New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெயிப்பது நிஜம் -இன்ஸ்பயரிங் இளங்கோ


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஜெயிப்பது நிஜம் -இன்ஸ்பயரிங் இளங்கோ
Permalink  
 


எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி?

future-visionஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 1

  • வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுப் போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்?
  • அலுவலகத்திலும் பிற இடங்களிலும் தினம் தினம் அவமானங்களை சந்தித்துச் சந்தித்து இதயம் நொறுங்கிப் போகிறவரா?
  • எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை என்று மனம் புழுங்கித் தவிப்பவரா?
  • எங்கேயும் எப்போதும் சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் தொடர்ந்து இரையாகிக் கொண்டிருப்பவரா?
  • ஆண்டவன் உங்களுக்கு மட்டுமே ஓர வஞ்சனை செய்துவிட்டதாக உள்ளம் குமுறுகிறவரா?
  • மொத்தத்துல வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலை’ என்று சதா புலம்பிக்கொண்டே இருப்பவரா?
  • இந்தக் கட்டுரைத் தொடர் உங்களுக்காகத்தான்…!
  • மேலே சொன்ன எந்தப் பிரச்னையும் எனக்கில்லேப்பா…I am perfectly well. I am a gifted person என்று நினைப்பவரா?  இந்தத் தொடர் உங்களுக்காகவும்தான்

0

சிறு வயது முதல் தமிழ் மீடியத்திலேயே படித்து வளர்ந்த எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். அடுத்து பிளஸ் டூ விலும் நல்ல மதிப்பெண்கள் (மாவட்டத்தில் முதல்) எடுத்ததை அடுத்து, லயோலா கல்லூரியில் சீட் கிடைத்தது. நான் ஆசைப்பட்டபடி அங்கு பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்.

சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்கிற தணியாத ஆவல் காரணமாக, நன்கு ஆங்கிலம் பேசும் மாணவர்களுடன் எனது நட்பை – அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ – நான் வளர்த்துக்கொள்ள முனைந்தேன். விளைவு… அவமானங்கள்… ஏளனங்கள்… புறக்கணிப்புக்கள். ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்கிற ஒரே உந்துதல் காரணமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்.

கல்லூரியில் நடைபெறும் விழாக்களில், போட்டியில், கலை நிகழ்ச்சிகளில் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள், நாடகங்கள், அனைத்திலும் நம்பிக்கையுடன் கலந்துகொள்வேன். எனக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு லட்சியம்தான். ஆங்கிலத்தில் பேச வேண்டும்… ஆங்கிலத்தில் பேசவேண்டும்… ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதுதான்.

மேற்கண்ட நான்கு பாராக்களை படித்துக்கொண்டு வருபவர்களுக்கு ஆங்கிலம் பேசவேண்டும் என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதென்ன பெரிய பிரமாதம்? நிறைய பேருக்கு இருக்குற தாகம்தானே இது? என்று தோன்றும். நான் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டேன். எனக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது என்பதுதான் அது. ஆம், நான் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி.

கல்லூரியில் சேர்ந்த தினத்திலிருந்தே இப்படி ஒரு ஆங்கில ஆசையோடு நான் திரிந்த இந்தச் சூழலில், கல்லூரியில் இருந்த சில சீனியர்களுக்கு என்னை ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. என்னுடைய ஆங்கில தாகம், எல்லோரிடமும் ஆங்கிலத்திலேயே பேசும்
பழக்கம் இதெல்லாம் ஏனோ அவர்களுக்குப் பிடிக்கலைபோல. குறிப்பாக ஒரு சீனியர் மாணவனுக்கு – அவன் பேரு ராபர்ட்னு வெச்சிக்கோங்களேன் – அவனுக்கு என்னைக் கண்டாலே ஆகலை.

ராபர்ட் யாருன்னா அவன்தான் அந்த காலேஜ்லேயே ராகிங் ஸ்பெஷலிஸ்ட். அதுவும் எப்படிப்பட்ட ராக்கிங் ஸ்பெஷலிஸ்ட்னா அவன் யாரையாவது ராக்கிங் பண்ணினா, ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்துல அழ வெச்சிடுவான். மேல கை வெக்கமாட்டான். அடிக்க மாட்டான். ஆனா வார்த்தைகளாலேயே சாகடிச்சிடுவான்.

எப்படிப்பட்ட மனவுறுதி கொண்ட ஆளா இருந்தாலும் அவன்கிட்டே சமாளிக்க முடியாது. அவங்களை அழ வைக்காமல் விடமாட்டான். கத்தியின்றி ரத்தமின்றி வார்த்தை களாலேயே காயப்படுத்திடுவான். எதிராளி கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கண்ணீராவது வந்த பிறகுதான் அவங்களை விடுவான். இப்படிப்பட்ட ராபர்ட்டுக்கு என் மேல அளவுகடந்த வெறுப்புணர்வு.

என்ன இவன் எப்போ பார்த்தாலும் இங்கிலீஷ், லிட்டரேச்சர், டிராமா, காம்பெடிஷன் அப்படி இப்படின்னு சீன் போட்டுகிட்டே இருக்கான்? அதுவும் நம்மளையெல்லாம் சுத்தமா கண்டுக்குறதேயில்லை?’ என்கிற எரிச்சல் அவனுக்கு.

ஒருநாள் நான் அவன் கண்ணுல மாட்டிட்டேங்க. ஏய்…இங்கே வா…’ன்னு கூப்பிட்டான். நான் இங்கே இருக்கேன். கரெக்டா பார்த்து வா’ – அதுலயும் ஒரு நக்கல். ஒரு குத்தல்.

நான் போனேன்.

‘ Tell me senior’

‘ஏய்… என்ன இங்கிலிஷ்ல பேசுறே? தமிழ் தெரியாதா உனக்கு?’

‘ Yes… i know senior’

‘அப்போ தமிழ்ல பேசு’

‘No senior. I am speaking in English because you know English and understand it senior. Isn’t it?’

 

‘என்ன மறுபடியும் இங்கிலிஷ்ல பேசுறே… தமிழ் தெரியும்தானே? ஒழுங்கா தமிழ்லயே பேசு.’

‘சரி’

‘நான் பொதுவா உன்னை மாதிரி மாற்றுத் திறனாளிகளை ராகிங் செய்றதில்லே… ஆனா நீ
ரொம்ப திமிர் பிடிச்சவன். உன்னை ராக்கிங் பண்ணியே தீர்றதுன்னு முடிவு
பண்ணிட்டேன்’

‘சரி’

‘எங்களை மாதிரி கண்ணு தெரிஞ்ச ஆளுங்களோட சரிசமமா படிக்கிறது உனக்கு
கஷ்டமா இல்லே… எப்படி உன்னால முடியுது?’

இப்படியாக எங்கள் உரையாடல் சிறிது நேரம் நீள்கிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றி
என்கிட்டே பேசுகிறான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வர்றேன்.
அடுக்கு நடுவுல ராபர்ட் என்னை ராக்கிங் செய்வதைப் பார்க்க அங்கு ஒரு பெரிய
கூட்டமே கூடிவிட்டது.

என்னுடைய லட்சியமே இந்த காலேஜ்ல சேர்ந்து இங்கிலீஷ்ல ஒரு கலக்கு கலக்கணும், அதுல ஒரு சாதனை பண்ணனும்கிறதுதான் என்பதை புரிந்துகொண்ட ராபர்ட், எந்த
அஸ்திரத்தை வீசினாலும் நான் கலங்காமல் உறுதியாக நின்ற நிலையில்… கடைசியில்…
அந்த கீழ்த்தரமான செயலில் இறங்குகிறான்.

‘சரி… நீ இங்கிலீஷ்ல பெரிய எக்ஸ்பர்ட்தான். ஏத்துக்குறேன். நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு. உங்க அம்மாவை நீ பார்த்திருக்கியா?’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பார்வையில்லாததைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஏனெனில், எனக்கு sight தான் இல்லையே தவிர vision உண்டு என்பதை நம்புகிறவன் நான். ஆனால், இந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. என் நிலையில் என்ன சொல்ல முடியும்? எனவே மௌனமாக நின்றுகொண்டிருந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட ராபர்ட் மேலும் மேலும் கேள்விகளை வீசுகிறான்.

‘உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா எப்படியிருப்பாங்க தெரியுமா?’

‘……………’

‘உன் அப்பா எப்படியிருப்பார்?’

‘…………….’

இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?’

‘…………….’

‘ரெயின்போ, மலை, அருவி, நதி, போன்ற இயற்கைக் காட்சிகள் எப்படியிருக்கும்னு
தெரியுமா?’

‘…………….’

‘சரி… அதையெல்லாம் விடு. நீ எப்படியிருப்பேன்னு உனக்கு தெரியுமா? உன் முகம்
எப்படியிருக்குன்னு உனக்குத் தெரியுமா?’

‘…………….’

‘தெரியாதில்லே… உன் முகமே உனக்கு எப்படியிருக்கும்னு தெரியாது. நீ என்ன
இங்கிலீஷ்ல டிகிரி படிச்சு, இங்கிலீஷ்ல பேசி கிழிக்கப்போறே? நீ வாழ்ந்து
என்னத்தை சாதிக்கப்போறே? உனக்கெல்லாம் சாகணும்னே தோணினது இல்லையா? என்னடா வாழ்க்கை இது… பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துடலாம்னு கூட தோணினது இல்லையா? உண்மையை சொல்லு…’

ஓர் உயிரைக் கொல்வதுதான் கொலை என்பதில்லை. இப்படிப் பலர் முன்னிலையில்
ஒருவரைக் காயப்படுத்துவது, அவமானப்படுத்துவது, அவரது காரக்டரை கொல்வதுகூட (Character Assassination) கொலை தான். படுகொலை. சொல்லப்போனால் உயிரை எடுப்பதைவிட இது கொடுமையானது. மிகுந்த வலியைத் தரக்கூடியது.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். – – குறள் 206

ராபர்ட் கேட்ட கேள்விகளுக்கு என்னோட நிலைமையில நீங்க இருந்திருந்தீங்கன்னா
என்ன செஞ்சிருப்பீங்க; என்ன பதில் சொல்லியிருப்பீங்கன்னு ஒரு நிமிஷம் கற்பனை
செஞ்சி பாருங்க.

பார்வையில்லாத சூழ்நிலையில நான் வேற என்ன பண்ண முடியும்? என்னளவில் நான் ஒரு ஹீரோ தான். ஆனால் சினிமா ஹீரோ அல்ல.

இது ஷூட்டிங் இல்லை. கலை நிகழ்ச்சி மேடையில்லை. வசனம் எழுதித் தர இது
நாடகமுமில்லை. நிஜம். துடிக்க வைக்கும் நிஜம்.

ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு நான் மௌனத்தை உடைத்தேன்.

ராபர்ட்டிடம் சொன்னேன். ‘முதல்ல நீ கையை கொடு… ஜஸ்ட் வான்ட் டு ஷேக் மை ஹாண்ட்ஸ் வித்யூ.’

‘டேய்… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… சமாளிக்காத’

‘நோ… நோ… நீ கையை கொடேன். அப்புறம் சொல்றேன்’

வேண்டா வெறுப்பாக ராபர்ட் கைகளை நீட்ட, அழுத்தமாக அவரது கைகளைப் பற்றி
குலுக்கினேன்.

பின் டிராப் சைலன்ட்டாக நான் சொல்லப்போவதை மொத்த கூட்டமும் பார்த்துக்
கொண்டிருக்கிறது.

‘முதல்ல உனக்கு நான் நன்றி சொல்லனும்னு ஆசைப்படுறேன். தேங்க்யூ வெரி மச்.
எனக்கு இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீ சொன்ன மாதிரி தற்கொலை எண்ணம்
வந்திருக்கு. ‘பார்வையில்லாம எதுக்கு இந்த உலகத்துல வாழணும்? பேசாம செத்துடலாம்’னு யோசிச்சிருக்கேன். ஆனா, உன்னைப் பார்த்ததும், இந்த நிமிஷத்துல
இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நான் வாழ்ந்து காட்டுறேன். என்னால
என்ன முடியும்னு சாதிச்சு காட்டுறேன். உன்னை மாதிரி மிருகங்களே வெட்கமில்லாம
இந்த உலகத்துல நடமாடும்போது நான் எதுக்கு சாகனும்?’

ராபர்ட் நான் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டபடி நின்றுகொண்டிருக்க ஒரு சில
வினாடிகள் நீடித்த நிசப்தத்தை தொலைக்கும் விதமாக கூடியிருந்த மொத்த கூட்டமும் ஒரு கணம் நான் சொன்ன பதிலுக்கு விசிலடித்து கைகளை தட்டியது.

அப்புறம் என்ன? ஒரே நாளில் நான் காலேஜ் முழுக்க ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பாப்புலராகி விட்டேன். ராபர்ட்டின் நண்பர்கள் எல்லோரும் அப்புறம் அவனை ஒதுக்கி விட்டு எனது நண்பர்களாகி விட்டார்கள். ஐ மீன்… நான் அதைத் தூண்டவில்லை. அவர்களுக்கே மனசாட்சி உறுத்தியிருக்கும் என்று தோன்றியது.

அன்றைக்கு என் மனத்தில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய லட்சியத் தீ… இன்று வரை
எரிந்துகொண்டிருக்கிறது.

நான் லயோலா கல்லூரியில் பி.ஏ. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம்
பெற்றபின்பு, அங்கேயே முதுகலைப் பட்டப் படிப்பில் (எம்.ஏ.) சேர்ந்தேன். 1994ல்
கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம்
விருதளித்துப் பாராட்டியது. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில், ‘ஆங்கிலத்தை
எப்படிக் கற்றுத் தருவது?’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு M.Phil முடித்தேன்.

பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவேன். பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் நான் பயின்ற சென்னை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணி.

தவிர, பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் ரேமண்ட்ஸ் ஷர்டிங் – ஷூட்டிங் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் ஒலிக்கும் குரல் (Prince Jewellery Panagal Park, Raymonds the Complete Man) என்னுடையதுதான்!

அது மட்டுமில்லீங்க… வேற பல நிறைய விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்
நான். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் ஓரளவு பாண்டித்யம் உண்டு.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த
நோட்ஸும் இல்லாமல் என்னால் பாட முடியும். சங்கீதம் கற்றிருக்கிறேன். கீபோர்ட்
வாசிப்பேன். மிமிக்ரி செய்வேன். பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம்
கற்றுத் தருகிறேன்.

இளங்கோ என்கிற பெயருடைய நான் தற்போது, ACE PANACEA SOFTSKILLS PVT. LTD என்ற வளர்ந்து வரும் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
தமிழகம் முழுதும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும்
பயிற்சியளிக்கும் பணி என்னுடையது. என் கீழுள்ள சுமார் 300 பயிற்சியாளர்கள்
மற்றும் 50 ஊழியர்களின் ஊதியத்துக்கு நான்தான் பொறுப்பு. ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறேன்.

என்னுடைய லட்சியப் பயணம், சவால்களை நான் எதிர்கொண்ட விதம், தன்னம்பிக்கை, எதிர் நீச்சல், இப்படி பல விஷயங்களை இத்தொடரில் தொடர்ந்து பார்க்கப்போகிறோம். அதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை நீங்கள் அடைய முடியும் என்று நம்புகிறேன்.

‘வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை’ என்பதை
அழுத்தந்திருத்தமாக நம்புகிறவன் நான்.

எனவே வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்!

நமக்கு என்ன நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல; அதற்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததே வாழ்க்கை!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எதிர்மறை கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

mathsஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 2

சின்ன வயதிலிருந்தே நான் பார்வையற்றோர் பள்ளியில்தான் படித்து வந்தேன். படிப்பில் ஓரளவு சுட்டிதான் நான். ஆனால் கணக்கில் மட்டும் கொஞ்சம் வீக். நிறைய பேருக்கு இருக்கும் பிரச்னைதான் இது. எல்லா சப்ஜெக்டும் நல்லா வந்தாலும் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் மட்டும் மக்கர் பண்ணும். எனக்கும் அதே பிரச்னை, கணக்கில்.

அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். கணித பாடத்துக்கு அதுவரை இருந்த ஆசிரியர் விடைபெற்று வேறு ஒரு புது ஆசிரியர் வந்திருந்தார்.

இடைநிலைத் தேர்வு (மிட்டெர்ம் டெஸ்ட்) வருகிறது. தேர்வு முடிந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை எங்களுக்குக் கொடுத்துக்கொண்டே வருகிறார். எல்லாரையும் இயல்பாக அவரவர் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் வாங்கியிருந்த மதிப்பெண்களை கூறிக்கொண்டே வந்த ஆசிரியர், என் பெயரைக் குறிப்பிடும்போது மட்டும், ‘இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அவர் ரொம்ப பெரியவர். நம்ம கிளாஸ்லயே ஹீரோ அவர். அவர் யார் தெரியுமா? யார் தெரியுமா? மிஸ்டர். இளங்கோதான்!’ என்று கிண்டலாக என்னை விளித்து பின்னர், எல்லாரையும் பார்த்து ‘ஐயா எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமோ? 100 க்கு 35. பெரிய மார்க் இல்லே?’ என்றார்.

மாணவர்கள் மத்தியில் களுக்கென்று ஒரு சிரிப்பொலி.

நான் ஒரு கணம் கூனிக் குறுகிப் போனேன்.

என்னைப் பார்த்துத் திரும்பி, மேற்கொண்டு அவர் தொடர்கிறார். இதே மாதிரி போப்பா… நல்ல வளர்ச்சி. சூப்பரா இருக்கும். இவங்கல்லாம் அடுத்து நைன்த் ஸ்டாண்டர்ட் போய்டுவாங்க. நீ இதுலயே இருக்கலாம்.

இது சின்ன விஷயமா சிலருக்குப் படலாம். ஆனா என்னைப் பொருத்தவரை அவமானத்துக்கு மேல் அவமானம். அவரோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் ஈட்டியா இருக்கு எனக்கு.
நான் ஒரு பார்வையற்ற மாற்று திறனாளியாய் இருந்தும் நான் ஆறாம் வகுப்பிலிருந்தே எல்லா விஷயத்துலயும் ஒரு முன்மாதிரி மாணவர்னு பேரெடுத்தவன். பள்ளியில் நடக்கும்
போட்டிகள் எதுவாக இருந்தாலும் அது பேச்சுப் போட்டியாக இருந்தாலும் சரி… பாட்டுப் போட்டியாக இருந்தாலும் சரி…. எதுவாக இருந்தாலும் அதில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றை தட்டிக்கொண்டு வந்துவிடுவேன்.

இப்படி எல்லாவற்றிலும் நான் அடித்து தூள் செய்யும்போது என்னுடைய கணித பலவீனத்தை மட்டும் குத்திக்காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது. ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து ஒரு மாணவனை சரியாக வழி நடத்தவேண்டியவர்… இப்படிச் செய்தது கொடுமைதான். என்ன செய்வது?

கனத்த மனதுடன் வீட்டுக்குத் திரும்பிய எனக்கு அன்றைய இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நடந்த இந்த அவமானத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.ஏன் இப்படி? எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த அவமானத்தைத் துடைப்பது? இப்படி பலவாறாக சிந்தனை ஓடுகிறது.

அடுத்த பத்து நாட்களுக்கு வகுப்பு வரும்போதெல்லாம் இதே சிந்தனைதான் எனக்கு மனத்தில் நிழலாடியது.

கணக்கென்ன பெரிய விஷயமா? அதெப்படி வராமல் போய்விடும்? கணிதத்தின் அடிப்படையே வாய்ப்பாடுதான். எல்லாரும் 16 ஆம் வாய்ப்பாடு வரைதான் அப்போதெல்லாம் மனனம் செய்வது வழக்கம். ஆனால் நான் 20ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்ய ஆரம்பித்தேன்.

வாய்ப்பாடு ஓரளவு கைவரப்பெற்றதும் நம்பிக்கை கைகூடியது. நம்மால் நிச்சயம் கணிதத்தில் ஒரு நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும் என்று நம்பிக்கை உறுதியாக ஏற்பட்டது. வேப்பங்காயாக கசந்த கணிதம் இப்போது இனிக்க ஆரம்பித்தது.

அதற்குப் பின்னர் பல கணக்குகள், கூட்டல்கள், கழித்தல்கள், சூத்திரங்கள் என எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப ப்ராக்டீஸ் செய்தேன். கணக்குக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கினேன்.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து திரும்பவும் ரிவிஷன் தேர்வு வந்தது.

இந்த முறை வாத்தியார் விடைத்தாள்களை அவரவர் பெயர்களை கூறிக்கொண்டே கொடுக்கிறார். என்னோட தாளை அளிக்கும்போது. ‘முன்னேற்றம் அப்படின்னா அதுக்கு அர்த்தம் இதுதான். இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அதை சொல்றதுக்கு முன்னாடி அவர் முந்திய தேர்வுகளில் எல்லாம் எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமா? 35, 50. இப்போ எவ்ளோ தெரியுமா? 90!’

‘வெல்டன் இளங்கோ. 100 க்கு 90 மார்க் எடுத்திருக்கிறார் மிஸ்டர். இளங்கோ’ என்று கூற, மாணவர்கள் கை தட்டுகிறார்கள்.

அன்றைக்குதான் நான் தலை நிமிர்ந்தேன். பட்ட அவமானம் துடைத்தெறியப்பட்டது. மேற்படி அனுபவங்களுக்கு பிறகு கணக்குமீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் நான் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? நூறுக்கு நூறு.

ஒரு காரியத்தை உங்களால் செய்யமுடியாது என்று யாராவது கூறினால், சொன்னவர்கள் மேல் கோபப்படாமல், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அது ஏன் நம்மால் முடியாது? நம்மிடம் உள்ள பலவீனம் என்ன? என்று யோசியுங்கள்.  நமது மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 படிக்கட்டுகள்

stepsஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 3

பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டபிறகு, அடுத்து பிளஸ் 1 சேரவேண்டும்.

பார்வையற்றோருக்கு இரண்டே பள்ளிகள்தான் இருக்கின்றன சென்னையில். ஒன்று
நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட். மற்றொன்று பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளி. இதில் லிட்டில் ஃபிளவர் கான்வென்ட்டில் ஆண்கள் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதியில்லை. அந்தப் பள்ளியின் சட்ட திட்டம் அப்படி.
பூவிருந்தவல்லிஅரசு பார்வையற்றோர் பள்ளியைப் பொருத்தவரை எனக்கு அங்கு தினமும் போய் வருவதில் நடைமுறை சிக்கல். நிச்சயம் தினமும் சாத்தியமில்லை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் தேர்ந்தெடுத்தது ராயப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீ
வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிதான். போக்குவரத்து மற்றும் இதர
காரணங்களால் இதுவே சரிப்படும் என்று தோன்றியது. ஆனால் இது பார்வையற்றோர் சிறப்பு பள்ளி இல்லை. ரெகுலர் பள்ளிதான். இருந்தாலும் எந்த நம்பிக்கையில் இந்தப் பள்ளியை தேர்ந்தெடுத்தேன்? அவர்கள் எப்படி அட்மிஷன் கொடுத்தார்கள்?

10வது முடித்தவுடன் பிளஸ் 1 அட்மிஷனுக்காக நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் போனேன். பார்வையற்ற மாணவர்கள் யாரையும் அவர்கள் அதுவரை சேர்த்ததில்லை.   காரணம், அதுக்கான வசதிகள் அங்கே இல்லே. இரண்டாவது காரணம், பள்ளியின் தேர்ச்சி விகிதத்தில் ஒரு சிறு கீறல்கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

ஆனால், பத்தாவது வகுப்பில் நல்ல ரேங்க் எடுத்திருந்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் அவர்களுக்குத் தயக்கம். எதற்கு அநாவசிய ரிஸ்க் என்று நினைத்திருக்கவேண்டும்.

பள்ளியின் முதல்வர் என்னிடம் பேசினார். ‘நல்ல ரேங்க் எடுத்திருக்கே. ஓகே. ஆனா, உங்களை மாதிரி மாணவர்களை எங்களுக்கு ஹேண்டில் பண்ண தெரியாது தம்பி. நீங்க வேற எங்காவது ட்ரை பண்ணுங்களேன்.’

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எப்படி பதிலளிப்பது அல்லது பதிலளிப்பதா வேண்டாமா என்பதும் புரியவில்லை.

அப்போதைக்கு வேறு எங்கும் சேரமுடியாது என்றும் தெரிந்தது. இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நம்பிக்கையுடன் வாய் திறந்தேன்.

‘சார்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் நல்லா படிச்சி, நல்ல ரேங்க் வருவேன்.’

‘படிக்கிறதைப் பத்தி பிரச்னை இல்லேப்பா. நீ நல்லா படிப்பே என்பது உன்னோட சர்டிஃபிகேட்ஸை பார்த்தாலே தெரியுது. அது இல்லே விஷயம். How will you manage?

மேனேஜ் என்று அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பிறகே புரிந்தது. அதாவது பிளஸ் 1 வகுப்புகளில் சில 3வது மாடியில் நடக்கும், இன்னும் சில நான்காவது மாடியில். அங்கெல்லாம் எப்படிச் செல்வாய்?

நான் சிறிதும்  தாமதிக்காமல் பட்டென்று பதிலளித்தேன். ‘ஸ்டெப்ஸ் ஏறிப் போகிறதுக்கு கால்தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்கு கண் தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அது போதும் சார் எனக்கு.’

ஒரு கணம் சிலிர்த்துப்போன முதல்வர் எழுந்து வந்து என் தோளைத் தட்டிக்கொடுத்தார்.  ‘ஓ.கே. இந்த ஸ்கூல்ல உன்னைச் சேர்த்துக்கறேன்.’

என்னைப் பொறுத்தவரை அவருடைய இந்த முடிவு எனக்கு மிகப் பெரிய திருப்புமுனை.

என்னை நம்பி அட்மிஷன் போட்ட அவர் பெயரைக் காப்பாற்றவேண்டுமே என்ற அக்கறையுடன் மிக நன்றாகப் படித்து அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் ரேங்க் வாங்கி பள்ளிக்குப் பெருமை சேர்த்தேன்.

மற்றவர்கள் நம்மீதும் நம் திறமைமீதும் கொண்டுள்ள நம்பிக்கையைவிட நாம் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மிக மிக முக்கியம். நமது திறமைகளைப் பற்றியோ தகுதிகளைப் பற்றியோ எந்தச் சூழ்நிலையிலும் நாம் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது.

உன்னையறிந்தால்…. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்…. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

‘பாட்டா? அதெல்லாம் உனக்கு வராது!’

ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  4

musicநான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவம் இது.

எங்களுக்கு மியூசிக் பாடம் உண்டு. அதில் எக்ஸாமும் உண்டு. கர்நாடக சங்கீதம்,
ஹார்மோனியம் வாசிப்பது, வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லித் தருவார்கள்.

ஒரு முறை இன்டெர்னல் எக்ஸாமுக்காக நாங்கள் எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த போது, எனக்கு ஆவேரி ராகம் பாட வேண்டும் என்று ஆசை எழுந்தது. அதை சொல்லிக் கொடுக்கச் சொல்லி நான் எங்கள் வாத்தியாரிடம் கேட்டபோது அவர், ‘என்னது ஆவேரி ராகமா? அதெல்லாம் உனக்கு வராது. இந்த ஆசையே வேண்டாம் விட்டுடு’ என்று கூறிவிட்டார்.

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.இதற்காக நான் அவர் வீட்டுக்கேகூட சென்று கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். ஆனால் அவர் எனக்கு அந்த ராகம் வராது என்பதில் உறுதியாக இருந்தார். அதைவிட அந்த ராகத்தை எனக்கு சொல்லித் தரக்கூடாது என்பதில் மேலும் உறுதியாக இருந்தார்.

ஆனால், என்னைவிடச் சுமாராக இசையறிவு கொண்ட பையன் ஒருவனுக்கு அவன் வீட்டுக்கே போய் சொல்லிக்கொடுத்தார். அதற்கொரு காரணம் இருந்தது. ஆனால் நான் அதை இங்கே சொல்ல விரும்பவில்லை.

வாத்தியார் ஆவேரி கற்றுக்கொடுக்க மறுத்து விட்டபோதும் என் ஆர்வம் குறையவில்லை. எப்படியாவது அதைக் கற்றுக்கொண்டு பாட வேண்டுமென்று ஆசை மிகுந்தது.

ஒரு நாள் டாக்டர். பால முரளி கிருஷ்ணா அவர்கள் ‘ஆல் இந்தியா ரேடியோ’ வில் (அகில பாரத வானொலி) மேற்படி ஆவேரி ராகத்தில் கீர்த்தனைகள் பாடுவதைக் கேட்டேன். நான் வீட்டில் இருக்கும்போது ரேடியோவில் அவருடைய பாடல்களை விடாமல் கேட்பது வழக்கம்தான். அன்று அவர் ஆவேரி பாடியபோது நான் அதை அப்படியே என்னுடைய டேப் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டேன். அதை டேப் தேய்கிற அளவுக்கு திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு ப்ராக்டீஸ் செய்தேன். எத்தனைமுறை எத்தனை நாள் என்று கணக்கே இல்லை. அத்தனைமுறை போட்டுக் கேட்டேன்.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பில் லோயர் கிரேட் எக்ஸாம்  வந்தது. இன்டெர்னலுக்காக வேறொரு ஸ்கூலுக்கு எங்கள் ஆசிரியர்களோடு போயிருந்தோம். எல்லோரும்
அவரவர் முறைக்காகக் காத்திருந்தோம். எங்களுக்கு எக்ஸாமினராக
வந்தவர் அறைக்கு ஒவ்வொரு மாணவராகப் போய் டெஸ்ட் அட்டென்ட் செய்து வந்துகொண்டிருந்தோம். உள்ளே அவர் சொல்கிற ராகத்தில் பாடவேண்டும். நான் என்னுடைய முறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கொஞ்சம் படபடப்பாகவும் தவிப்பாகவும் இருந்தது.

என்னோட முறை வந்தது. உள்ளே போனேன். அங்கே ஒரு பெரியவர் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கார். அவர் என்னை ஏதாவது பாடச் சொல்கிறார். எனக்கு நல்லா தெரிஞ்ச
பாட்டுகள் சிலவற்றைப் பாடினேன். பிறகு அவர் கேட்டார். ‘ஆவேரில உனக்கு ஏதாவது
தெரியுமா?’

பழம் நழுவி பாலில் விழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே பஞ்சாமிருதத்தில்
விழுந்தது போல இருந்தது எனக்கு.

உடனே பாடினேன். பாடி முடித்தும் ஒரே பின் டிராப் சைலண்ட். அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பதினைந்து நொடிகளுக்குப் பிறகு அவர் தன் சீட்டில் இருந்து எழுந்து வந்தார்.

நான் கீழே அமர்ந்திருந்தேன். வந்தவர் என் தோளைத் தட்டி ‘சபாஷ்… நல்லா பாடினேப்பா… வெரி குட்! வெரி குட்!’ என்றார்.

எனக்கு தலைகால் புரியவில்லை. காற்றில் மிதப்பது போல் இருந்தது.

வெளியில் பல பள்ளிகளைச் சேர்ந்த வாத்தியார்கள் காத்திருந்தார்கள். உள்ளே சென்ற தன் மாணவன் எப்படி பாடுகிறான் என்பதை அவர்களால் வெளியில் இருந்தபடியே கேட்க முடிந்தது.

என்னுடைய வாத்தியார் சுப்ரமணியமும் வெளியில்தான் இருந்தார்.

நான் வெளியே வந்ததும், ‘நீ எப்போடா கத்துக்கிட்டே ஆவேரியை? நல்லா பாடினேடா’
என்று சர்டிபிகேட் கொடுத்தார். அதற்கு மேல அவரால் பேசமுடியவில்லை.

என் இசைப்பயணம் எங்கே சென்று முடிந்தது தெரியுமா?

நான் லயோலாவுல படிக்கும் போது ஃபிலிப்ஸ் நிறுவனம் நடத்திய லைட் மியூசிக்
போட்டியில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கினேன்.

சில வருடங்களுக்கு முன் சன் டிவி.யின் அப்துல ஹமீது சார் நடத்திய பாட்டுக்கு
பாட்டு நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்துகொண்டேன்.

இப்பொழுது நான் சொந்தமாக ஒரு ம்யூசிக் ட்ரூப் வைத்திருக்கிறேன்.  என்னால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 2000 பன்மொழிப் பாடல்களை ராகங்களோடு முழுவதுமாகப் பாடமுடியும்.

மாபெரும் சாதனைகள் வலிமையால் நிகழ்த்தப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் என்று ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு. எத்தனை அருமையான ஆழமான கருத்து!

எந்த ஒரு செயலையும் அது எத்தனை கடினமாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் அது நிச்சயம் ஒருநாள் சாத்தியப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஜிம் பாடம்

tumblr_m9nehcJ83D1r566gro1_500ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 5

படிப்பு, இசையில் மட்டும் இல்லை. உடல் நலனிலும் நான் கவனமாகவும் ஆர்வமாகவும் இருந்தேன். எனக்கு sight தான் இல்லையே தவிர vision இருந்தது. (இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பிறகு பார்ப்போம்).

நான் பிளஸ் 1 படிக்கும்பொழுது, எங்களது பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு மாணவர்கள் அனைவரும் போவார்கள். ஜிம்முக்கு சென்று வந்து அங்கே நடந்த விஷயங்கள், அவர்கள் ப்ராக்டீஸ் பண்ண சங்கதிகள் பற்றி எல்லாம் பேசும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். நாமும் ஏன் ஜிம் போகக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது.

ஒரு நாள் என்கொயரிக்காக அந்த ஜிம்முக்கு போனேன். அங்கே ஒரு ஜிம் மாஸ்டர். ரொம்ப அருமையான மனுஷன். அவரைப் போய்ப் பார்த்தேன்.

‘எனக்கு ஏதாவது ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்க முடியுமா சார்?’ என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம், உடனே என்கிட்டே வந்து, தோள்ல ரெண்டு அடி
கொடுத்து… ‘என்ன ஸ்பெஷல் ட்ரெயினிங் உனக்கு? ஹூம்…. நல்லாத்தானே இருக்கே
நீ? அப்புறம் எதுக்கு ஸ்பெஷல் அது இதுன்னெல்லாம்’ என்று அதட்டினார்.

என்னைப் பார்த்துப் பரிதாபப்படுபவஙர்களைவிட என் மேல நம்பிக்கை வைத்து என்னை சராசரி மனுஷனா பார்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஒரே குஷி.

‘தேங்க்யூ சார்… அப்போ நாளைல இருந்து நான் ஜாயின் பண்றேன்’

‘அது என்ன நாளைல இருந்து.. ஏன் இன்னைக்கே ஜாய்ன் பண்ண மாட்டியா?’

‘சரி… சார்… இன்னைக்கே ஜாய்ன் பண்றேன். ஈவ்னிங் வர்றேன்.’

‘ஏன்… ஈவ்னிங்… இப்போ என்ன?’

உடனே ஜிம்மில் சேர்த்துக்கொண்டார்.

உனக்கு எதுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் என்று சொன்னாரே தவிர, நான் அங்கே இருக்கும்
ஒவ்வொரு விநாடியும் என்னுடன்தான் அவர் இருந்தார். ஒவ்வொரு அசைவையும் சொல்லித்
தந்தார். மூன்று நான்கு மாதங்களுக்கு இது தொடர்ந்தது. பிறகு எனக்கு எல்லாம் அத்துப்படியாகிவிட்டது.

அங்கே ஜிம்மில் ஒவ்வொரு செக்ஷனா போவேன். அப்பொழுது எல்லாமே மேனுவல்தான். PULL UPS, DUMP BELL, BAR EXERCISE இப்படி ஒவ்வொன்றிலும் நேரம் எடுத்து, விரிவாகப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஜிம்மில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டார்கள்.

ஜிம் அனுபவம் மறக்கமுடியாதது. உடலை fit ஆக வைத்துக்கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் நன்கு உதவின. இதுபோன இன்னொரு விஷயத்திலும் இது உதவியாக இருந்தது.

கண் பார்வை இல்லே, இவன்கூட என்னத்தைப் பேசுறதுன்னு என்று என்னுடன் பழகத் தயங்கிய பலர் இருந்தனர். குறிப்பாக, கடைசி பெஞ்ச் மற்றும் குறும்புக்கார மாணவர்கள். என்னுடன் ஜெல் ஆவதில் அவர்களுக்குப் பிரச்னைகள் இருந்தன. ஆனால் ஜிம் செல்ல ஆரம்பித்த பிறகு என்னுடன் பேச ஆரம்பித்தார்கள்.

‘ஹேய் … நல்லா இருக்குடா உன் பாடி. ஆர்ம்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. எப்படிடா மெயின்டெயின் பண்றே?’ என்றெல்லாம் பேச ஆரம்பிச்சாங்க. நான் ஹீரோ ரேஞ்சுக்கு அவர்களுக்கு டிப்ஸ் எல்லாம் அள்ளிவிடுவேன்.

சரியாகப் பள்ளிக்குச் செல்வேனோ இல்லையோ, ஜிம்முக்கு ஆஜராகிவிடுவேன். அந்தப் பள்ளியின் Arm Wrestling Champion ஆகும் அளவுக்கு இந்த ஆர்வம் என்னைக் கொண்டுச் சென்றது.

இளங்கோவை இதில் ஜெயிக்கமுடியாதுடா என்று மாணவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதிக்கமுடியாததை இதில் சாதிக்க முடிந்தது.

மெடலும் கப்பும் வாங்கிக் குவித்தால்தான் சாதனையா என்ன? நான்கு பேரை ஜெயித்தோம் என்னும் உணர்வு போதாதா? அதைவிட பெரிய மகிழ்ச்சி, அங்கீகாரம் வேறு என்ன இருக்கமுடியும்?

தம் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தும் பல பெற்றோர்கள், தங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை.

A sound mind in a sound body என்று சொல்வார்கள். இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை.

பிள்ளைகளுக்குப் படிப்பு முக்கியம் தான். அதைவிட முக்கியம் அவர்களுடைய உடல் நலனும் ஃபிட்னஸும். எனவே அவர்களை நன்றாக விளையாட அனுமதிக்கவேண்டும். எதிர்கால சூழ்நிலைகளைச் சமாளிக்க பள்ளிப் படிப்பும் வேலையும் மட்டும் போதாது. லைஃப் ஸ்டைல் நோய்கள் என்று சொல்லப்படும், ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றை பற்றியெல்லாம் அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு அளிக்கவேண்டியது அவசியம்.

அதற்கு முதல் படி, உடல் நலன் பேணுவது.

படிப்பு முக்கியம். ஆரோக்கியம் அதைவிட முக்கியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பிரமிப்போடு நிறுத்திவிடாதே!

impஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 6

Determination, Passion இரண்டும் எனக்கு இயல்பாகவே உண்டு. இந்த இரண்டையும் ஒட்டித்தான் என்னுடைய வாழ்க்கைப் பயணமே. சுயபச்சாதாபத்துக்கு என்றைக்குமே நான் இடம் கொடுத்ததில்லை.

‘எது வரையிலும் நீங்கள் போராடுவீர்கள்?’ என்று யாராவது என்னை கேள்வி கேட்டால்… ‘வெற்றி கிடைக்கும் வரை… அல்லது உயிரோடு உள்ளவரை’ என்பதே என் பதிலாக இருக்கும்.

‘வாழும் வரை போராடு… வழி உண்டு என்றே பாடு’ என்பதுதான் இந்த விஷயத்தில் என் கொள்கை.

+1 மற்றும் +2 வகுப்பு இரண்டுமே நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் அதன் மூலம் எனக்கு ஆங்கிலத்தில் fluency என்று சொல்லப்படும் புலமை ஏற்படவில்லை. தட்டுத் தடுமாறி திக்கித் திணறித்தான் ஆங்கிலம் பேசிவந்தேன். ஆனால் அது ஆங்கிலத்தில் எனக்கு இருக்கும் பற்றை எள்ளளவும் குறைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

எங்கள் வகுப்பில் மொத்தம் 110 பேர். அங்கே டிசில்வா என்று ஒரு பேராசிரியர் இருந்தார். 110 பேருக்குமான வருகைப் பதிவேட்டை ஓர் ஒன்றரை நிமிஷத்துக்குள் டக் டக்கென்று எடுத்து விடுவார். அவரைப் பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்லலாம்.

அவரது ஆங்கிலம் பேசும் ஸ்டைல். அவர் மொழி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். அடுத்து அவருடைய தோற்றம். கை கடிகாரத்திலிருந்து, ஷூ வரைக்கும் எல்லாமே போட்டிருக்கும் உடைக்கு தகுந்தாற்போல் மேட்ச்சிங்காக இருக்கும்.

அவர் பாடம் நடத்தும்போது வகுபே பின்டிராப் சைலன்ஸ்ஸில் இருக்கும். பாடம் நடத்தும்போதும் நடத்தி முடித்த பின்னரும், கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்.

அவருடைய கேள்விகளுக்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்கும் நான்கைந்து ஸ்டூடண்ட்ஸ் மட்டும்தான் எப்போதும் பதில் கூறுவார்கள். மற்றவர்கள் அமைதியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் அது vocabulary சம்பந்தமாகத்தான் இருக்கும். எனக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியாது.

ஒரு பக்கம் ஆங்கிலத்தின்மீது தீராத தாகம். மறுபக்கம் இந்தப் புரியாமை நிலைமை. இந்த இரண்டுக்கும் இடையில்தான் எனது பெரும்பாலான இங்கிலீஷ் வகுப்புகள் கடந்தன. இதனால் டிசில்வா சாரின் வகுப்புகளில் என்னால் மன ரீதியாக மனமொன்றி பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மணிநேரமும் வீணாகக் கழிந்தது.

ஒவ்வொரு முறையும் அவர் கேட்கும் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லிவிடவேண்டும் என்று மனத்துக்குள் சபதம் செய்து தயாராவேன். ஆனால் இறுதியில் வாய் பேசா ஊமையாகவே இருந்து விடுவேன்.

இப்படியே சில காலம் உருண்டது. இரண்டு செமஸ்டர்கள் முடிந்து மூன்றாவது செமஸ்டர் தொடங்கியது.

இடைப்பட்ட காலங்களில் என்னுடைய ஆங்கில சொல் திறனை வளர்த்துக்கொண்டேன்.

ஒரு நாள் டிசில்வா சார், ‘தி பாரடைஸ் லாஸ்ட்’ என்கிற பாடம் நடத்தினார். அப்போது ஒரு கேள்வி கேட்டார்.

அதாவது Imp என்றால் என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் கேள்வி, கேட்டால் பொதுவாக ஐந்து அல்லது ஆறு நொடிகள்தான் காத்திருப்பார். சில விதி விலக்கான சமயங்களில் மட்டும், மாணவர்கள் சரியான பதில் சொல்கிறவரைக்கும் காத்திருப்பார். மாணவர்கள் எப்படியாவது அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பார்கள். இதனால அவருடைய ஒவ்வொரு கிளாஸுமே எல்லாருக்கும் சவாலாவே இருக்கும். குறிப்பா எனக்கு…

அதனால் ‘imp என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதுதான் தாமதம், நான் உடனே கை தூக்கி விட்டேன்.

அவர் உடனே என்னை பார்த்து, ‘எஸ்…’ என்றார். அவர் கேட்கும் விதமே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

நான் உடனே, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் imp என்றால் பேபி டெவில் என்று கூறினேன்.

அவர், ‘அப்சல்யூட்லி’ என்றார் உடனே.

அந்த நொடி நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நிகழ்வு சாதாரணமாகத் தெரியலாம். ஆனா, இது போன்ற அனுபவத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் உண்மையனா மதிப்பு புரியும்!

இது விஷயமாக நான் சொல்ல ஆசைப்படுவது ஒன்றுதான்.

அதாவது விடாமுயற்சி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிலும் ‘டிசில்வா சார் கேள்விக்கு இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடணும்’, ‘இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடனும்’ என்று ஒரு வெறியுடனேயே நான் காத்திருந்திருக்கிறேன். அவர் நூறு கேள்வி கேட்டிருப்பார் என்றால் அதில் பல கேள்விகளுக்கு நான் பதிலை யூகித்து சொல்ல முற்படுவதற்குள் வேறு யாராவது கையைத் தூக்கிவிடுவார்கள். ஆனாலும் என் முயற்சியை நான் விடவில்லை. என் தீர்மானத்தைக் கைவிடவில்லை.

மாணவர்கள் எல்லோரும் அதற்குப் பிறகு, ‘என்னய்யா… டிசில்வா கிளாஸ்லயே பேசிட்டியா நீ… பெரிய ஆளு தான்யா?’ என்று சொல்லி என்னை ஒரே குஷிப்படுத்திவிட்டார்கள். டிசில்வா சாரின் கிளாஸில் பதில் சொல்வது என்பது அந்த அளவுக்கு மிகப் பெரிய விஷயம். கௌரவம்.

இது போன்ற சாதனைகளில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை நாம் மறுக்கக்கூடாது. அதை அனுபவிக்கவேண்டும்.

மேற்கூறிய சம்பவத்துக்குப் பிறகு, டிசில்வா சார் வகுப்பில் என்னுடைய பங்கேற்பு  ஏதாவது ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தப்பாகக்கூட பதில் சொல்லியிருக்கிறேன். அவர், ‘நாட் எக்சாக்ட்லி தட்’ என்று சொல்லி அதைத் திருத்திச் சொல்வார்.

நான் முதன்முதலில் பதில் சொன்ன மேற்கூறிய அந்த imp சம்பவம் என்னைப் பொருத்தவரையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகவே மாறிப் போனது. அதாவது எனக்கும் டிசில்வா சாருக்கும் இடையே இருந்த ஒரு திரையை அது விலக்கிவிட்டது. அப்படித்தான் நான் நினைத்தேன்.

யாருடைய வகுப்பில் நாம் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல மாட்டோமா என்று ஏங்கினேனோ அவரை அவருடைய டிபார்ட்மென்ட் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து பாடம் தவிர்த்து பிற பொதுவான விஷயங்களும்கூட உரையாடும் அளவுக்கு வந்தேன்.

இதை எப்படிச் சொல்வதென்றால் அதாவது நாம் யாரைப் பார்த்து பிரமிக்கிறோமோ… ரசிக்கிறோமோ அந்த நடிகரையோ நடிகையையோ அருகில் பார்த்துப் பேசி, அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு அவர்களுடன் கூடவே ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோன்று இருந்தது மேற்கண்ட எனது அனுபவம்.

எப்படியாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லிவிட வேண்டுமென்று எனக்கு ஏற்பட்ட வைராக்கியம் கடைசியில் எங்கே கொண்டு போய் உயர்த்தியது என்று பார்த்தீர்களா! எனவே எப்போதுமே மிகப் பெரிய விஷயங்களைப் பார்த்து ‘நம்மால் முடியுமா?‘ என்கிற மலைப்போடு நிறுத்திவிடக்கூடாது. தொட்டுப்பாருங்கள்… வானமே ஒருநாள் வசப்படும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 உங்கள் ரோல்மாடல் யார்?

father-role-model.jog_ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 7

சென்ற ஆண்டு மலேசியாவில் கெண்டிங் தீவுகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அரங்கத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய உரையை முடித்தவுடன் வழக்கமாக நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்வு
நடைபெற்றது.

அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று….

‘நீங்கள் மிகப் பெரிய சாதனையாளர். எத்தனையோ பேருக்கு வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு உந்துதலாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு யார் ரோல் மாடல்?‘ என்பதுதான்.

அதற்கு நான் ‘எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ‘ரோல் மாடல்’ என்று பார்த்தால் எனக்கு நான் தான் ‘ரோல் மாடல்’, என்று சொன்னேன்.  உடனே பலத்த கைதட்டல்.

இன்ஸ்பிரேஷன் நமக்கு பலர் இருக்கலாம். உதாரணத்துக்கு சினிமா பாடகர்களில்
எஸ்.பி.பி., கே.ஜே.ஜேசுதாஸ், கிளாசிக்கல் பாடல்களில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பி.எச்.அப்துல் ஹமீது, இப்படி பல்வேறு துறையில் பல
சாதனையாளர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்.

ஆனால் ரோல் மாடல் என்கிற கேள்வி வரும்போது… எனக்கு நான்தான் ரோல் மாடல் என்று சொன்னேன். அந்த பதிலை யாரும் எதிர்பார்க்காவிட்டாலும் அதை நான் சொன்னபோது மிகவும் ரசித்தார்கள் என்பது அப்போது எழுந்த கைத்தட்டல்களில் இருந்து புரிந்தது.

இதை நான் சொல்வதற்குக் காரணம்… தலைக்கனத்தின் காரணமாகவோ அல்லது தற்பெருமையினாலோ இல்லை. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்கிற மமதையான நினைப்பினாலும் இல்லை.

என்னை நான் ரோல் மாடலாக முன்மாதிரியாக நினைத்துக்கொள்ளும்போதுதான், என்
வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். விழவும்
பயமில்லை.. விழுந்த சுவடு தெரியாமல் எழுந்திருக்கவும் தயக்கமில்லை.

என்னை நானே ரோல் மாடலா நினைத்துக்கொள்ளும்போதுதான், ‘நான் அந்த நிகழ்வின்போது என்ன செய்தேன்? அந்த நேரத்தில் நான் எப்படி நடந்துகொண்டேன்? இதற்கு முன்பு அப்படியோர் சம்பவம் நடந்திருக்கிறதா? நடக்கவில்லையா? இப்போது நாம் என்ன செய்யலாம்? இதை ஒரு ரோல் மாடல் சம்பவமாக நமது வாழ்க்கையில் பதிவு செய்துவிடவேண்டுமானால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.

நான் இப்படிச் சொல்வதனால் உங்களுக்குப் பிடித்த சாதனையாளர்களை ரோல்மாடலா வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்குப் பிடித்த நற்குணங்கள் நிரம்பிய
ஒரு சாதனையாளரை நிச்சயம் நீங்கள் ரோல் மாடலாக வைத்துக்கொள்ளலாம். கொள்கைப்
பிடிப்புடன் வாழும் ஒரு சாதனையாளர் சொன்னால் நான்கு பேர் கேட்பார்கள் என்ற நிலை இருப்பது நல்லதுதான். ஏனெனில் அவர்களுடைய அந்த ஐடியாலஜி இதன்மூலம் பரவும். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு நீங்களே ரோல் மாடல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம்.

இது ஏன் என்றால், நீங்கள் உங்கள் ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் செய்வது எல்லாம் சரி என்று அர்த்தம் கிடையாது. உங்கள் அபிமான சாதனையாளர் செய்வதில் எது சரி எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் காலப்போக்கில் உங்களுக்கு வந்துவிடும். அந்த நிலை வரும்போது நீங்களே உங்களுக்கு ரோல் மாடலாகிவிடுங்கள். அப்போது நீங்கள் இன்னும் உயரத்துக்கு செல்வீர்கள்.

வாழ்க்கையில் ரோல் மாடலைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த அளவுக்கு சிரத்தை எடுப்போமோ அந்த அளவுக்கு கவனமும், எச்சரிக்கையும் பரிட்சைகளும் தேர்ந்தெடுக்கும் ரோல்மாடலுக்கும் அவசியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள்?

mirrorஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  8

சமீபத்தில் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். சுமார் 4000 பேர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசினேன்.

அப்போது நடைபெற்ற கேள்வி-பதில் பகுதியில், ஒருவர்: ‘நீங்கள் மிகப் பெரிய
சாதனைகள் செய்திருக்கிறீர்கள். பலருக்கும் மிகப் பெரும் தன்னம்பிக்கை உண்டாக்கக்கூடிய மனிதராக இருக்கிறீர்கள். அநேகர் உங்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக ஒரு கேள்வி. உங்களுக்கு எதிர்காலத்தில் அதிசயமாக vision வந்தால் யாரை முதலில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த நான் : ‘உங்கள் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆனால் அதில் அடக்கத்தோடு ஒரு சின்னத் திருத்தம். எனக்கு vision வரவேண்டும்
என்கிற அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. sight தான் இல்லை.’ என்றேன்.

நிறைய பேர் இந்தக் கேள்விக்குப் பதிலாக, என் அம்மாவையோ, அப்பாவையோ, சகோதர சகோதரிகளையோ, உற்ற நண்பர்களையோ சொல்வேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் அவர்களையெல்லாம் ஏற்கெனவே பார்த்துக்கொண்டு இருப்பதாகத்தான் உணர்கிறேன். பார்வையிருந்தால்தான் பார்க்க முடியும் என்றில்லையே.

நான் சொன்னேன். ‘அப்படி ஒருவேளை எனக்கு ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் பார்வை
திரும்பக் கிடைத்தால், நான் முதலில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைத்தான்
கேட்பேன்.’

அந்தப் பதிலை எவரும் எதிர்பார்க்கவில்லை. கைதட்டல் அடங்க கொஞ்சம் நேரம் பிடித்தது.

இந்தப் பதிலை கேட்கும் சிலருக்கு நான் ஏதோ தற்பெருமை பிடித்தவன் என்று கூட
தோன்றலாம். அப்படி அல்ல… முதலில் நாம் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
புரிந்துகொள்ளவேண்டும். சுயமுன்னேற்றத்தின் அடிப்படை விதியே ‘நீ முதலில் உன்னைத் தெரிந்துகொள்’ என்பது தான்.

நான் ஏற்கெனவே என்னைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். அப்படி இருக்க ஏன் என்னைப் பார்க்க கண்ணாடி வேண்டும் என்று கேட்டேனென்றால்… எனது தோற்றத்தைப் பற்றிய சுய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறேன். அதை இதன் மூலம் உறுதி செய்துகொள்வேன். இறுதி செய்துகொள்வேன். மேலும், முதலில் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதில்தான் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்….
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கும் வரிகள் எத்தனை பொருள் பொதிந்தவை!

விஷன் மற்றும் சைட் இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டையும் இங்கேயே பார்த்துவிடுவோம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர். (குறள் 427)

பொருள் : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சைட் என்பது பெரு பிரதிபலிப்பு, அவ்வளவே. விஷன் என்பது அப்படியல்ல. அதையும் தாண்டி ஊடுருவி தொலைநோக்கோடு பார்ப்பது.

எனவே பார்வையுடையவர்கள் அனைவரும் vision-ம் பெறவேண்டும் என்பதே என் ஆசை!

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், நீங்கள் மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை எல்லாம் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு உங்களைப் பற்றிய உங்கள் சுயமதீப்பீடு என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அது சரிதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் தெரிந்துகொண்டால்தான் இந்த உலகில் தொலைந்துபோகாமல் இருக்க முடியும். அதாவது உங்கள் தனித் தன்மையை இழக்காமல் இருக்கமுடியும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கைகள் போதும்

Hands upஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 9

சேமிப்பு என்பது எனது சிறு வயது முதல் ரத்தத்தில் ஊறிய ஒன்று. பள்ளிக்கூட நாள்களில் இருந்தே வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை முறைப்படி பராமரித்து வருகிறேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு வளர்ந்து ஆளாகும் நேரம் எனக்கு காசோலைப் புத்தகமும் ஏ.டி.எம். கார்டும் தேவைப்பட்டது. அதற்காக வங்கியை அணுகியபோது, அப்ளிகேஷன் எழுதிக்கொடுங்கள். ஒரு நான்கைந்து நாள்களில் கிடைத்துவிடும் என்று கூறினார்கள்.
நானும் அப்ளிகேஷன் எழுதிக்கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்… காத்திருந்தேன்… காத்திருந்தேன்… பலநாள்கள் காத்திருந்தும் வங்கியிடம் இருந்து பதிலேதும் இல்லை.

பின்னர் அது தொடர்பாக ஃபாலோ அப் செய்யும்போது எனக்குக் கிடைத்த பதில், அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

‘சாரி…ஸார் உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சு…’ என்றார்கள்.

எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன், எதற்காக ரிஜக்ட் செய்தார்கள்? எனது வங்கிக் கணக்கில் செக் பவுன்சிங் கூட இதுவரை நான் செய்ததில்லையே… தவிர வங்கிக் கணக்கையும் அதற்குரிய முறைப்படிதானே மெயிண்டெயின் செய்கிறேன். பின் எதற்காக? ஒரே குழப்பமாக இருந்தது.

வங்கிக்குச் சென்று, ‘ஏன்… என்ன காரணத்துக்காக ரிஜெக்ட் செய்தீர்கள்?’ என்று விசாரித்தேன்.
‘சார், நீங்க செக் புக்கையோ, ஏ.டி.எம் கார்டையோ உபயோகிக்கணும்னா மத்தவங்க உதவியைச் சார்ந்துதானே இருக்கணும். யாரோட உதவியும் இல்லாம யாரையும் சாராம உங்களால அதை ஹாண்டில் பண்ண முடியாது இல்லையா? அதனாலதான்…’ என்று இழுத்தார்கள்.

நான் சொன்னேன்… ‘நீங்கள் சொல்வது மற்ற யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எனக்குப் பொருந்தாது. ஏன் என்றால்… எனது ஒவ்வொரு செயலையும் வேலைகளையும் சகல விஷயங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் நானேதான் மானேஜ் செய்துகொண்டு மற்றவர்களுக்கும் ஓர் ஆப்பர்சூனிட்டி கொடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். சரி, ஒருவேளை அப்படியே ஏதாவது தவறு நடந்தது என்றாலும் அதற்கு நான் தானே பொறுப்பு? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் அதை நான் தானே எதிர்கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு ஏதும் பாதிப்பில்லையே. அப்படியே ஏதாவது தப்பு நடந்ததென்றாலும் பணத்தை நீங்கள் திருப்பி கொடுத்து விடுவீர்களா அல்லது அந்தப் பொறுப்பைத்தான் எடுத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

பிறகு நான் உறுதியாகச் சொல்லி விட்டேன். ‘என்னுடைய செக் புக், ஏ.டி.எம். கார்டுகளுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். போதுமா?’

‘சார், இங்கே நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. எதற்கும் நீங்கள் எங்களுடைய ஹெட் ஆபீஸ் போய் கேளுங்கள்.’

அவர்கள் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

ஆனால் நான் உறுதியா இருந்தேன். எனக்கு உரிமையான ஒன்றைப் பெற நான் எதற்காக அவுட் ஆஃப் தி வே முயற்சி செய்யவேண்டும்? முடியவே முடியாது. நீங்கள் எனக்கு கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்று உறுதியாக நின்றேன்.

அப்போது அந்த வங்கியில வேலை பார்க்கும் ஒரு நல்ல மனதுப் பெண் – என்னை அவங்களுக்கு நன்றாகத் தெரியும் – என் உதவிக்கு வந்தார்.

‘சார், நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்க அக்கவுண்ட் ஹிஸ்டரி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றியும் தெரியும். மற்றவர்களைவிட நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள்வீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்னதும்தான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது.

ஒரு பெரிய மலையைத் தாண்டியாகிவிட்டது. ஏ.டி.எம். கார்டு கிடைத்துவிட்டது.

அடுத்து செக் புக்.

செக் புக்கை எனக்கு தரமுடியாது என்பதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
பார்வையற்ற ஒருவர் செக் புத்தகத்தில் எப்படி கையெழுத்து போடுவார் – என்பதுதான்.
பார்வையே இல்லாமல் ஓவியம் வரைபவர்கள்கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்கிறபோது நான் கையெழுத்துப் போடுவது என்ன பெரிய விஷயம்? இதை அவர்களுக்குச் சொல்லி புரிய வைப்பதற்குள் நான் பட்ட பாடு அப்பப்பா… அதைச் சொல்லி மாளாது….

‘ஒருவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுவதற்கு அவருடைய கை நன்றாக இருந்தால் போதும். எனது கை நன்றாக இருக்கிறது. பத்து விரல்களும் நன்றாக இயங்குகின்றன. இது போதாதா… நான் எனது கையெழுத்தைப் போடுவதற்கு? அதற்கும் பார்வை குறைபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? கண்டிப்பாக எனக்கு செக் புக் வேண்டும்‘ என்று சொல்லி அடமாக நின்றேன்.

‘கையெழுத்துப் போடுவீர்கள் என்பது சரிதான்… அதை சரியாக சரியான இடத்தில் எப்படிப் போடுவீர்கள்?’ என்று வங்கியில் கேட்டார்கள்.

‘செக்கில் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடலாமா? போடக்கூடாது இல்லையா… ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது பாட்டம் ரைட் சைடில் தானே போட வேண்டும்? அது எனக்கு நன்றாகவே தெரியும்… மிகச் சரியாக அந்த இடத்தில் ‘என்’ கையெழுத்தைப் போடுவேன். போதுமா? உங்களுக்கு வேறென்ன பிரச்னை?’ என்று திருப்பிக் கேட்டேன்….

அப்போதும் வங்கியில் சமாதானமாகவில்லை… கடைசியில்…. பார்வையே இல்லாமல் படம் வரைகிறவர்கள் முதல் மிக நன்றாக கார் ஓட்டுகிறவர்கள் வரைக்கும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறி ஒருவழியாக கன்வின்ஸ் செய்தேன்.

ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தன்னுடைய அடிப்படை உரிமைகளைக்கூட போராடித்தான் பெறவேண்டியுள்ளது என்ற நிலையில் நம் நாடு இருப்பதை நினைத்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கல்வியறிவு நிரம்பப் பெற்ற எனக்கே இப்படி ஒரு அனுபவம் என்றால் அதிகம் படித்திராத ஆனால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாதிக்கத் துடிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை எண்ணிப் பார்க்கிறேன்.

மேலும் உங்களுக்கு சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் சௌகரியங்களை உரிமைகளைப் பெற சிலர் எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் அனுபவித்து வரும் சௌகரியங்களின் அருமையை உணர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் தரும் ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.

உரிமைகளை கேட்டு மட்டுமல்ல போராடியும் பெற ஒருவர் தயாராக இருக்கவேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பாஸ்போர்ட் வாங்கிய கதை

Indian_passport_20120330ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  10

அடுத்து பாஸ்போர்ட் அப்ளை செய்து (போராடிப்) பெற்ற விவகாரத்தைப் பார்ப்போம்.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போதே நான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து விட்டேன். இது சம்பந்தமாக மனு செய்வதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.

எனது மனுவை ஏற்றுக்கொள்வதில் இருந்தே எனது போராட்டம் தொடங்கிவிட்டது.

மனுவை ஏற்றுக்கொள்ளும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர் ஒருவர் ‘நீங்க எப்படி பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யலாம்?’ என்றார் எடுத்த எடுப்பிலேயே.

நான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், ‘நான் இந்தியன் என்று கருதுவதால்’ என்றேன்.

இப்படியொரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. ‘நாம சீரியஸாக பேசுவோமா?’ என்றார்.

‘நான் சீரியசாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

‘உங்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்து நீங்க ஏதாவது வெளிநாட்டுக்குப் போய் அங்கே எங்காவது ஏடாகூடமா வழி தெரியாமல் மாட்டிக்கொண்டீர்களானால்… பிரச்னை உங்களுக்கு மட்டுமில்லை…. நமது நாட்டுக்கும்தான். இதனால் நமது நாட்டின் பெருமையே பாதிக்கப்படும்’ என்று அவர் மேலும் மேலும் சீரியஸாக ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார்.

என்னது பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் வெளிநாட்டுக்குப் போய் அங்கே தவித்தால் அது நாட்டுக்கு அவமானமா? என்ன ஒரு பேத்தல்… இதோ இதைப் படித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கே இது அபத்தமாக இல்லை… எனக்கு எப்படி இருந்திருக்கும்?

ஏதோ எனக்கு நல்லது சொல்வதாக நினைத்துக்கொண்டு அவர் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு எனக்கு அளவில்லாத கோபம் வந்தது.

என்ன ஒரு மிதமிஞ்சிய கற்பனை பாருங்கள்… அதுவும் இப்படிப்பட்ட கற்பனைகள் எப்போது வருகின்றன தெரியுமா… ஒரு கடமையைச் செய்யாமல் இருப்பதற்கும் அந்த கடமையைச் செய்யும்போது எழும் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்திக்காமல் இருப்பதற்காகவும்தான் இம்மாதிரி கற்பனைகள் நமது ஆட்களுக்கு வருகின்றன.

அவர் பேசப் பேச நான் ஒரு பக்கம் அதை கேட்டுக்கொண்டு சிரித்தவாறு இருந்தேன்.

அந்த நபர் எரிச்சல் அடைந்து ‘சார்… என்ன சிரிக்கிறீங்க? கொஞ்சம் சீரியஸா இருங்க.’ என்றார்.

அப்போதெல்லாம் நான் கொஞ்சம் துடுக்குத் தனமாக இருப்பேன். இப்போது அப்படி இல்லை. நிறையவே மாறிவிட்டேன்.

‘சார், நான் சீரியஸாக இருப்பதால்தான் சிரிக்கிறேன். நீங்கள் சொன்னதைக் கேட்டு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.’ என்றேன்.

‘நோ சார்… உங்களுக்கு பாஸ்போர்ட் தர முடியாது. உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் நீங்கள் ஜாயிண்ட் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்துகொள்ளுங்கள்.’

‘அதெப்படி சார்… ஜாயிண்ட் பாஸ்போர்ட்டில் என்னுடன் வருகிற நபர் 24 மணிநேரமும் என் கூடவே இருப்பாரா? எனக்கு சுதந்தரமாக நடமாட கால்கள் இருக்கிறது. என்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அறிவு இருக்கிறது… அசாதரணமான சூழ்நிலைகளில் என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்குப் பேச்சுத் திறன் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக படிப்பறிவு இருக்கிறது… வேறென்ன வேண்டும் உங்களுக்கு?’

‘சார்…. நாட்டோட பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை வைத்துப் பார்க்கும்போது.. உங்களுக்கு தனிநபர் பாஸ்போர்ட் கொடுக்க முடியாது.’ அவர் குரலில் அதிகாரம் தொனித்தது.

‘பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவது நாட்டின் பெருமைக்கு உகந்தது அல்ல’ என்று நாடாளுமன்றத்தில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றிவிட்டது போலவும் அதை இவர் கண்டிப்பாக கடைப்பிடித்து வருவது போலவும் பேசியதைக் கேட்டு எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. மறுப்பக்கம் அதிர்ச்சி.

‘அதெப்படி எனக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் போகிறதென்று நானும் பார்த்துவிடுகிறேன்’ – அவரிடம் சற்று துணிச்சலாகவே பேசினேன்.

ரொம்பச் சுலபமாகச் சொல்லிவிட்டேனே தவிர அதற்காக நான் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடையாக நடக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு முறை இதற்காக பாஸ்போர்ட் ஆபீஸுக்கு அலைந்தேன்.

ஒரு கட்டத்தில் சலித்துப் போய் கடுமையான முயற்சிக்குப் பின்… மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை நேரில் சந்திப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரைச் சந்தித்தேன்.

அங்கே அவரிடம் என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டுபொதுவாக ஆங்கிலத்திலேயே பேசினோம். என்னுடைய ஆங்கில உச்சரிப்பும் அதன் துல்லியமும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது போலும்.

‘உங்கள் லாங்குவேஜ் மற்றும் அதன் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது…’ என்று அவர் பாராட்டினார்.

இறுதியாக நான் அவரைப் பார்க்க வந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னேன்.

‘அவ்வளவுதானே… ஜஸ்ட் எ மினிட்’ என்று சொன்னவர், எனக்கு யார் பாஸ்போர்ட் தரமாட்டேன் என்று சொன்னாரோ அதே ஊழியரை அவர் ரூமுக்கு வரச் சொன்னார்.

அவர் வந்ததும்… ‘இவர் பேப்பர்ஸ் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கரெக்ட்டா இருக்கா…’

‘இருக்கு சார்… ஆனா…. ‘

‘நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க… இவர் பேப்பர்ஸ் எல்லாம் சரியா இருக்கா?’

‘இருக்கு..’

‘அப்போ அவருக்கு பாஸ்போர்ட் கொடுத்துடுங்க’ என்று உத்தரவிட்டார்.

அவர் போனதற்குப் பிறகு… ‘ ஒரு பத்து நிமிஷம் காத்திருங்கள். உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்து விடும்.’ என்றார். அந்தப் பத்து நிமிடங்கள்வரை அவர் என்னுடன் பலவேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

சொன்னது போலவே பத்து நிமிடங்களில் பாஸ்போர்ட் என் கைக்கு வந்தது.

‘ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் இளங்கோ’ என்று பாஸ்போர்ட்டை என் கைகளில் கொடுத்து கை குலுக்கி வழியனுப்பி வைத்தார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மிகுந்த மிடுக்குடன்தான் பாஸ்போர்ட் அலுவலகத்தை விட்டுவெளியே வந்தேன். மனதெல்லாம் நினைத்ததை சாதித்த திருப்தி மேலோங்கி இருந்தது.

தட்டுங்கள் திறக்கப்படும்… திறக்கவில்லையா? தட்டிக்கொண்டே இருங்கள். திறப்பதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆள் கால் – ஆடை முக்கால்

dressஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 11

 

இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போவது ட்ரெஸ் கோட் பற்றி. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று சொல்வார்கள். அது தவறு. ஆடை தான் எல்லாமே என்று நான் சொல்வேன். ஆம், ஒருவர் அணிந்துகொள்ளும் ஆடைதான் அவர்களைப் பற்றிய பிறரின் மதிப்பீட்டுக்கு உதவுகிறது.

ஒரு நிகழ்ச்சியொன்றில் நான் பேசப்போகும்போது ஒருவர் என்னிடம், ‘ட்ரெஸ் கோடுக்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? நமது கலாச்சாரப்படி நாம் உடை உடுத்துகிறோமா போன்ற கேள்விகள் எல்லாம் இன்றைய உலகில் அவசியம் தானா?’ என்று கேட்டார்.

நான் சொன்னேன். ‘உங்களுடைய ஆடை உங்களைப் பற்றியும் உங்களின் மனப்பாங்கைப் பற்றியும் பகிரங்க அறிவிப்பு செய்கிறது. எனவே கண்டிப்பாக நாம் அணிந்துகொள்ளும் ஆடை குறித்து மிகவும் கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றேன்.

தவிர ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது நீங்கள் அணிந்துகொள்ளும் ஆடை அந்த நிகழ்ச்சி குறித்த உங்களது புரிதலை, ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. எனவே நாம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு தகுந்தாற்போல் நமது ஆடை இருப்பது அவசியம்.

தவிர எப்போதுமே நாம் எங்கே போனாலும் நன்றாக டிரஸ் செய்துகொண்டுதான் போகவேண்டும் என்பது நம்முடைய தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது.

அடுத்து பலருக்கும், ஏதாவது முக்கியமான இடத்துக்கு / நிகழ்ச்சிக்குப் போகும்போது மட்டும் தான் நன்றாக டிரஸ் செய்துகொள்ள வேண்டும், மற்றபடி சாதாரண இடத்துக்கு போகும்போது தேவையில்லை என்கிற எண்ணம் இருக்கிறது. அது மிகவும் தவறு.

டிரஸ் என்பது அதாவது நன்றாக உடை உடுத்திக் கொள்வது என்பது மற்றவர்கள் நம் மீது கொள்ளும் அபிப்பிராயத்துக்கு மட்டும் உதவுவதில்லை… நமது மனநிலை மற்றும் mood swing என்று சொல்லப்படும் மன மாற்றத்துக்கும் உதவுகிறது.

எப்போதாவது நீங்கள் சற்று தன்னம்பிக்கை குறைவாக உணர்ந்தீர்கள் என்றால், அல்லது சற்று டல்லாக ஃபீல் செய்தீர்களானால்… அப்போது கூட நீங்கள் நன்றாக டிரஸ் செய்துகொள்ளலாம். ப்ரெஷ்ஷாக குளித்துவிட்டு உங்களுக்கு பிடித்த ஒரு ஃபார்மல் டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு வீட்டுலேயே இருந்தால்கூட பரவாயில்லே… கார்டனில் வாக்கிங் போகலாம்…. பிடித்த பாடல்களைக் கேட்கலாம்… ஒரு ம்யூசிக் ஸ்டோர் போய் உங்களுக்குப் பிடித்த ஆல்பங்களை வாங்கலாம்…. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகலாம்… இதெல்லாம் செய்யும்போது படிப்படியாக உங்கள் மனநிலை சகஜ நிலைக்கு வந்து விடும். மிகவும் ஆக்டிவாக ஃபீல் செய்வீர்கள் என்பது நிச்சயம்.

நிறைய பேர் கல்யாணத்தில் போடுகிற கோட், சூட்டை அதற்குப் பிறகு போடுவதே கிடையாது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தைத்த அந்த கோட்டும் சூட்டும் தூசி படிந்துபோய் பரிதாபமாக கோட் ஸ்டாண்ட்டில் தொங்கிக்கொண்டு இருக்கும். ஒருவர் கோட்-சூட் அணிந்து செல்லும்படியாக வருஷத்துக்கு ஒரு நாலைந்து நிகழ்ச்சிகள் கூடவா வராது ? யோசித்துப் பாருங்கள்.

டிரஸ் மட்டுமில்லே… நாம உபயோகிக்கிற பெர்ஃப்யூம், டியோட்ரென்ட் இதெல்லாம் கூட நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விஷயங்கள் தான்.

டிரெஸ்ஸிங் பற்றிய முக்கியத்துவம் யாருக்குப் புரிகிறதோ இல்லையோ….வேலைக்கான இண்டர்வ்யூக்கு செல்பவர்கள், இளம் தொழில் முனைவோர்கள், பெரிய இடங்களில் தொடர்பில் இருந்து அவர்களுடன் பழகக்கூடியவர்கள் (சமூக ரீதியிலான அல்லது வணிக ரீதியிலான) இவர்களுக்குத் தெரியும் உடையலங்காரத்தின் அருமையும், மகிமையும்.

எனக்கு நன்கு தெரிந்த ஒருவர்…. நல்ல ஷார்ப்பான துடிப்பான ஆள், புதுப் புது நட்புகள், தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற துடிப்புள்ள நபர்… அவர் ஒரு நாள் என்னைப் பார்க்க வந்திருந்தார். நாங்கள் பேசிகிட்டிருக்கும்போது, அவர் தான் மனம் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றைப் பற்றிக் கூறினார்.

நண்பருக்கு ஒரு பெரிய மனிதருடன் அறிமுகம் கிடைத்து அவருடன் அலைபேசி நட்பு கொண்டிருந்ததாகவும், தம்மைச் சந்திக்க அவர் விரும்பியதாகவும் எனவே அவரை ஒரு நாள் நேரில் பார்க்கச் சென்றதாகவும், ஆனால் போன இடத்தில் அவர் இவரிடம் சரியாகக் கூட பேசவில்லை என்றும், சொல்லப்போனால் தன்னை அவர் சரியாக நடத்தவில்லை என்றும்… அவரா இப்படி என்று தாம் அதிர்ந்துபோனதாகவும் கூறினார்.

நான் கேட்டேன்… ‘நீங்கள் அவரை எப்போது எந்த மாதிரிச் சூழ்நிலையில் அவரைப் பார்க்கப் போனீர்கள்? காலையிலா மாலையிலா?‘

என் கேள்வியின் உள் அர்த்தம் அவருக்கு புரியவில்லை. அவர் வேறு ஏதோ நினைத்துக்கொண்டு பதில் சொன்னார்.

‘அதில்லை சார் பிரச்னை… அவர் நான் போகும்போது ஃப்ரீயா ரிலாக்ஸ்டாகத்தான் இருந்தார். இத்தனைக்கும் அன்றைக்கு லீவ் நாள் வேற. அதற்கு முன் தினம் இரவுகூட அவருடன் ஒரு அரை மணிநேரம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கூட நன்றாகத்தான் பேசினார். நடுவில் என்ன நடந்ததென்றே தெரியலே..‘ என்று புலம்பினார்.

‘நீங்கள் அவரை பார்க்கப்போனது காலையிலா சாயந்திரமா?‘

‘சாயந்திரம்…‘

‘போகிறதுக்கு முன்பு வெளியில் எங்காவது சென்றுவிட்டு அப்புறம் அவரிடம் சென்றீர்களா?‘

‘ஆமாம்… முக்கியமாக ரெண்டு மூணு இடங்களுக்குப் போகவேண்டி இருந்தது… அங்கெல்லாம் போய் விட்டு பிறகுதான் அவரைப் பார்க்கப் போனேன்.’

எனக்குப் புரிந்துவிட்டது. இவரின் அலைந்து திரிந்து களைப்படைந்த தோற்றம் பிளஸ் அன்று இவர் அணிந்திருந்த டிரஸ் இரண்டும்தான் வில்லனாகியிருக்கின்றன என்பது.

‘அன்றைக்கு எப்படி டிரஸ் பண்ணியிருந்தீங்க ?’

‘வெரி வெரி சிம்பிள் டிரஸ் தான்.’

‘நீங்கள் அவரைப் பார்க்கப்போனபோது… அந்த டிரஸ் எப்படி இருந்தது… காலையில் நீங்கள் எப்படிப் போட்டீர்களோ அதே மாதிரி இருந்ததா?’

‘அதெப்படி இருக்கும்? வெயிலில் நாலு இடத்துக்கும் டூ-வீலரில் அலைந்திருக்கிறேன். அவரைப் போய் பார்க்கும்போது டிரஸ் எல்லாம் கலைந்து ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.’

‘காலில் ஷூஸ் போட்டிருந்தீர்களா?‘

‘லீவ் நாளில் யாராவது ஷூ போட்டுக்கொண்டு சுற்றுவார்களா? நீங்க வேற சார்…’ என்றார் அலுத்துக்கொண்டு.

அப்போது நான் விளக்கிக் கூறினேன்.

‘உங்களுடைய நண்பர் அதாவது அந்தப் பெரிய மனிதர் உங்களிடம் அலைபேசியில் மட்டுமே தொடர்பு வைத்திருந்திருக்கிறார். உங்கள் தோற்றத்தைப் பற்றிய அபிப்ராயம் அவருக்கு இருந்திருக்கவில்லை. உங்கள் பேச்சை மட்டும் வைத்து உங்களைப் பற்றி ஒரு அனுமானத்துக்கு வந்திருக்கக்கூடும். அதை வைத்துதான் அவர் உங்களிடம் நன்றாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவரைப் பார்க்க நீங்கள் செல்லும்போது இருந்த விதத்தை பற்றி நீங்கள் கூறியதிலிருந்து, உங்கள் கசங்கிய ஆடையும், களைப்படைந்த தோற்றமும் உங்களைப் பற்றிய ஒரு சாதாரண ஒப்பீட்டை அவருக்கு ஏற்படுத்திவிட்டன. போதாக்குறைக்கு நீங்கள் ஷூ வேறு அணியவில்லை. அவரைப் போன்ற பெரிய மனிதர்கள் பெரும்பாலானோர் நிச்சயம் தோற்றத்துக்கும் அணியும் ஆடைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களாகத் தான் இருப்பார்கள். நீங்கள் அப்படியொரு தோற்றம் தரத் தவறியதால் அவர் உங்கள் மீது ஏமாற்றமடைந்திருக்கலாம்.’

‘ஆமாம்… சார்… ரொம்பச் சாதாரணமான தோற்றத்துடன் அவரைச் சந்திக்கச் சென்றது எவ்வளவு பெரிய தவறென்று இப்போது புரிகிறது. இனி நிச்சயம் டிரஸ் செய்துகொள்வதில் நான் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வேன். அதுவும் முதல் முறை யாரையாவது சந்திக்கப் போகும்போது நிச்சயம் இனிக் கவனமா இருப்பேன்.’ என்றார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது… பெரிய மனிதர்களை முதல் முறை பிசினஸ் விஷயமாவோ அல்லது வேறு எதாவது முக்கிய விஷயமாவோ சந்திக்கச் செல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அணியும் உடையில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெரிய மனிதர்கள்தான் என்றில்லை, முதல் முறையாக யாரை சந்திப்பதானாலும் தோற்றத்தில் சிறப்பாக நல்ல உடையலங்காரத்தில் சென்றால் உங்களைப் பற்றி ஏற்படும் அந்த முதல் அபிப்ராயம் சிறப்பாக இருக்கும். அது கடைசி வரைக்கும் நீடிக்கும்.

தோற்றத்தைப் பற்றி உடையலங்காரத்தைப் பற்றி கவலைப்படாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிக எளிமையாக இருந்து சரித்திரத்தில் இடமும் பிடித்து சாதித்த சாதனையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாவதில்லை. Exemption never make rules.

எனவே அவர்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதில்லை. டிரஸ் சென்ஸ் குறித்த அவர்களது கண்ணோட்டமும் கொள்கையும் அவர்களுக்கு வெற்றியை தந்தது. ஆனால் மற்றவர்களுக்கும் அது தரும் என்று சொல்லமுடியாது.

நான் படிக்கும் காலங்களில் கோட்-சூட் அணிந்துகொள்பவர்களைப் பற்றி கிண்டலாக கமெண்ட்டும் செய்ததுண்டு. ஆனால் இன்றைக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பேச நான்கு இடங்களுக்குப் போய் வரும்போதுதான் எனக்கு அதனுடைய முக்கியத்துவம் புரிகிறது.

( மு டி ந் த து )



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard