New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா
Permalink  
 


அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா (தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்)

 


ஷெல்டன் போலாக் (Sheldon Pollock) சம்ஸ்கிருதம், இந்தியப் பண்பாடு, இந்தியச் சிந்தனை மரபு ஆகிய துறைகளில் உலகளவில் கல்விப் புலங்களில் மிகவும் மதிப்புக்குரிய அறிஞராகக் கருதப்படுகிறார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றவர். தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் (South Asian Studies) துறையில் பேராசிரியராகவும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி குடும்பத்தினரின் பெருநிதியுடன் துவங்கப்பட்ட மூர்த்தி சம்ஸ்கிருத நூலகம் (Murty Sanskrit Library) என்ற நூல்வரிசையின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் 2010ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுத்துறையில் இவ்வளவு செல்வாக்குடன் திகழும் போலாக், சம்ஸ்கிருதம், இந்துப் பண்பாடு, இந்து சாஸ்திரங்கள் குறித்த மோசமான திரிபுகளையும், பிழையான சித்திரிப்புகளையுமே தனது ஆய்வுகளிலும்  நூல்களிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். 19ம் நூற்றாண்டில் மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட காலனிய வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றைத் திரித்து எழுதுவதற்கு ஒரு சட்டகத்தை உருவாக்கியதற்கு ஈடாக 21ம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை நவீன மேற்கத்திய அணுகுமுறைகளின்படி திரித்து எழுதுவதற்கான சட்டகங்களாக போலாக் கட்டமைக்கும் கருத்துகள் உள்ளன. அதனால் அவற்றை விமர்சிப்பது மிகவும் அவசியமானதாகிறது. சிறந்த இந்திய சிந்தனையாளரான ராஜீவ் மல்ஹோத்ரா இக்கட்டுரையில் போலாக்கின் அணுகுமுறையை ஆதாரபூர்வமாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
 
eb300119e205accfd1738144cd84963f_400x400
ராஜீவ் மல்ஹோத்ரா
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்?
ராஜிவ் மல்ஹோத்ரா
தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்
‘சம்ஸ்கிருதத்திற்கான போர்’ (Battle for Sanskrit) என்னும் எனது நூலில் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவியலின் (Indology) ஒருபிரிவின் கருத்தியல் நிலைப்பாடுகளைப் பற்றி விமர்சிக்க முயன்றுள்ளேன். கடும் உழைப்பாளி என்ற வகையில் போலாக் என்ற சம்ஸ்கிருத மொழியியல் ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சிச் சட்டகத்தை என்னால் ஏற்க இயலாது. ஹிந்து சமயத்தைத் தமது வாழ்வியல் நெறியாகப் பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப் போற்றும் சில ஆழ்ந்த கருத்துக்களை அவரது ஆராய்ச்சி அணுகுமுறை தகர்க்க முயல்கின்றது. ஹிந்துப் பாரம்பரியத்தின் ஆதாரக் கட்டமைப்பைத் தகர்த்துவிட அது முயல்கிறது. இந்தக் கட்டுரையில் போலாக்கின் கருத்துக்களில் முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்ல முனைகிறேன். கட்டுரையைப் படிக்கின்ற அன்பர்கள் எனது நூலை முழுமையாக வாசித்து, போலாக்கின் கருத்துகளையும் அதற்கு எதிரான எனது வாதங்களையும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
ஷெல்டன் போலாக்கின் சம்ஸ்கிருத ஆராய்ச்சி தோற்றுவித்திருக்கின்ற சிக்கல்களை, எனது நூல், ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சட்டகங்களின் (பார்வை) முரண்பாடாக, மோதலாக, போராட்டமாகக் காண்கிறது. முதலாவது, அகத்தவர் பார்வை; மற்றொன்று புறத்தவர் பார்வை. அகத்தவர் பார்வை என்பது வேத மரபின் உள்ளே அதன் வாழ்வியல் நெறியில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு வாழ்பவர்களுடையது. புறத்தியார் பார்வை அல்லது அன்னியர் நோக்கு என்பது வேதங்களை நிராகரிப்பவர்கள், புறக்கணிப்பவர்கள் மற்றும் ஒதுக்குவோர்களுடையது. இந்த அன்னிய அறிஞர்கள், சமூக அடக்குமுறை மற்றும் அரசியல் ஆதிக்கம் போன்ற மார்க்சிய, பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் வாயிலாக சம்ஸ்கிருத சாஸ்திரங்களை விமர்சிக்கின்றனர்.
ஷெல்டன் போலாக் மற்றும் பிற புறத்தவர்களுடைய பின்வரும் கருத்துக்களையும் ஆராய்ச்சி அணுகுமுறையையும் வேதப் பாரம்பரியத்தின் உள்ளே வாழ்கின்ற அகத்தவன் என்ற முறையில் நான் நிராகரிக்கின்றேன். .
·         புனிதமானது-புனிதமற்றது என்ற நிரந்தரமான வேறுபாட்டை, சம்ஸ்கிருதப் பாரம்பரியத்தினை ஆராய்வதற்கான அடிப்படையாகக் கொள்ளும் அவரது பிளவுண்ட ஆராய்ச்சி முறையியல்.
·         சிறுபான்மை இனக்குழுக்களை ஒடுக்குதல், இன அடக்குமுறை, வர்க்க முரண்பாடு, ஆண்-பெண் பாலினப் பேதம், பாரபட்சம் ஆகியவற்றை சம்ஸ்கிருதம் மற்றும் வேதத்தின் உள்ளீடாக இட்டுக் கட்டும் அவரது கருத்தியல் நிலைப்பாடு.
·         பாரத நாட்டின் வரலாறு, சிந்தனை ஆகியவற்றிலிருந்து அதன் மிக முக்கியமான உந்துவிசையாக இயங்கும் வாய்மொழி மரபுகளைப் புறந்தள்ளுதல், ஒதுக்குதல், கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போக்கு.
·         காவிய, காப்பிய இலக்கிய நடையை அரசியலாகக் காணும் நோக்கு.
·         


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா
Permalink  
 


நமது சாஸ்திரங்களின் நல்ல கூறுகளை, நற்பயன்களை முழுமையாக நிராகரிக்கும் போக்கு.
·         சம்ஸ்கிருதத்தையும் இதர பாரதிய மொழிகளையும் வேறுவேறு, தனித்தனி என்று பிளவுபடுத்தும் நாடகீயப் பாங்கு.
·         ஹிந்துசமயம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றிடையே உள்ள தொடர்ச்சியை மறுத்து, அவை வேறுவேறான தனியன்கள் என்று பிளவுண்டாக்கும் முயற்சி.
·         இராமாயணத்தைச் சமூக அடக்குமுறை என்பதோடு, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி ஒன்று திரட்டும் அரசியல் முயற்சி அது என்று பழிக்கும் போக்கு.
 
ஆன்மிகம் (பாரமார்த்திகம்) மற்றும் லௌகிகம் (வியவகாரிகம்) ஆகிய இரண்டும் வேறுவேறான, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, எதிரான, முரணான தளங்கள் என்பது போலாக்கின் ஆராய்ச்சிமுறையின் அடிப்படையான அனுமானமாக, நம்பிக்கையாக, ஆதார சுருதியாக விளங்குகிறது.
புலன் கடந்த அனுபூதியே வேத மரபின் முக்கியப் பிரமாணமாக ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்தப் புலன் கடந்த ஆழ்ந்த அனுபவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை, படிநிலை சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்பதாக போலாக் கூறுகின்றார்.
பாரத நாட்டின் வரலாற்றின் முக்கிய முன்நகர்வுகள் எல்லாவற்றையும், அது தனது பாரமார்த்திக, வேதநெறி சார்ந்த அடிப்படைகளில் இருந்து  விலகிச்செல்லும் முயற்சியின் விளைவுகளாகவே அவர் காண்கிறார். சம்ஸ்கிருதத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வேதரிஷிகள் தர்க்கபூர்வமாக உலகைப் புரிந்துகொள்ள முயலாமல் ஆன்மிகத்தில் ஒதுங்கி தனித்திருந்த காலமாக அவர் புனைந்துரைக்கின்றார். 
 “கடவுளரின் மொழியும், மனிதரின் உலகும்: நவீனகாலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சம்ஸ்கிருதம், பண்பாடு, அதிகாரம்” (The Language of the Gods and the World of Men; Sanskrit, Culture and Power in Premodern India) என்ற தனது மிகமுக்கியமான நூலில், போலாக் இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஷெல்டன் போலாக்கை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயல்பவர்கள் இந்த நூலை அவசியம் வாசிக்கவேண்டும்.
பொருளற்ற சடங்குகளும் மறுமையைப் பற்றிய இறுகிய மனப்பிடிப்பும் கொண்டதாக பிராமண மேட்டிமைத்தனத்தை போலாக் உருவகிக்கின்றார். சம்ஸ்கிருதம் அத்தகைய பிராமண மேட்டிமையின் பிடியிலிருந்து விலகி அரசர்களின் ஆதரவைப் பெறுவதற்காக உலகியலுக்கு நகர்வதை ஒரு முக்கியமான வரலாற்று முன்னகர்வாகப் புனைகிறார். அரசர்களின் அதிகாரத்தினை நிலைநிறுத்திக்கொள்ளும் ஆயுதமாக உருமாற்றமடைந்த சம்ஸ்கிருத மொழி, பிற்போக்குத்தனமானதாகவும், கேலிக்குறியதாகவும் மாறிவிடுகிறது என்றும் அவர் கூறுகின்றார் . சமூக அநீதி, அரசியல் உள்குத்து, ஊழல்கள் ஆகியவற்றால் அரசுகள் சீர்குலைவதால் அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் கருவியான சம்ஸ்கிருதம், பிற்போக்கானதாக உருமாற்றம் அடைகின்றது என்று போலாக் கருதுகிறார்.
 
அறிவியல்பூர்வமாக ஆய்ந்து பரிசோதிக்கமுடியாது என்ற காரணத்தைக்கூறி, பாரமார்த்திகம் என்னும் வாழ்வின் ஆன்மிகப் பரிமாணத்தை மிக எளிதாகப் புறந்தள்ளிவிடுகிறார் போலாக். வேதம் கூறும் ஆன்மிகச் சாதனங்கள், பயிற்சிகள் எதையும் பயன்படுத்திப் பார்த்ததாக அவர் கூறிக்கொள்வதில்லை. அவரது ஆராய்ச்சிநோக்கும் வேதப் பாரம்பரியத்தின் அணுகுமுறையாக இல்லை. தன்னை மதச்சார்பற்ற ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொள்ளுவதால் நம்முடைய மரபுக்கு புறத்தவராக அன்னியராகிறார். இதன் விளைவாக சம்ஸ்கிருத மொழி மற்றும் நூல்களை ஆராய்வதில் ஆன்மிக நோக்கு புறந்தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு மதச்சார்பற்ற அன்னிய அணுகுமுறை முதன்மைப்படுத்தப்படுகிறது.
 
சம்ஸ்கிருத மொழியின் வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிய மரபார்ந்த அகத்தவர்களின் பார்வை ஆரம்ப முதலே போலாக்கால் புறக்கணித்து ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம், ஆன்மிகமல்லாதது (மதச்சார்புள்ளது மற்றும் மதச்சார்பற்றது) என்று பிளவுபடுத்தி, மதச்சார்புள்ளவற்றை ஒதுக்கித்தள்ளும் ஷெல்டன் போலாக்கின் ஆராய்ச்சி அணுகுமுறையால், மரபில் ஊறித் திளைத்த அகத்தவர் பார்வை புறந்தள்ளப்படுகிறது. அவரது இந்த மதச்சார்பற்ற ஆராய்ச்சி அணுகுமுறையை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்தியாவில் சமூகநீதியின் பெயரால் சம்ஸ்கிருதத்தைத் தாக்கி அழிக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இவரது சம்ஸ்கிருதம் பற்றிய கருத்துக்களும் ஆராய்ச்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.
 
வெளிப்படையாகவே தனது நூல்களில் இருந்து தனக்குக் கிடைக்கும் அரசியல் பயங்களைப் பற்றியும் போலாக் சொல்லியிருக்கிறார். சம்ஸ்கிருதத்தை ஒரு செத்த மொழி என்று கடந்த காலத்திற்குப் பின்தள்ளி, பிற்போக்குச் சிந்தனைகளின் தோற்றுவாயாக அது இலங்குவதைக் காட்டுவது ஒன்றே இந்தியாவில் சமூக நீதியை ஏற்படுத்துவதற்கான வழி என அவர் கருதுகிறார். போலாக்கின் இந்தக் கருத்து எனது இரண்டாவது மறுப்பிற்கு இட்டுச் செல்கிறது. சம்ஸ்கிருதத்தில் பெண்கள், சிறுபான்மையினர் போன்றவர்களை ஒடுக்கும் கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டே பொதிந்திருப்பதால் அதனைப் புத்துயிர்க்கச் செய்வதும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் பிற்போக்கான வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தவே பயன்படும் என்ற போலாக்கின் கருத்தையும் மறுக்கின்றேன்.
போலாக் எழுதுகிறார்:
“சம்ஸ்கிருதம் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியாவில் ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும். மேலும் நவீன இந்திய மக்களில் மிகப் பிற்போக்குத்தனமான வகுப்புவாதம் பேசும் பிரிவினரால் அது மீண்டும் கையகப்படுத்தப்பட்டு அதற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.” (சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 140).
சமூக ஒடுக்குதலுக்கு சம்ஸ்கிருதம் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர் கருதுகின்றார். அவர் சொல்கிறார்.
சம்ஸ்கிருதத்தில் பதிந்துள்ள மரபார்ந்த ஆதிக்கம் என்பது கடந்த காலவரலாறு மட்டுமல்ல என்பது உறுதியாகத் தெரிகிறது. பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் சமூகப்பொருளாதாரக் கட்டமைப்பினை வலுவிழக்கச் செய்ய சட்டங்கள் பல இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சம்ஸ்கிருதத்தின் கடந்தகால வரலாறு ஆழ்ந்து புரிந்துகொள்ளப்படாததால், சரியாக விமர்சிக்கப்படாததால், மரபார்ந்த ஆதிக்கம் தனது பல்வேறு கோர வடிவங்களோடு இன்னமும் வலிமையாகவே இருக்கிறது. இருபிறப்பாளர் வர்ணத்தவர்களின் முதலாளித்துவச் சுரண்டல், மரபார்ந்த அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துகின்றது.” (சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 140).
ஆனால் அறிஞர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்று போலாக் புலம்புகிறார். எனவே இந்தியப் பாரம்பரியத்தில், பண்பாட்டில் காணப்படும் ஆதிக்கம், அடக்குமுறையின் பல்வேறு வடிவங்களைத் தோண்டித்துருவி, தேடிக்கண்டறிந்து, பகுத்தாய்ந்து, தனிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதே இன்றைய இந்தியவியலின் தலையாய நோக்கம் என்று அவர் கருதுகிறார். கடந்தகாலங்களில் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சமூகக் கட்டுப்பாடுகளுக்கு நவீன விளக்கங்களைக் கொடுப்பது அவரது ஆய்வின் முதன்மையான நோக்கமாக அமைந்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தைக் கற்கும் வாய்ப்பு, சமூகத்தின் உயர் படிநிலைகளில் இருந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு சம்ஸ்கிருதத்தின் மீதிருந்த ஏகபோக, முற்றுரிமை பௌத்தர்களால் அகற்றப்பட்டது என்றாலும், அது அரசியல் அதிகாரத்திற்கான கருவியாக, ஆயுதமாகத் தொடர்ந்தது என்கிறார் போலாக். பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், பண்பாட்டுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இயைவை உருவாக்குவதற்கும் சம்ஸ்கிருதத்தை அரசர்கள் பயன்படுத்தினர், யார் எதற்காக சம்ஸ்கிருதத்தைக் கற்கவேண்டும் என்பதை அரசர்களே முடிவு செய்தனர் என்கிறார் அவர். இந்தக் கருத்தை இன்னும் சற்றே விரிவாக கீழ்க்கண்டவாறு அவர் சொல்கிறார்.
“அனைவரும் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ள மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கவில்லை. மிகச்சிலரே அதனைப் பயன்படுத்த வல்லவர்களாக இருந்தனர். சிலர் அதைப் பயன்படுத்தினர், சிலர் அதைப் பயன்படுத்தவில்லை என்பதல்ல, மாறாக, சிலருக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தும் உரிமை இருந்தது, பெரும்பான்மையான மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது”. (சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 140). 
போலாக் இந்த ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் கட்டுப்பாடுகளின் தோற்றுவாயே ஆரியரின் வேதவாழ்வியல் என்று கருதுகிறார்.
அவர் கூறுகிறார்:
“சம்ஸ்கிருதம் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் தளம், தம்மை ஆரியர் என்று அழைத்துக்கொண்ட அந்த மொழியைப் பேசுகின்ற சமூகத்தின் சடங்கு மற்றும் வழிபாடு முதலானவை என்பதால், அவற்றிலே பங்கேற்பதற்கான நெறிமுறைகள் தடைகளாக உருவாக்கப்பட்டன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.” (சம்ஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டப்பட்டுள்ளது பக். 142).    
வேத இலக்கியத்தின் மீதான அவரது வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு மற்றும் மேற்கத்திய மொழி வரலாற்று ஆய்வுமுறையின் பயன்பாடு ஆகியவற்றின் கலவையாக அவரது ஆராய்ச்சி அணுகுமுறை மற்றும் கருத்தியல், அரசியல் திட்டம் அமைந்திருக்கிறது. வாய்மொழி இலக்கிய மரபை வரலாற்றில் இருந்து ஒதுக்குகிற அவரது போக்குக்கு இந்த அணுகுமுறை இட்டுச் செல்கிறது. தற்காலத்தில் தோன்றி பெருகி வரும் சமூக அரசியல் விழிப்புணர்வை மரத்துப் போகச்செய்யும் கடந்தகாலத்தின் அடிமைப்படுத்தும் போக்காக வேத மந்திரங்களை உச்சரித்தல், சடங்குகளை மேற்கொள்ளுதல், நெடிய, சிக்கலான நூல்களை மனப்பாடம் செய்தல் ஆகிய முறைகளை அவர் காண்கின்றார். மேலும் பௌத்த சமயம் வேதப் பாரம்பரியத்தினை “குறைகளைக் களைந்து மேம்படுத்தும் வகையில் அமைந்த தீவிரமான முயற்சி” என்ற முடிவிற்கு அவரை இந்த நிலைப்பாடு இட்டுச் செல்கிறது.
பிராமணர்களின் சம்ஸ்கிருதத்தின் மீதான முற்றுரிமையின் இரும்புப் பிடியினை தகர்த்தும், காவியம் போன்ற புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கியும் பௌத்தம் வேதப் பாரம்பரியத்தில் ஒரு தீவிரத் தாக்குதல் மூலம் மாற்றத்தினை முன்னெடுத்ததாகவும் அவர் கருதுகிறார். மொழி ஆராய்ச்சியின்அறிவார்ந்த பயனாக காவியம் போன்ற இலக்கிய வடிவங்களுக்கும், மகத்தான பண்டைய சம்ஸ்கிருத இலக்கண நூல்களுக்கும் புதிய விளக்கங்களை வழங்குவது என்றும் அவர் கூறுகின்றார். ஏனெனில் இந்த இலக்கிய வடிவங்களும் சரி, இலக்கண நூல்களும் சரி, அரசுகளின் அதிகாரத்துக்கும், கௌரவத்துக்கும், புகழுக்கும் எவ்வாறு முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தின, அவற்றைப் பெருக்கின என்பதைப் பற்றியெல்லாம் அறியப் பயன்படுகின்றன. அதுமட்டுமன்று.  சம்ஸ்கிருதம் எவ்வாறு பெண்கள், சிறுபான்மையினர், வெளியார் ஆகியோரை அடக்கிவைக்கும் சமூகக் கருத்துக்களை தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்த நிலைப்பாட்டிலிருந்து போலாக் சம்ஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் மொழி என்றும் அது சாமானிய மக்கள் பேசிய மொழிகளுக்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது முரண்பட்டது, எதிரானது என்ற முடிவினையும் அடைகிறார்.
பாரத நாட்டின் மகத்தான வீரகாவியங்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களை மற்ற (வேறுபட்ட) மக்களை வன்முறையின் மூலம் ஒடுக்குவதை நியாயப்படுத்தும் இலக்கியங்களாக போலாக் கட்டுரைக்கின்றார். சம்ஸ்கிருதத்தில் உள்ள சாஸ்திரங்களில் காணப்படும் அளப்பரிய, உள்ளார்ந்த ஞானத்தையும், காலந்தோறும் புதிய கருத்துக்களை, சிந்தனைகளை உருவாக்குவதற்கு அதில் காணப்படும் சாத்தியக்கூறுகளையும் மதித்துப் போற்றுகின்றவர்களுக்கு போலாக்கின் மேற்கத்தியப் பூதக்கண்ணாடிப் பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள சாஸ்திரங்களைப் பற்றிய பிம்பம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
சாஸ்திரங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வேத நெறிமுறைகளும், பிரபஞ்சவியல் புரிதல்களும், ஆன்மிக ஞானமும் புதியனவற்றைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன என்று போலாக் கருதுகிறார். நவீன காலத்துக்கு முந்தைய, காலாவதியாகிப்போன சட்டகங்களுக்குள் அவை சிறைப்பட்டிருப்பதால், மறுமலர்ச்சிக் காலத்தில் மேற்குலகில் தோன்றியது போன்ற சுதந்திர சிந்தனைகளை உருவாக்க அவற்றினுள் வாய்ப்பில்லை என்றும் அவர் கருதுகிறார். மொழியியலைப் பற்றிய பிரபலமான சம்ஸ்கிருத சாஸ்திரங்களைப் பற்றி போலாக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். .
எனினும் இந்திய நாகரிகம், நெறிமுறைகள் வழியாக மனித நடத்தையை வழி நடத்துவதன் முக்கியத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேதச் சடங்குகளின் கண்டிப்பான நெறிமுறைகளில் இருந்து உருவான வாழ்வியல் நோக்கினால் மனித நடத்தைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சாஸ்திரங்கள் எனப்படும் விதி நூல்கள் வேதநெறி சார்ந்த விழாக்களில் சடங்குகளை நடத்துவதற்கான கடுமையான, கண்டிப்பான விதிமுறைகள் வகுத்திருக்கின்றன. பிராமணர்களும், லௌகிக வாழ்வும், ஒருவகையான சடங்கு மயமாதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்திருக்கின்றன. அதன் வாயிலாக எல்லாவிதமான வாழ்வியல் நடைமுறைகளும் முக்கியமான நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படவேண்டும் என்று சாஸ்திர நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாஸ்திரம் என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்படும் இலக்கணங்கள், ஒட்டுமொத்த இந்திய நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவும், அதன் அறிவு வரலாற்றில் காணப்படும் சிக்கல்களிலும் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றன.
 
இதுபோன்ற போலாக்கின் கருத்துக்களின் உண்மையான பொருளை நாம் புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஏனென்றால் ஆரம்பத்தில் பாரதப் பாரம்பரியத்தைப் புகழ்வது போல, அதன் மிக அழகான கூறு சாஸ்திரம் என்று அவர் சொல்கிறார். பின்னர் அதே மிக அழகிய நூல்கள் சிக்கல்களுக்குக் காரணமாக மூலமாகக் கட்டுரைக்கப்படுகின்றன. பாரத தேசத்தின், நவீனத்துக்கு முந்தைய, விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிற, அறிவியலுக்கு முரணான, பயனற்ற எல்லாச் சிந்தனைகளுக்கும் தோற்றுவாயாக சாஸ்திரங்களை அவர் புனைந்துரைக்கின்றார்.
 
ஷெல்டன் போலாக் மேற்கத்திய மதச்சார்பற்ற வரலாற்று அனுபவத்தைப் பற்றிய ஒருவகைப் புரிதலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முனைவது தெளிவாகத் தெரிகிறது. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் சர்ச்சும், கிறிஸ்தவ நம்பிக்கைகளும் மக்களை மழுங்கடித்து அடக்கி ஒடுக்கும் சக்திகளாக, அரசியல் ஆயுதங்களாக இருந்தன. மறுமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் புரட்சியினால் அந்தச் சக்திகளின் அடக்குமுறையிலிருந்து மக்கள் விடுதலை பெற்றுச் சுதந்திர சிந்தனையைப் பெற்றனர் என்பது ஐரோப்பிய வரலாறு பற்றிய ஒரு முக்கியமான புரிதல் ஆகும். இதை உண்மை என்று நம்பும் போலாக்குக்கு, தற்போது சம்ஸ்கிருதத்தை நடைமுறையில் புழங்கும் பேச்சு மொழியாக்க, அதன் மறுமலர்ச்சிக்காகச் செய்யப்படும் முயற்சிகளை எதிர்ப்பது மிக இயல்பானதாகவே அமைந்திருக்கின்றது. சம்ஸ்கிருதத்தின் இந்த மறுமலர்ச்சி காவி மயமாக்குதலின் ஒரு பகுதியாகவே அவருக்குத் தெரிகிறது. இந்தியர்களைப் புரியாத சிந்தனைப்போக்கிலே, அதன் கடந்த கால வரலாற்றிலே அடைத்துவைக்கும் முயற்சியின் அரசியல் ஆயுதமாகவும் சம்ஸ்கிருத மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் அவருக்குக் காட்சியளிக்கின்றன.
மேற்கண்டவற்றை ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்க இந்தியவியலாளரின் முக்கியமான கருத்தியல் நிலைப்பாடுகள் என்று நான் கருதுகிறேன். மிகச்சுருக்கமாக அவற்றை மேலே சொல்லியிருக்கின்றேன். நான் இவற்றையெல்லாம் விரிவாக ‘சம்ஸ்கிருதத்திற்கான போர்’ என்ற எனது நூலிலே விவரித்திருப்பதோடு, அவற்றை நிராகரிக்கவும் செய்திருக்கின்றேன்.
நிறைவாக நான் சொல்வது என்னவென்றால் ஷெல்டன் போலாக்கின் சம்ஸ்கிருதம் பற்றிய பல்வேறு கருத்துக்ககளை நாம் எளிதாக மறுக்கவோ, நிராகரிக்கவோ அல்லது அபத்தம் என்று புறந்தள்ளிவிடுவதோ சாத்தியமன்று. அவர் சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை படைத்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மொழியின் நெடிய வரலாற்றையும், அதில் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய மகத்தான இலக்கியங்களைப் பற்றிய புரிந்துணர்வையும் கொண்டவராக இருக்கிறார். நமது பாரம்பரியத்தைப் பற்றிய அவரது தவறான புரிதலுக்கு எதிராக நின்று, நமது பாரம்பரியத்தின் மேன்மையை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள், ஆழ்ந்த மொழிப்புலமை, தர்க்கப்பூர்வமாக விவாதிக்கும் திறன் ஆகியவற்றோடு, பாரத நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கறையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும், ஆனால் அதற்காக அவர்கள் மேற்கத்தியச் சட்டகங்களையோ, அதன் மதச்சார்பற்ற கோட்பாடுகளையோ பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய உயர்கல்வி நிறுவனங்கள் விதித்துள்ள நியதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம்கூட அவர்களுக்குக் கிடையாது. நமது பாரம்பரியத்தினை, பண்பாட்டினை, நாகரிகத்தினைக் காப்பதற்கு, அவர்களுக்கு போதிய வசதிகளும் வாய்ப்புகளும் உள்நாட்டிலேயே இருக்கின்றன. வேதப் பாரம்பரியத்தில் வியவஹாரிகம் (லௌகிகம்) மற்றும் பாரமார்த்திகம் (ஆன்மிகம்) சார்ந்த அறிவுக்கருவூலங்கள் பலப்பல நிறைந்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றில் உள்ள உண்மைகளை உணர்வதற்கும் ஒருவர் தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய ஆழ்ந்த புரிதல் உடையவர்களால்தான் மிக வலுவான ஆதாரங்களோடு மிகச்சிறப்பாக ஷெல்டன் போலாக்கை முழுமையாக நிராகரிக்கமுடியும்.  
ஆங்கில மூலம்: http://battleforsanskrit.com/insiders-versus-outsiders/


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard