New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் இந்து?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
யார் இந்து?
Permalink  
 


யார் இந்து?

http://www.jeyamohan.in/22567

இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள். பத்ரிநாத் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு இனம்சார்ந்த, மொழி சார்ந்த,சாதி சார்ந்த கோடிக்கணக்கான மக்களால் இந்துமதவழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கண்கூடான உண்மையையாவது மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வேறுபடுவதையும் மறுக்கமாட்டீர்கள்.

இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சில வழிபாட்டு முறைகளைத் தன் மையத்தில் இந்துமதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, அது இந்தியா முழுக்கப் பொதுமொழியாக விளங்கிய சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். அதில் என்ன பிழை? அப்படி ஒரு மையமொழி எந்த மதத்துக்குமே இருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது இந்துமதத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

இக்குறிப்புகளில் நான் முன்வைப்பது ஒரு விரிவான இந்திய வரலாற்றுப் பரிணாமத்தின் சித்திரத்தை. அதன் அடிப்படையில்தான் என் விளக்கங்களை அளிக்கிறேன். அது டாக்டர் அம்பேத்கர்,டி.டி.கோசாம்பி முதல் இன்று டாக்டர் ராமச்சந்திரன் வரையிலான வரலாற்றறிஞர்கள் கூறும் ஆய்வுத்தரவுகளையும் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக விளக்கப்பட்ட, ஒரு வரலாற்றுவரைவு.

இந்து மதம் எல்லா பக்தர்களையும் சமமாக நடத்தியது, நடத்துகிறது என நான் சொல்லவில்லை. உலகில் உள்ள எந்த மதமும் அப்படி ஒரு மானுடசமத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது அல்ல. எல்லா மதங்களுமே அதன் நம்பிக்கையாளர்களிடையே தெளிவான உயர்வுதாழ்வுகளை வரையறுத்து வைத்திருந்தவைதான். இன்றுகூட எந்த மதமும் அந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக விட்டுவிடவும் இல்லை.

ஏனென்றால் மானுடவரலாற்றின் கடந்த காலத்தில் மனிதர்களெல்லாம் நடைமுறையில் சமம் என்ற சிந்தனையே இருந்ததில்லை. அந்தச்சிந்தனை ஒரு இலட்சியக்கனவாக உதித்துப் பல்வேறு சமூகப்போராட்டங்கள் வழியாக வளர்ந்து, சென்ற முந்நூறாண்டுகளுக்குள் உலகில் சில இடங்களில் சோதனை நடைமுறைக்கு வந்தது. இந்த நூறாண்டுக் காலத்தில்தான் உலகளாவிய ஒரு கருத்தாக அது ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் மானுட இனத்தில் நேர்பாதி அதை ஏற்றுக்கொண்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களே இன்றைய உலகில் பெரும்பான்மை என்பதை மறக்கவேண்டாம்.

இதுவரையிலான மானுடப்பண்பாட்டின் வளர்ச்சி என்பது மனிதர்களைத் திரட்டி மேல்கீழாக அடுக்கி உறுதியான சமூக அமைப்புகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா சமூகங்களும் அப்படி மேல்கீழ் அடுக்குகளாகக் கட்டப்பட்டவைதான். அவ்வாறு இந்தியநிலத்தில் பல்வேறு சமூகங்கள் உருவான காலகட்டத்தில் பிறந்து வந்தது இந்துமதம்.

இந்துமதம் ஒரு தொகைமதம். இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் சாதிமுறை என்ற அமைப்புக்குள் மேல் கீழாக அடுக்கப்பட்டு இங்குள்ள சமூகமுறை உருவானது. எந்த சாதி நிலத்தையும் வணிகத்தையும் வென்றெடுத்ததோ அது மேலே சென்றது. பிற சாதிமேல் அதிகாரம் செலுத்தியது. சமூகத்தை வழிநடத்திச்சென்றது.

இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் ஒரே சமூகமாகத் தொகுக்கப்பட்டபோது அந்த இனக்குழுக்களின் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அவ்வாறுதான் இந்துமதம் உருவானது.

பல்வேறு வழிபாட்டுமுறைகளும் சிந்தனைகளும் ஒன்றானபோது அவற்றுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. பலநூறாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் ஒவ்வொரு சிந்தனையும் இன்னொன்றால் பாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கு ஒரு மையஓட்டம் உருவாகி வந்தது. அந்த மையம் பிற அனைத்தையும் இணைக்க ஆரம்பித்தது.

நடைமுறையில் இந்தப் பல்வேறு சிந்தனைகளில் எது வலுவானதோ அது பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் அடைந்து மையமாக ஆவதே வழக்கம். உலகமெங்கும் பார்த்தால் அந்த வலுவான தரப்பு பிற எல்லாத் தரப்புகளையும் அழித்து இல்லாமலாக்கி வெற்றிகொண்டிருப்பதையே நாம் காணமுடியும். இந்தியாவில் அது நிகழவில்லை. மாறாகப் பிறவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு அந்த வலுவான தரப்பு வளர்ந்ததையே காண்கிறோம்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை வேதமரபு என்பதுதான் வலுவானது. ஆனால் அது பிற மரபுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவே அது இருந்தது. அனைத்தில் இருந்தும் முக்கியமான அம்சங்களை வாங்கிக்கொண்டு அது வளர்ந்தது. அந்த வளர்ச்சிப்போக்கில் வேதமரபு வேதாந்தமாகவும் பின்னர் பக்திமதங்களாகவும் மாறியது.

வைதிகமரபில் இருந்த பிரம்மம் என்ற கருத்துதான் இந்த இணைப்புப்போக்கு உருவாவதற்கான காரணம். பிரம்மம் என்பது பெயரற்ற, உருவமற்ற, எங்கும் நிறைந்த, எல்லாமாக ஆகிய ஒரு தத்துவார்த்தமான தெய்வம். அந்தத் தத்துவமாக நாம் எந்தக் கடவுளையும் காணமுடியும். கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் எல்லாம் பிரம்மமாக விளக்கமுடியும். உங்கள் உள்ளூர் மாரியம்மனைக்கூடத் தோத்திரங்களில் பிரம்ம சொரூபிணி [பிரம்மமே உருவெடுத்து வந்தவள்] என்றுதான் சொல்லி வழிபடுவார்கள்.

இந்தியாவெங்கும் இந்தத் தொகுப்புநிகழ்வு அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்து மெய்ஞானம் எவரையும் மேலே கீழே என வரையறுக்கவில்லை. சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் இந்துமதத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்களாக ஆகிறார்கள். இந்துமதத்தின் ஆசாரங்களை அவர்கள் அதற்கேற்ப வரையறைசெய்துகொள்கிறார்கள்.

நூறுவருடம் முன்பு இங்கே வரலாற்றை எழுதிய வெள்ளையர் இந்துமதம்தான் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது என எழுதிவைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவ மதமாற்ற எண்ணம் கொண்டவர்கள். சென்ற நூறாண்டுக்காலத்தில் ஏராளமான வரலாற்று ஆய்வுகள் மூலம் அது பொய் என நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிமுறையும் ஏற்றத்தாழ்வும் உருவாகி வந்த வரலாறு துல்லியமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூறுவருடமாகவே வரலாற்றை வாசிக்காத அரசியல்வாதிகளால் சொல்லப்படும் சில்லறை வரிகளே நம் மேடைகளில் உலவுகின்றன. உங்களைப்போன்றவர்கள் எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை நம்புகிறீர்கள்.

இந்து மதத்தின் மெய்ஞானம் ஏற்றத்தாழ்வை வரையறைசெய்கிறது என்றால் அதை இந்துமதத்தால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆனால் உண்மை அப்படி அல்ல . இந்துமதத்தின் அமைப்புக்குள்ளேயே எப்போதும் மேலே உள்ள சாதிகள் கீழே வருவதும் கீழே உள்ள சாதிகள் மேலே செல்வதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதே வரலாறு. அந்த மாற்றங்களுக்கான காரணம் பொருளாதாரம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது. கண்டிப்பாக மதம் சார்ந்தது அல்ல

இந்தியவரலாறெங்கும் எளிய நிலைகளில் வாழ்ந்த பல்வேறு அடித்தள சாதிகள் வரலாற்றின் ஓட்டத்தில் ராணுவபலம்பெற்று மேலாதிக்கத்தை உருவாக்கிக்கொண்டதைப் பார்க்கலாம். அவர்கள் பேரரசுகளை உருவாக்கினார்கள். இந்துமதத்தில் மேலாதிக்கம் பெற்றார்கள். சந்திரகுப்த மௌரியர் முதல் இதைக் காணலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பேராலயங்களைக் கட்டிய நாயக்கர்கள் ஆந்திராவில் உள்ள எளிய மாடுமேய்க்கும் சாதியினர்தான். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் தற்செயலாகக் குதிரை மேய்க்க ஆரம்பித்தார்கள். பெரிய ராணுவ சக்தியாக மாறிப் பேரரசுகளை உருவாக்கினார்கள். நாம் காணும் தமிழகக் கோயில் ஆசாரங்களை எல்லாம் அவர்கள்தான் தீர்மானித்தார்கள். இப்படித்தான் இந்திய வரலாறு செயல்படுகிறது.

ஆகவே இந்துமதத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் இந்துமதத்தின் மையக்கருத்துக்கள் அல்ல. அவை அந்தந்தக் காலகட்டத்து சமூக யதார்த்தங்கள் மட்டுமே. எந்த ஒரு மதமும் அதைப்பின்பற்றும் மக்களின் சமூக அமைப்பையும் நம்பிக்கைகளையும் ஒட்டித்தான் செயல்பட முடியும்.

இந்துமதத்தின் மையநூல்கள் எவை என நூற்றாண்டுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளையோ அதிகாரத்தையோ பேசக்கூடியவை அல்ல. அவை முழுக்க முழுக்கத் தத்துவநூல்கள். அவற்றையே சுருதிகள் என இந்துமதம் சொல்கிறது. அவைதான் மாற்றமில்லாதவை.

சமூக ஆசாரங்களையும் சடங்குகளையும் பேசும் நூல்களை ஸ்மிருதிகள் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. அவை காலந்தோறும் மாறக்கூடியவை. சாதிமுறையைக் கடுமையாக வரையறை செய்யும் மனு ஸ்மிருதி அவற்றில் ஒன்று. அதில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியது போல வேதங்களை பிராமணரல்லாதவர்கள் கற்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. அவற்றில் எல்லா சாதியினரும் கண்டிப்பாக வேதங்களை ஓதியாகவேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதிகள் கூட உள்ளன. அவை மன்னர்களால் மாற்றப்பட்டு மனு ஸ்மிருதி கொண்டுவரப்பட்டது. அதாவது இவை இந்துமதத்தின் மாறாத நூல்கள் அல்ல. அவை மதநூல்களே அல்ல,ஆசார நூல்கள் மட்டுமே. மதம் அவற்றுக்குப்  பயன்படுத்தப்படுகிறது

எப்படி மன்னர்கள் மனுஸ்மிருதியைக் கொண்டுவந்தார்களோ அதே போலத்தான் ஜவகர்லால் நேரு என்ற நவீன ஆட்சியாளர் மனுஸ்மிருதிக்கு நேர் எதிரான ஹிந்து சட்டத்தைக் கொண்டுவந்தார். அதை அம்பேத்கர்ஸ்மிருதி என்று சொல்லலாம். மறைந்த சித்பவானந்தர் அப்படித்தான் சொல்வார். இந்துமதம் என்ன அம்பேத்கர்ஸ்மிருதிக்கு எதிராகக் கொந்தளித்தா எழுந்தது? ஒரு சிறு திருத்தம்கூட இல்லாமல் அது இந்த சமூகத்தால் ஏற்கப்படவில்லையா? வெறும் ஐம்பதாண்டுக்காலத்தில் இந்துமதம் அதன் ஆயிரம் வருட நடைமுறைகள் பலவற்றை முற்றிலும் தலைகீழாக்கிக்கொள்ளவில்லையா? ஏனென்றால் அது ஆசாரமே ஒழிய மதத்தின் சாராம்சம் அல்ல என எல்லாருக்கும் தெரியும்.

ஆகவே இந்துமதத்தில் பொதுமை இல்லை என்பது போன்ற மேலோட்டமான வரிகளை விடுங்கள். எந்த மதத்திலும் இறந்த காலத்தில் பொதுமை இருந்ததில்லை. நவீன காலகட்டம் உருவாக்கிக்கொண்ட மானுடப் பொதுமை என்ற கருத்தை வேறெந்ந்த மதத்தை விடவும் எளிதாக இந்துமதம் ஏற்றுக்கொண்டதென்பதே வரலாறு. மானுடப்பொதுமை பேசிய சிந்தனையாளர்கள் கிறித்தவ மதத்துக்கு எதிராக முந்நூறாண்டுக்காலம் பல்வேறு தியாகங்களை செய்து போராடினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாமிடம் அப்படி போராடுவதற்கான வாய்ப்பேகூட இன்றுமில்லை என்பதை நினைவுறுங்கள்.

இந்துக்கோயில்களில் எல்லா சாதியினரும் நுழைய எந்தத் தடையும் இன்றில்லை. இன்றைக்கு எண்பத்தைந்து வருடம் முன்பு அனைவரையும் ஆலயத்துக்குள் அனுமதிப்பதற்கான, பொதுமைக்கான, குரல் இந்துமதத்தின் நாயகர்களிடமிருந்தே வந்தது. அதற்கான இயக்கத்தை காந்தியும், ஆரியசமாஜமும், ராமகிருஷ்ண இயக்கமும், நாராயணகுருவும், சகஜானந்தரும் முன்னெடுத்தபோது இந்து மதத்தில் இருந்து அப்படியொன்றும் பெரும் எதிர்ப்பு கிளம்பவுமில்லை. மிகச்சில அடிப்படைவாதிகள் எதிர்த்தனர், அவர்கள் உடனே ஓரம் கட்டப்பட்டனர். ஏனென்றால், இந்து மதத்தின் மூலநூல்கள் எவையும் மானுடப்பொதுமைக்கு எதிரானவை அல்ல. அவை மானுட ஆன்மீகத்தைப்பேசும் தத்துவ நூல்கள். அந்த மூலநூல்களைச் சுட்டிக்காட்டி நாராயணகுருவும் காந்தியும் சகஜானந்தரும் எதிர்ப்புகளை வாயடைக்கச்செய்ய முடிந்தது.

இன்று அன்னியமதத்தவர் உள்ளே நுழையத் தடை உள்ளது. அது ஓர் நடைமுறைத்தடை. இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் அல்ல, தொல்லியல்மையங்களும்கூட. ஆகவே அவை சுற்றுலாமையங்களாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. அது வழிபாடுகளுக்குத் தடையாக இருக்கலாகாதென்ற நோக்கில் கருவறையை ஒட்டிய இடங்களில் பிற மதத்தவர்களுக்குத் தடை உள்ளது. மற்ற இடங்களில் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தத் தடையும் தேவையில்லை என்பதே என் எண்ணம். அது இந்துமதத்தின் ‘கொள்கை’ அல்ல. மிக எளிதாக நீக்கப்படக்கூடிய ஒரு நடைமுறை மட்டுமே.

இன்னும்கூட ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குச் சொந்தமான கோயில்களில் பிற சாதியினர் நுழைய அச்சாதியினர் தடை செய்கிறார்கள். குலதெய்வக் கோயில்களில் பிற குலத்தவர் நுழையத் தடை உள்ள இடங்கள் உண்டு. அவை சாதிப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். அந்நோக்கில் அவை விவாதிக்கப்பட்டுக் களையப்படவேண்டியவை. மதுரைக்கோயிலில் தலித் நுழைய அனுமதிக்கும் இந்து மதம் உத்தப்புரத்தில் மட்டும் அனுமதிக்காதா என்ன?

சிதம்பரம் கோயிலில் சைவத்திருமுறைகள் குறைந்தது ஆயிரமாண்டுகளாக ஒவ்வொருநாளும் ஓதப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? என்றாவது அதைப் போய் சோதித்துப்பார்த்திருக்கிறீர்களா? நான் அழைத்துச்சென்ற ஈழத்து நண்பர்கள் அங்கே கருவறைமுன் நின்று திருப்புகழ் பாடியிருக்கிறார்கள்- பலமுறை. அங்கே இந்தியாமுழுக்க உள்ள எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல சம்ஸ்கிருதமே கருவறையின் மொழியாக இருக்கிறது, அவ்வளவுதான். இப்போது தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவெங்கும் இந்து ஆலயங்களுக்கு வழிபாடுசார்ந்த தொன்மையான நடைமுறைகள் இருக்கும். அந்த நடைமுறைகளைத் தொகுத்துள்ள நூல்களை நிகமங்கள் ஆகமங்கள் என்பது வழக்கம். தமிழகத்துக்கோயில்களில் அனேகமாக அனைத்துமே ஆகம முறைப்படி வழிபடப்படுபவை. ஆகமங்களே கோயில்களுக்கு சக்தியை அளிப்பவை என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவற்றை மாற்றுவதை அவர்கள் ஏற்பதில்லை.

சிதம்பரம் கோயில் நெடுநாட்களாகவே அதற்காக உருவாக்கப்ப்பட்ட பூசாரிக்குலங்களின் பொறுப்பில் உள்ளது. அவர்கள் ஆகமங்களை முழுமையாக நம்பி இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர்கள். எந்தச்சடங்குகளையும் மீற அனுமதிக்காதவர்கள். ஏனென்றால் அது அவர்களின் தொழிலும் கூட. அதில் மாற்றம் என்பது அவர்கள் தொழிலை இழப்பதுதான். ஆகவேதான் கோயிலின் வழமையான சில முறைமையை மீறி ஆறுமுகச்சாமி என்பவர் தமிழில் பாட முயன்றபோது அவர் அந்த அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். அவர் தமிழில் பாடியதற்காகத் தாக்கப்படவில்லை, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாடியதற்காகத் தாக்கப்பட்டார். அது ஒரு தொழில்போட்டி மட்டுமே. எந்தத் தொழிலிலும் அது நிகழும்.

அந்தத் தாக்குதல் இந்துமதத்தின் பக்தர்களால் நடத்தப்படவில்லை. அந்த அர்ச்சகர் முறை மாற்றப்பட்டபோது இந்துமதம் கொதித்தெழவும் இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான மாறுதல்கள் வழியாகத்தான் அது வளர்ந்து வந்தது, முன்னால் செல்கிறது. இந்துமதத்தின் எந்த ஒரு ஆசாரமும் நம்பிக்கையும் விவாதத்துக்கு திறந்து வைக்கப்பட்டதாகவே இன்றுவரை உள்ளது. அதை காலத்துக்கு ஏற்ப மாற்றுவது எப்போதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மக்களிடம் வரும் எந்த ஒரு ஆக்கபூர்வமான மனமாற்றத்தையும் இந்து மதம் தடுக்காது. ஏனென்றால் இந்துமதத்தின் மூலநூல்கள் என்பவை நெறிநூல்கள் அல்ல, தூயஞானநூல்கள் மட்டுமே. அவை இதைச்செய் இதைச்செய்யாதே என தடுக்கவில்லை. இதை இப்படி சிந்தனைசெய்து பார்க்கலாமே, இப்படி தியானிக்கலாமே என்று மட்டுமே சொல்கின்றன. நான் இந்துவாக இருப்பது இந்த சுதந்திரத்தை இந்த மதம் அளிக்கிறது என்பதனாலேயே.

ஆகவே இந்துமதத்தைச்சேர்ந்த ஓர் அமைப்போ ஓர் அறிஞரோ சொல்வது இந்துமதத்தின் கூற்று எனக் கொள்வது மோசடி மட்டுமே. அப்படி எவரும் எதையும்சொல்லலாம். ஆனால் எவரும் விதி சொல்ல, கட்டுப்படுத்த அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. இந்துமதம் ஒரு அமைப்பு அல்ல. ஒரு ஞானமார்க்கம் மட்டுமே. அதில் பலநூறு வழிகள் உள்ளன. எல்லா வழிகளுமே இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாத்திக ஞானமார்க்கமும் அடக்கம். வாசித்துப்பாருங்கள்

தமிழ் நீசபாஷை என்று சொன்னது யார்? இந்துமதத்தின் எந்த நூல்? எந்த ஞானி? யாரோ எங்கோ சொன்னார்கள் என நீங்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர தமிழ் மீது உங்களுக்கிருக்கும் ஆழமான இழிவுணர்வே அதற்குக் காரணம். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று செவிகளில் விஷமூற்றும் வரியைச் சொன்னவர் இப்படி அவதூறுப் பிரச்சாரம்செய்பவர்களின் வழிகாட்டியான ஈ.வெ.ராதான், எந்த இந்து ஞானியும் அல்ல.

நேர்மாறாக தெய்வத்தமிழ் என வைணவர்களாலும் சிவன் காதில் அணியும் குண்டலம் என்றும் அவன் உடுக்கின் நாதத்தால் அமைக்கப்பட்டது என்றும் சைவர்களாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்களாக வழிபடப்படுகிறது தமிழ். ஆயிரமாண்டுகளில் ஸ்ரீரங்கத்திலோ திருமாலிருஞ்சோலையிலோ நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் பாடப்படாத ஒருநாள் கடந்துசென்றதுண்டா? மதுரையிலோ நெல்லையிலோ திருமுறை பாடப்படாத ஒரு நாள் உண்டா? என்ன பேசுகிறீர்கள்?

நான் முந்தைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், சம்ஸ்கிருதம் என்றுமே அறிவுச்செயல்பாட்டுக்குரிய மொழிதான் என. பேசப்பட்ட புழக்கமொழி அல்ல அது. எஸ்பராண்டோ போலப் பொதுமொழியாக உருவாக்கப்பட்டது அது. அந்தக்கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன், அதன் பெரும் ஆசிரியர்கள் பிராமணர்கள் அல்ல என. அது சமணர்களுக்கும் நாத்திகர்களுக்கும்கூட மூலமொழிதான் என. எதையுமே நீங்கள் கண்டுகொள்வதில்லை.

ஏன் அனைத்துக்கோயிலிலும் சம்ஸ்கிருதம் மூலமொழியாக இருக்கிறது, அதற்கான வரலாற்றுக்காரணம் என்ன என்றுதான் நான் அக்கட்டுரையில் விளக்கியிருந்தேன். என்ன காரணத்தால் பிராமணர்கள் கோயிலில் பூஜைக்கு வைக்கப்படுகிறார்கள் என விரிவாக சமூகநோக்கில்தான் ஆராயவேண்டும். திருமணம் காதுகுத்து எல்லாவற்றுக்கும் பிராமணர்கள் வருவது என்பது இன்று நீங்களாக விரும்பித் தேர்ந்தெடுப்பது. தமிழகத்தின் பெரும்பாலான சாதிகளில் அப்படி வழக்கம் இல்லை. இன்று பணம் வரும்போது அதை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இந்துமதம் எங்கும் உங்களிடம் அப்படிச் சொல்லவில்லை. பிராமணர்கள் இந்துமதத்தின் பூசகர்கள் என்பது ஒரு வழிவழியான மரபு, அவ்வளவுதான். அது இந்துமத விதி அல்ல.காசி, ஸ்ரீசைலம் போன்ற பல பெருங்கோயில்களில் பக்தர்கள் அனைவருமே கருவறைசென்று தொட்டு பூஜை செய்யலாம் என்ற விதி ஆயிரமாண்டுகளாக உள்ளது.. இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான கோயில்களில் பிராமணர்கள் பூஜைசெய்யவில்லை . பலநூறு பூசாரிக்குலங்கள் உள்ளன. பல சமூகங்கள் அவர்களுக்குள்ளாகவே பூசாரிக் குலங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சம்ஸ்கிருதம் எப்போது கருவறைக்குள் வருகிறது? ஒரு தெய்வம் குல, இன, பிராந்திய அடையாளம் விட்டுப் பெருந்தெய்வமாக ஆகும்போதுதான். அய்யா , அதைத்தானே நான் கட்டுரையிலே சொல்லியிருந்தேன். அதையே சொல்லித் திருப்பிக் கேள்வி கேட்டால் என்னய்யா செய்வேன்?

அன்புள்ள செல்வம், உங்கள் பிரச்சினைதான் என்ன? நான் எழுதியிருந்த வினாவுக்கு பதிலாக நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்கெல்லாம் எதையெல்லாம் கேட்கின்றன என்று பாருங்கள். நீங்கள் இந்து என்கிறீர்கள். இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள், காரணம் சாதி என்கிறீர்கள், சம்ஸ்கிருதம் என்கிறீர்கள், பிராமணர் என்கிறீர்கள். எதை வலுக்கட்டாயமாக நம்ப விரும்புகிறீர்கள்? அதற்கான உளவியல் காரணம் என்ன? அந்தக் காரணத்தை இழக்கலாகாது என்பதற்காகத்தான் எழுதிய எதையுமே வாசிக்காமல், புரிந்துகொள்ளாமல் மீண்டும் கேட்கிறீர்களா?

அந்தக்காரணம் என்ன தெரியுமா? பொதுமைக்கு எதிரானவர் நீங்கள் என்பதே. உங்கள் சாதியநோக்கைத் தாண்டிச்செல்ல உங்களால் முடியவில்லை என்பதே. அதற்கான பழியைப் போட நீங்கள் இந்துமதத்தை பிராமணர்களை தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள்.

இந்த எதார்த்தத்தை நீங்கள் மானசீகமாக ஒப்புக்கொண்டால் நீங்கள் முதலில் உங்கள் சாதியின், குடும்பத்தின் உளவியலில் ஊறியுள்ள பொதுமைக்கு எதிரான அம்சங்களை நோக்கித் திரும்புவீர்கள். அதற்கான ஊற்று என்ன என்று உங்கள் இனக்குழு மனநிலையில் இருந்து கண்டுகொள்வீர்கள். அதைக்களைய உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மதம், பிராமணர் எனப் பழிசொல்ல இடம்தேடி அலைய மாட்டீர்கள். அதுதான் தொடக்கம்.

பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை. நாமெல்லாருமே ஒரே கடந்தகாலக் குட்டையில் ஊறியவர்கள்தான். அதைக் கடந்து செல்வதைப்பற்றி சிந்திப்போம். நாம் மாறினால் நம் மதமும் மாறும்.

எனக்கு முன்னால் நிற்கும் பிரச்சினை இதுதான் செல்வம். நான் பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவேன். அதில் எதையுமே படிக்காமல், பொருட்படுத்தாமல், முன்னர் சொன்னதையே திருப்பிச்சொல்லி எனக்குச் சுடச்சுட பதில் சொல்லிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள் பிறர். ஈவேராவின் வைக்கம் போராட்டம் முதல் இன்றைய காந்தி வரை இதுவே நிகழ்கிறது. நான் நிறுத்திக்கொள்ளும்போது என்னை ‘வாயடைக்க’ செய்துவிட்டதாகக் கொண்டாடியும் கொள்வார்கள்

அதைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால் சரி. இல்லையேல் திருப்பி வாசியுங்கள், புரிந்துகொள்வீர்கள்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒரு விஷயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். சென்ற பல வருடங்களில் உங்களைப்போல இத்தனை ஆழமான அடிப்படையான வினாக்களைக்கொண்ட கடிதங்களை மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். ஆகவே உங்களுடைய கடிதங்கள் ஒவ்வொன்றுமே மிக முக்கியமானவை என நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.

ஆகவே நான் உங்கள் வினாக்களுக்கு ஒரு விவாதத் தரப்பு என்ற நிலையில் என் பதில்களைச் சொல்கிறேன். என்னுடைய எல்லா பதில்களையும் அப்படித்தான் சொல்கிறேன் என்றாலும் உங்களிடம் இன்னும் அழுத்தமாக இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். உங்கள் சொந்தத் தேடல், சொந்த சிந்தனையில் நீங்கள் முன்னகரும்போது என்னுடைய வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். அது மட்டும் போதும்.

‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு நாம் ஓரான் பாமுக் வரை செல்லவேண்டிய தேவை இல்லை. இந்து மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதற்கிணையான எண்ணங்கள் இந்தியாவில் உருவாகிவிட்டன.

முதலில் அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அந்த மனநிலைகளையும் பார்ப்போம். வெள்ளையர்களுடன் இணைந்து வாழ்ந்த மேல்தட்டு, படித்த இந்துக்கள் ஒரு தர்மசங்கடத்தை அடைந்தார்கள். இந்துமதத்தை உதறவும் முடியாமல் தக்கவைக்கவும் முடியாமல் ஒரு பெரும் சிக்கலில் இருந்தார்கள்.

இந்துமதத்தின் ஆசாரங்களும், வழிபாட்டுமுறைகளும் அன்று வெள்ளையர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் பிரசாரம் உச்சகட்டவேகத்தில் இருந்தது அன்று. கல்விக்கூடங்களிலேயே அந்த விமர்சனங்களை கேட்டு வளர்ந்தவர்களாகவே அன்றைய படித்த இந்துக்கள் இருந்தார்கள்.

அந்த விமர்சனங்களை மதப்பிரசாரம் என்று எடுத்துக்கொள்ள படித்த இந்துக்கள் பழகினார்கள். அதைப்பற்றிய பல குறிப்புகளை நாம் அக்காலகட்டத்தைச் சித்தரிக்கும் வாழ்க்கைவரலாறுகளில் காணலாம். தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கிறித்தவம் நிகழ்த்திய மாபெரும் மானுட இன அழித்தொழிப்புகளைச் சுட்டிக்காட்டி அவர்களை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் ஐரோப்பிய நவீன தாராளவாத சிந்தனைகள், நவீன பகுத்தறிவுச் சிந்தனைகளின் வினாக்களை எதிர்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு நவீன ஐரோப்பா மீது பெரும் ஈடுபாடும் பக்தியும் இருந்தது. அவர்களின் ஆதர்ச புருஷர்களெல்லாமே அங்குதான் இருந்தார்கள். நவீன ஐரோப்பியச்சிந்தனைகளை அவர்கள் முறையாகக் கற்கவும் செய்தார்கள். மறுபக்கம் இந்து மரபின் சிந்தனைகளோ அவர்களுக்கு சரியாக அறிமுகமாகியிருக்கவில்லை. அவை வெறும் ஆசாரங்கள், நம்பிக்கைகள், புராணங்களாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தன. இந்துமதத்தில் அன்றிருந்த மானுடவிரோதமான ஆசாரங்களும் மூடத்தனமான சடங்குகளும் அவர்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தன.

ராஜா ராம்மோகன் ராய்

அன்றிருந்த படித்த வெள்ளையர்கூட இந்தியர்களை பழமையில் தேங்கிய மூட வழிபாடுகள் கொண்ட மக்களாகவே சித்தரித்தார்கள். குலக்குறி வழிபாடு [Totemism], மிருகவழிபாடு [Animism], பிரபஞ்சவழிபாடு [Pantheism], பலதெய்வ வழிபாடு [Polytheism], மாந்த்ரீகவழிபாடு [Shamanism] உருவ வழிபாடு [Idolatry] போன்று தங்களுக்கு முன்னரே தெரிந்த அபத்தமான அரைகுறையான சொல்லாட்சிகளால் இந்துமதத்தை அடையாளப்படுத்தினர். [இன்றும் கூட அந்தப் போக்கு அப்படியே தொடர்கிறது. இங்குள்ள பல ‘அறிவுஜீவிகள்’ அங்குள்ளவர்கள் எழுதிய நூல்களில் இருந்து பெற்ற இச்சொற்கள் வழியாகவே தங்கள் தந்தையரின் மதத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.]

இந்த படித்த இந்துக்கள் அவற்றிலிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பினர். வெள்ளையர்களின் கண்ணில் தங்களை நவீன மனிதாபிமான, ஜனநாயக, விழுமியங்கள் கொண்ட புதிய மக்களாக காட்டிக்கொள்ள்வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. ஆகவே அவர்கள் இந்து மதத்தை தங்கள் கோணத்தில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள முனைந்தார்கள். வெள்ளையர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்து ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்களும் நிராகரித்தார்கள். இவை அல்லாத ஓர் இந்துமதத்தை இந்து மரபுக்குள் இருந்து உருவாக்கிக்கொள்ள முயன்றார்கள்.

அக்காலகட்டத்தில் இந்துஞானநூல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. உண்மையிலேயே இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முயன்ற ஒருசில ஐரோப்பியரின் கடும் முயற்சி அவற்றுக்குப் பின்னாலிருந்தது. அம்மொழியாக்கங்கள் ஐரோப்பாவின் அறிவார்ந்த சிறு வட்டத்தில் புகழ்பெற்றன. அவற்றை ஆங்கிலம் வழியாகப் படித்த இந்துக்களுக்கு தங்கள் மரபின் வீச்சும் ஆழமும் புரிந்தது. ஆகவே அவற்றை மையமாகக் கொண்டு பிறவற்றை நிராகரித்து ஓர் இந்துமதத்தை உருவாக்க முற்பட்டார்கள்.

இந்த மனநிலையில் இருந்தே இந்து சீர்திருத்த இயக்கங்கள் ஆரம்பித்தன. மிகச்சிறந்த உதாரணமாக நாம் பிரம்ம சமாஜத்தைச் சொல்லலாம். பிரம்ம சமாஜம் உருவாக்க முயன்றது நவீன ஐரோப்பிய நோக்குக்கு உகந்த ஒரு இந்துமதத்தைத்தான். இந்து மதத்தின் அடிப்படையான தத்துவ விவாதங்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்கமுழுக்க கிறித்தவ பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு மதம்தான் பிரம்ம சமாஜம்.

பிரம்மசமாஜம் அன்று கல்கத்தா உயர்குடிகள் நடுவே பிரபலமாக இருந்திருக்கிறது. வெள்ளையர்களுடன் பழகுவதற்கு பிரம்ம சமாஜம் சிறந்த உபாயம் என்ற எண்ணம் இருந்தது. பிரம்மசமாஜிகள் ஆலயவழிபாடு, துறவு, பண்டிகைகள் போன்ற இந்துமத வழக்கங்களை எல்லாம் கடுமையாக நிராகரித்தார்கள். ஆங்கிலம் கற்ற இளைஞர்கள் பிரம்ம சமாஜத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினர்.

ஆகவே பிரம்மசமாஜத்தில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்துவிடுவார்களோ என்ற கிலி வங்காளப் பெற்றோர்களை ஆட்டிவைத்தது. பாரதியின் ஆறில் ஒருபங்கு போன்ற கதைகளில் இந்த அச்சத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

பிரம்மசமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தின் பகுதிகள் என்று சொல்லப்பட்ட பல மூடநம்பிக்கைகள் களையப்படுவதற்கும் தவறான ஆசாரங்கள் தடைசெய்யப்படவும் காரணமாக அமைந்தன என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டத்தில் இந்துமதத்தின் தனித்தன்மைகள் அனைத்தையுமே பிரம்மசமாஜம் அழிக்கிறதா என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. ஆகவே அதற்கு எதிரான சிந்தனைகள் உருவாயின. பிரம்மசமாஜம் அதன் எதிர்விளைவாக தீவிரமான மரபுவழிபாட்டு நோக்கை உருவாக்கியது. இதை நாம் தாகூரின் கோரா நாவலில் காணலாம்.

பின்னர் ஒரே ஒருநபர் தன் தனித்த ஆன்மீக வல்லமையால், மேதைமையால் பிரம்மசமாஜம் எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் பதில் சொன்னார். பிரம்மசமாஜம் என்ற அமைப்பு முழுமையாகவே மறையக் காரணமானார்– ராமகிருஷ்ண பரமஹம்சர்!

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ணர் பிரம்மசமாஜம் உருவாக்கிய அந்தத் துடிப்பான படித்த இளைஞர்களையே தனக்கு சீடர்களாக ஆக்கினார். அவர்களில் மாணிக்கம் விவேகானந்தர்தான். அவர் பிரம்மசமாஜத்தின் மொழியில் பேசிய வேதாந்தி. பிரம்மசமாஜம் விவேகானந்தரை உக்கிரமாக எதிர்த்தது. அதன்பிரதிநிதியான மஜும்தார் என்பவர் அமெரிக்காவில்கூட விவேகானந்தரைப்பற்றி அவதூறுகளைப்பரப்ப அரும்பாடுபட்டார் என்பது வரலாறு. அதைமீறி இந்து மரபின் ஞானமும் பண்பாடும் அதன் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் இல்லை என்பதை விவேகானந்தர் நிறுவினார். இந்து மதம் அதன் அடிப்படைகள் ஏதும் சிதையாமலேயே நவீன உலகுக்குரியதாக முன்னால் வந்து நிற்க முடியும் என்று காட்டினார்.

ராஜா ராம்மோகன் ராயின் காலகட்டத்தில் இந்துப் பண்பாட்டை இந்து மதத்தில் இருந்து பிரித்துக் காண்பதற்கான முயற்சிகள், அது சம்பந்தமான விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஒருவன் இந்து மதத்தின் எந்த ஆசாரங்களையும் பின்பற்றாத இந்துவாக இருக்க முடியுமா என்ற வினா அன்று முக்கியமாக இருந்துள்ளது. கோரா நாவலை இது சமபந்தமான விவாதத்திற்கான தொடக்கமாக வாசித்துப்பார்க்கலாம்.

அதன்பின் அந்த வினாவை நாம் ஜவகர்லால் நேருவின் எழுத்துக்களில் காண்கிறோம். என் நினைவு சரியென்றால் கலாச்சார இந்து என்ற சொல்லாட்சியையே நான் நேருவின் எழுத்துக்களில் வாசித்திருக்கிறேன்.

நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர். அவரது நாத்திகமென்பது ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளில் பின்புலம் கொண்டது. அவர் அன்று ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த கிறித்தவ மதமறுப்புவாதத்தை தனக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்தார். குறிப்பாக அவரிடம் பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் பாதிப்பு அதிகம். கூடவே நேருவுக்கு ஐரோப்பிய இயற்கைவழிபாட்டு [Naturalism] மரபுகளிலும் ஈடுபாடு இருந்தது.

ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்பண்பாட்டின் தத்துவச்சிந்தனைகள், அழகியல், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர் உணர்ந்தார்.

நேரு

அதன்பொருட்டு அவர் கண்டடைந்த அடையாளமே கலாச்சார இந்து என்பது. அதாவது இந்துமதம் பல்லாயிரமாண்டு காலமாக உருவாக்கிய எல்லா சாதகமான பண்பாட்டுக்கூறுகளுக்கும் தன்னை வாரிசாக வைத்துக்கொள்ளுதல். அதே சமயம் கடவுள், ஆலயவழிபாடு, ஆசாரநம்பிக்கைகள் போன்றவற்றில் இருந்து முழுமையாகவே விலகியிருத்தல் என அதை வரையறுக்கலாம்.

நேரு யுகத்தின் பல முக்கியமான சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தங்களை அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். க.நா.சு. தன்னை கலாச்சார ரீதியாக மட்டும் இந்து என்று சொல்வதுண்டு. நான் முதன்முதலில் க.நா.சு.வை சந்தித்த கூட்டம் விஜில் என்ற இந்து அமைப்பால் நடத்தப்பட்டது. அதில் க.நா.சு. தன்னை கலாச்சார இந்து என சொல்லிக்கொண்டதைக் கேட்டுதான் அச்சொல்லையே நான் அறிந்துகொண்டேன்.

க.நா.சு.வைப்போலவே சுந்தர ராமசாமியும் தன்னை பண்பாட்டு அடிப்படையில் மட்டுமே இந்து என முன்வைத்தவர். நானறிந்து சுந்தர ராமசாமிக்கு இறைநம்பிக்கையோ மதப்பிடிப்போ இருந்ததில்லை. பி.கெ.பாலகிருஷ்ணன் அவரது கட்டுரைநூலில் தன்னை கலாச்சார இந்து என்கிறார். இந்தியச்சூழலில் டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற பலரை சுட்டிக்காட்ட முடியும். இன்றும் கூட இந்த அடையாளத்தை தனக்கெனக் கொண்ட பல சிந்தனையாளர்களைக் காணலாம்.

தமிழில் இந்து என்ற சொல்லை கலாச்சாரம் சார்ந்த பொருளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக முன்வைத்து வாதிட்டவர் என ஜெயகாந்தனைச் சொல்லலாம். ‘நான் நாத்திகன், ஆனால் இந்து’ என்று அவர் மேடைகளில் முழங்கியிருக்கிறார். கலாச்சார இந்து என்ற கருத்தை ஜெயகாந்தன் வெவ்வேறு கோணங்களில் விளக்கியிருக்கிறார்.

ஜெயகாந்தன்

ஆகவே பண்பாட்டு இந்து என்ற கருத்துநிலை புதியதல்ல. குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கொண்டது அது. இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி தொடர்ச்சியாக வளர்ந்து இன்றும் புழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்து நிலைப்பாடு அது. அதை நாம் பாவிக்கையில் எதற்காக, எந்தச் சூழலில் அதற்கான தேவை வருகிறது என்ற புரிதல் நமக்குத்தேவை.

பிரம்மசமாஜம் இந்துமதத்தை இரண்டாகப்பிரித்துக் காண்பதற்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? அன்றைய ஐரோப்பா தன் பார்வையில் இந்துமதம் என்ற ஓர் அமைப்பை உருவகித்துக்கொண்டது. அவர்கள் நோக்கில் அது பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, சாதி தீண்டாமை உயிர்ப்பலி முதலிய சமூக ஆசாரங்கள், பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள், பல்வேறு மூடநம்பிக்கைகள், பலவகையான மடங்கள், தீவிரமான பக்தி ஆகியவற்றாலான ஒரு ஒற்றை மதம்.

ஐரோப்பியர் அறிந்திருந்த மதங்கள் எல்லாமே ஒற்றைப்படையான ஒழுக்குள்ளவை, திட்டவட்டமான கட்டமைப்புள்ளவை. இந்துமதத்தையும் அவர்கள் அப்படி உருவகித்துக்கொண்டார்கள். அவர்கள் இந்துமதத்தை ஆராய ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமதம் அதன் இயல்பான பன்மைத்தன்மை கொண்டதாக, நெகிழ்வானதாகவே இருந்தது. ஐரோப்பியர் உருவகித்துக்கொண்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத உருவகத்தை அவர்களிடமிருந்தே நவீனக்கல்விபெற ஆரம்பித்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதுதான் நாம் இன்று அறியக்கூடிய இந்துமதம் உருவானது.

ஐரோப்பியர்களில் பெருவாரியானவர்களின் நோக்கில் இந்துமரபின் எல்லா கூறுகளும் ஒரே பேரமைப்பின் பகுதிகள். ஒன்றுடனொன்று இணைந்து இயங்கக்கூடியவை. அதாவது வேதாந்த தத்துவமும் உடன்கட்டை ஆசாரமும் ஒரே மதத்தின் இரு அம்சங்கள். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. உடன்கட்டை ஆசாரம் காட்டுமிராண்டித்தனமானது. ஆகையால் வேதாந்தமும் காட்டுமிராண்டித்தனமானதே. உடன்கட்டை போன்ற ஆசாரங்களை உருவாக்கி நிலைநாட்டுவது வேதாந்தத்தின் தத்துவமையமே. ஆகவே இந்துமதம் நிராகரிக்கப்படவேண்டும்.

இந்த ஒற்றைப்படையாக்கலை இந்து ஆசாரவாதிகள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர்களின் ஆசாரத்துக்கு இது மத அங்கீகாரத்தை அளிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை இந்துமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிரானது. ஆசாரம் பேசும் இந்து பழமைவாதிகளும் நாத்திகம் பேசும் இந்துமத எதிர்ப்பாளர்களும் இந்து மதம் பற்றியும் இந்து மரபு பற்றியும் கொண்டிருக்கும் உருவகம் ஒன்றே. அது ஐரோப்பியர்களால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து பழமைவாதிகள் இந்துஞான மரபு என்பது வைதீக மரபே என வாதிடுவார்கள். அந்த வைதீகமே வேதாந்தம் என்பார்கள். வைதீக மரபின் எல்லா ஆசாரங்களுக்கும் வேதாந்தமே அடிப்படை என்பார்கள். தீண்டாமை உட்பட அனைத்து ஆசாரங்களையும் இந்துமததின் பிரிக்கமுடியாத பகுதிகள் என்பார்கள். வேதாந்தமும் அதில் அடக்கம் என்பார்கள். அதாவது இந்துமதம் என்ற அமைப்பின் உள்ளியக்கங்களை நிராகரித்து அதை தங்களுக்குச் சாதகமான ஒற்றைஅமைப்பாக முன்வைப்பார்கள். முன்னோர் சொன்ன ஒரு நெறி என இந்துமதத்தை வரையறை செய்வார்கள்.

அச்சு அசலாக அதையே இந்துமத விரோதிகளும் சொல்வார்கள். அவர்களுக்கும் வைதீக மரபே இந்துமதம். அதன் எல்லா ஆசாரங்களும் இந்துமதத்தில் இருந்து பிரிக்கமுடியாதவை. அதன் ஒருபகுதியே வேதாந்தம். அதன் ஆசாரங்களுக்கும் தத்துவங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே முரண்பாடுகளே இல்லை. அவை ஒன்றே! இவ்வாறு எளிமையான ஒரு எதிர்தரப்பு கிடைத்ததால்தான் நம்மூர் நாத்திகர்களால் விவாதிக்கமுடிகிறது.

ஆனால் உண்மையில் இந்து மரபு என்பது ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்டதுபோல ஒற்றைப்படையானது அல்ல. அது ஒன்றுடன் ஒன்று மறுத்து வாதிட்டு வளர்ந்த பல்வேறு ஞானத்தரப்புகளின் பெருந்தொகை. பன்மைத்தன்மையே அதன் அடையாளம். அதில் எந்த தத்துவத்தரப்புக்கும் மைய இடம் கிடையாது. அதன் அடிப்படை ஆசாரங்களோ, நம்பிக்கைகளோ, சடங்குகளோ அல்ல. அது மறுத்தும் ஏற்றும் பிளந்தும் இணைந்தும் தன் முரணியக்கம் மூலம் முன்னகரும் ஒரு ஞானவெளி.

மார்க்ஸிய ஆய்வுமுறையை முறையாகக் கடைப்பிடித்த வெகுசிலர் இந்த இயக்கத்தைச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமானவர் கெ.தாமோதரன். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் ஓர் எல்லைவரை. முரணியக்கம் என்ற கருதுகோள் அதற்கு அவர்களுக்கு உதவியிருக்கிறது. நம்மூரில் மார்க்ஸியதத்துவம் அறிந்த எவரும் இல்லை. அது இங்கே ஒரு கட்சிநம்பிக்கை மட்டுமே. இங்குள்ள மார்க்ஸியர் திராவிட இயக்கத்திடமிருந்து சித்தாந்தத்தை கற்றுக்கொள்பவர்கள் — தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்து குறிப்பாக.

இந்துஞானமரபு என்பது ஒட்டுமொத்தமாக அந்த விவாதக்களத்தையே சுட்டுகிறது.அதன் மிகப்பெரிய தரப்பாக இருப்பது வேதாந்தம். வேதாந்தத்தின் வளர்ச்சியடைந்த வடிவங்களே பிற்கால வேதாந்தங்களான அத்வைதம் முதலியன. அவையே இந்து தத்துவமரபின் சிகரங்கள். அவை ஆசாரங்களையோ வழிபாட்டுமுறைகளையோ அல்லது நம்பிக்கைகளையோ சார்ந்தவை அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்ததாக அறியப்படும் எந்த வழிபாட்டு மரபின் துணையும் இல்லாமல் நிற்க வேதாந்தத்தால் முடியும்.

விவேகானந்தர் வழியாக இந்திய நவீனச் சிந்தனைக் களத்தில் ஆணித்தரமாக இந்தக் கருத்து பதிவானதுமே ஒற்றைப்படையான இந்துமரபை உருவகித்திருந்த தரப்புகள் பின்வாங்க ஆரம்பித்தன. இந்துமதத்தை ‘சீர்திருத்தி’ மறுதொகுப்பு செய்து அதற்கு வெளியே இருந்து ஓர் ‘அறிவார்ந்த அமைப்பை’ உருவாக்க வேண்டியதில்லை என்ற கருத்து வலுப்பட்டது. அந்த அமைப்பு என்றுமே இந்துமரபுக்கு உள்ளேயே இருந்துவந்துள்ளது. இந்துமரபுக்குள் மேலும் அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பது உறுதிப்பட்டது. பிரம்மசமாஜம் உதிர்ந்தழிந்தது.

விவேகானந்தரின் குரலில் உள்ள பன்மைத்தன்மைக்கு இன்னும் அழுத்ததை அளித்தது நாராயணகுருவின் இயக்கம். அதுவும் வேதாந்தத்தையே முன்வைத்தது. ஆனால் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்ட எல்லா பழமையான ஆசாரங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அது வேதாந்தத்தை உபயோகித்தது.

இத்தகைய பன்மைநோக்குள்ள இந்துமதத் தரப்பை எதிர்கொள்ள நம்முடைய சம்பிரதாயமான இந்து எதிர்ப்பாளர்களால் முடிவதில்லை என்பதைக் காணலாம். அவர்கள் இந்தத் தரப்பையும் ஆசாரவாதத் தரப்பாக சித்தரித்துக்கொள்ளத்தான் முழுமூச்சாக முயல்வார்கள். அதன்பின் ஆசாரவாதத்திற்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் அவன் மேல் சுமத்துவார்கள்.

உதாரணமாக ஒருவர் தன்னை வேதாந்தி என்றும் இந்து என்றும் சொல்கிறார். வேதாந்த நோக்கில் நின்று அவர் இந்துமதத்தின் ஒட்டுமொத்த ஆசாரவாதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் முழுமையாக நிராகரிக்கிறார். நம் இந்து எதிர்ப்பாளர்கள் என்ன சொல்வார்கள்? அவரை எதிர்கொள்ள அவர்களால் முடியாது. இந்து மதம் மீது அவர்கள் சொல்லும் எந்த விமர்சனமும் அவருக்குப் பொருந்தாது.

ஆகவே அவர்கள் அவரை பொய்வேடம் போடும் ஆசார இந்து என்று அவதூறு செய்வார்கள். அவர் சாதிப்பிரிவினையை, மூடநம்பிக்கைகளை, மனிதாபிமானமற்ற அனைத்தையும் முற்றாக எதிர்த்து அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்தால்கூட அவரை சாதிவெறியர், மூடநம்பிக்கைகளைப் பரப்புபவர், மனிதாபிமானத்துக்கு எதிரான பழமைவாதி என்று முத்திரையிட்ட பின்பே அவரை விமர்சிப்பார்கள். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். நாராயணகுரு உட்பட.

இப்போது உங்கள் வினாவுக்கு வருகிறேன். நீங்கள் ஏன் பண்பாட்டு இந்து என ஓர் அடையாளத்தைத் தேடுகிறீர்கள்? விடை இதுதான். இந்து ஆசாரவாதிகளாலும் இந்து எதிர்ப்பாளர்களாலும் ஒருங்கே ஏற்கப்பட்டுள்ள ஒற்றைப்படையான இந்துமதம் என்ற உருவகத்தை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த இந்துமதத்துக்குள் இருக்க வேண்டுமென்றால்  இந்துமதத்தின் எல்லா நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் ஏற்றாகவேண்டும் என நீங்களும் நம்புகிறீர்கள்.

அது உங்களால் முடியாத காரியம். காரணம் உங்கள் தர்க்கபுத்தி, உங்கள் மனிதாபிமானம். ஆகவே இந்துமரபின் பண்பாட்டு அம்சங்களை மட்டும் வெளியே எடுத்து அவற்றை மட்டும் உங்களுடையதாகக் கொள்ள நினைக்கிறீர்கள். அவற்றை மட்டுமே கொண்டு உங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.

ஐரோப்பியர்களால் நம் மீது சுமத்தப்பட்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தச் சிக்கலே எழாது. இந்துமரபு என்பது ஒரு மாபெரும் விவாதக்களம். ஒரு பண்பாட்டுவெளி. அதில் நீங்கள் எந்தத் தரப்பையும் எடுத்துக்கொள்ளலாம். எதை எடுத்தாலும் நீங்கள் இந்துவாகவே இருக்கிறீர்கள்.

முழுமுற்றான ஆசார மறுப்புக்கு, முழுமையான நாத்திகவாதத்துக்கு இந்து மரபுக்குள் இடமிருக்கிறது. அதாவது நீங்கள் இந்து மதத்துக்கு ‘வெளியே’ போய் உருவாக்கிக்கொள்ளும் அந்தப் பண்பாட்டு அடையாளம் இருக்கிறதே அதற்கும் இந்து மதத்துக்குள் இடமிருக்கிறது. அந்தப் ‘பண்பாட்டு இந்து’வாக நீங்கள் உள்ளேயே இருக்க முடியும்.

அதாவது இந்துமதத்தின் இன்றுள்ள எந்த நூல்களையும் ஏற்காமல், எந்த அமைப்புக்குள்ளும் செல்லாமல், எந்த வழிபாட்டுமுறையையும் கடைப்பிடிக்காமல், எந்தக் கடவுளையும் நம்பாமல், எந்த ஆசாரங்களையும் ஒப்புக்கொள்ளாமல்கூட நீங்கள் இந்துவாக நீடிக்கமுடியும். இந்த மாபெரும் விவாதக்களத்தில் உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்கிக்கொண்டால் போதும். அதற்கு பலநூறு உதாரணங்கள் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் ராமலிங்க வள்ளலார். அவர் இந்துதானே? அவர் உருவாக்கிய சோதிவழிபாடு இந்துமதத்தின் அதுவரையிலான எல்லா தரப்பையும் முழுமையாக நிராகரித்து உருவானது அல்லவா?

ஓரான் பாமுக்

இறுக்கமான தீர்க்கதரிசன மதங்களுக்குள் இந்த இடம் இல்லை. பாமுக் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லீம் என ஏன் சொல்ல நேர்கிறது? இஸ்லாம் என்பது திட்டவட்டமான எல்லைகள் கொண்ட ஒரு மதம். அதனுள் இருப்பவர் அல்லாவை, முகமதுவை, குரானை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அவர் இஸ்லாமியர் அல்ல. இல்லை என்னால் அந்த முழு விசுவாசத்தை அளிக்கமுடியாது, அதேசமயம் இஸ்லாம் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளில் உருவாக்கிய பண்பாட்டுமரபை என்னால் துறக்கவும் முடியாது என அவர் உணரும் நிலையில் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்கிறார். அப்படி ஒரு கட்டாயம் ஓர் இந்துவுக்கு எங்கே இருக்கிறது?

இந்து என்ற அடையாளத்தை விடுங்கள். சைவத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அதுவே ஒரு ஞானப்பரப்புதானே ஒழிய ஒருங்கிணைக்கப்பட்ட மதம் அல்ல. சைவ வழிபாட்டாளர்களிலேயே இன்று எத்தனை வகையானவர்கள் இருக்கிறார்கள்! தினம் திருவிளையாடல்புராணம் வாசித்து லிங்கபூசை செய்யும் சைவரும் உண்டு, சிவோஹம் [சிவம்அஹம் - நானே சிவன்] என உணர்ந்து தியானத்தில் அமரும் சைவரும் உண்டு இல்லையா? இருவேறு எல்லைகள்! சைவத்துக்கு ஆறு அகச்சமயங்கள் – சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என அறிந்திருப்பீர்கள். ஆறு சிவன்கள்!

வரலாற்று நோக்கில் சைவத்தை பொதுவாக மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, சைவ வழிபாட்டுமுறை. அதில் சிவலிங்கபூசை, உள்ளிட்ட பல சடங்குகள் உள்ளன. மிகத்தொன்மையானது அது. இரண்டு, சைவப்பெருமதம். கிபி நான்காம் நூற்றாண்டுவாக்கில் உருவாக ஆரம்பித்த மதம் இது. பல்வேறு தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டு சிவனின் எல்லா வடிவங்களையும் ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு இது வளர்ந்து வந்தது. பக்தி வழிபாட்டுமுறை இதன் மையப்போக்கு. நாம் இன்று சைவமென அறியும் பேரிலக்கியங்களும், கலைகளும், ஆலயங்களும் எல்லாம் இதன் ஆக்கங்கள்.

சைவசித்தாந்தம் காலத்தால் பிந்தியது. பத்தாம் நூற்றாண்டுவாக்கில்தான் அதன் தெளிவான வடிவங்கள் உருவாக ஆரம்பித்தன என்று சொல்லலாம். சைவசித்தாந்தத்தின் உயர்தத்துவதளம் என்பது மேலும் சில நூற்றாண்டுகள் கழித்தே உருவானது.

சைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.

ஒரு சிவபக்தருக்கு சிவன் என்றால் என்ன? பிரபஞ்சநாயகனாகிய இறைவன். உலகை ஆக்கி நடத்தி அழிப்பவன். அவனைப்பணிந்து அவனை இறைஞ்சி நல்வாழ்க்கையும் வாழ்க்கைநிறைவும் அடையலாம். ஆனால் ஒரு தூய் சைவசித்தாந்திக்கு சிவம் என்றால் என்ன? அவன் நோக்கில் பிரபஞ்சம் என்ற பேரில் அறியக்கிடைப்பது ஆற்றலின் முடிவற்ற வெளி. அதை அவன் சக்தி என்கிறான். அந்த சக்தியை செயல்தன்மை கொண்டதாக, படைப்புத்தன்மை கொண்டதாக, ஆக்கக்கூடிய பிரபஞ்ச சாரமான கருத்துநிலை ஒன்றுள்ளது. அதுவே சிவம்.

அந்த சிவத்தை அவன் வழிபட வேண்டியதில்லை. அதனிடம் அவன் இறைஞ்சவேண்டியதில்லை. அதற்கு உருவம் ஏதும் கற்பிக்கவேண்டியதில்லை. அந்த சிவத்தின் அலகிலா பெருநடனத்தை பிரபஞ்சத்திலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அவன் அறிந்துணர்ந்தால் போதும். அதுவே அவனுடைய நிறைநிலை. அவனுடைய விடுதலை. இங்கே மதநம்பிக்கை எங்கே வந்தது? இது ஒரு உயர்தத்துவ விவாதம் மட்டுமே. ஒட்டுமொத்த தரிசனம் நோக்கிச் செல்வதனால் இது ஆன்மீகம். இந்த தளத்தில் இருப்பவனும் சைவனே.

சைவனாக இருந்தால் திருநீறு பூசவேண்டும், தேவாரம் பாடவேண்டும், சிவபூசை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். அவற்றை முழுநம்பிக்கையுடன் செய்யமுடியாதென்பதனால் சைவத்தின் பண்பாட்டுக்கூறுகளை மட்டும் தக்கவைக்க நினைக்கிறீர்கள். அது சைவம் அளிக்கும் வெளியை அறியாததனால் தோன்றுவது என்பதையே சொல்லவந்தேன். அவை எதையுமே செய்யாமல் தூய தத்துவநிலையிலேயே நீங்கள் சைவனாக இருக்கமுடியும்.

சரி, சைவத்தின் இந்த தரிசனத்தை நிராகரித்து முழுமுற்றான நாத்திகக்கொள்கை நோக்கிச் சென்றால்? சைவமரபு புறச்சமயம் என வகுக்கும் லோகாதய மதத்துக்குச் சென்று சேர்கிறீர்கள். அதற்குள்ளும் பல தரப்புகள் உள்ளன.

இப்படிச் சொல்லலாம். ஒரு கோட்டை இருந்தால் நீங்கள் அதற்கு வெளியே வீடு கட்டிக்கொள்ளலாம். இது இயல்பாக உருவான ஓர் ஊர். ஊருக்கு வெளியே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டினால் ஊர் உங்கள் வீட்டையும் சேர்த்து பெரிதாகிறது அவ்வளவுதான்.

அதாவது இன்று நீங்களிருக்கும் நிலையில் உங்களுக்கு கலாச்சார இந்து போன்ற அடையாளங்கள் தேவை இல்லை. அப்படி உங்களை வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உங்களுக்குச் சைவமதம் மரபாக வந்திருக்கிறது. அதன் அன்றாடவழிபாட்டுத் தலத்துடன், கடவுள் உருவகத்துடன் நீங்கள் முழுமையாக இயைய முடியவில்லை என்பதற்காக அதை விட்டு வெளிவந்து கலாச்சார இந்து என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை. அதற்குள்ளேயே அந்த அன்றாட மத-ஆசார-வழிபாட்டுத் தளங்களை மீறி நீங்கள் மேலும் மேலும் முன்னகர இடமிருக்கிறது. ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.

அந்த உச்ச எல்லைக்குச் சென்றும் நீங்கள் நிறைவடையவில்லை என்றால், நீங்கள் சைவமோ இந்துமதமோ அளிக்கும் எல்லா ஆன்மீக-தத்துவ விளக்கங்களையும் முழுமையாகக் கற்று நிராகரித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் உங்களை நாத்திகர் என்று முழுமையாகவே உணர்கிறீர்கள் என்றால், அதேசமயம் இந்துஞானமரபுக்குள் உள்ள சார்வாகம் முதலிய நாத்திகத் தரப்புகளையும் முழுக்க நிராகரிக்கிறீர்கள் என்றால் மட்டும் நீங்கள் வெளியே செல்லலாம். கலாச்சார இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் ‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு என்றே நான் நினைக்கிறேன். இரு காரணங்கள்.

இந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என நாம் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை.

அவர்களை பௌத்தர்கள் சமணர்கள் சீக்கியர்களாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்துக்கள் என்று சொல்லமுடியும். சூபி வழிபாட்டுமுறைகளையும் அப்படிச் சொல்லலாம். குணங்குடி மஸ்தான் சாகிபு அல்லது பீர்முகமது அப்பா அல்லது உமறுப்புலவரின் பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை மேலே சொன்ன இந்துப்பண்பாட்டுத்தொகுப்பில் இருந்து வந்தவையே.

நாராயண குரு

இங்கே இந்துப்பண்பாடு என்ற சொல்லை, பேதங்களை உருவாக்குவதாக அல்ல, பேதங்களைக் களைவதாகவே பயன்படுத்தவேண்டும். அது எவருக்கும் சொந்தமானதல்ல. எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதும் அல்ல. இந்த மண்ணில் உள்ள நதிகளைப்போல மலைகளைப்போல காடுகளைப்போல இங்கே பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. ஜெயகாந்தன் ஒரு மேடையில் சொன்னது இது.

இரண்டாவதாக, ஒருவர் இந்துமரபின் எல்லா சிந்தனைகளுக்கும் அப்பால் முழுமையாகவே மேலைநாட்டுச் சிந்தனைகளைச் சார்ந்து தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அதேசமயம் இந்துப் பண்பாட்டுக்கூறுகளை இழக்கவும் விரும்பவில்லை என்றால் அவர் தன்னை கலாச்சார இந்து என அடையாளம் காட்டிக்கொள்ள முடியும்.

எப்படியானாலும் அது வசதியான சொல்லே. அதிலுள்ள முக்கியமான வசதி என்னவென்றால் இந்து என்ற சொல்லுக்கு எதிராக இங்கே மதமாற்ற அமைப்புகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் உருவாக்கப்பட்டிருக்கும் கடுமையான வெறுப்புக்கு அது ஒரு பதிலாக அமையும். ஓரான் பாமுக் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்று சொன்னால் அதை முற்போக்கானதுதான் என்பவர்கள், சிவேந்திரன் தன்னை பண்பாட்டு இந்து என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்தாக வேண்டுமல்லவா? அந்த வாய்ப்பை ஏன் தவறவிடவேண்டும்! :)))



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

‘எழுதி வச்சிருக்கிற ஒண்ணையுமே நான் ஏத்துக்கறதில்லீங்க’

 

அன்புள்ள சுப்ரமணியம்,

தொலைபேசியில் உங்களிடம் பேசியபின்னர் இந்த பதிலை எழுதுகிறேன். ஆகவே இந்தப்பதில் உங்களுக்காக மட்டும் அல்ல.

பொதுவாக சமகாலத்தில் இந்திய மதங்களைப்பற்றிப் பேசும்போது வரும் முக்கியமான இடர் இது. இந்த குழப்பங்களுடன் நான் நித்யாவிடம் பேசியதும் அவர் கொஞ்சம் கடிந்து என்னை திருத்தியதும் அதை தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொண்டு நான் மனம் வருந்தியதும் நினைவுக்கு வருகிறது.

இந்த விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ளாமல் ஒருவர் இந்திய சிந்தனைகளுக்குள் செல்ல முடியாதென்றே சொல்லலாம். ஆனால் அது மிக கடினமான ஒன்றும் கூட. காரணம், நம் கல்வித்துறை மேலைநாட்டுச் சிந்தனைகள் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லாட்சிகள், தர்க்கங்கள் எல்லாமே மேலைநாட்டுச் சிந்தனை மரபில் இருந்து பெற்றுக்கொண்டவை. ஆகவே நாம் அவற்றின் அடிப்படையிலேயே சிந்திக்கப் பழகியிருக்கிறோம்

மேலும், இந்திய சிந்தனை மரபை நாம் மேலைநாட்டு இந்தியவியலாளர்களின் வழியாகவே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இன்றுள்ளது. நம் மரபான தத்துவக்கல்விமுறையும் அதற்கான அமைப்புகளும் மறைந்துவிட்டன. ஆகவே நாம் மேலைச் சிந்தனையில் பிரதிபலிக்கும் கீழைச்சிந்தனையை கற்கிறோம்.

கடைசியாக, இந்திய சிந்தனையை நவீன கோணத்தில் ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் மேலைநாட்டு கோட்பாடுகளைச் சார்ந்து சிந்தித்தவர்கள். எம்.என்.ராய், ராகுல சாங்கிருத்யாயன், டி.டி.கோஸாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் மார்க்ஸிய நோக்குள்ளவர்கள். ஆகவே பொருள்முதல்வாத அணுகுமுறை கொண்டவர்கள்.

அதேபோல தாஸ்குப்தா, ஏ.எல்பாஷாம் போன்றவர்கள் மேலைநாட்டு கருத்துமுதல்வாத மரபுகளின் பாதிப்புள்ளவர்கள். அவர்கள் அந்தக்கோட்பாட்டின் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தினார்கள். அந்தவகை அணுகுமுறை இங்கே நான்கு தலைமுறையாக வேரூன்றிவிட்டது.

இந்த சிக்கலில் இருந்து கொண்டு நாம் யோசித்து வைத்திருப்பனவற்றை ஒரு இந்தியக் குருகுல அமைப்புக்குள் செல்லும்போது செருப்பைக் கழற்றி வைப்பது போல கழற்ற வேண்டியிருக்கிறது. அது எளிய விஷயம் அல்ல. நம் அகங்காரம் பெரிதும் அடிபடும்.

”என்னாது நோட்டீஸ் காலியா இருக்கு? ”

”நாங்க நாத்திகர்ங்க”

காரணம், அதுவரைக் கற்றதை மற என்று ஒருவர் சொல்லும்போது நமது கல்விசார்ந்து நம்மை உருவகம் செய்துவைத்திருக்கும் நாம் புண்படுகிறோம். நம்மை ஒருவர் முட்டாள் என்று சொல்லிவிட்டதாக நினைக்கிறோம். அது உண்மை அல்ல. அது வேரு ஒரு கல்விக்கான இடம் விடு என்ற கோரிக்கை மட்டுமே.

இந்திய சிந்தனை மரபை மேலைச்சிந்தனை மரபு உருவாக்கிய கலைச்சொற்கள் மற்றும் இருமைகள் [பைனரி] கொண்டு புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு தொடக்கத்துக்காக அப்படி சிந்திக்கலாம் என்றால்கூட மேலே போகப் போக நிறையச் சிக்கல்களைச் சந்திக்க நேரும்.

இப்போது நம்மிடம் புழங்கும் சொற்களையும் இருமைகளையும் பற்றியே பார்ப்போம். இந்த இருமைகளை இந்தியச்சிந்தனைச் சூழலில் மிக அழுத்தமாக நிறுவிய நூல் என்றால் அது தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதிய ‘இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ தான். [தமிழாக்கம் கரிச்சான் குஞ்சு. விடியல் பிரசுரம்] தலைப்பிலேயே இருமை வந்து விடுகிறது

அந்த இருமைகளின் அமைப்பு இது. ‘நாத்திகம் X ஆத்திகம்’ என்ற பிரிவினை முதலில் செய்யப்படுகிறது.  ‘பொருள்முதல்வாதம் X கருத்துமுதல்வாதம்’ என்ற பிரிவினை அடுத்தபடியாக வருகிறது. நாத்திகமும், பொருள்முதல்வாதமும் ஒன்றே என அடுத்தபடியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. நாத்திக,பொருள்முதல்வாத தரப்பு முற்போக்கானது. ஆத்திக, கருத்துமுதல்வாத தரப்பு பிற்போக்கானது எனப்படுகிறது.

ஆத்திக, கருத்துமுதல்வாதத் தரப்பு ஆதிக்கசக்திகளின் கருத்தியலாக வரையறைசெய்யப்படுகிறது. அவை பிராமணியம் மற்றும் வைதிகத்தின் தரப்பாக அடையாளப்படுத்தப்படுகிறது. நாத்திகம் மற்றும் பொருள்முதல்வாதம் சுரண்டப்படும் அடித்தள மக்களின் தரப்பு என்று சொல்லப்படுகிறது. இபப்டியே இந்த எளிமைப்படுத்தல் வளர்ந்து செல்லும்.

இது அரசியலில் உள்ள இருமையாக்கம். இதேபோல மதத்தில் உள்ள  இருமையாக்கமும் எளிமையானதே. ஆத்திகம் என்றால் கடவுள் உண்டு என்று நம்பக்கூடியது. ஆகவே சடங்குகள் மற்றும் ஆசாரங்களை நம்பக்கூடியது. மறுபிறவி முதல் சோதிடம் வரை அனைத்தையும் நம்பக்கூடியது. நாத்திகம் என்றால் இவை அனைத்தையும் நிராகரிக்கக் கூடியது. அதாவது நம்புவது ஆத்திகம் நிராகரிப்பது நாத்திகம்.

இத்தகைய எளிமைப்பாடுகள் வழியாகவே சிந்தித்துப் பழகி எதையுமே உள்வாங்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். எதை எடுத்துக்கொண்டாலும் இந்த அளவுகோலைப்போட்டு இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். அனிச்சையாகவே இது நடந்துவிடுகிறது.

ஒரு கருத்து சொல்லபப்ட்டதுமே அது ஆத்திகமா நாத்திகமா, கருத்துமுதல்வாதமா பொருள்முதல்வாதமா, முற்போக்கா பிற்போக்கா என்று அடையாளம் செய்துவிடுகிறோம். சிந்தனையில் ஒரு பக்கவாதத்தை உருவாக்கி படுக்க வைத்துவிடுகிறது இது.

கெ.தாமோதரன்  போன்ற மார்க்ஸிய தத்துவசிந்தனையாளர்கள் இந்த எளிமைப்படுத்தலில் உள்ள அபத்தத்தை மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதி அவரது நூல்களில் ஆன்மீகத்தில் உள்ள எளிமைப்பாட்டைப்பற்றி கடுமையாக கண்டித்திருக்கிறார்.

‘ஃபார்முலா சரிதான். ஆனா இந்த எடத்திலே ஒதைக்குதோன்னு  சின்ன சந்தேகம்’

 

ஆத்திகம் நாத்திகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திகம் நாஸ்திகம் என்ற வடமொழிச்சொற்கள் அவை. அஸ்தி என்றால் இருப்பு என்று பொருள். இருப்பதாகச் சொல்பவர்கள் ஆஸ்திகர்கள். ந – ஆஸ்திகர்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள்.

இந்திய சிந்தனையில் ஒட்டுமொத்தமாக இச்சொற்கள் பழங்காலத்தில் புழங்கியதில்லை. ஒரு குறிப்பிட்ட விவாதத்திற்குள் ஒன்றை ஏற்பவன் ஆஸ்திகன் மறுப்பவன் நாஸ்திகன். அது ஒரு ஒட்டு மொத்த தத்துவ நிலைபாடோ, தர்க்க முறையோ ஆக இருந்ததில்லை. ஏனென்றால் இங்கே அப்படி ஒட்டுமொத்தமாக மறுப்பதும் ஏற்பதும் சாத்தியம் அல்ல.

மேலைநாட்டுச் சிந்தனையில் தீய்ஸம் [Theism] என்று ஆத்திகம் சொல்லப்படுகிறது. தேவ் என்ற வடமொழிச்சொல்லில் இருந்து கிரேக்க மொழிக்குப் போனது தே [Dei] இறை என்று அதற்குப் பொருள்.அதிலிருந்து உருவான சொல் தீய்ஸம். இறைவாதம் என்று மொழியாக்கம் செய்யலாம்.

திய்ஸம் பிரபஞ்சம் இறைசக்தியால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுவதென நம்புவது. ஒரு கடவுளையோ பலகடவுள்களையோ அது நம்பக்கூடும். ஆனால் பிரபஞ்சம் அதற்கு ‘வெளியே’ உள்ள ஒரு இறைவனால் ஆளப்படுவது என்பது அதன் சாராம்சம்.

ஆனால் அது மட்டுமல்ல. அந்த ‘இறைவன்’ ஓர் ஆளுமையாக [பர்சனாலிட்டி] அதாவது இருப்பாக  இருந்தாகவேண்டும். வெறுமொரு கருத்தாக அல்லது உள்ளுறையாக இருந்தால் போதாது. அப்போதுதான் கிரேக்கச் சிந்தனை மரபின்படி அது இறைவாதம் ஆக முடியும்.மதாவது மையத்தில் ‘தெய்வம்’ இருக்க வேண்டும் – அதுவே ‘தெய்விசம்’.

அவ்வாறு நம்பும் இறைவாதத்தை நம்பாமல் இருப்பதே நம்பிக்கையின்மை வாதம் [ Atheism] இறைவனின் இருப்பைப்பற்றி அறியமுடியாது என்று சொல்வது அறியமுடியாமைவாதம் [Agnosticism] இறைவன் இல்லை இருக்க முடியாது என வாதிடுவது இறைமறுப்புவாதம் [ Antitheism]

நம் சூழலில் இந்தவகையான துல்லியமான பிரிவினைகள் இல்லை. நம்பிக்கையின்மைவாதம் மற்றும் இறைமறுப்புவாதம் இரண்டையும் சேர்த்து நாத்திகம் என்று சொல்கிறோம். அதற்கு இறைவனை மறுத்தல் என்று பொருள். அதற்கு பகுத்தறிவுவாதம் என்றும் பெயர் சொல்கிறார்கள்.

இங்கே இறைவனை மறுப்பவர்கள் மறுப்புடன் நின்றுவிடுகிறார்கள். இறைவன் இல்லாமல் பிரபஞ்சம் எப்படி உருவாகி எப்படி இயங்குகிறது என்று சொல்ல முற்படுவதில்லை. அதற்கான கொள்கைகள் ஊகங்கள் எதையும் முன்வைப்பதில்லை. ஆகவே இங்கே உள்ளது நம்பிக்கையின்மைவாதம் மட்டுமே.

கருத்துமுதல்வாதம் , பொருள்முதல்வாதம் என்பது மதத்தைவிட தத்துவத்துடன் தொடர்புள்ள உருவகம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் உண்மையிலேயே பொருண்மைத்தன்மையுடன் இருக்கின்றன என்று நம்புவது பொருள்முதல்வாதம். அப்பொருளைப்பற்றிய எல்லா அறிதல்களும் கருத்துநிலைகளும் அந்தப்பொருள்களின் இயல்புகளினால் உருவாக்கப்படுகின்றன என்று அது வாதிடுகிறது. புலன்களுக்கு தெரியும் இந்த பொருள்உலகம் புறவயமானது. மாறாதது. பொருளே முதனமையானது.

அதற்கு எதிரானது கருத்துமுதல்வாதம். வெளியே உள்ள பொருட்களின் இயல்புகள் என நாம் அறிபவை நம்முடைய அறியும்தன்மையால் அப்படி அறியப்படுகின்றன. கல் ஏன் கடினமானது என்றால் நம் கை மென்மையானது என்பதனால்தான். ஆகவே அந்த அறிதல்தான அந்த பொருள் அந்த அறிதலுக்கு அப்பால் அந்தப்பொருள் உண்மையில் என்ன என்று நம்மால் சொல்லிவிடமுடியாது.

ஆகவே நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொருளும் அந்தப்பொருளைப்பற்றிய கருத்தின் பொருள்வடிவம் மட்டுமே என்று இவர்கள் சொல்கிறார்கள். அந்தக்கருத்து எவராலும் அறியப்படாவிட்டால்கூட அப்படித்தான் இருக்கும். அதாவது கருத்தே முதன்மையானது. பொருள் அதன் ஒரு தோற்றம் மட்டுமே.

உதாரணமாக, ஓர் அணு என்றால் அந்த அணுவை உருவாக்கியிருக்கும் விதிகள் மட்டுமே. அந்த விதிகளையே நாம் அந்தப் பொருளாகப் பார்க்கிறோம். ஆகவே இந்த பிரபஞ்சமே ஒரு கருத்துக் கட்டுமானம் மட்டுமே. நாம் அதை நம் இயல்பால் பொருளாக அறிகிறோம்.

இந்த இரு தரப்புகளும் எல்லா சிந்தனை மரபுகளிலும் மோதிக்கொண்டே இருக்கின்றன என்பதைக் காணலாம். தீராத விவாதம் இது. இன்று அணுப்பிளப்பு யுகத்தில் பழைய செவ்வியல் பொருள்முதல்வாதம் அர்த்தமிழந்து போய்விட்டிருக்கிறது.

பொதுவாக இந்தப்பிரபஞ்சம் கருத்துவடிவமானது என்பவர்கள் அக்கருத்தை உருவாக்கி நிலை நிறுத்தும் ஆற்றலாக கடவுளை முன்வைப்பார்கள். ஆகவே மேலைநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கருத்துமுதல்வாதிகள் இறைநம்பிக்கையாளர்களாகவும் இருந்தார்கள்.

பிரபஞ்சத்தில் நடப்பவற்றுக்கு அதற்கு அப்பால் இருந்து எந்த சக்தியும் பொறுப்பல்ல என்று வாதிட்ட இறைமறுப்பாளர்கள் பொதுவாக இந்த பொருள்வயப் பிரபஞ்சம் உண்மையானது என்று சொல்லக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே அங்கே இறைமறுப்பும் பொருள்முதல்வாதமும் கிட்டத்தட்ட ஒரே தரப்புதான்.

அந்த பிரிவினையைத்தான் இங்கேயும் அப்படியே போட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய சிந்தனையில் இந்த பிரிவினை செல்லுபடியாவதில்லை என்பதைக் காணலாம்.

இங்கே நாத்திகம் ஆத்திகம் என்ற சொல்லேகூட தத்துவத்தில் வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்கள் உண்மையிலே உள்ளனவா, இல்லை அவை நம்முடைய அகம் நமக்கு அளிக்கும் தோற்றம்தானா என்ற கேள்வி வேதாந்தம்,சமணம், பௌத்தம் ஆகிய மதங்களில் முக்கியமான ஒன்றாகும்.

இந்த விவாதத்தில் பருப்பொருள் உண்டு என்று சொல்பவர்கள் ஆஸ்திகர்கள் எனப்பட்டார்கள் அதாவது பொருள்முதல்வாதமே ஆஸ்திகம் என்று சொல்லப்பட்டது. அதை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள்! அதாவது கருத்துமுதல்வாதம் நாஸ்திகம் எனப்பட்டது. சமணம் எல்லா பொருளும் உண்டே என்று வாதிட்டது. அந்த வாதத்துக்கு சர்வாஸ்திவாதம் என்று பெயர். இந்த விவாதம் மிகவிரிவான ஒன்று. இதில் பல கொள்கைகள் உண்டு.

சரி, அதைவிட்டுவிட்டு வழக்கமான நாத்திக-ஆத்திக பொருள்கொண்டால்கூட பல சிக்கல்கள் உள்ளன. சமணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு கோணத்தில் அது பொருள்முதல்வாதத்தை நம்புவது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் உண்மையில் உள்ளன என்று அது சொல்கிறது. அவை வெறும் கருத்துநிலையோ மாயையோ அல்ல.

அப்படியானால் சமணம் முழுக்க பொருள்முதல்வாதமா என்ன? இல்லை. சமணத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு. ஆன்மா என்று அவர்கள் சொல்வது சாராம்சமான கருத்துநிலையைத்தான். புழுவுக்கு புழுவின் ஆத்மா உண்டு. கல்லுக்கு கல்லின் ஆத்மா உண்டு. கல்லின் கல்தன்மையை தக்கவைப்பது அந்த கல்லின் ஆத்மாதான். ஆக, சட்டென்று வேறு ஒருவகையில் கருத்துமுதல்வாதத்துக்குள் சென்று விடுகிறது சமணம். 

அதாவது பொருளும் உண்டு. பொருளுக்குள் கருத்தும்  உண்டு.ஆகவே சமணத்தை ‘பொருள்முதல்வாத கருத்துமுதல்வாதம்’  என்று சொல்ல வேண்டும். அதாவது அந்த பிரிவினையே இங்கே செல்லுபடியாகாது.

சரி, கருத்துமுதல்வாத நம்பிக்கை இருப்பதனால் சமணம் ஒரு இறைவாதமா? மேலைநாட்டு இறைவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் சமணம் இறைவாதமே அல்ல. சமணத்தில் பிரபஞ்சத்தை படைத்துக்காக்கும் கடவுள் இல்லை. அவர்கள் பிரபஞ்சம் படைக்கப்பட்டதல்ல என்றும் அது வளர்வதோ மாறுவதோ இல்லை என்றும் நம்புகிறார்கள். ‘மூவா முதலா உலகம்’ என்பது சீவக சிந்தாமனியின் முதல் பாடல் முதல்வரி.

 அப்படியென்றால் அவர்கள் இறை மறுப்பாளர்களா? அதுவும் இல்லை. பிரபஞ்சம் பொருள்வயமான விதிகளின்படி செயல்படுவது அல்ல. அதன் சாராம்சமாக உள்ள கருத்தின் அடிப்படையிலேயே அது நிகழ்கிறது. அந்தக் கருத்து என்பது கிட்டத்தட்ட கடவுள் போன்றதுதான் அவர்களுக்கு.

கடவுளின் இடத்தில் அவர்கள் பிரபஞ்சத்தில் உள்ளுறைந்துள்ள ஆதார விதியை வைக்கிறார்கள். அந்த விதி எல்லா பொருட்களையும் உயிர்களையும் கட்டுப்படுத்துகிறது. அதையே அவர்கள் ஊழ் என்றார்கள். அந்த ஊழின் அடிபப்டையில் ஓயாது சுழலும் சக்கரமே இப்பிரபஞ்சம், இந்த இயற்கை, மனித வாழ்க்கை முழுக்க.

இது ஆத்திகமா நாத்திகமா? சரியாக மேலைநாட்டு வரையறைப்படிச் சொன்னால் அடித்தளத்தில் முழுமையான நாத்திகம். மேலே செல்லச் செல்ல ஆத்திகம். உச்சியில் முழுமையான  ஆத்திகம்!

‘கடவுளுக்கு பயப்படுவதே பயத்தின் ஆரம்பம்’

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதேபோல பௌத்ததுக்குள் செல்வோம். பௌத்தத்தின் யோகாசார மரபின்படி பருப்பொருள் என்பதே கிடையாது. பிரபஞ்சம் என்பது நம் பிரக்ஞையில் நிகழும் ஒரு பெரிய நிகழ்ச்சிதானே ஒழிய தூலமானதும் மாறாததுமான் பொருள் அல்ல. பிரபஞ்சம் என்பது பிரபஞ்சத்தின் சாராம்சமான கருத்தே. அதாவது பிரபஞ்சமாக நாம் அறிவது பிரபஞ்சத்தின் நியதிகளையே. அந்த நியதிகளையே பௌத்தம் ‘தர்மம்’ என்கிறது.

அதாவது சரியான பொருளில் பௌத்தம்தான் இந்திய மரபின் ஆகப்பெரிய கருத்துமுதல்வாத சிந்தனை. அப்படியானால் பௌத்தம் கடவுளை நம்புகிறதா? இந்த பிரபஞ்சத்தில் உள்ள செயல்களை எல்லாம் கடவுள் கட்டுப்படுத்துகிறார் என்று நினைக்கிறதா? இல்லை. பௌத்தத்தில் கடவுளே இல்லை. பிரபஞ்சத்தின் சாரமாகிய தர்மமே மையப்பேராற்றல். அது செயல்படுவதனால் பிரபஞ்சமென்ற தோற்றம் உருவாகிறது. அல்லாமல் அது பிரபஞ்சத்தை ஆளும் கடவுள் அல்ல.

அதாவது ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் இரண்டையும் இணைத்து அந்த மூலக்கூறுகளை நெகிழ்வாக ஒன்றுடன் ஒன்று கட்டாமல் விட்டிருக்கும்வியற்கையின் விதியையே நாம் நீர் என்கிறோம். அதுவே ஆறு, அதுவே அருவி, அதுவே கடல். அதுவே அலை. அந்த விதி நீருக்கு வெளியே இருந்து நீரை கட்டுப்படுத்தவில்லை. அந்த விதியேதான் நீர். அது செயல்படுவதனால்தான் நீர் இருக்கிறது. செயல்படாவிட்டால் நீர் இல்லை. அந்த விதியும் இல்லை. 

அப்படியானால் பௌத்தம் என்ன, ஆத்திகமா நாத்திகமா? ஒருகோணத்தில் நாத்திகம் ஒரு கோணத்தில் நாத்திகம் என்றுதான் சொல்லமுடியும். கடவுள் இல்லை என்பதனால் அது நாத்திகம். கடவுளுக்கு இணையாக தம்மம் என்ற ஒன்றை முன்வைப்பதனால் அது ஆத்திகம்.

கே.தாமோதரன் அவரது இந்திய சிந்தனை என்ற நூலில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயவின் பிரிவினையை கடுமையாக நிராகரிக்கிறார். ஆத்திகம், கருத்துமுதல்வாதம், பிராமணியம், ஆதிக்கசக்திகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே பெட்டிக்குள் போட்டுப் பார்ப்பது மிகமிக அபத்தமான பார்வை என்கிறார்.

உதாரணமாக முழுக்க முழுக்க பிராமணிய மதம் என்றால் அது பூர்வமீமாம்சம் தான். வேதங்களை முழுமுதல் கடவுளின் நிலைக்குக் கொண்டு செல்பவை அவை. யாகம் வேளி போன்றவற்றின் மூலமும் பிராமணர்களுக்கு தானம் அளிப்பதன் மூலமும் விரும்பிய எல்லாவற்றையும் பெறலாம் என்று சொல்லக்கூடியவை.

ஆனால் பூர்வமீமாம்சத்தை மேலைநாட்டு அர்த்தத்தில் இறைவாதமாகக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு பிரபஞ்சத்தை உருவாக்கி ஆளும் இறைவடிவம் ஏதும் இல்லை. பிரபஞ்சம் அதன் நியதிகளினால் ஆனது. அந்த நியதிகள் சொல்லப்பட்டிருக்கும் நூல்கள் வேதங்கள். அந்த நியதிகளுக்கு தெய்வங்கள் கூட கட்டுப்பட்டவையே. அதாவது இன்ன யாகம் செய்தால் இன்ன தெய்வம் அருள்புரிய வேண்டும் என்றால் அதை அந்த தெய்வமே கூட மீற முடியாது.

தெய்வங்கள் வேத மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதேபோல பூர்வமீமாம்சகர்கள் கருத்துமுதல்வாதிகளும் அல்ல. அவர்கள் பொருள்முதல்வாதிகள். ஆம், அவர்களைப்பொறுத்தவரை இந்த பொருள்வயப் பிரபஞ்சம் என்பது ஒரு கருத்துநிலை அல்ல, உண்மை. அது சில விதிகளால் கட்டப்பட்டது. நெய்யை வேள்வித்தீயில் போட்டு ஒரு மந்திரத்தைச் சொன்னால் அதற்கான விளைவு நிகழ்ந்தாகவேண்டும்.

அதாவது சாராம்சத்தில் வைதிக மதம் என்பது நாத்திகவாதமே.  உலகியல்வாதமே அதன் மையம். ஆகவேதான் கீதை உட்பட்ட உபநிடத நூல்கள் வேதங்களில் உள்ள கர்மகாண்டத்தை, அதாவது வைதிக [பிராமண] மதமாகிய பூர்வமீமாம்சையை, நிராகரிக்கின்றன. சங்கரர் முதல் ராமானுஜர் வரை உள்ள பிற்கால வேதாந்திகளும் வைதிக மதத்தை நிராகரிக்கிறார்கள்.

அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தேவிபிரசாத் சொல்லும் பழங்குடி மக்களின் மதங்கள் எந்தவகையிலும் நாத்திகத்தன்மை கொண்டவை அல்ல. பொருள்முதல்வாத தன்மை கொண்டவையும் அல்ல. அவற்றில் பலவகையான இறைநம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள் உள்ளன என்கிறார் தாமோதரன்.

இந்திய வரலாற்றில் பிராமணிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கடுமையான மக்கள் எதிர்ப்பை உருவாக்கியவை சமணமும் பௌத்தமும். பிராமணர்களின் பூர்வ மீமாம்சம் பொருள்முதல்வாத நோக்கு கொண்டது. பௌத்தமும் சமணமும் கருத்துமுதல்வாத நோக்கு கொண்டவை.

அதேபோல இந்தியாவின் பக்தி காலகட்டத்திலும் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலும் அடித்தள மக்களின் குரலாக ஒலித்த பல ஞானிகள் கருத்துமுதல்வாத நோக்கு கொண்ட அத்வைதிகள். விவேகானந்தர், நாராயணகுரு, அய்யா வைகுண்டர் போன்றவர்கள் உதாரணம்.

” கடவுள்னு ஒருத்தர கண்டுபிடிச்சோம்னு வச்சுக்க, இது எல்லாத்துக்கும் அவர் மேல பழிய போட்டுரலாம்”’

 

ஆக, இந்த வகையான பிரிவினைகளைக் கொண்டு இந்திய சிந்தனையை ஆராய்ந்தால் அபத்தமான ஒற்றை வரிகளுக்கே சென்று சேர முடியும். அதையே நாம் எங்கும் கேட்கிறோம். பௌத்தம் ஒரு நாத்திகவாதம் என்றும் ஆகவே அது பொருள்முதல்வாத நம்பிக்கை கொண்டது என்றும் சொல்பவர்கள் உண்டு. சமணம் நாத்திகவாதம் என்று சொல்பவர்கள் உண்டு. இங்கே இந்தப் பிரிவினைகளுக்கே அர்த்தமில்லை. இங்குள்ள தர்க்கமுறைகளே வேறு.

இனி, நாத்திக ஆத்திக விவாதத்துக்கு வருவோம். இந்து மத அமைப்பு மூன்றடுக்கு முறை கொண்டது. முதல் அடுக்கில் குலதெய்வங்கள்,நாட்டார் தெய்வங்கள், மூதாதை தெய்வங்கள் உள்ளன. இரண்டாம் அடுக்கில் சைவ ,வைணவ, சாக்த பெருந்தெய்வங்கள் உள்ளன. மூன்றாவது அடுக்கில் தத்துவமே மையமாக உள்ளது.

மூன்றாவது அடுக்கில் உள்ள இறையுருவகங்களில் பிரம்மம் முதன்மையானது. சிவசக்தி உருவகம் இன்னொன்று. பராசக்தி உருவகம் மூன்றாவது. அவை அனைத்தும் முழுக்க முழுக்க தத்துவார்த்த கருத்துநிலைகள். இப்பிரபஞ்சத்தின்  உருவாக்கம், செயல்பாடு குறித்த பல்வேறுவகையான தரிசனங்கள்தான் அவை. பலவகையான நுண்ணிய தர்க்கமுறைகளால் அவை விளக்கப்பட்டுள்ளன, விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்றும் ஒன்றை ஒன்று வலுப்படுத்தும்படியாக கலந்திருக்கின்றன.முதல் அடுக்கில் உள்ள மாரியம்மனை பராசக்தி என்று சொல்வார்கள். பிரம்ம சொரூபிணி என்றும் சொல்வார்கள். ஒரேசமயம் மூன்றாகவும் ஆகி சாலை ஒரத்தில் வேப்பிலை சாத்தப்பட்டு மஞ்சள் அப்பப்பட்டு எல்லைக்கல் வடிவில் அமர்ந்திருக்கும்!

அதேபோல தூய தத்துவ வடிவமான பிரம்மத்தை இறையுருவகமாக ஏற்ற சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் எல்லாமே தெய்வங்களை வணங்கி போற்றியிருக்கிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரும் நாராயணகுருவும் இறைவழிபாடு செய்திருக்கிறார்கள். அந்த இறைவடிவங்களை அவர்கள் பிரம்மமாக உருவகித்தார்கள்.

இந்து ஞானமரபின் மூன்றாவது அடுக்கான தத்துவ தளத்தில் முழுமையாக தங்களை நிறுத்திக்கொண்ட ஒருவருக்கு பிற இரண்டும் ஏற்புடையனவாக இருக்காது. அவர்களுக்கு விஷ்ணுவோ சிவனோ கடவுள் அல்ல. பிரபஞ்சத்தின் அடிப்படையாக அறிய முடியாத, வரையறை செய்ய முடியாத ஒரு பெரும் விதி அல்லது மனம் உள்ளது அதுவே பிரம்மம். அதுவே அவர்கள் காணும் இறைச்சக்தி

அந்த சக்தியை அதை வழிபட வேண்டியதில்லை. அதற்கு சடங்குகளோ கோயில்களோ தேவை இல்லை.  அதை பிரபஞ்சம் முழுக்க எங்கும் பார்க்கலாம். பாரதி சொன்னது போல செத்த புழுவை இழுத்துச்செல்லும் புழுவும் கோடானுகோடி மைல்கள் நீளமுள்ள வாலை இழுத்துச்செல்லும் தூமகேதுவும் அதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

இங்குள்ள எல்லாமே அதுதான் [ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்] அதை அறியும் நம் பிரக்ஞையும் அதுவே [பிரக்ஞானம் பிரம்மாஸ்மி] அறிதலும் அறிபடுபொருளும் அறிவுமாக இருக்கும் நாமே அதுதான் [தத்வமஸி]   அதை உணர்வுபூர்வமாக உள்ளறிந்து அதுவே தான் என அறிந்து இருப்பதே முழுமை நிலை [அகம் பிரம்மாஸ்மி]

தத்துவ தளத்தில் இருந்து கீழிறங்காத வேதாந்தம் எப்போதுமே இந்து ஞானமரபில் இருந்துகொண்டிருக்கிறது. அத்வைதத்தில் அதற்கு சுத்தாத்வைதம் என்று பெயர். அதை மேலைநாட்டு பொதுபோக்கிலே நாத்திகம் என்றுதான் சொல்ல முடியும். ‘சுத்த அறிவே சிவம் என்று சொல்லும் சுருதி’ களை மட்டுமே அது ஏற்றுக்கொள்கிறது. அறிவே அதன் வழிமுறை. முழுமையறிவே உச்சகட்ட இலக்கு.

அப்படிப்பட்ட ஒன்றை இந்து மதத்தின் முதல் தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு மட்டுமே பார்க்கும்போது அது நாத்திகம் என்று தோன்றக்கூடும். ஆனால் இந்துமதம் என்பது ஒற்றைப்படையான நம்பிக்கை அல்ல என்று நாம் உணரவேண்டும். அது ஒரு ஒட்டுமொத்த வழிமுறையே ஒழிய ஒரு குறிப்பிட்ட இறைநம்பிக்கையோ ஒரு குறிப்பிட்ட கருத்துத் தொகையோ அல்ல.

இந்து ஞான மரபில் மிக வலுவான பொருள்முதல்வாத தரப்புகள் உள்ளன. சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் ஆகிய நான்கு தரிசனங்களுமே அடிப்படையில் பொருள்முதல்வாத தன்மை கொண்டவை . நம் மரபில் ஜடவாதம் என்று அதற்கு பெயர். ஆனால் அவை மேலைநாட்டு பொருள்முதல்வாதமும் அல்ல. அவற்றின் உயர் விளக்கத்தில் கருத்துமுதல்வாதம் உள்ளே வந்துவிடும்.

உதாரணமாக வைசேஷிகம் தூய பொருள்முதல்வாத அடிப்படையில் பிரபஞ்சத்தை விளக்குகிறது. ஆனால் பொருட்களின் அடிப்படை இயல்பைப்பற்றிப் பேசும்போது தன்மாத்ரா என்ற கருத்துமுதல்வாத கூறு உள்ளே வந்துவிடுகிறது. ஒவ்வொரு பொருளும் பொருண்மைத்தன்மையும் கருத்தும் கலந்து உருவாவது என்று வைசேஷிகம் சொல்கிறது. என்னுடைய இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள் [கிழக்கு பதிப்பகம்] வாசித்துப்பாருங்கள்.

இந்துமதம் ஓர் எல்லையில் உயர்தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்றுகொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல். அந்த உரையாடல் பல ஆயிரம் வருடங்களாக நடந்து நடந்து பலவகையான அபூர்வமான இணைப்புகளை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே பழங்குடிச்சடங்கு ஒன்றையேனும் செய்யாத இந்து என யாரும் இல்லை. உயர்தத்துவத்தில் ஒரு துளியேனும் அறியாத இந்துவும் எவரும் இல்லை. நாத்திகம் ஆத்திகம் என்றெல்லாம் இந்து ஞானத்தை பிரித்துவிட முடியாது. அதன் மூலம் இந்து மதத்தின் சாராம்சமான ஞான விவாதத்தில் இருந்து நாம் விலக்கப்பட்டுவிடுவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான் இந்துவா? 

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற வெளிசக்தி (external field) இல்லை என்ற உணர்வில் உறுதி ஏற்பட்டது. இதை சொல்வதற்குக் காரணம் நான் வறட்டு நாத்திகம் பேசுபவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே.மற்றபடி பாரதியின் ‘காணும் இடமெல்லாம் நான்’ என்னும் கோட்பாடு, ஐன்ஸ்டினின் ‘உலகம் ஒரு சுழற்சி’, ராமகிருஷ்ணரின் ‘நிர்சலனம்’ என்ற உணர்வு ஆகியவை புரியாவிட்டாலும் அவைகளில் உள்ளவைகளை என்னால் இப்போதைக்கு மறுக்க முடியவில்லை. புரியாததால் அல்லது அனுபவிக்காததால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. இப்போதைக்கு அவற்றை மதிக்க மட்டுமே முடிகிறது.

வேதங்களும், உபநிடங்களும் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை.

என்னுடைய இந்தக் கடிதம் அது குறித்தான என்னுடைய முயற்சியின் முதல் கட்டம் என்றே நினைக்கிறேன். கேள்வி நேரடியாக இல்லாவிட்டாலும், எனக்குத் தெரியும் பதில் அதை நோக்கிய பயணமாகவே இருக்கும். கேள்விக்கே வருகிறேன். நான் ஏன் இந்து?. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா?. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா? என்பது போல் கேள்விகளை எனக்குள் அவை எழுப்பும்.).

இந்து என்பதை வரையறுக்க முடியவில்லை என்ற ஒரு காரணமோ அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த, கிறிஸ்துவ, முஸ்லிமாக இல்லாதவர்கள் இந்து என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை?எனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.

எனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.

இப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து? அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா?

அது எங்கிருந்து என்னை நோக்கி வந்த மதம்? கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா? ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா? அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா?. மனிதனின் ஆதி காலத்தில் மதம் இருந்திருக்காது, எல்லா மதங்களுமே பிற்பாடு வந்ததுதான் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

என் கேள்வி என்னுடைய கிராமத்திற்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறை இல்லையா? அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா?. இப்போது என் தலைமுறையில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் கோவிலில் படைக்கும் உணவு குறித்தது. படித்த (அல்லது அப்படி கூறிக்கொள்ளும்) வட்டம் கோவிலில் அசைவம் சாப்பிடுவதைப் பாவம் போல் பார்க்கத் தலைப்படுகிறது. அவர்களுக்குப் பெரிய கோவில்கள் எனப்படும் கோவில்கள்தான் அழகுடனும், சக்தியுடனும், தெய்வாம்சத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம சாமிக்குப் பிடிச்சத நம்ம படைக்கிறோம் என்ற என் வாதம் அங்கு எடுபடவில்லை. (முற்றிலுமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி நான் அசைவத்தை மறுப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இது வேறு. வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் கோவிலில் ஒரு குற்ற உணர்வோடுதான் சாப்பிடுவார்கள் அல்லது மறுப்பார்கள்).

அதே போல நீத்தார் கடன் கொடுக்கு வழக்கம் எனக்குத் தெரிந்து என் தாத்தாவோ, பாட்டியோ செய்ததில்லை. இறந்த பதினாறாம் நாள் காரியம் செய்ததோடு சரி என்பது அவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது. இப்போது அந்த வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாற்றங்கள் நல்லதா தீயதா என்பதல்ல என் கேள்வி. என் கேள்வி கீதையும், வேதங்களும் எனக்கு பைபிள் அல்லது குரானைப் போல மட்டும்தானா? அல்லது எனக்கும் இவைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதுதான்.

தெளிவாகக் கேட்டு விட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அன்புடன்,
காளிராஜ்.

ஏரல் அருணாச்சல சாமி கோயில் முகப்பு

[ஏரல் அருணாச்சல சுவாமி கோயில் முகப்பு]

அன்புள்ள காளிராஜ்,

தமிழ்நாட்டில் ஏராளமான படித்த அடித்தளப் பின்னணி கொண்ட இளைஞர்களிடம் உள்ள குழப்பம்தான் இது. இந்தக்குழப்பம் சென்ற பல வருடங்களாக திராவிட இயக்கங்களாலும் இடதுசாரிகளாலும் வளர்க்கப்படுகிறது. அவர்களுக்குப்பின்னால் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பெரும் நிறுவன வலிமையுடனும் பணபலத்துடனும் செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்கள் இந்த ஐயத்தை ஒரு கருத்துநிலையாக மாற்ற முயல்கிறார்கள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன், தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.

அந்த மாற்றம் நிகழக் காரணம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கம். அந்தக் கருத்தரங்கிலே நாட்டார்சாமிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாமிகள், இந்துமதம் ஒடுக்கும் சாமிகளின் மதம் என்ற பிரிவினை மிக எளிதாக நம் அறிவுஜீவிகளுக்குள் திணிக்கப்பட்டது. இதற்காகக் கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

அதைப்பற்றி நம் இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒருவரான ச.தமிழ்ச்செல்வன் சொல்வதைப் பாருங்கள். ‘பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ’சனங்களின் சாமிகள்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள், கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது.http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_04.html கவனியுங்கள். தன்னுடைய சொந்தக் குலதெய்வங்கள் , தான் வாழும் சமூகம் பற்றிய வரலாற்றை யார் எங்கிருந்துகொண்டுவந்து கொடுக்கவேண்டியிருக்கிறது இந்த அறிவுஜீவிகளுக்கு என்று.

இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம் இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மட்டும் கேட்கவில்லை. அந்த அமைப்பாளர்களின் மதம் அந்த சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிக்கிறதா, அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர அனுமதிக்கிறதா, முன்பு அவர்களிடம் மதம் மாறியவர்களின் குலதெய்வங்கள் என்னாயின, அப்படியென்றால் அச்சிறுதெய்வங்களை ஒடுக்கி அழிக்கும் உண்மையான ஒடுக்குமுறைமதம் எது? ஒரு மாணவர் மட்டும் எழுந்து அதைக் கேட்டார், அவர் வெளியேற்றப்பட்டார்.

நீங்கள் கேட்கும் இந்த கேள்வி உங்களை அறியாமல் உங்களுக்குள் விதைக்கப்பட்டுத் தொடர்ந்த பிரச்சாரம் மூலம் வளர்க்கப்படுவது, அதைச்செய்பவர்கள் மதமாற்ற சக்திகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். படிக்கும் வழக்கமுள்ள உங்களுக்கு இருக்கும் இந்த ஐயமும் சஞ்சலமும் படிக்காத உங்கள் தந்தைக்கு இருக்காது. அவருக்கு அவர் இந்துவா இல்லையா என்பதில் ஐயமே இருக்காது. உங்கள் கேள்விக்கான பதிலை இந்தப் பின்னணியை விளக்காமல் சொல்லமுடியாது என்பதால் இதைச் சொல்ல நேர்கிறது.

திருச்செந்தூர்

[திருச்செந்தூர் முருகன் கோயில் முகப்பு]

*

உங்கள் கேள்வியின் அடித்தளம் என்பது மதம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் வரையறை சார்ந்தது. மதம் என்றால் உறுதியான இறைக்கோட்பாடு, திட்டவட்டமான நிறுவன அமைப்பு, தெளிவாக எல்லை வகுக்கப்பட்ட ஆசாரங்கள் ஆகியவற்றைக்கொண்டதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் இன்று காணும் பெரும்பாலான மதங்கள் அப்படித்தான் உள்ளன. ஆனால் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தாது. மதம் என்பதை இன்னமும் விரிவான நெகிழ்வான வரையறையுடன் புரிந்துகொண்டால்தான் நம்மால் இந்தியவரலாற்றை மட்டுமல்ல, ஆசிய ஆப்ரிக்க வரலாறுகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

தெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மாறமுடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.

இரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறைசெய்திருப்பார்.ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன

இந்த மதங்கள் தங்கள் மதநிறுவனர் மற்றும் அவரது நூல் மீதான முழுமையான நம்பிக்கையை விசுவாசிகளிடம் கோரும். அதை ஏற்காத அனைவரும் அன்னியர் அல்லது பிறர் என வரையறைசெய்யப்பட்டிருப்பார்கள். அந்தப் பிறர் அவர்களின் சொந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முழுமையாகக் கைவிட்டுத் தங்களுடன் இணைய வேண்டுமென அவை வற்புறுத்தும். அதற்கான எல்லா முயற்சிகளையும் அந்த மதங்கள் செய்யும். அந்தக் கடமை ஒவ்வொரு விசுவாசிக்கும் அறைகூவப்பட்டிருக்கும். அதனடிப்படையிலேயே அவை வளர்கின்றன.

இவ்விரு வகை மதங்களுக்கும் அப்பால் வேறு இரு வகை மதங்கள் உண்டு. ஒன்று தத்துவ மதங்கள். உதாரணம், பௌத்தம் சமணம் போன்றவை. அவையும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவை நம்பிக்கையை முன்வைப்பதில்லை, தத்துவத்தையே முன்வைக்கின்றன. அவை முன்வைக்கும் இறைவன் கூட ஒரு தத்துவ உருவகமே. அவர்களின் பிரபஞ்சவிவரணை நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க அறைக்கூவுகின்றன. கன்ஃபூஷிய மதம், தாவோ மதம் போன்றவையும் இவ்வகைப்பட்டவையே

தீர்க்கதரிசன மதங்கள் பரவுவதற்கும் தத்துவ மதங்கள் பரவுவதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அவர்களின் பழைய நம்பிக்கைகளை, ஆசாரங்களை முழுக்க உதறிவிட்டுத் தங்களிடம் வரும்படி சொல்கின்றன. முழுமையான நம்பிக்கையுடன் தாங்கள் சொல்வதை முழுக்க ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிடுகின்றன. நீங்கள் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ ஆனால் உங்கள் பழைய மதத்தின், குலதெய்வங்களின், ஆசாரங்களின் எந்த அம்சத்தையும் மிச்சம்வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளில் சிறிதளவேனும் ஐயம் கொள்ளமுடியாது.

ஆனால் தத்துவமதங்கள் அப்படிச் சொல்வதில்லை. உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் அந்தத் தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே அவை முன்வைக்கின்றன. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். அவர் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.அதாவது அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை

ஆகவேதான் பௌத்தமதத்தை எடுத்துப்பார்த்தால் இலங்கை பௌத்தமும் திபெத்திய பௌத்தமும் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் வேறு வேறாக இருக்கிறது. தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. ஷிண்டோ மதத்தை லௌகீகத்துக்கும் பௌத்தத்தை ஆன்மீகத்துக்கும் ஜப்பானியர் பயன்படுத்தமுடிகிறது. ஆனால் சாராம்சமாக ஓடுவது பௌத்த தத்துவதரிசனம்தான். பௌத்தம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம்.

இன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த மதங்களை நாம் ஆபிரகாமிய தீர்க்கதரிசன மதங்களுடன் வழக்கமாக ஒப்பிடுகிறோம். ஆகவே இவற்றின் மையத்தரிசனம் என்ன, மையநூல் எது, இவை உருவாக்கும் ‘பிறர்’ யார் என்றெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம். நாமே இந்த மதங்களின் மையமும் எல்லையும் இதெல்லாம்தான் என முடிவெடுக்கிறோம். உடனே இதனுள் உள்ள பிறர் யார் என்று குழம்ப ஆரம்பிக்கிறோம். உங்கள் கேள்வியில் இருப்பதும் அந்தச் சிக்கலே.

தொகைமதங்களுக்கும் அதற்கு முன்னர் சொல்லப்பட்ட இனமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள், தத்துவ மதங்கள் ஆகியவற்றுக்கும் இடையே என்ன வேறுபாடு? பிற மூன்று மதங்களும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து விரிந்துகொண்டே இருப்பவை என்பதுதான். இனமதம் இனம்சார்ந்த ஒரு சுய அடையாளத்தை மையமாகக் கொண்டுள்ளது. தீர்க்கதரிசன மதங்கள் அந்த தீர்க்கதரிசியின் மெய்யியலை மையமாகக் கொண்டுள்ளன. தத்துவ மதங்கள் அந்த தத்துவதரிசனத்தை மையமாகக் கொண்டுள்ளன.

அந்த மையத்தை அவை பல்வேறு பிற நம்பிக்கைகளுடன், பிற சிந்தனைகளுடன் உரையாடச்செய்கின்றன. தீர்க்கதரிசன மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் வென்று அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன. தத்துவ மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் பிற சிந்தனைகளையும் தத்துவார்த்தமாக ஊடுருவி அவற்றின் மையத்தை மாற்றியமைத்துத் தன்னுடன் இழுத்துச்செல்கின்றன. அதாவது இரு வகைகளிலும் ஏற்கனவே இருந்த ஒரு மையமானது விளிம்புகள் நோக்கி பரவுகிறது.

உதாரணமாக சமணம் தென்னகத்துக்கு வந்தபோது இங்கிருந்த நாகவழிபாடு செய்யும் நாகர்களிடம் பரவியது. நாகர்களை அது சமண தத்துவத்தை ஏற்கசெய்தது. நாகர்களின் நாகவழிபாடு சமணத்தின் ஒரு பகுதியாக ஆகியது. பார்ஸ்வநாதரின் தலைக்குமேல் உள்ள ஐந்துதலை நாகம் நாகர்களின் கடவுள்தான். நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் அவர்களுடைய கோயில்.

ஆனால் தொகை மதங்கள் அவ்வாறு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மையப்புள்ளி இல்லாதவை. அவை மிகமிகத் தொன்மையானவை என்பதனால் பெரும்பாலும் அவற்றின் மூலம் என்ன,தோன்றிய இடமென்ன என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் பழங்குடி மரபுகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் இணைவதன்மூலமாகத் தொகைமதங்கள் உருவாகின்றன என்று சொல்லலாம்.

ஒரு விரிந்த நிலப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்க்கையில் இருந்து தனித்தனியான வழிபாட்டுமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவற்றை மதம் என்று சொல்லமுடியாது. அந்த மக்கள் பிற மக்கள் திரளுடன் தொடர்ந்து நெடுங்காலமாக உறவாடும்போது அவர்களின் நம்பிக்கைமுறைகள் உரையாடுகின்றன. கொண்டும் கொடுத்தும் வளர்கின்றன. இவர்களுக்குள் ஒரு பொதுமையம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மையம் இணைப்பின் மூலம் புதியதாக உருவாகிறது. இன்னொரு வழிபாட்டுமுறை இணையும்போது மூன்றுக்கும் பொதுவான மையம் உருவாகிறது.

இப்படி நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகள் இணைந்து இணைந்து தொகைமதம் உருவாகிறது. பெரும்பாலும் தொகைமதங்கள் அந்த இணைப்புச்செயலிலேயே தொடர்ந்து இருக்கின்றன. ஆகவே அவற்றின் மையம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த மக்களுக்குள் எந்தப் பிரிவு கருத்தியல் செல்வாக்குடன் இருக்கிறதோ, எது அதிகாரத்துடன் இருக்கிறதோ அதை நோக்கி மையம் நகர்கிறது.

இந்துமதம் என நாம் சொல்லும் இன்றுள்ள அமைப்பு ஆரம்பகாலம் முதலே இன்றுள்ள தொகைமதம் என்ற வடிவிலேயே உள்ளது. இந்துமதத்தின் மிகப்பழைமையான நூலான ரிக்வேதமே கூட இந்தத் தொகுப்புத்தன்மைக்கான உதாரணம்தான். அது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அல்லது ஆசாரத்தை அல்லது தத்துவத்தை முன்வைப்பது அல்ல. அதில் அன்றிருந்த பல்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் தத்துவங்களும் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் இணைவதையும் நாம் ரிக்வேதத்தில் காணலாம்.

ரிக்வேதத்தின் இறுதிப்பகுதியில் இந்த இணைப்பின் விளைவாக உருவாகி வந்த ஒரு தோராயமான பொதுமையம் உள்ளது. அதை பிரம்மம் என்று சொல்லலாம். அதாவது பிரபஞ்சசாரமான கருத்தை அல்லது ஆற்றலை ஒரு அறியமுடியாமையாக உருவகித்து அதன் வெளிப்பாடாக இந்தப் பிரபஞ்சத்தை உணர்வது. இப்படி ஒரு மையம் உருவானதுமே அந்த மையத்துக்கும் வேறு மையங்களுக்குமான உரையாடல் ஆரம்பித்துவிட்டது. அதையே நாம் உபநிடதகாலகட்டத்தில் காண்கிறோம்.

இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்துமதம் என்ற மையக்கட்டுமானம் பிற சிறிய கூறுகளை உள்ளிழுத்துக்கொள்கிறது என்று இதை சில இடதுசாரிகள் விளக்கினார்கள். அதையே பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளிழுக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் எந்த வழிபாட்டுமுறையும் தன் சுய அடையாளத்தை இழக்கவில்லை. இரண்டாயிரம் வருடம் முன்பு அவ்வாறு உள்ளே வந்த நம்பிக்கைகளும் தத்துவங்களும் கூட அப்படியேதான் இருக்கின்றன. மையம் என்று இவர்கள் சொல்வதை வந்தவைதான் மாற்றியமைத்துள்ளன. அப்படியென்றால் அது உள்ளிழுத்தல் அல்ல. அது உரையாடலும் சமரசமும் மட்டுமே.

வரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்தனை உள்ளே வந்தால் அவர்களுடன் சமரசம்செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.

*

உங்கள் கேள்வியை இந்த பின்னணியில் ஆராயுங்கள். ’நான் இந்துவா?’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா? சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா? அப்படியானால் இந்து என்பவர் யார்? எல்லாரும் சேர்ந்தால்தான் இந்து. தனியாக இருந்தால் சைவரோ வைணவரோ சாக்தரோதான்.

இந்துமதத்தில் உள்ளதாக உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஓர் இருமையை. அதாவது பெருமதம x நாட்டார் மதம் [Theological religion x Folk religion] முரண்பாடு. இது இங்குள்ள வழிபாட்டுமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் வழிமுறை, வெள்ளையர் உருவாக்கியது. ஆனால் இதைவைத்து இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் கொஞ்ச வருடம் முன்னால் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான். இன்று நாட்டார் தெய்வமாக இருப்பது பெருந்தெய்வத்துடன் இணைந்து பெருந்தெய்வமாக ஆகிக்கொண்டுமிருக்கும்.

சிவன் உங்கள் கருப்பசாமியைப்போல ஒரு நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்று சுடலைமாடசாமி அருள்மிகு சிவசுடலைமாடனாக ஆகிக்கொண்டிருக்கிறார். இந்தப் பரிணாமம் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் நேற்றைய கருப்பசாமியைக் கும்பிடலாம் அல்லது நாளைய சிவனைக் கும்பிடலாம். அதாவது பைபிளில் ஒரு அத்தியாயத்தில் கருப்பசாமியை சேர்த்துக்கொண்டு அவரைக் கடவுளாக ஆக்க முடியாது, அதற்கு பைபிளில் குரானில் இடமில்லை. கீதையில் முடியும். ஆம் அந்த அம்சமே தொகைமதங்களை உருவாக்குகிறது.

இனி நீங்கள் சொல்லும் தகவல்கள். அவை பெரும்பாலும் உங்களுடைய சொந்த மரபைப்பற்றிய உங்கள் அறியாமையையே காட்டுகின்றன. உங்களுக்குப் பெரும்பாலும் உங்கள் ஊர், தெய்வங்கள், வழிபாட்டுமுறை எதைப்பற்றியும் தெரியாது. நீங்கள் மற்ற எல்லா இளைஞர்களையும்போல இதிலெல்லாம் ஆர்வமில்லாமல் வளர்ந்து நகருக்கு வேலைக்கு வந்திருப்பீர்கள். அதன்பின் நீங்கள் அங்கே இங்கே படித்தறிந்த ஒரு கிராமத்தை கற்பனை செய்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்

உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.

இந்த தெய்வங்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் முந்நூறாண்டுகளாகவே கிடைக்கின்றன. நாட்டார் வாய்மொழி மரபில் அதற்கும் முன்னதாகவே இந்த தெய்வங்களைப்பற்றிய கதைகள் உள்ளன. சுடலைமாடசாமி கதைப்பாடல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருப்பசாமி வில்லுக்கதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நீங்கள் வாசித்துப்பார்க்கலாம். தென்னகத்து நாட்டார் தெய்வங்கள் அனேகமாக அனைத்துமே சைவ மரபைச் சேர்ந்தவை. இத்தெய்வங்களின் தெய்வமாக சிவன் சொல்லப்பட்டிருப்பான். அல்லது சிவனிடம் வரம் வாங்கி அவை தெய்வமாக ஆகியிருக்கும். அந்த தெய்வங்களைப்பற்றிய வில்லுப்பாட்டுகள் , கணியான்முடியேற்று முதலியவற்றில் அந்தக் கதைகள் இன்றும் பாடப்படுகின்றன.

நம் பண்பாட்டில் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நாட்டார்தெய்வம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, குறியீட்டு தெய்வம். அதாவது ஒரு நோயை குணப்படுத்த அல்லது விளைச்சலை அதிகரிக்க வழிபடப்படும் சிறுதெய்வம். மரங்கள் பாறைகள் ஆறுகள் போன்றவற்றை வழிபடுதல். இரண்டு, நீத்தார் வழிபாடு. அருங்கொலை செய்யப்பட்டவர்கள், போரில் இறந்தவர்கள் பிரசவத்தில் இறந்தவர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும்முகமாக அவர்களை தெய்வமாக ஆக்குதல். மூன்று மூத்தார் வழிபாடு, குலமூதாதையரைக் கடவுளாக்குதல். சாமியார்களை அடக்கம்செய்யுமிடங்கள் கோயிலாகின்றன

முதலில் இப்படி உருவாகும் தெய்வங்கள் அந்த தெய்வத்தை உருவாக்கிய ஒரு இனக்குழுவுக்குள் இருக்கின்றன. அந்த இனக்குழு பிற இனக்குழுக்களுடன் உறவாடும்போது அவை பிற தெய்வங்களுடன் இணைந்து பெருந்தெய்வங்களாகின்றன. இன்று நீங்கள் பெருந்தெய்வங்களாகக் காணும் எல்லா தெய்வங்களும் இப்படி உருவானவையே. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரிய தெய்வங்கள் மட்டுமே குலதெய்வங்களாக அவர்களுக்குள் மட்டும் நீடிக்கின்றன.

இந்த உறவாடல் ஆரம்பித்து எத்தனையோ தலைமுறையாகிவிட்டிருக்கும். சொல்லப்போனால் இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்

மெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.

ஆகவே நீங்கள் நினைப்பது போல உங்கள் தெய்வங்கள் இந்து பொதுமரபுடன் உறவே இல்லாமல் தனியாக எங்கோ அந்தரவெளியில் நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இந்து மதத்தின் பொது அமைப்புடன் உரையாடாமலும் இல்லை. அது உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். குலதெய்வங்கள் கூட அந்தக்குலம் சற்றே பெரிதாக பரவி விரிந்தால் இந்து பொது வழிபாட்டு மரபுக்குள் இணைந்துவிடும். பிறதெய்வங்கள் அனைத்துக்குமே இந்து மரபு சார்ந்த ஒரு வரலாற்று விளக்கம் இருக்கும். மறுமுறை செல்லும்போது விசாரித்துப்பாருங்கள்.

நம்முடைய சிறுதெய்வங்களைப்பொறுத்தவரை ஊரில் சிலரே அவற்றைப்பற்றிய அறிதலுள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்கு அக்கறை கிடையாது. இதற்கு என்ன காரணமென்றால் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த பெரும் பஞ்சங்களால் உருவான பண்பாட்டுப்பின்னடைவு. நம்மில் பெரும்பாலான குடும்பங்கள் அப்போது இடம்பெயர்ந்தவர்களாக இருப்போம். குலத்தின் வேர் வேறெங்கோ இருக்கும். விளைவாகக் குலதெய்வங்கள் கைவிடப்பட்டு மறக்கப்பட்டன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் அழிந்து போயின. மரபார்ந்த கதைகளும் ஞானமும் அழிந்தன. சென்றடைந்த இடங்களின் எளிய சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சின. நம்முடைய அப்பா தாத்தாக்கள் ஒரு பண்பாட்டு வெறுமையில் இருந்து மெல்ல அந்தந்த ஊர்களில் வேர்பிடித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது.

உங்கள் மதம் எது என்பதில் என்ன ஐயம்? காளிராஜ் என்பது வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெயர்? காளி ஒரு இந்து தெய்வம் என்றாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.திருசெந்தூர்கோயில் பற்றிச் சொன்னீர்கள். மிக எளிதாகவே இதை அறிய முடியும். உங்கள் சாதிக்குத் திருச்செந்தூர் திருவிழாவில் மண்டகப்படி போன்ற ஏதாவது சடங்கு செய்யும் உரிமை இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் பத்தாம்நூற்றாண்டு முதல் இருந்துவரும் ஒரு மாபெரும் கோயில்சார்ந்த இந்து [சைவ] மத அமைப்பின் உறுப்பினர்தான். உங்கள் சாதிக்குரிய வழிபாட்டை உங்கள் அப்பாவோ தாத்தாவோ செய்யவில்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைமட்டுமே.

எனக்கும் குலதெய்வம் உண்டு. இட்டகவேலி நீலியும் மேலாங்கோடு யட்சியும். அவர்களைத்தான் என் முன்னோர் வழிபட்டார்கள். அதேசமயம் அவர்கள் திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலின் பிரம்மாண்டமான அமைப்பிலும் ஒரு சிறுபகுதியாக இருந்தார்கள். எல்லா சாதிகளுக்கும் இந்த இரட்டை மதநம்பிக்கை இருக்கும். சிறுதெய்வங்கள் அவர்களுக்குரிய பிரத்யேகமான தெய்வங்களாக இருக்கும். பெருந்தெய்வக் கோயில்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்கள்.

வேதம் வெறும் சடங்குகளுக்குரிய நூலாகவே இங்கே கொள்ளப்பட்டது. ஆகவே சடங்குசெய்பவர்களே அதைப் படித்தார்கள். கீதையும் வேதாந்தமும் எல்லாருக்கும் உரியவையாக சொல்லப்படவில்லை. பக்தி, வழிபாடு போன்றவற்றைத் தாண்டி வந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்கானவை அவை. எல்லாச் சாதியினரிலும் அவற்றை அறிந்தவர்கள் மிகமிகச் சொற்பமே.

புராண இதிகாசங்கள் இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அவரவர்களுக்குரிய வடிவில் சொந்தமானவையாக இருந்தன. புராணக்கதைகளுக்கு ஒவ்வொரு சாதியிலும் அவரவர்க்குரிய வேறுபட்ட வடிவங்களே உண்டு. அடித்தள மக்களுக்குப் புராணம் அறிமுகம் இல்லை, அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம் , மதுரை இறையியல் கல்லூரி ஆகியவை உருவாக்கிய பித்தலாட்டம் மட்டுமே

தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்

ஸ்பெஷல்நாடகங்கள் வந்தபோது அவையும் புராண நாடகங்களையே போட்டன. ஊமைப்படம் வந்தபோதும் புராணப்படங்களே. உங்கள் கிராமம் அல்லது உங்கள் குடும்பம் மிக ஆச்சரியமானதாகவே இருக்கிறது. உண்மையிலேயே இவை எதையுமே கொஞ்சம்கூட அறியாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ விசித்திரமான பிரமையுலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய விசேஷநிலையைத் தனியாக ஆராயவேண்டுமே ஒழிய அதைக்கொண்டு இந்துமதத்தையோ தமிழ்ச்சமூகத்தையோ ஆராயமுடியாது.

நீங்கள் சொல்கிறீர்கள், இந்து வழிபாட்டுமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என. இது எதையுமே அறியாமல் வெறுமே செவிவழிப் பேச்சுகளை நம்பி சொல்லும் கூற்று. இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்.

கருப்பசாமிக்கு என்ன தொழுகையா செய்கிறீர்கள்? அல்லது கூட்டு ஜெப ஆராதனையா? தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா? அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன? அதைத்தான் பிஜி தீவிலும் தென்னாப்ரிக்காவிலும் நேப்பாளத்திலும் எல்லாம் இந்துக்கள் செய்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கும் அதுதான் செய்யப்படுகிறது. கருப்பசாமிக்கும் சுடலைக்கும் திருநீறுதான் பூசப்படுகிறது. கருப்பசாமிகோயிலுக்குச் சென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.

எந்த சிறுதெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துக்களின் தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட. இதுவே உண்மை. எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் என்பது அதை வழிபடும் சமூகம் எந்த அளவுக்குப் பெரியது, எந்த அளவுக்கு செல்வமும் படிப்பும் சமூகச் செல்வாக்கும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஒரு இனக்குழு எந்த அளவுக்கு சமூக இடத்தை அடைகிறதோ அந்த அளவுக்கு அந்த இனக்குழுவின் தெய்வம் பெருமரபுக்குள் முக்கியத்துவம் பெற்று இணைகிறது.

அதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள்? யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன? துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா? இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது.

நீங்கள்தான் உங்களை இந்து மதத்துக்குள் திணித்துக்கொள்கிறீர்கள். இது ஐயாயிரம் ஆறாயிரம் வருடத்து வரலாறு. ஒவ்வொரு இனக்குழுவும் சமூக அதிகாரத்துக்காகவே முட்டி மோதுகிறது. தன்னுடைய இடத்தை அது தேடுகிறது. அந்த இடத்தை அடைந்ததும் அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது. உடனே அவர்களின் தெய்வங்கள் மையம் பெறுகின்றன. நாடார்களின் பத்ரகாளிகோயில்கள் இன்று பெற்றிருக்கும் பெரும் முக்கியத்துவம், வன்னியர்களின் மாரியம்மன்கள் பெற்றுவரும் முக்கியத்துவம் அதற்கான கண்கூடான சாட்சி.

சாலையோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். புத்தம்புதிய அம்மன்களும் கருப்பசாமிகளும் கான்கிரீட்டில் எழுந்து நிற்பதைக் காண்பீர்கள். அந்த சாமிகளைக் கும்பிடும் இனக்குழுவில் கொஞ்சபேர் துபாய் போய் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரம் செய்து சம்பாதித்திருப்பார்கள். அவர்கள் சமூகப்படிநிலையில் மேலே சென்று அதிகாரத்தை அடைய அடைய அவர்களின் தெய்வம் இந்து மதத்தின் இன்றுள்ள மையம் நோக்கிச் செல்லும். அப்படி மையம் நோக்கிச் செல்லவேண்டுமென்றால் அது மையத்துடன் உரையாடவேண்டும். தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். மையத்தை அது கைப்பற்றவேண்டும். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது

உங்கள்கிராமத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகும்போது அவற்றின் தோற்றமும் சடங்குகளும் மாறுகின்றன. உயிர்ப்பலி கேட்கும் கருப்பசாமி பிரபஞ்சத்தை ஆளும் பரம்பொருளாக வழிபடப்படும்போது எல்லா உயிருக்கும் கருணை கொண்ட சாமியாக ஆகவேண்டியிருக்கிறது. அதன்பின் அதற்கு உயிர்ப்பலி கொடுக்க முடிவதில்லை. அது அருள்மிகு கருப்பசாமியாக ஆகிறது.

இதுசரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை. இதுதான் இந்தியப் பெருநிலத்தில் ஐயாயிரம் வருடப்பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கிறது. இப்படித்தான் இந்துமதம் உருவாகி வந்திருக்கிறது. இச்சமூகம் வளர்ந்து முன்னால் சென்றுகொண்டிருக்கிறது. இது பண்பாட்டு ஆதிக்கம் என்று கூச்சலிடும் நம் அறிவுஜீவிகள் வெட்கம் மானமில்லாமல் இந்த ஒட்டுமொத்த சிறுதெய்வ வழிபாட்டையே வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பஜனைபாடுகிறார்கள்.

ஆகவே நீங்கள் இந்துவா என்றால் ஆம் இந்துவே என்றுதான் சொல்வேன். இந்து மதம் என்பது எல்லை வகுக்கப்பட்ட ஒரு பிராந்தியம் அல்ல. பல்வேறு தரப்புகள் உரையாடிகொண்டே இருக்கும் ஒரு பரப்பு. உங்கள் தெய்வங்களும் நீங்களும் ஏற்கனவே அந்த இந்து மதப்பரப்புக்குள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் மேலும் மேலும் நீங்கள் பொதுப்போக்கு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்து மதத்துக்குள் மேலும் மேலும் ஆதிக்கம் கொண்டு தங்களை மையமாக ஆக்கிக்கொண்டிருக்கும் மக்கள்கூட்டத்தில் ஒருவர்.

ஜெ

மறுபிரசுரம் 2011 / அக்டோபர் 15 முதற்பிரசுரம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்துமதமும் பழங்குடிகளின் தெய்வங்களும்

http://www.jeyamohan.in/6833#.VTYb-tKqqko

சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’. அவற்றுக்கு ஒரு தத்துவ- புராண விளக்கம் மட்டுமே அளிக்கின்றன. சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் படிமங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கின்றன.

அதாவது ஒரு ‘தரப்படுத்தல்’ அல்லது ‘மேம்படுத்தல்’ மட்டுமே நிகழ்கிறது. இந்த தொகுப்புச்செயல்பாட்டில் ஒரு இழப்பு உள்ளதா என்றால் உள்ளது. ஆனால் இது நூற்றாண்டுகளாக நடந்தும்கூட எந்த பழங்குடிப் பண்பாடும் அழிந்ததில்லை. பழங்குடிகளின் வரலாற்று நினைவுகள் இல்லாமல் ஆனதில்லை. சுயம் மறுக்கப்பட்டதில்லை. இந்திய பெருநிலத்தில் அழிக்கப்பட்ட பழங்குடி இனமே கிடையாது. வெகுசில உறுப்பினர்களே உள்ள இனம் கூட நீடிக்கவே செய்கிறது -தனியடையாளத்துடன்

மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன. அந்த மக்களின் பண்பாட்டு மரபு, பாரம்பரியம், தனித்தன்மை, வரலாற்று நினைவு முழுக்க அழிக்கப்படுகிறது.

இந்தியாவில் 300 வருடம் முன்பு மதமாற்றம் செய்யப்பட்ட பரதவர்கள் ஓர் உதாரணம். புனித சேவியருக்குப் முன்னால் அவர்களுக்கு என்ன வரலாறு இருந்தது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும்  இன்று அவர்களிடம் இல்லை. தொன்மங்கள், சடங்குகள் ,ஆழ்மன நம்பிக்கைகள் — எதுவும்! இன்று பழங்குடிகளுக்கும் இதுவே நிகழ்கிறது.

இந்த அழித்தொழிப்பைப்பற்றி நம் அறிவுஜீவிகள் பேசுவதே இல்லை. ஆனால் இந்து பௌத்த சமண மதங்களின் ‘அழிப்பை’ப்பற்றி  ‘ஆதிக்கம்’ பற்றி கருத்தரங்குகளாக போட்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் வேடிக்கை என்னவென்றால் சென்ற காலங்களில் இந்த வகையான கருத்தரங்குகள் எல்லாமே புனித சவேரியார் கல்லூரி போன்ற கிறித்தவ அமைப்புகளில்தான் நடத்தப்பட்டன! அவர்களின் நிதியுதவியுடன். அங்கே பேசிய எவருமே கிறித்தவம் இந்த பழங்குடி அடையாளங்களுக்கும், பண்பாடுகளுக்கும் என்ன செய்கிறது என பேசியதில்லை. ஒருவர் கூட!

பழங்குடிகளின் சமயம் இந்து மதம் அல்ல என்ற ‘கதை’ கடந்த பத்தாண்டுகளில்  வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புகளாலும் ஆய்வாளர்களாலும் மிக உக்கிரமாக சொல்லப்படுகிறது. இது உண்மை அல்ல என்பதை  எந்தப் பழங்குடி வழிபாட்டையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அறியலாம். பழங்குடிகளுக்கு அவர்களுக்கே உரிய தெய்வங்கள் உண்டு என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு சாதிக்கும் அவர்களுக்கே உரிய குலதெய்வங்கள் உண்டு. ஆனால் மைய  அடையாளம் இந்து மரபு சார்ந்ததாகவே இருக்கும் என்பதையும் காணலாம். இதுவே பழங்குடிகள் விஷயத்திலும்.

தமிழகப் பழங்குடிகள் இந்துமத அமைப்புக்குள் வந்தது சங்க காலத்திலேயே நடந்துவிட்டது என்பது படிக்கும் வழக்கம் கொண்ட எவருக்குமே தெரியும். சொல்லப்போனால் அவர்களின் தெய்வமான முருகனைத்தான் இந்துமதம் பெரும் தெய்வமாக வழிபடுகிறது.  இன்றும் தமிழகப் பழங்குடிகளில் 70 சதம் பேரின் கடவுள் வேலன் தான். பல்வேறு வடிவங்களில் இந்த தெய்வம் வழிபடப்படுகிறது.  மேற்குமலைகளில் சாத்தன் அல்லது சாஸ்தா. கேரளத்தில் பகவதி. அதாவது கண்ணகி. அதற்கு சிலப்பதிகாரமே சான்றளிக்கிறது.

அவர்களிடம் உள்ள விபூதி குங்குமம் கொடுப்பது, படையலிடுவது போன்ற சடங்குகள், மறுபிறப்பு போன்ற நம்பிக்கைகள் எல்லாமே இந்து மதம் சார்ந்தவையே. பெரும்பாலான பழங்குடி தெய்வங்களின் கதைகள் நேரடியாக சிவபெருமானில் வந்து முடிவதைக் காணலாம். இதை அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்கள் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பல ஆலயங்களில் பழங்குடிகளுக்கு தனியிடமும் தனிச்சடங்குகளும் உள்ளன. நான் மொழியாக்கம் செய்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூலை உதாரணமாக பார்க்கவும். பல இந்து ஆலயங்கள் பழங்குடி தெய்வங்களாக இருந்தவை. உதாரணம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.

சாராம்சத்தில் இந்து மதக்கூறு முற்றிலும் இல்லாத ‘தூய’ பழங்குடி தெய்வம் என ஒன்றுகூட இல்லை என்பதே உண்மை. எந்த பழங்குடித் தெய்வத்தின் கதையும் இயல்பாகவே சைவத்தில் வந்து முட்டுவதைக் காணலாம். இந்து மதம் என்பதே இத்தகைய பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே இதற்குக் காரணம்.  அதாவது இவர்கள் வேறு இந்துமதம் வேறல்ல. சம்பந்தமில்லாமல் கொண்டு வந்து இவர்களின் மேல் போடப்பட்ட அன்னிய வஸ்து அல்ல இந்து மதம். இவர்களிடமிருந்தே உருவாகி வந்தது அது.

என் விமரிசனம் என்னவென்றால் இந்துமதத்தின் அடித்தளத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு மற்றும் மூத்தார் வழிபாடுகளுக்கு அவற்றுக்கே உரிய தனித்தன்மை உண்டு என்றும் அதை தரப்படுத்தி சமப்படுத்தும் முயற்சிகள் இந்த ஊடக யுகத்தில்  அழிவை உருவாக்கலாம் என்றும்தான். ஒரு மாபெரும் தொன்மவெளி அது. ஆகம வழிபாடு போன்ற முறைகள் மூலம் அவற்றின் தனித்தன்மை அழிய விடக்கூடாது என்பதே என் எண்ணம்.

பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றால் யார்தான் இந்துக்கள்? இந்து மதத்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான். கீழே நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் அடங்கிய பழங்குடி வழிபாடு. மேலே பெருந்தெய்வ வழிபாடு. அதற்கு மேல் தத்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்தும் இருக்கும்.  தத்துவம் பழங்குடி வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு தத்துவம் நோக்கிச் செல்லும்.பழங்குடி தெய்வபிரதிஷ்டை இல்லாத எந்த பெரும் கோயிலும் தமிழ்நாட்டில் கிடையாது என்பதை நினைவுகொள்ளுங்கள்.

குலதெய்வ பழங்குடி தெய்வ வழிபாடு செய்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றால் நானும் இந்து அல்லதானே? என் இட்டகவேலி முடிப்புரை நீலிக்கு இந்து பெருமத புராணங்களில் இடமில்லையே. இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்

இந்தச் சிக்கலை சிலர் தாங்கள் செய்யும் மதமாற்றச் செயல்பாட்டுக்கு நிகராக ஆக்கியதையே கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆகப்பெரிய கருத்தியல் மோசடி என்று நினைக்கிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

sanskrit-literature

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது

உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.

நீங்கள் இந்து மதம் பற்றிக் கூறும்போது கோவிலில் பிராமணர்கள் ஓதும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இது எப்படி வந்தது. எல்லா தெய்வங்களும் நாட்டார் தெய்வங்களாகத்தான் ஆரம்பித்தது என்றால் இந்த ஸ்லோகங்கள் எப்படிப் பிறந்தது? இது ஏதோ அறிவு பூர்வமான விஷயம் போலத் தோன்றுகிறது. ஏன் இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? தமிழில் எதுவும் இல்லை.

இந்த சைவம் அசைவம் என்ற பிரிவு ஜாதியை சார்ந்து வந்ததா இல்லை மதத்தை வைத்து வந்ததா? அனைத்து நாட்டார் தெய்வங்களுக்கும் புலால் படைக்கிறார்கள் என்றால் எல்லோரும் ஒரு காலத்தில் அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்போது இவர்கள் சைவமாக மாறினார்கள்?

ஒருவேளை இதற்கான பதிலை நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தால் அதற்கான சுட்டியை மட்டும் அனுப்பவும்.

நன்றி
அருள்

அன்புள்ள அருள்,

நன்றி.

பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

தமிழில் எப்போது நமக்கு எழுதப்பட்ட நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போதே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கையும் அறிகிறோம். இந்தியாவில் தமிழல்லாத எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கால் இன்றைய வடிவம் பெற்றவைதான். சம்ஸ்கிருதமில்லாமல் செயல்பட முடியாதவையும்கூட. அந்த செல்வாக்கால் அவை அடிமைப்படவோ அழியவோ இல்லை, மாறாக வளமும் வளர்ச்சியுமே பெற்றுள்ளன. பிரம்மாண்டமான ஒரு செவ்வியல் மரபையும் மாபெரும் சொற்களஞ்சியத்தையும் அவை சம்ஸ்கிருதம் வழியாகப் பெற்றன.

இந்த செல்வாக்கு என்பது ஓர் உரையாடலின் விளைவே. சம்ஸ்கிருதத்தில் இருந்து இந்தியமொழிகள் பெற்றுக்கொண்டவை அனைத்துமே பிற வட்டாரமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டவைதான். சம்ஸ்கிருதத்துக்கு சொற்களை, இலக்கியத்தைக் கொடுக்காத எந்த மொழியும் நம்மிடம் இல்லை. சம்ஸ்கிருதம் வழியாக இந்திய வட்டாரமொழிகள் ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்தன என்பதே உண்மை

இதை இங்கே வந்த ஆங்கிலேய சிந்தனையாளர்கள் ஒரு ஆதிக்கம் என்று கதை விட்டு அதை நம்பும் [ அல்லது நம்பி வாழும் ] அறிவுஜீவிப்பட்டாளம் ஒன்றையும் உருவாக்கி விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அசல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த எளிமைப்படுத்தலை நிராகரிக்கிறார்கள்.

பலமொழிகள் புழங்கும் எந்த ஒரு சமூகச் சூழலிலும் பல்வேறு வரலாற்றுக்காரணங்களால் ஏதாவது ஒருமொழி இணைப்பு மொழியாக மெல்லமெல்ல உருவாகிறது. பெரும்பாலும் பிறமொழிகளில் இருந்து சொற்களை எடுத்துக்கொண்டு வளர்வதற்குரிய விரிவான இலக்கண அமைப்பை உருவாக்கிக் கொண்ட மொழிகளே அவ்வாறு ஆகின்றன. அல்லது அதிகமாக இடப்பெயர்ச்சி செய்யும் மக்களின் மொழிகள்.

உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் நேபாள மொழி பொதுவான இணைப்பு மொழியாக ஆகியிருப்பதை அங்கே சென்றபோது காணமுடிந்தது. நேபாள மொழியில் பழங்குடிமொழியின் சொற்கள் கலந்து அது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. முக்கியமான காரணம் நேபாள வணிகர்களே வடகிழக்கு மாநிலத்தின் மலைக்கிராமங்கள் தோறும் செல்லும் வணிகர்கள் என்பதுதான்.

இவ்வாறு உருவாகும் இணைப்புமொழி ஆரம்பத்தில் அவை ஒரு இனம் அல்லது நிலத்தின் மொழியாக இருக்கும். ஆனால் வளர்ச்சிப்போக்கில் அவை அந்த அடையாளங்களையும் எல்லைகளையும் மீறி விரிந்துவிடும். எந்தக் குழுவுக்கும் இடத்துக்கும் உரிமை கொண்டாட முடியாததாக ஆகிவிடும். அதன் மொழிக்களஞ்சியமே பலநூறு மொழிகளில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் உலகமொழியாக ஆனது அவ்வாறுதான்.

சம்ஸ்கிருதமும் அப்படிப்பட்ட மொழி. அதன் நெகிழ்வான இலக்கண அமைப்பு ஏராளமான பிற சொற்களை மட்டுமல்ல பிறமொழி வழக்குகளைக்கூட எடுத்துக்கொள்ளக்கூடியது. இரண்டாயிரம் வருடங்களாக சம்ஸ்கிருதம் எந்த இனத்துக்கும் நிலத்துக்கும் உரிய மொழி அல்ல. புராதன வேத மொழியில் இருந்து வளர்ந்து விரிந்து எல்லா இந்திய மொழிகளையும் இணைப்பதாக ஆகியது. பிறமொழிகளுடன் உரையாடி அது வளர்ந்தது. அது பிறமொழிகளைப் பாதித்து புதிய மொழிகளை உருவாக்கியது.

இன்றைய சம்ஸ்கிருதம் வழிபாட்டுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் மட்டும் உரிய மொழியாகக் கட்டமைக்கப்பட்டது. செம்மையாக செய்யப்பட்டது என்பதே சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் .

இந்துமதமும் சம்ஸ்கிருதமும் இணையாகவே வளர்ந்தவை. இந்துமதம் என்பது ஒரு மாபெரும் தொகுப்புமதம். அதன் தொகுப்புமொழியாக சம்ஸ்கிருதம் உருவெடுத்தது. நாமறியும் வரலாற்றுக்காலகட்டத்துக்கு முன்னரே இது நிகழ்ந்துவிட்டது. இந்து ஞானமரபின் எல்லாப் பிரிவுக்கும் சம்ஸ்கிருதமே மூலநூல் மொழி. ஆத்திகக் கொள்கைகளுக்கும் சரி நாத்திகக் கொள்கைகளுக்கும் சரி.

இவ்வாறு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருப்பதனால்தான் அது இந்து வழிபாடுகளுக்குரிய தனி மொழியாக ஆகியது. எல்லா மதங்களும் அவ்வாறு பொது வழிபாட்டுமொழி கொண்டவையே. உலகமெங்கும் அரபி மொழிதான் இஸ்லாமின் வழிபாட்டு மொழி. லத்தீன்தான் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு மொழி.

ஏனென்றால் மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல. ஆந்திரத்து பக்தர் கன்யாகுமரியில் வழிபடவேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபடவேண்டும். ஆகவேதான் ஒரு பொது வழிபாட்டுமொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது. அதை ஓர் ஆதிக்கம் என்றல்ல ஒரு மகத்தான தொகுப்புமுறை என்றே நான் நினைக்கிறேன்.

அந்தத் தொகுப்பு வன்முறைமூலம் நிலைநாட்டப்பட்டதல்ல. பற்பல நூற்றாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த நீடித்த அறிவார்ந்த விவாதம் மூலம் உருவானது. அது ஒருவழிப்பாதை அல்ல. கொண்டும் கொடுத்தும் உருவான உரையாடல். அந்த உரையாடல் மூலம்தான் இந்து மதத்தின் இன்றைய பன்மைத்தன்மை உருவானது. எதையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை உருவானது.

அந்த உரையாடலும் தொகுப்பும் நிகழ்ந்தமையால்தான் இத்தனை ஆயிரம் இனக்குழுக்களும் இவ்வளவு மொழிகளும் கொண்ட இந்த மாபெரும் நிலப்பரப்பு உலகின் பல நாடுகளில் இன்றும் நிகழ்ந்துவரும் மாபெரும் இனமோதல்கள் நிகழாது ஒரு பண்பாட்டுத்தேசியமாக இருந்தது, அரசியல் தேசியமாக நீடிக்கிறது.

இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது.

சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது.

பெரும்பாலான கேரள பகவதி கோயில்களில் இந்த சம்ஸ்கிருதமயமாக்கல் அரைநூற்றாண்டில் நிகழ்ந்தது. தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன. இந்து மதம் தன்னைத் தொகுத்துக்கொண்டு விரிவடையும் வழிமுறை இதுதான்.

அதாவது ஒரு நாட்டார் தெய்வம் ஒரு குலக்குழுவுக்குள் ஓர் மொழிச்சூழலுக்குள் ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் வழிபடப்படும்போது அதற்கு வட்டார மொழி போதுமானதாக உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள அனைத்து இந்துக்களும் வழிபடும் தெய்வமாக ஆகும்போது அது சம்ஸ்கிருதம் என்ற பொதுமொழியை வழிபாட்டுமொழியாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.

மேலும் அத்தகைய முயற்சிகள் எல்லாமே ஏதோ வழியில் இந்துமதம் என்ற உலகளாவிய போக்கை உடைத்து அழிக்கும் நோக்கமுள்ளவையாக உள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்தப் பொதுப்போக்கிலிருந்து ஒரு வட்டார, இனம்சார்ந்த தனிப்போக்கை வெட்டிக்கொள்வதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அதற்குப்பின்னால் உள்ள நோக்கம் என்பது ஆன்மீகமோ வழிபாடோ அல்ல, அரசியல் மட்டுமே.

மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன. சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா மதக்கருத்துகளுக்கும் தமிழிலும் கன்னடத்திலும் துளுவிலும் எல்லாம் மொழியாக்க வடிவம் இருக்கும். தமிழில் இல்லாத எதுவும் சம்ஸ்கிருதத்தில் இல்லை.

நாலாயிர திவ்யப் பிரபந்தமும், தேவார திருவாசகமும் எல்லாம் சம்ஸ்கிருதத்துக்கு இணையான வழிபாட்டு நூல்களாகவே சைவ வைணவ மதங்களால் தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாகக் கருதப்படுகின்றன, பாடப்படுகின்றன. ’கோயிலுக்குள் தமிழ் இல்லை’ என்பதைப்போல அபத்தமான அப்பட்டமான பொய் வேறு இல்லை. கோயிலுக்குள் செல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொய்யைக் கோயிலுக்குச் செல்பவர்கள் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் எல்லா ஆலயங்களிலும் தமிழ்த் தோத்திரங்களும் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழே அறியாத ஆந்திரக் கோயில்களில் திருப்பாவை பாடப்படுகிறது.

அதாவது வழிபாட்டுமுறையின் மையம் இந்திய அளவில், உலக அளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நடைமுறைத்தேவைக்காக மட்டுமே கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருக்கலாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாலி தீவிலும் கலிஃபோர்னியாவிலும் ஒரு இந்து சக இந்துக்களுடன் இணைந்து வழிபட வழிசெய்வது அந்தப் பொது அம்சமே. காசியில் போஜ்புரியில் சிவபெருமானைத் துதிப்பதில்லை, சம்ஸ்கிருதத்தில்தான். ஆனால் அங்கே நாம் ’பொன்னார்மேனியனே’ என்று பாட எந்தத் தடையும் இல்லை.

அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல. சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.

தமிழ் சம்ஸ்கிருதம் மூலம் ஒட்டுமொத்த இந்தியமரபுடன் உரையாடி வளர்ந்துதான் இன்றைய வடிவை அடைந்தது. சம்ஸ்கிருதம் இல்லையேல் நமக்கு சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ, சீவகசிந்தாமணியோ, கம்பராமாயணமோ இல்லை. இன்று ஆங்கிலத்தையும் நான் இப்படித்தான் சொல்வேன். உலக மொழிகளில் இருந்து நமக்கு வருவதெல்லாம் ஆங்கிலம் வழியாகவே. ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை.

இந்து தெய்வங்களைப்பற்றி , தத்துவங்களைப்பற்றி இன்று அதிகமாக எழுதப்படுவது ஆங்கிலத்திலேயே. காரணம் அதுவே இன்றைய இணைப்பு மொழி. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் அதிகமாக எழுதினார். அவரது மாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஆங்கிலத்தையே ஊடகமாகக் கொண்டார்கள். இந்து வழிபாட்டுக்குரிய மொழியாக சம்ஸ்கிருதமும் இந்து தத்துவசிந்தனைக்குரிய மொழியாக ஆங்கிலமும் இன்று திகழ்கிறது.இதுவும் இயல்பானதே என்றுதான் நினைக்கிறேன்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1

இந்துமதமும் தரப்படுத்தலும்

ஆங்கிலம் என்ற திமிங்கலம் மற்ற உலகமொழிகளை விழுங்கிவருவதுபோல, பெருமதங்கள் உலகத்தின் அனைத்து பழங்குடிமதங்களையும் ஞானமார்க்கங்களையும் விழுங்கிவிட்டால்? இது இயற்கையான நிகழ்வாகுமா? விழுங்கப்பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவ ஞான தரிசனங்கள் என்னாவது?

என்று நண்பர் கதிரேசன் சொன்னது இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. சமண புத்த மதங்கள் பல நூற்றாண்டுகளாக உழைத்து பல பழங்குடியினரை (தமிழரும் தான்) தன் வசம் கொண்டு வந்தன. பின் சங்கரர் தொடங்கி அதன் பின் வந்த பக்தி இயக்கங்கள் பல நூற்றாண்டுகள் முரண்பட்டு சமண, புத்த மதங்களுடன் மோதி வெற்றி கொண்டு இந்து ஞான மரபின் கீழ் கொண்டு வந்தன. அது பின் பல பழங்குடிகளின் தெய்வங்களையும் “தந்திரமாக” தன் குடையின் கீழ் கொண்டு வந்தது. அய்யனார் சாமி, ஐயப்பன் எல்லாம் இப்படி தான் உள்ளே கொண்டு வரப்பட்டார்கள். ஐயப்பன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்கிற கதை எல்லாம் எப்போது வந்தது என்று நினைக்கிறீர்கள். இதனைப்பற்றி ஜெ முன்பு எழுதிருக்கிறார்.

இது போலவே இந்துக்களை கிறித்தவ, இஸ்லாமிய மதத்திற்கு ஈர்க்கும் நடவடிக்கைளை பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். இதை ஒரு ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக்கொள்ளவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை ஆதிக்க சாதியினர் (தோழர் கற்றுக்கொடுத்த வார்த்தை) அப்பட்டமாக வெறுத்து மிதித்துக்கொண்டிருந்தால் அவர்களை வேறு மதங்கள் குறி பார்ப்பது ஒன்றும் தவறில்லை. அப்படி அவர்கள் இந்து மதத்தை விட்டு விலகி போய் விடுவார்களென்று இந்துக்களுக்கு பயமிருந்தால் அவர்களுக்கு உரியதை மறுக்காமல் இருக்க வேண்டும். காசு வாங்கி விட்டு மதம் மாறி விடுறாங்க என்று கூச்சல் போடுவதெல்லாம் வேலை செய்யாது.

இன்னொன்று, இந்துக்கள் இதை பற்றி ஓவராக கவலைப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் இஸ்லாத்தின் மாபெரும் வன்தாக்குதல் இந்து ஞானமரபை அசைக்க முடியவில்லை. அதற்கு அடுத்து இருநூறு ஆண்டுகள் பெரும்பலத்துடன் வந்த கிறித்தவ மிஷனரிகளும் ஒன்றும் செய்ய வில்லை. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா, இந்தோனீசியா எல்லாம் கிறித்துவத்தும் இஸ்லாம் வந்த ஒரு நூற்றண்டில் அடி பணிந்ததை கவனம் கொள்ளவும். இந்து ஞானமரபு பிடி கொள்ளாதது. அனைத்து மரபுகளையும் தன்னுள் கொண்டது. அது அப்படியே தான் இருக்கும். இந்துக்களாக அதை அழித்தால் தான் உண்டு.

கடைசியில், இந்தியாவின் மக்கள் தொகையில் எட்டு சதவிகிதம் ஆதிவாசிகள். அவர்கள் எந்த பெரும் மததையும் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துக்களும், கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் அவர்களை அப்படியே விட்டு விட்டால் நன்றாக இருக்கும்.

சிவா

1

அன்புள்ள சிவா

சில விஷயங்களை  அறியாமல் மிக உறுதியாகச் சொல்லிவிடுகிறீர்களோ என்ற எண்ணம்.

1.  சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’. அவற்றுக்கு ஒரு தத்துவ- புராண விளக்கம் மட்டுமே அளிக்கின்றன. சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் படிமங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கின்றன.

அதாவது ஒரு ‘தரப்படுத்தல்’ அல்லது ‘மேம்படுத்தல்’ மட்டுமே நிகழ்கிறது. இந்த தொகுப்புச்செயல்பாட்டில் ஒரு இழப்பு உள்ளதா என்றால் உள்ளது. ஆனால் இது நூற்றாண்டுகளாக நடந்தும்கூட எந்த பழங்குடிப் பண்பாடும் அழிந்ததில்லை. பழங்குடிகளின் வரலாற்று நினைவுகள் இல்லாமல் ஆனதில்லை. சுயம் மறுக்கப்பட்டதில்லை. இந்திய பெருநிலத்தில் அழிக்கப்பட்ட பழங்குடி இனமே கிடையாது. வெகுசில உறுப்பினர்களே உள்ள இனம் கூட நீடிக்கவே செய்கிறது -தனியடையாளத்துடன்

மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன. அந்த மக்களின் பண்பாட்டு மரபு, பாரம்பரியம், தனித்தன்மை, வரலாற்று நினைவு முழுக்க அழிக்கப்படுகிறது.

இந்தியாவில் 300 வருடம் முன்பு மதமாற்றம் செய்யப்பட்ட பரதவர்கள் ஓர் உதாரணம். புனித சேவியருக்குப் முன்னால் அவர்களுக்கு என்ன வரலாறு இருந்தது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும்  இன்று அவர்களிடம் இல்லை. தொன்மங்கள், சடங்குகள் ,ஆழ்மன நம்பிக்கைகள் — எதுவும்! இன்று பழங்குடிகளுக்கும் இதுவே நிகழ்கிறது.

இந்த அழித்தொழிப்பைப்பற்றி நம் அறிவுஜீவிகள் பேசுவதே இல்லை. ஆனால் இந்து பௌத்த சமண மதங்களின் ‘அழிப்பை’ப்பற்றி  ‘ஆதிக்கம்’ பற்றி கருத்தரங்குகளாக போட்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் வேடிக்கை என்னவென்றால் சென்ற காலங்களில் இந்த வகையான கருத்தரங்குகள் எல்லாமே புனித சவேரியார் கல்லூரி போன்ற கிறித்தவ அமைப்புகளில்தான் நடத்தப்பட்டன! அவர்களின் நிதியுதவியுடன். அங்கே பேசிய எவருமே கிறித்தவம் இந்த பழங்குடி அடையாளங்களுக்கும், பண்பாடுகளுக்கும் என்ன செய்கிறது என பேசியதில்லை. ஒருவர் கூட!

2  பழங்குடிகளின் சமயம் இந்து மதம் அல்ல என்ற ‘கதை’ கடந்த பத்தாண்டுகளில்  வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புகளாலும் ஆய்வாளர்களாலும் மிக உக்கிரமாக சொல்லப்படுகிறது. இது உண்மை அல்ல என்பதை  எந்தப் பழங்குடி வழிபாட்டையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அறியலாம். பழங்குடிகளுக்கு அவர்களுக்கே உரிய தெய்வங்கள் உண்டு என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு சாதிக்கும் அவர்களுக்கே உரிய குலதெய்வங்கள் உண்டு. ஆனால் மைய  அடையாளம் இந்து மரபு சார்ந்ததாகவே இருக்கும் என்பதையும் காணலாம். இதுவே பழங்குடிகள் விஷயத்திலும்.

தமிழகப் பழங்குடிகள் இந்துமத அமைப்புக்குள் வந்தது சங்க காலத்திலேயே நடந்துவிட்டது என்பது படிக்கும் வழக்கம் கொண்ட எவருக்குமே தெரியும். சொல்லப்போனால் அவர்களின் தெய்வமான முருகனைத்தான் இந்துமதம் பெரும் தெய்வமாக வழிபடுகிறது.  இன்றும் தமிழகப் பழங்குடிகளில் 70 சதம் பேரின் கடவுள் வேலன் தான். பல்வேறு வடிவங்களில் இந்த தெய்வம் வழிபடப்படுகிறது.  மேற்குமலைகளில் சாத்தன் அல்லது சாஸ்தா. கேரளத்தில் பகவதி. அதாவது கண்ணகி. அதற்கு சிலப்பதிகாரமே சான்றளிக்கிறது.

அவர்களிடம் உள்ள விபூதி குங்குமம் கொடுப்பது, படையலிடுவது போன்ற சடங்குகள், மறுபிறப்பு போன்ற நம்பிக்கைகள் எல்லாமே இந்து மதம் சார்ந்தவையே. பெரும்பாலான பழங்குடி தெய்வங்களின் கதைகள் நேரடியாக சிவபெருமானில் வந்து முடிவதைக் காணலாம். இதை அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்கள் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பல ஆலயங்களில் பழங்குடிகளுக்கு தனியிடமும் தனிச்சடங்குகளும் உள்ளன. நான் மொழியாக்கம் செய்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூலை உதாரணமாக பார்க்கவும். பல இந்து ஆலயங்கள் பழங்குடி தெய்வங்களாக இருந்தவை. உதாரணம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.

சாராம்சத்தில் இந்து மதக்கூறு முற்றிலும் இல்லாத ‘தூய’ பழங்குடி தெய்வம் என ஒன்றுகூட இல்லை என்பதே உண்மை. எந்த பழங்குடித் தெய்வத்தின் கதையும் இயல்பாகவே சைவத்தில் வந்து முட்டுவதைக் காணலாம். இந்து மதம் என்பதே இத்தகைய பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே இதற்குக் காரணம்.  அதாவது இவர்கள் வேறு இந்துமதம் வேறல்ல. சம்பந்தமில்லாமல் கொண்டு வந்து இவர்களின் மேல் போடப்பட்ட அன்னிய வஸ்து அல்ல இந்து மதம். இவர்களிடமிருந்தே உருவாகி வந்தது அது.

1

என் விமரிசனம் என்னவென்றால் இந்துமதத்தின் அடித்தளத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு மற்றும் மூத்தார் வழிபாடுகளுக்கு அவற்றுக்கே உரிய தனித்தன்மை உண்டு என்றும் அதை தரப்படுத்தி சமப்படுத்தும் முயற்சிகள் இந்த ஊடக யுகத்தில்  அழிவை உருவாக்கலாம் என்றும்தான். ஒரு மாபெரும் தொன்மவெளி அது. ஆகம வழிபாடு போன்ற முறைகள் மூலம் அவற்றின் தனித்தன்மை அழிய விடக்கூடாது என்பதே என் எண்ணம்.

பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றால் யார்தான் இந்துக்கள்? இந்து மதத்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான். கீழே நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் அடங்கிய பழங்குடி வழிபாடு. மேலே பெருந்தெய்வ வழிபாடு. அதற்கு மேல் தத்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்தும் இருக்கும்.  தத்துவம் பழங்குடி வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு தத்துவம் நோக்கிச் செல்லும்.பழங்குடி தெய்வபிரதிஷ்டை இல்லாத எந்த பெரும் கோயிலும் தமிழ்நாட்டில் கிடையாது என்பதை நினைவுகொள்ளுங்கள்.

குலதெய்வ பழங்குடி தெய்வ வழிபாடு செய்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றால் நானும் இந்து அல்லதானே? என் இட்டகவேலி முடிப்புரை நீலிக்கு இந்து பெருமத புராணங்களில் இடமில்லையே. இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்

இந்தச் சிக்கலை சிலர் தாங்கள் செய்யும் மதமாற்றச் செயல்பாட்டுக்கு நிகராக ஆக்கியதையே கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆகப்பெரிய கருத்தியல் மோசடி என்று நினைக்கிறேன்

ஜெ

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Mar 19, 2010



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard