New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இட ஒதுக்கீடா


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இட ஒதுக்கீடா
Permalink  
 


 

இட ஒதுக்கீடா ! ஆங்..செல்லாது ! செல்லாது !

இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் 80 வருடமா இருக்கே..இன்னும் எதுக்கு.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு பழைய கதையைச் சொல்லியே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்-னு கும்பலாச் சேர்ந்து குரல் எழுப்புவாங்க. இட ஒதுக்கீடு என்றதும் அம்பேத்கார் கொண்டு வந்தார் என்ற புரிதலும், அட்டவணை & பழங்குடியினத்தவர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற புரிதலுமே பெரும்பான்மையோரிடம் உள்ளது ! இரண்டு புரிதலுமே தவறு ! இட ஒதுக்கீடு வறுமை அழிப்புத் திட்டமும் இல்லை ;வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிறத் திட்டமும் இல்லை என்ற புரிதல் முதலில் வேண்டும். இந்தியாவிலுள்ள இட ஒதுக்கீட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதிலும், நடைமுறை ப்படுத்தியதிலும் தமிழகமே முன்னோடி. ஒவ்வொருக் கட்டத்திலும் கடுங் சோதனைகளைச் சந்தித்துள்ளது.

இன்று இடைச் சாதியாராய் இருந்து கொண்டு இட ஒதுக்கீட்டின் பலனை நன்கு அனுபவித்துக் கொண்டே, அட்டவணை/பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடைக் குறை சொல்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஒரு வரலாற்றுப் பார்வையில் காட்டி,  பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டே மிகுதியான சிக்கல்களை சந்தித்துள்ளது என்பதை காட்டுவதே இப்பதிவின் நோக்கம் !

முன்னுரை :

பிராமணர் ஆதிக்கம் !

அக்ரஹாரத்தில் வசித்து வந்த பிராமணர் ஒருவர்க்கு கை நிறைய வருமானம் வரும் ஜோசியந்தான் தொழில். ஒரு முறை வெளியூரிலிருந்து வீடு திரும்பும் வழியில் தஞ்சை கலெக்டர் அழைப்பதாக செய்தி வரவும் அங்கே சென்றார். அந்த வெள்ளைக்காரக் கலெக்டர் அவரிடம் “உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” எனக் கேட்க “தெரியும்” எனப் பதிலளித்தார்.  “கணக்கு பார்க்கத் தெரியுமா?” என அடுத்த கேள்வியைக் கேட்க “ஜோசியம் பார்க்கத் தெரியும், கணக்கும் பார்ப்பேன்” என்றார். விடாத கலெக்டர் “கிராமத்து கணக்கு வேலைகலைப் பார்ப்பீரா” எனக் கேட்க , “கொடுத்தால் பார்ப்பேன்” என்றார். அடுத்த நிமிடம் ஜோசிய பிராமணர் அரசு அலுவலரானார். (ஆர்.முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு – பகுதி -1 என்ற நூலிலிருந்து).

இப்பிடித்தான் விண்ணப்பிக்காமல், போட்டி இல்லாமல், கோரிக்கை இல்லாமல் அரசுப் பணிகளில் பிராமணர்கள் சேர்ந்தனர். எல்லாரும் இதே போலவா என்றால் இல்லை? சிலர்க்குப் பேச்சைப் பார்த்து, சிலர்க்குத் திறமையைப் பார்த்து. அதற்கு அடிபடைத் தேவையான கல்வி அன்று அவர்களிடமே பெரும்பான்மையாய் இருந்த காரணத்தால் அரசுப் பணிகள் அவர்களின் மடியில் தானாகவே விழுந்ததன !

1835-க்குப் பின் வந்த மெக்காலே கல்வி முறை வந்தபின் அனைவர்க்கும் படிக்க வாய்ப்பளித்தது ஆங்கில அரசு. ஆங்கில வழிக் கல்வியில் ஏற்கனவே படித்து, அரசு வேலையில் இருந்த பிராமணர்களின் குழந்தைகள் அமோகமாய்த் தேர்ச்சி பெற்றனர். குலத் தொழில் செய்து கொண்டு கல்வி மறுக்கப்பட்டவர்கள் விசயத்தைப் புரிந்துகொண்டு  படித்து வேலைக்கு வர முயலும் போது எங்கும், எதிலும் பிராமணர்கள் நிறைந்து இருந்தனர். அவர்கள் ஒய்வு பெறும் வரை வேலை கிடையாது. அப்போதைய (1892-1904) காலக் கட்டத்தில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிராமணர்கள் = 15/16 ; உதவிப் பொறியாளர்கள் = 17/21 ; உதவிக் கலெக்டர்கள்=77/120;

நீதிக் கட்சியும் முதல் இட ஒதுக்கீடும் !

CMs.JPG

இதே நேரத்தில் 1909-ல் சென்னை பிராமணர் அல்லாதார் சங்கம்தொடங்கப்பட்டது. தொடங்கிய உடனே சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிராமணத் தலைவர்கள் இந்தச் சங்கம் வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது, இன வாதத்தைப் பரப்புகிறது, இதனை ஊக்குவிக்கக் கூடாது என எழுத வேண்டிய இடத்திற்கு கடிதம் எழுதினர். அதிலேயே முடிந்து போனது அச்சங்கம் ! பின் 3 ஆண்டுகள் கழித்து பிரபல மருத்துவரான Dr.சி. நடேச முதலியார் தலைமையில் உருவானது முதல் ‘கழகம்‘ சென்னை ஐக்கிய கழகம் (The Madras United League) என்ற பெயரில். இதுவே பின் ‘திராவிடர்கழகம்‘ எனவும், ‘தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian People’s Association Ltd) எனவும் பல பரிமாணம் அடைந்து இறுதியில் ‘நீதிக் கட்சி‘ என மாறியது. 1920-ல் நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றியும் பெற்றது !

5-ஆகஸ்ட் 1921 அன்று ஓ.தணிகாசலம் செட்டியார் ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வந்தார்.அனைத்து சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் வேலை வாய்ப்பில் மக்கள் தொகை அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த மசோதா கேட்டது. விடுவார்களா அங்கிருந்த பிராமண உறுப்பினர்கள்? கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனாலும் முதல்வராய் இருந்த ‘பனகல் அரசர்’ ராமராய நிங்கார் அதை நிறைவேற்றி வரலாற்றின் முதல் கம்யூனல் G.O (MRO Public Ordinary Service GO 613) வெளியிட்டார் !

GO_1.jpg

இதன் படி வகுப்பு வாரியாக (சாதி வாரியாக இல்லை) வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யப்பட்டது !1921அப்போதைய இரட்டை ஆட்சி முறையின் படி அமைச்சரவை சட்டம் இயற்றினாலும் ஆளுநரே அதிக அதிகாரம் மிக்கவர். எனவே அவர் இதை நிராகரிக்க இச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. !

1927.JPG1927-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் P. சுப்பராயன் இன்னொரு அரசாணை மூலம் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர முயன்றார். கல்வி அமைச்சர் S. முத்தையா முதலியார் 1921-ல் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மசோதா கொண்டு வர முதல்வர் P. சுப்பராயன் அதை நிறைவேற்றி அரசாணை பிறப்பித்தார் (Communal G. O. Ms No. 1021). பிரதிநிதித்துவம் சற்றே மாறியது. 1947-ல் இந்தியா சுகந்திரம் பெறும் வரை இது பயனில் இருந்தது.

பிராமணரல்லதார்க்கு வேலை கிடைத்தாலும் அது எல்லோர்க்கும் சேரவில்லை. வெள்ளையரிடமிருந்து பிராமணர் வாங்கிக் கொண்டது போல பிராமணர்களிடமிருந்து  வாங்கி உயர் பிரிவு மக்களிடமேப் போய்ச் சேர்ந்தது. பெரியார் நீதிக் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். “நீதிக்கட்சிக்கார்களே நீங்கள் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 5% கூட இருக்காத இராஜாவை, மிராசுதாரரை, ஜமீன்தார்களை நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் ; நான் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 95% இருக்கிற உழைக்கும் மக்களைக் கருதிக் கொண்டு பேசுகிறேன்.” என்றார். 1931 சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடந்தது.

1947.JPG1947 அப்போதைய முதல்வர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார்பிராமணரால்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களைத் தனியாகச் சேர்த்து இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நடப்பது காங்கிரஸ் ஆட்சியா ? இல்லை தாடியில்லா இராமசாமி ஆட்சியா எனக் கேட்டு காங்கிரஸ் பார்பனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

இவை போக, மத்திய அரசுப் பணிகளுக்கும் இதே போல இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டுப் போராடியதன் காரணாமாய் 1934-ல் மத்திய அரசு கொண்டு வந்த  “சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ” மூலம் அப்போதைய இம்பீரியல் வங்கி, தனியார் இயக்கி வந்த தென்னக இரயில்வே,தென் மராத்தா இரயில்வே (1944 க்கு ப்பின்) ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. !

இத்தனைச் சட்டங்களும் அம்பேத்காரும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வரும் முன்னரே நடந்தவை !

எதிர்ப்புகளும் தடைகளும் !

1 இச் சட்டங்களுக்கு பலத்த எதிர்ப்பு (காந்தி உட்பட) இருந்தாலும் முதல் அடி இந்தியச் விடுதலைக்குப் பிறகுதான் விழுந்தது. மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு செய்யக் கொண்டு வரப்பட்ட  “சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ” 1934-ல் கொண்டு வரப்பட்டதல்லவா, அதை 1947 ஆம் ஆண்டு செப் 30 அன்று இரத்து செய்தது இந்திய அரசு. விடுதலை அடைந்த ஒன்னரை மாதத்தில். அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

2. ஸ்ரீமதி செண்பகம் துரைராஜ் vs மெட்ராஸ் மாகாணம்:

சென்னை மாகாணத்தில் அப்போதிருந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் “தான் ஒரு பிராமணன் என்றே ஒரே காரணத்தினால்” மருத்துவம் படிக்க வழிவிடவில்லை என்றும் இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும் சென்னையைச் சேர்ந்த  செண்பகம் துரைராஜ் என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்தார் அவரோடு ஸ்ரீனிவாசன் என்ற மாணவரும் தனக்கு போதிய மதிப்பெண் இருந்தும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கில் இணைந்து கொண்டார். வழக்கை விசாரித்த “சென்னை உயர் நீதி மன்றம்” அதை ஏற்றுக் கொண்டு சென்னையில் அப்போது இருந்த அனைத்துவித இட ஒதுக்கீடுகளையும் இரத்து செய்து ஆணை பிறப்பித்தது ! (இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்படும் அனைத்து பதிவுகளிலும் இந்த செண்பகம் இருப்பார்).

வழக்கு மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் சென்ற போது, ஒரு உண்மை வெளிவந்தது. வழக்குத் தொடுத்த செண்பகம் என்பர் எந்த மருத்தவக் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கவில்லை ! அத்தோடு விண்ணப்பிக்கும் வயதையும் தாண்டி இருந்தார் ! விண்ணப்பமே போடாமல்தான் ஒரு பிராமணன் என்பதால் மருத்துவம் கிடைக்கவில்லை என வழக்குப் போட்டு அதையும் சென்னை உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது !

Judegement1951.jpg

இன்னொருவரான ஸ்ரீனிவாசன் என்பவர் விண்ணப்பித்திருந்தும் அப்போதைய இட ஒதுக்கீட்டின் படி மொத்தமுள்ள  14 இடங்களில் 2 மட்டுமே பிராமணர்க்கு வழங்கப்படும் என்பதாலும், அவர் முதல் இரண்டு இடங்களில் இல்லாததாலும் அவர்க்கு இடம் கிடைக்கவில்லை. உச்ச நீதி மன்றம் இதை இந்திய அடிப்படை உரிமைக்கு (article 29 (1) & (2) ) எதிராய் இருப்பதாக எண்ணி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தி இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது ! (இந்த வழக்கின் முழுத் தீர்ப்பின் விவரம்: http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=1194)

பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்:

உச்ச நீதி மன்றம் போகுமே முன்னே பெரியார் ‘அசலே அநியாயம், அப்பீல அதே காயம்’ என்றார். இருந்ததாலும்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விளையக்கூடிய பேராபத்தைத் தடுக்கத் திட்டமிட்ட பெரியார், 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு’ ஒன்றைக் கூட்டினார். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

3. இந்திய அரசியலைப்புச் சட்டமும் இட ஒதுக்கீடும்:

அம்பேத்கார் தலைமையிலான அரசியலமைப்புக் குழு வேலை வாய்ப்புகளில் “மட்டும்” இட ஒதுக்கீடைக் கொண்டு வந்தது. அரசியலமைப்பின் 16(4) இதற்கான வழியைச் செய்கிறது.

Artical16_4.jpg

இதில் கவனிக்க வேண்டிய இரு முக்கிய விசயங்கள். 1.Backard Class 2.In the Opinion Of the State. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரையும் குறித்தது அந்த “பேக்வேர்ட் கிளாஸ் “ என்ற சொல். இது சபையில் விவாதத்திற்கு வந்த போது, யார் அந்த  “பேக் வேர்ட் கிளாஸ் ” எனக் கேட்டார்கள் “In the Opinion Of the Government” என்றார் அம்பேத்கார். அதாவது, அரசின் பார்வையில் எந்தச் சமூகம் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகத்திற்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்றுதான் இச்சட்டம் கூறுகிறது.

பெரியாரும் முதல் சட்டத் திருத்தமும் !

வேலை வாய்ப்பில் மட்டுமே ஒதுக்கீடு என்பதைக் கண்டு பெரியார் போராட்டம் அறிவித்தார். “நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற; தண்ணீ பிடிச்சுக்க-ன்னு சொன்ன ; ஆனால் டேன்க்-குத் தண்ணீ விடலையே ; எனக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்?”  என்று கேட்டார்.

தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 14.08.1950 அன்று மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாகாணம் முழுவதிலும், ‘அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’ அல்லது ‘அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்’ என்ற கோஷம் தலைதூக்கியது.

சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார்.  தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள்.

டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக  அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் பெரியார்; திருச்சியில் 03.12.1950-ல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். நடுவணரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழக மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்.

30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது… அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்துபொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன?” என்று உரிமைக் குரல் எழுப்பியிருந்தார் அண்ணா. (அறிஞர் அண்ணா அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பொன் விலங்கு’ என்ற தலைப்பில் நூலாக 1953-ல் வெளியிடப்பட்டது. )

தமிழகத்தில் ஏற்பட்டிருந்த மக்களின் கொந்தளிப்பை உரியவர் மூலம் அறிந்த சர்தார் வல்லபாய் படேல், தாமும் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதை நினைவு கூர்ந்து, மத்திய அமைச்சரவையிலும்,பாராளமன்றத்திலும் பெரியாரின் கொள்கைக்கு வலுவுண்டாக்கி, கல்வியிலும் இட ஒதுக்கீடு கொண்டுவர முடிவு செய்தார். இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் (விதி (15) (4) வந்தது.

Article15_4.jpg

‘குடிமக்கள் சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள எந்த வகுப்பினருக்கும், அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி அரசு எந்தத் தனி எற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது’ என்பதே அத் திருத்தம்.சட்டத் திருத்தம் ஏன் வருகிறது என நேரு அறிமுக உரையாற்றும் போது, ‘சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் (In Madras Provinance)’ இந்தச் சட்டத் திருத்தத்தைச் செய்ய வலியுறுத்தச் செய்கிறது எனக் கூறி பெரியாரின் போராட்டத்தைப் பதிவு செய்தார் !

4 . க்ரீமீ லேயர் வேண்டும் !

இந்தக் க்ரீமீ லேயர் என்பது இப்போது வந்தது அல்ல ! 1951-ல் முதல் சட்டத் திருத்தம் வந்த போதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and educationally)  பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சொல்லைச் சேர்த்தனர். விவாதத்தில் ‘பொருளாதாரத்திலும்’ (Economically) எனவும் சேர்த்த வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்த, அதை பெர்ம்பான்மையான உறுப்பினர்களும், நேருவும் மறுத்தார். அம்பேத்காரும் மறுத்தார். அரசியல் நிர்ணயசபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சேர்க்கப்படக் கூடாது என 234 பேரும் சேர்க்க வேண்டுமென 5 பேரும் வாக்களித்தனர். இதைச் சேர்க்க வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர் எஸ்.பி.முகர்ஜீ. இப்போதைய BJP-யின் தாய் அமைப்பான ஜனசங்-கைத் தொடங்கியவர் அவர்தான். !

5. காகா கலேகர் குழுவின் பரிந்துரைகளும் நேருவின் பல்டியும் !

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டது !வெற்றி ! வெற்றி! எனக் கொண்டாடிவிட வேண்டாம் ! இட ஒதுக்கீடு தரலாம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தரலாம், சட்டத் திருத்தமும் உண்டு, என்றாலும் யாருக்கெல்லாம் தரலாம் என ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது அரசு ! அக்குழுவின் தலைவர் காகா கலேகர் என்ற பார்ப்பனர் ! பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என 2 ஆண்டுகள் ஆய்வு செய்து 1955-ல் அறிக்கை கொடுக்கிறது அந்தக் குழு. அது சில சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்துகிறது. 2௦௦௦ சாதிகளை வகைப்படுத்திய தோடல்லாமல் பெண்கள் எல்லோரும் பிற்படுத்தப்பட்டோர் என்று புரட்சிகரமானக் கருத்து ஒன்றையும் கூறினார். குழுவின் உறுப்பினர்கள் கூறியபடி இட ஒதுக்கீடு 65% என ஆரம்பித்து 50%, 25% எனக் குறைத்து அறிக்கையில் எழுதினர். அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது அத்துடன் ஒரு கடிதத்தை குழுவின் சார்பாக அனுப்பினார். “இந்த அறிக்கையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தைக் கொண்டே எழுதியிருக்கிறேன். ஆனால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கடிதம் அனுப்பினார் ! இரண்டாண்டு ஆய்வு செய்து, அறிக்கைத் தயார் செய்து கையெழுத்துப் போட்டுவிட்டு, இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வதெல்லாம்…. (அந்த முழு அறிக்கையை இங்கே காணலாம்:  http://www.ispepune.org.in/PDF%20ISSUE/1991/JISPE2/report-backward-classes-comission.pdf) விக்கி: https://en.wikipedia.org/wiki/Kalelkar_Commission இறுதியாக இதன் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தன்னை ஒரு நாத்தீகன் என்றும் சோஷலிஸ்ட் என்றும் சொல்லிக் கொண்ட நேரு, 1951-ல் பொருளாதார ரீதியாக எனச் சேர்க்கக் கூடாது என்று சொன்ன அதே நேரு 1961-ல் அனைத்து மாநில அரசுகளுக்கும் தன் கைப்பட ஓரு கடிதம் (Demi-Official) எழுதினர். “இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு “பேக்வார்ட் கிளாஸ்” என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக் கொடுங்கள் சாதி ரீதியாகக் கொடுப்பதை நான் விரும்பவில்லை.! ” என்பதே அக்கடிதம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

6. M. R. Balaji And Others vs State Of Mysore on 28 September, 1962 !

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் மிக முக்கியமானது இது. மைசூர் அரசர் ஆட்சியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளின்படி இட ஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி பின் 68% ஆக உயர்த்துகிறார். இதனை எதிர்த்து M.R.பாலாஜி என்பவர் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி, திறமை எல்லாமே போய்விடும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற பெஞ்ச் இட ஒதுக்கீடு 50%-க்கு மேல் இருக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. இந்த 50%-க்கு ஏதாவது அறிவியல் அடிப்படை உண்டா எனில் , இல்லை என்பதே உண்மை ! அவர்கள் கொடுத்தத் தீர்ப்பு. தட்ஸ் ஆல். அதற்குப் பின் வந்த பல நீதிபதிகள் 50% என்பது தவறு என்று கூறி விட்டார்கள். ஆனாலும் 5 பேர் கொண்ட அமர்வு சொன்னாத் தீர்ப்புத்தான் இருக்கிறது. தீர்ப்பின் முழு விவரம் அறிய (https://indiankanoon.org/doc/599701/)

7. மண்டல் கமிசன் !

கலேகர் குழு 1953-ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நிராகரிப்பட்டப் பின் வேறு எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. மொராஜி தேசாய் அமைச்சரவையில் உள்த்துறை அமைச்சராய் இருந்த சரண்சிங் 1979ல் பிற்படுத்தப்பட்டோரின் நிலையை  ஆய்வு செய்து பரிந்துரை செய்ய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் ஒரு குழு அமைத்தார். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஆய்வு செய்யாமல் அப்போது இந்தியாவிலிருந்த 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அஸ்ஸாமில் பெய்த கடும் மழை காரணமாக அந்த ஒரு மாவட்டத்திற்குச்செல்ல முடியவில்லை. M.N. சீனிவாஸ் போன்ற மானுடவியில் அறிஞர்களுடைய கருத்துக்களைக் கேட்டனர். டாடா நிறுவனம், டெல்லி பல்கலை கழக மானுடவியல் பிரிவு போன்ற அமைப்புக்களில் ஆய்வு செய்தனர். அதைக் கொண்டு சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அறிவியல் பூர்வமாக கேள்விகளைத்  தயார்  செய்து தனித் தனி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. கவனிக்க, சட்டம் சமூக, கல்வி ரீதியாக என்று மட்டும் சொன்னாலும் மண்டல் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். மொத்தம் 22 மதிப்பெண்கள். யாரெல்லாம் 11 மதிப்பெண்ணை விட அதிகமாய் எடுத்து இருந்தார்களோ  அவர்களைப்  பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தார். அத்தோடு பிற்படுத்தப்பட்டச் சாதிகளை  வகைப்படுத்தித் தனித் தனியே பரிந்துரைகளைக் கொடுத்தார். மண்டல் கமிசனின் முழு அறிக்கை :http://www.ncbc.nic.in/Writereaddata/Mandal%20Commission%20Report%20of%20the%201st%20Part%20English635228715105764974.pdf
http://www.ncbc.nic.in/Writereaddata/Mandal%20Commission%20Report%20of%20the%202nd%20Part%20%20English635228722958460590.pdf

மண்டல்அ றிக்கையும் பரிந்துரைகளும் !

 

mandal.JPG

தன் ஆய்வை முடித்து 1980 டிசம்பரில் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் 6 பரிந்துரைகள் முக்கியமானது.

  1. கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு
  2. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
  3. கடன் கொடுப்பத்தில் 27%
  4. பொருளாதார வளர்ச்சிக்காக உற்பத்தி உறவுகளை புரட்சிகரமாக மாற்றியமைத்தல்
  5. அரசு உதவி பெறும் தனியார் நிறுவங்களில் இட ஒதுக்கீடு
  6. மீனவர்கள் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றி, அவர்களுக்குத் தனித் தொகுதி அளிக்க வேண்டும்.

Mandal_Report_OBC_Population.JPG

மண்டல் தன் அறிக்கையில் 3740 சாதிகளை வகைபடுத்தி இருந்தார். அப்போதைய மக்கள் தொகையின்படி சாதி வாரியாகப் பிரித்து பிற்படுத்தப்பட்டோர் 52% எனக் காட்டினார். ஆனாலும் நீதிமன்றக் கட்டுப்பாட்டின் படி 27%-தான் இட ஒதுக்கீடு தரமுடியும் என்றார்.

தாழ்த்தப்பட்டோர் + பழங்குடியினர் = 22%. M.R. பாலாஜி தொடர்ந்த வழக்கின் தீர்ப்புப் படி மொத்த இட ஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கக் கூடாது என்பதால் 27%தான் தர இயலும் என்று விளக்கினார்.

அதற்கே 10 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

மண்டல் நாயகன் V.P. சிங் !

அறிக்கையை வெளியிடவே பெரும் போராட்டம். அதற்கே 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 27% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றதும் எதிர்பாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத்திய அரசு அறிக்கையைக் கிடப்பில் போட்டது.

1989-ஆம் ஆண்டு தேசிய முன்னணி கட்சி  BJP ஆதரவுடன் ஆட்சி அமைக்க, வி.பி.சிங் பிரதமரானார். கிடப்பில் கிடந்த மண்டல் அறிக்கையை எடுத்து நடைமுறைப்படுத்த முடிவு செய்த்தார்.13.08.1990 அன்று அறிக்கையைச் செயல்படுத்த ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார்.
1. சிவில் பணிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு
2. வேலை வாய்ப்புகளில் நீதித் துறையிலும், அறிவியல் உயர் ஆய்வுகளிலும் இட ஒதுக்கீடு இல்லை என ஒரு விதி விலக்கை வைத்தார்.
3. மண்டல் அறிக்கையில் இருக்கும் 3740 சாதியினர்க்கும் இட ஒதுக்கீடு இல்லை. மத்திய அரசுப் பட்டிய, மாநில அரசுப் பட்டியல் என இரண்டிலும் இருக்கும் 2௦௦௦ சாதியினர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு (~60%).

rajeevgoswami.JPG

அதற்கே பற்றி எரிந்தது ! இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் உயர் சாதி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ராஜீவ் கோஸ்வாமி என்ற மாணவர் தீக்குளிக்க முயன்றார். பலத்தத் தீக் காயங்களுடன் உயிர் தப்பினார். சுரீந்தர் சிங் சவுகான் என்ற மாணவர் தீக் குளித்து இறந்தார்.

வி.பி.சிங்கின் ஆட்சிக்கும் ஆபத்து வந்தது ! BJP ஆதரவை விலக்கிக் கொள்வதாக பயமுறுத்தியது. அத்வானி ‘ரத யாத்திரை’ சென்றார். வி.பி. சிங் என்னவானாலும் பரவாயில்லை என உறுதியாக நின்று மண்டல் கமிசன் பரிந்துரைகளை நிறைவேற்றினார். ! ஆட்சி கவிழ்ந்தது !

1991ல்மீண்டும் தேர்தல் நடந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. P.V. நரசிம்மராவ் பிரதமரானார். நின்று போயிருந்த மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தப் புதிய சட்டம் போடுகிறார். முதலில் V.P. சிங் போட்ட வார்த்தைகளை மாற்றிப் போடுகிறார். கொடுக்கப்பட்ட 27%  ஒதுக்கீட்டில் “poorer section of the backward class” என்ற சொல்லைச் சேர்க்கிறார். அத்தோடு இன்னொரு அநியாயத்தையும் செய்கிறார். எந்த இட ஒதுக்கீட்டிலும் இடம் பெறாத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு 10%  ஒதுக்கீட்டைக் கொடுக்கச் சொன்னார் ! எந்த ஒதுக்கீட்டிலும் வராத சமூகம் என்றால் பிராமணச் சமூகந்தான். மண்டல் அறிக்கையின் படி, பிற்படுத்தபட்டோர் 27, தாழ்த்தப் பட்டோர் + பழங்குடியினர் = 22.5 ; மொத்தம் 49.5. பொதுப் பிரிவு 50.5 ; நரசிம்ம ராவ் இன்னொரு 10% பொதுப் பிரிவில் சேர்த்தாச் சொன்னார். சேர்த்தால் நீதி மன்றம் கூறிய 50%க்கு மேல் செல்லும் என்றுத் தெரிந்தும் கூட சேர்த்தார் !

8. இந்திரா சகாஹிணி vs Union Of India , 1992 (மண்டல் வழக்கு)  ! 

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மிக முக்கிய வழக்கு இது. இந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பு எழுதியது. வழக்கானது இவ்விரு குறிப்பாணைகள் (வி.பி.சிங் & பி.வி.நரசிம்ம ராவ்) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான். 

a) வழக்கினை விசாரித்த நீதிமன்றம், வி.பி. சிங் கொண்டு வந்த சட்டமும், இட ஒதுக்கீடும் செல்லும் என 9 நீதிபதிகளும் தீர்ப்பில் எழுதினர்.

b)  உயர் சாதியினர்க்கு பொருளாதார அடிப்படையில்  இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது.

c) அடுத்த மாறுதலான பிற்படுத்தபட்டவர்களிடையே  poorer section என்பதை பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை. மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்றும் கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது.

d) இட ஒதுக்கீடு 50% -க்கு மேல் இருக்கக் கூடாது என்றது. (தமிழகம், இராஜஸ்தான் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் 50%)

e) பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இருந்து க்ரீமி லேயர் பிற்படுத்தப்பட்ட மக்கள் விலக்கப்பட வேண்டும் என்றது. (தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது)

f) கூடவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துத்தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “”எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. இதை 5-வது வருடத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்’‘ என்று அந்த வழக்கிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு பிரச்னையில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் !

தீர்ப்பின் முழு விவரம் இங்கே (http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=16589)

நாகராஜ் வழக்கு !

எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதை எதிர்த்து எம். நாகராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 19-10-2006-இல் வெளியிட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளை விதித்தது.
 1. அரசின் உயர் பதவிகளில் இடம் காலியாக இருக்கிறது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
 2. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமிக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளார்கள் என்பதை அரசு ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
 3. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமனம் செய்தால் அரசின் நிர்வாகத் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
 இந்த மூன்று நிபந்தனைகளைத் தெளிவாக்கிய பின்னர்தான் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. !
 

 

9. மண்டல் கமிஷனும் தமிழக இட ஒதுக்கீடும் !
 
தமிழகத்தைப் பொறுத்தவரை 1980 முதலே 68% (50 + 18) இருந்து வருகிறது. MGR க்ரீமி லேயர் கொண்டுவந்த போது தி.மு.க-வும் , திராவிடர் கழகமும் கடுமையாக  எதிர்ப்புத் தெரிவித்ததால் அதனைக் கைவிட்டு இட ஒதுக்கீட்டை 68% ஆக உயர்த்தினார் அப்போதைய முதவர் MGR. பின்னர் கருணாநிதி 1% பழங்குடியினருக்கு தனியே வழங்கினார். அதே சமயத்தில் நடந்த வன்னியர் தனி ஒதுக்கீடு போராட்டம் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) வகுப்பைப் பிரித்து 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதாவது, 50% பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 30% பிறபடுத்தப்பட்டோர் + 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பிரித்து வழங்கப்பட்டது.
 
1992-ல் சஹானி வழகில் வழங்கப்பட்டத் தீர்ப்பின் காரணமாக இட ஒதுக்கீட்டை  50%ஆகக் குறைக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா 69% இட ஒதுக்கீட்டை தமிழக அரசின் கொள்கை முடிவாக ஏற்று சட்ட மன்றத்தில் பிரிவு 31c-யின் கீழ் தீர்மானம் ஒன்றை இயற்றி அதை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார். அது நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் 9ஆம் அட்டவணையில் 257a ஆகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தைப் பாதிக்காமல் வழி வகுக்கப்பட்டது.
 
9thschedule.JPGமுழு விவரம் : ( http://indiacode.nic.in/coiweb/amend/amend76.htm)
 

 

10. உயர் கல்வி இட ஒதுக்கீடும் பார்ப்பனப் புத்தியும் !
 
மண்டல் அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டும், தமிழகத்தில் தொடர்ந்து   இட ஒதுக்கீடு இருந்தும், மத்திய அரசின்/அரசு உதவி பெரும் கல்வி நிறுவங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. மண்டல் அறிக்கை பிற்படப்பட்டோர் மக்கள்த் தொகையை 52% எனக் கூறி இருந்தாலும் இட ஒதுக்கீடு 27% மட்டுமே பரிந்துரை செய்தது. அந்தப் பாதியைக் கொடுக்கவே மனம் இல்லை. இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டால் நாங்கள் குப்பை அள்ளவும், செருப்புத் தைக்கவும்தான் போக வேண்டும் என்று உயர் சாதி மாணவர்கள் விளக்குமாறு போராட்டம் நடத்தினர். ரிசர்வேசன் வேண்டுமானால் இரயில்வேயில் செய்யுங்கள் எனப் பதாகை பிடித்துக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் போராடினார்கள்.
 
antireservation
 
மத்திய அரசோ இந்த நேர்மையற்றப் போராட்டத்திற்கு பயந்து கொண்டு இன்னொரு குழுவை அமைத்தது. அதன் பெயர் சுதர்சன் நாச்சியப்பன் குழு. அவரும் ஆய்வு செய்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பரிந்துரைத்தார். அது போதாது என, வீரப்ப மொய்லி தலைமையில் இன்னொரு குழு அமைத்தது. அக்குழுப் போரட்டக்காரகளிடம் சென்று சமாதானம் பேசியது. இந்த 27% ஒரேடியாகக் கொடுக்காமல் படிப்படியாக 3 ஆண்டுகளில் கொடுக்கிறோம் என்றார்கள். அதற்கும் மறுப்புத் தெரிவித்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சரி, உங்களின் இடம் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அது வரை, 22.5% வரை அட்டவணை/பழங்குடியின ஒதுக்கீடு தவிர மீதி இருந்த 77% அவர்களே அனுபவித்து வந்தார்கள். இப்போது 27% கொடுத்தால் அது 50% ஆகி விடுமே ! வீரப்ப மொய்லி இடங்களை அதிகமாக்கி விடுகிறோம், உங்களுடைய  77% அப்பிடியே இருக்கும் என்றார். நான் படிக்காவிட்டாலும் பரவாயில்லை அவன் வரக் கூடாது என உறுதியாக நின்றனர். 2007 ஆம் ஆண்டு உயர் கல்வி நிறுவங்களில் 9% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கான்பூர் IIT-யில் 4% இட ஒதுகீடுத்தான்.
 
இறுதியாக உச்ச நீதி மன்றம் 10 April 2008 அன்று 27% இட ஒதுக்கீட்டை அனைத்து AIIMS/IIT-களிலும் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டது. க்ரீமி லேயர் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த இட ஒதுக்கீடு இல்லை ! 
 
இதற்காக 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது !
 

 

AIIMS பித்தலாட்டம் !
 
இத்தனைச் சட்டம், தகுதி பேசிய AIIMS தொடர்ந்து ஒரு பித்தலாட்டத்தைச் செய்து வந்தது. ஒரு கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை இருதால் இளங்கலையில் அதிக இடங்களும், முதுகலையில் குறைந்த இடங்களும் இருக்கும். ஆனால், AIIMS-ல் 40 MBBS இடங்கள் ;  முதுகலை இடங்கள் = 120. அதில் 33% (1/3)  AIIMS-ல் இளங்கலை படித்த மாணவர்களுக்கே !அதாவது, அங்குப் படித்த 40 பேருக்குமே! இது எங்கேயும் இல்லாத இட ஒதுக்கீடு ! நீங்கள் இங்கு இளங்கலை சேர்ந்து விட்டால் போதும். முதுகலை அனேகமாய் உறுதி !
 
இது யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. 2௦௦௦ ஆண்டு இது தெரிய வந்து அதுக்கு ஒரு வழக்கு போட்ட பின் உச்ச நீதி மன்றம் அந்த 33% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அந்த வழக்கு   A.I.I.M.S Students Union v. A.I.I.MS and others(AIR 2001 SC 3262) எனப்படும். (http://lawmantra.co.in/supreme-court-judgment-on-reservation-of-seats-in-all-india-entrance-examination-for-admission-to-post-graduate-courses-in-aiims/).
 
வழக்கு விசரானையில் இருக்கும் போது வெளி வந்த இன்னொரு பெரிய உண்மை : தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின மாணவர்களை விட குறைவான மதிப்பெண் எடுத்திருந்த 16 மாணவர்கள் இந்த முறையில் சேர்க்கப்பட்டிருந்தனர் ! இவர்கள்தான் இட ஒதுக்கீடுக்கு எதிராய்த் தகுதியை வைத்துப்போராட்டம் நடத்தியது ! நமக்குத் தகுதி பார்த்து இடம் மறுப்பார்கள் அனால் அங்கே படித்த தகுதியில்லாத 16 மாணவர்களுக்கு இடம் கொடுப்பார்கள் !
 
உச்ச நீதி மன்றம் சொல்லி இருந்தாலும் இப்போதும் கூட பொதுப் பிரிவு இடங்களில்  50% ஒதுக்கப்படுகிறது. !
 
AIIMS.JPG
 
இன்னும் சமூக நீதி வேண்டி, நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராட வேண்டியத் தேவை நிறைய இருக்கிறது ! அட்டவணைப் பிரிவினரின் ஒதுக்கீடு மட்டுமே இட ஒதுக்கீடு என எண்ணிக் கொண்டு அதே இட ஒதுக்கீட்டில் படித்து, வேலை வாங்கியவர்கள் அவர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் 3% உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் கொஞ்சமாய் படிக்கிறார்கள். அதை மற்ற அட்டவணை பிரிவினர் எதிர்ப்பது  கொடுமை !
 
வன்னியர் போராட்டம் நடந்த போது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவு வந்து அதில் 20% ஒதுக்கீட்டு பெற்றவர்கள், அதே பிரிவில் இருக்கும் மற்ற சாதியினரை எதிர்க்கிறார்கள் !
 
இதுதான் இட ஒதுக்கீட்டின் இன்றைய உண்மை நிலை !
தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன் கூறுவதைப் பாருங்கள்.
 
interview.JPG
உண்மையில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிறிய அளவிலான வெற்றியையே இதுவரை பெற்றிருக்கிறது இட ஒதுக்கீடு.
 
50 வருடமாய் இருக்கிறது, 60 வருடமாய் இருக்கிறது என எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம், இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கொண்டே தமக்கு கீழே உள்ளவரின் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம், இவர்கள் இருவருமே இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள். நாம் அனைவரும் ஒன்றாய் நின்று போராடினால்தான் இனிமேலும் வரப்போகும் சட்டச் சிக்கல்களை வென்று, புதிதாய் முளைக்கும் எதிரிகளை இனம் கண்டு சமூக நீதியை நிலை நாட்ட முடியும் !
 
 
 

 

உசாத் துணை:
1. இடஒதுக்கீட்டில் அநீதி – கொளத்தூர் மணி உரை – https://www.youtube.com/watch?v=gDiWpllh99o&list=PLA3494DD131A3C82E
2. திராவிட இயக்க வரலாறு – பகுதி -1  – ஆர்.முத்துக் குமார்
3. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகள்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard