New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பார்ப்பனர் மீது பகைமை -: சு.கோதண்டராமன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பார்ப்பனர் மீது பகைமை -: சு.கோதண்டராமன்
Permalink  
 


பார்ப்பனர் மீது பகைமை

பார்ப்பனர்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திரைப்படங்களில் பரிகசிக்கப்படுகின்றனர். மேடைகளில் இகழப்படுகின்றனர். ஒரு உறுப்பினர் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குறை கூறும் போக்கு தமிழ் நாட்டில் காணப்படுகிறது. ஒரு பார்ப்பான் குடித்து விட்டுத் தரையில் கிடந்தால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவார்கள். அதுவே வேறு சாதி்க்காரன் செய்தால் அவனது சாதிப் பெயரைச் சொல்வதில்லை. தமிழ்ச் சமூகம் பார்ப்பனர்களிடத்தில் உயர்வான நடத்தையை எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் இன்றுவரை நடந்த சாதிக் கலவரங்களில் ஒன்றில் கூட பார்ப்பனர் பங்கு பெற்றதில்லை. ஆனால் சாதிக் கொடுமை என்று சொன்னால் முதலில் விமர்சிக்கப்படுவது அவர்கள் தாம்.

பார்ப்பனர்களில் கலப்புத் திருமணம் நடந்துள்ள அளவுக்கு வேறு சாதிகளில் ஏற்பட்டுள்ளதா? சர்வே எடுத்து சதவீதம் பாருங்கள் தெரியும். ஆனாலும் சாதிக் கட்டுப்பாடு என்றால் சாடப்படுவது பார்ப்பனர் தாம்.

பிரதாப முதலி தவறு செய்தால் ஆசிரியர் அவனைத் தண்டிக்கக் கூடாது, பதிலாக அவனுடைய நண்பன் கனகு முதலியை அடிக்க வேண்டும் என்று பெற்றோர் உத்திரவிடுவதாக  பிரதாப முதலி சரித்திரத்தில் வரும். ஆங்கிலத்தில் whipping boy என்பார்களே, அது போல யார் தவறு செய்தாலும் அடி வாங்குவதற்கு என்று விதிக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

பாலசந்தர் அரங்கேற்றத்தில் ஒரு பார்ப்பனப் பெண் விபசாரியாக ஆவதைக் காட்டினார். பார்ப்பனர் உள்பட எல்லாரும் கண்டு மகிழ்ந்தார்கள், பாராட்டினார்கள். எழுத்தாளர் சுஜாதா தன் கதைகளில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை விவரித்திருக்கிறார். அதை எல்லோரும் படித்து இன்புற்றார்கள். அவரே ஒரு நாடார் பெண் ஓடும்போது ஏற்படும் உடல் அசைவை அவருக்கே உரிய நடையில் வர்ணித்தபோது நாடார் சமூகமே கொதித்து எழுந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

தனிப்பட்ட பார்ப்பனர் தாக்கப்பட்டால் வெகுண்டு எழுவர். ஆனால் சமூகம் என்ற வகையில் பார்ப்பனர்களுக்கு சூடு சொரணை கிடையாது. யாரையோ வைகிறான், வைதுவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவர்.

ஏனெனில் பார்ப்பனர்களுக்கு சமூக உணர்வு என்று ஒன்று கிடையாது. சமூகம் என்றால் ஒன்றுபடுத்தும் சக்தி ஒன்று இருக்க வேண்டும். பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துவது எது? மொழியா? அல்ல. தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு பேசும் பலர் உள்ளனர். அவரவர் ஆசாரங்கள் வேறு.

சமயக் கொள்கையா? அல்ல. சைவம் வைணவம் என்று இரு பெரும் பிளவுகளுக்கு இடையே மூண்டிருந்த பகைமைத் தீ அணைந்துவிட்டாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. மாத்வ சம்பிரதாயம் வேறு. பார்ப்பனர்களிலே கோயிலே கதியாகக் கிடப்போரும் உண்டு, கோயிலுக்கே போகாதாரும் உண்டு, நாத்திகவாதிகளும் பலர் உண்டு. வடமர், வாத்திமர் என்று தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத உட்பிரிவுகள் பற்பல.  குடும்பத்துக்குக் குடும்பம் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன.

ஒரு தலைமை உண்டா? இல்லை. வைணவர்களில் வடகலை தென்கலைப் பிளவுகள். சைவர்களில் காஞ்சி மடத்தைச் சார்ந்தவர்களும் உண்டு, சிருங்கேரி மட ஆதரவாளர்களும் உண்டு. எந்த மடத்தையும் ஏற்காதவர் எண்ணிக்கை தான் மிகுதி.

இத்தகைய நிலையில் பார்ப்பனர்களை ஒரு சமூகமாகக் காணவேண்டும் என்றால் அதற்கான ஒரே நியாயம் அவர்களது முன்னோர் வேதம் கற்றிருந்தனர் என்பது தான். இந்தத் தலைமுறையில் வேதம் கற்போர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. எதை வைத்து இன்று எல்லாப் பார்ப்பனரையும் ஒரே சமூகமாகக் கூற முடியும்?

சிவாசாரியார்கள் பார்ப்பனர்களா? அல்ல. இரு திறத்தாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பூணூல் அணிந்திருக்கிறார்கள், ஸம்ஸ்கிருத மந்திரம் கூறுகிறார்கள் என்பது தான் அவர்களைப் பார்ப்பனரோடு இணைப்பது. அவர்களுக்கு வேதப் பயிற்சி இல்லை, ஆகமப் பயிற்சி மட்டும் தான் உண்டு என்பதும் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டவர் என்பதும் பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

பூணூல் மட்டும் தான் பார்ப்பன அடையாளம் என்றால் பத்தர்களையும் கோமுட்டி, வாணிய செட்டியார்களையும் கூட பார்ப்பனர் என்று கூறலாம். ஸம்ஸ்கிருதம் அறிந்திருப்பது தான் பார்ப்பனீயம் என்றால் இன்று பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்களில் ஸம்ஸ்கிருதம் அறிந்தோர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. தமிழுக்குத் தொண்டு செய்த பார்ப்பனர்கள் அன்றும் இன்றும் மிகப் பலர். சென்ற நூற்றாண்டு வரை ஸம்ஸ்கிருதம் அறிந்த பிற சாதியினர் தொகை மிகுதி. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு எடுத்துக்காட்டு.

தாக்கப்படுதல் என்ற ஒரு தன்மை தான் பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துகிறது.

மேடையில் பார்ப்பனர்களைத் தாக்குவோர் தங்கள் அந்தரங்க ஆலோசகராக, வழக்கறிஞராக, மருத்துவராக, ஆடிட்டராக பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்வது உலகறிந்தது.

கேட்டால் பார்ப்பனர்கள் மீது எங்களுக்குப் பகை இல்லை. பார்ப்பனீயம் தான் எங்கள் எதிரி என்பார்கள். அது என்ன ஈயம்? விளக்கம் கேட்டால் பதில் கிடைக்காது. அவர்களுக்கே தெரியாது.

மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்க மறுப்பது தான் பார்ப்பனீயம் என்ற வாதம் தற்போது எடுபடாது. எந்தச் சாதியாக இருந்தாலும் பூணூல் அணிவித்து வேதம் கற்பிக்கத் தயாராக உள்ள பார்ப்பன நிறுவனங்கள் இன்று உள்ளன. பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர் அதில் சேர்ந்துள்ளார்கள்?

இணையத்தில் வேதம் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதே, வேதத்தை இகழ்வோர் எத்தனை பேர் அதைப் படித்துவிட்டு ஆதாரத்துடன் இகழ்கிறார்கள்?

கோயில் பூசைக்கு மற்றவர்களை அனுமதிக்கவில்லை என்பது அந்த ஈயங்களில் ஒன்று. இன்று எல்லாச் சாதியினருக்கும் ஆகமப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பயிற்சி பெற்ற சிலரும் அதில் போதிய வருவாய் வருவதில்லை என்று அதை விட்டு விட்டு வேறு தொழிலை நாடுவதைப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

ஒரு நேர்முகத் தேர்வில் தோற்றுப் போன ஒருவன் பார்ப்பானுக்குப் பார்ப்பான் உதவி செய்துவிட்டான். எனக்குக் கிடைக்கவில்லை என்று புலம்பினான். நேர்முகம் நடத்தியவர் பார்ப்பனர் அல்ல என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே பேச்சை மாற்றிக் கொண்டு பார்ப்பான் ஏதோ சாமர்த்தியம் செய்து காசைக் கீசைக் கொடுத்து வேலை வாங்கிவிட்டான் என்று சொல்லத் தொடங்கினான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பார்ப்பனீயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் அவர்களுக்கு ஒரு சமாதானம் ஏற்படுகிறது.

பார்ப்பனீயம் என்று இவர்கள் சொல்வதின் உண்மையான வடிவம் என்ன என்றால் அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். விரைவில் முன்னேறி விடுகிறார்கள் என்பது தான். இது தோல்வியுற்றவர்களுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு. இதை மறைத்து அதற்கு வரலாற்றைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்து வட இந்தியாவிலிருந்த திராவிடர்களைத் தெற்கே துரத்தியதும் அல்லாமல் தெற்கிலும் குடியேறினர் என்று என்றைக்கோ ஒரு விஷமக்கார ஆங்கிலேயன் எழுதி வைத்த,  புளித்துப் போன வாதத்தைக் கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் இவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. அவன் எழுதியது சரி தானா என்று எத்தனை பேர் சுயமாக வரலாற்றை ஆராய்ந்திருக்கிறார்கள்?

பார்ப்பனர் மீது வெறுப்பு என்பது தமிழ்நாட்டுக்கே உரியது. கேரளம் முதலான பிற தென் மானிலங்களில் உள்ள பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அங்கு இந்தத் துவேஷம் காணப்படாதது ஏன்? இவர்கள் கூற்றுப்படி வட இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் கைபர் கணவாய் மூலம் வந்தவர்கள் தாமே?

இந்த வெறுப்பு பற்றி முழுமையாக ஆராய்வோம். இதற்கு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணம் உண்டு. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் (எல்லோரும் அல்ல) வந்தேறியவர்கள் தாம். பாரசீகத்திலிருந்து அல்ல. தென்னிந்தியாவின் வடபகுதியிலிருந்து. 3000 வருடங்கள் முன்பு அல்ல. சுமார் 1500 வருடங்கள் முன்பு. கடந்த 3000 வருட இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் கடந்த காலங்களில் பார்ப்பனரும் அல்லாதாரும் இணக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். பகைமை உணர்வு ஏற்பட்டது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். முழுமையாக ஆராய்வோம்.

பூர்விகக் குடிகள் – தொல்காப்பியர் காலம்  
தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 ,  பாயிரம்.]

பூர்விகக் குடிகள் – சங்க காலம்
சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் –  தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல்  வேண்டும்.

பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்
களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

1. தீட்சிதர்கள்    
நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

2. நம்பியார்கள்    
சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

3. தென்கலை வைணவர்கள்    
பழந் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

4. ஆனைக்கா அந்தணர்கள்
திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள். இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும். (பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவெள்ளறைக் கோவிலின் முதிய பட்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு சொலவடை சொன்னார். ஆதி ரங்கம், அடுத்து வெள்ளறை, அடுத்தது ஆனைக்கா என்று பொருள்படும் அது எனக்கு மறந்து விட்டது. மறவாதது, இம்மூன்று தலங்களிலும் பூசை செய்பவர்கள் சோழியர்கள் என்று அவர் கூறியது.)

5. வீழி அந்தணர்    
ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

6. நயினார், பட்டர், திருசுதந்திரர்
திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்லது குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

7. களப்பிரர் கால அந்தணர்கள்
சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

அது என்ன சமய மாற்றங்கள்?
தொல்காப்பியத்தில் சிவன் வழிபாடு இல்லை. சங்க இலக்கியங்களிலும், அம்மையார் பாடல்களிலும் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் ஏற்பட்டதும் ஐந்தெழுத்து பிரபலமானதும் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச் சமயமாக ஆனதும் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

சைவம் அரச ஆதரவைப் பெற்றது. இத் தெய்வம் வேதத்தில் இல்லாதது என்பதால் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை மற்ற அந்தணர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புதிய குடியேற்றம்
அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. (சங்க காலத்திலும் வடமர் இருந்தனர் என்று பார்த்தோம்.) மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில்  குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சமணத்தால் சீரழிந்த வைதிக சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

ஜெயமோகன் 9.8.2014 அன்று அவரது வலைத்தளத்தில் எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய – வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

அது போல, சோழ மன்னர்களும் புறச்சமயத்தோரான களப்பிரர்களுக்கு எதிராகத் தங்கள் அதிகாரத்தைச் சைவம் மூலம் நிலைப்படுத்துவதற்காக, வட மாநிலங்களிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்கலாம்.

புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.  3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. (அம்மையார் ஈசனைச் சுடலைச் சாம்பல் பூசியவனாக வர்ணிக்கிறாரே அன்றித் தானோ பிற அடியாரோ திருநீறு பூசியிருப்பதாகக் கூறவில்லை.) இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது.

திருநாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், திருவொற்றியூர் காரோணம் என்ற பெயர்களை குஜராத் மாநிலத்தின் கார்வான் பகுதியில் தோன்றிய லகுலீச பாசுபத சமயத்தோடு தொடர்பு படுத்தும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. இந்தப் பாசுபதர்கள் தாம் சைவத்தை ஒரு தனிச் சமயமாக உருவாக்கினர். அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தான் மிகுதியாக ஏற்பட்டது என்பதையும் கவனிக்க.

மராட்டிய வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும். என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் மிகக் குறைவு. அவர்கள் சென்ற நூற்றாண்டு வரை மத்தியான்னப் பறையர் என்று அழைக்கப்பட்டனர்.

அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப் புலையனும் அஃதென்னும் வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு  நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

குடியேறிய வடமர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி – வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

 சிவாச்சாரியார்கள்

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் பூசகராக ஆக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I  page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர்– மு.நளினி, இரா.கலைக்கோவன்.] பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார்.[புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாகப் பூசகர் ஆக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல
தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் ஸம்ஸ்கிருதம் இலக்கிய மொழியாக இருந்தது. பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்

எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?
சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி  இருக்கலாம்.

சோழ அரசர்கள் அந்தணர்களுக்கு வரியில்லாத நிலங்களை மானியமாக அளித்தார்கள் என அறிந்தோம். இந்த நிலங்கள் எங்கிருந்து வந்தன? நிலம் புதிதாக உற்பத்தி செய்ய முடியாதது. ஏற்கெனவே பழந்தமிழ்க் குடிகள் விவசாயம் செய்த நிலத்தைத் தான் அரசர்கள் அந்தணர்களுக்குக் கை காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் அரசருக்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக இந்தப் புதிய அந்தணர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்திரவிட்டிருக்க வேண்டும்.

இதில் விவசாயிகளுக்குப் பொருளாதார நட்டம் ஏதுமில்லை. அரசனுக்குச் செலுத்துவதற்குப் பதிலாக அந்தணருக்குச் செலுத்தினர். அந்தணரும் வந்ததைக் கொண்டு எளிமையாக வாழ்ந்து தத்தம் கடமையைச் செய்து கொண்டிருந்தனர்.

17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சாதிப் பெயரைப் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வது வழக்கில் இல்லை. கம்பர் படையாச்சி, ஓட்டக்கூத்தர் முதலியார் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அருணகிரிநாதரின் சாதியை அவர் பெயரைக் கொண்டு சொல்ல முடிகிறதா?

சாதிப் பின்னொட்டுகள் தலைதூக்குவது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட ஆங்கிலேயர் நில உடைமையை ஆவணப்படுத்தத் தொடங்கும்போது இந்த இறையிலி நிலம் யாருக்கு உரியது என்று விசாரிக்கத் தொடங்கினர். இங்கிலாந்து நாட்டு முறைப்படி உழுது விளைவித்தவரைக் குத்தகைதாரர் என்றும் உட்கார்ந்து சாப்பிட்டவரை உரிமையாளர் என்றும் ஆவணப்படுத்தினர். இது பரம்பரையாக உழுது பயிரிட்டவர்களுக்குக் கசப்பை ஊட்டியிருக்க வேண்டும். பார்ப்பன வெறுப்பின் வேர் இங்கே தான் இருக்கிறது.

ஆங்கிலேயர் தங்கள் நாட்டில் உள்ளது போல இங்கு சர்நேம் இல்லாதது கண்டு வியந்தனர். மக்களுக்கு சர்நேம் ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தினர். அப்பொழுது ஒவ்வொரு குழுவினரும் ஒரு உயர்ந்த பெயரைத் தேர்ந்தெடுத்தனர். ஐயன், முதலி, படையாட்சி, தேவன், செட்டி (சிரேஷ்டி- உயர்ந்தவர்) என்று எல்லாப் பட்டப் பெயர்களும் உயர்வைப் பறை சாற்றுவதாகவே உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்தப் பெயர்கள் எளிமையாகவே இருந்தன. அதன் பின்னர் தான் இவற்றில் அர் ஆர் விகுதி சேர்க்கப்படலாயிற்று- ஐயர், முதலியார், படையாட்சியார், தேவர், செட்டியார் என. 19ஆம் நூற்றாண்டுக் கதைகளைப் பார்க்கவும். பாரதியின் கதைகளிலும் காணலாம்.

மக்களைப் பிரிப்பதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றுவிட்டனர். தங்கள் கம்பெனியிலும் அரசாங்கத்திலும் வேலை செய்ய வல்ல இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தபோது கல்வியே தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கை கொடுத்தனர். மற்றவர்கள் தயங்கியபோது இவர்கள் மேலைநாட்டுக் கல்வியைத் துணிந்து ஏற்றனர். அவர்களது பொருளாதாரம் மேலோங்கத் தொடங்கியது. மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்படலாயிற்று.

பார்ப்பனர்களிலும் ஏழைகள் உண்டு, மண்டுகள் உண்டு, குணக்கேடர்கள் உண்டு. ஆயினும் பெரும்பாலான பார்ப்பனர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள், பதவி உயர்வு பெருகிறார்கள். பிற சாதியினர், பிற மதத்தவர் கூடத் தங்கள் நிறுவனங்களில் பார்ப்பனரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஏன்? பார்ப்பனர்களின் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அவர்கள் மீது தேவையற்ற காழ்ப்புணர்வு குறையும், எல்லோரும் முன்னேற முடியும்.

பார்ப்பனர்களுக்கு என்று கடவுள் விசேஷமான அறிவைக் கொடுக்கவில்லை. அறிவாளிகள் எல்லாச் சமூகத்திலும் உண்டு. பார்ப்பனர்களின் சிறப்புக்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறையில் உள்ள சிறப்பு தான்.

அது என்ன வாழ்க்கை முறை?
வேதம் கற்கும் முறை பற்றி அறிவீர்கள். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. இதில் பயின்றவர்கள் எந்தக் கல்வியையும், கலையையும் எளிதாகக் கற்க முடியும். தற்காலத்தில் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வேதக் கல்வியை விட்டுவிட்டபோதிலும், கடுமையான வேதப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவரும் புரோகிதர்களால் வழிநடத்தப்படுவதால் அவர்களுக்கு எந்த வேலையைச் செய்தாலும் சிரத்தையோடு செய்வது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

சந்தியா வந்தனம் முதலாக பல சடங்குகளைப் பார்ப்பனர்கள் அனுசரிக்கிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தாமாகவே விரும்பி தம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன.

தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதில் பயிலும் எல்லாச் சாதி மாணவர்களும் மேல் நிலை அடைவதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

சாதிகளற்ற சமுதாயத்தை விரும்பிய பாரதி பார்ப்பானைப் பூணூலைத் துறக்கச் சொல்லவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவிக்கிறார். அவர் தன் பூணூலை நீக்கிக் கொண்டதாகத் திரைப்படத்தில் காட்டுவது உண்மையா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

அவர் சொல்கிறார், காஷ்மீரில் இந்துக்களிடையே சாதிகள் கிடையாது. எல்லோரும் பிராமணர்கள் தாம். அது போல இந்தியா முழுவதும் மற்ற எல்லா சாதியினரையும் மச்ச மாமிசங்களைக் கைவிடச் சொல்லி ஒரு பூணூலை அணிவித்தால் சாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்.

வெவ்வேறு நீளமுள்ள இரு கோடுகளைச் சமப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இரு வழிகள் உண்டு. பெரிய கோட்டை அழிக்கலாம் அல்லது சிறிய கோட்டை நீட்டலாம். பார்ப்பனர்களைத் தரம் தாழ்த்துவதன் மூலம் அடையப்படும் சமத்துவத்தை விட அவர்களது வெற்றியின் அடிப்படையைத் தெரிந்து கொண்டு அவர்களது நிலைக்கு உயர்வது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்துக்கான வழியாகும்.

படம் உதவிக்கு நன்றி:  http://thamizhoviya.blogspot.com/2011/11/blog-post_07.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard