New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிடம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திராவிடம்
Permalink  
 


பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு !

3leaders

இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான்.

பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  :

பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘சாதியற்ற திரவிட மஹா ஜன சபை‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘திரவிடர் கழகம்‘ என்ற அமைப்பையும் திராவிட பாண்டியன் என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அயோத்திதாசரும் அதில் எழுதினர்.பின் இவரது அமைப்பு ‘திராவிட மகாஜன சபை‘ என மாறி இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் ‘ஆதி திராவிட மகாசபை‘ எனப் பதிவு செய்யப்பட்டது. 1922-ல் பனகல் அரசர் தலைமையிலிருந்த நீதிக் கட்சி பள்ளர்/பறையர் எனக் குறிக்காமல் ‘ஆதி திராவிடர்‘ எனக் குறிக்க அரசாணை (அரசாணை 817) கொண்டு வந்ததது.

பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து (1919–1925) வெளியேறியவுடன் நீதிக் கட்சியில் சேரவில்லை. தனியே ‘சுயமரியாதை இயக்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் நீதிக் கட்சிக்குத் தலைவராகி, சுய மரியாதை இயக்கத்துடன் இணைந்தபின்புதான் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது (1944-ல்).

பெரியார் யாரைத் ‘திராவிடர்’ என்று குறித்தார்? இதுதான் நாம் அறிய வேண்டியது. தமிழக,ஆந்திர,கன்னட,மலையாள மக்களைச் சேர்த்து அனைவரையும் திராவிடர் என அழைத்தார் என்பது பொய் ! திராவிடர் என்று சென்னை மாகாண வாழ்த் தமிழரையேக் குறித்தார். திராவிடன் என்பதை அவர் குறிச் சொல் என்றே சொன்னார். ‘திராவிடர்’ என்ற சொல்லை பண்பாட்டு விடுதலைக்காக, சமூக விடுதலைக்காக, ஆரியத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதார் அனைவரையும் ஒன்றுத் திரட்ட/குறிக்கத்தான் பயன்படுத்தினார். periyar_dravidar

ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு கூட்டத்திற்குப் போனால், அங்குள்ள பெரும்பான்மையான நாகர்கோவில் மக்களைப் பார்த்து ‘ஈரோடுமக்கள் அல்லாதவர்களே’ என அழைப்பது எப்பிடிப் பொருத்தமில்லால் இருக்குமோ அதே போலதான் 2% மக்களை பார்ப்பனர் என்றும் மீதமுள்ள 98% மக்களை பார்ப்பனரல்லாதார் எனவும் அழைப்பது.

periyar_dravidar_2

periyar_dravidar_3https://aasifblogs.wordpress.com/2016/09/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/

ஏன் திராவிடர் என அழைத்தார்? தமிழர் என்றுதானே அழைத்திருக்க வேண்டும் எனக் கேட்கலாம்? அதற்கும் விடையளித்துள்ளார். தமிழன் எனப் பொதுவாய்க் குறிப்பிட்டால் பார்ப்பனரரும் அதனுள் வருவார்கள். திராவிடன் எனக் குறித்தால் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவன் என்றும் ஆரியனாக இருக்கவே விரும்புவான். எனவே நம்மைத் திராவிடன் எனக் குறிப்பதே சரியானது என்றார்.

tamilar.JPG

இதில் கவனிக்கவேண்டிய ஒன்று. பிறப்பின் அடிப்படையில் ஆரியன் என்றும் திராவிடன் என்றும்  பிரித்தாரா? தமிழன் – பிற மொழியாளன் (or வந்தேறி  :) )  எனப் பிறப்பினடிப்படையில் பிரிக்கக் கூடாது என நாம் கூறும் போதெல்லாம் பெரியார் மட்டும் என்ன? பார்ப்பனர்களை  பிறப்பின் அடிப்படையில்தானே ஆரியர் என்றார் என எதிர்க் கேள்வி வரும். (சீமான் கூட ஒரு பேட்டியில் இதைச் சொன்னார் ).
அம்பேத்கார் ஒருமுறை தனது கட்டுரையில் வட இந்திய சமார்-ரும் (இங்கேயுள்ள அருந்ததியர் போல) ஆரியர்தான் தென்னிந்திய பார்ப்பனரும் திராவிடர்-தான் என்றார். அதைக் காட்டி பெரியாரிடம் கேட்ட பொழுது, அவர் , நான் இரத்தப் பரிசோதனை செய்து நாங்கள் மக்களைப் பிரிக்கவில்லை. எனக்குத் தெரியும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் இல்லை என்பது நன்றாகத் தெரியும்.ஆனால் அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளில், ஆச்சார அனுஷ்டானங்களில் அவர்கள் காட்டும் பிரிவினைதான் என்னை அப்பிடிப் பேசச் செய்கிறதே தவிர இரத்தத்தைப் பார்த்தோ இரத்த சுத்தத்தைப் பார்த்தோ பிரிப்பத்தில்லை. நான் அதை ஆதரிப்பதும் இல்லை !

“இன்றைய தினம் ஆரிய – திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.” – 28.08.1953-இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு- “விடுதலை” 07-09-1953

ஆக, பெரியாரின் ‘திராவிடர்’ பார்ப்பனரல்லாத தமிழக மக்களைக் குறித்ததே !

திராவிட நாடு கேட்டாரா? தனித் தமிழ்நாடு கேட்டாரா ?

பெரியாரின் திராவிட நாடு என்பது சென்னை மாகாணந்தான், அதாவது இன்றையத் தமிழ்நாடு. பெரியார் தனித்தமிழ் நாடு பற்றிப் பேசிய பிறகுதான் 1937 அக்டோபரில் சென்னைப் பொதுக்கூட்டமொன்றில் பேசிய சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகத் ‘தமிழ் மாநிலம்’ அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அதற்கு உகந்த தருணம் என்றும் பேசினார். மொழிவாரி மாநிலம் அமைந்த போது அப்போதைய பிரதமர் நேரு ‘தட்சிண ராஜ்யம்’ என்ற பெயரில் தமிழகம், கேரளம்,கருநாடகம் இவற்றை இணைத்து ஒரே மாநிலமாக்க எண்ணினார். பெரியார் திராவிட நாடு வேண்டுமென நினைத்திருந்தால் இதை ஆதரித்திருப்பார். ஆனால் அவர் தட்சிண ராஜ்யத்தைக் கடுமையாக எதிர்த்து அத்திட்டத்தைக் கைவிட வைத்தார்.

tn2

tn3

TN4.JPG

“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”.   – (விடுதலை, 29.8.1956; வே. ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக் -732) 

ஆந்திரா, கேரளா,கர்நாடக எனப் பிரிந்ததை வரவேற்ற அவர் அரசாங்கத்தில் மலையாளிகளின் ஆதிக்கத்தை அப்போதே எதிர்த்தார் !

“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்  – இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. என்ன காரணம் என்றால்,
ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும்….
இரண்டு, அவர்கள் இருவருக்குமே   மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை…. மூன்றாவது இவர்கள்   இரு நாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர் களானாலும், அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக் காரர்களாவார்கள்… “

“அப்படி 14இல் ஏழிலொரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். “

இதை, நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.  – (விடுதலை – அறிக்கை, 11.10.1955; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ய, பக்.730) 

TN5.JPG

 

பெரியார் பேசியது 100% தமிழ்த் தேசியந்தான்.அவர் மக்களைக் குறிக்கும் போதும், மண்ணைக் குறிக்கும் போதும்  தமிழரையும், தமிழகத்தையுந்தான் குறித்தார் ! இன்றையத் தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரைத் தாராளமாக முன்னெடுத்துச் செல்லலாம் !

 

அண்ணா கேட்ட திராவிட நாடு: ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு ‘

1939-ல் பெரியார் நீதிக் கட்சித் தலைவராய் ஆன போதே இராசாசி அவரைச் சந்தித்துத் தான் பதவி விலகத் தயார் என்றும், நீதிக் கட்சிச் சார்பாக பெரியாரை முதல்வராகக் கேட்டார். பெரியார் மறுத்த போதே அண்ணாவிற்கு சற்று மனக் கசப்பு ஏற்பட்டது. பின்  பெரியாரிடமிருந்து வெளியேறி 1949-ல் தி.மு.கவை உருவாக்கி இராபின்சன் பூங்காவில் பேசும் போதே அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார். எங்கள் கட்சிப் பெயரில் ‘ர்’இல்லை என்பதைக் கவனியுங்கள். இது திராவிட முன்னேற்றக் கழகம். பெரியார் திராவிடர் என மக்களைக் குறித்தார். நாங்கள் திராவிட நாட்டைக் குறித்து அதை முன்றேற்ற விழைகிறோம் என்றுதான் அறிமுகப்படுத்தினார். உண்மையில் ‘திராவிட ‘ என்னும் சொல்லைக் கட்சிப் பெயரில் சேர்க்க அவர்க்கு மட்டுந்தான் தேவை இருந்ததது. அதற்குப் பின் வந்த எந்தக் கட்சிக்கும் திராவிட தேவையில்லா ஒரு ஓட்டுதான் !

மொழிவழித் தேசியம் குறித்த அண்ணாவின் புரிதல் எத்தகையது ?அவருடைய சொற்களிலிருந்தே:
“இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக் கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விட­யமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. அதன்படி பார்த்தால் இந்தியாவில் தமிழர், ஆந்திரா, கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. “இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்கூடிய அளவுக்கு மக்கள்தொகை, பொருள்வளம், நீர்வளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.”  – (திராவிடநாடு, கடிதம் 55, 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை,2005, பக்.199) 

மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் (12.3.1947) தமிழ் மாநிலம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் அண்ணாவும், ம.பொ.சியும் பங்கேற்றனர். தமிழ் மாகாணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், திராவிட நாடு பிரிவினைக்கு முதன்மை தந்தும் அண்ணா பேசினார். ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்: 

“தமது திராவிடர் கழகத்தின் திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கைக்கும், தமிழரசுக் கழகத்தின் தமிழரசுக் கோரிக்கைக்கும் வேற்றுமையில்லை யயன்று கூறி (அண்ணா) எங்களிடையே உறவை வளர்ப்பதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ‘திராவிடத் தனியரசு ஓரணா போன்றதென்றும், தமிழரசு காலணா போன்றதென்றும் கூறினார். ‘நான் கேட்கும் ஓரணாவில், ம.பொ.சி. கேட்கும் காலணா இருக்கிறது. ஆனால், ம.பொ.சி. கேட்கும் காலணாவில் ஓரணா இல்லை என்றார்.” மாநாட்டில், ‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்குட்பட்ட தமிழரசு’ என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகம் தமிழ்த் தேசியம் பேசினாலும் பெரியாரைப் போலத் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை. மதிய அரசுடன் இணைந்த தனி மாநில சுய உரிமையைத்தான் வலியுறித்தியது)

“திராவிடம் முன்னாளில் தனியாட்சியுடன் இருந்தது என்றும் அதை ஆரியர், வடவர் அடிமைக்காடு ஆக்கி விட்டனர் என்றும் ‘இன்றுதிராவிடத்தின் தலைவிதி டில்லியில் எழுதப்படுகிறது’ என்றும் டில்லி ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும்” என்றும் அண்ணா கருத்துரைத்தார். – “திராவிட நாடு தனியாக வேண்டும்  – தனி அரசாக வேண்டும்.” ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20) 

தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. – ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’, பக்.37) 

“தமிழ்நாடு தமிழருக்குத்தான்  – ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான்   கேரள நாடு கேரளருக்குத்தான்   கர்நாடகம் கர்நாடகருக்கே   இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே   ஆரியருக்கல்ல!  பனியாவுக்கல்ல!  “ – (அண்ணா ‘இன்பத் திராவிடம்’, பக்.34) 

“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (அண்ணா ‘இன்பத் திராவிடம், பக்.24) 

“இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும் போது எந்த ஒரு மொழிப் பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை தி.மு.க முழு மனதுடன் வரவேற்பதுடன் ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும், மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும்.”  – (மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? மதுரை, 2005, பக்.46) 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அண்ணாவின் திராவிட நாடு என்பது தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்னாடக என்னும் நான்கும் சேர்ந்தும் பிரிந்து போகும் உரிமையுடன் இந்திய அரசிலிருந்துத் தனித்து இயங்குவது. வினோ பாவுடன் நடந்த சந்திப்பில் அவரே விவரிக்கிறார்.

annaatn

 

இதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட நாட்டைப் பெற என்ன முயற்சி செய்தார்? ஒன்றுமே இல்லை. தேர்தல் அறிக்கையில் கூட திராவிட நாடு பெறுவோம் என்பதைத் தவிர வேறேதும் இல்லை. 1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. அதன் காரணமாக16ஆவது சட்டத் திருத்தம் வந்தது. இதன் படி தேர்தலில் நிற்கும் அனைவரும் இந்திய நாட்டின் இறையாண்மையை, ஒற்றுமையைக் காப்பேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்தலில் போட்டியிட முடியாது.

IndCons16.JPG

இதைத் தொடர்ந்தும், அதே நேரத்தில் நடந்த சீனப் போருக்கு ஆதரவுத் தெரிவித்தும் அண்ணாவும், தி.மு.க.வும் திராவிட நாடுப் பிரிவினையைக் கை விட்டனர். தாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கூறியவை ஆராயத்தக்கவையே !

அண்ணா கூறிய காரணங்கள்: “கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை, இன்னும் கேட்காததால்; கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால்; ஆந்திரர் ஆதரவு பெறவில்லை, அவர்களை நாம் அணுகாததால். கேட்டு மறுத்ததில்லை ; நாம் சொல்லி எதிர்த்த தில்லை. அப்படியே மறுப்பதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது.” ஆனால் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைச் சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களைத் தாண்டி எவரும் ஏற்கவில்லை. 

திராவிட நாடு கோரிக்கை அவரின் மிகப் பெரியத் தோல்வி என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அண்ணா  தமிழ்த் தேசியத்தை முன்னிருத்தியிருந்தால்  அப்பொழுது அணி திரண்டிருந்த தமிழ் அறிஞர்கள், தமிழ்த் தேசிய ஆர்வலர்கள், பெரியார் அனைவரும் அவர்பின் நின்றிருப்பர். பெரும் எழுச்சியாய் தமிழ்த் தேசியம் மலர்ந்திருக்கும். தனித் தமிழ்நாடு கிடைப்பதும், கிடைக்காமலிருப்பதும் வேறு. தமிழ்த் தேசியத்தை எவர் பேசினாலும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளினார் அண்ணா. தம் நாவன்மையால் அவர் சரியான திசைவழி வந்த தலைவர்களையயல்லாம் மக்களின் பார்வையில் ஈர்ப்பு இழக்கச் செய்தார். அந்நேரத்தில் தமிழ்த் தேசிய உணர்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் விட்டது தி.மு.க.தான் !

பாவாணரின் திராவிடம்: தமிழே மூல மொழி !

பெரியார், அண்ணா போன்று பாவாணர் அரசியல் தலைவர் அல்ல. சொல்லாய்வறிஞர் , வேர்ச் சொல் ஆராய்ச்சியாளர். அவர் திராவிட என்னும் சொல்லை அணுகும் முறையே வேறு.

பாவாணரைப் பொறுத்தவரை தமிழ் என்ற சொல்தான் திராவிடம் எனத் திரிந்திருக்கிறது. “தமிழம் > த்ரமிளம் > த்ரமிடம் > த்ரவிடம் > திராவிடம்”.

இதை நாம் காட்டும் போதெல்லாம், கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது உண்மையல்ல ! திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல், பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனப் பட்டியலிடுகிறார்.

paavaanar_3.JPG

யாரெல்லாம் சூத்திரர் என மனு சாஸ்த்திரம் கூற வரும்போது:

மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,
-சுலோகம் 43-ல்

பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.

சுலோகம் 44ல்
பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்
இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்
மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவர்

“எவ்வினையும் ஓப்புதலால்
திராவிடம் என்றியல் பாடை” எனப் பாடியுள்ளார் !

இது தவிர கால்டுவெல்: “கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வராகமிகிரர் நூலின் பழங் கையெழுத்துப் படிகளில் த்ரமிட என்னும் வடிவும் மங்கலேச அரசனின் பட்டங்களில் த்ரமில என்னும் வடிவும் காணப் பட்டன வென்றும், தாரநாதர் திபேத்தில் எழுதிய ‘இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு‘ (கி.பி. 1573) என்னும் நூலில், திராவிடர் ‘திரமிலர்‘(Dramilas) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், புராணங்களின் பழைய மொழிபெயர்ப்புகளிலெல்லாம் இவ் வடிவே பெருவழக்காயிருப்பதாகச்  குண்டெர்ட்டுப் பண்டாரகர் கூறுகிறாரென்றும், திரவிடம் என்பதன் மிகப் பழைய வடிவம் ‘த்ரமிட‘(Dramida) என்பது என்றும்; கால்டுவெல் கண்காணியார் வரைந்துள்ளார் “(தி.மொ. ஒ. இ., ப.9).

கால்டுவெல்-க்கு முன்பே திராவிடம் என்னும் சொல் இருந்தததை மறுக்க இயலாது !

பாவாணர் கால்டுவெல்-லின் திராவிடத்தை ஏற்கிறாரா?

தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி என்பதை இருவரும் ஏற்கின்றனர்.

LangHier.JPG

பாவாணர் தம்முடையத் “திராவிடத் தாய்” என்னும் நூலில் பல இடங்களில் கால்டுவெல்-க்கு நன்றி சொல்கிறார்.

“கழகநூற் பயிற்சியும் தனித் தமிழுணர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் அயல்நாட்டாரான அவர் ஆரியத்தினின்று திரவிடத்தைப் பிரித்துக் காட்டின அத்துணையே மிகச் சிறந்ததென்று கொண்டு பெருமகிழ்ச்சியுடன் அவருக்கு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.” (பக்:29)

தமிழல்லாத ஒரு மொழி திரவிடத்தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை. மொழித்துறைக்குச் சொன்னதே இனத் துறைக்கும். “திரவிட முன்னையர் (Pre-Dravidians”) என்றோ, மூலத்திரவிடர் (Protp-Dravidians) என்றோ, திரவிடர் (Dravidians) என்றோ வேறுபாடிருந்ததாக நமக்குத் தோன்றவில்லை.”

“தமிழ்மொழியின் சிறப்புப் பெயர், தமிழ் (தமிழம்), திரவிடம் என்னும் இருவடிவில் காணப்படுகின்றது. இவ் விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும்.

பகுதி 11. கால்டுவெல் தமிழைப் சிறப்பித்துக் கூறுவனவற்றையும் ஏற்றுக் கொள்கிறார். (பக்: 24)

“இக் குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் ஐரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக் குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிகவுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்களிலும் வேர்களிலும் பெரும்பாலானவற்றைப் பெற்றிருப்பதுமான மொழியாயிருந்தாலு.

“தமிழ்-இம்மொழி திரவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் மிகுந்த வளமுள்ளதும் ஐயமறப் பழைமையான வடிவங்களுள் பெரும்பகுதியையும் மிகப்பல வகைகளையும் கொண்டுள்ளதுமானதாதலின், தன் தகுதிக்கேற்றபடி, பட்டியில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது.”

“எவ்வகையிலும் திரவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ் வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன். தனித்து வழங்குதல் மட்டுமன்று; அதன் உதவியின்றித் தழைத்தோங்கவும் இயலும்.”

பகுதி 4. குமரி நாடே (Lemuria) தமிழ் (திரவிடம்) தோன்றிய இடம் (பக்:4) பற்றிக் கூறும் போது:
உலகில் இதுபோது திரவிடமிருப்பது இந்தியாவே; இந்தியாவிலும் திரவிடத்திற்குச் சிறந்தது தென்னாடே; தென்னாட்டிலும் சிறந்தது தமிழ்நாடே;”

தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந்தமை (பக் 8) பற்றிக் கூற வரும் போது. “தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திரவிடம் என்று திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க.”

“தலைக்கழகக் காலத்தில், தமிழ், செந்தமிழ் கொடுந்தமிழ் என இரண்டாக வகுக்கப்பட்டது. இவை வழங்கும் நாடுகளும் செந்தமிழ்
நாடு கொடுந்தமிழ் நாடு எனப்பட்டன. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன.”

“கால்டுவெல்கண்காணியார் திரவிடம் என்னும் சொல்லைத் திரவிடமொழிகளின் பொதுப்பெயராகவும் தொகுதிப் பெயராகவும்வரையறுத்தனர்.” (கவனிக்க: பாவாணரும், கால்டுவெல் தெலுங்கைக் குறிக்கத் திராவிடம் எனச் சொல்லவில்லை; திராவிட மொழிகளின் பொதுப் பெயராகவும், தொகுதிப் பெயராகவும் பயன்படுதியதாகத்தான் சொல்கிறார்)

திரவிட மொழிகளெல்லாம் சேர்ந்ததே முழுத்திரவிடம் (பக் 20) எனக் கூறும் போது “செந்தமிழும் கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல்-திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந்தமிழ்களே யாதலானும்,திரவிடரெல்லாம் ஒரு குலத்தாரேயாதலானும், ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இயற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும்,எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத்திரவிடமாகும். திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்னும் நான்குமே சிறந்தனவாகும்.”

ஒப்பியன் மொழிநூல் – நூல் 1 – பகுதி 1 – ஆரிய திராவிடப் பகுப்பு: – பக் 2

“தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பனரென்னும் ஒரு குலத்தாரே.”

“மாக்கசு முல்லர் திராவிட மொழிகளைச் சரியாய் ஆராயாததாலும், அவற்றை வடமொழியின் கிளைகள் என்று தவறாக எண்ணியதாலும், திராவிடத்தின் உண்மையான இயல்புகளைக் கூறமுடியவில்லை. திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கிய தென்றும், வடசொல்லென மயங்கும் பல சொற்கள் தென் சொற்களேயென்றும், வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் (Caldwell) கண்காணியரே.
திராவிட மொழிகள் மொத்தம் பன்னிரண்டென்பதும். அவற்றுள் ஆறு திருந்தினவும், ஆறு திருந்தாதனவுமாகும் என்பதும், பெலுச்சித்தானத்திலுள்ள பிராஹு யீ  திராவிட மொழியேயென்பதும், இவருடைய கண்டுபிடிப்பு களே. திராவிடம் வடமொழிச் சார்பற்றது, வடமொழியில் பல திராவிடச் சொற்களுள்ளன என்னுங் கொள்கைகளில், இவருடன் ஒன்றுபட்டவர், இவர் தமிழைச் சிறப்பாயா ராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயா ராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதேயெனினும் பொருந்தும்.”

தமிழே திராவிடத்தாய் (பக்:157)
“தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் (‘Italian of the East’) என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டுமன்று, இவ் வுலகிற்கே இலத்தீன்(Latin of the Universe) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழிகட்கெல்லாம் பொதுச்செல்வம்;”

செந்தமிழ்ச் சிறப்பு என்னும் நூலில் தமிழும் திராவிடமும் தென்மொழியும் பகுதியில்: “தமிழ், திரவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒருபொருட் சொற்களாய்த் தமிழையே நெடுங்காலம் குறித்து வந்திருப்பினும், இன்றை நிலைக்கேற்ப, தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன.”

“தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிருந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர சோழ பாண்டியர் தொன்றுதொட்டுத் தமிழகத்தைப் புகழ்பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது, திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திரவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது.”

“திரவிடம் எனப்படும் மொழிகட்குள் தமிழினின்று முதன்முதல் பிறராற் பிரிக்கப்பட்டது. தெலுங்காகும்.”

சில இடங்களில் கால்டுவெல்லின் கருத்துக்களுடன் கடுமையாக வேறுபடுகிறார்.

கால்டுவெல் திராவிடம் என்றே சொல்லே தமிழ் எனத் திரிந்தது எனச் சொன்னதை மறுத்து, தமிழ் என்ற சொல்தான் திராவிடம் எனத் திரிந்ததுஎன நிறுவுகிறார்.

தமிழ் வரலாறு – பாகம் 1 நூலில் கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள் என 7 கருத்துக்களை முன்வைக்கிறார். அதில் ஒன்றில் கூட தமிழ் வேறு திராவிடம் வேறு என்று கூறி கால்டுவெல்லை மறுக்கவில்லை !

தமிழின் உயர்வு, தனித்து இயங்கும் தன்மை, பிற திராவிட மொழிகளின் மூலம் என்றக் காரணிகளால் தமிழை திராவிட மொழிகளில் ஒன்று என்றவளவில் குறைத்து மதிப்பிடுவதை ஏற்கவில்லை. தமிழுக்குத் தனிடம் கொடுக்க வேண்டும் என்கிறார்.

“தமிழ் என்னும் சொல் திரவிடம் என்று திரிந்தது போன்றே, தமிழம் என்னும் மொழியும் பல திரவிட மொழிகளாகத் திரிந் திருப்பதனால், திரவிடம் என்னும் சொல்லால் திரவிட மொழி களைக் குறிப்பது தக்கதே. வடமொழி என்னும் பெயர் பல வட நாட்டு மொழிகளையும் ஆரியத்துள் அடக்குவதுபோல், தென் மொழி என்னும் பெயரும் பல தென்னாட்டு மொழிகளையும் தமிழுள் அடக்கும்.”

“தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், பிரித்துக் கூறல் வேண்டும். அவ்விரு கூறுகளையும் இணைத்துக் குறிப்பதற்குத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவேண்டும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் முறையே, Tamil. Dravidian, Tamilic or South Indianஎன்னும் சொற்களை ஆளலாம்.”

திராவிடம் என்பதே தீது :

இப்பிடித் தன் மொழியாய்வுக் கட்டுரைகளில் கூறியவர் ஏன் திராவிடம் என்பதே தீது எனத் “தமிழியற் கட்டுரைகளில்” கூறுகிறார்? அண்ணாவின் திராவிடத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள்.

அண்ணாவின் திராவிட நாட்டை அந்நாளையத் தமிழ் தேசியர்கள் அனைவரும் (ம.பொ.சி, ஆதித்தனார்,ஈ.வெ.கி. சம்பத், பாவாணர், பாவலரேறு) கடுமையாக எதிர்த்தனர். பெரியாரும், ஜீவா-வும் கூட அதை ஆதரிக்கவில்லை.

தமிழ் தனித்தியங்குமா? என்னும் கட்டுரையில் வட மொழிக் கலப்பின்றி தமிழ் தனித்து இயங்கும் என்கிறார். (தமிழ் மொழித் தனித்து இயங்கும். அவரேத் தனித் தமிழ் ஆர்வலர்தான். கருணாநிதியை அருட்ச்செல்வர் என்றே தனித் தமிழில் அழைக்கிறார். நாம் இன்றுத் தனித் தமிழில் பேசுவதோ, எழுவதோ இல்லை. வார்த்தை, அர்த்தம், உபயோகம், அனுபவம் எனப் பிரித்துச் சொல்ல முடியாதபடி வட மொழி தமிழில் கலந்துள்ளதை மறுக்க இயலாது)

தமிழும் திரவிடமும் சமமா? என்னும் கட்டுரையில் தமிழே பிற திராவிட இன மொழிகளின் மூலம் என்பதை நிறுவுகிறார்.

திரவிடம்’ என்பதே தீது, என்னும் கட்டுரையில் இன்றைய நிலையில் பிற திராவிட மொழிகளில் வட மொழிக் கலப்பு நிறைய உண்டென்பதாலும் தமிழின் இலக்கண,இலக்கிய உயர்வாலும், திரவிடத்தின் மூல மொழி என்பதாலும் அவைகளைத் தமிழுடன் சேர்க்க வேண்டாம் எனக் கூறுகிறார். Tamil. Dravidian, Tamilic or South Indian என வைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இக்கட்டுரையில் கவனிக்க வேண்டியவை, தி.மு.கவிற்கு எதிரான பின்வரும் கருத்துக்களே:

“திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தும், தமக்குத் தாமே முட்டுக்கட்டையிட்டுக் கொண்டது. இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை.”

“தமிழ்நாடு பிரிந்தபின், குறைந்தபட்சம் தென்னாட்டுத் திரவிட ரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலனங்களில் (விஷயங்களில்) ஒருகூட்டொப்பந்தம் செய்யும்போதே தி.மு.க. சொல்லும் திரவிடம் தோன்றும். அதற்கு இன்று தமிழர்மட்டுமே முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையே யாம்.”

“இதுகாறுங் கூறியவற்றால், உண்மை நிலையை உள்ளவாறுணர்ந்து, நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு, எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றிபெறுதற் பொருட்டு, பொதுநலத்தை முன்வைத்து ஒற்றுமையாகப் போராடி, முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க.”

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கையை எதிர்த்து, மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தமிழும், திராவிடமும் வேறு வேறாகப் பிரிந்த விட்ட பிறகு இணைய முடியாது எனக் கூறுகிறார் என்ற புரிதல் இங்கு அவசியம்.

யாருடைய திராவிடம் சரி ?

இவர்களைத் தவிர அம்பேத்கார் அவர்களும் ஆய்வு செய்து

“இந்தியாவில் நாகர்கள், ஆரியர்கள் என்ற இரண்டு இனம் இருந்தது. நாகர்கள் என்பது திராவிடர்களே. திராவிடம் என்பது மொழியால் வந்த பெயர். நாகர் என்பது இனப்பெயர்.” – (ஆதாரம்: பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_7; பக்கம்_300)

அயோத்திதாசர் முதல் அம்பேத்கார் வரை, பெரியார் முதல் இன்றைய சீமான் வரை யார் சொல்லும் திராவிடம் சரி/தவறு என்ற கேள்வியே தேவையற்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் தேவை கருதி அதற்கானப் பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.

தொல்காப்பியர் மரபியல் பற்றிக் கூறும் போது பாட்டி என்ற சொல் பெண் பன்றியையும், பெண் நாயையும் குறிக்கும் என்றார் (‘பாட்டி’ என்ப-‘பன்றியும் நாயும்’ தொல்.மரபியல் 610). ஆண் குதிரையை ‘சேவல்’ எனச் சொல்லலாம் என்றார் (குதிரையுள் ஆணினைச் ‘சேவல்’ என்றலும்). இன்று இந்த இரு சொற்களுக்கும் இன்றைய பொருள் வேறு. அதே போலத்தான் பெரியாரின் திராவிடத்திற்கு இன்றையத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் கூறும் பொருளும்.

எது இன்றையத் தேவையாய் இருக்கிறதோ அதை முன்னெடுத்துச் செல்வதே சிறந்தது ! அது திராவிடமோ, தமிழ்த் தேசியமோ, இல்லை இந்தியத் தேசியமோ !

 

PS: முடிந்தளவு தரவுகளை பெரியார்,அண்ணா,எழுத்திலிருந்தோ, பொதுக் கூட்டப் பேச்சிலிருந்தோ தந்திருக்கிறேன். புத்தகமெனில் பக்க எண்ணும் கொடுத்துள்ளேன். தவறு இருந்தால் சுட்டவும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard