New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசாரக்கோவை கூறும் வாழ்வியல் ஒழுகலாறு முனைவர் அ.ஜான் பீட்டர்,


Guru

Status: Offline
Posts: 24596
Date:
ஆசாரக்கோவை கூறும் வாழ்வியல் ஒழுகலாறு முனைவர் அ.ஜான் பீட்டர்,
Permalink  
 


ஆசாரக்கோவை கூறும் வாழ்வியல் ஒழுகலாறு
 

 

முனைவர் .ஜான் பீட்டர்,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி, திருவாரூர் – 610 003.
 
82.jpg
 
 
 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை ஆகும். இதனை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார். இவரது காலம் 5 ஆம் நூற்றாண்டு என்பர்.  வட மொழி நூலினை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் யாக்கப்பட்டது எனக் கருதுவர். போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம் ஆகிய வடமொழி நூல்களிலிருந்து பெறப்பட்ட கருத்துகளின் கோவையே இந்நூல் என்று ஒரு கருத்து உண்டு. ஆரிடம் என்னும் வடநூலின் பாற்பட்டது என்றும் தௌமியர் என்பார் கௌரவர்க்குக் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு என்றும் கருதுவர். வடமொழியில் இருடிகள் கூறிய ஆசார சீலங்களைத் தொகுத்து இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது என இந்நூலின் சிறப்புப்பாயிரத்தால் அறிகிறோம்.
இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்த 100 பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. குறள், சிந்தியல், அளவடி வெண்பாக்களான நேரிசை, இன்னிசை மற்றும் பஃறொடை வெண்பாக்களாலும், சிதைந்த சவலை வெண்பா யாப்பிலும் இவை அமைந்துள்ளன. ஆசார வித்து என முதல் மற்றும் நூறாவது வெண்பாக்கள் நிறைவுறுகின்றன. உண்ணுதல், உறங்குதல், நீராடல் , உடையணிதல் போன்ற பழக்கங்கள் மேற்கொள்ளும் முறைகள் பற்றியும், உடல் தூய்மை போற்றும் முறைகள் பற்றியும், இல்வாழ்க்கை பற்றியும் பிற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சொல்லப்படாத கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை அறிந்து இன்புறத்தக்கன. தமிழ் மொழி அற நூல்கள் சொல்லாத இக்கருத்துகளை வடமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த காரணம் பற்றியே மொழிபெயர்ப்பு நூலுக்கு எடுத்துக் காட்டாக இலக்கண விளக்க உரையாசிரியரால் குறிக்கப்படுகின்றது.
நல்லறிவாளர் துணிவு, பேரறிவாளர் துணிவு, யாவருங்கண்ட நெறி, மிக்கவர் கண்ட நெறி, ஒழுக்கம் பிழையாதவர் பண்பு என நல்ல ஒழுக்கங்கள் இந்நூலின் கண் தொகுக்கப்பட்டுள்ளன. பிற அற இலக்கியங்களில் கூறப்படாத தனிநபர் தூய்மை, சுகாதாரம், இல்லற நெறி போன்ற கருத்துகள் குறித்து இக்கட்டுரையில் விளக்க முற்படுகிறோம்.
நான்கு வகை எச்சில்கள்
எச்சில் என்பது கழிவு என்ற பொருளைக் குறித்து இந்நூலில் விளக்கப்படுகிறது. பல்வகைப்பட்ட எச்சில்கள் உள ஆயினும் நான்கு எச்சில்கள் இன்றியமையாதவை என ஆசாரக்கோவை(பாடல் 7) குறிப்பிடுகிறது. அவை, இருவகை இயக்கம் ஆகிய மல மூத்திரங்கள் , இணை விழைச்சு ஆகிய புணர்ச்சி, வாயில் விழைச்சு ஆகிய நான்கும் ஆகும். இவற்றை நன்கு கடைபிடித்து ஒழுகி இவ் எச்சிலுடன்படித்தல், கண் துயிலுதல், உரையாடுதல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது என இந்நூல் குறிப்பிடுகிறது. மேலும் புலை, ஞாயிறு, திங்கள், நாய், மீன் ஆகியவற்றை எச்சிலோடு காணவும் கூடாது  பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகிய இவற்றை எச்சிலுடன் தீண்டலும் ஆகாது என ஆசாரக்கோவை திறம்பட எடுத்துரைக்கிறது.(பாடல்கள் 5,6,8)
நீராடுதல்
தேவர் வழிபாடு மேற்கொள்வதற்கு முன்னும், தீக்கனா கண்ட பின்னரும், தூய்மை குன்றிய காலத்தும், மயிர்களைந்த பின்னரும், உண்டதை வாந்தி எடுக்க நேரும் காலத்தும், உண்ணுதற்கு முன்னரும், தூங்கி எழுந்த பின்னரும், புணர்ச்சி மேற்கொண்ட பின்னரும், கீழ்மக்களைத் தீண்ட நேர்ந்த காலத்தும், ஏனை எச்சிலான காலத்தும் நீராடுதல் வேண்டும் என்பது ஆசாரக்கோவை தரும் செய்தியாகும். மேற்காணும் ஈரைந்து காலத்தும் ஐயுறாது ஆடுக நீர் என்பது பாடல்10 இன் வழி விளக்கப்படுகிறது. எச்சிலோடு தீண்டக்கூடாதவை பற்றிக்கூறும் போது பசு புனிதமாகக் கூறப்படுகிறது. ஆனால் கீழ் மக்களை தீண்ட நேர்ந்த காலத்தில் நீராட வேண்டும் எனக் கூறுவதை நோக்கும் போது, பசுவை விட தாழ்வுடையவர்களாக மனிதர்களில் ஒரு பகுதியினர் கருதப்பட்ட அக்கால வழக்கம் வெளிப்படுகிறது.  உடையின்றி நீராடுதல் குற்றம் என மற்றொரு பாடல் விளக்குகிறது.
            நீராடும் போது நீரில் நீந்தல் ஆகாது; நீருள் உமிழக் கூடாது; நீருள் அமிழ்ந்திருக்கக் கூடாது; நீரில் விளையாடக் கூடாது; காய்ச்சல் உள்ள காலமாயினும் தலையை நனைத்தல்லாமல் குளிக்கக் கூடாது என நீராடும் இயல்பு விளக்கப்படுகிறது. நீரில் முகம் பார்க்கக் கூடாது; நீரைத் தொடாது தலையில் எண்ணெய் தேய்த்தல் ஆகாது, தலையின் கண் எண்ணெய் தேயத்த கையால் எவ்வுறுப்பையும் தீண்டக்கூடாது என்பனவும் மேலும் கூறப்படுகின்றன.
உடையணிதல்
நீராடும் போது ஒரு உடை உடுத்தல்லால் நீராடக் கூடாது என்பதால் உடையின்றி நீராடுதல் குற்றம் என விளக்கப்படுகிறது. மேலும் இரு உடை உடுத்தல்லால் ஓராடையுடன் உணவுண்ணக் கூடாது. உடுத்த ஆடையை நீருள் பிழியக்கூடாது. ஒரு உடையுடன் அவையின் கண் செல்லக்கூடாது. பிறர் அணிந்த மாசுடையைத் தீண்டக்கூடாது என்பன உடையணிதல் குறித்த ஆசாரக்கோவையின் கருத்தாகும்.
 
 
வழிபாடு
வைகறை யாமம் துயிலெழுந்து அன்றை நாள் தாம் செய்யக் கருதும் நல்லறமும் செயலையும் சிந்தித்து தாயும் தந்தையும்தொழுது எழுவது முந்தையோர் கண்ட நெறியாகும் என்கிறது ஆசாரக்கோவை. மேலும் அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தம் முன் பிறந்தோர், நிகரில்லாக் குரவர் ஆகியோரைத் தேவர் போலவே தொழுதல் வேண்டும் என்றும் ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது.
உணவுண்ணும் முறைமை
            உணவுண்ணும் முறைமை குறித்து பல பாடல்களின் வழி ஆசாரக்கோவை பரக்கப் பேசுகிறது.
                        நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
                        உண்டாரே உண்டார் எனப்படுவர்
என்கிறது ஆசாரக்கோவை. மண்டலம் செய்தல் என்றால் உண்கலத்தைச் சுற்றி நீர் இறைத்தலைக் குறிக்கும். கால் கழுவி நீர் காயும் முன் உண்ணல் வேண்டும்; நீர் காய்ந்த பின்னரே பள்ளியறை செல்ல வேண்டும் என மற்றொரு பாடலால் அறிகிறோம். உண்ணும் போது கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்; உண்ணும் போது தூங்காமல் அசைந்தாடாமல் பேசாமல் நன்கு அமர்ந்து வேறொன்றினையும் நோக்காமல் உணவையோ அல்லது வழிபடு தெய்வத்தையோ தொழுது, சிந்தாமல் கையால் எடுத்து உண்ணுக என மற்றொரு பாடல் குறிக்கிறது. (பாடல்20)
கிழக்கு மங்கலமான திசை என்பதால் அது நோக்கி அமர்தல் வலியுறுத்தப்பட்டது என்பர். நீதிநெறிச்சாரம் நூலும் இதையே வலியுறுத்துவது அறியத்தக்கது. கிழக்குத்திசைக்கு இடையூறு ஏற்படுமாயின் பிற திசைகளும் ஏற்கத்தக்கதே என விதிவிலக்கையும் ஆசாரக்கோவை எடுத்து இயம்புகிறது.
விருந்தினர், மூத்தவர்கள், பசு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவளித்துப் பின்னர் உண்ண வேண்டும். கிடந்து உண்ணக் கூடாது. நின்று உண்ணக்கூடாது. கட்டில் மேலமர்ந்து உண்ணக்கூடாது. வெளியில் நின்றவாறு உண்ணக்கூடாது. மிக விரும்பி உண்ணக்கூடாது என உண்ணக்கூடாத முறைகள் விளம்பப் படுகின்றன. அந்திப்பொழுதில் உண்ணல் ஆகாது என 29 ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுண்ணும் பந்தியில் தம்மினும் பெரியவர் அமர்ந்திருப்பாராயின் அவருக்கு வலப்புறம் அமரக்கூடாது; அவருக்கு முன் உண்ணகூடாது. அவருக்கு முன் எழக்கூடாது. அவர்களை நெருக்கி அமரலாகாது எனப் பெரியோர் பால் இருந்து அருந்தும் முறையை ஆசாரக்கோவை சுட்டுகிறது.
சுவைப்பொருட்களை உண்ணும் வரிசை முறைகளையும் பின் வருமாறு ஆசாரக்கோவை எடுத்தியம்புகிறது.
                        கைப்பன எல்லாம் கடை; தலை தித்திப்ப
                        மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
                        துய்க்க முறைவகையால் ஊண்.
இனிப்புச்சுவை உடையனவற்றை முதலிலும் கைப்புச்சுவையினவற்றை இறுதியிலும் ஒழிந்த பிற சுவையுடையனவற்றை இடையிலும் உண்ணல் வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
            உண்ணும் கலம் எப்படி இருத்தல் வேண்டுமென்பதையும் இந்நூல் கூறுகிறது. கலங்கள் எல்லாவற்றுள்ளும் மிகச்சிறியவற்றை உண்பதற்காக எடுத்துக்கொள்ளல் வேண்டும் என்பது இந்நூல் நுவலும் கருத்தாகும். நீர் அருந்தும் போது ஒரு கையால் மட்டுமே நீரை எடுத்து அருந்த வேண்டும் என்பதை,
                        இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்
                        கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு; இருகை
சொறியார் உடம்பு மடுத்து
வாய் துப்புரவு செய்தல்
            உணவு உண்ட பின்  வாயினை எவ்வாறு துப்புரவு செய்ய வேண்டும் என்பதையும் இந்நூல் வலியுறுத்துகிறது. வாயில் புக்க நீர் உள்புகாத படி நன்றாகக் கொப்புளித்து எச்சில் அறும்படி நன்றாகத் துடைத்து அழகுடன் மும்முறை நீர்குடித்து துடைத்துக்கொண்டு முக உறுப்புகளை அவ்வவற்றிற்கு உரிய முறைகளின் படி மந்திரம் சொல்லி  அல்லது விரல்களைச் செலுத்தித் துப்புரவு செய்யவேண்டும் என்பது ஆசாரக் கோவையின் 27 ஆம் பாடலின் வழி கூறப்படுகிறது. நீரிடத்து நின்றும் நடந்து கொண்டும் வாய் கழுவுதல் கூடாது. என 35 ஆம் பாடலில் வாய்கழுவும் கூறப்படுகிறது.
            தூங்கும் முறைமை
            தூங்கும் போது கைகூப்பித் தெய்வம் தொழுது, வடக்குப்புறம் தலைவைப்பதைத் தவிர்த்து, மேலே போர்த்துக்கொள்ளும் போர்வையை உடல் முழுமைக்கும் கொண்டு படுக்க வேண்டும். நீரில் நனைத்த கால் உலராமுன்னம் படுக்கைக்குச் செல்லக்கூடாது. தீண்டா நாள் மூன்றும் மனைவியைப் பார்க்கவே கூடாது. மூன்று நாட்களின் வரும் பன்னிரண்டு நாளும் மனைவியை பிரியவேகூடாது என்பதை,
                        தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்
                        ஈராறு நாளும் இகவற்க என்பதே
                        பேரறிவாளர் துணிவு (42)
மனைவியைக் கூடக்கூடாத பொழுதுகளாக உச்சிப்பொழுது, இடையாமம், காலை, மாலை, இருகடவுளர்க்குமுரிய நாட்கள், அட்டமி,   பிறந்த நாள் ஆகிய நாட்களை ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது.
            கழிப்பிடம்
            இருவகை கழிவுகளையும் வெளியேற்றத் தக்க இடங்கள் இவையிவை என்பதையும் ஆசாரக்கோவை கூறுகிறது.  புல், பயிர் நிலம், பசுவின் சாணம், மயானம், வழி, கோயில், நீர்நிலை,  நிழலிடம், பசுக்கள் தங்குமிடம் , சாம்பல் ஆகிய பத்து இடங்களிலும் மலசலம் கழித்தல் கூடாது என,
                        புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம்
                        தேவகுல நிழல் ஆனிலை வெண்பலியென்று
                        ஈரைந்தின் கண்ணும் இமிழ்வோடு இருபுலனும்
                        சேரார் உணர்வுடை யார் (32)
ஆசாரக்கோவை கூறுகிறது. பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்காமலும் இருந்து மலசலம் கழிக்க வேண்டும். பத்து திசையையும் மனத்தால் மறைத்து அதன் பின் அந்தரத்து அல்லால் உமிழ்தலும் மலசலம் கழித்தலும் நடைபெற வேண்டும் என்கிறது இந்நூல்.
            இவ்வாறு ஆசாரக்கோவை நூலெங்கும் , உடல் தூய்மை, மற்றும் அன்றாட நடத்தை நெறிகள் பற்றி தொடர்ந்து கூறப்படுகின்றன. வடக்கு திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்பது போன்று நடத்தை பற்றிய அறிவுரைகள் கூறப்படுகின்றனவே அன்றி அதற்கான காரணங்கள் யாவை என்பது பற்றிக் கூறப்படவில்லை. இன்றும் நடைமுறையில் இருக்கும் ஆச்சாரங்கள் பல இந்நூலில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடதத் தக்கது. ஆசாரக்கோவை நூலில் காணும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுச் சிந்தனைகள்  படித்து இன்புறத்தக்கன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard