New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் முனைவர் ச. முருகேசன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் முனைவர் ச. முருகேசன்
Permalink  
 


11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்  -முனைவர் ச. முருகேசன்

 

இலக்கியம் பற்றிய சிந்தனையும் நோக்கும் காலத்திற்கேற்றவாறும், சமுதாய, அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கேற்றவாறும் வேறுபட்டு வந்திருக்கின்றன. தொன்மைச் சிறப்பும், பல்வேறு இலக்கிய வகைகளும், மிகப்பெரிய இலக்கிய வரலாறும் கொண்ட தமிழில், இலக்கியத் திறனாய்வுத்துறை இன்று விரிந்து வளர்ந்துள்ளது. இத்தகைய சிறப்பிற்குரிய செவ்வியல் மொழியில் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான பரந்து விரிந்த இலக்கியப்பரப்பு முழுமையும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவலாகக் காணப்பெறுகின்றன. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகவும், இரட்டைக்காப்பியங்களுள் ஒன்றாகவும் போற்றப்பெறும் மணிமேகலை, சாத்தனார் இயற்றிய ஒப்பற்ற காவியமாகும். பதிகம் நீங்கலாக, முப்பது காதைகளைக் கொண்டது. பௌத்த சமயச் சார்பான நூலாக இருப்பினும், சமுதாய நலன், மக்கள் மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தும் நூலாகவும் அமைந்துள்ளது. செவ்விலக்கியங்களுள் ஒன்றான மணிமேகலைக் காப்பியத்தில் காணப்படும் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பகுத்தும் தொகுத்தும் தருகிறது இக்கட்டுரை.

 

பகுத்தறிவு - விளக்கம்

 

அறிவின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறு அறிவு ஈறாக உயிர்த்தொகுதியைப் பாகுப்படுத்திப் பார்த்தது தொல்காப்பியம். ‘ஆறறி வதுவே அவற்றொடு மனனே’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதன் மூலம், மனிதன் ஆறாவதாகிய மனவுணர்வு படைத்தவன் என்பதை அறியமுடிகிறது. மேலும் ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே’ என்னும் தொல்காப்பிய நூற்பாவும் ஆறறிவு உயிர்களை வரையறை செய்கிறது. ஆறறிவு உடையோருள், பகுத்துணரும் மனஉணர்ச்சி உடையோரே மனிதராகக் கருதப்பெற்ற காலம் அது. இதிலிருந்து மனிதன் என்பவன், மனிதப்பிறப்பிற்கே உரிய பகுத்தறிவு, பகுத்துணர்வு, மனஉணர்ச்சி முதலான இயல்புகள் உடையவனாக இருத்தல் வேண்டும் என்னும் மனித இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” 

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”



ஆகிய இரு குறட்பாக்களும், உலகின் முதல் சிந்தனையாளனான அய்யன் திருவள்ளுவன் பகுத்தறிவுக்குத் தந்த சீரிய விளக்கங்களாகும். ‘பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது’ என்றார் தந்தை பெரியார். “அடிப்படை உண்மைகளையும் வெளிப்படை உண்மைகளையும் மறுப்பதன்று; எண்ணம், சொல், செயல்களில் உள்ள ஐயுறவு நிலைகளைப் போக்குவதே பகுத்தறிவு” என்றார் அறிஞர் அண்ணா.

“ஒருவர் சொன்னதை ஆய்ந்து ஆய்ந்து பார்,
அதனை அறிவால் சீர்தூக்கிப்பார்
அறிவினை அறிவினால் ஆய்க; சரி எனில்
அதனால் உனக்கும் அனைவருக்கும்
நன்மை உண்டெனில் நம்ப வேண்டும்”
என்று ‘பகுத்தறிவு’ குறித்துப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன் மேலும், ‘எதையும் அறிவியல் பார்வையில் ஆராய்ந்து, நூலறிவையும் கேள்வியறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி மெய்ப்பொருள் காண்பதுதான் பகுத்தறிவு’ என்றும் கூறியுள்ளார். எனவே பகுத்தறிவு என்பது யார் கூறிய கருத்தாக இருந்தாலும் அதனை அறிவியல் பார்வையில் ஆராய்ந்து தெளிவடைவதே என்று கொள்ளலாம். இந்த வரையறையை அடிப்படையாகக் கொண்டு அமையும் பகுத்தறிவுச் சிந்தனைகள் தமிழிலக்கியப் பரப்பில் எங்கெல்லாம் காணப்படுகின்றன என்னும் தேடல் தற்போது எழுகின்றது. அத்தேடலின்போது மணிமேகலையில் சாதி எதிர்ப்பு, மதநல்லிணக்கம், மதுவிலக்கு, பரத்தமை ஒழிப்பு, பொருளியல் சமத்துவம் முதலான பகுத்தறிவுச் சிந்தனைகள் முன்வரிசையில் முகங்காட்டுகின்றன.

 

சாதி மறுப்புச் சிந்தனை

 

பண்டைத்தமிழ் மக்கள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்பதையே கோட்பாடாகக் கொண்டிருந்தனர். சங்ககாலத் தமிழகத்தில் சாதிப்பிரிவினைகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதித்து, ஒருமைப்பாட்டுப் பண்புடன் வணங்கினர் என்பதை அறியமுடிகின்றது. இருப்பினும், பிறப்பால் உயர்வு தாழ்வு வரையறுக்கப்படும் இழிவைப் போக்கும் வகையில் கல்வி கற்பதை முன்வைத்துத் தம் சாதி மறுப்புச் சிந்தனையை மிக மென்மையாகச் சங்கப்புலவர்கள் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள திறத்தை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் புறநானூற்றில்,

“வேற்றுமை தெரிந்த நூற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கண் படுமே”

என்று பாடியிருப்பது பகுத்தறிவுச் சிந்தனையின் ஒரு கூறான சாதியொழிப்புச் சீர்திருத்தத்தின் முதல் குரலாக ஒலிக்கிறது என்று கூறலாம். பிறப்பால் தாழ்ந்த வகுப்பில் தோன்றிய ஒருவன் கல்வியறிவைப் பெற்றால், அச்சிறப்புக் காரணமாக உயர்ந்த வகுப்பினர்க்குரிய சமுதாயத் தகுதியை அடையலாம் என்பதே இப்பாடற்பகுதியின் கருத்தாகும். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதற்காக இப்பாடல் புனையப்பட்டிருந்தாலும், சாதியால் தீர்மானிக்கப்பெறும் உயர்வு தாழ்வு வேறுபாட்டைக் களைய வேண்டுமானால் கல்வி கற்பதே உகந்ததாகும் என்னும் தீர்வையும் முன்வைத்துள்ளது. இதன் வாயிலாக இப்புலவரின் சாதிமறுப்புச் சிந்தனையையும் அதன் தீர்வின் திசைநோக்கிப் பயணப்பட்டிருக்கும் பாங்கையும் அறியமுடிகிறது.

சங்க இலக்கியம் சுட்டும் சமுதாயத்தில் தொழில்களின் அடிப்படையில் சில பிரிவினர் தாழ்ந்த நிலையினராகக் குறிக்கப்பெற்றுள்ளனர். அவர்களிடையே ஒருமைப்பாட்டுணர்வு நிலவியதால் சாதிப்புன்மை இல்லையென்று கூறலாம். எனவே தான் சங்ககாலப் புலவர்களிடையே சாதி எதிர்ப்புச் சிந்தனை மென்மையாக இழையோடுகிறது.


மணிமேகலை காட்டும் சமுதாயத்தில் தான் ‘வருணப்பாகுபாடு’ பாராட்டும் நிலையை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

“நால்வேறு வருணப் பாகுபாடு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் என்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்”

என வரும் பகுதி, இடுகாட்டில் கூட வருணப்பாகுபாடு பாராட்டும் நிலை அக்காலச் சமுதாயத்தில் நிலவியதைத் தெளிவுபடுத்துகிறது. சாதி முறையின் அடிப்படையில் மக்கள் சமுதாயம் பிளவுபட்டு நிற்பதைக் கண்ட சாத்தனார், வைதீகப் புராண இதிகாசங்களில் காணப்படும் சாதி குறித்த செய்திகளைத் தாக்குகிறார். அந்தணர்கள் வேள்வியில் கொலை செய்வதற்காக வைத்திருந்த பசுவை ஆபுத்திரன் கடத்தி வைத்துக் கொள்கிறான்; அதனைக் கண்ட அந்தணர்கள் அவனை ஒவ்வாத செயல் செய்தவன் என்று இழித்தும் பழித்தும், அவன் பிறப்பை அவமதித்தும் பேசுகின்றனர். அவர்களை நோக்கி,

“ஆன்மகன் அசலன் மான்மகன் சிருஞ்சி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?”

என ஆபுத்திரன் வினவுகின்றான். ஆவயிற்றில் பிறந்த அசல முனிவன், மான்வயிற்றில் பிறந்த சிருஞ்சி, புலிவயிற்றில் பிறந்த விரிஞ்சி, நரி வயிற்றில் பிறந்த கேசகம்பளன் ஆகியோரை உயர் அறவோர் கூட்டத்தினர் என்று நீங்கள் போற்றுகின்றீர், விலங்குகளின் வயிற்றில் பிறந்த இவர்கள் உயர்சாதியினராகக் கருதப்பெறும் நிலையில், இனிய பாலைத் தருகின்ற பசுவோடு தொடர்புடைய நான் மட்டும் எப்படி இழிகுலத்தவன் ஆக முடியும் என்று புரட்சிக் குரல் எழுப்புகின்றான். இதன் மூலம், பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் சாதி வேறுபாடுகளைப் பாராட்டும் மனநிலைக்குச் சாவுமணி அடிப்பது தெளிவாகப் புரிகிறது.

அரும்பிய நிலையில் காணப்பெற்ற சாதிமுறை இன்று வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துச் சமுதாயத்திற்குப் பெருந்தீமை பயக்கும் காரணிகளுள் ஒன்றாகிவிட்டது. இச்சமூகக் கொடுமைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சாதிமறுப்புச் சிந்தனையை வலியுறுத்தினார். ‘சமூகச் சீர்திருத்தத்தை முன்வைத்துத் தொண்டாற்றிய பெரியார் ஈ.வே.ரா. தமிழ்நாட்டில் சாதிமறுப்புச் சிந்தனை ஓர் இயக்கமாக வளர்ந்து செயல் வடிவம் பெற்றிட முக்கியப் பங்கேற்றுப் பாடுபட்டார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்குச் சாதியொழிப்பே தலையாய குறிக்கோளாகும்’ என்னும் திறனாய்வாளர் கூற்றே இதற்குச் சான்றாகும். ஆனாலும் சாதியின் ஆதிக்கத்தால் ஏற்படும் துன்பம் குறித்துப் பலர் இன்றும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இருப்பினும் சாதியத்தின் மேலாதிக்கம் இன்னும் முற்றிலுமாகக் குறையவில்லை என்பதும் கருதத்தக்கது.

 



மதநல்லிணக்கம்

 

பல்வேறு வகைப்பட்ட மதங்களையும், சடங்குகளையும் பின்பற்றும்போது, அவர்களிடையே ஒற்றுமையுணர்வு, நல்லிணக்கம் இல்லையென்றால் அவர்கள் அனைவருமே மதயானைகளாகிவிடுவர். இந்திரவிழா நடைபெறவிருப்பதைப் பற்றி முரசறைபவன் மக்களுக்கு அறிவிக்கிறான். அதனைக் கேட்டதும் பல்வேறு சமயநெறியைச் சார்ந்தோரும், பல்வேறு சமயக் கொள்கைகளைப் பரப்புவோரும் அங்கு கூடுகின்றனர். இந்திரவிழாவை ஒரு பொது நிகழ்ச்சி என்னும் பொதுமை நோக்கோடு, சமய வேறுபாடு பாராட்டாமல் ஒன்று கூடினர் என்பதை,

“மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக்கணக்கரும்” (மணி.1)

என்று மணிமேகலை காட்சிப்படுத்தியுள்ளது. இதேபோன்று குடிமக்களிடமும் அனைத்துத் தெய்வங்களையும் வழிபடும் சமயப் பொதுமை உணrவு குடிகொண்டிருந்ததைக் காணமுடிகின்றது.

“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்” (மணி.1)

என்று முரசறையப்படுவதே இதற்குச் சான்று.

பௌத்தக் காப்பியமான மணிமேகலை, ‘நுதல்விழி நாட்டத்து இறையோன்’ எனச் சிவனையும், ‘நீணிலம் அளந்தோன்’ எனத் திருமாலையும், ‘முருகு பெயர் குன்றம் கொன்றோன்’ என முருகனையும் குறிப்பிட்டுச் செல்கிறது. மேலும், ‘மையறு படிவத்து மாதவர்’ எனச் சமண சமயத்தவரையும், ‘காடமர் செல்வி’ எனக் கொற்றவையையும், ‘ஞான விளக்கமாக நின்று திகழும் தெய்வமாகிய கலைமகள்’ எனக் கலைமகளையும், ‘விரை மலர் தாமரை ஒருதனி இருந்த செய்யோள்’ என இலக்குமியையும், ‘அமரர் தலைவன்’ என இந்திரனையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு பலசமயக் கடவுளரையும் சிறப்பித்துக் கூறுவது, சாத்தனாரின் சமயப்பொறையுணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சமயப்பூசல் மாறி நல்லிணக்கத்தோடு மக்கள் நலமுடன் வாழ்வது பகுத்தறிவு கொண்ட மக்களால் மட்டுமே இயலும். அத்தகைய மக்கள் வாழ்ந்திருந்ததையும், எதையும் சமமாகவும் பொதுநோக்கோடும் சிந்திக்கும் திறன்கொண்ட சமயிகள் இருந்ததையும் மணிமேகலை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

 

மதுவிலக்கு

 

 

மது உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று தீவிரப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட, அதனை முற்றிலுமாக விலக்க இயலவில்லை. ஆனால் மது அருந்துவதைத் தவறான செயலாகக் கருதப்படாத காலத்தில், மதுவினால் ஏற்படும் எதிர்ப்பினை மணிமேகலை சுட்டிக்காட்டுகிறது. அறிவார்ந்த சமுதாயத்தினரிடையே தான் பகுத்தறிவுச் சிந்தனை தோன்றும்; அதன் மூலம் அச்சமுதாயம் மேம்பாடடையும் என்பதால் மதுவை விலக்க வேண்டும் என்று சாத்தனார் விரும்புவது அவருடைய பகுத்தறிவுச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. நாகர் தலைவன், கடலில் கப்பல் கவிழ்ந்ததிலிருந்து உயிர்தப்பி வந்த சாதுவனுக்கு இளம்பெண்ணும், கள்ளும், புலாலும் வேண்டும் அளவிற்குக் கொடுங்கள் என்று கூறியபோது சாதுவன், நான் அவற்றை வேண்டேன் என்று கூறுகிறான். அதனைக் கேட்ட தலைவன், மாதரும் கள்ளும் உணவும் இல்லை எனில் மக்கள் அடையும் பயன் யாது என்று சினந்து கேட்டான். அதற்குப் பதில் கூறும் சாதுவன்,

“மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்” (மணி.16)

என்று மதுவை விலக்குவதால் ஏற்படும் நன்மையை எடுத்துக்கூறுகிறார். புத்தியை மந்தப்படுத்தும் மதுவை விலக்கினால், புத்தியைக் கூர்தீட்டும் பகுத்தறிவு தானே மேலோங்கும். மது உடலுக்கு நன்மை தருமா? தீமை தருமா? என்பதைப் பகுத்து ஆய்ந்து அறியும் அறிவு மக்களுக்கு இருத்தல் வேண்டுமென்பதையே சாத்தனார், சாதுவனின் குரலில் எதிரொலிக்கிறார்.

 

பரத்தமை ஒழிப்பு

 

சங்கச் சமூகத்தில் பரத்தமை ஒழுக்கம் கடியப்படவில்லை. அன்றைய சமுதாயம், பரத்தமை ஒழுக்கத்தைச் சமூக அங்கீகாரத்திற்குரிய காரணிகளுள் ஒன்றாகக் கருதியது. சங்ககாலத்தை ஒட்டித் தோன்றிய திருக்குறளும், மணிமேகலையும் பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டித்தன. மக்கள் சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்காகத் தோன்றிய ஒரு சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. சாத்தனார், பரத்தைக்குலம் ஒழிய வேண்டும்; பரத்தையரும் நற்குலமக்களாக உயரவேண்டும் என்று கருதும் சீர்திருத்த நோக்குடையவர் என்பதை மணிமேகலைக் காப்பியம் முழுவதும் பரந்து கிடக்கும் செய்திகள் மூலம் அறிய இயலுகிறது. பெண்ணைப் போகப்பொருளாகப் பார்த்தல் பகுத்தறிவற்ற செயலாகும்.

“கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில்
வாழ்க்கை புன்மையென் றஞ்சிப் போந்த பூங்கொடி” (மணி.24)

என்னும் பகுதியில் பரத்தமையெதிர்ப்பைக் காண இயலுகிறது. உலகில் உள்ள குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படை பரத்தைத் தொழில் என்றும், அதனைச் சிறந்த தொழிலாகக் கருதி வாழ்க்கை நடத்தும் ஒரு கூட்டம் இருத்தல் சமூகத்தின் அவமானச்சின்னம் என்றும் மேகலை சுட்டுகிறது.

வசந்தமாலை மாதவியிடம், நாட்டியத்துறையில் தலைசிறந்து விளங்குகின்ற கணிகை ஒருத்தி, தவக்கோலம் பூண்டிருப்பது ஆராய்ந்து பார்க்கையில் வெட்கத்திற்குரியதாகும் என ஊரார் அலர் தூற்றுவதாகக் குறிப்பிடுகிறாள். மணிமேகலைக் காவியம் இதனை,

“கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை
நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்றே
அலகின் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர்தொகுபு உரைக்கும் பண்பில் வாய்மொழி” (மணி.2)

என்று குறித்துள்ளது. பரத்தமையை ஒழிக்கும் ஒரு நன்முயற்சியை இழிவாகக் கருதி அலர் தூற்றுவதைப் ‘பண்பில் வாய்மொழி’ என்று சாத்தனார் குறித்திருப்பது கருதத்தக்கது. ஒரு நற்செயலைக் குறை கூறுவது பண்பிலாத சொல் என்று சுட்டிச் செல்வதில் சாத்தனாரின் பகுத்தறிவுச் சிந்தனை பளிச்சிடுகிறது.

 

பொருளியல் சமத்துவம்

 

 

ஒரு சமுதாயத்தில் செல்வர், வறியர் என்றிருக்கும் மக்கள் அனைவரும் சமமாக, நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்னும் சமத்துவ நோக்குடையவா; சாத்தனார். வறுமை காரணமாகப் பசிக்கொடுமையால் தான் மக்கள் பகுத்திறவும் திறன்இன்றி, நன்மை - தீமை எதுவென உய்த்துணரும் ஆற்றல் குன்றிப் பல தீய செயல்களைச் செய்கின்றனர். எனவே பசிப்பிணியை அகற்றினால் பல சமுதாயச் சீர்கேடுகளைக் களைந்து விடலாம் என எண்ணிய சாத்தனார்,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி.11)

என்று சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்கக் கொடை கொடுத்தலை அல்லது பகுத்துண்ணலைத் தீர்வாகச் சுட்டுகிறார் சாத்தனார். இத்தகைய சமுதாயத்தில் தான், மக்கள் நன்னெறியில் செல்வர் என்பதை உணர்த்த விரும்பிய சாத்தனார், சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சமுதாயப் புரட்சியை முன்வைத்தார்.

“கறையோரில்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசாள் வேந்தன்” (மணி.19)

என்னும் அடிகள் இங்குச் சுட்டத்தக்கன.

சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வினைப் போக்கிச் சமத்துவச் சமுதாயத்தை வலியுறுத்துவது, மதநல்லிணக்கத்தை முன்னிறுத்துவது, அறிவினை மழுங்கடிக்கும் மதுவினை விலக்குவது, பரத்தமை ஒழிப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு அகன்ற சமத்துவச் சமுதாயத்திற்கான தீர்வுகாக முன்வைக்கும் பசிப்பிணி தீர்த்தல், பகுத்துண்ணல், சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய சிந்தனை ஆகியன மணிமேகலைக் காப்பியத்தில் காணப்பெறும் பகுத்தறிவுச் சிந்தனைகளாக அமைகின்றன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard