New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி
Permalink  
 


பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி: இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது? அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன? சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போராடி தோற்றபடியே இருந்தனர் உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள் ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் இருக்காது. தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும் அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர். வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த பிராமணர்களுக்கும் வெள்ளையரின் நிலக்கிழார்களாக இருந்த வடுகர்களுக்கும் இடையே போட்டியும் கசப்பும் இருந்தது. ஈவேரா அவரது கட்டுரை ஒன்றில் காவலதிகாரியாக ‘நிமிர்வும் மிடுக்கும் கொண்ட' நாயிடுவுக்குப் பதிலாக 'மீசையில்லாத பார்ப்பனன்' வரும் நிலையை வெள்ளையன் உருவாக்கிவிட்டதை எண்ணி வருந்தி எழுதியிருக்கிறார். இதுதான் அக்காலத்தின் முக்கியமான முரண். இதில் மெல்லமெல்ல பிராமணர் கை ஓங்கி வந்தது. மறுபக்கம் ஜமீன்தாரிமுறை ஒழிப்பால் தெலுங்கர்களின் ஆதிக்கம் சரிந்தது. சுதந்திரப்போராட்டம் வந்தபோது பிராமணர் மேலும் அதிகாரம் பெற்றனர். அதற்கு எதிரான வடுகர்களின் கசப்பே திராவிட இயக்கம். அக்கசப்பை அவர்களிடம் பெருக்கி இயக்கம் கண்டவர்கள் மலபார் நாயர்கள். திராவிடர் என்ற சொல்லை ஈவேரா எடுத்துக்கொண்டது தெலுங்கர்களை உள்ளடக்கும்பொருட்டே. ஏனென்றால் அதற்கு முன்னரே தமிழர் என்ற சொல்லையே மிகப்பரவலாக அன்றைய தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் கையாண்டு வந்தது வரதராஜுலு நாயிடு தலைமையில் ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள்கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது. இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு. சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு ‘லீனா தெலுங்கரா" என்றேன். "இல்லை சார் தலித் என்றார்கள்" என்றார். ‘அது அவர் உருவாக்கும் பிம்பம். தலித் இத்தனை பிராமண வெறுப்பைக் கக்கமாட்டார். கண்டிப்பாக இந்தம்மா தெலுங்குதான்' என்றேன். அவர் அரைமணிநேரத்தில் கூப்பிட்டு "எப்டிசார் சொன்னீங்க? உண்மைதான்' என்றார். "தமிழகத்தின் பிராமணக்காழ்ப்பு அரசியலின் பின்புலத்தை அறிந்தால் இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை" என்றேன். இந்த அதிகார அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக தலித்துக்கள் இன்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த அரசியலை அவர்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிராமண வெறுப்பின் பண்பாட்டுப் பின்னணி: இந்தியாவில் பிராமண மறுப்பு என்றும் இருக்கும். அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில் இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பது இயல்பானதே பிராமணிய மதிப்பீடுகளை நிராகரிக்காமல் சென்ற நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை நாம் கடக்க முடியாது. கொள்கைத்தளத்தில் இது மிக இன்றியமையாதது. மிகத்தீவிரமாக, ஈவேராவை விட பலமடங்கு முழுமையுடன் அதைச் செய்தவர் நாராயணகுரு. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் அவ்வகையில் பிராமண எதிர்ப்பாளர்களே. ஆனால் பிராமண எதிர்ப்பு வேறு பிராமணக் காழ்ப்பு வேறு. பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர்களால் முன்வைக்கப்பட்ட சென்றகால நிலப்பிரபுத்துவ யுக மதிப்பீடுகளை தர்க்கபூர்வமாக மறுத்து உடைப்பது. அவர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளைக் கடப்பது. அவர்களின் மனநிலைகளை நிராகரிப்பது. அதை மிகத்தீவிரமாக நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களில் காணலாம். என் முன்னுதாரணம் இந்த மரபே. பண்டித அயோத்திதாசரின் எழுத்துக்களில் உள்ளதும் பிராமண நிராகரிப்பே. பிராமணக் காழ்ப்பு என்பது அது அல்ல.அது கண்மூடித்தனமான வசைபாடல். அவமதித்தல். சிறுமை செய்தல். அதற்கு வரலாற்றுணர்வோ வாசிப்போ சிந்தனையோ தேவையில்லை. .ஈவேரா முன்வைத்தது அதைத்தான். அதன் முதன்மை நோக்கம் தன் சொந்த சாதிப்பற்றை மறைப்பதுதான். நேற்றைய சாதியமைப்பில் நடுப்பகுதியில் இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிராமணனை கூண்டில் ஏற்றி தப்பிப்பது மட்டும்தான். இந்து மெய்ஞான மரபுக்குள்ளேயே பிராமண எதிர்ப்பு என்றும் இருந்தது. பிராமணர்கள் வைதிகமரபின் குரல்களாகவே பெரும்பாலும் ஒலித்தனர். அவைதிக மரபுகள் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டன. அது முற்றிலும் வேறு ஒரு தளம். இன்றைய நிலையில் சாதிப்பற்று பற்றிய குற்றச்சாட்டுகளை பிராமணர்கள் மேல் சுமத்துபவர்கள் முதலில் தங்கள் சொந்தச் சாதிப்பற்றை அறிக்கையிட வேண்டும். சாதிக்கு எதிரான எந்தக் கலகமும் சொந்தச் சாதியின் சாதிவெறிக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். இத்தனை சாதி எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கும் தமிழ்ச்சூழலில் இடைநிலைச்சாதியில் இருந்து அச்சாதியை விமர்சனம் செய்து ஒரு குரல் எழுவதை நம்மால் காணமுடிவதில்லை. ராஜாஜியை கிழித்து தோரணம் கட்டலாம். முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஒரு விமர்சனத்தை தமிழகத்தில் எழுதிவிடமுடியாது. இதுவே இங்குள்ள சாதி எதிர்ப்பின் உண்மையான நிலை பாலைவன மக்கள் ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில் ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிடித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல் ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின் அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில் விடுவார்கள். அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள் ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்கள். சாதி வெறியில் ஊறிய தமிழகம், அப்படிக் கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள். அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள் பிராமணர்களும் சாதிமுறையும்: இந்த வெறுப்பை பிராமணர்கள் மேல் பிறர் மேல் காட்ட என்ன காரணம் சொல்லப்படுகிறது? அவர்கள் சாதிமேட்டிமை கொண்டவர்கள். சாதிமுறையின் லாபங்களை அனுபவித்தவர்கள்.சாதியை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அவமதிப்பது ‘சாமிக்கு நேத்திக்கடன்'. [ராமசாமியும் சாமியே] சாதியைப்பற்றி அம்பேத்கர் முதல் கோசாம்பி வரை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர். இன்று பக்கம் பக்கமாக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கின்றன.சாதியை பிராமணன் உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச் சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான் என்பதுபோன்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்படி ஒருவர் சொல்கிறார் என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம் மட்டுமே சாதிமுறை இங்கிருந்த பழங்குடிச் சமூக அமைப்பில் இருந்து மெல்லமெல்ல உருவாகி வந்தது. சாதிகள் என்பவை பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பு. ஆகவே தான் ஒவ்வொரு சாதியும் உபசாதிகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்துகொண்டே செல்கிறது. இச்சாதிபேதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம் கட்டிஎழுப்பப்பட்டது. அந்தச் சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது அந்த நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின் லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்றாகவேண்டும். ஆனால் அவர்கள் மட்டும்தான் அதற்குப் பொறுப்பா என்ன? இங்கே நாடாண்டவர்கள், நிலத்தை உரிமைகொண்டவர்கள், வணிகம் செய்து பொருள்குவித்தவர்கள் எவ்வகையிலும்பொறுப்பில்லையா? அவர்களெல்லாம் பிராமணர்களை கைகாட்டி தப்பித்துக்கொள்லலாமா? இங்குள்ள சாதிமுறை நேற்றைய சமூகப் - பொருளியல் அமைப்பின் உருவாக்கம். இன்று அது சமூக ரீதியாக்ப் பொருளிழந்துவிட்டது.அதன் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றுக்கு மட்டுமே இன்று ஏதேனும் மதிப்பு உள்ளது. அது நேற்றைய யதார்த்தம். நேற்றை இன்று சுமந்தலையவேண்டியதில்லை. நவீன மனிதன் அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தாகவேண்டும். அந்த மனநிலைகளை ஒவ்வொருவரும் உதறியாகவேண்டும் அந்த அமைப்பு கொடுமைகளுக்காக நாம் இன்று குற்றவுணர்வு கொண்டாகவேண்டும். எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களைவிடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாகவேண்டிய குற்றவுணர்ச்சி இது. இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மனநிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும். இதை சிலநாட்கள் முன் எழுதியபோது எனக்கு வந்த கடிதங்கள் என்னை பிராமணன் என வசைபாடின. அதாவது இங்குள்ள பிராமணரல்லாத உயர்சாதிகள் இடைநிலைச் சாதிகள் எவ்வகையிலும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையத் தயாராக இல்லை. அப்பொறுப்பை ஏற்க அவர்களுக்கு மனமில்லை. ஏனென்றால் உள்ளூர அவர்கள் அச்சாதிய மனநிலைகளை தக்கவைக்க விழைகிறார்கள். தன் மண்ணில் இன்னமும் இரட்டைக்குவளை இருப்பதை கண்டு கண்மூடிக்கொள்ளும் கவுண்டரும் நாயக்கரும் நாயிடுவும் ‘பெரியார் மண்ணுடா!' என்று சொல்லி பிராமணன் மேல் பாய்வதைப்போல பச்சை அயோக்கியத்தனம் வேறில்லை. அதைத்தான் காண்கிறோம். ‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா' என்று ஒருவர் கேட்டிருந்தார். "இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை' என்று நான் பதில் சொன்னேன். பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது. நான் கண்ட பிராமணர்களில் பாதிப்பேர் ஓட்டல்களில் இரவுபகலாக சமையல்வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல்கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்' என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான். ஆனால் வியர்த்து ஒழுக வெலைசெய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை. பிராமணக் காழ்ப்பை சாதிய எதிர்ப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துவது இங்குள்ள இடைநிலைச்சாதியின் சாதிவெறியர்கள் கொள்ளும் ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. ஒவ்வொருவருக்கு உள்ளூர உண்மை தெரியும். பிராமணர்களின் எதிர்மனநிலை: இன்று பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்களாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கியதன் குற்றவுணர்ச்சி மறைந்து ஒடுக்கப்படுவதன் ஆற்றாமையும் சினமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. சவால்விடுவதுபோல சாதிச்சங்கங்களை அமைக்கிறார்கள். ‘பிராமண சங்க அடலேறே' என்று ஒருவருக்கு வினைல் போர்டு வைத்திருப்பதை பார்வதிபுரத்தில் பார்த்தேன். இங்கு நிகழும் கீழ்த்தரமான வெறுப்பரசியல் அவர்களை எதிர்ப்பரசியலுக்குக் கொண்டுசெல்கிறது. மெல்லமெல்ல அவர்களையும் வெறுப்பால் நிறைக்கிறது. தமிழர்நாகரீகம் என்கிறோம். பண்பாடு என்கிறோம். நாம் ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுப்பின் கீழ்மை நம் பண்பாட்டின் மாபெரும் இழுக்குகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும். நவீன மனிதன் ஒருநிலையிலும் ஒரு மக்கள்திரளை ஒட்டுமொத்தமாக வெறுக்கமாட்டான். ஒருவரையும் அவர்களின் அடையாளம் காரணமாக வெறுக்கமாட்டான். கீழ்த்தர இனவெறி, சாதிவெறிதான் இது. இதையே முற்போக்கு என்று எண்ணிக்கொள்ள நம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள் பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது. வெறுப்பை அன்றி எதையுமே உணரமுடியாத மனங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும் கொண்டவர்களை நோக்கியே பேசுகிறேன். இக்கீழ்மையை விட்டுவெளியேறாதவரை நாம் நாகரீக மனிதர்களே அல்ல. இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும். இவ்வாறு ஜெயமோகன் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/writer-jeyamohan-blames-periyar-existing-caste-differences-217554.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்,

நானறிந்த ஈழத்தமிழ் நண்பர்கள் அனைவருமே தமிழகத் தமிழர்களைவிட அறிவுத்திறன் கொண்டவர்கள், வாசிப்பு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் சீமான் போன்ற ஒருவரை எப்படி மேடையேற்றி அமர்ந்து கேட்டு ரசிக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். இத்தனை கல்வியும் ஆர்வமும் இருந்தும் ஈழத்தில் இருந்து ஒரு முதன்மையான அறிவுலகச் சாதனை ஏன் நிகழவில்லை என எண்ணியிருக்கிறேன் [தளையசிங்கம் என்னும் தொடக்கம் தவிர்த்து]

அதற்கான பதில் உங்கள் கடிதத்தில் உள்ளது என்று பட்டது. ஆறுமுகநாவலர் முதல் கதிரைவேற்பிள்ளை வழியாக இன்று வரை தொடரும் ஒரு மனநிலை. அதை எதிர்மறை மனநிலை என்று சொல்லலாம். ஏதோ ஓரு தாழ்வுணர்ச்சி காரணமாக தன்னை ஒரு பீடத்தில் வைத்துக்கொண்டு எளியநக்கல்கள் வழியாகக் கடந்துசெல்வது. ஓர் அறிவியக்கத்தை நிகழ்த்துவதற்கான நீடித்த பொறுமையை, உழைப்பை அளிக்காமல் வசதியான கட்டங்களுக்குள் கம்பு சுற்றுவது.

சம்ஸ்கிருதம் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும், மகாபாரத காலகட்டத்துக்கு முன்னர், நாலைந்துவகை குறுமொழிகளாகப் பேசப்பட்டது. பின்பு இந்து மதத்தின் நாடளாவிய அறிவியக்கத்துக்காக அதை தரப்படுத்தினார்கள். அதன்பின்னரே அது சம்ஸ்கிருதம் என அழைக்கப்பட்டது. என்றும் அது அறிஞர்களின் மொழியே. மூலநூல்களை வாசிப்பவர்களுக்கு மட்டும் உரிய மொழியே. அதை ஒருவர் அன்றாடப்பேச்சுக்கு பயன்படுத்த முடியாது.

ஆனால் அதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வருடங்களாக தொடர்ச்சியாக ஓர் அறிவியக்கம் நிகழ்ந்துள்ளது. தத்துவம், இலக்கியம் மற்றும் மதநூல்கள் அதில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அறிஞர்களின் நூல்கள் அதில் உள்ளன. அது வைதிக மரபுக்கான மொழி அல்ல. இணையாகவே அதில் பிற மரபுகளின் நூல்களும் உள்ளன. நாத்திக மரபுகள், அவைதிக மரபுகள் மற்றும் சிற்பக்கலை, மருத்துவம் போன்ற நூல்கள்.

இன்று சம்ஸ்கிருதம் பண்டைய இந்தியாவின் ஞானக்களஞ்சியத்தின் மொழி. அத்துடன் அந்த ஞானக்களஞ்சியம் தொடர்ந்து இந்தியாவின் பிறமொழிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்தியாவின் எந்த ஒரு மொழி இலக்கியத்தை அணுகி அறியவேண்டுமென்றாலும் அதற்கு சம்ஸ்கிருதம் தேவை. சம்ஸ்கிருதம் ஓர் அறிவியக்க மொழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்குமென்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு சமஸ்கிருத எதிர்ப்போ மறுப்போ இருக்கலாம். அப்படியென்றால் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. அந்த பெரும் மரபை இப்படி முச்சந்தி ‘காமெடிகள்’ மூலம் கடந்துசெல்லவும் முடியாது. ஓர் அறிவியக்கத்தை இணையான ஆற்றல் கொண்ட இன்னொரு அறிவியக்கம் மூலமே எதிர்கொள்ளமுடியும்.

சம்ஸ்கிருதம் அழியுமென்றே வைத்துக்கொள்வோம். அதில் என்ன குதூகலம்? தமிழ் கூடத்தான் அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மற்றவர்கள் எம்பிக்குதிக்கவேண்டுமா என்ன? சம்ஸ்கிருதம் பிராகிருதம் பாலி தமிழ் போன்ற மொழிகள் அழிந்தால் இந்தியா இல்லை. அவற்றை அழியவிடாமல் காக்கவே எந்த அரசும் முயலும்.

அன்புள்ள சிவேந்திரன், இன்னொருவர் இக்கடிதத்தை எழுதியிருந்தால் ஓர் உதட்டுச்சுழிப்புடன் அழித்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியும். ஆகவே இந்நீண்ட கடிதம். சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா?

அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான்.

ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இல்லையேல் நீங்களும் செந்தமிழன் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

அன்புள்ள சத்யநாராயணன்,

ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது.

ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான்  ஃபாஸிஸம் என்கிறோம்

இவ்வறு வெறுப்பை உருவாக்கும்போது  நாம்  எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம்.

தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.

அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.

ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்ச்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது

இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி  , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை  புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது. 

 இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.

இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது.  தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.

இந்த வீழ்ழ்சியில் இருந்து தமிழை மீட்டது தமிழிய இயக்கம்தான். தமிழிய இயக்கம் என்று நாம் இன்று சொல்வது பலதளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த அறிவியக்கத்தைத்தான். கடந்த இருநூறு வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆகப்பெரிய அறிவியக்கம் என்பது தமிழிய இயக்கமே. தமிழின் தொல்நூல்களை பதிப்பித்தல் , அவற்றை ஆராய்ந்து தமிழின் தொல்மரபை நிலைநாட்டல், தமிழின் தனித்துவத்தை மறுபடியும் கண்டடைந்து நிலைநாட்டுதல் ஆகியவை ஒரு தளத்தில் நிகழ்ந்தன. இந்த இயக்கத்தை நாம் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறோம். 

இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிஓம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.

இந்த தமிழிய இயக்கத்தில் பிராமணர்களின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல் தமிழ் நூல்கள்  அழிந்திருக்கும்.  அவரது மாணவர்களான அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர், பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில் பெரும் பணியாற்றியவர்கள்.

தமிழிய இயக்கம் தமிழை மீட்டமைக்கும் வேகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானதாக  ஆனது. நடைமுறையில் அதில் பிராமண எதிர்ப்பும் கலந்து கொண்டது. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன.

பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதைப்போல அவர்கள் அந்த அதிகாரத்தை பிறர் எய்த அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக முதல் கசப்பும் எதிர்ப்பும் கேரளத்தில் , இன்னும் சொல்லப்போனால் நாயர் சாதியில்தான், உருவாகியது. காரணம் கிறித்தவ இயக்கத்தின் கல்விப்பணியை பயன்படுத்திக்கொண்டு கல்விகற்று வந்த நாயர்கள் அரச பதவிகளை நாடி பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

ஆரம்பகாலத்தில் இவ்வாறு பிராமணர்களால் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று வட்டார அரசுகளை அமைக்கும் வாய்ப்பை வழங்கியபோது அந்த அமைப்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியாக ஆகியது. இந்த அமைப்புக்கும் தமிழிய இயக்கத்துக்கும் கொள்கை அளவில் எந்தத்தொடர்பும்பு இல்லை. ஆனால்  இதன் ஆதரவாளர்களாக தமிழியக்கத்தினர் பலர் இருந்தார்கள்.

இக்காலத்தில் கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பெரிதாகப் பேசப்பட்டது. தென்னக மொழிகளை ஆராய்ந்த பிஷப் கால்டுவெல்  அவற்றுக்கு ஒரு பொது இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். தென்னகத்தைக் குறிக்க நம் சிற்ப- தாந்த்ரீக மரபில் பயன்படுத்தப்பட்ட திராவிட என்ற சொல்லை அவற்றைக் குறிக்க பயன்படுத்தினார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது

இவ்வாறு திராவிட இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது பிராமண வெறுப்பே. இந்திய மக்களை திராவிடர் ஆரியர் எனப்பிரித்து திராவிடர்  என்போர் தென்னகத்து பிராமணரல்லாதோர் என வகுத்து அவர்கள் தனி இனம் தனி நாடு என்று  வாதிட ஆரம்பித்தார்கள். இக்காலகட்டத்தில் திராவிட இனம் என்பதை வரையறை செய்வதற்கான அறிவார்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை. ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு உடனடியாக அவை கோட்பாடுகளாக ஏற்கப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது திராவிட இயக்கங்கள் திராவிடக்கருத்தியலை கைவிட்டன. அதற்கும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திராவிட என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது. ஏனென்றால் திராவிடக்கருத்தாக்கம் கர்நாடகம் ஆந்திரா கேரளத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.

அக்காலத்தில் இந்தியாவெங்கும் உருவாகி வலுவடைந்த பிராமணமைய வாதம் தன்னை சம்ஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பண்பாடென்பது பிராமணப் பண்பாடாக முன்வைக்கப்பட்டது. அது சம்ஸ்கிருதத்தால் மட்டுமே அமைந்தது என வாதிடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியால் புதுப்பணபலம் பெற்ற பிராமண சாதியின் ஒரு ஆதிக்க தந்திரம் அது.

அதற்கு எதிராக பிராமணரல்லாத சாதியினர் உருவாக்கிய பல கோட்பாடுகளை உருவாக்கினர். உதாரணமாக வேதங்களின் காலத்தை பிராமணர்கள் பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றபோது தமிழிய இயக்கத்தினர் கடல்மூழ்கிய குமரிநில நீட்சியை ஒரு பெரும் கண்டமாக உருவகித்து அதுவே பிரம்மசமாஜத்தினர் சொல்லிய லெமூரியா என வாதிட்டு ஆதாரமேதும் இல்லாமலேயே அதை நம்பவும் ஆரம்பித்தார்கள்

இவ்வாறு நம் சூழலில் புழங்கும் கருத்துக்கள் பெரும்பாலும்  ஆதிக்க நோக்குடன் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்கு எதிரான கருத்து அதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்டது. இன்று ஒரு அறிவார்ந்த ஆய்வாளர் நடுநிலையான ஆய்வுகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால் ஒரு அபாயம் உள்ளது. கருத்துநிலைபாட்டின் இரு தரப்புமே அவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள். ஒன்று அவர் தமிழியராக இருக்க வேண்டும். அல்லது அவர் பிராமணியராக இருக்க வேண்டும். இரண்டுமே துறை வெற்றிகளை அளிக்கக் கூடியவை. நடுநிலையாளருக்கு இன்று தமிழ்ச் சூழலில் ஆளிருப்பதில்லை. ஆகவே மிகக் குறைவாகவே நடுநிலைக் குரல்கள் ஒலிக்கின்றன

திராவிட இயக்கம் பிரபல அரசியலியக்கமாக ஆகியது. முதலில் பிராமணரல்லாத உயரசாதியினரின் குரலாக ஆரம்பித்தது பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக ஆகியது. இந்த பரிணாமத்தில் அது தமிழிய இயக்கம் உருவாக்கிய மனநிலைகளையும் கோஷங்களையும் பெரிது படுத்தி வெகுஜன நம்பிக்கைகளாக ஆக்கியது. தமிழிய இயக்கம் ஓர் அறிவார்ந்த இயக்கம். அதில் ஆய்வும் உண்டு, வெறுப்பின் அம்சமும் உண்டு. திராவிட இயக்கம் அதில் வெறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டது.

பொருட்படுத்தும்படியான தமிழாய்வுகள் எதையுமே திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. தமிழின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எந்த பங்களிப்பையும் அது ஆற்றவும் இல்லை. இது வரலாறு. ஏனெனில் அது பரப்பு இயக்கம், அறிவியக்கம் அல்ல. இன்று திராவிட இயக்கம் தன் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதெல்லாமே தமிழிய இயக்கத்தின் பங்களிப்புகளையே. அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட அல்ல.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அந்தக்கால கட்டாயங்களினால் உருவான கருத்துக்கள் பின்னர் வெகுஜனப்படுத்தப்பட்டு எளிய கோஷங்களாக மாறி நம் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை எதிரொலிப்பவர்கள் அவற்றை நிறுவப்பட்ட உண்மைகளாகவே எண்ணுகிறார்கள். மத நம்பிக்கை போல ஆவேசமாக முன்வைக்கிறார்கள். ஆராயவோ விவாதிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. எதிர் தரப்பை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். கருத்துக்கள் சார்ந்து முன்வைப்பதெல்லாமே மிகையுணர்சிக்களைத்தான். ஆகவே ஒரு விவாதமே சாத்தியமில்லாமல் போகிறது

இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது

சம்ஸ்கிருதம் சார்ந்து  நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி.  பிற மொழிகளுடன்  எந்த வகையான விவாதங்களும்  நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.

தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. 1. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். 2. அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ  உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.

3. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்]  உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட 4. அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள். 5. சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.

இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன

1. சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது

2. சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு முன்னுரிமை உள்ள மொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே

இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சம்ஸ்மிருதம் தமிழுக்குக் கடன்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெமோ. அவர்களுக்கு,

இன்று உங்கள் வலை தளத்தில் “ இந்து மதம்,சமஸ்கிருதம், பிராமணர்” என்ற தலைப்பில் நீங்கள் திரு.செல்வம் அவர்களுக்கு எழுதிய பதில் கட்டுரை,மிகுந்த ஆழமான,ஆராய்ச்சி பூர்வமான, அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அருமையாக இருந்தது.

உண்மையில் இதைப் படித்தவுடன்,நானும் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது.வைணவ பிராமணன் என்ற (உண்மையான பிராமணனா நான் என்று எனக்கு தெரியாது ) முறையில் என்னால் உறுதிபடக் கூறமுடியும் இன்றும் எங்கள் வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் முன்னுரிமை உள்ளது.தெய்வத்திற்கு அடுத்தபடியாக (ஏன் சில சமயங்களில் மேலாகவே ) போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் அந்தணர்களே அல்ல என்பது தாங்களும் அறிந்ததே.இந்தக்கால சூழ்நிலையில், தாங்கள் தான் பெரிய அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு இந்து மதத்தை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில்,நீங்கள் ஒருவர் மட்டும் தனி ஆளாக நின்று விளக்கம் அளிப்பதற்கு உங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்றி கூறுகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி என்றும்.

என்றும் அன்புடன்,
அ.சேஷகிரி

அன்புள்ள சேஷகிரி

ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இந்துக்களிலேயே ஒருசாராருக்கு சம்ஸ்கிருத மோகம் காரணமாகத் தமிழ்மீது இளக்காரம் இருந்தது என்பதையும் மறுக்கமுடியாது. அறியாமையின் விளைவான அந்தக் கூற்றுக்களே அந்த அவதூறுகள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன இல்லையா?

ஜெ

ஜெ,

சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.

கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.

சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நான் சொல்கிற இந்தக் கருத்துகளை மறுத்துச் சொல்கிற தெளிவு யாருக்காவது உண்டா? உண்டு என்றால் தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.(http://www.thamilworld.com/forum/index.php?showtopic=595)

இது உண்மையோ இல்லையோ ஆனால் சமஸ்கிருதம் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

கருணாநிதி ஒரு விகடன் பேட்டியில் அவர் தந்தைக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று கூறுகிறார்.

சமஸ்கிருதத்துக்குத் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்பட்டது போன்ற தற்கால உதாரணம் கர்னாடக இசை. முற்காலத்தில் அனைத்து மக்களும் பாடிய ரசித்த கர்னாடக இசை இப்போது 95% பிராமணர்களால் செய்யப்படுகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் கர்நாடக இசை பிராமண இசை அதற்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரச்சாரம் ஆரம்பித்து விடும்.

ராஜேஷ் கோவிந்தராஜன்

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம் ,

தங்களின் ,சமஸ்க்ருதம் ,ஹிந்து மதம் பதில் மிகத் தெளிவாக இருந்தது . பொதுமை மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பெரும்பாலும் சாதியைத் தாண்டிப் பேசுவது மிகவும் குறைவு என நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .எங்கள் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் பிராமணர்களை வைத்து நடந்து வந்தது .கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தமிழ்க் குழுக்கள் பிராமண எதிர்ப்புப் பிரசாரத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்தினார்கள் . தற்பொழுது பல திருமணங்கள் தெய்வத் தீந்தமிழ் முறைப்படி என்று அழைப்பிதழில் போடுவது அதிகரித்து வருகிறது. தெய்வத் தீந்தமிழ் முறை என்று திருமண முறை இருந்ததா .தாங்கள் விளக்க வேண்டும் .

என் சொந்த அனுபவம் , எங்கள் பகுதியில் பிரபலமான செஞ்சேரிமலை மந்தரகிரி வேலாயுதசாமி திருக்கோவில், இங்கு பிராமணர்களால் பூஜை செய்யப்படுகிறது .கோவிலில் ஓதப்படும் சமஸ்க்ருத மந்த்ரங்கள் புரியாவிட்டாலும் கூட மனதில் தன்னை மறந்த நிலையை நான் பலமுறை உணர்ந்துள்ளேன் .நண்பர்களும் இதுபோல உணர்ந்துள்ளார்கள் .இறைவனை வழிபட மொழி ஒரு காரணம் அல்ல என்பது என் எண்ணம் .மேலும் பிராமணர்களை வைத்து சடங்கு என்பது அவரவர்களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் இருப்பதால் செய்கிறார்கள் .பிராமணர்களிலேய பிராமணர் என்பதற்காக யாரையும் அழைப்பதில்லை .அவர் நன்றாக பூஜை மற்றும் யாகங்களை நடத்துகிறாரா பார்த்து என்று அவரவர் வசதிக்கேற்ப அழைக்கிறார்கள் என நான் எண்ணுகிறேன்.தாங்கள் இது பற்றியும் விளக்க வேண்டும்.பிழை இருந்தால் மன்னிக்கவும் .

சி.மாணிக்கம் மந்த்ராசலம் ,
செஞ்சேரிமலை.

அன்புள்ள மாணிக்கம் அவர்களுக்கு,

தமிழகமெங்கும் இன்று பல சாதியினர் தங்கள் திருமணங்களையும் சடங்குகளையும் பிராமணர்களைக்கொண்டு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் எல்லா சாதிக்கும் அவர்களுக்குரிய புரோகிதர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது இல்லை. சடங்குகள் மனித வாழ்க்கைக்குத் தேவையாகின்றன. அச்சடங்குகளை முறையாகச்செய்பவர்கள் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்களாக ஆகிறார்கள். அந்த பிராமணர் அவருக்கு தட்சிணை அளித்து சடங்குக்கு அழைப்பவர் மேல் கருத்தியல்செல்வாக்கு செலுத்துகிறார் என்பதெல்லாம் அபத்தம்.

இந்த வகையான வாதங்களெல்லாம் ஒரு பத்தாயிரம் பேருக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வெளியே இந்துக்கள் அவர்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அதே பாணியில் காலத்துக்கேற்ற மாறுதல்களுடன் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கூச்சல்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் உரையாடல்புள்ளிகளே இல்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். தங்கள் பதிவுகளை ஓராண்டுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது,
கடைசியாக நீங்கள் செல்வம் அவர்களுக்கு கொடுத்த விரிவான விளக்கம் அருமையாக இருந்தது.

ராமகிருஷ்ணன் டி எஸ்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி

சொல்லிச்சொல்லி சில பதில்கள் எனக்கே தெளிவாக உள்ளன போலும்

ஜெ

அன்பின் ஜெ…

என்னுடைய மின்னஞ்சலை மதித்துத் தங்கள் பதிலை வலைத்தளத்தில் இட்டமைக்கு நன்றி.

மிக விரிவானதொரு விளக்கம். இன்னும் நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் நீங்களே கட்டுரையில் கூறியுள்ளபடி இன்னும் நிறைய விடயங்களைத் தெரிந்து கொண்டு பின்பு உங்களிடம் அவை குறித்து கேட்கிறேன்.

மேலும் இத்தகைய விவாதங்களை நான் கருத்துப் பரிமாற்றமாகவே பார்க்கிறேன். வெற்றி / தோல்வியாக அல்ல என்பதையும் கூற ஆசைப்படுகிறேன்..

இது எல்லாவற்றையும் விட.. மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் எளியேனாகிய என் கேள்விகளை மதித்து உங்கள் கருத்துகளை வெளியிட்ட அந்த ஜனநாயகம் மிகவும் பிடித்திருந்தது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

மீண்டும் நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சம்ஸ்கிருதம் கடிதங்கள்

சம்ஸ்கிருதம் செத்த மொழி

. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது. – இது கட்டுரையில் (செப்டம்பர் 4ம்தேதி) காணப்பட்ட வரிகள்.

இதைப்பற்றி:

சம்ஸ்கிருதம் செத்த மொழி – இப்படிச்சொன்னது, திராவிடயியலாளர்களா இல்லையா என்பது உங்கள் பிரச்னை.

இப்படிச்சொல்பவர்கள் மொழியியலாளர்கள் (Linguists) என்பதுதான் நான் சொல்வது.

செத்தமொழி (dead language) என்றால் என்ன? அழிந்த அல்லது காணாமல் போன மொழி (extinct language) என்றால் என்ன? என்று தனித்தனியாக வரையறை சொல்கிறார்கள்.  செத்தமொழி என்றால் என்ன என்று விளக்கும்போது, அவர்கள் இலத்தீனோடு, சமசுகிருதத்தையும் எடுத்துக்காட்டாகக் காண்பிக்கின்றனர்.
அழிந்தமொழிக்கு, நிறைய பழங்காலத்து மொழிகளைக் காண்பிக்கின்றனர். (எ-டு ஆங்கிலோ நார்மன்)

செத்தமொழி இன்றும் எந்த வகையிலாவது இருக்கும். ஆனால், அழிந்த மொழி இருக்காது.

பேச்சுமொழியாக இருந்தால்தான் செத்தமொழியா இல்லையா எனச்சொல்வோம் என்றும், உரையாடலுக்குகந்த மொழியாக இல்லாமல், எழுதுவதற்குமட்டும் இருந்தால்தான், செத்தமொழியா இல்லையா என்று சொல்வோம் என்றும் மொழியிய்லாளர்கள் தங்களுக்குள் சட்டம் போடவில்லை.  எனவே, சமசுகிருதம் செத்தமொழியா இல்லையா எனத் தாராளமாக ஆராயலாம்.

இவர்களெல்லாரும், திராவிடயிய்லாளரோ, தமிழ்ப்பார்ப்பனருக்கு எதிரிகளோ இல்லை. இவர்கள் கல்வியியலாளர்கள். இவர்களின் defintions உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  மாறுபட்ட கருத்து இருப்பினும் அவற்றை வேண்டாமென கல்வியாளர்கள் ஒதுக்குவதில்லை.  இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படிக்கு
கரிக்குளம்.

 

 

 

அன்புள்ள கரிக்குளம்

உங்கள் நியாயங்கள் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையாக இல்லை.
சம்ஸ்கிருதம் பற்பல நூற்றாண்டுகளாக எவராலும் பேசபப்டவில்லை. எப்போதும்
அது அறிவுத்துறைக்குள்ள இணைப்புமொழியாகவே இருந்து வந்துள்ளது. அதன் பெயரே
அதைத்தான் சுட்டுகிறது. அதாவது அது சம்ஸ்கிருதமாக உருவானபோது எப்படி
இருந்ததோ அப்படித்தான் இப்போதும் உள்ளது. இதில் சாவு எங்கே வந்தது?

 

 

 

திருவாளர் செயமோகன் அவர்களுக்கு,

தமிழ்நாட்டிலும் வெளியிலுமாக பதினைந்துகோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆகவேதான் தமிழ் வாழ்கிறது, சில ஆயிரம் பார்ப்பனர்கள் கோயிலுக்குள் பொருள்புரியாமல் விடும் குசு தான் சமசுகிருதம். ஆகவேதான் அதை செத்த மொழி என்று சொல்கிறோம். நீங்கள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் சமசுகிருதம் செத்த மொழியேதான். அதை எந்த சங்கரன் வந்தாலும் எழுப்ப முடியாது. ‘ஆரியம் போல் அழியாமல் நின்ற’ மொழி என்று மனோன்மணியனார் இதைத்தான் சொல்கிறார். செத்தபாம்பு சமசுகிருதத்தை தூக்கிவைத்துப்பேசுபவர்கள் தமிழினவிரோதிகள் என்பதே உண்மை

செல்வ குணசேகரன்

அன்புள்ள செல்வ குணசேகரன்,

சரி, செத்ததென்றால் செத்ததாகவே இருக்கட்டுமே இப்போது என்ன கெட்டுப்போயிற்று? உங்களுக்கு பிணம் போதுமென்றால் அதை வைத்துக்கொள்ளுங்கள். உயிர் இருப்பது வேறு எவருக்காவது தெரிந்தால் அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் செத்தமொழி என்று சொன்னால் சம்ஸ்கிருதத்துக்கு என்ன குறைந்துவிடுகிறது? ஜாலியாக இருங்கள் ஜெல்வா…

ஜெ

 

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

 

 

இதுதான் நான் சொல்வது. 

 

இதற்குப் பதிலாக ‘அறிஞர்கள்’ சொல்கிறார்கள் என்கிறீர்கள். இந்த அறிஞர்கள் எதற்கெல்லாம் கட்டுபப்ட்டவர்கள் என்னென்ன நோக்கங்கள் கொண்டவர்கள் என்று நான் அறிவேன். உங்கள் ‘அறிஞர்’ கோஷத்துக்கு ஒரே பதிலைத்தான் நான் சொல்ல வேண்டும், அன்புள்ள கரிக்குளம் நீங்கள் ஓர் அறிஞரிடம்தான் பேசிக்கொன்டிருக்கிறீர்கள்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

செய்தொழில் பழித்தல்

image0011

அன்புள்ள ஜெ,

உங்கள் வலையில் வரும் கடிதங்களை கூர்ந்து படிப்பதுண்டு. குறிப்பாக நான் கவனித்தது என்னவென்றால், மென்பொருள் துறையில் பணிபுரியும் உங்கள் வாசகர்கள் அனைவருமே தங்கள் தொழில் குறித்த அறிமுகம் செய்துகொள்ளும்போது “சாப்ட்வேரில் கூலித்தொழில் செய்கிறேன்” என்று சொல்வதன் காரணம் மட்டும் புரியவில்லை.

கூலித்தொழில் என்பது எந்தவிதத்திலும் மட்டமல்ல எனும்போதும், அதன் பயன்பாட்டு தொனி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. குளிர்சாதன அறையில் அமர்ந்து சுகவாசியாக செய்யும் வேலையை, கைநிறைய மட்டுமல்ல, வங்கி நிறைய, நமது அன்றாட தேவைக்கும் அதிகமாகவே வாரிக்கொடுக்கும் ஒரு வேலையை, கிராமத்திலிருந்து வந்திருந்தாலும் பல நாடுகளுக்கு நம்மை இலவசமாகவே அனுப்புகிற அங்கும் ஒரு நல்ல வாழ்கையையும் கொடுக்கிற ஒரு வேலையை கூலித்தொழில் என்று மீண்டும் மீண்டும் படிக்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒருவனுக்கு வாழ்கையை கொடுத்த, செய்யும் தொழில்மேல் இவ்வளவு கீழான ஒரு மதிப்பீடு ஏன் என்பது புரியவில்லை. நான் கூட ஒருமுறை உங்களுக்கு எழுதும்போது, ஏற்கனவே இருக்கும் கமிட்மெண்ட்களுக்காக ஓடுகிறேன் என்று மட்டும் சொன்னதாகவே ஞாபகம். இது ஒருவகையான கற்பிக்கப்பட்ட தாழ்வுணர்ச்சி என்றே தோன்றுகிறது.

இப்படி ஓரிருவர் அல்ல, உங்களுக்கு எழுதும் பெரும்பாலானவர்களின் கூற்றாக இருப்பதால், அதையும் நீங்கள் திருத்துவீர்கள் என்று எண்ணியிருந்தேன். இந்தத்தொழில் எத்தனையோ குடும்பங்களை வாழவைத்திருக்கிறது, படிப்பு ஒன்றையே மதித்து வேலை தந்துள்ளது. எத்தனையோ பேர் நகரங்களில் வீடு மனைகள் கார் வாங்கி இதனால் பயன்பட்டுள்ளனர். விமானப்பயணங்கள் சாத்தியமாயிருக்கிறது. சகோதரிகளுக்கு சிறப்பான முறையில் திருமணங்கள் செய்ய இயன்றிருக்கிறது. எத்தனையோ சேவை நிறுவனங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு 30% வரை வரி ஈட்டுத்தருகிறது. (இதில் கருப்புப்பணம் என்ற ஏமாற்று வேலை பலிக்காது, ஏனெனில் வரி பிடித்தம் செய்தபிறகே சம்பளம் கொடுக்கப்படுகிறது.). உங்களை இணையம் மூலமாக படிப்பதும் சாத்தியப்பட்டிருக்கிறது.

அனைத்துத்தொழில்களுமே கூலிக்காக செய்யப்படுபவையே. கூலி என்பது தேவையான அளவு வந்தபிறகு சமூக காரணங்களுக்கான படைப்புகளும் செய்யப்படுகிறது. நல்ல விஷயங்கள் இலவசமாக மட்டுமே செய்யப்படுவதில்லை. (விதிவிலக்குகளும் உண்டு)இப்படி எழுதுபவர்கள் ஒரு போலியான தாழ்த்துதல் முறையை கையாள்வதாக கருதுகிறேன். இப்படி எண்ணுபவர்கள் அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்து வேறு வேலைகள் (தெரிந்தால்) செய்யலாமே? அல்லது இவர்களுக்கு இவர்களது அலுவலகங்களில் பணி உயர்வோ ஊதிய உயர்வோ மறுக்கப்பட்டால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் தெரிந்ததே.

ஒருவர் பேசும்போது என்னிடம் சொன்னார், நீங்கள் சங்கீதத்தில் மிகத்தேர்ந்திருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் அந்த அளவு ஞானம் இல்லை என்று. நான் சொன்னேன், ஆமாம் நீங்கள் சங்கீதத்தில் அடிமுட்டாள். உமக்கும் அதற்கும் பலகாத தூரம். நீர் ஒரு ஞான சூனியம் என்று. அப்போது அவர் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே. ஒருவர் தம்மை தாழ்த்திக் கொண்டு பேசும்போது, கேட்பவர் அதை அங்கீகரித்துச் சொன்னால் சொன்னவர் அதை எப்போதும் விரும்புவதில்லை போலும்.

உங்களை நான் கவனித்ததுண்டு. தம்மைத் தாழ்த்தி உம்மை உயர்த்தி எழுதும் போது ஒன்று உங்களிடமிருந்து பதில் வருவதில்லை. அல்லது அதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் பேசியதில்லை. ( நானும் அப்படி சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன்)

இந்த செய்யும்தொழிலை இழிவாக பேசும் மக்களுக்கு நீங்கள் நிச்சயம் மறுப்பு வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இது குறித்த உங்கள் கருத்தையும், செய்யும் தொழிலை மதிக்க வேண்டிய கட்டாயத்தையும் விளக்கமாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

எனது கருத்தில் தவறேதும் இருந்தால் திருத்தினாலும் சந்தோஷமே.
நன்றி
ராம்
 
 

அன்புள்ள ராம்

பல சந்தர்ப்பங்களில் இதை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு மரபான விவேகம் உள்ளது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது அது. செய்யும் தொழில் மேல் உண்மையான ஆர்வம் இருந்தால் ஒழிய அதைச் சிறப்பாகச் செய்ய முடியாது. நிபுணர்கள் எனப்படுபவர்கள் தங்கள் துறைகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களே. அந்த ஈடுபாடு காரணமாகவே அவர்களால் தொடர்ந்து இரவு பகலாக அதில் ஈடுபட முடிகிறது. சலிப்போ, சோர்வோ வருவதில்லை. கவனம் எப்போதும் குவிந்திருக்கிறது

செய்யும் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் போகும்போது படிப்படியாக வேலை சலிக்க ஆரம்பிக்கிறது. வேலையே நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதனால் அந்தச் சலிப்பு நம் வாழ்க்கை முழுக்க பரவுகிறது. மெல்ல மெல்ல நாம் சிடுசிடுப்பும் சுய வெறுப்பும் கொண்டவர்களாக ஆகிறோம்.

மேலும் வேலையை நிராகரிப்பதன் வழியாக வேலையில் உள்ள நம்முடைய தோல்விகளை நம்மால் மறைத்துக் கொள்ள முடிகிறது. நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேலை இல்லை இது என்றும் நம்முடைய ஆற்றலைக் காட்ட இவ்வேலையில் இடமில்லை என்றும் நாம் நம்மைக் கற்பனை செய்து கொள்கிறோம். வேலையை விட நான் எவ்வளவோ மேலானவன் என்று எண்ணிக் கொள்வதன் வழியாக வேலையில் உள்ள நம் ஈடுபாடின்மைக்குச் சாக்கு கண்டு கொள்கிறோம்.

ஆனால் இதற்கெல்லாம் ஒரு மறுபக்கம் உள்ளது. நம் சமூகத்தில் ஒருவரின் இயல்பான திறமைகள் மலர்வதற்கான கல்விமுறை இல்லை. ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான துறையை தானே தேர்வு செய்து கொள்வது அனேகமாக சாத்தியமில்லாமல் இருக்கிறது. பலசமயம் அப்படி தெரிவு செய்து கொள்வது நம் பொருளியல் சூழலில் தற்கொலைக்கு நிகரான செயலாகவும் இருக்கிறது.

இங்கே இருப்பது தொழில் பெறுவதற்கான பயிற்சிதான், கல்வி அல்ல. சிறுவயதிலேயே எது அதிக வருமானம் வருகிறதோ அந்தத் தொழிலை குழந்தைகள் செய்ய வேண்டும் என அப்பாக்கள் எண்ணிக் கொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளை அதற்கான பயிற்சியை நோக்கி ஒரே குறியாகச் செலுத்துகிறார்கள். குழந்தைகள் அந்தப் பாதையில் சென்று பெரும்பாலும் அதை அல்லது அதற்கு அடுத்தடுத்த இடங்களை தேர்வு செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன

எட்டாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரையிலான காலகட்டத்தில்தான் ஒருவரின் ரசனையும் ஆர்வமும் தீர்மானமாகிறது. பள்ளமான இடத்தை நீர் தேர்வு செய்வது போல அவரது தனியியல்பு அவருக்கான இடத்தை நோக்கிச் செல்கிறது. இவ்வயதில் பலவகையான வாய்ப்புகள் ஒருவர் முன் திறந்து விடப்பட வேண்டும். கலை, அறிவியல், இலக்கியம், பிற துறைகள். அதில் அவர் எதை நோக்கி தவிர்க்க முடியாமல்  ஈர்க்கப் படுகிறாரோ அதுவே அவரது துறை.

ஒரு துறையில் தன்னால் சிறப்பாகச் செயல் பட முடிகிறது என உணர்ந்து  அத்துறையில் மனம் தாவுவது என்பது இளமைப் பருவத்தின் பேரனுபவங்களில் ஒன்று. கடவுளே கண் முன் தென்படுவதைப் போல. கணிசமான வெற்றி பெற்ற மனிதர்கள் தாங்கள் தங்கள் துறைகளுக்கு தற்செயலாகவே வந்ததாகச் சொல்வார்கள். அது பாதி உண்மைதான். அவர்கள் முன் வரும் வாய்ப்புகள் தற்செயலானவை ஆனால் அதில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்வது தற்செயலே அல்ல

உண்மையில் இன்று நம் நாட்டில் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புகள் உள்ளனவா? இல்லை என்றே சொல்வேன். என் நோக்கில் பிளஸ் டூ கல்வி முறை வந்த போதே அந்த வாசல்கள் மூடப் பட்டு விட்டன. எட்டாம் வகுப்பு முதல் மாணவர்கள் பிளஸ் டூ கல்வியை மட்டுமே மனதில் கொண்டு உக்கிரமான பயிற்சிக்கு உள்ளாக்கப் படுகிரார்கள். வேறு திக்கே இல்லாமல் அதை முடித்து ஒரு தொழிற் கல்விக்குப் போய் வேலையில் அமர்கிறார்கள்.

இவர்களில் சிலருக்கு அவர்கள் சென்று சேரும் தொழிலில் இயல்பாக ஓர் ஆர்வம் உருவாகிறது. அதில் அவர்களின் வெற்றி தோல்விகள் அடையாளப் படுத்தப்படும்போது அவர்கள் முழுமையாகவே அதில் இறங்கி விடுகிறார்கள். ஆனால் தன் இயல்பான திறமைகள் வெளிப்படும் ஒரு துறையைக் கண்டடைந்தவர்கள் சொற்பமே. ஆகவேதான் நம்மில் திறனாளர் அதிகம், படைப்பாளர் மிக, மிகக் குறைவு

இந்நிலையில் ஒருவருக்கு அவர் செய்யும் தொழிலுக்கு அப்பால் தன் ஆளுமை இருப்பதாக தோன்றுவதென்பது மிக இயல்பான ஒன்றே.  சஞ்சய் சுப்ரமணியம் ஆடிட்டராக தொழில் புரிந்திருந்தால் ஆடிட்டர் தொழிலில் அவர் மன நிறைவு கொண்டு அதை நேசித்திருப்பார் என்று சொல்ல முடியாது. நேசிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் முடியாது.

செய்தொழில் பழித்தல் என்பது இங்கே தான் வருகிறது. அந்த தொழில் தேர்வு செய்தது அல்ல, விதிக்கப்பட்டது என்பதனால்தான்.  அந்நிலையில் ஒருவர் அந்தத் தொழிலுக்கு ஏற்ப தன் ஆளுமையை வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது கொடுமையானது என்றே நான் சொல்வேன். அந்தத் தொழிலை விட பெரியவராக அவர் தன்னை உணரும் சுயம் என்பது அவருக்கு மிக முக்கியமானது. அவருக்கு தன் இருப்புக்கான அடையாளமாக இருப்பதே அந்த சுயம்தான். அதை அவர் விட்டு விட வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். அதை அவர் சொல்வது செய்தொழிலுக்கு அநீதி இழைத்தல் என்றும் சொல்ல மாட்டேன்

உண்மையில் தன் உள்ளார்ந்த ஆற்றலைப் பற்றிய ஒரு புரிதலுடன் ஒருவர் இருப்பதை நான் சிறப்பானதாகவே நினைக்கிறேன். ‘நான் இது அல்ல இதற்கும் மேல்’ என்ற உணர்வு அவரை மேலேதான் கொண்டு செல்லும். வேலைக்கும் அப்பால் அவரது ஆளுமை விரிவடைவதற்கும் தன்னுடைய சொந்த தளங்களை தானே மெல்ல மெல்ல கண்டடைவதற்கும் அதுவே வழிவகுக்கும். ஜெயமோகன் எழுத்தாளன் ஆனது அப்படித்தான். பி. எஸ். என். எல் ஊழியராக திருப்தியுடன் வாழும் பிறரிடமிருந்து வேறுபட்டுத் தன்னை கண்டடைந்ததனால் தான்.

உலகம் முழுக்க கலை இலக்கியச் செயல்பாடுகள், அரசியல் சமூகச் செயல்பாடுகள், ஏன் ஓரளவு அறிவியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் மிகக்கணிசமான பகுதி அவற்றில் தொழில்முறையாக ஈடுபடாதவர்களால்  நிகழ்த்தப் படுகிறது. செய்தொழிலுக்கு அப்பாற்பட்டு வளர்பவர்களால். அவை இல்லையேல் மானுடமே வளர்ச்சி குன்றி போய்விடும். ஆகவே செய்தொழில் பழித்தல் என்பது ஒருவகையில் ஒரு மீறல், ஒரு எம்பித் தாவும் முயற்சி.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  அரசு ஊழியர்கள் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தடை இருந்தது. சேவை விதிகளின் படி இப்போதும் அந்தத் தடை நீடிக்கிறது. ஆனால் இது சம்பந்தமான ஒரு  தாவா வந்தபோது பண்டித ஜவகர்லால் நேரு அந்த கோப்பில் எழுதிய குறிப்பு மிக முக்கியமான ஆவணமாக இன்றும் கருதப்படுகிறது. எந்த மனிதனையும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்ல அரசுக்கு அதிகாரமில்லை என்று சொல்லும் நேரு தங்கள் அன்றாடத் தொழில்களுக்கு அப்பால் சென்று எதையாவது செய்பவர்களால்தான் கலையும் இலக்கியமும் வாழ்கின்றன என்கிறார். அந்தக் குறிப்பின் சட்ட ஆதரவால்தான் இன்றும் இந்தியாவில் என்னைப் போன்ற பல்லாயிரம் பேர்  எழுதுகிறோம் வரைகிறோம் வாசிக்கிறோம்.

மேலும் இன்னொன்று உள்ளது. தன்னுடைய படைப்பு சக்தி வெளிப்படும் துறையில்தான் ஒருவன் தன்னைக் கண்டுகொள்ள முடியும். அதில்தான் அவன் நிறைவு அடைய முடியும். நிறைவு என நான் இங்கே சொல்வது  உலகியல்  நிறைவை அல்ல. ஆன்மீக நிறைவை.  ஆத்ம சாட்சாத்காரம் [self realization] என நாம் சொல்வதை. அதற்குப் பதிலாக ஒரு துறையை தொழிலாக மட்டுமே எடுத்துக்கொண்டு அதில் திறமையை ஈட்டி வெற்றியை அடைந்து, அதன் பொருட்டு அதை நேசித்து வாழ்பவர்கள் மோசமான வெறுமை ஒன்றுக்குச் சென்று சேர்ந்திருப்பார்கள். அத்தகைய ‘வெற்றிகரமான’ லௌகீக வாழ்க்கை கொண்ட முதியவர்களை நாம் எங்கும் காணமுடிகிறது இப்போது

உழைப்பில் இருந்தும் தொழிலில் இருந்தும் உழைப்பாளி அன்னியமாவதென்பது ஒரு எளிய விஷயம் அல்ல. அது நவீன முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.முதலாளித்துவம் உழைப்பில் இருந்த படைப்பூக்கத்தை மெல்ல மெல்ல இல்லாமல் செய்து உழைப்பாளியை தன் உழைப்பை விற்பவனாக ஆக்குகிறது. தன் கையால் ஒரு படகு செய்யும் தச்சனுக்கு இருக்கும் படைப்பூக்கத் திருப்தி அதன் மூலம் அவன் அடையும் மீட்புபடகுத்தொழிற்சாலை ஊழியருக்கு இல்லை. முதலாளித்துவம் முதிரும்தோறும் இந்த அன்னியமாதல் அம்சம் மேலும் மேலும் வலிமை அடைகிறது.இளம் ஹெகலியராக இருந்த கார்ல் மார்க்ஸ் இதைப்பற்றி சிந்தனைசெய்திருக்கிறார். அவரது சிந்தனைகளை இருத்தலியளார்களும் நவமார்க்சியர்களும் இரு வகைகளில் விரிவாக்கம்செய்திருக்கிறார்கள். இது விரிவான ஒரு விவாதத்தளம்.

அன்னியமாகும் தொழிலாளி தன் சலிப்பை போக்க கேளிக்கைகளை நாடுகிறான். இந்நூற்றாண்டில் கேளிக்கைகள் இந்த அளவுக்கு விசுவ ரூபம் கொண்டமைக்குக் காரணம் இதுவே. தன் துறையில் கட்டாய கடும் உழைப்பு, அதன் சலிப்பை தீர்க்க கேளிக்கைகளில் செலவிடப்படும் ஓய்வுநேரம் என ஒரு நவீன உழைப்பாளியின் வாழ்க்கை நடந்து முடிகிறது. அதில் படைப்பூக்கம் இல்லை. தானே ஒன்றைச் செய்வதன் மூலம் தன்னையும் தன்னைச் சூழந்த பிரபஞ்சத்தையும் கண்டடைவதன் உவகை இல்லை. அதன் மீட்பும் இல்லை

ஆகவேதான் நுண்ணுணர்வு கொண்ட, மீட்புக்கு ஏங்கும், உழைப்பாளி “நான் என்பது இந்த வேலை அல்ல” என அடிக்கடி உணர்கிறார். அதற்கு அப்பால் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள முயல்கிறார். எனவே செய்தொழிலை ஒருவர்  ‘அதுவல்ல நான்’ என நிராகரிப்பதென்பது ஒன்றும் பெரும்பாவமில்லை. அதை பண்டைய தர்ம சாஸ்திர விதிகளின் படி நோக்க வேண்டியதும் இல்லை. அது அவரது சுய அடையாளம் சம்பந்தமானது. தன் படைப்பூக்கத்தை எங்கே அவர் காண்கிறார் என்பதைச் சார்ந்தது அது.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/  Opposit View  பூ.கொ.சரவணன்

மொழி அரசியல் பகுதி – 4 இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்


 

அன்பின் ஜெ.

சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன்.

“சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள்.

இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு ஏன், இன்றும் கூட சில இந்துக் கோவில்களில் எல்லா சாதியினரும் நுழைய முடியாது. ஆக மதத்தில், சாதியில் பிரிவினையைக் கடைப்பிடிக்கும் இந்து மதம் மொழியில் மட்டும் பொதுமையை எப்படிக் கடைப்பிடிக்கும் ?

’மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன’ என்கிறீர்கள் .சமஸ்கிருதம் அவ்வளவு நல்ல மொழியாக இருந்தால் ஏன் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடிய ஆறுமுகசாமி அய்யா அடி வாங்கினார். சமஸ்கிருதம் தேவ பாஷையாகவும் ,தமிழ் நீச பாஷையாகவும் ஆனது எப்படி?

அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல’ என்கிறீர்கள்.

பிறகு ஏன் அந்த மொழி மற்றவர்களால் பேசவோ, புழங்கவோ படவில்லை. பிராமணர் அல்லாதார் வேதம் கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற ஸ்லோகம் எதற்கு?

பின்வரும் இன்றைய நிஜமான நிலை மாறுபட்டதாக இருக்கிறதே ஏன் ?

1. அனைத்துக் கோவில்களிலும் சமஸ்கிருதம் தான் முதன்மை மொழி. தமிழில் போனால் போகிறது என்று சில பாடல்களைப் பாடுகிறார்கள்.

2. பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இன்று வரை நிறைவேறவில்லை. அவர்கள் இந்தத் தொழிலைக் கற்று விட்டு இன்று சும்மா இருக்கின்றனர்.

3. திருமணம், காதுகுத்து, புதுமனை புகும் விழா எனத் தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளும் பிராமணர்களால், நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில்தான் நடத்தப்படுகின்றன[ இதற்கு நானும் விதி விலக்கு இல்லை]

4. எந்தக் கோவில்களில் கூட்டம் வருகிறதோ அங்கு உள்ள சாமிகளுக்கு மட்டும் ஸ்லோகங்கள் உருவாக்கப்பட்டு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது.உ.ம் …திருப்பதி, சபரிமலை, திருச்செந்தூர்…..

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏகப்பட்ட சிறுதெய்வங்கள் பலபேருக்குக் குலதெய்வங்களாக உள்ளன. ஆனால் சமஸ்கிருதத்தின் கருணைப் பார்வை அந்த தெய்வங்களுக்கு எல்லாம் ஏன் கிடைக்க வில்லை?

மேலே உள்ள கருத்துக்களில் ஏதேனும் பிழை இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

என்னுடைய இந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு

அன்புடன்

செல்வம்

அன்புள்ள செல்வம்,

மன்னிக்கவும், நான் ஏற்கனவே விரிவாக எழுதிய குறிப்புகளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் உள்ளன. அவற்றை கவனிக்காமல் மீண்டும் அதே கேள்விகளையே கேட்கிறீர்கள். இந்த வகையான கவனக்குறைவு உங்களிடம் இருப்பதில்இருந்தே உங்களுடைய மேலே சொல்லப்பட்ட எல்லா வினாக்களும் வந்துள்ளன. அவை பொதுவாக சூழலில் இருந்து வந்தடைந்த மனப்பதிவுகளே ஒழிய கொஞ்சமேனும் ஆராய்ந்து நோக்கப்பட்டவை அல்ல.

இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள். பத்ரிநாத் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு இனம்சார்ந்த, மொழி சார்ந்த,சாதி சார்ந்த கோடிக்கணக்கான மக்களால் இந்துமதவழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கண்கூடான உண்மையையாவது மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வேறுபடுவதையும் மறுக்கமாட்டீர்கள்.

இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சில வழிபாட்டு முறைகளைத் தன் மையத்தில் இந்துமதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, அது இந்தியா முழுக்கப் பொதுமொழியாக விளங்கிய சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். அதில் என்ன பிழை? அப்படி ஒரு மையமொழி எந்த மதத்துக்குமே இருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது இந்துமதத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

இக்குறிப்புகளில் நான் முன்வைப்பது ஒரு விரிவான இந்திய வரலாற்றுப் பரிணாமத்தின் சித்திரத்தை. அதன் அடிப்படையில்தான் என் விளக்கங்களை அளிக்கிறேன். அது டாக்டர் அம்பேத்கர்,டி.டி.கோசாம்பி முதல் இன்று டாக்டர் ராமச்சந்திரன் வரையிலான வரலாற்றறிஞர்கள் கூறும் ஆய்வுத்தரவுகளையும் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக விளக்கப்பட்ட, ஒரு வரலாற்றுவரைவு.

இந்து மதம் எல்லா பக்தர்களையும் சமமாக நடத்தியது, நடத்துகிறது என நான் சொல்லவில்லை. உலகில் உள்ள எந்த மதமும் அப்படி ஒரு மானுடசமத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது அல்ல. எல்லா மதங்களுமே அதன் நம்பிக்கையாளர்களிடையே தெளிவான உயர்வுதாழ்வுகளை வரையறுத்து வைத்திருந்தவைதான். இன்றுகூட எந்த மதமும் அந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக விட்டுவிடவும் இல்லை.

ஏனென்றால் மானுடவரலாற்றின் கடந்த காலத்தில் மனிதர்களெல்லாம் நடைமுறையில் சமம் என்ற சிந்தனையே இருந்ததில்லை. அந்தச்சிந்தனை ஒரு இலட்சியக்கனவாக உதித்துப் பல்வேறு சமூகப்போராட்டங்கள் வழியாக வளர்ந்து, சென்ற முந்நூறாண்டுகளுக்குள் உலகில் சில இடங்களில் சோதனை நடைமுறைக்கு வந்தது. இந்த நூறாண்டுக் காலத்தில்தான் உலகளாவிய ஒரு கருத்தாக அது ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் மானுட இனத்தில் நேர்பாதி அதை ஏற்றுக்கொண்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களே இன்றைய உலகில் பெரும்பான்மை என்பதை மறக்கவேண்டாம்.

இதுவரையிலான மானுடப்பண்பாட்டின் வளர்ச்சி என்பது மனிதர்களைத் திரட்டி மேல்கீழாக அடுக்கி உறுதியான சமூக அமைப்புகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா சமூகங்களும் அப்படி மேல்கீழ் அடுக்குகளாகக் கட்டப்பட்டவைதான். அவ்வாறு இந்தியநிலத்தில் பல்வேறு சமூகங்கள் உருவான காலகட்டத்தில் பிறந்து வந்தது இந்துமதம்.

இந்துமதம் ஒரு தொகைமதம். இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் சாதிமுறை என்ற அமைப்புக்குள் மேல் கீழாக அடுக்கப்பட்டு இங்குள்ள சமூகமுறை உருவானது. எந்த சாதி நிலத்தையும் வணிகத்தையும் வென்றெடுத்ததோ அது மேலே சென்றது. பிற சாதிமேல் அதிகாரம் செலுத்தியது. சமூகத்தை வழிநடத்திச்சென்றது.

இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் ஒரே சமூகமாகத் தொகுக்கப்பட்டபோது அந்த இனக்குழுக்களின் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அவ்வாறுதான் இந்துமதம் உருவானது.

பல்வேறு வழிபாட்டுமுறைகளும் சிந்தனைகளும் ஒன்றானபோது அவற்றுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. பலநூறாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் ஒவ்வொரு சிந்தனையும் இன்னொன்றால் பாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கு ஒரு மையஓட்டம் உருவாகி வந்தது. அந்த மையம் பிற அனைத்தையும் இணைக்க ஆரம்பித்தது.

நடைமுறையில் இந்தப் பல்வேறு சிந்தனைகளில் எது வலுவானதோ அது பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் அடைந்து மையமாக ஆவதே வழக்கம். உலகமெங்கும் பார்த்தால் அந்த வலுவான தரப்பு பிற எல்லாத் தரப்புகளையும் அழித்து இல்லாமலாக்கி வெற்றிகொண்டிருப்பதையே நாம் காணமுடியும். இந்தியாவில் அது நிகழவில்லை. மாறாகப் பிறவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு அந்த வலுவான தரப்பு வளர்ந்ததையே காண்கிறோம்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை வேதமரபு என்பதுதான் வலுவானது. ஆனால் அது பிற மரபுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவே அது இருந்தது. அனைத்தில் இருந்தும் முக்கியமான அம்சங்களை வாங்கிக்கொண்டு அது வளர்ந்தது. அந்த வளர்ச்சிப்போக்கில் வேதமரபு வேதாந்தமாகவும் பின்னர் பக்திமதங்களாகவும் மாறியது.

வைதிகமரபில் இருந்த பிரம்மம் என்ற கருத்துதான் இந்த இணைப்புப்போக்கு உருவாவதற்கான காரணம். பிரம்மம் என்பது பெயரற்ற, உருவமற்ற, எங்கும் நிறைந்த, எல்லாமாக ஆகிய ஒரு தத்துவார்த்தமான தெய்வம். அந்தத் தத்துவமாக நாம் எந்தக் கடவுளையும் காணமுடியும். கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் எல்லாம் பிரம்மமாக விளக்கமுடியும். உங்கள் உள்ளூர் மாரியம்மனைக்கூடத் தோத்திரங்களில் பிரம்ம சொரூபிணி [பிரம்மமே உருவெடுத்து வந்தவள்] என்றுதான் சொல்லி வழிபடுவார்கள்.

இந்தியாவெங்கும் இந்தத் தொகுப்புநிகழ்வு அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்து மெய்ஞானம் எவரையும் மேலே கீழே என வரையறுக்கவில்லை. சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் இந்துமதத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்களாக ஆகிறார்கள். இந்துமதத்தின் ஆசாரங்களை அவர்கள் அதற்கேற்ப வரையறைசெய்துகொள்கிறார்கள்.

நூறுவருடம் முன்பு இங்கே வரலாற்றை எழுதிய வெள்ளையர் இந்துமதம்தான் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது என எழுதிவைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவ மதமாற்ற எண்ணம் கொண்டவர்கள். சென்ற நூறாண்டுக்காலத்தில் ஏராளமான வரலாற்று ஆய்வுகள் மூலம் அது பொய் என நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிமுறையும் ஏற்றத்தாழ்வும் உருவாகி வந்த வரலாறு துல்லியமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூறுவருடமாகவே வரலாற்றை வாசிக்காத அரசியல்வாதிகளால் சொல்லப்படும் சில்லறை வரிகளே நம் மேடைகளில் உலவுகின்றன. உங்களைப்போன்றவர்கள் எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை நம்புகிறீர்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்து மதத்தின் மெய்ஞானம் ஏற்றத்தாழ்வை வரையறைசெய்கிறது என்றால் அதை இந்துமதத்தால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆனால் உண்மை அப்படி அல்ல . இந்துமதத்தின் அமைப்புக்குள்ளேயே எப்போதும் மேலே உள்ள சாதிகள் கீழே வருவதும் கீழே உள்ள சாதிகள் மேலே செல்வதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதே வரலாறு. அந்த மாற்றங்களுக்கான காரணம் பொருளாதாரம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது. கண்டிப்பாக மதம் சார்ந்தது அல்ல

இந்தியவரலாறெங்கும் எளிய நிலைகளில் வாழ்ந்த பல்வேறு அடித்தள சாதிகள் வரலாற்றின் ஓட்டத்தில் ராணுவபலம்பெற்று மேலாதிக்கத்தை உருவாக்கிக்கொண்டதைப் பார்க்கலாம். அவர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். இந்துமதத்தில் மேலாதிக்கம் பெற்றார்கள். சந்திரகுப்த மௌரியர் முதல் இதைக் காணலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பேராலயங்களைக் கட்டிய நாயக்கர்கள் ஆந்திராவில் உள்ள எளிய மாடுமேய்க்கும் சாதியினர்தான். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் தற்செயலாகக் குதிரை மேய்க்க ஆரம்பித்தார்கள். பெரிய ராணுவ சக்தியாக மாறிப் பேரரசுகளை உருவாக்கினார்கள். நாம் காணும் தமிழகக் கோயில் ஆசாரங்களை எல்லாம் அவர்கள்தான் தீர்மானித்தார்கள். இப்படித்தான் இந்திய வரலாறு செயல்படுகிறது.

ஆகவே இந்துமதத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் இந்துமதத்தின் மையக்கருத்துக்கள் அல்ல. அவை அந்தந்தக் காலகட்டத்து சமூக யதார்த்தங்கள் மட்டுமே. எந்த ஒரு மதமும் அதைப்பின்பற்றும் மக்களின் சமூக அமைப்பையும் நம்பிக்கைகளையும் ஒட்டித்தான் செயல்பட முடியும்.

இந்துமதத்தின் மையநூல்கள் எவை என நூற்றாண்டுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளையோ அதிகாரத்தையோ பேசக்கூடியவை அல்ல. அவை முழுக்க முழுக்கத் தத்துவநூல்கள். அவற்றையே சுருதிகள் என இந்துமதம் சொல்கிறது. அவைதான் மாற்றமில்லாதவை.

சமூக ஆசாரங்களையும் சடங்குகளையும் பேசும் நூல்களை ஸ்மிருதிகள் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. அவை காலந்தோறும் மாறக்கூடியவை. சாதிமுறையைக் கடுமையாக வரையறை செய்யும் மனு ஸ்மிருதி அவற்றில் ஒன்று. அதில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியது போல வேதங்களை பிராமணரல்லாதவர்கள் கற்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. அவற்றில் எல்லா சாதியினரும் கண்டிப்பாக வேதங்களை ஓதியாகவேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதிகள் கூட உள்ளன. அவை மன்னர்களால் மாற்றப்பட்டு மனு ஸ்மிருதி கொண்டுவரப்பட்டது. அதாவது இவை இந்துமதத்தின் மாறாத நூல்கள் அல்ல. அவை மதநூல்களே அல்ல,ஆசார நூல்கள் மட்டுமே. மதம் அவற்றுக்குப்  பயன்படுத்தப்படுகிறது

எப்படி மன்னர்கள் மனுஸ்மிருதியைக் கொண்டுவந்தார்களோ அதே போலத்தான் ஜவகர்லால் நேரு என்ற நவீன ஆட்சியாளர் மனுஸ்மிருதிக்கு நேர் எதிரான ஹிந்து சட்டத்தைக் கொண்டுவந்தார். அதை அம்பேத்கர்ஸ்மிருதி என்று சொல்லலாம். மறைந்த சித்பவானந்தர் அப்படித்தான் சொல்வார். இந்துமதம் என்ன அம்பேத்கர்ஸ்மிருதிக்கு எதிராகக் கொந்தளித்தா எழுந்தது? ஒரு சிறு திருத்தம்கூட இல்லாமல் அது இந்த சமூகத்தால் ஏற்கப்படவில்லையா? வெறும் ஐம்பதாண்டுக்காலத்தில் இந்துமதம் அதன் ஆயிரம் வருட நடைமுறைகள் பலவற்றை முற்றிலும் தலைகீழாக்கிக்கொள்ளவில்லையா? ஏனென்றால் அது ஆசாரமே ஒழிய மதத்தின் சாராம்சம் அல்ல என எல்லாருக்கும் தெரியும்.

ஆகவே இந்துமதத்தில் பொதுமை இல்லை என்பது போன்ற மேலோட்டமான வரிகளை விடுங்கள். எந்த மதத்திலும் இறந்த காலத்தில் பொதுமை இருந்ததில்லை. நவீன காலகட்டம் உருவாக்கிக்கொண்ட மானுடப் பொதுமை என்ற கருத்தை வேறெந்ந்த மதத்தை விடவும் எளிதாக இந்துமதம் ஏற்றுக்கொண்டதென்பதே வரலாறு. மானுடப்பொதுமை பேசிய சிந்தனையாளர்கள் கிறித்தவ மதத்துக்கு எதிராக முந்நூறாண்டுக்காலம் பல்வேறு தியாகங்களை செய்து போராடினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாமிடம் அப்படி போராடுவதற்கான வாய்ப்பேகூட இன்றுமில்லை என்பதை நினைவுறுங்கள்.

இந்துக்கோயில்களில் எல்லா சாதியினரும் நுழைய எந்தத் தடையும் இன்றில்லை. இன்றைக்கு எண்பத்தைந்து வருடம் முன்பு அனைவரையும் ஆலயத்துக்குள் அனுமதிப்பதற்கான, பொதுமைக்கான, குரல் இந்துமதத்தின் நாயகர்களிடமிருந்தே வந்தது. அதற்கான இயக்கத்தை காந்தியும், ஆரியசமாஜமும், ராமகிருஷ்ண இயக்கமும், நாராயணகுருவும், சகஜானந்தரும் முன்னெடுத்தபோது இந்து மதத்தில் இருந்து அப்படியொன்றும் பெரும் எதிர்ப்பு கிளம்பவுமில்லை. மிகச்சில அடிப்படைவாதிகள் எதிர்த்தனர், அவர்கள் உடனே ஓரம் கட்டப்பட்டனர். ஏனென்றால், இந்து மதத்தின் மூலநூல்கள் எவையும் மானுடப்பொதுமைக்கு எதிரானவை அல்ல. அவை மானுட ஆன்மீகத்தைப்பேசும் தத்துவ நூல்கள். அந்த மூலநூல்களைச் சுட்டிக்காட்டி நாராயணகுருவும் காந்தியும் சகஜானந்தரும் எதிர்ப்புகளை வாயடைக்கச்செய்ய முடிந்தது.

இன்று அன்னியமதத்தவர் உள்ளே நுழையத் தடை உள்ளது. அது ஓர் நடைமுறைத்தடை. இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் அல்ல, தொல்லியல்மையங்களும்கூட. ஆகவே அவை சுற்றுலாமையங்களாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. அது வழிபாடுகளுக்குத் தடையாக இருக்கலாகாதென்ற நோக்கில் கருவறையை ஒட்டிய இடங்களில் பிற மதத்தவர்களுக்குத் தடை உள்ளது. மற்ற இடங்களில் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தத் தடையும் தேவையில்லை என்பதே என் எண்ணம். அது இந்துமதத்தின் ‘கொள்கை’ அல்ல. மிக எளிதாக நீக்கப்படக்கூடிய ஒரு நடைமுறை மட்டுமே.

இன்னும்கூட ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமான கோயில்களில் பிற சாதியினர் நுழைய அச்சாதியினர் தடை செய்கிறார்கள். குலதெய்வக் கோயில்களில் பிற குலத்தவர் நுழையத் தடை உள்ள இடங்கள் உண்டு. அவை சாதிப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். அந்நோக்கில் அவை விவாதிக்கப்பட்டுக் களையப்படவேண்டியவை. மதுரைக்கோயிலில் தலித் நுழைய அனுமதிக்கும் இந்து மதம் உத்தப்புரத்தில் மட்டும் அனுமதிக்காதா என்ன?

சிதம்பரம் கோயிலில் சைவத்திருமுறைகள் குறைந்தது ஆயிரமாண்டுகளாக ஒவ்வொருநாளும் ஓதப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? என்றாவது அதைப் போய் சோதித்துப்பார்த்திருக்கிறீர்களா? நான் அழைத்துச்சென்ற ஈழத்து நண்பர்கள் அங்கே கருவறைமுன் நின்று திருப்புகழ் பாடியிருக்கிறார்கள்- பலமுறை. அங்கே இந்தியாமுழுக்க உள்ள எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல சம்ஸ்கிருதமே கருவறையின் மொழியாக இருக்கிறது, அவ்வளவுதான். இப்போது தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவெங்கும் இந்து ஆலயங்களுக்கு வழிபாடுசார்ந்த தொன்மையான நடைமுறைகள் இருக்கும். அந்த நடைமுறைகளைத் தொகுத்துள்ள நூல்களை நிகமங்கள் ஆகமங்கள் என்பது வழக்கம். தமிழகத்துக்கோயில்களில் அனேகமாக அனைத்துமே ஆகம முறைப்படி வழிபடப்படுபவை. ஆகமங்களே கோயில்களுக்கு சக்தியை அளிப்பவை என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவற்றை மாற்றுவதை அவர்கள் ஏற்பதில்லை.

சிதம்பரம் கோயில் நெடுநாட்களாகவே அதற்காக உருவாக்கப்ப்பட்ட பூசாரிக்குலங்களின் பொறுப்பில் உள்ளது. அவர்கள் ஆகமங்களை முழுமையாக நம்பி இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள். எந்தச்சடங்குகளையும் மீற அனுமதிக்காதவர்கள். ஏனென்றால் அது அவர்களின் தொழிலும் கூட. அதில் மாற்றம் என்பது அவர்கள் தொழிலை இழப்பதுதான். ஆகவேதான் கோயிலின் வழமையான சில முறைமையை மீறி ஆறுமுகச்சாமி என்பவர் தமிழில் பாட முயன்றபோது அவர் அந்த அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். அவர் தமிழில் பாடியதற்காகத் தாக்கப்படவில்லை, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாடியதற்காகத் தாக்கப்பட்டார். அது ஒரு தொழில்போட்டி மட்டுமே. எந்தத் தொழிலிலும் அது நிகழும்.

அந்தத் தாக்குதல் இந்துமதத்தின் பக்தர்களால் நடத்தப்படவில்லை. அந்த அர்ச்சகர் முறை மாற்றப்பட்டபோது இந்துமதம் கொதித்தெழவும் இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான மாறுதல்கள் வழியாகத்தான் அது வளர்ந்து வந்தது, முன்னால் செல்கிறது. இந்துமதத்தின் எந்த ஒரு ஆசாரமும் நம்பிக்கையும் விவாதத்துக்கு திறந்து வைக்கப்பட்டதாகவே இன்றுவரை உள்ளது. அதை காலத்துக்கு ஏற்ப மாற்றுவது எப்போதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மக்களிடம் வரும் எந்த ஒரு ஆக்கபூர்வமான மனமாற்றத்தையும் இந்து மதம் தடுக்காது. ஏனென்றால் இந்துமதத்தின் மூலநூல்கள் என்பவை நெறிநூல்கள் அல்ல, தூயஞானநூல்கள் மட்டுமே. அவை இதைச்செய் இதைச்செய்யாதே என தடுக்கவில்லை. இதை இப்படி சிந்தனைசெய்து பார்க்கலாமே, இப்படி தியானிக்கலாமே என்று மட்டுமே சொல்கின்றன. நான் இந்துவாக இருப்பது இந்த சுதந்திரத்தை இந்த மதம் அளிக்கிறது என்பதனாலேயே.

ஆகவே இந்துமதத்தைச்சேர்ந்த ஓர் அமைப்போ ஓர் அறிஞரோ சொல்வது இந்துமதத்தின் கூற்று எனக் கொள்வது மோசடி மட்டுமே. அப்படி எவரும் எதையும்சொல்லலாம். ஆனால் எவரும் விதி சொல்ல, கட்டுப்படுத்த அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. இந்துமதம் ஒரு அமைப்பு அல்ல. ஒரு ஞானமார்க்கம் மட்டுமே. அதில் பலநூறு வழிகள் உள்ளன. எல்லா வழிகளுமே இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாத்திக ஞானமார்க்கமும் அடக்கம். வாசித்துப்பாருங்கள்

தமிழ் நீசபாஷை என்று சொன்னது யார்? இந்துமதத்தின் எந்த நூல்? எந்த ஞானி? யாரோ எங்கோ சொன்னார்கள் என நீங்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர தமிழ் மீது உங்களுக்கிருக்கும் ஆழமான இழிவுணர்வே அதற்குக் காரணம். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று செவிகளில் விஷமூற்றும் வரியைச் சொன்னவர் இப்படி அவதூறுப் பிரச்சாரம்செய்பவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராதான், எந்த இந்து ஞானியும் அல்ல.

நேர்மாறாக தெய்வத்தமிழ் என வைணவர்களாலும் சிவன் காதில் அணியும் குண்டலம் என்றும் அவன் உடுக்கின் நாதத்தால் அமைக்கப்பட்டது என்றும் சைவர்களாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்களாக வழிபடப்படுகிறது தமிழ். ஆயிரமாண்டுகளில் ஸ்ரீரங்கத்திலோ திருமாலிருஞ்சோலையிலோ நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் பாடப்படாத ஒருநாள் கடந்துசென்றதுண்டா? மதுரையிலோ நெல்லையிலோ திருமுறை பாடப்படாத ஒரு நாள் உண்டா? என்ன பேசுகிறீர்கள்?

நான் முந்தைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், சம்ஸ்கிருதம் என்றுமே அறிவுச்செயல்பாட்டுக்குரிய மொழிதான் என. பேசப்பட்ட புழக்கமொழி அல்ல அது. எஸ்பராண்டோ போலப் பொதுமொழியாக உருவாக்கப்பட்டது அது. அந்தக்கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், அதன் பெரும் ஆசிரியர்கள் பிராமணர்கள் அல்ல என. அது சமணர்களுக்கும் நாத்திகர்களுக்கும்கூட மூலமொழிதான் என. எதையுமே நீங்கள் கண்டுகொள்வதில்லை.

ஏன் அனைத்துக்கோயிலிலும் சம்ஸ்கிருதம் மூலமொழியாக இருக்கிறது, அதற்கான வரலாற்றுக்காரணம் என்ன என்றுதான் நான் அக்கட்டுரையில் விளக்கியிருந்தேன். என்ன காரணத்தால் பிராமணர்கள் கோயிலில் பூஜைக்கு வைக்கப்படுகிறார்கள் என விரிவாக சமூகநோக்கில்தான் ஆராயவேண்டும். திருமணம் காதுகுத்து எல்லாவற்றுக்கும் பிராமணர்கள் வருவது என்பது இன்று நீங்களாக விரும்பித் தேர்ந்தெடுப்பது. தமிழகத்தின் பெரும்பாலான சாதிகளில் அப்படி வழக்கம் இல்லை. இன்று பணம் வரும்போது அதை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இந்துமதம் எங்கும் உங்களிடம் அப்படிச் சொல்லவில்லை. பிராமணர்கள் இந்துமதத்தின் பூசகர்கள் என்பது ஒரு வழிவழியான மரபு, அவ்வளவுதான். அது இந்துமத விதி அல்ல.காசி, ஸ்ரீசைலம் போன்ற பல பெருங்கோயில்களில் பக்தர்கள் அனைவருமே கருவறைசென்று தொட்டு பூஜை செய்யலாம் என்ற விதி ஆயிரமாண்டுகளாக உள்ளது.. இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான கோயில்களில் பிராமணர்கள் பூஜைசெய்யவில்லை . பலநூறு பூசாரிக்குலங்கள் உள்ளன. பல சமூகங்கள் அவர்களுக்குள்ளாகவே பூசாரிக் குலங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சம்ஸ்கிருதம் எப்போது கருவறைக்குள் வருகிறது? ஒரு தெய்வம் குல, இன, பிராந்திய அடையாளம் விட்டுப் பெருந்தெய்வமாக ஆகும்போதுதான். அய்யா , அதைத்தானே நான் கட்டுரையிலே சொல்லியிருந்தேன். அதையே சொல்லித் திருப்பிக் கேள்வி கேட்டால் என்னய்யா செய்வேன்?

அன்புள்ள செல்வம், உங்கள் பிரச்சினைதான் என்ன? நான் எழுதியிருந்த வினாவுக்கு பதிலாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்கெல்லாம் எதையெல்லாம் கேட்கின்றன என்று பாருங்கள். நீங்கள் இந்து என்கிறீர்கள். இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள், காரணம் சாதி என்கிறீர்கள், சம்ஸ்கிருதம் என்கிறீர்கள், பிராமணர் என்கிறீர்கள். எதை வலுக்கட்டாயமாக நம்ப விரும்புகிறீர்கள்? அதற்கான உளவியல் காரணம் என்ன? அந்தக் காரணத்தை இழக்கலாகாது என்பதற்காகத்தான் எழுதிய எதையுமே வாசிக்காமல், புரிந்துகொள்ளாமல் மீண்டும் கேட்கிறீர்களா?

அந்தக்காரணம் என்ன தெரியுமா? பொதுமைக்கு எதிரானவர் நீங்கள் என்பதே. உங்கள் சாதியநோக்கைத் தாண்டிச்செல்ல உங்களால் முடியவில்லை என்பதே. அதற்கான பழியைப் போட நீங்கள் இந்துமதத்தை பிராமணர்களை தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள்.

இந்த எதார்த்தத்தை நீங்கள் மானசீகமாக ஒப்புக்கொண்டால் நீங்கள் முதலில் உங்கள் சாதியின், குடும்பத்தின் உளவியலில் ஊறியுள்ள பொதுமைக்கு எதிரான அம்சங்களை நோக்கித் திரும்புவீர்கள். அதற்கான ஊற்று என்ன என்று உங்கள் இனக்குழு மனநிலையில் இருந்து கண்டுகொள்வீர்கள். அதைக்களைய உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மதம், பிராமணர் எனப் பழிசொல்ல இடம்தேடி அலைய மாட்டீர்கள். அதுதான் தொடக்கம்.

பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை. நாமெல்லாருமே ஒரே கடந்தகாலக் குட்டையில் ஊறியவர்கள்தான். அதைக் கடந்து செல்வதைப்பற்றி சிந்திப்போம். நாம் மாறினால் நம் மதமும் மாறும்.

எனக்கு முன்னால் நிற்கும் பிரச்சினை இதுதான் செல்வம். நான் பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவேன். அதில் எதையுமே படிக்காமல், பொருட்படுத்தாமல், முன்னர் சொன்னதையே திருப்பிச்சொல்லி எனக்குச் சுடச்சுட பதில் சொல்லிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள் பிறர். ஈவேராவின் வைக்கம் போராட்டம் முதல் இன்றைய காந்தி வரை இதுவே நிகழ்கிறது. நான் நிறுத்திக்கொள்ளும்போது என்னை ‘வாயடைக்க’ செய்துவிட்டதாகக் கொண்டாடியும் கொள்வார்கள்

அதைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால் சரி. இல்லையேல் திருப்பி வாசியுங்கள், புரிந்துகொள்வீர்கள்.

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard