New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு -கணியன் பாலன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு -கணியன் பாலன்
Permalink  
 


மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 1

பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச் சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக் கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம், உலகாயதம், பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம், நியாயவாதம் எனப் பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நிலவின. அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர். சமற்கிருத நூற்சான்றுகளைக் கொண்டு உலகாயதம் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இருந்து வருவதாகத் தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாஸ்திரி அவர்களும், பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறியுள்ளனர்-(1). கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்தன.

     முனைவர். கா.இராசன் அவர்கள் தான் எழுதிய ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில் புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் எனவும் தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் அசோகன் காலத்திற்கு முற்பட்டவை என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை எனவும் கூறுகிறார்-(2). இந்த மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியது தான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ எனலாம்.

           தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி அவர்கள்-(3). ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றிருக்கலாம். ஆதித்தநல்லூர் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்-(4). இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் காரணமாகவே மெய்யியல், இசை, வணிகம், தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றில் பண்டையத் தமிழர்கள் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்தனர்.

 பண்டையத் தமிழ்ச் சமூகம்:

                  தமிழ்ச் சமூகம் பண்டைய காலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக் கொண்டிருந்தது. கி.மு. 1000 முதல் தமிழ்ச் சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியைத் தோற்றுவித்து பலவிதங்களிலும் தன்னை வளர்த்துக் கொண்டது. அவை வளர்வதற்கான சமூகச் சூழல் தமிழகத்தில் இருந்தது. கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. வாசனைத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தது.  இவையெல்லாம் கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இவை தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது எனலாம். தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தநிலை கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எவ்வித இடையூரும் இன்றி நீடித்து வளர்ந்து வந்தது.

              ஆதலால் இக்காலகட்டத்தில் மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் முதலியன தொடர்ந்து இடைவிடாமல் வளர்ந்து வந்தன. இக்காலத்தின் தொடக்கத்திலேயே, அதாவது கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப் (தொல்கபிலரின் சாங்கியம்)  பெற்றுக்கொண்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி நகர்மைய அரசுகளை ஒழித்து அவைகளை வேந்தர்கள் தங்கள் ஆட்சிப்பரப்பில் இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்நிலை கி.மு. 50 வரை தொடர்ந்து நடந்து வந்தது. அதே கால கட்டத்தில் சிறிது சிறிதாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் கிளை அரசர்களின் அரசுகளையும் நீக்கும் போக்கு அதிகரித்து வந்தது. கி.மு. 50 வாக்கில் அவையும் உச்ச கட்டத்தை அடைந்து குடும்ப உறுப்பினர்களின் தனித்தனி அரசுகள் இல்லாதொழிந்தன.

       இவ்விதமாகச் சிறு சிறு நகர்மைய அரசுகள், குடும்ப உறுப்பினர்களின் அரசுகள், கிளை அரசுகள்,  வேளீர்களின் சிற்றரசுகள், முல்லைநிலச் சீறூர், மருதநில மூதூர், குறிஞ்சிநில குறுநில மன்னர்கள், பிற சிறுகுறு ஆட்சியாளர்கள் என இவையாவும் இல்லாதொழிக்கப்பட்டன. கொங்குப் பகுதியிலும், தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தின் வட பகுதியிலும் இருந்த சிறுகுறு அரசுகளின் பெரும்பகுதி இல்லாதொழிந்தன.  இந்த நிலையில்தான் சங்கம் மறுவிய காலம் வருகிறது. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். 

       திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(5). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

         இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்க பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்து கொண்டிருந்த பொழுதுதான் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச் சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனை பள்ளிகள் அங்கு வளர முடிந்தது. தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 முதல் கி.மு. முடிய 1000 வருடங்களாக நகர்மைய அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்து கொண்டிருந்த சூழ்நிலை நிலவி வந்தது. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் சாங்கியம் மட்டுமின்றி பூதவாதம், எண்ணியம், வைசேடிகம் எனப்படும் சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம்  போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின.

      ஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய அரசமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.

               “கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

            பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்”-(7).    என்கிறார் மருதன் இளநாகனார். “கயிற்றினால் பிணிக்கப்பட்ட குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக்கொள்வதற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆய்வுசெய்தபின் அதனை நீக்கும் ஆவணமாக்களைபோல” என்பது இதன் பொருளாகும். இந்த ஆவணமாக்கள் என்பது அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்  ஆவர். குழிசி ஓலை என்பதை ஓட்டுச்சீட்டு எனலாம். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் எனவும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட அகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

         ஆனால் இந்நிலை சங்கம் மருவிய காலத்தில் இல்லை. அது கி.மு. 1000 முதல் கி.மு. முதல் நூற்றாண்டுவரை இருந்த நிலை ஆகும். அரசனின் அதிகாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இருந்தே எல்லையற்ற அதிகாரமாகச் சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் முடிவில் அது நிறைவு பெற்றது. அரசன் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக மாறிப்போனான். ஆனால் சங்கம் மறுவிய காலத்திலும் கிராமப்புர பேரூர்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்திருப்பர். வாரியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவை அரசனின் அதிகாரத்தைக்கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

          ஆதலால் இந்த “மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” என்பது குறைந்த பட்சம் கிறித்துவுக்கு முன்பே 1000 வருடங்களுக்கும் மேலான ஒரு நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். இந்தக் காலம் குறித்தப் புரிதல் இல்லாவிடில் தவறான, குழபபமான முடிவுகளை நாம் வந்தடைய நேரிடும். இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கும் மேலான, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு  தமிழ்ச் சமூகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது. அதன் காரணமாகவே பொருள்முதல்வாத மெய்யியல் பிரிவுகளில் ஒன்றான தொன்மையான எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த, கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்கபிலர்(சுமார் கி.மு. 750), ஒரு தமிழராக இருந்துள்ளார். இவரது பிற்கால மாணவரான, புறம் 194ஆம் பாடலைப்பாடிய சாங்கியம் என்கிற எண்ணியத்தை இந்திய அளவில் ஒரு பெரும் சங்கமாக வளர்த்தெடுத்த, பௌத்த மரபில் பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் அழைக்கப்படுகிற பக்குடுக்கை நன்கணியாரும் ஒரு தமிழராக இருந்துள்ளார்.

    ‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாட்டை ஆரம்பித்த கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூர்த்தலையார், நியாயவாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் போன்றவர்களும் தமிழர்களே ஆவர். இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையை அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவைகளேயாகும். சங்ககாலத்துக்குப் பிந்தைய (கி.மு.50), தமிழ்ச் சமூகச் சூழலால் பலவீனமடைந்த பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை, சங்கம் மருவிய காலத்துக்குப்பின்(கி.பி.250) பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இருந்த போதிலும் அதன்பின் பௌத்தமரபில் தோன்றிய தமிழர்களான, தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றவர்களிடமும்கூட மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் தாக்கம் முழுமையாக இருந்துள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

இந்தியத் தத்துவம்- பொருள்முதல்வாதம்:

         “இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்” என்கிற நூலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில், இந்தியத்தத்துவம் குறித்தும், பொருள்முதல்வாதமாகத் தோன்றிய கபிலரின் சாங்கியமும், கணாதரின் வைசேடிகமும் எப்படி ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டன என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். இந்தியத்தத்துவத்தில் ஆன்மீக வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில்  பொருள்முதல்வாதம் தோற்றுப் பின் வாங்கியுள்ளது. இந்தியத் தத்துவங்கள் வைதீகத் தத்துவங்கள், அவைதிகத் தத்துவங்கள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய ஆறும் வைதீகத் தத்துவங்கள், உலகாய்தம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றும் அவைதிகத் தத்துவங்கள் ஆகும். நம்முடைய தத்துவங்கள் வேதத்தைச் சார்ந்தோ அல்லது அதனை எதிர்த்தோ நிற்கின்றன. ஆனால் வேதத்தில் தத்துவம் என்பது மருந்தளவுக்கும் இல்லை-(8).

மீமாம்சம்:

           யாக, யக்ஞங்களின் கூட்டுச் சடங்குகளை கர்ம காண்டம் என உபநிடதங்கள் தாழ்த்திக் கூறின. இதனைவிட பிரம்ம அறிவின் ஞானம் பெறுவதே உயர்ந்தது என அவை கூறின. யாக, யக்ஞங்கள் போன்ற கூட்டுச் சடங்குகளை, அசுவமேத யாகம், இராசசூயம் போன்ற ஆட்சியாளர்களுக்கான சடங்குகளைச் செய்து நல்ல ஊதியமும் செல்வமும் பெற்றுவந்த பூசாரிகளும் மந்திரவாதிகளும் இதனை எதிர்த்தனர். உபநிடதங்களின் பிரம்மத்தையும், ஆன்மாவையும், அவை பற்றிய புதிய அறிவையும் எதிர்த்து, வேதச்சடங்குகளை ஆதரித்த இவர்கள் மீமாம்சகர்கள் எனப்பட்டனர். வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் முழுமுதல் கடவுட் கொள்கையை எதிர்த்ததால் இவர்கள் நாத்திகர்களாக ஆகிவிட்டார்கள். இவர்களின் தத்துவ நிறுவனர் அக்கபாதர் எனக் கருதப்படுகிறார்-(9).

கபிலரின் சாங்கியம்-வானமாமலை:

      கடவுள் இல்லை என மறுக்கிற நவீன சமணமும், பௌத்தமும் ஆன்மீக வாதங்களே. பொருள்முதல்வாதமாகத் தோன்றிய சாங்கியமும், வைசேடிகமும் ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பொருள் முதல் வாதமாக இருந்த சாங்கியத்தை ஆன்மீகவாதமாக மாற்ற முயன்ற  ஈசுவர கிருட்டிணர் என்கிற தத்துவ ஆசிரியர், தாமே ஒரு நூலை எழுதி, பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூலைத் தாம் கண்டெடுத்ததாகக் கூறி அதற்கு ஓர் உரையும் எழுதினார். அந்த நூலின் பெயர்தான் ‘சாங்கிய காரிகை’ ஆகும். 24 தாதுக்கள் சாங்கியத்தில் இருந்தன. 25ஆவது தாதுவாகப் புருடனைச் சேர்த்தனர். அந்த புருடனை சர்வ சக்தி வாய்ந்ததாக ஆக்கி சாங்கியத்தை ஆன்மீகவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தனர்-(10). ஆனால் ஈசுவர கிருட்டிணர் எழுதிய  ‘சாங்கிய காரிகை’ என்கிற அந்தப் பொய்யான நூல் குறித்து, “சாங்கியத்தின் கருத்தியல் போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே” என்கிறார் மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா என்கிற தத்துவ ஆசிரியர் ஒருவர்(11). இப்படித்தான் பண்டைய நூல்கள் அழிக்கப்பட்டு, அதனிடத்தில் பொய்யான நூல்கள் உருவாகி, அவை அங்கீகாரமும் பெற்றன.

கணாதரின் வைசேடிகம்-வானமாமலை:

      கணாதரின் வைசேடிகம் ஒரு பழமையான தத்துவம். கிரேக்கப் பொருள்முதல்வாதி கிராக்ளிடசு போல இவரும் அணுக்கொள்கையை விளக்கினார். காரணமின்றிக் காரியமில்லை என்பது இதன் அடிப்படைக் கொள்கை. நான்கு பூதங்களை வைசேடிகர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் ஆகாயத்தைப் பொருளெனக் கொள்வதில்லை. அணுக்கள் அழிவற்றவை. அவை படைக்கப்படுவதில்லை. இயல்பு, கூட்டு என்கிற இருவிதப்பண்புகள் அணுவிற்கு உள்ளன. இவ்விரு சக்திகளால் அணு கூடும்பொழுது உலகில் வேறுபட்ட குணங்களை உடைய பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. அணுக்களைத் தூண்டிச் சேர வைப்பது நிமித்த காரணம். அணுக்கள் சேருகிற போது உண்டாகிற ஓர் பண்புதான் அறிவுக்கூர்மை. நான்கு பூதங்கள் கூடிய ஒரு உடலின் பண்புதான் ஆன்மா. ஆன்மாவை உடலின் பண்பென  விளக்கும்போது, பகுதிகள் கூடும்பொழுது புதிய பண்புகள் சேருகின்றன என வாதித்து அவ்வாறு கூடுவதற்கு நிமித்த காரணம் தேவையில்லை என கணாதர் சொல்லுகிறார். ஆனால் அந்த நிமித்த காரணத்தைக் காட்டி அணுவை இயக்கவைக்கும் சக்தி கடவுள் எனக்கூறி வைசேடிகத்தை பிற்காலத்தவர்கள் நியாய வைசேடிகமாக ஆக்கி, அதனை ஆன்மீகமாக மாற்றி விட்டார்கள் என்கிறார் வானமாமலை அவர்கள்-(12). தமிழ் மரபு ஐம்பூதங்களைக் கொண்டது. கணாதரின் ஐம்பூதம் நான்கு பூதங்களாக மாற்றப்பட்டு விட்டது எனலாம்.

பரபக்க உலகாய்தம்-வானமாமலை:   

           வானமாமலை அவர்கள் கபிலரின் சாங்கியத்தையும், கணாதரின் வைசேடிகத்தையும் தமிழர் தத்துவமாக அறிந்திருக்கவில்லை. இந்தியப் பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசும் பொழுது இந்த இரண்டும் மிக முக்கியப் பொருள்முதல்வாதத் தத்துவங்களாக இருந்து ஆன்மீக வாதமாக மாற்றப்பட்டன என அவர் கூறுகிறார். பரபக்கம் என்பது எதிரியின் கூற்றாகச் சொல்லப்பட்டு அதற்கு விளக்கம் தரப்படும் ஒரு முறையாகும். அந்த விதத்தில் தமிழின் தத்துவ நூல்களான மணிமேகலை, நீலகேசி, சித்தியார்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றில் உள்ள பரபக்க உலகாயத விடயங்கள் குறித்து அவர் பேசுகிறார். மணிமேகலை(கி.பி. 6ஆம் நூற்றாண்டு)  காலத்தில் அளவைவாதி, சைவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி ஆகிய தத்துவவாதிகள் இருந்தனர். நீலகேசியார் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) காலத்தில் மூன்று பௌத்தப் பிரிவுகள் இருந்தன. அதுபோக சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் (உலகாய்தவாதம்) ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன என்கிறார்-(13). சித்தியார் காலத்தில் இருந்த தத்துவங்கள் குறித்து அறிய இயலவில்லை. வானமாமலை அவர்கள் தனது நூலில் இந்த மூன்று தமிழ் நூல்களிலும் உள்ள பரபக்க உலகாயதம் குறித்து மிக விரிவாகப்பேசுகிறார்-(14).

ஆசிவகம்-வானமாமலை:

          பரபக்க வாதங்களைக் கூறும் மணிமேகலை 4ஆவது தத்துவ வாதியாக ஆசிவகவாதியைப் பற்றிக் கூறுகிறாள். அவன் அணுக்கொள்கையை விளக்கி உயிரும் அணுவே எனக் கூறுகிறான் எனவும், ஆசிவகத்தை நீலகேசி புறச்சமயம் எனக் கூறி சமணத்தத்துவ நோக்கிலிருந்து விமர்சிப்பதால் இது சமணப்பிரிவாகக் கருதப்படலாயிற்று எனவும் ஆதலால் சைவ சிந்தாதிகள் இதனைத் தவறாக சமணத்தின் ஒரு பிரிவான சுவேதாம்பரச் சமணம் எனக் கூறுவர் எனவும் இதனுள் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை கூறுகிறார்-(15). ஆசிவகத்தைப் பற்றி வானமாமலை அவர்களுக்கு முழுமையானத் தரவுகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. வட இந்திய மரபில் ஆசிவகம் குறித்துப் போதிய தரவுகள் இல்லை. மற்கலி கோசாலர், பூரணகாயபர், பக்குடுக்கை நன்கணியார் ஆகிய மூவரும் இணைந்து இதைத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

 மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு-வானமாமலை:

          தமிழகத்தில் சாங்கியம், வைசேடிகம் ஆகிய இரண்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை தனிப் பொருள்முதல்வாதப் பிரிவாகவே இயங்கி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் வட இந்தியாவில் சாங்கியம், வைசேடிகம் ஆகிய இரண்டையும் ஆன்மீகமாக்கி வைதீகத்தின் ஒரு பிரிவாக மாற்றிவிட்டனர். இறுதியாக தமிழ் நாட்டு உலகாயதம் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் எனவும், மருத்துவ நூல்கள், சித்த நூல்கள், இரசவாத நூல்கள், வைணவ, துவைத நூல்களின் பரபக்கக் கூற்றுக்கள் முதலியனவற்றை ஆராயவேண்டும் எனவும் அதன் மூலம்தான் தமிழ் நாட்டில் நிலவிய அறிவியல் கொள்கைகளின் அடிப்படை நமக்கு விளங்கும் எனவும் வானமாமலை அவர்கள் முடித்துள்ளார்-(16). அதாவது தமிழகத் திற்கான தனித்துவமான பொருள்முதல்வாத அறிவியல் கொள்கைகள் அல்லது தத்துவார்த்தக் கொள்கைகள் இருந்துள்ளன என்பதை அவர் உறுதியாக நம்பினார் என்பதை அவரின் இறுதிக்கூற்று உறுதிப் படுத்துகிறது. அதனைத் தான் ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ என நாம் கூறுகிறோம். அந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபிலிருந்து தோன்றியவைகள் தான்  தொல்கபிலரின் சாங்கியம், கணாதரின் எண்ணியம் எனப்படும் வைசேடிகம் முதலியன ஆகும். ஆனால் நா.வானமாமலை அவர்களால் அவைகள் தமிழகத்தின் பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் என்பதை அன்று அறிய இயலவில்லை. “டாங்கே தொடங்கி நா.வா. வரை வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்துள்ளனர்” என்கிற பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கூற்றில் உள்ள உண்மை காரணமாக இருக்கலாம். பேராசிரியர் அரசு அவர்கள் கூறும் கண்ணோட்டம் உள்ள பலர் இன்றும் அறியாதுதான் உள்ளனர்.                                

                                                               - தொடரும்.

பார்வை:

1. பேராசிரியர் நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளியீட்டகம், ஜூலை-2008, பக்: 136,137.

2. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

3.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.                 

4.    “     “    பக்: 52-64.               

5.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

7.மருதன் இளநாகனார் அகநானூறு- 77ஆம் பாடல், வரி: 7, 8.  

8.நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 55-61.

9.    “     “      பக்; 68-70.

10.   “     “    பக்: 72-75.

11.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. ஜெயராஜ், NCBH,  டிசம்பர்-2011, பக்: 68.

12.நா. வானமாமலை, இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:76-78.

13.    “     “      பக்: 79-86.

14.    “     “      பக்: 79-111.

15.    “     “     பக்:168.    

16.    “     “     பக்:111.

கணியன் பாலன், ஈரோடு

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு -கணியன் பாலன்
Permalink  
 


மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 2

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா:

        தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஒரு புகழ்பெற்ற இந்தியத் தத்துவப் பேராசிரியர், மார்க்சிய அறிஞர். கணாதர் குறித்தும் அவரது வைசேடிக நூல் குறித்தும் அவர் பேசுகிறார். கணாதருக்கு இன்னொரு பெயர் உலூகர் எனவும், அதன் பொருள் ஆந்தை எனவும் அவர் கூறுகிறார். பின் அந்த ஆந்தை என்கிற பெயர் குறித்துப் பல பொருத்தமற்ற விடயங்கள் பேசப்படுகின்றன-(1). கணி+ஆதன் என்கிற தமிழ்பெயர் தான் கணாதன் என மாறியுள்ளது. ஆதன் என்பதை ஆந்தை எனக்கொண்டு பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கபிலரின் சாங்கியம் - சட்டோபாத்யாயா:

            கபிலர் என்பவரே இதனைத் தோற்றுவித்தவர் ஆவார். சாங்கியத் தத்துவம் மிகத்தொன்மையானது, அவற்றின் தாக்கம் மிகப்பரந்து பட்டது. பண்டைய இதிகாசமான மகாபாரதம், மருத்துவ நூலான சாரக சம்கிதை, மனுசுருதி, பல்வேறு புராணங்கள் ஆகியன ‘கார்பி’ கூறுவது போல் சாங்கியக் கோட்பாடுகளாலேயே நிறைந்துள்ளன. உபநிடதங்கள் கூட சாங்கியம் அவைகளுக்கு முந்தியது எனக் காட்டுகின்றன. ஆனால் தொடக்க காலத்தில் சாங்கியத் தத்துவம் எப்படி இருந்தது என்பது இன்றைக்கும்கூடத் தெளிவில்லாமலேயே இருக்கிறது. சாங்கியக் கொள்கைகளை விளக்குவதாக இரண்டு நூல்கள் உள்ளன. அவை கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய காரிகை, கி.பி. 1400 எனக்கருதப்படும் சாங்கிய சூத்திரம் ஆகிய இரண்டும் ஆகும். ஈசுவர கிருட்டிணருடைய சாங்கிய காரிகை விருப்பம்போல் திருத்தப்பட்டது என திபெத்திய சான்றுகளைக் காட்டி வாஸ்சிலியேவ் என்பவர் கூறுகிறார்-(2).

            சாங்கியத் தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது, அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை, ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக அது பரிணாமம் பெற்று வருகிறது என்பது தான் ஆகும். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவ வாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’. சாங்கிய காரிகைக்கு முந்தைய சான்று என்பது சாரகர் எழுதியதாகக் கருதப்படும் சாரக சங்கிதை என்கிற மருத்துவ நூல் ஆகும். சாரகர், சாங்கியத்தின் ‘புருடன்’ குறித்து ஐந்து கருத்துக்களை முன்வைக்கிறார். பொருளாயாதத் தன்மைகொண்ட 24 தாதுக்களின் குவியல்தான் புருடன் என்கிற மூன்றாவது கருத்துக்கே சாரகர் முக்கியத்துவம் அளிக்கிறார். ஐந்தாவது கருத்து புருடன் என எதுவும் இல்லை என்கிறது. ஆக பொருள்முதல்வாதத்திலிருந்து தெளிவாக வேறுபடுத்த முடியாத பழைய சாங்கியக் கொள்கையை சாரகர் கூறுகிறார்.

சாங்கியமும் பிரம்மசூத்திரமும்:

        உபநிடதங்களில் உள்ள தத்துவக் கருத்துக்களை தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக்கொண்ட ‘பிரம்ம சூத்திரம்’ நூலை பாதராயணர் எழுதினார். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்கிறார் தாஸ்குப்தா அவர்கள். இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றி புரிந்து கொள்ள முடியாது.  கி.பி. 8ஆம் நூற்றாண்டு சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன ஆகும். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பிரம்ம சூத்திரம் சாங்கியத்தைப் பிரதானவாதம் என்கிறது. பிரதானம் என்பது முதன்மைப்பொருள் ஆகும். சாங்கியவாதிகள் முதன்மைப்பொருள் இயற்கை விதிகளின் காரணமாக மாறுதலடைந்து உலகம் தோன்றியது என்பர். சாங்கியம் சுபாவவாதம் என்கிற இயற்கை விதிக்கொள்கை எனவும் சொல்லப்படுகிறது. பௌத்த மதக் கோட்பாடுகள் சாங்கியத்திலிருந்து தோன்றியவை என்கிறார் அசுவகோசு அவர்கள். சாங்கியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். அதனால் கருத்துமுதல்வாதிகளான சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் சாங்கியத்தைத் தமது முக்கிய எதிரியாகக் கொண்டார்கள். சங்கரரின் பிரம்ம சூத்திர உரை சாங்கியத்தை எதிர்க்க 60சூத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளது. பிற தத்துவங்கள் எல்லாவற்றையும் மறுக்க 43 சூத்திரங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அதில் பௌத்தப்பிரிவுகளையும்  சமணத்தையும் எதிர்க்க முறையே 17சூத்திரங்களும், 4 சூத்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்கரர் ‘பிரதான மல்லனைத் தோற்கடித்ததன் மூலம் பிற மல்லர்களை நாம் ஏற்கனவே தோற்கடித்து விட்டோம்’ என்கிறார்-(3).

   கபிலர் ஒரு அசுரர். அவரது சாங்கியத்தில் கடவுளுக்கு இடமில்லை. புருடன் என்பதற்கு ஆன்மா என்னும் பொருள் காலப்போக்கில் ஏற்பட்டது. உண்மையில் அதன்பொருள் அதுவன்று. புருடன் என்ற சொல்லுக்குத் தொடக்ககாலப் பொருள் ஆணின் உடல் என்பதாகும். இந்த அர்த்தத்தில்தான் ஆரமபகால உபநிடதங்களில் ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கருத்தை ஏற்கனவே பெல்வார்க்கர், இரானடே ஆகிய இருவரும் கூறியுள்ளனர்-(4).

கணாதரின் வைசேடிகம் – கோதமனாரின் நியாயவாதம்; சட்டோபாத்யாயா:

               சீன நாட்டைச்சேர்ந்த பௌத்தர்களின் மரபுப்படி கணாதரின் வைசேடிகம் என்பது பிற தத்துவங்களைக் காட்டிலும் உயர்ந்தது,  விசேடமானது என்கிற பொருளுடையது. இந்திய மரபுப்படி அது விசேடம் அல்லது தனித்தன்மையானது-(5). கணாதரின் வைசேடிக சூத்திரம், கோதமனாரின் நியாய சூத்திரம் ஆகிய இரண்டையும் குறித்துப் பேசவந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் இவை பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும் இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள்  இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் கூறுகிறார். இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலகில் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல்  போன்றவைகளும் புதியவை எனவும் ஆனால் அவை கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்தன என்பதற்கு அங்கு ஆய்வுகள் நடந்துள்ளன எனவும் இந்தியாவில் அதுபோன்ற ஒரு ஆய்வு நடைபெறவில்லை என்பதால் இவை கிரேக்கத்தத்துவ  மரபிலிருந்து நேரடியாகக் கடன் பெற்றவை என கீத் போன்றவர்கள் கூறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

         கிரேக்கத் தத்துவத்தின் அணுக்கொள்கை, பொதுமைகள், முற்கூற்று முடிவுகள், வகைப்பிரிவுகள் முதலிய கொள்கைகள், நியாய-வைசேடிக கருத்துக்களின் அச்சுநகலாக இருக்கவில்லை எனவும், இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிய திறந்தவெளி விவாதங்களின் விளைவாக நியாயத்தத்துவம் தோன்றியிருக்க வேண்டும் என செர்பாட்சுகி கருதுகிறார்  எனவும் அவர் கூறுகிறார். அனுபவமுறையிலான மூலமெய்ப்பொருள் ஆய்வு, அறிவுத்தோற்ற ஆய்வு ஆகியவற்றில் இவையிரண்டுக்கும் இணையாக வேறு நூல்கள் இந்தியத் தத்துவ மரபில் தோன்றவில்லை-(6).

அஜித கேசகம்பளி-

            இவர் தொடக்க காலத்தைச் சேர்ந்த பொருள்முதல்வாதி. புத்தரின் சம காலத்தவராக இருக்கலாம். “ஈகை என்றோ யாகம் என்றோ கொடை என்றோ எதுவும் கிடையாது. நற்செய்கை, தீச்செய்கை என்பவனவற்றிற்குப் பலனோ விளைவோ கிடையாது. மனிதன் நான்கு பூதச் சேர்க்கையால் உருவானவன்........... இந்தக் காணிக்கையும் இது தொடர்புடைய கொள்கைகளும் முட்டாள்தனமானவை. இதனால் பலனுண்டு என்று சொல்வது பச்சைப்பொய், வெட்டிப்பேச்சு. முட்டாள்களாயினும், அறிவாளிகளாயினும் அது யாராக இருந்தாலும் சரி, உடம்பு அழியும்போது அழிந்து போகின்றனர். மரணத்திற்குப் பின் அவர்கள் இல்லாதுபோகின்றனர்” என தொடக்ககால பௌத்த நூல் ஒன்று இவருடைய கருத்தை மேற்கண்டவாறு தொகுத்துக் கூறுகிறது-(7). இந்த அஜித கேசகம்பளி என்பவர் தமிழில் நரிவெரூஉத்தலையார் எனப்படுகிற புறம் 5, 195 ஆகிய பாடல்களைப் பாடியவர் ஆவார். ஆகவே இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் ஆகிறார். அசிதம் = நரி, கேசம்=தலைமுடி என மொழிபெயர்த்து நருவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை அசிதகேச கம்பாளர் என பெயர் மாற்றிவிட்டனர். இவர்தான் உத்தேசவாதம் என் கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். அஜித கேசகம்பளி என வட இந்திய மரபில் சட்டோபாத்யாயா போன்றவர்களால் அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகள் அடிப்படையில் தமிழியப் பூதவாதம் எனப்படும் உலகாயதமாகத் திகழ்கின்றன-(8).

கோதமனார் ஒரு தமிழர்:

       நியாயவாதத்தை தோற்றுவித்தவரின் பெயரும், புறம் 366ஆம் பாடலைப்பாடியவரின் பெயரும் கோதமனார் ஆகும். புறம் 366ஆம்   பாடல் அறவோனாக இருந்த ஒரு அரசனின் மகனுக்கு அறிவுரை கூறப்பாடியதாகத் தெரிகிறது. அறவோன் மகன் என்பதால் பிற்காலத்தவர் பாடப்பட்டவரைத் தருமபுத்திரன் என எழுதியுள்ளனர். அவருடைய காலத்தை அறிய இயலவில்லை. புறம் 366ஆம் பாடலைப்பாடிய கோதமனார் தான் நியாயவாதத்தை தோற்றுவித்தவர் எனலாம். பாடலின் கருத்தும், பெயரின் பொருத்தமும் இருவரும் ஒருவரே என்பதைக் காட்டுகின்றன.

தமிழ் சித்தர்கள்- சட்டோபாத்யாயா:

        தமிழ் சித்தர்கள் குறித்துத் தனது உலகாயதம் என்ற நூலில் சட்டோபாத்யாயா அவர்கள் தரும் முக்கியத் தரவுகளின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஏராளமான சித்தர் கவிதைகள் உள்ளன. அவை சித்தர்கள் எனப்படும் தாந்திரீகர்களால் எழுதப்பட்டவை. 18 சித்தர்களில் இருவர் போகர், புலிப்பாணி எனப்படும் சீனர்கள். போகர் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவிற்கு வந்தார். அங்கு தாந்திரீகத்தைக் கற்றார் புலிப்பாணியும் போகருடன் தமிழ் நாட்டிற்கு வந்து தங்கிவிட்டார். இவர்கள் மந்திரம், மருத்துவம், இரசவாதம், இயற்பியல் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர். இவை தாந்திரீகக் கண்ணோட்டத்தில் தமிழில் எழுதப்பட்டவை. தமிழ் சித்தர்களின் பல நூல்கள் தென்னிந்தியாவின் மடாலயங்களிலும், ஆவண நூலகங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தகுந்த முறையில் பதிப்பித்து ஆய்வுசெய்தால் இந்திய விஞ்ஞானத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான விவரங்கள் நமக்குக் கிடைக்கும். தமிழ் நூல்களின்படி தாந்திரீகத்தின் மூலம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பூர்வ விஞ்ஞானக் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன என்பதும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கான அம்சம் தாந்திரீகத்தில் உள்ளார்ந்து இருக்கிறது என்பதும் ஆகிய இரு முக்கிய காரணங்களுக்காக தமிழ் சித்தர்களின் நூல்கள் குறித்து நாம் ஆர்வம் காட்டுகிறோம். தமிழ்ச் சித்தர்கள் சங்கரரது கருத்துமுதல்வாதத் தத்துவத்தினை கடுமையாக எதிர்த்தனர்-(9).

             போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் எனக் கருதப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. அவர்கள் தங்கள் நூல்களை எல்லாம் தமிழில்தான் எழுதியுள்ளனர். இவர்களைக் குறித்த குறிப்புகள் எதுவும் சீனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த மதம் சார்ந்த பல சீனப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் சீனப் பெயர்களாகத்தான் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, பயண விபரங்களைச் சீன மொழியில்தான் எழுதியுள்ளனர். சீனத்தில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதலால் போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன. சீனத்தோடு இவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதை வைத்து இவர்களைச் சீனர்கள் எனக் கருதும் கருத்து உருவாகி இருக்கலாம். இவை பற்றி மேலும் ஆய்வுகள் தேவை. தாந்திரீகக் கருத்துக்கள் தமிழில் ஆரம்ப காலம் முதல் இருக்கின்றன என்பதும் அவை அறிவியல் மனப் பான்மையை வளர்க்கக் கூடியவை என்பதும் அது சங்கரரது கருத்துமுதல் வாதத்தினை எதிர்த்தது என்பதும்  இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்ச் சிந்தனை மரபின் வீழ்ச்சி:

    இந்தியத்தத்துவத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் குறித்துப்பேசும் அனைவரும் இனக்குழு காலத்திய மந்திர தந்திரக் கூறுகள், பூதவாதம் என்கிற உலகாய்தம், கபிலரின் சாங்கியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம், யோகம் ஆகியவைகளைப் பற்றிப் பேசியுள்ளனர். இதில் யோகம் என்பது ஒரு தத்துவம் அல்ல. அது ஒரு பயிற்சி முறைகளின் தொகுப்பே. யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி ஒரு தொகுப்பாசிரியர் மட்டும்தான். சிந்துவெளி காலத்திலிருந்து இப்பயிற்சிகள் வழக்கிலிருந்தன-(10).

    மந்திர தந்திரக் கூறுகள் என்பது ‘போலச்செய்தல்’ மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்  என்கிற இனக்குழுகால நம்பிக்கையாகும். அவற்றின் தத்துவக்கூறுகள் பூதவாதம் என்கிற உலகாயதத்தில் இணைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே பூதவாதம் என்கிற உலகாயதம், கபிலரின் சாங்கியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம் ஆகியவற்றில் நியாயம் தவிர பிற அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களும் மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் தோன்றியவைகளே என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். நியாயவாதத்தின் அளவையியலும் இன்னபிறவும் உலகாயதம், சாங்கியம், வைசேடிகம் ஆகியவற்றில் அடக்கம். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துப்படி இந்தியாவின் பொருள்முதல்வாத மெய்யியல் வரலாறு என்பது, தமிழகத்தில் தோன்றி சிறப்புடன் இயங்கி வந்த பூதவாதம் என்கிற உலகாயதம், சாங்கியம், வைசேடிகம், ஆசிவகம் ஆகிய நான்கு பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களின் வரலாறு தான் எனக்கூறலாம். நமது கருத்துப்படி நியாயவாதத்தின் கோதமனாரும் தமிழரே ஆவார். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று உண்மையே ஆகும்.

         கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை இந்திய அளவில் புகழ் பெற்றவைகளாக இருந்த இத்தத்துவங்கள் கிறித்துவ காலத்துக்குப்பின் தமிழக அளவில் மட்டும் ஓரளவு செல்வாக்கு மிக்கவனாக இருந்து வந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்திலும் செல்வாக்கு இழந்து, இல்லாது போயின. தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியும், அதன்பின் வலிமை பெற்ற பல்லவர் ஆட்சியும், வடஇந்தியாவில் குப்தர் ஆட்சியும் இந்தியா முழுவதும் சமண, பௌத்தமயமாதல் பின் சமற்கிருதமயமாதல் என்பதைக் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டுவந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள், பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களை இல்லாது ஆக்கின. அதன்பின் மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கான அடித்தளமாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியலை முழுமையாக இழந்தது எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவிலிருந்த அனைத்தும் சமற்கிருத மயமாக்கப்பட்டு, அனைத்துத் தத்துவங்களையும் வைதீக மரபின் கீழ் கொண்டுவரும்பணி வெற்றிகரமாக நிறைவேறியது. தத்துவமே இல்லாத வேதம், தத்துவங்களிலேயே தலைமையானதாகவும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும்  ஆக்கப்பட்டது.

         deviprasad chattopathiyayaaஇந்தியாவில் சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; எண்ணியம் என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; ஆசிவகச் சமயத்தைத் தோற்றுவித்தவர் அறப்பெயர் சாத்தன் எனப்படும் மற்கலிகோசாலர்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூர்த்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார்.  இவர்கள் அனைவரும் சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்கள் ஆவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறப்பாடல் ஆசிவக ஊழியலின் கருத்தைக் கொண்டுள்ளது. அதுபோன்றே கோப்பெருஞ்சோழனின், ‘செய்குவம் கொல்லோ’ என்கிற பாடல் ஆசிவகத்தின் தற்செயல் கோட்பாட்டைக் கொண்டுள்ளது-(11).

         ஆசிவகக் கோட்பாட்டிற்குரிய மூலச்சுவடுகள் எவ்வாறு தமிழ் இலக்கியங்களில் மட்டும் காணப்படுகின்றனவோ அதைப் போலவே சாங்கியத்தின் மூலச்சுவடுகளும் தமிழ் இலக்கியங்களில் தான் காணப் படுகின்றன. அத்துடன் சாங்கியம் யோகம், உலகாய்தம் ஆகிய பொருள்முதல்வாத மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன-(12).

இடைக்காலம் - தின்னாகர்:

            சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர். இடைக்காலத் தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் முதன்மையான ஆசிரியர் ஆவார். இவரைப்பற்றி பாரத்சிங் உபாத்யாயா, “பௌத்த தருக்கவியல் வரலாற்றில் முதன்மையான பெயர் தின்னாகர் ஆகும். இவர்தான் பௌத்த தருக்கவியலின் தந்தை.... இந்திய நாட்டின் தலைசிறந்த அளவைநூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பிடாத அளவை நூல் இவரது காலத்திற்கு பின் இல்லை எனலாம்” என்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை. இவர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு(13).

தர்மகீர்த்தி:

             தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி ஆவார். இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல்வாத நூல்களைக் கற்றார். தின்னாகரின் மாணவரான ஈசுவர சேனரிடம் தருக்கவியலைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட்(KANT)’ என அழைக்கிறார் செர்பாட்சுகி என்கிற இரசிய அறிஞர். இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. இந்த இருவர் போக, தருமபாலர் நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்து பௌத்த நூல்களை மாணவர்களுக்கு போதித்து வந்தவர் ஆவார். திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. அவர்கள். தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில் தான் எழுதினர்-(14)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க காலத்தில் கல்வி:

               கல்வியின் வளர்ச்சியும், மெய்யியலின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். சங்ககாலக் கவிஞர்கள், அரசன் முதல் ஆண்டி வரை அன்றையத் தமிழ்ச் சமூகத்தின்  அனைத்துத் தரப்பிலும் இருந்துள்ளனர் என்ற செய்தி அன்றையத் தமிழ் சமூகத்தில், பரந்து பட்ட அளவில், அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தற்காலத் தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன.

       இந்து நாளிதழ், 24.6.2010 இல் தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார்-(15). ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது. ஆனால் பண்டையத் தமிழ் சமூகத்தின் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய இயலவில்லை.

         “தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் அவர்கள்-(16)

           பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும்  எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத்தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர் நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.  

         அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர் நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது, அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியாக உள்ளது. வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்வி சங்ககாலத் தமிழகத்தில் இருக்கவில்லை. ஆனால் அக்கல்விமுறை சிறந்ததாகவும், வேறுபட்டதாகவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாகவும் இருந்தது

         “அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான  அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல்செய்ய, மணம்புரிய, இல்வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப்படுத்தியது; தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வு அதன் உள்ளார்ந்த மதிப்புக் கருதி பரிந்துரைக்கப்பட்டது” என்கிறார் சேவியர் தனிநாயகம் அடிகளார்-(17).

        கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்(புறம்-47). தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனோ தனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனாரால் தான் பாடப்படுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறான். பெரும்புகழ்க் கபிலர் கல்வி கற்ற புலவனை இகழ்ந்ததால் இருங்கோவேள் என்கிற குறுநில மன்னனின் முன்னோர்கள் இரு பெரும் நகரங்களை இழந்தனர் என்கிறார். சங்ககாலத் தமிழ் சமூகத்தில் கல்வி கற்ற புலவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகளைக் காணலாம். ஆகவே சங்ககாலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அன்றைய தமிழ் சமூகத்தில் பேரறிவும், பெரும் புலமையும் உடையவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தரப்பட்டது.

         பாணர்கள், பாடினிகள் போன்றவர்கள் வழிவழியான குடும்ப மரபின் காரணமாக இக்கல்வி அறிவைப் பெற்றனர் எனலாம். ஆனால் மற்ற சாதாரணக் குயவர்கள், தச்சர்கள், கருமான்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் செய்வோரும், பிற தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களும், இவர்களின் சாதாரணக் குடும்பப் பெண்களும் இந்த புலமைக் கல்வியை எப்படிப் பெற்றனர் என்பது மேலும் நன்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயமாகும். வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரணக் குயவர்குலப் பெண்கள்  இந்தப் புலமைக் கல்வியை பெற்றது குறித்து விரிவாக ஆய்ந்தறிந்து கண்டறிவதன் மூலமே நமது பண்டைய தமிழகத்தின் கல்விமுறையை அறிந்துகொள்ள இயலும். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் ஆகும். அன்று சமணப் பள்ளிகளோ, புத்தப் பள்ளிகளோ இல்லை.

        மாதவி போன்று, பரத்திமை நிறுவனத்தில் இருந்த பெண்கள் பல்வேறு கலைகளில் சிறந்திருப்பது என்பதும், உயர்கல்வியைப் பெற்றிருப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், புரிந்துகொள்ளக் கூடியதுமாகும். ஆனால் இது போன்ற பரத்திமை நிறுவனங்கள் தமிழகத்தில் ஓர் உயர் வளர்ச்சியை கி.மு.முதல் நூற்றாண்டுக்குப்பின் தான் வந்தடைந்தன எனலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து உயர்குடிப் பெண்கள் கல்வியறிவும் கலை அறிவும் பெறுவது குறைந்து போனது. மூவேந்தர்கள் பேரரசுகளாக ஆகியதும், வைதீகச் சிந்தனையின் கருத்துக்கள் பரவியதும் இதற்கான காரணங்கள் எனலாம். அதனால் தான் மாதவி அளவு கண்ணகி கல்வியறிவும் கலைஅறிவும் பெறவில்லை.

        கிரேக்கத்தில் ஏதென்சில் உள்ள உயர்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண்களைவிட பரத்திமை நிறுவனங்களில் இருந்த பெண்கள்தான் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். கிரேக்க உயர்குடிப்பெண்கள், அதன் பொற்காலத்தில் கல்வியறிவுகூட இல்லாதவர்களாகவும் குடும்ப பணிகளை செய்வதற்கான ஒரு தலைமை வேலைக்காரர்களாகவுமே நடத்தப்பட்டனர். கிரேக்கத்தில் மிகச் சிறந்த பெண் என்பவள் ஒரு பொது மகளாக இருந்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஸ்பார்ட்டவில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அங்கு பரத்திமை மதிக்கப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் நல்ல குணமும் மதிப்பும் உடையவர்களாகக் கருதப்பட்டனர்-(18).

            ஆதலால் ஏதென்சில் சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த பெண்கள் கல்வியறிவோ, கலையறிவோ பெற்றிருக்கவில்லை. பரத்திமைப்பெண்கள் தான் எங்கும் கல்வியறிவும், கலையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் தான் சாதாரணக் குடும்பப் பெண்கள் கூட கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். ஆனால் மூவேந்தர் அரசுகள் பேரரசுகள் ஆகிய காலமான கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நிலைமை மாறத் தொடங்கிவிட்டது எனலாம்.

          கி.மு. 150 க்குப்பின் சமண, பொளத்த மடங்கள் தமிழகத்தில் உருவாகியிருந்த போதிலும் கி.பி.க்குப்பின் தான் அவை கல்வி கற்பிக்கும் கூடங்களாக உருவாகின. அவைகளும் கூட பெரு நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கக் கற்றிருந்தனர். அதில் சிலர் சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு படைப்பாளிகளாக இருந்தனர். தொகை நூல்களில் இருக்கும் கல்வி, கற்றல், புலமை பற்றிய குறிப்புகளும், கல்வி, கற்றல், புலமை பற்றிய கருத்தாக்கங்களும் சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை என அறிய முடிகிறது. ஆக மிக நெடுங்காலங்களுக்கு முன்னரே தனக்கான ஒரு கல்வி முறையைத் தமிழகம் கொண்டிருந்தது, அதுவும் பரவலாக அனைத்து மக்களும் அக்கல்வியைப் பெறுமளவு அக்கல்விமுறை இருந்தது என்பது தான் மிகப்பெரிய விடயமாகும். தமிழகத்தின் கல்வி முறைக்கும் அதன் மெய்யியல் வளர்ச்சிக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாத மெய்யியல் தனக்கே உரித்தான தனித்துவமான கல்விமுறையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

                                                        - தொடரும்

கணியன் பாலன், ஈரோடு

பார்வை:

1.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்:50-53.

2.    “     “     பக்: 195, 196.

3.   “   “     பக்:  201-209. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எசு. தோதாத்ரி, NCBH,  ஜூன் 2010, பக்: 486-513.

4.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, ஜூன் 2010 பக்: 71-73.

5.   “    “    பக்:267.

6.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்தியத் தத்துவம்- ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்:268-274.

7.    “    “     பக்: 313, 314 

8.க. நெடுஞ்செழியன்,சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 22, 23, 29.

9.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, NCBH, ஜூன் 2010 பக்: 456-458.

10.     “       “      பக்: 210-216.               

11.முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 18, 19, 21-23, 84.

12.முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும், சரக சம்கிதையும், 2009, பக்: 51.

13, 14. நா.வானமாமலை அவர்கள், தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், 2008, பக்: 96, 126-130.

15. An epigraphic perspective on the antiquity of Tamil – Iravatham Mahadevan, The Hindu.  dt 24.6.2010.

16.பேராசிரியர் அ. பாண்டுரங்கன், ‘தொகை இயல்’ பக்: 194.

17.சேவியர் தனிநாயகம் அடிகளார், ‘பண்டையத்தமிழ் சமூகத்தில் கல்வி’ டிசம்பர்-2009, பக்: 64, 65.

18.ஏங்கெல்சு, “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” பாரதி புத்தகாலயம், பதிப்பு-2008, பக்: 80, 81.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 3

சங்கப் புலவர்கள் - ஆசிவகச் சமயம் சார்ந்தவர்கள்:

               ‘சங்க நூல்களெல்லாம் புத்தச் சமண சமயச் சார்புடையன அவைகளைப் பயிலுதல் கூடாது’ என்று தனது இளமைப்பருவத்தில் சில சிவனடியார்கள் கூறுவதுண்டு, எனச்  ‘சங்க இலக்கியம்’ பதிப்பாசிரியர் ம. பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களைச் சைவர்கள் படிக்கக் கூடாது என்கிற தடை இருந்தது போலவே திருக்குறளையும் சைவர்கள் படிக்கத் தடை இருந்துள்ளது. வைணவத்தில் அத்தடை வெளிப்படையாகவே இருந்ததை ஆண்டாள் ‘தீக்குறளை சென்றோதோம்’ என்பதால் அறியலாம். திருக்குறளும், நாலடியாரும் தொல்தமிழரான அயோத்திதாசரின் பாட்டனார் கந்தசுவாமி அவர்களால் காப்பாற்றப்பட்டு கையளிக்கப்பட்டவை என்பதால் அத்தடைகள் இருந்ததற்கான வாய்ப்பை உறுதி செய்யலாம்.  பெரும் பான்மைச் சங்ககாலப் புலவர்கள் வைதீக–சைவ  நெறிகளுக்கு மாறான சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் சங்க இலக்கியங்களை சைவர்கள் வெறுத்தனர். பரணரின் பாடல்கள் அவர் வைதீக மறுப்பாளர் என்பதை உறுதி செய்கிறது. நக்கீரர் தனது புறம் 395ஆம் பாடலில் தாம் ஆசிவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலார் எனப்படுகிற அறப்பெயர் சாத்தானின் கிளையைச் சேர்ந்தவன் எனக் கூறிக் கொள்கிறார்-(1).

           தமிழகத்தில் உள்ளனவும், சங்ககாலத்திற்கு உரியனவுமாகிய கற்படுக்கைகள் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் சமணர்களுக்கென்று அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்ட ஓரிரு கற்படுக்கைகளும் ஆசிவர்கட்கு மட்டுமே உரியனவாகத் திட்டமிட்டு அமைக்கப் பட்டுள்ளன. பேராசிரியர் தி.வி. மகாலிங்கம் தமிழகக் கற்படுக்கைகள் ஆசிவர்கட்கு உரியன என ஆய்ந்துரைத்துள்ளார். ஆனால் அவைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை-(2). மேலும் ‘அமணன்’ என்கிற சொல் வைதீக எதிர்ப்புக் கோட்பாட்டினர் அனைவரையும் குறிக்கும். அது பாகத மொழியில் ‘சிரமணன்’ என வழங்கும். ஆதலால் புத்த, சமண, ஆசிவகத் துறவிகள் அனைவரும் அமணன் என்றே அழைக்கப்பட்டனர்-(2). ஆதலால் பலகுழப்பங்கள்  ஏற்பட்டுள்ளன.

              கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து இளங்கோவடிகளின் காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான சங்ககாலப் புலவர்களில் பெரும்பாலோர் ஆசிவகச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்தம் சிந்தனை மரபின் ஆழத்தையையும், தொன்மையையும், சிறப்பையும், தனித் தன்மையையும் விளக்க நாம் சங்க இலக்கியங்களிலிருந்து ஏதேனும் ஒரு பாடலைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அப்பாடல் ஆசீவகமெய்யியலைச் சேர்ந்ததாகவே இருக்கும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாடல் இதற்குச் சான்று ஆகும்-(3). சங்க காலத்தில் நிலத் தெய்வங்களாகவும் பொருள்முதல் பிரிவைச் சார்ந்த தந்திர வழிபாட்டிற்குரியனவாகவும் விளங்கிய முருக-சிவ-மாலிய வழிபாடுகள் யாவும் வேதவழிப்பட்ட தெய்வங்களாக மாற்றம்பெற்றுள்ளன. அதற்கடையாளம்தான் கடவுள் வாழ்த்தே இடம்பெறாத தொகை நூல்களில் வேதவழிப்பட்ட கடவுள் குறித்தப் பாடல்கள் சேர்க்கப்பட்டது ஆகும்-(4). மேற்கண்ட தரவுகளிருந்து, சங்ககாலப் புலவர்களில் பெரும் பாலானோர் வைதீக மரபிற்கு எதிரான ஆசீவகச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆதலால் சைவ-வைணவ அடியார்கள், சங்கப்பாடல்களைப் படிக்கக் கூடாது எனத்தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும், சங்ககாலக்கல்வெட்டுகள் சமணத்துறவிகளது அல்ல! அவை ஆசிவகத் துறவிகளுக்கானவை எனவும் முடிவு செய்யலாம்.

வடஇந்திய - தமிழிய தத்துவமரபில் உள்ள முரண்பாடுகள்:

பூதவாதம் - உலகாயதம்:

          வடமரபில் பூதங்கள் நான்காக சொல்லப்படுகிறது. தமிழ் மரபோ ஐம்பெரும்பூதங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆகாயத்தைக் காணமுடியாது என்பதால் வட மரபில் வெளியைப் பூதமாக ஏற்பதில்லை. அதனால் உலகாயதம் - பூதவாதம் வரும் இடங்களில் வட மரபு நான்கு பூதங்களை மட்டுமே குறிக்கிறது. தமிழ் மரபில் வெளி எனும் ஆகாயம் ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல் முதல்பொருளில் ஒன்றாகவும் பேசப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழ் மரபில் வெளியை ஒரு பூதமாக ஏற்றுக்கொண்டதும், வெளியையும் காலத்தையும் இணைத்து முதற் பொருளாக வகைப்படுத்தியதும் தமிழ் மெய்யியலின் நுட்பத்தை உணர்த்தும் சான்றுகளாகும். இன்றைய வான் இயற்பியலில் நிலம்-பொழுது இரண்டையும் ‘SPACE AND TIME‘  எனக் குறிப்பர். சார்பியல் கோட்பாடும், பொது-சிறப்பு சார்பியல் கோட்பாடுகளும் வெளி-காலம் பற்றிய ஆய்வுகளேயாகும்-(5).  தமிழ்மரபுப்படி வெளி, காலம், நிலம் ஆகியவற்றை முதற்பொருளாக வைத்தத் தொல்காப்பியர் தெய்வத்தைக் கருப்பொருளாக வைத்தார். முதற்பொருளில் இருந்துதான் கருப்பொருள்கள் உருவாக முடியும் என்பது தான் தமிழ் மரபு. அதன்படி தெய்வம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் என்பதுதான் தொல்காப்பியர் கூறும் கருத்தாகும்.

எண்ணியம் - சாங்கியம்:

                ஐம்பூதக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழ்மரபைப் பூதவாதமாகவும், வெளி நீங்கலான நான்கு பூதங்களைக் குறிக்கும் வடமரபை உலகாயதமாகவும் மணிமேகலை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆயினும் இரண்டும் ஒன்றுதான் ஆகும். பூதவாதம்-உலகாயதம் போலவே, எண்ணியம் எனப்படுகிற சாங்கியம், சிறப்பியம் எனப்படுகிற வைசேடிகம் ஆகியவற்றிற்கும் இடையேயும் இப்படிப்பட்ட வட இந்திய, தமிழிய முரண்பாடுகள் உண்டு. வட மரபில் சாங்கியம், வைசேடிகம் என்பன தமிழ் மரபில் முறையே எண்ணியம், சிறப்பியம் எனப்படுகின்றன. எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழ் மரபில் 24 உறுப்புகளைக் கொண்டதாகவும் - புருடன் பற்றிய எண்ணமற்றதாகவும் உள்ளது.    

             “ஒன்று புரிந்த ஈரிரண்டின்

              ஆறுணர்ந்த ஒருமுதுநூல்”   -புறம்: 166.

        எனப் புறநானூறு எண்ணியத்தின் மூலவடிவைப் பதிவு செய்துள்ளது. ஆனால் வடமரபில் 24 உறுப்புகளுடன் புருடன் என்கிற ஒன்று சேர்க்கப்பட்டு 25 உறுப்புகளை உடையதாக எண்ணியம் என்கிற சாங்கியம் உள்ளது. இந்தப் புருடன் இடைச்செருகலாக வடமரபில் இணைக்கப்பட்டதை சாரக சம்கிதை மிகத் தெளிவாக விளக்குகிறது. ‘எண்ணியத்தில் புருடன்’ எனும் தலைப்பில் ஆராய்ந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள், புருடன் இடைச் செருகலே என்பதை உறுதி செய்துள்ளார்-(6).

         மகாபாரதமும், புராணங்களும் சாங்கியத்தின் தொன்மையை மட்டுமின்றி ஆதிகாலத்தில் இத்தத்துவத்துக்கு இருந்த பிரமிக்கத்தக்க செல்வாக்கை, ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கவும் செய்கின்றன. இதன் தொன்மையும், உபநிடதங்களின் அடிப்படைகளுக்கு எதிரான இதன் தெளிவான பார்வையும் இதன் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய  ஆரியம் சாராத சிந்தனைத்தொகுப்பில் தேடவேண்டும் எனத் தற்கால அறிஞரில் சிலரைப்பேச வைக்கிறது. அது சரியே எனவும் கபிலர் சடப்பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்த விபரங்கள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி, அதன் இயல்புக்கும், இயங்குநிலைக்கும் வேறெந்த புறக்காரணியும் இருக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் பார்வையால் அல்லது குறைந்த பட்சம் அறிவியல் கண்ணோட்டத்தின் முன்மாதிரியால் அமையப்பெற்றதாகும்-(7).

        தத்துவச் சிந்தனையைத் தொட்டுப் பேசுகிற மகாபாரதம் முதல் மனுவின் சட்டநூல் ஈறாகவுள்ள எந்தவோர் இந்திய இலக்கியமும்- குறிப்பாகப் பழங்கதைகளும், வீர காவியங்களும், புராணங்களும்- சாங்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டுள்ளவையே எனக் கார்பே கூறுகிறார்-(8). சட்டோபாத்யாயா அவர்களின் கருத்துப்படி சாங்கியம் தொன்மையானதாகவும், மிகவும் புகழ் பெற்றதாகவும் இருந்தது; தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் இருந்தது; முக்கியமாக ஆரியம் சாராத சிந்தனைத் தொகுப்பைக் கொண்டதாக அது இருந்தது. ஆரியம் சாராத இந்தியச்சிந்தனை என்பது மூலச்சிறப்புடைய தமிழ் சிந்தனையே ஆகும்.

சிறப்பியம் - வைசேடிகம்:

               எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் போலவே சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்திலும் முரண்பாடு உண்டு. இன்மையை (NEGATION) ஒரு பொருளாகக் கருதி பொருண்மை ஏழு என்பது தமிழியம்.

    “பொருள்குணம் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

    இன்மையுடன்பொருள் ஏழென மொழிப”     -என்கிறது 20 குறட்பாக்களைக் கொண்ட ‘அகத்தியத் தருக்க நூற்பா’ என்கிற தமிழ்த் தத்துவக் குறுநூல். வட மரபில் இன்மை நீங்கலாகப் பொருள்கள் ஆறே என்பர். வடமரபைப் பின்பற்றிய மணிமேகலையும் நீலகேசியும் பொருள்களை ஆறாகவே வகைப் படுத்துகின்றன.

        இதற்கான அடிப்படைக்காரணம் தமிழ் மரபு மூலவடிவத்திற்கும், அறிவியல் நோக்கிற்கும் சான்றாக இருப்பதுதான் ஆகும். அதே சமயம் வடமரபோ தமிழிலிருந்து கடன்பெற்றும், தமிழ் மரபின் அறிவியல் நோக்கை மறுக்கின்ற அல்லது திரிக்கின்ற வகையிலும் உள்ளது. இந்த எடுத்துக் காட்டுகள் தமிழர் மெய்யியல்கள் எவ்வாறு அறிவியலோடு தொடர்பு கொண்டுள்ளன என்பதுடன் மூலவடிவங்களாகவும் திகழ்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றில் உள்ள வடஇந்திய-தமிழ் மரபிற்கிடையுள்ள முரண்பாடுகள் ஆகும்-(9).

ஐந்திரம்:

         தொல்காப்பியப் பாயிரத்தில் தொல்காப்பியரை, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனார் போற்றுகிறார்; ‘அவதான சாதகத்தில்’ புத்தனின் முதன்மைச்சீடன் சாரிபுத்தன் தென்னாட்டில் ஐந்திரம் கற்றான் எனக் கூறப்பட்டுள்ளது; அநுமன் ஐந்திரக் கல்வியில் தேர்ந்தவன் எனக் கம்பர் சுட்டிக் காட்டுகிறார். ‘ஆன்வீக்சி’ என்பதைச் சாணக்கியர் அவர்கள் எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளின் பொதுப்பெயராகவே கருதுகிறார். ஆன்வீக்சியை வேதங்களைவிட மேலான கல்வி முறையாகக் குறிக்கும் சாணக்கியரைப் போலவே கம்பரும் ஐந்திரத்தை வேதங்களைவிட மேலானதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

          எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. அதன் காரணமாகவே அவை ஒரே பொதுப்பெயரால் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் எனப் போற்றப்படுவதாலும், ஆன்வீக்சிக்குச் சொல்லப்படும் அனைத்து வகையான விளக்கங்களும் (எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும்), தருக்கவியல் கூறுகள்-தந்திர உத்தி முதலான அனைத்துச் செய்திகளும் தொல்காப்பியத்தில் மட்டுமே முழுமையாக இடம் பெற்றிருப்பதாலும் ஐந்திரம் என்பதன் நேரடி மொழிபெயர்ப்புதான் ஆன்வீக்சி என்பது தெளிவாகிறது-(10).

          வேதங்களைவிட மேலான கல்வி முறையாக ஆன்வீக்சியை சாணக்கியரும், அதுபோன்றே வேதக் கல்வியைவிட மேலானதாக ஐந்திரத்தைக் கம்பரும் சுட்டிக்காட்டியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலானதாக வேதங்களைக் கருதும் நிலையில் சாணக்கியனும், கம்பனும்  வேதங்களைவிட மேலானதாக ஒன்றைச் சொல்லியுள்ளனர். ஆதலால் அவர்கள் இருவரும் குறிப்பிட்டது வெவ்வேறானதல்ல ஒன்றேதான் என முடிவுகட்டலாம். அதன் அடிப்படையிலும் தமிழியத்தின் ஐந்திரம் என்பதன் வடமொழி வடிவம்தான் ஆன்வீக்சி என உறுதி செய்யலாம்.

ஓகம்-யோகம்:

              சாரக சம்கிதை யோகம் எனக்குறிப்பது ஐந்திரம் அல்லது  ஆன்வீக்சியில் உள்ள சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளில் இருக்கும் யோகம் ஆகும். அதனை இன்றைய யோகம் பற்றிய கருத்தில் எடுத்துக்கொள்ளமுடியாது. பண்டைய யோகம் என்பது உடற்பயிற்சி, தவநிலையில் நின்று மூச்சுப்பயிற்சி மேற்கொண்டு மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகிய இன்றைய கருத்திலான பயிற்சி முறை அல்ல. பண்டைய யோகம் என்பது ஒரு மெய்யியல் பள்ளி எனவும், வைசேடிகம் எனப்படும் சிறப்பியலும், நியாயவியல் எனப்படும் அளவையியலும் பிரிந்து தனித்தனி மெய்யியல் கிளைகளாக ஆவதற்கு முன் இரண்டும் ஒன்றாக இருந்த நிலையில் வழங்கப்பட்ட பெயரே யோகம் எனவும் கூறுகிறார் சட்டோபாத்யாயா அவர்கள். ஆகவே ஐந்திரம் அல்லது ஆன்வீக்சியில் குறிப்பிடப்படும் யோகம் என்பது சிறப்பியலும், அளவையியலும் இணந்த ஒரு மெய்யியல் பள்ளியாகும்-(11).  ஆகவே ஐந்திரம் என்பது எண்ணியம், யோகம், சிறப்பியம், அளவையியல், உலகாயதம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

ஐந்திரம் - தொல்காப்பியம்:

              பகுத்தறிவையும், காரணகாரியக் கோட்பாட்டையும், தருக்கவியலையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிவுப்பள்ளியாகவே ஐந்திரம் திகழ்ந்துள்ளது. இவ்வறிவு மரபின் சுவடுகள் தொlல்காப்பியத்திலும், வடமொழியில் மருத்துவத்துறை சார்ந்த சாரக சம்கிதையிலும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நூல்களுக்கும் இடையே இந்த அடிப்படையில் காணப்படும் ஒற்றுமை மிக முக்கியமானதாகும். சாரக சம்கிதை, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு, கி.பி. முதல் நூற்றாண்டில் சமற்கிருத நூலாக வடிவம் பெற்றுள்ளது. இதன் மூலநூலின் மொழி தெரியவில்லை.

      இந்திய மெய்யியல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்றும் பொதுவான அளவை முறைகளைக்கொண்டிருந்தன. அம்மூன்றையும் சேர்த்து ‘அறிவு ஆராய்ச்சியியல்’ எனும் பொருளில் ஆன்வீக்சி என வடமொழியில் வழங்கினர். தமிழ் ஐந்திரத்தின் வடமொழி வடிவம்தான் ஆன்வீக்சி ஆகும். சாரக சம்கிதை எண்ணியத்தின் பெயரைச்சுட்டியும், சுட்டாமலும் எண்ணியக் கோட்பாட்டை விரிவாகக் கூறிச்செல்கிறது.

.          தொல்காப்பியமோ ஓரிடத்தில்கூட  எண்ணியத்தையோ, அல்லது யோக-உலகாயதத்தையோ பெயர்சொல்லிச் சுட்டவில்லை. ஆனால் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி அறிஞர்கள், குறிப்பாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்கள் மூலச்சாங்கியத்திற்கும், தொடக்க காலச்சிறப்பியத்திற்கும், யோக, உலகாயத மெய்யியல்களுக்கும் சேர்ந்தவை எனக் கருதுகிற

படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION)

அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு(THEORY OF  UNIVERSE)

அளவை இயல் கோபாடு(THEORY OF REASONING & LOGIC)

காரண – காரியக் கோட்பாடு(THEORY OF CAUSE & EFFECT)

இன்பவியல் கோட்பாடு(THEORY OF HEDONISM)

             ஆகிய அறிவியல் துறைகளைத் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறது-(12). இவைகளின் காரணமாகத்தான் பனம்பாரனார் தொல்காப்பியரை, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனக் கூறினார் எனலாம். எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்றையும் கொண்ட ஐந்திரம் என்கிற தமிழ் ஆராய்ச்சியியல் கல்வி முறையைக் கற்றுத் தேர்ந்தவர் தொல்காப்பியர் என்பதால்தான் அவர் ஐந்திரம் நிறைந்தவராகக் கருதப்பட்டார்.

தமிழ் அகத்திணை மரபு:

             தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல்கள் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,

    எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

    தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்    -தொல்.பொருளதிகாரம்-219.

         என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்

   தாம்வீழ்வார் மென்றோள்  துயிலின் இனிதுகொல்

   தாமரைக் கண்ணா னுலகு     -காமத்துப்பால், 1103.

         எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(13). 

ஆசிவகத் தரவுகள்:

              வைதீக எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் உள்ளீடாக அமைந்த தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பல பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஐந்திரம் மரபைச் சார்ந்தனவாக உளளன. கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப்பின்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பான்மை ஐந்திர மரபின் வழிவந்த ஆசீவக நெறியைச் சார்ந்த புலவர்களால் பாடப்பட்டனவாக உள்ளன. சிலப்பதிகாரம் ஆசிவகத்தின் இயல்பு-தற்செயல்-ஊழ் ஆகிய மூன்று கோட்பாடுகளுக்கும் முறையே கோவலன்-மாதவி-கண்ணகி ஆகியோரைக் குறியீடாகக் கொண்டு அமைந்த ஆசிவகக் காப்பியம் ஆகும். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய ஆசிவகம் சமய வடிவம் பெற்றிருந்த போதிலும் அதன் உள்ளீடு அறிவியல் கோட்பாடுகளையும், வைதீக எதிர்ப்பையும் கொண்டிருந்தது.

               பௌத்தத்தைத் தழுவிய மௌரிய அரசன் அசோகன் ஆசிவகத் துறவிகளுக்குக் கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தான். அசோகனின் பெயரன் ஆசிவகச் சமயத்தைத் தழுவினான். தமிழக மூவேந்தர்களில் பலர் ஆசிவகச் சமயத்தைத் தழுவியவர்களாகவும், புரந்தோர்களாகவும் திகழ்ந்துள்ளனர். ஏ.எல். பாசம் என்கிற ஆசுத்துரேலியர் பாலி-பாகத-சமற்கிருத-மாகதி ஆகிய நூல்களிலுள்ள பௌத்த சைன இலக்கியங்களில் இருந்து பரபக்கமாக-மாற்றார் கூற்றாகக் காணப்படும் ஆசிவகம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். அவர்தம் ஆய்வில் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னர் குறிப்பாக மௌரிய ஆட்சிக்குப்பின்னர் வட நாட்டில் ஆசிவகம் தனது செல்வாக்கை இழந்து விட்டது.  ஆயினும் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்கோடு இருந்துள்ளது எனவும் தென்னக ஆசிவகத்தில் பக்குடுக்கை நன் கணியாரின் பங்கு மகத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

      ஆசிவகக்கோட்பாடு குறித்துச் சிம்மர் அவர்கள்  “ஆரியருக்கு முற்பட்ட ஒரு சிந்தனை மரபின் இயற்கை அறிவியல்-உளவியல் ஆகியவற்றின் தொடர்ச்சியில் கிளைத்ததாகும். நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு மதிப்பிடுகின்ற போது, இயற்கையை - இயற்கை உலகைப்பற்றி - மிக உன்னதமாகவும், மிகமிக உயர்ந்த வகையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தொகுப்பாக இக்கோட்பாடு அமைந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது-(14). ஆசிவகத்தில் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை அவர்கள் கூறுவதை முன்பே குறிப்பிட்டோம்.

கபிலர்(சாங்கியம்):

       இந்நூலின் முதல் தொகுதியில் கபிலர் தமிழர் தான் என்பதற்கு கார்பே அவர்களின் கூற்றுக்கள் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பௌதாயண தரும சூத்திரம் எனும் சமற்கிருத நூல் இவரை அசுரர் என்கிறது. 24 எண்ணிக்கைகளைக்கொண்ட ஓர் அறிவு மரபை இவர் உருவாக்கினார். தமிழர் அதனை எண்ணியம் என்றனர். எண்களை அடிப்படையாகக் கொண்ட இதன் வடமொழி வடிவம்தான் சாங்கியம் ஆகும். 166ஆம் புறநானூற்றுப்பாடல் இவரை முதுமுதல்வன் என்கிறது(வரி: 1-9).

        ‘நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை     முதுமுதல்வன் வாய்போகாது

        ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்,         ஆறுணர்ந்த ஒருமுதுநூல்........

 மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக”

      இப்பாடலில் உள்ள “ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்” என்பதற்கு இந்நூல் 24 கூறுகளை விளக்கும் ஒரு மிகத் தொன்மையான நூல் எனப் பொருளாகும்.  இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘மூவேழ்துறை’ என்பதற்கு 21 கூறுபட்ட தருக்க நூலெனப் பழைய உரை குறிக்கிறது. எண்ணிய மெய்யியல் முழுமையான ஒரு அறிவியல் கோட்பாடு என்பதால், அம்மெய்யியலில் தருக்கவியல்கோட்பாடுகளும் இணைந்து  நின்றன. காட்சி, உய்த்தறிவு, மேற்கோள் ஆகிய மூன்றும் இதன் மெய்ப்பொருளை நிலைநாட்டி உறுதிசெய்யும் அளவையியல் கூறுகளாக இருந்தன. தமிழ்நாட்டுக் கொற்றவைத் திருவிழாக்களில் ‘சாங்கியம் காட்டுதல்’ என்பது இன்றும் ஒரு கடவுள் மறுப்புச்சடங்காகவே நடந்து வருகிறது. நற்றிணைப் புலவரான தொல்கபிலர்தான் எண்ணியக் கோட்பாட்டின் மூலவர் ஆவார்-(15).          திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது இரசிய நூலில், “கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட சாங்கியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக் கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி எனும் விசும்பு, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள், பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற கருத்தைச் சாங்கியச்சிந்தனை மரபு மொழிந்தது.

           வி.கிரபிவின் அவர்கள், “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும். ......நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்று கூறின”-(16) என்கிறார். சாங்கிய மூலவரான தொல்கபிலரின் வழி வந்தவர்கள்தான் எண்ணியத்தையும், அணுவியலையும் வளர்த்தெடுத்த பக்குடுக்கை நன்கணியாரும், கணாதரும் ஆவர். இவர்கள் தமிழ்ச்சிந்தனை மரபின் வழிவந்தவர்கள். ஆகவே இவை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனைகளாகும்.

      வி. கிரபிவின், “இந்தியாவின் மிகப் புராதனமான பொருள்முதல்வாதத் தத்துவஞானப் போக்கு உலகாயதம் அல்லது சார்வாகர்களின் சிந்தனை மரபு ஆகும்....... சார்வாகர்களது பொருள்முதல்வாதம் அவர்களது நாத்திக வாதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது...... சார்வாகர்கள் துன்பந்துயரங்களை முழுமையாக அகற்றமுடியாது, மகிச்சிகரமான வாழ்க்கையை முடிந்தவரை அதிகரித்துத் துன்பதுயரங்களை அதிகபட்சமாகக் குறைத்துவிடலாம் எனக்கருதினர். அவர்களது அறநெறிக்கோட்பாடு புலனின்ப மகிழ்ச்சியைத்தேடுவதைத் தூண்டவில்லை; அனைவருக்கும் இன்பம் நிறைந்த வாழ்க்கையே விவேகமானதென்று வலியுறுத்தியது” என்கிறார்-(17). இக்கருத்துக்கள் பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடலில் உள்ளவைதான் ஆகும். இப்பாடல் சாங்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் சார்வாகர்கள் சாங்கியக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் தங்களது தத்துவார்த்தக் கருத்தை வடிவமைத்துக் கொண்டார்கள் எனலாம்.

         புறம் 166ஆம் பாடலைப்பாடியவர் ஆவூர் மூலங்கிழார் ஆவார். இவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இவர் ஒரு பார்ப்பனனைப் பாடியுள்ளார். அந்தப்பார்ப்பனன் க. நெடுஞ்செழியன் அவர்கள் தரும் தரவுகளின்படி சாங்கியப் பற்றாளனாக இருந்துள்ளான். எண்ணியத்தின் 24 கூறுகளையும், தருக்கவியலின் 21 துறைகளையும் உடைய ஒரு முதுநூல் எனச் சொல்லப்படும்  தொல்கபிலனின் நூலைக் கற்றுத்தேர்ந்த புகழ்மிக்க அறிவு மரபின் வழிவந்தவன் இந்தப் பார்ப்பான் என்கிறார் புலவர். இந்த விண்ணந்தாயன் மட்டுமல்ல இவனது மரபைச் சார்ந்த முன்னோர்களும் சாங்கியப் பற்றாளர்களாகவே இருந்துள்ளனர் என்கிறார் புலவர்.

         பார்ப்பனனைப்  பற்றி இந்த ஒரே ஒரு தனிப்பாடல் மட்டுமே புறநானூற்றில் உள்ளது. அந்தப் பார்ப்பனனும் அவனது முன்னோர்களும் வைதீக மரபுக்கு முற்றிலும் எதிரான பொருள்முதல்வாத அறிவியல் மரபான தமிழியச் சாங்கிய மரபைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஆதலால் சங்ககாலப் பார்ப்பனன் என்பவன் தமிழ் மரபைச் சேர்ந்தவன் என்றே கருத இயலும். இவனது பெயரான கௌணியன் விண்ணந்தாயன் என்பதில் உள்ள கௌணியன் என்பது உண்மையானது தானா? என ஆய்வது அவசியம். கணியன் என்பது கௌணியன் என திருத்தப் பட்டிருக்கலாம். அது உண்மையாயின் பல குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். நியாய சூத்திரத்தின் ஆசிரியர் கோதமர், கவுதமர், கௌதமர் எனப்பலவாறாகச் சொல்லப்படுகிறார். அதுபோன்றே இங்கு பார்ப்பனன் என்பதால் கணியன் என்பது கௌணியன் என்கிற பிராமணியக் கோத்திரப் பெயராக மாற்றப்பட்டிருக்கலாம்.   

                                                          - தொடரும்.

கணியன் பாலன், ஈரோடு

பார்வை:                                                  

1.க. நெடுஞ்செழியன்,சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், மனிதம் பதிப்பகம், 2.10.2009, பக்:8-12.

2.    “     “      பக்:17.

3.     “     “     பக்:22.                   

4.   “      “      பக்:7.                       

5.    “     “      பக்: 24, 25, 29.

6. Devi Prasad Chattobadhyaya, Lokayata, p.51.

7. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, இந்திய நாத்திகம், தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2013, பக்: 79, 87.

8.     “      “      பக்: 78.                                                     

9.     “      “      பக்: 26-29.

10.   “       “      பக்: 31-32.

11.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:18.

12.    “     “       பக்: 33, 34.                                                             

13.         “     “       பக்: 34-36.

14.க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், மனிதம் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 1.

15.க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும், சமய வடிவங்களும், பதிப்பாசிரியர்-இரா. சக்குபாய், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்:67-69.

 16.வி. கிரபிவின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, பக்:45,46.

 17.             “                “              பக்: 44, 45.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 4

தமிழ் அறிவியல் மரபு:

  முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

 இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே-(1). என்கிறார் தொல்காப்பியர். முதற்பொருளை நிலம் அதாவது இடம், காலம் என வகைப்படுத்துவதோடு, முதற்பொருள் என்பது இடம்-காலம் ஆகிய இரண்டின் இயல்புகளே எனத் தம்முன்னோர் வகைப்படுத்தியிருந்ததையும் தொல்காப்பியர் தெளிவு படுத்துகிறார். அடுத்து,

  ஒரு நெறி பட்டாங் கோரியன் முடியுங்

  கரும நிகழ்ச்சி இடமென மொழிப -(2) என்கிறார் தொல்காப்பியர்.

அதாவது, கரும நிகழ்ச்சி என்பது காமப்புணர்ச்சி என்னுஞ்செயப்படுபொருள் நிகழ்ச்சியாகும். அது இடம் எனப்பட்டது என விளக்குவார் பேராசிரியர். ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார்.

இடம்-காலம்:

   இடம்-காலம் பற்றி மெய்யியல் அகராதி(DICTIONARY OF PHILOSOPHIES), காலமும் இடமும் பொருள் நிலைப்பின் அடிப்படை வடிவங்களாகும்..... கருத்து முதலாளர்கள் காலம்-இடம் இரண்டுமே பொருளோடு தொடர்புடையன என்பதை மறுக்கிறார்கள்...... பொருள் முதலாளர்கள் காலமும் இடமும் பொருளிலிருந்து பிரித்தறிய முடியாதவை..... எனக் கருதுகிறார்கள் என்கிறது. அடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வதுதான் பெருவியப்பைத்தருகிறது.

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்,பொருளியல்,

  என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும்-(3). இதற்குச் சார்பியல் கோட்பாடும், பொது-சிறப்பு சார்பியல் கோட்பாடுகளும் வெளி-காலம் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ன சொல்கின்றன எனப்பார்ப்போம்.

ஸ்டீவன் ஆக்கிங்சு(STEPHEN HANKINGS):

   ஐன்ஸ்டைனுக்குப்பின் நவீன உலகின் மிகப் பெரிய அறிவாளியாகக் கருதப்படுபவர்தான் ஸ்டீவன் ஆக்கிங்சு ஆவார். இவரது கருத்தின் சுருக்கத்தைக் கேட்போம்.

  “சார்பியல் கோட்பாடும், சிறப்புச் சார்பியல்(SPECIAL RELATIVITY) கோட்பாடும் வெளியும் காலமும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு நிலையான அரங்கம் என்றும், அந்த அரங்கம் அதில் நடப்பனவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்றும் கருதியது. ஆனால் பொதுச்சார்பியல் கோட்பாடு(GENERAL RELATIVITY), ‘வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கின்றன. அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றி எப்படி வெளியையும் காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச முடியாதோ அதைப்போன்றே பொதுச் சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது’ எனக் கூறுகிறது” இதுவே ஸ்டீவன் ஆக்கிங்சு அவர்கள் கூறும் கருத்தாகும்.

  “அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றி எப்படி வெளியையும் காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச முடியாதோ அதைப்போன்றே பொதுச் சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது” அஃதாவது, அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேச காலமும் வெளியும் வேண்டும். அண்டத்தின் எல்லைகளுக்கு வெளியே நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் அங்கு காலமும் வெளியும் பற்றிப்பேசுவது பொருளற்றதாகி விடுகிறது. ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இருக்கமுடியாது. “அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும்-காலமும் பற்றிப் பேசுவதும் பொருளற்றதாகி விடுகிறது” எனும் கருத்துதான் தொல்காப்பியரின் ‘அவையில் காலம் இன்மையான’ எனும் ‘நிகழ்ச்சி இல்லை எனில் காலமும் இல்லை’ என்கிற நூற்பாவின் கருத்தை விளக்குகிறது(4).

  அண்மைக்கால அறிவியல் அறிஞர்களின் வெளி-காலம், அண்டவியல் பற்றிய கருத்துக்களை தொல்காப்பியார் சொல்லி உள்ளார். மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு தான் இதற்கான காரணம் ஆகும். தமிழிய சிந்தனை மரபான ஐந்திரம் என்பது எண்ணியம், ஓகம், பூதவாதம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு பொதுப்பெயராகும். அவை மூன்றும் இணைந்து பொருள்முதல்வாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஐந்திரம் என்ற பெயரில் ஒன்றாக இயங்கின. இங்கு ஓகம் என்பது சிறப்பியலையும், அளவையியலையும் கொண்டதாகும். ஐம்பெரும் பூதங்களின் இயல்பை, இயற்கையை இந்த ஐந்திரம் கொண்டு தமிழர் ஆய்ந்தனர். அவ்வாய்வின் ஒரு கூறுதான் இடம்- காலம் பற்றிய ஆய்வாகும். இவ்வாய்வு 1000 ஆண்டுகால நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். இடம்-காலம் பற்றிய அவ்வாய்வு மரபில் கிடைத்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு தொல்காப்பியரின் ஆய்வும் அதன் விளைவாகக் கிடைத்த முடிவும் தான் தொல்காப்பியரின் இக்கருத்து எனலாம். மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு, தனது அடிப்படையாகத் தூய, கலப்பற்ற பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டிருந்ததே தொல்காப்பியரின் இதுபோன்ற ஆய்வுமுடிவுக்குக் காரணமாகும்..

தொல்காப்பியமும், சரக சம்கிதையும்:

   சரக சம்கிதை முதலில் எழுத்துவடிவம் பெறாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சரக சம்கிதையில் சொல்லப்படும் தருக்கவியல்-எண்ணியம் தொடர்பான பல செய்திகள் எழுதப்பட்ட நூலுக்குரிய இலக்கணங்களாக உள்ளன. தொல்காப்பியர் விளக்கும் எழுதப்பட்ட நூல்களுக்கான இலக்கணம், முதல் நூலின் வரையரை, பத்துவகை குற்றங்கள், 32 தந்திர உத்திகள் முதலியன தொல்கப்பியத்தைப்போலவே சரக சம்கிதையிலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.(5). இவை இவ்விரு நூல்களுக்கும் இடையே உள்ள அடிப்படைக்கோட்பாட்டு ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகின்றன.

அறம், பொருள், இன்பம்:

    தொல்காப்பியம், சாரக சம்கிதை ஆகிய இரு நூல்களையும் ஒப்பிட்டு க. நெடுஞ்செழியன் அவர்கள் ‘தமிழர் இயங்கியல்’ என்கிற நூலை எழுதியுள்ளார். சதீசு சந்திரா என்பவர் சாரக சம்கிதை நூலை விரிவாக ஆய்வு செய்தவர் ஆவார். சாரக சம்கிதை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றி கி.பி. 1ஆம் நூற்றாண்டில் உருவான மருத்துவ இலக்கண நூலாகும். தமிழ் மரபு, மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று கோட்பாடுகளை வகுத்தது. பொருள்வயிற் பிரிவும், அறத்தோடு நிற்றலும் தமிழ் மரபிற்கே உரியதாகும். பொருளையும், இன்பத்தையும் அறத்தின் அடிப்படையில்தான் ஈட்டவும், துய்க்கவும் வேண்டும். இவை தொல்காப்பியர் தரும் வாழ்வின் இலக்கணம் ஆகும். வைதீகம் இம்மூன்றோடு வீட்டையும் சேர்த்துக்கொண்டது. சாரக சம்கிதை வடமொழியில் அமைந்த மருத்துவம் பற்றிய முழுமையான இலக்கண நூல். சாரக சம்கிதை அதன் முதல் அத்தியாயத்தில் நல்ல உடல்நல வாழ்விற்கு இந்த நான்கு உறுதிப்பொருள்களும் அடிப்படை எனப் பேசுகிறது.

   ஆனால் இடையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றைத்தவிர மனதிற்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தரக்கூடிய வேறு ஒன்றும் கிடையாது எனவும் இம்மூன்றும்தான் மனிதர்களின் மனஇருளைப்போக்கும் மாமருந்து எனவும் சொல்கிறது. அறம், பொருள், இன்பம் பற்றிய இச்செய்திகள் அதன் மூலநூலில் இடம் பெற்றுள்ளன. சாரக சம்கிதை இவ்வாறு முரண்பட்டு பேசுவதற்கு மூலநூலில் உள்ளதைத் திரித்துக் கூறுவதே காரணமாகும்.. பகுத்தறிவையும், மனித நேயத்தையும் வளர்த்து, வேதவழிப்பட்ட வருணதருமங்களைக்கண்டித்து அறம், பொருள், இன்பம் எனும் வாழ்வியல் உண்மைகளைப் பாதுகாத்து மக்களை நெறிப்படுத்திய சாங்கியம், யோகம், உலகாய்தம் போன்ற கோட்பாடுகள் வேதங்களுக்கு முற்பட்டவை எனவும் ஆரியர் அல்லாதவருக்குரியவை எனவும் கார்பே அவர்கள் ஆய்ந்துரைத்துள்ளார்-(6). ஆகவே அறம், பொருள், இன்பம் என்கிற மூன்றும் தமிழ் மரபு எனவும் வேத, உபநிடத வழியில் வீடு வடமரபில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம்.

தொழில் முதல்நிலை:

    வடமொழியில் இது காரியாபினிவிருத்தி எனப்படும். பக்குடுக்கை நன்கணியாரின் தத்துவ ஞானத்திலிருந்து தோன்றியதுதான் கணாதரின் வைசேடிக தரிசனம் என தருமானந்த கோசாம்பி கூறுகிறார். காரியாபினிவிருத்தி தொடக்ககால வைசேடிகத்திற்கு அஃதாவது பக்குடுக்கை நன்கணியாரால் புரக்கப்பட்ட சாங்கியத்திற்கு-ஐந்திர மரபிற்கு உரியது. அதனை கோதமனார் எனப்படும் கௌதமரின் யோக சூத்திரம் சாங்கியக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக பக்குடுக்கை நன்கணியாரின் புறநானூற்றுப்பாடலை மேற்கோள் காட்டுவது நம் கருத்தை அரண் செய்கிறது. ஒரு செயலைச் செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு என்பதுதான் காரியாபினிவிருத்தி என்பதன் பொருளாகும். தொழில் முதல்நிலை எனத் தொல்காப்பியர் அதனைக் குறிப்பிடுவார். செயல்களின் முதல்நிலைகளை தொல்காப்பியர் பண்டைய மரபுப்படி எட்டாக வகைப்படுத்த சாரக சம்கிதை அந்த எட்டோடு இரண்டைச் சேர்த்து 10 எனக் குறிப்பிடுகிறது. ஆனால் அந்த இரண்டும் எட்டினுள் அடங்கும். ஆதலால் தொல்காப்பியர் கூறும் தொழில் முதல்நிலைதான் சாரக சம்கிதை குறிப்பிடும் காரியாபினிவிருத்தி ஆகும்-(7).

ஐம்பூதம்-புருடன்:

  தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சாரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. அதன்பின் சாரக சம்கிதை சாங்கியக் கோட்பாட்டில் இடம்பெற்ற புருடன் குறித்துப் பேசுகிறது. தொல்காப்பியம், திருக்குறள் இரண்டும் சாங்கிய, யோக, உலகாய்த மெய்யியலையும், அவற்றிற்குரிய அளவை இயலையும் அடியொற்றி அமைந்தவை. ஆயினும் அவற்றில் சாங்கியம் ஆராயும் புருடன் பற்றிய செய்தி இல்லை. சாங்கியம் குறிப்பிடும் ஐம்பூதக்கோட்பாடுகளும், உயிரின் படிமுறை வளர்ச்சியும், காரணகாரிய விளக்கமும் கடவுள் மறுப்பும் தொல்காப்பியத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளன. திருக்குறளில் அதன் அளவை இயலே அடிப்படையாய் அமைந்துள்ளது. ஆனால் அவைகளில் புருடன் இல்லை. அக்கினிவேசர் என்கிற மாணவர் புனர்வசு ஆத்திரேயரிடம் சாங்கியத்தில் உள்ள புருடன் குறித்து 23 கேள்விகளைக்கேட்டதாக சாரக சம்கிதை கூறுகிறது. அந்தக் கேள்விகள் அனைத்தும் புருடன் எனும் கருத்தை மறுத்துரைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. மேலும் கார்பே, சிம்மர், சாத்திரி முதலான அறிஞர்கள் மூலச்சாங்கியம் வேதமறுப்பானதே என்பதைத் தம் வாதங்களினால் நிலை நாட்டியுள்ளனர். சட்டோபாத்யாயா அவர்கள் புருடன் என்பது இடைச்செருகலாய் வந்ததே என்பார்.

 அணுக்கோட்பாட்டையும் உயிர்களின் படிமுறைக்கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சாங்கியத்தில் புருடன்-ஆன்மா இடம்பெறவில்லை என்பதும், மூலச்சாங்கியமும் அதனோடு இணைந்த யோகமும் வேதத்திற்கு மாறானவை என்பதுடன் எதிரானவை என்பதும் தெளிவாகின்றது. தொல்காப்பியம் அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பஞ்சபூதங்களைப் பற்றியும் உயிர்களின் படிமுறைகளைப் பற்றியும் விளக்குவதாலும் அவ்விளக்கத்தில் ‘புருடன் – ஆன்மா’ பற்றிய சுவடுகளே இல்லை என்பதாலும், உயிரின் இலக்கணம், ‘உணரும் தன்மை’யதே என்று கூறுவதாலும் சாங்கியத்தின் மூலவடிவங்களை அஃதாவது மூலச்சாங்கியத்தின் வடிவங்களைத் தமிழ் நூல்களில் மட்டுமே காணமுடியும் என்பதே உண்மையாகும்.

    ஆசீவகக் கோட்பாட்டிற்குரிய மூலச்சுவடுகள் எவ்வாறு தமிழ் இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றனவோ அதைப் போலவே சாங்கியத்தின் மூலச் சுவடுகளும் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே சாங்கியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன என்பதும், அவ்விலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்களே என்பதும் தெளிவு. தொல்காப்பியர் கூறும் அகத்திணை மரபுகள் அனைத்தும் அம்மெய்யியல்களின் அளவை இயலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் என்பதும் உறுதி. இதனைத் தமிழர் அளவை இயலும் அகத்திணை மரபுகளும் எனும் தனி ஆய்வாகவே காணலாம்-(8). மேலே காட்டிய பல்வேறு காரணங்களாலும் மூலச் சாங்கியத்தில் ‘புருடன்’ பற்றிய கருத்திற்கு இடம் இல்லை என்பது தெளிவாகின்றது.

தேர்வு:

   சாரக சம்கிதை தேர்வுக்கான உறுப்புகளாக மேற்கோள், காட்டு(பிரத்தியட்சம்), உய்த்தறிவு(அனுமானம்), உத்தி ஆகிய நான்கைச் சொல்லும். சாங்கியம் காட்சி, உய்த்தறிவு, மேற்கோள் ஆகிய மூன்றை மட்டும் குறிப்பிடும். தொல்காப்பியம் சாங்கியம் குறிப்பிடுவதை விளக்குவதோடு அதனை மேலும் செலுமைப்படுத்தும்வகையில் புலனறிவையும், நூல்களையும் சான்றுகளாகக் கொண்டு புலன்வழிவரும் காட்சி அளவையை, ஐயம், மருட்சி, தெளிதல் என்கிற அடிப்படையில் விளக்கி இதுதான் முடிந்த முடிபென துணிய வேண்டும் என்கிறது. தேர்வு பற்றிய விளக்கத்தில் சாரக சம்கிதையைவிட தொல்காப்பியம் தருக்கவியலைத் தெளிவாக நிலை நாட்டுகிறது-(9).

சரக சம்கிதை-தமிழ் மரபு:

   சரக சம்கிதையின் முன்னுரையில் அந்நூலுக்கு ஒரு புராண மரபும், தெய்வீகத்தன்மையும் வழங்கப்பட்டு அது ஒரு வைதீக நூலாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படையில் அது பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அறிவியல் நூல் ஆகும். இந்நூலை எழுதிய சரகர் பழைய நூலில் உள்ள சிலவற்றை நீக்கி, சிலவற்றைப் புகுத்தி ஒரு புதுப்பித்த நூலை உருவாக்கினார். அது அவரது பெயரால் சாரக சம்கிதை என அழைக்கப்படுகிறது என அந்நூலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால் முழுமையான அறிவியலாகவும், உடலியலின் அடிப்படையில் உருவானதும், தமிழ் மரபுக்கே உரியதும் ஆகிய தமிழ் சித்த மருத்துவமே சரகரால் சாரக சம்கிதையாக உருமாறியுள்ளது எனலாம். தொல்காப்பியத்திற்கும், சரக சம்கிதைக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்பது அவை இரண்டும் ஒரே மரபான தமிழ் மரபை அடியொற்றி இருப்பதால் ஏற்பட்ட ஒற்றுமையே ஆகும்-(10).

பொருள்முதல்வாத மெய்யியல்-தமிழ்ச் சிந்தனை மரபு சார்ந்தது:

தந்திர உத்திகள்:

   தந்திர உத்தியின் துணைகொண்டு ஒருவாதி தன் குறிக்கோளை நிலைநாட்டி அவையில் வெற்றிபெறவும் எதிரிகளை புறங்காணவும் முடியும் எனவும் இந்த தந்திர உத்திகள், அளவை நூலாகிய நியாயதத்துவத்திற்கே பெரிதும் பயன்படும் எனவும் சதீசு சந்திரா கூறுகிறார். சாணக்கியரும், சாரக சம்கிதை, சிசுரத சம்கிதை ஆகிய இரு மருத்துவ நூல்களின் ஆசிரியர்களும் இந்த தந்திர உத்திகளை எடுத்தாண்டுள்ளனர். ஆனால் அந்த மூன்று நூலாசிரியர்களும் இந்த தந்திர உத்திகளை தொகுத்திருக்க முடியாது என்கிறார் சதீசு சந்திரா அவர்கள். தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளைக்கொண்ட தொல்காப்பியம் இந்த தந்திர உத்திகளை தங்களது முன்னோர்களின் மரபுப்படி 32 ஆக வகைப்படுத்துகிறது. சாரக சம்கிதை இந்தத் தந்திர உத்திகளை 36 ஆக வகைப்படுத்துகிறது. எனினும் தொல்காப்பியத்தில் காணப்படும் செறிவும், திட்பமும் சாரக சம்கிதையில் காணப்படவில்லை. சாணக்கியரும், சிசுரத சம்கிதையும் தொல்காப்பியம் போலவே 32 ஆகவே வகைப்படுத்துகின்றனர்.

   தந்திரம் என்பது தமிழ் சொல். இச்சொல்லிற்கு நூல் என்பது பொருள். தொல்காப்பியம் நூல்களுக்கு உரிய உத்தியாக இத்தந்திர உத்திகளை வகைப்படுத்துகிறது. பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில், சொன்னூலைக் கற்றபின்பே அளவை நூலைக் கற்க வேண்டும் எனவும் அறத்தை அறியவும், அறிந்தவற்றை நிலை நிறுத்தவும் அடிப்படையாக இருப்பது அளவை இயல் அறிவுதான் என வள்ளுவர் வலியுறுத்துகிறார் எனவும் ஆதலால் சொன்னூல் என்பது தந்திர உத்திதான் எனவும் கூறுகிறார். தந்திர உத்திகளோடு உள்ள நூல்களை தொல்காப்பியர் பாராட்டுவது மேற்கூறிய வள்ளுவர், பரிமேலழகர் கருத்தை அரண் செய்கிறது. மேலே கண்ட தரவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, தந்திர உத்தி தமிழ் மரபுக்குரியதுதான் என்பதை உறுதி செய்கின்றன-(11). தந்திர உத்திகள் மிக நீண்ட காலமாகத் தமிழ் மரபில் இருப்பதும், அதனைச் சாரக சம்கிதையில் உள்ளதைவிடச் செறிவாகவும், திட்பமாகவும் தொல்காப்பியர் சொல்லியிருப்பதும், சதீசு சந்திரா அவர்கள், வடமொழியில் தந்திர உத்திகளைப் பேசும் மிகப் பழைய மூன்று நூல்களும் அதனைத் தொகுத்திருக்க முடியாது எனச்சொல்வதும், தந்திரம் என்பது தமிழ்ச்சொல்லாக, நூல் எனப்பொருள்தருவதாக இருப்பதும், பண்டைய தமிழ்ச்சமூகச் சூழலும், இன்னபிற காரணங்களும் தந்திர உத்தி என்பது தமிழ் மரபுக்குரியதுதான் என்பதை உறுதி செய்கின்றன.

இந்திய மரபுக்குப் புதியது:  

   “கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் பண்டைய காலத்தைச் சேர்ந்தவை அல்ல எனவும் இவைகளுக்கு அத்தகைய மரபு இல்லை எனவும் இவ்விரு தத்துவங்களில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள் இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் இவைகளின் அணுக்கொள்கை இவைகளுக்கு முந்தைய தத்துவ ஆசிரியர்களால் எடுத்துரைத்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் இந்த அணுக்கொள்கை போன்றே பொதுமைக்கொள்கை, முக்கூற்று முடிபுக்கொள்கை, உலகில் உள்ள எல்லாவற்றையும் தெளிவான வகைப் பிரிவில் பகுத்தல் போன்றவைகளும் புதியவை” எனவும் சட்டோபாத்யாயா கூறுகிறார். கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் அவற்றின் கூறுகளும் இந்திய மரபுக்குப் புதிதாக இருப்பதாக சட்டோபாத்யாயா கருதுகிறார்.

   சாங்கியமும் இந்திய மரபுக்குப் புதியதுதான். ஆனால் அது குறித்த மூலநூல் கிடைக்காததால், சாங்கியம் பற்றிய செய்திகள் பழைய இந்திய நூல்களில் பரபக்கமாகத்தான் கிடைப்பதால், ஈஸ்வர கிருஷ்ணருடைய சாங்கிய காரிகை இந்திய மரபுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டதால் சாங்கியம் இந்திய மரபுக்கு புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் கணாதரின் வைசேடிக சூத்திரமும், நியாய சூத்திரமும் ஓரளவு மூல நூலை ஒட்டி இருப்பதால் அவை இந்திய மரபுக்குப் புதிதாக இருக்கிறது. வட இந்திய மரபு என்பது அடிப்படையில் கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய மரபுக்குப் புதிதாக இருக்கும் கணாதரின் சிறப்பியமும், நியாயவாதத்தின் அளவையியலும் அவற்றின் கூறுகளும் கிரேக்கத் தத்துவ மரபில் வழக்கில் இருந்தவை எனவும் அதற்கான சமூகச்சூழல் அங்கு இருந்ததற்கான ஆய்வுகள் அங்கு நடந்துள்ளன எனவும் சட்டோபாத்யாயா கூறுகிறார். பண்டையத் தமிழ்ச் சமூகச் சூழல், கிரேக்கச் சமூகச்சூழல் போன்றதும் அதைவிட பலவிதங்களில் பொருள்முதல்வாதக் கருத்துகள் உயர் வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவானதாகவும் இருந்தது என்பதும் உண்மை.

தமிழ்ச் சமூகச் சூழல்:

   வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், சாங்கியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட சாங்கியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் அதற்கு முன்பே கி.மு. 1000 வாக்கிலேயே அல்லது கி.மு. 1000க்கு முன்பே 16 ஜனபதங்கள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1000க்கு முன்பே நடை பெற்றிருக்கவேண்டும். அப்பண்பாட்டுப் புரட்சி பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அக்கால கட்டத்தில்தான் “மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” ஒரு வடிவம் பெற்றது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.

  பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், சாங்கியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் சாங்கியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணியம் ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும். ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியத்தின் எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்தத் தற்காலத்திற்குரிய ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் ஆகும்.

பேரரசுக் கொள்கை-வைதீகச் சிந்தனை:

  கி.மு. 1000 முதல் கி.மு. 250 வரை பெரு நகரங்களை, சிறுசிறு நகரங்களை, அடிப்படையாகக் கொண்ட நகர்மைய அரசுகளும் வணிக நகர அரசுகளும் தமிழகத்தில் இருந்தன. அவைகள் மூவேந்தர்களின் குடும்ப உறுப்பினர்களாலும், கிளை அரசர்களாலும், சிறு குறு மன்னர்களாலும், வேளிர்களாலும் முழுமையான சுதந்திரத்தோடு ஆளப்பட்டு வந்தன. கி.மு. 250க்குப் பின்னர் பேரரசுக்கொள்கையால், வைதீகச் சிந்தனையின் செல்வாக்கால் சிறுகுறு அரசுகளை அழித்து அவைகளை மூவேந்தர் அரசுகள் தங்கள் பகுதியோடு சேர்த்துக்கொள்ளும் வழக்கம் துவங்கியது. வேந்தர்களின் நலன் சார்ந்த இந்த பேரரசுக்கொள்கையை வைதீகச்சிந்தனை ஆதரித்ததால் அதற்கு வேந்தர்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. இருந்தும் கி.மு. 50 வரை ஓரளவு நகர்மைய அரசுகளும் வணிகநகர அரசுகளும் இருந்தன. மூவேந்தர்களின் குடும்ப உறுப்பினர்களும், கிளை அரசர்களும் சிறுகுறு மன்னர்களும் வேளிர்களும் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

   ஆனால் கி.மு. 50க்குப்பின் அதாவது சங்கம் மறுவிய காலத்தில், இந்நிலை மாறியது. கிளை அரசர்களும் சிறுகுறு மன்னர்களும் இல்லாது போயினர், தனியான சுதந்திரமான நகர, நகர்மைய அரசுகளும் இல்லாது போயின. பேரரசுக் கொள்கை இவைகளை இல்லாது செய்து, வைதீகச் சிந்தனையை முழுமையாக ஆதரிக்கத்தொடங்கியது. அதன் காரணமாக தமிழகம் பலவீனமாகியது. பொருள்முதல்வாத மெய்யியலும் பலவீனமடைந்தது. தமிழ்ச் சமூகம் நாளடைவில் புரையோடிப்போன சமூக மாக மாறியது. இந்நிலையில் நடந்த களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தை வீழ்த்தியது. அது பொருள்முதல்வாத மெய்யியலின் அடித்தளத்தை அடியோடு அழித்து சமண, பௌத்த மத ஆதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அதன்பின் ஓரிரு நூற்றாண்டுகளில் பக்தி இயக்கம் உருவாகி வைதீக ஆதிக்கத்தை தமிழகத்தில் நிரந்தரமாகக் கொண்டு வந்தது. பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் சிறிது சிறிதாக, முழுமையான வைதீகச் சிந்தனைக்குள் கொண்டுவரப்பட்டது.

  கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில்(கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங்(HHIUEN- TSANG) அவர்கள், மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்துக் குறிப்பிட்டுள்ளதை இந்நூலின் முதல் தொகுதியில் தந்துள்ளோம். அதன்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில்கூட, “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர்” எனத் தமிழ் மக்களிடம் இருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே பண்டையத் தமிழகத்தில் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது எனலாம்.

               (தொடரும்)

- கணியன் பாலன், ஈரோடு

பார்வை:

1.தொல்காப்பியம்-பொருளதிகாரம், 4ஆவது செய்யுள், அகத்திணையியல்.

2.தொல்காப்பியம்-பொருளதிகாரம், 502ஆவது செய்யுள், செய்யுளியல்.

3, 4. க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், பதிப்பாசிரியர்-இரா. சக்குபாய், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்:105-111.

5. “ “  பக்: 75.

6.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:13-21.

7. “  “  பக்:22-27.

8. “  “  பக்:44-52.

9. “  “  பக்:137-138.

10. “  “  பக்:143-145.

11. “  “  பக்:9-12, 139, 140.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 5

பண்டைய மேற்குலகில் அறிவியலும் பேரரசும்:

 அறிவியல் வளர்ச்சிக்கு முன்பு உலகம் தட்டையானது எனவும் பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எனவும் ஞாயிறும் பிற கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன எனவும் மனிதன் நம்பி வந்தான். மேற்குலகில், சுமார் கி.மு. 500 முதல் கி.மு. 200 முடிய ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி இக்கருத்துக்களை மாற்றியமைத்தது. இக்காலகட்டத்தில் கிரேக்கத்தில் நகர அரசுகள் இருந்ததோடு, மத்தியதரைக்கடலை ஒட்டி பல்வேறு சிறு சிறு கிரேக்கக் குடியேற்ற நகர அரசுகளும் இருந்தன. இவை அறிவியலை வளர்த்தெடுத்தன. அலெக்சாந்தரால் எகிப்தில் உருவாக்கப்பட்ட அலெக்சாண்ட்ரியா நகரம் கிரேக்க அறிவியலின் அடித்தளமாகச் செயல்பட்டது. அங்கு தொடர்ந்து அறிவியல் வளர்ந்து வந்தது. இதன் விளைவாகவும் அதற்கு முன்னரும் பல வானவியல் அறிவியலாளர்கள் தோன்றினார்கள். அதில் பெரிக்கிளிசு(PERICLES)-(கி.மு.495-429) காலத்தில் வாழ்ந்த ஆனக்சாகரசு (ANAXAGORAS)–(கி.மு.510-428), சிசிலித்தீவில் உள்ள சிரக்கியூசு நகரத்தைச் சேர்ந்த ஆர்க்கிமிடிசு(ARCHIMEDES)-(கி.மு.287-212), அதே காலத்தில் வாழ்ந்த ஞாயிற்று மண்டலத்தின் தந்தை எனக் கருதப்படும் அரிசுட்டார்க்கசு(ARISTARCHUS)- (கி.மு.310-230), அலெக்சாண்ட்ரியா நகர நூலகத்தின் காப்பாளர் எரட்டாசுத்தனிசு(ERATOSTHENES)-(கி.மு.276-194) ஆகியவர்கள் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் அறிவியல் வளர்ச்சியின் துணைகொண்டு, பண்டைய கருத்துக்களை மாற்றியமைத்தார்கள்-(1).

 science historyஇவர்கள் உலகம் உருண்டையானது எனவும், பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை எனவும், பிரபஞ்சத்தில் நிறைய பூமிகளும் ஞாயிறுகளும் உள்ளன எனவும், பூமிதான் ஞாயிற்றைச் சுற்றி வருகிறது எனவும் கண்டுணர்ந்து சொல்லியதோடு பூமியின் சுற்றளவையும் கிட்டத்தட்டத் துல்லியமாக அளந்து கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட கி.மு. 100வரை இந்த அறிவு மேற்குலக அறிவியலாளர்களிடம் இருந்து வந்தது எனலாம். இந்த அறிவின் ஆழத்துக்கு பூமியின் சுற்றளவை அன்றே அளந்தது குறித்தத் தரவுகளைக் காண்போம். இதைச் செய்தவர் அலெக்சாண்ட்ரியா நூலகத் தலைவராக இருந்த எரட்டாத்தனிசு என்பவர் ஆவார். இவரது காலம் கி.மு.276-194 ஆகும்.

 அலெக்சாண்ட்ரியாவுக்கு 493 மைல் தொலைவில் இருந்த அசுவான் நகரில், முதுவேனிற்கால நடு நாளன்று, நண்பகலில், ஓர் ஆழமான கிணற்றின் அடியில் இருந்த நீரில் கதிரவனின் கதிர்கள் பட்டு பிரதிபலித்தது. அவ்வூரில் கதிரவனின் கதிர்கள் நேர் கீழாக, அதாவது செங்குத்தாக உறைந்தன. அதனால்தான் கிணற்றின் அடி ஆழத்தில் இருந்தும் கதிரவனின் கதிர்கள் பிரதிபலிக்க முடிந்தது. அச்சமயத்தில் அவ்வூர் முழுவதும் ஓரிடத்தில் கூட நிழல் இருக்கவில்லை. அதே சமயம் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த ஒவ்வொரு கட்டடமும் நிழலைத் தந்தது. அலெக்சாண்ட்ரியாவில் கதிரவனின் கதிர்கள் செங்குத்து நிலையைவிட்டு 7.2 டிகிரி விலகிச் சாய்ந்து உறைந்தன. இரண்டு ஊர்களுக்கும் இடையே கதிரவன் இவ்வாறு வேறுபட்டு உறைப்பதற்கு பூமி உருண்டையாக, ஒரு கோளமாக இருப்பதே காரணம் என்பதை எரட்டாத்தனிசு அறிவார். கோளம் 360 டிகிரி கொண்டது. 7.2 டிகிரி என்பது 50இல் ஒரு பங்கு ஆகும். ஆகவே ஒருபங்குக்கு 493 மைல் எனும்பொழுது 50 பங்குக்கு 24,650 மைல் வருகிறது என அவர் கணக்கிட்டார். எரட்டாத்தனிசு அவர்களின் கணக்குப்படி பூமியின் சுற்றளவு என்பது 24,650 மைல் ஆகும். இன்றைய நவீன அறிவியல்படி பூமியின் சுற்றளவு 24,830 மைல் ஆகும். இரண்டுக்கும் இடையே 180 மைல்தான் வேறுபாடு ஆகும். அதாவது, பிழையின் அளவு ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு(0.7%) ஆகும்-(2).

 இந்தளவு வளர்ச்சியடைந்திருந்த வானவியல் அறிவு அதன்பின் இல்லாது போனது. உரோம நகர அரசு வளர்ந்து உரோமப்பேரரசு ஆக ஆகியது. நகர அரசுகள் அனைத்தும் இல்லாது போயின. எகிப்தும் கி.மு. 31 வாக்கில் உரோம அரசின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. மேற்குலகம் முழுவதையும் உரோமப் பேரரசு ஆக்ரமித்துக் கொண்டது. உரோமப் பேரரசு வளர்ச்சியடைந்து நகர அரசுகள் இல்லாது போனதின் காரணமாக, அறிவியலின் வளர்ச்சி தடையானதோடு, நாளடைவில் அது பின்னோக்கிச் செல்லத் துவங்கியது. அதன் விளைவாக கி.பி 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய வானவியலாளர் தாலமி-1(CLAUDIUS PTOLEMY)-(கி.பி.100-170) என்பவர், உலகம் தட்டையானது எனவும் பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எனவும் ஞாயிறும் பிற கோள்களும் பூமியைச்சுற்றிவருகின்றன எனவும் போன்ற கருத்துக்களைக் கொண்ட ‘Almagest’ என்கிற நூலை எழுதினார். அப்பிற்போக்குக் கருத்துக்களே மறு மலர்ச்சிக்காலம் வரை அனைவராலும் ஏற்றுக்கொண்ட கருத்துக்களாக ஆகியது. முடியாட்சி காலத்துப் பேரரசு என்பது மக்களைக் கட்டுப்படுத்தவும், அடக்கி ஆளவும், அறிவியலை முடக்கி, கருத்துமுதல்வாதக் கருத்துக்களையும், கடவுளையும், மதநம்பிக்கைகளையும் பரப்புகிறது. அதனைத்தான் உரோமப் பேரரசும் செய்தது. அதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி இல்லாது போனது-(3).

தொல்காப்பியம் - மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் வெளிப்பாடு:

 பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் ஆய்வுமுறை பற்றிப் பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் எடுத்துக்காட்டியதை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், தமிழில் இலக்கிய வரலாறு என்கிற தம் நூலில், ‘மூலப்பாடத் திறனாய்வாளர் ஏற்றுக் கொள்ளத்தக்க நிரூபண முறைமைகளைக் கொண்டிராத தொல்காப்பியப் பாடப்பகுதிகள் பிற்காலத்து இடைச்செருகல்கள் என ஏற்றுக்கொள்ள அவரால் முடிய வில்லை. திட்டவட்டமான கருத்துக்களின் வரலாறு இல்லாத ஒரு நிலையில் வடமொழி நூல்களில் கூறப்பட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினையும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை” எனச் சுட்டிக் காட்டியுள்ளார்-(4). தொல்காப்பியத்தில், பொருளதிகார மரபியலில், விலங்குகளைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. ஆதலால் மரபியல் நூற்பாக்கள் 71-85 முடிய உள்ளவை இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயம் இல்லை. ‘சூத்திரம் என்ற சொல்லும், உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் 100-112 முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியரது அல்ல என்பது தெளிவாகிறது-(5). தொல்காப்பியத்தில் இவை போன்று வேறுசில இடைச்செருகல்கள்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த இடைச் செருகல்கள்தான் தொல்காப்பியம் அழியாமல் காப்பாற்றப்பட்டதற்குக் காரணம் எனலாம்.

 இதுவரை தமிழ்மெய்யியல் பற்றித் தரப்பட்ட தரவுகளில் இருந்து தொல்காப்பியம் குறித்துக் கீழ்கண்ட கருத்துக்களுக்கு நாம் வரமுடியும். மூலச்சிறப்புள்ள சாங்கியம், பண்டைய தாந்திரீகம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும், பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்கள் மூலச்சாங்கியத்திற்கும், தொடக்ககாலச் சிறப்பியத்திற்கும், யோக, உலகாயத மெய்யியல்களுக்கும் சேர்ந்தவை எனக் கருதுகிற படிமுறைக்கோட்பாடு, அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு, அளவை இயல் கோட்பாடு, காரண–காரியக்கோட்பாடு, இன்பவியல்கோட்பாடு ஆகிய அறிவியல் துறைகளையும் விரிவாகவும் செறிவாகவும் தொல்காப்பியம் எடுத்துச் சொல்கிறது. வெளி, காலம் குறித்த தொல்காப்பியரின் கருத்துக்கள் ‘ஸ்டீவன் ஆக்கிங்சு’ போன்ற அண்மைக்கால அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறது. சாங்கியத்தின் தாக்கம் இல்லாத பண்டைய இந்தியத்தத்துவங்களே இல்லை எனலாம். ஆனால் அதன் மூலச்சிறப்புள்ள கோட்பாடுகள் அனைத்தும் செறிவோடும் நிறைவோடும் தொல்காப்பியத்தில்தான் இடம்பெற்றுள்ளன. அறிவு ஆராய்ச்சியியலாகிய ஆன்வீக்சி எனப்படும் ஐந்திரம் நிறைந்தவராக தொல்காப்பியர் கருதப்படுகிறார். ஆகவே தொல்காப்பியம் என்பது மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் வெளிப்பாடு எனலாம். அதனால்தான் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், தொல்காப்பியம், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்” (one of the finest monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று எனவும் இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்பொருள் செய்யுளில் தொல்காப்பியம் கூறுகிறது எனவும் குறிப்பிடுகிறார். காலம்-வெளி குறித்த தொல்காப்பியர் கருத்து மனித அறிவாற்றலின் உச்ச நிலையைக் காட்டுகிறது.

 பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்தனர். அதனால்தான் அவர்கள் போன்றவர்களால் தொல்காப்பியத்தின் சிறப்பம்சங்களை, அதன் மூலச்சிறப்புள்ள பொருள்முதல் வாதச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதில் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைக் கொண்டே அவர்கள் தொல்காப்பியத்தை மதிப்பிட்டார்கள். தொல்காப்பியம் போன்ற தமிழ் நூல்களில் இருக்கும் மூலச்சிறப்புள்ள கருத்துக்கள் அனைத்தும் வடமொழி சார்ந்த சிந்தனைகளில் இருந்து வந்தவைகளே என அவர்கள் கருதினார்கள்.

 வடமொழி சார்ந்த சிந்தனை என்பது வேத, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துமுதல்வாத வைதீகச்சிந்தனை என்றே பொருள்கொள்ளமுடியும். அதில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளுக்கு இடமில்லை. வடமொழியில் இருக்கும் சாங்கியம், உலகாயதம், சிறப்பியம் & நியாயம், தாந்திரீகம், போன்ற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் அனைத்தும் வடமொழி சார்ந்த கருத்துமுதல்வாத சிந்தனைகளுக்கு எதிரானவை, ‘பண்டைய இந்தியச்சிந்தனை’ என்பதற்கு மாறுபட்டவை, பிற இடங்களில் இருந்து வந்தவை, முக்கியமாகத் தமிழகத்திலிருந்து வந்தவை என்பதை நமது ஆய்வு உறுதி செய்கிறது.

 தமிழ்ச்சமூகச்சூழல் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் செழித்து வளர்வதற்கு ஏற்ற இடமாக மிக நீண்டகாலம் இருந்துள்ளது என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். அதனால்தான் சாங்கியம் போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாதச்சிந்தனைகள் தமிழகத்தில் உருவாகின. ஆனால் அது போன்ற ஒரு சமூகச்சூழல் வட இந்தியாவில் அதிக காலம் நீடிக்கவில்லை. வட இந்தியாவில் நிலவிய வேத, உபநிடதச் சூழலும், பேரரசுக்கொள்கையும் கருத்துமுதல்வாதச் சிந்தனைக்கே இடமளித்தது. தமிழ் தனக்கான வரிவடிவத்தைக் குறியீடாக கி.மு. 1500 வாக்கிலேயே பெற்றிருந்தது என்பதை மயிலாடுதுறை கற்கோடாலியில் உள்ள குறியீடுகளும் இன்னபிற அகழாய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. கி.மு. 1000க்கு முன்பிருந்தே பொருள்முதல்வாதச்சிந்தனை தமிழகத்தில் செழித்து வளர்ந்து வந்தது என்பதை நாம் முன்பே உறுதி செய்துள்ளோம்.

 இவைபோன்ற புரிதல்கள் எதுவும் இல்லாத பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் சிறப்புமிக்க அனைத்துச் சிந்தனைகளுக்கும், அனைத்துக் கருத்துக்களுக்கும் வடமொழிச் சிந்தனைகளே, வைதீகச் சிந்தனைகளே மூலம் எனக் கருதினார்கள். இதன் காரணமாக வடமொழி நூல்களே அனைத்துத் தமிழ் நூல்களுக்கும் மூலநூல்கள் எனக் கருதும் சூழ்நிலை உருவானது. இவை வைதீக வழியிலான இந்தியாவை உருவாக்க வழியமைத்தது. இன்றும் கூட இது போன்ற வைதீக மரபு சார்ந்த வரலாறு கட்டமைக்கப்படுகிறது. கி.மு. 1000 முதல் கி.மு. முடிய இருந்த வட இந்தியச் சமூகச் சூழல் குறித்தோ, அதேகாலகட்டத் தமிழ்ச் சமூகச் சூழல் குறித்தோ முறையான, அறிவியல் அடிப்படையிலான, வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆய்வுகள் இல்லாத வரலாறு குறித்தப் புரிதல்கள்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதோடு, வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலையும் ஒரு மிக முக்கியக் காரணம் எனலாம்.

 பொதுவுடமைவாதிகளான டாங்கே, வானமாமலை போன்றவர்களிடமே இந்த வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை இருந்ததாக பேராசிரியர் வி. அரசு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். டி.டி. கோசாம்பி போன்றவர்களிடமும் அது போன்ற மனநிலை இருக்கிறது என நான் கருதுகிறேன். ஆனால் அவர்களிடம் வரலாற்றுப் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்தன; ஆனால் தமிழகத்தின் சில ஆய்வாளர்களிடம் வரலாற்றுப்பொருள்முதல்வாதச்சிந்தனையும் இல்லை என்பதால் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை மிக மிக அதிகமாகவே இருக்கிறது எனலாம். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றே, சிறப்புமிக்கப் பெரும்பாலானச் சிந்தனைகளுக்கும், பெரும்பாலான கருத்துக்களுக்கும் வடமொழிச் சிந்தனைகளே, வைதீகச் சிந்தனைகளே, சமற்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே மூலம் என அவர்கள் கருதுகிறார்கள். அதன்மூலம் வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் பணியை மிகச் சிறப்பாகச் செய்து அனைத்து மக்களின் வாழ்வுக்கும், வரலாற்றுக்குமான மூல ஊற்றாக விளங்குகிற, பொருள்முதல்வாதச் சிந்தனையின் அடிப்படையை தகர்த்தெறிகிறார்கள்.

 சமண பௌத்த மதக் கருத்துக்கள் வைதீகத்துக்கு எதிரானவை என்ற அளவில் அவைகளை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் இந்த சமண பௌத்த மதக் கருத்துக்கள் உலகாயதம், வைசேடிகம் போன்ற பொருள்முதல் வாதச்சிந்தனை மரபுகளை எவ்வளவு கடுமையாக எதிர்த்துப் போராடி அவைகளை அழித்து ஒழித்தன என்பதை மறந்து விடுகிறார்கள். மணிமேகலை இதனை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அதுபோன்றே சமண பௌத்த மதங்கள், மதம் என்ற நிறுவனமாக ஆகிய நிலையில் தங்களது முற்போக்கான பாத்திரத்தை அவை இழந்தன என்பதையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இலங்கையில் பௌத்தமதம் என்ன செய்தது என்ற புரிதல் அவர்களிடத்தில் இல்லை.

 1500 ஆண்டுகளாக இலங்கை பௌத்தமதத்தின் மகாவம்சம் நூல் தமிழர்களைக் கொல்லுவதன் மூலமே பௌத்தத்தைக் காக்க முடியும் என்ற தமிழர் எதிர்ப்பு இனவெறிக்கருத்தைப் பரப்பி வந்தது. இன்றும் பரப்பிக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் என்பது சிங்களர்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் நூலில் துட்டகாமினியின் தாய், தான் கர்ப்பமாக இருந்தபோது, தமிழனான எல்லாள மன்னனின் தமிழ் வீரன் ஒருவனைக்கொன்று அவனது தலையின் மீது நின்று அந்தத் தமிழ் வீரனின் பச்சை இரத்தத்தை குடித்துத் தனது கர்ப்பகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டாள். இவளே சிங்கள மக்களின் மகாதாயாகக் கருதப்படுகிறாள். இதே முறையில் இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் போது சிங்கள வெறியர்கள் பலர் தமிழ் மக்களைக் கொன்று அவர்களின் தலை மீது நின்று தமிழ் மக்களின் பச்சை இரத்தத்தை குடிக்கும் நிகழ்வு நடைபெற்று, அவை வரலாற்றில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் தமிழர்களைக் கொல்லுவதே ஒரு சிங்களனின் வாழ்வுக்கு அடிப்படை என்பது போன்ற இனவெறிக்கருத்துக்களை மகாவம்ச நூலின் மூலம் சிங்களபௌத்தம் 1000 வருடங்களுக்கு மேலாகப் போதித்து வருகிறது. மகாவம்ச நூலில் துட்டகாமினி வரலாற்றைக்கூறும் பகுதியில் உள்ள 57 பக்கங்கள் தமிழர் வெறுப்பையும் இனவெறிக்கருத்துக்களையும் விதைக்கும் பக்கங்களாக உள்ளன. அதில்தான் மேலே கண்ட நிகழ்வும் உள்ளது-(6).

 தமிழகத்தில் பொருள்முதல்வாதச் சிந்தனையை அழித்தொழித்ததில் சமண பௌத்த மதங்களுக்குப் பெரும் பங்குண்டு. களப்பிரர் ஆட்சியின்போது செல்வாக்கு பெற்ற இந்த சமண பௌத்த மதங்கள் 1000 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துவந்த பொருள்முதல்வாதச் சிந்தனை மரபுகளை(சாங்கியம், பூதவாதம், சிறப்பியம், நியாயவாதம் போன்ற) அடியோடு அழித்தொழித்தன. பொருள்முதல்வாதச் சிந்தனை மரபின் இன்பியல் கோட்பாடு சங்கம் மருவிய காலத்தில் எல்லை கடந்ததாக ஆகி சீரழிவு நிலையை அடைந்திருந்ததும், சமற்கிருதமயமாக்களும் போன்றவைகளும் அவைகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தன.

 ஆகவே பௌத்த சமண மதங்கள் தான் தமிழகத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தன போன்ற கருத்துக்கள் உண்மைக்கு மாறானவைகளாகும். பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் அதன் பொருள் உற்பத்தி, தொழிநுட்பம், வணிகம், வேளாண்மை, இலக்கியம், இசை, நாட்டியம் போன்ற கலைகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் ஊற்றுக்கண்களாக இருந்தன. மேலே சொல்லப்பட்டவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி என்பது கிமு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. பூதவாதத்தையும், சாங்கியத்தையும் கற்றுக்கொள்ள கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் வட இந்திய அறிஞர்கள் தமிழகம் நோக்கி வந்தனர் என்ற விடயம் இதனை உறுதிப்படுத்துகிறது. தமிழர் மதமாக இருந்த ஆசிவக மதம் அவைகளைப் பேணிக் காத்து வந்தது. ஆனால் சமண பௌத்த மதத்தின் பங்கு என்பது எதுவும் இல்லை. அவைகள் சாங்கியம், எண்ணியம், சிறப்பியம் போன்ற மூலச்சிறப்புடைய தமிழ் சிந்தனைகளைக் கொண்டு உருவானவை. அவை தமிழகத்திற்குத் தருவதற்கு எதுவுமில்லை. இந்தப் புரிதல் நமக்கு அவசியம்.

 பொருள்முதல்வாதச் சிந்தனை என்பது உழைக்கும் மக்களின் சிந்தனையே ஆகும். பண்டைய மேற்குலகில் பாரசீகப் பேரரசும், எகிப்தியப் பேரரசும், இரோமப்பேரரசும் வழங்காத மூலச்சிறப்புள்ள அறிவியல் கருத்துக்களை கிரேக்க நகர அரசுகள் உலகத்துக்கு வழங்கின. அதே போன்று, மகதப் பேரரசுகள் வழங்காத, மூலச்சிறப்புள்ள பல தத்துவார்த்த, அறிவியல் கருத்துக்களை பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் வழங்கியுள்ளன. இந்தியாவின் பொருள்முதல்வாதச் சிந்தனைகளின் மூல ஊற்று பண்டைய தமிழகமே என்பதை நாம் முன்பே உறுதிப்படுத்தியுள்ளோம். இந்திய வைதீகச் சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்த்து வந்த சிந்தனை மரபு என்பது மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுதான் ஆகும்.

 அந்தத் தமிழ்ச் சிந்தனை மரபு பொருள்முதல்வாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். தொல்காப்பியத்தில் தான் அந்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு ஓரளவு முழுமையாக இடம் பெற்றுள்ளது. ஆகவே தொல்காப்பியத்தை முழுமையாகவும் ஆழமாகவும் படித்துப் புரிந்து கொள்வதும், அதன் இடைச்செருகல்களை அறிந்து கொள்வதும் அவசியம். உண்மையில் இடைச்செருகல்கள் மூலம்தான் தொல்காப்பியம் தன்னை பாதுகாத்துக் கொண்டது என்பது வேறு விடயம். இடைச்செருகல்கள் இல்லை எனில் இந்நூலும் அழிந்து போன நூலில் ஒன்றாக ஆகியிருக்கும். தமிழகத்தின் உழைக்கும் மக்களே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றவற்றை இன்றுவரை பாதுகாத்து வந்து நமக்குக் கையளித்தார்கள் என்பது வரலாறு. ஆகவே மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு என்பது உழைக்கும் மக்களுடையது என்ற புரிதல் அவசியமாகிறது.

இந்தியப் பொருள்முதல்வாதச் சிந்தனை-தமிழ்ச்சிந்தனை:

 இந்திய அளவில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகளான சாங்கியம், உலகாயதம், சிறப்பியம் போன்றன மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியன என்பதை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, வானமாமலை, நெடுஞ்செழியன் ஆகியவர்களின் நூல்களைக் கொண்டு இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதுபோன்றே சாணக்கியரால் அறிவியல் ஆராய்ச்சிமுறை எனக்கருதப்பட்ட ஆன்வீக்சி எனப்படும் ஐந்திரம் என்பதும் தமிழ் மூலம்கொண்டது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. இந்திய அளவில் தொல்காப்பியம் மட்டுமே சாங்கியம் போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையின் கூறுகளைச் செறிவாகவும் விரிவாகவும் கூறுகிறது. சங்க இலக்கியங்களும், திருக்குறளும் கூட பொருள்முதல்வாதச் சிந்தனையின் மூலச்சுவடுகளைக் கொண்டுள்ளன. சாங்கியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன.

 கி.மு. 1000 முதல் கி.மு. 50 வரை இருந்த தமிழ்ச் சமூகச் சூழல் பொருள்முதல்வாதச் சிந்தனை வளருவதற்கான இடமாக தமிழகத்தை ஆக்கியிருந்தது. சங்கம் மருவிய காலத்தில் இந்நிலை மாறத்தொடங்கியது. களப்பிரர் ஆட்சியும், சமற்கிருதமயமாக்களும் இணைந்து தமிழகத்திலிருந்த பொருள்முதல்வாதச் சிந்தனை மரபை இல்லாதொழித்து சமண, பௌத்த, வைதீகச் சிந்தனையைக் கொண்டு வந்தன. பக்திகாலகட்ட இறுதியில் சமண, பௌத்த மதங்களும் இல்லாதொழிந்து வைதீகம் மட்டுமே செல்வாக்குபெற்ற நிலை உருவானது. இக்காலகட்டத்தில் பொருள்முதல் வாதச்சிந்தனை சார்ந்த நூல்கள் இல்லாதொழிந்தன. ஆனால் தொல்காப்பியம் மட்டும் அந்தச் சிந்தனையின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டதாக இன்றும் உள்ளது. ஆகவே இந்தியப்பொருள்முதல்வாதச்சிந்தனை என்பது மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனையே ஆகும்.

மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு:

 இந்திய அளவில் அறிவியல் கண்ணோட்டமும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும், காரணகாரியம்&தர்க்கவியல் கண்ணோட்டமும், தந்திரீகக் கருத்துக்களும் கொண்டதாக மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு இருந்துள்ளது. படிமுறைக்கோட்பாடு, அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு, அளவை இயல் கோட்பாடு, காரண–காரியக்கோட்பாடு, இன்பவியல் கோட்பாடு ஆகிய அறிவியல் துறைகளைக் கொண்டதாக தமிழ்ச்சிந்தனை மரபு உள்ளது. சாங்கியம், சிறப்பியம், நியாயம், உலகாயதம் ஆகிய தத்துவச் சிந்தனைகளை அது கொண்டுள்ளது. ஆதலால் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு என்பது மூலச்சிறப்புடைய கிரேக்கச் சிந்தனையோடு ஒப்பிடத்தக்கதாகும். சிலவிதங்களில் அதைவிட மேம்பட்டதாகவும் இருக்கிறது எனலாம். இவை குறித்து, விரிவான ஆழமான ஆய்வுகள் இன்றைய தேவையாக இருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமே மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் பல்வேறு பரிமாணங்களையும் நாம் கண்டறிய இயலும்.

(முற்றும்)

- கணியன் பாலன், ஈரோடு

பார்வை:

1, 2, 3. பெரிக்கிளிசு(PERICLES), ஆனக்சாகரசு(ANAXAGORAS), ஆர்க்கிமிடிசு (ARCHIMEDES), அரிசுட்டார்க்கசு(ARISTARCHUS), எரட்டாத்தனிசு(ERATOSTHENES), தாலமி-1 (CLAUDIAS PTOLEMY) ஆகியவர்களின் விக்கிபிடியாத் தரவுகள் & அறிவியல் வரலாறு, ஆர்தர் எசு. கிரிகர், முகம், ஜூலை-2012, பக்; 47-50, 67-69, 55-72.

4. அறிவியல் வரலாறு, ஆர்தர் எசு. கிரிகர், முகம், ஜூலை-2012, பக்: சு.க. மணி-அணிந்துரை- xvi, xvii.

5. சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, 2009, பக்: 192.

6. மகாவம்சம், தமிழில் எஸ்.பொ., அக்டோபர் -2009, பக்: 197-25



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 6

“மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு” என்ற தலைப்பில் முன்பே கீற்றில் எனது ஐந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரைகளைக் காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுடைய, 1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், 2.சங்க இலக்கியக் கோட்பாடுகளும், சமய வடிவங்களும், 3.ஆசிவகமும் ஐயனார் வரலாறும் ஆகிய மூன்று நூல்களை அடிப்படையாகக்கொண்டுதான் எனது இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ச் சிந்தனை மரபில் இன்மையும் முரண்பாடும்:

ஏழு பொருள்கள்:

   “பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

   இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”

tholkaapiyam 400என்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. சிறப்பியம் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட 20 இரண்டடி குறட்பாக்களைக் கொண்ட ஒரு தத்துவக்குறு நூல்தான் அகத்திய தருக்க நூற்பா ஆகும்(1). இந்த நூல் தமிழின் சிறப்பிய மூல மரபை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். இப்பாடலின் முதலில் வரும் ‘பொருள்’ என்பது பொருளின் பொருண்மைத்தன்மை என்பதை மட்டும் குறிக்கிறது. அதாவது முழுமையான பொருள்களின் உள்ளடக்கமாக இருக்கும் ஆறினுள் ஒன்றைச்சுட்டுகிறது. அப்பாடலின் இறுதியில் வரும் “பொருள்” என்பது பொருளின் முழுமையைக் குறிக்கிறது. இவைகளின் நுட்பம் மிக ஆழமானது என்கிறார் க. நெடுஞ்செழியன். இந்த ஏழு பொருள்களும் உள்பொருள், இல்பொருள் என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. பாடலின் முதலில் உள்ள ஆறு பொருள்களும் உள்பொருள் எனவும், இறுதியாக உள்ள இன்மை என்பது இல்பொருள் எனவும் பிரிக்கப்படுகிறது. உள்பொருள்கள் ஆறும் பற்றிய தரவுகளைப் பார்ப்போம்.

1.பொருள் – பொருண்மைத்தன்மை,

2.குணம் – தனக்கென உள்ள குறிப்பிட்ட பண்புகள்

3.கருமம் – செயல் அல்லது புடைப்பெயர்ச்சிக்கான தகுதி.

4.பொது – பொது இயல்புகள்

5.சிறப்பு – தனக்கென இருக்கும் தனித்த இயல்புகள்

6.ஒற்றுமை – ஒன்றிணைந்த தன்மைகளை பெற்றிருத்தல்.

ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.

  ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன். மேற்கண்ட அகத்திய தருக்க நூற்பாப் பாடலின் இறுதியில் உள்ள “ஏழென மொழிப” என்பதில் தமிழ் மரபின் தொடர்ச்சியும், தொன்மையும் வெளிப்படுகிறது எனலாம். அதாவது பொருள்கள் ஏழு என்பது தமிழ் முன்னோர்களின் கருத்தாகும். தமிழ் மரபைப் பின்பற்றி சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட தருக்க பரிபாடையும், தருக்க சங்கிரகமும் பொருள்கள் ஏழு என்கின்றன. ஆனால் வடமொழி மரபைப் பின்பற்றி தமிழில் எழுதப்பட்ட, பௌத்த, சைன மதங்களைப் பின்பற்றும் மணிமேகலையும், நீலகேசியும் பொருள்களை ஆறு என்று குறிக்கின்றன(2).

  ஒரு பொருள் உருவாவதற்கு முன் அது வேறு பொருளாக இருக்கும். அந்த வேறு பொருளாக இருக்கும் நிலைதான் இன்மையாகும். உலகில் உயிர் உருவாவதற்கு முன் சடப்பொருள்தான் இருந்தது. உயிர்ப்பொருள் என்பது இல்லை. ஆகவே உயிர்ப்பொருள் இல்லாத அந்த நிலைதான் இன்மை என்பதாகும். இந்த இன்மை என்ற சடப்பொருளில் இருந்துதான் உயிர்ப் பொருள் உருவாகியுள்ளது. அதுபோன்றே பெரு வெடிப்பிற்கு முன் மிகமிகச்சிறிய ஆதிமூலப்பொருள் இருந்தது. இறுதியில் அனைத்தும் இந்த ஆதிமூலப்பொருளில் சுருங்கிவிடும். இந்த ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கக் கோட்பட்டிற்குத்தான் இன்மை என்ற கோட்பாடு மூலம் தமிழ்ச்சிந்தனை மரபு விளக்கம் தந்தது.

இன்மை:

  தமிழ் மரபில் பொருள்கள் ஏழு என்பதற்கும், வடமரபில் இன்மையை விடுத்துப் பொருள்கள் ஆறு என்பதற்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் உண்டு. தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், எண்ணியக்கோட்பாடு குறிப்பிடும் அண்டத்தின் தோற்றம், முடிவு, கருநிலை ஆகிய அனைத்தும் பக்குடுக்கையாரின் ஏழு பொருள்களில் ஒன்றான ‘இன்மை’ யோடு தொடர்பு கொண்டன. இல்பொருளாகிய இவ்வின்மைதான் பொருள்கள் ஏழு எனக்கூறும் பக்குடுக்கையாரின் கோட்பாட்டிற்கு முழுமையான அறிவியல்தன்மையைக் கொடுக்கிறது. அத்துடன் உயிர்களின் திரிவாக்கக் கோட்பாட்டிற்கும்(சடப்பொருளிலிருந்து முதல் உயிர் தோன்றுவது) மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது(3).

  அண்டத்தின் தோற்றம், முடிவு குறித்த எண்ணியக்கருத்துக்களை,

     பூத விகாரத் தான்மலை மரமுதல்  

     ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகந்து

     வந்த வழியே இவைசென் றடங்கி  

     அந்தமில் பிரளய மாயிறும்…..  

என மணிமேகலை(27: 222-225) கூறிச்செல்கிறது. “மூல அணுவாகிய பரமாணுவில் தோன்றிய பூதங்களுக்கிடையே ஏற்பட்ட வினை மாறுபாடுகளால் இப்பேரண்டமும் பல்வேறு பொருள்களும் தோன்றின. பின்னர் அவை வந்த வழியே சென்று அந்தமில் பிரளயமாய் இல்லாதொழிதலே அதன் இயற்கை” என அண்டத்தின் தோற்ற, ஒடுக்கங்கள் குறித்து மேலேயுள்ள பாடல் விளக்குகிறது. இந்த விளக்கங்கள் அனைத்தும் இன்மைக்கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்கிறார் க. நெடுஞ்செழியன். அகத்திய தருக்க நூற்பா இன்மையை நான்காக வகைப்படுத்துகிறது.

   முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை

   யொன்றினொன் றின்மை யென்றின்மை நான்கே

  அந்த நான்கு இன்மைகள் குறித்த விளக்கத்தை கீழ்க்கண்டவாறு தருகிறார் க.நெடுஞ்செழியன். பெருவெடிப்பு குறித்த கருத்து என்பது முன்னின்மையையும், ஒன்றுமில்லாத பாழ்வெளியில் ஏற்பட்ட ‘அந்தமில் பிரளமாய் இறும்’ என்ற கருத்து பின்னின்மையையும், நிலவு-கதிர் ஆகிய ஒவ்வொன்றும் ஒன்றில் ஒன்றின்மையையும், நீர் எவ்வளவுதான் கொதித்தாலும் நெருப்பை அணைக்க உதவாது என்ற கருத்து முற்றின்மையையும் உணர்த்தி நிற்கின்றன. இன்மை பற்றிய நூற்பாவில், இன்மை காலக்குறிப்பால் உணரப்படும் என்கிறார் தொல்காப்பியர்(சொல்-214). தொல்காப்பியரின் இந்நூற்பாவில் உள்ள இன்மை குறித்து “பண்போடு இவற்றிடை வேற்றுமை யென்னை எனின் இன்மை பொருட்கு மறுதலையாகலின் பொருளின்கண் கிடக்கும் பண்பெனப்படாது’ என விளக்கம் தருகிறார் சேனாவரையர். அதாவது இன்மை பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள். தொல்காப்பியர் இன்மையைக் காலத்தோடு இணைத்துக்கூறுவதையும், காலத்தையும், இடத்தையும் முதல்பொருளாக வைத்ததையும் இணைத்துக் காணும்பொழுதுதான் இதன் அறிவியலை உணரமுடியும் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள்.

   இன்மையைப் பொருள் திணைகளில் ஒன்றாகத் தமிழர் ஏற்றுக் கொண்டதோடு அதற்கு ஒரு சிறப்பான இடத்தையும் தந்துள்ளதற்கான காரணத்திற்குக் க.நெடுஞ்செழியன் அவர்கள், “இன்மையை பொருட்கு மறுதலையாகக் காணும் இவ்விளக்கம் மிகவும் ஆழ்ந்து எண்ணத்தக்கது. ஒரு பொருளைப்பற்றி ஆராய்கின்ற போது அதன் உள்ளமை(இருத்தல்) பற்றிய ஆய்வைப்போலவே அதன் இன்மையைப்பற்றிய ஆய்வும் சிறப்பானதாகும். இப்பேரண்டம் முழுவதும் அணுக்களின் திரட்சி என்பர். கண்கூடாகக் காணும் இப்பேரண்டம், அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேராது தனித்துக்கிடந்த காலஊழியில் தோன்றவில்லை. எனவே இப்பேரண்டம் தோன்றாத ஒரு நிலையைப்பற்றிய ஆய்வும் தவிர்க்க இயலாதது. இத்தகு ஆய்வே இன்மைபற்றிய ஆய்வாகும்” என விளக்கம் தருகிறார். மேலும் இப்பேரண்டம் தோன்றாத ஒரு நிலையைப் பற்றிய ஆய்வுதான் முதற்பொருள் பற்றியதாகும். இத்தகு ஆய்வு தமிழகத்தில் தொடர்ந்து இருந்துள்ளது. அதன் அடையாளம்தான், ‘நிலம் பொழு திரண்டின் இயல்பென மொழிப’ எனும் தொல்காப்பிய நூற்பாவாகும். நிலம் பொழுது இரண்டும் முதற் பொருள் எனக்கூறாமல், இரண்டின் ‘இயல்பே’ முதற்பொருள் எனக்கூறியதின் நுட்பம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன்(4).

  இங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்க வேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப் பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலைதான் இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்ப் பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப் பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்ப்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறு பொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது மேற்கண்ட விளக்கத்தை உறுதி செய்கிறது.

  ஆதிமூலப்பொருளில் இருந்து பெரு வெடிப்பு தோன்றியது. இந்தப் பெரு வெடிப்பு ஏற்படுவதற்கு முன் இருந்த இன்மை நிலை, முன்னின்மையையும், இறுதியில் அனைத்தும் இந்த ஆதிமூலப்பொருளில் சுருங்கிவிட்டபின் இருக்கும் இன்மை நிலை, பின்னிமையையும் குறிக்கும். நீரை எவ்வளவு தான் கொதிக்க வைத்துச் சூடாக ஆக்கினாலும் அது நெருப்பை எரிக்க உதவாது, அது நெருப்பை அனைக்கத்தான் செய்யும். நீரும் சூடாக ஆக்கப்படுகிறது, நெருப்பும் சூடாக இருக்கிறது, ஆனாலும் அவை ஒன்றுடன் ஒன்று இணையும்பொழுது, மேலும் சூடாவதில்லை என்பதோடு சூட்டை இல்லாது செய்துவிடுகிறது. ஏன் என்றால் நீரில் நெருப்பை எரிக்க உதவும் தன்மை சிறிதுகூட இல்லை. அதுவே முற்றின்மை எனப்படும். அதுபோன்றே நூலில் இருந்து குடத்தையோ, மண்ணில் இருந்து புடவையையோ உருவாக்க முடியாது. இதுவே ஒன்றில் ஒன்றின்மை ஆகும். அதாவது நூலில் குடத்தை உருவாக்கும் தன்மை இல்லை என்பது போலவே மண்ணில் புடவையை உருவாக்கும் தன்மை இல்லை என்பதே ஒன்றில் ஒன்றின்மை ஆகும்.

முரண்பாடு:

  முரண்பாடு என்பது இல்லாமல் பிறப்போ, இறப்போ, இயக்கமோ, வளர்ச்சியோ எதுவுமே இல்லை. முரண்பாடு என்பது இயக்கவியலின் அடிப்படை என்பதால் முரண்பாடு இல்லாத பொருள் எதுவும் இருக்க வியலாது. பொருளில் இருக்கும் இருவேறு எதிர்மறைகள், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்ற முறையில் ஒன்றோடு ஒன்று ஒன்றியும், போரிட்டுக்கொண்டும் உள்ளன என்பது குறித்த அறிவியலே முரண்பாடாகும். பொருள் என்பதே எதிர்மறைகளுக்கிடையே உள்ள முரண்பாடு, ஒற்றுமை ஆகியவை பற்றிய விளக்கமே ஆகும். பொருட்களில் இருக்கும் இம்முரண்பாடு குறித்து, அறிவியல் நோக்கில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார் என்கிறார் முனைவர். க.நெடுஞ்செழியன். தொல்காப்பியத்தில் வரும் முரண்தொடை குறித்து, ‘மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே’ எனத்தொல்காப்பியர் கூறுவதாகவும், அதற்கு உரை எழுதிய பேராசிரியர், சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக முரண்தொடை வரும் எனவும் அது ஐந்து வகைப்படும் எனவும், முரண் எனும் சொல்லிற்கு பகைத்தல் எனப்பொருள் இருப்பதால் அப்பகை சொற்களுக்கும் பொருள்களுக்கும் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன். பொருள் குறித்து தொல்காப்பியர்,

 “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

 ஒழுக்கமும் என்றிவை இழுக்கு நெறியின்றி

 இதுவாகித் திணைக்குரிப் பொருளெனாது

 பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப” (தொல்-பொருளதிகாரம்-513 & செய்யுளியல்-204)

எனக்கூறியுள்ளார். அதாவது, இன்பம்-துன்பம், புணர்வு-பிரிவு, ஒழுக்கம்-இழுக்கு எனப் பொருள்களில் உள்ள முரண்பட்ட நெறிகளைக் குறிப்பதோடு, இத்திணைக்கு இதுவே உரிப்பொருள் என வரையறை செய்யாது எல்லாப் பொருட்கும் பொதுவாக நிற்கும் பொருளே பொருள்வகையாகும் என்கிறார். சொல்லும் பொருளும் முரணுதல் முரண் என வகைப்படுத்திய தொல்காப்பியர், பொருள்வகையாக இன்பம்-துன்பம், புணர்வு-பிரிவு, ஒழுக்கம்-இழுக்கு எனப்பாகுபாடு செய்வதன் வாயிலாக அம்முரண்பாட்டினை ஒரு கோட்பாட்டு நிலையில் வைத்து விளக்குகிறார் எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

   இடையறாத மோதலையும், இயக்கத்தையும் உள்ளடக்கியதே பொருளாகும். பொருதுதல், மோதுதல் எனும் செயலின் அடிப்படையில்தான் பொருள் என்னும் சொல்லும் உள்ளதெனலாம். தொல்காப்பிய இலக்கணத்தில் வரும் அகப்பொருள் என்பது களவு-கற்பு எனும் எதிர்மறைகளை உள்ளடக்கியுள்ளது போலவே, புறப்பொருள் என்பது முற்றுகை–தற்காப்பு, வெற்றி–தோல்வி, புகழ்–இழிவு ஆகிய எதிர்மறைகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. அத்துடன் அகப்பொருள் என்பது புறப்பொருளின் எதிர்மறையாக அமைந்துள்ளது. இவைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பொருள் என்பது முரண்பாடுகளுக்கும் எதிரும் புதிருமான தன்மைகளுக்கும் இடையேயான ஒற்றுமை என்பதன் விளக்கமாகவே இவை அமைந்துள்ளன என்பது தெளிவாகிறது. முன்பு குறிப்பிட்ட, ‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்’ எனத்தொடங்கும் தொல்காப்பியப் பாடலும்கூட பொருள்வகையின் தன்மையை, அதாவது முரண்பாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை, பொதுமையை விளக்குவதாகவே அமைந்துள்ளது எனலாம். மெய்யியலில் முரண்பாடு வகிக்கும் அடிப்படைப் பங்கு குறித்து, ‘பொருள்களில் உள்ள முரண்பாடுகளைப்பற்றிய விதி, அஃதாவது, எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய விதி பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படையாகும்’ என மாவோவும். ‘இயங்கியல் என்பது சரியான கருத்தில் பொருட்களின் அடிப்படையில் உள்ள முரண்பாடுகள் பற்றிய ஆய்வேயாகும்’ என லெனினும் கூறியுள்ளதாக க.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார்(5)

தொல்காப்பியர்- ஒரு பொருள்முதல்வாத மெய்யியல் அறிஞர்

  தொல்காப்பியர் குறிப்பிடும், பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம், ஊதியம்-இழப்பு ஆகிய எதிர்மறைகளின் ஒற்றுமையாலும், போராட்டத்தாலும் அமைவதே வாழ்க்கை என்ற கோட்பாட்டை விளக்கும் மூலச்சான்றாக இருப்பவை பக்குடுக்கை நன்கணியார், கணியன்பூங்குன்றனார் ஆகியவர்களின் புறநானூற்றுப் பாடல்களாகும். வாழ்க்கையை இயங்கியலாகப் பார்த்த இவ்வறிவியல் பார்வை பொருள்முதல்வாதக் கோட்பாட்டிற்கு உரியதாகும். ‘ஒரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக்காரணம் புறத்தில் அல்ல அகத்திலேயே இருக்கின்றது; அதற்குள்ளே நிலவும் முரண்பாட்டியல்பில் இருக்கிறது; இந்த அக முரண்பாட்டியல்பு ஒவ்வொரு பொருளிலும் உண்டு. எனவேதான் பொருட்களில் இயக்கமும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. அதே வேளையில் இதர பொருட்களுடன் கொண்டுள்ள அதன் உறவுகளும், பாதிப்புகளும் இரண்டாம் நிலைக்காரணங்களாகின்றன’ என மாவோ அவர்கள் கூறுகிறார். இவ்விளக்கத்தின் அடிப்படையில் தொல்காப்பியரை ஆராயும் போது அவர் எண்ணியப் பொருள்முதல்வாதப் பள்ளியைச்சேர்ந்தவர் என்பதை அறியலாம் எனவும், அவருடைய ஐம்பூதக்கோட்பாடும், உயிர்களின் வளர்ச்சி பற்றிய அவரின் படிமுறைக்கோட்பாடும் அதற்கான சான்றுகள் எனவும் குறிப்பிடுகிறார் க. நெடுஞ்செழியன்.

  கரும நிகழ்வே இடமெனச் சொல்லும் தொல்காப்பியர், அக்கரும நிகழ்வுகளை நேற்றுநடந்தது, இன்று நடக்கிறது, நாளை நடக்கும் என வகைப்படுத்துவதே காலம் எனவும் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு நிகழ்ச்சிகளே இடமாகவும், காலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும், அதனாலேயே அவை முதற்பொருளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன என்பதையும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இடம் காலம் ஆகியனவற்றின் இயல்புகளை, “இடமும் காலமும் பொருளது இருத்தலின் வடிவங்கள், பொருள்களின் எல்லா நிலைகளுக்கும் அவை இயல்பானவை. எந்தப் பொருளியல் இயக்கமும் எங்காயினும் ஏதெனும் ஒரு இடவெளியில், எப்போதாயினும், ஏதேனும் ஒரு காலத்தில்தான் நடைபெறுகிறது. காலத்திற்கும் இடத்திற்கும் புறம்பான இருத்தல்(BEING) நிலவுகிறது என்ற கருத்துமுதல்வாத-மதவரையறுப்பை ஏங்கெல்சு விமர்சித்தார். காலத்திற்குப் புறம்பான இருத்தல், இடத்திற்குப் புறம்பான இருத்தல் என்பன வெற்றுரைகளாகும் என அவர் கூறினார். பொருள்களின் இடவெளிப் பண்புகளும், காலவெளிப்பண்புகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை என்பதை தற்கால அறிவியல் உண்மைகள் காட்டுகின்றன” என மார்க்சியம் விளக்குகிறது. தொல்காப்பியர் இடத்தையும் காலத்தையும் முதற்பொருளாக வைத்ததும், கருப்பொருளும், உரிப்பொருளும் அம்முதற்பொருளை சார்ந்து நிகழ்வன என்று குறிப்பதும் இப்பின்புலத்தில் இருந்து ஆராயத்தக்கவை எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(6)

எதிர்மறைகளின் ஒற்றுமை:

  ஒற்றுமை என்பதற்கு இணங்கியிருத்தல், ஒன்றிணைதல், சார்ந்திருத்தல் எனப்பல பொருள்கள் உண்டு. ஊடலும், கூடலும் காமத்தின் இரு எதிர்மறைகள். ஊடியபடியே இருந்தாலும் வாழ்வு திகட்டிவிடும். ஆகவே முற்றான ஊடல், முற்றான கூடல் ஆகிய இரண்டும் பயனற்றவை. ஆகவே ஊடல்-கூடல் ஆகிய இரு எதிர்மறைகளின் ஒற்றுமை மூலமே காமம் பெறப்படுகிறது. ஒன்றில்லாமல் ஒன்று சுவைக்காது. இவை மிகுந்தாலும், குறைந்தாலும் இனிமையற்றது; அதனால் பயனற்றது எனச் சொல்வது, வாழ்க்கை குறித்த ஒரு அறிவியல் பார்வை ஆகும்.

 எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதற்கு,

 “நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற தொல்காப்பியரின் இந்நூற்பா சான்றாகிறது. இதில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டதும் முரண்பட்டதுமான பூதங்கள் ஐந்தும் கலந்த மயக்கம் தான் உலகம் என தொல்காப்பியர் கூறுகிறார்.. உலகமானது முத்தும் மணியும் கலந்தார்போல ஐம்பூதங்களிலும் விரவி நிற்கும் எனவும், பொன்னும், வெள்ளியும், செம்பும் உருக்கி ஒன்றானது போல வேற்றுமையின்றி ஒன்றிணைந்ததே இவ்வுலகம் எனவும் இளம்பூரணர் இதற்கு விளக்கம் தந்துள்ளார்(7). எதிர்மறைகளான இந்த ஐந்து பூதங்களும் இணங்கியும், ஒன்றிணைந்தும், சார்ந்தும் உருவானது இவ்வுலகம் எனக் கூறுவதன் மூலம், எதிர்மறைகளின் ஒற்றுமையால் உருவானதே இவ்வுலகம் என தொல்காப்பியர் கூறுகிறார் எனலாம்.

  “முரண்பட்ட தன்மைகளின் ஒன்றையொன்று சார்ந்த நிலையும், அந்தத் தன்மைகளுக்கிடையிலான போராட்டமும், பொருட்கள் அனைத்திலும் வாழ்வை நிர்ணயிப்பதோடு அவற்றின் வளர்ச்சியையும் முன் தள்ளுகின்றன” என மாவோ கூறுகிறார். முரண்பட்ட தன்மைகளின் ஒன்றையொன்று சார்ந்த நிலைக்கும், அந்தத் தன்மைகளுக்கிடையிலான போராட்டத்திற்கும் தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒருசிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறது எனலாம். அகத்திணையின் புறனாகப் புறத்திணையையும், அகத்திணைக்கு உள்ளும் களவின் முரணாகக் கற்பையும் அடிப்படையாகக் கொண்டு, அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல்கள் அமைக்கப்பட்டிருப்பதன் நுட்பம் கருதத்தக்கதாகும். ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ எனத்துவங்கும் நூற்பா முரண்பாடுகளின் இயல்பினை, அவை ஒன்றையொன்று சார்ந்துள்ள நிலைக்கும், ஒன்றில் ஒன்று மாறுபட்டு நிற்கும் நிலைக்கும் உள்ள தொடர்பை நல்லவண்ணம் விளக்குகின்றது என்கிறார் க. நெடுஞ்செழியன்(8)

      முரண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையை அகப்புறத் திணைகளில் மட்டுமில்லாமல் அகத்திணையின் உரிப்பொருள்களில், புணர்தல்-பிரிதல், இருத்தல்-இரங்கல், ஊடல்-கூடல் எனவும், எண்வகைச்சுவைகளை விளக்கும் மெய்ப்பாட்டியலில், நகை-அழுகை, இழிவு-வியப்பு, அச்சம்-வீரம், வெகுளி-கோபம் எனவும் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார் என்கிறார் க. நெடுஞ்செழியன். முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய பண்பு குறித்து ஆராயும் ஏங்கெல்சு, “முரண்பாடு என்பது வாழ்கின்ற உயிரினத்திற்கும் அதனுடைய வளர்ச்சிக்கும் கூட பொருந்தும்……நொடிக்குநொடி ஒரு பொருள்தானாகவும் வேறாகவும் உள்ளது…..ஆகவே உயிர் என்பதே ஒரு முரண்பாடாகும். உயிர்ப்பொருட்களின் உள்ளேயும் அவற்றின் இயக்கங்களிலும் பொதிந்து கிடப்பதும்; இடையறாது தோன்றிக்கொண்டும் தாமாகவே மறைந்துகொண்டும் இருப்பதும் அதுவேயாகும். அம்முரண்பாடு முடியும்பொழுது, உயிரும் முடிவுறுகின்றது. சிந்தனையும் கூட அம்முரண்பாட்டிலிருந்து தப்ப முடியாது என்பதைப்பார்க்கிறோம்” எனக் கூறுகிறார். முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய பண்பு இங்கு ஏங்கெல்சால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

   பொருளின் ஒவ்வொரு இயக்க வடிவத்திலும் இருக்கும் முரண்பாடு தனக்கெனத் தனித்தன்மை வாய்ந்த இயல்புகளைக் கொண்டுள்ளது. பொருள்களைப் பற்றிய மனித அறிவு என்பதே இந்த இயக்க வடிவங்களைப் பற்றிய அறிவே ஆகும். இந்தச்சிறப்பான அறிவுத்துறையை தமிழர் கோட்பாடாகிய எண்ணியம் நன்கு வளர்த்தெடுத்தது. ஒன்றினுள் ஒன்று கலக்கும் அதே வேளையில் ஒவ்வொன்றும் தன் தனித்தன்மைகளை இழக்காமலும் இருக்கின்றது. ஐம்பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் எனக் கண்டுணர்ந்த தமிழ் மெய்யியல் அறிஞர்கள், ஒவ்வொரு பூதத்தின் தனித்தன்மைகளையும் அவற்றின் இயல்புகளையும் ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு பால், சீர் எனப்பெயரிட்டுள்ளனர். சான்றாக நீர் என்பதன் பால் குளிர்மை ஆகும். அதன் சீர் எனும் இயல்நெறி கீழ் நோக்கிப் பாய்தல் ஆகும். ‘மண் திணிந்த நிலனும்’ எனத்தொடங்கும் புறநானூற்றுப்பாடல் பூதங்கள் ஐந்தும் ஒன்றனுள் ஒன்று கலந்திருத்தலும் ஒன்றிற்கொன்று முரண்பட்டு நிற்றலும் அவற்றின் இயற்கைப் பண்புகள் எனக் குறிப்பதன் மூலம் தமிழரின் இயல்புக்கோட்பாடு விளக்கம்பெறக் காணலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன்(9).

முதன்மைக்கூறும் பகைமையும்:

  பொருட்கள் அனைத்துமே முரண்பாடுகளின் தொகுப்புகளாக உள்ளன. மிகச்சிறிய அணுவில் மின்மம்(ELECTRON), நேர்மம்(PROTON), நடுமம்(NEUTRON) ஆகிய இம்மூன்றிற்குமான முரண்பாடுகள் உண்டு. அம்மூன்றின் முரண்பாடு இன்றி அணு இல்லை. இப்படி பொருட்களில் முரண்பாடு உண்டு எனினும், சிலபோது அவற்றில் ஏதேனும் ஒன்று முதன்மையான பங்கை வகிக்கும். முதன்மையான பங்கை வகிக்கும் அம்முரண்பாடு அப்பொருளின் இயக்கம்-வளர்ச்சியின் மீது செல்வாக்கு வகிக்கும். பிற முரண்பாடுகள் இரண்டாம் நிலையில் இருக்கும். மேலாண்மை வகிக்கும் முரண்பாட்டின் முதன்மைக் கூறு குறித்து தொல்காப்பியரின் இப்பாடல் விளக்கம் தருகிறது.

  ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

  ஒன்றி உயர்ந்த பால தாணையின்

 ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப

 மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே – (பொருளதிகாரம்:90, களவியல்:2) இந்நூற்பா காமம் குறித்த அறிவியல், உளவியல், இயங்கியல் பார்வையைக்கொண்டதாக அமைந்துள்ளது என்கிறார் க. நெடுஞ்செழியன்.

   இப்பாடலில், காதல் தோன்றக்காரணமாக உள்ள பால் ஆண்பால் என்றோ, பெண்பால் என்றோ தொல்காப்பியர் கூறவில்லை. இந்த இரண்டையும் சம்மாகக்கருதி, அதில் எது மேலாண்மை செலுத்துமோ அது காதலை முன்னெடுத்துச் செல்லும் என்பதே அவரின் கருத்தாகும். சமமான இரு எதிர்மறைகளில் எது மேலாண்மை செலுத்துமோ அது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்ற இயங்கியல் நோக்கோடு இப்பாடல் பாடப்பட்டுள்ளது எனலாம். சமமான இரு எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றே முடிவான, தீர்மானமான பங்கை வகிக்கக் காணலாம் என்பதைத்தான் தொல்காப்பியர் ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ எனக் குறிப்பிடுகிறார். சான்றாக குறிஞ்சிக்கலியின் முதல் பாடலில் தலைவி காதலை முன்னெடுத்துச்செல்வதையும், குறிஞ்சிக்கலியின் 15ஆம் பாடலில் தலைவன் காதலை முன்னெடுத்துச்செல்வதையும் முனைவர் க.நெடுஞ்செழியன் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

  எதிர்மறைகளுக்கு இடையேயான முரண்பாடுகளில் மேலாண்மை செலுத்தும் கூறு அகத்திணையில் ஆக்கத்திற்குத் துணையாகிறது. அதுவே புறத்திணையில் போர் ஏற்படக் காரணமாகிவிடுகிறது. ஆநிரைகளைக் கவர்தலும், மீட்டலும்; அரணை முற்றுகையிடலும், தற்காத்தலும்; போரில் முன்னேறுதலும், பின்வாங்கலும் இவை எல்லாம் முரண்பாட்டில் பகைமையின் பங்களிப்புக்கள் எனலாம். இம்முரண்பாடுகளையும், முரண்பாடுகளின் பல்வேறு தன்மைகளையும் உள்ளடக்கி அவற்றை வாழ்வியல் நெறியாக, மெய்யியல் கோட்பாடாக வடித்தளித்த பெருமை பக்கடுக்கை நன்கணியாருக்கு உரியதாகும். இருள் இன்றிப் பகல் இல்லை; இன்னாமை இன்றி இனிமை இல்லை. துன்பமே உலக இயற்கை. அத்துன்பத்தில் இனிமை காண்பதே வாழ்க்கை என அறிவுறுத்தியவர் அவர்.

 ‘இன்னா தம்மஇவ் வுலகம்

 இனிய கண்கிதன் இயல்புணர்ந் தோரே’ (புறம்-194). அவரது இப்புறப்பாடல் அதனைத்தான் கூறுகிறது. இனிமை, இன்பம் இவற்றிற்கான முரண்பாடுகளுக்கிடையே அமைந்ததே மனித வாழ்க்கை என்னும் இயங்கியல் கோட்பாடு இப்பாடலில் முழுமை பெறுகிறது. தமிழரின் வாழ்வியலுக்கும் மொழியியலுக்கும் மட்டும் உரிய இலக்கணமாகத் தொல்காப்பியத்தைக் காணாமல், தமிழரின் மெய்யியலுக்குரிய இலக்கணமாகவும் காண வேண்டும். அப்படிக்காணும் பொழுதுதான் இந்தியப் பொருள் முதலியல் வரலாற்றிலும், கிரேக்கப் பொருள் முதலியல் வரலாற்றிலும் தமிழர் வகித்த பங்கை, அவர்களின் பங்களிப்பை அறிய இயலும் எனக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(10)

பார்வை:

  1. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 54.

2. ஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-47.

  1.  “ “  “  பக்: 47

4  “  “  “  பக்: 50,51.

5.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 69-73.

  1.  “ “  “  பக்: 74-77

7.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர்:முனைவர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016 பக்: 332.

  1.  தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:78-81
  1.  “ “  “  பக்: 82-88

10.  “  “  “  பக்: 90-97

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7

தொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா

 தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது. பத்ரகிரியார் என்கிற சித்தர் அவரை ஆதிகபிலர் எனக் கூறுகிறார். சங்க இலக்கியமோ அவரை தொல்கபிலர் எனப் பாராட்டுகிறது. வடமொழி நூல்கள் அவரை கபிலன், கபிலமுனி எனக்கூறுவதோடு அசுரன் எனவும் கூறுகின்றன. தமிழ் அறிவியல் மரபின் தந்தையான அவரை தமிழகம் மறந்துவிட்டது. வடமொழியாளர்கள் அவரை புதைத்து வைத்துவிட்டனர். வடமொழியில் சாங்கியம் எனக்கூறப்படும் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் ஒரு தமிழர் என அறுதியிட்டு உரைத்து அவரை வெளிக்கொண்டுவந்த முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் பெரும்பாராட்டுக்குரியவராவார்.

 உலகாயதம் நூலில் தொல்கபிலரின் எண்ணியம் குறித்துத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய கூறிய கருத்துக்கள் இங்கு சுருக்கித் தரப்பட்டுள்ளன.

நாத்திகம் – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா: 

 deviprasath 268புத்தருக்கு முந்தையதாகக் கருதப்படும் ‘சுவேதசுவதரா’ என்ற மறைமம்(மறை என்பது வேதம், மறைமம் என்பது உபநிடதம்), எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் குறித்துக் கூறியுள்ளதை சட்டோபாத்தியாயா தனது ‘இந்திய நாத்திகம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த மறைம ஆசிரியர் தனது ‘ஒரு கடவுள் கோட்பாட்டை’ எண்ணியத்தின் அடிப்படைகளைவிட மேலானதென நிறுவுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அவர் கபிலரின் ஞானம் குறித்தோ அவரின் தொன்மை குறித்தோ கேள்வி எழுப்பவில்லை. கபிலரின் ஞானம் கடவுளின் கொடை எனவும், கபிலரின் பிறப்பு தொன்மையானது எனினும் அவரது பிறப்பை அவன் அறிவான் எனவும் அம்மறைமம் கூறுகிறது. கபிலரையும், அவரின் ஞானத்தையும் பற்றிய இந்த மறைமத்தின் கண்ணோட்டம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் உள்ள சான்றுகளால் மெய்ப்பிக்கப்படுகிறது எனவும் இந்நூல்கள் கபிலரின் புகழை ஆர்ப்பாட்டமாகப் பாடுபவை என்பதோடு, எண்ணியத் தத்துவத்தின் அடிப்படைகளை வெகுவாகச் சார்ந்திருப்பவை எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார்.

 சுமிருதிகள் கபிலரின் மீது அளவற்ற மதிப்பு கொண்டவை என்பதையும், அவரின் போதனைகளைப் பெருமளவில் தாங்கியவை என்பதையும் சங்கரரும் அறிந்திருந்தார் என்கிறார் சட்டோபாத்தியாயா. மகாபாரதமும், புராணங்களும் எண்ணியத்தின் தொன்மையை மட்டுமின்றி ஆதிகாலத்தில் இத்தத்துவத்துக்கு இருந்த பிரமிக்கத்தக்க செல்வாக்கை ஐயத்திற்கிடமின்றி மெய்பிக்கவும் செய்கின்றன எனவும், இதன் தொன்மையும், மறைமங்களின் அடிப்படைகளுக்கு எதிரான இதன் தெளிவான பார்வையும் இதன் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத்தொகுப்பில் தேடவேண்டும் எனத் தற்கால அறிஞரில் சிலரைப் பேச வைத்துள்ளது எனவும், அக்கருத்து சரியானதுதான் எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். கடவுள் குறித்த கருத்து மெய்ப்பொருள் ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றது, தருக்கவியலின்படி வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது போன்ற கருத்துக்கள் எண்ணிய நாத்திகத்தில் இருப்பதாகவும், முழுமுதற் பொருளின் உள்ளார்ந்த இயக்கவிதிகளின்படி இவ்வுலகு உருவாயிற்று என்பதே உலகின் தோற்றத்துக்கும் அதன் மாற்றத்துக்கும் காரணமான விளக்கமாகும் எனவும், ஆதலால் கடவுளை உலகின் தோற்றத்திற்குக் காரணமாகக் கருதிடும் கேள்வியே இங்கு எழவில்லை எனவும் சாங்கியகாரிகைக்கு உரையெழுதிய வாசசுபதி மிசுராவும், மாதவரும் குறிப்பிட்டுள்ளனர் எனக்கூறுகிறார் சட்டோபாத்தியாயா.

 கபிலர் சடப்பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்தத் தரவுகள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி, சடப்பொருளின் இருப்பு, அதன் தன்னிறைவான தன்மை ஆகியவற்றில் அதன் இயல்புக்கும், இயங்கு நிலைக்கும் வேறெந்த புறக்காரணியும் இருக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். உலகத்தத்துவ வரலாற்றில் ஆதிப்பழமையானதும் நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்டதுமான நாத்திகத்தின் பிரதிநிதியாக மட்டும் எண்ணியம் விளங்கிடவில்லை. அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தின் முன் மாதிரியால் அமையப்பெற்றதுமாகும் என்கிறார் சட்டோபாத்தியாயா. ஆதி உலகின் ஆச்சரியத்துக்குரிய அறிவுலகச் சாதனைகளின் கூறுகளைக்கொண்டதாக எண்ணியத்தைக் குறிப்பிட மேலே சொல்லப்பட்ட அறிவியல் அடிப்படையிலான ஆராய்வுகளே போதுமானது என்கிறார் சட்டோபாத்தியாயா. இவை அனைத்தும் “இந்திய நாத்திகம்” என்ற நூலில் சட்டோபாத்தியாயா அவர்கள் கூறுபவையாகும்(1). கபிலரது எண்ணியச் சிந்தனையின் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத் தொகுப்பில் தேடவேண்டும் என்பதை சட்டோபாத்தியாயா உட்படப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே கபிலரது எண்ணியம், மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது என்பது மேலும் உறுதிப்படுகிறது.

சட்டோபாத்தியாயா – உலகாயதம் - எண்ணியம்:

 “இறைவனின் ஐந்தாவது அவதாரம் முனிவர்களில் முக்கியமானவரான கபிலர் என்பவராவார். அவர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தார்” எனப் பாகவதம் கூறுகிறது. எண்ணியத்தில் கடவுளுக்கு இடமில்லை எனினும் பாகவதம், கபிலரைக் கடவுளின் அவதாரமாகக் கூறுகிறது. கபிலர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக் கொடுத்தார் என பாகவதம் கூறுவதை, சாங்கியக்காரிகையும் கூறுகிறது. இந்த ‘அசுரி’ என்பதன் பொருள் அசுரனின் மகன் என்பதாகும். வேறொரு பழைய நூலில் பௌதாயனர் என்பவர், கபிலரே அசுரர் எனவும் பிற அசுரர்களைப்போல இவரும் தேவர்களை எதிர்த்துப்போரிட்டார் எனவும் கூறுகிறார். மேலும் அசுரர்களது கருத்துகளுக்கும் எண்ணியத்திற்கும் அடிப்படையான விடயங்களில் ஒற்றுமை உள்ளது. ஆரம்பத்தில் முழுவதும் நாத்திகவாதமாகவும், பொருள்முதல் வாதமாகவும் இருந்த எண்ணியம் காலப்போக்கில் ஆன்மீகமயமாக்கப்பட்டு கருத்துமுதல்வாதம் ஊட்டப்பட்டு இறுதியில் மூல எண்ணியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டுள்ளது(2).

  கபிலரின் எண்ணியம் மிகவும் புகழ் பெற்றதாக இருந்ததால் கபிலர் கடவுளின் அவதாரமாக ஆக்கப்பட்டார். கபிலர் அசுரர் எனவும் அவர் அசுரர்களுக்கு எண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தார் எனவும் பண்டைய வைதீக நூல்கள் கூறுகின்றன. அதன்மூலம் அவர் ஆரியர் அல்லர் என்பதை பழைய வைதீக நூல்கள் உறுதி செய்கின்றன. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் தனது “உலகாயதம்” (தமிழில் எசு. தோதாத்ரி) என்ற நூலில் எண்ணியம் குறித்து 475 முதல் 589 வரையான 115 பக்கங்களில் பத்து தலைப்புகளில் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதன் சுருக்கத்தை அதே பத்து தலைப்புகளில் இங்கு காண்போம். அதன் தொடக்கத்தில், பெரும்பாலான எண்ணிய நூல்கள் வழக்கொழிந்துவிட்டன எனவும் எண்ணியத்தில் காணாமல்போன விடயங்களைக் கற்பனையாகத்தான் முழுமைப்படுத்த வேண்டியதுள்ளது எனவும் இது ஒரு சிக்கலான மீட்டுருவாக்கம் எனினும் இதனை மகிழ்ந்து ஏற்க நாம் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ஏனெனில் எண்ணியம் ஆக்கபூர்வமான, துணிச்சலான தத்துவம் எனவும் கிருசுண சந்திர பட்டார்ச்சார்யா கூறியதைக் குறிப்பிடுகிறார்(3).

 தமிழரான தொல்கபிலரால் உருவாக்கப்பட்ட எண்ணியம் என்கிற சாங்கியம் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குரியது என்பதைப் பற்றியும் தொல்காப்பியத்திலும் பிற தமிழ் இலக்கியங்களிலும் அவற்றின் மூலக்கருத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன என்பதைப் பற்றியும் வட இந்திய அறிஞர்களான சட்டோபாத்தியாயா போன்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனை அறிந்திருந்தால் எண்ணியம் குறித்தான பல மாறுபட்ட கருத்துக்களுக்கும், முரண்பாடுகளுக்கும் மிக எளிதாக முடிவு கண்டிருக்க முடியும் என்பதை எண்ணியம் பற்றிய சட்டோபாத்தியாயா போன்ற மிகச்சிறந்த வடஇந்திய அறிஞர்களின் கருத்துக்களிலும் காணமுடிகிறது.

1.தோன்றியமும் எண்ணியமும்: சட்டோபாத்தியாயா.

 தோன்றியம்(தாந்திரீகம்) மிகப்பழமையானது. அதன் தோற்றத்தைச் சிந்துவெளி நாகரீகத்திலிருந்தே காண முடியும். தோன்றியத்தின் அடிப்படைக் கொள்கைகள், எண்ணியக்கொள்கைகள் போலவே உள்ளன என்பதைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது. கபிலரின் சாங்கிய தரிசனம் ‘தோன்றியம்’ என அழைக்கப்படுகிறது என சங்கர் பலஇடங்களில் கூறியுள்ளார். மேலும் சாங்கிய காரிகையின் ஆசிரியர் தந்திரம் என்ற சொல்லைச் சாங்கிய தரிசனத்தைக் குறிப்பதாகவே கொண்டுள்ளார். வேறு எதற்கும் தந்திரம் என்ற பெயர் இருந்ததில்லை. மேலும் இன்னொரு ஆதாரம் கபிலதரிசனம் என்பதைத் தோன்றியம் என்னும் பொருளில் தந்திரம் என சங்கரர் அழைத்தார். இது பிரம்ம சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரம்மசூத்திரத்தில் தோன்றியத்தை நேரடியாக மறுக்கும் சூத்திரம் எதுவுமில்லை. பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் எண்ணியத்தை விரிவாக மறுத்ததால் தோன்றியத்தை மறுக்க வேண்டியதில்லை எனக் கருதியிருக்கலாம். அவருடைய காலத்தில் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமற்றதாக இருந்திருக்கலாம்.

 உலகாயதம் என்பது தோன்றியத்தில் உள்ள நம்பிக்கைகள் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் என்றால் மூலஎண்ணியத்தை இந்தியத்தத்துவ வரலாற்றில் உலகாயத்தின் வளர்ச்சி என்றே கூறலாம். எண்ணியத்திற்கும் உலகாயத்திற்கும் எந்தவித அடிப்படையான வேறுபாடுகளும் இல்லை என சைன ஆசிரியர் சிலங்கா கருதுகிறார். மூல எண்ணியம் சமரசம் செய்துகொள்ளாத நாத்திகவாதமாகவும், பொருள்முதல் வாதமாகவும் இருந்தது என்பது இதன்பொருள். மூல எண்ணியத்தின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இந்தியத்தத்துவ வரலாற்றில் ஈடிணையற்ற சிறப்பைத்தந்தது. இதன் காரணமாகத்தான் நமது தத்துவப் பாரம்பரியத்திற்கு ஆக்கபூர்வமான அறிவியலுக்கான அடிப்படைக் கருத்துக்களை எண்ணியத்தால் கொடுக்க முடிந்தது. இவற்றில் மிக முக்கியமானவை பொருள் பற்றிய கோட்பாடு, காரணகாரியக்கொள்கை, அறிவுக்கொள்கை, பரிணாமக்கொள்கை ஆகியனவாம். “சிந்தனை வரலாற்றில் எண்ணியம் சிறப்பான கவனத்திற்குரியது. சாங்கிய தரிசனம் உலகப்பரிணாமச் செயல்முறை பற்றிய, தெளிவான விரிவான கருத்தைக்கொண்டுள்ளது” என “சீல்” அவர்கள் கூறுகிறார்(4).

2.மூல எண்ணியச் சிக்கல்: சட்டோபாத்தியாயா.

 கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து எண்ணியம் இந்நாட்டில் பரவலான செல்வாக்கைப் பெற்றிருந்தது என்பதைக் கார்பே அவர்களின் கூற்றிலிருந்து அறியலாம். “கற்பனை நெடுங்கதையான மகாபாரதம் தொடங்கி சட்ட நூலான மனுநீதி சாத்திரம் வரை உள்ள நூல்கள், புராண இதிகாசங்கள் ஆகியன உள்ளிட்ட இந்திய இலக்கியம் முழுவதிலும் எண்ணியக்கொள்கை பரவி வழிகிறது” என்கிறார் கார்பே(5). புகழ்பெற்ற அறிஞர் பலரும் எண்ணியத்தை ஆதரிக்கின்றனர் என்பதை மீண்டும் மீண்டும் சங்கரர் ஒப்புக்கொள்கிறார். எண்ணியத்தை நேரடியாக விவரிக்கும் மூல நூல்கள் “சாங்கிய காரிகை”, “சாங்கிய சூத்திரம்” ஆகிய இரண்டுமாகும். கார்பேயின் கருத்துப்படி “சாங்கிய சூத்திரம்” கி.பி. 1400க்குப் பிற்பட்டது. தாசுகுப்தா இதனை 500 ஆண்டுகள் முன்கொண்டு போகிறார். எண்ணியம் பற்றிய ஆரம்பகால நூல்கள் பலவற்றைக் குறிப்பிடும் குணரத்னா, சூத்திரங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. எண்ணியம், வேதாந்தம் ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை அகற்றுவதற்கு இடைவிடாத முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் காணும்பொழுது இச்சூத்திரங்களை நாம் ஆதாரமாகக் கொள்ளமுடியாது. இதனோடு ஒப்பிடும்பொழுது ஈசுவர கிருசுணரின் சாங்கியக் காரிகை காலத்தால் முற்பட்டதாகும். இதன் காலம் கி.பி. 500 என கார்பேயும், கி.பி. 200 என தாசுகுப்தாவும் கூறுகின்றனர்.

 சாங்கிய காரிகையிலிருந்து உண்மையான மூல எண்ணியத்தைக் கண்டுபிடிப்பது இயலாது என அறிஞர்கள் கருதுகின்றனர். ஈசுவர கிருசுணர் கூறும் எண்ணியத்தைச் சரகர்(கி.பி. 87) குறிப்பிடவில்லை. மகாபாரதத்தின் சில பகுதிகளில் எண்ணியம் இடம்பெறுவதை அவர் குறிப்பிடுகிறார். எனவே ஈசுவர கிருசுணரின் எண்ணியம் காலத்தால் பிற்பட்டது. அது சரகர் காலத்தில் இல்லை. திபெத்திய ஆதாரங்களைக் கொண்டு, விந்தியவாசி(ஈசுவர கிருசுணர்) எண்ணியத்தினை அவருக்கு ஏற்றபடி திருத்தினார் என்று வாசிலீப் கூறுகிறார். ஆக வேதாந்தக் கருத்துக்களை இந்நூலில் சேர்க்க முயன்ற போக்கு மிகத்தெளிவாகக் காணப்படுகிறது. சாங்கிய காரிகைக்கு உரை எழுதியவர்கள் கௌடபாதரும், வாசசுபதி மிசரரும் ஆவர். கௌடபாதர் மாண்டூக்ய மறைமத்திற்கு உரை எழுதிய சிறந்த வேதாந்தி எனினும் காரிகைக்கு அவர் எழுதிய உரை வேதாந்தச் சார்பு உள்ளதாக இருக்கிறது. வாசசுபதி மிசரரும் எண்ணியத்தில் உள்ள நாத்திகவாதத்தை ஆத்திகவாதமாக மாற்ற வேண்டுமென்றே விரும்பினார். ஆகவே எண்ணியத்தை உறுதியாகப் பின்பற்றுபவர் எழுதிய உரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை(6).

3.மூல எண்ணியத்தின் ஆதாரங்கள்: சட்டோபாத்தியாயா.

  எண்ணியம் பற்றிய பழைய நூல்களில் சாங்கிய காரிகை நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்ட சசுதி தந்திரம் என்பதும் ஒன்றாகும். ஆனால் சசுதி தந்திரம் என்பது எண்ணிய நூலன்று என கோல்புரூக் கூறுகிறார். இந்நூல் 60 விடயங்களைக்கொண்டது என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால் வைதீக மரபுப்படி எண்ணியம் என்பது 25 விடயங்களைக் கொண்டது ஆகும்(ஆனால் தமிழ் மரபுப்படி எண்ணியம் என்பது 24 விடயங்களை மட்டுமே கொண்டது). சரகரால் எழுதப்பட்ட மருத்துவ நூலில் எண்ணியம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. சரகர் விவரிக்கும் எண்ணியம் ஒரு ஆதிகாலப்பிரிவு என தாசுகுப்தா கருதினார். குணரத்னா அவர்கள் மூல எண்ணியம்(மௌலிக்கிய சாங்கியம்), பிந்தைய எண்ணியம்(உத்தர சாங்கியம்) என இரு பிரிவுகளைக் குறிப்பிடுகிறார். இதில் சரகர் எழுதியது மூல எண்ணியம் ஆகும். மகாபாரதத்தில் எண்ணியம் பற்றி மிதிலையின் அரசரான சனகருக்குப் போதிக்கப்பட்டவை தாசுகுப்தாவின் கருத்துப்படி சரகரின் மூல எண்ணியத்தோடு ஒத்துள்ளது. எண்ணியம் மிகப்பழமையானது. பண்டைக்காலம் தொட்டே அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.

 மகாபாரதத்தில் எண்ணியம், ஓகம்(யோகம்) ஆகிய இரண்டும் நிரந்தரமான தத்துவங்கள் எனக் கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் “எண்ணியம், ஓகம், உலகாயதம்” ஆகிய மூன்று தத்துவங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கபிலர் என்பதிலிருந்துதான் புத்தர் பிறந்த இடத்தின் பெயரான ‘கபிலவசுது’ என்பது தோன்றியிருக்கவேண்டும் என்ற கருத்தினை சாத்திரி ஆதரித்தார். பௌத்தமதக் கோட்பாடுகள் எண்ணியத்திலிருந்து தோன்றியவை என அசுவகோசர் கூறியுள்ளார். புத்தரின் ஆசிரியர்களான ஆதாரகலமா, உத்தகா ஆகியோர் எண்ணியக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள். இவைகள் எண்ணியத் தத்துவம் புத்தருக்கு முந்தையவை என்பதை நிரூபிக்கின்றன. இவைகளைக்கொண்டு எண்ணியம் என்பது இந்தியத் தத்துவங்களில் மிகப்பழமையானது எனக் கார்பே கூறுகிறார்(7).       

4.பிரம்ம சூத்திரமும் எண்ணியமும்: சட்டோபாத்தியாயா.

  பிரம்ம சூத்திரம் என்பது மறைமங்களில்(உபநிடதங்களில்) உள்ள தத்துவக் கருத்துக்களை முதன்முறையாக ஒழுங்கு செய்த ஒரு முயற்சியாகும். இதில் 555 சூத்திரங்கள் உள்ளன. இந்நூல் நான்கு அதிகாரங்களும், அதிகாரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளையும் கொண்டுள்ளது. தாசுகுப்தாவின் கருத்துப்படி இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இந்தச்சூத்திரங்களின் பின்னால் தர்க்கபதம் என்ற பௌத்தத்தின் அறிவியல் பிரிவை மறுக்கும் பகுதி உள்ளது. இந்நூலின் சூத்திரங்களை உரையாசிரியரின் துணையின்றி புரிந்துகொள்ள முடியாது. காலத்தால் முற்பட்ட இந்நூலின் சிறந்த உரையாசிரியர் ஆதி சங்கரர் ஆவார். சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தவர் என்பதால் சங்கரருக்கும் இந்நூலுக்கும் இடையே உள்ள கால இடைவெளி மிகவும் அதிகமாகும். அடுத்த சிறந்த உரையாசிரியர் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இராமானுசர் ஆவார். இவர்கள் இருவருக்குமிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அது பொது அமைப்பிற்குள் இருக்கும் வேறுபாடுதான் எனலாம்.

 பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர்கள் எண்ணியத்தை எதிர்ப்பதில் முக்கியக் கவனம் செலுத்தினர். எண்ணியத்தை வேதாந்தத்திற்கு எதிராகக் கருதினர். ஆகவே எண்ணியத் தத்துவத்தை மறுக்க பிரம்ம சூத்திரத்தில் சொல்லப்படும் கருத்துக்களைக்கொண்டு, மூல எண்ணியத்தினை நாம் அறிந்துகொள்ள முடியும். அவைபோக மகாபாரதம், சரக சம்கிதை, பிந்தைய கால மறைமங்கள், சாங்கிய காரிகை ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலமும் மூல எண்ணியம் எது எனக் கண்டறியலாம். எண்ணியத்தில் வைதீக மறுப்பு இருந்ததால்தான், பிரம்மசூத்திரத்தை எழுதிய பாதராயணர் எண்ணியத் தத்துவத்தை எதிர்த்து வாதிட்டார் எனலாம்(8).

5.கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்: சட்டோபாத்தியாயா.

 எண்ணியத்தினை பாதராயணர் மறுத்தது என்பது தர்க்க முறையிலான ஒரு தேவையாகும். பிரம்ம சூத்திரத்தின்படி எண்ணியம் ‘முதன்மைப்பொருள் காரணவாதம்’ எனப்படுகிறது. எண்ணியத்தில் முதன்மைப்பொருள் என்பது ஆதிமூலப்பொருள் என்னும் முதல் காரணம் ஆகும். ஆனால் வேதாந்தத்தில் ‘பிரம்ம காரணவாதம்’ என்பது பிரம்மம்தான் முதல் காரணம் என்பதாகும். பிரம்ம சூத்திரத்தின் பிரம்ம காரண வாதத்திற்கும், எண்ணியத்தின் முதன்மைப்பொருள் காரணவாதத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும். அதாவது உணர்வு என்பதற்கும் சடப்பொருள் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு எனலாம்.

 பிரம்ம சூத்திரத்தின் முதல் நான்கு சூத்திரங்களில் பிரம்மத்தின் இயல்பு, வேதாந்த நூல்களின் இயல்பு ஆகியவற்றை ஆசிரியர் விளக்குகிறார். அடுத்த ஏழு சூத்திரங்களில் பிரம்மம் என்பது சித்துப்பொருள் எனவும், இதனை எண்ணியத்தின் அசித்துப்பொருளான முதன்மைப்பொருளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது எனவும் விளக்குகிறார். இந்த ஏழு சூத்திரங்கள் தவிர முதலாவது அதிகாரத்தின் நான்காவது பிரிவு மற்றும் இரண்டாவது பிரிவுகளின் ஆரம்பப் பகுதிகள் ஆகியவற்றில் எண்ணியம் மறுக்கப்படுகிறது. எண்ணிக்கை அடிப்படையில் 555 சூத்திரங்களில் குறைந்த பட்சம் 60 சூத்திரங்களில் எண்ணியத்தின் முதன்மைப்பொருள்கொள்கை மறுக்கப்படுகிறது. 43 சூத்திரங்களில்தான் மற்ற எதிர் தத்துவங்கள் மறுக்கப்படுகின்றன. இதில் சைனக் கருத்துக்களுக்கு எதிராக நான்கும், பௌத்தக்கருத்துக்களுக்கு எதிராக பதினேழும் உள்ளன.

  பிரம்ம சூத்திரம் முழுவதிலும் எவ்விடத்திலும் உலகாயதக் கண்ணோட்டம் மறுக்கப்படவில்லை. இதற்குக்காரணம் என்னவென்றால் பிரம்ம சூத்திர ஆசிரியருக்கு உலகாயதத்தை மறுக்க, எண்ணியத்தை மறுத்தாலே போதும் என்ற கண்ணோட்டம் இருந்தது. பிரம்ம சூத்திரம் முதல்முதலாக எண்ணியத்தைக் குறிப்பிடும்பொழுது உலகாயதப் பொருள்முதல்வாதத்தையும் குறிப்பிடுகிறது. எண்ணியத்தில் உள்ள முதன்மைப்பொருள் என்பது சடப்பொருள்தான் என்று சங்கர் விரிவாக விவாதித்துள்ளார். இராமனுசர் ‘புலனறிவற்ற சடமான முதன்மைப் பொருளிற்குச் சிந்திக்கும் திறனில்லை’ என்கிறார். ஆகவே எண்ணியம் என்பது உலகாயதப் பொருள்முதல்வாதத்தின் ஒரு வடிவமாக இருந்ததால்தான் வேதாந்திகள் அதனை வலுவாக எதிர்த்தார்கள்(9).

6.வேத எதிர்ப்பின் தோற்றம்: சட்டோபாத்தியாயா.

 இன்று எண்ணியம் வேதத்தோடு இணைக்கப்பட்ட ஆத்திகத் தத்துவமாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பிரம்மசூத்திரத்தின் நிலைபாடாக இருந்திருக்க முடியாது. அதன்படி எண்ணியம் என்பது அவைதீக அல்லது எதிர்வேத போக்குகளைக்கொண்ட வலுவான தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரத்தில் எண்ணியத்தை மறுக்கும் அறுபது சூத்திரங்களில் முப்பத்தி ஏழு சூத்திரங்கள் இதன் எதிர் வைதீகத் தன்மையைக் கூறுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளன. எண்ணியர்களது உணர்வில்லா முதன்மைப்பொருள் என்பதற்கு வேதாந்த நூல்களில் இடமில்லை என்கிறார் சங்கரர். இந்த விடயங்களில் இராமனுசர் சங்கரரிடமிருந்து வேறுபடவில்லை. பிரம்ம சூத்திர நிலைப்பாட்டின்படி எண்ணியத்தில் உள்ள அவைதீகக் கூறுகள் முழுமையானவை. சங்கரர் எண்ணியக்கொள்கைகளை வேதங்களுக்கு எதிரானவை என்று கூறுகிறார். வேதங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள கபில சுமிருதியைப் புறக்கணிக்க வேண்டும் என்று இராமனுசர் கூறுகிறார். மூல எண்ணியம் வேதங்களுக்கு எதிரானது என்ற உண்மை வலுவாக உள்ளது. எனவே வைதீகப்போக்கின் முக்கியமான பிரதிநிதிகளான சங்கரர், இராமானுசர் ஆகியோர் எண்ணியத்தை வைதீகத்துக்கு எதிரான ஒரு பலமிக்க தத்துவமாகவே கண்டனர்.

 எண்ணியமும், ஓகமும் வேதங்களைச்சாராத மிகப்பழங்காலத்தைச் சார்ந்தவையாகும். “பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், இந்த உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்புப் பற்றியும் அறிவியல் கண்ணோட்டத்தில் மட்டுமே விளக்க முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் இதனைப்புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் துவக்கத்தினைப் புரிந்துகொள்ளமுடியும். எண்ணியத்தத்துவம் நாத்திகவாதம் மட்டுமன்று, வேதங்களுக்கு எதிரானதும்கூட. நமக்குக் கிடைத்துள்ள எண்ணிய நூல்களில், சுருதிகளிலிருந்து காட்டப்படும் மேற்கோள்கள் அனைத்தும் பிந்தைய காலத்தவை. இதனுடன் இணைக்கப்பட்ட எல்லா வேதக்கூறுகளையும் நாம் அகற்றிவிட்டாலும் மூலஎண்ணியமானது எந்தப்பாதிப்பிற்கும் உள்ளாகாது. ஆரம்பத்திலிருந்து இன்றுவரை எண்ணியத்தத்துவமானது அதன் உள்ளடக்கத்தில் வேதங்களைச்சாராமலும், பிராமணிய பாரம்பரியத்திற்கு புறமாகவும் இருந்துள்ளது” என்கிறார் கார்பே(10). மேலும் மகாபாரதத்தில் எண்ணியம், ஓகம் ஆகியன வேதங்களில் இருந்து வேறாக இருந்தன என்பதைச்சுட்டிக்காட்டுகிறார் கார்பே. எண்ணியத்தின் பிறப்பிடமானது தாய்வழி உரிமை, தோன்றியம் ஆகியன வலுவாகப் பரவியிருந்த நிலப்பகுதியாகும். எனவே எண்ணியம் தோன்றியத்தின் வளர்ச்சியாகும் என்கிறார் சட்டோபாத்தியாயா(11). எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்வதற்கு, எண்ணியத்தின் தோற்றம் பற்றிய கார்பே அவர்களின் கருத்துக்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. தொல்கபிலர் எண்ணியத்தின் மூலவர் என்பதோடு மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபிற்கு ஒரு தத்துவ அடித்தளத்தை வழங்கியவரும், அதன் அறிவியல் மரபிற்கு வித்திட்டவரும் ஆவார்.

பார்வை:

1. இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.

2. உலகாயதம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.

  1.  “ “ “ 475
  2. “ “ “ 476-480

5 “ “ “ 480; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. 189.

6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484

  1.  “ “ “ 484-486
  2.  “ “ “ 486-489
  3.  “ “ “ 489-492
  4.  “ “ “ 498, GARBE, R.ANIRUDDHA’S COMMENTARY ON THE ORIGINAL PARTS OF VEDANTIN MAHADEVA’S COMMENTARY ON THE SNKHYA SUTRAS. CALCUTTA, 1892.

11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8

தொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா

7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.

 முதன்மைப்பொருள் என்பதன் பொருள் முதன்மையானது, முக்கியமானது என்பதாகும். மேலும் ‘முதல்நிலைப்பொருள்’, ‘முதல் முதலான பொருள்’, ‘பரிணமிக்காத நிலையில் உள்ள பொருள்’ போன்ற பொருள்களைக் கொண்டதாகும். எண்ணியக்கொள்கைப்படி முதல்நிலைப் பொருள் இறுதியான உண்மையாகும் அல்லது உலகக் காரணமாகும். முதன்மைப்பொருள் என்பதற்கு மற்றொரு சொல் பிரகிருதி அதாவது மூலப்பிரகிருதி அல்லது வேர்ப்பிரகிருதி என்பதாகும். பிரகிருதி தவிர புருடன் கொள்கையை எண்ணியம் ஏற்றுக்கொண்டுள்ளது (தமிழ் மூலங்களில் புருடன் இல்லை. ஆகவே மூல எண்ணியம் புருடன் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டோபாத்தியாயா அவர்களின் இக்கருத்து தமிழ் மூலங்களை அறியாததால் ஏற்பட்ட தவறாகும்). புருடன் என்பது பிரகிருதியின் பெருக்கம் எனப்படுகிறது. புருடன் என்பது ஆணைக்குறிக்கிறது. எண்ணியத்தில் புருடன் இரண்டாவது முக்கியமற்ற நிலையில் உள்ளது. பிற்பட்ட எண்ணிய வாதிகள் ஆன்மக்கருத்துக்களை(புருடன் போன்ற) வேதங்களிலிருந்து கடன்வாங்கி எண்ணியத்தில் புகுத்த முயன்றனர். ஈசுவர கிருசுணரும் அதைத்தான் செய்தார். ஆனால் வேதங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட புருடக் கோட்பாடு(ஆன்மக்கோட்பாடு) எண்ணிய அடிப்படைக் கருத்துக்களோடு ஒத்திசையவில்லை.

 Deviprasadமுதன்மைப்பொருள், பரிணாமம், பல புருடர்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிந்தைய எண்ணியவாதிகள் புருடன் என்பதைச் சுத்த உணர்வு எனக்கூறினார்கள். ஆனால் காரிகையின் ஆசிரியராலும் முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கை ஆகியவைகளை விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனவே புருடன் குறித்த அவருடைய கொள்கை சங்கரருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே காரிகைக்கும் அப்பால், முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையில் மூல எண்ணியத்தை மறுபடைப்பாக்கம் செய்ய வேண்டும். புருடர்கள் பலர் என்பது மூல எண்ணியத்தின் பண்பாகும். புருடன் என்பது பிறப்பு, இறப்பு, புலன் உறுப்புகள் ஆகியன உள்ள தனி மனிதர்களைக் குறிக்கும் என்ற பொதுவான நிலைபாடு காரிகையில் உள்ளது.

 புருடர்கள் பலவாக இருப்பதற்கு உலகம் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எண்ணியத்தின்படி காரியம் என்பது உண்மையானது. காரியம் என்பது பரிணாமவாதம் என்பதால், முதன்மைப்பொருளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவான உலகமும் உண்மை என ஆகிறது. இவை வேதாந்த நிலைபாட்டிற்கு நேர் எதிரானது. வேதாந்தத்தின்படி காரியமும், உலகமும் உண்மையாக இருக்க முடியாது. காரிகை ஆசிரியர் எண்ணிய தத்துவத்தில் வேதாந்தக் கருத்தான புருடன் என்பதைப் பின்புறமாக நுழைத்தபோது, இந்தச்சிக்கலை விளக்குவதற்கு எல்லாவகையான முரண்பாடுகளுக்கும் ஆளானார்.

 எண்ணியவாதிகளின் கருத்துப்படி இயற்கைவிதிகளின் காரணமாக முதல்நிலைப்பொருள் மாறுதல் அடைந்து உலகம் தோன்றியது. இதில் ஆன்மீகக் கூறுகளுக்கு இடமில்லை. மூல எண்ணியமானது முதன்மைப் பொருள்கொள்கை எனில் அது இயல்புவாதம் ஆகும். இயல்புவாதக்கொள்கை என்பது இயற்கையின் விதிக்கொள்கை எனப்படும். புல், மூலிகைகள், தண்ணீர் போன்றவை எந்த வகையான காரணமும் இன்றி அவற்றின் இயற்கை காரணமாகப் பசுவின் மூலம் பாலாக மாறுகின்றன. புல் போன்றவை மாறுவது அவற்றின் இயல்பு அல்லது இயற்கை என்றே கொள்ள வேன்டும். எனவே முதன்மைப்பொருள் மாறுவதும் இவ்வாறுதான் என ஊகிக்கலாம். இயல்புக்கொள்கையின்படி பாலுக்கான காரணம் புல்மட்டும்தான் என்று ஆகிவிடாது. அது பசுவால் உண்ணப்பட்ட புல் என்ற இயற்கையின் சிக்கலான செயல்முறையாகும். முதன்மைப்பொருள் வாதம் அல்லது பொருள்காரண வாதம் என்ற எண்ணியக் கொள்கை எண்ணிய வாதிகளை இயற்கை விதிகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தின் முன்னோடியாக ஆக்கியது.

 சரகரது நூல் காரிகையைவிடப் பழமையானது. இதில் எண்ணியத்தை இருவேறு கோணங்களில் காணும்போக்கு இருக்கிறது. முதலாவது கருத்துப்படி புருடன் அல்லது உணர்வு(சேதனம்) ஐந்து பொருள்சார்ந்த மூலகங்களுக்கும் சமமாக உள்ளது. அதாவது புருடனும் ஒரு மூலகம் தான். இங்கு பொருள்முதல்வாதத்தன்மை மிகத்தெளிவாக உள்ளது. இரண்டாவது கருத்துப்படி மனது உட்பட 24 கூறுகள் மட்டுமே உள்ளது. இதில் ஆன்மீகக் கூறுகள் எவற்றுக்கும் இடமில்லை. புருடன் என்ற கருத்தாக்கம் இதில் இடம்பெறவில்லை. ஆகவே இது அதிக அளவில் பொருள்முதல்வாதத் தத்துவமாக உள்ளது. ஆகவே சரகர் 24 கூறுகளை மட்டுமே குறிப்பிட, ஈசுவர கிருசுணர் 25 கூறுகளைக் குறிப்பிடுகிறார். புருடன் 25ஆவது கூறாக உள்ளது(தமிழ் மரபுப்படி 24 கூறுகள் மட்டுமே உள்ளது என புறநானூறு கூறுகிறது. அதில் புருடன் இல்லை). மகாபாரதத்தில் மூன்று போக்குகள் உள்ளன. அவை 24 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். 25 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள், 26 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாவதில் புருடன் இல்லை. இரண்டாவதில் புருடன் உள்ளது. மூன்றாவதில் புருடனுடன் பரம்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஆகவே சரகசம்கிதை, மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள சான்றுகளின்படி காரிகையில் இடம்பெறும் எண்ணியத்தைவிடப் பழமையான எண்ணியம் இருப்பது தெரிகிறது. இவற்றில் புருடன் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனக்குறிப்பிடுவது ஒன்று ஈசுவர கிருசுணரது கண்டுபிடிப்பு அல்லது இதனை அவர் வேறு இடத்திலிருந்து கடன் வாங்கினார் எனக் கூறலாம். புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனப்புரிந்து கொள்வது வேதாந்தச்சிந்தனையாகும்.

 பெல்வார்க்கர், இரானடே ஆகியோர் வேத இலக்கியங்களின் மிகப் பிந்தைய பகுதிகளில் கூட புருடன் என்பது மனிதனைக் குறிப்பதாக இருந்ததைத் தெரிவிக்கின்றனர். புருடன் ஆரம்பத்தில் மனிதனுக்குரிய உடல் அமைப்புடன் காணப்பட்டான். அதற்கு வேறு எந்த வகையான ஆன்மீகப்பொருளும் இல்லை. இரிக் வேதத்தின் பிந்தைய காலத்தில்தான் புருடன் என்பதை உலகத் தோற்றத்திற்குக் காரணமான அடிப்படையாக உயர்த்தும் போக்கு தோன்றுகிறது. புருடனைச் சுத்த உணர்வாகக் காண்பதற்கு முன் அதில் இடம்பெற்றுள்ள மானுட விடயங்கள் அகற்றப்பட்டன. அதன்பின் அதனைச் சுத்த உணர்வாக அல்லது சுயமாகக் காண்பது எளிதாக ஆகியது. இவ்விதமாக வேத பாரம்பாரியத்தில் புருடன் என்ற கருத்தாக்கம் வளர்ந்தது எனலாம். இவை சட்டோபாத்தியாயா கூறுபவையாகும்(12). தமிழ் மரபுப்படி, புருடன் இல்லாத 24 கூறுகளே உண்டு. சரக சம்கிதையும் தமிழ் மரபுப்படியான புருடன் இல்லாத 24 கூறுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே மூல எண்ணியத்தில் இல்லாதிருந்த, வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை, வடமரபில் வலியச்சேர்த்து எண்ணியத்தை ஆன்மீகமயமாக்க முயன்றதே பல முரண்பாடுகளுக்குக் காரணமாகும். சட்டோபாத்தியாயா அவர்கள் வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், பல புருடக்கொள்கை மூல எண்ணியத்தில் இருந்ததாகக் கருதுகிறார். தமிழ் மூலங்களை அறிந்திருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

8.எண்ணியத்தின் தோற்றம்: சட்டோபாத்தியாயா.

 மூல எண்ணியத்தின் தோற்றத்தினை மறைமங்களில் காணலாம் என ஓல்டன்பர்க் போன்றவர்கள் கருதினர். சுதா மறைமம், சுவேதசுவதார மறைமம், பிரசன்ன மறைமம் போன்ற சிலவற்றில் எண்ணியத்திற்கே உரித்தானக் கலைச்சொற்களும், எண்ணியத்திற்கே உரித்தான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றை எண்ணியத்தின் அடிப்படைகள் எனக் கருத இயலாது. இந்த மறைமங்களின் உண்மையான நோக்கம் மூல எண்ணியத்தின் முதன்மைப்பொருள் முக்கியமானதல்ல என்றும், அது மாயை என்றும் காட்டுவதாகும். எனவே மறைமங்களில் எண்ணியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவது அதனை மறுப்பதற்காகவே ஆகும். மேலும் எண்ணியத்தினை மேற்கோளாகக் காட்டாமல் வேதாந்தத்தினை விளக்கமுடியாது. இந்த மறைமங்களில் எண்ணியத்தினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தம் விளக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தினை பாதராயணர், சங்கரர் போன்ற வைதீக தத்துவவாதிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே மறைமங்களில் மூலஎண்ணியம் இடம்பெறுகிறது என்று ஓல்டன்பர்க் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.

 சாந்தோக்ய மறைமத்தில் சுவேதகேது ஆருண்யா என்பவன் தனது தந்தையான உத்தாலக ஆருணியிடமிருந்து உயர்ந்த ஞானம் பெறும் முறையை கற்றுக்கொள்ளும் கதையில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வருகின்றன. இதனை எண்ணியத்திற்கு முன்னோடி என சாகோபி கூறுகிறார். இக்கதையில் எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லது ஆதாரம் என்பது சத் அல்லது இருப்பு எனச்சொல்லப்படுகிறது. இந்த மறைமப்பகுதியில் வெப்பம், தண்ணீர், உணவு என்ற மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை இருப்பின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை. அவை இருப்பிலிருந்து தோன்றுபவையாகக் கூறப்படுகின்றன. “எல்லாப் பொருள்களுக்கும் இருப்புதான் வேர், இருப்புதான் வீடு, இருப்புதான் ஆதாரம். அதுதான் சிறந்த சாராம்சம். அதுதான் எதார்த்தம்(சத்தியம்), அதுதான் ஆத்மா, அதுதான் நீ.” என சாந்தோக்ய மறைமம் முடிகிறது. ஆகவே எண்ணியத்தின் முதல்நிலைப்பொருளும், சாந்தோக்ய மறைமத்தின் இருப்பும் வேறுவேறு ஆகும். அவை வேறுவேறு உலகக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் சாந்தோக்ய மறைமத்தில் பொருள்முதல் வாதத்தின் தொன்மையான தடயங்கள் உள்ளன. அந்தப் பழங்காலப் பொருள்முதல் வாதத்தின் சிதைவிலிருந்துதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவானது என்பதை இந்த மறைமக்கதை காட்டுகிறது. மறைமங்களில் காணப்படும் பழங்காலப் பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் மூல எண்ணியத்தைப்போன்று இருந்தது. ஆனால் அதனை எண்ணியத்தின் முன்னோடி என நாம் கருத முடியாது(13). ஆகவே மூல எண்ணியம் மறைமங்களுக்கு முற்பட்டது.

9.எண்ணியமும், ஓகமும்: சட்டோபாத்தியாயா.

 வேத நூல்களில் ஓகம் என்பது ஏரில் பூட்டுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மிகப்பழங்காலத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகப் பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகள் அல்லது பயிற்சிகளைக்குறித்தது. ஓகம், எண்ணியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒரு பண்டைய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இடையே அத்தொடர்பு விடுபட்டுவிட்டது என்பதும், பண்டைய தொடர்பு பிந்தைய காலத்தில் எண்ணிய ஓகமாக உருவானது என்பதும் ஒரு ஊகம்தான் எனவும், இந்த ஊகம் உண்மையெனில் ஓகத்தின் தோற்றத்திலிருந்து எண்ணியத்தின் தொடக்கத்தினை நாம் கண்டுபிடிக்க இயலும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா.

 பதஞ்சலி என்பவர் ஓக சூத்திரத்தை எழுதியவர் எனக் கருதப்படுகிறார். “எண்ணியத்தில் பதஞ்சலியின் பிரிவு என்பது ஓகத்தின் கருப்பொருளாக விளங்குகிறது. பதஞ்சலிதான் பல்வேறு ஓக முறைகளை ஒன்று சேர்த்து எண்ணியத்தின் இயக்கமறுப்புத் தன்மையுடன் இணைத்தார். இன்றைய வடிவமுள்ளதாக ஓகத்தினை மாற்றியமைத்தார்” என்கிறார் தாசுகுப்தா, பதஞ்சலியின் உரை நூலான “வியாசபாசியம்” எழுதிய வாசசுபதியும், விஞ்ஞானபிக்சுவும், பதஞ்சலி ஓகத்தினை உருவாக்கியவர் இல்லையென்றும் அதனைப் பதிப்பித்தவர் என்றும் கூறுகிறார்கள். பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் கடவுட் கோட்பாடு செயற்கையாக அறிமுகம் செய்யப்பட்டது எனவும், ஓக சூத்திரத்தில் கடவுளைப்பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன எனவும் ஓகத்தின் உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றிற்கு இது முரண்பட்டு இருக்கிறது எனவும் கூறுகிறார் கார்பே.

 மேலும் பண்டைய ஓக கொள்கையின்படி, கடவுள் உலகத்தினை படைப்பதுமில்லை; அதனை ஆள்வதுமில்லை; அவர் மனிதனது செயல்களுக்கு பரிசளிப்பதுமில்லை; தண்டனை கொடுப்பதுமில்லை; மனிதன் தனது இறுதி இலட்சியமாகக் கடவுளோடு ஐக்கியம் ஆகவேண்டும் என்று எண்ணுவதுமில்லை என்கிறார் கார்பே ஆகவே ஓக சூத்திரத்தில் கடவுள்கொள்கை செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஓக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புற உலகிலிருந்து உணர்வை முழுவதுமாக உள்வாங்கி அதனை அகத்தின் மீது ஒருமைப்படுத்திய பின்னர் அகமானது புற உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெறுகிறது. புற உலகம் உணர்விலிருந்து முற்றிலுமாக மறைந்து விடுகிறது. ஓக சூத்திரத்தில் இந்த முறையில் ஓக நடைமுறைகள் கருத்துமுதல்வாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே உண்மையான ஓகம் குறித்து பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் தேடுவது தவறாகும்.

 ஓக நடைமுறைகளின் உண்மையான நோக்கம் இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஆகும். தோன்றியத்தில் தொல்பழங்கால மந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தோன்றியத்தின் உண்மையான நோக்கமும் இயற்கையைக் கட்டுப்படுத்துவதுதான் ஆகும். ஆகவே வேதம் சாராத கருத்தியலின் முக்கிய வடிவமான தோன்றியத்தில்தான் நாம் உண்மையான ஓகத்தைக் காணவேண்டும்(14). ஆக பதஞ்சலியின் ஓக சூத்திரம் ஆன்மீகமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதால் அங்கு மூல எண்ணியத்தைக்காண இயலாது.

10.புதிய வடிவமும் உள்ளடக்கமும்: சட்டோபாத்தியாயா.

 கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருந்ததும், கருத்துமுதல்வாதிகளால் எதிர்க்கப்பட்டதும், காலத்தால் முற்பட்ட உணர்வுபூர்வமானதுமான ஒரு தத்துவம் எண்ணியம் ஆகும். எண்ணியம் பற்றிய நூல்கள் மறைந்துவிட்டதாலும், பழங்காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலம்வரை அதில் தொடர்ச்சி இல்லை என்பதாலும் மூலஎண்ணியத்தின் உருவம் அல்லது உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தை, அதன் கொள்கையைத் தீர்மானிக்கக் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற வேண்டும். முதன்மைப்பொருள் கொள்கைக்குப் பொருத்தமாக இருப்பவை எல்லாவற்றையும் மூலஎண்ணியத்தைச் சார்ந்தன என்றும், புருடன் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுபவை அனைத்தையும் மூல எண்ணியத்திற்கு புறம்பானவை என்றும் நாம் கருதவேண்டும்.

 எண்ணியத் தத்துவமானது முழுக்க முழுக்கப் பகுத்தறிவுத்தன்மை உடையது என்கிறார் கார்பே. அதன் காரணமாகத்தான் சங்கரர் அந்தப் முதன்மைப் பொருள்கொள்கை(எண்ணியத்தத்துவம்), மிக ஆழமான பகுத்தறிவுப் போக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆரம்பகால எண்ணிய தத்துவவாதிகளின் பகுத்தறிவுக் கண்ணோட்டமானது மறைமங்களின் புதிர்வாதத்தை அவர்கள் உணர்வுபூர்வமாக எதிர்த்ததின் விளைவு ஆகும். அதன் காரணமாகவே எண்ணியத்தை மறுக்கும்போது, பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் பகுத்தறிவிற்கான சுதந்திரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு தனி சூத்திரத்தை உருவாக்கினார். சங்கரர் பகுத்தறிவை மறுத்து,

 “மனிதனது சிந்தனை தடையற்றது. பகுத்தறிவு புனித நூல்களைப் புறக்கணிக்கிறது. அது தனிநபர் கருத்துக்ககளைச் சார்ந்திருக்கிறது. ஆகையினால் அதற்கு வலுவான அடிப்படை இல்லை.......மனிதர்களது எண்ணங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதன் காரணமாகப் பகுத்தறிவிற்கு உறுதியான அடிப்படை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கபிலர் போன்ற மிகத்திறமையான மனிதர்களது அறிவுபூர்வமான வாதங்களை அடிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் இந்தச்சிக்கல் தீருவது இல்லை. கபிலர், கணாதர் போன்ற மிகப்பெரிய அறிவாளிகள், பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியவர்கள், ஒருவரை ஒருவர் மறுப்பதை நாம் காண்கிறோம்” எனக் கூறுகிறார்(15). எண்ணியக்கொள்கையின் ஆதரவாளர்கள் பகுத்தறிவின்மூலம் தங்களது கொள்கையை நிலைநாட்ட முயன்றனர். ஆகவேதான் வேதங்களுக்கு ஆதரவாகப் பகுத்தறிவு சிந்தனையை மறுத்து வாதிடுகிறார் சங்கரர். ஆகவே பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியரும், சங்கரரும் வேதாந்தத் தத்துவத்தைப் பாதுகாக்க, மனிதனது சுதந்திரச்சிந்தனைக்கு, அவனது பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிராக இருந்தனர் என்பதை இந்த விவாதங்கள் உறுதி செய்கின்றன.

காரணகாரியப் பரிணாமக் கொள்கைகள்:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய சிக்கல், உலகிற்குரிய முதற்காரணம் என்ற சிக்கலாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான், உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. கௌடபாதர் காரணகாரியக் கொள்கையை ஐந்து கட்டங்களாகப் பிரித்தார். 1.காரியத்தின் தன்மை, 2.குறிப்பிட்ட பொருள் சார்ந்த காரணம் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும். 3.எல்லாவற்றையும் எல்லாவற்றைக்கொண்டும் உற்பத்தி செய்ய முடியாது. 4.ஒன்று எது முடியுமோ அதைச்செய்கிறது. 5.ஒரு வகையிலிருந்து அதே வகைதான் தோன்றும்(16). எண்ணியத்தத்துவவாதிகள் இயற்கையை உற்று நோக்குவதன் மூலம் இந்த காரணகாரியக்கொள்கையை உருவாக்கினார்கள் என சங்கரர் கூறுகிறார். காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்.

 “சாந்தம், இராசசம், மந்தம் ஆகியவற்றைக்கொண்டுள்ள சடப்பொருளான இந்த உலகம், சடப்பொருளான ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். அதுவும் இதே குணங்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கும்” என இதனைச் சுருக்கமாகக் கூறுகிறார் சங்கரர். இது குறித்து கார்பே அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். “பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் பொருட்காரணத்தின் விளைவாகத் தோன்றுவதுதான் இந்த உலகம் என்ற கொள்கையை எண்ணியம் கூறுகிறது. இந்தக்கட்டத்திலிருந்து முந்திய கட்டங்களை நாம் ஊகிப்பதன் மூலம் இறுதியில் முதல் காரணத்தைக் .கண்டறியலாம். அது முதல்நிலைப்பொருள் ஆகும். இதிலிருந்து உலகமானது காலப்போக்கில் பரிணமித்தது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு மூன்று குணங்கள் உள்ளன என எண்ணியம் கூறுகிறது. முதலாவது ஒளி, புகழ், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் சாந்தம். இரண்டாவது இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவற்றைக்குறிக்கும் இராசசம், மூன்றாவது மந்தநிலை, தடை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறிக்கும் மந்தம். இந்தக் குணங்கள் சம அளவில் நிலை மாறாமல் முதல்நிலைப்பொருளில் இருந்தன. இந்த அசையா நிலையில் ஏற்படும் மாறுதல் காரணமாக உலகம் தோன்றியது”(17). முதல்பொருள் குறித்து இவ்வளவு சிறப்பாக விளக்கிய கார்பே, எண்ணியத்தில் உள்ள புருடர்கள் என்ற கொள்கை காரணமாக மூல எண்ணியம் பொருள்முதல் வாதத்தின் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சட்டோபாத்தியாயா அவர்கள்.

 பரிணாமக்கொள்கையானது இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. எண்ணியவாதிகள் முதலில் கூறியபடி இயல்புக்கோட்பாடு என்கிற இயற்கைவிதிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இயற்கை விதிகளின்படி இடம்பெறும் சேர்க்கை, வளர்ச்சி ஆகியவற்றில் நடைபெறமுடியாதது எதுவுமில்லை. முதன்மைப்பொருளை இயக்குவதற்கு இந்த இயற்கை விதிகளே போதுமானவைகளாகும். ஆகவே எண்ணியம் என்பது ஆரம்பத்தில் பொருள்களின் இயக்கத்தினைப்பற்றிய கொள்கையாக இருந்திருக்க வேண்டும். உலகப் பரிணாமம் குறித்தக் கொள்கையை எண்ணியர்கள் எங்கிருந்து பெற்றார்கள் எனத்தெரியவில்லை. ஆனால் மூல எண்ணியத்தில் பரிணாமம் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. ஆதலால்தான் ஆரம்பகால எண்ணியத் தத்துவங்களில் அதன் கூறுகள் இருந்தன. அவர்களுடைய முதல்நிலைப்பொருள் கொள்கையிலிருந்து இது தானாகவே உருப்பெற்றது எனலாம். இந்த முறையில் முதன்மைப்பொருள் கொள்கை(உலகிற்கு முதல்காரணம் பொருள் என்பது) இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. தொடக்ககால எண்ணியம் நமது தத்துவப்பாரம்பரியத்தில் நேர்காட்சி அறிவியல்களுக்கான அடிப்படைகளை அளித்துள்ளது(18).

தமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:

 எண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணமாகும். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக்கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச்சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம்.

எண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:

 மூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமைமுறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப்பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார்(19). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற ஆரம்பகால வணிக நகர அரசுகளின் கோட்பாடாகும்.

 எண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக்கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடாகும். அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடாகும். எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது எனலாம்.

 எண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(20). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் க.நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின(ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது).

 தமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது எனலாம். மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் பேசுகிறது(21). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.

பார்வை:

1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.

2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.

  1.  “ “ “ 475
  2.  “ “ “ 476-480

5 “ “ “ 480; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. 189.

6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484

  1.  “ “ “ 484-486
  2.  “ “ “ 486-489
  3.  “ “ “ 489-492
  4.  “ “ “ 498, GARBE, R.ANIRUDDHA’S COMMENTARY ON THE ORIGINAL PARTS OF VEDANTIN MAHADEVA’S COMMENTARY ON THE SNKHYA SUTRAS. CALCUTTA, 1892.

11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500

  1. “ “ “ 501-548.
  2. “ “ “ 548-562
  3. “ “ “ 562-574
  4. “ “ “ 576
  5. “ “ “ 578. TRANSLATIONS USED FROM COLEBROOKE. SANKYAK KARIKA, CALCUTTA, 1887, PAGE: 28.
  6. “ “ “ 579, 580; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. PAGE: 190
  7. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 574-589
  8. “ “ “ 560, 561.
  9. “ “ “ 498-499.

21.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9

தொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு

 தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர் வடமொழியில் வைசேடிகம் எனப்படும் சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர். வைசேடிகச் சூத்திரம் என்ற வடமொழிநூல் இவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவரது சிறப்பியம், அணுவியம் குறித்துப்பேசும், “அகத்திய தருக்க சூத்திரம்” என்ற 20 இரு அடி பாக்களைக்கொண்ட, தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுநூல் கிடைத்துள்ளது. இதனைத் தமிழ் மெய்யியலுக்குக் கிடைத்த ஒரு அரிய செல்வம் எனலாம். தமிழில் நிறைய மெய்யியல் நூல்கள் இருந்துள்ளன என்பதற்கு இது ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இந்திய வரலாற்றில் பகவத்கீதை - பிரேம்நாத் பசாசு:

 திலகர், காந்தி முதல் இராசேந்திரபிரசாத் வரையான இந்திய அரசியல் தலைவர்களும், விவேகானந்தர், அரவிந்தர் முதல் டாக்டர் இராதாகிருசுணன் வரையான இந்திய அறிஞர்களும் பகவத்கீதையைத்தான் தங்களது வாழ்க்கை வழிகாட்டி நூலாகக் கருதி செயல்பட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் புகழ்பெற்ற அந்நூல் குறித்து “இந்திய வரலாற்றில் பகவத்கீதை” என்ற ஆய்வு நூலை பிரேம்நாத் பசாசு என்பவர் எழுதியுள்ளார். அவர் அந்நூலின் முன்னுரையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது எனவும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்டகாலத்தில் மூழ்கியது எனவும் குறிப்பிடுகிறார். கிறித்துவிற்குப்பின் வந்த முதல் 1000 ஆண்டுகளை இரண்டாகப் பிரித்த நேரு அவர்கள் முதல் 500 ஆண்டுகாலத்தில் பண்பாடு, தத்துவம், இலக்கியம், நாடகம், நுண்கலை, அறிவியல், கணிதம் ஆகிய பல துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்தது எனவும் ஆனால் அதற்குப்பிந்தைய 500 ஆண்டுகளில் உள்ளார்ந்த பலவீனத்துக்கு இந்தியா ஆட்பட்டது எனவும் அப்பலவீனம் இந்தியாவின் தகுநிலையை மட்டுமல்ல அதன் படைப்புத்திறனையும் பாதித்தது எனவும், கி.பி. 1000 க்குப்பின் உச்சிவேளையின் உன்னதமான ஒளி கடந்த காலமாகியதோடு, இந்தியாவின் இதயம் உறைந்து போய் அதன் இதயத்துடிப்பு குறைந்துகொண்டே வந்தது எனவும் அதன் காரணமாக அறிதலின் மீதிருந்த ஆர்வமும், சாதனை புரியவேண்டும் என்ற மன எழுச்சியும் இருந்த இடத்தை நீக்குப்போக்கற்ற கட்டுப்பாடுகளும், வறட்டுவாதமும் எடுத்துக்கொண்டன எனவும் நேரு அவர்கள் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார்(1).

 premnath book on gitaகீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம்பெற்ற பின்தான் இந்தியாவின் வீழ்ச்சியும் ஆரம்பமானது என்பதை நான் மட்டுமல்ல நேருவும் ஒப்புக் கொள்கிறார் என்கிறார் பசாசு. (கீதை மட்டுமல்ல சமற்கிருதமயமாக்களையும், பார்ப்பனியத்தையும் கொண்ட இந்துத்துவா ஏற்றம்பெற்ற காலகட்டம் அது. அன்றே இந்தியாவின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது எனலாம்). இந்துக்களின் புனித நூலான கீதை குறித்து, “உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத்தீமைகளை வளர்ப்பதற்குமே கீதையின் போதனைகள் பயன்பட்டு வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம் கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துவிடவும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்து எழவிடாமல் அடக்கி வைத்துக்கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம்”. என்கிறார் பிரேம்நாத் பசாசு(2).

 மேலும் அவர், பழைய பூசாரிப்பிழைப்புக்கான அத்தனை சாத்திரங்களும் சடங்குகளும், நீர்தெளிக்கப்பட்டு கீதையில் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் வாசகர்கள் குற்றம் சொல்ல முடியாதபடியும், குறைகாணாத அளவிலும் பார்ப்பனிய நச்சுக்கொள்கைகள் தேன் தடவித்தரப்பட்டுள்ளது எனவும் பார்ப்பனிய சாத்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் கீதையில் கவிதையாக்கப்பட்டு நிலைத்திருக்க வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். இந்தியச்சமூகத்தின் சாபக்கேடான சாதிப்பிரிவினை குறித்து, நான்கு வருணங்களையும் கிருட்டிணபரமாத்மாதான் படைத்தார் எனவும் நான்கு சாதிக்கான பட்டயங்களும் பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன எனவும் இவ்வியற்கையான சாதிப்பிரிவு மாற்றப்பட முடியாதது எனவும் கீதை சொல்வதாக ஆசிரியர் கூறுகிறார்(3). இறுதியாக பார்ப்பனியம் நிலைநாட்டப்படுவதற்குத் தேவையான கந்தலாகிப்போன பழைய பார்ப்பன நம்பிக்கைகளையும், சடங்கு முறைகளையும் சாத்திரங்களையும் ஒன்றுவிடாமல் கீதையில் பாடிவைத்து புறக்கடை வழியாக பார்ப்பனியம் நுழைய வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் குற்றஞ்சாட்டுகிறார்(4)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேதப்பாடல்கள் - பிரேம்நாத் பசாசு:

 இந்திய ஆரியரது காலத்துக்குச் சிறிது முன்போ அல்லது பின்போ உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த, வேறு சில பழங்குடிகளும், ஏறக்குறைய வேதப்பாடல்களில் காணப்படும் கருத்துக்களைக்கொண்ட பாடல்களைப்பாடி இருக்கிறார்கள். சுமேரியருடைய திருமுறைகள்(கி.மு. 2200), பாபிலோனிய புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப்பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல்பாடல்கள் எல்லாம் அறிவுத்தேடலின் வெளிப்பாடுகளே. இந்தோ ஆரியர்களது உணர்வுகள் அதுபோன்ற அறிவுத்தாகத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அவர்களது சிந்தனைகள் பேதமை நிறைந்ததாகவும், பொருளற்றதாகவும், சிறுபிள்ளைத்தனமானதாகவும் இருக்கின்றன. அறிவிலும், பண்பாட்டிலும் வளர்ச்சிபெற்ற சமூகங்கள், நேரம் வந்தபொழுது அவர்களது பழங்கடவுள்களைத் தூக்கி எறிந்தார்கள். பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள்கொள்கைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இந்தியர்கள் இன்றுவரை மூடநம்பிக்கைக்கு காரணமான, சமூக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிற பழங்கடவுள்களையே போற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வேத நாகரிகம் ஏனைய பழைய நாகரிகங்களைவிட நனி சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது, உலகுக்கு வழிகாட்டப் பிறர் கேட்டறியாத ஒன்றைத் தன்னுள்ளே கொண்டுள்ளது என்றெல்லாம் நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுவனவாகும்(5). இந்த வேதப்பாடல்களையும், பழங்கடவுள்களையும் கொண்டுதான் பார்ப்பனர்கள் தங்களை அன்று முதல் இன்று வரை உயர்ந்தவர்களாக, வலிமையானவர்களாக, செல்வாக்குமிக்கவர்களாக, அறிவும் திறமையும் கொண்டவர்களாக ஆக்கிக்கொண்டார்கள்.

கடவுளுக்கும் மேலானவன் பார்ப்பனன்- பிரேம்நாத் பசாசு:

 வேத காலத்தில் மதிப்புக்குரியவர்களாக இருந்து, பின்பு ஆதிக்க வர்க்கமாக உயர்ந்த பார்ப்பனர்கள், அதிகாரத்தைக்கைக்கொண்டு, அதையே தங்களைப்பாதுகாக்கும் அரணாகச் செய்துகொண்டார்கள். ஆதிக்கவர்க்கமாக அதிகாரவர்க்கமாக என்றென்றும் நிலைத்திருப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவர்களது முழுநேரச் சிந்தனையாக இருந்தது. அதற்காக பிராமணங்கள் என்ற புதியவகையான நூல்களை எழுதினார்கள். யாகங்கள் செய்வதற்கான, செய்விப்பதற்கான, விரிவான விளக்கங்களின் தொகுப்புதான் பிராமணங்கள் ஆகும். இந்த பிராமணங்கள் பார்ப்பனப் புரோகிதர்களின் தகுநிலையை எட்டாத உயரத்துக்கு ஏற்றிவைத்ததோடு கடவுள்களுக்குச் சமமாகவும் இருக்கவைத்தது. அதன்பின் கடவுள்களுக்கும் மேலாக, படைப்பின் முதல்வனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளப் பிராமணங்களில் மேலும் சிலமந்திரங்களை இடைச்செருகல்கள் செய்துகொண்டனர். “பார்ப்பனன் பண்டைய முனிகளின் மரபில் வந்தவன். எனவே அவன் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள், அதாவது அனைத்துக் கடவுள்களும் அவனுள் அடக்கம்” என சதபத பிராமணம் கூறுகிறது. பண்பாட்டு வரலாற்றில் பூசாரிக்கும்பலின் மூர்க்கத்தனம் எவ்வாறு நம்மைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு மீறி இருக்கிறது என்பதுமட்டுமல்ல, மத்திய காலத்துக்கு முந்தைய இந்திய வரலாறு முழுவதிலும் நமக்குக்காணக்கிடைக்கும் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இந்தக் கூற்றுகள் முன்னோடியாக அமைந்தன எனவும் வின்டர்நிட்சு கூறுவதைக் குறிப்பிடுகிறார் பிரேம்நாத் பசாசு(6).

 பார்ப்பனர்கள் சொத்து மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட முடியாது. மன்னர்கள் தங்கள் நாட்டையே இழந்தாலும் பார்ப்பனர்களின் சொத்துக்களில் கைவைக்கக் கூடாது. பார்ப்பனர்கள் மீது மன்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பார்ப்பனர்கள் இறுமாப்புடன் கூறினார்கள். பார்ப்பனனால் ஒருவன் கொலை செய்யப்பட்டால் அதைக் கொலைக் குற்றமாகக் கருதக்கூடாது. சூத்திரன் நினைத்தவுடன் கொல்லப்பட வேண்டியவன். இவை பிராமணங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளாகும். லேவி என்பார், “பிராமணங்களின் இறையியல் கருத்துகளைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக்காண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப்பண்புக்கு இடமே இல்லை”(7) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. பி.கே. கோசு “இந்துத்துவத்தில் ஏதாவது அருமைபெருமை இருக்குமானால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதேவேளையில் இந்துத்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும் அருவருக்கத் தக்கவைகளும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன”(8) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. மேலும் தேவையான பொழுது வேதப்பாடல்களில் மாற்றங்களும் இடைச் செருகல்களும் செய்யப்பட்டன என்கிறார் அவர்.(9) இந்த வேதப் பாடல்களிலும், பிராமணங்களிலும் பார்ப்பனன் குறித்துச் சொல்லப்பட்ட உயர்வான கருத்துக்களும், வர்ணாசிரமம் போன்ற பிற்போக்கான இந்து சமூகக் கருத்துக்களும் மிகநுட்பமான முறையில் கீதையில் புகுத்தப்பட்டன என்பதைப் பசாசு பலமுறை தெரிவிக்கிறார். ஆகவே கீதை பார்ப்பனியத்தை மிக நுட்பமாக உயர்த்திப்பிடிக்கிறது என்பதே அவரது முடிவாகும்.

பார்ப்பனர்கள் - தாழ்ந்த குலத்தவர்கள், கீழ்ச்சாதியினர் - ரைசு டேவிட்சு:

 பார்ப்பனர்கள் தாழ்ந்த குலத்தவர்களாக மதிக்கப்பட்டு கீழ்ச்சாதியினராக நடத்தப்பட்டனர் என ரைசு டேவிட்சு கூறுகிறார். “மன்னர்கள் முன்னிலையிலும், சான்றோர் அவையிலும், பார்ப்பனர்களைச் சுட்டுவதற்கு “தாழ்ந்த குலத்தான்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சாதியின் அடிப்படையிலும், பூசாரி என்ற அடிப்படையிலும், சான்றோர் அவையில் பார்ப்பனர்கள் கைகட்டி நின்றதோடு கீழ்ச்சாதியினராகவே நடத்தப்பட்டனர்” என ரைசு டேவிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு(10). “செவ்வியல் அறிவுடன் திகழ்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் இருந்தார்கள். வேடனும், இறைச்சி விற்பவனுமாகிய சால்புடைய தர்ம வியாதன், பார்ப்பனனாகிய கவுசிகனுக்கு ஒழுக்கநெறி பற்றியும் தத்துவ இயல் பற்றியும் கற்றுக்கொடுத்தான். பிறப்பினால் ஒருவன் பார்ப்பனன் ஆவது இல்லை. மாறாக சான்றாண்மையோடு ஒழுகுவதால்தான் ஒருவன் பார்ப்பனன் ஆகிறான் என்ற உண்மையையும் கவுசிகனுக்கு எடுத்துரைத்தான். அதுபோன்று வீதிகள்தோறும் சென்று, தலைச்சுமை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திய துலாதரன் என்பவன் சாசாலி என்ற பார்ப்பன முனிவருக்கு ஆசிரியராக இருந்தான்”(11) என வின்டர்நிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு. ஆகவே இவைகளின்மூலம் காலங்காலமாக பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவோ, கற்றறிந்த அறிஞர்களாகவோ இருக்கவில்லை என்பதையும், பல்வேறு கீழ்நிலைப் பணி செய்தவர்களும்கூட, கற்றறிந்த அறிஞர்களாகவும், பார்ப்பன முனிவர்களுக்கே ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

மறைமங்களில் பகுத்தறிவும், பொருள்முதல்வாதமும்:

  சுவம்ச வேத மறைமம் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளுக்கான எதிர்ப்பையும் கொண்டுள்ளது. “மறுபிறப்பு என்ற ஒன்று இல்லை. மெய்யறிவு என்ற ஒன்று இல்லை. கருத்துக்கள், உரையாடல்கள், ஒழுக்கநெறி என்பதெல்லாம் வெறும் மாயை, அவதாரம் என்ற ஒன்று இல்லை, கடவுள் இல்லை, சொர்க்கம் நரகம் என்றெதுவும் இல்லை. பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் புனித நூல்கள் யாவும் மூடர்களால் இயற்றப்பட்ட ஏமாற்றுக்கற்பனைகளே. ஆக்கும்சக்தியான இயற்கை, அழிக்கும் சக்தியான காலம் இவை இரண்டும்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கின்றன. இந்த இருவரும் மனிதனின் நன்னெறி அல்லது தீயநெறி இவற்றைப்பார்த்து அவர்களுக்கு இன்பமோ, துன்பமோ கொடுப்பதில்லை. மக்கள் தவறான வழிகளில் இழுக்கப்பட்டு கடவுள், கோவில், பூசாரி என அலைகிறார்கள். உண்மை என்னவென்றால் விசுணுவுக்கும், வீதிநாய்க்கும் எந்த வேறுபாடும் இல்லை” என சுவம்ச வேத மறைமம் கூறுகிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு. தைத்தரிய மறைமம், “பருப்பொருளே பிரும்மம். ஏனெனில் பருப்பொருளிலிருந்தே யாவும் தோன்றுகின்றன. தோன்றியபின்பு பருப்பொருள்களால் அவை வாழ்கின்றன. வாழ்வு முடிந்தவுடன் அவை பருப்பொருளாக மாறுகின்றன” எனக் கூறுகிறது. பிருகதாரண்ய மறைமம் “தனிமங்களிலிருந்து தோன்றுவன எல்லாம் அழிந்தபின் தனிமங்களில் கலக்கின்றன” என்கிறது. “பழமையான பருப்பொருள்களிலிருந்து உலகம் தோன்றியது” என கடம் மறைமம் கூறுகிறது. ஆகவே பொருள்முதல்வாதம்தான் தோற்றத்திற்குக்காரணம் என்பது மறைம முனிவர்கள் பலரின் கருத்தாக இருந்துள்ளது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(12).

 பார்ப்பனச் சிந்தனையாளர்கள் திட்டமிட்டு பகுத்தறிவையும், பொருள்முதல்வாதத்தையும் பேசிய மறைமங்களைப் புறக்கணித்தனர். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பிரபலப்படுத்தினார்கள். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு வேதாந்தம் என்ற பெயரில் வைதீக இறையியல் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டது. இந்தியச் சிந்தனைகளையும், பண்பாட்டையும் மிகச்சிறிய அளவில்தான் இந்த இறையியல் பிரதிபலிக்கிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு(13).

கணாதரும் கபிலரும்:

 கீதையின் தாக்கம் குறித்து ஒரு விரிவான ஆழமான ஆய்வைச்செய்த பிரேம்நாத் பசாசு அவர்கள் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் மாபெரும் சிற்பிகளான தொல்கபிலர் குறித்தும், கணாதர் குறித்தும் அதேநூலில், “இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குக் கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இரண்டு மாமனிதர்கள் தோன்றினார்கள். அவர்கள் இருவரும், அவர்களின் வழிவந்த திண்ணிய மனம் படைத்த சிந்தனையாளர்களும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. வேதக்கடவுளர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். பார்ப்பன வழிமுறைகள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், மறைமங்கள், செவிகிழியப் பேசப்பட்ட எல்லாம் வல்ல பிரும்மம் ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள்” என்கிறார் பிரேம்நாத் பதாசு(14). ஆக இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குத் தமிழர்களான கபிலரும், கணாதருமே முக்கியக் காரணம் என உறுதிபடத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பதாசு. ஆனால் அவர்கள் வடமரபைச் சாராத தமிழர்கள் என அவர் அறியார்.

நகர அரசுகளும் அறிவியல் சிந்தனைகளும்:

 உலகம் முழுவதும் ஆரம்பகால நகர வணிக அரசுகள்தான் புதிய சிந்தனைகள், முக்கியமாக அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாதச் சிந்தனைகள் வளர்ச்சி அடைவதற்கு ஒரு முக்கிய காரணிகளாக இருந்தன என்ற நமது கருத்தியலுக்கு வட இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை. கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வடஇந்திய அளவில் தோன்றிய சிறு குறு நகர அரசுகள் ‘நாடோடிகள்’ எனப்படும் புதிய சிந்தனையாளர்களுக்கு எப்படி ஆதரவு அளித்தன என்பதற்கு பசாசு அவர்கள் தனது நூலில் தரும் சில செய்திகள் சான்று பகர்கின்றன.

 “மக்கள் தேடும் புதிய நம்பிக்கைகள் பற்றி உரை நிகழ்த்த வரும் நாடோடி(சிந்தனையாளர்கள்)களுக்காக அரங்கங்களும் மேடைகளும் கட்டப்பட்டன. சாவாதி நகர அரசி மல்லிகாவின் பூந்தோட்டத்தில் பெரியதோர் அரங்கம் கட்டப்பட்டது. லிச்சாவி குலத்து மன்னன் தனது தலைநகரான வைசாலியில் உயர்ந்தவகை மரத்தில் முகடு வேய்ந்த அரங்கம் கட்டினான். இந்த அரங்கத்தில் நாடோடிகள்(பரிவிராசகர்கள்) வந்து தங்கிச்சென்றார்கள். ஊர்களுக்கு அருகிலுள்ள தோப்புகளில் நாடோடிகளுக்குத் தங்குமிடம் கட்டித் தரப்பட்டது. சாம்பா நகரில் காக்கிரா அரசி ஏரிக்கரையோரமாக உள்ள இனிமையான சாம்பாலா தோப்பில் அரங்கம் கட்டினாள். இராசகிருகத்தில் மயில்கூட்டம் ஆடித்திரியும் மோரா நிவப்பா என்ற இடத்திலுள்ள தோப்பில் அரங்கம் கட்டப்பட்டது” என்கிறார் பிரேம்நாத் பசாசு(15). ஆகவே சிறு நகர அரசுகள் அறிவியல் சிந்தனைகள் வளர்வதற்கு ஊக்கமளித்தன என்பதற்கு இவை சான்றுகளாகின்றன. மேற்கண்ட சான்றுகளின் மூலம், உலகம் முழுவதும், அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் கொண்ட சிந்தனைகள் வளர்வதற்கு நகர அரசுகள் காரணமாக இருந்துள்ளன என்பதற்கு மிகப்பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளோடு, தமிழக நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும், மறுமலர்ச்சிக்கால இத்தாலிய நகர அரசுகளும், இறுதியாக வட இந்தியாவின் சனபதங்கள் எனப்படும் சிறு சிறு நகர அரசுகளும் காரணமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.

 கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வட இந்திய அளவில் இருந்த பரிவிராசகர்கள் எனப்படும் நாடோடிகளில் முக்கியமானவர்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை எனவும் இவர்களின் உரைகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது எனவும், மன்னர்கள், சான்றோர்கள், அரசு அலுவலர்கள், கைவினைஞர்கள், உழவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இவர்களை வரவேற்று மதிப்பளித்தனர் எனவும் ரைசு டேவிட்சு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(16). இக்காலத்தில் இந்தியாவில் மீமாம்சம், வேதாந்தம், சிறப்பியம், நியாயம், எண்ணியம், ஓகம் ஆகிய 6 சிந்தனைப்பள்ளிகள் நிலவின. இவை இரண்டிரண்டாக பிற்காலத்தில் இணைக்கப்பட்டன என்பதோடு வேதம் சார்ந்தவையாகவும் ஆக்கப்பட்டன. அவை மீமாம்சம்-வேதாந்தம், சிறப்பியம்-நியாயம், எண்ணியம்-ஓகம் ஆகிய மூன்று இணைகளாகும். இவைகள் குறித்து பிரேம்நாத் பசாசு அவர்கள் தனது ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்ற நூலில் கூறியவைகளைச் சுருக்கமாக அறிவது அவசியம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மீமாம்சம் - பிரேம்நாத் பசாசு:

 மீமாம்ச சிந்தனைப்பள்ளியை நிறுவியவர் சைமினி ஆவார். அவரது மீமாம்ச சூத்திரம் என்ற நூல், 2621 சூத்திரங்களுடன், 890 பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. யாகங்கள் செய்வதும், செய்விப்பதும், சடங்குகளை நிறைவேற்றுவதும், வேத மந்திரங்கள் ஓதுவதுமே முக்திக்கான ஒரே வழி என்பதுதான் மீமாம்சகர்களின் கோட்பாடு. பொய்மையை நாடித்தேடி அதையே மெய்ம்மை என்று பொய்யாகக் கற்பிப்பதே மீமாம்சம் கூறும் அறிவுக்கோட்பாட்டின் முக்கியமான திரிபுவாதம் எனவும், அவர்கள் சம்கிதைகளின் மாறாத்தன்மையையும், நிரந்தரத்தன்மையையும் நிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதப்பாடல்களிலும், வேத மந்திரங்களிலும் மந்திர சக்தி இருப்பதாகவும், கடவுளர்கள் மொழிந்த வேதத்தை வழிமொழிவதற்கு சமற்கிருதமே சிறந்தமொழி எனவும், வேதங்களின் மெய்ப்பொருள் வேறு மொழிகளின் வழியாக வெளிப்பட்டிருக்க முடியாது எனவும், வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை எனவும், வேதங்களின் முன்பு கடவுளர்கள் கூட அற்பமானவர்கள் எனவும், வேதங்களும், பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன எனவும் சைமினி கூறுவதாகவும், ஆனால் மீமாம்ச சிந்தனையில் மெய்யறிவு என்பது சிறிதளவுகூட இல்லை எனவும், ஒரு இந்துவின் எல்லாவிதமான சமயச்சடங்குகளும், குடும்ப விழாக்களும் மீமாம்சம் சார்ந்தே உள்ளன எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

வேதாந்தம் - பிரேம்நாத் பசாசு:

 வேதங்கள் கூறும் மந்திரங்களை ஆராய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமாக நிறுவப்பட்ட இந்த சிந்தனை மரபைச் சேர்ந்தவர்கள் பிரும்மத்தைச் சுற்றியே வலம் வருகின்றனர் எனவும் தொடக்க காலங்களில் இயற்றப்பட்ட மறைமங்களில் பிரும்மம் என்ற கருத்துரு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனவும் இதுபோன்ற ஒருசில மறைமக் கருத்துக்களே இந்த வேதாந்தப்பள்ளியின் அடித்தளமாக அமைகின்றன எனவும் இந்நிலையில் அகிலம் அனைத்திற்குமான தனித்தன்மையான ஆன்மீகச் சிந்தனைகளின் தொகுப்புதான் வேதாந்தம் என அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 பிரும்மம் பருப்பொருட்களால் ஆனதல்ல. அதைப் புலன்களால் உணர இயலாது. உள்ளத்தால் மட்டுமே உணர இயலும். உலகிலுள்ள அனைத்தும் பிரும்மத்திலிருந்தே தோன்றுகின்றன. உலகம் நிலையற்றது; பொய்யானது; அழிவுறும் தன்மையுடையது. ஆனால் பிரும்மம் மெய்யானது; அழிக்க முடியாதது; என்றும் நிலைத்திருப்பது. பரமாத்மாவின் ஒரு பகுதியே சீவாத்மா எனவும், சீவாத்மா தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் நிலையில், அது பிரும்மத்துடன், அதாவது பரமாத்மாவுடன் இணைந்து இரண்டறக் கலந்து விடுகிறது. அதன்பின் ஆத்மாவுக்கு மறுபிறப்பில்லை. இவைகளைப் புரிந்துகொள்வதையே மறைமங்கள் ஆத்மா குறித்த அறிவு எனக் கூறுகின்றன என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 தன்னைத்தானே அறிந்துகொள்ளாத சீவாத்மா வழிதவறிச்சென்று, பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவிடுகிறது. தவறான வழியிலிருந்து மீண்டுவரும் சீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்துவிடுகிறது. இவ்வாறு மனிதன் வழிதவறிச்செல்வதற்கு மாயைதான் காரணம். மாயையில் கட்டுண்ட மனிதன் மெய்ம்மை பற்றிய அறியாமையில் மூழ்கி விடுகிறான். இந்த மாயையிலிருந்து விடுபட்டு பிரும்மத்தோடு இணைவதைத்தான் முக்தி அடைவது என வேதாந்தம் கூறுகிறது. முக்தி அடைவதற்கு மூன்று வழிகளை வேதாந்தம் கூறுகிறது. அவை ஞானமார்க்கம்(மெய்யறிவின் பாற்பட்ட வழி), பக்திமார்க்கம்(வழிபடும் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்வது), கரும மார்க்கம்(யாகச்சடங்குகளை முழுமையாக நிறைவேற்றிக் கரும வினையாற்றலின் மூலம் தன்னை உணர்தல்) ஆகியன.

 மூன்று வழிகளும் கடினமானவை என்பதால் வேதாந்திகள் முக்திக்கு ஞானமார்க்கமே(மெய்யறிவின் பாற்பட்ட வழி) சிறந்தது என பரிந்துரை செய்கிறார்கள் எனவும், ஆனால் வேதாந்திகள் கூறும் மெய்யறிவு என்பது சுதந்திரமான சிந்தனையின் வெளிப்பாட்டினால் பெறப்படும் மெய்யறிவு அல்ல எனவும், வேதாந்தத்தின் அடிப்படை வாதங்களோடு முரண்படும் எல்லாவிதமான சிந்தனைப்போக்குகளையும் அவர்கள் தடை செய்தார்கள் எனவும், முழுமையான புரிதலுக்குத் தர்க்கவாதம் முற்றான வழிமுறையாகாது என்பதும், மெய்யியல் கற்கும் காலத்தில் வேதாந்தக் கோட்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் அவர்களின் சட்டம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதாந்தம் உள்ளடக்கத்தில் மீமாம்சத்திலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டது அல்ல. அதனால்தான் மீமாம்சமும் வேதாந்தமும் இணை சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் பூசாரிகளின் ஆட்சிக்கு வழியமைத்துக் கொடுத்ததில் வேறெந்தப் பழமைவாதச் சிந்தனைப் பள்ளிகளையும்விட வேதாந்தம் தீவிரமான பங்கு வகித்தது, இன்றும் வகித்து வருகிறது. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும்(18). மறைமத்தில் உள்ள ஆன்மீகம் சார்ந்த 555 சூத்திரங்களைக்கொண்டு பாதராயணரால் எழுதப்பட்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூல்தான் வேதாந்தத் தத்துவத்துக்கான அடிப்படையாகும். மறைமத்தில் எண்ணியம் சார்ந்த பொருள்முதல்வாதக் கருத்துக்களும் இருக்கின்றன. ஆகவே மறைமக் கருத்துக்களின் தொகுப்பு என பிரம்ம சூத்திரத்தைக் கருத இயலாது.

சிறப்பியம்(வைசேடிகம்) - பிரேம்நாத் பசாசு:

 கணாதரின் சிறப்பியம் இயற்கை நிகழ்வுக்கான காரணங்களை இயற்கையோடு இணைத்துப்பார்க்கும் துணிகரமான முயற்சியை மேற்கொண்டதால் அது சிறப்பானது எனப்பொருள்தரும் சிறப்பியம் என்கிற வைசேடிகம் எனப்பட்டது. அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது. கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது.

 பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப் பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகி உள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் பொருட்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை கொண்டனவாகவும் இருக்கின்றன எனவும், பல்வேறு பொருட்களால் உருவாகிய உலகிற்கு முதலும் முடிவும் உண்டு எனவும் சில குறிப்பிட்ட அணுக்களின் இணைப்பால் விளைவதுதான் உணர்வு எனவும், ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் எனவும் சிறப்பியம் கருதுவதாக பசாசு கூறுகிறார்.

 முறைசெறிந்த அறிதலை, புலனுணர்வு, நினைவாற்றல், தேற்றம், உள்ளுணர்வு என நான்கு வகையாகச் சிறப்பியம் பிரித்தது. அக உலகின் உணர்வுகள், புற உலகின் தோற்றம் இவைகளுக்கிடையேயான ஒத்திசைவே மெய்மைக்கான அளவுகோளாகக் கொள்ளப்படவேண்டும் எனச் சிறப்பியம் கருதியது. இவை புரட்சிகரமான கருத்துக்கள் ஆகும். அணுக்கள் இணைவதற்கும், செயல்படுவதற்கும் ‘அதிருசுடி’ காரணியாக அமைகிறது என்ற திணிக்கப்பட்ட கருத்து தவிர கணாதருடைய கருத்துநிலை முற்றிலும் பொருள்முதல்வாத அடிப்படையிலானதே எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 இயற்கைப்போக்கிலேயே அணுக்கள் இணைகின்றன எனவும், தொடக்க காலத்திலிருந்த பொருட்கூறுகளின் உள்ளார்ந்த பண்புகளால்தான் பருப்பொருட்கள் உருவாயின எனவும் கணாதர் கோட்பாடுகளின் உரையாசிரியர் உபாசுகர் குறிப்பிடுகிறார். ஆதலால் ‘அதிருசுடி’ என்ற கருத்து தேவையில்லாமல் திணிக்கப்பட்டதே என பிரேம்நாத் பசாசு உறுதிபடத் தெரிவிக்கிறார். பிரும்மம் நிலைத்தது என்ற பார்ப்பனியக் கோட்பாட்டிற்கு எதிராக இயற்கை மாறும் தன்மையுடையது என சிறப்பியம் கூறியதால், இதனை அழிவிற்கு இட்டுச்செல்லும் வேதமறுப்புக் கோட்பாடு என பார்ப்பனர்கள் கடுமையாகச்சாடினர் என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான டிமோகிரிடிசு அவர்களைக் கணாதரோடு ஒப்பிடுவோர் உண்டு எனவும் டிமோகிரிடிசு அவர்களின் அணுக்கொள்கையை விடக் கணாதரின் அணுக்கொள்கை தன்னிலே முழுமையானதாக இருக்கிறது எனச் சிலர் கருத்துரைக்கின்றனர் எனவும் டிமோகிரிடிசின் கோட்பாடுகளில் அரிட்டாட்டில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் ஏதும் கணாதரின் அணுக்கொள்கையில் இல்லை எனவும் பசாசு கூறுகிறார். இயற்கை மதத்திலிருந்து பொருள்முதல்வாதக் கருத்தியல் நோக்கித் துணிவுடன் முன்னேறுவதற்கு ஏற்ற சமுதாய அமைப்பு கிரேக்கத்தில் இருந்தது எனவும் ஆனால் இந்தியாவில் அதுபோன்ற சமூக அமைப்பு அன்றுமுதல் இன்றுவரை இருக்கவில்லை எனவும் பசாசு குறிப்பிடுகிறார்.

 கிரேக்கத்தில் பூசாரிக் கூட்டம் அழித்து ஒழிக்கப்பட்டது போன்று இந்தியாவில் அவை அழித்தொழிக்கப் படவில்லை எனவும் இந்தியாவில் அறிவுலக வாழ்க்கை என்பது பார்ப்பனப் பூசாரிகளின் ஏகபோக உரிமையாக இருந்துவந்தது எனவும் பசாசு குறிப்பிடுகிறார். இவை சிறப்பியம் குறித்தும் கணாதர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுபவைகளாகும்(19). தமிழகத்தில் கிரேக்க சமூகத்தில் இருந்தது போன்ற நகர, நகர்மைய வணிக அரசுகள் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தன. இந்த நகர, நகர்மைய வணிக அரசுகளே பொருள்முதல்வாதக் கருத்துக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தன(20). பழந்தமிழகத்தில் கிரேக்கத்தைப் போன்றே பூசாரிக்கூட்டம் அழித்தொழிக்கப் பட்டிருந்தது. சங்ககாலத்திற்குப் பின்னரே அதாவது கி.மு. 50க்குப்பின்னரே அவர்களின் கருத்துக்கள் செல்வாக்கு பெறத்தொடங்கின. தமிழகத்தில் பக்திகால கட்டத்தில்தான் பூசாரிக்கூட்டம் வலிமைமிக்கதாக ஆகியது.

நியாயம் - பிரேம்நாத் பசாசு:

 நியாயம் என்பதற்கு தருக்க முறையில் காரணகாரியங்களைப் பகுத்தாய்தல் எனப்பொருளாகும். நியாய மரபினர் உலகப்பொதுமைச் சிந்தனைகளையும், முக்கூற்று(SYLLOGISM) முறையையும் வளர்த்தனர். சிறப்பியர்களின் அணுக்கொள்கை, இயற்பியல், அனுபவஅறிவுக்கொள்கை முதலியவனவற்றை நியாய சூத்திர ஆசிரியர் கவுதமர் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே சிறப்பியமும், நியாய சூத்திரமும் ஓரிணையாகக் கருதப்பட்டன. கவுதமரின் நியாய சூத்திரத்தில் 16 மெய்விளக்கங்கள் உள்ளன. முதல் 9 விளக்கங்கள் உறுதியான தருக்கமுறை தொடர்பானதாகவும், அடுத்த 7 விளக்கங்கள் பிழை நீக்குவதற்கும், அதனைத் தவிர்ப்பதற்குமான காரணிகளாகவும் இருக்கின்றன. சரியான முடிவை எட்டுவதற்கு விவாதங்களும், மறுப்புரைகளும் முக்கியமானவைகள் என நியாய சூத்திரம் கருதுகிறது. வேதங்கள் என்றுமுள்ளவை என்ற மீமாம்சகர்களின் கோட்பாட்டையும், கடவுள் இருக்கிறார் என்ற கொள்கையையும் கவுதமர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும். பிற்காலத்தில் “வைசேடிகமும், நியாயமும் ஒன்றிணைந்தபோது, இறைமைக் கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் பருப்பொருட்களைப் படைத்தவன் என்ற நோக்கில் அவர்களது இறைக்கோட்பாடு இருக்கவில்லை” எனக்கார்பே கூறுவதாகப் பிரேம்நாத் பசாசு தெரிவிக்கிறார்(21)

எண்ணியம்(எண்ணியம்) - பிரேம்நாத் பசாசு:

 எண்ணியம் குறித்தும் கபிலர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுவதை இங்கு சுருக்கமாகக் காண்போம். உலகினுடைய ஒழுங்கமைதியுடன் கூடிய படிமுறைச் செயல்பாடுகளை ஆழ்ந்து நோக்கி, அதற்கானத் தெளிவான விளக்கத்தைக் கூறியதால், இந்தியச்சிந்தனை மரபில் எண்ணியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. எண்ணியத்தத்துவம் என்பது மெய்யறிவுச் சிந்தனை(METAPHYSICAL) மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் ஆற்றல்களை மாற்றுதலும், அழித்தலும், திரட்டலும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கமும் ஆகும். மெய்யறிவுத்தத்துவ உலகில் எண்ணியச்சிந்தனை ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. போதாயனம் என்ற சாத்திரத்தை இயற்றியவர், கபிலரை அசுரர் எனக்குறிப்பிடுகிறார். கபிலர் எண்ணியச் சிந்தனைகளை அசுரர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகப் பாகவதம் குறிப்பிடுகிறது. மக்கள் கபிலரை மாபெரும் சிந்தனையாளர் என்றும் மனிதவாழ்வை ஈடேற்றம் செய்வதற்குப் பிறந்தவர் என்றும் போற்றிப் புகழ்ந்தார்கள். இலங்கையில் உள்ள அனுராதபுரக் குடவறைக்கோயிலில் கபிலரின் சிற்பம் ஒன்று உள்ளது.

 கபிலர் ஒரு தீவிரமான பட்டறிவுவாதி(EMPIRICIST). அவரது சிந்தனை, மனித இனத்தின் பட்டறிவு பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. பரிணாமக்கோட்பாட்டின்(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. புலனுணர்வு(SENSATIONALISM) அடிப்படையில் கருத்துரு வாக்கம் ஏற்படுகிறது என்ற அவரது கோட்பாடு இந்தியத்தத்துவ இயலுக்கு ஒரு மாபெரும் கொடையாகும். புலனுணர்வு, கருத்தேற்றம், சான்றுறுதி போன்றவை உறுதியான எண்பிக்கும் முறைகள் என அவர் கூறினார். புலனுறுப்புகள் இயற்கையின் உருவாக்கமே எனவும், புலனுறுப்புகள் புறவுலகு பற்றிய உண்மையான தோற்றத்தை அப்படியே நமக்குப் புலப்படுத்துகின்றன எனவும் கபிலர் திட்டவட்டமாகக் கூறினார்(22).

பெர்னார்டு:

 “அறிவுக்குட்பட்ட, காரணகாரியத்துடனான, விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் கூறுகிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத் தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என பெர்னார்டு என்பவர் எண்ணியம் குறித்துக் கூறுவதாகப் பசாசு கூறுகிறார்(23).

 இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக்கொள்கையாகும். ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது. இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் வளர்ச்சியில் பருப்பொருட்கள் வகிக்கப்போகும் பாத்திரத்தை கபிலர் அன்றே எதிர்நோக்கினார் எனவும், மனம்வேறு உடல்வேறு அல்ல என்ற ஒருமைக்கோட்பாட்டைக்கொண்டது எண்ணியம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

கார்பே:

 எண்ணியம் கடவுள் பற்றிச்சிந்திக்கவே இல்லை. எண்ணியத் தத்துவத்திற்கு எல்லாம்வல்ல ஒருவனின் தேவையும் இருக்கவில்லை. இதுபற்றி கார்பே என்பவர், “எண்ணியக்கோட்பாடு கடவுள்மறுப்புக் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படை, வேதப்புரட்டுகளுக்கு எதிரானது. நமக்குக் காணக் கிடைக்கும் எண்ணியச் சூத்திரங்களில், சுருதிகளின் கருத்திசைவை நாடுவது போன்று எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் பின்னாட்களில் இடைச்செருகல் செய்யப்பட்டவைகளே. எண்ணியச் சூத்திரத்தோடு வந்து ஒட்டிக்கொண்ட வேதப்பகுதிகள் அனைத்தையும் வெட்டி எறிந்தாலும் எண்ணிய மூலத்துக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. எண்ணியத்தத்துவம் தற்சார்புடையது. தனித்தன்மை வாய்ந்தது,. அதன் மூலப்படிவத்தின் உள்ளடக்கம் இந்நாள் வரையிலும் மாற்றமின்றி இருந்து கொண்டிருக்கிறது. அது வேதத்திற்கும் பார்ப்பன மரபிற்கும் புறம்பானது“ எனக்கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(24).

 பகுத்தறிவு – இயற்கைவாதம் என்று கூறத்தக்கதான ஒரு மெய்யறிவு மரபை எண்ணியச்சிந்தனை வளர்த்தெடுத்தது. இயல் உலகின் புறவயமான மெய்ம்மையை ஏற்றுக்கொண்டதே கபிலர் தத்துவத்தின் உண்மையான சிறப்புக்கூறாகும். உலகுக்குப் புறவயமான இருத்தல் ஏதும் இல்லை, கருத்து அல்லது எண்ணத்தில் மட்டுமே அது உள்ளது என்ற கோட்பாட்டைக் கபிலர் வன்மையாக மறுத்தார் எனவும், இருத்தலைக் கண்ணுற்ற பின்பே கருத்து உருவாகிறது என்ற நவீனகாலப் பொருள்முதல்வாதச் சிந்தனையோடு கபிலரின் கோட்பாடுகள் ஒத்துப்போகின்றன எனவும் கூறுகிறார் பசாசு.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா:

 சிறப்பியம் பொருள்முதல்வாதத்தின் பக்கம் நாடியது. எண்ணியம் கடவுள்மறுப்பு – இயற்கைவாதத்தோடு இணைந்துகொள்ள விழைந்தது. மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்டு, அதைச்சரியாகப் புரிந்து கொண்டால் இயற்கையை வெற்றிகொள்ளமுடியும் என்று எண்ணியவாதிகள் வலியுறுத்தினார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும் இது போன்ற சிந்தனைத்தெளிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது குறித்து “எண்ணியத்தின் மூலப்படிவம் சமரசமற்ற கடவுள்மறுப்பும், பொருள்முதல்வாதமுமே ஆகும். கடவுளற்ற ஆதிமூலப்பொருள் தத்துவம் என்றே எண்ணியம் நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வந்தது. இக்காரணத்தால்தான் அறிவியல் முன்னேற்றத்திற்கான சிந்தனை மரபாக எண்ணியம் இருக்க முடிந்தது. பருப்பொருள் கோட்பாடு; வினைக்கும் விளைபயனுக்குமான காரணத்தொடர்பு; மெய்யறிவு; பரிணாம முறை முதலியன எண்ணியக்கோட்பாட்டின் முக்கியமான கூறுகள் ஆகும்” என தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(25).

 இந்தியப்பண்பாட்டு வரலாற்றின் படைப்பாக்கம் நிறைந்த காலகட்டத்தில் இந்தியா கணாதர், கபிலர் என்ற இரண்டு அறிஞர் பெருமக்களை ஈன்றெடுத்தது. எண்ணியம் பகுத்தறிவு, இயற்கைவாத மெய்யறிவு முதலியன பற்றியே தீவிரமாக வலியுறுத்தியது. கணாதர் தீவிரப் பொருள்முதல்வாதி. ஆனால் வேதகாலத்திற்குப் பிந்தைய அறிவு வட்டாரத்தில் எண்ணியத் தத்துவமே மேலாண்மையுடன் விளங்கியது. கருத்துமுதல்வாத தத்துவத்திற்கு விடப்பட்ட முதல் அறைகூவல் எண்ணியமே எனவும், பார்ப்பன மதத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியதோடு, பழங்கால இந்திய சமூகத்தின் அடித்தளத்தையும் அது ஆட்டி வைத்தது எனவும், பார்ப்பனர்கள் எண்ணியத் தத்துவத்தை வெறுத்து ஒதுக்கித்தள்ளினர் எனவும், எண்ணியத்தின் புரட்சிகரமான கொள்கைகளை உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவர்கள் எதிர்த்தார்கள் என்பதோடு எண்ணியத்தத்துவ விரிவுரையாளர்களில் வேதப்பார்ப்பனர்கள் ஒருவர்கூட இல்லை எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியத்தத்துவம் கற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதனால், தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாகவே பார்ப்பனர்கள் எண்ணியத்திற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் எனவும் ஆனாலும் பார்ப்பனர்கள் கபிலரை மனதளவில் மன்னிக்கவே இல்லை எனவும் கூறுகிறார் பசாசு(26).

 கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஆதி சங்கரர் எண்ணியத்தைத் தோற்றுவித்தத் தமிழரான தொல்கபிலர் எனப்படும் கபிலர் குறித்து, “ஆபத்தான எதிரியான முதன்மை மல்லனைத் தோற்கடித்ததால், சிறிய எதிரிகளை வெல்வது இலகுவாயிற்று” என்கிறார்(27). ஆகவே தொல்கபிலரின் எண்ணியம்தான் பார்ப்பனர்களுக்கும், வேதாந்தத்திற்கும் மிகப்பெரிய எதிரியாக 3000 வருடங்களாக இருந்து வந்துள்ளது எனலாம். போதாயன சாத்திரத்தின் ஆசிரியர் கபிலரின் மீதான பார்ப்பன வெறுப்பை, “கடவுளர்களோடு போராடிய அவன் இதுபோன்ற வேற்றுமைகளை உருவாக்கினான். விவேகமுள்ளவன் அவன் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டான்” என வெளிப்படுத்துகிறார்(28). பார்ப்பனர்களுக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்த கருத்துக்களுக்கும் மிகப்பெரிய எதிரியாக கி.மு. 1000 முதல் இன்றுவரை தமிழகமே இருந்து வந்துள்ளது. பழந்தமிழகத்தில் தொல்கபிலர் முதல் வள்ளுவன்வரையும், இன்று அயோத்திதாசர் முதல் பெரியார்வரையும் பார்ப்பனியத்துக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்தத் தத்துவத்துக்கும் எதிரானவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தோன்றி வந்துள்ளனர். ஆகவே பார்ப்பனியத்தின் மிகப்பெரிய எதிரிகளை தமிழகமே தோற்றுவித்து வந்துள்ளது எனில் அது மிகையாகாது. இன்றும் அதற்கானத் தேவை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

 கபிலரின் எண்ணியம் முழுமையான அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவம் எனவும் நவீன அறிவியல் சிந்தனையோடு அது முழுமையாக ஒத்துப்போகிறது எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியம் குறித்த பெர்னார்டு அவர்களின் “தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” மேலும், உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என்ற இக்கூற்றுக்கள் எண்ணியத்தின் நவீன அறிவியல் தன்மையை முழுமையாகப் பறைசாற்றுகிறது எனலாம். எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

 தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து வளர்ச்சியடைந்த நகர, நகர்மைய அரசுகளும், சிறு குறு அரசுகளும் அதன் வேளாண்மை, பொருள் உற்பத்தி, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் ஏற்பட்ட உலகளாவிய வளர்ச்சியும்தான் தொல்கபிலர், கணாதர் போன்றவர்களைத் தோற்றுவித்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு தொல்கபிலர், கணாதர் போன்றவர்களின் பங்களிப்பால் பண்டைய தமிழ்ச்சமூகம் அறிவியல், தத்துவம், கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இவ்விடயங்களில் ஒரு சிறிய அளவு மட்டும் வடமொழியில்(ஆகமம் போன்றவற்றில்) சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இருந்த அனைத்தும் அழிந்து போயின. வடமொழியில் இருந்த ஆரம்பகால அறிவியல், தத்துவார்த்த, கலை சார்ந்த விடயங்களில் பெரும்பாலானவை தமிழ் மரபுக்குரியவை. சான்றாக சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும், பரதநாட்டிய சாத்திரம் என்ற நாட்டிய சாத்திர நூலும் தமிழ்வழி நூல்கள். ஆனால் தமிழில் இருந்த அவை போன்ற நூல்கள், தடயங்கள் இன்றி இல்லாது போயின. தமிழின், தமிழ்ச் சமூகத்தின் பெருமைக்குரிய தொல்கபிலர், கணாதர் போன்ற அறிஞர்கள் ‘தமிழர்கள்’ என்பதையே அறியாதவர்களாக இன்றையத் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. இவர்கள் குறித்து நமக்கு அரும்பாடுபட்டு எடுத்துரைத்த முனைவர் க.நெடுஞ்செழியன் பெரும்பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர் ஆவார்.

பார்வை:

1.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 16, 17.

  1. “ “ “ பக்: 18, 19.
  2. “ “ “ பக்: 329-331.
  3. “ “ “ பக்: 338
  4. “ “ “ பக்: 48-50.
  5. “ “ “ பக்: 58,59 & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 200

7.QUOTED IN BUDDHIST INDIA PAGE: 240 – 241.

8.THE HISTORY AND CULTURE OF INDIAN PEOPLE VOL-1 PAGE: 422

9.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 56-64.

  1. “ “ “ பக்: 77 & BUDDHIST INDIA PAGE: 31, 32.
  2. “ “ “ பக்: 79. & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 415.

12.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 88-92.

  1. “ “ “ பக்: 93.

14.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 131

  1. “ “ “ பக்: 132
  2. “ “ “ பக்: 131, 132.
  3. “ “ “ பக்: 95 – 100
  4. “ “ “ பக்: 100 – 105.
  1. “ “ “ பக்: 105 – 110.

20.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்:778-781

21.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:110-114.

  1. “ “ “ பக்; 114-116.
  2. “ “ “ பக்: 116.
  3. “ “ “ பக்: 121, 122. & INTRODUCTION TO TRANSLATION OF ANIRUDHA’S COMMENTS OK SAMKHYA SUTRA P. XX – Xxi.

25.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122, & LOKAYATA P. 263.

  1. பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122-124.
  2. “ “ “ பக்: 124
  3. “ “ “ பக்: 124 & LOKAYAT, P. 61.

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10

தொல்காப்பியம்:

 தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக்கொண்டது. தொல்காப்பியம் தமிழ்மொழிக்கான இலக்கணநூல் எனினும், இந்நூல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வுக்கான இலக்கண நூலாகவும் திகழ்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலைப் பேசும் இதன் பொருளதிகாரம் கீழ்க்கண்ட ஒன்பது இயல்களைக்கொண்டது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியன அவை. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு அறிவியல் அடிப்படையை வழங்கிய தொல்கபிலரின் எண்ணியச்சிந்தனையைக் கொண்டதாக தொல்காப்பியம் விளங்குகிறது. இவ்வுலகத்திற்கான அடிப்படையாக விளங்கும் முதன்மைப்பொருட்கள் இடம், காலம் ஆகிய இரண்டும்தான் என்பதை விளக்குகிறது இதன் பொருளதிகாரத்தின் நாலாவது பாடல்.

kaniyan balan book on tamil history “முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

 இயல்புஎன மொழிப இயல்பு உணர்ந்தோரே” (அகத்திணையியல் - 4).

நவீன அறிவியல் இதனை வெளி, காலம்(TIME&SPACE) எனக்கூறுகிறது. எண்ணியச் சிந்தனைப்படி ‘வெளி’ என்பதுதான் ‘இடம்’ என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 507ஆம் பாடல், கரும நிகழ்ச்சியை இடம் எனக் கூறுகிறது.

 ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்

 கரும நிகழ்ச்சி இடம்என மொழிப (செய்யுளியல் – 197)

 ஒரு நிகழ்ச்சி நடப்பதை இடம் எனக்கூறும் தொல்காப்பியரின் அடுத்த பாடல்(செய்யுளியல்-18), நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது காலம் எனக்கூறுகிறது. ஆகவே இடம், காலம் ஆகிய இரண்டும் கரும நிகழ்வுகளுக்கு அடிப்படை என்பது தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்தியலாக இருந்துள்ளது. அதனால்தான் அவையிரண்டும் உலகத்திற்கான முதற்பொருளாக தொல்காப்பியரால் சொல்லப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 244ஆம் பாடல் நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் காலமும் இல்லை என்கிறது.

 இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

 அவையில் காலம் இன்மை யான (பொருளியல் – 52; கடைசிப்பாடல்)

 நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார். ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம் எனப்படும் வெளி, காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாக ஆகிறது. இவைகளின் மூலம் இவரது கருத்துக்கள், வெளி - காலம் குறித்த நவீனச்சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை குறித்து முன்பே முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 உலகாயதத்தின் ஐம்பூதக்கருத்துக்களை விளக்குவதாக பொருளதிகாரத்தின் 637ஆம் பாடல் இருக்கிறது.

 நிலம் தீ நீர் வளி விசும் போடு ஐந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும் (மரபியல் – 91)

 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு எனும் வெளி ஆகிய ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். உயிரினங்களின் தோற்றத்துக்கான அறிவியல் அடிப்படையாக விளங்கும் பரிணாமக்கொள்கையைக் குறிப்பதாக பொருளதிகாரத்தின் 575ஆம் பாடல் இருக்கிறது.

 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

 இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

 மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபியல் – 27)

 தொடுதல் உணர்வு மட்டும் கொண்டவை ஓரறிவு உயிர் எனவும் அதனுடன் நாக்குச்சுவை கொண்டவை ஈரறிவு உயிர் எனவும், அத்துடன் மூக்கால் நுகரும் தன்மை கொண்டவை மூவறிவு உயிர் எனவும், இவையோடு கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டவை நான்கறிவு உயிர் எனவும், இந்த நான்குடன் செவியால் கேட்கும் திறன் கொண்டவை ஐந்தறிவு உயிர் எனவும், இந்த ஐந்துடன் மனம் கொண்டு அறியும் திறன் கொண்டவை ஆறறிவு உயிர் எனவும் இப்பாடலில் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.

 எல்லா உயிர்களும் இன்பத்தை அடைவதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் இன்பவியல் கோட்பாட்டை பொருளதிகாரத்தின் 219ஆம் பாடல் பேசுகிறது.

 எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

 தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். (பொருளியல் – 27)

அறம் சார்ந்த வாழ்வு:

 தனது பொருளதிகாரத்தின் 214ஆம் பாடலில் இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்.

 அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே

 வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).

 பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்தமுறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

 காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் – 51)

 இப்பாடல் துறவறம் குறித்தோ வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்தமுறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப்படைப்புகளில் இடம்பெறுவதைக்கூட ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத்தெரிவிக்கிறார். இலக்கியப்படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் அறத்தைக்கடைப்பிடித்தல் என்பது மிகமிக முக்கியமானதாக பழந்தமிழர்களால் கருதப்பட்டது எனலாம். ஆனால் வட இந்தியர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்விட வீடு என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். ஆனால் பழந்தமிழர்கள் வீடு என்பது குறித்தோ, இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தோ கவலைப்படவில்லை. அவர்கள் இந்த உலக வாழக்கையின் அனைத்து நடைமுறைகளிலும் அறத்தைக்கடைப்பிடித்து, பொருள் சேர்த்து, இன்பம் நுகர்ந்து வாழ்வதற்கே முக்கியத்துவம் தந்தனர்.

இன்பவியல் கோட்பாடு:

            தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,

            எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

            தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

            என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்

            தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

            தாமரைக் கண்ணா னுலகு      -காமத்துப்பால், 1103.

            எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(1).

ஐம்பூதம்:

            தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. புறநானூற்றின் 2ஆம் பாடல்,

 மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்

 விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும்

 தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல

 என ஐம்பெரும்பூதத்து இயற்கை என்ற, இயல்புக்கோட்பாட்டை விளக்கும். ஐம்பெரும்பூதங்களை ஆய்வு செய்ததால் பூதவாதம் எனவும், உலகின் தோற்றத்தைப்பற்றி ஆராய்ந்ததால் உலகாய்தம் எனவும் இக்கோட்பாடு அழைக்கப்படுகிறது. உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர்கள்; உணவால் ஆனதுதான் உடம்பு; நிலத்தொடு நீர் சேருவதுதான் உணவு; ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்கள் உடலையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர் என்கிற பொருள்தரும் பாடலை குடபுலவியனார் என்ற புலவர் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனிடம் கூறி அவனை நிலமும் நீரும் இணையத் தேவையான ஏரி, குளம், குட்டைகளை உருவாக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்

 உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

 நீரும் நிலனும் புணரியோர் ஈன்று

 உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” (புறம்:18, வரி: 19-23)

 இப்பாடலின் கருத்துக்கள் எண்ணியச் சிந்தனையின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிய ஐம்பூதக்கோட்பாட்டின்படி அமைந்தவைகள் ஆகும். திருமூலரும் உடம்பே உயிருக்கு அடிப்படை என்ற பொருளில் ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ எனக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்களுக்கு மூல ஊற்றாய் அமைந்த தந்திர மரபுக்குரியவை எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

 ஐம்பெரும்பூதங்களின் ஒன்றிணைப்பால் உருவாகும் வேதியல் மாற்றத்தால் தோன்றுவதுதான் உயிர் என்பதே பூதவாதிகளின் கருத்தாகும். சாரக சம்கிதை அறிவுப்புலங்களால் அறியப்படும் ஐம்பூதங்களை, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என வரிசைப்படுத்தும். இவ்வரிசை முறை உலகத்தோற்றம் குறித்த தமிழியக்கோட்பாடாகும். பரிபாடலின் 2ஆம் பாடல்,

 “கருவளர்வானத் திசையுடன் தோன்றி

 உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

 உந்துவெளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்

 செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையில்

 ஊண்முறை வெள்ள் மூழ்கி ஆர்தருபு

 மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்

 உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” -

என அண்டவெளியின் தோற்றம் குறித்துப் பேசுகிறது. இப்பாடல் சங்கம் மருவிய காலத்துக்குரிய பாடலாகும். “அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் கரு நிலையில் இருந்த போது பெரிய வெடியோசையுடன் அவ்வணுக்கரு வெடித்துச் சிதறியது. அதுவே முதல் ஊழி எனப்படும். அந்நிகழ்வே வெளியின் தோற்றத்துக்குக் காரணமாக ஆகியது. அதன்பின் பொருள்களை இயக்கும் காற்று தோன்றி கிளர்ந்து வீசிய இரண்டாம் பூதத்து ஊழியும், அடுத்து சிவந்த ‘தீ’ சுடர் வீசி எறிந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அடுத்து பனியோடு குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும் அடுத்தடுத்துத்தோன்றின. இறுதியாக அந்நான்கு பூதங்களின் ஊடே வெள்ளத்தே முழுகிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள், மீளவும் ஆற்றல் அதிகரித்துச் செறிந்து திரண்டு, முக்கூறிய நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்து ஊழியும் எனக்கூறப்பட்ட ஊழிகள் தோன்றின” இதுவே இப்பாடலின் பொருளாகும். இதன்படி வரிசைமுறை என்பது பெருவெடிப்பு, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என அமைகிறது. சரக சம்கிதை கூறும் இவ்வரிசைமுறை தொன்மைக்கால எண்ணியத்திற்கு உரியதாகும். எண்ணிய மெய்யியலின் ஒரு கூறாகவே மருத்துவம் தோன்றி வளர்ந்தது எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(2). மருத்துவம் மட்டுமின்றி பிற அறிவியல் துறைகளும் எண்ணியக் கருத்துக்களை அடித்தளமாக் கொண்டே பழந்தமிழகத்தில் உருவாகி வளர்ந்தன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மெய்ப்பாடுகள்:

 தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் மெய்ப்பாட்டியலில் உள்ள சில மெய்ப்பாடுகள் குறித்தும், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றில் ‘நூல்’ குறித்து சொல்லப்பட்டுள்ளவை குறித்தும் இங்கு காண்போம். இவ்விடயங்கள் தொல்காப்பியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் எனலாம். மெய்ப்பாடுகள் என்பன உடல்வழியாக வெளிப்படும் மன உணர்வுகள் ஆகும். அடிப்படை மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு மெய்ப்பாடுகளைக்கொண்டவை என்பதால் மொத்தம் 32 மெய்ப்பாடுகள் உள்ளன. அவை

1.நகை : எள்ளல், இளமை, பேதமை, மடன்.

2.அழுகை : இழிவு, இழவு, அசைவு, வறுமை.

3.இளிவரல்: மூப்பு, பிணி, வருத்தம், மென்மை.

4.மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.

5.அச்சம் : அணங்கு, விலங்கு, கள்வர், இறை.

6.பெருமிதம்: கல்வி, தறுகண், புகழ்மை, கொடை.

7.வெகுளி : உறுப்பறை, குடிகோள், அலை, கொலை.

8.உவகை : செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு.

 நகை என்ற மெய்ப்பாடு நான்கு வகையில் வெளிப்படும். பிறரை இகழும்போது தோன்றுவது எள்ளல், இளமையாக இருந்து முதியவரைக் கண்டு நகைப்பது இளமை, ஒருவரின் அறிவின்மை கண்டு நகைப்பது பேதமை, ஒன்றை உள்ளவாறு உணராமல் தவறாக உணரும் மடமை கண்டு நகைப்பது மடன். இவ்விதமாக எட்டு வகை மெய்ப்பாடுகளுக்கும் மேலே சொல்லப்பட்ட 32 மெய்ப்பாடுகளும் தோன்றும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 245 முதல் 255 வரையான பாடல்கள் (மெய்ப்பாட்டியல்:1-11) இவை குறித்துப் பேசுகின்றன. அதன் 256ஆம் பாடல் (மெய்ப்பாட்டியல்-12) இந்த 32 முதன்மை மெய்ப்பாடுகள் போக மீதி உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துப்பேசுகிறது. முதலில் உள்ள 32 முதன்மை மெய்ப்பாடுகள் உடம்பின் வழியாக உணர்வை வெளிப்படுத்துபவை. துணைமை மெய்ப்பாடுகள் என்பன மன அளவில் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.

 சான்றாக ‘உடைமை’ என்ற முதல் துணைமை மெய்ப்பாடு என்பது ஏதாவது ஒரு பொருளை உடமையாகப் பெறும்பொழுது மனதில் தோன்றும் மகிழ்ச்சி என்ற மன உணர்வைக் குறிக்கும். இப்படியாக உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துத் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆகவே மொத்தம் 64 மெய்ப்பாடுகள் உள்ளன எனலாம். இந்த மெய்ப்பாடுகள் குறித்த கருத்துக்கள் தனது முன்னோர்களால் சொல்லப்பட்டவை என்பதையும் தொல்காப்பியர் ‘என்ப, மொழிப’ என்பதன் மூலம் கூறுகிறார். வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ இவைகளுக்கு இணையான மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளது. அவை இரசங்கள் எனப்படுகின்றன. ஆனால் இந்த பரத நாட்டிய சாத்திரம் தமிழ் மூலத்திலிருந்து தோன்றிய ஒரு வழி நூல் ஆகும்(3). ஆகவே இந்த மெய்ப்பாடுகள் அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குச் சொந்தமானவை.

 தலைவி, தலைவனைக்காண்பது முதல் கூடி மகிழ்வது வரையும் அதன் பின்னரும் ஆன உணர்வு நிலைகள், 24 மெய்ப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, பொருளதிகாரத்தின் 257 – 262 வரையான பாடல்களில்(மெய்ப்பாட்டியல்:13-18) சொல்லப்பட்டுள்ளன. இளம்பூரணர் தலைவிக்குரிய இந்த 24 மெய்ப்பாடுகளையும் ‘அவத்தை’ எனக்குறிப்பிடுகிறார். இவை போக பெருந்திணைக்குரிய 20 மெய்ப்பாடுகள் பொருளதிகாரத்தின் 266ஆம் (மெய்ப்பாட்டியல்-22) பாடலில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே இந்த மெய்ப்பாடுகள் குறித்த விளக்கம், பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை நுட்பமான முறையில் வகைப்படுத்தி, தொகுத்து வைத்தவர்கள் என்பதையும், தொல்காப்பியரின் நுண்மான் நுழைபுலச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

நூல்:

 பொருளதிகாரத்தின் எட்டாவது இயல் செய்யுளியல் ஆகும். இந்த செய்யுளியலில் ‘மாத்திரை’ முதல் ‘இழைபு’ வரையான 34 செய்யுள் உறுப்புகள் குறித்து பொருளதிகாரத்தின் 310ஆம் பாடல்(செய்யுளியல்-1) பேசுகிறது. அதன்பின் அவைகளுக்கான விளக்கம் அச்செய்யுளியல் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 34 உறுப்புகளில் ‘அளவியல்’ என்ற உறுப்பு பற்றிய விளக்கத்தில் ‘நூல்’ குறித்துப் பேசுகிறார் தொல்காப்பியர். நூல் குறித்த விளக்கத்தை பொருளதிகாரத்தின் 471ஆம் பாடல் தருகிறது.

 நூல்எனப் படுவது நுவலுங் காலை

 முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

 தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

 உள்நின்று அகன்ற உரையோடு பொருந்தி

 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே (செய்யுளியல்-162).

 நூல் என்பதில் தொடக்கமும் முடிவும் மாறுபாடில்லாமல் தெளிவாக இருக்கும்; தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும்; தன்னுள் அடங்கிய தெளிவான, விரிவான உரையைப் பெற்றிருக்கும். இறுதியாக நூல் என்பது அந்நூலின் தன்மைக்கு ஏற்ப நுட்பமான பொருளை உணர்த்தும் பண்பைக்கொண்டது. இவை நூல் குறித்து தொல்காப்பியர் கூறுவதாகும். நூல், உரை, பிசி எனும் விடுகதை, பழமொழி எனும் முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி ஆகிய ஆறு இலக்கிய வகைகளுக்கும் அடி வரையரை கிடையாது என்பதை அதற்கு முந்தைய பாடலில்(செய்யுளியல்-161) தொல்காப்பியர் கூறுகிறார்.

 இலக்கிய வகைகளுள் ஒன்றான நூல் எனப்படுவது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளைக்கொண்டது. பொருள் எளிதில் அறியும் வகையில் யாப்பியல் நெறியில் அமைக்கப்படுவது சூத்திரம் ஆகும். ஒரே இனமாக வரும் பொருளை ஒருசேர வைத்துப் புனையப்படுவது ஓத்து(இயல்) ஆகும். ஒரு பொருள் நெறி என்றில்லாமல் பலவகைப்பட்டு விரவி வரும் பொருள்களை எல்லாம் தொகுத்துப் பொதுவாக அமைப்பது படலம் ஆகும். சூத்திரத்தின் ஒரு பொருளும், ஓத்தின் ஒரே இனப்பொருளும், படலத்தின் விரவிய பலபொருள்களும் சேர்த்துத் தொகுத்து அமைப்பது பிண்டம் ஆகும். இவை பொருளதிகாரத்தின் 472-477 வரையான 6 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நூல் என்பது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளையும் கொண்டதாக அமையும் எனலாம்.

 செய்யுளியலில் நூல் என்பது நான்கு வகையான பாகுபாடுகளைக் கொண்டது எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், பொருளதிகாரத்தின் மரபியலில் முதல் நூல், வழிநூல் என இருவகையான நூல்கள் உண்டு என்கிறார். வினைகள் நீங்கிய அறிவு முதிர்ந்த முனைவனால் ஆக்கப்படுவது முதல்நூல் ஆகும். முதல் நூலை அடிப்படையாகக்கொண்டு அதனைப்பின்பற்றி ஆக்கப்படுவது வழி நூல் ஆகும். வழி நூல் தொகுத்து அமைத்தல், விரித்துக்கூறுதல், தொகுத்தும், விரித்தும் அமைத்தல், மொழிபெயர்த்தல் ஆகிய நான்கு நிலைகளில் அமையும். பத்துவகைக் குற்றங்களும் இல்லாது, 32 வகை உத்திகளும் பெற்று, உண்மைப்பொருள் விளங்கக் கூறுவதே நூல் ஆகும். பொருளதிகாரத்தின் 643-649 வரையான பாடல்கள்(மரபியல்:95-99) இவை குறித்துப் பேசுகின்றன. இலக்கண நூலின் அமைப்பு, நூற்பாவின் இலக்கணம், காண்டிகை உரை, உரைநூல் ஆகியன குறித்துப் பொருளதிகாரத்தின் 648-654 வரையான 7 பாடல்கள்(மரபியல்:100-106) ஓரளவு விரிவாகப் பேசுகின்றன.

 பொருளதிகாரத்தின் 658ஆம் பாடல்(மரபியல்-110), நூலில் ஏற்படும் பத்து வகையான குற்றங்கள் குறித்துப் பேசுகிறது. 1.கூறியது கூறல், 2.மாறுகொளக்கூறுதல், 3.குன்றக்கூறல், 4.மிகைபடக்கூறல், 5.பொருள் இல் மொழிதல், 6.பொருள் மயங்கக்கூறல், 7.கேட்போருக்கு இனிமை தராதவகையில் கூறல், 8.பழிமொழியால் இழுக்கு வருமாறு கூறல், 9.தொன்மையைவிட்டு விலகி தானே ஒன்றைக்கூறல், 10.படிப்போருக்கு விளங்காத வகையில் கூறல் ஆகியன அந்த பத்து வகையான குற்றங்கள் ஆகும். இந்தப்பத்து வகையான குற்றங்களும் இல்லாமல் படைக்கப்படும் படைப்புதான் நூல் என்ற தகுதியைப்பெறும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர்.

 நூலை எழுதும்பொழுது கையாள வேண்டிய உத்திகள் என்பன 32 எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 660ஆம் பாடல்(மரபியல்-112), அந்த 32 உத்திகளையும் வரிசைப்படுத்திக்கூறுகிறது. அவை ‘நுதலியது அறிதல்’ முதல் ‘உய்த்துக்கொண்டு உணர்த்தல்’ வரை 32 உத்திகள் ஆகும். நுதலியது அறிதல் என்பது ‘சொல்லக்கூடிய கருத்தைப் பிறர் தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு கூறுதல்’ ஆகும். அதுபோன்றே, உய்த்துக்கொண்டு உணர்த்தல் என்பது ‘தெளிவில்லாத கருத்தை உய்த்து உணர்ந்து பொருந்தும் வகையில் விளக்கிக்கூறுதல்’ ஆகும். இப்படியாக நூல் எழுதுவதற்கான 32 உத்திகளையும் தொல்காப்பியர் பட்டியலிட்டுள்ளார். இந்த 32 உத்திகளையும் பின்பற்றி, முன்பு கூறிய 10 குற்றங்களையும் நீக்கிப் படைக்கப்படும் படைப்பு மட்டுமே நூல் என்ற தகுதியைப் பெறும். இந்த விலக்கப்படவேண்டிய 10 குற்றங்களும், பின்பற்றப்பட வேண்டிய 32 உத்திகளும் தமது முன்னோர்கள் கூறியிருப்பவை என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இவை அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியவை என ஆகிறது.

 தொல்காப்பியரால் நூலுக்குரிய இலக்கணமாகக் காட்டப்படும் 32 உத்திகள், பத்துவகைக்குற்றங்கள், சூத்திரம், காண்டிகை உரை, உரைநூல் முதலியன தருக்கவியலுக்குரியன எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். இந்த உத்திகள், குற்றங்கள் முதலியன குறித்து வடமொழியில் உள்ள சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் பேசுகிறது. அவற்றை அது பேச்சுக்கலைக்குரியதாகக் கூறுகிறது. ஆனால் அந்த மருத்துவ நூலும் தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல்தான் ஆகும்(4).

 பொருள்முதல் சிந்தனையாளர்கள் மூல எண்ணியத்திற்கும்(ORIGINAL SAMKYA), தொடக்ககால சிறப்பியத்திற்கும்(வைசேடிகம்) உரியன எனவும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை எனவும் எவற்றைக் குறித்துள்ளனரோ அவற்றை எல்லாம் தொல்காப்பியர் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறார் எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். மேலும் படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION), ஐம்பூதக்கோட்பாடு(THEORY OF UNIVERSE), அளவையியல் கோட்பாடு(THEORY OF REASONING AND LOGIC), காரணகாரியக் கோட்பாடு(THEORY OF CAUSE AND EFFECT), இன்பியல் கோட்பாடு(THEORY OF HEDONISM) ஆகிய அறிவியல் துறைகளை தொல்காப்பியர் குறிப்பிடுவதோடு, அவை தமது முன்னோர்கள் கூறியுள்ளவை என்பதையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(5). மேலே சொல்லப்பட்டவைகளின் மூலம், தொல்காப்பியர் ஒரு தத்துவ அறிஞரும், அறிவியல் மேதையும் ஆவார் என்பதோடு அவர் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் ஆகிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் சிற்பிகளில் ஒருவராக அவரை ஆக்குகிறது.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை:

 வட இந்தியாவில் 16 சனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், எண்ணியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட எண்ணியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் கி.மு. 1000க்கு முன்பே கிரேக்க நகர அரசுகள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான குறியீடுகள் என்ற ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1500 வாக்கில் நடை பெற்றுவிட்டது எனலாம். அப்பண்பாட்டுப் புரட்சி அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.

            பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் எண்ணியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணிய அடிப்படையிலான சிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும்.

 ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியம் எனப்படுகிற எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்துத் தற்காலத்திற்குரிய, ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் எனலாம்.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை - வேறுபாடுகள்:

1.தமிழிய சிந்தனையின்படி பூதவாதம் எனப்படும் உலகாயதத்தில் நீர், நிலம், தீ. வளி, வெளி ஆகிய ஐந்து பூதங்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனையில் வெளி இல்லாத நான்கு பூதங்களே உண்டு.

2.எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் தமிழியச்சிந்தனைப்படி 24 கூறுகள் மட்டுமே உண்டு. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி 24 கூறுகளுடன் புருடன் என்பது சேர்க்கப்பட்டு மொத்தம் 25 கூறுகள் உண்டு.

3.சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்தில் தமிழியச்சிந்தனைப்படி ஏழு பொருள்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனைப்படி ‘இன்மை’ இல்லாமல் ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.

4.தமிழ் மரபு மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டதாக உள்ளது. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி இந்த மூன்றுடன் வீடு என்பது சேர்க்கப்பட்டு மனித வாழ்வு நான்கு அடிப்படைகளைக்கொண்டதாக உள்ளது.

5.தொழில் முதல்நிலை எனப்படும் காரியாபினிவிருத்தி என்பது ஒரு தொழிலைச்செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு ஆகும். இது தமிழியச்சிந்தனைப்படி 8 வகைகளைக்கொண்டதாக உள்ளது. வட இந்தியச் சிந்தனைப்படி இந்த 8 வகைகளோடு முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து 10 வகைகளைக்கொண்டதாக அது உள்ளது.

6.தந்திர உத்திகள் என்பவை தமிழியச்சிந்தனைப்படி நூலுக்கான உத்திகளாக 32 உத்திகளைக் கொண்டுள்ளன. வட இந்தியச்சிந்தனைப்படி இவை பேச்சுக்கலைக்கான உத்திகளாக 36 உத்திகளைக் கொண்டுள்ளன.

 தமிழியச்சிந்தனைகளில் இருந்து தான் பெரும்பாலான அறிவியல், பொருள் முதல்வாத வட இந்தியச் சிந்தனைகள் உருவாகின என்பது முன்பே பலவிதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் கூட தமிழியச்சிந்தனைகளின் அறிவியல், தத்துவார்த்த அடிப்படைகளை ஆழ்ந்து புரிந்துகொள்ளாததன் விளைவேயாகும் என்பதும் முன்பே சொல்லப் பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் தமிழியச் சிந்தனைகளின் அறிவியல் அடிப்படையிலான பொருள் முதல்வாத மெய்யியலை உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

பார்வை:

1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:34-36

  1. “ “ “ பக்: 41-42.
  2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: பக்: 839, 840.
  3. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:145.

5.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 33, 34.

- கணியன் பாலன், ஈரோடு

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11

அண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும்

 நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது. அந்த நூலில் இருந்து அண்டம், காலம் ஆகியன குறித்தச் சுருக்கமான தரவுகள் இங்கு தரப்பட்டுள்ளன. அண்டம் குறித்த இருபெரும் கோட்பாடுகளை நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது. அவை ஐன்சுடீன் அவர்களின் பொதுச்சார்பியல் கோட்பாடும் (GENERAL THEORY OF RELATIVITY), கற்றை இயங்கியலும் (QUANTUM MECHANICS) ஆகும். இதில் முதல் கோட்பாடு பெருவீதக் கட்டமைப்புகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பல இலட்சம் கோடி கி.மீ அளவுகளைக் கொண்ட பெரிய உருவங்கள் குறித்தான கோட்பாடு என அதனைச் சொல்லலாம். விண்மீன்கள், கோள்கள், திரள்கள் போன்ற பெரிய கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுதான் பொதுச்சார்பியல் கோட்பாடாகும். அடுத்ததாக கற்றை இயங்கியல் என்பது கண்ணுக்கு புலப்படாத மில்லிமீட்டரில் பல இலட்சம் கோடியில் ஒருபங்கு போன்ற மிகமிகச் சிறிய அளவுப் பொருட்களைப் பற்றிய கோட்பாடு எனலாம். அணுவில் இருக்கும் நேர்மங்கள் (PROTONS), நொதுமங்கள் (NEUTRONS), பொடிமங்கள் (QUARKS), மின்மங்கள் (ELECTRONS) போன்ற கண்ணால் காண இயலாத மிகமிகச் சிறிய அளவுள்ள பொருட்களைப்பற்றிய கோட்பாடுதான் கற்றை இயங்கியல் கோட்பாடு ஆகும்.

  இந்த இரண்டு கோட்பாடுகளும் பலவிதங்களில் உறுதிசெய்யப்பட்டு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த இரண்டு கோட்பாடுகளும் சிலகோணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவைகளாக இருக்கின்றன. ஆகவே அறிவியலாளர்கள் இவைகளைப் பகுதிக் கோட்பாடுகளாகவே ஏற்று அங்கீகரித்துள்ளனர். ஆகவே அண்டம் முழுமைக்குமான கோட்பாடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்துத்தான் அண்டம் முழுமைக்குமான கோட்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இயற்பியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் எப்போதும் இடைக்காலத்துக்குரியவைதான் எனவும், புதிதாக நோக்கியறிந்த செய்தி ஒரு கோட்பாட்டிற்கு முரண்படுவதாகத் தெரிந்தால், நாம் அக்கோட்பாட்டைக் கைவிடவோ அல்லது திருத்தியமைக்கவோ வேண்டும் எனவும், பெரும்பாலும் புதிய கோட்பாடு ஒன்றை வகுத்துருவாக்கும்போது அது உண்மையில் முந்தைய கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது எனவும் கூறுகிறார் ஸ்டீஃபன் ஆக்கிங்(1).

stephen hawking

பொதுச்சார்பியல் கோட்பாடு:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டை அறிந்தவர்கள் ஐன்சுடைனின் புகழ்பெற்ற சமன்பாட்டையும் அறிந்திருப்பர். அந்தச்சமன்பாடு வருமாறு,

    E = m(cxc)

 இதில் E = ஆற்றல், m = பொருளின் நிறை c = ஒளியின் வேகம்.

 இதில் c என்ற ஒளியின் வேகமானது சுமார் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ ஆகும். மேற்கண்ட சமன்பாட்டின்படி, ஒளியின் வேகத்தை ஒளியின் வேகத்தோடு பெருக்கிக் கிடைப்பதை பொருளின் நிறையோடு பெருக்கவேண்டும். இவ்வாறு பெருக்கிக் கிடைப்பதுதான் அப்பொருளின் ஆற்றலாகும். ஒளியின் வேகம் மாறாது எனவும், எதனாலும் ஒளியின் வேகத்தைக்காட்டிலும் வேகமாகப்பயணம் செய்ய இயலாது எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு கூறுகிறது. பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க, நெருங்க அப்பொருளின் ஆற்றல் காரணமாக நிறை அதிகமாகி வரும். பொருளை வேகப்படுத்த மேன்மேலும் ஆற்றல் தேவைப்படும். பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க நிறை மேலும் மேலும் அதிகமாகி அது ஈறிலா (INFINITY) அளவாகிவிடும். ஆகவே பொருள் ஒளியின் வேகத்தை அடைய ஆற்றலின் தேவையும் ஈறிலா அளவு தேவைப்படும். இதன் காரணமாக ஒளியைத்தவிர பிற பொருட்களால் ஒளிவேகத்தை அடையவே முடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு(2).

வெளி-காலம்:

 சார்பியல் கோட்பாடு வெளி – காலம் குறித்த கருத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளது. சார்பியல் கோட்பாடு ‘அறுதிக்காலம்’ என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது காலம் என்பது ஒருவர் இருக்கும் நிலையைப்பொறுத்து மாறுகிறது. அடுத்ததாக, காலம் என்பது வெளி என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது(3). அதன் காரணமாகவே, பூமியும் அதில் உள்ள நம்மைப்போன்ற பொருட்களும் நீளம் அகலம் உயரம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட முப்பரிமாணப்பொருட்களாக இருக்கும் நிலையில், ‘வெளி-காலம்’ என்பதால் ஆன அண்டம் என்பது இம்மூன்றுடன் சேர்ந்து காலத்தை நான்காவது பரிமாணமாகக் கொண்டு நாற்பரிமாணப்பொருளாக இருக்கிறது.

ஈர்ப்பு விசையும் காலமும்:

 ஈர்ப்பு என்பது மற்ற விசைகளைப்போல் ஒரு விசையன்று. வெளி-காலம் என்பது தட்டையாக இல்லாமல், அதில் உள்ள நிறை மற்றும் ஆற்றலின் பரவலால் வளைந்தோ, உருண்டோ இருப்பதன் விளைவுதான் ஈர்ப்பு ஆகும் என்கிறார் ஐன்சுடீன். பொதுச்சார்பியலில் உருக்கள் எப்போதுமே நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோடுகளின் வழிச்செல்லும். ஆனால் அவை நமது முப்பரிமாண வெளியில் வளை பாதைகளின் வழிச்செல்வதாகத் தோன்றுகிறது. புவியின் பரப்பு ஓர் இரு பரிமாண வளைவெளி ஆகும். மலைப்பகுதி மேல் பறக்கும் ஒரு வானூர்தி, முப்பரிமாண வெளியில் நேர்கோட்டில் சென்றாலும், அதன் நிழல் இரு பரிமாண நிலத்தில்(மலைப்பகுதியில்) வளைந்த பாதையில் செல்வதுபோல் தெரியும். அதைப்போன்றுதான், வெளி-காலம் என்பது அதன் நிறை மற்றும் ஆற்றலால் வளைந்து இருப்பதால், நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோட்டில் செல்லும் பூமி, முப்பரிமாண நிலையில் வளை பாதையில் செல்வதுபோல தோன்றுகிறது(4).

 ஈர்ப்பு விசைப்புலங்களால் ஒளி வளைக்கப்படுவதாக பொதுச்சார்பியல் ஊகித்தது. 1919இல் மேற்கு ஆப்ரிக்காவில் பிரித்தானிய ஆய்வுக்குழு ஒன்று, ஒளி உண்மையிலேயே பொதுச்சார்பியல் ஊகித்தது போன்றே விலகலுக்கு உள்ளாவதாக மெய்ப்பித்தது. பொதுச்சார்பியல் கோட்பாடு, புவி போன்ற பெருநிறை கொண்ட உருவின் அருகே செல்லும்பொழுது காலம் மெதுவாகச் செல்வதாகத்தோன்றும் எனவும் ஊகித்தது. ஒளியின் ஆற்றல் புவியின் அருகே அதிகமாவதால் காலம் மெதுவாகச்செல்கிறது. புவியின் ஈர்ப்புப் புலத்தில் ஒளி மேல் நோக்கிச் செல்லச்செல்ல அது ஆற்றலை இழக்கிறது. ஆதலால் புவியின் மேலே இருக்கும் ஒருவருக்கு காலம் வேகமாகச் செல்லும். ஆதலால் அவருக்கு, புவியின் கீழே நடக்கும் நிகழ்வுகளுக்கு கூடுதல் காலம் ஆவதுபோல் தோன்றும். 1962இல் இது சோதித்துப்பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது(5).

 ஆகவே புவியின் அருகே அதிக ஈர்ப்பு ஆற்றல் இருப்பதால் அங்கு காலம் மெதுவாகச்செல்கிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சார்பியல் கோட்பாட்டில் தனித்துவமான அறுதிக்காலம் என்பதே இல்லை. அதற்குப்பதிலாக ஒருவர் இருக்கும் இடம், அவரது இயக்க நிலை முதலியனவற்றின் அடிப்படையில் அவருக்கே உரிய சொந்தக் கால அளவை இருக்கிறது என்பதுதான் உண்மை.

நிகழ்வுகள்:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது. அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை. அண்டத்தைப்பற்றிய மேற்கண்ட புதிய புரிதல்கள் காரணமாக அண்டத்திற்கு ஒரு திட்டமான காலத் தொடக்கம் இருக்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஒரு திட்டமான காலத்தில் அது முடிந்தாக வேண்டும் எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு குறிப்பதாக இரோசர் பென்ரோசும், நானும் உறுதி செய்தோம் என்கிறார் ஸ்டீஃபன் ஆக்கிங். ஆனால் கற்றை இயங்கியல் கோட்பாடு அண்டத்தின் முடிவு, தொடக்கம் ஆகியவற்றுக்கு முரணானது.

விரிவடையும் அண்டம்:

 நமது அண்டத்தில் சில பத்தாயிரம்கோடி திரள்கள் உள்ளன. திரள் (GALAXY) ஒவ்வொன்றும் சில பத்தாயிரம் கோடி விண்மீன்களைக் கொண்டுள்ளது. திரள்கள் சுருள் வடிவத்தில் உள்ளன. நமது திரளான பால் வீதி என்பது நூறாயிரம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. நமது திரளில் உள்ள விண்மீன்கள் பல பத்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது திரளின் மையத்தைச் சுற்றி வருகின்றன. நமது ஞாயிறு என்பது நமது பால் வீதித் திரளின் சுருள் கைகளின் உள்விளிம்புக்கு அருகே உள்ள சராசரி அளவுள்ள மஞ்சள் நிற விண்மீன் ஆகும். அனேகமாக எல்லாத்திரள்களும் நம்மை விட்டு விலகிச்சென்று கொண்டுள்ளன. மேலும் எந்த அளவு ஒரு திரள் தொலைவாக உள்ளதோ அந்த அளவு நம்மை விட்டு விரைவாக விலகிச்சென்று கொண்டுள்ளது. திரள்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள தொலைவும் இடைவிடாது அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன்படி நமது அண்டம் உண்மையில் விரிவடைந்து கொண்டுள்ளது.

கருந்துளை – இயன்வழுப்புள்ளி:

. பொதுச்சார்பியலில், எரிபொருள் தீர்ந்த பிறகு தானே தன் ஈர்ப்பினால் தகர்வுறும் விண்மீன் ஒரு வட்டாரத்தில் மாட்டிக்கொள்வதன் காரணமாக அதன் பரப்பு இறுதியில் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு ஆகி விடுவதால் அதன் பருமனும் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு சுருங்கி விடுகிறது. அந்த விண்மீனில் அடங்கிய பருப்பொருள்கள் அனைத்தும் சுன்னப்பருமனளவு கொண்ட மிகமிகச்சிறிய வட்டாரத்துக்குள் திணிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதனால் பருப்பொருள்களின் அடர்த்தியும் வெளி-கால வளைவும் ஈறில்லாததாக அதாவது எல்லையற்றதாக ஆகி விடுகின்றன. இந்த வெளி கால வட்டாரத்தையே நாம் கருந்துளை என்கிறோம். ஆகவே கருந்துளை என்பது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான ஒரு தகர்ந்துபோன விண்மீன் ஆகும். இந்த நிலையில்தான் கருந்துளை(BLACK HOLE) எனப்படும் ஒரு வெளி-கால வட்டாரத்துக்குள் அடங்கிய இயன்வழுப்புள்ளி(SIGULARITY) உருவாகிறது. வெளி-கால வளைவு ஈறிலையாகி அதாவது எல்லையற்றதாகி, ஒரு புள்ளி அளவான வெளி-கால வட்டாரமாதல் என்பதே இயன்வழுப்புள்ளி ஆகும். தொடக்கத்தில் அண்டம் ஒரு சுன்ன அளவாக இருந்தது என்பதோடு அதற்கு ஒரு மாவெடிப்பும்(BIGBANG) இருந்தது என்பதை இந்த இயன்வழுப்புள்ளித் தேற்றங்கள் காட்டுகின்றன. எனினும் அண்டம் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்துச் சார்பியல் கோட்பாடு ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில் எல்லா இயற்பியல் கோட்பாடுகளும் அண்டத்தின் தொடக்கத்தில் செயலிழந்து விடுகின்றன என அது ஊகிக்கிறது.

கருந்துளையும் சந்திரசேகர் வரம்பும்:

  பொதுவாக விண்மீன்கள் அவற்றின் அணுக்கருவினைகள் உருவாக்கும் வெப்பத்தால் ஈர்ப்புக்கவர்ச்சியைச் சரிசெய்து கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையாக இருந்து வரும். சான்றாக நமது ஞாயிறு இன்னும் ஐந்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குத்தேவையான எரிபொருளைக் கொண்டுள்ளது. ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிகமான எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு தன் ஈர்ப்பிற்கு எதிராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளமுடியாது என இந்தியாவைச் சேர்ந்த தமிழரான சந்திரசேகர் கணக்கிட்டார். அது இன்று சந்திரசேகர் வரம்பு என அழைக்கப்படுகிறது. ஒரு விண்மீன் எடை சந்திர சேகர் வரம்புக்கும் குறைவாக இருக்குமானால் தவிர்ப்புக்கொள்கை வழங்கும் விலக்கலைக் கொண்டு அது முடிவில் சுருங்குவதை நிறுத்திக்கொண்டு வெள்ளைக்குறளி (White Dwarf)) என்ற நிலையை அடையும். ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிக எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு சுருங்கத்துவங்கி, அதன் ஈர்ப்புப்புலம் மேலும் மேலும் அதிகமாகி ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலையை அடைந்து இறுதியில் பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான கருந்துளையாக ஆகும்.

கற்றை இயங்கியல்:

 கற்றை இயங்கியல் என்பது ஒரு நோக்காய்வுக்கான திட்டவட்டமான ஒற்றை முடிவை ஊகித்துச் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சாத்தியப்பாடுள்ள பல்வேறு முடிவுகளையும் அது ஊகித்தறிந்து ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு வாய்ப்புண்டு என்று நமக்குச் சொல்கிறது. ஆகவே கற்றை இயங்கியல் என்பது ஊகித்தறிய முடியாத தன்மை அல்லது திட்டவரையறையின்மை என்கிற தவிர்க்க முடியாத கூறு ஒன்றை அறிவியலுக்குள் அறிமுகம் செய்கிறது. ஆகவே இது உறுதியின்மைக் கொள்கை எனப்படும். அண்டம் தற்செயலால் ஆளப்படுகிறது என்ற கருத்தை ஐன்சுடீன் ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் அவர் இதை வன்மையாக எதிர்த்தார். ஆனால் உண்மையில் இந்தக்கோட்பாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் அனைத்திற்கும் அடிநாதமாய்த் திகழ்கிறது. தொலைக்காட்சிகள், கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்களின் இன்றியமையாத உறுப்புகளாகிய முத்தடையங்கள் (TRANSISTORS) மற்றும் தொகுப்புச்சுற்றுகள் ஆகியவற்றின் இயக்கத்தை இதுவே ஆள்கிறது. நவீன வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கும் இதுவே அடிப்படை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(6).

 பிளாங்கின் கற்றைக்கருதுகோள், ஒளிகள் என்பது அலைகளால் ஆனது என்றாலும் சிலவகையில் அது துகள்களால் ஆனதுபோல் நடந்துகொள்கிறது என்கிறது. அதனைக்கற்றைகள் எனப்படும் பொட்டலங்களாக மட்டுமே உமிழவோ அல்லது உட்கொள்ளவோ முடியும். கற்றை இயங்கியல் புத்தம் புதியவகையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் கற்றை இயங்கியலில் அலைகளுக்கும், துகள்களுக்கும் இடையே இரட்டைத்தன்மை உள்ளது. அதாவது சில நோக்கங்களுக்குத் துகள்களை அலைகளாகக் கொள்வதும், வேறு சில நோக்கங்களுக்கு அலைகளைத் துகள்களாகக் கொள்வதும் பொருந்திப் போகிறது(7). சான்றாக அணுக்கருவைச் சுற்றிவரும் மின்மத்தைத் துகளுக்குப்பதில் அலையாகக் கருதிக்கொள்ளலாம் என்பதன் மூலம் சில பிரச்சினைகளைக் கற்றை இயங்கியல் தீர்த்து வைத்துள்ளது.

தவிர்ப்புக்கொள்கை & எதிர்த்துகள்:

 வோல்ஃகேங் பாலி என்பவர், இரண்டு ஒத்தத்துகள்கள் ஒரே நிலவரத்தில் இருக்க முடியாது, அதாவது உறுதியின்மைக்கொள்கை விதிக்கும் எல்லைகளுக்குள் அவை இரண்டுக்கும் ஒரே நிலையும், ஒரே திசைவேகமும் இருக்கமுடியாது என்ற தவிர்ப்புக்கொள்கையை கண்டுபிடித்தார். தவிர்ப்புக் கொள்கை இல்லாமல் உலகம் படைக்கப்பட்டிருந்தால் பொடிமங்கள் தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட நேர்மங்களாகவும், நொதுமங்களாகவும் அமையமாட்ட. அவை மின்மங்களோடு சேர்ந்து தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட அணுக்களாகவும் அமையமாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங். பால் டிராக் என்பவர் மின்மத்துக்கு ஒரு பங்காளி, அதாவது ஓர் எதிர்மின்மம் அல்லது நேராக்கமின்மம்(POSITRON) இருந்தாகவேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். இதன்படி, ஒவ்வொரு துகளுக்கும் எதிர்த்துகள் உண்டு; அவை ஒன்றோடு ஒன்று மோதி அழியும்; அவைகளின் ஆற்றல்கள் மட்டுமே எஞ்சி நிற்கும். எதிர்த்துகளிலிருந்து உருவான முழு எதிருலகங்களும் எதிர் மக்களினமும் இருக்கக் கூடும். நாமும் நமது எதிர்த்துகள் நபரும் சந்தித்தால் இருவரும் அழிவோம். ஆனால் நம்மைச்சுற்றி எதிர்த்துகள்களைக்காட்டிலும் துகள்களே அதிகமாக உள்ளன என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(8).

விசையேந்தித் துகள்கள்:

 கற்றை இயங்கியலில் நேர்மங்கள், நொதுமங்கள், போன்ற பருப்பொருள் துகள்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் விசையேந்தித்துகள்கள் மாயத்துகள்கள் (VIRTUAL PARTICLES) எனப்படுகின்றன. ஏனெனில் இவைகளைத் துகள் கண்டுபிடிக்கும் கருவியால் கண்டுபிடிக்க முடியாது. அவை பருப்பொருள் துகள்களுக்கிடையே விசைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த விசையேந்தித்துகள்கள் தவிர்ப்புக் கொள்கைக்கு கீழ்ப்படிவதில்லை. அதன் காரணமாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய விசையேந்தித் துகள்களுக்கு எல்லையேதும் இல்லை. விசையேந்தித் துகள்களில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மெல்அணுக்கருவிசை (WEEK NUCLEAR FORCE), வல் அணுக்கரு விசை (STRONG NUCLEAR FORCE) ஆகிய நான்கு வகையினங்கள் உண்டு.

கருந்துளைகளின் கதிர்வீச்சு:

 ஒரு கருந்துளை என்பது பெருந்தொலைவுக்குத் தப்பிச்செல்ல இடமளிக்காத நிகழ்ச்சிக்கணம் ஆகும். கருந்துளையிலிருந்து தப்பிச்செல்ல கடைக்கணத்தில் முடியாமற்போய் எக்காலத்திற்கும் ஓரத்திலேயே வட்டமடித்துக்கொண்டிருக்கும் ஒளிக்கதிர்களின் வெளி-காலப்பாதைகளே கருந்துளையின் எல்லையாகிய நிகழ்ச்சி விளிம்பாக அமைகின்றன. கற்றை இயங்கியலின் உறுதியின்மைக்கொள்கைப்படி சுழலும் கருந்துளைகள் துகள்களைப் படைக்கவும், உமிழவும் வேண்டும். சார்பியலின்படி, கருந்துளையின் நிகழ்ச்சி விளிம்பிலிருந்து எதுவுமே தப்பிச்செல்ல முடியாது எனில் அது துகள்களை உமிழ்வது சாத்தியமற்றது. ஆனால் துகள்கள் கருந்துளையின் நிகழ்ச்சிவிளிம்பை ஒட்டிப்புறத்தே இருக்கும் ‘வெற்று’ வெளியிலிருந்து உமிழப்படுகின்றனவே தவிர கருந்துளைக்கு உள்ளிருந்து உமிழப்படுவதில்லை என கற்றை இயங்கியல் கோட்பாடு பதில் தருகிறது.

 ‘வெற்று’ வெளியென்று நாம் சொல்வது அடியோடு வெற்றாக இருக்க முடியாது. வெற்று வெளியில் ஈர்ப்புப் புலம், மின்காந்தப்புலம் போன்றவற்றைத் துல்லியமான முறையில் சுன்னமாக நிலைப்படுத்த முடியாது. இந்த வெற்றுப் புலத்தில் குறிப்பிடத்தக்கக் குறைந்தபட்ச உறுதியின்மை, அல்லது கற்றை ஏற்றவற்றங்கள் இருந்தாக வேண்டும். இந்த ஏற்றவற்றங்களுக்கு ஒளி அல்லது ஈர்ப்புத் துகளின் இணைகள் காரணமாகலாம். விசையேந்தித் துகள்களை ஒத்த மாய இணைகளாக மின்மங்கள் அல்லது பொடிமங்கள் போன்ற பருப்பொருள் துகள்கள் இப்புலத்தில் இருக்குமென்றும் உறுதியின்மைக்கொள்கை ஊகிக்கிறது(9). இணைகள் என்பன துகளும் எதிர்த்துகளும் ஆகும். வெளியேறிச்செல்லும் கதிர்வீச்சால் கருந்துளையின் நிறை குறைந்து, அது மிகச்சிறியதாகி, இறுதிப்பெரும் உமிழ்வுத் தெறிப்பில், கருந்துளை அடியோடு மறைந்துவிடும் என ஊகிக்கிறார் ஆக்கிங். பொதுச்சார்பியலையும் கற்றை இயங்கியலையும் அடிப்படையாகக்கொண்ட ஊகித்தறிதலுக்கு, கருந்துளையின் கதிர்வீச்சுதான் முதல் சான்றாகத்திகழ்கிறது என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

புழுத்துளையும் காலப்பயணமும்:

  ஒளியைக்காட்டிலும் வேகமாகப் பயணம் செய்ய முடியுமானால் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என சார்பியல் கோட்பாடு கூறுகிறது. அதே சமயத்தில் ஒளி வேகத்தில் பயணம் செய்வது என்பது இயலாத ஒன்று என்பதையும் அது கூறுகிறது. வெளி-காலத்தை சுருட்டி வளைத்து இரு இடங்களுக்கு இடையே ஒரு புழுத்துளையை உருவாக்குவதன் மூலம் காலப்பயணத்தை மேற்கொள்ள முடியும். புழுத்துளை(wormhole) என்பது தொலைவாக விலகியுள்ள சற்றொப்பத் தட்டையான வட்டாரங்கள் இரண்டை இணைக்கக் கூடிய மெலிந்த வெளி-காலக் குழாய் ஆகும். கடந்த காலத்துக்குள் பயணம் செய்ய, வெளி-காலத்தை சுருட்டுவதற்குத் தேவை எதிர்மறை ஆற்றல் அடர்த்தி கொண்ட பருப்பொருள் ஆகும். வெளி-காலத்தை சுருட்டி வளைக்க முடியும் என்பதற்கு மறைப்புகளின் போது ஒளி வளைதல் இருப்பதும், காலப்பயணத்திற்கு இடமளிக்கத் தேவையான வழியில் அதனை வளைக்க முடியும் என்பதற்கு காசிமிர் வளைவு என்பது இருப்பதும் ஆய்வுச் சான்றுகளாக உள்ளன. எனவே அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறிச்செல்லும் பொழுது இறுதியில் காலப் பயணம் செய்யும் ஒரு கால இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்க்.

அண்டம் குறித்த முன்மொழிவு:

 வெளி-காலம் என்பது மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் தொடங்கியது என்றும், முழு அண்டமும் மறுதகர்வுற்றால் மாநெரிப்பு(BIG CRUNCH) இயன்வழுப்புள்ளியில் அது முடிவடையும் என்றும் பொதுச்சார்பியல் ஊகித்தது. மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் அறியப்பட்ட அறிவியல்விதிகள் அனைத்தும் செயலற்றுவிடும் எனவும் அது ஊகித்தது. ஆகவே அண்டத்தின் மிகவும் முற்பட்ட கட்டங்களைப்பற்றிப்பேச பொதுச்சார்பியலும் கற்றை இயங்கியலும் இணைந்த “ஈர்ப்பியல் கற்றைக் கோட்பாடு” என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

. ஒரு வெளி-காலத்தில், நிகழ்ச்சிகளுக்குக் கால ஆயத்தின் கற்பனை மதிப்பு இருக்குமானால் அது யூக்லிடியன் வெளி-காலம் எனச் சொல்லப் படுகிறது. நாற்பரிமாணம் கொண்ட யூக்லிடியன் வெளி-காலத்தில் உள்ள ஒரு புள்ளியின் நிலையைக்குறிக்க நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றுதிசைகளின் வெளி-கால ஆயங்கள் தவிர காலம் என்ற நான்காவது திசையின் ஆயமும் வேண்டும். ஆயம்(CO-ORDINATE) என்பது வெளி-காலத்தில் ஒரு புள்ளியின் நிலையைக் குறிக்கும் எண் ஆகும். யூக்லிடிய வெளி-காலத்தில் காலத்திசைக்கும், வெளித் திசைகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. கற்றை இயங்கியலைப் பொறுத்தவரை, கற்பனைக்காலத்தையும், யூக்லிடிய வெளி-காலத்தையும் பயன்படுத்தி மெய் வெளி-காலம் பற்றிய விடைகளைக் கணக்கிடலாம். கற்றை இயங்கியலோடு, ஈர்ப்பை ஒருங்கிணைக்க கற்பனைக்காலம் தேவைப்படுகிறது ஈர்ப்பியல் கற்றைக்கோட்பாட்டில் யூக்லிடிய வெளி-காலங்களைப் பயன்படுத்துகிற காரணத்தால் வெளி-காலம் நீட்சியில் வரம்புள்ளதாக இருந்த போதிலும் எல்லை அல்லது விளிம்பாக அமைந்த இயன்வழுப்புள்ளிகள் எதுவும் இல்லாதிருப்பது சாத்தியமாகும். ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொண்ட வெளி-காலம், புவியைப் போன்று இருக்கும். புவி நீட்சியில் ஈறுள்ளது. ஆனால் அதற்கு எல்லையோ விளிம்போ இல்லை. காலமும் வெளியும் எல்லையில்லாமல் ஈறுள்ளதாக இருக்கும் என்ற கருத்து ஒரு முன்மொழிவுதான் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

அண்டம்:

universe 417

 படத்தில் காட்டப்பட்டுள்ள அண்டம் வடதுருவத்தில் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி தெற்கே செல்லச்செல்ல விரிவடைகிறது என்பதை அதன் குறுக்குக் கோட்டின் வட்டங்கள் குறிக்கின்றன. அண்டம் நடுக்கோட்டில் அதிகபட்ச உருவளவை அடைகிறது. தொடர்ந்து அதிகரித்துச்செல்லும் கற்பனைக் காலத்தில் அண்டம் சுருங்கத்தொடங்கி தென்துருவத்தில் ஒற்றைப்புள்ளியில் முடியும். அண்டத்தின் உருவம் வட தென் துருவங்களில் சுன்னமாக இருந்தாலும் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்காது. ஆகவே அறிவியல் விதிகள் இங்கு செயல்படும். அண்டத்தின் தொடக்கத்தில் மாவெடிப்பும், அதன் இறுதியில் மாநெரிப்பும் இருக்கும் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அண்டம் பற்றிய மேற்கண்ட விளக்கமும் அதற்கான பூமியை ஒத்த படமும் ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் ஊகமாகும்(10). அண்டம் சுருங்கும் கட்டத்தில் எல்லையின்மைக்கொள்கை சீர்குலைவை அதிகரிக்கச் செய்து, உயிர்ப்பிறவிகள் வாழமுடியாத நிலைமையை உருவாக்குகிறது. ஆகவே அண்டம் விரிவடையும் கட்டத்தில் மட்டும்தான் அறிவு உயிர் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இருக்கும். இவை ஸ்டீபன் ஆக்கிங் கூறுவனவாகும்.

    அண்டம்

 காலமும் வெளியும் எல்லையற்ற, ஈறுள்ள அண்டம் - ஆக்கிங்

  இறுதியாக அண்டம் என்பது வெளியும் காலமும் சேர்ந்து இயன்வழுப்புள்ளிகளோ எல்லைகளோ இல்லாத ஈறுள்ள நாற்பரிமாண வெளியாக இருக்கும். ஒரு கூடுதல் பரிமாணம் கொண்டு புவி போன்று அமையும். புவிக்கு எல்லையோ விளிம்போ இல்லை. ஆதலால் அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும். ஆதலால் படைத்தவருக்கு இங்கு இடமில்லை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

பொருள் விளக்கம்:

1.வெளி-காலம்(SPACE-TIME): நிகழ்ச்சிகளைப் புள்ளிகளாகக் கொண்ட நாற்பரிமாண வெளி.

2.நிகழ்ச்சி(EVENT): காலத்தாலும், இடத்தாலும் குறித்துக் காட்டப்படும் ஒரு வெளி-காலப் புள்ளி.

3.ஆயங்கள்(CO-ORDINATES): வெளியிலும், காலத்திலும் ஒரு புள்ளியின் நிலையைக் குறித்துக்காட்டும் எண்கள்.

4.இயன்வழுப்புள்ளி(SINGULARITY): வெளி-கால வளைவு ஈறிலையாகி இருக்கிற அதாவது எல்லையற்றாக ஆகியிருக்கிற ஒரு வெளி-காலப் புள்ளி.

5.இயன்வழுப்புள்ளித்தேற்றம் (SINGULARITY THEOREM): குறிப்பிட்ட சில நிலைமைகளில் இயன்வழுப்புள்ளி என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்கிற தேற்றம். சான்றாக அண்டம் இயன்வழுப்புள்ளியிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று காட்டுகிற தேற்றம்.

6.எல்லையின்மைக்கொள்கை: அண்டம் ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை(INFINITY-ஈறிலி) என்ற கருத்து, நமது பூமி ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை என்பதைப்போன்றது.

7.கருந்துளை(BLACK HOLE): ஒரு வெளி-கால வட்டாரம். அங்கு ஈர்ப்பு விசை மிகமிக வலுவாக இருப்பதால் அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாது. இது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான தகர்ந்துபோன ஒரு விண்மீன் ஆகும்.

8.கற்றை இயங்கியல்(QUANTUM MECHANICS): பிளாங்கின் கற்றைக் கொள்கை (QUANTUM THEORY)யிலிருந்தும், எய்சன்பர்க்கின் உறுதியின்மைக் கொள்கை(UNCERTAINTY PRINCIPLE)யிலிருந்தும் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடு.

9.மாநெரிப்பு(BIG CRANCH): அண்டத்தின் முடிவிலான இயன்வழுப்புள்ளி

10.மாவெடிப்பு(BIG BANG): அண்டத்தின் தொடக்கத்திலான இயன்வழுப்புள்ளி

சான்று நூல்: காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 267-276.

பார்வை:

1.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 14, 15.

  1. “ “ “ பக்: 29.
  2. “ “ “ பக்: 33.
  3. “ “ “ பக்: 41
  4. “ “ “ பக்: 44, 45.
  5. “ “ “ பக்: 78, 79.
  6. “ “ “ பக்: 79, 80.
  7. “ “ “ பக்: 93, 94.
  8. “ “ “ பக்: 145.
  9. “ “ “ பக்: 169, 170.

11. “ “ “ பக்: 267-276



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12

மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும்

  நாம் இதுவரை அண்டம் குறித்த ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் நவீனச்சிந்தனை பற்றிய ஒரு சுருக்கமான தரவுகளைப்பார்த்தோம். பண்டைய தொல்கபிலர், கணாதர் ஆகியவர்கள் தோற்றுவித்த எண்ணியம், சிறப்பியம் ஆகிய சிந்தனைப்பள்ளிகளின் கருத்துக்களோடு இந்த நவீனச்சிந்தனைகள் எவ்விதத்தில் ஒப்புமை கொண்டுள்ளன எனப்பார்ப்போம். அண்டம் பற்றிய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்து ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக் கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனைப் மரபால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது.

1.முதலும் இல்லை முடிவும் இல்லை:

 பழந்தமிழ்ச்சிந்தனை:

 deviprasath 268 “இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக் கொள்கையாகும். இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது. ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப் பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது” என எண்ணியம் கூறுவதாகச் சொல்கிறார் இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலை எழுதிய பிரேம்நாத் பசாசு(11).

நவீனச்சிந்தனை:

 அண்டத்திற்கு தொடக்கமோ, முடிவோ இருக்காது எனவும் அது என்றென்றும் இருந்துகொண்டிருக்கும் எனவும் ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை எனவும் சொல்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(12). மேலும் பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது என நவீன அறிவியல் கூறுகிறது. இதே கருத்துக்களைத்தான் மேற்கண்ட வரிகளில் எண்ணியம் கூறியுள்ளது. அண்டத்திற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை எனவும் உலகம் ஊழி ஊழிக்காலமாய் இருந்து கொண்டிருக்கிறது எனவும் இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது எனவும் அதை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை எனவும் எண்ணியம் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார். ஆகவே நவீனச்சிந்தனையும் எண்ணியமும் நான்கு விடயங்களில் ஒப்புமை கொண்டுள்ளன எனலாம். அவையாவன

1)பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது(இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது).

2)அண்டம் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது.

3)அண்டத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.

4)ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை.

2.பொருள்முதல்வாதம்-காரணகாரியக் கொள்கை:

பழந்தமிழ்ச் சிந்தனை:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய பிரச்சினை உலகிற்குரிய முதற்காரணம் என்ற பிரச்சினையாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான் உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்(13). உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு காரணகாரியக்கொள்கை மூலமே எண்ணியர்கள் வந்தடைந்தார்கள். இன்றைய உலகம் பொருளால் ஆனது என்பதால் இந்த உலகத்திற்கு காரணமான ஆதிமூலப்பொருளும் பொருளால்தான் ஆகியிருக்கவேண்டும். ஆகவே உலகத்திற்கான முதற்காரணம் என்பது பொருள்தான் ஆகும் என்பதே காரணகாரியக்கொள்கை மூலம் எண்ணியம் வந்தடைந்த முடிவாகும்.

நவீனச் சிந்தனை:

  இன்றைய நவீனச்சிந்தனையின்படி அண்டத்தின் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் பொருள்தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருள் என்பது இங்கு பொருளிலிருந்து உருவாகும் ஆற்றல் போன்றவற்றையும் குறிக்கும். ஆனால் பண்டைய காலத்தில் இதுபோன்ற முடிவிற்கு வருவதற்கு மிகப்பெரிய அளவிலான அறிவியல் சிந்தனை தேவைப்பட்டிருக்கும். மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபே இம்முடிவை வந்தடையக்காரணம் எனலாம்.

 3.ஆதிமூலப்பொருள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  பிரகிருதி அல்லது முதல்நிலைப்பொருளுக்கு எண்ணியம், “எதுவும் உருவாகும் முன்பே இருந்தது, ஆதிமூலமான அதிலிருந்தே அனைத்துப்பொருட்களும் தோன்றின; இறுதியில் அனைத்துப்பொருட்களும் அதிலேயே கலந்துவிடுகின்றன” எனப்பொருள் கூறுகிறது(14). மேலும் ஊழி ஊழிக்காலமாய் அது இருந்து வருகிறது எனவும் அதற்கு முதலோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது. அதாவது ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளில் இருந்து தான் நாம் காணும் அண்டமும் அதில் உள்ள பொருட்களும் தோன்றின எனவும் இறுதியில் இந்த ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளுக்குள் இந்த எல்லாப் பொருட்களும் கலந்து ஒன்றிணைந்து விடும் எனவும் இந்த ஆதிமூலப்பொருள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் எனவும் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது.

நவீனச்சிந்தனை:

 அண்டம் பற்றிய தன் முன்மொழிவில் அண்டத்தின் உருவளவு வட, தென் துருவங்களில் சுன்னமாகவே இருக்கும். ஆனால் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்க மாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.(15). மேலும் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். மேலும் அவர் தந்துள்ள அண்டம் பற்றிய படத்தில் வடதுருவத்தில் மாவெடிப்பும், தென் துருவத்தில் மாநெரிப்பும் காட்டப்பட்டுள்ளது. இவைகளின்படி மாவெடிப்புக்கு முன் அண்டத்தின் ஆதிமூலப்பொருளான முதல்நிலைப்பொருள் சுன்ன அளவில் இருக்கும் எனவும் மாவெடிப்பிற்குப்பின் அண்டத்தில் திரள்களும், விண்மீன்களும், கோள்களும், உயிர்களும் உருவாகும் எனவும் அவையனைத்தும் மீண்டும் மாநெரிப்பில் சுன்ன அளவு கொண்டதாக சுருங்கிவிடும் எனவும் அண்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும் எனவும் அதற்கு முடிவோ தொடக்கமோ இல்லை எனவும் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங். அதாவது மாவெடிப்புக்கு முன்பும் மாநெரிப்புக்கு பின்பும் அது இருந்து கொண்டிருக்கிறது என்றே அவர் கூறுகிறார். அதன் மூலம் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். ஆகவே இந்நவீனக்கருத்தைத் தத்துவார்த்த வடிவில் எண்ணியம் எளிமைப்படுத்திக் கூறியுள்ளது எனலாம்.

4.இயக்கமும் பரிணாமமும்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  எண்ணியத்தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது. அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக பரிணாமம் பெற்று வருகிறது என்பதுதான் ஆகும். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவவாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’(16). மேலும் “பரிணாமக்கோட்பாடு(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய கபிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன” எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

நவீனச்சிந்தனை:

  இங்கு ‘பொருள் நிரந்தரமானது’ என்பதற்கு அண்டம் என்றென்றும் இருந்து வருகிறது என்பதே எண்ணியச்சிந்தனையின் பொருளாகும். இதனை நவீன அறிவியல் கூறியுள்ளதை முன்பே பார்த்தோம். பொருள் இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை என்பதும் அது ஒரு வடிவத்திலிருந்து இன்னோன்றாகப் பரிணாமம் அடைந்து வருகிறது என்பதும் எண்ணியத்தின் கோட்பாடாகும். எண்ணியம் மேலே கூறுகிற இயக்கவியலும், பரிணாமக்கோட்பாடும் இன்று நவீன அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இன்றைய நவீனக்கருத்துக்களை அன்றே எண்ணியம் கூறியுள்ளதை ‘செர்பாட்சுகி’ அவர்கள் வியந்து போற்றுகிறார்.

5.வெளி, காலம், இயக்கம்: பழந்தமிழ்ச்சிந்தனை:

 உருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது நூலில், கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக்கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள் எனவும் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் எண்ணியச்சிந்தனை மரபு மொழிந்தது. “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார் வி.கிரபிவின் அவர்கள்(18).

  தொல்காப்பியர் முதற்பொருள் என்பது நிலம் பொழுது ஆகிய இரண்டின் இயல்பு என்பார். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றில் முதற்பொருளிலிருந்துதான் மனிதன், கடவுள் முதலான அனைத்துக் கருப்பொருட்களும் தோன்றுகின்றன எனவும் உரிப்பொருள் நிகழ்வுகள் அங்குதான் நடக்கின்றன எனவும் தமிழ் மரபு கருதியது. ஆகவே வெளி-காலம் என்ற முதற்பொருள்தான் அனைத்திற்கும் அடிப்படை என்ற எண்ணியச் சிந்தனைப்படிதான் தொல்காப்பியர் வெளி, காலம் என்பதை நிலம், பொழுது ஆகியவற்றின் இயல்புகள் எனக்கூறியுள்ளார். மேலும் முதற்பொருள் என்பது வெளி, காலம் ஆகியவற்றின் இயல்பு எனும்பொழுது அது இயக்கத்தையும் இணைத்துக் கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் எண்ணியச்சிந்தனை வெளி, காலம், இயக்கம் ஆகிய மூன்றையும் பருப்பொருளின் கூறுகளாகவும், அவைகளைப் பருப்பொருளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவைகள் எனவும் கருதியது. தமிழ்ச்சிந்தனை மரபின் இச்சிந்தனையை வி.கிரபின் அவர்கள், “புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார். ஆனால் இச்சிந்தனை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனை ஆகும். தமிழ் மரபின் சாதனைகள் இந்திய மரபின் சாதனைகளாகவே கூறப்பட்டு வருகின்றன. இந்நிலை மாறி தமிழ் மரபு ஒரு தனித்த மரபு என்பது வெளிப்பட வேண்டும்.

நவீனச்சிந்தனை:

 “காலம் என்பது ‘வெளி’ என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது” எனப்பொதுச்சார்பியல் கூறுகிறது.(19). ஆகவே வெளி-காலம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு பொருளாக ஆகிறது என்பதன் மூலம் இவை இரண்டும் பொருளின் கூறுகளாகவும் ஆகின்றன. மேலும் நவீனச் சிந்தனையின்படி இயக்கம் இல்லாத பொருளே இல்லை. ஆகவே வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்பதுதான் நவீனச் சிந்தனையின் கருத்தாகவும் உள்ளது. மேலும் அண்டம் என்பது வெளி-காலம் எனப்படும் நாற்பரிமாணப் பொருள் என்பதும் அதில் காலம் நான்காவது பரிமாணம் என்பதும் இந்த அண்டமும் அதில் உள்ள பொருட்களும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டுள்ளன என்பதும் இன்றைய நவீன அறிவியலின் கருத்தாகும். ஆகவே மேற்கண்ட விளக்கங்களின்படி, வெளி, காலம், இயக்கம் என்பன பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற எண்ணியத்தின் சிந்தனையோடு நவீனச்சிந்தனை ஒப்புமை கொண்டுள்ளது எனலாம்.

6.நிகழ்ச்சி: பழந்தமிழ்ச்சிந்தனை

 ஒரு நெறிப் பட்டாங் கோரியல் முடியுங்

            கரும நிகழ்ச்சி இடமென மொழிப’ என்கிறார் தொல்காப்பியர்.

            ‘ஒரு நெறிப்பட்டு, ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சியை இடமென்று சொல்வர்’ என்பதே இதன் பொருளாகும் அதாவது, வினை நிகழ்ச்சியை இடம் என்று சொல்வர் தம் முன்னோர் என்கிறார் தொல்காப்பியர். ‘ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும்’ என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார் என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(20).

 அடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வது பெருவியப்பைத் தருகிறது என்கிறார் க.நெடுஞ்செழியன்,

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்(பொருளியல்-244)

            ‘தேவர் உலகத்திலும், கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலும், மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்றால் காலமும் இல்லை’ என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன். நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார்(21). ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம், காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாகக் கொள்ளலாம். நவீனச்சிந்தனைப்படியும், எண்ணியச்சிந்தனைப்படியும் இடமும் வெளியும் ஒன்றையே குறிப்பதால், நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் வெளியும் இல்லை என தொல்காப்பியர் கூறுவதாக ஆகிறது.

 ஆகவே நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்ற நவீன அறிவியல் கருத்தை தொல்காப்பியர் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாடல் கருத்துக்கள் தொல்காப்பியருக்கு முந்தைய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் அறிஞர்களால் சொல்லப்பட்டவை என்பதை ‘மொழிப’ என்ற சொல் உறுதி செய்கிறது.

நவீனச்சிந்தனை:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது எனக்கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்(22). அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்பதே அவர் கருத்து எனலாம். தமிழ்ச் சிந்தனை மரபும் இக்கருத்தைக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியரின் பாடல்கள் உறுதி செய்கின்றன. ஆகவே இன்றைய வெளி - காலம் குறித்த நவீன அறிவியல் சிந்தனைகள் சிலவற்றை பண்டைய தமிழ்ச் சிந்தனைமரபு பெற்றிருந்தது என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

7.இன்மை: பழந்தமிழ்ச்சிந்தனை:

 “பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

  இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”

என்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.

 ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். மேலும் ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது என்கிறார் க. நெடுஞ்செழியன்(23).

 இங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்கவேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப்பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலையைப்பற்றி பேசுவதே இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப்பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்மையும் நவீனச்சிந்தனையும்:

 அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும்; அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது; அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்பதால், படைத்தவருக்கு இங்கு இடமில்லை என ஸ்டீபன் ஆக்கிங் சொல்வதை முன்பே பார்த்தோம். அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இல்லை; அது என்றும் இருந்து கொண்டிருக்கும் என்ற நவீனச்சிந்தனைக்கான ஒரு தத்துவார்த்தக் கோட்பாட்டு வடிவமே ‘இன்மை’ ஆகும். சுன்ன அளவில் இருக்கும் அண்டம் மாவெடிப்பில் தொடங்குகிறது. திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் உருவாகின்றன. பின் இறுதியில் அண்டம் சுருங்கத்தொடங்கி திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் சிதைந்து அழிந்து இறுதியில் மாநெரிப்பு ஏற்பட்டு அண்டம் சுன்ன அளவாகச் சுருங்குகிறது. ஆக மாவெடிப்பிற்கு முன்பும் மாநெரிப்பிற்கு பின்பும் அண்டம் சுன்ன உருவளவில் இருக்கும். இவை அண்டம்பற்றிய நவீனச் சிந்தனையாகும். ‘திரள்கள்’ என்பதைப் பொருளாக எடுத்துக்கொண்டால் அதற்கு முன்பிருந்த நிலை, அதாவது அண்டம் திரள்களாக இல்லாமல், மாவெடிப்பில் அல்லது சுன்ன அளவில் இருந்த நிலை, ‘இன்மை’ என ஆகிறது. அது போன்றே உயிர் தோன்றுவதற்கு முன்பு சடப்பொருள் தான் இருந்தது. அந்த சடப்பொருளில் இருந்துதான் உயிர் தோன்றியது. ஆகவே உயிர் தோன்றுவதற்கு முன்பிருந்த நிலையை, உயிர் என்பது இல்லாதிருந்த நிலையை ‘இன்மை’ என்பது குறிக்கிறது. ஆக இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக ஆவதற்கு முன்பிருந்த நிலை ஆகும். மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் என தமிழ் மரபு கூறுகிறது. பொருள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது என்பதையும், ஆனால் அது வேறு வேறு பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், ஒரு பொருள் இயக்கவியல் அடிப்படையில் இன்னொரு பொருளாகப் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் மரபு ‘இன்மை’ என்ற கோட்பாட்டு வடிவமாக ஆக்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்டம் என்ற பொருள் என்றும் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் அது எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அது வேறு வேறு பொருளாக பரிணாம முறையில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த ‘இன்மைக் கோட்பாடு’ குறித்தது எனலாம்.

8.அணுக்கள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது இரசிய நூலில் “....நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை” எனச்சொல்வதாகக் கூறுகிறார்(24). சிறப்பியம், நியாயம் முதலியன கணாதர், கௌதமனார் ஆகிய தமிழர்களின் தமிழ்ச் சிந்தனை மரபுகள் ஆகும்.

 அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது…… கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது….. பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் சிறப்பியம் கூறுவதாகச் சொல்கிறார் பிரேம்நாத் பசாசு(25). சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்று கணாதர் நம்பினார். ஆன்மா என்பதும் வளர்ச்சியடைந்த பொருளே. ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே. கணாதர் கோட்பாட்டின்படி ஆன்மா என்ற சொல் கருத்துமுதல்வாத கோட்பாட்டின் வரையறைக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது உறுதி எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 ஆகவே கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது எனவும் அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் உணர்வு, ஆன்மா முதலியன பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே எனவும் பழந்தமிழ்ச் சிந்தனை கருதியது.

நவீனச்சிந்தனை:

  கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அணுக்கள் பகுக்க முடியாதவை என்பதும் அணுவைவிட சிறிய பொருட்கள் இல்லை என்பதும் இன்று தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது. அணுக்களில் நேர்மங்களும்(PROTONS), நொதுமங்களும்(NEUTRONS), மின்மங்களும்(ELECTRONS) உள்ளன என்பதும் இந்த நேர்மங்களும், நொதுமங்களும் இன்னுஞ்சிறிய பொருட்களான பொடிமங்களால்(QUARKS) ஆனவை என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை போக அணுக்களில் விசைத்துகள்கள் இருக்கின்றன என்பதும் பொடிமங்களில் எதிர் பொடிமங்கள் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மிகச்சிறு பொருட்கள் குறித்த கோட்பாடே கற்றை இயங்கியல் ஆகும். ஆகவே அணுக்கள் குறித்த பண்டைய தமிழ்ச் சிந்தனை என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு மேலோட்டமான சிந்தனைபோல்தான் தோன்றுகிறது.

 ஆனால் பொருட்கள் கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் ஆனவை என்ற கருத்தும், பருப்பொருட்கள் அனைத்தும் அணுக்களின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் அணுக்களால் உருவாகின்ற பருப்பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்ற கருத்தும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உருவாகும் இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது என்ற கருத்தும், சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்ற கருத்தும், பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் ஆன்மா (ஆன்மா என்பது இங்கு உயிர் எனப்பொருள்படும்) என்ற கருத்தும் நவீன சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளது எனலாம். அணுக்கள், பொருட்கள் குறித்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் இக்கருத்துக்கள் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள அறிவியல் சிந்தனைப் பள்ளியால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

9.உலக அமைப்பு: பழந்தமிழ்ச்சிந்தனை:

 ‘அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது. தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்பதே உலகம் பற்றிய எண்ணியப்பார்வை என பெர்னார்டு அவர்கள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு அவர்கள்(26).

நவீனச்சிந்தனை:

ஒரு செல் உயிரி முதல் மனிதன்வரை:

 பேரா.சு. மணி அவர்கள் எழுதிய மனித ஜினோம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. உயிர் என்பது ஒரு வேதியியல் நிகழ்வுதான். ஆதியில் ஓர் உயிர் தோன்றி தழைத்து பரிணமித்து நிலைப்படுவதற்கு ஆதாரமாக இருந்த அறிவு டி.என்.ஏ. வில் மும்மூன்று சொற்களின் வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் டி.என்.ஏ. தோன்றுவதற்கு முன்பே உயிர் தோன்றிவிட்டது. அதனைத் தோற்றுவித்தது ஆர்.என்.ஏ. ஆகும். தன்னைச்சுற்றிலுமுள்ள வேதியியல் பொருட்களை சேகரித்து அவற்றைப்பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு தன்னைப்போலவே இன்னொன்றையும் உருவாக்கும் அசாத்தியப்பண்பு ஆர்.என்.ஏ. வுக்கு இருக்கிறது. ஆகவே அதுவே முதல் உயிரி ஆகும். ஆனால்

ஆர்.என்.ஏ. க்கள் நிலையற்றவை. உருவான உடனே சிதைந்துவிடும். ஆகவே தகவல்களைச் சேகரிக்க கெட்டியான டி.என்.ஏ.க்களை உயிரி உருவாக்கிக் கொண்டது. ஆக உயிரி பரிணாம வளர்ச்சியில், டி.என்.ஏ.க்களை தகவல் நிலைக்களங்களாகவும், புரோட்டின்களைத் தமது செயல் இயந்திரங்களாகவும், ஆர்.என்.ஏ.க்களை இவை இரண்டுக்கும் இடையே செயல்படும் இடைப்பணியாளனாகவும் அமைத்துக்கொண்டது. ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரி பரிணம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆகியுள்ளது.

 வாக்கியத்தின் முற்றுப்புள்ளியை விட 100 மடங்கு சிறியதாக மனித செல் இருந்தாலும் ஒரு முழுமையான தொழிற்சாலை போல் அது செயல்படுகிறது. தேவையான திட்டம், ஆற்றல், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, நகலெடுத்தல் போன்ற அத்தனை நிகழ்வுகளும் இதில் நடைபெறுகின்றன. ஒரு செல்லில், அதன் மையத்தில் உட்கரு, அதில் குரோமோசாம், அதில் டி.என்.ஏ. மூலக்கூறு ஆகியன இருக்கும். அந்த மூலக்கூறில் மனித உடலை வடிவமைத்து உருவாக்குவதற்கான 3 பில்லியன் எழுத்துக்களால் ஆன தகவல்கள் இருக்கும். அத்தகவல்களை புத்தகமாக ஆக்கினால், 300 பக்கமுள்ள ஆயிரம் புத்தகங்கள் ஆகிவிடும். இந்த தகவல்களைக் கொண்டுதான் நமது கரு பல இலட்சங்கோடி செல்களை உருவாக்கி சுமார் ஒரு இலட்சம் உதிரி பாகங்களைக்கொண்ட நமது உடலைத் தானாகவே தயார் செய்து கொள்கிறது. 40 வயதுள்ள மனித உடலில் சுமார் 100 டிரில்லியன்(இலட்சங்கோடி) செல்கள் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இத்தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித டி.என்.ஏ. மூலக்கூறில் 25000 தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு தகவலும் ஒரு கட்டுரை வடிவத்தில் உள்ளது. இந்தத்தகவல்கள் அனைத்தையும் சேர்த்து ஜினோம் எனவும், ஒவ்வொரு தகவலையும் ஜீன் எனவும் அழைக்கிறோம்.(27)

 3 பில்லியன்(பில்லியன்-100கோடி) ஆண்டுகள் வரை அமீபா போன்ற ஒற்றைச்செல் உயிரினங்கள் தான் உலகில் வாழ்ந்தன. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் கூட்டுசெல் உயிரிகள் தோன்றின. 500 மில்லியன் ஆண்டுகளுக்கு(மில்லியன்-10இலட்சம்) முன்பு கேம்பிரியன் யுகத்தில் பூச்சிகளின் வாரிசுகளான கால் முளைத்த மீன்களிடமிருந்து முதுகெலும்பிகள் உருவாகின. டைனோசர்கள் வாழ்ந்த 200 மில்லியன் ஆண்டுவாக்கில் இந்த முதுகெழும்பிகளின் வாரிசுகளான ஊர்வனவற்றிலிருந்து உருவானவைகள்தான் பாலூட்டி விலங்குகள். 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பாலூட்டி விலங்குகளிடமிருந்து பிரிந்தவைகள்தான் ஏப்புகள். ஏப்புகளிடமிருந்து சிம்பன்சிகளும், கொரில்லாக்களும் தோன்றின. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிம்பன்சிகளிடமிருந்து மனித மூதாதை தோன்றினான்(28). அந்த மனித மூதாதையிடமிருந்து 1.5 மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு மனிதன் தோன்றினான். சிம்பன்சியும் மனிதனும் 98 விழுக்காடு ஒப்புமை உடையவர்கள் ஆவர். ஈ ஆனாலும், மனிதன் ஆனாலும் இருவரும் ஒரே பொது உயிரினத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என்பதும், அந்தப்பொது மூதாதை எந்தவிதத்தில் தனது கருவின் உருவத்தை வடிவமைத்ததோ அதே விதத்தில்தான் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைய உயிரினங்களும் வடிவமைத்து வருகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன(29). மனித ஜினோம். 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு செல் உயிரி இன்று 100 டிரில்லியன் செல்கள் கொண்ட மனிதனாகப் பரிணாம முறையில் உருவாகியுள்ளான்.

 செல்கள் யாருடைய கட்டளையையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்காமல் தம்முடைய ஜினோமிலிருந்து அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டு தம் கடமைகளைத்தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தமக்குள்ளேயே இருக்கும் விளக்கமான திட்டமிட்ட கட்டளைக்கோவையின் அடிப்படையில் அவை செயல்படுகின்றன(30). அதனால்தான் ஒரு செல்கரு தன்னிடமுள்ள கட்டளைக்கோவையின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டு பத்துமாதத்தில் ஒரு குழந்தையாக உருவாகிறது. நமது மூளை பரிணாம வளர்ச்சியில் ஜினோமால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அது ஜினோமைவிட சிக்கல்மிக்க வளர்ச்சிபெற்ற கருவியாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இன்று ஆகியுள்ளது. ஜினோம் ஏற்கனவே விதிக்கப்பட்ட திட்டப்படி இயங்குகிறது. ஆனால் மூளை அனுபவ அடிப்படையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் செயல்படுகிறது. இந்த உலக அமைப்பில் இயற்கை உருவாக்கியதில் மிகமிக உயர்ந்த, மிகமிக அதீத அறிவுகொண்ட, பன்முகத்திறனும் தேர்ச்சியும் பெற்ற, நெகிழ்வுத்தன்மையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் அனுபவ அறிவுத்திறனும் உடைய, அசாதாரணமான பண்புகள் கொண்ட, ஒரு நுணுக்கமான, சிறப்புமிக்க, அதியற்புதமான பொருள்தான் மனித மூளை ஆகும்.

ஒப்புமை விளக்கம்:

1.அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது.

 அறிவுக்குட்பட்டும், காரணகாரியத்துடனும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், மேன்மையான அறிவு வளர்ச்சியோடும் உலகம் இயங்கி வருகிறது என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. உலகில் ஒரு செல் உயிரி தோன்றியது முதல் இன்றைய மனிதன் உருவாகியது வரையான வளர்ச்சி என்பது, உலகம் காரண காரியத்தோடும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், அறிவைப் பயன்படுத்தியும் வளர்ந்துவந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்கிறது.

2.தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிறது எண்ணியம். ‘ஒரு செல் உயிரி தோன்றியது முதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது தானே உருவாகி, பரிணாம முறையில் தானே அடைந்த வளர்ச்சிதான்’ என்பதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்துள்ளன.

3.”தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது”. என எண்ணியம் சொல்வதாகக் கூறுகிறார் பெர்னார்டு.

 (1).‘தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை’ என்கிறது எண்ணியம். நமது செல்களின் செயல்பாடுகள் மேற்கண்டவாறுதான் உள்ளன. அவை தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை குறையின்றி செய்து முடிக்கின்றன. அதுபோன்றே எல்லா செல்களுக்கும் செயல் நோக்கம் இருக்கிறது. (2).“தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது”. என்கிறது எண்ணியம். இங்கு சொல்லியிருப்பது பெரும்பாலான செல்களுக்கு பொருந்துகின்றன. ஒரு கரு செல் ஒரு குழந்தையை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொண்டு செயல்படுகிறது என்பது உறுதி. (3).”காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது, என்ன வினையாற்ற வேண்டும் என்ற குறிப்பு உள்ளது, தேர்ந்த அமைப்பாகச்செயல்படுகிறது” என்கிறது எண்ணியம். செல்லில் என்ன செய்யவேண்டும் என்ற வரையறையும் அதைச்செய்வதில் ஒருவித ஒழுங்கும் இருக்கிறது. செல்லில் உள்ள ஜினோம் என்பதில் செல்கள் செயல்படுவதற்கான கட்டளைக்குறிப்புகள் உள்ளன. அக்கட்டளைக் குறிப்புகளைப் பயன்படுத்தி செல்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகின்றன. ஆக எண்ணியத்தின் கருத்துக்கள் செல்களின் நடவடிக்கைகளோடு பொருந்திப் போகின்றன எனலாம்.

4.’உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு’ என்கிறது எண்ணியம். நவீன அறிவியல் கருத்தும் மேலுலக ஆற்றலை ஏற்பதில்லை. உலகம் தொடக்கமோ முடிவோ இல்லாமல் தொடர்ந்து இயங்கிவருகிறது என்பதை நவீன அறிவியல் பலவிதங்களிலும் உறுதி செய்துள்ளது.

5.’நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ எனக்கூறுகிறது எண்ணியம். ஒரு செல் உயிரிமுதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையில்தான் இருந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது. யாருடைய உதவியும் இன்றி, தானாகவே உயிர்கள் உருவாகியுள்ளன என்பதையும் நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது.

 பெர்னார்டு என்பவர் கூறிய எண்ணியத்தின் உலக அமைப்பு குறித்த கருத்துக்களில் பெரும்பகுதி நவீன உயிரியல் அறிவியலோடு ஒப்புமை கொண்டுள்ளன என்பதை மேலே தந்த விளக்கங்கள் உறுதி செய்கின்றன.

முடிவு:

1.முதலும் இல்லை முடிவும் இல்லை, 2. காரணகாரியக்கொள்கை, 3. ஆதிமூலப்பொருள், 4.இயக்கவியலும், பரிணாமும், 5.வெளி, காலம், இயக்கம். 6.நிகழ்வு, 7.இன்மை, 8.அணுக்கள், 9.உலக அமைப்பு ஆகிய தலைப்புகளில் நவீனச்சிந்தனையும் பழந்தமிழ்ச்சிந்தனையும் பல வகைகளில் ஒப்புமை கொண்டுள்ளன என்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டன. பழந்தமிழ்ச்சிந்தனை என்பது கிரேக்க நகர அரசுகள் போன்று நன்கு வளர்ச்சியடைந்த வணிக நகர அரசுகளின் 2000 ஆண்டுகளுக்கு முந்தையகாலகட்டச் சிந்தனை ஆகும். அதன் அடிப்படையாக கிமு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. பழந்தமிழ்ச்சமூகம் வேளாண்மை, தொழில், வணிகம், அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. பகுத்தறிவு, காரணகாரியக்கொள்கை, தர்க்கவியல், பொதுஅறிவு போன்றவற்றை வளர்த்தெடுத்து அவற்றை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொண்ட, ஒரு வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளியாக பழந்தமிழ்ச் சிந்தனைமரபு இருந்தது. தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய தத்துவார்த்த தமிழ் அறிவியல் அறிஞர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் அவற்றின் அடித்தளமாக இருந்தன. இவைகளின் காரணமாகவே பழந்தமிழ்ச் சிந்தனைமரபின் கருத்துக்கள் தத்துவார்த்த அடிப்படையில் எளிமைப் படுத்தப்பட்டதாக இருந்த போதிலும் நவீனச்சிந்தனையோடு பலவிதங்களிலும் ஒப்புமை கொண்டிருக்கிறது எனலாம்.

 கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளே இன்றைய மேற்குலகச் சிந்தனைகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளுக்கு மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழ்ச்சிந்தனை மரபு இருந்து வந்துள்ளது. பலவிதங்களில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபு கிரேக்க சிந்தனை மரபுக்குச் சமமாகவும் சிலவிதங்களில் அதற்கு மேம்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் அவை தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியப் படையெடுப்புகளாலும், வடஇந்திய ஆரியச்சிந்தனைகளாலும் மூடி மறைக்கப்பட்டு மீள முடியாதவாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. 50 – கி.பி. 250), பேரரசுக்கொள்கையின் காரணமாக பழந்தமிழ்ச்சிந்தனை மரபு மிகவும் பலவீனமாக ஆகியிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர்களான களப்பிரர் படையெடுப்பாலும், அவர்களின் ஆரம்பகால வன்முறை ஆட்சியாலும் இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டு ஒரு சிறுபகுதி ‘ஆகமம்’ போன்றவற்றில் சமற்கிருதமயமாக்கப்பட்டது. தமிழின் அறிவியல் சிந்தனை மரபின் அழிவிற்கு சமற்கிருதமயமாதலும், வைதீகக் கருத்துக்களும் மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.

 கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் தெற்காசியாவின் வணிகமொழி என்ற தகுதியை தமிழ் மொழி இழந்தது போலவே, கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் ஒரு அறிவியல் மொழி என்ற தகுதியை இழந்தது. அவ்விடத்தை சமற்கிருதம் எடுத்துக்கொண்டது(உலக அளவில் வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் இருந்த தமிழ் இன்று மக்கள் மொழி என்ற நிலையையும் கூட இழக்கும் அவலநிலை இருக்கிறது). அதன் காரணமாக கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழில் இருந்த அனைத்துத் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் பாதுகாக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் அழிந்து போயின. அறிவியல், இசை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுகளில் இருந்துதான் வட இந்தியச் சிந்தனை கடன் வாங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய நூலும், சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே. தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதோடு அதற்கு முன்னரே கி.மு. 1500 முதல் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இன்று உறுதியாகியுள்ளது. கீழடி அகழாய்வு தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதை உறுதி செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து நடக்கும் அகழாய்வுகளும் பிற ஆய்வுகளும் தமிழின் தொன்மையை மட்டுமல்ல அதன் தத்துவார்த்த அறிவியல் சிந்தனை மரபையும், வட இந்தியச்சிந்தனையின் பல முன்னேறிய தத்துவார்த்த அறிவியல் சிந்தனையின் மூலம் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுதான் என்பதையும் வெளிக்கொண்டு வரும் என்பது உறுதி.

        முற்றும்.

பார்வை:

11.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 117-119.

12.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 194

13.தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, உலகாயதம், தமிழில் எஸ். தோதாத்ரி, NCBH, சூன்-2010 பக்: 578-581.

14.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 116-117.

15.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 189.

16.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 785.& இந்தியத்தத்துவம் ஓர் அறிமுகம், சட்டோபாத்தியாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, படைப்பாளிகள் பதிப்பகம், பக்: 201.202.

17.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 115.

18.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798.

19.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 73.

20.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 105.

  1. “ “ “ பக்: 105, 106. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 800, 801.

22.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 47.

  1. ஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-51.

24.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798, 799.

25.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 105-106.

  1. “ “ “ பக்: 116.

27.மனித ஜினோம், பேரா. க. மணி, சூலை-2015, பக்: 2-7.

  1. “ “ “ பக்: 45-50.
  2. “ “ “ பக்: 269.
  3. “ “ “ பக்: 265-267.

- கணியன் பாலன், ஈரோடு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard