New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரமுத்து தமிழிலக்கியத்தில் தகுதிகொண்டவர் அல்ல. ஜெயமோகன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வைரமுத்து தமிழிலக்கியத்தில் தகுதிகொண்டவர் அல்ல. ஜெயமோகன்
Permalink  
 


வைரமுத்து


 

vairamuthu1xx

வைரமுத்து,ஆண்டாள் -ஜெயமோகன்

எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த வசைகளுடன் இணைந்துகொள்வேன் என நினைக்கிறார்கள்.

தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும்  நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் அதை கருத்துத் தளத்தில் கடுமையாக மறுக்கலாம், வசைபாடுவது கீழ்மை. தெய்வத்தமிழ் என தமிழை இறைவடிவாகக் கொண்டாடிய மரபில் வந்த எவரும் கவிஞனுக்கு எதிராகக் கீழ்மையைக் கொட்டமாட்டார்கள்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்து அவர் சார்ந்த திராவிட இயக்கமும், இந்திய இடதுசாரிகளும் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக இங்கே உருவாக்கி வரும் ’இந்தியமரபைச் சிறுமைசெய்வதே முற்போக்கு’ என்று நம்பும் தரப்பிலிருந்து எழுவது. இத்தகைய இழிவுரைகளுக்கு பலநூறு உதாரணங்கள் இங்குண்டு. இன்றுதான் இதற்கு எதிர்ப்பு உருவாகிவருகிறது. இவையே சுதந்திர அறிவியக்கம் என்று இங்கே பரவலாக நம்பப்பட்டுவந்த காலம் முதல் தனித்தகுரலாக நின்று அவற்றை எதிர்த்துவந்தவன் நான். இன்றும் என் நிலைபாடு அதுவே.

வைரமுத்துவின் பிழை என்பது நம் சூழலில் புழக்கம் கொண்டுள்ள நஞ்சூட்டப்பட்ட கருத்தை இயல்பான முற்போக்குக் கருத்தாக எண்ணி முன்வைத்த அசட்டுத்தனம் மட்டுமே. அவரைக் கண்டிக்கவும் எதிர்ப்புரை முன்வைக்கவும் உரிமை மட்டுமல்ல பொறுப்பும் இங்குள்ள மெய்நாடும் சிந்தனையாளர்களுக்கு உண்டு. ஆனால் அது வசைபாடுவதும் வெறுப்பைக்கக்குவதும் அல்ல.

வைரமுத்து மீது எனக்கு  தனிப்பட்ட காழ்ப்பு என ஏதுமில்லை. அதை அவருக்கும் அவருக்கும் எனக்குமான பொதுநண்பர்களுக்கும் எப்போதும் தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். நானும் அவரும் ஒரே காலகட்டத்தில் தமிழிலக்கியத்தில் செயல்படுபவர்கள் என்பதனால் அது இன்றியமையாததாகிறது. .எந்தவகையான வெறுப்புடனும் விலக்கத்துடனும் சொல்லப்படுவதல்ல என் கருத்து.கூடுமானவரை தன் ரசனைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என விழையும் விமர்சகனின் மதிப்பீடு மட்டுமே.

அவரைத்தான் நான் தனிப்பட்டமுறையில் நவீனத் தமிழின் மிகச்சிறந்த பாடலாசிரியர் என நினைக்கிறேன். ஆம், கண்ணதாசனைவிடவும். அதற்கான என் விமர்சனக் காரணங்களை முன்னரே எழுதிவிட்டேன்.பாடல் என்பது எடுத்தாள்கைக் கவிதை. [Applied Poetry] ஏற்கனவே மொழியில் உள்ள கவித்துவத்தை மெட்டுக்கு இணங்க அமைப்பது. ஒருவகை மொழித்தொழில்நுட்பம். மரபுத்தேர்ச்சியும் இசையமைவும் கொண்ட உள்ளம் அதற்குத்தேவை. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடல்களில் சரியாக அமைத்த வைரமுத்துவின் சாதனைக்கு நிகராக இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான் உள்ளனர். அவருடைய விரிவான மரபிலக்கிய ஞானமும் நவீனக்கவிதை வாசிப்பும் அதற்கு அடித்தளம்.

அதேசமயம் கவிஞர் என்னும் வகையில் அவருடைய இடம் பலபடிகள் கீழானது. அவர் வானம்பாடிக் கவிமரபிலிருந்து எழுந்தவர். கவிதையை நேரடிப்பிரகடனமாகக் கருதியவர்கள் அவர்கள். வைரமுத்து அந்த அழகியலுடன் திராவிட இயக்க மேடைப்பேச்சுக்கான அடுக்குச்சொல்லாட்சிகளையும் இணைத்துக்கொண்டவர். ஆகவே மேலும் கீழே சென்றவர். நல்ல கவிதை கவிதைவாசகனுடன் நிகழும் உரையாடல். வைரமுத்துவின் கவிதை எளிய ரசிகர்களை நோக்கிய ஒரு மேடைநிகழ்வு. அனைவருமறிந்த கருத்துக்களை அனைவருக்கும் உகக்கும் மொழியில் சொல்லும் முயற்சி அது. இன்றைய காலகட்டத்தின் கவிஞர்களின் நூறுபேரின் பட்டியலில்கூட வைரமுத்துவை நல்ல கவிதைவிமர்சகன் சேர்க்கமாட்டான்.

வைரமுத்து பாடலாசிரியர் என்பதே அவர் கவிஞராக ஆவதற்கான தடையாகவும் அமைகிறது. கவிதை நேரடியாகவே கவிஞனின் உளத்தூண்டலில் இருந்து பிறக்கிறது. முன்பில்லாத தன்மையே அதன் முதன்மைத் தகுதி. பாடல்களுக்கு இவ்வியல்புகள் தடைகள். ஆகவேதான் தமிழின் நல்ல கவிஞர் பலரும் பாடலாசிரியர்கள் அல்ல. பாடலும் கவிதையாகலாம், ஆனால் நல்ல இசைப்பாடல் நல்ல கவிதையாக வேண்டியதில்லை.

உரைநடையாசிரியர் என்னும் நிலையிலும் வைரமுத்துவுக்கு தமிழ் புத்திலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க இடமில்லை. அவருடைய உரைநடை செயற்கையான சொல்லாட்சிகளால் ஆனது. அவர் அவருக்கு முந்தைய திராவிட மேடைப்பேச்சுக்களில் இருந்து பெற்றுக்கொண்டது அது. அவருடைய புனைகதைகள் செயற்கையான தருணங்களை புனைந்து வழக்கமான ’அரசியல்சரி’ கொண்ட கருத்துக்களை முன்வைப்பவை. அவர் எழுதிய நூல்களில் கள்ளிக்காட்டு இதிகாசம் மட்டுமே ஓரளவேனும் குறிப்பிடத்தக்கது. அவர் வளர்ந்த சூழலின் வாழ்க்கையின் சித்திரம் அதிலுள்ளது. இளமையில் அவர் பெற்றுக்கொண்ட நுண்தகவல்களின் தொகை என்பதனாலும் அது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிலுள்ள பேயத்தேவர் தமிழிலக்கியத்தின் நல்ல கதாபாத்திரங்களில் ஒன்று.

ஓர் ஆளுமை என்ற வகையில் அவர்மேல் எனக்குள்ள மதிப்பையும் விமர்சனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். முதிராஅகவை இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமே. முக்கியமாக அவரிடம் எதிர்மறைக்கூறுகள் இல்லை. சோர்வூட்டும் உளநிலை இல்லை. ஊக்கமும் நன்னம்பிக்கையும் அளிக்கும் அவருடைய கவிதைகளால் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற பலரை நான் அறிவேன்.

அவருடைய வெற்றித்தமிழர் பேரவை என்னும் அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைஞர்களை இலக்கியத்திற்குள் ஈர்க்கும் பணியை செய்துள்ளது. இன்று சிறந்த வாசகர்களாக, அவரைக் கடந்து வந்துள்ள பலர் அங்கிருந்து எழுந்தவர்கள்.

அதேசமயம் தொடர்ச்சியான அரசியல் தூண்டில்கள் வழியாக அவர் விருதுகளையும் அங்கீகாரங்களையும் நோக்கி செல்வது அவருடைய ஆளுமைக்கு இழுக்கு. அவர் பேசும் இலட்சியவாதத்திற்கு எவ்வகையிலும் இசைவதல்ல அது.

மொத்தமாக, அவரை ஓர் இலக்கியவாதியாக ஏற்க எனக்கு தயக்கமில்லை. தனிமனிதராக மதிப்பும் உண்டு. ஆனால் இலக்கியமதிப்பீட்டில் அவர் முக்கியமான கவிஞரோ குறிப்பிடத்தக்க புனைகதைப்படைப்பாளியோ அல்ல.

வைரமுத்து சாகித்ய அக்காதமி பெற்றபோது நான் இக்கருத்துக்களை விரிவாக விவாதித்து அவர் விருதுபெற்றமைக்கான கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்திருந்தேன். அவருடைய நண்பர்களும் என் நண்பர்களுமான மரபின்மைந்தன் முத்தையா போன்ற பலர் எனக்கு எதிர்ப்பை விரிவாக பதிவுசெய்திருந்தனர். இது ஓர் இலக்கியவிவாதம். அவரவர் தரப்பை முடிந்தவரை முன்வைக்கவேண்டியதுதான். முற்றாக எது சரியானதென்று எவரும் இப்போது சொல்லிவிடமுடியாது என்னும் தன்னுணர்வு அனைவருக்கும் இருக்கும்.

வைரமுத்து தமிழிலக்கியத்தில் செயல்படும் கவிஞர், ஆனால் தமிழிலக்கியத்தின் முகம் என காட்டப்படும் தகுதிகொண்டவர் அல்ல. இவ்வேறுபாட்டையே நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன். இப்போது சூழல் மிகக்கலவையாக ஆகிவிட்டிருக்கிறது. ஒருவரிகூட வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள் இலக்கியக்கருத்துக்களை சொல்லும்களமாக குமுக ஊடகங்கள் ஆகி விட்டிருக்கின்றன. ஆகவே வெறுப்பும் காழ்ப்பும் உச்சஎதிர்நிலைகளும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. எத்தனைமுறை சொன்னாலும் ஓங்கி ஒலிக்கும் மொண்ணைக்குரல்களையும் வெறுப்புகளையுமே முதலில் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆயினும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்தக்குப்பைப்புயலைக் கடந்து நல்ல வாசகர் செவிகொள்ளக்கூடும் என நம்புவதனால்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: வைரமுத்து தமிழிலக்கியத்தில் தகுதிகொண்டவர் அல்ல. ஜெயமோகன்
Permalink  
 


வைரமுத்து,ஆண்டாள்

ஜெயமோகன்

andal

 

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.

ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.

இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும்  டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்

நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே.

http://www.jeyamohan.in/105607#.WlsPAWKnyaM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது?

பெருந்தேவி

சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் குறைந்தபட்சத் தரவுகளை முன்வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வாய்வழி வரலாறுகளாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் சுட்டப்படுவது இன்றியமையாதது.

அடுத்து, தேவதாசிகள் போன்ற குறிப்பிட்ட வகைமையினரைப் பற்றிப் பேசும்போது, வரலாற்றின் நெடிய பக்கங்களில் இந்த வகைமை ஒவ்வோர் இடத்திலும் காலகட்டத்திலும் எவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது என்ற பரந்த புரிதல் வேண்டும். இந்தியாவின் எல்லா இடங்களிலும் தேவதாசிகள் சம்பந்தப்பட்ட உள்ளூர் மரபுகளோ அல்லது இவர்கள் பெற்றிருந்த சமூக, பண்பாட்டு இடமோ ஒன்றே போன்றதாக இல்லை. கோயில் நடனக்காரர்கள் என்று சமயத்தோடு மாத்திரமே இவர்களின் சமூக, பண்பாட்டு இருப்பைத் தொடர்புறுத்தி எழுதுவது என்பது குறைந்துபட்ட புரிதலாகும்.

சங்க கால விறலியர், பரவையார் போன்ற பக்திக் காலகட்டப் பெண்டிர், சோழர்கள் காலத் தளிச்சேரி பெண்டுகள், இவர்களும் இவர்களொத்தவர்களும் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையிலான கோயில், அரண்மனை உட்பட்ட பொதுவெளி இயக்கங்களும் பங்களிப்புகளும், பின்னர் தேவதாசி – நடனப் பெண்டிர் அடையாளத்தில் நாயக்கர் காலகட்டத்தில் ஒருங்கிணைந்தது என்ற கருத்து தற்போது வரலாறு, மானுடவியல் ஆய்வுகளில் வலுப்பெற்றிருக்கிறது. தவிர காலனிய நவீனத்தில் முன்மொழியப்பட்ட ‘நாகரிகம்’ குறித்த சொல்லாடல், ‘ஒழுக்கம்’ பற்றிய பார்வை, சமூகச் சீர்திருத்த விவாதங்கள் போன்றவையும், இன்று நாம் புரிந்துகொண்டிருக்கிற தேவதாசி என்ற அடையாளத்தை உருவாக்கியிருக்கின்றன, பாதித்திருக்கின்றன. தேவதாசிகளைப் பற்றிப் பேசும்போது இவற்றையெல்லாம் மனதில்கொள்வது முக்கியம்.

போகிற போக்கில் சொல்லிவிடலாமா?

கவிஞர் வைரமுத்துவுக்கு அவர் ஆண்டாள் பற்றிப் பகிர்ந்த கருத்துகளை முன்வைக்க எல்லா உரிமையும் உண்டு, அவரை அச்சுறுத்தும் முகமாக விடுக்கப்படும் பாஜக ஆதரவாளர்களின் வன்முறைப் பேச்சுகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இதை உரக்கக் கூறிவிட்டே மேலே தொடர்கிறேன். வைரமுத்து தன் உரையில் ஆய்வாளர் ஒருவரைச் சுட்டி ஆண்டாளை தேவதாசி என்பதுபோல அறிவிக்கிறார். இந்த ஆய்வாளர் அமெரிக்கரா, இந்தியரா என்ற தேசிய அடையாளம் எனக்கு முக்கியமல்ல. வைரமுத்துவின் அந்தச் சுட்டுதல் தகவல் பிழையோடு செய்யப்பட்டது என்பதோடு, இப்படி ஒரு சில வரிகளில், மகாகவி ஒருத்தியின் அடையாளத்தைப் போகிற போக்கில் அறிவிப்பது கற்றார் செயலாக எனக்குத் தோன்றவில்லை. ஆண்டாள் தன் பாடலில் தன்னைப் ‘பட்டர்பிரான் கோதை’ என்றே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள் பிரதி வழியில் வருகிற அந்தச் சுய அறிமுகக் குறிப்பை விளிக்காமல் எந்த ஆய்வாளர் / பாடலாசிரியரும் வேறு யூகத்தை முன்வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்த யூகத்துக்கு ஆன்மிக உரைகளிலோ ஆன்மிகம் நீங்கிய உரைகளிலோ என்ன பெறுமதி இருக்க முடியும்?

மேலும் இசை, ஓவியம், நடனம் உள்ளிட்டத் தமிழ்க் கலைகளை வளர்த்ததிலும் அதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றியதிலும் தேவதாசிகளுக்கு இணை கிடையாது. அப்படியிருக்க, தேவதாசி மரபில் ஆண்டாள் தன்னை வைத்துப் பாடல் எழுதியிருந்தால் ஆண்டாளுக்கு அது பெருமை சேர்ப்பதே.

ஆனால், அத்தகைய அடையாளத்தைப் பிறர் யூகித்துச் சொல்வதில் பிரச்னையிருக்கிறது.

‘குலமகள்’ என்பவர் யார்?

வைரமுத்து இவ்வாறு கூறியிருக்கிறார்: “அவள் பிறப்பு குறித்து ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாக அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.”

இதில். ‘அந்தணரே’யில் உள்ள ஏகாரத்தைக் கவனியுங்கள். அந்த ஏகாரம் சாதி உள்ளிட்ட சமூகக் கட்டுமானங்களில் மயங்கியிருக்கிற ஏகாரம். அடுத்து அந்த ‘குலமகள்’ பதம். ‘குலமகள்’ என்கிற பயன்பாட்டுக்கு உள்ளார்ந்த பண்பாட்டுப் பொருள் மற்றும் மதிப்பு உள்ளது. சிலப்பதிகாரம், வெற்றிவேற்கையிலிருந்து தொடங்கி இன்றுவரை குலமகள் என்கிற கருத்தாக்கத்துக்கு எதிராக வைக்கப்படுவது யார் என்று தமிழறிந்தவர்களுக்குத் தெரியும். வெளிப்படையாக வைக்கப்படுகிற வார்த்தைகள் மட்டுமல்ல, சுட்டி விடப்படுகிற மௌனங்களும் இலக்கிய, பண்பாட்டு வரலாறுகளுக்குள் பொதிந்தவையே. என்னைப் பொறுத்தவரை வைரமுத்துவின் யூகம் இதனாலேயே ஆண் மையம் சார்ந்தது; ஆகவே, விமர்சிக்கப்பட வேண்டியது.

பொருள் மயக்கத்துக்கு இடம் தரலாகாது

ஆண்டாள் விலைமகள் என்றால் மதிக்க மாட்டீர்களா என்றால் என் பதில், நிச்சயமாக எந்தக் குறையுமில்லாமல் மதிப்பேன். ஆனால், இந்த ஆண்மையச் சமூகத்தில் ஒரு பெண் தன்னை தேவதாசி என்றோ, அதிலிருந்து மாறுபட்ட அர்த்தத்தில் விலைமகள் என்றோ அழைத்துக்கொள்வது வேறு, ஓர் ஆண் இருபொருள் மயங்க அவளை அப்படி விளிப்பது வேறு. ஆண்மையச் சமூகத்திலிருந்தபடி அதை எல்லாவிதத்திலும் போற்றிப் பாதுகாக்கிற, அதிலிருந்து மேலாண்மையை, சுகபோகங்களைப் பெறுகிற ஆண், ஒரு பெண்ணை, அவள் கவிஞராக இல்லாவிட்டாலும் தெய்வமாக இல்லாவிட்டாலும்கூட இவ்வகையில் பொருள்மயங்க அழைப்பது சரியல்ல.

கடுமையாக மறுக்கப்பட வேண்டிய, தொடர்புடைய இன்னொரு பால்பாகுபாட்டுக் கருத்தாக்கமும் இதில் உள்ளது. பாலியல் சொல் விடுதலையைப் பேசுபவள் என்பதாலேயே ஆண்டாளைக் ‘குலமகள்’ அல்லாத அடையாளத்தோடு வைத்து உரைப்பது. இதன் வெளிப்படையான அர்த்தம், காமத்தை எழுதுபவர்கள் குலமகளாக இருக்க முடியாது என்பதுதான். எழுத்திலிருந்து குல அடையாளத்தைத் தேடிப் பார்க்கும் மரபார்ந்த சொல்லாடல் இது. தன் பாலியலையும் பாலியல் விடுதலையையும் ஒரு பெண் கொண்டாடிப் பேசுவது வேறு, ஒரு பெண்ணின் எழுத்து வெளிப்பாட்டிலிருந்து அவள் பிறப்பை இவ்விதமாக அனுமானிப்பது வேறு. பழைமைவாத மதிப்பீட்டு மனோநிலையிலிருந்து வைரமுத்து செய்தது இதைத்தான். இவ்வகையான அனுமானம் திண்ணை வம்பளப்பாக, வெற்றுப் பரவசமாக மிஞ்சுமே அன்றிப் பெண்களின் பாலியல் விடுதலைக்கு எவ்வகையிலும் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாது.

முடிவு செய்ய வேண்டியது பெண்தான்

வெகுகாலம் முன்னர் என் நெருங்கிய நண்பர் என்னிடம் ஒருமுறை கேட்டார். பாலியல் வன்புணர்வைச் சில்லுமூக்கு உடைவு போல ஒரு பெண் பார்க்க வேண்டும். ஆனால், ஏன் அப்படிப் பார்ப்பதில்லை என்று. அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது அவளே. அதை அவள் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆண் தன்னிலை நிலையிலிருந்து ஆலோசனையாகச் சொல்வதுகூடத் தவறு என்று நான் அவரிடம் சொன்னேன்.

மேலே குறிப்பிட்டிருக்கிற பெண் அடையாளச் சொல்லாடலும் இதைப் போலத்தான். பொறுப்போடும் கவனத்தோடும் அணுக வேண்டிய ‘தேவதாசி’ போன்ற பண்பாட்டு இடையீடுகள் மிகுந்த பாலின வகைமையை, ஒரு சில வாக்கியங்களில் ஏனோதானோவென்று பொருள்மயங்கச் சொல்லிவிட்டு, அது பெருமைக்குரிய அடையாளம்தானே என்று கூறுவதில் நியாயமில்லை. பெண் பாலினம் சார்ந்த விவகாரங்களில் போதிய பொறுப்பும் கவனமும் இன்றி இப்படியாக ஓர் ஆண் கூற்று வெளிவரும்போது, பாலின ஒடுக்குமுறைக்கு அது ஆதரவாக இருக்கக்கூடிய அபாயமுண்டு.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஆண்டாள் ஒரு பெண் கவிஞர் என்பதால். நான் பெண் கவிஞர் என்று அறியப்பட விரும்பாவிட்டாலும் சகோதரித்துவ ஒன்றிப்பை பெண் கவிஞர்களோடு உணரும் சில தருணங்களும் எனக்கு உண்டு என்பதால்.

வன்மத்தைக் கையிலெடுக்க சாக்கை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பாஜக தரப்புக்கு வைரமுத்து தேவையில்லாமல் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்கிற மனவருத்தத்தையும் இங்கே நான் பதிவு செய்யத்தான் வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கவிஞர், எழுத்தாளர். ஆறு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.)

 https://minnambalam.com/k/2018/01/13/28



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

அண்ணாதொரை அந்நாளைய டி.ஆர்...

அடுக்குமொழியில் பேசி படிப்பறிவில்லாத பாமர மக்களை திசை திருப்புவதில் கழகத்தவர்கள் கைதேர்ந்தவர்கள்.

அதற்க்கு முன்னோடி அண்ணாவே. அவருடைய சில அடுக்கு மொழி பேச்சுக்கள்.

”அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு”
“ பெற்றால் வெற்றிமாலை இல்லையேல் சாவு மாலை”
”மொழிவழி பிரிந்து இனவழி கூடிவாழ்வோம்”
”ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கிவைத்து பிளப்போம்”
”அடியே மீனாஷி உனக்கேன் ழூக்குத்தி கழற்றடி கள்ளி”

“ ரூபாய்க்கு ழூன்று படி அரிசி இல்லையேல் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடி” (ஆட்சிக்கு வந்ததும் சென்னை கொயம்பத்தூர் மட்டும் ரூபாய்க்கு 1 படிபோட்டு அதுவும் 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது) ”

”தம்பி வடக்கு வளர்கிறது தெற்க்கு தேய்கிறது – வடக்கே பக்ராநங்கல் தெற்கே சக்கரை பொங்கல் வடக்கே சிந்தரி தெற்கே முந்திரி வடக்கே ரெயில் இஞ்சின் தெற்கே வெரும் ரெயில் பெட்டி இந்தநிலைமாற திராவிடம் பெற்றாகவேண்டும்”

”தம்பி சென்ஸார்போர்டு அனுமதித்தால் நான் நான்கு தமிழ் படம் எடுத்து திராவிடநாட்டை பெற்று தருவேன் – மாஸ்கோவிற்க்கு செல்வேன் மாலாங்கோவை சந்திப்பேன் அவரிடம் திராவிடநாடு பற்றி பேசுவேன் அமெரிக்கா செல்வேன் ஐசிநோவருடன் திராவிடம் பற்றி பேசுவேன் ஐக்கியநாடுகளுக்கு சென்று அங்கேயும் திராவிடம் பற்றி பேசுவேன்”

”வெள்ளையன் போய்விட்டால் வின்ஞானம் போய்விடும் நமக்கு குண்டூசிகூட செய்யதெரியாது”

”பனியாக்கள் கையில் அதிகாரம் மாட்டியுள்ளது – வடவரின் வேட்கை காடாக உள்ளது திராவிடம் – வடவர்கள் நம்மவர் அல்ல – நல்லவர் அல்ல – உடையாலும் உணவாலும் வேறுபட்டவர்கள்.”

“நாம் தின்பது அரிசி அவன் தின்பது கோதுமை”
”நாம் தின்பது தோசை அவன் தின்பது சப்பாத்தி”
”நாம் தின்பது இட்டலி அவன் தின்பது பூரி”

என்றெல்லாம் சிறுபிள்ளை தனமாக பேசி வடநாடு தென்நாடு பேதத்தை ஊக்குவித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ராஜாஜி சொன்னது என்ன?
 

இன்று வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் அன்று ராஜாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஞாநி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார் சுபவீ. வீரமணி கூட ராஜாஜிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேட்டார்.
 
திரிவேணி என்கிற ஆங்கில இதழில் 1946 செப்டம்பர் இதழில் ஆண்டாள் யார்? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதாவது ஸ்ரீ ஆண்டாள் என்று யாரும் இல்லை பெரியாழ்வாரே ஸ்ரீ ஆண்டாள் என்னும் பெயரில் பெண் தன்மையில் எழுதியதாக அந்த கட்டுரை கூறுகிறது..
 
     C.R. என்கிற பெயரில் உள்ள கட்டுரை, ராஜாஜி அவர்களுடையது என்று அறியலாம். அந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் தம்முடைய மதிப்புக்குறிய நண்பர் ஒருவரின் அபிப்ராயம் என்றும் தெரிவித்துள்ளார் C.R. அதாவது ராஜாஜியின் சொந்த கருத்து அல்ல.
 
rajaji.jpg
 
     பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் ஸ்வாமி தனது ஸ்ரீ ராமானுஜன் 291 இதழில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “ஒருமகள் தன்னை யுடையேன்“ என்று பெரியாழ்வார் சொல்லுவதைக்கொண்டும், நாச்சியார் திருமொழி 10-4 இல் “சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமைபொய்யன்றே” (ஒரு மஹா பாகவதரின் பெண்ணாக பிறந்துள்ளேன் இந்த பிறப்பு பொய்யாகுமே என்று கூறுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்). 
   
     பெரியாழ்வார் தான் ஆண்டாள் என்கிற புனைபெயரில் எழுதினார் என்ற கருத்து சிலருக்கு இருக்கலாம் அதனால் தானோ என்னவோ அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கண்ணதாசன் பக்திப் பெருக்கை காட்டிய  மீரா வடக்கே இருப்பாள் என்றால் தெற்கே ஒரு ஆண்டாள் இருக்கக் கூடாதா? என்று கேட்டார்.
 
     ஸ்ரீ ஆண்டாளை தேவதாசி என்று ராஜாஜி சொல்லவில்லை. அதனால்தான் ராஜாஜிக்கு எதிர்ப்பு இல்லை மறுப்பு மட்டுமே உள்ளது.
 
      மேலும் C.R எழுதியதைப் போன்றே வேறு ஒரு தமிழ் பத்திரிகையும் சிலவருடம் முன் குறிப்பிட்டதாக ஸ்ரீ ராமானுஜம் இதழ் பதிவு செய்கிறது.
 
     பெரியாழ்வார் திருமகள் என்ற தலைப்பில் ப்ர.அ என்று பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி தனது மறுப்பை ஸ்ரீ ராமானுஜம் இதழில் C.R . என்கிற ராஜாஜிக்கு 5 பக்கத்துக்கு எழுதியுள்ளார்.
 
ppa.jpg
 
     வைரமுத்து கூறிய சொல்லின் தீவிரம் / உள்நோக்கம் வேறு, ராஜாஜி அவர் நண்பர் கூறிய கருத்தினை பதிவு செய்ததில் உள்ள பொருள் வேறு, இரண்டும் எப்படி ஒன்றாகும்?
 
     மேலும் ராஜாஜி அதே கட்டுரையில் இதை தற்கால நாஸ்திகவாதமாக கொள்ளவேண்டாம் என்று கூறியுள்ளார். இருவரும் ஒருவர் என்று கொள்வது குறைவா?என்று கேட்டு முடித்துள்ளார்.
 
     ஞாநிக்கு ஏன் மறுப்பு இல்லை என்றால், அவர் அது குறித்து பேசிய இரண்டு மூன்று தினங்களுக்குள் இறந்துவிட்டதால் கூட மறுக்காமல் இருக்கலாம். ஞாநி நாஸ்திகர் அவரை பிராமணர் என்பதாகவே இறந்த பின்பும் சுபவீ பார்க்கிறார். அதை வைத்தே ராஜாஜியையும் ஞாநியையும் எதிர்க்கவில்லை என்கிறார்.
 
     மேலும் தினமணி போன்ற அனைவருக்கும் பொதுவான இதழில் இதைபோன்ற கருத்து வந்ததால் தான் வைரமுத்துவிற்கு  இந்த எதிர்ப்பு பரவியது.
 
     மேலும் ஸ்ரீ ராஜாஜியின் கருத்துக்கள் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது அதன் விபரம் இதோ..
 
      கல்கி இதழில் 28/2/1960 இல் நம்மாழ்வார் பாடிய பக்திநெறி என்னும் தலைப்பில் ராஜாஜி எழுதிய கட்டுரையில் இருந்த கருத்து ஒன்றுக்கு மறுப்பு தெரிவித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் இதழ் 148 (13-4) எட்டு பக்கங்கள் மறுப்பு எழுதியது.
 
      இதனை படித்த ராஜாஜி ஏற்றுக்கொண்டார். அதனை கடிதமாக 3/3/1960 அன்று ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் ஆசிரியர் புத்தூர் ஸ்வாமிக்கு எழுதினார்.
 
 
suthar.jpg
 
     மேலும் ராஜாஜியின் மற்றொரு வைஷ்ணவ தொடர்பான கட்டுரைக்கு ஸூதர்சனம் 14-3 (159) இதழ் மறுப்பு தெரிவித்தது, அதற்கு ராஜாஜி 15/2/1961 இல் எழுதிய பதில் கடிதத்தில் எனக்குத் தோன்றியதை எழுதினேன். சமயவாதத்துக்கு வேண்டிய படிப்பு என்னிடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம் 14-3 
(159) இதழில் வெளியானது.  
 
     ராஜாஜி அவர்கள் எத்தனையோ புத்தகங்களை எழுதியவர், பாரத தேசத்தின் உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர், தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். ஆனாலும் எந்த ஒரு நேரத்திலும் தனது பெயருக்கு முன் எந்த பட்டத்தினையும் அவர் போட்டுக்கொண்டதில்லை.
 
     மத விஷயங்களில் தனது கருத்துக்கு ஒரு மறுப்பு வந்தபோது துணிவுடனும்,நேர்மையுடனும் ஒப்புக்கொண்டவர். அதுதான் அவரது நாகரீகம் புரியும்படி சொன்னால் மனித நாகரீகம்.
 
      ஸ்ரீ ஆண்டாளை உயர்த்தி பேசியதாகவும் கடைசி வரியை தவறாக புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார்கள் வைரமுத்து தரப்பினர்.
 
     இதோ வைரமுத்து அவர்கள் அப்துல் ரகுமானின் 80 பிறந்த தின வாழ்த்து மேடையில் பேசியது இதோ அவரே சொல்லுகிறார் .. எந்த மேடையில் எதை சொல்ல வேண்டுமோ அங்கு அதை சொல்ல வேண்டும் என்கிறார்.
 
     எதை எந்த மேடையில் சொல்ல வேண்டும் என்று அறிந்து அதை அந்த மேடையில் சொல்லுபவர் நமது திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து. ஸ்ரீ ஆண்டாளினை பற்றி அவர் புகழ்துள்ள மேடையில் தான் அவர் அவதூறு பேசுகிறார்.
 
     அவரே சொல்லுகிறார் இதை ஆன்மீகவாதிகள் ஏற்கமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர்கள் ஏற்பார்கள் என்று. ஆகவே சர்ச்சையான கருத்து என்று தெரிந்தும் அதை சொல்லுகிறார், இது தினமணி நடத்திய விழாவில் அவரே சொன்ன கருத்து.
 
     இவர் மேற்கோள் காட்டிய நூல் அவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டதல்ல. எழுதியவர் என்று அவர் கூறியவர் தொகுப்பாளர்தான்.   
    அந்த கட்டுரையை எழுதிய நாராயணன், கேஸவன் இருவரும் தங்கள் ஊகத்தின் அடிப்படையில் தான் அப்படி எழுதினோம், அதற்கு எந்த அகச்சான்று, புறச்சான்று இரண்டும் கிடையாது என்று தந்தி டிவி செய்தியாளரிடம் பதில் கூறி ஆதாரமற்றது என்று உறுதி படுத்திவிட்டார்.
    அவர்கள் இருவரும் மேற்கோள் காட்டிய நூல் எதுவோ அந்த நூலில் கூட அப்படி இல்லை.  https://www.youtube.com/watch?v=I5jEWY_fACw&feature=youtu.be
     
    ஒரு தவறு, அந்த தவறை மேற்கோள்காட்டிய நூலில் தவறு அந்த நூல்,மேற்கோள்காட்டிய நூலில் அப்படி ஏதும் இல்லை மொத்தத்தில்  தவறு2.
 
     ஆதரவு தெரிவித்து கையெழுத்து இட்டவர்கள் எழுதிய கடிதத்தில் திருவெம்பாவை ஸ்ரீ ஆண்டாள் எழுதியது என்று எழுதியதில் தவறு. 
  
    கற்க கசடற என்றார் வள்ளுவர், வைரமுத்து இதன் பொருள் உணர்ந்து எழுதினால் பேசினால் அவருக்கு சிறப்பு.
 
     20 வருடத்துக்கு முன் அவர் கூறிய வார்த்தை நினைவுக்கு வருகிறது “இவ்வளவு நாள் தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறுபோடுவேன் என்றார்”
 
    தமிழுக்கு அவர் சோறுபோடாமல் இருந்தால் கூட பரவாயில்லை , தமிழின் மீது சேறு பூசாமல் இருந்தால் சரி.
 
     யாகாவார் ஆயினும் நாகாக்க: காவாக்கால்,
      சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
 
     எவற்றைக் காக்காவிடினும் சொல்லைக் காத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் சொற் சோர்வால் வருந்துவர். 
 
     ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
      நன்றுஆகாது ஆகி விடும்.
 
     ஒருவன் சொல்லால் ஒரு தீமை உண்டாயினும், அதனால் அவன் நன்மையெல்லாம் தீமையாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து -கோகுலாச்சாரி

 
 

தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து

  • எஸ்.கோகுலாச்சாரி ஆலய தரிசனம்

தின மணியில் வைர முத்து எழுதிய கட்டுரை குறித்து பல விமர்சனங்கள் இரண்டு மூன்று நாட்களாக வருவதைப்பார்க்கிறோம்.
இதில் கருத்து தெரிவிப்பவர்கள் பலர் மேலோட்டமாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் வாதிகளில் சிலருக்கு வைரமுத்து ஆண்டாளைப்பற்றிக் கூறிய ஒரு மேற்கோளைத் தவிர மீதிக் கட்டுரை முழுக்க ஆண்டாளை போற்றுவதாகவே கொள்கின்றனர்.
தமிழறிஞர்கள் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.
சிறு பான்மையான வைணவர்கள் வயிறு பிடித்துத் துடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
வைரமுத்து ஆண்டாளை ஆண்டாளின் தமிழை தமிழ் பாடிய நோக்கத்தை வரிக்கு வரி தாக்கியிருக்கிறார் என்பது தான் அடியேன் கருத்து.
அதனைத் தான் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.இதில் மாற்றுக் கருத்து இருந்தால் நிதானமாக நாம் விவாதிக்கலாம்.வைரமுத்து ஆண்டாளை மட்டுமல்ல இதற்கு முன் எழுதிய கட்டுரையில் கூட இதே போள்ற தவறுகளைச் செய்திருக்கிறார்.
இதற்கு முன் திருமூலர் பற்றிய கட்டுரையில் கூட தன் விருப்பத்திற்கு பேசியிருக்கிறார்.இது குறித்து மறுப்பு எழுதினேன். மலையோடு ஏன் மோதுகிறீர்கள்.விட்டுப் போங்கள் என்று சொன்னார்கள்.
வைரமுத்து பாரதியைத் தொட்டு, உ.வே.சாவைத் தொட்டு, திருமூலரைத் தொட்டு, கம்பரைத் தொட்டு, கடைசியில் ஆண்டாளிடம் வந்து மிகப் பெரிய கேட்டினைச் செய்திருக்கிறார்.
ஆண்டாளைப் பற்றி அவதூறு பேச ராஜபாளையத்தில் ராஜாக்கள் கட்டி அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபம்தானா கிடைத்தது?
இதற்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், இதைக் கேட்க முன் வரிசையில் ராஜா இல்லையே என்று வேறு ஒப்பாரி வைக்கிறார். நல்லவேளை ராஜா இல்லை என்று அவர் நிம்மதி அடைய வேண்டும்.
அடியேனுக்கு ஆண்டாள் என்று சொல்லியவுடன் அடிவயிறு கலங்கியது. அந்தத் தெய்வத்தாயை ிதமிழைப் போற்றுகிறேன் பேர்வழிீ என்று இந்தத் திரைப்படக் கவிஞர் தாறுமாறாய் எழுதப் போகிறாரே என்று மனம் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.
நினைத்தது நினைத்தபடியே நடந்து விட்டது.
ஆண்டாளின் தெய்வத்தமிழை கூறுகூறாக்கி தன் அறியாமைச் சட்டியில் வாட்டியெடுத்து வறுவலாக்கி தந்த அவலம் நிகழ்ந்தே விட்டது.
எழுதினவர் ஏட்டைக் கெடுத்தார்; பிரசுரித்தவர் பத்திரிகையைக் கெடுத்தார் என்று, பாரம்பரியமிக்க தினமணி, வைரமுத்துவின் வார்த்தைகளை வரிவிடாமல் அச்சடித்து – ஆண்டாளை அன்றாடம் வணங்கும் அத்தனை பக்தர்களின் உள்ளத்திலும் – திராவகத்தை வீசி தன் பெருமையைக் குலைத்துக் கொண்டது.
எந்த ஒரு நூலைப் பற்றியும் ஆராய மூன்று செய்திகள் முக்கியமாகக் கருதப்படும்.
1) நூல் பெருமை
2) நூல் பொருள் பெருமை
3) நூலாசிரியர் பெருமை
நூலை ஆராய முற்படுபவர்க்கும் இது பொருந்தும்.
ஆண்டாளின் தமிழை ஆராயும் தகுதி தனக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை வைரமுத்து.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இவ்வுலகத்தில் உண்டு. அவரவர் கருத்தை அவரவர் ஏற்பர். பின்பற்றுவர்.
ஆனால்,
தன் உள்ளத்துக்கு ஏற்காத கருத்தை தான் தோன்றித்தனமாக ஆராய வேண்டிய அவசியம் என்ன? இது தமிழை எவ்வாறு உயர்த்தும்?
1) ஆண்டாள் பெரியாழ்வார் பெண் என்பதை நம்பவில்லை.
2) ஆண்டாள் துளசி வனத்தில் கிடைத்த பூமாதேவியின் அம்சம் என்பதை நம்பவில்லை.
3) ஆண்டாள் எங்ஙனம் 8-ம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சிக்கருத்தைப் பாட முடிந்தது என்கிற ஐயப்பாடு இவருக்கு வருகிறது.
4) கல்லான கடவுள் பிம்பத்துடன், இரத்தமும் சதையும் கொண்ட பெண் கலக்கமுடியுமா என்கிற சந்தேகம் வருகிறது.
இப்படி ஆயிரம் ஐயங்களோடு ஆண்டாளை அணுகும் வைரமுத்து
எவனோ ஒருவன் ஆங்கிலத்தில் எப்போதோ எழுதிய கட்டுரையின் வரியை மட்டும் வைத்து ஸ்ரீரங்கத்து தாசி என்று கொஞ்சமும் நடுக்கமின்றி எழுதவும், உரத்தகுரலில் பேசவும் துணிகின்றார் என்றால், வைரமுத்துவின் உள்நோக்கம் ஆண்டாளை உயர்த்துவதா? தமிழை உயர்த்துவதா?
(இந்த விவாதத்தில் இன்னொரு ஆபத்தான கோணம் தாசி என்ற சொல் உயர்வா உயர்வில்லையா என்று மாறியிருக்கிறது.தாசி என்ற சொல் உயர்வுதான் என்று வாதிடும் வைரமுத்து இப்படி நான் சொல்வதை பக்தர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் எழுதுவது முரண்.மற்றும் குழப்ப வாதமல்லவா.இந்த வாதத்தில் வைரமுத்துவின் உள் நோக்கம் நன்றாகவே வெளிப்படும்.)
பெரியாழ்வார் பெற்ற பெண் அல்ல ஆண்டாள்; எல்லோருக்கும் தெரியும். கண்டெடுத்த பெண். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
அப்புறம் என்ன கேள்வி வைரமுத்துவுக்கு? ஆண்டாள் யார் பெற்ற பெண் என்று?
பூமாதேவியின் அம்சம் என்று வைணவர்கள் நம்புகிறார்கள். இதில் வைரமுத்துவுக்கு எங்கே குறை வந்தது? வைணவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கிறாரா?
இலக்கிய நூலில் ஆசிரியர் பற்றிய செய்திகளுக்கு அகச்சான்றுகள்தான் முதல் நிலை ஆவணங்கள்.
பெற்ற தந்தை ஒருமகள் தன்னை உடையேன் என்றும் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்று பாடுவதால் ஆண்டாள் அவர் பெண் என்பதும் திருமாலுக்கு கட்டிக்கொடுத்ததும் தெரிகிறது.
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் கோதை என்று பாட்டுக்கு பாட்டு தன் தந்தையைப் பற்றி எழுதியதை அடுத்து வந்தவர்கள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.
(நம்பிக்கை இல்லாதவர்கள் இதிலும் துருவித்துருவிக் கேள்வி கேட்கலாம்..அவர்கள் ஆண்டாள் தமிழை ஆராய்ந்து நம்புபவர்களுக்கு சொல்வது வேண்டாத வேலை.)
பெண் தன் தந்தை யார் என்று சொன்ன அகச்சான்று இருக்கிறது.தந்தை தன் பெண் யார் எனச் சொன்ன அகச்சான்று இருக்கிறது.ஊரார் அந்த காலத்தில் ஏற்றுக் கொண்ட அகச்சான்று இருக்கிறது.ஆனால் வைரமுத்து ஒரு போலி ஆராய்ச்சியை-அதுவும் உள்ளூர் காரன் சொன்னால் தெரிந்து விடும் என்று ஆங்கிலக்கட்டுரையை மேற் கோள் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
அந்த மேற்கோளைத் திணிப்பது தவிர வைரமுத்துவுக்கு என்ன நோக்கம்?
அரிதாரத்தைக் கழற்றிவிட்டால் திரைப்பட நடிகையின் அசல் அழகு தெரிந்து விடும் என்பார்கள். ஆர்ப்பாட்டமான – வலிந்து அலங்கரிக்கப்பட்ட – பாசாங்கான – தமிழ்நடையைக் கழற்றி விட்டு வைரமுத்துவின் உள்ளீடான செய்தியை உற்றுப் பார்த்தால் (இதற்குமுன் எழுதிய கட்டுரைகளில் கூட) மேலோட்டமான அணுகுமுறையும், முரண்பாடான கருத்துக்களும் பளிச்செனத் தெரியும்.
எனக்கு உள்ள வருத்தமெல்லாம் வைரமுத்துவின் மீது மட்டுமல்ல. அவரை – அவர் எப்படி அணுகுவார் என்று தெரிந்தும் – வானளாவத் தூக்கி அவரைப் பேசவைத்த தினமணியின் மீதுதான்!
இது குறித்து தினத்தந்தி தொலைக்காட்சியில் ஓர் விவாதம் நடந்தது.
அதில் ஓவியா என்பவர் சொல்கிறார். ிஇந்து மதம் அழிய வேண்டிய மதம். உங்கள் மனது புண்படும் என்பதற்காக ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியாது என்கிறார்.உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் வெளியிட வேண்டியதுதானேீ என்கிறார்.
நான் கேட்கிறேன்.வைரமுத்து ஒரு பக்கம் முழுக்க ஆண்டாளை ஆராய்கிறேன் பேர்வழி என்று எழுதிவிடுவார். எங்கள் மாற்றுக் கருத்தை இதே தினமணி இதே முக்கியத்துவம் கொடுத்து போடுமா?நாங்களே எழுதி நாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆண்டாளைப்பற்றி அறியாத உங்களைத்தானே எல்லாப் பஞ்சாயத்துக்கும் கூப்பிடுகிறார்கள்.
திரும்பவும் சொல்கிறேன்.இல கணேசன் உட்பட எல்லோரும் – ஆண்டாளை திருவரங்கத்தில் இருந்த தாசி – என்ற ஒரு வரியைத் தவிர மீதி எல்லாம் ஆண்டாளைப் போற்றுகின்ற அருமையான வரிகள்தான் என்கிறார்கள்.
மாலன்கூட விளக்கெண்ணையில் வெண்டைக்காயை நனைத்தது போல ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கருத்தைக் தவிர்த்திருக்கலாம் என்கிறார்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு செய்தி, தமிழ் இலக்கண இலக்கியப் புலமையைக் கொண்டு மட்டும் திருப்பாவையை – நாச்சியார் திருமொழியை ஆராய்வது – ஆண்டாளின் நோக்கத்தை முழுமையாக வெளிக்கொணர வகை செய்யாது என்பதை உணர்வதேயாகும்.
திருப்பாவை வைணவ நூல். திருமாலை தனிப்பெருங்கடவுளாகக் கொண்ட நூல். தமிழ் நூல்.இந்த மூன்றையும் புரிந்து கொள்ளாமல் ஆண்டாள் தமிழை ஆராய்வது குருடர்கள் யானையைத் தடவிப் புரிந்து கொண்டது போலத்தான் முடியும்.
காரணம் ஆண்டாள் தமிழில் வழங்கும் பல சொற்றொடர்கள் வைணவச் சமய ஒழுங்கினைப் புரிந்து கொண்டவர்க்கே விளங்கும். அங்கே தமிழ்ப்புலமை மட்டும் பயன்படாது.
சமயநெறி சார்ந்த தத்துவநூல் என்பதால் வேதாந்தம் படித்தவர்க்கும் கூட புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கும்.
அதனால்தான், வடமொழியின் கடினமான பிரம்ம சூத்திர வித்தைக்கு அழகாக விளக்கவுரை செய்த ஸ்ரீராமாநுஜர் திருப்பாவைக்கு உரை சொல்ல என்னால் முடியாது என்றார்.
வைரமுத்துவைவிட ஆயிரம் மடங்கு பன்மொழிப் புலமையும், தத்துவப் புலமையும் மிக்கவர்கள் உரையாசிரியர்கள்.
தனிநூல் செய்யும் ஆற்றல் மிக்க அவர்கள், ஆழ்வார்களின் ஈரத்தமிழை அணுஅணுவாக ரசித்து, பற்பல கோணங்களில் உரை செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உரைகளைத் தொடுவதற்குக் கூட ிதூயோமாய் வந்துீ என்கிற தகுதி வேண்டும்.
இப்படி உலகத்து உயிர்களின் உன்னத வாழ்வில் நாட்டம் கொண்ட நம் ஞானாசிரியர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
வைணவ உரைவளம் என்கிற நூலை செய்வதற்கு முன் வடமொழியையும், வேளுக்குடி வரதாச்சாரியரிடம் வைணவமரபு வழிக் கருத்துக்களையும் கேட்ட தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஒரு முறை திருவரங்கத்தில் பேசும்போது, ஆசார்யர்கள் நின்று ஞானமொழி பேசிய இம்மண்ணில் நின்று பேசவே என் கால்கள் நடுங்குகின்றன என்று சிலிர்த்தார்.திருவாய்மொழியைப் பல நாட்கள் பேசிய புவனகிரியில் பேராசிரியர் அன்பழகன் மரபுக்குட்பட்டுத் தானே பேசினேன் என்று கேட்பார்.
வைணவ இலக்கியங்களில் தோய்ந்ததால் வந்த தெள்ளிய மனத்தின் வெளிப்பாடு அது.
அப்படி முறையான பயிற்சி பெற்று திருப்பாவையைத் தொட்டிருந்தால் வைரமுத்துவுக்கு இந்த அவலநிலை வாய்த்திருக்காது.
ஆழ்வார்களின் நோக்கம், இலக்கண இலக்கியப் புலமையை மட்டும் வெளிப்படுத்துவது அல்ல.
தான் வணங்கும் – நம்பும் – திருமாலைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் தமிழ்தான் ஏற்ற மொழி என்பதால் தமிழில் பாடினார்கள்.
இதைப் புரிந்து கொண்டிருந்தால் தமிழை மட்டும் சமய இலக்கியங்களிலிருந்து பிரித்து எடுத்து நேசிப்பதாகத் தருக்கித்திரியும் வைரமுத்து ஆண்டாள் பக்கமே வந்திருக்க மாட்டார்.
ிகொடுமையில் கடுவிசை அரக்கன் திருவினைப் பிரித்துீ என்பது ஆழ்வார் பாசுரம்.
ஆண்டாள் நம்பியது திருமாலை.திருமாலின் புகழ்பாடுவது திருப்பாவை.எளிமையான செய்தி இது.
ஆண்டாள் நம்பியதிருமாலை நம்பாதவர் நாத்திக வைரமுத்து.
இவர் திருப்பாவையில் வேறு என்னத்தைத் தேடுகிறார்.
வைரமுத்துவின் கட்டுரைகளை உற்றுப்பார்ப்பவர்க்கு ஒன்று பளிச்செனப்படும்.
நூலாசிரியரின் கருத்தையோ – நூலுக்கு அதே அலைவரிசையில் எழுதிய உரையாசிரியர் கருத்தையோ புறம் தள்ளிவிட்டு, அதில் தன் கைச்சரக்கை கச்சிதமாக நுழைத்து விடுவார்.
கம்பன், திருமூலர் கட்டுரைகளைப் படிப்பவர்க்கும் இது தெரிந்திருக்கும். ஆனால், மௌன ஆசிரியர்களான தமிழறிஞர்கள் வாய்மூடிக் கிடந்தார்கள்.
வென்றவன் சொன்னதே வேதமாகியது.
திருப்பாவையில் மானுடக்காதலைத் தேடுகிறார் வைரமுத்து.
மானுடக் காதலையும், அதன் நுட்பத்தையும் வெளிப்படுத்த சங்க இலக்கியப்பாடல்கள் இருக்கின்றன.
இது அந்த வகை காதலல்ல என்பதால்தான் ஆணுக்கே நாயகிபாவம் ஏற்படுகிறது.
இதற்கு ஆசார்ய ஹ்ருதயம் என்கிற உயர்ந்த நூல் ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு என்று ஆணித்தரமான விளக்கத்தைத் தரும்.
ஆசார்ய ஹ்ருதயத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்திருந்தால்கூட வைரமுத்துவுக்கு இந்த தரம் கெட்ட கட்டுரையை எழுத மனம் வந்திருக்காது.
வைரமுத்து தன் கட்டுரையில் ்அதிகாலை ஒழுக்கத்துக்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்சு என்கிறார்.
அதிகாலை ஒழுக்கம் என்கிற தொடரே சரியா என்று தெரியவில்லை.
வைரமுத்து அவர்களே!
கண்ணன் என்பதொரு காரணம் அல்ல; கண்ணன் மட்டுமே காரணம் என்பதுதான் திருப்பாவையின் மையப்பொருள்.
கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு என்று புது விளக்கம் தரும் வைரமுத்து இந்த விளக்கத்தை எங்கிருந்து பெற்றார் என்று சொல்லவில்லை.
உனக்கே நாம் ஆட்செய்வோம் என்கிற திருப்பாவைத் தொடர் வைரமுத்துவின் கண்ணில் விழவில்லையா?
ஆண்டாளின் நோக்கம் கண்ணனை அடைவது மட்டுமே;
உலகியல் ரீதியான கணவனை அடையும் நோக்கம் திருப்பாவையில் எந்த வரியில் வருகிறது வைரமுத்து அவர்களே!
இறைவன் முன் எல்லோரும் சமம் என்னும் குறுகிய பரவசம் என்று கூறுகிறார் வைரமுத்து.
இதில் என்ன செய்தியைக் கூற வருகிறார்?
ஆண்டாளின் தமிழுக்கும் இம்மாதிரியான இன்றைய அரசியல் கருத்துக்களுக்கும் என்ன தொடர்பு?
தன் கருத்தை வலிந்து ஏற்கும் முயற்சியில் வைரமுத்து தினமணி பத்திகளை வீணடித்திருக்கிறார்.
தெய்வம் – கடவுள் என்று இடையிடையே சாதாரண வாசகனுக்குப் புரிபடா வகையில் குழப்ப யுத்தங்கள் நிகழ்த்துவது எதற்காக?இதற்கெல்லாம் யார் பொருள் கேட்டார்கள்.
்ஆண்டாளின் தமிழைப் போற்றுகிறேன் என்று கிட்டத்தட்ட 2500 வார்த்தைகளுக்கு மேற்பட்ட கட்டுரையில் ஒரு 20 வார்த்தையாவது ஆண்டாள் தமிழின் சிறப்பைப் போற்றியிருப்பாரா?சு
்தன் உடலென்ற அழகும் உயிர் என்ற பொருளும்சு என்று எழுதுவது சரியான உவமைதானா?
்ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையனசு என்கிறார்.இதுவும் அறியாதவன் புரியாமல் பேசுவது போலத்தான்.
காற்றில் கத்தி வீசுவதைப் போல இப்படி ஒரு கருத்தை தன் ஆராய்ச்சி பீறிட முழங்குகிறார்.
ஆழ்வார்களின் அடிமைக் குரலான பாசுரங்களை ஆண்டாள் பாசுரங்களிலும், ஆண்டாளின் விடுதலைக் குரலான பாசுரங்களை ஆழ்வார்கள் பாசுரங்களிலும் காணலாம். நாலாயிரம் பாடல்களிலும் நுட்பமான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை நுகர்ந்து உணர முடியும்.
ஜீவாத்மாவை அடிமையாகவும், பரமாத்மாவை தலைவனாகவும் கொள்ளும் மரபு வைணவ தத்துவ மரபு.
ஜீவாத்மாவை பெண்ணாகவும், பரமாத்மாவை ஆணாகவும் கொள்ளும் மரபு வைணவ தத்துவ மரபு.
இந்த இணைப்புதான் வைணவ தத்துவத்தின் இலக்கு.இந்த இணைப்புதான் ஆன்மிக காமம்.உலகியல் காதலில் உள்ள உயிர்ப்பும் துடிப்பும் ஆன்மிகக்காதலில் வெளிப்படுவதே சமயத்தில் உள்ள அகத்துறை பாடல்கள்.(சைவம் வைணவம் இரண்டிலும் இது பொருந்தும்.)தத்துவ ரீதியாக இந்தத் துடிப்பை புரிய வைக்க முடியாது என்பதற்காகவே உலகியல் காமம் போலவே பாசுரம் அமைத்தார்கள்.அதற்கு வைரமுத்துவைப்போல் உள்ளவர்கள் நேர் பொருள் எடுத்தால் என்ன செய்வது என்று உரை எழுதி வைத்தார்கள்.
வைணவ இலக்கியங்களிலே – அதன் தத்துவப் பின்புலத்தோடு – தோய்ந்து கரைகண்ட அறிஞர்களிடம் பாடம் கேட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இல்லையெனில் குருட்டுக்கிழவன் கிணற்றில் விழுந்த கதைபோலத்தான் முடியும்!
்குத்து விளக்கெரியப் பாசுரம்சு ஆண்டாள் அகவெழுச்சியின் அத்து மீறல் என்று எழுதி, ்இதற்கு உரைகாரர்கள் வேறு பொருள் காட்டித் தம் தீராத் திமிர் காட்டுவார்கள்சு என்று எழுதும் வைரமுத்துவின் வாசகங்களில் அவரின் அறிவுணர்ச்சியையும், ஆய்வுணர்ச்சியையும் விட, பிரபல்யமாகி பெரும் மேடை கிடைத்துவிட்டால் எதையும் சொல்லலாம் என்ற திமிர் உணர்ச்சிதானே வெளிப்படுகிறது!
நுண்மாண் நுழைபுலம் மிக்க உரைகாரர்கள் பக்தியைத் தவிர, வேரறியாதவர்கள் –
குற்றமற்ற தூயவர்கள் –
யார் வம்புக்கும் போகாமல் தெய்வத்திருவடிகளையே நம்பிக் கிடந்தவர்கள்.
பரம கருணையுள்ளவர்கள் .
இத்தகைய உரைகாரர்களின் ஒரே ஒரு சொல் ஆழத்துக்குக் கூட நெருங்க முடியாதவர் வைரமுத்து! திருப்பாவைக்கு ஏராளமான அறிஞர்கள் எழுதிய அற்புத உரையை –
ஞான உரையை –
உள்ளுறைப் பொருளை உலகுக்கு காட்டும் உன்னத உரையை-
புலமைத்திமிர் என்று ஒதுக்கிவிட்டு இழித்துரைப்பதுதான் ஆண்டாள் தமிழுக்கு வைரமுத்து தரும் ஏற்றமா?
மனச்சாட்சியோடு தமிழுலகம் முன் அவரும் தினமணியும் பதில் சொல்ல வேண்டும்.
உலகியல் காமத்தின் உன்னத வரிகளே அந்த பாட்டின்(குத்து விளக்கு) நேர்பொருள் – உயர்பொருள் என்று தீர்ப்பளிக்க வைரமுத்து யார்?
இன்றைக்கும் திருப்பாவை, மார்கழி விடியலில் வைரமுத்து வீட்டின் பள்ளியறையிலா பாடப்படுகிறது?
தனித்த பாலியல் உணர்வுப் பாசுரமாக (மானுடக் காமமாக)இவர் சொல்லும் பாசுரங்களை ஊரறிய – கனத்த குரலோடு – தெருவில் நின்று பாடவேண்டிய மரபை யார் ஏற்படுத்தித் தந்தது?
இதுதான் அந்தப்பாடலில் அர்த்தம் என்றால் நாதமுனிகள் போன்றோர் அதை தினம்பாட வேண்டிய முறையில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?
காமச் சுவைக்காத்தான் மகாஞானியான இராமாநுஜர் திருப்பாவை ஜீயர் என்று போற்றப்பட்டாரா?காமச்சுவையைத்தான் வேதத்தின் வித்து என்று போற்றினார்கள்.
ஓ சங்கத் தமிழ் என்பதை நீங்கள் அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டீர்களோ..?
வைரமுத்து தன் உள்ளக் கருத்தை ஓங்கித் திணிக்க – உரைகாரர்களை சர்வ அலட்சியமாக தூக்கிப் போடுவதின் உள்நோக்கம் திருப்பாவையையும் – திருப்பாவையின் உன்னதத் தமிழையும் உயர்த்துவதல்ல?திருப்பாவையில் ஊடுருவி வைணவ நம்பிக்கைகளைப் பலி போடுவது.
்கண்ணனோடு உறவாடியதை உயர்திணைப் பெண்கள் சொல்லார்சு என்றால் வைரமுத்துவின் மனதில் இருக்கும் இழிபொருள் என்ன?
கண்ணன் உயர்குலப் பெண்களோடு மட்டும் கூடுபவனா? பின் ஏன் ஆயர் குலத்தில் பிறந்தான்! இது அபத்தத்தின் உச்சமல்லவா! தினமணி இதனை ஆராய்ச்சி என்று வெளியிடுகிறது.
குலசேகர ஆழ்வாரின் குரலில் ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது என்கிறார்.
ஐயா வைரமுத்து அவர்களே! குலசேகர ஆழ்வாரை முழுதும் படித்திருக்கிறீரா? அவருடைய ஏர்மலர் பூங்குழல் பாசுரத்தை ஒருமுறை படித்துப்பாரும்! தேவகியின் புலம்பலும், தசரதன் புலம்பலும் படித்துப் பார்த்தால் நீங்கள் எழுதின வார்த்தையை நீங்களே மறுக்கும் ஞானம் பிறக்கும்.
அன்பே தகளியா பாட்டில் தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய்த் தெரிகிறது என்று எழுதுகிறார் வைரமுத்து.
தனிமனிதனின் தொண்டுள்ளம் அல்ல; உலக உயிர்களை உன்னதத் தன்மையோடு நேசிக்கும் மனித மாண்பின் வெளிப்பாடுதான் முதலாழ்வார்களின் குரல்.
நம்மாழ்வாரின் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை என்று அருகிருந்து நம்மாழ்வாரை உணர்ந்தது போல் சொல்கிறீர்கள்!
திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்து திருமண் இட்டுக் கொண்டது போல உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது! என்று எழுதுகிறீர்களே! இந்த விஷமத்தனமான உதாரணம் எதற்கு?
வைரமுத்துவைவிட 1000 மடங்கு பரம ரசிகர் பராசரபட்டர். இவர் நம்மாழ்வாரின் அகத்துறை பாடல்களுக்கு கொடுத்த விளக்கத்தை சற்று வாசித்துவிட்டு பிறகு வந்து வைரமுத்து விளக்கமளிக்கலாம் .
இப்படி வரிக்கு வரி அபத்தப்பின்னலை -அலங்காரத்தமிழில் செருகி- அச்சேற்றி,
புரிந்தவர்களை கலங்க வைக்கவும்,
புரியாதவர்களை மயங்க வைக்கவும்,
புதியபார்வை என்று சொல்லி, தன் கருத்தை வலிந்து திணிக்கவும் வைரமுத்துவால் மட்டுமே முடியும்.
இப்படி உள்ள அபத்தங்களின் உச்சம்தான் இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி என்று உள்நோக்கத்தோடு சேர்க்கப்பட்ட ஆங்கில வரி!
தமிழில் ஆராய்ந்தவர்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, தமிழை உயர்த்த ஆங்கிலத்தைத் தேடிப்போய் தன் அறிவுக்கூர்மையை நிரூபிக்க முயற்சித்திருக்கிறார் வைரமுத்து.
கடைசியில் முடிக்கும்போது எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கை.
நம்பிக்கை வேறு; நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கை வேறு போலிருக்கிறது!
வைரமுத்து அவர்களே! தமிழை காசுக்கு ஆராய்வது – நேரத்தைப் போக்க ஆராய்வதும் உங்கள் தொழில்.
அதற்கு உங்கள் இலக்கியத்தையே நீங்கள் ஆராய்ந்து உரை எழுதலாம்.
ஆனால்,
ஆண்டாள் தமிழ்க்கவிஞர் மட்டுமல்ல.
தெய்வக் கவிஞர்.
நூற்றுக்கணக்கான திருத்தலங்களிலே தனிக்கோயில் நாச்சியாராக பகவானுக்கு இடப்புறம் வீற்றிருந்து அருள் தருபவர்.
ஆண்டாளின் திருப்பாவையை தமிழுக்காக மட்டுமே நீங்கள் உங்கள் மொழி அறிவில் உரசிப்பார்க்கலாம்.
ஆனால், அதனை நீங்கள் தினசரி வாசிப்பதில்லை.வைணவ சமயம் உங்கள் வாழ்வோ நம்பிக்கையோ புரிதலோ அல்ல.
உடலும் உயிருமாகப் பின்னிப் பிணைந்த வைணவத் தமிழில் நீங்கள் தமிழைத் தனியே பிரித்தெடுத்தால் கிடைப்பது உயிரற்ற உடல்தான்.அல்லது உடலற்ற உயிர்தான்.
உடலற்ற உயிரை உங்ளால் பிடிக்க முடியாது.
உயிரற்ற உடலுக்கு சடலம் என்று பெயர்.அதை எரிக்கவோ புதைக்கவோ மட்டுமே முடியும்
உயிரற்ற தமிழைச் சவமாக்கி ஒப்பாரி வைப்பது தான் வைரமுத்துவின் நோக்கமா…
ஆனால்,வைரமுத்து அவர்களே
வைணவர்கள் அதனை தங்கள் வாழ்வியலோடு பிணைத்துக் கொண்டவர்கள்.
திருப்பாவையைச் சேவித்து – ஆண்டாளை வணங்காமல் அவர்கள் தினசரி காலை உணவை உட்கொள்வதில்லை.
அந்தத் தெய்வத்தமிழை உங்கள் எல்லைக்குட்பட்ட அறிவால் (டூடிட்டிணாஞுஞீ டுணணிதீடூஞுஞீஞ்ஞு) கொச்சைப்படுத்தாதீர்கள்.
ஆண்டாளோடு உங்கள் தமிழ் ஆராய்ச்சியை விட்டுவிடுங்கள்.
உங்கள் பணமும் புகழும் செல்வாக்கும் உங்களைக் காப்பாற்றட்டும்.
(கட்டுரையாளர்… கோகுலாச்சாரி.. ஆசிரியர்்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாள் நாமம் வாழி  -வைரபாரதி

"படுக்கையை விரி ... படுத்ததும் சிரி ... பற்றிட சரி ... பட்டென உறி "
என்பதைப் போன்ற மாயா ஜால வார்த்தைகள் அல்ல பக்தி இலக்கியங்கள்..

பக்தி அரிய உணர்வு ... அகந்தைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை ..

எந்த கர்வத்தாலும் கடவுளை உணரும் பக்தி பாலத்தில் நடக்க இயலாது .. அது முடம் ..

பக்தி கணிதம் அல்ல ...கர்வ அடையாளங்களை அழிப்பது ..
படிப்பால் ... புகழால் ... வரும் பிடிப்பை உடைப்பது ...

Image may contain: 2 people, people smiling, text

பக்திக்கு ஒன்பது வெளிப்பாடுகள் உண்டு .. அதில் ஏழாவது "தாஸ்யம் " தன்னைச் சமர்ப்பித்து கடவுட் சேவை ஆற்றல் ....

"தேவ தாசி " என்பது தீ மொழி ஆனதால் ... பொருட் திரிபு ஏற்பட்டதால் அதை பயன் படுத்தல் பிழை ...

ஆஞ்சநேயர் , பரம ஹம்சர் , ஆண்டாள் தாஸ்ய பக்தி உணர்வாளர்கள் ...

கடவுள் என்பது பேரனுபவம் ... அந்த அனுபவ வெளிப்பாடுகளே சமயப் பகிர்வுகள் ...

கிளைகளைப் பிடிக்கும் வரை பறத்தல் சாத்தியமில்லை பறவைக்கு ... அறிவு என்பது கிளை .. கடவுள் ஆகாயமாய் பேரனுபவம் .

உணர்ச்சி மனத்துக்கானது .. உணர்வு ஆத்மாவுக்கானது ...

ஆக புரிதல் அல்ல உணர்தலால் ஆன்மிகம் முழுமை அடைகிறது ..

பக்தியை ... பக்தி இலக்கியங்களை .. எழுதிய பக்தர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது பூக்களின் வாசனையை கைக்குள் அடக்க பூவை தேய்த்துப் பார்ப்பது போல் அறிவீனம் ...

சந்தனக்கட்டைக்கும் பூவுக்கும் வித்யாசம் உண்டு .. இரண்டும் மணம் தான் என்ற போதிலும் ... ஆய்வால் பக்தி வருவதில்லை ... ஆய்வால் முனைவர் பட்டம் வேண்டுமானால் பெறலாம் .. பேசலாம் .. அதில் ஆழம் இல்லை.

பக்தி ஆய்வுக்கு அப்பாற்பட்டது ...

சீதையும் நிலத்தில் கிடைத்தவள் தான் . ஆண்டாள் துளசி வனம் ..
திருமகளின் அம்சங்கள் ...

நம் ஐந்தாவது தலைமுறை முன்னோரின் பிறப்பே நாம் ஆய்வு செய்வது கடினம் ..அவர்கள் இருந்தனர் .. நாம் இருப்பதால் .. நாமே அதன் சாட்சி ..

ஆண்டாள் பாசுரங்கள் தாஸ்ய உணர்வு மிக்கவை ...

கண்களை வெளியே ஒப்படைக்காமல் வெளிச்சத்தை வாங்க இயலாது ..

கண்களை உள்ளே ஒப்படைக்காமல் ஆத்மாவை அனுபவிக்க இயலாது ..

பக்தி மேலோங்கினால் அழுகை பீறிடும் .. எனக்கு ஏற்பட்டிருக்கிறது
"காதலாகி .. கசிந்து ... கண்ணீர் மல்கி " மாணிக்க வாசகரின் பேரனுபவம் .. வார்த்தை ஜாலமல்ல ...

அந்த அநுபவம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர முடியும் ...

"அனுபவம் " என்பது உலகம் சார்ந்தவை . . "அநுபவம் " உள்ளுணர்வு சார்ந்தவை ...

ஆண்டாள் பாசுரங்கள் .. ராச லீலை என்பவை உடலை .. மனதை .. உணர்வைக் கொடுத்தல் ... அவை காமமல்ல ...

மனித காமம் என்பது வெண் ரத்தம் கழித்தல் ...
மனித பக்தி என்பது தன் சித்தம் அழித்தல் ...

பெரிய தூரம் அல்ல ... மனதுக்கும் மன சாட்சிக்கும் உள்ள தூரம் ... ஆனால் பார்வை வேறு ...

கொடுத்தாலே அழிக்க முடியும் .. அது ஒரு கொடுப்பினை ...

கடவுள் அருளால் மட்டுமே பக்தி ஏற்படும் .. சூரிய ஒளியால் சூரியனைப் பார்ப்பது போல் ..

மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு சூரியனை கொதிக்கும் வெள்ளித் தட்டு என்பதான ஜாலம் ...

உள்ளே உள்ள சூரியனை அநுபவிக்க வேண்டும் ...

நாத்திகர் பேசும் தமிழ் மொழி அகத்தியர் வகுத்தது .. தொலகாப்பியர் அகத்தியர் சீடர் .. முதற் சங்கத் தலைவன் முருகன் ..
இவர்களில் ஒருவர் கூட நாத்திகர் அல்லர் ..

ஆன்மிகம் தோற்றி .. இலக்கணம் வகுத்து .. வளர்த்து எடுக்கப்பட்டது நம் தமிழ் மொழி ...

நாத்திகத்திற்கும் ஆதி தமிழுக்கும் சம்மந்தம் இல்லை .. முப்பாட்டன் முருகனை உணர்ந்தால் புரியும் ...

இந்துக்கள் தமிழர் இல்லையாம் ...
தேவாரம் .. திருவாசகம் கிளிக்கி மொழியிலா எழுதப் பட்டது ?

திருவள்ளுவர் சமணராம் ... சரி சமணர்களாவது தமிழர்களா ?

வள்ளுவரும் ... வள்ளலாரும் .. நாத்திகர் இல்லை ...

ஆக நாத்திகர் தமிழரே இல்லை .. இது வாதம் ...வஞ்சம் அல்ல ...

கம்பர் எழுதியதை எந்தக் கொம்பரும் எழுத வில்லை ...

பக்தி எழுத வைக்கும் ...

கண்ணதாசன் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் இதை ...
அவரின் நேர்மை எனக்குப் பிடிக்கும் ...

அவர் கவிஞர்களின் மனசாட்சி ...

பார்வை அற்றவர்கள் யானையின் வயிற்றை தடவி பெரிய பாறை என்பது போல நாத்திக அணுகுமுறை

நதி மூலம் .. ரிஷி மூலம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை ..
அறிவு புலன்களுக்கு உட்பட்டவையே ..

பேரனுபவம் நிகழ வேண்டும் எனில் திறந்திருத்தல் அவசியம் ...

தமிழ் காட்டு மிராண்டி மொழி அல்ல .. சொன்னவர் சிலை உடைத்தார் .. அவர் உடைந்த பிறகு அவருக்கே சிலை வைத்தனர் ...

அவரை மதிக்கிறேன் .. அவரே பக்தி செய்பவர்களை ஒன்று சேர்த்தவர் ...

அருளால் வளரும் பக்தியே அரிது ..

மண்டியிடலும் ... நமாஸும் ... தோப்புக்கரணமும் வெவ்வெறு வடிவம் .. பக்தி ஒன்றே ...

பக்தி தீது பேசாது .. தாசி மகன் என திட்டாது .. தாசி குலம் என மேற்கோள் காட்டாது ...

துப்பாக்கி முனையிலும் .. கருணைப் போர்வையிலும் மதம் மாற்றாது ...

மதத்திற்கு ஆள் சேர்ப்பதாலும் .. ஜாதிக்கு அரிவாள் சுமப்பதாலும் .. பக்தி பிடிபடாது ...

அது தனக்குள்ளே இறங்கி .. தன்னை கரைத்து .. தன்மை நிறைத்து .. வெட்ட வெளியெ தாமென உணர்தல் ...

அணு அணுவாய் கடவுள் எனும் பேரனுபவத்தில் கலத்தல் ...

அப்படி கலந்தவள் ஆண்டாள் ..
அவள் நம் ஆன்மாவை ஆண்டாள் ..
அவள் வேறேதொன்றையும் வேண்டாள் ...

அத்தகைய அநுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும் ...

ஆண்டாள் நாமம் வாழி 🙏🏻

-வைரபாரதி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: one or more people and text

Image may contain: one or more people and text

DT1Z9EkVQAAVTRR.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 6 people, people smiling

Image may contain: 5 people, text

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: text

Image may contain: 1 person, smiling, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 



Priya Venkat

ஆண்டாளை அவதூறாகப் பேசிய வைரமுத்துவை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுவுடன், அவர் தற்போது, தான் செய்தது தவறே இல்லை என்றும், வேண்டுமென்றே தனது பேச்சுத் தவறாகச் சித்தரிக்கப்பட்டு விட்டதாகவும், கூறியிருக்கிறார்.

அவர் அளித்திருந்த வீடியோ மற்றும் செய்திதாள் அறிவிப்புகளின் அடிப்படையில் அவருக்குச் சில கேள்விகள்: -

1. ஆண்டாள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை, மூன்று மாதங்கள் ஆராய்ச்சி செய்தேன் என்கிறீர்களே, மூன்று மாதங்கள் ஆராய்ச்சி செய்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தில் வெளியாகாத ஒரு கட்டுரையை வெளியானாதாக எப்படிச் சொன்னீர்கள்? இது தான் உங்கள் ஆராய்ச்சியின் லட்சணமா?

2. சரி, கட்டுரையில் இண்டியானா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரை என்று கூறிவிட்டு, இப்போது அது தவறு என்று நிரூபிக்கப்பட்டவுடன், அதை உண்மையில் எழுதிய நாராயணன் ராவ் அவர்கள் சொன்னதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன் என்கிறீரே! அப்படியானல் இண்டியானா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரை என்று இதுவரைப் பொய் சொல்லி வந்துள்ளீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

3. அந்த நாராயணன் ராவ் அவர்களும், "இது ஆராய்ச்சி முடிவில்லை; இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை; ஊகத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்" என்று தந்திடிவி பேட்டியில் கூறியுள்ளார். ஊகத்தின் அடிப்படையில் சொன்ன ஒரு கருத்தை, ஆண்டாளைத் தாயாகப் போற்றுவதாக இப்போது சொல்லும் நீங்கள், எடுத்துக் கையாள வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஊகத்தின் அடிப்படையில் ஒருவர் சொன்ன கருத்தை இது வரை ஆராய்ச்சிக் கட்டுரை என்று சொல்லி வருவது உங்கள் அடுத்த பொய் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?

4. அந்தக் கட்டுரையில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை பற்றி மட்டும் தான் பேசியுள்ளீர்களா? 
ஆண்டாள் எந்தக் குலத்தில் பிறந்தவள் என்று தெரியாதவள் என்கிற வரிகளை எதற்காகச் சொல்லியுள்ளீர்கள்? ஆண்டாளைப் போற்றுதாகச் சொல்லுபவருக்கு ஆண்டாள் ஒரு அவதாரம் என்பது மட்டும் புரியாமல் போய்விட்டதோ?

5. தேவதாசி என நான் கூறிய வார்த்தைத் திரிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறீர்கள். அதை அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்திற்காகவோ, யாரோ சிலர் என் கருத்தை திரித்து விட்டனர் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் உங்கள் கட்டுரை வெளியானவுடன், அதைப்படித்து, மனம் நொந்து, அழுது புலம்பி, உண்ணாமல் இருந்த விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அம்மையார் ஆண்டாள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் அரசியல் செய்கிறாரா அல்லது அவருக்குத் தமிழ் தெரியாதா? உங்கள் மூன்று மாத ஆராய்ச்சிக் கண்களில் அவருடைய பங்களிப்புப் படவில்லையோ?

6. பெருமாளிடம் சரணடைந்து சந்நியாசம் ஏற்றுக்கொண்டு, பெருமாளை தெய்வமாகப் போற்றும் வைஷ்ணவர்களுக்குக் குருவாக இருந்து வழிகாட்டி வரும் வைணவக் குருமார்களுக்கு உங்களின் கட்டுரை புரியவில்லை என்கிறீர்களா? இல்லை அவர்களும் அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்களா?

7. அதே போல், சிவபெருமானைப் போற்றி சந்நியாசம் ஏற்று இருக்கும் சைவமட ஆதீனங்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து இருக்கிறார்களே அவர்களும் அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்களா?

8. அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்துள்ளார்களே அவர்களும் அரசியல் செய்கிறார்களா? இவர்களுக்கு எல்லாம் உங்களை எதிர்ப்பதால் என்ன அரசியல் லாபம் கிடைக்கிறது?

9. சரி, திரு. சுகி சிவம் அவர்கள், தமிழ் உலகிலும் ஆன்மீக உலகிலும் பலராலும் அறியப்பட்டவர். அவரே உங்களுக்குக் கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளாரே! அவரும் உங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறாரா என்ன?

10. "தேவதாசி” என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதாக வாதாடும் நீங்கள், அதே கட்டுரையில் மற்ற இடங்களில் வக்கிரத்தனமான எண்ணங்களுடன் ஆண்டாளைக் கொச்சைப்படுத்திய வார்த்தைகளை எல்லாம் சாய்சில் விட்டது ஏன்? அந்தக் கட்டுரையில் எந்தெந்த இடங்களில் ஆண்டாளைப் பற்றித் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறீர்களோ, அவை அனைத்திற்கும் ஏன் அப்படிக் குறிப்பிட்டீர்கள் என்று தமிழர் அறிஞர்கள் மன்றத்தில் பொதுமேடையில் விளக்கம் தர நீங்கள் தயாரா?

11. ஒரு தவறை வேண்டுமென்றே செய்து விட்டு, ஒரு களங்கத்தை இந்துக்கள் போற்றும் ஆண்டாளின் மீது கற்பித்து விட்டு அதை உணர்ந்து மன்னிப்பு கோராமல் மீண்டும் மீண்டும் உங்கள் தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும் இழி செயலை ஏன் தொடர்கிறீர்கள்?

------------------------------------

வைரமுத்து மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவருடைய மனப்போக்கையும், செயல்பாட்டையும் பார்க்கும்போது, அவர் பதில் அளிக்க மாட்டார் என்பது தெளிவு.

எனவே, இந்தப் போராட்டம் தொடரவேண்டும்; வலுவடையவேண்டும்!

வைரமுத்துவும், வைத்தியநாதனும் மன்னிப்புக் கோரும் வரை இந்தப் போராட்டதை விடக்கூடாது! இந்தப் போராட்டம் இவர்கள் போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழகத்தில் பல கிறிஸ்துவர்கள் தமிழர் போர்வையில் சமூக விரோதப் பிரிவினை வாதத்தைப் பரப்பி வந்தவர்கள், இந்த நிகழ்விற்கு சில நாள் முன்பு திரப்பட நடிகர் ரஜனிகாந்த் அரசியல் நுழைவை "ஆன்மிக அரசியல்" என்றதையும் தன் நுழைவு அறிவிப்பை பகவத் கீதையிலுர்ந்து ஒரு வாசகம் கூறி சொன்னதையும் -மிகவும் தரக் குறைவாய் அருவர்ப்பாய் பேசினர், தமிழக தொலைக்காட்சிகள் ஐச்ங்கமாக, அருவருப்பாக தமிழர் மெய்யியலைப் பழிக்கும் கிறிஸ்துவர்களை ஊக்குவிப்பது போல் வாய்ப்பு தந்து வருகிறது.

செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், மே ௧7 தெரு மிருகன் கந்தி, கௌதமன், மரியா லாரன்ஸ் போன்ற கிறிஸ்துவர்களும், அமீர், ஜவஹருல்லாக் போன்ற முஸ்லிம்களும் - வீரமணி போன்ற தமிழர் விரோத வியாதிகளும் பன்றித்தனமாய் ஊளையிட்டனர். தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்ற திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமியின் திராவிடர் கழகம் எனெஉம் தமிழர் விரோத இயக்கம் கிறிஸ்துவர்களோடு இயைந்து உலக நாத்தீகர் மாநாடு என நடத்தியது, ஆனால் உலகின் பெரும்பான்மை சமயங்களைப் பேசாமல் - தமிழர் மெய்யியலைப் பழித்தது, திமுக கட்சியின் கனிமொழி தரம் தாழ்ந்து திருப்பதி கோவிலிற்கு பாராளுமன்றக் குழு உறுப்பினராய் சென்றதை நினைவு கூர்ந்து பாராளுமன்ற சட்ட விதிகளுக்கு விரோதமாய் பேசினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

toi%2Bvairamuthu.jpg 7cbb.jpg  7dc.jpg

7cc.jpg 20_01_2018_013_023.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

16373092.jpg  17175087_1.jpg 26229411_1147644458672001_51598375019776



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

172329805.jpg 172525680_1.jpg 172525680_1.jpg 172721481_1.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

26814822_1651484128228788_17243357496154  26229411_1147644458672001_51598375019776 26733697_1147644558671991_70531162738439 26239733_1147580568678390_40333699644640



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

//இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.//

வைரமுத்து தன் கட்டுரையில் ஆண்டாளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் வரிகள் இவைதான். ஆண்டாளை பக்தியிலிருந்துப் பிரித்துவிட்டால் தன்விருப்பில் எல்லாவற்றையிம் திரித்துவிடலாம் என்ற நோக்கில் எடுத்த எடுப்பிலேயே அவர் தொடுத்த கணைதான் இந்த வரிகள். கண்ணன் என்பதொரு காரணம் என்ற வரியில் சொல்லப்பட்டிருக்கும் ஒருமை, கண்ணனைச் சொல்லும் முறையின் கீழ்மையின் அடையாளம். பாக்கள் முழுமையுமே கண்ணனை நோக்கிச் சொல்லப்பட்ட இலக்கியத்தில், தன் உடல் சார்ந்த, மனம் சார்ந்த கவலைக்கான தீர்வாக நோன்பும் அதன் பெயரொட்டாகக் கண்ணனும் என்று இவர் மொழிந்துவிட்டார். இவ்வரிகளின் முன் வரிகளில் மார்கழியின் இயல்பு வர்ணனை மயக்கத்தில் இவ்வரிகள் தொடர்ந்து வருகின்றன.

இக்கட்டுரை, ஆண்டாளை பக்தியினின்றும் 
பிரித்தெடுத்தபின் ஒரு பிணச்சோதனையின் முடிவுகளைத் தருவதுபோல் அமைந்திருக்கிறது. இதை அனைவரும் உணரவேண்டும்.

OOGAI NATARAJAN BJP 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Senthilram Palani

5 hrs · 
 

ஆண்டாள் பாசுரங்களுக்கு ஆன்ம விளக்கம் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டு வருகிறது, காரணம் ஆண்டாளுடைய பாசுரங்களை சாதாரண காதல் வரிகளாக படித்தால், அது நமது தாயினுடைய காதல் கடிதங்களை படிப்பதற்கு சமானமாகும் என்பதால், தாயினுடைய காதல் வரிகளுக்கு ஆன்மீக விளக்கங்களைக் கொடுத்து, பக்தியில் கலக்க வைத்தனர் முன்னோர்கள்.

ஆனால் இந்த வைரமுத்து போன்றவர்களோ தாங்கள்தான் அறிவுஜீவிகள் என்று நினைத்துக்கொண்டு இவற்றை இப்படி ஆன்மீக நோக்கோடு பார்க்கக்கூடாது, இவற்றை காதல் நோக்கோடுதான் பார்க்கவேண்டும், என்பதும் கூட ஒருவிதத்தில் ஆண்டாள் தாயாரை சிறுமை படுத்துவதற்கே.

ஆனால் கடைசியில், ஆண்டாள் தாயார் குலமறியாதவர், காதல் உணர்ச்சிகளை வெளிப்படையாக பாடும் அளவிற்கு சுதந்திரம் உடையவர் ஆதலால், அவரை குலமகளாகக் கொள்வதற்கு யாரும் வரவில்லையாம். (இதனை ஏன் இங்கு கூறவேண்டும்? இது மறைமுகமாக வைரமுத்து செய்யும் விஷமச் செயல்)

மற்றும் சரியாக ஆய்வு செய்யப்படாத ஒரு ஆய்வுக்கட்டுரையைக் காட்டி, நமது ஆண்டாள் தாயாரை தவறான போக்கில் விமர்சித்து, அதனை பக்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அவரே ஏன் கூறவேண்டும்? சரி அந்த ஆய்வுக் கட்டுரை எழுதியவரே கூட தான் ஆண்டாள் தாயார் பற்றிக்கூறியது ஒரு அனுமானமே தவிர, ஆதாரங்களற்றது என்று கூறிய பின்னும் கூட மன்னிப்பு கேட்காதவன், என்ன கவிஞன்?

காதல் பாடலுக்கும், பக்தி பாடலுக்கும் சிறு வித்தியாசம்தான் உள்ளது, அவை முற்போக்கு மடையர்களுக்குப் புரியாது. அப்படி புரியாத விஷயத்தில் ஏனடா தலையிடுகிறீர்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 8 people, people smiling



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

“கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஒரு திறந்த மடல்”

“மொழி காத்தான் சாமி” என்ற தலைப்பில் உ.வே.சா பற்றி தாங்கள் உரையாற்றுவதற்கு முன்பே தினமணியின் நோக்கத்தைப்பற்றி எனது முகநூல் பக்கத்தில் எச்சரித்திருந்தேன். மேலும் அந்த கட்டுரைக்கு “மொழி காத்தான் சாமி” என்று தலைப்பிட்டு இருந்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். அடுத்து தாங்கள் வாசித்த ‘கருமூலம் கண்ட திருமூலர்’ என்ற கட்டுரையில், திருமூலர் உடலில் இருந்தவர் ஒரு சிவயோகி என்ற கருத்தை மறுத்து திருமூலர் ஒரு இடையர்தான் என்று நிறுவியதற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தால் கடவுளாக தங்களால் உருவாக்கப்பட்ட ஆயர் குல கண்ணனைப்பற்றி கேள்விகள் எழும். அல்லது ஒரு சமூகத்தின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் என்று வாளாயிருந்து விட்டனரோ, என்னவோ?. ஆனால் கடந்த 8ந் தேதி அன்று ஆண்டாள் கட்டுரையை படித்ததும் எதிர்ப்பு வருமென்ற எனது கணிப்பு பொய்க்கவில்லை..

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் இருந்த, அந்த காலத்திலேயே ‘ஆண்டாள்’ வேண்டப்படாத பெண் குழந்தையாகி துளசி வனத்தில் வீசியெறியப்பட்டாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட அவள், பிற்காலத்தில் தனது பிறப்பின் ரகசியத்தை அறிந்து வாழ்க்கையின் மீதே வெறுப்படைந்தாள். பெண்களுக்கு எதிரான கொடுந்தளைகளை எண்ணி மனதிற்குள் குமைந்த அவள், அதில் இருந்து விடுதலை பெற, ‘மானிடர்க்கு வாழ்க்கைப்படேன்’ என்று சூளுரைத்தாள். . கண்ணனையே காதலனாக, கணவனாக கைத்தலம் பற்றி, நாள்தோறும் அவனுக்கு பாசுரங்களால் அமுதூட்டி சூடிக்கொடுத்த சுடர் கொடியானாள். அவளை எந்த அக்கரகாரமும், அரண்மனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இரத்தமும் சதையுமாக அரங்கனுடன் கலந்தாள் என்பதுடன் அவள் வாழ்க்கை முற்றுப்பெற்று விடுகிறது. ஆண்டாள் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தாங்கள் மேற்கோள் காட்டியதற்காக பொங்கும் இந்துத்துவாக்களிடம் மன்னிப்பு கோருவதில் தயக்கமில்லை என்கிறது தினமணி. இதன் மூலம் தங்களை சிறுமைப்படுத்திவிட்ட தினமணிக்காக இனியும் கட்டுரை வாசிக்கப் போகிறீர்களா? எண்ணியல் முதல் வானியல் வரை உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும், ஆரியர்களே மூலவர்கள் என பொய்யை புனைந்துரைக்கும் தினமணிக்கு வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் நோக்கமே தவிர, தமிழ் இலக்கியத்தின் மீது ஏற்பட்ட பற்றல்ல. தமிழ்த் தாயின் தவப்புதல்வனாகவும் மூத்தக் கவிஞனாகவும் வலம்வரும் தாங்கள், இனியாவது தினமணிக்காக வாசிப்பதை நிறுத்திவிட்டு தமிழ் மக்களுக்காக வாசியுங்கள். இடம், நாள், பொழுது மூன்றையும் கூறுங்கள்; உங்கள் வாசிப்பை கேட்க இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடுவார்கள்; உறுதி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கவிப்பேரரசுக்கு இசைக்கவியின் கடிதம்

http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-06-48/2016-07-11-14-54-18/item/765-2018-01-13-16-35-38 

(கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு.உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!

அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது. 
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.

அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.

அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்)

மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த 
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! 
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு 
கோரும்வரை நீளும் வழக்கு

இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் 
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் 
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் 
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான் 
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை 
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை 
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான் 
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!

மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம் 
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ? 
தனியான மரியாதை தமிழாலன்றோ? 
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ? 
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ? 
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ? 
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்! 
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை 
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை 
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை 
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!

ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா? 
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா? 
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள் 
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!

இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை 
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை 
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை 
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்? 
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்! 
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்! 
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர் 
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!

13.01.18 / சனிக்கிழமை / மாலை 06 மணி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சீமான் அவர்களுக்கு கேள்விகள் முடிந்தால் பதில் சொல்லட்டும். :

1. ஆண்டாள் பாசுரங்கள் கோவில்களில் படுவது இல்லை என்ற உங்கள் வாதம் தவறு முடிந்தால் பாசுரம் பாடாத கோவிலை காட்டுங்கள் ?

2. அண்ணன் சொன்னார், 2000 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் வந்தார்கள், தமிழ் கடவுளை சமஸ்க்ருத கடவுளாக மாற்றினார்கள் என்று சொல்லும் நீ, எந்த ஆண்டு வந்தார்கள் என்று சொல்லவில்லை, அப்போ ஆண்ட தமிழ் மன்னர் யார் என்று சொல்ல முடியுமா ?

3. 3000ஆயிரம் ஆண்டு முன்பு எழுதிய சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டும் நீ, பரிபாடல்களில் ராமாயணம், மஹாபாரதம் பற்றி சொல்லி இருப்பது தெரியாதா ?

4. அதே சங்க இலக்கியத்தில் சமஸ்கிருதத்தையும் போற்றி பேசியிருப்பதும் தெரியாதா ?

5. தமிழ் இலக்கியம் பேசும் நீ எந்த தமிழ் இலக்கியத்தில் ஆரியர்கள் வந்தார்கள் என்று எழுத பட்டது என்று சொல்ல முடியுமா ?

சங்க இலக்கியத்தில் ராமாயணத்தை மேற்கோள் காட்டிசொல்லும் பழக்கம் இருந்தது என்றால் எவ்வளவு தொன்மை இந்த ராமாயணம் என்று புரியவில்லையா ?

இது சாதாரணமா கேட்கும் கேள்வி மட்டுமே, முடிந்தால் பதில் சொல் இது உங்கள் கட்சி நண்பர்களுக்கும் இது பொருந்தும்..

நன்றி - Srivatsan Iyengar



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாளைப்பற்றி அவதூறு -D.A.ஜோசப்,

(வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய அவதூறுக்கு 20.1.2018 அன்று ஸ்ரீரங்கம், காந்தி சாலை தேவி மகாலில், ஸ்ரீமத்பரமஹம்ஸேத்யாதி, செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்வாமி தலைமையில் "பாஞ்சஜன்யம்" ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணஸ்ரீ A.க்ருஷ்ணமாச்சாரி ஸ்வாமிகள் நடத்திய கண்டன விழாவில் D.A.ஜோசப் சார்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

வரலாறு வேறு ஆன்மீகம் வேறு. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியது என்று புராணம் சொன்னால். இல்லை இல்லை சில லட்சம் ஆண்டுகள்தாம் என்று அகழ்வாராய்ச்சி மாற்றிச் சொல்லும். நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது ஆன்மீகம். நாகரீக விஞ்ஞானத்தில் பிறந்தது ஆராய்ச்சி. பூமாதேவி புனிதமான ஆண்டாளாக நந்தவனத்தில் பெரியாழ்வாருக்குக் கிடைத்தாள் என்று ஞானம் வரலாறுசொன்னால் பெற்றோர் இல்லாமல் பிள்ளை எப்படிப் பிறக்கும் என்று விஞ்ஞானம் கேள்வி கேட்கும். எப்படியாவது ஒரு பெற்றொரை சிருஷ்டித்தால்தான் சரித்திரத்திற்றும் புலனாய்வுக்கும் திருப்தி பிறக்கும்.

பெற்றோரைத் தேடும்போது ஒரு தேவதாசி ஏன் தாயாக இருக்கக்கூடாது என்று வக்ரமாக ஒரு யூகம். நாமெல்லாம் தாயாக நினைக்கும் ஆண்டாளைப்பற்றி இப்படி ஒரு புது சரித்திரம் சில புல்லர்கள் சிருஷ்டித்தார்கள். புல்லர்கள் அப்படி செய்யாதிருந்தால்தான் வியப்பு! ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக வைணவம் நிலை பெற்றுவரும்வையகத்தில் வாழும் ஒரு இந்தியனுக்கு அதுவும் தமிழனுக்கு இந்த வரலாறு மனதுக்கு மிகவும் பிடித்துப் போனால் அதுதான் வியப்பு ! அதை மேடையேறி பலர் முன் பறைசாற்ற அந்தகவிஞன் விரும்பினால் அது இன்னும் வியப்பு !

பேசும் பேச்சு கேட்பார் காதில் நுழையும். அது ஏச்சாய் இருந்தால் நெஞ்சைத்துளைக்கும். இதைப் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும். ஆன்மீகத்தால் அகில உலகப்பெயர்பெற்ற பாரதத்தில் பார்மகள் அளித்த பவித்ர நாயகி பலர்க்கும் பொதுவான பெண்மகள் என்று சொன்னால் பண்புடையோர் மனம் என்ன பாடுபடும் ? "சொல்லுக்குப் பதில் கல்" என்ற கொள்கையுடையோர் கல்கொண்டு வீசி தம் கோபம் தீர்த்துக்கொள்வர். ஆனால் பொறுமையே பூஷணமாக வாழும் ஆன்மீகவாதிகள் அடக்கவும் முடியாமல், அடங்கவும் முடியாமல், மடங்கவும் முடியாமல் அனுபவிப்பர் துன்பத்தை ! இன்று நம்மை அந்தத்துன்பத்தில் ஆழ்த்திய வைரமுத்து, ஆன்மீக வைரிகளின் சொத்து. அவருக்கு பிடித்ததோ பித்து? நியாயம்கேட்டு நம் உள்ளமே நீ கத்து !

யுகம் கலிதான். ஒத்துக்கொள்கிறோம். ஆனால் யுகத்தின் முடிவு இப்போதே வந்துவிட்டதோ என்று மனம் நொந்து கொள்ள வைக்கிறது இந்த பேச்சு ! கண்டிக்கிறோம் ! கண்ணீர் வடிக்கிறோம். கதறுகிறோம் கடவுளை நோக்கி !

அடியேன் இராமானுஜதாசன், 
D.A.ஜோசப்,
(பாண்டிச்சேரி)

Image may contain: 2 people, people standing


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கர்நாடக இசைக் கலைஞர் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் பதிவு

வைரமுத்துவா ? வரி முத்துவா ?

வைரமுத்து என்றிருந்த நீ வைரியாகிப் போனது ஏன் ?.

கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய நீ கள்ளிப்பால் கொடுத்தது ஏன் ?

அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழுகையில்

அடுத்தவர் நம்பிக்கையைப் பழித்தது ஏன் ?- முன்பு

ஆண்டவர்களை அண்டிப் பிழைக்கும் நீ

ஆண்டாளைப் பழித்து அருவருப்பாய் பேசியது ஏன் ?

இலக்கியவாதி என்று இருமாந்திருந்த உன்னை

இயக்கிப் பின்னணியில் இருந்த சீமான்கள் யார் ?

தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்

இறையுணர்வை உணர்த்துகையில் - எந்த

இலக்கோடு பேசினாய் , இலட்சங்கள் பெற்றாயோ ?

வேலிக்கு ஓணான் சாட்சியுரைப்பதுபோல்

வெளிநாட்டு ஆய்வாளனை துணைக்கு அழைத்தாயோ ?

பகுத்தறிவுவாதி என்றால் நீ பிறந்த மதத்தினிலே

வகுத்தவற்றை முதலில் பகுத்தறிந்து பார்க்கில்லையே ?

கருவில் உதித்ததனால் கோசலையின் மகனாக

ராமன் அவதாரமில்லை, அவனுக்கு ஏன் கோயிலென்றாய் ?

மேரியின் கருவில்தான் வந்துதித்தார் இயேசுபிரான்

அவருக்கு ஏன் கோயிலென்று என்றேனும் கேட்டாயோ ?

கர்த்தரைக் கணவராய் வரித்து கன்னியாஸ்திரீகளெல்லாம்

அர்ப்பணிப்பார் தம் வாழ்வை , அதனை அறிந்திலையோ ?

அர்பணித்தாள் ஆண்டாள் அரங்கனுக்கே தன்னை அதன்

அர்த்தத்தைத் திரித்து அவதூறு பேசினையே ,

முந்தி விரித்தவளென்று , மூடனைப்போல் பேசினையே

சந்தி சிரிக்குதடா உன்னை சாடித் தூற்றுதடா

காசுக்கு உடலை விற்பதுதான் வேசித்தனம் - உன்போல்

காசுக்கு விஷக்கருத்தை விதைப்பதுவும் வேசித்தனம் .

தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழன் காட்டுமிராண்டி என்று

உமிழ்ந்த பெரியார் வழியை பின்பற்றும் அறிவிலியே -அந்தத்

தமிழால்தான் உண்கின்றாய் , உணர்கின்றாய் , வாழ்கின்றாய் .

தமிழ்க் கடவுள் ஆண்டாளைத் தாழ்த்தியும் பேசுகிறாய் .

உன்வீட்டிலுள்ளோர் ஆத்திகராய் வாழ்கின்றார்

உன்மத்தம் கொண்ட நீ நாத்திகனாய் வாழ்கின்றாய் - கேட்டால்

அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லையென்றாய்.

அடுத்தவர் மத சுதந்திரத்தில் தலையிடுதல் முறையாமோ ?

வீட்டைக்கட்டுப் படுத்த முடியாத வீணனாக இருக்கும் நீ

நாட்டைத்திருத்திடவோ , நாக்கூசாது பேசுகிறாய் -நீ

அடிவருடும் தலைவனது இல்லத்தார் எல்லோரும் -இறை

அடிதொழுது பிரார்த்தனைகள் அன்றாடம் செய்கின்றார் -நீ

புரட்டும் பொய்யும் பேசி, வறட்டு வாதம் செய்து

புரட்டும் செல்வம் கொண்டு , பகட்டாய் வாழ்ந்திடவோ ?

ஆத்திகரின் பொறுமை பேடித்தனமல்ல , வெகுண்டெழுந்தால்

நாத்திகரெல்லாம் நசுங்கிப்போய்விடுவீர் .

திருந்து , வருந்து , இல்லையேல் திருத்தப்படுவாய் விரைவில்.

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard