New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு
Permalink  
 


திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு

IMG-20180209-WA0031

ஜேசன் ஸ்மித்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் திருக்குறளை ஆய்வு செய்யும் ஜேசன் ஸ்மித்.

ஜேசன் ஸ்மித்.

தி

ருக்குறளை ஜி.யு.போப் உள்ளிட்ட பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். உலகில் இதுவரையில் 80 மொழிகளில் திருக்குறள் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

அதன் செறிவைக் கண்டு உலக அளவில் பலர் அதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் அமெரிக்க ஹார்வர்டு மாணவர் ஜேசன் ஸ்மித். இவர் தற்போது புதுச்சேரியில் தங்கியிருந்து திருக்குறளை மொழிபெயர்ப்பதுடன், ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ள திருக்குறள் நூல் படிகளை அவர் எடுத்துள்ளார்.

இதனாலேயே இவரை ‘திருக்குறள் ஜேசனார்’ என்று செல்லமாய் அழைக்கிறார்கள் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில். தனது ஆய்வு தொடர்பாக ஜேசன் ஸ்மித் கூறியது:

தமிழில் புகழ்மிக்க திருக்குறளின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி தமிழகம் வந்தேன். அனைவருக்கும் புரியும்படியாக இன்னும் எளிமையாக்கி திருக்குறளின் உரையை ஆங்கிலேயர்களுக்கு கொண்டு செல்வதே எனது விருப்பம். திருக்குறளின் பொருளை ஆங்கிலேயர்கள் எளிதில் புரிந்து கொள்ள இவ்வுரை உதவும்.

திருக்குறள் உரையை செம்மையான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சித்துள்ளேன். இது மிகப்பெரிய பணி; ஆனாலும் அதன் மீதுள்ள ஆர்வம் அதை செய்து முடிக்க வைக்கும்.

தமிழில் இடைக்கால புலவர்களின் நூல்களையும் ஆராய்ந்து வருகிறேன். திருக்குறளுக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வரவேற்பையும் ஆராய்கிறேன். எனக்கு பல குறள்கள் பிடித்தாலும் "அகர முதல" குறளே அதிக சிறப்பு மிக்கது என்கிறார் இந்த திருக்குறள் ஜேசனார்.

ஜேசன் ஸ்மித் ஆராய்ச்சிக்கு உதவி வரும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பயிற்சியாளர் பிரகாஷ் கூறும்போது, “அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் மதுரையில் உள்ள இந்திய படிப்புகளுக்கான அமெரிக்க நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் ஜேசன் வந்தார். தனது விருப்பத்தை தெரிவித்தார். அன்றிலிருந்து திருக்குறள் குறித்து விளக்கங்களை அளித்து வருகிறேன். மணக்குடவர், பரிமேலழகர் ஆகியோரின் உரையை ஜேசன் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்பு சரிதானா என்பதை தற்போது சரிபார்த்து வருகிறோம். தனது உரை பற்றி மேலும் சிலருடன் விவாதித்து இறுதி செய்து வருகிறார். விரைவில் அவரது அரிய பணி முடிவடையும்’’ என்று தெரிவித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு
Permalink  
 


திருநாவுக்கரசு ஐபிஎஸ்

 

திருக்குறள் பிரியர் ஐபிஎஸ் அதிகாரி ரா.திருநாவுக்கரசு.

ருவர் 100 திருக்குறளை படித்து அதன்படி நடந்தாலே போதும். அவரை யாராலும் வீழ்த்தமுடியாத நிலைக்கு உயர்வார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ரா.திருநாவுக்கரசு.

தேனி மாவட்டம், ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் படித்ததெல்லாம் அரசு பள்ளியில்தான். சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சியும் முடித்து, தந்தை விரும்பியதால் சட்டப்படிப்பையும் படித்து வைத்தார்.

படித்தது அறிவியல் என்றாலும் தமிழ் இலக்கியம் மீது ஈடுபாடு அதிகம். இளைஞர் நலத்துறை நடத்திய வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளராகச் சென்றவர், போட்டியாளர்களுக்கு தெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து அசத்தியுள்ளார். இன்றைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ‘‘உங்கள் அறிவை ஏன் போட்டித் தேர்வுக்கு பயன்படுத்தக் கூடாது?’’ என்ற கேட்ட பிறகுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாரானார் திருநாவுக்கரசு. 1999-ல் முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற, அதே ஆண்டில் டிஎஸ்பி.

வீரப்பன் தேடுதல் படலத்தில் 100 பேர் கொண்ட தனிப்படைக்கு தலைவராகவும், 7 ஆண்டுகள் வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவிலும் பணியாற்றியவருக்கு 2007-ல் முதல்வர் கையால் வீரதீர விருது கிடைத்தது. 2015-ல் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பணியில் சேர்ந்த காலம் முதல் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றியுள்ளார்.

2013-ல் அவர் எழுதிய ‘உன்னுள் யுத்தம் செய்’ என்ற புத்தகம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘கேளிக்கைகளில் நேரத்தை வீணடித்து லட்சியப் பாதையில் இருந்து விலகும் மாணவர்கள், இளைஞர்களுக்காக எழுதப்பட்ட நூல் இது. திருக்குறளோடு தன்னம்பிக்கை கதைகளை சொல்லும் விதமாக ‘ஒரு குறள் ஒரு பொருள்’ எனும் தலைப்பில் மற்றொரு புத்தகம் எழுதி வருகிறேன்’’ என்றார்.

தற்போது, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வரும் அவர், தினமும் காலையில் பணிக்கு வந்தவுடன் போலீஸாரை அழைத்து அவர்களுக்கு தினமும் ஒரு திருக்குறளை தமிழ், ஆங்கிலத்தில் சொல்லி நடைமுறை வாழ்க்கையோடு கற்றுக் கொடுக்கிறார். வாட்ஸ்அப்பையும் விட்டுவைக்காமல் அதன்மூலமாகவும் திருக்குறளை பரப்பி வருகிறார்.

மாதம்தோறும் ஏதாவது ஒரு பகுதிக்கு குடும்பத்தோடு சென்று மரக்கன்று நடுவதை வழக்கமாக்கி இருக்கிறார். தனியாளாக இதுவரை 25,000 மரக்கன்றுகளையும், குழுவாகச் சேர்ந்து பல லட்சம் கன்றுகளையும் நட்டு வைத்திருக்கிறார்.

“வெளிமாநிலம், வெளி நாடு சென்றாலும் தமிழரின் மிகப்பெரிய அடையாளம் திருக்குறளும், திருவள்ளுவரும்தான். உலகமே போற்றும் பொக்கிஷம் நம்மிடம் இருப்பதால் அதை நாம் பின்பற்ற வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்நாளில் 100 திருக்குறளையாவது படித்து அதன்படி நடந் தால் அவர்களை யாரா லும் வீழ்த்த முடியாது’’ என்கிறார் நம்பிக்கை பொங்க.

காக்கிச் சட்டைக்குள்ளும் கவிதை பேசும் மனசு இருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த திருக்குறள் பிரியர் திருநாவுக்கரசு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இளைய தலைமுறையினரைக் கவர புது வடிவம் பெறும் திருக்குறள்

திருக்குறளை மையமாகக் கொண்ட இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகம்.

மு.இராசாராம்

திருக்குறளை மையமாகக் கொண்ட இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகம்.

திருக்குறள் சிறந்த இலக்கியம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கை முறையின் அங்கங்களான பக்தி, சாகச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஈகை, அரசாட்சி, பாதுகாப்பு, நட்பு, காதல் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன.

உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செயலரும், டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான மு.இராசாராம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.

திருக்குறள் முற்றோதல் திட்டம்

இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோதுதான் சீன மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘குளோரி ஆஃப் திருக்குறள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இந்நூல் 15 பதிப்புகள் செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோது 1330 திருக்குறளையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் திட்டமான திருக்குறள் முற்றோதல் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருக்குறளை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுபோய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாகக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும், நாட்டை ஆளும் ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும், அவருக்கு உதவி செய்யும் அமைச்சர்களும், ஒற்றர்களும் எப்படி இருக்க வேண்டும், வேளாண்மை, மருத்துவம், உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்து அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளன.

ஆயிரத்தில் ஒருவன்

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளின் பெருமையை பறைசாற்றும் விதமாக, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருக்குறளைப் பின்பற்றி எப்படி முன்னேற முடியும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நாடகத்துக்கான கருத்தாக்கத்தை நான் வழங்கி இருக்கிறேன். நாடகத்துக்கான ஆடற்கலை பயிற்சி மற்றும் இயக்கத்தை கே.ஆர். சுவர்ணலட்சுமி மேற்கொண்டுள்ளார். நாடகத்துக்கு முரளி சுப்பிர மணி இசையமைத்துள்ளார்.

இதில் காதல், மர்மம், நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாடகத்தில் அசல் குறள்கள், அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான விளக்கங்கள் ஆகியவை பொருத்தமான பாரம்பரிய மற்றும் கிராமப்புற இசையுடன் இணைந்து ஒலிக்கும். இந்த நாடகம் பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடனங்கள் கலந்த கலவையாகவும், இதுவரையில் மேடையில் கண்டிறாத அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும்.

இந்த நாடகம் வரும் ஜனவரி 24-ம் தேதி சென்னை நாரத கான சபாவில் முதல்முறையாக அரங்கேற்றம் செய்யப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்ல ஒரு புது முயற்சி

 

சென்னையைச் சேர்ந்த 'வள்ளுவக் குடும்பம்' அமைப்பு திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. மணல் சிற்பங்கள் மூலம், இசையின் மூலம் திருக்குறளின் சிறப்பை மக்களிடத்து எடுத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு, நாட்டுக்குறள் என்ற நிகழ்ச்சியின் மூலம், நாட்டுப்புற பாடல் வாயிலாக திருக்குறள் கருத்துகளை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்தனர்.

இந்தாண்டு நடைபெறவுள்ள நாட்டுக்குறள் நிகழ்ச்சி குறித்து ஒடிசா மாநில தலைமை செயலாளர் பாலகிருஷ்ணன் ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியது:

“திருக்குறளின் அழகு அதன் மதசார்பற்ற, உலகளாவிய கருத்துக்கள் தான். திருக்குறள் கூறும் கருத்துகளை தற்போதுள்ள நவீன தமிழர்களிடையே எடுத்துச் செல்வது தான் நாட்டுக்குறள் நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் அடைய விரும்புவது.

சென்ற வருடம் நடந்த நாட்டுக்குறள் நிகழ்ச்சி நாட்டுப்புறப் பாடல்களையும், இன்பத்துப்பாலையும் மையப்படுத்தி நடைபெற்றது. இந்தாண்டு சற்று வித்தியாசமாக, முப்பாலையும் இதில் கொண்டுவந்துள்ளோம், அதுமட்டுமின்றி மூன்று வித இசையை இதில் சேர்த்துள்ளோம். அறப்பறை, பொருளிசை, 'இன்பத்து பாப்' என இதற்கு பெயர் சூட்டியுள்ளோம். இதற்கு, தாஜ் நூர் இசையமைத்துள்ளார், டிராட்ஸ்கி மருது ஒவியம் தீட்டியுள்ளார், நான் பாடல் வரிகளை எழுதியுள்ளேன். வள்ளுவர் தினமான ஜனவரி 15 இந்த பாடல்கள் ஒளிபரப்பப்படும்.

கடந்த ஆண்டு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் மணல் சிற்பத்தை மெரினா மற்றும் ஒடிசா பூரி கடற்கரையில் உருவாக்கினார். இந்த வருடம், இந்தியாவில் உள்ள நான்கு கடற்கரையில் இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு, ஒடிசா பூரி கடற்கரை, விசாகபட்டிணம், கோவா, மற்றும் கன்னியாகுமாரி கடற்கரைகளை தேர்வு செய்துள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சென்ற வருடம் நடந்த நாட்டுக்குறள் நிகழ்ச்சியை பற்றி ஒரு சிறிய தொகுப்பு:

நாட்டுக்குறள் நிகழ்ச்சிக்கு தயார் செய்திருந்த அழைப்பிதழ் சற்று வித்தியாசமாக இருந்தது, எந்த ஒரு பாகுபாடுமின்றி சமத்துவத்தை கடைபிடிக்கும் அழைப்பிதலாக இருந்தது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், நீதிபதி மகாதேவன், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, மற்றும் தமிழ்செல்வன் கலந்துகொண்டனர். இவர்களிடையே, நாட்டுக்குறள் நிகழ்ச்சி, நிகழ்ச்சி நாயகன் திருவள்ளுவரையே சற்று உயர்த்திப்பிடித்தது.

சரியாக 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், திருக்குறள் இன்பத்துப்பால் தழுவிய ஏழு நாட்டுப்புறப் பாடல்கள் இசையமைப்பாளர் தாஜ் நூரின் இசையிலும், ஒடிசா மாநில தலைமை செயலாளர் பாலகிருஷ்ணனின் வரிகளிலும், டிராட்ஸ்கி மருதுவின் ஓவியத்திலும் அரங்கேற்றப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்க் கனவு!

 

செந்தில் மற்றும் சிவா சுப்பிரமணியம்

ள்ளிப் பருவத்தில் மதிப்பெண்கள் வாங்குவதற்காகத் திருக்குறளின் மகத்துவம் புரியாமல் மனப்பாடம் செய்து நாமெல்லாம் படித்திருப்போம். உண்மையில் திருக்குறளில் இல்லாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் கற்றுத்தந்த வாழ்வியலின் உன்னதத்தை இளைஞர்கள் விரும்பும் வழியில் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள் சிவா சுப்பிரமணியமும் செந்திலும். இதற்காக ‘குறள் பாட்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியிருகிறார்கள் இவர்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்கிறது இந்தக் குறள் பாட்.

“இது செயற்கை நுண்ணறிவை நோக்கிய முதல் படி. செயற்கை நுண்ணறிவு மூலமாகத் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் ஒரு சிறு முயற்சி. கற்களில் தமிழில் எழுதத் தொடங்கி, ஓலைகள், தாள்கள், அச்சில் புத்தகங்கள் என்ற பயணம் இப்போது கணினியில் தமிழை எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. இதன் அடுத்த கட்டம் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதாகவே இருக்கும். தமிழை அடுத்த தலைமுறைக்குக் கடத்த கணினியில் தமிழை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கணினிக்கே தமிழைக் கற்றுகொடுத்துவிட்டால், மொழியை அழியாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடலாம்” என்று செயற்கை நுண்ணறிவைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் சிவா சுப்பிரமணியம்.

‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திருக்குறளை உருவாக்கியது ஏன்?’ என்று கேட்டபோது, “இந்தக் கால இளைஞர்களிடம் திருக்குறளை நேரடியாகப் படிக்கச் சொல்ல முடியாது. அவர்களைக் கவரும்வண்ணம் கேலி கிண்டல்களுடன் மீம் வழியாக நகைச்சுவையாகச் சொன்னால், தமிழை எளிதாகக் கொண்டுசேர்க்க முடியும். இதைக் கருத்தில்கொண்டே குறள் பாட்-ஐ வடிவமைத்தோம்’’ என்கிறார் சிவா சுப்ரமணியம். லண்டனில் பணியாற்றிவரும் இவர், தமிழ் மொழியின் மீது கொண்ட காதலால், தன் நண்பர் செந்தில் உடன் சேர்ந்து உருவாக்கியதே இந்தக் குறள் பாட்.

ஃபேஸ்புக்கில் குறள் பாட் (https://www.facebook.com/kuralbot/?fref=ts) பக்கத்துக்குச் சென்று ‘send message’ என்ற பகுதியை கிளிக் செய்து, 1330 குறள்களின் வரிசை எண்ணை டைப் செய்து அனுப்பினால், அடுத்த நொடியே குறளும் அதற்கான விளக்கமும் அதிகாரமும் பளிச்செனத் தோன்றும். மேலும், குறள்களின் அதிகாரங்களான அறம், பொருள், இன்பம் என்று கூறினால், அந்தந்தப் பாலிலிருந்து குறளை எடுத்துக் கொடுக்கிறது. குறள் மட்டுல்லாமல் புத்தகங்களையும் இந்தக் குறள் பாட் பரிந்துரைக்கிறது. குறள் பாட் செயற்கை நுண்ணறிவைக் கொண்டுள்ளதால், நாம் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு தமிழில் பதிலளிக்கும். பெரும்பான்மையான பதில்கள் கேலி கிண்டலாகவே இருக்கும். அண்மையில் கனடாவில் நடைபெற்ற தமிழ் இணையதள மாநாட்டில், ஆய்வுக் கட்டுரைக்கான பரிசையும் குறள் பாட் வென்றது.

“குறள் பாட் பக்கத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதேபோல பல்வேறு வகையான மென்பொருட்கள், செயலிகள் தமிழில் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிவா சுப்பிரமணியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தெருவாசகம் 1: ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை

சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியான அண்ணா சாலையும், வாலாஜா சாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ளது எல்லீஸ் சாலை. அதன் மறுமுனை திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு அருகில் சென்று முடிகிறது. இதற்கு இணையாக காயிதே மில்லத் சாலை வடபகுதியில் செல்கிறது. இந்தச் சாலை மட்டுமல்லாது இந்தப் பகுதியே எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது.

யார் இந்த எல்லீஸ்?

 

பிரான்சிஸ் வைட் எல்லீஸ்

கிழங்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அதிகாரியாகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸின் (Francis Whyte Ellis) நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயர் இந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது. சமீபத்தில் சென்னையில் ஆங்கிலேயர்களின் பெயரிலான சாலைகளின் பெயரை மாற்ற மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக 50 சாலைகள் முதலில் பட்டியலிடப்பட்டன. அவற்றுள் இந்த எல்லீஸ் சாலையும் ஒன்று. அதன்படி சில சாலைகளின் பெயரும் மாற்றப்பட்டன. ஆனால் எல்லீஸ் சாலையின் பெயர் மாற்றும் முடிவே கைவிடப்பட்டது.

காரணம், எல்லீஸ் கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரி மட்டுமல்ல. அவர் தமிழ் அறிஞர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு விளக்கவுரை எழுதியதாக வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது கட்டுரையில் கூறுகிறார்.

1777-ல் இங்கிலாந்தில் பிறந்த எல்லீஸ், 1796-ல் கிழக்கிந்தியக் கம்பெனிப் பணிக்காகச் சென்னை வந்தர். முதலில் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு வருவாய்ச் செயலாளர் அலுவலக உதவியாளர், உதவி வருவாய்ச் செயலாளர், வருவாய்ச் செயலாளர் எனப் படிப்படியாகப் பதவியுர்வு அடைந்தார். மாசிலிப் பட்டிணத்தின் ஜில்லா நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 1809-ல் சென்னை மாகாண நிலச் சுங்க ஆட்சியராகவும் 1810-ல் சென்னை மாகாண ஆட்சியராகவும் பதிவியுர்த்தப்பட்டார்.

எல்லீசன் ஆன எல்லீஸ்

எல்லீஸ், சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டு வந்திருக்கிறது. அதைப் போக்கும் பொருட்டு பல கிணறுகளை வெட்டுவித்திருக்கிறார். அந்தக் கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. இந்தக் கிணறு 1818-ம் ஆண்டு வெட்டப்பட்டது. கிணற்றின் கைப்பிடிச் சுவரில் அவர் ஒரு கல்வெட்டைப் பதிப்பித்திருக்கிறார். அந்தக் கல்வெட்டில் திருக்குறள் பொருட்பாலில் வரும் கீழ்க் கண்ட குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார் எல்லீஸ். “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்/வல்லரணு நாட்டிற் குறுப்பு”. இதிலிருந்து அவரது தமிழ்க் காதலை உணர்ந்துகொள்ள முடியும். இப்போது இந்தக் கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது என்ற கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனின் குறிப்பைத் தன் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார் வேங்கடாசலபதி.

 

கேமரா உபகரணங்களின் சந்தை

மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டையில் 'சென்னைக் கல்விச் சங்கம்' என்ற ஒரு கல்லூரியைத் தமிழ்ப் பெயரில் 1812-ல் நிறுவினார். தமிழ் மீதிருந்த பற்று காரணமாகத் தன் பெயரை தமிழ் உச்சரிப்புக்குத் தகுந்தாற்போல் எல்லீசன் என மாற்றிக்கொண்டார். இன்னும் பல தமிழ்த் தொண்டாற்றும் முன்பு தனது 41-வது வயதில் எல்லீஸ் இறந்தது தமிழுக்குப் பெரும் இழப்பு. இந்த முன்னோடியைக் கவுரவிக்கும் ஒரே ஒரு அடையாளம் இந்தச் சாலை மட்டுமே.

இன்று இந்தச் சாலை கேமராக்கள், ஃபோட்டோ ஃப்ரேம்ஸ், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான தமிழ்நாடு அளவிலான சந்தையாக மாறியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேமரக் கலைஞர்கள் இங்கு தங்கள் வேலைக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக இங்கு வருகிறார்கள். வார நாட்களில் எப்போதும் நெருக்கடியாகவே இந்தச் சாலை இருக்கும். நிறுவனப் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தச் சாலையில் அதிகம். இந்தச் சிறிய சாலைக்குள்ளே விளக்காலான நிறுவனப் பெயர்ப் பலகைகள் வடிவமைப்பு, பிரிண்ட் என முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட தி இந்து (தமிழ்) அலுவலகமும் இந்தச் சாலையின் தொடக்கத்தில்தான் உள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard