




மேலும் ஐரோப்பிய இனம் அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியென பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பு ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகளை தேவையற்றதாக்கின. அல்லது ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் எழுந்தவண்ணமே உள்ளன. இன்றைய தீண்டாமை மற்றும் சாதியக்கொடுமைகளினை ஆதாயமாக்கிக் கொண்டு இந்து தருமத்துக்கு எதிராகவும் இந்து சமுதாயத்துக்கு எதிராகவும் இயங்கும் போலி-தலித் அமைப்புகள் இந்த வரலாற்றினைத்தான் மறைத்து விடுகின்றன. சாதிக்கொடுமை ஏதோ இந்து தருமத்தினால் மட்டுமே ஏற்பட்டது என்று பொய் கூறி வெறுப்பியல் பிரச்சாரம் செய்து பகைமை வளர்க்கின்றனர். பாணர்களையும் மேலும் சில மக்கள் சமுதாயங்களையும் இவ்விதம் ஒதுக்கும் போக்கு ஏறக்குறைய எல்லா மானுட சமுதாயங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த மக்களின் ஆன்ம எழுச்சியையும் விடுதலைவேட்கையையும் குறித்த பதிவுகளின் சுவடுகள் கூட பாரத சமுதாயமன்றி பிற சமுதாயங்களில் காணமுடிவதில்லை.உதாரணமாக எந்த சமய இலக்கியத்திலும் சரி அல்லது நாடக இலக்கியங்களிலும் சரி இந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் குரல் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியங்களில் அழித்தொழிக்கப்பட்டது. இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் பாரத சமுதாயத்தில் இறைவனே இந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக பக்தி இலக்கியங்களில் வெளிப்பட்டது பாரதத்தின் சிறப்பாகும். தொண்டரடிபொடியாழ்வார் திருமாலின் குரலாகவே மேல்சாதியினரைக் குறிப்பிட்டு கூறுகிறார்:
பழுதிலா ஒழுக்கலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்களாகில்
தொழுமின் நீர்: கொடுமின்:கொள்மின்:3

"வேத வேதாந்தங்களை எல்லாம் தெரிந்து பரம பக்தனாயிருப்பவனுக்கும் அடியார்களைப் பழிப்பது அபாயத்தையே விளைக்கும் என்கிறார் (தொண்டரடிபொடியாழ்வார்.) பழிப்பு என்றால் தூஷிப்பது கூட அல்ல; சாதியைக் குறிப்பிடுவதே பழிப்பதாகும் என்பர். இதற்கு தண்டனை மறுமையில் எமலோகத்திலோ வேறு எங்கேயோ என்பதில்லையாம். தூஷித்த அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே கிடைத்துவிடுகிறதாம்."4
மேலும் பாணர்கள் மேற்கத்திய நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்ட போது, பெரிய பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் அத்தகைய கொடுமைகள் எல்லாம் நடக்கவே இல்லை - பாணர்கள் மனிதர்களே அல்ல என்கிற மாதிரி அவர்களைக் குறித்து அவர்களை அடக்கியதல்லாது வேறேது குரலும் கிறிஸ்தவத்தின் 1700 ஆண்டுகள் வரலாற்றில் பதியக்கூட இல்லாத மானுட சமத்துவமின்மை தாண்டவமாடிய உலகில் இந்து அருளாளர்கள் சமுதாயப் போக்கில் தாழ்த்தப்பட்ட பாணர்குல பெருமையை பதிந்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் நாம் இன்றைய விளிம்பு நிலை சமுதாயத்திடம் எவ்வாறு ஒரு இந்து என்கிற முறையில் சேவை செய்திட வேண்டும் என்பதனை விளக்குகிறது. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் "திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்" எனக்கூறினால் திருமலை நம்பிகள் கூறுகிறார்:"பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே"

அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் மற்றொரு நல்ல எடுத்துக்காட்டாகும். கிறிஸ்தவ மிசிநரிகளாலும் வெள்ளையர் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தாலும் அடக்குமுறைக்கு ஆளான சான்றோர் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்கு காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர். அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கு அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கு உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம். கிறிஸ்தவம் போன்ற மதங்களில் இறைதூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப்பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். மோசடியான வம்சாவளி பட்டியலைக் கூட இதற்காக உருவாக்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும். எனவே அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என கேள்விபட்டவுடன், கிறிஸ்தவ ஆதிக்க கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (கிறிஸ்தவ தாக்கத்தினால் இருக்கலாம்) அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா என கேட்க அதற்கு சாஸ்திரி ஒருவர் "எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா"5 என்றார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார்.
"பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்...குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்"6இவ்வாறு இந்து தத்துவம் வெறும் தத்துவமாக மட்டுமல்லாது நடைமுறை இயக்கமாகவும் பொருளாதார-அரசியல்-வரலாற்று சூழல்களால் தாழ்த்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான பலவீனமான மக்களை காப்பாற்றும் விடுதலை இயக்கமாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

வீர சாவர்க்கர் பல கட்டுரைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் குட்டகுட்ட குனியக் கூடாது என்றும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் எழுதினார். தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக ஆவதற்கு மேல்சாதியினர் ரத்னாகிரியில் எதிர்ப்பு தெரிவித்த போது, வீர சாவர்க்கர் அரசுக்கு எழுதினார், "தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக ஏற்க இயலாத அளவு மனிதத்தன்மை அற்றவர்களுக்கு கல்வி சாலையே தேவை இல்லை. தாழ்த்தப்பட்டவரை ஆசிரியராக நியமிக்க முடியாது என்றால் பள்ளியையே இழுத்து மூடிவிடுவதுதான் உசிதம்." வீர சாவர்க்கரின் ஆதரவின் விளைவாக தாழ்த்தப்பட்டவர் ஆசிரியராக தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றுவது தடுக்கப்பட முடியாததாயிற்று. அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும் கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிட்டார்.7 என்ற போதிலும் மேல்சாதி மக்களின் சாதிய வெறி விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக வீர சாவர்க்கருக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு மேல்சாதியினரிடமிருந்து புகார்கள் போயின. அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்:
"இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை வெளியிடப்பட்டது8.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான பரம பூஜனீய குருஜி சாதீயத்தை அழித்திட எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளை புராண-இதிகாசங்களில் கூறப்படும் பகீரதனின் பிரயத்தனத்துடனேதான் ஒப்பிட முடியும். மானுட மூடத்தனமாகிய உயர் சாதி வெறியால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு சாதிய அரண்களால் அடைக்கப்பட்ட ஞான கங்கையை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளூக்கு கொண்டு செல்ல களமிறங்கிய நவீன பகீரதன் பரம் பூஜனீய குருஜி. சாதிதான் அனைத்து கேடுகளுக்கு காரணம் என்று ஒரு புறம் பேசிக்கொண்டு மறுபுறம் சாதிய ஓட்டுவங்கிகளை உருவாக்கும் முற்போக்குகள் வாழும் இந்த போலிகளின் உலகில் ஸ்ரீ குருஜி சமுதாய நல்லிணக்கம் குறித்து உண்மையான அக்கறையும் தெளிவான பார்வையும் கொண்டிருந்தார்:
"ஒரு மரம் தனது காய்ந்து போன இலைகளையும் பட்டுப்போன கிளைகளையும் உதிர்த்து புதிய இலைகளையும் கிளைகளையும் வெளிக்கொணர்வதைப் போல சமுதாயம் இன்றிருக்கும் வர்ண வியவஸ்தாவை உதிர்த்துவிட்டு அதன் இடத்தில் சமுதாய நலனுக்கு உகந்த புதிய சமுதாய அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ளட்டும். இது சமுதாயத்தின் இயற்கையான வளர்ச்சி முறையேயாகும்....பழைய வீட்டினை இடித்து தள்ளிவிட்டு புதிய வீட்டினை அமைப்பது போல தேவையற்ற சமுதாய அமைப்பினை இப்போதே இத்தருணமே முடிவடைய செய்ய வேண்டும்." 9வரலாற்று புகழ் மிக்க உடுப்பு விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு துறவிகளையும் ஒரு மேடையில் ஒருங்கிணைத்து (இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பட்ட வேதனைகளும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.)



"பழமையானது என்பதால் மட்டுமே நன்மை பயக்கக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ நாம் எதையுமே கருதமுடியாது. கடந்த காலங்களில் இந்த பழமையான நெறிகளுக்கு ஏற்ப வாழ்ந்ததால் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்று நாம் எண்ணக்கூடாது. எனது தகப்பனாரும் பாட்டனாரும் வெட்டிய கிணறு உப்புகரிக்கிறது என்றாலும் அவர்கள் இதையே குடித்து வாழ்ந்தார்கள் எனவே நாமும் அதையே குடிப்போம் என்கிற குருட்டுத்தனம் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது. இத்தகைய சிந்தனை தவறானது. ...களைய வேண்டியவற்றை களைந்து மேன்மையானவற்றை பகுத்தறிந்து காக்க வேண்டும்....தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவம் இல்லை. சமுதாய சமத்துவத்தைக் கொண்டு வர நாம் முயற்சிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எவ்விதத்திலாவது சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்திட முயற்சிக்க வேண்டும்."11
அண்மையில் எந்த அர்ச்சகர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான ஆலயப்பிரவேசத்தை மறுத்தாரோ அதே அர்ச்சகரின் பேரன் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடம் தம் முன்னோர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.அவர் அப்படி மன்னிப்பு கேட்ட மேடை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி மேடை ஆகும்.12

"இடதுசாரி நண்பர்கள் என்னை வசை பாடலாம். நான் அதற்காக வருந்தவில்லை. ஏனெனில் எனக்கு ஒரே குறிக்கோள்தான். அது தேசிய ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும்....வெறும் பேச்சுக்களும் புத்தகங்களும் சமுதாய நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் கொண்டுவந்திட முடியாது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சமரஸா மஞ்ச் போன்றவற்றின் செயல்பாடுகள் மேலும் மேலும் விரிவடைவதன் மூலமே அது நடந்திடும்."13
அது போலவே நம் பொதுவான நினைப்புக்கு அப்பால் இன்றைய சமுதாய விளிம்பு நிலை மக்களில் பலரை இந்த விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றதில் காலனிய ஆதிக்க சக்திகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இதுவும் இந்து விரோத கருத்தியல் கொண்டோ ரால் பெரிய அளவில் மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குற்றப்பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்டு இன்றளவும் காவல்துறையினரால் கொடுமைப் படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டில் இருப்போரால் சுரண்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வரும் சமுதாயத்தினர் ஆவர். இவர்களில் பல வனவாசி மற்றும் தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்கள் அடங்குவர். உதாரணமாக சிங்கப்பூர் பல்கலைக்கழக சமூகவியலாளர் ஆண்ட்ரூ மேஜர் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபியர் மட்டும் 1,50,000 பேர் குற்றப்பரம்பரையினராக அறிவிக்கப்பட்டதையும் இத்தகைய தரவுகள் வெளியே அறியப்படாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.14
1871 இல் பிரிட்டிஷ் அரசால் அமுலாக்கப்பட்ட இந்த கொடுமையான இனவாத சட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ இறையியல் மற்றும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் ஆகியவற்றின் தாக்கம் கொண்டது. தாய் தந்தையர் செய்த பாவம் குழந்தைகளுக்கு வரும் எனும் நம்பிக்கை உலகம் முழுததும் பொதுவாக இருந்தாலும் இந்திய மரபில் அது மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. எனவேதான் இரணியனுக்கு பிரகலாதன் பிறக்க முடியும் எனும் கருத்தாக்கம் இங்கு வேரூன்றியது. யாராவது ஒருவர் செய்த தவறுக்கு அவரது பரம்பரை பரம்பரையாக அது பாவசுமையாக வரும் எனும் நம்பிக்கை பாரதத்தில் வேரூன்றிடவில்லை. மாறாக, ஆதாம் செய்த பாவம் ஆதி பாவமாக மனிதகுலம் சுமக்கும் எனவும், கிறிஸ்துவினை கொன்ற இரத்தப்பழியை யூதர்கள் இன்னும் சுமப்பதாகவும் கொண்ட நம்பிக்கைகள் கிறிஸ்தவ மேற்கின் முக்கிய ஆதார நம்பிக்கைகளாக திகழ்ந்தன. இதன் விளைவாகவே இந்தியாவிலும் குற்ற பரம்பரையினர் என வனவாசி சமுதாயம் மற்றும் நாடோடி சமுதாயங்களை சார்ந்தவர்களை முத்திரை குத்தினர். பாரதம் முழுவதும் 160க்கும் அதிகமான சமூகத்தினர் குற்றப்பரம்பரையினர் ஆக்கப்பட்டனர். அவர்கள் காலனிய அரசின் காவல்துறையாலும் காலனிய அரசுக்குட்பட்ட சமுதாயத்தினாலும் கீழாகப் பார்க்கப்பட்டனர். பலவித சுரண்டலுக்கும் ஆளாயினர்.
அத்தகைய ஒரு சமுதாயமே பர்த்திகள். ரமேஷ் சதுபலே எனும் சங்க ஸ்வயம் சேவகர் தமது நிலத்தில் 18 ஏக்கர்களை இந்த சமுதாயத்தினருக்கான தங்கும் விடுதி கட்ட அளித்தார். பர்த்தி குழந்தைகளுக்கான தங்கும் கல்வி விடுதி அமைந்திட நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் நிதி உதவி அளித்தனர். சமுதாய சமரஸா மஞ்ச் தலைவர் திரு.ரமேஷ் பதங்கே எப்படி ஒரு 82 வயது ஸ்வயம் சேவக்கான திரு. தத்தோபந்த் பெத்தே என்பவர் 10,000 ரூபாய் சேகரித்துக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். நாடெங்கும் உள்ள ஸ்வயம் சேவகர்கள் பர்த்தி குழந்தைகளின் கல்விக்காக வீடு வீடாக அலைந்து பணம் சேகரித்து கொடுத்தனர்.15

- 1. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஜூன் 19 2007, 'Kanchi Seer to flag off Rath Yatra'
- 2. Kathy Stuart, Defiled Trades and outcastes - honour and ritual pollution in early modern Germany pp.24-25 (Cambridge University Press, 1999)
- 3.ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை -42 ஆம் பாடல்
- 4.பி.ஸ்ரீ.ஆச்சாரியர், 'துயில் எழுப்பிய தொண்டர்' பக்.103-104 கலைமகள் காரியாலயம். 1957
- 5.அகிலத்திரட்டு அம்மானை: 2831-32
- 6.அகிலத்திரட்டு அம்மானை: 2852-53, 2855-57
- 7.ஜனதா, 9 மார்ச் 1931
- 8.ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2
- 9.http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=159&page=17
- 10.http://ekalindia.org/ekal_new/index.php
- 11. 'சமுதாய சமத்துவம் இந்து ஒருங்கிணைப்பு' -ப.பூ.தேவரஸ் 1974 மே 7 ஆற்றிய உரை
- 12.http://www.hindu.com/2005/08/15/stories/2005081501430900.htm
- 13.http://timesofindia.indiatimes.com/articleshow/1945000.cms
- 14.ஆண்ட்ரு மேஜர், "State and Criminal Tribes in Colonial Punjab: Surveillance, Control and Reclamation of the 'Dangerous Classes'"(Modern Asian Studies (1999), 33: 657-688 Cambridge University Press) http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=21611
- 15. ரமேஷ் பதங்கே, 'ஆர்.எஸ்.எஸ்ஸும் மனுவாதமும்', 1998