New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலம்-முனைவர் ப. சரவணன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்க காலம்-முனைவர் ப. சரவணன்
Permalink  
 


புதைந்தவை சாட்சி சொல்கின்றன

சங்க காலம் / தேடல் – 1

காலத்தை வெட்டாதீர்

PandyasSangamAgeMCSIObverse‘காலம்’ எனும் நீள் சரடில் ஒரு குறிப்பிட்ட அளவினைத் துண்டாக வெட்டியெடுத்து அது எந்தக்காலம் என்று கணிப்பது எளிதன்று. பொருத்தமில்லாதது. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட தூண்டுதல் ஏற்பட்டு அது துலங்கலாக மாறி பல்வேறு மாற்றத்துக்குட்பட்டு ஒருநிலைபெற்ற  பெருநிலையைக் கண்டு, அது தோன்றுவதற்கும் தொய்வடைவதற்கும் இடைப்பட்ட காலத்தை அளந்து அதற்கு ஒரு பெயரிடுதல் எளிது. பொருத்தமானது.

பொது யுகத்துக்கு முன்பு (பொ.யு.மு) ஏதோ ஒரு நூற்றாண்டையும் பொது யுகத்தில்  ஏதோ ஒரு நூற்றாண்டையும் குறித்துக் கொண்டு இக்காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவதைவிட, ஒரு சமூகம் இவ்வாறு தோன்றி, இவ்வாறு வளர்ந்து, இவ்வாறு நலிவுற்றது என்று குறித்துக்கொண்டு அச்சமூகம் தோற்றியது முதல் நலிவுற்றது வரையிலான காலக்கட்டத்தை ‘இவ்வாறு சொல்லலாம்’ என்று பெயரிடுவது சிறப்பு.

காலத்தை வெட்டாதீர். காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வைத் தனித்தெடுத்துக் காலத்தைக் கணிக்கவேண்டும். அது ஒன்றின் முழுமையாக இருக்கவேண்டும். ஒரு மனிதனின் ஆயுட்காலம் போலவோ (தனிமனித வரலாறு) அல்லது ஒரு சமூகத்தின் ஆயுட்காலம் போலவோ  (சமூகத்தின் வரலாறு) அது முழுமையானதாக இருக்கவேண்டும். தலையும் வாலும் சிதைந்திருந்தாலும் (தோற்றமும் முடிவும் தெரியவில்லை என்றாலும் கூட) அதன் உடலின் நீளத்தைக் கொண்டு காலத்தைக் கணிக்கவேண்டும். தனிமனித வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு ஐந்தாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம். சமூகத்தின் வரலாற்றைப் பொருத்தவரை அக்கணிப்பு  ஐம்பதாண்டுகாலம் முன், பின்னாக இருக்கலாம்.
தமிழரின் சங்ககாலம்

தமிழர் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, நலிவுற்ற காலத்தைச் ‘சங்ககாலம்’ எனலாம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்குமுன் ‘கூடிப்பேசி முடிவெடுத்தல்’ என்பது இனக்குழுத் தமிழரின் தொல்வழக்கம்.

செய்யுளைப் புலவர்கள் கூடிப்பேசி ஒப்புக்கொள்வதைச் சங்க இலக்கியங்கள் ‘புணர்கூட்டு’ என்று சுட்டியுள்ளன. புணர்தல் என்றால் கூடுதல். புணர்கூட்டு என்பது ஒருங்கிணைதல், சங்கமித்தல் என்ற பொருள்படும்.

சங்கு என்ற சொல்லிலிருந்து சங்கம் என்ற சொல் பிறந்துள்ளது. சங்கிலிருந்து எழும் ஒலியைச் சங்குநாதம் என்று கூறுவதில்லை – சங்கநாதம் என்று கூறுகிறோம். க,த,ந,ப,ம போல ‘ச’ வும் மொழிமுதல் வரும் என்று தொல்காப்பியர் சுட்டியுள்ளார். ‘பெயல் ஊழி’யைச் சங்கம் ஆண்டு என்று சுட்டுவது உண்டு. இங்குச் சங்கம் என்பது மிகப்பெரும் ஓர் எண்ணைக் குறிக்கிறது.

‘சங்கம்’ என்ற சொல் அசைவன, சங்கு, ஒருவகை வாச்சியம், கணைக்கால், கூடுகை, கூட்டம், சங்கநிதி, சங்கவாத்தியம், சங்குவளையல், சபை, திரள், நெற்றி, மிகுதியைக் குறிக்கும் அளவுப்பெயர், தொகுதி, பெருங்கூட்டம் எனப் பல்வேறு பொருள்படும். ‘சங்கம்’ என்பது பல்வேறு பொருள்களில் ஆளப்பட்ட தமிழ்ச்சொல்.

காலப்போக்கில் இனக்குழுத்தன்மை மாறினாலும் தமிழர் கூட்டமாகவே வாழ்ந்தனர். தனித்து வாழ்தல் என்பது தமிழர் மரபன்று. அந்தக் கூட்டு வாழ்க்கையின் ஒட்டுமொத்த காலநிர்ணயமே சங்ககாலம். அது பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தைக் குறிக்கின்றது என்பதனைத் தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் பல்வேறு சான்றாதாரங்களோடு நிறுவியுள்ளார். அக்காலக் கட்டமே சங்ககாலம் என்பதற்கு அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் பல ஆதாரங்களாக அமைகின்றன. அவை மண்ணில் புதையுண்டு நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. அவை அகழ்வாய்வின் வழியாக மீட்டெடுக்கப்பட்டுவருகின்றன. அவை அதிரும் எண்ணற்ற எளிய கேள்விகளுக்கு உறுதியான மெளன விடைகளாக, சாட்சியங்களாக விளங்குகின்றன.

சாட்சி – 1

இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக்  கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு  இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.

அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர்.  அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.

சாட்சி – 2

பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.

சாட்சி – 3

இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு  அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.

நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும்  சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.

சாட்சி – 4

இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.

மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.

சாட்சி – 5

தமிழர்கள் கடலோடிகளாகவும் வாழ்ந்தனர். கடல்வணிகத்தில் சிறந்திருந்தனர். ஏற்றுமதியும் இறக்குமதியும் இருந்தகாரணத்தால் கிரேக்கநாடு, ரோமானிய நாடு, எகிப்து நாடு, பாரசீகநாடு, அரேபியா நாடு எனப் பன்னாட்டு வணிகர்களின் பயன்பாட்டுப் பொருட்களும் நாணயங்களும் அணி, மணிகளும் சோழர், பாண்டியர், சேரர் துறைமுகப்பகுதிகளில் நடத்திய அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

தமிழரின் கடல்வாணிகம் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 56, பதிற்றுப்பத்து – 2, முல்லைப்பாட்டு – 61-62, நெடுநல்வாடை – 101, அகநானூறு – 149 ஆகிய செய்யுள் அடிகளில் படித்தறியமுடிகின்றது.

சாட்சி – 6

தமிழர்கள் குகைகள், சமணப்பாழிகள், பானை ஓடுகள், தாழிகள், மோதிரங்கள், முத்திரைகள், கல்லாயுதங்கள் ஆகியவற்றில் தங்கள் பெயரையோ, குறிப்புகளையோ அல்லது ஒரு சிறு செய்தியையோ தமிழி எழுத்துகளில் எழுதிவைத்துள்ளனர். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டும் அதற்கும் முன்புமாகும்.
கரூர் மாவட்டம் புகழூர் அருகேயுள்ள ஆறுநாட்டார்மலையில் பதிற்றுப்பத்தில் குறிப்படப்பட்டுள்ள சேர அரசமரபினரின் ஏழு, எட்டு, ஒன்பதாம் பத்துக்குரிய அரசர்களின் பெயர்கள் (செல்வக்கடுங்கோ வாழி ஆதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை) எழுதப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டின் காலத்தை நடன. காசிநாதன் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள அறச்சலூர் என்ற இடத்தில் உள்ள கற்குகையில் இசைக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு. இக்கல்வெட்டின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்று நடன. காசிநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், சங்ககாலத்தின் இறுதியில் தமிழர்கள் தமிழிசையில் தேர்ச்சிபெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

மதுரை மாவட்டம் மாங்குளம் (மீனாட்சிபுரம் அல்லது அரிட்டாபட்டி) அருகே உள்ள ஓவாமலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு கல்வெட்டுகளுள் ஒன்றில் நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு உள்ளது.  இந்த நெடுஞ்செழியன் சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறாத பழைய நெடுஞ்செழியன் என்று தெரியவருகின்றது. மற்ற கல்வெட்டுகளின் செய்தியிலிருந்து பாண்டிய அரசு மற்றும் வணிகர்களின் ஆதரவோடு சமண முனிவர்கள் தங்கள் பள்ளிகளை அமைத்துக் கொண்டமையை அறியமுடிகின்றது. இக்கல்வெட்டுக்களின் காலத்தைக் கா. இராஜன் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்து மலைக்குகையில் “அந்துவன்“ என்ற பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. ‘அந்துவன்’ என்பவர் திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பாடியதாக அகநானூறு – 59ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

வணிக முத்திரைகளிலும் மோதிரங்களிலும் குறவன், தாயன், தித்தன், வேட்டுவன், குட்டுவன்கோதை, மாக்கோதை, பெருவழுதி, கொல் இரும்பொறை, சாத்தன் போன்ற பெயர்கள் தமிழி (சங்ககாலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதப் பயன்பட்ட எழுத்துகளைத் தமிழி என்று அழைப்பர்) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் மட்டும் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற 250-க்கும் மேற்பட்ட பானையோட்டுத் துண்டுகளுள் ஒன்றில் கண்ணன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பானையோட்டின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

இந்த ஆறு வகைப்பட்ட மௌனத் தொல்சாட்சியங்களின் வழியாகச் சங்ககாலத்தைப் பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று உறுதிபடுத்த முடிகின்றது. அக்காலகட்டத்தில் தமிழர்கள் கூட்டமாக வாழ்ந்ததையும் அவர்கள் எழுத்தறிவும் வணிகஅறிவும் இலக்கியப் புலமையும் இசைநுட்பமும் பெற்றுச் சிறந்திருந்தனர் என்பதனையும் அறியமுடிகின்றது. சமணர்களின் செல்வாக்கும் நிலவியதை உணரமுடிகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான்கும் நமதே

சங்க காலம் / தேடல் – 2

தமிழர் மலர்ந்த விதம்

india-militaryஏறத்தாழ 1000 ஆண்டுகாலப் பரப்பில் நான்கு படிநிலைகளில் தமிழர் மலர்ந்தனர். வேட்டையாடுதல், மேய்த்தல், விளைவித்தல், விற்றல் என்ற நான்குவித தொழில் முறைமைகளில் அந்த மலர்ச்சி இருந்தது.

ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட காலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளாக இருக்கலாம்.முதல் படிநிலையின் உச்சத்தில் இரண்டாம் படிநிலையின் தோற்றம் என்ற நிலையில் ஒவ்வொரு படிநிலையும் அமைவுபெற்றது. ஆனால், பின்னது வந்தவுடன் முன்னது அழிவுற்றது என்று கருதமுடியாது.

இக்கருத்தினை, “ஒன்று அழிந்து வந்தது. மற்றொன்று வளர்ந்து வந்தது. பழைய சமுதாயத்தின் குறிக்கோள்கள், கருத்துக்கள், தத்துவங்கள் முதலியன புதிதாகத் தோன்றும் சமுதாயத்தின் குறிக்கோள், கருத்துக்கள், தத்துவங்களுக்கு மாறுபட்டனவாக இருந்தன“[1] என்று நா. வானமாமலை கூறுவதோடு இணைத்துச் சிந்திக்கலாம். இறுதியில், இந்நான்கும் இணைந்தும் தனித்தும் ஓர்மை பெற்றிருந்தன.

இந்நான்கு தொழில்களும் நான்கு வெவ்வேறு தனித்தன்மையுடைய நிலப்பரப்பில் காலவோட்டத்துக்கு ஏற்ப உருவானவையே. வேட்டையாடுதல் – மலை, மேய்த்தல் – காடு, விளைவித்தல் – வயல், விற்றல் – கடற்கரை மணலும் கடலும். “நால் நிலப்பாகுபாடுகளும் அந் நால்நிலங்களின் இயற்கை விளைபொருட்களும் உற்பத்திப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளும் உணவு முறைகளும் மரம்-செடி-கொடிகளும் இசை முதலானவையும் வெவ்வேறுபட்டனவாய் இருந்தன“[2] என்று பெ. மாதையன் உறுதிபடுத்தியுள்ளார்.

வேட்டையிலும் விளைவித்தலிலும் இனக்குழு மரபினையும் விளைவித்தலிலும் விற்றலிலும் அரசுசார் நிறுவன மரபினையும் காணமுடிகின்றது. இது தேவைக்கு ஏற்ப நிகழ்ந்த மாற்றம்.  இதனை இனக்குழுக்கள் பெருங்குழுக்களாக மாறியமை என்று கொள்ளலாம். காலவோட்டத்தில் இனக்குழுத்தலைவர்கள் சிற்றரசர்களாகவும் சிற்றரசர்கள் பேரரசர்களாகவும் உருப்பெற்றனர்.

வேட்டையாடு விளையாடு

இனக்குழுத் தமிழர்கள் முதலில் வாழ்ந்தது மலைகளிலும் குன்றுகளிலும்தான். அக்காலத் தமிழகத்தில் இத்தகைய நிலவியல் சூழல் மிகுந்திருந்தமையும் இதற்கொருகாரணம். அங்கு கிடைத்த இயற்கைசார் உணவினை உட்கொண்டு அதற்குரிய தகவமைப்புடன் அத்தமிழர் வாழ்ந்துவந்தனர்.

அன்றாட உணவினை அந்தந்த வேளைக்கும் தேவைக்கும் ஏற்ப எடுத்தும் (தேன், புல்லரிசி), அகழ்ந்தும் (கிழங்கு, வேர்), பறித்தும் (இலை, பூ), கொன்றும் (வனவிலங்கு, பறவை ) உண்டனர். இவர்களின் பொருளாதாரம் (உணவாதாரம்) மூங்கில்நெல், பலா, வள்ளிக்கிழங்கு, தேன் முதலியவையே. குறிஞ்சித்திணையை மையமிட்ட சங்கப் பாடல்களில் இத்தகைய உணவுப்பொருட்களே இடம்பெற்றுள்ளன. சான்று புறநானூறு – 109.

இலக்கியத்தில் இத்தகைய நிலப்பரப்பினைக் குறிஞ்சி என்றும் அதற்குரிய நிலவெல்லையாக மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஔவையார் “மிசை“ என்று குறிஞ்சி நிலத்தைச் சுட்டியுள்ளார். மிசை என்பது “மேடு“ என்ற பொருள்படும்.

மலைக்காட்டுப்பகுதிகளில் வேடர், எயினர், மழவர், மறவர் ஆகிய பெயர்களால் சுட்டப்படும் வேடர்கள் இனக்குழுமுறையில் வாழ்ந்துவந்தனர். “குன்றுகளில் வாழும் மக்கள் மிகவும் புராதனமான (நாகரீகமற்ற) நிலையில் இருந்தார்கள்“[3] என்று கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஆம்! அவர்கள் காட்டுமனிதர்கள்தான். அதற்காக அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று கருதிவிடக்கூடாது.

குறுநில மன்னர்கள் பெரும்பாலும் இக்குன்றுப் பகுதிகளில் இருந்து அரசாண்டதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன. இவர்கள் மலைத்தலைவர்கள். அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், கண்டீரக் கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, கொண்கானங்கிழான், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொன்றன் போன்றார்கள் குறிப்பிடத்தக்க மலைத்தலைவர்கள். இவர்களில் பலர் வள்ளல்களாக இருந்துள்ளனர். காரணம், இவர்களுடைய மலை உணவு வறட்சியற்றதாக இருந்துள்ளது.

நல்ல மேய்ப்பர்கள்

காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.

காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.

இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். இத்தலைமையினருக்குக் குடிமக்களாகத் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இருந்துள்ளனர்.

இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.

ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.

“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.

குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.

வயலும் வாழ்வும்

காலவோட்டத்தில் உழவின் வழியாக உணவு உற்பத்திப் பெருக்கத்தை மிகுவிக்கக் கற்ற தமிழர்கள் ஆற்றுப்பாசனவசதியுடைய வயல்வெளிகளைத் தங்களின் தொழிலிடமாக, வாழ்விடமாகக் கொண்டனர். இவர்கள் மென்புல மக்கள். நன்செய் வேளாண்மையை உடையவர்கள். வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் என்று சுட்டப்பட்டது.

வயல் விளைவதற்குக் காரணமான மழையும் அதற்குரிய கடவுளான இந்திரனும் இவர்களால் போற்றப்பட்டனர். இந்திரனை வேந்தன் என்று அழைத்தனர். பின்னாளில் இவர்களின் தலைவர்கள் தங்களை “வேந்தர்கள்“ என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், இவர்கள் பெருநிலப்பரப்பினையுடைய மூவேந்தர்களுள் அடங்குபவர்கள் அல்லர். இந்நிலமக்களின் தலைவர்கள் “முதுகுடி மன்னர்கள்“ என்ற அழைக்கப்பட்டனர். இவர்கள் நிலவுடைமையாளர்களாகத் திகழ்ந்தனர்.

பணப்பயிர்களை விளைவித்தனர். பண்டமாற்றில் நெல்லை உயர்நிலைமதிப்புப் பெறச்செய்தனர். வளம் கொழிக்கும் நிலமாக மருதநில வயல்கள் இருந்தன. வாழ்வும் செம்மைப்பட்டது. கொண்டாட்டங்கள் பெருகின. “மருதநிலப் பகுதியில் வாழும் மக்கள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்“[4] என்று கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் உணவுப்பொருட்களாக வெண்ணெல் உணவு, கருப்பஞ்சாறு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 255 முதல் 262 வரையிலான அடிகள்.

வேலைப்பிரிவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதங்களின் செல்வாக்கு போன்றன இந்நிலத்தில் கிளைத்து வளர்ந்தன. வயலைப்போலவே இவர்களின் வாழ்வும் வளம்பெற்றிருந்தது.

நன்செய் வேளாண்மையின் அசுரவளர்ச்சியால் புன்செய் வேளாண்மை இழிவுக்குரியதாகக் கருதப்பட்டு மதிப்பிழந்தது. அதனால்தான், வென்ற அரசர் தோல்வியடைந்த அரசரின் விளைநிலங்களில் ஏரில் கழுதையைப் பூட்டி புன்செய் பயிர்களான வரகு, கொள் முதலிய தானியங்களை விதைத்து இழிவுபடுத்தினர். சான்று புறநானூறு -15, 392.

திரைகடலோடி திரவியம் தேடி

காலவோட்டத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக வணிகத்துக்கு முதன்மைத்தன்மை வழங்கப்பட்டது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாத வணிகர் வர்க்கம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தது. உள்நாட்டு வணிகக் குழுவினருக்கு “நிகமம்“ என்று பெயர் இருந்துள்ளது.

கடலும்  கடல்சார் பகுதிகளும் இவர்களின் வணிகத்தளங்களாயின. பரதவர்கள் தங்களின் வணிகக்குழுவினருக்கு “நியமம்“ என்று பெயரிட்டிருந்தனர். இப்பகுதியை நெய்தல் என்றனர். நெய்தல் நிலத்தில் உமணர்கள் விளைவித்த உப்பு மருதநிலத்தில் விளைந்த நெல்லுக்கு ஒப்பாகப் பண்டமாற்றில் கருதப்பட்டது.

கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்து விலைமதிப்புடையதாக வெளிநாட்டு வணிகத்தில் கருதப்பட்டது. நா. வானமாமலை, “தென்கடலில் முத்துக்குளிப்புப் பற்றியும் கொற்கைக் கடல் முத்து தங்கள் சீமாட்டிகளை அணியச்செய்வது பற்றியும் அறிந்திருந்தார்கள். நம் நாட்டு இலக்கியச் சான்றுகளை அவை உறுதிப்படுத்துகின்றன. மேலும் கொற்கையில் அகப்படும் ரோம நாணயங்கள் தொடர்ச்சியாக அகஸ்டஸ் காலம் முதல் ஆர்க்கேடியஸ் காலம் (14-400கி.பி வரை) வரை கிடைப்பது இச்செய்திகளை ருசுப்படுத்தும் பொருட்சான்றாகும்“[5] என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பட்டினங்களின் வளர்ச்சி அளப்பரியதாக உள்ளது. நிலைத்த அரசால்தான் வலுவான கடல்வாணிகத்தைச் செம்மையுற செய்யமுடியும். அந்தவகையில், சோழ வேந்தருக்கு புகாரும் (புறநானூறு – 30, பட்டினப்பாலை – 129-136, 216-218) சேர  வேந்தருக்கு முசிறியும் (புறநானூறு – 343, அகநானூறு – 149) பாண்டியருக்குக் கொற்கையும் (அகநானூறு – 27,130,201, 296, ஐங்குறுநூறு – 185, 188, நற்றிணை – 23, சிறுபாணாற்றப்படை – 56-58) கடல்வணிகத் துறைமுகங்களாக அமைந்து வளம்தரும் அட்சயப் பாத்திரங்களாகத் திகழ்ந்தன.

இம்மூன்றாலும் அந்நியநாட்டு வணிகர்கள் நம்நாட்டில் கால்பதிக்க வழியேற்பட்டது. அவர்களின் பண்பாடும், பழக்க வழக்கங்களும், அடிமைகளை வாங்கிப் பணியமர்த்தும்  வழக்கமும் நம்நாட்டிலும் ஏற்படலாயின.

பண்டமாற்றுமுறை கடல்கடந்து நிகழ்ந்தது. வணிகர்களின் வளமான வாழ்வினை மதுரைக்காஞ்சியின் 500 முதல் 506 வரையிலான அடிகள் எடுத்துக்காட்டியுள்ளன.

நான்கிலும் நாம்தான்

மலை,காடு,வயல்,கடல் என்ற நான்கு வெவ்வேறான நிலப்பரப்புகளில் வாழ்ந்ததும் படிப்படியாக முன்னேறியதும் தமிழர்தான். அவர்களின் சங்ககாலம் இந்நான்கிலும் ஊடுபாவாக விரவியுள்ளது.

நால்வகை நிலங்களையும் தனித்தனியே ஆண்ட நிலைமை மாறி, நானிலத்தையும் ஒருவர் ஆளும் பேரரசுநிலை உருவாகியது.[6] பாண்டிய நெடுஞ்செழியன் நானிலத்தோர் வழிபட ஆண்டுவந்தான் என்ற செய்தியைப் புறநானூற்றின் 17ஆவது பாடல் தெளிவுபடுத்தியுள்ளது. சேரமான் கோக்கோதை மார்பன் இவ்வாறு நானிலப்பகுதியை ஆண்டதனால் அவன் நாடன், ஊரன், சேர்ப்பன் எனப் புகழப்பட்டான்.

நானிலத்தையும் இணைத்து ஆளும் போக்கில் தொழில் அடிப்படையில் உரிமைகளும், மதிப்பும் வரிசைநிலையும் வகுக்கப்பட்டன. தொல்காப்பியத்தில் 70-84 ஆகிய நூற்பாக்களில் நால்வருணத்தாருக்குரிய வரையறைகள் வகுக்கப்பெற்றுள்ளன. நால்வருணம் (அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்) என்ற கோட்பாடு இந்நிலையில் வலுப்பட்டது.


 


1.  வானமாமலை, நா., பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள், ஆராய்ச்சி 2: 9, ப.14.

2.  மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 10.

3.  சிவத்தம்பி, கா., திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், ஆராய்ச்சி 3: 2, ப.342.

4.  மேலது.

5.  வானமாமலை, நா., சங்கும் முத்தும் சமுதாய மாறுதல்களும் – 2, தாமரை, ஏப்ரல் 1969, ப.39.

6.  மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 69.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுதிச்சென்ற விதியின் கை

சங்க காலம் / தேடல் – 3

தமிழரின் “தலை“யெழுத்து

Influence of Christianity on Tamil Languageகல்தோன்றிய, மண்தோன்றிய காலத்துக்குப் பின்தோன்றிய மொழிகள் பல. அவற்றுள் ஒன்று தமிழ்மொழி.எகிப்து நாட்டில் பொ.யு.மு. 60ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன.[1] சீன நாட்டில் பொ.யு.மு. 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன. உலக மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ்மொழிக் கல்வெட்டுகளின் காலம் மிகப் பிற்பட்டதுதான்.

பாரத கண்டத்தில் தோன்றிய ரிக் வேதத்தின் காலம் பொ.யு.மு. 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.[2] ரிக் வேதத்தின் காலத்தைத் தீர்மானிப்பதில் பல அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எப்படியானாலும் பாரதகண்டத்தில் தோன்றிய மொழிகளோடு ஒப்பிடும்போதும் தமிழ்மொழியின் எழுத்துருவின் காலம் பிற்பட்டதுதான்.

ஆனால், மற்றவை வழக்கிழந்தபோதும் தமிழ் வழக்கிழக்காமல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டு உயர்ந்து வளர்ந்தது என்பதில் எந்த அறிஞர் குழுக்களிடமும் கருத்துவேறுபாடு இருக்காது.

‘தமிழி’ எழுத்தின் காலம்

தமிழ்மொழியின் எழுத்து வடிவம் முதலில் உருவ (படம்) எழுத்தாக இருந்து, கருத்தெழுத்தாக மாறிப் பின்னர் அசையெழுத்து நிலையினை அடைந்து, பின் செம்மையடைந்து வரியெழுத்தாக மாறியது. அதற்குத் “தமிழி“ என்றுபெயர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற பகுதியில் அகழ்வாய்வுசெய்து கண்டெடுக்கப்பட்ட பானையோட்டில் தமிழி எழுத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பானையோட்டினை கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்ததில் அதன் காலம் பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு என்று தெரியவந்தது.அதாவது, தமிழி எழுத்து ஏறத்தாழ பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்தே வரியெழுத்தாக வழக்கிலிருந்துள்ளது. அப்படியென்றால், அது உருவ (படம்) எழுத்தாக இருந்த காலகட்டம் ஏறத்தாழ பொ.யு.மு. 13ஆம் நூற்றாண்டு என்பது என் கணிப்பு.

தமிழகத்தில் அரசலூர், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகர்மலை, ஆனைமலை, எடக்கல் கல்வெட்டு, கருங்காலக்குடி, கலசக்காடு, கழுகுமலை, கீழவளவு, கொடுமணல், சமணர்மலை, சித்தன்னவாசல், பரங்குன்றம், திருவாதவூர், பஞ்சபாண்டவர்மலை, புகழூர், மறுகால்தலை, மாங்குளம், மாமண்டூர், முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், தேனூர், ஐம்பை, போர்ப்பன்னக்கோட்டை போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பொ.யு.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், மட்பாண்டச் சில்லுகளில் தமிழி எழுத்தில் அமைந்த சொல், சொற்கள், தொடர் ஆகியன காணப்படுகின்றன.

இவற்றுள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கண்டறியப்பட்ட குகைக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் தமிழி தானா? அல்லது மூலத் தென் திராவிட மொழியா? என்ற ஐயம் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருக்கு இருந்தது. காரணம், இக்குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளின் கலப்பில் ஒரு கலப்புமொழியாக அமைந்திருந்ததே.[3]

இக்கல்வெட்டுகளைச் செதுக்கிய புத்தசமயத்தைச் சார்ந்தோர்கள் பிராகிருத மொழியில் புலமைபெற்றவர்கள். அதே நேரத்தில் அவர்கள் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர்கள் அல்லர். தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் “இக்குகை இவரது“ என்றோ, “இக்குகையை இவருக்கு இவர் அமைத்துக்கொடுத்தார்“ என்றோ அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் அக்குகைகளில் அச்செய்திகளை எழுதிவைத்தனர்.

தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து குகை மற்றும் குகைசார்ந்த பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் மொழி, மொழி நடையின் அடிப்படையிலும் அவை தொல்காப்பிய விதி ஒழுங்குக்கு உட்படுவதாலும் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாக இருப்பதாலும் அவை தமிழி மொழிதான் என்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

மூன்றுமுகம்

தமிழி எழுத்துரு மூன்றுகட்ட நிலைகளில் மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.[4] முதல்கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் “கந்தசாமி“ என்ற சொல்லினை எழுதினால் நம்மால் அதனைக் “காந்தாசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதனைக் “கந்தசாமி“ என்றே புரிந்து சரியாகப் படித்தார்கள்.

இரண்டாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கநதசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தவர்கள் அதனைச் சரியாகவே படித்தார்கள்.

மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கந்தசாமி“ என்று மட்டும் படிக்கமுடிந்தது. அவர்களும் அவ்வாறே படித்தார்கள். அதனால், தமிழி எழுத்துவடிவம் தன்னுடைய மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் செம்மையுற்றது என்று உறுதிபடுத்தலாம்.

மொழிகள் பல – எழுத்துரு ஒன்றே

அக்காலத்தில் எழுத்துவழக்கில்லாத பல மொழிகள் தமிழி எழுத்தினையே தமது எழுத்துவடிவமாகக் கொண்டிருந்தன. வடஇந்தியப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பிராகிருத மொழியைப் பேசினாலும் அவர்களுடைய மொழியைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதியுள்ளனர். அங்குக் கண்டறியப்பட்ட பழைய கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழி எழுத்துவடிவில் எழுதப்பெற்றவையே.

அசோகர் தமது பிராகிருத மொழி மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுக்களைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதினார். காரணம் இந்திய அளவில் பல மொழி பேசுவோரும் அறிந்த எழுத்துருவாகத் தமிழி இருந்துள்ளது. அதாவது, இப்போது உலக அளவில் ஆங்கில எழுத்துரு இருப்பதுபோல.

பதினெட்டுள் ஒன்று

பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற “சமவயங்க சுத்தா“ என்ற சமணசமய நூல் அக்காலத்தில் இந்தியாவில் வழக்கிலிருந்த 18 வகையான எழுத்துவடிவங்களைப் பட்டியலிட்டுள்ளது.[5] அவற்றுள் ஒன்று தமிழி.

பொ.யு.மு. 168 இல் எழுதப்பெற்ற “பன்னவயங்க சுத்தா“ என்ற சமண சமய நூலும் அப்பதினெட்டு எழுத்துவடிவங்களுக்குரிய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது.

அவை 1.பம்பி, 2.யவநாளி, 3.தொசபுரியா, 4.கரோத்தி, 5.புக்க ரசரியா, 6.போகவையா, 7.பஹாரையா, 8.உய-அம்த ரிக்கியா, 9.அக்கரபித்தியா, 10.தேவானையா, 11.நினித்யா, 12.அம்கலிபி, 13.கணியலிபி, 14.கம்தவ்வ-லிபி, 15.ஆதம்சலிபி, 16.மஹேசரி. 17.தமிழி, 18.பொலிம்தி என்பனவாகும். இந்நூலில் இவ்வெழுத்துகள் அவை தோன்றிய காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழி எழுத்து வடிவம் முதலாவதாகச் சுட்டப்பட்டிருக்கும்.

இந்திய எல்லையைக் கடந்த தமிழி எழுத்து

தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உரைகல்லில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தனைக் கண்டுபிடித்துள்ளனர். அவ்உரைகல்லின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டு ஆகும்.

இலங்கையில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு – சிவப்பு மட்பாண்டங்களில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர். இதன் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.

அதே நாட்டில் திசமகாராமையில் அதே காலகட்டத்தைச் சார்ந்த கருப்பு – சிவப்பு மண் தட்டில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதே நாட்டில் பூநகரியில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் அதே காலகட்டத்தைச் சார்ந்த ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழி எழுத்தில் “பானை ஒறி“ என்று எழுதப்பெற்ற பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்குரிய ஒரு சாடியினை எகிப்து நாட்டில் உள்ள லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.[6]

அதே நாட்டில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற இடத்தில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு சாடியில் தமிழி எழுத்தில் எழுதப் பெற்ற ஒருவாசகத்தைக் கண்டறிந்துள்ளனர்.

ஓமன் நாட்டில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு பானை ஓட்டுத்துண்டில் “ணந்தை கீரன்“ என்று தமிழி எழுத்தில் எழுதப்பட்ட ஒரு சொல்லினைக் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாட்டவரின் வருகையாலும் தமிழ்நாட்டவரின் வெளியுறவு நடவடிக்கைகளாலும் கடல் வணிகத்தின் வளர்ச்சியாலும் இவை சாத்தியப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற தமிழிக் கல்வெட்டுகள்

மிகப்பழமையான தமிழிக் கல்வெட்டுகள் ஆதிச்சநல்லூரிலும் மாங்குளத்திலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். இவற்றிற்கு அடுத்தபடியாகத் தொல்நிலையில் உள்ளவை புலிமான்கோம்பை, தாதப்பட்டி கல்வெட்டுகளாகும். இவற்றின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன். அதற்கு அடுத்தது சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டுகள். இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்.

சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டு, “எருமி நாட்டுக் குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறுபோவில் இளயர் செய்த அதிடனம்“ என்ற செய்தியை வழங்குகிறது.[7] இதிலுள்ள “காவுடி“ என்ற சொல் “காவிதி“ என்ற ஒரு பட்டப்பெயரினைக் குறிக்கின்றது. இப்பட்டப்பெயர் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜம்பையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் காலத்த்தாகும். இக்கல்வெட்டில் அதியமான் நெடுமான் அஞ்சியை “சதியபுதோ“ என்று குறிப்பிட்டுள்ளது. வட இந்தியாவில் மௌரியராட்சியின் போது அசோகர் உருவாக்கிய கல்வெட்டில், தன் அண்டைநாட்டு அரசர்கள் பற்றிய குறிப்பில், “சோழர், பாண்டியர், சத்யபுத்ரர், கேரளபுத்ரர்“ என்று உள்ளது. ஆக, அசோகர் குறிப்பிடும் “சத்யபுத்ரர்“ என்ற சொல் “சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி“யைத்தான் குறிக்கிறது என்று உறுதிப்படுகிறது. அப்படியென்றால், பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் அஞ்சி தமிழகத்தின் மூவேந்தர்களுக்கு இணையாக ஆண்டுவந்தமையை அறியமுடிகிறது.

ஜம்பைக் கல்வெட்டு திருக்கோயிலூர்க்கு அருகில் கிடைத்திருப்பதால், “அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோயிலூரை ஆட்சிபுரிந்த மலையமான் திருமுடிக்காரியை வென்றதாக“ இலக்கியங்கள் குறிப்பிடும் செய்தி கதை அல்ல – நிஜம் என்று உறுதிபடுத்தியுள்ளது.

அரச்சலூரில் கிடைக்கப்பெற்ற இசைக் கல்வெட்டில் இசைக்குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் அருகில், “எழுத்துப் புணருத்தான் மசிய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன்“[8] என்ற செய்தி உள்ளது. அதாவது, “மசிய் வண்ணக்கன் தேவன் இவ் இசை எழுத்துகளைக் கல்லில் செதுக்கினார்“ என்ற பொருளினைத் தருகிறது. தமிழரின் இயல் (இலக்கணம், இலக்கியம்) மட்டுமல்ல இசையும் பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, அவ் இசை “தமிழிசை“ என்பதனையும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். இக்கல்வெட்டிற்குப் பிற்பட்டதே சிலப்பதிகாரம். அதில் உள்ள அரங்கேற்றுக்காதை தமிழரின் இசைப் புலமைக்கும் கூத்து நுட்பத்திற்கும் ஓர் உரைகல்.

முக(ம்)வரி மாறிய தமிழி

தமிழி என்பதனைக் காலப்போக்கில் தமிழ்பிராமி எழுத்து, தொல்தமிழ் எழுத்து, பண்டைத்தமிழ் எழுத்து, சங்கத்தமிழ் எழுத்து, தென்னிந்திய பிராமி எழுத்து என்றெல்லாம் அழைத்துள்ளனர். இப்போது நாம் இதனைத் “தமிழ்“ என்று சுட்டுகிறோம்.

செம்மையுடைய எழுத்துவடிவமே சிறப்பெழுத்துகளைக் கொண்டிருக்கும். தொடக்க காலத்திலேயே “தமிழி“ தனக்குரிய சிறப்பெழுத்துகளான ழ,ள,ற,ன ஆகிய நான்கு எழுத்துகளையும் பெற்றித்திகழ்ந்தது. தமிழி செம்மையுடைய எழுத்துவடிவமுடையது. “அசோகன் பிராமி“ முதலானவை அனைத்தும் தமிழிக்குப் பிற்பட்டவையே – செம்மையற்றவையே.

தமிழி எழுத்தின் எழுத்து வடிவம் பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டளவில் மாறத்தொடங்கியது. அது முதலில் வட்டெழுத்தாகவும் மிகப் பிற்காலத்தில் தற்போது உள்ள தமிழ் எழுத்தாகவும் மாற்றம் பெற்றது.

கண்ணெழுத்து (சிலப்பதிகாரம் – 5 11-112), கோலெழுத்து (திருக்குறள் – 1285), குயிலெழுத்து (அகநானூறு – 297) என்று தமிழி எழுத்து எழுத உதவும் கருவி, எழுதப்படும் பொருள் சார்ந்து பல பெயர்களைப் பெற்றது.

சமஸ்கிருத மொழியின் உச்சரிப்புகளைச் சரியாக எழுதுவதற்காக மட்டுமே கிரந்த எழுத்துக்களைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

“தலை“ என்ற சொல்லுக்கு “முதல்“ என்றும் பொருளுண்டு. தமிழரின் முதல் எழுத்து வடிவம் “தமிழி“ என்பதால் அது தமிழரின் தலையெழுத்துதானே! இப்போதும் “தமிழி“ இருக்கிறது– “தமிழ்“ என்ற பெயரில். “தமிழி“ தன்னுடைய வரியெழுத்தில் மாற்றம் பெற்றாலும் தன் மரபுப் பண்பினைத் தக்கவைத்துக் கொண்டு, கொள்ளுத் தாத்தாவின் தனிப் பண்பினைப் பெற்ற எள்ளுப் பெயரனைப் (எள்ளுப் பேரன்) போலத் “தமிழ்“ என்ற எழுத்து நிலையிலுள்ளது.

0

ஆதாரம்

  1. இலக்குவனார், சி. பழந்தமிழ், ப. 30.
  2. மேலது.
  3. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழ் மொழி வரலாறு, ப. 59.
  4. இராசேந்திரன், பொ., சாந்தலிங்கம், சொ., கல்வெட்டுக்கலை, ப. 19.
  5. T.V.Mahalingam, Early South Indian Paleography, Pp. 110-111.
  6. ta.wikipedia.org
  7. காசிநாதன், நடன., கல்லெழுத்துக்கலை, ப. 27.
  8. மேலது, ப. 28.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சங்க காலம் / தேடல் – 4

சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா?

tsunamiதமிழ்நாட்டின் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடல், சங்ககாலத்தில் இல்லை என்றும் அங்கு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும் பின்னர் கட(ற்)ல்கோளால் (சுனாமி) அந்நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது என்றும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் (சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்கள்) தப்பிப் பிழைத்து இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதியில் குடியேறினர் என்றும் செவிவழிச்செய்தி சார்ந்த வலுவான தொன்மக் கருத்து உள்ளது.

அப்படியென்றால், இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதிகளுக்கு வந்த சங்கத் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள்தானா? அவர்கள் கடல்கோளால் தப்பிப்பிழைத்து அகதிகளாகத்தான் இப்போது இருக்கும் தமிழகத்துக்கு வந்தார்களா? அப்படியானால் இப்போது உள்ள தமிழகம் அவர்களின் தாய்நிலம் இல்லையா? அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்லரா? இவ்வினாக்களுக்குரிய விடைகளை நாம் சுனாமிகளின் பின்னணியில்தான் தேட வேண்டியுள்ளது.

அழிக்கும் கடற்பேரலைகள்

பொ.யு.மு. 426 ஆம் ஆண்டிலும் பொ.யு.மு. 365 ஆம் ஆண்டிலும் உலகில் ஏற்பட்ட சுனாமிகள் பற்றிய எழுத்தாதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1755, பொ.யு.1883, பொ.யு.1929, பொ.யு.1946, பொ.யு.1950, பொ.யு.1958, பொ.யு.1960, பொ.யு.1964, பொ.யு.1998, பொ.யு.1999, பொ.யு.2001, ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு பற்றிய விரிவான செய்திகளை அறியமுடிகின்றது.

தற்காலத் தமிழர்கள் அறிந்த சுனாமிகள் இரண்டு. ஒன்று, 22.12.1964 ஆம் நாள் தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி (ஆழிப் பேரலை). இரண்டு, 26.12.2004 ஆம் நாள் சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி. இரண்டும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் உள்ள சில குறிப்புகள் பழந்தமிழகத்தைத் தாக்கிய ஒரு பெரிய சுனாமி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இலக்கியம் என்றால் புனைவுதான், கற்பனைதான். அவற்றில் உள்ள செய்திகளின் மிகைப்படுத்தலை நாம் ஒதுக்கிவிடலாம். ஆனால், அச்செய்திகளின் மையத்தை நாம் புறக்கணிக்க முடியாது.

குமரிக் கண்டம் இருந்ததா?

குமரி (கன்னியாகுமரி) என்பது, சங்ககாலத்தில் நாஞ்சில் என்ற சிற்றூரினை உள்ளடக்கிய ஓர் ஊர். இப்போது பேரூராட்சியாக உள்ளது. அப் பழங்காலத்து நாஞ்சில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற பெயரில் உள்ளது. நாஞ்சில் என்றால், கலப்பை என்று பொருள். கலப்பை வடிவில் உள்ள மலையினைக் குறிக்கிறது. அம்மலையைச் சுற்றியுள்ள நாட்டினை நாஞ்சில் நாடு என்கிறனர். அந்நாட்டின் தலைநகர் நாஞ்சில். இவ்வூர் பற்றிய குறிப்பு புறநானூரில் 137ஆவது பாடலில் உள்ளது.

இந்திய விடுதலையின்போது திருவதாங்கூருக்கு உட்பட்டிருந்த குமரி தமிழ்பேசும் பகுதியாக இருப்பதால் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தோடு இணைந்த்து. இப்போது குமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பேசப்படும் தமிழ்மொழியினை “நாஞ்சில் தமிழ்“ என்றுதான் சுட்டுகிறோம்.

“நாஞ்சில்நாட்டின் கடற்கரையினைக் குமரிமுனைதான் இப்போது கிழக்கு, மேற்காகப் பிரித்துள்ளது. மேற்குக்கடற்கரையில் கடல் அரிப்பு மிகுதியாக உள்ளது. ஆதலால், கடற்கோளால் விழுங்கப்பட்ட பகுதி நாஞ்சில்நாட்டின் மேற்குக்கடற்பகுதியாக இருக்கலாம்“[1] என்பது சு.கி. ஜெயகரனின் கருத்து.

பழைய சுனாமி

சிலப்பதிகாரத்தின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு. சிலப்பதிகாரத்தில் உள்ள காடுகாண்காதையில் பழந்தமிழகத்தில் பாய்ந்த பஃறுளி ஆற்றினையும் பலமலைகளைத் தொடராக உள்ள குமரி எனும் மலையினையும் கடல் விழுங்கிய செய்தியைக் காணமுடிகின்றது. ஆக, ஒரு பெரும் நிலப்பரப்பும் அதில் பாய்ந்த ஆறும் நீள் மலையும் நீருள் ஆழந்த செய்தி புலனாகிறது. இது நிகழ்ந்தது அந்நூல் எழுதுவதற்கு ஏறத்தாழ நூறாண்டுகளுக்குள் முன் இருக்கலாம்.

குமரிக்கோடு பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது இருக்கும் நாடு என்ற சொல்லுக்கும் அப்போதிருந்த நாடு என்ற சொல்லுக்கும் நில அளவையில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. நாடு என்றால் அக்காலத்தில் சிறிய அளவில் உள்ள நிலப்பரப்புதான். அதாவது, இப்போதுள்ள ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பு.

வடபகுதியில் இருந்த குமரியாற்றுக்கும் தென்பகுதியில் உள்ள பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட தொலைவு 700 காதம் என்பர். ஒரு காதம் என்பது 1.1கி.மீ.[2] என்ற அளவில் மொத்தம் 770 கி.மீ. தூரம்தான். அதுவும் ஆறு வளைந்து நெளிந்து ஓடும் என்பதால் மொத்தத் தூரம் வடக்குத் தெற்காக 400கி.மீ. இருக்கலாம்.

குமரிக்குத் தெற்கே ஒரு கண்டம் இருந்தது என்று சொல்லப்படுகிறது. அது கடல்கோளால் நீருள் மூழ்கியது என்றும் கூறுகின்றனர். கடலுக்கு அடியில் இருப்பது நிலம்தான். அந்த நிலமெல்லாம் நீருள் மூழ்கிய நாடுகள் என்றோ நீருள் மூழ்கிய கண்டங்கள் என்றோ நாம் நம்புவதும் கற்பனைசெய்வதும் ஏற்புடையதல்ல.

குமரிக்கண்டம் என்ற கருத்து ஆங்கிலேயர்களால் கற்பனையில் உருவாக்கப்பட்டு பின்னர் அதனைத் தமிழர்கள் தங்களின் பழமைக்கு ஆதாரமான விவரித்துக்கொண்ட நீள்புனைவு என்பது சு.கி. ஜெயகரன் முதலானோரின் அசைக்கமுடியாத கருத்து.

கண்டம் அல்ல நிலத்துண்டம்

தற்போது இருக்கும் கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடற்பகுதியில் ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பும் அதற்குள் திசை அளவில் 400கி.மீ. நீளமுள்ள ஓர் ஆறும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆக, ஒரு நிலத்துண்டு இருந்துள்ளது. அது கண்டம் அளவிற்கு இல்லை. காரணம், கண்டம் என்பது, “பெரும் நீர்ப்பரப்பால் பிரிக்கப்ட்ட பெரிய தொடர்ச்சியான நிலத் தொகுதிகளாகும்“[3] என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, குமரிக்கண்டம் என்று கூறுவது சரியன்று. குமரியின் தென் எல்லை ஓர் ஊரின் அளவில் நீண்டிருந்திருக்கலாம். அதனால்தான், சு.கி. ஜெயகரன் “குமரிக்கண்டம் இருந்ததா?“ என்பது பற்றிய ஆய்வு நூலில் தான் கண்டடைந்த முடிவினையே, உண்மையினையே அந்நூலுக்குத் தலைப்பாகக் “குமரி நிலநீட்சி“ என்று தலைப்பிட்டுள்ளார்.

பாண்டியனின் சங்கம்

அந்த நிலநீட்சிப்பகுதியினைத்தான் கடல் அழித்தது. அங்குள்ள மணவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த பாண்டிய மன்னன் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்து வந்தான். அப்பகுதி கடலால் மூழ்கடிக்கப்படவே இப்போது இருக்கும் தமிழகத்தை அதாவது, அப்போது சேரர்களும் சோழர்களும் ஆட்சிபுரிந்துவந்த, தமிழர்கள் வாழ்ந்த, தமிழகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அங்கும் தன் வழமைப்படிச் சங்கம் அமைத்துத் தன் தமிழாய்வுப் பணியினைத் தொடர்ந்துள்ளான்.

அவன் தன்னுடைய தொடர் படையெடுப்பால் கடற்கோளால் தான் இழந்த தென் தமிழகத்திற்கு ஈடாக “வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான்“ என்ற செய்தியைச் சிலப்பதிகாரம் காடு காண்காதை புலப்படுத்துகிறது. ஆக, பாண்டியன் தன் ஆட்சிக்குட்டபட்ட பகுதிகளில், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சங்கம் அமைத்துத் தமிழாராய்ந்துள்ளான்.

குறிப்பாகப் பாண்டியர்கள் ஆட்சிகுட்பட்ட தமிழர் பகுதிகளில் சங்கம் என்ற அமைப்பு முனைப்புடன் செயல்பட்டுள்ளது. ஆதலால்தான் மதுரை, வையை, கூடல் என்ற சொற்களோடு சங்கம் அல்லது தமிழ்மொழி பற்றிய செய்திகளை இணைத்துப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. சான்றுகள் சிறுபாணாற்றுப்படை – 65, 66, பரிபாடல் – 6. இவற்றைத் தமிழ்ச் சங்கத்துக்கும் இவற்றுக்குமான உறவாகவோ அல்லது தமிழ் மொழிக்கும் இவற்றுக்குமான உறவாகவோ கருத்தில்கொள்ள வாய்ப்புள்ளது.

மணவூரை அவன் கடல்கோளில் இழப்பதற்கு முன், தமிழகத்தில் எந்த மன்னரும் சங்கம் வைத்துத் தமிழாராயவில்லையா? என்ற வினா எழுகின்றது.

மூச்சங்கங்களும் முழுப்பொய்களும்

பொ.யு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்க் களவியலுரை முதலான தமிழ் நூல்களிலும் பொ.யு. 10ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டிலும் சங்ககாலத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்கள், மூன்று வேறுபட்டக் காலகட்டத்தில், மூன்று வேறுபட்ட நிலப்பரப்பில், மூன்று வேறுபட்ட சான்றார் கூட்டத்தில் இருந்ததாகக் தெரிவித்துள்ளன. அந்நூல்கள் கூறும் காலகட்டமும், மன்னர் மற்றும் புலவர் கூட்டங்களும் ஏற்புடையனவாக இல்லை. அவை தமிழையும் தமிழரையும் மிகைப்படுத்திப் புகழும் நோக்கோடு எழுதப்பெற்ற புனைவுகளே. டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி, இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இப்புனைவினை முழுவதும் நம்பாவிடினும் “ஒரு சங்கமாவது இருந்திருக்கக் கூடும்“ [4] என்று கருதுகின்றனர்.

பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் (பிற்காலத்தொகுப்பு நூல்கள் தவிர) மூச்சங்கங்கள் பற்றிய எக்குறிப்பும் இல்லை. “புணர்க்கூட்டு“ என்ற சொல் மதுரைக்காஞ்சியில் (762) காணப்படுகின்றது. மன்றம், தமிழ்நிறை என்ற சொற்களாலும் “சங்கம்“ என்ற அமைப்பு பிற இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது.

முச்சங்க கால நூல்களான அகத்தியம், கலி, குருகு, வெண்டாளி, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்றனவற்றுள் எவையும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இவையெல்லாம் கற்பனை நூல்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மதுரையில் சங்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதனை மதுரா, உத்தர மதுரை, தென்மதுரை, வட மதுரை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[5] அக்காலத்தில் மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர்தான் இருந்துள்ளது. அதற்கு முற்பட்டக் காலத்தில் மதுரைக்கு “மதிரை“ என்ற பெயரே இருந்துள்ளது. இவற்றைக் கல்வெட்டாதாரங்கள் மெய்ப்பித்துள்ளன.

“முச்சங்கங்கள்“ என்ற மாயையை விரிவுபடுத்தி, ஸ்கை நலன் [6] என்ற ஒரு வலைத் தளத்தில் வரைபடத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முச்சங்கங்கள் பற்றி மாயையின் உச்சம் அச்செய்தி.

“முச்சங்கங்கள்“ என்ற மாயையை உடைத்தெறியும் ஆய்வுக்கட்டுரைகளுள் மூ. அய்யனார் எழுதிய “இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்கவரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்“[7] என்ற கட்டுரை ஆகச்சிறந்தது.

“சங்கம் என்ற அமைப்பு இல்லவே இல்லை“ என்ற கருத்தினை கே.என். சிவராசபிள்ளையும் பி.தி. சீனிவாச ஐயங்காரும் முன்மொழிந்துள்ளனர். நான் அவர்களின் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.

தமிழகமும் சங்கமும்

எங்கெல்லாம் தமிழ் அறிந்த மன்னர்கள் ஆட்சிபுரிந்தனரோ, எங்கெல்லாம் தமிழ் அறிந்த உயர்குடியினர் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் புலர்வர் சென்று அவர்களைச் செய்யுட்களால் புகழ்ந்தும் போற்றியுமுள்ளனர்.

அப் புலவர்களின் கூட்டம் தங்களுக்குள் வாதிட்டும், புலமைப்போர் நடத்தியும் இருக்கலாம். “புலன் நாவுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ்“ (கலித்தொகை – 68) என்ற அடிகளால் புதிய செய்யுட் படைப்பினை மன்னர் உள்ளிட்ட சான்றார் அவையில் அரங்கேற்றம் செய்யும் மரபும் ஏறக்குறைய Public viva-vice போல இருந்துள்ளது. ஆக, அந்த அவையிலும் தமிழ்ச்செய்யுட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சான்று தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட முறை.

ஆதலால், முச்சங்கம் என்று வரையறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்முகப்பட்ட சங்கங்கள் இருந்துள்ளன. அவை தமிழ்ச் செய்யுட்களைத் தகுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது என் கணிப்பு.

சங்க காலத்தின் இறுதி என்பது பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் சங்க காலத்தின் தொடக்கம் என்பது தமிழி எழுத்துருக்கள் பண்பட்ட காலமான பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு என்பதும் என் கணிப்பு.

- – -

  1.  ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 46.
  2. ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 30.
  3. Lewis, Martin W.; Karen E. Wigen,The Myth of Continents: a Critique of Metageography.p. 21
  4. http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm
  5. Sivrajapillai K.N., The Chronology of Early Tamils (1932)
  6. http://www.nalan.me/nalan.me.drupal/node/69
  7. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1902:2014-01-09-03-46-43&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொள்ளையடித்தல்

சங்க காலம் / தேடல் – 5

மார்க்ஸியச் சிந்தனைச் சித்திரம்

20121129163414!Black_spear_detailகாரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.

மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக இருந்தது. பெரிய விலங்குகளை வளைத்து வேட்டையாடக் “கூட்டு வேட்டையும்“ தேவைப்பட்டது. வேட்டைக்காக இணைந்த மக்கள் தங்களுக்குள் வேட்டைப் பொருளினை ஓரளவிற்குச் சமமாகவே பகிர்ந்துகொண்டனர். ஆக, அக்காலத்திலே “பங்கீடும்“ அவர்களிடையே உருப்பெற்றுவிட்டது.

வேட்டையிலிருந்து வளர்த்தலுக்கு

வேட்டை உணவினை நாளும் தேடி அலையாமல் அவ் உணவினைத் தாமே பேணிப் பின் உண்ணும் திட்டம் காலச்சூழலில் ஏற்பட்டது. அவர்களின் வளர்ப்பு விலங்குகளாகப் பசுக்கள் இருந்தன.ஆடுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் பசுக்கள் அளவுக்கு முதன்மையாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலுமாக வேட்டையைக் கைவிட்டு, தம் உணவினைத் தாமே வளர்க்கத் தொடங்கினர். அவற்றை மேய்ப்பதே அவர்களின் தொழிலாகியது. அவர்கள் பயறு, வரகு, தினை, கொள், அவரை, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பசுக்களை வளர்க்கும் கூட்டங்கள் பெருகித் தனித்தனியே வாழத்தொடங்கியன. அக்கூட்டங்களுக்குரிய உடைமைப் பொருளாகப் – சொத்தாகப் பசுக்களே இருந்தன. ஆதலால்தான், “மனித குலத்தின் முதல் உடைமை பசுக்கள்“[1] என்று வெ.மு. ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளார். அவையே அவர்களின் அசையும் சொத்து. அவர்களின் பொருளாதாரமும் உணவாதாரமும் அவையே. அவற்றால் கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வளங்களும் (பால் உட்பட பிற அனைத்தும்) அவர்களுக்கு முதன்மையாக இருந்தன. ஆதலால், அச்சமூகச் சூழலில் பசுக்கள் முதன்மையிடத்தினைப் பிடித்தன.

வேட்டையிலிருந்து கொள்ளைக்கு

வேட்டையை மறக்காத அதாவது, வளர்த்தலில் நாட்டமில்லாத கூட்டம் வேட்டையைக் கொள்ளையாக மாற்றிக்கொண்டது. இது, மனிதகுல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை. சில வேடர்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தமைகான சிறு தடயங்கள் புறநானூற்றின் 323 மற்றும் 325 ஆம் பாடல் அடிகளில் காணப்படுகின்றன. அவர்கள் தோரை, ஐவனம், தினை ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்பர். (ஆ – பசு. நிரை – கூட்டம்). ஆநிரைகளைக் கவரும் (திருடும்) கூட்டங்களும் (வேடர்) ஆநிரைகளை வளர்க்கும் கூட்டங்களுக்குச் (ஆயர்) சம அளவிலும் அவர்களுக்கு எதிர்நிலையிலும் இருந்தன. ஆயர் கூட்டத்தினர் காடுகளிலும் (முல்லைத்திணை), வேடர் கூட்டத்தினர் மலைகளிலும் (குறிஞ்சித்திணை) தங்களின் முகாம்களை அமைத்துக்கொண்டனர்.

பசுக்களைக் கொள்ளையடித்தவர்கள் மழவர், மறவர், எயினர், வேடர், குறவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும் பசுக்களை வளர்த்தவர்கள் ஆயர், கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும்ச் சங்க இலக்கிய அடிகள் சுட்டியுள்ளன.

பசுக்களை வளர்த்த இக்கூட்டத்தாருக்குள்ளும் பசுக்களைக் கொள்ளையடிக்கும் வழக்கமும் இருந்துள்ள தகவலைப் புறநானூறு 257ஆவது பாடல் தெரிவித்துள்ளது. “உடைமை“ என்று வந்தபின்னர் அதனை எப்படியாவது அபரிமிதமாகப் பெருக்கும் போக்குகளுள் ஒன்றாகத்தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.

திருடுதலும் தடுத்தலும் (அல்லது) மீட்டலும்

வேடர்கள் ஆநிரைகளைத் திருடவருதலும் அவர்களிடமிருந்து அவற்றை ஆயர்கள் காத்தலும் ஆகிய இவ் இரு நிலைகளும் சங்கத்தமிழரின் தொடக்கக் காலத்தில் தவிர்க்கமுடியாத வாழ்வியல் நிகழ்வாக இருந்தன.

பின்னாளில், இத்திருட்டு (கொள்ளை) வீரம் சார்ந்ததாகக் கருதப்பட்டது. திருடுதலும் திருட்டினைத் தடுத்தலும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டலும் வீரமாகவே போற்றப்பட்டன. திருடுதலை வெட்சித்திணை என்றும் திருட்டினைத் தடுத்தலை அல்லது பறிகொடுத்த ஆநிரைகளை மீட்டுவருதலைக் கரந்தைத்திணை என்றும் தமிழர்கள் புறத்திணைகளை வகுத்து வளர்த்தனர். இப்பாகுபாடு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பிற்கால இலக்கணநூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

களவும் கற்பும்

ஒவ்வொரு திணைக்கும் (திணை – ஒழுக்கம்) அகம், புறம் என்ற இரண்டு இணையான செயல்படு ஒழுக்க நிலைகள் உண்டு. அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழு. குறிஞ்சித்திணைக்கு ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணின் மனத்தினைக் களவாடுதல் (களவு – திருட்டு) அகத்திணையாகவும் உணவுக்காகப் பிறர் வளர்க்கும் ஆநிரைகளைக் களவாடுதல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

முல்லைத்திணைக்குப் பெண் தன் கற்பினைக் காத்தல் (காத்தல் – பேணுதல்) அகத்திணையாகவும் தம் பொருளாதாரமான ஆநிரைகளைக் காத்தல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

குறிஞ்சி என்ற அகத்திணைக்கு வெட்சி என்ற புறத்திணையை இணையாகக்கொள்வது தமிழர் வழக்கம். அதனைப் போலவே முல்லை என்ற அகத்திணைக்குக் கரந்தை என்ற புறத்திணை இணையாகக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

திருட்டும் வீரமும்

வேடர் முதலான இனக்குழு மக்கள், ஆயர் முதலான இனக்குழு மக்கள் மேய்க்கும் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துத் திட்டமிட்டுக் கூட்டமாகச் சென்று திருடும் அல்லது கொள்ளையிடும் வழக்கத்தில் சங்கத் தமிழரின் உடல்வலிமை வெளிப்படுத்தப்படுவதால் இது அக்காலத்தில் வீரமாகவே கருதப்பட்டது.

ஒரு வகையில் இதனைக் “கூட்டுவேட்டை“ என்று தமிழாய்வாளர்கள் கூறிக்கொண்டாலும் என் கணிப்பில் இது திருட்டுதான் – கொள்ளைதான்.

இத்திருட்டினைத் தடுப்பவர்களை அல்லது தங்களது ஆநிரைகளை இழந்தவர்கள் அவற்றை மீட்கப்போராடுவதனை வீரம் என்று கொள்ளலாம்.

சங்க இலக்கிய அடிகள் இத்திருட்டினை “ஊர்ப்பூசல்“, “ஆகோள்“, “ஆகோள் பூசல்“ என்று சுட்டியுள்ளன. அதாவது, “சண்டை“ என்ற பெயரில். இது போர் அல்ல.

இத்திருட்டினை நடத்தத் தலைமைதாங்கும் இனக்குழுத்தலைவனை “உரையன்“, “நெடுந்தகை“, “மதவலி“ என்று சங்க இலக்கிய அடிகள் அழைத்துள்ளன. இத்திருட்டிற்குத் துணைபோகும் வேடர்களை “மீளியாளர்“ என்றும் இத்திருட்டினைத் தடுக்கும் ஆயர்களை “மறவர்“ என்றும் அவ் இலக்கிய அடிகள் குறிப்பிட்டுள்ளன.

திருடலாம்

வேடர் இனக்குழு ஆண்கள் இத்திருட்டு நடவடிக்கைக்கு ஆயத்தமாவது குறித்துச் சங்க இலக்கிய அடிகள் பல உள்ளன. இவர்கள், காரை மரத்தின் பழம் போல் விளைந்த கந்தாரம் குடித்து, பச்சை இறைச்சி (பச்சூன்) அதாவது, அன்று கொல்லப்பட்ட விலங்கின் தசையை உண்டு, மது அருந்தி தெம்பாகச் சென்றுள்ளனர்.(புறநானூறு – 258, 269.) ஒருவிதத்தில் இது அவர்களுக்கு இறுதி உணவாகக் கூட இருக்கலாம் அல்லவா? கொள்ளை நிகழ்ச்சியில் இவர்கள் பிடிபட்டு இறக்கவும் வாய்ப்புள்ளதே!

திருடும் வெட்சியினர் வில்லையும் அம்பினையும் பயன்படுத்தியுள்ளனர். (புறநானூறு–259.) இவர்கள் பசுக்களைக் கொள்ளையடித்து வெற்றியுடன் வரும்போது அதனைக் கொண்டாடுவதற்காக, கொள்ளையடித்துக் களைத்துவருபவர்களுக்கு வழங்குவதற்காக முதிய சாடியில் “கள்“ நிறைத்து வைத்துள்ளனர். (புறநானூறு – 258.) அதுமட்டுமல்ல, தங்கள் (கொள்ளைத்) தலைவனை வரவேற்க ஊரில் பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, கள், இறைச்சி படைத்துள்ளனர். துடிப்பறையை முழக்கயுள்ளனர்.

அக்காலத்தில் விழா கொண்டாடப் “புதுமணல் பரப்பும் வழக்கம்“ இருந்துள்ளது. அக்காலத் திருமணம் பற்றிக் கூறும் அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்களில் புதுமணல் பரப்பும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் கொள்ளையை விழா போலக் கொண்டாடியுள்ளனர்.

வெட்சியினர் நள்ளிரவில் பதுங்கிச்சென்று ஆநிரைகளைக் களவாடி விடிவதற்குள் தம் இருப்பிடத்திற்கு வந்துசேர்கின்றனர். வந்தவுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து.

ஒன்று – தன்னை நம்பியிருக்கும் கூட்டத்திற்கும் தன்னோடு திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் உள்ள உணவுத்தேவைகளை உடனே பூர்த்திசெய்யும் உபசரிப்பு எண்ணம்.

இரண்டு – கொள்ளையடித்து வந்த ஆநிரைகளை மீண்டும் கூட்டமாக வைத்திருந்தால் கரந்தையர் வந்து அவற்றைக் கைப்பற்றிச் செல்ல எளிதாகிவிடும் என்ற எச்சரிக்கை எண்ணம்.

மீட்கலாம்

கொள்ளையடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்டுவரச் செல்லும் ஆயர் வீரனுக்கு ஆயர் குழுவினர் “கரந்தைமாலை“யை அணிவித்து அனுப்புவதனைப் புறநானூறு – 280 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

திருட்டினைத் தடுக்கும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டுவரும் கரந்தையினர் வாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூறு 259ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

அவன் அப்போரில் வீரமரணமடைந்துவிட்டால் அவனுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்குப் “படலை மாலை“யைச் சூட்டி வழிபடும் மரபு இருந்துள்ளது. புறநானூறு – 265.

அறிவொளி

வெட்சியினரான வேடர்களைக் கல்வியறிவற்றவர்களாகப் புறநானூறு 263ஆவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது. அப்படியென்றால், கரந்தையினர் கல்வியறிவுடையவர்களா? ஆம். அவர்கள் ஆநிரையைக் காக்க அல்லது பறிகொடுத்த ஆநிரையை மீட்டுவர நிகழ்த்தப்பட்ட கரந்தைப் பூசலில் உயிர்துறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். (புறநானூறு – 260) அந்த நடுகல்லில் இந்த நபர், இந்த இடத்தில், இவர்களுடன் நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணமடைந்தார் என்ற செய்தியினைத் “தமிழி“ எழுத்தில் எழுதியுள்ளனர். (புறநானூறு – 260). இவற்றைப் பற்றி ராஜ் கௌதமன், “பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்பட்ட அம்சம் போலத் தெரிகிறது“[2] என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து இந்த முறை தொடர்ந்து வந்துள்ளது. முடிமன்னர் காலத்தில் இது சடங்காக மாற்றப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.

திருடுதல் ஒரு சடங்காக மாற்றப்படுதல்

இனக்குழு நிலை நலிவடைந்து அதாவது, பெருங்கற்கால நாகரிக எச்சங்கள் முற்றிலும் மறைந்து முடிமன்னராட்சி மலர்ந்தபோது, இத்திருட்டும் திருட்டினைக் காத்தலும் அல்லது பறிகொடுத்த பசுக்கூட்டத்தை மீட்டலுமாகிய வெட்சியும் கரந்தையும் பெரும்போருக்கு முன் நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகக் கைக்கொள்ளப்பட்டன.

இங்குப் பசுக்களைத் திருடுதல் “கவர்தல்“ என்ற சொல்லாலும் பசுக்களைக் கவரச்செல்லும் வீரர்கள் வெளிப்படுத்தும் வீரம் பூசல் என்று அழைக்கப்படாமல் “போர்“ என்ற சொல்லாலும் புலவர் மரபினரால் குறிக்கப்பட்டுள்ளன.

அதாவது, முடிமன்னர்கள் வேடர் முதலான இனக்குழு மக்களின் தலைவர்களை அழைத்து தம் எதிரி நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர (கொள்ளையிட) ஆணையிட்டுள்ளனர். இதற்கு, “வேந்து விடு தொழில்“ என்று பெயர். “பெரும்போரில் ஆநிரைகள் அழியாமல் காத்தல் வேண்டும்“ என்ற உயிர்நேய நோக்கோடு அச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்று கருதவேண்டும்.

அச்சடங்கின் ஒரு பகுதியாகப் பசுக்கூட்டத்தினைக் கவரச்செல்லும் (திருட்டு அல்ல) வீரர்கள் வெட்சிப்பூவையும் திருட்டினைக் காக்கும் அல்லது திருடப்பட்ட பசுக்களை மீட்கும் வீரர்கள் கரத்தைப்பூவையும் சூடும் வழக்கம் ஏற்பட்டது. இவை அச்சங்கிற்கான அடையாளப் பூக்களாக மாறின.

முடிமன்னர்கள் வெட்சிவீரர்கள் கைப்பற்றி வந்த பசுக்கூட்டங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல் வெட்சித்தலைவனுக்கும் அவனோடு சென்று வெட்சிப் போரினை (இது பூசல் அல்ல) நிகழ்த்த உறுதுணையாக இருந்த வெட்சிவீரர்களுக்கும் அவர்களுக்குரிய வரிசை அறிந்து பங்கிட்டுக்கொடுத்தனர். இது அவர்களுக்குரிய பரிசு அல்ல ஊதியம் என்று கருதவாய்ப்புள்ளது. அதாவது இத்தகைய இனக்குழு வீரர்களைத் தமது அடியாட்களாக மட்டும் (படைவீரர்களாக அல்ல) முடிமன்னர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

மார்க்ஸிய நோக்கில் இந்த வெட்சி வீரர்களின் வாழ்க்கையை ஆராயும்போது, இவர்களின இந்நிலைக்கு “உடைமைச் சமூகத்தின் பேராசையே காரணம்“ என்று எண்ணத்தோன்றுகிறது. மலைகளில் வேட்டையாடும் வேடர்கள் காடுகளில் கொள்ளைக்காரர்களாக மாறி, பின்னர் முடிமன்னர்களுக்கு அடியாட்களாக மாறிவிட்டது காலப்பிழைதான்.

- – -

  1. ஷாஜகான் கனி, வெ.மு., “மனிதகுல வரலாறும் தொல்காப்பியமும்“, ஆய்வுக்கோவை – 2006, ப. 2346.
  2. ராஜ்கௌதமன், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்,ப.13.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பேயும் கடவுளும்

சங்க காலம் / தேடல் 6

மரணம் தந்த வரமும் சாபங்களும்

Demon-Dracula-HDதொல்குடித் தமிழர்கள் எதிர்கொண்ட முதல் மரணம் அவர்களுக்குள் இரண்டு வித அச்சங்களை உருவாக்கியது.

அச்சம் – 1. எல்லோரும் இறந்துவிடுவார்களா?

அச்சம் – 2. இறந்த பின்னர் என்னாவார்கள்?

அவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளுவதற்கு இரண்டு மூடநம்பிக்கைகள் தடையாக இருந்தன.

மூடநம்பிக்கை – 1. இறந்தோர் உயிர்பெறுவர்.

மூடநம்பிக்கை – 2. இறந்தவர்கள் ஆவிகளாக நம்மைச் சுற்றியே வாழ்கிறார்கள்.

தொடர்ந்து பல மரணங்களைப் பார்த்த பின்னரும் அவர்களுள் ஒருவரும் உயிர்பெறவில்லை என்பதனை உணர்ந்த பின்னரும்கூட அவர்கள் இந்த மூடநம்பிக்கையை விட்டு மீளவில்லை. இப்போதும்கூடத்தான்.

இதன் தொடர்ச்சியாக அவர்கள், “நம்மவர்களின் ஆவிகள் நமக்கு நன்மை செய்யும். நமது எதிரிகளின் ஆவிகள் நமக்குத் தீமை செய்யும்“ என்றும் கருதினர். எதிரிகளின் ஆவிகளைப் “பேய்கள்“ என்று கருதினர்.

எதிரிகளிடமிருந்து தப்புவதும் அவர்களைக் கொல்வதும் தமிழர்களுக்கு எளிதாகவே இருந்தன. ஆனால், எதிரிகளின் ஆவிகளிடமிருந்து (பேய்களிடமிருந்து) தப்புவதும் அப்பேய்களை அழிப்பதும் அவர்களால் முடியாததாக இருந்தன. அந்த மனக்குழப்பம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அவர்கள் அவற்றைப் போக்கப்(நீக்கப்) பல மந்திரங்களையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டனர். ஆனால், அவை அவர்களின் மனக்குழப்பத்தைச் சிறிதும் குறைக்கவில்லை. அவர்களுக்கு வலிமையான, நம்பகமாக ஓர் ஆவி தேவைப்பட்டது. அவர்கள் சிந்தித்தார்கள். “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தின் வழியாக அவர்களுக்கு நல்ல ஆவிகள் பல கிடைத்தன.

சங்கத் தமிழருக்குள் ஏற்பட்ட “பேய்“ என்ற சிந்தனை உருவாக்கமே, அவர்களைக் “கடவுள்“ என்ற ஒரு கருத்தாக்கத்தை உண்டாக்கத் தூண்டியது. “இறந்தோர் உயிர்பெறுவர்“ என்ற நம்பிக்கையே அவர்களிடையே “பேய்“ பற்றிய சிந்தனை விதையினை ஆழமாக ஊன்றியது.

மரணம் தந்த வரம் ஒன்று. அது, “இப்போது இருக்கும் ஒருவர் எப்போதும் இருக்கமாட்டார்“ என்ற நிலையாமைக் கருத்து. மரணம் தந்த சாபங்கள் இரண்டு. ஒன்று பேய். மற்றொன்று கடவுள். “பேய்“ என்பது தீய ஆவி. “கடவுள்“ என்பது நல்ல ஆவி. கிறித்துவர்கள் “பரிசுத்த ஆவி“ என்று கடவுளைக் கூறுவதை இங்கு ஒப்புநோக்கலாம். தொல்குடித் தமிழர் வளர்த்த இக் கடவுள் கோட்பாட்டினைச் சங்கத்தமிழர்கள் தங்களின் அச்சத்தின் உச்சியினாலும் கற்பனைத் திறத்தினாலும் பேருருவாக வளர்த்துக்கொண்டனர்.

ஆதிக் கடவுள்கள்

சங்கத் தமிழருக்கு இயற்கையே கடவுள். குறிப்பாக, இயற்கை தரும் மழையே அவர்களுக்கு எல்லாமுமாக இருந்தது. அந்த மழையினை உருவாக்க உதவும் கூட்டுழைப்புப் பருப் பொருள்களான மலை, கடல், கதிரவன், மேகம் ஆகிய நான்கும் அவர்களுக்குக் கடவுளாகவே தெரிந்தன. அவை, எந்நிலத்தில் உச்சம்பெற்றிருந்தனவோ (மலை – குறிஞ்சி, கடல் – நெய்தல், கதிரவன் – மருதம், மேகம் – முல்லை) அந்நிலங்களுக்குரிய கடவுளாகவே கருதப்பட்டன. இந்த நோக்கத்தில்தான் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையியல் ஐந்தாவது நூற்பாவில்,

  1. மாயோன் (கருமை நிறம்)   – மேகம்  – முல்லை (காடுறை – கானுறை[ii]),
  2. சேயோன் (செம்மை நிறம்)  – மலை – குறிஞ்சி (மைவரை),
  3. வேந்தன் (தலைவன்)  – கதிரவன்   – மருதம் (தீம்புனல்),
  4. வருணன்  – கடல் – நெய்தல் (பெருமணல் – பெருமதில்[iii])

என நான்கு இயற்கைகளை நிலம்சார் கடவுளாக இலக்கணப்படுத்தியுள்ளார்.

இந்த இயற்கைப் பருப்பொருட்களுக்குச் சங்கத் தமிழர்கள் மனித உருவம் கொடுத்து மாயோன் – திருமால், சேயோன் – முருகன், வேந்தன் – இந்திரன், வருணன் என வழிபடத் தொடங்கினார்கள். அவர்களின் வழிபாடு சடங்குகள் சார்ந்து இருந்தது.

சங்ககாலச் சடங்குகள்

சங்ககாலத்தில் அகவன் மகள், கட்டுவிச்சி ஆகியோரின் குறிசொல்லும் செயல்கள், விரிச்சி கேட்டல், மழையை வருவித்தல், வெறியாடல், இயற்கைசார் வழிபாடுகள் முதலியன சடங்கு சார்ந்து இருந்துள்ளன. மந்திர உச்சரிப்பு இல்லாமல் சடங்கு இருந்திருக்குமா?

தொல்காப்பியம் செய்யுளியல் 175ஆவது நூற்பாவில் செய்யுள் வகையில் ஒன்றாக “மந்திரம்“ என்பது குறிப்பிட்டுள்ளது. செய்யுளைப் புலவர்கள் எழுதுவது வழக்கம். இவ்வகைச் செய்யுளைப் புலவர்கள் எழுதியதாகக் கருதமுடியாது. அப்படியானால் யார் எழுதியது?

அதே நூற்பாவில், “நிறைமொழி மாந்தர்“ என்ற சொல் காணப்படுகின்றது. நிறைமொழி மாந்தர் என்பவர் தலைமை பூசாரியாகவோ மந்திரவாதியாகவோ இருக்கலாம். அப்படியென்றால் இவ்வகைச் செய்யுளை அல்லது செய்யுற் கருத்துகளை இவர்கள் கூற, மற்றவர் எழுதியிருக்கக்கூடும். மந்திரத்தை “மறைமொழி“ என்று அந்நூற்பா குறிப்பிட்டுள்ளது. ஆதலால், இம் மந்திரங்கள் வேதத்துக்கு நிகரானவை என்பது புலப்படுகிறது.

மந்திரம் என்பது சடங்கில் பயன்படுத்தப்படுவது. ஆக, பூசாரி, மந்திரவாதி, மந்திரம், சடங்கு, வேதம் ஆகியன பற்றித் தொல்காப்பியர் குறிப்புணர்த்தியுள்ளார். அப்படியானால் இச் சடங்கும் மந்திரமும் பேய்களுக்கா? கடவுள்களுக்கா?

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சங்க இலக்கியத்தில் காணப்படும் பெருவழக்கான சடங்கு “வெறியாடல்“. இதனைச் சங்க இலக்கியங்கள் பேய் ஓட்டுதல், பேய் விழா என்று குறிப்பிட்டுள்ளன. அதாவது, முருகன் இளம்பெண்ணின் மீது உறைந்ததாகக் கருதி (அணங்குதல்), அந்த முருகனைச் சமாதானப்படுத்தி, அப்பெண்ணிடமிருந்து விலக்குவதே இச்சடங்கின் நோக்கம்.

தலைவி காதல் வயப்பட்டு தன்னிலை மறந்து இருத்தலைத் தாய் தன் பெண் மீது ஏதோ தெய்வம் உறைந்துவிட்டதாகத் தவறாக நினைத்துவிடுகிறாள். அதாவது, தன் மகளைப் பீடித்தக் காதல் நோயைப் பேய் அல்லது தெய்வம் பற்றியதாகக் கருதிவிடுகிறாள். ஆக, ஒரு தவறான புரிதல்சார்ந்த சரியான சடங்குமுறையே வெறியாடல். இதுபற்றிக் குறுந்தொகை – 111,263, பரிபாடல் 5:13-15, ஐங்குறுநூறு – 243,245,248, நற்றிணை – 273, 282, அகநானூறு – 22, 98 ஆகிய இலக்கியச் செய்யுள்களில் காணமுடிகிறது.

இச்சடங்கினைக் கட்டுவிச்சியைக்கொண்டோ, வேலனைக்கொண்டோ நிகழ்த்தியுள்ளனர். அகநானூற்றின் 270ஆவது பாடலில் இச்சடங்கினை ஆடுமகள் நடத்தியதாகவும் குறிப்புள்ளது. இச்சடங்கில் குருதிப்பலியும் இடம்பெற்றுள்ளது. “வெறியாடல்“ முருகனுக்கு மட்டுமல்ல தொல்தாய்த் தெய்வமான கொற்றவைக்கும் நடத்தப் பெற்றுள்ளது.

குறிஞ்சித்திணைக்கு முருகன் மட்டுமல்ல கொற்றவையும் தெய்வமே. குறிஞ்சி நிலத்துக்கு அகத்திணையிலும் புறத்திணையிலும் தெய்வம் முருகன், புறத்திணையில் கொற்றவையும் தெய்வமாகக் கருதப்பட்டுள்ளது. அதாவது, “குறிஞ்சிதானே வெட்சியது புறனே“ என்ற அடிப்படையில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். குறிஞ்சித்திணையின் திரிபுதான் பாலை என்பதால் அங்கும் கொற்றவையே தெய்வமாகியது. ஒருவகையில் கொற்றவையின் புதல்வன்தான் முருகன்போலும். இதனைத் திருமுருகாற்றுப்படையின் 250 ஆவது அடியில் காணமுடிகின்றது. தெய்வங்களுக்குள் ரத்த உறவினைக் கற்பிதம்செய்துகொள்ளுதல் தொல்தமிழர் வழக்கம்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 63ஆவது நூற்பாவின்படி, அகத்திணையிலும் புறத்திணையிலும் முருகனுக்கு வெறியாடல் சடங்கு நடத்தப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அகத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “குறிஞ்சி“ப் பூவையும் புறத்திணையில் வெறியாடலை நடத்தும் வேலன் “காந்தள்“ பூவையும் சூடுவது மரபாக இருந்திருக்கலாம்.

குறிஞ்சித்திணைத் தெய்வங்களுள் ஒருவரான முருகனுக்கு இரண்டு வித பரிமாணங்களைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. அகத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு பேரழகன் – குசும்புக்காரன் – காதல் தலைவன் – காதலுக்குக் காவல்காரன் – காமக்கடவுள். புறத்திணைப் பாடல்களில் முருகன் ஒரு மாவீரன் – முரடன் – மூர்க்கன் – சினம் மிக்கவன் – போர்த்தலைவன் – போர்க்கடவுள் – வெற்றிக்கடவுள். இதற்குச் சான்றுகள் புறநானூறு – 14,16, அகநானூறு – 158,266, பதிற்றுப்பத்து – 26, மதுரைக்காஞ்சி – 181, பொருநராற்றுப்படை – 131 ஆகிய இலக்கியங்களின் செய்யுட்களில் உள்ளன.

ஜெய் காளி

பாலை நிலத்தின் தனிப்பெரும் கொடுந்தெய்வம் கொற்றவை. வெற்றிக்குரிய தெய்வம். “கொற்றம் தருபவள்“ என்பதால் இவளுக்குக் “கொற்றவை“ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்நிலம் சார்ந்துள்ள நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவளே தெய்வம். பாலைத் திணையில் பரவலாக இருக்கும் ஆறலைக் கள்வர்களாகிய எயினருக்குக்கும் வேட்டையாடும் வேட்டுவருக்கும் வெற்றியைத் தரும் தெய்வமாகவும் கொற்றவை இருந்திருக்கிறாள். ஆக, வேட்டைச் சமூகமாக இருந்த தொல்தமிழர்களின் ஆதித்தாய்த்தெய்வமே மறுஉருவில் கொற்றவையாக வணங்கப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்தினர் கொள்ளைச் சமூகத்தினராக மாறிய பின்னர் தங்களின் தெய்வத்தின் வடிவத்தையும் மாற்றிக்கொண்டனர்போலும். ஆநிரை கவரச்செல்லும் (திருடுதல்) எயினருக்கு அவள் வெற்றியைத் தருவதாகவும் அதற்குக் கைமாறாக அவர்கள் தம்மையே (நரபலி) பலியிட்டுக் கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 62ஆவது நூற்பா “கொற்றவை நிலை“ என்ற ஒரு புறத்திணைத் துறையினைச் சுட்டியுள்ளது. அது கொற்றவை வழிபாடு பற்றியதாக இருக்கலாம். கொற்றவை பற்றிய விரிவான தகவல்களைச் சங்க இலக்கியங்களின் வழியாகப்பெறஇயல்வதில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில் கொற்றவை வழிபாட்டினை விரிவாக அறியமுடிகிறது.

“மால்“ என்ற திருமால்

முல்லை நிலத்தின் தனிப்பெருங்கடவுள் மாயோனாகிய மால் அல்லது திருமால். ஆய்ச்சியர் தலைவர் – கோவலர் அரசன் – ஆநிரைக் காவலன். கலித்தொகையின் முல்லைக்கலியிலும் பரிபாடலில் திருமால் வழிபாட்டினை விரிவாகக் காணமுடிகிறது. வேதங்களில் இடம்பெற்றுள்ள விட்ணுவின் சித்திரத்தினை முல்லைப்பாட்டில் மூவுலகை அளந்த திருமால் பற்றிய குறிப்புப் புலப்படுத்துகிறது.

ஆனால், பரிபாடல் தரும் திருமால் சித்திரம் சங்க இலக்கியத்தில் இல்லை. தொல்காப்பியர் குறிப்பிடும் தொல்தமிழரின் மாயோன் இப்போது திருமால். பரிபாடல் காட்டும் திருமால் வைணவ சமயத்தோற்றத்தின் முதன்நிலையிலுள்ள திருமால். அப்படியென்றால் திருமால் இருவரா? ஒருவர்தான். இது குறித்து ந. சுப்புரெட்டியார், “வேதங்களில் காண்ப்பெறும் மூன்று நீண்ட அடிகளை உடைய இறைவனாகக் கருதப் பெறும் விட்டுணுவைப் பற்றிய கருத்தும் மெய்ப்பொருளியல் சார்ந்த நாராயணனைப் பற்றிய கருத்தும் ஆயர் இனக்கடவுளான கிருட்டிணனைப் பற்றிய கருத்தும் இணைந்தே “திருமால் சமயம்“ உருப்பெற்றது“[iv]என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கால வளர்ச்சியில் மக்கள் மாயோனை வெவ்வேறுவிதமாகத் தரிசிக்கத் தொடங்கியதன் விளைவே இது.

சங்கத் தமிழர்கள் நடத்திய “குரவைக்கூத்து“ எனும் நிகழ்ச்சி திருமால் வழிபாட்டோடு நேரடித் தொடர்புடையது. இக்கூத்து பற்றிய சித்திரத்தினைச் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும் காணமுடிகிறது. கலித்தொகையின் முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் நடைபெற்று முடிந்தவுடன் மக்கள் ஒன்றுகூடிக் “குரவைக்கூத்து“ நிகழ்த்தித் திருமாலை வழிபட்டதாகக் குறிப்புள்ளது.

சங்க இலக்கியத்தில் மருதநிலக் கடவுளான “இந்திரன்“ பற்றியும் நெய்தல் நிலக் கடவுளான “வருணன்“ பற்றியும் விரிவான தகவல்கள் இல்லை. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரனை மையப்படுத்திய இந்திரவிழாகாட்சியைத் தவிர வேறு பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

மனிதர்கள் உருவாக்கிய கடவுள்கள்

சங்கத் தமிழர்கள் பேய்களிலிருந்து தப்பிக்கவும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்குவதற்கும் தங்கள் இனத்தவர் அல்லாத ஒரு தனித்த, பெரிய சக்தியின் பேருதவி தேவைப்பட்டது. அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் அனைத்து வகையான தவறுகளையும் பொருத்தருளும் அல்லது மன்னிக்கும் ஒரு பெரிய கருணையாளரின் துணை தேவைப்பட்டது. அதற்காக, அவர்கள் “கடவுள்“ என்ற கருத்தாக்கத்தை உருவ, அருவ, அருவுருவ அளவில் உருவாக்க முயன்றனர். அந்த முயற்சி முடிவற்றதாக அமைந்து, பின்னர் சமயமாகப் பெருகி நின்றது. ஆக, மனிதர்கள்தான் கடவுளையும் படைத்தனர்.

மனிதர்கள் பேயைக் கற்பனை செய்தனர்.அது அவர்களைப் பிடித்துக்கொண்டது. அதனை விரட்டக் கடவுளை உருவாக்கினர். இறுதியில் அவை இரண்டும் மனிதர்களைப் பிடித்துக்கொண்டன.

- – -

http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043222.htm

[ii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html

[iii] http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_11.html

[iv] சுப்புரெட்டியார், ந., வைணவச் செல்வம், ப. 35.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அது ஒரு காதல் காலம்

சங்க காலம் / தேடல் - 07

காமத்திலிருந்து காதலுக்கு

seed_Sunflowerமுதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்ததுஅந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்துகாதலாகக் குவிந்து,பெண் மீதும் ஆண்மீதும் அன்பாக மலரத் தொடங்கியது.இதற்குக் காரணங்கள் பல.ஆண்  பெண் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்.பெண்வழிச் சமுதாயத்தின் ஆளுகையாக இருக்கலாம். “வன்முறையால் எவற்றையும் அடைந்துவிடமுடியாது“ என்ற உயரிய சித்தாந்தமாகக்கூட இருக்கலாம்.

அந்த அன்புமலரைக் காதலாகவும் காமமாகவும் சற்றுக் கூடுதலாக முரட்டுக்காமமாகவும் மாற்றும் வித்தையை ஆணும் பெண்ணும் படிப்படியாக அறியத்தொடங்கினர்ஆம்அவர்கள் காமத்தை அன்பாகவும் அன்பைக் காமமாகவும் கையாளக் கற்றுக்கொண்டனர்ஆனால்,அவர்களால் அவற்றை ஒருபோதும் காதலாக மட்டும் வைத்துக்கொள்ள முடியவில்லைகுளிர்ந்த நீரானது பனிக்கட்டியாக உறையுமுன் உள்ள தனிநிலை போலவோபனிக்கட்டி வெப்பமாகிக் குளிர்ந்த நீராவதற்குமுன் உள்ள தனிநிலை போலவோ காதலும் ஒரு பிடிபடாத சமமற்ற தனிநிலை.

காதற்திணைகள்

தொல்தமிழர் தங்கள் நிலங்கள் நான்கினுள் பாலையையும் சேர்த்து அவற்றை மொத்தமாக “அன்பின் ஐந்திணை“ என்று கூறும் வழக்கம் உள்ளதுஅதாவதுஅவை காமம் கனிந்துகாதற்கனியாக விளைந்த அன்பின் ஐந்திணைஅந்த ஐந்து நிலத்திலும் காதல் இருந்ததுஆனால்தன் வீரியத்தில் மாற்றங்களைப் பெற்றிருந்தது.

குறிஞ்சி என்றால் ஆண்-பெண் சேர்க்கை (பின்னிப்பிணைந்த இல்லறம்),முல்லை என்றால் பெண் தன் கற்பினைக் காத்திருத்தல் (இடைவெளியோடு கூடிய இல்லறம்), மருதம் என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் இடைச்செருகலாக “சக கிழத்தி“ (சக்காளத்திவந்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு(ஊடல்), நெய்தல் என்றால் தலைவனைப் பிரிந்த தலைவி “அவன் வருவான்“ என்ற நம்பமுடியாத நம்பிக்கையில் இரங்கியிருத்தல் அல்லது புலம்புதல் (கேள்விக்குறியான இல்லறம்), பாலை என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் ஏற்பட்டுவிட்ட, தாற்காலிகத்திலிருந்து நிரந்தரத்தை நோக்கிய பிரிவு (கேள்விக்குறியான வாழ்க்கை).

இப்படி வேறுபட்ட இல்லற வாழ்வுடைய ஐந்நிலங்களிலும் காதல் இருந்ததாஇருந்ததுஅது இல்லையெனில் நெய்தல் திணையிலும் பாலைத் திணையிலும் தலைவி உயிருடன் இருந்திருக்க மாட்டாள்ஆம்!தலைவி உயிர்த்திருக்க அருமருந்தாக இருந்தது காதல்தான்ஒருவிதத்தில் அது அவளின் உயிராகவும் இருந்தது.

காதலும் காதல் நிமித்தமும்

சங்க இலக்கியங்களை அதன் பாடுபொருள் சார்ந்து அகம்புறம் எனப் பாகுபாடுசெய்துள்ளனர்அகம் என்றால் அகத்திணைபுறம் என்றால் புறத்திணைஇங்குத் திணை என்பதனை ஒழுக்கம் என்ற பொருளில் கருதவேண்டும்ஆகஅகம் என்பது அகம் சார்ந்த ஒழுக்கம்அதாவது,அன்புகாதல்காமம் மற்றும் பிறரிடத்தில் வெளிப்படையாகச் சொல்லத்தகாத அனைத்தும் அகத்திணையுள் அடக்கம்புறம் என்பது புறம் சார்ந்தஅகம் சாராத மற்ற ஒழுக்கங்கள்அவையனைத்தும் புறத்திணையுள் அடக்கப்படும்சங்க இலக்கியப் பாக்கள் 2381. அவற்றுள் அகத்திணையைச் சார்ந்தவை 1862. அதாவது, 78.20 சதவிகிதப் பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தவை.

காதல்“ என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைத் தானே எண்ணி, “89 இடங்களில் காதல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது“ என்ற கருத்தினை முனைவர் பெ.மாதையன் தெரிவித்துள்ளார்.iஅதாவதுபுள்ளிவிவரப்படி பார்த்தால் 21பாடலுக்கு ஒருமுறை “காதல்“ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

எல்லாத்திணைகளிலும் காதல் இலைமறை காயாகத்தான் இருந்துவந்துள்ளதுஅதனால்தான் அதனைக் களவு (திருட்டுத்தனம்என்ற சொல்லால் நாசுக்காகக் குறிப்பிட்டனர்ஒழுக்கம் என்பதுபெற்றோருக்குத் தெரியாதஅவர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் “களவொழுக்கம்“ என்றும் அவர்களுக்குத் தெரியவந்துஅது அவர்களால் ஏற்கப்பட்டால் அது “கற்பொழுக்கம்“ என்றும் இருவகையில் பொருள்படுத்தப்பட்டது.

தேவதைகள் காத்திருக்கிறார்கள்

தலைவியும் தலைவனும் முதன்முதலில் சந்திக்கும் இடமாகப் பூம்பொழில்(சோலைவனம்), நீர்நிலை (அருவிகுளம்ஆறு,), விளைநிலங்கள்(தினைப்புனம்), விளையாட்டு ஆயம் (ஆடுகளம்ஆகிய நான்கும் இருந்தன.இந் நான்கு இடங்களும் தலைவி தன் பெற்றோரின் அனுமதியினைப் பெற்றுத் தன் தோழியுடன் உலாவும் அல்லது சிறுசிறு பணிகளைப் புரியும் இடமாக இருப்பதனால் அங்கு அவளைத் தனித்துக் காணத் தலைவனுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.

பூக்களைப் பறித்து மாலைகட்டி மகிழ பூம்பொழிலுக்குத் தலைவிசெல்வது உண்டுகுளித்துக் கரையேறவோ அல்லது நீராடி மகிழவோ நீர்நிலைகளுக்குத் தலைவிசெல்வதும் உண்டுதன் வீட்டாருக்குச் சொந்தமான நிலங்களில் தினைசோளம்சாமைவரகு முதலான பயிர்களை விளையச் செய்திருந்தால்அவற்றின் கதிர்முற்றிய காலங்களில் அவற்றைப் பறவைகளிலிருந்து காக்கப் பரணமைத்துகவன்கற்களின் உதவியுடன் அவற்றை விரட்டும் பணிக்குத் தலைவிசெல்வதும் உண்டு.பந்து விளையாடமணல்வீடு கட்ட மற்றும் இன்னபிற விளையாட்டுகளில் பொழுதினைக் கழிக்கும் பொருட்டு தலைவி தன் தோழியுடன் விளையாட்டுத் திடலுக்குச் செல்வதும் உண்டுஇந்த இடங்களிலெல்லாம் இளம்பெண்கள் தங்கள் பெற்றோரின் துணையின்றி வருவார்கள் என்பது இளைஞர்களுக்குத் தெரியும்இங்கெல்லாம் இளைஞர்கள் தங்களைக் காண ரகசியமாக வருவார்கள் என்பது இளம்பெண்களுக்கும் தெரியும்.தலைவியின் தாய்க்கும் தெரியும்அத்தாயும் ஒருகாலத்தில் தலைவியாக இருந்தவள்தானேஇருந்தாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கை அவள் கண்களை மறைத்துவிடுகின்றது.

காதற்தீ

தலைவி மருதநிலத்துக்காரியாகவோ முல்லைநிலத்துக்காரியாகவோ இருக்கலாம்அதேபோலதலைவன் மலைநாடனாகவோ,நெய்தல்நிலத்துக்காரனாகவோ இருக்கலாம்இருவரும் எதிர்ப்படும்போது அவர்களுக்குள் இருக்கும் உணர்வுத் தீ அவர்களை இணைத்துப் பற்றிக்கொண்டால் போதும்பின்னர்அத் தீ அணையாமல் இருக்கத் தோழியும் பாங்கனும் (தலைவனின் நண்பன்காவல் காப்பர்.

முதல்சந்திப்புக்குப் பின்னர் அடுத்தடுத்த சந்திப்புகளை ஒழுங்குபடுத்திக்கொடுப்பது தோழியும் பாங்கனும்தான்அவர்களின் பகற்சந்திப்பினைப் பகற்குறி என்றும் இரவுச்சந்திப்பினை இரவுக்குறி என்றும் அழைப்பர்சந்திப்பு என்பது வெறும் பேச்சுமட்டுமல்லஉடல்சார்ந்த அன்புறவும்தான்.

அவர்களின் காதலை அதாவது நட்புறவினைக் குறுந்தொகைப் பாடல் நிலத்தைவிடகடல்நீரைவிடவானைவிடப் பெரியதாக உயர்த்திக் கூறியுள்ளது.

ஊர் சிரித்தது

தலைவியின் காதலை அவளின் நடவடிக்கைகளிலிருந்தும் அறிந்துகொண்ட ஊரார் நீர்த்துறைகளில் கூடும்போது தங்களுக்குள் பேசிக்கொள்வர்.இதனைச் சங்க இலக்கியங்கள் “அம்பல்“ என்று குறித்துள்ளனஇவ்வாறு இவர்கள் பேசிக்கொள்வதனைத் தலைவியோ அல்லது தலைவியின் உறவினர்களோ அறியமாட்டார்கள்தலைவியை அவளது காதலனோடு இணைத்துக் கண்டுவிட்ட ஊரார் அவர்களின் உறவு பற்றி தலைவியின் உறவினர் அறியுமாறு வெளிப்படையாகவே பேசுவர்இதனைச் சங்க இலக்கியங்கள் “அலர்“ என்று சுட்டியுள்ளனஒரு பெண்ணைப் பற்றி “அலர்“ எழுந்தால்அது அப்பெண்ணின் கற்புக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அலர் ஊர்முழுவதும் பரவுவதனைத் தோழிதலைவனுக்குத் தெரியப்படுத்துவாள்இதனை “அலர் அறிவுறுத்தல்“ என்று கூறுவர். “உங்கள் காதல் ஊராருக்குத் தெரிந்துவிட்டதுஊர் சிரிக்கிறதுஉடனே வந்து தலைவியை மணந்து கொள்“ என்பது இதன் உட்குறிப்பு.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்ல தோழி

இந்தக் களவு உறவு நீட்டித்தால் தலைவி கருவுற நேரிடும்ஆதலால்,தோழிதலைவன்  தலைவியின் திருமணம் குறித்து (அதனை வரைவு என்பர்தலைவனிடம் வலியுறுத்திக்கொண்டே இருப்பாள்.திருமணத்துக்காகப் பொருள்தேட(செல்வம்தலைவன் வெளியிடங்களுக்குச் செல்லத் துணிவான்அப்போதுதலைவி தன் தலைவனைப் பிரிந்து தனித்திருக்க நேரிடும்தலைவனின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மனவோட்டத்தைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல எடுத்துக்கூறியுள்ளனஇரவில் அவள் தனித்து விழித்திருப்பாள்இரவுப் பொழுதில் ஏற்படும் சிறுசிறு ஒலிகளையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்இதனால்அவள் உடல்,தோள்வளைகள் மற்றும் கை வளையல்கள் நெகிழ்ந்து கழன்றுவிடும் அளவுக்கு மெலிவுறும்இதனைக் கண்ட தாய்தன் மகளைத் தெய்வம் அணங்கியதாகக் கருதி வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவாள்.இதுகுறித்து கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.

இத்தருணத்தில்தான்தோழி தன் தலைவியின் காதல் புராணத்தை விரிவாகவும் நுட்பமாகவும் தலைவியின் தாய்க்கோ அல்லது தலைவியின் செவிலித்தாய்க்கோ (வளர்ப்புத் தாய்தெரிவிப்பாள்இப்பணியினைச் சங்க இலக்கியங்கள் “அறத்தொடுநிற்றல்“ என்று அருமையாகச் சொல்லியுள்ளது.அதாவதுஉண்மையைப் போட்டுடைத்தல்.

களவாகற்பா?

எந்தப் பெற்றோர்தான் காதலை ஏற்பர்இக்காலப் பொற்றோர் மட்டுமல்ல அதற்குச் சங்ககாலப் பெற்றோரும் விதிவிலக்கல்லசங்ககாலக் காதல் பெரும்பாலும் களவுதான்பின்னர் தலைவியின் வீட்டில் தோழியும்,தலைவனின் வீட்டில் பாங்கனும் அவர்களின் பெற்றோருக்கு எடுத்துக்கூறி,தலைவன்  தலைவியின் களவொழுக்கத்தினைக் கற்பொழுக்கமாக மாற்ற முயல்வர்அம்முயற்சி கைகூடினால்பெற்றோர்கள் அவர்களுக்கு மணமுடித்து அல்லது அவர்களை ஏற்றுக்கொண்டுதங்களுக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவர்அம்முயற்சி கைகூடவில்லையெனில் தலைவன்  தலைவி உடன்போக்கினை மேற்கொள்வர்அதாவது,குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்றுதங்களுக்கென்று ஓர் இல்லமைத்துக் கற்பொழுக்கத்தில் வாழ்வர்.

பெற்றோர்கள் தலைவன்  தலைவியின் காதலை ஏற்காதுபோது அவர்களைத் தன்வழிப்படுத்துவதற்காகவும் அவர்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும் உண்டுதலைவின் பெற்றோர் தலைவியைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள “இச்செறித்தல்“ (இல்லத்தில் வைத்தல்)உண்டுஅதாவதுஹவுஸ் அரெஸ்ட் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிடுதல்.கூண்டுக்கிளியாக்கப்பட்ட தலைவியின் நிலையினைத் தலைவனுக்கு எடுத்துக்கூறித் தலைவி தன் உயிரைவிட்டுவிடுவாள்ஆதலால்,எப்படியாவது அவளைக் காப்பாற்றி அழைத்துச்சென்று மணம்செய்துகொள் என்று தோழிதலைவனிடம் மன்றாடுதல் உண்டு.

பெத்தமனம் பித்து

வீட்டைவிட்டுத் தன் தலைவனுடன் வெளியேறிய தலைவியின் நிலையினைக் குறித்துத் தாயும் செவிலித்தாயும் அடையும் துயரம் அளவற்றதுதன் மகள் விளையாடிய பாவைகள் (பொம்மைகள்), பந்து முதலானவற்றைப் பார்த்துப் புலம்பும் புலம்பல்கள் குறித்தும் தன் மகள் இவ்வழியே சென்றிருக்கலாம் என்று கருதி சில பாதைகளின் வழியே சென்று அவளைத் தேடி தந்தைகளின் ஆற்றாமை குறித்தும் யார்வழியாகவோ தன் மகள் இன்ன ஊரில் இன்ன இடத்தில் இப்படி வாழ்கிறாள் என்பதனைக் கேள்வியுற்று மனம்வெதும்பும் பெற்றோர்கள் குறித்தும் தன் மகள் எங்கிருந்தாலும் அங்கு அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று தன் தெய்வத்தை வணங்கும் தாயின் மனவோட்டம் குறித்தும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் பல உள்ளனபிள்ளைகள் புதிய தம்பதியராக மாறி மகிழ்வுறும்போதும் அவர்களைப் பெற்ற பழைய தம்பதியரான பெற்றோர்கள் கலங்குவது ஒரு முரண்தான்.

அழியாக் காதல்

பெரும்பாலும் காதலுக்குத் தடையாக இருந்தவை நிலம்சார்ந்த வேறுபாடுகளும் வருவாய் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும்தான்வயல்சார் வாழ்க்கையையுடைய தன் மகளை ஒரு மலைநாடனுக்கு மணம்முடித்துவைக்கத் தந்தை விரும்புவதில்லைகாரணம்மருதம்,குறிஞ்சி என்ற நிலம்சார்ந்த வேறுபாடுநாவாய்கள் (கப்பல்கள்பல வந்துபோகும் துறைமுகத்துக்கு உரிமையுடையவர் தன் மகளை முல்லைநிலத்தில் பசுக்கள் சிலவற்றை மேய்க்கும் இளைஞனுக்கு மணம்முடித்துவைக்க விரும்புவதில்லைகாரணம்பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுஇவையே இப்போதும் வேறுவடிவில் உள்ளனஅவற்றாலும் காதலை அழிக்க முடியவில்லைகாரணம்காதல் என்றும் அழிவதில்லை.

- – -

i மாதையன்பெ., சங்க இலக்கியத்தில் குடும்பம். 38.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தலைவன், தலைவி, இன்ன பிறர்

chilambu1சங்க காலம் / தேடல் – 09

னியுடைமைச் சொத்து உருவானபின்னர்அச்சொத்தினைத் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தும் உரிமை யாருக்கு?என்ற வினா எழுந்ததுஒருவருக்கு உரிய ஒரு மனைவியின் புதல்வருக்கே அந்த உரிமை தரப்பட்டது.

ஒருவருக்கு உரிய மனைவி“ என்று ஒரு பெண்ணை மட்டும்தான் உறுதிப்படுத்தவேண்டியிருந்தது.அந்த உறுதிப்பாட்டுக்குக் “கரணம்“(எல்லோர் முன்னிலையிலும் மணமக்களுக்குத் திருமணம் செய்துவித்தல்என்ற திருமணம் உதவிற்றுஅவ்வாறு திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் புதல்வர்களே அடுத்த வாரிசு.

அத்தகைய திருமணம் இன்றி வேறுவகையான திருமணத்தால் மனைவியாகும் பெண்ணுக்கும் அத்தம்பதியருக்குப் பிறக்கும் புதல்வர்களுக்கும் சொத்துரிமைஇல்லறக் கடமைகள் மற்றும் சமூகச்செயல்பாட்டு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன.

தொல்காப்பியம்“ என்ற இலக்கண நூலிலும் “சங்க இலக்கியங்கள்“ என்ற இலக்கிய நூல்களிலும் (காலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் தவிர்த்துவிலைமகளிர் பற்றிய குறிப்புகள் இல்லைஆனால்தலைவனின் ஆசை நாயகிகள் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.

தலைவனின் மனைவிக்குதான் இல்லறக் கடமைகளும் சொத்தும் சமூகச்செயல்பாட்டு உரிமைகளும் வாரிசு உரிமையும் உண்டுஆசை நாயகிகளுக்கு அவ்வுரிமைகள் மறுக்கப்பட்டிருந்தனஇதனை நற்றிணையின் 330ஆவது பாடலும் அகநானூற்றின் 16ஆவது பாடலும் விளக்கியுள்ளன.

இல்வாழ்வில் “கற்பு“ என்பது இல்லறக்கடமையாற்றுதலைக் குறித்தது.அக்கடமையைச் செய்யத் தகுதியற்றவர்களாகக் கருதப்படும் சின்னவீடுகளைக் கற்பற்றவர்கள் என்று கருதினர்பின்னாளில்தான் கற்பு என்பது உடல்மனம் சார்ந்த்தாகக் கருதப்பட்டது.

தலைவனுக்குரிய மனைவி யார், ஆசை நாயகிகள் யாவர் என்ற வகைப்பாட்டினை விளக்கக் கரணம் என்ற திருமணம் உதவியதுஅவ்வாறு திருமணம் செய்துகொண்ட பெண்தான் தலைவனின் அதிகாரபூர்வமான மனைவி. யாருக்கும் தெரியாமலே அல்லது சிலருக்கு மட்டும் தெரிந்து அவன் மணந்துகொள்ளும் பெண்கள்ஆசை நாயகிகள். இதற்குச் சான்றுகளாக அகநானூற்றின் 36, 46, 66, 166, 206 ஆகிய பாடல்களும் நற்றிணையின் 313ஆவது பாடலும் உள்ளன.

காலத்தின் தேவையோ!

ஆசை நாயகிகளைச் சமுதாயம் ஏற்றுக்கொண்டது ஓர் விபத்துதான்அது காலத்தின் தேவையாகக்கூட இருந்திருக்கலாம்அதாவதுபழந்தமிழ்ச் சமுதாயம் முதலில் வேட்டைச் சமுதாயமாக இருந்து பின்னர் போர்ச்சமுதாயமாக மாறியதுவேட்டையிலும் போரிலும் ஆண்களின் உயிரிழப்பு மிகுதிஆதலால்ஆண் துணையினை இழந்த பெண்கள் மிகுந்திருக்கலாம்அக்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட எண்ணிக்கையில் மிகுந்ததால் “பலதார மணம்“ (ஓர் ஆண்பல பெண்களை மணப்பதுஅதற்கு ஒரு சமநிலைத் தன்மையைக் கொண்டுவரும் என்று அச்சமுதாயம் கருதியிருக்கலாம்அப்படியென்றால், “ஒருவனுக்கு ஒருத்தி“ என்ற தமிழ்ப் பண்பாடு என்னவாயிற்றுஅப்பண்பாடு வாரிசுரிமைக்காகத்தான் பின்பற்றப்பட்டதுவாழ்க்கை நலத்துக்காக அல்ல.

சங்க காலத்தில் ஆசை நாயகிகள் மட்டும்தான் இருந்தனரோவிலைமகளிர் என்று யாரும் இல்லையாஇல்லைசங்க காலத்தில் இல்லை. ஆனால்தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் எழுதப்பெற்றுள்ள உரைகளில் விலைமகளிர் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மூலப் பாடல்களுக்கும் உரைகளுக்கும் இடைப்பட்ட காலம் மிகப்பெரியது.அதனால்தான்உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தின் சமூக வெளிப்பாடுகளே அவர்கள் உரைகளில் பிரதிபலித்துள்ளன.

தொல்காப்பிய மூல நூற்பாவில் பரத்தைகாமக்கிழத்தியர்பரத்தையர் என்ற சொற்கள் யாரைக் குறிக்கின்றனஅவை ஆசைநாயகியைத்தான் குறிக்கின்றனதலைவனின் பலதார திருமணத்தைக் (சமூகத்தால் ஏற்கப்படாதகுறிக்கின்றனவிலைமகளிரைக் குறிக்கவில்லை.

வெளியாள்

பரத்தை“ என்பதற்கு அயன்மைஅயலார்அயலாந்தன்மைஅயலவர்,வெளியாள்அந்நியர்புறப்பெண்டிர் என்று பொருள்கொள்ளலாம். பரத்தை என்பது, “வெளியாள்“ என்றால், “உள்ளாள்“ என்பது யாரைக்குறிக்கிறது?தலைவியைத்தான் குறிக்கிறதுதலைவியைத் தவிர்த்துத் தலைவனுக்கு இன்பம்தரும் பிற பெண்கள் வெளியாட்கள்தான் பரத்தையர்தான்.

ஆனால்அவ்வெளியாட்களாக அப்பெண்கள் தன் தலைவனுக்கும் அவனது தலைவிக்கும் பிறந்த குழந்தையைத் தன்குழந்தையாகப் பாவிக்கும் செயல்களும் அக்குழந்தைக்கு அணிகலன்களை வழங்குவதும் அக்குழந்தை அப்பெண்ணைத் தாய் என்று அழைப்பதும் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன.இப்பாசப்பிணைப்பினை எப்படிப் புரிந்துகொள்வது?

எக்காலத்திலும் எந்தப் பாலியல் தொழிலாளியும் தன் நுகர்வோரின் குழந்தையைத் தன் குழந்தையாகப் பாவித்ததில்லைஅக்குழந்தைக்குப் பொன்நகையை அணிவித்ததில்லைஅக் குழந்தை அவளைத் தாய் என்று அழைத்ததும் இல்லைஇவற்றின் வழியாக அவ் வெளியாட்கள் பரத்தையர் “விலைமகளிர் அல்லர்“ என்பது புலனாகின்றது.

சின்னம்மாக்கள்

தன் கணவரைப் போலவே தன் குழந்தையும் வெளியாட்களுடன் நட்புறவுகொள்வதைத் தலைவி கண்டிக்கும் நிகழ்வுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளனதலைவி அவ்வெளியாள்களை “எங்கையர்“ என்ற சொல்லால் அழைக்கின்றாள்.

அதாவது, “என்னுடைய தந்தை“ என்பது “எந்தை“ என்றானதுபோல, “என்னுடைய தங்கைகள்“ என்பது “எங்கையர்“ என்றானது.

தலைவிக்கு உடன்பிறந்த தங்கைகள் அவர்கள் அல்லர்ஆனால், “அம் முறையுடைய பெண்கள் அவர்கள்“ என்பது இங்கு குறிப்புணர்த்தப்படுகிறது.அப்படியானால்தலைவனின் குழந்தைக்கு அப்பெண்கள் சின்னம்மாக்கள்தானே!

அகநானூற்றின் 16ஆவது பாடல் பெரியம்மா-சின்னம்மாவின் உறவினை உறுதிப்படுத்தியுள்ளதுதன் தலைவனின் குழந்தையைக் கண்ட சின்னம்மா,அவனை அன்போடு அருகே அழைத்து, “வருக என்னுயிரே“ என்று கொஞ்சுகிறாள்அதனைக் கண்ட தலைவி, “குறுமகளேஏன் பேதுற்றனை.நீயும் இவன் தாய்தானே!“ என்று அன்புறவு பாராட்டுகிறாள்அத்தகைய அன்புறவு பலதார மணத்தில் பின்பற்றப்படுவதுதான்.

இச்சின்னம்மாக்கள் தம் தெருவில் (அவர்களுக்கெனத் தனித் தெருவும் இருந்தது பரத்தைச்சேரிதம் வீட்டில் தனித்திருந்துதலைவனோடு மட்டுமே வாழ்ந்தனர்அவர்களுக்குப் பிற ஆண்களோடுஎவ்விதமான தொடர்பும் இருக்கவில்லைஅவ்வாறு வெளியாட்கள் பிற ஆண்களோடு தொடர்பிலிருந்தால்தலைவி அவர்களை “எங்கையர்“ என்று அழைப்பாளா?ஆகசின்னம்மாக்கள் “விலைமகளிர் அல்லர்“ என்பது தெளிவாகின்றது.

இப்போதுஎன் மனத்தில் ஒரு கேள்வி எழுகின்றதுதலைவியைப் பெற்ற தாயினை “நற்றாய்“ என்றும் தலைவியை வளர்க்கும் தாயைச் “செவிலித்தாய்“ என்றும் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளனஆதலால்,செவிலித்தாய் என்பவள் தலைவியின் தந்தைக்கு ஆசைநாயகியாகாரணம்,இலக்கியத்தில் தலைவியின் தோழியாக வருபவள் செவிலித்தாயின் மகள் அல்லர்செவிலித்தாய்க்குச் சொந்த மகனோமகளோ இருப்பதாக இலக்கியத்தில் குறிப்புகள் இல்லைஇது மேலும் ஆய்வுக்குரியது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குழப்பமும் தெளிவும்

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள “காமக்கிழத்தியர்“ சொல் யாரைக் குறிக்கிறதுவிலைமகளிரையாஅல்ல. “கிழத்தி“ என்றால்தலைவியைக் குறிக்கும். “கிழவன்“ என்பதுதலைவனைக் குறிக்கும். “காமக்கிழத்தியர்“ என்பதுஆசைநாயகிகளைக் குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் காணப்படும் “காமக்கிழத்திகாதற்பரத்தை,சேரிப்பரத்தைநயப்புப் பரத்தைஇற்பரத்தைஇல்லிடப்பரத்தை“ போன்ற சொற்கள் அவ் இலக்கியங்களின் மூலப்பாடலில் இடம்பெறவில்லைஅப் பாடல்களின் திணைதுறைஅடிக்குறிப்புகள்பதவுரை போன்றவற்றில் காணப்படுகின்றனஇவை அனைத்தும் அப்பாடல்களைப் புரிந்து கொள்வதற்காகப் பிற்காலத்தில்சங்ககாலத்துக்குப் பின்னர் எழுதப்பெற்றவை.

முற்காலத்தில் “நாற்றம்“ என்ற சொல் “நறுமணம்“ என்ற பொருளில் கையாளப்பட்டதுபிற்காலத்தில் அதே சொல் “விரும்பத்தகாத மணம்“ என்ற பொருளில் கையாளப்பட்டுவருகின்றதுஅதுபோலத்தான்முற்காலத்தில் ஆசைநாயகிகளைக் குறித்த சொற்கள் பிற்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுகின்றன.

யாருக்குச் சொந்தம் யார் யாரோ?

வெளியாளுக்குத் தன் தலைவனின் மனைக்கிழத்தி (தலைவியார் அவளுடைய பிள்ளைகள் யார் யார் என்பதெல்லாம் நன்றாகத் தெரியும்.ஆனால்தலைவிக்குத் தன் தலைவனுக்கு யாரெல்லாம் ஆசைநாயகிகள் என்பது தெரியாதுஒன்றிரண்டு என்றால் தெரிந்திருக்கும்!

வழித்தடத்தில் தன் தலைவனின் தலைவியைச் சந்திக்கும் ஒரு ஆசைநாயகிஅவளருகில் சென்றுதன்னை அறிமுகப்படுத்தும் விதமாக, “நான் தூரத்தில் வசிப்பவள்உனக்குத் தங்கைமுறையை உடையவள்“ என்று கூறித் தலைவியின் நெற்றியையும் கூந்தலையும் அன்புடன் வருடுகிறாள்இந்தப் பாசவருடல் அகநானூற்றின் 386ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளதுஇப்படிப் பாசமாக அவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டைகள் வருவதும் உண்டு.

சக்களத்திச் சண்டைகள்

சக்களத்தி“ என்றால் சக கிழத்தி என்று பொருள்அதாவதுஅக்காள் தங்கைகள்அவர்களுக்குள் ஏன் சண்டைவருகிறதுஅவர்களுக்குத் தனித்தனியே கணவர்கள் இருந்துவிட்டால் ஏன் சண்டைவரப்போகிறது?ஒரே கணவன் என்பதால்தான்அதுவும் அவர்கள் ஒருதாய் வயிற்று அக்காள் தங்கைகளாக இல்லாமல் இருப்பதால்தான் இச் சண்டை வலுக்கிறது.

குறிப்பாக இச் சண்டைகள் அக்காலத்தில் மருதத்திணை சார்ந்த இடங்களில்(வயலும் வயல் சார்ந்த இடங்கள்மிகுதியாக உள்ளதுகாரணம்,தலைவனிடம் செல்வம் மிகுந்துள்ளதுஅவனுக்கு “வீடுகள்“ சிலவற்றைப் பராமரிக்கும் தெம்பும் வந்துவிடுகிறதுஅவன் ஆசைநாயகியிடம் மிகுதியான நேரத்தைச் செலவிடுவது தலைவிக்குப் பிடிக்கவில்லைதன் கணவனைக் கட்டுப்படுத்த இயலாத தலைவிதன் கணவனின் ஆசைநாயகியின் மீது சினத்தைக் காட்டுகிறாள்இதனை அகநானூற்றின் 76, 276, 336, 346 ஆகிய பாடல்களும் குறுந்தொகையின் 8, 164, 80, 364, 370ஆகிய பாடல்களும் விளக்கியுள்ளன.

தலைவனைப் பிரிந்து வருந்துவது தலைவி மட்டுமல்லசிலவேளைகளில் ஆசைநாயகிகளும்தான்இச்சோகத்தினை நற்றிணையின் 90, 216,குறுந்தொகையின் 238, அகநானூற்றின் 146 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றதுஆசைநாயகிகள் விலைமகளிர்களாக இருந்தால்,இச்சோகம் அவர்களை வாட்டியிருக்குமாஇதன்வழியாகவும்,ஆசைநாயகிகள் விலைமகளிர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 320ஆவது பாடல் ஒரு பரத்தை தன் தலைவன் தன்னைப் பிரிந்து பிறிதொரு பரத்தையிடம் சென்றதால் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ளதுஅப்படியென்றால் அந்தப் பரத்தை கைவிடப்பட்டவள் ஆகிறாள்அவள் இனி வேறு ஒரு தலைவனைத் தேடிக்கொள்வாளோஅப்படியென்றால்இந்தப் பரத்தையும் விலை மகளாகிறாளோ?

ஆசைநாயகியைச் சரிவரப் பேணிக்காக்காத தலைவர்களால் அவர்கள் வேறுவழியின்றிவாழ்வாதாரத்துக்காக விலைமகளாக மாறுகின்றனர்.போரில் வென்று கொள்ளையடித்துவரும் பொருட்களுடன் அடிமைகளாகப் பெண்களையும் கொண்டுவருதல் வழக்கமாக இருந்துள்ளதுஅவ்வாறு கொண்டு வரப்பட்ட மகளிர் “கொண்டிமகளிர்“ என்று அழைக்கப்பட்டனர்.அப்பெண்களும் காலப்போக்கில் விலைமகளிராகிறார்கள்.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள 170ஆவது பாடல் பரத்தையைக் கண்ட ஊர்ப்பெண்கள் தம் தலைவனை அவளிடமிருந்து காத்துக்கொள்வதற்கு முற்படுவதாகக் கூறியுள்ளதுஅப்படியென்றால்ஆசைநாயகியைவிட விலைமகள் ஆபத்தானவளோ!

சங்க காலத்தில் பெண்ணுடல் விற்கப்படவில்லைசங்க காலத்துக்குப் பின்னர் பெண்ணுடல் பல வகைகளில் விற்கப்பட்டதுகாலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் வீதிகளில் விலைமகள்கள் பெருகிவிட்ட தன்மையினைப் புலப்படுத்துகின்றன.

மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள 569 முதல் 576 ஆம் வரையிலான அடிகள் அக்காலத்தின் பெரு நகரங்களுன் ஒன்றான மதுரை நகர வீதிகளில் விலைமகள்கள் வலம்வருவதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.

பரிபாடலின் 20ஆவது பாடலின் 48 முதல் 58 வரையிலான அடிகளில் தெருவில் செல்லும் விலைமகளைக் கடிந்துகொள்ளும் நிகழ்வு சுட்டப்பெற்றுள்ளது.

சங்ககாலத்திற்குப் பின் காலவோட்டத்தில் இவ் விலைமகளுக்குப் பொதுமகள்வரைவின் மகளிர்கணிகைசலதிதாசிவேசிதேவரடியாள்,விபச்சாரிபாலியல் தொழிலாளி இன்னபிற பெயர்கள் ஏற்பட்டன.

காலங்கள் மாறினாலும் மனைவிஆசைநாயகிவிலைமகள் என்ற முத்தரப்பும் வலுவுடன்தான் உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உணவும் மதுவும்

Tamil_foodசங்க காலம் / தேடல் – 10

அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா,உணவுவல்சிஉண்டி,ஓதனம்அசனம்பகதம்,இசைஆசாரம்உறை,ஊட்டம்புகாமிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 623ஆவது நூற்பா, “எண்வகை உணவு“ பற்றிக் குறித்துள்ளதுஅவை எவை என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்கவில்லைஆனால்உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். ஆனால்அவ்விளக்கம் ஏற்புடையதாக இல்லைதமிழர் உணவுகள் எட்டுவகை என்றால்அவை சமைக்கப்படும் முறையிலா அல்லது உண்ணப்படும் முறையிலா என்ற வினா எழுகின்றதுசங்க இலக்கிய அடிகள்தமிழர்கள் உணவுவகை எண்பதுக்கும் மேற்பட்டது என்று காட்டுகின்றன.

சைவ உணவு (மரக்கறி)

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில்தொல்தமிழர்கள் அரிசியைப் பயன்படுத்தியதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன.

நெல்லிலிருந்து அவர்கள் அரிசியைக் கைக்குற்றல் கைக்குத்தல் (உலக்கை கொண்டு இடித்தல்முறையில் இடித்துப் பிரித்துப் பயன்படுத்திய செய்தியினைப் புறநானூற்றின் 399ஆம் பாடல் தெரிவித்துள்ளது.பெரும்பாணாற்றுப்படையின் 98ஆவது அடியிலும் சிறுபாணாற்றுப்படையின்193ஆவது அடியிலும் இச்செய்தியினைக் காணமுடிகின்றது.

அகநானூற்றின் 37ஆவது பாடலில் காணப்பயிறுடன் (கொள்பாலினைக் கலந்து வைத்த கஞ்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைபடுகடாமின் 434 ஆவது அடியில் அவரை விதையை அரிசியுடன் கலந்து செய்த கஞ்சி பற்றிய செய்தி காணப்படுகின்றது.

பட்டினப்பாலையின் 44, 45ஆவது அடிகளில் சோறுவடித்த கஞ்சி ஆறுபோல ஓடியதாகக் குறிப்புள்ளது.

பழந்தமிழர்கள் சோறு என்பதற்கு அடிசில்அழினிகூழ்அவிழ்கொன்றி,நிமிரல்புழுங்கல்பொம்மன்மிதவை எனப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

பச்சரிசியால் உருவாக்கப்பட் சோறினைப் “பொங்கல்“ என்றும் வேகவைத்த அரிசியால் உருவாக்கப்பட்ட சோற்றினைப் “புழுங்கல்“ என்றும் அழைத்தனர்.

சோறினைச் சிறுசோறுபெருஞ்சோறு என்றும் வகைப்படுத்தியிருந்தனர்.மேலும்சோறில் கலக்கும் அல்லது சோறின் தன்மைக்கு ஏற்ப அதனை ஊன்சோறுகொழுஞ்சோறுசெஞ்சோறுநெய்ச்சோறுபுளிச்சோறு,உளுந்தஞ்சோறுபாற்சோறுவெண்சோறு எனப் பலவகைப்படுத்தியிருந்தனர்.

உழவர்கள் வரகரிசிச்சோற்றுடன் புழுக்கிய அவரைப் பருப்பினைக் கலந்து உண்ட செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 195ஆம் அடி குறிப்பிட்டுள்ளது.

அகநானூற்றின் 250ஆவது பாடல் மற்றும் நற்றிணையின் 344ஆவது பாடலின் வழியாக அக்காலத் தமிழர்கள் தானியங்களை வெயிலில் காய வைத்தபின் சமைத்த செய்தியினை அறியமுடிகின்றது.

தின்பண்டங்கள்

பெரும்பாணாற்றுப்படையின் 194 மற்றும் 195ஆம் அடிகள் “கும்மாயம்“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றிக் குறிப்பட்டுள்ளதுஇதே பண்டம் பற்றிய குறிப்பினை அம்பாசமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலும் காணப்படுகின்றதுஇப்பண்டத்துக்குப் பயிற்றுப்போகம் என்ற வேறொரு பெயரும் உண்டு.

மதுரைக்காஞ்சியின் 624ஆவது அடியில் “மெல்லடை“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் 625ஆவது அடியில் “மோதகம்“ (அப்பம்என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் 627ஆவது அடியில் “தீஞ்சேறு“ (அப்பம்என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாணாற்றுப்படையின் 372 மற்றும் 373ஆவது அடிகளில் “அப்பம்“ செய்யும் முறை சுட்டப்பட்டுள்ளது.

புறநானூற்றின் 381ஆம் பாடலில் “பண்ணியம்“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

வேகவைத்த நெல்லிலிருந்து “பொரி“ தயாரிக்கும் செயல் பற்றி ஐங்குறுநூற்றின் 53ஆவது பாடல் சுட்டியுள்ளது.

வேகவைக்காத நெல்லிலிருந்து “நெல்மா“ என்ற பெயரில் பாசவல் (அவல்)தயாரித்த செய்தியை அகநானூற்றின் 141ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.

மயக்கமென்ன?

அக்காலத்தில் மன்னர்கள்வீரர்கள்புலவர்கள்பாணர்கள் இன்னபிற மக்களும் தங்களின் தகுதிக்கு ஏற்பவும் விருப்பத்துக்கு ஏற்பவும் பல்வேறு வகையான மயக்க உணவுகளையும் உண்டுள்ளனர்சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ள “உண்டாட்டு“ என்ற சொல் நீர்ம மயக்க உணவினைப் பருகி (குடித்துமகிழ்வதனைக் குறிப்பிட்டுள்ளதுஅக்கால மக்கள் கள்அரியல்தோப்பிகந்தாரம்பிழிமட்டுமட்டம்வேரிநறவு,தேறல்மது என்ற பல்வேறு வகையான மயக்க பானங்களைப் பருகினர்.

சிறிய கள்பெரிய கள் என்பன மதுவின் அளவினைக் குறித்தனஅவை மது வகைகள் அல்லஅக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் எல்லா வகையான மதுவும் நொதித்தல் முறையால் தயாரிக்கப்படுபவையே!

அக்காலத்தில் மதுவைத் தயாரிப்பதற்காகப் பழச்சாறுஅரிசிக் கஞ்சிதேன் முதலியவற்றைப் புளிக்கவைத்துள்ளனர்இவற்றை வளைந்த மூங்கில் குழாய்களிலோ அல்லது தசும்பு என்ற பானையிலோ (இத்தசும்புப் பானையைப் பற்றித் தமிழரின் மண்பாண்டத் தொழில்நுட்பம் பற்றிய அத்தியாயத்தில் காண்போம்ஊற்றிக் காற்றுப் புகாதவாறு களிமண் பூசி அடைத்து அவற்றை மண்ணில் புதைத்துவைத்தனர்.இச்செயல்முறைகளைப் புறநானூறு 120 மற்றும் 129ஆம் பாடலிலும் மலைபடுகடாம் 463ஆம் பாடலிலும் காணமுடிகின்றது.

மதுவுக்கு எப்போது “கிக்“ (சுள்ளாப்புஏறும் என்பது பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளதுஇரு பகல் இரண்டு இரவு புளிக்கவைத்தால் மதுவுக்குச் சுள்ளாப்பு மிகுதியாகும் என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 279 முதல் 281 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளனநீண்ட நாள்கள் புளிக்கவைத்த மதுவின் சுள்ளாப்பு தேள் கொட்டியது போல நாவில் ஏறும் என்று புறநானூற்றின் 392ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

கள்“ என்பது தென்னை அல்லது பனை பாளைகளைச் சீவி அதிலிருந்து வடியும் நீர்மத்தை மண்பாண்டத்தில் சேகரித்து அதனைப் புளிக்கவைத்து உண்பதாகும்பனை மரத்திலிருந்து கள் வடிக்கப்பட்ட செய்தியினை நற்றிணையின் 323 ஆம் பாடல் தெரிவித்துள்ளதுஅக்கள்ளினைப் பருகி தன்னிலை மறந்து ஆடிய மக்கள் பற்றி அகநானூற்றின் 256,பட்டினப்பாலையின் 89, நற்றிணையின் 38 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளனசங்க இலக்கியத்தில் “கள்“ என்று வெறுமனே குறித்தால் அது தென்னங்கள்ளையே குறிக்கும். “பனங்கள்“ என்று குறித்தால் மட்டுமே அது பனைமரத்தின் கள்ளினைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

தேறல்“ என்பது நாரால் வடிகட்டித் தெளிய வைக்கப்பட்ட “கள்“ ஆகும்.பார்ப்பவர் முகம் தெரியுமாறு தெளியவைக்கப்படும் தேறலைப் “புறத்தேறல்“ என்று புறநானூற்றின் 398ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

தேறல்“ என்பதற்குக் “கள்ளின் தெளிவு“ என்றும் “தேனின் தெளிவு“ என்றும் இருவகையான விளக்கத்தினைத் தந்துள்ளனர்இதில் எதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற தெளிவினைத் திருமுருகாற்றுப்படையின்195ஆவது அடி தந்துள்ளதுஆம்அது தென்னை மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள்ளின் தெளிவு என்று பொருள்கொள்வதே சிறப்பு.

கள்ளினைத் தம் வீரர்களுக்கும் கள்ளின் தெளிவினைத் (தேறல்தானும் உண்டான் தலைவன் என்ற செய்தி புறநானூற்றின் 298ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளதுஇதில் நாம் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்தெளிய வைத்த கள்ளினைவிடத் தெளிய வைக்காத கள்ளில்தான் சுள்ளாப்பு மிகுதியாக இருக்கும்அதனைத்தான் தலைவன் தன் வீரர்களுக்கு வழங்கியிருக்கிறான்தான் சுள்ளாப்பு குறைந்த கள்ளினையே பருகியிருக்கிறான்.

மாம்பழம்தேன்பலாச்சுளை ஆகியவற்றைச் சேர்த்துப் புளிக்கவைத்த கள்ளின் தெளிவுதான் தேறல் என்று குறிஞ்சிப்பாட்டின் 188 முதல் 190வரையுள்ள அடிகள் தெரிவித்துள்ளனஆனால்இவ்வாறு செய்யப்படுவன “அரியல்“ என்று பதிற்றுப்பத்தின் 61ஆவது பாடல் தெரிவித்துள்ளது.ஆனால்அரிசிக் கஞ்சிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் “அரியல்“ என்று பெரும்பாணாற்றுப்படையின் 275முதல் 281வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளனஇது என்ன புதுக்குழப்பம்மது என்றாலே குழப்பம்தானே!

வீட்டிலேயே தாயரிக்கப்படும் கள்ளுக்குத் “தோப்பி“ என்று பெயர்நம் வீடுகளில் காப்பிடீ தயாரிப்பது போல அக்காலத் தமிழர்கள் “தோப்பி“ தயாரித்தார்கள்போலும்இதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 142ஆவது அடி தெரிவித்துள்ளதுவீட்டில் தயாரிக்கப்பட்டாலும் அதன் வீரியம் குறைவதில்லைதோப்பி நன்கு முற்றியிருந்தால் அது பாம்பின் நஞ்சு உடலில் ஏறுவது போலச் சுள்ளாப்பினைத் தரும் என்று அகநானூற்றின்348ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

காரைப் பழத்தினைப் பிழிந்து “காந்தாரம்“ என்ற மதுவினைத் தயாரித்துள்ளனர்இது திராட்சைச் சாறுபோலக் கரிய நிறமுடையது.காந்தாரம் பற்றிய குறிப்பு புறநானூற்றின் 258ஆவது பாடலில் உள்ளது.

மட்டு“ என்பது சுள்ளாப்பு குறைந்த மதுவகையாக இருந்துள்ளதுஇதனைப் பெண்கள் உண்டுள்ளனர்அவர்களுக்கு அச்சுள்ளாப்பு மிகவும் குறைவாக இருந்ததால் தன் கணவர் உண்ணும் சுள்ளாப்பு மிகுந்த மதுவினை அருந்தியதாகப் பட்டினப்பாலையின் 108ஆவது அடி தெரிவித்துள்ளது.

நிறம் மாறிய மட்டுவை “மட்டம்“ என்றனர்இது நீல மணியின் நிறத்தைப் பெற்றிருக்கும்இதுபற்றிப் பதிற்றுப்பத்தின் 12ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

பசுவின் நெய்போன்ற மதுவுக்கு “வேரி“ என்று பெயர்இது பற்றிப் புறநானூற்றின் 152ஆவது பாடல் சுட்டியுள்ளது.

பண்டைத் தமிழர் மிகுதியான கள்ளினைக் கொண்டுசெல்ல வண்டிகளைப் பயன்படுத்திய செய்தியை அகநானூற்றின் 126ஆவது பாடல் தெரிவித்துள்ளதுஇந்திய விடுதலைக்கு முன் தமிழகத்தில் “கள்வண்டிகள்“ புழக்கத்தில் இருந்தனஅவை சங்கத் தமிழரின் மதுமயக்கத்தின் குறியீடாகத் தள்ளாடித் தெருவலம் வந்தனஅக்காலத்தில் “கள்ளுக்கடைகள்“ இருந்தமை பற்றிய செய்தியைப் பதிற்றுப்பத்தின் 75ஆவது பாடல் குறித்துள்ளது.

இங்குக் கள்ளுக் கடை உள்ளது“ என்பதனை அறிவிப்பதற்காக அடையாளக் கொடிகளையும் அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்இப்போது ஃபிளக்ஸ் பேனர் வைப்பதுபோலஇச்செய்தியினைப் பட்டினப்பாலையின்180, 181ஆகிய அடிகளும் மதுரைக்காஞ்சியின் 372ஆவது அடியும் தெரிவித்துள்ளன.

அக்கால மக்கள் கடனுக்குக் கள்வாங்கிக் குடித்தும் பின்னர் கைக்குப் பொருள் கிடைத்ததும் அதனைக் கொண்டு அக்கள்ளுக் கடனினை அடைத்த செய்திகளைப் பெரும்பாணாற்றுப் படையின் 140, 141 ஆகிய அடிகளும் பதிற்றுப்பத்தின் 20ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.

கள்ளுக்குக் விலையாக (பண்டமாற்றுநெல்லும் யானைத் தந்தமும் பசுவும் தேனும் கிழங்கும் கொடுத்துள்ளனர்இதனை மலைபடுகடாமின் 462 முதல்464 வரையிலான அடிகளும் பதிற்றுப்பத்தின் 30ஆவது பாடலும் பெருநராற்றுப்படையின் 214, 215ஆகிய அடிகளும் உறுதிசெய்துள்ளன.

- – –



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்னபிற உணவு

பெரும்பாணாற்றுப்படையின் 307 முதல் 310 வரையிலான அடிகளில் “மாங்காய் ஊறுகாய்“ செய்துஉண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

கரும்பினை எந்திரங்களினால் பிழிந்த செய்தியைப் புறநானூற்றின் 99ஆவது பாடலும்அதன் சாற்றினைக் கட்டியாக்கி இனிப்புக்குப் பயன்படுத்திய தகவலைப் பெரும்பானாற்றுப்படையின் 259ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.

குறிஞ்சி நில மக்களுக்குத் தேன் முதன்மையான உணவாக இருந்துள்ளது.

நெய்தல்திணை மக்கள் குழல் மீனினைக் காயவைத்து அதனைக் கருவாடாக்கி உண்டசெய்தியை சிறுபாணாற்றுப்படையின் 163ஆவது அடி தெரிவித்துள்ளது.

அசைவ உணவு (புலால்)

பழந்தமிழர் அசைவ உணவினைப் (இறைச்சியைப்பைந்தடிஊன்பைந்துணி எனப் பலப் பெயர்களால் குறிப்பிட்டுள்ளனர்.

பசுவின் இறைச்சியினைப் பாறையில் காயவைத்து உண்டதாக அகநானூற்றின் 390ஆவது பாடல் கூறியுள்ளது.

இறைச்சியினை “உப்புக்கண்டம்“ போட்டும் உண்டுள்ளனர்அதனை இப்போது “கொடியிறைச்சி“ என்று சில பகுதிகளில் குறிப்பிடுகின்றனர்.அதாவதுஇறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி அதனை உணவுக்குப் பயன்படுத்துவதுஇதனைப் பழந்தமிழர் “வாடூன்“ என்று குறிப்பிட்டுள்ளனர்.புறநானூற்றின் “இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்“ என்ற அடி உறுதிசெய்கின்றதுஇதனை அக்காலத்தில் “உணங்கல்“ என்றும் அழைத்துள்ளனர்.

இறைச்சியைப் பொரித்து உண்ணும் பழக்கமும் அக்காலத் தமிழரிடம் இருந்துள்ளது என்பதற்குப் புறநானூற்றின் 389ஆவது சான்றாக உள்ளது.இறைச்சியைப் பொரிக்கும் போது எழும் ஓசையானது நீர் நிறைந்த பொய்கையில் (தடாகம்மழைத்துளி விழுவது போல இருந்தது என்று அப்பாடல் குறிப்பிட்டுள்ளது.

இறைச்சியை இரும்புக் கழியில் கோத்துஅதனைத் தீயில் வாட்டி சமைத்து உண்டுள்ளனர்இதற்குச் சான்றாகப் பொருநராற்றுப்படையின் 105ஆம் பாடலும் அகநானூற்றின் 169ஆம் பாடலும் உள்ளன.

வீரர்கள் இறைச்சியை மிகுதியாக உண்டதால் அவர்களின் பற்கள் கலப்பையின் கொழு தேய்வதைப் போலத் தேய்ந்து மழுங்கியதாகப் பொருநராற்றுப்படை என்ற இலக்கியம் சுட்டியுள்ளது.

புறநானூற்றின் 395ஆம் பாடல் “உவியல்“ என்ற ஓர் உணவுப் பண்டத்தை வாளைமீனின் சதையிலிருந்து செய்துள்ளமையைத் தெரிவித்துள்ளது.

சைவ – அசைவ கலப்பு உணவு

பழந்தமிழகத்தின் மருத நில மக்கள் சைவ – அசைவ உணவுகளைக் கலந்து உண்டுள்ளனர்சிறுபாணாற்றுப்படையின் 195ஆம் அடியில் வேகவைத்த நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயைக் கலந்து விருந்தளித்த செய்தி காணப்படுகின்றது.

புறநானூற்றின் 60ஆம் பாடல் மற்றும் 119ஆம் பாடல் ஆகியன இருவேறு வகையாகப் புளிக்கறி சமைத்த விதத்தினைப் புலப்படுத்தியுள்ளனமுன்னது அயிலை மீனைக் கொண்டும்பின்னது செம்புற்றீயலைக் கொண்டும் புளிக்கறி சமைத்து அதனைச் சோறுடன் இணைத்து உண்டுள்ளனர்.

உணவே வாழ்க்கை

பழந்தமிழர்கள் எவ்வாறெல்லாம் அசைவ உணவுகளை உண்டனர் என்ற செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 255 மற்றும் 280ஆவது பாடல்,குறுந்தொகையின் 320ஆம் பாடல்பட்டினப்பாலையின் 63ஆவது பாடல் நற்றிணையின் 60ஆவது பாடல் ஆகியன விரிவாகக் கூறியுள்ளன.

அக்காலத் தமிழர் அசைவ உணவுப் பட்டியலில் மீன் வகைகள் பறவை வகைகள் எனப் பல இனங்களும் இருந்தனர்அக்காலத் தமிழருக்குப் பசுதான் சிறந்த அசைவ உணவாக இருந்துள்ளதுஅதாவதுதிராவிடர்களின் சிறந்த அசைவ உணவு பசுஅக்காலத்திலும் தமிழகத்து அந்தணர்கள் (அக்காலத்தில் “அந்தணர்“, “பார்ப்பார்“, “ஐயர்“ ஆகிய சொற்கள் சாதியையோ குலத்தையோ குறிக்கவில்லைஇச்சொற்கள் சான்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. “சான்றோர்“ என்றால்கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர் என்பதாகும்அசைவ உணவினை உண்ணமாட்டார்கள்பிற்காலத்தில் தமிழகத்தில் பிறக்காத அந்தணர்கள் பசுவைத் “தெய்வம்“ என்று நமக்குக் கற்பித்துஅதனை நம் அசைவ உணவுப் பட்டியலிலிருந்து நீக்கச் செய்தனர்தமிழர்கள் தம் உணவில் பசுவை இழந்தது ஒரு துன்பியல் நிகழ்வுதான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விருந்து

சங்க காலம் / தேடல் - 11

உணவளிக்கும் பண்பு

Flora in Vellalore (4)தொல்தமிழர்கள் தம் வாழ்வில் ஒருவேளை உணவுக்குக்கூடப் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டவர்கள்.அப்படியிருக்கஅவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தம்மை நாடிவந்தோருக்கு மிகுதியாக உணவளித்துள்ளனர்.அரும்பாடுபட்டுப்பெற்ற உணவினைப் பிறருக்கு வழங்கி மகிழும் பண்பு அவர்களுக்கு எப்படி வந்தது?

அவர்கள் எத்தகைய உணவினைஎவ்விதத்தில்,எவருக்கெல்லாம் வழங்கினர் என்பதனைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல விரிவாகக் கூறியுள்ளனஅவை விருந்தினை மிகைப்படுத்திப் பாடினாலும்அவற்றின் உள்ளார்ந்த சாரத்தை நம்மால் மறுக்கமுடியாது.உணவினைத் தேடுவதில் தமிழரின் வீரம் மிளிர்கிறதுஅவ் உணவினைப் பலரோடு பகிர்ந்துண்பதில் அவர்களின் கொடைப் பண்பு சிறப்படைகிறது.தமிழரின் வாழ்வைக் “காதலும் வீரமும்“ என்று சொல்வதைவிட “வீரமும் கொடையும்“ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆம்இது உணவுக்கொடைகொடைகளுள் சிறந்தது – தலையாயது.

விருந்து உருவாக்கம்

சங்க காலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த தமிழர்கள் தாங்கள் வேட்டையில் பெற்றகொள்ளையடித்துப் பெற்ற உணவுகளைக் கொண்டுவந்து தங்களின் குழுவினரிடையே பகிர்ந்துகொண்டனர்.எஞ்சியவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கத் தெரியாததால்தங்கள் குழுவினர் அல்லாதோருக்குக் கொடையாக வழங்கியுள்ளனர்.

தொல்காப்பியத்தில் உள்ள வெட்சித்திணை துறைகளுள் இறுதியாக “பாதீடுஉண்டாட்டுகொடை“ என்ற மூன்றும் இடம்பெற்றுள்ளன. “பாதீடு“ என்பதுஇனக்குழுக்கள் உணவுகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுதல். “உண்டாட்டு“ என்பதுகள்ளுண்டு மகிழ்தல். “கொடை“ என்பதுதங்களை நாடிவரும் பிற இனக்குழுவினருக்கு இலவசமாக வழங்குதல்இதனை நற்றிணையின் 85, 336 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.

உணவைக் கொடையாக வழங்கும் செயல் பெரிய அளவில் நடைபெறும்போதும் உணவினைக் கொடையாகப் பெற்றவர்கள் அங்கேயே இருந்து உண்டபோதும் அவ் உணவுக்கொடைவிருந்தாகப் பரிணமித்தது.

நூலின் வனப்பு இயல்புகள் எட்டனுள் ஒன்று “விருந்து“ என்று தொல்காப்பியம் சுட்டியுள்ளதுஅதாவதுமரபார்ந்த நூலாக்க முறையைவிடப் புதிதாக ஒரு நூல் உருவாக்கப்படுமானால் அதற்குப் பெயர் விருந்துபுதிதாக வருவது விருந்துபுது வரவு என்பதுபோலபுதிதாக வருபவர் விருந்தினர்அவ்விருந்தினருக்கு உணவளித்தல் விருந்து.இவ்வாறுதான் “விருந்து“ என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கநேர்கிறது.

வாங்க சாப்பிடலாம்!

பெரும்பான்மையாக இந்த உணவுக்கொடை ஓர் இனக்குழுவுக்கும் பிரிதொரு இனக்குழுவுக்கும் ஒரு பாலமாக இருந்துள்ளதுஉணவால் உருவாக்கப்பட்ட இந்த உறவு அவர்களுக்குள் நட்புறவை ஏற்படுத்தி,ஒற்றுமையைக் கொண்டுவந்ததுவேட்டைக்காகவோ அல்லது உண்வுப்பொருள் தேடியோ தொலைதூரம் செல்லும் இனக்குழுக்களுக்குப் பிற இனக்குழுக்கள் உணவும் உறைவிடமும் நல்கியுள்ளனஇதனை அகநானூற்றின் 187ஆவது பாடலில் காணமுடிகின்றது.

இந்த விருந்துமுறை பின்னாளில் அவர்களுக்குள் புறமணமுறையையும் தோற்றுவித்ததுஇருவேறு இனக்குழுவைச் சார்ந்த தலைவன் – தலைவியர் சந்தித்து மகிழும்போது தலைவிதலைவனைத் தன் இல்லத்துக்கு உணவு உண்ண அழைப்பதும் (அகநானூறு-200, 300),தலைவியிடம் தலைவன் உன் வீட்டுக்கு உணவு உண்ண வரலாமா என்று வினவுவதும் (அகநானூறு-110) தலைவிக்காகத் தோழிதன் தலைவியின் தலைவனை விருந்துண்ண அழைப்பதும் (அகநானூறு-340,குறுந்தொகை–179, நற்றிணை-276) வெறுமனே உண்டுஉறங்க அல்ல.தலைவன்-தலைவியின் காதல் நெருக்கத்துக்கு வழிவகுக்கத்தான்.இவற்றின் வழியாகத் தலைவன்தலைவியின் வீட்டாரிடம் நெருங்கிப் பழகவும் பின்னாளில் தலைவியைப் பெண்கேட்டு வரவும் வழிவகை ஏற்படுகின்றது.

மன்னன் கோப்பெருநற்கிள்ளி மானை வேட்டையாடி அதன் கறியினைத் தீயில் வாட்டிப் புலவர்களுக்கு உணவளித்த செய்தியைப் புறநானூற்றின் 150மற்றும் 152ஆவது பாடல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்காலத்தில் விருந்தினருக்கு முதலில் எலுமிச்சைச் சாறு தருவதுபோல அக்காலத்தில் விருந்தினருக்கு முதலில் தரப்படுவது மதுஅதனைக் குடித்து மகிழ்ந்த பின்னர் அவர்களுக்குப் புலால் உணவினை வழங்கியுள்ளனர்

பொருநராற்றுப்படையின் 85 முதல் 89 வரையிலான அடிகள்விருந்தினர்கள்(வழிப்போக்கர்கள்மதுவை மாந்தி மகிழ்ந்த செய்தியைத் தடுமாற்றம் இன்றிக் குறிப்பிட்டுள்ளன.

அருகம்புல்மேய்ந்து கொழுத்த செம்மறிஆட்டுக்கறியினைச் சுடச்சுட விருந்தினருக்கு வழங்கிய செய்தியையும் விருந்தினர்கள் அக்கறியினைத் தம் வாய்க்குள்ளேயே ஆறவைத்து உண்ட செய்தியையும் பொருநராற்றுப்படையின் 103 முதல் 108 வரையிலான அடிகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன.

மலைபடுகடாமின் 164 முதல் 169 வரையிலான அடிகள் விருந்தினருக்குத் தினையரிசிச் சோற்றினை நெய்யில் பொரித்த புலாலுடன் கலந்து அளித்ததாகத் தெரிவித்துள்ளன.

நெல் விளையாத புன்புலச் சீறூரில் விளைய வைத்த வரகையும் தினையையும் முற்றிலுமாக இரவல் மாக்களுக்குத் தந்தாலும்கூட,தன்னிடம் வந்தவர்க்குக் கிண்ணத்தில் தயிரும் களாப்பழம் போலப் புளிக்கும் கள்ளும் வாடூனும் வரகரிசியோடு நெய்யிட்டுச் சமைத்த வெண்கோற்றுக்களியையும் வழங்கிய சீறூர் மன்னர் பற்றிய செய்தியினைப் புறநானூற்றின் 328ஆம் பாடல் உரைத்துள்ளது.

விருந்தினர் வராத நாள்களை வீண் நாள்களாகப் பண்டைத்தமிழர்கள் கருதியுள்ளனர்தங்களுக்கு அமிர்தம் கிடைத்தாலும் அதனை விருந்தினரோடு பகிர்ந்து உண்ணவே அவர்கள் விரும்பியுள்ளனர்இதனைப் புறநானூற்றின் 182ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

தாங்கள் நெடுவழிப்பயணம் மேற்கொள்ளும்போது தங்களுடன் மூங்கில் குழாய்களில் அடைத்தும் தம்முடன் அழைத்துச்செல்லும் கால்நடைகளின் கழுத்தில் பல்வேறு உணவுகளைச் சுமத்தியும் செல்வர்அவைஅவர்கள் செல்லும் வழியில் யாராவது வழிப்போக்கர்கள் பசியுடன் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு அளிப்பதற்காகத்தான்இதனை அகநானூற்றின் 311ஆவது பாடல் உறுதிசெய்துள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எப்படிக் கவனித்துக்கொண்டனர்?

பொருநர்கள் விருந்துக்குச் சென்ற இடத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவுவகையறாக்கள் குறித்துப் பொருநராற்றுப்படையின் 113 முதல் 116வரையிலான அடிகளில்வேகவைத்ததும் விரல்போல் நிமிர்ந்து நிற்கும் கடினமற்ற அரிசிச் சோற்றைப் பாலில் கலந்துபொரிகறிகள் மற்றும் புளிக்கறியுடன் சேர்த்துத் தங்களுக்கு வழங்கப்பட்டதாகப் தெரிவித்துள்ளனர்.

பொருநராற்றுப்படையின் 74 முதல் 78 வரையிலான அடிகள் எவ்வாறு விருந்தினரைக் கவனிக்கவேண்டும் என்று விவரித்துள்ளன.விருந்தினருடன் நட்புறவுடன் இனியசொற்களைப் பேசிபுதிதாகக் கன்றினை ஈன்ற பசு எவ்வாறு தன் கன்றுடன் நெருங்கிப் பரிவுகாட்டுமோ அவ்வாறு அணுகிஅவர்களின் எலும்பும் குளிரும்படியாக அன்புசெலுத்துதல் வேண்டும் என்று அந்த இலக்கிய அடிகள் தெரிவித்துள்ளன.

பெரும்பாணாற்றுப்படையின் 477 முதல் 479 வரையிலான அடிகள் எவ்வாறு விருந்தினருக்கு உணவளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.விருந்தினருக்கு இரவில் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போல பல்வேறு வகையான உணவுகளைத் தனித்தனிக் கிண்ணங்களில் வைத்து,அவர்களுக்கு அருகே அமர்ந்துஅவர்கள் விரும்பியவற்றை உய்த்தறிந்து,அவர்களுக்குப் பரிமாறி உணவளிக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட அடிகள் சுட்டியுள்ளன.

விருந்தினரை வழியனுப்பும்போது அவர்களுக்குக் குதிரை பூட்டிய தேரினைப் பரிசளிப்பதும் உண்டுஇதனைக் குறுந்தொகையின் 205ஆவது பாடல் உறுதிசெய்துள்ளது.

விருந்தினருடன் ஏழு அடிகள் முன்சென்று அவர்களை வழியனுப்பி வைப்பது சங்கத் தமிழரின் பண்பாடுகளுள் ஒன்றாக இருந்துள்ளது.இதுபற்றிப் பொருநராற்றுப்படையின் 164 மற்றும் 165ஆவது அடிகள் விளக்கியுள்ளன.

விருந்து வைத்தே தீருவேன்!

தன்னைக் காணவந்தோருக்கும் ஏதுமில்லாது வருந்திவந்தோருக்கும் தன்னால் இயன்ற விருந்தினை நல்கியுள்ளனர்அதற்காகத் தம்பொருளினைப் பணையமும் வைத்துள்ளனர்முதல் நாள் தன்னுடைய வாளையும் மறுநாள் தன்னுடைய கரிய சீறி யாழினையும் ஒரு பாணர் பணையப் பொருளாக வைத்து விருந்து பேணியதனைப் புறநானூற்றின்316ஆம் பாடல் காட்டியுள்ளது.

ஓர் இனக்குழுத்தலைவன் தான் வறுமையில் வாடும்போதும் தன்னை நாடிப் பசியுடன் வந்த பாணருக்கு வரகினைக் கடனாகப் பெற்று உணவு படைத்த செய்தியினைப் புறநானூற்றின் 327ஆம் பாடல் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்த வரகுதினை என எல்லாவற்றையும் இரவலர்க்கு உண்ணக் கொடுத்துவிட்டதால் கதிரில் முற்றிக் காய்ந்த விதைத் தினையை உரலில் இட்டுஇடித்துசமைத்து அவ்வூர்த் தலைவனின் மனைவி உண்டதாகப் புறநானூற்றின் 333ஆவது பாடல் கூறியுள்ளது.

விருந்தளிக்கப் பெருவிருப்பம் கொண்டுஅதற்காகப் பொருளீட்டி வருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொருள் தேடச் சென்ற சங்கத் தமிழர் பற்றி அகநானூற்றின் 205ஆவது பாடல் எடுத்துரைத்துள்ளது.

ஒவ்வொருநாளும் தன் வீட்டின் தலைவாசல் கதவினை அடைக்கும் முன்னர்வீதிகளில் யாரேனும் புதியவர்கள்விருந்தினர்கள் (அதிதிகள்)வருகிறார்களா என்று உற்றுநோக்கிஅவ்வாறு யாரேனும் வந்தால் அவர்களுக்கு உணவளித்த பின்னரே உறங்கச் சென்றுள்ளனர்இதனை நற்றிணையின் 142ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

தலைவியின் வீட்டிற்குத் தலைவன் விருந்துண்ண வருவது தலைவியின் வீட்டாருக்கு அதிர்ச்சியையும் வழங்கியுள்ளதுதலைவன் ஒருநாள் மட்டும் விருந்தினராகத் தலைவியின் வீட்டில் உண்டுதங்குகிறான்அதனால் மனநலம் சிதறிய தலைவியின் தாய்போர் நிகழும் இடத்துக்கு அருகில் உள்ள ஊராரைப்போலப் பலநாள் உறங்காது தவித்திருக்கிறாள்இதனை குறுந்தொகையின் 292ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

விருந்தும் விதிமுறைகளும்

தலைவனும் தலைவியும் இணைந்து தன்னினத்தினருக்கும் பிற இனத்தினருக்கும் விருந்துபடைத்த நிலை காலவோட்டத்தில் மறுபடத்தொடங்கியதுஒருவகையில் இம்மாற்றம் விருந்து படைத்தல் சார்ந்த விதிமுறையாகவும் கைக்கொள்ளப்பட்டது.

தலைவன் இல்லாதபோது தலைவிமட்டும்கூட தனித்த நிலையில் விருந்துபடைத்த செய்தியைப் புறநானூற்றின் 319, 326 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.

தலைவன் இல்லாதபோது தலைவி யாருக்கும் விருந்துபடைக்கும் அனுமதி மறுக்கப்பட்டதுஇதனை நற்றிணையின் 81, 361 ஆகிய பாடல்களும் ஐங்குறுநூற்றின் 442ஆவது பாடலும் சுட்டியுள்ளன.

ஏன் இத்தகைய விதிமுறைகள் தோற்றம் பெற்றனஇதற்கு விடையாக, “சமூகத்தின் ஒரு பண்பாட்டுக் கூறு ஒரு சமூகத் தேவை கருதித் தோற்றம் கொள்ளும்அச்சமூகத் தேவை நிறைவெய்திய பின்னர் அப்பண்பாட்டுக் கூறு அழிந்துவிடும்அல்லது உருமாறிப் போகும்இது சமூக நடப்பியல்விருந்து என்னும் பண்பாட்டுக் கூறு பரிமாற்றம் எனும் சமூகத் தேவை கருதித் தோற்றம் கொண்டதுபரிமாற்றம் என்பதன் அடிப்படைத் தன்மைகள் சங்க கால அரசியல்சமூகபொருளாதாரசமயக் காரணிகளால் மாற்றம் பெறவே விருந்தும் தன்னை உருமாற்றிக்கொண்டது“என்று சிலம்பு நாசெல்வராசு கூறியுள்ள கருத்து சிந்திக்கத்தக்கது.

தலைவன் – தலைவி இணைந்து வழங்கிய விருந்து பொதுவுடைமைச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம்தலைவன் இல்லாதபோது தலைவி வழங்கிய விருந்து தாய்வழிச் சமுதாயத்தின் “அதிகாரநிலை“ எனலாம்.தலைவன் இல்லாதபோது தலைவி விருந்து படைக்கக்கூடாது என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் “அடக்குமுறை“ எனலாம்.

உட்சுவை குறைந்த விருந்து

விருந்து“ என்ற ஒன்று தோற்றம்பெறாதபோதுஇனக்குழுக்கள் தங்களுக்குள் மட்டும் உணவினைப் பங்கீடு செய்துவந்தனஅப்போது,அவர்களுக்குள் அகமணமுறைமட்டுமே நிலவியதுஅந்நிலையில் அவர்கள் வேட்டைச் சமூகமாக இருந்ததால்அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் என எவையும் பெரிய அளவில் அவர்களிடம் இல்லை.

விருந்து“ என்ற ஒன்று தோன்றிய பின்னர்பிற இனக்குழுக்களுடனான உறவு பேணப்பட்டதுஅதன் பின்விளைவாகப் புறமணமுறை உருவானது.வேட்டைச் சமுதாயம் ஆநிரை வளர்ப்புச் சமுதாயமாகப் பரிணமித்த சூழிலில்அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் பெரிய அளவில் உருவாகினபுறமணமுறையால் ஓர் இனக்குழுவுக்குள் இருந்த அசையும் மற்றும் அசையாச் சொத்து பிற இனக்குழுவுக்குச் சென்றுசேர்ந்தன.

தன்குழுவினரின் சொத்து பிறகுழுவினருக்கு உரிமையுடையதாக மாற மூலக்காரணியாகத் திகழும் விருந்தினைக் கட்டுப்படுத்த விரும்பினர்.விருந்திற்கான வரைமுறைகளைவிதிகளை உருவாக்கினர்அதனால்,விருந்தின் “உட்சுவை“ குறைந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அழகு

சங்க காலம் / தேடல் - 12

யாருக்காக?

15_madurai1நலமும் வளமும் அழகிலிருந்துதான் தொடங்குகின்றனஅழகு ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகின்றதுஅது இயற்கையழகாகவோ செயற்கையழகாகவோ இருக்கலாம்ஆனால்அழகு முதன்மைத்தேவைதான்யாருக்காக ஒருவர் அழகாக இருக்கவேண்டும் என்ற வினாவுக்கான உண்மையான விடை, “அவரவர்களுக்கான அழகு“ என்பது அல்ல. “எல்லோருக்குமான அழகு“ என்பதுதான்உண்மையில்பிறருக்காகத்தான் நாம் நம்மை அழகாக்கிக்கொள்கிறோம்அக்கால மக்கள் தமது உணவுத் தேவைக்குப் பின்னர் உடைத்தேவையிலும் அலங்காரத் தேவையிலும் கவனம் செலுத்தினர்ஆம்,மனிதன் உடையிலும் அலங்காரத்திலும்தான் புறவயமாக விலங்கிலிருந்து வேறுபடுகின்றான்.

ஆடைகள் ஆயிரம்

தொல்தமிழர்கள் தழைகளையும் பூக்களையும் மரல்நாராலும் நறைநாராலும் கோத்து ஆடையாக அணிந்து வந்தனர்விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் கம்பளி ஆடைகளையும் அணிந்தனர்பஞ்சையும் பட்டு நூலையும் கொண்டு நெய்து துணிகளை உருவாக்கினர்மலை எலியின் முடியினையும் சிறு விலங்குகளின் முடிகளையும் துணிகளை உருவாக்கப் பயன்படுத்தினர்அத்துணிகள் புகையைப்போலபால் ஆவியைப் போலபாம்புச் சட்டையைப் போலமூங்கிலின் உரியைப் போல மிக மெல்லியதாக இருந்தன.

இடையன் ஒருவன் பசுமையான இழைகளால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் மாசுபடிந்த ஆடையையும் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 54ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள்மரப் பட்டைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளையும் தழைகளால் செய்யப்பட்ட ஆடைகளையும் அணிந்திருந்ததாகத் திருமுருகாற்றுப்படையின் 201 முதல் 204 வரையிலான அடிகளும் முழுவதும் பூவால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்ததாகப் புறநானூற்றின் 116ஆவது செய்யுளும் தலைவியும் அவளது தோழியும் 99வகையான பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்துஅவற்றின் புறவிதழ்களை நீக்கித் தழையாடை செய்து அணிந்ததாகக் குறிஞ்சிப்பாட்டும் தெரிவித்துள்ளன.

பனையோலைகளையும் தென்னை ஓலைகளையும் பனையகணி,நறைநார்மரல்நார் ஆகியவற்றைக் கொண்டு வலைபெட்டிவட்டிபிழா,கடகம்பேழை போன்றவற்றை உருவாக்கிப் பயன்படுத்திய பழந்தமிழர்கள்நார்களை விடுத்து நூலுக்கு மாறியது காலக்கொடைதான்.

காலப்போக்கில் பருத்தியின் பயன்பாட்டினைப் புரிந்துகொண்ட தமிழர்கள் அவற்றைக் கொண்டு நூல் உருவாக்கவும் அவற்றை நெய்து ஆடை செய்யவும் கற்றுக்கொண்டனர்.

காருகம்“ என்பதுதுணியைக் குறிக்கும் சொல். “காருகர்“ என்பது,நெசவாளரைக் குறித்தது. “துகில்“ என்ற சொல்பெரும்பான்மையாகப் பருத்தித்துணியையே குறித்தது.

சங்க காலத்தில் பருத்தி பயிரிடப்பட்ட செய்தியைப் புறநானூற்றின்299ஆவது மற்றும் 324ஆவது செய்யுள்களும் அகநானூற்றின் 129ஆவது செய்யுளும் எடுத்துக்கூறியுள்ளன.

பழந்தமிழர்கள் பருத்தியை மூட்டை மூட்டையாக விளைவித்த செய்தியினைப் புறநானூற்றின் 393ஆம் செய்யுளும் வில்லால் அடித்து,நுரைபோன்ற தூய்மையான பஞ்சினை உருவாக்கிய செய்தியினை நற்றிணையின் 247ஆவது மற்றும் 299ஆவது செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளன.

பருத்தியை நூலாக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டனர்.நூல் நூற்கும் பெண்கள் வைத்துள்ள கோது நீக்கப்பட்ட பஞ்சு பற்றிப் புறநானூற்றின் 125ஆவது செய்யுளும் நூல் நூற்கும் பெண்கள் ஒளிக்காக ஏற்றியுள்ள விளக்கொளி பற்றிப் புறநானூற்றின் 326ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளனவிடியவிடிய இப்பணியினை அவர்கள் செய்ததாகப் புறநானூற்றின் 326ஆம் செய்யுளும் நற்றிணையின் 353ஆவது செய்யுளும் கூறியுள்ளனஇதனால் அவர்களின் வீட்டைச் சுற்றிப் பஞ்சுத் தூசி படர்ந்திருந்தமையைப் புறநானூற்றின் 116ஆவது செய்யுள் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடைகளுக்குப் பூவேலைப்பாடுகள் செய்து அழகுப்படுத்தினர்.துணிகளுக்கு நறுமணமூட்டினர்பூந்துகில் வகையிலான துணிகள் மிகவும் வழவழப்பாக இருந்தனஅவ் ஆடைகள் நுண்மையும் மென்மையும் வாய்ந்தவையாக இருந்தனஅவை, “அகன்ற பகன்றை மலர்“ போன்று இருந்ததாகப் புறநானூற்றின் 390ஆவது செய்யுளும் “நீலநிறமுடைய பூந்தொழில் செய்யப்பட்ட ஆடை“ என்று புறநானூற்றின் 274ஆவது செய்யுளும் “சிவந்த நிறமுடைய பூந்தொழிலுடைய துகில்“ என்று திருமுருகாற்றுப்படையின் 15ஆவது அடியும் “புகையை நுகர்தால் போல மாசடையாத ஆடை“ என்று திருமுருகாற்றுப்படையின் 138ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளன.

மெல்லிய துணிகளால் ஆடைகள் மட்டுமன்றி அரசருக்குரிய குடைகளும்,கொடிகளும்பதாகைகளும் உருவாக்கப்பட்டன.

தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் அழுக்கான ஆடைகளை நீக்கிப் புத்தாடைகள் அணியுமாறு கூறிய மன்னர்அவர்களுக்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடைய பட்டாடைகளைக் கொடையாக வழங்கினார் என்றும் பூவேலைப்பாடுகளையுடைய ஆடைகளை வழங்கினார் என்றும் புறநானூற்றின் 398ஆவது செய்யுள் தெரிவித்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

   

பட்டாடைகள் பல வகைப்பட்டிருந்தனஅவைஇறஞ்சி,  இரட்டு,கவற்றுமடிகத்தூலம்கரியல்குருதிகுஞ்சரிகோங்கலாகோசிகம்,சில்லிகைசித்திரக்கம்மிசுண்ணம்செம்பொத்திதத்தியம்திருக்கு,துரியம்தேவாங்குதேவகிரிபஞ்சுபச்சிலைபரியட்டக்காசுபணிப்பொத்தி,பங்கம்பாடகம்பீதகம்புங்கர்க்காழகம்பேடகம்நுண்டுகில்வடகம்,வண்ணடைவெண்பொத்திவேதங்கம் என வழங்கப்பட்டன.1 

ஆடைகளைத் தூய்மைப்படுத்த காழியர்கள் (வண்ணார்உவர்மண்ணைத் துணிகளில் தோய்த்துத் துவைத்ததாக அகநானூறின் 89ஆவது செய்யுள் சுட்டியுள்ளதுஆறுகளில் வண்ணார் துணிகளைத் துவைக்கும் துறைக்கு(இடத்துக்கு) “துறைபோகு“ என்று பெயர்.

நல்ல ஆடைகளை எப்போதும் புதிதாகவே இருக்குமாறு புலத்தியர்கள்(துணியைத் துவைப்பவர்கள்அவ் ஆடைகளுக்குப் பசைதோய்த்து (கஞ்சி),கல்லில் அடைத்துமுறுக்கி நீர் உலர்த்தித் துவைத்துக்கொடுத்த செய்தியைக் குறுந்தொகையின் 330ஆவது செய்யுளும் மதுரைக்காஞ்சியின்721ஆவது அடியும் குறிப்பிட்டுள்ளனஅவ் ஆடைகள் நறுமணத்தோடு இருக்க அவற்றுக்கு அகிற்புகையூட்டிய செய்தியை மதுரைக்காஞ்சியின்554ஆவது அடியும் புலத்தியர் இரவும் பகலும் இப்பணியில் ஈடுபட்டனர் என்ற செய்தியை நற்றிணையின் 90ஆவது செய்யுளும் தெரிவித்துள்ளன.

அக்காலத் தமிழர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துகிலினையும் துக்கத்தை வெளிப்படுத்த கலிங்கத்தையும் உடுத்தினர்.கணவனைப் பிரிந்த பெண்கள் மாசேறிய கலிங்கத்தையும் கணவனைக் கூடிய பெண்கள் பூவேலைப்பாடுகளை உடைய துகிலையும் உடுத்தியதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

நுண்வினை“ என்று குறிப்பிடப்படும் சாயத்தொழிலும் அக்காலத்தில் இருந்துள்ளதுஅரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பழந்தமிழர்களின் “சாயத்தொட்டிகள்“ கண்டெறியப்பட்டனஅவை நான்கு மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் அகலமும் உடையனவாக இருந்தன.சுடுமண்ணால் செய்யப்பட்ட நூல் நூற்கும் “தக்களி“யும் அவ் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.2அவுரி முதலான பல செடிகள் சாய நிறங்களை உருவாக்கப் பயன்பட்டனகொன்றை மரப் பட்டைகளிலில் வேதிப்பொருட்களைச் சேர்த்துக் கருமை நிறத்தைக் கண்டுபிடித்தனர்.கடுக்காயையும் கொன்றையையும் கலந்து வேறொரு நிறத்தைக் கண்டுபிடித்தனர்சாயவேரையும் காசுக்கட்டியையும் இணைத்து அடர்சிவப்பு நிறத்தைக் கண்டுபிடித்தனர்இந்நிறங்களைத் துணிகளில் ஏற்றும் சாயத்தொழில்நுட்பத்தில் அவர்கள் தேர்ந்திருந்தனர்நீல ஆடைகளை உருவாக்கியமை பற்றிக் கலித்தொகையின் 7, 11, 15, ஆகிய செய்யுள்களும் கருமை நிற ஆடைகளை உருவாக்கியமை பற்றி மதுரைக்காஞ்சியின் 638ஆவது அடியும் தெரிவித்துள்ளன.

பணக்காரப் பெண்கள் பகலில் பட்டாடையையும் இரவில் மெல்லிய துகிலையும் உடுத்தினர்அரசமாதேவியர் தம் மார்பில் “வம்பு“ எனும் கச்சினைக் கட்டியிருந்தனர்இரவுக்காவலர்கள் நீலநிறக் கச்சினையும் படம் எனும் சட்டையையும் அணிந்திருந்தனர்இறைவழிபாடு செய்வோர் நீராடியபின்னர் தங்களின் கீழாடையாகக் “காழகம்“ என்பதனை அணிந்தனர். “அறுவை“ என்ற தூய்மையான ஆடையினை அரசர்கள் புலவர்களுக்கு வழங்கினர்.

பெண்கள் வண்ணப் புடைவை (புட்டகம் அல்லது முருங்காக் கலிங்கம்)அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 12ஆவது பாடலும் நீராடுவதற்குரிய ஆடையினை அணிந்தமை பற்றிப் பரிபாடலின் 6ஆவது மற்றும் 7ஆவது பாடல்களும் சுட்டியுள்ளன.

கச்சு“ என்ற ஆடை மார்பில் அணியப்படுவது என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 71ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றது.அது இடுப்புவரையில் அணியத்தக்க ஆடை என்று அகநானூற்றின்376ஆவது செய்யுளிலிருந்து உணரமுடிகின்றதுபூவேலைப்பாடுகள் மிக்க கச்சு என்ற செய்தியினைக் குறிஞ்சிப் பாட்டின் 125ஆவது அடியிலிருந்து அறியமுடிகின்றதுபோர் வீரர்களும் கடவுளர்களும் மகளிரும் கச்சி அணிந்திருந்தனர் என்ற செய்திகளை நற்றிணையின் 21ஆவது செய்யுளும் சிறுபாணாற்றுப்படையின் 238, 239ஆகிய அடிகளும் முல்லைப்பாட்டின் 46, 47ஆகிய அடிகளும் உணர்த்துகின்றன.

மனிதர்கள் மிகுதியாகக் கூடும் கூட்டத்துக்குச் செல்லும்போது சில பெண்கள் தன் உடலை முழுவதும் மறைத்துக்கொள்வதற்காக மெய்யுறை அணிந்ததாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளதுஇதனை “மெய்யாப்பு“ என்றும் குறிப்பிடுவர். “முழுஉடல்உடை“ என்று கூறலாம்.இஸ்லாமியப் பெண்கள் “பர்தா“ அணிவதைப்போல.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அழகுக்கு அழகூட்டுதல்

பொன்“ தமிழ்நாட்டில் விளைவதல்லஅது பிற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான்பழம்பாடல்கள் இரும்பு போன்ற பிற அனைத்து உலோகங்களையும் “பொன்“ என்றே சுட்டியுள்ளனஅச்சொல் இடம்பெரும் சூழலைப் பொருத்துதான் அது தங்கத்தைக் குறிக்கின்றதா என்று அறிந்துகொள்ளமுடியும்தங்கத்தைப் “பொன்“ என்றும் “பொலம்“ என்றும் தமிழர்கள் குறிப்பிட்டனர்பொன் என்பது, “சாதரூபம்“, “கிளிச்சிறை“, “ஆடகம்“, “சாம்பூநதம்“ என நான்கு வகைப்படும்இந்நான்கு சொற்கள் குறித்துப் புறநானூற்றின் 377ஆம் செய்யுளிலும் மதுரைக்காஞ்சியின்410ஆவது அடியிலும் திருமுருகாற்றுப்படையின் 18ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

பொன் நகை செய்ய அப்பொன்னுடன் செம்பினைக் கலப்பர்செம்பின் அளவுக்கு ஏற்ப பொன்னின் மாற்று கூடும் அல்லது குறையும்பொன்னின் மாற்றினைக் காண உரைகல் பயன்படும்அதனைப் பழந்தமிழர்கள் கட்டளைக்கல் என்று அழைத்தனர்இதனைப் பெரும்பாணாற்றுப்படையின்220ஆம் செய்யுளிலும் அகநானூற்றின் 178ஆவது செய்யுளிலும் நற்றிணையின் 3, 25 ஆகிய செய்யுள்களிலும் குறுந்தொகையின் 192ஆவது செய்யுளிலும் காணமுடிகின்றது.

பொன் நகையில் பலவித மணிகளைப் பதித்துப் பல்வேறுபட்ட வடிவங்களில் நகைகளைச் செய்த “கம்மியர்கள்“ அக்காலத்தில் இருந்தனர்.

நகைகளில் மகளிர் அணிவனஆடவர் அணிவன என இரண்டு பொதுவகைகள் காணப்பட்டனமகளிர் அணிந்த நகைவகைகள் குறித்துச் சிலப்பதிகாரத்தில் விரிவான பட்டியல் இருக்கிறதுமுத்துமாணிக்கம் அல்லது பிற கற்களைப் பரல்களாக உள்ளடக்கிய சிலம்பு (நூபுரம்),கால்விரல் மோதிரம்பரியகம்அரியகம்பாடகம்சதங்கைகுறங்குசெறி,அரையில் அணியும் முத்துவடம்முப்பத்திரண்டு வடத்தாலான முத்துமேகலைமாணிக்கமும் முத்தும் இழைத்த தோள்வளையல்கள்,மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம்செம்பொன் வளைநவமணி வளைசங்கவளைபவழவளைவாளைமீனைப் போன்று செய்யப்பட்ட மாணிக்க மோதிரம்மோசை என்னும் மரகதக் கடைசெறிகழுத்திலணியும் வீரச் சங்கிலிநேர்ச் சங்கிலிபொன் ஞாண்அரிநெல்லிக்காய் மணிமாலை,முகப்பில் கட்டின இந்திர நீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும் காதணிசீதேவியார்பூரப்பாளைதென்பல்லிவடபல்லிதொடி,அரையணிஇரத்தினம் கட்டின அடுக்காழிகழுத்தணிகலாபம்காஞ்சி,காதணிகாலணிகால் விரலணிகால் மோதிரம்குறங்கு செறி,கொக்குலாய்கையணிகைவிரலணிசரப்பளிசங்குவளை,சிலம்புதண்டைசூடகம்தலையணிதாறாருவிதொடையணிதோடு,தோளணிபருமம்பாதசாலம்பிடர் அணிபீலிபுல்லகம்பூரம்பாளை,பொன்வளைபொன்னரிமாலைநவரத்தினவளைநீலக்குதம்பைநுண் ஞாண் சாவடிநுழைவினைநேர்சங்கிலிமகரக்குழைமகரப் பகுவாய்,மகரவாய் மோதிரம்மாணிக்க வளைமேகலைமுத்தாரம்முஞ்சகம்,முத்துவளைவல்லிகைவாளைப்பகுவாய்மோதிரம்விரிசிகை,வீரசங்கிலி,இடையில் அணிந்த பட்டிகையான மேகலைகாஞ்சிகலாபம்,பருமம்விரிசிகை என ஐவகை அணிகள்காதில் அணியும் குதம்பை,வளர்ந்த காதில் அணியும் கடிப்பிணைபலவகையான பூத்தொழில் குயிற்றப்பட்ட கைவளைகள்முத்தால் இழைக்கப்பட்ட கைவளைகள் எனப் பற்பல நகைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.3

இவற்றையெல்லாம் அணிந்திருந்த பழந்தமிழச்சி பொற்தேவதைதானே!அந்தப் பொற்தேவதைகளுள் ஒன்று புதுமணலில் நடந்துவந்த செய்தியினைப் புறநானூற்றின் 253ஆம் பாடல் தெரிவித்துள்ளது. “புதுமணல்“ என்பது மங்கல நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பரப்பப்படுவதுஆதலால்இந்தத் தேவதை மணமகளாகவும் இருக்கக்கூடும்.

பல வகையான ஆபரணங்களை அணிந்த இளம்பெண் பந்தாடிய செய்தியையும் பொற்கழங்காடிய செய்தியையும் பெரும்பாணாற்றுப்படையின் 327 முதல் 335வரையுள்ள அடிகள் தெரிவித்துள்ளன.

வறுமையில் வாடும் விவசாயப் பெண்கள் (வெறுந்தேவதைகள்வயலில் களைச்செடிகளாக விளைந்த குவளைஆம்பல்வள்ளி போன்ற பூச்செடிகளின் தண்டுகளை வளைத்துத் தமக்கு வளையல்கள் செய்து அணிந்ததாகப் புறநானூற்றின் 352ஆம் செய்யுள் தெரிவித்துள்ளது.

மகளிருக்கான அடைமொழிகளை அவர்கள் அணிந்திருந்த நகைகளை மையப்படுத்தியும் உருவாக்கியுள்ளனர்சான்றாக, “செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு - 36), “ஒண்டொடி மகளிர்“ (புறநானூறு - 24), “வாலிழை மங்கையர்“ (புறநானூறு - 11) இத்தொடர்களைக் காட்டலாம்.

குழந்தைகள் தெய்வமல்லவாஅவர்களுக்கான அலங்காரம் தனிப்பட்டதாகவே இருந்ததுகுழந்தைகளின் நெற்றியில் சுட்டியும் பிறையும்மூவடம் கோத்த பொன் சங்கிலிகழுத்தில் ஐம்படைத் தாலியும்,புலிப்பல் தாலியும்கை விரல்களில் சுறாமீனைப் போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட மோதிரங்கள்மணிகள் உள்ளிட்ட சதங்கைகள்கால்களுக்குப் பொன் இரட்டைச் சரிகள்மணியும் பவழமும் கோத்த அரைஞாண்வாய்கள் தேரையின் வாய்போல் அமைக்கப்பட்ட வாய்ப்பூட்டுடைய சதங்கைகள்கிண்கிணி எனப் பலவும் அணிவிக்கப்பட்டனகுழந்தைக்காகச் செய்யப்பட்ட இரு வடங்களினாலான காற்சரி என்ற பாதசரம்பொடி வைத்து இணைக்கப்பட்டமை வெளியில் தெரியாதவாறு மீண்டும் நெருப்பிலிட்டு ஒளியூட்டப்பட்ட செய்தியினைக் கலித்தொகையின் 85ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆடவர்கள் அணிந்த நகைகள் மிகக் குறைவுதான். மதாணிமுத்துமாலை,வெள்ளிக் கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள்கைவளைகள் (காப்பு போன்றனஆகியன மட்டுமே அணிந்திருந்தனர்விலைமதிப்பற்ற பல மணிகள் கோர்க்கப்பட்ட பாம்புபோல வளைந்த ஆரத்தையும் சேரமான் வஞ்சன் அணிந்திருந்ததாகப் புறநானூறின் 398ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பொற்றொழில்

யானையின் முன் மண்டையிலிருந்து துதிக்கை வரை அணியப்படும் பொன்னகைக்கு அணிஓடைபொற்பட்டம்முகபடாம் என்று பெயர்கள் உண்டுஓடைப் பொன் சிறந்த பொன்னாகக் கருதப்பட்டதுபொன்னால் செய்யப்பட்டுவெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட தாமரைப் பூவைச்(பொற்றாமரைசிறந்த குரல்வளமுடைய பாணருக்குப் பரிசிலாக வழங்கியுள்ளனர்பொன்னை உருக்கிக் கட்டியாக்கிப் பின்னர் அதனை அடித்து கடகம்கங்கணம்காப்பு என விதவித அணிகலன்களை செய்துள்ளனர்.

பொற்தகடுகளால் ஆன கூண்டுகள் அரங்கு ஆகியவற்றைப் பதித்து அதன் மேல் இரத்தினங்களையும் பதிக்கும் செயலுக்குக் குந்தனவேலைப்பாடுகள் என்று பெயர்கெட்டிப் பொன்னில் பலவிதக் கற்களைப் பதித்தலுக்குக் கட்டடவேலை என்று பெயர்பொற்தகடுகளில் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கடையலங்காரம்சடைபில்லைஅட்டிகைபொத்தான் ஆகியவற்றைச் செய்தவற்கு நகாசுவேலை என்று பெயர்குந்தன வேலைப்பாடுகளுக்குரிய அச்சுகளில் இரத்தினப் பொடிகள்பலநிறக் கண்ணாடிகள் ஆகியவற்றைப் பதிக்கும் வேலைக்கு மின்னக் காய்ச்சு வேலை என்று பெயர்பொன்னாலான ஒட்டியாணம் செய்வதற்குப் பிடிப்போகரை என்று பெயர்அக்காலப் பொற்கொல்லர்கள் பொற்தொழிலில் கைதேர்ந்திருந்தனர்.

கார்கூந்தல் பெண்ணழகு

கறுத்துநீண்டுநெளிந்த கூந்தல் உடைய பெண் அழகு மிக்கவளாகக் கருதப்பட்டாள்பெண்கள் கொண்டைகுழல்பனிச்சைசுருள்முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர்மகளிரின் கூந்தலுக்கு “ஓதி“ என்ற பெயர் உண்டுகூந்தலுக்கு “ஐம்பால்“ என்ற ஒரு பெயரும் உண்டுஅதாவதுகுழல்அகம்கொண்டைபனிச்சைதுஞ்சை(குறுந்தொகை - 229) என ஐந்துவகையாகக் கூந்தலை அழகுபடுத்துவதால் அதற்கு அப்பெயர் வந்தது.

பெண்கள் தங்களின் கூந்தலை ஆற்றில் நீராடியும் துவர்ப்பொருள் கொண்டு தோய்த்தும் தூய்மைப்படுத்தினர் என்றும் கூந்தலில் படிந்துவிட்ட மாசுக்களையும் எண்ணெப் பசையையும் நீக்க இழைதுகள்களைப் பயன்படுத்தினர் என்றும் பரிபாடலின் 10ஆவது பாடலின் 89 முதல் மற்றும் 91 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

நீராடிய பெண்கள் தங்களின் கூந்தலின் ஈரத்தை நீக்குவதற்காக வெயிலில் உலர்த்திஎண்ணெய் தடவி, “தகரம்“ என்ற மரத்தின் சாந்து பூசி,அகிற்புகையூட்டியதாகக் குறுந்தொகையின் 107 முதல் 110 வரையிலான செய்யுள்கள் குறிப்பிட்டுள்ளனகூந்தல் மணக்கவேண்டும் என்பதற்காக மானின் கஸ்தூரிக் குழம்பினைத் தடவியதாகச் சிலப்பதிகாரம் 29 மற்றும்30ஆவது அடிகள் சுட்டிக்காட்டியுள்ளனஅக்கருவிகொண்டு அழகுபடுத்தப்பட்ட கூந்தல் கார்மேகத்தைப் போல சீராக இருந்ததாகக் கலித்தொகையின் பாலைக்கலி 31 மற்றும் 35ஆவது பாடல்கள் வருணித்துள்ளன.

கூந்தலைச் சீர்படுத்த கழல்மணிக்கொடியின் கனியைப் பயன்படுத்தினர் என்ற செய்தியைப் புறநானூற்றின் 97ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

சீர்படுத்தப்பட்ட கூந்தலினைக் கதுப்புகொண்டைஅளகம்குழல்பின்னல் எனப் பலவாறு அமைத்துக்கொண்டனர்அக்கூந்தல் மேகம் கால் இறங்கியதுபோல இருந்தது என்று அகநானூற்றின் 323ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள் தங்களின் கூந்தல் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்களைப் பயன்படுத்தினர்மகரவாய்வகிர் போன்ற தலையணிகளை அணிந்தனர்.மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்கள் அணிந்தனர்மலர் அணியப்படாத கூந்தலுடைய பெண்ணை இழிவாகக் கருதினர்கூந்தலுக்குக் களிமணைத் தோய்த்து தூய்மைப்படுத்தும் வழக்கம் இருந்ததுகூந்தலுக்கு வாசனையூட்ட அகிற்புகையைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினர்.

கண்ணுக்கு மையழகு

முக அலங்காரத்திற்காக மெய்க்கலவையைப் பயன்படுத்தினர்இக்கலவை மணம்மிக்கதுஇதனை முகத்துக்கும் கைகால்களுக்கும் தடவினர்.பெரும்பாலும் அக்கால மகளிர் தம் மார்புகளுக்குச் சந்தனக்குழம்பு பூசுவது உண்டுஅச்சந்தனச் சாந்தினைவிட மணம்மிக்க அகிற்புகையின் மனம்மிக்க சந்தனச் சாந்தினைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் தன் மார்பில் தடவியதாகப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

மகளிர் தம் கண்களுக்குக் கருமையிட்டனர்மைதீட்டும் குச்சியினைக் “கோல்“ என்று அழைத்தனர்பெண்களின் மையிட்ட கண்கள் பற்றிய வர்ணனை பல செய்யுள்களில் இடம்பெற்றுள்ளதுசான்றாக நற்றிணை –252, கலித்தொகை பாலைக்கலி – 26, பரிபாடல் -7, 18 ஆகிய பாடல்களைக் காட்டலாம்.

நெற்றியில் திலகமிடுதலை மகளிர் தவறாது கைக்கொண்டனர்மகளிர் தமக்குத் திலகமிட்டுக் கொண்டதனை நற்றிணையின் 62ஆம் செய்யுளும் கலித்தொகையின் 92ஆவது செய்யுளும் குறிப்பிட்டுள்ளன.

தன்னை முழுவதுமாக அலங்கரித்துக்கொண்ட பெண் தன்னழகைத் தாம் பார்த்து மகிழ்வதற்காகக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளனர்ஒளி ஊடுறுவும் கண்ணாடியை “பாண்டில்“, “வயங்கல்“, “வயங்குமணி“ என்று குறிப்பிட்டனர். “வயங்குமணி“ என்பது பளிங்குக் கல்லையும் குறிக்கும்.ஒளியை எதிரொளிக்கும் கண்ணாடியை “ஆடி“, “மண்டிலம்“ என்று குறிப்பிட்டனர்அதில் தெரியும் பிம்பத்தைநிழலுருவைப் “பாவை“ என்றனர்இக்கண்ணாடிகள் கையடக்கமாகச் சிறியதாகவும் ஆளுயரத்தில் பெரியதாகவும் இருந்துள்ளனஇதனைப் பரிபாடலின் 12ஆவது பாடலும் குறுந்தொகையின் ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

இவ்வாறாகத் தன்னை அழகுபடுத்திக்கொண்ட பெண்கள்தம் வாய் மணக்கும் வகையில் வாசனைப் பொருள் கலந்த பாக்கினை வாயில் அடக்கிக்கொண்டனர்நெடிய தொலைவுவரைக்கும் மணக்கும் வாசனைப் பொருள்களைத் தன்மீது தடவிக்கொண்டனர்.  இச்செய்திகளைப் பரிபாடலின் 12ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

ஆண்களின் அலங்காரம்

ஆடரின் முடிக்கு “ஓரி“ என்ற பெயர் உண்டுஆடவர் தம் தலைமுடியினைக் குடுமியாக முடிந்தனர்முன் மண்டையில்(நெற்றிக்குமேல்முடிகளைக் களைந்திருந்தனர்அது சாத்திரத்துக்காக அல்லமுன்மண்டையில் வெயில் படவேண்டும் என்பதற்காக. ஆண்களும் தலையில் பூச்சூட்டிக்கொண்டனர்அதற்கு கண்ணி என்று பெயர்.பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ள சேரமன்னருக்குக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர்புறத்திணையில் போருக்குச் செல்லும் வீரர்கள் தலையில் அடையாளப் பூக்களைச்(வெட்சிப்பூகரந்தைப்பூநொச்சிப்பூவகைப்பூ போன்றனசூடினர்பிற ஆண்கள் பூமாலை அணிவதும் உண்டு.

உணவு உயிர்வாழத் தேவையானது. “அழகு“ வாழ்க்கையை வாழத் தேவையானதுஅக்காலம் முதல் இக்காலம் வரை ஒப்பனைகள் சார்ந்த பொருட்கள்கருவிகள் இன்னபிற மாறி வந்தாலும் மனிதர்களின் மனத்தில் உள்ள, “தன்னை அழகாக்கிக்கொள்ளுதல்“ என்ற அழகுணர்ச்சி மட்டும் மாறவேயில்லைமானுடம் வாழ்ந்திருக்க அதுவே பெரிய உந்து சக்தி.

அடிக்குறிப்புகள்

  1. http://tamilacademy.org

  2. சாமிநாதன்., சங்க காலத் தொழில்நுட்பம். 30.

  3. http://www.keetru.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நெருப்பும் நேரமும்

சங்க காலம் / தேடல் – 13

அறிவொளி

Large_bonfireஉலகின் ஒரு மூலையில் ஒரு காட்டில் மூங்கில்களின் கணுக்கள் மிகுதியான காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசித் தீப்பொறிகளை உருவாக்கினஅவை மூங்கிலின் காய்ந்த இலைகளை எளிதில் பற்றவைத்தனபற்றிய தீ அணைய சில மணிநேரங்களாகினஅம்மூங்கில் காட்டில் சிக்கிக்கொண்ட விலங்குகள் தீக்கிரையாகினஅவற்றை எடுத்துச் சுவைத்த மனிதன் தீயால் வெந்த விலங்கின் தசைச் சுவையைத் தன் நாவில் ஏற்றிக்கொண்டான்மீண்டும் மீண்டும் அச்சுவை அவனுக்குத் தேவைப்பட்டதுகாத்திருந்தான் மீண்டும் ஒரு காட்டுத்தீக்காக.

உடனடியாகவா அது நிகழ்ந்துவிடும்காலம் சென்றனபின்னர் அவன் சிந்தித்தான்காற்றுமூங்கில்உரசல்தீ என இந்நான்கின் இணைப்பையும் கூர்ந்து நோக்கிஅவற்றைச் சிறிய அளவில் கூட்டிணைப்புச் செய்து,தீப்பொறிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டான்தீயை உருவாக்கவும் அதனைப் பெருக்கவும் அவற்றை அணைக்கவும் மீண்டும் தீயை உருவாக்கவும் கைதேர்ந்தான்தீயின் ஒளியால் அறிவொளிபெற்றான்.

உலக அளவில் மனிதன் இவ்வாறுதான் தீயினை அறிந்தான்.தொல்தமிழரும் அவ்வாறே தீயினைத் தம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்திஅவர்களின் வாழ்வில் ஒளியேற்றினர்.

காட்டுத் தீயும் வீட்டுத் தீயும்

அகநானூற்றின் 39ஆவது பாடலில்நெடுந்தொலைவில்முற்றிய மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்துதீப்பொறிகளை உருவாக்கின.அத்தீப்பொறிகள் மூங்கிற் சருகுகளைப் பற்றிக்கொண்டனபின்னர் உலர்ந்த ஊகம் புற்களைப் பற்றி எரித்தனபின்னர் காற்றடிக்கும் திசையெல்லாம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு காட்டையே தீக்கிரையாக்கின என்று இடம்பெற்றுள்ள ஒரு வர்ணனை காட்டுத் தீயை நம் மனக்கண்முன் கொண்டுவந்துள்ளது.

இக்காட்டுத் தீயின் பிறப்பினை அறிந்த தமிழர் அதனைத் தன் முயற்சியால் தன் வீட்டளவில் உருவாக்க மரக்கட்டையைக் கையாண்டனர்கல்லின் மீது அம் மரக்கட்டையைக் கடைந்து, (மத்துகொண்டு தயிர் கடைவதைப் போலஅதன் அருகில் எளிதில் தீப்பிடிக்கும் சருகுகளை வைத்துத் தீப்பொறியை உருவாக்கினர்இம் மரக்கட்டைக்குத் “தீக்கடைக்கோல்“ என்று பெயர்இதனை “ஞெலிகோல்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளனசான்றுகள் – ஐங்குறுநூறு 307,புறநானூறு 331.

மாடுமேய்க்கும் இடைச்சிறுவன் தன்கைகளால் முயன்று தீக்கடைக்கோலினால் தீ மூட்டிய தகவலைப் பெரும்பாணாற்றுப்படையின்179வது அடி தெரிவித்துள்ளது.

இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அளிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினைப்புறநானூற்றின் 315ஆவது செய்யுளில், நெடுமான் அஞ்சியின் வீரத்துக்கு உவமையாகத் தீக்கடைக்கோலினைக் காட்டியுள்ள புலவரால், “இச்சிறிய எளிய தீக்கடைக்கோலால் காட்டை அழிக்க வல்ல மிகப்பெருந்தீயினை உருவாக்க முடியும்“ என்ற செய்தியினை அறியமுடிகின்றது.

உப்பு விற்கும் வணிகர்கள் தீக்கடைக்கோலினைப் பயன்படுத்திய செய்தியினை அகநானூற்றின் 169ஆவது செய்யுளில் காணமுடிகின்றது.புலி கொன்று தின்று ஒதுக்கிய யானையின் உடற்பகுதியின் ஒரு பகுதியைப் பாலை நிலத்தின் கள்வர்கள் எடுத்துச்சென்றனர்மீதமுள்ள பகுதியை உப்பு வணிகர்கள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயில் வதக்கிநீரில் உலை கூட்டி ஊன்சோறு சமைத்தனர் என்று அச்செய்யுள் குறிப்பிட்டுள்ளது.

அகநானூற்றின் 274ஆவது செய்யுளில் செம்மறியாட்டுக் கூட்டத்தையும் பசுக்கூட்டத்தையும் மேய்க்கும் இடையன்தன் கைப்பொருள்களுள் ஒன்றாகத் தீக்கடைக்கோலினை வைத்திருந்ததாக ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

நற்றிணையின் 142ஆவது செய்யுளில் பால் விற்கும் இடையன் தன்னிடம் ஞெலிகோல் வைத்திருந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

இடையர்கள் தன் மேய்ச்சல் விலங்குகளைப் பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அழைத்துச்சென்று தங்கவைக்கும் இயல்பினர்அவர்கள் மாலைப்பொழுதில் இரவில் வெளியிடங்களில் தங்குவது என்பது இயல்பானதொன்றுஅப்போது அவர்கள் தங்களுக்கான ஒளியினை உருவாக்க தீக்கடைக்கோலினைத் தன்னோடு ஒரு தீப்பெட்டியைப் போல(வத்திப்பெட்டி), இன்றைய டார்ச்சு லைட்டைப் போலக் கொண்டுசென்றுள்ளனர்.

அந்தத் தீக்கடைக்கோல் மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்காகவும் குளிரில் ஈரப்பதமாகிவிடாமல் இருப்பதற்காகவும்அதனைத் தேற்பையில் கலப்பை அதள் போட்டுச் சுருக்கிக்கொண்டனர் என்ற செய்தியினை நற்றிணையின் 142ஆவது செய்யுள் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

இடையர்களிடம் மூங்கிலால் உருவாக்கப்பட்ட புல்லாங்குழலும் இருந்தது என்பதனை நாம் நினைவில்கொள்ளவேண்டும்அப்புல்லாங்குழலில் இடப்பட்ட துளைகள் தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட தீயினால் உருவாக்கப்பட்டவை என்ற செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின்177 முதல் 179 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காத்தலும் அழித்தலும்

புறநானூற்றின் 247ஆவது செய்யுளில்யானை கொண்டுவந்த உலர்ந்த மரத்தின் விறகை ஞெலிகோலின் உதவியால் கானவர் தீயிட்டுக் கொளுத்தினர் என்றும் அத்தீயொளியால் உறங்கிக்கொண்டிருந்த மான் கூட்டம் விழித்துக்கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளதுகாடுகளில் பரணமைத்து இரவில் தங்கும் கானவர்கள் தம்மைக் காட்டு விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள இவ்வாறு பெருந்தீயினை உருவாக்கியுள்ளனர்தீப்பந்தத்தைப் பரணில் ஏற்றிவைத்தும் விலங்குகளை அச்சுறுத்தியுள்ளனர்.

அத் தீப்பந்தத்திற்கு (கொள்ளிக்கட்டை) “ஞெகிழி“ என்று பழந்தமிழர் பெயரிட்டிருந்தனர். “ஞெலி“ என்ற சொல்தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். “ஞெகிழ்“ என்ற சொல் தீயைக் குறித்ததுசான்று கலித்தொகையின்101ஆம் பாடல்ஞெலிகோலால் உண்டாக்கப்பட்ட தீயைக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்ளிக்கட்டைக்கு அல்லது தீப்பந்தத்துக்கு “ஞெகிலி“ என்று பெயரிட்டது மிகச் சரியேஇந்த “ஞெகிலி“ என்ற சொல் குறுந்தொகையின் 357ஆவது செய்யுளில் இடம்பெற்றுள்ளது. “விலங்குகள் நெருப்பை நெருங்காது“ என்பதனைத் தொல் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

தொல் தமிழர் நெருப்பினை ஆக்கத்துக்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படுத்தினர்தீக்கடைக்கோலால் உண்டாக்கப்பட்ட சிறுதீயினைக்கொண்டு உணவு சமைத்தனர்அத்தீயினைப் பெருக்கிப் பகைவரின் விளைநிலத்தையும் ஊரையும் அழித்தனர்.  இதற்குப் புறநானூற்றின் 57ஆவது செய்யுளும் பதிற்றுப்பத்தின் 71ஆவது செய்யுளும் சான்றாகவுள்ளன.

நெருப்பின்றி அமையாது உலகு

காட்டுத் தீயினைக் கண்டு அஞ்சிய தொல்தமிழன் அதனைத் தெய்வமாக வணங்கினான்பின்னர் அத்தெய்வத்திடம் ஒரு பூசாரியைப்போல நெருங்கினான்அத்தெய்வத்தை எழுப்பும் வித்தையைக் கண்டான்பின்னர் அவனே ஒரு தெய்வமாகிவிட்டான்ஆம்தாமே நெருப்பினை உருவாக்க கண்டறிந்த அந்த ஆதிமனிதன் என்னளவில் ஒரு தெய்வம்தான்நீரின்றி மட்டுமல்லநெருப்பின்றியும் அமையாது உலகு.

நிகழ்காலம் அறிதல்

தொல் தமிழர்கள் நேரங்காலம் பாராமல் உழைத்தனர்சூரிய உதயத்தில் விழித்துஉழைக்கத் தொடங்கிசூரிய அஸ்தமனத்தில் ஓய்வுகொண்டனர்.உதயம் பகற்பொழுதினையும் அஸ்தமனம் மாலைப் பொழுதினையும் அவர்களுக்கு உணர்த்தியதுமற்ற பொழுதுகள் அவர்களால் கணிக்க முடியாத அளவுக்குப் போக்குக்காட்டினஇரவில் கேட்கவே வேண்டாம்.நள்ளிரவில் நேரங்காலமா தெரியப்போகிறது?

பகற்பொழுதின் காலத்தினைச் சூரிய நகர்வைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர்தன் உடல் நிழலின் நீளத்தைத் தன் காலடியால் அளந்தும் கணித்தனர்இரவுப்பொழுதில் சந்திரனின் நகர்வைப் பார்த்தும் ஒருவகையில் காலத்தைக் கணித்தனர்சூரியன் வலதுபுறமாக இருக்குமாறு நின்றுகொண்டு கைவிரல்களில் சுட்டுவிரலை உயர்த்தி அதன் நிழல் மடக்கப்பட்ட எவ்விரலில் விழுகிறதோ அதனை வைத்துக் காலத்தைக் கணித்தனர்பீர்க்குநெருஞ்சிஇருள்நீக்கி முதலிய செடிகளில் மொக்கு மலர்வதை வைத்தும் காலத்தைக் கணித்தனர்மலர உள்ள மொக்கின் முனைப்பு நிலையைப் “போது“ என்பர்ஒரு நாளின் தொடக்கப் பொழுதினை (காலத்தினைஉணர்த்தியதால் அதற்குப் “போது“ என்று பெயரிட்டனர்இவற்றின் வழியாக ஒரு குத்துமதிப்பாகத்தான் காலத்தினை அவர்களால் கணிக்க முடிந்ததுஎல்லாக் காலநிலைகளிலும் சரியான நேரத்தைக் கணக்கிடுவது என்பது தமிழருக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது.

காலக் கூறுகள்

தமிழர்கள் காலத்தினைப் பெரும்பொழுதுசிறுபொழுது என்று இருவகையாகப் பகுத்தனர். “பெரும்பொழுது“ என்பதுஓர் ஆண்டின் ஆறு கூறுகள்அதாவது தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஒவ்வொன்றுக்கும் இணையான மாதங்களைச் சேர்ந்தது ஒரு பெரும்பொழுது என்றனர்.அவை கார் (மழை) – ஆவணியும் புரட்டாசியும்கூதிர் (குளிர்) – ஐப்பசியும் கார்த்திகையும்முன்பனி – மார்கழியும் தையும்பின்பனி – மாசியும் பங்குனியும்இளவேனில் – சித்திரையும் வைகாசியும்முதுவேனில் – ஆணியும் ஆடியும் என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகக் கூதிரும் முன்பனிக்காலமும் கருதப்பட்டனமுல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுதாகக் கார்காலம் மட்டும் கருதப்பட்டதுபாலை நிலத்துக்குரிய பெரும்பொழுதுகளாகப் பின்பனிஇளவேனில் முதுவேனில் ஆகியன கருதப்பட்டனமருதத்திணைக்கும் நெய்தல் திணைக்கும் ஆறு பெரும்பொழுதுகளும் உரியவையாகக் கருதப்பட்டன.

சிறுபொழுது“ என்பது ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு கூறுகளாக்குவதுஅதாவது ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணிநேரத்தை உள்ளடக்கியதுஅவை நள்ளிரவு மணிமுதல் காலை 6மணிவரை “வைகறை“காலை மணிமுதல் 10 மணிவரை “காலை“(விடியல்), முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் மணிவரை “நண்பகல்“,பிற்பகல் மணிமுதல் மாலை மணிவரை “எற்பாடு“மாலை 6மணிமுதல் இரவு 10 மணிவரை “மாலை“இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 2மணிவரை “யாமம்“ என்பனவாகும்.

குறிஞ்சி நிலத்துக்குரிய சிறுபொழுதாக யாமமும் முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுதாக மாலையும் பாலை நிலத்துக்குரிய சிறுபொழுதாக நண்பகலும் கருதப்பட்டனவைகறையும் எற்பாடும் ஐந்நிலத்துக்கும் பொதுவான சிறுபொழுதுகளாகக் கருதப்பட்டன.

தமிழர்கள் சிறுபொழுதுகளை மணிக்கணக்கில் பிரிக்காமல் நாழிகைக் கணக்கில் பிரித்தனர்.

நாழிகை“ என்பதுபழங்காலக் காலக்கணக்கீட்டின் ஓர் அலகு.  24நிமிடங்கள் ஒரு நாழிகைஒரு மணிநேரம் என்பது இரண்டரை நாழிகைகள்பகல் என்பது 30 நாழிகைகள்இரவு என்பது 30 நாழிகைகள்.ஒருநாள் என்பது 60 நாழிகைகள்அதாவது 24 மணிநேரம்.

ஒருநாளின் பகுதிகளைச் சிறுபொழுதுகளாகப் பிரித்திருந்தனர் என்றனர்.சிறுபொழுதுகள் மொத்தம் ஆறுஅவை ஒவ்வொன்றும் 10 நாழிகைகளை உள்ளடக்கியிருந்தனஅதாவதுநான்குமணிநேரங்களை.

இந்த நாழிகையைக் கணக்கிட ஒரு கருவியினைக் கண்டறிந்தனர்.வட்டில் ஒன்றில் நீர் நிரப்பிஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டுஎஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் விதத்தில் ஒரு கருவியினை உருவாக்கினர்அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கண்டறிய முடிந்ததுஇக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயரிட்டனர்.இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.

இக் கருவிகொண்டு நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர்கள் மன்னனைத் தொழுதுவாழ்த்தி கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே!உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இத்துணை என்று அறிவித்த செய்தியினை முல்லைப்பாட்டின் 55 முதல் 58 வரையிலான அடிகள் வெளிப்படுத்தியுள்ளன.

உலகம் அஞ்சுமாறுமேகமூட்டத்துடன் பெருமழை பெய்தலின் நிலமும் வானும் ஒன்றாகப் பொருந்தினாற் போன்று தோன்றும் கார் காலத்தே,கதிரவனைக் கொண்டு காலமறிய இயலா நிலையில் குறுநீர்க் கன்னலைக் கொண்டு பொழுதறிவிக்கும் கணக்கரையே நம்பி மக்கள் இருந்த செய்தியினை அகநானூற்றின் 43ஆவது செய்யுள் குறிப்பிட்டுள்ளன



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

உற்பத்தி

சங்க காலம் / தேடல் – 14

 

தொல்தமிழர்களின் தன்னிச்சையான உணவு உற்பத்தி பெரும்பாலும் நிலம் சார்ந்ததாகவே அமைந்திருந்ததுஅவர்கள் தங்களை உழுகுடிகளாகவே அடையாளம் கண்டனர்வயல்வெளியில் அவர்களின் வாழ்வு மையம் கொண்டதுஉழுதல் அவர்களுக்கு உடலுழைப்பின் அருமையினைக் கற்றுத் தந்ததுஉழுது உற்பத்தி செய்வதையே அவர்கள் நாகரிகமாகக் கருதினர்.

செய்“ என்றால் “வயல்“ என்று பொருள்நிலத்தினை அதன் தன்மைக்கு ஏற்ப பல சொற்களில் குறிப்பிட்டுள்ளனர்வெவ்வேறு தன்மைகொண்ட நிலங்களைக் குறிக்கும் சொற்களின் பட்டியல் வருமாறு - “1.ஆற்றுவைப்பு -ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம் 2. அருக்கக் கொல்லை -ஆற்றோரத்தில் உள்ள நிலம் 3. படுகை ஆற்றோரத்து நிலம். 4. கரைவழி -ஆற்றோரமான நிலம். 5. காற்புரவு ஆற்றுப் பாய்ச்சல் நிலம். 6. வெளிவாய்ப் படுகை ஆறுகுளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம். 7. இறைப்புப் பட்டரை கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம். 8. ஏற்றப்பட்டரை ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம். 9. தூர்வை கிணற்றைச் சேர்ந்த நிலம். 10. ஆயக்கட்டு ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம். 11.நன்செய்நிலம் நீர்வளம் நிறைந்துள்ள நிலம். 12. புன்செய் நிலம் வானம் பார்த்த நிலம்கொல்லை நிலம். 13. அளக்கர் திணை கடலாற் சூழப்பட்ட நிலம். 14. வானம் பார்த்த நிலம் மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம் 15.எரங்காடு பருத்தி விளையும் புன்செய் நிலம். 16. நாற்றங்கால் விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம். 17. சாட்டி அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம்உரமிடப்பட்டிருக்கும் நிலம். 18. குளக்கீர் குளத்தில் மதகையடுத்துள்ள வயல்குளம் பார்த்த வயல் 19. நகரி அரசுக்குரிய புறம்போக்கு. 20. பெரும்பேறு அரசுக்குரிமையான நிலம். 21. சூன் -புறம்போக்கு நிலம். 22. குடிவார நிலம் குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம். 23. பள்ளத்தாக்கு இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம். 24. பள்ளம் -பள்ளத்தில் உள்ள நிலம்தாழ்ந்த நிலம். 25. தில்லியம் புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். 26. உறாவரை பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம். 27. எடார் வெளிநிலம். 28. செய்யுள் விளைநிலம் 29.தொய்யில்செறிப்பு உழுநிலம். 30. பண்ணை வயல் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

31. செந்திரம் செய்தல் நிலம். 32. பாசல் பசிய விளைநிலம் 33. நன்னிலம்நன்செய் நெல் விளையும் புலம். 34. படப்பு கொல்லை. 35. துடவை உழவுக் கொல்லை. 36.விதைப்புனம் புதுக்கொல்லை. 37. முதை பழங்கொல்லை. 38. பின்னை-வீட்டுக் கொல்லை 39. திருத்து நன்செய் நிலம். 40. தாக்கு நெல் வயல். 41.வற்புலம் மேட்டு நிலம். 42. தகர்தராய் மேட்டு நிலம். 43. கருஞ்செய் -நன்செய் நிலம். 44. காங்கவீனம் தினைவிளையும் நிலம். 45. தினைப்புனம் -தினைவிளையும் நிலம். 46. மலைப்புனம் தினைவிளையும் நிலம். 47.சேற்றுப்புழி உழப்பட்ட நிலம். 48. விரைகால் விதைக்குரிய நிலம். 49. தடி -சிறு வயல். 50. காணியாட்சி உரிமை நிலம். 51. காடாரம்பம் -நீர்ப்பாசனமில்லாத நிலம். 52. வட்டகை அடைப்பு நிலம். 53. எகபலி -ஒருபோக நிலம். 54. ஓராண் காணி ஒருவனுக்கே உரிய நிலம். 55. காணி நிலம் நூறு குழி அளவுள்ள நிலம். 56. கந்தக விரைப்பாடு ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்.45

நன்செய்ப் பயிர்கள்

நீராதாரம் உள்ள நல்ல நிலத்தை நன்செய் அல்லது நஞ்செய் என்றனர்.இதில்தான் நெல்லும் கரும்பும் விளைவித்தனர்.

தரமான நெல்லை விளைவிக்க வேண்டுமெனில்நிலம் நன்கு பண்படுத்தப் பட்டிருக்கவேண்டும்அக்காலத்தில் நிலத்தை எவ்வாறு பண்படுத்தினர் என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 197 முதல் 201 வரையிலான அடிகள் விளக்கியுள்ளன.

நெல் வயலுக்கு அருகில் உணவுப் பொருள்களால் நிறைந்த குடியிருப்புகளை உடைய உழவர்கள் நிலத்தைப் பல முறை உழுதனர்உழவுத் தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளைக் குடியிருப்பின் முன்பகுதியில் நுகத்தடியில் பூட்டி உழுவதற்குச் செல்வர்பெண் யானையின் வாய்போன்று வளைந்த வாயை உடைய கலப்பையின் உடும்பு முகம் போன்ற கொழு,நிலத்தில் முழுவதும் அழுந்தும்படி வளைய உழுதனர்ஒருமுறை உழுதலை “ஒரு சால் உழவு“ என்றும் இருமுறை உழுதலை “இருசால் உழவு“ என்றும் கூறுவர்எனவே, “செஞ்சால் உழவர்“ என்றதால் நிலத்தைப் பலமுறை உழுதனர் என்பது தெரியவருகின்றதுஉழவு சீராய் அமைய இரு எருதுகளும் ஒத்து நடக்க வேண்டும்இதனையே “நடை நவில் பகடு“ என்று அவ் அடிகளில் குறிக்கப்பெற்றுள்ளதுபெண் யானையின் வாய் போன்ற கலப்பைஉடும்பு முகம் போன்ற கொழு என்ற உவமைசார்ந்த விளக்கங்கள் இன்றைய கலப்பையின் அமைப்பினை ஒத்துள்ளன.

அக்காலம் முதல் இக்காலம் வரை நாம் கலப்பையின் அமைப்பினையும் கொழுவின் அமைப்பினையும் மாற்றவில்லை. “உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றி“ என்ற அடியால் நிலத்தை ஆழ உழுதனர் என்பது தெரியவருகின்றதுநிலத்தைப் பல ஏர்களைக் கொண்டு உழும்போது ஒவ்வொரு ஏரும் ஒரு வளையமாகப் போட்டு நிலம் முழுவதும் உழுது முடிப்பது வழக்கம்அவ் வழக்கம் இன்றும் (இயந்திரம் கொண்டு உழுதாலும்பின்பற்றப்படுகின்றதுஅதே வழக்கம் அக்காலத்திலும் இருந்துள்ளது என்பதனை “வளா கோலுதல்“ அல்லது “தொடுப்பெறிந்து உழுதல்“ என்ற சொற்களால் அறியமுடிகின்றது. “தொடுப்பெறிந்து உழுதல்“ என்பதுகலப்பையால் வளைய உழுதல் என்ற பொருள்படும்.

அக்காலத் தமிழர் உழவுக்கு எருதினை மட்டுமல்ல எருமையினையும் பயன்படுத்தினர் என்பதனை நற்றிணையின் 60வது பாடல் உணர்த்தியுள்ளது.எருமை உழவு வேகமாக நடைபெற்றதா என்பது ஐயம்தான்சங்க கால எருமை மாடு மட்டும் சுறுசுறுப்பாகவா இருந்திருக்கும்?

அக்கால மக்கள் நெல் வித்தில் பல வகைகளை உருவாக்கியிருந்தனர்.சான்றாககருடன் சம்பாசம்பாசீரகச் சம்பாசின்னச் சம்பாபெரிய சம்பா,வாடைச் சம்பாமல்லிகை சம்பாகம்பன் சம்பாகுண்டு சம்பாகைவளை சம்பாகுங்குமச் சம்பாபுனுச் சம்பாகாடைச் சம்பாகுன்றிமணிச் சம்பா,தோரைவெண்ணெல்கார்அன்னதானம்குறுவைஅறுபதாங்கோடை,மிளகிசெம்மிளகிசிறுமணி போன்றவற்றைக் காட்டலாம்.

தேர்ந்தெடுத்த விதைநெல்லினைக் கொண்டு நாற்றினை உருவாக்கினர்.பின்னர் அந்த நாற்றுகள் உரிய அளவு விளைந்தவுடன் உழவர்களும் உழத்தியர்களும் இணைந்து நாற்றினை நட்டுள்ளனர்இதனை நற்றிணையின் 60 ஆவது பாடல் தெரிவித்துள்ளதுஅப்பாடலில்நிலத்தில் சிறிது நீரினைத் தேக்கிவைத்து நாற்று நடுதல் செயல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பெற்றுள்ளதுஅதே முறையைத்தான் இப்போதும் நம் உழவர்கள் பின்பற்றிவருகின்றனர்.

நெற்பயிர்கள் தழைத்துவளர்ந்துதூர்பல விட்டுக் கிளைத்த பின்னர்,கருப்பிடித்துகதிர் முற்றினவிளைந்த பயிரின் முற்றிய கதிர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காற்றில் ஒலி எழுப்பிய காட்சியினை அகநானூற்றின்243ஆவது பாடல் காட்டியுள்ளதுஅந் நெற்பயிர்கள் மெல்லிய வாழைத்தாறின் நுனியில் தொங்கும் பூவை அசையச் செய்கின்ற அளவுக்கு வயல்களில் நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருந்தன என்று நெற்பயிர்களின் உயரத்தை நற்றிணையின் 400 ஆவது பாடல் அளந்து கூறியுள்ளதுஇது மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லைஅக்காலத்தின் நெல்லின் தரம் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்புள்ளதுஅவை இக்கால நெற்பயிர்களைப் போலச் செயற்கை உரம் உண்டு வளர்ந்தவை அல்ல!

நெல்வயலைக் கால்நடைகளிலிருந்து பாதுகாப்பதற்காக வயலைச் சுற்றி வேலியமைப்பது இக்கால வழக்கம்அக்காலத்தில் வேலியாகக் கரும்பினைப் பயிரிட்டுள்ளனர்இதனைப் புறநானூற்றின் 386ஆவது பாடலால் அறியமுடிகின்றதுஒரு பயிரைக் காக்க வேறு ஒரு பயிர் வேலியாக அமைக்கப்பட்டுள்ளமை தொல் தமிழரின் உற்பத்திப் பெருக்க நுட்பத்துக்கு ஒரு சான்றுநெல்வயலைத் தொடர்ந்து கரும்புப் பாத்திகளை அமைத்துள்ளனர்இதனை அகநானூற்றின் 306ஆவது பாடல் சுட்டியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

எவ்வளவு விளைந்தது?

புறநானூற்றின் 391ஆவது பாடலில் ஒரு புலவர் ஒரு மன்னரை வாழ்த்துகிறார்அவ் வாழ்த்தில் உன் நிலங்களில் உரிய காலத்தில் மழை பொழிந்துஒரு வேலி நிலத்துக்கு ஆயிரம் கலம் நெல் விளையட்டும் என்று குறிப்பி்ட்டுள்ளார்இவ் வாழ்த்து மிகைப்படுத்தியது அல்லஅரிதானது என்றாலும் அது நிகழக்கூடியதுதான்அக்காலத்தில் ஒரு வேலி என்பது இ்க்காலத்தில் ஏழு ஏக்கர்காவிரி நதியிலிருந்து நீர் பெற்ற நிலங்களில் இத்தகைய விளைச்சல் இருந்துள்ளதுஅது குறித்துப் பொருநராற்றுப்படையின் 242 முதல் 248வரையிலான அடிகள் விளக்கியுள்ளனநிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அரிவாளால் அறுத்து குவித்தனர்அது மலைபோல் இருந்ததுஅவற்றைப் பதரடித்து நெல் மணிகளாக்கி மூடைகளில் அடைத்தனர்அந்த மூடைகள் எங்கும் பரவியிருந்தனஇவ் இலக்கியத்தில் உழவர்களைக் “களமர்“ என்றும் நெல்லை “வத்தம்“ என்றும் புலவர் குறித்துள்ளார்.

சோழநாட்டுப் (சோணாடுபயிர்வளம் பற்றிப் பட்டினப்பாலையின் 13 முதல்19 வரையிலான அடிகள், “குலைகளை உடைய தென்னைதார்களை உடைய வாழைகாய்களை உடைய கழுகுமணங்கமழும் மஞ்சள்,சுவையுள்ள கனிகளைத்தரும் மாமரங்கள்குலைகளை உடைய பனை,கிழங்கினை உடைய சேம்புமுளையை உடைய இஞ்சி“ என ஒரு பட்டியல் தந்துள்ளன.

கரும்பு விளைவித்தலும் அதனைப் பிழிந்து சாறு எடுத்துப் பாகுகாய்ச்சி வெல்லம் செய்தலும் தமிழரின் மற்றுமொரு முதன்மைத் தொழிலாக இருந்துள்ளதுஇதுபற்றிப் பதிற்றுப்பத்தின் 75ஆவது பாடலில் குறிப்பு உள்ளது.

கரும்பு வளம் மிகுந்திருந்ததால்தான் சேற்றில் சிக்கிய வண்டிச்சக்கரங்களை மீட்கக் கரும்புக்கட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்இதனை அகநானூற்றின்116ஆவது பாடல் தெரிவித்துள்ளதுகரும்பு வளம் தன்னிகரற்று இருந்ததால் கரும்பினைப் பிறருக்கு இலவசமாகவும் வழங்கியுள்ளனர்இதுபற்றிப் புறநானூற்றின் 28ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளதுகரும்பு மிகுந்திருந்ததால் அவற்றைப் பிழிய மனித உழைப்பு மட்டும் போதுமானதாக இல்லை.ஆதலால்கரும்பினைப் பிழிய எந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்அந்த ஒலி ஆண் யானை பிளிறுவதுபோல் இருந்ததாக ஐங்குறுநூற்றின் 55ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 258ஆவது பாடலும் பெரும்பாணாற்றுப்படையின் 259, 260 ஆகிய அடிகளும் மலைபடுகடாமின்340, 341ஆகிய அடிகளும்தெரிவித்துள்ளனகரும்புச்சாறையும் விரும்பியோருக்கு இலவசமாகத் தந்ததாகவும் கரும்புச்சாறினைக் காய்ச்சிக் கட்டியாக்கி வெல்லப்பாகு செய்ய ஆலைகள் இருந்ததாகவும் அந்த ஆலைகளிலிருந்து எழும் புகை மண்டியதாகவும் பெரும்பாணாற்றுப்படையின் 260 முதல் 262 வரையிலான அடிகளும் அகநானூற்றின் 237ஆவது பாடலும் கூறியுள்ளனஇந்த அடிகளில் “விசயம்“ என்ற சொல் இடம்பெற்றுள்ளதுஇச்சொல் கருப்பஞ்சாறுகட்டி ஆகிய பொருளில் ஆளப்பட்டுள்ளதுஇவ் வெல்லப்பாகினால் செய்யப்பட்ட பால் கலந்த இனிப்புப்பண்டமும்தின்பண்டங்களும் விருந்தினருக்கு அளிக்கப்பட்ட செய்தியினைப் புறநானூற்றின் 381ஆவது பாடல் தெரிவித்துள்ளதுஇப்பாகிலிருந்து “தீஞ்சேற்றுக்கடிகை“ என்ற கற்கண்டினைச் செய்ததாக மதுரைக்காஞ்சியின் 532ஆவது அடி தெரிவித்துள்ளது.

புன்செய்ப் பயிர்கள்

மழையை மட்டுமே நம்பியிருக்கும் நிலத்தைப் புன்செய் அல்லது புஞ்செய் என்றனர்இதனை மானாவாரி நிலம் என்றும் அழைக்கின்றனர்.இந்நிலத்தில் பருத்திதினைவரகு போன்றன விளைவித்தனர்.

புன்செய் நிலத்தில் மழைக்காலம் முடிந்ததும் அம் மண்ணைப் பக்குவப்படுத்தி வரகு அல்லது தினை விதைத்தனர்அவை முளைத்தவுடன் அவற்றுடன் இணைந்து முளைத்த களைகளையும் நெருக்கமாக முளைத்துவிட்ட வரகு அல்லது தினைப் பயிர்களையும் நீக்குவதற்காகப் “பல்லியாடுதல்“ என்ற செயலினைச் செய்தனர்இச்செயல் குறித்த தகவலைப் புறநானூற்றின் 120ஆவது பாடலில் காணமுடிகின்றது. “பல்லியாடுதல்“ குறித்த விளக்கத்தினை தசாமிநாதன், “நெருங்கி முளைத்த பயிர்களைக் கலைக்கவும் எளிதில் களை எடுப்பதற்கும் கூரிய இரும்பு ஆணிகள் பலகையில் கீழ் நோக்கி இருக்குமாறு பொருத்தப்பட்டு வளையங்களில் கயிறுகட்டிவாய்ப்பூட்டு மாட்டப்பட்ட உழவுக் காளை பூட்டி உழுதல் பல்லியாடுதல் எனப்படும்“ என்று தந்துள்ளார்.

வரகு அல்லது தினை அறுவடைக்குப்பின்னர் அந்நிலத்தல் தொடர்ச்சியாக வேறு பயிர்களையும் விளைவித்துள்ளனர்வரகுதினைகேழ்வரகு,கவ்வை (எள்), அவரைபசிய பயற்றம் (பாசிப்பயறு), உழுந்துபெரும்பயறு போன்றவற்றைச் சுழற்சிமுறையில் தொடர்ந்து விதைத்து,விளைவித்துள்ளனர்இதனையும் அப் பாடலடிகளின் வழியாக அறியமுடிகின்றதுவெவ்வேறு பயிர்களைச் சுழற்சிமுறையில் பயிரிடுவதால் மண் வளம் காக்கப்படுவதோடுபல்வேறுபட்ட தானிய இருப்பும் கிடைக்கப்பெறும்ஊடுபயிராகவும் அவரை பயிரிடப்பட்ட செய்தியினை அகநானூற்றின் 294 மற்றும் குறுந்தொகையின் 82 ஆகிய பாடல்கள் தெரிவித்துள்ளனபலா மரத்தின் மீது மிளகுக் கொடியினைப் படரவிட்டும் அதன் கீழ் மஞ்சள் செடியைப் பயிரிட்டும் இருந்தமையைச் சிறுபாணாற்றுப்படையின் 42 முதல் 44 வரையிலான அடிகளின் வழியாக அறியமுடிகின்றது. “ஊடுபயிரால் முதன்மைப் பயிருக்கு எத்தகைய இடையூறும் இல்லை“ என்பதனையும் “ஊடுபயிர்களின் வளர்ச்சியால் முதன்மைப் பயிருக்குப் பாதுகாப்பும் வளமும் உண்டு“ என்பதனைத் தொல் தமிழர் உணர்ந்திருந்தனர்.

ஒரு சிறுவன் பெரிய தேங்காயை உண்டுவிட்டுஅது திகட்டவேதன் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள வைக்கோல் போரின் மீது ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயன்றதாகப் புறநானூற்றின் 61ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளதுஇப் பாடலில் மூன்று வகையான வளங்கள் சுட்டப்பெற்றுள்ளனபனைமரம் உயரத்துக்கு வைக்கோல் போர்அதாவதுநெல்வளம் மிகுதி என்பது புலப்படுத்தப்படுகின்றதுதேங்காயும் பனையும் சிறுவர்கள் விளையாட்டாக உண்டு மகிழும் வகையில் பெருமளவில் விளைந்திருந்தமை.

குடிசைகளின் முன் மஞ்சள் பயிரிட்டனர்அவர்களின் குடிசைக்கு அருகிலிருந்த தோப்புகளில் பலா மரங்கள் சக்கையற்ற சுளைகளைத் தருவனவாக இருந்தனஇத்தோப்பில் இளநீர்வெண்ணிற வாழைப்பழங்கள்நுங்கு போன்றன விளைந்திருந்தன.இச்செய்திகளையெல்லாம் பெரும்பாணாற்றுப்படையின் 353 முதல் 362வரையிலான அடிகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனஅவர்கள் மஞ்சள்இஞ்சி,மிளகுவள்ளிக்கிழங்கு போன்றனவற்றையும் விளைவித்தனர்மலைப் பகுதிகளிலிருந்த சந்தனஅகில் மரங்களை வெட்டி நிலத்தைப் பண்படு்த்திக் குட்டையான கதிர்களை உடைய தோரை என்ற நெல்வகையினையும் நெடிய தாளை உடைய வெண்சிறுகடுகுகையும் ஐவனநெல் என்ற வெள்ளிய நெல்வகையையும் இஞ்சிமஞ்சள்மிளகு முதலியவற்றைப் பயிரிட்டனர்.இச்செய்திகளை மதுரைக்காஞ்சியின் 286 முதல் 289வரையிலான அடிகள் உரைத்துள்ளன.

காத்தல்

தினைப்புனத்தைக் காக்கப் பெருமளவில் மகளிர் பணியாற்றியுள்ளனர்.அவர்கள் அத்தினைப் புனத்தை விலங்குகள்பறவைகளிடமிருந்து காப்பதற்காக வள்ளைப்பாட்டுப் பாடியும் கவண் கல் எறிந்தும் பறைகொட்டியும் பாடுபட்டமை பற்றி மலைபடுகடாம் நூலின் 342, 343ஆகிய அடிகள் தெரிவித்துள்ளன.

காட்டுப் பலா மரங்களில் விளைந்து கனிந்த பலாப் பழங்களைக் குரங்குகளிடமிருந்து காக்கக் கானவர்கள் ஓர் உத்தியினைப் பயன்படுத்தினர்.பழுத்தப் பழம் நிறைந்த பலா மரங்களில் வலையை மாட்டியுள்ளனர்.இச்செய்தியினைக் குறுந்தொகையின் 342ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

தொல்தமிழர்கள் தங்களின் உழவு நடவடிக்கைகளை மருதநிலம் சார்ந்த நன்செய் நிலங்களில் மிகுதியாக மேற்கொண்டனர்அவர்கள் பெருமளவில் விளைவித்தது நெல்லும் கரும்பும் மட்டுமேஇயற்கையாகவே இவ்விரண்டும் அந்நிலச் சூழலுக்கு ஏற்ற பயிராகவும் இருந்தன.நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியும் அதனால் உண்டாக்கப்பட்ட உணவும் மருதநில மக்களின் நாகரிகமான வளமாகவும் பொருளாதாரமாகவும் இருந்தன.

அடிக்குறிப்புகள்

  1. http://tamilarnaagarigam.blogspot.in/2012/09/blog-post_2907.html

  2. சாமிநாதன்., சங்க காலத் தொழில்நுட்பம்பக்.5,6.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விற்பனை 

சங்க காலம் / தேடல் – 15

9801568பழந்தமிழர்கள் பல்வேறு பொருள்களை மிகுதியாக உற்பத்தி செய்ததால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினைப் பெற, அப் பொரருள்களைப் பல இடங்களில் விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. தமக்குத் தேவையான பல்வேறு பொருள்களைப் பண்டமாற்றாகப் பெற விற்பனையே சிறந்த நடவடிக்கை என்று அவர்கள் நினைத்தனர். அதற்காகவே, அவர்கள் நேர்மையான, எல்லோருக்கும் (விற்போருக்கும் வாங்குவோருக்கும்) சாதகமான விற்பனைமுறையினை உருவாக்கினர்.

ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று, அயல் நாடுகளில் தங்கி, வாணிபம் செய்து வரவேண்டுமென்றால் அந்நாட்டில் உள்நாட்டு வாணிபம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்க வேண்டும். அப்படியென்றால்,தமிழ்நாட்டின் உள்நாட்டு வாணிபம் செழித்தோங்கியிருந்ததா?.

பழந்தமிழர் முதலில் உள்நாட்டு வாணிபத்தில்தான் காலூன்றத் தொடங்கினர். தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவில் வாணிபம் நடைபெற்றது. வடஇந்தியருடன் கொண்ட வாணிபத்தொடர்பு அவர்களுக்குப் பிறநாடுகளுடன் வாணிபத்தொடர்புகொள்ள நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்),ரோமாபுரி,எகிப்து முதல் கிழக்கே சீனா வரையிலும் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலை நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.

பழந்தமிழரின் விற்பனை பெரும்பான்மையாகப் பண்டமாற்றாகவே இருந்தது. பெரும்பான்மையாக நெல்லினை அளவாகக் கொண்டே பிறபொருள்களை மதிப்பிட்டனர். சிறுபான்மையாக மதிப்பிடும் பொருளாக உள்வர்த்தகத்தில் பொன்னும் வெளிவர்த்தகத்தில் காசும் இருந்தன.

பண்டமாற்று

பண்டமாற்று என்பது, ஒரு பொருளுக்கு நிகரான மதிப்பில் பிறிதொரு பொருளினைப் பெற்றுக்கொள்வது. பண்டமாற்றில் பெரும்பாலும் நெல்லும் உப்பும் சம மதி்ப்புப் பொருளாகக் கொள்ளப்பட்டன. இவ்விரண்டும் மக்களின் முதன்மைத்தேவையாகவும் இருந்தன. காரணம், உப்பில்லாமல் சமைக்கமுடியாது, நெல்லின்றி வெறும் உப்பினை மட்டும் உண்ணமுடியாது. உப்பு விளையும் நிலப்பகுதியில் நெல்விளையாது. நெல்விளையும் நிலப்பகுதியில் உப்பு விளையாது. ஆக, நெல்லும் உப்பும் சமமான மதிப்பினையும் சமமான தேவையினையும் கொண்டதாக விளங்கின.

வேட்டுவர்கள் கொண்டுவந்த தயிரினைப் பெற்றுக்கொண்ட பாண்டிய நாட்டின் உழத்திகள் அதற்குப் பண்டமாற்றாக நெல்லினை வழங்கியதாகப் புறநானூற்றின் 33ஆவது பாடல் தெரிவித்துள்ளது. கெடிற்று மீனுக்குப் பண்டமாற்றாக நெல்வழங்கியதனை ஐங்குறுநூற்றின் 47ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. வரால் மீனுக்குப் பண்டமாற்றாக ஓர் ஆண்டு பழைமையான நெல்லினை வழங்கியதாக ஐங்குறுநூற்றின் 48ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இவ்வாறு மீனைக் கொடுத்து நெல்லைப் பெற்றுச் செல்லும் வழக்கத்தினைப் புறநானூற்றின் 343ஆவது பாடலில் காணமுடிகின்றது.

குறிஞ்சி நிலத்துக் கானவர்கள் தேனையும் கிழங்குவகைகளையும் விற்று அதற்குப் பண்டமாற்றாக நெய்தல் நிலத்தின் மீனையும் மதுவினையும் பெற்றுள்ளனர். கரும்பினையும் நெல்லினையும் கொடுத்து அதற்குப் பதிலாக மான் இறைச்சியையும் கள்ளினையும் பெற்றுள்ளனர். இச்செய்தியினைப் பொருநராற்றுப்படையின் 214 முதல் 217 வரையிலான அடிகளில் காணமுடிகின்றது. முல்லை நிலத்து ஆய்சியர் தாம் விற்கும் நெய்க்குப் பதிலாகப் பசும்பொன்னை ஏற்காமல் பசுவையும் கரிய எருமை நாகினையும் (பெண் எருமை) பெற்றுச் சென்றதாகப் பெரும்பாணாற்றுப்படையின் 158 முதல் 166 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

அங்காடித்தெருக்கள்

ஊர்களிலிருந்த கடைத்தெருக்களை இரண்டு வகையாகப் பிரித்திருந்தனர். ஒன்று நாளங்காடி, இரண்டாவது அல்லங்காடி. “நாளங்காடி“ என்பது, பகற்கடை. அதாவது, பகல்நேரக்கடைகள். “அல்லங்காடி“ என்பது இரவுநேரக் கடைகள். (அல்-இரவு). கடைகளில் விற்கப்படும் பொருள்களின் உருவத்தினைக் கொடியில் வரைந்து அவற்றை அக்கடையின்மீது பறக்கவிட்டிருந்தனர்.இவ் வணிகர்கள் “அங்காடி வணிகர்கள்“ என்று அழைக்கப்பட்டனர். பழங்கால மதுரை மாநகரில் இயங்கிய நாளங்காடிகள் பற்றியும் அல்லங்காடிகள் பற்றியும் மதுரைக்காஞ்சி இலக்கியம் விரிவாகத் தெரிவித்துள்ளது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இயங்கிய நாளங்காடி, அல்லங்காடிகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. கடற்கரையை ஒட்டிய பட்டினப்பாக்கம் பகுதிகளில் நாள் மற்றும் அல்லங்காடிகள் மிகுந்திருந்தன.

நிலவழி இடப்பெயர்ச்சி

ஐவகை நிலங்களிலும் விளைந்தவற்றை ஐவகை நிலங்களிலும் கிடைக்கச்செய்தால்தான் விற்பனையும் நுகர்வோர் நலனும் சிறக்கும். ஆதலால், விற்பனைப் பொருள்களை ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குக் கொண்டுசேர்ப்பதுதான் வணிகர்களின் முதற்பணியாக இருந்தது.

உள்ளூர்ப் பகுதிகளில் வணிகப்பொருள்களைக் கொண்டு செல்வதற்காகக் கழுதைளும் எருதுகளை இழுத்துச்செல்லும் கட்டைவண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு அவற்றை வழிநடத்திச்சென்றமை குறித்துப் பெரும்பாணாற்றுப்படையின் 71 முதல் 81 வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளன. அக்கழுதைகளின்மீது ஏற்றப்பட்ட மிளகு மூட்டைகள் பெரிய பலாப்பழத்தைப் போன்று இருந்துள்ளன. எருதுகள் வரிசையாக இழுத்துச்செல்லும் உப்பு வண்டிகளைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படையின் 55ஆவது அடி குறிப்பிட்டுள்ளது. உப்பினை வண்டியில் ஏற்றிக்கொண்டு உமணப்பெண்கள் வண்டியை ஓட்டியதாகவும் அவ்வண்டியின் அச்சு முறிந்துவிடாதவாறு அவற்றைக் கண்காணித்துக்கொண்டே உமணர்கள் அவ்வண்டியின் இருபக்கங்களிலும் நடந்துவந்தனர் என்றும் பெரும்பாணாற்றுப்படையின் 61 முதல் 65 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன.

நெடுவழிப் பயணத்தில் வண்டியில் பூட்டப்பெற்றுள்ள எருதுகள் களைப்படையும். அவ்வாறு களைப்படையும் எருதுக்கு தாற்காலிக ஓய்வுகொடுத்துவிட்டு வேறு எருதுகளைப் பூட்டிப் பயணத்தைத் தொடர்வர். இதற்காகவே கூடுதலாக எருதுகளையும் தன் பயணத்தில் அழைத்துச்சென்றுள்ளனர். இவர்கள் இவ்வாறு மேற்கொள்ளும் நெடும்பயணத்தைச் “சாத்து“ என்பர். வணிகர்கள் வணிகத்தின் பொருட்டுக் கூட்டமாக ஒருவரை ஒருவர் சார்ந்து  செல்வதால் “வணிகச்சாத்து“ என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வணிகர்கள் தம் நெடும்பயணத்தின்போது தம்மையும் தமது வணிகப்பொருள்களையும் பாதுகாக்கும் குலதெய்வமாகச் “சாத்தன்“ என்ற தெய்வத்தைக் கருதினர். இத்தெய்வத்தினை வணிகர்களே  உருவாக்கியிருக்கக்கூடும். வணிகர்களில் சிறந்தோரை “எட்டி“ என்று சிறப்பித்தனர். வணிகர்குழுவின் தலைவர் “சாத்தன்“ என்றும் “சாத்துவன்“ அழைக்கப்பட்டார். வணிகர் குழுவினர் நூறுபேர் அல்லது நூறு வண்டிகளில் ஒரு குழுவாகச் சென்றதால் இச் “சாத்து“ என்பது நூறு என்ற எண்ணுப்பெயரில் மாறியது.

உப்பினைக் கொண்டுசென்று அவற்றுக்குப் பதிலாக நெல்லினை வாங்கிவரும் ஓடங்களைப் பற்றிப் பட்டினப்பாலையின் 28 முதல் 30 வரையிலா அடிகள் குறிப்பிட்டுள்ளன. உப்புக்குப் பண்டமாற்றாக நெல்லினைப் பெறும் உமணப்பெண் சேரிப்பகுதியில் நடந்து, தெருவில் கூவி உப்பினை விற்றுள்ளாள். இச்செய்தியினை அகநானூற்றின் 140, 390 ஆகிய படல்களில் காணமுடிகின்றது.

நீர்வழி இடப்பெயர்ச்சி

நாட்டின் கரையோரப் பகுதிகளுக்கு வணிகப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்காகத் தமிழர்கள் ஓடங்களைப் பயன்படுத்தினர். இத்தகைய ஓடங்களைப் “பஃறி“ என்றனர். இத்தகைய பஃறிகளைக் கொண்டு உப்புக்குப்பதிலாக நெல்லினைப் பெற்றுவந்த செய்தியினைப் பட்டினப்பாலையின் 29 முதல் 32 வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் பஃறிகளையும் தோணிகளையும் அம்பிகளையும் பயன்படுத்தியுள்ளன. கடலில் நிற்கும் பெரிய மரக்கலங்களிலிருந்து வணிகப் பொருட்களைத் தோணிகளின் வழியாகக்கொண்டுவந்து கரையில் சேர்த்துள்ளனர். இது குறித்துப் புறநானூற்றிள் 343ஆவது பாடல் தெரிவித்துள்ளது. நதியின் இருகரையினையும் இணைக்கும் பாலமாக அம்பிகள் என்ற சிறு ஓடங்கள் இருந்துள்ளன. இவை மக்களை ஒருகரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல பேருதவிபுரிந்துள்ளன. இத்தகைய அம்பிகள் பற்றிப் புறநானூற்றின் 381ஆவது பாடல் தெரிவித்துள்ளது.

வணிகப்பொருட்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பெரிய மரக்கலத்தினை “நாவாய்“ என்றனர். இதனை “வங்கம்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் வழியாகத்தான் தமிழ்நாட்டுக்குக் குதிரைகள் இறக்குமதிசெய்யப்பட்டன. இச்செய்தியினை மதுரைக்காஞ்சியின் 77 முதல் 83 வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளன. கங்கை நதியிலும் கடலின் கழிமுகப் பகுதியிலும் வங்கம் சென்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன (சான்றுகள் நற்றிணை – 189, புறநானூறு – 400).

கிரேக்க வரலாற்று நூலாசிரியர் பெரிப்புளுசு என்பவர், “சோழ நாட்டுத் துறைமுகங்களிற் கரையோரமாகத் தமரிக்கா வரையும் செல்லும் கப்பல்கள் உள்ளன. இன்னும் மரங்களைப் பிணைத்துச் செய்யப்பட்ட “சங்கரம்“ எனப்பட்ட பெரும் கப்பல்களும் அங்கு உள்ளன. கிரிசி என்ற ஊருக்கும் கங்கை நதிக்கும் செல்லும் கப்பல்கள் கொலண்டியா எனப்பட்டன. கொலண்டிய மிகப் பெரிய உருவத்தை உடையது“1 என்று தமது குறிப்பில் தெரிவித்துள்ளார். அம்பி, கலம், திமில், தோணி, நாவாய், வங்கம் போன்ற சொற்களால் மரக்கலங்களைச் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன. இவை இரவு, பகல் பாராது காற்றின் விசையால் இயக்கப்பட்டன. இத்தகவலை மதுரைக்காஞ்சியின் 536ஆவது அடியிலும் அகநானூற்றின் 255ஆவது பாடலிலும் காணமுடிகின்றது.

வணிக நிலையங்கள்

கடல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உள்நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறுபட்ட வணிகப்பொருட்களை அடுக்கிவைத்து முத்திரை இடுவதற்காகத் துறைமுகப் பகுதிகளில் வணிக நிலையங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறுபட்ட வணிகப்பொருட்களை இறக்கி வைத்து, உள்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனை செய்வதற்காகவும் அவ் வணிக நிலையங்கள் பயன்பட்டன. இவற்றைப் “பண்டகசாலைகள்“ என்றனர். இப்பண்டகசாலைகளில் அடுக்கி வைக்கப்பட்ட மூடைகளின் எண்ணிக்கை பற்றிப் பட்டின்பாலையின் 129 முதல் 136 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன. இறக்குமதி செய்யப்ட்ட அணிகலன்களையும் பண்டகசாலையில் அடுக்கிவைத்திருந்ததாகப் பதிற்றுப்பத்தின் 55 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

முப்பெரும் துறைமுகங்கள்

கடல் வாணிபத்துக்கெனப் பண்டைத் தமிழகத்தில் மூன்று பெரிய துறைமுகங்கள் இரவு பகல் பாராது செயல்பட்டன. அவை சோழநாட்டின் “புகார் துறைமுகம்“, சேரநாட்டின் “முசிறி துறைமுகம்“, பாண்டிய நாட்டின் “கொற்கை துறைமுகம்“ ஆகிய மூன்றுமாகும்.

சோழநாட்டின் புகார் துறைமுகம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. இதனைக் “காவிரிப் பூம்பட்டினம்“ என்றனர். அத்துறைமுகத்திற்கு வந்த பெரிய கப்பல் பற்றிப் புறநானூற்றின் 30 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. பிற துறைமுகங்களைவிட இந்தத் துறைமுகத்தின் அமைப்பு சிறந்திருந்தது. அதாவது, கடலிலிருந்து வரும் பெரிய கலம் ஆற்றுமுகத்தில் புகும்பொழுது, கலத்தின் விரைவாலும் ஏற்றிவரும் பொருட்களின் பாரத்தாலும் அப்பெரிய கலம் தரைதட்டக்கூடும். இதனைத் தவிர்ப்பதற்காகக் கடலிலேயே கலத்தின் பாயினைக் களைதலும், ஏற்றிவந்த பொருட்களைவேறு சிறு படகுகளுக்கு மாற்றிக் கலத்தின் பாரத்தைக் குறைப்பதும் உண்டு. இத்தகைய முயற்சிகள் எவற்றையும் புகார் துறைமுகத்திற்கு வரும் கலங்கள் செய்யவேண்டியதில்லை. காரணம் புகாரின் ஆற்றுமுகம் மிகுந்த ஆழமுடையதாகவே அமைக்கப்பெற்றிருந்தது. அதனால், புகார் துறைமுகம் கடலிலிருந்து வரும் கலங்கள் ஆற்றுமுகம் வரை விரைந்தும், பாரத்தைக் குறைக்காமலும் வந்து பொருட்களை இறக்கவும் ஏற்றவும் வசதியாக இருந்தது. இத்தகவலைப் புறநானூற்றின் 30 ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது.

இத்துறைமுகத்தில் உள்ள பண்டகசாலையில் அங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குச் சோழரின் முத்திரையான புலியின் உருவம் பதிக்கப்பட்டது. இது பற்றிப் பட்டினப்பாலையின் 129 முதல் 135 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன. இறக்குமதியாகும் பொருட்களுக்குச் சுங்கவரி பெறப்பட்டன.

கடல்வழியாக மரக்கலங்களில் வந்த குதிரைகளும் நிலவழியாகப் பல்வேறு வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும் மேருமலையில் தோன்றிய மாணிக்க மணியும் சாம்பூநதம் என்ற பொன்னும் குடகு மலையில் தோன்றிய சந்தனக்குறடும் அகில்மரமும் தென்கடலில் எடுக்கப்பெற்ற முத்தும் கீழ்த்திசைக் கடலிலிருந்து எடுக்கப்பெற்ற பவளமும் கங்கையாற்றிலிருந்தும் காவிரியாற்றிலிருந்தும் கொண்டுவரப்பெற்றப் பல்வேறு பொருட்களும் ஈழநாட்டிலிருந்தும் கடாரத்திலிருந்தும் கொண்டுவரப்பெற்ற அரிய பொருட்களும் குவிந்திருக்கும் புகார்நகரத்துத் தெருக்கள் பற்றிப் பட்டினப்பாலையின் 183 முதல் 191 வரையிலான அடிகள் வர்ணித்துள்ளன.

புகார்ப் பகுதியில் வணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து வந்த பல்வேறு மொழிபேசும் வணிகர் கூட்டம் வாழ்ந்து. இச்செய்திகளைப் பட்டினப்பாலையின் 129 முதல் 136 வரையிலான அடிகளும் 216, 217 ஆகிய அடிகளும் தெரிவித்துள்ளன.

இத்துறைமுகத்திற்கு அருகில் அதாவது கடலோரமாக மருவூர்ப்பாக்கமும் மேற்குப் பக்கத்தில் பட்டினப்பாக்கமும் அமைந்திருந்தன. இவ் இரண்டு ஊர்களையும் பிரிக்கும் வகையில் இடைப்பட்ட நிலப்பகுதிகளைச் சோலைவனங்கள் நிறைந்திருந்தன. அவற்றின் அருகில் நாளங்காடிகளும் அல்லங்காடிகளும் செயல்பட்டன. மருவூர்ப்பாக்கத்தில் கடல்வழி வணிகர்களும் நெய்தல் நில மக்களும் வாழ்ந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரச குடும்பத்தினரும் பெரிய வணிகர்களும் வாழ்ந்தனர். இங்கு வெள்ளிடை மன்றம், எலாஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச்சதுக்கம், பாவை மன்றம் என ஐந்து மன்றங்கள் இருந்தன. இரண்டு பாக்கங்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இளவந்திச் சோலை, உய்யணம், சன்பதிவனம், உறவனம், காவிரிவனம் ஆகிய ஐந்து தோட்டங்களும் அமைந்திருந்தன.

சேரநாட்டின் முசிறி துறைமுகம்பேரியாற்றின் பக்கத்தில் உள்ள கொடுங்கல்லூருக்கு அருகில் அமைந்திருந்தது. இத்துறைமுகத்தினை “முசிரிஸ்“ என்று பிறநாட்டினர் அழைத்தனர். இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கு மிளகு ஏற்றுமதி மிகுதியாக நடைபெற்றது. யானைத் தந்தங்களும் தந்தவேலைப்பாடுடைய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இத்துறைமுகத்தின் பண்டகசாலையில் ஏற்றுமதிக்கான மிளகு மூடைகளும் இறக்குமதி செய்யப்பெற்ற பொன்னாலான பொருட்களும் குவிந்திருந்தன. இத்தகவல்களைப் புறநானூற்றின் 343ஆவது பாடல் தந்துள்ளது.  பெரிப்புளுசு, “பொன்னும் இரத்தினமும் மென்மைமிக்க புடவைகளும் சித்திரங்கள் அமைந்த ஆடைகளும் பவளமும் செம்பும் ஈயமும் கோதுமையும் இத்துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், கோதுமை உள்ளாட்டு வாணிகத்திற்காக இறக்குமதி செய்யப்படவில்லை, அங்குள்ள கப்பல் மாலுமிகளின் உணவுக்காகத்தான்“2 என்று தெரிவித்துள்ளார்.

பாண்டிய நாட்டின் கொற்கை துறைமுகத்தினைப் பிறநாட்டினர் “கொல்சி“ என்றனர். இத்துறைமுகத்தில் முத்துதான் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக இருந்துள்ளது. பாண்டியர்கள் தங்களின் கடற்பகுதிகளில் தங்களின் சிறைக் கைதிகளை முத்துக்குளிக்கச்செய்து ஏராளமான முத்துக்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். கொற்கையில் முத்துக்கள் பெருமளவில் இருந்த செய்தியினைச் சிறுபாணாற்றுப்படையின் 56 முதல் 58 வரையிலான அடிகளும் அகநானூற்றின் 27, 130, 201, 320 ஆகிய பாடல்களும் நற்றிணையின் 25ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

நெடிய ஒளிவிளக்கு

வணிகக் கப்பல்கள் இரவில் திசையறியாது திகைத்துநின்றுவிடக்கூடாது என்பதற்காகக் கடற்கரையில் உயர்ந்த ஒளிவிளக்கினை அமைத்தனர். இவற்றைக் “கலங்கரை விளக்கம்“ என்றனர். இச்சொல்லில் உள்ள “கரை“ என்ற சொல் “எல்லை“ என்ற பொருளினைக் குறிக்காமல் “அழைத்தல்“ என்ற பொருளினைக் குறித்துள்ளது. அதாவது, “கடலில் வரும் கலங்களைக் கரைக்கும் அழைக்கும் விளக்கு“ என்ற கருத்தினை இச்சொல் கொண்டுள்ளது. இக் கலங்கரை விளக்கம் கற்றையிட்டு வேயப்படாமல் சாந்திட்டுக் கட்டப்பெற்றது. இரவில் மட்டும் எரியும் வகையில் அமைக்கப்பெற்றது. இது பற்றிய குறிப்பினைப் பெரும்பாணாற்றுப்படையின் 349 முதல் 351 வரையிலான அடிகளில் பெறமுடிகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

அயல் வணிகம்

“முதல் கரிகாலச் சோழனுக்கு முன்னோர் ஒருவர்காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் நுட்பத்தைக் கற்று,நடுக்கடல் கப்பலோட்டிச் சென்றவர்“ என்று  வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் புறநானூற்றின் 66ஆவது பாடலில் புகழ்ந்துள்ளார். மாமூலனார் என்ற புலவர் தம் காலத்தவர்களான நந்தர்களையும்மௌரியர்களையும் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் தமது இறுதிக்காலத்தில் முதல் கரிகாலச்சோழனைப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆதலால், தமிழர்கள் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே கடலோடிகளாக இருந்துள்ளனர் என்பது தெரியவருகின்றது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல்வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு, இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள்,கண்ணாடி மணிகள்,கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. முற்காலச் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் புதைபொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கத்திகள்,கோடாரிகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் பொ.யு.மு. முதல் நூற்றாண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன. இச்சான்று சீனம்,ஜாவா போன்ற கீழை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் பழைமையைக் காட்டுகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும்,ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல்வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம்,மலேசியா,ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்;.

சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். சீனத்துப் பட்டாடைகளையும்சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இதனால் இன்றளவும் பட்டுக்குச் “சீனம்“ என்றும்சர்க்கரைக்குச் “சீனி“ என்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது.   சீனாக் களிமண்,சீனப் பட்டாடை,சீனாக் கற்கண்டு,சீனாச் சரக்கு,சீனாக் கிழங்கு,சீனாப் பூண்டு ஆகிய சான்றுகள் மூலம் தமிழகம் சீனாவுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன. சீன தேசத்து இலக்கியங்கள் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும்,பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும்மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.

தமிழகத்துப் பண்டங்களான ஏலம்,இலவங்கம்,இஞ்சி,மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவை போன்ற பொருள்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் என்பவர்,தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு  கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது பொ.யு.மு. 1490ஆம் ஆண்டு என்பர்.

தென் அரேபியா நாட்டு அரசி ஸீபோ,இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் என்பவனைக் காணச் சென்றபோது,அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய்,இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. சாலமன் ஆண்ட காலம் பொ.யு.மு. 1000 என்பர்.

சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை,அகில் மரங்கள்,யானைத் தந்தம்,குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

கிரேக்கம்,ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வாணிகர்,தொழிலாளர் முதலானோரை “யவனர்“ என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும்மொழியையும் “அயோனெஸ்“ என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் “யவனர்“ எனத் திரிந்தது. ஆனால்,அச்சொல் கிரேக்கர்களையும்ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக வழங்குகிறது. யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் அவர்களுடைய நாடுகளிலிருந்து தங்கத்தையும்மதுவையும் இறக்குமதி செய்தனர். தங்கத்தின் விலைப்பொருட்டாக மிளகினை ஏற்றுமதி செய்தனர். யவனர்கள் வாணிகர்களாக மட்டுமன்றி,தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர் – உலோக வேலை செய்பவர்)மெய்க்காவலராகவும் பணிபுரிந்துள்ளனர்.

வாணிபம் விரிவடையத் தொடங்கியதும் தமிழகத்திலே குடியேறிவிட்ட ரோமர்களின் தொகையும் வளர்ந்து வந்தது. அதனால் அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்து இருந்ததாகத் தெரிகிறது. தமிழகத்தில் இருந்த மூன்று பெரிய துறைமுகப் பட்டினங்களிலும் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன. இந்த இருப்பிடங்களை “யவனச்சேரி“ என்றனர். அக்காலத்தில் வாழ்ந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த பொன்,வௌ;ளி நாணயங்களும்செப்புக் காசுகளும் இப்போது அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.

கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிபத்தில் இறங்கியது பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். முதன்முதலில்,ஹிப்பாலஸ் என்னும் கிரேக்கர்,பண்டைய தமிழகத்தின் மேற்கே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதங்களில் காற்று வீசுகிறது எனக் கண்டறிந்தார். இதுவே தென்மேற்குப் பருவக்காற்று ஆகும். இதனைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்ட கிரேக்கர்கள் பெரிய பெரிய மரக்கலங்களைத் தமிழகத்தின் மேலைக் கரைக்குச் செலுத்தி நங்கூரம் பாய்ச்சினர். இவ்வாறு பண்டைய தமிழர்கள் கிரேக்கர்களுடன் கொண்ட வாணிபத் தொடர்பால்பழந்தமிழ்ச்சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெறலாயின. சொபோகிளிஸ்,அரிஸ்டோ பேனீஸ் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இச்சொற்களைக் காணமுடிகிறது.

அரிசி என்னும் தமிழ்ச்சொல் “அரிஸா“ எனவும்இஞ்சி அல்லது இஞ்சிவேர் என்னும் தமிழ்ச் சொல் “ஜிஞ்ஜிபேராஸ்“ எனவும்இலவங்கத்தைக் குறிக்கும் கருவா என்னும் தமிழ்ச்சொல் “கர்ப்பியன்“ எனவும் உருமாற்றம் அடைந்து கிரேக்க மொழியில் நுழைந்து வழங்கின. கிரேக்க வாணிகர்கள் இப்பொருள்களுடன் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று கிரேக்க நாட்டில் பயன்படுத்தினார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும் ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர். எனினும் பொ.யு. முதலாம் நூற்றாண்டு வரையில் ரோமரின் வாணிபம் பெரும் அளவு விரிவடையவில்லை. அகஸ்டஸ் ஆட்சியில்தான் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு ஏற்பட்டது. இவர் பொ.யு.மு. 30 ஆம் ஆண்டில் எகிப்தை வென்று தமது ஆட்சியை நிலை நாட்டினார். இதன் பின்விளைவாக, அவருக்குத் தமிழகத்துடன் முதன்முதலாக நேரடியான வாணிபத் தொடர்பு ஏற்பட்டது. அதனையடுத்துத் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையிலான கடல்வாணிபம் பெருகியது.

அகஸ்டஸின் சம காலத்தவர் ஸ்டிராபோ  என்ற நூலாசிரியர். இவர் பூகோள நூல்ஒன்றை எழுதியுள்ளார். “எரித்திரியக் கடலின் பெரிபு;ஸ்“ என்ற ஒரு வரலாற்று நூல் பொ.யு. 60ஆம் ஆண்டில் தோன்றியது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. பொ.யு. 70ஆம் ஆண்டில் பிளினி  எழுதியுள்ள உயிரியல் நூல் ஒன்றும்பொ.யு. 160ஆம் ஆண்டில் தாலமி எழுதியுள்ள பூகோள நூல் ஒன்றும் கிடைத்துள்ளன. இந்நூல்களில் பண்டைத் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிபத்தைப் பற்றிய சான்றுகள் பல உள்ளன. இந்நூல்களில் தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். அவற்றுள் பல துறைமுகங்களின் பெயர்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் “திண்டிஸ்“ என்றும்முசிறியை “முஸிரிஸ்“ என்றும் பாண்டிய நாட்டுத் துறைமுகமான குமரியைக் “கொமாரி“ என்றும்தமிழகத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் “கொல்சாய்“ என்றும்நாகப்பட்டினத்தை “நிகாமா“ என்றும்காவிரிப்பூம்பட்டினத்தைக் “கமரா“ என்றும்புதுச்சேரியைப் “பொதுகே“ என்றும்மரக்காணத்தைச் “சோபட்மா“ என்றும்மசூலிப்பட்டினத்தை “மசோலியா“ என்றும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் ஊரில் ஓர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாராய்ச்சியின் போது ரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இந்நாணயங்கள் மூலம் பண்டைய தமிழருக்கும் ரோமாபுரி மக்களுக்கும் கடல்வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

தமிழகத்துடன் ரோமாபுரியினர் மேற்கொண்டிருந்த வாணிபம் அவர்களுடைய பேரரசின் ஆதரவின்கீழ் செழிப்புடன் வளர்ந்து வந்தது. இவ்வாணிபத்தின் வளர்ச்சிக்கு ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் பெரிதும் ஊக்கமளித்தார்.

பாண்டிய மன்னன் ஒருவன் தன் தூதுவர் இருவரைத் தம் அரசவைக்கு அனுப்பி வைத்ததாக அகஸ்டஸ் கூறுகிறார். ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல்வாணிபம் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிபம் தமிழகத்தில் மட்டுமின்றி மசூலிப்பட்டினம்ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று.

ரோமாபுரியுடன் தொடர்ந்து தமிழகம் கடல் வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் ரோமாபுரி வாணிகர்கள் தமிழகத்திலேயே தங்கிக் குடியேறிவிட்டார்கள். தமிழகத்திற்கு வாணிபம் செய்ய வந்த கிரேக்கரும்யூதரும்சிரியரும் ரோமர்கள் குடியேறி வாழ்ந்த இடங்களில் அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த அவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார்.

தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்கும் இடையே கடல் வாணிபம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் காசு வாணிபத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண் தகடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வாணிகருடன் கொண்டிருந்த வரவு-செலவுகள் குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வாணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி, அங்கேயே தங்கி, தமது தொழிலை நடத்தி வந்ததற்கும் இத்தகடுகள் சான்றளிக்கின்றன.

சென்றனவும் வந்தனவும்

தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களிலிருந்தும் பல்வகைப்பட்ட பொருட்கள் பலவேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பெற்றன. அதேபோல் இறக்குமதியும் செய்யப்பெற்றன. இரும்பு, விலங்குகளின் தேல்கள், ஆட்டுமயிர், நெய், யானைத்தந்தம், முத்து, மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணெய், மெல்லிய ஆடைகள், தேக்கு – அகில் – சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகள், தேங்காய், வாழை, அரிசி, சோளம், கம்பு, தானியவகைகள், கரும்பும் வெல்லமும் சேர்க்கப்பெற்ற புளி, வெற்றிலை, பாக்கு, மூலிகை மருந்துகள், வயிரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்தனர். பென் மற்றும் வெள்ளிநாணயங்கள், மதுவகைகள், பவளம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நெடும்பயணம் மேற்கொள்ளும் கடலோடிகள் தங்களின் கப்பலைக் காக்கப் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கப்பலில் கட்டப்பெற்றுள்ள பாய் கிழிந்து, அது கட்டப்பெற்றக் கயிறு அறுந்து, சூறைக்காற்றால் பாய் மரமும் அதன் அடிப்பாகமும் முறிந்து மரக்கலம் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும்போது அதனைக் காப்பாற்றவேண்டி நங்கூரம் பாய்ச்சி அதனை நிலைநிறுத்தியுள்ளனர். இது பற்றிய தகவலினை மதுரைக்காஞ்சியின் 370 முதல் 375 வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளன.

கப்பலைத் திறமையுடன் தக்க திசையில் செலுத்துவோரை நாம் மாலுமிகள் என்கிறோம். அவர்களைப் பழந்தமிழர்கள் “நீகான்கள்“ என்று அழைத்துள்ளனர். இயற்கைச் சீற்றத்தினால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்தால் அதிலிருந்து கப்பலைக் காப்பதற்காகக் கப்பல் கடலிலிருக்கும்போதே அவ்வரிசலைப் பயின் (பிசின்) தடவி செப்பனிட்டுள்ளனர். இது பற்றிய குறிப்பினைப் பரிபாடலின் 10 ஆவது பாடலில் காணமுடிகின்றது.

செங்கடலில் உள்ள ஏசிரிஸ் என்ற இடத்திலிருந்து சேரநாட்டுத் துறைமுகத்திற்கு வரும் அயல்நாட்டுக் கப்பல்களைக் கொள்ளயிட முசிறி கடலெல்லைக்கு வெளியிலுள்ள கடற்கொள்ளையர்கள் காத்திருப்பர். அவர்களிடமிருந்து தப்புவதற்காக நீகான்கள் பயணிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் “பக்கரே“ (வைக்கரை) என்ற இடத்தில் இறக்கிச் சென்றதாக3 ஹூசைன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடற்பகுதியில் உள்ள சில தீவுகளைத் தங்களின் வாழிடமாகக்  கொண்ட கடம்பர் இனத்தினர் கடற்கொள்ளை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். கடம்பர்களின் வாழிடம் “வெள்ளைத்தீவு“ என்று வரலாற்றறிஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.4 இவர்கள் தமிழகத்திற்கு வரும் அயல்நாட்டு கப்பல்களைக் கொள்ளையிடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் அயல் வணிகர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தனர். வாணிபத்தில் பின்னடைவும் ஏற்பட்டது. இக்கடம்பர்களை அடக்குவதற்காக இமயவரம்பன் நெடுஞசேரலாதன் கடற்படைநடத்திக் கடம்பர்களை முற்றாக அழித்தார். இச்செய்தியினைப் பதிற்றுப்பத்தின் 2, 17, 20 ஆகிய பாடல்களும் அகநானூற்றின் 127, 347 ஆகிய பாடல்களும் குறிப்பிட்டுள்ளன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் வெல்கெழுக்குட்டுவன் ஆட்சிக்கு வந்தபொழுதும் கடற்கொள்ளையர்கள் மீண்டும் தங்களின் கடற்கொள்ளை முயற்சிகளை மேற்கொண்டனர். வெல்கெழுக்குட்டுவன் தன்னுடைய தந்தையைப்போலவே கடற்படை நடத்திக் கடம்பர்களை விரட்டி, அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடல்பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன்“ என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றது.

வணிகப் புலவர்கள்

சங்கப் புலவர்கள் எல்லோரும் மன்னர்களையும் செல்வந்தர்களையும் தம் புலமைத் திறத்தால் புகழ்ந்து பாடி, பரிசில் பெற்று வாழ்ந்தனர் என்று கூறமுடியாது. புலவர்கள் பலர் தம் வறுமையைத் தணிக்கத் தம் புலமையைப் பிறரிடம் அடகுவைக்கவில்லை. புலவர்கள் பலர் பாடல் இயற்றுவதையே தம் தொழிலாகவும் கருதவில்லை.  புலவர் பலரின் முதன்மைத் தொழில் வாணிகமாகவும் பாடல் இயற்றுவது பொழுதுபோக்காகவும் இருந்துள்ளது. இவற்றை  அவர்களுக்குரிய அடைமொழிகளால் அறியமுடிகின்றது.

சான்றாக, கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், அறுவை வணிகன் இளவேட்டனார், மதுரைப்பண்ட வாணிகன் இளநத்தனார், மதுரைப் பெருங்கொல்லனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங்கொற்றனார் போன்ற புலவர்களைக் குறிப்பிடலாம். “கூல வாணிகம்“ என்பது தானியங்களை விற்பனை செய்வது. “அறுவை வாணிகம்“ என்பது ஆடையை விற்பனை செய்வது. “பண்ட வாணிகம்“ என்பது பலசரக்குப் பொருட்களை விற்பனை செய்வது. “பொன் வாணிகம்“ என்பது அணிகலன்களை விற்பனை செய்வது.

பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்ததால்மட்டுமல்ல, உற்பத்தி செய்த பொருட்களைப் பலவகையில் நேர்மையாக விற்பனை செய்ததால்தான் பழந்தமிழர்கள் உலக அளவில் புகழ்பெற்றனர்.

அடிக்குறிப்பு

  1. மேற்கோள் – வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, பக். 242, 243.
  2. மேலது, ப. 246.
  3. மேற்கோள் – இராசமாணிக்கனார், மா., தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்), பக். 64, 65.
  1. http://muelangovan.blogspot.in/2008/11/blog-post_22.html


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குயவரும் கொல்லரும்

சங்க காலம் / தேடல் – 16

22THEF_TAMIL3_jpg_133005gபழந்தமிழர்களின் பயன்பாட்டுப் பொருள்கள் (புழங்குபொருட்கள்)பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டவையேநெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்துப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அவர்கள் மண்ணைப் பாத்திரங்களாகப் பயன்படுத்தும் நுட்பத்தை அறிந்தனர்.மண்ணாலான பாண்டங்களைத் தயாரிக்க அவர்களுக்குச் சக்கரமும் நெருப்பும் முதன்மைத்தேவையாக இருந்தனமட்பாண்டத் தயாரிப்பில் தொல்தமிழர் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தைத்தான் இன்றளவும் நாம் பயன்படுத்திவருகிறோம்மட்பாண்டத் தொழில் தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்று.

நெருப்பினை ஊதிப் பெருக்கி அதன் வெப்ப நிலையை உயர்த்தத் தெரிந்துகொண்டபின்னர்இரும்பினை உருக்கிப் பயன்படும் வகையில் கருவிகள்ஆயுதங்கள் போன்ற பலவற்றை உருவாக்கத் தொடங்கினர்.

ஆறுவகை மட்பாண்டங்கள்

சங்கத் தமிழர்கள் மட்பாண்டங்களைக் “கலம்“ என்றனர்அவற்றைச் செய்யும் குயவரைக் “கலம் செய்கோவே“ என்று புறநானூற்றின் 32ஆவது பாடல் சிறப்பித்துள்ளதுஇக்காலத்தில் அவர்களைக் “குலாலர்கள்“ என்கிறோம்தொல்தமிழர் தயாரித்த மட்பாண்டங்களைப் பானைகுடம்,தாழிகுழிசிதசும்புநெற்கூடு (குதிர்என ஆறு வகைப்படுத்தலாம்.

இடையர்களால் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட மட்பாண்ட வகை பானைஇடையன் என்று அறியப்பட்ட சங்க கால “அதளன்“ பசுக் கூட்டங்களை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும்போதுதன்னுடைய கைப்பொருட்களாகத் தீக்கடைக்கோல்தோற்படுக்கைபானை முதலியவற்றை மூட்டையாகக் கட்டித் தன் தோளில் மாட்டிய உறியில் தொங்கவிட்டுச் சென்றதாக அகநானூற்றின் 274ஆவது பாடல் கூறியுள்ளது.இடையர் இந்தப் பானையை உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தி இருக்கலாம்ஆய்ச்சியர்கள் தயிர்கொண்டு செல்லும் மிகப்பெரிய பானை என்ற பொருளில் “மிடாப்பானை“ என்ற சொல் நற்றிணையின் 84ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது.

குடம்“ என்பதுபானையைவிடச் சிறியதுமெலிந்து உயர்ந்த வடிவினையுடையதுபலாப்பழத்தின் மிகப்பெரிய பழத்துக்குக் குடம் உவமையாக நற்றிணையின் 353ஆவது பாடலில் சுட்டப்பட்டுள்ளதுமகளிர் குடிநீரைக் கொண்டுவர வேலைப்பாடுகள் நிறைந்த குடத்தினைப் பயன்படுத்தியதாக அகநானூற்றின் 336ஆவது பாடல் தெரிவித்துள்ளது.கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெற்றுள்ள குடத்தில் பசுவின் பால் கறக்கப்பட்டது என்ற செய்தி குடத்தின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்துகின்றது.

குழிசி“ என்ற மட்கலம் பல்வேறு பயன்பாட்டுக்குரியதாக இருந்துள்ளது.அகநானூற்றின் 393 பாடலில் இக் குழிசியில் உணவு சமைத்த செய்தி இடம்பெற்றுள்ளதுநெல்லை உரலிலிட்டுஇடித்து அரிசியாக்கி அதனையும் சுனைநீரையும் களிமண்ணால் செய்யப்பட்ட குழிசியில் இட்டுக் கல் அடுப்பில் ஏற்றிச் சோறுபொங்கியதாக அப்பாடலில் குறிப்பு உள்ளது.புறநானூற்றின் 168, 237, 371, 393 ஆகிய பாடல்கள் குழிசி சோறாக்கப் பயன்படுத்தப்பட்டமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

குழிசி ஓலை முறை“ அதாவது “குடவோலைமுறை“ என்று அறியப்பட்ட அக்காலத் தேர்தல் முறைக்கு இக்குழிசியைப் பயன்படுத்தியுள்ளனர்.இதனை அகநானூற்றின் 77ஆம் பாடல் தெரிவித்து்ளளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தயிரைக் கடைய இக்குழிசியினைப் பயன்படுத்தியுள்ளதாகப் பெரும்பாணாற்றுப்படையின் 158, 159 ஆகிய அடிகளும் புறநானூற்றின்65ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளனமுல்லைநிலத்தைச் சார்ந்த ஆய்ச்சியர் பால் காய்ச்சும் பாத்திரமாகவும் இக்குழிசி பயன்பட்டுள்ளதுஅவ்வாறு பால் காய்ச்சி பயன்படுத்திய பின்னர் அக்குழிசியில் கமழும் பால் வாசத்தைப் போக்க விளாம்பழத்தை அதனுள் இட்டுள்ளனர்இச்செய்தியினை நற்றிணையின் 12 பாடல் தெரிவித்துள்ளது.

தசும்பு“ என்ற மட்பாண்டத்தைப் பெரும்பான்மையாக முல்லைநில மக்களான ஆய்ச்சியர்கள் மத்துகொண்டு தயிர் கடைய இத் தசும்பு மட்பாண்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர்இச்செய்தியினை நற்றிணையின்84ஆவது பாடல் கூறியுள்ளதுஇத்தசும்பில் மதுவையும் வைத்துள்ளனர் என்ற செய்தியினைப் புறநானூற்றின் 33, 239 ஆகிய பாடல்கள் சுட்டியுள்ளன.

தாழி“ என்று குறிப்பிடப்படும் மட்பாண்டத்தைப் பூச்செடிகள்பருத்திச்செடி,பிணம் போன்றவற்றை வைக்கப் பயன்படுத்தியுள்ளனர்அழகுக்காக வைக்கப்படும் பூந்தொட்டியாகத் தாழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனஇதனை அகநானூற்றின் 369 மற்றும் 165 ஆகிய பாடல்கள் உறுதிபடுத்தியுள்ளன.பருத்திச் செடிகளைத் தாழியில் வைத்து வளர்த்துள்ளமையை அகநானூற்றின் 129ஆவது பாடல் கூறியுள்ளதுஇறந்தோரின் உடலை நல்லடக்கம் செய்யவும் இத்தாழிகளைப் பயன்படுத்தியுள்ளனர்இதனைப் புறநானூற்றின் 256, 228 ஆகிய பாடல்களின் வழியாக அறியமுடிகின்றது.தாழிகள் ஒரு மீட்டர் உயரமுள்ளவைஅகழ்வாய்வில் முதுமக்கள் தாழிகள் என்ற பெயரில் பல்வேறு தாழிகள் கண்டறியப்பட்டுள்ளனசில தாழிகளில் மேற்புறத்தில் “தமிழி“ எழுத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளனசில அலங்காரம் செய்யப்பட்டுள்ளனஅத்தகைய தாழிகளைப் போலவே இப்போதும் சில குயவர்களால் இத்தாழிகள் செய்யப்படுகின்றனமதுரை கிடாரிப்பட்டியில் உள்ள குயவர்களின் குடிசை வீட்டடின் முன்புறம் இத்தாழிகளில் குடிநீர் நிறைத்துவைத்துள்ளமையை இப்போதும் காணமுடிகின்றது.

குதிர்“ என்று அறியப்பட்ட நெற்கூடு பண்டையத் தமிழரின் விவசாயக் கருவூலமாக இருந்துள்ளதுகுறிப்பாக இதில் விதைநெல்லைச் சேமித்துள்ளனர்இவற்றில் சேமிக்கப்படும் விதைநெல் அவர்களுக்கு ஓராண்டுக்குப் பின்னர்தான் தேவைப்படும்ஓராண்டு வரை நல்ல நிலையில் இருக்கக்கூடிய நெற்கூடுகளை அவர்கள் மண்ணால் உருவாக்கினர்அந்த நெற்கூடை அழகுற அமைத்திருந்தனர்இக்கூடுகள் நெடுநாள் நல்ல நிலையில் இருந்தமையால் அவற்றைக் “குமரி மூத்த கூடு“ என்று குறிப்பிட்டனர்இச்சொல்லுக்கு “ஒரு பெண் பருவமெய்திப் பல ஆண்டுகள் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னி நிலை“ என்று பொருள்.அப்பெண்ணின் கற்புபோல இக்கூடும் சிதையாது இருக்கின்றது என்ற பொருளில் இந்த நெற்கூடினைக் “குமரி மூத்த கூடு“ என்று குறிப்பிட்டு அதன் சிறப்பினைப் பெரும்பாணாற்றுப்படையின் 245 முதல் 247வரையிலான அடிகள் விவரித்துள்ளன.

விதை நெல்லை மட்டுமல்ல உணவுக்காக உள்ள நெல்லையும் வரகையும் பிற தானிய வகையறாக்களையும் கூட தமிழர்கள் இத்தகைய குமரி மூத்த கூடுகளில் பாதுகாத்துவந்துள்ளனர்இதுகுறித்துப் புறநானூற்றின் 148ஆம் பாடலும் பெரும்பாணாற்றுப் படையின் 182, 186 ஆகிய அடிகளும் தெரிவித்துள்ளனஇந்த நெற்கூடுகளின் நிழலில் ஓர் எருமை மாடு படுத்துறங்கியதாகப் பட்டினப்பாலையின் 14, 15 ஆகிய அடிகள் தெரிவித்துள்ளனஇதன் வழியாக நெற்கூடுகளின் அளவு புலப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன் பழநி சங்கிலித்தேவர் சந்தில் வசிக்கும் சித்ரா அழகேசனுக்குரிய இடத்தில் வீடு கட்டும் பணிக்காத் தோண்டப்பட்ட குழியில் சங்க காலத்தைச் சார்ந்த தானியக் குதிர் கண்டெடுக்கப்பட்டது.அதனை நேரில் சென்று ஆய்வுசெய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, “இது எட்டு அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட வெற்றிடக் குழியாக உள்ளதுமுட்டை வடிவிலான இக்குழியைச் சுற்றிலும்,தட்டையான கற்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதுமேல்பகுதியில்ஓர் அடி தடிமன் கொண்டகல்மூடி போன்ற அமைப்பு காணப்படுகிறது.இக்குழியின் மேல்வாய் தரையில் இருந்து நான்கடி ஆழத்தில் துவங்குவதால்சங்ககாலம் என உறுதிப்படுத்தலாம்இப்பகுதியில் கிடைத்த மண்பாண்ட ஓடுகள், 2000 ஆண்டுகளுக்கு முன்(சங்ககாலபயன்பாட்டில் இருந்தவைவிளிம்புப் பகுதியில் கலைநயத்துடன் கூடிய வரிவடிவம்,குடுவை போன்ற அமைப்புடன் உள்ளதுதானியக்குதிராகப்பயன்படுத்தப்பட்டிருக்கலாம்இருப்பினும் வெள்ளைச்சோளம்மல்லிகைச் சோளம்இறுங்கச்சோளம்செஞ்சோளம் உள்ளிட்ட ஆறுவகைகள் மட்டுமே பதனப்படுத்தி வைப்பர்பிற தானியங்களைஇதில் பதனப்படுத்த முடியாது.

40 முதல் 50 மூட்டை சோளம் நிரப்பும் வகையில் குழியமைவு உள்ளது.வைக்கோலைப் பரப்பிஅதன்மீது சோளத்தை நிரப்புவர்பின்னர் புங்கை மர இலைகள் பரப்பிமணலால் மூடி விடுவர்பூச்சி தாக்குதல்மழையால் ஈரப்பதம் அடைதல்கெட்டுப்போதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும்உணவுத் தேவையின்போதுஇவற்றை எடுத்துப்பயன்படுத்துவர்இருப்பினும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களால்,தானியத்தை எடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டுஇதனைத்தவிர்க்கத் தனியக் குதிருக்குள் இறங்கும் நபர் இறங்கும் முன்பும் மேலே வந்த பின்பும் சம்பந்தப்பட்ட சுக்குகருப்பட்டி ஆகியவற்றை உண்பார். 1930-க்குப் பின் பதனப்படுத்தலில் நாகரிக வளர்ச்சி காரணமாகதானிய குதிர்முறை அழிந்து விட்டது1என்று தெரிவித்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

மட்கலத்திலும் “காப்பி“

தமிழகத்தில் திருக்காம்புலியூர்உறையூர்காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் வழியாகக் கண்டெடுக்கப்பெற்ற கறுப்பு-சிவப்பு நிற மட்கலன்கள் சிலவற்றில் கீறல் குறியீடுகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படிகின்றனசிலவற்றில் நேர்கோடுகள்குறுக்கு-நெடுக்குக் கோடுகள்வளைந்த கோடுகள் போன்ற தன்மையில் வண்ணங்கள் தீட்டியிருப்பதனையும் காணமுடிகின்றது.இப்பகுதிகளில் கருஞ்சிவப்புக் கலவை பூசிய மட்கலன்களையும் கண்டெடுத்துள்ளனர்.

வெளிப்பரப்பில் வெண்மையான வண்ணம் தீட்டப்பட்டுப் பளபளப்பான தோற்றத்துடன் கூடிய தனிக்கறுப்பு நிற மட்கலன்கள் சிலவற்றைக் கல்லூர்,கொற்கைகாஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கண்டெடுத்துள்ளனர்.

ரோமானியர்களின் “ரௌலட்டட் மட்கலன்கள்“ மிருதுவான களிமண்ணால் நேர்த்தியாகச் செய்யப்பட்டவைஇவை எஃகின் நிறமாகவோ அல்லது சாம்பல் நிறமாகவோ இருக்கும்இவற்றின் உட்பகுதியில் புள்ளிகளாலான ஒப்பனைகள் வட்டமுக்கோணஅறுகோணகண்முட்டை வடிவங்களில் ஒன்றினைக் கொண்டிருக்கும்இத்தகைய மட்பாண்டங்கள் உறையூர்,காஞ்சிபுரம்கொற்கைவசவசமுத்திரம்செங்கமேடுநத்தமேடுகாரைக்காடு,கரூர் ஆகிய பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன.ரோமானியர்களால் செய்யப்பெற்ற ரௌலட்டட் மட்பாண்டங்களைக் கடல்வணிகத்தின் வழியாகத் தமிழகத்துக்கு வந்தனஅவற்றைப் பார்த்து வியந்த தமிழகக் குயவர்கள்அவற்றைப்போலவே தாமும் செய்ய முயன்றுள்ளனர்தமிழகக் குயவர்கள் செய்த உள்ளுர் ரௌலட்டட் மட்கலன்களை அரிக்கமேடு,உறையூர்காரைக்காடு போன்ற இடங்களில் கண்டெடுத்துள்ளனர்ஆனால்,இவர்கள் செய்தவைதரத்திலும் அழகிலும் அவற்றைப் போல் இல்லை.

ரோமானியர்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய மற்றொரு மட்கலம் “ஆம்போரா சாடிகள்“ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத் திரவங்களைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லும் வசதியுடன் செய்யப்பட்டிருந்தனஇவற்றின் அடிப்பாகம் கூர்மையாகவும் வாய்ப்பகுதியில் மூடியும் கழுத்துப் பகுதியின் இரண்டு புறங்களிலும் கைப்பிடிகளும் காணப்படுகின்றனஇவற்றைக்கொண்டு மதுபானங்களை மண்ணில் நீண்ட நாட்கள் புதைத்து வைக்கலாம் என்ற சிந்தனையோடு தமிழகக் குயவர்கள்ஆம்போரா சாடிகளின் வடிவமைப்பில் கைப்பிடிகள் இல்லாமல் பல சாடிகளைத் தயாரித்துள்ளனர்இவற்றைக் காஞ்சிபுரத்தில் கண்டெடுத்துள்ளனர்.

 ஊது உலை

எரியும் உலையில் காற்றினை அழுத்தத்துடன் வேகமாகச் செலுத்தி வெப்பத்தினைப் பெருமளவு உயர்த்தும் தொழில்நுட்பம் ஊது உலையில் செயல்படுத்தப்படுகின்றதுஅவ்வுலைக்குள் காற்றினை அழுத்தத்துடன் விரைவாகச் செலுத்தும் கருவிக்குத் “துருத்தி“ என்றுபெயர்சங்க காலத்தில் ஊது உலையில் மூன்று விதமாக துருத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவை 1. மிதிதோல் துருத்தி, 2. விசைத் துவாங்கு துருத்தி, 3. கைத் துருத்தி என்பனவாகும்.

முதல்வகையான மிதிதோல் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலையில்,தோலாலான மிதி உலையை மிதித்துக் கொல்லர் காற்றை உலைக்குள் செலுத்துவார்இத்துருத்தி பற்றிய செய்திகள் அகநானூற்றின் 202ஆவது பாடலிலும் குறுந்தொகையின் 172ஆவது பாடலிலும் பெரும்பாணாற்றுப்படையின் 207 மற்றும் 208ஆவது அடிகளிலும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் வகையான விசைத் துவாங்கும் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலையின் செயல்பாடு பற்றி தசாமிநாதன், “துருத்தியின் தோற்பைகாற்றை வெளியிலிருந்து உள்ளிழுத்து விரியவும் காற்றை நெருப்பில் ஊதச் சுருங்கவுமாகச் செயல்படஅத்துடன் மேலே பொருத்தப்பட்ட சிறு சக்கரம் வழியாகக் கயிறு ஒன்று இணைக்கப்படும்.கயிற்றின் ஒரு முனையை மேலிருந்து கீழே இழுக்கக் காற்றை ஊதி தோற்பை சுருங்கும்கயிற்றை விடத் தோற்பை காற்றை இழுத்து விரியும்ஊதப்படும் காற்றின் வேகம்கயிற்றை இழுக்கும் வேகத்தைப் பொறுத்தது”“3என்று விளக்கியுள்ளார்இந்த வகையான துருத்திகொண்ட ஊது உலை பற்றிய செய்தியை அகநானூற்றின் 96, 224 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

மூன்றாவது வகையான கைத் துருத்தியால் இயக்கப்படும் ஊது உலை சற்று வேறுபட்டதுகைத்துருத்தியில் உள்ள தோற்பையில் சிறிய அளவிலான இரண்டு இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.இவ்விரண்டு தகடுகளும் கதவுகள் போல் திறக்கவும் மூடவும் செய்யும்.தோற்பை கையால் இயக்கப்படும்போதுமூடிகள் இரண்டும் திறந்து காற்றை இழுத்துக்கொள்ளும்அழுத்தப்படும்போது மூடிக்கொள்ளும்.அப்போது காற்று உலைக்குள் சென்று நெருப்பின்மீது அழுத்தும்.கைத்துருத்திகள் பற்றிய குறிப்பினைப் புறநானூற்றின் 345ஆவது பாடலில் காணமுடிகின்றதுஇந்த மூவகையாக துருத்திகளும் தற்காலத்திலும் கொல்லர் பட்டறைகளில் செயல்பாட்டில் உள்ளன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 உருகும் இரும்பு

சங்க காலத்தில் ஊது உலைகளின் உதவியால் இரும்பினைப் பெருமளவில் உருக்கியுள்ளனர்உருகிய இரும்பின் நிறம் எருமை மாட்டுக் கொம்பின் நிறத்தை ஒத்தது என்று அகநானூற்றின் 56ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளதுஇரலை மானின் கரிய கொம்புபோன்றது என்று அகநானூற்றின் 4ஆவது பாடல் சுட்டடியுள்ளதுஉருகிய இரும்பால் வார்த்துச் செய்யப்பட்ட இரும்புப் பட்டையானது புன்னை மரத்தின் கரிய நிறமுடைய கிளைக்கு ஒப்பானது என்று நற்றிணையின் 249ஆவது பாடல் தெரிவித்துள்ளதுஇந்த மூன்று உவமைகளிலிருந்து, அவர்கள் பயன்படுத்திய இரும்புத் தாதுவின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு இரும்பின் நிறம் சற்று மாறுபட்டுத் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இரும்புப் பட்டறை

உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்துவளைத்து கருவிகள்பொருட்கள் செய்ய சங்கத் தமிழர்களுக்கு நான்கு கருவிகள் உதவினஅவை 1. உலைக்கல், 2. சம்மட்டி, 3. கொறடு, 4. பனைமடல்.

உலைக்கல் என்பது பட்டறைக்கல்லைக் குறிக்கும்அடித்து வளைக்க வேண்டிய சூடான இரும்பினை உலைக்கல்லின் மீது வைத்துஅதனைச் சம்மட்டியால் அடித்துள்ளனர்ஆண் யானையின் பெரிய கொம்புக்குப் பூண் மாட்டுவதற்காக இரும்பினை அடித்து வளைத்த உலைக்களத்தின்நிகழ்வினைப் புறநானூற்றின் 170ஆவது பாடல் விளக்கிக் கூறியுள்ளது.அந்த உலைக்கத்தில் “கூடம்“ என்று சுட்டப்பட்ட சம்மட்டியும் “உலைக்கல்“ என்று அழைக்கப்பட்ட பட்டறைக்கல்லும் இருந்துள்ளமையை இப்பாடல் சுட்டியுள்ளது.

கொல்லன் பட்டறையில் உள்ள கவை போன்ற கொடிற்றை“ என்று கொறடினைப் பெரும்பாணாற்றுப்படையின் 206, 207ஆகிய அடிகள் குறிப்பிட்டுள்ளன. “பெண்யானை பிளந்ததால் நார் உரிக்கப்பட்ட வெள்ளிய பாலை மரங்களின் கிளைகள் கொடிறு போன்று இருந்தன“ என்று நற்றிணையின் 107ஆவது பாடல் கொறடினைச் சுட்டியுள்ளது.

உருக்கிவார்க்கப்பட்ட இரும்பின் அதிவெப்பத்தைத் தணிக்கப் பனைமடலில் நீரைத் தோய்த்துத் தெளித்துள்ளனர்இதுபற்றிய குறிப்பினை நற்றிணையின் 133ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றதுபட்டறையில் கொல்லர் இரும்பினை அடிக்கும் போது எழும் தீப்பொறிகளின் சித்திரத்தினை அகநானூற்றின் 72ஆவது பாடல் காட்சிப்படுத்தியுள்ளது.

இப்பாடலில் இரும்பினைப் புலவர் “பொன்“ என்று குறிப்பிட்டுள்ளார். “பொன்“ என்பதுஅக்காலத்தில் பொதுவாக உலோகங்களைக் குறித்தது.இச்சொல் தங்கத்தைக் குறிக்கும் ஒருசொல்லாகவும் இருந்துள்ளது.

இரும்பாயுங்கள்

இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர்வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே“ என்று புறநானூற்றின் 312ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளது.இதிலிருந்து கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தலே என்பது தெரியவருகின்றதுகொல்லர் செய்த ஆயுதங்கள் சில வருமாறு  வில்அம்புவேல்அரிவாள்,ஆண்டலையடுப்புஈர்வாள்உடைவாள்கதிரருவாள்ஐயவித்தூலம், கதை,கவைகல்லிடு கூடைகணையம்கழுகுப்பொறிகவசம்குத்துவாள்,கைவாள்கொடுவாள்கோல்சிறுவாள்தகர்ப்பொறிதொடக்கு,பிண்டிபாலம்ஞாயில்மழுவாள்விளைவிற்பொறிஅரிதூற்பொறிஇருப்பு முள்எரிசிரல்கழுகருவிலூகம்கல்லமிழ் கவண்கற்றுப்பொறிகழுமுள்,குந்தம்கூன்வாள்கைபெயர்கோடாரிசதக்கணிதண்டம்தூண்டில்,தோமரம்புதைநாராசம்வச்சிரம்.

வரகுக் கதிர்களை இரும்பாலான அரிவாளால் அரியப்பட்ட செய்தியினை மலைபடுகடாமின் 113ஆவது அடி தெரிவித்துள்ளதுகானவனின் கைகள் இரும்பினை வடித்துவைத்தது போன்று இருந்ததாக அகநானூற்றின்172ஆவது பாடல் உவமைப்படுத்தியுள்ளதுஅரிவாள் பற்றிய குறிப்புகளை நற்றிணையின் 195, 275ஆகிய பாடல்களிலும் புறநானூற்றின் 379ஆவது பாடலிலும் பொருநராற்றுப்படையின் 242ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

கொல்லர் செய்த வேல் இலைவடிவமுடைய முனையையும் நீண்ட காம்பினையும் உடையது என்பதனைப் புறநானூற்றின் 180ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றதுவேல்கள் கூரிய முனையினை உடைய என்ற குறிப்பினைப் புறநானூற்றின் 42ஆவது பாடலின் வழியாகத் தெரிந்துகொள்ளமுடிகின்றதுபழுக்கக் காய்ச்சி கூர்மையாக வடிக்கப்பட்ட வேல் என்று புறநானூற்றின் 295ஆவது பாடல் சுட்டியுள்ளதுவேலினை நீண்ட இரும்புக் காம்பின் முனையில் திருகப்பட்டு (உலோகத்தில் திருகு அமைக்கும் தொழில் நுட்பம்இணைக்கப்பட்டிருந்ததுஇச்செய்தியினைப் புறநானூற்றின் 97ஆவது பாடலின் வழியாக அறியமுடிகின்றது. “வேல்“ பற்றிய குறிப்புகளை அகநானூற்றின் 215, 272, 312 ஆகிய பாடல்களிலும் பெரும்பாணாற்றுப்படையின் 119, மலைபடுகடாமின் 490,மதுரைக்காஞ்சியின் 739, நெடுநல்வாடையின் 176ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றது.

பகழிகணைஎஃகு என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் “அம்பு“ பற்றிய குறிப்புகளை அகநானூற்றின் 9, 215, 289, 371 ஆகிய பாடல்களிலும் புறநானூற்றின் 23, 181 ஆகிய பாடல்களிலும் பரிபாடலின் 18ஆவது பாடலிலும் நற்றிணையின் 329ஆவது பாடலிலும் பதிற்றுப்பத்தின் 45ஆவது பாடலிலும் காணமுடிகின்றது.

வாள்“ பற்றிய குறிப்புகளைப் புறநானூற்றின் 50, 109, 278 ஆகிய பாடல்களின் வழியாக அறியமுடிகின்றதுகுறுவாளை “உடைவாள்“ என்றனர்இது பற்றி மதுரைக்காஞ்சியின் 635, 637ஆவது அடிகளில் அறியலாம்இரும்பு வாள் மிகச் சரியாக வெட்டுவதற்குப் பயன்படும் என்ற கருத்தினைப் பரிபாடலின் ஏழாவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது.

எதிரிகளின் படைக் கருவிகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் “கேடயம்“ பற்றிய செய்தியைப் புறநானூற்றின் நான்காவது பாடலின் வழியாக அறியமுடிகின்றதுNflஇதனைக் “கேடகம்“, “தோல்“, “கிடுகு“ என்றும் சுட்டியுள்ளனர்.

வீரர்கள் தங்களை ஆயுதங்கள் தாக்காதவாறு உடல் முழுவதும் மறைத்துக்கொள்ளும் வகையில் இரும்பாலான கவசம் அணிந்துள்ளனர்இக் கவசத்தினை “மெய்ம்மறை“ என்றனர்.Nfஇதனை “மெய்ப்பை“, “மெய்யாப்பு“ என்றும் குறித்துள்ளனர்இதுகுறித்து புறநானூரின் 14, 21, 65 ஆகிய பாடல்களும் பரிபாடலின் இரண்டாவது பாடலும் முல்லைப்பாட்டின்60ஆவது அடியும் சுட்டியுள்ளன.

மதில்களையும் அரண்களையும் எதிரிகளிடமிருந்து காக்கஎந்திரங்களைக் கொண்டு ஆயுதங்களை எறியும் திறனையும் சங்கத் தமிழர் பெற்றிருந்தனர்.இந்த எந்திரங்கள் இரும்பாலானவைஇவை மிகப்பெரிய அளவிலும் மிகச்சிறிய அளவிலும் அமைக்கப்பட்டிருந்தனஇவை மிகச்சிறந்த பாதுகாப்பினை நல்கியுள்ளனஇதுகுறித்துப் பதிற்றுப்பத்தின் 53ஆவது பாடலும்புறநானூற்றின் 177ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 66, 67அடிகளும் குறிப்பிட்டுள்ளன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இரும்புக் கருவிகள்

அக்காலத்தில் ஆயுதங்களை எறிவதற்கு மட்டுமல்ல பிற தொழில்களுக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனகரும்பு பிழிதலுக்கு இரும்பாலான எந்திரங்கள் பயன்பாட்டிலிருந்துள்ளனஇது பற்றிப் புறநானூற்றின் 322ஆவது பாடலும் பொரும்பாணாற்றுப்படையின்259 முதல் 262 வரையிலான ஆகிய அடிகளும் ஐங்குறுநூற்றின் 55ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 258ஆவது அடியும் மலைபடுகடாமின் 340, 341ஆகிய அடிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

மரங்களை வெட்டுவதற்குரிய கைக்கோடரிகளை “நவியம்“ என்று அழைத்தனர்சில கோடரிகளில் நெடிய காம்புகள் (கைப்பிடிஉண்டு என்ற செய்தியையும் இலக்கிய அடிகளின் வழியாக அறியமுடிகின்றது.புறநானூற்றின் 23, 36 ஆகிய பாடல்கள் நவியம் பற்றிப் பகர்ந்துள்ளன.

உழவுக்கருவிகளான கொழுகணிச்சி (குந்தாலி அல்லது கூந்தாலம்),உளிவாய்ப் பாரை போன்றவற்றையும் இரும்பால் செய்துள்ளனர்.உழுகருவியான கலப்பையின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் கொழுவின் வலிமையினைப் பெரும்பாணாற்றுப்படையின் 197 முதல் 200வரையிலான அடிகளும் பொருநராற்றுப்படையின் 117, 118 ஆகிய அடிகளும் பதிற்றுப்பத்தின் 58 ஆவது பாடலும் சுட்டியுள்ளனகணிச்சியின் திறன் குறித்து அகநானூற்றின் 399ஆவது பாடலும் நற்றிணையின் 240ஆவது பாடலும் சுட்டியுள்ளனகரிய கரம்பு நிலத்தைப் பண்படுத்தப் பயன்படும் உளிவாய்ப் பாரையின் செயல்பாடு பற்றிப் பெரும்பாணாற்றுப் படையின் 91,92 ஆகிய அடிகள், “இரும்பாலான பூண் தலையிலே கட்டப்பட்டுத் திரட்சி உடைய மரத்தாலான கைப்பிடி உடையதும் உளிபோலும் வாயை உடைய பாரைகளாலே கட்டிகள் கீழ் மேலாக வரும்படி குத்திக் கிண்டினர்“ என்று கூறியுள்ளன.

நெய்தல் நிலத்தினைச் சார்ந்த பரதவர்கள்எறிஉளியைப் பயன்படுத்தினர்.இது மீன்வேட்டைக்குப் பயன்பட்டுள்ளதுபெரிய மீன்களை எறிஉளியை எறிந்து கொன்றுள்ளனர்கயிற்றில் கட்டப்பெற்ற எறி உளியையும் ஒளிமிகுந்த விளக்குகளையும் பரதவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது கைப்பொருளாகக் கொண்டுசென்றனர் என்ற தகவலை நற்றிணையின் 388 ஆவது பாடல் தெரிவித்துள்ளதுகொம்பினை உடைய சுறாமீனைக் கொல்லப் பரதவர்கள் எறிஉளியைப் பயன்படுத்தினர் என்ற செய்தியைக் குறுந்தொகையின் 304 ஆவது பாடல் கூறியுள்ளதுசிறிய அளவினை உடைய மீன்களைப் பிடிக்கத் தூண்டில்களைப் பயன்படுத்தினர்தூண்டிலில் உள்ள முள்ளினை (மடிதலைஇரும்பால் செய்துள்ளனர்இத்தூண்டில் குறித்த பதிவினைப் பெரும்பாணாற்றுப்படையின் 284 முதல் 287 வரையிலான அடிகளில் காணமுடிகின்றது.

உளிகளில் பல வகைகளைச் செய்து பயன்படுத்தியுள்ளனர்.யானைத்தந்தங்களில் வேலைப்பாடுகளைச் செய்வதற்காக “மரஉளி“யையும் நடுகல் அமைக்க “கல்உளி“யையும் கைவினைப்பொருட்களைச் செய்ய “நுண்உளி“யையும் பயன்படுத்தியுள்ளனர்மரஉளி பற்றிய செய்தியை நெடுநல்வாடையின்115 முதல் 123 வரையிலான அடிகளிலும் சிறுபாணாற்றுப்படையின் 252, 253 ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றதுகல் உளி குறித்த செய்தியை அகநானூற்றின் 343 ஆவது பாடலிலும் நுணு் உளி பற்றிய குறிப்பினைச் சிறுபாணாற்றுப்படையின் 51 முதல் 54 வரையிலான அடிகளிலும் காணமுடிகின்றது.

இரும்பால் செய்யப்பட்ட விளக்குகளையும் (தகளிஅக்காலத் தமிழர் பயன்படுத்தியுள்ளனர்இது பற்றி நெடுநல்வாடையின் 41,42ஆகிய அடிகள் சுட்டியுள்ளனநார்களைப் பின்னுவதற்கும் தோல்களைத் தைப்பதற்கும் இரும்பு ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர்இதனைப் புறநானூற்றின்82ஆவது பாடலும் பதிற்றுப்பத்தின் 42, 74ஆவது பாடல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

கிணற்றிலிருந்து நீரை இறைக்க இரும்பாலான இறவை வாளிகளைப் பயன்படுத்தியுள்ளனர்இது பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தின்22ஆவது பாடலில் காணமுடிகின்றது.

தானியங்களை உரலிலிட்டு குற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மர உலக்கையின் நுனியில் இரும்பால் பூண் இட்டனர்இது பற்றிய குறிப்பு,சிறுபாணாற்றுப்படையின் 193, 194 ஆகிய அடிகளிலும் அகநானூற்றின் ஒன்பதாவது பாடலிலும் இடம்பெற்றுள்ளதுஉலக்கைக்கு மட்டுமல்ல யானையின் தந்தத்திற்கும் இரும்புப்பூண் இட்டுள்ளனர்இது பற்றிப் புறநானூற்றின் 370 ஆவது பாடலிலும் பெரும்பாணாற்றுப்படையின் 436, 437ஆகிய அடிகளிலும் காணமுடிகின்றது.

கத்திரிக்கோல் என்று அறியப்பட்ட கத்திரிகையையும் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளனர்இது இரும்பாலானதுஇது பெரும்பாலும் மகளிரின் கூந்தலை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதுஅதனால் இதனை மயிர்குறைக் கருவி என்றனர்இதற்கு “வாள் இடை“ என்றும் “எஃகு இடை“ என்றும் பெயருண்டுஇதுபற்றிய குறிப்பினைப் பொருநராற்றுப்படையின் 29,30 ஆகிய அடிகளிலும் கலித்தொகையின் பாலைக்கலி 31, 35 ஆவது பாடல்களிலும் காணமுடிகின்றது.

தொடர்“ என்று குறிப்பிடப்படும் சங்கிலிகளை இரும்பால் செய்து அதனைச் சிறைக் கைதிகளைப் பிணைக்கப் பயன்படுத்தியுள்ளனர்இது பற்றிப் புறநானூற்றின் 74 பாடலில் குறிப்புள்ளது.

யானைகளை அடக்கும் அங்குசத்தை இரும்பால் செய்துள்ளனர்.அங்குசத்தின் நெடிய காம்பு மரத்தாலும் அதன் கூர்முனை இரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும்அங்குசத்திற்குத் “தோட்டி“ என்று பெயருண்டுஇது பற்றிக் கலித்தொகையின் நெய்தல் கலி 21ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

இலவம் பஞ்சுக் காய்களிலிருந்து பஞ்சினைப் பிரித்தெடுக்க இரும்பாலான மத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்இந்த இரும்பு மத்து பற்றி அகநானூற்றின் 217ஆவது பாடலில் குறிப்பு உள்ளது.

மிகக் கூர்மையான கருவிகளுள் ஒன்று “அரம்“இது இரும்பாலானதுபிற இரும்புக் கருவிகளையும் ஆயுதங்களையும் கூராக்கவும் வழவழப்பாக்கவும் அரங்கள் பயன்படுத்தப்பட்டனஅரங்கள் பற்றிப் புறநானூற்றின் 36ஆவது பாடலும் அகநானூற்றின் 199ஆவது பாடலும் மலைபடுகடாமின் 35முதல்37வரையிலான அடிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

சங்கினை அறுத்து வளையல் செய்யும் தொழில்நுட்பத்தினைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர்சங்கு வளையல் அணிவது அக்காலப் பண்பாடாக இருந்துள்ளதுசங்கினை அறுக்கவும் அரம் பயப்படுத்தப்பட்டுள்ளதுசங்கு அறுக்கும் அரம் பற்றி அகநானூற்றின் 125, 349ஆகிய பாடல்களும் நற்றிணையின் 235ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.

அரவுவாள்“ என்று சுட்டப்பட்ட ரம்பமும் அக்காலப் பயன்பாட்டில் இருந்துள்ளதுஇதனை “வாளரம்“ என்றும் அழைத்தனர்இது மரங்களை அடியோடு அறுக்கப் பயன்படுத்தப்பட்டதுஇது பற்றி நற்றிணையின்235ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளது.

கொடுவாள்“ என்று சுட்டப்பெற்ற சிறிய அளவிலான கருவியினைக் காய்கறிகளையும் இறைச்சிகளையும் நறுக்கப் பயன்படுத்தியுள்ளனர்இது பற்றிப் பெரும்பாணாற்றுப்படையின் 471, 472ஆகிய அடிகளில் குறிப்பு உள்ளது.

சங்கத் தமிழர்களின் புழங்குபொருட்கள்ஆயுதங்கள் உருவாக்கத்தில் குயவரும் கொல்லரும் பெரும்பங்காற்றியுள்ளனர்புழங்குபொருட்கள் தமிழரின் வாழ்க்கைக்கும் ஆயுதங்கள் தமிழரின் உயிருக்கும் உறுதுணையாக அமைந்தன.

- – -

அடிக்குறிப்புகள்

 

  1. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=218578

  2. மாரிசாமிநா., தொல்லியல். 162.

  3. சாமிநாதன்., சங்க காலத் தொழில்நுட்பம்பக்.67,68.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தலைமை

சங்க காலம் / தேடல் – 17

king

வேட்டை நிகழ்வுக்காகத்தான் தனிமனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணங்கிக் கூட்டுச்சேர வேண்டியிருந்தது. பின்னர் அக்கூட்டத்தினரை வழிநடத்திச்செல்ல நாலும் தெரிந்த ஒரு வீரர் அவர்களுக்குத் தேவைப்பட்டார். அவரின் ஆலோசனையின்படி அக்கூட்டத்தினர் செயல்பட்டனர். அவ் வீரரே அக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். பின்னாளில், கால்நடைகளை மேய்ப்பதற்கும் வயல்வெளிகளில் உற்பத்திசெய்யவும் தனிமனிதர்கள் பலரோடு இணைந்து, கூட்டாகப் பணியாற்ற வேண்டியிருந்தது. அதற்காகத் தனிமனிதர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களை வழிநடத்தவும் ஒரு தலைவர் தேவைப்பட்டார். இத் தலைமைநிலைதான் பின்னாளில் “அரசு“ என்ற ஒன்று உருவாவதற்கான அடிக்கல்.

நால்வகை தலைமைகள் 

பழந்தமிழர் வரலாற்றில் நான்கு வகையான தலைமைகள் படிப்படியாகத் தோன்றின. 1. சீறூர் மன்னர், 2. முதுகுடி மன்னர், 3. குறுநில மன்னர், 4. வேந்தர்.

“சீறூர் மன்னர்“ என்பவர், “தான் மக்களுள் ஒருவர்“ என்ற நிலையில் வாழ்ந்தார். “முதுகுடிமன்னர்“ என்பவர், “தன் மக்களுக்காகத் தான்“ என்ற மனநிலையில் மக்களை ஒருங்கிணைத்தார். “குறுநில மன்னர்“ என்பவர்கள் பெரும்பாலும் மக்கள் பிரதிநிரிகளாகவும் வள்ளல்களாகவும் இருந்துள்ளனர். “வேந்தர்“ என்பவர், “அரசுக்காகத்தான் மக்கள்“ என்ற நிலையில் தன்னுடைய அதிகாரத்தினைச் செலுத்தினார். இந் நான்கு தலைமைகளுக்கும் இடையேயுள்ள வேற்றுமைகள் அவர்களின் நிலப் பொருளாதாரம்,நிலவிரிவு, அரசாளுமை சார்ந்து ஏற்பட்டன.

சீறூர் மன்னர்

பழந்தமிழரின் சீறூர் மன்னர் பற்றிய சித்திரத்தினைச் சங்க இலக்கிய அடிகளிலிருந்து உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. குச்சுப்புல் நரைத்தது போன்ற நிறமுள்ள தாடியை உடையவர். ஊரைவிட்டு வேறெங்கும் செல்லாதவர். பகைவர் பசுக்கூட்டங்களை விரைவில் கவரும் திறமுடையவர். தனக்கென எந்தச் சொத்தும் இல்லாதவர். விருந்தினரை உபசரிக்கத் தன் வாளினை அடமானம் வைப்பவர். விதைநெல்லைக் கொண்டும் விருந்து உபசரித்துள்ளார். தன் வீட்டில் தனக்காக இருந்த பழைய உணவினையும் விருந்தினருக்கு அளித்துள்ளார். காலையில் கள்ளைக் குடித்துவிட்டுத் தூசி நிறைந்த முற்றத்தில் உறங்குபவர். தான் கவர்ந்துபெற்ற செல்வத்தினை ஊராருக்கு வாரிக்கொடுப்பவர். விலையுயர்ந்த ஆபரணங்கள் ஏதும் இல்லாதவர். போர்க்காலத்தில் தலைவனாகச் செயல்படுபவர். அவருக்கு யாரும் கடனுக்குக் கள் தருவதில்லை. யானைத் தந்தத்தை ஈடாக வைத்து அவர் கள் வாங்கிப் பருகினார். இவர்கள் காட்டு நாட்டார். பெரும்பாலும் இவர்களின் நிலப்பகுதி காடுசார்ந்தே அமைந்துள்ளது. நெல் விளையாத புன்செய் நிலமுடையவர். வரகும் தினையும் விளையுமிடத்தினர். கள்ளிச் செடி வளர்ந்த புன்செய் நிலத்தினர். பருத்திச் செடியினை வேலியாக உடைய ஊரினர். அரிய மிளையில் வாழ்பவர்.

இவரது சிறியவீட்டின் முற்றம் கூளம் நிறைந்தது. முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கொடியும் படர்ந்து நிழல் தருவதால் பந்தல் வேயவேண்டியதில்லை. இருப்பினும் வயிரம் பாய்ந்த மரக்கால்களை நாட்டிப் பந்தல் போடப்பெற்றது. இம் முற்றத்தில் வளர்ந்த அறுகம் புல்லையும் முஞ்ஞைக் கொடியையும் முயல், மான் போன்ற மெல்விலங்குகள் வந்து கறிக்கும். இங்குக் கூதாளிப் பூவும் காட்டு மல்லிகையும் வளர்ந்திருந்தன.

ஊருக்கு வெளியில் இருந்த மன்றத்தில் அமர்ந்து பொதுச்சிக்கல்களைத் தீர்த்தார். இந்த மன்றம் “பொதியில்“, “நாள் மகிழ் இருக்கை“, “நாள் இருக்கை“, “நாள் அவை“, “நாள் மகிழ்“, “நறவு மகிழ் இருக்கை“ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஓர் ஊருக்கு வருகைதரும் பாணர் முதலான கலைஞர்கள் இந்தப் பொது அவையில்தான் தன் இசைக்கலையினை முதலில் வெளிப்படுத்துவர். இம்மன்றத்தில்தான் ஆய்ச்சியர் குரவைக்கூத்தினை நிகழ்த்தினர். காதற்தலைவியைப் பெறுவதற்காகத் காதற்தலைவன் மடலூர்வதும் இத்தகைய மன்றத்தின் முன்தான். ஆக, மன்றம் ஊர்ப்பொது அவையாக இருந்துள்ளது. அதுவே சீறூர் மன்னரின் அவைக்களமாக இருந்துள்ளது. அவரது வாழிடம் ஊருக்குள் இருந்துள்ளது.

இத்தகவல்களைப் புறநானூற்றின் 123, 125, 180, 150, 151, 157, 168, 197, 257, 258, 265, 285, 287, 299, 302, 308, 313, 316 – 320, 322, 324 – 326, 328, 330, 331, 333 – 335, 373, 387, 388, அகநானூற்றின் 61, 76, 97, 245, குறுந்தொகையின் 298, கலித்தொகையின் குறிஞ்சிக்க்கலி 22, முல்லைக்கலி 2, பதிற்றுப்பத்தின் 13, 23, 25, 43, 30 ஆகிய செய்யுட்களின் வழியாகப் பெறமுடிகின்றது.

சீறூர் மன்னரைச் “சீறூர் மதவலி“, “சிறுகுடிக்கிழான்“, “சீறூர் வண்மையோன்“, “சீறூர் நெடுந்தகை“ என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர். இவர் மறவர் பெருமகனாக, கோவலர் வீரராக, புன்புலத்து வேலோனாகத் திகழ்ந்தார். இவர்களுள் சிலர் வள்ளல்களாகவும் இருந்துள்ளனர்.

இத்தகைய சீறூர் மன்னர்களை மட்டுமே பாடிய புலவர்களாக அடைநெடுங்கல்வியார், அள்ளுர் நன்முல்லையார், ஆலங்குடி வங்கனார், ஆலியார், உறையூர் இளம்பொன் வணிகனார், உறையூர் முதுகூத்தனார், எருமை வெளியனார், ஒக்கூர் மாசாத்தியார், ஒரூஉத்தனார், ஓரம்போகியார், கோடைபாடிய பெரும்பூதனார், தங்கால் பொற்கொல்லனார், நெடுங்கழுத்துப் பரணர், நொச்சி நியமங்கிழார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மதுரை அறுவை வணிகன், இளவேட்டனார், மதுரை இளங்கண்ணி கௌசிகனார், மதுரைக் கணக்காயனார், மதுரைத் தமிழ்க் கூத்தனார், மதுரைப் பூதன் இளநாகனார், மதுரை வேளாசான், மோசி சாத்தனார், வடமோதங்கிழார், விரிச்சியூர் நன்னாகனார், விரியூர் நக்கனார், வீரை வெளியனார், வெள்ளைமாளர், வெறிபாடிய காமக்கண்ணியார், வேம்பற்றூர்க் குமரனார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் முதுகுடி மன்னரையோ, குறுநிலமன்னரையோ, வேந்தரையோ பற்றிப் பாடவில்லை.

இப்புலவர்கள் “வல்லாண்முல்லை“ என்னும் துறையமைந்த பாடல்களால் மட்டுமே சீறூர் மன்னர்களைப் புகழ்ந்துள்ளனர். இப்புலவர்கள் இச்சீறூர் மன்னர்களின் மனைவியரை “மூதின்முல்லை“ என்னும் துறையமைந்த பாடல்களால் மட்டுமே போற்றியுள்ளனர். இவ் இரண்டு துறைகளில் அமைந்த பாடல்களில் சீறூர் மன்னரின் பெயரோ அவர்களின் மனைவியர் பெயரோ குறிப்பிடப்படுவதில்லை.

சீறூர் மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இல்லை. இவர் மக்களுள் ஒருவர்தான். மக்கள் இவரைத் தன் தலைவராக நினைத்தனர். இவருக்காக வேறு சிறப்பு உரிமைகளையோ, சலுகைகளையோ ஏதும் அவர்கள் தந்துவிடவில்லை. ஒருவகையில் இவர்தான் அந்த ஊர் மக்களுக்குக் காவற்காரர், ஊர்த்தலைவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முதுகுடி மன்னர்

பழந்தமிழரின் சீறூர் மன்னரைவிடச் சற்றுச் செல்வாக்கும் சொல்வாக்கும் நிலவிரிவும் உடையவர் முதுகுடி மன்னர். இவரை “ஓரெயில் மன்னர்“, “தண்பணைக்கிழவன்“ (கிழவன்-தலைவன்), “தொல்குடி மன்னன்“ என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர். இவர்களின் நிலப்பகுதி வயல்சார்ந்தது. இவர்களைப் பற்றிப் பாடிய பாடல்கள் அனைத்தும் “மகட்பாற்காஞ்சி“ என்னும் துறையைச் சார்ந்ததாகவே உள்ளன. புறநானூற்றின் 336 முதல் 355 வரையிலான பாடல்கள் முதுகுடி மன்னர்கள் பற்றியவை. பெரும்பாலும் இவர்கள் நிலவுடைமையாளர்கள். இவர்கள் வேந்தரை எதிர்த்துப் போரிட்டு அழிந்தவர்களே ஆவர்.

குறுநில மன்னர்

குறுநில மன்னர்களின் வாழ்விடம் பெரும்பான்மையாக மலைசாரந்த பகுதியாகவே உள்ளன. அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், கண்டீரக் கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, கொண்கானங்கிழான், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொற்றன் போன்ற குறுநில மன்னர்கள் குறிஞ்சி நிலத்தையே தன்னிடமாகக்கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்களின் நிலஎல்லைகள் பற்றிப் புறநானூற்றின் 91, 109, 123, 128, 143, 148, 150 – 152, 154, 157, 158, 168 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. பாரி,காரி,ஓரி,நல்லி,பேகன்,ஆய்,அதியன் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். இவர்கள் சேர,சோழ,பாண்டி ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்றபோதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

வேந்தர்

நால்வகை நிலத்தினையும் தனித்தனியே ஆண்ட நிலைமாறி நால்வகை நிலத்தையும் ஒருவரே ஆளும் சூழல் ஏற்பட்டபோது “வேந்தர்“ உருவானார். ஆற்றுப்படை இலக்கியங்கள் நானிலத்தை ஆண்ட வேந்தர்கள் பற்றி விரிவாகக் கூறியுள்ளன. பாண்டிய நெடுஞ்செழியனை நான்கு நிலத்தையும் தனித்தனியே ஆண்ட குறுநில மன்னர்கள் வணங்கியமையைப் புறநானூற்றின் 17ஆவது பாடல் தெரிவித்துள்ளது. சேரமான் கோக்கோதை மார்பன் மூன்று நிலத் தலைவர்களுக்கும் தலைவர் என்பதால் அவரை “நாடன்“ (குறிஞ்சி), “ஊரன்“ (மருதம்), “சேர்ப்பன்“ (நெய்தல்) என்று புறநானூற்றின் 49 பாடல் புகழ்ந்துள்ளது. வேந்தர்கள் பழங்குடியினரையும் சீறூர் மன்னர்களையும் முதுகுடி மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் வென்று தமது ஆட்சியை விரிவுபடுத்தினர். இதற்குப் பல சான்றுகளைக் கூறமுடியும். “கூடல்“ நகரை ஆண்ட அகுதையிடமிருந்து அப்பகுதியைப் பாண்டியர் கைப்பற்றினர். கோப்பெருநற்கிள்ளி ஆமூர்மல்லனை வென்று “ஆமூர்“ நகரையும் பழையனை வென்று “போர்வை“ நகரையும் கைப்பற்றினார். சேந்தன் என்பவனிடமிருந்து “உறந்தை“ என்ற நகரினை சோழன் வெளியன் தித்தன் கைப்பற்றினார்.

பெருஞ்செல்வமும் நிலவிரிவும் ஆளுமைத்திறனும் முரசு, காலாற்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, வெண்கொற்றக்குடை, ஆணைச்சக்கரம், மணிமுடி, ஆகியவற்றை உடையவரே “வேந்தர்“. பனம்பூ, வேப்பம்பூ, அத்திப்பூ ஆகிய அடையாளப் பூக்களைக் கொண்டிருந்தனர். புலிக்கொடி, வில்கொடி, மீன்கொடி என அடையாளக் கொடிகளையும் வைத்திருந்தனர்.

இவர்கள் குளிர்ந்த மருத நிலம் சூழ்ந்த தளராத இருக்கையர். விழாக்கள் சிறந்து விளங்கும் பழைமையான ஊரினர். ஊரைவிட்டு என்றும் நீங்காத பழங்குடிமக்களை உடையவர். நெற்கூடுகள் நிறைந்து நிற்கும் வளமான நாட்டினை உடையவர். செங்கற்களால் கட்டப்பட்ட, காவல் மிகுந்த, உயர்ந்த பெரிய அரண்மனை, சுண்ணாம்பால் செய்யப்பட்ட மாடம், நீண்ட பெரிய இல்லங்கள், ஆராய்ச்சி மணியுடைய முற்றம் என வேந்தர்கள் மிகுந்த பாதுகாப்போடு வளமான வாழ்வினை வாழ்ந்தனர்.

அரசரின் செல்வங்களைக் காப்பதற்காக மதில்களும் கிடங்குகளும் “ஞாயில்“ எனப்படும் மதில் உறுப்புகளும் அரண்களும் மிகுதியான அளவில் அமைக்கப்பட்டன. சங்க இலக்கியங்களில் மதில் 42 இடங்களிலும் ஞாயில் 10 இடங்களிலும் எயில் 53 இடங்களிலும் அரண் 32 இடங்களிலும் புரிசை 20 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறுநில மன்னர்களைப் போல இவர்கள் வாரி வழங்கவில்லை. இவ்வேந்தருக்குப் போர்த்தொழிலில் அடியாட்களாகச் சீறூர் மன்னர்களும் முதுகுடிமன்னர்களும் குறுநில மன்னர்களும் செயல்பட்டனர். இதனை இலக்கியங்கள் “வேந்துவிடுதொழில்“ என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளன. இந்த அடியாட்கள் சிறப்புற பணியாற்றினால் அவர்களுக்கு வேந்தர் ஊதியம் வழங்கியுள்ளார். அவ் ஊதியத்தினை இலக்கியங்கள் “வேந்து தரு விழுக்கூழ்“ என்று சிறப்பித்துள்ளன. தன்னால் வேந்தர் வெற்றி பெற்றால், அதனைத் தன்னுடை வெற்றியாக நினைத்து, மகிழ்ந்து கொண்டாடியுள்ளனர். இதனை இலக்கியங்கள் “வேந்நாட்டு அரவம்“ என்று குறிப்பிட்டுள்ளன.

பாண்டியருக்கு அதியன், தந்துமாறன், நம்பிநெடுஞ்செழியன், பண்ணி, பாண்டியன் கீரஞ்சாத்தன், நாலைகிழவன் நாகன் ஆகிய குறுநில மன்னர்கள் போர்க்கால அடியாட்களாக இருந்தனர். சோழர்க்கு மலையமான், ஈர்ந்தூர் கிழான் தோயன்மாறன், சிறுகுடிகிழான் பண்ணன், மத்தி, மலையமான் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோரும் சேரருக்கு நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் ஆகியோரும் உதவினர். மலையமான் திருமுடிக்காரி என்ற வள்ளல் மூவேந்தரில் யார் படைஉதவி கோரினாலும் உடனே முன்வந்து உதவுபவராக இருந்துள்ளார். மூவேந்தரை “வம்பவேந்தர்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகவல்களைப் புறநானூற்றின் 3, 31, 35, 38, 39, 45, 75, 84, 115, 119, 122, 127, 126, 139, 171, 172 – 174, 179, 197, 205, 239, 265, 284, 281, 285, 287, 307, 316, 319, 320, 324, 333, 339, 345, 350, 351, 360, 369, 378, 380, 388, 390, 396, கலித்தொகையின் முல்லைக்கலி 8, அகநானூற்றின் 13, 162, 226 ஆகிய பாடல்களின் வழியாகவும் பெரும்பாணாற்றுப்டையின் 405, 411, மலைபடுகடாமின் 479 ஆகிய அடிகளின் வழியாகவும் பெறமுடிகின்றது.க் கேட்டறிந்தான். “முடிசூடுதல்“என்ற சடங்கு வேந்தர்க்கு மட்டுமே உரியது. ஆதலால்தான் “முடியுடை மூவேந்தர்“என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்க வேண்டும். “வேந்தர்“ என்பவர் மன்னருக்கு மேலானவர். “மன்னர்“ எப்போதும் வேந்தரின் படைசார்ந்த பணியாள்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

சேரர்

கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அணிந்தனர். பொ.யு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது.

அந்துவன் சேரேல் இரும்பொறை கருவூரிலிருந்தும் உதியன் சேரல் குழுமூரிலிருந்தும் ஆட்சி செலுத்தினர். இவ்வாறு இருவழிச் சேர அரசர் ஒரே காலத்தில் ஆண்டு வந்தமையை அறியமுடிகின்றது.

பெரும்சோற்று உதியன் சேரலாதன்,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர். சேரன் செங்குட்டுவன் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவரது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செங்குட்டுவனின் படையெடுப்புகளுள் இமயமலையை நோக்கிய படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தார். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவர் முறியடித்தார். தமிழ்நாட்டில் “கற்புக்கரசி கண்ணகி“ அல்லது “பத்தினி தெய்வம்“ வழிபாட்டைச் செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினார். அக்கோவில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

சோழர்

திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது.

இருவழிச் சோழ அரசினர், தொடக்கக் காலத்தில் உறந்தையிலும் அழுந்தூரிலும் இருந்து ஆண்டு வந்தனர். உறந்தையில் “கிள்ளி“ பரம்பரையினரும் அழுந்தூரில் “சென்னி“ பரம்பரையினரும் இருந்தனர்.

சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகாற்சோழன். இவரின் இளமைக்காலம்,போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள்,பாண்டியர்கள்,பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளைக் கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தார். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு சிறப்புமிக்க போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தார். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவரது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவர் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி, தடையற்ற நீர்ப்பாசன வசதிக்கு வித்திட்டார். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவர் வெட்டுவித்தார்.

பாண்டியர்

தென் தமிழகத்தில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. அகுதை என்பவர் ஆட்சிபுரிந்த “கூடல்“ நகரைப் பாண்டியர் கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினர். நெடியோன்,பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும் கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்த்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக,நெடுஞ்செழியன் தமிழகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும்பாண்டிய நாட்டின் சமூக, பொருளாதார நிலைமைகளைக் குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசராவார். களப்பிரர்களின் படையெடுப்பின் விளைவாகச் சங்க காலப் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

மரபு வழி அரசும் ஆட்சிமுறையும்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசர் கேட்டு நடந்தார். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி,சேரர்களுக்கு வில்,அம்பு.

அக்கால மன்னரின் வாரிசுரிமை தாய்வழிச் சார்ந்ததா அல்லது தந்தை வழிச் சார்ந்ததா என்பதில் கருத்துவேறுபாடுகள் நீடிக்கின்றன. சேர நாட்டில் வாரிசுரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தந்தைவழிச் சார்ந்தது என்றும் கருதுகின்றனர். ஆனால், மூவரசுகளிலும் ஒரே தன்மையான வாரிசுரிமையே பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. காரணம் சோழ, பாண்டியர்களின் வழக்கத்தை மட்டுமன்றித் தமிழகம் முழுவதுக்குமான வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்ற தொல்காப்பியர் “தாயத்தின அடையாத் தாயம்“என்று குறிப்பிட்டுள்ளார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனுக்குப் பதிற்றுப்பத்தில் அரிசில் கிழார் என்ற புலவர் “இந்நிலவுலகத்து வாழ்வார்பொருட்டுச் சால்பும் நடுவுநிலையும் உள்ளிட்ட பிற நற்பண்புகளும் நாடு காத்தற்கு வேண்டும் அரசியலறிவு வகை பலவும் முற்றும் கற்றுத் துறை போகிய சிறப்பும் நிறைந்த நன் மகனைப் பெற்றுள்ளார்“என்று பாராட்டியுள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் “தந்தைவழிச் சமூகம்“ என்பது தெளிவாகின்றது. இம்முறை தமிழகம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்திருக்கவேண்டும். வாரிசுரிமை மூத்த மகனுக்கோ அல்லது தந்தை வழிச் சார;ந்தோருக்கு உரியதாயிற்று.

மன்னர்கள் தங்களைச் “சூரிய குலத்தினர்“என்றோ “சந்திர குலத்தினர்“என்றோ கூறிக்கொள்ளவது மரபு. சோழர்கள் சூரியக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களின் செப்பேடுகள் குறிப்பிட்டுள்ளன. வீர ராஜேந்திரனின் கல்வெட்டு தங்கள் குலமுதல் பரிதி என்றும் சோழ மன்னர்கள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கின்றது. காசியபர், அத்திரி ஆகிய இருவரும் அவர்களின குடி முதல்வர்களாகக் கருதப்படுகின்றனர்.

வாரிசு இல்லாமல் அரசர் இறந்துவிட்டால் புதுமையான முறையில் புதிய அரசரைத் தேர்ந்தெடுக்கும் பணியினை அமைச்சர் பெருமக்கள் மேற்கொண்டனர். பட்டத்து யானையின் துதிக்கையில் ஒரு மாலையை அளித்துத் தெருவில் அதை உலாவச் செய்து அது யாருக்கு அந்த மாலையினை இடுகிறதோ அவரையே அரண்மனைக்கு அழைத்து வந்து அரசராக்கினர். இம் முறையில் கரிகாற்சோழன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

அரசன் அரியணை ஏறியதை ஒரு விழாவினைப் போல் கொண்டாடியுள்ளனர். அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா என்று அதனை அழைத்தனர்;. அப்போது அந்த அரச குடும்பத்தில் மூத்தோரால் அல்லது பரம ஆலோசகர்களால் அரசுக்குரிய சின்னங்கள் கொடுக்கப்பட்டு அல்லது அணிவிக்கப்பட்டு முடிசூட்டும் விழா நடத்தப்பட்டது. அன்றுமுதலே ஆட்சி செலுத்தி ஆண்டு குறிக்கப்பெற்றது. இவ்விழாவினைச் சிறந்த மண்ணுமங்கலம் என்று அழைத்தனர்.

முடியுடை வேந்தர்களும் சிற்றரசர்களும் தங்களுக்கெனத் தனித்தனி அவைகளைக் கொண்டிருந்தனர். தொல்காப்பியம் பாயிரத்தில் அவையம் என்ற சொல் காணப்படுகின்றது. அரசனின் மன்றமானது அரசவை,ஓலக்கம்,இருக்கை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரசவையில் அரச குடும்பத்தினர்மட்டுமின்றி, குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் அரசு அலுவலர்களும்குறிப்பிட்ட பொதுமக்களும் இடம்பெற்றனர்;. இது அரசனுடைய தனிப்பட்ட ஆலோசனை சபையாக இருக்கவில்லை. இது “நாளிருக்கை“ என்றும் “நாள் மகிழிருக்கை“ என்றும் அழைக்கப்பட்டது. “மந்திராலோசனை“ என்ற சபையே அரசரின் தனிப்பட்ட ஆலோசனை சபையாக இருந்தது. நடுவுநிலைமை தவறாத சிறப்புத் தன்மை கொண்டதாக உறையூர் அவை பாராட்டப்பட்டது. இதனை நற்றிணையின் 400,புறநானூற்றின் 39 ஆகிய பாடல்களில் அறிய முடிகின்றது.

ஆட்சியில் அரசருக்கு உதவியாக, பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள், அந்தணர்கள் (சான்றோர்), படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. அரசின் முதன்மையான வருவாய் நிலவரி (புரவு). அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும்(உல்கு) வசூலிக்கப்பட்டது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றிப் பட்டினப்பாலை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்குரிய முதன்மையான வருவாயாக இருந்தன. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக இரவும் பகலும் அச்சாலைகளும் பெருவழிகளும் கண்காணிக்கப்பட்டன.

சொற்குறியீடுகள்

அரசு என்ற நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரநிலையைக் கைப்பற்றி ஆட்சி புரிபவர்களை இறை, கோ, கிழவன், கிழான், மன்னர், மன்னவன், வேந்து, வேந்தன், அரசு, அரசன், குருசில், குரிசில், கொற்றம், கொற்றவன் எனப் பல்வேறு சொற்களால் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

இச்சொற்கள் ஒன்றுக்கொன்று மிக நுண்ணிய பொருள்வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. பழங்காலத்தில் இச்சொற்களைப் பயன்படுத்துவதில் குறிப்பிட்ட எளிய ஒழுங்குமுறைமட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது. குறுநில மன்னரை அல்லது மன்னரைக் “கோ“ அல்லது “இறை“ என்று அழைப்பர். ஆனால், குறுநில மன்னரை அல்லது மன்னரை “அரசன்“ அல்லது “வேந்தன்“ என்று அழைக்கமாட்டார்கள். ஆனால், அரசரை “இறை“, “கோ“, “மன்னன்“ என்ற சொற்களாலும் அழைப்பதுண்டு. இக்குழப்பமான சொற்குறியீட்டு மாற்றங்கள் எதிரில் உள்ள தலைமை நபரின் அரசு நிர்வாக அதிகார விரிவினைப் பொறுத்து அமைவுகொள்கின்றன எனலாம்.

இறை என்ற சொல்லைவிட கோ என்ற சொல் உயரிய மதிப்புடையது. இறை என்பது இறைவன், தலைவன், குடிமக்கள் செலுத்தும் வரி எனப் பல பொருட்களில் ஆளப்படக்கூடியது. இனக்குழுத் தலைவனையும் ஒரு கூத்துக் குழுவின் தலைவனையும் இறை அல்லது கோ என்றும் அழைத்தனர். அந்த இனக்குழுத்தலைவரோ அல்லது அக் கூத்துக்குழுவின் தலைவரோ குறுநில மன்னர் முன் நிற்கும்போது, அத்தலைவரைச் சார்ந்தோர்கள் அக்குறுநில மன்னரைக் கோ என்றும் இத்தலைவரை இறை என்றும் அழைப்பதுதான் முறையான மதிப்புநிலையாக அக்காலத்தில் கருதப்பட்டது. இந்தத் தகுதிப்பாடு குறித்த சொற்பயன்பாட்டினைப் புறநானூற்றின் 156ஆவது பாடல் நுட்பமாக உணர்த்தியுள்ளது.

சங்க இலக்கியச் செய்யுள்களில் 141 செய்யுள்களில் குறுநில மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 71 செய்யுள்கள் மட்டுமே குறுநில மன்னர்களின் பெயரினைச் சுட்டியுள்ளன. ஆனால், 138 செய்யுள்களில் வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 45 செய்யுள்கள் மட்டுமே வேந்தர்களின் பெயரினைச் சுட்டியுள்ளன. இதிலிருந்து வேந்தருக்குப் புலவர்கள் வழங்கியுள்ள மதிப்பினை அறியமுடிகின்றது.

வேளிரைத் தவிர்த்து பிற தலைமையாளர்களைக் கிழவன், கிழார் என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். இதற்குச் சான்றுகளாகப் புறநானூற்றின் 129, 131, 152, 163 ஆகிய செய்யுட்களைக் காட்டலாம். வேளிர்கள் குறுநிலத் தலைவர்களே என்றாலும் அவர்கள் வேந்தருக்கு இணையாக மதிக்கப்பெற்றுள்ளனர். பதிற்றுப்பத்தில் “வேந்தரும் வேளிரும்“ என்ற சொற்றொடர் நான்கு இடங்களில் வந்துள்ளன. வேளிர்கள் வளமான பகுதிகளில் ஆண்டுள்ளனர். குறிப்பாக, நீலகிரியில் குன்னூர், தென்னாற்காட்டில் திருக்கோவலூர், தர்மபுரியில் தகடூர்.

“தாமின்றி மக்கள் இல்லை“ என்ற கருத்தாக்கத்தினைத் தன்னுள்ளும் மக்களின் மனத்தினுள்ளும் விதைத்தவர்களாக மன்னர்கள் இருந்துள்ளனர். அதனால்தான் புறநானூற்றின் 86ஆவது பாடல், “மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்“ என்று உறுதிப்படுத்தியுள்ளது.

“மன்னன்“ என்ற சொல் “மன்னு“ என்னும் வினையடியாகப் பிறந்தது. “மன்னு“ என்ற சொல்லுக்கு, நிரந்தரமாக இரு, நீண்ட காலத்திற்கு இரு, ஏற்றுக்கொள்ளுதல், அழியாது பாதுகாத்தல், உறுதியாயிருத்தல், நிரம்பியிருத்தல் என்று பல பொருள்கள் உள்ளன. இச்சொல்லுக்குரிய பொருள்களை இணைத்து, அதாவது “மக்களை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்து அவர்களின் மனத்தில் நிறைந்திருத்தல்“ என்பதே “மன்னன்“ என்ற சொல்லுக்கான விரிவான விளக்கமாகக்கொள்ளலாம்.

“கோ“ அல்லது “மன்னன்“ அரசராகப் பதவியேற்கப் “பிள்ளையாட்டுச் சடங்கு“ என்ற ஒரு சடங்கு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதனைப் புறத்திணையியல் 60ஆம் நூற்பா குறிப்பிட்டுள்ளது.

அரசும் அதிகாரமும்

“வேந்தர்“உருவாக்கம் தமிழகத்தில் முறைப்படுத்தப்படாத அரசியல் அமைப்பினைக் காலூன்றச் செய்துவிட்டது. “அரசு“ குறித்த குறிப்புகள் தமிழ்நாட்டில் உயரதிகார அரசியல் நிறுவன அமைப்பின் தொடக்க நிலையை உணர்த்துகின்றன.

“அரசு“ என்னும் எண்ணக்கரு மூவேந்தரோடு மட்டுமே பொருந்துகின்றது. இதனைப் புறநானூற்றின் 34, 55 ஆகிய பாடல்களிலும் பொருநராற்றுப்படையின் 159ஆவது அடியிலும் காணலாம். “வேந்து“ என்பது, அரசதிகாரம் குறித்து உள்நாட்டில் தோன்றி வளர்ந்த சொல்லாகும். அரசு துணைமை வடிவம் போல் தோன்றுகிறது. மூன்று வேந்தர்களுக்குரிய ஒவ்வொரு அரசும் “அரசு“ எனக் கொள்ளப்பட்டது. பதிற்றுப்பத்தின் 89 ஆவது பாடலிலும் மதுரைக்காஞ்சியின் 191 ஆவது அடியிலும் “அரசியல்“ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல் “நீதி“ என்ற உட்பொருளில் கையாளப்பட்டுள்ளது.

“அரசு“ என்பது, நிலையான படையுடன் தொடர்புடையது. புறநானூற்றின் 55, 197 ஆகிய பாடல்களின் வழியாகவும் பதிற்றுப்பத்தின் 43ஆவது பாடலின் வழியாகவும் “அரசு“ என்பது, நால்வகைப் படையுடனேயே முழுமை பெறுகிறது என்பதனைத் தெரிந்துகொள்ளமுடிகின்றது. தொல்காப்பிய மரபியல் 81ஆவது நூற்பாவில் அரசனுடைய அடையாளச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படை வல்லமை மிக்க ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், “வேந்தனின் நடவடிக்கைகள் அனைத்தும் அறநெறிப்பட்டதாகவே இருக்கவேண்டும்“ என்ற அறிவுரைகள் புலவர்களால் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர்களைவிடப்புலவர்களே அரசர்க்கு அறநெறிகளை வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். “அருளும் அன்பும் நீங்காது,குழந்தைகளைப் பாதுகாக்கும் தாயரென நாட்டைப்பாதுகாப்பாயாக“என்பது நரிவெரூஉத்தலையார் சேரமான் கருவூரேறிய ஒள்;வாள் கோப்பெருஞ்சேரலிரும்பொறைக்கு அறிவுரை கூறியுள்ளார். “நமரெனக் கோல் கோடாது,பிறரெனக் குணங்கொல்லாது அறநெறி செலுத்துக“என்று பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு மதுரை மருதன் இளநாகனாரின் அறிவுரை கூறியுள்ளார். புலவர்கள் அரசருக்கு அறிவுரை நல்கியமைக்குச் சான்றுகளாகப் புறநானூற்றின் 35, 55 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இலக்கியங்கள் இதனைச் “செவியறிவுறுத்தல்“ என்கின்றன. வேந்தருக்குச் செவியறிவுறுத்திய புலவர்கள் வரிசையில் முரஞ்சியூர் முடி நாகராயர், இரும்பிடர்த் தலையார், நரிவெரூஉத் தலையார், காரிகிழார், வெள்ளைக்குடி நாகனார், ஆவூர் மூலங்கிழார், மதுரை மருதன் இளநாகனார் சிராந்தையார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

“அரசு“ என்ற சொல் சங்க இலக்கியத்தில் “அரைசு“ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாகப் பட்டினப்பாலையின் 34 அடியினையும் புறநானூற்றின் 26, 42, 354 ஆகிய பாடல்களையும் காட்டலாம். சங்க இலக்கியங்களில் தலைமையைக் குறிக்கக் “குருசில்“ என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் “குரிசில்“ என்றும் இது குறிக்கப்படுகிறது. சான்றாக, மதுரைக்காஞ்சியின் 151, மலைபடுகடாமின் 186 ஆகிய அடிகளையும்ஐங்குறுநூற்றின் 306, 471, 473, 480, பதிற்றுப்பத்தின் 24, 31, 32, 53, 55, 72, 88, புறநானூற்றின் 16, 50, 68, 161, 198, 210, 285, 290, 321, 333, 341, 377,அகநானூற்றின் 184 ஆகிய பாடல்களையும் குறிப்பிடலாம்.இச்சொல்அரசர், மன்னர்மற்றும் குறுநிலத் தலைவர்களோடு தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, ஈட்டியோடும் அதுவன்றிப் படையோடும் இச்சொல்குறிப்பிடப்படுகின்றது. “குரிசில்“ என்னும் சொல் ஆளுவதற்கான உரிமையைச் சுட்டுகிறது.

வேந்தரின் பணியாளா மன்னர்?

மன்னருடைய ஆட்சி மற்றும் நிறுவப்பட்ட அவருடைய அதிகாரத்தின் தன்மையை நெடுநல்வாடையின் 78ஆம் அடியில் கூறப்பெற்றுள்ளது. அதில், “அதிகாரப் பொறுப்புடைய ஒருவர்ஏனையோரிடமிருந்து வேறுபட்டுப் பெருமனை (பெரியவீடு) ஒன்றைத் தமக்குரியதாகக் கொண்டிருப்பர்“ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சுவர்அமைந்த குடியிருப்புகளில் மன்னர் வாழ்ந்தார் என்பதற்கு அகநானூற்றின் 373 ஆவது பாடலும் சிறுபாணாற்றுப்டையின் 274ஆவது அடியும் பட்டினப்பாலையின் 277 மற்றும் 278ஆகிய அடிகளும் சான்றுகளாக உள்ளன.

எங்கு வேளாண்மை வளர்ச்சியுற்றதோ அங்கு “மன்னன்“ என்னும் பெயர்வழக்குத் தோன்றியிருக்கலாம். வளர்ச்சியுறும் அப்புதிய பகுதியை அழிவினின்றும் அவன் பாதுகாக்கவேண்டும். மன்னர், “காவல் மன்னன்“ என்றும் புறநானூற்றின் 331ஆவது பாடலில் குறிப்பிடப்பெறுகிறார். ஆகவே, காப்பவரே “மன்னர்“ ஆகிறார். அவனுடைய அதிகாரத்துக்குட்பட்ட நிலவெல்லை வரையறைக்குட்பட்டதாகவே இருந்திருக்கும்.

எளியனாய் இருந்தபோதிலும் மன்னர் கொடையளிப்பவராகவும் இருந்துள்ளமையைப் புறநானூற்றின் 320, 327, 328 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது. மன்னர் தன் கடமையை எண்ணிச் செயல்பட்டார் என்று நற்றிணையின் 146ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.

வேந்தர்கள் மன்னர்களிடமிருந்து மணமகளைத் தேர்ந்தெடுப்பதும் நடைபெற்றுள்ளது. இதனைப் புறநானூற்றின் 336, 337ஆம் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. இது “மகட்கொடை“ எனப்பட்டது. வேந்தர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து மன்னர்களுக்கு எதிராகப் போர்புரிந்ததும் உண்டு. அதுகுறித்து புறநானூற்றின் 374 ஆவது பாடலும் அகநானூற்றின் 174 ஆவது பாடலும் தெரிவித்துள்ளன.

“மன்னன்“ என்பவன் ஒரு நிலப்பகுதியைப் பாதுகாத்து அதற்குத் தேவையானவற்றை வழங்கி ஆட்சி புரிந்தவன் ஆவான். இவ்வாறாக, மன்னன் உருவாகியது, தமிழகத்தில் “அரசன்“, “அரசு“ உருவாவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

“வேந்து“ அல்லது “வேந்தர்“ என்ற சொல், ஆளுவோரிடையே ஆற்றல் மிக்க போர்த் தன்மையுள்ள ஆட்சியாளர்உருவாவதனைக் காணமுடிகின்றது. ஆட்சியின் பலம், அதிகாரத்தைப் பொறுத்தளவில், வேந்தர்தான் மிக்க படைபலம் உடையவர். அவருடைய படைகளோடு தொடர்புபடுத்தியே அவர் எப்பொழுதும் குறிப்பிடப்படுகின்றார். இதனைப் புறநானூற்றின் 38, 278, 322, 390 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

தொல்காப்பியப் புறத்திணையியலில் “மன்னன்“ என்னும் சொல் இடம்பெறவில்லை. பாசறை வேந்தனுடன்தான் தொடர்புபடுத்தப்படுகிறது. “வேந்தரின் தலைமையின் கீழ்ப் போர்செய்தல்“ என்பது, மன்னர் நிலையிலிருந்து தொடங்குகின்றது. இதனை “வேந்துவிடுதொழில்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாகப் புறநானூற்றின் 285, 296, 301, 304, 306, 318 – 320, 322, 326, 332 ஆகிய பாடல்கள் விரித்துரைத்துள்ளன. “வேந்தரின் போர் அடியாள்களின் தலைவர் மன்னர்“ என்ற கருத்திலிருந்து மன்னரின் பதவியை, நிலையை நாம் அறிந்துகொள்ளலாம். அத்தகைய போர் அடியாள்களின் தலைவர்கள் குதிரைகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதற்கான சான்றுகளைப் புறநானூற்றின் 299ஆம் பாடலும் நற்றிணையின் 81ஆம் பாடலும் காணமுடிகின்றது. இத்தகைய தொழில் புரிவோருக்கமைந்த பாசறை குறித்து நெடுநல்வாடையின் 18 ஆவது அடியும்புறநானூற்றின் 22, 31, 33, 62, 69, 298, 294, 361, 304 ஆகிய பாடல்களும் பட்டினப்பாலை 16, 50, 61, 64, 84, 88 ஆகிய அடிகளும் கூறியுள்ளன. வேந்தருக்காப் பாடுபட்டுப் போர்புரிந்து வெற்றியைத் தேடித்தந்த மன்னர்களுக்கு வேந்தர்கள் நெல், பொன், யானை முக படாம் போன்றவற்றைப் பரிசாக வழங்கியுள்ளனர். இதனைவிட மேலாக அம்மன்னர்களுக்கு நல்ல வாழ்க்கையினையும் சிறந்த வசதிகளையும் ஏற்படுத்தித்தரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களுக்கு நிலப்பகுதிகளை வழங்கியுள்ளனர். இதனைத் “தண்ணடைநல்கல்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேந்தன் தன் படையுடைமை அதிகாரத்தின் வலிமை காரணமாக, பிற அதிகாரங்களையுடைய இத்தகையோரிடமிருந்து வேறுபடுகின்றான். போர்சார்நிறுவனத்தை வைத்துக்கொள்வது வேந்தனுக்கு எளியதுதான். ஆனால், நிலையான படை அமைப்பு இருந்தது என்று சொல்வதற்குச் சான்று கிடைக்கவில்லை. போர்வீரர்களுடைய போரற்ற கால வாழ்க்கை குறித்து எந்தக் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை.

மன்னனுடைய நிர்வாக அமைப்பு குறித்த குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, “வேந்துவினை“ காரணமாக மக்கள் வெளியே செல்வது போன்ற வேந்தனைப் பற்றிய குறிப்புகளை ஐங்குறுநூற்றின் 426, அகநானூற்றின் 104, 254 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

மக்கள் தாம் மேற்கொண்ட பணிகளால் பல மாதங்கள் வெளியிடங்களில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாகவே மிகவும் விரிவடைந்த நிருவாக இயந்திரம் வேந்தன்கீழ்தான் இருந்தது என்பதனை ஏற்கமுடியவில்லை. முடிமன்னரைச் சுட்டும் “கொற்றம்“ என்னும் சொல் இவ்வகைப்பட்ட ஆளுவோருடன் தொடர்புபடுத்தப்பட்டது. இதனைப் பதிற்றுப்பத்தின் 62, 64, 69 மற்றும் புறநானூற்றின் 21, 37, 338,367 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது.

ஆற்றுப்பாசனம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கை வேந்தரோடு தொடர்புடையது என்பது முதன்மையான கருத்தாகும். சேர, சோழ, பாண்டியர்களைக் குறிக்க மட்டுமே “வேந்து“ என்னும் தொடரைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. இம்மூன்று பெரிய நிலப்பரப்புகளை ஆண்டவர்களே வேந்தர்கள் எனக் குறிக்கப்படுவது மரபுவழி வந்ததாகும். மரபு அவர்களை “மூவேந்தர்“என்றே குறிக்கிறது. மூன்றாமவரைப் புகழும்போது மற்ற இருவரையும் குறிக்கும் மரபும் உள்ளது. இதனை அகநானூற்றின் 96, புறநானூற்றின் 42 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது. ஏனைய வேந்தர்களுடைய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்போடு ஒப்பிடுகின்றபொழுது, இம்மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலப்புரப்பு ஆற்றுப் படுகைகளில் விரிந்துள்ளமையை அறியமுடிகின்றது. ஆற்றுப்பாசனம் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கை வேந்தரோடு தொடர்புடையது என்பது முதன்மையான கருத்தாகும்.

வேந்தருக்குக் கீழ்ப்பட்ட குறுநிலத் தலைவர்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. சான்றாகப் புறநானூற்றின் 179ஆவது பாடலைக் காட்டலாம். “மன்னன்“ என்னும் ஆட்சிப் பொறுப்பிடம், “வேந்தன்“ என்பதைவிடக் கீழானது என்பதைப் புறநானூற்றின் 319ஆவது செய்யுள்வழியாக அறியமுடிகின்றது. இச்செய்யுள், “வேந்தன் அனுப்ப, அவன் வகுத்தளித்த செயலை நிறைவேற்ற மன்னன் சென்றான்“ என்று குறிப்பிட்டுள்ளது. மன்னனுக்கு வேந்தனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் புறநானூற்றின் 333 மற்றும் 338 ஆகிய செய்யுட்களில் காணமுடிகின்றது.

அரசருக்குரிய கூட்டத்தைக் குறிக்கும் “வேத்தவை“ என்ற சொல் வேந்தரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இச்சொல்லின் சொற்பிறப்பே இதற்கான சாட்சியமாகிறது. வேந்தனின் “கூட்டம்“ (அவை) என்பதே அதன் பொருள். இச்சொல்லினைப் புறநானூற்றின் 382 ஆவது பாடலிலும் மலைபடுகடாமின் 39ஆவது அடியிலும் காணமுடிகின்றது.

இருப்பினும், இக்கூட்டம் நிரந்தரமான நிர்வாக அமைப்புக் கூட்டமோ நிரந்தரமான நிர்வாக இயந்திரமோ அல்ல. இறை, கோ நிலையிற் காணப்பட்ட சுற்றமே வேந்து நிலையில் இந்த விரிவான பொருளினைப் பெற்றிருக்கலாம். சில குறுநிலத் தலைவர்களும் மன்னர்களும் இத்தகைய சுற்றம் உடையவராய் இருந்தனர். இனக்குழு இயல்புடன் தொடர்புடைய இம்மரபு “நாள் மகிழிருக்கை“யில் தெளிவுபெறுகிறது.

நாள்மகிழிருக்கையில் ஆள்வோன், தன் குழுவைச் சேர்ந்த முதியவர்களுடன் சேர்ந்தமர்ந்து கள் பருகுவான் என்பதனைப் புறநானூற்றின் 29, 54, 123, 324, 330 ஆகிய பாடல்களும்பெரும்பாணாற்றுப்படையின் 441 முதல் 447 வரையிலான அடிகளும் தெரிவித்துள்ளன. இருக்கை நாளடைவில் கூட்டமாக வளர்ச்சி பெற, அக்கூட்டத்தில்தான் அரசன் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்தான். “முடிசூடுதல்“என்ற சடங்கு வேந்தர்க்கு மட்டுமே உரியது. ஆதலால்தான் “முடியுடை மூவேந்தர்“என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்க வேண்டும். “வேந்தர்“ என்பவர் மன்னருக்கு மேலானவர். “மன்னர்“ எப்போதும் வேந்தரின் படைசார்ந்த பணியாள்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தென்னிந்திய நிலவியல்

சங்க காலம் / தேடல் – 18

DSC00769இந்தியாவின் பழம்பெயர் “நாவலம்“ என்பதாகும். சிலப்பதிகாரம் இப்பகுதியினை ‘நாவலந் தண்பொழில்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது வடபகுதி, தென்பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தின் இறுதியில் ஒட்டுமொத்த இந்தியாவின் தென்பகுதியில் இருந்த முதன்மையான இடங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். ஆபிரர், புளிந்தர், கலிங்கம், சாதவாஹனப் பேரரசு, பூழிநாடு, குடநாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, புனல்நாடு, பன்றிநாடு, பாண்டிநாடு, வேணாடு, அஜந்தா, சோபாரா, கன்ஹேரி, நாஸிக், பைத்தான், தந்தபுரம், ஹதிகும்ப, கார்லெ, பாஜா, தெரா, பிஷ்டபுரம், வேங்கி, அமராவதி, மஸாலியா, நாகார்ச்சுனகொண்டா, பட்டிப்ரோலு, ஏற்றகுடி, வனவாசி, சித்தபுரம், சிரவணபெல்கொளா, வேங்கடம், காஞ்சி, எய்தபட்டினம் (சொபத்மா), தலைக்காடு, தொண்டி, கரூர், முசிறி, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், வஞ்சி, தலையாலங்கானம், நெல்கின்றா, வைக்கரை, மதுரை, சாலியூர், கொற்கை, கோட்டியற, குமரி.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழ்த் தென்பகுதி முடியுடை வேந்தர் மூவரால் ஆளப்பட்டது. இம் மூன்று வேந்தர் பரம்பரையினரைச் சங்க இலக்கியங்கள், “தமிழ்கெழு மூவர்“, தண்டமிழ்க் கிவர் … மூவர்“ என்றெல்லாம் அழைத்துள்ளன. அவர்கள் ஆண்ட அந்த மொத்தப் பகுதியைத் “தமிழகம்“ என்றனர். பிட்டங்கொற்றனைப் புகழ்ந்து பாடிய கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், “வையக வரைப்பில் தமிழகம் கேட்ப“ என்று தமிழகம் என்ற சொல்லி்னைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, “தமிழகம்“ என்ற சொல், சங்க காலத்திலேயே வழக்கிலிருந்துள்ளது. தமிழ்மொழியைப் பேசும் மக்களின் எல்லையாக வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரிமுனையும் இருந்தன. சோழ மன்னரால் ஆளப்பட்ட சோழநாடு காவிரியாற்றினால் நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. அதன் தென் பகுதி வளம் குன்றி இருந்தது. பாண்டியரால் ஆளப்பட்ட பாண்டிநாட்டின் வடபகுதியில் எயினர்களின் இருப்பிடங்களும் காடும் இடையிடையே தண்பூங்காக்களும் தடந்தாழ் வயல்களும் இருந்தன. வையை நதியால் வளம்பெற்றது. சேர மன்னரால் ஆளப்பட்ட சேரநாடு பேரியாற்றின் வழியாக நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. இதற்குக் “குடநாடு“ என்றும் பெயருண்டு. சேர, சோழ, பாண்டிய நாடுகளும் கொங்குநாட்டின் பகுதிகளும் பண்டைத் தமிழகத்திற்குரிய நிலப்பரப்பாக இருந்தன.

வச்சிரம், அவந்தி, கலிங்கம், மகதம், மத்திம நாடு, ஆரிய நாடு, யவனர் வளநாடு, குடகு, கொங்கணம், கருநடம், பங்களம், கோசர் நாடு போன்றவைத் தமிழகத்திற்கு வெளியிலுள்ள நாடுகளாக இருந்தன.

பழைய நாடுகள்

செந்தமிழ்நாட்டில் தென்பாண்டி, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு, சீதநாடு, மலைநாடு, புனல்நாடு எனப் பன்னிரு உட்பிரிவுகள் இருந்ததாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை தவிர குறும்பொறை நாடு, பொறைநாடு, வானமலை நாடு, கொண்கானம், கடுங்கோநாடு, பாயல்நாடு, வள்ளுவநாடு, வைநாடு போன்றவற்றையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழைய ஊர்கள்

பழந்தமிழர்கள் வாழ்ந்த ஊர்களுள், 240 ஊர்களின் பெயர்களை மட்டும் இலக்கியங்களிலிருந்து அறியமுடிகின்றது. அவற்றைக் கொண்டு பழந்தமிழ்நாட்டின் வரைபடத்தினை உருவாக்கலாம். அவ் ஊர்களின் பெயர்கள் சில பின்வருமாறு – அட்டவாயில், அரிமணவாயில், அலைவாய், அழுந்தை, அழும்பில், அள்ளூர், ஆமூர், ஆலங்கானம், ஆலமுற்றம், ஆன்பொருநை, இடையாறு, உறத்தூர், உறந்தை, உறந்தைக்குன்றம், ஊனூர், எருமை நன்னாடு, ஏழில், கடிகை, கண்டீரம், கருவூர், கவிரம், கழாஅர், கழுமலம், கள்ளில், கள்ளூர், காமூர், குடந்தை, குடவாயில், குடநாடு, குடபுலம், குடவரை, குதிரை மலை, குறுக்கைப் பறந்தலை, குறுக்கை, குறும்பொறை, குழுமூர், குன்றம், கூடல், கூடற் பறந்தலை, கொடுங்கால், கொல்லி, கோடி, கோடை, கோவல், சாய்க்கானம், சிறுமலை, செல்லி, செல்லூர், தகடூர், தலையாறு, தேமுதுகுன்றம், நியமம், நீடூர், நெடுவரை, பட்டினம், பரங்குன்றம், பருவூர்ப் பறந்தலை, பவத்திரி, பறம்பு, பாக்கம், பாரம், பாணாடு, பாழி, பாழிப் பறந்தலை, பாணன்நாடு, புகாஅர், புறந்தை, புன்னாடு, பெருந்துறை, பொதியில், போஓர், பொதினி, மருங்கூர்ப்பட்டினம், மாங்காடு, மாந்தை, மிளைநாடு, முசிறி, முள்ளூர், மோகூர், வடவரை, வல்லம், வாகைப் பறந்தலை, வாகை, வீரை, வியலூர்,விளங்கில், வெண்ணி, வெண்ணிப் பறந்தலை, வெண்ணி வாயில், வெண்ணிமணிவாயில், வெளியம், வேங்கடம், வேம்மி, வேளூர்.

பெரும்பாலும் நிலம் அடிப்படையில் சில சொற்குறியீடுகளோடு ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பெற்றுள்ளன. குறிஞ்சி நிலப்பகுதியாக இருந்தால் “சிறுகுடி“, “குறிஞ்சி“, “குன்றம்“ என்றோ, முல்லை நிலப்பகுதியாக இருந்தால் “பாடி“, “சேரி“, “பள்ளி“ என்றோ, மருத நிலப்பகுதியாக இருந்தால் “ஊர்“ என்றோ, நெய்தல் நிலப்பகுதியாக இருந்தால் “பட்டினம்“ என்றோ, பாலை நிலப்பகுதியாக இருந்தால் “பறந்தலை“ என்றோ பின்னொட்டுடன் ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இல்லாமலும் பல ஊர்களின் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு மிக்க சில நகரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வஞ்சி

சேரர் ஆண்ட பகுதி “வஞ்சிமாநகர்“ எனப்பட்டது. “கருவூர்“ என்றும் சுட்டப்பெற்றது. சேரர்கள் ஆண்ட பகுதிகளில் சிவன்கோவில், ஆடக மாடம், குணவாயில், வேண்மாடம் முதலிய பகுதிகள் ஒன்றோ சிலவோ அமைக்கப்பட்டன. “முசிறி“, “தொண்டி“ என்னும் துறைமுகங்கள் இந்நாட்டுக்குரியன. சேர மன்னர் செங்குட்டுவன், மைசூரிலும் அதைச் சுற்றி உள்ள கங்க நாட்டுக்காரர்களையும் கிழக்கில் தமிழ் வழங்கிய எல்லையில் இருந்த கட்டி நாட்டுக்காரர்களையும் கங்கரின் எருமை நாட்டுக்கு வடக்கிலிருந்த கருநடரையும் கொண்கானத்தின் வடக்கெல்லையான வானியாற்றின் வடபுறம் இருந்த பங்கள நாட்டினரையும் துளு நாட்டுக்கு வடக்கே இருந்த கொங்கணத்தவரையும் தமிழகத்தின் வடக்கில் கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப் பகுதிகளில் பரவியிருந்த கலிங்கரையும் வென்றுள்ளார். ஆக, சேரரின் நிலப்பரப்பு இவ்வகையில் விரிவுபெற்றது.

புகார்

சோழ மன்னருக்குரிய காவிரியாறு சங்கமத்துறைக்குரிய “புகார்“ என்ற பெயர் அவரது நாட்டிற்கும் உரியதாகியது. காகந்தி, கோலப்பட்டணம், சம்பாபதி, பூம்புகார், காவேரிப் பட்டணம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களாலும் இந்நகர் குறிக்கப்பெறுகின்றது. இது நீர், நில, தொழில், வாணிப, கலை ஆகிய பலவளங்களை உடைய துறைமுகநகரம். இது மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவுகளை உடையது. இவ் இரண்டிலும் நாளங்காடிகள் இருந்தன. நாளங்காடியில் காவல் பூதப்பீடிகை இருந்தது. ஐந்து மன்றங்களும் இரண்டு ஏரிகளும் பதினெட்டு கோவில்களும் புகாரில் இருந்தன.

மருவூர்ப்பாக்கத்தில் பல்வேறு தொழிலாளர்களும் வேற்று நாட்டவரும் குடியிருந்தனர். பண்டகசாலைகளும் பெரும்பாணிருக்கையும் கூலமறுகும் நெய்தலங்கானலும் இருந்தன. கூல மறுகில் அல்லங்காடி செயல்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் மன்னர், அரசு ஊழியர், மருத்துவர், வானநூல் வல்லோர், பன்முறைக் கருவியர், படைப்பிரிவினர், கணிகையர், வேதியர், வணிகர், வேளாளர், சங்குவளை செய்வோர், மணிகளைத் துளையிடுவோர் முதலியோர் முறைப்படி தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். காமன் கோவிலும் இரண்டு ஏரிகளும் இருந்தன.

பட்டினப்பாக்கத்தில் உலகஇடைகழியும் அதையடுத்து நகரின் எல்லையில் இலவந்திகைச் சோலையும் அங்கிருந்து காவிரியின் கடைமுகத்திற்குச் செல்லும் பாதையும் இருந்தன. மேற்கு நோக்கிய உறையூர்ச்சாலை காவிரியின் கடைமுகத்தில் தொடங்கி நீண்டது. வச்சிரக்கோவில், தருக்கோவில், திருமால் கோவில், சமணர் மற்றம் பௌத்தர் வழிபாட்டிடங்களும் பட்டினப்பாக்கத்தில் இருந்தன.

மதுரை

பாண்டிய மன்னர் ஆண்ட “மதுரை“ பழம்பெரும் நகரமாகும். கடல்கோளுக்குப் பின்னர் புலவர் பலர் கூடிய இடம் என்ற பொருளில் “கூடல்“ என்ற பெயரினைப் பெற்றது. கோட்டை வாயில்களின் மேல் இருந்த கோபுரங்களால் இது “மாடக்கூடல்“ எனப்பட்டது. இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாக இருந்தமையால் “மருதை“ என்று அழைக்கப்பட்டு, பின்னர் அச்சொலல் மருவி மதுரையானது. இதுகுறித்து அ. முத்துவேலன், “கொள்ளிடமும் காவிரியும் குலவிடும் திருவரங்கம்போல் வடபுலத்தில் வையை ஆறு வளங்கொழித்திடச் செய்ய தெற்கில் ஓர் தேனாறாய்த் திகழ்ந்த கிருதமால் நதி திரட்டித் தந்த மருதநிலத் திரவியத்தால், மருதை என்று துலங்கியது மருவி, மதிரையாக மாறி, மதுரை என்று திரிநது வழங்கிவருகிறது“55 என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கொங்கர்கள் மதுரையை முற்றுகையிட்டபோது பசும்பூண் பாண்டியன் கொங்கரை எதிர்த்து வென்றார்.

மதுரை, “கொற்கை“ என்ற பெரிய துறைமுகத்தினை உடைய நகரம். வையை ஆறு தற்போது ஓடவில்லையெனினும் சங்க காலம் முதல் இன்றுவரை தன் ஓடுபாதையினை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அதன் அகலமும் ஆழமும் மாறிவிட்டன. நில, நீர், பூ வளமுள்ள மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபத்திற்குச் சிறப்புபெற்றுத் திகழ்ந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய பெருந்தெய்வங்களுக்கும் மதுராபதி, இயக்கி போன்ற சிறுதெய்வங்களுக்கும் இங்குக் கோயில்கள் இருந்தன. சமண, பௌத்த பள்ளிகளும் இருந்தன. பல்வேறு கொடிகள் ஏற்றப்பட்ட இந்நகரினைச் சுற்றிக் கோபுரம் கொண்ட நான்கு வாயில்களுடன் பலபொறிகளை உடைய கோட்டையும் அகழியும் காவற்காடும் கிழக்குப் பகுதியில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. அந்த மூதூர்தான் இன்றைய மதுரை. நகருக்குள் காவற்கணியர் வீதியும் ஆடற்கத்தியர்க்கு இரண்டு பெரிய வீதிகளும் அங்காடி வீதியும் பொற்கடை வீதியும் இரத்தினக்கடை வீதியும் அறுவைக் கடை வீதியும் கூலக்கடை வீதியும் ஆய்ச்சியர் குடியிருப்பும் குறுந்தெருக்களும் சந்திகளும் முடுக்குகளும் இருந்தன.

kJமதுரை நகரில் சங்க காலத்திலேயே சமண முனிவர்கள் வாழ்ந்து வந்தமை பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிட்டுள்ளது. குன்றைக் குடைந்து செய்விக்கப்பெற்ற சமணப் பள்ளிகளில் (சமணர்களின் வாழிடம்) சமண முனிவர்கள் வாழ்ந்தனர். இம் முனிவர்களை, இல்லறத்தில் உள்ள பொதுமக்கள் பூவும் புகையும் கொண்டுசென்று பணிந்து வணங்கினர் என்ற குறிப்பினை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இலக்கியத்தில் உள்ள இக்குறிப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மதுரை அணைப்பட்டி அருகிலுள்ள குன்றக்குகைத்தளப்பள்ளியில் தமிழி எழுத்தில் செதுக்கப்பெற்றுள்ள கல்வெட்டு அமைந்துள்ளது. இக் கல்வெட்டின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு. இக்கல்வெட்டில், “மதிரை அமணன் அதினன்“ என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், சமணர் மலை, சித்தர்கள் நத்தம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் மதுரையில் சமணர்கள் வாழ்ந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. மதுரையில் சமணர்களின் இருத்தல் (குடியிருத்தல்), எண்ணற்ற இடையூறுகள் பலவற்றைக் கடந்தும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை (பொ.யு. 2014) நீட்டித்துவருகின்றது.

காஞ்சி

இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் ஒன்று காஞ்சி மாநகரம். காஞ்சிக்குப் பொ.யு. 640ஆம் ஆண்டு வந்த சீனப் பயணி யுவான்சுவாங், பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வநது பௌத்த சமயக்கொள்கைகளைப் பரப்பியதாகவும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுதுபட்டுக்கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நகரம் சார்ந்த பகுதியினைத் “தொண்டைமண்டலம்“ என்று சங்க இலக்கியங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பாணாற்றுப்படையில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்நகரம் அக்காலத்தில் நான்கு பகுதிகளாக விளங்கியது. சிவக்காஞ்சி, விஷ்ணுக்காஞ்சி, ஜீனக்காஞ்சி, பௌத்தக்காஞ்சி. “சிவக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள பெரியகாஞ்சிபுரம். “விஷ்ணுக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள சின்னக்காஞ்சிபுறம். “ஜீனக்காஞ்சி“ என்பது, திருப்பருத்திக்குன்றம். “பௌத்தக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள். அக்காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்தனர்.

தொல்லியல் துறையினர் காஞ்சியில் அகழாய்வுசெய்தபோது, பௌத்த விகாரை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ் விகாரையில் சுட்ட செங்கற்களும் வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதியும் காணப்பட்டன. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண்டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும் மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இந்த ஸ்தூபியின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பெற்றுள்ளது. இதன் கீழ் உள்ள மண் அடுக்கில் கண்டெடுக்கப்பெற்ற மட்கல ஓட்டில் “புதலதிச“ என்ற சொல் தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்றிருந்தது.56

பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவனின் தம்பி இளங்கள்ளி காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை ஆண்டார். அப்போது அவர் புத்தருக்குக்கோயில் கட்டியதாக மணிமேகலையின் 28ஆவது காதையில் குறிப்பு உள்ளது.

பிற நகரங்கள்

முடியுடை மூவேந்தருக்கு உட்பட்ட இம் மூன்று பெருநகரங்களைத் தவிர்த்து, சிங்கபுரம், உறையூர், நாகநீள்நகர், குமரிக்கோடு, குமரியம் பெருந்துறை, உஞ்சை (அவந்தி), வடவேங்கடம், அரங்கம், மாங்காடு, கொடும்பை, திருமால்குன்றம், அயோத்தி, தொண்டி, வயலூர், கபிலபுரம். நெடுவேள் குன்றம், தலைச்செங்கானம், தங்கால், வாரணம், செந்தில், வெண்குன்று, ஏரகம், செங்களம், அழும்பில், நீலகிரி, பறையூர், குயிலாலுவம், வியலூர், நேரிவாயில், இடும்பில், அகப்பா, காப்பியத்தொல்குடி 32 நகரங்களைப் பற்றிய குறிப்புகளைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. சிறப்பு மிக்க சில ஊர்களைப் பற்றிப் பார்ப்போம்.

உறையூர்

சோழர்கள் வாழ்ந்த ஊர் உறையூர். “உறந்தை“ என்ற பழம்பெயர்கொண்ட இவ் ஊரில் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களின் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக “உறையூர்“ குறிக்கப்பெற்றுள்ளது. சான்றாக, உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர்க் கதுவாய் சாத்தனார், உறையூர்ச் சல்லியன் குமரன், உறையூர்ச் சிறுகந்தன், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார், உறையூர் முதுகொற்றன் முதலிய புலவர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டலாம். உறையூர்க்குக் “கோழி“ என்ற பெயரும் இருந்துள்ளது. “ஊர் என்றால் அது உறையூர்தான்“ என்ற பொருளில் நக்கீரர் இறையனார்க் களவியலுரையில் குறி்ப்பிட்டுள்ளார். உறையூரிலிருந்த “அறங்கூறும் அவையம்“ (நீதிமன்றம்) அக்காலத்தில் புகழ்பெற்றது. இந்த அவையின் சிறப்பினை நற்றிணையின் 400, அகநானூற்றின் 93, புறநானூற்றின் 39, 58 ஆகிய பாடல்கள் புகழ்ந்துள்ளன. இங்கு நன்செய் நிலங்கள் மிகுதியாக இருந்துள்ளன. மலையும் காடும் ஆறும் இந்த ஊரில் இருந்துள்ளன. ஆதலால், இவ் ஊர் வளம்மிக்கதாகவும் இயற்கையான அரண்களை உடையதாகவும் இருந்துள்ளது.

கழுமலம்

“கழுமலம்“ என்ற பெயர் பிற்காலத்தில் “காழி“ என்றாகி, இப்போது சீர்காழி என்றுள்ளது. கரிகாற்சோழனை வேந்தராகத் தேர்ந்தெடுத்த யானை கழுமலத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரியவருகிறது. கரிகாற்சோழன் இவ் ஊரிலிருந்து ஆண்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர் இவ் ஊர் சேர மன்னர் குட்டுவனுக்குரியதாக மாறியது. அவரிடமிருந்து இவ் ஊரினைக் கைப்பற்ற சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி முயற்சி செய்தார். இதனை அறிந்த குட்டுவன் தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களுக்கு ஓர் அவசர ஓலையினை அனுப்பித் தனக்குப் படைபலம் தருமாறு ஆணையிட்டார். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சிற்றரசர்கள் தமது படையுடன் குட்டுவனுக்கு உதவ வந்தனர். இந்தக் கூட்டுப்படைக்குக் கணையன் என்பவர் ஒட்டுமொத்த படைத்தளபதியாக இருந்தார். கணையன் நன்னனின் நண்பர்.அழுந்தூரை ஆண்ட சோழன் கண்ணீப் பெரும்பூண் சென்னி என்பவர் இளஞ்சேட் சென்னிக்கு உதவியாகத் தனக்குக் கீழிருந்து, “போர்“ எனும் ஊரினை ஆளும் பழையன் என்பவரைத் தலைமையாகக் கொண்டு பெரும்படையினை அனுப்பினார். எதிரிகளின் பாசறையைத் தாக்கி அழித்த பழையன், தானும் மாண்டார். இதனை அறிந்த கண்ணீப் பெரும்பூட் சென்னி தானே முன்னின்று படை நடத்திச் சென்று, கணையனைக் கைதுசெய்தார். கழுமலத்தினைக் கைப்பற்றினார்.இவ் வெற்றியினைத் தன் தலைநகரான அழுந்தூரில் கண்ணிப் பெரும்பூட் சென்னி கொண்டாடியதாகக் குறிப்புள்ளது. இவரைச் “செங்கணான்“ என்றும் குறித்துள்ளனர். இருப்பினும் “சென்னி“ என்பது, சோழர்களின் பொதுப் பெயர்களுள் ஒன்று என்பதால் இங்குக் குறிப்பிடப்படும் “சென்னி“, கண்ணிப் பெரும்பூட் சென்னியா அல்லது நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியா அல்லது உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியா என்பது விவாதத்திற்குரியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

கருவூர்

அக்காலத்தில் மூன்று கருவூர்கள் இருந்துள்ளன. அதில் சேரர்கள் ஆண்ட கருவூர், “சேரபோத்ரர்களின் அரண்மையுள்ள கரோரா“ என்று தாலமியால் சுட்டப்பட்டு்ள்ளது. இது கொங்குநாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில், சேரர்களின் இரும்பொறை மரபினரால் ஆளப்பட்ட கருவூர் ஆகும். இதற்கு “வஞ்சி“ என்ற வேறொருபெயரும் உண்டு. இது இன்றைய “கரூர்“ ஆகும். மற்ற இரண்டு கருவூர்களுள் ஒன்று மேலைக்கடற்கரையிலும் மற்றொன்று தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ள கருவூரைச் சேரர்களின் குட்டுவன் மரபினரால் ஆளப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கரூர் அன்றைய காலத்தில் செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்துள்ளது. இது அயல்நாட்டு வாணிபத்தோடு மிகுந்த தொடர்புடையது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் யவனர்களின் காசுகள் பல கிடைத்துள்ளன.

குடவாயில்

சோழன் கண்ணிப் பெரும்பூட் சென்னிக்குரிய ஊர் “குடவாயில்“. இதனைக் “குடந்தை“ என்றும் “குடந்தைவாயில்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இன்று “குடவாசல்“ என்று அழைக்கப்படுகின்றது. தஞ்சை நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் உள்ளது. அக்காலத்தில் இங்குப் பழைய நெல்லை மிகுதியாகச் சேமித்துவைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சோழர்களின் கருவூலமாகவும் (கஜானா) இது இருந்துள்ளது. அதனால், இவ் ஊருக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அரண்களும் மதில்களும் இவ் ஊரினைச் சுற்றி இருந்துள்ளன. அவற்றைச் சுற்றி அகழிகளும் இருந்துள்ளன. இது மக்கள் தொகை பெருகிய ஊராகவும் இருந்துள்ளது. சோழன் செங்கணான் கழுமலப்போரில் தன்னால் கைதுசெய்யப்பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறையை இவ் ஊரில் சிறைப்படுத்தினான். அந்தப் பகுதி இப்போது “கோட்டவம்“ என்று அழைக்கப்படுகின்றது.

தொண்டி

இரண்டு தொண்டிகள் உள்ளன. ஒன்று சேர நாட்டின் மேற்குப்பகுதியிலும் மற்றொன்று பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையின் பகுதியிலும் உள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள தொண்டியில் கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது இராமநாதபுரத்திற்கு அருகில் ஒரு சிற்றூராகத் தொண்டி முடங்கிப்போனது. சேர நாட்டிலுள்ள தொண்டி இன்று ஆழப்புழை ஆற்றின் கரையில் இருந்துள்ளது. ஊருக்குச் செல்லும் வழி இருக்கிறது. ஆனால், ஊர்தான் இல்லை. தொண்டிக்குச் செல்லும் வழியில் “தொண்டிப்போயில்“ என்ற சிற்றூர் மட்டுமே உள்ளது. தொண்டி இல்லை.

பரங்குன்று

கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் பழங்காலத்தில் பரங்குன்று என்று அழைக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் தென்மேற்கில் உள்ளது. இக்குன்றின் மேலுள்ள குகைத்தளங்களில் சமண முனிவர்களின் கற்படுக்கைகளும் பாறைகளில் தமிழி எழுத்தில் பொறிக்கப்பெற்றுள்ள வாசகங்களும் உள்ளன. சங்ககாலப் புலவர் நல்லந்துவனாரின் பெயரும் அவ் வாகசத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. இராவணன் கைலாய மலையைப் பெயர்க்கும் காட்சி சிற்பவடிவில் உள்ளது. இது பிற்காலத்தது.

அறுபடை வீடுகள் பற்றிப்பேசும் திருமுருகாற்றுப்படையும் முதல் படைவீடாகத் திருப்பரங்குன்றத்தையே சுட்டுகிறது. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங்குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிட்டுள்ளது. புலவர் மருதன் இளநாகனார் அகநானூற்றின் 59ஆவது பாடலில், திருப்பரங்குன்றத்தை “முருகன் குன்றம்“ என்று சுட்டியுள்ளார். அதே நூலில் 149ஆவது பாடலில் புலவர் எருக்காட்டூர் தாயங் கண்ணனார் திருப்பரங்குன்றத்தை “ஒடியா விழவின் நெடியோன் குன்றம்“ என்கிறார். மதுரைக்காஞ்சியின் 264ஆவது அடியில் “தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்“ என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.பரிபாடலில் உள்ள பாடல்களுள் ஏழு பாடல்கள் பரங்குன்றின் முருகனைப் பற்றியதாக அமைந்துள்ளன. அவ் ஏழ் பாடல்களுள் ஒன்றில் பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும் அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவற்றைக்காண வந்த மதுரை மக்கள் அங்கிருந்த ரதி, மன்மதன், அகலிகை, கௌதமர், பூனை உருக்கெண்ட இந்திரன் ஆகியோரை அடையாளங்கண்டு வியந்ததாகவும் சுட்டப்பெற்றுள்ளது. பெரும்பான்மையான சங்க இலக்கியப் பாடகல்கள் பரங்குன்றை முருகனோடு இணைத்துப் பேசியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே சமணத்துறவியர் வாழ்ந்ததற்காக சான்றுகள் உள்ளன.57 அவர்கள் வாழ்ந்த குகைகளின் முகப்புகளிலும் குகைக்குள் அவர்கள் படுத்துத் தூங்கிய கற்படுக்கைகளிலும் தமிழி எழுத்தில் அமைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சான்றாக, “அந்துவன் கொடுபிதவன்“, எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தான் ஆய்சயன நெடுநாதன்“, “மாரயது கயம“ இம்மூன்றினையும் குறிப்பிடலாம்.

பாழி

எழிமல்லைப் பகுதியில் “பாழி“ என்ற ஒரு நகரம் இருந்துள்ளது. அதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் ஆண்டுவந்தார். இந்நகர், வடநாட்டிலிருந்து மேற்குக் கடற்கரை வழியாகத் தமிழ்நாட்டின் கிழக்கி நோக்கி நுழைய ஒரு வாசலாக இருந்தமையால், பலரும் இதனைப் பயன்படுத்தித் தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைய முடிந்தது. அவர்களை எதிர்த்து நம்மவர்கள் தொடர்ந்து போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நகர் தொடர்ந்து போர்க்களமாகவே இருந்துவந்தது. ஆதலால், இந்நகரத்திற்குச் “செருப்பாழி“ (செரு-பகை,போர்) என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

வேங்கடம்

“கடம்“ என்றால், பாலைநிலம் என்று பொருள். வேங்கடமலைக்கு வடக்கிலுள்ள பாலைநிலத்தைக் குறித்த இச்சொல் பின்னர் அங்கிருந்த மலைக்குரிய பெயராக மாறிவிட்டது. இதனை “வெங்கடம்“ என்றும் அழைத்துள்ளனர். தொல்காப்பித்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழ்மொழி பேசும் மக்களின் வாழிட எல்லையை “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து“ என்று இம்மலையைத் வடதிசை எல்லையாகக் காட்டியுள்ளார். இம்மலைப்பகுதியினை ஆதனுங்கன், புல்லி, கரும்பனூரன், தொண்டைமான், தொண்டைமான் வழியினர், திரையன் ஆகியோர் ஆண்டுள்ளனர். இம் மலைப்பகுதியிலிருந்துதான் பாண்டிய நாட்டிற்கு யானைகள் பல கொண்டுவரப்பட்டன.

நெடுவழிகள்

ஒவ்வொரு நகரினையும் இணைக்கும் வழிகளும் பல வகையில் இருந்துள்ளன. பண்டைத் பெருவழிகளும் சிறுவழிகளும் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துள்ளன. புகாரிலிருந்து காவிரியின் வடகரை வழியாகத் திருவரங்கத்திற்குச் செல்லும்பாதை இப்போது மேலையூருக்கும் கீழையூருக்கம் இடையே மாற்றம் பெற்றுள்ளது. உறையூரிலிருந்து கொடும்பாளூர் வழியாக மதுரைக்கு வரும் பாதைகள் சேத்துப்பட்டி என்ற ஊரையடுத்து மூன்றாகப் பரிந்துள்ளன. இதனால் சூலம் போன்ற அமைப்பினை இன்றும் காணமுடிகின்றது. இவற்றுள் ஒன்று சிறுமலை வழியாகவும் மற்றொன்று நத்தம் கணவாய் வழியாகவும் பிரிதொன்று அழகர்மலை வழியாகவும் மதுரையை அடைந்துள்ளன. இன்று திருச்சியிலிருந்து கொடும்பாளுர் வழியாகத் துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி ஊர்களைக் கடந்தபின்னர் வேறுபாதையில் பிரிந்து மதுரையை அடைகின்றது. மதுரையிலிருந்து வையையின் தென்கரை வழியே நெடுவேள்குன்று வரை பாதை இருந்துள்ளது. சோழ நாட்டிலிருந்து பொதிய மலையைக் கடந்து சேரநாட்டினை அடையமுடிந்துள்ளது. சேரநாட்டிலிருந்து கூமாபட்டி கணவாய் வழியாகத் தங்கால் ஊரினை அடைந்தனர். வஞ்சியிலிருந்து நீலகிரி நெடும்புறம் வரை பாலக்காட்டுக் கணவாய் வழியாக ஒரு பெருவழி இருந்துள்ளது. tவடதிசையிலுள்ள கனகவிசயரை வென்று, கண்ணகிக்குச் சிலைசெய்ய இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி வஞ்சிக்கு வந்த சேரன் செங்குட்டுவன் வஞ்சி முதல் கங்கை வரை ஒரு பெருவழியினைப் பயன்படுத்தியிருப்பாரே! கங்கையிலிருந்து குமரி முனைக்குப் புனித நீராட வந்தவர்கள் ஒரு நெடுவழியினைப் பயன்படுத்தியிருப்பனரே! இவ் வழிகள் வட, தென் இந்தியாவை இணைத்த நிலப் பாதைகள்தானே!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

வீரவாளும் வெற்றிவேலும்

சங்க காலம் / தேடல் – 19

640px-Puhar-ILango

தம் வீர வாளினைச் சுழற்றிய திசையெங்கும் வேந்தர்களுக்கு வெற்றிதான். அவர்களுக்கு உதவியாக இருந்த படைவீரர்கள் வேலேந்தினர். வாளும் வேலும்கொண்டு படையை நடத்தி, குடிகாத்து, நாட்டினை விரிவாக்கினர். முடியுடை மூவேந்தர் மரபினரின் வெற்றிகள் அனைத்தும் இவ்வகையில் பெறப்பட்டவையே. ஒரு விதத்தில் போர்களின் வழியாகத்தான் வேந்தர்களை நாம் அடையாளம் காணமுடிகின்றது.

மூவேந்தர்களின் மரபில் சங்ககாலச் சேரர்கள், சங்ககாலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர்கள் பற்றியும் அவர்களுக்கு நட்பாக அல்லது எதிரியாக இருந்த வேளிர்கள், சிற்றரசர்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் சங்க காலத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய தெளிவான ஒரு வரைபடம் நமக்குக் கிடைக்கும்.

போர்

மூன்று வேந்தர் மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை, குடை, முடி, கோல் என்பனவாகும். “வெண்கொற்றக்குடை“ என்பது, காவல் தொழிலையும் “மணிமுடி“ என்பது, அரசியல் தலைமையையும் “செங்கோல்“ என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தமக்கு நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போர் மேற்கொண்டனர். போர் இரண்டு நிலைகளில் நடைபெற்றது. ஒன்று தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று தன் நாட்டை விரிவாக்கிக்கொள்ள.

அக்காலப் போர்க்களத்தில் வில், அம்பு, வாள், வேல், குந்தம், கோல், கைக்கோடரி, எஃகம், முசலம் போன்றவற்றை ஆயுதங்களாகவும் இரும்பாலான மெய்மறைகள், கடுவாத்தோலால் செய்யப்பட்ட சட்டை, கேடயம், உடலில் போர்த்தும் கவசம் ஆகியன தடுப்பாயுதங்களாகவும் பயன்படுத்தினர். போரைத் தொடங்கும் முன்பு கொம்பு, சங்கு, முரசு போன்றவற்றை முழக்கினர். முரசில் வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகைகள் இருந்தன. போரில் வீர முரசினை முழக்கினர். பகைவர் போரைத் தவிர்க்க விரும்பினால் அவரிடமிருந்து திறைப்பொருளினைப் பெற்றுக்கொண்டனர்.

எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க யானைப் படையினைப் பயன்படுத்தினர். வேந்தர்களுக்கு யானைகளே தாம் உலா வரும் வாகனமாகவும் போர்க்கள வாகனமாகவும் பயன்பட்டன. போர்க்களத்துக்குச் செல்லும் முன் படையானைகளுக்கு மதுவினை ஊட்டி வெறியேற்றியுள்ளனர். தேர்கள் மிகுதியாகப் பொதுவாழ்வில் பயன்படுத்தப்பட்டன. சிறுபான்மையாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. தேர்ப்படையில் பலவகைத்தேர்கள் அணிவகுத்தன. தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித்தேர் என்பன அத்தேர்களுள் முதன்மையானவை. பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையே பயன்படுத்தினர். யானைகள் பூட்டப்பட்ட தேர்களும் இருந்துள்ளன. குதிரைப் (இவுளி) படைகள் பெரும்பாலும் போர்வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் குதிரைமீது சென்று எதிரிகளைத் தாக்கினர். தமிழக வேந்தர்கள் இக் குதிரைப் படைகளால்தான் தமிழகத்தின் மீது படையெடுத்த வம்பமோரியர்களையும் மோரியர்களின் தடுத்தனர். நூறு எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்தனர். இப் படையினைத் தூசுப்படை என்றனர். போரில் இப்படையினரே முன்சென்றனர். கடல்வழியாக வரும் எதிரிகளைத் தாக்கக் கப்பற்படையினையும் வேந்தர்கள் வைத்திருந்தனர். இது அவர்களின் கடல் வாணிபத்திற்குப் பாதுகாப்பாக இருந்தது. சேரர்களின் கப்பற்படையும் யானைப் படையும் புகழ்பெற்றவை. ஈழத்தை இக் கப்பற்படையினால்தான் இரண்டாம் கரிகாற்சோழன் (பெருந்திருமாவளவன்) வெற்றிகொண்டார்.

ஒவ்வொரு வேந்தரும் நிலையான படைகளை வைத்திருந்தனர். போர்க்காலத்தில் கூடுதல் படைக்காக வாட்குடி மக்களைத் திரட்டிப் படையினைப் பெருக்கிக்கொண்டனர். அப்படையில் மறவர், எயினர், மழவர், மல்லர் போன்ற மறக்குடியினரே இருந்துள்ளனர். தனக்குக் கீழ் உள்ள சிற்றரசுகளின் படைகளை உரிமையோடு தம் படையுடன் இணைத்துக்கொண்டனர். படைவீர்ர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தனர். இப் போர்ப் பயிற்சிப் பட்டறைக்கு “முரண் களரி“ என்று பெயர். போரற்ற காலங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் படையினரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இதனை “வாளுடைவிழா“ என்றனர்.

போருக்குச் செல்லுதலை ஒரு விழாவாகவே கொண்டாடியுள்ளனர். இதற்காகப் பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நன்னிமித்தம் பார்த்தல், நற்சொல்கேட்டல் (வரிச்சி), போர்வாளினை நீராட்டுதல், குடை மற்றும் முரசினைக்கொண்டு அணிவகுப்பினை நடத்துதல், வஞ்சின மொழி கூறுதல், கொற்றவை வழிபாடு (பலியிடுதலுடன்), மரபுக்குரிய மாலையணிதல், தங்கள் சின்னம் தாங்கிய கொடியினை ஏந்துதல், அடையாளப் பூவினைச் சூடுதல் போன்றன போருக்குச் செல்லும்முன் செய்யப்பெற்ற சடங்குகளாகும். வேந்தர் தன் வீரர்களுக்கு உணவளித்து மகிழ்விப்பார். இதனைப் “பெருஞ்சோற்றுநிலை“ என்பர்.

போர் நிகழும் இடத்துக்குச் சற்று தூரத்தில் வேந்தர் பாசறை அமைத்துத் தங்குவதும் உண்டு. இது கூதிர் பாசறை, வேனிற் பாசறை என இரண்டு வகைப்படும். இந்தப் பாசறை ஓர் ஊர் போலத்தோன்றும். ஆதலால், இதனைக் “கட்டூர்“ என்றனர். பாசறைப் பணியாளர்களுள் பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பின்னரும் சில சடங்குகள் செய்யப்பட்டன. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். அந் நடுகல்லைச் சுற்றி வேல் நட்டி, அரண் அமைத்துக் கோவிலும் அமைக்கப்பட்டது. அங்கு நெல் உகுத்து, நீராட்டி, நாட்பலி ஊட்டி, விளக்கேற்றி வழிபட்டுள்ளனர். போரில் வெற்றிபெற்றால் வேந்தர் வீரர்களுடன் சேர்ந்து துணங்கைக் கூத்தாடுதலும் நடைபெற்றுள்ளது. வேந்தர் தம் வீரர்களுக்கு “உண்டாட்டு“ நடத்துவர். இதில் கள்ளும் உண்வும் மிகுதியா இருக்கும். பகைநாட்டில் கொள்ளையிட்ட பொருட்களின் சில பகுதியை வரிசையறிந்து வீரர்களுக்கு வழங்குவதும் உண்டு.

தாம் வெற்றிபெற்ற நாட்டில், கொள்ளையிட்ட பின்னர் தீயிட்டு அழித்தல் (மழபுல வஞ்சி, கொற்றவள்ளை ஆகிய துறைகள் இவை பற்றி விளக்கியுள்ளன), வயல்களைக் கழுதைபூட்டப்பட்ட ஏர்கொண்டு உழுதல், நீர் நிலைகளில் யானையை இறக்கிப் பாழாக்குதல், பெண்களின் கூந்தலை அறுத்தல், ஆண்களின் பற்களைப் பிடுங்குதல் போன்ற வன்முறைகளை மேற்கொண்டனர். தாம் போர்தொடுத்த நாட்டில், ஊரில் உள்ள காவல்மரத்தை அழித்தனர். ஏன் காவல் மரத்தை அழிக்கவேண்டும்? அதன் பின்னணியில், “ஒரு குலத்தின் கருவறுத்தல் சார்ந்ததொரு பெரிய நம்பிக்கை“ இருக்கின்றது.

ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே குலக்குறி. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன், பல்வேறு வகை மரங்கள், செடி – கொடிகள், புறா, கோழி, மயில், முதலான பறவைகள் இனக்குழு வாழ்வில் குலக்குறியாகக் கொள்ளப்பெற்றன. இக்குலக்குறி அந்த இனத்தின் அடையாளச் சின்னமாக அமைந்தன.

புறப்பாடல்களில், மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றிகொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல் மரங்கள் இடம்பெற்றுள்ள காவற்காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரித்துக்கூறப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. புறநானூற்றின் 3, 23, 59 ஆகிய பாடல்கள் “காவல்மரம்“ பற்றி எடுத்துரைத்துள்ளன. காவல் மரங்கள் சூரிய ஒளிக்கதிர்கள் நுழைய முடியாதவாறு அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்கள் புனிதமானவையாகவும் வழிபாட்டிற்குரியனவாகவும் கருதப்பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் காவற்காட்டினைக் காவு, கடிமிளை என்று குறிப்பிட்டுள்ளன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதால்தான் அதனை அவமதிக்கும் வகையில் வேந்தர் அதனை இழிவுபடுத்தும் நோக்கோடு அதில் தமது யானைகளைக் கட்டுதல், வெட்டுதல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். “ஓர் இனத்தினை அழிக்கும்போது அவ் இனத்தின் உயிர் ஆற்றலாகவும் வளமாகவும் இருக்கும் குலக்குறியினை அழித்துவிட்டால் அவ் இனம் முற்றாக அழிந்துவிடும்“ என்ற நம்பிக்கையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன.

சிறந்த படைத்தலைவருக்கு வேந்தர், “ஏனாதிப் பட்டம்“ வழங்கினார். இப்பட்டம் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கும் குடியிருப்புப் பகுதிக்கு “ஏனாதிப்பாடி“ என்ற பெயரும் இருந்துள்ளது.

சங்கச் சேரர்கள்

கொங்கணக் கடற்கரைக்குத் தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரையும் கெங்குநாடும் இணைந்த பகுதி சேரநாடாகும். மங்களுருக்கு அருகில் கடலோடு கலக்கும் சந்தகிரி ஆற்றுக்குத் தெற்கிலுள்ள மலைப்பாங்கான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேரநாடு அமைந்திருந்தது. சேரர்கள் மலைநாட்டுக்காரர்கள். “சேரல்“ என்பது மலையைக் குறிக்கும். மலைவேடர்களுக்கு வில்லும் அம்பும் வேட்டை ஆயுதமாக இருந்ததால், அவற்றையே தங்களின் சின்னமாகக் கொண்டனர். கரூவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி முதலானவை சேரநாட்டின் முதன்மையான பெரிய ஊருகளாகும். சேரநாடு “உம்பற்காடு“ என்றும் “வேழக்காடு“ என்றும் அழைக்கப்பட்டது. சேரர்களைச் சேரர், வானவர், வில்லவர், குடவர், குட்டுவர், பொறையர், மலையர் என்று அழைத்தனர்.

சேரரில் இரண்டு கிளைவழியினர் உண்டு. 1. உதியன் சேரலாதன் கிளைவழி, 2. இரும்பொறை கிளைவழி. உதியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பெருஞ்சேரலாதன், செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் உதியன் கிளைவழியில் தோன்றியவர்கள். அந்துவன் சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலியோர் இரும்பொறை கிளைவழியினர்.

சேர நாட்டின் தெற்கில் உதியன் சேரலாதன் மரபினரும் வடக்கில் இரும்பொறை மரபினரும் ஆதிக்கம் செலுத்தினர். இரும்பொறையினர் கரூரைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்தனர்.

சேரநாட்டை முதன்முதலில் வரிவாக்கம் செய்தவர் உதியன் சேரலாதன். இவர் குழுமூரில் இருந்துகொண்டு, சேரநாட்டைச் சிறுகச்சிறுக விரிவாக்கினார். இவ் ஊரில் உள்ள ஏழை, எளியவருக்கு இவர் தொடர்ந்து உணவளித்துள்ளார். ஆதலால், இவ் ஊர் “உதியன் அட்டில்“ என்று அழைக்கப்பட்டது. இவர், பாடலிபுத்திரத்தினை ஆண்ட இறுதி நந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இறந்தவர் நினைவாக இருப்போருக்கு உணவளிக்கும் வழக்கம் (பெரும்பிடி, பொருஞ்சோறு) தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. அதனைப் பின்பற்றி இவர் முன்னோர் வழிபாட்டுச் சடங்கினைப் பெரியளவில் நடத்தினார். முன்னோர் நினைவாகத் தம் படையினருக்குப் “பெருஞ்சோறு“ அளித்துள்ளார். ஆதலால், இவரைப் “முதியர்ப் பேணிய உதியன் சேரலாதன்“ என்று சிறப்பித்துள்ளனர். பாடலிபுத்திரத்தில் நந்த மன்னருக்கும் சந்திரகுப்தமோரியருக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, நந்த மன்னருக்கு உதவியாகப் படைநடத்திச் சென்றுள்ளார். வேணாட்டு வேளிர்கள் இவருக்கு வேண்டியவர்களாக இருந்ததால், காலம் கனிந்தபோது தம் நாட்டுக்குத் தெற்கே தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று, தென் கடற்கோடியைத் தம் நாட்டுக்கு எல்லையாக்கினார். இவர் இரண்டாம் நன்னனைப் போரில் வென்றார்.

உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவர் வடஇந்தியாவரை படையெடுத்திச் சென்றுள்ளார். யவனர்களுடனும் கடற்கொள்ளையருடனும் போரிட்டு வென்றுள்ளார். இவர் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரத்தினை வெட்டித் தனக்கு முரசு செய்தார். இவர் காலத்தில் பாடலிபுத்திரத்திற்கும் தமிழகத்திற்கும் நட்புறவு நீடித்தது. அது இந்தியாவின் உள்நாட்டு (வட, தென் இந்திய) வாணிபத்திற்கு உதவியது. இவரைக் “குடக்கோ நெடுஞ்சேரலாதன்“, “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்“, “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்“ என்றெல்லாம் அழைத்துள்ளனர். 58ஆண்டுகள் ஆட்சிசெய்த இவர், போர்வை என்ற இடத்தை ஆண்ட சோழவேந்தர் “பெருவிறற்கிள்ளி“ என்று அழைக்கப்பட்ட வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போஓர் என்னுமிடத்தில் போரிட்டு மாண்டார்.

இவருக்குப் பின்னர் இவரது தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆண்டார். இவர், மலை நாட்டுப் பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட “உம்பற்காடு“ எனும் பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். இவர் காலத்தில் “கொற்றவை“ வழிபாடு சிறப்புற்று இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவர், “தான் சேர நாட்டிற்குரிய அனைத்துப் பகுதிகளையும் ஆளும் வரை மணிமுடி அணியாமல், களங்காயால் செய்த கண்ணியும் நாரால் செய்த முடியும் அணிந்துதான் அரசாட்சி புரிவேன்“ என்று கூறி, அவ்வாறே அரச பதவியினை ஏற்றமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் நேரிமலையில் இருந்து சேர நாட்டினைச் சீர்ப்படுத்தினார். இவர் சேர நாட்டையொட்டி மேலைக் கடற்கரையில் வியலூரை ஆண்ட மூன்றாம் நன்னன்வேண்மானை வாகைப் பெருந்துறையில் எதிர்கொண்டு அழித்தார். அவ்வெற்றியின் வழியாகச் சேரநாடு இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.பூழிநாட்டின் மீது படையெடுத்து அதனையும் சேரநாட்டுடன் இணைத்தார். சேர நாட்டுப் பெருவழிகளில் இருந்த கள்வர் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தினார். பசும்பூண் பாண்டியருக்கும் தனக்கும் பகையாக இருந்த நெடுமிடல் என்ற மன்னரை அழித்ததோடு, அம் மன்னனின் வளமான நாட்டினையும் அழித்தார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை தம்பதியருக்குப் பிறந்த வெல்கெழுகுட்டுவன் ஆட்சிக்கு வந்தார். இவரைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “செங்குட்டுவன்“ என்று வரலாற்றாசிரியர்கள் பலர் தவறாகக் கணித்துள்ளனர். இவர் கடற்கொள்ளையரை முற்றாக அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன்,“ “கடற்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவன்“ போன்ற சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இவர் காலத்தில் மோகூரைப் பழையன் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மீது வெல்கெழுகுட்டுவனின் நண்பர் அருகை என்பவர் பகைகொண்டார். பழையன், அருகையைப் போரில் வென்று, அவரைப் புறமுதுகிடச்செய்தார். அருகை தலைமறைவானார். இதனை அறிந்த வெல்கொழுகுட்டுவன் பழையன் மீது போர்தொடுத்தார். “மோகூர்“ என்ற பெயரில் பல ஊர்கள் இருந்துள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சிக்கு அருகில், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கு அடுத்து, பொதியமலைக்கு அருகில் என இருந்த இ்ம் மூன்று மோகூர்கள் அல்லாத ஒரு மோகூரை ஆண்ட பழையனை அழித்து, அந்த மோகூரை வெல்கெழுகுட்டுவன் கைப்பற்றினார். பழையனின் காவல் மரமான வேம்பினை வெட்டிப் பழையனின் மனைவியரின் கூந்தல்களை அறுத்து, அவற்றைக் கொண்டு கயிறுதிரித்து, அக்கயிற்றின் (மயிர்க்கயிறு) ஒரு முனையினை வீழ்த்தப்பட்ட வேம்புமரத்தினைப் பிணைத்து, மறுமுனையினை யானைக் காலில் கட்டி, யானையால் அம் மரத்தினை இழுக்கச்செய்தார். அந்த அதன் நினைவாக அப்பகுதியில் இருந்த ஒரு ஊருக்கு “குட்டுவனஞ்சூர்“ என்ற பெயரிடப்பட்டது. இது “குட்டுவன் அஞ்சிய ஊர்“ அல்ல. இதனைக் “குட்டுவனைக் கண்டு அஞ்சிய ஊர்“ என்று பொருள் கொள்ளவும். இவர் வியலூர், கொடுகூர், நேரிவாயில் போர்களில் வெற்றிபெற்றார்.

இவரது மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது இயற்பெயர் “அத்தி“. இவர் இளமையில் ஆடற்கலையில் சிறந்து விளங்கி “ஆட்டனத்தி“ என்ற பெயரினைப் பெற்றவர். இவர் இயல், இசை, நாடகம், ஆடல், பாடல் ஆகிய கலைகளைக் கற்றும் கற்பித்தும் வந்தார். இவர் முதற்கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியை மணந்தார். கழாஅர் முன்துறையில் காவிரி நீரில் இவர் நடனமாடும்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை மருதி என்பவள் காப்பாற்றி அவரை மணந்துகொண்டாள். தன் கணவரைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் மருதி இவரை ஒப்படைத்துவிட்டு, கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இவரது நாட்டின் வடஎல்லையில் வாழ்ந்திருந்த ஓரினத்தவர் இவரது நாட்டிற்குள் புகுந்து ஆட்டு மந்தையினைக் கவர்ந்து சென்றனர். இவர் தாமே சென்று அவ் ஆட்டுமந்தையினை மீட்டுவந்தமையால் இவருக்கு, “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவருக்குப் பின்னர் அந்துவன் சேரல் முதலான சிலர் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சோழநாட்டினை முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஆண்டுவந்தார். இச்சேரர்களின் காலத்தில் பூழிநாடும் கொங்குநாடும் சேரநாட்டுடன் இணைக்கப்பெற்றன.

இவர்களைத் தொடர்ந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் காலூன்றியது. இவ் வேந்தரும் மற்ற சீறூர் மன்னர்களும் வணிகர்களும் பௌத்த துறவிகள் தங்குவதற்காகக் குகைகளைச் செப்பம்செய்து வழங்கினர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் “கோ ஆதன் செல்லிரும் பொறை“ இவராகவும் இருக்கக்கூடும்.

இவரது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார். இவர் “அஞ்சி“ என்ற மன்னரை எதிர்த்துத் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். யார் இந்த அஞ்சி? வரலாற்றில் இரண்டு அஞ்சிகள் உள்ளனர். ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சி. மற்றொருவர் இவரின் முன்னோரான அஞ்சி. இருவரையுமே “அஞ்சி“ என்றே குறிப்பிட்டுள்ளனர். தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு குதிரைமலை (குதிரை மூக்கு மலை) உள்ளிட்ட நாட்டினை ஆட்சிபுரிந்தவர் அதிய மரபினரான அதியமான் நெடுமான் அஞ்சி. “எழினி“ என்பது, இவருக்குரிய குடிப்பெயராகும். இவரைக் “கொங்குநாட்டு மழவர்“ என்றும் குறிப்பிடுகின்றனர். அஞ்சி தன்னைப் பகைத்த ஏழு அரசர்களையும் எதிர்த்தவர். அஞ்சி மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்துச் சென்று அவருடைய திருக்கோவலூரை அழித்தார். திருமுடிக்காரி தம்பியோடிச் சென்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கொல்லிமலை ஓரியும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் பகையில் இருந்தார். காரியின் துணையுடன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின்மீது படையெடுத்தார். இதனை அறிந்த பாண்டியரும் சோழரும் அதியமானுக்குத் துணையாகப் படைகொண்டுவந்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை பகைவர் அனைவரையும் துணிந்து தாக்கித் தோல்வியடையச் செய்தார். அதியமானைக் கொன்று, களவேள்வி செய்தார். இவரின் தகடூர் வெற்றியைத் “தகடூர் யாத்திரை“ என்ற நூல் விரித்துரைத்துள்ளது. “முன்னொரு காலத்தில் 14 வேளிர்கள் ஒன்றுகூடிக் காமூரை எறித்தார்கள்“ என்று புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய காமூர் நாட்டை ஆண்டவர் கழுவுள். இவர் ஆயர்குலத் தலைவர். இவர் மூவேந்தருக்கும் அடங்காமல் இருந்தார். இவரைப் பெருஞ்சேரல் இரும்பொறைத் தாக்கி, காமூரை எறித்து, கழுவுள் கோட்டையினைக் கைப்பற்றினார். சேரநாட்டின் எல்லைக்கு வெளியிலிருந்த பூழி, கொல்லிக்கூற்றம் ஆகிய பகுதிகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆட்சியிலிருந்தனர். அவ் இருவருக்கும் இணையான பெருவேந்தராக இவர் விளங்கினார்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இளஞ்சேரல் இரும்பொறை. இவரது காலத்தில் சோழரும் பாண்டியரும் சேரநாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை இவர் வென்றார். விச்சி மலையினையும் அதனைச் சூழ்ந்திருந்த காட்டையும் குறுநிலங்களையும் ஐந்து பெருங்கோட்டைகளையும் கைப்பற்றினார்.

இவருக்குப் பின்னர் ஆண்ட யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் தொண்டியாகும். இவரது இயற்பெயர் “வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை“ என்பதாகும். இவரது கண் யானையின் கண்போன்று இருந்தமையால் இவ் அடைமொழியைப் பெற்றார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தலையாலங்கானப் போரில் தோல்வியடைந்து கைதியானார். பின்னர் இவருக்கும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, சோழருக்குத் துணையாக வந்த முள்ளூர் மலைப்பகுதியினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியிடம் (இவர் மூவேந்தரில் யார் படையுதவிகோரினாலும் உதவுவார்.) சேரர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோல்வியுற்றார்.

இவருக்குப் பின்னர், குட்டுவன்கோதை ஆண்டார்.“வானவன்“ என்று அழைப்பர். வானவன் சேரமான் குட்டுவன் கோதையின் படைத்தலைவர் பிட்டன். இவரைப் பிட்டங்கொற்றன் என்றனர். அதியர் குடியைச் சேர்ந்த அஞ்சிக்கும் எழினிக்கும் உரிமையாக இருந்த குதிரைமலைப் பகுதியைச் சேரர் கைப்பற்றித் தன் படைத்தலைவராகிய பிட்டங்கொற்றனுக்கு வழங்கினார். அதன்பின்னர் பிட்டங்கோற்றன் குதிரைமலைப் பகுதியினை ஆண்டுவந்தார். இவர் கொங்கு நாட்டிலுள்ள குறும்பொறைக்குக் கிழக்கேயுள்ள ஆமூரை ஆண்டக் கொடுமுடியைத் தாக்கினார். கொடுமுடி வென்றார். சோழநாட்டிலும் ஆமூர் உள்ளதால், இந்தக் கொடுமுடியைச் சோழரின் படைத்தலைவர் என்று கருதலாம்.

வானவன் சேரமான் குட்டுவன் கோதைக்குப் பின்னர் திருக்குட்டுவன், இளம்கடுங்கோ ஆகியோர் ஆண்டனர்.

அதன் பின்னர் கோக்கோதை மார்பன் மாரிவெண்கோ ஆட்சிக்கு வந்தார். மாந்தரஞ்சேரல் இறந்தவுடன் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சிமாநகரை முற்றுகையிட்டார். கோக்கோதை மார்பன் கோட்டைக்குள் ஒளிந்திருந்தார். “ஒளிந்திருக்கும் வேந்தரைத் தாக்குவது உமது சிறப்பிற்கு அழகல்ல“ என்று புலவர் ஆலத்தூர் கிழாரும் புலவர் மாறோக்கத்து நப்பசலையாரும் கூறியதைப் புறக்கணித்துவிட்ட கிள்ளிவளவன், வஞ்சிமாநகரின் அகழியையும் நீர்நிலைகளையும் மதிலையும் ஊர்களையும் அழித்தார். தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சேரநாட்டினை ஆண்டதாக மற்றொரு கோக்காதை மார்பனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர், கிள்ளிவளவன் மதுரைப் பாண்டியரைத் தாக்கமுயற்சித்தபோது, அவரைத் தடுத்துப் போரிட்ட, பழையன்மாறன் என்பவரிடம் தோல்வியுற்றதனை அறிந்து, மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சேரப் பேரரசு தொய்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவர் ஞாயிற்றுச் சோழனுடைய மகள் நற்சோணையை மணந்தார். இத்தம்பதியருக்குப் பிறந்தவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவன்தான் சேரர் குலம் மீண்டும் உயர்வடையக் காரணமாக இருந்தார். இவரது மனைவி இளங்கோவேண்மாள். இவரது காலத்தில் இலங்கையை முதலாம் கயவாகு ஆண்டுவந்தார். “கயவாகு பொ.யு.171 முதல் பொ.யு. 193 வரை ஆண்டார்“ என்று இலங்கை வரலாற்று நூலான மாகவம்சத்தைப் புதுப்பித்த கெய்சர் குறிப்பிட்டுள்ளார். சாதவாஹனர் ஸ்ரீ சதகர்ணியும் இவரது காலத்தவரே. கொடுங்கூரை ஆண்ட கொங்கரை எதிர்த்துச் செங்களத்தில் செய்தபோரிலும் வட ஆரியரோடு புரிந்த வண்டமிழ்ப் போரிலும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற போரிலும் இமயத்தை நோக்கிய படையெடுப்பிலும் வெற்றிபெற்றார். இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலைசெய்து, கோயில் அமைத்துப் பத்தினித் தெய்வ வழிபாட்டினை நடத்தினார். அவ் விழாவில் இலங்கை வேந்தர் கயவாகுவும் கலந்துகொண்டார். இது தொடர்பான செய்திகளைச் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகின்றது.

சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தர் கணைக்கால் இரும்பொறை ஆவார். இவர் சோழ வேந்தர் வெங்கணானிடம் தோல்வியுற்றார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சங்கச் சோழர்கள்

காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய (கழனி – விளைநிலம்) பெருமையுடையோர் சோழர்கள். இவர்கள் நாட்டைச் “சோழநாடு“ அல்லது “சோணாடு“ என்று அழைத்தனர். வடக்கில் நெல்லூரிலிருந்து தெற்கில் புதுக்கோட்டை வரையுள்ள பகுதி சோழநாடு. காடுகளில் வாழ்ந்த புள்ளிப்புலிகளின் நினைவாக இவர்கள் தமது கொடியில் புலிச்சின்னத்தைப் பொறித்தனர். சோழர்களைச் சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி என அழைத்துள்ளனர். புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், குடமூக்கு போன்றன சோழநாட்டின் முதன்மையான நகரங்களாகும். வளம்மிகுந்த நன்செய் நிலங்களை உடைய இப்பகுதியில் நெல்விளைச்சல் மிகுதி. முதற்சோழன் வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. இவர் இங்கு ஆட்சிசெய்தபோது வட இந்தியாவில் நந்தர்கள் ஆண்டனர். சேரநாட்டினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆண்டார். சேரரும் சோழரும் பகைகொண்டு, போர்க்களத்தில் கடும்போர் புரிந்து, அக்களத்திலேயே இருவரும் மாண்டனர்.

இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி. வரலாற்றில் “இளஞ்சேட்சென்னி“ என்ற பெயரில் நால்வர் உள்ளனர். உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, வம்ப வடுகரை ஓட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ்சேட்சென்னி. இவர்கள் நால்வரும் ஒருவரே என்ற கருத்தும் உள்ளது.

இவரது காலத்தில் சேரநாட்டினை வெல்கெழு குட்டுவனும் பாண்டிய நாட்டினைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் ஆண்டுவந்தனர். மோரியர் மற்றும் கோசர்கள் இணைந்து கூட்டுப்படை நடத்திவந்து எதிர்த்தபோது, அப் படைகளைச் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி எழில்மலை பாழிகோட்டையில் எதிர்கொண்டார். வெற்றிபெற்றார். இவரது படையில் தேர்ப்படைக்கு முதன்மைத்தன்மை தரப்பட்டுள்ளது. இவர் வம்பவடுகரை வென்றார். இவர் வேளிர் குலத்துடன் மணவுறவு கொண்டவர். இவரின் மனைவி கருவுற்றிருந்த போது, இவர் ஒரு போர்க்களத்தில் மாண்டார். குழந்தை பிறந்தது. அக் குழந்தைதான் முதலாம் கரிகாற்சோழன் (கரிகால் வளவன்). இவரை இவரது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) வளர்த்தார். கரிகால் வளவனை அழிக்கப் பெரும் எரியூட்டும் சதி நடந்தது. அதிலிருந்து தப்பும்போது இவரது கால் தீயால் கருகிப் புண்ணாகியது. அதனால் “கரிகாற்சோழன்“ என்று குறிப்பிடப்பட்டார். அதன் பின்னர் பல எதிர்ப்புகளையும் தாண்டி, தன் தாய்மாமன் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் கரிகாற்சோழன் தன் இளம்வயதிலேயே ஒரு பெரும்போரினை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சிறுவன்தானே எளிதில் வென்றுவிடலாம் என்ற தவறான கணிப்புடன், சேரரும் பாண்டியரும் வேளிர் ஒன்பதுபேர்களுடன் கூடிப் பெரும்படைநடத்தி, நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள “வெண்ணி“ என்ற ஊரின் வாசலில் (கோவில்வெண்ணி), முதலாம் கரிகாற்சோழனை எதிர்த்தபோது, துணிவுடன் போராடி அனைவரையும் அழித்தார். இவர் சேரன் பெருஞ்சேரலாதன் மீது எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகின் வழியாக வெளிப்பட்டது. முதுகில் புண் ஏற்பட்டதால், அவமானமடைந்த பெருஞ்சேரலாதன் போர்க்களத்தில் வடக்கு திசைநோக்கி அமர்ந்து, உண்ணா நோம்பிருந்து (உண்ணாவிரதம்) இருந்து உயிர்நீத்தார். அப்போர் நடந்த ஊர் “வெண்ணிவாயில்“ என்றும் அவ் ஊரின் வெளிப்புறங்கள் போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டதால் “வெண்ணிப் பறந்தலை“ என்றும் இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் கோசர்கள் ஆண்டுவந்தனர். முதலாம் கரிகாற்சோழன் முதலில் உறையூரையும் பின்னர் புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தார். இவர் தன் மகள் ஆதிமந்தியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று அறியப்பட்ட அத்திக்கு (ஆட்டனத்தி) மணம்செய்து கொடுத்தார். இவர் ஆட்டனத்தி கழாஅர் முன்துறையில் (கழுதகாரன் துறை) நடனம் செய்ததனைக் கண்டுகளித்துள்ளார். வலிமையான கடற்படையை நிறுவி, இலங்கைமீது படையெடுத்து வென்றார். ஊளியர், அருளாளர், வடவர், வேளிர் குலத் தலைவர் இருக்கோவேள் ஆகியோரையும் வென்றார். கழாஅர் முன்துறையை ஆண்டவர் “மத்தி“. இவர் பரதவர் குலச் சிற்றரசர். இவர் கரிகாற்சோழருக்குக் கீழ்ப் பணிந்திருந்தார். ஒருமுறை யானை பிடிக்கக் கடமைப்பட்டிருந்த எழினி என்பவர் வராததால், கரிகாற்சோழர் சினம்கொண்டார். அவரது ஏவலின்பேரில் மத்தி, எழினியைத் தேடிச்சென்றார். நெடுந்தொலைவில் இருந்த எழினியைக் கண்டுபிடித்து அவரின் பல்லினைப் பிடுங்கி, அதனை வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்தார். தன் பெயர் எழுதிய கல்லை அவ் ஊரின் நீர்த்துறையில் அமைத்தார்.

கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும். ஆர்க்காட்டுத் தலைவர் ஆட்சியில் இருந்த உறையூரை வென்று அங்குச் சோழ அரசினை நிறுவினார். உறையூரைச் சுற்றிலும் காவற்காட்டினை அமைத்து உறையூரைப் பாதுகாப்பான நகராக மாற்றினார். இவருக்குக் கோப்பெருநற்கிள்ளி, வெளியன் என்ற மகன்களும் ஐயை என்ற மகளும் இருந்தனர். வெளியனின் பெயர் “தித்தன் வெளியன்“ என்பதாகும். பொருநன் என்பவர் உறையூரைத் தாக்கியபோது, தித்தனுக்கு உதவியாகப் போர்வையை (போஓர்) ஆண்ட பொருநற்கிள்ளி என்பவர் உதவ விரும்பினார். ஆனால், தித்தன் அவர் உதவியைப் பெறாமலே, பொருநனை எதிர்கொண்டார். தித்தன் கொடைத்தன்மை மிகுந்தவராகவும் இருந்துள்ளார். இவரது காலத்தில் “பெருந்துறை“ சோழர்களின் முதன்மையான துறைமுகமாக இருந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் இங்குப் பெருகியிருந்தது. தித்தன் வெளியனின் படைத்தளபதியாகப் “பிண்டன்“ என்பவர் இருந்தார். இவர், தித்தன் வெளியனின் கட்டளைப்படி முதலாம் நன்னனின் தலைநகரான பாழியைத் தாக்கியபோது, நன்னனால் தேற்கடிக்கப்பட்டார்.

தித்தனின் மகன் கோப்பெருநற்கிள்ளி. இவர் ஆட்சிக்கு வரும்முன்னரே ஆமூர் மல்லனை வென்றார். இவர் போர்வை (போர்அவை, போஓர்) கோப்பெருநற்கிள்ளி என்று அறியப்பட்டார். ஆட்சிக்கு வந்தபின்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியானார். “இராஜசூயம் யாகம்“ செய்ததால் இவரை “இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி“ என்று அழைத்தனர். இவரது காலத்தில் கரூரைத் தலைநகராகக்கொண்டு மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். பாண்டிய நாட்டினைக் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆண்டுவந்தார். இவர் உறையூர்ப் பகுதியை ஆட்சிசெய்த போது அழுந்தூர்ப் பகுதியைப் பெரும்பூண் சென்னி ஆண்டதாகக் கூறுகின்றனர். இவரே கழுமலத்தில் வெற்றிவாகை சூடியதாகக் கூறப்படுகின்றது.

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைத் தொடர்ந்து கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ஆண்டனர்.

இரண்டு சோழ வேந்தர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போட்டி நிலவியுள்ளது. நலங்கிள்ளிக்கு அஞ்சி உறையூர், ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளில் மாறிமாறி நெடுங்கிள்ளி ஒழிந்துகொண்டார். பின்னர், காரியாறு என்ற இடத்தில் அவர் கொல்லப்பட்டார்.

நலங்கிள்ளிக்குப் பின்னர் அவரின் மகன் கிள்ளிவளவன் ஆட்சிக்கு வந்தார். இவரின் தந்தைப் பெயரின் பின் பின்னொட்டான “கிள்ளி“ (நலங்கிள்ளி) என்பதனையும் அவரின் தந்தைப் பெயரின் பின்னொட்டான “வளவன்“ (கரிகால்வளவன்) என்பதனையும் இணைத்து இவருக்குக் “கிள்ளிவளவன்“ என்று பெயரிட்டுள்ளனர். இவர் பாண்டியன் பழையன் மாறனை வென்று கூடல்நகரினைக் கைப்பற்றினார். இவர் வடதிசையில் இருந்த கோசரையும் அழித்துள்ளார். பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையிலும் சோழன் கிள்ளி வளவன் உறையூரிலும் ஆட்சியிலிருந்தபோது தொண்டையர் கடல்வழியாக்க் கூடூருக்குள் நுழைந்து வேங்கடலைப் பகுதியில் ஊடுருவினர். அவ்வாறு வந்த தொண்டையர் மரபில் மூத்தவர் திரையன். இவர் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக்கொண்டு ஆண்டார். இவர் கடலரசர் குடியைச் சேர்ந்தவர். இரண்டாம் கரிகாற்சோழன் சிறுவனாக இருந்தபோது, இத்திரையன் சோழப்பேரரசினைக் கைப்பற்றியுள்ளார். இவரைப் பல்வேல் திரையன், தொண்டைமான் இளந்திரையன் என்றும் போற்றியுள்ளனர். கிள்ளிவளவனால் பாடப்பெற்ற புகழையுடைய சிற்றரசன் “பண்ணன்“. இவர் அருமனையை அடுத்துள்ள சிறுகுடியை ஆண்டவர். இவர் வயதில் முதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியநெடுஞ்செழியன் காலத்தில் இருந்து வாழ்ந்துவருபவர். இவர் காலத்தில் செம்பியனும் சேரனும் மற்ற ஐவரும் தலையாலங்கானத்தில் கொல்லப்பட்டனர். இவரது உதவியால் சோழநாடு நெடுஞ்செழியனின் மேலாண்மைக்கு வந்த்து. இவர் பாண்டியரோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இவர் துறவி இயக்கனுக்குப் பாழி (சமணர் படுக்கை) அமைத்துக்கொடுத்துள்ளார். இவர் “செழியன் பெருங்குளம்“ என்ற பெயரில் ஒரு குளத்தை வெட்டியுள்ளார். இவரின் முதுமையைப் போக்கக் கிள்ளிவளவன் தன் இளமையைத் தர விரும்பினார்.

சோழன் கிள்ளி வளவனுக்குப் பின்னால் பெருந்திருமாவளவன் (இரண்டாம் கரிகாற்சோழன்) ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன் இவர் சிறைப்பட்டிருந்தார் என்று குறிப்புகள் உள்ளன. இவர் காவிரிக்குக் கரை எழுப்பினார். இவர் வெட்டிய வாய்க்கால்களுள் ஒன்று “பெருவளவாய்க்கால்“ ஆகும். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வடக்கில் திரையர்கள் வலிமையுடன் இருந்துள்ளனர். காஞ்சியைத் தொண்டைமான்களின் மரபினர் ஆண்டனர். இரண்டாம் கரிகாற்சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்த வீரர்களை அடிமைகளாக்கிச் சோழநாட்டின் நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்தினார்.

இவருக்குப் பின்னர் செங்கணான், நல்லுருத்திரன் போன்றார் ஆட்சிக்கு வந்தனர். செங்கணான் சிவாலயங்கள் பலவற்றை ஏற்படுத்தினார். இவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவனின் சமகாலத்தவர். செங்கணானைப் ‘பெரும்பூட்சென்னி’ என்றும் அழைத்துள்ளனர்.இவரது கழுமலப்போர் குறிப்பிடத்தக்கது. சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தரான கணைக்கால் இரும்பொறையை இவர் கைதுசெய்தார்.

சங்கப் பாண்டியர்கள்

வடக்கில் வெள்ளாறிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கில் சோழமண்டலக் கரையிலிருந்து மேற்கில் கேரளாவிற்குச் செல்லும் அச்சன் கோயில் கணவாய் வரையிலும் உள்ள பகுதி பாண்டியநாடு. பாண்டியர்களின் கொடியிலுள்ள சின்னம் மீன். பாண்டியர்களை மீனவர், கவுரியர், பஞ்சவர், தென்னர், செழியர், மாறர், வழுதி, தென்னவர் என்றெல்லாம் அழைத்துள்ளனர். பாண்டியர் மரபில் பழைமையானவராகக் கருதப்படுபவர் முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். அவருக்குப் பின்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

பாண்டியருக்கு முன்னர் மதுரையை (கூடல்) ஆண்டவர் அகுதை. இவர் ஆண்ட கூடல் நகரினை “அகுதைகூடல்“ என்று புலவர் கபிலர் குறிப்பட்டுள்ளார். இவர் வெளியன் வேண்மான் ஆஅய் எயினனுடன் நட்புடன் இருந்தார். ஆஅய் எயினன் புன்னாட்டினை ஆண்டவருடன் நட்புடன் இருந்தார். புன்னாட்டின் மீது பாழிநாட்டை (இது சேரநாட்டின் வடகோடியில் உள்ள எழிற்குன்றத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதி) ஆண்ட முதலாம் நன்னன் தொடர்ந்து போர்தொடுத்து அம்மக்களை வாட்டினான். இந்த அறமற்ற செயலைக்கண்டு வருந்திய ஆஅய் எயினன், நன்னனின் பாழி நாட்டின் மீது போர்தொடுத்தார். அப்போரில் நன்னனின் படைத்தலைவர் மிஞிலி, ஆஅய் எயினனுடன் மோதினார். இப்போரில் ஆஅய் எயினன் மாண்டார். போர்க்களத்தில் இருந்த ஆஅய் எயினனின் உடலை அப்புறப்படுத்த விரும்பாத நன்னன் அதனைப் பறவைகள் உண்ணட்டும் என்று இருந்துவிட்டார். இக்கெடுமையைக் கண்டு கொத்தித ஆஅய் எயினனின் நண்பர் அகுதை பாழிநாட்டின் மீது படையெடுத்தார். ஆஅய் எயினனின் உறவினரின் துன்பத்தை அகுதை நீக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. ஆஅய் எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரரின் படைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் படைத்தலைவரைக் கொன்ற நன்னன்மீது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் படையெடுத்துச்சென்றுப் பெருந்துறைப்போரில் நன்னனை அழித்தார் என்பது தனிவரலாறு.

வலிமை மிக்க அகுதையைப் பூதப்பாண்டியனின் மகனான நெடியோன் விரட்டியடித்துவிட்டு, கூடலில் பாண்டியப் பேரரசிற்குக் கடைக்காலிட்டார். தப்பியோடிய அகுதைக்குக் கோசர் அடைக்கலம் தந்தார். நிலம் தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியர்தான் பாண்டிய நாட்டினை விரிவாக்கம் செய்தார். ஆதலால், இவரைப் “பன்னாடு தந்த பாண்டியன்“ என்று சிறப்பிக்கின்றனர்.

இவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி ஆவார். இவரைப் புகழந்து இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) பாடியுள்ளார். இவர் முதற்கரிகாற்சோழனின் தாய்மாமன் ஆவார். இவரது காலத்தில் சேரநாட்டினைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சோழநாட்டினை உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னியும் ஆண்டுவந்தனர்.

இவரை அடுத்து உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆண்டுள்ளார். இவரது காலத்தில் சேரநாட்டினை மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினை முடித் தலைக்கோ பெரு நற்கிள்ளியும் ஆண்டனர். இவர் வேங்கை மார்பன் என்ற அரசரின் பெரிய கோட்டையினைக் கைப்பற்றியதால் “கானப்பேரெயில்கடந்த“ என்ற அடைமொழியினைப் பெற்றுக் “கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி“யானார்.

இவரைத் தொடர்ந்து அறிவுடைநம்பி என்ற பாண்டியர் ஆண்டார். இவர்காலத்தில் சேரநாட்டினைக் கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினைக் கோப்பெருஞ்சோழனும் ஆண்டனர்.

இவருக்குப் பின்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். “ஒல்லையூர்“ என்பது, புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்து வட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதனை மீட்டுத் தன்வசப்படுத்தியதால் இவருக்கு “ஒல்லையூர் தந்த“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவரை அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சியினை ஏற்றார். இவரது காலத்தில் சேரநாட்டினை யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். அவ் வேந்தரைத் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் இருக்கும் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற இடத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். அவரைக் கைதுசெய்து தன் சிறையில் அடைத்தார். அச் சிறையிலிருந்து யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றார். இவரை எதிர்த்துச் சோழரும் சேரரும் பெரும்படையோடு “கூடற்பறந்தலை“ என்ற இடத்தில் இவருடன் மோதினர். இவர் அவ் இருவரின் படையோடும் கடுமையாகமோதினார். அவர்கள் தமது வெற்றிமுரசினைப் போர்களத்தில் விட்டுவிட்டுப் புறமுதுகிட்டனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் தலையாலங்கானம் என்ற இடத்தில் இவரை எதிர்த்து எழுவர் (சேரர், சோழர், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன்) ஒன்றாகப் படைதிரண்டனர். அவர்கள் அனைவரையும் நெடுஞ்செழியன் ஒருபகற்பொழுதிலேயே வீழ்த்தி வெற்றிபெற்றார். இவர் பாண்டிய நாட்டினை நல்லூர் வரை விரிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்ற பெயரில் அழைத்துக்கொண்டு அழும்பிலை ஆளத்தொடங்கினர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை “வென்வேற்செழியன்“ என்றும் “நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் படைத்தளபதி அதிகன் என்பார் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் கொங்கரை எதிர்கொண்டார். கொங்கர் பாண்டியரின் யானைப் படையினை அழித்தார். செய்தியறிந்த நெடுஞ்செழியன் வாகைப் பறந்தலைக்கு விரைந்தார். கொங்கரை அழித்து, கொங்கருக்குரிய நாடுகள் பலவற்றைக் கைப்பற்றினார். இவரைத் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்“ என்றும் “பாண்டிய நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது படைத்தலைவன் “கடலன் வழுதி“. இவர் “விளங்கில்“ என்ற ஊரில் ஆட்சிசெய்தவர். துறவி இயக்கனுக்கு மலைக்குகையில் படுக்கை (சமணப் பாழி) வெட்டிக்கொடுத்தவருள் இவரும் ஒருவர். இவர் கணிய நந்தி என்பவருக்கும் பாழி அமைத்துக்கொடுத்துள்ளார். இதனை மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியங்களில் “நெடுஞ்செழியன்“ என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மற்றொருவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். “செழியன்“ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் வந்துள்ளது. இச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறித்துள்ளது. இவரையே பசும்பூட்செழியன், பசும்பூண் பாண்டியன், பசும்பூண் வழுதி என்றும் குறித்துள்ளனர்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தர் உக்கிரப் பெருவழுதியாவார். இவரே, சித்திரமாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுள்ளது.

பசும்பூண் பாண்டியன் என்ற வேந்தர் பற்றிய செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரைப் பாண்டியர் மரபில் எவ் இடத்தில் இணைப்பது என்று தெரியவில்லை.

கூடல்நகரில் பாண்டிய அரசினை நிறுவிய நெடியோனின் மகன் பசும்பூண் பாண்டியர் ஆவார். இவர் யானைப் படையுடன் சென்று கொல்லிமலையை ஆண்ட சிற்றரசரான அதிகனை வென்று, அங்குத் தன் யானைப்படையின் வெற்றி அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் அதிகன் இவருக்கு நண்பராகி, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தன் நாட்டினை இழந்து, பாண்டியருக்குப் படைத்தலைவராக மாறினார். அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவராக இருந்தார். இவர் பாண்டியருக்கு நண்பராகியதால் அவர்களும் பாண்டியருக்கு நண்பர்களாகினர். இச் சூழலில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர வேந்தர்களுடன் இணைந்து கீழைக் கொங்கர்கள் மீது படையெடுத்தபோது, கீழைக்கொங்கர்களுக்கு ஆதரவாகப் படைநடத்திய பசும்பூண் பாண்டியர் மேலைக்கொங்கரை வென்றார். இவருக்குப் படைத்தலைவராக இருந்தவர் “அதிகன்“ என்றும் “நெடுமிடல்“ என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவரை வில்கெடு தானைப் பசும்பூட் பாண்டியன், நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியர், இயல்தேர்ச்செழியன், கைவன் செழியன், கொடித்தேர்ச் செழியன், கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர்.

சங்கப் பாண்டியரின் இறுதி வேந்தர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவார். இவரைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழங்காசுகள்

சங்க காலம் / தேடல் – 20

PandyasSangamAgeMCSIObverseபழங்கால வாணிபத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்த “பண்டமாற்று“ முறையின் அடுத்த கட்ட வளர்ச்சிநிலையாகக் குறிப்பிட்ட அளவு பொன்னைக் கொடுத்து எப்பொருளினையும் பெறும்நிலை ஏற்பட்டது. இங்குப் பொன் ஒரு “பொதுப்பொருள்“ என்ற நிலையில் அது கையாளப்பெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் நிலையான அரசுகள் பிற நாட்டினரின் நாணயப் பயன்பாட்டினைப் பார்த்துத் தாங்களும் நாணய சாலைகளை அமைத்து, காசுகளை உருவாக்கி, தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகப் புழக்கத்திற்காக அவற்றைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பினர். இக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகத்தால் சதுரம் அல்லது செவ்வக வடிவில் உருவாக்கப்பெற்றன.

குத்துக்குறி நாணயங்கள்

பண்டைய இந்தியாவில் வேத காலத்திலிருந்தே நாணயங்கள் வழக்கில் இருந்துள்ளன. ஓரின மக்களால் “அடும்பரா“ என்ற நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகையான இந்திய நாணயங்களை அலெக்சாந்தர் பார்த்துள்ளதாகக் குறிப்பு உள்ளது. நந்தர், மௌரியர், சுங்கர், கண்வர் முதலிய பேரரசர்களும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பெற்றன. ஆதலால் அந் நாணயங்களை “முத்திரை நாணயங்கள்“ என்றனர். இவற்றைத் தமிழில் “குத்துக்குறி நாணயங்கள்“ என்று அழைத்தனர். மோரியர் ஆட்சியில் கர்ஷபணம், சுவர்ண, தரணம், மாசகம் போன்ற காசுவகைகள் புழக்கத்தில் இருந்ததாக கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். மௌரியரின் முத்திரை நாணயங்கள் தமிழகத்தில் வீரசிகாமணி, தாராபுரம், வெம்பாவூர், கவுனியண்குட்டை, தொண்டமானத்தம், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. ஆதலால், இந்தியாவின் உள்நாட்டு வாணிபத்தில் குறிப்பாக வட, தென்னிந்திய வாணிப உறவில் குத்துக்குறி நாணயங்கள் பெரும்பங்காற்றியுள்ளமையை அறியமுடிகின்றது. இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. 175 ஆம் ஆண்டு வரை என்று கணித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து குஷானர்களும் நாணயங்களை வெளியிட்டனர்.

சங்க காலப் பாண்டியர் காசுகள்

மூவேந்தருள் பாண்டியரே முதன்முதலில் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டனர். இவை நந்தர்களாலும் மோரியராலும் வெளியிடப்பட்ட “கர்ஷபணம்“போன்று இருந்தன. இக் கர்ஷ பணம் ஒரு கர்ஷ எடையில் (146.4 க்ரைன் என்பது ஒரு கர்ஷ எடை) இருந்தன. பாண்டியரின் காசுகளில் ஒருபுறம் மீன் சின்னமும் மறுபுறம் சூரியன் மற்றும் மங்கலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவை பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வெளியிடப்பெற்றிருக்கலாம்.

மதுரை கோவலன்பொட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சங்க காலப் பாண்டியரின் சதுர வடிவச் செப்புக் காசு ஒன்றும் வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் மனிதனின் எலும்புக்கூடும் கிடைத்துள்ளன.59 மதுரை வைகையாற்றுப் பகுதியில் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. இக்காலப் பகுதியைச் சார்ந்த மோரியரின் முத்திரை இடப்பெற்ற வெள்ளிக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளைப் பின்பற்றிப் பாண்டியர்கள் தங்களின் காசுகளில் மீன் சின்னத்தைப் பொறித்து வெளியிட்டனர். பாண்டியரின் சதுர வடிவிலமைந்த காசுகளில் ஒருபுறத்தில் மங்கலச் சின்னங்களுடன் நிற்கும் யானையும் மறுபுறம் கோட்டுருவமாக உள்ள மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன.

மதுரையில் கிடைக்கப்பெற்றுள்ள சங்க காலக் காசுகளுள் ஒன்றில் “பெருவழுதி“ என்ற பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது. இதன் ஒருபுறத்தில் கடல் ஆமைகள் உள்ள நீர்த்தொட்டியின் முன் நிற்கும் குதிரையின் உருவம் உள்ளது. குதிரையின் கீழ்ப் புறத்தில் எழுத்துகளைப் பொறிக்கவில்லை. “டவுரின்“ சின்னத்தைத்தான் பொறித்துள்ளனர். இதன் மேற்புறத்தில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்று எழுதப்பெற்றுள்ளது. இந்தச் செப்புக் காசு 1.7 செ.மீ. நீளமும் 1.7. செ.மீ. அகலமும் 4.100கிராம் எடையும் உடையது.60இக் காசின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். இக்கருத்துகளை இரா. கிருஷ்ணமூர்த்தி உறுதிபடுத்தியுள்ளார்.

சங்க காலப் பாண்டியர் வெளியிட்டுள்ள செப்பு நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. அந் நாணயங்களுள் சிலவற்றில் குதிரை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் யானை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் கோயில், ஆமை சின்னங்களும் சிலவற்றில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்ற சொல்லும் சிலவற்றில் பெருவழுதியின் தலை உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இவை அனைத்திலும் ஒரு புறத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பெற்றுள்ளமையால் இவை பாண்டியரின் காசுகள்தான் என்று உறுதிப்படுத்த முடிகின்றது.

அழகன் குளத்தில் நடத்தப்பெற்ற அகழாய்வில் பாண்டியரின் நீள்சதுரச் செப்புக்காசு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் ஒரு புறத்தில் மீன் உருவமும் மறுபுறத்தில் திமிலோடு கூடிய காளையின் நின்றநிலை உருவமும் காளையின் முகத்திற்குக் கீழ் தொட்டியும் காணப்படுகின்றது.

பெருவழுதி என்று தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்ற காசுகளில் சில அறுபக்க வடிவிலும் உள்ளன. அவற்றின் முன்புறம் குதிரை, தொட்டில் ஆமை, “பொருவழுதி“ என்ற சொல் ஆகியனவும் பின்புறம் இரண்டு மீன் உருவங்களும் (இணைக்கயல்) (கயல்-மீன்) பொறிக்கப்பெற்றுள்ளன.

சதுர வடிவில் கிடைக்கப்பெற்றுள்ள காசுகளின் ஒருபுறத்தில் குதிரை, வியூபத் தம்பம், வேலியிட்ட மரம், நந்திபாதம், யாககுண்டம் முதலான உருவங்களும் மறுபுறத்தில் மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக் காசுகளில் “பெருவழுதி“ என்ற சொல் இல்லை. இக்காசுகளில் யாகங்கள் பற்றிய குறிப்புகள் உருவங்களாக வெளிப்படுவதால், இவை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். இப் பாண்டியர் அசுவமேதயாகம் செய்துள்ளார் என்பதற்கு இக்காசுகள் சான்றாக உள்ளன.

கிரேக்க, ரோமானியரின் காசுகளில் அரசரின் தலைவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். அக் காசுகளைப் பின்பற்றிப் பாண்டியரும் தங்களின் தலைவடிவத்தினைக் காசுகளில் பொறித்திருக்கலாம். இத்தகைய காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

கரூரில் கிடைக்கப்பெற்ற காசு ஒன்றில் ஒருபுறம் யானையும் அதன்மேல் எட்டு மங்கலச் சின்னங்களும் யானையின் முன்புறம் சூலமும் வில்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. இதன் மறுபுறத்தில் வேலியிட்ட மரமும் மீன் குறியீடும் உள்ளன.

மதுரையில் 1917ஆம் ஆண்டு ஹார்விமில் கட்டுவதற்காக வானம்தோண்டியபோது (நிலத்தைத் தோண்டுதல்), ரோமானியரின் பழங்காலத் தங்கக்காசுகள் 11 கிடைக்கப்பெற்றன. இவற்றுள் கிளாடியஸ், நீரோ, டோமிட்டன் ஆகியோரின் தங்கக்காசுகளும் அடக்கம். பழங்காலத்தில் மதுரையோடு ரோமானியர்கள் வணிகவுறவு கொண்டிருந்தனர் என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன.

சங்க காலச் சேரர் காசுகள்

சேரர்கள் தங்களின் வெள்ளிக் காசுகளில் ஐந்து முத்திரைகளைப் பதித்தனர். கரூர் அமராவதி ஆற்றுப்படுகைகளில் கண்டறியப்பெற்ற காசுகளின் முன்புறத்தில் முகடு, சூரியன், சந்திரன், ஸ்தூபம், தொட்டிக்குள் மீன் ஆகியனவும் பின்புறத்தில் சேரரின் அரச முத்திரையான வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றன. இவை “அச்சுக்குத்தப்பெற்ற காசுகள்“ என்று அழைக்கப்பெற்றன.61 சேரரின் செப்புக்காசுகள் இரண்டு கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒன்றின் ஒருபுறம் காளையின் நின்றநிலை உருவமும் கலப்பையும் மறுபுறம் வில், அம்பு, அங்குசம் ஆகியனவும் பொறிக்கப்பெற்றுள்ளன. மற்றொன்றின் ஒருபுறம் காளையின் நின்ற நிலை உருவமும் மறுபுறத்தில் வில், அம்பு, அம்பின் இருபுறத்தலும் ஸ்வஸ்திக் சின்னம், அங்குசம் ஆகியன பொறிக்கப்பெற்றுள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்ற காசுகளுள் சிலவற்றில் சேரமான் மாக்காதையின் பெயர் தமிழி எழுத்துருவிலும் அவரின் தலை உருவங்கள் ஐந்து வகையில் (ஒரு காசில் ஓர் உருவ வகை என) பொறிக்கப்பெற்றுள்ளன. ஆதலால், வரலாற்றில் மாக்கோதை என்ற பெயரொட்டுடைய சேரவேந்தர்கள் ஐவர் இருந்தார்களா? இவர்களுள் ஒருவர் புறநானூற்றின் ஐந்தாம் பாடலில் இடம்பெற்றுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையா? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. இக் காசுகளின் காலம் பொ.யு. முதல் நூற்றாண்டாகும்.

சேரர் மரபில் “பொறையர்“ குலத்து வேந்தரான் அந்துவன் சேரல் இரும்பொறையின் காசும் கண்டெடுக்கப்பெற்றுள்ளது. இதில் எழுத்துகளும் உள்ளன. சேர வேந்தர் கொல்லி மலையினை வென்றதன் நினைவாக ஒரு காசினை வெளியிட்டுள்ளார். அக்காசின் ஒருபுறத்தில் தோரணவாயிலின் உள்ளே ஒரு வேந்தர் நின்றநிலையில் உருவமும் அக்காசின் விளிம்புகளில் தமிழி எழுத்துருவில் “கொல் ஈப்புறை“ என்ற சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. அதனை ஒட்டி ஆற்றுநீரில் இரண்டு மீன்கள் நீந்திக்கொண்டிருப்பது போலவும் பொறிப்புகள் உள்ளன. அக்காசின் மறுபுறம் வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றுள்ளன. இது சேர வேந்தர் கொல்லிப் பொறையன் வெளியிட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மற்றொரு காசில் ஒருபுறம் தமிழி எழுத்தில் “கொல்லிப்பொறையன்“ என்று எழுதப்பெற்றும் மறுபுறம் தோரணவாயிலின் நடுவில் நிற்கும் வேந்தரின் உருவமும் அவரது வலதுகரத்தில் ஏந்திய நிலையில் போர்க்கருவியும் வேந்தரின் இடதுபுறத்தில் நெடிய வேலியிட்ட மரம் ஒன்றும் வலப்புறம் ஒன்றெயொன்று தொடர்ந்து வேந்தரை நோக்கி நீந்திவரும் மூன்று மீன்களும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக்காசுகள் வட்ட வடிவத்திலும் தடித்தும் இருக்கின்றன. கரூரில் சீனம், கிரேக்கம், ரோம், சிரியா, பொனிசியா ஆகிய நாடுகளின் நாணயங்களும் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவை அந்நாடுகளுடனான கரூரின் வாணிப நடவடிக்கைகளுக்குச் சான்றுகளாக உள்ளன.

சங்க காலச் சோழர் காசுகள்

சங்கப் பாண்டியர், சங்கச் சேரர்களைப் போலச் சங்கச் சோழர்கள் மிகுதியான வகைகளிலும் எண்ணிக்கைகளிலும் காசுகளை வெளியிடவில்லை என்றே கருத இடமுள்ளது. சங்கச் சோழர்கள் செப்பு நாணயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.62பூம்புகார் அகழாய்வில் சங்கச் சோழரின் சதுர வடிவ செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒருபுறம் யானையும் மறுபுறம் புலியின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சிலவற்றில் முன்புறம் குடை, யானை, குதிரை ஆகிய சின்னங்களும் மறுபுறம் புலியின் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சோழரின் முட்டை வடிவ செப்புக்காசும் கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள சோழர் காசுகளில் உள்ள சின்னங்களைக் காணும்போது, அவற்றில் ஒரு புறம் புலியும் மறுபுறம் தேர், குதிரைகள் பூட்டப்பெற்றத் தேர், யானை, வேலியிட்ட மரம், குடை, வேல், விலங்கு, மரம் போன்றனவற்றுள் ஒன்றா சிலவோ பொறிக்கப்பெற்றுள்ளன என்பதனை அறியமுடிகின்றது. சோழர் காசுகளில் எழுத்துப்பொறிப்புகள் உடைய காசுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.63 இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள சங்கச் சோழர்களின் காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. முதல் நூற்றாண்டு வரையில் என்று கணித்துள்ளனர்.

தமிழகத்தில் அயல்நாட்டு நாணயங்கள்

பழந்தமிழகத்தின் அயல் வாணிபக் களமாகத் திகழ்ந்த பூம்புகார், முசிறி, கொற்கை, கொல்லத்துறை, எயிற்பட்டினம், தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், பந்தர், கொடுமணம், தரங்கம்பாடி, நீர்க்குன்றம், புதுச்சேரி, நீர்ப்பெயற்று ஆகிய இடங்களில் அருகாமையில் அயல் நாணயங்கள் புதையுண்டிருக்க வாய்ப்புகள் மிகுதி. 64

பொ.யு.மு. 350ஆம் ஆண்டுக்கும் பொ.யு.மு. 100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த கிரேக்க நாணயங்கள் 50-க்கும் மேற்பட்டவை கரூர் ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவ் ஆற்றுப்பகுதியில் திரேஸ், கிரீஸ், கீரீட், ரோட்ஸ், சிரியா, பொனீசிய (லெபனான்), பிலிஸ்தியா, அஸ்கலோன், எதியோப்பியா, சூடான், ஜூடேயா, ஆகிய நாட்டு நாணயங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றுள் சில தங்க நாணயங்கள். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

ரோம் நாட்டு நாணயங்கள் கரூர், கோவை (கத்தாங்கன்னி, குருத்துப்பாளையம், பெண்ணார், வெள்ளலூர், பொள்ளாச்சி), ஈரோடு போன்ற ஊர்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள மதுரை கலயம் புத்தூர், நெல்லை கரிவலம் வந்தநல்லூர், சோழ நாட்டில் உள்ள பூம்புகார், தஞ்சாவூர், தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம், மாம்பலம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. பொ.யு. 54ஆம் ஆண்டு முதல் 68ஆம் ஆண்டு வரையில் ரோமை ஆண்ட நீரோ மன்னரின் காலத்தில் ரோம் நாணயங்களில் போலிகள் (கள்ளக் காசுகள்) ஊடுறுவின. இதனால் தமிழக வணிகர்கள் ரோம நாணயங்களை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.

பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே சீனா, தமிழகத்துடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தபோதும் தமிழகப் பகுதியில் இதுவரை பொ.யு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய சீனாக்காசுகள் (சீனக்கனகம்) கிடைக்கவில்லை.65 பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும்,பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும்மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் சீன நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

ஒரு பழங்காசினைக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ளமுடியும். அக்காசு கண்டெடுக்கப்பெற்ற இடத்தினையும் அக்காசில் உள்ள குறிகளையும் கொண்டு அக்காசினை வெளியிட்ட பேரரசின் எல்லைகளும் பரப்பும், அப்பேரரசின் பொருளாதாரம், வணிபத்தொர்புகள், அப்பேரரசரின் மரபுவரிசைநிலை, எழுத்துவடிவம், சமயப்பற்று, சடங்குகள் இன்ன பிறவற்றையும் கணிக்க முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முத்தமிழ்: சொல்லேர் உழவர்

சங்க காலம் / தேடல் – 21

3303மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூக்கூறுகளும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. தமிழ்மொழி சங்க காலத்தில் மூன்று வகைகளில் நிலைபெற்றிருந்தது. ஒன்று இயல், மற்றொன்று இசை, பிறிதொன்று நாடகம். தமிழ் மொழி, “இயல்“ வழியாக மானுடத்தின் அறிவுக்கூறையும் “இசை“ வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் இணைந்த “நாடக“த்தின் வழியாக முயற்சிக்கூறையும் வளர்த்தது. இயலையும் நாடகத்தினையும் இணைக்கும் கயிறுதான் இசை. முத்தமிழின் மையமும் அதுதான்.

கூத்தும் நாடகமும் ஒரு பொருள் குறித்த சொற்கள்தான். அக்காலத்தில் “கூத்து“ என்று அறிய்பட்டது பின்னாளில் நாடகமாக நிலைபெற்றது. முத்தமிழைப் “பரிபாடல்“ என்ற நூல் “தமிழ்மும்மை“ என்றது. “ஒரு விஷயத்தைச் சொல்லால் விளக்குவது இயல், பாட்டால் விளக்குவது இசை, நடிப்பால் விளக்குவது நாடகம்“ என்று குறிப்பிட்டுள்ளார் ஆறு. அழகப்பன். “நடனமும் நாடகமும் கூத்துமெல்லாம் முதன் முதல் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களே. தொன்று தொட்டு இயலும் இசையும் நாடகமும் தமிழுக்கே உரியவாதலில் தெரிந்து சான்றோர் எல்லாம் தமிழை “முத்தமிழ்“ என வழங்கி வருகின்றனர்“ என்றார் மறைமலை அடிகள். பிற்கால ஔவையின் செய்யுளில் உள்ள “சங்கத் தமிழ் மூன்றும் தா“ என்ற அடியிலிருந்து, “இயல், இசை, நாடகம் (கூத்து) ஆகிய மூன்றும் இணைந்ததே சங்கத் தமிழ்“ என்பது தெளிவாகின்றது.

புலவர் மரபு

இயற்றமிழை வளர்த்து, வாழச்செய்த அக்காலச் செந்நாப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. “இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற்பிறந்த கவிதைகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர். புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்களைத் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்டனர். இத்தகு புலவர் பெருமக்கள் கவிகளைப் பாண்டியன் கேட்டு மகிழ்வான்“ என்ற செய்தியைக் கலித்தொகையின் நெய்தற்கலி 35ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. விவசாயி ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுது நல்ல பயிரினை விளைவிப்பதைப் போலப் புலவர்கள் சொற்கள் என்ற ஏரினைக் கொண்டு தமிழ்மொழியினை உழுது நல்ல செய்யுட்களைப் புனைந்துள்ளனர். ஆதலால், அப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று “தமிழ்விடுதூது“ என்ற சிற்றிலக்கியம் குறிப்பிட்டுள்ளது.

இப் புலவர்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களைக் கொண்டு இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். சங்க காலப் புலவர்களாக 473 பேரைக் குறிப்பிடுவர். 102 பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. 473பேரில் 41பேர் பெண் புலவர்கள். மொத்தச் சங்க இலக்கியப் பாடல்கள் 2381. இவற்றுள் 235 பாடல்கள் கபிலர் இயற்றியவை. சங்க இலக்கியத்தில் மூன்று அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு, 782 அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு. பாட்டும் தொகையும்தான் சங்க இலக்கியம் என்பர். பாட்டு என்பது பத்துப்பாட்டினைக் குறிக்கும். தொகை என்பது எட்டுத்தொகையினைக் குறிக்கும்.

எட்டுத்தொகை

தனிப்பாடல்களின் தொகுப்புதான் எட்டுத்தொகை. அதாவது எட்டுத்தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பும் பாடல்களின் அடிவரையறை மற்றும் பொருள்மரபு (பாடல் அடிகளின் எண்ணிக்கை, அகப்பொருள், புறப்பொருள்) ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ளது. இத்தொகுப்பு நூல்களை “எண்பெருந்தொகை“ என்பர். எட்டுத்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களில் மிகக் குறைந்த அடி அளவு மூன்றாகவும் மிகுதியான அடி அளவு 140 ஆகவும் உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

நற்றிணை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் நற்றிணை. விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 110 மற்றும் 379 ஆகிய பாடல்கள் உள்ளன. “நல்ல திணை“ என்ற பொருளில் இத்தொகுப்பு நூலின் தலைப்பு வைக்கப்பெற்றுள்ளது. இதிலுள்ள பாடல்களை 187 புலவர்கள் இயற்றியுள்ளனர். 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. நற்றிணைப் பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்கு “நற்றிணை நானூறு“ என்ற பெயரும் உண்டு.

காதலன் (தலைவன்) வரவினைப் பல்லி ஒலி எழுப்பிக் கூறுவதாகக் கருதி, நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலி (தலைவி), காதலர் வரும் வரை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கத்தினை இத்தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

சோழ மன்னர் அழிசிக்குரிய பெருங்காட்டில் விளைந்த நெல்லிக்கனிகளின் புளிப்புச் சுவையை நினைத்து வாவல் (வெளவால்) தன் கனவிலும் ஏங்கும் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.
இத்தொகைநூலில் அதியமான் அஞ்சி, அழிசி, ஆய் அண்டிரன், உதியன், ஓரி, காரி, குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர்.

குறுந்தொகை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் குறுந்தொகை. இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் இயற்றியுள்ளனர். 10 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. குறுந்தொகைப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 307 மற்றும் 391 ஆகிய பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் “குறுந்தொகை நானூறு“ என்ற பெயரும் உண்டு. இத்தொகைநூலில் ஆகுதை, அதியன், ஆய், எவ்வி, ஓரி, கட்டி, குட்டுவன், நள்ளி, நன்னன், பாரி, மலையன், வடுகர் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். காஞ்சியூர், உறந்தை, தொண்டி, குறும்பூர், மாந்தை, சிறுநல்லூர், குன்றூர் முதலிய பழந்தமிழக ஊர்களும் சுட்டப்பெற்றுள்ளன.
குழந்தைகள் சிறுதேர் இழுத்தும் பெண்கள் குரவைக்கூத்து ஆடியும் மகிழ்ந்துள்ளனர். நல்வினை, தீவினை, வீடுபேறு, சுவர்க்கம், நரகம், கூற்றுவன் (எமன்) போன்ற தொன்மக் கருத்துகளையும் வீட்டின் கூரையின் மீதமர்ந்து காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கைசார்ந்த கருத்துகளையும் இத்தொகுப்பு நூலினுள் காணமுடிகின்றது.
பண்டமாற்றாக இடையவர் பாலைக்கொடுத்துத் தானியத்தைப் பெற்றதனையும் உமணர்கள் உப்பினைக் கொடுத்து நெல்லினைப் பெற்றதனையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.

நடனப் பெண்ணை “ஆடுகள மகள்“ என்றும் நடனமாடும் ஆடவரை “ஆடுகள மகன்“ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். அக்காலத்தில் பறை, பண்லம், பதலை, முழவு, தட்டப்பறை, குளிர் முரசு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர். இவற்றை இத்தொகுப்பு நூலின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தலைவன் மீது தலைவிகொண்ட காதல் நிலத்தைவிடப் பெரியதாகவும் வானத்தைவிட உயர்ந்ததாகவும் கடலைவிட ஆழமானதாகவும் உள்ளது என்று நீள, அகல, உயர (ஆழ) கணித அளவீடுகளால் புலவர் குறிப்பிட்டுள்ளார். இது, அம் மூன்றின் (நிலம், வானம், கடல்) தன்மை சார்ந்தும் உயர்வானதாகக் குறிக்கப்பெற்றுள்ளது எனலாம்.

தமிழர்கள் அக்காலத்திலேயே “சேமச்செப்பு“ என்ற மட்பாண்டத்தை இக்கால ஃபிளாஸ்க் (தெர்மாசு குடுவை) போலப் பயன்படுத்தியுள்ளனர். “முன்பனிக் காலத்திற்கு உகந்த சூட்டையுடைய நீரைச் சேமச்செப்பிலிருந்து பருகலாம்“ என்ற செய்தி குறுந்தொகையின் 277ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது. வெப்பத் தண்ணீரை நெடுநேரம்வரை வெப்பமாகவே வைத்திருக்கும் கலத்தினைத் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இப்பாடலின் வழியாக உறுதிப்படுகின்றது.

ஐங்குறுநூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் மூன்று அடிகள் முதல் ஐந்து அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 500 பாடல்களின் தொகுப்பு நூல் ஐங்குறுநூறு. இதிலுள்ள பாடல்களை ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து புலவர்கள் இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் கூடலூர்கிழார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார். திணைக்கு நூறு பாடல்கள் வீதம் அன்பின் ஐந்திணைகளுக்கு ஐநூறு பாடல்கள் இயற்றப்பெற்றுள்ளன. ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பிரிவுகளாகவும் பிரிவுக்குப் பத்துப் பாடல்கள் வீதமும் தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் “பத்து“ என்ற சொல்லினைப் பின்னொட்டாகக்கொண்ட தலைப்பினைப் பெற்றுள்ளன. நெய்தல் திணையில் அம்மூவனார் இயற்றிய “தொண்டிப்பத்து“ என்ற தொகுப்பு அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இத்தொகுப்பு நூலில் சோழன் கடுமான் கிள்ளி, குட்டுவன், பாண்டியன், சேரன் ஆதன்அவினி, விராஅன், மத்தி, கொற்கைக்கோமான் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். ஆமூர், தேனூர், இருப்பை, கொற்கை, மாந்தை, கோவலூர், கழார் (காவிரி), தொண்டி ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்தொகுப்பு நூலில் “அம்மை“, “அழகு“ ஆகிய வனப்புகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

இந்திரவிழா, தைந்நீராடல் போன்ற பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளைபெற்ற தம்பதியரை இத் தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

பதிற்றுப்பத்து

பாடாண்திணையில் (புறத்திணை) ஆசிரியப்பாவில் எட்டு அடிகள் முதல் 57 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 100 பாடல்களின் தொகுப்பு நூல் பதிற்றுப்பத்து. இது, பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பாகப் பத்துத் தொகுப்புகள் அடங்கிய 100 பாடல்களின் தொகுப்பு நூல். முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை (20 பாடல்கள்). நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்துப்பாடல்களின் இறுதியிலும் பதிகம் காணப்படுகின்றது. அப்பதிகத்தில் பாடினோர் பெயர், செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசில், அரசர் ஆண்ட கால அளவு, வேந்தனின் பெற்றோர், வேந்தனின் சிறப்புகள் ஆகியன குறிப்பிடப்பெற்றுள்ளன. பாடலின் சிறப்பான தொடரே அப்பாடலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 18 துறைகள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்பாட்டில் இல்லாத சொற்கள் பல இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளமையால் இத்தொகுப்புநூலினை “இரும்புக்கடலை“ என்பர்.

புலவர் குமட்டூர்க்கண்ணனார் 58ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டில் 500 ஊர்களை பிரமதேயமாகவும் தென்னாட்டு வருவாயுள் பாதியினைச் சில ஆண்டுகளுக்கும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.
புலவர் பாலைக்கௌதமனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பற்றிப் பாடிய பாடல் மூன்றாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் பெற்ற பரிசில் குறிப்பிடத்தக்கது. அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெரு வேள்விகள் செய்து அவரும் அவரின் மனைவியும் விண்ணுலகம் அடைய வேந்தர் உதவியுள்ளார்.
புலவர் காப்பியாற்றுக்காப்பியனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றிப் பாடிய பாடல் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 40,00,000 பொன்னும் ஆளுவதில் பாதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பரணர் 55ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிப் பாடிய பாடல் ஐந்தாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டு வருவாயையும் வேந்தரின் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் காக்கைப்பாடினியார் 88ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் ஆறாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் ஒன்பது துலாம் (காய்ப்) பொன்னும் 1,00,000 பொற்காசுகளும் “அவைக்களப் புலவர்“ என்ற தகுதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் கபிலர் 22ஆண்டுகள் ஆட்சிபுரிந்த செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பாடியபாடல் ஏழாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 1,00,000 (காணம்) பொற்காசுகளும் “நன்றா“ என்ற குன்றின் மீதேறி அவரின் கண்களுக்கு எட்டிய எல்லைவரையிலுள்ள நிலங்களையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.
புலவர் அரிசில் கிழார் 17ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் எட்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 9,00,000 (காணம்) பொன்னும் அரசுக் கட்டிலும் பெற்றார்.
புலவர் பெருங்குன்றூர்க் கிழார் 16ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்பதாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 32,000 பொற்காசுகளும் பல நூறாயிரம் அருங்கலன்களும் ஊரும் மனையும் ஏரும் பிறவும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் வேள்விகள் பல செய்ய புரோசுகளுக்கு (புரோகிதர்கள்) மிகுதியான பொருட்களை வழங்கியுள்ளார். வேள்வியில் ஆகுதியாக்குவதற்குச் சிறந்த நெல்லான ஓத்திரநெல் ஓகந்தூரில் மிகுதியாக விளைந்துள்ளது. ஆதலால், அந்த ஊரினை தேவதானமாக புரோசுகளுக்கு இவ் வேந்தர் வழங்கியுள்ளார். தன்னைப் “புரோசு மயக்கி“ என்று பெருமையாக அழைத்துக்கொண்டார்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக் கூத்தாடுவோரோடு தானும் சேர்ந்து அக் கூத்தினை ஆடி மகிழ்ந்துள்ளார்.

யாழ் போன்று இனிய இசையைத் தரவல்ல “இன்னரம்“ என்ற கருவியைப் பற்றிய குறிப்பு இத்தொகுப்பு நூலினுள் உள்ளது. ஆம்பற்குழல், கொம்பு, வலம்புரிச்சங்கு போன்ற இசைக்கருவிகள் சிறப்பித்துக் கூறுப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலில் போரில் விழுப்புண்ணடைந்து வருந்தும் வீரர்களை விறலியர்கள் யாழிசைத்து ஆறுதல் படுத்திய செய்தியைக் காணமுடிகின்றது.

சகுனம் பார்த்தலை “நிமித்தம்“ என்பர். இதனை நல்நிமித்தம், தீநிமித்தம் என்று இருவகைப்படுத்துவர். “நிமித்தம்“ என்பதனை இத்தொகுப்பு நூல் “உன்னம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு வகை மரம் என்றும் அதன் நிலையைக் குறித்து நிமித்தம் கணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பேய்கள் தாம் விரும்பிய உயிர்களின் மீது மேவும் என்றும் உரிய பலியினை அவற்றுக்குத் தந்தால் அவை அவ் உயிரை விட்டு நீங்கும் என்று நம்பினர்.

பரிபாடல்

அகத்திணையும் புறத்திணையும் கலந்து, பரிபாட்டு என்ற பாவகையில் 32 அடிகள் முதல் 140 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 70 பாடல்களின் தொகுப்பு நூல் பரிபாடல். ஆனால், 22 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 13. மதுரை மாநகரை ஒட்டி ஓடும் வைகையாற்றில் புதுவெள்ளம் வந்தபோது மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்களின் செயல்பாடுகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மதுரை, வையைஆறு, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், காளி ஆகியன சிறப்பிக்கப்பெற்றுள்ளன. பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய மூப்பண்களைக் கொண்டு பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

இந்நூலுள் மருத நிலத்திற்குரிய தெய்வமாக மதுரை மாதெய்வமும் நெய்தலுக்குரிய தெய்வமாக வைகையாகிய நீர்த்தெய்வமும் உள்ளீடாகக் குறிக்கப்பெற்றுள்ளன என்பர்.
சுழியத்தை (பூசியம்) “பாழ்“ என்றும் அரையைப் “பாகு“ என்றும் ஒன்பதைத் “தொண்டு“ என்றும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

சாக்தம் (காடுகாள்), கௌமாரம் (செவ்வேள்), வைணவம் ஆகிய மூன்று சமயங்கள் பற்றி இந்நூல் பகர்ந்துள்ளது.

புலவரின் கற்பனைத் திறத்திற்கு ஒரு பெருஞ்சான்று – “விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலினது ஈரமானது தீரும்பொருட்டு, ஒருத்தி வண்டு மொய்க்கும் போதை கொண்ட கள்ளைத்தன் கையில் ஏந்தி நின்றாள். அவ்வேளையில் அவள் கண்கள் கரிய நெய்தல் மலரைப் போலத் தோன்றின. அவள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும் போதை மிகக் கள்ளைக் குடித்தாள். குடித்ததும் அவளுடைய கருநிறக் கண்கள், பெரிய நறவம் பூவைப் போலச் செந்நிறத்தை அடைந்தன“. இக் கற்பனைசார்ந்த வருணனை பரிபாடலின் 60 முதல் 65 வரையிலான அடிகளில் உள்ளன.

பழந்தமிழகத்தில் இருந்த தைநீராடல் வழக்கம், காலப்போக்கில் மார்கழி நீராடலாக மாற்றம் பெற்றதோடு, பனிநீர் தோய்தலும் பாவையாடலுமாகத் திகழ்ந்த இளம் பெண்களின் விளையாட்டு, காலப்போக்கில் வழிபாடும் பாவைநோன்புமாக வளர்ந்துவிட்டது. பாகவதத்தில் கார்த்தியாயினி விரதம் நோற்று கண்ணனை அடையும் நெறி மார்கழி மாதத்தில் நிகழ்கின்றது. இக்குறிப்பு, பழந்தமிழகத்தின் பாவை நோன்புடன் உறவுடையது. பரிபாடலில், “அம்பா ஆடல்“ என்று கூறப்பெறுவதுதான் கேரளத்தில் திருவாதிரைத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.

கலித்தொகை

அகத்திணை சார்ந்து கலிப்பாவில் 11 அடிகள் முதல் 80 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 149 பாடல்களின் தொகுப்பு நூல் கலித்தொகை. இதிலுள்ள பாடல்களைத் திணைக்கு ஒரு புலவராக பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை), கபிலர் (குறிஞ்சி), மருதன் இளநாகனார் (மருதம்), சோழன் நல்லுருத்திரன் (முல்லை), நல்லந்துவனார் (நெய்தல்) ஆகிய ஐந்து புலவர்களும் ஐந்து திணைகள் சார்ந்த பாடல்களை இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இத்தொகுப்பு நூலினை “நல்லந்துவனார் கலித்தொகை“ என்றும் குறிப்பிடுவர். இந்நூலுள் 641 உவமைகள் உள்ளன.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஓரங்க நாடக அமைப்பினைப் பெற்றுள்ளன. கைக்கிளையும் பெருந்திணையும் இந்நூலுள் காணப்படுகின்றன. குறிஞ்சிக்கலியில் ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக்கலியும் பெருமளிவில் இடம்பெற்றுள்ளன. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல், குரவையாடுதல் போன்றன பற்றிய செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. நெய்தற்கலியில் தைநீராடுதல், மடலேறுதல் போன்றன பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “பெண்கள் பிறந்தவீட்டிற்கு உரியவர்கள் அல்லர்“ என்ற சிந்தனையை இத்தொகுப்பு நூல் வலியுறுத்தியுள்ளது.

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் அன்னாய் வாழிப் பத்து என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலில் புலவர் கபிலர் ஓர் உளவியல் நிபுணர்போலச் செயல்பட்டுள்ளார். தலைவனால் தலைவிக்கு ஏற்பட்ட காதல்நோயினைத் தலைவியின் தாய் ஏதோ அணங்கு பற்றியதாகக் கருதி, அதனை நீக்க வெறியாடல் நிகழ்த்த ஏற்பாடுசெய்கின்றாள். அன்னையின் அச்செயலினைத் தடுத்த தலைவியின் தோழி, “அன்னையே! நான் சொல்வதைக் கேட்பாயாக. நின் மகள் அடைந்துள்ள இந்நோய் தீர்வதற்குரிய மற்றொரு முறையும் உள்ளது. அது யாதெனில்? நின் மகளை நமது வீட்டுப் புழக்கடையில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவதால் புலால் நாற்றம் தாங்கிய துறு கல்லின் மீது ஏற்றி நிறுத்தி, அவர் நாட்டில் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணி போல் விளங்கும் இழையை அணிந்த இவள் நிற்கும் நிலைபெறின் இவள் உற்ற நோய் எளிதி்ல் தீரும். வெறியாடற் செயலினும் இச்செயல் சிறந்தது“ என்று கூறுகின்றாள். தலைவியின் மன அழுத்தத்தினைப் போக்கத் தலைவன் வாழும் இடத்தின் காட்சி ஒரு மருந்தாகப் பயன்படுவதனைக் கபிலர் உளவியல் நோக்குடன் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் எட்டு அறக்கருத்துகளை எடுத்துரைத்துள்ளது. அவை செல்வம் நிலையாமை, வறியவரது இளமை சிறக்காது, ஈகையற்றவரின் செல்வம் அவரை அண்டியோர்க்குப் பயன்படாது, பிறருக்குத் தீங்கு செய்வோர் தாமே ஒழிவர், இளமையும் காலமும் தாமே கழியும் தன்மையுடையன, அறவழியில் பொருளீட்டினால் அச்செல்வம் இவ் உலக வாழ்விற்கும் மறு உலக வாழ்விற்கும் பயன்படும், நிலையாமையை உணர்ந்தவர் ஈகைபுரிவர், மனித உடல் பெறுவதற்கு அரியது என்பனவாகும்.

கலித்தொகைப் பாடல்கள் யாப்பால் இயற்றமிழ், வழங்கொலியால் இசைத்தமிழ், பா அமைப்பால் நாடகத்தமிழ் என்று முத்தமிழையும் கலித்தொகையில் கண்ணுறமுடிகின்றது.

அகநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் அகநானூறு. இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் இயற்றியுள்ளனர். மூன்று பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. அகநானூற்றுப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் உருத்திரன் சன்மனார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார். இத்தொகுப்பு நூலுக்கு நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு, அகப்பாட்டு என்ற பெயர்களும் உண்டு. இத்தொகுப்பு நூலில் உள்ள பாடல்கள் களிற்றியானைநிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) என்ற மூப்பிரிவினை உடையன. பாலைத்திணைப் பாடல்கள் 1,3,5,7,9 என ஒற்றைப்படை எண்வரிசையிலும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் 2,8,12,18 என்ற எண்வரிசையிலும் முல்லைத்திணைப் பாடல்கள் 4,14,24,34 என்ற எண்வரிசையிலும் மருதத்திணைப் பாடல்கள் 6,16,26,36 என்ற எண்வரிசையிலும் நெய்தற்திணைப் பாடல்கள் 10,20,30,40 என்ற எண்வரிசையிலும் வைக்கப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலுள் அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, உதியஞ் சேரலாதன், அவ்வி, எழினி, கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் “முதலிரவு“ நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.

குடவேலைத் தேர்தல் முறை, ஆடுமகள் (நடனப்பெண்) பாவைபோல வெறியாடும் நிலை போன்றன இத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

பொ.யு.மு. 326 ஆம் ஆண்டுல் நடைபெற்ற அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சிய வடநாட்டைச் சார்ந்த நந்தர்கள் தங்களின் செல்வங்களைக் கங்கை நதிக்கு அடியில் மறைத்து வைத்த செய்தியையும் பொ.யு.மு. 310 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திரகுப்த மோரியரின் மாமன் பிந்துசாரனின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற செய்தியையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புறநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் 40 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 399 பாடல்களின் தொகுப்பு நூல் புறநானூறு. இதிலுள்ள பாடல்களை 157 புலவர்கள் இயற்றியுள்ளனர். 14 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடல் எழுந்த சூழல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
பாண்டிய வேந்தர்கள் 12பேர், சேர வேந்தர்கள் 18பேர், சோழ வேந்தர்கள் 13பேர் வேளிர்கள் 18பேர் பற்றியும் அவர்களின் வீர, தீர, ஈர உணர்வுகளையும் இத்தொகுப்பு நூல் விரித்துக்கூறியுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், ஓய்மான் நல்லியக்கோடன், சோழன் கரிகாற் பெருளத்தான், குமணன், கோப்பெருஞ்சோழன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த புலவர்களுக்கும் இருந்த உறவுநிலையினை விரிவாகக் கூறியுள்ளது.

அருவிக்குத் துகில் (துணி), அருளுக்கு நீர், கந்தைத்துணிக்குப் பாசியின் வேர், கள்ளின் மயக்கத்திற்கு தேளின் கடுப்பு, கலிங்க ஆடைக்குப் பாம்பின் தோல், குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம், நரைத்த கூந்தலுக்குக் கொக்கின் இறகு, பொறுமைக்கு நிலம் ஆகியன உவமையாக இத்தொகுப்பு நூலில் கூறப்பெற்றுள்ளன. 10 வகையான ஆடைகள், 28 வகையான அணிகலன்கள், 30 வகையான படைக்கருவிகள், 67 வகையான உணவுகள் முதலியன சுட்டப்பெற்றுள்ளன.

தனிமனிதனின் உரிமைகளும் கடமைகளும் சமூக இணைப்பும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் ஆகிய இயல்புகள் எல்லாம் அறக்கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டன. இவ் அறக்கோட்பாட்டினை உருவாக்குவதும் வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவு முறைகளே. பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சமூகத்தின் கருத்துகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறத்தன் முதன்மைநோக்கம். அறத்தின் இயல்பு, சிறப்பு, ஆற்றல் பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ 35 பாடல்கள் எடுத்துரைத்துள்ளன. நிலையாமை பற்றி ஏறத்தாழ 40 பாடல்கள் வலியுறுத்தியுள்ளன.66 “மறவாழ்வில் அறநெறி முதன்மையானது“ என்பதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. “சங்க இலக்கியங்களுக்கு முன்னர் தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ந்த அறநூல்கள் பல இருந்து, அவை பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆலத்தூர் கிழார் காலத்த்திலும் திருவள்ளுவரின் காலத்திலும் அவை இருந்துள்ளன. அக்கால அரசர்கள் அறங்கூறவையங்களில் அவற்றைப் பேணிக்காத்தனர். அவையே அறங்கூறுவோர்க்கும் பிறர்க்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன“67 என்ற சிந்தனையைச் சொ. இலக்குமணசாமி முன்வைத்துள்ளார். “அறம்“ என்ற சொல் புறநானூற்றில் ஆட்சி, நீதி, கொடை, மக்கள் நலம் ஆகியவற்றைக் குறிப்புணர்த்தும் சொல்லாகவே புறநானூற்றில் கையாளப்பெற்றுள்ளது.

கணவரை இழந்த கைம்மைப் பெண்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு பருத்தி நூல்நூற்றல் தொழிலினைச் செய்கின்றனர் என்ற செய்தியினை இத்தொகுப்பு நூல் சுட்டியுள்ளது. அத்தகைய பெண்களைப் “பருத்திப்பெண்டிர்“ என்று சுட்டியுள்ளது.
இத்தொகுப்பு நூல் வெண்ணிப்பறந்தலை, வாகைப் பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், காணப்பேரெயில் போன்ற போர்க்களங்களின் விரிவான வரலாற்றை எடுத்துக்கூறியுள்ளது.

பத்துப்பாட்டு

பத்து நெடிய தனிப்பாடல்களின் தொகுப்புதான் பத்துப்பாட்டு. ஒரு பாடல் ஒரு தனிநூல். இந்தப் பத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டுள்ளன. எல்லாம் பாடாண்திணையில் அமைந்தவை. எட்டுப் புலவர்கள் ஆறு தலைவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பத்துப் பாடல்களின் தொகுப்பினைத்தான் “பத்துப்பாட்டு“ என்கிறோம். இதில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படையைச் சார்ந்தவை. ஆற்றுப்படை என்றால் “வழிப்படுத்துதல்“ என்று பொருள். ஆற்றுப்படை நூல்கள் ஒருவகையில் பயணக்குறிப்பு இலக்கியங்கள்.

திருமுருகாற்றுப்படை

புலவர் நக்கீரர், செவ்வேளாகிய முருகப்பெருமானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 317 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

இந்நூலுக்குப் “புலவராற்றுப்படை“ என்றும் “முருகு“ என்றும் வேறுபெயர்கள் உண்டு. துன்பப்படுவோரை முருகனிடம் செல்லுமாறு கூறி (ஆற்றுப்படுத்தி – வழிகாட்டி) அவர்கள் தம் துயரிலிருந்து விடுபட நக்கீரர் உதவியுள்ளார். இந்நூலின் நோக்கமும் இதுதான். முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவி நன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என ஆறுபடைவீடுகள் உண்டு. அவற்றைச் சென்றடைந்து முருகப்பெருமான வழிபட நக்கீரர் வழிகாட்டியுள்ளார். ஒரு படைவீட்டிற்கு ஒரு பகுதியென இந்நூல் ஆறு பகுதிகளை உடையது.

இந்நூலுள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறி்ப்புகளும் உண்டு. முருகனைக் காட்டிலும் சோலைகளிலும் ஆற்றிலும் குளக்கரையிலும் கடம்பமரத்திலும் முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் அம்பலத்திலும் மரத்தடியிலும் மரக்கட்டையிலும் உறைந்திருப்பதாகக் கருதி வழிபட்டனர் என்பதனை இப்பாடலின் வழியாக அறியமுடிகின்றது. முருகப்பெருமானை ஆறு முகங்களையும் 12 கரங்களையும் உடைய உருவமாகக் கற்பனைசெய்து வழிபட்டனர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும் ஆடறுத்தும் கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும் ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்களை நடத்தினர். பலிப் பொருட்களைப் பிரப்பங்கூடைகளில் வைத்து முருகனைத் தொழுதனர். இந்நூலுள் மாபுராணம், பூத புராணம், கந்தபுராணம் போன்றவற்றின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பொருநராற்றுப்படை

புலவர் முடத்தாமக் கண்ணியார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 248 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பொருநராற்றுப்படை. இந்நூல் வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

வேடம் புனைந்து பாடுவோரைப் (பாடுநர்) “பொருநர்“ என்பர். வேளாண்மையைப் பற்றிப் பாடும் ஏர்க்களம் பாடுநர், போர்க்களத்தில் நின்று அது பற்றி வர்ணித்துப்பாடும் போர்க்களம் பாடுநர், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னரின் வெற்றியைப் பாடும் பரணி பாடுநர் எனப் பொருநரில் மூன்று வகையினர் உண்டு. இந்நூலில் குறிப்பிடப்படும் பொருநர் போர்க்களம் பாடுநராவர்.

கரிகாற்பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பொருநர் தன்னை எதிர்ப்படும் வறிய பொருநரிடம், “கரிகாற்பெருவளத்தானின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொருநரின் மனைவியர் யாழ்வாசிப்பதிலும் இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர். ஆதலால், அவர்களைப் “பாடினி“ என்றனர். அந்தப் பாடினியின் உருவ அழகினைப் பொருநராற்றுப்படை நுட்பமாக வர்ணித்துள்ளது. ஆற்றுமணல் போன்ற கூந்தல், எட்டாம் பிறைபோன்ற நெற்றி, வில் போன்ற புருவங்கள், மழைபோன்ற கண்கள், இலவம் பூப்போன்ற வாய், முததுப்போன்ற பற்கள், மகரக் குழைகள் ஆடுபவை போன்ற காதுகள், வெட்கத்தால் கவிழ்ந்திருக்கும் கழுத்து, மூங்கில் போன்ற தோள்கள், மெல்லிய மயிர் நிறைந்த முன் கைகள், காந்தள் போன்ற மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போன்ற நகங்கள், பிறருக்கு வருத்தம் விளைவிக்கும் மார்புகள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ், உண்டென்று உணரப் படாத நுண்ணிடை, மேகலை அணியப்பெற்ற அல்குல், யானையின் துதிக்கை போன்ற தொடைகள், மயி்ர் ஒழுங்குபட்ட கணைக்கால், ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்ற சிவந்த பாதங்கள் என அவளது தலை முதல் பாதம் வரையுள்ள 19 உறுப்புகளையும் புலவர் வர்ணித்துள்ளார்.
யாழினிசை, “தீயோரின் குணத்தை மாற்றி, அவர்களை நல்லோராக மாற்றவல்லது“ என்று இந்நூல் தெரிவித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் மக்களிடையே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை இருவேறு வர்ணனைகளின் வழியாக இந்நூல் தெரிவித்துள்ளது. செல்வ வளமுடையவர்கள் கண்ணால் காணமுடியாத அளவு மெல்லிய நூலால் நெய்யப்பெற்ற, அழகான பூவேலைப்பாடுகள் செய்யப்பெற்ற, பாம்பின் தோலைப் போல மென்மையும் வழவழப்பும் பளபளப்பும் உடைய மெல்லி துணியினை அணிந்தனர். கொட்டைக் கரை போட்ட பட்டாடையை அணிந்தனர். வறுமையில் வாடுவோர் ஈரும் பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்யக்கூடிய, வேர்வையால் நனைந்து நாற்றமடிக்கக்கூடிய, வேறு நூல்கள் நுழைந்திருக்கின்ற தையல் போடப்பெற்ற, கிழிந்த கந்தையினை அணிந்திருந்தனர்.

அக்காலத் தமிழர்கள் தாம் உணவு உண்பதற்கு முன்னர் காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினை இந்நூலின் 181 முதல் 184 வரையிலுள்ள அடிகள் குறிப்பிட்டுள்ளன. “உயர மற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை. அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்கின்ற குடிசை. அக் குடிசையில் குடியிருப்போர் இரத்தங்கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன“ என்ற செய்தி அவ் அடிகளில் உள்ளன.

அக் காலத்தில் வழக்கிலிருந்த பண்டமாற்றுமுறை பற்றியும் இந் நூலில் அறியமுடிகின்றது. தேனையும் நெய்யையும் கிழங்கையும் கரும்பினையும் அவலினையும் கொடுத்து, மீனையும் நெய்யையும் மதுவையும் மானிறைச்சியையும் கள்ளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
விருந்தினரைப் பேணிப் பின்னர் அவர்களை வழியனுப்பும்போது அவர்களுடன் ஏழடி நடந்துசென்று வழியனுப்பும் பண்பாடு அக்காலத்தில் இருந்துள்ளமையை இந் நூல் குறிப்பிட்டுள்ளது.

சிறுபாணாற்றுப்படை

புலவர் இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், மாவிலங்கையைத் தலைநகரமாகக் கொண்ட ஆட்சிபுரிந்த ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 269 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் சிறுபாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

“பாண்“ வாசிக்கும் தொழிலைச் செய்ய ஒரு பிரிவினரைப் “பாணர்“ என்றனர். பாணர்கள் மூவகைப்படுவர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர். யாழ்ப்பாணர் இரண்டு வகைப்படுவர். சீறியாழ்ப்பாணர், பேரியாழ்ப்பாணர். இந்நூலில் இடம்பெறும் பாணர் சீறியாழ்ப்பாணர். ஆதலால்தான் “சிறுபாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

ஓய்மா நாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு சிறுபாணன் தன்னை எதிர்ப்படும் வறிய சிறுபாணனிடம், “ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்நூலில் விறலியின் உருவ அழகு வர்ணிக்கப்பட்டு்ள்ளது. அவளின் கன்னம், கூந்தல், நுதல், நோக்கு, பல் முதலிய பத்து உறுப்புகள் மட்டும் வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்நூலில் உப்பு வணிகர்களின் குடும்பம் சுட்டப்பெற்றுள்ளது. அவர்கள் உப்பு விற்பனைக்காக வண்டிகளில் உப்பு மூடைகளை ஏற்றிக்கொண்டுச் செல்லும்போது அவ் வணிகரும் அவருடைய மனைவியும் அவரின் குழந்தைகளும் அவர்கள் வளர்த்த பெண் குரங்கும் (மந்தி) உடன் செல்வதாகக் குறிப்பு உள்ளது. நுணா மரத்தின் கட்டையினைக் கடைந்து மணிகள் (மரமணிகள்) செய்து, மாலையாகக் கோத்து, தாங்கள் வளர்க்கும் பெண்குரங்கின் கழுத்தில் கட்டியிருந்தனர். வேளாளர்கள் தங்களின் வீட்டு வளர்ப்பு விலங்காக நாயினை வைத்திருந்தனர் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது.

நல்லியக்கோடனின் 16 நற்குணங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. செய்ந்நன்றி அறிதல், 2. சிற்றினம் இன்மை, 3. இன்முகம் உடைமை, 4. இனியன் ஆதல், 5. அஞ்சினோர்க்கு அளித்தல், 6. வெஞ்சினம் இன்மை, 7. ஆண் அணி புகுதல் (போர்க்கலத்தில் எதிரியின் படைக்குள் புகுதல்), 8. அழிபடை தாங்கள் (போர்க்கலத்தில் தன் படை சிதறாமல் காத்தல்), 9. கருதியது முடித்தல், 10. காமுறப்படுதல், 11. ஒருவழிப்படாமை, 12. ஓதியது உணர்தல், 13. அறிவு மடல் படுதல், 14. அறிவு நன்கு உடைமை, 15. வரிசை அறிதல், 16. வரையாது கொடுத்தல்.
இந்நூலில் அக்காலத்தில் நிலவிய உணவுப் பண்பாட்டினை அறியமுடிகின்றது. நெய்தல் நிலத்தினர் வறல் குழல் மீன் கருவாடினை விருந்தளிப்பர் என்றும் வேடர்குலத்தினர் புளிக்கறியுடன் சோறும் வேட்டையாடிவந்த ஆமான் முதலியவற்றைச் சமைத்து விருந்தளிப்பர் என்றும் உழவர் குலத்தினர் கைக்குத்தல் அரிசிச் சோற்றினையும் வயல் நண்டினையும் பீர்க்கங்காய்க் கூட்டினையும் விருந்தளிப்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பெரும்பாணாற்றுப்படை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 500 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பெரும்பாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.
இந்நூலில் இடம்பெறும் பாணர் பேரியாழ்ப்பாணர். ஆதலால்தான் “பெரும்பாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பெரும்பாணன் தன்னை எதிர்ப்படும் வறிய பெரும்பாணனிடம், “தொண்டைமான் இளந்திரையனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நிலம் சார்ந்த குடியிருப்புகள் பற்றிய குறிப்புகளை இந்நூலுள் காணமுடிகின்றது. வரகு வைக்கோலால் வேயப்பட்ட முல்லை நிலக் கோவலர் குடில், வைக்கோலால் வேயப்பட்ட மருதநில வேளாளரின் அழகிய குடில், தருப்பைப் புல்லால் வேயப்பட்ட நெய்தல் நில வலைஞர் குடில், ஈந்தின் இலையாலும் ஊகம் புல்லாலும் வேயப்பட்ட பாலைநில எயினரின் குடில், அக் குடிலினைச் சுற்றி அமைக்கப்பெற்ற உயிருடன் வளரும் செடியால் ஆன வாழ் முள் வேலி, கன்றுகள் பிணிக்கப்பட்ட பந்தல், சாணத்தால் மெழுகப்பட்ட தரையுடன் கூடிய அந்தணர்க் குடியிருப்பு போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

இவர்களின் உணவுப் பண்பாட்டினை பற்றியும் அறியமுடிகின்றது. ஏற்றை அறுத்துச் சமைத்தும் வீட்டிலேயே நெல்லால் காய்ச்சிய கொழியல் அரிசிக் கள் முதலியவற்றையும் உண்ணும் குறிஞ்சி நிலமக்கள், அவரைப் பருப்பு கலந்த வரகுச் சோற்றை (கும்மாயம்?) உண்ணும் முல்லை நில மக்கள், நெல்லரிசியுடன் கோழிவறுவல், தினைச்சோறும் பாலும் உண்ணும் மருத நிலமக்கள், மீன் இறாலுடன் கொழியல் அரிசிக் கஞ்சியினை உண்ணும் நெய்தல் நில மக்கள், முயல், பன்றி, உடும்பு, ஈந்தின் விதை போன்ற சிவந்த சோறு, புல்லரிசியுடன் கூடிய கருவாட்டுக்குழம்பு முதலியவற்றை உண்ணும் பாலை நிலமக்கள், கருடன் சம்பா என்று குறிப்பிடப்படும் இராசா அன்னம், நெய்ச்சோறு, கறிவேப்பிலை கருவேம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வெண்ணெயில் செய்த மாதுளைக் கறியையும் மாவடு ஊறுகாயையும் உண்ணும் அந்தணர்கள் என அக்கால மக்களின் பொருளாதாரம் சார்ந்த உணவுமுறைகளை இந்நூல் பட்டியலிட்டுள்ளது.

உழுதுவாழும் விவசாயக்கூலிகளை உழவர்கள் என்றனர். இவர்கள் நிலஉரிமையுடைய வேளாளர்கள் அல்லர். இவர்களின் புன்செய் நிலத்தில் விளையும் வரகினையும் அவரையினையும் தம் உணவாகக்கொண்டனர். வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை உண்டனர். நன்செய் நிலஉரிமையாளர்களான வேளாளர்கள் வீடுகளில் இனிப்பான சுளைகள் நிறைந்த பெரியபலாப்பழம், நல்ல இன்சுவை இளநீர், யானைக் கொம்புகளைப் போன்ற தோற்றமுடைய வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள், நல்ல பனை நுங்கு, இனிய பண்டங்கள், சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்கு போன்ற உணவுகளாக உள்ளன. உழுகுடிகளுக்கும் நன்செய் உழவுநிலங்களை வைத்திருக்கும் வேளாளர்களுக்கும் இடையே உள்ள வர்க்க வேறுபாடுகளை அவர்களின் உணவுப் பண்பாட்டின் வழியாக அறியa முடிகின்றது.
“நீர்ப்பாயல்துறை“ (நீர்ப்பெயற்று) என்ற இடத்தில் மிகப்பெரிய கலங்கரைவிளக்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. aதொண்டைநாட்டின் தலைநகரான் காஞ்சிமாநகரின் செல்வச் செழிப்பினையும் பெருமையினையும் இந்நூல் 393 முதல் 420 வரையிலான அடிகளில் குறிப்பிட்டுள்ளது. இந்நகர்த் தெருக்களில் எப்பொழுதும் தேர்கள் ஓடிக்கொண்டிருப்பதால் தெருக்கள் பள்ளமும் மேடுமாகவும் படுகுழியுமாகவும் சிதைந்து காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரைச் சார்ந்த திருவெஃகா அக்காலத்திலேயே திருமால் திருப்பதியாகப் பெயர்பெற்றிருந்துள்ளது. காஞ்சி நகரத்தில் சோலைகள் பல இருந்தன. அச்சோலைகளில் குரங்குகள் பலவுண்டு. யானைப் பாகர்கள், யானைகளுக்கு நெய் கலந்த சோற்றுக் கவளத்தை வைக்கின்றனர். யானைகள் அக்கவளங்களைத் தம் கால்களில் இட்டு மிதிக்கின்றன. அக்கவளங்களைக் குரங்குகள் கவர்ந்துகொண்டு சோலைக்குள் ஓடுகின்றன. இந்நூல் இதனைக் காட்சிபடுத்தியுள்ளது.

கூத்தராற்றுப்படை

புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 583 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் கூத்தராற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலுக்கு “மலைபடுகடாம்“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு கூத்தர் தன்னை எதிர்ப்படும் வறிய கூத்தரிடம், “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூத்தர்கள் என்போர் நாடகக் கலைஞர்கள். இவர்கள் தம்மோடு இசைக்கருவிகள் பலவற்றை எடுத்துச்செல்வது இயல்பு. முழவு, ஆகுளி, பதலை, கோடு, தூம்பு, குழல், யாழ், பாண்டில் முதலிய இசைக்கருவிகளைத் தம்மோடு எடுத்துச்சென்றதாக இந்நூல் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் தம்முடன் பேரியாழினையும் வைத்திருந்தனர். அந்தப் பேரியாழின் அமைப்பினையும் இந்நூல் விளக்கியுள்ளது. பேரியாழ் முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், சுள்ளாணிகள், பத்தல், யானைக் கொம்பினால் ஆன யாப்பு, பொல்லம் பொத்தப்பட்ட போர்வை, உந்தி, கோடு, வணர் என பல உறுப்புகளை உடையது என்று விளக்கியுள்ளது.

கூத்தர்கள் செல்லும் வழி மலைப்பாதை. அங்குள்ள சிக்கல்கள் பற்றியும் இந்நூல் சுட்டியுள்ளது. ஆங்காங்கு பன்றிகளைப் பிடிப்பதற்காகப் பன்றிப்பொறிகள் வைக்கப்பெற்றிருக்கும். பரற்கற்கள் நிரம்பிய குழிகளில் பாம்புகள் மறைந்திருக்கும். தினைப்புனத்தைக் காக்கும் குறவர்கள் யானைகளை விரட்ட எறியும் கவண்கற்கள் பறந்துகொண்டிருக்கும். காட்டாற்று வழியில் வழுக்கும் இடங்கள் மிகுதி. மலையின் இயற்கைப் பேரழகினை இரசித்துக்கொண்டு நடந்தால் வழிதவறிவிடு வாய்ப்புண்டு. அவ்வாறு வழிதவறியவர்களுக்குக் குறவர்கள் வழிகாட்டுவார்கள். இரவில் குகைகளில் தங்கிக்கொள்ளலாம். செல்லும் வழியில் பல நடுகற்கள் காணப்படும். திரும்பி வரும்போது வந்த வழியினை அறியவேண்டும் என்பதற்காகச் செல்லும்போதே ஆங்காங்கே புல்லை முடிந்துகொண்டே வழிநெடுகச் செல்லவேண்டும் எனப் பல அறிவுரைகள் இந்நூலுள் கூறப்பெற்றுள்ளன.

இந்நூலில் 20 வகையான ஓசைகள் கூறப்பெற்றுள்ளன. அருவி விழும் ஒலி, குறவர்களின் சங்கொலி, காயம்பட்ட கானவரின் அழுகை ஒலி, புண் ஆற்றும் கொடிச்சியரின் பாட்டொலி, வேங்கை மலரைப் பார்த்து அஞ்சும் பெண்களின் அச்ச ஒலி, தன் துணையை இழந்த ஆண் யானையின் ஆற்றாமை ஒலி, தன் குட்டியை இழந்த பெண்குரங்கின் தவிப்பொலி, மலைத்தேனைக் கைப்பற்றிய கானவரின் ஆரவார ஒலி, குறுநில மன்னரின் பாதுகாவல்களை அழித்துவிட்ட கானவரின் வெற்றி ஒலி, குரவைக்கூத்தாடும் குறவர்களின் ஒலி, ஆற்றுவெள்ளத்தின் ஒலி, யானைப் பாகரின் ஒலி, கிளிகளை ஓட்டும் பெண்களின் குரலாசை, மலைக்காளையும் வளர்ப்புக்காளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ஒலி, எருமைக் கடாக்களின் போர் ஒலி, பலாச்சுளையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்க அதன் மீது கன்றுகளை மிதிக்கச்செய்யும் சிறுவர்களின் ஒலி, கரும்பிலிருந்து சாறினைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்தின் ஒலி, தினையைக் குற்றும் மகளிரின் பாட்டொலி, பன்றிகளை விரட்டுவதற்காக முழக்கப்படும் பறையொலி, இந்த ஓசைகள் மலையில்பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் எதிரொலி என 20 வகையான ஒலிகளை (ஓசைகளை) இந்நூல் சுட்டியுள்ளது.

கூத்தர்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றை இந்நூலினுள் காணமுடிகின்றது. நடுகற்களை வணங்குதல், பாடுவதற்கு முன்போ அல்லது ஆடுவதற்கு முன்போ அவர்கள் இறைவனை வணங்குதல், ஓரிடம் விட்டுப் பிறிதொரு இடம்செல்வதற்கு முன்பு நிமித்தம் பார்த்தல், மது, எருமைத் தயிர் முதலியவற்றைச் சேமித்துவைக்கும் கலமாக (பாத்திரம்) மூங்கிற் குழாய்களைப் பயன்படுத்தியுள்ளனர். இசைக்கருவிகளை உறையிட்டுப் பாதுகாத்தனர். சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுழற்றி மட்கலன்கள் செய்துள்ளனர். மனித உயிரைப்பறிக்கும் தெய்வத்திற்குக் “கூற்றுவன்“ (எமன்) என்று பெயரிட்டிருந்தனர்.

முல்லைப்பாட்டு

புலவர் நப்பூதனார், முல்லைத் திணையில் 103 அடிகளில் அகப்பொருளில் ஆற்றியிருத்தல் என்ற பொருளில் பாடிய பாடல் முல்லைப்பாட்டு. இந்தக் குறுநூலுக்கு “நெஞ்சாற்றுப்படை“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. போர் நிமித்தமாகத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துத் தலைவி துன்பப்படுவதும், பின்னர் தன் மனத்தினைத் தாமே தேற்றிக்கொள்வதும் (ஆற்றியிருத்தல்) முல்லைப்பாட்டின் மையக்கரு.

தலைவியின் இல்லறக்காட்சிகளும் தலைவரின் பாசறைக்காட்சிகளும் சரிபாதியாக இந்தக் குறுநூலில் பதிவாகியுள்ளன. முல்லைநிலக்காட்சியும் கார்கால (மழைக்காலம்) வர்ணனையும் சிறப்புற பதிவாகியுள்ளன. விரிச்சிகேட்டல், நற்சொல்கேட்டல், நாழிகை அறிதல், யானையைப் பழக்குதல், பாசறை அமைத்தல், பாசறையைப் பேணுதல், பாசறையில் இருக்கும் ஆயுதமேந்திய பணிப்பெண்கள், மெய்க்காப்பாளர்களாக விளங்கிய யவனர்கள், குற்றேவல்புரியும் மிலேச்சர்கள், வீரர்கள் பற்றிய குறிப்புகள், முதல்நாள் போரின் பின்விளைவுகள் எனப் பிற இலக்கியங்களில் இல்லாத பல செய்திகள் இந்தக் குறுநூலில் இடம்பெற்றுள்ளன.

நிறைந்த இலைகளையுடைய இருண்ட காசாஞ்செடிகள், வெண்காந்தள் மொட்டுக்கள், பொன்னிறமுடைய கொன்றை, இரத்த வண்ணத்தில் பூத்திருக்கும் தோன்றிச் செடிகள் என்று மழைக்காலச் செடிகள், மலர்கள் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டு

புலவர் கபிலர், குறிஞ்சித் திணையில் 261 அடிகளில் அகப்பொருளில் பாடிய பாடல் குறிஞ்சிப்பாட்டு. இப்பாடலுக்குப் “பெருங்குறிஞ்சி“ என்ற பெயரும் உண்டு. தலைவன் மீது தலைவிகொண்ட காதலைத் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தெரியப்படுத்துதலே (அறத்தொடு நிற்றல்) குறிஞ்சிப்பாட்டின் மையக்கரு. தலைவன்-தலைவியின் காதலைப் பின்நோக்கு உத்தியில் தோழி எடுத்துரைத்துள்ளாள். தோழி அறத்தொடு நிற்றலுக்கு எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவி, கூறுதல் உசாதல் என்ற ஏழு நிலைகள் உள்ளன. இப்பாடலில் தோழி, “கூறுதல் உசாதல்“ நிலையைத் தவிர்த்து மற்ற ஆறுநிலைகளில் தலைவியின் செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள்.

இப்பாடலில் பழந்தமிழ் நிலத்தில் பூத்துக்குலுங்கிய 99 வகையான மலர்கள் பற்றிய பட்டியல் இடம்பெற்றுள்ளது. தலைவியைச் சந்தித்து, காதலித்து, கந்தர்வ மணம் புரிந்த தலைவன் அவளை விட்டுச் செல்லும்போது, “உன்னை ஊரறிய மணந்துகொள்வேன்“ என்று உறுதியளிக்கின்றான். அப்போது அவன் அவ் உறுதியளித்தலைச் சிறு சடங்கின் வழியாகச் செய்தான். மலையில் உறைந்துள்ள இறைவனை வாழ்த்தி, தன் மனத்தில் உள்ள உண்மைநிலையினை இறைவனிடம் கூறுகின்றான். எந்நிலையிலும் எக்காரணம் கொண்டும் தலைவியைப் பிரியேன் என்று தன் வாய்மையைத் தெளிவுபடுத்தித் தலைவியின் மனத்திற்கு உறுதியளிக்கின்றான். அருகில் வீழ்ந்திருந்த அருவியின் தெளிந்த நீரைக் கையால் அள்ளி, உன்னை ஊரறிய மணப்பேன் என்று உறுதியளித்து அந் நீரைப் பருகினான்.
“மறுபிறப்பு“ குறித்த நம்பிக்கை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னை ஊரறிய மணந்துகொள்வதாக உறுதியளித்த தலைவன் வாராததால் தலைவி வருந்தி, பின்னர், “இப்பொழுது நம்மை அவர் மணந்துகொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாயினும் அவரைக் கூடி இன்புறும் வாழ்வு கிடைப்பதாக“ என்று வேண்டிக்கொள்கின்றாள்.

“ஓர் இறைக்கோட்பாடு“ இந்நூலில் சுட்டப்பெற்றுள்ளது. “இறைவன் ஒருவனே. அவரே பல்வேறு உருவங்களில் பல்வேறு தெய்வங்களாகக் காட்சிதருகின்றார்“ என்ற கருத்தினை, “வேறு பல் உருவின் கடவுள்“ என்ற அடியில் இந்நூல் தெரிவித்துள்ளது.

“கழைக்கூத்தாடிகள்“ பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. விலகி நிற்கும் இரண்டு மரங்களுக்கு இடையில் கயிற்றைக்கட்டி அதன்மீது நின்றுகொண்டு, கைகளில் ஒரு கழையினைப் பற்றிக்கொண்டு நடனமாடும் கழைக்கூத்தாடிகள் பற்றியும் அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்ற இசைக்கும் கலைஞர்கள் பற்றியும் குறிப்பிடப்பெற்றுள்ளது.

மதுரைக்காஞ்சி

புலவர் மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு மருதத்திணையில் புறத்திணை இலக்கணத்தில் 782 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய நெடும்பாடல்தான் மதுரைக்காஞ்சி. இந்நூலினைக் காஞ்சிப்பாட்டு, கூடல்தமிழ், காஞ்சித்திணை என்றும் சிறப்பித்துள்ளனர். மதுரை நகரின் ஒருநாள் நிகழ்வுதான் இந்நூலின் மையக்கரு.
இப்பாடலின் 346ஆவது அடிமுதல் 699ஆவது அடி வரையுள்ள 354 அடிகள் ஒருநாள் மதுரையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கின்றன. ஆதலால், இப்பாட்டினை “மாநகர்ப்பாட்டு“ என்றனர். ஒரு தனிப்பாடல் இப்பாடலைக் “கூடற்றமிழ்“ என்று குறிப்பிட்டுள்ளது.

தலையாலங்கானம் திருவாதவூருக்கு அருகில் இருக்கிறது. இவ் இடத்தில் இப்பாடலின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் சேர, சோழரோடு ஐம்பெரும் குறுநில வேளிரையும் சேர்த்து வென்றதாக இப்பாடல் தெரிவித்துள்ளது.
இவ் வேந்தருக்கு நிலையாமைக் கருத்தை வலியுறுத்த இப்பாடல் பாடப்பெற்றதாகவும் அதனால்தான் இப்பாடல் “மதுரைக்காஞ்சி“ (காஞ்சி-நிலையாமை) என்ற பெயரினைப் பெற்றதாகவும் கூறுகின்றனர். இக்கருத்தினைச் சு. வேணுகோபால் ஏற்கவில்லை. அவர், “ தொல்காப்பியம், “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை“ என்று வஞ்சினக் காஞ்சித்துறையைப் பற்றிக் கூறியுள்ளது. பகைவரின் படையெடுப்பை எதிர்த்துப் போர்செய்து, முறியடிக்கிற வெற்றி என்பது இதன் பொருளாகும். மதுரைக்காஞ்சி போர் வெற்றியோடு பண்பாட்டு இயக்கத்தைத்தான் மிகுதியாக விவரிக்கின்றது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒண்பெண் அவிர் இழை தெழிப்ப இயலி“, “திண்சுவர் நல் இல்“, “ கதவம் கரைதல்“, “வானம் நீங்கிய நீல் நிற விசும்பு“, “திரையிடும் மணலினும் பலரே உரைசெய மலர்தலை உலகம் ஆண்டு அழிந்தோரே“ என்பன போன்ற சொற்றொடர்களில் நிலையில்லாது அழிந்துவிடும் நிலத்தியல் வாழ்க்கை பற்றியும் நிலைத்து நிற்கக்கூடியதாக நம்பப்படும் மேலுலகு வாழ்க்கையின் வீடுபேறு பற்றியும் சொல்லப்பட்டிருந்தாலும் நிலையாமையை வலியுறுத்துவதற்காகவே இப்பாடல் பாடப்பட்டதன்று. உண்மையில் வாழ்க்கையின் பல்வேறு விதமான அம்சங்களை ஒருங்குதிரட்டி முன்வைப்பது நோக்கமாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் அகம்,புறம் இரண்டையும் முழுமையாகத் திரட்டி வைக்கிறது எனலாம். கொடை, ஆட்சித்திறம், உண்மை, நீதி, வணிகம், விவசாயம், தொழில் இவற்றிற்கான வளத்தைப் பெருக்கும் தன்மைகள், நீடித்த நிலைபேறுக்கு உரியவை என்ற அடிப்படையில்தான் “காஞ்சி“ என்ற கருத்தியல் மதுரைக்காஞ்சி முழுமைக்கும் ஊடாடி வருகின்றது. பத்துப்பாட்டின் நூல்வரிசையைக் குறிப்பிடும் வெண்பா, இப்பாட்டினைப் “பெருகு வள மதுரைக்காஞ்சி“ என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளது“68 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

பாண்டியர் புகழ்பாடும் இந்நூலின் பெரும்பகுதி மதுரைமாநகரை வர்ணித்துள்ளது. பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் விளைந்த பொருட்களை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அகில், சந்தனம், தோரை என்னும் நெல்வகை, வெண்சிறு கடுகு, ஐவன நெல் போன்றன குறிஞ்சி நிலத்திலும் வரகு, அழகிய மணிகள், தினை, எள், முசுண்டை, முல்லை, கிழங்கு வகைகள் போன்றன முல்லை நிலத்திலும் நெல், கவலைக் கிழங்குகள், தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் போன்றன மருத நிலத்திலும் முத்து, சங்கு, உப்பு, தீம்புளி, மீன் போன்றன நெய்தல் நிலத்திலும் மூங்கில், ஊகம்புல் போன்றன பாலை நிலத்திலும் மிகுதியாக விளைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மதுரை நகரில் பறந்த விழாக்கொடி, வெற்றிக்கொடி, வணிகக்கொடி போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது. வணிகக்கொடிகளின் வரிசையில் “உயர்ரக மதுபானம் கிடைக்கும்“ என்பதனை உணர்த்தும் கொடியும் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.
பல்வேறு கோயில்கள், பௌத்தப் பள்ளிகள், சமணப்பள்ளிகள் ஆகிய பல சமயங்களுக்கும் உரிய நிலையங்கள் அக்கால மதுரையில் இருந்துள்ளமையை இப்பாடலால் அறியமுடிகின்றது. இருப்பினும், சிவனே முழுமுதற் கடவுளாக இருந்தமையைத் “தெள் அரிப்பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அறிவிளங்கிய ஆய்பெண் அவிர் இழை“ என்ற அடி குறிப்புணர்த்தியுள்ளது.

“திருவோணநாள்விழா“ மதுரையில் கொண்டாடப்பட்ட செய்தியினை “மாயோன் மேய ஓணநல்நாள்“ என்ற அடியின் வழியாப் பெறமுடிகின்றது. இப்பாடல் திருப்பரங்குன்ற விழா, வேந்தரின் பிறப்புநாள்விழா, அந்திவிழா போன்ற பல்வேறு விழாக்களையும் குறிப்பிட்டுள்ளது.

சூலுற்ற மகளிர் விளக்கேந்தி கோயிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றமையும் யாழ், முழவு, ஆகுளி முதலான இசைக்கருவிகள் இசைக்க அவ் ஊர்வலம் நகர்ந்தமையையும் கடவுளைத் தொழுது சாலினி என்ற தேவராட்டி முன் பலி கொடுத்தமையையும் காணமுடிகின்றது. இவ் வழிபாடு பற்றிச் சு. வேணுகோபால், “சூல் உற்றதற்குப் பலிச்சோறு படைத்த இனக்குழுச் சடங்கு, இங்குச் சமய வழிபாடு கலந்த்தொரு வழக்கமாக மாறியுள்ளது“69 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் “அன்னசாலைகள்“ மதுரையில் நிறைந்திருந்தனஎன்ற குறிப்பு இந்நூலில் உள்ளது. அந்த அன்னசாலைகளில் தேன் மணம் கமழும் பலாச்சுளைகள், பலவகைப்பட்ட மாம்பழங்கள், பலவகையான காய்கறிகள், வாழைப்பழம், மழையினால் கொடிகளில் அழகாக முளைத்திருக்கின்ற இளங்கீரை, அமுதம் போன்ற இனிமையான பலவகைப்பட்டச் சாதம், புலவுச்சோறு (சைவமும் அசைவமும் கலந்தது), முற்றிய கிழங்கு ஆகியவை இலவசமாக அளிக்கப்பெற்றன.

நெடுநல்வாடை

புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு முல்லை மற்றும் வஞ்சித்திணையில் அகமும் புறமும் கலந்து 188 அடிகளில் ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் நெடுநல்வாடை. இந்நூலினைச் “சிற்பப்பாட்டு“ என்றும் சிறப்பித்துள்ளனர்.
கூதிர்காலத்தில் வீசக்கூடிய வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பம் தருவதாகவும் போர்த்தொழிலுக்குச் சென்ற தலைவனுக்கு அதே வாடைக்காற்று இன்பம் தருவதாகவும் அமைந்துள்ள முரண்நிலையே இந்நூலின் மையக்கரு.

“வாடை“ என்பதற்குக் “குளிர்காற்று“ என்று பொருள். இது வடதிசையிலிருந்து வீசுவதால் “வாடைக்காற்று“ என்ற பெயரினைப் பெற்றது. தெற்கிலிருந்து வீசுவது “தென்றல்“ என்றதனைப் போல இதற்குப் பொருள்கொள்ளலாம்.

பெண்கள் மாலைக் காலத்தில் விளக்கேற்றி, நெல்லையும் மலரையும் தூவி அந்த விளக்கின் ஒளியை வணங்கியுள்ளனர். சந்தனக் கற்கள் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். சந்தனக்கல்லினை “வான்கேழ் வட்டம்“ என்று அழைத்துள்ளனர். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரைப் பருகுவதற்காக வாய் குறுகலாக அமைந்த மட்பாண்டத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மண் கூஜாக்கள் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த மண் கூஜாக்களைத் “தொகுவாய்க்கன்னல்“ (சிறிய வாயுடைய நீர்ப்பாண்டம்) என்று அழைத்துள்ளனர்.

40 வயதுவரை வாழ்ந்து மடிந்த யானையின் தந்தத்தினை அறுத்தெடுத்து, அதனைக்கொண்டு கட்டிலுக்குக் கால்கள் செய்துள்ளனர். அக் கட்டில்காலில் பலவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் செய்துள்ளனர். இச்செய்திகளை இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது.

பட்டினப்பாலை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு நெய்தல் மற்றும் பாலைத்திணையில் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல் (செல்லாமல் விடுதல்) எனும் துறையில் 301 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் பட்டினப்பாலை. இந்நூலினைக் “வஞ்சிநெடும்பாட்டு“ சிறப்பித்துள்ளனர். காவிரிப்பூம்பட்டினத்தின் சிற்பினை விரிவாகக் கூறுவதே இந்நூலின் மையக்கரு.

இப் பாடலைப் பாடிய உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாற்பெருவளத்தான் பதினாறுகால் மண்டபத்தைப் பரிசாக வழங்கினார். பிற்காலத்தில், பாண்டிய மன்னர் சோழநாட்டினை முற்றுகையிட்டுத் தரைமட்டமாக்கியபோது, கரிகாற்பெருவளத்தான் உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசாக வழங்கிய பதினாறுகால் மண்டபத்தையும் தஞ்சைப் பெரியகோவிலையும் இடிக்காமல் விட்டுவிட்டதாகத் திருவெள்ளறைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

இந்நூலில் பல செய்திகள் விரவியுள்ளன. வெண்மீன் என்ற வெள்ளிக் கோள்மீன் வடக்குத் திசையில் நின்றால் நாட்டில் மழை பொழிவு ஏற்பட்டு வளம்பெருகும் என்றும் அது தெற்கு திசையில் நின்றால் மழைநீங்கி வறட்சிமிகும் என்றும் இந்நூலில் வானியல் செய்தி குறிக்கப்பெற்றுள்ளது.

வணிகத்திற்காகப் படகில் (பஃறி) உப்பினைக் கொணர்ந்த உமணர்கள், அவற்றை நெல்லுக்குப் பண்டமாற்றாக விற்றுத் திரும்பும்போது அவர்களின் படகில் உப்புக்குப் பதிலாக நெல் இருந்தமையைச் சுட்டியுள்ளது. இச்செய்தியிலிருந்து, அக்காலத்தில் உப்பும் நெல்லும் சம மதிப்பில் இருந்தமையை அறியமுடிகின்றது.

பழம் புலவர்கள் படைத்தளித்துள்ள தனிப்பாடல்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தினை நம் கண்முன் காட்டவல்லது. அவர்கள் மிகைப்படுத்திப் பலவற்றை அவற்றில் கூறியிருந்தாலும், அவற்றின் மையப்பொருளில் மாற்றமோ, திரிபோ, முழுக் கற்பனையோ இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இலக்கியச் சான்றுகளான இத் தனிப்பாடல்கள் 50 சதவிகிதம் வரலாற்றாய்வுக்கு ஏற்றவை. அதேவேளையில், பழம் புலவர்களின் கவிப் புலமைத்திறத்திற்கு 100 சதவிகிதம் வலுவான ஆதாரமாகத் திகழ்பவை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard