New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பறையர்கள் -சி. இராஜாராம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பறையர்கள் -சி. இராஜாராம்
Permalink  
 


தமிழர்களும் சாதிகளும்

caste

பறையர்கள் / அத்தியாயம் 1

சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.

தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.

‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள். இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.

பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்

இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.

சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.

ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.

சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.

‘சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.

‘இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.

‘இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).

சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டு ‘இந்தியவியல்’ அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.

சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.

இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.

அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :

  1. இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
  2. மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
  3. ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
  4. பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.

என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.

‘தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.

  1. அகமணம் – தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
  2. பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
  3. பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
  4. தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
  5. புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
  6. சாதி நீக்கம் (Ex-communication).
  7. சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.

தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.

நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.

ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.

0

புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதி – வருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள் ‘கஹபதி’கள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் ‘தாசர்கள்’ என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்’ என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர் – வரியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல் – கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.

கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.

பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல் – கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.

கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள் – கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.

சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.

குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.

இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சாதி என்றொரு மாயம்

sultanateபறையர்கள் / அத்தியாயம் 2

முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.

தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.

பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.

அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.

0

மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.

உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.

அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.

மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.

இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.

நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.

ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.

ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.

0

இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.

தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்…ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.

0

ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும் ‘சாதி’ என்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால் ‘மாப்பிள்ளை’ என்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.

கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.

13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.

மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.

வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆப்பிரிக்கத் தாய்

africaபறையர்கள் / அத்தியாயம் 3

இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர சைவர்கள் (கர்நாடகத்தில் தோன்றியவர்கள்) கடைசியில் தனியொரு சாதியாக அமைந்து போயினர். கொள்வினை, கொடுப்பினை முதலியவற்றைத் தமக்கிடையே மட்டுமே செய்து கொண்டனர். அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.

குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும் ‘ஜாட்’ வகுப்பினர் 8ம் நூற்றாண்டில் ‘சண்டாளர்’களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.

சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.

மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோது ‘கீழ்’ நிலைக்குத் தள்ளப்பட்டு ‘கீழ் சாதி’யான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.

நாடு முழுமைக்கும் சமணம், பௌத்தம், ஆசிவகம், சைவம், வைணவம் ஆகிய வைதிக சமயங்களின் தொகைக்கேற்ப வருண வேற்றுமையும், சாதிப் பிரிவுகளும் வலுப்பெற்று வளர்ந்தன. ஒவ்வொரு பெருங் கோயிலைப்பற்றியும், ஊர்ப்புராணங்கள் தோன்றின. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளுடன் இந்திரன் சாபம் இங்கு தீர்ந்தது, சந்திரன் சாபம் அங்கு தீர்ந்தது என்னும்  கதைகளும் அந்தக் கோயிலுக்கு வந்து பயன்பெற்ற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள் முதலியவர்களுடன் குறிப்பிட்ட சாதி மக்களையும், தெய்வ சம்பந்தம் உடையவர்களாக அப்புராணங்கள் சித்தரித்தன.

இதனால் பல சாதியர்களும் தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்டிக் கொள்ளத் தங்களை மேலான தெய்வங்களுடன் சம்பந்தப்படுத்தும் கதைகளைப் புனைந்தனர். இதனால் சாதி எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் பட்டினவர், செம்படவர், பரவர், வன்னியர் முதலியோர் பற்றிய புராணக் கதைகளும் பெருகின.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்தபோது எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும் என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும், குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர் என்று கூறியதை குறிப்பிட்டிருந்தார்.

1910ல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது ஒவ்வொரு சாதியரும் தங்கள் கோத்திரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியது. அப்பொழுதுதான் ஒவ்வொரு சாதியினரும் தம்மை இந்திரன் குலமென்றும், சந்திரன் குலம் என்றும், அக்கினிக் குலம் என்றும், சூரியன் குலம் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.

கள்ளர், மறவர், அகம்படியார் தம்மை இந்திர குலம் என்று கூறிக் கொண்டனர். கல் தச்சர், பொன் வேலை செய்யும் ஆசாரிகள் தம்மை விசுவகர்மா பிராமணர்கள் என்று கூறிக் கொண்டனர். நாடார், வன்னியர் தம்மை ‘சத்திரியர்’ என்றும் ‘பள்ளர்’ தம்மை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறிக் கொண்டனர்.

இதனால் சோழப் பேரரசு காலத்தில் மேற்சாதியினர் (வலங்கையினர்) 98 பிரிவினராகவும், கீழ்ச்சாதியினர் (இடங்கையினர்) 98 பிரிவினராகவும் இருந்த சாதிப்பிரிவு 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2378 சாதிகளாகப் பெருகின. 1955ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புக்கான குழு (பேக்வர்ட் க்ளாஸ் கமிஷன்) பின் தங்கிய சாதிகள் மட்டும் 2399 என்று கணக்கிட்டது. அப்படியென்றால் முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் க்ளாஸ்)

எத்தனை? தாழ்த்தப்பட்ட சாதிகள் எத்தனை? இவற்றைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் சாதிப்பிரிவுகள் மட்டும் நாலாயிரத்தை நெருங்குமா? தாண்டுமா?

ஆங்கிலேயர் ஆட்சியில் தங்களை உயர்ந்த குலத்தார் என்று கூறிக்கொண்டவர்கள், நாடு விடுதலைப் பெற்றபின் தங்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

0

மனிதர்களைப் பற்பல சாதிகளாகப் பாகுபடுத்தும் பழக்கம் வருணாசிரமம் என்னும் சதுர்வண முறை நம் துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து நம் சமூக போராட்டங்கள் அனைத்துக்கும் – சிப்பாய்க் கலகத்திலிருந்து அயோத்தி காலம் வரை காரணமாக இருந்திருக்கிறது.

மருத்துவ நோக்கில் சாதிகளைப் பிரிக்க வேண்டுமென்றால் ரத்த க்ரூப் ஏ,பி,ஓ பாஸிட்டிவ், நெகட்டிவ் என்றுதான் பிரிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது பொருத்தமான ரத்தம் தானா? என்று பார்த்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மருத்துவத்தின் சாதி.

மானுடவியலில் மனித சாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூ கினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கிவிடுகிறார்கள். நாமெல்லோரும் ஆசிய வகை.

இந்த வகைகளிடையே சரும நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிர் சுருட்டை போன்ற வெளித் தோற்றங்களில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால் உள்ளுறுப்புகளின் அமைப்பில் வித்தியாசம் இல்லை. ஓர் ஆப்பிரிக்கனின் இதயத்தை ஒரு ஆசியனுக்கு வைக்க முடியும்.

ஆசியனின் சிறுநீரகத்தை ஒரு காகேசியன் ஏற்கலாம். இறைச்சித் தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று சிவவாக்கியர் கேட்டதற்கு பதில் ‘இல்லை’ என்பதே.

நவீன மனிதன் எப்போது உண்டானான் என்பது பற்றிச் சுவாரஸ்யமான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்க பெர்கல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் வில்ஸன் என்பவர் நேச்சர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு புதிய சித்தாந்தம் கொண்டு வந்தார்.

‘நம் முன்னோர்கள் ‘நியண்டர்தால்’ என்னும் இனமல்ல. நவீன மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். இன்றைய மனித சமுதாயம் அத்தனை பேரும் அந்த ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றியவர்கள்தான்’ என்று ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறார் வில்ஸன். இதற்காக அவர் பயன்படுத்திய அறிவியல் வளர்ச்சி முறை மாலிக்யுலர் பயாலஜி என்னும் இயலைச் சார்ந்தது.

இந்த ஆய்வின்படி அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, என்று தாய் வழியிலேயே வம்சாவளியைப் பின்னால் தள்ளிக் கணக்கிட முடிந்தது. அவ்வாறு கணக்கிட்டால் நாம் எல்லோரும் ஒரு லட்சத்து சொச்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்மணியின் வாரிசுகள். உலகில் உயிர் வாழும் அத்தனை மனிதர்களும் இந்த மகாமகா பாட்டியிடமிருந்து மைட்டோ காண்ட்ரியா பெற்றவர்கள் என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப் பெண்மணிக்கு ‘மைட்டோ காண்ட்ரியல் ஈவ்’ என்றும் பெயரிட்டார்.

பைபிளின் ஏவாள் இந்த மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த ஒரே தாய் சித்தாந்தத்துக்கு எதிராக அவர்கள் மற்றொரு சித்தாந்தம் சொல்கிறார்கள். அது ‘நோவாவின் படகு’ சித்தாந்தம். இதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதியிலிருந்து வந்த நவீன மானிடர்களால் இடம் பெயர்க்கப்பட்டனர். பிறகு  ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அவர்கள் பரவினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க ஏவாள் சித்தாந்தம் பலரை வசீகரித்துள்ளது. அதன் சமூகவியல் அர்த்தங்கள் மிக மிக ஆழமானவை. மனித இனத்தில் எல்லோரும் ஒரே தாயிடமிருந்து ஜனித்தவர்கள் ஆவார்கள்.

ஆராய்ச்சிகளும், மருத்துவ உண்மைகளும் என்ன சொன்னாலும் சாதி பிடியிலிருந்து இறங்கி சமூக தளத்தில் ஒன்றாக இருக்க இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வேதங்களில் சாதி

vedaபறையர்கள் / அத்தியாயம் 4

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.

வெளிநாட்டுப் படையெடுப்புகளால் ஏற்பட்ட சமூகமாற்றம் ஒரு புறமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் தோன்றிய அறிவுப்புரட்சி மறுபுறமுகமாகப் பார்ப்பனிய மேலாண்மையை அலைக்கழித்தன. இந்த அறிவுப் புரட்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கவுதம புத்தர். இவர் தோற்றுவித்த பௌத்த சமயம், பார்ப்பனியத்தின் அனைத்து முனைகளையும் மழுங்கடித்தது. பார்ப்பனர்களின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் வேதக் கல்வியின் மையமாக விளங்கியதுமான தட்சசீலம் வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் பண்பாட்டுத் தாக்குதல்களாலும் சிதைவடைந்தது.

இதனால் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக நல்லதொரு புகலிடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயினர். இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியரின் படையெடுப்புகள் பார்ப்பனியத்தின் அடிப்படைகளைத் தகர்க்கத் தொடங்கின. ஆசீவகம், உலகாயதம், பௌத்தம் ஆகிய மனித நேயக் கோட்பாடுகளை வன்முறையில் சிதைத்தொழித்த பார்ப்பனியத்தை இஸ்லாமும் வன்முறையில் சந்தித்தது. அத்த்துடன் பார்ப்பனியம் கையாண்ட வஞ்சகத் தன்மைக்கு மாறாக இஸ்லாம் பின்பற்றிய சகோதரத்தன்மை – அனைவரையும் சமமாக நடத்திய சமத்துவம் – மக்களிடையே இஸ்லாத்துக்கு நல்லதொரு செல்வாக்கு ஏற்படவும் வழி வகுத்தது.

இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளான பார்ப்பனர்களின் முழுக்கவனமும் தென்னாட்டுப் பக்கம் திரும்பியது. தென்னாடு வந்த பார்ப்பனர்களுக்கு குப்தப் பேரரசு, பல்லவப் பேரரசு இவற்றை அடுத்து வந்த பிற்காலப் பாண்டிய சோழப் பேரரசுகள் ஆகிய அனைத்தும் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகத் திகழ்ந்தன. இவ்வாறு தென்னகம் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் சிதறிக் கிடந்தனர். அவர்களை, சிதறிக் கிடந்த பார்ப்பனியத்தை ஒரு கட்டுக்குள் ஒன்றிணைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.

இந்த ஆதிசங்கரர் மனுதர்மத்தை எழுதிய மனுவைவிட ‘சூத்திரனை’ இழிவுபடுத்தியவர் ஆவார். சூத்திரன் ஒருவன் வேதம் படித்துவிட்டால் அவனை நெஞ்சைப் பிளப்பது, நாவை அறுப்பது; வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியவர்தான் ஆதிசங்கரர் ஆவார். சங்கராச்சாரியார் இப்படி சூத்திரர்களைத் துன்புறுத்தி அடக்குவதற்கு எடுத்துக் கொண்ட சான்றுகள் குப்த அரசர்கள் காலத்திய ‘கௌதம சூத்திரம்’ முதலிய நூல்களில் இருக்கின்றன. அதாவது சமுத்திர குப்தனுடைய காலத்தில் (கி.பி. நான்காம் நூற்றாண்டில்) ஆரம்பித்து சங்கராச்சாரியாரின் காலம் (கி.பி. 9வது நூற்றாண்டின் ஆரம்பம்) வரைக்கும் நம்முடைய பார்ப்பன முன்னோர்கள் சூத்திரர்களை அமுக்கி வைத்துத் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாமல் முயன்று வந்தவர்கள் என்று தெரிகிறது.

0

இந்தியாவில் தொன்று தொட்டு சாதிக் கொடுமையும், சமயச் சண்டைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது அறிவுடையோர், சாதிக் கொடுமையையும், சமய ஊழல்களையும் ஒழிக்க வேண்டுமென்று சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைதீகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த வைதீகர்கள் சாதிக்கு ஆதாரமாகக் காட்டுவது மத நூல்களையே. மதநூல்களில் அந்தந்தக் காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களே சொல்லப்பட்டு இருந்தாலும் அதற்கு மிகுந்த சிறப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மத நூல்கள் யாவும் கடவுள் தன்மை பொருந்தியதாகவும், கடவுளும் அதன் அவதாரங்களாகிய கடவுள்களும் நேரில் வந்து உபதேசித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

வேதத்திலும், உபநிடதங்களிலும், இதிகாசங்களிலும், ஸ்மிருதிகளிலும், இன்னும் மற்ற மத நூல்களிலும் சாதியைப் பற்றி சொல்லி இருப்பதாலும், சாதி நாட்டில் தொன்று தொட்டே இருந்ததாலும், அதனை விடாது கைப்பற்றி ஒழுகல் வேண்டுமென்பது வைதீகக் கொள்கை.
ஆய்வாளர்கள் கண்டறிந்த விஷயங்கள் இவை. மிகப் பழைய நூலாக இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களிலும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. பிராமணன் என்னும் சொல் வேள்வி வேட்கும் முனிவனையும், பதிகங்கள் பாடும் புலவனையும் குறிக்கின்றனவே தவிர, பார்ப்பன வகுப்பினைக் குறிக்கவில்லை. ஏனைய மூன்று வகுப்பினரின் பெயர்களான சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களும்கூட அந்த ஒன்பது மண்டிலங்களிலும் காணப்படவில்லை. இதனால் அவை எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லோரும் ஒரே வகுப்பினராக இருந்தனர், நால்வேறு வகுப்பினராகப் பிரிந்திரிக்கவில்லை என்பது புலனாகும்.

இருக்கு வேதத்தின் (ரிக் வேதம்) பத்தாம் மண்டிலத்திலுள்ள புருஷ சூக்தம் நால்வகை மக்கள் பிரிவை உணர்த்துகிறது. ஆனால் அதிலும், இந்த நான்கு பிரிவினருக்குள் உயர்வு, தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் நால் வகைத் தொழில்களைச் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் வேறுபாடின்றி ஒருமித்து வாழ்ந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும், ரிக், யஜுர், சாமம் உள்ளிட்ட மூன்று வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களிலும் மக்கள் பாகுபாடு இல்லை என்று சொல்லலாம்.

சுக்கில யஜுர் வேதத்தின் முப்பதாம் இயலில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கள் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. சாதி வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும் பேசப்படவில்லை. வேத காலத்தில் சாதி வேற்றுமையின் பொருட்டு பூணூல் அணியும் வழக்கம் காணப்படவில்லை. அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்ததால், கடவுளைத் தொழிலில் புகுத்திருப்போர் தொழிலில் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போவதற்கு ஓர் அடையாளமாக அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இக்கால அளவுகளில் சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாயு புராணத்தில் கிருத யுகத்தில் சாதிகள் இல்லை என்றும் பிறகு தொழில்களுக்கு ஏற்ப மக்கள் நான்காகப் பிரிந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதீகர்கள் ஐந்தாம் வேதமாகக் கொண்டுள்ள மகாபாரதம் சாந்தி பருவத்தில் மேற்கூறிய நால்வகை சாதியாரில் ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியாரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலங்களில் உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர்.

0

இந்தியாவில், ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்களில் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவதில்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கிறது.

சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அனைவரும் இந்துக்களே என்னும் உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் சாதிய உணர்வுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்துக்களை ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முயலவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலர், நாட்டுப்பற்று காரணமாக இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக தங்கள் ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராகத் தங்கள் ‘சொந்த நலன்களை’க் காத்துக் கொள்வதே – பார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் – பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.

சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவும் உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களிடையே பொதுக் கருத்து ஏற்படுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இந்து மதத்தவன் ‘பொது மக்கள்’ என்று கருதுவது தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளனவாக இருக்கிறான்.

நல்ல இயல்புகளைச் சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதியினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?

சாதி என்ற அடித்தளத்தின்மீது எதையுமே உங்களால் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக்கக் கொண்டு நீங்கள் உருவாக்கும் எல்லாமே உருக்குலைந்து போகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சாதிகளும் உட்சாதிகளும்

tribalsபறையர்கள் / அத்தியாயம் 5

இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்த ‘அற நூல்கள்’ எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின.

இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு கால நிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. தன்னைத் தானே ஒரு சாதியாகவும் அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப்பெரியனவாகவும் மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமும் ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்து என்பது தத்துவார்த்த அளவில் தாராளத் தன்மையுடையதும், சமூகப் பழக்க அளவில் கெடுபிடியான கட்டுத் திட்டங்கள் கொண்டதுமான ஒரு மதமாகும். இதனால்தான் நாத்திகம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களையும் இது தனது தத்துவமாக உள்ளடக்கி அறிவிக்கும் அதே வேளை, சாதியக் கட்டமைப்பில் மட்டும் கறாரான கட்டுத் திட்டங்களைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. இதனாலேயே இந்துக்கள் தங்கள் இருப்பைச் சாதிய வடிவிலேயே வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த இந்துக்களும் உலகம் முழுக்க, இந்தியா முழுக்க வாழ்ந்தாலும் இவர்களும் மத அடிப்படையை வைத்து அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக தேசிய இனத்தை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வங்காளி, குஜராத்தி என்றே அறியப்படுகிறார்களே யொழிய பொதுவில் இந்துக்கள் என்று அல்ல.

இன்றைய சமூகத்தில் இந்து மற்றும் இந்துத்துவத் தாக்கமுள்ள எந்த ஒரு மக்கள் பிரிவும் சாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது. மனிதனின் சாதிய அடையாளமே மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. மனிதன் பிறந்து பெயர் வைக்கும் முன்பே ஏன் பிறக்கும் முன் கருவிலேயே மனிதனின் சாதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி அகமண முறையில் கெட்டித்தட்டிப் போயும், இறுக்கமடைந்தும் மாற்றமுடியாததாகவும், நிலவும் சாதியக் கட்டமைப்புக்குள் மனிதனுக்கு சுதந்தரம், சனநாயகம், சமத்துவம் எதுவும் இல்லை.

சாதி அமைப்பு என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுகளை கொண்டது. சாதாரண நோக்கில் பார்ப்பன சாதி, பார்ப்பனரால்லாத மேல்சாதி, பிறப்படுத்தப்பட்ட சாதி, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி இன்னும் அதற்குள்ளே நிலவும் உட்சாதி ஆகிய எந்த சாதியை எடுத்துக்கொண்டாலும் இந்த சாதிக்குள் சமத்துவம் இல்லை என்பதோடு இது படிநிலை வரிசையுடையதாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் இதுவே சமூகத்தில் அதன் இருப்பை தெளிவுப்படுத்துவதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளில் மிகக் கொடூர அல்லது மிக இழிந்த வடிவமே தீண்டாமை என்பது. என்றாலும் மேலே சொன்ன படிநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீண்டாமைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மேலே சொன்ன சாதிகளெல்லாம் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தொட்டால் தீட்டு என்னும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.

எனவே, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் மத்தியில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும், தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாருக்குமான படிநிலை ஏற்றத்தாழ்வையும் தீண்டாமைக் கொடுமையையும் ஒன்றாக்கி அதாவது சமப்படுத்திப் பார்த்துக் கொள்ள முடியாது. பார்த்துக்கொள்ளக் கூடாது.

சமுதாயத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வுகள் தோன்றும் முன்பே சாதி இருந்தது. அது இன்று நாம் காணும் சாதி என்னும் நோக்கில் அகமண முறையில் கட்டமைக்கப்பட்ட சாதியாக இல்லாமல் இந்திருக்கலாம். தொழில் ரீதியில் மற்றும் வேறுபல ரீதியில் பிரிவினையாக இருந்திருக்கலாம். இப்பிரிவினையே முதலில் தோன்றியது.

சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் உற்பத்தி உறவு என்கிற வகையில் புற நிலையாகவும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு வடிவம் என்கிற வகையில் அகநிலையாகவும் செயல்படுகிறது என்பது கிட்டத்தட்ட பெரும்பாலான சமூக ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இதிலும் உற்பத்தி என்பதை மனித உற்பத்தி, பொருள் உற்பத்தி என இரு வகையாகக் கொண்டு நோக்க, இவ்விரண்டிலுமே சாதியச் செயல்பாடுகள் நிலவுவது தெரியவரும். இங்கு மனித உற்பத்தி என்பது சொந்த சாதிகளின் வடிவில் அதாவது அகமண உறவில் நிகழ்கிறது. பொருள் உற்பத்தி என்பது பெருமளவும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் இன்னும் சில சாதிய அடிப்படையிலேயே நீடிக்கிறது. பொதுவான தொழில் கட்டமைப்பும் சாதி சார்ந்தே நிலவுகிறது.

வருணக் கோட்பாடு என்பது சாதியத்தை, தீண்டாமையை வலியுறுத்தும் ஒன்று. பார்ப்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்கிற படிநிலை வரிசையைக் கொண்டுள்ளது. இது பிறப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்கிற ஒரு கோட்பாடாகும்.

இப்படி இது கீழ் மேல் அடுக்கு வரிசைகளைக் கொண்டுள்ளதால் இப்படிநிலை வரிசையில் இடையில் உள்ள ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்களை எதிர்க்க விரும்பும் அதே வேளை, தங்களுக்கு கீழுள்ளவர்களைக் கண்டு நிறைவுற்று அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி அதிலேயே அகமகிழும் போக்கும் இருந்து வருகிறது.

0

சடங்கு புரோகிதர்களாக விளங்கிய பிராமணர்கள் ஒரு நாட்டின் அரசனைக் காட்டிலும் மேலானவர்களாக மாறிய நிலைதான் சாதியத்தின் அடித்தளம்.பொருளியியல் நிலையிலும் அரசியல் மேலாண்மையிலும் எஜமானர்களாகத் திகழ்ந்த அரசர்களின் ‘அதிகாரம் என்னும் தளமானது ஆன்மிகம், வேள்வி/யாகம், சடங்கு இவற்றைக் கொண்டு மன்னனுக்கும் – அரசனுக்கும் நாட்டுக்கும் மேன்மை ஏற்படுத்திய பிராமணர்களின் ‘சமூகத் தகுதி’ என்னும் தளத்தோடு கொண்ட உறவே சாதியத்தின் அடித்தளம் என்பார் துய்மோன் (1980:2).
‘சாதி என்பது குல – இனக்குழு அமைப்பின் எஞ்சிய வடிவங்களில் ஒன்று’ என்பார் கார்ல் மார்க்ஸ்.

‘சாதி என்பது ஒரு அமைப்பு முறை. இந்த அமைப்பில் ஆண் – பெண் எந்த குறிப்பிட்ட குழுவில் பிறந்தனரோ அந்தக் குழுவின் மூலமாகவே அவர்களுக்குச் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. சமூகப்படிவரிசையில் ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தொழில் – அல்லது தொழில்கள் உள்ளன. அக்குழுவுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்’ என்கிறார் கெய்ல் ஓம்வெட் (நூல்: வர்க்கம், சாதி, நிலம். பக்.60).

சாதி என்பதற்கு குலம், வருணம், இனம், ஓரினப்பொருளின் பொதுவாகிய தன்மை, திரள் என்றெல்லாம் தமிழ் லெக்சிகன் அகராதி (பக்.1367) பொருள் கூறுகிறது.

ஆறு பேரினமாக, ஒன்பது கிளையினமாக இருந்து பின்னர் நான்கு மொழியினமாக மாறிய இந்திய சமூகத்தில் சாதிகள் படிப்படியாக வளர்ந்து பெருகலாயின. பின்னர் மதங்கள் தோன்றின. குலக்குறி வழிபாடுகளால் பிரிந்து நின்ற மனிதன் மதங்களால் மேலும் பிரிந்தான்.
ஆரியர்கள் வருணாசிரம கோட்பாடுகளைப் புகுத்தினர். தொழில் அடிப்படையில் இருந்த சாதிகள் பிறப்பு அடிப்படைக்கு மாற்றப்பட்டன.

ஒரு சாதியில் பிறப்பதற்கு அந்த மனிதன் முற்பிறவியில் செய்த கர்மவினைகளே காரணம் என்றும், இழிவான நிலையில் பிறப்பதே – வாழுவதே இறைவன் ஒரு சில சாதிகளுக்கு இட்ட கட்டளை என்றும் போதனைகள் செய்யப்பட்டன.

ஆரியர் வருகைக்குப் பின்னர் தொழில் அடிப்படையில் தோன்றியதாகச் சொல்லப்பட்ட சாதிகளைப் பற்றி மண்டல் கமிஷன் அளிக்கும் புள்ளிவிவரம் இது. 3741 பிற்படுத்தப்பட்ட சாதியினரும், அவர்களுள் 2105 மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மற்றும் 1088 ஷெட்யூல்டு இனத்தவரும் 648 மலைவாழ் இனத்தவரும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 85% சூத்திர – தீண்டப்படாதவர்கள் என்றும், இங்குள்ள 11 கோடி முஸ்லிம்களில் 10 கோடி பேர் இந்துக்களாக இருந்து இஸ்லாத்துக்கு சென்றவர்களென்றும், அதில் பெரும்பாலோர் தீண்டப்படாத இனத்தவர் என்பதும் ஏற்கவேண்டிய உண்மையாகும்.

அக் காலத்திலே பல சாதிகள் இருந்ததை நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்தின்மூலம் அறிய முடிகிறது. சமயம், இலக்கியம், கல்வி என பல்வேறு கட்டுமானங்கள் இருந்தபோதும் சாதியை ஒழிக்க முடியவில்லை. சாதிப் பூசல்கள் மட்டுமின்றி சமய சண்டைகளும் நம் நாட்டில் இன்றுவரை நடந்துவருவது வேதனையானது.

‘இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம்’ 1985ல் இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் இனவரைவியல் மதிப்பாய்வினை ‘இந்தியாவின் மக்கள்’ என்னும் திட்டத்தில் வழியாகத் தொடங்கியது. இவ்வாய்வின்படி இந்தியாவில் இன்று 4635 சமூகங்கள் உள்லன. (சிங் 1992).
‘ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் காந்தியடிகள் தமது ‘அரிஜன்’ (16.11.1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ‘இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய வர்ணாசிரம விதி முறைகளுக்கு நேர் எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக் கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்களவு நாட்டுக்கு நல்லது’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு கட்டுரையில் காந்தியடிகள், ‘பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய சாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர் ஜாதி – கீழ் ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக இழிவை இழிவுபடுத்தி விட்டது’ என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார் (அரிசன் – 2.5.1936).

டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது ‘சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறானது. உட்சாதிகளை ஒழித்துவிடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்து விடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதற்கு மாறாக சாதி ஒழிப்பு, உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால் உட்சாதிகளை ஒழிப்பது சாதிகளை வலுப்படுத்தவே துணைபோகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்’ என்று குறிப்பிட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சாதியை ஒழிக்கமுடியவில்லை!

gandhiபறையர்கள் / அத்தியாயம் 6

சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.

‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ‘மக்கள் ஆட்சி முறை’ (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு ‘கண்ணாயிரம்’ என்று பெயரிடுவது போல் நடந்து வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை. சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.’ (குத்தூசி குருசாமி கட்டுரைகள்).

போர்முனைக்குச் சென்று உயிரைவிடத் தயாராயிருக்கும் இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று போரிட மறுக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலும் கூட, சுய சாதியை விட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.

சாதியின் வடிவம் எப்போதும் சமத்துவ உணர்வுக்கு எதிரானது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணிய உணர்வைக் காயப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் அது விடாது முயல்கிறது. சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும் மொழிப்பற்றையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மலிவான கட்சி அரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்துவிட்டதுதான் மிக மோசமான அவலம்.

‘என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி ‘தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார்.

‘இந்தியாவின் உயர்சாதி மக்களே உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.

‘சகல மனிதரும் சகோதரர், மனுஷ்ய வர்க்கம் ஆருயிர், இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி நான் வேறு சாதி; அவன் வேறு சாதி; எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. ஆவண சாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. இப்படியாக சாதி கூடவே கூடாது என்று கூப்பாடுப் போட்ட தேசிய, இலக்கிய, மதவாதிகளின் பேச்சை நாம் கேட்பதாகவே இல்லை.

அரசும் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கப் போராடித்தான் வருகிறது. 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது சமூகச் சீர்திருத்தத் துறை என்று தனித்துறையை உருவாக்கினார். கிறிஸ்துதாஸ் காந்தி தான் செயலாளர். அந்தத் துறையில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்தத் துறையை கலைத்தார். மறுபடியும் கடந்த முறை கருணாநிதி வந்ததும் அந்தத் துறையைக் கொண்டு வந்து கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்தார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மறுபடியும் இப்போது வந்த ஜெயலலிதா அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தற்போது சமூக சீர்திருத்தத் துறை திரும்பவும் செயல்படும் என்று சொல்லி ஓய்வு பெறப்போகும் கிறிஸ்துதாஸ் காந்தியையே செயலாளராக நியமித்து உள்ளார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் ஒரே ஒருவருக்குக்கூட நன்மை ஏற்படவில்லை. மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சாதி ஒழிப்புக் கொள்கை இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நாகர்கள் யார்?

nagasபறையர்கள் / அத்தியாயம் 7

நகர்: நகர்தல் = மெல்ல இடம் பெயர்தல், விரிவடைதல். நகர் = குடி பெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகமென்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம். மக்கள் பெருக்கத்தால் சிற்றூர்கள் பேரூர்களாவதும், பேரூர்கள் நகரங்களாவதும் இயல்பு. நகர்தல் என்பது பெயர்தல் அல்லது தள்ளுதல். மக்கள் நெருக்கம் பற்றி ஒரு மனையிலுள்ளார் நகர்ந்து புதுமனை புகுவதும், ஒரு தெருவிலுள்ளோர் நகர்ந்து புதுத்தெரு புகுவதும் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறு ஊர் ஒன்று சிறிது சிறிதாக நகர்ந்து நாளடைவில் நகராகிறது.

நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. ‘நகரகம்’ என்னும் சொல் ‘நகரிகம்’, ‘நாகரிகம்’ என மருவி வரும். நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரிலிருந்து வந்தது. நாகர்கள் என்பவர்கள் நாகநாடு என்னும் கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாகருடைய நாடு நாக நாடு.
நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் ஸ்நேக் என்பது இதே பொருள் பற்றியது.

நகர் என்ற சொல் மரபும் – நாகரிகம் என்ற சொல் மரபும் தரும் இந்த விளக்கம் கீழையுலகிலும், மேலையுலகிலும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளது. நாகரிகம், நகர் என்ற சொற்கள் தமிழருக்கேயுரிய தனித்தமிழ்ச் சொற்கள்.

நாகர் வடக்கே இமயம் வரையும், தெற்கே இலங்கை வரையும் கிழக்கே பர்மா முதலிய தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்தனர். அவர்கள் வகுத்த எழுத்து முறையே நாகரி – நகரி என்ற பெயரிலும் தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. வடதிசைச் சமஸ்கிருதமும், பிற வடதிசைத் தாய்மொழிகளும் எழுதப்படும் எழுத்து வடிவு இதுவே.

தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவி வட இந்தியாவில் நக்காரா (Naggharah) என்று கூறப்படுகிறது. ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒரு புறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. அதன் எடை 2.47 கிராம்.

குமரிக்கண்டம் இந்துமா கடலுள் மூழ்கியபிறகு தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு இருந்தது. அங்கே நாவல் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்ததால் அது நாவலந்தீவு (சம்புத்தீவு) என்று பெயர் பெற்றது. நாவலந்தீவின் பகுதியாக இருந்து காலப்போக்கில் கடலால் பிரிக்கப்பட்ட யாழ்குடாவுக்கு நாவலந்தீவு என்ற பழம் பெயர் நிலைத்திருந்ததாகத் தெரிகிறது. யாழ்குடா மிக ஆரம்பத்திலிருந்தே திராவிடக் கலாசாரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. யாழ் குடாவிலிருந்து திராவிடர்கள் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பரவலாயினர். இவ்வாறு தமிழர்கள் பரவி வாழ்ந்த பகுதிகளில் அன்று ஆதி குடிகளான நாகர்களும் பரவி வாழ்ந்துள்ளனர். அன்று ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த பகுதி (யாழ்குடாப்பகுதி) நாகதீபம் என அழைக்கப்பட்டது.

இலங்கையில் நாகர் குடிகளின் தோற்ற வளர்ச்சிகளை மகாவம்சத்தில் காணலாம். விஜயனும் தோழர்களும் (கி.மு. 483 அளவில்) இலங்கையை அடைந்த காலத்தில் எஞ்சிய இலங்காபுரி இயக்கர் ஆட்சியிலிருந்தது என்பதனை மகாவமிசம் குறிப்பிடுகின்ற குவேனியின் கதையிலிருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் ஆதியில் வாழ்ந்த இயக்கர், நாகர் என்பார் மனித வர்க்கத்தினரைச் சேர்ந்தவரல்லர் என்ற கருத்துப் பொதுவாக வரலாற்றாசிரிடையே நிலவி வந்துள்ளது. எனினும், இலங்கையின் வரலாற்றை ஆரம்பித்த சுதேசக் குடிமக்கள் இந்த இரு இனத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களும் சிறப்பாக இயக்கர் என்பார். இலங்கையின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற கருத்தைக் கல்வெட்டு ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தன் (கி.பி. 956 – 972) கல்வெட்டொன்று அர்ஹத் மகிந்தரால் வெல்லப்பட்டு வேலைக்கு அர்த்தப்பட்ட இயக்கர்களால் காவல் செய்யப்பட்ட திசவாபி பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் கர்மவிபங்க எனும் சமஸ்கிருதப் பௌத்த நூலும் இயக்கர்களை அர்ஹர் மகிந்தர் வென்றார் எனக் குறிப்பிடுகின்றது. சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறும் (71:14) இயக்கன் என்ற சொல்லை ஆட்பெயராக, மக்கள் பெயராகக் குறிப்பிடுகின்றது.

நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணிய மக்கள். புத்தருடைய காலத்தில் நாகர்கள் பௌத்தத்தைத் தழுவினர். மேலும் நாகர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையின் வடபாகத்தில் மட்டுமின்றி வடமேற்குப் பகுதியில் களனியாவரை பரவி வாழ்ந்தனர். விஜயனுடைய காலத்தில் பின்னரே இந்நாகர்கள் கிழக்குப் பகுதி வழியாக பரவலாயினர்.
முதலில் நாகர்கள் இலங்கையின் மேற்கு, வடமேற்கு, வடக்குப் பகுதிகளில் வாழ்ந்து பின் கிழக்குக் கரையூடாகத் தென்னிலங்கை வரை பரவினர் என்பதற்கு மகாவம்சம் மட்டுமின்றி டாலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. டாலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெளிவாகின்றது.

எச்.டி.சில்வா, நாகதீபம் என்பது வடபிரிவினைக் குறிக்கும் என்று கூறுகிறார். காசி செட்டி என்பவர் யாழ்குடாவே நாகதீபம் எனக் கூறுகிறார். ஹெச்.பாக்கர் என்பவர் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், சிறப்பாக வடபகுதியிலும் நாகர்கள் வாழ்ந்தனர் என்றும் ஆனால் வடபகுதியே வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நாகதீபம் என அழைக்கப்பட்டு வந்ததெனவும் கூறுவார். மேலும் அவர், புத்தரால் நாகர்கள் மதமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பற்றிய குறிப்புகள் தெளிவாக வரலாற்று நூல்களில் இல்லையெனவும், நாகதீபம் என்ற பெயரே இங்கு ஒரு காலத்தில் நாகர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதக்கூடிய சான்றாக அமைகின்றது என்றும் குறிப்பிடுகிறார். நாக வழிபாட்டையுடைய நாகர் குடிகள் ஆரம்பகாலத்தில் திருகோணமலைப் பகுதியில் வாழ்ந்திருப்பார்கள் என்பதை வற்புறுத்துவதோடு, நாகத்தீவு எனப்பட்டது இலங்கையின் வடபகுதி (கிழக்கு, மேற்குப் பகுதி உட்பட) முழுவதையும் உள்ளடக்கியிருந்ததென்றும் அதன் தென்னெல்லையை நிச்சயித்துக் கொள்வது முடியாது என்றும் செ.குணசிங்கம் கூறுகிறார்.

நாகர்கள் பௌத்தத்தைத் தழுவ காலப்போக்கில் அதன் தாக்கம் யாழ்குடா முழுவதும் ஏற்பட்டது. இந்நிலையில் நாகர் கலாசாரமும், தமிழ்க் கலாசாரமும் ஒன்றோடொன்று கல்ந்துவிடுகின்ற நிலையையும் நாம் அவதானிக்கலாம். பழந்தமிழர்களும் பௌத்தத்தைத் தழுவுகின்ற நிலை ஏற்படுகின்றது. விஜயன் காலத்துக்குப் பின்னர் தமிழ்க் கலாசாரத்துடன் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் கலந்துவிட்ட நாகர்கள் அரசியல், வர்த்தக முயற்சிகள் காரணமாக மத்திய இலங்கை ஊடாக ஊடுருவிக்கொண்டு, கிழக்குக் கரையாகத் திஸ்ஸமகாராம வரை பரவி வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது. அன்று நாகர்களும், பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே, இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பிரதேசங்களாகக் காணப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வரலாற்றில் நாகர்கள்

Naga182பறையர்கள் / அத்தியாயம் 8

வட இந்தியாவில் ஆரியர் வருகை பல கட்டங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக நாகர்கள் வடமாநிலங்களிலிருந்து தென்னோக்கிப் பரவத் தொடங்கினர். இதனால் இமயம் முதல் காஷ்மிர், தச்சிலா, கங்கைச் சமவெளிப் பிரதேசங்கள், பனாரஸ், பிகார், மேற்கிந்தியா, தென்னிந்தியா, இலங்கை வரை இவர்கள் நகர்ந்தனர். இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் பரவிய நாகர்கள் பெரும் ராஜ்ஜியங்களை ஆண்டவர்கள்.

டாலமியின் காலம் வரை (கி.பி.150) சோழ ராஜ்ஜியமும், காஞ்சியை ஒட்டிய பகுதிகளும் நாக குலத்தோரால் ஆளப்பட்டு வந்தன என்கிறார் சர்க்கார் என்பவர். சோழ, பாண்டிய நாடுகளில் நாகரின் செல்வாக்கை வெளிப்படுத்தும் நகரங்களான ‘உரகபுரம்’ என்றழைக்கப்பட்ட நகரங்கள் இருந்ததையும் இவர்கள் ஆதித்தமிழ்க் குடிகளுடன் இப்பகுதிகளில் கூடி வாழ்ந்தனர் என்பதையும் இவர் வலியுறுத்துகிறார்.

ஆதி சோழர்களுள் ஒருவரான முசுகுந்த சோழன் நாகர்களை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்தியபின் தமிழகத்தில் நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. எனினும் காலப்போக்கில் சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார். மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழர் குடிகளே என்பார் கனகசபைப்பிள்ளை.

தமிழகத்து நாகர்களின் வரலாற்றின்படி, இவர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர். இதன் பின்னரே தமிழகத்தில், நாக அரசுகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் பரவலாகக் கிடைக்கின்றன. அப்போது முதல் நாகர்கள் தமிழ்க் கலாசாரத்தைத் தமதாகத் தழுவிப் பேணித் தமிழரசுகளை அங்கீகரித்துக்கொண்டனர் எனத் தெரிகின்றது. அதனால் நாகர் வழிபாடுகள் சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. நாகர் குடிவந்த தமிழ்ப்புலவர் பலர் சங்க இலக்கியப் பாடல்களை இயற்றியவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் இலங்கை நாகர்களும், தென்னிந்திய அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

0

நாகநாடு என்பது இலங்கைத் தீவின் வடபகுதிக்குப் பண்டைக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர். மகாவம்சத்தில் இந்தப் பகுதி நாகதீபம் எனறே கூறப்படுகிறது. நாகதீபம் என்பது தீவு அல்ல. மணிமேகலை நாக நாடு என்று கூறும் இலங்கையின் வட பகுதியைத்தான் மகாவம்சம் நாகதீபம் என்கிறது. நாகநாடு என்றும், நாகத்தீவு என்றும் ஏன் பெயர் பெற்றது என்றால், இங்கு நாகர் என்னும் இனத்தவர் அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். தமிழ்நாட்டிலும் நாகர் இனத்தினர் இருந்தனர் என்பதனைச் சங்க நூல்களால் அறிகிறோம். ‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை.

நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள்.

கி.மு. 13ம் நூற்றாண்டு வாக்கில் கங்கைக்கும், யமுனைக்கும் இடையே உள்ள பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிறோம். திங்கள் மரபைச் சேர்ந்த ஆரியர்கள் தற்போது தில்லி இருக்குமிடத்தில் புதியதொரு துணைத்தலைநகரை அமைக்க விரும்பியபோது, அவ்விடத்தில் தங்கி வாழ்ந்த நாகர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
அர்ஜுனன் நாடு கடந்து வாழ்ந்த காலத்தில் முதலில் உலிபி என்ற நாக இளவரசியையும், அதன்பின் மணிபுரத்தை ஆண்ட நாக அரசன் சித்திரவாகனன் புதல்வியாகிய சித்திராங்கதையையும் மணம் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி.மு 6ம் நூற்றாண்டில் காண்கிறோம். அப்போது ஒரு நாக மரபினர் மகதத்தை ஆண்டனர். இம்மரபைச் சார்ந்த ஆளும் மன்னனாகிய அஜாத சத்துருவின் ஆட்சியிலேயே கௌதமபுத்தர் தம் புதிய கோட்பாட்டை வகுத்துரைத்தார். அது நாகர்களின் பேராதரவைப் பெற்றது.

இலங்கை வரலாற்று நூல்கள் யாவுமே நாகர்களைப் பற்றிய செய்திகளுடன் தொடங்குகின்றன. இவற்றிலிருந்து கி.மு. 6ம் நூற்றாண்டில் தீவின் மேற்குக் கரையில் வல்லமை வாய்ந்த நாக அரசுகள் நிலவின என்றும், அந்தக் காரணத்தால் தீவு ‘நாகத்தீவு’ என்று அழைக்கப்பட்டதென்றும் அறிகிறோம்.

1800 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பண்டைய அமராவதிச் சிற்பங்களிலும் அதுபோன்ற பிற இடங்களிலும் தலைக்குமேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன. இவை நாகர் உருவங்களே. இந்தச் சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச் சின்னமாகப் பின்புறம் ஐந்து தலை அல்லது எழு தலை நாகம் உள்ளது. நாக இளவரசியருக்கு இதுபோல முத்தலை நாகங்கள் உள்ளன.

ஆற்று வெளியிலேயே மனித நாகரிகம் முழுவளர்ச்சியடைந்தது. வேளாண்மை தலைத் தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர் எனப்பட்டனர். இந்த வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர், உழவர் ஆகிய மூல வகுப்புகளும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய கிளை வகுப்புக்களும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை மன்னரும் ஏற்பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டையும் அதைச் சார்ந்த சிற்றூர்களும் மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு நாடு ஆயின. இந்தத் தொடக்கக்கால நாட்டை மேனாட்டு வரலாற்று நூலாசிரியர் ‘நகர் நாடு’ என்பர். தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது.

நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி மணிமேகலை, நாகத்தை வழிபட்டும், நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.

நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், தலைசிறந்த பண்பாட்டு மக்களென மணிமேகலை கூறுகிறது. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன வழியினரேயாவர்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.

இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மைய, தென் இந்தியப் பகுதிகளிலும் நாம் நாகர்களைக் காண்கிறோம். குறிஞ்சிப் பகுதியில் குகைவாசிகளிடம் நாக வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். நாக வழிபாடு முருக வழிபாட்டுடன் இணைக்கப்பட்டுப் பின்னர் முருகனும் ஆரிய சுப்ரஹ்மண்யனுடன் இணைந்தான். இன்றும் தன்னை வழிபடுவோர் முன் சுப்பிரமணியன் பாம்பாகத்தான் உருக்கொண்டு வருகின்றான்; பாம்பு கண்ணில் பட்டால் வேண்டுதலை முருகன் ஏற்றுக்கொண்டான் எனக்கொள்கின்றனர். நாக வழிபாட்டிலிருந்து சிவன், தான் அணியும் பாம்புகளைப் பெற்றான்.

நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள்.
கடித்தவுடன் கொல்லும் பாம்பு (நாகம்) உலகெங்கும் கடவுளாக வழிபடப்பட்டது. சிவன், விஷ்ணு வழிபாடுகள் உருவான பின்னரும் நாக வழிபாட்டினராகவே இருந்தவர் நாகர் என்று அழைக்கப்பட்டனர்.

நாகர் அரசுகளைவிடப் பழமை வாய்ந்த அரசுகள் எதுவும் இருந்ததில்லை என்று தோன்றுகிறது. காவிரிப்பட்டிணமும் நாகர்களின் பழைய வாழ்விடமாக இருந்தது என்று சொல்கிறார்கள்.

கி.பி. 150ல் டாலமி தனது நூலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆய நாட்டவர், கரையர், பாண்டியர், சோழர், பதோய் (பரதர்), அருவாளர், பசர் நாகர் போன்ற இனக்குழு மக்கள் பெயர்களையே குறிப்பிடுகிறார். இதில் பசர் நாகர் என்பது நாக இனத்தைக் குறிக்கிறது.
நாகர்களில் அயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய பல கிளையினர் இருந்தனர். இவர்களில் மறவரே மிக வல்லமை வாய்ந்தவராகவும், போர்த் திறன் மிக்கவராகவும் இருந்தனர். தமிழருக்குப் பெரும் பகைவராக விளங்கியவர்களும் இவர்களே. நாலைகிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணியாற்றினான்.

நாக மரபினரிடையே எயினர் அல்லது வேடர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்க கொள்ளையும் கொலையுமே தொழிலாக இருந்தது. அவர்கள் அச்சம் தரும் காளியை வணங்கினர். தம் கொள்ளையில் துணையைப் பெற அவர்கள் காளி கோயில்களில் எருமைகளைப் பலியிட்டனர். சூறையாடுவதற்குப் புறப்படும் முன், அவர்கள் புட்குறிகளும் பறவைகளும் ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும் பற்றிய அறிவுரை கேட்டனர். அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள் பண்புக்கேற்றபடி கள்ளர் அல்லது கள்வர் என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர்.

நாகரின் இன்னொரு மரபினர் ஒளியர். இவர்கள் கரிகால் சோழனால் வென்றடக்கப்பட்டனர் என்று தெரிகிறது. மாமல்லபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டில் அவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டுவரை கூட வலிமையுடன் இருந்தனர் என்று அறிகிறோம். ஒளி நாகரல்லாமலும், நாகரினத்திலேயே சங்க நாகர், முகுளிநாகர் ஆகிய பிரிவினர் 11ம் நூற்றாண்டில் இருந்தனர் என்று தெரியவருகிறது.

அருவாளர் என்பவர்கள் அருவாநாடு, அருவா வடதலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாகரின் இடச்சார்பான பெயர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும், ஏனைத் தமிழரசர் வலிமையும் தாற்காலிகமாகச் சிலகாலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஓவியர் எயிற்பட்டினத்தில் ஆண்டதுடன் மாவிலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர்.

மேலங்கியின் அரசர் என்று டாலமியால் குறிப்பிடப்பட்ட பஸர்நாகர் பெரும்பாலும் இந்த ஓவியராகவே இருக்க வேண்டும்.

டாலமி கூற்றிலிருந்து சோழர் தலைநகராகிய உறையூரிலும், சோழர் குடிக்கும் நாகர் குடிக்கும் ஏற்பட்ட இனக்கலப்பின் மரபில் வந்த சோரநாகரே சோழர்களை அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டுமென்று கருத இடமேற்படுகிறது.

இதே காலத்தில் இலங்கையிலும் நாகர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றியிருந்தனர் என்று கருதவேண்டியிருக்கிறது.

பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவு கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வரலாற்றில் நாகர்கள் – II

nagasபறையர்கள் / அத்தியாயம் 9

தமிழர் அன்று பெரும் பிரிவு. அவர்கள் அனைவரும் தமிழே பேசினர். ஆனால் அதனுள் ஒரு சிறு பிரிவு தமிழினம் எனப்பட்டது. தமிழ்ப்பண்பு முழுவதும் தழுவிய மரபினரே தமிழினத்தவர் எனப்பட்டனர். திரையர், குறும்பர், நாகர், கந்தருவர் முதலியோர் தமிழராக, தமிழ்மொழி பேசுபவராக இருந்தனர். ஆனால் அவர்கள் தமிழினத்தவராகக் கருதப்படவில்லை.

தென்னகத்திலும் வெளியிலும், ஊர்ப்பெயர், குடிப்பெயர், தெய்வப்பெயர் ஆகியவற்றில் இன்றும் பெருவாரியாக ‘நாகர்’ என்ற சொல் காணப்படுகிறது. பழங்காலத்தில் இவ்வழக்கு இன்னும் மலிந்திருந்தது.

பண்டைய தமிழினத்தவராகிய தமிழருக்கும், தமிழே பேசிய நாகர் முதலியோருக்கும் தமிழ்மொழி பொதுவாக இருந்தது. இரு சாரார் நாகரிகத்திலும், பண்பாட்டிலும், பண்பிலும் பொதுக்கூறுகள் மிகப் பலவாயிருந்தன. ஆயினும் தமிழ்ப்பண்பு அவற்றில் ஓர் அடிப்படை வேறுபாடு கண்டது. தமிழர் இயல், கலைத் திறன்களைப் பயன்படுத்தினர். நாகர், திரையர், கந்தருவர் முதலியோர் நாகரிகத்தின் புறப்பண்பு அதாவது தனிமனித வாய்ப்பு, சமுதாய வாய்ப்பு ஆகியவற்றையே நாடினர்.

தமிழர் ஆடையணிகலன்களை அழகுக்காக மட்டுமின்றி இன்பத்துக்காக மட்டுமின்றி மானம் மறைக்கவும் பயன்படுத்தினர். நாகர் முதலியோர் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தினர். ஆடையில்லாமல் ஆடவும், பாடவும் அவர்கள் தயங்கவில்லை. சைவ, சமண சமயங்களில் இந்நாகரிகத்தின் தடயங்களைக் காணலாம். சென்னையை அடுத்த பெரிய நாயகியம்மன் கோயில் வழிபாட்டு முறையிலும், வங்கம், குஜராத் பகுதிகளிலும், தென்கிழக்காசியாவிலும் நடைபெறும் சமய மரபுகளிலும் இதன் பாதிப்பு உள்ளது.

இன்றைய தமிழகத்துக்கு வெளியில் உள்ள தமிழினத்தவராகிய நாகர்களே சில இடங்களில் ஆரியரை எதிர்த்துத் தனி வாழ்வு வாழ்ந்தும் சில இடங்களில் ஆரியரைத் தம் வயப்படுத்தித் தாமே ஆரியராகி அவர்களுக்குத் தலைமை தாங்கியும் இன்னும் சில இடங்களில் அடிமைப்பட்டும் தமக்குள் வேற்றுமைப்பட்டனர். தமிழரைப் போலவே அவர்களைப் பண்பாடு மூலம் ஒன்றுபடுத்த முயன்ற நாக இனப் பெரியோர்களே புத்தரும், மகாவீரரும் என்கிறார் கா.அப்பாத்துரை.தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால் தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர்.

சங்க காலத் தமிழகத்தில் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தனர். தமிழ்நாட்டு இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே. அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபு சார்ந்தது என்று அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்தநெறி வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா, சீனாவிலும் பரவியதற்கு இந்த இடங்களில் உள்ள மக்கள் பெரும்பகுதியினர் நாகமரபினராக இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

நாகசுரம் என்னும் இசைக்கருவி மிகப் பிற்காலத்தில் தோன்றியது. இது மரத்தினாலும், வெண்கலம் முதலிய உலோகத்தினாலும் செய்யப்பட்ட துளைக் கருவி. கி.பி. 17ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரத சங்கிரம் என்னும் நூலில் இது கூறப்படுகிறது. ஆரியர் முதன் முதலாக வாய்ப்பாட்டும், நரப்புக் கருவியும் பயின்று தோற்கருவியும் பயின்றனர். ஆயினும் ‘நாகசுரம்’ என்னும் துளைக்கருவியும் ‘தவல்’ போன்ற தோற்கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படுவதால்.

ஆரியப் பிராமணர் இசைப்பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ம் அத்தியாயம், 15ம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது…. இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஊருக்கு வெளியே போய்க்குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் இருந்த நாகர் என்னும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களால் இக்கருவி உண்டாக்கப்பட்டது என்றும், அதனால் இதற்கு நாகசுரம் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகிறார்கள். இதற்கு பக்க வாத்தியமாக அமைவது தவுல் என்னும் தோற்கருவி. இதுவும் புதிதாக உண்டானதே.

சங்க காலத்தில் இசை வகுத்த பாணர், நாகர் குலத்தினரே. எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்ற பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவும்.

குஷானர்கள் வடமேற்கு இந்தியாவில் நிறுவிய பேரரசின் விளைவாக இரு ஷத்ரப அரசுகள் நிலைப்பெற்றன. இவற்றில் ஒன்று பூமகர் குலம் என்றும், மற்றொன்று மேலை ஷத்ரபர் (சஷ்டனர்) குலம் என்றும் பெயர். (சஷத்ரபவன் என்னும் பாரசீகச் சொல் ‘சஷத்ரபர்’ என்று வடமொழியில் மருவிற்று). தொடக்க கால சஷத்ரபர்களில் நாகபாணர், பூமகர் என்பவர்கள் புகழ் பெற்றவர்கள்.

நாகபாணரின் கல்வெட்டுக்கள் நாசிக், ஜுன்னார் முதலிய இடங்களில் காணப்பெறுகின்றன. நாசிக் நாகபாணரது தலைநகராக இருந்தது. அவரை மகாசஷ்த்ரபர் என்றும் குறிப்பர். நாகபாணர் கி.பி. 104வரை ஆண்டார். அஜ்மீரிலிருந்து புனா வரை பரவிய அவர் ஆட்சியில் கத்தியவாரும், மாளவமும் கூட அடங்கின.

சங்க காலத்தில் இசை வகுத்த பாணர், பண்டைக் காலத்தில் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாக இருந்த நாக குலத்தினரே.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டியில் நாகர்கோயில் அமைந்துள்ளது. திறந்த வெளியில் அமைந்துள்ள இக்கோயிலில் கற்சிலைகள் உள்ளன.

0

அடுத்து பாணர்களைப் பார்ப்போம். தமிழில் நாகர் என்னும் பிரிவினர் பண்டைக் காலத்தில் இருந்தார்கள். அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாயிருந்தனர். இசை வகுத்த பாணர் நாகர் குலத்தினரே. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழமையானதென்பது தொல்காப்பியத்தால் அறியப்படும்.
பாண் என்பது பாட்டு. பண், பாண், பாடு, பா என்பவை ஓரினச் சொற்கள். சீவக சிந்தாமணியில் பாணியாழ் (1500), பாண் வலை (2040), பாணுவண்டு (2447), என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் (ப.349) பாண்-பாட்டு என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

பாட்டுக்கு கூத்து துணைத் தொழில் என்பதால் பாணர் கூத்தும் ஆடி வந்தனர். வயிரியர், செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற் பெயரும் கூத்துப் பற்றியவை. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்கு உரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும் நுண்வினைக்கூத்து.

பாணர்க்கு உரியது பெரும்பாலும் இசைத்தொழில் என்பதால் பல்வகைப் பறைகளுக்கும் (அல்லது மேளங்களுக்கும்) தோல் கட்டுதல் அவன் தொழில்.

ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். பாணர்கள் மீன்களைப் பிடித்து விற்று வாழத் தொடங்கியபோது நிலையாக மருதநிலை ஊர்களில் தங்கிக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அப்போது அவர்களை ‘வலையர்’ என்று சங்க இலக்கியம் குறிப்பிட்டது. சங்க கால இலக்கியங்கள் மீன் பிடித்து வாழ்ந்தவர்களைப் பரதவர் என்றும், பாணர் என்றும், வலைஞர் என்றும் பிரித்துக் காட்டியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பாணர்கள்

harpsபறையர்கள் / அத்தியாயம் 10

பாணர்கள், முத்தமிழும் இசை நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பதாலும் இசையில் தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும் அவர்களுக்கு அரசர் அவைக் களங்களிலும் தடையில்லாத நுழைவு கிடைத்தது. பரிசுகளும் மரியாதைகளும் கிடைத்தன.
அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது. பாணர் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனர் என்றாலும் பொதுவாக வறுமையால் வருந்தினார்கள். வள்ளல்களைத் தேடி மலை, காடு என்று திரிந்தனர் என்கிறது தொல்காப்பியம்.

ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ், பண் இவற்றைக் ‘கருப்பொருள்’ என வகைப்படுத்துவர். மக்கள் வாழ்வியலுக்கு ஏற்பவும், நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு ஏற்பவுமே உற்பத்தி உறவுகள் அமையும். ஆதலால் உணவுப்பொருளும் நிலத்துக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படும். இவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று பறை பற்றியது. மற்றொன்று யாழ் பற்றியது. பண்ணுக்குரிய கருவிகளை எல்லாம் யாழ் என்பதில் அடக்குகின்றனர்.

குறிஞ்சி யாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல் யாழ், பாலையாழ் என்று ஐவகை யாழின் அமைப்புக்கு ஏற்ப பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழரின் வாழ்வோடு இணைந்து வளர்ந்த இசையின் வளர்ச்சியில் இப்பாணர்களின் வளர்ச்சியும் அமைந்திருந்தது. இந்த வாணர்கள் பறைகளை முழக்கி, போர்க்களத்திலும், ஏர்க்களத்திலும் பாடியதுடன் அரசுச் செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதிலும் பெரும் பங்காற்றினர்.

அரசர் உறங்கச் செல்லும் போதும், துயில் எழும்போதும் அந்தந்த நேரத்துக்குரிய பண்களை யாழில் மீட்டுவது பாணர்களின் பணி.

பறை வகைகளில் ஒன்றான இணைப்பறை, பாணர்கள் இசைத்து வந்த ஒரு கண்பறை யாகும். பாணர்கள் இசைப்பாடலுக்குக் கிணையை முழக்கினார்கள். காலையில் வள்ளல்களைத் துயில் எழுப்பிக் கிணையை இசைத்துப் பாடினார்கள். கிணையை இசைத்துக் குறிஞ்சி நிலத்தைப் பாடினார்கள். உழவினையும், எருதுகளையும் போற்றி யாழிலிட்டு இசைத்துக் கிணையைக் கொட்டி நாள்தோறும் பாட விரும்பினர். புறநானூற்றில் இடம் பெறும் செய்திகள் இவை.

பாணர் குலத்துப் பெண்கள் கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார் போன்ற சாதாரண குடும்பப் பெண்கள் புலமையினால் புகழ் பெற்றிருந்தனர்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலே இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தாழ்ந்த நிலையை அடைந்து தீண்டப்படாதவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கி.பி. 7,8,9ம் நூற்றாண்டுகளில் சிறப்பு பெற்றிருந்த இசைப்பாணர் மரபு கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு அருகிவிட்டது.

பண்டைக் காலத்தில் பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும் அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளில் தொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரிய வர்ணாசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதும்தான். பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராக அரசரிடமும் பெருமக்களிடமும் அண்டமுடியாது போனது. இந்த இழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

தமிழின் பெருமைக்கும், சிறப்புக்கும் அடிப்படையாக அமைந்தது தமிழ் இசையாகும். அத்தமிழ் இசையை வளர்த்தவர்களும் பரப்பியவர்களும் பாணர்கள். இந்தப் பாணர்கள் பெற்றிருந்த சமூக மதிப்பு மிகவும் உயர்ந்தது. இது சங்க கால நிலை. ஆனால் பக்தி இயக்கக் காலத்தில் தீண்டத்தகாத சாதியினராக இவர்கள் தள்ளப்பட்டனர்.

இலக்கிய வளர்ச்சியில் உரைநடை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பாட்டு (செய்யுள்) தோன்றியதென்பது உறுதி. பண், பாண், பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுதுபோக்கு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பாணர் முதலில் சாதாரணமான பாடுநராக இருந்தனர். முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களுமாக உயர்வடைந்த அவர்கள், தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப்பட்டனர்.

தூய தமிழ்ப்பண்பாடு தொடங்கிய நீண்ட நெடுங்காலத்தில் பாணர், அரசன் நண்பர்களாகவும், அறிவுரை கூறுநராகவும் இருந்தனர். பிற்காலத்தில் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியப் பண்பாடு தென்னிந்தியப் பண்பாட்டுடன் கலந்த பின்னர், அதாவது வரலாற்றுக் காலத்தில் (கி.மு. 500க்குப் பின்) பாணர், தென்னிந்தியாவில் மிகத் தாழ்த்தப்பட்ட தீண்டாத சாதியாக சமூகத்தில் தாழ்நிலை அடைந்தனர்.

ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தனது ‘பழந்தமிழ்ச் செய்யுள்கள் அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சமஸ்கிருதப் படைப்புகளும் (1975)’ என்ற நூலில் எழுதுகிறார். ‘பாணர் தமிழரிடையே தொன்று தொட்டு இருந்து வருபவர். சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர். எனவே பண் அடிப்படையில் தென்னிந்திய தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. ‘பண்’ என்னும் சொல்லிலிருந்து ‘பாணன்’ என்னும் சொல் தோன்றியது. மாறாக பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களே) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங்கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர்களிடையே உருவாகி கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி மகாராஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இந்த இலக்கியத்தின் தாக்கம் சமஸ்கிருதக் கவிஞர்களிடம் ஏற்பட்டதன் காரணத்தால்தான் தரமான காவியச் செய்யுள் இலக்கியம் தோன்றியது. தென் இந்திய சாதியினரில் தாழ்நிலையில் இருந்த பாணரிடையே இருந்துதான் இந்தியாவின் இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின.’

சங்க காலத்திலேயே இசை, நடனம், ஓவியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. இன்றைய இந்திய இசை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே. இசையறிவை ஆரியரல்லாதவர்களிடம் ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர்.

இன்று கர்நாடக இசை எனப் பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. முகமதியர் 1565க்குப் பின்னர் தென்னாட்டில் புகுந்தபோது (விஜய நகர அரசர் காலத்தில்) கர்நாடக மன்னர் தலைமை வகித்ததாலும், தமிழ் நாட்டிலும் கர்நாடக மன்னர் தலைமை இருந்ததாலும் ‘கர்நாடகச் சங்கீதம்’ என்று அழைத்தனர்.

சீர் – சீரை – சீர்மை; சீரன் – கீரன்; சீர்த்தி-கீர்த்தனை; ஆக தமிழ்ச் சிந்தனை கீர்த்தனையாகியது. இக்கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்தில் உருவானதே.

இசையொரு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்ககாலத்திலேயே சிறந்து விளங்கின. சிலப்பதிகாரத்தில் இந்தக் கலைகளின் உச்சநிலையைக் காணலாம். அடியார்க்கு நல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது.

தமிழ் ஆடல் கலை 1925 வரை சின்னமேளம்/சதிக்கச் சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரத நாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை ‘பரதர்’ பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக்கூறுவது பிதற்றல் என்பதை பாவேந்தர் பாரதிதாசன் தம் நூல்கள் பலவற்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 யாழும் பறையும்

harp-hands-tonedபறையர்கள் / அத்தியாயம் 11

வில் வடிவமான யாழை, ‘வீணை’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் தமிழ் நாட்டில் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணர் என்பது பெயர். இவர்கள் பண்டைக் காலத்தில் சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள்.
பாணர்கள் தமது கலை நிகழ்ச்சிகளில் யாழ், குழல், முடிவு, பதலை ஆகிய இசைக்கருவிகளை வாசித்து வந்தார்கள். பாணர் இசைக்கலை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு போவதை நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.

பாணர்கள் தங்கள் இசைக்கருவிகளைக் காவடிகளில், இரண்டு புறத்திலும் தொங்கவிட்டுள்ள கூடைகளில் வைத்து தோள்மீது சுமந்து கொண்டு போனார்கள் என்கிறார் ஔவையார்.
ஓரி என்னும் வள்ளலின் சபையில் ஒரு பாணன் தன்னுடைய குழுவினருடன் சென்று இசைப்பாட்டுப் பாடத் தொடங்கினான். அப்போது அவன் விறலியைத் தன்னுடன் சேர்ந்து பாடும்படியும் மற்றவர்களை இசைக் கருவிகளை வாசிக்கும்படியும் கூறினான் என்று வன்பரணர் என்னும் புலவர் கூறுகின்றார்.

‘யாழ்’ என்பது மிகப் பழமையான இசைக்கருவி. உலகத்திலேயே பல நாடுகளில் ஆதிகாலத்தில் வழங்கி வந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும் பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால் மிகச் சிறந்த இசைக்கருவியாகப் போற்றப்பட்டது. மிகப் பழைய காலத்தில், உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ்.

வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

வில்லில் நாணைப் பூட்டி, அதில் அம்பைத் தொடுத்து, நாணைப் பலமாக இழுத்து, அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியால் ஒரு வித ஓசை உண்டானது. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம் போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக ‘வில்யாழ்’ என்னும் இசைக்கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க்கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறியது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது. சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசைப்பாடுவதிலும் புகழ்பெற்றிருந்தார்கள்.

உருவ அமைப்பிலும் யாழ் வில் போன்றது. வில் வடிவமான யாழை, வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கி வந்தது. பிறகு கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ் மறைந்து வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது.

யாழும் இசையும் பெற்றிருந்த இடத்தைப் பார்ப்பனர்களின் ‘வேதம்’ கைப்பற்றியபோது பாணர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம் இடத்தை இழந்தனர். இறுதியில் சமூகத்தின் கடைகோடிக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் பாணர்களின் யாழும் இசையும், கூத்தர்களின் கூத்தும் பாட்டும், விறலியரின் ஆடலும் பாடலும் ஆகிய அனைத்தும் தத்தம் தனித்தன்மையை இழந்து கணிகையரிடம் தஞ்சம் அடைந்தன.

ஊக்குவிப்பவர்கள் இல்லாததால் பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் கைவிட்டனர். அதனால் இசைத்தமிழ் அழிந்ததுடன் எஞ்சியுள்ள ஒரு சில இசைத்தமிழ்ச் சூத்திரங்களுக்கும் குறியீடுகளுக்கும் உண்மைப் பொருள் காண்பது அரிதாகிவிட்டது. இன்று இசைத் தொழில் நடத்த முடியாத பாணரெல்லாம் குடை முடைதல், மீன் பிடித்தல் முதலிய பிற தொழில்களை மேற்கொண்டுள்ளனர்.

பாணர் என்பவர் குலமுறைப்படி (இன்று ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுபவர்களுள் ஒரு சாரார்) பறையர். இதை அவருடைய பறையடிக்கும் தொழிலால் புலப்படும்.
தீண்டாமையால் பிற்காலத்தில் அவர்களுக்கு உயர் குலத்தாரிடத்தில் இடம் கிடைக்காமல் போனதாலும், பார்ப்பனர் இசைத் தொழிலில் புகுந்துகொண்டதாலும் பாணர்க்குப் பிழைப்புக் கெட்டதுடன் இசைத் தமிழும் மறைந்து போனது.

வேட்டையாடுதல் (வேடர்), மீன் பிடித்தல் (பரதவர்), கால்நடை வளர்த்தல் (இடையர்), வாணிகம் செய்தல் (வாணிகர்), உழவுத்தொழில் (உழவர்), போன்ற பல்வேறு தொழில்களின் மூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றி அந்த சங்க காலத்தில் கலையைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற கலைஞர்கள் மட்டும் பட்டினியில் வாழ்ந்துள்ளமைக்கு பொருள் உற்பத்தியைத் தோற்றுவிக்காத கலைத்தொழில் அவர்களுக்கு வருமானத்தை அளிக்கக் கூடிய தொழிலாக அமையப்பெறவில்லை என்பதை உறுதி செய்கிறது.

கலைஞனும், கலையும் உயர்வாக மதிக்கப்பட்ட மன்னராட்சியில் சில கலைஞர்கள் இழிவாகக் கருதப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மூத்த குடிகளாக விளங்கும் பறையரை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

காலஞ்சென்ற எம்.சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளார். 1891ம் ஆண்டுக் குடி மதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

பறையர்கள் குறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பறையர்கள் யார்?

17--cbamk4_folk_CB_1332916eபறையர்கள் / அத்தியாயம் 12

தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு மக்கள் வகையினங்கள் ‘குடி’ என்னும் பெயருடன் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. பழங்குடி, முதுகுடி, குரம்பைக்குடி, வேட்டக்குடி, நீள்குடி, விழுக்குடி, வீழ்குடி, செழுங்குடி, பல்குடி போன்ற தொடர்கள் இதனை உறுதி செய்கின்றன (பூங்குன்றன் 2007:12).

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிகளிலிருந்து மலைப்பகுதிகளுக்குக் குடியேறியவர்கள் பழங்குடி என்றும், சமவெளிகளிலிருந்து குடியேறாமல் நீண்ட நெடுங்காலமாகவே தத்தம் பகுதிகளில் மண்ணின் மைந்தர்களாக வாழுபவர்கள் முதுகுடி என்றும், வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே துணைக் கண்டத்தின் இனக்கூறுகளைத் தனித்துவமாகக் கொண்டிருப்பவர்களை தொல்குடி என்றும் கூறலாம்.

‘பறை’ என்ற சொல் ‘பாரை’ என்ற மலைப்பாறையிலிருந்து வந்ததாகப் பொருள் கொண்டு ‘பறையர்’ என்பவர் பாறை பகுதியில் வாழ்ந்தவர்கள் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே பறையர் முதன் முதலில் மலையில் அரசாண்டு பின்னர் சமவெளிக்கு வந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

பறையர் என்ற சொல் வங்காளத்தில் ராஜ்மகால் குன்றுகளில் வாழ்ந்து வரும் மக்களின் பெயராகிய ‘பகாரியர்’ என்ற சொல்லுக்கும், மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் பெயராகிய ‘பர்வாரியர்’ என்ற சொல்லுக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம்.
பரதாஸ், பரவர், பர்டிஸ்ம் பர்கியா, பகாரியாஸ் அல்லது மாலர்கள், பார்கள், மார்கள், மகார்கள் போன்ற இந்திய மாநிலங்களிலுள்ள பழங்குடி மக்களின் பெயர்கள் ஒன்றாக இருத்தலைக் காணமுடிகின்றது. எனவே, இவ்வாறு இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள ஆதிக்குடியினராகத் தீண்டப்படாதார் மலைவாழ் மக்களாக இருந்திருக்கின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது. இந்தப் பெயர்கள் திராவிடப் பெயராகிய ‘பரா’ என்ற சொல்லிலிருந்து வந்துள்ளன எனலாம். ‘பரா’ என்ற மலையாளச் சொல்லும் ‘பாறை’ என்ற தமிழ்ச் சொல்லும் ‘பாரு’ என்ற தெலுங்குச் சொல்லும் பாறையைக் குறிக்கின்றன. எனவே, மலைவாழ் மக்களாக இருந்தவர்களே பின்னர் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த பறையர் தமிழ்க்குடி மக்களெனத் தெரியவருகிறது.

‘பறையர்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான பல இந்தி மொழிச் சொற்களிலும், மலைவாழ் மக்களின் பெயர்கள் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் பின்னர் தீண்டப்படாதார் எனக் கருதப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கத்தைப் பலர் ஆதரிக்கவில்லை. வேறு வகையாக பார்த்தால் பறையன் என்ற வார்த்தை இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளை உணர்த்துகிறது.

‘பார்’ என்றால் பூமி அல்லது நிலம் என்று பொருள். ஆகவே, பறையர் என்பவர்கள் இந்த பூமி அல்லது மண்ணுக்குரியவர்.‘பரா’ என்ற சொல் வடமொழி வார்த்தை. அதன்படிப் பார்த்தாலும் அதன் பொருள் அயலவர் என்பதாகும். தங்களது கலாசாரத்துக்குப் புறம்பாக உள்ளவர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டதால் இந்நாட்டின் பழங்குடியினர் ‘பரா’ என்ற சொல்லிலிருந்து ‘பறையர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். ‘பராதீனம்’ என்ற சொல்லும் அயலாருக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை குறிப்பதாகும்.

இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதியிலும் வாழ்ந்த பழங்குடியினர் பார்ப்பனர்களுக்கு எதிராக அயலாராக இருந்து வந்ததாலும், புத்த மதத்தினராக இருந்ததாலும் இந்துமத உண்மையை நீண்டகாலம் ஏற்றுக்கொள்ளாததாலும் பறையரென்று அதாவது தங்கள் மதத்துக்குப் புறம்பானவர்களென்று பார்ப்பனரால் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தீண்டப்படதாருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்கள் அம்மாநில மொழி கலாசாரத்தை ஒட்டி இருந்தாலும் இந்தியாவிலுள்ள தீண்டப்படாதாரைப் பொதுவாக எல்லா மக்களும் ‘பறையர்’ என்று அழைத்துள்ளனர். இந்தப் பொதுப்பெயர் எதை உணர்த்துகிறதென்றால், இந்தியாவில் அனைத்துப் பகுதியிலும் பரவியிருந்த பார்ப்பனர்கள் தங்கள் கலாசாரத்துக்கும், சமயத்துக்கும் எதிரானவர்களைப் புறம்பானவர்களைப் பறையரென்று பொதுவாக அழைத்துள்ளனர்.

பறையர் அடித்த ‘பறை’யைக் கொண்டு பறையர் என்ற பெயர் வந்தது என்பது தமிழ் மொழியைப் பொறுத்தவரை பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மற்ற மாநிலங்களில் கொட்டப்படும் ‘பறை’ என்னும் தோல் கருவிக்கு இதே தமிழ்ப் பெயர் இந்திருக்க முடியாது. ஆனால் ‘பறையர்’ என்ற ஒரு பொதுப்பெயர் தீண்டப்படாதவருக்கு இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, வடமொழியிலுள்ள ‘பரா’ சொல் பிராமணர் அல்லாத அயலவர், ‘பிற’ இனத்தவர் என்ற சொல்லை உணர்த்துகிறது என்று ஏற்கலாம்.

மேலும், ‘பரச்சிந்தனை’, ‘பரஸ்திதி’, ‘பரம ஏழை’, ‘பாமரன்’, ‘பரமன்’, ‘பரம்பொருள்’ என்ற சொற்கள் ‘இகம்‘, ‘பரம்’ என்ற வேறுபாட்டை உணர்த்த வந்த சொற்கள். வடமொழிப்படி ஆராய்ந்தால் பரச்சிந்தனை என்பது உலகாயதத்தில் பற்றுக் கொண்டுள்ளவர்களாகிய கர்ம வினைஞர்களைக் குறிப்பதாக உள்ளது. பார்ப்பனர்கள் உலகாயதப் பற்றில் இருந்து நீங்கி, ஆன்மிகச் சிந்தனையில் இருந்தவர்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் உலகாயப் பற்றிலுள்ள மக்களை வேறுபடுத்தி தாழ்த்துவதற்காகவும், தங்களை ஆன்மிக நிலையில் உயர்த்திக் கொள்வதற்காகவும் கொண்டு வந்த சொல்லாகும். உடலால் உழைத்து வந்தவர்கள் இறைவனை சதா வழிபடும் நிலையில் இல்லாதவர்கள் என்ற காரணத்தால், உலகாயப் பணிகளாற்றி உடலுழைப்பில் இறைவனைக் கண்ட கர்ம வீரர்களைப் பார்ப்பனர் தாழ்வாக எண்ண அளித்த ஒரு பொதுவான பெயர்தான் ‘பறையர்’ எனத் தெரிகிறது.

பழையர் என்ற சொல்லிலிருந்து ‘பறையர்’ என்ற சொல் வந்திருக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். தமிழகத்தில் ‘பழையர்’ என்று அழைக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் ‘பறையர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர் என்ற வாதம் உள்ளது. தமிழகத்தில் பழநி குன்றிலும், அதைச் சார்ந்த பாறைகளிலும், குன்றுகளிலும் ‘பழையர்’ என்ற பெயருள்ள மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் சமவெளியில் வாழும் பறையர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வருகிறது.

‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்லது குடியும் இல்லை’ என்னும் நானூறு பாடலில் இருந்து இந்த நான்கு பிரிவுகளைக் கொண்ட மக்களை வைத்து தமிழ்க்குடி வளர்ந்துள்ளது தெரியவருகிறது. அந்த வகையில், பறையரைப் பழங்குடி மக்கள், பழந்தமிழர் என்று சொல்வது முற்றிலும் பொருந்தும்.

0

பறை’ என்ற சொல்லுக்கு சொல்லுதல், அறிவிப்பு செய்தல், சாற்றுதல் என்று பலப் பொருள்கள் உண்டு. தமிழர் பயன்படுத்திய அனைத்துத் தோற்கருவிகளான இசைக்கருவிகளுக்கும் தாயாக விளங்கியது பறை. பிற்காலத்தில் தீண்டாமையைக் குறிக்கும் நோக்கில் பறை, கொட்டி இசைத்த ஒரு பிரிவினரைப் ‘பறையர்’ என்று குறிப்பிட்டார்கள். பறையை அறைவோர் பறையர், கோடியர், துடியர், வள்ளுவர் என்று அழைக்கப்பட்டனர்.

பற+ஐ = பறை. பறை என்பது முதன்மைப் பொருள் ‘பறை’ எனும் பெயர் சொல்லுதல், உரைத்தல், அறிவித்தல் என வழிப்பட்ட பொருளை உடையது. ‘பறைதல்’ என்ற சொல் வழக்கு இன்று மலையாளத்திலும், யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையேயும் இன்னும் வழக்கில் உள்ளது.‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப் பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லிலிருந்து ‘பறை’ தோன்றியது.

‘தமிழர் வரலாறு’ நூல் ஆசிரியர் குணா, பறையர் எனும் பெயர் பறையடித்தலால் வந்ததன்று என்கிறார். பின் வருமாறு அவர் குறிப்பிடுகின்றார். ‘ஒரு குடி உடன்படிக்கையின் கீழ் ஓர் நிலக்கிழாரிடமிருந்து பாட்டத்திற்கு எடுத்து, நிலத்தை உழுது வித்திட்டு அறுத்து அந்நிலக்கிழாருக்குக் கட்டிய பாட்டத்தைப் பறை என்னும் முகத்தலளவையில் நெல் வடிவில் அளந்து கொடுத்து வந்த குடியானவரையே குறிக்கும். பறையர் என்னும் பெயர், ‘பறை’ என்னும் தோற்கருவியை முழக்கியதனால் வந்த பெயர் அன்று. இன்று ‘தபலா’ எனப்படும் இசைக்கருவியின் பழைய தமிழ்ப் பெயர் ஒரு கட்பறை ஆகும். அந்த தோற்கருவியின் மேல் கண்போல் இருக்கும் கரியமாவு ஒன்றேயொன்றாக இருப்பதனால் ஒரு கண்ணைக் கொண்பறை என்னும் பொருளில் அதனை ஒருகட்பறை’ என்றனர். அதேபோல் ஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பறைகள் இருந்தன. தோற்கருவிகள் அனைத்துமே பொதுவாகப் பறை எனப்பட்டனயேயன்றி இன்று தப்பட்டை எனப்படும் கருவிமட்டுமே பறை ஆகாது.

இதனால் பறையர் எனப்படும் பெயர் பறை என்னும் முகத்தலளவையில் பாட்டத்தை அளந்து கட்டிவந்த குடியானவர்களையே குறிக்கும். பிற்காலத் தெலுங்கு – கன்னட வந்தேறிகளின் காலத்தில் அப்பொருள் பிரிந்து ஒரு வரலாற்றுக் குழறுபடியானது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய கருத்துப்படி ‘பறை’ என்னும் முகத்தலளவைக் கையாண்ட குடியானவர்களே ‘பறையர்’. எனில் அவர்கள் தீண்டாதோராகக் கருதக் காரணமென்ன? தமிழர் அளவைகளில் பறை, மரக்கால் ஆகிய இரு அளவைகள் பற்றியும் நாம் அறிய வேண்டியுள்ளது. 5 மரக்கால் = 1 பறை என்று கூறுகிறது ‘கணக்கதிகாரம்’ என்ற தமிழரின் அளவை நூல். தமிழ் லெக்ஸிகனும் பறை என்ற அளவையினை குறிப்பிடுகின்றது. சிந்தாமணி, சிலப்பதிகாரம் ஆகியவையும் பறை அளவைக் குறிக்கின்றன.

5 மரக்கால் என்பது 1 பறை. 80 பறை என்பது 1 கரிசை என்ற அளவை தமிழர்களின் அளவு முறைகளில் இடம் பெற்றுள்ளது. ஒரு அளவுக்கருவியைக் குறிப்பிட்ட மக்கள்தான் பயன்படுத்தினர், பிறமக்கள் எவரும் பயன்படுத்தவில்லை என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. மேலும் தீண்டாமை உணர்வு ஏற்பட இந்த அளவுக்கருவி காரணமா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் இசைக்குடிகள் வரிசையில் ‘பறையர்’ இடம் பெறக் காரணம், அம்மக்கள் பறையடித்தலால் உருவானதேயாகும். தொன்று தொட்டு வழக்கிலும் இச்சொல் இக்காரணம் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது. மானுடவியல் ஆய்வாளர்களும் இம்மக்கள் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘பறை அடித்ததால் வந்த பெயர் பறையர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதுவே சரியான பெயர்க் காரணமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பறையர்கள் யார்? – II

paraiபறையர்கள் / அத்தியாயம் 13

‘பறையன்’ என்ற சொல் உலக அளவில் தீண்டாமையைக் குறிக்கப் பல மொழியினரும் பயன்படுத்தும் சொல்லாகி வருகிறது. ‘தமிழர்கள் யார்?’ எனும் தலைப்பில் வித்தாலி பூர்ணிக்கா எனும் ருஷ்ய நாட்டு அறிஞர் எழுதிய ஒரு கட்டுரையில் ‘பறை முழக்கிய பறையர்களின் வாழ்க்கை சமூகத்தில் மிகத் தாழ்வானதாகக் கருதப்பட்டது. அவர்கள் தனித்து வாழ நேர்ந்தது. பிற சமூகத்து மக்களோடு இணைந்து வாழ முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் இப்படிப் பெயர் பெற்ற ‘பறையர்கள்’ என்ற சொல் பல உலக மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ‘பறையர்கள்’ என்ற சொல் உலக மொழிகளில் இடம் பெற்றிருப்பது ஒருவகையில் பெருமைதான் என்றாலும், சமூக அநீதியின் சின்னமாக வழங்கப்பெறும் நிலைமை மாற வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் இன்றைய சிந்தனையாகத் திகழ்கிறது!’ என்று குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச் சமுதாயத்தின் ஆதி நிலை வாழ்க்கையைப் பற்றி பேசும் சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளைப் பார்க்கையில் அக்காலச் சமுதாயமானது பிற்காலத்தில் காணப்பட்டதைப் போன்று ஏற்றத் தாழ்வானதாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. கி.மு. 100ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு. 300ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிலவிய தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள் நிலவின என்பதை ஐந்தினை நிலங்கள் குறித்த விவரணைகளிலிருந்து அறியமுடிகிறது. சாதி அமைப்பு போன்றதொரு அமைப்பினை இக்காலக்கட்டத்தில் அடையாளம் காண முடியாது என்ற போதிலும் ஒரு சிலர் ‘கீழ்மக்களாக’க் கருதப்பட்டதற்கானச் சான்றுகள் உள்ளன.

தோல் தொடர்பான தொழில்கள், துணி வெளுக்கும் தொழில், மீன் பிடித்தொழில் முதலியவற்றை மேற்கொண்டவர்கள் ‘அசுத்த’மான வேலைகளைச் செய்பவராக கருதப்பட்டனர். மரணச் சடங்குகளுடன் தொடர்புடைய பிரிவினரும் இவ்வாறே கருதப்பட்டனர். ஏனையோர் மனத்தில் கட்டுக்கடங்காத பயத்தையும் பீதியையும் உண்டாக்கவல்ல அலாதியான ஆற்றல் கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களிடம் இருப்பதாக நம்பப்பட்டது. பெண்களிடத்தும், பாணர்கள், பாடினியர், விறலியரிடத்தும் இத்தகைய ஆற்றல் குடிகொண்டிருந்ததாக சங்ககால மக்கள் நம்பினர். குழுத்தலைவர்களுடனும் குறுநில மன்னர்களுடனும் இணைந்து அவர்கள் போர்புரிந்த காலங்களில் அவர்களது பெருமைபாடி, தமது கற்பனையாற்றலாலும், அபாயகரமான சக்தியாலும் அரசர்களுக்கு தைரியத்தையும், உன்மத்தத்தையும் பாணர்களும் பிறரும் ஊட்டினர்.

கீழ்மக்களாயினும் அவர்கள் அரசனுக்குப் பெருமை சேர்ப்பவராகவே கருதப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அம்மக்கள் செல்வாக்கிழந்தனர். கி.பி. 300ம் நூற்றாண்டுக்குப் பிறகு பார்ப்பனர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தமது மேலாண்மையை நிறுவ வந்தனர். ஆன்மீக அறிவுடையராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் அரசர்களின் கவனத்தை ஈர்த்தனர். நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் மன்னர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் பெறத்தக்கவராயினர். பழைய சமுதாய ஏற்பாட்டில் பாணர்களுக்கும் பிற ‘கீழ் மக்களுக்கும்’ இருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும் குறையவும் அவர்கள் வெறும் கீழ் மக்களாக மட்டும் தாழ்த்தப்படவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் காரணமாக அமைந்தது.

ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த நாகரிக இனமான நாகர் அல்லது திராவிட இனத்தின் சிதறுண்ட மனிதர்கள்தான் பின்னர் தீண்டப்படாதார் என அழைக்கப்பட்டனர்.

தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள். நாகர்களோடு திராவிடர்கள் கொண்டிருந்த தொடர்பு மணிமேகலை நூலில் வருகின்றது. நாகர்கள் தொடர்புடைய நாகப்பட்டினர், நாகூர், நாகர்கோயில், நாகபுரி, நாகாலாந்து என்ற கடற்கரை மற்றும் உள்நாட்டு பட்டினங்கள் இன்றும் உள்ளன. தமிழ்நாட்டுக்கு நாவந்தீவு என்ற ஒரு பெயரும் உண்டு. இது நாகர்களை அடிப்படையாகக் கொண்ட பெயராகும். நாகர்கள் என்பதும், திராவிடர்கள் என்பதும் ஒரே கலாச்சாரத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். இவர்களது தாய்மொழியாகிய தமிழ்மொழி ஒரு கால கட்டத்தில் இந்தியா முழுவதும் வழக்கில் இருந்தது.

நாகர்கள் பறையர்களின் மூதாதையர் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர்கள் தென்னகத்தை ஆண்டதாக வரலாறு உள்ளது. நாகர்களின் கலாசாரமும் நாகரிகமும் தமிழகத்தில் பரவியிருந்தது. நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்.

பல்லவ அரசகுடித் தோன்றல் ‘தொண்டைமான் இளந்திரையன்’ என்பவன் நாக இளவரசி பீலிவனை என்பவளின் மகனாவான். மகாராஷ்டிரம், ஆந்திரம், சிலோன் போன்ற நாடுகள் நாகர்கள் ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளன. ஆந்திரப் பகுதிகளை ஆண்ட சாதவாகனர்கள் நாகர்கள் எனவும் இவர்கள் ஆதிதிராவிடர் வழிவந்த திராவிடர்களே எனவும் அம்பேத்கர் கூறுகிறார்.

நாகர்களால்தான் தண்டகாரண்யவனம், மக்கள் வாழும் பகுதியாக மாற்றப்பட்டது என்ற கருத்துள்ளது. ஆரிய நாகரிகத்தை ஏற்றுக்கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள், நாகர்களை வென்று தாழ்வான பணிகளுக்கு ஆட்படுத்தியும், அவர்களை தனியே ஒதுக்கி வைத்தும் தீண்டாத நிலைக்குக் கொண்டுச் சென்றார்கள்.

0

சங்க காலத்தில் சிறந்த இசைக் குடிகளின் வரிசையில் இடம் பெற்ற பறை முழக்கிய மக்கள் அக்கருவியையே அடையாளமாகக் கொண்டு குறிப்பிடப்பட்டனர். ‘பறை’ என்ற சொல்லும், பறை கொட்டுகிறவர் ‘பறையர்’ என்ற சொல்லும் தாழ்ந்த பொருண்மையை சங்ககாலத்தில் தரவில்லை, காப்பியத்திலும் தரவில்லை. ஏறத்தாழ சோழர் காலத்தில் இக்கொடுமைத் தொடங்கி கி.பி. 16, 17ம் நூற்றாண்டில் உச்ச நிலையை அடைந்தது.

பறையர் சங்ககாலச் சமுதாயத்தில் மிகக் கௌரவமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

‘தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால்
தீண்டாமைப் பட்டம் வேண்டாதார் இல்லையடி சகியே’

என்ற பாரதிதாசனின் சமத்துவப் பாடலின் வரிகளிலிருந்து இதனை உணர முடிகிறது.
‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்ல; குடியுமில்லை’ என்ற புறநானூற்று வரிகளில் இவர்கள் முக்கியக் குடிகளாகக் கருதப்படுகின்றனர். பண்டைய தமிழகத்திலிருந்த இந்த நான்கு அடிப்படைக் குடியிலிருந்துதான் ஏனைய குடியினர் தோன்றியுள்ளனர்.

‘பறையர் இழி குலத்தினர்’ என்று சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் துடியர்கள் இழியர், இழிப்பிறப்பாளர் எனக் கூறப்பட்டுள்லனர். இவர்கள் புலையரெனவும் அழைக்கப்பட்டுள்ளனர். தூய்மையற்ற அசுத்தமான சமூகப் பணிகளைச் செய்பவர்கள் அனைவரும் புலையர் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளனர். பிறப்பு அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் சாதிமுறை அமைதல் என்பது சங்ககாலத்தில் காணப்படாத ஒன்று.

ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னன், தமிழ்ச் சமுதாயத்தில் நான்கு வகுப்பினர் இருந்ததாகக் கூறுகிறார். இந்நூல் குலத்தில் கீழானவன் என்று கல்லாதாரை மட்டுமே கூறியுள்ளது, தமிழ்ச்சமுதாயம்.

‘நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன் கற்றிலனாயின் கீழிருப்போனே’ என்று புறநானூற்று அடிகள் குறிப்பிடுகின்றன. கற்காதவர்கள் குலத்தால் உயர்ந்தவர்களாயினும், கற்றவர் முன் கீழோரே என்பது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த உயர்ந்த நீதியாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பறையர்கள் யார்? III

parai1பறையர்கள் / அத்தியாயம் 14

தமிழகத்தில் பிறந்த மக்கள் வகுப்பு, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களில் வாழ்ந்தனர். இந்த நான்குவகை நிலத்திலும் தம்முன் ஏதும் வேறுபாடு இன்றி உண்ணல், கலத்தலைச் செய்து வந்தனர் என்பதை தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான தெய்வத் தமிழ் மறை நூல்களில் இருந்து அறியலாம்.

இவ்வாறு இந்த நான்கு வகை நிலத்திலும் வாழ்ந்த மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பல வகுப்பினராகப் பிரிக்கப்பட்டோருள் கொலையும் புலால் உணவும் மறுத்து, ஓதல், வேட்டல், அரசு புரிதல் வாணிகம் செய்தல், உழவு செய்தல் என்னும் உயர்ந்த தொழில் புரிந்தோர் ‘மேலோர்’ என்று கருதப்பட்டனர். கொலையும், புலையும் செய்வோர் கீழோர். இவ்வாறு இந்த இருபெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் தொழிலாலும் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைத்து, கீழோர் மேலோர்க்கு அடங்கி நடந்து, மேலோர் தம் கீழ் வாழும் குடிமக்களை இனிது பாதுகாத்து வந்தனர். இவ்வாறு அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை நடைபெற்றது. அக்காலத்தில் தீண்டாமை இல்லை.

தென்னிந்தியாவில் தீண்டப்படாதாரைப் பறையர் என்பார்கள். இவர்கள் திராவிட இனத்தவர்களால் வெல்லப்பட்டார்கள். இவர்களுக்குக் கீழ்த்தரமான தாழ்வான கேவலமான சமூக வேலைகளைத் தந்தனர்.

தீண்டப்படாதார் திராவிடர்களுக்கு முன்னதாகத் தென்னகத்தில் வாழ்ந்த மலைவாழ் இனத்திலிருந்து வாழ்ந்தவர்களென்றும், இவர்கள் முதன் முதலில் திராவிடர்களால் தாழ்நிலைக்கும், அடிமை நிலைக்கும் தள்ளப்பட்டார்களெனவும் கால்டுவெல் கூருகிறார். தமிழ்நாட்டுப் பறையர்கள் சிறப்புமிக்க இனத்தவர்களாக மதிக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் சமயப் பண்டிகைகளிலும், விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் இவர்களுக்குத் தனித்த முன்னுரிமைகளும், சலுகைகளூம், மரியாதைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் கால்டுவெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

குர்யி என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவது போன்று தீண்டப்படாதாரெனத் தமிழகத்தில் கருதப்பட்ட மக்கள், திராவிடர்களுக்கு முன்னதாகத் தென்னிந்தியாவை தங்கள் நாடாகக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து தென்னகத்தில் குடியேறியதால், இவர்கள் காட்டுப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் குடியேறினர். அவ்வாறு மலை மற்றும் காட்டுப் பகுதிகளுக்குச் செல்லாமல் சமவெளிப்பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு, தாழ்நிலை ஊழியர்களாக மாற்றப்பட்டனர்.

சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர நாகரிகத்துக்கு திராவிடர்கள்தான் சொந்தக்காரர்கள் என்பது, ஆதித்திராவிடர்களையே சாரும். தென்னகத்திலிருந்த திராவிட இனத்தாரிடையே ஆதிமக்களாகிய திராவிட இனத்தவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற நிலைக்கு ஆளாக வேண்டியிருந்தது.

பிரான்ஸிஸ் அவர்கள் கூறுவது போன்று, பழைய தமிழ்ப்பாடல்களிலும் அதற்குப் பின்னர் வந்த நாட்களிலும் பறையர் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஆதிக்குடியினரான இவர்கள் எயினர் என்ற பெயரில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் தமிழ் நூல்களில் உள்ளன. இந்த எயினர் என்பவர்கள் பறையரென்று அழைக்கப்பட்ட மக்களுக்கும் மூதாதையரென்று கருதப்படுகிறது.

பறையர்கள் இம்மண்ணின் ஆதிக்குடியினர். பறையர்கள் மற்ற தமிழர்கள் போலல்லாமல் தமிழ் மொழியை, தமிழ் நாகரிகத்தை, கலாசாரத்தை எந்த வித பிற நாகரிகக் கலப்பும் இன்றி தொடர்ந்து பின்பற்றிக் காத்து வந்தவர்கள். இவர்களது அன்றாட பேச்சு வழக்கிலுள்ள கஞ்சி, உறங்கு, சேரி, காய்ச்சல், கண்மாய், முடங்கு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு என்பன போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள் இவர்களை உண்மைத் தமிழர்கள் என்று இனம் கண்டு கொடுக்கின்றன.
தமிழகத்தில் ஆதித்திராவிடர்கள் ‘பறையர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். தென்தமிழ் மாவட்டங்களில் உள்ள பள்ளி இளஞ்சிறுவர்களின் சான்றிதழில் பறையர் என சாதி பெயர் இருப்பதை இன்றும் காணலாம், ஆனால் வட தமிழ்நாடு மாவட்டங்களிலுள்ள தீண்டப்படாத மாணவர்கள் பெயர் ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இவர்கள் தீண்டப்படாதவர்களில் பெரும்பான்மையினர் பறை என்ற இசைக்கருவிகளை நல்ல, கெட்ட வைபவங்களுக்கு வாசித்ததால் இவர்களுக்குப் பறையர் என்ற பெயர் கால வழக்கில் வந்ததாக எண்ணுகின்றனர்.

தமிழ் இலக்கியங்களில் போர் முரசு அறிவிப்பவர்களை வள்ளுவரென்றும், பறையரென்றும் அழைத்துள்ளனர். ‘பறைதல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்ற மலையாள வழக்கின்படிப் பார்த்தால், இவர்கள் செய்திகளை அறிவிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. இன்றைய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் இசைகள் அன்று (இன்றும்) அவர்களால் நிகழ்ந்துள்ளன. நல்லதைக் கெட்டதை சொல்லுவதும், உணர்ச்சி எழுப்ப இனிய கதைப்பாக்கள் பாடுவதும் தொழிலாகக் கொண்ட ஓர் இனமாக இவர்கள் இருந்திருக்க வேண்டும். இறந்தவர்களுக்குப் பறை அறைதலையும் இவர்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.

பறையர் என்பவர், இலங்கையிலிருந்து கைது செய்து கொண்டு வரப்பட்ட நாகர்களென்றும், இதைப் போன்று கேரளத்தில் தீயவர்களென்று கருதப்படும் தீண்டப்படாதாரும், இலங்கையிலிருந்து கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்ட நாகர்களே என்றும் கருதப்படுகிறது. தமிழ் ராமாயணம் ஒன்றில் இலங்கை என்ற பகுதி பறையர் வாழும் ஒரு நகர் என்று குறிப்பிடப்படுகிறது.

பறையர்கள் கலப்பில்லாத தமிழ்க் குடியினர், பச்சைத் தமிழர். பறையர் என்ற சொல் சங்ககாலத்தில் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படவில்லை. பறையர்கள் தங்களைப் பிராமணர்களுக்கு மூத்தவர்களாகக் கூறிக் கொண்டுள்ளதற்கு வழக்கில் ஆதாரம் உள்ளது.

‘பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் அவன் கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதி ஆனான்’ என்ற பழமொழி ஒன்று தமிழகத்தில் வழக்கில் உள்ளது. பார்ப்பானுக்கும் பறைச்சிக்கும் பிறந்த பிள்ளை நொறைச் சாதி என்றும், பாப்பாத்திக்கும் பறையனுக்கும் பிறந்த குழந்தை தாப்பாள் சாதி என்றும் பெயருண்டு.

அகநானூறு, திருமுருகாற்றுப்படை என்ற சங்ககால இலக்கியங்களில் இவர்கள் முருகனுக்கு ஆட்டை வெட்டிப் பலி கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. பெரிய புராணத்தில் கண்ணப்பர் என்ற ஒரு வேடர் குல சிவனடியார் பன்றியின் இறைச்சியைச் சிவனுக்கு அளித்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கிறது.

இறைவனுக்கு மாமிசத்தை வைத்துப் படைத்து வந்த காலகட்டத்தில் தீண்டப்படாத இனத்தைச் சார்ந்தவர்கள் அர்ச்சர்களாக இருந்து வந்த ஆராதனைகளைச் செய்துள்ளன. மிருகங்களைத் தெய்வங்களுக்குப் பலியிடும் வழக்கத்தைக் கடுமையாகச் சாடிய காலத்தில் பிராமணர்கள் தீண்டப்படாதாரின் இடங்களைப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

பிராமண முறையை எதிர்த்தவர்களும், பிராமண முறையில் இணைந்து இந்துக் கடவுள்களை வணங்க முன்வராதவர்களும் பறையரென்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு பிராமணர்களின் முறையைத் தனியாக நின்று எதிர்த்தவர்கள்தான் தீண்டப்படாதவர்கள். இதனால்தான்.

‘ஆரியர் தமையொப்பா ஆதித்திராவிடரை சேரியில் வைத்தாரடி’ என பாரதிதாசன் தனது சமத்துவப் பாடல்களில் (1929) பாடியுள்ளார். இதேபோல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஆரியர்களை எதிர்த்த ஆதிதிராவிடர்கள் என்றும், வெஞ்சமர் வீரர் என்றும், தஞ்சம் புகாத் தமிழர் என்றும், தம்மைப் பழிப்பவரிடமும் தளராத அன்பைக் காட்டும் பாங்கர் பறையர் என்றும் ஏற்றிவைத்துப் பேசுகின்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு

800px-Olaichuvadiபறையர்கள் /அத்தியாயம் 15

பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.

பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை அவர்களிடமிருந்து எடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் குடியிருப்புக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் இரண்டு பெயர்களில் அழைக்கப்பட்டன. ஒன்று கிராமம் என்ற வடமொழிப் பெயர். மற்றொன்று நத்தம் என்ற சேரிப்பகுதி. இவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் நெடுங்காலத் தொடர்பு உண்டு என்பது இதனால் தெரிய வருகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பறையர்கள் தங்களுக்கென தனி புரோகிதர்களையும், ராணுவத் தலைவர்களையும் கொண்டு மிக உயர்ந்த சமூக அமைப்போடு வாழ்ந்து வந்தனர். பறையர்கள் சில சாதியினருக்கும் சமயக் குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங்கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடல் அருந் துப்பின்………………..
……………….குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,

சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

திணை: வாகை. துறை: மூதின் முல்லை. பாடியவர் மாங்குடி கிழார். குரவு, தளவு, குருந்து, முல்லை என்ற நான்கு வகைகள். வேறு சிறந்த பூக்கள் கிடையாது. வரகு, திணை, கொள், அவரை என்பனவன்றி வேறு சிறந்த உணவுப் பொருள்கள் கிடையாது. துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் சிறந்த குடிகள் கிடையாது. பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர் வராதவாறு தடுத்து வென்று தாமும் வீழ்ந்து நடுகல்லானவரின் நடுகல்லைத் தொழுவதின்றி நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு கிடையாது. (இவை எல்லாம் புலவர் குறித்துப் பாடும் காட்டுத் தலைவன் நாடு பற்றியவையாகும்) எனக் குறிப்பிடப்படுகிறது.

பிறகுடிகள் பல இருந்தாலும் ‘இந்நான்கல்லது குடியும் இல்லை’ என்பது துடி கொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய இவர்கள், மறவர்கள் போருக்குக் கிளர்ச்சிக்கு கொண்டு செல்லுதல் முதலாக, வாகைசூடிப் பரிசுப்பெறுதல் ஈறாக உடனிருந்து மகிழ்வித்தும், மறம்பாடியும் பணிசெய்வோர் என்பதுடன் இவர்களே தொன்மைக் குடிகளாக கூடி வாழ்ந்த கலைக் குடிகளாக வாழ்ந்தவர் என்று சிறப்புடன் குறிப்பிடப்படுகிறது.

‘பறையர்’ என்பது தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் தொழிலை பறையர் செய்து வந்தபடியால் பறையர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் காலத்திலும், சங்ககாலத்திலும் பறையர் சமுதாயம் செல்வாக்கும் பெருமையும் வாய்ந்ததாகவும் மேம்பட்ட சமுதாயமாகவும் இருந்தது என்பது உண்மை வரலாறு. பறையர் குடி தமிழ்நாட்டின் நிகரற்ற குடியாக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே விளங்கியதென 335வது சங்கப்பாடல் புறநானூறு கூறுகின்றது. இதை அறிந்துதான் புங்கனூர் இராமண்ணா, ‘பறையர் என்றால் அவர்தான் தமிழர்; தமிழர் என்றால் அவர்தான் பறையர்’ என்று கூறி, பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு, தமிழ் நாட்டின் வரலாறு, பாரத தேசத்தின் வரலாறு, பறையர் வரலாறு முழுமையாகத் தெரிந்து விட்டால் தமிழர் வரலாறும், தமிழ் நாட்டின் வரலாறும் முழுமையாகத் தெரிந்து விடும். தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்துவிட்டால் இன்றைய இந்தியாவின் வரலாறு தலைகீழாய் மாறிப்போகும் என்று குறிப்பிடுகிறார். (நூல் – பறையர் ஓர் வரலாற்றுச் சுருக்கம்).

இன்று ஷெட்யூல் சாதிகள் என்று சொல்லப்படும் மக்கள் தொகுதி பழங்காலத்தில் குலங்களாகவே இருந்தன. இன்று சில சலுகைகளை முன்னிட்டு அவற்றைச் சாதிகள் என்று அரசியல் சட்டத்திலும் வழக்கத்திலும் சொல்கிறோம் என்று நமது உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தீர்ப்பில் சுட்டிக் காண்பித்திருக்கின்றது. காரணம் இங்கு அந்நியர்களால் வருணாசிரம சாதி முறை புகுத்தப்பட்டபொழுது, அதை எதிர்த்தவர்கள் அன்று வலிமை வாய்ந்த பறையர் போன்ற மூத்த தமிழ்க்குடியினர் ஆவர். ஆகவே மிகவும் தீமை வாய்ந்த சாதி முறையை எதிர்த்தவர்களையும் சாதிகள் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது என்பதே உச்சநீதிமன்றம் கூறும் காரணமாகும்.

31.12.1918 அன்று ஆங்கிலப் பேரரசின் தூணாக விளங்கிய மேன்மை தங்கிய சர். அலெக்சாண்டர் அவர்கள் இந்திய அரசுக்கு பார்ப்பனர், பறையர் ஆகிய இரு சமுதாயங்களையும் பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து குறிப்புரை ஒன்று சமர்ப்பித்தார். அந்தக் குறிப்புரையில் பார்ப்பனரை வெறும் பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனால் பறையர்களைக் குறிப்பிடும்போது, ‘பெருமை வாய்ந்த பெரிய பறையர் சமுதாயம்’ என்று குறிப்பிடுகின்றார். அவர் பறையர் சமுதாயத்தினரைச் சாதி என்று குறிப்பிடவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு உரம் சேர்ப்பதாக இருக்கின்றது. (அம்பேத்கர் எழுத்தும், பேச்சும் அடங்கிய 22வது பாகம் 444ம் பக்கம்).

ஆகவே, ஆரியர்கள் இங்கு காலடி எடுத்து வைத்து தமது கேடு விளைவிக்கும் வருணாசிரம தர்ம சாதிமுறையைப் புகுத்த முயன்றனர். தமிழ்ப் பண்பாடுகளையும் உயரிய மரபுகளையும் உயரப் பிடித்துக் கொண்டு கேடுகெட்ட சாதிமுறையைக் கடுமையாக எதிர்த்தவர்கள் பெருமை மிக்க பறையர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பார்ப்பனர்களும் பறையர்களும்

brahmanism_GodsOfTheIndianTriadபறையர்கள் /அத்தியாயம் 16

ஹென்றி வொயிரகட் என்ற ஆங்கிலேயப் பேராயர் தென்னிந்தியாவின் ஊர்த் தெய்வங்கள் என்ற நூலில் ‘தென்னிந்தியாவில் உள்ள பறையர் சமுதாயத்தினர் தொடக்கக் காலத்தில் திராவிடர்களுக்குள் மூத்த முன்னணிச் சமுதாயமாக இருந்தனர். அவர்களை உச்ச இடத்திலிருந்து கீழே தள்ளவும், அடிமைகளைப் போல் இழிவுப்படுத்தவும் பிராமணர் ஆதிக்கமே பயன்படுத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மேலும் எம்.ஜே.வுட்ஹவுஸ் என்ற தொல்பொருள் ஆய்வாளர் தனது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற நூலில் ‘பிராமணிய சாதிமுறை இங்கு நுழைக்கப்பட்டபோது இப்போது தென்னிந்தியாவில் அடிமைக்குடிகளாக அழுத்தப்பட்டவர்கள் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார்கள். உண்மையாகவே அவர்கள் நிலக்கிழார்களாகவும் இருந்தனர். பழங்காலத்தில் அவர்கள் சமுதாயத்திலும் நாட்டிலும் பெற்றிருந்த பெருமை, சிறப்புரிமைகள் என்ற வடிவில் காணப்படுகின்றது. மிக ஆர்வத்துடனும் அந்த சிறப்புரிமைகள் காக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் அந்த உரிமைகள் எந்த அடிப்படையில் வந்தன என்பது மறக்கப்பட்டதுடன் தெளிவுபடுத்தாமலும் போயிருக்கின்றன. மறைந்த பழைய சமுதாய அமைப்பில் அவர்கள் பெற்றிருந்த சிறப்புரிமைகள் இன்னும் தொடர்ந்து வாழ்கின்றன. உச்சத்திலிருந்து நீண்டநாளுக்கு முன்பு புறப்பட்டுப் போனவர்களின் நிழல்கள் அவை. ஒரு காலத்தில் இந்த மக்களின் முன்னோர்கள் உயர்ந்த வாழ்வு பெற்றிருந்தனர். இன்றைக்கு ‘நாங்கள் உயர்ந்த சாதிகள்’ என்ற கர்வத்துடன் கூறிக்கொள்பவர்கள் அன்று அந்த உயர்வு வாழ்வு பெற்றிருந்த சமுதாயப் பெருமக்களை நாடி தமது வாழ்க்கையை ஓட்ட ஒண்டி வாழ்ந்தவர்கள். அப்படி ஒரு காலத்தில் ஒண்டி வாழ்ந்தவர்கள் இன்று அவர்களைத் தொட்டாலும் தீட்டு எனப் பண்பின்றிச் சொல்லவும் தயங்குவதில்லை.’ (Slavery in the Tamil Country, Prof. Manikkam, p.22). என்று கூறுகிறார்.

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து இன்றைய ஒடுக்கப்பட்ட சமுதாயமான பறையர் சமுதாயத்தினர் பழங்காலத்தில், சமுதாயத்தில் மதிப்பும் பெருமையும் வாய்ந்த இடத்தைப் பெற்று வாழ்ந்திருந்தனர் என்பதை உணர முடியும்.

தந்திரமாக, ஒழுக்கங்கெட்ட சில தமிழ் அரசர்களையும், காசுக்கும் பதவிக்கும் விலைபோகும் சில தமிழர்களையும் பயன்படுத்தியே பண்பாட்டுக் களத்தில் வெல்ல முடியாத மிகப்பெரிய மூத்த தமிழ்ப்பறையர் சமுதாயத்தைப் பார்ப்பனர்களால் வீழ்த்த முடிந்தது.
பார்ப்பனர் தமது வருணாசிரம சாதி முறையைப் புகுத்தி வலுவாக வாழ்ந்திருந்த தமிழ்ப் பெருமக்களைப் பிரித்து சிதறவைக்க முனைந்தனர். தமிழகத்தின் மூத்தத் தமிழ்க்குடியினரான பெருமைமிகு பறையர் சமுதாயம் தமிழ்ப் பண்பாடுகளை உயரப்பிடித்துக் கொண்டு தம்முடன் ஒத்துழைத்த நல்ல சில தமிழ்க்குடிகளாகவும், நல்ல தமிழ்ப்பண்பாளர்களாகவும் இருந்தவர்களுடன் சேர்ந்து வருணாசிரம சாதிமுறையைப் புகுத்தித் தென்னிந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். பறையர்-பார்ப்பனர் பண்பாட்டு மோதலில் பார்ப்பனர் கை ஓங்கியது. அதற்குப் பல காரணங்களில் தமிழர்களில் பலர் அந்தக் கொடிய சாதிமுறையை எதிர்ப்பதைக் கைவிட்டு ஏற்றுக் கொண்டதே முக்கியக் காரணமாகும்.

இன்றும் உலகில் ஆங்கில அகராதிகளிலும் பறையர்-பார்ப்பனர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வரலாற்றில் அன்று ஏற்பட்ட பண்பாட்டு மோதலின் விளைவே அகராதிகளிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. இன்று உலகில் உன்னதமாக வாழ்ந்து வீழ்த்தப்பட்டவர்களைப் பறையர் என்றே குறிப்பிடும் வழக்கம் உருவாகியுள்ளது. நியாயமற்ற எதையாவது கையாண்டு ஆதிக்கம் பெறுவர்களைப் பிராமணர் என்றும் அழைக்கின்றனர்.

தமிழகராதியில் ‘பறையன்’ என்ற சொல்லுக்குப் புரோகிதன் அல்லது வழிபாடு செய்பவன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில், காதணி விழா, பூப்பு நீராட்டு விழா, மணவிழா முதலிய குடும்ப விழாக்களிலும், இறப்பு நிகழ்ச்சிகளிலும் இசைவாணர்கள் அல்லது பறை என்னும் இசைக்கருவிகளை முழக்குபவர்கள் தவறாது இடம் பெறுவர். இசைவாணர்கள் இன்றைய சாதி அமைப்புப் படி ‘பறையன்’ என்ற இனத்தவராவர்.

பண்டைக் காலத்தில் இசைக்குடிகளுக்குரிய சிறப்புச் செயலால் பெருமையுடன் அழைக்கப்பட்ட ‘பறையர்’, நால்வருணப் பாகுபாட்டின்படி தீண்டத்தகாத சாதி இந்துவாகி, ‘பறையர்’ என்பது பிறவியினால் பெற்ற இழிவானப் பெயராக நின்று நிலைத்துவிட்டது. பரம்பரைக் களங்கம் தன்மீது படிந்திருப்பதை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

‘விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை; பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!” என்று பாரதியார் பறையர் விடுதலைப் பற்றிப் பாடினாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை.

உலக உயிர்களிடையே உயர்வாகக் கருதப்படும் மனிதர்களிடம் மட்டும் காணப்படும் சாதியப் பிரிவினைகளால் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் பழக்கம் மெல்ல, மெல்லக் கருக்கொண்டு வளர்ந்து ஆழ வேரூன்றி அழிக்க முடியாத விஷ விருட்சமாக இன்று வளர்ந்து நிற்கின்றது.

இசைத்துறையில் மகோன்னத நிலையில் இருந்த பறையரும், பாணரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்த இரு தமிழ்க்குடிகளும் இசைத்துறையிலிருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

திராவிட இனத்தின் சிறப்பும் செல்வாக்கும் மிக்க தமிழ்க்குடி என உலக ஆங்கில அகராதிகள் வர்ணிக்கும் பெருமைமிகு பறையர் சமுதாயம் கோயில்களிலும் கலைகளிலும் அரசிலும் சமுதாயத்திலும் முதலிடம் பெற்றிருந்தனர் என்பது வரலாறு. ஆரியரின் இன ஒதுக்கல் கொள்கை வலிந்து புகுத்தப்பட்டதால் பறையர் சமுதாயம் பெற்றிருந்த இடங்கள் பறிக்கப்பட்டு முழுமையாக ஒதுக்கப்பட்டனர். இப்படி இன ஒதுக்கல் கொள்கையால் பல பெருங்கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாறு தெளிவாகக்காட்டுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நீலமும் சில பெயர்களும்

பறையர்கள் / அத்தியாயம் 17

‘பறை’ என்ற சொambedkarல் (கூட) வேறுபல சொற்களுடன் இணைந்து வரும் பொழுது இழிவு, அழுக்கு, முருட்டு, கருப்பு என்ற பொருளுடன் வழக்கில் இருந்து வந்துள்ளது.

சில உதாரணங்கள். பறைக்கால் மறைக்காலி  என்றால் ஒருவகை மெல்லிய துணிவகை. பறைக்காளி என்பது ஒருவகை முரட்டுத் துணி. பறைக்குடும்பு என்பது வரிக்கூத்து வகை. பறைக்கோலம் என்றால் இழிவான தோற்றம். பறைசீவி என்றால் சிறுநன்னாரி, நன்னாரி வகை. பறைத் தாதர் என்பவர் வள்ளுவரில் ஒரு சாரார். பறைத் துணி    என்பது ஒருவகை முரட்டுத்துணி, அழுக்காடை. பறைத் தொம்பர் என்றால் பறைக் கூத்தாடி. பறை நாகம் என்றால் கருநாகம். பறைப் பூச்சி என்பது சிலந்திப் பூச்சி வகை. பறைப் பருந்து என்றால்  கரும்பருந்து. பறையாமை என்றால் கருநிறமுள்ள இழிவசவு. பறைப்பாரி என்பது  இரவு காவலாளியின் பாடல் வகை.

மனிதன் திரளாகக் கூடி வாழ்ந்த சிறு சிறு குழு அமைப்புகளுக்கு ஊர்ப்புறம் என்றும், நகர்ப்புறம் என்றும் பெயரிடப்பட்டன. இப்பெயர்கள் மனிதன் குழுக்களாகக் கூடி வாழ்ந்த காலத்தில் இடத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காட்டப்பட்டன. குறிப்பாக மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்தோரை மலைவாசிகள், காட்டுவாசிகள் என்றும் தீவுகளில் வாழ்ந்தோரை தீவுகளில் வசிப்போர் என்றும், சமவெளிகளில் வாழ்ந்த மக்களை சமவெளி மக்கள் எனவும் குறிக்கப்பெற்றனர்.

இராக்கின் தென்பகுதியில் உள்ள பண்டைய ‘ஊர்’ என்னும் பெயர் கொண்ட பகுதி இருந்தது. கி.மு. 3000ல் மெசபடோமியாவில் ஊர் என்னும் பகுதி இருந்தது.பாபிலோனியாவில் ஊர் என்ற நகரத்தில் கி.மு. 2100 காலத்திய களிமண் குறுநாவல் ஒன்று கிடைத்திருக்கிறது. யூப்ரடீஸ் நதிக்கரையில் ‘ஊருக்’ என்ற ராஜ்ஜியம் இருந்தது.

தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்களுள் ஆறை என்பது ‘ஆற்றூர்’.‘புத்தூர்’ என்பது புதியவூர்; ‘மூதூர்’ என்பது பழையவூர். ‘பேரூர்’ என்பது மாநகர். ‘பட்டி’ என்பது கால்நடைத்தொழுவம் உள்ள சிற்றூர். ‘பற்று’ என்பது தனிப்பட்டவருக்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; ‘அடங்காப்பற்று’ என்பது அரசன் ஆணைக்கு கடங்காதவர் வசிக்கும் ஊர். ‘பள்ளி’ என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; ‘பாளையம்’ என்பது படையிருக்கும் ஊர்; ‘பட்டு’ என்பது பாளையத்தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; ‘மங்கலம்’ என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர். ‘வாடை’ என்பது வேட்டுவர் அல்லது இடையர் இருக்கும் ஊர். ‘பண்டார வடை’ என்பது குடிகளுக்குரிய ஊர்; ‘நத்தம்’ என்பது பார்ப்பனரல்லாதார் வாழும் ஊர்; ‘குடி’ என்பது ஒரு குடும்பத்தாரோ அல்லது குலத்தாரோ வசிக்கும் ஊர்; ‘குடிக்காடு’ என்பது குடிகள் வசிக்கும் காட்டூர்; ‘குடியேற்றம்’ (குடியேற்றம் என்பது இன்று குடியாத்தம் என மருவி வழங்கும்) என்பது மக்கள் குடியேறிய ஊர்.

‘கல்லாங்குத்து’ என்பது கடின நிலத்தூர்; ‘முரம்பு’ என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; ‘பேட்டை’ என்பது சந்தை கூடும் ஊர்.

‘எயில்’ என்பது மதில் சூழ்ந்தவூர்‘; ‘பரம்புரி’ என்பன அரசர் தலைநகர். ‘விண்ணகரம்’ (விண்டு+நகரம்=விண்னகரம் – விண்டு-விஷ்ணு நகர், நகரம்-மனை, கோயில்) என்பது திருமால் கோயில் ஊர்.

ஊர்ப் பெயர்கள் இவ்வாறிருக்க சேரித்தெரு, பறையர் தெரு, அரிசனத் தெரு, காலனி, புதுக்காலனி, புதூர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், அம்பேத்கர் காலனி என்று பல வகைப்பட்ட பெயர்களில் பறையர் வசிக்கும் இடங்களுக்கு ஆதிக்க சமூகம் கொடுத்திருக்கும் பெயர்கள் எதைக் குறிக்கிறது? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டத்தின் மேல் உயர்வு பெற வழிவகுத்த அம்பேத்கர் பெயரிலும், சமூக மாமேதை தந்தை பெரியார் பெயரிலும் பறையர்கள் குடியிருப்புகளுக்கு பெயர் வைத்திருப்பது நியாயம் தான் என்றாலும் மேற்காணும் பெயர்களையெல்லாம் இந்த சமூகத்தோடு பறையர்கள் இணைந்து வாழக்கூடாது என்கிற பிரிவினை சூழ்ச்சியையே காட்டுகிறது. (தர்மபுரி மாவட்டத்தில் பறையப்பட்டிப் புதூர் என்ற ஊர் உள்ளது. ஆனால் அந்த ஊரில் அனைத்து சமூகத்தினரும் வாழ்கின்றனர்).

மனித இனம் பல்கிப் பெருகிய காலங்களில் இயற்கைச் சூழல் மற்றும் புவியமைப்புகளுக்கேற்ப உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவர்களைக் கறுப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர் எனப் பிரித்தன. மானுடவியலாளர் இவர்களை நீக்ரோ, மங்கோலியர், காகேசியர் எனக் குறிப்பிடுகின்றனர். இது உடல் மாற்ற அடிப்படையில் ஏற்பட்ட வேறுபாடு. ஆனால் இந்தியாவில் வசிக்கும் பறையர்கள்/தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஏனைய இந்தியர்களைப் போல் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கும் பெயர்கள் பறையர், பஞ்சமர், சேரிக்காரர், ஹரிசனர், திருக்குலத்தார், ஆதிதிராவிடர், தலித்.

இந்தப் பறையர்களுக்கு வழங்கப்படும் மேலும் பல பெயர்கள் வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி என்பன. இந்தப் பெயர்கள் அனைத்தும் கிராம வேலையில் ஈடுபடும் பறையர் சாதியினருக்கு உரியனவாகும்.

தமிழகத்தில் உள்ள பறையர்களுடன் தொடர்பு படுத்தப்படும் ஒரு நிறம் நீலம். தமிழகத்தில் உள்ள கட்சிக் கொடிகளில் கூட ‘நீலக்கலர்’ மிகக் குறைந்தே இருக்கும் அல்லது முற்றிலும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட கட்சியினரின் கொடிகளில் ‘நீலம்’ கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதற்குக் காரணம் அம்பேத்கர் அவர் பயன்படுத்திய கட்சிக் கொடியின் நிறம் நீலம் என்பதாக இருக்கலாம்.

நீலத்தின் விளக்கத்தை எழுத்தாளர் ஜெயமோகன் (கொற்றவை) குறிப்பிடுகிறார். ‘அறிய முடியாமையின் நிறம் நீலம் என்று தமிழர் அறிந்திருந்தார்கள். நீலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல் நீலம் ஒரு புன்னகை. கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்க தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் மரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள். அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள். ஆகவே, அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னகைக்கும் கருமையே நீலம்.

நீலம் கொண்டவள் குமரி அன்னை. அழியாத கதைகளின் வழியாக அவர்கள் அறிந்த முழுமுதல் தெய்வம். தென்திசையில் குமுறும் கடலுக்கும் வடதிசையில் ஓங்கி நின்ற மலையடுக்குகளுக்கும் இடையே அவள் ஆளுகையில் காட்டுப் பசுமை அலையடித்துத் ததும்பும் அம்மண்ணைக் குமரி நிலம் என்றார்கள்.’

அதனால்தான் நமது தேசிய கொடியில் இருக்கும் அசோகச் சக்கரத்தை நீல நிறத்தில் வடிவமைத்தாரோ அம்பேத்கர்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பறையர்களும் சில பெயர்களும்

imagesபறையர்கள் / அத்தியாயம் 18

தமிழகத்தில் வேளாண்மையை மட்டும் குலத்தொழிலாகக் கொண்டவர்களைத் தான் ஆதிக்குடியினர் எனக் கொள்ளலாம். இவர்கள் உழவுப்பறையரென்றும், நெசவுப் பறையரென்றும் அழைக்கப்பட்டனர். வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டு பிறந்த மண்னை முதன் முதலில் உழுது வந்தவர்களை ஆதிக்குடியினர் அல்லது முதல் குடியினர் எனக் கூறுகிறோம். இவர்கள் மண்னை உழுதுண்டு வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். இந்த இனங்கள் மண்ணை வாழ்விடமாகக் கொண்டதால்தான் அதை வைத்து உழுது பிழைத்துள்ளார்கள். இவர்களது உழவுத் தொழிலுக்கும் பின்னர்தான் மற்றத் தொழில்கள் பிறந்துள்ளன.

பறையருக்கு தலையாரி, தண்டாசி என்ற பெயர்கள் உண்டு. தலையாரி என்பவன் நிலங்களின் எல்லையை நன்கு அறிந்திருந்தான். இதனால் மற்றச் சாதியினரைப் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகிறான் என்று அறியப்படுகிறது.

பறையர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள், பழந்தமிழர், பச்சைத் தமிழர், கலப்பில்லாத தமிழ்க்குடியினர். ஸ்ரீ ராமானுஜரால் திருக்குலத்தார் (புனித குடும்பத்தை சார்ந்தவர்கள்) என்றும், காந்தியடிகளால் ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவாரூர், தியாகராசர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை ‘யானை ஏறும் பெரும் பறையர்’ என்று அழைக்கின்றனர்.

உழவுப் பறையர், நெசவுப் பறையர், கோட்டைப் பறையர், கோட்டாகாரர் பறையர், முரசுப் பறையர், அரிப்புக்காரப் பறையர், கோலியப் பறையர், கட்டிப்பறையர், குடிப்பறையர், வேளாப் பறையர், அம்புப் பறையர், வள்ளுவப் பறையர், தீப் பறையர், கொங்குப் பறையர், சோழியப் பறையர், கிழக்கிந்திய பறையர், பந்தல் முட்டிப் பறையர், பூவன் பறையன் என்று பறையரை வகைப்படுத்துவர். இவற்றின் விரிவைக் கீழே காண்போம்.

தமிழ்நாட்டுக் கோயில்களின் திருவிழாக்களில் பறையர்களுக்கு ராஜ மரியாதைகளைப் பெற்று வந்துள்ளனர். பறையர்களில் ஒரு பிரிவினரான ‘கோட்டைப் பறையன்’ என்பவர்களே. தங்களுக்கென கோட்டையை வைத்திருந்ததை தங்கள் பெயர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்னொரு பிரிவினர் தங்களைக் கோட்டைக்கார பறையர் எனக் கூறிக் கொண்டுள்ளனர். இப்பிரிவினர் குதிரைத் தொழுவங்களை வைத்துக் குதிரைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

இன்னொரு பிரிவினர் படையில் முரசு கொட்டியதால் ‘முரசு பறையர்’ என்ற பெயர் பெற்றுள்ளனர். படை நடத்தும்போது இம்மக்கள் வெற்றி முரசு கொட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர். முரசுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மோசி கீரனாருடைய பாடலிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் அறியலாம்.

தமிழகத்தில் பறையர்கள் பல தொழில்களையும் ஆற்றிவந்துள்ளனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலோர் ‘உழவுப் பறையர்கள்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். உழுது பயிரிடுதல் இவர்களுடைய முதன்மைத் தொழிலாக இருந்துள்ளது. இவர்களில் சொத்துள்ளவர்கள் நிலவரி கட்டி வந்துள்ளனர். இந்த இனத்தவர்களில் ‘தலையாரி’ என்பவர்கள் குளங்களிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணிர் திறந்து விடுபவர்களாகப் பணி புரிந்துள்ளனர். இவர்களில் ஒரு சிலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தறிக்குப் ‘பறைதறி’ என்று பெயர் இருந்தது. இவர்கள் ‘நெசவுப் பறையர்’ என அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது செலுத்தப்பட்ட வரிக்கு ‘பறைதறி இறை’ என வழங்கப்பட்டு வந்துள்ளது.

கி.பி. 1665ம் ஆண்டின் செப்பேடுபடி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பறையர்கள் தாங்கள் அனுபவித்து வந்த வெள்ளைக் குதிரையைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு வாதாடி வந்துள்ளனர். அத்தோடு தாங்கள் அனுபவித்து வந்த பதினாறுகால் பந்தல், மூன்று தேர்கள், பதினெட்டு வகை இசைக்கருவிகள் போன்றவையும் பயன்படுத்த உரிமை வேண்டினர். இந்த உரிமைகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாமென அப்பகுதி குரும்பர்கள் எதிர்ப்புக் கிளம்பி வந்தனர். இந்தப் பறையர்கள் மொத்தம் 348 குலங்கள் இருந்தன. இவர்கள் குலங்கள் யாவும் தொழிற் பெயர்களாகவும் இருந்தன.

தங்கம் எடுப்பவர் ‘அரிப்புக்கார பறையர்கள்’, நெல் விளைவிப்பவர் ‘உழவுப் பறையரென்றும்’ நெசவு செய்பவர் ‘கோலியப் பறையரென்றும், இரும்பை உருக்குபவர் ‘கட்டிப் பறையரென்றும்’, முடித்திருத்துவோர் ‘குடிப்பறையரென்றும்’, துப்புரவு செய்பவர் ‘வேளாப் பறையரென்றும்’, வேட்டையாடுபவர் ‘அம்புப் பறையரென்றும்’, முரசு அறிவிப்பவர் ‘முரசுப் பறையரென்றும்’, நிமித்தம் சொல்லுபவர் ‘வள்ளுவப் பறையரென்றும்’, கள்ளெடுப்பவர் ‘தீப் பறையரென்றும்’, வழங்குவதோடு, ‘கொங்குப் பறையர்’ என்போர் சோழ நாட்டவரென்றும், ‘கிழக்கிந்தியப் பறையர்’ செலத்தவரென்றும், ‘பந்தல் முட்டிப் பறையர்’ பானைகளை பந்தல் அளவு உயர்த்தி வைத்துத் திருமணம் செய்தவரென்றும் பெயர் கொண்டிருந்தனர். இவ்வாறு 1891ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி பறையர்கள் என்று 348 பிரிவினரைக் குறிப்பிடுகின்றனர்.

‘பூவன் பறையன்’ என்பவன், பாசன வாய்க்கால் ஒன்றை வெட்டிக் கொடுத்து அரையண் அணுகன் என்ற பட்டப் பெயரைப் பெற்றுள்ளான். பூவன் பறையன் என்பவன் சோழ மன்னனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பூவன் வெட்டித்தந்த வாய்க்காலுக்கு பூவன் வாய்க்கால் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த இனத்தவர்களில் சிலர் சோழர், பாண்டியர்களின் படைகளில் படைவீரர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் வலங்கை மாந்தர் என அழைக்கப்பட்டுள்ளனர். முதலாம் ராசராச சோழன் காலத்தில் இம்மக்கள் அடங்கிய படைக்கு வலங்கை வெள்ளைக்கார சேனை என்று பெயர் இருந்தது. இவர்களது படைத்திறமையைக் கண்டு ஆங்கிலேயர்கள் இவர்களைக் கொண்டு ஒரு தனி ராணுவப் பிரிவை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுக்கல்லில் ‘சாக்கைப் பறையனார்’ என்ற பெயரும், மற்றொரு நடுக்கல்லில் ‘பறையன் புளியனேன்’ என்ற பெயரும் காணப்படுகிறது. இந்த வீரர்கள் நாடு காக்கவும், மாடு காக்கவும் வேண்டி தம் புகழ் நிறுத்தி மாய்ந்தனர்.
சங்க இலக்கியத்தில் ஒரு இசைக்குடியாக இடம் பெற்ற பறையர், பிற்காலத்தில் போர் வீரர்களாகவும், காவலர்களாகவும் விளங்கியுள்ளனர். கலைத் தொழிலில் ஈடுபட்ட பறையர்கள் தமிழ்நாட்டுப் புராதன குடிகள். இவர்கள் தமிழ் நாட்டில் பறையரென்றும், வட நாட்டில் மாலமாதிகரென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் பலமுள்ள கூட்டத்தினராக இருந்தனர். பறையர்களில் பல வகுப்புகள் உண்டு. (ஏற்கெனவே கூறப்பட்டுள்ள பறையர்-பெயர்கள் கீழே வருவதால் ஒரே பெயர் இருமுறை வருவதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இருவேறு ஆசிரியர்களுடைய ஆய்வை அப்படியே கொடுத்துள்ளேன்).

அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க்கட்டி, கோலியாண், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக் கட்டாதவர், வலை நாதன், இவர்களுள் கோலியன் – துணி நெய்வோன், வள்ளுவன் – பறையர்களுக்குப் புரோகிதன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொடராயன், வண்ணார வேலை செய்பவன்.

பறையர்கள் 9வது நூற்றாண்டின் பல்லவர் காலத்து உயர் பதவியில் இருந்ததாகத் தெரிகிறது.
சோழர் காலத்தில் பறையர் என்ற குலத்தைப் பற்றி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெனத் தனிச் சுடுகாடும் (இன்னும் அதே நிலைதான்) ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய குலத்தினரைப் போலவே அவர்கள் முழு சொத்துரிமை பெற்ற குடிகளாக வாழ்ந்தனர். கிராமத்தார்கள் எழுதிக் கொடுத்த ஆவணங்களில் பறையர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

சோழர் காலத்தில் தீண்டாதவர் என்றோ, சண்டாளர்கள் என்றோ இவர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் ‘புல்லுப்பறிக்கிற பறையன்’ தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். அத்துடன் புலையரும் சமூகத்தில் தாழ்ந்தவராகக் கொள்ளப்பட்டனர். இந்தக் குலத்தினருள் ‘ஊர்ப்பறையன்’ மண்டை சோமநாதன் ஏழிசை மோகப் படைச்சண்’ என்பான் ஒருவரு ராசராசன் காலத்தில் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று ஏற்றிவரத் தானம் அளித்துள்ளான். பறையடியான் ஒருவன் திருக்கழுக்குன்றம் கோயிலில் விளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்து வைத்தான். ஆனால் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் திருக்கோவலூர்ப் பகுதியில் பறையர் மிகவும் இழிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கூலி உழவர்களாகவும் கொத்தடிமைகளாகவும் திகழ்ந்த பறையர்களுள் ‘புல்லுப்பறிக்கும் பறையர்’ என்னும் புதுப்பிரிவு தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் படைகளில் உள்ள குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேண்டிய புல்லை வழங்கியவர்கள் ‘புல்லுப் பறிக்கும் பறையர்’ ஆனர். அரசர்கள் மாறினாலும், அரசுகள் மாறினாலும் புல்லுப்பறிக்கும் அந்தத் தொழிலிலிருந்து மட்டும் அம்மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

தங்கலான் பறையர் என்ற பிரிவு ஒன்று இருந்தது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பெயர். தங்கலான் பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணத்தில் மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் வீட்டுக்கு வரும் சமயம் அவனுடைய மைத்துனன் வாசலில் அவனை நிறுத்தி அவன் கால்விரலில் ஒரு மெட்டியினை அணிவிப்பான். அப்போது தனக்கு ஒரு மகள் பிறந்தால் அவளை, அவன் மகனுக்குக் கட்டி வைப்பதாக மணமகன் உறுதி கூறும்வரை அவன், மணமகன் பாதத்தைக் கிள்ளியபடி இருப்பான்.

தங்கலான் பறையர் சாதி சிறுமியர், முதன் முதல் பூப்படையும்போது நிகழ்த்தும் சடங்கில் அவளுடைய மாமன் மனைவி அல்லது அத்தை, புட்டு முடியப்பட்ட துணியினால் அவளை மொத்தியபடி அவளுக்கு ஒரு பெண் பிறக்குமானால் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைப்பதாக உறுதி கூறும்படி வேண்டுவாள்.

பார்ப்பனர்களின் உட்குழு ஒன்று தன்னை ‘மத்தியானப் பறையர்’ என அழைத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு நாளும் நடுப்பகல் ஒரு மணி நேரத்துக்கு இவர்கள் பார்ப்பனத்தன்மையை இழந்து விடுவதாகவும், அந்த ஒரு மணி நேரம் முடிந்த பின்னரே மீண்டும் இவர்கள் பார்ப்பனர்களாக மாறுவதாகவும் ஐதீகம்.

பொதுவாகவே ‘ஐயன்’ என்னும் சொல் தந்தையைக் குறிக்க பறையர் ஆளும் சொல்லாகும். (ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயா என்னும் விளிவடிவம் பாண்டி நாட்டு வெள்ளாளர், முதலியார் முதலிய பல குலத்தாரும் தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும்.
பறையருள் ‘தோட்டி’ என்ற பிரிவினர் உண்டு. இவர்கள் மேளம் அடிப்பவர்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டிகளில் பெரும்பாலோர் மேளம் அடிப்பவரே. இன்றும் இவர்களின் குடும்பம் பெரும் தொகையினராக உள்ளனர்.

கோண்டுச் சமூகத்தில் இசைக்கருவியுடன் பாடும் பர்தான்களைப் ‘பாண’ என்றழைத்தனர். ‘பாண’ என்று குறிப்பது சங்க காலத் தமிழ்ச்சமூகத்தில் காணப்பட்ட பாணர்களை நினைவுப்படுத்துகிறது. கோண்டுகளிடம் ‘தோட்டி’ என்பவரும் அண்டி வாழ்கின்றனர். இன்றைய தமிழ்ச்சமூகத்திலும் தோட்டிகள் உள்ளனர். இத்தகு பிரிவினர் இருப்பது பழம்பெரும் வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. கோண்டுகள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள் ஆவர்.

தோட்டி மலை ஒன்று இருந்துள்ளதை அறிகிறோம். கடையேழு வள்ளல்களில் ஒருவன் நள்ளி. இவன் தோட்டி மலையின் தலைவன். இது பழனி மலையின் தென்கீழ்ப் பகுதியில் உள்ளது என்பர். பழனிமலையில் பழையர் என்பவர்கள் வாழ்கின்றனர். இந்த பழையருக்கும் பறையருக்கும் தொடர்பு உண்டு. பறையர்களின் ஒரு பிரிவான தோட்டியின் பெயராலே மேற்கண்ட தோட்டி மலை இருந்ததாகக் கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வெட்டியான் முதல் ஹரிஜன் வரை

imagesபறையர்கள் / அத்தியாயம் 19

இனி வெட்டியான் என்று அழைக்கப்படும் பிரிவினரைப் பற்றிப் பார்ப்போம்.
வெட்டியான்: உறவினர் அனைவரும் தங்கள் பற்றை உடல் அளவில் துறந்து உறவை வெட்டிவிடும் வேளையில் பிணத்துக்கும் தனக்கும் இடையே வெட்ட முடியாத பணிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்பவன்தான் வெட்டியான். பிணம் எரிவதற்கான குறுகிய நேரம்தான் இவனது பணிக்காலம் என்றாலும் இப்பணியின் பொழுது இவன் சற்றும் விலகிவர முடியாது.

வெட்டு, வெட்டி என்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்தது வெட்டியான் என்ற சொல். ‘வெட்டி என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு’ (ந.சி. கந்தையாப்பிள்ளை. செந்தமிழ் அகராதி. 1957) எனப்பல அகராதிகளும் பொருள் தருகின்றன. இதிலிருந்து பிறந்த வெட்டியான் என்பதற்கு ‘கிராம ஊழியர், பிணம் எரிப்பவர்’ எனப் பொருள் அறியப்படுகின்றது.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)என்னும் குறள், யாக்கை நிலையாமையைக் குறிப்பிடுகின்றது. நாம் உயிருடன் வாழும் காலத்தில் நற்பண்புகளிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தவே பல நிலையாமைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகின்றனர். உடம்பினின்று உயிர் பிரிந்து விட்டால் இவ்வுடம்பால் யாதொரு பயனுமில்லை. எனவே வெட்டியான் அல்லது வீணான உடல் என்றாகி விடுகின்றது. இவ்வாறாகிவிட்ட உடலைப் பொறுமையுடன் பொறுப்புணர்வுடன் போதிய நேரம் எடுத்துக் கொண்டு எரிக்கின்றதால் தான், இத்தொழில் புரிவோனுக்கு ‘வெட்டியான்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது போலும். எனவே இத்தொழிலை வெட்டித்தொழில் அதாவது அழிந்த ஒன்றை மேலும் அழிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் வெட்டி முயற்சி எனக் கூறலாம்.

வெட்டியான்: ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும். வீணான-பயனற்ற வேலை செய்பவர்களை இன்று கூட ‘வெட்டி வேலை செய்பவர்’ என்றுதான் சொல்கிறோம். மன்னர்கள் காலத்தில் இந்த வேலையினை செய்யாவிட்டால் தண்டனை உண்டு; செய்தால் கூலி இல்லை. கோயில்கள் கூட இப்படித்தான் கட்டப்பட்டிருக்கக் கூடும். காவிரிக் கரையை உயர்த்துவதற்கு இத்தகைய வேலையே வாங்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் வேலை செய்யாதவர்களை ‘சிவத் தூரோகி’ என்று கூறி தண்டனைகள் தரப்பட்டிருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று; இருந்த நிலங்களின் உழைக்க வேண்டும். ஆனால் கூலி இருக்காது. கடவுளிடத்தில் போய் பேரம் பேச முடியாது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியர்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தர மாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும். இது ஓலை ஊழியம்.

உப்பு ஊழியம் என்பது தாமரைக் குளத்தில் எடுக்கப்பட்ட உப்பை நாகர்கோவிலில் உள்ள  நாகராஜா கோயிலுக்கும், கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலுக்கும் கொண்டு போய் கொடுப்பது. இந்த மாதிரியான ஊழியங்களும், வெட்டி வேலைகளும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளும், பொருளாதார சுரண்டல்களும் மன்னராட்சியில் இருந்தன. அங்கு ஜனநாயகம் கிடையாது.

சோழர் காலத்தில் இறுக்கமாகி, விஜய நகர காலத்தில் ‘தீண்டாமை’ முற்றுப் பெற்றிருக்கிறது. சோழர்காலத்தில் பார்ப்பனர் – வேளாளர் கூட்டாக இருந்து வேலை செய்திருக்கிறார்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வது.

மேற்கண்ட வேலைகளை செய்பவர்கள் பொதுவாக வெட்டியான் என்றழைக்கப்பட்டனர் போலும்.

0

பறையர்களை ‘காலனிக்காரர்’ என்ற சொல்லாலும் குறிக்கப்படுகின்றனர். இப்படி ஆதிக்க சமூகத்தினர் குறிப்பதின் பொருள் என்ன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கும் அது விளங்காதென்பது எங்களுக்கும் விளங்கும்.

நகர நாகரிக வளர்ச்சிமிக்க இக்காலத்தில் பல இடங்களில் புதிய புதிய வாழ்விடத் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் காலனி என்னும் சொல்லால் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய இடங்களைச் சுட்டுவதற்கு நாம் ‘குடியிருப்பு’ எனும் சொல்லைப் படைத்து வழங்கத் தொடங்கியிருக்கிறோம். தனக்கென தனி அமைப்புகளைப் பெற்றிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.

சுந்தரர் காலத்திலோ அதற்கு (கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்) முன்னோ தமிழ்நாட்டில் வலங்கையர் (முற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும், இடங்கையர் (பிற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும் அணி திரண்டு உரிமைக் கோரிப் போரிட்டனர் என்று பேராசிரியர் நா.வானமாமலை தமது நூலில் (தமிழர் பண்பாடும் வரலாறும்) கூறியுள்ளார்.

நிலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள்; வெண்கவசி வீச்சு, சிவிகை, குதிரை முதலிய ஊர்தி; மேளவகை, தாரை வாங்க முதலிய ஊதிகள்; வல்லவாட்டி, செருப்பு ஆகியவை பற்றிக் குலங்களுக்கிடையே பிணக்கும் சச்சரவுகள் ஏற்பட்டதனால் கரிகாலன் என்னும் பெயர் கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அந்த வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமைந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம்.
சோழராட்சிக்குப் பின் பல்வேறு அரசுகள் ஏற்பட்டதனாலும் பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும் ஆங்கிலேயர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை இடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்தது. 1809ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பக்கவ், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத் தீர்ப்பாளர் சார்சு கோல்மன்  துரை அவ்வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டம் செய்தார். அவ்வகையில் பறையர்கள் வலங்கைக் குலங்களில் இடம் பெற்றிருந்தனர்.

0

நேர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிசனங்கள்’ என்று 1931ல் காந்தியடிகள் பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்தியடிகள் இவ்வாறு விளக்கம் அளித்தார். ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் குலத்தவர்களை அந்நியஜாஸ்’ என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்து ‘பங்கிகள்’, ‘பறையர்கள்’ பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது’ ஆகவே ‘அந்நியஜாஸ்’ (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

சுவாமி சிரத்தானந்தர்தான் முதன் முதலில் ‘தலித்’ என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால், தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் வரை எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள் என்று ‘நவஜீவன்’ (07.06.1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர். ராஜ் கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ‘ஹரிஜன்’ என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில் ‘பல கிராமங்களில் ஏற்கனவே ‘ஹரிஜனா’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும் மிகச்சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் – கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்’ என விளக்கமாக எழுதியிருந்தார்.

ஆகவே, ‘ஹரிஜன்’ என்ற சொல் புதிதல்ல, குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெவே புனையப்பட்டது. தவிர ‘சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே’ என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது’ (அரிசன் 07.06.1931).

1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில் ‘ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா’ என்பதே எனது பிரார்த்தனை. நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது’ என்று அறிவுறுத்தினார். (தி ஹிந்து 04.02.1946).

‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற தலைப்பில் தமது 14.04.1946 தேதியிட்ட ‘அரிஜன்’ வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு எழுதியிருக்கிறார். ‘ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும் தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்று வரை மிக மிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

ஒவ்வொரு இந்துவும் உயர்வு-தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக் கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழதைகளாகி விடுவோம். அதுவே ‘ஹரிஜன்’ என்பதன் மெய்ப்பொருள்.

காந்தியாரின் இக் கருத்தை ஏற்று ‘அரிஜன்’ ஆக விருப்பமுள்ளோர் இம் மனித கூட்டத்தில் யாரேனும் உண்டா? சோத்துக்கே வக்கில்லை என்றாலும் கூட அவனுடைய சொந்த சாதியை விட எந்த ஆதிக்கச் சாதியாவது தயாரா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஹரிஜன்

15245217_2பறையர்கள் / அத்தியாயம் 20

1936ல் ‘ஏலா’ என்ற இடத்தில் ஷெட்யூல்டு சாதியினர் மாநாடு அம்பேத்கர் தலைமையில் நடந்தது. இதில் தீண்டாமைக்கு எதிராக மதம் மாறுங்கள் என்றும், தான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்றும் அம்பேத்கர் கூறினார். இதனைத் தடுக்க மகாத்மா காந்தி சில உத்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று தான் 1938ல் ‘ஹரிஜன்’ என்ற சொல்லில் ஷெட்யூல்டு சாதியினரை அழைக்க வேண்டுமென்று சொல்லியது.

இச்சொல் கூடாதென்று அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். அரிசன் என்பதற்கு ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று பொருள். அன்றைய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த ஜெகஜீவன்ராமும் எதிர்த்தார்.

‘ ஹரிஜன் ’ என்ற சொல்லை நாங்கள் ஏற்க முடியாது. இது ஷெட்யூல்டு சாதி மக்களையும், மற்ற இந்துக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்கவே செய்யும். அதனால் நன்மைக்குப் பதில் தீமையே விளையும் என்றும் சொன்னார். இதற்காக ஜெகஜீவன்ராமை கட்சியைவிட்டு விலகுமாறு நோட்டீசு அனுப்பப்பட்டது. அரிசன் என்ற சொல்லுக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் நீடித்தபோதும் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
மராட்டியம், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் ‘ ஹரிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளன.

இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த தீண்டப்படாதார் பல பெயர்களில் தீண்டப்படாதாராக வாழ்ந்தாலும் காந்தி அவர்களுக்குப் பொதுவாக அளித்த ‘ஹரிஜன்’ என்ற புதுப்பெயர் இவர்களைத் தனியே ஒதுக்கிவைத்தது. அனைவராலும் எளிதாகக் கண்டறியச் செய்தது. தொடாமல் ஒதுக்கி வைக்கவும், புறந்தள்ளவும், அணுகவிடாமல் பார்க்காமல் தடுத்து நிறுத்தவும், மக்களோடு கலந்து வாழவிடாமலும் சுலபமாகத் தடுத்து வந்தது.
ஹரிஜனர் வழக்காறு:

1. அனுப்பர்களின் சாவுச் சடங்கில் கோடி வெள்ளிப் போடுதல் (பிணத்தின் மீது துணிப் போர்த்துதல்) உரிமையைக் கன்னட அரிசனங்கள் பெற்றுள்ளனர்.

2. தொட்டிய நாயக்கர்களும் தெலுங்கு ஹரிஜனங்களும் உடன் பிறந்தவர்கள். நாயக்கச் சகோதரர் இருவருள் இளையவர் கன்றுக்குட்டியைச் சமைத்து உண்டதால் ஹரிஜன் என விலக்கப்பட்டான்.

3. ஈஸ்வரன் களத்துமேட்டில் வேலை செய்தபோது நெற்றி வியர்வையைத் தென்னைமரத்தின் மீது தெளிக்க, அம்மரத்திலிருந்து ஹரிஜனர் வெளிப்பட்டனர்.

‘சமூக அந்தஸ்து கிடைக்காத நிலையில் ஹரிஜனங்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தைத் தராது நமது ஜனநாயகத்தின் கூரையை வேய்ந்து கொண்டே போவது வீண்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு காந்தி தன் வாழ்நாளின் பிற்காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்’ என்று காந்திஜியினுடைய சீடனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ஸ்ரீநாராயண பிள்ளை குறிப்பிடுகிறார். அப்படியானால் காந்தியடிகள் தன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஹரிஜன்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

0

பறையரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுவர். ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று பாடினார் ஔவையார். வறுமைக்கு ஒப்பான கொடுமை உடையது உலகில் என்றுதான் உள்ளது. அதுதான் வறுமை என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை உணர்ந்த இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் பல உணவைச் சேகரித்து வாழும் நிலையிலிலிருந்து மேற்கொண்டு முன்னேறவில்லை.

மனிதர்களின் இருப்பு, இடம், காலமென்ற இருபெரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. எனவே அதிகாரத்தை கட்டமைக்கிறவர்கள், தாங்கள் அதிகாரம் செலுத்துபவர்களின் நடமாடும் இடத்தை, காலத்தை வரையறைக்குள் கொண்டு வருவதில் கவனமாகச் செயல்படுகின்றனர். இந்தியச் சாதிச் சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நடமாடும் வெளியை வரையறுப்பவர்கள் அதிகாரம் செலுத்தும் ஆதிக்கச் சாதியினரே.

ஒடுக்குமுறை அரசியலின் மற்றொரு அதிகாரத் தளம் பண்பாட்டுத் தளமாகும். ஒடுக்குகின்ற தன்னுடைய வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உயர்ந்ததாகவும், ஒடுக்கப்படுகின்ற மக்களின் பழக்க வழக்கங்களைத் தாழ்ந்ததாகவும் புனைந்து அம்மக்களுக்கும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை உளவியல் ரீதியாகவே வடிவமைத்து விடுவதில் வெற்றி அடைந்து விடுகிறது.

பொருள் ஆதாரத்தைப் பறிப்பது, வேலைப்பிரிவினை அமைப்பது, நடமாடும் வெளியை வரையறுப்பது, மொழியைப் பிடுங்குவது, கல்வியைப் பறிப்பது முதலிய பல தந்திரங்களை ஆதிக்கச் சாதியினர் கையாண்டுள்ளனர். அதனால் தாழ்த்தி வைக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

‘இந்தியர்களே அறியாமை இருளில் மூழ்கியுள்ள, கல்வி அறிவு இல்லாத அந்தத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை மறந்து விடாதீர்கள்! அவர்கள் என் சகோதரர்கள்’ என்றார் விவேகானந்தர். அவர் போதனை ஏற்கப்பட்டுள்ளதா?

0

பாரசீக எல்லையிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் வரை இந்திய சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த மாபெரும் முதற்பெரும் மன்னர் சந்திரகுபதர். இவர் தாய்வழியில் தாழ்த்தப்பட்டவர் என்று சில நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கருத்துப்படி, ராஜவம்சத்தில் பிறந்த சந்திரகுப்தரின் தந்தை ‘மௌரா’ என்னும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் காதல் வயப்பட, அவர்களுக்குப் பிறந்தவர்தான் சந்திரகுப்தர் என்றும், ‘மௌரா’ என்கிற பெயரிலிருந்துதான் ‘மௌரிய’ என்பது வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

சந்திரகுப்தரும், நந்த மன்னர்களும் பங்காளிகள் என்பதால் இவர்களுக்கிடையே நடந்த பங்காளிச் சண்டையால் நந்தர்களின் ஆட்சியை அழித்து மௌரியர் ஆட்சி தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒரு காலகட்டம்தான் சுதந்தரமும் பெருமையும் புகழும் கொண்டதாக இருக்கிறது. அது மெரியப் பேரரசின் காலமே. மற்ற காலங்களில் எல்லாம் தேசம் தோல்வியில் துவண்டு கிடந்தது. அது ஏன்? மௌரியர் காலத்தில் நான்கு வர்ண அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மக்களில் பெரும்பான்மையினரான சூத்திரர்கள் அப்பொழுதுதான் தங்களுக்குரிய நிலையை எட்டினார்கள் – நாட்டின் ஆட்சியாளர் ஆனார்கள். இந்த நாட்டின் பெரும்பான்மையினரான மக்களின் அவல நிலைக்குக் காரணமான நால்வர்ண அமைப்பு மேலோங்கிய காலம் – தோல்வியும் அறியாமை இருளும் மேலோங்கிய காலம்.

சங்ககாலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வியைப் பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு திருக்குறளில் சேர்க்கப்பட்டுள்ளன (குறள் 40-43 அதிகாரங்கள்). குற்றமறக் கற்க வேண்டுமென்றும், கற்றபின் தாம் கற்ற வழியே நடக்க வேண்டும் என்றும், கல்வி கற்க கற்க அறிவு சுரந்துகொண்டே போகும் என்றும், கல்வி கற்ற ஒருவனுக்கு உலகம் முழுவதும் தன் சொந்த ஊராகவே தோன்றும் என்றும், கல்விச் செல்வம் ஒன்றே அழியாச் செல்வமாம் என்றும், கல்லாதவன் மேனியழகு ஒர் பொம்மையின் அழகுக்கு நிகராம் என்றும், கல்வியை விடக் கேள்வியே மேம்பட்டதென்றும், யார் யார் என்ன சொன்னாலும், அதை ஆராய்ந்து அதனுள் காணக்கூடிய உண்மையை ஓர்வதே நல்லறிவு என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின் உரிமையாக இருந்ததில்லை. எக்குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், வறியோரும், மன்னரும், எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும் கல்வியைத் தேடிப் பெற்றனர்.  பல குலத்தைச் சார்ந்த புலவர்கள் தமிழகமெங்கும் உலவிவந்தனர். அதன்பின் வேத நெறியைப் பின்பற்றிய பார்ப்பனர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள கையாண்ட மிகக் கடுமையான வழிகளில் ஒன்றுதான் கல்வியைத் தமது தனியுடமையாக்க முயன்ற முயற்சியாகும். பார்ப்பனர்களின் இம்முயற்சியை மனிதநேயம் கொண்ட அனைவரும் கண்டித்துள்ளனர் என்பதும் வரலாற்று உண்மையாகும்.

புத்தருக்கும் லோகித்யன் என்ற பார்ப்பனுக்கும் நடந்த உரையாடல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தை வற்புறுத்தியும், பரப்பியும் வந்த லோகித்யனை வாதத்தில் வென்றதுடன், கல்வி மக்களின் பொதுச் சொத்து என்றும் அப்பொதுச்சொத்தைத் தனதாக்கிக் கொள்பவன் கள்வனாகத்தான் இருக்க முடியும் என்றும் விளக்கி அவனை ஏற்கும்படிச் செய்தார் புத்தர்.

இந்தியாவில் நெடிய வரலாற்றில் பார்ப்பனீயத்தை வெளிப்படையாகப் புறக்கணித்த அரசர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், 20ம் நூற்றாண்டில் கோல்காப்பூர் அரசராக விளங்கியவரும் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமாகிய சாகு மகாராசாவும் ஆவர். கல்வி கற்பதிலும், அரச பொறுப்புக்களை வழங்குவதிலும், செல்வத்தைச் சேமிப்பதிலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விதிகளை மீறி, தடைகளை உடைத்துச் செயல்பட்ட காரணத்தால் கண்ணகியைச் சாக்காக வைத்துப் பார்ப்பனர்கள் மதுரையை எரித்தனர். நெருப்புக் கடவுள் பார்ப்பனக் கோலத்தில் வந்து மதுரையை எரித்தது என்பதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்?

பௌத்தர்களின் நாலந்தர் பல்கலைக்கழகத்தைப் பல்லாயிரம் மாணவர்கள் தங்கிப் படித்த அக்கல்வி நிலையத்தை இரவோடு இரவாகப் பார்ப்பனர்கள் தீயிட்டு கொளுத்தியும், மதுரையில் சமணர்களோடு அனல்வாதமும், புனல்வாதமும் நடத்தி அவர்களின் நூல்களை அழித்து பிறர் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த முயன்ற செய்தியை வரலாற்றில் நாம் அறிகின்றோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பறையரும் தொன்மும்

cowபறையர்கள் / அத்தியாயம் 21

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெற்றுத்தர அந்தந்த காலகட்டங்களில் பலர் போராடியிருக்கின்றனர். அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஜோதிபா புலே அவர்கள். அவர் 1851ம் ஆண்டு பெண்களுக்காகவும், 1852ல் தீண்டப்படாத மக்களுக்காகவும் பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கும், தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதன் முதலில் இந்தியாவில் ‘மகாத்மா’ என்ற பட்டம் ஜோதிபா புலேவுக்குத்தான் கொடுக்கப்பட்டது.

ஜோதிபா புலேயின் கருத்தை நடைமுறைப்படுத்தி இந்தியாவில் 1902ல் தன்னுடைய கோலாப்பூர் சமஸ்தானத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்தவர்தான் சாகு மகராஜ் என்று சொல்லக்கூடிய கோலாப்பூர் அரசர். புத்தருடைய கருத்தை எப்படி அசோகர் நடைமுறைப்படுத்தினாரோ அதுபோல ஜோதிபா புலேயின் தத்துவத்தை மராட்டிய ஆட்சியிலே செலுத்திய பெருமை ‘சத்ரபதி’ என்று அழைக்கப்பட்ட சாகுமகராஜ் அவர்களையே சாரும்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதார் சமூக அந்தஸ்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தீண்டப்படாதவர்களுக்காக கிறிஸ்தவர்கள் பல கல்விக் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், அநாதை இல்லங்களையும், நல்வாழ்வுத் திட்டங்களையும், திருச்சபைகளையும் தென் தமிழகத்தில் உருவாக்கினர். இதன் விளைவாகத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து தப்பித்து வாழ விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதத்துக்குக் குடிபெயர்ந்தனர். இதனால் ஒரு சில தீண்டாதாரின் பொருளாதார, கல்வி, சமூக நிலை உயர்ந்தது. ஆங்கில அரசு பிறப்பித்த கல்விச் சட்டங்களும், திட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்து வந்த கொடுமைகள் குறைய வழிவகுத்தன.

தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டப்படாத பிரிவினருக்கு கிறிஸ்தவ மதத்தில் விருப்பம் இருந்ததோ இல்லையோ, உயர்குடி-தமிழர் கொடுத்த இடையூறு மற்றும் அநீதிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வறுமையிலிருந்து விடுபடவும், தாங்கள் உயிர்வாழவும், மானத்தைக் காத்துக்கொள்ளவும், தங்களது சந்ததிகள் இந்த நாட்டில் பாதுகாப்போடு வாழவும், கல்வி கற்கவும், பல தீண்டப்படாதார் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். பறையரில் பெரும்பாலோர் இப்படிக் கிறிஸ்தவர்களாக மாறினர்.

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கொடுக்கக்கூடாது. அவர்கள் எல்லோரும் தொடக்கப்பள்ளியோடு நிற்க வேண்டும்’ என்று பால கங்காதர திலகர் கூறியதாக கி.வீரமணி (சாவர்க்கர்-காந்தியார்-கோட்சே-ஆர்.எஸ்.எஸ்) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

0

பறையர் பற்றிய சில தொன்மங்களை இனி பார்ப்போம்.

வழக்காறு 1 : அண்ணன், தம்பி ஆகிய இரண்டு பிராமண சகோதரர்கள் இருந்தனர். கோயிலுக்குப் பூசை செய்ய அண்ணன் தினமும் கோயிலுக்குச் செல்வார். பொங்கலிட்டுப் படைக்கும் காலத்தில் அங்கு வந்த இந்திரலோகத்துப் (தேவலோகம், மேலுலகம்) பசு ஒன்று வந்து நிற்க அண்ணன் பசுவிலிருந்து தினமும் ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்து அரிசிப் பொங்கலுடன் ரத்தப் படையல் இடுவது வழக்கம். படையல் முடிந்ததும் பசுவும் அங்கிருந்து போய்விடும்.

அண்ணன் வீட்டுக்குத் திரும்பி வரும்போது மனைவிக்கும் தம்பிக்கும் பொங்கல் படையல் கொண்டு வருவார். தினமும் படையலின்போது பசு வந்து செல்வதைக் கவனித்த ஊரார் தம்பியிடம் அண்ணன் மாட்டுக்கறி உணவிட்டு, உங்களுக்குப் பொங்கல் சோறு மட்டும் கொண்டு வருகிறார் என்று சீண்டிவிட்டனர். தம்பியும் இத்தகவலை கர்ப்பமாயிருந்த அண்ணியிடம் கூறினான். அவள் தன் கணவனிடம் கர்ப்பமாயுள்ள எனக்குச் சோறு, உனக்கு மட்டும் மாட்டுக்கறியா? கறி கொண்டு வராவிட்டால் நான் இறந்துவிடுவேன் எனக் கூறினாள். மாட்டுக்கறி உண்னாத அண்ணன், மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டு பசுவிலிருந்து ஒரு சிறு சதையை வெட்டி கறியாக்கிக் கொண்டு வந்தான். பசு இறந்து விட்டது. இவ்வளவையும் மறைந்திருந்து பார்த்த தம்பி கறியை உண்ண மறுத்து விட்டான்.

ஊரார் பஞ்சாயத்துக் கூட்டி ‘நீ பசுவைக் கொன்று விட்டாய் அதை அப்புறப்படுத்துவதுடன் அதனை நீயே உண்ண வேண்டும். மாடு வெட்டிய பயலாக மாறியதால் நீ தீண்டத்தகாதவன், ஊரை விட்டு வெளியேறு’ எனத் தீர்ப்புக் கூறினார்.

அண்ணன் ஊரைவிட்டுக் கிளம்பும்போது ஒரு பெரியவர் ‘எங்கே போகிறாய் சாமி, இனிக் கோயிலைப் பார்ப்பது யார்’ எனக் கேட்க அண்னன் ‘கோயில் வேலையைத் தம்பி பார்ப்பான்’ எனக் கூறினான்.

அண்ணனும் மனைவியும் வேறோர் ஊருக்கு வந்தவுடன் மக்கள் ஒரு குடிசையை ஒதுக்கிக் கொடுத்து ஊராரிடம் உணவு பெற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றனர். பஞ்சாயத்தார் கூடி அண்ணனுக்கு ஊர்க்காவல் செய்யும் வேலையையும் பஞ்சாயத்துக்கு மக்களை அழைக்கும் வேலையையும் கொடுத்தனர். அழைக்கும் வேலையை எளிமையாக்க அண்ணன் விலங்குத் தோலால் தப்பு செய்து பறையடித்து அழைக்க அன்றிலிருந்து பறையன் என அண்ணனை அழைத்தனர். இறந்த விலங்குகளையும் எடுக்கச் சொன்னார்கள். தீட்டுள்ள இவ்வேலையைச் செய்தமையால் அண்ணனை ஒதுக்கி வைத்தார்கள். (ராபர்ட் டெலீஜ் 1993:538)

வழக்காறு 2: மாரியம்மன் கோயிலுக்குச் சகோதரர்கள் இருவர் பூசாரியாக இருந்தனர். ஒரு நாள் அண்ணன் பேசா விரதமிருக்க முடிவு செய்து மக்களிடம் கோயில் வேலைகளை ‘என் தம்பி பார்ப்பான்’ என்று சொல்ல அன்றிலிருந்து அண்ணன் மேளமடிப்பவராகவும் தம்பி பார்ப்பனப் பூசாரியாகவும் மாறினர்.

வழக்காறு 3: இரண்டு ஏழைச் சகோதரர்கள் சாமி கும்பிட கோயிலுக்குச் சென்றனர். அங்கு இறந்து கிடந்த பசுவை அகற்றுமாறு கடவுள் ஆணையிட, அண்ணன், ‘என் தம்பி பார்ப்பான்’ (அதை என் தம்பி செய்வான்) என்றான். கடவுள் அக்கூற்றை அவன் தம்பி ‘பார்ப்பான்’ (பார்ப்பனன்) என்று புரிந்து கொள்ள அன்றிலிருந்து அண்ணன் பறையனாகவும், தம்பி பார்ப்பானாகவும் அவர்களிடமிருந்து பிர சாதிகளும் தோன்றின.

வழக்காறு 4: ஒரு காலத்தில் பறையர் உட்பட கிராமத்திலிருந்த எல்லாச் சாதியினரும் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார்கள். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிவன் அதிசயமாகத் தோன்றி முதலில் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தருவதாகக் கூறினான். இதற்கு ‘நான் கொடுக்கும் பூணூலை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்’ எனச் சிவன் கூறினார். அனைவரும் போட்டுக் கொண்டனர். பின்னர் வரிசையில் நின்று ஒவ்வொருவராகச் சிவனிடமிருந்து பரிசைப் பெற்றுத் தங்கள் உடைகளில் முடிச்சு போட்டு பத்திரமாக எடுத்துச் சென்றனர். ஆனால் பறையர் தாம் கொண்டு வந்த கூம்பு வடிவ மீன் பிடிக்கும் கூடையானது இருபக்கமும் வாயுடையது இதை மறந்துவிட்டுப் பரிசைப் பெற்றதால் வீட்டிற்குச் செல்லும்போது பரிசு விழுந்துவிட்டது. தன் அறிவின்மையை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டான். (ஜீர்ஃபெல்ட் மற்றும் லிண்ட்பெர்க் 1975: 222-3)

வழக்காறு 5: உலகம் ஏற்பட்ட போது ஒன்றுமேயில்லை. உயிரினங்களும் இல்லை. ஆதி என்ற பெண் மட்டும் தோன்ற அவள் தனக்குத் துணை வேண்டும் என அக்னியாகம் நடத்தினாள். நெருப்பிலிருந்து அழகான மனிதன் தோன்றினான். ஆதி அவனை மணந்தாள். மணந்தவன் யாருமில்லை; ஈஸ்வரனே. இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். மண்ணில் மனித இனத்தவர்களை உண்டாக்கிய வேலை முடிந்து விட்டது. சாதியைத் தோற்றுவிக்கும் வேலை மட்டும் பாக்கி உள்ளது. அதையும் முடிக்க வேண்டும் என நான்கு குழந்தைகளையும் நான்கு வருணங்களாகப் படைத்தார். அதில் ஒருவரே பறையர்/பள்ளர்.

வழக்காறு 6: மற்றொரு வழக்குப்படி வெள்ளாளர்களுக்குத் தொழில் செய்வதற்குத்தேவேந்திரனால் படைக்கப்பட்டவர்கள்.

வழக்காறு 7: சூத்திரருக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்பது ஒரு வழக்கு.

வழக்காறு 8: கலா சாம்பவன் என்ற பறையருக்கு மூதாதையராக இருந்த ஒரு புரோகிதன், சிவனுக்குப் படைக்க இருந்த மாட்டிறைச்சியின் ஒரு பகுதியை மறைந்து வைத்து தனது கர்ப்பவதி மனைவிக்குக் கொடுக்க இருந்தாள். இதை அறிந்த சிவன், அவனை இறைச்சியை மறைத்ததால் ‘பறையன்’ என்று இகழ்ந்து கூறி அவனைத் தாழ்த்திவிட்டார். அவர் அர்ச்சகர் பணியிலிருந்து நீக்கப்பட்டு அவரது தம்பிக்கு அப்பணி அளிக்கப்பட்டது. ‘மறையன்’ என்று அழைக்கப்பட்ட பெயர் நாளடைவில் மருவி ‘பறையன்’ என வந்தது என்ற ஒரு மரபுக்கதை உண்டு. பறையர்களும், பார்ப்பனர்களும் உடன் பிறவா சகோதரர்கள் என்று எப்.ஆர். ஹெமிங்வே திருச்சி மாவட்டம் பறையர்கள் பற்றிய குறிப்பாக எழுதியுள்ளார். இதன் காரணமாகவே ‘பறையர்கள்’ தங்களது திருமணக் காலத்திலும், நீத்தார் சடங்குகளிலும் இன்றும் பூணூல் தரித்துக் கொண்டு சடங்குகளைச் செய்து வருகிறார்கள்.

வழக்காறு 9: மலபார் பகுதியில் பறையர்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட மரபு முறை வளர்ந்து வந்துள்ளது. அதன்படி அவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினரென்றும், இவர்களைச் சிலர் மாட்டிறைச்சி தின்னச் செய்து சமுதாயப் பழக்க வழக்கங்களை மீறியவர்களென்று பெயர் கொடுத்துள்ளனர். இந்த முறையில் இவர்கள் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

வழக்காறு 10: பிராமணரும், பறையரும் ஒரு காலத்தில் பங்காளிகளாக இருந்ததாகத் தெரிகிறது. மூதாதையர்கள் சொத்தை இவர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர். மாட்டிறைச்சியை உண்டதற்காக இன்றைய பறையர் என்ற பிரிவினர் பிராமணரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

வழக்காறு 11: பார்ப்பானின் தலையோடு கூடிய மறையர் உடலில் தான் மாரியம்மன் இருப்பதாக ஒரு கதை கூறப்படுகிறது.

வழக்காறு 12: நந்தர் இனத்தவரின் ஒரு பிரிவினர் சாம்பான் என்று அழைக்கப்பட்டுகின்றனர். ஏனெனில் புராணப்படி இறைவன் நாராயணனுக்கும் படைத்தளபதியாக இருந்தவர் ‘சாம்பான்’ என்பவரே. இவரே நாராயணனுக்குத் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். சாம்புவான் என்பவர் புராணப்படி பிரம்மாவின் நேரடி மகனாக இருந்திருக்கிறார். ஆனால், பிராமணர்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்று புராணம் கூறுகிறது. எனவே சாம்பவான் வழிவந்த அதிதிராவிடர்கள், பார்ப்பனர்களை விட உயர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

வழக்காறு 13: கேரளாவில் அடித்தளச் சாதியின் தொன்மமானது, பறையர்களை மூத்த பிராமணன் என்று கூறுகிறது.

வழக்காறு 14: கேரள நாயாடிகள் ‘ஹல்லே மக்களு’ (பூர்வீக மகன்கள்) என்று, அவர்களைப் பிராமணரோடு தொடர்புபடுத்துகிறது.

வழக்காறு 15: ராபர்ட் டெலீஜ், களப்பணி செய்த ‘வாழ்கிற மாணிக்கம்’ (புனை பெயர் கொண்ட இராமநாதபுரக் கிராமம்) கிராமத்தின் பிராமணர்கள் பறையருடனான உறவை அங்கீகரிக்கிறார்கள் என்றும், திருமணத்தின் போது அண்ணன் வரிசையாக வெற்றிலைப்பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சடங்கு ரீதியாக அவர்களுக்குக் கொடுப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

வழக்காறு 16: பிராமணர்களுக்கும், பறையர்களுக்கும் உள்ள தொடர்பு பல வழக்காறுகளாக மக்களிடம் வழங்கி வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சிறுவர்கள் பனம்பழம் தின்னும்போது அதன் முனையைப் ‘பார்ப்பான் முனை’ என்றும் மற்றொரு முனையைப் ‘பறையன் முனை’ என்றும் கேலி செய்வதுண்டு. இப்பழம் பற்றிய குறியீடு இரு சாதியரும் ஒரு தொழிற்களத்தில் இருந்ததைக் குறிப்பதாகும்.

வழக்காறு 17: திருவாரூர் கோயில் விழாவின் போது பறையர் ஒருவர் யானை மீதமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது. பார்ப்பனரையும், பறையரையும் தொடர்புபடுத்தும் கதையும் நடைமுறையும் இக்கோவிலில் சில ஆண்டுகள் முன்பு வரை வழக்கில் இருந்துள்ளது.
ஒரு நாள் திருவாரூர்க் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அதே வேள்வியின் பயனாக சிவபெருமான், ஒரு பறை மகன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வேள்விக் கூட்டத்திற்குள் வந்து விட்டார். வந்தவர் சிவபெருமான் என்பதை உணராத பார்ப்பனர் ‘பறையன் உள்ளே வந்துவிட்டான், யாகம் தீட்டுப்பட்டு விட்டது என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான் ‘நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்துவிட்டார்.

சாபத்திலிருந்து விமோசனம் ஆகுமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இறங்கிய சிவபெருமான் நிரந்தரமாகப் பறையனாவதற்குப் பதில் நாள் தோறும் நண்பகல் ‘முதல் ஒரு நாழிகை நேரம்’ மட்டும் பறையனாய் இருப்பீர்களாக என்று சாப விமோசனம் தந்தார். அதன்படியே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் நண்பகலில் (மத்தியானம்) ஒரு நாழிகை நேரம் பறையர்களாகிவிடுகிறார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது. பறையனானவர் மீண்டும் பார்ப்பனராக வேண்டுமென்றால் தீட்டுக் கழிக்க வேண்டும். எனவே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒரு முறை குளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கமும் அண்மைக் காலம் வரை நீடித்திருக்கிறது.
வழக்காறு 18: ஔவையார் வளர்த்த மூன்று பறையர் பெண்கள் திருக்கோவிலூர் மன்னனை மணந்து அவர்கள் வழிவந்தோரே உடையார் என்று தொன்மம் கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆதி திராவிடர்

imagesபறையர்கள் / அத்தியாயம் 22

இப்போது நாம் பார்த்த பறையர் தொன்மங்களில் பறையர் அண்ணனாகவும், பிராமணர் தம்பியாகவும் உள்ளனர். இந்தத் தொன்மத்தின்படி அண்ணன் தம்பி என்ற வயது வேறுபாடு தந்தை வழிச் சமூக அமைப்பில் மூத்தவர் தந்தையின் இறப்புக்குப்பின் குடும்பப் பொறுப்பு வாரிசுரிமை பெறுதல் போன்றவற்றால் அதிக அதிகாரம் பெற்றவராக மாறுகிறார். ஆனால் இறந்த மாட்டை அப்புறப்படுத்தும் போதும், மௌன விரதம் இருக்க முடிவு செய்யும்போதும் ‘என் தம்பி பார்ப்பான்’ என்னும் கட்டம் வரும்போது அண்ணன் தகுதியிழந்து புறச்சாதியாகவும், தம்பி பிராமணராகவும் மாறுகின்றனர்.

தொன்மத்தின் கதைக் கூறுகளைக் கவனிக்கும் போது அண்ணன் நேர்மையாகவும், கடமை உணர்வோடும், பொறுப்பு மிக்கராகவும், நல்ல கணவராகவும் உள்ளார். இக்கட்டான சோதனை வந்தபோது ‘என் தம்பி பார்ப்பான்’ என ஊரை விட்டு வெளியேறுகிறார். இத்தொன்மத்தின் இன்னொரு அடிக்கருத்து மிகவும் முக்கியமானதாகும். பிராமணர் முதற்கொண்டு பல உயர்சாதிகளின் தொன்மங்கள் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன அல்லது விண்ணுலகு நிகழ்ச்சியோடு தொடர்பு கொள்பனவாக இருக்கின்றன. ஆனால் பறையர் தொன்மத்தில் புறச்சாதியாக மாறும் முடிவினை இறைவன் வழங்கவில்லை. அண்ணன்தான் முடிவு செய்கிறார்.

அண்ணன் மாட்டுக்கறி உண்டுவிட்டு அண்ணிக்குப் பொங்கல் சோறு மட்டும் கொண்டு வருகிறார் என்று தம்பியின் பொய்யான கூற்று மூலம் அண்ணனுக்குச் சோதனை ஏற்படுத்தித் தகுதியிழக்கச் செய்யும் தம்பியின் விளைவானது, தோற்றத் தொன்மங்கள் அல்லாத தொன்மங்களிலும் காணக் கூடியவையே.

பறையரும், பிராமணரும் சகோதரர்கள் என்று பல தொன்மங்கள் கூறுகின்றன. அவை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. பிராமணர்கள் மத்தியத் தரைக்கடல் இனத்தையும் பறையர்கள் திராவிட இனத்தையும் சேர்ந்தவர்கள்.

பிராமணர்கள் கீழ்ச்சாதிப் பெண்களை மணந்தால் ஆறு கீழ்ச்சாதிகள் (அபஸ்தக்குகள்) தோன்றினர் என மனு கூறுகிறது. ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்து இன்று தாழ்ந்தவராக மாறிவிட்டோம் என்பதையே இத்தொன்மங்கள் வலியுறுத்துகின்றன.
பிராமணர்கள் இந்தியாவுக்குள் குறைந்தபட்சம் இரண்டு கட்டங்களாக வந்தனர் என்பது பெரும்பாலோர் ஏற்றுக் கொண்ட இரண்டு கட்ட நுழைவுக் கோட்பாடாகும். முதலில் அசுரர்களும், பின்னர் தேவர்களும் நுழைந்தனர். முதலில் வந்த அசுரர்கள் சிந்துவெளித் திராவிடர்களோடு இணக்கம் பெற்றுச் செயல்பட்டனர். இன்றைய மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதியில் வாழும் பிராமணர்கள் அசுரர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திராவிடப் பண்பாட்டை வெகுவாக ஏற்றுக் கொண்டவர்கள். பின்னர் வந்த தேவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களுடன் முரண்பாடு கொண்டவர்கள். அவர்களே சிந்துவெளி நாகரிகத்தை அழித்துத் திராவிடர்களின் மேல் மேலாதிக்கம் செலுத்த முற்பட்டவர்கள்.

பிராமணர்களின் நுழைவுக்குப் பின் ஏற்பட்ட மிக நீண்ட சமூகப் பண்பாட்டு உருவாக்கத்தில் இந்நாட்டு மன்னர்களே பிராமணர்களுக்குச் சமூகப் புரவலர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், அடித்தளச் சாதியினர் (பறையர் சாதி) ஒரு காலத்தில் பெற்றிருந்த உயர்ந்த நிலையைப் பின் வந்த பிராமணர்கள் ஏற்றுக் கொண்டதை ஒரு சமூக இணக்கக் கருத்தாக சகோதரர் என்னும் தொன்மமாக்கம் விவரிக்கிறதா? என்பன போன்ற தேடல், தோற்றத் தொன்மம் குறிந்த இந்த ஆய்வுக்களத்திலிருந்து விலகுவதாக அமைகிறது.

மேலும் பறையர்களின் பெரும்பாலான தொன்மங்கள் அண்ணனின் முடிவால் தாழ்ந்தநிலை ஏற்பட்டது என்றிருக்க, வேளாளருக்குத் தொழில் செய்ய சிவனால் படைக்கப்பட்டவன் பறையன் என்பது, இவர்கள் மேல் மற்ற சாதிகள் வேண்டுமென்றே செலுத்திய அதிகாரமாகவே உள்ளது.

0

இனி, ஆதிதிராவிடர் பற்றிப் பார்ப்போம்.

ஆதி என்ற சொல், பழமை, முதுமை என்ற பொருளிலேயே இன்று அறியப்படுகிறது. கதைகளைச் சொல்வோர் ஆதி காலத்திலேயே என்று தொடங்குவர். ஆதிதிராவிடர் என்ற சொற்கள் இன்று வழக்கில் உள்ளன. ஆதி என்பதற்கு தோற்றம், முதல், மூப்பு, தொடக்கம் என்று பொருள்படும்.

கடைக்கழக இலக்கியங்களில் ஆதி என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கலித்தொகை, ‘பழமை’ என்ற பொருளில் விளக்கமளிக்கிறது.

ஆதி அந்தணன்: சிவன் முப்புரங்களை அழித்தபோது, ஆதி அந்தணன் தேர்ப்பாகனாக வந்து தேரைச் செலுத்தினான் என்று பரிபாடல் கூறுகிறது. ஆதி அந்தணன் என்று பரிபாடல் கூறும் தேரோட்டியை பிரம்மாவாக ஆரியச்சார்பு உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். ஆதி அந்தணனை நல்லோன், உயர்ந்தோன், அறிவு மிக்கோன் எனப் பொருள் கொள்வதே சிறப்பானது.

ஓரியன் கூட்டத்தில் சிவந்து ஒளிர்ந்து காணப்படும் ஒரு விண்மீனையே ஆதிரையென்று தொல் தமிழர் அழைத்தனர். ஓரியன் கூட்டமே முதலில் அறியப்பட்டுப் பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அக்கூட்டத்தை குறிஞ்சி நிலத் தலைவனாகிய வேடன் போன்றும் உருவகம் செய்தனர். அக்கூட்டத்தில் ஒளிமிகுந்த மீனை ஆதி திரை என்றே தொல் தமிழர் அழைத்தனர்.

ஆதி அருமன்: இவன் ஒரு வள்ளல், இவனது ஊர் பழமையான பனைவளம் சார்ந்தது என கள்ளில் அத்திரையினார் என்ற புலவர் குறுந்தொகையில் கூறுகிறார். தனை ஆதி அருமன் முதூர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆதி மந்தி: கரிகாலன் மகளாக ஆதிமந்தி கூறப்படுகிறாள். (மந்தி என்ற சொல்லுக்கு வண்டு என வீரமாமுனிவர் பொருள் கூறுகிறார்).

ஆதிரை: கரிகாலனின் மகளான இவர் எழுதிய பாடல் ஒன்று (31) குறுந்தொகையில் உள்ளது.
ஆதிரை: மார்கழி மாதத்து ஆதிரை நாளில், சிவனுக்கு விழாவெடுத்தச் செய்தியை பரிபாடல் விளக்குகிறது. ஆதி என்ற சொல் குதிரையின் தேரோட்டம் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. (புரவியைக் குறித்த ஆதி என்ற சொல், கடைக்கழகக் கால வழக்கே எனக் கொள்ளலாம்).

கலித் தொகையும், குறுந்தொகையும் மட்டுமே, ஆதி என்பதற்குப் பழமை என்ற பொருளைத் தருகின்றன. ஆதி-அந்தம் என்பது, தொடக்கமும் முடிவுமில்லாத கடவுள் தன்மையைக் குறித்த சொல்லாகும். (அந்தம்-முடிவைக் குறித்தச் சொல்) எனவே, ஆதி என்ற சொல், பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகிறது என்பதால், அது பழந்தமிழ்ச் சொல்லே என அறியலாம்.

ஆதி என்ற சொல் குமரிக்கண்ட அழிவுக்குப் பிறகே வழக்கில் வந்தது எனக் கருத இடமுள்ளது. ஆதி என்ற சொல்லுக்கு ‘யா’ என்பதே வேர்ச் சொல்லாகும்.

திருவள்ளுவர் ‘ஆதி பகவன்’ என்று குறிப்பிடுகிறார். யாத்திசை என்ற சொல்லின் சுருக்கமே ‘யாதி’. யாதி பகவன் என்ற சொற்களை நோக்கும் போது, அவை பிற்காலத்தில் ஆதி பகவன் என்று சொல்லப்பட்டது என்று கொள்ளலாம். பகவன் என்பதற்கு உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றுக்குத் தேவையானவற்றை அளிப்பவன், இறைவன் என்று பொருள்படும்.

யாதி-பகவன் = தென்திசைக் கடவுள். குமரிக்கண்டத்தில் வணங்கப்பட்ட கடவுள்.

திருவள்ளுவர் கூறிய ஆதிபகவன், தென்திசைக் கடவுளே என்பதும் தெளிவு. ஆதி என்ற சொல், யாதி என்பதின் மறுசொல்லே என்பதால், ஆதி தமிழ்ச்சொல்லே. மிகப் பழைமையான கடவுளை ஆதி என்ற சொல் சுட்டுவதால், பிற்காலத்தில் பழமை என்ற சொல்லும், ஆதி என்ற சொல்லாலேயே அறியப்பட்டது.

ஆதி என்ற சொல்லுக்கு, யா என்பதே வேர்ச்சொல்லாகும். யா என்பது தென் திசையைக் குறித்தச் சொல்லே என்பதற்குத் தமிழில் சான்றுகள் இல்லை அல்லது யா என்ற சொல்லை விளக்கும் இலக்கியங்கள் அழிந்து போயிருக்க வேண்டும். யா என்ற சொல் தென்திசையைக் குறித்ததே என்ற விளக்கம் தமிழில் காணப்படவில்லை என்றாலும், தமிழ் மொழியில் இருந்து கிளைத்ததாகக் கருதப்படும் பல்வேறு மொழிகளில் யா என்ற சொல், தென் திசையைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது. இம்மொழிகள் யாவும் குமரிக்கண்ட அழிவுக்குப் பிறகு, தமிழர் குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளாகும். பாபிலோனியம், எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில், யா என்ற சொல்லுக்குத் தென்திசை என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

யா என்பது, பிற்காலத்தில் ஆ என்ற எழுத்தால் சொல்லப்பட்டுள்ளதை அறியலாம். யாண்டு-ஆண்டு, யாடு-ஆடு, யாடவர்-ஆடவர், யாத்திரை-ஆத்திரை, யாணி-ஆணி, யாத்தி-ஆத்தி, யாதன் – ஆதன் என விரியும்.

யா (பாபிலோனிய மொழி) : பாபிலோனுக்குத் தெற்கேயிருந்த கடல் தெய்வத்தின் பெயர் இச் சொல் பாபிலோனிய மொழியில் நீரோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான குறுந்தொகையும் யா என்ர சொல்லுக்கு நீர் என்ற பொருளையே தருகின்றது.

ஆதி என்ற சொல், தென்திசையைக் குறித்த யாதி என்ற தமிழ்ச்சொல்லே. யாதி தமிழர் என்போர் (இப்போது நாம் குறிக்கும் ஆதி திராவிடர்) குமரிக்கண்டத்தே வாழ்ந்திருந்த தொல் தமிழர் ஆவர். அவரே தமிழரின் மூத்த குடியும் முதற் குடியும், அறிவார்ந்த பல்குடியுமாவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆதிதிராவிடர்கள்

278607bigபறையர்கள் / அத்தியாயம் 23

சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர். (தமிழாதி – உயர்குல வகுப்பினர் எனக் கூறிக் கொள்வோர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க இந்தச் சொல்லை கையாள்கின்றனர்).

ஒதுக்கப்பட்ட மக்கள் இன்று யாராலும் திருகுலத்தார் (புனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்) என்றும், ஆதி திராவிடர் அதாவது முதல் தமிழர், முன்னைய தமிழர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் பேசுவோர், தொன்று தொட்டுப் பேசுவோர், தமிழ் பற்றுடையோர், தமிழரிடைப் புறக்கணிக்கப்பட்டிருப்போர் இவர்கள் யாவரும் ஒருவகையாகத் ‘தமிழர்’ என்றே கூறப்படுகின்றனர். எனினும் ஆதிதிராவிடரே சிறப்பு வகையால் ‘முழுத் தமிழர்’ ஆவர் எனத் தோன்றுகிறது.

மத்திய காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூலாகிய ‘ஞான வெட்டியான்’ என்ற நூலில் ஆதி திராவிடர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனத்தை ஆண்டதற்கும் அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்று உயர்ந்து நின்றதற்கும் ஆதாரமாக வெள்ளைக் குடையையும், வெண்சாமரத்தையும், கற்கள் பதித்த காதணிகளையும், வாளையும் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆதிதிராவிடர்கள் ஒரு காலத்தில் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வந்தவை எனக் கருதப்படுகிறது.

சுதந்தர இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு வந்த போதிலும் இன்றளவும் ஆதி திராவிடர்கள் ஒதுக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். மரபு வழியில் இவர்களைப் ‘பறையர்’ என்றும் அழைக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.
ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.

அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார், ஆதி திராவிடர் மகாசன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றில் முன்மொழிந்து அதை நிறைவேற்றுமாறு செய்தார். 1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதி திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர். 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை.

1922ம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம் நாள் பஞ்சமர் என்ற இழி பெயர் நீக்கப்பட்டது. (ஆனால் பஞ்சமி நிலம் என்ற சொற்றொடரில் உள்ள பஞ்சமி என்ற சொல் மட்டும் இன்னும் நீக்கப்படாமல் பஞ்சமி நிலம் என்றே வழங்கப்படுகிறது). சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஆதி திராவிடர் என்னும் பெயரை அதிகாரபூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நீதிக்கட்சியினரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது.

இட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரிக் குழுக்கள் ஆகியவற்றால் கல்வித்துறையிலும் அரசுப்பணியிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தைத் தடுத்தும், பஞ்சமர் பெயர் மாற்றத்தால் வைதீக சாதி அமைப்புகளைத் தகர்த்தும் செயல்பட்டது நீதிக்கட்சியின் அரசு. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமலில் இருக்குமென்றும் அரசு தெளிவுப்படுத்தியது. மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் ‘ஆதி திராவிடர்’ என்றும், கன்னட மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்றும் வழங்கிவரும் என்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியது.

ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமைகளை மக்களிடையே கொண்டு செல்ல அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் 2008 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் மட்டும் ரூ.1 கோடி மோசடி நடந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு உள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகையின் இந்த மோசடியால் ஆதிதிராவிடரின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் தடைபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே போல் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களை ஓட்டுக்காக மட்டுமே அரவணைத்துக் கொள்ளும் போக்கு இருந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு (தினகரன், 04.03.2012) நடந்த சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் ஆதிதிராவிடர்கள் ஓட்டுக்களைப்பெற ஒரு கட்சி புது திட்டம் அமைத்து சங்கரன் கோயில் தொகுதியில் மொத்தம் 45 ஆயிரம் ஆதி திராவிடர்களின் ஓட்டுகளை முழுவதும் பெற முயற்சி நடப்பதாகவும் அன்றைய செய்தித்தாளில் (உண்மையாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கட்சியின் மீது கூறப்பட்ட இந்தப் புகார் காழ்ப்புணர்ச்சியாகவும் இருக்கலாம்) காண முடிந்தது.

0

பண்டைத் தமிழகத்திலும், இன்றும் ‘சேரி’ என்ற சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. சேரி என்ற சொல் இன்று தீண்டப்படாதார் வாழும் இடமாக குறிக்கப்படுகிறது. ஆனால் பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. அப்பொழுது இருந்த சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இனங்களை, பல மொழிகளை, பல பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக நகர்க்கரையில் அமைந்தது. நகர் எனப்பட்டது போல், ஊர்ந்து பெருகும் வாழிடங்கள் ஊர் எனப்பட்டது போல, சேர்ந்து வாழுமிடங்கள் சேரி எனப்பட்டது.
சேரி என்பது, பல வீடுகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்பு. முற்காலத்தில் முல்லை நிலத்தூர்கள்  ‘சேரி’ என்னும் பொதுப்பெயர் பெற்றன. முல்லை நிலமக்கள் இடையராதலின், மருதநில நகர்ப்புறத்துள்ள பேரூரும் நகருமாகி, திணை மயக்கமும் தொழில் பற்றிய குலப்பாகுபாடும் உண்டானபின் ஒவ்வொரு பேரூரிலும் ஒவ்வொரு குலத்தாருடைய தனிக் குடியிருப்பும் ‘சேரி’ எனப்பட்டது. இவ்வாறு இடைச்சேரி, பறைச்சேரி, பார்ப்பனச் சேரி என்னும் வழக்கு எழுந்தது.

‘ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்’ (தொல். அகம் 37). நாளடைவில் குலப்பாகுபாடு, பிறப்போடு தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டப் பின் தாழ்த்தப்பட்டோர் பிற குலத்தாரோடு சேராது ஊருக்குப் புறம்பே வசிக்க நேர்ந்தது. அதிலிருந்து ‘சேரி’ என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பையே உணர்த்தி வருகின்றது.

கி.பி. 2ம் நூற்றாண்டின் முடிவில் மலபார் கரையில் உள்ள தமிழ்க்குடியிருப்புகள் வடக்கே தலைச் சேரிக்கு அப்பாலும், கிழக்கே மலைத் தொடர் அடிவாரம் வரையிலும் பரவியிருந்தது என்று பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை  (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்) குறிப்பிடுகின்றார். இதில் கூறப்பட்டுள்ள தலைச்சேரி என்ற பகுதி இருந்துள்ளதை அறியலாம்.

கொங்கு நாடானது பழங்காலத்தில் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஆறை நாடு. இந்த ஆறை நாடு 6 உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதில் ஒன்று தணக்கு நாடு என்பது. இந்த தணக்கு நாடு என்பது ‘நடுவச் சேரி’யைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன்மூலம் ‘நடுவச்சேரி’ என்ற ஊர் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

சங்க கால மதுரை மாநகரில் புறமதிலுக்கும், அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் ‘புறஞ்சேரி’ என்று பெயர் பெற்றிருந்தன. அங்கு பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர்.

கபிலர் கூட குறிஞ்சித்திணை குறித்து விளங்குங்கால் ‘ஊர் அலம் சேரிச்சிறூர்’ என்று குறிப்பிடுகிறார். பெரிய ஊரல்லாது சேரிகளைக் கொண்ட சிற்றூர் என்பது இதன் பொருள்4
‘யவனச்சேரி’ இருந்ததை மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. (யவனர் – கிரேக்கர், அரேபியர் மற்றும் ரோமர். பொதுவாக வெளிநாட்டவரை குறித்தாக இருக்கலாம்) இலங்கையில் ‘சாவகச் சேரி’ என்ற நகரம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் மாயூரம் வட்டம் ‘திருமணஞ்சேரி கோயில்’ உள்ளது. இதற்குப் பழைய பெயர் ‘திருக்கற்றாளி மகாதேவர் கோயில்’ என்பது. இப்போதைய பெயர் ‘உத்வாகநாத சுவாமி கோயில்’ என்பது.

சங்க காலப் பார்ப்பனப் புலவர் ஒருவரின் பெயர் முடமோசியார். இவர் உறையூர் ‘ஏணிச்சேரி’ முடமோசியார் என்று அழைக்கப்படுவார். மோசி என்பது ஒரு குடிப்பெயராக இருக்கலாம். மோசி என்பது ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். இம்மோசி என்னும் ஊர் தாராபுரம் வட்டம் மூலனூர்க்கு அருகில் உள்ளதாகக் கூறுவர். இவர் பாண்டிய நாட்டில் மோசி என்னும் குடியைச் சார்ந்தவர் என்றும் கூறுவர். இவர் உறையூர்ச் சோழன் கோப்பெருநற்கிள்ளியிடம் தங்கியிருந்தவர். ஏணிச்சேரி என்ற ஊரில் வாழ்ந்தவர் என்பர்.

பவானிக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் ‘ஓரிச்சேரி’ என்னும் ஊர் உள்ளது. அது இன்று ‘ஓரிச்சேரி’ என்று வழங்கப்படுகிறது. சங்ககால வள்ளல்களில் ஒருவனான ஓரியின் பெயரால் ஓரிச்சேரி வழங்கப்பட்டது எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சேரி

slum_quarter_in_th_1_galleryfull2பறையர்கள் / அத்தியாயம் 24

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் ‘இரவுச்சேரி நாடு’ என்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் ‘சங்கனாச்சேரி’ என்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் ‘பெரும்பச்சேரி’ என்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ‘ஒழிகினச்சேரி’ என்ற ஊர் உண்டு.

தமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ‘வடசேரி’ என்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் ‘வீரநாராயணன் சேரி’.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ‘ஆளூர் சேரி’யில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ‘ஆளூர் சேரி’யைக் காணலாம்.

பெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் ‘சேரிப் பரதர் வலை முன்றில்’ கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.

உத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.

கேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் ‘புறஞ்சேரி’யில் கிடக்கும் பறையரில்… என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரி’யில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்‘சேரி’யில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்‘சேரி’யில் கிடக்கும்… என்றும் (1832) குறிப்பிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் ‘சேரி’ என்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.

போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் ‘சேரி நாட்டில்’ பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி ‘சேரிநாடு’ என்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரதநாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன்  பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி – பெயர்களில் உள்ள ‘சேரி/மேளம்’ என்ற சொற்களை நோக்குக.

சிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென ‘குவளைச் சேரி’யைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்’ என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.
பண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் ‘சேரி’ப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் ‘சேரி’யடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் ‘சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் ‘சேரி’ வலை வணங்கும் முன்றில் (சிலம்பு – கானல் 4-60 சிலம்பு – கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்‘சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்‘சேரி’  (மதுரைக்காஞ்சி -615)
‘சேரி’ வாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

என இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில் வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.

கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் ‘சேரி’ என்றும் பாவாணரின் ‘பழந்தமிழராட்சி’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

சேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் ‘சேரி மொழி’யென்றும் வழங்கியுள்ளனர்.

பல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேரி, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
பல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த ‘சேரி’ என்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard