New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் திருமகன் இராமன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழர் திருமகன் இராமன்
Permalink  
 



தமிழர் திருமகன் இராமன்

 

இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.

இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது. 

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?

ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். 

சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம். 

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20) 

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”. 

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது. 

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்! 

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

சைவத் திருமுறைகளில் இராமாயணம்:

சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் - 

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -

"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் - வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற] 

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”


(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

என்றே சம்பந்தர் பாடுவார். 

மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.

சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருப்புகழில் ராமாயணம்:

முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -

“எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார். இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார். 

“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார். 


kula.jpg


கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான். 

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”

என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.

தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -

“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”


(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)

ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!

தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கலைகள் போற்றும் காகுத்தன்:

10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை. 
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.


Vaduvur_Raman_Sirippu.jpg


தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.

தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.

எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர் திருமகன் இராமன்:

திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5

“..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, Rama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.”

திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை. 

'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன! 

(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Anonymous said...

"ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையே நிகழ்ந்த போர்தான் இராமாயணம் என்பதாக ஒரு வாய்மையைப் புனைந்துரைத்து மகிழ்வர் சிலர். இதன் உண்மை அறியாது மயங்கி அறிவு சான்ற சிலரும் இவ்வாதத்தில் ஈடுபடுவது வருந்தத் தக்கது.

இதன் உண்மைதான் என்ன?

இராவணன் தமிழனே அல்லன். அவன் ஓர் அரக்கன். தமிழனுக்குப் பெயர் கிள்ளி, வளவன், நெடுஞ்செழியன் என்றிப்படி அமையுமே அன்றி, ரோதனம் செய்தவன் என்ற பொருளைத் தரும் இராவணன் என்றோ குடம் போன்ற காதினன் என்ற பொருளைத் தரும் கும்பகர்ணன் என்றோ அமைதற்கில்லை. 

இனி, இராவணன் தங்கையான சூர்ப்பநகை என்ற பெயராவது தமிழ்க்குலப் பெண்டிர் பெயராகுமா என நோக்குவோம்.

முறம் போன்ற நகங்களை உடையவள் என்பதே சூர்ப்பநகை என்பதன் பொருள்.

அப்படிப்பட்டவள்தான் தன் கணவனைத் தொடுவாளாயின் எத்துணை மென்மையாக இருக்கும்?

இயல்பாகவே நன்மையும் மென்மையும் உடைய தமிழ்க் குலத்தோர்க்கு இவ்வரக்கப் பெயர்கள் சற்றேனும் பொருந்துவனவன்று.

இம்மட்டன்றி, சூர்ப்பநகையின் கணவரது பெயர் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் வாயிலும் வழங்க இயலாத அப்பெயர் 'வித்யுத்ஜிஹ்வா' என்பதே.

வித்தையினால் நாவுடன் யுத்தம் செய்தவன் என்பது அதற்குப் பொருள்.

இனி, தமிழில் சங்ககால இலக்கியங்களாவது இராவணன் தமிழன் என்ற செய்தியைப் பேசுகின்றனவா எனில் இல்லை.

புறநானூற்றுப் பாடலொன்று 'இராவணன் அரக்கன்' என்றே கூறுகிறது. தேவார திருவாசகங்களும் இராவணன் அரக்கன் என்று பலவிடங்களில் கூறுகின்றன. எனினும் காலத்தின் முற்பாடு குறித்துப் புறப்பாடலையே ஈண்டு எடுத்துக் காட்டுதல் சாலும். 

ஊன்பொது பசுங்குடையார் பாடலில் காணப்படும் அவ்வரிகள் இதோ:

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
(புறம் 378)

மேற்பாடலால் இராவணன் அரக்கனே என்பது சங்ககாலச் செய்தியானது கண்கூடு.

ஆகவே, இராவணன் தமிழனே என்பாரது கூற்று, சான்று ஏதுமில்லாப் பொய்படு புரையாதல் கண்டு தெளிக."

கிருபானந்த வாரியார்
புத்தகம்: கம்பன் கவிநயம். எழுதியவர் வாரியார். குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Anonymous said...

ஜடாயு சார்,
இவர்களின் ஆரிய-திராவிட கூற்றை உண்மை என்றே வைத்தாலும் ராமாயணத்தில் ராவணன் ஒரு பிராமணன்தானே.அதனால்தானே அவனைக் கொன்ற பாவத்திற்கு ராமேசுவரத்தில் சத்திரியனான ராமர் பூசை சடங்குகள் நடத்தினார்.மஞ்சத்துண்டு தத்துவப்படி ராவணன் திராவிடப் பிராமணன் போலும்.
அன்புடன்
பொன்.பாண்டியன்

Anonymous said...

'தமிழர் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பார்கள்.

உண்மைதான். தமிழர்க்குரிய தனிக்குணமானதை உலகில் எந்த மொழி பேசும் குழுமத்திலும் காணவியலாது.

அது என்ன தெரியுமா?

'கடந்த மூவாயிரம் வருடங்களாக எம் மூதாதையர் முட்டாள்களாகவே இருந்து வருகிறார்கள்' என்று உலகில் எந்த மொழிக் குடும்பத்தாரும் கனவில் கூட நினைக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய மூளைச்சலவை செய்யப்பட்ட சோற்றாலடித்த முட்டாள் தமிழர் பெரும்பான்மை இப்படித்தான் நினைக்கிறது.

கம்பனை எரி, சேக்கிழாரைக் கொளுத்து, தொல்காப்பியனைத் தூரக்கிடாசு, ஏழைத்தமிழ்ப்புலவனை ஏளனம் செய், திருக்குறளை மலமென்று சொல் - என்று கடந்த நூறாண்டுகளாக இவர்கள் மண்டையை மரமாக்கியது வெறும் ஈவேரா என்ற தனிமனிதரில்லை. இந்தப் பெருந்திட்டத்தின் பின்னே சூத்திரதாரியாய் கண்ணுக்குத் தெரியாத கயிற்றை இழுப்பது கிறுத்துவ மிசிநரி. கண்டங்கள் தோறும் திட்டமிட்டுக் குறிபார்த்து ஒவ்வொரு இனமாக தங்கள் வேர் மீதே வெறுப்பு கொள்ளும் அளவுக்கு மனம் மாற்றி மதம் மாற்றுவதை ஒரு நுண்கலையாகவே மிசிநரி நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. 

இன்றைய திகதியில் இன்றைய தலைமுறையில் மூலநூல்களைப் படிக்கும் எத்தனை தமிழர்களைப் பார்க்க முடியும்? இவர்கள் கற்பதெல்லாம் மூன்றாம்தர புரட்டு நூல்களையே.

மேலும் தமிழாசிரியர்களில் பலரும் இன்று கிறித்துவர்கள். மீதி இருப்போர் திராவிடக் குஞ்சுகள். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மிகத்தையும் தமிழையும் திட்டமிட்டுப் பிரித்துத் தமிழினத்தின் ஆணிவேரினையே அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது உங்களைப் போன்று ஒருவர் வந்து வெளிச்சம் போட்டுக் காட்டாவிட்டால் திருமாவளவன் சொல்வது போல் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனுக்கு' ரசிகர் மன்றம் அமைக்கவும் முற்படுவார்கள்.

ஆனால் ஒன்று. எத்தனை புரட்டர் வந்தாலும் தமிழெனும் இறைமொழி முருகன் காப்பது. அது வெற்றிவேலாய் வீரவேலாய் வீறு கொண்டு இவர்களை அழிக்கும்! இது அந்த முருகன் மீது ஆணை!

அன்புடன்,
அருட்பிரகாசம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Anonymous said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:

கலித்தொகையிலும் இராவணன் அரக்கனே என்பதற்கான சான்று உண்டு. 

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் 
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை....

(கலித்தொகை, இரண்டாவது--குறிஞ்சிக் கலி; கபிலர் இயற்றியது; பாடல் 38)

ஐ இரு தலையின் அரக்கர் கோமான். பத்துத் தலைகளைக் கொண்டவனும், அரக்கர்களின் அரசனுமான இராவணன் கைலாச மலையைப் பெயர்க்க முயன்றதைப் போல இந்த யானை, இந்த வேங்கை மரத்ததை அடியோடு பெயர்க்க முயல்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

enRenRum-anbudan.BALA said...

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*

(என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை 
ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன்)

என்றும்

பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*

(தம்பிமார்களான பரதனும், சத்ருகனனும், இலக்குவனும், துணைவியான சீதாபிராட்டியும் சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி துதி செய்ய வேண்டி, அவர்கள் உடன் நின்ற ஸ்ரீராமனை, வலிமை வாய்ந்த இராவணனை வதம் செய்த ஒப்பில்லா எம்பெருமானை)

என்றும்

ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*

(வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் 
காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவன் ஆவான் என் தலைவன்.)

என்றும் திருமங்கையாழ்வாரால் போற்றி வணங்கப்பட்டவனும்,

சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*


என்று திருப்பாணாழ்வாரை பக்தியால் உருக வைத்தவனும்

மலையதனால் அணைகட்டி* மதிளிலங்கை அழித்தவனே*
அலைகடலைக் கடைந்து* அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே*
கலைவலவர் தாம்வாழும்* கணபுரத்தென் கருமணியே*
சிலைவலவா சேவகனே* சீராம தாலேலோ 


என்று குலசேகர மன்னனால் போற்றி சீராட்டப்பட்டவனும்

ஆன ஸ்ரீராமன் குறித்து பரப்பப்பட்ட புரட்டுக்களுக்கும், அவதூறுகளுக்கும், விளக்கமான இப்பதிவின் மூலம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!

பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், அனாவசியமாக, சிந்திக்காமல், சைலண்ட் மெஜாரிட்டியை புண்படுத்தும் விதமாக இராமபிரானை வசை பாடி விட்டு, அதை நியாயப்படுத்த வால்மீகியை துணைக்கழைத்தது பெரிய கொடுமை. 

நமது தமிழ் கூறும் வலையுலகத்தில் (பலரும்) அதைக் கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதையும் பாராட்டி மகிழ்வது உச்சக்கட்ட கொடுமை!

எ.அ.பாலா



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வால்மீகி ராமாயணம் கூறுவது என்ன ?-சோ

"ஜூனியர் விகடன்' பத்திரிகை 30.9.2007 தேதியிட்ட இதழில், ராமாயணம் பற்றி அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் கூறியுள்ள, சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


ஸ்ரீ தாத்தாச்சாரியார், வயதில் மட்டுமல்ல, அறிவிலும் மிகப் பெரியவர்; ஸம்ஸ்க்ருத புலமை மிகுந்தவர்; வேதங்களை அறிந்தவர்; ஹிந்து மத சித்தாந்தங்களை நன்கு கற்றவர். இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத நான், அவருடன் மாறுபடுகிற கருத்துக்களைச் சொல்வது என்பது – நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. அவர் கூறியுள்ளவையும், அவற்றுக்கு என் மறுப்பும் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...போர் முடிந்து ராமர் திரும்புகையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்து விட்டதாகவும், வால்மீகி ராமாயணத்தில் வருகிறது...

மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,
இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ! அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' – என்று கூறுகிறார்.
அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான்
இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர் பெற்று,மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' – என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ..."ராமர் பாலம்' என்று சொல்வதே தவறு. "ராமர் அணை' என்று வேண்டுமானால் சொல்லலாம்... "சேது' என்ற சொல்லுக்கு "கடந்து செல்வது' என்று பொருள். ராமர் கடலைக் கடந்து சென்ற நிகழ்வுக்குப் பெயர்தான் சேது. இது ஒரு வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல...

மறுப்பு : ஸம்ஸ்க்ருத அகராதிகளில் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அவ்வாறே அதற்குப் பொருளும் கூறப்பட்டிருக்கிறது.

"ஸேது' என்பதற்கு "அணை' என்ற பொருள்; மற்றும் "பாலம்' என்கிற பொருள்; மேலும் சில அர்த்தங்கள் – அகராதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் "கடப்பது' என்ற அர்த்தம் கூறப்படவில்லை.

தவிர, வால்மீகி ராமாயணத்தில் "ஸேது:' (ஸேதுஹு என்று படிக்க வேண்டும்) என்று வருகிறது. வினைச்சொல் "ஸேது:' என்று வராது. ஆகையால் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லே. (ஸாம வேதத்தில், அது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கூற என்னால் முடியவில்லை.)

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...மணல் மற்றும் கற்களைப் போட்டு, அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தரப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக, வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான்
"சேது பாலம்' என கதைகட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்....

மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் "தடுப்புகள்' ஏற்படுத்தப்பட்டன என்றோ, அவற்றை வானர சேனை தாண்டித் தாண்டி சென்றன என்றோ கூறப்படவில்லை.

அணை – பாலம் கட்டப்பட்டதையும், கடலை, வானர சேனை கடந்ததையும் வால்மீகி ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது :

"பல்லாயிரக்கணக்கான வானரர்கள், பாறைகளைப் பெயர்த்து, மரங்களைப் பிடுங்கி, கடற்கரைக்கு கொண்டு வந்தனர். (மரங்களின் பெயர்களும் தரப்பட்டிருக்கின்றன). பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டன... பாறைகளை சமுத்திரத்தில் போட்டு, (அவை நேராக இருக்க) கயிறுகள் பயன்படுத்தப்பட்டன... (ஒவ்வொரு தினமும் எவ்வளவு தூரம் பாலம் கட்டப்பட்டது என்பது விளக்கப்படுகிறது)... இவ்வாறு, வானத்தில் தெரிகின்ற நக்ஷத்திர மண்டலம் போல், அந்த சமுத்திரத்தின் நடுவே
காட்சியளித்த, அந்த உன்னதமான பாலத்தை (அணையை), நளன் கட்டினான். வானத்திலிருந்து சித்தர்களும், ரிஷிகளும் இந்த அதிசயத்தைப் பார்வையிட்டனர். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உடைய அந்தப் பாலத்தைக் கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் பிரமித்தனர். நன்கு கட்டப்பட்ட, மிகச் சிறப்பான, ஸ்திரமான அந்த அணை, வகிடு எடுக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கேசம் போல காட்சியளித்தது...!

இவ்வாறு, வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிற அணையை, அல்லது பாலத்தை "மண்ணையும் கல்லையும் போட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது' என்று கூறுவது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது.

வால்மீகி ராமாயணத்தில் மேலும் "...ஸுக்ரீவனுடன், ராமர் வானர ஸேனைக்கு தலைமை வகித்து முன் சென்றார் (ஹனுமார் அவரைத் தாங்கிச் செல்ல வேண்டுமென்று ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டான்) சில வானரர்கள், பாலத்தின் நடுவில் நடந்தனர்;
சிலர் பாலத்தின் இருபுறங்களில் நடந்தனர்; சிலர் தண்ணீரிலியே கூட நீந்தினர்... கடலின் மறு கரையிலிருந்து, நளன் கட்டிய பாலத்தின் மூலம் இலங்கையை அடைந்த வானர ஸேனைகள் அங்கே முகாமிட ஸுக்ரீவன் ஆணையிட்டான்...'

இவ்வாறு வால்மீகி கூறியுள்ளபோது, ஏதோ மணல் "திட்டுகளை தாண்டித் தாண்டி' மறு கரை அடையப்பட்டது என்று சொல்வதும், வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானதே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது. ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார் : "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்' – அதாவது "நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்' என ராமர் தன் உரையில் சொல்வதாக, வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது....

மறுப்பு : இந்த மேற்கோள் அரைகுறையாகவும், தவறாகவும் இருக்கிறது. ஸீதை அக்னி பிரவேசம் செய்கிறபோது, தேவர்கள் ராமர் முன்தோன்றி, "தெய்வங்களில் முதன்மை படைத்தவன் நீ, என்பதை நீ உணராமற் போவது எப்படி? படைப்பின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், இருக்கிறவனல்லவா நீ? மனிதன் போல நடந்துகொண்டு ஸீதையை அலட்சியம் செய்கிறாயே?' என்று கேட்கின்றனர்.

அதற்கு ராமர் கூறுகிற பதிலில் பாதியை மேற்கோள் காட்டி, அர்த்தம் கூறுகையில், கொஞ்சம் தானாக சேர்த்துக் கூறியிருக்கிறார் பெரியவர். அந்த ஸ்லோகம் இவ்வாறு அமைந்திருக்கிறது:

ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம்/
ஸோஹம் யஸ்ச யாதஸ்ச
பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே//

இதன் பொருள் : தசரதனின் மகன், ராமன் என்கிற மனிதன், என்றே என்னை நான் கருதுகிறேன். மேன்மை வாய்ந்த பகவான் (பிரம்மதேவன்) நான் யார், எங்கிருந்து வந்தவன் என்பதைக் கூறுவாராக'...

அதாவது, "என்னைப் போற்றாதீர்கள்' என்றும் ராமர் கூறவில்லை; "நான் தெய்வமெல்லாம் கிடையாது' என்றும் கூறவில்லை. "நான் யார் என்பதை பிரம்மதேவன் விளக்குவாராக' – என்றுதான் சொல்கிறார். அப்போது பிரம்மதேவன், பலவித போற்றுதல்களைக் கூறுகிறார். "நீயே நாராயணன். நீயே கார்த்திகேயன். அறிவு, பலம், பொறுமை, அனைத்தும் நீயே. எல்லாவற்றின் தொடக்கமும் நீயே. முடிவும் நீயே. நீயே விஷ்ணு. நீ, மஹாவிஷ்ணு; ஸீதை, மஹா லக்ஷ்மி...' பிரம்மதேவன் கூறுகிற துதி நீண்டது; அது புகழ்பெற்ற துதி.

இவ்வாறு பிரம்மதேவன் கூறுவதை ராமர் மறுத்து, "என்னைப் போற்றாதீர்கள்' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது. இந்த துதிக்குப் பின்னால்தான், ஸீதையை ஏந்தி அக்னிதேவன் தோன்றினான்.

இதைத் தவிர, விஷ்ணுவே, ராமராக அவதரித்தார் என்பதும், வால்மீகி ராமாயணத்திலேயே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ராமர் தெய்வமல்ல என்பது, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்து.

ராமாவதாரம், மனித அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து, தனது அவதார காலத்தை முடிப்பதே விஷ்ணுவின் நோக்கம். அதனால்தான், ராமர் "நானே தெய்வம்' என்று கூறிக்கொள்ளவில்லை.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர், "நான் ஒரு சாதாரண தொண்டன்' என்று சொல்லிக் கொண்டாலும், அவரை தொண்டனாக நடத்தாமல், தலைவனாகவே நடத்துகிற "பண்பு' உள்ள தேசத்தில் – "ராமர் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?' என்ற கேள்வி, அநாவசியமானது.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் அக்கரை போவதற்காகத்தானே கட்டினார்.
வணங்குவதற்காகவா கட்டினார்?....
மறுப்பு : இப்படி எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அது ஒன்றும் பெரிய காரியமல்ல. "சாவதற்காகத்தானே ஏசுவை சிலுவையில் அரைந்தார்கள். சிலுவையைக் கும்பிடுவதற்காகவா?' என்று கேட்கலாம். ஏசு பிரானின் தெய்வீகத் தன்மையை ஏற்காதவர்கள், இப்படிப் பேசலாம்.

"நபிகள் தலையில் முடி வைத்துக் கொண்டது, வழக்கப்படியானதுதானே?
வணங்குவதற்காகவா முடி வைத்துக் கொண்டார்?' என்றும் கேட்கலாம். இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அலட்சியமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்!

ராமர் கடலைக் கடப்பதற்கு சமுத்திரத்தில் பாலம் அமைத்த அரிய சாதனையை, தேவர்களே புகழ்ந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த உணர்வை வணங்குவதற்கு மேல், பக்தியுடையவர்கள் செய்யக் கூடியது என்ன?

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...(ஸ்ரீராமர்) திரும்புகிறபோது, விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை ராமர் இலங்கைக்குப் போவதற்கும், ஏதாவது விமானம் இருந்திருந்தால், இந்தப் பிரச்சனையே வந்திருக்காது....

மறுப்பு : ஏன்? ராவணன் ஸீதையை அபகரித்துச் செல்லாமல் இருந்திருந்தாலும், இந்தப் பாலம் பற்றிய பிரச்சனையே வந்திருக்காதே? அதைக் குறிப்பிட்டால், ராவணனின் தீய குணத்தை நியாயப்படுத்துவது போல இருக்கும் என்று அதுவிடப்பட்டு, அதற்குப் பதிலாக "ராமருக்கு இலங்கை செல்ல விமானம் இருந்திருந்தால்...' என்பது மட்டும் குறிப்பிடப்படுகிறதா?

"ராமரே அழிக்க முடிவு பண்ணியதை, நாம் வீண் நம்பிக்கையில் போற்றி...' என்றும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சார்யர், தனது கருத்துக்களின் முடிவாகக் கூறியிருக்கிறார்.

நாமும் முடிவாகச் சொல்கிறோம் ராமர், ஸேதுவை அணையை பாலத்தை அழிக்க நினைக்கவும் இல்லை, முடிவுசெய்யவும் இல்லை, முனையவும் இல்லை. அதற்கு மாறாக ஸீதையிடம் அந்த பாலத்தைக் காட்டி, அதன்மூலம் ஸமுத்திரத்தைக் கடந்ததையும் கூறி மகிழ்கிறார். அந்த இடத்தில் சமுத்திரக் கரையையும் கூட, புனிதமானது என்றும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் திகழும் என்றும் ராமர் கூறுகிறார். இது வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்டிருப்பது.

ஆக, ராமர் பற்றி ஸ்ரீ தாத்தாச்சார்யர் கூறியுள்ளவை, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்துக்களே ஒழிய, அதை ஒட்டிய கருத்துக்கள் அல்ல.

(நன்றி: துக்ளக் )
நன்றி:http://idlyvadai.blogspot.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!

(Where the past comes alive...)

– என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரை
வெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.

தவிர,

""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர்
தாங்கி நிற்கிறது;

...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''


– என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.

இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.

ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

துவேஷம் தொடர்கிறது
"ராமன் குடிகாரன் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்' – இது தமிழக முதல்வரின், ஹிந்து மத துவேஷப் பேச்சுக்களின் சமீபத்திய வெளியீடு. 

ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை – என்பதை அவருக்கு யார் சுட்டிக்காட்டினார்களோ, தெரியாது; டெலிவிஷன் சேனல்களினால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு விட்ட இந்த அட்டூழியமான பேச்சை, கொஞ்சம் மாற்றி, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில், "ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' என்று மட்டுமே முதல்வர் கூறியதாக, அவருடைய 
பேச்சு "திருத்தி' அமைக்கப்பட்டது. 

இந்த திருத்தமும், பிதற்றலே. வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்திலும் ராமர் ஸோமபானம் அருந்துகிறவர் என்று எழுதப்படவில்லை. 

ஸோமபானமும் அருந்தவில்லை ! 

ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. 

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல. 

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம். 

ஆனால், மேலே கூறியுள்ளபடி, "ராமர் ஸோமபானம் அருந்தினார்' என்று கூட, வால்மீகி தனது இராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. 

அதாவது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி கூறியிருக்கிறார்' என்ற முதல்வரின் பேச்சும் பிதற்றல்; "ராமர் ஸோமபானம் என்கிற மதுபானம் அருந்துகிறவர்' என்று வால்மீகி எழுதியிருப்பதாக, முதல்வர் கூறியிருப்பதும் அபத்தம். 

சரி, ஏன் இப்படி முதல்வர், தப்பும் தவறுமாக பேசியிருக்கிறார்? "பட்டாபிஷேகத்திற்கு வஸிஷ்டர் குறித்த தினம் மட்டமான தினமாகி விட்டது, ஏன்?' என்றும்; "ஸீதை மீது ராமர் மரவுரியை கட்டாயமாகத் திணித்தார்' என்றும் ஏற்கெனவே கலைஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. அந்தத் தவறுகளை அப்போதே நாம் சுட்டிக்காட்டினோம். ராமாயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, பிதற்றியே தீருவது என்று, அவருக்கு என்ன வைராக்கியமோ தெரியவில்லை – இப்போது மீண்டும் அந்த வேலையைச் செய்திருக்கிறார். 

இருந்தாலும் கூட, முதல்வர் ஆயிற்றே! அதனால், அவருடைய பதவியை நினைத்தாவது – அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, கொஞ்சமாவது நாம் முனைய வேண்டாமா? 

"மது' என்றால் "குடி'தானா ? 

திரைப்பட காமெடி சீன்களில், காமெடியன் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, "கெக்கே... புக்கே... மக்ர டொக்கே... ஜிக்ல மக்கோ... திங்கன கும்பாரே... அஜாகினி பஜோகினி...' என்று ஏதாவது பேசுவார்; அவர் பக்கத்தில் இருப்பவர், இந்த உளறலுக்கு ஒரு அர்த்தம் சொல்வார். அந்த மாதிரி, முதல்வரின் பேச்சுக்கு, நாம் ஒரு பொருள் காண்போம். 

ராமாயணத்திலிருந்து, ராமர் "மது' உண்டதாக தெரிய வருகிறது என்று யாரோ முதல்வரிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு, "ஆஹா! மது! மதுபானம்! சாராயம்!' என்று அவர் முடிவுகட்டி விட்டார் போலிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன. 

"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' – "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது. 

ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குடிப்பழக்கத்திற்கு, ராமர் கண்டனம் ! 

இன்னமும் சொல்லப்போனால், போதை தருகிற பானங்களை அருந்துவதை ராமர் வெறுத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வாலி வதத்திற்குப் பிறகு, ஸுக்ரீவன், தான் ராமருக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்; இப்படி யுத்த முஸ்தீபுகள் செய்யப்படாமல், இருப்பதைப் பார்த்த ராமர் கோபம் அடைகிறார். ஸுக்ரீவன் கேளிக்கைகளிலும், போதை பானங்கள் அருந்துவதிலும் நேரம் கழித்துக் கொண்டிருப்பதை சாடி, அவர் லக்ஷ்மணனிடம் பேசுகிறார். 

அந்த இடத்தில் ராமர் கண்டிக்கிற பழக்கம் "பானம் அருந்துவது'; "பானமேவோபஸேவதே' – "பானம் அருந்துவதிலேயே குறியாக இருக்கிறான்' என்று ராமர் கூறுகிறார். அந்தப் பழக்கத்தைக் கண்டிக்கிறார். ஆனால், குடிப் பழக்கத்தை, "மது அருந்துவது என்றோ, ஸோமபானம் அருந்துவது' என்றோ சொல்லவில்லை; 

லக்ஷ்மணன் சுக்ரீவனை சந்திக்கச் செல்கிறான்; முதலில் தாரை (வாலியின் மனைவியாக இருந்தவள்; பின்னர் சுக்ரீவனோடு இணைந்தவள்) வந்து வரவேற்கிறாள். "பானம் அருந்தியதால் லஜ்ஜை விலகியவளாக' என்று அவள் வர்ணிக்கப் படுகிறாள். "பானயோகாச்ச நிவ்ருத்தலஜ்ஜா' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது; "மது அருந்தியதால் வெட்கத்தை விட்டாள்' என்றோ, "ஸோமபானம் அருந்தியதால் லஜ்ஜையை விட்டாள்' என்றோ, சொல்லப்படவில்லை. 

ராமர் சுக்ரீவனுக்கு விடுத்த எச்சரிக்கையையும், அவர் கூறியதையும் தாரையிடம் எடுத்துரைக்கிற லக்ஷ்மணன், "வாழ்வில் நலம் பெறவும், தர்ம நெறிப்படி நடக்கவும் விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி குடிப்பது தகாது; அறம் பொருள் இன்பம் 
மூன்றையும் குடி அழிக்க வல்லது' என்கிறான். அதாவது ராமரும், அவர் சொல்படி பேசிய லக்ஷ்மணனும் குடியை நிந்தித்தனர். இந்த இடத்திலும் குடிப்பழக்கம் "மது அருந்துவது' என்று குறிப்பிடப்படவில்லை. "பானம்' என்றுதான் கூறப்படுகிறது. 

மீண்டும், ஸுக்ரீவனை சந்திக்கிறபோது, பசுவதை செய்பவன், திருடன், விரதத்தை மீறுபவன், ஆகியோருக்கு இணையாக குடிப்பவனைப் பேசுகிறான் லக்ஷ்மணன். அப்போதும் "மது, ஸோமபானம்' என்றெல்லாம் சொல்லவில்லை. "கோக்னே சைவ ஸுராபேச சௌரே பக்னவ்ரதே ததா' – என்று சொல்லி, குடிப் பழக்கத்தை "ஸுராபே' – ஸுராபானம் அருந்துவது, என்றுதான் லக்ஷ்மணன் கூறுகிறான். 

ராமரும், லக்ஷ்மணனும், குடிப்பழக்கத்தை இவ்வாறு கண்டனம் செய்திருக்க, ராமர் குடிகாரர் என்றோ, குடிப்பழக்கம் உடையவர் என்றோ கருத வால்மீகி ராமாயணத்தில் இடமே இல்லை. 

மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்வது தகும் என்பதால், "ஸோமபானம் என்பது போதை தருகிற பானம் அல்ல' என்பதையும், அதையும் ராமர் அருந்தியதாக வால்மீகி கூறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம். 

நேருஜி – தவறான விலாசம் ! 

"நேரு சொன்னார், சொன்னார்...' என்று மீண்டும் மீண்டும் முதல்வர் பேசி வருகிறார். மேலைநாட்டு விமர்சனங்களை அப்படியே ஏற்ற நேருஜியின் கருத்துகளைப் படித்து, ஹிந்து மதம் பற்றி தெளிவுபெற முடியாது. பார்லிமென்டின் நடைமுறைகள், சோஷலிஸ நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் பற்றி 
தெரிந்துகொள்ள, நேருவின் கருத்துகளும் உதவும். ஆன்மீகம் பற்றியோ, தெய்வ நம்பிக்கை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமானால், அனந்தராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்; அல்லது தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஆகியோரை அணுக வேண்டும். முதல்வர் விலாசம் தெரியாமல், நேருவிடம் போனது அவருடைய தவறு. உதாரணமாக – ரம்ஜான் நோன்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் – முதல்வரிடம் போனால், அந்த நோன்பு பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றி விவரம் இல்லாவிட்டாலும் – "குல்லாய் அணிவது, கஞ்சி குடிப்பது' என்ற விவரங்களாவது தெரியவரும். ஆனால் விநாயகர் சதுர்த்தி பற்றி கேட்டால், "கொழுக்கட்டையை வாயில் திணிப்பேன்' – என்பார். கிருத்திகை விரதம் பற்றி அவரிடம் கேட்பதில் என்ன பயன் இருக்கும்? "அன்று நான் நிறைய சாப்பிடுவேன்' என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்கு மேல் அவருக்குத் தெரியாது. 

ஆகையால் விலாசம் தவறி அவரிடம் போய் இந்த மாதிரி விஷயங்கள் பற்றி கேட்டால், அது நம் தவறு. இவ்விஷயத்தில், நேருஜி சமாச்சாரமும் அப்படித்தான். இருந்தாலும், அவர் மனித நாகரிகத்தை மதித்தவர் என்பதால், "கொழுக்கட்டை திணிப்பேன்' என்றெல்லாம் சொல்லாமல், "எனக்கு அது பற்றியெல்லாம் நம்பிக்கையும் இல்லை; தெரியவும் தெரியாது' என்று சொல்லியிருப்பார். 

இதையெல்லாம், முதல்வரின் கவனத்திற்காக நாம் சொல்லவில்லை. கலைஞர் "ராமன் குடிகாரன்... ஸோம பானம் அருந்தும் பழக்கமுடையவர்' என்றெல்லாம் பேசியதற்கு மறுதினமே, திரு. சரத்குமார், திரு.குருமூர்த்தி ஆகியோர் என்னிடம் இதுபற்றி அபிப்ராயம் கேட்டபோது, வால்மீகி ராமாயணத்தில் உள்ள மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். அவர்களைப் போல நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறினால், ஓரளவாவது உண்மைகள் பலரிடையே பரவும்; கலைஞர் போல துவேஷ மனம் கொண்டவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று என்ன பயன்? துவேஷத்தில் மூழ்கியிருக்கிற அவரால், உண்மையை கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமற் போய்விட்டது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், வாசகர்களில் யாராவது, முதல்வரின் பேச்சைப் பற்றிய செய்தியைப் படித்து, சற்று மனம் குழம்பியிருந்தால், அவர்கள் "தெளிவுபெற வேண்டும்' என்கிற எண்ணத்தில்தான், இவ்வளவு விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அரசியல் சட்டம் ! 

"ராமர் பற்றி பேசக்கூடாது என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்று ரொம்ப புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டிருக்கிறார். "ஹிந்து மதம் நீங்கலாக மற்ற மதத்தவர்கள் வழிபடுகிற தெய்வங்கள் பற்றியோ, இறைத் தூதர்கள் பற்றியோ எதுவும் பேசக் கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? அப்போது அவை பற்றியெல்லாம், யாராவது தாறுமாறாகப் பேசினால், அதில் தவறு இல்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமா? அதுதான் முதல்வரின் வாதமா? அதை விடுவோம். 

"அரசு மேற்கொள்ளும் திட்டம் பற்றி யாரும் எதுவும் பேசினால் அது சதி' என்று அரசியல் சட்டம் சொல்கிறதா? இல்லையே! பின் ஏன், சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகிறவர்கள் செய்வது சதி என்று முதல்வர் சாடுகிறார்? சில ஆண்டுகளுக்கு முன்பு "என்னை கருணாநிதி' என்று குறிப்பிடுகிறார்களே? தமிழக அரசியல் அவ்வளவு தாழ்ந்துவிட்டது!' என்று முதல்வர் வேதனைப்பட்டாரே? ஏன்? அரசியல் சட்டத்தில் "கருணாநிதியை, கருணாநிதி என்று சொல்லக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறதா? சமீபத்தில், "என் குடும்பத்தினர் பற்றி விமர்சனம் செய்கிறார்களே' என்று வருத்தப்பட்டாரே – "கருணாநிதி குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? 

அரசியல் சட்டம், எல்லா மதத்தினருக்கும் இடர்பாடு, குறுக்கீடு இன்றி தங்கள் நம்பிக்கையைத் தொடர்கிற உரிமையைத் தந்திருக்கிறது; வழிபாட்டு உரிமை உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதை மதிக்காமல் ஒரு ஆட்சியாளர் பேசுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே! 

கிரிமினல் குற்றம் ! 

இது ஒருபுறமிருக்க – முதல்வர் தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் மனம் புண்படுகிறபடியும், ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்தும் பேசி வருவது – அரசியல் சட்டம் கூறுகிற மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல; இந்திய தண்டனைச் சட்டம் (இந்தியன் பீனல் கோட்) பிரிவுகள் 295ஏ, 298 ஆகியவற்றின்படி கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு, அந்த இருபிரிவுகளில், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை' என்று முதல்வர் கூறலாம். 

ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது. 

இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வருகிறவர், ஆட்சியில் எப்படி தொடரலாம்? ஒரு மதத்தினர் தொழும் தெய்வங்களை நான் இகழ்ந்தே தீருவேன் என்று செயல்படுகிறவர் – மதச்சார்பின்மையின்படி ஆட்சி நடத்துபவரும் அல்ல; அப்படிப்பட்டவர் பதவியில் தொடர்வது, அரசியல் சட்டத்திற்குப் பெருமையும் அல்ல. 

(நன்றி: துக்ளக் )



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ராமாயணத்திலிருந்து என்ன கற்கலாம்?

ராமன் 

தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். 

சீதை 

வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். 


தசரதன் 

பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன். 

லக்ஷமணன் 

சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன். 

பரதன் 

தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன். 

கைகேயி - முதல் பாதி 

தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம். 

கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம். 

கூனி-மந்தரை 

யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது 

சூர்பனகை 

திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது 

ராவணன் 

இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று. 

மண்டோதரி 

கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள். 

கும்பகர்ணன் 

தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. 

விபீஷணன் 

தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. 

வாலி 

தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு. 

சுக்ரீவன் 

அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன். 

அனுமான் 

தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன். 

புஷ்பகவிமானம் 

இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை. 

வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது 

நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். 

ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன. 

இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். 

காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இப்போது கலித்தொகை கூறும் ராமாயண கதை காண்போம்.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் 
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, 
ஐ இரு தலையின் அரக்கர் கோமான் 
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை 
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் 
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை 
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன் 
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: கலித்தொகை 38:1-8

புலவர் கபிலர் யானை தன் கொம்புகள் வேன்கை மரத்தில் குத்தியதை பின் எடுக்க முடியாமல் தவித்ததை - இமயமலையை வில்லாக வளைத்து (முப்புரம் எரித்த) சடையுடைய சிவபெருமான் தன் மனைவி உமையோடு அமர்ந்து இருந்தபோது 10 தலை கொண்ட இராவணன் இமயமலை கீழ் கையிட்டு தூக்கிடமுயல சிவன் அழுத்த அல்லல் உற்றாதற்கு உவமையாக தந்துள்ளார்.

தமிழ் மக்களிடம் இராமாயணம் மிகுதியாக பரவிஉள்ளதைக் காட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!! 
தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!

இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:

"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்

இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!

முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்??? 

அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!

இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!

ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை. 

குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!

அன்புடன்
ஹரிஹரன் http://harimakesh.blogspot.com/2007/10/179.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன் பாமரத்தனம் 
இந்த வார விகடனில் "ஹாய் மதன்" பகுதியில் இப்படி ஒரு கேள்வி பதில்.

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?
என்.பிரபாகர், ஆ.புதூர்.

மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு«க்ஷத்திரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதி-நிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்-துரைக்க மட்டுமேகிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில்சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில்துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'

ஹாய் மதன் அனைத்தும் அறிந்த ஒரு அறிஞர் என்று அவரிடம் கேள்வி கேட்பவர்கள் உட்பட யாருமே எண்ணுவதில்லை.

இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கூமுட்டைத் தனமான பதிலைப் பார்க்கையில், மகாபாரதம் போன்ற நன்கறியப் பட்ட விஷயத்தில் கூட ஒரு குறைந்த பட்ச ஹோம் ஒர்க், புரிதல், உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவரே என்ணுவதாகத் தெரிகிறது.

இது பற்றி இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட திரு. ஹரிகிருஷ்ணன் (அனுமன் வார்ப்பும் வனப்பும் நூலின் ஆசிரியர்) அவர்களிடம் மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டபோது அவர் அனுப்பிய பதில் மூலம் ஹாய் மதனிடம் தொடுக்கும் கேள்விகள் -

1) முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் பதிப்பு இப்போது யாரால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கே கிடைக்கும்?

2) கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே இல்லை. அவன் ஒருபோதும் அரசனாகவே இருந்ததில்லை என்பதுதான் வியாச பாரதத்தின் தற்போதைய மொழிபெயர்ப்புகள் சொல்வது. பாகதவமும் இதையே சொல்கிறது. சிசுபாலன் கிருஷ்ணனை நிந்திக்கும்போது சொல்வனவற்றில் இதுவும் ஒன்று:

O Bhishma, if one like thee, possessed of virtue and morality acteth from motives of interest, he is deserving of censure among the honest and the wise. How doth he of the Dasarha race, who is not even a king, accept worship before these kings and how is it that he hath been worshipped by ye? O bull of the Kuru race, if thou regardest Krishna as the oldest in age, here is Vasudeva, and how can his son be said so in his presence?

ஆகவே, கிருஷ்ணனை யாதவ அரசன் என்று சொல்லும் முதலில் எழுதப்பட்ட வியாச பாரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. எனவே தயவுசெய்து எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்ட புத்தகத்தைத் தாங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எம்போன்ற எளிய வாசகர்களுக்குப் பெரிய உபகாரமாக இருக்கும்.

3) ஆனால் பாரதமும் பாகவதமும் கிருஷ்ணனைப் பரம்பொருள் என்று மிகப் பல இடங்களில் குறிக்கின்றன. பீஷ்மர் தன்னுடைய உடலை விடுவதற்கு முன்னால் மிகத் தெளிவாகவே இதைச் சொல்கிறார். யுத்த சமயத்தில் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை வதைப்பதற்காகக் கண்ணன் விரையும்போதும், கூப்பிய கரங்களோடு 'வா கண்ணா, உன் கையால் எனக்கு விடுதலை கிடைக்கட்டும்' என்று துதிக்கிறார்.

இவையெல்லாம் வங்காளிகளுடைய பிற்சேர்க்கை என்பதை நிறுவுவதற்காகத் தாங்கள் எங்களுக்கு அருள்கூர்ந்து இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்.

இவை ஒரு அறிஞர் கேட்கும் கேள்விகள்.

எனக்கும் சில சாதாரணமான கேள்விகள் தோன்றுகின்றன -

பொது சகாப்தம் (Common Era, CE) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த *தமிழர்* இளங்கோ அடிகள் *மகாபாரத* கண்ணனை நாராயணனாகவே கண்டு பாடுகிறாரே -

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுபவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்களே? இதற்கும் முந்தைய சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளனவே? இது எல்லாம் "மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாடு" இல்லையா?

அப்போ சிலம்புக்கும், பரிபாடலுக்கும் முற்பட்ட ஏதாவது வங்காளி நூல் கிருஷ்ணனைக் கடவுள் என்று ஆக்கியதா? அதை மதன் படித்திருக்கிறாரா? அல்லது இளங்கோ அடிகளும் அதைப் படித்துத் தான் கண்ணன் கடவுள் என்று தெரிந்து கொண்டாரா?

ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாப்ரபு 16-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் தோன்றுவதற்கு ஒரு 800-900 ஆண்டுகள் முன்பே ஆண்டாள் திருப்பாவையும், "கண்ணன் எம்பெருமான்" என்று கசிந்துருகிப் பாடிய திருவாய்மொழியும் தோன்றி விட்டதே! திருக்கண்ணபுரம் என்று தமிழகத்தில் திவ்யதேசமே இருந்ததே!

இப்படி ஆகத் தொன்மையான சங்கத் தமிழ் நூல்களே கண்ணனைக் கடவுளாகப் போற்றுகின்றன என்னும்போது இந்தக் கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்த காலமே "மிகப் பிற்பட்ட காலமா"? அப்போ நீங்கள் சொல்லும் அந்த "கண்ணன் கடவுள் ஆகாத" மிக மிக முற்பட்ட காலத்திற்கு சான்றுகள் எங்கே? எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?

கோடிக்கணக்கான இந்துக்கள் போற்றும் தெய்வ அவதாரமான ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி இப்படி ஏனோதானோ என்று போகிற போக்கில் ஒரு பதில் கொடுத்து விட்டுப் போகிறீர்களே மதன்? இது நியாயமா?
http://jataayu.blogspot.com/2007/10/blog-post_26.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம் 
. . .


தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான். இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். . .

இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.

***

புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப் போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை. சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Whether Raman is shathriyan or Ravan is a shathriyan is not a big matter. Stopping a development or improvement work in the name of a Religious faith is an atrocious.

Both Panama Canal or Suez canal have created huge benefits for the sea routes, same way Sethu Canal also will benefit the sea route. The connection between India and Srilanka is a natural one.

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Did you check the project report of the same?

 

For 25000 Tons ship only, world has stopped manufacturing, Continental Transporting does not use such size, will you transfer goods in mid-sea and then allow smaller ships in the proposed canal.

why alternate and proper routes not accepted?

Defence risk?

Economic viability?



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Project report also can be made biased based on individual belief system one has adopted. The Chennai and Tuticorin ports have to be connected for a reasonable transportation of goods shipments, we have so many smaller ports between those 2 bigger ports which will also get benefited for an export oriented business.

We need a sea port Hub connecting Chennai and Tuticorin which can be seen as a good alternative for Co(lo)mbo through which once Tamilians were doing the sea trade across the world.

Colombo port would have been better than Singapore today, if Sinhalese maintained a cohesive relationship with Tamil people. Either, Tamil people need the Colombo port, or else, connecting Chennai port and Tuticorin port using a by-pass sea route can benefit and create a bigger competition with Colombo.

It has an emotional connect which hides to sea any biased reports!!!





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Nowcanal to handle- 25Tons ship canal can be of no use. 

International ships are 100 Tons - will they change mid way. Please read technically before reply 

The problem is the handling of the matter by TN CM. Un necessarily criticizing People belief.

Jesus never existed.

https://www.youtube.com/watch?v=mwUZOZN-9dc

Muhammad never existed. 

https://www.youtube.com/watch?v=kXf7uP9lhE8

No politician ever talk this way.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தில் இராமர் பற்றி குறிப்பு உள்ளதா? https://ta.quora.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

https://ezhunaonline.com/folk-religion-and-hinduism/ 

கோயில் பண்பாடு | முனைவர் சிலம்பு நா. செல்வராசு pdf https://puthagasalai.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோயில் பண்பாடு | முனைவர் சிலம்பு நா. செல்வராசு pdf

கோயில் பண்பாடு சிலம்பு ந.செல்வராசு

கோயில் பண்பாடு

            பண்டைய கிரேக்கர்களுடைய சிறப்பான வாழ் விற்குக் காரணமாகக் “கோயில் பண்பாடு” அமைந்ததைப் போலத் தமிழர்களுடைய மேம்பட்ட வாழ்விற்கும் “கோயில் பண்பாடு” பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. கோயில்கள் தமிழர்களுடைய வாழ்க்கையோடு பல நிலை களிலும் பின்னிப் பிணைந்து நிலைத்தன. எனவேதான் தமிழர்கள், கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கோயிலோடு நீக்கமற நிலைத்து வாழும் முறையைக் கையாண்டனர்.

            தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமாகக் கோயில்கள் அமைந்திருந்தாலும், தஞ்சை மாவட்டத்தில் தான் ஏனைய மாவட்டங்களைவிட அதிக எண்ணிக்கை யிலான கோயில்கள் அமைந்துள்ளன. தஞ்சைத் தரணியி லுள்ள கோயில்கள், கலை வளமும், இலக்கியச் செழுமையும் மிக்கனவாகும். எனவே தமிழர் கோயில் பண்பாட்டைப் புரிந்து கொள்ளத் தஞ்சை மாவட்டக் கோயில்கள் பெரிதும் துணை செய்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் கோயில்கள் மிகுதியாக உள்ள சீர்காழி வட்டம் இந்த ஆராய்ச்சிக்குக் களமாகக் கொள்ளப் பெற்றுள்ளது.

            தமிழர்கள் கோயில்களோடு கொண்டுள்ள தொடர் பால், சமய வாழ்க்கைப் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றிருந்தது. தமிழர்களின் புராதனக் கலைகளும், இலக்கிய வளங்களும், வழிபாடு போன்ற செயற்பாடுகளும், மக்களின் உயர் மனப்பான்மையையும், பக்தி நெறியையும், சமயப் பண்பாட்டையும் காட்டவல்லனவாகும். இவை அறிவியல் வளர்ச்சியின் புற மாறுதல்களுக்குட்பட்டு, மறைந்தும், அருசியும், மாறியும் வருகின் றன. இவை அழியாமல் பதிவு செய்து பாதுகாப்பதற்கு இவ்வாய்வு வாய்ப்பளிக்கிறது. பண்டைக் காலந்தொட்டுத் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவிப் பரந்து நிலைத்தவை கோயில்களே ஆகும். இக்கோயில்களை ஆராய்வதின் மூலம் தமிழர்களின் சமயப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள இவ்வாய்வு துணை செய்கிறது. தமிழ் இலக்கியங்களில் ஒரு பெரும் பிரிவான பக்தி இலக்கியங்கள் கோயில்களினால் வளர்க்கப் பட்டனவே ஆகும்.

            இவ்வாய்வு. பக்திப் பாடல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், தத்துவப்பாடல்கள் முதலிய இலக்கியங்களின் வளத்தைத் தெரிந்துகொள்ளத் துணை செய்கிறது. மேலும் தஞ்சை மாவட்டத்தில், சைவ வைணவச் சமயங்கள் தழைத்தோங்கி, சமயம் வளர்த்த பெருமையையும் புரிந்து கொள்ள இவ்வாய்வு வாய்ப்பளிக்கிறது.

            இதுகாறும் கோயில்களைப் பற்றி வந்த நூல்களை நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கோயில் பற்றிய நூல்கள்/ஆய்வுகள்

1.தலபுராணம், தோத்திரப் பாடல்கள் முதலியன.

2.கோயில்களின், புராண, இலக்கிய, கலை, கல்வெட்டுச் சிறப்புப் பற்றிய தனி நூல்கள்.

3.பத்திரிக்கைகள், இதழ்கள், வழங்கும் திருத்தலப் பெருமை குறித்த கட்டுரைகள் முதலிய பல.

4.ஆய்வேடுகள்

(1) கோயில்களுக்குப் புராணமெருகேற்றி, இறைத் தன்மை மிளிர உலவ விட்ட பெருமை தலபுராணங் களையே சாரும். “காழித்தலபுராணம்”, “புள்ளிருக்கு வேளூர்த் தலபுராணம்”, முதலிய தல புராணங்களை இதற்குச் சான்றுகளாகக் கூற இயலும். இவையல்லாமல், அடியார்கள் கோயிலைப் பற்றி எண்ணிறந்த தனிப்பாடல் களையும், சிற்றிலக்கியங்களையும் அருளிச் செய்துள்ளனர்.  தேவார திருவாசக நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல் களையும், “திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்’, “முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்” – போலும் சிற்றிலக்கியங்களையும் இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.


(2) இரண்டாம் நிலையாக, கோயில்களின் புராணங் கள், இறைவன் கீர்த்தி, கட்டட அமைப்பு, சிற்பங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓவிய நடன நுணுக்கங்கள், கோயிலின் காலம், அமைவிடம், செல்லும் வழி போன்ற பல செய்திகள் அடங்கிய நூல்கள் பல வெளிவந்துள்ளன.

            தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் “வேங்கடம் முதல் குமரி வரை” – என்ற ”பாலாற்றின் மருங்கினிலே”, “பொன்னியின் மடியினிலே”, “காவிரிக் கரையிலே”, பொருநைத் துறையிலே” – என்னும் பகுதிகளாக்கி, தமிழகக் கோயில்களைப் பற்றி ஆராய்த் துள்ளார். நா. சுப்புரெட்டியார் அவர்கள், “மலைநாட்டுத் திருப்பதிகள்” “சோழ நாட்டுத் திருப்பதிகள்’, “தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’, ‘பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்” – என்ற நூல்களில் பல வைணவத் தலங்களை ஆராய்ந்துள்ளார். மேலும், கண்ணப்ப முதலியார் அவர்களின், “தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்’, “பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்” என்னும் நூல்களும், கி. முத்துப்பிள்ளை அவர்களின் ‘சிறப்புமிக்க சிவாலயங்கள்”. “புகழ் மணக்கும் வைணவத் தலங்கள்” என்னும் நூல்களும் மேற்கூறிய செய்திகளில் சிலவும், பலவும் பெற்று அமைந்தனவாகும்.

            கலை, கல்வெட்டு, வரலாறு இவற்றிற்கு முக்கியத் துவம் கொடுத்துச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகள் காட்டும் வரலாற்றுச் செய்திகள் முதலிய வற்றின் சிறப்புகள் இந்நூல்களில் அடங்கியுள்ளன. ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்களின், ‘சோழர் கோயிற் பணிகள்”, “தஞ்சைத் திருக்கோயில்கள்”, “தஞ்சை இராசராசேச்சுவரம்”, – முதலிய நூல்களும், குருசாமி தேசிகர் அவர்களின் “தென்னாட்டுத் திருக் கோயில் கல்வெட்டுக்கள்”, இரா. நாகசாமி அவர்களின், “தமிழகக் கோயில் கலைகள்”, இராமசாமி அவர்களின் “தமிழ்நாட்டுச் செப்புத் திருமேனிகள்”, எஸ். ஆர். பால சுப்பிரமணியன் அவர்களின், “சோழர் கலைப்பாணி’, “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்” முதலான பல நூல்களும் மேற்கூறிய செய்திகளை உள்ளடக்கியனவே ஆகும். மேலும் “பழனித் தலவரலாறு”, “ஸ்ரீரங்கநாதர் கோயில் வரலாறு”, “தில்லைச் சிற்றம்பலவன் கோயில்- எனத் தனியொரு கோயில் பற்றிய நூல்களும் வந்துள்ளன.

            (3) மூன்றாவதாக; திருத்தலங்கள் பெருமை குறித்துப் பத்திரிக்கைகள், இதழ்கள் வெளியிடும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். பரணிதரன் (ஆனந்த விகடன்) பொன் பாஸ்கர மார்த்தாண்டன் (இதயம் பேசுகிறது) போன்றோர் இக்கட்டுரைகளை எழுதி உள்ளனர். ”திருக்கோயில்’, “ஞான பூமி”, “ஞானசம்பந்தம்”, தர்மசக்கரம்”, “திருக்கயிலை” – முதலியன சமயந் தொடர்பான இதழ் களாக, சமயக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றன.

            (4) நான்காவதாக; கோயில் பற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கே. கே. பிள்ளை அவர்கள் “சுசிந்தரம் கோயிலையும்”, சி. கிருட்டினமூர்த்தி அவர்கள் “திருவாரூர் கோயிலையும்”, கே. கோபாலகிருட்டினன் கோயிலையும்”, உமா அவர்கள் “திருக்கழுகுன்றக் மகேசுவரி அவர்கள் “நெல்லையப்பர் கோயிலையும்”, கே. வி. இராமன் அவர்கள் “காஞ்சி காமாட்சியம்மன் கோயிலையும்”, ந. கல்யாணசுந்தரம் அவர்கள் “திருச் செந்தூர் முருகன் கோயிலையும்”, சி. மணி அவர்கள் “கும்பகோணம் சக்கரபாணி கோயிலையும்” -எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். மேலும் கதிர்வேலு அவர்கள் “சேலம் மாவட்டத்துச் சிறு தெய்வங்கள்’’ குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

            இவை வரலாற்றுப் பின்னணி, நில அமைப்பு, கட்டட அமைப்பு, காலம், செயற்பாடு, கலைகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள், சமுதாயத் தொடர்பு போன்ற செய்திகளை மட்டும் உள்ளடக்கியனவாக உள்ளன.

            மேற்குறிப்பிட்ட நூல்களும், கட்டுரைகளும், ஆய்வேடு களும், நாடு தழுவிய நிலையில் உள்ள கோயில்களையோ, அல்லது தனித்த ஒரு கோயிலையோ கொண்டு பொது வான சிறப்புச் செய்திகளையே கூறியுள்ளன.

            மேற்குறிப்பிட்ட நூல்களிலும், கட்டுரைகளிலும், ஆய்வேடுகளிலும் மேற்கொள்ளப்படாத, ஒரு வட்டந் தழுவிய அளவில், சைவ, வைணவ, சிறு தெய்வக் கோயில் வட்டம் களை உள்ளடக்கிக் கோயில் அமைந்திருக்கும் மற்றும் ஊர்கள் பற்றிய செய்திகளும், சமய நிலையும், நேர்த்திக்கடன், நம்பிக்கை, செயற்பாடு, விழா, கூத்துக்கள் பண்பாட்டுக் கொடை முதலியவற்றால் வெளிப்படும் பற்றியும், கோயிலினால் வெளிப்படும்

இலக்கியக் கொடை பற்றியும், சமுகத் தொடர்பு குறித்தும், சமூக இயல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்வது இதுவே முதல்முறையாகும். இப்பகுப்பு முறையையோ, அணுகு முறையையோ, மேற்குறிப்பிட்ட நூல்கள் முதலியன மேற் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு தமிழர்களின் கோயில்கள் மூலம் வெளிப்படும் பண்பாட்டுக் கொடை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.

            இவ்வாய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் இயலில் ஆய்வுப் பொருள் அறிமுகம், வரையறை போன்ற செய்திகள் பெறுகின்றன. ஆய்வுப் பின்னணியின் முக்கியத்துவத்தைக் கருதி, இரண்டா இயவில் சீர்காழி வட்டத்தின் பெயர், அமைப்பு, சமயநி பொதுவாக வட்டத்திலுள்ள கோயில்கள் பற்றிய செய்திக ஆராயப்பட்டுள்ளன.

            மூன்றாம் இயலில் கோயில் அமைந்துள்ள ஊர்க்கோயில்களின் அமைப்புகள், தலவிருட்சம், தீர்த்தம், இன உருவம், கீர்த்தி ஆகியன பற்றிய செய்திகள் ஆராய பட்டுள்ளன. நான்காம் இயலில் கோயிலின் செயற்பாடா வழிபாட்டு முறைகள், பாடல்கள், நம்பிக்கைகள், நேர்த்தி கடன்கள், விழாக்கள், விழாக்காலக் கூத்துக்கள் ஆகி செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. ஐந்தாம் இயல் கோயிலி வரலாறு பற்றியமைந்தது. இவ்வியலின் விரிவுக்கு அஞ்சி சீர்காழி சட்டைநாதர் கோயிலின் வரலாறு மட்டு ஆராயப்பட்டுள்ளது. ஆறாவது இயல் கோயில் சமுதாய தோடு கொண்டுள்ள தொடர்பை விளக்குவது. இதில் பூை செய்வோர், பாடகர்கள், பாமர மக்களின் வழிபாடு மரபுகள், கோயிலுக்கும் சமுதாயத்திற்குமுள்ள தொடர் ஆகிய செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. ஏழாவது இய அரிதாகப் பெறப்பட்ட சில வழிபாட்டுச் செய்திகள் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. இவற்றை இந்நூலில் இரண்டாம் பகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.

            இக்கள ஆய்வில் ஆய்வு தொடர்பாகச் செய்திகளை சேகரிப்பதற்குத் தலபுராணங்களும், பக்தி இலக்கியங்களும் கல்வெட்டுக்களும், செவிவழிச் செய்திகளும், சுவடிகளும் அறநிலைத்துறை அறிக்கைகளும், கோயிலோடு தொட புடையவர்கள் தந்த தகவல்களும், சமயத் தொடர்புடை பெரியோர்கள் தந்த செய்திகளும் பெருமளவில் துனை செய்தன. எண்ணற்ற செவிவழிச்செய்திகளையும், நம்பிக்கை கதைகளையும் பலர் எடுத்துரைத்தனர். சுவடிகளில் உள்ள செய்திகள், பழைய கையெழுத்துப் பிரதிகொண்டு சரிபார். கப்பட்டு, அந்த வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

            தமிழர்களின் கோயில் பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியாக இந்நூல் தோன்றக் கூடும். ஆனால் சைவம், வைணவம், சிறுதெய்வச் சமயம் மூன்றை யும் ஒரு பண்பாடாக அடக்கும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதை இங்கே அடிக்கோடிட்டுச் சுட்டுதல் வேண்டும். சைவம் வைணவம் ஒருபுறமும் நாட்டுப்புறத் தெய்வச் சமயம் ஒருபுறமும் தனித் தனியேதான் நிற்கின்றன. சைவ வைணவத்தை நாட்டுப்புற மக்கள் தம் அனுபவம் சார்ந்த நிலையில்தான் / தம் வாழ்க்கையோடு தொடர்பு கொண்ட நிலையில்தான் சில இடங்களில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையைத் தவிர ஏனைய இடங்களில் அச்சமயங்கள் தனியேதான் நிற்கின்றன என்பதையும் இங்கே கூறுதல் வேண்டும். என்றாலும் தவிர்க்கமுடியாதபடி வேதாகமங்கள் சார்ந்த சைவ வைணவப் பண்பாடும் தமிழக நாட்டுப்புற மக்களின் உயிர்ப்போடு கூடிய நாட்டுப்புறச் சமயமும் சேர்ந்ததே “தமிழரின் கோயில் பண்பாடு” என்று கூற வேண்டியுள்ளது.

            கோயில் பண்பாடு என்ற பொருண்மை பற்றிய ஒரு முன்மாதிரி அளவீட்டு நூலாக இதனை வாசகர்கள் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்நூல் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்ளும் எம் நிறுவன இயக்குநர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர் களுக்கும் நிறுவனத் தோழர்களுக்கும் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன் சிலம்பு நா. செல்வராசு

பொருளடக்கம்

முன்னுரை

ஆய்வுக்களம் – சமயம் கோயில்கள்

 பெயர்க்காரணம் 23, சீர்காழியின் பிற பெயர் கள் 23, சீர்காழி வட்டத்தின் அமைப்பு 25, புகழ் பெற்ற ஊர்கள் 26, சீர்காழி 26, பூம்புகார் 26, வைத்தீசுவரன் கோயில் 27, திருப்புன்கூர் 27, திருநாங்கூர் 27, திருநகரி 28, திருவெண்காடு 28, திருமுல்லைவாயில் 28, வடரெங்கம் 28, திருமயிலாடி 28, வருசபத்து 29, மாதானம் 29, ஆச்சாள்புரம் 29, தமிழகத் தில் சமயநிலை 30, சீர்காழி வட்டச் நிலை 32, சீர்காழி வட்டத்தில் தோன்றிய அடியார்கள் 32, இன்றைய சமயநிலை 34, ஒன்பது கோள்கள் 37, சைவக் கோயில்கள் 38, வைணவக் கோயில்கள் 40, சிறுதெய்வக் கோயில்கள் 41, குறிப்புகள் 44, இயல் பின்னி ணைப்பு 47, சீர்காழி வட்டக் கோயில்கள் 47, புகழ்பெற்ற சைவக் கோயில்கள் 47, புகழ் பெற்ற வைணவக் கோயில்கள் 48, புகழ்பெற்ற சிறுதெய்வக் கோயில்கள் 49


கோயில் அமைப்பு-விருட்சம்-தீர்த்தம்-உருவம்

கோயில்களும் ஊர்களும் 57, கோயில் கட்டட வளர்ச்சி 60, தமிழகக் கோயில்களின் வகைகள் 60, திருக்கோயில் அமைப்பும் தத்துவமும் 61, முதல் UN 505 62, இரண்டாம் வகை 64, மூன்றாம் வகை 66. நான்காம் வகை 66, தலவிருட்சம் 67, சீர்காழி வட்டத் தலவிருட்சம் 69, தீர்த்தங்கள் 70, சீர்காழி வட்டக் கோயில் களில் இறை உருவங்கள் 73, இலிங்க மூர்த்தம் 74, குரு மூர்த்தம் 74, சங்கம மூர்த்தம் 75, சிறு தெய்வ வடிவங்கள் 75, சீர்காழி வட்டத் தெய்வங்களின் சிறப்புகள் சைவ மூர்த்திகள் 77, வைணவ மூர்த்திகள், நாராயணப்பெருமாள் 80, குடமாடு கூத்தர் 80, பள்ளிகொண்ட பெருமாள் 80, ‘செம்பொன்னரங்கர் 80, அண்ணன் பெருமாள் 80, சிறு தெய்வ மூர்த்தி கள் 81, மாரியம்மன் 81, காளியம்மன் 81, அங்காளம்மன் 82, திரௌபதியம்மன் 82, காமன் 82, உருத்திராபதியார் 83, பண்பாட்டுக் கொடை 83, இலக்கியக் கொடை 85, குறிப்புகள் 86.


கோயிலும் வழிபாடும்

பூசை முறைகள் 92, சீர்காழி வட்டக் கோயில் களின் பூசை முறைகள் கோயில்களில் 93, நைவேத்தியம் 94, சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் 95, வழிபாட்டில் பலி யிடுதல் 97, பலியிடுதலில் சில மரபுகள் 99, வழிபாட்டில் மந்திரம் 100, தோற்றம் 101, சீர்காழி வட்ட வழிபாட்டுப் பாடல்கள் 102, சைவ, வைணவப் பாடல்கள் 102, சிறுதெய்வப் பாடல்கள் 103, விழாக்கால பாடல்கள் 104, உடுக்கைப் பாடல்கள் 105, முதற்பகுதி 106. இரண்டாம் பகுதி 106, மூன்றாம் பகுதி 107, நான்காம் பகுதி 107, இரதியின் ஒப்பாரிப் பாடல்கள் 107, தாலாட்டுப் பாடல்கள் 108, சீர்காழி வட்டத்தில் நம்பிக்கைகள் தெய்வீக மருந்து 110, ஓசை நாயகி 111, தீர்த்தங்களும் நம்பிக்கைகளும் 111, மழை பெய்யும் 111, மக்கட்பேறு 112, குறிகேட்டல் 112, திருநீறு போடுதல் 114, வேப்பிலை அடித்தல் 114, பிரார்த்தனைத் தலங்கள் 116, நேர்த்திக் கடனும் அளிக்கும் முறையும் 116, தொட்டிலும் பாவையும் 117, ஒலியும் ஒளியும் 117, உயிருக்கு உயிர் 118, தீ மிதித்தலும் காவடி எடுத்தலும் 118, சேவல் அளித்தல் 119, விழா 120, விழா-வகைகள் 121, விழாக்களின் நோக்கம் 122, சீர்காழி வட்டத் திருவிழாக் களின் நோக்கங்கள் 123, சிறுதெய்வ விழாக் களின் நோக்கங்கள் 123, காமவிழாவின் நோக்கம் 123, அன்னப்படையல் விழாவின் நோக்கம் 124, தீமிதி விழாவின் நோக்கம் 125, சீர்காழி வட்டத் திருவிழாக்கள் 125, திருமுலைப்பால் உற்சவம் 126, மங்களாசாசன உற்சவமும் கருடசேவையும் 126, வேடுபறி உற்சவம் 127, நந்தனார் உற்சவம் தீமிதித் திருவிழா 128, மாசித் திருவிழா 129, காமன் விழா 129, அன்னப்படையல் விழா 130, மயான சூறை 130, படுகள விழா 131, பாகுபாடு 131, விழாவோடு நேரடித் தொடர் புடையன 133, காமன் விழாவில் 133, படுகள விழாவில் 134, உருத்திராபதியார் விழாவில் 134, கானியாட்டம் 135, விழாவைச் சார்ந்து நிகழ்வன 135, சமயத் தொடர்பானவை 136, கோலாட்டம் 137, சமயத் தொடர்பு இல்லா தன 137, பண்பாட்டுக் கொடையும், இலக்கியக் கொடையும் 138, பண்பாட்டுக் கொடை 138, இலக்கியக் கொடை 141, குறிப்புகள் 141

கோயிலும் வரலாறும்

சட்டைநாதர் கோயில் வரலாறு 150, சட்டை நாதர் கோயில் தோற்றம் பற்றிய செய்திகள் 150, சட்டைநாதர் கோயில் இலக்கியங்கள் தரும் செய்திகள் 151, இறைவன் புகழ் 152, புராணச் செய்திகள் 153, வரலாற்றுச் செய்தி கள் 154, சட்டைநாதர் கோயில் கல்வெட்டுகள் காட்டும் வரலாறு 155, பண்பாட்டுக் கொடை யும் இலக்கியக் கொடையும் 160, பண்பாட்டுக் கொடை 160, இலக்கியக் கொடை குறிப்புகள் 162

கோயிலும் சமுதாயமும்

அ. கோயிலும் பூசை செய்வோரும் சிவாச்சாரியார் பட்டாச்சாரியார் பூசாரிகள் 168, ஆ. கோயிலும் பாடகர்களும் 172, ஓதுவார்களும் தீர்த்தக்காரர்களும் 172, பாடற் பூசாரிகள் 175, நீதிமன்றமும் தண்ட னையும் 183, முறைப்பாடு 184, வற்றைத் தொடங்குதல் 183, கோயில் புகுதல் 186, முதன்மையர் 187, சமயக் குறியீடுகள் 188, கோயிலும் சமுதாய உறவு நிலையும் 188, உறவு நிலையை வெளிப்படுத்தும் சில காரணி கள் 189 மண்டகப்படி 190, இல்லறச் சடங்கு கள் 191, நிலப் பராமரிப்பு 192, பண்பாட்டுக் கொடை 194, பண்பாட்டுக் கொடை 194, குறிப்புகள் 196

சிறுதெய்வ வழிபாடுகள்

சிறுதெய்வ வழிபாடுகள் 199, காமன் விழாவும் பண்பாடும் 201, மூணாங்குழித் திருவிழா 202, பாடல்களும் பண்பாடும் 203, முடிவுரை 204, குறிப்புகள் 205, காமத்தகன விழாவில் இரதி யின் ஒப்பாரிப் பாடல்கள் 206, முகவுரை 206, சமுதாயமும், துன்பியலும் 207, இரதியின் ஒப்பாரிப் பாடலும், சூழலும் 207, பாடல் களின் அமைப்பு 208, பாடல்களில் சமுதாயப் பின்னணி 209, பாடல்களில் மானிட உணர்வு கள் 210,குறிப்புகள் 211, நாட்டுப்புற வழக் காற்றில் சிறுத்தொண்டர் புராணம் 212, முன்னுரை 212, பெரிய புராணமும் பாமர புராணமும் 213, சிறுமையும் பெருமையும் 213, வேறுபாடுகள் 215, பாமரர் பார்வைகளில் வேறுபாடு 217,சுவடிகளில் வனப்பூசை- பதிவும் விளக்கமும் 218, அமைப்பு 218, பேறியான வனுக்கு வனப்புசை பொடும் வேபறமுறை 219, கட்டுரைக்குத் தொடர்பான முதன்மைத் தகவல்கள் 226, சொற்பொருள் விளக்கம் 229, சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள் 232, முன்னுரை 232, பண்டைத் தொடர்பு 233, உருவ அமைப்பு 233, மண் கூம்பு வடிவம் 233, கருவி உருவம் 234, கரக வடிவம் 235, இயற்கைச் செடி கொடிகள். இணைந்த செயற்கை வடிவம் 236, வழிபாட்டில் பலி யிடுதல் 236, சில விதிமுறைகள் 237, வழி பாட்டில் இசைப் பாடல்கள் 238, விழாக் காலப் பாடல்கள் 238, உடுக்கைப் பாடல்கள் 239, தாலாட்டுப் பாடல்கள் 239, ஒப்பாரிப் பாடல்கள் 239, நம்பிக்கைத் தொடர்பு 239, கடவுளை அழைத்தலும் குறிகேட்டலும் 240, வழிபாட்டில் அருஞ்செயல்கள் 241, வழி பாட்டில் நேர்த்திக் கடன்கள் 242, சில முடிவு கள் 243,குறிப்புகள் 246 துணை நூல்கள் தகவலாளர் பற்றிய குறிப்புகள்


கோயில் பண்பாடு

சிலம்பு நா. செல்வராசு

உரிமை: பாக்கியவதி செல்வராசு

வெளியீடு: அனிச்சம் இலக்கிய வட்டம்

உரிமையாளர்: பாக்கியவதி செல்வராசு 11, இரண்டாம் தெரு,

                               மோகன் நகர் புதுச்சேரி-605 005

பதிப்பு : முதற்பதிப்பு: 1999 சூலை 11

                  திருவள்ளுவர் ஆண்டு 2030 ஆனித்திங்கள்

விலை: ரூபாய் அறுபது (ரூ.60/-)

அச்சகம்: சபாநாயகம் அச்சகம்

                   கீழைத்தேர்வீதி, சிதம்பரம் – 608 001.

 

கோயில் பண்பாடு

முனைவர் சிலம்பு நா. செல்வராசு

விரிவுரைஞர் இலக்கியப்புலம்

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

அனிச்சம் இலக்கிய வட்டம்

புதுச்சேரி – 605005

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

தமிழ்க்கோயில்கள்-தமிழர்-பண்பாடு

தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

            விண் மறைக்கும் கோபுரங்கள், வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்தது நம் நாடு. தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு அளவிற்கு வேறு எந்த நாட்டிலுமே கோயில்கள் இல்லை. ஏன் ? அழகிலும் காம்பீர்யத் திலும் கூட தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு ஈடு இணை சொல்லக்கூடிய கோயில்கள் பிற நாடுகளில் இல்லை என்பதும் சரித்திரப் பிரசித்தம். இந்தக் கோயில்கள் எப்படி எழுந்தன? யார் உருவாக்கினார்கள்? யார் இலக்கணம் வகுத்தார்கள்? அவைகள் மக்களது சமுதாயத்திற்கு எவ்வளவு இன்றியமையாததாக இருந் திருக்கின்றனர் ? என்றெல்லாம் தமிழர்களாகிய நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?


            கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றி மூத்தவர்கள் தமிழ் மக்கள் என்பது வரலாறு. அந்தப் பழந் தமிழர் உண்ணத் தெரிந்து
இருக்கிறார்கள்; உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள்; உறங்கத் தெரிந்திருக்கிறார்கள். இத்துடன் மனித வாழ்வு முடிந்து விட இல்லை என்பதையுமே உணர்ந்திருக்கிறார்கள். வாழ்விலே இவர்கள் பெற்றிருந்த அமைதியை வானில் எழுந்த இடியும் மின்னலும், காற்றில் தோன்றிய கடுமையும், காட்டில் எழுந்த கடுந்தீயும், ஆற்றில் புரண்ட வெள்ளமும், நிலத்தில் தோன்றிய பூகம்பமும், குலைத்திருக்கிறது. இது காரணமாக வாழ்க்கை ஆட்டம் கொடுத்துவிடுமோ என்று அஞ்சியிருக்கிறார்கள்.

            இந்த அச்சத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்ச்சி. நிலம்,நீர், அனல், காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் பயங்கர நிலையைக் கண்டு அஞ்சியே இறைவனை நினைத்திருக்கிறார்கள் முதலில். அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையை உணர்ந்த பின் தான் அன்பு பிறந்திருக்கிறது அவர்கள் உள்ளத்தில். அதன் பின்னரே, உலகின் நன்மைக் கெல்லாம் காரணமாக இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று அவன் வெம்மையைக் குறைத்து தண்மையையே அளிக்கும் சந்திரன், இரண்டிற்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அழிக்கவும் உதவும் அனல் இவற்றையே கொடிநிலை, வள்ளி, கந்தழி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள்.


”கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

என்பது தானே தொல்காப்பியர் கூற்று.

            இப்படி இறை உணர்ச்சி பெற்ற தமிழர் பின்னர் நீண்டுயர்ந்த மலையைக் கண்டு அதில் வளரும் மரம், செடி கொடிகளைக் கண்டு அந்தச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு, அந்த மலர்களில் எழும் மணத்தினை நுகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்று பரந்த கடலிலே அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே அந்த ஒலி எழுப்பிய இன்னிசையிலே உள்ளம் பறிகொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது.

            அப்படித்தான் மலை மூலமாக இறை வழிபாடு ஆரம்பத்திருக்கிறது. அந்த மலையையும் அலையையும் கலையையும் உருவகப்படுத்தியே மலை மகள், அலைமகள், கலைமகள் என்று கற்பனை பண்ணி யிருக்கிறார்கள். இடையிடையே பழைய பயமும் விட்ட பாடில்லை. அந்தப் பயத்தை எல்லாம் எண்ணியபோது, கலைமகள், அலைமகள், மலைமகள் மூன்று பேரையும் சேர்ந்தே நினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவ மும் சேர்ந்த அன்னையையே பராசக்தி – பழையோள் என்று வணங்கியிருக்கிறாள்.
இப்படித்தான் இறைவழிபாடு மலை முகட்டிலும் கடல் கரையிலும் நதி தீரங்களிலும் ஆரம்பித்திருக்கிறது. பின்னரே கல்லையும் மண்ணையும், மரத்தையும் மிருகத்தையுமே வணங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள். இப்படி வணங்கத் தலைப்பட்டவர்களே, தாங்கள் வணங்கிய தெய்வங் களுக்கு உருவங்கள் அமைத்திருக்கிறார்கள்.

            அந்த உருவங்களைச் சுற்றி கோயில்கள் எழுப்பியிருக்கிறார்கள்; மாடங்கள் கட்டியிருக்கிறார்கள்; கோபுரங்களை உயர்த்தி இருக்கிறார்கள். இயற்கையில் பிறந்த இறைவழிபாடு, பின்னர் மனிதனது கலை உணர்வால் வளர்ந்து வளர்ந்து வளம் பெற்றிருக்கிறது. கோயில்களாக அவைகள் உருவாவதற்குப் பெரியவர்கள் வழிகளை வகுத் திருக்கிறார்கள்; மூர்த்திகளைப் உருவாக்கத் திட்டமிட் டிருக்கிறார்கள், கோயில் நிர்மாணத்தைப் பற்றி – மூர்த்திகரமாக விளங்கும் சிற்ப வடிவங்களைப் பற்றி சில்பரத்தினம் முதலிய சிற்ப நூல்கள் எழுவதற்கு முன்னமேயே ஆகமங்கள் எழுந்திருக்கின்றன. அந்த ஆகமங்களில் காணும் வழி முறைகளைப் பற்றியே ஒரு சில வார்த்தைகள் இன்று.

            ஆகமம் என்னும் வடமொழிப் பதத்தின் பொருள் தொன்று தொட்டு வரும் அறிவு என்பதேயாகும். அது பொதுவாக வே தங்களுக்கும் சாஸ்திரங்களுக்குமே அமைந்த பெயர் என்றாலும், சிறப்பாக இறை வழிபாடு, மந்திரம், மூர்த்தி, ஆலயம் முதலியவற்றை விளக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது. வழிபடும் கடவுளின் பெயராலேயே ஆகமங்கள் பேசப்படுகின்றன. னுடைய வழிபாட்டைக் கூறுவது சிவாகமம். விஷ்ணு வின் வழிபாட்டைக் கூறுவது வைஷ்ணவ ஆகமம். சக்தியின் வழிபாட்டைக் கூறுவது சாக்த ஆகமம்,

நாடு நகரமும் நற்றிருக் கோயிலும்

தேடித் திரிந்து, சிவபெருமான் என்று

பாடுமின்; பாடிப் பணிமின்; பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே


            என்பது திருமூலரது வாக்கு. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம் உள்ளத்துக்கு உள்ளேயும் இருக்கிறார் என்று உணர்வது சாதாரண மனிதர்களாகிய நமக் கெல்லாம் எளிதாக சித்தியாகிறது ஒன்றல்ல, “தேடிக் கண்டு கொண்டேன் தேவாதி தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்” என்று எக்களிப்போடு பாடுவது நாவுக்கரசர் போன்ற சமய குரவர்களுக்கே சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆதலால் இறைவனை ஒரு இடத்தில் இருப்பதாக உருவகப்படுத்தி, அந்த இடத்தில் ஆன்மா லயித்து நிற்கும்படி செய்வதே நம் போன்ற சாதாரண மக்களுக்கு சாத்தியமான தொன்று. ஆன்மாக்களை இறைவனிடம் லயிக்கச் செய்யும் இடம் என்பதனாலேயே ஆலயம் என்று அழைத்திருக்கிறார்கள். உள்ளத்துள்ளேயே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த அந்தப் பூசலார் நாயனார் கூட, அந்த இறைவனுக்கு உள்ளத்துக்குள்ளேயே ஒரு ஆலயம் அமைக்க முனைந்திருக்கிறார் என்றால் கேட்பானேன்.

 
            இனி இந்த ஆலயங்கள் எப்படி அமைய வேண்டும், அந்த அமைப்பைப்பற்றி ஆகமங்கள் என்ன கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம் தானே. ஆலயத்தின் பிரதான பாகம் மூலஸ்தானம். அங்குதான் இறைவனது திரு உருவம் அமைக்கப் படுகிறது. சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் லிங்கத் திரு உருவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். காரணம், உருவமும் இல்லாமல் அருவமும் ஆகாமல் அருவுருவத் திருமேனியனாக சிவபிரான் லிங்க உருவில் இருக்கிறான் என்று எண்ணியிருக்கிறார்கள்.

            சிவன் ஒருவனே பரமாத்மா. அவனுக்கு மாத்திரமே லிங்கம் உரியது என்று சைவ ஆகமங்கள் கூறும். மூலஸ் தானம் அல்லது கர்ப்பக்கிருகம் ஆலயத்தின் மற்றைய பகுதிகளைவிட மிகச் சிறியதாகவும் ஒரே ஒரு வாயிலை மட்டும் உடையதாகவும் இருத்தல் வேண்டும். கர்ப்பக் கிருகத்தை அடுத்து அமைக்கப்படுவது. அர்த்த மண்டபம். இதற்கு இரண்டு வாயில். கர்ப்பக் கிருகத்தை விடச் சற்று விசாலமானது. அங்கு நின்றே அருச்சகர் தீபம் ஏற்றி தீபாராதனை எல்லாம் செய்வார். பக்தர்கள் அர்த்த மண்டபத்திற்கு வெளியே உள்ள மகா மண்டபத்தில் நின்றே தரிசனம் செய்வர். அர்த்த மண்டபத்தில் சிவலிங்கத்துக்கு எதிர்முகமாக சிறிய நந்தி விக்கிரகம் அமைந்திருக்கும். மூலஸ்தானத்தின் வாயிலின் வலதுபுறம் விநாயகரும் இடதுபுறம் சுப்பிரமணியரும் இருப்பர்.


            ஆலயத்தை வலம் வருவதற்கு அமைக்கப்படும் இடம் பிரகாரம் எனப்படும். ஒவ்வொரு கோயிலுக்கும் மூன்று அல்லது ஐந்து பிரகாரங்கள் அமைக்கப்படும். கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியிருக்கும் பிரகாரத்தில் கோஷ்டங்கள் அமைத்து தென்பக்கத்துக் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியும், மேல்பக்கத்துக் கோஷ்டத்தில் லிங்கோத்பவரும் வட பக்கத்துக் கோஷ்டத்தில் துர்க்கையையும் அமைத்தல் வேண்டும். துர்க்கைக்கு எதிரே எதிர்முகமாக சண்டீசர் இருப்பார். வெளிப் பிரகாரத்தில் வாயிலுக்கு நேரே கொடிமரம், பலிபீடம், பெரிய நந்தி முதலியவைகளும் அமையும். கோயிலின் முதல் வாயிலிலேயே கோபுரமும், மூலஸ்தானத்தின் மீது விமானமும் கட்டப்பெறும். விமானத்தின் மீதும் கோபுரத்தின் மீதும் பொற்கலசங்கள் அமைக்கப்படும். கோவிலைச்சுற்றி கட்டப்பெறும் மதில் சுவர்மீது வெளியிலிருந்து காண்பவர் சிவாலயம் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு நந்தியையேனும் சிவகணங்களையேனும் அமைத்தல் வேண்டும்.

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவதற் காக புதிய ஆலயங்களை அமைக்குமாறும், பழைய ஆலயங்களைப் புதுப்பிக்குமாறும் ஆகமங்கள் கூறுகின்றன.

”ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம்

சாலையும் சதுக்கமும் சமைக்க,

காலையும் மாலையுங் கடவுளர்க்கு அணி

மாலையும் தூபமும் வழங்குக”


            என்று தானே கவிச்சக்கரவர்த்தி கம்பனும் அந்த ஆகமங்களின் அடி ஒற்றிக் கூறுகிறான். ஆகமத்தில் கிரியா பாதம், சரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்கு பிரிவுகள் உண்டு. இந் நான்கு பாதங்களையும் கூறும் சிவாகமங்கள் இருபத்தி எட்டாகும். அத்தனையையும் திருமூலர் திருமந்திரத்தில் ஐந்தாம் தந்திரத்தில் விளக்குகிறார். அந்த ஐந்தாம் தந்திரம் வாதுளாகமத்தின் சாரம் என்பர், இரண்டையும் கற்று அறிந்தவர்கள். ஆலய சேவையைப்பற்றியும், பஞ்ச பர்வ உத்சவம், பிரமோத்சவம் முதலிய உத்சவங்களைப் பற்றியும், மூர்த்திகளின் சிற்ப வடிவங்கள், வாகனங்கள், ரதங்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன. காமிகாகமம், வாதுளாகமம், சுப்பிரபேதஆகமம், புட்காராகமம் ஆகிய ஐந்தும் கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவைகள் சிலவற்றிற்கு தமிழ் மொழி பெயர்ப்புகளும் உண்டு. ஆகமங்களில் கூறப்பட்டுள்ள கும்பாபிஷேகம் நித்திய பூசை முதலிய நற் கருமங்களை விளக்குவதற் காக தனியாக வேறு நூல்களும் இயற்றப் பெற்றிருக்கின்றன.

பொருளடக்கம்

தமிழ்க் கோயில்கள்

1. ஆகமங்களில்
 2. குடைவரை அமைப்பு
3. கோயில்கள்
4. மாளிகைகள்
5. சரித்திரச் சான்று


தமிழர்ப் பண்பாடு

1. சிற்பத்தில் – ஓவியத்தில்
2. இலக்கியத்தில் – -பி. ஸ்ரீ. ஆச்சார்யா
3. இசையில் – -கே.வாசுதேவ சாஸ்திரி
4. மடாலயங்களில் -எஸ். சிவகுமார்
5. தினசரி வாழ்வில் -அ. ரா. இந்திரா

 

தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

S. R. சுப்பிரமணிய பிள்ளை

பப்ளிஷர்ஸ் :: திருநெல்வேலி -1



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard