New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி Poornachandran


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி Poornachandran
Permalink  
 


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் 

597px-My_impression
கேள்வி 1. விரிச்சி கேட்டல் என்ற பண்டைய பழக்கம் இன்றைய சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒப்பானதா? காலக்கணிப்பு என்பது பிற்கால சங்க இலக்கியமான கணியன் பூங்குன்றனார் போன்றவர்களிடமும் இருநத வழக்கம் இல்லையா?

காசி விசுவநாதன், துபாய்
விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள். அதாவது, நாம் ஏதாவது ஒரு செயல் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலையோடு வீட்டு வாசற்படியை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கிறோம். தெருவில் யாரோ ஒருவன் இது முடியவே முடியாது என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டு போகிறான். நாம் உடனே மனம் துணுக்குறுகிறோம். பதிலாக, அவன் நிச்சயமா நல்லபடியா எல்லாம் நடக்கும்பா என்று சொல்லிக்கொண்டுபோவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது நம் மனம் மகிழ்ச்சிடைகிறது. இதுதான் விரிச்சி கேட்டல். இது ஒரு மூடநம்பிக்கை தான். இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான மூடநம்பிக்கை என்று ஆறுதல் அடையலாம்.
இது இக்காலச் சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒத்ததல்ல என்பது நான் விளக்கியபோதே தெரிந்திருக்கும். ஏனென்றால் இதில் ஜாதகம் எழுதுவது, அதை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பது, நல்லநாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைப் பார்ப்பது என்பதெல்லாம் கிடையாது.
“பிற்கால” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிய வில்லை. சங்க இலக்கியம்தான் தமிழில் முற்பட்டது, மூத்தது. கமில் சுவலபில் போன்ற உலகப் பேராசிரியர்கள் எல்லாம்கூட சங்க இலக்கியம் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமசுகிருதம், பிராகிருதம், பாலி போன்ற மொழிகளைத் தவிர இந்தியாவில் தமிழ் மட்டுமே இருந்தது. அக்காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளோ, குசராத்தி, வங்காளி போன்ற வடஇந்தியமொழிகளோ எவையும் தோன்ற வில்லை. தமிழைச் செவ்வியல் மொழி என்பதற்கு இது முக்கியக் காரணம்.
சங்க இலக்கியம் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக்காலமாவது பரப்பளவு உடையது. அதாவது ஒரே ஆண்டிலோ, ஒரு பத்தாண்டிலோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல அது. கி.மு. 300 வாக்கில் தொடங்கப்பட்டிருக்கலாம். கி.பி.200 வரை எழுதப்பட்டிருக்கலாம். அதில் கணியன் பூங்குன்றனாரை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக ஏசுநாதர் காலத்தை ஒட்டி இருக்கலாம். (தனித்தனிப் புலவரின் காலத்தை மதிப்பிடுவது கடினம், என்றாலும் சிலர் செய்திருக்கிறார்கள்.)
கணித்தல் என்பது கணக்கிடுதல். வானத்தின் நட்சத்திர, கோள் (கிரக) அமைப்புகளைக் கணக்கிடுபவர் என்பது இச்சொல்லின் பொருள். அதாவது இக்கால வழக்கில் சொன்னால், ஒரு வானியலாளர். சோதிடர் அல்ல. தமிழ் மக்கள் அக்காலத்தில் வானியலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம். பார்ப்பனர்கள் என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமானால், பிரம்மத்தைத் தேடுகிறார்களோ இல்லையோ, பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 3. தமிழிசை இயக்கம் தவற விட்ட பாதை என்ன? ஏன் தமிழர்களின் செவ்வியல் இசை வடிவமான கருநாடக இசை என்பதை-கர்நாடிக் என்ற இசைத்திருட்டினை மீட்டெடுக்க முடியவில்லை? 
கார்த்திகேயன், கலிபோர்னியா
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் தொட்டே தமிழ் இசைக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ்ப் பண்கள் (இராகங்கள்) பலவற்றைக் குறித்துள்ளன. பழந்தமிழ் நாட்டில் குழல், யாழ், தண்ணுமை (மிருதங்கம்) உட்படப் பல இசைக்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் இலக்கிய, கல்வெட்டு, பிற உரைநடைக்குறிப்புகள் சான்றுகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ பதிநான்காம் நூற்றாண்டில் சாரங்க தேவர், பின்னர் வேங்கட மகி காலம் தொடங்கி, தமிழிசை கர்நாடக இசையாக மாறியது. இவர்கள் எல்லாம் கன்னடர்கள், தெலுங்கர்கள். அவர்கள் தமிழ் இசையைக் கர்நாடக இசையாக மாற்றி, இராகங்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத்து, நூல்கள் எழுதிவிட்டார்கள். ஏனென்றால் அது விஜயநகரப் பேரரசின் காலம். தமிழ் ஆட்சியாளர்கள் இல்லை. இருந்த குறுநிலத் தமிழ் மன்னர்களாவது அபாயத்தை உணர்ந்து தமிழ் இசை பற்றிய நூல்களைத் தமிழ்இசை வாணர்களை வைத்து எழுதச் செய்திருக்கவேண்டும். அவ்வளவு நோக்கம் அவர்களுக்கு இல்லை. இடைக்கால வரலாற்றை விரிப்பது பதிலைப் பெரிதாக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
1930களில் தமிழிசை இயக்கம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்கள் பலரால் உருவாக்கப் பட்டது. தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ள பலர்-தண்டபாணி தேசிகர், இலக்குமணப் பிள்ளை போன்ற பலர் இதில் இணைந்தனர்.
ஆனால் தமிழிசை இயக்கம் ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1. தமிழிசை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீதிக்கட்சியைச் சேர்ந்த வர்கள். பச்சையாகச் சொன்னால், செட்டியார்கள், பிள்ளைமார்கள், முக்குலத் தோர் இத்தியாதி. அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற நிலையில், நீதிக்கட்சி செய்யும் எந்த முயற்சியும் காங்கிரஸுக்கும், இந்திய தேசியத்திற்கும் எதிரானதாகவே நோக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கம் பெரிய ஆதரவு பெறவில்லை. குறிப்பாகப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். காங்கிரஸ் பெரிய அளவில் பார்ப்பன இயக்கம்தான். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், கல்கியும் சத்தியமூர்த்தியும் மட்டுமே. பாரதியாருக்குத் தமிழ் இசையில் ஆர்வம் உண்டு. ஆனால் அவர் 1921இலேயே மறைந்துவிட்டார்.
2. இதை ஏற்ற நீதிக்கட்சிப் பெரும்தனக்காரர்கள், அடித்தட்டுவரை தமிழிசை இயக்கம் பரவுவதற்கான முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. மாநாடுகள் போட்டார்கள், சில கச்சேரிகள் நடத்தினார்கள், பத்திரிகைகளில் ஆதரவுக்கட்டுரைகள் எழுதினார்கள்-அவ்வளவுதான். உண்மையில் தமிழிசை சற்றேனும் பரவியது என்றால் காரணம் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகர்களால்தான். அவர்கள்தான் பொதுமக்களிடம் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சென்றார்கள். பொதுமக்களுக்கு இசையின் வரலாற்றிலோ, கோட்பாடுகளிலோ என்ன அக்கறை இருக்கமுடியும்?
3. மிக முக்கியமான கோளாறு, திராவிட இயக்கத்தவர் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. தி.க. எந்தக் கலையிலுமே ஆர்வம் காட்டியதில்லை. தி.மு.க. திரைப்படத்திலும், நாடகத்திலும் ஆர்வம் காட்டியதுபோல, தமிழிசையிலும் ஆர்வம் காட்டியிருந்தால் ஓரளவேனும் அது பிழைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடக்கத்தில் பாரதிதாசன் போன்றோர் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் கைவிட்டுவிட்டார்கள். திரைப்படப் பாடல்களின் திசை வேறாகப் போய்விட்டது. பொதுவுடைமை இயக்கத்திலும் பட்டுக்கோட்டை ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நல்ல பாடல்கள் எழுதியவர். வேறு ஒருவரும் கிடையாது.
4. பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் ஆற்றல் வாய்ந்த கவிஞனாக வந்தவர் கண்ணதாசன். ஆனால் அவருக்குக் கொள்கை எதுவும் கிடையாது. அதிகபட்சம், அவர் கண்ணனுக்கு தாசன்தான். கண்ணா கண்ணா என்று மறுபடியும் தெய்வப் புலம்பல்.
இப்படி எத்தனையோ காரணங்கள்.

கேள்வி 4. பரதவர் கலை என்ற பரதக்கலை, பின் நாட்களில் எவ்வாறு பரத நாட்டியம் என மாற்றம் பெற்று, ஒரு சாதி அமைப்பிற்கு மட்டுமே சொந்த மானது? அதனைப் பரத்தையர் கலை என்ற அவலம் வந்ததற்குக் காரணம் என்ன?

காந்திராஜ், வட கரோலினா 
அ. எல்லாச் சொற்களையும் வடமொழிச் சொற்கள் என்றாக்கி, அதற்கு ஒரு காரணத்தை அல்லது கட்டுக்கதையைச் சொல்லிவிடுவதில் பார்ப்பனர்களுக்கு நிகர் இல்லை. அப்படித்தான் பரதவர் கலை (பேச்சுத் தமிழில் பரதவக் கலை>பரதக்கலை) என்பதற்கும் ப-என்றால் பாவம், ர-ராகம், த-என்றால் தாளம், “பாவமும் ராகமும் தாளமும் நிரம்பியது பரதம்” என்றாக்கிவிட்டார்கள். உண்மையில் அப்படித்தான் என்றாலும், அது பாராதாக் கலை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்? (ஒருவேளை வடமொழியில் நெடில்களை எல்லாம் விட்டுவிடவேண்டுமா?)
ஆ. இதெல்லாம் பின்னால்தான். இம்மாதிரிக் காரணங்கள் கண்டுபிடிக்கும் முன்பே அது பார்ப்பனர்க் கலையாக உருமாற்றம் அடைந்துவிட்டது. அதற்கு முன்பு அதை இசைவேளாளர்களும் தாசிகளும்தான் காப்பாற்றிவந்தார்கள். இராஜராஜ சோழன் சோழநாட்டில் பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதும், அவற்றில் கணிகையர்களைப் பாட்டுப்பாடுவதற்கும் நாட்டியமாடுவதற்கும் நியமித்தான். அதற்காகவே முன்பு சிற்றளவில் இருந்த பரத்தையர்களை தேவதாசிகள் (தேவரடியார்கள்-இது இப்போது வழக்கில் தேவடியா என்று வசைச்சொல்லாக மாறிவிட்டது) என்று பெரியதொரு சாதியாக மாற்றிக் கோயிலுக்குக் கோயில் அனுப்பினான். இது நடந்தது கி.பி. பதினோரம் நூற்றாண்டில்.
இ. இவர்கள் தேவர் அடியார்களாக இருந்ததெல்லாம் சிறுகாலம்தான். பிறகு இயல்பாகவே அவர்கள் பெரியமனிதர்களுடைய, அதிகாரிகளுடைய, ஆதிக்க சாதியினருடைய (பார்ப்பனர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், இத்தியாதி) வைப்புகளானார்கள். (1950கள்வரை கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவருக்கும் வைப்பாட்டிகளாக தாசிகள் உண்டு. அவர்களுக்கு அதில் மிகவும் பெருமை. அக்காலத்து ஜமீன்தார், மைனர்களுக்கும் தாசிகளிடம் போய்வருவது மிகப் பெருமை.) ஆகவே இறைவனுக்குரிய கலை, பெரிய மனிதர்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. அதற்குப் பெயரும் பரதவர் கலை என்பதிலி ருந்து சதிர்க்கச்சேரியாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரதநாட்டியம், சதிர் என்ற பெயரில்தான் அறியப்பட்டது.
ஈ. இசை, நாட்டியக் கலையோடு அன்றிலிருந்து சம்பந்தப்பட்டது நாதசுரமும் பெரிய மேளம் எனப்படும் தவிலும். நாதசுரத்தை ஊத மூச்சுப்பிடிக்கவேண்டும். தவில் அடிக்க கைகளில் வலு வேண்டும். அந்த ‘தம்’-மும், வலுவும் இல்லாததால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள்.

கேள்வி 5. சங்க இலக்கியங்களின் காலநிலை குறித்து விளக்கம் தேவை.

சுப்பிரமணி, சென்னை 
முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இயற்றப் பட்டது சங்க இலக்கியம். இதற்கு ஆதாரங்களை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் (மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றில்) காணலாம். அகச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. புறச்சான்றுகளாகக் கிடைப்பவைதான் முக்கியமானவை. அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்.
அ. சங்ககாலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்) கிரேக்கர், ரோமானியர் பெரிய அளவில் தமிழகத்தோடு கப்பல்களில் வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ், பிளைனி, தாலமி எழுதிய நூல்கள் ஆகியவற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் கிரேக்க, ரோமானியக் (இவர்களை யவனர் என்பது தமிழ் வழக்கம்) காசுகள்-குறிப்பாக கி.மு.வில் இருந்த அகஸ்டஸ் சீஸரின் காசுகள் புதுச்சேரி அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களுக்கு யவனர் குற்றேவல் செய்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆ. தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பவை தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சொற்றொடர் அமைப்புகள், செய்திகள் ஆகியவை அக்காலத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிநடை, செய்திகள் ஆகியவற்றுடன் ஒத்துச் செல்கின்றன.
இ. சங்ககால நகரமான பூம்புகார் கடலடியில் இன்றும் மறைந்து கிடக்கிறது. 1980 கள்வரை கடலில் அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் காவிரி கடலில் கலக்குமிடத்துக்கு அருகில் கடலுக்கடியில் மிகப்பெரிய நகரம் ஒன்று இருப்பதைக் கண்டு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் பணம் இல்லை என்ற நொள்ளைச் சாக்கு காட்டி அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது.
இதுபோல இன்னும் ஏராளமாகக் கூறலாம். எதற்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படிப்பது நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

kannaki-cooking
கேள்வி: தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பது அரசியல் சாராத இயக்கங்களால் முடியுமா?   செல்வன், சென்னை

பதில்:
 அரசியல் என்ற சொல்லின் அர்த்தத்தைக் குறுக்கிப் பார்ப்பதால் கேட்கப் படும் கேள்வி இது. எங்கே, எதில் அரசியல் இல்லை? இன்னொருவர் பண்பாடு நம் மீது சுமத்தப்படுவது அரசியல் செய்கை இல்லையா? அது என்ன கள்ளமற்ற, குழந்தைத்தனமான செயலா? ஆதிக்கத்துக்கான செயல்தானே?
அதுபோல அதிலிருந்து, நம் பண்பாட்டை நாம் மீட்டுருவாக்கம் செய்வது, காப்பாற்றுவது என்பதும் அரசியல் செய்கைதான். அதில் சந்தேகம் என்ன?
நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும், பேசும் எல்லாப் பேச்சுகளிலும் நுண்அரசியல் கலந்திருக்கிறது. நேரடி அரசியல் பங்கேற்பிலிருந்து வித்தியாசப்படுத்த, நுண்அரசியல் என்ற சொல் கையாளப்படுகிறது.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி என்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே. அதில் முக்கால்வாசி ஆங்கிலமும் கால்வாசித் தமிழும் ஒருவர் கலந்து பேசுகிறார் என்றால் அவரது இயல்பு, பின்னணி, நோக்கம் இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அவர் ஒரு பணக்காரராக, அல்லது உயர்மத்தியத் தர வகுப்பு சார்ந்தவராக இருப்பார். அவருக்குத் தமிழ் பற்றிப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது. ஏதோ கலப்புத் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவதோடு சரி. அதையும்கூட இப்போது பலர் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பேச்சு பழகவேண்டும், அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக வீட்டிலும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மொழித் தூய்மை பற்றியோ கலப்பு பற்றியோ கவலை கிடையாது. சுருக்க மாகச் சொன்னால் தமிழ்ப்பண்பாடு பற்றிக் கவலை கிடையாது. ஏதோ படித்தார்கள், நல்ல ஊதியம் வாங்கிப் பிழைக்கிறார்கள்- அவ்வளவுதான். ஆகவே தங்கள் பிள்ளைகளை அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்கமாட்டார்கள். அப்படிப் படித்தால் நல்ல வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாது அல்லவா? அவர்கள் ஊதிய உயர்வுக்கெல்லாம் போராட மாட்டார்கள். தாங்களே உயர் அதிகாரிகளாக இருப்பதால் இன்னும் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசியே முடித்துக்கொள்வார்கள்..

இத்தகைய மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் இவர்கள் தங்களோடு பழகுபவர்களுக்கும்-அவர்கள் கீழ்மத்தியத் தர வகுப்பினராக இருந்தாலும் பரப்புவார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா? இதை எப்படி ஒழிப்பீர்கள்? ஆகவே அரசியல் இயக்கங்களால் மட்டுமே நமது பண்பாட்டை மீட்க முடியும். வேண்டுமானால் நுண்அரசியலோடு நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறுங்கள். அதுவும் வெளிப்படையான அரசியலுக்குச் சில சம்பவங்கள் நிகழும்போது இட்டுச் சென்றுவிடும்தான். வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பெரியாரே அந்தந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அல்லவா?

கேள்வி: மதுரை மீது மாலிக் கபூரின்  படையெடுப்புக்குப் பிறகு சரண் அடைந்த வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் நிலை என்ன?  மதுரை பொற் குவியல்களை மாலிக் கபூர் கொள்ளை அடித்துச் சென்ற பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடு பஞ்சத்தில் இருந்து மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் (தமிழர்களின் தற்போதைய நிலை) தமிழர்கள் உயர முடியுமா? அதற்கு என்ன வழி? மௌ.வினோத் குமார்

பதில்- இந்தக் கேள்வி பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடியவரை பதில்சொல்ல முயற்சி செய்யலாம்.

மாலிக் காபூர் கொள்ளையடித்துச் சென்றபிறகு தமிழ்நாடு பாலைவன மாயிற்று. இன்னும் இரண்டு முறை- 1314இல் குஸ்ரூகான் என்பவன் படையெடுத்தான், 1323இல் உலூஸ்கான் படையெடுப்பு நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். உலூஸ்கான் பின்னால் முகமது பின் துக்ளக் ஆனான். அசன்ஷா என்பவனிடம் ஆட்சியை விட்டுச் சென்றான். முஸ்லிம்கள்தான் மதுரையில் 1344வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள், இருந்தாலும் நான்காம் சுந்தரபாண்டியன் 1320 வரையிலும், நான்காம் வீரபாண்டியன் 1347 வரையிலும் உயிரோடிருந்தார்கள் என்று தெரிகிறது. இதுபற்றித் தேவையானால், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற நூலைப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் பாண்டிய பரம்பரையினர் தலைக்கோட்டைப் போர் வரை (கி.பி.1565) வாழ்ந்திருந்தார்கள், விசயநகரப் பேரரசுக்குச் சிற்றரசர்களாக இருந் தார்கள் என்று தெரிகிறது. (உங்களுக்குத் தேவைப்பட்டால் 1309 முதல் 1565 வரை குறுநில மன்னர்களாக இருந்த பாண்டிய மன்னர்களின் பட்டியலைத் தர இயலும்.)

1336இல் விசயநகரப் பேரரசு ஆந்திரத்தில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குள் ளாகவே முதலாம் புக்கன் மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். பிறகு தமிழகத்தில் விசயநகர ஆட்சிதான். அவன் படையெடுப்பு பற்றி அவன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் நன்றாக விளக்குகிறது.

பாளையக்காரர்களான கட்டபொம்மு போன்றவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் பெயரில் பாண்டியன் இருந்தாலும் அவர்கள் பாண்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

கடைசியாக, இன்றைய தமிழர்கள் முன்னேறுவதற்கு வழிகேட்கிறீர்கள். மொழியுணர்வும் இனவுணர்வும் எந்த மக்களுக்கும் இன்றியமையாதவை. அவற்றை வளர்ப்பது ஒன்றுதான் நாம் எதிர்காலத்தில் இருப்பதற்கான ஒரே வழி. இல்லையென்றாலும் இருக்கமுடியும் -எந்த அடையாளமும் அற்றவர்களாக.

மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் நம்மைவிட தேர்ந்த மொழி யுணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் காணமுடியும். அவர்கள் இனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் கட்சிகளை, பிற பிரிவினைகளை மறந்து ஒன்றாக நிற்கிறார்கள். தமிழர்கள்?  மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் கூடி நம் இனத்தவரைக் கொலைசெய்ததை வேடிக்கை பார்த்த மாபெரும் இனமல்லவா நாம்? அந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இன்றுவரை தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதே, அதற்கு ஆதரவாக இங்கே ஊடகங்கள் இருக்கின்றனவே,  நமக்கு இன உணர்வு இருக்கிறதா?

கேள்வி: நிலம் வகைப்படுத்தலும், பிரிவுகளும் மற்ற எந்த நாகரிகங்களிலும் இல்லாத வகையில் தமிழர்கள் பகுத்தது வியப்பாக உள்ளது. அரப்பா நாகரிகத்தின் தொடராக நம் இனத்தை அடையாளம் காண எந்த வகையான தொன்மச் சான்றுகள் நம்மிடம் உள்ளன? மொழி தவிர்த்து வாழ்வியல் முறைகளில் ஒப்புமை உள்ளதா என்பதுதான் கேள்வியின் நோக்கம். கோவிந்தராஜ், அம்பத்தூர்

பதில்: இவை இரண்டு தனித்தனிக் கேள்விகள். நிலத்தைத் திணைகள் அடிப்படையில் வகைப்படுத்தலும் அதிலுள்ள துறைகளும் வேறு எந்த நாகரிகத் திலும் காணப்படாத, தமிழர்களுக்கே உரிய தனித்த முறை. இது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்த திணை துறைப் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. சங்க இலக்கியம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நு£ற்றாண்டு அளவிலிருந்து எழுதப்பட்டது என்பதால், அதற்கு முன்னரே இந்த முறை உருவாகியிருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் நாம் காண்பது சங்க இலக்கியம் என்றால், அது மிகச் செம்மையான கூறுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செம்மை அப்போதுதான் தோன்றுகின்ற இலக்கியத்திற்கு இருக்கமுடியாது. ஆகவே சங்க இலக்கியம் தோன்றுவதற்குக் குறைந்தது ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமையாவது தமிழ்மொழிக்கும் இலக்கியங்களுக்கும் இருந்திருக்கவேண்டும் என்பது நியாயமான யூகம். அதாவது கி.மு. 1200 அளவுக்கு நியாயமாகத் தமிழ் மொழியின் பழமை யைக் கொண்டு செல்ல இயலும்.

கி.மு. 1500 அளவில் வடமேற்கு ஐரோப்பா-இன்றைய காகசஸ்-யூரல் பகுதியிலி ருந்து ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. சிந்துவெளி நாகரி கத்தை ஆரியர்கள் அழித்தார்கள் என்று முன்னர் கூறினார்கள். இப்போது அந்தக் கருத்து மாறியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3000-2000 காலப் பகுதியைச் சேர்ந்தது. அது தட்பவெப்ப மாறுதல்களால் அழிந்ததாக இன்று கருதுகிறார்கள். இப்படிப் பார்த்தால், நாம் ஒரு கேள்விக்கு விடைகண்டாக வேண்டும்.

கி.மு. 2000 அளவில் மறைந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், கி.மு. 1000 அளவில் தோன்றிய தமிழர் நாகரிகத்திற்கும் எப்படித் தொடர்புப்படுத்துவது?

இப்படித் தொடர்பு படுத்துவதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இடைவெளி. இன்னொன்று ஆயிரம் மைல் இட வேறுபாடு.

இந்த இரண்டையும் மிகச் சரியாக நிரப்ப நம்மிடம் சான்றுகள் இல்லை. கி.மு. 1000க்கும் கி.மு. 2000க்குமான கால இடைவெளியும் வடக்கு-தெற்கு என்ற இட இடைவெளியும் நிரப்பப்படத் தக்க சான்றுகள் கிடைத்தால்-இதுவரை கிடைக்க வில்லை-நாம் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், தமிழ் நாகரிகம்தான் என்று அடித்துக்கூற முடியும். இல்லாதவரை சந்தேகம்தான்.

இந்த இடைவெளியைத்தான் வடநாட்டு இந்துவெறியர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆரியர் வருகை சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவோ பின்னால் என்ற போதிலும் அது ஆரிய நாகரிகமே என்று சான்று களையெல்லாம் திருத்தி வரலாறு எழுதுகின்றனர். (சான்றாக, சிந்துவெளி நாகரி கத்தில் பசு-எருது முத்திரைகள் உள்ளன. அவை இறைவனைப் போன்ற ஒருவர் அருகில் உள்ளன. அதனால் பசுபதி ஈசுவரருடைய முற்காலச் சித்திரிப்பு, திராவிடம் சார்ந்தது என்றார்கள். இந்துவெறியர்கள், அவற்றைக் குதிரை முத்தி ரைகளாகப் படம்வரைந்து அதை ஆரிய நாகரிகத்தினது என்று சித்திரிக்கின்றனர். குதிரைகள் ஆரிய நாகரிகத்தில் உண்டு. அஸ்வமேத யாகம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்?) அதனால் ஆரிய நாகரிகமே காலத்தினால் முந்தியது, அதன் தொடர்ச்சியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்-தமிழ் நாடு உட்பட-உள்ள நாகரிகம் என்று நிலைநாட்டுவது அவர்கள் நோக்கம். அவர்கள் இப்படிச்

செய்தது, இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இதற்கான இணையதளங்களில் இந்தச் சான்றழிப்புகளைக் காணலாம்.

இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வரலாம். தமிழர் திணை-துறைப் பகுப்புக்கு நேரடியான சான்றுத் தொடர்ச்சி சிந்துவெளிநாகரிகத்திலிருந்து கிடைக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தை நாம் சேர்ந்தவர்கள் என்றாலும் இல்லை என்றாலும், திணை-துறைப் பகுப்பு நமக்கே உரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

கேள்வி:  மார்ட்டின் வீலர் காலத்திற்குப் பின் தமிழகக் கரையோரம் மற்றும் கரைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு முடக்கப்பட்டது. இது தொடர்ந்திருக்கு மானால் நமது தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்குமல்லவா? பாண்டியன், மதுரை

பதில்: மார்ட்டின் வீலர் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்த நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், ரூபார், ராக்கிகடி, காளிபங்கன் முதலிய பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து குஜராத் வரை நீளும் நாகரிகப்பகுதி இது. இதை ஆரம்பித்து வைத்தவர் சர் ஜான் மார்ஷல். 1930-40களில், இந்தியா சுதந்திரம் பெறும்வரை அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருந்தவர் மார்ட்டிமர் வீலர். லோத்தல் இன்றும் குஜராத்தில் உள்ளது. மிச்சப் பகுதிகள் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் உள்ளன. 2010இல் சட்லெஜ் பகுதியில் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிர உருக்குச் சாலை (கி.மு.5000 அளவிலானது) மூழ்கிப்போயிற்று. இப்போது இந்து வெறியர்கள், ரிக்வேதத்தில் உள்ள நதிஸ்துதி சூக்தம் என்பது சிந்துவெளி நாகரி கத்தில் எழுதப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்ட்டிமர் வீலர்தான் சிந்துவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களை ஆராய்ந்து ஆரியர்கள் இந்த நாகரிகத்தை அழித்தவர்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்த அகழ்வா ராய்ச்சியின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதால் தொல்லியல் ஆய்வில் இந்தியர்களுக்கு ஆர்வம் குறைந்துபோயிற்று.

இந்தத் தொல்லியல் ஆய்வு தொடர்ந்திருக்குமானால் சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழ் நாகரிகத்தையும் இணைக்கும் சங்கிலிக்கான சான்றுகள் கிடைத்திருக்கலாம் என்பது யூகம்தான். உறுதியாகச் சொல்லமுடியாது. மேலும், சுதந்திரமடைந்தபின் இதில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள்-சிகாரிபுரம் ரங்கநாதராவ் போன்றவர்கள் அது ஆரியநாகரிகம் என்று நிரூபிக்க முனைந்தார்கள். எனவே பயன் கிட்டி யிருக்குமா என்பது சந்தேகம்தான்.

கேள்வி: கவிதை வடிவம் சிதைந்தது, புதுக்கவிதை என்ற வடிவம் வந்ததாலா அல்லது மக்களின் இலக்கண அறிவு குறைந்ததாலா? சேது, புதுக்கோட்டை

பதில்: புதுக்கவிதை என்ற வடிவம், உரைநடை பரவியதன் விளைவாக ஏற்பட்டது. தமிழைவிட ஆங்கிலத்தில் உரைநடை முன்னமே தோன்றிவிட்டதால், புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில், ஒரு நு£ற்றாண்டுக்கு முன்னமே தோன்றி விட்டது. இது உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு மாற்றம். இதற்கு மக்களின் இலக்கண அறிவின் குறைவைக் காரணம் சொல்லமுடியாது.

நாயக்கர் காலத்திலிருந்து சிற்றிலக்கியங்கள் புராணங்கள்தான் தமிழில் தோன் றின. அவை கற்பனை வறட்சியையும், வடநாட்டுக்கதைகளின் தழுவலையும் கொண்டிருந்தன. ஆனால் நல்ல யாப்பில்தான் எழுதப்பட்டன. இவற்றைக் கவிதைகள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் கவிதைக்குரிய உயிர்ப்புத் தன்மை இவற்றில் இல்லை.

யாப்பில் எழுதிவிட்டால் மட்டும் கவிதையாகாது. அது வெறும் செய்யுளா கவே நிற்கும். யாப்பு என்பது செங்கல்லை வைத்துக் கட்டடம் கட்டுவது போன்றது. அது கலையழகுமிக்க நேர்த்தியான கட்டடம் ஆகப்போகிறதா, எவ்விதச் சிறப்புமற்ற குட்டிச்சுவர் ஆகப்போகிறதா என்பது கட்டுவோனின் கலைநோக்கினைப் பொறுத்ததுதானே? அதுபோலத்தான் யாப்பும். அதைக் கம்பரைப்போல, பாரதியைப் போல, பாரதிதாசனைப்போல, செம்மையாகப் பயன்படுத்தினால் நல்ல கவிதையும் ஆகும். தெருவுக்குத் தெரு நம்நாட்டில் கவிஞர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு எழுதுபவர்கள் கையில் குட்டிச்சுவரும் ஆகும்.

புதுக்கவிதையும் அதுபோலத்தான். அதுவும் நல்ல கவிஞர்களிடம்தான் உயிர் பெறும். கலையாகும். எவர் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைத்தால் உரைநடைக் குட்டிச்சுவர்கள்தான் மிஞ்சும். எல்லாப் புதுக் கவிதைகளையுமே கவிதைச் சிதைவுகள் என்று பார்க்கலாகாது. ஆழ்ந்த உணர்வுகளை எழுப்புகின்ற சிறந்த புதுக்கவிதைகளும் உள்ளன.

ஆனால், புதுக்கவிதை யாப்பினைக் கைவிட்டதால், நல்ல உணர்வைத் தரக்கூடிய ஒரு சிறந்த கருவியை இழந்துவிட்டது என்பது உண்மை. கவிதையின் பொருளுக்கு யாப்பின் இசைநயம் அனுசரணையாக இருந்து உயிர் தருகிறது, அந்தக் கவிதைப் பொருளைச் செழுமையாக்குகிறது. கம்பரின் பல கவிதைகள், மிகச் சிறப்பாகக் கவிதைப்பொருளுக்கு அனுசரணையாகச் சந்தத்தைப் பயன்படுத்தக்கூடியவை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

c03115lb
கேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£? மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா?  செ.ராஜ்குமார் சென்னை

பதில்:
 இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ஏன் அப்படி? உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள்? தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும்? உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது.  இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.

கேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே? தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது? சரவணன், மேட்டூர்

பதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.

சமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.

சங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.

வடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.

இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலாம்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.

சமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.

உதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.

கேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்னஅதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன? கிருஷ்ணன், சென்னை

பதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)

2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும்? மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.

4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.

5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.

6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்களை சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.

7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.

இப்படி இன்னும் பலப்பல……

தமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள்,  இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது? (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)

அறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள்? நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது? நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன? சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது  ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.

கேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையேஅது கடினம் என்றால்வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன? செந்தில் குமார், மதுரை

பதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.

வெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது? பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தானான/ – /தானான/

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தான்.

என்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள்! (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).

அல்லது,

தானன / தானன / தானன/ தானன /

தானன / தானன / தானன / – / தானன /

தானன / தானன / தானன / தானன /

தானன / தானன / தான்.

தானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனம்.

இவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.

கேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும்,சித்தமருத்துவம் தமிழிலும்ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதேஇப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே? குமார், கலிபோர்னியா

பதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.

1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா? எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.

3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.

4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.

5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

வடநாட்டில்-பீகாரில் கூட கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பல கருத்துகள்  தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

aaa959
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாய் விளங்கும் ஆன்மிக வாதிகள் சொல்லும் இராமர்பாலம் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு பாலம் அங்கு இருக்குமாயின் குமரிக்கண்டம் கடலடியில் மறைந்த பிறகு கட்டப்பட்டிருக்குமா? விளக்கம் தேவை. (இன்றைய தலைமுறையேனும் தெளிவுறப் புரிந்துகொள்ளவேண்டும்) சுவாமிநாதன் திருமுல்லைவாயில்

பதில்
: நமக்கு அறிவியல் மனப்பான்மை முதலில் தேவை. கட்டுக்கதைகளிலிருந்து மெய்ம்மைகளை வேறுபடுத்தி அறிய இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகள், வேண்டுமென்றே இதில் குட்டைகுழப்புகிறார்கள்.

இராமன், அவன் வாழ்ந்தது, பாலம் கட்டியது எல்லாம் கட்டுக்கதை. ஒவ்வொரு மதத்திற்கும் கட்டுக்கதைகள் உண்டு. இராமன் என்பவன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டுவந்தான் என்பது இந்துமதத்தின் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதைகளுக்கும் மெய்ம்மைக ளுக்கும் சம்பந்தமில்லை. (உதாரணமாக, சிந்தித்துப்பாருங்கள், இராமனின் தந்தை தசரதன் பல லட்சம் ஆண்டுகள் பத்தாயிரக்கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தானாம். இது சாத்தியமா?  உண்மையில் நடக்கக்கூடியதா? அவன் தேவர்களுக்காக சம்பராசுரன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றானாம்…)

குமரிக்கண்ட நிகழ்வு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போது மனித இனம் தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறி. எனவே குமரிக்கண்டம் போன்றவற்றை கட்டுக்கதைகளோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கடற்பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாகவும் சில ஆழமின்றியும் தானாகவே அமைந்திருக்கின்றன. பூமியில் மேடு பள்ளங்கள் இல்லையா? மலைகள், பள்ளத் தாக்குகள் இல்லையா? அப்படித்தான் கடலின் பரப்பிலும். அவற்றில் ஆழங் குறைந்த பகுதியைப் புராணங்களோடு இணைத்து அது ஆதாம் கட்டிய பாலம், இராமன் கட்டிய பாலம் என்று கட்டுக்கதை ஆக்கிவிடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள வள்ளிமலைஎன்ற ஊரில் இன்னும் பல இடங்களில்-சற்றே பாறைகள் மஞ்சளாக இருந்தால் வள்ளியம்மை முருகப்பெருமானோடு மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்று கதை கட்டியிருப்பார்கள். அது போன்றதுதான் இதுவும்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது அறிவியல் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு அது என்ன எதிர்விளைவு ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டியது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டமும் உடன் பாடில்லை. மனிதன் இயற்கையை ஒட்டி, அதனோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சிசெய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சுனாமிகள்தான் மிஞ்சும்.

கேள்வி : மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஏற்படுவதாக இருந்தாலும், தமிழில் மட்டும் அது விரைவாகவும் திட்டமிட்டும் நடப்பதாகப் படுகிறதே, மொழிக்கலப்பைத் தவிர்க்க வழி என்ன? – கண்ணன், சேலம்

மொழிக்கலப்பு எல்லா மொழிகளிலும் நிகழ்வது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படியானால் தமிழில் மட்டும் அது எப்படி நடவாமல் போகும்? எங்கெல்லாம் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து பழகவேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மொழிகள் இரண்டிலுமே கலப்பு ஏற்படும்.

தமிழில் மொழிக்கலப்பு விரைவாக நடக்கிறது என்பது யூகம். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் திட்டமிட்டு நடக்கிறது என்று நமக்குத் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

இந்தியாவில், சமசுகிருதக் கலப்பில்லாமல் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றுதான். பிற திராவிட மொழிகளும்கூட சமசுகிருதக் கலப்பினை வெவ்வேறு அளவில் ஏற்றுக்கொண்டு அது இயற்கை என்று கருதிவிட்டன. மொழிக்கலப்பு இயற்கை என்பதை ஏற்காதவர்கள் தமிழ்பேசுபவர்களில் மட்டுமே இருக்கிறார்கள். சமசுகிருத, இந்தி, வடநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாம் தமிழில் வடமொழிக்கலப்பு கூடாது என்கிறோம். இது அரசியல் பிரச்சினை. மொழிசார்ந்த பிரச்சினை அல்ல. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை இருந்து இந்தியின் ஆதிக்கமோ, சமசுகிருத ஆதிக்கமோ இல்லை என்றால் நாம் மொழிக்கலப்பைப் பெரும்பாலும் எதிர்க்கமாட்டோம்.

ஏறத்தாழ கி.பி.1310 முதலாகத் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் கள், பிறகு கடைசியாக ஐரோப்பியர்கள் ஆகியவர்களால் ஆளப்பட்டது. சுதந்திர மடைந்த பிறகும் நாம் சுதந்திரமாக இல்லை. ஆதிக்கத்தில் பிறமொழியினர் இருக்கும்போது, நமது மொழி எப்படி வளரும்? அவர்கள் மொழி நமது மொழி யுடன் அதிகமாகக் கலக்கும் சாத்தியமே அதிகம்.

தமிழ்நாட்டில் பிறமொழியினர் ஆண்டதால் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி யினர் தமிழர்களுடன் கலந்து வாழ்வதைப் பார்க்கலாம். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் எல்லா கிராமங்களிலும் உள்ளனர். நாயுடுகள், நாயர்கள், ஒக்கலிகர்கள் என இவர்கள் பட்டியல் நீளும். ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ பிற மாநிலங்களிலோ இப் படிப்பட்ட பிரச்சினை இல்லை. எல்லையில் மட்டுமே ஓரளவு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் ரெட்டியாரோ நாயுடுவோ இல்லாத கிராமம் ஏது? அவர்கள் பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தங்கள் மொழி யையே பேசுகிறார்கள். இவர்களைத் தமிழர்கள் என்பதா, அயலார்கள் என்பதா? எங்கள் கிராமத்தில்கூட நிலையாக வாழ்ந்து சொந்த நிலங்களில் விவசாயம் செய்துவருபவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என்றே சொல்லுகிறார்கள். வீட்டில் அதில்தான் பேசுகிறார்கள். வடமாவட்டங்களின் முஸ்லிம்களும் (சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி,…) அப்படித்தான். அவர்கள் வீட்டில் உருதுதான் பேசுகிறார்கள். வெளியில் வந்தால் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அதன் கலப்பு மிகுதியாகிறது. செயற்கையான கலப்பு என்று நாம் சொல்லக்கூடியது ஆங்கிலக் கலப்பைத்தான். ஆங்கிலத்தைக் கலந்து பேசாவிட்டால் அது சரியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அந்த மோகம் இருக்கிறது. அதற்கு மேல், கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்து வளர்ச்சி. தொலைக் காட்சிகள் திட்டமிட்டே மொழிக்கலப்பை வளர்க்கின்றன. அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். 90 சதவீதம் கிராமப்புறப் பெண்கள் பார்க்கக்கூடிய சமையல் நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து நடத்துகிறார்கள். குழம்பு, சோறு, எல்லாம் மறைந்து கிரேவி, நான், புடிங் போன்ற சொற்கள் சமையல் நிகழ்ச்சிக்குள் வந்துவிட்டன. காய்கறிகளின் பெயரைக்கூட அவர்கள் தமிழில் சொல்வதில்லை. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் அப்படித்தான். பிறமொழிகளில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

செயற்கையான மொழிக்கலப்பை மட்டுமே நாம் தவிர்க்கவேண்டும். எனவே ஆங்கிலக்கலப்பையும், வடநாட்டுப் பண்பாடு திட்டமிட்டுச் சுமத்தப்படுவதால் புகும் இந்திக்கலப்பையும் மட்டும் நாம் சற்றே தீவிரமாக நிராகரித்தால் போதுமா னது. நல்லது. தேவையானது.

கேள்வி :. தமிழகம் இப்போதிருப்பதைவிட அகன்ற நிலப்பரப்பு உள்ளதாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே? – முகம்மது யூசுப், துபாய்

பதில்: ஆமாம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியும், கிழக்கில்-மேற்கில் கடல்களும் தமிழகத்துக்கு அக்கால எல்லைகள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகம் என்பது தொல்காப்பியம். இப்போதிருக்கும் வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் கிழக்குக் கடல், மேற்குக் கடல் என்றே அக்காலத்தில் (குணகடல், குடகடல் என்றும்) வழங்கப்பட்டன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். அக்காலத்தில் சாலை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடுகள். இப்போதுபோல எல்லா நிலமும் விவசாய நிலங்களாகவோ, குடியிருப்பு மனைகளாகவோ பழங்காலத்தில் இல்லை. பொது விளக்குகள் கிடையாது. வேக மான வாகனப் போக்குவரத்து  எதுவுமே கிடையாது. மலையாள மொழி அப்போது தோன்றவில்லை. அதனால்  இன்றிருக்கும் கேரளா அப்போது சேர நாடாகவே- தமிழ்நாடாகவே இருந்தது. வடக்கிலும் வேங்கடம் வரை தமிழ் தான் இருந்தது. அதற்கும் அப்பால் வடக்கில் இருந்தவர்கள் வடுகர் (வடக்கு நாட் டவர்) என்றழைக்கப்பட்டார்கள். மேற்கிலும் மைசூர் வரை தமிழ்நாடுதான். அது எருமைநாடு என்று தமிழ் இலக்கியங்களில் வருகிறது. மைசூர் என்பது மஹிஷ + ஊர். மஹிஷம் (வடமொழி) என்றால் எருமை. எருமையூரை, மஹிஷ ஊராக மாற்றி, மைசூராக இப்போது ஆக்கிவிட்டார்கள். அதேபோல கொங்குநாடு என்பது பிற்காலப் பல்லவர்  காலத்தில் கங்க நாடாக மாறிவிட்டது. இப்படி எத்தனையோ மாற்றங்கள். இப்போதிருக்கும் மங்களூரிலிருந்து நேர் கிழக்காகத் திருப்பதி வரை ஒரு கோடு கிழியுங்கள். அதற்குத் தெற்கே உள்ளதெல்லாம் பழங் காலத் தமிழ்நாடுதான். அப்போது வடுக மொழி இருந்தது. கன்னட மொழி உருவாகவில்லை. வெம் + கால் + ஊர் = வெங்காலூர் (மேற்கத்தியச் சீமையி லிருந்து கீழே இறங்கி வந்தால் வெம்மையான காற்று வீசும் ஊர் என்று அர்த்தம்)

என்ற பெயர்தான் இப்போது பெங்களூர் ஆகியிருக்கிறது. பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பேச்சு மொழியில் அவ்வளவாக வித்தியாசம் கிடையாது. (சென்னைத் தமிழுக்கும் கோவைத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்கூடக் கிடையாது.) எழுத்து மொழிதான் வேறுபட்டுவிட்டது.

இதற்குமேல் இன்னொரு குறிப்பு: வடவேங்கடம் தென்குமரி என்பதிலுள்ள தென் குமரி-அது குமரிமுனை அல்ல, பழங்காலத்தில் குமரிக்கண்டம் இருந்தது, அதில் குமரி ஆறு ஓடியது, அந்தக் குமரி ஆற்றைத்தான் தென்குமரி என்ற சொல் குறிக்கிறது என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், அப்போதிருந்த தமிழகத்தின் பரப்பு எவ்வளவு இருக்கும்?

கேள்வி : கலிங்கத்துப் பரணி கற்பனையால் எழுதப்பட்ட இலக்கியமா? இல்லை உண்மையில் நடந்தனவற்றின் தொகுப்பா? – செந்தில் குமார், சென்னை

பதில்: கற்பனையும் உண்மையும் அற்புதமாக இணைக்கப்பட்ட ஒரு படைப்பு கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்க சோழ  அரசன், காஞ்சி புரத்தில் தன் அரண்மனையில் வந்து தங்கியிருந்து, அங்கிருந்து தன் படைத்தலைவன் கருணாகர பல்லவனைக் கலிங்கத்துக்குச் சென்று போரிட்டு வருமாறு கூறுகிறான். கருணாகர பல்லவனும், அவ்வாறே ஒரு பெரும் படையுடன் கலிங்கத்துக்குச் சென்று அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தோற்கடித்து (வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் தனித்தனி அரசர்கள் அப்போது) திறை செலுத்தச் செய்து வருகிறான். இது வரலாற்றுச் செய்தி.

கடுங்கோடை காலம். எங்கும் உணவின்றி, பேய்கள் பசியால் வாடுகின்றன. அவை தங்கள் தலைவியான காளியிடம் முறையிடுகின்றன. அவள், இப்போது கலிங்கத்தில் பெரும் போர் நடக்கிறது. அந்தப் போர்க்களத்திற்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான இரத்தக்கூழும் நிணமும் கிடைக்கும், உங்கள் பசி தீரும் என்று சொல்லி அவற்றை அனுப்புகிறாள். அவ்வாறே அந்தப் பேய்கள் கலிங்கப் போர்க்களத்திற்குச் சென்று உணவருந்திப் பசி தீர்ந்து காளியை வாழ்த்துகின்றன. இது சுத்தமான கற்பனைப் பகுதி.

இன்னொரு சிறிய கற்பனைப் பகுதியும் கலிங்கத்துப் பரணியில் உண்டு. போர்க்களத்திலிருந்து  திரும்பி வருகின்ற வீரர்கள் நள்ளிரவிலோ, விடியலுக்கு முன்னரோ கண்ட நேரத்தில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அப்போது வாயிலைத் திறக்குமாறு அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் வேண்டு கின்றனர். மனைவியர் எவ்விதம் கணவன் மார்களின் காதலுக்கு ஏங்கியிருந்தார் கள், இப்போது எவ்விதம் நடந்துகொள்கிறார்கள் என்பது கடைதிறப்பு என்ற முதற்பகுதியில் வரும் ஒரு சிற்றின்பச் சுவை மிக்க கற்பனைப் பகுதி.

ஒரு வரலாற்றுப் போரையும் ஒரு பேய்க்கதையையும் இணைப்பது எவ்வளவு வித்தியாசமான கற்பனை?

கேள்வி : சங்க இலக்கியங்களில் உள்ள தமிழ் தமிழ் மொழியா என்னும் அளவுக்கு உள்ளது. வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. அவைகள் வேறு ஏதோ மொழிக்காக தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருக்கின்றன. அந்த வார்த்தைகள்தான் அக்காலத்தில் வழக்குச் சொல்லாக இருந்தனவா? இல்லையெனில் புலவர்கள் தங்கள் பழமையை வெளிப்படுத்த அத்தகைய சிக்கலான சொற்களைக் கையாண்டுள்ளார்களா? – பாண்டியன் – ராமநாதபுரம்

பதில்: உண்மையில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறைவு, மிகக் குறைவு. சங்க இலக்கியம் படிக்கும்போது  நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மொழியைப் படிக்கிறீர்கள். மொழி காலத்தாலும் இடத்தாலும் வேறுபடக் கூடியதுதானே?  ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த பல வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்போது இருந்த பெரியவர்களுக்கு- அவர்கள் இருந்தால்- இப்போது உள்ள தமிழ் சுத்தமாகப் புரி யாது. ஐம்பதாண்டுகளிலேயே இவ்வளவு மாற்றம் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தமொழி எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

உங்களுக்கு ஒரு சில மொழிகளேனும் நன்றாகத் தெரிந்தால் இந்தக் கேள்வியே எழாது. ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும்- ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமே (சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது சுத்தமாகப் புரியாது. அவ்வளவு மாற்றம். பிற எல்லா மொழிகளுமே அப்படித் தான். சமசுகிருதம் ஒன்றைத்தான் செயற்கையானதாக, உச்சரிப்பு மாறாததாக வைத்திருக்கவேண்டும் என்று “செம்மைப்படுத்தியதால்” அது மாறாததாக ஓரள வுக்கு இருக்கிறது. அதே சமசுகிருதத்தின் பேச்சுமொழி வடிவமான பிராகிருதம்-இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்தது-அபபிரம்சமாக உரு மாறி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, இந்தி என்பதுபோல பல மொழிகளாக மாறிவிட்டது. இவற்றோடு எல்லாம் ஒப்பிடும்போது தமிழின் மாற்றம் மிகக் குறைவு. இன்றைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புரிகிறதே. (கேளிர் என்பது மட்டும் சற்றே கடினமான சொல்.) அல்லது செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்றால் புரிகிறதே. அதனால் உங்கள் கூற்று ஓரளவு உண்மை. உங்கள் பிற கேள்விகளுக்கு பதில்கள்.

1. தமிழ்ச் சொற்கள், தமிழுக்காக மட்டுமே உருவானவைதான். வேறு எந்த மொழிக்காகவும் அல்ல. இதுதான் எந்த மொழிக்குமே உள்ளது.

2. அந்தச் சொற்கள்தான் அந்தக் காலத்தில் வழக்குச் சொற்களாக இருந்தன.

3. புலவர்கள் செயற்கையான பழந்தமிழில் எழுதினால் நிற்காது. இந்தக் காலத்தில்கூடப் பெருஞ்சித்திரனார் போன்ற சிலர் அக்கால வழக்கைக் கையாண்டு கவிதை எழுதிப்பார்த்தார்கள். ஆனால் அவற்றைப் படிப்போர் இல்லை. எந்தக் காலமாக இருந்தாலும், அந்தந்தக் காலத்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினால்தான் மக்கள் படிப்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

11619999906_32821ccb1c
கேள்வி : அந்தக் காலத்தில் பொதுமக்கள், புலவர், அரசர் எல்லாம் ஒரே தமிழில்தான் பேசினார்களா? அருண்குமார் – நாமக்கல்

பதில்:சாத்தியமே இல்லை. எந்தக் காலத்திலும் பொதுமக்களின் பேச்சுமொழி வேறு, புலவர்களின் செம்மையான இலக்கிய மொழி வேறு. அரசர்கள் புலவர்களிடம் உரையாடும்போது செந்தமிழில்தான் பேசவேண்டும். மக்களிடம் குறைகேட்கும் போது அவர்கள் மொழியிலேயே பேசியாக வேண்டும்.
சமஸ்கிருதத்தில் மிருச்சகடிகம் (மண்ணால் செய்யப்பட்ட சிறிய தேர்) என்ற நாடகம் இருக்கிறது. அதில் புலவர்கள், அரசர்கள், உயர்குலத்தோர் பேசும் வசனங்களில் மட்டும் சமஸ்கிருதமும், பொதுமக்கள் பேசும் வசனங்களில் பிராகி ருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதான் இயல்பான நிலை.
பொதுமக்களின் மொழிதான் உண்மையான மொழி. இயக்கமுள்ள மொழி. மாறு கின்ற மொழி. புலவர்களின் மொழி செம்மொழியாக இருந்தாலும், அது காலத்தில் உறைந்துபோய்விட்ட மொழி. அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது. புலவர்கள்கூட வீட்டில் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் செம் மொழியிலா பேசமுடியும்? அப்போது இயல்பான பேச்சுத் தமிழைத்தான் பயன் படுத்தியிருப்பார்கள்.

கேள்வி :தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சமணத்தைத் தழுவி உள்ளதே? நாகராஜன் – சென்னை

பதில்: அப்படியில்லை. தமிழில் மிகுதியான நூல்களுக்குரிய பெருமை சைவத்திற்குத் தான் உண்டு. அடுத்த நிலையில்தான் சமணம் வரும். மூன்றாம் நிலையில் வைணவமும், நான்காவதாக பௌத்தமும் வரும். அண்மைக்காலத்தில் கிறித்துவ  நூல்கள் மிகுதியாக இயற்றப்பட்டுள்ளன. எனவே இப்போது மூன்றாம் நிலையில் கிறித்துவ நூல்களே இருந்தாலும் இருக்கலாம். ஏனோ தெரியவில்லை, முஸ்லிம்கள்தான் இதில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படி நோக்கும்போது இதில் அண்மைக்கால இலக்கியத்தைச் சேர்க்கக்கூடாது. ஏனென் றால் அண்மைக்கால-நவீன இலக்கியத்தின் தன்மை சமயம் சார்ந்தது அல்ல.

சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது, வடநாட்டிலிருந்து வந்த வைதிகக் கருத்துகளும், சமணசமயமும் ஒரே சமயத்தில் தமிழ்நாட்டில் பரவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சமணப்புலவர்கள் பலர்- உலோச்சனார் போன்றவர்கள் சங்க இலக்கியத்தில் கவிதை படைத்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில்

-சங்க காலத்து நூல்களுக்குச் சமயம் இல்லை, கற்பிக்க இயலாது.

-பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மை (திருக்குறள் உட்பட) சமணச் சார்புடையவை.

-தொல்காப்பியம் சமண நூல்.

-ஐம்பெரும் காப்பியங்கள், சமண-பௌத்த நூல்கள் கலந்தவை. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண நு£ல்கள். மணிமேகலை, குண்டல கேசி  இரண்டும் பௌத்த நூல்கள்.

ஆபரணங்களைப் பெயர்களாகக் கொண்ட முதல் தொகுப்பான இந்தப் பழந்தமிழ்க் காப்பியங்களில் எவையுமே சைவ, வைணவ நூலாக இல்லை என்பதை நோக்கவேண்டும்.

மிகுதியான இலக்கண நூல்களும், நிகண்டு நூல்களும் சமணப்புலவர்கள் செய்தவையே. தமிழில் தொடக்ககாலத்தில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர்கள் சமணர்கள். ஆனால் வைதிக சமயங்களால் சமணம் அழிந்தபிறகு,  அவர்கள் பங்களிப்பு குறைந்துபோயிற்று. ஆனாலும் நூல்களைப் படியெடுத்து வாழ்க்கை வைபவங்களில் தருகின்ற தங்கள் பழக்கம் மூலமாக அவர்கள் சிலப்பதிகாரம் போன்ற நூல்களைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

கேள்வி : தமிழகத்தில் சமணம் எப்பொழுது பரவியது? மீனாட்சி ராஜன் – செய்யாறு

பதில்:முன் கேள்வியிலேயே ஓரளவு பதில் இருக்கிறது. சமணமதத்தை நிறுவிய மகாவீரர் கி.மு. 599இல் பிறந்து கி.மு.527இல் மறைந்ததாகச் சொல்கிறார்கள்-அதாவது கி.மு. ஆறாம் நு£ற்றாண்டு. ஏற்கெனவே ஒரு கேள்வியில் நான் குறிப் பிட்டிருந்ததுபோல, கி.மு. 1500வாக்கில் வடநாட்டுக்கு வந்த ஆரியர்களும் மெதுவாகப் பரவி தெற்கில் வந்துசேர ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே அவர்களில் ஒருபகுதியினர் ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் தமிழகத்துக்கு வந்திருப்பார்கள். சமணர்களும் அவர்களோடு சேர்ந்தே தமிழகத்துக்கு வந்திருக் கலாம். அல்லது ஒரு 25 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் வந்திருக்கலாம். எப்படியானாலும் சமணர்கள் கி.மு. நான்காம் நு£ற்றாண்டு அளவிலேனும் (அதாவது கடைச்சங்கத் தொடக்கக்காலம்) தமிழகத்திற்கு வந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்போதிருந்து சமணம் தமிழகத்தில் பரவியது. ஆனால் வைதிக சமயமோ, சமணமோ எதுவாயினும் அவ்வளவு வேகமாகச் சங்க காலத்தில் பரவவில்லை. ஏறத்தாழ கிறித்துவுக்கு ஓரிரு நு£ற்றாண்டுகள் கழித்துத்தான் இவை வேகமாகப் பரவவும் செய்தன. தங்களுக்குள் போரிடவும் தொடங்கின.

கேள்வி : சங்க இலக்கியத்தில் தலைவன் பரத்தை வீட்டிற்குச் செல்வது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழன் அன்றிலிருந்தே ஆணுக்கான தனிமனித ஒழுக்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையா? – முருகேசன் – மாயவரம்

பதில்: உண்மை அதுதான். உலகத்தில் எந்த நாட்டிலுமே தொடக்கத்தில் தாய்வழிச் சமூகம் என்பது இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்குப் பல ஆதாரங்களும் உண்டு. தாய்வழிச் சமூகம் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூக மாக மாறியது. தந்தைவழிச் சமூகம் என்பது பெண்களை அடக்கியாளுகின்ற ஆண்தலைமைச் சமூகம்தான்.

புராதனப் பொதுவுடைமைச் சமூகம்தான் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்க முடியும். எப்போது சொத்துடைமையும் அடிமை முறையும் உருவானதோ, அப்போதே பெண்களுக்குச் சனியன் பிடித்துவிட்டது. தன் சொத்தைத் தன் மக்களுக்கே தரவேண்டும் என்பதற்காகக் கற்பு என்ற கருத்து உண்டாக்கப்பட்டது. அதன்வாயி£கப் பெண் அடிமையாக்கப் பட்டாள். இதைப்பற்றிப் பெரியார், பெண் ஏன் அடிமையானாள் என்று ஒரு சிறிய நல்ல புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார். காலம் செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் இறுகின.

பரத்தையர் ஒழுக்கத்திற்கு ஒருவித சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. தந்தைவழிச் சமூகம் உருவான காலத்திலிருந்தே எல்லா நாடுகளிலும் பரத்தைமை இருந்துதான் வருகிறது. அக்காலச் சமூகம் போர்ச்சமூகம். ஆண்கள் எல்லாம் போருக்குச் செல்வார்கள். செல்பவர்களில் எத்தனை சதவீதம் திரும்பிவரு வார்கள் என்று தெரியாது. முழுதும் அழிந்துபோகவும் கூடும். எனவே ஆண்க ளின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது, அதனால், பரத்தைமை உருவானது என்று சிலர் சொல்கிறார்கள்.

பழங்காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனுக்கும் அவன் வீரர்களுக்கும் முதல் வேலை எதிரிநாட்டுப் பெண்களைக் கைப்பற்றுவதுதான். பல சமயங்களில் அவர்களை அரண்மனை போன்ற இடங்களில் பணிப்பெண்களாக வும் அடிமைகளாகவும் அமர்த்திக்கொள்வார்கள். வடநாட்டில் பர்தா முறை தோன்றியதற்கு முஸ்லீம்களின் படையெடுப்பு முக்கியக் காரணம்.

சங்க இலக்கியங்கள் ஆணுக்குத் தனி உரிமையே தருகின்றன. அவன்தான் குடும்பத் தலைவன் என்பதால் தலைவி அவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண் டும். அவள் செய்யக்கூடியதெல்லாம் கொஞ்சம் மறுப்பது, கொஞ்சம் ஊடல் கொள்வது அவ்வளவுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

aa
கேள்வி: துரை என்பது தமிழ்ச்சொல்லா? மக்கள் எந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்?

பதில்:
 துரை என்ற சொல்லின் மூலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல் ஐரோப்பியர்கள் நம் நாட்டில் வந்தபிறகுதான் புழக்கத்திற்கு வந்தது. மேலானவர், பதவியில் உயர்ந்தவர் என்ற பொருளில் பொதுவாக ஆங்கிலேயர்களையும், குறிப்பாக அதிகாரிகளையும் துரை என்று அழைப்பது பழக்கமாக இருந்தது. பிறகு அது மக்களின் சிறப்புப் பெயராகவும் காலப்போக்கில் (துரை, துரையரசன், துரைராஜ், பெரியதுரை, தருமதுரை, தம்பிதுரை என்பவை போல) மாறிவிட்டது. இந்தப் பெயர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு காணமுடியவில்லை.
கேள்வி: ஆன்மிகத்தில் அத்வைதம், துவைதம் என்று கூறுகிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
பதில்: 
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவை நம் இந்தியத் தத்துவத்தில் வழங்கும் சொற்கள். ஆன்மிகம் வேறு, தத்துவம் வேறு என்பது என் கருத்து. இந்த மூன்று தத்துவங்களுமே தென்னாட்டில் ஏற்பட்டவை. அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர் ஆதிசங்கரர். அவர் பிறந்த இடம் இன்று கேரளாவில் உள்ள காலடி என்ற ஊர் (அக்காலத்தில்-கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அது தமிழகம்). விசிஷ்டாத் வைதக் கொள்கையை உருவாக்கிய இராமாநுஜர் திருப்பெரும்புதூரைச் சேர்ந்தவர். துவைதக் கொள்கையை உருவாக்கிய மத்வர், உடுப்பியைச் சேர்ந்தவர்.
அத்வைதம் என்பது ஒருமைக் கொள்கை ((monism). அ+த்வைதம். இரண்டு அல்லாதது, ஒன்று, என்பது பொருள். த்வைதம் என்பது இருமைக் கொள்கை (dualism). சுருக்கமா கச் சொல்வதானால், பழங்காலத்தில் ஆன்மாவும் (அதாவது உயிர்களும்) இறைவனும் (தத்துவச் சொல்லாடலில் பிரம்மம்) ஒன்றா, வெவ்வேறா-குறிப்பாக ஜீவன்கள் முக்தி அடைந்தபின் இறைநிலை அடைகின்றனவா, அல்லது இறைவனுக்கு வேறான நிலை யில் உள்ளனவா என்ற கேள்வி பற்றி யோசித்ததன் விளைவு இவை. இறைவனும் ஆன்மாக்களும் வெவ்வேறு அல்ல (இறைவன் பரமாத்மா, மனிதன் ஜீவாத்மா) என்பது அத்வைதம். இவை வெவ்வேறானவை (ஒன்றல்ல, இரண்டுதான்) என்பது துவைதம். மேற்குநாட்டிலும் ஒருமைக்கொள்கை, இருமைக் கொள்கை உண்டு. spirit and matter இவை ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி அது.

கேள்வி: பார்ப்பன வெறுப்பு தமிழ்நாட்டில் ஏன் ஏற்பட்டது? – சதாசிவம், பெங்களூர்

இந்தக் கேள்வி தவறு. பார்ப்பன வெறுப்பு ஏற்படவில்லை, பார்ப்பனிய வெறுப்புதான் ஏற்பட்டது. பார்ப்பனியம் என்பது ஒரு தத்துவம், கொள்கை. அதைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லாச் சாதியினருமே கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவராகப் பிறந்தும், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட பிறகு இன்றைய பார்ப்பனர்களைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சாதி மக்களையே இழிவாக நோக்கும் தலித்துகளும் பார்ப்பனியத்தில் திளைப்பவர்கள்தான். பார்ப்பனர்களைப்போலவே தங்களுக்குக் கீழுள்ளவர்களை இழிவாக நினைக்கின்ற வேளாளர்கள் போன்ற சாதியினரும் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள்தான்.
எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் மேல்-கீழ், உயர்ந்த-தாழ்ந்த என்ற வேறு பாடு இல்லையா என்று பலர் கேட்கிறார்கள். பிற மதங்களில் இல்லையா என்ற கேள் வியையும் எழுப்புகிறார்கள். இதற்கு விடை எளியது. பிற நாடுகளிலும், பிற மதங்களி லும், ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது பிறப்பினால் ஏற்படுகிறது என்றும் அப்படிக் கடவுள் (பிரம்மா) எழுதிவைத்தார் என்றும் நியாயப் படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே நிகழ்கிறது. இதுதான் பார்ப்பனியம். இப்படிப் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு என்றால் இந்த மதத்தில் இருப்பதற்கு நாம் வெட்கப்படுகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 1378158449993

கேள்வி: தமிழ்நாட்டில் பட்டிமன்றங்கள் பல நடக்கின்றன. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: 
பட்டிமன்றம் போன்ற பாணியில் இலக்கிய விவாதங்களை நடத்துவது இந்திய மொழிகள், கலாச்சாரங்கள் பலவற்றிலும் உண்டு. குறிப்பாக, உருது, இந்தி போன்ற மொழிகளில் இதை நன்றாக நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பட்டிமன்றங்கள் சற்றே வேறுபட்டவை, விசித்திரமானவை. ஒன்று, இது திராவிடக் கட்சிகளால் ஆரம்பித்து, ஆதரிக்கப்பட்டது- ஓர் அரசியல் விளைவு என்பது.
ஆரம்பத்தில் பட்டிமன்றம் பெரிய நன்மையாகவே இருந்தது. சாதாரண மக்கள் பேசும் உரிமை பரவலாக இல்லாத ஒரு நாட்டில், பட்டிமன்றம் ஒரு ஜனநாயக அமைப்பாகவே- பலருக்கும் பேசும் வாய்ப்புத் தருகின்ற அமைப்பாகவே முதலில் செயல்பட்டது. யாரோ முன்பின் தெரியாதவர்கள்-வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்- வந்து தங்கள் கருத்துகளை மேடையில் வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக நடைமுறையைப் பிரபலப்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள அரட்டை அரங்கம் போன்றவை முதலாக நீயா-நானா வரைகூட அப்படித்தான்.
இப்போது பட்டி மன்றம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லை. எண்பது தொண்ணூறுகளிலிருந்த வரவேற்பு இப்போது அவற்றிற்கு இல்லை. யாரோ ஒரு சிலர்-பாப்பையா, லியோனி போன்றவர்கள் பழம் புகழில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு பதிலாக வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டன. பட்டிமன்றம் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மிகப் பிரபலம் அடைந்திருந்த ஒன்று.

இதுவும்கூட ஆரம்பத்தில் ஒருமாதிரியாக இலக்கியக் களமாகத்தான் தொடங்கியது. பலர், பட்டிமன்றத்தின் முதல் தலைப்பே “கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா” என்று கூறுவார்கள்.

ஆனால் பிற்காலத்தில் இது வெறும் காட்சி ஆகிவிட்டது. செயற்கையான தலைப்புகள், அலங்காரப் பேச்சுமுறை, வெறும் நகைச்சுவைக் களஞ்சியமாக-நகைச்சுவைகளின் தொகுப்பாக ஆக்குதல்-கைதட்டல் வாங்குவதற்காகவே பேசுதல்-கருத்துகளுக்கு முக்கியத்துவமின்மை போன்ற தன்மைகள் அவற்றின் இலக்கியப் பண்பையும் விவாதத் தன்மையையும் இல்லாமல் செய்து கேளிக்கை ஆக்கி விட்டன. நான் முதலிலிருந்தே பட்டிமன்றத்தை எதிர்த்தவன். அதற்குக் காரணம், அதன் கோமாளித்தனமோ செயற்கைத்தன்மையோ கூட அல்ல. எந்தப் பிரச்சினையையும் அது நோக்கும் தன்மைதான்.

பட்டிமன்றம், எந்தப் பிரச்சினையையும் (இலக்கியம், சமூகம் சார்ந்த எதுவா யினும்) இரண்டு எதிரெதிர் முனைகளாக- அமைப்புவாதத்தில் துருவ எதிர்வுகள் அல்லது இருமை எதிர்வுகள் (binary opposites என்று சொல்வார்கள்-அப்படிப் பகுத்துப் பார்க்கிறது. இது ஒரு கோளாறான பார்வை. உதாரணமாக நன்மை-தீமை என்று இரண்டு எதிரெதிர் முனைகளில் சமுதாயத்தில் காணும் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியுமா?  வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா? இடையில் எத்தனை விதமான சாம்பல்நிறச் சாயைகள் இருக்கின்றன? இதுவா-அதுவா என்று பார்ப்பதே தவறான முறை. ஏனென்றால் இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் அவற்றிற்கு உள்ளேயோ வெளியேயோ ஏராளமான நிலைப்பாடுகள் உண்டு. பட்டிமன்றத்தின் அடிப்படையே இரண்டு அணிகள், ஒரு தலைவர். இரண்டு அணிகள் இரண்டு எதிர்முனைகளை எடுத்து வாதிடுகின்றன. ஆனால் விஷயமே இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையில்தான் இருக்கிறது.

அதனால் அறிவைக் குறுக்குதல், எளிமைப்படுத்திப் பிரச்சினைகளை நோக்குதல் என்ற அடிப்படைத் தவறு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

pongal_22
கே. நாட்டுப் பற்று, தேசத்துரோகம்-இந்தச் சொற்கள் இப்போதெல்லாம் அரசியல் வாதிகள் பேச்சிலும் ஊடகங்களிலும் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவற்றுக்கு விளக்கம் தேவை. (சிவானந்தம், கடலுர்)

முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ளவேண்டியது நாடு வேறு, அரசு வேறு, அரசாங்கம் வேறு. ஆங்கிலத்தில் நாடு என்பதை country என்பார்கள். தேசத்தை nation என்பார்கள். அரசு என்பது state. அரசாங்கம் என்பது government , நிர்வாக முறை. தேசம் என்பது ஓர் இன மக்களைக் குறிக்கும் சொல். நாடு என்பது அந்த இன மக்கள் வாழும் எல்லைக்குட்பட்ட, நிர்வகிக்கப்படுகின்ற பிரதேசம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மறைத்தல், தேசியக் கொடி போன்ற அரசாங்கச் சின்னங்களை மதித்தல், தேசியகீதம் பாடுவது, அரசியலமைப்புச் சட்டம் புனிதமானது என்று போற்றுவது, நம்நாடு அல்லது கலாச்சாரம்தான் உலகத்திலேயே உயர்ந்தது என்று பேசுவது இவையெல்லாம் நாட்டுப் பற்றுக்கு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவை புற அடையாளங்களே ஒழிய, உண்மையான நாட்டுப்பற்று அல்ல. தேசிய கீதம் பாடுவதற்கும் சைவன் ஒருவன் திருநீறு பூசுவதற்கும் வித்தியாசம் ஒன்று மில்லை.
திருநீறு பூசிக்கொண்டே சைவக்கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அதுபோலத்தான் தேசியகீதம் பாடுபவர்கள் அல்லது அரசியல் சட்டத்தைப் புனிதமாகப் போற்றுபவர்கள் பேசுபவர்கள் நாட்டுப் பற்றாளர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உண்மையில் நாட்டு மக்களை-எந்தப் பகுதியில் அவர்கள் வாழ்ந்தாலும்-மதித்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் உரிமைகளைப் போற்றுவது, அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை எவ்விதத்திலும் மறுக்காமல் இருப்பது இவைதான் முதலில் நாட்டுப்பற்றுக்கு அடையாளம். அரசாங்கம் இன்றைக்கு ஒரு விதமாக இருக்கும், நாளைக்கு மாறும். இன்று ஒரு கட்சி அரசாட்சியில் இருக்க லாம், நாளை மாறலாம். இவற்றைக் குறைகூறுவதும், இவை செய்யும் தவறு களை எடுத்துரைப்பதும் நாட்டுப்பற்று அல்ல என்று நமது அரசியல் கட்சியாளர் கள் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர்) கருதுகிறார்கள். அதற்கேற்ப ஊடகங் களும் தாளம் போடுகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் சில ஊடகங்கள் இருக்கின் றன. கட்சியின் நிர்வாக முறையைக் குறைகூறினால் அவை தேசப்பற்று நாட்டுப் பற்றைக் குறைகூறிவிட்டதாக ஒப்பாரி வைக்கின்றன. மாநில, மைய அமைச்சர் களும் இதற்கு விதிவிலக்கில்லை.

உதாரணமாக, நமது தேசியகீதத்தை எடுத்துக் கொண்டால், பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல வங்கா என்று வருகிறது. பஞ்சாப், சிந்து, குஜராத், மகாராஷ்டிரம், உத்கலம் (ஒரிசா), வங்கம் ஆகிய நாடுகள் மட்டும் குறிக் கப்படுகின்றன. தென்னகம் முழுவதையும் திராவிடம் என்ற ஒரேசொல் அடக்கி விடுகிறது. வடக்கிலுள்ள ஆறுகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. தெற்கு பற்றி வேறு குறிப்புகளே கிடையாது. இதைச் சொன்னால் நாட்டுப் பற்று இல்லாதவன், தேசத்துரோகி என்பார்கள். ஒரு நாட்டுக்குப் பொதுவான தேசிய கீதம் இப்படியா இருப்பது?

நாட்டுப்பற்றுக்கு எதிரானது தேசத்துரோகம். நமது நாட்டை வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்பவர்கள் யார்? நமது மக்களின் உரிமைகளைப் பறித்து அயல் நாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவது யார்? அவர்கள் கொள்ளை அடிக்க நமது நாட்டு வளங்களைத் திறந்துவிட்டு, அங்குள்ள ஏழை மக்களை இடம் பெயர்ப்பது யார்? நமது நாட்டு மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதை விட்டு இன்னொரு நாட்டுக்காரனுக்கு செல்வத்தை வாரி வழங்கி அவன் இரா ணுவத்திற்கும் பயிற்சி அளிப்பது யார்? இவர்களெல்லாம் நாட்டுத் தலைவர்களா, தேசத் துரோகிகளா? கூடங்குளத்திலிருந்து 29 கி.மீ.இல் நாகர் கோவில் இருக்கும்போது அதைப் பாதுகாப்பான இடம் என்று தேர்வு செய்து மக்களை ஒழிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது யார்? மேலே கூறியதைச் செய்பவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று தேசத் துரோகிகள்.

இவர்கள் சொல்லுவதுதான் நாட்டுப்பற்றாக இருக்கிறது, வயிற்றுக்கே போராடுகின்ற ஏழை எளியவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டை-பிற உரிமைகளைக் கூட அல்ல-கேட்டால் அவர்கள் தேசத்துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்காகப் போராடுபவர்கள் நக்சலைட் என்று முத்திரைகுத்தப்பட்டு ஒழிக்கப்படுகிறார்கள். வேறு எந்த நாடாவது சொந்த மக்களையே கொன்று குவித்துப் பார்த்திருக்கிறீர்களா?

உண்மையில் அரசாங்கத்தை விமரிசனம் செய்வது சிறந்த நாட்டுப்பற்றே ஆகும். நாடு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில்தானே அந்த விமரிசனம் செய்யப் படுகிறது? அடுத்தபடியாக தனிமனித அளவில் என்று சொன்னால் நமது கடமை யை ஒழுங்காகச் செய்வதுதான் நாட்டுப்பற்று. அரசாங்க அதிகாரிகள், தலைவர் கள் என்றால், நாட்டு மக்களுக்கு வேண்டியதைச் செய்வது நாட்டுப்பற்று, மக்கள் உரிமைகளை மறுப்பது தேசத்துரோகம். தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தை விமர்சிப்பது நல்லது. தேவையானதும் கூட.

கே. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று இன்று பரவலாகப் பேசப்படு கிறது. அப்படி என்றால் என்ன? அவை உண்மையில் தொண்டு செய்கின் றனவா? (பரமேஸ்வரன், காட்பாடி)

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பவை அரசாங்கத்துக்குச் சம்பந்த மில்லாத, ஆனால் ஏதேனும் ஒரு கொள்கைப்படி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்கள் என்று பொதுவாக வரை யறை செய்யப்படுகின்றது. இன்று இந்தியாவில் யார்வேண்டுமானாலும் ஒரு தொண்டு நிறுவனத்தை அமைக்கலாம். அதற்காகப் பண உதவி பெற்றுத் தொண்டுசெய்கிறேன் என்று கூறலாம், ஏமாற்றவும் செய்யலாம்.

இன்று இந்தியாவில் ஏறத்தாழ 40000 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உண்மையான தொண்டு செய்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு தருவதைவிட அவர்கள் அறிவை மழுங்கடிப்பதைத்தான் இவை நன்றாகச் செய்கின்றன.

இன்று உலகமயமாதல்தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம். தனியார்மயமாதலின் இன்னொரு பெயர்தான் அது. பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆதிக்கத்தை உலகின் எல்லாப்பகுதிகளிலும் நிறுவச் செய்யப்பட்ட ஏற்பாடுதானே அது? தொண்டு நிறுவனங்களும் இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்பாக இயங்குபவையே.

மேலும் அரசு செய்யவேண்டிய பல சேவைகளைத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் நிலையும் இருக்கிறது. இது ஜனநாயகத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும். அரசுத் துறைகள் பெயரளவிலாவது மக்களின் கட்டுப்பாட்டில் இருக் கின்றன. ஆனால் தொண்டு நிறுவனங்கள் அப்படி அல்ல. அவை தங்களுக்கு நிதி உதவி செய்கின்ற பெருநிறுவனங்கள், பெரும்பணக்காரர்களின் கட்டுப்பாட் டில்தான் இயங்கமுடியும். பலசமயங்களில் அரசாங்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பிறர் பெயரால் (பினாமியாக) தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு அந்தந்த சமயத்திலான சிறு ஆறுதலை வழங்கி, அவர்க ளுடைய விமரிசனப் பண்பையும் போராட்ட குணத்தையும் மழுங்கடிக்கின்றன என்பது மார்க்சிய நோக்கிலான விமரிசனம்.

நல்ல மக்கள் நல அரசாங்கம் செயல்பட்டால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வேலையில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Vaalum-parichayum

கேள்வி: பழைய பாட்டு ஒன்று-சித்திரமும் கைப்பழக்கம் என்று வருகிறது. அதில் பழக்கம், பிறவிகுணம் என்று சொல்லப்படுகிறது. அதன் பொருள் என்ன?
நீங்கள் குறிப்பிட்டது அவ்வையார் எழுதிய தனிப்பாட்டு.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என்பது அந்தப்பாட்டு. இது வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்கின்ற கலைகள், தொழில்கள், நடத்தைகள் போன்றவற்றையும், பிறவியிலேயே வருகின்ற (இப்போதெல்லாம் உயிர்வேதியியலில் பாரம்பரியம், மரபணுக்களால் ஏற்படுகிறது என்கிறார்களே அதுபோல) குணங்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சித்திரம் பழகுவதால் வருவது; செந்தமிழ், நல்ல தமிழைப் பேசப்பேச வருவது; கல்வி மனப்பழக்கத்தினால் வருவது; நடை (அவரவருடைய பாணி-ஸ்டைல் என்று சொல்கி றோமே, அது)யும் கூடப் பழக்கத்தினால் வருவதுதான்; ஆனால் நட்பு, தயை (கருணை அல்லது பரிவு காட்டுகின்ற பண்பு), கொடை (பிறருக்குக் கொடுக்கின்ற குணம்) ஆகிய குணங்களெல்லாம் பாரம்பரியத்தினால் வருகின்றவை என்று இந்தப் பாட்டு சொல்கிறது.

பொதுமைப்படுத்திச் சொன்னால், பண்புகள் மரபினால் வருகின்றவை, கலைகள், தொழில்கள் போன்றவை எல்லாம் பழக்கத்தினால் வருகின்றவை என்பது அவ்வை யாரின் கருத்து. இன்றைக்கு நாம் நினைவில் இருத்தவேண்டிய மிகச் சிறந்த கருத்து இது.

காரணம், கலைஞர்கள் கருவிலே திருவுடையவர்கள், பிறவியிலேயே வருவதுதான் கலை, எல்லோருக்கும் அது வந்துவிடாது என்றெல்லாம் இன்று கதைகட்டுகிறார்கள். குறிப்பாக, சில ஜாதியிலே பிறந்தவர்களுக்குத்தான் சில கலைகள் வரும், மற்றவர்க ளுக்கு வராது என்று தங்களை உயர்த்திக்கொள்ளவும், பிறரைத் தாழ்த்தவும் இம்மாதி ரிக் கூற்றுகளைப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு என்கிறார் அவ்வையார். எல்லாக் கலைகளையும் எவரும் பழக முடியும் என்பது அவர் கருத்து. விளையாட்டுகளும் அப்படித்தான். உதாரணமாக செஸ் விளையாட்டு என்பது சிலருக்குத்தான் வரும், புத்திக்கூர்மை உடையவர்கள் சில குறிப்பிட்டவர்கள்தான் என்று பேசுகிறார் கள். அதுவும்கூட பழக்கம்தான்;

பண்புதான் பிறவியில் வருவது என்பது அவ்வை கருத்து. குறிப்பாக இது சாதிமுறைக்கு எதிரான ஒரு பாட்டு.
ஆனால், இன்று நாம் சில பண்புகள்கூட, பழக்கத்தினால் வருவது என்று நிரூ பிக்கமுடியும். உதாரணமாக திருடுதல் என்பது ஒரு பண்பா, தொழிலா? அது பண்பு, பிறவியினால் வருவது என்று கருதித்தான் முன்பு ஆங்கிலேயர்கள் ஒரு தனித்த பிரி வையே உருவாக்கினார்கள். அது பழக்கத்தினால் வருவது என்பதால்தான் இன்று சீர்திருத்தப்பள்ளி வைத்தோ, உளவியல் மருத்துவரிடம் அனுப்பியோ அதைக் களைய முற்படுகிறோம்.
தமிழ்நாட்டில் பல அவ்வையார்கள் இருந்திருக்கிறார்கள். இன்று சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி என்பதுபோல அன்றைக்கு அவ்வை என்பதும் புழக்கத்திலிருந்த ஒரு சிறப்புப் பெயர் (ப்ராபர் நௌன்). இந்தத் தனிப்பாட்டை எழுதிய அவ்வையார் பிற்காலத்தியவர். இவர் சங்க காலத்து அவ்வையார் அல்ல.

கேள்வி: செவ்வியல் என்ற சொல்லை (உதாரணமாக செவ்வியல் தமிழ்) அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதற்கு என்ன அர்த்தம்? 
செவ்வியல் என்ற சொல் இரண்டு தனித்த அர்த்தங்களில் கையாளப்படுகிறது.
ஒன்று, காலத்தினால் பழமையானது, முற்பட்டது என்பது. இதை ஆங்கிலத்தில் கிளாசிகல் என்ற சொல்லால் குறிப்பார்கள். தமிழ் ஒரு கிளாசிகல் (செவ்வியல்) மொழி, செம்மொழி. காலப்பழமைதான் இங்கு முக்கியம் என்றாலும், தனித்து இயங்கு கின்ற தன்மை, இலக்கிய-இலக்கண வளத்தைப் பெற்றிருக்கின்ற தன்மை, சிறந்த பண்பாட்டைப் பெற்றிருக்கின்ற தன்மை ஆகியவையும் இந்தப் பொருளில் அடக்கம்.

முன்பெல்லாம் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகள் என்றார்கள். பிறகு இதில் அராபிய மொழியும் சேர்ந்தது. இவற்றில் சேர்த்துச் சொல்லப்படாவிட்டாலும் இவற்றுக்கு இணையான வளம்கொண்ட செம்மொழி தமிழ்.

செவ்வியல் என்ற சொல்லின் அடிச்சொல், செம்மை (சிறப்பானது). எனவே செவ்- என்ற அடைமொழி சிறப்பான எந்தப் பொருளுக்கும்/தன்மைக்கும் பொருந்தும். அதனால்தான் தமிழில் கடவுளைக்கூட செவ் + வேள் ‘செவ்வேள்’ என்றார்கள். பழங் கால நூல்களே அன்றி, சிறந்த நூல்கள் எல்லாம் ‘கிளாசிக்’(ஸ்)-செவ்வியல் நூல்கள் எனப்படுகின்றன. ஆங்கிலம் தமிழைப்போல அவ்வளவு பழமை உடையது அல்ல என்றாலும், இன்றும் எழுதப்படுகின்ற சிறந்த நூல்கள் எல்லாம் செவ்வியல் நூல்கள் என்றே கருதப்படுகின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மட்டும் கிளாசிக்ஸ் அல்ல, ஜாய்ஸ் எழுதிய டப்ளினர்ஸ் கதைகளும் கிளாசிக்ஸ்தான்.

தமிழுக்குச் செம்மொழித்தன்மை பெற்ற முறைதான் வருந்தத்தக்கது. இதில் நம் அரசி யல்வாதிகளும் அறிஞர்களும் கோட்டை விட்டுவிட்டார்கள். தமிழ் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடைய மொழி என்பது (வெறும்) அந்தஸ்து அளிப்பதைவிட முக்கியமானது. ஆனால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தபோது அது ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த மொழி என்று கூறியே இந்திய அரசாங்கம் அளித்தி ருக்கிறது. இது மிகவும் கேவலமானது என்பதோடு, தமிழை சமஸ்கிருதத்திற்கு பிற்படுத்தியும், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளையும் தமிழோடு காலத்தினால் ஒப்பவைத்து நோக்குவதாகவுமே அமைகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Madurai-alanganallur-jallikattu

கேள்வி  (39): குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? அது பற்றித் தங்கள் கருத்தென்ன?

நண்பர் ஒருவர் தான் குமரிக்கண்டம் என்ற நூல் ஒன்று எழுதப்போவ தாகக் கூறி அதுபற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு என் எதிர்வினையைப் பொதுவாகச் சிறகில் தெரிவிக்க வேண்டியே இந்த பதில்.
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். லெமூரியாக் கண்டம் என்ற ஒன்றுகூட-அதைப்போல-இருந்தததாகச் சொல்கிறார்கள். இவையெல் லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலப்பகுதிகள். அப்போது பூமியின் தோற்றமே வேறாக இருந்தது. இப்போதுள்ள பல நிலப்பகுதிகள் துண்டுபட்டும், பல நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்தும் தோற்றமளித்தன. எந்தக் கலைக்களஞ்சியத்திலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம்.
ஆனால் குமரிக்கண்டத்தில் ஏழுஏழு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன, அவற்றில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. (நண்பர் அவற்றின் பெயர்களையெல்லாம் வேறு தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.) சிலப்பதிகாரத்தில் “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வருவதெல்லாம் தொல்பழம் மனத்தின் நினைவுகள் அல்லது கூட்டு நனவிலியின் நினைவுகள் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கொள்வார்கள்.

ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழியே பிறக்காத கற்கால மனிதர்கள்தான் வாழ்ந்தார்கள். இன்று போற்றப்படுகின்ற எகிப்திய நாகரிகம் (பிரமிடுகளையெல்லாம் வானியல் அறிவோடு கட்டியவர்கள்)  என்பதே இன்றைக்கு ஐந்தாயிரம்-ஆறாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுதான். சிந்து வெளி நாகரிகமும் அவ்வாறே. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்தது என்பது பழங்காலக் கற்பனை. ஒருவேளை ஆரியர்கள் அவர்களுடைய வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கதைகட்டியதற்கு மாற்றாகத் தமிழ்ப்புலவர்கள் இப்படிக் கதைகட்டினார்களோ என்னவோ!

லெமூரியா என்ற பெயர், லெமூர் என்ற ஆதிக்குரங்கின் பெயரால்தான் வருகிறது. இதனால்தான் புதுமைப்பித்தன் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று சொல்வதில் தமிழர்களுக்கு ஆசை என்று கிண்டல் செய்தார் போலும்.

இன்று நாம் செய்ய வேண்டியது லெமூரியாவையோ குமரிக் கண்டத்தையோ தேடுவது அல்ல. அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அங்கு தமிழர்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வேறு கற்கால இனம் ஏதேனும் வாழ்ந்திருக்கவும் கூடும். ஏனென்றால் இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நிலப்படங்களில் ஆப்பிரிக்காவும் இந்தியத் துணைக்கண்டப் பகுதியும் இணைந்திருந்ததாகக் காட்டப்படுகிறது.

இப்போது நாம் செய்யவேண்டியது, இன்று தமிழினம் தன்னை எப்படித் தற்காத்துக் கொள்ளப்போகிறது, எப்படி எதிர்காலத்தின் சவால்களை எதிர் கொண்டு வாழப்போகிறது என்பது பற்றிய சிந்தனைதான். குமரிக்கண்டம் இருக்கட்டும், இன்று போகும் போக்கில் இனி ஐந்து முதல் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயமே இருக்காது, நிலம் எல்லாம் பிளாட்போட்டு விற்பனை செய்யப்பட்டு விடும், சோற்றைவிடுங்கள் ஐயா, குடிக்கத் தண்ணீருக்கு எங்கே போகப்போகிறீர்கள்? அரசியல்வாதிகளுக்கு இதுபற்றிய அக்கறை எல்லாம் இல்லை

உணவு உடை உறைவிடம் என்றார்கள் பழங்காலத்தில். உணவையும் (விவசாயத்தையும்) உடையையும் (நெசவுத்தொழிலையும்) ஒழித்துவிட்டு வெறும் கான்கிரீட் காடுகளில் (உறைவிடம்) வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணமா?

அன்பர்களே, தயவுசெய்து தமிழ்மீது உள்ள அக்கறை என்றபெயரில் குமரிக் கண்டத்தையும் பழங்கால நினைவுகளையும் தேடுவதைவிட்டு இன்றைக்கு வாழ்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி யோசியுங்கள்.

கேள்வி (40): அப்படியானால் தமிழ்நாடு வளமற்ற நாடு, தமிழனுக்குச் சரித்திரம் தேவையில்லை என்கிறீர்களா?

மேற்கண்ட (39)ஆம் கேள்விக்குரிய பதிலை என் மாணவர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கேட்ட கேள்வி இது. ஒரு கேள்வியல்ல, தொடர்பற்ற இரண்டு கேள்விகள் இதில் இருக்கின்றன.

முதல் கேள்விக்கு விடை: ஆம், தமிழ்நாடு வளமற்ற நாடுதான்.

“நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல

நாட வளந்தரு நாடு”

என்றார் வள்ளுவர். சோற்றுக்கும் தண்ணீருக்கும் பிறரை நாடுகின்ற நாடு எப்படி வளமான நாடாகும்? பக்கத்திலுள்ள நாட்டிடம் தண்ணீர் கேட்டு எத்தனை எத்தனை ஆண்டுகளாகப் பிச்சையெடுக்கிறோம்? அவர்களோ ஈவிரக்க மின்றி (சட்டத்தை விடுங்கள்) ஒருசொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்கி றார்கள்.

தமிழ்நாட்டுக்கென்று ஒரு நதி உண்டா? எல்லா ஆறுகளும் அடுத்த மாநிலத்தில் பிறப்பவை. அவர்கள் மனம்வந்து தண்ணீர் கொடுத்தால்தான் உண்டு.

அதனால்தான் பழங்காலக் கரிகால் சோழன் முதலானவர்களும் பல்லவ மன்னர்களும் பிற்காலச் சோழர் பாண்டியர் விஜயநகர அரசர் முதலான யாவரும் தமிழ் நாட்டில் ஏரி குளங்கள் வெட்டிக் கண்மாய்கள் வைத்துக் காப்பாற்றினார்கள். மழைநீரைத் தேக்கினார்கள். இப்போது அவையெல்லாம் எங்கே? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தனக்கென்று ஓர் ஆறும் இல்லாத ஒரு நாட்டை- முற்றிலு மாகக் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் எல்லாம்-நீர்ப்பாசன வசதிகள் முழுதும் பாழாக்கப்பட்டுவிட்ட நாட்டை வளமான நாடு என்று தமிழ்மீதுள்ள, தமிழ் நாட்டுமீதுள்ள அன்பால் சொல்லலாம்-குருட்டுக்குழந்தையையும் கண்ணாயிரமே என்று கொஞ்சுகின்ற தாய்போல. ஆனால் உண்மை? சென்னை மாகாணம் என்ற  பெயரை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் ஆர்வம் காட்டிய அரசியல்வாதிகளுக்கு “நாடென்ப நாடா வளத்தன” என்ற முதுமொழி தெரியா மலா போயிற்று? மலையைக்கூடத் தின்கிறார்களே ஐயா பணத்துக்கு?

இரண்டாவது கேள்விக்கு பதில்: தமிழனுக்குச் சரித்திரம் தேவைதான். சரித்திரம் என்பது, எழுதியவனின் சார்பு ஓரளவு இருந்தாலும், முதன்மைச் சான்று, இரண் டாம்நிலைச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் பிறப்பது. (அன்புகூர்ந்து வரலாறு எழுதும் கலையைச் சற்றே பாருங்கள்). இலக்கியம் போன்ற சான்றுகள் எல்லாம் மூன்றாம்நிலை (டெர்ஷியரி)ச் சான்றுகள்தான். இவை உண்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குமரிக்கண்டம் போன்றவையெல்லாம் மூன்றாம் நிலைச் சான்றுகளால்கூட நிறுவப்பட முடியாதவை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard