நடத்திய திவான்தான். ஆகவே திருவிதாங்கூர் மன்னருடனோ திவானுடனோ பேசிப்பலனில்லை என்று எண்ணிய காந்தி திருவிதாங்கூர் போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ. எச். பிட்  அவர்களுக்கு கடிதமெழுதி வன்முறைகள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்

 

அந்த வெளிப்படையான வேண்டுதல் சங்கடமளிக்கவே பிட் மகாராணியைக் கண்டு கறாராக பேசினார். விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாக்கப்பட்டது. காந்தி சத்யாகிரகத்தை தற்காலிகமாக திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பதிலுக்கு வைக்கம் ஆலயத்தைச்சுற்றியிருக்கும் பாதைகளில் கிழக்குப்பாதை தவிர பிறவற்றை திறந்துவிட நம்பூதிரிகள் ஒத்துக்கொள்வார்கள் என்றும் வன்முறையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிட் சொன்னார். காந்தி அதற்கு ஒத்துக்கொண்டார்.

 

விளைவாக 1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தை திரும்பப்பெற காந்தி ஆணையிட்டார். அரசுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும்கூட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட மேலும் ஒரு மாதமாகியது. அதன்பின்னரே சத்யாகிரகம் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலோட்டமான பார்வைக்கு  வைக்கம் சத்தியாக்கிரகம் அரைகுறை வெற்றி என்றே தோன்றும். வைக்கம் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில்மட்டுமே எல்லா சாதியினரும் நுழையலாம் என்று  ஒத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு வீதி அப்போதும் நுழையக்கூடாததாகவே இருந்தது. ஆலயப்பிரவேசம் நிகழவேயில்லை. இந்த விஷயத்தை வைத்துத்தான் வைக்கம் போராட்டத்தில் காந்தி விட்டுக்கொடுத்தார், சமரசம் செய்துகொண்டார் என்றெல்லாம் ஈவேரா அனுதாபிகள் எழுதுகிறார்கள்.

 

உண்மையில் காந்தியின் போராட்டமுறையே இதுதான். போராட்டம் என்பதே அவரைப்பொறுத்தவரை ஒரு பிரச்சார முறைதான். ஒரு கருத்தை மிகப்பரவலாக எடுத்துச்செல்வதே ஜனநாயகப் போராட்டம். அக்கருத்தே சமூகமாற்றத்தையும் அதிகார மாற்றத்தையும் உருவாக்குகிறது. வைக்கத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சிலநூறு போராளிகளைப் பலிகொடுத்திருக்கலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு என்பது பழமைவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதில்தான் உள்ளது. அதிரடிகள் மூலம் அதைச் செய்ய முடியாது.

 

கோயிலுக்குள் வன்முறை நிகழ்ந்திருந்தால் மிதவாத நோக்கு கொண்டிருந்த உயர்சாதியினரையும்  எதிர்பக்கம் தள்ளிவிடவே அது வழி வகுத்திருக்கும். போராடியவர்களில் கடும் இழப்பு உருவாகி ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டு போராட்டம் மேலும் தொடர முடியாமலாகிவிட்டிருக்கும். வன்முறைப்போராட்டம் எதிலும் இதைப்பார்க்கலாம். இருதரப்பினரும் மேலும் மேலும் கடுமையான நிலைபாடு எடுக்க பிரச்சினை முற்ற போராட்டம் ஏராளமான இழப்புகளை அடைந்தபின்னர் வேறு வழியில்லாமல் சமரசம்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சமரசப்பேச்சுவார்த்தையை முன்னரே வன்முறை இல்லாமலேயே நிகழ்த்துவதே காந்தியின் போராட்ட முறையாகும்.

 

காந்தி தன் தரப்பு கோரிக்கைகளில் ஒருபகுதியை விட்டுக்கொடுத்தார். வைக்கம் பழமைவாத தரப்பு ஒருபகுதியை விட்டுக்கொடுத்தது. கிழக்குவாயிலை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கௌரவம் பாதுகாக்கப்பட்டது. இதுவே  வைக்கம் சத்யாக்ரகத்தின் முடிவு. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல எல்லா போராட்டத்தையும் காந்தி இப்படித்தான் முடித்திருக்கிறார். போராட்ட சக்தியில் பெரும்பகுதி தன் தரப்பில் எஞ்சும்போதே சமரசம்செய்துகொண்டார்.

 

காந்தியைப் பொறுத்தவரை மிகப்பெருவாரியான மக்கள் போராட்டத்தில் பங்குகொண்டபோதே போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எப்போது உயர்சாதியினரில் பெரும்பகுதி மனசாட்சியின் அழைப்பை ஏற்று போராட்டத்திற்கு ஆதரவளித்தார்களோ அப்போதே போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. கேரள யதார்த்தம் புரிந்தவர்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறார்கள். கேரளத்தில் ஈழவர்களுக்கு நேர்மேலே உள்ள சாதி நாயர்கள். கால்நூற்றாண்டுக்காலம் நாராயணகுருவையும் ஈழவர்களையும் எதிர்த்தவர்கள். அவர்களின் தலைவரான மன்னத்து பத்மநாபன் நாராயணகுருவின் பாதங்களை வணங்கி வைக்கம் சத்யாகிரகத்திற்கு வந்தது கேரள வரலாற்றின் ஒரு திருப்புமுனை.

 

அதன்பின் இந்த முக்கால்நூற்றாண்டில் கேரளத்தில் சாதிமோதல்களே நடந்ததில்லை. ‘பைத்தியக்கார விடுதி’யாக இருந்த கேரள மண் சட்டென்று இந்தியாவின் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாக ஆக ஆரம்பித்தது. கல்வியில் அது அடைந்த மாபெரும் வெற்றி அங்கே ஆரம்பிக்கிறது. அதுவே வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையான விளைவாகும்.

 

வைக்கம் சத்தியாக்கிரகத்தின் விளைவாக அதுவரை திருவிதாங்கூரில் ஒரு சிறு அமைப்பாக இருந்த காங்கிரஸ் பிரம்மாண்டமாக ஆகியது. அதன் அடித்தளமாக ஈழவர்களும் நாயர்களும் புலையர்களும் அமைந்தார்கள். பின்னர் கேரளத்தில் உருவான இடதுசாரி இயக்கமும் இந்த அடித்தளத்தில் இருந்து உருவானதே. வைக்கம் உட்பட உள்ள காங்கிரஸின் போராட்டங்களில் இருந்து உருவான தலைவர்கள்தான் ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ், கெ.ஆர்.கௌரி போன்றவர்கள்.

 

வைக்கத்துடன் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள காந்தி உத்தேசிக்கவுமில்லை. வைக்கம் போராட்டம் முடிந்ததுமே கேரளத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆலயப்பிரவேச உரிமை கோரி காங்கிரஸ் தனித்தனிப் போராட்டங்களை ஆரம்பித்தது. எந்த ஊருக்கும் வெளியே இருந்து சத்யாக்கிரகிகள் செல்லக்கூடாது என்பது விதி. டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்திற்கு பின்னர் சக காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து திருவார்ப்பு, கண்ணன்குளங்கரை ஆகிய ஊர்களில் ஆலயநுழைவுப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டினார்.

 

பின்னர் அத்தனை தனிப்போராட்டங்களையும் ஒருங்கிணைத்து பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் வைக்கம் அளவுக்கே முக்கியமானது குருவாயூர் சத்யாக்கிரகம். 1931 நவம்பர் ஒன்று முதல் மன்னத்து பத்மநாபன் தலைவராகவும் கேளப்பன் செயலராகவும் பின்னர் கம்யூனிஸ்டு தலைவர்களாக ஆன ஏ.கே.கோபாலன், சுப்ரமணியன் திருமும்பில் ஆகியோர் காப்டன்களாகவும்  அமைந்த போராட்டக்குழு குருவாயூரின் ஆலயப்பிரவேசபோராட்டத்தை ஆரம்பித்தது.

 

போராட்டங்களின் விளைவாக 1936ல் திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா ஆலயப்பிரவேச அறிவிக்கையை வெளியிட்டார். கேரளத்தில் உள்ள எல்லா ஆலயங்களும் அனைத்துச் சாதியினருக்கும் திறந்துகொடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதுவே வைக்கத்தில் ஆரம்பித்த போராட்டத்தின் கடைசி வெற்றியாகும். இந்த அறிவிப்பு வெளிவரும்போது கேரளத்தில் ஏற்கனவே பாதிக்குமேற்பட்ட கோயில்களில் ஆலயநுழைவு நடந்துவிட்டிருந்தது. போராட்டத்தின் வெற்றியை தெரிவிக்கும் முகமாக காந்தி வந்து நேரில் மன்னரைச் சந்தித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து திருவனந்தபுரம் ஆலயத்திற்குள் நுழைந்தார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 காந்தியப் போராட்டத்தின் எல்லா சிறப்பம்சங்களும் வைக்கம் போராட்டத்திலும் உண்டு.

 

1. போராட்டத்தை அதிரடியாக நடத்தாமல் குறியீட்டு ரீதியாக நடத்துவது. அதன் மூலம் அதிகநாள் நீடிக்கவிட்டு சாத்தியமான அதிகபட்ச பிரச்சாரத்தை உருவாக்குவது

 

2. அதிகமான மக்கள்பங்கேற்புக்கு முயல்வது. அவ்வாறு அதிகமான மக்கள் பங்கேற்கும்பொருட்டு முடிந்தவரை எளிமையானதாக போராட்டமுறையை வைத்துக்கொள்வது.

 

3 வன்முறையை முற்றிலும் தவிர்த்துவிடுவது. வன்முறை உருவாகும்போது சமரசம் செய்துகொள்வது

 

4 பலவற்றை விட்டுக்கொடுத்து சாத்தியமான வெற்றியை  அடைவது. அதற்காக எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பது

 

5 ஆனால் கடைசியாக எதை உத்தேசித்திருக்கிறார்களோ அது வரை போராட்டத்தை நிறுதிக்கொள்ளாமல் இருப்பது. வருடக்கணக்காக சலிக்காமல் போராட்டத்தை முன்னெடுப்பது

 

அதாவது ஆலயப்பிரவேச உரிமை சட்டமாக ஆகாமல் வைக்கம் போராட்டத்தை காந்தி நிறுத்திக்கொண்டிருக்க மாட்டார்.  அவர்து நோக்கம் வைக்கத்தில் நுழைவது அல்ல. இந்துக்களின் மனமாற்றமே. சீராக பிடிவாதமாக 12 வருடம் நடந்த ஆலயப்பிரவேச போராட்டம் கேரளத்தில் அதை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

 

வைக்கம்போராட்டம் காந்திக்கு சமூகசீர்திருத்த விஷயங்களில் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இடத்தைக்குறித்து ஒரு தெளிவை உருவாக்கியது. அதில் எழக்கூடிய சிக்கல்களைப்பற்றிய பல புரிதல்களை அவர் அடைந்தார். குருவாயூரிலும் அதை சோதித்துப் பார்த்தபின்னரே 1932க்குப்பின் அவர் தேசிய அளவில் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.

 

இங்கே குறிப்பிடவேண்டிய சில விஷயங்கள் உண்டு. பூனா ஒப்பந்தத்துக்குப் பின்னர் அம்பேத்காரின் ஆதரவுதளத்தை கவரவே காந்தி ஹரிஜன் இயக்கத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னரே காந்தி தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிப்பாகுபாடு எதிர்ப்புக்கான சோதனை முயற்சியாக வைக்கம்போராட்டத்தை ஆரம்பித்துவிட்டிருந்தார். அது ஒரு மக்களியக்கமாக ஆகி இறுதியான வெற்றியை குருவாயூரில் ஈட்டிய பிறகே அவர் அதை தேசிய அளவில் விரிவாக்கம் செய்தார்.

 

மேலும் உயர்சாதி இந்துக்களின் மனமாற்றம் மூலம் இப்போராட்டங்களை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்றும் காந்தி வைக்கம் முதல் குருவாயூர் வரை நடந்த போராட்டங்கள் வழியாகவே கற்றுகொண்டார். பைத்தியக்கார விடுதியான கேரளத்தில் சாத்தியமென்றால் எங்கும் சாத்தியமே என்று அறிந்திருப்பார். ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபின்னர் இந்தியாவெங்கும் ஆயிரத்தி எண்ணூறு முக்கியமான ஆலயங்களில் ஆலயநுழைவு போராட்டம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தது.

 

ஆலயநுழைவு ஏன்? அன்றும் இன்றும் அக்கேள்வி உள்ளது. காந்தியைப் பொறுத்தவரை எல்லாமே ஒரு குறியீட்டு செயல்பாடுதான். உப்பு சத்தியாக்கிரம் ஏன், உப்பா முக்கியம் என்று கேட்பது போன்றதே இது. ஆலயம்தான் தீண்டாமை நிகழும் மையமான இடம். புனிதம் என்ற சொல்லே அதனுடன் தொடர்புடையது. அங்கே சமத்துவம் என்பது எங்கும் சமத்துவம் என்றே பொருள்படும். ஹரிஜன இயக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கைத்தொழில்கள் அளித்தல், மது ஒழிப்பு, குடியிருப்புகளை சுத்தப்படுத்துதல் ஆகிய மூன்று திட்டங்களை காந்தி முன்வைத்தார்.

 

வைக்கம் சார்ந்த இந்த வரலாற்று அலைகளில் எங்குமே ஈவேரா ஒரு பொருட்படுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதே வரவாறு.  அன்று அவர் ஒரு வட்டாரக் காங்கிரஸ் தலைவர் மட்டுமே. முக்கியமான தமிழகத் தலைவர்கூட அல்ல. காங்கிரஸின் ஆணையின்றி வைக்கத்திற்கு தன் சிறு ஆதரவாளர்குழுவுடன் வந்த அவர் வைக்கம் போராட்ட அமைப்புடன் சேர்ந்து சிலநாட்கள் போராடி சிறைசென்றார். பின்னர் சுதந்திரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்திக்கு எதிராக இருந்த சக்திகளுடன் இணைந்து செயல்பட்டார். ஏற்கனவே அவர் காங்கிரஸில் இருந்து விலகித்தான் இருந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கும் காங்கிரஸ¤க்கும் இடையே கசப்புகள் இருந்தன. 

 

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழகத்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் காந்தியையும் காங்கிரஸையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். அதற்கு அப்போது நடந்துவந்த வைக்கம் போராட்டத்தை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டார்கள். வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்திருந்த பல்வேறு உள்விவாதங்களை ஈவேரா அவரது நோக்கில் பெரிதுபடுத்தினார். இதனலேயே வைக்கம் இங்கே ஒரு பேசுபொருளாக ஆனது.

 

ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஈவேரா காந்தியை அவதூறு செய்தார் என்றோ வேண்டுமென்றே அவர் பொய்களைச் சொன்னார் என்றோ நினைக்கவில்லை. அத்தகைய சிறுமைகள் அண்டாத மாமனிதர் என்றே அவரைப்பற்றி எண்ணுகிறேன்.  இவ்விஷயம் குறித்து நாராயண இயக்கத்தின் முக்கியமான மூத்த தலைவர் சிலருடன் உரையாடியபோது அவர்கள் அளித்த வெளிச்சமே இவ்விஷயத்தில் என் புரிதலை உருவாக்கியது.

 

ஈவேரா காந்தியப்போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. கடைசிவரை. அவரைப்போலவே காங்கிரஸ¤க்குள் இருந்த ஏராளமான தீவிரப்போக்குள்ளவர்கள் காந்தியப் போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. வைக்கம் போராட்டத்தில் காந்தியுடன் இருந்தவர்களில் பாதிப்பேர் வெளியேறி கம்யூனிஸ்டுகளாக ஆனார்கள் என்பதே வரலாறு. ஈவேரா அனைத்தையும் அதிரடியாகவே கண்டார். கவன ஈர்ப்புக்கான அதிரடிப்போராட்டங்களைச் செய்து அவற்றை உடனடியாக விட்டுவிட்டு அடுத்ததற்குச் செல்வது அவரது இயல்பு. அவர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நீடித்த திட்டமிட்ட குறிக்கோள் கொண்ட எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதே வரலாறு.

 

ஈவேரா அவர்கள் காந்தியைக் குறித்துச் சொன்ன விமரிசனங்களை முற்றிலும் மாறான உலக நோக்கும் போராட்டமனநிலையும் கொண்ட இன்னொரு தலைவரின் எதிர்நிலை என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். பின்னர் அவர் அதைவிடக் கடுமையான எதிர்நிலைகளை அவரது சீடர்களிடமே எடுத்திருக்கிறார் என்பதும் வரலாறே

 

காந்தியப்போராட்டம் என்பது குடிமைச்சமூகத்தில் கருத்தியல் மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் சமூக அரசியல் மாற்றங்களை நோக்கிச் செல்ல முயல்வதாகும். ஆகவே அது மக்களின் மனநிலையை மெல்லமெல்ல மாற்றியமைக்க முயல்கிறது. அதாவது காந்தியப்போராட்டம் என்பது எதற்காக போராட்டம் நிகழ்கிறதோ அதை வெல்வதற்காக அல்ல. அதன் விளைவுகள் எப்போதுமே மறைமுகமானவை.

 

இக்காரணத்தால் காந்தியப்போராட்டம் நீண்டகால அளவிலேயே நிகழ முடியும்.  அதிகமான மக்களை போராட்டத்தில் ஈடுபடச்செய்யவேண்டும் என்பதற்காக போராட்டத்தை எளிய குறியீட்டுச்செயல்பாடாகவும் கடுமையான ஒடுக்குமுறைகள் நிகழாததாகவும் வைத்திருப்பார் காந்தி. ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் வன்முறை நிகழ அனுமதிக்க மாட்டார். எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு முன்வருவார். விவாதிப்பார். ஆகவே காந்தியப்போராட்டம் மீண்டும் மீண்டும் சமரசம் செய்யப்படும்.

 

இக்காரணத்தால் எந்த ஒரு காந்தியப்போராட்டத்திற்கும் ‘மனச்சோர்வுப்புள்ளி’ ஒன்று உண்டு. ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரகம் எல்லாவற்றிலும் இந்த மனச்சோர்வு வந்துள்ளது. தீவிரமான எண்ணங்களுடன் உடனடி விளைவை விரும்புகிறவர்கள் காந்தியப்போராட்டம் என்பது அர்த்தமற்ற சடங்கு என்று எண்ணுவார்கள். சிலர் சினம் கொண்டு காந்தி போராட்ட வீரியத்தை அணைப்பதாக குற்றம் சாட்டுவார்கள். ஈவேரா போன்ற சிலர் காந்தியின் அடிப்படை நோக்கங்களை ஐயபப்டுவார்கள்.

 

ஆனால் வரலாற்றை ஒட்டுமொத்தமாக பார்ப்பவர்கள் காந்திய இயக்கம் சமரசமே இல்லாமல் அதன் இலக்கை நோக்கிச் செல்வதையே காண்பார்கள். மெதுவாக ஒரு சமூக உளவியல் மாற்றத்தை உருவாக்கியபடி அது வெற்றி நோக்கி நகர்கிறது. வைக்கத்திலும் அதுவே நிகழ்ந்தது. காந்தி உத்தேசித்த வெற்றி என்பது ஒருசாரார் மேல் இன்னொருசாரார் அடையும் வெற்றி அல்ல.  இரு சாராரும் ஒரு பொதுவான முற்போக்கு கருத்தை நோக்கிச் செல்லும் போது உருவாகும் வெற்றியே.

 

ஈவேரா அவர்கள் காந்தி ஆலயப்பிரவேசப் போராட்டத்தில் பிராமணர்களிடம் சமரசம் பேசியதைத்தான் மாபெரும் துரோகமாக எண்ணுகிறார்கள். ஈவேரா இதுகுறித்து எழுதிய கட்டுரைகளை முழுமையாகவே நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு கேரள சமூக-அரசியல் சூழலைப்பற்றி எந்த அறிதலோ அக்கறையோ இல்லை என்றே எனக்குப் பட்டது. அவர் தமிழகத்து அரசியலையே மனதில் கொண்டிருந்தார். அந்த கசப்பு காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட ஓர் அதிர்ச்சி நடவடிக்கை மட்டும்தான் வைக்கம்.

 

வைக்கம் போராட்டத்தில் காந்தி மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளை துரோகமாகச் சித்தரித்து அக்காலத்தில் ஈவேரா பேசினார். ஆனால் போராட்டம் வைக்கத்திற்குப் பின்னர்தான் கேரளம் முழுக்க பரவியது  அங்கிருந்து இந்தியா முழுக்கச் சென்றது என்ற வரலாற்று யதார்த்தத்தை அறிந்தவர்கள் ஈவேரா அவர்களின் பேச்சு புரியாமல் செய்யப்பட்ட ஒன்று என்றுதான் சொல்வார்கள்.

 

ஈவேரா தமிழ்நாட்டில் வைக்கம் போன்று சாதிமறுப்பு அல்லது தீண்டாமை ஒழிப்புக்கான எந்த நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பிராமண எதிர்ப்புச் செயல்பாடுகளில் பிற்படுத்தப்பட்டோரையும் தலித்துக்களையும் ஒருங்கிணைக்க முயன்ற அவர் பிற்படுத்தப்பட்டோர் ஆற்றிவந்த கடுமையான சாதிய ஒடுக்குமுறையை கண்டும்காணாமல் விட்டுவிட்டார். பிராமண ஆதிக்கம் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அவர் கனவு கண்டார்.

 

ஒரு பேச்சுக்காகச் சொல்வோம். இன்றைய மதுரை மாவட்டம் அன்று எப்படி இருந்திருக்கும். ஏதாவது ஒரு மதுரைமாவட்டத்து கிராமத்தில் தனி டம்ப்ளர் முறையை ஒழிக்க ஒரு போராட்டத்தை ஈவேரா ஆரம்பித்து முழுவெற்றி கிடைக்கும் வரை போராடியிருக்க வாய்ப்பிருக்கிறதா? அவரது இயல்பின்படி அவர் வந்து ஆவேசமாக பேசி ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டுச் சென்றுவிடுவார். நிலைமை அப்படியே நீடித்து  இன்றும் இருந்துகொண்டிருக்கும். இன்று அதுதானே தமிழக நிலைமை?

 

வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்காக ஈவேரா ஆதரவாளர் உரிமை கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் முக்கால்நூற்றாண்டு கழித்து இன்று ஈவேராவின் கோட்டைகளாக இருந்த ஊர்களில்கூட  தலித்துக்களின் வாயில் சாணிகரைத்து ஊற்றும் சடங்குகளும் தடுப்புச்சுவர்களும் நீடிக்கின்றன. அதற்கெதிராக தலித் இயக்கங்கள் போராடும்போது திராவிட இயக்கங்கள் எதிர்நிலை எடுக்கின்றன அல்லது மௌனம் சாதிக்கின்றன. 1920 களில் கேரளத்தில் தமிழகத்தை விட பலமடங்கு கேவலமான சாதிவெறி இருந்தது. வைக்கம் போராட்டமும் அதை ஒட்டி உருவான மக்களெழுச்சியும் அந்த மனநிலைகளை கேரளத்தில் இருந்து ஒழித்தன. 

 

ஈவேரா அவர்கள் தலித்துக்களுக்காக வைக்கம் போல ஒரு பெரும் போராட்டத்தை இங்கே நடத்தி அந்தப் போராட்டத்தில் ஓரளவேனும் வெற்றியை ஈட்டியிருந்தால் மட்டுமே அவரது நோக்கமும் செயல்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப்போராட்டத்தில் கேரள உயர்சாதியினர் மனமாற்றம் அடைந்து வந்து வைக்கம் போராட்டத்தில் இணைந்தது போல தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினரில் ஒரு பகுதியினராவது வந்து கலந்துகொள்ளச்செய்ய அவரால் முடிந்திருந்தால் காந்தியைப்பற்றி அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை பரிசீலிக்க முடிந்திருக்கும். அவர் அப்படிச் செய்திருந்தாரென்றால் இன்று பாப்பாபட்டி-கீரிப்பட்டிகள் தேவைப்பட்டிருககது. கண்டதேவி தேர் சுமுகமாக ஓடியிருக்கும்.

 

வைக்கம் அன்றி ஈவேராவின் சாதனைகளாகக் கூறிக்கொள்ள எந்த சாதி ஒழிப்புப் போராட்டமும் இல்லை என்பதனாலேயே வைக்கம் போராட்டத்தில் ஈவேராவின் பங்கு பெரிதுபடுத்தபடுகிறது. எந்த திறந்த விவாதமும் இல்லாமல், வெளிப்படையான ஆதாரங்களேதும் முன்வைக்கப்படாமல், வைக்கம் வீரர் என்ற ஒற்றை வரிமூலம் அந்த கருத்து ஒரு நம்பிக்கையாக நிலைநாட்டப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே அந்த நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை

 

வைக்கத்தில் ஈவேரா அவர்களுக்கு 1994ல் தமிழக அரசு நினைவுமண்டபம் கட்டி சிலை எடுத்த போது இது  சார்ந்த ஒரு சிறுவிவாதம் கேரளத்தில் உருவானது. ஈவேராவின் பங்களிப்பை திராவிட இயக்கம் பொய்யாக மிகைப்படுத்துவது குறித்து கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே வைக்கத்தில்  காங்கிரஸ¤ம் திராவிடர்கழகமும் தமிழக அரசும் சேர்ந்து உருவாக்கிய அச்சிலையில் ஈவேரா வைக்கம்போராட்டத்தில் கலந்துகொண்டார் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. கேரளத்து வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரை கேரள சமூகப்பிரச்சினை ஒன்றுக்காக அவர் போராட வந்தார் என்பதே மதிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க ஒரு காந்தியப்போராட்டம். காந்தி அவரது வழிமுறைகளை சோதித்துக்கொண்ட இடம் அது. எதிர்தரப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் முன்னகர்வதே காந்தியின் வழியாகும். ஆனால் விடாப்பிடியாக பல வருடங்களுக்கு அந்த போராட்டத்தை பலமுனைகளில் முன்னெடுப்பதும் அவரது வழக்கம். அப்படித்தான் வைக்கம் போராட்டம் ஒட்டுமொத்த ஆலயப்பிரவேச இயக்கமாக ஆகி முழுவெற்றியை அடைந்தது. அந்த வழிமுறைகளை காந்தி பின்னர் ஹரிஜன இயக்கத்தில் செயல்படுத்தினார்.

 

வைக்கம் போராட்டம் காந்தியின் நிலையுத்தம் என்னும் வழக்கப்படி நடைபெற்றது. அவரது ஜனநாயகப் போராட்ட வழிமுறைகளை புரிந்துகொள்ளாதவர்களில் ஒருவர் ஈவேரா அவர்கள். தன்னுடைய மேலோட்டமான அதிரடிப்போக்குக்கு காந்திய வழிமுறைகள் ஒத்துவராது என்று எண்ணிய ஈவேரா காந்தியை நிராகரித்தார். காந்தியின் பொறுமையான சமரச வழிமுறையை போராட்ட வீரியத்தை காட்டிக்கொடுக்கும் முறை என்று புரிந்துகொண்டார்.

 

வரலாற்றின் ஒரு தருணத்தை இரு வேறு ஆளுமைகள் வேறுவேறாகப் பார்த்தனர் என்பதையே இதில் இருந்து ஒரு பொதுவாசகன் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஈவேராவின் சொற்களை வைத்து இப்போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை மதிப்பிடுவது ஆபத்தானது. வைக்கம் போராட்டத்தையும் பின்னர் நிகழ்ந்த போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது காந்திய வழி மிகவெற்றிகரமாக கேரள மனசாட்சியை தொட்டெழுப்பி சமூக மாற்றத்தை மோதல் இல்லாமல் நிகழ்த்தி புதிய கேரளத்தை உருவாக்கியது என்பதைக் காணலாம்.

 

இந்த போராட்டத்தின் நாயகர் அதாவது உண்மையான ‘வைக்கம் வீரர்’ டி.கெ.மாதவன் மட்டுமே. அவரது  இருபதாண்டுக்கால பொதுவாழ்க்கையின் சாதனை அது. அதை சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈவேரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமைசேர்க்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்


 
Save
Share60
 

வ.வே.சு.அய்யர்

தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.

 

வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் பயின்றார்கள். அய்யரின் மகன் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தியும் பிற மாணவர்களும் இணைந்து சமமாகவே அமர்ந்து உணவுண்டார்கள். ஆனால் இரு பிராமண மாணவர்களுக்குத் தனியாக அங்கே உணவு பரிமாறப்பட்டது

வாவில்லா குடும்பம் என்ற பிரபலமான வைதிக குடும்பத்தின் இரு மாணவர்கள் அவர்கள். ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்தவர்கள். அன்று கடுமையான பிரிட்டிஷ் அடக்குமுறைச் சூழலில் சுதேசிப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படுவது கடினமாக இருந்தது. வீடுவீடாகச் சென்று மாணவர்களை சேர்க்கவேண்டியிருந்தது. ஆசாரம் கெட்டுப்போகலாகாது என்று  அந்தக் குடும்பத்தினர் இட்ட நிபந்தனையை ஏற்றுத்தான் வ.வே.சு.அய்யர் அவர்களை சேர்த்துக்கொண்டார். அதற்கேற்ப அவர்களை மட்டும் தனியாக உணவருந்தச் செய்தார்.

அன்றைய காங்கிரஸில் இருந்த இருபெரும் குழுக்களுமே பிராமணத்தலைமை கொண்டவை- சத்தியமூர்த்தி குழு, ராஜாஜி குழு. இரண்டுக்கும் எதிராக உருவாகிவந்தவர்கள் பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் தலைமையில் கிளர்ந்துகொண்டிருந்தார்கள்.

உண்மையில் இது பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லாத உயர்சாதியினரின் அதிகாரக் கலகம். காங்கிரஸின் முன்னோடிகள் பிராமணர்கள். ஆனால் 1920களுக்குப்பின் காங்கிரஸுக்குள் பிராமணரல்லாத உயர்சாதியினர் பெருமளவுக்கு வந்து உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மை ஆகியிருந்தனர். அது தலைமையில் பிரதிபலிக்கவில்லை. இதுவே உண்மையான பிரச்சினை

வரதராஜுலுநாயுடுவின் சீடரும் தனக்கெனத் தனி செல்வாக்கு கொண்டவருமான ஈ.வே.ராமசாமி அவர்கள்  இந்த எதிர்ப்புக்குத் தலைமை ஏற்க ஆரம்பித்தபோது கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தார். இவர்கள் தமிழகக் காங்கிரஸின் அதிகார அமைப்புடன் முரண்பட்டுக் காங்கிரஸை விட்டு விலகும் நிலையில் இருந்தார்கள். இச்சூழலை நாம் கோவை அய்யாமுத்துடி.எஸ்.எஸ்.ராஜன் போன்றவர்களின் சுயசரிதைகளிலும் ஈவேரா எழுத்துகளிலும் இன்று வாசித்தறிய முடிகிறது.

வ.வே.சு.அய்யர் அப்போது காங்கிரஸ் தலைமையால் மதிக்கப்படும் நிலைமையில் இருந்தார். அப்போது காங்கிரஸில் வளர்ந்து வந்துகொண்டிருந்த ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்கும் இடையே அகங்கார மோதல் உருவானது. வ.வே.சு.அய்யர் பொதுவாகவே கொஞ்சம் தோரணை கொண்டவர் என்பது பலரால் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் படித்தவர், விரிவான வாசிப்பு கொண்டவர், தியாக வரலாறு கொண்டவர். காங்கிரஸில் தன்னை அவர் விதிகளுக்கு அப்பாற்பட்ட பிதாமகனாக எண்ணிக்கொண்டிருந்தார்.

பொதுவாகவே எவருக்கும் பணிந்து போகாதவர் ஈவேரா. அத்துடன் காந்தியைப்போலப் பண விஷயத்தில் மிதமிஞ்சிய கண்டிப்பு கொண்டவர்.  காங்கிரஸ் கட்சியின் செயலராகக் காசோலையில் கையெழுத்திடும் இடத்தில் இருந்தார் ஈ.வே.ரா.  பொதுவாகவே ஈவேரா ஐந்துபைசாவுக்கும் ஆயிரம் கணக்கு கேட்பார், துளைத்து எடுப்பார். அதை கோவை அய்யாமுத்து விரிவாகவே எழுதியிருக்கிறார். வ.வே.சு. அய்யர் பணத்துக்கு வந்தபோது ஈவேரா கணக்குகளைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். அதை வ.வே.சு.அய்யர் தனக்குச் செய்யப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொண்டார். ஈவேரா , வ.வே.சு.அய்யரின் தோரணையால் எரிச்சல் கொண்டார்

காங்கிரஸ் கட்சி ஆசிரமத்துக்கு ஒதுக்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கான காசோலையை வ.வே.சு.அய்யர் கேட்க வந்தபோது காங்கிரஸ் கமிட்டியின் எல்லா நிபந்தனைகளையும் அய்யரின் ஆசிரமம் நிறைவேற்றுகிறதா எனத் தன்னிடம் ஐயர் வாக்குமூலம் கொடுத்தால் காசோலையில் கையெழுத்திடுவதாக ஈ.வே.ரா சொன்னார். அய்யர் ஈவேராவை அலட்சியம் செய்து கூட்டுச்செயலாளாரிடம் ஐயாயிரம் ரூபாய்க்குக் காசோலையை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

ஈவேரா

நான்குநாள் கழித்து இந்தத் தகவல் ஈவேராவுக்குத் தெரிய வந்தது. அந்த அலட்சியத்தால் சீண்டப்பட்ட ஈவேரா மிச்சத் தொகையைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்துவிட்டார். அய்யருக்கும் ஈவேராவுக்கும் கடுமையான பூசல் ஏற்பட்டுவிட்டது. அய்யர் ஈவேராவை சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக காங்கிரஸ் மாகாணக் கமிட்டிக் கூட்டம் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் இல்லத்தில் நடந்தபோது ஈவேராவிடம் உள்ள பூசலைப்பற்றி சொல்லாமல் தனக்கு மிச்ச ஐயாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார். ராஜன் உடனே ஈவேராவைக் கூட்டத்திலேயே கடிந்து பேசினார்

கோபம்கொண்ட ஈவேரா,வ.வே.சு.அய்யர் கட்சியின் செயலராகிய தன்னை மதிக்கவில்லை, தன்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று கூறி ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட முடியாது என்று மறுத்தார். கூட்டத்தில் சிலர் ஈவேரா வயதில் மூத்த அய்யரை எதிர்த்துத் துடுக்காகப் பேசுவதாக சொன்னார்கள். அதில் ஈவேராவின் நெருக்கமான நண்பராகிய கோவை அய்யாமுத்து முன்னணியில் இருந்தார். ஈவேரா அய்யர் தன்னிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றார். வ.வெ.சு.அய்யர் ஈவேராவிடம் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் எழுந்து சென்றார். கட்சி ஈவேராவைக் கண்டித்தது. வேறு செயலர் கையெழுத்துப் போடட்டும், நான் போடமாட்டேன் என்று ஈவேரா கறாராகச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் எல்லா பிராமணர்களும் ஒரே தரப்பாகக் கூடிவிட்டதாக வரதராஜுலு நாயுடு கருதினார். அதை அங்கே அவர் கோபத்துடன் சொல்ல டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் வகுப்புவாதப்பேச்சு பேசுவதாக நாயுடுவைக் கண்டித்தார். கூட்டம் முடிந்ததும் பிராமணரல்லாதவர்களும் பிராமணர்களும் தனித்தனியாகப்பிரிந்து பேசிக்கொண்டார்கள்.  கடினமான சொற்கள் வீசப்பட்டன. மனக்கசப்புகள் பலப்பட்டன. ஈவேரா கையெழுத்து போடாததனால் வ.வே.சு.அய்யருக்குக் கடைசிவரை மீதிப் பணம் கொடுக்கப்படவில்லை.

அதைத் தொடர்ந்து திருச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈவேரா அவர்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சேவையைப்பாராட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த அதே மாநாட்டில் வ.வே.சு.அய்யர்,ஈவேரா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இது வெறும் தனிப்பட்ட மனக்கசப்பின் விளைவே என கோவை அய்யாமுத்து பதிவு செய்கிறார். ஈவேரா கடுமையாகப் புண்பட்டார். ஈவேராவின் நண்பரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவருக்கே உரிய படபடப்புடன் இது ஒரு சாதிய மனநிலையின் வெளிப்பாடு, பிராமணர் கூட்டாகச் சேர்ந்து இதைச் செய்கிறார்கள் என்று அந்த மாநாட்டில் குற்றம்சாட்டிப் பேசினார்.

வ.வே.சு.அய்யரின் தீர்மானம் தோல்வி அடைந்தது. இது தொண்டர் மட்டத்தில் பிராமணர்களைவிட பிராமணரல்லாதாரின் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரச்சமநிலை மாறியமைக்கான திட்டவட்டமான ஆதாரமாக இருந்தது.  இது பிராமணர்களுக்கு ஒரு சுவரெழுத்தாகத் தெரிந்தது. உள்ளே ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்குமான பூசல் வலுத்துக்கொண்டே வந்தது. அதற்கு வ.வே.சு.அய்யரின் பிதாமக மனநிலையே காரணம் என்று இப்போது பலவாறாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் மாறிவிட்டதை அய்யர் புரிந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அய்யருக்கு வெள்ளைய அரசு கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. காங்கிரஸின் நிதியைக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவேரா முற்றாக நிறுத்திவிட்டார்.  பள்ளியை நடத்துவது சிரமம் ஆகியது.வ.வே.சு.அய்யர் தன்னை வந்து பார்த்து சமாதானம் செய்வார் என ஈவேரா எதிர்பார்த்தார். ஆனால் அய்யர் தனிப்பட்டமுறையில் மக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அதை ஆதரித்து இதழ்களில் எழுதினர். திருவிகவும், வரதராஜுலு நாயுடுவும்கூட அதை ஆதரித்தனர்

கொதிப்படைந்த ஈவேரா நாயுடுவைக் கண்டித்துக் கூட்டங்களில் பேசினார். பிராமணச்சதிக்கு நாயுடு விலை போய்விட்டார் என்றார். நாயுடு திருவிகவை ஈவேராவிடம் தூதனுப்பினார். அவர்களுக்கிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஒற்றுமையாக இருந்து வ.வே.சு.அய்யரையும் அவருக்குப்பின்னால் உள்ள பிராமண அதிகாரத்தையும் தோற்கடிப்பது என முடிவெடுத்தார்கள். ஈவேரா, நாயுடு ஆகியோர் வ.வே.சு.அய்யர் பிராமண சாதிபேதத்தைப் பரப்புவதாகவும் ஆகவே பிராமணரல்லாதார் அவருக்கு நிதியுதவி செய்யவேண்டாம் என்றும் இதழ்களில் எழுதினார்கள்.  இது வ.வே.சு.அய்யரைக் கொதிப்படையச்செய்தது.அவர் மேலும் தீவிரமாக வசூலில் ஈடுபட்டார். அவர் நாடறிந்தவராதலால் ஆதரவும் அதிகம் இருந்தது.

சிலநாட்கள் கழித்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய மகன் வந்து சேர்மாதேவி ஆசிரமத்தில் இரு பிராமண மாணவர்களுக்குத் தனிப் பந்தி போடப்படுவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தைப் பெரிய அளவில் வெளியே கொண்டுவந்து வ.வே.சு.அய்யரை ஒடுக்கவும்,  பிராமணத்தலைமைக்கு எதிராக பிராமணரல்லாதாரைத் திரட்டவும் முடியும் என வரதராஜுலு நாயுடுவும் ஈவேராவும் கருதினர். அதை ஒரு பெரிய விஷயமாக முன்னெடுத்தனர். வ.வே.சு அய்யரின் ஆசிரமத்தில் பிராமணரல்லாதார் கொடுமைக்குள்ளாவதாகவும் பிரார்த்தனை உட்பட அனைத்திலுமே சாதிபேதம் காட்டப்படுவதாகவும் ஈவேராவும் நாயுடுவும் கடுமையாக எழுதினர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுக்க காங்கிரஸில் இருந்த பிராமணரல்லாதாரைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் வ.வே.சு.அய்யர் அவருக்கே உரித்தான மிதப்பில் இதைப் பொருட்படுத்தவில்லை. அவர் விளக்கமளிக்கவும் இல்லை. காந்தி உட்படப் பலர் விளக்கம் கோரியும்கூட தான் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் பதிலளிக்க முடியாது என்ற நிலையை வ.வே.சு.அய்யர் எடுத்தார். சில விஷயங்களை அவர் விளக்கியிருந்தால் அன்றே இச்சிக்கல் ஓய்ந்திருக்கும்.

உதாரணமாக ஆசிரமத்தில் பிரார்த்தனைகளில் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் என்ன வகையான பிரார்த்தனைகள் இருக்கின்றனவோ அதுவே பின்பற்றப்பட்டது. அதாவது சைவர்களுக்கு தேவாரம்,திருவாசகமும், வைணவர்களுக்குத் திருவாய்மொழியும், பிராமணர்களுக்கு உபநிடத பாடங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டன. ஒரு வழிபாட்டுமுறை கொண்டவர்கள்மேல் பிற வழிபாட்டுமுறைகள் திணிக்கப்படவில்லை. இது அன்றைய சூழலில் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஒருசைவ வேளாளப்பிள்ளைக்கு உபநிடதம் சொல்லிக்கொடுப்பது பெரும் மத அவமதிப்பாகவே கொள்ளப்படும். வ.வே.சு.அய்யர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தே பிள்ளைகளைச் சேர்த்திருந்தார்

ஆனால் அங்கே விருப்பமுள்ள அனைவருக்குமே உபநிடதங்கள் கற்பிக்கப்பட்டன. அய்யர் மாணவர்கள் குர் ஆன், பைபிள் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துபவராக இருந்தார். அதைப் பல இடங்களில் எழுதியிருக்கிறார். ஆனால் அவரால் அதை ஒரு பாடத்திட்டமாக ஆசிரமத்தில் வைக்க முடியாத நிலை இருந்தது என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் அவர் விளக்க முயலவில்லை. தன்னைப்பற்றி அனைவருக்கும் தெரியும் என்று அவர் நினைத்தார்.

ஈவேரா காங்கிரஸில் இருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தையும் பின்னர் திராவிடர் கழகத்தையும் ஆரம்பிப்பதற்கான தூண்டுதல் நிகழ்ச்சி இது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே அய்யர் தன் மாணவர்களுடன் பாபநாசம் அருவியில் குளிக்கச்சென்று வெள்ளத்தில் சிக்கிய மகளைக் காப்பாற்றுவதற்காக முயன்று மரணம் அடைந்தார். பிரச்சினை அங்கே முடிந்தாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமான விஷயத்தில் மீண்டும் பிராமணர் -பிராமணரல்லாதார் பேதம் மேலோங்கி, காங்கிரஸில் இருந்து ஈவேரா வெளியேறினார். இந்தக் காலகட்டத்தில்தான் சிலமாதங்கள் வைக்கம் சென்று அந்தப் போரில் பங்குபெற்றார்.

இதையொட்டி வ.வே.சு அய்யர் ஒரு இந்துசனாதனி என்றும் சாதியவாதி என்றும் தொடர்ந்து வரலாறு எழுதப்பட்டு வந்தது. அதை மறுத்து அவரது உண்மையான ஆளுமையை முன்வைக்கும் எழுத்துக்கள் எழுதப்படவில்லை. பிராமண சனாதனிகளும் அவரைத் தங்களவர் என்று எழுதத்தலைப்பட்டார்கள். சேர்மாதேவி ஆசிரமத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்தவர்கள் மிகமிகக் குறைவே.  சாதிவெறியர் என ஒற்றைவரி முத்திரையால் அய்யர் வரலாற்றில்ன்ஒதுக்கப்பட்டார்.

இப்போது தலித் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், 1925 வாக்கில் சேர்மாதேவி ஆசிரமத்தில் பிராமணரல்லாத உயர்சாதி மாணவர்களுக்குத் தீட்டு கற்பிக்கப்பட்டது எனக் கொதித்தெழுந்த திராவிட இயக்க அரசியல்வாதிகள் 1960 களில்கூட அதே ஒதுக்கு தலித் மாணவர்களுக்கு அனேகமாக எல்லாப் பள்ளிகளிலும் இருந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. 1990 களில்கூட பல்வேறு ஆலயங்களில், தேர்த்திருவிழாக்களில் தலித்துக்கள் ஒதுக்கப்பட்டது அவர்கள் கண்ணில் படவில்லை.

ஈவேரா,வ.வே.சு.அய்யருக்கு எதிராகப் போராடிய அக்காலகட்டத்தில் ஈவேராவின் சாதியினர் உட்பட பல பிராமணரல்லாத உயர்சாதியினர் நடத்திவந்த பள்ளிகளில் தலித் மாணவர்கள் சேர்ந்து அமரவோ உணவுண்ணவோ அனுமதிக்கப்படவில்லை. அதைப்பற்றி அன்றைய தலித் தலைவர்கள் தங்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். அவை எந்த மனசாட்சிப்பிரச்சினையையும் உருவாக்கவில்லை. இன்றும்கூடப் பல பள்ளிகளில் அந்நிலை நீடிக்கிறது. அதற்கு எதிராகத் தமிழ்ப் பொதுமனநிலை இன்றும் திரண்டிருப்பதாகச் சொல்லமுடியாது.  எண்பதுகளுக்குப்பின் உருவாகி வந்த தலித் இயக்கங்களே அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

ஆனால் இதை ஈவேராவின் சாதிய நோக்கு என சில தலித் எழுத்தாளர்கள் எழுதுவதை என்னால் ஏற்கமுடியவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். அவர் இந்த மனநிலைகளுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதி என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எந்த அரசியல்தலைவரையும்போல அவரும் தன் ஆதரவு அடித்தளத்தை மீறி எதையும் செய்துவிடமுடியாத நிலையிலேயே இருந்தார். அவரது ஆதரவுத்தளம் என்பது முதன்மையாக பிராமணரல்லாத உயர்சாதியாகவே [முக்கியமாக நாயுடு, நாயக்கர், மற்றும் முதலியார்] அன்று இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் முன்னிடம் பெற ஆரம்பித்த பின்னரே திராவிட இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இயக்கமாக உருமாற்றம் கொண்டது. ஈவேராவின் ஆதரவுத்தளமும் மாறியது. இன்று அவர் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகமாகவே அறியப்படுகிறார்.தமிழகத்தில் ஈவேரா தலித்துக்களுக்காக எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை. அந்த வரலாற்று உண்மையை மறைக்கவே அவர் சிலநாட்கள் பங்குபெற்ற வைக்கம்போராட்டம் முழுக்கமுழுக்க அவரால் நடத்தப்பட்டது என்ற வரலாற்றுத் திரிபு செய்யப்பட்டது.

வ.வே.சு.அய்யர் செய்துகொண்ட சமரசம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஒரு அமைப்பு அதன் நிலைநிற்புக்காக ஆதாரமான கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதென்பது அபத்தம். சேர்மாதேவி ஆசிரமம் மூடும்நிலையில் இருந்தது என்பது உண்மை என்றாலும் அந்நிலையில் அதை மூடியிருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

வ.வே.சு.அய்யர் தன்னுடைய கல்விப்பணிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் வாரிசாக நியமித்தது கொங்குகவுண்டரான சுவாமி சித்பவானந்தரைத்தான். சித்பவானந்தர் தமிழகத்தில் ஒரு பெரிய கல்வி இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு நிதியாதரவு அளித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பிராமணரல்லாத செல்வந்தர்களே. அன்றும் இன்றும் எல்லாவகையிலும் சாதி ஒதுக்குதல்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது சித்பவானந்தரின் கல்வியமைப்பு. இதையும் நாம் கணக்கில் கொண்டாகவேண்டும்.

சமீபகாலமாக வ.வே.சு.அய்யர் மீதான மொத்தையான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால்சென்று அவரை அணுகும் நோக்கு உருவாகி வருகிறது. அதற்கு உதாரணம் என்று சொல்லத்தக்க  ஒரு நல்ல கட்டுரை செப்டம்பர் 2011 ‘உயிர் எழுத்து’ இதழில் மீனா எழுதி வெளிவந்துள்ள ’வ.வே.சு- ஒற்றை வரலாறுகளுக்கு இடையே உருப்பெறும் பன்முகம்’ என்ற கட்டுரை.

வ.வே.சு.அய்யர் பற்றிய திராவிட இயக்க திரிபுகளுக்கு மட்டுமல்லாமல் அவரைச் சொந்தம்கொண்டாடும் சனாதன தரப்பு திரிபுகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது திராவிட இயக்கத்தினரின் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இக்கட்டுரை. வ.வே.சு.அய்யர் எப்படி மத,இன நோக்குக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார் என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் வாதிடுகிறது. தென் தமிழ்நாட்டில் மதநோக்குக்கு அப்பார்பட்டவர் என இஸ்லாமியர் தரப்பால் எண்ணப்பட்டவர் அவர். பெரும்பாலான பூசல்களில் சமரசம்செய்யும் தரப்பாகத் திகழ்ந்தவர். நம்பிக்கையிலும் தனிவாழ்க்கையிலும் சாதிபேத நோக்கு இல்லாதவராக வாழ்ந்தவர்.

வன்முறைப்பாதையில் நம்பிக்கை கொண்டிருந்து,அந்தப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவரான வ.வே.சு அய்யர் காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக ஆன ஆரம்பகாலத்தில் காந்தியை நேரில் சந்திக்கிறார். அந்த சாதாரண சந்திப்பில் காந்தியின் தோற்றத்தாலேயே மனமாற்றம் கொண்டு உறுதியான அகிம்சைவாதியாக ஆனார்.

சேர்மாதேவி ஆசிரம விஷயத்தை பிராமணரல்லாத ஒருவரின் கோணத்தில் நின்றுதான் ஆசிரியர் விமர்சிக்கிறர். வ.வே.சு.அய்யர் எடுத்த நிலைப்பாடு தவறானது என்றாலும் அது அவர் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு அளித்த தனிப்பட்ட உறுதிமொழி சார்ந்தது என்றும் , பெரும் எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் அந்த மாணவர்களை நீக்கமுடியாது என்ற முடிவில் நீடிக்க அதுவே காரணம் என்றும் மீனா குறிப்பிடுகிறார். ஆனால் வ.வே.சு.அய்யர் ’குருகுலத்தில் இனி எந்த ஒரு மாணவருக்கும் தனிப்பந்திமுறையை அனுமதிக்கமுடியாது’ என்று அறிவித்து அந்த அறிவிப்பை ’தி இந்து’ நாளிதழில் வெளியிட்டார் என்கிறார்.

கட்டுரையாசிரியர் ‘காலாகாலமான பார்ப்பனிய ஒதுக்குதலுக்கு எதிரான சீற்றத்தில் வ.வே.சு.அய்யர் பலியானது சோகமானது’ என்கிறார். ’ இது பார்ப்பனரல்லாதாரிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த முறையை வ.வே.சுவே புகுத்தியதைப்போன்ற ஒரு கருத்து இங்கே கட்டமைக்கப்பட்டதில் தட்டையான வரலாறு எழுதும் முறையும் வறட்டுத்தனமான அரசியல் அணுகுமுறையும் பெரும்பங்கு வகித்துள்ளது’என்கிறார் ஆசிரியர்

வ.வே.சு அய்யரின் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட ஓர் இரங்கல் கட்டுரையில் இருந்து ஒரு நீண்ட பகுதியை மீனா மேற்கோள் காட்டுகிறார். அப்போது அவரது ஆசிரமத்துக்கு எதிரான பிரச்சாரம் உச்சநிலையில் இருந்தது.  ‘சாதி மத பேதம் கடந்த பெரியார் ஆவர் நம் ஐயர். மக்கள் யாவரும் நிகரெனும் கொள்கையுடைவரவர். சமூக வாழ்க்கையை குலைத்து பெருங்கேடு விளைவித்து வரும் கொடிய வழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் உடையவர். …இதுகாலை நடந்துவரும் குருகுலப்போர் இவரது சமூகக் கொள்கைகளின் மேல் மக்களுக்குள் ஒருவித ஐயத்தை உருவாக்கி விட்டதென்றாலும் அவ்வையப்பாட்டுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. உடனுண்ணலையும் வேறு சாதியார் இல்லங்களில் உணவெடுத்தலையும் இவர் கைக்கொண்டிருந்தார் என உண்மையை யாமறிவோம்’

இந்த இரங்கல் கட்டுரையை எழுதியவர் ஈ.வே.ரா அவர்கள்தான். ‘பிரச்சினைகளைப் பன்முகப் பரிமாணங்களுடன் பார்க்கும் பண்பும் விமர்சனங்களுக்காகப் பங்களிப்புகளைப் புறக்கணித்துவிடாத நடுநிலைமையும் பெரியாரிடம் இருந்தது. இத்தகைய பண்புநலன்கள் ஒரு சிறிதும் இன்றி காஞ்சி சங்கராச்சாரியாருடன் வ.வே.சுவை ஒப்பிட்டுப்பார்த்தவர்கள்,தம்மைப் பெரியாரின் வழிவந்தவர்களாக சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் அவலத்தை என்னவென்பது?’ என்கிறார் கட்டுரையாசிரியர்.

பின்னாளைய திராவிட இயக்க நூல்களில் சற்றும் அடிப்படை இல்லாமல் வ.வே.சு.அய்யரின் ஆசிரமக் கல்விநிலையத்தில் அப்பட்டமான சாதிக்கொடுமைகள் நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளன.இணையத்தில் இந்த விஷயத்தைப்பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது என தேடினேன். ‘அதிகம் படித்த வ.வே.சு அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் வருணாசிரம அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது. பார்ப்பன சிறுவர்களுக்கு தனியிடம், தனித்தண்ணீர், தனி உணவு என்றும் பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறு இடம், வேறு தண்ணீர், வேறு உணவு என்று வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். பார்ப்பன சிறுவர்களுக்கு காலை உணவாக உப்புமா போன்றவை சூடாக பரிமாறப்பட்டது. பார்ப்பனர் அல்லாதகுழந்தைகளுக்கு பழைய சேற்றையே கொடுத்து வந்தனர்’ என எழுதப்பட்ட கட்டுரையைக் கண்டு உண்மையிலேயே வருத்தமடைந்தேன்.

‘புறக்கணிக்கப்பட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டும் கிடக்கும் வரலாற்றுப்பக்கங்களில் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் முன்முடிவுகளைக் கைவிட்டு சனநாயக வாசிப்பை சாத்தியப்படுத்துவதுமே நமக்குரித்தான பணிகள்.’ என்று மீனா சொல்லும் வரிகளை மீண்டும் ஆமோதிக்கிறேன். இத்தகைய கட்டுரைகள் இனிமேலாவது அதிகார விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட அநீதிகளைச் சமன் செய்யட்டும்.

 

முதற்பிரசுரம் Sep 26, 2011  மறுபிரசுரம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பெரியார் அவதரித்த புனித மண்!


 
 
 
Save
Share56
 

Perumal-Murugan

அன்புள்ள ஜெ ,
எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி கண்ணீர் மல்க கடிதம் எழுதலாம் சமுக வலை தளங்களில் ஆவேசம் அடையலாம் அவரின் முடிவை ஏளனம் செயலாம் ஆனால் திருசெங்கோடில் சாதி அமைப்புகள் எதிர்ப்பு அதன் வீரியம் பல பேருக்கு தெரியாது . இன்னும் சாதியின் மேன்மையை , சில தெருவுக்குள் , சிலர் வீட்டுக்குள் , சில திருமணத்திற்கும் சில மக்கள் வரவே கூடாது என்று நெனைக்கும் கொங்கு தேசத்தில் தனியாய் ( எழுத்தாளனுக்கு என்றும் குழு கிடையாது ) வாழ்ந்து போராடுவது கடினம் . நீங்கள் சொன்ன மாதிரி நம்முடைய எதிர்ப்பை இந்த புத்தக கண்காட்சியிலே காட்டலாம் . இதை விட அருமையான தருணம் வேறு எதுவும் இல்லை . இப்படியே போனால் பிற்காலத்தில் சாதி சார்புடைய , சாதி பலம் கொண்ட , சாதி , மதம் மட்டுமே எழுதி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் கூடம் மட்டுமே இருக்கும் … நாம் சிறுகூட்டம் தான் ஆனால் நல்ல தெளிவான எதிர்ப்பை காட்ட இது சரியான தருணம் …

ஊசூ

அன்புள்ள ஊ சூ

பெயர்சொல்லவும் அஞ்சும் உங்கள் நிலையை நான் புரிந்துகொள்கிறேன்

ஈவேரா அவர்கள் பிறந்த, பெரும்பாலும் பணியாற்றிய அவரது மண் அவர் மறைந்து இத்தனை நாட்களுக்குப்பின் எப்படி இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் போல காலம் கடந்து நிற்கும் சான்று இன்னொன்று இல்லை.

ஈவேரா பாடுபட்டது முழுக்க முழுக்க இந்த இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக என்பதே உண்மை. இவர்களிடம் தங்கள் சாதிப்பற்றைக் கைவிடும்படி அவர்கள் சொல்லவில்லை. மாறாக இவர்கள் தங்கள் ஆதிக்கச் சாதிவெறியை தக்கவைத்துக்கொள்ள மிகச்சிறந்த திரை ஒன்றை அவர் அமைத்துக்கொடுத்தார் – பிராமண வெறுப்பு.

ஆகவேதான் அவர்கள் அவரைக் கொண்டாடினர். பெரியார் பிறந்த மண் என தங்கள் மண்ணை மேடைமேடையாக முழங்கினர். பெருமாள் முருகனே அப்படி முழங்குவதைக் கேட்டிருக்கிறேன்.

ஈவேரா எந்த சாதியொழிப்பையும் கொண்டுவரவில்லை. எந்த மக்களிடமும் சிறிய அளவிலான மனமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. சாதிவெறியை திறமையாக மறைக்க, பிராமணர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மாய்மாலத்தைச் செய்ய இடைநிலைச்சாதிகளை கற்பித்தார்.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து அந்தத் திரை கொஞ்சம் விலகுகிறது. அதையும் மழுப்பவே பெரியாரியர்கள் முயல்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி உண்மை பல்லிளிக்கவே செய்யும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை


 
Save
Share139
 

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ. வே. ரா வின் அணுகுமுறை

 

இக்கட்டுரை , ஈ.வே.ரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல. அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு. அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன் வைக்க என்னால் முடியும். அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கட்டுரையை என் மனப் பதிவும், நிலைப்பாடும் என்ன என்பதை இவ்விவாதச் சூழலில் விளக்குவதற்கே எழுதியிருக்கிறேன்.

பொதுவாக ஈ.வே.ரா குறித்துப் பேசுபவர்களுக்கு ஒரு போக்கு உண்டு. அவர்கள் மற்ற சிந்தனையாளர்களை அச்சிந்தனையாளர்களின் சொந்த வாழ்க்கை, பொதுச் செயல்பாடுகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு மதிப்பிடுவார்கள். ஆனால் ஈ.வே.ரா வை மதிப்பிட முன் வருபவர்கள் அவரது பேச்சுகளை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், மற்ற விஷயங்களைக் கணக்கில் கொண்டால் அது அவதூறு என்றும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

பெரியாரியர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் மற்ற அனைவரையும் தனி வாழ்க்கை சார்ந்தே விமர்சித்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தனி வாழ்க்கை எப்போதுமே விசித்திரமான முறையில் மர்மமாக இருக்கும். தமிழகத்துப் பெரியாரியர்களில் தங்கள் சொந்த சாதியின் எல்லையை கடந்தவர்கள் மிக, மிகக் குறைவு என்ற எளிய உண்மை கூட, இதனால் விவாதத்துக்கு வருவது இல்லை.

என்னைப் பொறுத்த வரை, ஒருவர் என்ன சொன்னார் என்பது ஒரு போதும் முதன்மையான அளவுகோல் அல்ல.

சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

ஈ.வே.ரா தன் நீண்ட வாழ்வில் பல் வேறு இடங்களில் பேசிய பேச்சுகளில் பலவகைப் பட்ட கருத்துக்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் உள்ளன. பொதுவாக அவரது இயல்பு, மிகையாக உச்சகட்ட வேகம் வெளிப்பட கருத்து சொல்வது. ஆகவே இன்று, அவரைத் தங்கள் விருப்பப் படி சித்தரிப்பது மிக எளிது.

எஸ். வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், கி வீரமணி ஆகியோர் முன் வைக்கும் மூன்று கோணங்களும் அவரது பேச்சுகளில் இருந்து உருவாக்கப் பட்டவை. ஈ.வே. ரா வை ஒரு இந்து ரிஷி எனச் சித்தரிக்கும் பல நூறு மேற்கோள்களைத் திரட்டி ஒருவர் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  ஆகவே எஸ். வி. ஆர், அ மார்க்ஸ் ஆகியோரின் முயற்சிகளை ஒருவகை அறிவுத் தொழில் நுட்பங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன். எனக்கு அவரது வாழ்க்கையும், அவரது செயலின் விளைவுகளும் முக்கியமே. பேச்சுகளை மட்டும் வைத்து மதிப்பிட வேண்டுமென்றால் தமிழ் சரித்திரத்திலேயே பெரிய கலகக்காரர் சாரு நிவேதிதா தான், ஈ.வே.ரா உறை போடக் கூடக் காணாது.

ஈ.வே.ரா வின் வாழ்க்கையை வைத்து அவரை ஒரு கலகக்காரர் என்றோ, சமூக அமைப்பை முழுமையாக மறுதலித்தவர் என்றோ சொல்வது வேடிக்கையானது. சொத்து சேர்ப்பது, அச்சொத்தை வாரிசுகளிடம் விட்டுச் செல்ல முனைவது, அதற்காக வயதில் பாதி கூட இல்லாத பெண்ணை மணம் செய்வது, சொந்த சாதியின் எல்லைகளை மீறாமலிருப்பது, ஏன் சொந்த மதத்தின் அடையாளத்தைக் கூடத் துறக்க மறுப்பது என ஈ.வே.ராவின் மனம் ஒரு மரபார்ந்த முறையிலேயே செயல் பட்டுள்ளது .

அவரது எழுத்துக்களில் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுக்கவாதியின் பார்வையையே காண முடிகிறது -மதத்துக்குப் பதிலாக ஒழுக்கத்தை முன் வைத்தவர் என்று ஈ.வே.ராவை கூறி.விட முடியும். அந்த ஒழுக்கங்கள் பல மரபால், மதத்தால் உருவாக்கப் பட்டவை . அவர் அவற்றின் மூல ஊற்று குறித்தெல்லாம் சிந்தித்ததே இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மரபான அறம், ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளையே தன்னை நாடி வந்தவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து சொல்லியுள்ளார் .

பல நூல்களை இது குறித்து சொல்லலாமென்றாலும் முக்கியமாகச் சொல்லவேண்டிய நூல் கோவை அய்யாமுத்து வின் சுயசரிதை. ஈ.வே.ராவின் நண்பராகவும், குடியரசு வெளியீட்டாளராகவும் இருந்த சர்வோதயத் தலைவர் அவர். அவர் காட்டும் ஈ.வே.ரா மரபான மனப் போக்கும், லெளகீக விவேகமும், சக மனிதர்களிடம் அபாரமான கனிவும் கொண்ட, அதே சமயம் மிகக் கறாரான,  துடுக்குத்தனமும் , நிலையற்ற சிந்தனைப் போக்கும். கொண்ட, ஒரு மேலான மனிதர் மட்டுமே.

இன்று ஈ.வே.ரா தமிழகத்தில் விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட பிம்பமாகக் கட்டமைக்கப் பட்டு வருகிறார். படிப் படியாக அவர் குறித்த நினைவுகளும் அப்படியே தொகுக்கப் பட்டுப் பதிவாகும். வரலாறும் அப்படியே சமைக்கப்படும். ஆயினும் சிலராவது இம்மாதிரி படிமச் சமையல்களை மீறி விஷயங்களக் காண முற்படவேண்டிய அவசியமுள்ளது. ஆனால் இங்கு அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு உருவாக்கப் படும் கெடுபிடிகளை அஞ்சியே செயல் படுகிறார்கள் .

உதாரணமாக ஒரு நிகழ்ச்சி: நான் எவருடைய பட்டப் பெயரையும் குறிப்பிடுவதில்லை. ஆகவே மகாத்மா என்றோ, பெரியார் என்றோ எழுதுவதில்லை. சிலகாலம் முன்பு கன்னட சிந்தனையாளர் டி. ஆர். நாகராஜ் அவர்களை, காலச் சுவடுக்காக பேட்டி கண்டேன். நாகராஜ் ஈ.வே.ராவின் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்து பிறகு தலித் சிந்தனையாளராக ஆனவர். ஈ.வே.ரா மீது மதிப்பை வெளியிட்டு, கூடவே அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல, பாமரத் தனமான சீர் திருத்தவாதியே, என்றும் கருத்து சொல்லியிருந்தார். தன் பேட்டியில் அவர் ஈ.வே.ரா [E.V.R] என்று மட்டுமே சொல்லியிருந்தார். ஆனால் காலச்சுவடு , பெரியார் என்று போடா விட்டால் இதழுக்கே பிரச்சினை வரும் என்று பயப் பட்டது. அது உண்மையும் கூட. அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி கடைசியில் ஒரு சமரசமாகப் பெரியார் என்று தான் போட வேண்டி வந்தது. இன்று இம்மாதிரி கெடு பிடிகளை மீறி அவரை, அவரது பங்களிப்பின் ஒட்டு மொத்தத்தை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும்.

ஈ.வே.ரா முற்றிலும் மரபான மனம் கொண்டவர் என்று நான் சொல்ல வரவில்லை. முற்றிலும் மரபை எதிர்த்தவர் என்று சொல்ல முடியாது என்று தான் சொல்கிறேன். யதார்த்த மனம் கொண்ட எவருமே அப்படி எல்லாவற்றையும் தலைகீழாக்க வேண்டுமென்று சொல்லவும் மாட்டார்கள். ஈ.வே.ரா வாய்ப்பந்தல்காரர் அல்ல,செயல்வாதி. அவர் வரையில் எதை நம்பினாரோ அதைச் செய்ய முயன்றவர் அவர். அவ்வகையில் திராவிட இயக்கத்தவரில் அவர் விதி விலக்கு.

ஒவ்வொன்றும் அதன் உள்ளார்ந்த பல காரணங்களுடன், ஒரு தொடர்ச்சி நிலையில் தான் இங்கு காணப்படுகிறது. ஒவ்வோரு விஷயமும் ஏராளமான பிற விஷயங்களுடன் கலந்தும் உள்ளது. முழுப்புரட்சி பேசும் மார்க்ஸியர் கூட அதை ஏற்றுத்தான் பேச முடியும். அந்தச் சிக்கலை ஓரளவேனும் புரிந்துகொண்டவன் தான் சீர்திருத்தவாதியாக ஏதேனும் செய்ய முடியும். ஈ.வே.ரா அமைப்புக்கு வெளியே போய்த் தீர்வு காண முயன்றவர். மற்ற அத்தனை பேரும் அமைப்புக்குள்ளேயே தீர்க்க முயன்றவர்கள், என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்ல என்ன ஆதாரம்? [மேற்கோள் என்றால் காஞ்சி சங்கராச்சாரியாரில் இருந்தே அதேபோல எடுத்துக் காட்டுகிறேன்] இம்மாதிரி பொது சொற்றொடர்களைத் தவிர்த்து விட்டுப்பேச முயல்வது நல்லது.

என்னைப் பொறுத்த வரை ஈ.வே.ரா ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமே. எல்லா சீர்திருத்த வாதிகளிடமும் மேலான ஒரு சமூகம் குறித்த கனவு இருக்கும். அது எப்போதுமே நடைமுறையிலிருக்கும் அமைப்புக்கு வெளியேதான் இருக்கும். அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குரிய ஒரு குறைந்த பட்ச செயல் திட்டமும் இருக்கும். அத்துடன் அவர்கள் அடிப்படையில் சார்ந்து இருக்கும் ஒரு சமூகப்பின்னணி [அல்லது ஆதரவுத்தளம்] இருப்பதையும் காணலாம். அது அக்காலத்தைய வரலாற்றுச் சந்தர்ப்பத்தால் இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒன்று

ஒரு சமூகவியல் ஆய்வாளன் அச்சீர்திருத்தவாதியை முற்றிலும் தவிர்த்து விட்டு அவரது எழுச்சியையும், சாதனைகளையும் முழுக்க ஒரு சமூக வர்க்கப் போராட்டமாக மட்டும் காணமுடியும்– ஈ.எம்.எஸ் எப்போதுமே அப்படித் தான் பார்க்கிறார். நாராயண குரு ஈழவப் பின்னணி உடையவர். பூலே மகர்களின் பின்னணி உடையவர். இப்படி அனைத்து சீர்திருத்தவாதிகளைப் பற்றியும் சொல்லலாம். அதே சமயம் அவர்கள் இப்பின்னணியின் உருவாக்கம் மட்டுமே என்று சொல்லும் அணுகு முறைகளை என்னால் ஏற்க முடியவில்லை. இப்பின்னணிக்கு அப்பாலும் அவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய தனி ஆளுமைக்கும், இப்பின்னணிக்கும் இடையேயான ஒரு மோதல்-சமரசப் புள்ளியாகவே அவர்களின் செயல் பாட்டுத் தளம் அமைகிறது .

நீண்ட காலமாக ஒடுக்கப் பட்ட ஈழவ மக்கள் ஆட்சியிலும், சமூக அதிகாரத்திலும் பங்கு பெறும் பொருட்டுக் கொண்ட சமூக எழுச்சி, நாராயண குருவின் பின்னணியில் உள்ளது. அதை அவர் உருவாக்கினார், அது அவரையும் உருவாக்கியது. இரண்டையும் பிரிக்க முடியாது. அந்த எழுச்சியின் தேவைகளும், விதிகளும் அவரைத் தீர்மானித்தன. கூடவே அவரது தத்துவத் தேடல்,      தனிப்பட்ட ஆளுமைஅம்சங்களும் அவரை தீர்மானித்தன. அவரது வாழ்க்கை முழுக்க இவ்விரு சக்திகளுக்கும் இடையேயான மோதலும், சமரசமும் மாறி மாறி நடக்கும் வலி மிக்க நாடகத்தை நாம் காணலாம்.  அவரது வாழ்க்கை குறித்து, கறாரான வரலாற்றுப் பதிவுகள் பல எழுதப் பட்டிருப்பதனால் நமக்கு இன்று இது தெரிகிறது.

ஈழவர்களுக்கு, மற்ற தீண்டப்படாதாருடன் உள்ள துவேஷத்தை நீக்க, நாராயண குரு தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை போராடினார். அதில் ஏராளமான மனக் கசப்புகளையும் விரோதங்களையும் கூட அவர் அடைந்தார். ஈழவர்களின் அதிகாரப் போட்டிகளை அவர் தொடர்ந்து காண நேர்ந்தது. அவரது பிரியப்பட்ட மூன்று முக்கிய மாணவர்களும் [நடராஜ குரு, ‘புலையன் ‘ அய்யப்பன், குமாரன் ஆசான்] அவரது இயக்கத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இறுதிக் கட்டத்தில் அவரும் வெளியேறினார்.  இதெல்லாம் தான் நிதரிசனங்கள். எல்லா சீர்திருத்த வாதிகளின் வாழ்க்கையிலும் இந்த போராட்டமும், அவலமும் இருக்கும். உண்மையில் இது இலட்சிய வாதத்துக்கும், யதார்த்தத்துக்கும் இடையேயான  போராட்டம்.

ஈ.வே.ரா குறித்து தமிழில் வரலாற்றுப் பதிவுகள் இல்லை, துதிகளே உள்ளன. ஆயினும் அவர் ஏறத்தாழ சமகாலத்தவர், நானே அவரைப் பார்த்து, பேச்சை கேட்டிருக்கிறேன். ஆகவே பல விஷயங்களை நாம் இப்போதும் அறிய முடிகிறது. ஈ.வே.ரா வின் ஆதரவுத் தளம் அவரது அரசியலில் தெளிவாகவே இருக்கிறது. பிராமணரல்லாத உயர் சாதியினர் ஆட்சி மற்றும், சமூக அதிகாரத்துக்காக நடத்திய சமூகப் போராட்டத்தின் பின்னணியே ஈ.வே.ரா வின் இயக்கம். அந்த எல்லையைத் தாண்டிப் போகும் அம்சங்களும் அவரிடமிருந்தன. அவை அந்த அரசியலில் சமரசத்துக்கும் உள்ளாயின. அதிகாரம் கிட்ட நெருங்கியபோது அவரும், நாராயணகுரு போலவே புறக்கணிக்கப் பட்டார்

ஈவேராவின் இயக்கம், பிரிட்டிஷ் அரசதிகாரத்துடன் சமரசம் செய்துகொண்டு, அதற்குக் குற்றேவல் புரிந்தது என்று கூடச் சொல்லலாம். ஆட்சியதிகாரத்தைக் கையாள விரும்பிய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து உருவானது.  அன்று வரி செலுத்துவோர் மட்டுமே வாக்களித்தனர். ஆகவே நிலமும், சொத்தும் வைத்திருந்த பிராமணர் வலுவான சக்தியாக இருந்தனர். அதனால் அந்த இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கமாக ஆரம்பித்து ஆட்சிக்கு முயன்ற போது ஜஸ்டிஸ் கட்சியாக ஆகியது.

சுதந்திரத்திற்குப் பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை வந்த போது, பிற பிற்பட்ட சாதியினர் எண்ணிக்கை பலம் காரணமாக அரசியல் சக்தியாக ஆனார்கள். அப்போது ஈ.வே.ராவின் இயக்கம் அவரை மீறி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் பிற பிற்பட்ட சாதியினர் இயக்கமாக ஆகியது. பிராமணர் வெறுப்பு என்ற கொடியின் கீழ் உயர் சாதி நிலப் பிரபுக்களையும், குடியானவ சாதிகளையும் இணைக்கவும், அதிகாரத்தை நோக்கி செல்லவும் அது முயன்றது. ஒரு கட்டத்தில் உயர் சாதியினர், பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கை பலத்தால் ஓரம் கட்டப்பட்டு முற்றிலும் பிற்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக அது ஆகியது. இத்தருணத்தில் ஈ.வே.ராவும் அதிகார அரசியலில் ஓரம் கட்டப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் ஒரு புனித தந்தைச் சின்னமாக ஆக்கப் பட்டார்.

தலித்துக்கள் மீதான ஈ.வே.ராவின் அணுகுமுறை இன்று தமிழ் நாட்டில் மிகக் கடுமையாக விமரிசிக்கப் படுகிறது. வரும் காலத்தில் அது மேலும் வலுப்படவே செய்யும். நடைமுறையில் ஈ.வே.ரா தலித்துக்களுக்காக ஏதும் செய்யவில்லை. அவரது ஆதரவுத் தளங்களில் இருந்த கடுமையான சாதிக் கொடுமைகளைத் தடுப்பதற்காகக் குரல் கொடுக்கவோ, திட்டவட்டமான போராட்டங்களில் ஈடுபடவோ இல்லை. பல தலித் போராட்டங்களில் அவர் எடுத்த மேம்போக்கான நிலைப்பாட்டை, இன்று தலித் சிந்தனையாளார்கள் பலர் கடுமையாக விமரிசித்தும் வருகிறார்கள் .

தமிழகத்தில் தலித்துக்கள் தங்களை நேரடியாக அடக்கி ஆண்ட பிற்படுத்தப் பட்ட  மக்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கான எந்த போராட்டத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. இந்த உண்மையை மறைக்கவே அவர் கேரளத்தில் பங்கு கொண்ட ஒரே போராட்டமான வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் பெரிது படுத்தப் படுகிறது. இங்கே கவனிக்கத் தக்கது என்னவென்றால் வைக்கத்தில் ஆலய நுழைவுக்காகப் போராடியவர்கள் தலித்துக்கள் அல்ல, பிற்படுத்தப் பட்டவர்களான ஈழவர்களே. அவர்களுடன் இணைந்தே ஈ.வே.ரா போராடினார். இந்த உண்மை இங்கே பேசப் படுவதே இல்லை.

தமிழகத்தில் ஈ..வேராவின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னரே தலித் எழுச்சி உருவாகிவிட்டிருந்தது. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அவ்வெழுச்சியின் நாயகர்கள். ஆனால் அந்த எழுச்சியை பிராமணரல்லாத உயர்சாதியினரின் பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பிணைத்தது வழியாக அதை மழுங்கடித்தார் ஈ.வே.ரா.  அவரது கொள்கைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியலதிகாரம் நோக்கிச் செல்லத் தோள் கொடுக்கும் சக்தியாக தலித்துக்களை முக்கால் நூற்றாண்டுக் காலம் நிறுத்தி வைத்தன. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துக்களை ஒடுக்குகிறார்கள் என்ற நடைமுறை உண்மையை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோஷத்தால் மூடி வைத்தது ஈ.வே.ராவின் இயக்கம்

ஈ.வே.ரா மறைந்து அரை நூற்றாண்டு கழித்து, உருவான தலித் இயக்கங்கள் தங்கள் முன்னோடிகள் நிறுத்தி விட்ட புள்ளியில் இருந்து, ஈ.வே.ரா தொடங்கிய புள்ளியில் இருந்து மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் ஈ.வே.ராவை எதிர்க்கிறார்கள். இன்று தலித் இயக்கங்கள் உருவாகி தலித் விடுதலைக்கான ‘உண்மையான‘ போராட்டங்கள் நடக்கும் போது ஈ.வே.ராவின் ஆதரவுத் தளமே அவர்களின் முதல் எதிரியாக இருப்பதையும், எவரும் காணலாம்.

தலித்துக்கள் அறிவும், விவேகமும் சற்று குறைவானவர்கள், அவர்களையும் நாம் சற்று அணைத்துப் போக வேண்டும் என்பதே அவரது பார்வையாக இருந்துள்ளது. இந்த உயர்சாதிப் பார்வையை  அவர் தவிர்த்திருக்க முடியாது, அது ஓரளவு அவரது அந்தரங்க நம்பிக்கை, ஓரளவு அரசியல் சமரச நிலைப்பாடு. அவருக்கு ஆதரவுத் தளமாக இருந்த உயர் / நடுத்தர சாதிகளின் நம்பிக்கை அது. அந்த மனப் போக்குக்கு வெளியே அவரால் அதிகம் நகர்ந்திருக்க முடியாது.

ஈ.வே.ரா அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தலித்துக்களின் வரலாற்றுக்கான ஒரு முன் வரைவு பண்டித அயோத்தி தாசரால் முன் வைக்கப்பட்டு பிற இரு தலித் தலைவர்களால் வலுவாக முன்னெடுக்கப் பட்டிருப்பதை இன்று தலித் ஆய்வாளர்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். தலித்துக்கள் தங்கள் மரபாலோ, குணத்தாலோ இழிந்தவர்கள் அல்ல என்பதே அந்த வரலாறு. அவர்கள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். நில உடைமையாளர்கள். பழைய பௌத்தர்கள். பௌத்தம் வீழ்ச்சியடைந்த போது நிலம் பிடுங்கப் பட்டு மெல்ல,மெல்ல ஒடுக்கப்பட்ட நிலை அடைந்தவர்கள். இதை அயோத்தி தாசர் ஆதாரங்களுடன் முன்வைத்து பேசியிருக்கிறார். அக்காலத்து மேலை ஆய்வாளர்களான கர்னல். ஆல்காட் போன்றவர்கள் இதை ஏற்றிருக்கிறார்கள்.

ஆனால் ஈ.வே.ரா இந்த நம்பிக்கையை, ஒரு போதும் முழு மனதாக  ஏற்க வில்லை, என்பதை அவரது மொத்த எழுத்துக்களை வாசிக்கையில் காணலாம். அவரது இயல்புக்கு ஏற்ப அவர் தன் தரப்பை மாற்றி, மாற்றிச் சொல்லியிருந்தாலும் தலித்துக்கள் புராதனமான காலத்தில், பண்பாட்டின் ஆரம்பத்திலேயே, ஆரியர்களின் புராணங்களால் தாழ்த்தப் பட்டவர்கள் ஆக ஆனவர்கள் என்பதே, அவர்களின் கொள்கையாக இருந்துள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இங்கே ஒரு நிகழ்ச்சியைச் சொல்லவேண்டும். என்னுடைய விஷ்ணுபுரம் நாவல் 1997ல் வெளி வந்த போது, அதில் பத்தாம் நூற்றாண்டில், பறையர்கள் நகர,வீதிகளில் நடமாடும் உரிமையுடன், கோயில்,சேவையில் இருந்ததாக எழுதியிருந்ததை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.மார்க்ஸ் மிகக் கடுமையாக விமரிசித்து அது ஒரு ‘இந்துத்துவ அஜெண்டா’ என்று குற்றம் சாட்டினார். ”பறையரை ஒருத்தர் ‘நீர் பறையரா?’ என்று கேட்கிறார். அவர்கள் பறையுடன் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதென்ன இந்துத்துவ சொர்க்கமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்து மரபால் அடிமைப்படுத்தப்பட்ட தலித்துக்கள், மனிதர்களாகக் கருதப்பட்டதே கிறித்தவ மிஷனரிகளால்தான். அந்த யதார்த்தத்தை மூடிவைத்து இந்துக்கள் பறையர்களை மதித்தார்கள் என்ற கட்டுக்கதையை இந்நூல் உருவாக்குகிறது’ என்றார் அ. மார்க்ஸ்

அப்போது அயோத்தி தாசரின்  படைப்புகள் வெளியாகவில்லை. நான் அவர் பெயரையே கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படி எழுதியமைக்கான காரணத்தை விளக்கினேன். பறையர்களும், கேரளத்தில் புலையர்களும் நில உடைமையாளர்களாக இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கேரள ஆய்வாளர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். அபிதான சிந்தாமணியில் கூடத் திருவாரூர்க் கோயிலில் பறையர்களுக்கு உள்ளே நுழையும் உரிமை கொடுக்கும் ஆசாரம் உள்ளது என்றும் இது அவர்கள் எப்போதோ உயர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால் தான் எழுதினேன் என்றேன். அ.மார்க்ஸ் அதை ஏற்காமல் மீண்டும், மீண்டும் அது ஓர் இந்துத்துவப் பொய் என்றும், அதை ஈ.வே.ரா ‘தோலுரித்து’ ஐம்பதாண்டுகள் ஆகின்றன என்றும் சொன்னார். பெரியாரியர்களின் மனப்போக்குக்கு அ.மார்க்ஸின் இந்த அணுகுமுறை சரியான உதாரணம்.

கூட்டம் முடிந்து வெளியே செல்லும்போது ஒருவர் என்னிடம் நான் சொன்னதே உண்மை என்றும் அதற்கு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்றும், அயோத்திதாசர் என்பவரைத் தெரியுமா, என்றும் கேட்டார். ’இல்லை’ என்றேன். ’பாருங்கள் பெயரே தெரியாமல் புதைத்துவிட்டார்கள்’ என்று வருந்திய பின் சென்னையில் உள்ளஅன்பு. பொன்னோவியம் என்ற அறிஞரை, நான் சந்திக்கவேண்டும் என்றார். நான் அடுத்த சென்னைப் பயணத்தில் அன்பு. பொன்னோவியத்தைச் சென்று சந்தித்தேன். ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்தமையால் சிறிதளவே பேச முடிந்தது. பின்னர் அயேத்திதாசர் நூல்கள்  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியால் வெளியிடப்பட்டன.

ஈ.வே.ரா தலித் அரசியலின் அடிபப்டையாக இருக்கும் அவர்களின் வரலாற்றுவாதத்தை ஏற்க.வில்லை. அதை ஒரு மூட.நம்பிக்கை என்றே அவர் எண்ணினார். ஏனென்றால் அவர் அதை வெளிப்படையாக திட்டவட்டமாக ஏற்றிருந்தால் அவரால் அவரது ஆதரவு வட்டமான பிராமணரல்லாத உயர்சாதியினர் மற்றும் பிற்பட்ட மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும்

இதே போல ஈ.வே.ரா தொழிலாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த உறவு குறித்தும், ஆழமான விமரிசனங்கள் எதிர்காலத்தில் வரும் என்று தான் நான் நம்புகிறேன். இன்றைய இடது சாரி கட்சிகள் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள உணர்ச்சி வேகங்களை எதிர் கொள்வதை விட அதனுடன் சேர்ந்து போவதே மேல் என்று முடிவு செய்து வெகு நாள் ஆகிவிட்டது . தொழிலாளர் இயக்கங்களில் ஈ.வே.ராவின் உறவு அவரது ஆதரவுத் தளமான நடுத்தர வியாபாரிகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரின் மனநிலையால் கட்டுப்படுத்தப் பட்டது .

ஈ.வே.ராவின் மீதான என் முக்கிய விமரிசனங்கள் இவற்றின் அடிப்படையிலானவை அல்ல. எந்த சீர்திருத்த வாதியும் அவனது சமூகச் சிந்தனையாலும், வரலாற்று சந்தர்ப்பத்தினாலும் தான் தீர்மானிக்கப் படுகிறான். ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம்.  அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று. தமிழின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது. பல விதமான விமரிசனங்களைத் தொடர்ந்து முன் வைத்த ஒருவர் மீது, இம்மாதிரி ஒரு விமரிசனத்தை முன்  வைப்பது ஒன்றும் பெரிய பழி பாவமல்ல என்று தான் நான் எண்ணுகிறேன்.

இவ்வகையில் ஈ.வே.ராவின் முதல் பிரச்சினை அவர் எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்துப் பேசுகிறார். அதைப் பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப் பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற் கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது. அவர் மதம் குறித்தும், கடவுள் குறித்தும் பேசுகிறார், ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது. அவருக்குச் சமானமான தளத்தில் இயங்கிய பூலே, அம்பேத்கார் ஆகியோரின் விரிவான அசல் ஆய்வுகளை இங்கு சுட்டிக் காட்டலாம். அதை விட முக்கியமாக அவருக்கு முன்னரே தமிழில் இயங்கிய அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளை.

ஏன் இந்த ஆய்வுகள் தேவை என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. அடிப்படை ஆய்வுகளின் பலம் கொண்ட செயல் திட்டங்களே நிதரிசனத்துக்கும், வரலாற்றுத் தேவைகளுக்கும் நெருக்கமாக வர முடியும். சாதி என்பது பிராமணச் சதி என்ற ஒற்றை வரியில் புரிந்து கொண்ட ஈ.வே.ரா உண்மையில் சாதியின் எடையின் அடித் தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துக்களை ஏமாற்றுகிறார். சாதியைக் கற்பித்தவன் பார்ப்பான். ஆகவே தேவர்களும், நாயுடுக்களும், பார்ப்பானை ஒழிப்பார்கள். தலித்துக்களை தீண்டாமலும் இருப்பார்கள் என்ற விபரீத நிலைமை தமிழ் நாட்டில் உருவாக இதுவே காரணம்..

இரண்டாயிரம் வருடங்களாக இங்கு வேரூன்றியவை மதங்கள். அவற்றுக்கு மிக விரிவான தத்துவ கட்டமைப்பு உள்ளது. அவற்றின் படிமங்களே நம் ஆழ்மனத்தை உருவாக்கியுள்ளன. ஆயிரம் வருடக் கலையிலக்கியப் போக்குகள் அவற்றிலிருந்து முளைத்தவை. போகிற போக்கில் கடவுள்களைத் திட்டினால் மதத்துக்கு ஏதும் ஆகி விடுவது இல்லை. அதுவும் ஈ.வெ.ரா மதம் உருவாகிய குறியீட்டு அமைப்புகளைக் கூட அப்படியே நேரடி அர்த் தம் எடுத்துக் கொண்டு விளாசியவர் . அவர் வாழ்ந்த காலத்திலேயே மதச் சொற்பொழிவளர்கள் அவற்றுக்குத் திட்ட வட்டமான பதிலை அளித்து விட்டார்கள். ஈ.வே.ரா கேட்ட கேள்விகள் மிக மேலோட்டமானவை மட்டுமல்ல அவற்றுக்கு திட்ட வட்டமான பதிலும் மரபில் ஏற்கனவே இருந்தது.கடவுளை empirical ஆக நிரூபிக்க முடியுமா என்றார் அவர்.அப்படியானால் empirical ஆக நிரூபிக்க முடியாத எல்லாமே பொய்யா,தேவையற்றவையா என்று திருப்பி கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடிய வில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி. க கூட்டம் நடந்தது .அதில் ஈ.வே.ராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர்.  ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ?‘ நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.  ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?’என்றார் அவர். ‘ சரஸ்வதின்னா ஒரு சக்தி சார்.வீணை நாதத்திலேயும், பாட்டோட அழகிலேயும் அது இருக்குது.  நம் நாக்கிலும், புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.  கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்… அவரு பாவம் வயசானவரு. படிச்சவர் கூட கெடயாது. ஏதோ சொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர் தானே, இவருக்கு எங்கே போச்சு சார் புத்தி?” இது தான்  தமிழ் நாட்டில்இன்று ஈ.வே.ராவின் இடம்.

அதாவது அறிவார்ந்த ஆய்வின் பலம் இல்லாமல் பொதுப் புத்தியால் [பிராமண காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள தனிப் பட்ட கோபங்களாலும்] ஈ.வே.ரா உருவாக்கிய எளிய வாதகதிகள் உடனடியாக உடைத்து எறியப் பட்டன . இந்தியா முழுக்க சனாதனப் போக்குக்கு எதிராக தத்துவப் பரிமாணமுள்ள, வரலாற்றுப் பிரக்ஞை உள்ள ஆழமான விமரிசனங்கள் உருவாயின. அவற்றை இன்றுவரை சனாதன மதம் எதிர் கொள்ள முடியவுமில்லை.  நாராயண குரு முதல் அம்பேத்கர் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். தமிழில் ஈ.வே.ரா உருவாக்கிய சருகு வேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது. இதை எவரும், இன்றைய தமிழ்ச் சூழலை அவதானித்தால் காணமுடியும்.

பதினாறு வருடம் முன்பு பி.கெ. பாலகிருஷ்ணன் [கேரள வரலாற்றாசிரியர் ] சொன்னார். ‘இனி தமிழ் நாட்டில் பிராமணர்களுக்கு நல்ல காலம். யாகமும், ஹோமமும் தூள் கிளப்பப் போகின்றன” . ‘‘ஏன்?” என்று கேட்டேன். ‘‘எளிமையான ஒரு பிராமண எதிர்ப்பு மட்டுமே அங்கே உருவாக்கப் பட்டுள்ளது. பிராமண தத்துவம் எதிர் கொள்ளப் படவேயில்லை. அங்கே வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணன் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை இனி மற்ற சாதியினர் கைப்பற்றியதுமே சமரசம் ஆரம்பித்து விடும். அவர்களுக்காக பிராமணன் யாகம் செய்ய ஆரம்பித்து விடுவான்”  மேற்கொண்டு இதற்கு ஆதாரம் தேவை என்றால் ஸி .ஜெ.ஃபுல்லர் எழுதிய தேவியின் திருப் பணியாளார்கள் என்ற நூலை பார்க்கலாம்.

மதமும், பாரம்பரியமும், அன்றாட நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்துள்ள நம் சூழலில் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு நிதானத்துடன் தான் ஒரு சீர்திருத்தக் கோணத்தை முன் வைக்க முடியும். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி , பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு. மாரியம்மன் கோவில்களை இடித்து விட்டு அங்கே கிராமக் கக்கூஸ் கட்டலாம் என்று சொல்வது எளிய விஷயம். அதன் விளைவாக மாரியம்மன், பராசக்தியாக மாறுவதும் பல்லாயிரக் கணக்கான முளைப் பாரித் தட்டுகளை மேல் மருவத்தூருக்குக் கொண்டு போவதும் தான் நடந்தது தமிழ் நாட்டில்.

முன் வைத்த ஒரு சீர்திருத்தக் கருத்தை, மெல்ல மெல்ல வளர்த்தெடுப்பது அதைவிட முக்கியமான விஷயம். அப்போக்கில் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஓர் உண்மை. அது மக்கள் அக்கருத்தை உள் வாங்கிக் கொண்டதன் விளைவு. .ஈ.வே.ராவைத் தமிழகம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டது? இங்குள்ள தந்தை[முதுமை] வழிபாட்டு மனநிலை அவரை மதிக்கச் செய்தது. தமிழ் இளைஞர்களில் ஒரு சிறு சாரார் இளமையின் ஒரு கட்டத்தில் அவர் மீது எளிய ஈர்ப்பினை அடைந்து சில வருடங்களியே நேர் எதிராகத் திரும்பியும் விடுகிறார்கள். ஈ.வே.ராவின் கருத்துக்கள் முளைக்காத கூழாங்கல் விதைகள்போல இன்று தமிழ்நாட்டு அகநிலத்தில் சிதறிக்கிடக்கின்றன என்பதே உண்மை. அவர் மீது ஏன் தீவிரமான விமரிசனங்கள் எழவில்லை, ஏன் எளிய மரியாதையுடன் எல்லாரும் தாண்டிச்செல்கிறார்கள் என்றால் ஈவேராவை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் பகுதியாக ஆக்கிக் கொள்வதில்லை.

“ தன் தரப்புக்கு வலு சேர்க்கும் விஷயங்களைக்கூட ஈவேரா கற்றுக் கொள்ளவில்லை” என்கிறார் டி ஆர் நாகராஜ்[காலச்சுவடு பேட்டி] . இந்திய மரபிலேயே அழுத்தமான நாத்திக போக்குகள், அவைதீக போக்குகள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு தமிழ் மரபின் ஆக்கபூர்வமான கூறுகளுடன் பிணைக்க முயலும் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமான முன்னுதாரணமாக இங்கு ஏற்கனவே இருந்தார். தத்துவ மேதையாக  ஈ.வே.ராவைக் காட்டப் பெரும் பணமும், உழைப்பும் செலவிடப்படும் இன்றும் கூட பலவகையிலும் நவீனத் தமிழின் முதல் தத்துவ சிந்தனையாளாரான அயோத்திதாச பண்டிதர் ஏன் அப்படி முன்வைக்கப்படுவது இல்லை?

தமிழ் அறிஞர்களை தேடித் தேடி படித்த எனக்கு அவரது படைப்புகள் தலித் இயக்கங்கள் தலையெடுத்த பிறகே வாசிக்கக் கிடைத்தன என்ற நிதரிசனத்தை ஒரு போதும் நான் மறக்க சித்தமாக இல்லை. தமிழ் பெளத்தம் குறித்த எனது பத்தாண்டு தேடலின் அடிப்படை விடைகளைப் பண்டிதர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுதி விட்டிருந்தார் என்பதும் அவை மறைக்கப்பட்டன என்பதும் எனக்கு தமிழ் அறிவுத் துறையில் செயல்படும் சாதி மனநிலையின் ஆதாரமாகவே தெரிகிறது . விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்பு அயோத்தி தாச பண்டிதர் கிடைத்திருந்தால் பல தளங்களை விரிவு செய்திருப்பேன் .

ஈ..வே.ரா வின் நடைமுறை வெற்றி அவர் தன் இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன்[பிராமணரல்லாதார் இயக்கத்துடன்] இணைத்துக் கொண்டதில் தான் உள்ளது. சமூக/அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு தரப்பு அது. இந்தியா முழுக்க அந்தத் தரப்பு வலுப் பெற்று அதிகாரத்தை பிடித்தது.  இப்போது இந்திய அரசியல் பிற்பட்ட [குடியானவ/மேய்ச்சல் ] சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. நாளை அது தலித்துக்களுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையேயான ஒரு சம நிலையாக இருக்கும். இவ்வாறு பிற்பட்ட சாதிக்குரிய அரசியல் அலையின் திவலையாக,ஒரு முத்திரையடையாளமாக மட்டுமே ஈ.வே.ரா இன்று முக்கியத்துவம் பெறுகிறார் .

ஈ.வே.ரா திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ் தேசியம், தமிழ் கலாச்சார அடையாளத்தேடல் முதலியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்பது ஒரு உண்மை. இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப் பட்டுள்ளது. கொள்கை ரீதியாக ஈ.வே.ரா தோற்று, புறக்கணிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். இப்போது தன் தெலுங்கு அடையாளத்தை மறக்காத, அவரே தமிழ் இன அரசியலின் தொடக்கப்புள்ளி என்று கூசாமல் வரலாறு திரிக்கப் படுகிறது. அதே சமயம் தமிழ் இன அரசியல் அதன் தீவிரத் தளத்தை அடையும் போது ஈ.வே.ராவே தெலுங்கு ஆதிக்கவாதி என குற்றம் சாட்டப்படும் நிலையும் இங்கு உள்ளது [பார்க்க. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்] எப்போது உண்மையிலேயே தமிழின அரசியல் அதிகாரம் நோக்கி நெருங்குகிறதோ அப்போதே ஈ.வே.ராவும் அவர்களால் தூக்கி வீசப்படுவார் என்பதற்கான சான்று அது.

ஈ.வே.ராவை முன்னிறுத்த இன்று நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் அரசியல் நோக்கமே உள்ளது என்பது என் புரிதல். உயர்சாதியிலிருந்தும் [எஸ்.வி.ராஜதுரை,வ கீதா,ஆ.இரா. வேங்கடாசலபதி,.ராஜன் குறை ] பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தும்[அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் ]செய்யப் படும் இம்முயற்சிகள் உருவாகி வரும் தலித் எழுச்சி கண்டு அஞ்சி செய்யப் படுபவை. பிராமணர்களைப் பொது எதிரியாகக் காட்டித் தங்கள் மீதான தலித்துக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நோக்கம் கொண்டவை. தலித்துக்களைத் தங்கள் தலைமையின் கீழ் சேர்க்கும் பொருட்டு ஈ.வே.ராவைப் பொதுவான தத்துவ வழிகாட்டியாக சித்தரிக்க முயல்பவை.

கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் ஈ.வே.ரா அவசர அவசரமாக ‘மறுகண்டுபிடிப்பு ‘ செய்யப் பட்டிருப்பது தற்செயலல்ல. ஈ.வே.ராவைத் தத்துவ அறிஞராகச் சொல்லும் போது ஏன் பெரும்பாலானவர்களுக்குச் சிரிப்பு வரவில்லை என்றால் நாம் செத்துப்போன அனைவரையுமே அமரர் ஆகக் காண்பவர்கள் என்பதனால் தான். ஈ.வே.ரா சிலைக்குப்  பிறந்த நாளுக்கு மாலை போட்டு சுண்டல் வினியோகித்து வழி படுகிறார்கள் தமிழர்கள். அதைப் போன்ற ஒரு வழிபாடு தான் இதுவும், வேறெதுவும் அல்ல

தமிழ்ச் சூழலில் ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த வெளிறலை பற்றி ஏராளமாகச் சொல்லலாம். தர்க்க பூர்வ விவாதத்தில் கோபம் எழுவது இயல்புதான். தர்க்கமே இல்லாமல் எளிய ஒற்றை வரியைத் தன் தரப்பாக முன்வைப்பது, அதற்கு எதிராகச் சொல்லப் படும் தர்க்கங்களைக் கூட எளிய ஒற்றை வரியாக மாற்றிக் கொள்வது எனும் போக்கு ஈ.வே.ராவில் இருந்து தமிழ் சூழலில் பரவிய ஒன்று.

இரண்டாவது விஷயம், எல்லா அறிவார்ந்த விஷயங்களையும், பாமரத்தனமாகக் குறுக்கி எளிய ஒற்றை வரிகளாக மாற்றிகொள்வது. பேசும் விஷயம் குறித்து அடிப்படை ஆய்வு கூடச் செய்யாமலிருப்பது. இப்போக்கு தமிழில் எதையுமே வசையாக மட்டுமே முன் வைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. மாற்றுத் தரப்பை எளிமைப் படுத்துவது போன்று அறிவார்ந்த விவாதத்துக்குத் தீங்கு செய்வது பிறிதில்லை. விவாதத்தை நடத்தவே முடியாது போகும். முடிவில்லாமல் ‘‘ஐயா, நான் சொல்ல வந்தது அதல்ல”  என்று மாற்றுத் தரப்பினர் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாகப் பெரியாரியர்களின் சங்கர மட எதிர்ப்பையே எடுத்துக் கொள்வோம். அந்த மரபார்ந்த சாதியமைப்பின் மீதுள்ள விமரிசனத்தை அப்படியே அவர்கள் அத்வைதம் மீதான விமரிசனமாக ஆக்கி விடுவார்கள். அத்வைதம் ஒரு சாதிய சித்தாந்தம், அதைக் கற்பித்த சங்கரர் சாதியை நம்பினார் என்பதனால் –என் று சொல்வது இன்றைய பெரியாரிய நோக்கு. ஆகவே அது புதைந்து போகவிடுவதே மேல்! பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான மேற்கத்திய சிந்தனையாளார்கள் அடிமை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை பேரையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டார்களா? இந்திய மறுமலர்ச்சிக்கால சீர்திருத்தவாதிகளில பலர் அத்வைதிகள். விவேகானந்தர் போன்ற சூத்திரர்கள், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற தீண்டப் படாத சாதியினர் ….. தலித்துக்களில் மீட்பின் முதல் செய்தியை கொண்டு சென்ற சுவாமி ஆத்மானந்தா, தலித் துறவியான சுவாமி சகஜானந்தா போல [150 பேரை நான் பட்டியலிட முடியும்] இவர்களெல்லாம் அத்வைதிகளே. இது எப்படி?

சங்கரர் குறித்துப் பல வகையான ஐயங்கள் இது வரை பதிவு செய்யப் பட்டுள்ளன. பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிய சங்கரரும், கேரள ஜாதியமைப்பின் இலக்கண கர்த்தா என்று அடையாளம் காட்டப் படும் சங்கரரும், இந்திய சங்கர மடங்களை நிறுவிய சங்கரரும் ஒருவரல்ல என்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது. பல ஐதிகங்கள் அவர் பெயரின் வலிமையைப் பயன் படுத்தி கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டவை. பல நூல்கள் அவர் பெயரில் பிறகு எழுதி சேர்க்கப்பட்டவை.  நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் செளந்தர்ய லஹரிக்கும், பிற நூல்களுக்கும் இடையே மொழி அமைப்பில் பெரிய கால வேறு பாடு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் கூட சங்கரர் பேரில் நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

இப்படிப் பட்ட ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது மிக சிக்கலான விஷயம். ஆனால் இதோ எளிதாக ஒற்றை வரியை உருவாக்கியாகி விட்டது.  ஆகவே சங்கரரைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. புதைத்துக் கையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் மீதி. ஆனால் அம்பேத்கார் அத்வைதத்தைப் படித்தார். ஈ.எம். எஸ் படித்தார். அயோத்தி தாசர் படித்தார். இது தான் ஈ.வே.ரா உருவாக்கிய மனோ பாவத்தின் சரியான உதாரணம்.

சங்கரரில் இந்தியப் பெளதிக வாத மரபின் மிகச் சாரமான பகுதி உள்ளடங்கியுள்ளது. அத்வைதத்தின் எதிர்முனை பிற்கால பெளத்த சிந்தனை. பெளத்த சிந்தனை நியாய மரபின் அடிப்படையிலானது. அவ்விவாதத்தினூடாக அத்வைதம் நியாய மரபின் தருக்கக் கட்டுமானத்தை அப்படியே தானும் சுவீகரித்து கொண்டிருக்கிறது. அதே போலத் தூய தருக்கத்தை முன்னிறுத்தும் பெளதிகவாத சிந்தனையான நியாயத்தில் முதல் கட்ட வேதாந்த மரபின் அடிப்படைகள் சில உள்ளடங்கியுள்ளன. சிந்தனையை அதன் விவாத வடிவில் மட்டுமே பயில, மீட்க, தக்க வைக்க முடியும். மார்க்ஸையும் -ஹெகலையும்,  கிராம்ஷியையும் -குரோச்சேவையும் சேர்த்தே பயில முடியும். மிக எளிமையாக சொல்லப் போனால் பக்தி, சடங்கு ஆகியவற்றுக்கு எதிராக தூய அறிவை முன் வைக்கிறது அத்வைதம். அதனாலேயே அது இந்திய மறு மலர்ச்சிக் கால சீர்திருத்தவாதிகளுக்கு முக்கியமான கருவியாகியது. அத்வைதத்தின் வழியாக, நியாய மரபே அப்பங்களிப்பை நடத்தியது என்றும் சொல்லலாம் .

அத்வைதத்தின் எதிர் முனையாகவே இங்கு மார்க்ஸியம் செயல் பட முடியும் என்றே ஈ.எம்.எஸ் சொல்கிறார். அத்வைதத்தை வசதியாக புறக்கணித்து விடலாம். ஆனால் நம் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் [மொழியில்] அது வலுவாக உட்கார்ந்திருக்கும் வரை அதை விவாதித்து வென்றடக்கியே ஆகவேண்டும். நமது பழமொழிகளில் கணிசமானவை அத்வைதச் சார்பு கொண்டவை. நமது பக்திப் பாடல்கள் அத்வைத உள்ளடக்கம் உடையவை. ஒரு சிந்தனை காலப் போக்கில் மொழியில் கலந்து விடுகிறது. பிறகு அதன் பாதிப்பு பெரிதும் நனவிலி சார்ந்தது.  ஆக அத்வைதம் அல்லது சங்கரர் போன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அணுகுவதற்கு மிக நுட்பமான பகுப்பாய்வு நோக்கு தேவை. மிக விரிவான வரலாற்று அணுகுமுறை தேவை. ஆனால் ஈ.வே.ரா செய்வது அவருக்குத் தெரிந்த சில்லறைத் தகவல்களை வைத்துக் கொண்டு ஆங்காரத்துடன், வன்மத்துடன் மண்டையில் ஓங்கிப் போடுவது மட்டுமே. அது சிந்தனைத் தளத்தில் மிக, மிக ஆபத்தான போக்குகளையே உருவாக்கும். அதன் விளைவே இன்றைய தமிழ்ச் சூழலின் தேக்க நிலை.

அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தை. அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது அது. முரண்படவும் விரிவு படுத்திக் கொள்ளவும் அதில் இடமுண்டு. ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன். இறந்த காலத்தின் கைதிகளாக வாழும் பெரும் மக்கள் திரள் உடைய பகுதி தமிழகம். நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப, நுகர்வோர் கால கட்டத்துக்கு [முதலாளித்துவ கால கட்டத்துக்கு என கலைச் சொல்லாகக் கூறலாம்] நகர்வதற்கான கருத்தியல் ஆயுதங்கள் சிலவற்றை அவர்களுக்கு உருவாக்கித் தந்த சக்தி மிக்க சமூக சீர்திருத்தவாதி அவர். அவரை நவீனத்துவத்தின் பிரச்சாரகர் என்று சொல்லலாம் . அவரது நோக்கங்களோ,அவரது தனிப் பட்ட மனிதாபிமான நோக்கோ ஐயத்துக்கு உரியவை அல்ல. அவர் ஒரு முக்கியமான வரலாற்று நாயகர் என்றே நான் கருதுகிறேன். ஈ.வே.ரா மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் கண்டிப்பாக உருவாகியுமுள்ளது. ஆனால் எது மூட நம்பிக்கை, எது மரபான குறியீட்டுச் செயல்பாடு என்றெல்லாம் தெரியாத ஒட்டு மொத்த மட்டையடி பகுத்தறிவையும், கலாச்சாரம் சார்ந்த ஒரு வகை மூடநம்பிக்கையாகவே மாற்றிவிட்டது.

பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும் என்ற யதார்த்ததை வைத்தே புரிந்து கொள்ளலாம்.  விவாதங்களை மறுக்கும்,முத்திரை குத்தி வசைபாடும், வெறுப்பை உமிழ்வதையே கருத்துப்போராக எண்ணும் இந்த மூர்க்கம் ஈ.வே.ரா உருவாக்கியது தான்.

 

நான் என் குரு மரபாகக் கொண்டுள்ள நாராயண குருவின் குருகுலம் என்பது இந்திய ஞான மரபை வேதங்களையும், வேத விரோத ஞான நூல்களையும் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் விவாதக் களனாகக் காணும் போக்கு கொண்டது. அடிப்படையிலேயே பிராமண எதிர்ப்புக் கொண்ட ஓர் அறிவியக்கம் அது. அடிப்படையில் எனக்கு அவைதீக மரபுகள் மீது, குறிப்பாக பெளத்தம் மீது மட்டுமே ஓரளவாவது சார்பு நிலை உள்ளது. தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதிக மரபை ஆக்க பூர்வமாக விமரிசித்த, அவைதீக மரபைத் தீவிரமாக முன் வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சனாதன, புரோகித மரபிற்கு மாற்றான அசலான சிந்தனைப் போக்குகள் உருவாக்கப்பட, மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டுமென நான் எண்ணுகிறேன்.

அத்தகைய அவைதீக மரபு வெகு காலம் இந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. இந்தியாவின் தத்துவ வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது ,அது உருவாக்கிய விவாத சாத்தியம்தான். [நான் வேத விரோதி என்று என்னை சொல்லிக் கொள்வேன். ஆகவே இங்கு வேத மரபும் இருந்தாகவேண்டும் — டி ஆர் நாகராஜ்] நான் அதைக் கற்று ஆராய்ந்து முன் செல்லவே விரும்புவேன். மாறாக நான் பெரியாரை ஏற்றால் சங்க இலக்கியத்தை, பதஞ்சலி யோக சூத்திரத்தை, திருக்குறளை, நியாய சூத்திரங்களை எல்லாம் முழுமையாக நிராகரிக்க வேண்டியிருக்கும். வேதங்களை கீதையை, கம்பராமாயணத்தை, பாரதியை, அரவிந்தரை, கொளுத்த வேண்டியிருக்கும். பிறகு எனக்கு மிஞ்சுவது ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் தூறல்களான சில அரைத் தத்துவவாதிகள் மட்டுமே. மூளை சூம்பிப் போன ஆசாமிகள் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. அது எனக்கு ஒவ்வாது. என் சவாலே வேறு என்று தான் சொல்கிறேன். அந்த முரட்டு மட்டையடி தமிழ்க்கலாச்சாரத்தில் செல்லாக் காசு என நிரூபணமாகி விட்டது என்று தான் சொல்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இங்குள்ள மதம், மொழி அனைத்திலும் சனாதன மரபின் பாதிப்பு அதிகம். தமிழகத்தின் மூல மரபுகள் பல ஒடுக்கப் பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுப்பதும் நிலை நாட்டுவதும் ஒரு பெரும் கலாச்சாரப் பணி. அது ஒருபோதும் எதிர்மறையான செயல்பாடுகள் மூலம் உருவாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், அயோத்தி தாச பண்டிதரும் [நாராயணகுருவும், நடராஜ குருவும்] ஆற்றிய ஆக்க பூர்வமான பணிகளே, எனக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக உள்ளன. கலை இலக்கியங்களைப் புறக்கணிக்கும், கொச்சையாக மதிப்பிட்டு இழிவுபடுத்தும் மனநிலை அப்பணிக்கு நேர் எதிரான ஒன்று. ஏனெனில் கலை இலக்கிய மரபுகளில் இருந்தே நம் சாராம்சமான கலாச்சார அம்சங்கள், குறிப்பாக தமிழ் கலாச்சாரக் கூறுகள் கண்டடையப் பட முடியும்.

ஓர் உதாரணம் சொல்லலாம். இப்போது என் முன் கணிப்பொறி அருகே நான் படித்துக் கொண்டிருக்கும் இரு முக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் உள்ளன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வு [வட்டப்பாலை குறித்தது] குமரிமைந்தன் பண்டைத்தமிழ் கால, நில அமைப்பு குறித்து எழுதிய ஆய்வு . இரண்டுமே சோதிடத்தை, குறிப்பாக ராசி சக்கரத்தை முக்கியமான கருவியாகப் பயன்படுத்துபவை.  பழந்தமிழரின் அறிதல் முறையை ஆய்வு செய்ய மிக முக்கியமான ஒரு தளம் சோதிடம். அது குறித்து இன்னும் நமக்கு முழுக்கத் தெரியாத நிலையில் உடனடி முன் முடிவுகளுக்கு வருவதை பொறுப்பான ஆய்வாளர் தவிர்க்கிறார்கள் .

இன்று சோதிடத்துக்குப் பயன்படுத்தப்படும் ராசி சக்கரம் என்ற அமைப்பு முன்பு தமிழரின் கணித முறையாக இருந்தது என்கிறார் குமரி மைந்தனும், அவரது நண்பரும் ஆய்வாளருமான வெள்ளுவனும். குமரிமைந்தன் ஈ.வே.ரா மீது பிடிப்புள்ளவர் என்றபோதிலும் தமிழ்நாட்டு சோதிட ஆய்வு முறைகளை மூட நம்பிக்கை என எள்ளி நிராகரிக்கக் கூடாது என்கிறார். தமிழக ஆலயங்களின் சடங்குகளை மாற்றக் கூடாது என்கிறார். பண்டைத் தமிழரின் காலக் கணிதமும், வானியலும் அவற்றில் உறைகின்றன என்பது அவரது கூற்று. ஈ.வே.ரா உருவாக்கும் மனோபாவம் இந்த மரபான அறிவுகளை முழுக்கத் துடைப்பத்தால் அள்ளி குப்பையில் போடத் தானே நமக்கு கற்பிக்கிறது?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  இன்று நாம் சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஈ.வே.ராவின் மூர்க்கமான எதிர்மறைப் போக்குகளை தவிர்த்து விட்டு படைப்பூக்கத்துடன் முன்னகர வேண்டிய அவசியம் தான் உள்ளதுஇங்கே ஒரு நிகழ்ச்சியைச் சொல்லவேண்டும். என்னுடைய விஷ்ணுபுரம் நாவல் 1997ல் வெளி வந்த போது, அதில் பத்தாம் நூற்றாண்டில், பறையர்கள் நகர,வீதிகளில் நடமாடும் உரிமையுடன், கோயில்,சேவையில் இருந்ததாக எழுதியிருந்ததை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.மார்க்ஸ் மிகக் கடுமையாக விமரிசித்து அது ஒரு ‘இந்துத்துவ அஜெண்டா’ என்று குற்றம் சாட்டினார். ”பறையரை ஒருத்தர் ‘நீர் பறையரா?’ என்று கேட்கிறார். அவர்கள் பறையுடன் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதென்ன இந்துத்துவ சொர்க்கமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்து மரபால் அடிமைப்படுத்தப்பட்ட தலித்துக்கள், மனிதர்களாகக் கருதப்பட்டதே கிறித்தவ மிஷனரிகளால்தான். அந்த யதார்த்தத்தை மூடிவைத்து இந்துக்கள் பறையர்களை மதித்தார்கள் என்ற கட்டுக்கதையை இந்நூல் உருவாக்குகிறது’ என்றார் அ. மார்க்ஸ்

அப்போது அயோத்தி தாசரின்  படைப்புகள் வெளியாகவில்லை. நான் அவர் பெயரையே கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படி எழுதியமைக்கான காரணத்தை விளக்கினேன். பறையர்களும், கேரளத்தில் புலையர்களும் நில உடைமையாளர்களாக இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கேரள ஆய்வாளர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். அபிதான சிந்தாமணியில் கூடத் திருவாரூர்க் கோயிலில் பறையர்களுக்கு உள்ளே நுழையும் உரிமை கொடுக்கும் ஆசாரம் உள்ளது என்றும் இது அவர்கள் எப்போதோ உயர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால் தான் எழுதினேன் என்றேன். அ.மார்க்ஸ் அதை ஏற்காமல் மீண்டும், மீண்டும் அது ஓர் இந்துத்துவப் பொய் என்றும், அதை ஈ.வே.ரா ‘தோலுரித்து’ ஐம்பதாண்டுகள் ஆகின்றன என்றும் சொன்னார். பெரியாரியர்களின் மனப்போக்குக்கு அ.மார்க்ஸின் இந்த அணுகுமுறை சரியான உதாரணம்.

கூட்டம் முடிந்து வெளியே செல்லும்போது ஒருவர் என்னிடம் நான் சொன்னதே உண்மை என்றும் அதற்கு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்றும், அயோத்திதாசர் என்பவரைத் தெரியுமா, என்றும் கேட்டார். ’இல்லை’ என்றேன். ’பாருங்கள் பெயரே தெரியாமல் புதைத்துவிட்டார்கள்’ என்று வருந்திய பின் சென்னையில் உள்ளஅன்பு. பொன்னோவியம் என்ற அறிஞரை, நான் சந்திக்கவேண்டும் என்றார். நான் அடுத்த சென்னைப் பயணத்தில் அன்பு. பொன்னோவியத்தைச் சென்று சந்தித்தேன். ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்தமையால் சிறிதளவே பேச முடிந்தது. பின்னர் அயேத்திதாசர் நூல்கள்  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியால் வெளியிடப்பட்டன.

ஈ.வே.ரா தலித் அரசியலின் அடிபப்டையாக இருக்கும் அவர்களின் வரலாற்றுவாதத்தை ஏற்க.வில்லை. அதை ஒரு மூட.நம்பிக்கை என்றே அவர் எண்ணினார். ஏனென்றால் அவர் அதை வெளிப்படையாக திட்டவட்டமாக ஏற்றிருந்தால் அவரால் அவரது ஆதரவு வட்டமான பிராமணரல்லாத உயர்சாதியினர் மற்றும் பிற்பட்ட மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும்

இதே போல ஈ.வே.ரா தொழிலாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த உறவு குறித்தும், ஆழமான விமரிசனங்கள் எதிர்காலத்தில் வரும் என்று தான் நான் நம்புகிறேன். இன்றைய இடது சாரி கட்சிகள் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள உணர்ச்சி வேகங்களை எதிர் கொள்வதை விட அதனுடன் சேர்ந்து போவதே மேல் என்று முடிவு செய்து வெகு நாள் ஆகிவிட்டது . தொழிலாளர் இயக்கங்களில் ஈ.வே.ராவின் உறவு அவரது ஆதரவுத் தளமான நடுத்தர வியாபாரிகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரின் மனநிலையால் கட்டுப்படுத்தப் பட்டது .

ஈ.வே.ராவின் மீதான என் முக்கிய விமரிசனங்கள் இவற்றின் அடிப்படையிலானவை அல்ல. எந்த சீர்திருத்த வாதியும் அவனது சமூகச் சிந்தனையாலும், வரலாற்று சந்தர்ப்பத்தினாலும் தான் தீர்மானிக்கப் படுகிறான். ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம்.  அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று. தமிழின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது. பல விதமான விமரிசனங்களைத் தொடர்ந்து முன் வைத்த ஒருவர் மீது, இம்மாதிரி ஒரு விமரிசனத்தை முன்  வைப்பது ஒன்றும் பெரிய பழி பாவமல்ல என்று தான் நான் எண்ணுகிறேன்.

இவ்வகையில் ஈ.வே.ராவின் முதல் பிரச்சினை அவர் எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்துப் பேசுகிறார். அதைப் பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப் பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற் கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது. அவர் மதம் குறித்தும், கடவுள் குறித்தும் பேசுகிறார், ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது. அவருக்குச் சமானமான தளத்தில் இயங்கிய பூலே, அம்பேத்கார் ஆகியோரின் விரிவான அசல் ஆய்வுகளை இங்கு சுட்டிக் காட்டலாம். அதை விட முக்கியமாக அவருக்கு முன்னரே தமிழில் இயங்கிய அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளை.

ஏன் இந்த ஆய்வுகள் தேவை என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. அடிப்படை ஆய்வுகளின் பலம் கொண்ட செயல் திட்டங்களே நிதரிசனத்துக்கும், வரலாற்றுத் தேவைகளுக்கும் நெருக்கமாக வர முடியும். சாதி என்பது பிராமணச் சதி என்ற ஒற்றை வரியில் புரிந்து கொண்ட ஈ.வே.ரா உண்மையில் சாதியின் எடையின் அடித் தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துக்களை ஏமாற்றுகிறார். சாதியைக் கற்பித்தவன் பார்ப்பான். ஆகவே தேவர்களும், நாயுடுக்களும், பார்ப்பானை ஒழிப்பார்கள். தலித்துக்களை தீண்டாமலும் இருப்பார்கள் என்ற விபரீத நிலைமை தமிழ் நாட்டில் உருவாக இதுவே காரணம்..

இரண்டாயிரம் வருடங்களாக இங்கு வேரூன்றியவை மதங்கள். அவற்றுக்கு மிக விரிவான தத்துவ கட்டமைப்பு உள்ளது. அவற்றின் படிமங்களே நம் ஆழ்மனத்தை உருவாக்கியுள்ளன. ஆயிரம் வருடக் கலையிலக்கியப் போக்குகள் அவற்றிலிருந்து முளைத்தவை. போகிற போக்கில் கடவுள்களைத் திட்டினால் மதத்துக்கு ஏதும் ஆகி விடுவது இல்லை. அதுவும் ஈ.வெ.ரா மதம் உருவாகிய குறியீட்டு அமைப்புகளைக் கூட அப்படியே நேரடி அர்த் தம் எடுத்துக் கொண்டு விளாசியவர் . அவர் வாழ்ந்த காலத்திலேயே மதச் சொற்பொழிவளர்கள் அவற்றுக்குத் திட்ட வட்டமான பதிலை அளித்து விட்டார்கள். ஈ.வே.ரா கேட்ட கேள்விகள் மிக மேலோட்டமானவை மட்டுமல்ல அவற்றுக்கு திட்ட வட்டமான பதிலும் மரபில் ஏற்கனவே இருந்தது.கடவுளை empirical ஆக நிரூபிக்க முடியுமா என்றார் அவர்.அப்படியானால் empirical ஆக நிரூபிக்க முடியாத எல்லாமே பொய்யா,தேவையற்றவையா என்று திருப்பி கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடிய வில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி. க கூட்டம் நடந்தது .அதில் ஈ.வே.ராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர்.  ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ?‘ நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.  ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?’என்றார் அவர். ‘ சரஸ்வதின்னா ஒரு சக்தி சார்.வீணை நாதத்திலேயும், பாட்டோட அழகிலேயும் அது இருக்குது.  நம் நாக்கிலும், புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.  கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்… அவரு பாவம் வயசானவரு. படிச்சவர் கூட கெடயாது. ஏதோ சொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர் தானே, இவருக்கு எங்கே போச்சு சார் புத்தி?” இது தான்  தமிழ் நாட்டில்இன்று ஈ.வே.ராவின் இடம்.

அதாவது அறிவார்ந்த ஆய்வின் பலம் இல்லாமல் பொதுப் புத்தியால் [பிராமண காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள தனிப் பட்ட கோபங்களாலும்] ஈ.வே.ரா உருவாக்கிய எளிய வாதகதிகள் உடனடியாக உடைத்து எறியப் பட்டன . இந்தியா முழுக்க சனாதனப் போக்குக்கு எதிராக தத்துவப் பரிமாணமுள்ள, வரலாற்றுப் பிரக்ஞை உள்ள ஆழமான விமரிசனங்கள் உருவாயின. அவற்றை இன்றுவரை சனாதன மதம் எதிர் கொள்ள முடியவுமில்லை.  நாராயண குரு முதல் அம்பேத்கர் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். தமிழில் ஈ.வே.ரா உருவாக்கிய சருகு வேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது. இதை எவரும், இன்றைய தமிழ்ச் சூழலை அவதானித்தால் காணமுடியும்.

பதினாறு வருடம் முன்பு பி.கெ. பாலகிருஷ்ணன் [கேரள வரலாற்றாசிரியர் ] சொன்னார். ‘இனி தமிழ் நாட்டில் பிராமணர்களுக்கு நல்ல காலம். யாகமும், ஹோமமும் தூள் கிளப்பப் போகின்றன” . ‘‘ஏன்?” என்று கேட்டேன். ‘‘எளிமையான ஒரு பிராமண எதிர்ப்பு மட்டுமே அங்கே உருவாக்கப் பட்டுள்ளது. பிராமண தத்துவம் எதிர் கொள்ளப் படவேயில்லை. அங்கே வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணன் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை இனி மற்ற சாதியினர் கைப்பற்றியதுமே சமரசம் ஆரம்பித்து விடும். அவர்களுக்காக பிராமணன் யாகம் செய்ய ஆரம்பித்து விடுவான்”  மேற்கொண்டு இதற்கு ஆதாரம் தேவை என்றால் ஸி .ஜெ.ஃபுல்லர் எழுதிய தேவியின் திருப் பணியாளார்கள் என்ற நூலை பார்க்கலாம்.

மதமும், பாரம்பரியமும், அன்றாட நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்துள்ள நம் சூழலில் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு நிதானத்துடன் தான் ஒரு சீர்திருத்தக் கோணத்தை முன் வைக்க முடியும். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி , பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு. மாரியம்மன் கோவில்களை இடித்து விட்டு அங்கே கிராமக் கக்கூஸ் கட்டலாம் என்று சொல்வது எளிய விஷயம். அதன் விளைவாக மாரியம்மன், பராசக்தியாக மாறுவதும் பல்லாயிரக் கணக்கான முளைப் பாரித் தட்டுகளை மேல் மருவத்தூருக்குக் கொண்டு போவதும் தான் நடந்தது தமிழ் நாட்டில்.

முன் வைத்த ஒரு சீர்திருத்தக் கருத்தை, மெல்ல மெல்ல வளர்த்தெடுப்பது அதைவிட முக்கியமான விஷயம். அப்போக்கில் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஓர் உண்மை. அது மக்கள் அக்கருத்தை உள் வாங்கிக் கொண்டதன் விளைவு. .ஈ.வே.ராவைத் தமிழகம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டது? இங்குள்ள தந்தை[முதுமை] வழிபாட்டு மனநிலை அவரை மதிக்கச் செய்தது. தமிழ் இளைஞர்களில் ஒரு சிறு சாரார் இளமையின் ஒரு கட்டத்தில் அவர் மீது எளிய ஈர்ப்பினை அடைந்து சில வருடங்களியே நேர் எதிராகத் திரும்பியும் விடுகிறார்கள். ஈ.வே.ராவின் கருத்துக்கள் முளைக்காத கூழாங்கல் விதைகள்போல இன்று தமிழ்நாட்டு அகநிலத்தில் சிதறிக்கிடக்கின்றன என்பதே உண்மை. அவர் மீது ஏன் தீவிரமான விமரிசனங்கள் எழவில்லை, ஏன் எளிய மரியாதையுடன் எல்லாரும் தாண்டிச்செல்கிறார்கள் என்றால் ஈவேராவை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் பகுதியாக ஆக்கிக் கொள்வதில்லை.

“ தன் தரப்புக்கு வலு சேர்க்கும் விஷயங்களைக்கூட ஈவேரா கற்றுக் கொள்ளவில்லை” என்கிறார் டி ஆர் நாகராஜ்[காலச்சுவடு பேட்டி] . இந்திய மரபிலேயே அழுத்தமான நாத்திக போக்குகள், அவைதீக போக்குகள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு தமிழ் மரபின் ஆக்கபூர்வமான கூறுகளுடன் பிணைக்க முயலும் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமான முன்னுதாரணமாக இங்கு ஏற்கனவே இருந்தார். தத்துவ மேதையாக  ஈ.வே.ராவைக் காட்டப் பெரும் பணமும், உழைப்பும் செலவிடப்படும் இன்றும் கூட பலவகையிலும் நவீனத் தமிழின் முதல் தத்துவ சிந்தனையாளாரான அயோத்திதாச பண்டிதர் ஏன் அப்படி முன்வைக்கப்படுவது இல்லை?

தமிழ் அறிஞர்களை தேடித் தேடி படித்த எனக்கு அவரது படைப்புகள் தலித் இயக்கங்கள் தலையெடுத்த பிறகே வாசிக்கக் கிடைத்தன என்ற நிதரிசனத்தை ஒரு போதும் நான் மறக்க சித்தமாக இல்லை. தமிழ் பெளத்தம் குறித்த எனது பத்தாண்டு தேடலின் அடிப்படை விடைகளைப் பண்டிதர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுதி விட்டிருந்தார் என்பதும் அவை மறைக்கப்பட்டன என்பதும் எனக்கு தமிழ் அறிவுத் துறையில் செயல்படும் சாதி மனநிலையின் ஆதாரமாகவே தெரிகிறது . விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்பு அயோத்தி தாச பண்டிதர் கிடைத்திருந்தால் பல தளங்களை விரிவு செய்திருப்பேன் .

ஈ..வே.ரா வின் நடைமுறை வெற்றி அவர் தன் இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன்[பிராமணரல்லாதார் இயக்கத்துடன்] இணைத்துக் கொண்டதில் தான் உள்ளது. சமூக/அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு தரப்பு அது. இந்தியா முழுக்க அந்தத் தரப்பு வலுப் பெற்று அதிகாரத்தை பிடித்தது.  இப்போது இந்திய அரசியல் பிற்பட்ட [குடியானவ/மேய்ச்சல் ] சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. நாளை அது தலித்துக்களுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையேயான ஒரு சம நிலையாக இருக்கும். இவ்வாறு பிற்பட்ட சாதிக்குரிய அரசியல் அலையின் திவலையாக,ஒரு முத்திரையடையாளமாக மட்டுமே ஈ.வே.ரா இன்று முக்கியத்துவம் பெறுகிறார் .

ஈ.வே.ரா திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ் தேசியம், தமிழ் கலாச்சார அடையாளத்தேடல் முதலியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்பது ஒரு உண்மை. இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப் பட்டுள்ளது. கொள்கை ரீதியாக ஈ.வே.ரா தோற்று, புறக்கணிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். இப்போது தன் தெலுங்கு அடையாளத்தை மறக்காத, அவரே தமிழ் இன அரசியலின் தொடக்கப்புள்ளி என்று கூசாமல் வரலாறு திரிக்கப் படுகிறது. அதே சமயம் தமிழ் இன அரசியல் அதன் தீவிரத் தளத்தை அடையும் போது ஈ.வே.ராவே தெலுங்கு ஆதிக்கவாதி என குற்றம் சாட்டப்படும் நிலையும் இங்கு உள்ளது [பார்க்க. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்] எப்போது உண்மையிலேயே தமிழின அரசியல் அதிகாரம் நோக்கி நெருங்குகிறதோ அப்போதே ஈ.வே.ராவும் அவர்களால் தூக்கி வீசப்படுவார் என்பதற்கான சான்று அது.

ஈ.வே.ராவை முன்னிறுத்த இன்று நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் அரசியல் நோக்கமே உள்ளது என்பது என் புரிதல். உயர்சாதியிலிருந்தும் [எஸ்.வி.ராஜதுரை,வ கீதா,ஆ.இரா. வேங்கடாசலபதி,.ராஜன் குறை ] பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தும்[அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் ]செய்யப் படும் இம்முயற்சிகள் உருவாகி வரும் தலித் எழுச்சி கண்டு அஞ்சி செய்யப் படுபவை. பிராமணர்களைப் பொது எதிரியாகக் காட்டித் தங்கள் மீதான தலித்துக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நோக்கம் கொண்டவை. தலித்துக்களைத் தங்கள் தலைமையின் கீழ் சேர்க்கும் பொருட்டு ஈ.வே.ராவைப் பொதுவான தத்துவ வழிகாட்டியாக சித்தரிக்க முயல்பவை.

கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் ஈ.வே.ரா அவசர அவசரமாக ‘மறுகண்டுபிடிப்பு ‘ செய்யப் பட்டிருப்பது தற்செயலல்ல. ஈ.வே.ராவைத் தத்துவ அறிஞராகச் சொல்லும் போது ஏன் பெரும்பாலானவர்களுக்குச் சிரிப்பு வரவில்லை என்றால் நாம் செத்துப்போன அனைவரையுமே அமரர் ஆகக் காண்பவர்கள் என்பதனால் தான். ஈ.வே.ரா சிலைக்குப்  பிறந்த நாளுக்கு மாலை போட்டு சுண்டல் வினியோகித்து வழி படுகிறார்கள் தமிழர்கள். அதைப் போன்ற ஒரு வழிபாடு தான் இதுவும், வேறெதுவும் அல்ல

தமிழ்ச் சூழலில் ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த வெளிறலை பற்றி ஏராளமாகச் சொல்லலாம். தர்க்க பூர்வ விவாதத்தில் கோபம் எழுவது இயல்புதான். தர்க்கமே இல்லாமல் எளிய ஒற்றை வரியைத் தன் தரப்பாக முன்வைப்பது, அதற்கு எதிராகச் சொல்லப் படும் தர்க்கங்களைக் கூட எளிய ஒற்றை வரியாக மாற்றிக் கொள்வது எனும் போக்கு ஈ.வே.ராவில் இருந்து தமிழ் சூழலில் பரவிய ஒன்று.

இரண்டாவது விஷயம், எல்லா அறிவார்ந்த விஷயங்களையும், பாமரத்தனமாகக் குறுக்கி எளிய ஒற்றை வரிகளாக மாற்றிகொள்வது. பேசும் விஷயம் குறித்து அடிப்படை ஆய்வு கூடச் செய்யாமலிருப்பது. இப்போக்கு தமிழில் எதையுமே வசையாக மட்டுமே முன் வைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. மாற்றுத் தரப்பை எளிமைப் படுத்துவது போன்று அறிவார்ந்த விவாதத்துக்குத் தீங்கு செய்வது பிறிதில்லை. விவாதத்தை நடத்தவே முடியாது போகும். முடிவில்லாமல் ‘‘ஐயா, நான் சொல்ல வந்தது அதல்ல”  என்று மாற்றுத் தரப்பினர் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாகப் பெரியாரியர்களின் சங்கர மட எதிர்ப்பையே எடுத்துக் கொள்வோம். அந்த மரபார்ந்த சாதியமைப்பின் மீதுள்ள விமரிசனத்தை அப்படியே அவர்கள் அத்வைதம் மீதான விமரிசனமாக ஆக்கி விடுவார்கள். அத்வைதம் ஒரு சாதிய சித்தாந்தம், அதைக் கற்பித்த சங்கரர் சாதியை நம்பினார் என்பதனால் –என் று சொல்வது இன்றைய பெரியாரிய நோக்கு. ஆகவே அது புதைந்து போகவிடுவதே மேல்! பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான மேற்கத்திய சிந்தனையாளார்கள் அடிமை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை பேரையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டார்களா? இந்திய மறுமலர்ச்சிக்கால சீர்திருத்தவாதிகளில பலர் அத்வைதிகள். விவேகானந்தர் போன்ற சூத்திரர்கள், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற தீண்டப் படாத சாதியினர் ….. தலித்துக்களில் மீட்பின் முதல் செய்தியை கொண்டு சென்ற சுவாமி ஆத்மானந்தா, தலித் துறவியான சுவாமி சகஜானந்தா போல [150 பேரை நான் பட்டியலிட முடியும்] இவர்களெல்லாம் அத்வைதிகளே. இது எப்படி?

சங்கரர் குறித்துப் பல வகையான ஐயங்கள் இது வரை பதிவு செய்யப் பட்டுள்ளன. பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிய சங்கரரும், கேரள ஜாதியமைப்பின் இலக்கண கர்த்தா என்று அடையாளம் காட்டப் படும் சங்கரரும், இந்திய சங்கர மடங்களை நிறுவிய சங்கரரும் ஒருவரல்ல என்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது. பல ஐதிகங்கள் அவர் பெயரின் வலிமையைப் பயன் படுத்தி கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டவை. பல நூல்கள் அவர் பெயரில் பிறகு எழுதி சேர்க்கப்பட்டவை.  நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் செளந்தர்ய லஹரிக்கும், பிற நூல்களுக்கும் இடையே மொழி அமைப்பில் பெரிய கால வேறு பாடு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் கூட சங்கரர் பேரில் நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

இப்படிப் பட்ட ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது மிக சிக்கலான விஷயம். ஆனால் இதோ எளிதாக ஒற்றை வரியை உருவாக்கியாகி விட்டது.  ஆகவே சங்கரரைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. புதைத்துக் கையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் மீதி. ஆனால் அம்பேத்கார் அத்வைதத்தைப் படித்தார். ஈ.எம். எஸ் படித்தார். அயோத்தி தாசர் படித்தார். இது தான் ஈ.வே.ரா உருவாக்கிய மனோ பாவத்தின் சரியான உதாரணம்.

சங்கரரில் இந்தியப் பெளதிக வாத மரபின் மிகச் சாரமான பகுதி உள்ளடங்கியுள்ளது. அத்வைதத்தின் எதிர்முனை பிற்கால பெளத்த சிந்தனை. பெளத்த சிந்தனை நியாய மரபின் அடிப்படையிலானது. அவ்விவாதத்தினூடாக அத்வைதம் நியாய மரபின் தருக்கக் கட்டுமானத்தை அப்படியே தானும் சுவீகரித்து கொண்டிருக்கிறது. அதே போலத் தூய தருக்கத்தை முன்னிறுத்தும் பெளதிகவாத சிந்தனையான நியாயத்தில் முதல் கட்ட வேதாந்த மரபின் அடிப்படைகள் சில உள்ளடங்கியுள்ளன. சிந்தனையை அதன் விவாத வடிவில் மட்டுமே பயில, மீட்க, தக்க வைக்க முடியும். மார்க்ஸையும் -ஹெகலையும்,  கிராம்ஷியையும் -குரோச்சேவையும் சேர்த்தே பயில முடியும். மிக எளிமையாக சொல்லப் போனால் பக்தி, சடங்கு ஆகியவற்றுக்கு எதிராக தூய அறிவை முன் வைக்கிறது அத்வைதம். அதனாலேயே அது இந்திய மறு மலர்ச்சிக் கால சீர்திருத்தவாதிகளுக்கு முக்கியமான கருவியாகியது. அத்வைதத்தின் வழியாக, நியாய மரபே அப்பங்களிப்பை நடத்தியது என்றும் சொல்லலாம் .

அத்வைதத்தின் எதிர் முனையாகவே இங்கு மார்க்ஸியம் செயல் பட முடியும் என்றே ஈ.எம்.எஸ் சொல்கிறார். அத்வைதத்தை வசதியாக புறக்கணித்து விடலாம். ஆனால் நம் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் [மொழியில்] அது வலுவாக உட்கார்ந்திருக்கும் வரை அதை விவாதித்து வென்றடக்கியே ஆகவேண்டும். நமது பழமொழிகளில் கணிசமானவை அத்வைதச் சார்பு கொண்டவை. நமது பக்திப் பாடல்கள் அத்வைத உள்ளடக்கம் உடையவை. ஒரு சிந்தனை காலப் போக்கில் மொழியில் கலந்து விடுகிறது. பிறகு அதன் பாதிப்பு பெரிதும் நனவிலி சார்ந்தது.  ஆக அத்வைதம் அல்லது சங்கரர் போன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அணுகுவதற்கு மிக நுட்பமான பகுப்பாய்வு நோக்கு தேவை. மிக விரிவான வரலாற்று அணுகுமுறை தேவை. ஆனால் ஈ.வே.ரா செய்வது அவருக்குத் தெரிந்த சில்லறைத் தகவல்களை வைத்துக் கொண்டு ஆங்காரத்துடன், வன்மத்துடன் மண்டையில் ஓங்கிப் போடுவது மட்டுமே. அது சிந்தனைத் தளத்தில் மிக, மிக ஆபத்தான போக்குகளையே உருவாக்கும். அதன் விளைவே இன்றைய தமிழ்ச் சூழலின் தேக்க நிலை.

அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தை. அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது அது. முரண்படவும் விரிவு படுத்திக் கொள்ளவும் அதில் இடமுண்டு. ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன். இறந்த காலத்தின் கைதிகளாக வாழும் பெரும் மக்கள் திரள் உடைய பகுதி தமிழகம். நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப, நுகர்வோர் கால கட்டத்துக்கு [முதலாளித்துவ கால கட்டத்துக்கு என கலைச் சொல்லாகக் கூறலாம்] நகர்வதற்கான கருத்தியல் ஆயுதங்கள் சிலவற்றை அவர்களுக்கு உருவாக்கித் தந்த சக்தி மிக்க சமூக சீர்திருத்தவாதி அவர். அவரை நவீனத்துவத்தின் பிரச்சாரகர் என்று சொல்லலாம் . அவரது நோக்கங்களோ,அவரது தனிப் பட்ட மனிதாபிமான நோக்கோ ஐயத்துக்கு உரியவை அல்ல. அவர் ஒரு முக்கியமான வரலாற்று நாயகர் என்றே நான் கருதுகிறேன். ஈ.வே.ரா மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் கண்டிப்பாக உருவாகியுமுள்ளது. ஆனால் எது மூட நம்பிக்கை, எது மரபான குறியீட்டுச் செயல்பாடு என்றெல்லாம் தெரியாத ஒட்டு மொத்த மட்டையடி பகுத்தறிவையும், கலாச்சாரம் சார்ந்த ஒரு வகை மூடநம்பிக்கையாகவே மாற்றிவிட்டது.

பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும் என்ற யதார்த்ததை வைத்தே புரிந்து கொள்ளலாம்.  விவாதங்களை மறுக்கும்,முத்திரை குத்தி வசைபாடும், வெறுப்பை உமிழ்வதையே கருத்துப்போராக எண்ணும் இந்த மூர்க்கம் ஈ.வே.ரா உருவாக்கியது தான்.

 

நான் என் குரு மரபாகக் கொண்டுள்ள நாராயண குருவின் குருகுலம் என்பது இந்திய ஞான மரபை வேதங்களையும், வேத விரோத ஞான நூல்களையும் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் விவாதக் களனாகக் காணும் போக்கு கொண்டது. அடிப்படையிலேயே பிராமண எதிர்ப்புக் கொண்ட ஓர் அறிவியக்கம் அது. அடிப்படையில் எனக்கு அவைதீக மரபுகள் மீது, குறிப்பாக பெளத்தம் மீது மட்டுமே ஓரளவாவது சார்பு நிலை உள்ளது. தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதிக மரபை ஆக்க பூர்வமாக விமரிசித்த, அவைதீக மரபைத் தீவிரமாக முன் வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சனாதன, புரோகித மரபிற்கு மாற்றான அசலான சிந்தனைப் போக்குகள் உருவாக்கப்பட, மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டுமென நான் எண்ணுகிறேன்.

அத்தகைய அவைதீக மரபு வெகு காலம் இந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. இந்தியாவின் தத்துவ வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது ,அது உருவாக்கிய விவாத சாத்தியம்தான். [நான் வேத விரோதி என்று என்னை சொல்லிக் கொள்வேன். ஆகவே இங்கு வேத மரபும் இருந்தாகவேண்டும் — டி ஆர் நாகராஜ்] நான் அதைக் கற்று ஆராய்ந்து முன் செல்லவே விரும்புவேன். மாறாக நான் பெரியாரை ஏற்றால் சங்க இலக்கியத்தை, பதஞ்சலி யோக சூத்திரத்தை, திருக்குறளை, நியாய சூத்திரங்களை எல்லாம் முழுமையாக நிராகரிக்க வேண்டியிருக்கும். வேதங்களை கீதையை, கம்பராமாயணத்தை, பாரதியை, அரவிந்தரை, கொளுத்த வேண்டியிருக்கும். பிறகு எனக்கு மிஞ்சுவது ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் தூறல்களான சில அரைத் தத்துவவாதிகள் மட்டுமே. மூளை சூம்பிப் போன ஆசாமிகள் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. அது எனக்கு ஒவ்வாது. என் சவாலே வேறு என்று தான் சொல்கிறேன். அந்த முரட்டு மட்டையடி தமிழ்க்கலாச்சாரத்தில் செல்லாக் காசு என நிரூபணமாகி விட்டது என்று தான் சொல்கிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழகத்தைப் பொறுத்த வரை இங்குள்ள மதம், மொழி அனைத்திலும் சனாதன மரபின் பாதிப்பு அதிகம். தமிழகத்தின் மூல மரபுகள் பல ஒடுக்கப் பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுப்பதும் நிலை நாட்டுவதும் ஒரு பெரும் கலாச்சாரப் பணி. அது ஒருபோதும் எதிர்மறையான செயல்பாடுகள் மூலம் உருவாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், அயோத்தி தாச பண்டிதரும் [நாராயணகுருவும், நடராஜ குருவும்] ஆற்றிய ஆக்க பூர்வமான பணிகளே, எனக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக உள்ளன. கலை இலக்கியங்களைப் புறக்கணிக்கும், கொச்சையாக மதிப்பிட்டு இழிவுபடுத்தும் மனநிலை அப்பணிக்கு நேர் எதிரான ஒன்று. ஏனெனில் கலை இலக்கிய மரபுகளில் இருந்தே நம் சாராம்சமான கலாச்சார அம்சங்கள், குறிப்பாக தமிழ் கலாச்சாரக் கூறுகள் கண்டடையப் பட முடியும்.

ஓர் உதாரணம் சொல்லலாம். இப்போது என் முன் கணிப்பொறி அருகே நான் படித்துக் கொண்டிருக்கும் இரு முக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் உள்ளன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வு [வட்டப்பாலை குறித்தது] குமரிமைந்தன் பண்டைத்தமிழ் கால, நில அமைப்பு குறித்து எழுதிய ஆய்வு . இரண்டுமே சோதிடத்தை, குறிப்பாக ராசி சக்கரத்தை முக்கியமான கருவியாகப் பயன்படுத்துபவை.  பழந்தமிழரின் அறிதல் முறையை ஆய்வு செய்ய மிக முக்கியமான ஒரு தளம் சோதிடம். அது குறித்து இன்னும் நமக்கு முழுக்கத் தெரியாத நிலையில் உடனடி முன் முடிவுகளுக்கு வருவதை பொறுப்பான ஆய்வாளர் தவிர்க்கிறார்கள் .

இன்று சோதிடத்துக்குப் பயன்படுத்தப்படும் ராசி சக்கரம் என்ற அமைப்பு முன்பு தமிழரின் கணித முறையாக இருந்தது என்கிறார் குமரி மைந்தனும், அவரது நண்பரும் ஆய்வாளருமான வெள்ளுவனும். குமரிமைந்தன் ஈ.வே.ரா மீது பிடிப்புள்ளவர் என்றபோதிலும் தமிழ்நாட்டு சோதிட ஆய்வு முறைகளை மூட நம்பிக்கை என எள்ளி நிராகரிக்கக் கூடாது என்கிறார். தமிழக ஆலயங்களின் சடங்குகளை மாற்றக் கூடாது என்கிறார். பண்டைத் தமிழரின் காலக் கணிதமும், வானியலும் அவற்றில் உறைகின்றன என்பது அவரது கூற்று. ஈ.வே.ரா உருவாக்கும் மனோபாவம் இந்த மரபான அறிவுகளை முழுக்கத் துடைப்பத்தால் அள்ளி குப்பையில் போடத் தானே நமக்கு கற்பிக்கிறது?

இன்று நாம் சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஈ.வே.ராவின் மூர்க்கமான எதிர்மறைப் போக்குகளை தவிர்த்து விட்டு படைப்பூக்கத்துடன் முன்னகர வேண்டிய அவசியம் தான் உள்ளதுஇன்று நாம் சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஈ.வே.ராவின் மூர்க்கமான எதிர்மறைப் போக்குகளை தவிர்த்து விட்டு படைப்பூக்கத்துடன் முன்னகர வேண்டிய அவசியம் தான் உள்ளதுஇங்கே ஒரு நிகழ்ச்சியைச் சொல்லவேண்டும். என்னுடைய விஷ்ணுபுரம் நாவல் 1997ல் வெளி வந்த போது, அதில் பத்தாம் நூற்றாண்டில், பறையர்கள் நகர,வீதிகளில் நடமாடும் உரிமையுடன், கோயில்,சேவையில் இருந்ததாக எழுதியிருந்ததை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.மார்க்ஸ் மிகக் கடுமையாக விமரிசித்து அது ஒரு ‘இந்துத்துவ அஜெண்டா’ என்று குற்றம் சாட்டினார். ”பறையரை ஒருத்தர் ‘நீர் பறையரா?’ என்று கேட்கிறார். அவர்கள் பறையுடன் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதென்ன இந்துத்துவ சொர்க்கமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்து மரபால் அடிமைப்படுத்தப்பட்ட தலித்துக்கள், மனிதர்களாகக் கருதப்பட்டதே கிறித்தவ மிஷனரிகளால்தான். அந்த யதார்த்தத்தை மூடிவைத்து இந்துக்கள் பறையர்களை மதித்தார்கள் என்ற கட்டுக்கதையை இந்நூல் உருவாக்குகிறது’ என்றார் அ. மார்க்ஸ்

அப்போது அயோத்தி தாசரின்  படைப்புகள் வெளியாகவில்லை. நான் அவர் பெயரையே கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படி எழுதியமைக்கான காரணத்தை விளக்கினேன். பறையர்களும், கேரளத்தில் புலையர்களும் நில உடைமையாளர்களாக இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கேரள ஆய்வாளர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். அபிதான சிந்தாமணியில் கூடத் திருவாரூர்க் கோயிலில் பறையர்களுக்கு உள்ளே நுழையும் உரிமை கொடுக்கும் ஆசாரம் உள்ளது என்றும் இது அவர்கள் எப்போதோ உயர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால் தான் எழுதினேன் என்றேன். அ.மார்க்ஸ் அதை ஏற்காமல் மீண்டும், மீண்டும் அது ஓர் இந்துத்துவப் பொய் என்றும், அதை ஈ.வே.ரா ‘தோலுரித்து’ ஐம்பதாண்டுகள் ஆகின்றன என்றும் சொன்னார். பெரியாரியர்களின் மனப்போக்குக்கு அ.மார்க்ஸின் இந்த அணுகுமுறை சரியான உதாரணம்.

கூட்டம் முடிந்து வெளியே செல்லும்போது ஒருவர் என்னிடம் நான் சொன்னதே உண்மை என்றும் அதற்கு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்றும், அயோத்திதாசர் என்பவரைத் தெரியுமா, என்றும் கேட்டார். ’இல்லை’ என்றேன். ’பாருங்கள் பெயரே தெரியாமல் புதைத்துவிட்டார்கள்’ என்று வருந்திய பின் சென்னையில் உள்ளஅன்பு. பொன்னோவியம் என்ற அறிஞரை, நான் சந்திக்கவேண்டும் என்றார். நான் அடுத்த சென்னைப் பயணத்தில் அன்பு. பொன்னோவியத்தைச் சென்று சந்தித்தேன். ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்தமையால் சிறிதளவே பேச முடிந்தது. பின்னர் அயேத்திதாசர் நூல்கள்  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியால் வெளியிடப்பட்டன.

ஈ.வே.ரா தலித் அரசியலின் அடிபப்டையாக இருக்கும் அவர்களின் வரலாற்றுவாதத்தை ஏற்க.வில்லை. அதை ஒரு மூட.நம்பிக்கை என்றே அவர் எண்ணினார். ஏனென்றால் அவர் அதை வெளிப்படையாக திட்டவட்டமாக ஏற்றிருந்தால் அவரால் அவரது ஆதரவு வட்டமான பிராமணரல்லாத உயர்சாதியினர் மற்றும் பிற்பட்ட மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும்

இதே போல ஈ.வே.ரா தொழிலாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த உறவு குறித்தும், ஆழமான விமரிசனங்கள் எதிர்காலத்தில் வரும் என்று தான் நான் நம்புகிறேன். இன்றைய இடது சாரி கட்சிகள் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள உணர்ச்சி வேகங்களை எதிர் கொள்வதை விட அதனுடன் சேர்ந்து போவதே மேல் என்று முடிவு செய்து வெகு நாள் ஆகிவிட்டது . தொழிலாளர் இயக்கங்களில் ஈ.வே.ராவின் உறவு அவரது ஆதரவுத் தளமான நடுத்தர வியாபாரிகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரின் மனநிலையால் கட்டுப்படுத்தப் பட்டது .

ஈ.வே.ராவின் மீதான என் முக்கிய விமரிசனங்கள் இவற்றின் அடிப்படையிலானவை அல்ல. எந்த சீர்திருத்த வாதியும் அவனது சமூகச் சிந்தனையாலும், வரலாற்று சந்தர்ப்பத்தினாலும் தான் தீர்மானிக்கப் படுகிறான். ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம்.  அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று. தமிழின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது. பல விதமான விமரிசனங்களைத் தொடர்ந்து முன் வைத்த ஒருவர் மீது, இம்மாதிரி ஒரு விமரிசனத்தை முன்  வைப்பது ஒன்றும் பெரிய பழி பாவமல்ல என்று தான் நான் எண்ணுகிறேன்.

இவ்வகையில் ஈ.வே.ராவின் முதல் பிரச்சினை அவர் எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்துப் பேசுகிறார். அதைப் பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப் பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற் கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது. அவர் மதம் குறித்தும், கடவுள் குறித்தும் பேசுகிறார், ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது. அவருக்குச் சமானமான தளத்தில் இயங்கிய பூலே, அம்பேத்கார் ஆகியோரின் விரிவான அசல் ஆய்வுகளை இங்கு சுட்டிக் காட்டலாம். அதை விட முக்கியமாக அவருக்கு முன்னரே தமிழில் இயங்கிய அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளை.

ஏன் இந்த ஆய்வுகள் தேவை என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. அடிப்படை ஆய்வுகளின் பலம் கொண்ட செயல் திட்டங்களே நிதரிசனத்துக்கும், வரலாற்றுத் தேவைகளுக்கும் நெருக்கமாக வர முடியும். சாதி என்பது பிராமணச் சதி என்ற ஒற்றை வரியில் புரிந்து கொண்ட ஈ.வே.ரா உண்மையில் சாதியின் எடையின் அடித் தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துக்களை ஏமாற்றுகிறார். சாதியைக் கற்பித்தவன் பார்ப்பான். ஆகவே தேவர்களும், நாயுடுக்களும், பார்ப்பானை ஒழிப்பார்கள். தலித்துக்களை தீண்டாமலும் இருப்பார்கள் என்ற விபரீத நிலைமை தமிழ் நாட்டில் உருவாக இதுவே காரணம்..

இரண்டாயிரம் வருடங்களாக இங்கு வேரூன்றியவை மதங்கள். அவற்றுக்கு மிக விரிவான தத்துவ கட்டமைப்பு உள்ளது. அவற்றின் படிமங்களே நம் ஆழ்மனத்தை உருவாக்கியுள்ளன. ஆயிரம் வருடக் கலையிலக்கியப் போக்குகள் அவற்றிலிருந்து முளைத்தவை. போகிற போக்கில் கடவுள்களைத் திட்டினால் மதத்துக்கு ஏதும் ஆகி விடுவது இல்லை. அதுவும் ஈ.வெ.ரா மதம் உருவாகிய குறியீட்டு அமைப்புகளைக் கூட அப்படியே நேரடி அர்த் தம் எடுத்துக் கொண்டு விளாசியவர் . அவர் வாழ்ந்த காலத்திலேயே மதச் சொற்பொழிவளர்கள் அவற்றுக்குத் திட்ட வட்டமான பதிலை அளித்து விட்டார்கள். ஈ.வே.ரா கேட்ட கேள்விகள் மிக மேலோட்டமானவை மட்டுமல்ல அவற்றுக்கு திட்ட வட்டமான பதிலும் மரபில் ஏற்கனவே இருந்தது.கடவுளை empirical ஆக நிரூபிக்க முடியுமா என்றார் அவர்.அப்படியானால் empirical ஆக நிரூபிக்க முடியாத எல்லாமே பொய்யா,தேவையற்றவையா என்று திருப்பி கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடிய வில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி. க கூட்டம் நடந்தது .அதில் ஈ.வே.ராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர்.  ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ?‘ நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.  ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?’என்றார் அவர். ‘ சரஸ்வதின்னா ஒரு சக்தி சார்.வீணை நாதத்திலேயும், பாட்டோட அழகிலேயும் அது இருக்குது.  நம் நாக்கிலும், புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.  கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்… அவரு பாவம் வயசானவரு. படிச்சவர் கூட கெடயாது. ஏதோ சொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர் தானே, இவருக்கு எங்கே போச்சு சார் புத்தி?” இது தான்  தமிழ் நாட்டில்இன்று ஈ.வே.ராவின் இடம்.

அதாவது அறிவார்ந்த ஆய்வின் பலம் இல்லாமல் பொதுப் புத்தியால் [பிராமண காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள தனிப் பட்ட கோபங்களாலும்] ஈ.வே.ரா உருவாக்கிய எளிய வாதகதிகள் உடனடியாக உடைத்து எறியப் பட்டன . இந்தியா முழுக்க சனாதனப் போக்குக்கு எதிராக தத்துவப் பரிமாணமுள்ள, வரலாற்றுப் பிரக்ஞை உள்ள ஆழமான விமரிசனங்கள் உருவாயின. அவற்றை இன்றுவரை சனாதன மதம் எதிர் கொள்ள முடியவுமில்லை.  நாராயண குரு முதல் அம்பேத்கர் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். தமிழில் ஈ.வே.ரா உருவாக்கிய சருகு வேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது. இதை எவரும், இன்றைய தமிழ்ச் சூழலை அவதானித்தால் காணமுடியும்.

பதினாறு வருடம் முன்பு பி.கெ. பாலகிருஷ்ணன் [கேரள வரலாற்றாசிரியர் ] சொன்னார். ‘இனி தமிழ் நாட்டில் பிராமணர்களுக்கு நல்ல காலம். யாகமும், ஹோமமும் தூள் கிளப்பப் போகின்றன” . ‘‘ஏன்?” என்று கேட்டேன். ‘‘எளிமையான ஒரு பிராமண எதிர்ப்பு மட்டுமே அங்கே உருவாக்கப் பட்டுள்ளது. பிராமண தத்துவம் எதிர் கொள்ளப் படவேயில்லை. அங்கே வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணன் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை இனி மற்ற சாதியினர் கைப்பற்றியதுமே சமரசம் ஆரம்பித்து விடும். அவர்களுக்காக பிராமணன் யாகம் செய்ய ஆரம்பித்து விடுவான்”  மேற்கொண்டு இதற்கு ஆதாரம் தேவை என்றால் ஸி .ஜெ.ஃபுல்லர் எழுதிய தேவியின் திருப் பணியாளார்கள் என்ற நூலை பார்க்கலாம்.

மதமும், பாரம்பரியமும், அன்றாட நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்துள்ள நம் சூழலில் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு நிதானத்துடன் தான் ஒரு சீர்திருத்தக் கோணத்தை முன் வைக்க முடியும். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி , பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு. மாரியம்மன் கோவில்களை இடித்து விட்டு அங்கே கிராமக் கக்கூஸ் கட்டலாம் என்று சொல்வது எளிய விஷயம். அதன் விளைவாக மாரியம்மன், பராசக்தியாக மாறுவதும் பல்லாயிரக் கணக்கான முளைப் பாரித் தட்டுகளை மேல் மருவத்தூருக்குக் கொண்டு போவதும் தான் நடந்தது தமிழ் நாட்டில்.

முன் வைத்த ஒரு சீர்திருத்தக் கருத்தை, மெல்ல மெல்ல வளர்த்தெடுப்பது அதைவிட முக்கியமான விஷயம். அப்போக்கில் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஓர் உண்மை. அது மக்கள் அக்கருத்தை உள் வாங்கிக் கொண்டதன் விளைவு. .ஈ.வே.ராவைத் தமிழகம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டது? இங்குள்ள தந்தை[முதுமை] வழிபாட்டு மனநிலை அவரை மதிக்கச் செய்தது. தமிழ் இளைஞர்களில் ஒரு சிறு சாரார் இளமையின் ஒரு கட்டத்தில் அவர் மீது எளிய ஈர்ப்பினை அடைந்து சில வருடங்களியே நேர் எதிராகத் திரும்பியும் விடுகிறார்கள். ஈ.வே.ராவின் கருத்துக்கள் முளைக்காத கூழாங்கல் விதைகள்போல இன்று தமிழ்நாட்டு அகநிலத்தில் சிதறிக்கிடக்கின்றன என்பதே உண்மை. அவர் மீது ஏன் தீவிரமான விமரிசனங்கள் எழவில்லை, ஏன் எளிய மரியாதையுடன் எல்லாரும் தாண்டிச்செல்கிறார்கள் என்றால் ஈவேராவை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் பகுதியாக ஆக்கிக் கொள்வதில்லை.

“ தன் தரப்புக்கு வலு சேர்க்கும் விஷயங்களைக்கூட ஈவேரா கற்றுக் கொள்ளவில்லை” என்கிறார் டி ஆர் நாகராஜ்[காலச்சுவடு பேட்டி] . இந்திய மரபிலேயே அழுத்தமான நாத்திக போக்குகள், அவைதீக போக்குகள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு தமிழ் மரபின் ஆக்கபூர்வமான கூறுகளுடன் பிணைக்க முயலும் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமான முன்னுதாரணமாக இங்கு ஏற்கனவே இருந்தார். தத்துவ மேதையாக  ஈ.வே.ராவைக் காட்டப் பெரும் பணமும், உழைப்பும் செலவிடப்படும் இன்றும் கூட பலவகையிலும் நவீனத் தமிழின் முதல் தத்துவ சிந்தனையாளாரான அயோத்திதாச பண்டிதர் ஏன் அப்படி முன்வைக்கப்படுவது இல்லை?

தமிழ் அறிஞர்களை தேடித் தேடி படித்த எனக்கு அவரது படைப்புகள் தலித் இயக்கங்கள் தலையெடுத்த பிறகே வாசிக்கக் கிடைத்தன என்ற நிதரிசனத்தை ஒரு போதும் நான் மறக்க சித்தமாக இல்லை. தமிழ் பெளத்தம் குறித்த எனது பத்தாண்டு தேடலின் அடிப்படை விடைகளைப் பண்டிதர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுதி விட்டிருந்தார் என்பதும் அவை மறைக்கப்பட்டன என்பதும் எனக்கு தமிழ் அறிவுத் துறையில் செயல்படும் சாதி மனநிலையின் ஆதாரமாகவே தெரிகிறது . விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்பு அயோத்தி தாச பண்டிதர் கிடைத்திருந்தால் பல தளங்களை விரிவு செய்திருப்பேன் .

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈ..வே.ரா வின் நடைமுறை வெற்றி அவர் தன் இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன்[பிராமணரல்லாதார் இயக்கத்துடன்] இணைத்துக் கொண்டதில் தான் உள்ளது. சமூக/அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு தரப்பு அது. இந்தியா முழுக்க அந்தத் தரப்பு வலுப் பெற்று அதிகாரத்தை பிடித்தது.  இப்போது இந்திய அரசியல் பிற்பட்ட [குடியானவ/மேய்ச்சல் ] சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. நாளை அது தலித்துக்களுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையேயான ஒரு சம நிலையாக இருக்கும். இவ்வாறு பிற்பட்ட சாதிக்குரிய அரசியல் அலையின் திவலையாக,ஒரு முத்திரையடையாளமாக மட்டுமே ஈ.வே.ரா இன்று முக்கியத்துவம் பெறுகிறார் .

ஈ.வே.ரா திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ் தேசியம், தமிழ் கலாச்சார அடையாளத்தேடல் முதலியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்பது ஒரு உண்மை. இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப் பட்டுள்ளது. கொள்கை ரீதியாக ஈ.வே.ரா தோற்று, புறக்கணிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். இப்போது தன் தெலுங்கு அடையாளத்தை மறக்காத, அவரே தமிழ் இன அரசியலின் தொடக்கப்புள்ளி என்று கூசாமல் வரலாறு திரிக்கப் படுகிறது. அதே சமயம் தமிழ் இன அரசியல் அதன் தீவிரத் தளத்தை அடையும் போது ஈ.வே.ராவே தெலுங்கு ஆதிக்கவாதி என குற்றம் சாட்டப்படும் நிலையும் இங்கு உள்ளது [பார்க்க. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்] எப்போது உண்மையிலேயே தமிழின அரசியல் அதிகாரம் நோக்கி நெருங்குகிறதோ அப்போதே ஈ.வே.ராவும் அவர்களால் தூக்கி வீசப்படுவார் என்பதற்கான சான்று அது.

ஈ.வே.ராவை முன்னிறுத்த இன்று நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் அரசியல் நோக்கமே உள்ளது என்பது என் புரிதல். உயர்சாதியிலிருந்தும் [எஸ்.வி.ராஜதுரை,வ கீதா,ஆ.இரா. வேங்கடாசலபதி,.ராஜன் குறை ] பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தும்[அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் ]செய்யப் படும் இம்முயற்சிகள் உருவாகி வரும் தலித் எழுச்சி கண்டு அஞ்சி செய்யப் படுபவை. பிராமணர்களைப் பொது எதிரியாகக் காட்டித் தங்கள் மீதான தலித்துக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நோக்கம் கொண்டவை. தலித்துக்களைத் தங்கள் தலைமையின் கீழ் சேர்க்கும் பொருட்டு ஈ.வே.ராவைப் பொதுவான தத்துவ வழிகாட்டியாக சித்தரிக்க முயல்பவை.

கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் ஈ.வே.ரா அவசர அவசரமாக ‘மறுகண்டுபிடிப்பு ‘ செய்யப் பட்டிருப்பது தற்செயலல்ல. ஈ.வே.ராவைத் தத்துவ அறிஞராகச் சொல்லும் போது ஏன் பெரும்பாலானவர்களுக்குச் சிரிப்பு வரவில்லை என்றால் நாம் செத்துப்போன அனைவரையுமே அமரர் ஆகக் காண்பவர்கள் என்பதனால் தான். ஈ.வே.ரா சிலைக்குப்  பிறந்த நாளுக்கு மாலை போட்டு சுண்டல் வினியோகித்து வழி படுகிறார்கள் தமிழர்கள். அதைப் போன்ற ஒரு வழிபாடு தான் இதுவும், வேறெதுவும் அல்ல

தமிழ்ச் சூழலில் ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த வெளிறலை பற்றி ஏராளமாகச் சொல்லலாம். தர்க்க பூர்வ விவாதத்தில் கோபம் எழுவது இயல்புதான். தர்க்கமே இல்லாமல் எளிய ஒற்றை வரியைத் தன் தரப்பாக முன்வைப்பது, அதற்கு எதிராகச் சொல்லப் படும் தர்க்கங்களைக் கூட எளிய ஒற்றை வரியாக மாற்றிக் கொள்வது எனும் போக்கு ஈ.வே.ராவில் இருந்து தமிழ் சூழலில் பரவிய ஒன்று.

இரண்டாவது விஷயம், எல்லா அறிவார்ந்த விஷயங்களையும், பாமரத்தனமாகக் குறுக்கி எளிய ஒற்றை வரிகளாக மாற்றிகொள்வது. பேசும் விஷயம் குறித்து அடிப்படை ஆய்வு கூடச் செய்யாமலிருப்பது. இப்போக்கு தமிழில் எதையுமே வசையாக மட்டுமே முன் வைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. மாற்றுத் தரப்பை எளிமைப் படுத்துவது போன்று அறிவார்ந்த விவாதத்துக்குத் தீங்கு செய்வது பிறிதில்லை. விவாதத்தை நடத்தவே முடியாது போகும். முடிவில்லாமல் ‘‘ஐயா, நான் சொல்ல வந்தது அதல்ல”  என்று மாற்றுத் தரப்பினர் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாகப் பெரியாரியர்களின் சங்கர மட எதிர்ப்பையே எடுத்துக் கொள்வோம். அந்த மரபார்ந்த சாதியமைப்பின் மீதுள்ள விமரிசனத்தை அப்படியே அவர்கள் அத்வைதம் மீதான விமரிசனமாக ஆக்கி விடுவார்கள். அத்வைதம் ஒரு சாதிய சித்தாந்தம், அதைக் கற்பித்த சங்கரர் சாதியை நம்பினார் என்பதனால் –என் று சொல்வது இன்றைய பெரியாரிய நோக்கு. ஆகவே அது புதைந்து போகவிடுவதே மேல்! பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான மேற்கத்திய சிந்தனையாளார்கள் அடிமை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை பேரையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டார்களா? இந்திய மறுமலர்ச்சிக்கால சீர்திருத்தவாதிகளில பலர் அத்வைதிகள். விவேகானந்தர் போன்ற சூத்திரர்கள், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற தீண்டப் படாத சாதியினர் ….. தலித்துக்களில் மீட்பின் முதல் செய்தியை கொண்டு சென்ற சுவாமி ஆத்மானந்தா, தலித் துறவியான சுவாமி சகஜானந்தா போல [150 பேரை நான் பட்டியலிட முடியும்] இவர்களெல்லாம் அத்வைதிகளே. இது எப்படி?

சங்கரர் குறித்துப் பல வகையான ஐயங்கள் இது வரை பதிவு செய்யப் பட்டுள்ளன. பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிய சங்கரரும், கேரள ஜாதியமைப்பின் இலக்கண கர்த்தா என்று அடையாளம் காட்டப் படும் சங்கரரும், இந்திய சங்கர மடங்களை நிறுவிய சங்கரரும் ஒருவரல்ல என்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது. பல ஐதிகங்கள் அவர் பெயரின் வலிமையைப் பயன் படுத்தி கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டவை. பல நூல்கள் அவர் பெயரில் பிறகு எழுதி சேர்க்கப்பட்டவை.  நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் செளந்தர்ய லஹரிக்கும், பிற நூல்களுக்கும் இடையே மொழி அமைப்பில் பெரிய கால வேறு பாடு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் கூட சங்கரர் பேரில் நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

இப்படிப் பட்ட ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது மிக சிக்கலான விஷயம். ஆனால் இதோ எளிதாக ஒற்றை வரியை உருவாக்கியாகி விட்டது.  ஆகவே சங்கரரைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. புதைத்துக் கையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் மீதி. ஆனால் அம்பேத்கார் அத்வைதத்தைப் படித்தார். ஈ.எம். எஸ் படித்தார். அயோத்தி தாசர் படித்தார். இது தான் ஈ.வே.ரா உருவாக்கிய மனோ பாவத்தின் சரியான உதாரணம்.

சங்கரரில் இந்தியப் பெளதிக வாத மரபின் மிகச் சாரமான பகுதி உள்ளடங்கியுள்ளது. அத்வைதத்தின் எதிர்முனை பிற்கால பெளத்த சிந்தனை. பெளத்த சிந்தனை நியாய மரபின் அடிப்படையிலானது. அவ்விவாதத்தினூடாக அத்வைதம் நியாய மரபின் தருக்கக் கட்டுமானத்தை அப்படியே தானும் சுவீகரித்து கொண்டிருக்கிறது. அதே போலத் தூய தருக்கத்தை முன்னிறுத்தும் பெளதிகவாத சிந்தனையான நியாயத்தில் முதல் கட்ட வேதாந்த மரபின் அடிப்படைகள் சில உள்ளடங்கியுள்ளன. சிந்தனையை அதன் விவாத வடிவில் மட்டுமே பயில, மீட்க, தக்க வைக்க முடியும். மார்க்ஸையும் -ஹெகலையும்,  கிராம்ஷியையும் -குரோச்சேவையும் சேர்த்தே பயில முடியும். மிக எளிமையாக சொல்லப் போனால் பக்தி, சடங்கு ஆகியவற்றுக்கு எதிராக தூய அறிவை முன் வைக்கிறது அத்வைதம். அதனாலேயே அது இந்திய மறு மலர்ச்சிக் கால சீர்திருத்தவாதிகளுக்கு முக்கியமான கருவியாகியது. அத்வைதத்தின் வழியாக, நியாய மரபே அப்பங்களிப்பை நடத்தியது என்றும் சொல்லலாம் .

அத்வைதத்தின் எதிர் முனையாகவே இங்கு மார்க்ஸியம் செயல் பட முடியும் என்றே ஈ.எம்.எஸ் சொல்கிறார். அத்வைதத்தை வசதியாக புறக்கணித்து விடலாம். ஆனால் நம் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் [மொழியில்] அது வலுவாக உட்கார்ந்திருக்கும் வரை அதை விவாதித்து வென்றடக்கியே ஆகவேண்டும். நமது பழமொழிகளில் கணிசமானவை அத்வைதச் சார்பு கொண்டவை. நமது பக்திப் பாடல்கள் அத்வைத உள்ளடக்கம் உடையவை. ஒரு சிந்தனை காலப் போக்கில் மொழியில் கலந்து விடுகிறது. பிறகு அதன் பாதிப்பு பெரிதும் நனவிலி சார்ந்தது.  ஆக அத்வைதம் அல்லது சங்கரர் போன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அணுகுவதற்கு மிக நுட்பமான பகுப்பாய்வு நோக்கு தேவை. மிக விரிவான வரலாற்று அணுகுமுறை தேவை. ஆனால் ஈ.வே.ரா செய்வது அவருக்குத் தெரிந்த சில்லறைத் தகவல்களை வைத்துக் கொண்டு ஆங்காரத்துடன், வன்மத்துடன் மண்டையில் ஓங்கிப் போடுவது மட்டுமே. அது சிந்தனைத் தளத்தில் மிக, மிக ஆபத்தான போக்குகளையே உருவாக்கும். அதன் விளைவே இன்றைய தமிழ்ச் சூழலின் தேக்க நிலை.

அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தை. அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது அது. முரண்படவும் விரிவு படுத்திக் கொள்ளவும் அதில் இடமுண்டு. ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன். இறந்த காலத்தின் கைதிகளாக வாழும் பெரும் மக்கள் திரள் உடைய பகுதி தமிழகம். நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப, நுகர்வோர் கால கட்டத்துக்கு [முதலாளித்துவ கால கட்டத்துக்கு என கலைச் சொல்லாகக் கூறலாம்] நகர்வதற்கான கருத்தியல் ஆயுதங்கள் சிலவற்றை அவர்களுக்கு உருவாக்கித் தந்த சக்தி மிக்க சமூக சீர்திருத்தவாதி அவர். அவரை நவீனத்துவத்தின் பிரச்சாரகர் என்று சொல்லலாம் . அவரது நோக்கங்களோ,அவரது தனிப் பட்ட மனிதாபிமான நோக்கோ ஐயத்துக்கு உரியவை அல்ல. அவர் ஒரு முக்கியமான வரலாற்று நாயகர் என்றே நான் கருதுகிறேன். ஈ.வே.ரா மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் கண்டிப்பாக உருவாகியுமுள்ளது. ஆனால் எது மூட நம்பிக்கை, எது மரபான குறியீட்டுச் செயல்பாடு என்றெல்லாம் தெரியாத ஒட்டு மொத்த மட்டையடி பகுத்தறிவையும், கலாச்சாரம் சார்ந்த ஒரு வகை மூடநம்பிக்கையாகவே மாற்றிவிட்டது.

பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும் என்ற யதார்த்ததை வைத்தே புரிந்து கொள்ளலாம்.  விவாதங்களை மறுக்கும்,முத்திரை குத்தி வசைபாடும், வெறுப்பை உமிழ்வதையே கருத்துப்போராக எண்ணும் இந்த மூர்க்கம் ஈ.வே.ரா உருவாக்கியது தான்.

 

நான் என் குரு மரபாகக் கொண்டுள்ள நாராயண குருவின் குருகுலம் என்பது இந்திய ஞான மரபை வேதங்களையும், வேத விரோத ஞான நூல்களையும் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் விவாதக் களனாகக் காணும் போக்கு கொண்டது. அடிப்படையிலேயே பிராமண எதிர்ப்புக் கொண்ட ஓர் அறிவியக்கம் அது. அடிப்படையில் எனக்கு அவைதீக மரபுகள் மீது, குறிப்பாக பெளத்தம் மீது மட்டுமே ஓரளவாவது சார்பு நிலை உள்ளது. தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதிக மரபை ஆக்க பூர்வமாக விமரிசித்த, அவைதீக மரபைத் தீவிரமாக முன் வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சனாதன, புரோகித மரபிற்கு மாற்றான அசலான சிந்தனைப் போக்குகள் உருவாக்கப்பட, மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டுமென நான் எண்ணுகிறேன்.

அத்தகைய அவைதீக மரபு வெகு காலம் இந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. இந்தியாவின் தத்துவ வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது ,அது உருவாக்கிய விவாத சாத்தியம்தான். [நான் வேத விரோதி என்று என்னை சொல்லிக் கொள்வேன். ஆகவே இங்கு வேத மரபும் இருந்தாகவேண்டும் — டி ஆர் நாகராஜ்] நான் அதைக் கற்று ஆராய்ந்து முன் செல்லவே விரும்புவேன். மாறாக நான் பெரியாரை ஏற்றால் சங்க இலக்கியத்தை, பதஞ்சலி யோக சூத்திரத்தை, திருக்குறளை, நியாய சூத்திரங்களை எல்லாம் முழுமையாக நிராகரிக்க வேண்டியிருக்கும். வேதங்களை கீதையை, கம்பராமாயணத்தை, பாரதியை, அரவிந்தரை, கொளுத்த வேண்டியிருக்கும். பிறகு எனக்கு மிஞ்சுவது ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் தூறல்களான சில அரைத் தத்துவவாதிகள் மட்டுமே. மூளை சூம்பிப் போன ஆசாமிகள் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. அது எனக்கு ஒவ்வாது. என் சவாலே வேறு என்று தான் சொல்கிறேன். அந்த முரட்டு மட்டையடி தமிழ்க்கலாச்சாரத்தில் செல்லாக் காசு என நிரூபணமாகி விட்டது என்று தான் சொல்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இங்குள்ள மதம், மொழி அனைத்திலும் சனாதன மரபின் பாதிப்பு அதிகம். தமிழகத்தின் மூல மரபுகள் பல ஒடுக்கப் பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுப்பதும் நிலை நாட்டுவதும் ஒரு பெரும் கலாச்சாரப் பணி. அது ஒருபோதும் எதிர்மறையான செயல்பாடுகள் மூலம் உருவாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், அயோத்தி தாச பண்டிதரும் [நாராயணகுருவும், நடராஜ குருவும்] ஆற்றிய ஆக்க பூர்வமான பணிகளே, எனக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக உள்ளன. கலை இலக்கியங்களைப் புறக்கணிக்கும், கொச்சையாக மதிப்பிட்டு இழிவுபடுத்தும் மனநிலை அப்பணிக்கு நேர் எதிரான ஒன்று. ஏனெனில் கலை இலக்கிய மரபுகளில் இருந்தே நம் சாராம்சமான கலாச்சார அம்சங்கள், குறிப்பாக தமிழ் கலாச்சாரக் கூறுகள் கண்டடையப் பட முடியும்.

ஓர் உதாரணம் சொல்லலாம். இப்போது என் முன் கணிப்பொறி அருகே நான் படித்துக் கொண்டிருக்கும் இரு முக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் உள்ளன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வு [வட்டப்பாலை குறித்தது] குமரிமைந்தன் பண்டைத்தமிழ் கால, நில அமைப்பு குறித்து எழுதிய ஆய்வு . இரண்டுமே சோதிடத்தை, குறிப்பாக ராசி சக்கரத்தை முக்கியமான கருவியாகப் பயன்படுத்துபவை.  பழந்தமிழரின் அறிதல் முறையை ஆய்வு செய்ய மிக முக்கியமான ஒரு தளம் சோதிடம். அது குறித்து இன்னும் நமக்கு முழுக்கத் தெரியாத நிலையில் உடனடி முன் முடிவுகளுக்கு வருவதை பொறுப்பான ஆய்வாளர் தவிர்க்கிறார்கள் .

இன்று சோதிடத்துக்குப் பயன்படுத்தப்படும் ராசி சக்கரம் என்ற அமைப்பு முன்பு தமிழரின் கணித முறையாக இருந்தது என்கிறார் குமரி மைந்தனும், அவரது நண்பரும் ஆய்வாளருமான வெள்ளுவனும். குமரிமைந்தன் ஈ.வே.ரா மீது பிடிப்புள்ளவர் என்றபோதிலும் தமிழ்நாட்டு சோதிட ஆய்வு முறைகளை மூட நம்பிக்கை என எள்ளி நிராகரிக்கக் கூடாது என்கிறார். தமிழக ஆலயங்களின் சடங்குகளை மாற்றக் கூடாது என்கிறார். பண்டைத் தமிழரின் காலக் கணிதமும், வானியலும் அவற்றில் உறைகின்றன என்பது அவரது கூற்று. ஈ.வே.ரா உருவாக்கும் மனோபாவம் இந்த மரபான அறிவுகளை முழுக்கத் துடைப்பத்தால் அள்ளி குப்பையில் போடத் தானே நமக்கு கற்பிக்கிறது?

இன்று நாம் சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஈ.வே.ராவின் மூர்க்கமான எதிர்மறைப் போக்குகளை தவிர்த்து விட்டு படைப்பூக்கத்துடன் முன்னகர வேண்டிய அவசியம் தான் உள்ளது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிட இயக்கம் – கடிதம்


 
Save
Share9
 

 

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நான் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவள். உங்களுடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஈடாக உங்களுடைய துணிச்சலும் நேர்மையும் என்னை கவர்ந்த பண்புகள். குறிப்பாக நீங்கள் திராவிட இயக்கம் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானவை. திராவிட இயக்கத்தின் போலித்தனம், முரட்டுத்தனம், மோசடித்தனம் பொய் பித்தலாட்டங்கள் என்னைப் போன்றவர்களை விலகி நிற்க வைக்கின்றன.

 

என் பணியிடத்தில் இதை அனுபவித்து உள்ளேன். ஆண் ஆசிரியர்கள் (குறிப்பாக தமிழ்) திராவிட இயக்கத்தின் மேல் எந்த விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். குடும்பத்திலும் இதே நிலைமை. இது ஏன் எனப்புரியவில்லை? பள்ளி பாட நூல்களில் இவர்கள் வரலாற்றை திருத்தும் விதம் மற்றும் மிகையுணர்ச்சியுடன் தலைவர்களை சித்தரிக்கும் விதம் அருவெறுப்பூட்டவை. நிற்க. என் மகன் இந்த அபத்த சூழலிருந்து தப்பித்து வெளிநாட்டில் வசிக்கிறான். அவன் எனக்கு பல சுட்டிகளை அனுப்பியுள்ளான். முகநூலில் காரசாரமான விவாதம் நடக்கிறது என்கிறான்.

 

இதெயெல்லாம் படித்துப்பிறகு விரக்திதான் மிஞ்சுகிறது. தர்க்கபூரவமான எந்த கேள்விக்கும் திராவிட இயக்கத்தினர் பதில் அளிக்கமாட்டார்கள். எல்லாமே பார்ப்பன சதியாக பார்ப்பது என்பது நரி தந்திரம். தங்களின் தவறுகளை, இயலாமைகளை, மோசடிகளை மறைக்க இந்த தந்திரத்தை கையாள்கிறார்கள். நான் படித்த எந்த பிராமண ஆசிரியர்களும் ஒருபோதும் என்னை சாதி ரீதியாக வேற்றுமை காட்டியதில்லை. திராவிட இயக்கத்தினர் தமிழ்நாட்டின் மொத்த வரலாற்றையும் தங்கள் வசதிக்கேற்ப மாற்றுகிறார்கள். இணையதள்ம், முகநூல் முழுவதும் இவர்களின் கொட்டம் தலை விரித்தாடுவதாக என் மகன் மட்டுமல்ல என் மாணவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

 

தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வரலாறு என அனைத்து துறையையும் கைப்பற்றி மிகை உணர்ச்சியுடன் திரித்து எழுதி குவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பின பக்கமெல்லாம் திராவிட போற்றிப்பாடிகள்.(மன்னிக்கவும் உங்கள் வார்த்தையை பயின்றுள்ளேன்). 1967க்குப்பிறகு தமிழ்நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள்? எனக் கணக்கிட்டால் தலை சுற்றும். ரியல் எஸ்டேட், தனியார் கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரைப்பட தயாரிப்பு, மருத்துவமனைகள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், ஆடை தொழிற்சாலைகள், சாராய கம்பெனிகள், கட்டுமான நிறுவனங்கள், உணவு விடுதிகள், ஊடகம், பத்திரிக்கைத்துறை என இந்தப் பட்டியல் நெடியது. இதன் பங்குதாரர்கள்/உரிமையாளர்கள் முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தினர். நீங்கள் குறிப்பிடுவதுபோல், இதற்கு இன்னொரு பெயர் இடைநிலை சாதியினர்.

 

பெரியார் பெரும் பகையையும் வெறுப்பையும் தமிழ்நாட்டு மண்ணில் விதைத்து விட்டு போய்விட்டார். பிராமணர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, அதிகாரத்தை கைப்பற்றியதுதான் திராவிட இயக்கம் செய்தது, தொடர்ந்து அதிகார மையத்தில் இருப்பதற்கு என்னென்ன மோசடித்தனங்களை கையாள வேண்டுமோ அனைத்தையும் செய்து வருகிறது. (அவ்வபோது பார்ப்பன சதி என ஓலமிட வேண்டும்). திராவிட இயக்கம், அதன் தலைவர்கள் மிதமிஞ்சிய பொய் புரட்டு பிம்புகளால் கட்டப்பட்டுள்ளது.இவர்களின் பொய் பித்தலாட்டங்கள் ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது.. இப்போதே தமிழ்நாட்டில் என் மகன் தலைமுறையினர் இவர்களின் உண்மையான முகம் தெரிந்து புறக்கணிக்கிறார்கள். கீழே உள்ள சுட்டியை படித்துப்பாருங்கள். பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கியுள்ளது என வரலாற்றை திரித்துள்ளார்கள். பாடப்புத்தக்ங்களிலும் இதே நிலை.

 

கூடுதலாக வீரமணி, “யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்” என்ற நூலையும் எழுதியுள்ளார். யாரோ திராவிட அபிமானி யுனெஸ்கோ மன்றம் என்ற பெயரில் வழங்கியதை, யுனெஸ்கோ வழங்கியது என புரட்டியது மட்டுமல்லாமல் அதைப்பற்றியும் ஒரு நூல் வெளிவந்துள்ளது எவ்வளவு பச்சை மோசடித்தனம். யுனெஸ்கோவின் இணையதளத்திலும் இம்மாதிரியான எந்தக் குறிப்பும் இல்லை. வழக்கம்போல், வீரமணி கொதித்தெழுந்து’ பார்ப்பன சதி” என வசை பாடியுள்ளார். என் மாணவர்கள் சொன்னது சரியென்றே படுகிறது.. திராவிட இயக்கத்தினர் படிக்கமாட்டார்கள்.. வழிபடுபவர்கள். கற்பிதங்களை கேள்விக்கேட்காத “பகுத்தறிவாதிகள்”. இதேபோல்தான், சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் கருணாநிதிக்கு ஸ்டாம்ப் அடிக்கப்பட்டுள்ளது என்ற புரளியை கிளப்பினார்கள். இதெல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளிவருவது நல்லது. திராவிட பிம்பம் உடையட்டும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் இந்தக் கடிதத்தை உங்கள் தளத்தில் பிரசுரிக்கலாம்.

அன்புடன்

கிருஷ்ண ப்ரியா குமரேசன்

https://satyavijayi.com/no-unesco-did-not-credit-ev-ramasamy-with-an-award-titled-the-socrates-of-south-east-asia/?fbclid=IwAR2z_DI9j-7CtK_AGZeAos4YYZfQIKfV_X55D4I-Qce6W5fNVtXsbix2KCM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விடுபட்ட ஆளுமைகள்


 
Save
Share58
 

Tamilnatu neethimangal Wrapper

கேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய எவரிடம் பேசினாலும் சி.பி.யின் ஆட்சியை பொற்கால ஆட்சியென்றே தான் சொல்வார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல் துறையில் சாலையைத் தோண்டி தொலைபேசி இணைப்பு அளிப்பதற்காக முயன்றபோது ஒப்பந்ததாரர் வந்து  “அச்சாலையை உடைக்க முடியாது” என்றார் ஏறத்தாழ நான்கடி தடிமனாக தரமான கான்கிரீட்டால் அந்தச் சாலை போடப்பட்டிருந்தது. பொறியாளர்கள் சென்று பார்த்துவிட்டு இரு புறமும் தோண்டி அந்த சாலைக்கு அடியில் சுரங்கம் அமைத்து தொலைபேசி இணைப்பை அளித்தார்கள். மேலே உயர்எடைகொண்ட லாரிகள் சென்று கொண்டிருக்க அடியில் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றுவதை நான் பார்த்தேன். திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவில் வரைக்கும் சர்.சி.பி.ராமசாமி அய்யர் காலத்தில் போடப்பட்ட சாலை அது.

குமரி மாவட்டத்தின் பொருளியல் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் பெரும்பாலான அமைப்புகள் சி.பி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டவை. பேச்சிப்பாறை நீர்மின் திட்டம் அதில் மிக முக்கியமானது. குளச்சல் உட்பட துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு அவர் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக ஊழலற்ற கறாரான ஆட்சி ஒன்றை அளிக்கவும் அவரால் முடிந்தது.

கோமல் அன்பரசனின் தமிழகத்து நீதிமான்கள் என்ற நூலை படிக்கத் தொடங்கும்போது முதல் கட்டுரையே சி.பி.ராமசாமி அய்யரைப் பற்றியதாக இருந்தது இனிய தொடக்கத்தை அளித்தது. சி.பி.ராமசாமியின் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு விரைவு கோட்டுச்சித்திரமாக அளிக்கிறது அக்கட்டுரை. வழக்கறிஞராக அவர் பெற்ற பெரும்புகழ் அவருடைய பொதுவாழ்க்கையின் அடித்தளமாக அமைந்தது.அன்றைய சென்னை மாகாணத்தின் அரசு வழக்கறிஞராகவும், கவர்னரின் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலில் உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

 

சி.பி.ராமசாமி அய்யர்

சி.பி.ராமசாமி அய்யர்

கிட்டத்தட்ட அமைச்சருக்கு நிகரான அப்பொறுப்பில் அவர் இருக்கையில்தான் மேட்டூர் அணை கட்டப்பட்டுவதற்கான முன் முயற்சிகளை எடுத்தார். அவருடைய தனிப்பட்ட சாதனை என்று மேட்டூர் அணையை கோமல் அன்பரசன் சொல்கிறார். பைக்காரா நீர்மின்சக்தி திட்டம் அவருடைய இன்னொரு சாதனை .தமிழகத்தில் தூத்துக்குடி சென்னை துறைமுகங்களின் மேம்பாட்டுக்கும் அரும்பணியாற்றியிருக்கிறார். இச்செய்திகள் இன்றைய தலைமுறையில் எவருக்கேனும் தெரியுமா என்பது வியப்புக்குரியது. எனக்கே மேட்டூர் அணை உருவாக்கத்தில் சி.பி.ராமசாமி ஐயரின் பங்கு உண்டு என்று இந்த நூலில் வாசித்தது வியப்பூட்டும் புதிய செய்தியாக இருந்தது.

ஏற்கனவே நாம் அறிந்த பல்வேறு செய்திகள் ஒன்றுடன் ஒன்று விரைவு மின்சார தொடர்புகள் போல பொருந்தி ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குவதுதான் இந்நூலின் அழகு அன்னிபெசண்ட் அம்மையார் ஆந்திராவில் நாராயணய்யா என்பவரின் இருமகன்களை தத்து எடுத்துக்கொண்டு வந்து அவர்களில் எதிர்கால உலககுரு என்று அறிவித்து தியாசபிகல் சொசைட்டியில் வைத்து வளர்த்தார். இளையவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தனது மைந்தர்களைத்  திரும்பத்தரவேண்டுமென்று கோரி தந்தை நாராயணய்யா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது அவ்வழக்கில் நாராயணய்யாவுக்காக ஆஜரானவர் சிபி.ராமசாமி ஐயர் என்பது எனக்குப் புதிய செய்தி. எங்கோ நூலில் அதைப் பார்த்திருக்கலாம் ஆனால் இவ்வாறு இணைத்துக்கொண்டதில்லை.

சர். சி.பி.ராமசாமி ஐயர் சாதிய நோக்கு கொண்டவரென்றும் ,தமிழகத்தில் பிராமண ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் என்றும் ஒரு தரப்பால் சொல்லப்பட்டதுண்டு. அவர் உறுதியான பாரம்பரியவாதி என்பதில் ஐயமில்லை. ஆனால் சாதியவாதி என்று சொல்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. மாறாக நேர்எதிராக சொல்வதற்கான ஆதாரஙகள்தான் அவர் வாழ்க்கையில் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தை காந்தியும், நாராயணகுருவும் முன்னெடுத்தபோது ஆலயங்களை அனைத்து சாதியினரும் வழிபடுவதற்காக திறந்துவிடவேண்டுமென்ற சட்ட முன்வரைவை உருவாக்கி மகாராஜாவை அதில் கையெழுத்திட வைத்தவர் அன்று திவானாக இருந்த சர்.சி.பி ராமசாமி ஐயர் அதன் பொருட்டு அவர் காந்தியால் அவர் பாராட்டப்பட்டார்.

அதேபோல முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கான சட்ட முன்வரைவை எழுதி அளித்து அனைத்து வகையிலும் ஆதரவளித்து நிறைவேற்ற வைத்தவர் சி.பி.ராமசாமி ஐயர். இச்செய்திகளின் முக்கியத்துவம் என்னவென்றால் இன்று சென்றகால வரலாற்றின் ஒளிமிக்க பக்கங்களை எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் அரசியல்சார்ந்த ஆளுமைகளின் மேல் ஏற்றிவைத்து வரலாறு எழுதும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அத துதிவரலாற்றால் மறைக்கபப்டும் உண்மைகள் இவை

கோமல் அன்பரசன் சி.பி.ராமசாமி அய்யர் அவகளின் வாழ்க்கையின் சிறிய தகவலைச் சொல்கிறார். ஒரு தலித் இளைஞன் வழக்கறிஞர் படிப்புக்கு படித்துவிட்டு எவரும் தன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளாமலிருந்த செய்தியை தற்செயலாக அறிந்தபோது சி.பி.ராமசாமி அய்யர் அவரை அழைத்து தன் உதவியாளராக வைத்துக்கொண்டார். தன் இல்லத்திலேயே தங்க வைக்கவும் செய்தார். பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் நீதிபதியுமான என்.சிவராஜ் அவர்.

சி.பி ராம்சாமி ஐயர் போன்றவர்களை புரிந்துகொள்வது இன்றைய சூழலில் கடினம். தங்களுக்கென்று ஒர் உறுதியான கொள்கையை ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். திருவிதாங்கூரின் திவானாக இருந்த சிபி.ராமசாமி ஐயர் அன்று கம்யூனிஸ்ட்கட்சி வயலார் போன்ற ஊர்களை ‘விடுவித்து’ அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை கடுமையான போலீஸ் நடவடிக்கை மூலம் ஒடுக்கினார். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த அடக்குமுறைகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாறு சொல்கிறது. அதன்பொருட்டே சி.பி.ராமசாமி ஐயர் குரூரமான ஆட்சியாளர் என்று இடதுசாரிகளால் சித்தரிக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரம் கிடைத்தபோது திருவிதாங்கூர் தனி நாடாக நீடிக்கவேண்டுமென்று வாதாடினார். அதற்குக் காரணம் திருவிதாங்கூரில் அனந்தபத்மநாபசாமி ஆலயத்தில் இருந்த மாபெரும் செல்வம் பற்றி அவருக்குத்தெரியும் என்பதுதான் என்று இன்று பேசப்படுகிறது. சுங்கம், விற்பனைவரி போன்றவற்றினூடாக மத்திய அரசுக்கு பெரும் நிதியை அளிக்கும் கேரளம் மக்கள்தொகைக் குறைவு என்பதனால் அதில் பாதியையே மத்திய அரசிடமிருந்து திரும்பப்பெற முடியும் என்றும், ஆகவே இந்திய அரசுடன் திருவிதாங்கூர் இணைவது அந்நிலப்பகுதியின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.

ஆகவே திருவிதாங்கூர் தனிநாடாக ஆகவேண்டும் என முயற்சிகள் எடுத்துக்கொண்டார். குறைந்தது ஒரு பேரமாவது பேசி சில ஒப்பந்தங்கள் செய்தபின்னரே இணையவேண்டும், நிபந்தனையற்று இணையக்கூடாது என்று வாதிட்டார்.  இந்திய அரசின் கறாரான ராணுவ நடவடிக்கை வரக்கூடும் என்றபோது அரசர் அஞ்சி பணிந்தார். அய்யரின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மணி என்பவரால் தாக்கப்பட்ட சி.பி.ராமசாமி ஐயர் திவான் பதவியிலிருந்து விலகி தமிழகத்திற்கு திரும்பி வந்தார்.

திருவிதாங்கூர் திவான் பொறுப்பிலிருந்து விலகியதுமே இந்திய தேசியத்திற்கு உறுதியான ஆதரவளிப்பவராகவும் முதன்மையான கல்வியாளராகவும் ஆனார். பனாரசஸ் இந்து பலகலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைவேந்தராக பணியாற்றினார். 1956-ல் இந்திராகாந்தியின் ஆலோசனையின்படி நேரு சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்எஸ்ஸின் கம்யூனிஸ்டு அரசைக் கவிழ்த்தபோது கடுமையாக எதிர்த்து அது ஜனநாயகத்திற்கு  எதிரானது என்று கருத்துப்பதிவு செய்தார்

தான் எந்தப் பணியை ஆற்றுகிறோமோ அந்தப்பணிக்கு முழுமூச்சான சேவையை அளிப்பது என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது. ஒருவகையில் அது வழக்கறிஞரின் இயல்பும் கூட .அவரின் அறமென்பது யாருக்காக வாதாடுகிறார் அவருடைய தரப்பை முழுமையாக முன்வைப்பது.

கோமல் அன்பரசுவின் நூல் வெறுமே தகவல்களை மட்டும் சொல்லிச் செல்வதில்ல. நிகழ்வுகளினூடாக ஆளுமைகளின் குணச்சித்திரத்தை வரைந்து காட்ட அவரால் முடிந்திருக்கிறது. சென்ற காலத்தின் வெவ்வேறு வரலாற்று நிகழ்ழ்வுகளை ஒன்றுடன் ஒன்று கோர்க்கும் பல சிறுசெய்திகளால் செறிந்திருக்கிறது இந்நூல். ஆகவே நம் மனதில் அக்காலகட்டம் பெரும் பின்னலாக உருவாக்கப்படுகிறது ஆகவே இப்போது வாசிக்கையில் ஒரு புனைவை வாசிக்கும் உள எழுச்சியை இந்த புத்தகம் அளிக்கிறது.

 

வி.எல்.எதிராஜ்

வி.எல்.எதிராஜ்

வி.எல்.எதிராஜ் பலரும் அறிந்த ஆளுமை. லட்சுமிகாந்தன் கொலைவழக்குக்காக தண்டிக்கப்பட்ட தியாகராஜப் பாகவதரையும் கலைவாணரையும் லண்டன் பிரிவிகவுன்சிலில் வாதிட்டு மீட்டு வந்தவர். சென்னை எதிராஜ் கல்லூரியின் நிறுவனர். அதற்கப்பால் இந்த நூலில் மிக வசீகரமான ஆளுமையாக அவர் எழுந்து வருகிறார். அவருடைய புகைப்படங்களை முன்னரே பார்த்திருந்ததனால் உரத்த குரலில் சொற்பெருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் ஒருவராக அவரைக் கற்பனை செய்துகொண்டேன். தாழ்ந்த குரலில் மிகக்குறைவான வார்த்தைகளில் வாதாடுபவர் என்று இந்த நூலில் படித்தபோது வியப்பாக இருந்தது. உடனே என் உள்ளத்தின் சித்திரம் மாறியும் விட்டது.

எதிராஜ் நீதிபதிகளுக்கும் தனக்குமான ஒரு அந்தரங்கமான ஆழமான உரையாடலாக நீதிமன்ற வழக்காடுதலை மாற்றிக்கொள்வார் என்று கோமல் அன்பரசன் சொல்கிறார். அவருடைய கார்ப்பித்து, தனது இல்லத்தில் பலகை வைத்துக்கொள்ளாத தன்னம்பிக்கை அல்லது தற்பெருமை ,அவரது தோற்றம், அவர் ஆஜரான வழக்குகளில் அவர் கடைபிடித்த உத்திகள் என தமிழக வரலாற்றில் ஒரு தொன்மமாக மாறிப்போன ஒருவர் முற்றிலும் எதார்த்தமான வடிவம் கொண்டு இந்த நூலில் நம்முன் வருகிறார். ஒரே நாளில் நாற்பத்து நாலு வழக்குகளில் ஆஜராகியிருக்கிரார் எதிராஜ் என்று இந்நூலில் வாசிக்கையில் எப்போதுமே வரலாற்று மனிதர்கள் சாதாரணமாக பிறர் எண்ணும் எல்லைகளை கடந்து சென்றிருப்பார்கள் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது

சி.பி.ராமசாமி ஐயர் வி.எல்.எதிராஜ் போல வரலாற்றில் ஏற்கனவே இடம் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாசகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத நீதியரசர்களின் வரலாறுகளும் இந்நூலில் வந்துகொண்டே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் உயிலை வாசித்த என்.சி.ராகவாச்சாரியின் வரலாறு ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் ,கட்சியின் உடைமைகளையும் கையாளும் முழு பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் என்பதை சுட்டும் கோமல் அன்பரசன் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரார்களிடம் பெறும் ஆழ்ந்த நம்பிக்கையின் உதாரணமாக அதை குறிப்பிடுகிறார்.

எஸ்.சீனிவாச ஐயங்கார் பிறிதொரு உதாரணம். அரசு வழக்கறிஞராக இருந்தவர் அரசு அன்னிபெசண்ட் மேல் ஒரு தேசத்துரோக வழக்கு தொடுக்க முன்வரும்போது எவ்வகையிலும் அது சட்டபூர்வமானதல்ல என்று அன்றைய கவர்னருக்கு அறிவுறுத்தி அந்த வழக்கை ரத்து செய்ய வைத்தார். தான் வகிக்கும் பொறுப்புக்கான நெறிகளே தன்னை ஆளவேண்டுமேயொழிய அரசாங்கத்தின் ஒருபகுதியாக தன்னை அரசு வழக்கறிஞர் மாற்றிக்கொள்ளக்க்கூடாது என்ற உறுதியும் தனது நம்பிக்கைகளின் படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிமிர்வும் அவரிடம் இருந்தது. எதிராஜுக்கு மாற்றாக நீதிமன்றத்தில் அருவி போல சொற்பெருக்காற்றுபவர் சீனிவாச ஐயங்கார். அவருடைய வாதங்களை எவரும் முழுமையாகக் குறித்துக்கொள்ள முடியாதென்பதனால் பல்வேறு இடங்களில் பலர் ஒரே சமயம் குறித்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார் கோமல் அன்பரசன்.

வழக்கறிஞர் தொழிலில் உச்சகட்ட வெற்றியை அடைந்து அரசு வழக்கறிஞராகவும் திகழ்ந்த சீனிவாச ஐயங்கார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த செய்தியைக்கேட்டதும் மனம் கொந்தளித்து அரசுப்பொறுப்பிலிருந்து விலகினார். மிக ஆடம்பரமான வாழ்க்கைக்கு பழகிவிட்டிருந்த அவர் மிக எளிய வாழ்க்கையை தன்க்கு விதித்துக்கொண்டு அதைப்பழகினார். சிறை செல்லவேண்டியிருக்குமென்று உணர்ந்து வெறுந்தரையில் படுக்கவும் எளிய உணவை உண்ணவும் குறைந்த வசதிகளுடன் வாழவும் தன்னைப்பழக்கிக்கொண்டார். காங்கிரசுடன் இணைந்து முக்கியமான பொறுப்புக்ளை வகித்தார் ஆனால் காந்தியிடம் கருத்து வேறுபாடு கொண்டு காங்கிரசிலிருந்து பின்னர் பிரிந்தார்.

Srinivasa_Iyengar

எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார்

 

1925-ல் வகுப்புவாரி இட ஒதுக்கீடுக்காக குரல் எழுந்தபோது காங்கிரசில் அவருக்கும் ஈவெராவுக்கும் தான் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. ஈ.வே.ரா வெளியே போவதற்கும் சீனிவாச ஐயர் முக்கியமான காரணமாக இருந்தார். வகுப்புவாரி இட ஒதுக்கீடென்பது சமூக மோதல்களுக்கே வழிவகுக்கும் என்பது ஐயருடைய உறுதியான கருத்தாக இருந்தது.

இந்த நூலின் தனிச்சிறப்பே இவ்வாறு இது அன்றைய அரசியல் மதம் என வெவ்வேறு துறைகளை தொட்டுச் செல்வதுதான். அதற்கு ஒரு காரணம் உண்டு அன்றைய இந்தியச்சூழலில் வழக்கறிஞர் பணி என்பது ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது .அதற்கான வரலாற்று பின்புலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நீதிநிர்வாகம் என்பது மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. குலக்குழுக்கள், ஊர் குழுக்கள், சிற்றர்சர்கள் என நீதி அந்தந்த பகுதிகளில் மரபான நம்பிக்கைகள் மற்றும் குடிவழக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷார் இந்தியாவுக்களித்த கொடை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு பொதுச்சட்டத்தை அனைவருக்கும் உரியதாக முன்வைத்ததுதான்

பொதுநீதி என்ற கருதுகோள் இந்தியாவுக்குப் புதிது. 1862ல் பிரிட்டிஷார் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை தொடங்கி தொடர்ந்து இந்தியாமுழுக்க நீதிமன்றங்களைத் திறந்தபோது அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அவற்றுக்கு படையெடுத்தனர். நீதிமன்றங்கள் திறந்து பத்தாண்டுகளுக்குள்ளேயே கையாள முடியாத அளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன என்று சொல்கிறார்கள் .ஏனெனில் இந்தியாவின் மைய படுத்தப்படாத நீதி என்பது பலசமயம் அந்தந்த பகுதிகளில் வழங்கும் ஆதிக்கத்துக்கு உகந்ததாகவே இருந்தது. சாதிக்கொரு நீதி, வல்லவனுக்கும் எளியவனுக்கும் வெவ்வேறு நீதி என்று நிலவியது. அதுவும் குறிப்பாக மொகலாய ஆட்சி, தென்னகத்தில் நாயக்கர் ஆட்சி போன்ற வலுவான பேரரசுகள் அழிந்து நூறாண்டுகளுக்கும் மேலாக உதிரி ஆட்சியாளர்களின் பூசலும், கொள்ளையும் நிகழ்ந்தது இங்கே.தடியெடுத்தவன் தண்டல்காரன், வல்லான் வகுத்ததே வாய்க்கால் போன்ற பழமொழிகள் உருவான பின்புலம் இதுவே. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வழப்பறிக்கொள்ளையும் தீவெட்டிக்கொள்ளையும் அன்றாட நிகழ்வுகளாக இருந்திருக்கிறது. வரிவசூலே ஒருவகையான கொள்ளையாக  இருந்திருக்கிறது. அந்நிலையில் பிரிட்டிஷ் நீதி என்பது மிகப்பெரிய ஒரு மீட்பாக அன்றிருந்த மக்களுக்குத் தோன்றியது.

அவர்கள் நீதிமன்றத்துக்குப் படையெடுத்தபோது அங்கு அவர்களின் பொருட்டு வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டனர். புகழ்பெற்ற ஆங்கிலேய பாரிஸ்டர்கள் அன்று உயர்நீதிமன்றங்களில் பணியாற்றினர். ஆனால் இந்தியப் பண்பாட்டையும் இந்தியாவின் சமூகச்சூழலையும் நுணுகி அறிந்த இந்திய வழக்கறிஞர்களே பலவழக்குகளை புரிந்துகொண்டு பாதிக்கப்ட்டவர்களுக்கு நீதிவாங்கித்தரமுடியும் என்றநிலைமை இருந்தது. அந்த இடத்தை நிரப்பும்பொருட்டு கல்விமான்கள் எழுந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஓர் இந்தியரால் வகிக்கப்படக்கூடிய மிக மதிப்புவாய்ந்த பதவி என்பது நீதித்துறை சார்ந்ததாகவே இருந்தது.

இத்துறையில் செல்வமும் புகழும் ஈட்டியவர்கள் அங்கிருந்து  அரசியலுக்கும் பொதுவாழ்க்கைக்கும் வந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கறிஞர்களால்தான் நடத்தப்பட்டன. காந்தி ,நேரு, பட்டேல் என பெரும்பாலான தலைவர்கள் வழக்கறிஞர்களே. தென்னகத்தில் ராஜாஜி சத்யமூர்த்தி போன்ற பெரும்பாலோனவர்கள் வழக்கறிஞர்கள். ஆகவே வழக்கறிஞர்களின் கதை என்பது தமிழக அரசியலின், சமூகமாற்றத்தின் கதையாகவும் உருப்பெறுகிறது  கோமலின் இந்த நூலை ஆங்காங்கே வந்து செல்லும் குறிப்புகளிலிருந்து அந்த அரசியல் நிகழ்வுகளையும் சென்று வாசித்து இணைத்துக்கொண்டு செல்பவர் மிகப்பிரம்மாண்டமான ஒரு காலச்சித்திரத்தை அடையமுடியும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  கோமல் அன்பரசனின் இந்நூலை படிக்கையில் இரு எண்ணங்கள் எழுகின்றன ஒன்று தங்கள் துறையில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி தலைமுறைகளால் நினைக்கப்படவேண்டிய ஆளுமைகளாக மாறியவர்கள் இன்று என்னவாக கருதப்படுகிறார்கள் என்பது. உதாரணமாக, எஸ்.துரைசாமி ஐயர். செட்டிநாட்டை சேர்ந்த கோயில் பூசகர் ஒருவர் மலேசியா பர்மா முதலிய நாடுகளிலிருந்து ஆலயத்திருப்பணிக்காக தான் திரட்டிய பணத்தை உள்ளூரிலிருக்கும் ஒரு பெரிய குடும்பத்திடம் கொடுத்து  வைக்கிறார். பிறகு அதை திரும்பக்கேட்கும்போது அதை மறுத்துவிடுகிறார்கள். அந்தப் பெரிய குடும்பத்திற்கெதிராக வழக்கு நடத்த எந்த வழக்கறிஞரும் அன்று தயாராக இல்லை. சிறிய வழக்கறிஞர்கள் நடத்தினால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்கவும் நிற்காது. அந்த வழக்கை கேள்விப்பட்டதுமே ஒரு ரூபாய் கூட ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் அதை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத்தருகிறார் துரைசாமி அய்யர். அது ஒரு திரைப்பட காட்சியின் நாடகத்தன்மையுடன் இந்த நூலில் உள்ளது.

இத்தகையவர்கள் அவர்கள் சார்ந்த வட்டத்துக்குள் தொடர்ச்சியாக நினைவுகூரப்ப்படவேண்டும். அது இங்கே நிகழ்கிறதா என்றால், இல்லை. கோவை ஈரோடு மதுரை போன்று வழ்க்கறிஞர் தொழில் இருநூறாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஊர்களில் கூட இன்றைய வழக்கறிஞர்களுக்கு சென்ற தலைமுறையின் பெரிய ஆளுமைகளைப்பற்றி அடிப்படை அறிவாவது உண்டா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. இது இரண்டு காரணங்களால் நடைபெறுகிறது. ஒன்று எதையும் அறிந்துகொள்வதற்கான சோம்பல். வரலாற்றையோ பண்பாட்டின் ஒழுக்கையோ புரிந்துகொள்ளாமல் அன்றாடத்திலேயே புழங்கும் சிறுமை அது. இந்தியா போன்று தேங்கிப் போன சமூகங்களின் இயல்பு.

அதற்கு அப்பால் ஒன்றும் உண்டு, தொடர்ச்சியாக விழுமியங்ளில் சமரசம் செய்து கொண்டே இருக்கும் இந்தத் தலைமுறைக்கு தான் கொண்ட கொள்கையில் அர்ப்பணிப்புடன் சமரசமின்றி நின்ற சென்ற தலைமுறையை நினைவுகூர்வது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஏதேனும் ஒருவகையில் அவர்களை கேலி செய்து, இழிவுபடுத்தி புறக்கணித்தாலொழிய தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை அது. இன்றைய இணையச் சூழலில் பார்த்தால் இளையதலைமுறையினர் உறுதியான உயர்விழுமியங்களை முன்வைத்து வாழ்ந்த அனைவரையும் இழிவு படுத்துவதை ஒருவகையான புரட்சித்தனம் என்ற பாவனையில் செய்துவருவதைக்காணலாம். இது சென்ற காலத்திலிருந்து விடுபட்டுக்கொள்வது மட்டும் அல்ல, விழுமியங்களிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் கூட. தன்னலத்திற்காக எதையும் செய்யலாம் என்று தனக்குத்தானே ஒரு அனுமதியைக்கொடுத்துக்கொள்ளும்பொருட்டு செய்யப்படும் ஒரு கழைக்கூத்தாட்டம் இது. இன்றைய சூழலில் சென்ற தலைமுறையின் நெறிசார்ந்த வாழ்க்கை கொண்டவர்களை முன்வைக்கும் இந்த நூல் மிக முக்கியத்துவம் அடைகிறது.

இன்னொரு அம்சத்தை சுட்டிக்காட்டியாகவேண்டும். சென்றகாலத்து ஆளுமைகளை அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கருதாமல் ஏதேனும் சாதி, மத அரசியல் அடையாளங்களைக்கொண்டு சிறுமைசெய்துகொள்ளுதல், புறக்கணித்தல்.  வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்நூலில் விரிவான ஒரு கட்டுரை உள்ளது. தமிழக வரலாற்றில் ஒரு நிலையிலும் தவிர்க்கப்பட முடியாதவர் வி.கிருஷ்ணசாமி ஐயர். சுதந்திர இந்தியாவின் அரசியல்சட்ட வரைவென்பது அதற்கு முன்னரே இருநூறு ஆண்டுகளாக இங்கு நிகழ்ந்துவந்த சட்ட உருவாக்கத்தின் ஒரு முதிர்வுநிலை என்று சொல்லாலாம்.

இந்தியாவிற்கு அதற்கு முன்னால் இருந்தது மரபான நெறிகள்தான். அவை குலநீதியாகவும் வட்டாரநீதியாகவும் மதக்கட்டுப்பாடுகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும்தான் இருந்தன. அவற்றில் எது நீதி எது வெறும் வழக்கம் என்று பிரிப்பது கடினம். அந்த அதிகாரம் அரசர்கள், குலத்தலைவர்கள், மதத்தலைவர்கள் கையில்தான் இருந்தது.இந்தியாவில் பொதுநீதிமுறையை பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்தபோது பொதுச்சட்ட வரைவை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது. மரபான நீதிநூல்களையும், மதநெறிகளையும் ஒருபக்கம் கொண்டு மறுபக்கம் பிரிட்டிஷ் பொதுச்சட்டத்தை இன்னொரு பகுதியாக எடுத்துக்கொண்டு இந்தியப் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது பல்லாயிரம் வழக்குகளினூடாக சிறிது சிறிதாக அது மேம்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டு ,விரிவாக்கப்பட்டுத்தான் இந்தியாவுக்குரிய சட்டம் வந்தடையப்பட்டது.

இந்த சட்ட உருவாக்கத்தில் ஆரம்ப கால சட்ட மேதைகள் அளித்த பங்களிப்பென்பது நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது.  இந்தியச் சொத்துச்சட்டம், தனிச்சட்டத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்களித்தவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். திருவாரூரில் பிறந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த முத்துசாமி ஐயர் இன்னொரு பெரும்பங்களிப்பாளர். இவர்களைப்பற்றிய வரலாறுகள் அரசியல் காரணங்களுக்காக பிற்காலத்தில் மறைக்கப்பட்டன, மறக்கவும்பட்டன. அவர்கள் பிறந்த சாதி மீது அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்ட காழ்ப்பு இன்றும் தொடர்கிறது.

 

ஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர்

ஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர்

வி.கிருஷ்ணசாமி ஐயர் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஒருபகுதியாக விளங்கியவர். சென்னையில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தியவர் .பாரதியின் நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரியும் சென்னை மியூசிக் அகாடமியும் உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் .அவருடைய மகன் கி. சந்திரசேகரன் தமிழின் ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தன்னை தொடக்ககாலத்தில் பாதித்த ஆசிரியர் அவர் என சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தந்தையின் வரலாறை அவர் ஜஸ்டிஸ் வி. கிருஷ்ணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதி கலைமகள் வெளியீடாக வந்துள்ளது. இளமையில் அந்நூலை நான் படித்திருக்கிறேன். அதேபோல முத்துசாமி ஐயர் அளித்த கொடை முக்கியமானது.

அவர்களுடைய அரசியல் தரப்போ அல்லது அவர்களின் மத நம்பிக்கையோ அவர்களின் சட்டத்துறைப் பங்களிப்பை மறைக்காமலிருய்க்கையில்தான் அறிவியக்கம் முறையானதாக இருக்கமுடியும். இந்நூல் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மறைக்கப்பட்ட அந்த ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது, ஆனால் அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. உதாரணம் எல்.சுப்ரமணிய அய்யர். ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் மாணவர். பிரம்மஞான சங்கத்தின் முதன்மையான நிர்வாகிகளில் ஒருவர். தலித் கல்விக்காக முதன்மையான பணிகளை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்தபோது உடனிருந்தவர்.

மீண்டும் மீண்டும் இந்நூல் அளிக்கும் சிறு சிறு மின்னல்களையே நினைவில் நிறுத்திக்கொள்கிறேன். கே பாஷ்யம் அவர்களின் வரலாற்றில் சென்னையில் இன்றும் பாஷ்யம் பஷீர் அகமது தெரு என்றிருக்கும் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதை ஆசிரியர் சொல்கிறார் இருவரும் ஒரே தெருவில் இருந்திருக்கிறார்கள். இயல்பாக நிகழ்ந்த இது ஒரு மத ஒற்றுமைக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. திருவிகவுடன் சேர்ந்து விதவை மறுமணத்துக்காக உழைத்த டி.சதாசிவ ஐயரின் பெயரைப்படித்ததும் திரு.வி.கவின் எனது வாழ்க்கை செலவில் என் சரித்திரத்தில் அவரைப்பற்றிய குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன.

சென்ற நூற்றாண்டின் சட்டதுறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்கு செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பும் ஆக உள்ளது இந்த நூல். வழக்கமாக தமிழ் சூழலில் எழுதப்படும் நூல்களில் பெரும்பாலானவை பொதுவெளியில் ஏற்கனவே புழங்கும் தகவல்களை திரும்ப எடுத்து வேறொரு பாங்கில் அடுக்கி வழக்கமான அரசியல்பார்வை ஒன்றை முன்வைப்பவையாகவே இருக்கின்றன. மூலத்தகவல்களைத் தேடித் திரட்டி நூல் எழுதுவதென்பது மிக மிக அரிய ஒன்று .அத்தகைய நூல்கள் வாசகனுக்கு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. எழுத்தாளனுக்கு அவன் புனைவிலக்கியத்தின் வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அளிக்கின்றன.

வரலாறு என்பது நம்மால் தொகுத்து தொகுத்து கூர்மைப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்லப்படும் நிகழ்வுகளின் கட்டமைப்புதான். முதன்மையான நிகழ்வுகள் மட்டும் நினைவில் நிறுத்தப்பட்டு பிற காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. முதன்மையான நிகழ்வுகள் என்பவை யாவை, அவை முதன்மையான நிகழ்வுகள் என்று எவர் எந்த அடிப்படையில் முடிவு செய்கிறார்கள்? 2000-ம் ஆண்டு முடிவின்போது ஆங்கிலஇதழ் ஒன்று இரண்டாயிரம் ஆண்டுகளின் நிகழ்வுகள் என்று பட்டியலிட்டிருந்தது. அதை மலையாள மனோரமா ஆண்டிதழுக்காக நான் மொழியாக்கம் செய்தேன். காண்டர்பரி தேவாலயத்தில் புதிய கார்டினல் பதவியேற்பு ஒரு முக்கிய நிகழ்வாகவும் அதற்கு இணையான முக்கியமான நிகழ்வு சீனாவில் ஒரு அரசவம்சம் தொடங்குவதாகவும் இருந்தது. அந்த பட்டியலில் எழுபது சதவிகித நிகழ்வுகள் ஐரோப்பாவுக்குள் நிகழ்ந்தவை

எப்போதும் ஆதிக்கத்தின் அடிப்படையில், ஓங்கிநின்றிருக்கும் கருத்தியலின் அடிப்படையில் தான் வரலாற்றுக் கட்டுமானம் நிகழ்த்தப்படுகிறது. அந்த பெரு வரலாற்றை அல்லது பொது வரலாற்றை மறுப்பவை நுண்வரலாறுகள். விடுபட்ட நிகழ்வுகளைத் தொகுத்து உருவாக்குபவை. புனைவிலக்கியம் எப்போதும் அதைத்தான் செய்கிறது. அதற்கிணையான ஒரு பணியை இன்று இதழியல் செய்கிறது. தமிழக சமூக,அரசியல் வரலாற்றில் விடுபட்ட நூற்றுக்கணக்கான இடைவெளிகளை நிரப்பும் ஒரு சிறிய நூல் இது. கோமல் அன்பரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோமல் அன்பரசன் எழுதி சூரியன்பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் ‘தமிழக நீதிமான்கள்’ என்னும் நூலுக்கான முன்னுரை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஈவேரா?


 
Save
Share13
 

அன்புள்ள ஜெ,

பெரியாரை நீங்கள் ஈவேரா என்று எழுதுவதற்கான விளக்கத்தை எழுதியிருந்தீர்கள். அது எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. ஒரு வீம்பாகவே அதை நான் நினைக்கிறேன். என்னதான் சொன்னாலும் இன்னொருவரின் பெயரை நீங்கள் பிழைதிருத்தக்கூடாதென்று படுகிறது

அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்,

என் விளக்கத்தை எழுதிவிட்டேன்.

இரு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். கவியோகி சுத்தானந்தபாரதியாரின் சுயசரிதை ‘சோதனையும் சாதனையும்’ [சுத்தானந்த நூலகம் திருவான்மியூர் வெளியீடு] .ஈவேரா அவர்களின் நெருக்கமான நண்பர் அவர். அந்நூலின் 248 ஆம் பக்கம் 55 ஆவது அத்தியாயம் ‘பெரியார் நட்புக்கு உரியார்’. அதில் இவ்வாறு எழுதுகிறார்.

‘நாயக்கர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் வேங்கட்டப்ப நாய்க்கரும் சின்னத்தாயாரம்மாளும் கதவில்லாக்குடிலில் கஷ்டஜீவனம் செய்தனர். கூலிவேலை கல்லுடைத்தல் தட்டுக்கடை செங்கல்வண்டி துவரை உடைத்தல் முதலிய வேலைகளைச் செய்து மண்டிக்கடை வைத்து படிப்படியாகப் பணக்காரரானார்… இரண்டுபுதல்வர் பிறந்தனர். ஒருவர் ஈ.வே.கிருஷ்ணசாமி, மற்றவர் நமது ஈ.வே.ராமசாமி….’

நான் ஏன் ஈவேரா என எழுத ஆரம்பித்தேன் என்று நானே யோசித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இருக்கும் பழைய நூல்களில் அதற்காக தேடிப் பார்த்தேன். அக்காலத்தைய தமிழறிஞர்கள் பெரும்பாலும் ஈ.வே.ராமசாமி என்றும் அவரது தந்தை வேங்கட்டப்பநாயக்கர் என்றும்தான் எழுதியிருக்கிறார்கள். [தங்கள் பெயரையே மயிலை சீனி வேங்கடசாமி என்றுதான் எழுதியிருக்கிறார்கள்] நான் எழுதியது அவர்களின் எழுத்துமுறையை அறியாமலேயே பின்பற்றியதுதான்.

இரண்டாவது விஷயம் இந்த விக்கிப்பீடியா குறிப்பைப்பாருங்கள். தன்பெயரை எப்போதுமே வ.வெ.சு.ஐயர் என்றுதான் அவர் எழுதியிருக்கிறார். வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்பதுதான் அவரது பெயர். [அவர் எழுதியமுறை வ.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர்]

அவரது தந்தைபெயரை வேங்கடேசன் என்று மாற்றவும், ஐயரை விட்டுவிட்டு அவர் பெயரை வ.வே.சுப்ரமணியம் என்று எழுதவும் தயக்கமில்லை நமக்கு. அதை எந்த சுயமரியாதையாளரும் சுட்டிக்காட்டி ஒருவரின் பெயரை இன்னொருவர் எப்படி மாற்றி எழுதலாமென கேட்பதுமில்லை.நானே குழம்பியிருக்கிறேன். வ.வே.சு.அய்யர் என்றுதான் மாற்றி எழுதியிருக்கிறேன்…

சரி, இதில் ஏதாவது பொதுவிதி உள்ளதா என்றால் இல்லை ஈ.வே.ரா பற்றிய விக்கிபீடியா குறிப்பு தெளிவாக வெங்கட்ட நாயக்கர் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது தெலுங்கு உச்சரிப்பில் ஈவேராவின் தந்தை பெயரை மட்டும் எழுதவேண்டும். பிறர் தந்தைபெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்

இதுதானா தமிழியம் அல்லது பெரியாரியம்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்


 
Save
Share13
 

ஆசிரியருக்கு,

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல.

இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன.

இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த பொழுது தமிழகத்தில் இல்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு தேவை என ஏன் குரல் எழுப்பப்பட்டது? அதன் வரலாற்று நியாயம் என்ன? அந்தக் கால கட்டத்தில் அரசு அதிகாரத்திலும், கல்விக் கூடங்களிலும் எத்தனை சதம் பிற்படுத்தப்பட்டவர் பங்கு பெற்றார்கள்?

உங்களுக்குத் தெரியாத ஒன்றினை நான் சொல்ல முடியாது.

இன்று எல்லா அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட ஜமீன்தார் வடிவம் கொள்ளத்தான் முயல்கின்றன. திராவிடக் கட்சிகள் மட்டும் அல்ல. குடிமை ,மக்கள் ஆட்சி , அரசியலமைப்பு கூட்டு சமூக அமைப்பு மன நிலை போன்றவை வேகமாக நகராமல் முதலாளித்துவ பொருள் உலகில் வெகு வேகமாக நகருவதன் விளைவே இன்றைய நம் நிலமை. அரசியல் கட்சிகள் தனியார் சொத்தாகி விட்டன, அவை சாமான்ய மக்களிடம் இருந்து மெல்ல அந்நியப்பட்டு ஒரு நிறுவன வடிவத்தில் நிற்கின்றன.

நீங்கள் திராவிட இயக்கத்தினை நிராகரிப்பது ஏன் எனக் கட்டுரை எழுதிய பொழுது அதில் பதிலிடு செய்து இருந்த பீகாரில் பணி புரிந்த ஒரு தமிழக அதிகாரி சில கருத்துகளை சொல்லி இருந்தார், அந்தக் கருத்துகள் கவனிக்கத்தக்கது.

நில உடமைப் பண்ணையார்கள் , உயர் அரசதிகாரம் படைத்தவர்கள் இடம் இருந்த அரசதிகாரம். பின்னர் திராவிடக்கட்சிகள் காலத்தில் எளிதில் சாதாரண மனிதர் கையில் மாறியது.(தமிழகத்தில் பிள்ளைகள் படிக்கக் காரணமான பெருந்தலைவரே தன்னை ஒரு அரச குருவாக மாற்ற முயன்ற காலம்). ஆண்டி நாடரின் புத்தகம் இந்தக் கை மாறலைப் பற்றியதே. இது ஒரு பெரும் நிகழ்வு. இதன் துவக்கப் புள்ளிகள் ஒரளவு லட்சிய வாதிகளும் , ஜனநாயகவாதிகளும்தான், பின்னாளில் இது மாறிப் போனது.

இது ஒற்றைப் படையான அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு கால கட்டத்தின் மாற்றம்.

நீங்கள் பல இடங்களில் நாரயண குரு வழி சிறந்தது என்று சொல்வீர்கள். தமிழகத்திலும் ஒரு நாராயண குரு வந்திருக்கலாம். இதுவும் ஆன்மீக நம்பிக்கை உள்ள பூமிதான். யாரும் உருவாவதைத் தடுக்க வில்லை. அப்படி ஒருவர் வரவில்லை.

பெரியாரும் , அம்பேத்கரும் வைதீகம் பற்றி எரியும் காலத்தில் சொன்ன வழி முறை ஒன்றே. அதில் இருந்து வெளி நில்லுங்கள் என்பதே அந்த வழி.

பெரியார் வெளியேறி சுயத்தில் நில்லுங்கள் என்றார். அது செயல் முறையில் மிகக் கடினமான ஒரு காரியம். அது போன்ற வெட்ட வெளி இருப்பு சுக துக்கங்கள் நிரம்பிய ஒரு சாமான்ய குடும்ப உறுப்பினருக்கு எளிதல்ல. பெரியார் சொல்லிய வழி ஒரு லட்சியவாத வழி என்றே எண்ணுகின்றேன்.

அம்பேத்கர் வெளியேறி பௌத்தம் நில்லுங்கள் என்றார். பௌத்தமும் ஒரு அவைதீகமே.

பக்திக் கால கட்டத்தில் இந்து மரபினைப் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தால் வைதீகம் மட்டுமே இந்து மரபாகாது. வைதீகம் இந்து மரபில் வந்த ஒரு பயிர், பௌத்தம் போல,ஆசிவகம் போல. அது தன்னை முழு நிலமாக மாற்றி நிற்பதே பல நேரம் காட்சிப் பிழை தருகின்றது.

இந்திய மரபில் வந்த குறள் போன்ற நூல்கள் வழி அறிவு நகர்ந்து பக்தி யுகம் வராமல் இருந்திருந்தால் மேம்பட்ட குடிமைச் சமுதாயம் உள்ளிருந்தே வந்திருக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் சொன்ன சாதிய அடுக்கின் கீழ் இருந்து மேல் வந்த குப்தனும் ,மராட்டிய மன்னனும் , விஜய நகர அரசும் வைதீக அங்கீகாரத்தில் தான் துவங்குகின்றன.
அந்த அங்கீகாரம் இல்லை என்றால் அவை இல்லை. எனவே அடுக்கின் மேல் கீழ் விசையை அடுக்கின் வெளியே நிற்கும் ஒரு சக்தி கட்டுப்படுத்துவதை இதில் நாம் காணலாம்.

போகன் எழுதிய ஒரு சிறு கட்டுரையை அல்லது புனைவை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். மிகச் சிறப்பாக இருந்தது.

http://ezhuththuppizhai.blogspot.com/2012/10/blog-post.html

நன்றி
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

நான் சொல்ல நினைப்பதைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு என்பது இந்தியச் சமூக வெளியில் பிரிட்டிஷாரின் சலுகையை எதிர்பார்த்து நிற்கும் ஆதரவுச்சமூகங்களை உருவாக்கும் பொருட்டு பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது. தேவையானவர்களுக்கு அல்ல, தங்களுக்குச் சாதகமானவர்களுக்கே இட ஒதுக்கீடு என்பது அவர்களின் கொள்கை.

அதை இந்திய சமூகத்தில் சமூகப்-பொருளியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சமூகப்பாதுகாப்பாக ஆக்கப் போராடியவர் அம்பேத்கர். இந்தியச் சமூகம் தன் மக்களில் ஒரு பகுதியினருக்கு தானே அளிக்கும் சலுகை என உருவாக்கியவர், அதை ஒடுக்கும்சாதியினர் உள்ளிட்ட இந்திய சமூகமனம் ஏற்கும்படி செய்தவர் காந்தி. ஆகவே அவர்கள் முன்னோடிகள்.

அப்படி ஒரு கொள்கையும் அதற்கான மனநிலையும் உருவான பின் ஒவ்வொரு சாதிக்குழுவும் சலுகைகளுக்காக அரசியல்ரீதியாகப் போராடியது, பலர் அதை அடைந்தனர். அப்படிப் போராடிய அனைவரும் இட ஒதுக்கீடு என்ற முறையின் பிதாமகர்கள் அல்ல. இட ஒதுக்கீடுக்காக அவர்களுக்கு நன்றி சொல்வதென்பது குறுகிய சாதி நோக்கு மட்டுமே

வெள்ளைய ஆட்சியில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் அதை ரத்துசெய்தார். வெள்ளை ஆட்சியில் இட ஒதுக்கீடு வெள்ளையர்களுக்கான ஆதரவுச்சமூகங்களுக்கு அளிக்கப்பட்டது, அந்தச் சலுகை இந்திய அரசால் அளிக்கப்படவேண்டியதில்லை என்பதுதான் அவர் சொன்ன காரணம். அரசியல்சட்ட நிர்ணய சபையில் போக்கர் பகதூருக்கு அம்பேத்கார் அளித்த பதில்களில் இதைக் காணலாம்

நாளை இங்கே அரசியல் நிர்ப்பந்தம் மூலம் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வரலாம். உடனே இஸ்லாமியர் அம்பேத்கரை விட்டுவிட்டு போக்கர் பகதூரைப்போல இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டுக்காகப் பேசியவர்களை மட்டும் ‘இட ஒதுக்கீட்டின் சிற்பிகள்’ என்று சொல்லி வணங்கி , அவர்களை முன்னிறுத்தித் தங்கள் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அது பெரும் வரலாற்றுப்பிழை. நான் சுட்ட விரும்புவது அதை மட்டுமே



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard