New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விக்கிரமாதித்தன் கதைகள் -உமா சம்பத்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
விக்கிரமாதித்தன் கதைகள் -உமா சம்பத்
Permalink  
 


காட்டில் கிடைத்த சிம்மாசனம்!

1

p_dense_forest_paintingமனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு!
உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான போஜராஜனுக்கு அன்றைய நாள் அப்படித்தான் அமைந்தது! அவன் ஸ்தம்பித்துப் போயிருந்தான்.
உலகின் தலை சிறந்த உன்னதமான ராஜ்ஜியங்களுள் ஒன்றாக பிரசித்தி பெற்றிருந்தது உஜ்ஜயினி ராஜ்ஜியம். புராண காலம் தொட்டு ராமாயண, மகாபாரத இதிகாசங்களில் இடம் பெற்ற, புராதனமான புகழ் வாய்ந்த ராஜ்ஜியம் உஜ்ஜயினி பட்டணம். கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றதாக பாகவதம் சொல்கிறது.

இத்தனை கீர்த்தி மிக்க உஜ்ஜயினி பட்டணத்துக்கு அரசனாக இருப்பதில் போஜராஜனுக்கு மிகுந்த பெருமிதம் உண்டு. நேர்மை தவறாத நல்லரசு நடத்தி வந்த போஜராஜன் தனது குடி மக்களை உயிர் போல பாவித்தான். அவர்களுக்கு எந்த ஒரு குறையும், தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக ஆட்சி புரிந்தான். அவன் தற்போது உஜ்ஜயினியின் எல்லைப்பகுதியில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்ததுகூட தனது குடிமக்களின் துயரம் ஒன்றைத் தீர்ப்பதற்காகத்தான்!

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஒரு நாள், உஜ்ஜயினியின் எல்லைப்புற குடிமக்கள் பெருங்கூட்டமாக அலறியடித்துக்கொண்டு அரசவைக்குள் வந்து குவிந்தனர். பலரும் பலவிதமாகக் கதறி முறையிட்டனர்.

‘மன்னவா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள். எங்களையும், எங்களது குடும்பத்தினரையும் தாங்கள்தான் காப்பாற்றி அருளவேண்டும்.’

‘தினம் தினம் செத்து மடிகிறோம் அரசே.’

‘ஆமாம்! ஆமாம்! நாளும் நாளும் உயிர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன. துயரத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் அரசே!’

எல்லோரும் ஆளாளுக்கு அழுது புலம்பி ஒருசேரப் பேசியதில் மன்னன் போஜராஜனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

‘என் ஆருயிர் குடிமக்களே, பதட்டப்படாதீர்கள். எதற்கும் கலங்காதீர்கள். உங்களுடைய பிரச்னை எதுவானாலும் நான் தீர்த்து வைக்கிறேன்! கலங்காதீர்கள்!’ என்று ஆறுதல் கூற, மன்னரின் அருகில் இருந்த நீதிவாக்கிய மந்திரி, அவர்களைப் பார்த்துக் கேட்டார்:

‘பிரஜைகளே! அமைதி! அமைதி! நீங்கள் எல்லாம் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்ன உங்களின் பிரச்னை? எல்லோரும் ஆளுக்கு ஆள் கத்தாமல் யாராவது ஒருவர் மட்டும் முன் வந்து புரியும்படியாகச் சொல்லுங்கள்’ என்றார்.

கூட்டத்தில் தலைவன் போல் தென்பட்ட ஒருவன் முன்வந்து, ‘அரசே, நாங்கள் அனைவரும் நமது உஜ்ஜயனி நாட்டின் எல்லைப்புற கிராமங்களில் வசிப்பவர்கள். பக்கத்திலேயே அடர்த்தியான வனப்பகுதி என்பதால், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்து புலி, கரடி, நரி போன்ற கொடிய மிருகங்கள் இரவு வேளைகளில் அடிக்கடி எங்கள் இருப்பிடத்துக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்குவதுடன், கொட்டிலில் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் அடித்து இழுத்துச் சென்று விடுகின்றன. சில நேரங்களில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகளையும்கூட பலியாக்கிக் கொள்கின்றன. இதனால் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். இதிலிருந்து தாங்கள்தான் எங்களைக் காக்கவேண்டும்.’ என்று முறையிட்டான்.

மன்னன் போஜராஜன் நீதிவாக்கிய மந்திரியுடன் கலந்தாலோசித்து விட்டு, மக்களிடம் சொன்னான்: ‘என் அன்பான பிரஜைகளே! கலங்காதீர்கள். காட்டு மிருகங்களால் இனி உங்களுக்கு எந்தத் துன்பமும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை, நானே நமது வீரர்களுடன் நேரில் காட்டுக்குச் சென்று மிருகங்களை வேட்டையாடத் தீர்மானித்து விட்டேன். இனி அந்தக் காட்டு மிருகங்களால் உங்களுக்குத் துன்பம் ஏதும் நேராது. அனைவரும் தைரியமாக புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று கூறி வழியனுப்பி வைத்தான்.

மக்கள் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் மன்னரைப் போற்றி வணங்கி விட்டுச் சென்றனர்.

மறுநாள் உஜ்ஜயினியின் காட்டுப் பகுதி திமிலோகப்பட்டது. ஒரு சிறு சேனையுடனும், மந்திரி பிரதானிகளுடனும் வனத்துக்குள் நுழைந்த போஜ மன்னன் கானகத்தை நாலாபுறமும் சூழ்ந்து உள் நுழைந்து புலி, சிங்கம், கரடி, நரி போன்ற அபாய மிருகங்களை வளைத்து வளைத்து வேட்டையாடினான்.
ஏராளமான மிருகங்கள் எதிர்பட்டதால் அரைநாளுக்கும் மேலாக வேட்டை தொடர்ந்தது. சூரியன் உச்சிக்கு வந்து வெய்யில் தகித்துக் கொளுத்தியது. மன்னனும் ஏனைய படைவீரர்களும் களைத்துப் போனார்கள். நா வறண்டது. வியர்வை பெருக்கெடுத்து உடைகளைத் தொப்பலாக நனைத்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.

மன்னன் போஜராஜன் சற்றே களைப்பார நினைத்தான். தாகசாந்திக்கு நீரும், சிரமப்பரிகாரம் செய்ய நிழலும் எங்காவது இருக்கிறதாவென்று தேடி அவனும் படை வீரர்களும் கானகத்துக்குள் அலைந்தனர்.

தேடி அலைந்ததில் ஒரு காத தூரத்திலேயே வனத்தின் கிழக்குப் பகுதியில் கம்பங்கொல்லை ஒன்று அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது.
நான்குபுறமும் அடர்ந்த நிழல் தரும் பழ மரங்களும் நடுவே கம்பங் கொல்லையும், பெரிய ஆழ் கிணறும், பிஞ்சு வெள்ளரிக்காய் விளைந்த தோட்டமுமாக அப்பகுதி அவர்களை வசீகரித்தது.

அந்தக் கம்பங்கொல்லைக்கு உரிமையாளன் சரவணப்பட்டன் என்னும் அந்தணன். சரவணப்பட்டன் அப்போது முற்றிய கதிர்களை பறவைகளிடமிருந்து காப்பதற்காக உயர்ந்த பரண் ஒன்று அமைத்து அதன்மீது அமர்ந்து கவண் கல்லில் கற்களைப் பூட்டி வீசி பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தான்.

மன்னனும் மந்திரிகளும் படை வீரர்களும் கம்பங்கொல்லையை நெருங்கும்போதே சரவணபட்டன் அவர்களை இனம் கண்டு கொண்டான். வேட்டையாடிக் களைத்துத் தள்ளாடியபடி வந்த அவர்களது நிலையை உணர்ந்து இரக்கம் கொண்டான்.

பரண் மீது இருந்தபடியே அவர்களை வரவேற்றான். ‘வாருங்கள். அனைவரும் வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். புவியாளும் மாமன்னர் இந்த எளியேனின் இருப்பிடத்துக்கு வருகை தந்ததை எனது பூர்வ ஜென்ம புண்ணியமாகக் கருதி மகிழ்கிறேன். எல்லோரும் வேட்டையாடி மிகவும் களைத்துப் போயிருக்கிறீர்கள். இதோ எனது இந்தக் கிணற்றில் சுவையான குளிர்ந்த நீர் தளும்பிக் கிடக்கிறது. முகம் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு நீர் அருந்துங்கள். கம்பங்கொல்லையில் முதிர்ந்த கதிர்கள் உள்ளன. எடுத்துச் சாப்பிடுங்கள். மரங்களில் இனிப்பான பழங்கள் கிடைக்கும். தோட்டத்து பிஞ்சு வெள்ளரிக்காய் உங்கள் தாகம் தீர்ப்பதுடன் பசியையும் போக்கும். எல்லோரும் தயங்காமல் நிறைவாக எடுத்துச் சாப்பிடுங்கள். உங்களது குதிரைகளுக்கும் உண்ணவும், அருந்தவும் கொடுங்கள்’ என்று சொன்னான்.

சரவணப்பட்டனின் வரவேற்பில் மகிழ்ந்த போஜராஜன் தனது படையினருடன் கம்பங்கொல்லைக்குள் நுழைந்தான்.

அவ்வளவுதான் அடுத்த நொடி அந்த தோப்பும், கம்மங்கொல்லையும் துவம்சமாகியது. மன்னனும் அவனது மந்திரி பிரதானிகளும், வீரர்களும் பசியின் காரணமாக கதிர்களை ஒடித்தும், பழ மரங்களை உலுக்கிப் பழங்கள் பறித்தும், வெள்ளரிப் பிஞ்சுகளை பிய்த்தும் பசி தீரச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

பரணில் இருந்து இதை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்த சரவணப்பட்டன், சற்று நேரத்தில் கம்மங்கொல்லைக்குள் நுழைய முயன்ற பன்றி ஒன்றைத் துரத்துவதற்காக பரணை விட்டுக் கீழிறங்கினான்.
அவனது பாதங்கள் தரையில் பட்டதும், சரவணப்பட்டனின் பார்வை மாறிப் போனது. முகம் விகாரமானது. கம்பங்கதிர்களை வீரர்கள் ஒடிப்பதையும், பழ மரங்களை உலுக்கி நாசம் செய்வதையும், விளைந்த வெள்ளரிப் பிஞ்சுகள் எல்லாவற்றையும் ஆளாளுக்கு பிய்த்துச் சாப்பிடுவதையும் கண்டு மனம் பதறினான். மிகுந்த கோபத்துடன் இரைந்து கத்தினான்.

‘ஐயையோ! இந்த அநியாயத்தை கேட்பாரில்லையா! போஜ மன்னரே நீங்களே இப்படி அக்கிரமம் செய்யலாமா? இந்த ஏழை அந்தணனின் கம்பங்கொல்லையை இப்படி அழித்து நாசம் செய்து விட்டீர்களே? இது உங்களுக்கே தகுமா? எனது மொத்த விளைச்சலையும் உண்டு தீர்த்து எனது குடும்பத்துக்கு வருமானம் இல்லாமல் செய்து விட்டீர்களே! ஏழை பிராமணனின் வயிற்றில் அடித்து விட்டீர்களே. இதுவா நீதி? ‘மதம் பிடித்த யானையையும், அகங்காரத்தால் நீதி நெறி தவறி நடக்கும் மன்னையும் யாரால்தான் கட்டுப்படுத்த முடியும்?’ என்று பழமொழி சொல்வார்கள். உங்கள் விஷயத்தில் அது இன்று உண்மையாகி விட்டது. நான் மோசம் போய்விட்டேன், நாசமாகி விட்டேன். ’ என்று புலம்பினான். தலையில் அடித்துக் கொண்டான்.

மன்னன் போஜராஜனும் மற்றோர்களும் இதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். ‘இதென்ன கொடுமை! வரவேற்று உபசரித்தவனே இப்படி தூற்றிப் பேசினால் என்னதான் செய்வது?’

மன்னனும் அவனைச் சார்ந்தவர்களும் ஏதும் மறுமொழி பேசாமல் கம்பங்கொல்லையை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்தபடியே வெறுப்பு ததும்ப சரவணப்பட்டன் மீண்டும் நடந்து பரண் மீது ஏறி நின்றான்.

பரண் மீது கால் வைத்ததுமே அதுவரையில் அவன் முகத்தில் பரவியிருந்த கசப்பும் வெறுப்பும் நீங்கி, பூரண சாந்தம் நிலவியது. மீண்டும் புன்சிரிப்பு தவழ்ந்தது.

தனது கம்மங்கொல்லையிலிருந்து மன்னரும் மற்றவர்களும் வெளியேறுவதைப் பார்த்தவன், குழப்பத்துடன் அவர்களை நோக்கிச் சத்தமாக, ‘அரசே, நில்லுங்கள்! இதென்ன வந்த காரியம் முடியாமல் ஏன் எல்லோரும் பாதியிலேயே வெளியேறுகிறீர்கள்? இப்போதுதானே கம்மங்கதிர்களையும், பழங்களையும் சாப்பிடத் தொடங்கினீர்கள். இன்னும் ஒருவர் முகத்திலும் பசிக் களைப்பு நீங்கியதாகவே தெரியவில்லையே? அதற்குள்ளாக ஏன் புறப்பட்டுச் செல்கிறீர்கள்? இப்படி அரைகுறையாக தாங்களும் தங்களது பரிவாரங்களும் புறப்பட்டு விட்டால் விருந்தாளிகளை சரியாக உபசரிக்கவில்லையே என்று என் மனது வருத்தப்படாதா? தயவுசெய்து மீண்டும் உள்ளே வாருங்கள். வயிறாரச் சாப்பிட்டு, களைப்பு தீர மர நிழலில் தங்கி ஓய்வெடுங்கள். சூரியன் அஸ்தமித்ததும் மாலையில் எல்லோரும் புறப்பட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் என் மனம் திருப்தியாகும்!’ என்றான்.

போஜராஜன், நீதிவாக்கிய மந்திரியிடம், ‘மந்திரியாரே இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதே. இந்த அந்தணன் அந்தப் பரண் மீது இருந்தபோது மிகுந்த மனித நேயத்துடன் காணப்பட்டான். பசியும், களைப்புமாகக் கிடந்த நமது நிலைமையைப் புரிந்துகொண்டு கொல்லையில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி தாராள மனத்துடன் உபசரித்தான். ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம் பரண் மீதிருந்து கீழிறங்கியவன் ஒரு சாமான்யனுக்கே உரித்தான சுயநலத்துடன் கொல்லை நாசமானதற்காக கோபத்தில் கொதித்து நம்மை விரட்டியடித்தான். இப்போதோ மீண்டும் பரண் மீது ஏறியதும் நாம் பசிக்களைப்பு தீராமல் திரும்புவதைக் கண்டு வருத்தப்பட்டு அதே பழைய நற்குணத்துடன் உபசரிக்கிறான். இது மிகவும் விசித்திரமாகவும் புதிராகவும் இருக்கிறது. என்னக்கென்னவோ இந்தப் புதிருக்கான விடை அந்தப் பரண்மீதுதான் உள்ளதென்று தோன்றுகிறது. ’ என்றான்.

‘ஆம் மன்னவா! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவன் நடத்தையே எனக்கு மிகவும் அதிசயமாயிருக்கிறது!’ என்றார் மந்திரி.

‘இருங்கள். நான் அந்த பரண் மீது ஏறிப்பார்த்து விட்டு வருகிறேன்’
மன்னன் போஜராஜன் விறுவிறுவென நடந்து சென்று சரவணப்பட்டன் நின்றிருந்த பரண் மீது ஏறினான்.

அடடா! அடடா! என்ன உணர்விது! மன்னன் பரண் மீது ஏறி நின்றதுமே தனக்குள் பெறும் மாறுதலை உணர்ந்தான். பிறவியெடுத்தது முதல் இதுவரை உணர்ந்திராத ஒரு பேரமைதி அவனுக்குள் நிலவியது. பிரபஞ்சத்தின் மீதான அத்தனை ஜீவன்களின் மீதும் பேரன்பு பொங்கித் ததும்பியது. ஒரு பெரும் ஞானநிலை; உத்தம குணங்களின் மொத்த பெட்டகமாக அவனது இதயம் நிறைந்து வழிந்தது. போஜராஜனிடம் அந்தச் சமயத்தில் யார் என்ன கேட்டாலும், அவனது ராஜ்ஜியத்தையே கேட்டாலும், ஏன் அவனது உயிரையே கேட்டாலும் தந்து விடுவான். போஜராஜன் ஆனந்தமும் ஆச்சர்யமும் கொண்டான். ‘என்ன இது அதிசயம்! அழகான இந்தக் கம்மங் கொல்லைக்குள், அதுவும் இந்தப் பரண் மீது ஏறியதுமே அப்போதுதான் பிறந்த குழந்தையின் நிர்மலமான இதயம் போல உள்ளம் எந்தக் களங்கமும் இல்லாமல் புனிதமாகத் திகழ்கிறதே. என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதைக் கண்டுபிடிப்பது?’

போஜன் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் சரவணப்பட்டனிடம், ‘அந்தணரே, இந்தக் கொல்லையின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டுதான் தங்கள் குடும்பம் வருடம் முழுவதும் ஜீவிக்க வேண்டும் என்பதை நானறிவேன். ஆனால் இன்று நானும் எனது பரிவாரத்தினரும் எங்கள் பசிக்காக இந்தக் கம்மங்கொல்லையின் மொத்த விளைச்சலையும் உண்டு தீர்த்து விட்டோம். இதனால் தாங்களும், தங்களது குடும்பத்தினரும் வருடம் முழுவதும் சிரமப்பட நேரிடும் என்பதால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நானே இந்த கம்மங்கொல்லையை வாங்கிக் கொள்கிறேன். இதற்கு ஈடாக பொன்னோ, பொருளோ, பல நூறு மடங்கு நிலமோ நீங்கள் எது கேட்டாலும் விலையாகத் தருகிறேன். என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். இதில் தங்களுக்குச் சம்மதம்தானே?’ என்று கேட்டான்.

சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த சரவணப்பட்டன் மிகுந்த பணிவுடன், ‘அரசே, தாங்களே எனது வரம் தரும் கடவுள். பகவானின் கடைக்கண் பார்வையில் பக்தனின் துயரங்கள் தொலைந்து போகும் என்பது போல எனது இந்தக் கம்மங்கொல்லையை தாங்கள் பெற்றுக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தங்களது இந்த அநுக்கிரகத்தால் நான் பெரும் பாக்கியசாலியும், தன்வந்தனாகவும் ஆவேன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனக்கு இதில் முழு சம்மதம். தாங்கள் இதற்கு விலையாக எதைத் தந்தாலும் பெற்றுக்கொள்கிறேன்.’ என்று வணங்கினான்.

மன்னன் போஜ ராஜன் அடுத்தநாளே சரவணப்பட்டனை அரசவைக்கு வரவழைத்து ஏராளமான பொன்னும், மணிகளும், பட்டாடைகளும், தங்க ஆபரணங்களும் பரிசளித்து, கம்மங்கொல்லைக்கு ஈடாக ஒரு பெரும் கிராமத்தையே எழுதித்தந்து அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான்.
உடனே காலம் தாழ்த்தாமல் அரண்மனை வேலையாட்களை காட்டுக்கு அனுப்பி, கம்மங்கொல்லையின் பரணுக்கு கீழ் பூமியைத் தோண்டும்படியாகக் கட்டளையிட்டான்.

மன்னனின் ஆணைப்படி வேலையாட்கள் பரணை அகற்றிவிட்டு, பூமியைத் தோண்டத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட ஆறடிக்குக் கீழ் பள்ளம் வெட்டி மேலும் தோண்ட முற்படும்போது மண்வெட்டி ஏதோ உலோகத்தில் பட்டு ‘டிங்’ என்ற சத்தம் எதிரொலித்தது.

அதன்பின் ஆட்கள் சர்வ ஜாக்கிரதையாக கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டத் தொடங்க, பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்ட வஸ்துவைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான் போஜராஜன்.

அழகிய கலை நுணுக்கத்துடன் வைர வைடூரியங்கள் ஒளிர ஒரு நவரத்தின சிம்மாசனத்தின் மேற் பகுதி மெல்ல வெளிப்பட்டது. அதைக் கண்டதுமே போஜ மன்னன் கட்டுக்கடங்காத ஆனந்தமும் ஆச்சரியமும் கொண்டான். முழு சிம்மாசனத்தையும் மெல்ல மெல்ல ஒரு சிறு சிதைவும் நேராமல் எடுக்கச் சொன்னான்.

அதுபோலவே ஆட்கள் நாலாபுறமும் மிகுந்த ஜாக்கிரதையாக மண்ணை அகழ்ந்து போட சிறு சேதாரமும் இன்றி முழு சிம்மாசனமும் காணக் கிடைத்தது.

ஆஹா! என்ன அற்புதம்! முழுக்க முழுக்க பசும் பொன்னால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் இழைக்கப்பட்டு ஜொலித்த அந்த சிம்மாசனம், முப்பத்திரண்டு படிகளுடன், ஒவ்வொரு படிக்கும் ஒரு பதுமையாக முப்பத்திரண்டு பதுமைகள் கொண்டதாக அமைந்திருந்தது.
சிம்மாசனத்தைப் பார்க்கப் பார்க்க பரவசம் கொண்ட போஜராஜனின் மனம் துள்ளிக் குதித்தது.

இந்த சிம்மாசனம் புதையுண்டு கிடந்த இடத்தின் மீது நின்ற போதே மனத்தில் உயர்ந்த நற்குணங்கள் உண்டாகின என்றால், இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தால் எத்தனை உயரிய ஆட்சியைத் தரமுடியும்; இதனால் தனக்கு எத்தனை பெயரும், புகழும் உண்டாகும் என்று நினைத்துப் பார்த்தான்.

போஜன் சிறகடிக்கும் மனத்துடன் சிம்மாசனத்தை சர்வ ஜாக்கிரதையாக பள்ளத்திலிருந்து மேலே கொண்டு வரச் சொன்னான். ஆட்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிம்மாசனத்தை உயரே தூக்க முயற்சித்தனர். கிட்டத்தட்ட ஐம்பது பேர். ஆனால் சிம்மாசனத்தை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது. போஜராஜன் நீதிவாக்கிய மந்தியிடம் திரும்பி, ‘அமைச்சர் பெருமானே, சிம்மாசனம் இந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறதே! என்ன காரணமாக இருக்கும்?’ என்று துயரத்துடன் வினவினான்.

‘மன்னவா, வருத்தப்படாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும்! இந்தச் சிம்மாசனம் யாருடையதென்று நமக்குத் தெரியாது. எத்தனை யுகங்களுக்கு முற்பட்டதென்றும் தெரியாது. இதில் அமர்ந்து ஆட்சி செய்தவர்கள் தேவலோகத்தின் தேவாதி தேவர்களாக இருக்கலாம். கந்தர்வ, கின்னரர்களாக இருக்கலாம். அதனாலேயே இந்த சிம்மாசனம், தெய்வாம்சம் கொண்டதாகத் திகழ்கிறது. அப்படியிருக்க இதை சாமான்யர்களாகிய நாம் அத்தனை சுலபமாக அடைந்து விட முடியுமா என்ன? சாதாரண ஒரு புதையலை எடுக்கவே முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்விக்கும்போது, இந்த சிம்மாசனத்தை தாங்கள் அடையும் முன்பாக அதற்கென பரிகார பூஜைகள் செய்து பிராமணர்களுக்கு தான தர்மங்கள் செய்வித்து பிறகு சிம்மாசனத்தை அணுகினால் எல்லாம் நன்மையாகவே முடியும் என்பது என் எண்ணம்!’ என்றார்.

போஜராஜன் நீதிவாக்கிய மந்திரியின் ஆலோசனைப்படியே அரண்மனை புரோகிதர்களை வரவழைத்து அவ்விடத்திலேயே சிம்மாசனத்துக்கு சகல சம்பிரதாயங்களோடு, சாஸ்திர முறைப்படி பூஜை செய்வித்தான். பூஜையின் முடிவில் அந்தணர்களுக்கும், ஏழை எளியோர்க்கும் தான தர்மம் செய்வித்து, சிம்மாசனத்தை பக்தியுடன் வணங்கி நிறைவு செய்தான். அதன் பிறகு காவலர்கள் சிம்மாசனத்தை தூக்க முயற்சிக்க, அந்த அதிசயம் நிகழ்ந்தது! சிம்மாசனம் அசைந்து கொடுத்தது.

போஜராஜன் மகிழ்ந்து போனான். நீதிவாக்கிய மந்திரியின் சமயோசித ஆலோசனைதான் இந்த அற்புதத்துக்குக் காரணம் என்று எண்ணியபோது, ஒரு நாட்டுக்கு மதியூகியான நல்ல மந்திரி எத்தனை அவசியம் என்பதை தீர்மானமாக உணர்ந்தான். அதைச் சொல்லவும் செய்தான்.

‘மந்திரியாரே தங்களது அறிவுரையும் ஆலோசனையும் இல்லாதிருந்தால் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்காது! அறிவாளிகளுடன் நட்பு கொள்வதென்பது எத்தனை சிறந்தது என்பதை நான் இப்போது உணர்கிறேன்’ என்றான்.
நீதிவாக்கிய மந்திரி, ‘மன்னா, தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த நல்ல நிகழ்வுக்குக் காரணம் நான் மட்டும் அல்ல; நான் கூறிய ஆலோசனையை, ‘இவனென்ன சொல்வது? நாமென்ன கேட்பது?’ என்றில்லாமல் அதை மதித்து ஏற்றுக் கொண்டீர்கள் அல்லவா, அதுதான் முக்கியம். ஒருவன் எத்தனை சிறந்த அறிவாளியாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்டு ஏற்றுக் கொள்பவனே புத்திசாலி. அப்படியில்லாதவன் அழிவையே எதிர்கொள்வான்.

‘அதுபோலவே மந்திரியும் தனது கருத்தையும் யோசனைகளையும் வலுக்கட்டாயமாக மன்னனின் மேல் திணிக்கக்கூடாது என்பதும் முக்கியம். அரசனின் எண்ணப் போக்கை உணர்ந்து, அதற்கேற்ப பக்குவமாக நடந்து மன்னனுக்கு நன்மையே உண்டாகும்படியாக நடந்து கொள்ளவேண்டும். அதாவது, நந்தமன்னனை அவனது மந்திரி பஹுசுருதன் என்பவர் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து காப்பாற்றியது போல!’ என்றார்.

‘அடடா! அது என்ன கதை அமைச்சரே? எனக்குச் சொல்லுங்கள்’ ஆவலுடன் கேட்டான் போஜ ராஜன் . நீதிவாக்கிய மந்திரி சொல்லத் தொடங்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மந்திரி பஹூசுருதன் கதை – 1

விக்கிரமாதித்தன் கதைகள் / 2

a32b9a9a59562291c5216ea4c3b9073cவிசாலை என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் நந்தன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். விசாலை நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று பகைவர்களே இல்லாமல் செய்து, ராஜ்ஜியத்தை மிக நல்ல முறையில் அரசாட்சி செய்து வந்தான்.

நந்தனின் மனைவி, பட்டத்து ராணி பானுமதி. இவர்களது ஒரே மகன் ஜெயபாலன். பராக்கிரமசாலியான மன்னன் நந்தனுக்கு பக்க பலமாக நின்று வழிநடத்தியவர் அமைச்சர் பஹூசுருதன். ஆட்சி அதிகாரத்தின் எல்லாத் தருணங்களிலும் மந்திரியின் ஆலோசனையைத் தவறாமல் கேட்டுக்கொள்வது மன்னனின் வழக்கம்.

இதுநாள்வரையில் அமைச்சர் பஹூசுருதன் வழிகாட்டலில், அவரது ஆலோசனையில் மன்னனுக்கும் தேசத்துக்கும் நல்லதுதான் நடந்திருக்கிறதே தவிர எந்தக் கெடுதலும் நேர்ந்ததில்லை. ஆனால் இப்போதோ… அவர் சொன்ன ஒரு சிறிய ஆலோசனை; அதன்படி வரையப்பட்ட ஓர் ஓவியம் – அப்பாவி ராஜகுருவுக்கு மரணத்தையே கொண்டு வந்துவிட்டது!

ராஜகுருவுக்கு மரணதண்டனை விதித்தவன் மன்னன் நந்தன்.

இத்தனைக்கும் மன்னன் நந்தன் கொடுங்கோலனோ, சர்வாதிகாரியோ அல்ல! மிக நல்லவன்தான்!

அவனிடம் ஒரேயொரு சிறிய பலவீனம் உண்டு. அந்த பலவீனம் காரணமாக மந்திரி பஹூசுருதன் எடுத்த நடவடிக்கைதான் இப்படியோர் சிக்கலில் வந்து முடிந்துவிட்டது.

அது என்னவென்றால், நந்தனின் மனைவி பானுமதி மிக மிக அழகானவள்! தேவலோகத்து பெண்களுக்கு நிகராக வனப்பும், வசீகரமும் கொண்டவள்.
இதுதான்… இந்த அழகுதான் மன்னன் நந்தனின் மிகப் பெரிய பலவீனம்!
அழகின் அரசியான பானுமதியை விட்டு சிறிது நேரமும் பிரிந்திருக்க சம்மதிக்க மாட்டான் நந்தன். பானுமதி எப்போதும் சதா சர்வ காலமும் அவன் அருகிலேயே இருக்க வேண்டும்.

தினப்படி ராஜசபைக்குக்கூட பானுமதியை உடன் அழைத்துக்கொண்டுதான் வருவான். சிம்மாசனத்தில் தனக்குப் பக்கத்திலேயே அமர்த்திக் கொள்வான். (அந்தக் கால கட்டத்தில் மகாராணிகள், இளவரசிகள் போன்ற அரண்மனைப் பெண்கள் யார் கண்களுக்கும் படாமல் அந்தப்புரத்திலேயே இருப்பதுதான் வழக்கமாக இருந்தது. வெளியில் செல்லும்போதும் மூடு பல்லக்குதான்.)
மன்னன் நந்தனின் இந்தப் பலவீனம்தான் மந்திரி பஹூசுருதனுக்குப் பிடிக்கவேயில்லை.

‘நாளெல்லாம் ராஜ சபைக்கு எவன் எவனோ வந்து போகிறான். எல்லோர் பார்வையும் ஒன்று போலவே இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இதில் கள்ளப்பயலும் இருப்பான், காமாந்திரனும் இருப்பான், பார்வையிலேயே அழகை அள்ளி விழுங்கி மனத்திலேயே படுக்கை போட்டு விடுவார்களே’ என்று புலம்பித் தவித்தார். மகாராணி பானுமதிக்கும் இது பிடிக்கவில்லை என்பதையும் உணர்ந்தார்.

எத்தனைநாள்தான் மனத்துக்குள்ளேயே வைத்திருந்து புலம்பித் தவிப்பது? மன்னனிடம் இது சரியல்லவென்று சொல்லிவிடத் தீர்மானித்தார்.
ஒருநாள், ‘அரசே! நான் தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றி பேச வேண்டும்.!’ என்று தொடங்கினார்.

‘நான் சொல்லப் போகும் விஷயம் தங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனாலும் சொல்ல வேண்டியது எனது கடமை என்பதால், அதை எப்படிச் சொல்வது என்றுதான்…’ மந்திரி இழுக்க…

‘அமைச்சரே, தயங்க வேண்டாம்; நீங்கள் எதைச் சொன்னாலும், அது நாட்டுக்கும், எனக்கும் நன்மை அளிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். தைரியமாகச் சொல்லுங்கள்’ – ஊக்கமளித்தான் நந்தன்.

‘நன்றி மன்னவா. ராஜகுடும்பத்தின் நற்பெயர் காரணமாகவே இதை நான் தங்களுக்குச் சொல்கிறேன். மகாராணியின் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பு நான் அறியாததல்ல. ஆனாலும் தாங்கள் ராஜசபையிலும் மகாராணியை கூடவே அழைத்து வந்து சிம்மாசனத்தில் அமர்த்திக்கொள்வது அவ்வளவு நல்லதென்று எனக்குப் படவில்லை. சபைக்கு வரும் நபர்களில் சில பேர் மகாராணியின் அழகை விழுங்கும்விதத்தில் பார்ப்பதும், அதன் காரணமாக மகாராணியார் பானுமதி சங்கடத்தில் தவிப்பதும், மிகவும் கொடுமை அரசே!’

‘மந்திரி பஹூசுருதனாரே, தாங்கள் சொல்ல வருவது எனக்கும் புரிகிறது. ஆனால் நான் என்ன செய்வேன்? பானுமதியைப் பார்க்காமல் என்னால் ஷணநேரம்கூட இருக்கமுடியவில்லையே. ராஜசபையில் நாளெல்லாம் அவளைக் காணாமல் நான் தவித்துப் போய்விடுவேன் மந்திரியாரே!’ – பரிதாபமாகச் சொன்னான் நந்தன்.

மந்திரி பஹூசுருதன் சிந்தித்தார். சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட்டது.
‘சரி, அப்படியானால் ஒன்று செய்வோம் மன்னா! ஒரு நல்ல ஓவியனை அழைத்து மகாராணியார் பானுமதியாரை ஆளுயரத்துக்கு உயிரோவியமாகத் தீட்டச் சொல்வோம். அதை ராஜசபையில் உங்கள் கண் முன்பாகத் தொங்கவிடலாம். இதனால் தங்கள் எண்ணமும் ஈடேறும். மகாராணியின் தர்மசங்கடமும் தீரும்!’ என்றார்.

மன்னன் நந்தனுக்கு இந்த யோசனை பிடித்துப் போனது. உடனேயே சிறந்த ஓவியனை தேடி அழைத்து வரக் கட்டளையிட்டான்.

அரண்மனை ஆட்கள் அலசி ஆராய்ந்து ஓவியன் ஒருவனை அழைத்து வந்து மன்னன் முன் நிறுத்தினார்கள்.

மன்னன் அவனிடம், ‘ஓவியரே, நமது மகாராணியை மிகத் தத்ரூபமாக ஆளுயரத்தில் தாங்கள் வரைந்து தர வேண்டும். முடியுமா?’ என்று கேட்டான்.

‘மகாராஜா! நான் மலர் ஒன்று வரைந்தால் பட்டாம்பூச்சிகள் நிஜமென்று ஏமாந்து போய் அம்மலரினுள் தேனுன்ன வந்து விடும். அத்தனை தத்ரூபமாக இருக்கும் எனது படைப்பு. மகாராணியை ஒருமுறை பார்த்தால் போதும். அச்சு அசலாக அவரை அப்படியே வரைந்து கொடுத்து விடுவேன்.’ என்றான்.

மன்னன் அவனை அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தான்.

மகாராணி பானுமதியைப் பார்த்ததுமே, முதல் பார்வையிலேயே அவள் சாமுத்திரிகா லட்சண சாஸ்த்திரத்தின்படி, நால்வகைப் பெண்களான பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினியில் முதல் தரமான பத்தினி வகையைச் சேர்ந்தவள் என்பதை ஓவியன் உணர்ந்துகொண்டான்.

பத்தினி வகைப் பெண்கள், கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பார்கள். இயற்கையாக நறுமணம் மிக்க மெல்லிய சரீரம், செண்பக மலர் போன்ற சிவந்த நிறம், சிற்பம் போன்ற உடலமைப்பு, நீண்டு கருத்த மெல்லிய கூந்தல், முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகம், விசாலமான நெற்றி, செவ்வரி படர்ந்த கண்கள், பிறை போன்ற புருவங்கள், மான் போன்ற மருண்ட பார்வை, எள்ளின் பூ போன்ற அழகிய நாசி, கொவ்வை பழம் போன்ற சிவந்த வாய், முத்து போன்ற நெருங்கிய பற்கள், வலம்புரி சங்குக் கழுத்து, உருண்ட தோள்கள், இனிய சொற்கள், பொய் பேசாத குணம், அன்ன நடை, உரத்துப் பேசாத குயிலுக்கு ஒப்பான குரல் என பத்தினியின் அத்தனை குணநலன்கள் படி பானுமதி இருந்தாள்.

ஓவியன் அந்த அங்க சாஸ்திர சாமுத்திரிகா லட்சணங்களின்படியே பானுமதியை வரைந்து எடுத்துக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்தான்.
ஓவியத்தைப் பார்த்த மன்னன் நந்தன் பிரமித்துப் போனான். ‘ஆஹா! அற்புதம். பிரமாதம். ஓவியனே, இந்தத் தத்ரூபமான ஓவியத்தால் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டாய்! பரிசாக உனக்கு என்ன வேண்டும் கேள்!’ என்று மனம் திறந்து பாராட்டிச் சொன்னான்.

இதனால் கர்வம் கொண்ட ஓவியன், ‘அரசே நான் தங்கள் அரண்மனைக்கு வந்ததே தங்களது அதிர்ஷ்டம்தான். ஏனெனில் என்னை நாலாதிசைகளிலும் பல மன்னர்களும் வேண்டி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். காரணம், ஓவியத் திறமையில் என்னைப் போல இந்த உலகில் வேறு யாருமே கிடையாது!’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

அப்போது இதைக் கேட்டுக் கொண்டே மன்னனின் குருநாதரான ராஜகுரு சாரதாநந்தனர் ஒரு புன்முறுவலுடன் உள்ளே வந்தார்.

ஓவியன் வரைந்திருந்த மகாராணி பானுமதியின் ஓவியத்தை நிதானமாகப் பார்த்தவர், ஓவியனிடம் திரும்பி, ‘ஓவியனே, நிஜமாகவே நீ திறமைசாலிதான். அரசியாரின் ஓவியத்தை மிகத் தத்ரூபமாக வரைந்திருக்கிறாய் என்பது உண்மைதான்; என்றாலும் மகாராணியின் தோற்றத்தில் ஒரு முக்கிய அம்சத்தை நீ குறிப்பிடத் தவறிவிட்டாயே!’ என்றார்.

‘இருக்காதே! மிகத் துல்லியமாகவே நான் வரைந்திருக்கிறேன். அப்படி எந்த அம்சத்தை நான் வரையத் தவறி விட்டேன் என்பதை தாங்கள் எனக்கு சொல்ல முடியுமா?’

‘மகாராணியாரின் இடது துடையில் எள் அளவு மச்சம் உண்டு. அந்த மச்சத்தை நீ குறிப்பிடத் தவறிவிட்டாய்!’ என்று ராஜகுரு சொல்ல ஓவியன் தலை குனிந்தான்.

ராஜகுரு சாரதா நந்தனர் இவ்வாறு கூறியதுமே மன்னன் நந்தனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஓவியனுக்கு சன்மானம் அளித்து அனுப்பியதோ, ராஜகுரு விடைபெற்றுக் கொண்டதோ எதுவுமே நினைவில் தங்காமல், மகாராணியின் மச்ச சமாச்சாரமே அவன் மனத்தை வியாபித்திருந்தது.
‘ராஜகுரு சொன்னது உண்மைதானா அல்லது ஓவியனை மட்டம் தட்டுவதற்காக பொய் சொன்னாரா? நந்தன் உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக அந்தப்புரத்துக்கு விரைந்தான்.

மகாராணியும் அவனும் தனித்திருக்கும்போது பானுமதியின் இடது துடையைப் பரிசோதித்தான். ஆம்! அவளது துடையில் எள் அகல மச்சம் இருந்தது!

மன்னன் நந்தன் உக்ரமானான். மகாராணியின் துடையில் இருக்கும் மச்சத்தை ராஜகுரு எப்படி அறிந்திருக்க முடியும்? அப்படியானால் அவருக்கும், மகாராணிக்கும் இடையில் ஏதோ ரகசியத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மச்ச சமாச்சாரம் அவருக்குத் தெரிந்திருக்க சாத்தியமில்லை!’

நினைக்க நினைக்க அவன் நெஞ்சு கொதித்தது.

மன்னன் நந்தன் உடனடியாக மந்திரி பஹூசுருதனை வரவழைத்து நடந்தது அனைத்தையும் தெரிவித்தான்.

மன்னன் என்ன நினைக்கிறான் என்பது மந்திரிக்கு புரிந்து போனது.
‘நிச்சயமாக தவறு நடந்திருக்கிறது மந்திரி. நான் அப்படித்தான் சந்தேகப்படுகிறேன். யாரையும் நான் நம்பத் தயாராயில்லை. காமத்திலும், மோகத்திலும் இந்த உலகில் யாரும் உத்தமர் இல்லை. பானுமதியின் மேல் நான் அளவு கடந்த பாசம் வைத்துவிட்டேன். அவளை என்னால் தண்டிக்க முடியாது. ஆனால் இந்த ராஜகுருவை கண்டிப்பாக தண்டித்தே தீரவேண்டும். அவனுக்கு மரண தண்டனை அளித்து விடுங்கள்.’

அவ்வளவுதான், மன்னன் விநாடி நேரத்தில் தீர்ப்பெழுதி விட்டான். மந்திரி பஹூசுருதனுக்கும் வேறு வழியிருக்கவில்லை! அரசன் இப்போது ஆத்திரத்தில் அறிவிழந்திருக்கும்போது தான் என்ன சொன்னாலும் அது தவறாகத்தான் தோன்றும் என்பதால் மன்னன் கட்டளைப்படியே ராஜகுருவை கைது செய்ய, தானே வீரர்களுடன் புறப்பட்டார்.

ராஜகுரு சாரதா நந்தனரின் வீட்டை அடைந்து அவரிடம் மன்னனின் கட்டளையைத் தெரிவித்தார் பஹூசுருதன்.

இதைக் கேட்ட ராஜகுரு மனம் உடைந்து போனார். ‘ராஜ்ஜியத்தை ஆளும் அரசனுக்கு நட்பு, நன்றி, அன்பு, பாசம், உறவு ஏதும் கிடையாது என்பது எத்தனை உண்மை’ என்று எண்ணினார்.

கைது செய்யப்பட்டு வீரர்களுடன் புறப்பட முனையும்போது ராஜகுரு சாரதா நந்தனர், மந்திரியிடம், ‘மந்திரியாரே, ஒரு நல்ல மனிதன் என்பவன் எத்தனை சிக்கல்களில் சிக்கினாலும், துன்பங்களில் வதைபட்டாலும், சாகும் தறுவாயிலும்கூட, அவனவன் செய்த நற்காரியங்களின் பலாபலன்களாலேயே காப்பாற்றப்படுகிறான்! நான் எந்தத் தவறும் செய்யாத உத்தமன் என்பது உண்மையானால் நானும் காப்பாற்றப்படுவேன்!’ என்று சூசகமாகக் கூறினார்.

மந்திரி பஹூசுருதன் ஒரு கணம் யோசித்தார். ராஜகுருவின் மேல் தவறு இருக்குமென்று அவருக்குத் தோன்றவில்லை. எது ஒன்றையும் ஆராயாமல் கண்மூடித்தனமாக மன்னன் விதித்த தண்டனையிலிருந்து ராஜகுருவைக் காப்பாற்றத் தீர்மானித்தார்.

இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் ராஜகுருவை தனது மாளிகைக்கே அழைத்துச் சென்று ஓர் அறையில் பதுக்கி வைத்தார். காலம் கனியும்போது வெளிப்படலாம் என்று ராஜகுருவுக்கு ஆறுதல்கூறி எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.

காலம் உருண்டது. மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், மன்னன் நந்தனின் மகனான ஜெயபாலன் வேட்டையாடுவதற்காக படை, பரிவாரங்களுடன் காட்டுக்குப் புறப்படத் தயாரானான். அவனுடைய நெருங்கிய நண்பனான புத்திசாகரன் வழியனுப்புவதற்காக வந்திருந்தான். மந்திரி பஹூசுருதனின் மகன் தான் இந்த புத்திசாகரன்.

அரசகுமாரன் கிளம்ப யத்தனிக்கும்போது, சில கெட்ட சகுனங்கள் தென்பட்டன. கறுப்புப் பூனை ஒன்று குறுக்கே போனது. ஒற்றை பிராமணர் ஒருவர் எதிரே வந்தார். காலம் கெட்ட காலத்தில் ஆந்தையின் அலறல் சப்தம் கேட்டது. ஒருவன் தலை மீது விறகுக்கட்டைகளை சுமந்து போனான். திடீரென்று மேகங்கள் திரண்டு மூடி வானம் இருண்டு போனது.

புத்திசாகரனின் மனதில் சஞ்சலம் மிகுந்தது. அவன் ஜெயபாலனிடம், ‘நண்பா, அரசகுமாரா, நீ இன்று வேட்டைக்குச் செல்ல வேண்டாம். புறப்படும்போதே துர்ச்சகுனங்கள் தென்படுகின்றன. இதனால் ஏதாவது கேடு விளையுமோ என்று தோன்றுகிறது. இன்னொரு நாள் செல்லலாம்.’ என்றான்.

ஆனால் ஜெயபாலனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையுமில்லை. உடன்பாடும் இல்லை. அவன் புத்திசாகரனிடம், ‘நண்பா, முடிவெடுத்த பிறகு எதையுமே தள்ளிப் போடுவது எனக்குப் பிடிக்காது. அப்படியேனாலும், இந்த சகுனத்தடைகளால் என்னதான் நேருகிறதென்று அதையும்தான் பார்த்து விடுகிறேனே!’ என்றான்.

‘எதைத்தான் சோதிப்பது என்று வரைமுறை கிடையாதா ஜெயபாலா? விஷம் குடித்தால் என்னவாகும் என்று குடித்துப் பார்த்தா சோதனை செய்வது? எந்த ஒரு புத்திசாலியும் இது போன்ற விஷயங்களை பரீட்சை செய்து பார்க்க முன்வரமாட்டான். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!’ என்றான்.

ஆனாலும் ஜெயபாலன் அவன் பேச்சை மறுத்து விடாப்பிடியாக வேட்டைக்குப் புறப்பட்டான்.

வேட்டையில் பலவிதமான மிருகங்களையும் கொன்று விட்டு, குதிரையில், ஒரு மானைத் துரத்திச் சென்றபோது ஜெயபாலன் தனது படை, பரிவாரத்தினரை விட்டுவிட்டு வெகு தொலைவு சென்று விட்டான். மானும் இவனுக்கு போக்கு காட்டிவிட்டு மறைந்து விட, ஜெயபாலன் நடுக்காட்டில் சிக்கிக் கொண்டான். திக்கு திசை தெரியவில்லை. எங்கிருக்கிறோம் என்றோ, எந்தப் பக்கம் போவது என்றோ வழி புலப்படவில்லை. தாகத்தால் தொண்டை வறண்டது.

அரசகுமாரன் குதிரையை அங்கும் இங்குமாகச் செலுத்தி தண்ணீரைத் தேடினான். சற்று தூரத்தில் தண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்டாறைக் கண்டான். மனம் குதூகலித்தான். குதிரையை விட்டுக் குதித்து மிகுந்த ஆவலுடன் ஓடோடிச் சென்று கை, கால் முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ஆற்று நீரை அள்ளி அள்ளிப் பருகி தாகம் தணிந்தான்.

பின் குதிரையை தண்ணீர் பருக விட்டு விட்டு சற்றுத் தள்ளி ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் நிழலில் போய் அமர்ந்து கொண்டான்.

அப்போதுதான் அரசகுமாரனை நோக்கி அந்த ஆபத்து பாய்ந்து வந்தது!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மந்திரி பஹூசுருதன் கதை – 2

விக்கிரமாதித்தன் கதைகள் / 3

4514004ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் ஜெயபாலன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்! குதிரையின் பயத்துக்கான காரணம் புரிந்தது.

அவன் அமர்ந்திருந்த மரத்தின் நேரெதிரே இருந்த அடர்ந்த புதரிலிருந்து புலி ஒன்று பயங்கர உறுமலுடன் வெளிப்பட்டது. பாய்ச்சலுக்குத் தயாரானது. குதிரை அதைப் பார்த்த கணமே சிட்டாகப் பாய்ந்தோடி விட, புலியின் பார்வை அரசகுமாரன் மேல் திரும்பியது.

ஜெயபாலன் பயமும் திகைப்புமாக புலியிடமிருந்து தப்பிக்க வழி தேடினான். எந்தப் பக்கம் ஓடினாலும் புலியின் பாய்ச்சலுக்கு தான் இரையாகி விடுவோம் என்று தோன்ற, சட்டென்று பொறி தட்டியது. அதுவரை தான் அமர்ந்திருந்த அடர்ந்த மரத்தின் மீது மளமளவென்று ஏறினான்.

அடக் கடவுளே! அங்கே அவன் எதிர்பாராத இன்னொரு அபாயம் காத்திருந்தது!
மரத்தின் மேற்புற கிளையொன்றில் ஒரு பெரும் கரடி அமர்ந்திருந்தது!

அரசகுமாரன் வெலவெலத்துப் போனான். இதென்ன சோதனை? வாணலிக்குத் தப்பிய மீன் தீயில் விழுந்தது போல, புலிக்குப் பயந்து மேலே ஏறினால் கரடி! கரடிக்குப் பயந்து கீழே இறங்கினால் புலிக்குப் பலியாகிப் போவது நிச்சயம். அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. திகிலில் மூர்ச்சையாகிப் போய் விடுவோம் என்று தோன்றியது.

அப்போது அரசகுமாரனைப் பார்த்து அந்தக் கரடி பேசியது:

‘ராஜகுமாரா, பயப்படாதே. இந்த மரம் நான் வசிக்கும் வீடு. புலிக்குப் பயந்து என் வீட்டுக்குள் நுழைந்த நீ என் விருந்தாளி. எனவே நான் உனக்கு அபயம் அளித்துக் காப்பாற்றுகிறேன். புலியைக் கண்டு கவலை கொள்ளாதே! அது போகும்வரை நீ இங்கேயே இருக்கலாம்!’ என்றது.

அரசகுமாரன் நிம்மதியடைந்தான். கரடியின் கீழே இன்னொரு அடர்ந்த கிளையின் மீது அமர்ந்தபடி, ‘கரடியே, மிக்க நன்றி. ஒரு உயிரைக் காப்பதென்பது தர்மத்திலேயே மிகப் பெரிய தர்மமாகும். இதனால் உனக்கு ஏழு பிறப்புக்கும் புண்ணியம் கிட்டும்.’ என்றான்.

அதற்கும் மேல் புலி அவ்விடத்தை விட்டுச் செல்வதற்காக அரசகுமாரனும், கரடியும் காத்திருந்தார்கள். ஆனால் புலி அங்கிருந்து கொஞ்சமும் நகர்வதாயில்லை. சூரியன் மறைந்து நிலவு வந்த பிறகும் புலி அங்கேயே காத்திருந்தது.

நேரம் கரைந்து கொண்டேயிருக்க, நிலவு உச்சிக்கு வந்து நடு இரவாகியது. பசியும், களைப்புமாக ஜெயபாலன் சோர்வடைந்து போனான். தூக்கம் அவன் கண்களைச் சுழற்றியது. உட்கார்ந்தபடியே தூங்கி வழியத் தொடங்கினான்.
இதைப் பார்த்த கரடி, ‘ராஜகுமாரா, உனக்கு தூக்கம் வந்துவிட்டது. ஆனால் நீ இப்படி உட்கார்ந்தவாறு தூங்குவது சரியல்ல. ஆழ்ந்த தூக்கத்தில் நீ கிளையிலிருந்து சரிந்து கீழே விழுந்து விட்டால் சரியாக புலியின் வாயில் சிக்கிக் கொள்வாய். பயப்படாதே, இங்கே வா. என் மடியில் படுத்துக் கொண்டு பயமில்லாமல் நிம்மதியாக உறங்கு!’ என்றது.

அரசகுமாரனும் கரடியின் மடியில் படுத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கத் தொடங்கினான்.

அவன் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போனதும் கீழிருந்த புலி, மரத்திலிருந்த கரடியிடம் சமத்காரமாகப் பேசத் தொடங்கியது.

‘கரடியே, உனக்கென்ன பைத்தியமா? நாமெல்லாம் ஒரே இனம். மிருக இனம். வன விலங்குகள் நாம். மனிதன் என்பவன் நமது இனத்துக்கு எதிரியாவான். அதுவும் இவன் நமது இனத்தை, மிருகங்களை வேட்டையாட வந்தவன். அப்படிப்பட்ட பாதகனுக்குப் போய் உதவி செய்கிறாயே, இது தகுமா? நான் சொல்வதைக் கேள்; உன் மடியிலிருக்கும் ராஜகுமாரனை கீழே தள்ளி விடு. நான் இன்னும் ஏதும் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடக்கிறேன். எனக்கு உணவிட்ட புண்ணியம் உனக்குச் சேரட்டும்!’ என்றது.

‘புலியே, உன் சாமர்த்தியமான பேச்சு என்னிடம் எடுபடாது. இந்த அரசகுமாரன் எதிரியோ, நண்பனோ; நான் இவனுக்கு வாக்களித்திருக்கிறேன். அதை நம்பித்தான் இவன் என் மடியில் படுத்திருக்கிறான். எனவே நான் கண்டிப்பாக நம்பிக்கை துரோகம் செய்யமாட்டேன். அப்படி செய்பவன் ஏழு பிறப்பிலும் நரகத்தில் உழலுவான் என்பார்கள் பெரியோர். அந்தப் பாவம் எனக்கு வேண்டாம்! வீணாகக் காத்திருக்காதே. வேறெங்காவது சென்று உன் உணவுக்கு வழி பார்த்துக்கொள்’ என்றது கரடி.

இதனால் ஏமாற்றமடைந்த புலி, பிறகும் அவ்விடத்தை விட்டுப் போகாமல் அங்கேயே இருந்தது.

ஒரு ஜாமத்துக்குப் பின் அரசகுமாரன் விழித்துக் கொண்டான். அப்போது கரடி அவனிடம், ‘ராஜகுமாரா, இப்போது நான் சற்று நேரம் உறங்குகிறேன். எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டது.

‘ஓ! பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். கவலையில்லாமல் உறங்கு’ என்றான் அரசகுமாரன்.

கரடி நன்றாக உறங்கியதும், புலி, ராஜகுமாரனிடம் தனது நைச்சியமான பேச்சைத் தொடங்கியது.

‘ராஜகுமாரா, நான் சொல்வதை கவனமாகக் கேள். நீ இந்தக் கரடியை நம்பாதே. கொண்ட பிடியை விடாதது கரடி. அதன் கூரிய நகங்களை கவனி. நிச்சயமாக அது உன்னை விடாது. நான் இங்கிருந்து போனதும், சற்று நேரத்தில் இதன் ஜோடி கரடி வந்து விடும். இரண்டுமாகச் சேர்ந்து கண்டிப்பாக உன்னைக் கொன்று தின்று விடும். அதற்காகத்தான் இது காத்திருக்கிறது. பாவம் அப்பாவியான உனக்கு இது தெரியவில்லை. ஆபத்தின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்!’ என்றது.

அரசகுமாரன் புலியின் பேச்சைக் கேட்டு குழம்பினான்.

புலி மேலும் சொன்னது: இப்போதும் காலம் கடந்து விடவில்லை. உன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் கரடியை சத்தமில்லாமல் கீழே தள்ளி விடு. அதைக் கொன்று தின்று என் பசியைத் தீர்த்துக் கொள்கிறேன். உனக்கும் ஆபத்து நீங்கி விடும். அதன் பின் நானும் போய் விடுவேன். நீயும் சந்தோஷமாக உன் அரண்மனைக்குச் சென்று விடலாம். ’ என்றது.

அரசகுமாரன் கொஞ்சமும் யோசிக்காமல் அதன் பேச்சை நம்பி, தூங்கிக் கொண்டிருந்த கரடியை கீழே தள்ளி விட்டான்.

கீழே விழுந்த கரடி பாதி வழியில் உறக்கம் கலைந்து சுதாரித்துக் கொண்டு, அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தப்பியது.

அது, கோபத்துடன் அரசகுமாரனைப் பார்த்து, ‘நம்பிக்கை மோசம் செய்த துரோகியே, ஒரு பைத்தியம் கூடச் செய்யாது இந்தத் தவறை! இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும். திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக்கொண்டு இந்தக் காட்டில் பைத்தியமாகச் சுற்றித் திரிந்து வா.’ என்று சாபமிட்டது.

கரடியின் கோபத்தைப் பார்த்து பயந்து போன புலி, அது தன்னை எங்கே சபித்து விடப் போகிறதோ என்று மிரண்டு ஓடிப் போனது.

அரசகுமாரன் மரத்திலிருந்து இறங்கி பைத்தியம் பிடித்தவனாகி, ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைச் சொன்னபடி காட்டுக்குள் அலைந்து திரியத் தொடங்கினான்.

***

விசாலை நகரத்திலோ அரண்மனை அல்லோகலப்பட்டது. காட்டுக்கு வேட்டைக்குப் போன அரசகுமாரனின் குதிரை மட்டும் தனியே அரண்மனைக்குத் திரும்பி வர, ராஜகுமாரனுக்கு என்ன நேர்ந்ததோ என்று மன்னனும், மகாராணியும் பதறிப் போயினர்.

மந்திரி பஹூசுருதன் உடனடியாக ராஜகுமாரன் ஜெயபாலனைத் தேடுவதற்காக ஒரு பெரும் குழுவை காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆட்கள் நாலாபுறமும் தேடித் திரிந்து கடைசியாக ஜெயபாலனைக் கண்டுபிடித்தார்கள். ‘பித்துப் பிடித்த நிலையில் ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று புலம்பியபடியே காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தவனை கட்டித் தூக்கி அரண்மனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மன்னன் நந்தனும் மகாராணி பானுமதியும் தங்களது ஒரே மகனின் நிலைமையைக் கண்டு பதை பதைத்துப் போனார்கள். என்னாயிற்று? இவன் ஏன் இப்படி ஆனான்? என்று புரியாமல் துயரத்தில் தவித்தார்கள்.

மந்திரி பஹூசுருதன் உடனடியாக நாட்டிலேயே மிகச் சிறந்த வைத்தியர்கள், வைதிகர்கள், மந்திரவாதிகள், பேய் ஓட்டுபவர்கள் என சகலவிதமானவர்களையும் அரண்மனைக்கு வரவழைத்தார்.

எல்லோரும் அவரவர் திறமையைக் காட்டி அரசகுமாரனை குணப்படுத்த முயற்சித்தார்கள். ம்ஹூம்! எந்த வைத்தியமும், மந்திர தந்திரமும், பூஜை புனஸ்காரங்களும் அவனிடத்தில் பிரயோசனப்படவில்லை.

ஜெயபாலன் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பைத்திய நிலையில் ‘ஸஸேமிரா’ என பிதற்றிக் கொண்டிருந்தான். மன்னன் நந்தன் நிலை குலைந்து போனான். மந்திரி பஹூசுருதன் முன்பு தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

‘அமைச்சரே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜகுரு சாரதா நந்தனார் மட்டும் இருந்திருந்தால் வெகு சுலபமாக என் மகனைக் குணப்படுத்தியிருப்பார். நான் ஒரு முட்டாள். சந்தேகத்திலும், கோபத்திலும் அவசரப்பட்டு தீர விசாரிக்காமலும்கூட அவரைத் தண்டித்து விட்டேன். எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்பு எவனொருவன் தீர ஆலோசிக்காமல் செயல்படுகிறானோ அவன் கண்டிப்பாக பின்னாளில் வருந்தத்தான் வேண்டும் என்பார்கள். எனக்கு இந்தத் தண்டனை வேண்டியதுதான்!’ என்று கதறினான்.

மந்திரி பஹூசுருதன் அவனுக்கு ஆறுதல் கூறும்படியாக, ‘அரசே! விதி மிக வலிமையானது. எது ஒன்று நடைபெற வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். அதற்கேற்பவே விதி மனிதனை நகர்த்துகிறது. எனவே கடந்து போனவைகளுக்காக வருத்தப்படுவது வீண். இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.’ என்றார்.

மந்திரியின் வார்த்தைகளால் ஆறுதலடைந்த நந்தன், ‘ஆம்! அதுவே சரி! மந்திரி பஹூசுருதனாரே! உடனே, நாடெங்கும் பறை சாற்றுங்கள். எனது மகனை குணப்படுத்துபவர்க்கு ராஜ்ஜியத்தில் பாதியை பரிசாகத் தருவதாக மூலை முடுக்கெல்லாம் அறிவிக்கச் சொல்லுங்கள்!’ என்றான்.

***

மந்திரி பஹூசுருதன் அன்று வீட்டுக்குப் போனதுமே ராஜகுரு சாரதா நந்தனரிடம் அரண்மனையில் நடந்த அனைத்தையும் சொல்லி வருத்தப்பட்டார்.

‘பாவம் மன்னர்! தனது மகனுக்காக பாதி ராஜ்ஜியத்தை துறக்கவும் தயாராகி விட்டார்’ என்று பெருமூச்சு விட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட ராஜகுரு சாரதா நந்தனர், மந்திரியாரே, நாளை மன்னரிடம் போய், ‘என் வீட்டில் உறவுக்கார இளம் பெண் ஒருத்தி இருக்கிறாள். அந்தப் பெண் மிகுந்த திறமைசாலி. அவள் அரசகுமாரனை நேரில் பார்த்தால் நிச்சயமாக குணப்படுத்தி விடுவாள்!’ என்று சொல்லி ராஜகுமாரனை இங்கே அழைத்து வாருங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்றார்.

மறுநாள் அரண்மனைக்குச் சென்ற மந்திரி பஹூசுருதன், ராஜகுரு சொன்னபடியே மன்னரிடம் சொல்ல, எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்றிருந்த நந்த மன்னன் தனது மகன் ஜெயபாலனை அழைத்துக் கொண்டு மந்திரியின் மாளிகைக்கு விரைந்து வந்தான்.

மந்திரியின் மாளிகையில் ஒரு பெரிய அறையொன்றின் நடுவே ஒரு திரையைத் தொங்கவிட்டு அதன் முன்பாக ராஜகுமாரன் அமர வைக்கப்பட்டான். திரைக்கு மறுபுறம் ராஜகுரு அமர்ந்திருந்தார். ராஜகுமாரன் இடைவிடாமல் ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று பிதற்றிக் கொண்டேயிருந்தான்.

ராஜகுரு சாரதா நந்தனார் கண்மூடி கடவுளை தியானித்தார். பின் ஸ, ஸே, மி, ரா, என்கிற எழுத்தில் தொடங்கும் நான்கு ஸ்லோகங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறினார்.

முதல் சுலோகமான ‘ஸ‘ என்கிற எழுத்தில் தொடங்கிய சுலோகத்தின் அர்த்தமானது நட்பையும், நம்பிக்கையையும் எத்தனை உயர்வாகப் போற்ற வேண்டும் என்பதைக் குறித்துச் சொல்லப்பட்டது. அந்த சுலோகத்தைச் சொன்னதுமே அரசகுமாரன் ‘ஸ’ என்கிற எழுத்தைச் சொல்வதை விட்டு விட்டான். ‘ஸேமிரா’ என்று மட்டும் சொன்னான்.

பின் ராஜகுரு மற்ற ஸே, மி, ரா எழுத்துக்களுக்கு உண்டான சுலோகங்களைக் கூறினார். அந்தச் சுலோகங்களும், துரோகத்தையும், கடமையையும், சத்திய மீறலையும் குறித்துச் சொல்லப்பட்டவைதான்.

ஒவ்வொரு சுலோகங்கள் சொல்லி முடித்த பிறகும், அந்தந்த எழுத்துகளை சொல்வதை நிறுத்திய அரசகுமாரன், நான்கு சுலோகங்களும் சொல்லி முடித்ததும் ஏதும் பேசாமல் சிலை போல் அமர்ந்திருந்தான்.

ராஜகுரு கடைசியாக காட்டில் நடந்த புலி, கரடி, மனிதனுக்கிடையில் நடந்த முழுக் கதையையும் சுருக்கமாகக் கூற அரச குமாரன் திடுக்கிட்டு, பித்தம் தெளிந்து சுயநிலைக்கு மீண்டான்.

மன்னன் நந்தன் சந்தோஷத்தின் உச்சத்துக்குப் போனான்.

திரையின் பின்னால் இருப்பது ஓர் இளம்பெண் என்று நினைத்துக்கொண்டு, மிகுந்த பரவசத்துடன், ‘பெண்ணே, உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நான் சொன்னபடியே உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தந்து விடுகிறேன்’ என்று தழுதழுத்தான்.

‘மன்னவா, நான் தங்களுடைய பாதி ராஜ்ஜியத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. தேசத்தின் உண்மையான பிரஜை என்கிற முறையில் எனது கடமையென்றே இதைச் செய்தேன்.’ என்றதும், மன்னன் தொடர்ந்து கேட்டான்.

‘சரி, அது போகட்டும் பெண்ணே! நீயோ இங்கு நகரத்தில் இருக்கிறாய்; ஆனால் எங்கோ காட்டில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்ததுபோலச் சொல்கிறாயே! எப்படி?’ என்றான் ஆச்சரியத்துடன்.

‘எனது தேவ குரு பிரஜாபதியின் அருளால் சரஸ்வதி தேவி எனது இதயக் கமலத்தில் வீற்றிருக்கிறாள். அவளைத் துதித்து மகாராணியார் பானுமதியின் மச்சத்தை ஞானதிருஷ்டியினால் அறிந்தது போலவே, காட்டில் நடந்த நிகழ்வையும் அறிந்து கொண்டேன்!’ என்றபடி ராஜகுரு சாரதா நந்தனர் வெளிப்பட்டார்.

மன்னன் நந்தன் திகைத்துப் போனான். ஆச்சரியப்பட்டான். கண்ணீர் மல்கினான். பின் சுதாரித்துக் கொண்டவன், ‘குருநாதரே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்’ என்றபடி அவர் பாதம் தொட்டு வணங்கினான்.
மந்திரி பஹூசுருதன் நடந்தவற்றை முழுதும் மன்னனிடம் தெரிவித்து விட்டு, அவரது கட்டளையை மீறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆனால் மன்னனோ, மந்திரியின் கையைப் பற்றிக்கொண்டு, மிகுந்த நெகிழ்ந்த குரலில், ‘அமைச்சரே, தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமேயில்லை. நான் மிகப் பெரும் தவறைச் செய்யவிருந்தேன். நீங்கள் மட்டும் அதைத் திருத்தி ராஜகுருவை தப்பிக்க வைக்காமல் இருந்திருந்தால் நான் பெரும் பழிக்கு ஆளாகியிருப்பேன். ராஜகுருவைக் கொன்று, ஓர் அந்தணரைக் கொன்றதனால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாகி பிரம்மராட்சஸாக மாறி அலைந்து கொண்டிருந்திருப்பேன்.’ என்று தழுதழுத்தவன் மேலும் தொடர்ந்து, ‘அதுமட்டுமல்ல, உங்களால்தான் எனது மகன் மிகப் பெரிய ஆபத்திலிருந்து ராஜகுருவின் மூலமாக தப்பிக்க முடிந்தது. எனவே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது நான்தான்.’ என்று பலவிதமாகப் புகழ்ந்து மந்திரி பஹூசுருதனுக்கு பரிசுகளை அள்ளித் தந்து கௌரவித்தான்.

***

மேற்கண்ட பஹூசுருதனின் கதையை நீதிவாக்கிய மந்திரி சொல்லி முடிக்க, போஜராஜனும் கதையில் மகிழ்ந்து போய் மந்திரிக்கு பலவிதமான சன்மானங்கள் தந்து சிறப்பித்தான். பின் எல்லோரும் சிம்மாசனத்துடன் அரண்மனைக்குப் புறப்பட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 4
Meditation_Silhouette_by_leon433காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தின சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரம்கால் மண்டபத்தைக் கட்டினான். அதை பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச் சரிகைகளாலும், தோரணங்களாலும் அலங்கரித்து மண்டபத்தின் நடுவில் கம்பீரமாக சிம்மாசனத்தை அமர்த்தினான்.

வேத விற்பன்னர்கள்  காசி, ராமேஸ்வரம் முதலான பலப்பல திவ்யக்ஷேத்திரங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதத் தீர்த்தங்களால் அந்தச் சிங்காதனத்தை அபிஷேகித்து, யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து புனிதப்படுத்தினார்கள். எல்லாம் முடிந்ததும் ஒரு நல்ல முகூர்த்த நேரத்தில் போஜ மன்னன் முப்பத்திரண்டு படிகள் கொண்ட சிம்மாசனத்தின் மீது ஏறி அமரப் போனான்.

அப்போது சிம்மாசனத்தின் முப்பத்திரண்டு படிகளிலும் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் ஏக காலத்தில் கலகலவெனச் சிரித்தன.

இதைக் கண்டு திகைத்துப் போன போஜ மன்னன், பதுமைகளைப் பார்த்து, ‘சிம்மாசனத்தின் வினோதப் பதுமைகளே, நான் சிம்மாசனம் ஏறப் போகும் சமயத்தில் எதற்காக சிரித்தீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே!’ என்று கேட்டான்.

உடனே முதல் படிக்குக் காவலாக நின்றிருந்த சுகேசி என்கிற வினோதப் பதுமை தனது இனிமையான பெண் குரலில், ‘போஜ ராஜனே, எங்களது சக்ரவர்த்திக்குள்ள வீரம், வேகம், தைரியம், நற்பண்பு, உயர்குடி பெருமை, நுண்கல்வி, மனதிட்பம் போன்ற குணங்கள் உனக்கிருக்கிறது என்று நினைத்தால் நீ இந்தச் சிம்மாசனத்தில் ஏறலாம்.’ என்றது.

இதைக் கேட்டு திடுக்கிட்ட போஜராஜன் அந்தப் பதுமையிடம், ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்? நீ கூறிய எல்லா குணங்களும் என்னிடமும் உள்ளன. தவிர ஈகையில் என்னைப் போல எவரும் இந்தப் பூவுலகில் இல்லை. யாசிப்பவர் எவராயினும் இல்லையென்று மறுத்துக் கூறாமல் அள்ளி அள்ளித் தருபவன் நான்!’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டான்.

சுகேசி மேலும் சிரித்தபடி, ‘இதோ இந்தச் சொல்லிக் காட்டும் தன்மையே உனது கீழ்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்குணம் கொண்ட ஒருவன், தான் செய்த உதவிகளை பெரிதுபடுத்திப் பேசுவும் மாட்டான்; மற்றவர்களது தவறுகளை உரக்கச் சொல்லித் திரியவும் மாட்டான். அது கீழானவர்களின் செயலாகும்.  எவனொருவன் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொள்ளாமலும், மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி தண்டோரா போடாமலும் இருக்கிறானோ அவனே மனிதர்களில் சிறந்தவன் ஆவான்!’ என்றது.

சுகேசியின் சொற்களால் வெட்கமடைந்த போஜமகாராஜன், ‘ஆம்! நீ சொன்னது மிகவும் சரிதான். வலது கை கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்பார்கள் பெரியோர். நான் என்னைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டது முட்டாள்தனம்தான்!’ என்று ஒப்புக் கொண்டான்.

சுகேசி மேலும் சொன்னது: ‘கேள்! போஜராஜனே! எங்கள் சக்கரவர்த்தி விக்கிரமாதித்த மகாராஜா ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் பணிந்து வணங்கி கப்பம் கட்டும்படியாகத் திகழ்ந்தவர். அவரது சகோதரரும், அறிவாளியுமான பட்டி என்கிற மதியூக மந்திரியுடன் இந்தப் பூலோகத்தை தேவலோக இந்திரனுக்கு நிகராக ஆண்டு ராஜ்ஜிய பரிபாலனம் செய்தவர். அவரைப் போல வீரதீர மகாராஜனல்லவோ இந்தச் சிம்மாசனத்தில் ஏறவேண்டும்!’ என்றது.

‘பதுமையே இந்த சிம்மாசனத்துக்கு சொந்தக்காரனான அந்த மகா வீரர் விக்கிரமாதித்த பூபதியைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என மிகுந்த ஆவலாக இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சொல்வாயா?’ என்று கேட்டான் போஜராஜன்.

‘ஆஹா! அதெற்கென்ன? அவரது பூர்வீகத்திலிருந்து சொல்கிறேன், கேளுங்கள் மகாராஜனே!’ – சுகேசி பதுமை சொல்லத் தொடங்கியது.

அந்தணனும் அலங்காரவல்லி தாசியும்…

ராஜமகேந்திரபுரம் அழகான ஊர். அந்த நகரத்தில் சந்திரவர்ணன் என்னும் பிராமணன் வாழ்ந்து வந்தான்.

சந்திரவர்ணன் மிகச் சிறந்த பண்டிதன். வேத விற்பன்னன். சகல சாஸ்திர புராணங்களைக் கரைத்துக் குடித்தவன். அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவன். ஆனாலும் தான் கற்ற வித்தைகளில் அவனுக்குத் திருப்தியில்லை. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை அநேகம் உள்ளதாகக் கருதினான். அதையெல்லாம் கற்றுத் தருவதற்கு தகுந்த குருவைத் தேடிப் புறப்பட்டான்.

நாடோடியாக ஊர் ஊராக குருவைத் தேடித் திரிந்த சந்திரவர்ணன் ஒருநாள், கிராமம் ஒன்றைக் கடந்து காட்டு வழி செல்லும்போது, அங்கிருந்த குளம் ஒன்றில் முகம் கை கால்களை கழுவிக் கொண்டு தாகம் தீர தண்ணீர் அருந்தினான். பின் மிகுந்த களைப்பின் காரணமாக அந்த குளத்தோரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியிலேயே படுத்து தூங்கிப் போனான்.

சந்திரவர்ணன் படுத்து ஓய்வெடுத்த அந்த ஆலமரத்தில்தான் ஒரு பிரம்மராட்சஸன் வசித்து வந்தான். ரிஷியாக இருந்து சாபத்தினால் பிரம்மராட்சஸனாக மாறிப் போனவன் அவன். சாபவிமோசனம் வேண்டி, அந்த ஆலமரத்தில் தங்கி தவம் செய்து கொண்டிருந்தான். அன்றைய தவத்துக்குப் பிறகு கண் விழித்த பிரம்ம ராட்சஸன், மரத்தினடியில் உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து வியந்தான். அவன் யார் என்று தெரிந்து கொள்வதற்காக, ஓர் அந்தணனைப் போல் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வந்து சந்திரவர்ணனை எழுப்பினான்.

‘ஐயா! பிராமணரே! யார் நீங்கள்? கள்வர்களும், கொடிய விலங்குகளும் நடமாடும் இந்தக் காட்டுப் பிரதேசத்துக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

சந்திரவர்ணன் அவனை வணங்கி, ‘ஸ்வாமி! நான் ராஜமகேந்திரபுரம் என்கிற ஊரிலிருந்து வருகிறேன். வேத, சாஸ்திரப் புராணங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்றவன் நான். ஆனாலும் கற்றுக்கொள்ள வேண்டிய சாஸ்திரங்கள், வித்தைகள் இன்னும் ஏராளம் உள்ளதால் அதற்கான தகுந்த குருவைத் தேடியே புறப்பட்டேன். தங்களைப் பார்த்தால் மாபெரும் பண்டித விற்பன்னர் என்று தோன்றுகிறது. என்னை தங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு மேலும் பல வித்தைகளையும் சொல்லித் தர வேண்டும்’ என்று வேண்டினான்.

பிரம்மராட்சஸனாகிய ரிஷி, புன்னகையுடன், ‘சந்திரவர்ணா,  உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. ஆறு மாத காலம், உணவு, உறக்கம் இரண்டையும் துறந்து நீ விரதம் இருக்கவேண்டும். நான் இந்த ஆலமரத்தின் மீதிருந்தபடியே அனைத்து வித்தைகளையும் உனக்குக் கற்பிக்கிறேன்!’ என்றார். முதல் காரியமாக, ஆறு மாத காலத்துக்கு பசி, தூக்கம் இரண்டும் சந்திரவர்ணனை பாதிக்காமல் இருக்க மந்திரம் ஒன்றை உபதேசித்தார். பின் வித்தை போதிக்கத் தொடங்கினார்.

பிரம்ம ராட்சஸன் மரத்தின் மீது அமர்ந்தபடியே ஆலமர இலைகளில் பாடங்களை எழுதிப் போட அவற்றைச் சேகரித்துக் கொண்டு, சந்திரவர்ணன் பசி, தூக்கம் முற்றும் துறந்து சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

ஆறு மாத காலம் விரைந்தோடிப் போனது. பிரம்ம ராட்சஸன், சந்திரவர்ணனுக்கு கல்வி கற்பித்தபடியே தனது தவத்தையும் முடிக்க, அவரது சாபம் நீங்கியது. தேவலோகத்திலிருந்து இந்திர விமானம் இறங்கி வந்தது. சாப விமோசனம் பெற்ற ரிஷி விமானத்தில் ஏறும் முன்பாக சந்திரவர்ணனிடம், ‘குருவுக்கு பெருமை சேர்க்கும் சிஷ்யன் நீ. இந்த உலகத்தில் உன்னளவுக்கு அறிஞர் வேறு யாருமில்லை. இனி நீ நகரம் திரும்பி ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு, இல் வாழ்க்கையைத் தொடங்கு!’ என்று வாழ்த்திச் சென்றார்.

சந்திரவர்ணன் தனது ஊரான ராஜமகேந்திரபுரத்துக்கே புறப்பட்டான். வழியில் கன்னிகாபுரம் என்னும் நகரத்தை நெருங்கும்போது மாலைப் பொழுது முடிந்து இரவுப் பொழுது தொடங்கியது. நீண்ட தூரம் நடந்து வந்ததில் மிகவும் களைப்படைந்து அங்கே கண்ணில்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரத்திலேயே நினைவு தப்பி விழுந்தான். ஆறு மாத காலமாக பசி, தூக்கம் இல்லாமல் கிடந்ததன் காரணமாக அவனது உடல் கட்டை போல் ஆகிப்போனது.

சந்திரவர்ணன் விழுந்த கிடந்த வீடானது அலங்காரவல்லி என்னும் தாசியினுடையது. ராக்கால பூஜை முடிந்து கோயிலிருந்து திரும்பி வந்த அலங்காரவல்லி திண்ணையில் கிடந்த சந்திரவர்ணனைப் பார்த்து ஏதோ வழிப் போக்கன் என்று நினைத்து அவனுக்கு உணவிட்டு உபசரிப்பதற்காக எழுப்பினாள். திடுக்கிட்டாள்.

சந்திரவர்ணன் பிணம் போலக் கிடந்தான். மூச்சுக் காற்று மட்டும் வந்துகொண்டிருந்ததே தவிர உடலில் சிறிதும் அசைவில்லை. பதறிப் போன அலங்காரவல்லி உடனடியாக வைத்தியரை வரவழைத்தாள்.

அவர் சந்திரவர்ணனை பரிசோதித்து விட்டு, அலங்காரவல்லியிடம், ‘அம்மா! இந்த அந்தணன் நீண்ட காலங்களாக உணவும், உறக்கமும் இல்லாமல் கிடந்திருக்கிறான். அதன் காரணமாகவே இவன் இப்படி மூச்சு விடும் பிணம் போலாகி விட்டான். நான் ஒரு தைலம் காய்ச்சித் தருகிறேன். அதை இவன் உடல் முழுக்க நாளுக்கு மூன்று முறை தடவி வாருங்கள். உடலின் ரத்தநாளங்களில்  உணர்வு வந்து விடும். தவிர நான் தரும் இன்னொரு மருந்தை இவனுக்குப் புகட்டுங்கள். அது இது ஜீவ சக்தியைத் தந்து சுய நிலைக்கு மீட்டு விடும்!’ என்றார்.

அலங்காரவல்லி வைத்தியர் சொன்னது போலவே தைலம் தேய்த்து, மருந்து புகட்டி வர,  ஐந்தாம் நாள், சந்திரவர்ணன் பிரக்ஞை மீண்டான். நடந்தவைகளை அறிந்து அலங்காரவல்லிக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்குப் புறப்படத் தயாரானான்.

அப்போது அலங்காரவல்லி, ‘ஸ்வாமி! நீங்கள் செய்வது நியாயமா? எனது வீட்டின் திண்ணையில் கிடந்த தங்களை எனது கணவனாகவே பாவித்துத்தான் வீட்டுக்குள் வைத்து இந்த  ஐந்து நாட்களாக பணி விடை செய்து வந்தேன். இப்போது உடல் குணமானதும் என்னை விட்டுப் போகிறேன் என்கிறீர்களே! நான், உங்களை விடவே மாட்டேன். தயவுசெய்து என்னை மணந்து உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.’ என்று வேண்டினாள்.

சந்திரவர்ணன் அதிர்ந்து போனான். ‘அடடா! என்னது இது! இது எப்படி நடக்கும்? பெண்ணே! நானோ அந்தணன்; நீயோ தாசி குலத்தவள். எப்படி உன்னை மணந்துகொள்வேன்? என்னால் முடியாது! சாஸ்திரம் இதை அனுமதிக்காது!’ என்று மறுத்தான்.

அலங்காரவல்லி கேட்பதாயில்லை. அவள் சந்திரவர்ணனை அழைத்துக்கொண்டு அந்த நகரத்து மன்னனிடம் சென்று  தன் வழக்கைக் கூறினாள். நீதி வழங்குமாறு கேட்டாள்.

ராஜா ரவிமாறவர்மன் இருதரப்பு நியாயங்களையும் கேட்டான். பின் அவன் மந்திரியிடமும் ராஜ பிரதானிகளிடமும் கலந்தாலோசிக்க,  ராஜகுரு எழுந்து,

‘அரசே! அந்தணன் ஒருவன், தாசி குலத்துப் பெண்ணை மணந்து கொள்வதை சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது எனது உண்மைதான். ஆனால் அப்படி ஓர் அந்தணன் தனது குலத்தைத் தவிர வேறு குலத்துப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் நேர்ந்தால் அப்போது அவன் நான்கு வர்ணத்திலுள்ள பெண்களையும் ஒரே சமயத்தில் ஒரே முகூர்த்தத்தில் மணந்து கொள்ளவேண்டும் என்று சாஸ்திரம் வழி சொல்கிறது!’ என்று கூறினார்.

வழக்குக்குத் தீர்வு கிடைத்ததென்று மன்னன் மகிழ்ந்து போனான்.

அவன் தனது ராஜகுருவிடம், ‘அப்படியானால் சத்ரிய குலத்தவளான எனது மகள் சித்ராங்கியையும், பிராமண குலத்துப் பெண்ணான உமது மகள் காஞ்சனையையும், வைசிய குல சோமசுந்தர செட்டியாரின் மகள் கோமளவல்லியையும், இவர்களுடன் தாசி அலங்காரவல்லியையும் சேர்த்து நால்வரையும் ஒரே முகூர்த்தத்தில்   இந்த அந்தணனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோம்! எல்லோருக்கும் சம்மதம்தானே?’ என்று கேட்டான்.

மன்னன் சொல்லை யாரால் மறுக்க முடியும்!

ஒரு சுபமுகூர்த்த நாளில் சந்திரவர்ணன் நால்வரையும் மனைவிகளாக்கிக் கொண்டான். அந்நகரிலேயே தங்கி தனது நான்கு மனைவிகளுடன் சுக போகமாக வாழ்க்கை நடத்தினான்.

அவனது இனிய இல்வாழ்க்கையின் பயனாக  பிராமணப் பெண்ணுக்கு வல்லப ரிஷி என்கிற மகனும், அரசகுமாரி சித்ராங்கியின் மூலமாக விக்கிரமாதித்தன் என்னும் புதல்வனும், வைசியப் பெண்ணுக்கு பத்ரி எனும் புத்திரனும், கடைசியாக தாசி அலங்காரவல்லிக்கு பர்த்ருஹரி என்னும்  தனயனுமாக நான்கு குமாரர்கள் பிறந்தார்கள்.

இந்த இடைக்காலத்தில் ராஜா ரவிமாறவர்மன் உடல்நலம் குன்றி இறந்துபோக மருமகனான சந்திரவர்ணனே  அந்நகரத்தின் மன்னனாகி நல்லாட்சி நடத்தினான்.

***

வருடங்கள் கடந்தன. சந்திரவர்ணனின் புதல்வர்கள் நால்வரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். பெரும் அறிஞர்களிடம் கல்வி கற்ற அவர்கள் அனைவரும் சிறந்த புத்திமான்களாகவும், இணையில்லா வீரர்களாகவும் திகழ்ந்தார்கள்.

நாளடைவில் சந்திரவர்மனும் வயோதிகம் அடைந்து உடல்நலம் குன்றினான்.

அவனது முடிவுநாள் நெருங்கும் நேரத்தில் நான்கு மகன்களும் சுற்றிச் சூழ்ந்திருக்க, சந்திரவர்ணன் தனது கடைசி மகனும் தாசி அலங்காரவல்லியின் புதல்வனுமான பர்த்ருஹரியைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினான். என்ன காரணமென்று மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும் பர்த்ருஹரிக்குப் புரிந்து போனது.

‘தந்தையே தங்கள் வேதனை எனக்குப் புரிகிறது! தாசியின் மகனான நான் திருமணம் செய்து கொண்டு என் மூலம் சந்ததி ஏற்பட்டால் மேலுலகில் தங்களுக்கு மோட்சம் கிடைக்காது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதுதானே தங்கள் துன்பத்துக்குக் காரணம்? நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டாலும் என் மூலமாக சந்ததி ஏற்படாது என்பது நிச்சயம்!’ என்று வாக்களித்தான்.

இதனால் மனத் திருப்தியடைந்த சந்திரவர்ணன், தனது மற்ற மகன்களிடம், ‘என் அன்பு குமாரர்களே, எனது மேலுலக நலனுக்காக தனது குல விருத்தியையே தியாகம் செய்த பர்த்ருஹரிக்கு நானும் பிரதிபலனாக ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். எனவே நான் இறந்த பிறகு இந்த நாட்டை ஆளும் அரசனாக பர்த்ருஹரிக்கே பட்டம் சூட்ட நினைக்கிறேன். நிறைவேற்றுவீர்களா?’ என்று கேட்க மற்ற மூன்று மகன்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

சந்திரவர்ணன் மன நிம்மதியுடன் இறந்து சொர்க்கம் போனான்.

தந்தை சொற்படியே பர்த்ருஹரி அந்நாட்டின் மன்னனானான். மற்ற மூன்று மகன்களுள் அந்தண குமாரனான வல்லபரிஷியோ தனது குல வழக்கப்படி தவம் செய்ய விரும்பி, மற்ற இரு சகோதரர்களான பட்டி, விக்கிரமாதித்தனை ராஜா பர்த்ருஹரிக்கு பக்க பலமாக இருக்கச் சொல்லி விட்டு, விடை பெற்றுக் கொண்டு தவம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்.

***

ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியில் கன்னிகாபுர ராஜ்ஜியம் மிகுந்த செல்வச் செழிப்போடு திகழ்ந்தது.

பிரதம மந்திரியான பட்டியின் துணையோடு மன்னன் நீதி நெறி வழுவாமல் தருமப் பரிபாலனம் நடத்தினான்.  இன்னொரு தம்பியான விக்கிரமாதித்தன் தனது வீரத்தால் அண்டை தேசத்து மன்னாதி மன்னர்களையெல்லாம் ஜெயித்து அனைவரையும் ராஜா பர்த்ருஹரியின் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டி பணிந்து நடக்கச் செய்தான். குடிமக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சுபிட்சமாக வாழ்ந்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ராஜா பர்த்ருஹரியின் வாழ்க்கையையே திசை மாற்றிப் போட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது!

ஒரு இனிப்பான பழத்தின் மூலம் கசப்பான நிகழ்வுக்கு வித்திட்டவன் சோமசர்மன் என்கிற ஓர் அந்தணன்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அரசன் பர்த்ருஹரியும் அபூர்வ பழமும்

விக்கிரமாதித்தன் கதைகள் / 5

pomegranates1அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட கன்னிகாபுர ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீக காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஆனால் அவன் முதுமையடைந்த பிறகு எங்கும் செல்வதற்கு முடியாமலும், பொருளீட்ட முடியாமலும் வறுமையில் வாடினான். நாலு இடத்துக்கு போய் யாசகம் கேட்கக்கூட உடலில் வலு இல்லை. பசி பட்டினியாக மிகவும் துன்பப்பட்டான்.

அப்போது சோமசர்மன், வறுமையிலிருந்து மீள்வதற்காக தேவி மகாலக்ஷ்மியை நோக்கி தவம் செய்யத் தீர்மானித்தான். அதன்படியே மிகுந்த சிரமத்துடன் தட்டுத் தடுமாறி காட்டுக்குச் சென்று, லக்ஷ்மிதேவியை நோக்கித் தவமிருந்தான்.

மழை, வெயில், காற்று, புயல், மிருகங்கள் போன்ற அத்தனை இடைஞ்சல்களையும் தாண்டி, சோமசர்மன் விடாப்பிடியாக தவமிருந்ததால் மகாலக்ஷ்மி மனம் மகிழ்ந்து போய் அவன் முன் தோன்றினாள்.

‘சோமசர்மனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? தயங்காமல் கேள்’ என்றாள்.

தேவியின் தரிசனம் கண்ட சோமசர்மன் மெய் சிலிர்த்துப் போய் அவளது திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

‘தேவி, மகாலக்ஷ்மி, இந்த வயதான காலத்தில் நான் வறுமையில் மிகவும் துன்பப்படுகிறேன் தாயே! தயவுசெய்து என் மேல் கருணை கொண்டு பொன், பொருள் செல்வ சுகங்களைத் தந்தருள வேண்டும் தயாபரியே!’ என்று வேண்டினான்.

‘சோமசர்மா, உனது இந்த விருப்பத்தை என்னால் இப்போது நிறைவேற்றி வைக்கமுடியாது. அதற்கு விதியில் இடமில்லை. செல்வ சுகங்களை அனுபவிக்கும் பாக்கியம் இந்தப் பிறவியில் உனக்கு இல்லை! வேறு ஏதாவது கேள்’ என்று கூறினாள்.

சோமசர்மனுக்கு வருத்தமாக இருந்தாலும் வறுமையிலிருந்து மீள வேறு என்ன வரம் கேட்கலாம் என்று யோசித்தான். மீண்டும் இளமை திரும்பி, பழைய உடல் வலிவு பெற்றால் முன்பு போல வீடு வீடாகச் சென்று யாசகம் செய்தாவது இந்த வறுமையிலிருந்து மீண்டு விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அதையே வரமாகக் கேட்டான். ‘தாயே மகாலக்ஷ்மி! எனது இந்த வயோதிகத் தன்மை போய் நான் மீண்டும் இளமை பெற வேண்டும்!’

‘சரி! அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிய பூமாதேவி, ஒரு பெரிய கனிந்த மாதுளம் பழத்தை வரவழைத்து சோமசர்மனிடம் தந்தாள். ‘சோமசர்மா! இந்தப் பழம் சாதாரணப் பழமல்ல. என்றுமே மாறாத இளமையைத் தரக்கூடியது. பழத்தைச் சாப்பிடு. நீ விரும்பியது நடக்கும்!’ என்று சொல்லி மறைந்தாள்.

சோமசர்மன் மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டுக்குத் திரும்பினான். மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து பூஜை புனஸ்காரங்கள் செய்து பய பக்தியுடன் பழத்தைச் சாப்பிடலாம் என்று அமர்ந்தபோது அவனது மனத்தில் ஓர் பொறி தட்டியது. தீர்க்கமாக சிந்தித்தான்.

‘இந்தப் பழத்தை நான் சாப்பிட்டால் மாறாத இளமை கிடைக்கும். அதன்மூலம் இறப்பைக்கூடத் தள்ளிப் போடலாம். ஆனால் இதன் மூலம் நான் சாதிக்கப் போவதென்ன? இந்த இளமையை சுக போகமாக அனுபவிக்க செல்வம் இருக்கிறதா என்ன? அல்லது எனது வறுமைதான் தொலைந்து விடப் போகிறதா? இல்லவேயில்லை! காலமெல்லாம் யாசகம் செய்து மற்றவரிடம் கையேந்திதான் எனது பிழைப்பு நகரப் போகிறது. அப்படியிருக்க, எதற்கு இந்த அபூர்வப் பழத்தை நான் வீணடிக்க வேண்டும்?’ – சோமசர்மனுக்கு அந்தப் பழத்தை சாப்பிடும் விருப்பமில்லாமல் போனது.

வேறு யாருக்கு இந்தப் பழத்தை அளிப்பது? யோசிக்கும்போது பழத்தை உண்ணத் தகுதியானவன் நாட்டை ஆளும் அரசனே என்ற முடிவுக்கு வந்தான். காலம் தாழ்த்தாமல் உடனே புறப்பட்டு அரண்மனைக்குச் சென்றான். ராஜ தர்பாரில் மன்னனைப் பார்த்து வணங்கினான்.

‘தர்மநெறி தவறாத மாமன்னரே நீவிர் நீடுழி வாழ்க!’ என்று வாழ்த்தி, ‘மன்னா, இந்த அபூர்வ கனியை தங்களுக்கு அளிக்கவே நான் இங்கு வந்தேன்!’ என்று சொல்லி மாதுளம் பழத்தைக் கொடுத்தான்.

பழத்தை பெற்றுக் கொண்ட மன்னன், ‘அந்தணரே! உமக்கு என் நன்றி. அபூர்வமான பழம் என்கிறீரே! அப்படியென்ன சிறப்பு இதில்?’ என்று ஆர்வத்துடன் கேட்டான்.

‘அரசே, திருமாலின் தேவியான ஸ்ரீமதி மகாலக்ஷ்மியின் திருவருளால் இந்தப் பழம் எனக்குக் கிடைத்தது. இதைச் சாப்பிட்டால் அழியாத இளமையும், அதனால் நீண்ட ஆயுளும் கிட்டும். இந்தப் பழத்தை பரம தரித்திரனான நான் சாப்பிடுவதைவிட, இந்த ராஜ்ஜியத்தை நீதிநெறி தவறாமல் பரிபாலிக்கின்ற தாங்கள் சாப்பிட்டு நீண்ட ஆயுளும், பூரண இளமையும் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்!’ என்றான்.

ராஜா பர்த்ருஹரி சோமசர்மனுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் திரவியங்களும், நிலபுலன்களும் அளித்து அவனை கௌரவித்து அனுப்பி வைத்தான்.

பின், பழத்துடன் அந்தப்புரத்துக்கு விரைந்தான்.

ராஜா பர்த்ருஹரி ஒரு கலா ரசிகன். அழகை ஆராதனை செய்யும் மன்மதப் பிரியன். அவனது அந்தப்புரம் முன்னூற்றுக்கும் மேலான பேரழகிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்ருஹரிக்கு அத்தனை பேருமே பிரியமானவர்கள்தாம் என்றாலும், அவர்களுள் பேரழகியும், பட்ட மகிஷியுமான பிங்கலையின் மேல் தனது உயிரையே வைத்திருந்தான். அவன் மாதுளம் பழத்துடன் அந்தப்புரத்துக்கு விரைந்தது பிங்கலைக்குக் கொடுப்பதற்காகத்தான்.

ராணி பிங்கலையின் அறைக்குச் சென்ற, ராஜா பர்த்ருஹரி அவளிடம் மாதுளம்பழத்தைக் கொடுத்து அதன் அற்புத மகிமையைப் பற்றி விளக்கிக் கூறினான்.

‘என் ஆருயிரே, நீ இந்தப் பழத்தைச் சாப்பிட்டு எப்போதும் மாறா இளமையுடன் திகழ வேண்டும். அந்த உனது இளமை அழகை நான் திகட்டத் திகட்ட ருசிக்க வேண்டும். இந்தா சாப்பிடு’ என்றான்.

‘மன்னவா தங்களின் இந்த அன்பு எனது பாக்கியம்! குளித்து முடித்து நியமத்துடன் நான் இப்பழத்தைச் சாப்பிடுகிறேன்! நிச்சயமாக தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’ என்று சொல்லி வாங்கிக் கொண்ட பிங்கலை, அந்த மாதுளம் பழத்தை அவள் சாப்பிட விரும்பவில்லை.

ராணி பிங்கலைக்கு ஒரு ஆசை நாயகன் இருந்தான். அரண்மனையின் குதிரை லாயத்தைப் பராமரிக்கும் குதிரைப் பாகன் அவன். தனது மோகத்தைத் தணிக்கும் மன்மதன் என்று அவனைத்தான் கருதினாள் பிங்கலை. எனவே தனது கள்ளக் காதலன் இளமை குறையாமல் இருந்தால் காமக் கடலில் ஆசை தீர முங்கிக் குளிக்கலாம் என்று கருதி குதிரைப் பாகனை ரகசியமாகச் சந்தித்து அந்த மாதுளம் கனியைக் கொடுத்து விட்டுப் போனாள்.

குதிரைப்பாகனும் அந்தப் பழத்தைச் சாப்பிடவில்லை. பட்டத்து மகிஷியின் ஆசைநாயகனாக இருந்தபோதும் மகாராணியின் மேல் அவனுக்கு பெரியளவுக்கு பிரியமொன்றுமில்லை. அவன் அரண்மனை வேலைக்காரி ஒருத்தியிடம் மோகம் கொண்டிருந்தான். மகாராணி பிங்கலை தனக்கு அளித்த பழத்தை அவன் அந்த வேலைக்காரிக்குக் கொடுத்தான்.

அந்த அரண்மனை வேலைக்காரியும் சாமான்யப்பட்டவளில்லை. அவளுக்கு இடையன் ஒருவனுடன் கள்ளத் தொடர்பிருந்தது. பழத்தை அவனுக்கு அளித்தாள்.

இடையன் அதை வாங்கி, தன்னுடன் மாட்டுக் கொட்டகையில் எடுபிடியாக கொட்டகையைச் சுத்தம் செய்து போகும் தனது ஆசை நாயகியான வேலைக்காரப் பெண்ணுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்தான்.

வேலைக்காரப் பெண் அந்த மாதுளம் பழத்தை வாங்கி தனது குப்பைக் கூடையின் மேலாக வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் சாப்பிடலாம் என்று புறப்பட்டாள்.

அப்போது, அரண்மனையின் மேல் மாடத்தில் நின்று இயற்கையழகை ரசித்துக் கொண்டிருந்த ராஜா பர்த்ருஹரியின் கண்களில் யதேச்சையாக அந்த வேலைக்காரி தென்பட்டாள். அவளது கூடையின் மேலாக இருந்த பிரகாசம் மிகுந்த மாதுளம் கனியைப் பார்த்ததும் மன்னனுக்கு சந்தேகம் எழுந்தது.

‘அந்தணன் சோமசர்மன் நமக்கு அளித்த கனியைப் போல இருக்கிறதே?’

சேவகனை விட்டு அந்த வேலைக்காரியை அழைத்து வரச் சொல்லி விசாரித்தான். அவள் மாட்டுக் கொட்டகை இடையன் தனக்கு அந்தப் பழத்தை தந்ததாகச் சொன்னாள்.

மன்னன் குழப்பமடைந்தான். ‘ஒருவேளை இது அந்தணன் அளித்ததைப் போன்ற இன்னொரு அபூர்வ கனியோ? அப்படியானால் இந்த மற்றொரு அபூர்வ கனியை, நான் சாப்பிட்டால் பிங்கலையைப் போல் நானும் என்றும் இளமை மாறாமலும், இறவாத்தன்மையுடனும் அவளுடன் சுகித்திருக்கலாமே!’ – அரசனுக்குள் ஆசை மூண்டது.

‘பெண்ணே இந்தக் கனியை எனக்குத் தருவாயா?’ என்று கேட்டான்.

கொட்டகை கூட்டும் வேலைக்காரிக்கு அந்தப் அபூர்வப் பழத்தைப் பற்றி இடையன் சொன்னதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அவளது சாதாரண வாழ்க்கையில் அற்புதங்களுக்கெல்லாம் இடமும் இல்லை. எனவே மன்னன் கேட்டதுமே மறு பேச்சில்லாமல் பழத்தைத் தந்து விட்டாள். தவிர மன்னன் கேட்டு எதைத்தான் மறுக்க முடியும்!

ராஜா பர்த்ருஹரி வேலைக்காரிக்கு நிறைய பொன் ஆபரணங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தான். அவனுக்கு முதலில் இந்த மற்றொரு கனியைப் பற்றிய தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அரண்மனை சேவகர்களை அனுப்பி சோமசர்மனை அழைத்து வரச் செய்தான்.

‘அந்தணரே, சில நாட்களுக்கு முன்பாக மகாலக்ஷ்மி உமக்கு அளித்ததென்று சொல்லி பழமொன்றைக் கொடுத்துச் சென்றீரல்லவா? இப்போது அதுபோலவே இன்னொரு பிரகாசம் பொருந்திய மாதுளம்பழம் எனக்குக் கிடைத்துள்ளது. அப்படி இன்னொரு பழமும் இருக்க வாய்ப்புள்ளதா?’ என்று கேட்டான்.

சோமசர்மன் திட்டவட்டமாக மறுத்தான். ‘அரசே! உறுதியாகச் சொல்கிறேன். தேவி மகாலக்ஷ்மி அளித்தது ஒரேயொரு மாதுளம் கனிதான். நீங்கள் என்னை நம்பலாம். கடவுளுக்கு நிகரான தங்களிடம் நான் பொய் சொல்ல மாட்டேன்!’ என்றான்.

‘அப்படியானால் இந்தக் கனி ஏது?’ என்று அந்த மாதுளம்பழத்தைக் காட்டினான்.

பழத்தை வாங்கிப் பார்த்த சோமசர்மன், ‘இது நான் தந்த கனிதான்!’ என்றவன் தொடர்ந்து, ‘மன்னா, நான் தந்த கனியை நீங்கள் சாப்பீட்டீர்களா?’ என்று கேட்டான்.

‘இல்லை! அதை நான் எனது பட்டமகிஷிக்குத் தந்துவிட்டேன்!’ என்றான்.

‘சரி, மகாராணியார் அந்தப் பழத்தை சாப்பிட்டார்களா என்று விசாரியுங்கள்.’

இப்போது ராஜா பர்த்ருஹரியின் மனத்திலேயே சந்தேகம் அழுத்தமாக விழுந்தது. உடனே பிங்கலையை வரவழைத்துக் கேட்டான்.

‘மகாராணி பொய் சொல்லாமல் சொல். நான் உனக்குத் தந்த அபூர்வ மாதுளம் பழத்தைச் சாப்பிட்டாயா? இல்லையா? அல்லது வேறு யாருக்கேனும் தந்தாயா? உண்மையை மறைக்காமல் கூறு!’

மகாராணி நடுங்கிப் போனாள். விபரீதம் அவளுக்குப் புரிந்து விட்டது. இனி மன்னனிடம் பொய் சொல்ல முடியாது. அவன் தீர விசாரித்துத் தெரிந்துகொண்டால் மரண தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

பிங்கலை தயங்கித் தயங்கிப் பேசினாள்: மன்னவரே, தயவுசெய்து கேளுங்கள். எனக்கு எந்த தண்டனையும் தரமாட்டீர்கள் என்று உறுதியளித்தால் நான் உண்மையைக் கூறுகிறேன்!’ என்று சொல்லி, மன்னனிடம் சத்தியம் பெற்றுக் கொண்டு, ‘நான் அதை குதிரைப் பாகனிடம் கொடுத்து விட்டேன்!’ என்று சொல்லி ராஜா பர்த்ருஹரியின் முகத்தைப் பார்க்க திராணியின்றி தலை கவிழ்ந்தாள்.

மன்னனுக்கு நொடி நேரத்தில் எல்லாம் புரிந்து போனது. ராஜ பத்தினி சோரம் போனது அவனுக்கு தலை குனிவாக இருந்தது. பின் குதிரைப் பாகனை அழைத்து விசாரித்தான். அவன் அரண்மனை வேலைக்காரிக்குக் கொடுத்ததும், அந்த வேலைக்காரி இடையனுக்குத் தந்ததும், இடையன் கொட்டகைப் பெண்ணுக்குக் கொடுத்ததுமான சங்கிலித் தொடர் ரகசிய நிகழ்வுகள் முழுதும் அம்பலமாகின.

ராஜா பர்த்ருஹரி மிகுந்த மன வேதனையடைந்தான். ராஜ்ஜியத்தின் பட்டமகிஷி கேவலம் ஒரு குதிரைப் பாகனோடு மோகம் கொண்டிருந்தது அவனை சகிக்க முடியாத துயரத்தில் மூழ்கடித்தது.

பெண்களின் மன ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று பெரியோர்கள் சொன்னதுதான் எத்தனை உண்மையானது! தான் நேசிப்பவர் தன் மீது அன்பு செலுத்த வேண்டும்; நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து சாதிக்கும் பெண்கள் உண்மையில் அவர்கள் யார் மீதும் பூரண அன்பு செலுத்துவதும் இல்லை; நம்பிக்கை கொள்வதும் இல்லை. மோகமும், ஆசையும் நிறைந்த துரோகப் பதுமைகள்தான் இந்தப் பெண்கள்!’ என்றெல்லாம் சிந்தித்த பர்த்ருஹரி, பிங்கலையைத் தண்டிப்பதால் மட்டும் ஆகப் போவதென்ன என்று கருதி அவளை விட்டு விலகிப் போகத் தீர்மானித்தான்.

அரண்மனை ஆடம்பர வாழ்வும், உறவுகளின் பொய் நாடகமும் அவனுக்கு வெறுத்துப் போக, பரிபூரணமாக உலகப் பற்று நீக்கி, பந்த பாசங்களை விலக்கி, துறவு மேற்கொள்வதென்ற முடிவுக்கு வந்தான்.

ராஜா பர்த்ருஹரி ராஜ்ஜியத்தை தனது சகோதரன் விக்கிரமாதித்தனுக்கு அளித்து பட்டம் சூட்டி விட்டு, துறவியாகி காட்டுக்குச் சென்றான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அதிசய சிம்மாசனமும் ஆயிரம் வருட ஆயுளும்

விக்கிரமாதித்தன் கதைகள் / 6

rambha_and_urvasiராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விட பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத் திருப்தியில்லை.

கன்னிகாபுரம் என்கிற சிறிய ராஜ்ஜியத்துக்குள் கிணற்றுத் தவளைபோல உழலும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய கனவுகள் பிரம்மாண்டமானவை. அவற்றைச் சாத்தியப்படுத்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

தனது தம்பியும் ராஜ்ஜியத்தின் மகா மந்திரியுமான பட்டியை அழைத்த விக்கிரமாதித்தன், ‘பட்டி, எனது ஆட்சி இந்தச் சிறிய கன்னிகாபுர நகரத்துடன் குறுகிப் போவதில் எனக்கு விருப்பமில்லை. இன்னும் பலப்பல நாடு நகரங்களையும் எனது குடையின் கீழ் கொண்டுவரத் தீர்மானித்துள்ளேன். எனவே அதற்குத் தகுந்தபடி நமது தலைநகரம் இன்னும் விஸ்தாரமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

உறுதியான கோட்டைக் கொத்தளங்கள், அகழிகள், மாட மாளிகைகள், விஸ்தாரமான வீதிகள், குடிமக்கள் வசிக்க அழகிய வீடுகள், அற்புதமான நந்தவனங்கள், மிகப்பெரிய ஏரிகள், குளங்கள் என்று ஒரு குறையும் இல்லாதபடி அந்தத் தலைநகரம் அமையவேண்டும். ஆறும் மலையும் வனமும் சூழ்ந்த வளமான பகுதியாக இருக்கவேண்டும். அதுபோலொரு இடத்தை நீ போய் தேர்ந்தெடுத்து வா!’ என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அண்ணன் சொல்லைத் தட்டாத பட்டி அப்போதே இடம் தேடிப் புறப்பட்டான்.
நாலா திசைகளுக்கும் சென்றான். பலப்பல இடங்களைப் பார்த்தான். எதுவும் அவன் மனத்துக்குத் திருப்தியளிக்கவில்லை. நாட்கள் விரைந்தன. அவனது பயணமும் தொடர்ந்தது. ஒருநாள் விஷாலி மலையடிவாரத்தில் சிப்ரா நதியை ஒட்டி ஒரு பெரும் வனப்பகுதியைக் கண்டான் பட்டி. அந்தக் காட்டுப் பிரதேசமானது மிக மிகப் பரந்து காணப்பட்டது. மலைகளும், அருவிகளும், சுனைகளும், எங்கெங்கும் ஆளுயர மரங்களும், செடி கொடிகளும் படர்ந்து இயற்கை எழில் ததும்பி வழிந்தது. பட்டியின் மனத்தில் மகிழ்ச்சி பிரவாகித்தது.

அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தான். குதிரையில் இன்னும் சற்றுத் தொலைவு சென்றதும் நட்ட நடுக் காட்டில் ஒரு கோயில் தென்பட்டது. பட்டி ஆச்சரியமானான். ‘அட! இதென்ன அதிசயம்? இந்த அடர்ந்த வனத்தில் இப்படியொரு கோயில் எப்படி வந்தது? குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு கோயிலை நெருங்கினான்.

அதுவொரு அம்மன் கோயில். பெரும் மலையடிவாரத்தின் கீழ் அழகுற அமைந்திருந்தது. கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் கொலுவிருந்தாள். கோயிலைச் சுற்றிலும் ஆளுயர ஆலமரங்கள் அடர்த்தியாக சுற்றிலும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி கம்பீரமாக நின்றிருந்தன. கோயிலின் எதிரே அழகான தாமரைக் குளம் நீர் ததும்ப அலையடித்துக் கொண்டிருந்தது. மலையின் பாறை வழியே அருவியொன்று வழிந்தோடி அந்தக் குளத்தில் வந்திறங்கி ததும்பிக் கொண்டிருந்தது.

அந்த இடமே மிக ரம்மியமாகக் காணப்பட்டாலும் ஓரிரு விசித்திரக் காட்சிகளும் தென்பட்டன. ஓர் ஆலமரத்தின் மீது கிளைகளில் வட்ட வடிவமாக ஏழு உரிகள் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. அந்த உரிகள் மிகச் சரியாக தாமரைக் குளத்துக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்தன. அதன் நேர் கீழே தாமரைக் குளத்தில் நடுவில் மிகக் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது.

பட்டிக்கு ஒன்றும் புரியவில்லை! என்ன அந்த உரிகள்? குளத்தின் நடுவே எதற்கு அந்தக் கூரிய வேல்?

பட்டி கருவறைக்குச் சென்று காளியம்மனை வழிபட்டு, கோயிலைச் சுற்றி வந்தான். அப்படி வந்தபோது ஒரு பெரிய பாறையொன்றில் சில வாசகங்கள் செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டான். நெருங்கிச் சென்று படித்தான்.
‘வீரனோ, சூரனோ, புத்திமானோ, பலவானோ, யாராயிருந்தாலும், எந்தக் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்தத் தைரியசாலி இந்த தாமரைக் குளத்தில் குளித்து அம்மனைத் தொழுது, மேலே ஆலமரத்தின் மீது இருக்கும் ஏழு உரிகளையும் ஒரே வீச்சில் துண்டித்து வீழ்த்தி, அந்த உரிகள் கீழே விழும் முன்பாகவே குளத்தின் நடுவில் இருக்கும் கூரிய வேலின் மீது தனது உடலை தயங்காமல் பாய்ச்சுகிறானோ அத்தகைய அபூர்வனுக்கு தேவி காளியம்மனே காட்சியளிப்பாள். அப்படி அவளது தரிசனம் கண்டவன் பெரும் சக்கரவர்த்தியாக ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களையும் வென்று இந்தப் பூவுலகை அரசாளுவான்! இது உறுதி!

இதைப் படித்த பட்டி பெரும் ஆச்சரியத்துடன் உடனடியாக கன்னிகாபுரம் திரும்பி, விக்கிரமாதித்தனிடம் சகலத்தையும் தெரிவித்தான். கூடவே பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் அந்தப் பிரதேசமே புதிய தலைநகரம் அமைக்க சிறந்த இடமென்றும் கூறினான்.

பட்டி சொன்னதில் மிகுந்த ஆர்வம் கொண்ட விக்கிரமாதித்தன் அதற்குமேல் தாமதிக்காமல் உடனே பட்டியுடன் அந்த இடத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தான்.

தாமரைக் குளத்தில் மூழ்கிக் குளித்து மாகாளியம்மனை மனதாரத் தொழுதான். பின் தனது வாளுடன் மரத்தின் மீது ஏறியவன் சக்கரவட்டமாகக் கட்டப்பட்டிருந்த உரிகளை நெருங்கியபோது, பட்டி, விக்கிரமாதித்தனைப் பார்த்து, ‘மன்னா, அந்த உரிகளில் ஏதேனும் ஒன்றின் மீது கால் வைத்து ஏறி வட்டமாகச் சுழலுங்கள்’ என்றான்.

விக்கிரமாதித்தன் அதுபோலவே சுழல, ஏழு உரிகளின் கட்டப்பட்டிருந்த கயிறுகளும் ஒன்றன் மீது ஒன்றாக பின்னிக் கொண்டு ஒரே கயிறாக முறுக்கிக்கொண்டு தொங்கின.

‘மன்னா இப்போது அதை ஒரே வெட்டில் வெட்டி விட்டு, உடனே நீங்கள் வேலின் மீது குதித்து விடுங்கள்’ என்றான் பட்டி.

விக்கிரமாதித்தன் அவன் சொன்னது போலவே செய்தான். இதோ வேலின் நுனி மார்பில் துளைத்து முதுகின் புறம் வெளிப்படப் போகிறது என்று நினைத்தபடியே வீழ, அப்படியேதும் நேரவில்லை.

தேவி மாகாளி அங்கே பிரத்தியக்ஷ்மாகி விக்கிரமாதித்தனை தாங்கிப் பிடித்துக் காப்பாற்றினாள்.

தேவியின் தரிசனம் கண்ட பட்டியும், விக்கிரமாதித்தனும் பரவசமானார்கள். தேவியை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை பலப்பல தோத்திரங்களால் துதித்து போற்றிப் புகழ்ந்தார்கள்.

அவர்களது உன்னத பக்தியினால் மனம் மகிழ்ந்த காளி தேவி, அவர்களை வாழ்த்தி, ‘விக்கிரமா, உனது பணிவும், பக்தியும், வீரமும் என்னை மகிழச் செய்துவிட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள்.

‘தாயே! பராசக்தி! நீ வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்தத் திருக்கோயிலின் பிரதேசத்திலேயே எனது தலைநகரை அமைத்துக் கொண்டு ராஜ்ஜியம் ஆள ஆசைப்படுகிறேன். வரமளிக்க வேண்டும் தாயே!’ என்று வேண்டினான்.

‘அப்படியே ஆகட்டும்!’ என்று வரமளித்த பத்ரகாளியம்மன், தேவலோகக் கலைஞனான விஸ்வகர்மாவை அழைத்தாள்.

‘இந்த வனப்பிரதேசத்தை விண்ணுலகின் இந்திர லோகம் போல உருவாக்கிக் கொடு’ என்று கட்டளையிட்டாள்.

அதன்படியே அந்த மலையடிவார கானகப் பிராந்தியத்தை ஒரு மாயாலோகம் போல வடிவமைத்தான் விஸ்வகர்மா. அந்தப் பரந்த பிரதேசத்தை நொடி நேரத்தில் ஓர் அதிசய தலைநகராக உருவாக்கினான். விக்கிரமாதித்தன் விரும்பியபடியே மிகப்பெரிய ஏரிகள், குளங்கள், அற்புதமான நந்தவனங்கள், உறுதியான கோட்டைக் கொத்தளங்கள், அகழிகள், மாட மாளிகைகள், விஸ்தாரமான வீதிகள், குடிமக்கள் வசிக்க எண்ணற்ற அழகிய வீடுகள், மன்னனுக்கென மாபெரும் அதிசய விசித்திர அரண்மனை என்று ஒரு குறையும் இல்லாதபடி அந்நகரம் சொர்க்கம்போல ஜொலித்தது.

‘விக்கிரமா, உனது ராஜ்ஜியத்தை சீரும் சிறப்புமாக ஆள இதோ இந்தப் பொக்கிஷத்தையும் வைத்துக்கொள்!’ என்று சொல்லி பொன்னும், மணிகளும், வைர வைடூரியங்களும், தங்கக் காசுகளும் நிரம்பி வழிந்த ஏராளமான திரவியக் குவியலை பெட்டி பெட்டியாகப் பரிசளித்த மாகாளியம்மன், ‘நீண்ட நெடிய காலம் தர்மப் பரிபாலனம் செய்வாயாக!’ என்று வாழ்த்தி மறைந்தாள்.

விக்கிரமாதித்தன் அந்த நகருக்கு ‘உஜ்ஜயினி மாகாளிப்பட்டணம்’ என்று பெயர் சூட்டி, தனது குடிமக்களை அங்கே வரவழைத்துக் குடியமர்த்தி அங்கிருந்தே தனது ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கினான். கல்வெட்டில் பொறித்திருந்ததைப் போலவே ஐம்பத்தாறு தேசத்து அரசர்களையும் வென்று, எல்லோரும் தன்னை வணங்கிப் பணிந்திருக்கும்படியாகச் செய்தான்.

அவனது ஆட்சியின்கீழ் குடிமக்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் எந்தவிதப் பயமோ கவலையோ இல்லாமல் சுகமாக வாழ்ந்தார்கள். தேசத்தில் நியாயமான வரியை வசூலித்து, மக்களுக்குத் தேவையான-வற்றை அளித்து நீதி தவறாமல் ஆட்சி புரிந்தான். அவனது புகழ் பூலோகத்தில் மட்டுமல்லாது ஈரேழு உலகங்களிலும் பரவியது.

அதனாலேயே அவன் தேவலோகம் செல்லும்படி நேர்ந்தது!

***

தேவலோகத்தில் இந்திரனுக்கு ஓர் ஆபத்தான சூழல் உருவாகிக் கொண்டிருந்தது!

என்னவென்றால், பூலோகத்தில் அப்போது விசுவாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்தார். கடுமையான அவரது தவத்தினால் இந்திரனுடைய இந்திர பதவிக்கே ஆபத்து வந்து விடும் போல் தோன்றியது.

பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியுமா? விசுவாமித்திரனுடைய தவத்தை உடனடியாகக் கலைத்தே தீரவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தான் இந்திரன். அதொன்றும் கஷ்டமில்லை! தவத்தைக் கலைக்கத்தான் அட்டகாசமான உத்தி இருக்கிறதே! ஏற்கெனவே மேனகைக்கு மயங்கியவர்தானே முனிவர். இம்முறை ரம்பா, ஊர்வசி யாரையாவது அனுப்ப வேண்டியதுதான்!
சரி, இருவரில் யாரை அனுப்புவது? இதில்தான் சிக்கல் எழுந்தது!

ஆட்டத்தில் சிறந்தவள் எவளோ அந்தப் பேரழகியை விசுவாமித்திரரை மயக்க அனுப்பலாம் என்று எல்லோரும் சொல்ல, ‘பரதத்தில் நான் தான் சிறந்தவள்’ என்றாள் ரம்பா. இல்லையில்லை நான் தான் சிறந்தவள் என்றாள் ஊர்வசி.
தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லோரும் அமர்ந்து, ரம்பா, ஊர்வசி இருவரையும் தனித் தனியே ஆடச் சொல்லியும், ஒருசேர ஆடவைத்துப் பார்த்தும்கூட நடனத்தில் யார் சிறந்தவள் என்று யாராலும் தீர்ப்பு சொல்ல முடியவில்லை.

அப்போதுதான் நாரதர் அந்த ஆலோசனையை அளித்தார். ‘இந்திரா இங்கிருக்கும் யாராலும் இதைக் கண்டு பிடிக்க முடியாது. பூலோகத்தில் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணம் என்கிற ராஜ்ஜியத்தை ஆளும் விக்கிரமாதித்தன் என்னும் மன்னவன் சகல சாஸ்திரங்களும் கற்ற விற்பன்னன். பரதக்கலையின் சகல சூட்சுமங்களும் அறிந்தவன். அவனை இங்கு அழைத்து வந்தால் ரம்பா, ஊர்வசி இருவரில் நடனக் கலையில் சிறந்தவர் யார் என்பதை அவன் கண்டுபிடித்துச் சொல்லி விடுவான்!’ என்றார்.
இந்திரன் உடனடியாக தனது தேரோட்டியான மாதலியை பூலோகம் அனுப்பி, விக்கிரமாதித்தனை தேவலோகத்துக்கு வரவழைத்தான்.

தேவ விமானத்தில் இந்திரலோகம் வந்திறங்கிய விக்கிரமாதித்தனை பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்ற இந்திரன் தனக்கு ஏற்பட்ட சிக்கலைப் பற்றி அவனிடம் விளக்கமாகச் சொல்லி, ’ரம்பா. ஊர்வசி இருவருள் யார் பரதத்தில் சிறந்தவர் என்று எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை விக்கிரமாதித்தரே! தாங்கள்தான் இதைக் கண்டுபிடித்து தீர்ப்பளிக்க வேண்டும்!’ என்று கோரினான்.

அன்றே இந்திரசபையில், விக்கிரமாதித்தன் முன்னிலையில் முதலில் ரம்பையும், அடுத்து ஊர்வசியும் தனித் தனியே நடனமாடினர். இருவர் நடனத்தையும் பார்த்து ரசித்துப் பாராட்டிய விக்கிரமாதித்தன் மறுதினம் இருவரையும் ஒருசேர ஆடவைத்துப் பார்த்து தீர்ப்பளிப்பதாகக் கூறினான்.
அதற்கு முன் விக்கிரமாதித்தன் ஒரு சிறு முன்னேற்பாட்டைச் செய்துகொண்டான். யாருக்கும் தெரியாமல் நந்தவனத்துக்குச் சென்ற விக்கிரமாதித்தன் தேவலோகத்து மலர்களைப் பறித்து இரண்டு பூச்செண்டுகள் கட்டினான். பின் அந்தப் பூச்செண்டுகளுக்குள் சில வண்டுகளை பொதித்து வைத்தான்.

மறுநாள் இந்திரசபையில் ஏழு லோகத்துப் பிரஜைகளும் ஆர்வத்துடன் வந்து குவிந்து விட்டனர். நடனப் போட்டி தொடங்கும் நேரம் நெருங்கியது. ரம்பாவும், ஊர்வசியும் சபையின் மையத்துக்கு வந்து நடனமாடத் தயாரானார்கள். அப்போது அவர்களிடம் வந்த விக்கிரமாதித்தன் இருவருக்கும் ஆளுக்கொரு பூச்செண்டு அளித்து வாழ்த்தி அந்தப் பூச்செண்டுடனே அவர்களை நடனமாடும்படிக் கேட்டுக் கொண்டான்.

நடனம் தொடங்கியது. இருவரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டிச் சுழன்றாடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நடனம் வேகமெடுத்து உச்சகட்டத்துக்குச் சென்றது. ஒருவரையொருவர் வெல்ல வேண்டும் என்கிற நோக்கில் இருவரும் பம்பரமாகச் சுழன்றாடினார்கள். ஊர்வசியை வென்று விட வேண்டும் என்கிற ஆக்ரோஷத்தில் ரம்பா தன் கையிலிருந்த பூச்செண்டை சற்று இறுக்கிப் பிடித்து விட, பூச்செண்டிலிருந்த வண்டுகள் அவளது கையை பதம் பார்த்து விட்டன. வண்டுகள் கொட்டியதால் சுரீர் என்ற வலியில் ரம்பாவின் ஆட்டத்தில் சற்றே ஜதி விலகிப் போனது. ஆனாலும் யாருக்கும் தெரியாமல் சுதாரித்துக் கொண்டு ரம்பா தனது ஆட்டத்தைத் தொடர்ந்தாள். ஆனால் ஊர்வசியோ நடனத்தில் மிகுந்த லாகவமாக பூச்செண்டை மிருதுவாகப் பிடித்தபடியே ஆடியதால் கடைசிவரை வண்டுகள் கொட்டாமல் ஆடி முடித்தாள்.

பரதநாட்டியப் போட்டி முடிந்ததுமே தனது ஆசனத்திலிருந்து எழுந்த விக்கிரமாதித்தன் நடனத்தில் சிறந்தவள் ஊர்வசியே எனத் தீர்ப்பளித்தான்.
‘எப்படி? எப்படிக் கண்டிபிடித்தீர்கள்? நீங்கள் எந்தவிதத்தில் இந்த தீர்ப்பைச் சொல்கிறீர்கள்?’ – சபையோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஆச்சரியத்துடன் கேட்டனர். ஏனெனில் இருவரது ஆட்டத்திலும் அவர்களால் எந்தக் குறையும் காணமுடியவில்லை.

விக்கிரமாதித்தன் சபையோரிடம் காரணத்தை விவரிக்கத் தொடங்கினான். முதலில் தனது பூச்செண்டுகள் குறித்த ஏற்பாட்டைப் பற்றி விளக்கமாகச் சொல்லி விட்டு, இந்திரனிடம் திரும்பி, ‘தேவர் கோமானே! நடனத்தில் நளினம் முக்கியம். முகபாவம் முக்கியம். உணர்ச்சிவசப்படுதல் கூடவே கூடாது. இது அனைத்தையும் ரம்பா தவறி விட்டாள். ஊர்வசியை வெல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி வேகத்தில் நளினமாகப் பற்றிக் கொள்ள வேண்டிய பூச்செண்டை அவள் அழுத்தமாகப் பிடிக்க அதனால் அவளை வண்டுகள் கொட்டியது. அதன் காரணமாக அவளது நடனத்தில் ஜதி தவறிப் போனது. வண்டுகள் துளைத்த வலியின் வேதனையால் நொடிநேரம் அவளது முகபாவமும் மாறிப் போனது. அதனால் ஊர்வசியே ஜெயித்தாள்.‘ என்று அறிவித்தான்.

‘ஆஹா! அற்புதம்! மிக அற்புதம்!’ – எல்லோரும் வியப்புடன் விக்கிரமாதித்தனை புகழ்ந்தார்கள். இத்தனை காலம் யாராலும் தீர்மானிக்க முடியாமல் இருந்ததை விக்கிரமாதித்தன் தெள்ளத் தெளிவாக்கி விட்டான்.

இந்திரன் மிகவும் மகிழ்ந்து போனான். விக்கிரமாதித்தனுக்கு அளவில்லா பரிசுகளை அள்ளிக் கொடுத்த தேவேந்திரன் அதனுடன் விலைமதிப்பில்லாத நவரத்தின சிம்மாசனம் ஒன்றையும் பரிசளித்தான்.

அந்த அதிசய சிம்மாசனம் முப்பத்திரண்டு படிகள் கொண்டதாக, படிக்கொரு பதுமைகள் அமைந்ததாக பொன்னால் செய்யப்பட்டு, வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்டு, நவரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தகதகத்தது.

‘விக்கிரமாதித்தா! இந்த சிம்மாசனம் சிவபெருமான் எனக்குத் தந்தது. அன்பின் மிகுதியால் இதை நான் உனக்குத் தருகிறேன். ஆயிரம் ஆண்டுகள் நீ இந்த அதிசய சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆட்சி புரிவாயாக!’ என்று வாழ்த்தி வரமளித்தான்.

விக்கிரமாதித்தன் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு சகல பரிசுப் பொருள்களுடனும், சிம்மாசனத்துடனும் தேவ விமானத்தில், தனது உஜ்ஜயினி மாகாளி பட்டணம் திரும்பினான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விக்கிரமாதித்தனும் வேதாளமும்

விக்கிரமாதித்தன் கதைகள் / 7

vikramaditya.1இந்திரன் அளித்த தேவ சிம்மாசனத்தை ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் தனது கொலு மண்டபத்திலே ஸ்தாபித்த விக்கிரமாதித்தன் அதன் மீது வீற்றிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் ராஜ்ஜிய பரிபாலனம் செய்தான்.
ஆனால் விக்கிரமாதித்தன் தேவலோகம் சென்று வந்த நாளிலிருந்து மதிமந்திரி பட்டிதான் சற்று வருத்தத்துடன் காணப்பட்டான். இதைக் கண்டுகொண்ட விக்கிரமாதித்தன், ஒருநாள் தனிமையில் பட்டியிடம் கேட்டான்.

‘பட்டி, சற்று நாளாக உன் முகத்தில் வாட்டத்தைக் காண்கிறேன். சொல், என்ன உன் துன்பம்?’ என்று கேட்டான்.

‘அண்ணா, வாழ்நாள் முழுதும் எப்போதும் தங்களுடனேயே இருக்க பேராசைப்பட்டவன் நான். ஆனால் தேவேந்திரனால் ஆயிரம் ஆண்டு காலம் ஆயுள் வரம் பெற்று வந்த தங்களுடன் கடைசிவரை என்னால் எப்படி இருக்கமுடியும்? அதனை நினைத்துத்தான் சஞ்சலப்பட்டேன்!’ என்றான்.

இப்போது விக்கிரமாதித்தனையும் துயரம் சூழ்ந்து கொண்டது. ‘அடடா எத்தனை சுயநலவாதி நான். உன்னைப் பற்றி யோசிக்காமல் போனேனே. உனக்கும் சேர்த்தல்லவா நான் வரம் பெற்று வந்திருக்க வேண்டும்!’ என்று சொல்லி வருந்தினான்.

அண்ணன் விக்கிரமாதித்தனது துன்பம் பொறுக்காத பட்டி உடனடியாக சுதாரித்துக் கொண்டு, ‘அண்ணா வருத்தப்படாதீர்கள். உங்கள் தம்பி புத்திசாலி என்பது உண்மையானால் ஆயிரம் என்ன, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயுள்கூட நான் பெற்று விடுவேன். கவலைப்படாதீர்கள்‘ என்று கூறி விக்கிரமாதித்தனை கலகலப்பாக்கினான்.

அண்ணனிடம் விளையாட்டுக்குச் சொன்னாலும், அதை உண்மையாக்கிக் கொள்ள விரும்பிய பட்டி, நள்ளிரவில் தங்களது குல தெய்வமான மாகாளி அம்மன் கோயிலுக்குச் சென்றான். தேவியை மனமுருகிப் பிரார்த்தித்து அவளை தரிசிக்க வேண்டினான்.

தேவி பத்ரகாளியம்மன் பட்டி முன் பிரசன்னமானாள். ‘மகனே பட்டி இந்த நடுநிசி வேளையில் என்னைப் பார்க்க விரும்பிய காரணம் என்ன?’ என்று கேட்டாள்.

‘தேவி, எனது சகோதரன் விக்கிரமாதித்தனுக்கு தேவலோக அதிபதியாகிய இந்திரன் ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரமளித்துள்ளான். எனக்கு வரமருள தாயாகிய உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். உன் பிள்ளை மீது கருணை காட்டு தாயே! எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம் தா அன்னையே!’ என்று தேவியின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினான்.

‘பட்டி, நீ கேட்கும் வரத்தைப் பெறவேண்டுமானால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. குற்றமே இல்லாத முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஓர் ஆண் மகன், அதுவும் அவன் சத்ரிய வம்சத்து மன்னனாக இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட ஒருவனது தலையை நீ எனக்குக் காணிக்கையாகத் தந்தால் நீ விரும்பியது கைகூடும்! செய்கிறாயா?’ என்றாள்.

‘இதோ இப்போதே கொண்டு வருகிறேன் தாயே!’என்ற பட்டி அரண்மனைக்கு விரைந்தான். ஆம்! பத்ரகாளி கூறிய நிபந்தனைக்கு முழுத் தகுதியாக இருந்தவன் விக்கிரமாதித்தன் மட்டும்தான்!

விக்கிரமாதித்தனது பள்ளியறைக்குள் வேகமாக நுழைந்த பட்டி, மகாராணியுடன் படுத்திருந்த அவனை எழுப்பி தனியே அழைத்து வந்து, ‘அண்ணா! எனக்கு உங்கள் தலை தேவைப்படுகிறது!’ என்று கேட்டான்.
விக்கிரமாதித்தன் ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல், ‘அதற்கென்ன எடுத்துக்கொள் பட்டி!” என்று சொல்லி தயாராக தலையைக் குனிந்து நின்றான்.

பட்டி ஒரே வீச்சில் விக்கிரமாதித்தனுடைய தலையை துண்டித்து எடுத்துக்கொண்டு சென்று, காளியம்மன் பாதத்தில் வைத்து, ‘தாயே இதோ நீங்கள் கேட்டபடியே சர்வ லட்சணங்களும் கொண்ட எனது தமையன் தலை, உனக்குக் காணிக்கை’ என்று பணிந்தான்.

‘பட்டி, நிபந்தனையை குறையில்லாமல் நிறைவேற்றியதால் நீ விரும்பியவாறே, உனக்கு இரண்டாயிரம் வருடங்கள் ஆயுள் வரமளிக்கிறேன். தவிர எப்போதும் செல்வ சுகத்துடனும், பூரண புத்திசாலித்தனத்துடனும் இறுதிவரை வாழ்வாயாக!’ என்று வாழ்த்தினாள்.

அவள் சொல்லி முடித்த மறுகணமே பட்டி கலகலவென்று கேலியாகச் சிரித்தான்.

‘பட்டி எதற்காக இந்த கேலிச் சிரிப்பு?!’ பத்ரகாளி வியப்புடன் கேட்டாள்.

‘மன்னியுங்கள் தாயே! தேவர்கள் தலைவனான தேவேந்திரன், எங்கள் விக்கிரமாதித்த மகாராஜாவுக்கு அளித்த வரமே பலிக்காமல் போய், ஆயிரம் ஆண்டு ஆயுள் வாங்கினவன் சிரம் இதோ அறுபட்டுப்போய் தரையில் கிடக்கிறது. இதில் தாங்கள் அளித்த வரத்தை நான் எப்படி நம்புவது தாயே? அதைத்தான் நினைத்தேன்; சிரித்தேன்!’

’பட்டி! நீ மிகச் சிறந்த அறிவாளி என்பதில் சந்தேகமேயில்லை. உன் திறமையான வாதத்தால் என்னை நீ வென்றுவிட்டாய்! கவலைப்படாதே! நான் உனக்கு அளித்த வரம் தப்பாது. தேவேந்திரன் விக்கிரமாதித்தனுக்கு அளித்த வரமும் பிழையாகாது!’ என்றவள் பட்டியிடம் எலுமிச்சம் பழமும், திருநீறும், தீர்த்தமும், ஒரு பிரம்பும் தந்து, ‘பட்டி! விக்கிரமாதித்தன் தலையை அவனது உடலோடு சேர்த்து வைத்து இந்த தீர்த்தத்தைத் தெளித்து, வெட்டுப்பட்ட இடத்தில் இந்தத் திருநீற்றைப் பூசு. பிரம்பால் தடவிக் கொடு. விக்கிரமாதித்தன் உயிர் பெறுவான்!’ என்று சொல்லி மறைந்தாள்.

காளியம்மனின் பிரசாதத்தோடும், விக்கிரமாதித்தனின் தலையோடும் அரசனின் பள்ளியறைக்கு விரைந்த பட்டி, தேவி சொன்னதுபோலவே தலையை உடலோடு வைத்து தீர்த்தம் தெளித்து திருநீற்றைப் பூசினான். பிரம்பால் வருடினான். மறுகணமே விக்கிரமாதித்தன் உயிர் பெற்று எழுந்தான்.

பட்டி நடந்தது அனைத்தையும் அவனிடம் சொல்ல, இப்போது விக்கிரமாதித்தன் முகம் வாட்டமுற்றான்.

‘தம்பி பட்டி, எனது ஆயுளோ ஆயிரம் ஆண்டுகள்தான்; ஆனால் நமது மாகாளியம்மன் உனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயுள் அளித்துள்ளாள். கடைசிவரை நாம் இருவரும் சம ஆயுளுடன் வாழ சாத்தியமே இல்லையா?’ என்று கூறி வருந்தினான்.

‘அண்ணா தங்களது வருத்தம் நியாயம்தான். ஆனால் நான் இதை எண்ணிப் பார்க்காமலா இருப்பேன். நாம் இருவரும் சம ஆயுளுடன் வாழ வழியிருக்கிறது!’ என்றான் பட்டி.

‘அப்படியா? என்ன வழி அது?’ ஆவலுடன் கேட்டான் விக்கிரமாதித்தன்.

‘அண்ணா, தேவேந்திரன் உங்களுக்கு வரமளித்தபோது, ‘இந்த அதிசய சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வாய்‘ என்றுதானே வரமளித்துள்ளான். எனவே நீங்கள் ஆறுமாத காலம் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யுங்கள். அடுத்த ஆறுமாதம் தேசாந்திரியாக காடு மேடெல்லாம் சுற்றி வாருங்கள். இப்படி நாடாறு மாதமும் காடாறு மாதமுமாக காலம் கழித்தால் நீங்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழலாம்!’என்று யோசனை தெரிவித்தான்.

விக்கிரமாதித்தனும் மனம் மகிழ்ந்துபோய் பட்டியைப் பாராட்டி கட்டித் தழுவிக் கொண்டான். பட்டியின் ஆலோசனைப்படியே காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஆட்சி நடத்தத் தொடங்கினான்.

***

இப்படியாக விக்கிரமாதித்தனது தொடக்ககால சரித்திரத்தைச் சொல்லி முடித்த முதலாம் பதுமையான சுகேசி, ‘போஜராஜனே, எங்களது விக்கிரமாதித்தன் சரித்திரம் கேட்டீர்கள் அல்லவா? இப்போது சொல்லுங்கள். எங்கள் சக்ரவர்த்திக்குள்ள வீரம், விவேகம், தைரியம், புத்திக்கூர்மை இவையெல்லாம் உங்களுக்கு இருக்கிறதென்று நினைத்தால் நீங்கள் தாராளமாக இந்தச் சிம்மாசனத்தில் ஏறி அமரலாம்!’ என்றது.

முதலாம் பதுமை கதை சொல்லி முடிக்கும் தறுவாயில் அன்றைய நாள் முடிந்து சூரியன் அஸ்தமனமாகி விட்டதால், சிம்மாசனத்தில் அமர வேண்டிய முகூர்த்த காலமும் கழிந்து விட போஜராஜனும், அவனது மந்திரியும் ராஜசபையை விட்டு அவரவர் இல்லத்துக்குச் சென்றார்கள்.

***

இரண்டாம் நாள், மீண்டும் ராஜசபை கூடியது.
அன்றைய தினம் ஒரு நல்ல முகூர்த்த காலத்தில் போஜ மன்னன் முப்பத்திரண்டு படிகள் கொண்ட சிம்மாசனத்தின் முதல்படி ஏறி இரண்டாம் படி மீது கால்வைக்கும் தருணம் அந்தப் படிக்கு காவலாயிருந்த இரண்டாம் விசித்திரப் பதுமையான மதனாபிஷேகவல்லி முன்தினம் போலவே கேலியாகச் சிரித்து, ‘போஜராஜனே சற்று நில்லும். பயம் என்பதின் அர்த்தமே அறியாத, எமது சக்ரவர்த்தி விக்கிரமாதித்தனின் சாகசங்கள் பெரும் வியப்புக்குரியது மட்டுமல்ல, போற்றுதலுக்கும் உரியது! அவரது வீரதீரமானது உமக்கு இருக்கிறதென்று உணர்ந்தாலல்லவா நீர் இந்தப் படியை ஏறி சிம்மாசனம் அமர முடியும்?’ என்றது.

‘இரண்டாம் பதுமையே, உமது விக்கிரமாதித்த பூபதியிடம் கண்டு வியந்த அந்த வீரப் பிரதாபத்தை சாகசச் செயல்களை எனக்கும்தான் சொல்லேன்! கேட்டு மகிழ்கிறேன்’ என்றான் போஜராஜன்.

‘ஓ! அப்படியே ஆகட்டும்! எத்தனைமுறை கூறினாலும் திகட்டாத மன்னனது பெருமையைக் கூறுகிறேன் கேளும் மன்னவனே!’ என்ற மதனாபிஷேகவல்லிப் பதுமை அக்கதையை சொல்லத் தொடங்கியது.

***

விக்கிரமாதித்த மன்னன் அரசாளும் உஜ்ஜயினி நகரத்தின் அருகாமையில் ஒரு பெரும் காடு இருந்தது. அந்தக் காட்டின் மையத்தில் ஓர் வனதுர்க்கையம்மன் கோயிலும், அந்தக் கோயிலிலிருந்து நான்கு காத தூரத்தில் மயானம் ஒன்றும், அந்த மயானத்தில் நடுவில் ஒரு முருங்கை மரமும் இருந்தன.

அது சாதாரண முருங்கை மரம் இல்லை! பார்க்கவே விசித்திரமான வளைந்து நெளிந்து காணப்பட்ட அந்த முருங்கை மரத்தில்தான் வேதாளம் ஒன்று தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த வேதாளமும் சாமான்யமானதில்லை. அதை ஒருவன் வசப்படுத்தி விட்டால், அந்த வேதாளத்தின் மூலம் அவன் நினைத்த காரியங்கள் எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ள முடியும். உலகையே ஆட்டிப் படைக்க முடியும்!

முனிவர்கள், மந்திரவாதிகள், ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள் என்று அந்த வேதாளத்தைப் பற்றித் தெரிந்த பலரும் எப்பாடு பட்டாவது அந்த வேதாளத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முயற்சித்து வந்தனர். ஆனால் ஒருவராலும் அதை சாதிக்க முடியவில்லை.

வேதாளத்தை வசப்படுத்த முயற்சித்தவர்களுள் ஞானசீலன் என்கிற தேவி உபாசகன் முக்கியமானவன். இவன் தனது தீவிர பக்தியினால் வன துர்க்கையம்மனையும், வேதாளத்தையும் வசப்படுத்திக்கொண்டு சகல சித்திகளும் பெற்று, இந்தப் பூவுலகையே ஆட்டிப் படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அதற்காகவே வனதுர்க்கையம்மன் கோயிலில் பெரும் யாக குண்டம் வளர்த்து கடும் தவமிருந்து பூஜை செய்தான். ஒருநாள் தேவி வனதுர்க்கையம்மன் அவன் முன் காட்சி தந்தாள்.

‘ஞானசீலா! உனது பக்தி சிரத்தையுடன் கூடிய கடுமையான தவம் கண்டு மனம் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள்.

ஞானசீலன் பரவசமாக, ‘தேவி! எனக்கு இறவா வரம் வேண்டும். தவிர இந்த மண்ணுலகில் அரசாளும் அத்தனை மன்னர்களையும் வென்று மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக நான் இந்தப் பூவுலகையே அரசாள வேண்டும். மகா சக்ரவர்த்தியாகத் திகழ வேண்டும். அதற்கு நீதான் அருள்புரிய வேண்டும்!’ என்று கேட்டான்.

‘ஞானசீலா, நீ கேட்ட வரங்கள் உனக்குக் கிடைக்க வேண்டும் என்றால் ஆயிரம் அரசர்களைக் கொன்று அவர்களது உடல்களை யாக குண்டத்தில் போட்டு யாகம் செய்ய வேண்டும். தவிர அந்த மன்னர்களது தலைகளை வெட்டி எனது பாதத்தில் காணிக்கையாக வைத்தால் நீ விரும்பியது நடக்கும்!’ என்று சொல்லி மறைந்தாள்.

அதற்கு மேல் ஞானசீலன் நேரத்தை வீணாக்க விரும்பாமல் நாடு நாடாகப் புறப்பட்டான். பலப்பல யுக்திகளாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், கபட நாடகங்களாலும் அநேக மன்னர்களை ஏமாற்றி தனியே அழைத்து வந்து வனதுர்க்கையம்மன் பாதத்தில் வைத்து பலியிட்டான். இம்மாதிரி அவன் பலியிட்ட மன்னர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது (999) ஆகி விட்டது. ஆயிரமாவது தலைக்கு விக்கிரமாதித்தனது தலையை திட்டமிட்டான் ஞானசீலன்.

ஆனால் விக்கிரமாதித்தனை பலி கொடுக்கும் முன்னதாக அவன் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. அது வேதாளத்தை வசப்படுத்தும் திட்டம். அதற்கான முயற்சியில் இறங்கினான் ஞானசீலன்.

***

ஒரு பெரும் மகரிஷி போல் சாந்தசொரூபியாக வடிவம் கொண்டு விக்கிரமாதித்தன் சபைக்குச் சென்றான் ஞானசீலன். தன்னை அன்புடனும் பணிவுடனும் வரவேற்ற விக்கிரமாதித்தனை ஆசீர்வதித்து ஒரு மாதுளங்கனியை அவனுக்குக் கொடுத்து வாழ்த்தி விட்டு வேறு ஏதும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டான்.

முனிவர் தந்த மாதுளம் கனியை விக்கிரமாதித்தன் அருகிலிருந்த பட்டியிடம் தர முயற்சிக்க, அப்போது கைதவறி பழம் கீழே விழுந்து உடைந்தது.
அட! என்ன ஆச்சரியம்! பழத்திலிருந்து மாதுளை முத்துகளுக்குப் பதிலாக விலையுயர்ந்த ரத்தின கெம்புக் கற்கள் சிதறித் தெறித்தன. வியந்து போனான் விக்கிரமாதித்தன். அந்த ரத்தினக் கற்களை எடுத்துப் பார்த்த மகாமந்திரி பட்டி, அவைக விலைமதிப்பில்லாதவை என்று உணர்ந்து கொண்டான். பின் யோசனையுடன் விக்கிரமாதித்தனிடம் சொன்னான்: மீண்டும் அந்த முனிவர் கண்டிப்பாக இங்கு வருவார்!

பட்டி சொன்னதுபோலவே மறுநாள் மீண்டும் ராஜசபைக்கு விஜயம் செய்தார் முனிவர். அவரை வரவேற்று உபசரித்த விக்கிரமாதித்தன், ‘மகா முனிவரே, நேற்று தாங்கள் அளித்த அதிசய மாதுளம் கனியில் விலை மதிப்பில்லாத ரத்தினக் கற்கள் இருந்ததைக் கண்டேன். பொன் பொருளில் நாட்டமில்லாத துறவியான தாங்கள் எனக்கெதற்காக இத்தனை விலையுயர்ந்த கற்களைப் பரிசளித்தீர்கள்? பதிலுக்கு என்னிடமிருந்து ஏதோ எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது! சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ – விக்கிரமாதித்தன் நேரிடையாக விஷயத்துக்கு வந்தான்.

‘ஆம் விக்கிரமா! மிகச் சரியாக கணித்து விட்டாய்! எனக்கு உனது உதவி தேவைப்படுவது உண்மைதான்! நான் நமது உஜ்ஜயினியின் கானகப் பிரதேசத்திலுள்ள வனதுர்க்கையம்மனை பூஜித்து ஒரு யாகம் நடத்த உத்தேசித்திருக்கிறேன். யாகம் பூர்த்தியானால் அதன் மூலம் எனக்கு அஷ்டமாசித்திகளும் கைவசமாகும். ஆனால் அந்த யாகத்தை நடத்தவிடாமல் செய்ய சில துஷ்ட சக்திகள் காத்திருக்கின்றன. எனவே பத்ரகாளியின் பரம பக்தனான நீ யாகத்தின்போது என்னருகில் இருந்தால் அந்த துஷ்ட சக்திகள் தொல்லை தராமல் விலகிப் போய் விடும். இந்த உதவி ஒன்றைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்!’ என்றான்.

‘அப்படியே ஆகட்டும் முனிவர் பெருமானே! கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றி வைக்கிறேன். சொல்லுங்கள், நான் எங்கு எப்போது வரவேண்டும்?’

முனிவன் ஞானசீலன் விக்கிரமாதித்தன் வரவேண்டிய இடத்தையும் நாளையும் நேரத்தையும் சொல்லி விட்டு, ‘விக்கிரமா, யாகத்துக்கு நீ தனியாகத்தான் வரவேண்டும். இது மிக முக்கியம்!’ என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான்

***

முனிவன் ஞானசீலன் சொன்னதுபோலவே குறிப்பிட்ட நாளில் நடுஜாமத்தில் வன துர்க்கையம்மன் கோயிலுக்கு தன்னந்தனியாகச் சென்றான் விக்கிரமாதித்தன்.

அங்கே பெரும் யாககுண்டம் வளர்த்து அமர்ந்திருந்தான் ஞானசீலன். அவனைச் சுற்றிலும் குறளிகளும், சில ஏவல் பேய்களும் கிடந்து கூத்தாடிக்கொண்டிருந்தன.

‘முனிசிரேஷ்டரே! தாங்கள் சொன்னபடியே தனியே வந்துவிட்டேன். இப்போது நான் தங்களுக்கு செய்ய வேண்டிய காரியம் ஏதாவது உள்ளதா?’ என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.

‘ஆம், விக்கிரமாதித்தா! ஒரு முக்கிய காரியத்தை நீ செய்ய வேண்டும்! இக் கோயிலின் தென் பகுதியில் நான்கு காத தூரத்தில் மயானம் ஒன்று இருக்கிறதல்லவா? அதன் நடுவே வளைந்து நெளிந்த முருங்கை மரம் ஒன்று உள்ளது. அதன் உச்சாணிக் கிளையில் பிணம் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பிணத்தை நீ இங்கே கொண்டு வந்து என்னிடம் சேர்த்து விட்டால் போதும்! அதுதான் முதல் காரியம்!’ என்றான் ஞானசீலன்.

‘அவ்வளவுதானே! இதோ, இப்போதே சென்று அப்பிணத்தைக் கட்டித் தூக்கி வருகிறேன்!’

விக்கிரமாதித்தன் மயானத்தை அடைந்தான். முருங்கை மரத்தை தேடிக் கண்டுபிடித்து அதன் உச்சாணிக் கிளையில் தொங்கிய பிணத்தை எடுத்து தோளின்மீது போட்டுக் கொண்டு கீழிறிங்கினான். அப்போது பிணம் வாய் விட்டு அழுதது.

அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் பிணம் உயிரோடு இருப்பதாகப் பதறிப்போய் அதை தரையில் கிடத்தினான். மறுநொடியே பிணம் மீண்டும் பறந்துபோய் முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையில் தலைகீழாகத் தொங்கியது.

விக்கிரமாதித்தன் ஆச்சரியமடைந்தான். இதென்ன விசித்திரம்? பிணம் பறக்கிறதே! மீண்டும் மரத்தில் ஏறி அந்த சவத்தைச் சுமந்து கொண்டு கீழிறிங்கினான்.

அப்போது பிணத்துக்குள் புகுந்திருந்த வேதாளம், ‘ஏ விக்கிரமாதித்த மகாராஜாவே! இந்தப் பிணத்துக்குள் புகுந்திருக்கும் வேதாளமாகிய நான், உன்னை நன்கு அறிவேன்! உன்னை அனுப்பி வைத்த அந்த ஞானசீலனையும் அறிவேன். என்னை அவனிடம் சேர்ப்பதற்காகத்தானே கொண்டு போகிறாய்? போகட்டும். உன்னுடன் நான் வரவேண்டுமானால் ஒரு நிபந்தனை இருக்கிறது. நாம் போய்ச் சேரும்வரை வழி முழுக்க நீ பேசவே கூடாது. பேசினால் நான் மீண்டும் முருங்கை மரத்துக்கே போய் விடுவேன். ஆனால் நான் உன்னிடம் பேசிக்கொண்டு வருவேன். என்னைச் சுமந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க வழிப் பயணத்தில் உனக்கு சுவாரசியமான கதை சொல்லுவேன். கதையின் முடிவில் ஒரு புதிரும் போடுவேன். அந்தப் புதிருக்கான சரியான விடையை நீ சொல்ல வேண்டும். விடை தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உனது தலை சுக்குநூறாகச் சிதறி விடும்.’ என்றது.

விக்கிரமாதித்தன் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தவித்தான். ‘வழியில் பேசக் கூடாது; பேசினால் வேதாளம் மீண்டும் மரத்துக்கே போய் விடும்! ஆனால், வேதாளம் கேட்கும் கேள்விக்கு பதிலும் சொல்ல வேண்டும். அப்படி கதையின் புதிருக்கான விடையைச் சொல்லாவிட்டாலோ தலை வெடித்துச் சிதறிப் போய் விடும்! என்னதான் செய்வது?

சரி! வேறு வழியில்லை. அப்படி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே போய் விட்டால் மறுபடியும் கட்டித் தூக்கி வரவேண்டியதுதான்’ என்று நினைத்து தேற்றிக் கொண்டான்.

ஏதும் பதில் பேசாமல் பிணத்தைச் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளமும் அவனது பதிலை எதிர்பார்க்காமல் கதை சொல்லத் தொடங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வேதாளம் சொல்லிய ‘பத்மாவதியின் காதல்’ கதை (1)

விக்கிரமாதித்தன் கதைகள் / 8

Vetalவருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரை பிரதாபமகுடன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் வஜ்ரமகுடன். பயமறியா இளங்கன்று. அழகில் மன்மதன். கலா ரசிகன்.
இந்த வஜ்ரமகுடனின் ஆருயிர் நண்பன் புத்திசரீரன். அந்நாட்டு மந்திரியின் மகன். நண்பர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார்கள். எங்கும் எப்போதும் இணை பிரியாமல் சுற்றி வந்தார்கள்.

ஒருநாள் இருவரும் வேட்டையாடலாம் என்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஆசை தீரும் வரை மிருகங்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடினார்கள். பின் களைத்துப் போய் தாகம் தீர்த்துக் கொள்ள நீர்நிலை தேடி அலைந்து சற்று தூரத்தில் ஒரு பெரும் அருவித் தடாகத்தைக் கண்டார்கள். அதை நெருங்கியவர்கள் திகைத்துப் போனார்கள்.

அங்கே, தடாகத்தில் பூத்திருந்த அழகழகான தாமரைப் பூக்களுக்கு மத்தியில் கலகலவென்று சிரிப்பொலியுடன் அநேகம் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். அந்த அழகுப் பெண்களுக்கு மத்தியில் ஈடு இணையற்ற அழகுப் பெட்டகமாக அந்தப் பெண்களின் தலைவி போல் ஒருத்தி தனியே ஜொலித்தாள்.

அவளைப் பார்த்த கணம் இளவரசனான வஜ்ரமகுடன் திகைத்துப் போனான். அபாரமான அவளது அழகுக்கு அடிமையாகிப் போனான். தேவலோகப் பெண்களுக்கே சவால் விடுவது போன்ற அவளது வனப்பில் மெய்மறந்து நின்றான்.

அந்தப் பெண்ணும் வஜ்ரமகுடனைப் பார்த்தாள். வஜ்ரமகுடன் தனது அழகில் மலைத்து நிற்பதைக் கண்டு வெட்கப்பட்டு, மயங்கி நின்றாள். முதல் பார்வையிலேயே அவளுக்கும் வஜ்ரமகுடனை மிகவும் பிடித்துப் போனது. அவனை தனது இதயத்திலே வைத்துப் பூட்டிக்கொண்டாள்.

அந்தப் பெண்ணின் பெயர் பத்மாவதி. அவள் வஜ்ரமகுடனுக்கு தன்னைப் பற்றிய தகவலைத் தெரிவிக்க நினைத்தாள். குறிப்பால் உணர்த்த முயன்றாள். நீரில் பூத்திருந்த ஒரு தாமரை மலரைப் பறித்து தனது காதில் வைத்துக் காண்பித்தாள். பின் அந்தத் தாமரையை காதில் அணிந்துகொள்வதுபோல பாவனை காட்டி, காதணியான தந்தபத்திரம் என்னும் அணிகலனைப் போல அதை சுருட்டிக் காண்பித்தாள். பின் மற்றொரு தாமரைப் பூவைப் பறித்து தனது தலையில் சூடிக்கொண்டாள். அடுத்து தனது மற்றொரு கையை அவளது இதயத்தில் வைத்து வஜ்ரமகுடனைப் பார்த்துச் சிரித்து வெட்கத்துடன் தலை குனிந்தாள். இந்த தனது குறிப்புச் செயல்களை அந்தப் பெண் விளையாட்டுப் போல செய்ததால் அவளது தோழிகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வஜ்ரமகுடனின் பக்கத்திலிருந்து புத்திசரீரன் அனைத்தையும் கவனித்துப் பதிய வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் நீராடி முடித்த அந்தப் பெண் தனது தோழிகளுடன் வஜ்ரமகுடனை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே புறப்பட்டுச் சென்றாள். வஜ்ரமகுடனோ அவள் செல்வதைப் பார்த்தபடியே தவிப்புடன் நின்றான்.
இயலாமையுடன் தனது நண்பன் மந்திரிகுமாரனிடம் புலம்பினான். ‘தோழா, புத்திசரீரா! எனது இதயம் அவளுடனேயே சென்று விட்டது. ஆனால் அவள் யாரென்றோ, எங்கிருக்கிறாள் என்றோ ஒன்றும் தெரியவில்லை. அவளில்லாமல் இனி என்னால் ஜீவிக்கவே முடியாது. ஆனால் இனி நான் அவளை மீண்டும் எப்படிக் காண்பேன்?’ என்று புலம்பினான்.

புத்திசரீரன் திகைத்துப் போனான். ‘என்ன இப்படிச் சொல்கிறாய் வஜ்ரமகுடா! அந்தப் பெண் தன்னைப் பற்றிய தகவல்களைக் குறிப்பால் உணர்த்தினாளே, நீ அதைக் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டான்.

‘அப்படியா? இல்லையே! ஏதொன்றையும் நான் கவனிக்கவில்லையே! அடடா! அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே! நான் அவள் அழகிலேயே மதிமயங்கி இருந்துவிட்டேன் நண்பா! அவள் சொன்னது உனக்கு ஏதும் புரிந்ததா?’ என்றான்.

‘ஆம்! வஜ்ரமகுடா! அவள் சொன்ன குறிப்புகளிலிருந்து எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன் கேள். அவள் தாமரைப் பூ ஒன்றைத் தன் காதில் வைத்துக் காண்பித்ததால், ‘தான் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள்’ என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதில் அணிந்து கொள்வது போலச் செய்து, தந்தபத்திரம் என்னும் காதணியைப் போலச் சுருட்டிக் காண்பித்ததால், ‘அந்நாட்டில் உள்ள தந்தச் சிற்பி ஒருவனின் மகளாக அவள் இருக்க வேண்டும். அடுத்தும் ஒரு தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டதால் பத்மாவதி என்பது அவளது பெயராக இருக்கலாம். கடைசியாக தனது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு அவள் உன்னை வெட்கப்பார்வையுடன் நோக்கித் தலை குனிந்ததால் காதல் வயப்பட்டு அவளது இதயத்தை உனக்கே தந்துவிட்டாள் என்று அர்த்தமாகிறது!’ என்று விளக்கம் சொன்னான்.

வஜ்ரமகுடன் ஆனந்தத்தில் புத்திசரீரனை கட்டித் தழுவி அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டினான். ‘என் வயிற்றில் பால் வார்த்தாயடா நண்பா! உன்னை நண்பனாகப் பெற்றது என் பாக்கியம்!’ என்றவன், ‘நண்பா புத்திசரீரா! நான் உடனே அவளை சந்தித்துப் பேச வேண்டும்! நீதான் அதற்கு வழி காட்டவேண்டும்!’ என்று வேண்டினான்.

‘வஜ்ரமகுடா! கலங்காதே! கர்ணோத்பலன் என்னும் மன்னன் ஒருவன் கலிங்க நாட்டை ஆண்டு வருவதை நான் அறிவேன். அந்நாட்டின் சிறந்த தந்த சிற்பிகளுள் ஒருவர் சங்கிராமவர்த்தனன் என்பவர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்றும், அவள் மிகுந்த பேரழகி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அநேகமாக இந்தப் பத்மாவதி அவரது மகளாகத்தான் இருக்க வேண்டும்!’ – மந்திரி குமாரன் இப்படிச் சொன்னதுமே ராஜகுமாரன் பொறுமையிழந்து துடிக்கத் தொடங்கிவிட்டான்.

‘நண்பா! அப்படியானால் ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? எனக்கு அவளை உடனே பார்த்தாக வேண்டும். இப்போதே புறப்படுவோம் வா!’

இருவரும் கலிங்க நாட்டை நோக்கி குதிரையை விரட்டினார்கள்.

***

மன்னன் கர்ணோத்பலன் ஆண்ட கலிங்க நாட்டை அடைந்த வஜ்ரமகுடனும், புத்திசரீரனும் மிகச் சுலபமாகவே தந்த சிற்பி சங்கிராமவர்த்தனன் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் நேரடியாக சிற்பியின் இல்லத்துக்குள் சென்று பத்மாவதியைப் பார்த்து விட முடியுமா என்ன? சமய சந்தர்ப்பம் பார்த்துத்தானே அவளைச் சந்திக்க வேண்டும். அதற்குத் தகுந்தபடி அக்கம் பக்கத்தில் தங்க இடம் தேடினார்கள்.

சிற்பியின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வயதான மூதாட்டி ஒருத்தி தனியே வசித்திருந்தாள். வஜ்ரமகுடனும், புத்திசரீரனும் அவளை சிநேகம் பிடித்துக்கொண்டு அவளுக்கு நிறைய பொன்னையும், பொருளையும் கொடுத்து வசப்படுத்திக் கொண்டு அவளது வீட்டிலேயே தங்கினார்கள்.

ஒருநாள் சமயம் பார்த்து மந்திரி குமாரன் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான். ‘அம்மா, இவ்வூரில் சிற்பி சங்கிராமவர்த்தனன் என்பவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?’

‘என்ன தம்பி இப்படிக் கேட்டு விட்டாய்! நான் அவரது வீட்டில்தான் வேலை பார்க்கிறேன். தாயில்லாத அவரது மகளை குழந்தைப் பருவத்திலிருந்தே செவிலித் தாயாக இருந்து வளர்த்தது நான்தானே!’

‘ஆஹா! தாயே! பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல ஆயிற்று! அம்மா! எங்களுக்காக தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். சிற்பியின் மகள் பத்மாவதியிடம் சென்று, ‘நீ அருவித் தடாகத்தில் பார்த்த இளவரசன் உன்னைத் தேடி வந்திருக்கிறான். அவன் உன்னைத் தனிமையில் சந்தித்துப் பேச ஆவலாக உள்ளான்.’ என்று தகவல் சொல்லி அவளது பதிலைக் கேட்டு வரவேண்டும்!’ என்று கெஞ்சிக் கேட்டான்.

ஏற்கெனவே அவர்கள் தந்த பொன் பொருளில் மயங்கிய மூதாட்டி, மறுமொழி பேசாமல் கிளம்பிப் போனாள். போனவள் சிறிது நேரத்தில் அழுது அரற்றியபடி வீடு வந்து சேர்ந்தாள்.

‘அம்மா, ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது?’ பதறிப் போய் கேட்டான் ராஜகுமாரன் வஜ்ரமகுடன்.

‘என்ன சொல்வது தம்பி? அவளிடம் போய் நீங்கள் சொன்னதை அப்படியே சொன்னேன். முதலில் எல்லாவற்றையும் சிரித்தபடியே கேட்டுக் கொண்டவள், ‘தனிமையில் எப்போது சந்திக்கலாம்?’ என்று இளவரசன் கேட்டு வரச் சொன்னார்’ என்றதுமே, மிகுந்த கோபத்துடன், என்னைத் திட்டித் தீர்த்ததுடன், கற்பூரக் கரைசலில் அவளது இரண்டு கைகளையும் முக்கியெடுத்து எனது இரண்டு கன்னங்களிலும் அடித்து விட்டாள். இதோ பாருங்கள்!’ என்று காட்டினாள்.

ஆம்! மூதாட்டியின் இரண்டு கன்னங்களிலும் பத்து விரல்களின் அடையாளம் பளிச்சென்று அச்சாகப் பதிந்திருந்தது.

இதைப் பார்த்ததுமே அரசகுமாரன் வஜ்ரமகுடன் முகம் வாடிப் போனது.
உடனே மந்திரி குமாரன் அவனிடம், ‘நண்பா! கலக்கம் கொள்ளாதே! அவள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. நீ அவளை எப்போது சந்திக்கலாம் என்பதைத்தான் இப்படி பூடகமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாள்! இப்போது பௌர்ணமி காலம் என்பதால் நிலா வெளிச்சம் பூரணமாக ஜொலிக்கும் இந்தப் பத்துநாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கலாம் என்பதைத்தான் கிழவியின் கன்னங்களில் கற்பூரம் தொட்டு அடித்து உணர்த்தியிருக்கிறாள்!’ என்றான்.

அது போலவே பத்து நாட்களுக்குப் பிறகு பத்மாவதி, மூதாட்டியிடம் தனது வீட்டின் நந்தவனத்துக்கு ராஜகுமாரனை நள்ளிரவில் வரும்படி பூடகமாகச் சொல்லியனுப்பினாள். அதை மந்திரி குமாரன் புரிந்து ராஜகுமாரனிடம் சொல்ல, அதன்படியே வஜ்ரமகுடன், இரவில் நந்தவனத்தில் பத்மாவதியைச் சந்தித்தான்.

காதலர்கள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார்கள். கட்டித் தழுவி முத்தமழை பொழிந்தார்கள். இறுதியில் காந்தர்வ விவாகம் புரிந்து கலவியில் மூழ்கித் திளைத்தார்கள்.

விடியும் நேரம்… வஜ்ரமகுடன் புறப்படத் தயாரானபோது, பத்மாவதி அவனிடம், ‘அன்பரே நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். அன்று அருவிக்கரை தடாகத்தில் நான் தெரிவித்த சங்கேதக் குறிப்புகளை தாங்களே புரிந்து கொண்டீர்களா அல்லது தங்களது நண்பர் விளக்கினாரா?’ என்று கேட்டாள்.

‘அதையேன் கேட்கிறாய் தேவி? நீ சொன்ன சங்கேதக் குறிப்புகளின் பொருள் எதுவும் எனக்கு விளங்கவேயில்லை. எனது நண்பன் மந்திரி குமாரன் புத்திசரீரன் தான் எனக்கு அவைகளின் பொருளை விளக்கினான்!’ என்று உண்மையைத் தெரிவித்தான்.

‘நல்லவேளை இப்போதாவது சொன்னீர்களே! கடைசியில் அவரால்தானே உங்களை நான் அடைய முடிந்தது. அதனால் அவர் என் சகோதரர் ஆவார். நான் அவருக்கு மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இருங்கள் தங்கள் தோழருக்கு என் அன்பின் காணிக்கையாக கொஞ்சம் பலகாரங்கள் தருகிறேன். கொண்டு தந்து சாப்பிடச் சொல்லுங்கள். அவருக்குக் கொடுத்து விட்டு உடனே இங்கே வந்து விடுங்கள். எனது தாய் தந்தையர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் எந்தப் பயமுமில்லாமல் இங்கே நாமிருவரும் சேர்ந்து சாப்பிடுவோம்!’ என்றாள்.

வஜ்ரமகுடனும் பத்மாவதி தந்த பலகாரங்களை எடுத்துப் போய் புத்திசரீரனிடம் கொடுத்துவிட்டு, நடந்த விஷயங்களைத் தெரிவித்தான்.
எல்லாவற்றையும் கேட்ட புத்திசரீரன், ‘நண்பா ராஜகுமாரா! நீ பெரும் தவறைச் செய்து விட்டாய். பத்மாவதியின் குறிப்புகளுக்கான விளக்கத்தை நான்தான் உனக்குச் சொன்னேன் என்பதை நீ அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது. அந்த விஷயத்தை நீ மறைத்திருக்க வேண்டும்!’ என்று கூறினான்.

‘அதனால் என்ன? அவளொன்றும் தவறாக நினைக்கவில்லை. அதனால்தானே உன்னை சகோதரன் என்று ஏற்றுக் கொண்டாள். போகட்டும், உன் சகோதரி கொடுத்தனுப்பிய பலகாரத்தை நீ சாப்பிடு. என்னை உடனே வரச் சொன்னாள்; நான் அவளுடன் உணவருந்தச் செல்கிறேன்!’ என்று சொல்லிப் புறப்பட்டான்.

‘சற்றுப் பொறு நண்பா! இதைக் கவனித்து விட்டுச் செல்!’ என்ற புத்தி சரீரன்,

பத்மாவதி தனக்குக் கொடுத்து அனுப்பிய பலகாரங்களிலிருந்து கொஞ்சத்தை எடுத்து அருகிலிருந்து நாய்க்குப் போட்டான். அதைச் சாப்பிட்ட நாய் உடனே சுருண்டு விழுந்து செத்துப் போனது.

வஜ்ரமகுடன் அதிர்ந்து போனான். ஆத்திரம் கொண்டான்.

‘அட! நாசகாரி! இத்தனை கொடியவளா அந்தப் பத்மாவதி? அவள் எதனால் இப்படிச் செய்தாள்? எனது உயிர் நண்பனையே கொல்லப் பார்த்தாளே! அவளை என்ன செய்கிறேன் பார்!’ என்று கொதித்தான்.

‘பொறுமை நண்பா, கோபப்படாதே! உன் உயிர் நண்பன் என்பதால்தான் அவள் என்னைக் கொல்ல நினைத்தாள். அவளது குறிப்புகளைப் புரிந்து கொண்டதால் எனது புத்திசாலித்தனத்தை உணர்ந்து கொண்ட பத்மாவதி, அதனாலேயே பயந்துபோய், எங்கே அவளிடமிருந்து நான் உன்னைப் பிரித்து விடுவேனோ என்ற சந்தேகத்தில் இதைச் செய்திருக்கிறாள். உன் மீது கொண்ட அவளது அபரிமிதமான காதல்தான் இதற்குக் காரணம்! அதனால் பாவம் அவளை வெறுத்து விடாதே. அவளுக்கு ஒரு சிறு பாடத்தை நான் கற்பிக்கிறேன்! அதற்கு நீ உதவி செய்தால் போதும்!’ என்றான்.

‘என்ன செய்யவேண்டும் சொல். செய்கிறேன்!’ வஜ்ரமகுடன் சொல்ல, இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நகரத்தின் வீதிகளில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டது.

இருவரும் வெளியே வந்து பார்க்க, மக்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

‘நமது ராஜாவின் குழந்தை இறந்து போயிற்றாம்’ என்று எல்லோரும் பதட்டத்துடன் பேசிக் கொண்டார்கள்.

புத்திசரீரன் துள்ளினான். ‘ஆஹா! பத்மாவதிக்கு பாடம் புகட்ட வழி கிடைத்து விட்டது. நண்பா, வஜ்ரமகுடா! நான் சொல்லும்படி செய்தால் பத்மாவதியை அவள் சொந்தபந்தங்களிடமிருந்து பிரித்து ஒரேயடியாக நாம் அழைத்துச் சென்று விடலாம். செய்வாயா?’ என்று கேட்டான்.

‘இதென்ன கேள்வி. சொல், அப்படியே செய்து முடிக்கிறேன்!’ என்றான் வஜ்ரமகுடன்.

‘நண்பா ராஜகுமாரா, நீ இப்போதே புறப்பட்டு பத்மாவதியிடம் செல். அவளுடன் அன்பாகப் பேசிச் சல்லாபித்து சந்தோஷமாக இருந்துவிட்டு, மெல்ல மெல்ல அவளுக்கு மதுவைப் புகட்டி விடு. மது மயக்கத்தில் அவள் நினைவிழந்து கிடக்கும்போது அவளது இடுப்பில் உனது நகங்களால் திரிசூலம் போல கீறல் போட்டு அடையாளம் ஏற்படுத்தி விட்டு அவளது நகைகளில் விலையுயர்ந்த நகை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து விடு. பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரமகுடன் அதுபோலவே செய்து முடித்து, பத்மாவதியின் நகைகளில் விலை உயர்ந்ததான முத்துமாலையை எடுத்துக் கொண்டு வந்து மந்திரிகுமாரனிடம் கொடுத்தான்.

***

அடுத்தநாள் காலையில் மந்திரி குமாரன் ஒரு சந்நியாசி போல வேடமிட்டுக் கொண்டு அவ்வூர் மயானத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டான். ராஜகுமாரன் சந்நியாசியின் சீடன் போல வேடம் பூண்டிருந்தான்.

மந்திரிகுமாரன், வஜ்ரமகுடனிடம் பத்மாவதியின் முத்துமாலையைக் கொடுத்து, ‘நண்பா, இந்த முத்துமாலையை கடைத் தெருவுக்குக் கொண்டு சென்று எல்லோரும் பார்க்கும்படியாகக் காண்பித்து விலை பேசு. நகையை வாங்க வருபவர்களிடம் வேண்டுமென்றே மிக அதிகமாக விலை கூறு. இதனால் கடைத் தெருவில் சலசலப்பு ஏற்படும். அரசாங்கக் காவலர்கள் உன்னை வந்து விசாரிப்பார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. இதை என் குருநாதர்தான் கொடுத்தனுப்பினார் என்று சொல்லி விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று சொல்லியனுப்பினான்.

வஜ்ரமகுடன், மந்திரிகுமாரன் சொன்னபடியே செய்தான். அவன் முத்துமாலைக்கு மிக மிக அதிகமாக விலை கூறியதும் காவலர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டு சென்று நகர காவல் தலைவன் முன் நிறுத்தினர்.

காவல் தலைவன் முத்துமாலையை வாங்கிப் பார்த்தான். இது தந்த சிற்பி சங்கிராமவர்த்தனன் வீட்டு முத்துமாலைதான் என்பது அவனுக்கு ஊர்ஜிதமாகத் தெரிந்தது. அந்த முத்துமாலை காணாமல் போய் விட்டதாக முன்னதாகவே அவனுக்குப் புகார் வந்திருந்தது.

காவல் தலைவன் தன் முன் நின்றிருந்த வஜ்ரமகுடனிடம் ‘சந்நியாசியே பொய் சொல்லாமல் சொல். உனக்கு ஏது இந்த முத்துமாலை?’ என்று கேட்டார்.

‘ஐயா, எனது குருநாதர்தான் இந்த முத்துமாலையை என்னிடம் தந்து விற்று வரச் சொன்னார். அவர் இப்போது இவ்வூர் மயானத்தில்தான் இருக்கிறார். நீங்கள் எதைக் கேட்க வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!’ என்றான்.

நகர காவல் தலைவன் வீரர்கள் சிலருடன் புறப்பட்டு, வஜ்ரமகுடனுடன் மயானத்துக்கு வந்தான்.

அங்கே சந்நியாசி வேடத்திலிருந்த மந்திரி குமாரனிடம் முத்துமாலையைப் பற்றி விசாரித்தான்.

அப்போது சந்நியாசி கோலத்திலிருந்த மந்திரிகுமாரன் அவனிடம், ‘காவல் தலைவரே நேற்று நள்ளிரவில் நான் மயான பூஜைக்காக இங்கே வந்தபோது சில மோகினிப் பிசாசுகள் இருப்பதைக் கண்டேன். அதிலொரு மோகினி தனது மடியில் இவ்வூர் அரசனின் மகனைக் கிடத்திக்கொண்டு, அவளது கூரிய நகங்களால் அந்தப் பாலகனுடைய நெஞ்சைக் கிழித்து அவனது இதய மலரை எடுத்து காலபைரவனுக்குச் சமர்ப்பித்து பூஜித்துக் கொண்டிருந்தாள்.
அதை நான் பார்த்துவிட்டதால் தனது கூட்டத்தாருடன் வந்து எனக்கும் தொல்லை கொடுக்க முனைந்தாள். உடனே நான் கோபத்துடன், எனது திரிசூலத்தால் அவளது இடைப் பகுதியில் சூடு வைத்துத் துரத்தி விட்டேன். அப்போது அந்த மோகினியின் கழுத்திலிருந்து அறுந்து விழுந்த முத்துமாலைதான் இது! சந்நியாசியான நான் இந்த ஆபரணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? அதனால்தான் எனது சீடனிடம் கொடுத்து விற்று வரும்படிச் சொன்னேன்! ’ என்றார்.

இதைக் கேட்ட காவலர் தலைவன் பதறிப் போனான். திகிலில் ஆழ்ந்தான்.
இந்த முத்துமாலைக்கு சொந்தக்காரி பத்மாவதி. அப்படியானால் அவள் மோகினிப் பிசாசா? அவள்தான் மன்னனின் மகளைக் கொன்றாளா?

அடுத்த நொடி காவல் தலைவன் அரண்மனைக்குப் பறந்தோடிப் போய் மன்னனிடம் நடந்தது அனைத்தையும் கூறினான்.

மன்னனும் அதிர்ந்து போனான். சந்நியாசி சொன்னது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பத்மாவதியை அழைத்து வரச் சொல்லி, பணிப்பெண்களை விட்டு அவளை சோதிக்கச் சொன்னான்.

பணிப்பெண்கள் பரிசோதித்து விட்டு சந்நியாசி சொன்னதுபோலவே பத்மாவதியின் இடுப்பில் அவர் சூடு போட்ட திரிசூலக் குறி இருக்கிறது என்று கூற, பத்மாவதி மோகினிப் பிசாசுகளில் ஒருத்தி என்கிற முடிவுக்கு வந்தான் அரசன்.

அவள்தான் தனது மகனைக் கொன்றவள் என்பதால் அவளுக்கு என்ன தண்டனை விதிப்பது என்று ஆலோசித்தபோது, போலி சந்நியாசியான மந்திரிகுமாரன் சபைக்கு வந்து மன்னனிடம் கூறினான்.

‘அரசே, இந்தப் பெண் பூர்வ ஜென்ம சாபத்தால் மோகினிப் பிசாசு ஆனவள். இவளைக் கொன்று நீ பெரும் பழிக்கு ஆளாகி விடாதே. இப்பெண்ணை உனது நாட்டை விட்டு துரத்தி விடு. அது போதும்!’ என்று சொல்ல மன்னனும் அது போலவே பத்மாவதியை நாடு கடத்த உத்தரவிட்டான். பத்மாவதியின் பெற்றோர்கள் அழுது கதறி முறையிட்டும், அவன் மனம் இரங்கவில்லை.
காவலர்கள் பத்மாவதியை கட்டிய புடவையுடன் இழுத்துச் சென்று நடுக்காட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பினார்கள்.

அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நிர்க்கதியாக விடப்பட்ட பத்மாவதிக்கு இது அத்தனையும் மந்திரிகுமாரன் சூழ்ச்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தாலும், வேறு போக்கிடம் இல்லாததால் எதிர்காலத்தை நினைத்து பயந்து கண்ணீர் விட்டாள்.

அப்போது அங்கு வந்த வஜ்ரகுமாரனும், புத்திசரீரனும் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். பத்மாவதிக்கு சிறு பாடம் கற்பித்து அரசகுமாரனுடன் ஒன்று சேர்ப்பதற்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகச் சொல்லி புத்திசரீரன் பத்மாவதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
பின் வஜ்ரமகுடன் பத்மாவதியை தனது ராஜ்ஜியத்துக்கு அழைத்துப் போய் அவளை மணந்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தான்.

ஆனால், இது எதுவும் தெரியாமல் காட்டில் பத்மாவதியை தேடித் திரிந்த அவளது பெற்றோர்கள் காட்டு மிருகங்கள் அவளைக் கொன்று தின்று விட்டதாக முடிவெடுத்து கலங்கிப் போனார்கள். அந்த வருத்தத்திலேயே தந்த சிற்பி மனம் உடைந்து இறந்து போனார். கணவன் இறந்த துயரத்திலேயே மனைவியும் அடுத்த சில நாட்களில் மாண்டு போனாள்.’

– என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், கேள்வி கேட்டது.

‘இந்தக் கதையில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உண்டு. அதை நீர்தான் தீர்த்து வைக்க வேண்டும். பத்மாவதியின் பெற்றோர்கள் இறந்த தோஷமானது யாரைச் சேரும்? வஜ்ரமகுடனையா? புத்திசரீரனையா? பத்மாவதியையா? பதில் சொல்! விடை தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உனது தலை வெடித்துச் சிதறி விடும்!’ என்றது.

விக்கிரமாதித்தன் மெல்லச் சிரித்தபடி, ‘பெரும் சாமர்த்தியசாலியான வேதாளமே சொல்கிறேன் கேள்! பத்மாவதியின் பெற்றோர்கள் இறந்த பாவமானது நீ சொன்ன மூவரையுமே சேராது. அந்தப் பாவம் மன்னன் கர்ணோத்பலன்னையே சேரும்.’ என்றான்.

‘உன் பதில் விசித்திரமாயிருக்கிறது! நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் இந்த மூவர்தான். அதனால்தானே அந்த முதியோர்கள் மனம் உடைந்து மாண்டு போனார்கள்? பாவம்! இதில் அரசன் என்ன செய்தான்?’

‘சொல்கிறேன் கேள் வேதாளமே! மந்திரிகுமாரன் தனது நண்பனும் எஜமானனுமான அரசகுமாரனுடன் பத்மாவதியை சேர்த்து வைப்பதற்காகத்தான் அனைத்தையும் செய்தான். அது அவனது கடமையும்கூட! அதேபோல ராஜகுமாரனும் பத்மாவதியும் ஆழ்ந்த காதல் மோகத்தின் காரணமாகவே இப்படி நடந்து கொண்டார்கள். அவர்களைப் பொருத்தவரை வாழ்க்கையில் தாங்கள் ஒன்று சேர்வதற்காகவே செய்த எதுவும் பாவமில்லை.

ஆனால் ஒரு நாட்டின் மன்னன் என்பவன் எது ஒன்றையும் தீர விசாரிக்காமல் செயல்படக்கூடாது. அதை கர்ணோத்பலன் மன்னன் மறந்துவிட்டான். அவன் தனது ராஜதர்மத்தைக் கைவிட்டு ஆழ்ந்து யோசிக்காமலும் தீர விசாரிக்காமலும் தவறான முடிவுக்கு வந்து அநியாயமாகத் தீர்ப்பளித்து விட்டான். அதனாலேயே பத்மாவதியின் பெற்றோர் உயிர் இழக்க நேர்ந்தது. எனவே அந்தப் பழி பாவம் முழுவதும் மன்னனையே சேரும்!’ என்றான்.

விக்கிரமாதித்தனுடைய இந்தச் சரியான பதிலாலும், அவனது மௌனம் கலைந்து போனதாலும் அவனுடைய தோளில் இருந்த வேதாளம் புறப்பட்டு மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்று ஏறிக் கொண்டது.

விக்கிரமாதித்தனும் விடாமுயற்சியுடன் மீண்டும் முருங்கை மரத்துக்குச் சென்று தலைகீழாகத் தொங்கிய வேதாளத்தைப் பிடித்து வரப் புறப்பட்டான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வேதாளம் சொன்ன ‘பிரபாவதி’ கதை (2)

விக்கிரமாதித்தன் கதைகள் / 9

hqdefaultவிக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்து வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். பெயர் பிரபாவதி. மிகச் சிறந்த அழகி.

பாசத்துக்குரிய தனது மகளின் மேல் உயிரையே வைத்திருந்த விஷ்ணுசர்மா பிரபாவதி பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்து வைப்பதற்காக பொருத்தமான மாப்பிள்ளையை தேடத் தொடங்கினார்.
உற்றார், உறவினர் அறிந்தோர் தெரிந்தோர் அனைவரிடமும் சொல்லி வைத்ததில் அநேக வரன்கள் வந்ததில், ராஜகுப்தம் என்னும் ஊரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுசர்மாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மூவருமே நன்கு படித்த அறிவாளிகள். நற்குணம் கொண்டவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ஒவ்வொருவருமே பிரபாவதிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான். சரி, இவர்களில் யாரை பிரபாவதிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுப்பது?

விஷ்ணுசர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பிரபாவதியின் அழகில் மனம் பறி கொடுத்திருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தான் பிரபாவதியை திருமணம் செய்து தரவேண்டுமென்று விஷ்ணுசர்மாவை வற்புறுத்தினார்கள். அவளில்லாமல் தங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று கெஞ்சினார்கள். அதற்கும் மேலாக பிரபாவதியை தனக்குத் திருமணம் செய்து தராமல் வேறு யாருக்காவது மணம் செய்துதந்தால் அந்த நிமிடமே தனது உயிரை விட்டுவிடுவதாக தற்கொலை மிரட்டலும் செய்தனர்.

விஷ்ணுசர்மா அதிர்ந்து போனார். அவருக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. யோசித்து பதில் சொல்ல சில காலம் அவகாசம் அளிக்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுசர்மாவின் முடிவு தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தீர்மானித்து இளைஞர்கள் மூவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

நாட்கள் ஓடின. இளைஞர்களில் எவன் ஒருவனுக்கு சாதகமாக முடிவெடுத்தாலும் மற்ற இருவர் உயிர் துறந்து விடுவார்களோ என்கிற பயத்தில் விஷ்ணுசர்மாவும் நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இளைஞர்களோ தினமும் பிரபாவதியைக் காண்பதும், அவளது அழகை ரசித்து மகிழ்வதுமே தங்களது பாக்கியமாகக் கருதி நாட்களை இனிமையாக நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரும் துக்கம் நிகழ்ந்தது.

ஒருநாள் சாதாரண ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பிரபாவதி போகப் போக ஜுரவேகம் அதிகமாகி பின் முற்றிலும் சுயநினைவு இழந்து மூன்றாம் நாள் இறந்தே போனாள்.

பிரபாவதியை நேசித்த மூன்று இளைஞர்களும் இடிந்து மனம் உடைந்து நொறுங்கிப் போனார்கள்.

மூவரில் ஒருவன் பிரபாவதியை தகனம் செய்த மயானத்திலேயே ஒரு குடிசை போட்டுத் தங்கி, பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டு அவளது சாம்பலின் மீதே படுத்துறங்கி, காலம் கழிக்கத் தொடங்கினான். மற்றொருவன், பிரபாவதியின் அஸ்திகளை எடுத்துக்கொண்டு கங்கையில் சேர்ப்பிப்பதற்காக காசிக்குப் புறப்பட்டுப் போனான். இன்னொருவனோ மனம் வெறுத்து சந்நியாசியாகி தேசாந்திரம் போனான்.

அப்படி தேசாந்திரம் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று சந்நியாசி ஒருநாள் சந்திரபிரஸ்தம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரின் அந்தணர் ஒருவர் இவனைக் கண்டு சந்நியாசியை தனது வீட்டுக்கு உணவருந்த அழைத்துச் சென்றார்.

அந்தணரின் மனைவியும் துறவியை வரவேற்று வேண்டிய உபசரணைகள் செய்து, சாப்பிடுவதற்காக அவனை மனையில் அமர்த்தினாள். பின் அவர் முன் பெரும் வாழையிலையிட்டு சாதம், கறிகாய்கள், பழங்கள் வைத்துப் பரிமாறி, தேவையானதை கேட்டுக் கேட்டு உபசரித்தாள்.

அப்போது அவளின் குழந்தை அழுது அடம் பிடித்து விடாமல் கத்திக் கதறியது. எவ்வளவோ சமாதானம் செய்தும் அடங்காமல் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அந்தப் பெண்மணி கோபத்துடன் குழந்தையைத் தூக்கி அடுப்பு நெருப்பில் வீசியெறிந்து விட்டாள். வீசிய மாத்திரத்தில் குழந்தை நெருப்பில் பொசுங்கிப் போய் சாம்பலாகிப் போனது.

இதைக் கண்ட வாலிபத் துறவி திடுக்கிட்டுப் போய், அப்படியே சாப்பாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்துகொண்டு அலறினான். ‘அடிப்பாவி! நீ பெண்தானா? அல்லது பிரம்மராட்சஸியா? தாய் உருவில் வந்த பேயே, ஒரு சிறு குழந்தையைப் போய் இப்படி நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டாயே? ஐயோ! இந்த வீட்டில் சாப்பிடுவதே பெரும் பாவம்! இதற்கு மேல் ஒரு விநாடியும் இங்கிருக்க மாட்டேன்!’ என்று கதறிப் புலம்பியபடி அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

அப்போது அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தணன், ‘சந்நியாசியைத் தடுத்து நிறுத்தி, சிறு புன்னகையுடன் கூறினார்: ஸ்வாமி! பதறாதீர்கள்! இது இந்த வீட்டில் சகஜமாக நடப்பதுதான். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. இதோ இப்போதே எனது மந்திரத்தினால் குழந்தையை உயிர்ப்பித்து விடுகிறேன்! பாருங்கள்.’ என்று சொல்லி, அந்தணன் சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து, நெருப்புச் சாம்பலின் மீது கலச நீரைத் தெளிக்க குழந்தை ஒரு சிறு காயமும் இன்றி எழுந்து வந்தது.

வாலிபத் துறவி மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அன்றைய இரவை அங்கேயே கழித்த சந்நியாசி, அந்தணனிடம் தனக்கும் அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தரும்படி மன்றாடிக் கேட்டான். மாண்டு போன தனது காதலியை உயிர்பிக்க வேண்டுமென உண்மையைக் கூறி, அவன் அந்தணனிடம் கெஞ்ச, ‘துறவியாரே! நீங்கள் இத்தனை தூரம் கெஞ்சுவதால் நான் உங்களுக்கு அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!’ என்றான் அந்தணன்.

‘என்ன நிபந்தனை சொல்லுங்கள். எதுவானாலும் செய்கிறேன்!’ துடிப்புடன் கேட்டான் துறவி.

‘இந்த சஞ்சீவி மந்திரத்தை ஒருமுறை மட்டுமே அதுவும் உனது காதலியை உயிர்ப்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொரு முறை பயன்படுத்தக் கூடாது. சம்மதமா?’

‘சம்மதம். அப்படியே செய்கிறேன். அந்த ஒருமுறைக்கு மேல் சஞ்சீவி மந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்! இது சத்தியம்!’

அந்தணன், துறவியின் காதில் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தான்.

வாலிபத் துறவி மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பகலாக நடந்து இடையில் எங்குமே தங்காமல் பிரபாவதியை தகனம் செய்த மயானத்துக்கு வந்து சேர்ந்தான். அதே சமயம் பிரபாவதியின் அஸ்திகளை கங்கைக்குக் கொண்டு சென்ற இளைஞனும் அஸ்திகளை புனித நீராட்டிக் கொண்டு அங்கே ஊர் திரும்பியிருந்தான். முதலாம் வாலிபன் எப்போதும்போல் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்துக்கொண்டு அங்கேயே இருந்தான்.

வாலிபத் துறவி, மற்ற இருவரிடமும் நடந்ததைக் கூறி, ‘நண்பா, நீ பிரபாவதியின் சாம்பலைக் குவித்து வை. காசிக்குச் சென்று வந்த நீ அவளது அஸ்திகளை சாம்பலிலேயே போடு. நான் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவளை உயிர் பிழைக்க வைத்து விடுகிறேன்!’ என்று சொல்லி அது போலவே செய்தான்.

துறவி, சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து நீர் தெளித்ததுமே பிரபாவதி மாறாத பேரழகுடன் முன் போலவே எழுந்து வந்தாள்.

அதிசயம் நிகழ்ந்த அடுத்த கணமே அங்கே பெரும் சண்டை மூண்டது!

ஆம்! பிரபாவதியின் அழகில் மயங்கி கிறங்கிப் போன மூவரும், உயிருடன் வந்த பிரபாவதி தனக்குத்தான் சொந்தம் என்றும், அவள் தன்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருமே தன்னால்தான் பிரபாவதி உயிர்பிழைத்தாள் என்று கூறி உரிமை கொண்டாடினார்கள்.

‘எனது சஞ்சீவி மந்திரத்தால்தால் பிரபாவதி உயிர் பிழைத்தாள். எனவே அவள் என்னைத்தான் மணந்துகொள்ள வேண்டும்!’ என்றான் ஒருவன். அவளது அஸ்திகளை காசியில் திருமுழுக்காட்டிக் கொண்டு வந்தவனோ, ‘நான் அவளது அஸ்திகளை கங்கை நதியில் முழுக்காட்டிய புண்ணியத்தால்தான் உயிர் பிழைத்தாள். ஆகையால் அவள் எனக்கே மனைவியாவாள்!’ என்று வாதிட்டான். இன்னொருவனோ, ‘நான் பிரபாவதியின் சாம்பலை பாதுகாத்து வந்ததால்தானே அவள் உயிருடன் வருவது நிகழ்ந்தது! இல்லாவிட்டால் அவள் உயிர் பிழைத்தது எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? எனவே அவள் எனது உடமை’ என்று அடித்துச் சொன்னான்.’

-இந்த விதமாக கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது,

‘சொல்லுமய்யா மகாராஜனே! அந்தப் பெண் பிரபாவதி யாருக்குச் சொந்தமாவாள்? அவர்களது வாதத்தில் உள்ள நியாயம் என்ன? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சிதறி விடும்!’ என்று கேட்டது.

விக்கிரமாதித்தன் விளக்கமாக பதில் கூறினான்: வேதாளமே, மந்திரத்தால் அந்தப் பெண்ணை உயிர் பெறச் செய்தவன் நிச்சயமாக அவளது கணவனாக மாட்டான். ஏனென்றால் அவளுக்கு உயிர் கொடுத்தவன் தந்தை ஸ்தானத்துக்கே ஒப்பானவன் ஆவான். அதுபோலவே பிரபாவதியின் அஸ்தி எலும்புகளை கங்கைக்கு எடுத்துச் சென்றவன் அவளுக்கு மகனாவான். அவளது சாம்பலை விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவி மயானத்திலேயே தங்கி பாதுகாத்துக் கொண்டிருந்தவனே அவளது கணவன் ஆவான்!’ என்று கூறினான்.

விக்கிரமாதித்தனுடைய இந்த சரியான பதிலால் வேதாளம் அவனது தோளிலிருந்து புறப்பட்டு முருங்கை மரத்துக்கே சென்று சேர்ந்தது. முனிவன் ஞானசீலனுக்குக் கொடுத்த வாக்குப்படி வேதாளத்தைப் பிடித்து வர விடாமுயற்சியுடன் மீண்டும் புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூன்று சகோதரர்களின் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 10

jennifer-lopez-bedமனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். பாதி வழி கடந்ததும் வழக்கம் போல கதை சொல்லத் தொடங்கியது வேதாளம்.

‘அங்கதேசத்தின் அக்ரஹாரம் ஒன்றில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தனர். மூவரும் அவரவர் ரசனைக்கேற்ப தங்களது வாழ்க்கையை சுகானுபவமாக அனுபவித்து வாழ்ந்தனர். அவர்கள் மூவரிடமும் ஆளுக்கு ஆள் அலாதியான திறமையொன்று இருந்தது.

மூத்த சகோதரன் அட்டகாசமான சாப்பாட்டுப் பிரியன். சாப்பாடு குறித்ததான ரசனையில் அவனுக்கு நிகராக யாருமே கிடையாது. இரண்டாமவன் சிற்றின்ப போகப் பிரியன். பெண்களின் சாமுத்திரிகா லட்சணம் முதல் அவர்களை ஆட்கொள்ளும் காம சாஸ்திரம் வரை சகலமும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவன். மோக தாப விரக விளையாட்டுகளில் வல்லவன். கடைசி சகோதரன் நித்திரை சுகத்தில் ரசனைக்காரன். உறக்கத்தை மோகிக்கும் ரசனையாளன். கட்டில், படுக்கை, மெத்தை அனைத்தையுமே மிகுந்த கச்சிதமாகவும் தரமாகவும் தேர்ந்தெடுத்து தூக்கத்தில் மூழ்குபவன்.

ஒருநாள் அவர்களது தந்தையார் யாகம் ஒன்று நடத்தப் போவதாகச் சொல்லி, அந்த யாகத்துக்குத் தேவைப்படும் ஆமை ஒன்றைக் கொண்டு வருமாறு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.

சகோதரர்கள் மூவரும் கடலோரமாகவே தேடித் திரிந்து கடைசியாக ஆமை ஒன்றைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதை கையில் தூக்கிக் கொண்டு வருவது யார் என்று சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆமையை முதலில் பார்த்த மூத்த சகோதரன் தனது தம்பிகளிடம், ‘கரடுமுரடாகவும் வழுவழுப்பாகவும் உடல் தசைகள் சுருங்கியும் காணப்படும் இந்த ஆமையைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே நீங்கள் இதைத் தூக்கி வாருங்கள்!’ என்றான்.

‘இல்லையில்லை எனக்கும் இதைப் பார்த்தால் குமட்டுகிறது. நான் தூக்கிவர மாட்டேன்’ என்று இரண்டாமவன் சொல்ல, ‘எனக்கும் அப்படித்தான் இருக்கிறது!’ என்று மறுத்தான் மூன்றாமவன்.

‘இதை நீங்கள் தூக்கி வராவிட்டால் தந்தையின் யாகம் பூர்த்தியாகாத பாவம் உங்களையே சேரும்!’ என்று பயமுறுத்தினான் அண்ணன்.

‘அதே பாவம் உன்னைச் சேராதா என்ன?’ என்று தம்பிகள் அண்ணனை ஏளனம் செய்தார்கள்.

‘நான் எப்பேர்ப்பட்ட ரசனையாளன். போஜன கலாரசிகனான என்னைப் போய் நாற்றமடிக்கும் ஆமையை தூக்கி வரச் சொல்கிறீர்களே! இது நியாயமா?’ என்று முகம் சுளித்தான் மூத்தவன்.

இரண்டாமவன், ‘நான் மட்டும் என்ன? பட்டுப் போன்ற மேனியையுடைய கட்டிளம் கன்னிகளைத் தழுவி அங்குலம் அங்குலமாக ரசித்து காமத்தைக் கலையாக நுகரும் என்னைப்போய் இந்தக் கேவலமான ஆமையை தூக்கி வரச் சொல்கிறீர்களே! உங்கள் மனசாட்சிக்கே உறுத்தவில்லையா?’ என்றான்.

‘உறக்கத்தின் உன்னதத்தை உளப்பூர்வமாக உணர்ந்து அனுபவிக்கும் நான் இந்த ஆமையைச் சுமந்து வந்தால் அதன் பிறகு எனது வாழ்நாளில் ரசனையான நித்திரை என்பது வசப்படுமா? நீங்களே சொல்லுங்கள். எனவே தயவுசெய்து இந்த வேலையை என்னை செய்யச் சொல்லாதீர்கள்!’ என்று தீர்மானமாக மறுத்தான் கடைசி சகோதரன்.

இப்படியாக அவர்களது வாதம் தொடர்ந்து கொண்டே போய் ஒரு முடிவுக்கு வர முடியாமல், கடைசியாக அவ்வூர் மன்னனிடம் தங்கள் வழக்கைக் கொண்டு சென்றனர்.

இவர்களது வழக்கைக் கேட்ட மன்னன் பிரசேனன், இந்த மூன்று கலாரசிகர்களின் விதவிதமான திறமையைக் கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் மூழ்கினான்.

பின் சகோதரர்களிடம், ‘நீங்கள் மூவரும் இங்கு எனது அரண்மனையிலேயே தங்குங்கள். உங்களை நானே சோதித்துப் பார்த்துவிட்டு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்!’ என்றான்.

அரண்மனைப் பணியாட்கள் சகோதர்கள் மூவரையும் அழைத்துச் சென்று விருந்தினர் அறைகளில் தங்க வைத்து சகல வசதிகளும் செய்து தந்து உபசரித்தனர்.

மன்னன் பிரசேனன் அன்றைய மதிய உணவுக்கே சகோதரர்கள் மூவரையும் தன்னுடன் உணவு அருந்த வரும்படி அழைப்பு விடுத்தான்.

சகோதரர்கள் மூவருடன் மன்னனும், மந்திரிகள், பிரபுக்கள் என அநேகர் சேர்ந்து உணவருந்தினர். அறுசுவையுடன் விதவிதமான ருசிகரமான ராஜ உணவுகள் பரிமாறப்பட்டன. அனைவரும் ரசித்து ருசித்து உண்டு மகிழ, சகோதரர்களில் மூத்தவனான சாப்பாட்டுப் பிரியன் மட்டும் ஏதொன்றையும் சாப்பிடாமல் முகம் சுளித்து அமர்ந்திருந்தான்.

அதைக் கண்ட மன்னன் பிரசேனன், ‘ ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாய்? உடல்நிலை சரியில்லையா?’ என்று விசாரித்தான்.

‘இல்லை மன்னவா! இந்த சாதத்தில் பிணவாடை அடிக்கிறது. அருவருப்பினால் என்னால் ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை!’ என்றான்.

‘சாதத்தில் பிண வாடையா? எனக்கொன்றும் தெரியவில்லையே!’ என்ற மன்னன், மற்றவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு ஏதேனும் வாடை தெரிகிறதா? எல்லோரும் சாதத்தை எடுத்து முகர்ந்து பாருங்கள்!’ என்று சொன்னான்.

மந்திரிகள், பிரபுக்கள் எல்லோருமே எடுத்து முகர்ந்து பார்த்து, ‘மன்னவா மல்லிகைப் பூப்போன்ற இந்த சாதத்தில் எந்த கெட்ட மணமும் எங்களுக்குத் தெரியவில்லை. சுவையும் நன்றாகவே உள்ளது!’ என்றனர்.

ஆனால் சாப்பாட்டுப் பிரியனோ, தீர்மானமாகச் சொன்னான். ‘கண்டிப்பாக இந்த சாதத்தில் பிண வாடை படிந்திருக்கிறது! இது மிக உண்மை!’

உடனே மன்னன் பிரசேனன், மடப்பள்ளியிலிருந்து ஆட்களை தருவித்து எல்லா வகையிலும் துருவித் துருவி விசாரித்தான். விசாரணையின் முடிவில் ஆச்சரியகரமான உண்மை ஒன்று வெளியானது.

ஆம்! அன்றைய தினம் சமைக்கப்பட்டிருந்த அரிசி, ஒரு மயானத்தின் அருகிலிருந்த விளைநிலத்தில் விளைந்த அரிசி என்பது தெரிய வந்தது.
மன்னன் பிரசேனன் ஆச்சரியப்பட்டுப் போனான். ’போஜனப் பிரியனே, உண்மையில் உனது இந்த ரசிகத் திறமை மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். உன்னைப் போல் சாப்பாட்டு வல்லவராக வேறு யாரும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்.’ என்று மனம் திறந்து பாராட்டினான்.

பின் வேறு அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் சாப்பாட்டுப் பிரியனுக்குப் பரிமாறப்பட்டு, விருந்து நிறைவடைந்தது.

பின் சகோதரர்கள் மூவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள்.

மன்னன் அடுத்தபடியாக பெண் சுகம் அறிவதில் வல்லவனான இரண்டாவது சகோதரனை சோதிக்க நினைத்தான். அன்றைய இரவு சந்திரன் உதயமானதும் தனது அரண்மனைப் பெண்களில் அழகில் மிகச் சிறந்தவளான தாசிப்பெண் ஒருத்தியை இரண்டாமவன் அறைக்கு அனுப்பி வைத்தான்.

அந்த தாசிப் பெண் இரண்டாவது சகோதரனை நெருங்கி சல்லாபத்துக்கு இழுத்து கட்டியணைக்க, அந்த சிற்றின்பப் பிரியனோ, தனது மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘பெண்ணே! நீ முதலில் இந்த அறையை விட்டு வெளியேறி விடு! உன்னோடு மோகம் கொள்ள என்னால் முடியாது! உன் உடல் மேலிருந்து வெள்ளாட்டின் நீச்சவாடை வீசுகிறது! அது என்னை குமட்டுகிறது!’ என்று சொல்லி அவளை விடாப்பிடியாக வெளியே துரத்தினான்.

இதைக் கேள்விப்பட்ட மன்னன் வியந்து போனான். அந்தப் பெண்ணின் மீதிருந்து அப்படியொரு வாடை வருவதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அந்த சிற்றின்பப் பிரியன் சொன்னதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று கருதிய மன்னன் விடாப்பிடியாக அந்தப் பெண்ணின் முழு பூர்விகத்தையும் தூண்டித் துருவி விசாரித்தான். கடைசியில் அந்த ஆச்சரியகரமான உண்மை வெளியானது.

தாசிப் பெண் பிறந்தபோது அவளின் தாய் பிரசவத்தின் போதே இறந்துவிட, தாய்ப்பால் இல்லாமல் அவள் வெள்ளாட்டுப் பாலை குடித்து வளர்ந்த குழந்தை என்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்டதும் மன்னன் பிரசேனன் பெரிதும் திகைத்துப் போனான். பெண் சுகம் அறிவதில் இந்த இளைஞனுக்கு நிகரானவன் ஈரேழு உலகங்களிலும் யாரும் இருக்கமுடியாது என்று இரண்டாம் சகோதரனை பாராட்டினான்.

இந்த சூட்டுடனே உறக்க சுகத்தில் வல்லவனான மூன்றாமனுடைய ரசனையையும் சோதித்துப் பார்த்து விட எண்ணி, தூக்க ரசிகனுடைய அறையில் அவனது சௌகரியப்படியே அவன் கேட்டவாறே, மென்மையான ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் ஆறேழு மெத்தைகள் போடச் சொல்லி உத்தரவிட்டான்.

மனத்துக்கு இதமான நல்ல மணம் வீசும் நறுமணப் புகை போடப்பட்டு, சுகமான காற்றும், இதமான குளிரும் நிலவியபோதும் நித்திரைப் பிரியனால் ஒரு ஜாமம் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்து முடியாமல், ‘ஐயோ! எனது முதுகில் ஏதோ உறுத்துகிறதே! வலிக்கிறதே!’ என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு கதறினான்.

இதைக் கண்ட சேவகர்கள் அணுகி விவரம் விசாரிக்க, மூன்றாமவன் அவர்களிடம் திரும்பி தனது முதுகைக் காண்பித்தான். அவனது முதுகில் ஒரு மெல்லிய முடியளவுக்கு ஒரு வளைவுக் கீறல் சிவக்கத் தென்பட்டது.
இது எப்படி வந்தது? சேவகர்கள் மெத்தைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க, ஆறாம் மெத்தைக்குப் பிறகு ஏழாவது மெத்தைக்கு மேல் ஒரு மெல்லிய தலைமுடியொன்று இருந்தது. நித்திரைப் பிரியனின் முதுகில் இருந்த கீறல் அடையாளம் அதனுடன் கச்சிதமாகப் பொருந்தியது.

சேவகர்கள் ஓடோடிச் சென்று மன்னனிடம் சென்று இத்தகவலை தெரிவித்தனர்.

மன்னனும் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏழாவது மெத்தையில் கிடந்த தலைமுடியானது ஏழு மெத்தைகள் தாண்டியும் இவனது முதுகில் பதிகிறதென்றால், அதையும் இவன் உணர்கிறானென்றால், நிச்சயமாக உறக்கத்தை கலாபூர்வமாக அனுபவித்து ரசிப்பதில் வல்லவன் இவன்தான். இவனுக்கு நிகர் வேறு யாருமில்லை என்று புகழ்ந்தான்.

மறுநாள் தனது அரசவையில் அவர்கள் மூவருக்கும் ஏராளமான பொன் பொருள் வழங்கி கௌரவித்து அனுப்பி வைத்தான்.

-என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது.

‘போஜன ரசனை, பெண் ரசனை, நித்திரை ரசனை என்கிற மூன்று ரசனைகளில் வல்லவர்களான அந்த சகோதரர்களில் மிகவும் வல்லவன் யார்? எந்த விதத்தில் அவன் மேன்மையானவன் ஆவான்? பதில் தெரிந்தால் சொல் பார்ப்போம்!’

‘போஜன ரசனை கொண்டவனும், பெண் சுகம் காண்பனும் அவரவர் பூரண சுய உணர்வுடன் ஐம்புலன்களால் அனுபவித்துத் தெரிந்துகொண்டதைத்தான் சொன்னார்கள். ஆனால் நித்திரை சுகம் காண்பவனோ, எல்லாப் புலன்களும் உறக்கத்தில் மூழ்கி உணர்வற்ற ஜட நிலையில் தான் அனுபவித்ததை உணர்த்தினான். எனவே அவனே மிகப் பெரும் கலாரசிகன்! ரசனையில் வல்லவன்!’

விக்கிரமாதித்தனின் சரியான பதிலால், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் பறந்து போக, விக்கிரமாதித்தன் தளர்ச்சியடையாமல் மீட்டு வரப் புறப்பட்டான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மூன்று மாப்பிள்ளைகள் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 11

210px-DEMON_MASKவிக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துப் புறப்பட்டதும், பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல வேதாளம் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘உஜ்ஜயினி என்னும் நகரத்தை புண்ணியசேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது அரசவை பண்டிதராகப் பணியாற்றியவர் ஹரிதாஸர் என்னும் அந்தணர்.

ஹரிதாஸர் தனது மனைவி, மகன், மகளுடன் உஜ்ஜயினியின் அக்ரஹாரம் ஒன்றில் குடியிருந்தார். மனைவி பத்மாவதி. மகன் பெயர் தேவஸ்வாமி. அவரது மகளின் பெயர் தேவப்பிரபா.

ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபாவுக்கு தான் ஒரு பேரழகி என்பதில் மெல்லிய கர்வம் உண்டு. அவள் அப்போது திருமண வயதை எட்டியிருந்ததால் கூடிய சீக்கிரமே அவளுக்குத் தகுந்தவாறு மாப்பிள்ளை தேடவேண்டும் என்று, தேவப்பிரபாவின் தாயும், தந்தையும், அண்ணனும் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாள்.

தேவப்பிரபாவுக்கு மனத்தில் மெல்லிய பயம் ஏற்பட்டது. தனது அழகுக்கும் அறிவுக்கும் தகுந்தபடி இல்லாமல் தனது பெற்றோர் ஏதோவொரு மாப்பிள்ளையைப் பிடித்து வந்து கட்டி வைத்து விடுவார்களோ என்று கவலைப்பட்டாள்.

எனவே தன் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகவே சொல்லி விடத் தீர்மானித்து, ஒருநாள் வீட்டில் அனைவரும் சேர்ந்திருந்த சமயத்தில் மெல்லப் பேச்சைத் துவக்கினாள்.

‘அம்மா, நீங்கள் என் திருமணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?’ என்று வெட்கத்துடன் கேட்டாள்.

‘ஆம் மகளே! அது எங்கள் கடமையல்லவா? வயதுக்கு வந்த பெண்ணை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது அம்மா! அதனால்தான் விரைவிலேயே உனக்குக் கணவராகத் தகுந்தவராக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!’ – அம்மா அன்புடன் கூறினாள்.

அதற்குள் அவளது தந்தையார் ஹரிதாஸர் குறுக்கிட்டு, ‘மகளே தேவப்பிரபா, நீ எங்களிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய் என்று தோன்றுகிறது! எதுவானாலும் தைரியமாகச் சொல் அம்மா!’ என்று கேட்டார்.

‘ஆம் அப்பா! எனக்குக் கணவராக வரப் போகிறவரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுக்கும் மணமகன் வீரத்திலோ, ஞானத்திலோ, விஞ்ஞான சூத்திரத்திலோ ஏதோ ஒன்றில் வல்லவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! இதற்கு மாறாக எந்தத் திறமையும் இல்லாத எவரையேனும் தேர்ந்தெடுத்துவிட்டு தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! இது என் கோரிக்கை!’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் விரைந்தோடிச் சென்றுவிட்டாள்.

இதைக் கேட்டதுமே ஹரிதாஸரும், மனைவி பத்மாவதியும், மகன் தேவஸ்வாமியும் மலைத்துப் போனார்கள். தேவப்பிரபா குறிப்பிட்டபடியான மாப்பிள்ளையை எங்கு போய் தேடி, எப்படிக் கண்டுபிடிப்பது என்று கவலை கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில்தான் ஹரிதாஸர் வசித்த அந்த உஜ்ஜயினி நகரத்துக்கு வேறொரு அபாயமும் வந்து சேர்ந்தது!

தட்சிணதேசத்து மன்னன் பிரத்யுங்கன் என்பவன் உஜ்ஜயினி தேசத்தின் மீது படையெடுத்து வந்து எல்லைப்புறத்தில் முகாமிட்டிருந்தான்.

உஜ்ஜயினியின் மன்னன் புண்ணியசேனன் பதறிப் போனான். தட்சிணதேசத்து மன்னனின் பெரும் படையுடன் உஜ்ஜயினியின் சிறிய படை மோதி வெற்றி கொள்வதென்பது நடக்காத காரியம். எனவே மன்னன் பிரத்யுங்கனுடன் சமாதானமாகப் போக விரும்பினான்.

அவனிடம் யாரை சமாதானத் தூதுக்கு அனுப்புவது என்று யோசித்து தனது அரசவைப் பண்டிதரான ஹரிதாஸரை தேர்ந்தெடுத்து போர் முகாமுக்கு அனுப்பி வைத்தான்.

ஹரிதாஸர் உஜ்ஜயினி மன்னனின் சார்பாக தட்சிண மன்னனிடம் சமாதானம் பேசினார். அவனது மனத்துக்கு உகந்தபடியாக பிரத்யுங்கனைப் புகழ்ந்து பேசி வசப்படுத்திக் காரியம் சாதித்தார். உஜ்ஜயினி மன்னனுடன் நட்புக்கரம் நீட்ட தட்சிண மன்னனும் ஒப்புக் கொண்டான். ஹரிதாஸரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தன்னுடன் இரண்டொரு நாள் தங்கிச் செல்லும்படியாகக் கேட்டுக் கொண்டான்.

அதன்படியே தட்சிண மன்னன் பாசறையில் தங்கியிருந்தபோது ஹரிதாஸரை வந்து சந்தித்தான் ஒரு பிராமண இளைஞன். தட்சிண மன்னனின் அரசவையைச் சேர்ந்தவனான அந்த இளைஞனின் பெயர் சூத்திரவான்.

அவன் ஹரிதாஸரை வணங்கி, ‘ஸ்வாமி, என் பெயர் சூத்திரவான். நான் தங்களது மகள் தேவப்பிரபாவைப் பற்றியும் அவளது பேரழகு குறித்தும் அநேகர் சிலாகித்துப் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதிலிருந்தே மனத்தில் தங்கள் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டுவிட்டேன். எனவே தாங்கள் தங்கள் மகளை எனக்கு மணம் செய்வித்துத் தந்தால் மிகவும் மகிழ்வேன்!’ என்று வேண்டினான்.

ஹரிதாஸருக்கு இளைஞன் சூத்திரவானைப் பிடித்துப் போனாலும், மகள் தேவப்பிரபா தனக்கு இட்ட நிபந்தனையை நினைத்துப் பார்த்தார். அதை சூத்திரவானிடமும் கூறினார்.

‘இளைஞனே உன்னை எனது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதில் சிறு சிக்கல் இருக்கிறது. எனது மகள் தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டார்.

‘ஆஹா! ஸ்வாமி அதிலொன்றும் பிரச்னையில்லை. நான் விஞ்ஞான சூத்திரத்தில் கரை கண்டவன். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நிரூபிக்கிறேன், பாருங்கள்!’ என்றவன் சில தினங்களிலேயே இயந்திரப் பொறிகளால் ஆகாயத்தில் பறக்கும் அதிசய விமானம் ஒன்றை உருவாக்கி, அதில் ஹரிதாஸரையும் ஏற்றிக் கொண்டு விண்ணில் பறந்து காண்பித்தான்.

மீண்டும் தரையிறங்கிய மறுகணமே மனம் மகிழ்ந்து போன ஹரிதாஸர், இளைஞன் சூத்திரவானிடம், ‘நீர்தான் எமக்கு மாப்பிள்ளை. இன்றிலிருந்து ஏழாவது நாள் உமக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடைபெறுவது உறுதி’ என்று வாக்களித்து விடை பெற்றார்.

இவர் இங்கே வாக்குறுதி தந்த அதே சமயத்தில் உஜ்ஜயினியில் ஹரிதாஸரின் மகனான தேவஸ்வாமியையும் ஓர் இளைஞன் சந்தித்து அவனது தங்கையை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினான்.
அதற்கு தேவஸ்வாமி, ‘நண்பரே எனது தங்கை தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உம்மிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டான்.

சூரசேனன் என்கிற அந்த இளைஞன் பெயருக்குத் தகுந்தபடி தான் ஒரு வீரன் என்றும், வில் வித்தை, வாள் வித்தை, மற்போர், ஆயுதச் சண்டை அனைத்திலும் ஈடில்லாத திறமை கொண்டவன் என்றும் சொல்லி அதை தேவஸ்வாமியின் முன் நிரூபித்துக் காண்பித்தான்.

சூரசேனனின் திறமையைக் கண்டு மகிழ்ந்த தேவஸ்வாமி தனது தங்கை தேவப்பிரபாவை சூரசேனனுக்கே மணம் முடித்து வைப்பதாக அவனுக்கு வாக்குறுதி தந்தான். அதற்காக அவன் குறித்த மணநாளும், முகூர்த்தமும், அவனது தந்தை ஹரிதாஸர் சூத்திரவானுக்கு நிச்சயித்திருந்த அதே முகூர்த்த நாளிலேயே அமைந்தது.

இவர்கள் மட்டுமா, தேவப்பிரபாவின் தாய் பத்மாவதியும்கூட ஞானதேசிகன் என்கிற இளைஞனிடம் அதைத்தான் கூறியிருந்தாள்.

ஆம்! தேவப்பிரபாவின் அழகில் மனம் பறிகொடுத்த ஞானதேசிகன் என்கிற இளைஞன் அவளது தாயான பத்மாவதியை அணுகி நமஸ்கரித்தான். பின் மிகுந்த பணிவுடன், தேவப்பிரபாவை தனக்கு மணம் செய்து தருமாறு அவளிடம் கேட்டான்.

அதற்கு பத்மாவதி அவனிடம், ‘தம்பி! எனது மகள் தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் ஏதாவது திறமை உள்ளதா?’ என்று கேட்க,

‘அம்மா! நான் ஒரு ஞானி! முக்காலமும் உணர்ந்தவன். சந்தேகமிருந்தால் தாங்கள் என்னை பரீட்சை செய்து பார்க்கலாம்!’ என்று கூறினான்.
அதன்படியே பத்மாவதி அவனை பலவிதத்தில் சோதித்துப் பார்க்க, ஞானதேசிகன் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் சொல்லி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

அந்த ஆச்சரியத்துடனே பத்மாவதி ஞானதேசிகனுக்கு தனது மகள் தேவப்பிரபாவை மணம் முடித்துத் தருவதாக வாக்களித்து முடித்தாள். அவள் ஜோசியரிடம் சென்று கேட்டு நிச்சயித்த முகூர்த்தம், அவளது கணவரும், மகனும் நிச்சயித்திருந்த அதே தினம்தான்!

தட்சிண மன்னனின் பாசறையில் இருந்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய ஹரிதாஸர், தனது மனைவியிடமும், மகனிடமும் மகள் தேவப்பிரபாவுக்கு தான் மாப்பிள்ளை நிச்சயம் செய்து விட்ட தகவலைக் கூறினார்.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பத்மாவதியும், தேவஸ்வாமியும் தாங்களும் தேவப்பிரபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வாக்களித்து விட்ட தகவலைத் தெரிவித்தனர்.

இப்போது வீட்டில் அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டது. இப்படி ஆளுக்கு ஆள் வாக்களித்து விட்டோமே! யாருக்குத்தான் தேவப்பிரபாவை மணம் முடித்துக் கொடுப்பது என்று சஞ்சலத்தில் ஆழ்ந்தார்கள்.

நாட்கள் விரைந்தோடி திருமண நாள் வந்தது. வீரத்தில் வல்லவனான சூரசேனனும், விஞ்ஞான சாஸ்திரத்தில் விற்பன்னனான சூத்திரவானும், ஞானத்தில் வல்லமை மிக்க ஞானதேசிகனும் என மூன்று மாப்பிள்ளைகளும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மூன்று மாப்பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் மோதல் நிகழப் போகிறது என்று ஹரிதாஸரின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்க, அப்போதுதான் பெரும் திருப்பம் நேர்ந்தது.

‘கல்யாணப் பெண்ணைக் காணோம்!’ என்று கூக்குரல் எழுந்தது.

‘என்னது தேவப்பிரபாவைக் காணோமா?’ அவளது பெற்றோரும், தமையனும் அதிர்ந்துபோய் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார்கள்.

ஊஹூம்! எங்குமே காணோம்! அவள் வெளியில் செல்லவில்லை. வீட்டினுள்ளும் இல்லை. காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டாள்!
பதைபதைத்துப் போன தேவப்பிரபாவின் தாய் பத்மாவதி, ஞானதேசிகனிடம், ‘தம்பி! உங்களது ஞானத்தால் இப்போது எனது மகள் எங்கிருக்கிறாள் என்று அறிந்து சொல்ல முடியுமா?’ என்று வேண்டினாள்.

‘அம்மா! பதறாதீர்கள். இதோ இப்போதே அறிந்து சொல்கிறேன்!’ என்ற ஞானதேசிகன் கண் மூடி அமர்ந்து தனது ஞானத்தால் தேடிப் பார்த்து உணர்ந்து, ‘விந்திய மலைக் காட்டின் குகையில் வசிக்கும் அரக்கன் ஒருவன்தான் தேவப்பிரபாவை தூக்கிச் சென்று வைத்துள்ளான்.’ என்று கூறினான்.

தேவப்பிரபாவின் பெற்றோர், திடுக்கிட்டுப் போனார்கள். ‘ஐயோ! எங்கள் செல்ல மகளை அரக்கன் கொண்டு போனானா? அவள் எப்படி தவிக்கிறாளோ தெரியவில்லையே. அரக்கனிடமிருந்து எங்கள் மகளை எப்படி மீட்பது? வழி ஒன்றும் தெரியவில்லையே!’ என்று கலங்கினார்கள்.

அப்போது சூத்திரவான் அவர்களிடம், ‘கவலைப்படாதீர்கள். இப்போதே நான் வானில் செல்லும் விமானம் மூலம் நொடிப் பொழுதில் அரக்கன் தேவப்பிரபாவை வைத்திருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்!’ என்று ஆறுதல் கூறினான்.

அதன்படியே விமானத்தை அவன் துரிதமாகத் தயார்படுத்த, சூரசேனன் அரக்கனை எதிர்ப்பதற்குத் தேவையான பலவிதமான ஆயுதங்களை, விமானத்தில் எடுத்து வைத்தான். பின் சூத்திரவானும் ஞானதேசிகனும்,சூரசேனனும், தங்களுடன் தேவப்பிரபாவின் தந்தை ஹரிதாஸரையும், அண்ணன் தேவஸ்வாமியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். விந்திய மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சூத்திரவான் விமானத்தைக் காட்டில் இறக்கியதுமே இவர்களைப் பார்த்துவிட்ட அரக்கன் மிகுந்த கோபத்துடன் பெரும் பாறைகளை வீசியெறிந்து தாக்கத் தொடங்கினான். வீரனான சூரசேனன் மற்ற அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்திருக்கச் செய்து தான் ஒருவனாகவே அரக்கனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டான். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நீண்ட நேரம் நடந்த போரின் முடிவில் சூரசேனன் தனது முழுத் திறமையையும் காட்டி, இறுதியாக பிரம்ம பாணத்தின் மூலமாக அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். தலையும் உடலும் இரண்டு துண்டுகளாக்கப்பட்டு அரக்கன் மாண்டு போனான். தேவப்பிரபாவை மீட்டுக்கொண்டு அதிசய விமானத்தில் ஏறி அனைவரும் உஜ்ஜயினி வந்து சேர்ந்தார்கள்.

இதற்குப் பிறகுதான் தொல்லை தொடங்கியது.

அன்னை, தந்தை, அண்ணன் மூவரும் ஆளுக்கு ஆள் வாக்குறுதி தந்தபடி தங்களுக்குத்தான் தேவப்பிரபாவை மணம் செய்து தரவேண்டும் என்று மூவரும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது.

‘தேவப்பிரபாவை தூக்கிக்கொண்டு போன அரக்கன் எங்கிருக்கிறான் என்று நான் கண்டு பிடித்துச் சொல்லாவிட்டால் நீங்கள் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? எனவே எனக்குத்தான் தேவப்பிரபா சொந்தமாக வேண்டும்!’ என்றான் ஞான தேசிகன்.

‘இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டால் போதுமா? யாரும் எளிதில் போக முடியாத அந்தக் கானகப் பகுதிக்கு நான் எனது அதிசய விமானத்தில் அழைத்துச் சென்றிருக்காமல் போனால் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? என்னால்தான் அது சாத்தியமானது! எனவே தேவப்பிரபா எனக்கே சொந்தம்!’ என்றான் சூத்திரவான்.

‘நீங்கள் இருவரும் என்ன செய்திருந்தாலும், அரக்கனுடன் சண்டையிட்டு நான் அவனைக் கொன்றிருக்கா விட்டால் மீண்டும் தேவப்பிரபா எப்படி கிடைத்திருப்பாள்? எனவே அவள் எனக்கே மனைவியாக வேண்டும்.’ என்றான் சூரசேனன்.

இப்படி மூன்று மாப்பிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்த ஹரிதாஸர் குடும்பத்தார் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள்.’

என்று கதையை முடித்த வேதாளம், ‘ஐயா விக்கிரமாதித்தரே! நீங்கள் சொல்லுங்கள்! ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபா யாருக்குச் சொந்தமாவாள்? மூன்று மாப்பிள்ளைகளில் யாரை அவள் மணந்துகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிட்டால் உமது தலை சுக்குநூறாக சிதறிவிடும்’ என்றது.

விக்கிரமாதித்தன் வேறு வழியில்லாமல் தனது மௌனம் கலைத்து பதில் கூறினான்:

‘காதல் என்றாலே வீரம்தான் முன்னணி வகிக்கும். எனவே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அரக்கனுடன் சண்டையிட்டுக் கொன்ற வீரனுக்கே அந்தப் பெண் உரிமையாவாள். மற்றபடி விஞ்ஞான சாஸ்திரம் அறிந்தவனும், ஞானம் கொண்டவனும் வீரனுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். பெண்ணை அடையும் முதல் உரிமை அவர்களுக்கில்லை!’

விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மதனமோகினி கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 12

46149_Mahishasura-Mardhini-Picture-Brahma-Wallpaper_1570x1200விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது.
‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று போற்றப்படும் விக்கிரமாதித்தரே, என்னைச் சுமந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க உமக்கு ஒரு கதை சொல்கிறேன். காது கொடுத்துக் கேளும்!’ என்று கதையை சொல்லத் தொடங்கியது.

‘பிரஹத்புரம் என்னும் நகரத்தை யட்சகேது என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ்ஜியத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கையம்மன் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அங்கு கோயில் கொண்டிருந்த துர்க்கையம்மன் மகா வரப்பிரசாதி. பக்தர்கள் வேண்டியதைத் தந்து அருள்பாலிப்பவள். அதனால் பிரகஹ்புரம் குடிமக்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியிருந்த நாடு நகரங்களில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் அக்கோயிலுக்கு வந்து துர்க்கையம்மனை தரிசனம் செய்து பலனடைந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அக்கோயிலின் திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் அத்திருவிழாவில் மன்னர் முதல் எளியவர்வரை அத்தனை பேரும் ரதத்திலும், மாட்டு வண்டிகள் கட்டிக் கொண்டும், கால்நடையாகவும் உற்றார் உறவினருடனும் கூட்டம் கூட்டமாக தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து தங்கி கோயில் தீர்த்தக் குளத்தில் நீராடி துர்க்கையைத் தரிசித்து மகிழ்வார்கள். அவர்களுள் சிலர் தங்களது கஷ்டங்களைச் சொல்லி பிரார்த்தித்துக்கொள்வார்கள். மற்றும் சிலர் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக தாங்கள் வேண்டிக் கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள்.

அப்படி கோயிலுக்கு வந்தர்களில் பவளனும் ஒருவன். பிரகஹ்புரத்தை அடுத்த ஆலப்பாக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். சற்று வசதிக்கார இளைஞன். அவனது ஒரே குறை தாழ்வு மனப்பான்மை. அதனால் கொஞ்சம் கோழைத்தனம் உண்டு. ஆனால் அளவுகடந்த அம்மனின் பக்தன். துர்க்கையம்மனின் மீது எல்லையில்லாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவன். அதனால்தானோ என்னவோ அந்த துர்க்கையம்மனின் திருவிழாவில் பவளனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் நேர்ந்தது.

பிரஹத்புரம் வந்து துர்க்கையம்மன் கோயில் திருவிழாவில் மிகுந்த பக்தியுடனும், பரவசத்துடனும் சுற்றி வந்த பவளனின் கண்களில் பட்டாள் அந்தத் தேவதை. நிலவை உருக்கி வார்த்து, நட்சத்திர மின்னலால் இழைத்தது போன்ற வனப்புடன் திகழ்ந்த அந்தப் பெண்ணைக் கண்டதுமே அவள் மேல் காதலானான் பவளன்.

திருவிழாவில் அவள் நடந்த திசையெல்லாம் தொடர்ந்து போய் அவளது அழகை கண்களால் விடாமல் பருகி தன் இதயம் முழுக்க நிரப்பி மகிழ்ந்தான். ஆனால் மனத்துக்குள் இத்தகைய பேரழகி தனக்குக் கிடைப்பாளா என்கிற ஏக்கமும் எழுந்தது. மேலும் அவளைப் பின்பற்றி அவளைக் குறித்த தகவல்களைத் திரட்டிக்கொண்டான். அவளது பெயர் மதனமோகினி என்பது உச்சரிக்கும் போதெல்லாம் அவனது நாக்கை தித்திக்க வைத்தது.

’மதனமோகினி’ ‘மதனமோகினி’ ‘மதனமோகினி’ என்று அவள் பெயரை மந்திரம் போல் உச்சரித்தவன், அதே வேகத்துடன் நேராக துர்க்கையம்மன் சந்நிதிக்குச் சென்றான். தேவியை வணங்கி மனம் உருகப் பிரார்த்தித்தான்.

‘தாயே துர்க்காதேவி! இப்போது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்! இதோ உன் கோயிலில் நான் பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே, அந்த மதனமோகினியே எனக்கு மனைவியாக வாய்க்கவேண்டும். பேரழகியான அவளுடன் சில நாட்களே வாழ்ந்தாலும் போதும். என் ஜென்ம பலன் பூர்த்தியாகிவிடும். இதற்கு நீதான் அருள் செய்ய வேண்டும். அப்படி நீ என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், அடுத்தமுறை உனது இந்த ஆலயத்துக்கு வரும்போது என் தலையை வெட்டி உனக்கு காணிக்கையாக்குகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டான்.

துர்க்கையம்மன் கோயிலிலிருந்து வீடு திரும்பிய பவளன், நாளெல்லாம் மதனமோகினியின் நினைவாகவே கிடந்தான். அவளை நினைத்தே ஏங்கினான். தனக்குத்தானே பேசிக் கொண்டான். தானே சிரித்துக் கொண்டான். சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இளைத்துத் துரும்பானான்.

பவளனின் இந்த நிலையைக் கண்டு அவனது பெற்றோர் பெரும் கவலை கொண்டனர். ஒருநாள் பவளனின் தாயார் அவனை அழைத்து, ‘மகனே! பவளா! ஏன் இப்படி பித்துப் பிடித்தவன் போல் கிடக்கிறாய்? என்ன உன் துயரம்? சொன்னால்தானே நாங்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும்!’ என்று கேட்டு விசாரிக்க, பவளன் திருவிழாவில் தான் கண்ட மனம் கவர்ந்த பெண்ணைப் பற்றி அவளிடம் கூறினான்.

தாயார் இதை பவளனின் தந்தையிடம் கூற, அவர் பவளனிடம், ‘அந்தப் பெண் யார்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘இதற்காகவா, உண்ணாமல் உறங்காமல் நீயும் துன்பப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தினாய்? அந்தப் பெண்ணின் தகப்பன் எனது நண்பன்தான். பொன் பொருள், குலம், அந்தஸ்து என்று அனைத்திலும் நாமும் அவனுக்கு நிகரானவர்கள்தான். எனவே நான் பெண் கேட்டால் அவன் மறுக்க மாட்டான். கவலைப்படாதே!’ என்றார்.

அதுபோலவேதான் நடந்தது. மதனமோகினியின் தந்தை மிகுந்த சந்தோஷமாக பவளனுக்கு தனது மகள் மதனமோகினியை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

மனைவி மதனமோகினியுடன் வீடு திரும்பிய பவளன் மிகுந்த சந்தோஷமாக அவளுடன் இல்லறம் நடத்தினான். மணமக்கள் சல்லாபக் கடலில் மூழ்கித் திளைத்து இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகினார்கள். காலம் களிப்புடன் நகர்ந்தது.

திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள் மதனமோகினியின் அண்ணன் மதனபாலன் தனது தங்கையின் வீட்டுக்கு வந்தான். தங்கையும், தங்கையின் கணவனான பவளனும், அவனது பெற்றோரும் மதனபாலனை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அன்றைய தினம் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்து மதனபாலனை திணறத் திணற உபசரித்து மகிழ்ந்தனர்.

சாப்பாடு இன்னபிற உபசாரங்கள் எல்லாம் முடிந்ததும் மதனமோகினியின் அண்ணன் தங்கையின் புகுந்த வீட்டாரிடம், சொன்னான். ‘ஊரிலே துர்க்காதேவி கோயில் உற்சவத் திருவிழா தொடங்கிவிட்டது. தங்கையுடன் உங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அப்பா அனுப்பி வைத்தார்’ என்று கூறினான்.

பவளனின் அப்பா அவனிடம், ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்.’ என்றவர், தனது மகன் பவளனிடம் திரும்பி, ‘பவளா! முதலில் நீயும் உன் மனைவியும் நாளைக் காலையே உனது மைத்துனனுடன் புறப்பட்டுச் செல்லுங்கள்! எனக்கு இங்கே ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு நானும் உன் அம்மாவும் இரண்டொருநாள் கழித்து வருகிறோம்!’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலையில் பவளன், மனைவி மதனமோகினி, மைத்துனன் மதனபாலனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவர்கள் பிரகஹ்புரத்தை அடையும்பொழுது உச்சிப்பொழுது நெருங்கி விட்டது. நகரத்தின் நுழைவாயிலிலேயே அமைந்திருந்த துர்க்கையம்மனின் கோயிலைக் கண்டபோதே பவளனின் இதயம் சிலிர்த்தது. கடந்து போன திருவிழா நாள்கள் நினைவுக்கு வந்தது. மதனமோகினியைக் கண்டு ஏங்கியதும், அம்மனின் சந்நியில் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையும், அதுபோலவே பேரழகி மதனமோகினி தனக்கு மனைவியாகக் கிடைத்த ஆனந்தமயமான வாழ்க்கையும் மனத்துக்குள் அலைமோதியது.

நன்றியுணர்வில் மனம் நெகிழ்ந்த பவளன் உணர்ச்சிப் பெருக்கு மேலிட துர்க்கையம்மன் சந்நிதியில் தனது பிரார்த்தனையை நிறைவேற்றத் தயாரானான். மனைவி மைத்துனனிடம் ஏதும் சொல்லாமல் அவர்களை கோயிலின் பிரமாண்டமான ஆலமரத்து நிழலில் அமர்த்தி விட்டு, ‘மோகினி, நீயும் உனது அண்ணனும் களைத்துப் போயிருக்கிறீர்கள். எனவே இங்கேயே அமர்ந்து இளைப்பாறுங்கள். நான் போய் துர்க்கையம்மனை தரிசித்து வணங்கிவிட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவர்களை அமரச் செய்து விட்டு சந்நிதிக்குள் புகுந்தான்.

மகிஷாசூரமர்த்தினியாக கோலம் கொண்டிருந்த துர்க்கையம்மனை தரிசித்தவன், அவளிடம், ‘தேவி தயாபரி! துர்க்காமாதா! எனது ஆசையை நிறைவேற்றி ஆனந்த வாழ்வளித்தாய். இந்த ஒரு வருடம் மிகுந்த மனத் திருப்தியுடன் என் மனைவியுடன் வாழ்ந்துவிட்டேன். அது போதும் எனக்கு. இதோ, நான் உனக்கு அளித்த வாக்குப்படி என் தலையை உனக்கு காணிக்கையாக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தான்.
சந்நிதிக்குள் கிடந்த வெட்டுக் கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டவன், கோயிலினுள் ஆலயமணி கட்டியிருந்த கயிற்றில் ஆலயமணியைக் கழற்றி விட்டு, அந்தக் கயிற்றில் தனது தலை முடியை உயர்த்திக் கட்டினான். பின் வெட்டுக் கத்தியால் ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துக் கொண்டான். ரத்தம் சொட்டச் சொட்ட அவனது தலை கயிற்றில் தொங்கி ஊசலாட, முண்டமாகிய உடல் தள்ளாடித் தரையில் விழுந்தது.
வெளியே காத்திருந்ததில் மதனமோகினி மரத்தில் சாய்ந்தபடி தூங்கியே போனாள். அவளது அண்ணன் மதனபாலனோ நேரம் விரைந்தோடியதில் பொறுமையிழந்துபோய், தூங்கிக் கொண்டிருந்த தங்கையை அப்படியே விட்டு பவளனைத் தேடி கோயிலுக்குள் நுழைந்தான்.

அங்கே, தங்கையின் கணவன் தலை வேறு உடல் வேறாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ‘அடடா! என்ன காரியம் செய்து விட்டேன். தங்கையின் கணவனை தனியே விட்டிருக்கக்கூடாது. இப்போது எப்படி நான் இதை என் உயிருக்குயிரான தங்கையிடம் போய் சொல்வேன்.’

மதனபாலன் மனம் உடைந்து போனான். தங்கையின் கணவன் இறந்து விட்டான் என்ற தகவலை போய்ச் சொல்ல அவனுக்கு இதயத்தில் திராணியில்லை. அவன் ஓர் தீர்மானத்துக்கு வந்தான்.

பவளன் இறந்தது போலவே அவனும் அதே வழியில் அதே கத்தியால் தனது தலையை துண்டித்துக் கொண்டு மாண்டு போனான்.

இது எதுவும் அறியாத மதனமோகினி, தூக்கம் கலைந்து பார்த்தபோது பக்கத்தில் யாரும் இல்லாததால் திகைத்துப் போனாள். என்னை தனியே விட்டுவிட்டு இருவரும் எங்கே சென்றார்கள்? கணவனையும், அண்ணனையும் தேடி கோயிலுக்குள் சென்றாள்.

அங்கே, நேசத்துக்குரிய கணவனும், பாசத்துக்குரிய அண்ணனும் இருவரும் மாண்டு கிடக்கும் கொடிய காட்சியைக் கண்டாள். கதறினாள். துடித்தாள். இதயம் வெடித்து விடுவதைப் போல குமுறிக் குமுறி அழுதாள்.

அழுது அழுது கண்ணீர் வற்றித் துவண்டதும், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்தாள். துர்க்கையம்மன் முன் சென்று ஆவேசத்துடன், ‘தாயே, என்னைக் காத்து ரட்சிக்க வேண்டிய நீயே என்னைக் கைவிட்டு விட்டாய். உனது சந்நிதியிலேயே, உன் கண்ணெதிரிலேயே எனது கணவனும், சகோதரனும் உயிர் விட்டிருக்கிறார்கள். நீ அவர்களைக் காப்பாற்றவில்லை. போகட்டும்! எனது மஞ்சள் குங்குமத்தையும், மங்கலத்தையும் காக்க மனமில்லாதவளே, இனி நான் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். இதோ உன் கண்ணெதிரேயே நானும் உயிர்விடப் போகிறேன். இந்த ஜென்மத்தில் என்னைக் கை விட்டதுபோல இல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் இந்த இருவருமே எனது கணவனாகவும், சகோதரனாகவும் அமைய வரம் கொடு!’ என்று வேண்டிக் கொண்டாள்.

பின் மதனமோகினி ஆலயத்தின் உள்ளேயே ஓர் ஆலமரத்தின் விழுதைக் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளப் போனாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! கருவறையில் இருந்து ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது.
‘மகளே மதனமோகினி, அவசரப்படாதே! நீ ஆத்மஹத்தி செய்துகொள்ளத் தேவையில்லை. உனது பதி பக்தியும், அண்ணன் மீது கொண்ட பாசமும் மன உறுதியும் போற்றத்தக்கது. போ! போய் இருவரது தலைகளையும் அவரவர் உடலுடன் பொருத்தி வை! எனது அருளால் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருப்பார்கள்!’ என்று கூறியது.

மனம் மகிழ்ந்து போன மதனமோகினி, தூக்கிலிருந்து இறங்கி ஆவலுடன் இருவரது உடல் கிடந்த இடத்துக்கு ஓடினாள். இருவரது தலைகளையும் உடலுடன் பொருத்தினாள். ஆனால்… ஆனால்…

அடடா! அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்? தலைகால் புரியாத சந்தோஷத்தினாலும், பதற்றத்தினாலும் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் மதனமோகினி இருவரது தலைகளையும் மாற்றி மாற்றிப் பொருத்தி விட, கணவனின் தலை அண்ணன் உடலிலும், அண்ணனின் தலை கணவன் உடலிலும் பொருந்திப் போய் இருவரும் உயிர் பெற்று எழுந்து நின்றார்கள்.

மதனமோகினி மனம் கலங்கிப் போனாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. இந்த இருவரில் யார் எனது கணவன்? யார் எனது அண்ணன்? கணவன் தலையோடு நிற்கும் அண்ணனின் உருவமா? அண்ணனின் தலையோடு இருக்கும் கணவனின் உருவமா? எப்படிக் கண்டுபிடிப்பது?’

குழப்பத்தின் உச்சத்தில் கதையை நிறுத்திய வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது:

‘சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே! இந்த இரண்டு உருவங்களில் யார் மதனமோகினியின் கணவன்? யார் மதனமோகினியின் அண்ணன்?’

‘வேதாளமே, ஒருவனது எண்சாண் உடலில் சிரசே பிரதானம் என்பர் பெரியோர். நாமும் தலையைக் கொண்டுதான் மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறோம். அதுமட்டுமல்ல தலையில் உள்ள மூளைதான் அனைத்தையும் யோசிக்கிறது. செயலாற்றத் தூண்டுகிறது. எனவே அந்த இருவரில் எவன் மதனமோகினியை மனைவி என்று நினைக்கிறானோ அவனே அவளின் கணவன் ஆவான்!’

அவ்வளவுதான்! சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முருங்கை மரம் செல்ல, விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போனான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் / 13 

two_parrots_and_a_vein_by_gehadmekki-d5cv0seவிக்கிரமாதித்தன் விடாமுயற்சியுடன் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தபோது வேதாளம் தனது அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கியது.

‘பூலோகத்தின் புண்ணிய நதியான கங்கை ஆற்றின் கரையில் உள்ள பாடலிபுத்திரம் என்னும் நகரை விக்கிரமசேனன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்ல ஒழுக்கமும், பண்பும் கொண்டவன். மகா தர்மசீலன். நேர்மை தவறாதவன். அவன் ஒரு பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து வந்தான். அதன் பெயர் விதேகன்.

விதேகன் எனப்படும் அந்த ஆண் கிளி ஒரு பேசும் கிளி! முக்காலமும் உணர்ந்த, சகல சாஸ்திரங்களும் அறிந்த புத்திசாலியான கிளி. அதனாலேயே மன்னன் விக்கிரமசேனன், அந்தக் கிளியின் மேல் அலாதியான பாசம் கொண்டிருந்தான்.

நாட்டை அரசாட்சி செய்வதிலிருந்து தனது சொந்த வாழ்க்கையின் பிரச்னைவரை எல்லாவற்றுக்கும் அந்தக் கிளியைக் கலந்து ஆலோசித்து அதன் சொற்படிதான் விக்கிரமசேனன் செயல்பட்டு வந்தான். அவ்வளவு ஏன்? மன்னன் விக்கிரமசேனனுடைய திருமணம்கூட அந்தக் கிளியின் ஆலோசனைப்படிதான் நடந்தது. ஆமாம்! விக்கிரமசேனனுக்கு மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்த ஏராளமான ராஜகுமாரிகளின் ஓவியங்களிலிருந்து மகதராஜ்ஜியத்தின் மன்னன் மகளான மதிவதனியை கிளிதான் தேர்ந்தெடுத்தது. அவளைத்தான் தனது மனைவியாக்கிக் கொண்டான் விக்கிரமசேனன்.

ஆச்சரியம் என்னவென்றால் ராணி மதிவதனியும் ஒரு கிளியை வளர்த்து வந்தாள். அதுவோர் பெண் கிளி. அதன் பெயர் சோபிகை. அதுவும் ஆண் கிளி விதேகனைப் போன்றே பேசும் திறனும், அறிவும் கொண்ட அழகுக் கிளியாகத் திகழ்ந்தது.

மகத இளவரசி மதிவதனி மன்னன் விக்கிரமசேனனை மணந்துகொண்டு பாடலிபுத்திரம் வந்ததும் இரண்டு கிளிகளும் அந்தப்புரத்தில் அவர்களது பள்ளியறையில் ஒரே கூண்டிலேயே சேர்ந்து வசித்து வந்தன. மன்னனையும், மகாராணியையும் தங்களது அறிவார்ந்த பேச்சுத் திறத்தால் நகைச்சுவை உணர்வுடன் பேசி மகிழ்வித்து வந்தன.

இப்படியிருக்கும்போது ஆண் கிளியான விதேகனுக்கு பெண் கிளி சோபிகை மேல் காதல் உண்டாகி, ஒருநாள், ‘சோபிகை, எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது!’ என்று கேட்டது.

அவ்வளவுதான் சோபிகைக்கு வந்ததே கோபம்! அது மிகுந்த கடுகடுப்புடன், விதேகனிடம், ‘ஆண்கள் எல்லோருமே நன்றியில்லாதவர்கள். கொடுமைக்காரர்கள். துர்புத்தி கொண்டவர்கள். எனவே நான் எந்த ஆணையும் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை!’ என்று துடுக்காகச் சொன்னது.

சோபிகையின் இந்தப் பதிலால் எரிச்சலுற்ற விதேகன், ‘ஒட்டு மொத்தமாக ஆண் வர்க்கத்தையே இப்படித் தூற்றுவது சரியில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பெண்கள்தான் கொடூரமான குணமும், துரோக புத்தியும் கொண்டவர்கள்!’ என்றது.

இப்படியே இரண்டும் மாற்றி மாற்றி ‘ஆண்கள்தான் கெட்டவர்கள்’, ‘இல்லையில்லை பெண்கள்தான் மோசமானவர்கள்’ என்று சண்டை போட்டுக்கொண்டன. விவாதம் ஒரு முடிவுக்கு வருவதாயில்லை. எனவே தங்கள் வழக்கை மன்னன் விக்கிரமசேனனிடம் சொல்லி முடிவை அவனது தீர்ப்புக்கே விட்டுவிடலாம் என்று தீர்மானித்தன. ஆண் கிளி ஜெயித்தால் பெண் கிளி சோபிகை, விதேகனை மணந்து கொள்ளவேண்டும். பெண் கிளி ஜெயித்தால் ஆண் கிளி விதேகன் காலம் முழுவதும் சோபிகையின் அடிமையாகக் கிடக்கவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

மன்னன் விக்கிரமசேனன் இருதரப்பு வழக்கையும் கேட்டான். பின், அவன் புன்னகையுடன், பெண் கிளியிடம், ‘சோபிகை! ஆண்கள் நன்றி கெட்ட கொடுமைக்காரர்கள், துரோகிகள் என்கிறாயே! எதை காரணமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘அரசே, இதற்கு ஆதாரமாக கதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள்!’ என்று சொல்லத் தொடங்கியது.

‘சதுர்மங்கலம் என்னும் ஊரில் ஜெயதத்தன் என்னும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரேயொரு செல்வ மகன்; பெயர் நாகதத்தன். தாயில்லாப் பிள்ளை என்று தந்தை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்ததில் நாகநத்தன் சீர்கெட்டுப் போய் பொறுப்பில்லாத ஊதாரியாக வளர்ந்தான். எந்த வேலையும் செய்யாமல் தந்தைக்கும் வியாபாரத்தில் உதவியாக இல்லாமல் வெறுமனே ஊர் சுற்றி வந்தவனுக்கு, தீயவர்கள் பலர் நண்பர்களானார்கள். ஒருவன் கெட்டுப் போவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது அவனது தீய சகவாசம்தான் என்பது நிஜம்தானே!

தனது பொல்லாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது, மாது, சூது என்று பலப்பல தீயபழக்கங்களுக்கு ஆளாகி மனம் போல் திரிந்தான் நாகதத்தன். இதனால் மனம் உடைந்து போன ஜெயதத்தன் அந்தக் கவலையிலேயே நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்தே போனான். தந்தை மரணமடைந்ததில் சிறிதும் மனம் வருந்தாத நாகதத்தன் சொத்தெல்லாம் கைக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டான். நாளொரு பெண்ணும், பொழுதொரு மதுவும், சதாசர்வ காலமும் சீட்டாட்டமுமாக தனது தீய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மொத்த சொத்தையும் செலவழித்துத் தீர்த்தான். வீடு வாசல் நிலபுலன்கள் அனைத்தும் போய் விரைவிலேயே அடுத்த வேளைச் சோற்றுக்கே வழியில்லாத நிலையில் நடுத்தெருவுக்கு வந்தான்.

பெரும் பணக்காரனாக இருந்து, சொத்து முழுவதும் போய் ஏழ்மை நிலைக்கு வந்த நாகதத்தன் அதற்கும் மேல் அதே ஊரிலேயே வசிக்க விருப்பமில்லாமல் கால்போன போக்கில் புறப்பட்டான். ஊர் ஊராக, நாடு நாடாகத் திரிந்தான். ஆங்காங்கே கிடைத்ததைச் சாப்பிட்டு நினைத்த இடத்தில் தூங்கி வலம் வந்தான்.

அப்படி சுற்றி வந்த தருணத்தில் ஒருநாள் அவன் வாணியபுரம் என்னும் நகரத்தை அடைந்தபோது அங்கே தனநாயகர் என்ற வணிகர் அவனுக்கு அறிமுகமானார். ஏனோ தெரியவில்லை தனநாயகருக்கு நாகதத்தனை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. அவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவிட்டு உபசரித்த தனநாயகர் அவனை அங்கேயே தம்முடனே தங்க வைத்துக் கொண்டார்.

நாகதத்தன் அங்கிருந்த சிறிது காலத்திலேயே தனநாயகரிடமும் அவரது வீட்டாரிடமும் மிகுந்த நல்லவன் போல் நடித்து அனைவரது மனத்தையும் கவர்ந்து கொண்டான். அவனொரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை அறியாத தனநாயகர் தனது ஒரே மகளான ரத்னாவளியை நாகதத்தனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்டார்.

பிறகென்ன? நாகதத்தனுக்கு சந்தோஷத்துக்கு குறைவேயில்லை. பெரும் செல்வச் சீதனத்தோடு வந்த அன்பான மனைவி, ஆனந்தமான இல்லறம், படாடோபமான வாழ்க்கை, பெரும் மதிப்புடன் கொண்டாடும் மாமனார், மாமியார் என சுகபோகமாகக் காலம் கழிந்தது.

ஆனாலும் என்ன? ஆடின காலும், பாடின வாயும் சும்மாயிருக்காது என்பதுபோல, தீயபழக்கங்களிலேயே மூழ்கி குருட்டாம்போக்கில் செலவு செய்த நாகதத்தனுக்கு மாமனார் வீட்டில் இருப்பது கட்டிப் போட்டது போல இருந்தது. ஆசை தீர செலவு செய்ய கைகளில் ஏராளமான செல்வம் இருக்கும்போது அதற்கும் மேல் அங்கே தங்கியிருக்க நாகதத்தனுக்குப் பிடிக்கவில்லை.

ஒருநாள் அவன் தனது மாமனார் தனநாயகரிடம் சென்று, ‘ மாமா! நான் ஊரை விட்டு வந்து நெடுநாள்களாகி விட்டன. தந்தை இறந்த துக்கத்தில் வீட்டை விட்டுப் புறப்பட்டவன், ஊர் ஊராக தலயாத்திரை செய்து, இங்கே தங்களைச் சந்தித்த பிறகு அப்படியே தங்கிவிட்டேன். பாவம்! அங்கே எனது உற்றார் உறவினர்கள் எல்லோரும் என்னைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே நான் ஒருமுறை, ஊருக்குப் போய் அனைவரையும் பார்த்து தகவல் சொல்லிவிட்டு வருகிறேன். ரத்னாவளியுடன் புறப்பட்டுச் செல்ல என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்!’ என்று கேட்டான்.

ஒரே மகளான ரத்னாவளியை பிரிந்திருக்க தனநாயகருக்கு சம்மதம் இல்லையென்றாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு, நாகதத்தனுக்கு மேலும் கொஞ்சம் பொன் பொருளைக் கொடுத்து, மகளை அவனுடன் அனுப்பி வைத்தார். கூடவே ஒரு வேலைக்கார கிழவியையும் மகளுக்குத் துணையாக போகச் சொல்லி அனுப்பினார்.

பயணம் புறப்பட்ட மூவரும் மாலை மங்கும் நேரத்தில் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். நாகதத்தன் மனைவி ரத்னாவளியிடம், ‘ரத்னா, இருட்டப் போகிறது. இங்கே காட்டுப் பகுதியில் திருடர் பயம் அதிகம்! எனவே உனது நகைகளை எல்லாம் கழட்டி என்னிடம் கொடுத்து விடு’ என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டான்.

அப்படி அவன் வாங்கிக் கொண்டதன் பின்னணியில் ஒரு பெரும் சதித்திட்டம் ஒளிந்திருந்தது. பொதுவாக மது, மாது, சூது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான கயவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்ச மாபாதங்கங்களுக்கும் அஞ்ச மாட்டார்கள் என்று பெரியோர் சொல்வார்கள். நாகதத்தனும் அப்படிப்பட்டவன்தானே! அதனால்தான் அவன் மிகப் பெரிய பாதகம் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்தான். மனைவி ரத்னாவளியைக் கொன்றுவிட்டு அவளது பொன் பொருள் நகைகளுடன் ஓடிப் போய் விடுவது என்பதுதான் அந்தத் திட்டம்.

இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் அவர்கள் மூவரும் ஒரு மலைப்பாங்கான பகுதியைக் கடந்தபோது அவன் தனது திட்டத்தை நிறைவேற்றினான். மலையின் மறுபுறம் இருந்த அதலபாதாளத்தில் மனைவி ரத்னாவளியையும், அவளுடன் துணைக்கு வந்த கிழவியையும் பிடித்துத் தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

நாகதத்தனால் தள்ளி விடப்பட்ட கிழவி மிக வேகமாகக் கீழே உருண்டுபோய் ஒரு பெரும் பாறையில் மோதிக்கொண்டாள். அதனால் அவள் மண்டை உடைந்து அக்கணமே இறந்துபோனாள். பின்னால் தள்ளி விடப்பட்ட ரத்னாவளி கிழவியின் மேல் போய் விழுந்ததால் அடிபடாமல் தப்பித்துக் கொண்டாள்.

ரத்னாவளி பெரும் அதிர்ச்சியடைந்தாள். கணவனின் இந்தத் துரோகத்தை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் இரவு முழுதும் மனம் உடைந்துபோய் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள். பின் ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு, பொழுது விடிந்ததும் சுற்றிலுமிருந்த செடி கொடிகளைப் பிடித்துக் கொண்டு மேலேறி வந்தாள். பின் திக்குதிசை தெரியாமல் அலைந்து திரிந்து எதிர்பட்டவர்களிடம் வழி கேட்டுக்கொண்டு, தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அலங்கோலமாக வந்து சேர்ந்த மகள் ரத்னாவளியின் நிலை கண்டு தனநாயகர் பதறிப் போனார். ‘என்னம்மா, என்னாயிற்று? உனது கணவர் எங்கே? நீ ஏன் இப்படி அலங்கோலமாக வந்திருக்கிறாய்? என்னாயிற்று மகளே?’ என்று படபடத்தார்.

மனைவியையே கொல்லத் துணிந்த கயவன்தான் என்றாலும், உத்தமியான ரத்னாவளிக்கு தன் கணவனைக் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. தந்தையிடம் பொய் கூறினாள்.

‘அப்பா! நாங்கள் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கொள்ளைக் கும்பல் ஒன்று எங்களை மடக்கி நகை, பொருள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு விட்டது. அதை தடுக்க முனைந்து சண்டையிட்டதால் எனது கணவரை அந்தக் கொள்ளைக் கூட்டம் கட்டி தூக்கிக்கொண்டுபோய் விட்டது. அந்த மோதலில் மண்டையில் அடிபட்டு கிழவி இறந்துவிட்டாள். நான் மட்டும் தப்பித்து வந்துவிட்டேன்!’

‘ம்ஹும்! போனது போகட்டும்.தெய்வத்தின் கருணையால் நீயாவது உயிர் பிழைத்து வந்தாயே மகளே! கவலைப்படாதே! நாம் எப்படியாவது உனது கணவனைத் தேடிக் கண்டுபிடிப்போம்!’ – என்று அவளது தந்தையும் தாயும் ரத்னாவளிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். ரத்னாவளியோ சதாசர்வ காலமும் தன்னைப் பிரிந்து போன கணவன் நாகதத்தன் நினைவாகவே இருந்து மனம் கலங்கி வருந்தினாள். என்றாவது ஒருநாள் அவன் மனம் திருந்தி வரமாட்டானா என்று காத்திருந்தாள்.

மாமனார் கொடுத்த பொன் பொருளுடன், மனைவியின் நகைகளையும் சேர்த்து பெரும் செல்வக் குவியலுடன் சொந்த ஊர் திரும்பிய நாகதத்தன் பழையபடியே தனது சகாக்களுடன் கொண்டாட்டங்களில் இறங்கி, விரைவிலேயே மொத்த செல்வத்தையும் செலவழித்துத் தீர்த்தான்.
கையில் செப்பாலடித்த காசு கூட இல்லாமல் போனதும் மீண்டும் அவனுக்கு தனது மாமனார் தனநாயகரின் நினைவு வந்தது. அவரிடம் சென்று ஏதாவது வியாபாரம் செய்யப்போவதாகச் சொல்லி பொன் பொருள் கேட்டு வாங்கலாம் என்று புறப்பட்டான்.

மகள் ரத்னாவளியைப் பற்றி தனநாயகர் கேட்டால் அவளை ஊரிலேயே அறுவடையைப் பார்த்துக் கொள்வதற்காக விட்டு வந்ததாகச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்.’ என்று திட்டமிட்டான்.

நாகதத்தன் ஊருக்குள் நுழைந்து தெருமுனைக்கு வரும்போதே ரத்னாவளி அவனைப் பார்த்து விட்டாள். மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று அவனை எதிர்கொண்டாள்.

ரத்னாவளி செத்துப் போயிருப்பாள் என்று நினைத்திருந்த நாகதத்தன் உயிருடன் அவளை எதிரே கண்டதும் திகிலடைந்து போனான். பயந்து நடுங்கினான்.

உடனே ரத்னாவளி அவனை ஆறுதல்படுத்தி, காட்டில் நடந்த எதையுமே தான் தந்தையிடம் கூறவில்லை என்று சொல்லி, அவரிடம் தான் சொல்லியிருந்த பொய்யை நாகதத்தனுக்குச் சொல்லி அதன்படியே அவனை சமாளிக்கச் சொன்னாள்.

ஆசுவாசம் கொண்ட நாகதத்தன் பயம் நீங்கி, ரத்னாவளியுடன் வீட்டுக்குச் சென்றான். தன்னை கட்டித் தூக்கிப் போன கொள்ளையரிடமிருந்து அவர்கள் ஏமாந்த சமயத்தில் மிகுந்த சாமர்த்தியமாக தப்பி வந்ததாகக் கதை சொல்லி சமாளித்தான்.

மாப்பிள்ளை தப்பிப் பிழைத்து வந்ததை தனநாயகர் பெரும் விருந்து வைத்துக் கொண்டாடினார். மனைவி ரத்னாவளியும் கணவனது துரோகத்தை மறந்து அவனுடன் சந்தோஷமாக இல்லறம் நடத்தினாள். நாகதத்தனும் வழக்கம் போல தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

ஆனாலும் கலங்கிய சேற்றுக் குட்டையில் மூழ்கி அதையே சுகமாகக் கருதும் எருமையைப் போல தீயபழக்கங்களில் மூழ்கித் திளைத்த அந்தக் கொடியவனுக்கு ஒழுக்கமான வாழ்க்கையில் நீடித்திருக்க முடியவில்லை.
ஒருநாள் அந்தத் துரோகி நாகதத்தன், இரவு தன்னுடன் படுத்திருந்த மனைவி ரத்னாவளியை கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, அவளது நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.

இப்போது சொல்லுங்கள் மகராஜா! பசி பட்டினியிலிருந்து காப்பாற்றி, தனது மகளையே அளித்த தனநாயகருக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசமில்லாமலும், உத்தமியான மனைவி ரத்னாவளிக்கு பெரும் துரோகத்தை இழைத்தவனுமாகிய நாகதத்தன் போன்ற ஆண்கள் கொடுமைக்காரர்கள்தானே? இந்தக் கதை மூலம் ஆண்கள் எல்லோரும் பெரும் மோசக்காரர்கள் என்பது விளங்குகிறதில்லையா?’ என்றது சோபிகை கிளி.

உடனே ஆண் கிளியாகிய விதேகன், ‘பெண்கள் மட்டுமென்ன? பொய், பித்தலாட்டம், சோரம், அக்கிரமம், அயோக்கியத்தனம் போன்றவற்றின் மொத்த உருவம்தானே அவர்கள்! அதற்கு நான் சொல்லப்போகும் இந்தக் கதையே உதாரணம். கேளுங்கள், மகாராஜா!’ என்று கதை சொல்லத் தொடங்கியது.

புருஷபுரம் என்னும் நகரத்தில் ரத்னாகர் என்னும் வியாபாரி இருந்தார். பெரும் செல்வந்தராகிய அவருக்கு வசுந்தரா என்பவள் ஒரே மகள். மிகுந்த அழகியான அவளை பக்கத்து நகரத்தில் பெரும் பணக்காரனாகத் திகழ்ந்த சாத்துவன் என்கிற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். அவர்களது இல்லறம் இனிமையாகவே நடந்தது.

ஒருசமயம் வசுந்தராவின் கணவன் வியாபார விஷயமாக வெளிதேசம் சென்றதால் அவள் தனது பிறந்தகத்துக்கு வந்து தங்கியிருந்தாள். அந்தச் சமயத்தில் கோயிலுக்குச் செல்லும்போதும், கடைத் தெருவுக்குச் செல்லும்போதும் அதே ஊரிலிருந்த அழகான இளைஞன் ஒருவனை அவள் அடிக்கடி காண நேர்ந்தது. அவன் பெயர் இளமாறன். அழகில் மன்மதனாகத் திகழ்ந்த இளமாறன்மேல் வசுந்தராவுக்கு நாட்டம் ஏற்பட்டது. அவனைக் கண்டநாள் முதல் விரகதாபத்தால் தவித்த வசுந்தரா, தனது வேலைக்காரியை அவனிடம் தூது அனுப்பி இளமாறனை தினமும் தனிமையில் சந்தித்துப் பேசினாள். யாருக்கும் தெரியாமல் அவர்களது கள்ளக்காதல் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது.

இந்தத் தருணத்தில் வெளிதேசம் போயிருந்த வசுந்தராவின் கணவன் ஊர் திரும்பினான். வந்ததுமே மனைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டுக்கு ஓடோடி வந்திருந்தான். கணவன் வந்ததில் வசுந்தராவுக்கு சிறிதளவும் சந்தோஷமில்லை. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன் வந்து விட்டானே என்றெண்ணி மனம் குமுறினாள். கணவன் வந்த நாள் முதல் அவள் தனது கள்ளக் காதலனை சந்திக்க முடியவில்லை. தவித்து மருகினாள்.

ஒருநாள் இரவு, கணவன் நன்கு உறங்கியதும் வசுந்தரா தனது கள்ளக் காதலனைக் காண்பதற்காக திருட்டுத்தனமாகப் புறப்பட்டாள். வழக்கமாக தாங்கள் சந்திக்கும் இடத்துக்கு அவனை வரச்சொல்லி முன்னதாகவே தகவல் அனுப்பியிருந்தாள். வெகுநாள்களுக்குப் பின் காதலனை சந்திக்கச் செல்வதால் தன்னிடம் இருந்த எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு சர்வ அலங்காரபூஷிதையாகக் கிளம்பினாள்.

இப்படி இவள் கிளம்பியதை அவளது வீட்டுக்குள் பதுங்கியிருந்த திருடன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். மிகச் சரியாக அன்றைக்குத்தான் அவன் வசுந்தராவின் வீட்டுக்குத் திருட வந்திருந்தான். மொத்த நகைகளையும் அணிந்துகொண்டு வசுந்தரா புறப்பட்டுச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் பதறினான். ‘அய்யய்யோ! நான் திருட வந்த மொத்த நகைகளையும் அணிந்து கொண்டு செல்கிறாளே! அப்படி இவள் இந்நேரத்தில் எங்கே செல்கிறாள்? என்று நினைத்துக்கொண்டு ஆவலுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.

ஆசையுடனும் பெரும் ஆவலுடனும் தனது கள்ளக் காதலனைச் சந்திக்கச் சென்ற வசுந்தராவுக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வசுந்தராவின் கள்ளக் காதலன் இளமாறன் அங்கிருந்த மரத்தடி ஒன்றில் பாம்பு கடித்து இறந்து போய் நீலம் பாரித்து பிணமாகக் கிடந்தான். அப்படி பிணமாகக் கிடந்தவன் உடலுக்குள் அம்மரத்து வேதாளம் ஒன்று புகுந்து கொண்டிருந்தது.

இது ஏதும் அறியாத வசுந்தரா தனது ஆசை நாயகன் மாண்டு கிடந்ததில் மனம் வருந்தி அவனை மடியில் எடுத்து கிடத்திக் கொண்டு அழுதாள். அளவுகடந்த துக்கமும் அழுகையுமாக காதலனின் பிணத்துக்கு ஓர் ஆசை முத்தம் இட அவள் நெருங்கியபோது, அவனது உடலுக்குள் இருந்த வேதாளம் வசுந்தராவின் மூக்கை கவ்விப் பிடித்துக் கடித்தது. மூக்கின் முனைப் பகுதி துண்டிக்கப்பட்டு பிணத்தின் வாய்க்குள்ளேயே விழுந்தது.
வசுந்தரா வலியில் துடிதுடித்துப் போனாள். ரத்தம் சொட்டச் சொட்ட பதறி எழுந்தாள். பிணத்துக்குள் ஏதோ பேய் நுழைந்திருக்கிறது என்று உணர்ந்து திடுக்கிட்டவள் அதற்கும் மேல் அங்கே தாமதிக்காமல், ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினாள்.

அவளது மனம் முழுவதும் திகிலாக இருந்தது. காலையில் தன்னைக் காண்பவர்கள் எல்லோரும் துண்டிக்கப்பட்ட தனது மூக்குக்கு விளக்கம் கேட்பார்களே என்ன சொல்வது என்று எண்ணியவள், தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனத்தில் ஓர் யோசனை தோன்ற, பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.

‘ஐயையோ! எல்லோரும் வாருங்களேன். என் கணவன் என்கிற இந்த மகாபாவி, ஒரு சாதாரண சண்டையில் எனது மூக்கை வெட்டி விட்டானே.’ என்று கதறினாள்.

அவளது அலறலைக் கேட்டு முதலில் விழித்துக் கொண்டவன் வசுந்தராவின் கணவன் தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். அடுத்து வசுந்தராவின் தந்தையும், தாயும் இன்னும் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கே ஓடோடி வந்தனர். மூக்கு வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட நிற்கும் மகளையும், அவள் பக்கத்தில் திகைத்து நிற்கும் கணவனையும் கண்டு, கோபம் கொண்டனர். அவனை எதுவுமே விசாரிக்காமல், அவன் சொல்ல வந்ததையும் கேட்காமல் வெறியுடன் அவனை அடித்து உதைத்தனர். வசுந்தராவின் கணவன் மயங்கி விழுந்தான்.

இது நடந்தது அத்தனையையும் வசுந்தராவைப் பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த திருடன் இதற்கும் மேல் இங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்றெண்ணி ஓசைப்படாமல் நழுவி வீடு போய் சேர்ந்தான்.
மறுநாள், வசுந்தராவின் வழக்கு அரசவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசன் முன்னிலையில் விசாரணை நடந்தது. வசுந்தராவின் கணவன், தான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றும், அவளது மூக்கு எப்படி அறுபட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் சொல்ல, அவனை யாரும் நம்பவில்லை. வசுந்தராவின் சொல்லையே அனைவரும் நம்பினார்கள். இறுதியாக மனைவியின் மூக்கை அறுத்த குற்றத்துக்காக வசுந்தராவின் கணவனுக்கு மரணதண்டனை விதித்தான் மன்னன்.

இந்த வழக்கு எவ்விதமாகப் போகிறதென்று காண்பதற்காக திருடனும் அந்த அரசவைக்கு வந்து மக்களோடு நின்று கவனித்துக் கொண்டிருந்தான். மன்னன் வசுந்தராவின் கணவனுக்கு மரண தண்டனை விதித்ததும் திருடன் திடுக்கிட்டுப் போனான். அவனுக்கு அதற்கு மேல் மனம் தாளவில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதை காணச் சகிக்காமல் நடந்த உண்மையைச் சொல்லி விடுவதென்று தீர்மானத்துக்கு வந்தான்.

‘மன்னவா! தங்கள் விசாரணையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்!’ என்று சொல்லியபடி சபையின் மையப்பகுதிக்கு வந்து அரசன் முன் பணிந்து நின்றான்.

‘அரசே, இந்தப் பெண்ணின் கணவன் நிரபராதி! ஏதும் அறியாத அப்பாவி! நடந்தது அனைத்தையும் நான் அறிவேன்!’ என்றவன், முன் தினம் இரவு வசுந்தராவின் வீட்டுக்கு தான் திருடச் சென்றது முதல், கள்ளக் காதலன் வாயில் சிக்கி அவளது மூக்கு அறுபட்டது வரை விளக்கிச் சொன்னான்.
‘மன்னா, இவள் பெரிய சூழ்ச்சிக்காரி! வஞ்சகி! இழிவான பிறவி இவள்! நான் கூறியதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், இறந்து கிடக்கும் இவளது கள்ளக் காதலனின் பிணத்தின் வாயில் பார்த்தால் உண்மை விளங்கும். இந்தப் பெண்ணின் மூக்கு அந்த பிணத்தின் வாயில் கிடக்கும்!’ என்றான்.

மன்னனும் அதுபோலவே காவலர்களை அனுப்பி பரிசோதிக்க திருடன் சொன்னது ஊர்ஜிதமானது. மன்னன் வசுந்தராவின் கணவனை விடுதலை செய்து, வசுந்தராவை மொட்டையடித்து கழுதை மேல் ஏற்றி நாடு கடத்தும்படிக் கட்டளையிட்டான். வழக்கில் தவறான தீர்ப்பு வழங்காமல் காத்த திருடனுக்குப் பரிசுகள் அளித்து இனி திருடக் கூடாது என்று சொல்லி அரண்மனை உத்தியோகமும் கொடுத்தான்.

இப்போது சொல்லுங்கள் மகாராஜா, பெண்கள்தானே கொடுமைக்காரிகள்? வஞ்சகிகள்?’ என்று ஆண் கிளி விதேகன் கதை சொல்லி முடித்துக் கேட்டதுமே அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

கதைகள் சொல்லிய இரண்டு கிளிகளும் தேவலோக கந்தர்வனாகவும், தேவலோகக் கன்னியாகவும் உருமாற்றம் பெற்றன.

‘மன்னவா, நாங்கள் இந்திரன் அளித்த சாபத்தால் இதுவரை கிளிகளாகக் கிடந்தோம். தங்களுக்குச் சொல்லிய இந்தக் கதைகள் மூலம் சாபவிமோசனம் பெற்றோம்!’ என்று சொல்லி இருவரும் விடை பெற்றுக் கொண்டு வானுலகம் மீண்டார்கள்.

இவ்வாறாக கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், ‘நீர் சொல்லும் மகாராஜனே! அந்த இரண்டு கிளிகளும் சொன்ன கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் மிக மோசமானவர், கொடியவர் யார்? சரியான விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உமது தலை சிதறி விடும்! பதில் சொல்லும் உத்தமரே!’ என்று கேட்டது.

‘வேதாளமே! இந்த இரண்டு கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் பெண்தான் மிகவும் மோசமானவள். கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்துவதை விட, அமைதிக்கும், கருணைக்கும், பொறுமைக்கும் உதாரணமாகச் சொல்லப்படும் பெண்ணானவள் தன் கணவனைக் கொடுமைப்படுத்துவதுதான் மிகவும் மோசமான செயலாகும். இக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள்தான், ஆண்களை விடவும் பொய்யானவர்களாக, துரோகிகளாக இருக்கிறார்கள்!’ என்றான்.

விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் அவனது தோளை விட்டு முருங்கை மரத்துக்குப் பறந்தது. விக்கிரமாதித்தன் அதைத் துரத்திக் கொண்டு விரைந்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வீரபாலன் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 14 

img_1098_medவிக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தைத் தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

அளகாபுரி என்னும் பட்டணத்தை ராஜசிம்மன் என்பவன் ஆண்டு வந்தான். நீதி நெறி வழுவாத அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவனது ஆட்சியில் பசி, பட்டினி, பஞ்சம் என்பதே இல்லை. அவனது பட்டணத்தில் ஏழைகளும் இல்லை. எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவாக வாழ்ந்து வந்தார்கள். இன்னும் சொல்லவேண்டுமானால் பூமியைத் தாங்கி அருள்பாலிக்கும் மாதா பூமாதேவியே மன்னன் ராஜசிம்மனின் நற்குணத்தால் கவரப்பட்டு அவனை ஆசீர்வதித்து அவன் மீது மிக்க அன்புடன் திகழ்ந்தாள்.

இத்தனை சிறப்பு மிக்கவனான ராஜசிம்மன் அரசவைக்கு ஓர்நாள் வீரபாலன் என்பவன் அவனது மனைவி வேதவதி, மகன் விஜயன், மகள் லீலாவதி என தனது குடும்பத்தினருடன் மன்னனைக் காண வந்தான். ராஜசிம்மனைக் கண்டு பணிந்து வணங்கினான்.

‘அரசே, நான் ஒரு வீரன். மத்வ தேசத்திலிருந்து வருகிறேன். நானிலமே போற்றிப் புகழும் தங்களின் கீழ் பணியாற்றவே தங்களை நாடி வந்துள்ளேன். தங்களின் அந்தரங்கப் பாதுகாவலனாக என்னை ஏற்றுக் கொண்டால் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஆபத்தும் நேராமல் காப்பேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்!’ என்று தலை தாழ்த்தி விண்ணப்பித்தான். அவனது குடும்பத்தினரும் மன்னன் முன் கை கூப்பி நின்றிருந்தனர்.
வீரனுக்கே உரிய வாள், கேடயத்துடன் கம்பீரமாக தன் முன் நின்று தன்னம்பிக்கையுடன் பேசும் வீரபாலனை மன்னன் ராஜசிம்மனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மலர்ந்த புன்னகையுடன், வீரபாலனைப் பார்த்து, ‘அப்படியே ஆகட்டும் வீரனே! உன்னை எனது பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ நாளையிலிருந்து பணிக்கு வரலாம். இந்த உனது பணிக்கு சன்மானமாக மாதம் 100 பொற்காசுகள் பெற்றுக் கொள்ளலாம்! ’ என்று கட்டளையிட்டான்.
வீரபாலனும், அவனது குடும்பத்தாரும் மன்னனுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மறுதினமே வீரபாலன் பணியில் சேர்ந்தான். அரண்மனை வாசலில் உருவிய வாளுடன் நடைபயின்று அல்லும் பகலும் காவல் காத்தான். வெயில், மழை, காற்று, புயலே அடித்தபோதிலும் தனது கடமையிலிருந்து தவறாமல் சொட்டச் சொட்ட நனைந்தபடி அவன் காவல் புரிந்ததை மன்னன் ராஜசிம்மன் பலநாள்கள் கண்டு வியந்தான். மனத்துக்குள் பாராட்டினான்.
காலம் விரைந்தது.

ஓர்நாள் இரவு மன்னன் தனது பள்ளியறையில் இருந்தான். வீரபாலன் வழக்கம்போல் அரண்மனை வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி காவல்காத்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு பெண் கதறியழும் ஒலி கேட்டது. அந்த அழுகையொலி கேட்பவர்களின் மனத்தை வருத்திப் பிசைந்தது.

மன்னன் ராஜசிம்மன் அந்த அழுகைச் சப்தத்தினால் பாதிக்கப்பட்டு மேன்மாடத்துக்கு வந்து நின்று நாலாதிசையிலும் பார்த்தான். அந்த அழுகைச் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மன்னன் ராஜசிம்மன், வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்த வீரபாலனைப் பார்த்து, ‘வீரபாலா! ஒரு பெண்ணின் அழுகையொலி உனக்குக் கேட்கிறதா?’ என்று கேட்டான்.

‘ஆமாம் அரசே! அந்தச் சப்தத்தை நானும் கேட்டேன்!’ என்றான் வீரபாலன்.

‘நமது ஆட்சியில் இந்த அவலக் குரல் எதிரொலிப்பது மனத்துக்குச் சங்கடமாயிருக்கிறது. யார் அந்தப் பெண்? எதற்காக அழுகிறாள்? என்று விசாரித்து வா!’ என்று அனுப்பி வைத்தான்.

வீரபாலன் புறப்பட்டுச் சென்றாலும் மன்னன் ராஜசிம்மனுக்கு மனம் கேட்கவில்லை. தனது குடிமக்களில் ஒருத்தி கதறி அழுகிறாள் என்றால் அதில் தனது ஆட்சியின் தவறு ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி அவன் மனத்தைத் துளைக்க, அரண்மனையில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனும் அரண்மனையை விட்டு வெளியே வந்து வீரபாலன் போன திசையிலேயே பின் தொடர்ந்தான்.

மன்னனின் கட்டளைப்படி அழுகுரல் கேட்ட திசை நோக்கி விரைந்த வீரபாலன், நகரத்தின் எல்லையில் இருந்த நதிக்கரையை அடைந்தான். நதிக்கரையின் ஓரத்தில் இருந்த மண்டபம் ஒன்றில் சர்வ அலங்கார லட்சணங்களுடன் பெண்ணொருத்தி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
‘ஐயோ விதியே உனக்கு கொஞ்சமும் இரக்கமில்லையா? தர்மவானான மகா வீரனை அழைக்கிறாயே! அவனது வாழ்க்கையோடு விளையாடுகிறாயே! இது நியாயமா?’ என்று புலம்பிக் கொண்டு விம்மினாள்.

வீரபாலன் அவளை அணுகி, ‘தாயே! நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா? இந்த அர்த்தராத்திரியில் எதற்காக இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

அப்பெண், ‘மகனே! நான் பூமாதேவி. இந்நாட்டு அரசன் ராஜசிம்மன், என் அன்புக்குரிய மகன். தர்மநெறி தவறாமல் நல்லாட்சி நடத்தும் அந்த நல்லவன் இன்னும் இரண்டொரு நாளில் இறக்கப் போகிறான். அந்த துக்கம் தாளாமல் தான் அழுது கொண்டிருக்கிறேன்!’ என்றாள்.

இதைக் கேட்ட வீரபாலன் திடுக்கிட்டுப் போனான். பதறித் துடித்தான்.
அவன் பூமாதேவியிடம், ‘தாயே! பராக்கிரமசாலியும், தயாள குணம் கொண்டவரும், தனது குடிமக்களை, தான் பெற்ற மக்களைப் போல் அரவணைத்துக் காப்பவருமாகிய எனது அன்புக்குரிய மன்னருக்கா மரணம் வரப் போகிறது என்கிறீர்கள்? இல்லை, இல்லவேயில்லை! அப்படி நேரக் கூடாது! தாயே! கடவுளுக்கு நிகரான அன்னை பூமாதேவியே! சொல்லுங்கள் தாயே! நான் மன்னர் ராஜசிம்மனின் பாதுகாவலன். அவரது உயிரைக் காப்பாற்றும் கடமை எனக்கிருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து மன்னரைக் காப்பாற்ற ஏதாவது வழியிருக்கிறதா? தயவுசெய்து உதவுங்கள் தாயே!’ என்று கெஞ்சினான்.

உடனே பூமாதேவி, ‘இருக்கிறது வீரனே! இந்த அபாயக் கண்டத்திலிருந்து ராஜசிம்மனைத் தப்புவிக்கும் வழி ஒன்றிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றுவது ஆகாத காரியம்!’என்றாள்.

‘தாயே எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றியே தீருவேன்! சொல்லுங்கள் தாயே! என்ன செய்தால் என் மன்னனின் உயிரைக் காப்பாற்ற முடியும்?’

‘வீரபாலா! இந்நகரத்தின் தென் எல்லையில் வனபத்ரகாளியின் கோயில் இருக்கிறது அல்லவா? அக் கோயிலின் பலி பீடத்தில் தகப்பன் ஒருவன் தனது மகனை மனமுவந்து பலி கொடுத்தால் மன்னன் ராஜசிம்மன் இந்த மரணகண்டத்திலிருந்து தப்பித்து விடலாம். இல்லாவிட்டால் இரண்டொருநாளில் அவன் மரணமடைவது நிச்சயம்!’ என்றாள்.

வீரபாலன், ‘தாயே! இதை நான் நிச்சயம் நிறைவேற்றி விடுவேன்! இனி நீங்கள் வருத்தம் கொள்ளவேண்டாம்!’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து விரைந்தான்.

இவ்வாறு வீரபாலனும், பூமாதேவியும் பேசிக்கொண்டு இருந்த சகல விஷயங்களையும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்த மன்னன் ராஜசிம்மன் மறைந்திருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தான். இனி வீரபாலன் என்ன செய்யப் போகிறான்? எங்கே செல்கிறான்? என்கிற ஆர்வத்துடன் மன்னன் ராஜசிம்மன் வீரபாலனைப் பின் தொடர்ந்து செல்லலானான்.

நதிக்கரை மண்டபத்திலிருந்து புறப்பட்ட வீரபாலன் நேராக தனது வீட்டை அடைந்தான். அங்கே தனது மனைவியிடம் பூமாதேவி தன்னிடம் கூறியது அனைத்தையும் விளக்கமாகச் சொன்னான்.

இதைக் கேட்ட அவனது மனைவி வேதவதி, ‘குடிமக்கள் சௌக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கவேண்டுமானால் அதற்கு முதலில் நாட்டின் மன்னன் பூரண ஆயுளுடன் நலமாக இருப்பது அவசியம். அவன் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அரசனுடைய நலனுக்காக எதையும் நாம் தியாகம் செய்யலாம்!’ என்றாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வீரபாலனின் மகனாகிய சிறுவன் விஜயனும் தன் தந்தையிடம், ‘அப்பா, நமது மன்னர் மிகவும் நல்லவர். இந்நாட்டின் லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கும் கடமையில் இருப்பவர். அவரது உயிரைப் பாதுகாக்கும் கடமை உங்களுக்கு இருப்பது போலவே, தகப்பனின் கடமையில் பங்கேற்பது மகனாகிய எனது கடமையாகும். எனவே நமது மன்னரின் உயிரைக் காப்பாற்ற நான் என் உயிரைத் தர சித்தமாயிருக்கிறேன். தாமதிக்க வேண்டாம். வாருங்கள், வனபத்ரகாளியின் கோயிலுக்குச் செல்வோம்.’ என்றான்.

உடனே வீரபாலனின் குடும்பத்தார் மனைவி, மகன், மகள் உட்பட அனைவரும் அந்த நள்ளிரவு நேரத்திலேயே வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டனர்.

இவ்வளவையும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த மன்னன் ராஜசிம்மன், வீரபாலன் குடும்பத்தாரின் தியாகத்தை நினைத்து உள்ளம் நெகிழ்ந்து போனான். மேலும் அவர்களைத் தொடர்ந்து சென்றான்.

கோயிலை அடைந்ததும் வீரபாலனின் மகன் விஜயன், தேவியைப் பணிந்து வணங்கி, ‘தாயே, பத்ரகாளி, எனது இந்தச் சிறு உயிரை பரிசாகப் பெற்றுக் கொண்டு, நீதிமானான மன்னர் ராஜசிம்மனுக்கு நீண்ட ஆயுளைத் தா!’ என்று வேண்டிக் கொண்டு பலி பீடத்தில் தனது தலையைப் பொருத்திக் கொண்டான்.

அடுத்தநொடி தனது கூரிய வாளால் மகனின் தலையை வெட்டியெடுத்து அம்மனின் காலடியில் காணிக்கையாக வைத்த வீரபாலன், ‘தகப்பனொருவன் மனமுவந்து தனது மகனின் உயிரை பலி கொடுத்தால் மன்னன் உயிர் காக்கப்படும் என்று சொன்னார்கள். நான் அதைச் செய்து விட்டேன். தேவி பத்ரகாளி இனி நீதான் மன்னர் ராஜசிம்மனை மரண அபாயத்திலிருந்து காப்பாற்றவேண்டும்!’ என்று வேண்டினான்.

அப்போது அசரீரி ஒலித்தது. ‘வீரபாலா, உனது தியாகம் வீணாகாது. மன்னன் உயிர் தீர்க்காயுசாக நீட்டிக்கப்பட்டு விட்டது. இன்னும் பல நூறு வருடங்கள் அவன் நல்லாட்சி புரிவான்!’ என்று கூறியது.

அப்போது மாண்டு போன தனது அண்ணன் விஜயனின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வீரபாலனின் மகள் லீலாவதி அழுது அழுது அதீத துக்கத்தால் இதயம் வெடித்து இறந்து போனாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரபாலனின் மனைவி வேதவதி, கணவனிடம், ‘சுவாமி! கணவனது காரியத்தில் பங்கேற்பது மனைவியின் கடமை. இது முடிந்து விட்டது. மன்னனைக் காப்பாற்ற வேண்டிய உங்களது கடமையில் துணை நின்று காரியம் பூர்த்தியாகி விட்டது. இதில் நமது இரண்டு குழந்தைகளும் இறந்த பிறகு இதற்கு மேல் இவ்வுலகில் எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. எனவே குழந்தைகளின் உடலுக்கு சிதை மூட்டி அவர்களுடனே நானும் உயிர் விடச் சித்தமாகி விட்டேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும்!’ என்று சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு, அதுபோலவே குழந்தைகளுடன் எரிந்து சாம்பலானாள்.

பின் பத்ரகாளியின் முன் நின்ற வீரபாலன், ‘தாயே, அசரீரி சொன்ன வாக்கின்படி, மன்னர் ராஜசிம்மர் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி பூரணநலமாக இருந்து நாடாள்வார் என்பது உறுதியாகி விட்டது. நான் எனது குடும்பத்தை இழந்து இவ்வுலகில் துக்கமும் துயரமுமாக வாழ்வதை விட எனது உயிரை விடுத்து அவர்களுடனே போய் விடுவதுதான் சரியானது!’ என்று சொல்லியபடி தனது வாளால் தலையை ஒரே வீச்சில் துண்டித்துக் கொண்டு மாண்டு விழுந்தான்.

இதுவரையிலும் அங்கே நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ராஜசிம்மன் உணர்ச்சிப் பிழம்பாக திகைத்துப் போய் நின்றான். அதிசயப்படுவதா, ஆச்சரியப்படுவதா, துக்கப்படுவதா, வேதனைப்படுவதா ஒன்றும் விளங்கவில்லை.

வீரபாலனின் குடும்பத்தவர் தன் ஒருவனுக்காக செய்த தியாகம் அவனுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தி மனத்தை நடுங்கச் செய்திருந்தது. இதயம் நெகிழ்ந்து தவித்தது.

‘எந்த ஒரு மனிதனும் செய்யத் துணியாத பெருந்தியாகத்தை செய்த இக்குடும்பத்தினரை நான் எப்படிப் போற்றுவேன்? அர்த்தராத்திரியில் காட்டுக்குள் வந்து இக்குடும்பத்தினர் செய்த தியாகம் யாருக்குமே தெரியப்போவதில்லை. ஆனாலும் எந்தப் பாராட்டையும், புகழ்ச்சியையும் எதிர்பாராமல் என் ஒருவனது உயிருக்காக நான்கு உயிர்களை பலியிட்டு விட்டார்களே! இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பார்களா? இவர்களை நான் எப்படி கௌரவிப்பேன்?’ என்றெல்லாம் நெகிழ்ந்தான்.

அவனது மனம் துயரத்தில் தத்தளித்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக தேவி பத்ரகாளியின் முன் வந்து நின்றவன், ‘தாயே, மனித உயிர்களில் பெரியது என்ன; சிறியது என்ன? உயர்ந்தது என்ன; தாழ்ந்தது என்ன? உயிர்களின் மதிப்பு ஒன்றேதான்! என் ஒருவனுக்காக நான்கு உயிர்கள் மரித்தது எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது. நானும் இனி உயிர் வாழ பிரியப்படவில்லை. இந்தா எனது உயிரும் உனக்கு காணிக்கை!’ என்று சொல்லி வாளை எடுத்து தலையை வெட்டிக் கொள்ள முனைந்தான்.

அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.

‘ராஜசிம்மா அவசரப்படாதே! மற்றவர் வேதனையைப் பொறுக்காத, தியாகத்தை மதிக்கத் தெரிந்த நீதிமானே! வருந்தாதே! இதோ உன் பொருட்டு உயிர் துறந்த அனைவரும் உயிர் பிழைப்பார்கள்!’ என்று சொல்லியது.

மறுகணமே மாண்டுபோன வீரபாலன் குடும்பத்தினர் அனைவரும் உயிர் மீண்டு எழுந்தனர். அவர்களின் கண்படாமல் மன்னன் ராஜசிம்மன் நழுவி அரண்மனை சேர்ந்தான்.

உயிர் மீண்ட வீரபாலன் குடும்பத்தினர் இது அன்னை பத்ரகாளியின் அருள் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி வீடு மீண்டனர்.

மறுநாள் வீரபாலன் எப்போதும்போல் அரண்மனை வாசலில் பணியாற்றச் சென்று காவலிருந்தான். அப்போது மன்னன் ராஜசிம்மன் அவனை தர்பாருக்கு அழைத்து வரச் சொல்லி, தானே தனது மந்திரி பிரதானிகளுடன் வந்து வீரபாலனை எதிர்கொண்டு வரவேற்றான். வீரபாலனுக்கு தனி இருக்கை அளித்து கௌரவித்து, சபையில் உள்ளோருக்கு முன் தினம் நடந்த நிகழ்வை முழுவதும் கூறினான். சபையோர் திகைத்து திக்குமுக்காடி வீரபாலனையும் அவனது குடும்பத்தாரையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

மன்னன் ராஜசிம்மன் வீரபாலனுக்கு பெரும் பதவியளித்து, பொன்னும் பொருளும் ஏராளமாகத் தந்து தன்னுடன் இணை பிரியாத நண்பனாக வைத்துக் கொண்டான்.

என்று கதை சொல்லி முடித்த வேதாளம் வழக்கம் போல் கேள்வி தொடுத்தது.

‘மன்னனுக்காக பெரும் தியாகம் செய்த வீரபாலன் மற்றும் அவனது குடும்பத்தினர், தனது பணியாளன் செய்த தியாகத்தின் காரணமாக வேதனையில் தனது உயிரையே போக்கிக் கொள்ள முனைந்த மன்னன் ராஜசிம்மன் இவர்களுள் யார் மிக உயர்ந்தவர்? சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே!’

‘ நிச்சயமாக மன்னன் ராஜசிம்மன் தான் உயர்ந்தவன்!’ என்றான் விக்கிரமாதித்தன்.

வேதாளம் திகைப்புடன் கேட்டது. ‘என்ன! விக்கிரமாதித்தரே யோசித்துத்தான் சொல்கிறீரா? மன்னன் உயிருக்காக தனது மகன் உயிரையே பலி கொடுத்த வீரபாலன் உயர்ந்தவனில்லையா? பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை மன்னனது நலனுக்காக பலி கொடுக்க ஒப்புக் கொண்ட தாய் வேதவதி உயர்ந்தவளில்லையா? மன்னன் உயிர் காக்க தனது உயிரையே துணிச்சலாகத் தர ஒப்புக் கொண்ட சிறுவன் விஜயன் உயர்ந்தவனில்லையா? இவர்களையெல்லாம் விட ராஜசிம்மன் எப்படி உயர்ந்தவனாவான்?’

‘அரசனின் கீழ் பணி புரியும் வீரனும், அவனது குடும்பத்தினரும் மன்னனுக்காக உயிர் தியாகம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதுதான் உலக நியதி. அதுபோலவே மன்னர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்களின் கீழ் உள்ளவர்களை பலி கொடுப்பதென்பதும் சர்வ சாதாரணமாக நிகழ்வுதான். இப்படியிருக்கையில் மன்னன் ராஜசிம்மன் தன் கீழ் பணிபுரியும் ஒரு சாதாரண வேலைக்காரனுக்காகவும், அவனது குடும்பத்தினர் செய்த தியாகத்துக்காகவும் மனம் வேதனைப்பட்டு தனது உயிரையே தரச் சித்தமானான் அல்லவா? எனவே அவனது செயலே மிக பெரியது. அவனே மிக உயர்ந்தவன்!’ என்று சொன்னான்.

விக்கிரமாதித்தனின் இந்த விளக்கம் மிகச் சரியான பதிலாக அமைய வேதாளம் அவனது தோளிலிருந்து விடுபட்டு முருங்கை மரத்துக்குப் பறந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஒரு பேரழகியின் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 15 

1082105906வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்க அது மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது.

‘பாரதத்தின் தென்கிழக்கிலே வல்லபாலன் என்னும் அரசன் கௌசாம்பி என்னும் பட்டணத்தை ஆண்டு வந்தான். அந்தப் பட்டணத்தில் வசித்து வந்த முத்தநாதன் என்பவர் ஒரு நேர்மையான வணிகர். அவரே அந்தப் பட்டணத்தின் வியாபாரிகளுக்கெல்லாம் தலைவராகத் திகழ்ந்தார். வணிகத்தில் வாய்ச் சொல்லில் சத்தியமும், நாணயமும் இரண்டு கண்களாக மதித்த முத்தநாதன் வாழ்விலும் நீதி, நியாயம் தவறாமல் வாழ்ந்தார்.

முத்தநாதனுக்கு ஒரு மகன். ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். மகன் வித்யாதரன் தந்தைக்குத் துணையாக வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டான். மகள் வித்யாவதி மிகுந்த குணவதி. தைரியசாலி. அதீத இரக்க குணம் கொண்டவள். தனது தந்தையைப் போலவே வாக்கு சுத்தம் கொண்டவள். ஒருவருக்குக கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தனது உயிரையும் கொடுக்கத் துணிவாள். அதுமட்டுமல்ல, தேவலோகத்து மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகைகளே பொறாமை கொள்ளும் அழகு படைத்தவள் வித்யாவதி. மன்மதனின் மனைவியான ரதி தேவியே வெட்கம் கொள்ளும் அளவுக்கு மோகன வடிவம் கொண்டவள்.

அவளது இந்தப் பேரழகுதான் அவளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது. ஒருநாள் மாலை நேரம். வித்யாவதி கோயிலுக்குச் சென்று விட்டு நந்தவனம் வழியாக தனிமையில் வந்தபோது மதனகாமன் என்பவன் அவளை எதிர்கொண்டு இடைமறித்தான். மதனகாமன் வித்யாவதியின் சகோதரன் வித்யாதரனின் நண்பன்.

‘வித்யாவதி, நான் உன்னிடம் சற்றுப் பேசவேண்டும்!’ என்றான் மதனகாமன்.

‘அதற்கு இதுதானா இடம்? சரி சொல்லுங்கள்!’ என்றாள் வித்யாவதி.

‘வித்யாவதி உனது பேரழகு என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. உனது வனப்பான பருவமும், திரண்ட எழிலும் என் உள்ளத்தை நார் நாராகக் கிழித்துப் போடுகிறது. நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன் வித்யாவதி. இனிமேலும் என்னைத் தவிக்கவிடாதே. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு, என் தாபத்தைத் தீர்த்து வை!’ – இறைஞ்சினான் மதனகாமன்.

வித்யாவதி திடுக்கிட்டாள். மதனகாமன் இப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது காதலை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவள் தந்தை முத்தநாதன் வித்யாவதிக்கென அவர்களது உறவிலேயே பக்கத்து ஊரிலுள்ள குணசேகரன் என்கிற வணிகர் குல இளைஞனுக்கு மணம் பேசி நிச்சயித்திருந்தார். விரைவிலேயே அவளது திருமணம் நடக்கவிருந்தது. இந்தச் சூழலில் மதனகாமனின் கோரிக்கை அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

அவள் மதனனிடம், ‘தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தந்தை ஏற்கெனவே வேறோர் மாப்பிள்ளையைப் பார்த்து எனக்கு நிச்சயம் செய்து விட்டார். இன்னும் சிறிது நாட்களில் எனக்குத் திருமணம் நடைபெறப் போகிறது. என்னை மறந்து விடுங்கள்!’ என்றாள்.

‘இல்லை வித்யாவதி. உன்னை என்னால் மறக்க முடியாது. உன்னை அடையாமல் என் வேட்கை தீராது. தயவுசெய்! உன் காலில் விழுந்து கேட்கிறேன். கருணை காட்டு. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு!’ – என்று கெஞ்சினான்.

வித்யாவதி எத்தனையோ விதமாக அவனுக்கு நற்போதனைகள் செய்தபோதும் அவன் கேட்பதாயில்லை. மண்டியிட்டான்… கண் கலங்கினான்… விம்மினான்… வெடித்தான்… உண்மையாகவே அவளது பாதங்களில் விழுந்து புரண்டு அழுதான்.

கடைசியாக, ‘நீ எனக்கு இல்லையென்றால் இக்கணமே, மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்வேன்!’ என்று மிரட்டினான்.

வித்யாவதி திடுக்கிட்டாள். ‘தயவுசெய்து உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள். இது நியாயமில்லை. இன்னொருவர் மனைவியாக நிச்சயிக்கப்பட்ட நான் உங்களை எப்படி மணந்து கொள்ள முடியும். இதனால் எனது தந்தையல்லவா சத்தியம் தவறியவர் என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாகிப் போவார்? கருணைகூர்ந்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்!’ என்று கூறினாள்.

மதனன் முடிவாக, ‘சரி, நீ என்னை மணந்து கொள்ள வேண்டாம். உனது இந்த அழகுதான் என்னை அலைக்கழிக்கிறது. இதை ஒருமுறை சுவைத்து எனது மோகம் தணிந்துவிட்டால் எனது இந்த வேட்கை தீர்ந்து விடும் என்பது நிச்சயம். இப்படியாவது ஒரே ஒருமுறை எனக்கு உதவி செய்!’ என்று கேட்டான்.

மதனகாமனின் இந்த நடத்தை வித்யாவதியை வேதனைப்படுத்தியது. இறுதியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, மதனனிடம், ‘ஐயா! உங்களது தாபம் எனக்குப் புரிகிறது. நீங்கள் என்மீது கொண்டது காதலல்ல, காமம்! சரி நீங்கள் கேட்ட உதவியை நான் கட்டாயம் நிறைவேற்றித் தருகிறேன். ஆனால் முதலில் என் திருமணம் முடியட்டும். எனது தந்தை என்னை கன்னிகாதானம் செய்து தரும்போது அவரது சத்தியத்தைக் காக்கும் விதமாக மணவறையில் நான் கன்னியாக இருக்கவேண்டியது முக்கியம். இல்லையேல் எனது தந்தை வாக்கு தவறியவர் ஆவார். திருமணத்துக்குப் பிறகு நானே உங்களைத் தேடி வந்து என்னைத் தருகிறேன்!’ என்று வாக்குறுதி அளித்தாள்.

ஆனால் மதனகாமன் இதற்கு ஒப்புக் கொள்ளாதவனாக, ‘மற்றவன் எச்சில் செய்து தருவதை சுவைக்கக் கூடியவன் அல்ல நான். வித்யாவதி, உன்னை எனக்குத் தருவதாக வாக்கு தந்தாய். மிக்க சந்தோஷம். ஆனால் அப்படி உன்னை அளிப்பதானால் பூரண கன்னித்தன்மையோடு நீ எனக்கு வேண்டும்!’ என்றான்.

வித்யாவதிக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘சரி, நான் வாக்களித்தபடியே திருமணம் முடிந்ததும் என் கன்னித்தன்மை கலையாமல் நான் உன்னை வந்தடைகிறேன். என்னை நம்பு. இது சத்தியம்!’ என்று அவனுக்கு சத்தியம் செய்து தந்து விடை பெற்றாள்.

பெரியோர்கள் நிச்சயித்தபடி குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினத்தில் வித்யாவதியின் திருமணம் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.
இரவுப் பொழுது நெருங்க நெருங்க வித்யாவதி பதறினாள். தனது சத்தியத்தை கணவரிடம் எப்படிச் சொல்வது? இதை அவர் எப்படி எதிர்கொள்வார்? ஒன்றும் புரியவில்லை!

இரவு, முதலிரவு அறைக்குள் நுழைந்ததுமே வித்யாவதி கணவன் குணசேகரன் கால்களில் தடாலென்று விழுந்து கண்ணீர் விட்டாள்.
குணசேகரன் பதறிப் போனான். ‘முதலிரவு அறைக்குள் மணப்பெண் அழுகிறாள் என்றால் அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையோ? என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று எண்ணியவன்,வித்யாவதியிடம், ‘பெண்ணே! அழாதே! உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன்னைத் தொடக்கூட மாட்டேன். உன்னைக் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். நீ யாரை விரும்புகிறாயோ அந்தக் காதலனுடனேயே என்று வாழலாம். நீ இப்போதே புறப்பட்டுச் செல்!’ என்றான்.

குணசேகரனின் வார்த்தைகளால் துடிதுடித்துப் போன வித்யாவதி, ‘அப்படிச் சொல்லாதீர்கள். நான் உங்களை மனப்பூர்வமாக விரும்பித்தான் திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். உங்களைக் கணவனாக அடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றாள்.

குணசேகரன் குழம்பிப் போனான். ‘பின் எதற்காக இந்தக் கண்ணீர்? என்ன உனது துன்பம்? என்னிடம் சொல்!’ என்று கேட்டான் குணசேகரன்.

‘தயவுசெய்து நான் சொல்லப்போவதை தாங்கள் ஆத்திரப்படாமல் கேட்க வேண்டும்.’ என்ற வித்யாவதி, மதனகாமனின் விருப்பத்தையும், கன்னித்தன்மை கலையாமல் வந்து தன்னை அவனிடம் தருவதாக சத்தியம் செய்து தந்திருப்பதையும் விவரமாகச் சொல்லி முடித்தாள்.

‘அன்பரே! நானோ எனது குடும்பத்தாரோ இதுநாள்வரை எந்தத் தருணத்திலும் கொடுத்த வாக்கைத் தவறியதில்லை. இம்முறையும் நான் மதனமோகனனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி விட்டு வருவதற்கு தாங்கள்தான் அனுமதி அளிக்கவேண்டும்!’ என்று கோரினாள்.

குணசேகரனுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அவனுக்குத் தனது மனைவியின் கோரிக்கை விசித்திரமாக இருந்தது. கட்டிய மனைவியை இன்னொருவனிடம் அனுப்பி வைப்பதா என்று மனது கொந்தளிக்கவும் செய்தது. விரக்தியாக சிரித்துக் கொண்டான். பதற்றப்படாமல் ஆழ்ந்து யோசித்தான். அவனும் வணிக வம்சத்தவன்தானே? கொடுத்த வாக்கைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டும் என்பதில் எந்த விதிவிலக்கும் கிடையாது என்பதால் மனத்தை கல்லாக்கிக் கொண்டு வித்யாவதிக்கு சம்மதம் சொன்னான்.

‘வித்யாவதி ஒருவருக்கு வாக்களிக்கும் முன் அது சாத்தியமா என்பதை யோசித்துத்தான் அளிக்க வேண்டும். அப்படி ஒருமுறை அளித்து விட்டால் உயிரைக் கொடுத்தாவது அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். பரவாயில்லை போய் வா! கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து நீ உனது கள்ளக் காதலனைக் காணச் செல்லவில்லை. பசித்தவனுக்கு பிச்சையிடுவது போல உன் அழகை யாசித்தவனுக்கு பிச்சையிட்டு விட்டு திரும்பப் போகிறாய். மனைவியின் சத்தியத்தில் கணவனுக்கும் பங்கிருக்கிறது. போய் நிறைவேற்றி விட்டு வா!’ என்று அனுப்பி வைத்தான்.

வித்யாவதி கணவனுக்கு நன்றி சொல்லி, அந்த ராத்திரி நேரத்திலேயே மதனகாமனை காண்பதற்கு விரைந்தாள்.

அடுத்தொரு சோதனையும் அவளை நெருங்கியது.

வித்யாவதி மதனகாமனை காணச் செல்லும்பொழுது வழியில் காட்டுப் பகுதியில் திருடன் ஒருவன் வித்யாவதியை கத்தி முனையில் மடக்கி மிரட்டினான்.

வித்யாவதி வீணே பேசி காலம் தாழ்த்த விரும்பாமல், தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி திருடனிடம் கொடுத்தாள்.

வித்யாவதியின் அழகை மிகுந்த ஆசையுடன் கண்களால் பருகிய அந்தத் திருடன் அவள் கொடுத்த நகைகளை வாங்காமல், மிருதுவான அவளது கைகளைப் பற்றித் தடவினான்.மேலும் சொன்னான்.

‘இந்த பொன் நகைகள் எதுவும் எனக்கு வேண்டாம். உருக்கி வார்த்த தங்கச் சிலை போல் இருக்கும் நீதான் வேண்டும். வா பெண்ணே! என்னை அணைத்துக் கொள்! என் ஆசையைத் தீர்த்து வை!’

வித்யாவதி பதறி விலகினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

‘ஐயா, பாழாய்ப் போன எனது இந்த அழகுதான் எனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. திருமணமான அன்றிரவே தாலி கட்டிய கணவனைச் சேராமல், அந்த நல்லவரின் அனுமதியுடன் ஒரு காமுகனுக்கு தேகத்தை ஒப்படைக்கப் போய்க் கொண்டிருக்கும் அபலை நான். இதில் தாங்கள் வேறு தடுத்து துன்புறுத்துகிறீர்களே!’ என்று கதறினாள்.

‘என்ன? கணவனின் அனுமதியுடன் அடுத்தவனை சேரப் போகிறாயா? என்ன உன் கதை? எனக்குச் சொல்!’ என்று கேட்டான்.

வித்யாவதி தனது கதையை அவனிடம் சொல்லி முடித்தாள். பின், ‘ஐயா! உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். தயவுசெய்து இப்போது என்னை விட்டு விடுங்கள். வாக்குக் கொடுத்தபடி என் கன்னித்தன்மையை அந்த காமுகனுக்குக் கொடுத்து விட்டு திரும்ப வரும்போது மீண்டும் இங்கேயே வந்து சேருகிறேன். தங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன்!’ என்றாள்.
திருடனும் சம்மதித்து அனுப்பி வைத்தான்.

ஒருவழியாக எல்லா கண்டத்திலிருந்தும் தப்பி தனது கன்னித் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு, மதனகாமனிடம் வந்து சேர்ந்தாள் வித்யாவதி.
அவளைப் பார்த்ததும் மதனகாமன் முதலில் அதிர்ச்சியுற்றான். பின் எல்லையில்லாத வியப்படைந்தான். திருமணமான முதல் ராத்தியில் கட்டிய கணவனுக்குக்கூட தன்னை அர்ப்பணிக்காமல் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னித் தன்மையுடன் தன் முன் வந்து நிற்கும் வித்யாவதியைப் பார்க்கவே அவன் மனம் கூசியது. வெட்கித் தலை குனிந்தான்.

‘வித்யாவதி! மிகக் கேவலமானவன் நான். உனது நேர்மையோடும், உனது கணவனின் தியாக உள்ளத்தோடும் ஒப்பிட்டால் நான் சிறு தூசு போல் என்னை உணர்கிறேன். உனது இந்த தூய குணம் என்னைத் திருத்தி விட்டது. உத்தமியே! உனது கன்னித்தன்மை கலையாமல் இங்கிருந்து செல். உன் கணவனுக்கே அதை காணிக்கையாக்கி இருவரும் இன்புற்று வாழ்ந்திருங்கள்!’ – என வாழ்த்தி வழியனுப்பினான்.

அங்கிருந்து புறப்பட்ட வித்யாவதி, திருடன் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.
அத்தனை விரைவாக திரும்பி வந்த வித்யாவதியைப் பார்த்து திருடன் ஆச்சரியப்பட்டான். ‘இத்தனை சீக்கிரம் வந்து விட்டாயே! காமுகன் அங்கில்லையோ?’ என்று வினவினான்.

‘காமுகன் கனவானாகி விட்டான்!’ என்ற வித்யாவதி நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

இதைக் கேட்ட திருடன் மனம் நெகிழ்ந்து போனான். அவனது கண்கள் கலங்கின.

‘அம்மா! உண்மையாகவே உன்னைப் போல் ஒரு உத்தமியை நான் இதுவரை பார்த்ததில்லை. காமுகனுக்கு வந்த மனமாற்றம் இந்தக் கள்ளனுக்கு மட்டும் வராதா என்ன? இங்கிருந்தும் உனது கன்னித்தன்மை கலையாமல் புறப்பட்டுச் செல். உனது நற்குணம் எப்பேர்ப்பட்ட தீயவனையும் நல்வழிப்படுத்தி விடும் அம்மா! நீ தீர்க்காயுசாக, தீர்க்க சுமங்கலியாக உனது கணவனுடன் மகிழ்ச்சியாக இரு.’ – என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தான்.

வித்யாவதி மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று கணவனிடம் சேர்ந்தாள். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னாள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அன்புடன் கணவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவளை கட்டித் தழுவிய குணசேகரன், ‘வித்யாவதி உனது மேனியழகு அவர்களைக் கெட்டவர்களாக்கியது. ஆனால் உனது உள்ளத்தழகு அவர்களை நல்லவர்களாக மாற்றிவிட்டது. உன்னை மனைவியாக அடைந்ததில் நானும் பெருமைப்படுகிறேன் கண்மணி!’ என்று சொல்லிப் பூரித்தான்.

இப்படியாக கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது.

‘இப்போது நான் சொன்ன கதையில் வந்த கணவன், காமுகன், கள்ளன் மூவருமே மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் என்றாலும் இதில் யாருடைய நடத்தை மிகச் சிறந்தது என்பாய்?’

‘வேதாளமே, கணவன் குணசேகரன், காமுகன் மதனகாமன் இருவரும் வணிக குலத்தைச் சேர்ந்தவர்கள். நாணயம், நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியவர்கள். அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதில் எந்த அதிசயமுமில்லை. ஆனால் அடுத்தவர்களை ஏமாற்றியும், மிரட்டியும், வஞ்சித்தும், திருடியும் பிழைப்பு நடத்தும் தீயவனான ஒரு கள்ளன் மனம் திருந்தி நடந்து கொண்ட பெருந்தன்மைதான் பாராட்டுக்கு உரியது!’

சரியான பதிலைச் சொன்னதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற, விக்கிரமாதித்தன் சோர்ந்து போகாமல் அதை விரட்டிச் சென்றான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard