New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் நான்மறை -எழுதாக் கற்பு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ் நான்மறை -எழுதாக் கற்பு
Permalink  
 


http://amaruvi.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

 

பண்டைய தமிழர் – ஒரு பார்வை

தற்காலத்திய அத்வைத மடங்களில் ஒன்றான காஞ்சி மடம், அதன் துறவியரின் சமூக ஆன்மிகப் பணி, இவர்களின் தேவை முதலியன பற்றி அறிந்து கொள்ள இந்த அத்வைத சித்தாந்தமே தோன்றியிராத போது தமிழகம் எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஆரியர் படை எடுப்பு என்ற ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்வும் கலையும் கலாச்சாரமும் வேறாகின என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ள வேளையில் சங்க காலம் முதல் தமிழரின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது தேவைப்படுகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட கல்வி ஆரியர் படை எடுப்பின் முன் தமிழர் நிலை மிகவும் முன்னேறிய ஒரு சமூக நிலையாக இருந்தது என்றும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டது என்றும், மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றும் மக்கள் அனைவரும் ஒரு நிகர் சமானமாக எவ்வித சாதிப் பிளவுகளும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் கூறுகிறது. ஆனால் ஆரியர் படை எடுப்புக்குப்பின், வைதீக பிராம்மணர்களின் சூழ்ச்சியால் தமிழர் பிளவு பட்டனர் என்றும், பல கடவுளர் வழிபாடு புகுத்தினர் என்றும், உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புகுத்தினர் என்றும், மூட நம்பிக்கைகள் பெருகின என்றும் பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்றும் இதற்குக் காரணம் வட நாட்டிலிருந்து வந்த மாடு மேய்த்த ஆரியர் என்றும் நமது தமிழ்ப் பாட நூல்களும் ‘அறிஞர்களும்’ தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை உண்மையா ? ஆதி சங்கரர் தொடங்கி வைதீக காலம் தொட்டுத்தான் மூட நம்பிக்கைகளும், பெண் அடிமைத்தனமும், சாதிப் பாகுபாடுகளும் தோன்றியனவா ? இவரும் இவர் சார்ந்த வைதீக மதமும் அவரைப் பின்பற்றிய வைதீக மதத்தின் மற்ற பரிணாமங்களும் தான் பாரத தேசத்தின் அத்தனை கேடுகளுக்கும் காரணமா?

இவற்றைப் பார்ப்பதற்கு நாம் சங்க காலத்தை ஒரு அளவு கோலாகக் கொள்வோம். சங்கத்திற்கு முன்னர் தோன்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் ‘தொல்காப்பியம்’, ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘நற்றிணை’ முதலிய தொல் நூல்களின் வழி நின்று அக்கால சமூகத்தை ஆராய்வோம்.

முற்போக்காளர்கள் கூறுவது : ‘பண்டைய தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே கொண்டிருந்தனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையே இருந்து வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுளோ அல்லது கடவுளே இல்லை என்றா இருந்ததா?

இல்லை. சங்க நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு அகராதி போன்று ஒரு பகுதி உள்ளதாகத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குப்பிடப்பட்டுள்ளார்.

ஆண் தெய்வங்கள் தவிர ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.

தொல்காப்பியம் ‘மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே ..” என்னும் இடத்தில் கொற்றவை பற்றிக் கூறுகிறது.

இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது.

திருமாலை ‘ஆல் அமர் கடவுள்’ என்றும், முருகனை ‘சேயோன்’ என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.  முருகன் ‘சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேர்ப்படையை உடைய முருகன்’ என்று போற்றப்படுகிறான். (சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் )

இத்தெய்வங்கள் தவிர இறந்தோரையும் கடவுளர்களாக வழிபட்டுள்ளனர். அவர்கள் நினைவாக கற்களை நட்டு ( நடுகல் ) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் ..’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்.

வைதீக மதங்கள் வருகையாலும் ஆதி சங்கரரது ‘அத்வைத’ சமயத்தின் தாக்கத்தாலுமே வேதங்களின் முறைப்படி உயிர்ப்பலிகள் தொடங்கின என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்ததுள்ளது. அது உண்மையா ?

சங்க காலத்தில் முருகனுக்கு ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்து வழிபட்டனர் என்று  குறுந்தொகையில் உள்ளது. (சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி..)

‘வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு’ என்று நற்றிணையில் ( வெறி எடுத்தால்  உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன்..) வருகிறது.

ஆக பலி இட்டு வணங்குவது வேத காலத்திற்குப் பின் தமிழகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் புனைவே.

மூட நம்பிக்கைகள் வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டது என்று கூறுவதும் அபத்தமே.

மழை வேண்டும் என்று புறநானூற்றில் ‘மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய் மாறி ஆன்று மழைமேக்கு உயர்க  .. ‘ என்று மழை பெய்ய வேண்டி பலி கொடுத்து வணங்குவர் என்றும் வருகிறது.

கோழி, ஆடு முதலியன பலவகையான பலிகளுக்குப் பயன்பட்டன என்று பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

பலன்கள் வேண்டிக் குரவைக் கூத்து, பாவை நோன்பு முதலியன சங்க காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாலும் அந்தப் புராதனமான நோன்பையே நோற்றாள் என்று வைணவம் குறித்த தொடர்களில் நாம் முன்னமேயே கண்டோம்.

இம்மை, மறுமை முதலியன பல முறை சங்கப் பாடல்களில் இடம் பெறுகிறது. சங்கம் மருவிய காலத்தவரான வள்ளுவரும் வானுலகம், இம்மை, மறுமை, ஊழ்வினை முதலியன குறித்துப் பேசியுள்ளார்.

சகுனம் பார்ப்பதும், நல்ல நாள் பார்ப்பதும் சங்க காலத்திலேயே இருந்த பழக்கங்கள்.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை ‘ என்று தொல்காப்பியம் களவியல் சூத்திரம் ‘களவு மணம் புரியும் காலத்தில் கெட்ட நேரத்தில் காதலியுடன் சேராமல் இருக்கும் பழக்கம் தலைவனிடம் இல்லை..” என்று கற்பு மணம் புரிந்தோர் நாளும் கிழமையும் பார்ப்பார்கள் என்றும் களவு மணம் புரிந்தோர் அவ்வாறு இல்லை’ என்றும் கூறுகிறது.

பல்லி சொல்லுக்கும் பலன் பார்த்தார்கள் பண்டைத் தமிழர் என்பது கலித்தொகையில் காணக்கிடைக்கிறது.

எரி நட்சத்திரம் பற்றியும் புறநானூற்றில் செய்திகள் உள்ளன. அது தீங்கு நிகழப்போவதை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. இரும்பொறை என்ற மன்னன் இறந்தபோது கூடலூர் கிழார் என்னும் புலவர் ‘கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ..” என்னும் புறப் பாடலில் குறிப்பிடுகிறார்.

பால் தயிராகாமல் பாலாகவே உள்ளது; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; உறியில் இருந்து இறக்கிய வெண்ணையை உருக்கினால் உருகவில்லை; சகுனங்கள் சரியாக இல்லை என்று ஆய்ச்சியர் குரவையில் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவை சங்கம் மருவிய காலம்.

இவை தவிர பெண்கள் உடன் கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு நோற்றல் முதலியனவும் சங்கப் பாடல்களில் பெருமையாகவே பேசப்படுகிறது. எனவே இவை வைதீக மதத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழர் மரபில் இருந்துள்ளன.

அவ்வையார், நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் முதலான பெண் புலவர்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் கல்வியிலும் உரிமைகளிலும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் தெரிகிறது.

தொல்காப்பியர் ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்பது எப்போதும் பெண்களுக்கு உரிய குணம் என்று கூறுகிறார்.

வள்ளுவரும் ‘மனைவியின் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற செயல் எந்நாளும் பெரியோர் கூட்டத்தில் வெட்கம் தரும் செயலாகும் என்பதை ‘இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்’ என்று கூறுகிறார்.

இவை தீமை என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் இவை வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டன என்பதும் பண்டைய தமிழர் வாழ்வில் இவை ஒன்றுமே இருந்ததில்லை என்பதும் உண்மை கலப்பிலாத பொய் என்பதும் நாம் அறிய வேண்டியது ஆகும்.

சரி. இப்பண்டைய தமிழர் வாழ்விற்கும் ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மடத்திற்கும் தொடர்பென்ன ? விரைவில் பார்ப்போம்.

 

வைணவ லட்சணம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

இராமானுசர்  வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.

சிலவற்றைப் பார்ப்போம்.

வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:

“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”

தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.

இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:

“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”

சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர்,  அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.

அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.

ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).

மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது  காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.

கொக்கு வெண்மை நிறம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.

கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம். 

அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.

இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.

அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.

இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.



-- Edited by Admin on Monday 30th of March 2015 10:31:23 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைணவம் – அந்தணர் – மேலும் சில பார்வைகள்

இப்பதிவில் வழக்கிற்கு மாறாக சில சம்ஸ்க்ருத வாக்கியங்களும், பதங்களும் தென்படும். சம்ஸ்க்ருதம் என்பதற்குப் பொருள் -‘ நன்றாகச் செய்யப்பட்டது’ என்பதே.

ஆறு – இந்த இலக்கம் பல இடங்களில் தென்படுகிறது.

சென்ற பதிவில் “அறுதொழிலோர்” என்று வள்ளுவரும் திருமூலரும் அந்தணர் பற்றிக் குறிப்பிட்டனர். வட மொழி நூல்கள் அந்தணர் பற்றிக் கூறும்போது “ஷட் கர்ம நிரதர்” என்று அழைக்கின்றன.

வடமொழி நூல்களில் வருவனவாக அந்தணர்கள் செய்யும் தொழில்கள் என்ன ? தமிழ் நூல்களில் உள்ளது போன்று உள்ளதா ?

அந்தணர்களின் தொழில்கள் வட மொழிநூல்களில் பின்வருமாறு :

அத்யயனம் : வேதம் பயில்வது
அத்யாபனம் : வேதம் பயிற்றுவிப்பது
யஜனம் : சுயமாக வேள்வி செய்வது
யாஜனம் : மற்றவருக்கு வேள்வி செய்விப்பது
தானம் : தானம் கொடுப்பது
பிரதிக்ரஹம்: தான் தானம் பெறுவது.

இந்த ஆறு தவிர வேறு என்ன ஆறு ?

வேதத்திற்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அந்த ஆறு அங்கங்களுமே “சடங்கம்” என்று வடமொழி கூறுகிறது. தற்போது நாம் சடங்கு என்று தமிழில் வழங்கிவரும் சொல்லின் வேர் சடங்கம் என்ற ஆறு பாகங்கள் என்னும் பொருளில் வழங்கும் சொல்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

“அமரவோர் அங்கம் ஆறும் வேதமோர் நான்கு ஓதி..” என்று கூறுகிறார்.

புறநானூறு ,

“நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முது புதல்வன்வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ”

சிவன் ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தை எப்போதும் ஓதிக்கொண்டுள்ளான் என்னும் பொருளில் வருகிறது.

இறைவனே ஓதும் வேதத்தை யார் பயிலலாம் என்ற கேள்வி வருவது இயற்கையே. வேதம் முதலான நூல்கள் ஒரு குலத்தார் மட்டுமே பயிலலாம் என்று ஆதியில் இருந்தது என்று பகுத்தறிவாளர் கூறுவாரே ? அப்படி உள்ளதா என்றால் இல்லை. வேதத்தை மாணவன் பயிலலாம் என்று இருக்கிறது.மாணவன் யார் ? உபநயனம் ஆனவன் மாணவன். ஆக, பூணூல் தரிப்பு விழா முடித்த ஒரு குலத்துச் சிறுவன் மட்டுமே மாணவனாகலாமா?

அதுவும் இல்லை.  அனைவரும் ஆகலாம். ஆதாரம் ?

மறுபடியும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :

“ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ உச்யதே
வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி: ச்ரோத்ரிய உய்ச்யதே”

அதாவது, பிறப்பினால் அனனவரும் சூத்திரன் என்ற பிரிவைச் சேர்ந்தவனே. அனனவரும் நாலாம் வர்ணத்தவர்களே. உபநயனம் என்ற சடங்கினால் ஒருவன் இருபிறப்பாளன் ஆகிறான். (த்விஜ என்பது இரு பிறப்பு என்று பொருள் படும் ). பின்னர் கல்வியினால் விப்ரன் என்ற நிலை அடைகிறான். அதன் பின்னர் இந்த மூன்றும் சேர்ந்து அவனை “ச்ரோத்ரியன்” என்று உயர்ந்த நிலை அடைய உதவுகிறது என்பது இதன் பொருள். மகாபாரதத்தில் யாதவனான கண்ணன் அந்தணனான குசேலனுடன் சேர்ந்து ஒரே குருகுலத்தில் பயின்றதை நினைவில் கொள்ளவும்.

வேறு சான்றுகள் ? காயத்ரி மந்திரத்தின் மூல ரிஷியான விஸ்வாமித்திரர் அந்தணர் அல்லர். மகாபாரதத்தை எழுதியவரும் வேத வியாசர்  என்று அந்தணர்களின் தலைவராகப் போற்றப்படும் முனிவரின் தாய் ஒரு மீனவப் பெண். ஆக பிறப்புக்கும் பார்ப்பனனாவதற்கும் தொடர்பில்லை.

தவிஜ என்பது இருபிறப்பாளன் என்று பார்த்தோம். இருமுறை பிறப்பது என்பது என்ன?

உபநயனம் என்ற சடங்கு ( பூணூல் அணிவித்தல்) நடக்கும் முன்னர் ஒரு சிறுவன் வாழும் நிலை ஒரு பிறவி. உபநயனம் முடிந்து அவன் கல்வி கற்கத் துவங்கும் நிலை இன்னொரு பிறவி. உபநயனம் முடிந்தவன் இருபிறப்பாளன்.

இதற்குச் சரியான தமிழ் வார்த்தை உள்ளதா ?

பார்ப்பனன் என்பதே அந்தத் தொடர். ‘பார்ப்பு’ என்பது பறவை என்று பொருள் படும், ‘அனன்’ என்பது அதைப் போன்றவன் என்று ஆகும். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். ஏனென்றால் பறவைக்கு அது முட்டைக்குள் இருக்கும் போது ஒரு உயிர். முட்டையின் ஓட்டை உடைத்து வெளி வந்தபோது இன்னொரு உயிர். அதுபோல் அஞ்ஞானம் என்ற இருள் அடர்ந்த நிலையில் முட்டைக்குள் உள்ள பறவை போல் இருக்கிறான். உபநயனம் என்று சடங்கு முடிந்து அவன் குருவினிடம் சேர்ப்பிக்கப்படும்போது இன்னொரு உயிர் பெற்று ஞானப் பாதை நோக்கிச் செல்கிறான் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் பொதிந்த சொல் ‘பார்ப்பனன்’ என்பது.

பூணூல் அணிவித்தவுடன் ஒருவன் த்விஜனாகிவிடுகிறானா ?

இல்லை. பூணூல் அணிவித்த பின் குருவினிடம் ஒப்படைக்கப்படுகிறான். தனக்கு உரிய கடமைகளைச் செய்வதாலும் விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் அவன் ஞானத் தேடலில் முன்னேறுகிறான். அதன்பின்னர் குரு அவனுக்குக் கல்வி புகட்டுகிறார்.

பூணூல் அணிவிப்பதை ‘உப-நயனம்’ என்று வட மொழி கூறுகிறது. அதன் பொருள் ‘அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்பது. குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல். பின்னர் கல்வி. அதன்பின்னர் அவனது கடமைகளை நிறைவேற்றுதல். பின்னர் உலக வாழ்விலிருந்து வெளியேற வேண்டி மறுபடியும் குருவினிடம் அடைக்கலம். அப்போது குரு இறைவனின் அருகில் அழைத்துச் செல்வார். அது சன்யாசம் – துறவு பூணுதல். அப்போது முதல் உப நயனத்தின்போது அணிவித்த பூணூலும் விலகும்.

உபநயனம் ஆன த்விஜனின் கடமைகளும் விரதங்களும் என்ன ?

கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளல், காலையிலும் மாலையிலும் காயத்ரி என்னும் மகா மந்திரத்தை மௌனமாக ஓதுதல், தீ வழிபாடு செய்தல், மலர், சந்தானம் முதலிய வாசனைகளை நுகராமல் இருத்தல், தினமும் காலையில் பிச்சை எடுத்து அதனை உணவாகக் கொளல், வயிறு நிரம்ப உண்ணாதிருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், ஒருபோதும் உண்மை தவிர வேறு எதுவும் பேசாதிருத்தல், வயலில் உழவர்கள் ‘தேவை இல்லை’ என்று கீழே கொட்டிய நெல்லைக் கொணர்ந்து உணவு உட்கொளல் முதலிய கடுமையான விரதங்கள் மேற்கொளல் வேண்டும். இவற்றால் அவனது குரு மனத்திருப்தி அடைந்தால் அவர் பாடம் நடத்துவார்.

வயிறு நிறைய உண்ணாதிருப்பது பற்றி வள்ளலார் ,”பசித்திரு, தனித்திரு, விழித்திரு..” என்று கூறியதை ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட நியமங்களுடன் வாழ்பவன் த்விஜன் அல்லது பார்ப்பனன்.

ஆக, பார்ப்பனன் என்பது பிறவியாலோ பூணூல் தரிப்பதாலோ வருவதன்று. அது ஒரு பதவி. அதை அடைய மேற்சொன்ன விரதங்கள் தேவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் நாரதர் தருமருக்கு உபதேசம் செய்கிறார்.

இவ்வாறு கடின விரதங்களை மேற்கொண்ட ஒருவன் வேதம் பயிலத் தகுதியானவனாகிறான் ; வேதம் படிக்கவேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்கிறான் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது : அந்தணனாக ஒருவன் ஆவதற்குப் பல படிகளை அவன் கடந்தாக வேண்டியுள்ளது. ஒரு நுழைவுத்தேர்வு போல் அப்பதவிக்கு உரிய தகுதிகள் மேலும் மேலும் கடினமானவையாகவே உள்ளன. இவ்வளவு தூரம் கடின உழைப்புக்குப்பின் தான் ஒருவன் வேதம் பயில முடியும் என்று வைத்துள்ளதால் வேதத்தின் உயர்ந்த நிலை தெரிகிறது.

மஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி வேத அறிவை விற்கும் அந்தணனையும் பிரம்மச்சரியத்தை மீறும் மாணவனையும் ரொம்பவும் கண்டிக்கிறது. “திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன் – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்”,  என்கிறது விதுரநீதி.

சங்க இலக்கியம் முதல் வள்ளுவர் காலம் கடந்து தற்காலம் வரை வழங்கி வந்துள்ள சொல் பார்ப்பனன் என்பது..

குறுந்தொகையில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்பவரது பாடல் :

“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பு முறுக்கி னன்னார் களைந்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் இன்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே”

சிவந்த பூக்களை உடைய புரச மரத்தின் பட்டையை உரித்துத் தண்டோடும் கமண்டலத்தொடும் விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே, உன்னுடைய வேதத்தில் பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்தும் உள்ளதா என்ன? என்னும் பொருளில் அமைந்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு.

ஒன்று “பார்ப்பன மகனே” என்று ஒரு படித்தவனை அழைப்பது.
இரண்டு “எழுதாக் கற்பு ” என்னும் தொடர். அக்காலத்தில் வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. வாய் வழியாகவே ஒரு குரு தன் மாணவனுக்கு உபதேசிப்பது என்பது வழக்கம். அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேதம் சம்ஸ்க்ருத மொழியில் உருவாக வில்லை. வேதத்தின் மொழி ‘ஸநதஸ்’ எனப்படும் ஒரு ஒலி அமைப்பு. பிற்காலத்தில் அது சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது.

அந்தணர்கள் தீ வேள்வி செய்தனர் என்பதை, “தீயினைக் கும்பிடும் பார்ப்பார்..” என்று பாரதியாரும்  கூறுகிறார்.

தமிழ் நாட்டில் வேதம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? வேதம் ஓதுவது பற்றி சாதாரண மக்கள் என்ன நினைத்தார்கள் ? பழைய கால நிலை என்ன?

பரிபாடல் இவ்வாறு கூறுகிறது :

“நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் பல்லக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”

“சேர நாட்டுமக்கள் வஞ்சி மாநகரில் கண்விழிக்கும்போதும் சோழர் தலைநகர் மக்கள் கோழி என்னும் ஊரில் கண் விழிக்கும்போதும் அவர்கள் கோழி கூவுவதைக் கேட்டே கண் விழிக்கிறார்கள். ஆனால் பாண்டியன் தலைநகர் மதுரையில் நாங்கள் அதிகாலியில் வேதம் ஓதும் ஒலியைக் கேட்டே கண்விழிக்கிறோம்”, என்று மதுரையின் பெருமை பேசுவதுபோல் அமைந்துள்ளது.

“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று பாரதியாரும் கூறுகிறார்.

இன்னும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவன.

இன்றைய நிலையில் பள்ளிகளை நாம் பாட சாலை என்று அழைக்கிறோம். ‘ பாடம் படிப்பதால் அது பாடசாலையானது. பண்டைய நாட்களில் வேதம் ஓதுவதை ‘பாட” என்று அழைத்தனர். எனவே வேதத்தை வார்த்தைகள் கோர்த்து “கனம்” என்கிற முறையில் பாடுபவர்களை ‘கனபாடிகள்’ என்று அழைக்கிறோம். தற்போது இந்தப் ‘பாடம்’ வேதம் அல்லாத மற்ற விஷயங்களுக்கும் வந்துவிட்டது.

வேதம் படிப்பது வரை சரி. யார் கற்றுத் தருவார்கள் ?

இன்று நாம் ஆசிரியர் என்று அழைக்கிறோம். முன்னாளில் “ஆச்சாரியர்” என்பது தற்போது ஆசிரியர் என்று வழங்குகிறது. இன்னொரு சொல் “வாத்தியார்” என்பது.

இது எப்படி வந்தது?

ஒரு தொடர் கதையையோ ஒரு நெடுந்தொடரின் ஒரு பாகத்தையோ நாம் “அத்யாயம்” என்று அழைக்கிறோம். அதுபோல் பல அத்யாயங்களைக் கற்பவரை “அத்யயனம் செய்கிறார்” என்று அழைப்பது மரபு. ( வேத அத்யயனம் செய்தவர் என்று அழைப்பது நாம் அறிந்ததே). அந்த அத்யாயத்தைப் போதிப்பவர் “அத்யாபகர்” அல்லது ‘அத்யாயர்’. அதுவே நாளடைவில் மருவி இன்று “வாத்யார்” என்று நாம் கூறுகிறோம்.

‘அத்யாபகர்’ என்பவர் உயர்ந்த ஆசிரியர். கல்விக்குக் காசு வாங்காதவர். ஆனால் காசு வாங்கிய ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் ‘உப-அத்யாபகர்’ என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் ‘உபாத்யாயம்’ செய்வது என்பது பணம் வாங்கிக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதைக் குறிப்பதாகியது. இன்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் ‘உபாத்யாயா’ என்ற பெயருடையவர்கள் திகழ்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியில் நல்ல பெரிய ஆசிரியர்கள் “மஹாமஹோபாத்யாய” என்று பட்டம் வழங்கிக் கௌரவித்தது நினைவில் கொள்ளலாம். ( மஹாமஹோபாத்யாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் என்னும் தமிழறிஞர் நம் நினைவில் நிற்கிறார்).

அது தவிர இரண்டு வேதங்கள் கற்றறிந்தவர் ‘திவிவேதி’ என்றும் மூன்று வேதங்கள் கற்றவர் ‘த்ரிவேதி’ என்றும் நான்கு வேதம் கற்றவர் ‘சதுர்வேதி’ என்றும் அழைக்கப்பட்டனர். வடமாநிலங்களில் இன்றளவும் இவை புழங்கிவருகின்றன. வங்காளத்தில் சட்டர்ஜி, முகர்ஜி, சட்டோபாத்யாயா முதலிய பெயர்களும் இவை சார்ந்தவையே.

வேதக் கல்விமுறை குறித்துத் தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.

‘உபாத்யாயர்’ பற்றிப் பார்த்தோம். அவர் பொருள் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தினார் என்பது கண்டோம். எனவே அவர் முன்னோர் நினைவு ( திவசம் ) முதலான நாட்களில் அமரச்செய்து உணவு பறிமாறப்படும் பெருமை இழக்கிறார் என்கிறது மனுஸ்மிருதி. பணம் வாங்காமல் கல்வி வழங்குவதே சிறப்பு என்று அறிவுறுத்துகிறது.

உபாத்யாயர். அவருக்கு மேல் அத்யாபகர். அவருக்கும் மேல் ஆச்சார்யர்.

ஆச்சாரியாரின் குணம் என்ன? எப்படி இருக்க வேண்டும் ?

மூன்று குணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். பண்டைய சாஸ்திரங்களையும் நூல்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கவேண்டும் (‘ஆசிநோனி ஹி சாஸ்த்ரார்த்தம்”). கற்றதை அப்படியே வெளியில் நடத்தும் அறிவாளியாக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”). இவ்வாறு தான் கற்றவழி தானும் நடந்து மற்றவருக்கும் போதித்து அவர்களையும் அவ்வழியில் நடக்கச்செய்யவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”).

கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன் என்று விதுரநீதி கூறுகிறது.

இதையே வள்ளுவரும் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார்.

இன்னொரு இடத்தில் வள்ளுவர், அந்தணன் வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்கத்தை விட்டானெனில் முதலுக்கே மோசம் ஏற்படும் என்னும் பொருளில்,

“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ” என்கிறார்.

இதற்கும் மேல் மனு தர்ம சாஸ்திரம் கூறுவது நம் கவனத்தை ஈர்க்கிறது :

திருட்டின் தன்மை அறிந்து திருடுகிற நான்காம் வர்ணத்தவனுக்குஅந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும் என்கிறது அது.

இவ்வளவு தூரம் தமிழிலும் வட மொழியிலும் அந்தணர் பற்றியும் பார்ப்பனர் பற்றியும் செய்திகள் உள்ளன. பிறப்பினால் ஒருவன் அந்தண நிலை அடைவதில்லை என்பதையும், பார்ப்பனன் என்பது இழிச்சொல் அல்ல என்பதையும்  கண்டோம். ஆயினும், இவை வெளியில் வருவதில்லையே ? அது ஏன் ?

பாரதியாரிடம் கேட்போம்.அவர் கூறுகிறார் :

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்…
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிற்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக்கல்வி பயின்று உழல்பித்தர்கள்.”

நமது மெக்காலேயின் ஆங்கில வழிக்கல்வியையும் அதனால் நமது பெருமையை அறியாமலே போனதையும் அவ்வாறு படித்து வந்தவர்கள் “பேடிக்கல்வி” பயின்ற பித்தர்கள் என்றும் வசைபாடுகிறார் பாரதியார்.

இந்த நமது வரலாற்று வீழ்ச்சியில் அவர் காலத்திற்குப்பின் தோன்றிய “பகுத்தறிவு” அரசாங்கங்களின் பங்கினை அறியாதவர் பாரதியார். எனவே அவரை மன்னித்து வைணவம் பற்றிய நமது ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

இவ்வளவு தூரம் அந்தணர்கள் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழலாம். இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கல்வி முறை மற்றும் வாழ்க்கை வழி முறை நாளடைவில் சிதைந்து போய் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை வைணவம் எப்படிக் கையாண்டது என்று அறிந்துகொள்ள இந்த நம் ஆராய்ச்சி பயன்படும் என்று கருதுகிறேன்.

அடுத்தபதிவில் சங்க காலத்தில் வைணவம், சமூக அமைப்பு, பின்னர் சங்கம் மருவிய காலங்களில் வைணவம் மற்றும் சமூக அமைப்பு என்று பயணத்தைத் தொடர்வோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைணவம் – பண்டைய அந்தணர்

வைணவம் தொடரில் முக்கிய பாத்திரமான  அந்தணர்கள்  பற்றிப் பார்ப்போம். ஏனெனில் இன்றைய நிலையில் வைணவர்கள் என்றாலே ஐயங்கார் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு தோற்றம் உள்ளது. மற்ற அனைவரும் சைவர்கள் போலவும், ஐயங்கார் பிரிவினர் மட்டுமே திருமால் தொண்டர்கள் போலவும் பார்க்கிறோம். ஐயங்கார்கள் அந்தணர்கள் என்பதால் முதலில் பொதுவாக அந்தணர்கள் பற்றிப் பார்த்துவிட்டு பிறகு வைணவம் குறித்து நுழைவோம்.

நேரே விஷயத்திற்கு வருகிறேன்.  அந்தணன்  பார்ப்பனனா?   கம்பன் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோதும் அது விஷயமாக வேறு நூல்களைப் பார்த்தபோதும் இந்த அந்தணன் என்ற சொல் பலமுறை தென்பட்டது.

சங்க இலக்கியங்கள் என்று பார்த்தேன். அவற்றில் அந்தணன், பார்ப்பனன் என்று இரண்டும் தென்பட்டன. சிலப்பதிகாரமும் அப்படியே. பக்தி இலக்கிய காலகட்டமான ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலும் அவர்கள் பாட்டில் அந்தணர் என்பதே அதிகம் தென்படுகிறது. வேதியர் என்பதும் இருக்கிறது.

சரி. இப்போது இதற்கு அவசியம் என்ன? மோடி, பொருளியல், பணவீக்கம், ரஜினியின் அடுத்த படம், நடிகை திரிஷாவின் சிரிப்பு என்று உலகம் நகர்ந்துகொண்டிருக்கும்போது அந்தணன் எக்கேடு கெட்டால் என்ன? தமிழ் இலக்கியங்களில் என்ன இருந்து தொலைத்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

வரவிருக்கும் வாரங்களில் வைணவம் குறித்தும், ஆழ்வார்கள் குறித்தும் காணவேண்டிய நிலையில், வைணவத் தத்துவங்களுக்குள் புகும் முன்னர், அந்தணர்கள் எவ்வாறு சங்க காலம் தொட்டு பாரதி காலம் வரை சமய மற்றும் மொழி, கலாச்சாரம் சார்ந்த கருத்தியல்களில் இரண்டறக் கலந்துள்ளனர் என்று அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு அவர்கள் தொழில்கள்  என்ன, அவர்களின் சமுதாயம், கல்வி, கலாச்சாரம், அரசு  சார்ந்த பங்களிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு மேலே செல்வது பயனளிக்கும்.

அந்தணன் என்பதன் பொருள் என்ன ? இவையே பொருள்களாக ஒரு தமிழ் அகராதி கூறுகிறது : செந்தண்மை உடையவன், வேதத்தின் அந்தம் அறிந்தவன், முனிவன், கடவுள், வியாழன், சனி.

‘அந்தம்’ என்பது முடிவு என்று அறிவோம். வேதத்தின் அந்தம் வேதாந்தம். அதனை அறிந்தவன் வேதாந்தி.

அதுபோல் ‘அந்தம்’+’அனன்’ = அந்தணன் என்று தெரிகிறது. முடிவை அறிந்தவன். முடிவான பிரம்மத்தை அறிந்தவன். பிரம்மத்தை அறிந்தவன் பிராம்மணன் என்று கூறுவதிலிருந்து அந்தத்தை அறிந்தவன் அந்தணன் என்று வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

இன்னொரு பொருளும் தெரிந்தது. சற்று இலாகியம் சார்புள்ளது.

அந்தணன் = ”அம்’ + ‘தண்’ + ‘அனன்’ என்று பிரிக்க முடிகிறது.

அம் = அழகு;  தண் = குளிர்ச்சி ; அனன் = கொண்டவன்.

ஆக, அழகும் குளிர்ச்சியையும் கொண்டவன், வெம்மை இல்லாதவன் என்ற பொருளிலும் வருகிறது.

சரி. ஆதாரம்?

எப்பொழுதும் போல் வள்ளுவர். அவர்  கூறுகிறார்:

“அந்தணன் என்போன் அறவோன் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்”

எல்லா உயிர்களிடத்திலும் உள்ளத்தால் செம்மைத்தன்மை ( கோபம் முதலிய கடுங்குணங்கள் ) இல்லாதிருந்து அற வழியில் நடப்பவன் அந்தணன். செம்மைத் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் போதாது ; அறவழியில் நடப்பவனாகவும் இருக்கவேண்டும். அவனே அந்தணன் என்கிறார்.

தமிழக “பண்டிதர்கள்” எப்போதும் போல் இந்த இடத்தில் ‘அந்தணன்’ என்பது கடவுள்அல்லது  நன்னெறியில் நடப்பவரே அன்றி பார்ப்பனரைக் குறிப்பது அல்ல என்று தங்கள் வரலாற்றுக்கடமையை ஆற்றியுள்ளார்கள். ஆனால் கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு அந்தணன் என்றால் கடவுள் என்று கூறுவது அவர்களுக்கே ஒரு மாதிரி பட்டிருக்கும்போலே. எனவே தற்கால “பண்டிதர்கள்”,  “அறவழியில் நடப்பவர்கள்” என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.  (சிவபெருமானுக்கு “ஈர்ஞ்சடை அந்தணன் ” என்று கலித்தொகை பெயரிடுகிறது.  )

எப்போதும்போல் அவர்களை நிராகரித்துவிட்டு மேலே தொடர்வோம்.

அந்தணர்களின் தர்மம் என்ன ? அவர்கள் எவ்வாறு அறியப்படுகிறார்கள் ?

சங்க இலக்கியங்கள் தொடங்கி, ஆழ்வார் பாசுரங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாரத புராணம், திருக்குறள், சைவத்திருமுறைகள் எல்லாவற்றிலும் அந்தணனுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் பலவற்றில் மிகவும் அழுத்திச்சொல்வது இந்த மூன்றும்  :

வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், உலக நன்மை வேண்டி இறையிடம் வேண்டுதல். இந்த மூன்றும் வலியுறுத்தப்பட்டாலும் அவர்கள் ஆறு தொழில்கள் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமூலர் கூறுவது இது :

“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பி
முப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று
ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே”

அந்தணர் என்பவர் ஆறு தொழில் செய்யும் வகையினர். தினம் மூன்று முறை அக்னிஹோத்ரம் என்னும் தீ வணக்கம் செய்திருக்கவேண்டியவர்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட நியமங்களை விடாது பின்பற்றுபவர்கள். பிறவிக்குக் காரணமான கருமங்கள் அழிய வேண்டி நற்கருமம் செய்து வாழவேண்டியவர்கள் என்கிறார்.

சரி? அது என்ன ஆறு தொழில்கள் ?

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், தானம் வாங்குதல், வழங்குதல், வேள்வி செய்தல், செய்வித்தல். இவை ஆறே அந்தணர் தொழில்கள். கோவில்களில் பூசை செய்வது பற்றி ஒரு பேச்சும் இல்லை.

ஆறு தொழில்கள் என்று திருமூலர் சொன்னால் போதுமா ?

நமது திருவள்ளுவர் சொல்வது :

“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”

மன்னன் ஆட்சியின் தன்மை பால் வளம் மற்றும் அந்தணர் நூலை ( வேதம் ) ஓதுதலை குறியீடாகக்கொண்டு கணிக்கப்படுகிறது தெரிகிறது. இங்கே அறுதொழிலோர் என்பது அந்தணரைக் குறிக்கிறது.

திருமூலர் மேலும்,  “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே,” என்றும் கூறுவது நோக்கத்தக்கது. இரண்டு பாடல்களிலும் “செந்தழல் ஓம்புதல்” என்று குறிப்பிடுகிறார்.

திருமூலர் போல் செந்தழல் ஓம்புதல் பற்றிப் பலர் கூறியுள்ளனர்.

தொண்டரடிப்பொடியாழ்வார் :

“குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிக்கொள் அந்தண்மை…” என்று  அந்தண்மையையும் நீராடி மும்முறை அனல் ஓம்பும் கடமை பற்றியும் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் தேரழுந்தூர் பாசுரத்தில்,

“அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர்”

என்று தேரழுந்தூர் வாழ் அந்தணர்கள் எழுப்பிய வேள்விப்புகை ஊர் முழுவதும் பரவி இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

அந்தணர் பற்றி சைவத்திருமுறைகள் பல விஷயங்கள் கூறுகின்றன.

அந்நாளில் அந்தணர் வேள்வி செய்வது இன்றியமையாததாகவும் அதனால் நாட்டிற்கு மிக்க நன்மை ஏற்படும் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

தேவாரம் இவ்வாறு கூறுகிறது :

“வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே”

சோர்வை அறியாத அந்தணர்கள் ஹவிஸ் என்னும் அவியைச் சொரிந்து வேள்வி செய்தலால் மழையும் நிலமும் நன்மை அடையும், தேவர்கள் நன்மை அடைவர், இதற்கெல்லாம் முதல் நூலாய்த் திகழும் வேதமும் நிலைபெறும். அவ்வாறு செய்யாவிட்டால், இந்த நன்மைகள் கிட்டா.

மேலும் கூறும்போது :

“ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்”, என்று ,

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓதுகின்ற அந்தணர் மறுமை நலம் வேண்டி பிறர்க்கும் இட்டு உண்பர் என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு பாடலில் ,

“அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான” என்று

அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயின் உள்ளே நமக்குத் துணையான இறைவன் உறைந்துள்ளான் என்று கூறுகிறார் ஞானசம்பந்தர்.

இத்தகைய அந்தணர் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று சம்பந்தர் தேவாரம் கூறுகிறது :

“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

அந்தணர் வாழ்க, தேவர் வாழ்க, பசுக்கூட்டங்கள் வாழ்க, மழை பொழிக, அதனால் வேந்தன் வாழ்க, தீயவை எல்லாம் அழிக …இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக என்று வாழ்த்துகிறார்.

இதில் காணவேண்டியது, அந்தணர்களைப் பற்றிக்கூறும் போது பசுக்களைப் பற்றியும் கூறுகிறார். அந்தணர் வேள்வி செய்வதால், ஆநிரைகள் வளரும், மழை பெய்யும், மக்களும் மன்னனும் வாழ்வார்கள் என்று அந்நாளில் நம்பினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அக்கினி தேவனிடம் ,

“ஆவும் ஆனிரைப் பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணியுடையீரும்”

ஆகிய இவர்களை விடுத்து மற்றதை எரிப்பாயாக என்று ஆணை இடுகிறாள். இங்கும் அந்தணரும் பசுக்களும் ஒருங்கே கூறப்பட்டுள்ளனர்.

“கோ-ப்ராம்மண்ஸ்ய..” என்ற சமஸ்கிருத பதமும் பசுவையும் அந்தணர்களையும் ஒருசேரக் கூறுகிறது. ஒரு வேளை பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வேள்வி செய்வதால் பசுமாடுகளையும் அந்தணர்களையும் ஒருங்கே கருதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்யும் என்பது பண்டைய விதி.

ஏன் மூன்று மழை என்று விவேக சிந்தாமணி கூறுகிறது:

“வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

வேதம் ஓதும் வேதியர்களுக்காக ஒரு மழையும், நீதி நெறி தவறாத மன்னனுக்கோர் மழையும், கற்புடைய மாதருக்காக ஒரு மழையும் என்று ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்துள்ள காலம் இருந்துள்ளது.

அடுத்த பதிவில் அந்தணர் அல்லது பார்ப்பனர் பற்றி மேலும் சில பழைய நூல்கள் கூறுவதையும், அவர்களுக்கான கடுமையான விதிகள் பற்றியும் வட மொழி நூல்கள் கூறுவதையும்  பார்த்துவிட்டு வைணவத்திற்குள் செல்வோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கம்பன் – மதுவும் மாமிசமும்..

கம்பன் மதுவும் மாமிசமும் பற்றி என்ன கூறுகிறான்  என்று பார்க்கும் முன், சில அதிர்ச்சிகளை எதிர்கொள்வோம்.  “அட, இப்படியும் இருந்திருக்குமா?”, என்று எண்ண வைப்பது அந்தச் செய்தி.

மதுவும் மாமிசமும் தமிழர் நாகரிகத்தில் இருந்தன, அன்றாட உணவில் இருந்து வந்துள்ளன என்றால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். ஆனால், சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் இவை தமிழர் உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்துவந்துள்ளன என்று அடித்துக் கூறுகிறார்.

“பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கிய நூலகளில் மதுவும் மாமிசமும் கலந்து மணம் வீசுவதைக் காணலாம். பெரு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், அனைவரும் தம்மிடம் வந்த விருந்தினர்க்கும்,இரவலர்க்கும் வேண்டியமட்டும் மதுவும், மாமிசமும் அளித்து அயர்வு தீர்த்தனர்; என்று அந்த நூல்களில் காணப்படுகின்றன. பெரும் புலவர்களான ஔவையாரும், கபிலரும் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தனர்”, என்கிறார் சாமி.சிதம்பரனார்.

அதுபோலவே, “அறியப்படாத தமிழகம்” என்னும் நூலில் தொ.பரமசிவன் என்னும் நிகழ்கால ஆராய்ச்சியாளர், தமிழ்க் காவல் தெய்வங்களான சுடலைமாடன், கருப்பசாமி முதலிய தேவதைகளுக்கு மிருக பலி கொடுப்பதை விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறும் சில முறை பலிகள் நாகரீக எல்லைக்குள்ளேயே இல்லை. ஆனால் அப்படியும் ஒரு காலம் இருந்துள்ளது தெரிகிறது. ஆனால் இது சங்க காலமா என்று தெரியவில்லை.

ஆனால் சங்க காலம் கழித்துத் தோன்றிய “சங்கம் மருவிய” கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிலும், திருக்குறள், சைவ வைணவ சமயக் கால நூல்களிலும் மதுவும் மாமிசமும் இழித்துக் கூறப்படுகிறது. ஆக, சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பதியும்வரை மதுவிற்கும் மாமிசத்திற்கும் தமிழ் மண்ணில் ஒரு ஏற்றம் இருந்துள்ளது தெரிகிறது.

வள்ளுவர் மாமிச உணவை மிகவும் பழிக்கிறார். மதுவையும் அப்படியே, எனவே “புலால் உண்ணாமை”, “கள் உண்ணாமை” என்று அதிகாரங்களே வைத்துள்ளார்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்” என்கிறார்.

( கொல்லா  விரதத்தைக் கொண்டவனை, மாமிசம் உண்ணாதவனை இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும் )

இந்தக் காலங்கள் கழித்து 300 ஆண்டுகள் பின்பே கம்பன் காலம். அவனது எழுத்துக்களில் திருக்குறள், ஆழ்வார் பாசுரங்களின் பாதிப்பு தெரிகிறது. எனவே மதுவையும் மாமிசத்தையும் பழிக்கிறான் கம்பன்.

இதில் கவனிக்கத்தக்கது வால்மீகி ராமாயணம் மதுவும் மாமிசமும் வெறுக்கப்படாத காலத்தில் எழுத்தப்பட்டது. ஆனால் கம்ப ராமாயணமோ சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வேரூன்றி அழிந்தபின் பக்தி இலக்கியக் காலங்களுக்குப் பின் எழுதப்பட்டது. எனவே தான் கதா பாத்திரங்களை மதுவும் மாமிசமும் உண்ணாதவர்களாகச் சித்தரிக்கிறான் கம்பன்.பின்னர் அதுவே சிறந்த ஒழுக்கம் என்று கருத்தப்படுகிறது.

கம்பன் இராமனைக் கனியும் கிழங்குகளும் உண்பவனாகவே காட்டுகிறான். இதைத் தவறாமல் குறிப்பிடுகிறான்.

இராமனும் சீதையும் கானகம் அடைகிறார்கள். அங்கு அவர்கள் உண்ணும் உணவு காட்டப்படுகிறது :

“காயும் கானில் கிழங்கும்கனிகளும்

தூய தேடிக்கொணர்ந்தனர்; தோன்றல் நீ

ஆயகங்கை அரும்புனல் ஆடினை,

தீயை ஓம்பினை செய்அமுது என்றனர்”

( காட்டில் கிடைக்கும் உண்பதற்கரிய காய்களையும், கிழங்குகளையும், கனிகளையும் நல்லனவாகத் தேடிக் கொண்டுவந்தனர். பெருமையுள்ள இராமனே, நீ சிறந்த உயர்ந்த கங்கையில் நீராடி, தீ வளர்த்து வேள்வியினை முடித்தபின் இவற்றை உண்டு களைப்பு தீருவாயாக, என்று வேண்டிக்கொண்டனர் )

இதில் நாம் காண வேண்டியது, இராமன் உணவு உண்ண வேண்டிய முறை பற்றியும் முனிவர்கள் கூறுவதுபோல் அமைத்துள்ளது. நீராடவேண்டும், தீ வளர்த்து தினப்படி ஆற்றவேண்டிய தெய்வீகச் திருச்சடங்குகள் செய்யவேண்டும், பின்னர் காயையும் கனியையும் உண்ண வேண்டும் ( “அமுது செய்ய வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை வைணவர்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்).

கம்பன் இன்னொரு இடத்திலும் இராமன் உண்டது என்ன என்று கூறுகிறான்.இலக்குவன் தான் உண்டது என்ன என்று கூறுமாப்போலே அமைந்துள்ள பாடல் இது :

“பச்சிலை கிழங்கு காய் பரமன் துங்கிய

மிச்சிலே நுகர்வது, வேறுதான் ஒன்று நச்சிலேன்”

( இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய்களின் மீதத்தையே நான் உண்பது வழக்கம். இதைத் தவிர வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை ).

யுத்தகாண்டத்தில், கம்பன் இராமனை வர்ணிக்கும்போது,

“கானிடைப் புகுந்து இரும்கனி காயொடு நுகர்ந்த

ஊன்உடைப் பொறை உடம்பினன் .. ” என்று கூறுகிறார்.

( காட்டில் அமைந்துள்ள பழங்களையும், காய்களையும் உண்ட ஊண் அமைந்த பாரமாகிய உடம்பை உடைய இராமன் .. )

மேலே காய் கனிகளை மட்டும் உண்டான் என்று தெரியும்படிக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.

விபீஷணன் நல்லவன் என்று இராமனுக்கு எடுத்துக் கூறும் அனுமன் பின்வருமாறு கூறுகிறான் :

“நிந்தனை நறவமும் நெறியில் ஊண்களும் தந்தன கண்டிலன் ”

(பழிக்கு ஆளாக்கும் மதுவும், நன்னெறிக்கு மாறான புலால் போன்ற உணவு வகைகளையும் இவன் – விபீஷணன்- சேர்த்து வைத்து நான் கண்டதில்லை )

மாமிச உணவு  உண்ணாதவர்களை “சைவம்” என்று தற்காலத்தில் அழைக்கிறோம்.கொல்லா விரதம் கொண்டவர்கள் சைவர்கள் என்று அழைக்கப்படவேண்டிய காரணம் என்ன ? கம்பனை விட்டு சற்று விலகி, வேறு சில பழைய பாடல்களை ஆராய்வோம்:

திருமூலர் என்னும் சைவ சமயப் பெரியார்,

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” என்று அன்பாக இருப்பதே சிவம், தெய்வத்தன்மையானது அன்பு என்னும் பொருள் படும்படிக் கூறுகிறார்.

மற்ற மனிதர்களிடத்து அன்பு செய்தலே சிவமா அல்லது எல்லா உயிரிடத்தும் அன்பு செய்வது சிவ நெறியா என்ற குழப்பம் தோன்றலாம்.

அதற்குத் தாயுமானவர் என்ற சைவப் பெரியவர் கூறுவது :

“எவ்வுயிரும் பராபரன்சந்  நிதிய தாகும்

இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் ”

(எல்லா உயிரும் இறைவனின் சன்னிதியே, இங்கு வாழும் உயிரினங்களின் உடலே இறைவன் வாழும் ஆலயம்).

ஆக அன்பு செய்தல் எல்லா உயிரிடத்தும் செய்தல் வேண்டும் என்பது சைவ சமயம்.

தாயுமானவர் மேலும்,

“கொல்லா விரதம் குவலயமெ லாமோங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே”, என்று பாடுகிறார்.

(உயிர்களைக்கொல்லாமை என்னும் விரதம் இந்த உலகெல்லாம் தழைத்து வளர எல்லாருக்கும் எடுத்துச்சொல்வதே என் ஆசை )

ஆக சைவ சமயம் பின்பற்றுபவர்கள் மாமிசம் உண்பது தவறு என்பது பல வகையிலும் சொல்லாமலே சொல்லப்பட்டுள்ளது காண்கிறோம்.

சிவன் வழிபாட்டு சமயம் சிவ-சமயம் என்றும், காலப்போக்கில் சைவ சமயம் என்று ஆகி இருக்க வேண்டும். அத்துடன் அன்புருவான சிவனை வழிபடுபவர்கள் மாமிச உணவைத் தவிர்த்ததால் சைவர்கள் ஆனார்கள் என்று வழக்கத்தில் வந்திருக்கலாம் என்று காலஞ்சென்ற தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தெரிவிக்கிறார்.

இந்த நேரத்தில், “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ” என்று மஹாகவி பாரதியார் பாடியுள்ளது நினைவில் கொள்ளத் தக்கது.

கம்பனிடம் திரும்ப வருவோம்.

மது அருந்துவதை இழித்துக் கூறும் கம்பன் பரதன் கூறுவதுபோல் அமைத்துள்ள பாடல் ஒன்று உள்ளது 

இராமனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பும்போது பரதன் அயோத்தியில் இல்லை.அவன் வந்தபிறகு அவனது உள்ளத்தை அறிய இராமனின் தாய் கோசலை ,பரதனிடம் ,”கைகேயி செய்த வஞ்சனை உனக்கு முன்னமே தெரியாதா?” என்ற பொருள் படும்படிக் கேட்டாள். அதைக்கேட்ட பரதன்,”என் அன்னை செய்த வஞ்சகச் செயலை முன்னரே அறிந்து நான் உடந்தையாய் இருந்திருப்பேனானால் நான் பின்வரும் மாபாதகச் செயலைச் செய்தவர் அடையும் பாவத்தை அடைவேன்”, என்று கூறுகிறான்.

“கன்னியை அழிசெயக் கருதினோன், குரு

பன்னியை நோக்கினன்; பருகினோன் நறை ;

பொன்இகழ் களவினில் பொருந்தினோன், என

இன்னவர் உறுகதி என்னது ஆகவே”

(மணமாகாத கன்னிப்பெண்ணிடம் தவற நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண்ணத்துடன் பார்த்தவன் ; மது அருந்தியவன்; பொன்னைத் திருடிச் சேர்க்கும் இழிதொழிலில் ஈடுபட்டவன் ; இவர்கள் அடையும் கதியை நான் அடைவேன்).

மது அருந்துவதைப் பெண்ணிடம் தவறாக நடப்பதற்கும், ஆசிரியரின் மனைவியைப் பற்றித் தவறாக எண்ணுவதற்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறான் கம்பன்.

மேலும் மதுவின் தீய விளைவுகளைப் பட்டியல் போடுகிறான் சுக்ரீவனின் வாயிலாக. அது பின்வருமாறு:

“வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும்,

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை

நஞ்சமும் கொள்வது அல்லால் நரகினை நல்காது அன்றே”

(மது அருந்துதல் வஞ்சகம், களவு, பொய்- இது மூன்றையும் செய்யத்தூண்டும்; மயக்கத்தை உண்டாக்கும்; முறையற்ற வழியில் அறிவை அலையச் செய்யும்; அடைக்கலம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்; நல்ல குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கிவிடும்; கள் உண்பவர்களை அக்கள்ளில் உள்ள நஞ்சே கொன்றுவிடும் … )

உலகில் உள்ள அனைத்துப் பாவங்களுக்கும் மூல காரணமாக மதுவைக் கம்பன் மது அருந்தும் பழக்கம் உள்ள சுக்ரீவன் வாயிலாகவே சொல்லவைத்துள்ளான்.

சுக்ரீவன் மேலும் பேசுவான் :

“அய்யநான் அஞ்சினேன் இந் நறவினின் அரியகேடு

கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்”

(ஐயனே, நான் இந்த மதுவினால் வரும் பெரிய கேடுகளுக்கு அஞ்சினேன்; இனி என் கையால் மதுவைத் தீண்ட மாட்டேன்; உள்ளத்தாலும் நினைக்க மாட்டேன்; அதனை மனத்தால் நினைப்பதே தீமையாகும் )

மதுவிலக்கு, மாமிச விலக்கு முதலியன நல்ல ஒழுக்கங்களை அளிக்கும்; நம்மை உயர்த்தும். எனவே இக்கேடுகளை அறவே விலக்கிய ஒரு ஒழுக்க சமுதாயமே உயரும் என்ற கொள்கையில் கம்பன் பளிச்சிடுகிறான்.

இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தற்காலச் சூழ் நிலையைப் பற்றி எண்ணினால் பாரதி சொன்னதுபோல,”நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று கோபம் கொப்பளிக்கப் பாட வேண்டியதுதான்.

தற்போது நாட்டில் அரசே கள் விநியோகம் செய்யும் காலத்தில்,மது பற்றிய கம்பன் பாடல்கள் நமது பாடங்களில் வராதது ஏன் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

அடுத்த பதிவில் என்ன வரும் என்று தெரியாது !



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கம்பன் சுவை – ஒழுக்கம்

 

இராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

முன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.

இப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.

இதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.

கம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.

பின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” என்று கேட்கிறான்.

இங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:

“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச

வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்

எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”

(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).

இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.

இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.

குகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )

கம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.

பல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடுத்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:

“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்

இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்

சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”

( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)

இங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.

இதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.

பாரதியும்,

“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

இராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ? ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.

இராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.

சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,

“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.

( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )

இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :

“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா

வாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்

தாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான்

ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா !”

(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )

இவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)

கம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.

கும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :

“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் !

மாசில் புகழ் காதல் உறுவோம்! வலிமை கூரப்

பேசுவது மானம்! இடைப் பேணுவது காமம்,

கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம்!”

(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க !)

மேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி !” என்று கூறுகிறான்.

இத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,

“ஆயிரம் மறைப்போருள் உணர்ந்து,அறிவமைந்தாய் !தீவினை நயப்புருதல் செய்தனை ”

என்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.

தன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.

இராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,

“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?”

என்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.

சரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது?

நம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:

“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்கண் இல் ”

(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )

அது மட்டுமா ? இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.

“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி”

(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )

வள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.

அதற்கும் மேல் :

“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.

(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).

“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.

ஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

அடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=156

(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
 156.   
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே 
    
செம்பூ முருக்கி னன்னார் களைந்து 
    
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்  
    
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
5
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும் 
    
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் 
    
மருந்து முண்டோ மயலோ விதுவே. 

என்பது கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.

 

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.

     (பி-ம்.) 3. ‘தாழ்மண்டிலத்துப்’; 4. ‘படிம’; 5. ‘னின்செயலுள்ளும்’.

 

     (ப-ரை.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே---, செ பூ முருக்கின் - செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது, நல் நார் களைந்து - நல்ல பட்டையை நீக்கி விட்டு, தண்டொடு பிடித்த - அதன் தண்டோடு ஏந்திய, தாழ் கமண்டலத்து - தாழ்கின்ற கரகத்தையும், படிவம் உண்டி - விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே-, எழுதா கற்பின் - வேதத்தையறிந்த, நின் சொல்லுள்ளும் - நின்னுடைய அறிவுரைகளுள், பிரிந்தோர் புணர்க்கும் - பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும், பண்பின் - தன்மையையுடைய, மருந்தும் உண்டோ - பரிகாரமும் இருக்கின்றதோ? இது - இங்ஙனம் நீ கழறுதல், மயல் - மயக்கத்தால் வந்ததாகும்.

 

     (முடிபு) பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.

 

     (கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.

 

     (வி-ரை.) இது பார்ப்பனப் பாங்கன் காமநிலை யுரைத்துத் தேர்நிலை யுரைத்த போது (தொல்.கற்பு. 36) தலைவன் கூறியது. முருக்கென்றதுபுரச மரத்தை; இது பலாசென்றும் கூறப்படும். தாழ் கமண்டலம் - உறியிலே தாழ்ந்த கமண்டலம்; "உறித் தாழ்ந்த கரகமும்’ (கலி. 9:2.) எழுதாக் கற்பு - எழுதாக் கிளவியைக் கற்ற கல்வி; அதாவது வேத முணர்தல். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12.) மருந்துமுண்டோ வென்ற உம்மை பயனற்ற இடித்துரையே யன்றிப் பரிகாரமும் உண்டோவென்னும் பொருட்பயன் உடையது. ‘நாம் இடித்துரைத்தால் இவன் கொண்ட காமம் நீங்கும்' என்று பாங்கன் எண்ணிய எண்ணத்தை மயலென்றான். உண்டோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளது; மயலோ: ஓ அசை நிலை.

 

    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று.

 

    (மேற்கோளாட்சி) 1. முறைமை சுட்டா மகனென்னும் பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றது(தொல். விளி. 18, தெய்வச். ); உயர்திணைப் பெயர் ஏகார விளி யுருபு பெற்று வந்தது (நன். 304,மயிலை.)

 

    4. முறைமை சுட்டா மகனென்பது விளிவேற்றுமைக்கண் ஏகாரம் பெற்றுவந்தது (தொல். விளி.12, ந.; இ.வி.207.)

    3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

 

    ஒப்புமைப் பகுதி 2. நாரென்பது பட்டைக்கு வருதல்: குறுந். 112:4, 274:5.

 

    4. படிவவுண்டிப் பார்ப்பன மகன்: "படிவப் பார்ப்பான்" (முல்லைப். 37.)

 

    6. பிரிந்தோர்ப் புணர்த்தல்: குறுந். 146:2.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sanskrit and Panini
The descriptive grammar of Sanskrit, which Pāṇini brought to its perfection, is one of the greatest monuments of human intelligence and an indispensable model for the description of languages. 
Leonard Bloomfield, 1929

Modern linguistics acknowledges it as the most complete generative grammar of any language yet written, and continues to adopt technical ideas from it.
Paul Kiparsky, 1994

The Grammatical system elaborated by native Grammarians, is in itself most perfect, and those who have tested Panini's work will readly admit, that there is no Grammar in any language, that could vie with the wonderful mechanism of his eight books of Grammatical rules.
Max Müller



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மேல்
 
    வட_பெருங்கல் (2)
தென் குமரி வட_பெருங்கல்/குண குட கடலா எல்லை - மது 70,71
தென் குமரி வட_பெருங்கல்/குண குட கடலா எல்லை - புறம் 17/1,2

 மேல்
 
    வட_மலை (2)
வட_மலை பிறந்த மணியும் பொன்னும் - பட் 187
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது - புறம் 67/7

 மேல்
 
    வட_மீன் (2)
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் - கலி 2/21
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி - புறம் 122/8

 மேல்
 
    வட_மொழி (2)
கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி - முல் 35
வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற - கலி 25/1


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard