– ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

Thirukural04

  சமரசமும், கடவுள் திருமுன் அனைவரும் சமமே என்னும் பொது நோக்கமும் நம் நாட்டில் பேசப்பட்டு நகரங்களில் மட்டுமன்றி சிற்றூர்களிலும் காட்டுத் தீயே போல் பரவி மக்களிடையே உணர்ச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணிவரும் இக்காலத்தில் ‘பொதுமறை’யாகிய திருக்குறளில், இந்நோக்கம் அமைந்திருக்கும் விதத்தை நூல் முழுவதும் பொதுவாக நோக்கிக் கண்டறிவது சாலவும் பொருத்தமுடையதேயாம்.

  இருவகைச் சுவைகள் ஏற்ற அளவிற் கலந்து ஒத்து இயங்குங்கால் ஒருவித புதுச்சுவை தோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். அதேபோன்று ஒரு நாட்டில் பல மக்கட் தொகுதிகளும் சாதிப் பரிவுகளும் இருப்பினும் அவற்றிடையே ஒத்த உணர்ச்சியும், பொது நோக்கமும், அன்பும் நிலவி ஒற்றுமை மிகுமாயின் அந்நாடு முன்னேற்ற மடைந்து சிறப்புறும். பிறப்பினாலேயே உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றும் சாதியால் உயர்ந்தோர், தான் உயர்ந்தோர் என்று நினைக்கின்ற போலிக் கொள்கைகளும் போலி உயர்வும் பொது நோக்காளிக்கில்லை. ஆதலினால் சமரசம் மிகுந்த நாட்டில் சாதியாலுயர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் என்ற வேற்றுமைகள் இல்லை.

  ‘‘பொது நோக்கத்தை’’ மக்களுக்குப் புகட்ட வந்த உலகத்துச் சான்றோர்கள் பலரும், அவ்வுணர்ச்சி மக்களுக்குச் சொல்லளவில் மட்டுமன்றி, வாழ்க்கையில் செய்து காட்டலிலும் உண்டாகும்படியான பல வழிகளைத் தங்கள் வாழ்க்கைவழி காட்டிச் சென்றுள்ளார்கள். இரசுகின்டாலசுடாய், தாயுமான முனிவர் இராமலிங்க அடிகள் போன்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்போர் இதனுண்மையைக் கண்டறிவர். உலகம் போற்றும் கவியரசராம் இரவீந்தரரும், காந்தியடிகளும் இவ்வழியிலே மக்களைப் பயிலுவித்துத் தம் அன்புச் சமயத்தால் உலகம் முழுவதையும் ஒன்றுபடுத்தி வந்தனர். பிறப்பு வேற்றுமைகளை அறவே ஒழித்து எவ்வுயிரையம் தம்முயிர் போல் பாவித்து, உயர் பதவி பொருளீட்டம் முதலிய அழிதன் மாலையவாம் போலிப் பொருள்களில் மனம் வையாது, பிறருக்குழைக்கும் பெருமை ஒன்றினையே ஒவ்வொருவரும் தங்கள் உலக வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்பதே இப் பெரியோர்கள் நமக்குக் காட்டும் வழியாகும். சுருங்கக் கூறின் பிறர் குற்றமே பார்த்தல், புறங்கூறல் முதலியன இன்றி, மனத்துக்குள் மாசிலராகித் தம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைத் தம்மாற் கூடிய வரையில் முன்னேற்ற முயலுவதே பொது நோக்கத்தின் அடிப்படையான கொள்கையாகும்.

  இத்துறையில் இறங்குபவர்களுக்கு நேரும் இடையூறுகள் பலவிருக்கலாம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது. தங்கள் கொள்கையைக் கொண்டு செலுத்த வேண்டும். மேலும் வெளிக்குப் பொது நோக்கத்தின் பெருமையைப் பிறர்க்குப் புலப்படும்படி மேடைகளிற் பேசித் திரிந்து, தமது வாழ்க்கையில் அதற்கேற்ற ஒன்றும் செய்யாது வாழும் போலித் தொண்டர்க்கு, ஈங்கு இடமில்லை. தாம் செய்யும் தொண்டிற்குப் பதிலாகப் பயன் யாதொன்றையும் எதிர்பார்ப்பாரும் இதற்கு அருகரல்லர், ‘‘என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்று கருதிய ஆளுடைய அடிகளது தூய உள்ளமே வேண்டற்பாலது. எனவே இந்நிலைக்கு வேண்டுவன பிறர்க்கென வாழும் பெற்றியும், தனக்கென வாழாத் தகைமையும் அவற்றை நடத்திக் காட்டுவதற்குரிய மனத்திட்பமும். இடுக்கண் அழியாமையுமாம் இவற்றையெல்லாம் ஊடுருவிச் செல்லும் அன்புடைமையும் வேண்டற் பாலதே. ‘அன்பின் வழியது உயிர் நிலை’ யாதலின் எல்லாவுயிர்களிடத்தும் அன்பில்லையாயின் அவற்றிற்காகத் தாம் செய்யும் நற் செயலுமில்லையாம்.

  இன்றும் பொது நோக்கமும் ஒழுக்கமுடைமையும் பிரிக்க முடியாத ஒரு தொடர்பைப் பெற்றிருக்கின்றன. ஒன்றையொன்று எப்பொழுதும் தழுவியே நிற்கும். சிறந்த ஒழுக்க சீலர்கள் சிறந்த பொது நோக்காளிகள் எல்லாரும் உயர்ந்த குணமேன்மையும் ஒழுக்கமும் உடையவர்களாகவும் இருந்திருப்பதை நாம் அறிவோம். ஒழுக்கமுடைமையே உயிரினும் பெரிதாக ஒவ்வொருவராலும் போற்றப்படுவது. தக்கார் தகவிலர் என்பது ஒருவரது பிறப்பினாலன்றி, ஒழுக்கத்தினாலேயே அறியப்படுமாதலின், நாம் வாழ்க்கையில் செய்யும் செயல்களனைத்தும் நம் ஒழுக்கமுடைமையின் மூலமாகவே ஆராயப்பட்டுத் தகுதி உடையன அல்லது தகுதி அற்றன என்று மதிக்கப்படும் ஒழுக்க மேம்பாட்டையும் குண நலத்தையும் தவிர்த்து மக்களுக்கு உயர்ந்த அணிகலன்கள் வேறில்லை. இல்லறத்தில் நின்று அன்பு ஒப்புரவுகளைச் செய்யும் பொது நோக்காளிக்கும், மனத்துக்குண் மாசிலாராகி, அகப்பற்று, புறப்பற்றுகளைக் கைவிட்டு மெய்யுணர்வு விழைந்து எவ்வுயிரையும் கருணைக் கண் கொண்டு பார்க்கும் முதிர்ந்த அருள் நெறியில் நிற்கும் ஞானியாகிய பொது நோக்காளிக்கும், பிறர்க்கும் ஒழுக்கம் இன்றியமையாததாகும்.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய் தொழில் வேற்றுமையான்’’.

‘‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்’’

‘‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகினுண்டு’’

‘‘மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’’.

‘‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லார் கீழிருந்தும்

கீழல்லார் கீழல்லவர்’’

‘‘ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங்காண்கிற் பின்

தீதுண்டோ வாழு முயிர்க்கு’’

‘‘பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னுமுலகு.’’

என்பன போன்ற குறட்கள் இப்பொது நோக்கக் கொள்கைக்கு அடிப்படை யானவை என்று கருதலாம்.

  பொது நோக்கத்தின் தன்மையையும், நடைமுறையையும் பயனையும் தம் வாழ்க்கையில் உணர்ந்து நடத்திக் காட்டிய நுண்மாண் நுழைபுலம் உடைய சமரச ஞானியாகிய திருவள்ளுவரும் தம் பெரு நூலில் தலை சிறந்த பொது முறையை விதந்தோதுகின்றனர். மேற்கூறிய பொது விதிகளின் இன்றியமையாமையை வற்புறுத்தி; ஒழுக்கத்தின் விழுப்பத்தை எடுத்துக்காட்டி, இல்லற துறவற இயல்களில் அன்பு அருள் நெறிகளை அமைத்துள்ளார். இவ்வியல்களை முறையே படிப்போர் அன்பு அருள்கள் இல்லற துறவறங்களில் பரிணமித்து செய்வதை அறியாமற் போகார் முடிவில் சமுதாய சமய வாழ்க்கைகளிலும் பொது நோக்கம் அமைந்துள்ள பான்மையையும் தாமேயறிவர்.

  தமிழ்நாடு செய்த தவப்பயனாய் அவதரித்த திருவள்ளுவர் உலகத்தோருக்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் சிறந்த ஒருவராக வைத்து எண்ணப்படுகிறார் என்பது நாமறிந்த தொன்றாகும். உலகம் போற்றும் தம் பெருநூலில் ஆசிரியர் வகுத்துப் போந்த ஒழுக்க முறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுதற்குரியதாய்ப் பொது நோக்கப்பார்வையோடு அருளிச் செய்யப்பட்டுள்ளது.